நிழலெனத் தொடரும் மொழி
எங்களூர் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது. தமிழ்ப் பள்ளியென்றால், எங்களூர் கோவிலின் ஞாயிறு வகுப்புகளின் ஓர் இணைப்பு வகுப்பாக நடக்கும் பள்ளி.
அதில் ஒரு நிகழ்ச்சியாக, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், பரிபாடல், நாலடியார் என்று நீதி நூல்களின் தொகுப்பிலிருந்து சில பகுதிகளை தமிழிலும், ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் குழந்தைகள் சொன்னார்கள். பெற்றோர் முகங்களில் பெரும் பரவசம் குடிகொண்டதைக் காண முடிந்தது. எத்திசை சென்றாலும், அத்திசையில் கற்பவர்க்கென ஒரு சபை இருக்க வேண்டும். அதுவும் தாய்மொழி சார்ந்ததாக இருப்பின் அது அடுத்த தலைமுறையின் சிந்தையை நெறிமுறைப்படுத்த மிகவும் அவசியமானது.
"ஆத்தி (மலரைச்) சூடிய" சிவன் அல்லது பார்சுவநாத தீர்த்தரங்கரை வணங்கி கல்வி நூலை எழுதினார் ஔவையார் என்பார்கள் மொழி அறிஞர்கள். கொன்றை மலரும் சிவபெருமானுக்கு உரித்தானது. அதனால் அந்த நூலுக்கு தலைப்பு கொன்றை வேந்தன்.
இவ்வகையிலான அரிச்சுவடி முதலிருந்தே கல்வி ஒழுக்கம் பாடும் நீதி நூல்கள் தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.
தமிழ்ப்பள்ளிக்கான நிகழ்வு என்பதால், இப்படியானதொரு முன்னுரையுடன் தொடங்கவில்லை. தாய்மொழி வழி சிந்தையைப் பற்றி பொதுவான புள்ளிகளாக மூன்று விஷயங்களைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
கலாச்சார தொடர்ச்சி
தாய்மொழி என்பது நம்முடைய கலாச்சார பின்னணியின் ஒரு முக்கிய கண்ணி. இங்கே குழுமியிருக்கும் ஆசிரிய பெருமக்கள், தன்னார்வலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்று பலரும் இங்கே குடியேறிய முதல் தலைமுறை தமிழர்களாக இருக்கும் வாய்ப்புண்டு. நானும் அப்படித்தான். என்னுடைய கல்விப் பாடங்களை நான் ஆங்கில மொழி வழியாகக் கற்றிருந்தாலும், என்னுடைய வளர்ப்பு சூழ்நிலை முழுவதுமாக தமிழ்மொழி சார்ந்தது. என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் படித்த பல புத்தகங்கள் என் சிந்தையை செழுமைப்படுத்த உதவின. அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியில் அமைந்தவை. யாக்கோவ் பெரில்மென் (Yakov Perleman) எனும் ரஷிய அறிவியலாளரின் இயற்பியல் பாடம் பற்றிய ஒரு நூலை நான் தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்க நேர்ந்தது. நாம் பள்ளியில் படிக்கும் இயற்பியல் பாடம்தான். ஆனால் அதை யாகோவ்வின் சரளமான கூறல்முறையில், தமிழில் படிக்கும்போது எனக்கு எழுந்த ஆனந்தம் அளவிட முடியாதது. நமது சிந்தை முறையில், நம் தாய்மொழியின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்கது. அதன் வழியே நாம் ஒரு கலாச்சார பின்னணியை, அதன் தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்கிறோம். இன்றைய அறிவியலிலும், தொழில்நுட்பங்களிலும், பிரபஞ்சவியலில் மனிதர்கள் நிகழ்த்தியிருக்கும் பெரும் பாய்ச்சலிலும், நம்முடைய மொழியும் அதன் கலாச்சாரமும் நம்மை சிறு நிழலெனத் தொடர்ந்து வருகிறது.
இன்று இங்கிருக்கும் அடுத்த தலைமுறை மாணவர்கள் பலரும் தங்களுடைய வளர்ச்சிப் பாதையின் ஓரிடத்தில் தங்கள் மொழிசார்ந்த கலாச்சார பின்னணி பற்றிய ஒரு தேடல் முளைத்தெழும். அவர்கள் திரும்பிப் பார்க்கும் தருவாயில், இந்தப் பாதை சான்றோர் செறிந்த பாதையாக நிலைத்திருக்கும் வகையில் காப்பது நமது பொறுப்பாகிறது.
இன்னமும் இருபது முப்பது ஆண்டுகளில், அந்நிய மண்ணிற்கு புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம் தலைமுறையினர் தங்கள் அடுத்த தலைமுறைக்கு, தாய்மொழியின் இன்றியமையாமைப் பற்றியும் சிறப்புப் பற்றியும் பாடம் எடுப்பார்கள் என்றால் நான் வியப்படைய மாட்டேன். நமது தாய்மொழியான தமிழ், இரண்டாயிரம் ஆண்டுகளாக அப்படித்தான் ஒவ்வொரு தலைமுறையினர் வழியே கடந்து வந்திருக்கிறது. நாம் மொழியை கற்கத்தான் செய்கின்றோம். ஆனால் மொழி நம்மை தலைமுறைகள் கடந்து கலாச்சார சங்கிலித்தொடரென இணைத்து நிறுத்தியிருக்கின்றது.
இலக்கிய நுகர்ச்சி
ஒரு புத்தக பரிச்சயம் உங்களிடையே நிகழ்த்துவது ஒரு ரசாயன மாற்றம். அது உங்களை அப்புத்தகத்தின் பிரதியாக்குகிறது, ஓரளவிற்கு. பிறகு உங்கள் போக்கில் அப்புத்தகம் உண்டாக்கிய தாக்கம், பிறிதொரு நகலாக, மற்றுமொரு புத்தகத்திற்கான தன்மையில் விரிவடையச் செய்கிறது. இலக்கிய நுகர்ச்சி அப்படித்தான். தமிழ்மொழியின் இலக்கிய செழுமை அபாரமானது. பொயுமு 2ம் நூற்றாண்டு சார்ந்த சங்க இலக்கியங்கள், பிறகு எட்டாம் நூற்றாண்டில் பெரும் இயக்கமாக உருவான பக்தி இலக்கியம், பிறகு பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி கண்ட, கம்பராமாயணம் முதலான பெரும் இலக்கிய செயல்பாடுகள், பிறகு 18ம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் பெஸ்கி போன்ற உலக அறிஞர்கள் தமிழிற்காக தங்களை ஒப்புக் கொடுத்து இலக்கிய பேணிய வரலாறு, என்று தொய்வில்லா தொடர்ச்சி கொண்ட மொழி. இலக்கியத்தின் அறிமுகம் மனிதனின் ஆன்மாவிற்கு உரமேற்றக் கூடியது. ஒரு கவிதை வரி கொண்டு தன் இலட்சியத் தேடலை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். ஓர் இலக்கிய பாடலையோ, அல்லது மரபார்ந்த செய்யுளோ உங்களை ஆசுவாசப்படுத்தி, முறையான திக்கை நோக்கி உங்கள் பார்வையைத் திருப்ப வல்லது.
பென்சில்வேனியா புத்தக கிளப்கள் போன்ற வாசிப்புக் குழுக்கள் அப்படியான நூல்களைப் பற்றிய பரிச்சயம் ஒன்றை உண்டாக்குகின்றன. நூல்களுடனான நெருக்கத்தை உண்டாக்குகின்றன. புத்தகங்களின் வீச்சையும் தீர்க்கத்தையும் கண்டறிய உதவுகின்றன.
கல்வி ஒழுக்கம்
கல்வி ஒழுக்கத்தின் அரிச்சுவடியை மொழிப்பாடத்திலிருந்து தொடங்கிய ஔவையைப் பற்றிப் பார்த்தோம். அதையே, புதியப் பொலிவோடு, இருபதாம் நூற்றாண்டில் பாரதி, 'புதிய ஆத்திசூடி'யெனப் பாடுகிறார்.
ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
என்று, நூல்களின் மரபுக்கேற்றபடி கடவுள் வாழ்த்தை, அனைத்து மதங்களும் உள்ளடக்கிய நெடும் வாழ்த்தாக பாடியதோடு நிறுத்தாமல்,
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
அனைத்து நிலையிலும் ஒளிபொருந்திய அறிவைக் கொண்டோர், அல்லல்களை அகற்றினார் என்று போற்றி, அத்தகைய அறிவின் அருள் கொண்டு அமரத்துவம் நிறைந்த வாழ்வை அடைவோம் என்கிறார் பாரதி.
மறத்தைப் போதித்த மொழி, அறத்தின் வழிநின்ற மொழி, பக்தி மார்க்கத்தில் பக்குவப்படுத்திய மொழி, பாரதியின் சொற்கள் வழியே அறிவுச்சுடரென வழிகாட்டியாக நிற்கிறது இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்.
உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.