Reading view

தமிழ் வாங்கிய தலை

(2024ம் ஆண்டு, ஆலன்டவுன் தமிழ்ச்சங்கம் சார்பாக நடந்த தமிழ்ப்புத்தாண்டு விழாவில் நடத்திய 'தமிழ் வாங்கிய தலை' என்ற தலைப்பில், சங்கப்பாடல்கள் வழியே வள்ளல் குமணனின் கதையை நாடகமாக நிகழ்த்தியதன் எழுத்து வடிவம்).

காட்சி 1:

(பாத்திரங்கள்: புலவர் பெருஞ்சித்திரனார், யானை பொறுப்பாளர், குதிரை பொறுப்பாளர், சிவிகைக்காரர், கருவூலத்தலைவர்)

குதிரைக்காரர்: யானைக் கொட்டடி எப்படி இருக்கிறது?

யானைக்காரர்:  காலையில் இருந்து நான்கு யானைகளை அனுப்பியாகிவிட்டது.  நீங்கள்?

குதிரைக்காரர்: ஏழு குதிரைகள்.  அதில் ஒரு புலவருக்கு செம்மண் நிறத்தில்தான் குதிரை வேண்டுமாம்.  அதுதான் அவர் ஊர் மண்ணின் நிறமாம்.

சிவிகைக்காரர்: சிவிகைகள் மட்டும் இன்று ஐந்து பரிசாக அனுப்பினேன். 

கருவூலத்தலைவர்:  அத்தனை சிவிகைகளுக்கும் கூடவே தூக்கிச் செல்ல ஆட்களும், அவர்களுக்கான பொருளும் சேர்த்துத்தான் புலவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஹ்ம்ம்ம்….

பெருஞ்சித்திரனார்: குடிமக்களே! அதிகாரிகளே! வருத்தம் கொள்ளாதீர்கள்.  அரசன் பொருளை அள்ளிச் சேர்ப்பது வலிமையின் அடையாளம்.  அவற்றை ஓரிடத்திலேயே தேக்கி வைக்காமல், வாரி வழங்குவது அவனுடைய  மாட்சிமைக்கு அடையாளம்.  புலவர்களுக்கு பரிசில் என்பது, அவர் வழியே எளிய மக்கள் அனைவருக்கும் போய்ச் சேரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

யானைக்காரர்: வணக்கம் பெருஞ்சித்திரனாரே! பாடுபட்டு படையும் அரசும் கொண்டு சேர்த்ததை எல்லாம் வள்ளலென இரவலர்க்கு அள்ளிக் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது?

பெருஞ்சித்திரனார்: முள்தோள் மூடிய பலாப்பழங்கள் நிறைந்த இந்த முதிர மலையைப் பாருங்கள்.  தோல் நீக்கி இனிய சுளைகளை சுவைக்கும் கடுவன் குரங்கு, அதனை தம் துணைக்கும் பகிர்ந்துண்ண அழைப்பது போலத்தான் இரவலர்க்கு புரவலராய் இருக்கும் வள்ளல்கள்.  இதோ கொடைவள்ளல் குமணன் அவைக்கு நானும் புறப்பட்டுவிட்டேன், தமிழ்ச்சுவையை பரப்புவதற்கு.

[திரை]

 

காட்சி 2:

(பாத்திரங்கள்: மன்னன் குமணன், இளவரசர் இளங்குமணன், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர்)

அமைச்சர்1: பறம்பு மலையின் கோமான் பாரி.  கொல்லி மலை கோமான் ஓரி, மலையமான் திருமுடிக் காரி,  தகடூர் தலைவன் அதியமான் அஞ்சி, பொதினி அரசன் பேகன், மோகிப் புலவர் பாடிய ஆய், வள்ளல் கோன் நள்ளி இவர்கள் வரிசையில் என்றும் இருக்கக் கூடிய முதிர மலை அரசன் குமணன் அவர்களுக்கு வணக்கம்.

குமணன்:  தமிழுக்குத் தலை வணக்கம்.  நற்றமிழில் பாடினீர் அமைச்சரே. குடிகளும் மக்களும் சுற்றமும் உறவினரும் நலம்தானே.

இளங்குமணன்: (இடைபுகுந்து) புலவர்களின் கற்பனையை அமைச்சருமா பரப்புவது?  அள்ளித் தரும் கைகள் என்றும், அரசைக் காத்திடுமா?  வருவாயைத் தாண்டி பரிசுகள் என செலவிடும்  வள்ளல்தன்மையைக் கொண்டு எப்படி அரசு புரிந்துவிட முடியும்?

