Reading view

ஹெக்ஸகோன் – 11

ஜூலை 10, 2023

 ஜூலை ஒன்பதுடன் எங்களுடைய படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.  என்னுடைய கணவனாக குறும்படத்தில் நடித்த மேகவண்ணன் அவர் குடும்பத்துடன் பிரான்ஸின் தென் பகுதியிலிருக்கும் மோன்பெல்லியே என்ற ஊருக்கு செல்வதாகச் சொன்னார். அங்கே அவருக்கு ஒரு வீடு இருந்தது. ஜூலை மாதம் பிரான்ஸிலிருக்கும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை. ஒருவர் பாக்கியில்லாமல் அவரவருக்கு ஏற்ற இடங்களுக்கு குழந்தைகளை இட்டுச் செல்கிறார்கள். நீலவண்ணனுக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் அவளுடைய காதலனுடன் தனி வீட்டில் வசிக்கிறாள். சின்னவள் எம்மா. பத்தாவது படிக்கிறாள். மேகவண்ணனும் அவர் மனைவி மரியாவும் மகள் எம்மாவும் மோன்பெலியேவில் பதினைந்து நாட்கள் தங்கத் திட்டமிட்டிருந்தனர்.

‘நீயும் வருகிறாயா?’ என்று கேட்டார் மேகவண்ணன்.

‘ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கச் செல்லும்போது இந்தக் கரடி எதற்கு’ என்றேன்.

‘உன்னை பதினைந்து நாளும் எங்களோடு இருக்கச் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. நடுவில் வரும் சனி ஞாயிறன்று எங்களுடன் இருக்கலாம். ஜூலை 15, 16 எங்களுடன் செலவழிக்கலாமே. நீ தேவதை. கரடி என்று சொல்லாதே’ என்றார் தன் மனைவியைப் பார்த்து புன்னகை செய்தபடி.

அவரும் ‘நீங்கள் வந்தால் சந்தோஷமே’ என்று உண்மையாக மனதார சொன்னதுபோல் தான் இருந்தது.

உடனே யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன். எனக்கு டி.ஜி.வி. அதிவேக ரயிலில் பயணச்சீட்டு வாங்கி அனுப்பினார் மேகவண்ணன்.

*

பாரிஸ் மெத்ரோ ரயிலில், அதாவது பாரிஸுக்குள் மட்டுமே செல்லும் மெத்ரோவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல இரண்டு யூரோ மட்டுமே என்று தெரிந்தது. நம்மூர் ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட இருநூறு ரூபாய். கிஷோர் வாங்கிக் கொடுத்திருந்த மெத்ரோ அட்டையில் பத்து முறை மெத்ரோவிலோ பேருந்திலோ பயணம் செய்யலாம். காலியானால் திரும்ப பணமேற்றிக் கொள்ள வேண்டும். பலர் பயணச்சீட்டு வாங்குவதில்லை. அட்டையைத் தேய்த்தால் திறக்கும் கதவின் மேலாக எகிறிக் குதித்து செல்வதை கவனித்தேன். அப்படிச் செல்பவர்களில் எண்பது சதவிகிதம் புலம் பெயர்ந்தவர்கள். எக்காலத்திலும் அப்படிச் செல்லக்கூடாதென்று கிஷோர் எங்களை முன்னரே எச்சரித்து விட்டார்.

‘டிக்கட் செக்கர் வந்துவிட்டால் ஃபைன். அதுகூடப் பரவாயில்லை. போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி வந்தால் அடுத்தமுறை வீசா கிடைக்காது’ என்று பயமுறுத்தினார். அப்படியும் இரண்டு முறை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தேன், அட்டைவேலை செய்யாததால். சாந்த்ரா ‘பரவாயில்லை, என் பின்னால் வந்துவிடு’ என்று சொன்னார். அதனால் இரண்டு முறைபயத்துடன் பயணச்சீட்டில்லாமல் பயணித்தேன். ‘டிக்கட் செக்கர் வந்தால் நீ யாரோ, நான் யாரோ’ என்றார் குறும்புச் சிரிப்புடன்சாந்த்ரா.

ஷோபா சக்தியைப் பார்த்தபோது சொன்னார் ‘நானும் இப்படி எகிறிக் குதித்துதான் போவேன். தீபன் திரைப்படத்திற்கு ‘பால்ம்த’ஆர்’ (Palme d’or )விருது கிடைத்தபோது டிவியில் என் படத்தைக் காட்டிக்கொண்டே இருந்தார்கள். அந்த நாளில் நான்மெத்ரோவில் செல்ல வேண்டியிருந்தது. எல்லோரும் என்னைப் பார்த்து நட்புடன் சிரிக்கவே, எகிறிக் குதிப்பதற்கு வெட்கப்பட்டுடிக்கட் வாங்கினேன். இந்த விருதுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று நேர்காணலில் கேட்டபோதுஇதைத்தான் சொன்னேன். முந்தி டிக்கட் வாங்க மாட்டேன். இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டதால் டிக்கட் வாங்கவேண்டியிருக்கிறது என்று’ என்றார்.

‘ஆனாலும் இரண்டு யூரோ அதிகம்தான். பாவம், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்’ என்றேன் சாந்த்ராவிடம்.

‘இரண்டு யூரோவில் உங்கள் நாட்டில் என்ன வாங்க முடியும்?’ என்று சவால் விட்டார் சாந்த்ரா.

‘என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஏகப்பட்டது வாங்கலாம். இரண்டு லிட்டர் பால், தயிர், மூன்று நாளைக்குக் காய்கறி,…’ என்று வரிசையாக அடுக்கினேன்.

‘கிராமத்தில் இருக்கும் என் மாமியார் இருநூறு ரூபாய்க்குதான் கரண்ட் பில் கட்டுகிறார் ஒரு மாதத்துக்கு. ஏன்? ஒரு சல்வார்டாப்ஸோ, புடவையோ, சட்டையோ கூட வாங்கலாம்’ என்றேன். சாந்த்ரா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பேசாமல் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விடலாம் என்று நினைத்திருப்பார்.

பாரிஸில் விலைவாசி பயங்கரம். புறநகர்ப் பகுதிகளிலெல்லாம்கூட 1200 சதுர அடி வீடு ஆயிரம் யூரோ (கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்) வாடகை. மாதம் குறைந்த பட்சம் 3000 யூரோ சம்பாதித்தால் மட்டுமே மூச்சு விட முடியும். அதாவது கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும். இந்தியாவில் இருந்து பாரிஸ் சென்று பத்து நாள் இருக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் வேண்டும். விமான டிக்கட்டே 70,000ல் இருந்து 90,000 வரை. அங்கே செலவு செய்ய ஒரு லட்சம் கட்டாயம் வேண்டும். எல்லா சுற்றுலாத் தலங்களுக்கும் குறைந்தது 1500 ரூபாய் கட்டணம் உண்டு.

*

சரியான பிளாட்பாரம் பார்த்து நின்றால் நாம் நிற்கும் பிளாட்பாரமில் வரும் எல்லா வண்டிகளும் நமக்கு வேண்டிய இடத்திற்குப் போகும். இந்த வண்டிதான் அங்கு போகும் அது போகாது என்றெல்லாம் இல்லை. சரியான பிளாட்பாரத்தில் நிற்பது மட்டும்தான் முக்கியம்.  எல்லாப் பக்கங்களிலும் வழி சொல்லும் பலகைகள் உண்டு. இரு முறை தனியாகப் போய் வந்துவிட்டால் மெத்ரோ நமக்குப் புரிபட்டு விடும். பாரிஸ் நகரத்தில் தனியாக மெத்ரோவில் ஏறி சுற்றிப் பார்ப்பது சுலபம்தான்.

‘சென்னையில் இப்படி வசதியில்லை. நான் அங்கு வந்தபோது பஸ்ஸில் ஏறி மிகவும் சிரமப்பட்டேன்’ என்றார் சாந்த்ரா.

‘முதலில் பாரிஸோடு சென்னையை ஒப்பிடுவதே தப்பு சாந்த்ரா. இந்த வானிலையும்  இப்படியான சாலைகளும் சென்னையில் இல்லை. எங்கள் மக்கள் தொகையையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். மட்டுமல்லாமல் எங்கள் ஊர் மக்களிடம் வழி கேட்டால் உங்களை வீடு வரை கொண்டு விட்டு வருவார்கள்’ என்றேன்.

‘அது, ஆமாம்! மக்கள் ரொம்ப அன்பானவர்கள்’ என்றார்.

‘இங்கும் மக்கள் அன்பானவர்களே. தோபாந்தோனுக்கு நான் வழி கேட்டபோது எல்லோரும் வழி சொன்னார்கள் சாந்த்ரா. அதையும் சொல்ல வேண்டும்.’

‘நீ வழி கேட்ட அனைவரும் ஆண்களா?’

‘ஒருவரைத் தவிர அனைவரும் ஆண்கள்.’

‘அதானே பார்த்தேன்!’ என்றார் கிண்டலாகப் புன்னகைத்துக்கொண்டு.

