Reading view

தோற்றாலும் விடமாட்டேன் – கமலா முரளி மதிப்புரை

மெட்ராஸ் பேப்பர் இதழின் உதவி ஆசிரியர், நஸீமா ரஸாக், தமிழ்நாட்டில் திருக்கோவிலூரில் பிறந்து, தற்போது துபாயில் வசித்து வருகிறார். மௌலா, துபாய் விசா பகுதி 1 மற்றும் பகுதி 2, தளிர், மராம்பு, என்னைத் தேடி, பொன் விளைந்த பூமி உள்ளிட்ட பதினொரு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்து தமிழ் திசையில் இவரது கட்டுரைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நஸீமா ரஸாக் அவர்களது ”தோற்றாலும் விடமாட்டேன்” கட்டுரைத் தொகுப்பு நாற்பது கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தோல்விகள் எத்துனை வந்தாலும், மனந்தளராது, விடா முயற்சியுடன் தங்கள் இலக்கை நோக்கிப் பயணித்த உலக அளவிலான நாற்பது சாதனையாளர்களைப் பற்றிய நூல்.

சாதனையாளர்களைப் பற்றிய தகவல்களை அள்ளித் தரும் தகவல் திரட்டு அல்ல இந்த நூல்.
ஒரு சாதனையாளர் எந்த ஆண்டு பிறந்தார், எங்கு எப்போது படித்தார் அல்லது அவருக்குக் கிடைத்த அங்கிகாரங்களின் பட்டியல் போன்ற புள்ளி விவரங்களால் பக்கங்கள் நிரப்பப்படவில்லை.

அதே சமயத்தில், ஒவ்வொருவருடைய வாழ்வின் முக்கியத் தருணங்களை, உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அவர்கள் எதிர் கொண்ட சவால்கள், அவர்களது வேதனைகள், திடமான உறுதியுடன் , விடாமுயற்சியுடன், தோற்றாலும் விடமாட்டேன் என்ற தீர்மானத்துடன் அவர்கள் செயல்பட்டதை மிகச் சிறப்பாக வெளிக் கொணர்ந்து உள்ளார்.
கட்டுரைகளின் நீளம் பற்றிக் குறிப்பிட வேண்டும்.ஆசிரியர் எடுத்துக் கொண்டு இருக்கும் சாதனையாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக ஒரு நூலே எழுதலாம். இருப்பினும், அவர்களது வாழ்வின் முக்கியத் தருணங்களையும் குறிப்பிட்டு, அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் சொல்லி, தோல்வி மனப்பானமையை அறவே ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நூலின் அடிப்படைக் கருத்தை ஆழமாக வலியுறுத்தி… இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவை அனைத்தையும் சிறிய கட்டுரைகள் வாயிலாகத் தந்துள்ளார்.
தொய்வில்லாமல் , சுவாரசியத்துடன் படிக்க இந்த “சுருங்கச் சொல்லும்” உத்தி உதவுகிறது என்றால் மிகை ஆகாது.
அத்தியாயங்களின் தலைப்புகள் சாதனையாளர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன. ஓரிரு அத்தியாயங்களுக்கு மட்டுமே சாதனையாளரின் பெயரே தலைப்பாக உள்ளது.

சாதனையாளரின் கோணத்தில், சாதனையாளரே பேசுவது போல் (First Person Narrative) அமைந்திருப்பது மிகச் சிறப்பு. சிறப்பானதொரு கதை சொல்லும் உத்தி அல்லவா ! வாசகரை, சாதனையாளருடன் பொருந்தி இருக்க வைக்கிறது இந்த உத்தி!

