Reading view

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்

ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வசித்துவந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சந்தைக்குச் சென்று விறகு வெட்டிக் கொடுத்து சம்பாதித்து வந்தான். ஒருமுறை அவனுடைய ஊரை அடுத்து இருந்த இன்னொரு ஊரின் வாரச்சந்தைக்குச் சென்றிருந்தான். அங்கு பூக்கடை வைத்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து மனத்தைப் பறிகொடுத்தான். அதற்குப் பிறகு அவளைப் பார்ப்பதற்காகவே அந்த ஊரில் நடைபெற்ற சந்தைக்கு ஒவ்வொரு வாரமும் செல்லத் தொடங்கினான். அந்தப் பெண்ணிடம் எப்படியோ பேச்சுக் கொடுத்து அவள் மனத்தில் இடம் பிடித்துவிட்டான்.

இருவரும் பேசிப்பேசி தம் காதலை வளர்த்துக்கொண்டனர். அவனுக்கும் பெற்றோர் என சுட்டிக்காட்ட ஒருவரும் இல்லை. அவளுக்கும் பெற்றோர் இல்லை. அதனால் அவர்களுடைய காதலுக்குத் தடை சொல்ல ஒருவரும் இல்லை. அதனால் அவர்களாகவே ஒரு நல்ல நாள் பார்த்து ஒரு கோவிலில் தெய்வத்தின் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒரே ஊரில் வசித்தார்கள். ஒவ்வொரு பொழுதும் ஆனந்தமாகக் கழிந்தது. அவன் காலையில் எழுந்ததும் கோடரியை எடுத்துக்கொண்டு விறகுவெட்டக் கிளம்பிவிடுவான். அவளும் பூந்தோட்டத்துக்குச் சென்று பூக்களை வாங்கிவந்து மாலையாகக் கட்டி விற்பதற்காகக் கிளம்பிவிடுவாள். அவர்கள் சம்பாதித்துக் கொண்டுவரும் பணம் அவர்களுடைய தேவைக்குப் போதுமானதாக இருந்தது. இருவருடைய இல்வாழ்க்கையும் இனிமையாகக் கழிந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் நேசத்தோடு பார்த்துக்கொண்டனர். திருமணமாகி ஐந்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை பிறக்கவில்லை. அது ஒன்றுதான் அவர்களுக்கு மனக்குறையாக இருந்தது.

அக்கம்பக்கத்தில் உள்ள எல்லாக் கோவில்களுக்கும் அவர்கள் சென்று குழந்தைக்காக வேண்டிக்கொண்டனர். ஓராண்டுக்குப் பிறகு ஒரு வழியாக அவள் கருவுற்றாள். அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தைக்கு நான்கு வயது நடக்கும்போது, திடீரென அவள் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். விறகுவெட்டிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

நான்கு வயது பிள்ளையை தனியாக வளர்க்க அவன் படாத பாடுபட்டான். விறகு வெட்டச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அச்சிறுவனையும் அவன் அழைத்துக்கொண்டு செல்லவேண்டியதாக இருந்தது. அவனால் விறகு வெட்டுவதிலும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. சிறுவனையும் சரியான முறையில் பார்த்துக்கொள்ள முடியவில்லை. கடைசியாக வேறு வழி தெரியாமல், சிறுவனைப் பார்த்துக்கொள்வதற்காக இன்னொரு பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொண்டான்.

தாயில்லாத சிறுவனுக்குத் தாயாக இருந்து நல்லவிதமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பல விதங்களில் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துத்தான் அவன் அந்தத் திருமணத்தைச் செய்துகொண்டான். புதிதாக வந்த மனைவியும் தொடக்கத்தில் அச்சிறுவனிடம் மிகுந்த பாசத்தோடு இருந்தாள். சிறுவனும் அந்தப் பெண்ணிடம் கிடைத்த தாய்ப்பாசத்தில் மகிழ்ந்து கவலையில்லாமல் இருந்தான். சித்தியாக இருந்தாலும் அம்மா என்றே அழைத்து மகிழ்ந்தான்.

எல்லாமே அவளுக்கு என ஒரு குழந்தை பிறக்கிறவரை சரியாகத்தான் இருந்தது. அதற்குப் பின் அவள் குணம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அந்தச் சிறுவனை அவள் வெறுக்கத் தொடங்கினாள். அற்பமான விஷயங்களுக்கெல்லாம் அவன்மீது கோபம் கொண்டு வசைபாடினாள். அவனுடைய தேவைகளை உதாசீனம் செய்யத் தொடங்கினாள். அச்சிறுவன் வயதில் சின்னவனாக இருந்தாலும் தன் சித்தியிடம் ஏற்பட்டிருக்கும் வேறுபாட்டை எளிதாகப் புரிந்துகொண்டான். அதனால் தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு அவள் சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தான். அவள் அச்சிறுவனை ஓர் அடிமை போல நடத்தினாள்.

ஒருநாள் அவளை அவன் அம்மா என்று அழைத்தபோது ‘இனிமேல என்னை அம்மான்னு கூப்புடாத, புரியுதா? நானா உன்ன பெத்தேன்? யாரோ ஒருத்தி உன்ன பெத்துட்டு என் தலையில கட்டிட்டு போயிட்டா. ஒழுங்கா சித்தின்னு கூப்புடு’ என்று கடுமையான குரலில் சொன்னாள். அவனும் அன்றுமுதல் அம்மா என்று அழைப்பதை விட்டுவிட்டான். தனிமையில் இருக்கும்போது அதை நினைத்து அவனுக்கு அழுகையாக வரும். சிறிது நேரம் அழுது மனவேதனையைக் குறைத்துக்கொள்வான்.

சிறுவன் பத்து வயதைத் தொடும் வரை அவள் அமைதியாக இருந்தாள். பிறகு ஒருநாள் கணவன் நல்ல மனநிலையில் இருந்த சமயத்தில் ‘இன்னும் எத்தனை நாளுக்கு இவனை இப்படியே வீட்டுக்குள்ள வச்சிருக்கறது? பத்து வயசு ஆயிடுச்சி. இப்பவே உலகத்தைப் புரிஞ்சிக்கறதுக்கு அவனைப் பழக்கினாதானே நல்லது’ என்று சொன்னாள்.

‘சரி, அதுக்கு இப்ப என்ன செய்யலாம்?’ என்று கேட்டான் கணவன்.

‘நீ வேலைக்குப் போற இடத்துக்கு அவனையும் அழைச்சிட்டு போய் நாலு விஷயங்களை கத்துக் கொடுக்கறதுதான் நல்லது.’

‘விறகுவெட்டக் கத்துக் கொடுக்கணும்னு சொல்றியா?’

‘அதுல என்ன தப்பு? மெல்ல மெல்ல பழகினாதான எல்லாத்தயும் கத்துக்க முடியும்.’

‘அதுக்கென்ன இப்ப அவசரம்? அவனால ஒழுங்கா கோடாலியை தூக்கி நிறுத்தமுடியுமான்னு கூட தெரியலை. உடம்புல சக்தி வேணாம? இன்னும் கொஞ்சம் நாள் போவட்டும். பார்ப்போம்.’

ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அந்தப் பேச்சு தொடங்கியது.

‘வயசுப்பிள்ளை இப்படி ஒரு வேலையும் செய்யாம சுத்திட்டு சுத்திட்டு வந்தா, எதிர்காலத்துல எதுக்கும் உருப்படியில்லாம போயிடுவான். நான் சொல்றத கேளு. ஏதாவது ஒரு வேலைக்கு அவனை அனுப்பு. அதுதான் அவனுக்கும் நல்லது. நமக்கும் நல்லது.’

‘அனுப்பலாம். அனுப்பலாம். இரு. கொஞ்ச நாள் போவட்டும்.’

‘பெத்தவளா இருந்தா, இப்படி ஒன்னுத்துக்கும் உதவாதவனா வளர்ப்பாளா? மாத்தாந்தாயா இருந்ததாலதான் இப்படி தறுதலையா வளர்த்திருக்கான்னு எதிர்காலத்துல என்னை யாரும் விரலை நீட்டி சொல்லிடக் கூடாது. அந்த பயத்தாலதான் நான் சொல்றேன். அத நீ புரிஞ்சிக்கணும்.’

‘சரி, அவனை இப்ப என்ன வேலைக்கு அனுப்பலாம். அதையும் நீயே சொல்லு.’

‘எங்கயும் அவன் வேலைக்குப் போவவேணாம். யாருகிட்டயும் கைகட்டி வேலை செய்யவும் வேணாம். இங்க பாரு. நம்மகிட்டயே ஏழு பசுமாடுங்க இருக்குது. அந்த மாடுங்களை தினமும் விளையாட்டா ஏரிப்பக்கமோ, காட்டுப்பக்கமோ, மலையடிவாரத்துக்கோ ஓட்டிட்டுப் போய் மேய்ச்சிட்டு வந்தாவே போதும். அதுவும் ஒரு வேலைதான?’

அவள் எடுத்துச் சொன்ன விதம் அவனுக்கும் ஏற்புடையதாகத் தோன்றியது. ‘சரி, ஏதாவது செய்’ என்று அவளுடைய விருப்பத்துக்கு விட்டுவிட்டான்.

அடுத்தநாள் காலையில் அவள் தொழுவத்தில் இருந்த ஏழு பசுமாடுகளையும் அழைத்துவந்து அவனிடம் கொடுத்தாள். ‘ஊருக்கு வெளியில மலையடிவாரத்துல பச்சைப்பசேல்னு நல்ல புல்வெளி இருக்குது. அங்க கொண்டுபோய் மேய்ச்சிட்டு வா’ என்று சொன்னாள். மதிய உணவுக்காக ஒரு பாத்திரத்தில் பழைய சோற்றை நிரப்பிக் கொடுத்து அனுப்பிவைத்தாள்.

மலையடிவாரத்தின் பக்கமாக நல்ல பசுமையான புல்வெளி இருந்தது. அந்தப் புல்வெளியின் பக்கம் பசுக்களை மேய விட்டுவிட்டு, அவற்றின் பின்னாலேயே பாட்டுப் பாடி திரிந்தான். ஒவ்வொரு பசுவுக்கும் அவன் ஒரு பெயர் சூட்டியிருந்தான். அந்தப் பெயரைச் சொல்லித்தான் அவன் அந்தப் பசுவைக் கூப்பிட்டான். எந்தப் பசுவையும் அவன் பசுவாகவே நினைக்கவில்லை. தன் வயதை ஒத்த சிறுவர்களாகவே அவற்றை அவன் நினைத்தான். ஏழு பசுக்களும் அவனுக்கு ஏழு நண்பர்கள்.

மதிய வேளையில் வெயில் உச்சிக்கு ஏறியதும் பசுக்களை பக்கத்தில் இருந்த குளத்துக்கு அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்கவைத்தான். பிறகு மெதுவாக அவற்றை ஓட்டி வந்து நிழலில் உட்கார்ந்து இளைப்பாறவைத்தான். அதற்குப் பிறகுதான் அவன் தான் கொண்டுவந்திருந்த தூக்குவாளியைத் திறந்தான். தூக்குவாளியில் நிறைந்திருந்த நீராகாரத்துக்குள் கையை விட்டு சோற்றைப் பிசைந்தான். அப்போது அருகில் இளைப்பாறிக்கொண்டிருந்த பசுக்கள் எல்லாம் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன.

‘என்னங்கடா, சோறு சாப்புடறீங்களா?’ என்று கேட்டான். அவை தலையசைத்ததைப் பார்த்துவிட்டு அவை ஆமாம் என்று சொல்வதாக அவன் நினைத்துக்கொண்டான். ‘ஆகா, உங்களுக்கும் சோறு சாப்பிடணும்ன்னு ஆசை வந்துடிச்சா?’ என்று கேட்டுக்கொண்டே ஏழு பசுக்களுக்கும் நடுவில் சென்று உட்கார்ந்துகொண்டான்.

முதலில் அவன் ஒரு கை நிறைய சோற்றை அள்ளி சாப்பிட்டான். அடுத்து மீண்டும் கை நிறைய சோற்றை அள்ளி முதல் பசுவின் வாய்க்குள் ஊட்டினான். அந்தப் பசு பழைய சோற்றை ருசித்துச் சாப்பிட்டு அசைபோட்டது. இப்படியாக அவனும் ஏழு பசுக்களும் சாப்பிட்டு முடித்தார்கள். அதற்குப் பிறகு அவன் அவற்றுக்கு கதைகள் சொன்னான். அவற்றின் முன்னால் பாட்டுப் பாடி ஆடினான். அவையும் அவன் சொல்வதையெல்லாம் புரிந்துகொண்டதுபோல தலையை உயர்த்தி ம்மே ம்மே ம்மே என்று விதம்விதமாக குரலெழுப்பி உடலைக் குலுக்கின.

அவன் சாப்பிட்ட பழைய சோறு கொஞ்ச நேரத்துக்குக் கூட தாங்கவில்லை. அடுத்து சிறிது நேரத்திலேயே மறுபடியும் பசிக்கத் தொடங்கியது. ஆயினும் சாப்பிட வழி இல்லாத இடத்தில் அதைப்பற்றி நினைப்பதால் ஒரு பயனுமில்லை என்ற எண்ணத்துடன் மெளனமாக பசுக்கள் பின்னால் நடந்துசென்றான்.

அவனுடைய மெளனத்தைக் கொண்டே அவனுடைய மனநிலையை உணர்ந்துகொண்ட ஒரு பசு, அவனுக்குப் பின்னால் வந்து அவனை முட்டி தலையாலேயே தள்ளிக்கொண்டு சென்றது. இன்னொரு பசுவுக்கு அருகில் வந்ததும் அவனைக் கீழே தள்ளியது. அவன் அந்தப் பசுவின் பால்மடிக்கு அருகில் விழுந்தான். அதன் மடியில் பால் குடி என்பதுபோல தன் கொம்பால் அவனை முட்டி முட்டி உணர்த்தியது. முகத்துக்கு அருகில் பால்மடியைப் பார்த்ததும் பசு சொல்லவருவது என்ன என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அடுத்த கணமே அவன் அதன் மடியில் பால் அருந்தத் தொடங்கினான். பால் வயிற்றில் நிறையத் தொடங்கியதும் அவன் பசி அடங்கியது. அதற்குப் பிறகு பசிக்கிற வேளையில் எல்லாம் அவனுக்கு பசுவின் பாலே அமுதமானது.

அவனுக்கு பழைய சோற்றைக் கொடுத்து அனுப்பும் அவனுடைய சித்தி, தன்னுடைய சொந்தப் பிள்ளைக்கு மட்டும் பலவிதமான கறிகளோடு ருசியாக சோறு சமைத்துப் போட்டு, அவன் சாப்பிடுவதை பக்கத்தில் உட்கார்ந்து அழகு பார்த்தாள்.

இரவிலும் அவனுக்கு எல்லோரும் சாப்பிட்டு எஞ்சிய சோறுதான் கிடைத்தது. அவன் எதைப்பற்றியும் எந்தக் குறையும் சொன்னதில்லை. பசி அடங்க ஏதோ ஒரு சாப்பாடு என்பதுதான் அவன் கணக்கு. சாப்பிட்டு முடித்ததும் பசுக்களோடு சேர்ந்து தொழுவத்திலேயே படுத்துக்கொண்டான்.

கஷ்டம் கொடுத்தால் அவனாகவே வீட்டைவிட்டு ஓடிப் போய்விடுவான் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எல்லாக் கஷ்டங்களையும் அவன் சகித்துக்கொள்வதைப் பார்க்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

என்றைக்காவது அவன் மனச்சோர்வில் முகம்சுருங்கி உட்கார்ந்துவிட்டால், ஒவ்வொரு பசுவாக அவனை நெருங்கிவந்து அவன் முதுகில் முட்டும். அவன் தோள்பட்டையை நாவால் நக்கும். எழுந்து வா என்று சொல்வதுபோல ம்மே என்று குரல் கொடுக்கும்.

பழைய சோறு சாப்பிட்டாலும் அவன் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவே இருந்தான். சத்தான உணவுகளைப் பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுத்தாலும் அவள் பெற்ற சிறுவன் எலும்புத் தோற்றத்துடன் குச்சியாகவே இருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க அவளுடைய எரிச்சல் பலமடங்கு கூடுதலானது. மனத்தில் பொறாமைத்தீ பற்றி எரிந்தது.

அந்தப் பொறாமைத்தீயிலேயே அவள் மனம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வெந்து கொதிப்பேறியது.

அவன் இருபது வயது இளைஞனாக வளர்ந்து நின்றான். ஐந்து வயதில் இருந்த அமைதியைவிட அப்போது இன்னும் கூடுதலான அமைதி அவனிடம் குடிகொண்டிருந்தது. அவன் வீட்டுக்குள் செல்வதே குறைந்துவிட்டது. சாப்பிடுவதற்கு மட்டுமே அவன் வீட்டுக்குள் சென்றான். மற்றபடி பகல் முழுக்க மலையடிவாரத்துப் புல்வெளியிலும் மரத்தடியிலும் இரவு முழுக்க மாட்டுத்தொழுவத்திலும் கழித்தான்.

அவனுடைய வாட்டசாட்டமான தோற்றத்தையும் மகிழ்ச்சியான முகத்தையும் பார்க்கப்பார்க்க அவள் மனச்சங்கடம் பெருகியது. தான் பெற்ற மகன் அதுபோல இல்லையே என்று நினைத்துப் பொறாமைப்பட்டாள். அவனை எப்படியாவது அந்த வீட்டைவிட்டு வெள்யேற்றினால்தான் நிம்மதியாக இருக்கமுடியும் என்று அவள் நினைத்தாள்.

அடுத்தநாள் காலை. கோடாலியை எடுத்துக்கொண்டு சந்தை நடைபெறும் ஊருக்கு விறகு வெட்டுவதற்காக அவன் புறப்பட்டான். அப்போது அவள் கட்டிலிலேயே படுத்துக்கொண்டு வலிப்பதுபோல முனகியபடி இருந்தாள். ஒரு கருப்புத்துணியை எடுத்து நெற்றியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு வலியால் துடிப்பதுபோல நடித்தாள்.

‘ஏன், என்னாச்சி?’ என்று அவளுக்கு அருகில் வந்து கேட்டான் விறகுவெட்டி.

‘தலையே வெடிக்கிற மாதிரி வலிக்குது.’

அவன் அவள் நெற்றியைத் தொடுவதற்காகக் குனிந்தான். ‘ஐயையோ, தொடாதீங்க. வலி தாங்க முடியலை’ என்று கண்ணீர் விட்டு அழுதாள்.

‘சரி, கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ. நான் ஓட்டமா ஓடிப்போய் நாட்டு வைத்தியரை அழைச்சிட்டு வரேன்.’

‘அதெல்லாம் வேணாம், இங்க பக்கத்திலயே இரு.’

‘பக்கத்திலயே நின்னுட்டிருந்தா, எப்படி குணமாவும் சொல்லு. பைத்தியமா நீ?’

‘நான் சொல்றதை கோபப்படாம கேக்கறதா இருந்தா, இத எப்படி குணப்படுத்தறதுன்னு நானே சொல்றேன். இதுக்கு என்ன மருந்துன்னு எனக்கு நல்லா தெரியும்.’

‘என்ன மருந்து, சொல்லு. எங்க இருந்தாலும் தேடிப் பார்த்து வாங்கியாறேன்.’

‘கண்டிப்பா எடுத்துவரேன்னு சத்தியம் பண்ணு. அப்பதான் சொல்வேன்.’

‘உன் தலைவலி நல்லாவறதைவிட வேற எது எனக்கு முக்கியம்? எதை எடுத்துட்டு வரணும்னு சொல்லு. ஒரே ஓட்டமா ஓடிப் போய் எடுத்துட்டு வரேன்.’

‘சத்தியம் பண்ணு.’

‘எதுவா இருந்தாலும், எங்க இருந்தாலும் சத்தியமா எடுத்துட்டு வரேன். போதுமா? சொல்லு. எங்க இருக்குது மருந்து?’

‘உன் பெரிய பையனை கொன்னு, அவனுடைய ரத்தத்தை எடுத்துட்டு வா. அதைக் கொண்டுவந்து என் நெத்தியில பூசு. அப்பதான் என் வலி சரியாவும். இதை நீ செஞ்சா, இங்க உன் கூட நான் இருப்பேன். இல்லைன்னா என் புள்ளைய தூக்கிகிட்டு என் அம்மா வீட்டுக்குப் போயிடுவேன்.’

‘என்ன சொல்ற நீ? கைக்கு உசந்த புள்ள அவன். அவனைப் போய் எப்படி கொல்றது?’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவனைக் கொன்னு ரத்தத்தை எடுத்துவந்த பிறகு எங்கிட்ட பேசு. இப்ப கெளம்பு.’

என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த மனைவியை ஒருமுறை அவன் பார்த்தான். பிறகு ஒரு பெருமூச்சோடு கோடாலியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். அவனுடைய கால்கள் தாமாகவே மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கின. அவனுடைய முதல் மனைவியின் முகமும் மகனுடைய முகமும் மாறி மாறி அவன் நெஞ்சில் எழுந்து மறைந்தன.

கோடாலியோடு நடந்து வந்த விறகுவெட்டியை பசுக்கள்தான் முதன்முதலில் பார்த்தன. அவனுடைய வருகையின் நோக்கத்தை அவை எப்படியோ தம் நுண்ணுணர்வால் புரிந்துகொண்டன. ஒரு அப்பாவாக இருந்துகொண்டு இந்தக் காரியத்தை செய்யத் துணிந்துவிட்டானே என்று நினைத்து அவன் மீது அருவருப்பு கொண்டன. உடனே அந்த மரத்தடியில் நிழலில் உட்கார்ந்திருந்த இளைஞனை அவன் சுலபமாக நெருங்கி விடாதபடி அரண்போல சுற்றி வளைத்துக்கொண்டு நின்றன.

பசுக்களுக்கு அருகில் நெருங்கி வந்த பிறகு விறகுவெட்டி தன் மகனைப் பெயர் சொல்லி அழைத்தான். தன் அப்பா தன்னைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்திருப்பதை உணர்ந்த அந்த இளைஞன் ஆச்சரியத்தோடும் குழப்பத்தோடும் எழுந்து நின்று பார்த்தான். அவரை நெருங்குவதற்காக அடியெடுத்து வைத்தான். ஆனால் பசுக்கள் அவனை அடியெடுத்து வைத்து விடாதபடி முதுகாலும் கொம்பாலும் முட்டிமுட்டித் தடுத்தன. அவை தன்னைத் தடுக்கவேண்டுமென்றால் ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்பதை அவன் புரிந்துகொண்டு நின்ற இடத்திலேயே நின்றான்.

ஏழு பசுக்களும் ஆக்ரோஷமாக விறகுவெட்டியைப் பார்த்து குரலெழுப்பின. நெருங்கி வந்துவிடாதபடி கொம்பைச் சுழற்றி மிரட்டின. அதைப் பொருட்படுத்தாமல், மகனைக் கொல்லும் ஆவேசத்துடன் கோடாலியை உயர்த்திப் பிடித்தபடி முன்னோக்கி நடந்துவந்தான்.

அக்கணமே ஒரு பசு கண்ணைமூடி கண்ணைத் திறக்கும் வேகத்தில் அவனை நோக்கி அடியெடுத்துவைத்து முன்னால் சென்று தன் கொம்பால் அவனை முட்டித் தள்ளியது. இன்னொரு பசு முன்னேறி வந்து அவன் கால்களை மிதித்தது. மற்றொரு பசு வேகமாக வந்து அவனுடைய தோள் மீது காலால் உதைத்தது. கோடாலி ஒருபக்கம் நழுவிவிழ, அவன் இன்னொரு பக்கம் விழுந்து உருண்டான். நீண்ட கொம்புடைய ஒரு பசு அவனைத் தன் கொம்பாலேயே முட்டிக்கொண்டு சென்று உருட்டிவிட்டது. இன்னொரு பசு காலால் எட்டி உதைத்து தள்ளிவிட்டது. அவன் உருண்டோடி கீழே விழுந்தான். அடுத்த கணமே விறகுவெட்டி மீண்டும் நெருங்கிவிடாதபடி இளைஞனை தன் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு மலை உச்சியை நோக்கி நடந்தது பசு. பிற பசுக்களும் அந்தப் பசுவுக்குப் பாதுகாப்பாக சுற்றிவளைத்தபடி கூடவே நடந்தன.

பசு முட்டி உருட்டிவிட்டதால் ஏற்பட்ட சோர்வும் அவமானமும் விறகுவெட்டியைப் பாடாய்ப் படுத்தின. பசுக்கள் சூழ தன் மகன் தப்பித்துச் செல்லும் திசையையே ஒருவித இயலாமையோடு பார்த்தான். ‘சரி, இதுவும் நல்லதுக்குத்தான்’ என மனத்துக்குள் ஆறுதலாக நினைத்துக்கொண்டான். அப்போதுதான் தன் மனைவி ரத்தம் எடுத்துவரச் சொன்ன கோரிக்கை அவனுடைய நினைவுக்கு வந்தது. மகனே தப்பித்துப் போய்விட்ட பிறகு, ரத்தத்துக்கு என்ன செய்வது என நினைத்துக் குழம்பினான்.

அப்போது அவன் விழுந்துகிடந்த மரத்தைச் சுற்றி இரண்டு அணில்கள் ஓடி விளையாடுவதைப் பார்த்தான். உடனே அவற்றை நோக்கி தன் கோடாலியை வீசினான். கோடாலியின் கூர்மையான பகுதியில் வெட்டுப்பட்டு ஓர் அணில் அந்த இடத்திலேயே இறந்தது. அந்த ரத்தம் கோடாலியின் கூர்மையான பகுதியில் படிந்து சொட்டியது. விறகுவெட்டி இறந்துகிடந்த அணிலை நோக்கி வேகமாகச் சென்றான். தன்னிடம் இருந்த துணியை அணிலின் ரத்தத்தில் தோய்த்து நனைத்தான். பிறகு அத்துணியைப் பாதுகாப்பாக தன் பைக்குள் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் தொலைவில் வரும்போதே அவன் வருகையை உணர்ந்துகொண்ட அவனுடைய மனைவி வேகவேகமாக கட்டிலுக்கு அருகில் சென்று படுத்துக்கொண்டாள். அம்மா அம்மா என்று வலியில் முனகுவதுபோல முனகத் தொடங்கினாள்.

அவளைப் பெயர் சொல்லி அழைத்தபடி வீட்டுக்குள்ளே வந்த விறகுவெட்டி ‘இதோ, நீ கேட்ட ரத்தம். அவனைக் கொன்று எடுத்துவந்துட்டேன்’ என்று ரத்தம் தோய்ந்த துணியை எடுத்து நீட்டினேன்.

‘நீங்களே நெத்தியை சுத்தி கட்டிவிடுங்க. வலி தாங்கமுடியலையே’ என்று கிணற்றிலிருந்து பேசுவதுபோல பேசினாள் அவள். கட்டிலில் அவளுக்கு அருகில் உட்கார்ந்த விறகுவெட்டி ரத்தம் படிந்த துணியை அவளுடைய நெற்றியைச் சுற்றி கட்டினான்.

சில நிமிடங்களிலேயே ‘அப்பாடி, இப்பதான் வலி போச்சி’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் அவள்.

மலை உச்சிக்கு இளைஞனை அழைத்துச் சென்ற பசுக்கள் அங்கிருந்த ஓர் ஆலமரத்தின் நிழலில் இறக்கிவிட்டது. ஒவ்வொரு பசுவையும் கட்டியணைத்து அதன் நெற்றியில் நன்றியோடு முத்தம் கொடுத்தான் அவன். இனி வீட்டுப்பக்கம் செல்வதில் பொருள் இல்லை என்று அவன் மனம் நினைத்தது. பசுக்களுக்கும் அந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனமில்லை. இந்த பூமியில் வாழ்ந்த காலம் போதும் என அவை நினைத்தன.

ஏழு பசுக்களும் ஒருகாலத்தில் தம் முன்னோர்கள் வாழ்ந்த காமதேனுவின் உலகத்துக்குச் செல்லப் போவதாக அவனுக்கு வெவ்வேறு குரல்மாற்றத்தின் மூலம் உணர்த்தின. ‘கவனமாக இரு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது’ என்று அவனை வாழ்த்தின. பிறகு இரு புல்லாங்குழல்களைப் பரிசாகக் கொடுத்தன.

‘நாங்க வேற உலகத்துல இருந்தாலும் உன்னை எப்பவும் நினைச்சிட்டிருப்போம். நீ எங்களுக்குப் புள்ளை மாதிரி. நீ மகிழ்ச்சியா இருக்கற சமயத்துல இந்தப் புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அந்த இசையைக் கேட்டு நீ சந்தோஷமா இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். நீ துக்கமா இருக்கற சமயத்துல இந்த இன்னொரு புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அதைக் கேட்டு நீ துன்பத்துல இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். உன் உதவிக்கு உடனே நாங்க வந்து உன் துன்பத்தைப் போக்குவோம்’ என்று மூத்த பசு சொன்னது.

பிறகு அவனை அந்த ஆலமரத்தடியில் உட்காரவைத்துவிட்டு, அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு தம் உலகத்துக்குச் சென்றன. அவன் அந்த மரத்தடியையே தன் உலகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதற்குக் கற்றுக்கொண்டான். பசிக்கும் நேரங்களில் மலைப்பகுதியில் இருக்கும் செடிகளிலும் மரங்களிலும் பழுத்துத் தொங்கும் கனிகளைப் பறித்துச் சாப்பிடுவான். எதுவுமே கிடைக்காத நேரத்தில் துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய புல்லாங்குழலை எடுத்து வாசிப்பான். சில நொடிகளில் ஏழு பசுக்களும் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து அவனுக்குத் தன் பாலையே உணவாகக் கொடுத்து பசியாற்றிவிட்டுச் செல்லும். சந்தோஷமான நேரங்களில் அவன் வாசிக்கும் புல்லாங்குழலின் இசையைக் கேட்டு, அவையும் சந்தோஷத்துடன் அவனை நினைத்துக்கொள்ளும்.

ஏறத்தாழ இப்படியே ஒரு ஆண்டுக்கும் மேல் காலம் நகர்ந்துவிட்டது. ஒருநாள் அந்த மலைத்தொடரின் வேறொரு பக்கத்தில் ஆட்சி செய்துவந்த ஒரு சிற்றரசனின் மகள் தன் தோழிகளோடு விளையாடிபடியே அந்த மலையடிவாரத்துக்கு வந்தாள். அங்கே ஒரு கிணறு இருந்தது. விளையாடிய களைப்பில் அனைவரும் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அருந்தினர். ஒருத்தி வாளியைச் சாய்த்து நீரை இறைக்க இன்னொருத்தி கைகளைக் குவித்து அந்த நீரை வாங்கி அருந்தினாள். இளவரசி நீரருந்த வந்தபோது அவளுடைய நெருங்கிய தோழி வாளியைச் சாய்த்து நீரை ஊற்றினாள்.

அவள் தண்ணீர் அருந்தும்போது பொன்னிறமான ஓர் இழை குவிந்த கைக்குள் விழுந்ததைப் பார்த்தாள். உடனே தண்ணீர் அருந்துவதை நிறுத்திவிட்டு, அந்தப் பொன்னிழை என்ன என்று பார்த்தாள். அது என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. எங்கிருந்து பறந்து வந்திருக்கும் என சுற்றுமுற்றும் திரும்பித்திரும்பிப் பார்த்தாள். அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அதைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தம் அரண்மனைக்குத் திரும்பி நடந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் நடந்தனர்.

சிறிது தொலைவு நடந்த பிறகு ஏதோ ஒரு உள்ளுணர்வின் தூண்டுதலால் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அப்போது அவள் கண்களுக்கு ஆலமரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருக்கும் இளைஞனின் உருவம் தெரிந்தது. அவனுடைய தலைமுடி பொன்னிழைகளைப்போல படிந்திருப்பதையும் பார்த்தாள். அக்கணமே மணந்தால் அவனைத்தான் மணக்கவேண்டும் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தாள்.

வீட்டுக்குச் சென்றதுமே ஒரு கருப்புத்துணியை எடுத்து தன் நெற்றியைச் சுற்றி இறுக்கமாகக் கட்டிக்கொண்டு படுத்துவிட்டாள் இளவரசி. அவள் சோர்ந்து படுத்திருக்கும் செய்தி அப்போதே அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அரசன் அவளுடைய அந்தப்புரத்துக்கு ஓடோடி வந்தான். அரசனுக்கு அவள் ஒரே மகள். தாயில்லாமல் வளர்க்கப்பட்ட செல்ல மகள். அவளை படுக்கையிலிருந்து எழுப்பி உட்காரவைக்க அரசன் மிகவும் முயற்சி செய்தான். ஆனால் அவள் எழுந்திருக்கவே இல்லை.

‘என்னம்மா, உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி படுத்திருக்கே? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. உனக்குத் தேவையானது எங்க இருந்தாலும், அதைக் கொண்டுவந்து உன்கிட்ட சேர்க்கறேன்’ என்றான் அரசன்.

அவள் அதைக் கேட்ட பிறகு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள். ‘நம்ம நாட்டு எல்லைக்கு வெளியே இருக்கிற மலையடிவாரத்துல ஒரு ஆலமரம் இருக்குது. அந்த மரத்து உச்சியில ஒரு இளைஞன் உட்கார்ந்திருக்கான். அவனை நான் பார்த்தேன். அவன் தலைமுடி தகதகன்னு தங்கம் மாதிரி மின்னுது. அவன் ரொம்ப அழகா இருக்கான். அவனை எப்படியாவது எனக்கு கல்யாணம் செஞ்சி வைங்க. நீங்க செஞ்சு வைக்கறேன்னு எனக்கு சத்தியம் செஞ்சாதான், நான் இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பேன்’

‘அவ்ளோதானே? அதுக்கு ஏன் இப்படி அடம் பிடிக்கணும்? இப்பவே ஆளுங்கள அனுப்பி அவனை அழைச்சிட்டு வரச் சொல்றேன். ஒரு இளவரசியே ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லும்போது, வேணாம்ன்னு சொல்றவங்க இந்த உலகத்துல இருக்கறாங்களா என்ன?’

‘அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல எனக்கு நீங்க சத்தியம் பண்ணுங்க. அப்பதான் எனக்கு நம்பிக்கை வரும்.’

‘சத்தியமா அவனை உனக்கு கட்டிவைக்கறேன். போதுமா? எழுந்திரும்மா.’

உடனே அரசன் நம்பிக்கைக்கு உரிய ஏழு வேலைக்காரர்களை அழைத்து விவரத்தைச் சொல்லி ‘அந்த இளைஞனை எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சி உடனடியா அழைச்சிட்டு வாங்க’ என்று கட்டளையிட்டான். வேலைக்காரர்கள் அனைவரும் கூட்டமாக மலையடிவாரத்தை நோக்கிச் சென்றனர்.

அவர்கள் முதலில் அரசன் குறிப்பிட்ட கிணற்றை அடைந்தார்கள். அதற்குப் பின் அந்த ஆலமரத்தை நோக்கிச் சென்றார்கள். உச்சிக்கிளையில் இளைஞன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த பிறகுதான் அவர்கள் நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கினார்கள்.

அந்த இளைஞனை கைதட்டி அழைத்து ‘உன் கூட ஒரு விஷயம் பேசணுமாம். ராஜா உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னாரு’ என்றார்கள்.

‘அதெல்லாம் வரமுடியாது. போங்க’ என்று பதில் சொன்னான் அந்த இளைஞன். அரசனின் அழைப்பை ஒருவன் மறுப்பான் என்பதையே அவர்களால் நம்பமுடியவில்லை. எதை எதையோ சொல்லி கெஞ்சியும் பார்த்தார்கள். ஆனாலும் அவன் இறங்கி வரவில்லை. அவனைப் பிடிப்பதற்காக அந்த மரத்தின் மீது ஏறத் தொடங்கினார்கள்.

அதைப் பார்த்ததும் துன்ப நேரங்களில் இசைக்கும் புல்லாங்குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான் இளைஞன். அந்த இசை விண்ணுலகத்தில் இருக்கும் பசுக்களுக்குக் கேட்டது. தம் மகன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் என்பதை அவை புரிந்துகொண்டன.

அக்கணமே ஏழு பசுக்களும் கூடி ஆலமரத்தை நோக்கி வந்தன. அரசனின் பணியாட்கள் இளைஞனிடம் வம்பு செய்துகொண்டிருப்பதைப் பார்த்தன. உடனே அந்த ஆட்களோடு அவை மோதின. தம் கொம்புகளால் அவர்களை முட்டி கீழே தள்ளின. அவர்கள் தரையில் விழுந்து உருண்டார்கள். திடீரென நிகழ்ந்த தாக்குதலால் திகைத்த வேலைக்காரர்கள் அக்கணமே தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் அரண்மனைக்கு ஓடினார்கள். பசுக்கள் எல்லாம் கூடி இளைஞனுக்கு ஆறுதல் கூறின. அவன் பசிக்கு பால் கொடுத்துவிட்டு, விண்ணுலகத்துக்கு விடைபெற்றுக்கொண்டு சென்றன.

அரண்மனைக்கு ஓடிய வேலைக்காரர்கள் அரசனிடம் நடந்த விவரங்களையெல்லாம் சொன்னார்கள். ‘இது என்ன, விசித்திரமா இருக்குதே’ என்று குழம்பினான் அரசன்.

பிறகு முப்பது பேரை அழைத்துக்கொண்டு அவனே நேரில் அந்த இடத்துக்குச் சென்றான். அவர்கள் கூட்டமாக தன்னை நோக்கி வருவதை மர உச்சியிலிருந்து இளைஞன் பார்த்துவிட்டான். உடனே வழக்கம்போல துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான். உடனே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் அந்த இடத்துக்கு விரைந்துவந்தன. ஒரு சிறிய படையே தன் மகனை எதிர்ப்பதற்குத் திரண்டு வருவதைப் பார்த்த பசுக்கள் அவர்களை எதிர்கொண்டன. ஒவ்வொருவரையும் கால்களால் உதைத்து கீழே உருட்டிவிட்டன. கொம்பால் முட்டி காயப்படுத்தின. அந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அரசனின் படை வேறு வழியில்லாமல் பின்வாங்கி அரண்மனைக்குத் திரும்பியது.

அரசன் தோல்வியோடு அரண்மனைக்குத் திரும்பிவந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இளவரசி நிராசைக்குள்ளானாள். மனவேதனையுடன் எழுந்திருக்க விருப்பமில்லாமல் படுக்கையிலேயே படுத்திருந்தாள். அந்தச் செய்தியை அறிந்த அரசனின் மனம் துயரத்தில் மூழ்கியது.

அந்தப் பிரச்சினையை எப்படி கையாள்வது என்று புரியாமல் இரவு முழுதும் தூக்கமின்றி அரண்மனைத் தோட்டத்தில் உட்கார்ந்தபடி யோசனையில் மூழ்கியிருந்தான் அரசன்.

அப்போது பொழுது விடிந்தது. சூரியனின் ஒளிக்கதிர்கள் தரையைத் தொடும் முன்பே தோட்டத்தில் இருந்த மரங்களில் காகங்கள் கூடி கரையும் சத்தம் எழுந்தது. வானத்திலும் சில காகங்கள் கூட்டம்கூட்டமாகப் பறந்து செல்வதைப் பார்த்தான். காகங்களின் காட்சியும் அவற்றின் சத்தமும் அச்சமயத்தில் அவனுக்கு ஆறுதலாக இருந்தன.

‘இறைவனுடைய படைப்புல நீங்க எல்லாம் ரொம்ப கொடுத்து வச்ச உயிரினம். எந்தத் துயரமும் இல்லாம ரொம்ப ஆனந்தமா இருக்கீங்க. என்னை மாதிரி எந்தக் கஷ்டமும் உங்களுக்கு இல்லை’ என்று மனத்துக்குள் நினைத்து பெருமூச்சுவிட்டான்.

அப்போது அவன் முன்னால் ஒரு காகம் வந்து உட்கார்ந்து அவனை நோக்கி குரல் கொடுத்தது. முதலில் அந்தச் சத்தத்தை அரசன் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. தொடர்ச்சியாக அந்தக் குரல் எழுந்ததும் ஆர்வத்துடன் அந்தக் காக்கையின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அந்தக் காக்கை தன்னை நோக்கித்தான் தலையை அசைக்கிறது என்று நினைத்துக்கொண்டு அதைப் பார்த்து புன்னகைத்தான்.

உடனே அந்தக் காக்கை அரசனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தது. அரசனின் மனம் வியப்பில் மூழ்கியது. ‘அரசே, உனக்கு என்ன கவலை? என்னிடம் சொல். என்னால் முடிந்த உதவியை உனக்குச் செய்கிறேன்’ என்று சொன்னது.

தன்னோடு பேசும் காக்கையைப் பார்த்து அவனுடைய ஆச்சரியம் பல மடங்காகப் பெருகியது. எல்லாம் கடவுளின் கருணை என நினைத்துக்கொண்டு மனத்துக்குள்ளேயே கடவுளுக்கு நன்றி சொன்னான். நடந்த விஷயங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் அந்தக் காக்கையிடம் விரிவாகச் சொன்னான் அரசன்.

‘அவன்கிட்ட அதிசயமான ஒரு புல்லாங்குழல் இருக்குது. எங்களைப் பார்த்ததும் அவன் அதை எடுத்து வாசிச்சான். உடனே எங்கிருந்தோ பெரிய பெரிய கொம்பு இருக்கிற பெரிய பெரிய பசுக்கள் ஆகாயத்துலேர்ந்து வந்து எங்களை முட்டி மோதி விரட்டியடிச்சிடுச்சி. அந்தப் புல்லாங்குழலை அவன்கிட்டேர்ந்து எப்படியாவது எடுத்துட்டோம்ன்னா, அவனை ரொம்ப சுலபமா நம்ம வழிக்குத் திருப்பிடலாம்.’

அதைக் கேட்டதும் ‘கவலைப்படாதே. என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு பறந்துபோனது காக்கை. அரசனும் தன் தினசரி வேலைகளைப் பார்க்க நிம்மதியாக அரண்மனைக்குத் திரும்பினான்.

அரசன் குறிப்பிட்ட மலையடிவாரத்துக்குப் பறந்துசென்ற காக்கை, அங்கிருந்த ஆலமரத்தையும் அதன் உச்சியில் உட்கார்ந்திருந்த இளைஞனையும் பார்த்தது. ஒருகணம் அவன் அழகைப் பார்த்து ரசித்தது. ‘இப்படிப்பட்ட அழகன் மேல இளவரசி ஆசைப்பட்டதுல ஆச்சரியமே இல்லை’ என்று நினைத்துக்கொண்டது. அவன் உட்கார்ந்திருந்த கிளைக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு கிளைக்குச் சென்று சத்தம் காட்டாமல் அமர்ந்து அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தது.

அப்போது அவன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புல்லாங்குழலை இசைத்துக்கொண்டிருந்தான். அந்த இனிய இசை மயக்கம் தருவதாக இருந்தது. அந்த இசையில் மயங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்த காக்கைக்கு சில கணங்களுக்குப் பிறகுதான் தான் வந்த வேலை நினைவுக்கு வந்தது. ‘ஓ. இந்தப் புல்லாங்குழலை வச்சிகிட்டுதான் ஆகாயத்துலேர்ந்து பசுக்களை வரவழைக்கிறியா?’ என்று நினைத்துக்கொண்டு மெல்ல அவனுக்கு அருகில் பறந்துவந்து சட்டென அந்தக் குழலை தன் அலகால் கவ்விக்கொண்டு பறந்துபோனது.

சற்றும் அதை எதிர்பார்க்காத இளைஞன் அதிர்ச்சியில் மூழ்கினான். இப்படி ஏமாந்துவிட்டோமே என நினைத்து துயரத்தில் மூழ்கினான். சிறிது நேரம் என்ன செய்வது என்றே அவனுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடு அந்தக் காக்கை பறந்துபோன திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகுதான் அவனுக்கு துன்பத்தில் இருக்கும்போது இசைக்கத்தக்க இன்னொரு குழலின் நினைவு வந்தது. உடனே அதை எடுத்து இசைக்கத் தொடங்கினான். அடுத்த கணமே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் இறங்கி வந்தன. ‘என்ன மகனே, என்ன துன்பம்?’ என்று கேட்டன. அவன் நடந்த செய்தியையெல்லாம் அவற்றிடம் சொன்னான்.

‘போகட்டும் விடு. நடந்ததை நெனச்சி கவலைப்படாதே. உனக்கு இன்னொரு புல்லாங்குழல் தரேன்’ என்று பசுக்கள் ஆறுதல் கூறின. புத்தம்புதிதாக இன்னொரு குழலை வரவழைத்து அவனிடம் அளித்தன. பிறகு அவனோடு சிறிது நேரம் கொஞ்சியிருந்துவிட்டு விண்ணுலகத்துக்குத் திரும்பின.

புல்லாங்குழலை எடுத்துச் சென்ற காக்கை அரண்மனைக்குச் சென்று அரசனிடம் கொடுத்தது. அரசன் அந்தக் காக்கைக்கு பலமுறை நன்றி சொன்னான். ‘கவலைப்படாதே அரசே. எந்த சமயத்தில் உனக்கு உதவி தேவைப்பட்டாலும் என்னை ஒரு நொடி நினைச்சிக்கோ. நான் வந்து என்னால முடிஞ்ச உதவியைச் செய்றேன்’ என்று சொல்லிவிட்டு பறந்துபோனது. இனி, இளைஞனை வசப்படுத்தி அழைத்துவருவது எளிதான விஷயம் என நினைத்தான் அரசன்.

அடுத்தநாள் காலையில் ஏற்கனவே மலையடிவாரத்துக்குச் சென்று திரும்பிய வீரர்களை அழைத்து அந்த இளைஞனை அழைத்துவரும்படி சொன்னான். அவர்கள் அங்கு செல்லவே அஞ்சினர். ‘ஐயோ, அங்க அந்தப் பசுக்கள் வந்து முட்டுமே’ என்று நடுங்கிக்கொண்டே சொன்னார்கள். ‘அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நான் சொல்றத நம்புங்க. போய் அழைச்சிட்டு வாங்க’ என்று அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பிவைத்தான்.

காலையில் சென்ற வீரர்கள் அனைவரும் மாலையில் காயங்களோடு ஓடிவந்து அரசன் முன்னால் நின்றார்கள். ‘நீங்க போ போன்னு சொன்னதால நாங்க கெளம்பிப் போனோம். நீங்க வரவே வராதுன்னு சொன்ன பசுக்கூட்டம் இந்த முறையும் வந்துடுச்சி. எங்களையெல்லாம் முட்டிமுட்டி விரட்டியடிச்சிடுச்சி. அந்த இளைஞன் ரொம்ப கெட்டிக்காரனா இருக்கான். அவன்கிட்ட ஏதோ மந்திரம் இருக்குது. ஒரு புல்லாங்குழல எடுத்து ஊதினா, எல்லாமே நடக்குது’ என்று முறையிட்டார்கள்.