*

மேகவண்ணன் அழைப்பை ஏற்று பாரிஸிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மோன்பெலியே நகரத்துக்கு TGV என்ற வெகு வேக ரயிலில் மூன்றரை மணி நேரத்தில் சென்றேன். கார் த லியான் என்ற ஸ்டேஷனில் இருந்துதான் வேறு ஊர்களுக்குச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் புறப்படுகின்றன. நந்தனின் வீட்டிலிருந்து கிளம்பியதால் அவர் என்னை வழியனுப்ப வந்திருந்தார். விமான நிலையத்தைப் போலவே ஒரு கட்டத்துக்கு மேல் அவரை அனுமதிக்கவில்லை. பயணிகள் மட்டும்தான் என்று தடுத்து விட்டனர். அது இரண்டடுக்கு ரயில். சுத்தமாக இருந்தது. எனக்குக் கிடைத்த இருக்கை நடுவில் மேசையோடு இருந்தது. இந்தப் பக்கம் இருவர் அந்தப் பக்கம் இருவர் என்று உட்காரலாம். இது மாதிரியான இருக்கைகள் சதாப்தியில் பொதுவாகப் பெட்டியின் நடுவில் இருக்கும். இந்த வண்டியில் பெட்டியின் கடைசியில் இருந்தது. எனக்கு எதிரே ஸ்டைலாக, புஜங்களில் டாட்டூ வரைந்த ஒரு தந்தையும் இருபதுகளில் இருக்கும் அவரின் மகளும் அமர்ந்திருந்தனர். என் அருகே ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்.

வண்டி கிளம்பும் நேரம் வந்ததும், டிக்கட் கலெக்டர் வந்து ‘எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா, ஏதேனும் வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள். Bon Voyage!’ என்று சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டுச் சென்றார். எல்லோரும் ‘மெர்சி’ என்றார்கள். அதற்குப்பின் அந்தப் பெட்டியிலிருந்து சத்தமேயில்லை.

வண்டி கிளம்பியவுடன் ‘உங்கள் போனை சைலண்ட் மோடில் வைக்கவும். மற்றவருக்கு தொல்லையில்லாமல் ஹெட்போனில் பாட்டு கேட்கவும். புகை பிடிக்கவும் கூடாது. குழந்தைகளுக்கான பிரத்யேகப் பெட்டி இருக்கிறது. வேண்டுமானால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அறிவிப்பு பிரெஞ்சிலும், பிரெஞ்சைப் போன்ற உச்சரிப்புடன் ஆங்கிலத்திலும் வந்தது. சுரங்கப் பாதையினுள் செல்லும்போது விமானத்தில் போவதுபோல காதை அடைத்தது.

நம்மூர் போல ‘மத்தியானம் என்ன சமைச்சு வச்சிருக்க? கண்ணன் வந்தானா? ஊர் சுத்தாம சோறு தின்னானா இல்லியா?’ என்று அலற முடியாது. அனைவரும் இடித்து வைத்த புளிபோல் சீட்டில் ஒட்டிக் கொண்டு வீடியோ பார்க்கிறார்கள் அல்லது புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். போன் பேச வேண்டும் என்றால் பெட்டிக் கதவைத் திறந்து வெளியில் போய் கிசுகிசுத்து விட்டு வருகிறார்கள். முதல் வகுப்புப் பெட்டிக்காரர்களுக்கு தனியே வெளியில் ஒரு பெஞ்சு உண்டு. அதில் உட்கார்ந்து கதைக்கலாம், பத்து டெசிபலில். மனிதர்கள் என்ன, அந்த ரயிலில் பயணம் செய்யும் நாய் பூனைகளும் முனகுவது கூட இல்லை. அழகாக மடியில் உட்கார்ந்து கொண்டு வருகின்றன.

ரயிலின் ஒரு பெட்டி டைனிங் கார் மற்றும் பார். வேண்டுமென்றால் அங்கே போய் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் நான் பார்த்த வரை எல்லோரும் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.

அப்பாவும் மகளும் வழியில் ஒரு ஊரில் இறங்கினார்கள். இறங்கும்முன் என்னிடமும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞனிடமும் ‘Bonne journee’ (‘இந்த நாள் இனிய நாளாகட்டும்’) என்று சொல்லிவிட்டு இறங்கினார்கள். ஆஹா! அருமையான மக்கள் என்று நினைத்துக் கொண்டேன். மோன்பெலியேவிலிருந்து பாரிஸ் திரும்பி வரும்போது என் எண்ணம் சற்று மாறியிருந்தது.

மோன்பெலியேவிலிருந்து பாரிஸ் திரும்பும்போது ஸ்டேஷன் வாசலில் என்னை மேகவண்ணன் இறக்கிவிட்டுவிட்டுப் போய் விட்டார். நான் அறிவிப்பு வந்ததும் நேராக பிளாட்பாரத்துக்கு சிறிது முன்னால் நின்றிருந்த டிக்கட் சோதனை செய்பவரிடம் என் டிக்கட்டை காண்பித்தேன். அவர் ‘வலது பக்கம் செல்லுங்கள். Bonne Journee’ என்றார். நான் கோச் நம்பரைப் பார்த்து உள்ளே ஏறும்முன் என் பின்னாலிருந்து கடுமையான ஒரு குரல் வந்தது. திரும்பிப் பார்த்தால் தள்ளுவண்டியில் குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி முறைத்துக் கொண்டிருந்தார். ‘என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டேன்.

‘சீக்கிரம் ஏறு, இல்லையென்றால் எனக்கு வழியை விடு’ என்று கடுகடுவென்று சொன்னார். பிரான்ஸ் வந்தபிறகு முதல் முறையாக கடுஞ்சொல் கேட்டதால் அதிர்ச்சியுடன் உள்ளே ஏறினேன். அந்தப் பெண்மணிக்கு அந்த டபுள் டெக்கர் வண்டியின் மேலடுக்கில் இருக்கைபோல. எனக்கும் மேலடுக்கில்தான் இருக்கை. அவர் தள்ளுவண்டியை மேலே தூக்கிக் கொண்டு போக சிறிது சிரமப்பட்டார். நான் தயங்கிக்கொண்டே ‘உதவி வேண்டுமா’ என்று கேட்க ‘தேவையில்லை, எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்’ என்று கடுப்படித்தார். தேவையா இது என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடம் பேசவேண்டும் என்றிருந்தது. ஆனால் தயக்கத்தினால் பேசவில்லை. பிரஞ்சு SNCF ரயில்வே, தன் பயணிகளை பக்கத்தில் உட்கார்ந்து பயணிப்பவருடன் பேச வைப்பதற்கு முயற்சி செய்கிறது. 65 சதவிகித பிரஞ்சு மக்கள் ரயிலில் தன்னுடன் பயணிப்பவரிடம் பேச விரும்புகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. ஆனால் மற்றவர் பேச விரும்ப வேண்டுமே என்ற தயக்கத்தில் பேசுவதில்லை என்று அந்த ஆய்வு சொல்கிறது. சிலர் அமைதியாக ஓய்வாக இருக்கவே விரும்புகிறார்கள். தங்களுக்கான நேரமாக அதைக் கருதுவதால் யாருடனும் பேச விரும்புவதில்லை என்றும் தெரிவிக்கிறது. இதில் குழம்பிப் போய், குறைந்த பட்சம் Valentine’s Day, Christmas போன்ற சமயங்களிலாவது கூட பயணிப்பவருக்கும் ஒரு கேக்கோ பிஸ்கட்டோ எடுத்து வாருங்கள் என்று ரயில்வே சொல்கிறது. பசியில் வயிறு இறைந்தால்கூட முழு பெட்டிக்கும் கேட்குமளவு நிசப்தத்தோடு செல்கிறது TGV. நம் ரயில் பயணங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

நம்மைப் பார்த்து இவர்கள் திருந்துவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும். பாவம் என்று நினைத்துக் கொண்டேன்.

-தொடரும்

  •  

ஹெக்ஸகோன் – 10

பெப்ருவரி 1990

பத்தாவது முழுப்பரிட்சைக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. பேபி ஆறாவது. ஹரி எஞ்சினியரிங் கடைசி ஆண்டு.

ஒவ்வொரு நாளையும் சமாளிப்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தாலும் எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது. அதுவும் வேகமாக. சட்டென்று அம்மாவுக்குத் தலை நரைத்து வயசானவளாகக் காட்சியளிக்கிறாள். அப்பாவும் தளர்ந்து போனது தெரிகிறது. ஹரி அப்பாவை இரு சக்கர வாகனம் ஓட்ட விடுவதில்லை. கல்லூரிக்கு செல்லும் முன் அப்பாவை அவர் அலுவலகத்தில் விட்டுவிட்டுப் போகிறான். வரும்போது அழைத்துக்கொண்டு வருகிறான். அப்பா அம்மாவை இவ்வளவு அழகாக கவனித்துக்கொள்ளும் அவனுக்கு எங்கிருந்து இந்த புத்தி வந்தது? ஏன் என்னிடத்தில் மட்டும் பிரச்சனை? நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏதாவது தப்பான சமிக்ஞை கொடுக்கிறேனா? குழப்பம் அதிகமாகியது.

