Reading view

மேசைகளும் மனிதர்களும்

1

நேற்று இரவு. கோரமங்களாவில் ஓர் உணவகம்.

ஒருவர் தனியாக நுழைகிறார். காலியாக இருந்த ஒரு மேசையில் சென்று அமர்கிறார், முதுகுப்பையைக் கழற்றிப் பக்கத்தில் வைத்துவிட்டு உணவுப் பட்டியலை எடுத்துப் புரட்டுகிறார்.

சில விநாடிகளில், மேலாளர் அங்கு வருகிறார். ‘சார், நீங்கமட்டுமா?’ என்கிறார்.

‘ஆமா’ என்கிறார் இவர்.

‘அப்படீன்னா இந்த மேசைக்கு மாறிக்கறீங்களா?’ என்று இரண்டு பேர்மட்டும் அமரக்கூடிய இன்னொரு சிறிய மேசையைக் காட்டுகிறார் அவர்.

‘ஏன்?’ என்று புருவம் உயர்த்துகிறார் இவர்.

‘இது ஆறு பேருக்கான மேசை. யாராவது குடும்பத்தோட வந்தாங்கன்னா அவங்களுக்குப் பயன்படும்.’

இந்த விளக்கத்தை அவர் சொல்லி ஒரு விநாடிகூட ஆகவில்லை. அந்த நபர் உணவுப் பட்டியலைக் கீழே போட்டுவிட்டுப் பையை எடுத்துக்கொண்டு சரேலென்று அந்த உணவகத்தைவிட்டு வெளியேறிவிட்டார்.

2

இன்று மாலை. அதே கோரமங்களாவில் வேறோர் உணவகம்.

அது குறுந்தீனிக்கான நேரம் என்பதால் அந்த உணவகம் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. மூலையில் ஒரே ஒரு மேசைமட்டும்தான் காலியாக இருக்கிறது.

ஒருவர் தனியாக நுழைகிறார், ஆவலுடன் சுற்றிப் பார்க்கிறார், காலியாக உள்ள மேசையைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் பாய்ந்து சென்று அமர்கிறார். முகத்தில் நிம்மதி, மகிழ்ச்சி.

மறுகணம், அந்த மகிழ்ச்சி காணாமல் போகிறது. எரிச்சலுடன் முகத்தைச் சுளித்தபடி எழுந்துகொள்கிறார்.

காரணம், அவர் அமர்ந்த மேசையில் ஒரு காஃபிக் கோப்பை இருக்கிறது. சற்றுமுன் அங்கு அமர்ந்திருந்தவர் அருந்திய கோப்பைதான் அது. தூய்மைப் பணியாளர் அதை இன்னும் நீக்கவில்லை.

ஆனால், அந்தப் பெண்ணுக்கு ஏனோ அது அசிங்கமான ஒரு பொருளைப்போல் தோன்றுகிறது. நான்கைந்து மேசை தள்ளியிருந்த தூய்மைப் பணியாளரைக் கை தட்டி அழைக்கிறார், அருவருப்புச் சைகையால் அந்தக் கோப்பையைச் சுட்டிக்காட்டி நீக்கச் சொல்கிறார். அவர் வந்து அதை நீக்கப்பட்டபிறகுதான் அவருடைய முகம் இயல்பாகிறது, நிம்மதியுடன் அந்த மேசையில் அமர்கிறார்.

*

நேற்றும் இன்றும் இரண்டு வெவ்வேறு உணவகங்களில் நான் பார்த்த காட்சிகள் இவை. இரண்டு நிகழ்வுகளிலும் நான் அடுத்த மேசையில் இருந்தேன் என்பதால் நடந்தவற்றை மிகத் தெளிவாகப் பார்த்துப் புரிந்துகொள்ளமுடிந்தது.

இதைப் பதிவுசெய்வதன்மூலம் நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஆறு பேர் மேசையில் அமர்ந்தவருக்கு அலுவலகத்தில் ஆயிரம் அழுத்தங்கள் இருந்திருக்கலாம், நிம்மதியாகச் சாப்பிட வந்தவருக்கு வேறு இடத்தில் மாறி உட்காரவேண்டும் என்கிற அறிவுறுத்தல் எரிச்சலூட்டியிருக்கலாம். பயன்படுத்தப்பட்ட காஃபிக் கோப்பையைப் பார்த்து அருவருத்த பெண் தூய்மை விரும்பியாக இருந்திருக்கலாம். அவரவர்க்கு ஒரு நியாயம் இருக்கும். அதை நான் மறுக்கவில்லை, புரிந்துகொள்கிறேன்.