பத்து பெண் சாதனையாளர்கள் மற்றும் முப்பது ஆண் சாதனையாளர்கள் பற்றி நூல் விவரிக்கிறது.
அறிவியல் ( இயற்பியல், கணிதவியல்), கால்பந்து, இணைய வர்த்தகம், வணிகம், தொழில் நிறுவன முனைவர்கள், கிரிக்கெட், கார்ட்டூன் – அனிமேஷன், குத்துச்சண்டை, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர் ( புதினம், குழந்தை எழுத்தாளர், மர்மக் கதை, கவிஞர் ) இசை, நடனம், நடிப்பு, கணினித் துறை, உணவுத் தொழில், அரசியல், கூடைப்பந்து, சிறு மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள், ஓட்டப் பந்தயம், பால் உற்பத்திப் பொருள், உடற்கலை வல்லுநர், மலையேற்ற வீரர், கதை சொல்லி, ஊக்கமூட்டும் சொற்பொழிவாளர்…. எத்துணை துறைகள் !
எந்தத் துறையாக இருந்தாலும், நிராகரிப்பு, தோல்வி, துரோகம் முதலியவற்றைக் கடந்து, துணிவுடன், தொடர்ந்து முயற்சிப்போருக்கு வெற்றி நிச்சயம் எனக் கட்டியம் கூறுகிறது இந்நூல்.

என்னைக் கவர்ந்த தலைப்புகள் : கருந்துளையின் காதலன், கோழி அரசன், துணை வந்த செயற்கைக் கால், மரண தண்டனை.

ஒரு சில கட்டுரைகள் பற்றி:

கூடைப் பந்துத் தலைவன் : இக்கட்டுரை ”ஹிஸ் ஏர்னெஸ்” என அறியப் படும் மைக்கேல் ஜோர்டான் பற்றியது.

// தோல்விகளை மட்டுமே அதிகமாக சந்தித்தவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் முதல் பெயர் என்னுடையதாகத் தான் இருக்கும்.// எனத் தொடங்குகிறது ஜோர்டனின் அத்தியாயம்.
பள்ளியில் மிக அருமையாக விளையாடினாலும், குழுவில் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில், அவரது உயரம் குறைவு! அந்த நிராகரிப்பையும் தோல்வியையும் சீரணித்து ஜூனியர் மாணவர் குழுவில் இணைந்தார். உயரத்தை அதிகரிக்க உணவு பயிற்சி என முயற்சி செய்தார். வாய்ப்பு கிடைத்து விளையாடத் துவங்கும் நேரம் காலில் அடி. அதனால், சரியான பருவத்தில் பல வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் விளையாடத் துவங்கிய போதும் சரியான கட்டங்களில் புள்ளிகளை எடுக்காமல், ஒன்பதாயிரம் முறை சிறப்பாக ஆடத் தவறி உள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு முறையும் தோல்வி, அவமானங்கள், குற்ற உணர்வு. ஆனால், கூடைப்பந்து விளையாட்டில் முக்கிய இடத்தை அடைந்தார். விளம்பரங்கள், நிர்வாகம் என பல களங்களைக் கண்டார். நிராகரிப்புகளையும் வலிகளையும் பயிற்சிக்கு உரமாக மாற்றியதால் வெற்றி சாத்தியமாகியது.

முதுகில் ‘ஏழு’ இலக்கமிட்ட ஜெர்ஸியைப் பார்த்தாலே வெறி கொள்ளும் ரசிகர் கூட்டம் உலகம் முழுதும் ! கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றியது ”ரியல் மேட்ரிட்” கட்டுரை.
பெற்றோர்களால் ஒரு பந்தைக் கூட வாங்கித் தர முடியாத நிலை. பிற மாணவர்கள் ரொனால்டோவின் வறுமையைப் பரிகசித்தனர். இங்கேயே இருந்தால் மீன்காரனாகத் தான் ஆக வேண்டும். நகரத்துக்குச் சென்று கால்பந்து பயின்றால் குடும்பமே உயரும் என தந்தை சொல்ல, நகரம் நோக்கிச் சென்றார்.
ஆனால், பதினைந்து வயதில் ரொனால்டோவுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பின் மீண்டும் களத்தில் ரொனால்டோ!
மேன்செஸ்டர் அணியை எதிர்த்து விளையாடிய ரொனல்டோவை அந்த அமைப்பே நூற்றியெழு மில்லியன் டாலர் கொடுத்து ஓப்பந்தம் செய்தது. பிரபலமான ஏழாம் எண் ஜெர்ஸியை அவருக்குக் கொடுத்த போது சக வீரர்கள் விரும்பவில்லை.

