Reading view

கடந்த ஆயிரம் ஆண்டுகளின் ஆகச்சிறந்த சிந்தனையாளர் மாமேதை மார்க்ஸ் | BBC News கருத்து கேட்பு பட்டியலில் மார்க்சுடன் இருந்தவர்கள்

கடந்த ஆயிரம் ஆண்டுகளின் ஆகச்சிறந்த சிந்தனையாளர் மாமேதை மார்க்ஸ்.. BBC News நடத்திய கருத்துக் கேட்பு பட்டியலில் மார்க்சுடன் இருந்தவர்கள்.. 1. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) ஜெர்மன் நாட்டை சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான…

The post கடந்த ஆயிரம் ஆண்டுகளின் ஆகச்சிறந்த சிந்தனையாளர் மாமேதை மார்க்ஸ் | BBC News கருத்து கேட்பு பட்டியலில் மார்க்சுடன் இருந்தவர்கள் appeared first on Book Day.

  •  

கார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்

Image result for karl marxகார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை அறிவித்த சார்ல்ஸ் டார்வின், மனதின் நுட்பத்தை கண்டறிவித்த உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட், பிரபஞ்ச ரகசியத்தின் புதிரை விடுவிப்பதற்கான சார்பியல் தத்துவத்தை அறிவித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின், இவர்களுக்கு நிகராக உலகின் சமூகவரலாறு பற்றிய அறிவியலை அறிவித்தவர் கார்ல் மார்க்ஸ். பிரபஞ்சம் அதில் வாழும் உயிர்கள், அதன் உயிரின வரலாறு, சமூகவரலாறு என ஒவ்வொரு தனிமனிதனின் உலகப்பார்வையை மாற்றியமைத்த முக்கிய சிந்தனையாளர்கள் இவர்கள்.

கார்ல் மார்க்ஸ் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட பாட்டாளிகள், ஏழைகள் குறித்து தீவிரமாக சிந்தித்தவர். மனித உறவை ரொக்கப் பட்டுவாடா உறவாக முதலாளியம் மாற்றியமைத்ததுள்ளதை கண்ணடறிந்தவர். தனது தீவிர ஆய்வின்மூலம் பண்டம்/சரக்கு என்கிற முதலாளிய பொருளுற்பத்தியின் உயிர்நாடியை பகுப்பாய்வு செய்து அது மூலதனத்தை எப்படி ஓரிடத்தில் குவிக்கிறது என்ற தன்னிகரற்ற ஆய்வின்மூலம் மூலதனம் என்ற கம்யுனிஸ சிந்தனைக்கான ஆதாரநூலை முன்வைத்தவர்.

முதலாளியம் உழைப்பை அந்நியப்படுத்தி மனிதனை வெற்றாக மாற்றுகிறது என்பதையும், அது பாட்டாளிகளின் உழைப்பை சுரண்டி அவர்களது உபறியை உறிஞ்சி கொழிக்கிறது என்பதையும், சமனற்ற ஏற்றத்தாழ்வான பொருளுற்பத்தி முறையில் செயல்படுவதன் வழியாக அது தனக்குதானே சவக்கழியை தோண்டிக் கொள்ளும் என்பதையும் முரணியங்கியல் தர்க்கமுறையில் வெளிப்படுத்தி உலகின் எதிர்காலத்தை தீர்க்கதரிசனப்படுத்தியவர். முதலாளியம் உற்பத்தி செய்த பண்டங்களை விற்று உள்நாட்டு சந்தையை நிறைத்தபின், சந்தை தேடி அலைந்து அமேரிக்க, இந்திய, ஆப்பரிக்க கண்டங்களை கண்டுபிடித்த வரலாற்றையே கடல்வழிப்பயண வரலாறாக கூறுகிறது. இவ்வரலாற்றின், அதாவது காலனியத்தின், அறிவியலை தனது பொருளியில் பகுப்பாய்வில் வெளிப்படுத்தியவர் மார்க்ஸ். பொருளாதாராத்தின் அரசியலை வெளிப்படுத்தியவர். ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் முதலாளியப் பொருளியல் நலன் இருப்பதை கட்டுடைத்துக்காட்டிய சிந்தனைமுறையே மார்க்சியம்.

இதுவரையிலான தத்துவவாதிகள் உலகை விளக்கினார்கள் பிரச்சனை அதை எப்படி மாற்றுவது என்பதுதான் என்று கடவுள், இயற்கை பேராற்றல், அப்பாலை சக்தி உள்ளிட்ட கருத்தியலான நம்பிக்கைகளை சிதைவாக்கம் செய்து அதற்குள் உறைந்திருப்பது உழைப்பைச் சுரண்டும் முதலாளிய லாபவெறியே என்பதை வெளிப்படுத்திக் காட்டியவர். உலகை மனிதர்கள் இத்தகைய கருத்தியலால் தலைகீழாக உணர்கிறார்கள் என்றார். கருத்தியல் என்ற ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்தது அவரது தத்துவார்த்த சிந்தனையில் தனிச்சிறப்பான ஒன்றாகும். கருத்தியல் என்ற சிந்தனைவழியாக எப்படி ஒவ்வொரு மனித உடலும் தனக்குள் தவறான பிரக்ஞையைக் உலகப்பார்வையாகக் கொள்கிறது என்பதை விவரித்தவர்.

மாற்றம் ஒன்றைத்தவிர மாறாதது உலகில் இல்லை என்று உலகின் இயங்கு சக்தி மனித உழைப்பும் அதனால் மாறிக் கொண்டே இருக்கும் உலகம் என்பதையும் தனது சிந்தனைகள் வழி மெய்ப்பித்துக் காட்டியவர். தனது வாழ்வு முழுவதையும் உலகப் பாட்டாளி வர்க்கம், ஏழைகள் மற்றும் சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள்பற்றி மட்டுமே சிந்தித்தவர்.

