Reading view

நிழலெனத் தொடரும் மொழி

(எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா (ஜூன் 15ம் தேதி, 2024) கொண்டாட்டத்தில் நான் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம்)

முதலில், இந்த மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், மாணவச் செல்வங்களின் பெற்றோர்களுக்கும், மற்றும் தமிழ்ப்பள்ளியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் முக்கியமாக, தமிழ் கற்கும் ஆர்வத்துடன் இங்கு வந்துள்ள மாணவ மாணவிகளுக்கு எனது வணக்கங்கள். அவர்களை, இவ்வகை விழாக்களின் வேடிக்கை விநோதங்கள் பெருமளவில் ஈர்க்கலாம்.  ஆனால் அவற்றில் முதன்மையாக தமிழ் மொழியும் ஓர் ஈர்ப்பான அம்சமாக இருக்கிறது என்பது நமக்கு மகிழ்ச்சி தருவது.  இங்கிருக்கும் அனைவரையும் இணைக்கும் அடிசரடாக தமிழ் இருக்கின்றது.



 எங்களூர் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது.  தமிழ்ப் பள்ளியென்றால், எங்களூர் கோவிலின் ஞாயிறு வகுப்புகளின் ஓர் இணைப்பு வகுப்பாக நடக்கும் பள்ளி.  

அதில் ஒரு நிகழ்ச்சியாக, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், பரிபாடல், நாலடியார் என்று நீதி நூல்களின் தொகுப்பிலிருந்து சில பகுதிகளை தமிழிலும், ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் குழந்தைகள் சொன்னார்கள்.  பெற்றோர் முகங்களில் பெரும் பரவசம் குடிகொண்டதைக் காண முடிந்தது.  எத்திசை சென்றாலும், அத்திசையில் கற்பவர்க்கென ஒரு சபை இருக்க வேண்டும்.  அதுவும் தாய்மொழி சார்ந்ததாக இருப்பின் அது அடுத்த தலைமுறையின் சிந்தையை நெறிமுறைப்படுத்த மிகவும் அவசியமானது.  

"ஆத்தி (மலரைச்) சூடிய" சிவன் அல்லது பார்சுவநாத தீர்த்தரங்கரை வணங்கி கல்வி நூலை எழுதினார் ஔவையார் என்பார்கள் மொழி அறிஞர்கள்.  கொன்றை மலரும் சிவபெருமானுக்கு உரித்தானது.  அதனால் அந்த நூலுக்கு தலைப்பு கொன்றை வேந்தன்.

இவ்வகையிலான அரிச்சுவடி முதலிருந்தே கல்வி ஒழுக்கம் பாடும் நீதி நூல்கள் தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.  

தமிழ்ப்பள்ளிக்கான நிகழ்வு என்பதால், இப்படியானதொரு முன்னுரையுடன் தொடங்கவில்லை.  தாய்மொழி வழி சிந்தையைப் பற்றி பொதுவான புள்ளிகளாக மூன்று விஷயங்களைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

கலாச்சார தொடர்ச்சி

தாய்மொழி என்பது நம்முடைய கலாச்சார பின்னணியின் ஒரு முக்கிய கண்ணி.  இங்கே குழுமியிருக்கும் ஆசிரிய பெருமக்கள், தன்னார்வலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்று பலரும் இங்கே குடியேறிய முதல் தலைமுறை தமிழர்களாக இருக்கும் வாய்ப்புண்டு.  நானும் அப்படித்தான்.  என்னுடைய கல்விப் பாடங்களை நான் ஆங்கில மொழி வழியாகக் கற்றிருந்தாலும், என்னுடைய வளர்ப்பு சூழ்நிலை முழுவதுமாக தமிழ்மொழி சார்ந்தது.  என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் படித்த பல புத்தகங்கள் என் சிந்தையை செழுமைப்படுத்த உதவின.  அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியில் அமைந்தவை.  யாக்கோவ் பெரில்மென் (Yakov Perleman) எனும் ரஷிய அறிவியலாளரின் இயற்பியல் பாடம் பற்றிய ஒரு நூலை நான் தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்க நேர்ந்தது.  நாம் பள்ளியில் படிக்கும் இயற்பியல் பாடம்தான்.  ஆனால் அதை யாகோவ்வின் சரளமான கூறல்முறையில், தமிழில் படிக்கும்போது எனக்கு எழுந்த ஆனந்தம் அளவிட முடியாதது. நமது சிந்தை முறையில், நம் தாய்மொழியின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்கது.  அதன் வழியே நாம் ஒரு கலாச்சார பின்னணியை, அதன் தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்கிறோம்.  இன்றைய அறிவியலிலும், தொழில்நுட்பங்களிலும், பிரபஞ்சவியலில் மனிதர்கள் நிகழ்த்தியிருக்கும் பெரும் பாய்ச்சலிலும், நம்முடைய மொழியும் அதன் கலாச்சாரமும் நம்மை சிறு நிழலெனத் தொடர்ந்து வருகிறது.  

