Velli Veethiyar Padalkalil Pen Mozhiyum Punaivum|Dr.A.Kohila
Abstract
The writings of the feminists are primarily recorded by the people’s life. They have recorded their inner self through their works. He was born in Madurai. His songs are cantered on his own experiences. He followed the songs of the Sangha literary traditions.
வெள்ளி வீதியார் பாடல்களில் பெண்மொழியும் புனைவும்
பெண்படைப்பாளிகளின் எழுத்துக்கள் மக்கள் வாழ்வியலை முதன்மையாகக் கொண்டவை. தனது படைப்புகள் வழியாக தன் அகஉணர்வுகளை சுயம் இழக்காமல் பதிவு செய்தனர்.பிரிவாற்றாமையால் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளைத் தனக்கே உரிய பெண் மொழியடன் புனைந்தார் வெள்ளிவீதியார் என்பதை எடுத்துக் கூறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது இவ்வாய்வு.
மதுரையில் வெள்ளிவீதியார் பிறந்தார்.இவரின் பாடல்கள் தன் சொந்த அனுபவங்களை மையமிட்டே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. சங்க இலக்கிய மரபுகளைப் பின்பற்றியே பாடல்களை உருவேற்றினார்.தனிபட்ட ஆண் பெண் இருவரிடையே உள்ள காதல் உணர்வினை மறைத்துத் தலைவன் தலைவி பெயர்களைக் கூறுவதைத் தவிர்த்தார். இயற்கையைத் தனிப் பொருளாகக்கொண்டு மானிட உணர்வுகளைப் பதிவு செய்வதை நோக்கமாக் கொண்டார்.
“வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப்பிறர் முன்னர்
கல்லாமைகாட்டியவள்-வாழி சான்றீர்”1
என்ற கூற்றிற்கிணங்க வெள்ளிவீதியார் புலமைப் பெற்றிருந்தார்.இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு முதலிய உணர்வுகளைக் கூறாமல் தலைவனும் பாங்கனும் காதல் பொருளாக நிகழ்த்தும் பாடல் ஒன்றினை மட்டும் வெள்ளிவீதியார் பாடியிருக்கிறார்.காமம் செப்பல் ஆண்மகற்கமையும் என்பது ஆண்பாற் புலவர்களுக்குப் பொருத்தமாவது போல் பெண்பாற் புலவர்கள் பாடல்களுக்கு பொருத்தமாக அமையவில்லை.அதே போல் பெண்பாற் புலவர்கள் பாடல்களில் இளமை நலம் பயவாமல் இருப்பது தாங்கொணாத் துயர நிலையாகவேப் பதிவு செய்திருப்பதைக் காணமுடிகிறது.இந்நிலையை ஆண்பாற்புலவர் பாடல்களில் காண முடியவில்லை.
“வெண்மணல் விரிந்த வீததை கானல்”2
“இலங்கு வெள் அருவி போல”3
“தண்டுடைக் கையர் வெண்தலை சிதவலர்”4
“வான்கரும்பின் ஓங்கு மணற் சிறுசிறை”5
“சிறு வெள்ளாங்குறுகே சிறுவெள்ளாங்குறுகே”6
என வெள்ளிவீதியார் வெண்மை என்ற சொல்லாடல் மீது பற்றுக் கொண்டவராக வெள்ளிய மணல் பரந்த கடற்கரை வெண்மைத்தலையினை உடைய தலைவன் என பதிவு செய்திருப்பதின் வழி தன் பெயரை ஒவ்வொருப்பாடலிலும் பதிவு செய்யவேண்டும் என்பதில் தனித்துவம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இவரது பாடல்கள் பிரிவாற்றாமையை முதன்மையாக கொண்டிருக்கின்றன. இவர் செய்யுட்கள் சோக கீதங்கள் எனக் கூறத்தகுந்தவை. இவர் தம் பாடல்கள் இகத்துறை தழுவியவை. இவர் பாடல்களில் ஒன்பது தலைவிக் கூற்றாகவும் மூன்று தோழிக் கூற்றாகவும் ஒன்று செவிலித்தாய் கூற்றாகவும் ஒன்று மட்டும் தலைவன் கூற்றாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. கற்பு நெறி பிறழாமை தலைவியின் அவல நிலை காமம் மிக்க கழிபடர்கிளவி முதலானவையே பாடலின் பொருண்மைகளாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
“உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர்க் காட்சிகற்புச் சிறந்தன்று”7
எனத் தலைவிக்கூற்றுரைக்கு ம் போது தலைவிக்கு நாணும் கற்பும் கடவாமை வேண்டும் என்கிறார்.
“நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கு இரு முன்னீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின்ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம்காதலரே”8
என பெரும்பாலும் தலைவிக் கூற்றினையே தன்மைப்படுத்தியிருக்கிறார். காதலனைத் தேடிப் பிரிந்த துயரத்தைப் பின்வருமாறுப் பதிவு செய்கிறார்.