அவர்களை அனுப்பிவிட்டு தனிமையில் உட்கார்ந்து ரொம்ப நேரம் யோசனையில் மூழ்கினான் அரசன். அவனுடைய புல்லாங்குழலை காக்கை எடுத்துவந்த பிறகு இன்னொரு புல்லாங்குழல் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று நினைத்துக் குழம்பினான்.

அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எப்படி என பல கோணங்களில் யோசித்துப் பார்த்தான். ஒன்றும் பிடி கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் காக்கையிடம் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என முடிவு செய்தபடி அதை மனத்துக்குள் நினைத்து தியானித்தான். அடுத்து சில கணங்களிலேயே அவனுக்கு எதிரில் கா கா என கரைந்தபடி காக்கை தோன்றியது.

‘துக்கத்துக்கு என்ன காரணம்? இன்னும் பிரச்சினை ஓயவில்லையா?’ என்று கேட்டது. அரசன் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் காக்கையிடம் பகிர்ந்துகொண்டான்.

காக்கை எந்தப் பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் யோசித்தது. ‘ஏதோ ஒரு பிழை நடந்திருக்குது. ஒரு ரெண்டுநாள் பொறுத்துக்கோ. நானே கண்டுபிடிச்சி சரி செய்றேன்’ என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது.

இளைஞன் உட்கார்ந்திருந்த ஆலமரத்தின் வேறொரு கிளையில் சத்தம் காட்டாமல் அமர்ந்தபடி அவனுடைய நடவடிக்கைகளை ஒன்றுவிடாமல் கவனிக்கத் தொடங்கிது காக்கை. நாலைந்து நாட்கள் அவனைக் கவனிக்கும் வேலை நீடித்தது. அப்போதுதான் அவனிடம் இரண்டு புல்லாங்குழல்கள் இருப்பதையும் துக்கமான நேரத்தில் இசைக்க ஒரு குழலையும் மகிழ்ச்சியான சமயத்தில் இசைக்க இன்னொரு குழலையும் அவன் மாறிமாறிப் பயன்படுத்தும் ரகசியத்தையும் அது கண்டுபிடித்தது. கடந்த முறை குழலை எடுக்கும்போது என்ன பிழை நடந்தது என்பதை காகத்துக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. மேலும் ஒரு நாள் காத்திருந்து அவன் மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக இளைஞன் மகிழ்ச்சிக்குழலை இசைத்துக்கொண்டிருந்த சமயத்தில், சந்தடி காட்டாமல் அவனுக்கு அருகில் சென்று, அவன் தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்த துன்பக்குழலைக் கவ்விக்கொண்டு பறந்துசென்றது.

விண்ணுலகத்திலிருந்த பசுக்கள் இளைஞனின் இன்பக்குழலின் இசையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தன. தன் மைந்தன் நலமாகவே இருக்கிறான் என நினைத்து மகிழ்ச்சியடைந்தன.

குழலின் இசையில் தன்னை மறந்து கண்ணை மூடி லயித்திருந்த இளைஞன் நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் கண்களைத் திறந்தான். சிறிது நேரத்துக்குப் பிறகுதான் தனக்கு அருகில் வைத்திருந்த துன்பக்குழலைக் காணவில்லை என்பதை அவன் உணர்ந்தான். கீழே எங்காவது விழுந்திருக்குமோ என அவனுக்கு சந்தேகம் வந்தது. மரத்திலிருந்து இறங்கிவந்து தரையெங்கும் தேடிப் பார்த்தான். கிடைக்கவில்லை. கிளையிடுக்குளில் சிக்கியிருக்குமோ என்ற சந்தேகத்துடன் ஒவ்வொரு கிளையாக ஏறி நின்று மீண்டும் தேடிப் பார்த்தான். அங்கும் கிடைக்கவில்லை. மனமுடைந்து மரத்திலிருந்து கீழே இறங்கிவந்தான்.

புதையலைப்போல தனக்குக் கிடைத்த அபூர்வமான குழலைத் தொலைத்துவிட்டோமே என அவன் மனம் துயரத்தில் மூழ்கியது. தான் குழலைத் தொலைத்த செய்தியை எப்படியாவது தன் பசுக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என நினைத்தான். ஆனால் தன்னிடம் துன்பக்குழல் இல்லாத நிலையில் அச்செய்தியைத் தெரிவிப்பது எப்படி எனப் புரியாமல் குழம்பினான். பித்துப் பிடித்தவனைப்போல மகிழ்ச்சிக்குழலை எடுத்து மீண்டும் மீண்டும் இசைத்தான் அவன். விண்ணுலகத்தில் இருந்தபடி அந்த இசையின் நாதத்தைக் கேட்ட பசுக்கள் தன் மைந்தன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதைத் தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு அவையும் மகிழ்ச்சியில் திளைத்தன.

அப்போது தொலைவில் அரசன் அனுப்பிய ஆட்களின் கூட்டமொன்று ஆலமரத்தை நெருங்கிவருவது தெரிந்தது. அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் அவன் மரத்தடியிலேயே அமைதியாக நின்றான். அவனை நெருங்கிவந்த அரசனின் ஆட்கள் அவனைத் தூக்கி ஒரு சிம்மாசனத்தில் உட்காரவைத்து, அதைத் தூக்கிக்கொண்டு ஊரை நோக்கி நடந்துசென்றனர். கடுமையான தாக்குதலை எதிர்பார்த்திருந்த அவன் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தபடி அரண்மனையின் வாசலிலேயே அரசன் நின்றிருந்தான். ‘வருக வருக’ என இளைஞனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.

அந்தப்புரத்திலிருந்த இளவரசியை தோழிகள் அழைத்துவந்தனர். அவளுக்கும் அவனுக்கும் அரசன் திருமணம் செய்துவைத்தான். அங்கிருந்த அவைப் பெரியவர்கள் அவனை மகிழ்ச்சியோடு வாழ்த்தினர்.

ஆசைப்பட்ட கணவன் கிடைத்ததை ஒட்டி இளவரசி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். ஆனால் அந்த இளைஞனால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியவில்லை. அங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என அவன் விரும்பினான். ஆனால் அதற்குச் சரியான வழி தெரியாமல் தவித்தான்.

ஒரு மாதம் கழிந்தது. அந்த இளைஞன் முகம் மலரவே இல்லை. குழல் இசைப்பதையும் விட்டுவிட்டான். ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்துக்குச் சென்று நெடுங்காலமாக தான் தங்கியிருந்த ஆலமரத்துக்கு அடியில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவான். அவனிடம் மகிழ்ச்சிக்குழல் மட்டுமே இருந்தது. மகிழ்ச்சியே இல்லாத அத்தருணத்தில் அக்குழலை எடுத்து இசைக்க அவன் மனம் விரும்பவில்லை. அமைதியாக உட்கார்ந்திருப்பான். தன் அன்புக்குரிய பசுக்கள் எங்காவது தென்படுகிறதா என அங்குமிங்கும் தேடிப் பார்ப்பான். பிறகு ஏமாற்றத்தோடு திரும்பிவிடுவான்.

இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது. துயரம் படிந்த இளைஞனுடைய முகம் மலரவே இல்லை. இளவரசியோடு முகம் கொடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று அவள் கேட்டாலும் அவன் ஒரு பதிலும் சொல்வதில்லை.

ஒருநாள் அவன் வழக்கம்போல காலை உணவுக்குப் பிறகு மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போது அவனுக்குத் தெரியாமல் அந்த இளவரசியும் அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள்.

விண்ணுலகத்தில் வசித்துவந்த பசுக்களும் இளைஞனிடமிருந்து ஒரு செய்தியும் இல்லையே என நினைத்து குழப்பத்தில் மூழ்கியிருந்தன. இன்பக்குழலின் இசையும் வரவில்லை, துன்பக்குழலின் இசையும் வரவில்லை என்பதால் ஏதோ ஒரு சிக்கலில் அவன் சிக்கியிருப்பதாக அவை நினைத்தன. எதுவாக இருந்தாலும் ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம் என நினைத்து அதே நாளில் அவையும் பூமிக்கு வந்து சேர்ந்தன.

வழக்கமாக இளைஞன் உட்கார்ந்திருக்கும் மரக்கிளையில் அவன் காணவில்லை. ஆலமரத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் அவனைத் தேடிப் பார்த்தன பசுக்கள். எங்கும் அவன் தென்படவில்லை. ஆளுக்கு ஒருபக்கம் நடந்து சென்று தேடிப் பார்க்கலாம் என முடிவெடுத்து ஒவ்வொரு பசுவும் ஒவ்வொரு பக்கம் நடந்துசென்றது.

மலையடிவாரத்தை நோக்கி வந்த இளைஞன் மரத்தை நெருங்கிவரும் சமயத்தில் தன்னை நோக்கி வரும் ஒரு பசுவைக் கண்டான். தன் குழலோசை கேட்காமல் விண்ணுலகத்திலிருந்து தம் பசுக்கள் பூமிக்கு வர வாய்ப்பே இல்லை என நினைத்து முதலில் அப்பசுவை அவன் பொருட்படுத்தாமல் நடந்து போய்க்கொண்டே இருந்தான். சிறிது தொலைவு சென்ற பிறகுதான் தோற்றத்தில் தன் பசுவைப்போலவே அப்பசுவும் காணப்பட்டதால் ஒரு சின்ன சந்தேகத்துடன் நின்றான்.

ஒரு காலத்தில் பசுக்களை அழைக்க வழக்கமாக எழுப்பும் ஓசையை எழுப்பி அதை அழைத்தான். அவன் அழைப்புக்குரலைக் கேட்டதும் அந்தப் பசு திரும்பிப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டது. உடனே ஓடோடி வந்தது. அவனும் அதை நோக்கி ஓடினான். அதன் கழுத்தைப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டான். அதன் முதுகில் ஏறிப் படுத்தான். ம்மே ம்மே என வெவ்வேறு விதமாக குரலெழுப்பி அவனும் பசுவும் கொஞ்சினர். மறைவிடத்திலிருந்து அக்காட்சியைப் பார்த்த இளவரசி ஆச்சரியத்தில் உறைந்துபோனாள். முதன்முறையாக அந்த இளைஞன் முகம் மலர்ந்திருப்பதை அவள் பார்த்து மகிழ்ந்தாள். அவள் விழிகளிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வடிந்தது.

அந்தப் பசு எழுப்பிய குரலைக் கேட்டதும் வெவ்வேறு திசைகளில் அவனைத் தேடிக்கொண்டிருந்த பிற பசுக்களும் அந்த இடத்தை நோக்கி ஓடிவந்தன. இளைஞனைப் பார்த்ததும் அவையும் மகிழ்ச்சியில் துள்ளின. ஒவ்வொன்றும் ஓடிவந்து அவனை முட்டி தன் ஆனந்தத்தைத் தெரிவித்தது. ஏழு பசுக்களிடையில் அவன் ஒரு சிறுவன் போல மகிழ்ச்சியோடு நின்றிருந்தான்.

கொஞ்சல் எல்லாம் முடிந்த பிறகு அப்பசுக்களிடம் தன்னிடமிருந்த துன்பக்குழல் தொலைந்துபோன செய்தியைத் தெரிவித்தான் அவன். குழல் இசைக்காமல் போனதற்கு அதுதான் காரணம் என்றும் தெரிவித்தான். ‘கவலைப்படாதே’ என்று சொன்ன ஒரு பசு அவனுக்கு புதியதொரு குழலைக் கொடுத்தது. ‘இனிமேல் நீ இதையே துன்பக்குழலா பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்தது. ஒரு பெரிய புதையலைப் பெற்றுக்கொள்வதுபோல அவன் அக்குழலைப் பெற்றுக்கொண்டான்.

இளைஞனும் பசுக்களும் உரையாடலில் மூழ்கியிருந்த நேரத்தில் இளவரசி தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள். பசுக்களின் முன்னால் தோன்றி வணங்கினாள். இளைஞன் அவளை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நடந்த விஷயங்களையெல்லாம் பசுக்களிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அவளை பசுக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தினான்.

அவனுடைய குழல் தொலைந்துபோனதற்கு தானும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்துவிட்டதாகத் தெரிவித்து இளைஞனிடமும் பசுக்களிடமும் மனமார மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் அவள்.

‘அவன் மேல நான் வச்ச ஆசைதான் எல்லாத்துக்கும் காரணமே தவிர, எனக்கு வேற எந்த கெட்ட நோக்கமும் இல்லை.’

அவளுடைய முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்த காதலை அந்த இளைஞனும் புரிந்துகொண்டான். அந்தப் பசுக்களும் புரிந்துகொண்டன.

‘நூறாண்டு காலம் மாறாத அன்போடு நீடித்து வாழ்க’ என இருவரையும் பசுக்கள் வாழ்த்தின. இருவரும் பசுக்களின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.

‘குழல்களை பத்திரமா வச்சிக்கோ. எப்ப வேணும்ன்னாலும் எங்களை நீ கூப்பிடலாம்’ என்று சொல்லிக்கொண்டே விடைபெற்று ஆகாயத்தில் பறந்துசென்றன.

பசுக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய பிறகு இளவரசியும் இளைஞனும் வெகுநேரம் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து கதை பேசினார்கள். இளைஞன் தன் கதையை முழுமையாக அவளுக்கு விரிவாகச் சொல்லத் தொடங்கினான். பொழுது சாயும் வரைக்கும் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குப் பிறகு இருவரும் அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள் appeared first on கிழக்கு டுடே.

  •  

கடந்த வியாழக்கிழமை உருவான பிரபஞ்சம்

 “திவ்யன்!” என்று உரக்க அழைத்த கடவுளின் தூதுவரின் குரல் வானுலக அலுவலகம் முழுவதும் எதிரொலித்தது. ஓட்டமும் நடையுமாக வந்த திவ்யன்...

The post கடந்த வியாழக்கிழமை உருவான பிரபஞ்சம் appeared first on சிறுகதைகள்.

  •  

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல்

ஓர் ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். வாழ்நாள் முழுதும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு அவர்களிடம் செல்வம் இருந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து அவர்களுக்குச் சேவை செய்ய ஏராளமான சேவகர்கள் காத்திருந்தனர். அவர்களுடைய அரண்மனைக்குப் பின்னால் மாபெரும் தோட்டமொன்று இருந்தது. அங்கு ஏராளமான மரம், செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அவற்றுக்கு நடுவில் காகம், குருவி, கொக்கு, குயில் என ஏராளமான பறவைகள் பறந்து விளையாடின. தாமரைப்பூக்கள் பூத்திருக்கும் பெரிய குளமொன்றும் இருந்தது. எல்லாம் இருந்தும் அவர்களுக்கு ஒரே ஒரு குறை இருந்தது. பேர் சொல்லி அழைக்கவும் ஓடி விளையாடவும் ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அந்தக் குறை.

அரண்மனைக்கு வந்துபோகும் துறவிகளும் குருசாமிகளும் சொன்ன ஆலோசனைகளுக்கு ஏற்ப ஏராளமான விரதங்களையும் அவர்கள் செய்து பார்த்துவிட்டார்கள். தான தருமங்களும் செய்து பார்த்தார்கள். எந்தப் பயனும் இல்லை.

திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அதற்குப் பிறகும் அவர்களுக்குப் பிள்ளைப்பேறு உண்டாகவில்லை.

பிள்ளை இல்லை என்னும் கவலை ராணியை வாட்டியெடுத்தது. நாள் முழுதும் ராணி கவலையில் மூழ்கியிருப்பதைக் கண்டு ராஜாவும் வருத்தத்தில் ஆழ்ந்தார். எங்கு சென்றாலும் அந்தக் கவலையிலிருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை. ஒருநாள் அதே கவலையுடன் அரண்மனைக்குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் இறைவனிடம் தன் கோரிக்கையை முன்வைத்து கடுமையான வகையில் தவமியற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.

அக்கணமே குளத்தங்கரை ஓரமாக இருந்த ஒரு வட்டப்பாறையை எடுத்து தன் தலைமீது சுமந்தபடி இன்னொரு வட்டப்பாறை மீது ஏறி கைலாசம் இருக்கக்கூடிய வடக்குத்திசையைப் பார்த்து நின்றார். ஒவ்வொரு நாளும் தான் பக்தியுடன் வணங்கும் சிவபெருமான் எதிரில் தோன்றி தனக்கு பிள்ளைவரம் அளிக்கும் வரையில் அந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை என்றும் தலைமீது வைத்த சுமையை இறக்கப்போவதில்லை என்றும் மனத்தில் முடிவெடுத்துக்கொண்டார்.

ராஜாவின் செயலைப் பார்த்த வேலையாட்கள் அந்த முயற்சியைக் கைவிடும்படி பயபக்தியுடன் கேட்டுக்கொண்டனர். இறைவனின் வரம் கிட்டும்வரை தன் தவத்திலிருந்து பின்வாங்கமுடியாது என ராஜா அவர்களிடம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். உடனே வேலைக்காரர்கள் ஓடோடிச் சென்று ராணியிடம் அந்தத் தகவலைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு திகைத்த ராணி குளத்தங்கரைக்கு ஓடோடி வந்தாள். தலைமீது வட்டப்பாறையைச் சுமந்தபடி நின்றிருக்கும் ராஜாவின் கோலத்தைப் பார்த்து அச்சம் கொண்டாள்.

ராஜாவின் முன்னால் நின்று கைகுவித்து அவர் மேற்கொண்டிருக்கும் தவமுயற்சியைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டாள் ராணி. ராணியைத் தொடர்ந்து மூத்த அமைச்சரும் அரண்மனை குருவும் அடுத்தடுத்து வந்து அதே கோரிக்கையை ராஜாவின் முன் வைத்தார்கள். சிவபெருமான் நேரில் காட்சியளிக்கும் வரை தன் தவத்திலிருந்து பின்வாங்கமுடியாது என உறுதியாகத் தெரிவித்தார் ராஜா.

வேறு வழியில்லாமல் அனைவரும் ராஜாவைக் குளத்தங்கரையில் தனியாக விட்டுவிட்டு தத்தம் வேலைக்குத் திரும்பினர். ஒவ்வொரு கணமும் சிவபெருமானை மனமுருகும் வகையில் தன் கோரிக்கையை முன்வைத்து பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார் ராஜா. அவர் தலை மீதிருந்த பாறை பெருஞ்சுமையாக அவரை அழுத்தியது. பிள்ளை இல்லை என்னும் மனக்குறை அதைவிட பெருஞ்சுமையாக அவரை அழுத்தியது.

கைலாசத்தில் பார்வதிதேவியோடு அமர்ந்திருந்த சிவபெருமான் தன் ஞானக்கண் வழியாக வட்டப்பாறையைத் தலையில் சுமந்தபடி தவத்தில் மூழ்கியிருக்கும் ராஜாவின் கோலத்தைப் பார்த்தார். அதைப் பார்க்கப்பார்க்க அவருக்கும் மனச்சுமை பெருகியது. ஆனாலும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

பார்வதி தேவியால் அப்படி இருக்கமுடியவில்லை. அடிக்கடி சிவபெருமானுக்கு அந்த ராஜாவைப்பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். அந்த ராஜாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தூண்டிக்கொண்டே இருந்தாள். சிவபெருமானுக்கு அவன் வேண்டிய வரத்தைக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. அவரால் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரமுடியவில்லை. அதனால் ‘இது எல்லாமே ஆரம்ப வேகம்தான். கொஞ்சநாள் இப்படி இருந்து பார்த்துட்டு அப்புறம் தானாவே விட்டுடுவான்’ என்று பார்வதிதேவியிடம் சொல்லிவிட்டு அமைதி கொண்டார்.

ஆனால் சிவபெருமான் நினைத்ததுபோல ராஜா பின்வாங்கிச் செல்பவராகத் தெரியவில்லை. அவர் எதிர்பார்த்ததைவிட அதிக மன உறுதி கொண்டவனாக இருந்தார். ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டு காலம் அவர் தீராத மனச்சுமையோடும் தலைச்சுமையோடும் நின்றிருப்பதைப் பார்த்ததும் ஒருநாள் சிவபெருமானின் மனத்தில் கருணை பிறந்தது. உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்து பூமிக்குச் செல்வதற்காக புறப்பட்டார்.

அவருடைய திடீர் பயணத்தைப் பார்த்த பார்வதிதேவி ‘இவ்வளவு அவசரமா எங்க கிளம்பிட்டீங்க?’ என்று கேட்டாள்.

அதற்கு சிவபெருமான் ‘அந்த ராஜாவுடைய பக்தி என் தலைமேல ஒரு பெரிய பாரமாக உட்கார்ந்துட்டிருக்குது. பன்னிரண்டு ஆண்டு கால பக்தியின் எடையை என்னால தாங்கமுடியலை. பாவம், அவன் ஒரு சாதாரண மனிதன். அந்தப் பாறையுடைய எடையை அவன் எப்படித்தான் தாங்கிட்டிருக்கானோ தெரியலை. முதல் வேலையா, அவனுக்கு அவன் கேக்கற வரத்தைக் கொடுத்துட்டு வரேன். அதுக்கப்புறம்தான் நானும் நிம்மதியா இருக்கமுடியும்’ என்று சொன்னார். ‘போய் வாங்க. போய் வாங்க. நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கீங்க’ என்று சொல்லி சிவபெருமானை வாழ்த்தி கைலாசத்திலிருந்து வழியனுப்பி வைத்தாள் பார்வதிதேவி.

கைலாசத்திலிருந்து நேராக அரண்மனைக் குளத்தங்கரைக்கு வந்து ராஜாவின் முன் காட்சியளித்தார் சிவபெருமான். ஒளிவேறுபாட்டின் காரணமாக சிவபெருமானின் இருப்பை உணர்ந்துகொண்ட ராஜா தன் கண்களைத் திறந்து சிவபெருமானைப் பார்த்தார். அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.

‘முதல்ல பாறையிலிருந்து நீ இறங்கி வா. தலைமேல வச்சிட்டிருக்கிற சுமையை கீழ எறக்கு’ என்று சொன்னார் சிவபெருமான்.

ராஜா தன் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ‘ஐயா சிவபெருமானே, முதல்ல எனக்கு வரம் கொடுங்க. அதுக்கப்புறம் நான் இந்தப் பாறையிலிருந்து இறங்கி வரேன்’ என்று தெரிவித்தான்.

சிவபெருமான் இரண்டுமூன்று முறை சொல்லிப் பார்த்தார். ஆனால் ராஜா அதைக் கேட்கவில்லை. தன் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ‘முதல்ல வரம். அதுக்கப்புறம்தான் இறங்குவேன்’ என்றார்.

அவருடைய உறுதியைக் கண்டு சிவபெருமான் மனம் நெகிழ்ந்துபோனார். ‘ராஜா. என் சொல்லை நம்பு. நீ கேட்கிற வரத்தை நான் கண்டிப்பா கொடுப்பேன். ஆனால் இங்கு இல்லை. நாளைக்கு காலையில உன் அரண்மனைக்கே நேரா வந்து ராணியையும் சந்திச்சிட்டு வரம் கொடுப்பேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிவபெருமான்.

ஒரு கணம் ராஜா அமைதியாக சிவபெருமான் முகத்தைப் பார்த்தார். அவர் சொல்மீது அவருக்கு நம்பிக்கை பிறந்தது. ‘சரி சிவபெருமானே. உன் கருணைக்கு நன்றி. நீ சொன்னபடி செய்றேன்’ என்று சொல்லிக்கொண்டே தன் தலைமீது வைத்திருந்த பாறையை கீழே இறக்கிவைத்தார். பிறகு நின்றுகொண்டிருந்த பாறையிலிருந்து கீழே இறங்கி சிவபெருமானை நோக்கி நடந்துவந்தார். அவர் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு எழுந்து நின்றார். ராஜாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தபடி இருந்தது.

‘இப்போ நிம்மதியா அரண்மனைக்குப் போ. நாளைக்குக் காலையில நான் அங்க வரேன். அப்போ விரிவா பேசிக்கலாம்’ என்று அவரை வழியனுப்பிவைத்தார் சிவபெருமான். ராஜாவும் மற்றொரு முறை அவரைக் குனிந்து வணங்கிவிட்டு அரண்மனையை நோக்கி நடந்து சென்றார்.

சிவபெருமானின் தரிசனம் கிடைத்த செய்தியை உடனடியாத் தன் ராணியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் மனம் துடித்தது. அவர் அரண்மனைக்குள் செல்லும்வரை பார்த்தபடி நின்றிருந்த சிவபெருமான் தனக்குள் புன்னகைத்தபடி அங்கிருந்து மறைந்தார்.

அரண்மனைக்குள் வரும் ராஜாவை முதலில் வேலையாட்கள்தான் பார்த்தார்கள். முதலில் ஒருகணம் அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. அஞ்சி ஒதுங்கினார்கள். பிறகு ராஜா அனைவரையும் பார்த்து ‘என்னப்பா, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஏன் என்னைப் பார்த்து எல்லாரும் மெரள்றீங்க?’ என்று கேட்டபடியே நடப்பதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஓடோடிச் சென்று அரண்மனை முழுவதும் அச்செய்தியைப் பரப்பினர். ஒருவன் வேகமாக அந்தப்புரத்துக்குச் செய்தி அனுப்பிவைத்தான். செய்தி கிடைத்ததும் ராஜாவை வரவேற்க ராணியே நேராக வாசலுக்கு வந்து நின்றாள். அதே சமயத்தில் ராஜா படியேறி உள்ளே வந்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள் அவள்.

‘ராணி, எனக்கு சிவபெருமானின் தரிசனம் கிடைச்சிட்டுது. அவர் கருணையும் கிடைச்சிட்டுது’ என்றார்.

‘என்ன ராஜா? என்ன சொல்றீங்க? விளக்கமாச் சொல்லுங்க’ என்று கேட்டாள் அவள்.

‘ஆமாம். நான் சிவபெருமானை நேருக்கு நேர் பார்த்தேன். அவர் என் கண் முன்னால காட்சியளித்தார்.’

‘உண்மையாகவா?’

‘ஆமாம். நமக்கு பிள்ளைவரம் கொடுக்க சிவபெருமான் ஒத்துகிட்டாரு.’

‘அப்படியா? இந்த மகிழ்ச்சியை என்னால தாங்கவே முடியலை.’

‘நாளைக்கு காலை வேளையில நம் அரண்மனைக்கே நேருல வரேன்னு சிவபெருமான் சொல்லியிருக்காரு. அந்த சமயத்துல அந்த வரத்தை கொடுக்கறதா எனக்கு வாக்களிச்சிருக்காரு.’

ராஜாவை உச்சியிலிருந்து பாதம் வரை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு உடல்சிலிர்த்தாள் ராணி. ராஜாவை ஒருமுறை தழுவிக்கொண்டாள்.

‘நம்முடைய நீண்டகால ஏக்கம் நாளைக்கு காலையில நிறைவேறப்போவுது. சிவபெருமான் நம் அரண்மனைக்குள்ள வர சமயத்துல நீ நல்ல உடைகளை உடுத்திகிட்டு வரவேற்பு கொடுக்க தயாரா இருக்கணும். அதுக்கு முன்னால் இன்னைக்கே நம்ம வேலையாட்களை வச்சிகிட்டு அரண்மனையை முழுசா கழுவி துடைச்சி கோலம் போட்டு பளிச்சினு வச்சிருக்கணும். ஒருவேளை நம் அரண்மனையிலேயே அவர் காலை உணவைச் சாப்பிடக்கூடும். அவருக்குப் பேரீச்சம்பழங்கள்தான் ரொம்பவும் பிடிக்கும். நல்ல பழங்களை விதையை எடுத்துட்டு ஒரு தட்டில தயாரா வச்சிருக்கணும். அது போதும்.’

ராணிக்கு ராஜாவின் சொற்களை நம்புவதா, கூடாதா என குழப்பமாக இருந்தது. அவள் குழப்பத்தைப் புரிந்துகொண்டதும் ராஜா அவள் தோளைத் தொட்டு அசைத்து ‘பயப்படாதே ராணி. சிவபெருமான் எனக்கு வாக்களிச்சிருக்காரு. நிச்சயமாக அவரு நம்மைப் பார்ப்பதற்கு வருவாரு’ என்று ஆறுதலாகச் சொன்னார்.

அடுத்த காலை விடிந்தது. சிவபெருமான் கைலாசத்திலிருந்து ஆகாயமார்க்கமாக ஒரு சாமியாரின் தோற்றத்தோடு அந்த ஊரின் எல்லைக்கு வந்து சேர்ந்தார். அவர் தோளில் ஒரு பை தொங்கியது. ஒரு கையில் பிச்சைத்தட்டும் இன்னொரு கையில் ஓர் ஊன்றுகோலும் இருந்தன. ஊர் நெருங்கியதும், கண்ணுக்குத் தென்பட்ட முதல் வீட்டின் வாசலில் நின்று பிச்சை கேட்டார். அந்த வீட்டில் வசித்துவந்த ஒரு கிழவி முறத்தில் அரிசி எடுத்துவந்து நீட்டினாள். அவர் அதை தன் தோள்பையில் வாங்கிக்கொண்டு ஆசி வழங்கிவிட்டு அடுத்த வீட்டை நோக்கி நடந்தார். அந்த வரிசையில் இருந்த எல்லா வீட்டு வாசல்களிலும் நின்று பிச்சை வாங்கியபடி நடந்தார்.

தெருக்கள் கூடும் இடங்களில் நின்று எல்லோரும் பார்க்கும் வகையில் நடனமாடி குதித்தார். ஓங்கிய குரலில் ராகம் போட்டு பாடினார். சிறு பிள்ளைகளும் பெரியவர்களும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். சிவபெருமான் அவர்கள் அனைவருக்கும் பையிலிருந்து பழங்களை எடுத்துக் கொடுத்தார். இப்படி பிச்சை வாங்கியபடியே கடைசியாக அரண்மனையை அடைந்தார்.

ராஜாவும் ராணியும் அரண்மனை வாசலிலேயே சிவபெருமானுக்காகக் காத்திருந்தனர். வாசலில் வந்து நின்ற சாமியாரைப் பார்த்ததும் சிவபெருமான்தான் சாமியார் வேடத்தில் வந்திருக்கிறார் என்பதை ராஜா புரிந்துகொண்டான். ராணியின் பக்கமாகத் திரும்பி கண்ணசைவில் அந்த உண்மையை அவளுக்கு உணர்த்தினான். உடனே ராணி வாசலிலேயே மஞ்சள் கரைத்த நீரை நிறைத்துவைத்திருந்த குடத்தை எடுத்துவந்து சாமியாரின் பாதங்களில் ஊற்றி தூய்மை செய்துவிட்டு விழுந்து வணங்கினாள். ராஜாவும் ராணியோடு சேர்ந்து காலில் விழுந்து வணங்கினான். ‘சீரும் சிறப்போடும் சந்ததியோடும் நீடூழி வாழ்க’ என இருவரையும் வாழ்த்தினார் சாமியார்.

பிறகு பையிலிருந்து இரு மாம்பழங்களை எடுத்து ராணியிடம் கொடுத்தார். ‘இவற்றை சாப்பிடு மகளே. நீ நீண்ட காலமா பிள்ளை இல்லாத மனக்குறையோடு இருக்கறேன்னு எனக்குத் தெரியும். உன் குறையைத் தீர்க்கறதுக்காக பன்னிரண்டு ஆண்டு காலம் கடுமையா தவம் செய்த உன் கணவன் மிகவும் அன்பானவன். உங்க ரெண்டு பேருக்கும் நான் உதவி செய்யணும். உன் கணவன் கேட்ட வரத்தை அளிக்கறதுக்கு முன்னால உன்னிடமிருந்து ஒரு கேள்விக்கு பதில் எதிர்பார்க்கிறேன்’ என்று சொன்னார்.

‘என்ன கேள்வி ஐயா?’ என்று பணிவோடு கேட்டாள் ராணி.

‘உனக்கு பதினாறு ஆண்டுகள் மட்டுமே ஆயுள் உள்ள புத்திசாலிக்குழந்தை வேணுமா? நூறு ஆண்டுகள் வரை கெட்டியான ஆயுள் உடைய முட்டாள் குழந்தை வேணுமா? இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லிட்டால், என் வேலை எளிதாக முடிஞ்சிடும்’ என்றார் சிவபெருமான்.

‘ஐயோ, இது என்ன குழப்பம்?’ என்று தலையைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள் ராணி. ‘நான் என்ன பதில் சொல்வேன்? எனக்கு ஒன்னுமே புரியலையே’ என்று புலம்பியபடி அருகில் நின்றிருந்த ராஜாவின் பக்கம் திரும்பினாள். ராஜாவும் ஏதோ பதில் சொல்ல முற்பட்டான். உடனே கையை உயர்த்தி அவனைத் தடுத்த சிவபெருமான் ‘ராணியிடம் கேட்ட கேள்விக்கு ராணிதான் பதில் சொல்லவேண்டும்’ என்று உறுதியான குரலில் தெரிவித்தார். அதைக் கேட்டதும் ராஜா அமைதியடைந்தான்.

ராணி தன் கைகளை உயர்த்தி தன் தலைமீது பட்பட்டென்று அடித்துக்கொண்டாள். ‘ஐயோ, நான் என்ன செய்வேன்? இது என்ன சோதனை? நான் என்ன கேட்பேன்? எனக்கு ஒன்னுமே புரியலையே. இப்படி ஒரு இக்கட்டில சிக்கிகிட்டேனே’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள். அவள் விழிகள் சிறிது நேரம் வாசலருகில் புத்தம்புது பூக்களுடன் காற்றில் மெல்ல அசைந்தபடி நின்றிருந்த ஒரு செடியின் மீது பதிந்தன.

பிறகு எழுந்து நின்று சிவபெருமானைப் பார்த்து கைகுவித்து வணங்கியபடி, ‘ஐயா, ஒரு முட்டாளைப் பெத்து நூறு ஆண்டுகள்வரைக்கும் வச்சிருக்கிறதால என்ன பயன் இருக்கப் போவுது. ராஜ்ஜியத்தையும் ஆட்சி செய்ய முடியாம, வீட்டையும் கவனிச்சிக்க முடியாம இருக்கற ஒரு முட்டாள் இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான் அல்லவா?’ என்று சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். சிவபெருமான் அவளை அமைதியோடு பார்த்தபடி நின்றிருந்தார்.

‘வீட்டைக் கவனிச்சிக்கிறதைவிட நாட்டைக் கவனிச்சிக்கிறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். எனவே, பதினாறு ஆண்டுகள் வாழக்கூடிய புத்திசாலிக் குழந்தையே போதும்’ என்று சொன்னாள் ராணி.

‘முடிவாகத்தான் சொல்றியா?’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘ஆம் ஐயா’ என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள் ராணி.

‘அவசரப்பட வேணாம். நல்லா யோசிச்சி உன் முடிவைச் சொல். வரத்தைக் கொடுத்த பிறகு எக்காரணத்தைக் கொண்டும் என்னால மாத்தமுடியாது.’

‘எல்லாக் கோணங்களிலும் ஆராய்ச்சி பண்ணிட்டுதான் என் பதிலைச் சொல்றேன் ஐயா. எனக்கு பதினாறு ஆண்டு காலம் மட்டுமே வாழுறா புத்திசாலிக்குழந்தையே போதும்.’

சிவபெருமான் ஒருகணம் ராணியையும் ராஜாவையும் மாறிமாறிப் பார்த்தார். பிறகு இருவருடைய தலைமீதும் கை வைத்து கண்களை மூடி முணுமுணுத்தார். பிறகு ‘நீங்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டேன். நீங்க நினைச்சபடியே ஆகட்டும். வாழ்வாங்கு வாழ்க’ என்று கூறிவிட்டு அரண்மனையைவிட்டு வெளியேறினார்.

அடுத்து சில நாட்களிலேயே ராணி கருவுற்றாள். அரண்மனை வைத்தியர் அவளுடைய கர்ப்பத்தை உறுதி செய்ததும், ராஜா ஊரில் உள்ள அனைவரும் வந்து உண்டுவிட்டுச் செல்லும் வண்ணம் அரண்மனை வாசலிலேயே பெரியதொரு பந்தல் போட்டு, ஓர் அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அனைவரும் விருந்துண்டு ராணியை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

பத்து மாதங்கள் நிறைவுற்ற தருணத்தில் ராணி அழகான ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். வம்சம் விளங்கப் பிறந்த குழந்தையைப் பார்த்து ராஜா பூரித்தார். அன்று மாலையே ராஜா ஊரிலிருந்த சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டு தெய்வத்துக்கு நன்றி சொன்னார். ஊரில் இருக்கும் எல்லா ஆலயங்களிலும் குழந்தையின் பெயரில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குழந்தைக்கு சென்னா என்று பெயரிட்டனர்.

சென்னா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தான். அனைவருடைய முன்னிலையிலும் வெளித்தோற்றத்துக்கு மகிழ்ச்சியாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டாலும் ராணி ஒவ்வொரு கணமும் உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தாள். சிவன் குறிப்பிட்டதுபோல தன் மகன் பதினாறு வயதுவரை மட்டும்தான் உயிர்வாழ்வானோ என நினைத்து துயரத்தில் மூழ்கியிருந்தாள்.

யாருக்கும் தெரியாமல் ஒரு ஜோதிடரை அரண்மனைக்கு வரவழைத்தாள் ராணி. குழந்தை பிறந்த நேரத்தையும் வரம் கொடுத்தபோது சாமியார் சொன்ன தகவலையும் சேர்த்துச் சொல்லி, குழந்தையின் எதிர்காலத்தைக் கணித்துக் கூறுமாறு கேட்டுக்கொண்டாள். ஜோதிடர் அங்கேயே உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு ராணியின் முகத்தைப் பார்த்தார்.

‘அம்மா, அந்தச் சாமியார் சொன்னது எல்லாமே உண்மை. இந்தக் குழந்தை நல்ல ஞானமுள்ளவன். வீரமும் நேர்மையுணர்ச்சியும் உள்ளவன். ஆனா பதினாறு வயசு நடக்கற சமயத்துல அவனுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்னு காத்திட்டிருக்குது. அது எப்படி முடியும்னு யாராலயும் சொல்லமுடியாது.’

ஜோதிடருக்கு தக்க தட்சணையைக் கொடுத்து அனுப்பிவைத்த ராணி, தன் சென்னாவை கண்ணை இமை காப்பதுபோல காத்துவந்தாள். சென்னா மெல்ல மெல்ல வளர்ந்து பாலகனான். அரண்மனையில் இருந்த அனைவருக்கும் அவன் செல்லப்பிள்ளை ஆனான். அவனும் எல்லோரோடும் அன்பாகப் பழகி, எல்லோருடைய மனத்திலும் இடம் பிடித்தான். சென்னா எங்கு சென்றாலும் அவனோடு ஒரு சிறுவர் கூட்டமும் பின்தொடர்ந்தது.

விளையாட்டுபோல பதினாறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அப்போதும் சென்னா பிற சிறுவர்களோடு சேர்ந்து ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் பந்து விளையாடி பொழுதுபோக்கினான்.

ஒருநாள் ஒரு சிறுவன் ‘நீ ராஜாவுடைய பிள்ளை. நீ ஏன் எங்களை மாதிரியான ஆளுங்களோடு சேர்ந்து இங்க வந்து பந்து விளையாடுற? காட்டுக்குப் போய் மான்வேட்டை ஆடறதும் புலிவேட்டை ஆடறதும்தான் உன்னைமாதிரியான இளவரசர்களுக்கு அழகு’ என்று குறிப்பிட்டான்.

‘மானையோ, புலியையோ வேட்டையாடிக் கொல்றதில என்ன அழகு இருக்கப்போவுது? நமக்குத் துன்பம் தராத உயிருக்கு நாம ஏன் துன்பம் தரணும்?’ என்று கேட்டான் இளவரசன் சென்னா.

‘கொல்வதில் அழகு எதுவும் இல்லைதான். ஆனால் கொல்வதுதான் வீரம். அப்படித்தான் நம் சாஸ்திரம் சொல்லுது’ என்றார்கள் சிறுவர்கள்.

அன்று வீட்டுக்குத் திரும்பிய சென்னா இரவு முழுக்க, பிற சிறுவர்கள் சொன்னதைப்பற்றி யோசித்துக்கொண்டே இருந்தான். அடுத்தநாள் காலையில் அவன் சிறுவர்களோடு விளையாடுவதற்குச் செல்லவில்லை. அவன் ஏதோ யோசனையில் மூழ்கியபடி அரண்மனையில் ஓர் அறைக்குள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க ராணிக்கு வருத்தமாக இருந்தது.

‘என்ன நடந்திச்சி மகனே?’ என்று பரிவோடு கேட்டாள். பிற சிறுவர்கள் அவனைப் பார்த்து சொன்ன சொற்களையெல்லாம் அவன் ராணியிடம் சொன்னான். ‘பாவம் அந்தச் சிறுவர்கள். அவுங்க பேச்சையெல்லாம் நீ ஏன் கேட்கிற? நீ உன் விருப்பம்போல நம் அரண்மனைத் தோட்டத்திலேயே விளையாடு. காட்டுக்குப் போறதுலாம் ரொம்ப ரொம்ப ஆபத்தான காரியம்’ என்று ராணி அவனை எச்சரித்தாள்.

‘இல்லை அம்மா. நான் காட்டுக்குப் போய் புலியைக் கொன்று என் வீரத்தை அனைவருக்கும் நிரூபிச்சிக் காட்டணும். கோழை போல ஒதுங்கி நிற்க எனக்கு விருப்பமில்லை’ என்று சொன்னான் சென்னா.

‘உன்னை கோழைன்னு இப்ப யாரு சொன்னாங்க? நீ எவ்வளவு பெரிய வீரன்ங்கறது எனக்குத் தெரியுமே. தினம்தினமும் நம் அரண்மனைத்தோட்டத்தின் உச்சிக்கிளையில தொங்கற மாம்பழங்களை உன் வில்லையும் அம்பையும் கொண்டு வீழ்த்தறதை என் கண்ணால ஒவ்வொரு நாளும் நான் பார்த்துட்டுதான இருக்கேன்’ என்று சென்னாவை அமைதிப்படுத்த முயற்சி செய்தாள் ராணி.

‘நான் வீரன்ங்கறது உனக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா? ஊரில இருக்கிறவங்களுக்குத் தெரியவேணாமா? காட்டுக்குப் போய் வேட்டையாட எனக்கு அனுமதி கொடுங்க. என் வேட்டையில புலிகளை வீழ்த்தி நான் யார்ங்கறதை இவங்களுக்குப் புரியவைக்கிறேன்.’

‘அவசரம் வேண்டாம் மகனே. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும். அப்போது உன்னை நானே காட்டுக்கு அனுப்பிவைப்பேன். அமைதியாக இரு. இனிமேல நீ வெளியே போய் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடவேணாம். அரண்மனைக்குள்ளயே இருக்கற சிறுவர்களோடு சேர்ந்து விளையாடு. அது போதும்’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள் ராணி.

அவளுக்கு திடீரென ஜோதிடர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்வான் என்று குறிப்பிட்ட சிவபெருமானின் சொற்களும் நினைவுக்கு வந்தன. என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு தன் அறைக்குத் திரும்பினாள்.

மறுநாள் விடிந்தது. காட்டுக்குச் சென்று வேட்டையாட வேண்டும் என சென்னாவின் மனம் துடித்தது. அரன்மனைக்குள்ளேயே அவனோடு நெருக்கமாகப் பழகுகிற சில வேலைக்காரர்களையும் மாடுகளைப் பராமரிக்கிற சிறுவர்களையும் சேர்த்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் காட்டுக்குப் புறப்பட்டான்.

எதிர்பாராத விதமாக, ராணி அந்த இடத்துக்கு வந்துவிட்டாள். அவன் நின்றிருக்கும் கோலத்தைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள். அவன் புறப்பட்டு நிற்பதைப் புரிந்துகொண்டதும் அவனை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என முயற்சி செய்தாள். அவனோடு பேசத் தொடங்கிய சில நொடிகளிலேயே அவன் மன உறுதியை அவள் உணர்ந்துகொண்டாள். அவனைத் தடுத்து நிறுத்துவது சிரமம் என்பதையும் புரிந்துகொண்டாள்.

ஒரு பெருமூச்சுடன் ‘உன் விருப்பம்போல காட்டுக்குப் போய் வேட்டையாடிட்டு வா. நான் உன்னைத் தடுக்கலை. ஒரே ஒரு கணம் நான் வெளியே போய் சகுனம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு வரேன். அதுக்கப்புறம் நீ கெளம்பலாம்’ என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றாள்.

அப்போது அவள் பார்வையில் கெட்ட சகுனங்களே தென்பட்டன. எண்ணெய்க்கூடைகளோடு ஒரு வண்டி சென்றது. கோடரிகளோடு விறகுவெட்டிகள் நடந்துபோனார்கள். எல்லாமே கெட்ட சகுனங்கள். அவற்றையெல்லாம் பார்த்து மனவருத்தத்தோடு ராணி திரும்பி வந்தாள். தான் பார்த்த குறிப்புகளையெல்லாம் மகனிடம் எடுத்துச் சொன்னாள். ‘ஒரே ஒரு நல்ல சகுனம் கூட என் கண்முன்னால தென்படலை. கொஞ்ச நேரம் காத்திரு. ஏதாவது ஒரு நல்ல சகுனம் அமையட்டும். அதுக்கப்புறம் நீ புறப்பட்டுச் செல்லலாம். நான் உன்னைத் தடுக்கமாட்டேன்’ என்றாள் ராணி. அவள் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.

ஆனால் சென்னா மன உறுதியோடு நின்றிருந்தான். ஒருமுறை எடுத்த முடிவிலிருந்து பின்வாங்குவதிலை என்பதில் உறுதியாக இருந்தான். ‘அம்மா. நான் புறப்பட்டுட்டேன். இப்பவே ரொம்ப காலதாமதமாகிட்டுது. தயவுசெஞ்சி என்னைத் தடுக்காதே. என் கூட இத்தனை பேர் வரும்போது எதுக்கும்மா கவலைப்படறீங்க? நான் பாதுகாப்பா திரும்பி வருவேன்’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். அவனோடு அரண்மனையைச் சேர்ந்த ஆட்களும் பின்தொடர்ந்து சென்றனர். ஒரு பாதுகாப்புக்காக ராணி தன் சகோதரனையும் அவர்களோடு அனுப்பிவைத்தாள்.

