சுற்றிப் படரும் தீ
"இதெல்லாம் மூலப் பிரதியில் சொல்லவே இல்லப்பா. இவங்களா எதையாவது எழுதிக்கிறாங்க" என்று சில உரையாசிரியர்களைப் பற்றிக் கிண்டலடிப்பார்கள்.
யாப்பிலக்கணம், அணியிலக்கணம், ஓசைநயம், மரபு சார்ந்த பொருள் கூட்டுதல் என்று பலவகை வழக்கங்கள் இருந்தாலும், கவிதை என்று வரும்போது உரையாசிரியகளின் சிறகுகள் பெரியதாக விரியத் தொடங்கி விடுகின்றன.
மரபு கவிதைகளிலிருந்து, வசன கவிதைகளுக்கு ஒரு இயல்பான பாலம் அமைத்துக் கொடுத்த வகையில், பாரதியின் பங்கு தமிழ்மொழிக்கு இன்றியமையாதது.
"பாரதிக் கல்வி" என்ற நூலில், அந்தக் கவிதைகளுக்குள் இன்னும் சில அடிகள் ஆழப் புகுந்து விடுகிறார், கவிஞர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். "தீக்குள் விரல்வைத்தால், நின்னை தீண்டும் இன்பம் தோன்றுகிறதே" என்கிற ஒரு வரியைக் கொண்டு மோகனரங்கன் பாரதியை நெருங்கிச் சென்று அறிய முற்படும் தருணங்கள் மிகவும் தீர்க்கமானவை.
பாரதியின் பாடல்கள் நூலின் இரு பதிப்பை எடுத்துக் கொண்டு, மேற்குறிப்பிட்ட வரி ஒரு பதிப்பில் இடம்பெற்று அதற்கு முந்தைய பதிப்பில் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதையொட்டி மோகனரங்கனின் ஆய்வுகள் பாரதியின் படைப்புகளைச் சுற்றிச் சுழன்று செல்கின்றன.
"துழாய் (துளசி) மலர் மணக்க, வளையல்கள் செறிந்த முன் கையுடன், சிறு மானைப் போன்ற என் பெண், தன் மேனி வேகாமல், அச்சுதனே என்று சொல்லி செந்தீயை தழுவுகிறாள். என் கோவிந்தனே எனச் சொல்லி குளிர்ந்தக் காற்றைத் தழுவுகிறாள். இப்படி அவள் செய்வது ஒன்றா இரண்டா..." எனத் தாயின் புலம்பலாக நம்மாழ்வாரின் பாசுரம் ஒலிக்கிறது. கண்ணன் மீது பித்துக் கொண்ட அந்த சிறுபெண்ணிற்கு சுடுநெருப்பும், குளிர்காற்றும் ஒன்றே போலத்தானாம்.
இந்தப் பாசுரத்தை பாரதியின் ஆங்கில மொழியாக்கத்திலும் படிக்கும் வாய்ப்பும் நமக்கு இருக்கிறது. நேரடியான புத்தகப் பிரதியாக இல்லை. மைக்ரோஃபில்ம் பிரதியாக,நியூயார்க் லைப்ரரியில் கிடைக்கும் என்கிறார்கள். 'பாரதி எனும் பற்றுக்கோடு' சிறுகதையில் வரும் புலவர் இரத்தினசாமி ஐயா இந்தப் புத்தகம் தன்னுடைய பாரதி சேகரிப்பில் இல்லையே என வருத்தப்படுவார். அதனால் என்ன. இது போன்ற அரிய புத்தகங்கள் பற்றி சில அரிய பதிவுகளாவது நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றனவே என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
ஆண்டாள், தன்னுடைய நாச்சியார் திருமொழியில், பார்க்கும் குயில்கள், மயில்கள், மலர்கள் என எல்லாவற்றிலும் கண்ணனின் நிறத்தையே காண்பதாக புலம்புவார். தொண்டரடி பொடியாழ்வார், முல்லை நிலத்து காட்டின் தெய்வமான கண்ணனை, அதன் பசுமையான நிறத்தோடு ஒப்பிடுவார்.
இந்த மரபார்ந்த பொருட்செறிவோடு, பாரதி தன்னுடைய பாடலில், காக்கையின் சிறகை உவமையாகக் கொண்டு வருகிறார். அவ்வளவு அடர்த்தியான கருமை நிறம் என்பது எவ்வளவு ஒளி பொருந்தியதாக, காந்தியுடையதாக இருக்க வேண்டும். இந்திய பக்தி மரபில், துன்பங்கள் கொடுக்கும் கலியின் (சனி பகவான்) வாகனம் காக்கை என்பார். ஆண்டாளை ஒட்டியும், அப்படியே மரபை உடைத்துக் கொண்டும், காக்கையின் சிறகை காதல் கண் கொண்டு பார்க்கும் கவித்துவ மனம் பாரதிக்கு வாய்த்திருக்கிறது.
நம்மாழ்வாரின் பாசுரத்தில் வரும் அச் சிறுபெண் குளிர்காற்றையும், சுடும்நெருப்பையும் கண்ணனின் நாமம் சொல்லி தழுவி நிற்கிறாள். பாரதிக்கு ஒரு விரல் கொண்டு தீயினை தீண்டினால் போதும். கண்ணன் அவரையேத் தழுவும் இன்பத்தை அப்படியே அளித்து விடுகிறான்.
தமிழ்வேதம் செய்வித்த பெருமை கொண்ட ஆழ்வார்களின் பாசுரங்களில், கண்ணனின் கீதையைப் பற்றி நேரடியான சுட்டுதல் இல்லை என்பார்கள் ஆய்வாளர்கள். ஆனால் கீதையின் சரணாகதி தத்துவத்தை சுட்டும் விதமாக நம்மாழ்வாரின் பாசுரத்தில் "வணக்குடைத் தவநெறி வழி நின்று" என வருவதாகச் சொல்வார்கள்.
பாரதிக்கு கண்ணனின் வேய்ங்குழல் கீதம் ஒன்றே போதுமானதாக இருக்கிறது. அது தத்துவம் சார்ந்த மொழியாற்றுகையாக இருந்தால் என்ன, மொழியற்ற குழலோசையாக இருந்தால் என்ன, கண்ணனின் கீதம் அவர் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.
சுற்றிப் படரும் தீயை பாரதி தொடர்ந்து தனக்குள் உருவகித்துக் கொண்டே வந்திருக்கிறார். தசையினைத் தீச்சுடினும், சிவசக்தியைப் பற்றி பாடும் மனம் அவருக்குத் தேவையாக இருக்கிறது. சிறு பொந்தினுள் வைத்த நெருப்புப் பொறி படர்ந்திழுத்து பஸ்மமாக பொசுகிக் கொள்ளக் காத்திருக்கும் காடுபோல ஒரு கவித்துவத் தருணத்தை நோக்கிக் காத்திருப்பது தவிர கவிஞனுக்கு வேறென்ன வேண்டும்?
உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.