குமணன்:  இளையவனே.  தமிழுக்கு தொண்டாற்றுபவர்கள் புலவர்கள்.  நாம் அவர்களுக்கு என்ன அளித்தாலும் அது மொழிக்கும், மொழி சார்ந்த மக்களுக்குமாக பரவிச் செல்லும்.  வெகுளாதே.

படைத்தலைவர்: இளவரசரின் கவலையிலும் பொருள் உள்ளது அரசே.  கட்டுக்கோப்பான படைகளை உருவாக்கிவிட்டு, யானைகளையும் குதிரைகளையும் ஈகையென கொடுத்து விட்டால், நாளை அந்நிய படையெடுப்பை எப்படி தடுத்தாள்வது?

அமைச்சர்2: நம் அரசரின் வள்ளல் குணம் நம் நாட்டின் பெருமை.  ஈகை குணத்தால் பயன் பெறும் மக்கள் நலன் உயர உயர அரசின் கோல் உயர்கிறது.  நாடும் உயர்கிறது படைத்தலைவரே.

இளங்குமணன்: இது பொருளற்ற தர்க்கம்.  நிலத்தையும், அரசையும் காப்பதற்கு உரமான படைகள் தேவை.  தமிழ் தனியே நின்று இந்த தரணியைக் காத்திடுமா.

குமணன்: அப்படியா எண்ணுகிறாய்?  (யோசித்தவாறே நடந்து) கேள் தம்பி!  இன்றிலிருந்து இந்நாட்டை நீ காப்பாயாக.  எம் தமிழ்ப் பாசம் உன்னைத் தடைப்படுத்தாது.  இதோ என் உடைவாள் இருக்கிறது.  அதோ உறைந்து வாழ காடும் இருக்கிறது.  இடறின்றி இந்நாட்டை நீயேக் காத்து இன்புற்றிரு. 

(குமணன் உடைவாளை உயர்த்திக் காட்டிக் கொண்டு வெளியேறுதல்)

அமைச்சர்1:  புதிய அரசர் இளங்குமணன் நீடுழி வாழ்க.

இளங்குமணன்:  அண்ணனை திருத்தவே வாதிட்டேன்.  ஆனால் இந்த அரசினை இனி ஏற்று நடத்தும் பொறுப்பில் என்னை அர்பணிக்கின்றேன்.

படைத்தலைவர்: ஆனாலும், இன்றும் குடிமக்கள் அனைவரும் வள்ளல் குமணனையே அரசர் என பாராட்டுவர் இளவரசே.  உங்கள் ஆட்சி பலவீனமாகவே இருக்கும்.

இளங்குமணன்: அதற்கு? (குழம்பியவாறு) என்ன செய்யலாம் என்கிறீர்கள்?

[திரை]

காட்சி 3:

(பாத்திரங்கள்:  அறிவிப்பாளன், ஆவூர் பெருந்தலை சாத்தனார், வள்ளல் குமணன்)

அறிவிப்பாளன்: இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால்… மன்னர் இளங்குமணனுக்கு எதிராக அவரது அண்ணன் குமணன் கலகம் செய்ய முற்படுவார் என்பதால், குமணனின் தலையைக் கொண்டு வருபவர்க்கு, நூறு இலட்சம் பொற்காசுகள் பரிசு.  (இடைவெளி விட்டு) குமணனின் தலையை கொண்டு வருபவர்க்கு மன்னரின் பரிசு நூறு இலட்சம் பொற்காசுகள்.

(சொல்லிக் கொண்டே இம்முனையிலிருந்து அம்முனைக்கு செல்ல, எதிரே ஆவூர் பெருந்தலை சாத்தனார் வருகிறார்)

சாத்தனார்: ஆகா! இதென்ன துயரம்.  வள்ளல் குமணனின் புகழைக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்தால், அவர் நாடிழந்து காட்டில் உறைய, இப்போது அவர் தலைக்கு விலை வேறு அறிவிக்கின்றார்களே.  பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.

(எதிரே வரும் குமணன், புலவரை நிறுத்தி)

குமணன்:  தாங்கள் யார்? அறிவுசால் பெருமை கொண்ட புலவர் பெருமான் போலிருக்கிறதே.