ஆவேசத்துடன் காட்டுக்குள் புகுந்த சென்னா முதலில் ஒரு முயல்களின் கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக் கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத் தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட முயல்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றி அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். முயல்களின் உடல்களைச் சுமந்த வண்டியை ஒரு வேலைக்காரன் ஓட்டிக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான்.

முதல் வேட்டையை எளிதாக நிகழ்த்திமுடித்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் தொடர்ந்து காட்டுக்குள் சென்றான் சென்னா. நீண்ட நேர பயணத்துக்குப் பிறகு ஒரு பெரிய குளத்தைச் சுற்றி திரிந்துகொண்டிருந்த ஒரு மான்கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக் கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத் தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட மான்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றினான். ஒரு வேலைக்காரனை அழைத்து வண்டியை அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். மான்களின் உடல்களைச் சுமந்த வண்டி அரண்மனையை நோக்கிச் சென்றது.

முயல்களையும் மான்களையும் வீழ்த்திய உற்சாகத்தோடு சென்னா தொடர்ந்து காட்டின் மையப்பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினான். நெடுந்தொலைவு பயணம் செய்த பிறகு ஒரு சிறிய குன்றைச் சுற்றி மரங்கள் அடர்ந்திருந்த ஒரு பகுதியில் திரிந்துகொண்டிருந்த ஒரு புலிக்கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை அசைந்து அசைந்து நடக்கும் அழகையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமுடன் பாய்ந்து தாவி எழும் அதிசயத்தையும் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொரு புலியாக கொன்று வீழ்த்தினான். பிறகு வழக்கம்போல புலிகளின் உடல்களையெல்லாம் திரட்டி ஒரு வண்டியில் ஏற்றினான். வண்டியை அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். புலிகளின் உடல்களோடு வண்டி அரண்மனையை நோக்கிச் சென்றது.

முயல்களின் உடல்களையும் மான்களின் உடல்களையும் புலிகளின் உடல்களையும் சுமந்த வண்டிகள் அடுத்தடுத்து அரண்மனை வாசலுக்கு வந்து நின்றதைப் பார்த்ததும் ராணி ஓரளவு மனம் தெளிந்தாள். ‘உங்களை கவலைப்பட வேணாம்னு இளவரசர் சொன்னாரு’ என்று ஒவ்வொரு வண்டிக்காரரும் அவளிடம் சொன்னதைக் கேட்டதும் அவள் மனம் நிறைந்தது. தன் மகன் பெரிய வீரன் என்று நினைத்து மகிழ்ச்சியில் மூழ்கினாள்.

அதே நேரத்தில் அன்றைய வேட்டை வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்தான் சென்னா. அவனுக்குத் துணையாக நின்றிருந்த அவனுடைய மாமா ‘இன்றைக்கு இது போதும். நாம் வீட்டுக்குச் செல்லலாம்’ என்று சென்னாவுக்கு நினைவூட்டினார். சென்னாவும் அவர் சொற்களை ஏற்றுக்கொண்டான். மொத்த குழுவும் அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தது.

பொழுது அடங்கி இருள் சூழ்ந்த நேரத்தில் வழியில் ஒரு கோவில் தென்பட்டது. அதைப் பார்த்ததும், முதல் வேட்டை வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக கோவிலுக்குச் செல்லவேண்டும் என சென்னாவுக்குத் தோன்றியது. மாமாவிடம் தன் எண்ணத்தைச் சொன்னான். அவரும் அவன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். உடனே அனைவரும் அந்தக் கோவிலுக்குள் சென்றனர்.

வெளியே இருந்ததைவிட கோவிலுக்குள்ளே கூடுதலான இருள் அடர்ந்திருந்தது. அக்கம்பக்கம் எதுவும் தெரியவில்லை.

‘உள்ளே எதுவும் தெரியலையே. எப்படிச் சென்று எப்படி வணங்குவது?’ என்று கவலையோடு கேட்டான் சென்னா.

அப்போது ஒரு வீரன் ‘கொஞ்ச நேரம் பொறுத்திருங்க இளவரசரே. என்னிடம் சிக்கிமுக்கிக்கல் இருக்குது. அதைத் தேய்ச்சி நெருப்பை உண்டாக்கறேன். வெளிச்சம் வந்த பிறகு செல்லலாம்’ என்றான்.

‘சரி’ என்று தலையசைத்த சென்னா ஓரமாக ஒதுங்கி நின்றான்.

வீரன் வேகவேகமாக வெளியே சென்று கைநிறைய சருகுகளைச் சேகரித்து எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் குவித்தான். தன் பையிலிருந்த சிக்கிமுக்கிக்கற்களை எடுத்து ஒன்றோடொன்று தேய்த்து நெருப்பை எழுப்ப முயற்சி செய்தான். ஆனால் நெருப்புப்பொறி விழவில்லை. அடுத்தடுத்து பல முறைகள் முயற்சி செய்தான். எல்லாமே தோல்வியில் முடிவடைந்தன.

விரைவில் அனைவரையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பவேண்டும் என்ற கவலையில் இருந்த மாமாவைப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

‘வெளிச்சத்துக்காகக் காத்திருக்கவேணாம். சீக்கிரமா நாம அரண்மனைக்குத் திரும்பியாவணும். இருட்டா இருந்தாலும் பரவாயில்ல. வாசலில் இருந்து பார்க்கிறமாதிரிதான் கருவறை இருக்கும். நூல் பிடிச்சதுபோல நேரா நடந்து போனா, தெய்வத்தின் முன்னால் போய் நின்னுடலாம். அதே இடத்துல நின்னு கண்ண மூடி வணங்கிட்டு சட்டுனு திரும்பிடலாம்’ என்று அவர் வழி சொன்னார்.

மாமா சொன்ன ஆலோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ‘மெதுவா…. மெதுவா…..’ என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டே ஒருவர் தோளை ஒருவர் பிடித்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து கருவறைக்கு முன்னால் சென்று நின்றார்கள். இருட்டுக்குள் நிழலாக தெய்வத்தின் கரிய உருவத்தைப் பார்த்து தலைகுனிந்து வணங்கினர். பிறகு சென்ற வழியிலேயே ஒவ்வொரு அடியாக வைத்து திரும்பி நடக்கத் தொடங்கினர்.

சிக்கிமுக்கிக்கற்களைத் தேய்ப்பதன் வழியாக நெருப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்தபடியே இருந்தான் வீரன். அவனே எதிர்பாராத வகையில் சட்டென ஒரு நெருப்புப்பொறி தோன்றி சருகுகளிடையில் விழுந்தது. அக்கணமே நெருப்பு பற்றிக்கொள்ள எங்கெங்கும் வெளிச்சம் பரவியது. எதிர்பாராத வெளிச்சத்தில் கண்கள் கூசின. அனைவரும் கண்களை மூடிமூடித் திறந்தனர்.

அந்த வெளிச்சத்தில் கருவறைத் தெய்வத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் சென்னா. தெய்வத்தின் பின்னால் சுவர்மீது ஒரு பெரிய புலியின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. பெரிய முகம். பெரியபெரிய பற்கள். பெரிய கண்கள். பெரிய உடல். பெரிய நகங்கள். பாய்வதற்குத் தயாராக இருப்பதுபோன்ற தோற்றம். அதைப் பார்த்த கணமே இனம்புரியாத அச்சத்தில் மூழ்கினான் சென்னா. காட்டில் நேருக்கு நேர் பார்த்த புலி எழுப்பாத அச்சத்தை அச்சுவரில் தீட்டப்பட்டிருந்த புலியின் சித்திரம் எழுப்பியது. அவனைத் தாக்கி வீழ்த்துவதற்காக அந்தப் பேருருவம் தக்க தருணத்துக்காகக் காத்திருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.

எந்தக் கணமும் அந்தப் புலி தன் மீது பாய்ந்து தன்னைத் தாக்கும் என சென்னாவுக்குத் தோன்றியது. அவனால் அப்போது மூச்சுகூட விடமுடியவில்லை. விரைவில் வெளியேறிவிடலாம் என நினைத்துக்கொண்டு வாசலை நோக்கிப் பாய்ந்தான். அவன் கண்கள் அவனையறியமால் சுற்றுச்சுவர்கள் மீது படிந்தன. அச்சுவர்களிலும் புலிகளின் அதே பேருருவம். அதே கண்கள். அதே தோற்றம். தன்னைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் புலிகள் சூழ்ந்து நிற்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. அச்சத்தில் சென்னாவின் உடல் நடுங்கியது. என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொள்வதற்கு முன்பேயே சென்னா அந்த இடத்தில் மயங்கி விழுந்தான்.

‘ஐயோ’ என அலறியபடி அவனை நோக்கி அவனுடைய மாமா ஓடினார். அவன் மயங்கியிருந்தான். சுய உணர்வு இல்லை. உடனே இரு கைகளாலும் அவனைத் தூக்கி ஏந்தியபடி வெளியே வந்தார். எல்லோரும் சென்னாவைப் பார்ப்பதற்காக அவனைச் சூழ்ந்து நின்றனர். அவன் கன்னத்தைத் தொட்டு அசைத்துப் பார்த்தார் அவனுடைய மாமா. எந்த அசைவும் இல்லை. மூக்கின் கீழே விரலை வைத்து மூச்சைப் பரிசோதித்துப் பார்த்தார். மூச்சின் தடமே இல்லை. ‘ஐயோ, என் மருமகனே. தவமாய்த் தவமிருந்து என் அக்கா பெத்த பிள்ளையை இப்படி பறிகொடுத்துட்டேனே’ என்று அழுதார்.

சுற்றி நின்றிருந்தவர்கள் அனைவருடைய கண்களிலும் கண்ணீர் தேங்கியது. சிறிது நேரத்துக்கு முன்புவரை அந்தக் கூட்டத்தினரிடையில் நிலவிய மகிழ்ச்சித்தடம் முற்றிலும் அழிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது. உடனே நான்கைந்து பேர் அருகிலிருந்த மரங்களில் ஏறி பொருத்தமான கிளைகளை வெட்டி வீழ்த்தினார்கள். அக்கிளைகளை ஒன்றுடன் ஒன்றை இணைத்து கட்டிலைப்போல ஆக்கினார்கள். அதன் மீது சென்னாவின் உடலைத் தூக்கிக் கிடத்தினார்கள். பிறகு அதைச் சுமந்தபடி அரண்மனையை நோக்கி நடந்தனர். ‘ஐயோ, என் அக்காவுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே எனக்குப் புரியவிலையே…’ என்று சொல்லி வாய்விட்டுப் புலம்பியபடியே வந்தார் மாமா.

வேட்டையில் கொல்லப்பட்ட முயல், மான், புலி என விலங்குகளின் குவியல்கள் வாசலில் வந்து குவிவதைப் பார்த்துவிட்டு, வெற்றியோடு வருகை தரும் மகனுக்காகக் காத்திருந்த ராணி, மரக்கட்டில் மீது வைத்து சுமந்துவரப்பட்ட அவனுடைய உடலைப் பார்த்து மயக்கமுற்று விழுந்தாள். உடனே பணிப்பெண்கள் ஓடோடி வந்து அவளுடைய மயக்கம் தெளிய தேவையான சிகிச்சையைச் செய்தனர். ‘ஐயோ, அக்கா’ என்று வீறிட்டு தலையில் அடித்துக்கொண்டு அழுதார் அவளுடைய சகோதரர். செய்தி கேட்டு ஓடோடி வந்த ராஜாவும் சென்னாவின் உடலைப் பார்த்து இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். ‘எல்லாம் விதியின் பயன்’ என்று மனம் நொந்து பேசியபடி இருந்தார்.

மயக்கம் தெளிந்து எழுந்த ராணி, சென்னாவின் உடலை தன் மார்போடு சாய்த்துக்கொண்டு அழுதாள். குழந்தைவரம் கொடுத்த சிவபெருமான் சொன்ன வாசகம் நினைவுக்கு வந்து அவள் மனத்தை அழுத்தியது. ‘சிவனே. நீ சொன்னபடியே பதினாறு வயதில் என் மகனைப் பறிகொடுத்துட்டேனே’ என்று ஆற்றாமையோடு சொல்லிச்சொல்லி கண்ணீர் விட்டாள். ராஜாவால் எதுவும் பேச இயலவில்லை. ‘முட்டாளா இருந்தாலும் பரவாயில்லை, நூறு வருஷம் வாழற பிள்ளையைக் கொடுன்னு நாம கேட்டிருக்கலாம்’ என்று தனக்குத்தானே சொல்லி அழுதார்.

அரண்மனையில் இருந்தவர்கள் அனைவரும் இளவரசனின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். அதைக் கவனித்ததும் ராணி அவர்களைப் பார்த்து சத்தம் போட்டு தடுத்தாள்.

‘நான் அவனுக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துவைக்ணும்னு மனசுக்குள்ள நினைச்சிருந்தேன். அது நடக்கலை. ஆனாலும் நான் என் ஆசையை நிறைவேற்றிக்காம விடமாட்டேன். அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடி திருமணம் செய்வேன். இது சத்தியம். இதை நான் செய்து காட்டுவேன். அந்தத் திருமணம் நடக்கும்வரை அவனுடைய உடலை அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லவோ, அடக்கம் செய்யவோ அனுமதிக்கமாட்டேன்’.

அவளுடைய சூளுரையைக் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். ‘இறந்துபோன ஒருவனுக்கு யாரு இந்த உலகத்திலே பெண் கொடுப்பாங்க?. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? ஏன் இந்த ராணி இப்படி பைத்தியக்காரத்தனமா பேசுறா?’ என்று நினைத்துக்கொண்டனர். ஆனாலும் அவள் ராணி என்கிற காரணத்தால் யாரும் எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் நெஞ்சிலேயே அடக்கிக்கொண்டனர்.

அரண்மனை கருவூலத்திலிருந்த தங்க ஆபரணங்களையெல்லாம் ஒரு பெரிய மூட்டையில் போட்டுக் கட்டி எடுத்துவரச் செய்தாள் ராணி. அந்த மூட்டையை ஒரு மாட்டுவண்டியில் தூக்கிவைக்கச் சொன்னாள். பிறகு தன் அண்ணனையும் அவனுக்குத் துணையாக இன்னும் சில வீரர்களையும் அந்த வண்டியோடு செல்லும்படி சொன்னாள்.

‘இந்த ராஜ்ஜியத்தையே ஒரு சுத்து சுத்துங்க. என் மகனுக்கு யாரு பொண்ணு கொடுக்க தயாரா இருக்கறாங்களோ, அவுங்களுக்கு வண்டியில இருக்கிற இந்த தங்கமூட்டையை பரிசா கொடுத்துட்டு, அந்தப் பொண்ணை வண்டியில ஏத்திகிட்டு வாங்க.’

ராணியின் பேச்சைத் தட்டமுடியாமல் அவளுடைய சகோதரனும் பிற வீரர்களும் வண்டியை ஓட்டிக்கொண்டு ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு தெருவாகச் சென்றார்கள். வண்டி நிற்கும் இடங்களிலெல்லாம் ராணியின் கோரிக்கையை அறிவித்தபடி சென்றார்கள்.

அந்த ஊர்க் கடைசியில் ஒரு ஏழைக் குடும்பம் வசித்துவந்தது. அவருக்கு ஏழு பெண்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கும் அவரால் திருமணம் செய்துவைக்கமுடியவில்லை. மிகுந்த மனவேதனையோடு நாட்களைக் கடத்திவந்தார். மாட்டுவண்டியோடு வந்தவர்களின் கோரிக்கை அவருடைய காதில் விழுந்தது. உடனே அந்த வண்டியை நிறுத்தி, அவர்களிடம் சென்று ‘இறந்துபோன இளவரசனுக்கு நான் என் பொண்ணை மனப்பூர்வமா கல்யாணம் செஞ்சி வைக்கறேன்’ என்று சொன்னார்.

கோரிக்கையின் விவரம் அந்தப் பெரியவருக்குப் புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியாமல், அவர்கள் நிதானமான குரலில் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார்கள். அந்தப் பெரியவர் ‘நீங்க சொல்றது எனக்குத் தெளிவாவே புரியுதுங்க ஐயா. நான் என் பொண்ணை அனுப்பிவைக்கத் தயாரா இருக்கறேன். வாங்க’ என்று அமைதியாகச் சொன்னார்.

வந்த வேலை இவ்வளவு சீக்கிரமாக முடிந்ததில் ஓரளவு ஆறுதல் கொண்ட அக்குழுவினர் மாட்டுவண்டியை அந்தப் பெரியவரின் வீட்டுக்கு ஓட்டிச் சென்றனர். பெரியவர் வண்டிக்கு முன்னால் வழி சொல்லிக்கொண்டே சென்றார். வீட்டை அடைந்ததும் திண்ணையைக் காட்டி ‘ஒரு நிமிஷம் இப்படியே உக்காந்திருங்க. நான் வீட்டுக்குள்ள போய் விவரத்தை சொல்லி பொண்ணை தயார் செஞ்சி அழைச்சிட்டு வரேன்’ என்று சொன்னார். வண்டிக்குழுவினர் திண்ணையில் உட்கார்ந்து இளைப்பாறினர்.

வீட்டுக்குள் சென்ற பெரியவர் தன் மனைவியிடமும் பெண்களிடமும் வாசலில் வண்டி வந்து நின்றிருக்கும் விவரத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து தன் ஏழு மகள்களையும் பார்த்து ‘இந்தக் கல்யாண ஏற்பாட்டுல உங்கள்ல யாருக்கு விருப்பம் இருக்குதோ, அவுங்க போகலாம். நான் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டேன். ஆனா, யாராவது ஒருத்தவங்க போனாதான் கிடைக்கப்போற இந்த செல்வத்தால நம்ம குடும்பம் மேல வரும்’ என்றார்.

பெண்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் முகத்தைப் பார்த்தபடி எந்தப் பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் நின்றிருந்தனர். அப்போது எல்லோருக்கும் இளைய பெண்ணான சென்னவ்வா ‘அப்பா, நான் இந்தக் கல்யாணத்துக்குத் தயாரா இருக்கேன். என்னை அனுப்புங்கப்பா’ என்று முன்வந்தாள்.

அதுவரை திடமானவர் போல இருந்த அந்தப் பெரியவர் திடீரென உடைந்து அழத் தொடங்கினார். ‘நீ இந்த வீட்டுக்குக் குலதெய்வமா இருப்பம்மா’ என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றார். மற்ற பெண்கள் அவளுக்கு நல்ல உடைகளை உடுத்தி வெளியே அழைத்துவந்தனர். வண்டிக்காரர்கள் வண்டியிலிருந்த தங்கமூட்டையை இறக்கி அந்த வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டு, அந்தப் பெண்ணை உட்காரவைத்தார்கள். ‘போய்வா சென்னவ்வா. உனக்கு கொடுப்பினை இருந்தா சாவித்திரிக்கு செத்துப்போன புருஷன் உயிரோடு திரும்பவும் கிடைச்சமாதிரி உனக்கும் கிடைக்கட்டும்’ என்று கைகளை உயர்த்தி வாழ்த்தினார் பெரியவர்.

அடுத்த கணமே வண்டி புறப்பட்டது. அந்த வண்டி அந்தத் தெருவைக் கடக்கும்வரை கைகுவித்தபடி நின்றிருந்த பெரியவர் பிறகு ஒரு பெருமூச்சோடு வீட்டுக்குள் போனார்.

அரண்மனைக்குச் சென்றதுமே சென்னவ்வாவுக்குத் திருமண அலங்காரம் செய்தார்கள். செத்துப்போன சென்னாவுக்கும் மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டது. சிறிது நேரத்தில், எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களோடும் அந்தத் திருமணம் நடைபெற்று முடிந்தது. அனைவரும் அட்சதை தூவினார்கள். சென்னவ்வாவின் கழுத்தில் தாலி ஏறியது.

திருமணம் முடிந்த கையோடு சவ அடக்க ஏற்பாடுகளும் நடைபெற்றன. சென்னாவின் உடலைக் குளிப்பாட்டி, மாலையிட்டு பாடையில் கிடத்தினர். சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு, பாடையைக் தூக்குவதற்கு முற்பட்டனர். அந்த நேரத்தில் அங்கே நின்றிருந்த சென்னவ்வா மணப்பெண் கோலத்தோடு வேகமாக நடந்துவந்து அந்தப் பாடையில் சென்னாவின் உடலுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள்.

அதைப் பார்த்து அனைவரும் ‘இப்படி நீ செய்யக்கூடாதும்மா. நீ வீட்டுலதான் இருக்கணும்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொற்களைக் கேட்க சென்னவ்வா தயாராக இல்லை. அவள் மிகவும் உறுதியான குரலில் ‘நானும்தான் வருவேன். என்னை யாரும் தடுக்கமுடியாது. அவர் என்னுடைய கணவர். அவரைப் புதைக்கற இடத்துல என்னையும் சேர்த்துப் புதைங்க. அவர் இல்லாத உலகத்துல வாழ எனக்கு விருப்பமில்லை’ என்று தெரிவித்துவிட்டு உறுதியாக உட்கார்ந்துகொண்டாள்.

வேறு வழியில்லாமல் சென்னவ்வாவையும் சேர்த்து சுமந்துகொண்டு இடுகாட்டுக்குச் சென்றார்கள் பணியாட்கள். அவர்கள் இடுகாட்டை நெருங்கும் சமயத்தில் இடிமின்னலோடு கடுமையான மழை பொழியத் தொடங்கியது. இடுகாட்டில் பாடையை இறக்கிவைத்துவிட்டு, அனைவரும் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.

இரண்டுமூன்று மணி நேரங்களாக காத்திருந்தபோதும் மழை நிற்கவே இல்லை. கொஞ்சம்கொஞ்சமாக வலுத்து பேய்மழையாக மாறியது. புயல்போல காற்று வீசியது. கிழக்கு மூலையில் இருந்த ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெள்ளம்போல இடுகாட்டை நோக்கிப் புரண்டு வந்தது. அதைப் பார்த்து அச்சம் கொண்ட அனைவரும் இடுகாட்டைவிட்டு வெளியேறி தத்தம் வீட்டை நோக்கியும் அரண்மனையை நோக்கியும் ஓடத் தொடங்கினர்.

மெல்ல மெல்ல பொழுது அடங்கத் தொடங்கியது. எங்கெங்கும் இருள் சூழ்ந்தது. மழை ஓயவே இல்லை. அந்த நேரத்தில் கூட பாடையில் இளவரசனின் உடலுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தாள் அவள். மழை வெள்ளத்தில் அவளைச் சுற்றி சேறும் சகதியும் ஓடியது.

‘நான் என்ன செய்யறது? இதுதான் என் விதி’ என்று சொன்னபடி அந்தச் சேற்றில் கையை விட்டு அளைந்தபடி இருந்தாள் சென்னவ்வா. அவள் கைகள் தன்னிச்சையாக அந்தச் சேற்றை அள்ளிக் குழைத்து ஒரு உருண்டையாக உருட்டின. அந்த உருண்டையை மனம்போன போக்கில் அழுத்தியும் தட்டையாக்கியும் வெவ்வேறு வடிவமாக மாற்றி மாற்றிச் செய்தன. ஒருமுறை உருவாக்கிய வடிவம் சிவன் கோவில் நந்தியைப்போல இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

நந்தீஸ்வரா என்று மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள் சென்னவ்வா. அந்த நந்தியை தனக்கு முன்னால் நிற்கவைத்து, பல கோணங்களில் பார்த்து திருப்தியடைந்தாள். செத்துப்போன உடல்மீதிருந்த மாலையிலிருந்து பூக்களைப் பிரித்தெடுத்து அதன் மீது தூவினாள். தொடர்ந்து தனக்குத் தெரிந்த சிவன் பாடலை பக்தியோடு பாடத் தொடங்கினாள்.

அவள் பாடப்பாட அந்த நந்தி உருவம் தன் உடலை அசைப்பதுபோல இருந்தது. சில நொடிகளில் உண்மையிலேயே அவள் முன்னால் நந்தி உயிர்பெற்று எழுந்து நின்றது. ‘சென்னவ்வா, உன் பக்தி என்னை மெய்சிலிர்க்க வைக்குது. உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது. உனக்கு என்ன வேணும், கேள்’ என்று கேட்டது.

உடனே சென்னவ்வா கண்ணீரோடு தன் கதையையெல்லாம் நந்தியிடம் சொன்னாள். ‘என் புருஷனுடைய உயிர்தான் எனக்கு வேணும் நந்தீஸ்வரா. அவரோடு சேர்ந்து சிவபெருமான் பார்வதி மாதிரி நல்லவிதமா குடும்பம் நடத்தணும்’ என்று முறையிட்டாள். ‘உனக்காக நான் முயற்சி செய்றேன் சென்னவா, கவலைப்படாதே’ என்று ஆறுதல் சொன்னது நந்தி. அடுத்த கணமே அது மெல்ல அசைந்து கைலாசத்தை நோக்கிப் பறந்து சென்றது.

கைலாசத்தில் பார்வதியோடு உரையாடிக்கொண்டிருந்த சிவபெருமான் முன்னால் இறங்கி நின்று வணங்கியது நந்தி. உடனே சிவபெருமான் நந்தியை ஏறிட்டுப் பார்த்தார். உடனே ‘ஐயா, எனக்காக நீங்க ஒரு காரியம் செஞ்சிக் கொடுக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது நந்தி.

‘என்ன செய்யணும், சொல்’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘பூமியில நடக்கிற விஷயங்கள் எல்லாத்தையும் நீங்களும் பார்த்திருப்பீங்க. சென்னவ்வாவுடைய புருஷனுக்கு நீங்க மறுபடியும் உயிர் கொடுக்கணும். பாவம், ரொம்ப சின்ன பொண்ணு. செத்துப்போன வீட்டுக்காரன் பக்கத்துல அது உக்காந்திருக்கிறத பார்க்கப்பார்க்க மனசுக்கு சங்கடமா இருக்குது. அவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ நீங்க ஒரு வழி செய்யணும்.’

‘அது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இப்படியெல்லாம் எடுத்த உயிரை கொடுத்துகிட்டே போனா, அதுக்கு ஒரு முடிவே இருக்காது. உனக்காக, அந்த சென்னவ்வாவுக்கு சின்னதா ஒரு சோதனை வைக்கலாம். அவளுடைய எதிர்வினை எப்படி இருக்குதுன்னு கவனிக்கலாம். அதுக்கப்புறம் நாம் உயிரைத் திருப்பிக் கொடுக்கிறதைப்பத்தி நாம ஒரு முடிவெடுக்கலாம்’ என்றார் சிவபெருமான். ‘சரி ஐயா’ என்று ஏற்றுக்கொண்டது நந்தி.

சிவபெருமான் அக்கணமே ஒரு புலியை சென்னவ்வா அமர்ந்திருக்கும் இடுகாட்டுக்குச் சென்று தாக்குதல் நிகழ்த்தும்படி ஏவிவிட்டார். இருளும் மழையும் சேர்ந்திருந்த அந்தப் பொழுதில் சிவபெருமான் ஏவிய புலி சென்னவ்வாவுக்கு அருகில் சென்று நின்று உறுமியது. சென்னாவின் உடலை இழுத்துச் சென்று தின்ன அது முயற்சி செய்தது. அதைப் புரிந்துகொண்ட சென்னவ்வா உடனடியாக இளவரசனின் உடலை மறைத்தபடி குறுக்கே படுத்துக்கொண்டு ‘புலி அண்ணா, புலி அண்ணா, உனக்குப் பசிச்சா நீ என்னை வேண்டுமானா அடிச்சிச் சாப்பிடு. தயவுசெஞ்சி என் கணவரை விட்டுடு’ என்று கைகூப்பிக் கெஞ்சினாள்.

அவள் கண்ணீரோடு கெஞ்சியதைப் பார்த்து அந்தப் புலியின் மனம் கரைந்துவிட்டது. இளவரசனின் உடலை நோக்கி முன்வைத்த காலை தயக்கத்தோடு பின்னால் எடுத்துக்கொண்டது. ஒருகணம் சென்னவ்வாவைப் பார்த்தது. ‘உன்னைப் பார்த்தால் பாவமா இருக்குது. நான் அவனையும் சாப்பிடலை, உன்னையும் சாப்பிடலை, போதுமா?’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.

மறுகணமே கைலாசத்துக்குத் திரும்பிவந்து சிவபெருமான் முன்னால் நின்று வணங்கியது. உடனே சிவபெருமான் புலியை ஏறிட்டுப் பார்த்தார். ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது புலி.

‘சொன்ன வேலையைச் செய்யவிடாத அளவுக்கு உன்னை எது தடுத்தது, சொல்’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘சென்னவ்வாவுடைய பக்திதான் பெருமானே. அந்தச் சின்ன பொண்ண பார்க்க ரொம்ப பாவமா இருக்குது. செத்துப்போன வீட்டுக்காரன் பக்கத்துல அது உக்காந்திருக்கிறத பார்க்கப்பார்க்க மனசுக்கு சங்கடமா இருக்குது. கொல்லறதுக்கு மனசே வரலை. அவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ நீங்க ஒரு வழி செய்யணும் பெருமானே.’

‘அது அவ்வளவு சுலபமான காரியமில்லை’ என்று சொல்லிவிட்டு யோசனையில் மூழ்கினார் சிவபெருமான். தன் முயற்சி தோற்றுப்போனதை நினைத்து வருத்தத்தோடு ஒதுங்கி நின்றது புலி.

நீண்ட யோசனைக்குப் பிறகு சிவபெருமான் ஒரு சிங்கத்தை அந்த இடுகாட்டை நோக்கிச் செல்லுமாறு ஏவினார். அந்தச் சிங்கமும் சென்னவ்வாவின் கண்ணீரில் மனம் கரைந்து திரும்பி வந்து ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது. மேலும் அதுவும் சென்னவ்வாவுக்காக வாதாடியது.

சிங்கத்தின் வேண்டுகோளைக் கேட்டு சலித்துப்போன சிவபெருமான் அடுத்து ஒரு யானையை ஏவினார். அந்த யானையும் சென்னவ்வாவின் கண்ணீரைக் கண்டு மனம் இரங்கி திரும்பி வந்து ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது. மேலும் அதுவும் சென்னவ்வாவுக்காக வாதாடியது.

எல்லோரும் சென்னவ்வாவுக்காக வாதாடியதைக் கண்ட சிவபெருமான் தானே நேரில் பார்த்து நிலைமையைப் புரிந்துகொள்வதற்காக கைலாசத்திலிருந்து புறப்பட்டு இடுகாட்டுக்கு வந்தார். வழக்கம்போல ஒரு சாமியாரின் கோலத்தில் தோளில் ஒரு பிச்சைப்பையை மாட்டிக்கொண்டு இன்னொரு கையால் ஓர் ஊன்றுகோலை ஊன்றி ஊன்றி கொட்டும் மழையில் அவளுக்கு முன்னால் வந்து நின்றாள். ‘அம்மா, ஏதாவது தானம் செய்யுங்கம்மா’ என்று சென்னவ்வாவை நோக்கி கை நீட்டினார்.

இடுகாட்டில் மழையில் இறந்துவிட்ட உடலுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு ஒரு சாமியாருக்கு எதைத் தானமாகக் கொடுப்பது என்று புரியாமல் தவித்த சென்னவ்வா ஒருகணம் யோசனையில் மூழ்கினாள். மறுகணமே எவ்விதமான தயக்கமும் இல்லாமல் தன் கழுத்தில் தொங்கிய தங்கத்தாலியைக் கழற்றியெடுத்து சாமியார் நீட்டிய கையில் வைத்தாள்.

‘இதைக் கொடுக்கறேன்னு தயவுசெஞ்சி நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க ஐயா. இந்த இடுகாட்டுல உக்காந்துகிட்டு இந்த மழையில உங்களுக்கு வேற எதையும் கொடுக்கமுடியாத நிலையில இருக்கேன். என்னை மன்னிச்சிடுங்க’ என்று சொன்னாள் சென்னவ்வா.

சென்னவ்வாவின் செய்கை சிவபெருமானின் மனத்தைக் கரைத்துவிட்டது. உடனே அவர் அந்தத் தாலியை அவள் கழுத்திலேயே மீண்டும் அணிவித்துவிட்டு, இறந்துபோன இளவரசனை மீண்டும் உயிர்ப்பித்தார். ‘நூறாண்டு காலம் வாழ்க’ என்று சொல்லி இருவரையும் வாழ்த்தினார். தனக்கு அருகில் இருந்த இளவரசனின் உடலில் அசைவை உணர்ந்த சென்னவ்வா சாமியாருக்கு நன்றி சொல்லத் திரும்பினாள். அதற்குள் அவர் மறைந்துவிட்டார்.

அவர் சென்ற திசையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீரோடு நன்றியோடு கைகுவித்து வணங்கினாள் சென்னவ்வா. உயிர்பிழைத்த இளவரசன் சென்னா மெல்ல எழுந்து உட்கார்ந்தான். தான் இடுகாட்டில் இருப்பதையும் தனக்கு அருகில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதையும் பார்த்து அவன் குழப்பமுற்றான். அவன் குழப்பம் தீரும் வகையில் சென்னவ்வா பொறுமையாக எல்லாவற்றையும் விரிவாக அவனுக்கு எடுத்துரைத்தாள். பிறகு இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தடிக்குச் சென்று ஒதுங்கி விடியவிடிய கதைபேசி மகிழ்ந்தனர்.

காலையில்தான் மழை நின்றது. வெள்ளத்துக்கு அஞ்சி இடுகாட்டிலேயே பாடையை வைத்துவிட்டு ஓடிவிட்ட அனைவரும் மீண்டும் இடுகாட்டுக்கு வந்தனர். அங்கே சென்னாவும் சென்னவ்வாவும் மரத்தடியில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்தனர். பிறகு அவர்களிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் இருவரும் பொறுமையாக விளக்கம் கொடுத்தனர். அரண்மனையிலிருந்து ஒரு புதிய வண்டியை வரவழைத்து, அதில் இளவரசன் சென்னாவையும் சென்னவ்வாவையும் உட்காரவைத்து அரண்மனைக்கு ஓட்டிச் சென்றனர்.

வழிநெடுக அந்த ஊர்மக்கள் நின்று அந்த மணமக்களை வாழ்த்தினர். அரண்மனை வாசலிலேயே நின்றிருந்த ராஜாவும் ராணியும் அவ்விருவரையும் நெஞ்சோடு தழுவி மகிழ்ந்தனர். இறைவனின் கருணையே கருணை என கைலாசம் இருக்கும் திசையை நோக்கி எல்லோரும் கையை உயர்த்தி வணங்கினர். பிறகு ‘வலது காலை வச்சி உள்ள வாங்க’ என உரைத்து, மணமக்களை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள் ராணி.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல் appeared first on கிழக்கு டுடே.

  •  

ஒரு டால்ஃபின் பேச ஆரம்பித்த போது

 சாரா மைக்கை கையில் எடுத்துக் கொண்டு அரங்கின் மையத்திற்கு வந்து நின்றாள். லேசாக நடுங்கிய விரல்களால் தன் மேலங்கியை சரி...

The post ஒரு டால்ஃபின் பேச ஆரம்பித்த போது appeared first on சிறுகதைகள்.

  •  

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்

ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிகளும் புதர்களும் உயரமான மரங்களும் இருந்தன. ஒரு புதருக்கு அருகில் ஒரு சின்ன எறும்புப்புற்று இருந்தது. அந்தப் புற்றுக்குள் ஒரு அம்மா எறும்பும் ஒரு குட்டி எறும்பும் இருந்தன.

அந்தக் குட்டி எறும்பு அம்மா எறும்பைவிட எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு இடத்தில் ஒரு கணம் கூட அமைதியாகத் தங்கியிருக்காது. ஒரு புதரிலிருந்து இன்னொரு புதருக்கும் பிறகு அங்கிருந்து மற்றொரு புதருக்கும் ஊர்ந்து போய்க்கொண்டே இருக்கும். அதற்கு ஒரு வேலையும் கிடையாது. ஆனால் ஊர்ந்துகொண்டே இருக்கும் சுகத்துக்காகவே விழித்திருக்கும் நேரமெல்லாம் அப்படி தடதடவென ஓடிக்கொண்டே இருக்கும். அந்தக் குட்டி எறும்புக்கு அது ஒரு பொழுதுபோக்கு.

ஒருநாள் அது வேகமாக ஊர்ந்துகொண்டிருந்தபோது நிலம் வழுக்கி உருண்டு சென்று தண்ணீரில் விழுந்துவிட்டது. அதுவரை அச்சமென்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்துவிட்ட அந்தக் குட்டி எறும்புக்கு முதன்முதலாக அச்சம் ஏற்பட்டது. ‘அம்மா அம்மா, காப்பாத்துங்கம்மா’ என்று அம்மா எறும்பின் காதில் விழும் வகையில் அலறியது.

குட்டி எறும்பின் அலறலைக் கேட்டு அம்மா எறும்பு துடித்தது. தண்ணீரில் விழுந்து தவிக்கும் தன் குட்டி எறும்பின் நிலையைக் கண்டு அதன் உடல் நடுங்கியது. ‘சொன்ன பேச்சைக் கேக்காம இப்படி விழுந்து தானா துன்பத்தை வரவழைச்சிகிச்சே, இப்ப என்ன செய்வது?’ என்று நினைத்து வேதனைப்பட்டது.

‘ஐயோ, என் குட்டி எறும்பை யாராவது காப்பாத்துங்களேன்’ என்று அலறியது அம்மா எறும்பு. அதன் அலறலை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் அந்த அம்மா எறும்பு தவித்தது. வேகவேகமாக ஊர்ந்து சென்று கரைக்குப் பக்கத்தில் நின்று கதறித் துடிக்கும் குட்டி எறும்பைப் பார்த்து ஆறுதல் சொன்னது. அடுத்த கணமே மேலேறி வந்து உதவிக்கு யாராவது கிடைக்கமாட்டார்களா என்று நான்கு பக்கங்களிலும் பார்வையைச் சுழற்றித் தேடியது.

அப்போது கரையோரத்தில் எங்கிருந்தோ ஒரு தவளை தத்தித்தத்தி குதித்தபடியே வந்து நின்றதை எறும்பு பார்த்தது. உதவிக்கு ஆள் கிடைத்துவிட்டதை நினைத்து அதன் மனம் ஆறுதல் அடைந்தது. உடனே வேகவேகமாக தவளைக்கு அருகில் சென்று வணக்கம் சொல்லிவிட்டு, ‘தவளையண்ணா, தவளையண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கேட்டுக்கொண்டது. ‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது தவளை. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. எப்படியாவது அதைக் காப்பாத்துங்க தவளை அண்ணா. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்’ என்று கெஞ்சியது.

அம்மா எறும்பின் குரல் காதில் விழுந்தபோதும், எதுவுமே கேட்காதமாதிரி அந்தத் தவளை நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது. பிறகு அலட்சியமாக தன் முகத்தைத் திரும்பி அம்மா எறும்பைப் பார்த்து ‘என்ன சொன்ன நீ? எனக்கு சரியா காதுல விழலை. இன்னொரு தரம் சொல்லு’ என்று கேட்டது. ‘என் குட்டி எறும்பு தெரியாத்தனமா மண் சரிவில சிக்கி தண்ணீருக்குள்ள விழுந்து உயிருக்குப் போராடுது. தயவுசெஞ்சி காப்பாத்துங்க தவளை அண்ணா’ என்று மன்றாடியது அம்மா எறும்பு.

‘உன் குட்டி எறும்பைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? அதனால எனக்கு என்ன லாபம்? பேசாம போ. போ. யாரையும் என்னால காப்பாத்த முடியாது’ என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டது தவளை.

‘தவளையண்ணா, தவளையண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் உதவி கேட்பேன். தயவுசெஞ்சி வந்து காப்பாத்து தவளை அண்ணா’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘ஐய, ஒருதரம் சொன்னா உன் காதுல விழாதா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது தவளை.

அதைத் தொடர்ந்து தவளையிடம் எதுவும் கேட்க விருப்பமில்லாத அம்மா எறும்பு அடுத்து யாரிடம் உதவி கேட்கலாம் என நினைத்து அக்கம்பக்கமாகப் பார்த்தது.

அப்போது கரையோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்தது. உடனே ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா’ என்று அழைத்தபடி அதற்கு அருகில் வேகவேகமாக நகர்ந்து சென்றது. அதற்குள் அந்தப் பாம்பு தன் புற்றுக்கு அருகில் சென்றுவிட்டது. ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா. கொஞ்சம் நில்லுங்க’ என்று கூவியபடி மூச்சு வாங்கியவண்ணம் பாம்பின் முன்னால் சென்று நின்றது எறும்பு. ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது பாம்பு. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்லி விரட்டியடிச்சிடுச்சி. நீ வந்து அந்த தவளையப் புடிச்சி தின்னு புத்தி புகட்டணும். வாங்க. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்’ என்று மன்றாடியது.

பாம்பு ஒருகணம் அந்த எறும்பை விசித்திரமாகப் பார்த்தது. பிறகு ‘எனக்கு பசியே இல்லாத நேரத்துல நான் எப்படி யாரையாவது புடிச்சி சாப்பிடமுடியும். உனக்கு வேற வேலை இல்லையா? பேசாம போ. போ’ என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டது.

‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘நான் சொல்றது உன் காதுல விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது பாம்பு.

அதைத் தொடர்ந்து பாம்பிடம் எதுவும் கேட்க விருப்பமில்லாத அம்மா எறும்பு அடுத்து யாரிடம் உதவி கேட்கலாம் என நினைத்து அக்கம்பக்கமாகப் பார்த்தது.

அப்போது கரையோரமாக வசித்த ஒரு பாம்பாட்டியின் குடிசையைப் பார்த்தது. அவன் வீட்டுக்கு வெளியே கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் சென்ற அம்மா எறும்பு ‘பாம்பாட்டி அண்ணா, பாம்பாட்டி அண்ணா’ என்று அழைத்தபடி கட்டிலுக்கு அருகில் வேகவேகமாக நகர்ந்து சென்றது. அதற்குள் பாம்பாட்டி தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

‘பாம்பாட்டி அண்ணா, பாம்பாட்டி அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டான் பாம்பாட்டி. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்லி விரட்டியடிச்சிடுச்சி. அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். எனக்கு இப்ப பசிக்கலை. நான் சாப்பிடமாட்டேனு பாம்பு சொல்லிடுச்சி. நீ இப்பவே வந்து அந்தப் பாம்பை மயக்கிப் புடிச்சி அடக்கி உன் தொழிலுக்கு எடுத்துக்கோ’ என்று சொன்னது.

எறும்பினுடைய திட்டத்துக்கு பாம்பாட்டி உடன்படவில்லை. ‘என்கிட்ட ஏற்கனவே ஒரு பாம்பு இருக்குது. புதுசா எனக்கு எந்தப் பாம்பும் தேவையில்லை. என்னைத் தொல்லை பண்ணாத. தூங்க விடு. போ’ என்று விரட்டியடித்துவிட்டு மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

‘பாம்பாட்டி அண்ணா, பாம்பாட்டி அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘நான் சொல்றது உன் காதுல விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டினான் பாம்பாட்டி.

தன் திட்டம் தோல்வியடைந்ததைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என அதன் மனம் யோசனையில் மூழ்கியபடி அக்கம்பக்கம் பார்த்தது.

அப்போது ஒரு மரத்தடியில் நீண்டு செல்லும் வேர்களுக்கிடையில் ஒரு எலிவளையைப் பார்த்தது. உடனே அந்த வளைக்குப் பக்கத்தில் சென்று ‘எலி அண்ணா எலி அண்ணா’ என்று அவசரமாக அழைத்தது. நாலைந்து முறை குரல் கொடுத்த பிறகு வளையிலிருந்து எலி வெளியே வந்தது. அங்கே நின்றுகொண்டிருந்த எறும்பைப் பார்த்து ‘நீயா என்னைக் கூப்பிட்டாய்? என்ன விஷயம்?’ என்று கேட்டது.

‘எலி அண்ணா, எலி அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது எலி. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். அந்தப் பாம்பும் முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்தப் பாம்பை மயக்கிப் புடிச்சி எடுத்துக்கோன்னு பாம்பாட்டிகிட்ட சொன்னேன். அவனும் முடியாதுன்னு என்னை விரட்டி அடிச்சிட்டான். நீ அந்தப் பாம்பாட்டி வச்சிருக்கிற பாம்புக்கூடையைக் கடிச்சி பெரிசா ஒரு ஓட்டை போடணும். அந்தப் பாம்பு தப்பிச்சி ஓடிடும். அப்பதான் அந்தப் பாம்பாட்டிக்கு புத்தி வரும்’ என்று சொன்னது.

எறும்பினுடைய திட்டத்துக்கு எலி உடன்படவில்லை. ‘அவசியமே இல்லாம பாம்பாட்டி கூடையைக் கடிச்சி நான் ஏன் ஓட்டை போடணும். போ. போ. போய் வேற ஏதாச்சிம் வேலையைப் பாரு’ என்று விரட்டியது. பிறகு ‘நான் ஓய்வெடுக்கணும்’ என்று முணுமுணுத்துக்கொண்டே வளைக்குள் புகுந்துகொண்டது.

‘எலி அண்ணா, எலி அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘நான் சொல்றது உன் காதுல விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது எலி.

தன் திட்டம் தொடர்ந்து தோல்வியடைவதைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என அதன் மனம் யோசனையில் சிறிது தொலைவு சென்றது.

ஒரு செடிக்குப் பக்கத்தில் ஒரு பூனை உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு நம்பிக்கையோடு, அந்தப் பூனைக்குப் பக்கத்தில் சென்று வணக்கம் சொன்னது. ‘என்ன விஷயம்?’ என்று கேட்டது பூனை.

‘பூனை அண்ணா, பூனை அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது பூனை. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். அந்தப் பாம்பும் முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்தப் பாம்பை மயக்கிப் புடிச்சி எடுத்துக்கோன்னு பாம்பாட்டிகிட்ட சொன்னேன். அவனும் முடியாதுன்னு என்னை விரட்டி அடிச்சிட்டான். அந்தப் பாம்பாட்டி வச்சிருக்கிற பாம்புக்கூடையைக் கடிச்சி ஓட்டை போட்டு அவனுக்குப் புத்தி புகட்டுன்னு எலிகிட்ட சொன்னேன். அந்த எலியும் எதுவும் செய்யமுடியாதுனு சொல்லி விரட்டியடிச்சிட்டுது. நீ அந்த எலியைப் புடிச்சி கரகரனு கடிச்சி சாப்பிடணும்’ என்று சொன்னது.

எறும்பினுடைய திட்டத்துக்கு பூனை உடன்படவில்லை. ‘எந்தக் காரணமும் இல்லாம ஒரு எலியை நான் ஏன் கடிச்சிக் கொல்லணும்? போ. போ. போய் வேற ஏதாச்சிம் வேலையைப் பாரு’ என்று விரட்டியடித்தது பூனை.