உணர்வு ஒருவரது வாழ்நிலையை தீர்மாணிப்பதில்லை, வாழ்நிலையே உணர்வை தீரமாணிக்கிறது என்று புற உலகும் அதன் பொருளாயுத உறவுகளுமே மனித உணர்வை, சிந்தனையை தீர்மாணிக்கிறது என்பதை தனது சிந்தனைகளின் விதையாக முன்வைத்தவர். சிந்தனையும், உணர்வும் யதார்த்தத்தை படைத்துக் காட்டுகிறது என்கிற அகநோக்கிலான கருத்துமுதல்வாதத்தை அடித்து நொறுக்கி, வாழும் சூழல்தான் ஒருவரது உணர்வை, சிந்தனையை தீர்மாணிக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டினார். சமூகப்புரட்சி அதன் உள்ளார்ந்த பொருளியல் முரண்களால் தீர்மாணிக்கப்படுகிறது என்ற அவரது கருத்தாக்கம் ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளின் புரட்சிகர வரலாற்றால் நிரூபிக்கப்பட்டது.

மார்க்ஸின் வாழ்க்கை முட்செடிகள் நிறைந்த ஒருவேளை உணவிற்கும் வழியற்றதான வறுமை நிறைந்த வாழ்க்கை மட்டுமல்ல தொடர்ந்து ஓரிடத்தில் தங்கமுடியாது அதிகாரத்தால் தடைசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நாடோடி வாழ்க்கை. உலக வறுமையைப்போக்க சொந்த வாழ்வை வறுமையாக்கிக் கொண்டவர். அவரது மனைவி ஜென்னி மார்க்ஸ் தனது குழந்தை ஒன்று இறந்தபோது நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுதினார் ”இப்பிள்ளை பிறந்தபோது தொட்டில் வாங்க பணம் இல்லை இறந்தபோதோ சவப்பெட்டி வாங்க பணம் இல்லை” என்று. இத்தனைக்கும் ஜென்னி மார்க்ஸ் ஜெர்மானிய பிரஷ்ய அரசாங்கத்தில் அமைச்சகத்தில் பணிபுரிந்தவரின் மகள். பிறப்பிலேயே செல்வந்தர். மார்க்ஸ் மீது கொண்ட காதலில் தனது கணவரின் அனைத்து துயரங்களையும் ஏற்று அவரோடு தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். மார்க்சியம் என்கிற கார்ல் மார்க்சின் தத்துவ சிந்தனையின் உருவாக்கத்திற்கு ஜென்னி மார்க்சின் அளப்பறிய தியாகம் முக்கியமானது. மார்க்ஸை அவரது சுதந்திர சிந்தனையோடு இறுதிவரை வறுமையில் போராடிக் காத்தவர் ஜென்னி.

மார்க்ஸின் அளப்பறிய சிந்தனைவளத்தைக் கண்டுணர்ந்து இறுதிவரை தனது நட்பின் வழியாக அவரது எழுத்துக்களுக்கு பலமாகவும், அவரது குடும்ப வறுமைக்கு உதவியாளராகவும் இருந்து மார்க்சியத்தை உருவாக்கிய ஏங்கல்ஸ் நட்பிற்கு ஒரு இலக்கணமாக இருந்தவர். மார்க்சிய சிந்தனையில் குடும்பம், அரசு, பெண்நிலை, அறிவியல், மதம் போன்ற கருத்தியல்கள் குறித்த பகுப்பாய்வை மார்க்சிய வழியில் நின்று எழுதிக்காட்டி அச்சிந்தனைமுறையை வளப்படுத்தியவர் ஏங்கல்ஸ். மார்க்சிய சிந்தனை என்பது இவ்விரட்டையர்களின் ஒரு பிரிக்கவியலா கலவையில் உருவான சிந்தனையே.

மார்க்சியம் என்பது இன்று உலகளாவிய ஒரு சிந்தனையாக சமூக மொழியில் சிந்தனையில் ஆழ்தளத்தில் இறங்கியுள்ளது. இன்றைய உலகின் எந்த மாற்றுச் சிந்தனையும் அல்லது புதிய சிந்தனையும் மார்க்சியத்துடன் ஒரு உரையாடல் இன்றி தன்னை முன்னகர்த்த முடியாது. மார்க்சியம் ஒரு அரசியல் நனவிலியாக, சமூக நனவிலியாக மாறியுள்ளது. அதனோடு நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ளாமல் எந்த சிந்தனையும் சாத்தியமில்லை. காரணம் மார்க்சியம் உலக மாற்றம், சமூக மாற்றம் என்பதை தனது அடிநாதமாகக் கொண்ட ஒரு சிந்தனைமுறை. புதியதொரு வாழ்வை அதற்கான சாத்தியங்களை திறந்துகாட்டிய சிந்தனைமுறை.

உலகில் தேசம் இனம், மதம், சாதி, பால் என்பவை மனிதன் மற்றும் வரலாறு கட்டமைக்கும் மனிதமைய சாராம்சவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. மனிதனின் பெருந்துயரங்களுக்கு காரணமாக உள்ள இப்பல்வேறு அடையாளங்களின் கூறுபாடுகளிலிருந்து, மனிதனை ஒடுக்கப்பட்டவன், ஒடுக்குபவன் என்கிற சாராம்சமற்ற, வலைப்பின்னல்களில் உருவாகும் இணைந்தும், கலைந்தும் போகக்கூடிய நெகிழ்ச்சியான ஒரு அடையாளமாக மார்க்சியர்களால் முன்வைக்கப்பட்டதே “பாட்டாளி வர்க்கம்”. அது பிறப்பை அடிப்படையாகக்கொண்ட ஒரு அடையாளம் அல்ல. எளிமையாக ஏற்கவும், விலகவுமான ஒரு அடையாளம். வரலாற்றில் ஒரு புதிய மக்கள் தொகுதியை உருவாக்கிய அடையாளம். அதற்குள் மனித குலத்தோற்றத்திலிருந்து உருவாகிவந்ததான வரலாற்றுக் கதையாடலின் தொடர்ச்சியோ, அல்லது மனித உடலுக்குள் தங்கி உள்ளதாக சொல்லப்படும் மூலப்படிம உணர்வின் சாராம்சப் பண்போ இல்லை.