“காலேப் பரிதப்பினவே கண்ணே நோக்கி
நோக்கி வாள் இழந்தனவே”9
“வெண்தேர்தாதின் புன்னையோடு கமழும்
பல் கானல் பகற்குறி வந்து நம்
மெய்கவின் சிதையப்பெயர்ந்தமை”10
என்று தன் தோழியிடம் தன் காதலைக்கூறுகிறாள்.மற்றொருப்பாடலில் தலைவியின் மனநிலையைக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார். கடல் ஒலிக்கின்றது. கடல்நீர் பொங்கிக் கரையை உடைக்கின்றது. தாழையும் பெயர்ந்து நறுமணம் வீசுகின்றது. பறவைகள் கூக்குரலிடுகின்றன. அத்தருணத்தில் காதலன் தன்னுடன் இல்லையே என புலம்புவதாக அமைந்துள்ளது.
“ஓங்கு மணற்சிறுசிறை
தீம்புனல் தெரிதர வீந்து உக்காஅங்கு
தாங்கும் அளவைத்தாங்கி
காமம் தெரிதரக் கைநில்லாதே”11
என பசலையால் உண்ட அழகினையும்
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்த உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது”12
என தலைவியின் புலம்பலையும் காம உணர்வினையும் கூறுகிறார்.இதே கருத்தினை ஔவையார் உடன்போக்கில் சென்ற தலைவியின் காதல்உணர்வினை வெள்ளிவீதியாரைத் தழுவி
“உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின்எம் அளவைத்தன்றே வருத்தி
வான்றோய்வற்றே காமம்
சான்றோ ரல்லர் யாம் மரீஇயோரே”13
இவ்வகையில் தலைவியின் களவையும் கற்பையும் பேசுவதில் இருவரும் ஒன்றுப்படுவதைக்காணமுடிகிறது.இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 13. களவிற்கு உரியன 5 கற்பிற்கு உரியன 8. இவரின் மாந்தர்கள் களவினராயினும் கற்பினராயினும் காதல் உணர்வு கொண்டவர்கள்.பாடும் புலவர்க்குப் பெரும்பாலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் உணர்வு அகத்திணை இலக்கியத்தில் இல்லை.இதனை மாற்றும் விதமாக வெள்ளிவீதியார் செயல்பட்டிருப்பதைக்காண முடிகிறது.இவர் பாடிய பாடல் அகத்தைத் தழுவி எழுதப்பட்டனஎன்பதைப் பின்வருமாறு அறியலாம்.
“மகளீர் தழுவிய துணற்மையானும்
மள்ளர் குழீஇய விழவி னானும்”14
என்ற ஆதிமந்தியின் அகப்பாடலை ஒத்து தம் பாடலைப் பாடி இருக்கிறார்.உடன்போக்கு பொருள்வயிற்பிரிவு ஆகியவையும் தன் பாடுபொருளாகக் கொண்டிருக்கிறார்.இவர் கற்பு நெறியின் போக்குகள் அகத்தை சார்ந்தவையாகவே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.களவு நெறியின் பண்புகள் குறித்து அதிகம் பேசி இருப்பதைக் காணமுடிகிறது.பிறக்கூறுகளை குறிப்பாக தொன்மத்தைத் தன் பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்பதைப் பின்வருமாறு உணரலாம்.
“————————- யானே
காதலர் கெடுத்த சிறுமையோடு நோய்கூர்ந்து
ஆதிமந்திபோல பேதுற்று”15
தன் அனுபவத்தை வெளிக்கொணரத் தொன்மத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்.
தொகுப்பாக
Ö பிரிவாற்றாமையை மையமாகக் கொண்டு பாடல்களை எழுதினமை.
Ö சுய உணர்வு குறிப்புகளாக பாடல்களை உருவாக்கியமை.
Ö இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாக் கொண்டு களவுநெறி கற்பு நெறி வாயிலாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தியமை.
Ö வெள்ளிவீதியார் என்ற பெண் மொழியின் புனைவுகள் அடிப்படையின் வாழ்வின் உணர்வு பிம்பங்களே என்பதை அறிய முடிந்தமை.
துணை நூல்கள்
1.நெய்தற்கலி.24
2.குறுந்தொகை.386
3.அகநானூறு.362
4. குறுந்தொகை.146
5. குறுந்தொகை.149
6.நற்றிணை.70
7.தொல்காப்பியம் இளம் உரை
8.குறுந்தொகை.130
9. குறுந்தொகை.42
10.நற்றிணை பாடல்
11.குறுந்தொகை.149
12.குறுந்தொகை.44
13.ஔவையார் பாடல்
14.ஆதிமந்திப்பாடல்
15.அகநானூறு.45
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ கோகிலா,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
மாதனாங்குப்பம், சென்னை – 600 099.
The post Velli Veethiyar Padalkalil Pen Mozhiyum Punaivum|Dr.A.Kohila appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.