சுமதியை அவ்வப்போது வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன். பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் இருந்தவள் இப்போது புருஷனைக் கூட்டிக்கொண்டு கோயமுத்தூர் சென்றுவிட்டாள். எங்களைப் பார்க்க சிரமமாக இருந்ததோ என்னவோ. திருமணமாகி ஒரு வருடத்திலேயே ஒரு ஆண் குழந்தையும் பெற்றாள். பிரசவத்துக்கு பாண்டி அண்ணா, அம்மா வீட்டிற்கு அனுப்பாமல் தானே பார்த்துக்கொண்டார். இருவரும் எங்களிடம் எந்த உதவியும் கேட்கக் கூடாதென்று வைராக்கியமாக இருந்தனர். குழந்தை பிறந்ததும் நாங்கள் போய் பார்த்துவிட்டு வந்தோம். அழகாக மொட்டுமொட்டென்று சுமதியைப் போலவே இருந்தது. அதற்குப்பின் ஓரிரு முறை குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவள், பின் கோயமுத்தூருக்கு வீடு மாற்றி சென்று விட்டாள்.

ஹரியின் நோட்டை நான்தான் கிழித்தேன் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தாலும் வீட்டில் எதுவும் சொல்லவில்லை. அடுத்து வந்த நாட்களில் தூங்காமல் வேலை செய்து கொண்டிருந்தான். அடுத்தடுத்து வந்த மாதங்களில் பிரச்சனை எதுவும் இல்லாமல் போகவே அப்பாடா என்ற ஒரு பெருமூச்சு நிலவியது. கோனா சந்தோஷப்பட்டாள்.

ஆனால் மெல்ல மெல்ல கள்ளிச்செடி வளர்வதுபோல வேறு விதமாக ஆரம்பித்தான் ஹரி.

‘அம்மா, இவளை பக்கத்து வீட்டு குமாரோட பார்த்தேன். ஒண்ணும் இருக்காதுன்னு தெரியும். ஆனா ஏன் தேவையில்லாம அவனோட நடுரோட்டுல பேசிண்டு நிக்கறா?’

‘அம்மா, இவ போட்டுக்கற டிரெஸ் ஒண்ணும் சரியில்லை. சொல்லிட்டேன். நான் சொன்னா சண்டைக்கு வருவா. நீ கொஞ்சம் சொல்லு.’

‘அப்பா, கீதா ஸ்கூல்ல சரியா பாடத்தை கவனிக்கறதில்லன்னு கேள்விப்பட்டேன். எப்பவும் கனா கண்டுண்டே உட்கார்ந்திருக்காளாம்.’

‘அம்மா, எதுக்கு இப்ப இவ இப்படி நகம் வளர்த்தி நெயில் பாலிஷ் போட்டுக்கறா? எவனை மயக்க? சுமதி மாதிரி இன்னொரு கேஸ் நம்ம வீட்டுல வரணுமா?’

‘அப்பா, 8.30 மணி பஸ்ஸுக்கு எதுக்கு எட்டு மணிக்கே பஸ் ஸ்டாண்டுல நிக்கறா?’

இப்படி மெல்ல மெல்ல என் பெற்றோரின் மனதை விஷமாக்கினான். நன்றாகப் படிக்கும் பிள்ளை, தலைச்சன், பின்னால் குடும்பத்தை கவனித்துக் கொள்ளப் போகிறவன், இதுவரை எந்த வம்பையும், நண்பன் என்று எவனையும் கூட்டி வராத பிள்ளை, ஊரார் கெட்ட பழக்கம் என்று வரையறுத்து வைத்திருக்கும் எந்தக் கெட்டதும் இல்லாத பிள்ளை. அவன் சொன்னால் வேறு என்ன வேண்டும். அதுதான் தெய்வ வாக்கு. என்னைக் கண்டிக்க ஆரம்பித்தனர். நான் எகிற ஆரம்பித்தேன். நான் திருப்பிப் பேச ஆரம்பித்ததும் அவர்களுக்கு என்னிடம்தான் தப்பு இருக்கிறது என்று தோன்ற ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல முடிவே செய்து விட்டனர். நான் எவ்வளவோ மன்றாடினாலும் கேட்பதாயில்லை. எனக்கு நாட்டியம் கற்றுக்கொள்ள, பாட்டுக் கற்றுக்கொள்ள, இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசை. ஆனால் இவன் என்னைப் பற்றி தோற்றுவித்திருந்த பிம்பமே வென்றது. பள்ளியை விட்டால் வீடு, வீட்டை விட்டால் பள்ளி என்றே என் வாழ்க்கை அமைந்தது. நான் வீட்டை விட்டு எங்கும் நகர முடியாதபடி வெங்கட் பார்த்துக் கொண்டான்.

ஒவ்வொரு வருடமும் எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு மணி நேர தொலைவிலிருக்கும் மருதமலைக்கு பத்தாவது படிக்கும் பெண்களையும் பனிரெண்டாவது படிக்கும் பெண்களையும் கூட்டிச் செல்வார்கள். முழுப் பரிட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன் இரண்டு மூன்று பேருந்துகளில் எங்களை ஏற்றி கூட்டிச் செல்வார்கள். அதுதான் எங்களுக்கு உல்லாசப் பயணம். மருதமலைக்கு சென்று நாங்கள் நல்லபடியாக தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம். அந்த நாளை எதிர்பார்த்து ஒவ்வொருவரும் ஆனந்தத்துடன் இருப்போம். அதைப் பற்றிய பேச்சு பள்ளியில் ஜனவரியிலிருந்தே ஆரம்பித்துவிடும்.

எவ்வளவு கெஞ்சியும் மருதமலை பயணத்துக்கு என்னை என் வீட்டினர் அனுப்பவில்லை.

‘இவள் கண்டிப்பாக குமாருடனோ ஜாகீருடனோ ஓடி விடுவாள்’ என்று ஹரி அடித்து சொன்னான். என் வகுப்பு ஆசிரியை அனுமதி கேட்டும்கூட என் பெற்றோர் அனுப்ப மறுத்தனர். குமாரும் ஜாகீரும் என்னுடன் பிறக்காத சகோதரிகள்போல். எப்படி இவர்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பது?

கோனா ஒரு நாள் ஹரியைப் பார்க்க வேண்டி வந்தது. முதல் பார்வையிலேயே அவனை எரித்து விடுவதுபோல் பார்த்தாள். ஹரிக்குப் புரிந்துவிட்டது. அன்றிலிருந்து கோனா அவனுக்கு எதிரியாகி விட்டாள்.  அவள் நட்பு கூடாநட்பு என்று என் பெற்றோரை நம்ப வைத்தான்.

‘அம்மா, அவங்க குடும்பத்துக்கு புலிகளுடன் தொடர்பு இருக்கு. இவளை நாம கட்டுப்படுத்தலன்னா நிலைமை கைவிட்டுப் போயிடும்’ என்றவுடன் கோனா வீட்டுக்கு வருவதற்கும் தடை போடப்பட்டது.

என் வகுப்புத் தோழிகள் மருதமலை சென்ற அன்று எனக்கு வீட்டில் நிலைகொள்ளவில்லை. நினைவெல்லாம் அங்கேயே இருந்தது. கூட்டம் கூட்டமாக சினிமாவுக்குச் செல்லும், உணவருந்தி மகிழும் பெண்களைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. எனக்கு மட்டுமல்லாமல் பேபிக்கும் அதே நிலைமைதான். அவளை எதுவும் சொல்ல மாட்டார்கள் என்றாலும் அவள் என்னோடவே ஒட்டுவாரொட்டிபோல் ஒட்டிக்கொண்டே இருப்பாள். அவளுக்கு நான் இருந்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம். என்னால் பேபியிடம் ஓர் அளவுக்கு மட்டுமே பேச முடியும்.

எனக்கு இப்போதெல்லாம் புத்தகங்கள் மட்டுமே தோழிகள். லைப்ரரி மாமாவை வீட்டுக்கே வந்து புத்தகங்கள் தருமாறு சொல்லிவிட்டார்கள். அதனால் வாரம் ஒருமுறை அவர் வார இதழ்கள், மாத இதழ்கள், நாவல்கள் எல்லாம் கொண்டு வந்து கொடுப்பார். அடுத்த வாரம் வருவதற்குள் படித்துவிட்டு நானும் அம்மாவும் வேறு புத்தகங்களை எடுத்துக் கொள்வோம்.