ஆனால், இந்த இரு சூழ்நிலைகளிலும் அவர்கள் கடைப் பணியாளர்களை நடத்திய விதம்தான் எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. அவர்களும் மனிதர்கள்தான், உழைத்துப் பிழைக்கிறவர்கள்தான். நாம் வாடிக்கையாளர் நிலையில் உள்ளோம் என்ற ஒரே காரணத்தால் அந்தக் கடையில் பணியாற்றுகிற எல்லாரையும் இப்படி அலட்சியமாக நடத்தவேண்டுமா? உயர்ந்த படிப்பும் பெருநகர வேலை அனுபவமும் இந்தப் பண்பைத்தான் நமக்குக் கற்றுத்தருகின்றனவா?

பின்குறிப்பு: இந்நிகழ்வுகள் இரண்டும் சரியாகக் கோரமங்களாவில் நடைபெற்றிருப்பது எதேச்சையான ஒற்றுமை இல்லை என்பது பெங்களூர்வாசிகளுக்குப் புரியும்.

  •  

கொண்டாட்ட வரம்புகள்

இன்று காலை, பேருந்தில் எனக்கு முன் வரிசையில் இரண்டிரண்டாக நான்கு இளைஞர்கள் உட்கார்ந்திருந்தார்கள், தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். நால்வரும் சில மாதங்களுக்குமுன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு முதல் வேலையில் சேர்ந்துள்ளவர்கள் என்பது அவர்களுடைய உரையாடலிலிருந்து தெரிந்தது.

சிறிது நேரத்துக்குப்பின் அவர்களுடைய பேச்சு ஐபிஎல்லை நோக்கித் திரும்பியது. இந்த ஆண்டு சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையிலான ஆட்டத்தை நேரில் பார்க்கவேண்டும் என்று ஒருவன் சொன்னான். அதை இன்னொருவன் ஆமோதித்தான், ‘டிக்கெட் ஐயாயிரம் ரூபாயாவது வரும். பரவாயில்லை, லைஃப் டைம் எக்ஸ்பீரியன்ஸ். விடக்கூடாது.’

‘ஐயாயிரமா?’ என்று திகைப்புடன் கேட்டான் ஒருவன், ‘அவ்ளோ காசு ஆகுமாடா?’

‘ஆமாம்டா’ என்றான் இன்னொருவன், ‘தோனி, கோலியெல்லாம் விளையாடறாங்கன்னா சும்மாவா?’

‘இருந்தாலும் ஐயாயிரம் ரூபாய் ஜாஸ்திடா’ என்றான் அவன். ‘நீங்க வேணும்ன்னா போய்ட்டு வாங்க. நான் டிவியில பார்த்துக்கறேன்.’

அவ்வளவுதான். மற்ற மூவரும் அவன்மீது பாயாத குறையாகப் பேசத் தொடங்கினார்கள். ‘வாழ்க்கையை இனிமையாக வாழவேண்டும். அதற்கு ஐயாயிரம் ரூபாய் என்பது ஒரு தொகையே இல்லை, அதைச் செலவிடத் தயங்கக்கூடாது’ என்பதுதான் அவர்களுடைய அடுத்த ஐந்து நிமிடப் பேச்சின் சுருக்கம்.

அந்த இளைஞன் திரும்பத் திரும்ப எல்லாரையும் மறுத்துக்கொண்டிருந்தான். ஆனால், ஓரிரு முயற்சிகளுக்குப்பிறகு, அவனுடைய குரல் தணியத் தொடங்கியது. அவன் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. எப்படியாவது இந்தப் பேச்சு வேறு திசையில் மாறிவிட்டால் பரவாயில்லை என்று ஏங்குவதுபோல் இழுத்து இழுத்து ஏதோ சொன்னான்.

மற்ற மூவரும் அதைத் தங்களுடைய வெற்றியாக நினைத்துக்கொண்டார்கள். ‘அன்னிக்கு நமக்குத் திருவிழாதான். செமையான டிக்கெட்டுக்கு நான் ஏற்பாடு பண்றேன். எல்லாரும் காசு ரெடி பண்ணிடுங்க’ என்றான் ஒருவன்.

இப்போது அந்த இளைஞன் மீண்டும் பேசினான், ‘இல்லைடா. என்னால அவ்வளவெல்லாம் செலவழிக்கமுடியாது. நீங்க என்ன நினைச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. நான் மேட்ச் பார்க்க வரலை’ என்றான்.

