Reading view

தமிழ் வணிக எழுத்தாளர்கள், நாவல்கள்

இந்தப் பதிவில் வரும் எவரும் (மகரிஷி தவிர்த்து) எந்த விதத்திலும் முக்கியமான எழுத்தாளர் அல்லர். ஒரு காலகட்டத்தில் அந்தக் காலத்துக்கு சுவாரசியமான, இப்போது காலாவதியாகிவிட்ட கதைகளை வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளாகவோ, மாத நாவல்களாகவோ எழுதியவர்கள், அவ்வளவுதான். தமிழ் வணிக எழுத்து வரலாற்றிலேயே அதிகபட்சம் ஒரு அடிக்குறிப்பு (footnote) என்பதற்கு மேல் இவர்கள் யாருக்கும் இடமில்லை.

இது முழுமையான வணிக எழுத்து பட்டியலும் அல்ல என்பது தெளிவு.

படித்த சில நாவல்கள்/எழுத்தாளர்கள் பற்றி தனித்தனியாக எழுத சோம்பேறித்தனம், அதனால் இங்கே ஒன்றாக எழுதிவிட்டேன். மகரிஷி பற்றி மட்டும் என்றாவது தனியாக எழுத வேண்டும். இப்போதைக்கு அவரது நாவல்கள் சரியாக நினைவில்லை.

ஆனால் வார இதழின் பக்கங்களைக் கிழித்து bind செய்யப்பட்ட நாவல்களைப் படிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. அது என் தலைமுறைக்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும்!


  • என் பதின்ம வயதில் ராஜேந்திரகுமார் ஓரளவு பிரபலமான வணிக எழுத்தாளர். மாத நாவல்கள் ஆரம்பித்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தார். நண்பர்கள் வட்டாரத்தில் சுஜாதா, புஷ்பா தங்கதுரை இருவருக்கும் அடுத்த இடத்தில் இருந்தார். ஞே என்று விழிக்கும் பாத்திரங்கள், பைக்கில் போகும் இளைஞனின் முதுகில் அழுந்தும் இளைஞிகள் அடிக்கடி வருவார்கள். இன்று படிக்கும்போதுதான் கழுத்துக்கு கீழே கை நகர்ந்தது என்று படித்தாலே கிளுகிளுப்பு அடைந்தோமா என்று தோன்றுகிறது.
  • நாஸ்டால்ஜியாவால் சமீபத்தில் சில கதைகளைப் படித்தேன். வால்கள் (1963) அறுபதுகளில் எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னுரையில் 1963-இல் எழுதப்பட்டது என்று போட்டிருந்தாலும் அமலா, நதியா என்று எண்பதுகளின் நடிகைகள் பேரெல்லாம் வருகிறது. ஒரு வேளை காலத்துக்கேற்ப் அப்டேட் செய்துவிட்டாரோ என்னவோ. ஒன்று நிச்சயம், 1963 காலகட்டத்தில் வெற்றி பெற்ற வணிக நாவலாக இருந்திருக்கும். பதின்ம வயதுப் பள்ளிப் பெண்களின் லூட்டி. அந்தக் காலத்து வணிக நாவல்களின் பிரதிநிதியாக இணைத்திருக்கிறேன். காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன்.
  • மாத நாவலாக வந்த காதலுக்கு கெட்டிக்காரனை மீள்வாசிப்பு செய்தபோது அவரது அந்தக் காலக் கவர்ச்சியை புரிய வைத்தது. சளசளவென்று உரிமையோடு ஆண்களோடு பேசும் நாயகி! அந்த மாதிரி யாராவது கிடைக்கமாட்டார்களா என்று அலைந்த காலம்.
  • வணக்கத்துக்குரிய காதலியே டைம்பாஸ் புத்தகம். திரைப்படமாக வந்தது. இளமை இனிமை இந்துரேகா ஏதோ மாத நாவல். திறமையாக எடிட் செய்யப்பட்ட திரைப்படம் போல காட்சிகள் மாறுகின்றன. ஆனால் கதையில் வலு இல்லை.
  • ஒரு சாத்தான் வேதம் ஓதுகிறது எழுபதுகளில் வரும் திரைப்படம் போல பல திடுக்கிடும் காட்சிகளைக் கொண்டது.
  • என்றும் உன் அருகில், கண்டுபிடி கண்ணே, குளிர் குளிர் குளிர், மறுபடியும் மரணம், நம்புவதற்கல்ல, நீலமான ராத்திரி, நியாயம் சில சமயம் கொல்லும், ஒரு தேவி என்னைத் தேடுகிறாள் எல்லாம் படிப்பவர்களைக் கொல்கிறது.