தன் திட்டம் பூனையிடமும் தோல்வியடைந்ததைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என திட்டமிட்டபடி தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு நாய் கரையில் ஏறி நிற்பதைப் பார்த்தது.

உடனே நம்பிக்கையோடு, அந்த நாய்க்குப் பக்கத்தில் சென்று வணக்கம் சொன்னது. ‘என்ன விஷயம்?’ என்று கேட்டது நாய்.

குட்டி எறும்பு தண்ணீரில் விழுந்த செய்தியில் தொடங்கி பூனை பாம்புக்கூடையில் ஓட்டை போட மறுத்த செய்தி வரைக்கும் எல்லா விஷயங்களையும் சுருக்கமாக அந்த நாயிடம் எடுத்துச் சொன்னது எறும்பு. பிறகு அந்த நாய்க்கு வேகமூட்டும் வகையில் ‘நாய் அண்ணா, நாய் அண்ணா, நீ அந்தப் பூனையை இந்த வட்டாரத்தைவிட்டே துரத்திடிக்கணும். அப்பதான் அதனுடைய திமுரு அடங்கும்’ என்று கேட்டுக்கொண்டது.

அந்த நாய் எறும்பைப் பார்த்து விசித்திரமாகச் சிரித்தது. ‘ஒரு பூனை உனக்கு உதவி செய்யலைன்னா, அது உனக்கும் பூனைக்கும் உள்ள பிரச்சினை. அந்தப் பிரச்சினைக்குள்ள நான் எப்படி நடுவுல வரமுடியும்? போ. போ. உன் பிரச்சினையை நீயே தீத்துக்கோ. நடுவுல என்னை இழுத்துவிடாதே’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டது.

தன் திட்டம் தோல்வியடைந்ததைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபடியே சிறிது தொலைவு சென்றது.

ஒரு மரத்தடியில் யாரோ எப்போதோ உடைத்துப் போட்ட ஒரு கிளை உலர்ந்து கிடந்தது. பார்ப்பதற்கு உருட்டுக்கட்டை போல இருந்தது. யாருமே தனக்கு உதவவில்லை என்கிற ஆற்றாமையோடு அந்தக் கட்டையிடம் சென்று ‘கட்டை அண்ணா, கட்டை அண்ணா. யாருமே எனக்கு உதவி செய்யலை. நீயாவது எனக்கு உதவி செய்வியா?’ என்று சொல்லிப் புலம்பியது. அதன் குரல் கட்டையின் காதில் விழுந்தது. ‘என்ன உதவி வேணும், சொல்’ என்று பரிவோடு கேட்டது கட்டை.

குட்டி எறும்பு தண்ணீரில் விழுந்த செய்தியில் தொடங்கி பூனையை விரட்டியடிக்க நாய் மறுத்த செய்தி வரைக்கும் எல்லா விஷயங்களையும் சுருக்கமாக அந்தக் கட்டையிடம் எடுத்துச் சொன்னது எறும்பு. பிறகு அந்தக் கட்டைக்கு வேகமூட்டும் வகையில் ‘கட்டை அண்ணா, கட்டை அண்ணா. எனக்கு உதவி செய்ய மறுத்த அந்த நாயை நீதான் ஓட ஓட அடிச்சி விரட்டணும். இந்த உலகத்துல யாருமே எனக்கு உதவி செய்யலை. நீயாவது எனக்கு இந்த உதவியைச் செய்யணும்’ என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டது.

எறும்பின் மனத்தில் இருந்த சீற்றத்தை கட்டை புரிந்துகொண்டது. ‘உனக்கு நான் கட்டாயமா உதவி செய்றேன். கவலைப்படாதே’ என்று நம்பிக்கையூட்டும் குரலில் ஆறுதல் சொன்னது. தொடர்ந்து ‘ஒரு விஷயத்தை நீ புரிஞ்சிக்கணும். நானா பறந்துபோய் யார்மேலயும் விழுந்து அடிக்கமுடியாது. யாராவது என்னைப் புடிச்சி அவுங்கள நோக்கி வீசணும். முதல்ல நீ என்னை எடுத்து அந்த நாயைப் பார்த்து வீசு. நான் போய் அடிக்கறேன்’ என்று சொன்னது. அதைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கியது அம்மா எறும்பு. ‘நான் இருக்கற அளவுக்கு உன் உருவத்தை என்னால தூக்கமுடியுமா? அதெல்லாம் நடக்கற காரியமா, சொல்’ என்று தளர்ந்த குரலில் பதில் சொன்னது. அதே சமயத்தில் அடுத்த என்ன செய்யலாம் அடுத்து என்ன செய்யலாம் என அதன் ஆழ்மனம் யோசனையில் மூழ்கியது.

சிறிது தொலைவில் ஆலமரத்தின் நிழலில் உட்கார்ந்து ஒரு சிறுவன் பாடம் படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய உரத்த குரலைக் கேட்டபிறகுதான் அவன் அங்கே இருப்பதை அம்மா எறும்பு உணர்ந்தது. உடனே அதன் மனத்தில் ஒரு திட்டம் உதித்தது. வேகவேகமாக அந்தச் சிறுவனை நோக்கி ஊர்ந்து சென்றது. பாடத்தில் மூழ்கியிருந்த சிறுவன் தன்னை நோக்கி ஒரு எறும்பு ஊர்ந்துவருவதைக் கவனிக்கவில்லை. அவனை நெருங்கி வந்த அம்மா எறும்பு ‘தம்பி, தம்பி, எனக்கு ஒரு உதவி செய்வியா?’ என்று கேட்டது.

பேசும் எறும்பைப் பார்த்து படிப்பதை நிறுத்திய சிறுவன் ‘உதவியா? என்ன உதவி?’ என்று கேட்டான். ‘அதோ, அங்க இருக்கற கட்டையை எடுத்து அந்த நாயை அடிக்கணும்’ என்று சுட்டிக் காட்டியது. ‘நான் எதுக்கு அந்த நாயை அடிக்கணும். போ. போ. எனக்கு படிக்கிற வேலை இருக்குது’ என்று சலித்துக்கொண்டான் சிறுவன். அவன் பதிலைக் கேட்டு அம்மா எறும்புக்கு துயரம் பொங்கியது. ‘உயிரே இல்லாத அந்தக் கட்டை என் துக்கத்தைப் புரிஞ்சிகிட்டு எனக்கு உதவி செய்ய தயாரா இருக்குது. ஆனா உயிரு இருக்கற நீங்க எல்லாருமே இரக்கமே இல்லாதவங்களா இருக்கறீங்க. உங்களைவிட அந்தக் கட்டை ரொம்ப மேல்’ என்று புலம்பியது.

‘நீ என்ன வேணும்ன்னாலும் சொல்லிக்கோ. எனக்கு பாடம் படிக்கிற வேலை இருக்குது’ என்று திரும்பி உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான் சிறுவன்.

‘இரு இரு. உனக்கு நான் சரியான பாடம் கத்துக் குடுக்கறேன்’ என்று சொன்ன அம்மா எறும்பு மனத்துக்குள் கறுவிக்கொண்டே மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று அவன் தொடையின் மேல் ஏறி நறுக்கென்று கடித்தது.

‘ஐயோ, இது என்ன? ஏன் இப்படி கடிக்கிற?’ என்று அலறினான் சிறுவன்.

‘எனக்கு உதவி செய்றேன்னு சொல்லு. அப்பதான் கடிக்கிறத நிறுத்துவேன்’ என்றபடி மீண்டும் அழுத்தமாக அவன் தொடையைக் கடித்தது அம்மா எறும்பு.

‘சரி சரி. உதவி செய்றேன். முதல்ல கடிக்கிறத நிறுத்து’ என்று அலறிக்கொண்டே எழுந்து நின்றான். அம்மா எறும்பு அவனைப் பார்த்தது.

‘என்ன செய்யணும், சொல்லு’ என்று கேட்டான் சிறுவன்.

‘எடு. அந்தக் கட்டையை எடு. எடுத்து அந்த நாயை அடி’ என்றது அம்மா எறும்பு.

அந்தச் சிறுவன் வேகமாகச் சென்று அருகிலிருந்த அந்தக் கட்டையை எடுத்து நாயை நோக்கி குறிபார்த்து வேகமாக வீசினான். நாயின் வயிற்றில் அந்தக் கட்டை சரியாகத் தாக்கியது. ‘ஐயோ’ என்று வலியால் அலறிக்கொண்டு எழுந்தது நாய் தனக்கு எதிரில் அம்மா எறும்பையும் அதற்கு உதவியாக ஒரு சிறுவனும் நின்றிருப்பதைப் பார்த்து அச்சம் கொண்டது. ‘ஐயோ, அடிக்காத. நான் என்ன செய்யணும், சொல்’ என்று வலியோடு கேட்டது.

‘போ. போய் அந்தப் பூனையை விரட்டிப் புடி’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே நாய் அந்தப் பூனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

நாய் விரட்டிவருவதைப் பார்த்ததுமே தப்பிப்பதற்காக அங்குமிங்கும் வளைந்து வளைந்து ஓடியது பூனை. எந்தப் பக்கம் சென்றாலும் பின்னாலேயே விரட்டிவரும் நாயைப் பார்த்து அச்சத்தில் மூழ்கியது. இறைக்க இறைக்க ஓடியபடியே அம்மா எறும்பைப் பார்த்து ‘ஐயோ, என்னை விரட்டவேணாம்னு சொல்லு. நான் என்ன செய்யணும். சொல்லு. அதைச் செய்யறேன்’ என்று அலறியது.

‘போ. போய் அந்த எலியை விரட்டிப் புடி’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே அந்தப் பூனை எலியை நோக்கி ஓடியது. பூனை தன்னை விரட்டி வருவதை உணர்ந்ததும் எலி நடுங்கியது. அங்குமிங்கும் ஓடி மறைந்துகொள்ள முயற்சி செய்தது. பூனையின் வேகத்தின் முன்னால் அதன் முயற்சி பலனின்றி தோல்வியில்தான் முடிந்தது. மூச்சிறைக்க ஓடி களைத்துப்போன எலி ‘ஐயோ. என்னை விரட்ட வேணாம்னு பூனைகிட்ட சொல்லு. நான் என்ன செய்யணும், அதைச் சொல்லு. நீ சொல்றபடி செய்றேன்’ என்று அம்மா எறும்பிடம் கேட்டது. ‘போ. அந்தப் பாம்பாட்டியுடைய கூடையில கடிச்சி ஓட்டை போடு’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே தூக்கத்தில் மூழ்கியிருந்த பாம்பாட்டியின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பாம்புக்கூடையில் ஒருபக்கமாக கடித்துக் கடித்து ஓட்டை போட்டுவிட்டுச் சென்றது.

பாம்பாட்டி அப்போதும் நல்ல உறக்கத்தில் மூழ்கியிருந்தான். பாம்புக்கூடையில் சுருண்டிருந்த பாம்பு ஓட்டை வழியாக மெல்ல வெளியே வந்தது. முற்றிலுமாக வெளியே வந்ததும் விடுதலை கிடைத்ததாக நினைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க நினைத்தது.

தன் முன்னால் நின்றிருந்த அம்மா எறும்பைப் பார்த்து பாம்பு ஒரு கணம் திகைத்து நின்றது. அம்மா எறும்பு தன் கதையை எல்லாம் அந்தப் பாம்பிடம் விளக்கமாகச் சொன்னது. அதைத் தொடர்ந்து ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா, நீ விடுதலையாவறதுக்கு நான்தான் காரணம். நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கேட்டுக்கொண்டது.

‘என்ன செய்யணும், சொல்’ என்று இரக்கத்தோடு கேட்டது பாம்பு.

‘அங்க கரையோரமா ஒரு தவளை உக்காந்திட்டிருக்குது பாரு. அதை நீ ஒரே விழுங்கா விழுங்கணும்’ என்றது அம்மா எறும்பு.

‘ஆகா. நானும் ரொம்ப பசியோடு இருக்கேன். எங்கே இருக்குது அந்தத் தவளை. அதைக் காட்டு’ என்று தலையைத் திருப்பி உற்றுப் பார்த்தது பாம்பு. அம்மா எறும்பு அது உட்கார்ந்திருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டியது. உடனே பாம்பு அதை நோக்கி வேகமாகச் சென்றது.

தன்னை நோக்கி வேகமாக ஒரு பாம்பு வருவதையும் அதற்குப் பின்னால் அம்மா எறும்பு நின்றிருப்பதையும் பார்த்த தவளை அச்சத்தில் உடல் நடுங்கியது. அங்கிருந்தபடியே தப்பிக்க இடம் தேடி தத்தளித்தபடி ‘ஐயோ எறும்பே. நான் என்ன செய்யணும் சொல். என்னைக் கொல்ல வேணாம்’ என்று கதறியது. ‘சீக்கிரமா தண்ணியில குதிச்சி, உயிருக்குத் தவிச்சிட்டிருக்கிற என் குட்டி எறும்பைக் காப்பாத்தி கரைக்கு அழைச்சிட்டு வா’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு.

உடனே தவளை ஒரே பாய்ச்சலில் தண்ணீருக்குள் தாவியது. அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குட்டி எறும்பை நெருங்கி தன் முதுகில் ஏறி உட்கார்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டது. அதுவரை மூச்சுவிட தடுமாறிக்கொண்டிருந்த குட்டி எறும்பு வேகமாகச் செயல்பட்டு சட்டென அந்தத் தவளையின் முதுகில் ஏறி அமர்ந்தது. அப்போதுதான் அதற்கு போன உயிர் திரும்பிவந்த மாதிரி இருந்தது. நிம்மதியாக மூச்சு விட்டது. தவளை மெதுவாக கரைக்கு வந்து சேர்ந்தது. குட்டி எறும்பும் அதன் முதுகிலிருந்து இறங்கி வந்து அம்மா எறும்போடு சேர்ந்துகொண்டது.

பாம்புக்கும் தவளைக்கும் அம்மா எறும்பு நன்றி சொல்லிவிட்டு தன் புற்றை நோக்கி ஊர்ந்து சென்றது. குட்டி எறும்பைப் பாதுகாப்பாக புற்றுவரை அழைத்துச் சென்று தங்கவைத்தது. பிறகு தொடக்கத்தில் நின்றிருந்த இடத்துக்கு மீண்டும் தனிமையில் திரும்பி வந்தது. ஆபத்து சமயத்தில் தனக்கு உதவ மறுத்த பாம்புக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று அதன் மனம் திட்டமிட்டது.

தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த பாம்பாட்டி தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்த பாம்புக்கூடையில் ஓட்டை இருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தான். கூடைக்குள் இருந்த பாம்பு தப்பித்துச் சென்றிருப்பதை உணர்ந்து திகைப்பில் மூழ்கினான். இது யார் செய்த வேலையாக இருக்கும் என்று தெரியாமல் அவன் குழப்பத்தோடு அமர்ந்திருந்தான். அந்த நேரத்தில் அவனுக்கு முன்னால் சென்று நின்றது அம்மா எறும்பு.

‘கூடைக்குள்ள இருந்த பாம்பு தப்பிச்சிடுச்சின்னு நினைச்சி கவலைப்படாதே பாம்பாட்டி அண்ணா. நான்தான் என்னுடைய சொந்தக் காரணத்துக்காக அதைத் தப்பிக்க வைச்சேன். அதுக்கு ஒரு காரணம் இருக்குது. உனக்கு வேற ஒரு பாம்பு கிடைக்க ஏற்பாடு செய்றேன். அந்தப் பாம்பு இருக்கற இடம் எனக்குத் தெரியும். நீ என் கூட வந்தா, நான் அந்த இடத்தைக் காட்டுவேன். நீ மகுடி ஊதி அதைப் புடிச்சி எடுத்துக்கலாம்.’

அம்மா எறும்பு சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது பாம்பாட்டிக்குப் புரிந்தது. மறுபேச்சில்லாமல் மகுடியோடும் புதிய கூடையோடும் அம்மா எறும்புக்குப் பின்னாலேயே சென்றான். சிறிது தொலைவு சென்றதும் அம்மா எறும்பு தனக்கு உதவிக்கு வராமல் ஏளனம் செய்த பாம்பு வசிக்கும் புற்றை அந்தப் பாம்பாட்டிக்கு அடையாளம் காட்டியது.

பாம்பாட்டி அந்தப் புற்றுக்கு அருகில் சென்று மகுடியை எடுத்து ஊதினான். புற்றிலிருந்து பாம்பு வெளியே வந்து படமெடுத்தபடி நின்றது. பாம்பாட்டி அதை லாவகமாகப் பிடித்து தன் கூடைக்குள் சுருட்டி வைத்தான். தொலைவிலிருந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மா எறும்பைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு புன்னகைத்தபடி தன் குடிசையை நோக்கி நடந்து சென்றான்.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம் appeared first on கிழக்கு டுடே.

  •  

அறிவியல் புனை கதைகள்

பதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது.


செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுரை.....


உலக அறிவியல் புனைவு இலக்கியத் தோற்றம் குறித்து இதுவரை தமிழில் பேசப்படவில்லை என்ற குறையை நீக்குமுகமாக....

1.தமிழில் சில வரவுகள்.

தமிழில் ஏற்கனவே அறிவியல் புனைவு இலக்கிய வகைகள் ஒரு சில தோன்றியுள்ளன. பெ.நா.அப்புசுவாமி ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதியதோடு கால எந்திரம் ( Time Machine – Herbert George Wells ) என்ற மொழிபெயர்ப்பு அறிவியல் புதினத்தையும் விஞ்ஞானக் கதைகள் என்ற தாமே இயற்றிய அறிவியல் புனைகதை நூலையும் வெளியிட்டுள்ளார். சுஜாதாவின் திசைக் கண்டேன் வான் கண்டேன் ( திருமகள் நிலையம் ), 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ', எம்.ஜி.சுரேஷின் '37' ஆகிய குறிப்பிடத்தக்க அறிவியல் புதினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுஜாதாவின் 'விஞ்ஞானச் சிறுகதைகள்',மலையமானின் 'அறிவியல் கதைகள்', நெல்லை சு.முத்துவின் 'நான்காம் பரிமாணம்' ஜெயமோகனின் 'விசும்பு' பலர் மொழிபெயர்த்து இயற்றியும் வெளியிட்டுள்ள 'எதிர்காலம் என்று ஒன்று' ஆகிய அறிவியல் புனைகதை நூல்கள் வெளியாகியுள்ளன.

என்றாலும் உலக அறிவியல் புனைவின் தோற்றம் குறித்தோ, வளர்ச்சிக் கட்டங்கள் குறித்தோ ஏதும் தமிழில் எழுதப்படவில்லை. இந்நிலையில் மணவை முஸ்தபாவின் 'அறிவியல் படைப்பிலக்கியம்' நூலைத் தவிர அறிவியல் புனைவிலக்கியம் குறித்த நூலேதும் வெளியிடப்படவில்லை. எனவே, அறிவியல் புனைவு இலக்கியம் குறித்து எழுத வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

2.அறிவியல் புனைவெனும் சொல்லின் நிலைபேறு

இங்கே இவ்விலக்கிய வகைக் குறித்த தமிழ்ச் சொல்லின்படி மலர்ச்சியையும் ( Evolution ) கூற விரும்புகிறேன். முதலில் விஞ்ஞானக்கதை, அறிவியல் கதை, விஞ்ஞானச் சிறுகதை, அறிவியல் படைப்பிலக்கியம் போன்ற சொற்கள் பயன்பட்டு 1994 இல் 'எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்' என்ற நூலில் நான் அறிமுகம் செய்த 'அறிவியல் புனைகதை', 'அறிவியல் புனைவு', 'அறிவியல் புனை இலக்கியம்' ஆகிய சொற்கள் தரமுற்று அண்மையில் வெளியிடப்பட்ட விசும்பு, எதிர்காலமென்று ஒன்று, 37 ஆகிய நூல்களில் இச்சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

3.அறிவியல் புனைவின் தோற்றம்

உலக அளவில் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலம் பற்றி பொதுவான ஒருமித்த ஒப்புதலுடைய கருத்து உருவாகாமலேயே உள்ளது. சிலர் பிளாட்டோவின் 'அட்லாண்டிஸ்' கதையை, அதாவது கி.மு. 350 தொடக்கமாகக் கூறுகின்றனர். வேறு சிலர் 'கில்காமெஷ்' ( Gilgamesh ) காப்பியத்தை, அதாவது கி.மு 2400 ஐத் தொடக்கமாகக் கூற விரும்புகின்றனர்.

இவையிரண்டும் மிகவும் பொருளற்றனவாகும். அறிவியல் புனைவு புத்தறிவியலின் தோற்றத்தோடேதான் தோன்ற முடியும். ஏனெனில், அது நடப்பில் உள்ள சமூகத்தை விட உயர்நிலை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற சமூகச் சூழ்நிலை வளமார்ந்த கற்பனையோடு புனைந்துரைக்க வேண்டும். எனவே அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக மாற்றமடைதல் பற்றிய உறுதிவாய்ந்த கண்ணோட்டம் தோன்றிய பிறகே அறிவியல் புனைகதை தோன்ற வாய்ப்பு ஏற்படும். இதனால் முதல் தொழில் புரட்சி காலக்கட்டத்திற்கு மிக நெருக்கமாகவே அறிவியல் புனைவின் தோற்றம் அமைய முடியும். எனவே இதற்கு முந்தைய சூரிய, நிலாப் பயணக் கற்பனையெல்லாம் அற்புத நவிற்சியேயாகும். கி.மு 150 இல் சாமோசாட்டாவால் இயற்றப்பட்ட 'லூசியனின் மெய்வரலாறு' விவரிக்கும் நிலாப்பயணமும், பாரதத் தொன்மத்தில் அனுமான் சூரியப்பழத்தை விழுங்கும் விவரிப்பும் உயர்வு நவிற்சியேயாகும்.

இந்தக் கருத்தை மதிப்பவர்கள் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளாகக் கொள்கின்றனர். அதாவது 1818 ஆம் ஆண்டில் கவிஞர் ஷெல்லியின் துணைவியாரான மேரி ஷெல்லி இயற்றிய 'ஃபிராங்ஸ்ட்டைன்' என்ற புதின உருவாக்கத்தை அறிவியற் புனைவின் தோற்றமா கக் கொள்கின்றனர். சிலர் இதையும் 1765 இல் ''ஹொராஸ் வால்போல்'' இயற்றிய ''ஒட்ராண்டோக் கோட்டை'' போன்றவற்றையும் கோதிக் வகைப் புதினமாகவே கருதுவோரும் உண்டு. எனினும் அதற்குப் பின் வெளியான ஆலன் போ ( Edgar Allan Poe -1809.01.19 – 1849.10.07 ), ஹாத்தார்ன் ( Hawthorne July 4, 1804 – May 19, 1864 ) போன்றோரின் இலக்கியப் படைப்புக்களை, அறிவியல் புனைவின் தோற்றமாகக் கருதுவோரும் உண்டு.

இந்நிலையில் உண்மையான / சரியான அறிவியல் புனைகதையின் தோற்றமாக 'ஜூல் வெர்னே'( Jules Verne ) என்பவர் 1863 ஆம் ஆண்டில் இயற்றிய ''வளிமக் கூண்டில் ஐந்து வாரங்கள்'' ( Five Weeks in a Balloon - Download this e-book for free ) என்ற புதினத்துடன் அறிவியல் புனைகதையின் தோற்றத்தை இனங்காணலாம். இவர்தான் முதன்முதலாக கோதிக் வகை புனைவின் தாக்கமேதும் இன்றி அறிவியல் புனைகதைகளை முற்றிலும் புதிய முறையில் எழுதினார். இவர் மட்டுமே அறிவியல் புனை கதைகளை எழுதி முதன் முதலாகப் பெரும் பொருள் ஈட்டினார். புகழின் உச்சியையும் அடைந்தார். எனவே 1863 ஆம் ஆண்டே மிகத் தெளிவாக வரையறுக்க முடிந்த அறிவியல் புனைகதையின் தோற்றமாகும். இதையும் மறுக்கும் வாதமும் நடப்பில் உண்டு.

கி.மு 2400, கி.மு 350, கி.மு 150, கி.பி 1818 அல்லது 1863 ஆகிய எந்தக் காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றியதாகக் கருதினாலும் அதன் மெல்லிய இழைப்புரி நீண்டநெடுங்கால இலக்கியப் படிகளின் ஊடாகத் தோன்றி முகிழ்ந்ததெனக் கூறலாம் . 1920 களுக்கு முன்பு மிகச் சிலரே அறிவியல் புனைவு இலக்கியத்தில் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜூல் வெர்னே ( Jules Gabriel Verne - 1828.02.08 – 1905.03.24 ), எச்.ஜி.வெல்ஸ், ஆகிய இருவர் மட்டுமே. வேண்டுமானால் திருமதி மேரி ஷெல்லியையும் இவர்களோடு கருதலாம்.

அப்படியென்றால், பேரளவில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றிப் பரவலாக வாசிக்கப்பட்டது எப்போது? என்ற கேள்வியை இயல்பாகக் கேட்கத் தோன்றும். அறிவியல் புனைவிலக்கியம் படைப்பில் திரளான எழுத்தாளர் ஈடுபட்டது எப்போது? என்ற வினாவையும் தொடுக்கத் தோன்றலாம். மற்ற இலக்கியவினங்களைப் போன்ற விரிந்த புலவளர்ச்சி எப்போது ஏற்பட்டது? என்ற வினாவும் எழலாம். அறிவியல் புனைவிலக்கியச் செம்மல்களாக விளங்கும் ராபர்ட் ஹீன்லீன், ஆர்த்தர் சி.கிளார்க், அய்சக் அசிமோவ், அன்னி மெக்காஃபிரே, ஃபிராங்கு ஹெர்பட், ரே பிராட்பரி, உர்சுலா கே.லீ குவின் போன்றோர் உருவாகிய அறிவியற் புனைவின் பொற்காலம் அல்லது அறிவியற் புனைவின் செவ்வியற் காலம் எது? எனும் அடிப்படைக் கேள்வி எழுகிறது.

இத்தகைய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது ''அறிவியல் புனைவு இதழ்'' ( Magazine Science Fiction ) என்ற இதழின் தோற்றமே எனலாம். இதன் முதல் இதழ் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதைப் பதிப்பித்தவர் ஹியூகோ கெர்ன்ஸ்பேக் ( Hugo Gernsback) என்பவராகும். இவர் பெயரால் அறிவியல் புனைவு விருதொன்று ''ஹியூகோ கெர்ன்ஸ்பேக் '' ( Hugo Award ) என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

இதையும் மறுப்பவர்களும் உண்டு. இந்த அறிவியல் இதழ் அரைகுறைப் படிப்பாளிகளுக்காக மிகமட்டமான மஞ்சள் தாளில் இலக்கியத் தரமற்ற ''குடிசைப் புகுதி'' இலக்கியத்தை ( Gheo Literature ) வெளியிட்டதெனக் கருதுவோரும் உண்டு. இதை முதன்மை இலக்கியப் போக்கினர் அருவருப்பான கண்ணோட்டத்தோடே நோக்கினர் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. அவர்கள் இவ்விலக்கிய வகையை இலக்கியமாகவே கருதவில்லை என்பதே நடப்பியல் உண்மை.

இதிலும் ஓரளவு பொருளில்லாமல் இல்லை. ஏனெனில் அ.பு.இ ( M.S.F ) வெளியிட்ட 90 விழுக்காடு கதைகள் மட்டமான பதினாட்டையாண்டு ( Teenage ) இளம் பருவக் கற்பனைகளாகவே உருவெடுத்தன என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு ஸ்டார்ஜன் எழுதிய விதி ( Law ) என்ற புனைவு அடிக்கடி எடுத்துக்காட்டாக கூறப்படுவதுண்டு. என்றாலும் அ.பு.இ ( M.S.F ) பல இளைஞர்களை தங்களது புனைவுத் திறைமைக் கூர்மைப்படுத்திக் கொள்ள உதவியது. மேலும் இந்த இதழ்தான் அவர்கள் வேறுவகை இலக்கிய வகைப் புனைவுக்குள் புகாமல் தடுத்தது. அக்காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் மக்களிடையே பரவலாகப் புகழ் பெறவில்லை, எனினும் அத்துறையில் சில எழுத்தாளர்கள் புகழ்ச்சி அடைய அ.பு.இ ( M.S.F ) இதழ் வழிவகுத்த்து. வியல் புனைபுனைகதை இலக்கியத்தைப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்து உலகில் தவழவிட்டது. முதலில் நாலுகால் நடைக்கும் பிறகு தத்தி நடக்கவும் பயிற்சி தந்தது.

இந்த நிலையில் அ.பு.இ ( M.S.F ) இதழைக் கண்டு முகஞ்சுழித்து வெறுத்து ஒதுக்கியவர்கள் பத்தாம்பசலி இலக்கியப் பண்டிதர்களேயாவர். இவர்களில் சிலரும் இவ்விதழில் அறிவியல் புனைகதை எழுதிப் புகழ் பெற்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிதாகிறது. எனவே இவர்கள் தாம் ஏறிய ஏணியை எட்டி உதைத் மனப்பான்கினர்.

இப்போது அ.பு.இ ( M.S.F ) இதழின் பணிகளைக் கருதுவோம். அந்த இதழ் அவ்வளவு எளிதாக உருவாகவில்லை. காரணம் அந்தக் காலத்தில் அறிவியல் புனைவு இலக்கியம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெறாமலிருந்ததே. அதில் மிகச் சிலரே எழுதினர். அவர்களிடம் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தும் அளவுக்குப் பொருள் வளமும் இல்லை. இதழைத் தொடங்கிய கெர்ன்ஸ் பேக் (Hugo Gernsback) இதழைத் தக்கவைத்திட எச்.ஜி.வெல்ஸ், ஜூல் வெர்னே ஆகிய இருவரது அறிவியல் புனைவுப் படைப்புகளை வெளியிட வேண்டியிருந்தது. எனினும் மெல்ல மெல்ல புதிய எழுத்தாளர்களைக் கவர்ந்திழுக்கலானது.

இந்த எழுத்தாளர்கள் எழுத்துத் தொழிலுக்கே முற்றிலும் புதியவர்களாகவிருந்தனர். மேலும் அவர்களது எழுத்துத் திறமையும் போதுமான அளவுக்கு அமையவில்லை. அறிவியல் புனைவிலக்கிய வரையறையைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிகளாகவும் 'அதியற்புதச் சாகசப்' ( Romantic ) புனைவர்களாகவுமே இருந்தனர். எனவே அர்களிடமிருந்து மிகவும் தரங்குறைந்த மஞ்சளிதழ்ப் படைப்புக்களே கிடைத்தன. எனவே 1920 களில் தரமான அறிவியல் புனைவிலக்கியம் உருவாகவில்லை என்பதே உண்மை.

இருந்தாலும், அக்காலப் படைப்புக்களே சற்றுத் தரம் வாய்ந்தனவாக அமையத் தொடங்கின. இதற்குச் சில விதிவிலக்குகளும் இல்லாமலில்லை. இதில் விளைந்த ஓர் அரிய படைப்பு 'விண்வெளித் துப்புரவாளன்' Amazing Stories என்ற இதழில் தொடராக வெளியாகியது.

இந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க அறிவியல் புதினமேதும் உருவாகவில்லை. குறும்புதினங்களே குறிப்பிடத்தக்க தரத்துடன் விளங்கின. அவையும் ஒரே இதழில் வெளியிடத்தக்க அளவுடைய சிறு கதைகளாகவே அமைந்தன. எனவே மிகச் சிறந்த எழுத்தாளர்களும் இக்காலகட்டத்தில் குறும்புதினங்கள் படைப்பதிலேயே கவனம் செலுத்தினர்.

மெல்ல மெல்ல 1930களில் அறிவியல் புனைவிலக்கியம் பொதுக் கவனமீர்ப்புக்கு ஆளாகத் தொடங்கியது. எனினும் அப்போதும் அறிவியல் புனைவின் தரம் நிலைபேறடையவில்லை. மஞ்சளிதழ்த் தரமே மேலோங்கியது. எனினும் சீரிய மையக் கருக்கள் தோன்றி மலர்ந்தன, வாசகச் சிந்தனையும் விரிவடைந்திடலானது.

இதற்கிடையில் 1930களின் முன்னணி இதழாக 'அதிர்ச்சிதரும் கதைகள்'(Astounding Stories) என்ற இதழ் தோன்றியது.

1930, ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட முதல் இதழே களைகட்டத் தொடங்கிவிட்டது. முந்தைய இதழைப் புறந்தள்ளி வளரலானது. இன்னொரு காரணம் கெர்ன்ஸ்பேக்கால் முந்தைய இதழில் புறக்கணிக்கப்பட்ட ஹாரி பேட்ஸ் (Harry Bates) இந்த இதழின் ஆசிரியராகப் பதவியேற்றதேயாகும். மேலும் இந்த இதழ் எழுத்தாளர்களுக்குக் கணிசமான தொகையை வழங்கியது. அத்தோடு ஹாரி பேட்ஸ் முழுமுனைப்போடு சுறுசுறுப்பாக செய்லபட்டதும் இதழை வேகமாக முன்னேற வழிவகுத்தது. அத்தோடு இவர் கெர்ன்ஸ் பேக் பின்பற்றிய கதையில் நீதியுரைத்தல் போக்கைக் கைகழுவிவிட்டு, அறிவியல் புனைவில் ஆழமான கருக்களை விதைப்பதில் பெருங்கவனம் செலுத்தலானார். எனினும் 1933 மார்ச் இதழோடு அதன் வெளியீட்டாளரான வில்லியம் கிளேட்டன் செலவைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மஞ்சளறிக்கை வெளியிட நேர்ந்தது.. அவர் மட்டுமா, நாடே அன்று பெரும் பொரிளாதாரச் சரிவைச் சந்தித்தது. இதற்கிடையில் அந்த இதழ் 1933 அக்டோபர் மாதத்தில் ஸ்ட்ரீட் அண்டு ஸ்மித் வெளியீட்டகத்திற்குக் கை மாறியது. எஃப்.ஓர்லின் டிரமெயின் இதழின் ஆசிரியரானார்.

டிரமெயின் இதழின் பொறுப்பில் 4 ஆண்டுகள் இருந்தார். அறிவியல் புனைவில் பலவகைச் சிந்தனை மாற்றங்களுக்கு வித்திட்டார். பழைய கருவிகளில் புதிய மாற்றங்களை உருவாக்கியதோடன்றி, புதிய கருபாடுகளுக்கு ( Notions ) வழிவகுத்தார். இது வாசகப் பேராதரவைத் திரட்டியது. அப்பேராதரவினால் இதழ் பிறகு அச்சுறுத்தலேதுமின்றி தொடர்ந்து நிலைபெறலானது. இதனால் 1930கள் காலகட்டம் அறிவியல் புனைவின் செவ்வியற் காலமாக ( Classical Period ) உருவெடுத்தது.



இக்காலகட்டச் சிந்தனை மாற்றப் புனைவுக்கு எடுத்துக்காட்டாக மர்ரே லீன்ஸ்ட்டரின் ( Murray Leinster ) ( புனை பெயர் வில்லியம் எஃப். ஜெர்கின்ஸ் ) 'காலத்தின் பக்கவாட்டுப் பயணம்' ( Side wise in Time) என்ற கதையைக் கூறலாம். இது 1934 ஜூன் இதழில் வெளியானது. இது புடவிகளின் ( Universes ) இணைநிலைக்கால ஓடைகள் என்ற புதிய கருதுகோளை உருவாக்கியது. ஒரே புள்ளியில் இக்காலவோடை நடப்பில் உள்ள பல பாய்வுப் போக்குகளில் எந்தவொரு பாய்வுப் போக்கையும் பின்பற்றலாம் என்ற கருத்தை வெளியிட்டது. இந்த ஸின்ஸ்ட்டீரியக் கருதுகோள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குவைய அண்டவியிலில் ( Quantum Cosmology ) கருதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வழக்கத்திற்கு மாறான டிரமெய்ன் காலக்கதை, அவ்விதழின் முந்தைய ஆசிரியரான ஹாரி பேட்ஸ் என்பவரால் படைக்கப்பட்டது. கதையின் பெயர் 'ஆ! அனைத்தும் சிந்தனைமயம்' ( Alas, All Thinking ) என்பதாகும். இது 1935 ஜூன் இதழில் வெளியாகியது. படிமலர்ச்சியின் ஒரு சீரழிவுப் போக்கைப் படம் பிடித்தது.

டிரமெய்ன் காலத்துப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜான்.டபிள்யூ.கேம்பெல்(John W. Campbell) ஆவார். இவர் எஃப்.எஃப்.ஸ்மித்தைப் பின்பற்றி மீ அறிவியல் ( Super Science ) புனைகதைகளை எழுதத் தொடங்கினார். அத்துறையில் இவரால் ஸ்மித்தின் இடத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பிறகு இவர் டான்.ஏ.ஸ்டூவார்ட் என்ற புனை பெயரில் மேலும் நுட்பம் வாய்ந்த கதைகளை எழுதலானார். இக்கதைகள் இலக்கியத் தரத்தோடு உணர்ச்சித் ததும்பல் மிக்கமைந்தன. இவரது 'அந்தியொளி' ( Twilight ) என்ற கதை 1934, நவம்பர் மாதம் 'அதிர்ச்சிதரும் கதைகள்' ( Astounding Stories ) இதழில் வெளியாகியது.

ஸ்டூவர்டின் மிகச் சிறந்த நெடுங்கதை 'யார் அங்கே போகிறது?' ( Who Goes There? ) அதே இதழில் 1938 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியது. இது மதி நுட்பமும் அச்சுறுத்தல் திறனும் வாய்ந்திருந்தது.

'யார் அங்கே போகிறது?' வெளியான அதே வேளையில் அறிவியல் புனைவில் மற்றொரு புரட்சியும் ஏற்பட்டது. டிரமெய்ன் 'அதிர்ச்சிதரும் கதைகள்' . இதழின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, இதழின் ஆசிரியரான ஜான்.டபிள்யூ.கேம்பெல், அறிவியல் பற்றியும் அறிவியலாளர் பற்றியும் மேலும் நம்பகமும் தரமும் வாய்ந்த புனைவாக்க திறமைசாலிகளைத் தேடலானார்.

இவர் முதலில் இப்புலத்தில் கொடிகட்டிப் பறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தார். ஹொரேஸ் கோல்டு ( Horace Gold ) என்பவர் கிளைடு கிரேன் கேம்பல் ( Clyde Crane Cambell ) என்ற புனைபெயரில் பல சிறந்த அறிவியல் புனைகதைகளை டிரமெய்ன் தலைமையில் எழுதினார். புதிய சூழலில் அவரால் தனது புனை பெயரைத் தொடர முடியவில்லை. எனவே, அவரது கதையான 'வடிவம் என்னும் பொருண்மை' முதன்முதலாக அவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகியது. இது, 1938, டிசம்பர் மாத இதழில் வெளியானது. இது தனது உருவத்தால் பல மேம்பாடுகளையும் குறைபாடுகளையும் சந்தித்தவரது பட்டறிவை இயல்பான விவரிப்பால் வக்கணையோடு நவின்றது.

டிரமெய்ன் காலத்தில் எழுதத் தொடங்கி முதிர்நிலைப் பட்டறிவுற்ற மற்றோர் எழுத்தாளர் எல்.ஸ்பிரேக் டி கேம்ப் என்பவராவார். இவரது முதல் கதை 1937 செப்படம்பர் இதழில் வெளியாகியது. அதற்குப் பிறகு இவர் பல பெயர்பெற்ற கதைகளை வடித்தளித்தார். இவர் அறிவியல், வரலாறு ஆகிய இரு புலங்களில் வல்லவர். எனவே இவரது கதைகள் இருபுலத் துல்லியம் வாய்ந்தனவாக அமைந்தன். அறிவியல் புனைவை நகைச்சுவை ததும்ப எழுதிய மிகச் சிலருள் இவரும் ஒருவர். இவர் இக்காலத்தில் தானே ஒரு துணையிதழை நடத்தி, தனது முழு வல்லமையையும் வெளிக்கொணர்ந்தார்.

டி.கேம்ப் தனது இதழில் முதல் தர எழுத்தாளராக விளங்கினார். அதில்
'பிரித்து ஆள்' ( Divide and Rule ) என்ற கதையை 1939, ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டார். இது இடைக்கால வீரமும் புத்தறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைப் போக்கும் பின்னிப் பிணைந்த பேரின்பக் கிளர்வு மூட்டும் கதையாக விளங்கியது.

மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் 1930 களில் வெளியாகிய செவ்வியற்கால அறிவியல் புனைவின் ஆகச்சிறந்த ஆக்கங்களாக அமைந்தன. இவை அறிவியல் புனைவிலக்கியத்தின் தனித்தன்மையையும் புனைவாற்றலையும் பறைசாற்றியதோடு, அறிவியற் புனைவின் காத்திரமான ( காழ்திறம் வாய்ந்த ) தோற்றத்திற்கு கட்டியம் கூறின எனலாம்.

*************************

தமிழ் இணைய உலகில் அறிவியல் புனைவு என்றால் அதன் மறுபெயர் சுஜாதா என்று கூறும் பலருக்காகவும் ஒரு போட்டி, பரிசுடன் கூடிய ஒரு போட்டி.

கேள்வி - எழுத்தாளர் சுஜாதாவின் இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் பக்கம் இரண்டில் ( Science Fictions Page - Two ) பட்டியிலிடப்பட்டுள்ள புத்தகங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் என்ன?

பரிசு - சரியான விடை கூறும் வாசகருக்கு விருபா தளத்தில் 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புதிய புத்தகங்களில் இருந்து வாசகர் விரும்பும் ஏதாவது ஒரு புத்தகம். 2009.01.18 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சித் திடலில் வழங்கப்படும்.

*************************

  •  

அறிவியல் புனை கதைகள்

பதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது.


செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுரை.....


உலக அறிவியல் புனைவு இலக்கியத் தோற்றம் குறித்து இதுவரை தமிழில் பேசப்படவில்லை என்ற குறையை நீக்குமுகமாக....

1.தமிழில் சில வரவுகள்.

தமிழில் ஏற்கனவே அறிவியல் புனைவு இலக்கிய வகைகள் ஒரு சில தோன்றியுள்ளன. பெ.நா.அப்புசுவாமி ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதியதோடு கால எந்திரம் ( Time Machine – Herbert George Wells ) என்ற மொழிபெயர்ப்பு அறிவியல் புதினத்தையும் விஞ்ஞானக் கதைகள் என்ற தாமே இயற்றிய அறிவியல் புனைகதை நூலையும் வெளியிட்டுள்ளார். சுஜாதாவின் திசைக் கண்டேன் வான் கண்டேன் ( திருமகள் நிலையம் ), 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ', எம்.ஜி.சுரேஷின் '37' ஆகிய குறிப்பிடத்தக்க அறிவியல் புதினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுஜாதாவின் 'விஞ்ஞானச் சிறுகதைகள்',மலையமானின் 'அறிவியல் கதைகள்', நெல்லை சு.முத்துவின் 'நான்காம் பரிமாணம்' ஜெயமோகனின் 'விசும்பு' பலர் மொழிபெயர்த்து இயற்றியும் வெளியிட்டுள்ள 'எதிர்காலம் என்று ஒன்று' ஆகிய அறிவியல் புனைகதை நூல்கள் வெளியாகியுள்ளன.

என்றாலும் உலக அறிவியல் புனைவின் தோற்றம் குறித்தோ, வளர்ச்சிக் கட்டங்கள் குறித்தோ ஏதும் தமிழில் எழுதப்படவில்லை. இந்நிலையில் மணவை முஸ்தபாவின் 'அறிவியல் படைப்பிலக்கியம்' நூலைத் தவிர அறிவியல் புனைவிலக்கியம் குறித்த நூலேதும் வெளியிடப்படவில்லை. எனவே, அறிவியல் புனைவு இலக்கியம் குறித்து எழுத வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

2.அறிவியல் புனைவெனும் சொல்லின் நிலைபேறு

இங்கே இவ்விலக்கிய வகைக் குறித்த தமிழ்ச் சொல்லின்படி மலர்ச்சியையும் ( Evolution ) கூற விரும்புகிறேன். முதலில் விஞ்ஞானக்கதை, அறிவியல் கதை, விஞ்ஞானச் சிறுகதை, அறிவியல் படைப்பிலக்கியம் போன்ற சொற்கள் பயன்பட்டு 1994 இல் 'எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்' என்ற நூலில் நான் அறிமுகம் செய்த 'அறிவியல் புனைகதை', 'அறிவியல் புனைவு', 'அறிவியல் புனை இலக்கியம்' ஆகிய சொற்கள் தரமுற்று அண்மையில் வெளியிடப்பட்ட விசும்பு, எதிர்காலமென்று ஒன்று, 37 ஆகிய நூல்களில் இச்சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

3.அறிவியல் புனைவின் தோற்றம்

உலக அளவில் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலம் பற்றி பொதுவான ஒருமித்த ஒப்புதலுடைய கருத்து உருவாகாமலேயே உள்ளது. சிலர் பிளாட்டோவின் 'அட்லாண்டிஸ்' கதையை, அதாவது கி.மு. 350 தொடக்கமாகக் கூறுகின்றனர். வேறு சிலர் 'கில்காமெஷ்' ( Gilgamesh ) காப்பியத்தை, அதாவது கி.மு 2400 ஐத் தொடக்கமாகக் கூற விரும்புகின்றனர்.

இவையிரண்டும் மிகவும் பொருளற்றனவாகும். அறிவியல் புனைவு புத்தறிவியலின் தோற்றத்தோடேதான் தோன்ற முடியும். ஏனெனில், அது நடப்பில் உள்ள சமூகத்தை விட உயர்நிலை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற சமூகச் சூழ்நிலை வளமார்ந்த கற்பனையோடு புனைந்துரைக்க வேண்டும். எனவே அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக மாற்றமடைதல் பற்றிய உறுதிவாய்ந்த கண்ணோட்டம் தோன்றிய பிறகே அறிவியல் புனைகதை தோன்ற வாய்ப்பு ஏற்படும். இதனால் முதல் தொழில் புரட்சி காலக்கட்டத்திற்கு மிக நெருக்கமாகவே அறிவியல் புனைவின் தோற்றம் அமைய முடியும். எனவே இதற்கு முந்தைய சூரிய, நிலாப் பயணக் கற்பனையெல்லாம் அற்புத நவிற்சியேயாகும். கி.மு 150 இல் சாமோசாட்டாவால் இயற்றப்பட்ட 'லூசியனின் மெய்வரலாறு' விவரிக்கும் நிலாப்பயணமும், பாரதத் தொன்மத்தில் அனுமான் சூரியப்பழத்தை விழுங்கும் விவரிப்பும் உயர்வு நவிற்சியேயாகும்.