சாத்தனார்: வள்ளல் குமணனைக் கண்டு எம் குறையைப் போக்கிக் கொள்ள வந்த அபாக்கியசாலி.  ஆவூர் முலங்கிழாரின் மகன் பெருந்தலை சாத்தன்.

குமணன்: தமிழைக் கற்றுணர்ந்தவர் எவரும் துரதிர்ஷ்டசாலி இல்லை ஐயா.  செல்லுமிடமெங்கும் சிறப்புதான்.  இதோ உங்கள் துயர் தீர, இந்த உடைவாளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

(குமணன் நீட்டிய உடைவாளைப் பெற்ற சாத்தனார், குழப்பமாகப் பார்க்கிறார்)

குமணன்: குழப்பம் வேண்டாம் புலவரே.  இதோ என் தலை.  வாளால் கொய்து எடுத்துக் கொண்டு எம் இளவலிடம் கொண்டு சேருங்கள்.  நூறு இலட்சம் பொற்காசுகளும் உங்களுக்கே. 

(அவர் முன் மண்டியிட்டு அமர்கிறான்)

சாத்தனார்: (உடைவாளையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கின்றார்) இரந்தோர் அற்றம் தீர்க்கும் வள்ளல் குமணரே! நீர் வாழ்க! மன்னா! உம் ஈகைத்திறத்தை என்னவென சொல்ல.  தமிழுக்கு தன் தலையை ஈந்த தன்னிகரில்லா கொடை வள்ளல் நீ.  (ஒரு கையை நீட்டி அவன் தலையில் கைவைத்து) உன் பரிசினை ஏற்றுக் கொண்டேன்.  இதோ தமிழ், உன் தலையை வாங்கிக் கொண்டு விட்டது.  இனி உன் தலை என் பொறுப்பு. (சிரிக்கிறார்)

[திரை]

காட்சி 4:

(பாத்திரங்கள்:  இளங்குமணன், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர், ஆவூர் பெருந்தலை சாத்தனார்)

அமைச்சர்1: இளவர….. அரசே! இதோ ஒரு செய்தி.  (துயரத்துடன் நிறுத்திக் கொள்கிறார்)

அமைச்சர்2:  ஆமாம் அரசே.  ஒரு துர் செய்தி (அவரும் மேலும் சொல்லாமல் நிறுத்திக் கொள்கிறார்)

(சாத்தனார் தன் கையில் துணியால் மூடிவைத்த தட்டுடன் வருகிறார்.)

படைத்தலைவர்: நம் அறிவிப்பிற்கு பதிலாக இந்தப் புலவர் வந்திருக்கிறார்.  (நிறுத்தி விட்டு) தங்கள் தமையனாரின் தலையை வாங்கி விட்டாராம்.  சாட்சியாக... (மேலே எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொள்கிறார்)

(உடனே பதறிய இளங்குமணன், முன்னே வந்து, தட்டை உற்றுப் பார்க்கிறான்.  ஓரிரெண்டு நொடிகளுக்குப் பிறகும் பதற்றம் விலகாமல் தட்டின் மேலிருந்த துணியை விலக்க, உள்ளே குமணனின் உடைவாள் வைக்கப்பட்டிருக்கிறது.)

இளங்குமணன்: ஐயோ! இது என் தமையனின் உடைவாள்.  இதை அவர் பிரிந்திருந்ததே கிடையாது.  (சாத்தனாரை நிமிர்ந்து பார்த்து) யாரடா, நீ பரதேசி.  அஞ்சா நெஞ்சனும், பெரும் வீரனுமான வள்ளல் குமணனின் உடைவாள் உன்னிடம் எப்படி வந்தது?

சாத்தனார்: அவரே இந்த வாளை என்னிடம் கொடுத்து தன் தலையை வாங்கிக் கொள்ளச் சொன்னார் இளவரசே

இளங்குமணன்: அப்படியானால்… அப்படியானால்… நீ அண்ணனைக் கொன்று விட்டாயா?  (கோபமடைந்து) யாரங்கே… படைத்தலைவரே, இக்கொடுமையை நிகழ்த்திய இந்தப் பரதேசியை இப்போதே கைது செய்யுங்கள்.  இத்தகைய மாபாதகத்திற்கு உத்தரவிட்ட நானும் பெருங்குற்றவாளி.  இக்கணமே நானும் அண்ணனைத் தேடிச் செல்கிறேன்.