இன்று இங்கிருக்கும் அடுத்த தலைமுறை மாணவர்கள் பலரும் தங்களுடைய வளர்ச்சிப் பாதையின் ஓரிடத்தில் தங்கள் மொழிசார்ந்த கலாச்சார பின்னணி பற்றிய ஒரு தேடல் முளைத்தெழும்.  அவர்கள் திரும்பிப் பார்க்கும் தருவாயில், இந்தப் பாதை சான்றோர் செறிந்த பாதையாக நிலைத்திருக்கும் வகையில் காப்பது நமது பொறுப்பாகிறது.  

இன்னமும் இருபது முப்பது ஆண்டுகளில், அந்நிய மண்ணிற்கு புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம் தலைமுறையினர் தங்கள் அடுத்த தலைமுறைக்கு, தாய்மொழியின் இன்றியமையாமைப் பற்றியும் சிறப்புப் பற்றியும் பாடம் எடுப்பார்கள் என்றால் நான் வியப்படைய மாட்டேன்.  நமது தாய்மொழியான தமிழ், இரண்டாயிரம் ஆண்டுகளாக அப்படித்தான் ஒவ்வொரு தலைமுறையினர் வழியே கடந்து வந்திருக்கிறது.  நாம் மொழியை கற்கத்தான் செய்கின்றோம்.  ஆனால் மொழி நம்மை தலைமுறைகள் கடந்து கலாச்சார சங்கிலித்தொடரென இணைத்து நிறுத்தியிருக்கின்றது.  

இலக்கிய நுகர்ச்சி

ஒரு புத்தக பரிச்சயம் உங்களிடையே நிகழ்த்துவது ஒரு ரசாயன மாற்றம்.  அது உங்களை அப்புத்தகத்தின் பிரதியாக்குகிறது, ஓரளவிற்கு.  பிறகு உங்கள் போக்கில் அப்புத்தகம் உண்டாக்கிய தாக்கம், பிறிதொரு நகலாக, மற்றுமொரு புத்தகத்திற்கான தன்மையில் விரிவடையச் செய்கிறது.  இலக்கிய நுகர்ச்சி அப்படித்தான்.  தமிழ்மொழியின் இலக்கிய செழுமை அபாரமானது.  பொயுமு 2ம் நூற்றாண்டு சார்ந்த சங்க இலக்கியங்கள், பிறகு எட்டாம் நூற்றாண்டில் பெரும் இயக்கமாக உருவான பக்தி இலக்கியம், பிறகு பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி கண்ட, கம்பராமாயணம் முதலான பெரும் இலக்கிய செயல்பாடுகள், பிறகு 18ம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் பெஸ்கி போன்ற உலக அறிஞர்கள் தமிழிற்காக தங்களை ஒப்புக் கொடுத்து இலக்கிய பேணிய வரலாறு, என்று தொய்வில்லா தொடர்ச்சி கொண்ட மொழி.  இலக்கியத்தின் அறிமுகம் மனிதனின் ஆன்மாவிற்கு உரமேற்றக் கூடியது.   ஒரு கவிதை வரி கொண்டு தன் இலட்சியத் தேடலை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.   ஓர் இலக்கிய பாடலையோ, அல்லது மரபார்ந்த செய்யுளோ உங்களை ஆசுவாசப்படுத்தி, முறையான திக்கை நோக்கி உங்கள் பார்வையைத் திருப்ப வல்லது.