இந்தக் கருத்தை மதிப்பவர்கள் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளாகக் கொள்கின்றனர். அதாவது 1818 ஆம் ஆண்டில் கவிஞர் ஷெல்லியின் துணைவியாரான மேரி ஷெல்லி இயற்றிய 'ஃபிராங்ஸ்ட்டைன்' என்ற புதின உருவாக்கத்தை அறிவியற் புனைவின் தோற்றமா கக் கொள்கின்றனர். சிலர் இதையும் 1765 இல் ''ஹொராஸ் வால்போல்'' இயற்றிய ''ஒட்ராண்டோக் கோட்டை'' போன்றவற்றையும் கோதிக் வகைப் புதினமாகவே கருதுவோரும் உண்டு. எனினும் அதற்குப் பின் வெளியான ஆலன் போ ( Edgar Allan Poe -1809.01.19 – 1849.10.07 ), ஹாத்தார்ன் ( Hawthorne July 4, 1804 – May 19, 1864 ) போன்றோரின் இலக்கியப் படைப்புக்களை, அறிவியல் புனைவின் தோற்றமாகக் கருதுவோரும் உண்டு.

இந்நிலையில் உண்மையான / சரியான அறிவியல் புனைகதையின் தோற்றமாக 'ஜூல் வெர்னே'( Jules Verne ) என்பவர் 1863 ஆம் ஆண்டில் இயற்றிய ''வளிமக் கூண்டில் ஐந்து வாரங்கள்'' ( Five Weeks in a Balloon - Download this e-book for free ) என்ற புதினத்துடன் அறிவியல் புனைகதையின் தோற்றத்தை இனங்காணலாம். இவர்தான் முதன்முதலாக கோதிக் வகை புனைவின் தாக்கமேதும் இன்றி அறிவியல் புனைகதைகளை முற்றிலும் புதிய முறையில் எழுதினார். இவர் மட்டுமே அறிவியல் புனை கதைகளை எழுதி முதன் முதலாகப் பெரும் பொருள் ஈட்டினார். புகழின் உச்சியையும் அடைந்தார். எனவே 1863 ஆம் ஆண்டே மிகத் தெளிவாக வரையறுக்க முடிந்த அறிவியல் புனைகதையின் தோற்றமாகும். இதையும் மறுக்கும் வாதமும் நடப்பில் உண்டு.

கி.மு 2400, கி.மு 350, கி.மு 150, கி.பி 1818 அல்லது 1863 ஆகிய எந்தக் காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றியதாகக் கருதினாலும் அதன் மெல்லிய இழைப்புரி நீண்டநெடுங்கால இலக்கியப் படிகளின் ஊடாகத் தோன்றி முகிழ்ந்ததெனக் கூறலாம் . 1920 களுக்கு முன்பு மிகச் சிலரே அறிவியல் புனைவு இலக்கியத்தில் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜூல் வெர்னே ( Jules Gabriel Verne - 1828.02.08 – 1905.03.24 ), எச்.ஜி.வெல்ஸ், ஆகிய இருவர் மட்டுமே. வேண்டுமானால் திருமதி மேரி ஷெல்லியையும் இவர்களோடு கருதலாம்.

அப்படியென்றால், பேரளவில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றிப் பரவலாக வாசிக்கப்பட்டது எப்போது? என்ற கேள்வியை இயல்பாகக் கேட்கத் தோன்றும். அறிவியல் புனைவிலக்கியம் படைப்பில் திரளான எழுத்தாளர் ஈடுபட்டது எப்போது? என்ற வினாவையும் தொடுக்கத் தோன்றலாம். மற்ற இலக்கியவினங்களைப் போன்ற விரிந்த புலவளர்ச்சி எப்போது ஏற்பட்டது? என்ற வினாவும் எழலாம். அறிவியல் புனைவிலக்கியச் செம்மல்களாக விளங்கும் ராபர்ட் ஹீன்லீன், ஆர்த்தர் சி.கிளார்க், அய்சக் அசிமோவ், அன்னி மெக்காஃபிரே, ஃபிராங்கு ஹெர்பட், ரே பிராட்பரி, உர்சுலா கே.லீ குவின் போன்றோர் உருவாகிய அறிவியற் புனைவின் பொற்காலம் அல்லது அறிவியற் புனைவின் செவ்வியற் காலம் எது? எனும் அடிப்படைக் கேள்வி எழுகிறது.

இத்தகைய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது ''அறிவியல் புனைவு இதழ்'' ( Magazine Science Fiction ) என்ற இதழின் தோற்றமே எனலாம். இதன் முதல் இதழ் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதைப் பதிப்பித்தவர் ஹியூகோ கெர்ன்ஸ்பேக் ( Hugo Gernsback) என்பவராகும். இவர் பெயரால் அறிவியல் புனைவு விருதொன்று ''ஹியூகோ கெர்ன்ஸ்பேக் '' ( Hugo Award ) என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

இதையும் மறுப்பவர்களும் உண்டு. இந்த அறிவியல் இதழ் அரைகுறைப் படிப்பாளிகளுக்காக மிகமட்டமான மஞ்சள் தாளில் இலக்கியத் தரமற்ற ''குடிசைப் புகுதி'' இலக்கியத்தை ( Gheo Literature ) வெளியிட்டதெனக் கருதுவோரும் உண்டு. இதை முதன்மை இலக்கியப் போக்கினர் அருவருப்பான கண்ணோட்டத்தோடே நோக்கினர் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. அவர்கள் இவ்விலக்கிய வகையை இலக்கியமாகவே கருதவில்லை என்பதே நடப்பியல் உண்மை.

இதிலும் ஓரளவு பொருளில்லாமல் இல்லை. ஏனெனில் அ.பு.இ ( M.S.F ) வெளியிட்ட 90 விழுக்காடு கதைகள் மட்டமான பதினாட்டையாண்டு ( Teenage ) இளம் பருவக் கற்பனைகளாகவே உருவெடுத்தன என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு ஸ்டார்ஜன் எழுதிய விதி ( Law ) என்ற புனைவு அடிக்கடி எடுத்துக்காட்டாக கூறப்படுவதுண்டு. என்றாலும் அ.பு.இ ( M.S.F ) பல இளைஞர்களை தங்களது புனைவுத் திறைமைக் கூர்மைப்படுத்திக் கொள்ள உதவியது. மேலும் இந்த இதழ்தான் அவர்கள் வேறுவகை இலக்கிய வகைப் புனைவுக்குள் புகாமல் தடுத்தது. அக்காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் மக்களிடையே பரவலாகப் புகழ் பெறவில்லை, எனினும் அத்துறையில் சில எழுத்தாளர்கள் புகழ்ச்சி அடைய அ.பு.இ ( M.S.F ) இதழ் வழிவகுத்த்து. வியல் புனைபுனைகதை இலக்கியத்தைப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்து உலகில் தவழவிட்டது. முதலில் நாலுகால் நடைக்கும் பிறகு தத்தி நடக்கவும் பயிற்சி தந்தது.

இந்த நிலையில் அ.பு.இ ( M.S.F ) இதழைக் கண்டு முகஞ்சுழித்து வெறுத்து ஒதுக்கியவர்கள் பத்தாம்பசலி இலக்கியப் பண்டிதர்களேயாவர். இவர்களில் சிலரும் இவ்விதழில் அறிவியல் புனைகதை எழுதிப் புகழ் பெற்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிதாகிறது. எனவே இவர்கள் தாம் ஏறிய ஏணியை எட்டி உதைத் மனப்பான்கினர்.

இப்போது அ.பு.இ ( M.S.F ) இதழின் பணிகளைக் கருதுவோம். அந்த இதழ் அவ்வளவு எளிதாக உருவாகவில்லை. காரணம் அந்தக் காலத்தில் அறிவியல் புனைவு இலக்கியம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெறாமலிருந்ததே. அதில் மிகச் சிலரே எழுதினர். அவர்களிடம் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தும் அளவுக்குப் பொருள் வளமும் இல்லை. இதழைத் தொடங்கிய கெர்ன்ஸ் பேக் (Hugo Gernsback) இதழைத் தக்கவைத்திட எச்.ஜி.வெல்ஸ், ஜூல் வெர்னே ஆகிய இருவரது அறிவியல் புனைவுப் படைப்புகளை வெளியிட வேண்டியிருந்தது. எனினும் மெல்ல மெல்ல புதிய எழுத்தாளர்களைக் கவர்ந்திழுக்கலானது.

இந்த எழுத்தாளர்கள் எழுத்துத் தொழிலுக்கே முற்றிலும் புதியவர்களாகவிருந்தனர். மேலும் அவர்களது எழுத்துத் திறமையும் போதுமான அளவுக்கு அமையவில்லை. அறிவியல் புனைவிலக்கிய வரையறையைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிகளாகவும் 'அதியற்புதச் சாகசப்' ( Romantic ) புனைவர்களாகவுமே இருந்தனர். எனவே அர்களிடமிருந்து மிகவும் தரங்குறைந்த மஞ்சளிதழ்ப் படைப்புக்களே கிடைத்தன. எனவே 1920 களில் தரமான அறிவியல் புனைவிலக்கியம் உருவாகவில்லை என்பதே உண்மை.

இருந்தாலும், அக்காலப் படைப்புக்களே சற்றுத் தரம் வாய்ந்தனவாக அமையத் தொடங்கின. இதற்குச் சில விதிவிலக்குகளும் இல்லாமலில்லை. இதில் விளைந்த ஓர் அரிய படைப்பு 'விண்வெளித் துப்புரவாளன்' Amazing Stories என்ற இதழில் தொடராக வெளியாகியது.

இந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க அறிவியல் புதினமேதும் உருவாகவில்லை. குறும்புதினங்களே குறிப்பிடத்தக்க தரத்துடன் விளங்கின. அவையும் ஒரே இதழில் வெளியிடத்தக்க அளவுடைய சிறு கதைகளாகவே அமைந்தன. எனவே மிகச் சிறந்த எழுத்தாளர்களும் இக்காலகட்டத்தில் குறும்புதினங்கள் படைப்பதிலேயே கவனம் செலுத்தினர்.

மெல்ல மெல்ல 1930களில் அறிவியல் புனைவிலக்கியம் பொதுக் கவனமீர்ப்புக்கு ஆளாகத் தொடங்கியது. எனினும் அப்போதும் அறிவியல் புனைவின் தரம் நிலைபேறடையவில்லை. மஞ்சளிதழ்த் தரமே மேலோங்கியது. எனினும் சீரிய மையக் கருக்கள் தோன்றி மலர்ந்தன, வாசகச் சிந்தனையும் விரிவடைந்திடலானது.

இதற்கிடையில் 1930களின் முன்னணி இதழாக 'அதிர்ச்சிதரும் கதைகள்'(Astounding Stories) என்ற இதழ் தோன்றியது.

1930, ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட முதல் இதழே களைகட்டத் தொடங்கிவிட்டது. முந்தைய இதழைப் புறந்தள்ளி வளரலானது. இன்னொரு காரணம் கெர்ன்ஸ்பேக்கால் முந்தைய இதழில் புறக்கணிக்கப்பட்ட ஹாரி பேட்ஸ் (Harry Bates) இந்த இதழின் ஆசிரியராகப் பதவியேற்றதேயாகும். மேலும் இந்த இதழ் எழுத்தாளர்களுக்குக் கணிசமான தொகையை வழங்கியது. அத்தோடு ஹாரி பேட்ஸ் முழுமுனைப்போடு சுறுசுறுப்பாக செய்லபட்டதும் இதழை வேகமாக முன்னேற வழிவகுத்தது. அத்தோடு இவர் கெர்ன்ஸ் பேக் பின்பற்றிய கதையில் நீதியுரைத்தல் போக்கைக் கைகழுவிவிட்டு, அறிவியல் புனைவில் ஆழமான கருக்களை விதைப்பதில் பெருங்கவனம் செலுத்தலானார். எனினும் 1933 மார்ச் இதழோடு அதன் வெளியீட்டாளரான வில்லியம் கிளேட்டன் செலவைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மஞ்சளறிக்கை வெளியிட நேர்ந்தது.. அவர் மட்டுமா, நாடே அன்று பெரும் பொரிளாதாரச் சரிவைச் சந்தித்தது. இதற்கிடையில் அந்த இதழ் 1933 அக்டோபர் மாதத்தில் ஸ்ட்ரீட் அண்டு ஸ்மித் வெளியீட்டகத்திற்குக் கை மாறியது. எஃப்.ஓர்லின் டிரமெயின் இதழின் ஆசிரியரானார்.

டிரமெயின் இதழின் பொறுப்பில் 4 ஆண்டுகள் இருந்தார். அறிவியல் புனைவில் பலவகைச் சிந்தனை மாற்றங்களுக்கு வித்திட்டார். பழைய கருவிகளில் புதிய மாற்றங்களை உருவாக்கியதோடன்றி, புதிய கருபாடுகளுக்கு ( Notions ) வழிவகுத்தார். இது வாசகப் பேராதரவைத் திரட்டியது. அப்பேராதரவினால் இதழ் பிறகு அச்சுறுத்தலேதுமின்றி தொடர்ந்து நிலைபெறலானது. இதனால் 1930கள் காலகட்டம் அறிவியல் புனைவின் செவ்வியற் காலமாக ( Classical Period ) உருவெடுத்தது.



இக்காலகட்டச் சிந்தனை மாற்றப் புனைவுக்கு எடுத்துக்காட்டாக மர்ரே லீன்ஸ்ட்டரின் ( Murray Leinster ) ( புனை பெயர் வில்லியம் எஃப். ஜெர்கின்ஸ் ) 'காலத்தின் பக்கவாட்டுப் பயணம்' ( Side wise in Time) என்ற கதையைக் கூறலாம். இது 1934 ஜூன் இதழில் வெளியானது. இது புடவிகளின் ( Universes ) இணைநிலைக்கால ஓடைகள் என்ற புதிய கருதுகோளை உருவாக்கியது. ஒரே புள்ளியில் இக்காலவோடை நடப்பில் உள்ள பல பாய்வுப் போக்குகளில் எந்தவொரு பாய்வுப் போக்கையும் பின்பற்றலாம் என்ற கருத்தை வெளியிட்டது. இந்த ஸின்ஸ்ட்டீரியக் கருதுகோள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குவைய அண்டவியிலில் ( Quantum Cosmology ) கருதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வழக்கத்திற்கு மாறான டிரமெய்ன் காலக்கதை, அவ்விதழின் முந்தைய ஆசிரியரான ஹாரி பேட்ஸ் என்பவரால் படைக்கப்பட்டது. கதையின் பெயர் 'ஆ! அனைத்தும் சிந்தனைமயம்' ( Alas, All Thinking ) என்பதாகும். இது 1935 ஜூன் இதழில் வெளியாகியது. படிமலர்ச்சியின் ஒரு சீரழிவுப் போக்கைப் படம் பிடித்தது.

டிரமெய்ன் காலத்துப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜான்.டபிள்யூ.கேம்பெல்(John W. Campbell) ஆவார். இவர் எஃப்.எஃப்.ஸ்மித்தைப் பின்பற்றி மீ அறிவியல் ( Super Science ) புனைகதைகளை எழுதத் தொடங்கினார். அத்துறையில் இவரால் ஸ்மித்தின் இடத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பிறகு இவர் டான்.ஏ.ஸ்டூவார்ட் என்ற புனை பெயரில் மேலும் நுட்பம் வாய்ந்த கதைகளை எழுதலானார். இக்கதைகள் இலக்கியத் தரத்தோடு உணர்ச்சித் ததும்பல் மிக்கமைந்தன. இவரது 'அந்தியொளி' ( Twilight ) என்ற கதை 1934, நவம்பர் மாதம் 'அதிர்ச்சிதரும் கதைகள்' ( Astounding Stories ) இதழில் வெளியாகியது.

ஸ்டூவர்டின் மிகச் சிறந்த நெடுங்கதை 'யார் அங்கே போகிறது?' ( Who Goes There? ) அதே இதழில் 1938 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியது. இது மதி நுட்பமும் அச்சுறுத்தல் திறனும் வாய்ந்திருந்தது.

'யார் அங்கே போகிறது?' வெளியான அதே வேளையில் அறிவியல் புனைவில் மற்றொரு புரட்சியும் ஏற்பட்டது. டிரமெய்ன் 'அதிர்ச்சிதரும் கதைகள்' . இதழின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, இதழின் ஆசிரியரான ஜான்.டபிள்யூ.கேம்பெல், அறிவியல் பற்றியும் அறிவியலாளர் பற்றியும் மேலும் நம்பகமும் தரமும் வாய்ந்த புனைவாக்க திறமைசாலிகளைத் தேடலானார்.

இவர் முதலில் இப்புலத்தில் கொடிகட்டிப் பறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தார். ஹொரேஸ் கோல்டு ( Horace Gold ) என்பவர் கிளைடு கிரேன் கேம்பல் ( Clyde Crane Cambell ) என்ற புனைபெயரில் பல சிறந்த அறிவியல் புனைகதைகளை டிரமெய்ன் தலைமையில் எழுதினார். புதிய சூழலில் அவரால் தனது புனை பெயரைத் தொடர முடியவில்லை. எனவே, அவரது கதையான 'வடிவம் என்னும் பொருண்மை' முதன்முதலாக அவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகியது. இது, 1938, டிசம்பர் மாத இதழில் வெளியானது. இது தனது உருவத்தால் பல மேம்பாடுகளையும் குறைபாடுகளையும் சந்தித்தவரது பட்டறிவை இயல்பான விவரிப்பால் வக்கணையோடு நவின்றது.

டிரமெய்ன் காலத்தில் எழுதத் தொடங்கி முதிர்நிலைப் பட்டறிவுற்ற மற்றோர் எழுத்தாளர் எல்.ஸ்பிரேக் டி கேம்ப் என்பவராவார். இவரது முதல் கதை 1937 செப்படம்பர் இதழில் வெளியாகியது. அதற்குப் பிறகு இவர் பல பெயர்பெற்ற கதைகளை வடித்தளித்தார். இவர் அறிவியல், வரலாறு ஆகிய இரு புலங்களில் வல்லவர். எனவே இவரது கதைகள் இருபுலத் துல்லியம் வாய்ந்தனவாக அமைந்தன். அறிவியல் புனைவை நகைச்சுவை ததும்ப எழுதிய மிகச் சிலருள் இவரும் ஒருவர். இவர் இக்காலத்தில் தானே ஒரு துணையிதழை நடத்தி, தனது முழு வல்லமையையும் வெளிக்கொணர்ந்தார்.

டி.கேம்ப் தனது இதழில் முதல் தர எழுத்தாளராக விளங்கினார். அதில்
'பிரித்து ஆள்' ( Divide and Rule ) என்ற கதையை 1939, ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டார். இது இடைக்கால வீரமும் புத்தறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைப் போக்கும் பின்னிப் பிணைந்த பேரின்பக் கிளர்வு மூட்டும் கதையாக விளங்கியது.

மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் 1930 களில் வெளியாகிய செவ்வியற்கால அறிவியல் புனைவின் ஆகச்சிறந்த ஆக்கங்களாக அமைந்தன. இவை அறிவியல் புனைவிலக்கியத்தின் தனித்தன்மையையும் புனைவாற்றலையும் பறைசாற்றியதோடு, அறிவியற் புனைவின் காத்திரமான ( காழ்திறம் வாய்ந்த ) தோற்றத்திற்கு கட்டியம் கூறின எனலாம்.

*************************

தமிழ் இணைய உலகில் அறிவியல் புனைவு என்றால் அதன் மறுபெயர் சுஜாதா என்று கூறும் பலருக்காகவும் ஒரு போட்டி, பரிசுடன் கூடிய ஒரு போட்டி.

கேள்வி - எழுத்தாளர் சுஜாதாவின் இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் பக்கம் இரண்டில் ( Science Fictions Page - Two ) பட்டியிலிடப்பட்டுள்ள புத்தகங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் என்ன?

பரிசு - சரியான விடை கூறும் வாசகருக்கு விருபா தளத்தில் 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புதிய புத்தகங்களில் இருந்து வாசகர் விரும்பும் ஏதாவது ஒரு புத்தகம். 2009.01.18 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சித் திடலில் வழங்கப்படும்.

*************************

  •  

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா

ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் ஏழைமையான நிலையில் வசித்துவந்தது. நடுவயதைக் கடந்த ஒரு அம்மாதான் அக்குடும்பத்தின் தலைவி. அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் புனிதா. இளையவள் பெயர் புஷ்பா.

அவர்களுடைய வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய பூந்தோட்டம் இருந்தது. அத்தோட்டத்தில் பலவிதமான பூக்கள் பூத்துக் குலுங்கின. தினந்தோறும் காலையில் தூங்கி எழுந்ததும் அந்த அம்மா தோட்டத்துக்குச் சென்று ஒரு சிறிய கூடை நிறைய பூக்களைப் பறித்து எடுத்துவருவாள்.

அவர்கள் வசித்துவந்த குடிசையிலிருந்து நடந்து செல்கிற தொலைவில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ளேயும் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அந்தப் பூக்களில் இருந்து எழும் நறுமணம் இனிய மயக்கத்தைக் கொடுப்பதுபோல இருக்கும். தோட்டத்தில் அம்மா பூக்களைப் பறிக்கும் சமயத்தில் இரு மகள்களும் காட்டில் உள்ள பூந்தோட்டத்துக்குச் செல்வார்கள். நடக்கும்போது சிரிக்கச்சிரிக்க கதை பேசிக்கொண்டே சென்று வருவதால் அவர்களுக்கு களைப்பே தெரியாது. அங்கிருக்கும் பூந்தோட்டத்தில் ஏராளமான பூக்கள் பூத்துக் குலுங்கும். இருவரும் சேர்ந்து கூடை நிறைய பூக்களைப் பறித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி வருவார்கள்.

காலையில் கஞ்சி குடித்தபிறகு இரு மகள்களும் ஆளுக்கு ஒரு கூடையை எடுத்துக்கொண்டு பூக்களை விற்று வருவதற்காக சந்தைக்குச் செல்வார்கள். சந்தைக்குச் செல்லும் வழியில் உள்ள தெருக்களில் ‘பூ வாங்கலையோ பூ’ என்று கூவியபடி செல்வார்கள். சிலர் தம் வீடுகளிலிருந்து வெளியே வந்து பூ வாங்கிக்கொண்டு செல்வார்கள். கூடைகளில் நிரப்பி எடுத்துவந்த பூக்களில் பெரும்பகுதியை தெருவில் வசிப்பவர்களே வாங்கிவிடுவார்கள். எஞ்சியிருக்கும் பூக்கள் சந்தையில் உச்சி வேளைக்குள் விற்பனை ஆகிவிடும்.

விற்பனையில் கிடைத்த பணத்தில் சாப்பாட்டுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், உப்பு, புளி முதலிய பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள்.

அவர்கள் வந்ததும் சமையல் வேலையைத் தொடங்குவாள் அம்மா. சமைத்து முடித்ததும் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய பொழுது அப்படித்தான் கழிந்துவந்தது.

புனிதாவும் புஷ்பாவும் சகோதரிகள் என்றபோதும், அதையும் கடந்து இருவரும் நல்ல தோழிகளாக இருந்தார்கள். ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். ஒன்றாகவே வருவார்கள்.

செடிகளில் பூக்கும் பருவம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. தோட்டத்தில் வழக்கமாக ஒரு கூடை நிறைய பூக்களைப் பறிக்கும் அம்மா அரைக்கூடை கூடக் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படத் தொடங்கினாள். காட்டில் இருக்கும் தோட்டத்திலும் பூக்கள் குறைவாகவே கிடைத்துவந்தன. பூக்கள் குறைந்ததால் விற்பனை குறைந்தது. விற்பனை குறைந்ததால் வருமானமும் குறைந்தது. அரைவயிறும் கால்வயிறுமாகச் சாப்பிடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது.

ஒருநாள் நள்ளிரவில் ஏதோ கெட்ட கனவின் விளைவாக புஷ்பாவுக்கு விழிப்பு வந்துவிட்டது. கண்ணைத் திறந்து பார்த்தாள். எங்கெங்கும் இருளே சூழ்ந்திருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியாக இருண்ட வானமும் மேகங்களைக் கடந்துசெல்லும் அரைநிலாவும் தெரிந்தன. அப்போதுதான் யாரோ விம்மி விம்மி அழும் சத்தம் கேட்டு படுத்த நிலையிலேயே தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.

நடுவீட்டில் மாடக்குழியில் இருந்த சாமி விளக்கின் முன்னால் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் உருவம் தெரிந்தது. யாரோ ஒரு முகம் தெரியாத மனிதரிடம் பேசுவதுபோல அந்த விளக்கிடம் எதையோ சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாள் அம்மா. அழுதுகொண்டே அவள் பேசிக்கொண்டிருந்ததால் அவளுடைய சொற்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அம்மாவின் முகத்தில் வழிந்தோடும் கண்ணீரைப் பார்க்கப் பார்க்க புஷ்பாவுக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. உடனடியாக புனிதாவை எழுப்பவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆயினும் அந்த எண்ணத்தை அப்படியே அடக்கிக்கொண்டு என்னதான் நடக்கிறது பார்ப்போம் என அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘கடவுளே, இது உனக்கே அடுக்குமா? பெத்தெடுத்த புள்ளைங்களுக்கு வயிறு நிறைய சோறு போடக்கூட முடியாத நிலையில என்னை வச்சிருக்கியே, இது நியாயமா? இந்த உலகத்துக்கே வழிகாட்டறியே, என் ஒருத்திக்கு நீ நல்ல வழி காட்டக்கூடாதா? உனக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?’

இந்தத் துக்கத்திலிருந்து எப்படியாவது அம்மாவை மீட்கவேண்டும் என புஷ்பாவின் மனம் திட்டமிட்டது. நீண்ட நேர யோசனைக்குப் பிறகு அவள் நெஞ்சில் ஒரு எண்ணம் உருவானது. அக்கணமே அவள் கவலைகள் எல்லாம் விலகிவிட்டன. குடும்பத்தில் கவிந்த வறுமைச்சூழலில் இருந்து மீண்டுவிடலாம் என்றும் துக்கத்தில் மூழ்கியிருக்கும் அம்மாவையும் மீட்டெடுத்துவிடலாம் என்றும் அவள் மனம் நம்பியது. அம்மாவைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, மெதுவாக விழிமூடி உறங்கத் தொடங்கினாள்.

அடுத்தநாள் காலையில் எழுந்ததும் குளித்துமுடித்த பிறகு வழக்கம்போல பூப்பறிப்பதற்காக அம்மா தோட்டத்துக்குச் சென்றுவிட்டாள். புனிதாவும் புஷ்பாவும் கூடையை எடுத்துக்கொண்டு காட்டின் திசையில் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். நடைக்களைப்பு தெரியாமல் இருப்பதற்காக புனிதா ஒரு காட்டில் சிங்கத்தை ஏமாற்றிய தந்திரக்கார நரியின் கதையைச் சொல்லிக்கொண்டே வந்தாள். கதை முடிவதற்கும் காட்டை அடைவதற்கும் சரியாக இருந்தது.

தோட்டத்தில் நிறைய பூச்செடிகள் இருந்தபோதும் பல செடிகளில் பூக்களே இல்லை. ஒருசில செடிகளில் ஒன்றிரண்டு பூக்கள் மட்டுமே காணப்பட்டன. அதுவரை அவர்களுக்கு அரைக்கூடை நிறையும் அளவுக்காவது பூக்கள் கிடைத்துவந்தன. அன்று அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்கும் அளவுக்கு மட்டுமே பூக்கள் கிடைத்தன.

‘இத கொண்டுபோய் வித்தா என்னடி கிடைக்கும்? யாராவது ஒரு ஆள் வந்து வாங்கினாலே முடிஞ்சிபோயிடும். நிச்சயமா நாம எல்லாரும் இன்னைக்கு பட்டினியாதான் இருக்கணும்.’

புனிதாவின் முகம் வாடியது. அவள் பெருமூச்சு விடுவதைப் பார்க்க புஷ்பாவுக்கு வருத்தமாக இருந்தது. நேற்று இரவு அம்மா கண்ணீர் விட்டு அழுத காட்சியும் அப்போது நினைவுக்கு வந்தது.

‘அக்கா, நான் ஒரு முக்கியமான செய்தி சொல்றேன். அதை நீ யாருகிட்டயும் சொல்லக்கூடாது. சரியா?’ என்று புனிதாவிடம் சொன்னாள்.

‘அப்படி என்னடி முக்கியமான செய்தி? அதை ஏன் யாருகிட்டயும் சொல்லக்கூடாது?’ என்று புஷ்பாவைக் குழப்பத்தோடு பார்த்தாள் புனிதா.

‘அது அப்படித்தான். முதல்ல நீ யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு சொல்லு. அதுக்கப்புறம் என்ன செய்திங்கறத நான் சொல்றேன்.’

புஷ்பாவை ஒருகணம் விசித்திரமாகப் பார்த்தாள் புனிதா. பிறகு ‘சரிடி அம்மா. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். அது என்ன செய்தியோ, அதைச் சொல்லு’ என்றாள்.

‘சத்தியமா.’

‘ஏன் சத்தியம் செய்தாதான் சொல்வியா?’

‘ஆமாம்.’

‘சரி, சத்தியமா, சத்தியமா, சத்தியமா. போதுமா?’

‘பூ கிடைக்கலைங்கறதுதான இப்ப நம்ம குறை? கூடை நிறைய பூ கிடைக்கறதுக்கு என்கிட்ட ஒரு வழி இருக்குது. அதும்படி நாம செஞ்சா, தினந்தினமும் கூடை நிறைய பூ கிடைக்கும். நமக்கும் நிறைய பணமும் கிடைக்கும்.’

கண்கள் மின்ன விவரித்துக்கொண்டே போகும் புஷ்பாவை ஒருமுறை தலையிலிருந்து கால்வரைக்கும் மெளனமாகப் பார்த்தாள் புனிதா.

‘என்னடி உன் வழி? ஏதேதோ உளறாம, புரியறமாதிரி அதை முதல்ல சொல்லுடி.’

‘நல்லா கேட்டுக்கோ. நான் நினைச்சா, என்னால பூ பூக்கிற மரமா மாறமுடியும். அந்த சக்தி என்கிட்ட இருக்குது.’

‘ஏன்டி இப்படி திடீர்னு உளற ஆரம்பிச்சிட்ட?’

‘உளறலை. உண்மையைத்தான் சொல்றேன். பொறுமையா கேளு. நான் மரமா நிக்கிற சமயத்துல நீ இந்தக் கூடை நிறைய பூக்களை பறிச்சிக்கோ. அந்த அளவுக்கு அதிகமா ஒரு பூவைக்கூட பறிக்கக்கூடாது. பூவைக் கிள்ளி எடுக்கும்போது அளவா கிள்ளி எடுக்கணும். எந்தக் கிளையையும் உலுக்கக்கூடாது. ஒவ்வொரு பூவா தொட்டுத் தொட்டுத்தான் எடுக்கணும். தேவை இல்லாம கிளைகளை வளைக்கிறதோ, இலைகளைக் கிள்ளறதோ கூடாது. புரியுதா?’

புஷ்பா சொல்லச்சொல்ல நம்பமுடியாதவள் போல உறைந்து நின்றாள் புனிதா. புஷ்பா அவளைத் தொட்டு அசைத்தாள். ‘என்ன அக்கா, நான் சொல்றது புரியுதா?’ என்று கேட்டாள்.

‘புரியுது. ஆனா, இது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமாவும்னுதான் தெரியலை. அதான் யோசிக்கிறேன்’ என்று நம்பிக்கையற்றவளைப்போல பதில் சொன்னாள் புனிதா.

‘இங்க பாருக்கா. முதல்ல நம்பக் கத்துக்கோ. நம்பிக்கைதான் வாழ்க்கை. புரியுதா?’

‘சரி, முதல்ல நீ பூ பூக்கிற மரமா மாறு. பார்க்கலாம்.’

‘அதுக்கு முன்னால நீ ஒரு முக்கியமான வேலை செய்யணும்’

‘அது என்ன வேலை?’

‘அதோ அங்க ரெண்டு குடம் இருக்குது பாரு. அதை அந்தக் குளத்தங்கரைக்கு எடுத்தும் போயி சுத்தமா கழுவு. ரெண்டு குடம் நிறைய தண்ணியை நிரப்பி எடுத்து வா. குடத்துக்குள்ள தண்ணிய நிரப்பிய பிறகு உன் விரல் நகம் கூட அந்த தண்ணியில படக்கூடாது. தீட்டு பட்டுடும். கவனமா சிந்தாம சிதறாம எடுத்துட்டு வரணும்.’

‘அப்புறம்?’

‘நான் இங்கயே உக்காந்துட்டிருப்பேன். ஒரு குடம் தண்ணியை எடுத்து குளிக்கவைக்க தலையில ஊத்தறமாதிரி என் தலையில ஊத்து. உடனே நான் மரமா மாறிடுவேன். ஒவ்வொரு கிளையிலும் ஏராளமான பூ பூத்திருக்கும். கூடை நிறைய தேவைப்படற அளவுக்கு நீ பூக்களை பறிச்சிக்கலாம். எல்லா வேலையையும் முடிச்சிட்ட பிறகு தண்ணி வச்சிருக்கிற இன்னொரு குடத்த எடுத்து மரத்தை சுத்தி ஊத்தணும். உடனே நான் மறுபடியும் பொண்ணா மாறிடுவேன்.’

புஷ்பாவின் சொற்களில் புனிதாவுக்கு அப்போதும் நம்பிக்கை பிறக்கவில்லை. ‘நீ சொல்றதெல்லாம் உண்மையா நடக்குமாடி?’ என்று சந்தேகத்தோடு கேட்டாள்.

‘முதல்ல உன் அவநம்பிக்கையை நிறுத்துக்கா. நடக்கும்னு நம்பிக்கையோடு நினைச்சிக்கோ அக்கா. எல்லாம் நல்லபடியாவே நடக்கும்.’

‘சரி’ என்றபடி அரைமனத்தோடு அங்கே ஒரு மரத்தடியில் காணப்பட்ட இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு குளத்துக்குச் சென்றாள். திரும்பித்திரும்பி புஷ்பாவைப் பார்த்தபடியே நடந்துபோனாள். புஷ்பா சொன்னபடி இரு குடங்களையும் முதலில் நன்றாகக் கழுவி தூய்மைப்படுத்தினாள். பிறகு தண்ணீரை நிரப்பிக்கொண்டாள். அந்தத் தண்ணீரில் விரல் படாமல் லாவகமாக எடுத்துக்கொண்டு திரும்பினாள்.

புஷ்பா ஏற்கனவே நின்றிருந்த இடத்திலேயே நின்றிருந்தாள். புனிதா குடங்களுடன் திரும்பி வருவதைப் பார்த்ததும் அதே இடத்தில் கால்களை மடக்கி தரையில் உட்கார்ந்தாள்.

ஒரு குடத்தை அருகிலிருந்த மரத்தடியில் வைத்துவிட்டு இன்னொரு குடத்தோடு புஷ்பாவின் அருகில் வந்து நின்றாள் புனிதா. புஷ்பா அவளைப் பார்த்து தண்ணீரை தன் தலைமீது ஊற்றுமாறு கண்ணாலேயே சைகை செய்தாள். அவள் உதடுகள் எதையோ முணுமுணுத்தபடி இருந்தன. குடத்தை உயரே தூக்கி தன் கைவிரல் பட்டுவிடாதபடி மெதுவாக குடத்தைச் சாய்த்து கொஞ்சம் கொஞ்சமாக புஷ்பாவின் தலையில் தண்ணீரை ஊற்றினாள் புனிதா.

பானையிலிருந்த கடைசிச்சொட்டு தண்ணீர் புஷ்பாவின் மீது விழும்வரை, அங்கு ஒரு மாற்றமும் நிகழவில்லை. ஆனால் மறுகணமே புஷ்பா மாயமாக மறைந்துபோனாள். அந்த இடத்தில் உண்மையாகவே பூக்கள் நிறைந்த ஒரு மரம் நின்றது. ஒவ்வொரு கிளையிலும் கொத்துக்கொத்தாக பூக்கள் தொங்கின. புனிதா ஒரு கிளையை நெருங்கிச் சென்று ஒரு பூவைத் தொட்டுப் பார்த்தாள். உண்மையான பூ. கமகமவென அதன் நறுமணம் வீசியது.

புஷ்பா சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவளுக்கு அப்போது நினைவுக்கு வந்தது. வேகவேகமாக தம் பூக்கூடையை எடுத்துவந்து ஒவ்வொரு பூவாக எச்சரிக்கையோடு பறித்து கூடைக்குள் போட்டாள். வெகுவிரைவில் அந்தக் கூடை நிறைந்துவிட்டது.

இன்னும் பத்து கூடைகளை நிரப்பலாம் என்கிற அளவுக்கு கிளைகளில் பூக்கள் நிறைந்திருந்தன. அவற்றை என்ன செய்வது என வாய்பிளந்து பார்த்தாள் புனிதா. அப்போது ஏற்கனவே புஷ்பா எச்சரிக்கையாகச் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. உடனே மனநிறைவோடு கூடையை எடுத்துவந்து வேறொரு மரத்தடியில் வைத்துவிட்டு, அங்கிருந்த இரண்டாவது தண்ணீர்க்குடத்தை எடுத்துச் சென்று பூமரத்தின் வேரில் ஊற்றினாள். கடைசிச்சொட்டு தண்ணீர் தரையில் விழுந்த கணத்தில் மரம் மறைந்துவிட, அந்த இடத்தில் புஷ்பா அமர்ந்திருந்தாள். அந்த இடத்தில் ஒரு மரம் இருந்ததற்காக எவ்விதமான அடையாளமும் தெரியவில்லை.

புன்னகைத்தபடியே எழுந்து நின்று புனிதாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள் புஷ்பா. தன் சகோதரியின் சாமர்த்தியத்தையும் தியாகத்தையும் நினைத்து பெருமையோடு அவளைத் தழுவிக்கொண்டாள் புனிதா.

‘அக்கா, நாம கெளம்பலாம். இப்ப புறப்பட்டாதான் சந்தைக்கு நேரத்தோடு போய் சேரமுடியும்.’

‘ஆமாமாம் கெளம்பு.’

புனிதா கூடையைச் சுமந்துகொள்ள இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

‘மரமா மாறக்கூடிய சக்தி உனக்கு எப்ப வந்தது? எப்படி வந்தது?’ என்று ஆர்வத்தோடு கேட்டாள் புனிதா.

‘சின்ன வயசுல இங்கதான அடிக்கடி வந்து விளையாடிட்டிருப்பேன். அப்ப ஒருநாள் ஒரு சாமியாரு இந்த வழியா நடந்து போனாரு. அவருக்கு ஒரு கால் இல்ல. குச்சி வச்சிட்டு ஒத்தக் காலால நடந்து போனாரு. பார்க்கறதுக்கே பரிதாபமா இருந்தது. அவருக்கு ரொம்ப தண்ணி தாகம்போல. அந்த வழியா போன என்னைப் பார்த்து இங்க குடிக்கறதுக்கு தண்ணி எங்க கிடைக்கும்னு கேட்டாரு. நான் தண்ணி இருக்கற இடத்தை சொல்லி, அவரு அந்த இடத்துக்கு நொண்டி நொண்டி போய் சேர்றதுக்குள்ள பொழுதே போயிடும்னு நினைச்சி, இங்கயே இரு தாத்தா, நான் போய் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு ஓட்டமா ஓடி ஒரு தேக்கு இலையை பொட்டலம்மாதிரி மடிச்சி, அதுக்குள்ள தண்ணியை நிரப்பி எடுத்துட்டு வந்து கொடுத்தேன்.’

‘சரி.’

‘அதை குடிச்ச பிறகுதான் அவருக்குத் தெம்பு வந்தது. அதுக்கப்புறம்தான் அவரு என்னைப் பத்தி விசாரிச்சாரு. நான் சொன்னதையெல்லாம் கேட்டுட்டு சிரிச்சிகிட்டே என்னை ஆசீர்வாதம் செஞ்சாரு. அதுக்கப்புறம்தான் மரமா மாறக்கூடிய ஒரு மந்திரத்தைச் சொல்லி செய்முறையையும் கத்துக் குடுத்தாரு. இதெல்லாம் எதுக்குங்க தாத்தான்னு அவர்கிட்ட கேட்டேன். என்னைக்காவது உனக்கு உதவியா இருக்கும்மான்னு சிரிச்சிகிட்டே சொல்லிட்டு போயிட்டாரு. அப்பவே நான் அதை மறந்துட்டேன். நேத்து ராத்திரி நடுராத்திரியில எழுந்து உக்காந்துகினு சாமியப் பார்த்து அம்மா அழுது புலம்பனதைப் பார்த்தேன். பூ கிடைக்கலைங்கறதுக்காக மனக்கஷ்டத்தோடு அம்மா பேசிட்டிருந்தாங்க. அப்பதான் நம்மால முடிஞ்ச அளவுக்கு அம்மாவுக்கு ஏதாவது செய்யணும்ங்கற எண்ணம் உண்டாச்சி. பூ இருந்தா பொழைச்சிக்கலாம்ங்கற எண்ணம் வந்ததுமே சின்ன வயசுல சாமியார் சொல்லிக்கொடுத்த மந்திரமும் ஞாபகம் வந்திட்டுது. அதான் சங்கதி.’

‘தினமும் இப்படி கிடைக்குமா?’

‘அதுதான் நம்ம திட்டம். ஒவ்வொரு நாளும் இதேபோல நாம காட்டுக்கு வருவோம். நான் மரமா மாறி நின்னதும் கூடை நிறைய பூவை எடுத்துக்கோ. அதுக்கப்புறம் மறுபடியும் நீ என்னை பொண்ணா மாத்திடு. அது போதும்.’

‘எப்படியோ நம்ம சாப்பாட்டுக்கவலை தீர்ந்தது. அம்மா நிம்மதியா இருப்பாங்க. எதையும் நினைச்சி அழமாட்டாங்க. அது போதும்.’

இருவரும் வீட்டை நோக்கி உற்சாகத்தோடு நடந்தார்கள். அம்மா பாதி அளவே நிரப்பிவைத்த பூக்கூடை வாசலிலேயே இருந்தது. அதையும் எடுத்துக்கொண்டு இருவரும் சந்தைக்குச் சென்றார்கள்.

காட்டிலிருந்து எடுத்துவந்த பூக்களின் நிறமும் மணமும் சந்தைக்கு வந்த அனைவரையும் ஈர்த்தன. தெருவில் நடப்பவர்கள் ஒவ்வொருவரும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்துபோனார்கள். சிலர் கையில் இருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு பூக்களை பொட்டலமாகக் கட்டி வாங்கிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் நினைத்ததைவிட வேகமாக எல்லாப் பூக்களும் விற்றுத் தீர்ந்தன. உடனே இருவரும் கடைக்குச் சென்று அன்றைய சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.

சீக்கிரமாக திரும்பிவிட்ட மகள்களைப் பார்த்ததும் அம்மாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ‘எங்கடி பூ? ஏன் சீக்கிரமா வந்துட்டீங்க?’ என்று தயக்கத்தோடு கேட்டாள். ‘எல்லாப் பூவும் இன்னைக்கு சீக்கிரமா வித்து தீர்ந்துடிச்சிம்மா’ என்று சொல்லிக்கொண்டே வெற்றுக்கூடைகளை திண்ணையில் வைத்தாள் புஷ்பா. சமையல் சாமான்கள் நிறைந்த கைப்பையை அம்மாவிடம் கொடுத்தாள் புனிதா.

‘என்னமோ கடவுள் கண்ணத் தெறந்துட்டான்’ என்று மனத்துக்குள் முணுமுணுத்தபடி சமையல் பொருட்கள் அடங்கிய பையை வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் சென்றாள் அம்மா.

இப்படியே ஒவ்வொரு நாளும் நடந்தது. ஒரு கட்டத்தில் வீட்டுத் தோட்டத்தில் பூக்கள் பூக்கும் அளவு குறைந்துகொண்டே வந்து நின்று போனது. அப்போது அந்தக் கூடையையும் காட்டுக்கு எடுத்துச் சென்று இரு கூடைப்பூக்களோடு திரும்பி வந்தனர். வயிற்றுப்பாட்டுக்காக எங்கோ எப்படியோ அலைந்து திரிந்து பூக்களைச் சேகரித்துக்கொண்டு திரும்புகிறார்கள் என தன் பிள்ளைகளை நினைத்து பெருமைப்பட்டாள் அம்மா. ஆண் பிள்ளைகள் கூட செய்யமுடியாத செயலை தனக்குப் பிறந்த பெண் பிள்ளைகள் செய்கிறார்கள் என்று அடிக்கடி நினைத்துக்கொண்டாள்.

ஒருநாள் சந்தையில் அவர்கள் பூக்கூடையோடு உட்கார்ந்திருந்தபோது ஒரு இளைஞன் அவர்களுக்கு அருகில் வந்து கூடையில் இருந்த பூக்களைத் தொட்டுப் பார்த்தான். அவன் பெயர் சிக்கண்ணா. அதன் மணத்தையும் நுகர்ந்து பார்த்தான்.

‘இந்தப் பூவுடைய பெயர் என்ன?’ என்று புஷ்பாவிடம் கேட்டான்.

இதுவரை ஒருவரும் அவளிடம் அப்படி ஒரு கேள்வி கேட்காததால் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று ஒருகணம் புரியவில்லை. ஆனாலும் தைரியமாக ‘காட்டுப்பூ’ என்றாள்.

‘அது தெரியுது. பூவுக்குன்னு தனியா பேரு எதுவும் கிடையாதா?’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாங்க காட்டுப்பூன்னு சொல்வோம். அதுதான் பழக்கம்.’

‘அது சரி, நல்ல மணமாத்தான் இருக்குது. என்ன விலை?’

‘உங்களுக்கு எவ்வளவு வேணும், அதைச் சொல்லுங்க?’

‘இந்தக் கூடையில இருக்கற எல்லாப் பூவையையும் நான் எடுத்துக்கறேன். என்ன விலைன்னு சொல்லுங்க.’

சிக்கண்ணாவின் கண்களில் ஆர்வம் மட்டுமே தெரிந்தது. கிண்டலோ கேலியோ எதுவும் தெரியவில்லை. புஷ்பா ஒருகணம் கழித்து ஒரு விலையைச் சொன்னாள். அவன் மறுபேச்சின்றி அவள் சொன்ன விலையைக் கொடுத்துவிட்டு பூக்களை மூட்டையாகக் கட்டித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டு சென்றான்.