மார்க்ஸ் கூறினார் “மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட  ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள். இறந்துபோன தலைமுறையினரின் மரபு, உயிருள்ளவர்களின் மூளையை ஒரு அமுக்கு பேய்போல அமுக்கிக் கொண்டிருக்கும்.”

பாட்டாளி வர்க்க அடையாளம் என்பது மார்க்ஸ் மரபு என்கிற பழங்கதைகளை உருவகப்படுத்தி சொன்னதைப்போல, ஒரு அமுக்குப்பேய் அடையாளம் அல்ல. அது ஒருவர் உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் தன்னிலை சார்ந்த அடையாளம். அதாவது, பாட்டாளிவர்க்க அடையாளத்தில் சாராம்சம் இல்லை, இருப்பு அல்லது இருத்தல் மட்டுமே உள்ளது. நீங்கள் உணர்வுபூர்வமாக இயங்கும் சூழல் மற்றும் உங்கள் வாழ்நிலையில் அல்லது நீங்கள் இயங்கும் வலைப்பின்னல் அமைப்பில் தங்கியுள்ள ஒரு அடையாளம்.

உலகத் தொழிலாளிவர்க்கம் என்பது பிழைப்புவாத, தொழிற்சங்கவாத, கூலி-வாத சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு பல அரசியல், சாதி, மத, இன அடையாளங்களுக்குள் இறுகி இன்று ஒற்றுமையற்று எண்ணற்ற குழுக்களாக பகைகொண்ட அமைப்புகளாக மாறிவிட்டது. சமூகப் பொருளாதாரப் புரட்சியின் தலைமைச் சக்தியாக மார்க்ஸால் கணிக்கப்பட்ட பாட்டாளிவர்க்கம் இன்று தன்னை ஒரு சராசரி பிழைப்புவாத வர்க்கமாக மாற்றிக்கொண்டுவிட்டது. ஆனால், “மரம் ஓய்வை நாடினாலும் காற்று விடுவதில்லை“ என்பதைப்போல.. இன்றைய கடுமையான பொருளாதார நெருக்கடி மீ்ண்டும் பாட்டாளிவர்க்கத்தை ஒற்றுமைக்கு கொண்டு செல்லும். புரட்சி, விடுதலை என்பது மார்க்சியம் கண்ட ‘உன்னதக் கனவா‘? அல்லது பின்நவீனத்துவவாதியான லியோதார்த் கூறியதுபோல ‘உன்னதக் கதையாடலா‘ (Grand Narration)? என்பதை வரலாறு வெளிப்படுத்தும்.

வரலாறு என்பதை மனிதன் உருவாக்குவதில்லை. அது ஒரு அமைப்பின் கட்டமைப்பு. அதாவது சூழலின் தேர்வு. மனிதன் சூழலால் தீர்மாணிக்ப்பட்டு, சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு வரலாற்று இயக்கத்திற்குள் இழுத்துச் செல்லப்படுகிறான். மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை. சமூக வரலாறுதான் மனிதர்களை உருவாக்குகிறது. எப்பொழுதும் மனித உடலானது சமூக வரலாற்றிற்குள் விதைக்கப்படுகிறது. சமூக வரலாற்றிற்குள் வளர்கிறது.

முதலாளித்துவம் தனக்கான தேசஅரசை உருவாக்க பாட்டாளி வர்க்கம் என்பதற்கு எதிராக இனம் என்கிற கருத்தாடலை தனது வரலாற்றுக் கதையாடல்கள் மூலம் பெருக்கியப்படியே உள்ளது. இனம் என்பதை பிறப்பின் அடையாளமாக மாற்றுகிறது. அதற்கு ஒரு மூலப்படிம உணர்வு இருப்பதாக கதைகளை எடுத்துரைக்கிறது. அதற்கு வரலாறு என்கிற ஆணிவேர் ஆதார அடிப்படையிலான ஒரு அறிவியல் சார்ந்த பகுத்தறிவு விளக்கம் சொல்கிறது. மனிதனை அழிக்கும் வரலாற்றைவிட, மனித குலத்தை வாழவைக்கும் தொன்மங்கள் மேலானவையே. ஏனென்றால் தொன்மங்கள் அழித்ததைவிட வரலாறு அழித்தவை ஏராளம். அதனால்தான் தொன்மங்களை காட்டுமிராண்டிகளின் கதையாடல் என்கிறது. அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவின் அடிப்படையில் மனிதர்களை அவர்களது உடலை எண்ணி அளந்து அறுதியிட்டு இனம் என்பதாக பிரிக்கிறது. அதற்கு மொழியை மூலமாக ஆக்குகிறது. காரணம் மொழிதான் உலகை படைக்கிறது என்பதை நம்மைவிட அதிகாரம் மிகச்சிறப்பாக புரிந்துகொண்டுள்ளது. மொழியற்ற உடலால் இந்த உலகை உணரமுடியாது என்பதால் மொழிகளை பெருக்கி தனது ஊடகங்கள் வழியாக பரவலாக்கிக் கொண்டேயுள்ளது.

ஆக, மொழி, இனம் போன்ற கூறுகளை சாராம்சமாக ஆக்குவதன்மூலம் மனிதர்களின் மண்டைக்குள் மரபு என்கிற வரலாற்றை ஒரு அமுக்குப்பேயாக உட்கார வைத்துள்ளது. இது இன்றைய புதிய வரலாற்றுவாதத்தினை முன் அனுமானிக்கும் ஒரு வாசகம் எனலாம். மார்க்ஸ் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இதுபோன்ற எண்ணற்ற வாசகங்கள் வலியுறுத்துகின்றது.