பென்சில்வேனியா புத்தக கிளப்கள் போன்ற வாசிப்புக் குழுக்கள் அப்படியான நூல்களைப் பற்றிய பரிச்சயம் ஒன்றை உண்டாக்குகின்றன.  நூல்களுடனான நெருக்கத்தை உண்டாக்குகின்றன.  புத்தகங்களின் வீச்சையும் தீர்க்கத்தையும் கண்டறிய உதவுகின்றன.  

கல்வி ஒழுக்கம்

கல்வி ஒழுக்கத்தின் அரிச்சுவடியை மொழிப்பாடத்திலிருந்து தொடங்கிய ஔவையைப் பற்றிப் பார்த்தோம்.  அதையே, புதியப் பொலிவோடு, இருபதாம் நூற்றாண்டில் பாரதி, 'புதிய ஆத்திசூடி'யெனப் பாடுகிறார்.  

ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;

கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;

மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;

ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

என்று, நூல்களின் மரபுக்கேற்றபடி கடவுள் வாழ்த்தை, அனைத்து மதங்களும் உள்ளடக்கிய நெடும் வாழ்த்தாக பாடியதோடு நிறுத்தாமல்,

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

அனைத்து நிலையிலும் ஒளிபொருந்திய அறிவைக் கொண்டோர், அல்லல்களை அகற்றினார் என்று போற்றி, அத்தகைய அறிவின் அருள் கொண்டு அமரத்துவம் நிறைந்த வாழ்வை அடைவோம் என்கிறார் பாரதி.

 மறத்தைப் போதித்த மொழி, அறத்தின் வழிநின்ற மொழி, பக்தி மார்க்கத்தில் பக்குவப்படுத்திய மொழி, பாரதியின் சொற்கள் வழியே அறிவுச்சுடரென வழிகாட்டியாக நிற்கிறது இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •  

தமிழ்விடு தூது

(சிறார் இலக்கியம்: அமெரிக்காவில், ஆலன்டவுன் நகரில் உள்ள எங்கள் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கென, சங்கப் பாடல்களை மையம் வைத்து எழுதிய மூவங்க நாடகம். 23-ஏப்ரல்-2023ல் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. 

2023ம் ஆண்டின் சிறந்த அனுபவமாக, சிறார் நாடகம் ஒன்றை அரங்கேற்றியதைக் குறிப்பிடலாம். எங்கள் ஊர் தமிழ்ப்பள்ளியில் படிக்கும் சிறுவர்களைக் கொண்டு புறநானூற்று சித்திரம் ஒன்றை மூவங்க நாடகமாக சென்ற ஏப்ரல் மாதம் அரங்கேற்றினோம்.
நான்கு மாதங்களுக்கும் மேலாக அந்த நாடகத்திற்கான ஒத்திகை செய்தோம் என்றாலும், அந்தப் பளு தெரியாதவகையில், மாணாக்கர்கள் மிகச் சிறப்பான ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
தமிழ்ப்புலவர் ஔவைக்கும், தகடூர் அரசன் அதியமானுக்குமான நட்புறவு பற்றி புறநானூற்றில் அருமையான சித்திரம் ஒன்று கிடைக்கின்றது. இறவாவரம் கொண்ட அருங்கனியான நெல்லிக்கனியை அன்னைத் தமிழுக்கு ஈந்த கொடையையும் தாண்டி, ஔவை எனும் விறலியின் பெருமிதமும், கம்பீரமும் அந்தப் பாடல்களில் சிறப்பாக ஒளிர்கின்றன.
புறம் 206, தகடூர் அரண்மனையின் வாயிற்காப்போனிடம், கவிச்செருக்குடன், 'காவினம் கலனே! சுருக்கினம் கலப்பை! எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே' என்று பாடும் பாடல். அதில் தொடங்கி, புறம் 101, புறம் 91, புறம் 95 என்று பிற பாடல்களை கோத்து நாடகமாக உயிர்பெற்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களும், பெற்றோரும் மிகச் சிறப்பான ஒத்துழைப்பை நல்கினார்கள்.
நாடகம் மிகச் சிறப்பாகவே அரங்கேறியது. அதை யூட்யூபில் சேர்க்க இவ்வளவு காலம் காத்திருந்தேன். அயலகத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் இவ்வளவு இனிமையாக பைந்தமிழைப் பேசுவது என்பது மிக உவகையளிக்கும் அனுபவம். வசனங்களை சப்-டைட்டில்களாக வீடியோவில் சேர்த்து ஒலிகோப்பை சீர்படுத்தி இணைத்திருக்கிறேன். இன்னமும் சிறப்பான வீடியோ எடுத்திருக்கலாம். விழா கோலாகலத்தில் அதன் மீதான கவனம் சற்று பிந்திவிட்டது.