அதற்குப் பிறகு சிக்கண்ணா ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் அந்த இடத்துக்கு வரத் தொடங்கினான். புஷ்பாவிடம் பேச்சு கொடுத்து அவளை எப்படியாவது உரையாடலுக்குள் இழுத்தான். அவள் அவனை எப்படியாவது வெட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு வெடுக்வெடுக்கென்று பேசினாலும் அவன் மிகவும் அன்பார்ந்த குரலிலேயே பேசினான்.

‘ஒவ்வொரு நாளும் இருக்கற பூ எல்லாத்தையும் நீங்களே வாங்கிட்டு போறீங்களே? வீட்டுக்கு எடுத்தும் போயி என்ன செய்வீங்க?’ என்று கேட்டாள் புஷ்பா.

‘நான் வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னு யாரு சொன்னா?’

‘பின்ன?’

‘வீட்டுக்குப் போற வழியில ஒரு கோயில் இருக்குது. அந்தக் கோயிலுக்குப் போய் சாமிகிட்ட வைக்கச் சொல்லிட்டு போயிடுவேன்.’

‘ஏன்? வீட்டுக்கு எடுத்தும் போவமாட்டீங்களா?’

‘எடுத்துட்டு போகலாம். ஆனா வீட்டுல யாருகிட்ட கொடுக்கறது?’

‘ஏன், உங்க மனைவிகிட்ட கொடுத்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க இல்லையா?’

‘மனைவியா?’ என்று சொல்லிவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தான் சிக்கண்ணா. சிரித்துச்சிரித்து அவனுக்கு புரையேறிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக செருமி தன்னைச் சரிப்படுத்திக்கொண்டான். பிறகு ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க’ என்று வெட்கத்தோடு சொன்னான். அதற்குப் பிறகு புஷ்பா எதுவும் பேசவில்லை. அமைதியாக வேறெங்கோ பார்ப்பதுபோல முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் பூக்கூடைகளோடு சந்தைக்கு வருகிற சமயத்தில் அவனும் வரத் தொடங்கினான். ஏதாவது ஒரு விஷயத்தைத் தொட்டு அவர்களோடு உரையாடலை வளர்ப்பதில் அவன் மிகுந்த ஆர்வம் காட்டினான். ஒருநாள் பூவிலிருந்து எழும் மணத்தை இழுத்து நுகர்ந்துவிட்டு ‘சந்தனம் மாதிரி மணக்குது’ என்றான் இன்னொருநாள் ‘நெய்மாதிரி மணக்குது’ என்றான். மற்றொரு நாள் ‘வெல்லப்பாகு மாதிரி மணக்குது’ என்றான். அவன் வரும் சமயத்தில் கூடையில் எவ்வளவு பூ இருக்கிறதோ, அவ்வளவையும் அவனே மொத்தமாக வாங்கிக்கொண்டு சென்றான்.

ஒருநாள் புஷ்பாவிடமிருந்து பூக்களை வாங்கிக்கொண்டு திரும்பிய சிக்கண்ணா தனக்கு ஏற்பட்டிருக்கும் மயக்கம் பூவை மட்டும் சார்ந்த மயக்கமா, அந்தப் பெண்மீது ஏற்பட்டிருக்கும் மயக்கமா என பிரித்தறியமுடியாமல் குழம்பினான். கடைசியில் இரண்டும் சேர்ந்த மயக்கம் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

அவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கிருந்து மணம் நிறைந்த அப்பூக்களைக் கொண்டுவருகிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் கண்டுபிடிக்கவேண்டும் என்று திட்டமிட்டான். அவனுடைய திட்டத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் சகோதரிகள் இருவரும் வழக்கம்போல ஊரில் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் சந்தையிலிருந்து அவர்கள் தம் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது அவர்களுக்குத் தெரியாமல் சிறிது தூர இடைவெளியில் அவர்களைப் பின்தொடர்ந்து நடந்து சென்றான். சுவாரசியமாக கதை பேசிக்கொண்டு சென்ற சகோதரிகள் இருவரும் அவன் தமக்குப் பின்னால் வருவதை உணரவே இல்லை.

ஊருக்கு வெளியே தன்னந்தனியாக இருக்கிற ஒரு குடிசைக்குள் சகோதரிகள் இருவரும் சென்று மறைவதை அவன் கண்டுபிடித்தான். அங்கேயே வெகுநேரம் ஒதுங்கி நின்று அந்த வீட்டில் அவர்களைத் தவிர அவர்களுடைய அம்மாவும் இருப்பதைப் புரிந்துகொண்டான். அந்தக் குடிசையின் மீது கண்வைத்தபடி சுற்றிவரும்போது, குடிசைக்குப் பின்னால் இருக்கிற பெரிய பூந்தோட்டத்தையும் பார்த்தான் சிக்கண்ணா. ஒன்றிரண்டு செடிகளில் மட்டும் பூக்கள் பூத்திருக்க, பிற செடிகள் செடிகளாக மட்டுமே நின்றிருப்பதைப் பார்த்தான். பூக்களே இல்லாத இந்தத் தோட்டத்திலிருந்து இப்பெண்கள் பூக்களை எப்படி எடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்று நினைத்துக் குழம்பினான். சந்தையில் அவர்கள் விற்கும் பூக்களுக்கும் அந்தத் தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களுக்கும் இடையிலான வேறுபாடு அவனை மேன்மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என அவனாகவே எதைஎதையோ நினைத்துக்கொண்டான். இறுதியில் குழப்பம்தான் எஞ்சியதே தவிர, அவனால் உறுதியாக ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.

அடுத்தநாள் சந்தையில் அந்தப் பெண்களின் வரவுக்காக அவன் காத்திருந்தான். அவர்கள் கூடைகளோடு வந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்து வியாபாரத்தைத் தொடங்கியதும் அவன் வழக்கம்போல பூ வாங்குபவன் போல அவர்கள் முன்னால் சென்று நின்றான்.

‘என்ன இது? இன்னைக்கு பூவிலிருந்து கரும்புச்சாறு மணம் வருது’ என்று சொன்னபடி குனிந்து கூடையிலிருந்து ஒரு பூவை எடுத்து திருப்பிப் பார்த்தான்.

‘கரும்புச்சாறை நினைச்சிகிட்டே பூவைப் பார்க்கிறவங்களுக்கு கரும்புச்சாறு மணம் வரும். கஞ்சித்தண்ணியை நினைச்சிகிட்டே பார்க்கிறவங்களுக்கு கஞ்சித்தண்ணி மணம் வரும்.’

‘நான் விளையாட்டுக்குச் சொல்லலைங்க. உண்மையாவே இந்தப் பூவிலேர்ந்து கரும்புச்சாறு மணம் வருது.’

அந்த இளைஞனோடு பேசுவதற்கு புஷ்பாவுக்கு ஆசையாக இருந்தாலும் பக்கத்தில் அக்காவை வைத்துக்கொண்டு பேச அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதனால் அவன் பேச்சைத் தடுக்கும் விதமாக, ‘பூவிலேர்ந்து எந்த மணமாவது வந்துட்டுப் போகட்டும். இப்ப உங்களுக்கு என்ன வேணும், சொல்லுங்க’ என்று கேட்டாள்.

‘எனக்கு பூதான் வேணும்’ என்று கூடையை நெருங்கினான்.

‘ஐயையோ, ஒவ்வொரு நாளும் நீங்களே எல்லாப் பூவையும் மொத்தமா எடுத்துட்டு போயிட்டா, வழக்கமா எங்ககிட்ட வாங்கற வாடிக்கைக்காரங்களுக்கு என்ன பதில் சொல்றது? மொத்தமா தரமுடியாது. உங்களுக்கு எவ்வளவு வேணுமோ, அந்த அளவுக்கு மட்டும் வாங்கிட்டுப் போங்க.’

புஷ்பா பேசப்பேச, அந்தப் பேச்சில் மயங்கியவன் போல கேட்டுக்கொண்டிருந்தான் சிக்கண்ணா. பிறகு ‘சரி, நீங்க சொல்றதையே கேக்கறேன். எத்தனை பேரு வந்து வாங்கிட்டு போறாங்களோ வாங்கட்டும். நான் யாரையும் தடுக்கலை. எல்லாரும் வாங்கினதுபோக கடைசியில என்ன மிஞ்சுதோ அதை நான் வாங்கிக்கறேன். சரிதானே?’ என்று கேட்டான்.

அந்த அளவுக்கு அவன் சட்டென்று இறங்கிவந்து பேசுவான் என புஷ்பா எதிர்பார்க்கவில்லை. அதனால் அவனை வெளியேற்றும் விதமாக அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. ‘சரி சரி’ என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினாள்.

பல பெண்கள் வந்து புஷ்பாவிடம் பூக்களை வாங்கிச் சென்றார்கள். கூடையில் பூ வேகவேகமாக குறைந்துகொண்டே வந்தது.

‘அது சரி, இதுக்கு முன்னால இந்த மாதிரி வண்ணவண்ணப் பூக்களை நான் இந்தப் பக்கம் பார்த்ததே இல்லை. எல்லாம் புதுசா இருக்குது. எங்கேர்ந்து வாங்கிட்டு வரீங்க?’ என்று கேட்டான் சிக்கண்ணா.

‘இது ஒன்னும் வாங்கன பூ கிடையாது. எங்க வீட்டு தோட்டத்துல பூத்த பூ’ என்று பெருமையாகச் சொன்னாள் புஷ்பா.

பூவே இல்லாத தோட்டத்தைப் பார்த்ததை அவன் மனத்துக்குள் நினைத்துக்கொண்டான். இந்தப் பெண் எதையோ மறைக்கிறாள் என்பதுமட்டும் அவனுக்குப் புரிந்துவிட்டது. மேன்மேலும் அவளைப் பொய் சொல்லவைக்க வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தான்.

‘தினமும் இவ்வளவு பூ பூக்கற அளவுக்கு உங்க தோட்டம் பெரிய தோட்டமா?’

‘ஆமாம். பெரிய தோட்டம். அதுதான் எங்க வாழ்க்கைக்கு ஆதாரம்.’

‘காலையில எழுந்ததும் பூவுடைய முகத்தைத்தான் முதல்ல பார்ப்பீங்களா?’

‘ஆமாம். அது எங்களுக்கு வெறும் பூ கிடையாது. எங்க தெய்வமே அதுதான்.’

அதற்குமேல் அவன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. விற்றதுபோக எஞ்சியிருந்த பூக்களை அவளே ஒரு தாளில் பொட்டலமாகக் கட்டி அவனிடம் கொடுத்தாள். அவன் உடனே பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டான்.

மறுநாள் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பாகவே எழுந்த சிக்கண்ணா தன் ஊரிலிருந்து வேகவேகமாக நடந்து அந்தப் பெண்களின் குடிசை இருந்த பகுதிக்குச் சென்று ஒரு தோப்புக்குள் ஒளிந்து நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தான்.

குடிசையின் கதவு திறந்தது. முதலில் அப்பெண்களின் அம்மா வெளியே வந்து குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து முகம் கழுவினாள். அதற்குப் பிறகு இரண்டு பெண்களும் எழுந்துவந்து முகம் கழுவினர். ஒரு கூடையை எடுத்துக்கொண்டு அம்மா தோட்டத்துக்குள் செல்ல, இன்னொரு கூடையை எடுத்துக்கொண்டு பெண்கள் இருவரும் தோட்டத்துக்கு அப்பால் நீண்டு செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினர். அந்த அதிகாலை வேளையில் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சிக்கண்ணா சிறிது தொலைவு இடைவெளியில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.

நீண்ட நேர நடைக்குப் பிறகு பெண்கள் காட்டில் நுழைந்தார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞனும் காட்டுக்குள் நுழைந்தான்.

அவர்கள் ஒரு தோட்டத்தின் முன் நின்றார்கள். வீட்டுத்தோட்டத்தில் காணப்பட்டதுபோல அங்கும் ஏராளமான பூச்செடிகள் இருந்தன. ஆனால் பூக்கள் மிகமிகக் குறைவாகவே இருந்தன. சந்தையில் அவர்கள் கூடையில் வைத்திருந்த பூக்களுக்கும் அங்கு பூத்திருந்த பூக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

என்னதான் நடக்கிறது என்பதை பொறுமையாகக் காத்திருந்து பார்த்துவிடுவோம் என்று முடிவெடுத்த சிக்கண்ணா மறைவிடத்திலேயே ஒதுங்கி நின்றான். ஒரு பெண் இரு குடங்களை எடுத்துக்கொண்டு குளத்தங்கரைக்குச் சென்று திரும்பியதையும் ஒரு குடத்தின் நீரை இன்னொருத்தியின் மீது ஊற்றியதையும் மறுகணமே அவள் பூக்கள் கொத்துக்கொத்தாக தொங்கும் மரமாக மாறியதையும் பார்த்தான். ஒவ்வொரு பூவாக நிதானமாகப் பறித்து கூடையை நிரப்பிக்கொண்டாள் பெரியவள். கூடை நிறைந்ததும் மற்றொரு குடத்தில் இருந்த நீரை எடுத்துவந்து மரத்தின் வேரடியில் ஊற்றியதையும் அடுத்த கணமே அவள் பெண்ணாக மாறியதையும் பார்த்தான்.

கண் முன்னால் நிகழ்ந்த அந்த மாற்றத்தைக் கண்டு அவன் பரவசத்தில் மூழ்கினான். எவ்வளவு அற்புதமான பெண் என்று அவளைப்பற்றி நினைத்துக்கொண்டான். இந்த அளவுக்கு உயர்வான ஆற்றல் உள்ளவளாக இருந்தபோதும் சந்தையில் மற்ற பெண்களைப்போல சாதாரணமாக பழகும் அளவுக்கு மனப்பக்குவத்தோடு அவள் நடந்துகொண்ட விதத்தை எண்ணி ஆச்சரியமடைந்தான். அக்கணமே அவள் மீது அவனுக்கு காதல் பிறந்துவிட்டது. எளிமையும் மகத்துவமும் கொண்ட அவளோடுதான் தன் வாழ்க்கை அமையவேண்டும் என மனத்துக்குள் முடிவெடுத்தான். சகோதரிகள் இருவரும் புறப்பட்டுச் செல்லும்வரை காத்திருந்து, அதற்குப் பிறகு தன் மறைவிடத்தைவிட்டு வெளியேறி தன் வீட்டுக்குச் சென்றான்.

அன்றும் சிக்கண்ணா சந்தைக்குச் சென்றான். அவர்கள் பூ விற்பனை செய்வதை தொலைவிலிருந்தே அவனால் பார்க்கமுடிந்தது. மறைவான ஓரிடத்தில் கூட்டத்தோடு ஒருவனாக நின்று, புஷ்பாவையே வைத்தகண் எடுக்காமல் பார்த்து மகிழ்ந்தான். அவளைப் பார்க்கப்பார்க்க அவன் மனத்தில் இதுவரை அனுபவித்திராத மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் பெருகுவதை உணர்ந்தான்.

பூக்கள் வேகவேகமாக விற்று, இன்னும் கொஞ்சம் பூக்களே எஞ்சியிருக்கும் சமயத்தில் அவன் புஷ்பாவை நோக்கி வந்தான். அருகில் வந்ததும் புன்னகைத்தபடி தலைகுனிந்து ‘வணக்கம்’ என்று சொன்னான். அவன் வணங்கிய விதத்தைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘இங்க என்ன கோயிலா கட்டி வச்சிருக்குது? இப்படி கும்பிடறீங்க’ என்றாள். ‘என் கண்ணுக்குத் தெரியற கோயில் உங்களுக்குத் தெரியலைபோல’ என்று சொல்லிவிட்டு மீண்டும் புன்னகைத்தான். அதைக் கேட்டதும் அவள் முகம் சிவந்தது. அவனை ஒருமுறை முறைத்துப் பார்த்துவிட்டு அமைதியானாள்.

‘இந்த ஊருலயே இப்படி ஒரு அழகான பூ பூத்ததை நான் பார்த்ததில்லை. எங்கேருந்து இதையெல்லாம் கொண்டு வரீங்க?’ என்று அப்பாவியைப்போல அவன் கேட்டான்.

புஷ்பா பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். அப்போது புனிதா குறுக்கிட்டு ‘அதான் அன்னைக்கே சொன்னமே, மறந்துடிச்சா? எல்லாமே எங்க வீட்டுத் தோட்டத்துல பூத்த பூதான்’ என்றாள். ‘அப்படியா, சரி சரி’ என்று தலையசைத்துக்கொண்டான் சிக்கண்ணா. அவன் பூவையெல்லாம் எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றதும் ‘எங்க எங்கன்னு கேட்டு இவன் எதுக்கு உயிரை எடுக்கறானோ’ என்று சத்தமில்லாமல் முணுமுணுத்துக்கொண்டாள் புஷ்பா.

அன்று இரவு சிக்கண்ணாவுக்கு தூக்கமே இல்லை. புஷ்பா பற்றிய கனவாகவே இருந்தது. கண்ணை மூடினால் மலர்குலுங்கும் மரமாக அவள் மாறி நின்ற கோலம்தான் தோன்றியது. அந்த அற்புதக்கணத்தை அவனால் மறக்கவே முடியவில்லை. மீண்டும் ஒருமுறை சென்று அந்தக் காட்டில் அவள் மரமாக மாறி நிற்கும் காட்சியைப் பார்க்கவேண்டும் என அவன் மனம் துடித்தது. அக்கணமே விடிந்ததும் முதல் வேலையாக காட்டுக்குச் சென்று அக்காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என முடிவெடுத்தான். அதற்குப் பிறகுதான் அவன் மனம் அமைதியடைந்தது.

திட்டமிட்டபடியே அதிகாலையில் எழுந்து காட்டுக்குச் சென்று ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி கிளைகளுக்கு நடுவில் மறைந்து உட்கார்ந்துகொண்டு சகோதரிகளின் வரவுக்காகக் காத்திருந்தான். அவன் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல சகோதரிகள் வந்தார்கள். வழக்கம்போல மூத்தவள் ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துவந்து இளையவள் மீது ஊற்ற, அடுத்த கணமே அவள் வண்ண வண்ண மலர்குலுங்கும் மரமென நின்றாள். கூடை நிறைய பூக்களைப் பறித்துக்கொண்ட மூத்தவள் இன்னொரு குடம் தண்ணீரை எடுத்துவந்து அம்மரத்தின் வேரடியில் ஊற்றினாள். அக்கணமே மரம் மறைந்துவிட அந்த இடத்தில் புஷ்பா நின்றாள். சகோதரிகள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் சிக்கண்ணா தன் வீட்டுக்குத் திரும்பினான்.

மலர்குலுங்கும் மரமென புஷ்பா நின்ற காட்சி அவன் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவள் மீது அவன் கொண்ட காதல் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகியது. ஒவ்வொரு நாளும் அவளைப் பார்ப்பதற்காகவே சந்தைக்குச் செல்வதும் அவளிடம் பேசுவதற்காகவே பூ வாங்குவதுமாக இருந்தான். காதல் பித்து அவனைப் பாடாய்ப் படுத்தியது. மணந்தால் அவளைத்தான் மணக்கவேண்டும் என அவன் முடிவு கட்டிக்கொண்டான்.

அன்று இரவு உணவுண்ணும் வேளையில் தன் பெற்றோரிடம் தன் காதலைத் தெரிவித்தான் சிக்கண்ணா. அதைக் கேட்டு அவர்கள் முதலில் திகைத்துவிட்டனர். ‘பூக்காரியையா? சந்தையில் பூ விற்பவளையா? ஊர்க்கோடியில் குடிசையில் இருப்பவளையா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டனர். ஆயினும் மகனுடைய மன உறுதியையும் விருப்பத்தையும் புரிந்துகொண்ட பிறகு அவன் காதலை ஏற்றுக்கொண்டனர்.

ஒருநாள் மாலை வேளையில் தம் பெற்றோரை அழைத்துக்கொண்டு புஷ்பா வசிக்கும் குடிசைக்குச் சென்றான். ஊரிலேயே பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தம் குடிசையைத் தேடி வந்திருப்பதை நினைத்து புஷ்பாவின் அம்மா தடுமாறினாள். ஏதோ தப்பு நடந்துவிட்டதோ என நினைத்துக் குழம்பினாள். இளைஞனின் அம்மா எல்லா விவரங்களையும் அவளிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னாள். அதற்குப் பிறகுதான் அவள் மனம் நிதானமடைந்தது.

‘புஷ்பா சின்ன பொண்ணு. அவளைவிட பெரிய பொண்ணு ஒருத்தி இருக்கா. பெரிய பொண்ண வச்சிகிட்டு சின்ன பொண்ணுக்கு எப்படிங்க கல்யாணம் செய்யமுடியும்? அதான் யோசனையா இருக்குது’ என்றாள் அம்மா.

‘உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, நாங்களே அந்தப் பொறுப்பை எடுத்துக்கறோம். என் கணவருடைய அண்ணன் பக்கத்து ஊருலதான் இருக்காரு. அந்தக் குடும்பத்துல ஒரு பையன் இருக்கான். உங்க பெரிய பொண்ண அவனுக்கு முடிச்சிடலாம்.’

தன் பிரச்சினைக்கு இப்படி ஒரு தீர்வு கிடைக்கும் என அம்மா எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு முடிவு காலம் நெருங்கிவிட்டது என்று அவளுக்குத் தோன்றியது. தான் கும்பிட்ட கடவுள் தன்னைக் கைவிடவில்லை என நினைத்து மனமுருகினாள்.

‘ஒரு வார்த்தை என் பொண்ணுங்ககிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள் அம்மா. கதவுக்குப் பின்னால் நின்றபடி எல்லாவற்றையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரிகள் இருவரும் தன் அம்மாவைத் தழுவிக்கொண்டனர். அந்த அணைப்பே அவர்களுடைய சம்மதத்தை அவளுக்கு உணர்த்திவிட்டது. சிறிது நேரம் அவர்களோடு உரையாடிய பிறகு வெளியே வந்து ‘உங்க விருப்பம்போலயே நடக்கட்டும்மா. ரெண்டு பேருமே சம்மதம்னு சொல்லிட்டாங்க’ என்றாள்.

அதற்குப் பிறகு எல்லா வேலைகளும் வேகவேகமாக நடந்தன. ஒரு நல்ல முகூர்த்த நாளில் இரண்டு திருமணங்களும் நடந்தன. அம்மா தன் மகள்களை அணைத்து ஆசி வழங்கி புகுந்த வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். புனிதாவும் புஷ்பாவும் தத்தம் கணவன் வீட்டுக்குச் சென்றனர். புகுந்த வீட்டில் இரண்டு பேருமே மிகமிக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

ஒருநாள் இரவு புஷ்பாவும் சிக்கண்ணாவும் அவர்களுடைய வீட்டுத் தோட்டத்தில் ஊஞ்சலில் அமர்ந்து வானத்தில் நகரும் நிலவைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தனர். நிலவின் வெளிச்சமும் இனிய குளிரும் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.

அப்போது சிக்கண்ணா புஷ்பாவைப் பார்த்து ‘நான் உன்னிடம் ஒன்னே ஒன்னு கேப்பேன். எனக்காக நீ செய்வியா?’ என்று கேட்டான்.

‘என்னால முடிஞ்சா கட்டாயம் செய்வேன். உங்களுக்குச் செய்யாம நான் யாருக்கு செய்யப்போறேன்?’ என்றாள் புஷ்பா.

அவன் புஷ்பாவை முதன்முதல் பார்த்ததில் தொடங்கி அவள் மரமாகி மலர்குலுங்க நின்றதையும் மீண்டும் பெண்ணாக மாறியதையும் பார்த்தது வரைக்கும் விவரித்தான். ‘மலர்குலுங்கற மரமா நீ நிக்கிற கோலத்தைப் பார்க்க ஆசையா இருக்குது. எனக்காக அந்த ஆசையை நிறைவேத்துவியா?’ என்று ஏக்கத்துடன் கேட்டான்.

ஏக்கமும் எதிர்பார்ப்பும் கொண்ட அவன் கண்களை ஏறிட்டுப் பார்த்தாள் புஷ்பா. அவளால் அவன் கோரிக்கையை மறுக்கமுடியவில்லை. ‘ஐயோ, அதெல்லாம் பழைய கதை. இப்ப எதுக்கு?’ என்று கொஞ்சிப் பேசி தப்பிக்க முயற்சி செய்தாள். ஆனால் அவன் தொடர்ந்து அவளிடம் ஒரு குழந்தையைப்போல கெஞ்சிக்கொண்டே இருந்தான். அதை மறுக்க அவளுக்கு மனம் வரவில்லை.

‘சரி, போய் ரெண்டு குடம் தண்ணி எடுத்து வாங்க’ என்றாள். அவன் உடனே ஓடோடிச் சென்று இரு குடங்களில் தண்ணீருடன் திரும்பி வந்தான். எல்லா வழிமுறைகளையும் எச்சரிக்கைகளையும் அவனிடம் சொன்னான்.

‘தேவையில்லாம பூவைக் கிள்ளக்கூடாது. இலையைக் கிள்ளக்கூடாது. கிளையை ஒடிக்கக்கூடாது. கவனமா இருக்கணும்’ என்று மீண்டும் மீண்டும் எச்சரித்தாள். அவன் எல்லாவற்றுக்கும் ‘சரி புஷ்பா’ ‘சரி புஷ்பா’ என்று புன்னகையோடு தலையாட்டினான்.

ஊஞ்சலைவிட்டு இறங்கி சில அடிகள் நடந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் புஷ்பா. உதடுகள் மட்டும் அசைய சில சொற்களை முணுமுணுத்தாள். பிறகு அவனைப் பார்த்து தண்ணீரை எடுத்து தன் தலைமீது ஊற்றும்படி கண்ணாலேயே அவனுக்கு சைகை செய்தாள். அவனும் பயபக்தியோடு அதைப்போலவே செய்தான். குடத்திலிருந்து கடைசிச்சொட்டு தண்ணீர் அவள் தலையில் விழுந்த மறுகணமே அவள் மறைந்துவிட, அந்த இடத்தில் அழகான மலர்மரம் நின்றிருந்தது.

அவன் விழிவிரிய அந்த மரத்தைப் பார்த்தபடி நின்றான். நிலவின் வெளிச்சத்தில் அந்த மலர்களின் நிறமும் அழகும் நெஞ்சைக் கவர்ந்தன. அந்த மலர்களின் நறுமணத்தில் அவன் மனம் நிறைந்தது. பரவசத்தில் ‘சொர்க்கம் சொர்க்கம்’ என்று அவன் கூவினான். அவனை அறியாமல் அவன் கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.

சில கணங்களுக்குப் பிறகு நிறைவுற்ற மனத்துடன் மற்றொரு குடத்தில் இருந்த தண்ணீரை அடிமரத்தைச் சுற்றி ஊற்றினான். கடைசிச்சொட்டு தண்ணீர் விழுந்ததும் அந்த மரம் இருந்த தடம் மறைந்தது. அந்த இடத்தில் புஷ்பா உட்கார்ந்திருந்தாள். ‘இப்ப சந்தோஷம்தானே?’ என்று புன்னகையோடு கேட்டபடி அவள் எழுந்து அவனை நோக்கி வந்தாள். ‘ரொம்ப ரொம்ப சந்தோஷம் கண்ணே’ என்றபடி அவன் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான்.

தோட்டத்திலிருந்து ஒரு புதுவிதமான மணம் வருவதை உணர்ந்ததும் அதே வீட்டின் வேறொரு அறையில் படுத்திருந்த அந்த இளைஞனின் தங்கை த்ரிஷா சட்டென விழித்தெழுந்தாள். முதலில் அது கனவு என அவள் நினைத்திருந்தாள். ஆனால் அப்போதும் அந்த மணம் ஜன்னல் வழியாக தன் அறைக்குள் வருவதை உணர்ந்த பிறகு அதை கனவு என நினைக்க அவள் மனம் மறுத்தது. எங்கிருந்து இந்தப் புதிய மணம் வருகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக படுக்கையிலிருந்து எழுந்து சத்தமில்லாமல் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்தின் பக்கம் நடந்தாள்.

தோட்டத்தை நெருங்கிய கணத்தில் சிக்கண்ணா நின்றிருப்பதையும் அவனுக்கு அருகில் ஒரு மலர்மரம் நின்றிருப்பதையும் அதன் முன்னால் கைவிரித்து மயங்கிய கோலத்தில் அவன் காணப்படுவதையும் அவள் பார்த்தாள். சட்டென ஒருகணம் அங்கேயே ஒரு மறைவிடத்தில் ஒதுங்கி நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தாள். தம் வீட்டுத் தோட்டத்தில் இந்தப் புதிய மரம் எப்படி ஒரே இரவில் வந்து முளைத்தது என்று புரியாமல் குழப்பத்தோடு நின்றிருந்தாள். அம்மரத்தின் பூக்களின் மணமே தன் அறை வரைக்கும் பரவியிருக்கிறது என்பதை அக்கணமே அவள் புரிந்துகொண்டாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் ஒரு குடம் தண்ணீரைக் கொண்டுவந்து அடிமரத்தைச் சுற்றி ஊற்றியதையும் அந்த இடத்தில் புஷ்பா எழுந்து நிற்பதையும் அவர்கள் இருவரும் கட்டித் தழுவிக்கொண்டதையும் பார்த்தாள். அந்த மாயமாற்றத்தைக் கண்டு த்ரிஷா மிகவும் பரவசம் கொண்டாள். இருவரில் ஒருவரும் தன்னைப் பார்த்துவிடாதபடி மெல்ல மெல்ல பின்வாங்கி நடந்து தன் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள் த்ரிஷா. என்றைக்காவது ஒருநாள் இதைப்பற்றி தன் அண்ணியிடம் பேசவேண்டும் என நினைத்து, அந்த விஷயத்தை ரகசியமாகவே தன் மனத்துக்குள் வைத்துக்கொண்டாள்.

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு வேலை தொடர்பாக சிக்கண்ணா வெளியூருக்குச் செல்லவேண்டியிருந்தது. நாலைந்து நாட்களில் திரும்பி விடுவதாக புஷ்பாவிடம் தெரிவித்துவிட்டு விடைபெற்றுக்கொண்டு அவன் ஊரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.

திருமணத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக தன்னோடு இருந்தவன் திடீரென பிரிந்துபோனதும் அப்பிரிவு புஷ்பாவை வாட்டியது. அவள் நெஞ்சில் வழக்கத்தைவிட அவனைப்பற்றிய நினைவுகள் அதிக அளவில் எழுந்தன. வீட்டிலும் சரி, தோட்டத்திலும் சரி, எங்கு சென்று உட்கார்ந்தாலும் அவன் நினைவு எழுந்து ஆக்கிரமித்தது.

ஒருநாள் மாலை வேளையில் புஷ்பா தன் அறையில் தனியாக உட்கார்ந்திருந்தாள். அப்போது த்ரிஷா ‘என்ன அண்ணி இது? ஏன் எப்ப பார்த்தாலும் ஒரே சோகமா இருக்கீங்க? நானும் என் சிநேகிதிகளும் காத்துவாங்க ஆத்தங்கரை வரைக்கும் போறோம். நீங்களும் வாங்க. உங்களுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்’ என்று ஆசையோடு அழைத்தாள். புஷ்பாவுக்கும் ஒரே இடத்தில் அடைந்து கிடக்காமல் எங்காவது வெளியே போய்வந்தால் நல்லது என்று தோன்றியது. அதனால் த்ரிஷா அழைத்ததும் தலைவாரி பூச்சூடிக்கொண்டு புறப்பட்டாள்.

த்ரிஷாவின் ஆறு தோழிகள் ஏற்கனவே வீட்டுக்கு வெளியே காத்திருந்தனர். அவர்களோடு புஷ்பாவும் சேர்ந்துகொண்டாள். எல்லோரும் கதைபேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சென்றார்கள். மாலைப்பொழுதில் ஆற்றங்கரை மணற்பரப்பில் ஓடிப் பிடித்து விளையாடினர். பக்கத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குச் சென்று மரங்களுக்கு நடுவில் கண்ணாமூச்சி விளையாடினர். அங்கிருக்கும் மரங்களில் பழுத்துத் தொங்கும் பழங்களைப் பறித்துத் தின்றனர். அவ்வப்போது தென்படும் குரங்குகளைக் கண்டு கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்.

மாலையில் சூரியன் மறையும் நேரம் வந்தது. ஆற்றின் மறுகரை விளிம்பை ஒட்டி சூரியன் முழுகுவதைப் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. அப்போது திடீரென அவளுக்கு சிக்கண்ணாவின் நினைவு வந்தது. அந்த அஸ்தமனக்காட்சியை அவனோடு சேர்ந்து பார்த்தால் அவன் என்னென்னவெல்லாம் சொல்வான் என அசைபோட்டு மகிழ்ந்தாள். அவளை அறியமால் அவள் முகத்தில் ஒரு புன்னகை வெளிப்பட்டது.

எல்லோரும் புறப்படுவதற்குத் தயாரான போது ‘அண்ணி, உங்ககிட்ட நான் ஒன்னே ஒன்னு கேப்பேன். எனக்காக செய்வீங்களா?’ என்று கேட்டாள்.

அவள் கேள்வியின் உள்ளர்த்தம் புரியாமல் ‘என்ன த்ரிஷா? என்ன வேணும்? என்னால முடிஞ்சா உனக்காக கண்டிப்பா செய்வேன்’ என்றாள் புஷ்பா.

உடனே த்ரிஷா ஒருநாள் இரவில் தோட்டத்தில் சிக்கண்ணாவும் அவளும் தனித்திருந்த நேரத்தில் அப்போது அவனுக்காக அவள் மலர் சொரியும் மரமாக நின்றதையும் பிறகு பெண்ணாக மாறியதையும் தான் பார்த்ததையும் தனக்கு எல்லாம் தெரியும் என்றும் தெரிவித்தாள்.

‘எனக்காக ஒரே ஒருமுறை நீங்க மலர்மரமா மாறி நிக்கணும் அண்ணி. எனக்கு பார்க்கணும்போல ஆசையா இருக்குது. உங்களுக்கு அந்த சக்தி இருக்குதுங்கறத காட்டறதுக்காகத்தான் இவுங்க எல்லாரையும் நான் இங்க கூட்டி வந்திருக்கேன்’ என்று மன்றாடினாள்.

‘வேணாம் த்ரிஷா. அது ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி விளையாட்டுக் காரியமில்லை. ஏதாவது தப்பு நடந்தா விபரீதமா போயிடும். நான் சொன்னா கேளு. புறப்படலாம் வா’ என்றாள் புஷ்பா.

த்ரிஷா விடவில்லை. தொடர்ந்து மன்றாடினாள். ‘எனக்காக ஒரே ஒருமுறை செய்யக்கூடாதா? என் மேல உங்களுக்கு கருணையே கிடையாதா?’ என்று கண்ணீர் விட்டாள்.

ஒரு காலத்தில் தன் குடும்பத்தையே தாங்கிய தன் வரம் தன்னை இப்படி ஒரு இக்கட்டில் சிக்கவைத்திருப்பதை நினைத்து புஷ்பா வருத்தத்தில் மூழ்கினாள். அதே சமயத்தில் தன் கண் முன்னால் ஒரு பெண் கண்ணீர் விடுவதைப் பார்க்கவும் அவளுக்கு சங்கடமாக இருந்தது.

‘சரி, உன் விருப்பப்படியே செய்யறேன். கண்ணீரைத் துடைச்சிக்கோ. நான் சொல்வதைக் கவனமாகக் கேள்’ என்று த்ரிஷாவிடம் செய்யவேண்டிய ஒவ்வொரு செய்முறையையும் விளக்கமாகச் சொல். த்ரிஷா எல்லாவற்றுக்கும் சரி சரி என்று உற்சாகமாகத் தலையாட்டினாள்.

‘நல்லா ஞாபகம் வச்சிக்கோ த்ரிஷா. தேவையில்லாம ஒரு பூவைக் கூட பறிக்கக்கூடாது. ஒரு இலையைக் கூட கிள்ளக்கூடாது. எந்தக் கிளையையும் புடிச்சி உலுக்கக்கூடாது. ஒடிக்கக்கூடாது.’

த்ரிஷா மீண்டும் எல்லாவற்றுக்கும் சரி சரி என்று தலையாட்டினாள்.

புஷ்பா தரையில் உட்கார்ந்து கண்மூடி மந்திரச்சொற்களைச் சொல்லிமுடித்ததும் அவளுடைய கண் சைகைக்காகக் காத்திருந்த த்ரிஷா குடத்திலிருந்த தண்ணீரை அவள்மீது ஊற்றினாள். கடைசிச்சொட்டு தண்ணீர் விழுந்த மறுகணமே அவள் மலர்மரமாக மாறி நின்றாள். ஒரு மாயவித்தைபோல வண்ணவண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மரம் திடீரென தன் கண் முன்னால் நிற்பதைப் பார்த்து த்ரிஷாவும் அவள் தோழிகளும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். ஒவ்வொரு மலரையும் தொட்டுத்தொட்டுப் பார்த்து ஆரவாரம் செய்தனர். உற்சாகத்தில் புஷ்பா சொன்ன நிபந்தனைகளை அனைவரும் மறந்தனர். ஒவ்வொரு பூவையும் கிள்ளி ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடத் தொடங்கினர். கைக்கு எட்டும் தொலைவில் இருந்த பூக்களையெல்லாம் பறித்து முடித்ததும் சற்றே தொலைவில் இருந்த பூக்களைப் பறிப்பதற்காக கிளையை எட்டி இழுத்தனர். அது மெல்லிய சத்தமுடன் முரிந்து விழுந்ததைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

ஆசை தீர ஆடி முடித்ததும்தான் அவர்களுக்கு வீட்டுக்குத் திரும்பும் நினைவு வந்தது. ‘சரி சரி போதும் விளையாட்டு. இருட்டற நேரமாயிடுச்சி. இதோடு நிறுத்திக்கலாம்’ என்றாள் த்ரிஷா. அவள் குரல் எழுந்ததும் அனைவரும் விளையாடுவதை நிறுத்திவிட்டனர். அவள் ஓரமாக வைத்திருந்த இரண்டாவது குடத்தை எடுத்துவந்து மலர்மரத்தைச் சுற்றி தண்ணீரை ஊற்றினாள். ஒரு பெண் வேதனையில் முனகும் குரல் கேட்டதே தவிர, மலர்மரம் பெண்ணாக மாறவில்லை.

த்ரிஷா முதன்முறையாக அச்சத்தில் மூழ்கினாள். மரத்தை ஊன்றிக் கவனித்தாள். ஒரு கிளையின் விளிம்பில் புஷ்பாவின் முகம் மட்டும் தெரிந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. வேதனை நிறைந்த அம்முகத்தை அவளால் நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை. பயமாக இருந்தது. ஏதோ விபரீதமாக நடந்துவிட்டது என்பதை உணர்ந்ததும் அவள் உடல் நடுங்கியது. அவளுடைய தோழிகளும் அச்சத்தில் மூழ்கினர். மேலும் அங்கே நின்றிருந்தால் ஆபத்து என நினைத்து ‘வா வா த்ரிஷா. போயிடலாம்’ என த்ரிஷாவை அழைத்தனர். த்ரிஷாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. குற்ற உணர்ச்சி அவளை வாட்டியது.

‘எங்க அண்ணன் வந்து கேட்டா நான் என்னன்னு பதில் சொல்றது?’

‘எல்லாரும் ஒன்னா சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடிட்டிருந்தோம். மறைஞ்சிக்கிறதுக்காக காட்டுக்குள்ள போனா, திரும்பிவரலைன்னு சொல்லிடலாம். கவலைப்படாதே.’

தோழிகள் சொல்லுக்குக் கட்டுப்படுவதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் தன் முட்டாள்தனமே காரணம் என அவளுக்குத் தோன்றினாலும் அந்தப் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது அவளுக்குப் புரியவில்லை. அமைதியாக எதுவும் நடக்காததுபோல அனைவரோடும் சேர்ந்து அவள் வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.

சில நாட்கள் கழித்து சிக்கண்ணா வீட்டுக்குத் திரும்பி வந்தான். வாசலைத் தாண்டும்போதே ‘புஷ்பா புஷ்பா’ என்று அழைத்துக்கொண்டே வந்தான். பதில் இல்லை என்றதும் ஒவ்வொரு அறையாகச் சென்று தேடினான். கடைசியாக த்ரிஷா இருக்கும் அறைக்கு வந்து ‘புஷ்பா எங்க போனா?’ என்று கேட்டான். த்ரிஷா நடந்த விஷயத்தை அவனிடம் விளக்கமாகச் சொன்னாள். அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு அவனுக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. ஐயோ என்று இடிந்துபோய் ஒரு தூணுக்கடியில் சரிந்து உட்கார்ந்தான். அவனை அறியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அப்போதே சிக்கண்ணா ஆற்றங்கரைக்குச் சென்றான். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் காட்டுக்குள் சென்று தேடினான். இரவு கவிந்த பிறகுதான் நம்பிக்கையை இழந்து வீட்டுக்குத் திரும்பினான். அவனைப் பார்க்கப்பார்க்க த்ரிஷாவுக்கு பாவமாக இருந்தது. உண்மையைச் சொல்லிவிடலாமா என பல நேரங்களில் நினைத்தாள். ஆயினும் ஏதோ அச்சத்தில் மூழ்கி அமைதியாக இருந்தாள். அவளுடைய குற்ற உணர்வு அவளை வாட்டியது.

தன் தேடல் வேட்டையில் மனம் தளராமல் தொடர்ந்து ஈடுபட்ட சிக்கண்ணா ஒருநாள் சோர்ந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவனை அறியாமல் அவன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. புஷ்பா புஷ்பா என்று சொல்லிச்சொல்லிப் புலம்பினான்.

அப்போது எங்கிருந்தோ யாரோ வேதனையில் முனகும் சத்தம் கேட்டது. முதலில் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏதோ ஒரு பறவையின் முனகல் என்றே நினைத்தான். ஆனால் தொடர்ச்சியாக எழுந்த அக்குரல் அவனை உருகவைத்தது. அது ஏதோ ஒரு மானுடக்குரல்தான் என்ற எண்ணம் எழுந்ததும் வேகமாக எழுந்து நின்று அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தான். அப்போதுதான் தான் அமர்ந்திருக்கும் மரத்தின் கிளையில் புஷ்பாவின் முகத்தைப் பார்த்தான். வேதனை படிந்த அவள் கண்களைப் பார்த்ததும் ‘புஷ்பா புஷ்பா’ என்று கூவினான். அக்குரலைக் கேட்டதும் அவள் கண்கள் விரிந்தன. தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. ஆனால் அவளால் ஒரு சொல் கூட பேசமுடியவில்லை.

‘ஐயோ. இது என்ன புஷ்பா? ஏன் இப்படி ஆச்சி?’

அப்போதுதான் மரத்தைச் சுற்றி விழுந்திருந்த பூக்களையும் கிளைகளையும் இலைகளையும் பார்த்தான். ஓரமாக உருண்டோடி கவிழ்ந்திருக்கும் குடத்தையும் பார்த்தான். என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் எளிதாக ஊகிக்க முடிந்தது.

கண்ணீர் பெருக ‘புஷ்பா புஷ்பா’ என்று முணுமுணுத்தான். ‘தெய்வமே, என் புஷ்பாவை எனக்குத் திருப்பிக்கொடு’ என்று மனமுருக வேண்டினான். பிறகு தரையில் கிடந்த ஒவ்வொரு பூவையும் எடுத்து அது பறித்தெடுக்கப்பட்ட இடத்தில் வைத்தான். ஆச்சரியமூட்டும் விதமாக, பூ உடனே அந்தக் கிளையுடன் ஒட்டிக்கொண்டது.

பூக்களைத் தொடர்ந்து இலைகளையும் கிளைகளையும் எடுத்துப் பொருத்தினான். மரம் பழைய நிலைக்குத் திரும்பியது. குடத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த ஆற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டுவந்து மரத்தைச் சுற்றி தெய்வத்தை நினைத்தபடி ஊற்றிவிட்டு கைகுவித்தபடி கண்களை மூடினான்.

ஒரு கணத்துக்குப் பிறகு கண் விழித்தபோது அந்த மரம் மறைந்துவிட்டதையும் புஷ்பா நிலைகுலைந்து சோர்வோடு சுருண்டு படுத்திருப்பதையும் பார்த்தான். உடனே ஓடோடிச் சென்று அவளை எடுத்து மடியில் சாய்த்துக்கொண்டு புஷ்பா புஷ்பா என்று பெயர் சொல்லி அழைத்தான். அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்து ‘வந்துட்டீங்களா?’ என்றபடி சோர்வோடு புன்னகைத்தாள்.

‘புஷ்பா, என் புஷ்பா’ என்று சொன்னபடி அவளை நெஞ்சாரத் தழுவிக்கொண்டான் சிக்கண்ணா.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா appeared first on கிழக்கு டுடே.

  •  

நேசப் பிரவாகம்

 அதிகாலையில் இரயில் நிலையத்தில் இறங்கியதும் தொற்றிய உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இரயில் நிலையம் முற்றிலுமாக மாறி இருந்தது. வெளியில்...

The post நேசப் பிரவாகம் appeared first on சிறுகதைகள்.

  •  

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுவார்கள்.

புதிய ஊருக்குச் சென்றதும் முதலில் அந்த ஊரைச் சுற்றிவந்து அதன் அமைப்பைப் புரிந்துகொள்வார்கள். பிறகு அங்கு நடமாடும் மனிதர்களிடன் பேச்சுக் கொடுத்து அவர்களுடைய எண்ணப்போக்கைப் புரிந்துகொள்வார்கள். அதன் அடிப்படையில் சூழலுக்குத் தகுந்தபடி பேசத் தொடங்குவார்கள்.

காதுகொடுத்துக் கேட்கிறவர்கள் மயங்கிப் போகிற அளவுக்கு இருவரும் இனிமையாகப் பேசி நெருக்கத்தை உருவாக்கிக்கொள்வார்கள். அதுவரை ஊர்சுற்றி ஈட்டிய அனுபவங்களின் அடிப்படையில் அந்தச் சமயத்தில் நினைவுக்கு வருகிற ஒன்றிரண்டு பழைய சம்பவங்களை அழகாக விவரித்து அவர்களுடைய மனத்தில் எளிதாக இடம்பிடித்துவிடுவார்கள். அதற்குப் பிறகு அந்த ஊரில் அவர்களுக்கு ராஜ உபசாரம் நடக்கும். வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு, ஏதேனும் மரத்தடியிலோ அல்லது குளக்கரையிலோ அல்லது சத்திரத்திலோ உறங்கிவிடுவார்கள்.