  • ஒரு காலத்தில் மணியனுக்கு இருந்த பிரபலம் புரியாத புதிர்தான். அவர் கொடி கட்டிப் பறந்த காலத்திலேயே – நான் வேர்க்கடலை கட்டி வந்த காகிதங்களைக் கூட படித்த காலம் – அவர் கதைகளை என்னால் படிக்க முடிந்ததில்லை. எல்லாவற்றிலும் செக்ஸ், காதல் பற்றித்தான் பேச்சு. ஆனால் நேரடியாகப் பேசமாட்டார்கள், கடுப்படிக்கும் வகையில் சுற்றி வளைப்பார்.
  • கெட்ட கேட்டுக்கு இதில் பல திரைப்படமாகவும் வங்திருக்கிறது – மோகம் முப்பது வருஷம், இதய வீணை, சொல்லத்தான் நினைக்கிறேன் (இலவு காத்த கிளி), வயசுப்பொண்ணு (லவ்பேர்ட்ஸ்) என்று. இதய வீணையும் சொ. நினைக்கிறேனும் நன்றாக ஓடின என்று நினைக்கிறேன்.
  • லவ்பேர்ட்ஸ், கணவன் அமைவதெல்லாம், ஆசை வெட்கமறியும்(1976) போன்ற வாரப் பத்திரிகை தொடர்களெல்லாம் சுத்த வேஸ்ட்.
  • இதயம் பேசுகிறது தொடர்தான் அவரை பிரபலமாக்கியது என்று நினைக்கிறேன். வெளிநாட்டுக் கவர்ச்சியில் அப்போது ஆர்வமாக எல்லாரும் படித்தார்களோ என்னவோ. இரண்டு மூன்று முறை புரட்டிப் பார்த்திருக்கிறேன், எப்போது பார்த்தாலும் சாப்பாட்டைப் பற்றித்தான் புலம்புவது போல இருந்தது…

  • javar_seetharamanஎனக்குத் தெரிந்த ஜாவர் சீதாராமன் நடிகர் ஜாவர்தான். அந்த நாள், பட்டணத்தில் பூதம், வீரபாண்டிய கட்டபொம்மன், மணமகன் தேவை மாதிரி சில படங்களில் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து அவர் நன்றாக நடித்தது ஏழை படும் பாடு திரைப்படத்தில்தான். அந்தப் படத்தில் ஜாவர் கதாபாத்திரத்தில் நடித்தத்தால்தான் அவருக்கு ஜாவர் என்று அடைமொழி ஏற்பட்டது.
  • ஜாவர் எழுதுவார் என்று கேள்விப்பட்டிருந்தாலும் எதையும் நான் படித்ததில்லை. சமீபத்தில்தான் சில புத்தகங்கள் pdf வடிவத்தில் கிடைத்தன. அவர் ஒன்றும் பிரமாதமாக எழுதிவிடவில்லை. அதுவும் சில சமயஙகளில் கிளுகிளுப்பாக எழுதுகிறோம் என்று நினைத்துக் கொண்டு (ரவிக்கை கிழிவது என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது) செயற்கையாக எழுதுவது கொஞ்சம் கடுப்படிக்கிறது. ஐம்பதுகளின் திரைக்கதைகள் போல பல யூகிக்கக் கூடிய செயற்கையான ட்விஸ்டுகளுடன் எழுதி இருக்கிறார். இருந்தாலும் அன்று சுவாரசியமாக இருந்திருக்கும், அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் சில நாவல்களை இன்று போல வேண்டாவிருப்பாக இல்லாமல் நிச்சயமாக விரும்பிப் படித்திருப்பேன் – குறிப்பாக உடல் பொருள் ஆனந்தி மற்றும் பணம் பெண் பாசம் – என்றுதான் நினைக்கிறேன். (மின்னல் மழை மோகினியும் அன்றைய காலகட்டத்துக்கு படிக்கக் கூடிய தொடர்கதையே) ஐம்பதுகளில் திரைப்படமாகவோ அல்லது நாடகமாகவோ வந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.
  • அவர் எழுதியவற்றில் சிறந்தவை உடல் பொருள் ஆனந்தி மற்றும் பணம் பெண் பாசம். உ. பொ. ஆனந்தியில் மெஸ்மரிசம் என்ற போர்வையில் ஒரு பேய்க்கதை. படிக்கலாம். ப. பெ. பாசத்தில் பணக்கார வில்லன் அப்பா, அவரை நல்ல வழிக்குக் கொண்டு வர பாடுபடும் பெண். மி.ம. மோகினியில் கன்னிப் பெண்ணுக்கு இன்னல் வந்து தீர்கிறது.
  • மற்ற நாவல்கள் எல்லாம் தண்டம். நானே நான் மாதிரி நாவலில் வரும் உருவ ஒற்றுமை உள்ள இருவர், ஒருவருக்கு அம்னீசியா என்பதெல்லாம் அறுபதுகளில் கூட திரைப்படங்களில் பார்க்கக் கூடிய கருக்கள்தான். சொர்க்கத்தில் புயல் பல சினிமாத்தனமான ட்விஸ்டுகளுடன் படு செயற்கையாக எழுதப்பட்டிருக்கிறது.
  • கொடுமையிலும் பெரும் கொடுமை கிளுகிளுப்பாக எழுதுகிறோம் என்று நினைத்துக் கொண்டு எதையோ எழுதி இருப்பது. குறிப்பாக அவர் கதைகளில் ரவிக்கையை கிழித்துக் கொண்டே இருக்கிறார்கள்!

  • மகரிஷி: பல நாவல்களை எழுதி இருக்கிறார், ஆனால் பனிப்போர் என்ற குறுநாவல் மட்டுமே ஏனோ இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் விவரிக்கும் அளவு வொர்த் இல்லை. பிற நாவல்களைத் தேடிப் பார்க்க வேண்டும்.
  • ஜெயமோகன் மகரிஷியின் பனிமலை, வட்டத்திற்குள் ஒரு சதுரம், நதியைத் தேடிவந்த கடல் ஆகியவற்றை குறிப்பிட வேண்டிய புனைவுகள் என்கிறார்.
  • சில நாவல்கள் திரைப்படமாக வந்தன – பனிமலை என்னதான் முடிவு என்ற திரைப்படமாக; பத்ரகாளி, புவனா ஒரு கேள்விக்குறி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு,  வட்டத்துக்குள் சதுரம், நதியைத் தேடி வந்த கடல் ஆகிய நாவல்களும் திரைப்படமாக வந்தன.

  • கல்கி ராஜேந்திரன் கல்கியின் மகன். கல்கி பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர்.
  • ரவிகுலதிலகன் என்ற சுமாரான சரித்திர நாவலை எழுதி இருக்கிறார்.
  • சைக்கோ சாரநாதன் எழுதப்பட்டபோது பிரபலமாக இருந்தது என்று கேள்வி. சைக்கோக்கள் பற்றி எழுதுவது அப்போது புதுமையாக இருந்திருக்கும்.

  • எல்லார்வி: கலீர் கலீர் என்ற நாவல் – அதுவும் கடைசி சில பக்கங்களைக் காணவில்லை – கிடைத்தது. அந்தக் காலத்தில் புகழ் பெற்ற வயலின் கலைஞர் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை என்பவர் 18 நாள் ஒரு மன நோயாளியிடம் தினம் ஒரு மணி நேரம் வயலின் வாசித்ததில் அவரது மன நோய் குணமாகிவிட்டதாம். அதை அடிப்படையாக வைத்து நடனத்தின் மூலம் ஒரு மன நோயாளி குணமானார் என்று கதை எழுதி இருக்கிறார். டி.ஆர். மஹாலிங்கம், அஞ்சலி தேவி, ஈ.வி. சரோஜா, எம்.ஆர். ராதா நடித்து ஆட வந்த தெய்வம் என்று திரைப்படமாகவும் வந்தது.
  • தோடி அடகு என்ற ஒரு அபுனைவும் கிடைத்தது. பல இசை வல்லுனர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
  • ராஜமாணிக்கம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றையும் புத்தகமாக எழுதி இருக்கிறார்.
  • எல்லார்வியின் ஒரு சிறுகதையை – நல்வாழ்வு – இணையத்தில் கிடைக்கிறது.

  • கிருஷ்ணமணி எழுதிய வேர்கள் என்ற நாவல் விகடன் நாவல் போட்டியில் பரிசு பெற்றது. சுமாரான வணிக நாவல். நிறைய பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நாயகன், நாயகி இருவரும் நாயகன் நாயகி என்ற காரணத்தினாலேயே காதலில் விழுகிறார்கள், மகா தெளிவுடன் இருக்கிறார்கள்…

  • தேவிபாலாமடிசார் மாமி (1992) விகடனில் தொடர்கதையாக வந்தது, அந்தக் காலத்தில் பிரபலமாகவும் இருந்தது. பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலாவை ஒரு ஆணும் பிடித்துக் கொண்டாரே என்று ஆச்சரியப்பட வைத்தார்.

  • யுவகிருஷ்ணா எழுதியஅழிக்கப் பிறந்தவன் நாவலின் பின்புலம் – பர்மா பஜாரின் குற்றப் பின்னணி – மட்டுமே அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்துகிறது. எப்படியோ முடிக்க வேண்டும் என்று அவசரப்பட்டிருக்கிறார்.

  • ஏ.கே. பட்டுசாமி எழுதிய கான்ஸ்டபிள் கந்தசாமி கல்கியில் தொடர்கதையாக வந்தது. பந்தா காட்டும் நாயகன், அவனுடைய காதல், அவன் மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள், கடைசியில் அடிக்கும் ஜாக்பாட் என்று கதை. கதை முக்கியமே இல்லை, ஆனால் அதன் ambience பழைய நினைவுகளைத் தூண்டியது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

  •  

வ.உ.சி. எழுதிய புத்தகம் – திலக மகரிஷி

திலகரைப் பற்றி வ.உ.சிதம்பரம் பிள்ளை 1933-34 -ஆம் வருஷங்களில் ஒரு பத்திரிகையில் “திலக மகரிஷி” என்ற பெயரில் தொடராக எழுதி இருக்கிறார்.  பத்திரிகையின் பெயர் வீரகேசரி, இலங்கைப் பத்திரிகை. பல ஆண்டுகளுக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன், படிக்க வேண்டும் என்று ஆசை. இப்போது இந்தப் புத்தகம் தமிழ் இணைய நூலகத்தில் கிடைக்கிறது.

புத்தகத்தைப் பதித்தவர் மா.ரா. அரசு. அரசு வரலாற்று ஆய்வாளர் மா. ராஜமாணிக்கத்தின் மகன். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். பல வருஷங்களாக அவரும் வீரகேசரி பிரதிகளைத் தேடி இருக்கிறார். முக்கால்வாசி இதழ்கள்தான் கிடைத்திருக்கின்றன. கிடைத்தவற்றைத் தொகுத்து புத்தகமாக (2010) வெளியிட்டிருக்கிறார்.

வ.உ.சி. திலகரின் அத்யந்த சீடர் என்பதால் புதிய தகவல்கள் எதுவும் கிடைக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. ஒரு வேளை கிடைக்காத வீரகேசரி இதழ்களில் இருந்திருக்கலாம். புத்தகத்தில் தெளிவாகத் தெரிவது வ்.உ.சி.க்கு திலகர் மேல் இருந்த பெரும் அபிமானம்.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் என்றும் கிழக்கு பதிப்பத்தில் கிடைக்கிறது என்றும் நண்பர்கள் சந்திரமௌலீஸ்வரன் மற்றும் ஸ்ரீனிவாஸ் தகவல் தருகின்றனர். அன்றைய விலை நூறு ரூபாயாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

  •