(தன் இடையிலிருந்த வாளை உருவ முயல, சாத்தனார் முன்னே வந்து ஒரு கையால் அவனை ஆற்றுப்படுத்துகிறார்)

சாத்தனார்:  இளவரசே! நான் பரதேசியல்ல.  பல தேசமும் சுற்றி வரும் எளிய தமிழ்ப்புலவன்.  நான் மன்னரது தலையை கொய்யவுமில்லை.  உங்கள் சகோதரப் பாசத்தை தொட்டெழுப்பும் திறவுகோலென இந்த உடைவாளை மட்டும் கொண்டு வந்தேன்.  நான் பயின்ற தமிழ் என்றும் தலையை காத்திருக்கிறதே அன்றி அழித்ததில்லை.  இதோ மன்னர் வருகிறார்.

(வள்ளல் குமணன் உள்ளே வருதல்)

குமணன்:  மன்னித்துக் கொள் இளையவனே.  [சாத்தனாரைச் சுட்டிக் காட்டி] தமிழ் என் தலையை வாங்கிக் கொண்டு விட்டதால், அது அழைக்கும் இடந்தோறும் நான் செல்ல வேண்டியிருக்கின்றது.  அதனால்தான் உன்னிடம் கொடுத்த வாக்கை மதிக்காமல் மீண்டும் நாட்டிற்கு வந்தேன். [சிரிக்கின்றான்]

இளங்குமணன்:  (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு குமணன் அருகில் சென்று மண்டியிட்டு) உங்கள் மாட்சிமை புரியாமல் உங்களுக்கு எதிராக வாதிட்டேன்.  கொடும் உத்தரவு பிறப்பித்தேன்.  இப்போது அனைத்தும் புரிந்தது அண்ணா.  தங்களுக்கு என்றும் நான் தொண்டன்.

(குமணன் குனிந்து இளங்குமணனை எழுப்பி அணைத்துக் கொள்ளுதல்)

குமணன்: வருந்தாதே! நாம் இருவரும் தமிழுக்குத் தொண்டர்கள்.  தமிழ் பயின்று அதன் வழி நிற்கும் சான்றோர்க்கும் தொண்டர்கள்.  அன்னை மொழி நம்மை என்றென்றும் வாழ்த்தி நிற்கும் தம்பி.

[திரை]

இறுதிக் காட்சி:

(பாத்திரங்கள்:  குமணன், இளங்குமணன், பெருன்சித்திரனார், பெருந்தலை சாத்தனார், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர், யானை பொறுப்பாளர், குதிரை பொறுப்பாளர், சிவிகைக்காரர், கருவூலத்தலைவர், அறிவிப்பாளர்)

(அனைவரும் ஒன்று கூடி வந்து நிற்க.  சாத்தனார் முன்னே வந்து)

சாத்தனார்: கார் கண்ட மயில் தோகை விரித்தது போல, நீர் பெற்று உயர்ந்து நிற்கும் நிறைவான நிலம் போல, முதிரமலை நாடு வள்ளல் குமணனைப் பெற்று வானுயர போற்றப்படும்.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •  

தமிழ்விடு தூது

(சிறார் இலக்கியம்: அமெரிக்காவில், ஆலன்டவுன் நகரில் உள்ள எங்கள் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கென, சங்கப் பாடல்களை மையம் வைத்து எழுதிய மூவங்க நாடகம். 23-ஏப்ரல்-2023ல் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. 