டிங்கில், விஸ்டம், பாலமித்ரா, துளிர், முத்து காமிக்ஸ்,பாலகுமாரன் தவிர ஆங்கிலத்தில் அகதா கிரிஸ்டியுடன் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ராபின் குக், ஆஸ்டரிக்ஸ், ஆர்.கே. நாராயண் என்று பலரும் என் புத்தக அடுக்கில் ஏறியிருந்தார்கள். இப்போதெல்லாம் சேஸின் உலகம் மிகவும் பிடித்துப் போனது. அவருடைய நாவல்களில் வரும் பாரடைஸ் சிட்டியில் நானும் வாழ ஆரம்பித்திருந்தேன். ல்யூடினண்ட் டாம் லெப்ஸ்கியுடன் சேர்ந்து நானும் பயணித்தேன். அமெரிக்க நிலப்பரப்பில் அவர்களுடன் அவர்களைப் போல ஜீன்சும் டி ஷர்ட்டும் அணிந்து வாழ்ந்தேன்.

ஆஸ்டரிக்ஸ் புத்தகங்களும் எனக்கு ஆகப் பிடித்திருந்தன. ஆஸ்டரிக்ஸ், ஓப்லிக்ஸ், அந்தக் கிராமத் தலைவன், அவர்கள் ஊரின் பாடகன், அதில் வரும் ஜூலியஸ் சீசர்…அனைவரும் என் குடும்பத்தில் ஒருவராயினர். என்னையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஏதேனும் ஒரு விஷயத்துக்காக மனது சஞ்சலமடைந்தால் நான் அடைக்கலமாவது இவர்களிடமே. அதில் வரும் ட்ரூயிடின் மந்திர பானத்தைக் குடித்து எனக்கும் அதீத சக்தி வருவதுபோல் நினைத்துக் கொள்வேன். லுதேசியாவின் பின் நானும் ஓடுவேன். ‘வானம் தலைமேல் விழுந்துவிட்டால் என்னாவது’ என்று நானும் அவர்களுடன் சேர்ந்து பயப்படுவேன். கிராமமே கூடிச் சாப்பிடுகையில் சாகபஷிணியாக இருந்தாலும் நானும் அவர்களுடன் உட்கார்ந்து சம்பிரமமாக சாப்பிடுவேன். என் கவலை, சஞ்சலம், கிலேசம் எல்லாம் பறந்து போய்விடும்.

இவர்களே போதும் இந்த ஜென்மத்துக்கு. யாரேனும் என்னை திருமணம் செய்துகொண்டு இந்த வாழ்க்கையிலிருந்து என்னை விடுவிக்கும்வரை இப்படியே வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன்.

ஆனால் நினைப்பதுபோல் வாழ்க்கை நடந்தால் சுவாரசியம் இல்லாது போய்விடும் என்று பிறக்கும் போதே பூப்போட்டு அர்ச்சிக்கப்பட்டிருக்கிறேன் போலும். சனி விஸ்வரூபம் கொண்டு ஆக்ரோஷமாக என்னை நோக்கி வந்தது.

கோயமுத்தூரில் இருக்கும் என் சித்தப்பா, அதாவது என் அப்பாவின் தம்பி பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. என் அப்பாதான் குடும்பத்துக்குப் பெரியவர் என்பதால் திருமணத்துக்கு முன் நடக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அப்பாவையும் அம்மாவையும் வந்து நடத்திக் கொடுக்கச் சொல்லி அழைத்தார்கள் சித்தப்பாவும் சித்தியும். மனையில் உட்கார ‘கன்யா பொண்’ ஒருத்தி வேண்டும் என்பதால் பேபியையும் மறக்காமல் கூட்டிக்கொண்டு வரும்படி சொல்லியிருந்தார்கள். வியாழக்கிழமை காலை புறப்பட்டு போய் வெள்ளிக்கிழமை இரவு வருவதாக ஏற்பாடு.

நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொன்னால் அம்மா மறுத்தாள்.

‘ஹரிக்கு யாருடி சமைச்சுப் போடுவா? பேசாமல் வீட்டில் இரு’ என்று கடுப்படித்தாள் அம்மா.

‘அம்மா, எனக்கும் கல்யாணி அக்காவைப் பார்க்கணும் போல இருக்கு. ப்ளீஸ் வரேனே’ என்று காலைப் பிடித்து கெஞ்சாத குறையாகக் கெஞ்சினேன்.

‘கண்ணம்மா, அம்மா சொல்றதைக் கேளு. இதோ! ரெண்டு மாசத்துல கல்யாணம். ஒரு வாரம் அங்கதான் இருக்கப் போறோம். சமத்தா அண்ணாவுடன் இரு’ என்று அமைதியாகச் சொன்னாள் அம்மா.

‘உன் பையன் சரியில்லை. அவன் என்னை தொந்தரவு செய்கிறான். அவன் என்னை மறுபடி தொல்லை செய்தால், என் மீது கை வைத்தால் நான் என்ன செய்வேன் அம்மா. அவன் உங்களுக்கெல்லாம் நல்லவனாக இருக்கிறான். என்னைப் பார்த்தால் அவன் சாத்தானாகி விடுகிறான் அம்மா. என்னைப் புரிந்து கொள்ளேன்’ என்று மனதில் அரற்றிக் கொண்டு,

‘ப்ளீஸ்…அம்மா, அம்மா, ப்ளீஸ்…விட்டுட்டு போகாதே’ என்று கண்ணீர் மல்க கெஞ்சினேன்.

‘என்னடி குழந்தையாட்டம் ஆடற’ என்று அம்மா கோபமாகத் தொடங்கினாள். ‘ஹரிக்கு ஏதோ பரிட்சையிருக்குன்னு சொன்னான். அவனுக்கு உதவியா இரு. அடம் பிடிக்காதே’ என்று முற்றுப்புள்ளி வைத்தாள் அம்மா.

வியாழக்கிழமை காலை ஹரி கல்லூரிக்குச் செல்ல தயாராகி வெளியே வந்தபோது

‘நாங்க போயிட்டு வரோம்டா. நாளைக்கு சாயந்திர வண்டி பிடிச்சு வந்துடுவோம். கீதாவைப் பார்த்துக்கோ’ என்றாள் அம்மா.

‘சரிம்மா’ என்றவன் கீழ் உதட்டை மடித்துக் கடித்து விஷமமாக சிரித்துக்கொண்டே செருப்பைப் போட்டதைப் பார்த்தவுடன் பகீரென்றது.

அம்மா, அப்பா, பேபி எல்லோரும் கிளம்பியவுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு மணியைப் பார்த்தேன். எட்டே முக்கால். ஒன்பது மணிக்கு எனக்குப் பள்ளியில் முதல் மணி அடித்து விடும். வீட்டிலிருந்து என் பள்ளி ஐந்து நிமிட நடைதான். ஜாகீர் கவர்மெண்ட் பாய்ஸ் ஹை ஸ்கூலில் படித்தான். அவனும் ஏறக்குறைய இதே நேரத்தில்தான் சைக்கிளில் கிளம்புவான். அவசர அவசரமாக அவன் வீட்டுக்குள் ஓடினேன். ரெஜினா அத்தை அவனுக்கு டிபன் பையை கொடுத்துக்கொண்டிருந்தாள்.

‘என்னடி குட்டி? இப்ப ஓடி வர?’ என்றாள் அத்தை.

‘அத்த, ஜாகீர் நேத்தே என்னோட சயின்ஸ் நோட்டு கேட்டான். மறந்துட்டேன் கொடுக்க. அதைக் கொடுக்க வந்தேன்’ என்று சொல்லி நோட்டைக் கொடுத்தேன். கேள்விக்குறியோடு என்னைப் பார்த்த ஜாகீரை கண்களாலேயே அமைதியாக வாங்கிக் கொள் என்ற செய்தி சொன்னேன்.

அவனும் ‘குடு’ என்று வாங்கிக்கொண்டு போய் விட்டான்.

மதியம் உணவு இடைவேளையில் பள்ளிக்கு வெளியே ஜாகீருக்காக காத்துக்கொண்டிருந்தேன். அவன் பேயறைந்ததுபோல் அரக்கப் பறக்க வந்தான்.

‘என்னடி இது எழுதியிருக்க? ஹரி அண்ணாவா? நம்பவே முடியல. நீ தப்பா புரிஞ்சுக்கலயே?’ என்றான்.

‘முழு விஷயமும் உனக்கு நான் அப்பறம் சொல்றேன். இன்னிக்கு ராத்திரி என் வீட்டுல என்னால் இருக்க முடியாது. என்ன செய்யறது? உன் வீட்டுக்கு வந்துடவா? ஆனால் அத்தைகிட்ட என்ன சொல்றது?’

‘ஹ்ம்ம்… எங்கம்மா நோண்டி நோண்டி கேப்பாங்க. என்ன சொல்லுவ?  இந்த விஷயத்தை பேசாம எங்கம்மா கிட்ட சொல்லிடலாமா?’

‘உங்களுக்கெல்லாம் மூளையே கிடையாதாடா? சொல்ல முடிஞ்சா நானே அத்தைகிட்ட சொல்லிடுவேன் இல்ல? உங்கம்மா, எங்கம்மா, மல்லிகா அத்தை, கவிதா அத்தை எல்லோரும் க்ளோஸ் பிரெண்ட்ஸ். அடுத்த நிமிஷம் காலனி பூரா தெரிய வரும். ஹரியை எதுவும் சொல்ல மாட்டாங்க. என் பேருதான் நாறும்.’