அடுத்த ஆண்டிற்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென ஒரு நாடகம் தயாரிக்கும் யோசனை இருக்கின்றது. இவ்வளவு ஆர்வமுள்ள அணி இருக்கும்போது நமக்கென்ன சுணக்கம்.)


தமிழ்விடு தூது (சங்கச் சித்திரம் பேசும் சிறார் நாடகம்)

காட்சி 1:

(பாத்திரங்கள்: ஔவையார், வாயில்காப்போன்1, வாயில்காப்போன்2, வாயில்காப்போன்3, வாயில்காப்போன்4)

காவல்காரர்கள் 3 பேரும் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

குரல்: வாயிலோயே! வாயிலோயே!

வா.கா.1: யாரோ உம்மை அழைக்கிறார்கள் போல.

வா.கா.2: இருமுறை கூப்பிட்டுவது போலிருக்கிறதே.  அப்படியானால் நம் இருவரையும்தான் அழைக்கிறார்கள் போல.

வா.கா.3: அப்படியானால் சரி.  என்னை யாரும் அழைக்கவில்லை. (நிம்மதியென கைகளைத் தூக்கிக் காட்டுகிறார்)

வா.கா.4: நான் வேண்டுமானால் உங்களை அழைக்கட்டுமா?

குரல் (மீண்டும்):  வாயிலோயே! வாயிலோயே!

வா.கா.1: ஏதோ பெண் குரல் போலிருக்கிறதே. 

வா.கா.2: குரலில் ஒலிக்கும் உறுதியும், இறுமாப்பும், ஏதோ தமிழ்ப்புலவர் போலிருக்கிறது.

வா.கா.3: கதவைச் சாத்துங்கள்! கதவைச் சாத்துங்கள்! புலவர்கள் என்றாலே எனக்கு சற்று பதட்டமாக ஆகி விடுகிறது.  நாம் இங்கே காய்ந்து கருகி காவல் காக்கிறோம் என்றால், இவர்கள் வெறும் வாயை வைத்துக் கொண்டு வித்தைக் காட்டி பிழைக்கிறார்கள்.

வா.கா.4: ஆமாம். ஆமாம்.

ஔவையார் அரங்கினுள் நுழைகிறார். காவல்காரகள் அமைதியாக இருக்கின்றார்.

ஔ:  வாயிலோயே! வாயிலோயே! செவிக்கு இனிய செய்யுள்களை யாத்து, கவிபுனைந்து பரிசு பெறும் புலவர்க்கு, மூடாத கதவுகள் தகடூர் அரண்மனையின் கதவுகள் என்பார். ஆனால் எனக்கு இவை மூடியே இருக்கின்றனவே. 

வா.கா.1: அது வந்து… அது வந்து….

வா.கா.2: அதுதான்…. அதுதான்…..

வா.கா.4: எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். 

வா.கா.3: உஷ்ஷ்ஷ்...! அரச உத்தரவு அன்னையே.  உங்களுக்கு…. இன்னும் அரச அழைப்பு வரவில்லை.

ஔ: (புரிந்து கொண்டவர் போல் தலையை ஆட்டிக் கொண்டு) அதியமானுக்கு தன் திறன் தெரியவில்லையா. அல்லது என் திறம் தெரியவில்லையா. 