விடிந்ததும் எழுந்து குளத்தில் குளித்துவிட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு அடுத்த ஊருக்கு நடக்கத் தொடங்கிவிடுவார்கள். ஊரில் இருப்பவர்களின் ஒருசிலர் அவர்களை நெருங்கி ‘ஐயா, இன்னும் ரெண்டுநாள் எங்க ஊருல தங்கிட்டுப் போகலாமே. ஏன் இவ்வளவு அவசரமா புறப்படறீங்க? நீங்க தங்கினா, உங்க புண்ணியத்துல நாங்களும் நாலு நல்ல விஷயங்களைக் கத்துக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பா இருக்கும்” என்று கேட்பார்கள். குருவும் சீடனும் புன்னகைத்தபடி அவர்களுடைய கோரிக்கையை மறுத்துவிடுவார்கள். ‘ஒருநாள் தங்கின ஊருல இன்னொரு நாள் தங்கக்கூடாதுங்கறது கடவுள் முன்னால நாங்க எடுத்துகிட்ட சபதம். தயவுசெஞ்சி எங்களைத் தடுக்கவேணாம்’ என்று நயமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிடுவார்கள்.

எந்த ஊருக்குப் போனாலும் அவர்களுடைய கதைகளைக் கேட்பதற்கு பத்து பேர் கூடிவிடுவார்கள். வயிற்றுப்பசியைத் தணித்துக்கொள்ள நல்ல சாப்பாடு கிடைத்துவிடும். அதனால் தினசரிக்கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் அவர்கள் ஆண்டுக்கணக்கில் நாடோடிகளாகத் திரிந்தார்கள்.

வழக்கம்போல ஒருநாள் காலை வேளையில் ஓர் ஊரிலிருந்து புறப்பட்டு மாலை வேளையில் இன்னொரு ஊரை அடைந்தார்கள். அந்த ஊரில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஊர் எல்லையைத் தொட்ட சமயத்திலிருந்து ஒருவர் கூட அவர்கள் பார்வையில் தட்டுப்படவில்லை. வழக்கமாக தெருவில் தென்படும் சின்னஞ்சிறு பிள்ளைகளின் விளையாட்டுக்காட்சிகள் கூட அந்த ஊரில் தென்படவில்லை. ஊரே நடமாட்டமின்றி ஏதோ பாழடைந்த ஊரைப்போல அமைதியில் மூழ்கிக் காட்சியளித்தது. கடைத்தெரு வெறிச்சென்றிருந்தது. குளத்தங்கரையும் கிணற்றங்கரையும் வெறிச்சென்று இருந்தன. கோவில் வாசல் கூட வெறிச்சோடி இருந்தது.

இது என்னடா விசித்திரம் என நினைத்துக்கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கியபடி குருவும் சீடனும் ஒவ்வொரு தெருவாக நடந்து பார்த்தார்கள். எல்லா வீடுகளின் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. ஒரு வீட்டில் கூட ஜன்னல் இல்லை. திண்ணைகள் வெற்றிடங்களாக இருந்தன. வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதையே தெரிந்துகொள்ள முடியவில்லை.

வீட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் கால்மடக்கி அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. வைக்கோல் போரின் ஓரமாக கோழிகள் கதகதப்பாக சுருண்டுப் படுத்திருந்தன. மரத்தடிகளில் நாய்கள் படுத்திருந்தன. புதருக்கடியில் பூனைகள் ஒடுங்கி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன, அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு வரும்போது பூட்டிய வீடுகளுக்குள் மனிதர்களும் உறங்குகிறார்களோ என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்தது. ஒட்டுமொத்த ஊரே ஏன் இப்படி உறக்கத்தில் மூழ்கியிருக்கிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

‘நாம இந்த ஊரைவிட்டு உடனடியா புறப்பட்டுப் போயிடறதுதான் நல்லது. யாருமே தென்படாத இந்த ஊருல யாரோடு நாம உரையாடமுடியும்? நமக்கு யார் சாப்பாடு போடுவாங்க?’ என்று சீடனிடம் சொன்னார் குரு.

சீடன் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவனைப்போல தலையை அசைத்தான். ‘குருவே, என்னால் இனிமேல் ஒரு அடிகூட நடக்கமுடியாது. கால்கள் வலியெடுத்துவிட்டன. பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது. சிறுகுடலை பெருங்குடல் தின்றுவிடும்போல உள்ளது’ என்று சொல்லிக்கொண்டே ஒரு மரத்தடியில் சோர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

‘இங்கேயே உட்கார்ந்துடறதால நம்ம பிரச்சினை தீராது. நமக்கு சாப்பாடு கிடைக்க வழியே இல்லை. நான் சொல்றதைக் கேளு. மெதுவா நாம அடுத்த ஊரைப் பார்த்துப் போயிடலாம்’ என்று குரு மறுபடியும் சீடனிடம் எடுத்துரைத்தார்.

‘மன்னிச்சிக்குங்க குருவே. என் உடம்புல கொஞ்சம் கூட சக்தியே இல்லை’ என்றான் சீடன்.

என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்துடன் இருளத் தொடங்கிய வானத்தின் பக்கம் பார்த்தபடி யோசனையில் மூழ்கினார் குரு. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு சேவல் கூவும் குரல் கேட்டது. அதைக் கேட்டதும் குரு ஒருகணம் திகைத்து எல்லாத் திசைகளிலும் திரும்பிப் பார்த்தார். என்ன நடக்கிறது என்பதே அவருக்குப் புரியவில்லை. அப்போது இருள் முழுமையாகக் கவியத் தொடங்கியது.

அந்த நேரத்தில் எல்லா வீடுகளிலிருந்தும் கதவுகளைத் திறந்துகொண்டு மனிதர்கள் வெளிப்படத் தொடங்கினார்கள். வாசல் தெளித்து கோலம் போட்டார்கள். தெருவில் மெல்ல மெல்ல நடமாட்டம் பெருகியது.

அதைப் பார்த்ததும் சீடன் உற்சாகத்தோடு எழுந்து நின்றான். ‘பாருங்க, பாருங்க. நம்ம நம்பிக்கை வீண்போகலை. சுடுகாடு மாதிரி தெரிஞ்ச இந்த ஊருல மனிதர்கள் நடமாட ஆரம்பிச்சிட்டாங்க. உலகத்துக்கெல்லாம் பகலா இருக்கும்போது இந்த ஊருல இரவா இருக்கும்போல. மத்த இடங்கள்ல ராத்திரியாகத் தொடங்கற சமயத்துல இந்த ஊருல விடியத் தொடங்கும்போல. விசித்திரமா இருக்குது’ என்று நடமாட்டத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினான்.

எல்லாவற்றையும் பார்த்து குரு குழப்பத்தில் ஆழ்ந்தார். ஆனால் மக்கள் நடமாட்டத்தைப் பார்த்ததும் சீடன் உற்சாகமடைந்துவிட்டான். களைப்பைப் பொருட்படுத்தாமல் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான். அவனுக்குப் பின்னால் நடந்துசெல்வதைத் தவிர, குருவுக்கு வேறு வழி தெரியவில்லை.

மனிதர்களைச் சந்தித்து, நம்பிக்கையைச் சம்பாதித்து, அதற்குப் பிறகு உணவு கிடைப்பதற்காகக் காத்திருக்கும் அளவுக்கு அவர்களால் பசியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடனடியாக எதையாவது சாப்பிட்டு தெம்பை வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில் இருவரும் இருந்தார்கள். அதனால் ஏதேனும் உணவுக்கடைக்குச் சென்று எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என நினைத்து கடைத்தெருவை நாடி நடக்கத் தொடங்கினார்கள்.

ஓர் உணவுக்கடையிலிருந்து வந்த மணம் அவர்களைத் தடுத்து நிறுத்தியது. சீடன் வேகமாக அந்தக் கடைக்குச் சென்றான். ஏராளமான தட்டுகளில் பலவிதமான உணவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கப்பார்க்க சீடனின் நாவில் எச்சில் ஊறியது. முதல் பார்வையில் தென்பட்ட ஓர் உணவைச் சுட்டிக்காட்டி கடைக்காரரிடம் ‘இது என்ன விலை?’ என்று கேட்டான். கடைக்காரர் ‘ஒரு பித்தளை காசு’ என்றார். சீடன் உடனே அதற்குப் பக்கத்தில் இருந்த தட்டில் வைக்கப்பட்டிருந்த வேறொரு சிற்றுண்டி வகையைக் காட்டி ‘இது என்ன விலை?’ என்று கேட்டான். கடைக்காரர் ‘அதுவும் ஒரு பித்தளை காசு’ என்று சொன்னார். உடனே சீடன் இன்னொரு சிற்றுண்டி வகையைச் சுட்டிக்காட்டி ‘இது என்ன விலை?’ என்று விசாரித்தான். கடைக்காரர் ‘அதன் விலையும் ஒரு பித்தளைக்காசுதான்’ என்று புன்னகைத்துக்கொண்டே சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் திகைத்து நின்றான் சீடன். அதைப் பார்த்த கடைக்காரர் அவனிடம் பொறுமையான குரலில் ‘இந்த ஊருல எதை எடுத்தாலும் ஒரே விலைதான். எல்லாமே ஒரு பித்தளை காசுதான்’ என்று சொன்னார்.

அதைக் கேட்டு குழப்பத்தில் ஆழ்ந்தான் சீடன். ‘எல்லாத்துக்கும் ஒரே விலையா? அது எப்படி? ஆச்சரியமா இருக்குதே’ என்று வாயைப் பிளந்தான்.

‘எல்லாம் எங்க ராஜாவுடைய கட்டளை. இந்த ஊருல எந்தப் பொருளை வித்தாலும் ஒரே விலைதான்.’

‘சாப்பாட்டுக்கடையில மட்டும்தான் அந்த வழிமுறையா? இல்ல, எல்லாக் கடைகளிலும் இதே வழிமுறைதானா?’ என்று மென்று விழுங்கியபடி கேட்டான்.

‘எந்தக் கடையில எதைக் காட்டி விலை கேட்டாலும் ஒரே விலைதான் சொல்வாங்க. ஒரு பெரிய கடப்பாறையை நீங்க வாங்கப் போனாலும் அதனுடைய விலையும் ஒரு பித்தளைக் காசாதான் இருக்கும். ஒரு படி நெல்லு வாங்கப்போனாலும் அதனுடைய விலையும் ஒரு பித்தளைக் காசாதான் இருக்கும். ராஜாவுடைய கட்டளையை மீறினா கடுமையான தண்டனை உண்டு.’

ஆளுக்கொரு பித்தளைக் காசைக் கொடுத்து சிற்றுண்டி வாங்கிச் சாப்பிட்டனர். வயிறு நிறைந்ததும் களைப்பின் காரணமாக அவர்கள் கால்கள் தள்ளாடத் தொடங்கின. படுத்துறங்க உடல் கெஞ்சியது. அப்போதுதான் தெருக்களில் கொஞ்சம் கொஞ்சமாக நடமாட்டம் பெருகத் தொடங்கியது. இருட்டை பகல்போல நினைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்களைப் பார்க்க அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது. வழக்கமாக ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியைத் தேடி நடக்கும் பழக்கமுள்ள அவர்கள் முதல்முறையாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியைத் தேடி அலைந்தார்கள். சிறிது தூரம் நடந்த பிறகு ஒரு பாழடைந்த மண்டபம் தெரிந்தது. அனைவராலும் கைவிடப்பட்ட அந்த மண்டபத்தில் நாலைந்து நாய்களைத் தவிர வேறெந்த நடமாட்டமும் இல்லை. உடனே குருவும் சீடனும் அங்கேயே மறைவாக ஓரிடத்தில் படுத்து உறங்கத் தொடங்கினர்.

பொழுது விடியும் சமயத்தில்தான் அவர்களுக்கு விழிப்பு வந்தது. எழுந்து உட்கார்ந்து வானத்தில் சூரியன் உதித்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேறுவதையே சிறிது நேரம் பார்த்தனர். பிறகு குளம் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று நீராடி முடித்தனர். அதே நேரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக ஊர் அடங்கத் தொடங்கியது.

‘இப்பவே நாம இந்த ஊரிலிருந்து கெளம்பிடலாம். இந்த ஊர் நமக்கு ஒத்துவராது’ என்று சீடனிடம் சொன்னார் குரு.

‘குருவே, நான் சொல்றதைக் கேளுங்க. இதைவிட நல்ல ஊர் உலகத்துலயே இருக்கமுடியாது. ஒரே ஒரு பித்தளைக்காசு செலவு செஞ்சா போதும். வயிறாரச் சாப்பிட்டு காலத்தைக் கழிக்கலாம். சாப்பாட்டுக்காக நாம ஊரூரா அலையவேணாம்.’

‘அந்த கோணத்துல யோசிச்சா நமக்கு வசதிதான். இல்லைன்னு சொல்லலை. ஆனா, ஊரு தூங்கற நேரத்துல நாம விழிச்சிருக்கறதும், நாம விழிச்சிருக்கிற நேரத்துல ஊரே தூங்கறதும் எனக்கு என்னமோ நல்லதா படலை. அதனாலதான் இந்த இடத்தைவிட்டு போயிடலாம்னு சொல்றேன்.’

‘நாலு நாள் பழகிட்டா தூக்கம், முழிப்பு எல்லாம் பழகிடும் குருவே. நீங்க கவலைப்படாதீங்க.’

‘இந்த ஊருல இருக்கறவங்க எல்லாருமே முட்டாளா இருக்கறாங்க. இவுங்களுக்கு ராஜாவா இருக்கறவன் எல்லாரைவிடவும் பெரிய முட்டாளாதான் இருப்பான். கடப்பாறையையும் நெல்லையும் ஒரே விலையில விக்கணும்னு கட்டளை போடற ராஜா நல்லவனா இருக்க வாய்ப்பே இல்லை. இவுங்களுக்கு நடுவுல நாம வாழறது ரொம்ப கஷ்டம். இவுங்களோடு பழகிப்பழகி கடைசியில நாமளும் முட்டாளா மாறிடுவோம். அதைப்பத்தியும் நீ கொஞ்சம் யோசிக்கணும்.’

‘யாரு முட்டாளா இருந்தா நமக்கென்ன குருவே. இது சொர்க்கம் குருவே, சொர்க்கம். நம்ம வாழ்க்கை குறையில்லாம நடந்தா போதாதா? நீங்க ஏன் நடக்காததையெல்லாம் கற்பனை செஞ்சி குழப்பிக்கறீங்க? அமைதியா இருங்க. எல்லாத்தயும் நான் பார்த்துக்கறேன்.’

குரு எடுத்துச்சொன்ன எந்தக் கருத்தையும் சீடன் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. குருவுக்கும் சீடனைவிட்டுத் தனியாகச் செல்ல மனமில்லை. வேறு வழியில்லாமல், சீடன் சொல்லுக்கு குரு கட்டுப்பட்டார். இருவரும் அந்த ஊரிலேயே காலத்தைக் கழிக்கத் தொடங்கினர்.

நாட்கள் வாரங்களாகின. வாரங்கள் மாதங்களாகின. ஒரு மாற்றமும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் கழிந்தது. ஒவ்வொரு பொழுதும் நல்லபடியாகக் கழிந்தாலும் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் எவ்விதமான உறவும் உருவாகிவரவில்லை. ஒருவரும் அவர்களிடம் நின்று பேசவில்லை. நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், ஏன் இங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று கூட கேட்கவில்லை. அவரவர்களும் அவரவர்கள் வேலையைப் பார்த்தபடி இருந்தார்கள்.

நாள் முழுக்க நடந்து நடந்தே பழக்கப்பட்ட இருவரும் நடையே இல்லாமல் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கியதில் இருவரும் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாதபடி பருத்துவிட்டனர்.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு திருடன் வந்தான். மற்ற ஊர்களைப்போல அந்த ஊர்க்காரர்கள் பகலில் விழித்திருந்து இரவில் உறங்கும் பழக்கம் உள்ளவர்கள் அல்ல என்பதையும் இரவில் விழித்து பகலில் உறங்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதையும் அவன் தெரிந்துகொண்டே வந்திருந்தான். பகல் வெளிச்சம் தன் தொழிலுக்கு உதவும் என அவன் நினைத்தான்.

அந்த ஊரில் ஒரு நகை வியாபாரி வசித்துவந்தார். ஊரிலேயே அவருடைய வீடுதான் பெரிய வீடு. அவர்தான் ஊரிலேயே பெரிய பணக்காரர். இரண்டுமூன்று நாட்கள் அந்த ஊரிலேயே தங்கி தெருத்தெருவாக அலைந்து நோட்டமிட்ட பிறகு அந்த வீட்டில் திருடுவதற்கு முடிவெடுத்தான் திருடன். அந்த வீட்டுக்குள் புகுந்தால் ஒரே திருட்டில், தேவையான அளவுக்குத் திருடிச் செல்லலாம் என்றும் அதற்குப் பிறகு இரண்டுமூன்று மாதங்கள் சந்தோஷமாகச் சுற்றித் திரியலாம் என்றும் அவன் திட்டமிட்டான்.

ஒருநாள் உச்சிப்பகல் வேளையில் அந்த ஊரே உறக்கத்தில் மூழ்கியிருந்தது. அந்த நேரத்தில் வியாபாரியின் வீட்டுக்குள் நுழைவதற்காக, பொருத்தமான இடத்தைத் தேடி வீட்டையே ஒருமுறை சுற்றி வந்தான் திருடன். உயரமான வெளிப்புறச்சுவரில் வாகான ஓர் இடத்தைத் தேடிக் கண்டடைந்தான். தன் மூட்டைக்குள் வைத்திருந்த கூர்மையான சின்னஞ்சிறு ஆயுதத்தால் குத்திக் குத்தி ஓட்டையிட்டான். ஓர் ஆள் தடையின்றி நுழைந்து செல்வதற்குப் போதுமான அளவுக்கு ஓட்டையிட்ட பிறகு, முதலில் தலையை நுழைத்து வீட்டுக்குள் ஏதேனும் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்த்தான். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு கைகளை மட்டும் நீட்டி தரையைத் தொட்டு ஊன்றிக்கொண்டான். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக உடலை உட்பக்கமாக இழுத்தான். வயிறுவரைக்கும் உள்ளே வந்துவிட்டது. இன்னும் கால்களை மட்டுமே உள்ளே இழுக்கவேண்டும் என்கிற நிலையில், அந்தச் சுவர் திடீரென இடிந்து அந்தத் திருடன் மீது விழுந்தது.

வலி தாங்காமல் திருடன் போட்ட சத்தத்தைக் கேட்டு வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் விழித்தெழுந்துவிட்டனர். திருடனைப் பார்த்ததும் கூக்குரலிட்டனர். அதைக் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக எழுந்து வெளியே வந்தனர். வியாபாரியின் வீட்டு வாசலில் பெரிய கூட்டமே கூடிவிட்டது.

வீட்டுக்குள் பாதி உடலும் வெளியே பாதி உடலுமாக இருந்த திருடன் தப்பித்துச் செல்ல முடியாத நிலையில் அந்தக் கூட்டத்தில் சிக்கிக்கொண்டான். திருடனின் தலையைப் பிடித்து இழுத்து நிற்கவைத்த கூட்டத்தினர், அவனை முதலில் நையப் புடைத்தனர். பிறகு அவன் கைகளைப் பின்புறமாகக் கட்டி இழுத்துச் சென்று ராஜாவின் முன்னால் நிறுத்தினார்கள்.

அகாலத்தில் உறக்கத்திலிருந்து எழுந்துவந்த ராஜா அவர்களைப் பார்த்து ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார். வியாபாரி நடந்த விவரங்களைச் சுருக்கமாக ராஜாவிடம் தெரிவித்தார்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ராஜா, திருடனைப் பார்த்து ‘உனக்கு ஏதாச்சும் சொல்லணும்னு தோணிச்சின்னா தாராளமா சொல்லலாம். உன் மீது சுமத்தப்பட்டிருக்கிற குற்றங்கள் எல்லாம் உண்மைதானா?’ என்று கேட்டார். தொடர்ந்து ‘ரெண்டுபேர் சொல்றதையும் கேட்ட பிறகுதான் நான் ஒரு முடிவுக்கு வரமுடியும்’ என்றார்.

பேசுவதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை நினைத்த திருடன் மகிழ்ச்சியடைந்தான். அதற்காக ராஜாவின் முன் தலைகுனிந்து வணங்கி நன்றி சொன்னான்.

‘திருட்டு என் குலத்தொழில் ராஜா. எல்லாரும் அவுங்கவுங்க குலத்தொழிலைச் செய்யறமாதிரி நானும் என் குலத்தொழிலைச் செய்யறேன். அது ஒன்னும் எனக்கு பெரிய தப்பா தெரியலை ராஜா.’

‘சரி, மேல சொல்லு’

‘திருடணும்ங்கற நோக்கத்தோடு அந்த வியாபாரி வீட்டுக்குத் திருடப் போனது உண்மைதான் ராஜா. ஆனா, நான் எதையும் திருடவே இல்லை. வீட்டுக்குள்ள போகறதுக்கு முன்னாலயே நான் பிடிபட்டுட்டேன்.’

ராஜா அந்தத் திருடனின் பேச்சைக் கேட்டு குழம்பினார். ‘திருட்டே நடக்கலைன்னா, அப்புறம் எதுக்கு இந்த வழக்கு?’ என்று முணுமுணுத்தார். பிறகு வியாபாரியின் பக்கம் திரும்பி ‘உன் வீட்டிலேர்ந்து ஏதாவது திருடு போயிருக்குதா?’ என்று கேட்டார். அந்த வியாபாரி ‘எதுவும் திருடு போகலை ராஜா’ என்று சொல்லிவிட்டு தலையை அசைத்தார். தொடர்ந்து ‘அவன் வீட்டுக்குள்ள பூந்து திருடறதுக்கு முன்னாலயே அவனைப் பிடிச்சிட்டோம் ராஜா’ என்றார்.

திருட்டே நடக்காத வழக்கில் எப்படி தீர்ப்பு கொடுப்பது என்று புரியாமல் குழம்பினார் ராஜா. அவருடைய தூக்கக்கலக்கம் அவரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

அந்த நேரம் பார்த்து திருடன் ‘உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ராஜா’ என்று சொன்னான்.

‘என்ன?’ என்பதுபோல அவன் பக்கம் பார்த்தார் ராஜா.

‘வியாபாரியுடைய வீட்டுச் சுவர் கட்டுமானம் சரியில்லை ராஜா. அது உறுதியா இல்லாததாலதான் அது என் மேல உடைஞ்சி விழுந்தது. ஒரு சாதாரண ஓட்டைக்குக் கூட தாக்குப் பிடிக்காத அளவுக்கு ஒரு வீட்டுடைய சுவரைக் கட்டறது குற்றமில்லையா ராஜா? அந்தச் சுவரால ஒரு வீட்டுக்கு எப்படி பாதுகாப்பைக் கொடுக்கமுடியும் ராஜா?’ திருடனாக இருந்தாலும் அவன் நியாயத்தைச் சுட்டிக் காட்டுகிறான் என்று நினைத்தார் ராஜா.

ராஜாவுடைய அமைதியைப் பயன்படுத்திக்கொண்டு திருடன் இன்னும் ஒரு படி முன்னேறி ‘இடிஞ்ச சுவர் என் மேல விழுந்ததால என் உடம்பெல்லாம் காயமா இருக்குது ராஜா. முதுகெலும்புல நல்ல அடி. நின்னாலும் வலிக்குது. உட்கார்ந்தாலும் வலிக்குது. ஒருவேளை அந்த அடியில என் உயிரே போயிருந்தா என் குடும்பத்துடைய கதி என்ன ஆயிருக்குமோ, தெரியலை’ என்று பணிவுடன் உடலை வளைத்து குனிந்தவாக்கிலேயே சொன்னான்.

‘அவ்வளவு பலவீனமா சுவரைக் கட்டிய வியாபாரியை விசாரிச்சி தண்டிக்கணும் ராஜா. அப்பதான் இதுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் ராஜா.’

திருடனின் யோசனை ராஜாவுக்குப் பிடித்துவிட்டது. அவர் உடனே வியாபாரியின் பக்கம் திரும்பினார். ராஜாவின் பார்வையைப் பார்த்ததுமே வியாபாரிக்கு உடல் வேர்வையில் நனைந்துவிட்டது.

‘என்ன சொல்ற நீ? உனக்குத் தண்டனை கொடுக்கட்டுமா?’ என்று கேட்டார் ராஜா. வியாபாரி ஒருகணம் யோசித்தார். எப்படியாவது இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று அவர் மனம் திட்டமிட்டது.

பணிவாகப் பேசுவதுபோல உடலை வளைத்து வணங்கியபடி ‘எனக்குச் சொந்தமான வீட்டுடைய சுவர்தான் ராஜா அது. அதுல ஒன்னும் சந்தேகம் இல்லை. ஆனா, நான் சுயமா அந்தச் சுவரைக் கட்டலை. கட்டடவேலை செய்யற ஆளுங்கதான் அந்தச் சுவரைக் கட்டினாங்க. நான் அந்த வேலைக்கு அவுங்களுக்கு சம்பளம் கொடுத்தேன். அவ்வளவுதான். அவுங்கதான் ஏதோ தில்லுமுல்லு செஞ்சிருக்காங்க’ என்று நிதானமான குரலில் சொன்னார்.

வியாபாரியின் கூற்றைக் கேட்டுவிட்டு ராஜா ஒருசில கணங்கள் யோசனையில் மூழ்கினார். வியாபாரியின் பேச்சில் ஒரு நியாயம் அடங்கியிருப்பதாக அவருக்குத் தோன்றியது.

பிறகு தொண்டையைச் செருமியபடி அவையில் நின்றிருந்த ஆட்களிடம் ‘வியாபாரியின் வீட்டில் கட்டடவேலை செய்த ஆளைக் கண்டுபிடிச்சி உடனே அழைச்சிட்டு வாங்க’ என்று ஆணையிட்டார்.

வேகவேகமாக அவையைவிட்டு வெளியேறிய ஆட்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் கட்டடவேலை செய்த ஆளைக் கண்டுபிடித்து இழுத்துவந்து ராஜாவின் முன்னால் நிறுத்தினர். வரும் வழியிலேயே அரண்மனை ஆட்கள் அந்த ஆளிடம் அவனை அழைத்துச்செல்வதற்கான காரணத்தை விளக்கியிருந்தனர். அதனால் ராஜாவின் முன்னால் நின்றதும் முதலில் குனிந்து வணக்கம் சொன்னான். பிறகு ‘ராஜா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கவனிச்சி கேளுங்க. என் கட்டட வேலையில எந்தக் குத்தமும் இல்லைங்க ராஜா. இதே ஊருல நான் எவ்வளவோ பேருக்கு வீடுங்க கட்டிக் கொடுத்திருக்கேன். இந்த வியாபாரி வீட்டைக் கட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயும் கட்டியிருக்கேன். பின்னாலயும் கட்டியிருக்கேன். அந்த வீடுங்க எல்லாம் பத்திரமாதான இருக்குது. ஊருக்குள்ள நீங்க வேணும்ன்னா விசாரிச்சித் தெரிஞ்சிக்கலாம். இவருடைய வீட்டுல மட்டும் ஒரு பிரச்சினை வந்திருக்குதுன்னா, அதுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும் ராஜா?’ என்று முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கேட்டார்.

ராஜாவும் ஒன்றும் புரியாமல் குழப்பத்தோடு ‘சுவர் இடிஞ்சி விழறதுக்கு நீ பொறுப்பில்லைன்னா, வேற யாரு பொறுப்பா இருக்கமுடியும்?’ என்று அவனிடமே அப்பாவித்தனமான குரலில் கேட்டார்.

‘ராஜா, நீங்க கோவப்பட மாட்டீங்கன்னா, நான் ஒரு விஷயம் சொல்றேன்’ என்று இன்னும் கூடுதலான பணிவோடு சொன்னான் கட்டட வேலை செய்பவன்.

‘என்ன, சீக்கிரம் சொல்லு’ என்று அவசரப்படுத்தினார் ராஜா.

‘எந்த வீடா இருந்தாலும் கட்டற வேலை மட்டும்தான் என்னை மாதிரியான ஆட்களுடையது. கட்டறதுக்கு முக்கியத் தேவையான செங்கல் எல்லாம் வேற ஒரு ஆளு சூளையில சுட்டு கொண்டுவரக்கூடிய பொருட்கள்தான். அந்தச் செங்கல்லுலதான் ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கணும் ராஜா’ என்று சொல்லிவிட்டு நிறுத்தினான் கட்டடவேலை செய்பவன்.

அவன் கூற்றில் ஒரு நுட்பமான பொருள் இருப்பதாக ராஜாவுக்குத் தோன்றியது. ‘ஆமாம், ஆமாம், நீ சொல்றது உண்மைதான்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். உடனே ஆட்களை அழைத்து ‘உடனே போய் அந்தச் செங்கல் சூளைக்காரனை அழைச்சிட்டு வாங்க’ என்று அனுப்பினார்.

வேலைக்காரர்கள் பல இடங்களில் தேடி அலைந்து கடைசியில் ஒரு வழியாக செங்கல் சூளை வைத்திருப்பவனைக் கண்டுபிடித்து விஷயத்தையெல்லாம் சொல்லி அழைத்துவந்து ராஜாவின் முன்னால் நிறுத்தினர்.

‘நீதான் இந்த வியாபாரி கட்டின வீட்டுக்கு செங்கல் கொடுத்தியா?’ என்று நேரிடையாக விஷயத்துக்கு வந்தார் ராஜா. அவன் ‘ஆமாம் ராஜா’ என்று பணிவோடு தலையசைத்தான்.

‘அப்ப வியாபாரியுடைய வீடு இடிஞ்சி விழறதுக்கு நீதான் மூலப்பொறுப்பு. உனக்குத்தான் தண்டனை கொடுக்கணும்’ என்று அவசரமாகச் சொன்னார் ராஜா.

‘நீங்க தண்டனை கொடுத்தா தாராளமா ஏத்துக்கறேன் ராஜா. அதுக்கு முன்னால நான் சொல்ற வார்த்தையை கேக்கணும்.’ என்று ராஜாவின் முகத்தைப் பார்த்தான் சூளைக்காரன்.

‘என்ன சொல்லப் போற நீ?’ என்று அதட்டலாகக் கேட்டார் ராஜா.

‘வியாபாரியுடைய வீட்டுக்கு செங்கல் கொடுக்கறதுக்குத்தான் புதுசா ஒரு சூளையை போட்டேன். அதுக்குத் தேவையான செங்கல்லுக்காக, களிமண்ணை கொழைச்சி கல் அறுத்துட்டிருந்த சமயத்துல பக்கத்து வீட்டுல நாட்டியக்கச்சேரிக்கு ஒரு இளவயசுப்பொண்ணு சலங்கைகட்டி ஆடி பயிற்சி எடுத்துட்டிருந்தா. ராஜா, அந்தச் சலங்கைச்சத்தம் எல்லாரையும் ஒரு மாதிரி பைத்தியம் புடிக்கிறமாதிரி வைச்சிடுச்சி. அடிக்கடி ஆளுங்க அந்தப் பொண்ணு மூஞ்சிய பாக்கறதுக்காக திரும்பித்திரும்பி பார்த்துகிட்டே வேலை செஞ்சாங்க. அதனால செங்கல் தயாரிப்புல முறைதவறி ஏதோ கோளாறு ஏற்பட்டுச்சி. எல்லாத்துக்கும் காரணம் அந்த நாட்டியக்காரிதான் ராஜா’ என்றான் சூளைக்காரன்.

அவனுடைய விவரிப்பில் ஒரு உண்மை இருப்பதாக ராஜாவுக்குத் தோன்றியது. உடனே ஆட்களை அழைத்து ‘சீக்கிரமா போய் அந்த நாட்டியக்காரியை அழைச்சிட்டு வாங்க’ என்று அனுப்பினார்.

உடனே வேலைக்காரர்கள் வெளியேறி நாட்டியக்காரி இருக்கும் இடத்தைத் தேடி அலைந்தனர். பலரிடம் விசாரித்து அவளுடைய வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து, தேடிவந்ததன் காரணத்தையும் சுருக்கமாக விவரித்துவிட்டு, தம்மோடு அழைத்துவந்தனர்.

‘இந்த சூளைக்காரங்க செங்கல் அறுத்திட்டிருந்த சமயத்துல நீ சலங்கை கட்டி நாட்டியப்பயிற்சி செஞ்சிட்டிருந்தியா?’ என்று நேரிடையாகக் கேள்வி கேட்டார் ராஜா. நாட்டியக்காரி உடனே ‘ஆமாம் ராஜா’ என்று பணிவோடு சொன்னாள்.

‘உன்னுடைய சலங்கைச்சத்தத்தால என்னென்ன விபரீதம்லாம் நடந்திருக்குது தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு ஒவ்வொன்றாக அவளிடம் நிறுத்தி நிதானமாக அடுக்கினார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்பதுபோல தலைவணங்கி நின்றிருந்தாள் நாட்டியக்காரி. ஆனால் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து எப்படி தப்பிப்பது என்று அவளுடைய ஆழ்மனம் திட்டமிட்டபடி இருந்தது. சட்டென மின்னல்போல ஓர் எண்ணம் அவள் நெஞ்சில் உதித்தது. அடுத்து ‘ராஜா, நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?’ என்று பணிவோடு கேட்டாள்.

‘என்ன? சீக்கிரம் சொல்’ என்றார் ராஜா.

‘அன்னைக்கு நான் சலங்கை கட்டி ஆடினது உண்மைதான் ராஜா. அதை நான் மறுக்கலை. ஆனா, அதுக்கு ஒரு காரணம் இருக்குது ராஜா.’

‘என்ன காரணம்?’

‘கால்ல போடற சலங்கைக்குப் பொருத்தமா கையிலயும் வளையல் போட்டு ஆடறதுதான் ஒரு நாட்டியக்காரிக்கு அழகு ராஜா. அப்படித்தான் எல்லா நாட்டியக்காரிகளும் ஆசைப்படுவாங்க. நானும் அப்படித்தான் ஆசைப்பட்டேன். என் சலங்கைக்கு பொருத்தமா ஒரு டஜன் வளையல் வேணும்னு அந்த நகைவியாபாரிகிட்ட ரொம்ப நாள் முன்னாலயே சொல்லி வச்சிருந்தேன். கை அளவு கூட கொடுத்து முன்பணம் கூட கொடுத்து வச்சிருந்தேன். சொல்லிவச்சி நாளுங்கதான் ஓடிச்சே தவிர, அவரு வளையலைச் செஞ்சி குடுக்கிற வழியாவே தெரியலை. எப்ப போய் கேட்டாலும் நாளைக்கு நாளைக்குன்னு சாக்குப்போக்கு சொல்லி அனுப்பிவச்சிடுவாரு. அவர் மட்டும் சொன்ன நேரத்துக்கு ஒழுங்கா வளையல்களை செஞ்சி குடுத்திருந்தாருன்னா, நான் வளையலை மட்டும் போட்டுகிட்டு பயிற்சி செஞ்சி பார்த்திருப்பேன். அப்ப சத்தம் பெரிசா கேட்டிருக்காது. ஆனா அவரு வளையலைக் கொடுக்காததால வேற வழியில்லாம சலங்கையை மட்டும் போட்டுகிட்டு பயிற்சி செஞ்சேன். அந்த சத்தம் இவ்வளவு விபரீதத்தை ஏற்படுத்தும்னு நான் கனவுல கூட நினைச்சிப் பார்த்ததில்லை. இதுல என் தப்பு எதுவும் இல்லை ராஜா. எல்லாமே இந்த வியாபாரியுடைய தப்பு.’

நாட்டியக்காரி சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்ட ராஜாவுக்கு அந்தப் பெண்ணின்மீது கருணை பிறந்தது. எல்லாக் குற்றங்களுக்கும் மூல காரணம் அந்த வியாபாரியே என்று அவர் முடிவு கட்டினார். தண்டனையை அறிவிக்கும் எண்ணத்துடன் அந்த வியாபாரியின் பக்கம் திரும்பினார். ‘உன் தப்பை மறைப்பதற்காக மத்தவங்க மீது பழி சுமத்திடலாம்னு நெனைச்சிட்டியா?’ என்று கேட்டார்.

‘அப்படியெல்லாம் நெனைக்காதீங்க ராஜா. என் மேல ஒரு தப்பும் இல்லை. நாட்டியக்காரி செஞ்சி கொடுக்கச் சொன்ன வளையல்களை எங்க தச்சாசாரிங்க எப்பவோ செஞ்சி முடிச்சிட்டாங்க. தங்கம் சம்பந்தமான பொருள்ங்கறதால, அதை நல்ல சகுனத்துலதான் எடுக்கணும், கொடுக்கணும்ங்கறது ஒரு சம்பிரதாயம் உண்டு ராஜா. காலையில விழிப்பு வர்ர வேளைதான் ஒரு நாள்ல நல்ல முகூர்த்தம் ராஜா. ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்ததும் குளிச்சிட்டு அந்த நேரத்துல அந்த வளையல்களை வாங்கிட்டு வரதுக்காக தச்சாசாரிங்க வீட்டுக்கு கெளம்புவேன். ஆனா, வீட்டு வாசலைத் தாண்டி நடக்கற சமயத்துல மொட்டை அடிச்சிகிட்டு, உடம்பு பூரா சாம்பலால பட்டையை போட்டுகிட்டு யானை மாதிரி தடியா ஒரு ஆளு எதுத்தாப்புல வந்துடுவான். அவன் இந்த ஊரே இல்லை. ஏதோ வெளியூருகாரன். இங்க வந்து மண்டபத்துல படுத்துங்கெடக்கறான். அவனைப் பார்த்தாவே வெளங்காமூஞ்சியா இருக்கும். அப்படி ஒரு மூஞ்சிய பார்த்துட்டு போனா, போற காரியம் விளங்குமான்னு எனக்கு மனசுக்குள்ள தோணும். சரி, விடு, நாளைக்குப் போயிக்கலாம்னு வீட்டுக்கே திரும்பிடுவேன். ஒரு நாள் இல்ல, ரெண்டு நாள் இல்ல, ஆறேழு மாசமா இதே கதைதான் நடக்குது. நாட்டியக்காரிக்கு சொன்ன தேதியில வளையலை கொடுக்கமுடியாததுக்கு இதுதான் காரணம் ராஜா.’

இரக்கத்தைத் தூண்டும் விதமாக வியாபாரி விவரித்த கதையைக் கேட்டு ராஜாவுக்கும் சங்கடமாக இருந்தது. ஆயினும் குரலில் கடுமையை வரவழைத்துக்கொண்டு ‘நீ சொல்ற விஷயம் மட்டும் பொய்யா இருந்தா, உனக்குத் தூக்குதண்டனை நிச்சயம்’ என்று எச்சரித்தார். பிறகு வேலையாட்களை அழைத்து முதலில் தச்சாசாரிகள் வசிக்கும் குடியிருப்புக்கு அனுப்பி, வியாபாரி சொன்ன விஷயம் உண்மைதானா என்று அறிந்துகொண்டு வருமாறு அனுப்பிவைத்தார்.

சிறிது நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து ஆசாரிமார்களிடம் விசாரித்ததாகவும் வளையல்கள் தொடர்பான விஷயம் உண்மைதான் என்றும் தெரிவித்தனர். அதைக் கேட்டதும் ராஜா மெளனமாக வியாபாரியின் பக்கம் பார்த்தார். தான் தெரிவித்த உண்மையை ராஜா உணர்ந்துகொண்டார் என்ற நிம்மதி உணர்வு வியாபாரியின் முகத்தில் படிந்திருந்தது.

ஒருகணம் யோசனையில் மூழ்கிய ராஜா ஒவ்வொரு நாள் காலையிலும் அவலட்சணமான முகத்துடன் மண்டபத்தில் ஒதுங்கியிருக்கும் ஆண்டியைக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு சொன்னார். உடனே ஆட்கள் புறப்பட்டுச் சென்றனர். ஊரில் புதிதாக நடமாடுகிறவர்கள் யார் என்கிற கேள்விக்கு எல்லோருமே குரு-சீடன் தங்கியிருக்கும் மண்டபத்தின் பக்கம் கையைக் காட்டினர். உடனே ஆட்கள் குளத்தங்கரைக்குச் சென்றனர். அங்கே குரு ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து கண்மூடி தியானத்தில் மூழ்கியிருக்க, சீடன் மட்டும் பரபரப்போடு அங்குமிங்கும் பார்த்தபடி நடமாடிக்கொண்டிருந்தான். அவன் முகத்தைப் பார்த்ததுமே தான் தேடிவந்த ஆள் அவனே என்று வேலையாட்கள் உறுதியாக நம்பினர். உடனே அவனை ‘வா. உன்னை ராஜா கூப்பிடுறார்’ என்று சொல்லி அழைத்துச் சென்றனர். அவர்கள் எழுப்பிய சத்தத்தைக் கேட்ட பிறகு மெல்ல கண்விழித்த குரு என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஒருகணம் குழப்பமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். பிறகு அவர்களுக்குப் பின்னாலேயே சென்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்னும் எண்ணத்தோடு நடக்கத் தொடங்கினார்.

ராஜாவின் முன்னால் சீடன் நிறுத்தப்பட்டதுமே, ராஜா வியாபாரியின் பக்கம் திரும்பி ‘நீ சொன்ன ஆள் இவன்தானா?’ என்று கேட்டார். மொட்டைத்தலையுடன் உடல்பருத்து காணப்பட்ட அவனைப் பார்த்ததுமே வியாபாரி ‘இவனேதான் ராஜா, இவனேதான்’ என்று குதித்தார். தொடர்ந்து ‘நீங்களே ஒருமுறை இவனை உற்றுப் பாருங்க ராஜா. இந்த அவலட்சணமான மூஞ்சியைப் பார்த்துட்டுப் போனா, போகிற காரியம் உருப்படுமா? நீங்களே ஒருமுறை பார்த்துட்டு சொல்லுங்க ராஜா’ என்றார்.

சீடனை ஒருமுறை ஏற இறங்க கவனமுடன் பார்த்தார் ராஜா. தான் எதற்காக அவைக்கு அழைத்துவரப் பட்டிருக்கிறோம் என்பதைப் பற்றி எதுவும் தெரியாத சீடன் குழப்பத்தோடு ‘ராஜா, நான் ஒரு தப்பும் செய்யலையே. என்னை எதுக்காக இங்க இழுத்து வந்திருக்காங்க?’ என்று கேட்டான்.

‘நீ நேரிடையா ஒரு தப்பும் செய்யலை. ஆனா மறைமுகமா பல தப்புகள் இந்த ஊருல நடக்கறதுக்கு நீ காரணமா இருந்திருக்க’ என்றார் ராஜா.

சீடன் குழப்பத்துடன் ராஜாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். ராஜா ஒவ்வொன்றாக விஷயத்தை அடுக்கடுக்காகத் தெரிவித்தார். இறுதியாக, அவன் செய்த குற்றத்துக்காக அவனுக்குத் தூக்குத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார். அடுத்தநாள் காலையில் ஊரெல்லையில் உள்ள தூக்குமேடையில் அவன் தூக்கிலிடப்படுவான் என்று தண்டனையையும் அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

தண்டனையின் அறிவிப்பைக் கேட்டு சீடன் துயரத்தில் மூழ்கினான். எதற்காக இந்த ஊரில் தங்கினோம் என்று தன்னையே நொந்துகொண்டான். இந்த ஊரைவிட்டுச் சென்றுவிடலாம் என ஏதோ உள்ளுணர்வின் தூண்டுதலால் தன்னை எச்சரித்த குருவின் பேச்சைக் கேட்காதது குறித்தும் அவரைத் தன் சாமர்த்தியத்தால் அமைதிப்படுத்தி அதே ஊரில் தங்கியிருக்கும் முடிவை எடுத்தது குறித்தும் வருந்தினான்.

சீடனின் பின்னாலேயே சென்ற குரு அந்தச் சபையின் ஓரமாக ஒதுங்கி நின்று, அங்கு நடைபெற்ற விசாரணையையெல்லாம் பார்த்தார். தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவனை வேலையாட்கள் அழைத்துச் சென்றதையும் பார்த்தார். எங்கும் குறுக்கிட்டுத் தடுக்கமுடியாத தன் நிலையை எண்ணி வருத்தமடைந்தார். தன் சீடனை எப்படி காப்பாற்றுவது என அன்று முழுநாளும் யோசித்தபடி இருந்தார்.

அடுத்தநாள் பொழுது விடிந்ததும் அவர் சீடன் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டு சென்றார். யாரோ ஒன்றிரண்டு பேர் வழியைச் சொல்ல, அதே வழியில் சென்று அந்தப் பெரிய கட்டடத்தின் முன் நின்றார்.

வெளியே நின்றிருந்த காவல்காரனிடம் ஒரு நிமிடம் தன் சீடனிடம் பேசுவதற்கு அனுமதி கேட்டார். ‘நாளைக்கு காலையில தூக்குல போடவேண்டிய ஆளு. பத்திரமா வச்சிருக்கறோம். பக்கத்துல போவாதீங்க. எட்டி நின்னு சீக்கிரமா பேசிட்டு வந்துடுங்க’ என்று எச்சரித்துவிட்டு, அவரை உள்ளே அனுப்பிவைத்தான் காவல்காரன்.

உள்ளே சென்ற குரு சீடன் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே நின்று சீடனை அழைத்தார். சுவரோடு ஒட்டியவனாக உள்ளே அமர்ந்திருந்த அவன் ஒரே பாய்ச்சலில் கதவுக்கு அருகில் வந்துவிட்டான்.

‘என்னை மன்னிச்சிக்குங்க குருவே. அன்னைக்கு நீங்க சொன்னபடி நான் கேட்டிருந்தா நாம ஏதாவது ஒரு இடத்துல ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கலாம். இப்படி ஒரு சிக்கல்ல சிக்கியிருக்கமாட்டேன். நான் செஞ்ச ஒரு தப்பால இப்படி முட்டாளுங்க நடுவுல சிக்கி என்னுடைய உயிரே போவப்போவுது’ என்று அழுதான் சீடன்.

சீடனின் கண்ணீரைப் பார்த்ததும் குருவின் மனம் உருகியது. ‘கவலைப்படாதே, உனக்கு உதவி செய்யறதுக்காகத்தான் நான் வந்திருக்கேன். நாளைக்கு காலையில ஊரு எல்லையில உன்னை தூக்குமரத்துல ஏத்தற சமயத்துக்கு சரியா நான் அங்க வந்து சேருவேன். இப்ப நான் ஒரு விஷயம் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. அதுமாதிரி செஞ்சா நீ பிழைச்சிக்கலாம். நாம ரெண்டு பேரும் இந்த ஊருலேர்ந்து தப்பிச்சிடலாம்’ என்றார் குரு.

‘என்ன குருவே?’ என்று கேட்டான் சீடன்.

