மணியின்கண் மறைந்திருக்கும் ஒளி
'ஹெமிங்வேயின் "வெள்ளை யானைகளை ஒத்த மலைகள்" கதையில், அந்த அமெரிக்கனும் அவனுடன் கூட இருந்த பெண்ணும் எப்படி இருப்பார்கள்?'
'அதிகம் யோசிக்க வேண்டாம். "அவள் தன் தொப்பியைக் கழற்றி மேஜை மேல் வைத்திருந்தாள்" என்கிற ஒரே ஒரு வர்ணனையைத் தவிர வேறு பாத்திர விவரிப்புகள் அதில் கிடையாது' . பாத்திரங்களுக்கான விவரணைகளை மிதமிஞ்சி செய்யக் கூடாது என்பதற்காக இப்படியொரு உதாரணத்தை கூறுகிறார் எழுத்தாளர் எல்மோர் லெனார்ட் (Elmore Leonard). வணிக ரீதியான வெற்றிகரமான எழுத்திற்கான பத்து விதிகளென 2001ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸில் எழுதியிருந்தார்.
"முதல் வரியிலேயே சொல்ல வந்த விஷயத்தைப் பற்றி கோடிட்டு காட்டிவிட வேண்டும். வானிலை அறிக்கை போல் வளவளவென எழுதிக் கொண்டே போகாதீர்கள். நீள பீடிகைகளை முடிந்த அளவில் தவிருங்கள். தேய்வழக்குகள் அறவே வேண்டாம். வட்டார வழக்குகளை குறைவாக பயன்படுத்துங்கள். வர்ணணைகளை விட, இயன்றளவு உரையாடலில் உணர்ச்சிகளைக் கொண்டு வாருங்கள். ஆச்சரியக் குறிகளை வாரியிறைக்காதீர்கள்" என்று நிறைய விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.
இவற்றில் பலதும் விவாதத்திற்குரியவை என்றாலும், அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்த விஷயம் "இந்த விதிகள் அனைத்தையும் ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், நான் எழுதியதைப் படித்தால் 'எழுதியது' போலிருப்பதாகத் தோன்றினால், அதை நான் மீண்டும் மீண்டும் எழுதுவேன்" என்றதுதான்.
எழுத்தைப் போல் அல்லாது எழுதுவதுதான் படிப்பதற்கு சுவாரசியமானதாக இருக்கும் என்கிறார் லெனார்ட். நடிப்பது போல் அல்லாது நடிக்கும் கலை போல. அந்நிலையை அடைவதற்கு அத்தனை படிநிலைகளில் பட்டை தீட்ட வேண்டியிருக்கிறது.
லெனார்ட் சொல்லாமல் விட்ட விஷயத்தை இங்கே நான் சேர்த்துக் கொள்கிறேன். ஒளிமிக்க பிரகாசத்தை உள்ளேக் கொண்ட கச்சா வைரம் போல் எழுத்தின் உள்ளே விஷயம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது தீட்டப்படும்போது, பொலியும் வைரக்கல் என மேலும் பிரகாசம் பெறும். செயற்கை கண்ணாடி கற்களை விட்ட, அரிய வைர மணிகள் காலத்தில் நின்று ஒளிரும் இயற்கையான பிரகாசம் கொண்டவை.
சைவ சித்தாந்த மரபில், அரிய கற்கள், மணிகளில் மறைந்திருக்கும் ஒளி போல இறைவன் நம் உள்ளத்தில் மறைந்து உறைவதாக உருவகங்கள் உண்டு. பாலில் இருக்கும் பசுநெய், விறகில் மறைந்திருக்கும் நெருப்பு, இவற்றைப் போல மாமணிகளில் ஒளிந்திருக்கும் பிரகாசம் போல என்று அப்பர் பெருமான் சிவனை வர்ணிக்கின்றார். "மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்" போல.
அதெப்படி மாமணிகளில் ஒளி மறைந்திருகும்? நன்றாக பிரகாசித்தால்தானே அது அரிய மணி என ஐயம் உண்டாகலாம். அரிய கற்களும், மணிகளும் அவற்றுக்கே உண்டான பிரத்யேக வகையில் தீட்டப்படும்போது அதன் பிரகாசம் மேலோங்குகிறது.
Sanding Stone - என்பதை சாணைக் கல் என்பர். வெட்டும் கூரான ஆயுதங்களை அக்கல்லில் உரசி தீட்டிக் கொள்வது போல, அரிய மணிகளை பொலிய வைக்கும் பட்டை தீட்டுவதும் உண்டு.
இதில் வியப்பு என்னவென்றால், பாரதியின் குறுகியகால வாழ்க்கையில், அவர் தன்னுடைய இருபதுகளில் கூட ஆசிரியப் பணி கொண்டுதான் தன் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார். பிறகு பத்திரிகைத் துறைக்கு மாறி, அரசியல் கட்டுரைகள் எழுதி, கேலிச் சித்திரங்கள் வரைந்து, தேசபக்தி பாடல்கள் இயற்றி, காவியம் புனைந்து, ஆன்மிகத்திலும் பாடல்கள் புனைந்திருக்கிறார். அதிலும் 'மணி ஒளிர (வெளுக்க) சாணை (Sanding) உண்டு' என்பது தேவாரப் பாடலில் இடம்பெறும் சைவ சித்தாந்தத்தின் ஒரு கூறு எனலாம். இத்தனைக்கும் அவருடைய வாழ்க்கை அனுபவங்களின் பதிவுகளின்படி அவர் பக்தி இலக்கியங்களை அறிமுகம் செய்து கொண்டதே இருபதுகளின் இறுதிப் பகுதியில்தான்.
ஒரு பத்தாண்டுகள் அவர் தன் படைப்பூக்க உச்சத்தில் இருந்திருக்கலாம். அதற்கு மேல் காலம் அவரைக் காத்திருக்க வைக்கவில்லை. அவ்வளவு குறுகிய காலத்தில் பாரதி வெளிப்படுத்தியிருக்கும் விரிவான படைப்பூக்கத் திறனும், அதில் வெளிப்படும் கூர்மையான மரபுத் தொடர்ச்சியும், அவற்றை மானுடத்தின் முன்னோக்கிய வளர்ச்சிப் பாதைக்கு அர்ப்பணித்திருப்பதையும் பார்க்கும் போது பெரும் வியப்பு உண்டாகிறது.
சாணைக் கல் கொண்டு பொலியச் செய்வதோ, கூர்மை கொள்வதோ நம்முடைய செவ்விலக்கிய மரபில் பயின்று வரும் உவமைதான். தற்போது, ஒரு திரையிசைப் பாடலில் "வாளில் ஏற்று சாணை" என்ற வரியைக் கேட்டதும் வியப்பாக இருந்தது. சாணைப் பிடித்தல் என்று நாம் வழக்கில் குறிப்பிடுவதில், அச்சொல் தொழிலாகு பெயராக வருகிறது. இந்தப் பாடலிலோ, 'அடி இயைபு' விதிகளுக்கேற்ப ஆணைக்கும், சேனைக்கும் இணையாக சாணையைப் பிடித்துப் போட்டிருக்கிறார் பாடலாசிரியர். ஆனால் பொருள் மாறி பண்பாகு பெயராக வருகிறது. இந்த வேறுபாடுகள் எல்லாம் புரிந்துதான் இப்படி எழுதினார்களா என்பது நமக்குத் தெரியவில்லை.
உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.