2023ம் ஆண்டின் சிறந்த அனுபவமாக, சிறார் நாடகம் ஒன்றை அரங்கேற்றியதைக் குறிப்பிடலாம். எங்கள் ஊர் தமிழ்ப்பள்ளியில் படிக்கும் சிறுவர்களைக் கொண்டு புறநானூற்று சித்திரம் ஒன்றை மூவங்க நாடகமாக சென்ற ஏப்ரல் மாதம் அரங்கேற்றினோம்.
நான்கு மாதங்களுக்கும் மேலாக அந்த நாடகத்திற்கான ஒத்திகை செய்தோம் என்றாலும், அந்தப் பளு தெரியாதவகையில், மாணாக்கர்கள் மிகச் சிறப்பான ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
தமிழ்ப்புலவர் ஔவைக்கும், தகடூர் அரசன் அதியமானுக்குமான நட்புறவு பற்றி புறநானூற்றில் அருமையான சித்திரம் ஒன்று கிடைக்கின்றது. இறவாவரம் கொண்ட அருங்கனியான நெல்லிக்கனியை அன்னைத் தமிழுக்கு ஈந்த கொடையையும் தாண்டி, ஔவை எனும் விறலியின் பெருமிதமும், கம்பீரமும் அந்தப் பாடல்களில் சிறப்பாக ஒளிர்கின்றன.
புறம் 206, தகடூர் அரண்மனையின் வாயிற்காப்போனிடம், கவிச்செருக்குடன், 'காவினம் கலனே! சுருக்கினம் கலப்பை! எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே' என்று பாடும் பாடல். அதில் தொடங்கி, புறம் 101, புறம் 91, புறம் 95 என்று பிற பாடல்களை கோத்து நாடகமாக உயிர்பெற்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களும், பெற்றோரும் மிகச் சிறப்பான ஒத்துழைப்பை நல்கினார்கள்.
நாடகம் மிகச் சிறப்பாகவே அரங்கேறியது. அதை யூட்யூபில் சேர்க்க இவ்வளவு காலம் காத்திருந்தேன். அயலகத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் இவ்வளவு இனிமையாக பைந்தமிழைப் பேசுவது என்பது மிக உவகையளிக்கும் அனுபவம். வசனங்களை சப்-டைட்டில்களாக வீடியோவில் சேர்த்து ஒலிகோப்பை சீர்படுத்தி இணைத்திருக்கிறேன். இன்னமும் சிறப்பான வீடியோ எடுத்திருக்கலாம். விழா கோலாகலத்தில் அதன் மீதான கவனம் சற்று பிந்திவிட்டது.

அடுத்த ஆண்டிற்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென ஒரு நாடகம் தயாரிக்கும் யோசனை இருக்கின்றது. இவ்வளவு ஆர்வமுள்ள அணி இருக்கும்போது நமக்கென்ன சுணக்கம்.)


தமிழ்விடு தூது (சங்கச் சித்திரம் பேசும் சிறார் நாடகம்)

காட்சி 1:

(பாத்திரங்கள்: ஔவையார், வாயில்காப்போன்1, வாயில்காப்போன்2, வாயில்காப்போன்3, வாயில்காப்போன்4)

காவல்காரர்கள் 3 பேரும் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

குரல்: வாயிலோயே! வாயிலோயே!

வா.கா.1: யாரோ உம்மை அழைக்கிறார்கள் போல.

வா.கா.2: இருமுறை கூப்பிட்டுவது போலிருக்கிறதே.  அப்படியானால் நம் இருவரையும்தான் அழைக்கிறார்கள் போல.

வா.கா.3: அப்படியானால் சரி.  என்னை யாரும் அழைக்கவில்லை. (நிம்மதியென கைகளைத் தூக்கிக் காட்டுகிறார்)

வா.கா.4: நான் வேண்டுமானால் உங்களை அழைக்கட்டுமா?

குரல் (மீண்டும்):  வாயிலோயே! வாயிலோயே!

வா.கா.1: ஏதோ பெண் குரல் போலிருக்கிறதே. 

வா.கா.2: குரலில் ஒலிக்கும் உறுதியும், இறுமாப்பும், ஏதோ தமிழ்ப்புலவர் போலிருக்கிறது.

வா.கா.3: கதவைச் சாத்துங்கள்! கதவைச் சாத்துங்கள்! புலவர்கள் என்றாலே எனக்கு சற்று பதட்டமாக ஆகி விடுகிறது.  நாம் இங்கே காய்ந்து கருகி காவல் காக்கிறோம் என்றால், இவர்கள் வெறும் வாயை வைத்துக் கொண்டு வித்தைக் காட்டி பிழைக்கிறார்கள்.

வா.கா.4: ஆமாம். ஆமாம்.

ஔவையார் அரங்கினுள் நுழைகிறார். காவல்காரகள் அமைதியாக இருக்கின்றார்.

ஔ:  வாயிலோயே! வாயிலோயே! செவிக்கு இனிய செய்யுள்களை யாத்து, கவிபுனைந்து பரிசு பெறும் புலவர்க்கு, மூடாத கதவுகள் தகடூர் அரண்மனையின் கதவுகள் என்பார். ஆனால் எனக்கு இவை மூடியே இருக்கின்றனவே. 

