Reading view

தலையங்கம் – மே 2025

சுட்டி உலகத்துக்கு இன்று நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள்! சுட்டி உலகம் துவங்கி நேற்றுடன் நான்காண்டு நிறைவு பெற்று, இன்று ஐந்தாம் ஆண்டு துவங்குகிறது.

2021ஆம் ஆண்டில் இந்த வலைத்தளத்தைத் துவங்குவதற்கு முன், தமிழில் என்னென்ன தலைப்புகளில் சிறுவர் நூல்கள் கிடைக்கின்றன? தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் யார் யார்? எந்தெந்தப் பதிப்பகங்கள் தமிழில் சிறார் நூல்களை வெளியிடுகின்றன? தமிழில் குழந்தைகள் படிக்க வேண்டிய சிறந்த சிறுவர் நூல்கள் என்னென்ன? என்று இணையத்தில் தேடிய போது விபரம் எதுவும் கிடைக்கவில்லை.  ஆனால் ஆங்கில நூல்களைப் பரிந்துரை செய்யும் வலைத்தளங்கள் பல இருந்தன.

எனவே நம் தாய்மொழித் தமிழில் வெளியாகும் நூல்களை வாசித்துப் பரிந்துரை செய்து, குழந்தைகளின் வாசிப்புக்கு வழிகாட்ட வேண்டும் என்று தோன்றிய எண்ணமே, ‘சுட்டி உலகம்’ துவங்க வழிவகுத்தது. அதற்குப் பிறகு பல சிறார் நூல்களை வாங்கி, அவற்றை வாசித்து நூல் அறிமுகம் செய்யத் துவங்கினோம். இன்று நூற்றுக்கு மேற்பட்ட நூல் அறிமுகங்கள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. மேலும் இந்நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் பற்றிய விபரங்களுடன், தற்கால எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு வாசிப்பில் ஈர்ப்பை ஏற்படுத்த, அவர்களின் வயதுக்கேற்ற நூல்களை வாசிக்கக் கொடுக்க வேண்டும்; இல்லையேல் குழந்தை வாசிப்பை வெறுக்கத் துவங்கிவிடும். புத்தகத்தைக் கண்டாலே ஓடத் துவங்கிவிடும். எனவே தான் இந்தத் தளத்தில் குழந்தைகளின் வயது வாரியாக புத்தக அறிமுகம் உள்ளது.

ஸீரோவில் ஆரம்பித்த இந்த வலைத்தளப் பார்வையின் (Views)எண்ணிக்கை, இன்று 80000ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்குத் தமிழைத் திருத்தமாக உச்சரிக்கச் ‘சுட்டி உலகம்’ காணொளியும் துவங்கி, அதில் பாடல்களை ஒலிபரப்புகிறோம்.

இவை குழந்தைகளைக் கவரக்கூடிய சந்தமும், இசையும், அனிமேஷனும் கொண்ட பாடல்கள். இந்தப் பாடல்களுள் ‘யானை வருது’ என்ற பாடல், ஒரு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் பார்வையைப் பெற்றிருக்கிறது என்பது வியப்பூட்டும் மகிழ்ச்சியான செய்தி! குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்த பாடலிது!

வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சுட்டி உலகத்துக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்னும் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் பிறந்த நாட்களைச் ‘சுட்டி உலகம்’ கொண்டாட இனிய வாழ்த்துகள்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post தலையங்கம் – மே 2025 first appeared on சுட்டி உலகம்.

  •  

தலையங்கம் – ஏப்ரல்-2025

எல்லோருக்கும் அன்பு வணக்கம்.

சிறார் வாசிப்பை ஊக்குவிக்க ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 10/05/2021 அன்று துவங்கிய இத்தளத்தில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சிறார் நூல்கள் பற்றிய அறிமுகத்தை வெளியிட்டிருக்கிறோம்.

‘சுட்டி உலகம்’ துவங்குமுன் இணையத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற தமிழ்ச் சிறார் நூல்கள் பற்றிய விபரம் தெரிவிக்கும் தளம் ஏதுமில்லை. ஆனால் ஆங்கில நூல்கள் பரிந்துரைக்குப் பல்வேறு வலைத்தளங்கள் இணையத்தில் இருந்தன;இருக்கின்றன.

