Reading view

அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரட்டும் !

      உயர்ரக கறுப்புத் தோலில் செய்யப்பட்ட, உயர்ந்த முதுகுச் சாய்மானம் உள்ள சுழல் நாற்காலி அது.  அதற்கு முன்னால்  நூற்றாண்டுப் பழமையான ஓக் மர மேஜை.  அதன் பெயர் புசானன் மேஜை.  இதுவரை 35 பேர் மட்டுமே அமர்ந்த நாற்காலி அது.  ‘அதில் உட்காருங்கள்.  அதிபரின் நாற்காலி தரும் உணர்வை உங்கள் எழுத்தில் கொண்டு வாருங்கள்’, என்கிறார் அதிபரின் பத்திரிக்கைச் செயலாளர் பியரி சாலிங்கர்.  அமெரிக்க அதிபரின் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு.  எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத உயர்ந்த மரியாதை.  மோசிகீரனாருக்கு அடுத்தபடியாக அரசுக் கட்டிலில் அமர்ந்த அந்த ஒரே படைப்பாளி இர்விங் வாலஸ். கென்னடி கவரி வீசாமல் குட்டித் தூக்கம் போடப் போய்விட்டார்.

      வாலஸ் மெல்ல அமர்கிறார்.  எதிரே பிரும்மாண்டமான மேஜை.  அதில் வலதுபுறம் பெரிய மேஜைவிளக்கு.  அதிபரின் குடும்பப் படங்கள்.  ஒன்றிரண்டு சிறு நினைவுப்பரிசுகள்.  விளக்கிற்கு அருகே ஆறு புத்தகங்கள். அதில் ஒன்று அந்த அதிபர் எழுதியது.  மேஜையின் நடுவே ஹோட்டல் மெனு அட்டை போன்ற அட்டையில் அதிபரின் அன்றைய நிகழ்ச்சிகள்.

      பக்கத்தில் அவரது கையெழுத்திற்குக் காத்திருக்கும் கோப்புகள்.  எழுதுபலகை. இடதுபக்கம் ஒரு பச்சை தொலைபேசி.  அருகே இரண்டு  சாதா கறுப்பு தொலைபேசிகள்.  அதில் ஒன்றுதான் கதைகளில் அடிக்கடி சொல்லப்படும் ஹாட்லைன்.

      நாற்காலியை மெல்ல இடப்பக்கமாகச் சுற்றுகிறார் வாலஸ்.  அதிபரின் நிகழ்ச்சி நிரல் செயலாளரின் அறை தெரிகிறது.  பக்கத்தில் திறந்த கதவு. குறுக்கே சங்கிலி கட்டப்பட்டு, அதற்கப்பால் அதிபரின் மெய்க்காப்பாளர் வாலஸைப் பார்த்துக் கொண்டு டென்ஷனாக நிற்கிறார்.  இன்னும் திரும்பினால் கனல் அடுப்பு.  அதன் மேல் இரு கப்பல்களின் மாதிரி பொம்மைகள்.  ஒரு கடற்போர் சித்திரம்.  அமெரிக்க போன்ஹோம் கப்பலும், பிரிட்டனின் செராபிஸ் கப்பலும் போரிடும் காட்சி.  அருகில் சின்னதாக அதிபரின் அந்தரங்கச் செயலாளரின் அலுவலகம்.  இன்னும் சற்றுத் திரும்பினால் மூன்று பெரும் பிரஞ்சுக் கதவுகளின் வழியே ரோஸ் தோட்டம் தெரிகிறது.

      நாற்காலிக்கு நேர் பின்னால் பெரும் மேஜை ஒன்றில் ஏழெட்டு நாளிதழ்கள், ஒரு டிக்டாஃபோன். மேஜைக்கு ஒருபுறம் அமெரிக்கக் கொடி. மறுபுறம் அதிபரின் கொடி.  அதன் பின்னால் மூன்று பெரும் ஜன்னல்கள்.  வெளியே பாதுகாவலர்கள்.  நிற்கும் அறை.  அதைத் தாண்டி ஐசனோவர் உருவாக்கிய தென்பகுதித் தோட்டம்.  அதில் அதிபரின் சிறுகுழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  நாற்காலி ஒரு சுற்று முடித்து நேராகிவிட்டது.

      ஒரு அசாதாரண விபத்தில், அதிபர் பதவிக்கு அடுத்தடுத்து யார் வரலாம் என்பதைக் கூறும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு வினோதமான ஷரத்தால், ஒரு எளிய கறுப்பினத்தவர் அதிபராகி விட்டால்?  அதை அமெரிக்க சமூகம், அதன் வெள்ளை மேட்டுக்குடி எப்படி ஏற்றுக் கொள்ளும்? அந்தக் கறுப்பு மனிதனுக்கு என்னென்ன சோதனைகள், வேதனைகள் வரும்? என்று யோசித்து, ஒரு நாவல் எழுத வாலஸ் முடிவு செய்ததன் பின்னணியில்தான் மேற்படி சம்பவம்.  அந்த நாள் 1963 செப்டம்பர் 16.

      அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், அங்கு கறுப்பர்களின் நிலை பற்றி ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்துவிட்டு, வெள்ளை மாளிகை ஆய்வுக்காக வந்த வாலஸின் அனுபவம்தான் இது.  இன்றும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் ‘தி மேன்’ என்ற அற்புதமான, அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய அந்த நாவலை எழுதும்போது, வாலஸ் வெள்ளை மாளிகையை கூட்டத்தோடு கூட்டமாக ஒரு பார்வையாளனாகச் சென்று பார்ப்பதை விரும்பவில்லை. தனது சொந்த அலுவலகத்தில் ஒரு அதிபர் எப்படி உணர்வார் என்ற அனுபவத்தைப் பெற விரும்பினார்.  பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தயங்கினார்கள்.  ஆனால் அதிபர் கென்னடி, மதியம் நான் குட்டித்தூக்கம் போடும் நேரம் என் அலுவலகம் காலியாகத்தானே இருக்கும், வாலஸ் அந்த நேரத்தில் என் நாற்காலியில் அமர்ந்து அதிபராக உணர்ந்து எழுதட்டும் என்றார்.  நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் வண்டு முருகனின் நாற்காலியில் உட்காரவாவது அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ள நிலையில் இது எத்தனை பெரிய ஆச்சரியம் !

      மற்றொரு ஆச்சரியமும் இருக்கிறது.  தனது கதாநாயகன் அதிபராகப் பதவியேற்கும்போது சொல்லப் போகும் பைபிள் வாசகத்தை, அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த மேஜையில் வைத்து மனதுக்குள் முடிவு செய்கிறார் வாலஸ்.  ‘கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா ;  கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா’ (சங்கீதம் 127 :1 , 2).

      நேரம் முடிந்துவிட்டது.  அதிபர் அலுவலக அறையிலிருந்து கீழே இறங்கும் மாடிப்படிகளை எண்ணியவாறு இறங்குகிறார் வாலஸ்.  உங்கள் நாவலில் உங்கள் வர்ணிப்புகளை எல்லாம் நாங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். உங்கள் நாவலைப் படித்து அலுவலக அமைப்பைத் தெரிந்து கொண்டு அவரைக் கொல்ல யாரும்   நுழைந்து விடாமல் இருக்க வேண்டும் என்கிறார் பாதுகாப்பு அதிகாரி சிரித்தபடி.  ஆனால் சம்பவம் வேறு இடத்தில் நடந்து விட்டது!

      நாவல் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, ஒன்பது வாரத்தில், 1963 நவம்பர் 22 அன்று கென்னடி சுட்டுக் கொல்லப்படுகிறார். வேதனையோடு தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் வாலஸ்.  டல்லஸ் சிடிசன் கவுன்சிலில் கென்னடி பேச இருந்த, அவரது  கடைசி உரையை செய்தியாளர் வாசித்துக் கொண்டிருக்கிறார்.  கென்னடியின் வாசிக்கப்படாத அந்த உரை, ‘கர்த்தர் நகரத்தைக் காவாராகில், காவலாளர் விழித்திருக்கிறது விருதா’, என்ற பைபிள் வாசகத்தோடு முடிகிறது.  வாலஸுக்கு புல்லரித்துப் போகிறது.

      நாவல் வெளியாகிவிட்டது.  வாலஸுக்கு சர்வதேச அளவில் புகழ் சேர்க்கிறது.  கென்னடியின் முதலாண்டு நினைவு நாள் வருகிறது. தாம் கென்னடியின் நாற்காலியில் அமர்ந்த அனுபவத்தை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புகிறார் வாலஸ்.  பத்திரிகைகளின் மேட்டுக்குடி முதலாளிகள் அதை நிராகரிக்கிறார்கள். கதையில் கூட ஒரு கறுப்பினத்தவன் அதிபராவதை விரும்பாத அமெரிக்க இனவெறி முதலாளித்துவப் பத்திரிகைகள், அந்த  நாவலை எழுதிய வாலஸை மௌனமாகப் புறக்கணித்தார்கள்.

      பல வருடங்கள் கழித்து இர்விங் வாலஸ் ‘தி சண்டே ஜெண்டில்மேன்’ என்ற தமது கட்டுரை தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில் தமது கென்னடி நாற்காலி கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார்.  அதிபரின் நாற்காலியில் தாம் அமர்ந்தபோது ஏற்பட்ட உணர்வுகளை மிக அருமையாகப் பதிவு செய்யும் இர்விங் வாலஸ் கட்டுரையை, ‘ மிகவும் சக்தி வாய்ந்த அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரவேண்டும்’, என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறார். அதைப் படித்த போது,

      ஒரு தட்டில்

      பழங்களும், பிரார்த்தனைகளும்

      வைக்கப்பட்டன.

      பழத்தைத் தின்றார் கடவுள்.

      பழுக்கட்டும் என்று

      விட்டு வைத்தார்

      பிரார்த்தனைகளை.

என்ற சுந்தர்ஜியின் கவிதை நினைவிற்கு வந்தது.  ஐம்பது வருடங்களாகப் பழுக்காத பிரார்த்தனை !

பின்னி​ணைப்பு

இது ஒரு நாள் சம்பவமல்ல.  பத்து நாட்கள் இது​போல் தினமும் மதியம் 2.30லிருந்து 4.30 வ​ரை ​கென்னடி ஓய்​வெடுக்கும் ​போது அவரது அலுவலக அ​றையில் இது ​போல் சுற்றித் திரிந்து ‘அதிபராக’ உணர்ந்திருக்கிறார் இர்விங் வாலஸ்.

இர்விங் வாலஸின் பு​னைவுக​ளைப் ​போல​வே அவரது கட்டு​ரை நூல்களும் மிகமிக முக்கியமான​வை.  இக்க​ட்டு​ரை அவரது சண்​டே ​ஜெண்டில்​மேன் என்ற கட்டு​ரைத் ​தொகுப்பிலிருக்கிறது – ஆம், ​வே​றெரு கட்டு​ரையில் நாம் ஏற்கன​வே பார்த்தது ​போல அவர் ஞாயிற்றுக்கிழ​மைக் கனவானாகத் திரிந்த காலத்தில் எழுதிய கட்டு​ரைகளின் ​தொகுப்பு அது.  1965ல் ​வெளிவந்த இந்தத் ​தொகுப்பில் அவர் அ​மெரிக்கா ​தொடர்பாக எழுதிய​வை, ​வெளிநாடு ​சென்று பார்த்த​தை எழுதிய​வை என இரு ​பெரும் பிரிவாகத் தந்திருக்கிறார்.  இந்தக் கட்டு​ரை மட்டும் the sunday gentleman on monday என்று தனியாக தரப்பட்டிருக்கும். Two nice old ladies என்ற சிகா​கோவின் புகழ் ​பெற்ற எவர்​​லே விடுதி​யை நடத்திய ​இரு பெண்கள் பற்றிய கட்டு​ரை பின்னாளில் the golden room என்ற நாவலுக்கு அடித்தளமானது.