வா.கா.1: அது வந்து… அது வந்து….

வா.கா.2: அதுதான்…. அதுதான்…..

வா.கா.4: எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். 

வா.கா.3: உஷ்ஷ்ஷ்...! அரச உத்தரவு அன்னையே.  உங்களுக்கு…. இன்னும் அரச அழைப்பு வரவில்லை.

ஔ: (புரிந்து கொண்டவர் போல் தலையை ஆட்டிக் கொண்டு) அதியமானுக்கு தன் திறன் தெரியவில்லையா. அல்லது என் திறம் தெரியவில்லையா. 

வா.கா.3: அப்படியில்லை புலவரே.  அது அதற்கென ஒரு நேரம் வரவேண்டுமில்லையா.  நாட்டிற்கு முதன்மையாக படைகளும், பாதுகாப்பும் தேவை.  கலை இலக்கியம் எல்லாம் பொழுது போக்கத்தானே.  பொறுத்திருங்கள். பரிசில் கிடைக்காமலா போகும்

ஔ:  (சிரிக்கிறார்).  காடு திறந்திருக்கிறது காவலரே, தேடி வருபவர்க்கெல்லாம் மரம் ஒன்றைக் கொடுக்க.  இதோ, எம் யாழினை தூக்கினோம்.  செல்வோம் இப்போதே.  கற்றவர்க்கு எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே.

ஔவையார் அரங்கிலிருந்து வெளியேற முயல, அவரெதிரே அதியமான் வருதல்.

அதி: தவறு என்னுடையதுதான். தவறு என்னுடையதுதான். பரிசு பெற்றதும் தாங்கள் புறப்பட்டு விடுவீர்களே என, பொறுமைக் காத்தேன்.  தமிழ் இன்னமும் சிலகாலம் தகடூரில் தங்கியிருக்கட்டுமே அம்மா. அருள்கூர்ந்து நீங்கள் பொறுத்தருள வேண்டும்.

ஔ:  (மீண்டும் சிரிக்கிறார்). நானறியாததா மன்னா.  ஒரு நாளானாலும் சரி.  இரு நாட்களானாலும் சரி. பலநாட்களுக்கு பலருடன் வந்தாலும் சரி. உன் விருந்தோம்பல் முதல் நாள் போல என்றுமே சிறந்ததாகவே இருக்குமல்லவா.  காலம் தாழ்ந்தாலும், நீ கையளிக்கும் பரிசு எங்களுக்கு உறுதியானதுதானே.  மற்றவரும் புரிந்து கொள்ளட்டும் எனப் பாடினேன்.

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

வாயி லோயே! வாயிலோயே!
வாயி லோயே! வாயிலோயே!
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

(புறநானூறு: 206)

o0O0o

காட்சி 2:



(பாத்திரங்கள்: அதியமான், அமைச்சர்1, துணையமைச்சர்1, கருவூலத்தலைவர், ஔவையார்)

அமை1: கருவூலத் தலைவர் காத்திருக்கிறார். நீங்கள் அதிகம் கவலை கொள்ளாமல் ஆணையிடுங்கள்.  ஔவயாருக்கு உகந்த பரிசினை இப்போதே அளித்துவிடுவோம்.

அதி: ஔவையாருக்கு உகந்த பரிசு…. (சற்று நிதானித்து கருவூலக்காரரைப் பார்க்க)

கரு: பொன்னும் மணியும் புரவியும் பல்லக்கும் நிலமும் வீடும் ஆடைகளும் அணிகலன்களும் படையும் ஆட்களும் அனைத்தும் இருக்கின்றன.  உங்கள் உளவிருப்பத்தைச் சொன்னால் சித்தப்படுத்தி விடுகிறேன்.

அதி: ஓ! இதுதான் நீங்கள் ஔவையாருக்கு உகந்த பரிசென எண்ணியிருக்கிறீர்கள். இல்லையா.

ஔவையார் அரங்கினுள் நுழைகிறார்.

ஔ: வெற்றிகரமான வாளேந்தி, பகைவர்கள் அனைவரையும் போரில் வென்று, பொன் மாலை அணிந்து பொலிவுடன் திகழும் மன்னா, நீ வாழ்க!

அதி: (கையை முன்னால் நீட்டி) இந்த பரிசினை தமிழின் சார்பாக நீங்கள் ஏற்க வேண்டும். 