என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.

‘என்னால கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி வீட்டுல இருக்க முடியாது. ஏதாவது நடந்தா நான் தற்கொலை பண்ணிப்பேன்’ என்றதும் ஜாகீர் கலவரமானான்.

‘இன்னும் பதினைந்து நிமிஷம்தான் இருக்கு ஜாகீர் பெல் அடிக்க. என்ன செய்யறது?’

‘தெரியலையேடி.’

‘சரி! நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நீ கொழுமம் ரோடுல இருக்கும் உன் பிரண்ட் செந்தில் வீட்டுக்கு அப்பப்போ போய் ராப்பூரா தங்கி படிப்ப இல்ல? அப்படி தங்கி படிக்கப் போறேன்னு அத்தைகிட்ட சொல்லிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடு. நானும் வந்துடறேன். பழநி போயிடலாம். ஒரு ராத்திரிக்கு மட்டும் ரூம் எடுத்து தங்கிடலாம். காலையில் சீக்கிரம் திரும்பிடலாம். என்ன சொல்ற?’

‘என்னடி பேசற? ஹரி அண்ணா உன்னைக் காணோம்னு தேட மாட்டானா?’

‘என் பிரண்டு வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு வரேன்னு லெட்டர் எழுதி வெச்சுட்டுப் வருவேன். சிம்பிள். அவனுக்குத் தெரியும். கோபப்படுவான். ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்? கார்த்தாலதான் சீக்கிரம் வந்துடப் போறோமே.’

‘உங்க அம்மா அப்பாகிட்ட போட்டுக் கொடுப்பானே?’

‘அதுக்கு என்ன கதை சொல்றதுனு அப்பறம் யோசிச்சுக்கலாம்.’

‘ரூம் நமக்குத் தருவாங்களாடி? அதுக்கு காசு இருக்கா?’

‘நான் பார்த்துக்கறேன் அதை. கவலைப்படாதே. சிறுவாட்டுப் பணம் இருக்கு.’

ஜாகீர் தயங்கினான்.

‘உன்னை விட்டா எனக்கு வேற யாரும் இல்லடா. கோனாவும் ஹாஸ்டல்ல இருக்கா. வெளிய அனுப்பவே மாட்டாங்க. நீ என்னோட பெஸ்ட் பிரெண்ட் இல்லையா’ என்றதும் அவன் கண்களில் பரிவு வந்தது.

‘சரிடி. இதுல ஒண்ணும் பிரச்சனை வராதுன்னு நினைக்கறேன். அஞ்சு மணி பஸ்ஸுக்கு போயிடலாம். என்ன…’ என்றான்.

சந்தோஷமாகத் தலையாட்டிவிட்டு பிரச்சனையை தீர்த்துவிட்ட நிம்மதியுடன் என் வகுப்புக்குப் போனேன். என்னுடைய இந்த செயல் பெரிய பூகம்பத்தை இரு வீட்டிலும் ஏற்படுத்தி என் வாழ்க்கையையே மாற்றிப் போடும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

  •  

ஹெக்ஸகோன் – 8

18 ஜூலை 1986

கோனேஸ்வரி, அவ அம்மா, அப்பா எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்திருக்கா. அவளோட அண்ணன் போர்ல செத்துப் போனதுக்கு அப்பறம் அவங்க அம்மாவும் அப்பாவும் பயந்துகிட்டு அவளை மட்டும் இங்க அனுப்பிட்டாங்க. அவளோட சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க வீட்டுக்கு. அவங்க இவளை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. பாவம்! அம்மா அப்பாவை அடிக்கடி கூப்பிட முடியாது. சில சமயத்துல அவளோட கண்ணு ரெட்டா இருக்கும். அவ அழுதிருக்கான்னு தெரியும். ஆனால் நான் பேசாம அவகிட்ட போய் உட்கார்ந்துப்பேன். அவ அனுமதிச்சா அவ கையைப் பிடிச்சுகிட்டு உட்கார்ந்திருப்பேன். அந்த நொடில எனக்கான ஆதுரத்தையும் தேடிப்பேன். பல சமயம் வார்த்தைகளே வேஸ்டுன்னு தோணும். நம் கஷ்டத்தைப் புரிஞ்சுண்டு அமைதியா நம்மோட மணிக்கணக்கா உட்கார ஒருத்தர் இருந்தாலே போதும். சிட்னி கார்ட்டன் மாதிரி. லூசி மானெட் மாதிரி. ஹெர்க்யூல் பய்ரோ மாதிரி. மிஸ் மேபில் மாதிரி. அவங்களோட மணிக்கணக்கா என்னால உட்கார முடியும். எனக்கு எப்பவும் துக்கமோ பயமோ கஷ்டமோ கொடுத்ததில்லை அவங்க.

அடுத்த மாதம் என்ன செய்யப் போறேன்? எப்படி ஹரியை சமாளிக்கப் போறேன்னு நினைச்சேன். எனக்குப் பதட்டம் ஜாஸ்தியாச்சு. என்னாச்சு உனக்குன்னு கோனா கேட்டா. இப்பல்லாம் இரண்டு பேரும் பேசாமலேயே இன்னொருத்தர் சரியான மனநிலையில இல்லன்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டோம். பேசாம இல்ல. பேசுவோம். ஆனா கஷ்டங்களைப் பேசறதில்ல. அவள் வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. அதே போல அவளுக்கும் என் வாழ்க்கை இப்ப வரை தெரியாது குடும்பத்துல யார் யார் இருக்காங்கறத தவிர.

‘என்னாச்சு, சொல்லணும்னா சொல்லு’ ன்னு சொன்னா.

அவ்வளவுதான்! நான் அழுதுகிட்டே எல்லாக் கதையையும் சொன்னேன். அவளோட கண்ணு டார்ச் லைட் மாதிரி பெருசா ஆயிடுச்சு. ‘என்ன சொல்ற? சொந்த அண்ணனா?’

‘ஆமா! அவன் சொந்த அண்ணனான்னே சந்தேகமாயிருக்கு.’

அவளுக்கு இன்னும் நம்ப முடியலை. கொஞ்ச நேரம் தரையைப் பார்த்துண்டிருந்தா. அப்புறம் மெல்லப் பேசினா.

‘செத்துப் போன என் அண்ணன் எப்பேற்பட்டவன் தெரியுமா? என் மேல் ஒரு துரும்புகூட விழாம பார்த்துப்பான். பதினொன்றாம் வகுப்பு படிச்சுகிட்டிருந்தான். எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்தது. நானும் அண்ணாவும் ஸ்கூலில் படியேறி க்ளாஸுக்குப் போகும்போது, எங்களுக்கு மேலே படியேறிக்கொண்டிருந்த சிங்களப் பையன்கள் ‘தமிழ் நாய்களா’ன்னு சிங்களத்துல சொல்லி எங்கள் மீது எச்சில் துப்புனாங்க. அதைப் பார்த்த டீச்சர்களும் ஒண்ணும் சொல்லலை. அண்ணனுக்கு கோபம். தான் ஒண்ணும் செய்ய முடியலையேன்னு தவிப்பு. அதைவிட தனக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் பார்த்துக்கொண்டு நிண்டாங்களேன்னு பதற்றம். ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.’

‘மூன்று வருடம் முன்பு இதே ஜூலை மாதம், இதே கருப்பு ஜூலை மாதம் 24ஆம் திகதி கடைக்குப் போய்விட்டு திரும்பிக்கொண்டிருந்த அவனை சிங்களக் காடையர்கள் தெருவில் அடித்துக் கொன்றார்கள். ஒரு போலீஸ் அதிகாரி ‘இவன் புலி’ என்று சொல்லி  டயர்களை அவன் மீது போட்டுக் கொளுத்தினான். எரியாத அவனுடைய ஒரு காலை அடுத்த நாள் குப்பை லாரி அள்ளிக்கொண்டு போனதாக பார்த்த ஒருவர் சொன்னார். என் பெற்றோர் என்னையும் இழக்கக் கூடாதென்று சிரமப்பட்டு இங்கு அனுப்பி விட்டாங்க.’

கோனாவின் சிவந்த கண்ணீர் நிறைந்த கண்களைப் பார்த்து எனக்கு கோவமும் அழுகையும் வந்தது. ‘என்ன கோனா, இந்த உலகத்திலிருக்கற எந்த நாடும் எதுவுமே செய்ய முடியாதா? உங்களுக்கு மட்டும் ஏனிந்த கஷ்டம்?’

‘பார்க்கலாம். யாராவது எங்களுக்கு உதவுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ என்றாள்.

கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியா இருந்தோம். அவளுடைய கஷ்டத்துக்கு முன்னாடி என்னோடது ஒண்ணுமே இல்லன்னு ஆகிடுச்சு.

மெல்ல கோனா பேசினாள்.

‘சரி! உன் விஷயத்துக்கு வரலாம். அடுத்த முறை அவன் உன்கிட்ட வந்தா என்ன பண்ணுவ?’