மார்க்ஸ்க்கு திரும்புதல் என்பது சமீபத்திய உலகளாவிய பொருளியல் நெருக்கடியின்போது உலகளவில் உருவான ஒரு கருத்தாக்கம். மீண்டும் உலகச்சிந்தனை மார்க்ஸியத்திற்கு திரும்பும் நிலை நோக்கி சமூக முரண் உந்தித்தள்ளுகிறது. நிதமூலதன ஆதிக்கத்திற்குள் சிக்கிவிட்ட இன்றை கார்ப்ரேட் என்கிற உலகமுதலாண்மை முதலாளித்துவம் தனது உள்நெருக்கடிகளில் சிக்கி வங்கிகள் திவாலாகி, கடன் அட்டை மற்றும் வங்கிக்கடன் பொருளாதார வலைப்பின்னலுக்குள் மனிதர்களையும், அரசுகளையும் சிக்கவைத்துள்ளது. தனது கார்பரேட்மயத்தை கிராமங்கள்வரை விரிவாக்கியுள்ளது. இதுதான் உலகமுதலாளியத்தின் முரண் முற்றும் நிலை. அல்லது மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தீர்க்கத்தரிசனமாக கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையில் அறிவித்த முதலாளியம் தனக்கான சவக்குழியை தோண்டிக்கொள்ளும் என்பதற்கான துவக்கம் எனலாம்.

- ஜமாலன் ([email protected]) 13-03-2016. மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை

  •  

மேதினம் – அடையாளங்கள் எனும் அமுக்குப்பிசாசு : ஜமாலன்

2009-ல் எழுதிய பழைய பதிவு இது. எனது பிளாக்கில் தேடிக்கிடைக்காமல் இனியொரு இதழின் சேமிப்பிலிருந்து எனது பதிவில் இணைக்கும்பொருட்டு மீள்பதிவு செய்கிறேன்.

”மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட  ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள். இறந்துபோன தலைமுறையினரின் மரபு, உயிருள்ளவர்களின் மூளையை ஒரு அமுக்கு பேய்போல அமுக்கிக் கொண்டிருக்கும்.” – கார்ல் மார்க்ஸ்

இன்று மேதினம். உலகத் தொழிலாளர்கள் தங்களையும், தங்கள் உரிமைகளையும் உணர்வதற்கான நாள். தமிழகத்தில் இருந்த காலங்களில் மேதின ஊர்வலங்களில் தவறாமல் கலந்துகொள்வது உண்டு. நான் இருக்கும் சூழலில் மேதினம் என்பதெல்லாம் அர்த்தமற்ற ஒன்று. என்றாலும், உலகத் தொழிலாளர்கள் மற்றும் பாட்டாளி வர்க்கத்திற்கு இதன் மூலம் மேதின வாழ்த்துக்களைச் சொல்வோம்.

உலகில் தேசம் இனம், மதம், சாதி, பால் என்பவை மனிதன் மற்றும் வரலாறு கட்டமைக்கும் மனிதமைய சாராம்சவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. மனிதனின் பெருந்துயரங்களுக்கு காரணமாக உள்ள இப்பல்வேறு அடையாளங்களின் கூறுபாடுகளிலிருந்து, மனிதனை ஒடுக்கப்பட்டவன், ஒடுக்குபவன் என்கிற சாராம்சமற்ற, வலைப்பின்னல்களில் உருவாகும் இணைந்தும், கலைந்தும் போகக்கூடிய நெகிழ்ச்சியான ஒரு அடையாளமாக மார்கசியர்களால் முன்வைக்கப்பட்டதே “பாட்டாளி வர்க்கம்“. அது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு அடையாளம் அல்ல. எளிமையாக ஏற்கவும், விலகவுமான ஒரு அடையாளம். வரலாற்றில் ஒரு புதிய மக்கள் தொகுதியை உருவாக்கிய அடையாளம். அதற்குள் மனித குலத்தோற்றத்திலிருந்து உருவாகிவந்ததான வரலாற்றுக் கதையாடலின் தொடர்ச்சியோ, அல்லது மனித உடலுக்குள் தங்கி உள்ளதாக சொல்லப்படும் மூலப்படிம உணர்வின் சாராம்சப் பண்போ இல்லை. பாட்டாளி வர்க்க அடையாளம் என்பது மார்க்ஸ் மரபு என்கிற பழங்கதைகளை உருவகப்படுத்தி சொன்னதைப்போல, ஒரு அமுக்குப்பேய் அடையாளம் அல்ல. அது ஒருவர் உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் தன்னிலை சார்ந்த அடையாளம். அதாவது, பாட்டாளிவர்க்க அடையாளத்தில் சாராம்சம் இல்லை, இருப்பு அல்லது இருத்தல் மட்டுமே உள்ளது. நீங்கள் உணர்வுபூர்வமாக இயங்கும் சூழல் மற்றும் உங்கள் வாழ்நிலையில் அல்லது நீங்கள் இயங்கும் வலைப்பின்னல் அமைப்பில் தங்கியுள்ள ஒரு அடையாளம். அல்லது பாட்டாளிவர்க்கம் என்பதை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.

உலகத் தொழிலாளிவர்க்கம் என்பது பிழைப்புவாத, தொழிற்சங்கவாத, கூலி-வாத சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு பல அரசியல், சாதி, மத, இன அடையாளங்களுக்குள் இறுகி இன்று ஒற்றுமையற்று எண்ணற்ற குழுக்களாக பகைகொண்ட அமைப்புகளாக மாறிவிட்டது. சமூகப் பொருளாதாரப் புரட்சியின் தலைமைச் சக்தியாக மார்க்ஸால் கணிக்கப்பட்ட பாட்டாளிவர்க்கம் என்பது இன்று தன்னை ஒரு சராசரி பிழைப்புவாத வர்க்கமாக மாற்றிக்கொண்டுவிட்டது. ஆனால், “மரம் ஓய்வை நாடினாலும் காற்று விடுவதில்லை“ என்பதைப்போல.. இன்றைய கடுமையான பொருளாதார நெருக்கடி மீ்ண்டும் பாட்டாளிவர்க்கத்தை ஒற்றுமைக்கு கொண்டு செல்லும். புரட்சி, விடுதலை என்பது மார்க்சியம் கண்ட ‘உன்னதக் கனவா‘? அல்லது பின்நவீனத்துவவாதியான லியோதார்த் கூறியதுபோல ‘உன்னதக் கதையாடலா‘ (Grand Narration)? என்பதை வரலாறு வெளிப்படுத்தும்.