வா.கா.3: அப்படியில்லை புலவரே.  அது அதற்கென ஒரு நேரம் வரவேண்டுமில்லையா.  நாட்டிற்கு முதன்மையாக படைகளும், பாதுகாப்பும் தேவை.  கலை இலக்கியம் எல்லாம் பொழுது போக்கத்தானே.  பொறுத்திருங்கள். பரிசில் கிடைக்காமலா போகும்

ஔ:  (சிரிக்கிறார்).  காடு திறந்திருக்கிறது காவலரே, தேடி வருபவர்க்கெல்லாம் மரம் ஒன்றைக் கொடுக்க.  இதோ, எம் யாழினை தூக்கினோம்.  செல்வோம் இப்போதே.  கற்றவர்க்கு எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே.

ஔவையார் அரங்கிலிருந்து வெளியேற முயல, அவரெதிரே அதியமான் வருதல்.

அதி: தவறு என்னுடையதுதான். தவறு என்னுடையதுதான். பரிசு பெற்றதும் தாங்கள் புறப்பட்டு விடுவீர்களே என, பொறுமைக் காத்தேன்.  தமிழ் இன்னமும் சிலகாலம் தகடூரில் தங்கியிருக்கட்டுமே அம்மா. அருள்கூர்ந்து நீங்கள் பொறுத்தருள வேண்டும்.

ஔ:  (மீண்டும் சிரிக்கிறார்). நானறியாததா மன்னா.  ஒரு நாளானாலும் சரி.  இரு நாட்களானாலும் சரி. பலநாட்களுக்கு பலருடன் வந்தாலும் சரி. உன் விருந்தோம்பல் முதல் நாள் போல என்றுமே சிறந்ததாகவே இருக்குமல்லவா.  காலம் தாழ்ந்தாலும், நீ கையளிக்கும் பரிசு எங்களுக்கு உறுதியானதுதானே.  மற்றவரும் புரிந்து கொள்ளட்டும் எனப் பாடினேன்.

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

வாயி லோயே! வாயிலோயே!
வாயி லோயே! வாயிலோயே!
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

(புறநானூறு: 206)

o0O0o

காட்சி 2:



(பாத்திரங்கள்: அதியமான், அமைச்சர்1, துணையமைச்சர்1, கருவூலத்தலைவர், ஔவையார்)

அமை1: கருவூலத் தலைவர் காத்திருக்கிறார். நீங்கள் அதிகம் கவலை கொள்ளாமல் ஆணையிடுங்கள்.  ஔவயாருக்கு உகந்த பரிசினை இப்போதே அளித்துவிடுவோம்.

அதி: ஔவையாருக்கு உகந்த பரிசு…. (சற்று நிதானித்து கருவூலக்காரரைப் பார்க்க)

கரு: பொன்னும் மணியும் புரவியும் பல்லக்கும் நிலமும் வீடும் ஆடைகளும் அணிகலன்களும் படையும் ஆட்களும் அனைத்தும் இருக்கின்றன.  உங்கள் உளவிருப்பத்தைச் சொன்னால் சித்தப்படுத்தி விடுகிறேன்.

அதி: ஓ! இதுதான் நீங்கள் ஔவையாருக்கு உகந்த பரிசென எண்ணியிருக்கிறீர்கள். இல்லையா.

ஔவையார் அரங்கினுள் நுழைகிறார்.

ஔ: வெற்றிகரமான வாளேந்தி, பகைவர்கள் அனைவரையும் போரில் வென்று, பொன் மாலை அணிந்து பொலிவுடன் திகழும் மன்னா, நீ வாழ்க!

அதி: (கையை முன்னால் நீட்டி) இந்த பரிசினை தமிழின் சார்பாக நீங்கள் ஏற்க வேண்டும். 

ஔவையார், அவன் கையிலிருந்த சிறிய நெல்லிக்கனியைப் பார்க்கிறார். சற்றும் தயங்காமல் அதைப் பெற்றுக் கொண்டு வாயில் போட்டுக் கொள்கிறார்.

ஔ: (மிகவும் மகிழ்ச்சியோடு) நீலநிற மணியை கழுத்தில் கொண்டது போலிருக்கும் அந்த சிவனைப் போல உன் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!