பல தோல்விகள், மூட்டு வலி, ஆட வேண்டிய மைதானத்திலேயே பார்வையாளனாக இருந்த சூழல் என பல வலிகளைத் தாங்கித் தான் வெற்றி பெற்றுள்ளார் ரொனால்டோ.
கால்களை இழந்தும் தம் துறையில் கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டிய ’மயூரி’ சுதா மற்றும் மலையேற்ற வீராங்கனை அருணிமா பற்றிய கட்டுரைகள் சிறப்பு.
பஜ்ஜி வியாபாரமும் செய்து இருக்கிறார், ஜவுளி வியாபாரமும் செய்து இருக்கிறார் திருபாய் அம்பானி. அடிபட்டு, அசிங்கப்பட்டு வாழ்வில் உயர்ந்தார்.
தலித் பெண்மணி கல்பனா சரோஜ், பாப் இசைக் கலைஞர் லேடி காகா மற்றும் பேச்சாளர் நிக் வுஜிசிக் கதைகள் நம்மை எழுச்சியுறச் செய்யும்.
//வெற்றி அழகானது. ஆனால், தோல்விகள்தாம் அர்த்தமுள்ளவை//

சாதித்தவர்களின் சறுக்கல் புள்ளிகளையும் தவறுகளையும் கண்டறிந்து, திருத்திக் கொண்டு அவர்கள் மேலே ஏறி உச்சம் தொட்ட விதத்தை இந்நூல் விவரிக்கிறது.
அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

கமலா முரளி

The post தோற்றாலும் விடமாட்டேன் – கமலா முரளி மதிப்புரை appeared first on Naseema Razak.

  •  

சக்ஸஸ் ஃபார்முலா – போஜன் மதிப்புரை

மொத்தம் 30 தலைப்புகளும் 109 பக்கங்களும் கொண்ட இந்த புத்தகம் ஒரு மோட்டிவேஷன் வகை சார்ந்த புத்தகம் என்று சொல்லலாம். இதில் சொல்லப்பட்டு இருக்கும் உள்ளடக்கம் என்ன என்பதை பார்ப்போம் .

எப்படி பிளான் பண்ண வேண்டும் : புத்தகத்தின் முதல் தலைப்பு இது தான் எந்த ஒரு செயலை செய்யும் முன் எப்படி திட்டம் இட வேண்டும் அந்த திட்டம் தோற்கும் போது அதை எப்படி மாற்றி கொள்ள வேண்டும் என்பதை 10 வழிமுறைகள் உடன் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

எண்ணங்கள் சீரானால் பழங்கங்கள் செம்மையாகும் : புத்தகத்தின் இரண்டாவது தலைப்பு இது பொதுவாக ஒரு பிரச்சனை ஏற்படும் போது அதற்கு எப்படி தீர்வு வரும் என்பதை யோசிக்கிறோம் அதற்கு ஆசிரியர் ஜர்னலிங் என்ற முறையை சொல்லி 10 வழி முறைகளையும் சொல்லி இருக்கிறார்.

நீங்களும் சி.இ.ஓ . ஆகலாம் புத்தகத்தின் நான்காவது தலைப்பு இது உண்மையில் எனக்கு இந்த தலைப்பு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது, ஒரு பிரச்சனை நமக்கு வருகிறது என்றால் அதை மற்றவர்கள் மீது பழி சொல்லாமல் அதை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்று 10 வழி முறைகள் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

ஏன் எதற்கு என்ற கேள்வி கேளுங்கள் : பொதுவாக சில சமயங்களில் தெளிவு இல்லாத போதும் தெரிந்த மாதிரி கேள்வி கேக்காமல் கடந்து செல்வோம் அப்படி செய்ய கூடாது என் சொல்கிறார் ஆசிரியர். அது மட்டும் இல்லமல் கேள்வி கேக்க சில வழி முறையை பற்றியும் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியை வரவேற்க்க தோல்வி அவசியம் : புத்தகத்தின் 11 தலைப்பு இது பொதுவாக தோல்வி ஒரு அவமான செயலாகவே பார்க்கப்படுகிறது தோல்வி அடைந்து விட்டால் அன்று நாள் ஒரு இருண்ட நாளாகவே பார்க்கிறோம் நான் பள்ளி படிக்கும் பொது 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளை சொல்லலாம். அன்று தேர்வில் தோல்வி அல்லது நினைத்த மதிப்பெண்ணை அடைய முடியாமல் போகும் மாணவர்களின் தவிப்பு சொல்ல முடியத ஒன்று. ஆனால் ஆசிரியர் சொல்லி இருப்பது தோல்வி என்பது இன்னொரு முயற்சி தான் தவிர அது அவமான அல்ல என்பதை சொல்லி இருக்கிறார்.

வேண்டாம் என்று சொல்லி பழகுங்கள் : உண்மையில் 13 தலைப்பாக வரும் இந்த விஷயம் எல்லாருக்கும் நடக்கும் ஒரு விஷயம் தான் பொதுவாக ஒரு வேலை அல்லது அளவுக்கு மீறிய வேலை கொடுக்கும் போது அதை ஏற்றுக்கொண்டு மன உள்ளச்சளுக்கு ஆளாகிறோம். இந்த புத்தகத்தில் ஆசிரியர் சொல்லும் விஷயம் சில விஷயங்களுக்கு நோ இல்லை என்று சொல்லி பழக வேண்டும் என்கிறார்.

முன்னேற்றத்தை தடுக்கும் காலம் தாழ்த்துதல்: புத்தகத்தின் 17 தலைப்பு இது பொதுவாக ஒரு செயல் செய்யும் போது யோசித்து செய்வது என்பது வேறு ஆனால் அதை காலம் தாழ்தி செய்வது ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.அப்படி காலம் தாழ்த்துவதால் என்ன சிக்கல் வரும் அதை எப்படி சரி செய்வது என சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியை ஈர்க்க வேண்டும் துரத்த கூடாது : புத்தகத்தில் 21 தலைப்பு இது வெற்றி என்றால் என்ன அது பயணமா அல்லது முடிவா அல்லது இலக்கா என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.இதை படிக்கும் போது வெற்றி பற்றி ஓரளவு புரிதல் வரும்.

செயல்களை ரகசியம் ஆக்குவோம் : இந்த தலைப்பு யாருக்கு பொருத்தி போகுதோ இல்லையோ கண்டிப்பாக எனக்கு பொருந்தும் ஒரு விஷயம் உண்மையில் நம் செயல் திட்டத்தை ரகசியமாக செய்யாமல் எல்லாருக்கும் அறிவித்து விட்டு செய்து பிறகு அதில் ஏமாற்றம் அடைகிறோம்.உண்மையில் இதை மாற்ற என்ன வழி என்பதை சொல்லியும் இருக்கிறார்.

28 தலைப்பு நேரமும் பொன்னும் ஒன்றல்ல : நேர நிர்வாகம் என்று சொல்ல படுவது உலகில் உள்ள அனைவருக்கு 24 நேரம் தான் ஆனால் சில பேர் அதில் வெற்றி பெற்றவர்களாக இருக்க காரணம் நேர திட்டமிடல் இதை பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியின் முதல் படி : புத்தகத்தின் கடைசி தலைப்பு இது தான் ஒருவர் வாழ்வில் வெற்றி பேர் வேண்டும் என்றால் பிறர் என்ன சொல்வார்களோ என்று நினைக்காமல் அல்லது பிறர் சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேணும் . அதற்கு தடையாக எது இருக்கிறதோ அதற்கு நோ சொல்ல பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
மிகவும் சிறிய புத்தகம் என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய புத்தகம் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவுக்கு தகவல் இருக்கிறது.

Boje Bhojan

The post சக்ஸஸ் ஃபார்முலா – போஜன் மதிப்புரை appeared first on Naseema Razak.

  •  

தர்ஜமா

மொழிபெயர்ப்பு நிலையானது அல்ல – கலாச்சாரமும், மொழியியலும் சமூகச் சூழல்களும் காலத்திற்கேற்ப மொழியாக்கத்தை உருவாக்குகின்றன. ‘மறு-மொழிபெயர்ப்பு சார்பு’ காலப்போக்கில் நியாயங்களை, விளக்கங்களை மாற்றுவது. ஹோமரின் இலியட் டஜன் கணக்கான முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் வலியுறுத்தின, அதே நேரத்தில் கரோலின் அலெக்சாண்டரின் நவீன பதிப்பு, மனிதநேயத்தையும் போர் எதிர்ப்பு உணர்வுகளிலும் கவனம் செலுத்தின. … Continue reading

  •  

மைக்ரோ பார்வை- 1- அப்பம் வடை தயிர்சாதம்- பாலகுமாரன்

இதன் ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு தொடர்பற்ற தன்மை இருக்கிறது. அது இந்நாவல் தொடர்கதையாக எழுதப்பட்டதால் இருக்கலாம். ஆனால் இறுதியில் எல்லா புள்ளிகளும் மிக அழகாக இணைகின்றன. ஒரு தலைமுறைக்கு நிகழ்ந்ததே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நிகழ்வதே இதன் சுவாரஸ்யம்.  சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் புரோகித தொழிலை விட்டுவிட நினைக்கிறது ஒரு பிராமண குடும்பம். வைதீகத்திற்கு மதிப்பு இல்லை, வருங்காலம் இல்லை என்று கருதுகிறார் அந்த குடும்பப் பெரியவர். கும்பகோணத்தில் தற்காலிகமாக சிறிய சுண்டல் கடை தொடங்கி அதற்கு பெரும் […]

  •  

பொன் விளைந்த பூமி, வாசிப்பு – ராஜா ஹஸன்

அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் நஸீமா ரஸாக், துபாய் தேசம் உருவானதைப் பற்றி எழுதிய வரலாற்று நூல்.
இன்று உலகின் சொர்க்க புரியாகத் திகழும் துபாய் அந்த நிலையை எவ்வாறு அடைந்தது எண்ணைய் வளம் மிகவும் குன்றிய ஒரு நாடு .பிற அரபு தேசங்களை விட முன்னணியில் சொல்லப்போனால் உலகிலேயே முன்னேறிய நாடுகளில் துபாய் நகரம் இடம் பெற்ற விதம் குறித்த சரித்திர பூர்வ தகவல்களுடன் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

மணல் சூழ்ந்த அரேபிய நிலம் அதிலிருந்து நாடுகள் ,யூத, கிறிஸ்தவ மதங்களைத் தொடர்ந்து இஸ்லாம் பரவிய விதம் என பண்டைய வரலாற்றிலிருந்து துவங்கும் நூலாசிரியர் படிப்படியாக 1800களில் அந்த தேசங்களின் நில அமைப்பு வாழ்க்கை என்று எழுதிச் செல்கிறார்.
1800களில் கிழக்கிந்திய கம்பெனியினர் பம்பாயிலிருந்து பாஸ்லாவிற்கு செல்லும் கடல் வழியாக நிலப்பரப்பை கைப்பற்றுகின்றனர். அவர்களுக்கும் கடற்கொள்ளையர்களுடன் நடந்த போரில் குவாசிம்கள் தோற்கடிக்கப்படுகின்றனர்.

வளைகுடாவில் பிரிட்டிஷ் படையினரின் வருகை ஒரு பாசிட்டிவான வளர்ச்சி. துபாய் ஒரு புதிய வெளிப்புற சக்தியுடன் ஆக்கபூர்வமான உறவில் இணைகிறது.
வளைகுடா பாதுகாப்பு பகுதிகளான பஹ்ரைன் மற்றும் கத்தாரையும் சேர்த்து அமீரகம் இருக்கும் என்று பிரிட்டிஷார் எதிர்பார்க்கையில் ஐக்கிய அரபு கரையோரத்தில் இருக்கும் ஐந்து மிகச் சிறிய ஷேக் ராஜ்ஜியங்கள் ஒன்றாக அபுதாபி, துபாய் ,பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு பிரதேசங்களாக செயல்பட துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

1968 ல் தனது தனித்தன்மையை இழந்து விடுவோம் என பஹ்ரைன் நாடு நினைத்ததால் இணைப்பு சாத்தியப்படவில்லை..
பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பஹ்ரைன் ,கத்தார் அமீரகத்தில் இணைய விரும்பாததால் ஏனைய ஏழு நாடுகள் ஒன்று சேர்ந்து 1971 டிசம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிறந்தது.

அபுதாபியின் ஷேக் தலைமை ஏற்க அனைத்து ராஜ்யங்களும் இணைந்த கவுன்சில் ஒன்றுகூடி முடிவுகளை எடுத்த விதம் விவரிக்கப்பட்டுள்ளது.
வியாபாரம் ஒன்று மட்டுமே பொருளாதார ரீதியில் தமது நாட்டை மேம்படுத்தும் என்ற எண்ணிய துபாயின் மன்னர் ஷேக் மஹ்தூம் முடிவால் துபாயில் அரேபியர்கள், பாரசீகர்கள், இந்தியர்கள் ,மற்றும் பலூச்சிகள் என வெவ்வேறு நிலத்து மக்கள் ஒன்று கூடி வாழ ஆரம்பித்தார்கள்.
துபாயில் இலவச துறைமுகம் ஒரு பக்கம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பாக இருந்தது.
ஷேக் ராஷீத் அவர்களின் மேற்பார்வையில் அடுத்தடுத்த வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்தார்கள்.

மன்னர் மனதில் துபாயை முக்கிய கேந்திரமாக மாற்றுவதற்கான அனைத்து பரிமாணங்களையும் யோசிக்க ஆரம்பிக்கிறார் .
1940களில் ஷார்ஜாவில் மட்டும் ஒரு சிறிய விமான நிலையம் இருந்த நிலையில் கப்பல் போக்குவரத்து தவிர விமான போக்குவரத்து அரிதான காலகட்டத்தில் தமக்கென்று சொந்தமாக விமான நிலையம் வேண்டும் என்று துபாயில் விமான நிலைய பணிகளை 1950 களில் ஆரம்பிக்கிறார்.
ஆரம்ப கட்டத்தில் விமான நிறுவனங்கள் துபாயில் தரையிறங்க மறுத்தன .அந்த அளவுக்கு பயணிகள் இருக்கைகள் நிரம்பாது என்ற காரணத்தை அவர்கள் முன்னெடுத்தனர் ஷேக் அவர்கள் இருக்கைகள் அனைத்தையும் தாமே வாங்கிக் கொள்வதாக அறிவித்து அதற்கான முயற்சிகளை செய்ததில் விமான நிறுவனங்கள் சம்மதித்து துபாயில் தரையிறங்க ஆரம்பித்ததை வாசிக்கையில் வியப்புக்கு உள்ளாகிறோம்.
அடுத்த கட்டமாக வணிகத் தேவைக்காக சொந்தமாக வங்கியை நிறுவிய வரலாறுகள்..
மற்ற அரபு நாடுகளை விட துபாயில் எண்ணெய் வளம் குறைவு.

1970களில் பிரம்ம பிரயத்தன முயற்சிகளுக்குப் பிறகு குறைவான எண்ணெய் எடுக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் ஒரு அதிசய பொருள். அது எவ்விதம் கிடைத்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டு வரும். அவ்வகையில் துபாயின் பொருளாதாரம் சிறிது சிறிதாக மேம்பட ஆரம்பித்தது..
அடுத்த கட்டமாக நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி.

துபாயையும் அபுதாபியையும் இணைக்கும் வகையில் நீண்ட சாலை போடப்பட்டது. துபாயின் ஆட்சியாளர் பெயர் அபுதாபி சாலைக்கும் அபுதாபியை ஆள்பவரின் பெயர் துபாய் சாலைக்கும் வைக்கப்பட்டது வரலாறு.
ஆங்காங்கே இருந்த சிற்றோடையின் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான புதிய பாலங்கள் கட்டப்படுகின்றன.
சரக்கு வாகனங்கள் துறைமுகத்தை விரைவில் சென்றடைவதற்காக தனியாக வசதிகள் அமைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லை விமான நிலைய ரன்வேயின் கீழே அகலமான சாலைகளும் சுரங்கப் பாதைகளும் அமைக்கிறார்கள்.

மக்கள் தொகை அதிகரிக்கையில் குடிநீருக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.
துபாய் நகருக்கு தெற்கே 15 மைல் தொலைவில் அல் அவீர் என்ற இடத்தில் ஒரு நன்னீர் நீர் நிலையை கண்டுபிடிக்கின்றனர். நிலத்தடி நீர் குழாய்கள் மூலம் துபாய் நகருக்கு கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறாக ஒவ்வொன்றாக வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்த அதே நேரத்தில், வரி, சிகப்பு நாடாத்தனம் போன்றவைகளில் வணிகர்களை சிக்க வைக்காமல் வரியில்லா துறைமுகம், ஏர்போர்ட் என்ற வசதிகள் 85 களில் பெருக ஆரம்பிக்கின்றன .
அந்த காலகட்டத்தில் துபாயில் நல்ல நட்சத்திர விடுதி கிடையாது. உடனடியாக விடுதிகள் கட்டப்படுகின்றன..
அவ்வாறே துபாய்க்கு என்று பிரத்தியேகமாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் துவக்கப்படுகின்றன .இன்று உலகின் நம்பர் ஒன் விமான நிறுவனமாக எமிரேட்ஸ் உள்ளது.

அனைத்து பொருளாதரங்களும் உள்கட்டமைப்பிலேயே முதலீடு செய்யப்படுகின்றன .துபாயின் வெற்று கடற்கரையான ஜெபல் அலி என்னும் இடத்தில் மெகா துறைமுகம் கட்டும் திட்டத்தை முன்னெடுக்கிறார்கள்..
துபாய் இன்று மிடில் ஈஸ்ட் வர்த்தகத்தின் நம்பர் ஒன் நகரம் .
மிகப்பெரிய துறைமுகம் மற்றும் விமான நிலையம் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு கம்பெனிகளின் இருப்பு ஷேக் ராஷீத்தின் தொலைநோக்கு பார்வையும் அவரின் கனவுகளும் இன்றைய துபாய்க்கு மிகப்பெரிய பலம்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய மால்கள் உணவகங்கள் கட்டப்படுகின்றன.. இவை குறித்து நஸீமா ரசாக் விரிவாக எழுதியுள்ளார் அதைப்போல் துபாயின் ரியல் எஸ்டேட் எவ்விதம் செயல்படுகிறது.. அமெரிக்காவின் லாஸ் வேகாசிற்கு அடுத்தபடியாக இன்று உலகப் பட்டியலில் துபாய் ரியல் எஸ்டேட்டில் முன்னணியில் அறியப்படுகிறது..
புர்ஜ் கலீஃபா என்னும் உலகின் உயரமான கட்டிடம் கட்டப்படும் பொழுது எழுந்த நெகட்டிவ் விமர்சனங்கள் ..
‘இது ஒரு வெள்ளை யானை ப்ராஜெக்ட் ..சரிவராது’ என்று பேசப்பட்ட நிலையில் அது எவ்வாறு முழுமை அடைந்தது என்பதை இரண்டு அத்தியாயங்களில் விரிவாக காண்கிறோம்..

“அந்தச் செல்லத்தை தூக்கி வாங்கப்பா” என்று படத்தில் சொல்வது போல் திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் துபாய்க்கு அழைத்து வரப்படுகிறார்கள். அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த ஆர்கிடெக்டுகள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள் கூட்டு முயற்சியே வானாளாவிய கட்டிடம்.
துபாயை ஆண்ட ஷேக்குகளின் சந்ததியில் ஷேக் முகமது குறித்த அத்தியாயத்தில் அவர் எந்த அளவுக்கு மக்களுடன் இணைந்து பணியாற்றி, வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் அவருடைய நிர்வாகத் திறமை குறித்த தகவல்கள் யாவும் வியப்பூட்டுகின்றன.
ஆசிரியர் சொல்வது போல ‘எல்லாம் இருக்கும் பல தேசங்கள் ஆட்சியாளர் சரியாக அமையாததால் அழிவை சந்திக்கின்றன. உதாரணமாக சிரியா, இலங்கை ஈரான் என சொல்லலாம். ஆனால் எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் ஒன்றும் இல்லாமல் உயரத்தை தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்பதில் சந்தேகமில்லை.
பழைய சங்கதிகளை சொல்வதுடன் இல்லாமல் இந்த நூலில் சமீபத்திய அசுரன் ,அரக்கன் ,கோவிட் நோய் தொற்று காலத்தில் துபாய் மீண்டெழுந்த கதையை மிகவும் அருமையாக நமக்கு சொல்கிறார்.

சுற்றுலா பயணிகளையே வருமானமாக கொண்ட ஒரு தேசம் பெருந்தொற்றின் காரணமாக முடக்கப்படும் போது சந்திக்கும் நஷ்டம். பொருளாதார சிரமங்களிலிருந்து வெளிவந்த தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன.
எமிரேட்ஸ் விமான நிறுவனம் பில்லியன் டாலர்களில் நஷ்டத்தை சந்தித்த பொழுது அரசு தலையிட்டு அந்த நஷ்டத்தை ஈடு செய்து மீண்டும் லாப நோக்கில் செயல்பட வைத்ததெல்லாம் மிகப்பெரிய முன்னெடுப்பு…

ஷேக் முகமது அவர்களின் மகனார் ஷேக் ஹம்தன் இன்றைய பட்டத்து இளவரசர்.. துபாய் எக்ஸ்போ கண்காட்சியை மிகச் சிறப்பாக நடத்தியதன் மூலம் அவருடைய நிர்வாகத் திறமை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி பரிமளிக்க செய்கின்றன.
பாலைவனத்தின் மீன்பிடி கிராமம் துபாய் என்கிற மணல்பிரதேசம் உலகின் பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றாக உருமாறிய வரலாற்றை ஆசிரியர் நஸீமா ரஸாக் தெளிவான தரவுகளுடன், சுவாரசியமான எழுத்து நடையில் அபாரமாக விளக்கியுள்ளார்.
வரலாற்று ஆர்வம் மிக்கவர்கள் மட்டுமல்லாது அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இந்த ‘பொன் விளைந்த பூமி’.

நன்றி ராஜா ஹஸன்.

 

புத்தகம் வாங்க

http://tinyurl.com/Pon-Vilaindha-Bhoomi

The post பொன் விளைந்த பூமி, வாசிப்பு – ராஜா ஹஸன் appeared first on Naseema Razak.

  •  

பணக்குட்டி (பிரதீப் செல்லத்துரை) நூல் அறிமுகம்

பிரதீப் செல்லத்துரை எழுதிய ‘பணக்குட்டி’ நூலைப் படித்தேன்.

உண்மையில் இந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘குட்டி போடும் பணம்’ என்று இருக்கவேண்டும். நம்முடைய பணத்தைப் பலமடங்காகப் பெருக்குவது எப்படி என்கிற பொதுத் திரியை எடுத்துக்கொண்டு அதன் அடிப்பகுதி, நுனிப்பகுதி, நடுப்பகுதி என அனைத்தையும் அழகாக எழுதியிருக்கிறார். எங்கும் பேராசைக்கான தூண்டல் இல்லை. சொல்லப்போனால், பண விஷயத்தில் ஆசையைக் கட்டுப்படுத்தினால்தான் அறிவு வேலை செய்யும் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பு, இதன் வடிவம். நூறு தலைப்புகள், ஒவ்வொன்றும் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் என்ற அளவில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதனால், நிதி வயலில் அகல உழுவதற்குப் பயிற்சியளிக்கிறது.

அதே நேரம், சில இடங்களில் அந்தச் சிறப்பே இந்நூலின் குறையாகவும் மாறிவிடுகிறது. எல்லாவற்றையும் ஒரு பக்கத்துக்குள் சொல்லிவிடவேண்டும் என்கிற துடிப்பில் சில தலைப்புகளைச் சற்று ஓட்டமாகப் பேசிவிடுகிறார், நாம் அவரோடு சேர்ந்து ஓடமுடியாமல் மூச்சு வாங்குகிறோம்.

ஆனால், இந்தச் சிக்கல் மிகச் சில கட்டுரைகளில்தான். நூலின் பெரும்பகுதியில் வடிவமும் உட்பொருளும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன. குறிப்பாக, பிரதீப் செல்லத்துரையின் மொழி, நுட்பமும் எளிமையும் சரியான அளவில் கலந்த கலவையாக இருக்கிறது, சிக்கலான கருத்துகளைக்கூட எளிதில் புரியவைத்துவிடுகிறது. இந்தப் பெருந்தலைப்பில் குறிப்பிடக்கூடிய பல நூல்களை இவர் எழுதுவார் என்று நம்புகிறேன், வாழ்த்துகிறேன்.

(பணக்குட்டி : பிரதீப் செல்லத்துரை : வி கேன் புக்ஸ் வெளியீடு : ரூ 180)

இந்தப் புத்தகத்தை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.

  •