‘தெரியல கோனா. பயமா இருக்கு. வீட்டுலயும் சொல்ல முடியாது. ஒருத்தரும் நம்ப மாட்டாங்க.’

‘அட சீ! பயமாவது மண்ணாங்கட்டியாவது. வீட்டுல எல்லாம் சொல்ல வேணாம். நீயே ஹாண்டில் பண்ணு. அடுத்த முறை அவன் வரும்போது இதைப் பண்ணு’ என்று கோனா சொல்லச் சொல்ல எனக்கு தைரியம் வந்தது.

***

 

18 ஜூலை 1989, ஞாயிற்றுக்கிழமை

இன்று பதினாறாவது பிறந்தநாள். இந்த மூன்று வருடங்களில் என்னென்னவோ நிகழ்ந்து விட்டது. காலம் உருண்டோடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நான் மட்டும் ஒரே இடத்தில் நின்றுவிட்டேன். ஆனாலும் ஆறு இழுத்துச் செல்லும் கூழாங்கல்லைப் போல காலம் தன்னோடு மனிதனை இழுத்துக்கொண்டு தானே போகிறது.

ஒரு வருடத்துக்குமுன், நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது முழுப் பரிட்சை நேரத்தில் ஒரு நாள் சுமதியைக் காணவில்லை. சுந்தரியக்கா வீட்டில் நேரம் காலம் தெரியாது உட்கார்ந்திருப்பாள் என்பதால் சற்று அசட்டையாக இருந்து விட்டார்கள் எங்கள் பெற்றோர். நாலு தப்படி வைத்தால் சுந்தரியக்கா வீடு. இங்கிருந்து ஒரு கூப்பாடு போட்டாலே அவர்கள் வீட்டுக்குக் கேட்கும். சுந்தரியக்காவின் அம்மாவும் சுமதியை தன் பிள்ளையைப்போல் பார்த்துக் கொள்வதால் அதிகம் என் பெற்றோர் கவலைப்படுவதில்லை.

எனக்குத் தேதி இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. அன்று மார்ச் மாதம் 8ம் நாள், 1988. அன்று ஞாயிற்றுக்கிழமை. பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென வீட்டில் ஒரு அமைதியின்மை. அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தால் எல்லோரும் பரபரப்பாக கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தனர். அம்மாவை ஏறிட்டுப் பார்த்தபோது சுமதியைக் காணோம் என்று கூறினார்.

‘சுந்தரி வீட்டுக்கு அவ போகவேயில்லையாம். கார்த்தால காபி குடிச்சுட்டு சுந்தரி வீட்டுலருந்து குமுதம் வாங்கிண்டு வரேன்னு போனா. சாப்பிடக் கூப்பிடலாம்னு போனப்போதான் தெரிஞ்சது’ என்று அம்மா கவலையானாள்.

‘மாமா வீட்டுல? ‘

‘அங்கயும் இல்லை. தெரிஞ்சவங்க எல்லார் வீட்டுலயும் பார்த்தாச்சு.’

எங்கள் தெருவிலிருந்து செய்தி பரவி காலனியின் பதினான்கு தெருவும் அக்காவைத் தேட ஆரம்பித்தது.

முதன் முதலாக சிவந்த விழிகளுடன் இருந்த என் தந்தையைப் பார்த்தேன். நாங்கள் நடுத்தர வர்க்கம்தான் என்றாலும் அப்பா எங்களுக்கு எதிலும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார். பெரிதாக வசதிகள் செய்து தர முடியாவிட்டாலும் மூன்று வேளை சாப்பாடும் துணிமணியும் கிடைத்து விடும். வேறென்ன வேண்டும்? ஏழு பேர் கொண்ட குடும்பம் என் அப்பாவின் சம்பளத்தில் மட்டுமே நடந்துகொண்டிருந்தது. என் அம்மாவும் பாட்டியும் சிட்டையாக பணத்தை நிர்வகித்தார்கள். சுமதியின் திருமணம் ஏற்பாடானால் தாராபுரத்திலிருக்கும் தாத்தாவின் ஒரு ஏக்கர் நிலத்தை விற்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். மற்ற இரண்டு பெண்களின் திருமணத்துக்கு முன் ஹரி தலையெடுத்து விடுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

‘நாங்க சத்தியமங்கல ப்ருஹசரணம். நம்மாளுங்களுக்குள்ளயே பாருங்கோ. வடமா வேண்டாம். அதுவும் தஞ்சாவூர்,பாலக்காடு பிராமணாளே வேண்டாம். அந்த வாயும் கையும் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று ஜாதகப் பரிவர்த்தனை செய்யும் கமலா மாமியிடம் பாட்டி கையை ஆட்டி ஆட்டிப் பேசினாள்.

‘ஏன் மாமி? ஒரு நல்ல தஞ்சாவூர் வடமப் பையன் இருக்கானே’ என்றாள் மாமி.

‘யப்பா, வேணாம்மா. ஒரு தடவை எங்காத்துக்காரர் பவானி ஆறுல பரிசல்ல போயிண்டிருந்தார். கூட கே.பி. சுந்தராம்பாள் வந்திருந்திருக்கா. என்ன சார், நீங்க வடமாளா, வாத்திமாளான்னு கேக்க, இவர் ப்ருஹசரணம்னு சொல்லிருக்கார். ப்ருஹசரணமா? அது ‘பெப்பே’ ஆச்சே முகவாய்க்கட்டைல கை வச்சுண்டு எங்காத்துக்காரரைப் பார்த்தாளாம். கொங்கு மண்டல பிராமணா நாங்க. ஒழுங்கா பிராமண பாஷை கூட பேச வராது. தஞ்சாவூர்,பாலக்காட்டுக்காராளைப் பொருத்தவரை நாங்க அவா செட்டுலயே சேர்த்தியில்லை. அந்த வடம ஜம்பத்துக்கு முன்னாடி ஒப்ப நிக்க முடியாதும்மா. நாங்க பெப்பேதான். அதுக்கு இன்னொரு பெப்பேதான் சரிப்பட்டு வரும்’என்றாள்.

மாலை நான்கு மணியாயிற்று. தேடித் தேடி அனைவரும் ஓய்ந்து விட்டனர்.

‘போலீஸுக்கு போயிடலாமா?’ என்று பக்கத்துக்கு வீட்டு ஜாகீர் அப்பா கேட்டார்.

‘இல்லீங்க மொஹமத், வெயிட் பண்ணுவோம். இன்னும் சிலரோட வீட்டுல பார்த்துடுவோம்’ என்றார் அப்பா.

திருப்பூரில் என் அம்மாவின் தங்கை இருந்தார். அவர் வீட்டுக்குப் போயிருப்பாளோ என்று ஒருவரை அனுப்பியிருந்தார் அப்பா. அனுப்பிய ஆள் சுமதி அங்கே இல்லை என்பதை ஜெயந்தியின் வீட்டுக்கு போன் பண்ணி சொன்னார். பாட்டி லலிதா சஹஸ்ரநாமம் ஜபிக்க ஆரம்பித்திருந்தாள்.

‘…மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:….’

அம்பாளுடைய நடையழகை வர்ணிக்கும் இந்த வாக்கியம்… மந்த கமனா- மெல்ல ஒயிலான நடை. அப்படித்தான் நடப்பாள் சுமதி. வேகம் பேச்சில் மட்டுமே இருக்கும். மற்றதெல்லாம் கனவு கண்டுகொண்டே மெல்லத்தான் செய்வாள். எங்கே போயிருப்பாள்?

அப்பா நிலைகுலைந்து போய் காலனிக் கிணற்றை எட்டிப் பார்த்தார். ‘பின்னாடி தோட்டத்துல கூட ஒரு கிணறு இருக்கில்ல? அங்கயும் பார்த்துட்டு வந்துடறேன்’ என்று சொன்ன அப்பாவின் முகத்தை காணச் சகிக்கவில்லை. முகமெல்லாம் வெளிறி, பட்டனை மாற்றிப் போட்ட கசங்கிய சட்டையோடு, கண்ணீர் தளும்பிய கண்களோடு, கலைந்த தலையோடு , சட்டென்று ஒரு பத்து வயது அதிகமானதைப்போல் தோற்றமளித்தார்.

ஜாகீர் மெல்ல என்னிடம் வந்து கிசுகிசுத்தான். ‘கீதா, எனக்கொரு சந்தேகம்டி. அன்னிக்கு அனுஷம் தியேட்டர் பின்னாடி இருக்கற வயக்காட்டுல சுமதியக்காவையும் பாண்டியண்ணனையும் பார்த்தேன். சிரிச்சு பேசிகிட்டிருந்தாங்க. நான் யார்கிட்டயும் சொல்லல. ஒரு வேளை…’ என்று இழுத்தான்.

‘நீ வாய வச்சுகிட்டு சும்மா இருடா’ என்று ஜாகீரின் வாயை நான் மூடும் நேரம் ஹரி பேசினான்.