அதியமான் கரம் கூப்பி வணங்குகிறார். 

துஅமை1: அன்னையே, உங்களுக்கும் தகடூர் அரசருக்கும் உள்ள நட்புறவானது எங்கள் எளிய சிந்தையை எல்லாம் கடந்தது.  ஆனாலும் இப்போது…

அமை1: அட, அதிகப்பிரசங்கியே.

துஅமை1: இல்லை ஐயா.  சற்றுமுன்  கருவூலத் தலைவர் பட்டியலிட்டு சொன்ன பரிசில்கள் மதிப்பு அளப்பரியாதது.  இந்த சிறிய நெல்லிக்கனியை அரசர் ஔவைக்கு அளிப்பதும் அவர் அதற்கு வாழ்த்துவதும்… 

அமை1: நிறுத்தப்பா.

ஔ:  ஐயங்களை தெளிவதுதானே அமைச்சுப் பணி. தடுக்காதீர்கள் ஐயா. (பிறகு துணையமைச்சரின் பக்கம் திரும்பி) இதோ சொல்கிறேன்.  இத்தனை விலைமதிப்பற்ற பொருட்களைக் காட்டிலும், இந்த கனியை எனக்கு அளித்ததிலிருந்து புரியவில்லையா, இது ஓர் அருங்கனியாகத்தான் இருக்க வேண்டுமென.  பெறுவதற்கு அரியக் கனியை, பெருமுயற்சியுடன் பெற்ற அரசர், அதன் சிறப்பைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லாமலே, அன்னைத் தமிழுக்கே அது உகந்த பரிசென அளித்ததில் இருக்கிறது அவருடைய கொடை உள்ளத்தின் உச்சம்.

அதி: நாடும் நிலமும் கோலோச்சும் அரசனும் அவன் புகழும் காலத்தோடு மறைபவை.  ஆனால் மொழியும், இலக்கியமும் காலம் கடந்து வாழ்பவை.  அன்னைத் தமிழாகிய நீங்கள் நீண்டு வாழ்ந்தால், உங்கள் சொற்களில் நானும் நீண்டு வாழ்வேனம்மா.

ஔ: நன்று சொன்னீர்கள்!  நன்று சொன்னீர்கள்! தமிழ் இனி ஓரிடம் தங்காமல் செல்லட்டும் எண் திசையும்.  தமிழுக்கு எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே.

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்ஆ காதே;

(புறநானூறு: 101)

o0O0o

 காட்சி 3:

(பாத்திரங்கள்: தொண்டைமான், ஔவையார், அமைச்சர்2, துணையமைச்சர்2)

தொ: புதிய படைக்கலன்கள் எல்லாம் வந்துவிட்டனவா அமைச்சரே? கூரிய வேல்கள், விரைவு அம்புகள், பொலிந்த வாட்கள்…

அமை2: ஆம்.  நன்கு பெரிய் பிடிகளுடன், எண்ணெய் பளபளப்புடன் படைக்கலன்கள் பொலிகின்றன. 

துஅமை2: (சற்று முன்வந்து) இப்போது படைப்புக்கடவுள் ஒருவரும் உங்களைத் தேடி வந்திருக்கிறார்.  ஔவையார் எனும் தமிழ்ப்புலவர்.

தொ: ஓ! ஔவையாரா.  அவர் அதியமானின் அவைக் கவிஞராயிற்றே.

அமை2:  ஆமாம்.  தகடூர் மீது படையெடுக்க வேண்டாம் என சமாதான தூது செய்தியுடன் அனுப்பியிருக்கிறார்களோ.

துஅமை2:  நாம் திரட்டியிருக்கும் படைபலத்தையும், கருவிகளையும் கண்டு பயந்துவிட்டிருப்பார்கள்.

தொ: ஆகா.  அரசர் ஆணைகளுக்கு புலவர்கள் தூதா.  புதியதாக இருக்கிறதே. அழைத்து வாருங்கள்.  என்ன சொல்கிறாரெனப் பார்ப்போம்.

ஔவையார் அரங்குள் நுழைகிறார்.

ஔ:  வாழிய மன்னா! வாழ்க நின் கொற்றம்!