மார்க்ஸின் மேற்கொண்ட குறிப்பில் ஒரு நுட்பமான செய்தி உள்ளது. அது வரலாறு என்பதன் வழியாகத்தான் மனித குலத்திற்கு ஒரு தொடர்ச்சி உருவாக்கப்படுகிறது என்பதுதான். இந்த வரலாற்றுத் தொடர்ச்சி என்பதே அனைத்து வன்முறைக்கும் அடிப்படையாகும். அதாவது “அமுக்குப்பேய்“. அதாவது செத்தொழிந்தவர்களின் மரபு, வாழ்ந்தழிபவர்களின் மண்டைக்குள் ஒரு அமுக்குப் பேய்போல உட்கார்ந்து கொண்டிருக்கும் என்பதுதான். இனம் என்கிற ஒன்றின் வரலாற்றுத் தொடர்ச்சி ஒரு கதையாடலாக கட்டப்பட்டு, மனிதனின் சாராம்சப் பண்பில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டு “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி” போன்ற கதையாடல்களால் கனவாகவும், பெருமிதமாகவும் இறக்கப்பட்டுள்ளது. இந்த கனவும் பெருமிதமும்தான் மார்க்ஸ் சுட்டிக்காட்டும் வரலாறு என்கிற அமுக்குப்பேய். மனிதன் வரலாற்றினால் வழிநடத்தப் படுகிறான். தனது உடலின் அல்லது உயிரின் இருப்பு என்பது வரலாற்றின் சமூகவெளிக்கு வெளியில் ஏதுமற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.

‘மனிதன்‘ மற்றும் ‘மனிதகுலம்‘ என்கிற கருத்தாக்கம் இந்தவகை வரலாற்று சாராம்சத்தின் ஒரு தொடர்ச்சியின் நவீன சொல்லாடல்தான்.
வரலாறு என்பதை மனிதன் உருவாக்குவதில்லை. அது ஒரு அமைப்பின் கட்டமைப்பு. அதாவது சூழலின் தேர்வு. மனிதன் சூழலால் தீர்மாணிக்ப்பட்டு, சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு வரலாற்று இயக்கத்திற்குள் இழுத்துச் செல்லப்படுகிறான். மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை. வரலாறுதான் மனிதர்களை உருவாக்குகிறது. சான்றாக, இன்று ஒவ்வொரு தமிழனும் ஈழத்தின் கடுமையான போரால் உளப்பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் பாதிக்கப்பட்டிருப்பதிலிருந்து இதனை உணரலாம். தமிழகத்தில் 60-களில் வெளிப்பட்ட இனஉணர்வு முகிழ்த்த ”தமிழன்” மீண்டும் இன்றைய வரலாற்றால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். பழைய ஆரிய/திராவிட பார்ப்பனீய/தமிழின முரண்பாடு துவங்கி இந்தி/தமிழ் முரண்பாடுவரை தமிழ் வரலாற்றில் திரும்ப புதிய இனவாத சக்திகளால் மேலெழும்பி வருகிறது. முத்துக்குமார் நண்பர்கள் வட்டம் துவங்கி “புரட்சித்தலைவி” (?) வரை இந்த வரலாற்றின் திசையியக்கியை (ஸ்டீரியிங்கை) தாவிப்பிடிக்கும் தன்முனைப்பை உணரமுடிகிறது. இன்றைய இனமானத் தமிழனை மீண்டும் வரலாறு உருவாக்கியிருப்பதை நாம் கண்கூடாக காணமுடிகிறது.

முந்தைய முரண்பாட்டில் திராவிட இயக்கங்கள் அரசியல் அதிகாரம் பெற்றதுடன் வரலாற்றை முடித்தன. ஆனால், இன்றைய அதே முரண்பாடுகள் வந்தால் இந்திய பெருந்தேசிய அரசானது ராஜபக்சேவை முன்னுதாரமாகக் கொள்ளும் உத்தியை அதிகாரம் கண்டடைந்துள்ளது. தமிழகம் ஒரு பாலஸ்தீனியமாக மாற்றப்படக்கூடும். வெடிகுண்டுகளுக்கு மத்தியில் நாம் வாழப்பழக்கிக் கொள்ள நேரலாம். வரலாற்றின் இந்த திரும்பவரல் இனம் எனும் அமுக்குப்பேயுடனும், அதற்கான பயங்கரவாத இராணுவத் தந்திரத்துடன் வருகிறது என்பதுதான் மிகப்பெரும் சோகம். வரலாற்றின் திரை இழுவையில் நமது மரணத்தைக் கூட வரலாறே தீர்மானிக்கப்போகிற ஒரு எதிர்காலமே நம் கண்முன் காட்சியாகிறது. தற்கொலை என்பது அதிகாரம் நிர்பந்திக்கும் மரணத்தை ஏற்காமல் நாமே மரணத்தை தேர்ந்துகொள்ளும் சுதந்திர போராட்ட வடிவமாக மாறலாம். இவையெல்லாம் ஊகக் காட்சியாக மட்டுமே எஞ்சி கெட்ட கனவாக மட்டுமே போகவேண்டும் என்பதே நமது ஆசையும் விருப்பமும்கூட.

ஆனால் உண்மையில், முதலாளித்துவம் இனம் என்கிற கருத்தாடலை தனது வரலாற்றுக் கதையாடல்கள் மூலம் பெருக்கியப்படியே உள்ளது. இனம் என்பதை பிறப்பின் அடையாளமாக மாற்றுகிறது. அதற்கு ஒரு மூலப்படிம உணர்வு இருப்பதாக கதைகளை எடுத்துரைக்கிறது. அதற்கு வரலாறு என்கிற ஆதார அடிப்படையிலான ஒரு அறிவியல் சார்ந்த பகுத்தறிவு விளக்கம் சொல்கிறது. மனிதனை அழிக்கும் வரலாற்றைவிட, மனித குலத்தை வாழவைக்கும் தொன்மங்கள் மேலானவையே. ஏனென்றால் தொன்மங்கள் அழித்ததைவிட வரலாறு அழித்தவை ஏராளம். அதனால்தான் தொன்மங்களை காட்டுமிராண்டிகளின் கதையாடல் என்கிறது. அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவின் அடிப்படையில் மனிதர்களை அவர்களது உடலை எண்ணி அளந்து அறுதியிட்டு இனம் என்பதாக பிரிக்கிறது. அதற்கு மொழியை மூலமாக ஆக்குகிறது. காரணம் மொழிதான் உலகை படைக்கிறது என்பதை நம்மைவிட அதிகாரம் மிகச்சிறப்பாக புரிந்துகொண்டு உள்ளது. மொழியற்ற உடலால் இந்த உலகை உணரமுடியாது என்பதால் மொழிகளை பெருக்கி, பரவலாக்கிக்கொண்டே உள்ளது தனது ஊடகங்கள் வழியாக.

ஆக, மொழி, இனம் போன்ற கூறுகளை சாராம்சமாக ஆக்குவதன்மூலம் மனிதனின் மண்டைக்குள் மரபு என்கிற வரலாற்றை ஒரு அமுக்குப்பேயாக உட்கார வைத்துள்ளது. இதுதான் மார்க்சின் இக்கருத்திலிருந்து நான் புரிந்துகொள்வது. இது இன்றைய புதிய வரலாற்றுவாதத்தினை முன் அனுமானிக்கும் ஒரு வாசகம் எனலாம். மார்க்ஸ் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இது வலியுறுத்துவதாகிறது.

மேதினமான இன்று தொழிலாளர்களின் நிலையை எண்ணும்போது ஒரு சின்ன கதைதான் நினைவிற்கு வருகிறது. ஒரு பெரிய யானையை ஒரு சிறிய சங்கிலியில் கட்டிப்போட்டிருந்தானாம் ஒரு யானைப்பாகன். அவ்வழியாக வந்த ஒரு வழிப்போக்கன் கேட்டானாம் “இத்தனை பெரிய வலுவுள்ள யானை, இந்த சின்ன சங்கிலியை அறுத்தெறியமுடியாதா?“ என்று. அதற்கு யானைப்பாகன் கூறினானாம், “இந்த யானை சிறியதாக இருந்தபோது இதே சங்கிலியால்தான் கட்டிப்போட்டேன், அப்பொழுது இந்த சங்கிலியை அதனால் அறுக்க முடியவில்லை. இன்று யானை வலுவானதாக வளர்ந்துவிட்ட போதிலும், அதனது சிந்தனையில் பழைய சங்கிலின் வலுதான் உள்ளது. அதனால் அது இன்றும் இதனை அறுக்க முயலவில்லை” என்று. இந்தக் கதையில் உள்ள “பழைய நினப்பு“ என்கிற அமுக்குபேய்தான் மரபாக சிந்தனைகளில் உட்கார்ந்து கொண்டுள்ளது. இன்றைய பாட்டாளிவர்க்கம் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த யானையைப்போல்தான். சங்கிலிப்பற்றிய பழைய நினைப்புதான் இன்றைய சங்கிலியை அறுத்தெறியக்கூடிய தனது வலுவை உணரமுடியாமல் ஆக்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

தோழர்களே! மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தங்களது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறிய இறுதிவாசகத்தை மேதின செய்தியாக மீண்டும் நினைவு கூறுவோம்.


“நாம் இழப்பதற்கு ஏதுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர, வெல்வதற்கோ ஒரு பொன்னான உலகம் இறுக்கிறது.”

-ஜமாலன்

01-05-2009.

  •  

லிங்கா எனும் பண்பாட்டு தேசியம்.

ஒரு வழியாக லிங்கா பார்த்தாகிவிட்டது. எல்லாம் kickass புண்ணியத்தில்தான். (தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாள நண்பர்கள்  இதை பதம் பிரித்து மொழிபெயர்த்து விடாதீர்கள்.) இதில்தான் பின்நவீனம் உள்ளிட்ட பல புத்தகங்கள், உலகப்படங்கள், அருமையான பல ஆவணப்படங்கள் எல்லாம் பதிவிறக்கம் செய்து பார்க்க முடிகிறது. (இன்னும் இதை இங்குள்ள அரசு தடை செய்யவில்லை.)

படத்தில் என்னை பிரம்மிக்க வைத்தது கே. எஸ். ரவிக்குமாரின் அபாரமான மூளைத்திறன்தான். ரஜனி என்கிற பிம்பத்தையும், தமிழக ரசிகர்களின் நாடித் துடிப்பையும் துல்லியமாக உணர்ந்து சந்தைப்படுத்த தெரிந்த அந்த திறன். இவர்போன்ற கதை-சமைக்க தெரிந்தவர்கள் ரஜனி போன்றவர்களுக்கு வாய்த்திருப்பது லாபம். ஆனால் சினிமா பற்றிய சீரியஸான எண்ணம் கொண்டவர்களுக்கு இது துர்லபம். தமிழ் சினிமா மெல்ல மெல்ல நகர்ந்து ஏதோ ஒரு போக்கை பிடித்து சினிமா என்று ஒன்று எடுக்க முனைந்ததை, ஒரே அடியில் வீழ்த்தி சந்தையை சமநிலைப்படுத்தி வியபாரிகளை வளர்க்க தெரிந்திருக்கிறது இவருக்கு.

மறைந்துவிட்ட கதாநாயகனுக்கும் சாகாவரம் தந்துவிடக்கூடிய பிரம்மா ரவிக்குமார்தான் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை. செண்டிமெண்டலான சில பொருட்களை வைத்துக்கொண்டு அதை மாற்றாமல் கதை பண்ணுவது என்பது அத்தனை எளிதல்ல.

அது என்ன செண்டிமெண்டலான (மெண்டலான  என்று தனியாகப் படித்தால் அது உங்கள் கோளாறு) பொருட்கள்.

1. பாம்பு (அண்ணாமலை-சந்திரமுகி)

2. நணபர்களாக இரண்டு அல்லக்கைகள் (பெரும்பாலும் கவுண்டமனி செந்தில் காம்பினேஷனில் கவுண்டமணி இடத்தை ரஜனி செய்வதுதான் ரசிகர்கள் குழந்தைகளுக்கு நகைச்சுவையாகத் தெரிகிறது. அதான் லூட்டியடித்தல்.)