‘அப்பா, இருங்கோ. ஒண்ணும் தோட்டத்துக்குப் போக வேண்டாம். இன்னிக்கு முகூர்த்த நாள். அநேகமா யார் கூடயாவது ஓடிப்போயிருப்பா’ என்றான் உணர்ச்சியில்லாமல்.

அந்தக் கோணத்தில் யோசித்தே பார்த்திராத எல்லோரும் ஸ்தம்பித்தனர். அப்பா தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார். பாட்டி இன்னும் வேகமாக ஜபித்தார். காந்தித் தாத்தாவும் அம்மாவும் செய்வதறியாது நின்றிருந்தார்கள். ஜாகீர் அப்பாவும் குமாருடைய அப்பா ஜகதீசனும் என்ன செய்யலாம் என்று கவலையுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

‘ஒண்ணும் செய்ய வேண்டாம் மாமா. அவளே வருவா பாருங்கோ. நாளை வரை பார்க்கலாம்’ என்றான் ஹரி.

‘அப்படியெல்லாம் நம்பிகிட்டு உட்கார்ந்திருக்க முடியாது சாமி’ என்றார் மொஹமத் மாமா. ‘ஆமா, ஆமா’ என்று தலையாட்டினார் ஜகதீசன் மாமாவும். அப்பாவைக் கூட்டிக்கொண்டு இருவரும் காவல் நிலையத்துக்கு சென்றனர்.

காவல் நிலையத்திலும் அதேதான் சொல்லியிருக்கிறார்கள். யார்கூடயாவது ஓடிப் போயிருக்குமுங்க. இந்தக் காலத்துப் பசங்க சினிமா பார்த்து கெட்டழியுதுங்க என்று புலம்பி விட்டு, இருந்தாலும் தேடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்பாவை போலீஸ் ஸ்டேஷன் படியேற வைத்துவிட்டாளே இவள் என்று கோபம் வந்தது.

ஜாகீர் ‘சொல்றதுதான் பெட்டர்’ என்று கிசுகிசுத்தான். ஜாகீரின் அம்மா ரெஜினா அத்தை நாங்கள் திருட்டு முழி முழிப்பதை பார்த்துவிட்டாள்.

‘ஏய், என்ன நடக்குது? உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா உண்மையை சொல்லிடுங்க’ என்று எங்களைப் பார்த்து கண்களை உருட்டினாள். எல்லோரும் எங்களைப் பார்த்தார்கள். பூதக் கண்ணாடிக்கு அடியில் மாட்டிக்கொண்ட எறும்புகளாகத் தவித்தோம்.

‘அதுவந்து, ஜாகீரு சுமதியக்காவையும் பாண்டி அண்ணாவையும் அனுஷம் தியேட்டருக்குப் பின்னாடி பார்த்தானாம்’ என்று திக்கித் திணறி சொல்ல, ரெஜினா அத்தை வேகமாக வந்து ஜாகீரில் முதுகில் பட்டென்று போட்டாள்.

‘முன்னாடியே சொல்லித் தொலைக்கறதுக்கு என்னடா? இவ்வளவு நேரம் வீணாப் போச்சுல்ல. நீயும் நல்ல அமுக்குணிதான்’ என்று இருவரையும் திட்டினாள். ரெஜினா அத்தை திட்ட ஆரம்பித்தால் ஓய மாட்டாள். ஜாகீரின் தங்கை அமுலு சமத்தாக இருப்பாள். நானும் ஜாகீரும் சிறு வயதில் செய்யாத சேட்டைகள் இல்லை.

ஒருமுறை அவன் சமையலறையில் இருந்து ஒரு டஜன் முட்டைகளைக் கொண்டு வந்தான். எனக்கு வழவழப்பாக இருந்த அந்த முட்டைகளைப் பார்க்கவும் தொடவும் நன்றாக இருந்தது. அமுலு அப்போது எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தாள். அவளை புழக்கடையில் உள்ள வேப்பமரத்தடியில் உட்கார வைத்து ஒவ்வொரு முட்டையாக அவள் தலையில் உடைத்தோம். ஜாகீர் ஒரு முட்டை நான் அடுத்த முட்டை என்று வரிசையாக உடைத்தோம். உடைத்து உடைத்து வேப்பமரத்தினடியில் போட்டோம். அதிலிருந்து வழியும் மஞ்சள் கருவையும் பிசின் போன்ற திரவத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லையென்றாலும் அந்த உடைக்கும் செயல் சந்தோஷத்தைக் கொடுத்தது. அமுலுக்கு பிடித்ததோ என்னவோ அசையாமல் உட்கார்ந்திருந்தது. அவ்வப்போது தலையை தேய்த்து விட்டுக் கொண்டது.

அந்த சுபகாரியத்தை செய்துகொண்டிருக்கும்போதே அத்தை வந்துவிட்டாள். ஓட முயற்சி செய்த எங்களைப் பிடித்து அமுலுவை தென்னம் மாரிலிருந்து ஒரு குச்சியை உருவிக்கொண்டு வரச் சொன்னாள். இரண்டு பேருக்கும் முட்டிக்குக் கீழ் அடி விழுந்தது.

‘அவந்தான் தறி கெட்டுத் திரியறான்னா, ஐயர் வீட்டுப் புள்ள முட்டையை எடுத்துகிட்டு ஆட்டமா ஆடற’ன்னு திட்டிக்கொண்டே அடித்தாள். என்னைவிட ஜாகீருக்குத்தான் நிறைய அடி. சத்தத்தைக் கேட்டு என் வீட்டு புழக்கடைக்கு வந்த அம்மா

‘கடங்காரிக்கு இன்னும் ரெண்டு கால்ல போடு ரெஜினா’ என்று எண்ணையை வார்த்தாள்.

எல்லா ஆட்டமும் என்னுடைய பத்தாவது வயதில் முடிவுக்கு வந்தது. இந்த பரபரப்பிலும் ரெஜினா அத்தையைப் பார்க்கும்போது அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. எவ்வளவு அருமையான நாட்கள்.

அதற்குள் பாண்டி அண்ணா வீட்டுக்கு ஆட்கள் ஓடியிருந்தார்கள். பாண்டி அண்ணாவின் வீடு பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அண்ணா எங்களுக்கு வழக்கமாக ஆட்டோ ஓட்டுவார். யாருக்காவது உடம்புக்கு முடியவில்லை என்றாலோ, கடைவீதிக்குப் போக வேண்டும் என்றாலோ அப்பா பாண்டி அண்ணாவின் ஆட்டோவைத்தான் அழைப்பது வழக்கம்.

பாண்டி அண்ணாவும் வீட்டிலில்லை என்று தெரிந்தவுடன் அவருடைய நண்பர்களை விசாரித்தார்கள். இருவரும் மாசாணியம்மன் கோயிலில் அன்று காலை திருமணம் செய்துகொண்டது தெரிந்தது. இரவு ஒன்பது மணி சுமாருக்கு சுமதியும் பாண்டி அண்ணாவும் (இனிமேல் அத்திம்பேர்) மாலையும் கழுத்துமாக வந்து நின்றனர். வீட்டில் என்னையும் பேபியையும் தவிர அனைவரும் உடைந்துபோய் விட்டனர். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை அவளைப் பார்த்து. அப்பாவைப் பார்க்கத்தான் சங்கடமாக இருந்தது.

கடைசியில் எங்களுக்கு பெப்பே காண்பித்து விட்டாள் சுமதியக்கா.

சினிமாவில் வருவதுபோல் அப்பாவின் காலில் விழுந்து அழுதாள் சுமதி. ஏனோ எனக்கு அவள் செய்வதெல்லாமே அவளுக்குப் பிடித்த நடிகையின் நடிப்பைப் போலவே இருக்கும். அழும்போது கூட அந்த நடிகை அழுவதுபோல இருந்தது. ‘வே’வென்று வாயைத் திறந்து அழாமல் நாசூக்காக நளினமாக அழுது மன்னிப்புக் கேட்டாள்.

அம்மா ஆத்திரத்தில் அடிக்க வந்தபோது காந்தித் தாத்தா (என் அம்மாவின் அப்பா) தடுத்து நிறுத்தி ‘மாப்பிள்ளை,நம்ம மனுஷாளுக்கு ஓடினது தெரியறதுக்கு முன்ன நீங்களே கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கோ’ என்றார்.

‘என்னப்பா சொல்றேள்?’ என்று தன் பர்சை எடுத்துப் பிரித்து அதிலிருந்து நான்கு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காண்பித்து ‘இவ்வளவுதான் இருக்கு என்கிட்ட. இந்த மாச மளிகை சாமானுக்கு அம்மாகிட்ட கொடுக்க வச்சிருக்கேன். எப்படிப்பா நானூறு ரூபால கல்யாணம் பண்றது?’ என்று மனதின் பெருவலியை முகத்தில் தேக்கிக்கொண்டு கேட்ட என் தந்தையின் முகத்தை என் கடைசி மூச்சுவரை மறக்க மாட்டேன்.