ஔவையார், அவன் கையிலிருந்த சிறிய நெல்லிக்கனியைப் பார்க்கிறார். சற்றும் தயங்காமல் அதைப் பெற்றுக் கொண்டு வாயில் போட்டுக் கொள்கிறார்.

ஔ: (மிகவும் மகிழ்ச்சியோடு) நீலநிற மணியை கழுத்தில் கொண்டது போலிருக்கும் அந்த சிவனைப் போல உன் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!

அதியமான் கரம் கூப்பி வணங்குகிறார். 

துஅமை1: அன்னையே, உங்களுக்கும் தகடூர் அரசருக்கும் உள்ள நட்புறவானது எங்கள் எளிய சிந்தையை எல்லாம் கடந்தது.  ஆனாலும் இப்போது…

அமை1: அட, அதிகப்பிரசங்கியே.

துஅமை1: இல்லை ஐயா.  சற்றுமுன்  கருவூலத் தலைவர் பட்டியலிட்டு சொன்ன பரிசில்கள் மதிப்பு அளப்பரியாதது.  இந்த சிறிய நெல்லிக்கனியை அரசர் ஔவைக்கு அளிப்பதும் அவர் அதற்கு வாழ்த்துவதும்… 

அமை1: நிறுத்தப்பா.

ஔ:  ஐயங்களை தெளிவதுதானே அமைச்சுப் பணி. தடுக்காதீர்கள் ஐயா. (பிறகு துணையமைச்சரின் பக்கம் திரும்பி) இதோ சொல்கிறேன்.  இத்தனை விலைமதிப்பற்ற பொருட்களைக் காட்டிலும், இந்த கனியை எனக்கு அளித்ததிலிருந்து புரியவில்லையா, இது ஓர் அருங்கனியாகத்தான் இருக்க வேண்டுமென.  பெறுவதற்கு அரியக் கனியை, பெருமுயற்சியுடன் பெற்ற அரசர், அதன் சிறப்பைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லாமலே, அன்னைத் தமிழுக்கே அது உகந்த பரிசென அளித்ததில் இருக்கிறது அவருடைய கொடை உள்ளத்தின் உச்சம்.

அதி: நாடும் நிலமும் கோலோச்சும் அரசனும் அவன் புகழும் காலத்தோடு மறைபவை.  ஆனால் மொழியும், இலக்கியமும் காலம் கடந்து வாழ்பவை.  அன்னைத் தமிழாகிய நீங்கள் நீண்டு வாழ்ந்தால், உங்கள் சொற்களில் நானும் நீண்டு வாழ்வேனம்மா.

ஔ: நன்று சொன்னீர்கள்!  நன்று சொன்னீர்கள்! தமிழ் இனி ஓரிடம் தங்காமல் செல்லட்டும் எண் திசையும்.  தமிழுக்கு எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே.

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்ஆ காதே;

(புறநானூறு: 101)

o0O0o

 காட்சி 3:

(பாத்திரங்கள்: தொண்டைமான், ஔவையார், அமைச்சர்2, துணையமைச்சர்2)

தொ: புதிய படைக்கலன்கள் எல்லாம் வந்துவிட்டனவா அமைச்சரே? கூரிய வேல்கள், விரைவு அம்புகள், பொலிந்த வாட்கள்…

அமை2: ஆம்.  நன்கு பெரிய் பிடிகளுடன், எண்ணெய் பளபளப்புடன் படைக்கலன்கள் பொலிகின்றன. 

துஅமை2: (சற்று முன்வந்து) இப்போது படைப்புக்கடவுள் ஒருவரும் உங்களைத் தேடி வந்திருக்கிறார்.  ஔவையார் எனும் தமிழ்ப்புலவர்.

தொ: ஓ! ஔவையாரா.  அவர் அதியமானின் அவைக் கவிஞராயிற்றே.

அமை2:  ஆமாம்.  தகடூர் மீது படையெடுக்க வேண்டாம் என சமாதான தூது செய்தியுடன் அனுப்பியிருக்கிறார்களோ.

துஅமை2:  நாம் திரட்டியிருக்கும் படைபலத்தையும், கருவிகளையும் கண்டு பயந்துவிட்டிருப்பார்கள்.

தொ: ஆகா.  அரசர் ஆணைகளுக்கு புலவர்கள் தூதா.  புதியதாக இருக்கிறதே. அழைத்து வாருங்கள்.  என்ன சொல்கிறாரெனப் பார்ப்போம்.

ஔவையார் அரங்குள் நுழைகிறார்.

ஔ:  வாழிய மன்னா! வாழ்க நின் கொற்றம்!

தொ: தமிழைப் போற்ற, இந்த தொண்டைமான் என்றும் தயங்கியதேயில்லை அம்மா.  வணக்கம்!

ஔ: மகிழ்ச்சி.  இப்போதுதான் உன் படைக்கல அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.  அல்லது அப்படி நான் பார்க்க வேண்டுமென்பது உன் அமைச்சரின் எண்ணமாக இருக்கும். (சிரிக்கிறார்)

தொ: (புன்முறுவல் செய்தபடி) அப்படியெல்லாம் இல்லை.  இன்று புதியதாக வந்தவை அவை.  இன்னமும் முறையாக அடுக்கப்பட்டு படைவீடுகளுக்கு அனுப்பி, சிறப்பாக அணிவகுப்பில் சேர்க்க வேண்டும்.

ஔ:  ஆமாம்.  மயிலிறகு சூட்டி, மெருகு குன்றாமல் ஒளிர்கின்றன அனைத்தும்.  கண்ணைப் பறிக்கின்றன.

தொ: (பெருமையுடன்) ஆமாம். நாங்கள் வெகு சிரத்தையுடன் படைக்கலங்களை பராமரிப்போம்.  உங்கள் தகடூரில் அப்படி செய்வதில்லைப் போல.

ஔ:  அங்கே, இவ்வளவு பராமரிப்புகளுக்கு எங்கே நேரம்?  எப்போதும் போரிலேயே இருந்து கொண்டிருக்கும் வீரர்களின் வேல்கள், பகைவர்களைக் குத்தி, நுனி சிதைந்தும் முறிந்து,  கொல்லன் பட்டறைகளில் கிடக்கின்றன.  சீர்படுத்தியதும் அடுத்த போருக்கு கிளம்பிவிடுவார்கள்.  எப்போதும் போர்களிலே நேரங்கழிக்கும் அவர்களுக்க், படைக்கலன்களை அழகுபடுத்தி, மாலை சூட்டி அணிவகுப்புகளில் வைத்துப் பார்க்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

அமை2: இதென்ன பேச்சு? போர்த்தொழிலில் சிறந்தவர் அதியமான் என்பது போலல்லவா சொல்கிறீர்கள்?

துஅமை2: நீங்கள் நின்று கொண்டிருப்பது தொண்டைமானின் அவை என்பது நினைவில் இருக்கட்டும் புலவரே.

ஔ: போரில் மட்டுமல்ல.  தன்னிடம் பொருள் இருந்தால், மற்றவர்க்கு உணவளித்துவிட்டு தான் உண்பான்.  பொருள் இல்லையென்றல் தன் உணவையே பிறருக்கு அளித்துவிடும் ஈகைக் குணத்திலும் அதியமான் ஒப்புயர்வற்றவன்.

தொ: (பெரியதாக சிரித்து) கற்றோரின் சொற்திறம், எம் போர்த்திறம் விட சிறந்தது எனப் புரிந்து கொண்டேன்.  தமிழ் போற்றும், தமிழ்ப்புலவர் போற்றும் தகடூர் மன்னன் மீது போர்த்தொடுக்கும் எண்ணம் என் மனதை விட்டு நீங்கியது.  கவிச்சொல்லை விட பெருஞ்சொல் வேறு உண்டா?

ஔ: இதோ என் யாழை தூக்கிக் கொண்டேன்.  தமிழை துணையாக்கிக் கொண்டேன்.  செல்வேன் எத்திசையும்.  எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே.

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடியுடை வியனக சவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எங் கோமான் வைந்துதி வேலே

(புறநானூறு: 95)

o0O0o

இறுதிக்காட்சி:

அனைவரும் திரண்டு வந்து நிற்க, அதியமான் கூற்றுடன் நிறைவடைகிறது)

அதி: தமிழுக்கென ஒரு கனி ஈந்தேன்.  தமிழ் எனக்கு மங்காப் புகழை பதில் அளித்தது.  அன்னைத் தமிழுக்கு என்றென்றும் எம் வணக்கம். 

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

நீல மணிமிடற்றொருவன் போல்
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் திங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே!

(புறநானூறு: 91)

o0O0o



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •