Reading view

எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம்

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூலில் பழைய தமிழ்நாட்டு விளையாட்டுகளைக் கதை மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். டிஜிட்டல் மீடியாவிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடக்கும் இந்நாளைய சிறுவர்க்குக் கைபேசி இல்லாமல் மட்டுமல்ல, எந்த வித எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் இல்லாமலே கூட விளையாட முடியும் என்பதை இந்நூல் சொல்கிறது. 

எனக்கு ஃபோன் தர மாட்டேங்கிறான்” என்று அண்ணன் மீது புகார் சொல்லும் தமிழினிக்கு, அவள் அம்மா புளியங்கொட்டைகளை வைத்து விளையாடும் ஒத்தையா?ரெட்டையா? என்ற விளையாட்டைச் சொல்லிக் கொடுக்கிறார். தமிழ் மொழியுடன் நெருக்கமான இவ்விளையாட்டுகள் மூலம் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடியும் என்று விளக்குகிறார் தமிழினியின் அப்பா.

தமிழினிக்கு ஆர்வம் அதிகமாக, கில்லா பிறாண்டி, எலி-பூனை விளையாட்டு போன்ற மற்ற விளையாட்டுகளையும் அம்மா கற்றுக் கொடுக்கிறார். கில்லா பிறாண்டி விளையாட்டின் போது பாடப்படும் பாட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்குப் பழைய பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்யும் இந்நூல் 12-14 வயது சிறார்க்கானது.

 வகைசிறார் கதை
ஆசிரியர்‘பஞ்சு மிட்டாய்’ பிரபு
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 50/-

The post எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் first appeared on சுட்டி உலகம்.

  •  

ஏழும் ஏழும் பதினாலாம்

‘குழந்தை இலக்கியத்தின் பிதாமகன்’ என்றழைக்கப்படும் அழ.வள்ளியப்பா அவர்கள் குழந்தைகளுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் காலம் தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. இவரது பாடல்கள் குழந்தைகள் பாடுவதற்கேற்ற இனிய ஓசையும், சந்தமும் கொண்டவை. குழந்தைகள் எளிதாக உச்சரித்து பாடுவதற்கேற்ற எளிய மொழியில் அமைந்தவை.  

இவரது பாடல்களிலிருந்து குழந்தைகள் பாடி மகழ்வதற்கு, 15 சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்ற தலைப்பில், பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ‘பஞ்சுமிட்டாய்- ஓங்கில் கூட்டம்- வெளியிட்டுள்ளது.

“அ,ஆ என்றேனே” என்ற முதல் பாடல், குழந்தைகள் விளையாட்டாய் அரிச்சுவடியைக் கற்க உதவும். ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்பது வேடிக்கையும், நகைச்சுவையும் நிறைந்து குழந்தைகளை மகிழ்ச்சியூட்டும் பாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அதே சமயம் 7+7=14 என்ற கணக்கையும், குழந்தைகள் விளையாட்டாய்த் தெரிந்து கொள்வார்கள்.

“ஏழும் ஏழும் பதினாலாம்

எலியா ருக்கு முழம் வாலாம்.

அறைக்குள் எலியார் புகுந்தாராம்

அங்கும் இங்கும் பார்த்தாராம்.

இரண்டு தட்டில் பணியாரம்

இருந்தது கண்டு மகிழ்ந்தாராம்

கடித்து கடித்துத் தின்றாராம்

கணக்கைக் கூட்டிப் பார்த்தாராம்.

ஏழும் ஏழும் பதினாலாம்.

எலியார் ஏப்பம் விட்டாராம்!”

நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  வாங்கிக் கொடுக்கலாம். குழந்தைகள் இப்பாடல்களைப் பாடுவதன் மூலம் புதிய சொற்களைக் தெரிந்து கொள்வதோடு, அவர்கள் தமிழ் உச்சரிப்பும் மேம்படும்.

வகைகுழந்தைப் பாடல்கள்
ஆசிரியர்அழ.வள்ளியப்பா
வெளியீடு:-பஞ்சுமிட்டாய் & ஓங்கில் கூட்டம் தஞ்சாவூர். செல் +91 9731736363  
விலைரூ 40/-.

The post ஏழும் ஏழும் பதினாலாம் first appeared on சுட்டி உலகம்.

  •