தொ: தமிழைப் போற்ற, இந்த தொண்டைமான் என்றும் தயங்கியதேயில்லை அம்மா.  வணக்கம்!

ஔ: மகிழ்ச்சி.  இப்போதுதான் உன் படைக்கல அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.  அல்லது அப்படி நான் பார்க்க வேண்டுமென்பது உன் அமைச்சரின் எண்ணமாக இருக்கும். (சிரிக்கிறார்)

தொ: (புன்முறுவல் செய்தபடி) அப்படியெல்லாம் இல்லை.  இன்று புதியதாக வந்தவை அவை.  இன்னமும் முறையாக அடுக்கப்பட்டு படைவீடுகளுக்கு அனுப்பி, சிறப்பாக அணிவகுப்பில் சேர்க்க வேண்டும்.

ஔ:  ஆமாம்.  மயிலிறகு சூட்டி, மெருகு குன்றாமல் ஒளிர்கின்றன அனைத்தும்.  கண்ணைப் பறிக்கின்றன.

தொ: (பெருமையுடன்) ஆமாம். நாங்கள் வெகு சிரத்தையுடன் படைக்கலங்களை பராமரிப்போம்.  உங்கள் தகடூரில் அப்படி செய்வதில்லைப் போல.

ஔ:  அங்கே, இவ்வளவு பராமரிப்புகளுக்கு எங்கே நேரம்?  எப்போதும் போரிலேயே இருந்து கொண்டிருக்கும் வீரர்களின் வேல்கள், பகைவர்களைக் குத்தி, நுனி சிதைந்தும் முறிந்து,  கொல்லன் பட்டறைகளில் கிடக்கின்றன.  சீர்படுத்தியதும் அடுத்த போருக்கு கிளம்பிவிடுவார்கள்.  எப்போதும் போர்களிலே நேரங்கழிக்கும் அவர்களுக்க், படைக்கலன்களை அழகுபடுத்தி, மாலை சூட்டி அணிவகுப்புகளில் வைத்துப் பார்க்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

அமை2: இதென்ன பேச்சு? போர்த்தொழிலில் சிறந்தவர் அதியமான் என்பது போலல்லவா சொல்கிறீர்கள்?

துஅமை2: நீங்கள் நின்று கொண்டிருப்பது தொண்டைமானின் அவை என்பது நினைவில் இருக்கட்டும் புலவரே.

ஔ: போரில் மட்டுமல்ல.  தன்னிடம் பொருள் இருந்தால், மற்றவர்க்கு உணவளித்துவிட்டு தான் உண்பான்.  பொருள் இல்லையென்றல் தன் உணவையே பிறருக்கு அளித்துவிடும் ஈகைக் குணத்திலும் அதியமான் ஒப்புயர்வற்றவன்.

தொ: (பெரியதாக சிரித்து) கற்றோரின் சொற்திறம், எம் போர்த்திறம் விட சிறந்தது எனப் புரிந்து கொண்டேன்.  தமிழ் போற்றும், தமிழ்ப்புலவர் போற்றும் தகடூர் மன்னன் மீது போர்த்தொடுக்கும் எண்ணம் என் மனதை விட்டு நீங்கியது.  கவிச்சொல்லை விட பெருஞ்சொல் வேறு உண்டா?

ஔ: இதோ என் யாழை தூக்கிக் கொண்டேன்.  தமிழை துணையாக்கிக் கொண்டேன்.  செல்வேன் எத்திசையும்.  எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே.

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடியுடை வியனக சவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எங் கோமான் வைந்துதி வேலே

(புறநானூறு: 95)

o0O0o

இறுதிக்காட்சி:

அனைவரும் திரண்டு வந்து நிற்க, அதியமான் கூற்றுடன் நிறைவடைகிறது)

அதி: தமிழுக்கென ஒரு கனி ஈந்தேன்.  தமிழ் எனக்கு மங்காப் புகழை பதில் அளித்தது.  அன்னைத் தமிழுக்கு என்றென்றும் எம் வணக்கம். 

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

நீல மணிமிடற்றொருவன் போல்
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் திங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே!

(புறநானூறு: 91)

o0O0o



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •