Reading view

தீமையைச் சுடு – Crime Novel

ஆபிசில் இருந்து வீட்டிற்கு வந்த போலீஸ் கமிஷனர் கனகசபாபதி  அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தார். அன்று அவருடைய நெருங்கிய நண்பர் மைக்கேல்ராஜின் ஒரே பெண்ணான ஜெனிஃபருக்கு நிச்சயதார்த்தம்.

கனகசபாபதி, மனைவி சிவகாமி, மகன் பிரபு மற்றும் மருமகள் ப்ரியம்வதாவுடன் அனைவரும் குடும்பத்துடன் நேரத்திற்கு நிச்சயதார்த்த பங்க்ஷனுக்கு கிளம்பி காரில் ஏறிய நேரம் வீட்டில் தொலைபேசி அழைக்கிறது.

டெல்லியில் இருந்து கமிஷனரிடம் அவசரமாகப் பேச அழைப்பு வந்திருப்பதாக வேலைக்காரி வள்ளியம்மை கூற, கமிஷனர் காரில் இருந்து மீண்டும் வீட்டிற்குள் சென்று ரிசீவரை எடுக்கிறார். அதில் மர்ம நபர் ஒருவன் பேசுகிறான். டெல்லியில் இருந்து பேசுவதாகச் சொன்னால் தான் உடனே உங்களிடம் பேச முடியும் என்று பொய் சொன்னதாகச் சொன்ன அவன், சித்தர் பாடல் ஒன்றைப் பாடி விட்டு போனை வைத்துவிடுகிறான்.

ஒருவழியாக நிச்சயதார்த்தம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தது  கமிஷனர் குடும்பம். ஆனால் கமிஷனரின் மனதிலோ வீட்டிற்கு திரும்பும் வரையிலும் அந்த சித்தர் பாடலே ஒலித்துக் கொண்டிருந்தது. ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்ற எண்ணம் அவருக்கு வலுப்பட்டுக் கொண்டே இருக்க, நள்ளிரவில் அவருக்கு ஒரு போன் வருகிறது.

மைக்கேல்ராஜ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விஷயம் கனகசபாபதியை எட்ட அதிர்ந்தார் அவர். உடனே அனைவரும் குடும்பத்துடன் மைக்கேல்ராஜின் வீட்டிற்குச் செல்ல, அங்கே மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடக்கின்றனர்.

அதேசமயம்..

தஞ்சையை அடுத்த ராஜகம்பீரம் என்ற ஊருக்கு புகழ்பெற்ற நாடி ஜோதிடர் ஜலகண்டரைப் பார்ப்பதற்காக வெற்றிவேல் என்பவன் வருகிறான். அவனை குதிரை வண்டிக்காரன் பொன்னுசாமி ஜலகண்டர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வண்டியில் போகும் வழியில் வெற்றிவேலின் பிரச்சனைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.

நாடி பிடித்து பார்த்து அவர்களுக்கேற்ற ஏடு எடுத்து பார்த்து, அதில் குறிப்பிட்டுள்ள சித்தர் பாடலை வைத்து, நமக்கான பரிகாரத்தை ஜலகண்டர் கண்டுபிடித்து சொல்வதாக நாடி ஜோதிடத்தின் பெருமைகளை வெற்றி வேலுக்கு எடுத்து சொல்கிறான் வண்டிக்காரன் பொன்னுசாமி.

வெற்றிவேலின் பிரச்சனைகளை ஜலகண்டர் அவனிடம் அப்படியே கூற, அசந்து போன அவன் அதை சரிசெய்ய பரிகாரம் கேட்க, ஏடு எடுக்க உள்ளே செல்கிறார் ஜலகண்டர். அதே சமயம் அவர் பின்னே சென்ற வெற்றிவேல் அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்கிறான்.

மைக்கேல்ராஜூம் அவன் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைத்த போலீஸ் கமிஷனர் கனகசபாபதி, கொலைக்கான மோட்டிவ்வை தேட யத்தனிக்கையில் மைக்கேல்ராஜ் எழுதியிருந்த கடிதம் கனகசபாபதியை வந்து சேர்கிறது.

அடுத்ததாக சம்பந்தமே இல்லாமல், புகழ்பெற்ற அமிர்தா குளிர்பான நிறுவனர் யோகானந்த் அவருடைய வீட்டு மொட்டைமாடியில் வைத்து கொலை செய்யப்படுகிறார். போலீஸ் விசாரணையில் மாதத்தில் இரண்டு முறையாவது நாடி ஜோதிடர் ஜலகண்டரை சந்திப்பதற்கு யோகானந்த் வருவது தெரிய வருகிறது.

மைக்கேல்ராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தின் தற்கொலையின் பின்னணி என்ன..? மைக்கேல்ராஜ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது என்ன..? வெற்றிவேல் யார்..? ஜலகண்டர், யோகானந்த் கொலைகளுக்கான மோட்டிவ் என்ன..? போனில் கமிஷனரிடம் சித்தர் பாடலைப் பாடியது யார்..? குற்றவாளி யார்..?

Casting : போலீஸ் கமிஷனர் கனகசபாபதி, மனைவி சிவகாமி, மகன் பிரபு, மருமகள் ப்ரியம்வதா, வேலைக்காரி வள்ளியம்மை, கனகசபாபதியின் நண்பன் மைக்கேல்ராஜ், மகள் ஜெனிஃபர், மர்ம நபர் வெற்றிவேல், குதிரை வண்டிக்காரன் பொன்னுசாமி, நாடி ஜோதிடர் ஜலகண்டர், அமிர்தா குளிர்பான ஓனர் யோகானந்த்.

  •  

ரோஜா முள் துரோகம் – Crime Novel

கல்யாண மண்டபத்தில் இருந்து வைஜெயந்தி தப்பித்த விஷயம் நீண்ட நேரத்திற்கு பிறகே அவளுடைய மாமா சிகாமணிக்கு தெரிய வந்தது. பெற்றோரை சிறு வயதிலேயே இழந்திருந்த வைஜெயந்தியை தாய்மாமா தான் வளர்த்து படிக்க வைத்திருந்தார். ஆனால், வைஜெயந்திக்கு அவர் பாத்திருந்த மாப்பிள்ளைக்கோ வயது நாப்பத்திரெண்டு.

புகழ்பெற்ற கம்பெனியில் ஜி.எம் ஆக இருந்த யதுநந்தன் தான் மாப்பிள்ளை. எப்பாடு பட்டாவது வைஜெயந்தியைத் திருமணம் செய்ய பிரம்மபிரயத்தனம் செய்து கொண்டிருந்த யதுநந்தன் போலீசிற்கு பணம் கொடுத்து அவளைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறார்.

அடுத்த நாள் காலை கல்யாணம் நடக்க இருந்த வேளையில், திட்டம் போட்டு வைஜெயந்தி நள்ளிரவு நேரத்தில் மண்டபத்தில் இருந்து தப்பிக்கிறாள். வைஜெயந்தி தப்பிக்க மாப்பிள்ளையின் வயது மட்டும் காரணம் இல்லை. அவள் ப்ரணேஷைக் காதலித்துக் கொண்டிருந்தாள்.

ப்ரணேஷ் – பணக்கார வீட்டு பையன், தாய் வள்ளியம்மைக்குத் தெரியாமல் தன்னுடைய காதலை வளர்த்து வருபவன். திட்டப்படி ப்ரணேஷின் நண்பன் பாண்டியுடன் மண்டபத்தில் இருந்து வைஜெயந்தி தப்பிக்க வேண்டியது. அதற்குப் பிறகு ப்ரணேஷும் வைஜெயந்தியும் கல்யாணம் செய்து கொள்வது.

எதிர்பாராத விதமாக, போலீஸ் விசாரணையில் வைஜெயந்தி மாருதி காரில் தப்பித்த விஷயம் தெரிய வருகிறது. மேற்கொண்டு விசாரித்ததில் ஒரு திடுக்கிடும் தகவல் போலீசிற்கு கிடைக்கிறது. வைஜெயந்தியைத் தான் காதலிப்பதாகச் சொல்லிய பாண்டி, மெக்கானிக்கல் ஷாப் நண்பனிடம் இருந்து, ஒரு காரை இரவல் வாங்கிச் சென்றதாக நண்பன் சொல்கிறான்.

இதற்கிடையில் ப்ரணேஷின் காதல் விஷயம் அவனுடைய அம்மா வள்ளியம்மைக்குத் தெரியவர, மேனேஜர் மற்றும் குடும்ப வக்கீலுடன் சேர்ந்து வைஜெயந்தியை விரட்ட திட்டம் போடுகின்றனர் மூவரும்.

யதுநந்தனிடம் பணத்தை வாங்கிய இன்ஸ்பெக்டர், பாண்டி வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்றபோது அவனும் வைஜெயந்தியும் வீட்டில் இல்லை. மேற்கொண்டு போலீஸ் வீட்டை அலச, வைஜெயந்தி எழுதிய டைரி அங்கு கிடைக்கிறது. டைரி முழுக்க காதல் கவிதைகள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் அக்கம்பக்கத்து ஆட்களை எழுப்பி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, திடீரென இன்ஸ்பெக்டரின் பார்வை பாண்டி வீட்டு பரண் மேலே செல்ல, அதிர்ந்தார் அவர். அங்கு கொலுசு அணிந்த ஒரு பெண்ணின் கால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்டிருந்த பெண் வைஜெயந்தி இல்லை. வைஜெயந்தியின் காதலன் ப்ரணேஷிடம் போலீஸ் விசாரித்த போது, வைஜெயந்தியைக் கூட்டி வரும்படி அவன் தான் பாண்டியிடம் கூறியதாகவும், ஆனால் இதுவரை தன்னிடம் அவளை அழைத்து வரவில்லை எனவும், பாண்டி வீட்டு பரண் மேல் இறந்து கிடந்த பெண் வைஜெயந்தியின் தோழி மோகினி எனவும் ப்ரணேஷ் கூற..

பாண்டி எதற்காக வைஜெயந்தியைக் கடத்தினான்..? யதுநந்தன்-வைஜெயந்தி திருமணம் நடந்ததா..? வைஜெயந்தி காணாமல் போனதற்கு காரணம் ப்ரணேஷின் அம்மா வள்ளியம்மையா..? பரண் மேல் இறந்து கிடந்த மோகினியைக் கொலை செய்தது யார்..? வைஜெயந்தி உயிருடன் இருக்கிறாளா..?

விறுவிறுப்புடன் நகரும் அடுத்தடுத்த நிமிடங்கள்..இன்றே வாசியுங்கள் ரோஜா முள் துரோகம்.

Casting : வைஜெயந்தி, தாய்மாமா சிகாமணி, மாப்பிள்ளை யதுநந்தன், ப்ரணேஷ், பாண்டி, மோகினி, மெக்கானிக் ஜோசப், ப்ரணேஷின் அம்மா வள்ளியம்மை.

  •