பேருந்தில் கசப்பான சிறு அமைதி. எல்லாரும் எதுவும் பேசாமல் மொபைலைப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அந்த இளைஞனைப் போன்றவர்களை நான் கல்லூரியிலும் அதன்பிறகும் நிறையச் சந்தித்திருக்கிறேன். வாழ்க்கையைக் கொண்டாட விரும்புகிறவர்கள். ஆனால், அவர்கள் பணத்தின் மதிப்பை அறிந்திருப்பதாலோ, வேறு பொருளாதாரச் சூழ்நிலை, கடமைகளாலோ, அதற்கு ஒரு விலையை நிர்ணயிக்கவேண்டிய கட்டாயம். அந்த எல்லைக்குள் வருகிற கொண்டாட்டங்களைமட்டும் ஏற்றுக்கொண்டு மகிழ்வார்கள், மற்றவற்றைச் சிரிப்போடு ஒதுக்கிவிடுவார்கள். அதனால் தங்கள் அன்புக்குரிய உலகத்தை, தங்களுக்கு ஆதரவளிக்கும் அடித்தளத்தைத் தாற்காலிகமாகப் பகைத்துக்கொள்ளவேண்டியிருப்பதுபற்றி அவர்களுக்குக் கவலை இருப்பதில்லை. அதற்கு எப்பேர்ப்பட்ட பொறுப்புணர்ச்சியும் துணிச்சலும் வேண்டும் என்று தெரியுமா!

அதிலும் குறிப்பாக, இன்றைக்கு எதை வேண்டுமானாலும் உடனடியாக வாங்க வசதியளிக்கிற கடன் பண்பாட்டில் மிகைச் செலவுகள் என்று எவையும் இல்லை என்பதுபோன்ற ஒரு மசங்கல் உணர்வு உண்டாகிவிடுகிறது. அப்படியொரு சூழலில் சுற்றியிருக்கிற “எல்லாரும்” செய்கிற ஒன்று நமக்கு வேண்டாம் என்று தீர்மானிப்பதற்கு இன்னும் கூடுதல் துணிச்சலும் தொலைநோக்கும் வேண்டும்.

பெயர் தெரியாத அந்தத் தம்பியை மனமார வாழ்த்தியபடிதான் வண்டியிலிருந்து இறங்கினேன். அதன்பிறகும் இன்று நாள்முழுக்க அவன் நினைவுதான்!

  •  

கவசத் திரை

போக்குவரத்து நிறுத்தத்தில் எங்களுக்கு எதிரில் நின்ற வண்டியில் அடுக்கடுக்காகத் தலைக்கவசங்கள். ஐம்பது, நூறு, இருநூறுகூட இருக்கலாம்.

அந்தச் சிறிய, இரு சக்கர வண்டியில் அத்தனைத் தலைக்கவசங்கள் பொருத்தப்பட்டிருந்ததே ஓர் அழகிய காட்சிதான். முதலில், இருபது அல்லது இருபத்தைந்து தலைக்கவசங்களை ஒன்றின்மீது ஒன்றாகப் பொருத்திக் கட்டிக் கோபுரம்போல் ஆக்கியிருக்கிறார்கள். பின்னர் அந்தக் கோபுரங்களை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டி மொத்தமாகத் தூக்கி வண்டியின் பின் இருக்கையில் நிறுத்திக் கட்டியிருக்கிறார்கள்.

இதனால், அந்த வண்டியை ஓட்டுபவர் ஆணா, பெண்ணா, இளைஞரா, நடுத்தர வயதா என்றுகூடப் பார்க்க வழியில்லை, ஹெல்மெட்களின் திரை அவரை மறைத்துவிடுகிறது.

சிறிது நேரத்தில் பச்சை விளக்கு எரிந்தது. எங்கள் ஓட்டுநர் அவருக்கு முன்னதாக விரைந்து செல்ல, ஆவலுடன் திரும்பிப் பார்த்தேன்.

அந்த விற்பனையாளர் (அல்லது தயாரிப்பாளர்) இளைஞர்தான். அத்தனைத் தலைக்கவசங்களின் கனத்தைச் சமாளித்துக்கொண்டு திறமையுடன் வண்டி ஓட்டினார். அவரும் ஒரு தலைக்கவசம் அணிந்திருந்தார். பின்னால் அடுக்கடுக்காகக் கட்டப்பட்டுள்ள அதே சரக்குதான்.

அவர் செல்கிற வழியில் மரங்களும் குரங்குகளும் இருந்தால் ஒரு சுவையான நவீனக் கதை நமக்குக் கிடைக்கும்!

  •