எனவே தற்காலத்தில் தமிழில் என்னென்ன தலைப்புகளில் சிறார் நூல்கள் கிடைக்கின்றன? எந்தெந்தப் பதிப்பகங்கள் சிறார் நூல்களை வெளியிடுகின்றன? இப்போது குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்கள் யார்? என்ற விபரம் எதுவும் அன்று கிடைக்கவில்லை. எனவே முதல் முயற்சியாகப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க வழிகாட்ட வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் ஆரம்பித்த இந்த வலைத்தளம் நான்காண்டுகளை வெற்றிகரமாக முடித்து அடுத்த மாதம் 10/05/2025 அன்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

குழந்தைகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை துவங்க இருக்கின்றது. இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். கைபேசி, இணையம் போன்றவற்றிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்கப் புத்தக வாசிப்பு ஒன்றே சிறந்த வழி!

இந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலகக் குழந்தைகள் புத்தக நாள் உலகமுழுதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய தேவதைக் கதைகள் உலகப்புகழ் பெற்றவை. இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவர் கதைகளில் ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) என்ற வாத்துக்குஞ்சு கதை குழந்தைகளிடையே மிகவும் பிரபலம்.

இவருடைய இன்னொரு பிரபலமான நூல் ‘லிட்டில் மெர்மெய்டு’ (Little Mermaid) என்று சொல்லப்படும் குட்டிக் கடற்கன்னி கதை. தமிழிலும் இதன் மொழிபெயர்ப்பு கிடைக்கின்றது. வானம் பதிப்பகம், சென்னை இதை வெளியிட்டுள்ளது.

சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி  அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக்  கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய  எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.

இந்த ஆண்டு நெதர்லாந்து இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பொறுப்பேற்று உள்ளது. கற்பனையின் சுதந்திரம் அதாவது The freedom of imagination”. என்பதை இந்தாண்டுக்கான கருப்பொருளாகத் (theme) தேர்வு செய்துள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டின் சிறார் எழுத்தாளர் ரயன் விஸர் (Rian Visser)  என்பவர் எழுதிய கவிதையின் கடைசி வரியை மேற்கோளாகத் (Motto) தேர்ந்தெடுத்துள்ளனர்.

“Make pictures for my poem; and please feel free; these words belong to you even though they came from me.”

“என்னிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருந்தாலும் அவை உன்னுடையவை தாம்”

குழந்தைகளுக்குப் புத்தகத்தை அறிமுகம் செய்ய வேண்டும்; அவர்கள் வாசிப்பின் அருமையை உணர வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கம்.

எனவே பெற்றோரே! உங்கள் குழந்தை வருங்காலத்தில் பன்முகத் திறமை பெற்றுச் சிறந்த ஆளுமையாகத் திகழ வேண்டும் என்பது உங்கள் கனவா? இன்றே குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுங்கள்; வாசிப்பின் அருமையை அவர்கள் உணரச் செய்யுங்கள்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post தலையங்கம் – ஏப்ரல்-2025 first appeared on சுட்டி உலகம்.

  •  

வைக்கம் வீரர் பெரியார்

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் கூடிய மிக எளிய மொழியில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.

குழந்தை வாசிக்கக் கூடிய எளிய மொழி, சிறு சிறு வாக்கியம், படங்கள் ஆகியவை, இந்த வாசிப்பு இயக்கச் சிறு புத்தகத்தின் வேர்கள். இது வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது.

வைக்கம் எங்கே உள்ளது? அங்கே என்ன போராட்டம்? அதில் பெரியாரின் பங்கு என்ன?  பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்!’ என்று பட்டம் கொடுத்தவர் யார்? பெரியார் சிறையில் அனுபவித்த கொடுமைகள் யாவை? என்றெல்லாம் தெரிந்து கொள்ள, இந்தப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் வாங்கி வாசிக்கக் கொடுங்கள். இதில் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்த நான்கு கருப்பு வெள்ளை படங்கள் உள்ளன.

வகை – சிறார் வாசிப்பு நூல்சிறுவர் கட்டுரை
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-

The post வைக்கம் வீரர் பெரியார் first appeared on சுட்டி உலகம்.

  •