மாமாவும் இன்னும் சில உறவினர்களும் பண உதவி செய்ய, ஒரு வழியாக அடுத்த முஹூர்த்தத்தில் நெருக்கமான உறவினர்களை மட்டும் அழைத்து அவளுக்கு திருமணம் செய்து அனுப்பிவிட்டார் அப்பா. வீடே இழவு விழுந்த வீடுபோல் இருந்தது.

எதிர் வீட்டு மல்லிகா அத்தைக்கு கடும் கோபம். ‘எங்க வீட்டுப் புள்ள இப்படி ஒரு ஜாதிக்காரன கட்டிகிட்டு வந்திருந்தா, புள்ளயே வேணாம்னு ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டிருப்போம். ஐயருங்க உங்களுக்கு தைரியமில்ல. எல்லாத்துக்கும் பயம். அவனோட வீட்டப் பாத்திருக்கீங்களா? அவங்க அம்மா, இதோ, அடுத்த தெரு சுந்தர்ராஜன் டாக்டர் க்ளீனிக்க பெருக்கி தொடைக்குது. மொறவாசல் பண்ற குடும்பம். என்ன மாதிரி குடும்பத்துலருந்து எங்க போயிருக்குது பாரு. நாங்களா இருந்தா அவன் கையக் கால முறிச்சுப் போட்டுப் போடுவோம்’ என்று பொரிந்து தள்ளினார்.

‘அப்புறம் என்ன மல்லிகா பண்றது? எல்லாரோட வாழ்க்கையும் நாசமாகிடும். அவா அவாளுக்கு என்ன கர்மாவோ அது படிதான் வாழ்க்கை. நம்மால ஒண்ணும் செய்ய முடியாது. அவ சந்தோஷமா இருப்பா. இருக்கணும். அவ எல்லாம் தெரிஞ்சு தேடிண்ட வாழ்க்கைதான?’ என்றார் காந்தித் தாத்தா.

‘என்னவோ சொல்லுங்க. மனசுதா ஆறல’ என்று முணுமுணுத்தார் மல்லிகா அத்தை.

இது நடந்து ஆறே மாதத்தில் பாட்டி தவறி விட்டாள். காலையில் இரண்டு தோசை தின்று ஹார்லிக்ஸ் குடித்தவள் என் அம்மாவிடம் என்னவோ போலிருக்கிறது என்று சொல்லியிருக்கிறாள். என் அம்மா அவள் பக்கத்தில் உட்கார்ந்ததும் அவளின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு உயிரை விட்டாள். என்னையும் பேபியையும் மல்லிகா அத்தை மதிய நேரத்தில் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார். என் அம்மா கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். மாமியாரானாலும் தன் அம்மாவைவிட அவளோடுதான் பல வருடம் இருந்திருக்கிறாள். அப்பா இறுகிய முகத்துடன் காரியம் செய்தார். எனக்கு ஏனோ அழுகையே வரவில்லை. எதுவும் தோன்றவில்லை. சுமதி மட்டும் வந்து அரைமணிக்கூறு இருந்தாள். அவள் கழுத்தில் வெறும் மஞ்சக்கயிறு மட்டுமே இருந்ததைப் பார்த்தேன். இளைத்துப் போன மாதிரி இருந்தது. என்னைப் பார்த்து சிறு புன்னகை செய்துவிட்டுப் போய் விட்டாள்.

எழுவர் ஐவராகி விட்டோம்.

***

கோனா சொல்லிக் கொடுத்தபடி அடுத்த மாதத்தின் நாட்கள் வந்ததும் நான் தைரியமாக தயாராக இருந்தேன். முதல் நாள் ஹரியின் வருகைக்காக காத்திருந்தேன். பனிரெண்டரை மணி வரை அவன் வரவில்லை. பிறகு ஆழ்ந்த நித்திரை அணைத்துக் கொண்டது. சுமார் அதிகாலை இரண்டு மணியளவில் என்னை யாரோ ஸ்பர்சிக்கும் உணர்வு வந்து உடம்பை உதறிக்கொண்டு எழுந்தேன். இளித்தபடி அவன்.

‘யூஸ் ஆயிட்ட போலிருக்கே! உனக்கும் பிடிச்சுடும் கொஞ்ச நாள்ல’ என்றான். இப்போது எனக்கு பயமிருக்கவில்லை. அருவருப்பின் உச்சகட்டத்தில் சீறினேன்.

‘கைல என்ன இருக்கு பார்த்தியா? நாயே! இனி பக்கத்துல வந்த…இதுதான் உனக்கு’ என்று கத்தியைக் காண்பிக்க ஒரு கணம் ஸ்தம்பித்த அவன் சிரித்துக்கொண்டே அநாயாசமாக என் கையை முறுக்கி கத்தியை வீசினான். அவன் உயரத்தும் பலத்துக்கும் நான் உறை போடக் காண மாட்டேன்.

‘ஓ! வீராங்கனை ஆகறீங்களோ! என்னை பயமுறுத்த முடியாதுடீ. என்னை வெட்டுவாளாம்’ என்று ஆக்ரோஷமாக கிசுகிசுத்துக் கொண்டே செய்ய வேண்டியதை செய்து விட்டு வெளியேறினான்.

இந்த முறை எனக்கு கையாலாகாத்தனத்துடன் கோபமும் வந்தது. என்னால் கோனாவின், அவள் அண்ணனின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.

சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் ஹரியின் அறைக்குச் சென்றேன். அவன் கதவைத் தாழிடவில்லை. பூனைபோல் மெதுவாக அடியெடுத்து வைத்து அவன் அறையைச் சுற்றி நோட்டமிட்டேன். அவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் மேஜை மேல் கல்லூரியில் அவன் ஒப்படைக்க வேண்டிய குறிப்புகள் அடங்கிய ரெகார்ட் நோட்டை எடுத்துக் கொண்டேன். அவனுடைய ஸ்டாம்ப் கலெக்ஷன் ஆல்பத்தையும் எடுத்துக் கொண்டேன். மேஜை மேல இருந்த இன்னும் இரண்டு நோட்டுப் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டேன். ஓசைப்படாமல் என் இடத்துக்கு வந்தேன். புழக்கடைக் கதவைத் திறந்து குளியல் அறைக்குச் சென்று நிதானமாக எல்லாவற்றையும் கிழித்தேன். ‘க்ளாஸ் ஃப்ர்ஸ்ட் தான நீ சனியனே! சாவு!’ என்று கறுவிக்கொண்டே எல்லவற்றையும் கிழித்தேன். ஸ்டாம்ப் ஆல்பத்தை கிழிக்க முடியாமல் அதைக் குளியலறை தொட்டிக்கு மேல் விறகு வைக்கும் பரணுக்குள் வைத்தேன். கிழித்த குப்பைகளை ஒரு பைக்குள் போட்டு மூட்டைகட்டி குமுட்டி அறைக்குக் கொண்டு வந்து அதன் மேல் என் துணிகள் சிலவற்றை அடைத்து அலமாரியில் வைத்தேன். காலையில் குப்பைத் தொட்டியில் போடலாம் என முடிவு செய்தேன். பிறகு பேய்த் தூக்கம் தூங்கினேன். அம்மா காலையில் ‘கீதா, ஸ்கூலுக்கு நேரமாச்சு, எழுந்திரு’ என்று பல முறை அலறிய பிறகு எழுந்தேன். புழக்கடையில் பல் தேய்த்துக்கொண்டே மெல்ல நோட்டம் விட்டேன். ஹரி அங்கேயும் இங்கேயும் அலைந்துகொண்டிருந்தது தெரிந்தது.

‘நாங்க ஏண்டா உன் நோட்டை எடுக்கப் போறோம். சரியாப் பாரு’ என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தது கேட்டது.

நான் சீக்கிரம் குளித்துவிட்டு பின்பக்கம் வழியாக முன் வாசலுக்கு வந்து படியில் நின்றபடி ‘என்னவாம் பிரச்சனை?’ என்றேன். அலாவுதீன் பூதம் போல என் குரல் கேட்டு சட்டென்று ஹாலுக்கு வந்தான் ஹரி. ‘அவனோட இரண்டு முக்கியமான நோட்டைக் காணலியாம். நீ பார்த்தியா?

‘நான் எப்படி என் ரூமை விட்டு வெளியே வருவேன்? எனக்கென்ன தெரியும். ராப்பூரா ஒரே கொசுக்கடி. சரியா தூங்கவேயில்ல’ என்றதும் என்னை குரோதத்துடன் பார்த்தான் ஹரி. கோண வாய் சிரிப்பை நான் இப்போது சிரித்தேன். திரும்பி நடந்தேன்.

அதற்குப் பிறகு ஹரி என் அறைக்கு வருவதை நிறுத்திவிட்டான்.

ஆனால் மூன்று வருடங்களாக வேறு விதமான சித்திரவதை செய்ய ஆரம்பித்திருக்கிறான்.

*

‘ஹாப்பி சிக்ஸ்டீந்த் பர்த்டே டு மீ!!!’

-தொடரும்

 

  •