3. தாடி (பாட்சா-படையப்பா)

4. மப்ளர்-சால்வை-துண்டு (பாபா-படையப்பா-அண்ணாமலை)

5. வெள்ளிக்கிழமை வெளியீடு (இது பொதுவாக தமிழ் சினிமாவிற்கான வௌயீட்டு வியபார செண்டிமெண்ட் வெள்ளிக்கிழமை படம் வெளியானால் வெள்ளிவிழா என்ற நம்பிக்கை)

6. கோவில் (இது இல்லாத ரஜனி படமே இல்லை எனலாம்.)

7. குறிப்பாக லிங்கம் (அருணாச்சலம்)

8. ஸ்கூல் பேக் (ராஜாதி ராஜா – படையப்பா)

9 பலூன்கள் (சந்தரமுகி)

10. உடலை சாய்த்தபடி மாடிப்படியில் இறங்கி வருதல் (நல்லவனுக்கு நல்லவன், படையப்பா)

11. ருத்ராட்சம் (அருணாச்சலம்)

12. பைக் (இருசக்கர வாகனம் - பாபா) 

13. அறிமுகப்பாடலில் கண்டிப்பாக எஸ்பிபி (பாபாவில் சங்கர் மகாதேவன் பாடி படம் படுத்துவிட்டபின் எஸ்பிபி யை மறப்பதில்லை.)

14. கோமாளி-சீரியஸான ஊர்க்காவலன் (இரட்டைகள் என்ற தத்துவத்தின் அடிப்படை எதிர்முரணான ஆக்டிவிஸம்)

15. அரசியலுக்கு வருவதான அறிவிப்பும் அதற்கான வசனங்களும். (இது அண்ணாமலையாக இருந்தாலும் லிங்கேணஸ்வரனாக இருந்தாலும் வசனம் வைக்கப்பட வேண்டும்.)

இத்தகைய பொருட்களை (அதாவது சினிமா மொழியில் பிராப்பர்ட்டி என்பார்கள்) வைத்துக்கொண்டு ஒரு கதையை தற்காலத்திற்கு ஏற்ப உப்பு புளி காரம் போட்டு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றால் அந்த நளமகராஜனாலேயே முடியாது. கே. எஸ். ரவிக்குமாரால் முடியும் என்பதை நிருபிப்பதுதான் லிங்கா. இதான் அவரது அபிரிதமான மூளைத்திறன். ஜிகிர்தண்டா போல வெட்டி ஒட்டி இசை வசனம் மாற்றி பட நாயகனை வில்லனாக கோமாளியாக அசால்ட் குமாரை அழுகுனி குமாராக ஆக்க முடியும் சினிமாவால். சினிமா ஒரு சிருஷ்டி என்பதை புரிவது அவசியம். ஆனால் தமிழில் சினிமா என்பது மேற்சொன்ன செண்டிமெண்டல் உதரிப்பாகங்களை இணைத்து உருவாக்கப்படும் ஒரு சரக்கு, பண்டம்.

சரக்கு வழிபாடு பற்றி கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் விரிவாக பேசுகிறார். மக்கள் ஒரு பொருளை நிலையானதாக்கி, அதன்மீது தனது கற்பனைகளை கட்டமைத்து, அதன் உள்ளார்ந்து உள்ள பொருளியல் உறவுகளை அறியாமல், அதை வழிபடும் ஒருவகை மதம் சார்ந்த மனோவியலின் முதலாளிய வெளிப்பாடு. அந்த சரக்கை தயாரித்து அதற்கு பாலையும் பலூனையும் கொட்டி வழிபட வைப்பது என்றால் அது ரவிக்குமார் போன்ற பிரம்மவித்தை தெரிந்தவர்களால்தான் முடியும். ஒரு உள்ளீடற்ற நாயகனை வரலாற்று நாயகனாக மாற்ற முடியும் என்பதை தொடர்ந்து தமிழ் இயக்குநர்கள் நிருபித்துக் கொண்டுதான் உள்ளனர்.

மக்களிடம் நிலவிவரும் முல்லைப் பெரியார் அணைபற்றிய பொது புத்தி கதையில், ஒரு திரிக்கப்பட்ட வரலாற்றை திணிப்பதும், அதன் வழியாக தமிழின் இனமானக் காவலனாக ஒரு பிம்பத்தை கட்டமைப்பதும், அந்த பிம்பம் இந்தியன் என்கிற பெருந்தேசியத்தை முன்வைப்பதும், அதற்கு ஏற்ப தற்போதைய அரசியல் சூழல் கணிந்திருப்பதும் என்பதாக காவியடிக்கப்பட்ட தமிழ் தேசிய உணர்வை இந்திய தேசியத்தின் காவியில் கலப்பதற்கு வெறும் வியபார மூளை மட்டும் போறாது. அதைதாண்டிய ஒரு அரசியல் அவதானிப்பு தேவை. அந்த அவதானிப்பு கான்சியஸாக திட்டமிட்டு வரவேண்டிய அவசியமில்லை. கதையை சமைக்கும்போது அதில் வரும் சமூக போக்கின் சூடு மற்றும் சுவைகளில் அது தானாக விரவிவிடும். அப்படித்தான் லிங்கா பெயர் துவங்கி மரகத லிங்கம் வரை தனது அரசியலை நுண் தளத்தில் சரியாக செய்கிறது.

சினிமா ஒரு வேட்கை நிறைவு பிம்பத்தை கட்டமைப்பதன் வழியாக நாயகனை வழிபடுவதும், அவனது அரசியலை ஏற்பதும், அதற்காக தர்க்கிப்பதும், அதை பின்பற்றுவதும், அதில் வெறிகொள்வதுமாக வேதித் தனிமங்களை உடலின் நுண்புழைகள் வழியாக உள்ளிறக்கி விடுகிறது.  சினிமாவிற்கு தேவை உடல் மட்டும்தான். மனசு அல்ல. உங்களது சிந்தனையை சினிமாதான் சிந்திக்கிறது. உங்களது உடலை சினிமாதான் வழிநடத்துகிறது.

ரஜனி நாயகியை காப்பாற்ற (இடையில் ஊரையும் அணைக்கட்டையும் காப்பாற்ற வேண்டும்.  எத்தன…. ஒரு தனிமனிதனாக 3 மணிநேரத்தில் அந்த திரைக்குள் அவர் காப்பாற்றுவார்.) பைக்கில் புறப்பட்ட நொடியில் காமிரா கட் செய்து, கட் செய்து காட்டும் காட்சியில் முக்கியமானது அவர் தனது இராணுவத்தனமான பூட்ஸ் காலால் பைக்கின் கீரை அனாசியமாக தட்டுவது. இக்காட்சி மட்டும் ஒரு நொடிக்குள் இரண்டு வெவ்வேறு இடங்களில் காட்டப்படும். கதாநாயகி அலற இங்க கால்கள் கீரை தட்டும். இத்தகைய சில நொடி பிம்பங்கள் உருவாக்கும் உள்ளுணர்ச்சிகள் அதிகம். அதுதான் ரஜனி என்கிற ஆண்மையின் பிம்பமாக மனதில் பதிகிறது. ரஜனி என்கிற பிம்பத்தின் அத்தனை ஆண்மையும் அந்த சில நொடி கீர் போடுதலில் எண்ணற்ற பார்வையாளர்களின் ரசிகர்களின் மனதில் உறைகிறது. அப்புறம் அப்புறம் என்ன நம்ம ரோட்ல வீட்லு காட்ல என கீர் போட வேண்டியதுதான் பாக்கி. படத்தில் இப்படி திட்டமிட்ட எண்ணற்ற காட்சிகளை வகைப்பிறித்தறியலாம். இது ஒரு சோறுதான். இப்படி சட்டி நிறைய ஆக்கி வைத்து உள்ளார்கள்.

முல்லைப் பெரியாறு அணைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் உண்டா என்றால் ரவிக்குமார் இல்லை என்பார். பார்வையாளன் அந்த சம்பந்தத்தை தனது மூளையில் பதித்துக்கொண்டால் போதும்தானே. ரஜனி அணைக்காக மக்களைத்திரட்ட இந்திய தேசியக் கொடியை பிடித்து இந்தியண்டா என்ற கரகர குரலில் கர்ஜி்ப்பதும், அரசியல் கட்சிகள் குறிப்பாக தேசியம் பேசும் ப.ஜ.க. போன்ற கட்சியின் கர்ஜனையும் ஒன்றாக கலந்தவிடும் பார்வையாளனுக்கு அது போதுமே. வரலாறாவது மண்ணாங் கட்டியாவது.

மைசூர் மகாராஜா, மதுரை கலக்டர், சென்னையில் ஜேப்படித் திருடன், மாட்டுபண்ணைவைத்து பால்கறக்கும் சமையல்காரன், இங்கிலாந்தில் ஐசிஎஸ் படித்தவர், சிவில் இன்ஜீனியர் இப்படி ஒரு வரிசையை ஒரே நடிகரை சிலுவைபோல் சுமக்க வைத்து பாவத்தை கழுவ ரவிக்குமார் ஒருவரால்தான் முடியும். கட்டிலுக்கு அடியில் பெண்ணாக மனஉவகை கொண்டு திருடனிடம் அதிலும் படித்த டீவியில் பணிபுரியம் ஹைஃபை நாயகி அவரிடம் சில்மிஷம் செய்வதெல்லாம் பேசினால் நிறைய எழுத வேண்டும்.

சரி இந்த கதை போலிசெய்துகாட்டும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பற்றிய வரலாறு சினிமாவில் உண்மையாக காட்டப்பட வேணடுமா? இப்படி கேள்வி கேட்பது அபத்தம். காரணம் சினிமா உண்மையும் அல்ல பொய்யும் அல்ல அது சினிமா. அது உண்மைபோல காட்டப்படும் பொய் அல்லது பொய்போல காட்டப்படும் உண்மை. நாம் உண்மை பொய் என்ற இருமைகளை மீறி சிந்திக்கமுடியாத எளிமைப்படுத்தப்பட்ட சிந்தனையில் இருத்தி வைக்கப்பட்டு உள்ளோம். சினிமா உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள மற்றொரு யதார்த்தம். அந்த யதார்த்தம் உண்மையைவிடவும் பொய்யைவிடவும் வலிமையானது. அதனால்தான் சினிமா தொடர்ந்து நம்மை தொந்தரவு செய்கிறது. லிங்கா போன்ற படங்கள் வரும்போதும் கொண்டாடப்படும்போதும் பெருங்கவலையும் பேரச்சமும் சூழ்கிறது. ஒரு நாயகனை எந்த அளவிற்கு அவனே சலித்தும் புளித்தும் போகும் அளவிற்கு உயர்த்தி உருவாக்க முடியுமோ அந்த அளவிற்கு இதில் உயர்த்தப்பட்டு உள்ளது.

ரோலான் பர்த் எந்த ஒரு சொல்லுதலுக்குள்ளும் (நேரேட்டிவ்) ஐந்துவிதமான சொல்முறைச் சங்கேதங்கள் (Narrative codes) இருக்கும் என்று தனது S/Z என்ற நூலில் விவரிக்கிறார். அதில் ஐந்தாவது சங்கேதம் கலாச்சார சங்கேதம். அதாவது பண்பாட்டு சங்கேதம். இதுதான் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஆதிக்கம் செய்யும் சங்கேதம். தொடர்ந்து வாழும் மக்களின் பண்பாட்டை அடையாளப்படுத்திக்காட்டி உறுதிப்படுத்தும் ஒன்று. லிங்கா அப்படி உறுதிப்படுத்தும் பண்பாடு… இந்தியா எனப்படும் ஒற்றைத் தேசியத்தின் பண்பாடு. அதாவது இன்றைய அரசியலில் சொன்னால் பண்பாட்டு தேசியம். இது யார் யாருக்காக முன்வைக்கிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

லிங்கா பார்த்தபின் மனதில் தாங்கவியலாத சோர்வும், துயரமும், துக்கமும் வருவது எனக்கு மட்டும்தானா என்றும் தெரியவில்லை. ஈஸ்வரா….  

- ஜமாலன். (14-12-2014)

  •