இந்த the sunday gentlemanல் வாலஸ் எழுதியிருக்கும் முன்னு​ரை மிகமிக முக்கியமானது.  புகழ்​பெற்ற எழுத்தாளராவதற்கான அவரது உ​ழைப்​பைப் ​போகிற​போக்கில் ​சொல்வார்.  பத்திரி​கைகளில் ​வே​லை பார்த்துக் ​கொண்டு முதலாளி ​சொன்ன​தை எழுதிக் ​கொண்​டே ஞாயிற்றுக்கிழ​மைகளில் அவர் எழுதிய கட்டு​ரைகள், நாவல்கள் உடனடியான அங்கீகாரம் ​பெற்றுவிடவில்​லை.  அவரது புகழ் ​பெற்ற ப​டைப்புகளின் எண்ணிக்​கைக்கு சமமாக அவரது நிராகரிக்கப்பட்ட ப​டைப்புகளும் உண்டு. அவர் ​சொல்வ​தை அப்படி​யே தருகி​றேன் – பாருங்கள்.

என் பதி​னேழாவது வயதில் நான் மிகவும் மதித்த ஐந்து ஆளு​மைகள் பற்றி ( இதில் கிளாரன்ஸ் டா​ரோவும், வால்டர் ரீடும் உண்டு) ஹீ​ரோஸ் ஆஃப் டு​டே என்று ஒரு நூல் எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பதி​​​னெட்டாவது வயதில் மக்களின் ​பொதுவான மூடநம்பிக்​கைக​ளை ​வைத்து, ஸாரி யு ஆர் ராங் என்று ஒன்று எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பத்​தொன்பதாம் வயதில் ​ஹோண்டூராஸ் காடுகளில் நான் ​மேற்​கொண்ட சாகசப் பயணம் பற்றி ​​மை அட்​வென்சர் டி​ரெய்ல் என்று ஒன்று எழுதி​னேன்.  நிராகரிப்பு.  ​டேனியல் ​டெஃ​போவின் வாழ்க்​கை வரலாற்​றை தி சண்​டே ​ஜென்டில்​மேன் ( அதுதான் ஒரிஜினல் ​போலும்!) என்று இருபதாவது வயதில் எழுதி, அதுவும் நிராகரிக்ப்பட்டது.  இருபத்தியிரண்டாவது வயதில் முதல் பன்னிரண்டு சீசர்களின் வாழ்க்​கை வரலாற்​றை ​ரோமன் ஹாலி​டே என்று ஆரம்பித்து பாதி எழுதி நா​னே நிறுத்திவிட்​டேன்.  அப்​போது பல பத்திரி​கைகளிலும் பிரசுரமாகி இருந்த பல கட்டு​ரைக​ளை திருத்தி எழுதி புத்தகமாகத் ​தொகுத்​தேன்.  அது பிரசுரமாகவில்​லை.  இருபத்தி ஐந்தாம் வயதில் தனகா நி​னைவுச் சின்னம் பற்றி ஜப்பான்ஸ் ​மெய்ன் காம்ஃப் ​என்று ஒன்​றை எழுதி​னேன்.  நிராகரிப்புதான்.   இருபத்தி​யேழாவது வயதில் நான் ​பத்திரி​கை வாழ்வில் பேட்டி கண்ட ஆளு​மைக​ளைப் பற்றி வித் ​​தெயர் ​பேண்ட்ஸ் டவுண் என்று ஒரு நூல்.  பிறகு ​கேப்ரியல் என்று ஒரு நாவலுக்கு முதல் இரண்டு அத்தியாயங்கள். இந்தக் காலகட்டத்தி​லே​யே அ​ரைடஜன் நாவல்களுக்கு ஓரிரு அத்தியாயங்கள். எல்லாம் ​தோல்விதான். முப்பத்தி​யேழாவது வயதில் பத்திரி​​கை ​வே​லை​யை விட்டுவிட்டு சீரியஸாக முழு​நேர எழுத்தாளனாக உட்கார்ந்து எழுதிய​போதுதான் முதல் புத்தகம் வந்தது.

பிரசுரமாகாத இந்த நூல்க​ளை யாராவது ​தேடி எடுத்துப் பிரசுரித்தால் எப்படி இருக்கும்! ஆனால் என்​றேனும் ஒரு நாள் அ​வை பிரசுரமாகும் என்ற நம்பிக்​கை எனக்கு இருக்கிறது.

எப்படி எழுத​வேண்டும் என்ப​தை மட்டுமல்ல, எப்படி விடாமுயற்சி​யோடு எழுத​​வேண்டும் என்ப​தையும் நாம் இர்விங் வாலஸிடம் ​சேர்த்துக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

  •