சீடனின் அருகில் சென்ற குரு, அவன் காதோடு ஒரு ரகசியத்தைச் சொன்னார். சீடன் அதைக் கேட்டு தலையசைத்துக்கொண்டான். அவன் அதுவரையில் உணராத ஒரு நிம்மதியை அக்கணத்தில் உணர்ந்தான். அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. பிறகு குரு அவனிடமிருந்து விடைபெற்று அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.

அடுத்தநாள் காலையில் ஊர் எல்லையில் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். ராஜாவும் வந்திருந்தார். அவர் அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு பெரிய ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில் உட்கார்ந்துகொண்டு ராஜா ‘ம், தண்டனைக்கைதியை கொண்டுவாங்க. சீக்கிரம் தண்டனை முடியட்டும்’ என்று அவசரப்படுத்தினார்.

சீடனை அழைத்துவந்த ஆட்கள் அவனை தூக்குமேடையில் நிற்கவைத்தனர். அவன் முகத்தில் எவ்விதமான கலக்கமும் இல்லை. பதற்றமில்லாமல் அமைதியாக இருந்தான். அவன் முகத்தை மூடுவதற்காக ஒரு பெரிய கருப்புத்துணியோடு அவனுக்கு அருகில் ஒரு வேலைக்காரன் சென்றான்.

அந்த நேரத்துக்குச் சரியாக, கூட்டத்துக்கு நடுவில் நின்றிருந்த குரு ‘மன்னிக்கவும் ராஜா. உங்ககூட ஒரே ஒரு நிமிடம் பேசணும்’ என்று அனைவரையும் விலக்கிக்கொண்டு ராஜாவின் இருக்கைக்கு முன்னால் வந்து நின்றார்.

‘எதுவா இருந்தாலும் தண்டனை முடியட்டும். அதுக்கப்புறம் பேசிக்கலாம்’ என்றார் ராஜா.

‘தண்டனையைப்பற்றித்தான் உங்ககூட பேசணும் ராஜா. ஒரே ஒரு நிமிடம் போதும்’ என்று கெஞ்சினார் குரு.

ராஜா குருவை ஒருகணம் உற்றுப் பார்த்தார் ‘முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க. அதுக்கப்புறமா நீங்க என்ன நினைக்கறீங்களோ அதைச் சொல்லுங்க’ என்றார்.

‘இதோ, தூக்குமேடையில நிக்கிறானே, இவனுடைய குரு நான். இவன் என்னுடைய சீடன்.’

‘ஓஹோ’

‘இவ்வளவு காலமும் என்கூட இருந்தும் கூட, இவனை நல்லபடியா ஆளாக்கமுடியாம போயிடுச்சி. அதுவே எனக்குப் பெரிய குற்ற உணர்வா இருக்குது. இவனை நல்லவிதமா ஆளாக்காம இருந்தது என்னுடைய முதல் குற்றம். நான் இவனை ஒழுங்கா கவனிச்சிருந்தா, இவன் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டான். அதனால இவனுக்குத் தரவேண்டிய தூக்குத்தண்டனையை எனக்குக் கொடுங்க. நான் முழுமனசோட அந்தத் தண்டனையை ஏத்துக்கறேன்’ என்று சொல்லிக்கொண்டே தூக்குமேடையில் ஏறி சீடனுக்குப் பக்கத்தில் சென்று நின்றுவிட்டார்.

ராஜா அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது என்ன புது குழப்பம் என்று சிந்தனையில் மூழ்கினார்.

‘எங்க குரு சொல்றத கேக்காதீங்க ராஜா. வாய்ப்பிருந்தும் நல்ல விஷயங்களைக் கத்துக்காம இருந்தது என் தப்புத்தான். இதுல குருவுடைய தப்பு எதுவும் இல்லை. தூக்குத்தண்டனை எனக்குரியதாவே இருக்கட்டும்’ என்றான் சீடன்.

‘ராஜா, வயசுல நான் பெரியவன். நான் சொல்றத தயவுசெஞ்சி கேளுங்க. தூக்குத்தண்டனை எனக்குரியதாவே இருக்கட்டும்’ என்று வாதாடினார் குரு.

‘இல்லை இல்லை. எனக்கு அளிக்கப்பட்ட தண்டனை எனக்கு உரியதாவே இருக்கட்டும். அதை மாத்தவேணாம்’ என்றான் சீடன்.

குரு, சீடன் இருவருக்குமிடையில் நடைபெற்ற விவாதத்தைக் கேட்டு சுற்றி நின்றிருந்தவர்கள் குழப்பத்தில் மூழ்கினர். முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்று தெரிந்துகொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது.

ராஜாவுக்கு என்ன முடிவெடுப்பது என்பதைப்பற்றி ஒரு தெளிவும் பிறக்கவில்லை. ‘இது என்ன புது குழப்பமா இருக்குது? இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லை’ என்று முணுமுணுத்தார்.

‘நான் ஒரு முன்மாதிரியா இருக்கணும்னு நினைக்கறேன் ராஜா’ என்றார் குரு.

அப்போது சீடன் குறுக்கிட்டு, ‘ராஜா, வேணும்ன்னா குருவையும் நீங்க தூக்குல போடுங்க. ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனா, என்னை முதல்ல தூக்குல போட்டுட்டு, அதுக்கப்புறம் அவரை போடுங்க’ என்றான்.

‘இல்லை. இல்லை. என்னைத்தான் முதல்ல போடணும். அதுக்கப்புறம் அவனுக்கு தண்டனை கொடுத்தாலும் சரி, கொடுக்காட்டாலும் சரி, உங்க விருப்பம்’ என்றார் குரு.

ராஜாவுக்கு மனம் குழம்பியது. ‘சாகறதுக்கு ஏன் நீங்க ரெண்டு பேரும் நான் நான்னு முன்னால வரீங்க, எனக்கு ஒன்னுமே புரியலையே’ என்றார்.

‘ராஜா, என்னை முதல்ல தூக்குல போடச் சொல்லுங்க’ என்றார் சீடன்.

‘நான் இவனுடைய குரு. நான் சொல்றதை கேளுங்க. என்னை முதல்ல தூக்குல போடச் சொல்லுங்க’ என்றார் குரு.

‘இங்க பாருங்க. விசாரணைப்படி அவன்தான் குற்றவாளின்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். அதை மாத்தமுடியாது. அதனால அவனைத்தான் முதல்ல தூக்குல போடணும்’ என்று முடிவாக அறிவித்தார் ராஜா.

அதைக் கேட்டு சீடனின் முகம் மலர்ந்தது. குருவின் முகம் வாட்டமடைந்தது. அதைப் பார்த்த ராஜாவுக்கும் சற்றே வருத்தமாக இருந்தது. ‘என்ன விஷயம், ரெண்டு பேரும் உண்மையைச் சொல்லுங்க. தூக்குல தொங்கறதுக்கு ஆளாளுக்கு ஏன் முந்திக்கறீங்க?’ என்று குருவிடம் கேட்டார். குரு ஒருகணம் அமைதியாக நின்றிருந்தார். பிறகு ராஜாவை நோக்கி இரண்டடி தொலைவு நெருங்கிச் சென்று நின்றார். அடங்கிய குரலில் ‘அதுல ஒரு சின்ன ரகசியம் இருக்குது ராஜா’ என்று சொன்னார்.

‘ரகசியமா, என்ன ரகசியம்?’ என்று கேட்டார் ராஜா. குரு ஒருகணம் தன்னையே கவனித்தபடி நின்றிருக்கும் கூட்டத்தைப் பார்த்தார். பிறகு ‘என்னுடைய ஞானக்கண்ணால நான் ஒரு காட்சியைப் பார்த்தேன் ராஜா. அதுதான் முக்கியமான காரணம்’ என்று ராஜாவுக்கு மட்டும் கேட்கிறவகையில் ரகசியமான குரலில் சொன்னார். அது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் ராஜாவும் குரலை மட்டுப்படுத்தி ‘அது என்ன ரகசியம், கிட்ட வந்து சொல்லுங்க’ என்றார்.

குரு இன்னும் சில அடிகள் நடந்து ராஜாவுக்கு அருகில் சென்றார். அவர் காதருகில் குனிந்து ‘இன்னைய முகூர்த்தத்துல யார் முதல்ல தூக்குல தொங்கி உயிர் விடறாங்களோ, அவுங்களுக்கு அடுத்தடுத்த ஏழு பிறப்புகள்லயும் ஏதோ ஒரு ராஜ்ஜியத்துக்கு ராஜாவா இருக்கக்கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கப்போவுது. அதுதான் நான் பார்த்த காட்சி’ என்று முணுமுணுத்தார்.

அதைக் கேட்டு ராஜா தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று துள்ளிக் குதித்தார். ‘உண்மையாகவா சொல்றீங்க?’ என்று கண்கள் மின்ன கேட்டார்.

‘ஆமாம் ராஜா. சத்தியமா நான் அந்தக் காட்சியைப் பார்த்தேன்’ என்றார் குரு.

‘ஏழு பிறவியிலயும் ராஜாவா?’ என்று மீண்டும் கேட்டார் ராஜா.

‘ஆமாம் ராஜா. இது ஒரு அபூர்வமான முகூர்த்தம்’ என்றார் குரு.

அதைக் கேட்டு ராஜா தண்டனையை நிறைவேற்ற தூக்கு மேடையில் காத்திருக்கும் ஊழியர்களை அழைத்தார். சீடனை விடுவிக்கும்படி ஆணையிட்டார். ‘இந்தக் கணமே என்னைத் தூக்கிலிடுங்கள். இது என் கட்டளை’ என்று சொன்னபடி தூக்கு மேடையில் ஏறி நின்றார். சீடனும் குருவும் திகைத்த முகத்துடன் ஒதுங்கி நின்றனர். மேடையைச் சுற்றி வேடிக்கை பார்க்க நின்றிருந்த பொதுமக்கள் எதுவும் புரியாமல் குழப்பத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ராஜா என்ன சொல்கிறார் என்பதை முற்றிலும் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாற்றத்தோடு நின்றிருந்தனர் ஊழியர்கள்.

‘முட்டாள்களே, நான் சொல்வது புரியலையா? உங்க ராஜாவுடைய கட்டளை இது. என்னைத் தூக்கிலிடுங்க’ என்று சத்தம் போட்டு சொன்னார் ராஜா.

வேறு வழியில்லாத ஊழியர்கள் அக்கணமே கருப்புத்துணியால் அவருடைய முகத்தை மூடி கயிற்றில் சுருக்கிட்ட கயிற்றை மாட்டிவிட்டு தூக்குமேடையில் நிறுத்தினர். அடுத்த கணமே இன்னொரு ஊழியர் காலுக்குக் கீழே இருந்த பலகையை இழுத்துவிட்டார். சிறிது நேரத்தில் ராஜாவின் உயிர் பிரிந்துவிட்டது.

‘என்ன இது?’ ‘ஏன் இப்படி?’ என்று குழப்பத்துடன் ஆளாளுக்கு ஒரு கேள்வியைக் கேட்டபடி அங்கேயே கூட்டமாக நின்று அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். குருவையும் சீடனையும் ஒருவரும் கவனிக்கவில்லை. அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்தக் கூட்டத்தைவிட்டு வேகவேகமாக வெளியேறினர். பிறகு அந்த ஊரைவிட்டே வெளியேறினர்.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும் appeared first on கிழக்கு டுடே.

  •  

சட்டை

 அவன்தானா? சட்டெனத் தோற்றம் வர நாற்காலியிலிருந்து எழுகிறார் அப்பாதுரை. வெளியே போய் நிலைப்படியோரம் நின்று தெருவில் பார்வையோட்டுகிறார். காணவில்லை. குரல்...

The post சட்டை appeared first on சிறுகதைகள்.

  •  

கல் அடுக்கு சிற்பங்கள் - அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம்

கல் அடுக்கு சிற்பங்கள் - அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம்.



சிறு பிராயத்தில், கற்களை அடுக்கி வைத்து ஆடும் ஒரு விளையாட்டு நினைவில் இருக்கிறது.  இந்திய துண கண்டத்தில் பரவலாக அறியப்படும் சிறுவர் விளையாட்டுதான்.  நமது முறை வரும்போது, சிதறிகிடக்கும் வெவ்வேறு வடிவான சிறு கூழாங்கற்களை, கீழே விழாதபடிக்கு அடுக்கி வைக்க வேண்டும்.  எதிரணியினர் பந்தை எறிந்து அக்கல் அடுக்கை தகர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  பிற்பாடு, கடலோரமாக இது போன்ற கற்களை அடுக்கி வைத்து ஒரு வடிவத்தை உருவாக்குவது ஒரு கலையாக பயிலப்படுகிறது எனத் தெரிந்து கொண்டேன்.  


வாழ்க்கை நமக்கு அளிக்கும் அனுபவங்களிலிருந்து ஒரு புனைவுலகை உருவாக்கிக் கொள்வது 'கல் அடுக்கு சிற்பங்களை' உருவாக்குவது போன்றதொரு கலைதான்.  அதொரு கற்பனை உரு.  ஆனால் அக்கற்கள் நிஜமானவை. அக் கற்கள் அந்த அடுக்கிற்காக உருவானவை அல்ல.  நனவுலகில் நிகழ்ந்த அனுபவங்களை அப்படியே ஒரு புனைவுலகிற்கான அடுக்கு சிற்பங்களாக மாற்றும் ரசவாதம் அ முத்துலிங்கம் அவர்களின் தனித்த திறமை.


அ முத்துலிங்கம் அவர்களுக்கு என் தந்தையை விட 5 வயது அதிகம்.  இக்காலத்து எழுத்தாளர்கள் இடையே ஒரு முதுதாதை வடிவாக அவர் இருக்கிறார்.  என் போன்ற சிறுவர்கள் கை அளாவிய இந்த குறுங்கட்டுரைகள் அவர் போன்ற பெரும் தந்தைகளுக்கு பிரியமானதாக இருக்கக் கூடும் என்று வள்ளுவரை மனதில் கொண்டு இதை மேற்கொண்டு எழுதுகிறேன். தமிழ் இலக்கியத் தொடர்ச்சியின் கடைக் கண்ணியில் இருக்கும் எவராக இருந்தாலும், அ முத்துலிங்கம் அவர்களுடைய இலக்கிய செயல்பாட்டு விளைவின் ஒரு சிறு தொடர்ச்சியாக இருக்கும் சாத்தியமே அதிகம்.  மக்கள் சொற்கேட்டல் பெற்றவர்க்கு உற்ற இன்பம்.


தற்கால இலக்கிய சூழலைப் பற்றிய கூர்மையான அவதானிப்பை அ முத்துலிங்கம் அவர்கள் எப்போதும் செய்யத் தவறியதில்லை.  தொழில்நுட்பமும், தொடர்புவலையும் செறிந்த இக்காலத்தில், எண்ணற்றப் புத்தகங்கள் உருவாகி வருகின்றன.  அவருடைய முதல் தொகுப்பு இலங்கையிலிருந்து கையெழுத்துப் பிரதியாக கப்பலேறி தமிழகம் சென்று அச்சு வடிவம் அடைந்து மீண்டும் இலங்கைக்கு வருகிறது.  தம் எழுத்தை அச்சு வடிவத்தில் காண்பதற்கு தவமாய் தவமிருந்த காலம் போய், இப்போது புத்தக வடிவம் எய்துதல் ஒப்பீட்டளவில் மிகவும் எளிதாகி விட்டிருக்கிறது.  ஆனால் புத்தகம் ஆகுவதெல்லாம் எழுத்தாகி விடுமா? அல்லது புத்தகம் ஆக வேண்டிய எழுத்து வெற்றி பெறுகின்றதா?  அரிதான எழுத்து பலவும் ஒரு பதிப்போட்டு தேங்கி, புதையுண்டு போயிருக்கின்றன.  எழுத்திற்கு தேவை வடிவம் மட்டுமல்ல, தொடர் வாசிப்பும்.  இந்தத் தொடர்ச்சியைப் பற்றி அ முத்துலிங்கம் பல இடங்களில் கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.  கனடா இலக்கிய தோட்டத்தினை தோற்றுவிக்க அவர் ஒரு முக்கிய காரணமாக இருந்ததற்கும் இந்தக் கரிசனம் முக்கியமானது.  


தமிழின் இலக்கிய மரபு சங்ககாலம் தொட்டு பல்வேறு காலங்களில் பெரும் பாய்ச்சல் காட்டி வளர்ந்திருக்கின்றது.  நவீன காலத்தில், சிறுபத்திரிகைகள் வழியே, மணிக்கொடி இயக்கம் வழியே,  பெரும் இலக்கிய ஆளுமைகளின் தலைமையிலான கூடுகைகள் வழியே, அவர்களிடையேயான ஆரோக்கியமான, அழிச்சாட்டியமான சர்ச்சைகள் வழியே என பல பரிமாணங்கள் காட்டி வளர்ந்திருக்கின்றது.  இணையம் வழியே பல தொழில்நுட்ப வசதிகளும், உடனடி தொடர்புகளும் பெருகிய காலத்தில் இலக்கிய மரபிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது எனலாம்.  பெரும் வணிக பத்திரிகைகளின் ஓரங்கமாக புனைவெழுத்து எட்டிய வீச்சைக் காட்டிலும் இணையம் பல மடங்கு அதிகமாகவும், முதிர்ச்சியுடனும் இலக்கிய வெளியை சுவீகரித்துக் கொண்டது.  அந்த இயக்கத்தின் முக்கிய அங்கமாக அ முத்துலிங்கம் அவர்கள் காணப்படுகிறார்.  


இணையம் வழியே தமிழிலக்கியம் பரவ தொடக்கமாக இருந்த திண்ணை பத்திரிகையில், அவருடைய படைப்புகள் வெளி வரத் தொடங்கிய காலத்திலிருந்தே நான் அவருடைய வாசகந்தான்.  அப்போது அவர் கனடாவிற்கு வருகை புரிந்திருந்த நடிகை பத்மினியுடனான சந்திப்பை, தனக்கேயுண்டான தனிச்சுவையுடன் எழுதியிருந்ததை நினைவு கூர்ந்தேன்.  மைய நீரோட்ட பத்திரிகைகள் 'ஜூசி'யாக தருகிறோம் என உருவேற்றித் தரும் செய்திகளுக்கும்,  எத்தகைய அனுபவ்த்தையும் ஒரு கலை நுட்பத்துடன், சுவை குன்றாது, அழுத்தமான செறிவுடன் வெளிப்படுத்தும் எழுத்திற்குமான வேறுபாடு உடனே பற்றியிழுத்துக் கொண்டது.    


இன்றைய சமூக ஊடகங்களில், புதிய தொடர்புகளைப் பெருக்கிக் கொள்ளவென முனைப்பில், ஒரு கூட்டில் தங்களை அடைத்துக் கொள்ளும் போக்கை அதிகம் காண முடிகிறது.  அப்படியொரு அவசர அடையாளம் புனைந்து கொள்வதை, அரசியல் நோக்கெனவும் புரிந்து வைத்திருக்கிறோம்.  அரசியல் அரங்கின் முதன்மையான கோட்பாடு, வெற்றியை நோக்கிய பயணத்தில் உண்மைக்கான இடம் முக்கியமில்லை என்பதே.   அறத்தை காவுகொடுத்து பெரும் வெற்றியில் என்ன ஒளி இருந்துவிடப் போகின்றது.  "அரசியல் எனும்போது அதொரு கூடாரத்தில் அடைக்கப்பட்ட நிலை" என்கிறார் அ முத்துலிங்கம்.  இலக்கியம் என்பது கூடாரங்களுக்கு அப்பாற்ப்பட்ட விரிந்து படர்ந்த வெளி.  வெட்டவெளியில் பயணப்படும் இலக்கிய வாழ்விற்கு துணையென சத்தியம் தவிர வேறெதுவும் இருப்பதில்லை.  வம்பு சர்ச்சைகளும், பொருமல்களும் படைப்பூக்கத்திற்கான பெரும் உந்துதல் என்பதை தகர்த்து, வாழ்வனுபவங்களை சான்றாக கொண்டு கதை புனைந்து செல்லும் எழுத்தாளனாக தன்னை நிறுவிக் கொள்கிறார்.  அந்தக் கதைகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து ஒரு பெரும் சித்திரமாக நமக்கு அவருடைய படைப்புலகை துலங்கச் செய்கின்றன.



கல்லூரி மாணவனாக அவர் எழுதிய சிறுகதைகளிலிருந்தே அவரிடம் அந்த முதிர்ந்த பக்குவம் படிந்திருந்தது.  அதற்கு முந்தைய பருவத்தில் அவருடைய அம்மாவை ஆஸ்துமா நோய்க்கு பலி கொடுத்த துக்கத்தின் விளைவாக இருக்கலாம்.  ஒரு பேட்டியில் அம்மாவுடைய இறுதிக்கண அவஸ்தையை மிகக் கூர்மையானச் சொற்களில் சுருக்கமாகச் சொல்கிறார்.  மலைச் சுனையின் ஆழத்தில் புரளும் கற்களின் சலனம் மேற்பரப்பில் புலப்படுவதில்லை.  மாறாக அந்த சுனை ஆறாக நம் மனதில் புரண்டு ஓடும்போது நாமே அக்கற்களாக தத்தளிக்கத் தொடங்குகிறோம்.  ஒவ்வொரு வாசிப்பிலும் அந்த மலை ஓடையின் புரட்டல் ஒவ்வொருவித கொந்தளிப்பை தோற்றுவிக்க வல்லதுது


"இருப்பிடம்" என்றொரு கதை.  நாம் இப்போது ஸ்பெஷல் சைல்ட் என்று சொல்லிப் பழக்கப்பட்ட தனித்துவ திறமை கொண்ட சிறுவன் பற்றிய கதை.  தேர்த்திருவிழா பின்னணியில் அந்தச் சிறுவனைப் பற்றிய ஒர்ரு சம்பவமாக கதை விரிகின்றது. பெரும் தேர்ச் செல்லக் கூடிய பெரும்பாதைகளின் அமளி துமளியிடையே அபூர்வமாக பூத்து நிற்கும் ஒற்றை மலரை ஒரு கவிஞனின் மனம்தான் கண்டுகொள்ள முடியும்.  அதன் வசீகரத்தை அவனால்தானே அங்கீகரிக்க முடியும். நாஞ்சிலாரின் புகழ்பெற்ற இடலாக்குடி ராசாவை நினைவுபடுத்திய அழகிய கதை.


அந்த முதல் சிறுகதை தொகுப்பின் தலைப்பு கதையான "அக்கா" ஒரு சிறுவனின் பார்வையில் தன் அக்காவைப் பற்றி சொல்வதாக இருக்கிறது.  அந்தக் கதை நிகழும் காலத்தில் அந்த சிறுவனின் அக்கா, திருமண பருவத்திற்கு தயாராகும் ஒரு சிறு பெண்.  அவளை பெண் பார்க்க ஒரு குடும்பம் வருகிறது.  அதில் ஒரு மாமா அவளையே உற்றுப் பார்க்கிறார்.  அக்கா ஓடி வந்து விடுகிறாள்.  அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியின் துளைக்கும் கேள்விகளை அனுசரித்தபடி அக்கா பேசிக் கொண்டிருக்கிறாள்.  ஆனால் அந்த வரன் தகையவில்லை.  பிறகு மற்றொரு மாமா அழகான புகைப்படங்கள் எடுக்கிறவர்.  அக்காவையும் ஒரு புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார்.  அந்தப் படத்தை இந்த சிறுவனிடம் காட்ட, தன் அக்காவிடமும் அந்தப் படத்தை காட்ட அவன் விரும்புகிறான்.  அந்த மாமா புகைப்படத்துடன் ஒரு காதல் கடிதத்தையும் தருகிறார்.  பெண் பார்க்க வந்த மாமாவிற்கும், காதல் கடிதம் அளிக்கும் மாமாவிற்கும் அவனுக்கு வேறுபாடு தெரிவதில்லை.   அந்த காதல் கடித நாடகம் அம்பலப்பட்டு அந்த சிறுவனின் குடும்பத்தினரிடையே பெரும் களேபரம் நிகழ்கிறது.  முத்துலிங்கம் அவர்களின் விருப்ப எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் போல, இந்த சம்பவத் திரிகளை சாதாரணமாக சொல்லிச் செல்லும் போது, அந்த கதையோட்டம் நமக்கு சொல்லாத ஒரு புள்ளியில் ஓர் அசௌகரியம் ஏற்படுகின்றது.    அது அந்த அக்கா என்றழைக்கப்படும் சிறுபெண்ணின் மனவோட்டமாக இருக்கலாம்.  அல்லது அந்த கோபக்கார, தகப்பனின் இயலாமையாக இருக்கலாம்.  அந்த சிறுவனின் பார்வையில் கதை எழுதிப் போகும் முதிர்ந்த எழுத்தாளனின் திறன் நம்மை அப்படியான தத்தளிப்பில் ஆழ்த்தி வைத்திருக்கிறது.  


அதே தொகுப்பில் காணப்படும் "பக்குவம்" சிறுகதையின் பேசுபொருளெல்லாம் அக்காலத்து கல்லூரி வயசு இளைஞனின் படைப்பா என வியப்பாக இருக்கின்றது.  பூப்படைதல் எனும் ஒரு இயல்பான பயாலஜிக்கல் நிகழ்வை மையமாக கொண்ட கதை.  அக்கதையின் தொடக்கத்தில் ஒரு முரணை வைக்கின்றார் கதாசிரியர்.  இளைய பெண் குழந்தை பூப்படையும் வைபவத்தில், மூத்த பெண் குழந்தைக்கு ஏற்படும் சங்கடமான அனுபவம்.  அந்தக் கதை ஒரு இயல்பான முடிவிற்கு சென்று விடுகிறது.  ஆனால் அது நமக்கு ஒரு அவஸ்தையை அளிக்காமல் போவதில்லை.  இந்த முத தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் களம், அதன் மையப்பொருளை விரித்துக் கொண்டு போகும் நேர்த்தி, அவை பேசப்பட வேண்டிய பொருள் என்பதற்கான நியாயம், அதன் வடிவ பொருத்தம் இவையெல்லாம் அக்காலத்தின் முக்கிய தமிழ் எழுத்தாளர் எவர்க்கும் குறைந்ததில்லை.  இலங்கையில் பேசப்பட்ட அளவிற்கு அப்போது தமிழ்ச்சூழலில் பேசப்படாமல் போயிருக்கலாம்.  


அவர் மீண்டும் எழுதத் தொடங்கிய காலத்தில், அவருடைய படைப்புகளின் விவரணை முறையிலும், அதன் விவரிப்பிலும் குறிப்பிடதக்க மாற்றங்கள் இருக்கின்றன.  இடைக்காலத்தில் அவருக்குண்டான பரந்துபட்ட அனுபவங்களும், அவருடைய உலகளாவிய நோக்கும் அவருடைய படைப்புகளின் மையம் கொள்கின்றன எனலாம்.


க மோகனரங்கன் அவர்கள் தன்னுடைய முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். முத்துலிங்கம் அவர்களின் கதைகளில் வரும், பெரும் எடை கொண்ட ஆப்பிரிக்க யானை. நெடுங்காலம் பூமியில் புதையுண்டு கிடக்கும் சிகாடா பூச்சி.... போன்ற அபூர்வ வகை விலங்குகள் பற்றி குறிப்பிடுகிறார்.  உயிரற்ற எந்திரங்களையும் ஒரு மையப்பாத்திரமாக முத்துலிங்கம் ஆக்கிவிடுகிறார்.  'பூமாதேவி' கதையில் அப்படித்தான், துணி துவைக்கும் இயந்திரம் ஓர் அபாரமானதொரு பாத்திரமாக உருவகித்திருக்கிறது.  ஒரு தந்தை தனது சிறு மகளுக்கு அந்த சலவை இயந்திரத்தின் முன்பாக, நாம் எப்படி மனிதர்களுடனான 'ஒப்பந்தம்' என்கிற ஒரு நடைமுறையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நியமத்தைப் பற்றி  போதிக்கின்றார்.  அந்தப் பெண் பெரியவளானதும் தவறாமல் தன்னுடைய ஒப்பந்தங்களை கடைப்பிடிக்கிறாள்.  ஆனால் அதை போதித்த அப்பாவிடம், அவருடைய சிறிய மகளாக அந்த 'பூமாதேவி' பற்றிய விளையாட்டுப் பேச்சு ஒப்பந்தத்தை காலப்போக்கில் மறந்து விட்டிருந்தாள்.  அந்தப் புள்ளியைச் சுற்றி கதை ஒரு சராசரி அமெரிக்க வாழ்க்கையை பின்னிப் பிணைந்து கொண்டு செல்கின்றது.


கனேடிய குடியேற்ற அதிகாரிக்கு, சிறைக்கைதி எழுதும் கோரிக்கை கடித வடிவத்தில் எழுதப்பட்ட சிறுகதை "கொழுத்தாடு பிடிப்பேன்".  இது போன்ற கடித வகை புனைவுகளில் ஒரு வித மர்ம வசீகரம் உண்டு.  இந்தக் கதை சொல்லிப் போகும் பல சம்பவங்கள், கனடா நாட்டின் புலம்பெயர் வாசியின் ஒரு சராசரி அனுபவப் பதிவாக  விரிகின்றது.  ஒரு புதைந்த ரகசியத்தின் புற விளிம்புகளை தொட்டு விளக்கிக் கொண்டே போகும் சாமர்த்திய விவரிப்பு.  கதை முடிந்ததும், அதன் சரடுக்ளை இழுத்துப் பிடித்து அந்த புதிருக்கான விளக்கத்தை தேடி நாம் அந்த வரிகளிடையே மீண்டும் தோண்டித் தோண்டிப் பார்க்கின்றோம்.


புலம்பெயர் வாழ்க்கையின் இருண்மையான பக்கங்களைக் காட்டும் மற்றொரு சிறுகதை "கருப்பு அணில்".  பனிக்கொட்டத்தொடங்கிய அந்த வேளையில் கதைநாயகனே ஓர் அணில் போல தன்னை உணர்ந்தபடி தன் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, அதனால் உருவாக்கிக் கொள்ளும் ஒரு கற்பித கொண்டாட்டம்.  தேர்ந்த சொற்களில் மனதை துளைத்து செல்கின்றது.  ஒருவிதத்தில் அந்த நம்பிக்கையற்ற நிராசையின் விரக்தியை நாமும் கொண்டாட ஆரம்பித்து விடுகிறோம்.


சிறுபெண்ணின் மனதின் புதிர் மையங்களைத் தொட்டுப் போகும் மற்றொரு படைப்பு "மகாராஜாவின் ரயில்வண்டி".  சகி என்றழைக்கப்படும் மன்றோவின் கதையை நினைவுப் படுத்துவது போல் ரோஸ்லின் பல ரகசியங்களை கதைசொல்லியிடம் சொல்கிறாள். அப்போதுதான் பிறந்திருக்கும் ஒரு பூனைக்குட்டி அவளுக்கு அரிஸ்டாட்டிலை நினைவுப் படுத்துகிறது என்று அப்படியே அதற்கு பெயர் சூட்டுகிறாள்.  அவள் இல்லாதபோது அந்தப் பூனைக்குட்டிகளை பார்க்க நேரிடும் கல்லூரிச் சிறுவனான கதைசொல்லி, அந்தக் குட்டிகளுக்கு அவளுடைய பெயரையே பிட்டுப் பிட்டு வைக்கிறான்.


ஒரு பேட்டியில் அ முத்துலிங்கம் சொல்கிறார்.  அவருடைய இளம் பிராயம் புராண இதிகாசங்கள், பக்தி கதைகளென அம்மாவிடம் கேட்டு வளர்ந்ததை.  படைப்பூக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மனதை இக்கதைகள் எவ்வளவு தூரம் பாதித்திருக்கும் என நாம் விளக்க வேண்டியதில்லை.  அந்த கதை அனுபவங்கள் பிறகொரு காலத்தில் வேறு சில திறப்புகளாக வெளிப்படுவது இயல்பு.  ராமாயண காவியத்தை ஆதி காவியம் என்பர்.  வால்மீகியை ஆதி கவி எனவும் சொல்வர்.  அந்த வகையில் அக்காவியத்தின் தொடக்க பாடல், முதல் கவிதையாக இருக்க வேண்டும்.  ஆனால் அது ஒரு போற்றும் பாடலா அல்லது நிந்தைப் பாடலா என பாடபேதங்கள் உண்டு.  இது காவியத்தில் இடம் பெற்றிருக்கும் மறை புதிர்.  இதை ஒரு புனைவாக விரித்துப் பார்க்கும் போது உங்களுக்கு ஒரு பார்வை கிடைக்கும்.  கம்ப நாட்டாரின் சொற்களில் "ஆங்கு எரி விதி முறை அமைவித்தான்; அதன் பாங்குற நடந்தனள், பதுமப் போதினாள்" என்கிறார்.  என்ன?  ராமாயணக் கதையின் உச்சமான அக்கினி பிரவேசம் பற்றிய பாடல் அது.  


புதுமைப் பித்தன் என்ன செய்கிறார்? அந்த செய்தியை அகலிகையிடம் கொண்டு போய் சொல்கிறார்.  அது சாபவிமோசனம் எனும் கதையாக உருவாகிறது.  அதே செய்தியை ஓர் அன்னயின் பார்வை கொண்டு பார்க்கிறார் ஜெயகாந்தன்.  அவருடைய முத்திரை சிறுகதையான 'அக்னி பிரவேசம்' உருவாகிறது.   மகாபாரத இதிகாசத்தில் காண்டவ பிரஸ்தத்திலிருந்து இந்திர பிரஸ்தம் உருவாகுவதை, நகர நவீனமாக்கத்தில் வைத்துப் பார்க்கிறார் அம்பை. 


அது போல குங்கிலியகலய நாயனாரின் கதையை முத்துலிங்கம் அவர்கள், ஒபுக்கு எனும் மேற்கு ஆப்பிரிக்க இளைஞன் ஒருவனின் வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கிறார்.  அவருடைய அலுவலகத்தில் ஒன்றும் தெரியாத வெகுளி இளைஞனாக வருபவன், அங்கிருந்த கணிணியை கற்றுக் கொள்கிறான்.  அங்கே பீஸ்கோ எனும் பகுதியில் இருந்து வரும் ஒரு பெண்ணை காதலியாகக் கொள்கிறான்.  அவள் வழியே மதுப்பழக்கமும் ஏற்படுகிறது.  அவன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் அவன் மீளாத ஓர் எல்லைக்கு சென்று விடுகிறான்.  அந்த எல்லையிலிருந்து விடுபடுதல் என்பதுதான் சாதனை.  குங்கிலியகலய நாயனாரின் பக்தி தொண்டு அது போன்ற மீளா எல்லைக்குட்படும்போது இறையருளால் மீட்கப்படுகின்றது என்பது நமது தொன்மக்கதை.  இந்த 'விடுபடுதல்' பற்றி மூன்று தளங்களில் பேசுகிறார்.  நண்பர்களிடையே அவர்களுடைய அனுபவங்களை வைத்தொரு சரடு.  ஒபுக்குவின் கதை.  இறுதியாக குங்கிலியகலய நாயனாரின் கதை.  இம்மூன்றும் தனித்தனியாக அதனளவில் ஒரு சிறுகதையாக இருப்பவை.  


முத்துலிங்கம் அவர்களின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க அழுத்தம் தோற்றுவித்த சிறப்பானதொரு படைப்பு "அமெரிக்காக்காரி" சிறுகதை.  இந்த சிறுகதையைப் பற்றி மட்டுமே நான் விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்படிப்பு படிக்க வரும் பெண், வியட்நாமிய இளைஞன் ஒருவனை திருமணம் முடிக்கிறாள்.  அவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவப் பரிசோதனை சொல்கின்றது. பிறகொரு ஆப்பிரிக்கரின் விந்தணுவை கடன் வாங்கி குழந்தை பெற்றுக் கொள்கிறாள்.  அமெரிக்கக்காரி சிறுகதையில், மதியின் பெண்ணையும் சேர்த்து மூன்று அமெரிக்கக்காரிகள் இருக்கிறார்கள். இலங்கையில் ஒரு கிராமப்பகுதியில் வடிவாக சேலையை வரிந்து உடுத்தி, கொண்டை போட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும் மதியின் அம்மாவால்தான் மதியினுள் அமெரிக்கக்காரியாகும் கனவு விதைக்கப்படுகின்றது. தன்னுடைய குழந்தை பிறந்ததும் மதி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது ‘உன் வயிற்றில் நான் இருக்கும்போதே, என் வயிற்றில் கருமுட்டைகள் இருந்திருக்கின்றன. அப்படியானால் இவளும் உன் வயிற்றினிலிருந்து வந்தவள்தான்‘ என்கிறாள். அம்மாவிடமிருந்த அக்கனவு மதி வழியே அவள் பெண்ணாக பிறந்து வருகிறது.


ஒருவித கவித்துவ மன அலைக்கழைப்பை காட்சிபடுத்தும் கதை "செங்கல்".  ஏதோ ஒரு இனம்புரியாத தேடலில் மையம் கொண்டு, பிறகு அந்தத் தேடலே ஒரு பாரமாக மாறி, தொலைதூர மலையின் தடையால் எதுவுமே அடைய முடியாமல் போய்விட்டது போல் ஒருவித ஹலுசினேஷன் தொனியில் முடிகிறது.  இது போன்ற உத்திகள் கொண்ட மிஸ்டிகல் கதைகளில் முத்துலிங்கம் அவர்களுக்கு எப்போதும் நாட்டம் இருந்திருக்கின்றது.  மற்றொரு தலைப்பு மறந்துவிட்ட கதையில், முதிய தம்பதிகள், ஒரு மனநல மருத்துவரிடம் தங்கள் பிரச்னைகளைப் பற்றி சொல்லிக் கொண்டு வருவர்.  இறுதியாக அவர்கள் சொல்லும் பிரச்னை அவர்கள் கண்களுக்கு மட்டும் புலனாகும் அவர்களுடைய பெண்ணோ, பேத்தியோ பற்றியது என்பது போல முடியும்.  ஒரு ஓட்டலில் உணவு பரிமாறும் வேலையில் இருக்கும் சிறு பெண், அந்த ஓட்டலுக்கு வரும் ஒரு இளைஞன் மீது காதல் கொள்கிறாள்.  அவளுக்கு அவனுடன் எப்படிப் பேசுவது என்று தவிப்பாக இருக்கிறது.  அவனுடைய தொலைபேசி எண் அவளுக்கு எப்படியோக் கிடைக்கின்றது.  ஃபோனும் செய்து விடுகிறாள்.  மறுமுனையில் அவனுடைய குரல் கேட்டதும் இவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.  ஒரே பேதமை.  தடுமாற்றம்.  சட்டென, அவளுக்கும் அவனுக்கும் அறிமுகமான, அவள் வழக்கமாக செய்ய்தும் மெனு ஒப்பித்தலை செய்கிறாள்.  


இப்படி அ முத்துலிங்கம் அவர்கள் தனது கதை உலகை வளர்த்துக் கொண்டே போகிறார்.  எங்கோ அந்த கதையுலகில் நாமும் இடம்பெற்று விடுகிறோம்.  அப்புறம் நாமும் அவருடைய பாத்திரங்களாக உருமாறி விடுகிறோம்.  அதை அவர் செய்கிறாரா, அல்லது அதற்கு நாம் விழைகிறோமா என்பது ஒரு விவரிக்க இயலாத அனுபவமாக இருக்கின்றது.  ஆத்மநாம் ஒரு புகழ்பெற்ற கவிதை இப்படி முடிகின்றது.  "எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்" என.  இன்னொரு கவிதை "எனக்கு கிடைத்த சதுரத்தில் நடை பழகிக்கொண்டிருக்கிறேன்" எனத் தொடங்கும்.  இவையிரண்டையும் இணைத்துப் பார்க்கும் போதுதான் ஒரு கலைஞனின் படைப்பூக்க மனம் பற்றிய ஒரு திறப்பு நமக்கு புலனாகின்றது.  அ முத்துலிங்கம் அவர்கள் தனது நடையை அயராது தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்.  எதற்கான தேவையாகவும் இல்லாமல், ஒரு பறவையின் இயல்பான பறத்த போல அவருடைய எழுத்துப் பயணம் தொடர்ட்டும்.


நமக்கான சதுரங்களில் நாமும் நடந்து பயில்வோம்.  அவருக்கு இல்லாத ஒரு வசதி நமக்கு உண்டு.  அவரைப் போன்ற முன்னோடிகளின் தடம் பற்றிக் கொண்டு நாம் பறக்கலாம்.  இயல்பாக.  எதையும் நிறுவ வேண்டிய அவசியமற்ற ஏகாந்த பயணத்தில். 




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •  

நரன் எழுதிய “கேசம்” – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை


பொதுவாக நரனின் கதையுலகம் பற்றிப் பேசுவதற்கு அவரது முழுப் படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும். முழுப் படைப்புகளையும் வாசிக்கும் வாய்ப்பு இன்னும் இல்லாததால் இந்தப் புத்தகம் பேசும் கதை மாந்தர்கள், சூழல்கள், கதையுலகம் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று தோன்றுகிறது. இந்தப் புத்தகம் பற்றி விரிவாகப் பேசவே நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அவற்றில் முக்கியமானது மற்றும் அவசியமானது என்று நான் கருதுவது அல்லது நான் கண்டடைந்தது என்று கூறினால் நரனின் கதை மாந்தர்கள் தொண்ணூறு சதவிகிதம் அதீத மனப்பிறழ்வுத் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதன் நீட்சியாகச் சாதாரண மனிதர்களிடம் இல்லாத வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மக்களோடு புழங்கும் அசாதாரண மனநிலை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். மேலும் இதிலொரு அழகு என்னவென்றால் தங்கள் பிறழ்வுகளை யாருமறியாது ஒரு ரகசியமாகவே அனைவரும் வைத்திருப்பது தான்.

அந்தக் கதாபாத்திரங்கள் யாருமே தங்கள் பிறழ்வு பற்றிய பிரக்ஞை அற்று ஒடுங்கிக் கிடக்கும் மனநிலை உடையவர்களாகவே இருக்கிறார்கள். பிறழ்வுகளில் பலவகை உண்டு. பிறழ்வடைந்த பலர் தங்களுக்கு ஏற்படும் புற, சமூகத் தீங்குகளின் காரணமாக அதீதக் கோபத்தில் மற்றவருக்குச் சமுதாயத்துக்குத் தீங்கு இழைப்பவர்களாக மாறுகிறவர்கள் ஒரு ரகம். அந்த அநீதியைத் தட்டிக் கேட்க வழியற்று தன்னை அழித்துக் கொண்டோ ஒடுங்கிக் கொண்டோ தங்களை அழித்துக் கொள்வது ஒரு வகை. நரனின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இரண்டாவது வகையில் வந்து நிற்கின்றன.

தங்களைத் தாக்கும் ஏதோ ஒரு சூழல், அதிலிருந்து மேடேற முடியாத தன்மை அதன் நீட்சியாகத் தீவிரத்தன்மைகள் தொடரத்தொடர அத்தகைய பிறழ்வுகளை ஒரு பிரச்சினையாக எந்த கதாபாத்திரமும் யோசிக்கவில்லை.

அதை அனுபவிக்கத் துவங்குகிறார்கள். இந்தக் கதாபாத்திரம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எந்த வாசகனும் சொல்லவே முடியாது. அப்படி இருந்தால் அது அப்படிதான் இருக்க முடியும் என்று தோன்றவைப்பதில் கைதேர்ந்த ஆசிரியராக இருக்கிறார். ஏன் நம்மோடு கூட இருப்பவர்கள் தானே அல்லது நாம் தானே இவர்கள் என்று கூட எடுத்துக் கொண்டால் சரி தவறு என்று எந்தத் தராசுகளையும் தூக்கிக் கொண்டு இல்லாமல் வாசிக்கலாம்.

இவர்களால் தீங்கு நேருமா என்றால் எப்படி வேண்டுமானாலும் திரும்பும் என்பதைத் தவிர வேறேதும் சொல்ல முடியாது. இந்தக் குற்றங்களின் அல்லது இவர்கள் அப்படி ஆகக் காரணமானவர்களை, சூழல்களை என்று யாரை நோக்கியும் நேரடியாகக் கைநீட்டி விட முடியாத படியான சிக்கலில் விழுந்து கொண்டவர்கள், விழவைக்கப்பட்டவர்கள்.

ஆனால் அவர்களைக் காப்பாற்ற முடியுமா (அதாவது அது போல் நம்மோடு உலாவும்) என்றால் அதைத் தான் அவர்கள் துன்பமெனக் கருதுவார்களோ என்று தோன்றுகிறது. அந்தப் பிறழ்வின் உச்சங்களையே அவர்கள் விடுதலையென நம்புகிறார்கள். எனில் அவர்களை அப்படியே விட்டு விடுவதே வழி என்ற முடிவுக்கு நாமே நகர்ந்து விடுகிறோம்.

 

மொத்தம் பதினொரு கதைகள்.

திருகுமொழி வடிவம் கொண்ட மொழியமைப்பு பெரும்பாலும் இல்லை. ஓரளவுக்கு அல்லது நன்றாகவே புரிந்து கொள்ள வாய்ப்புடைய எளிமையான மொழிநடைதான். ஆனால் வலுவான கதாப்பாத்திரத்திர வடிவமைப்பு, பழக்கவழக்க, காட்சி வடிவமைப்பு, திடீரென ஏதேனும் ஓர் இடத்தில் இறுக்கி முடிச்சிட்டு அங்கேயே அவிழ்க்கும் நுட்பமான இடங்கள் இவற்றை எப்படியேனும் கண்டு கொண்டால் நரனின் கதைகளுக்குள் பதற்றமின்றி உலாவரலாம்.

1. மானேந்தி கதையில் ஸ்தபதியாக வந்து சிலையைப் புணரும் கணபதி, அவன் வீட்டில் சிலை கண்திறக்காது அம்மா மீது விழுந்து இறந்து போவது இதை இறை நம்பிக்கை உடையோர் தண்டனையாகக்கூட எடுத்துக் கொள்ள முடியும். அவ்வளவு சிலை செய்பவனுக்கு நன்றோ தீதோ அந்த எண்ணங்களைத் தோற்றுவித்து யார்?

2. பெண்காது கதை அடைக்கலராஜிற்கு இருப்பது யாரேனும் தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது பிரச்சினையாக மாற அவன் முதல் மனைவி ஏன் அப்படி இருக்கிறாள், இவனால்தான் விவாகரத்து வாங்கிக் கொண்டாளா.. இப்போது வந்து கேட்பவள் எவ்வளவு காலங்களுக்குக் கேட்பாள். அவளுடைய தந்தைக்கு ஏன் தான் வேலை செய்த பஞ்சு மில்லின் சத்தங்கள் கேட்கமுடியாது மரணித்துப் போனார். காதுகளும் சத்தங்களும் நம்மை எவ்வளவு ஆக்கிரமிக்கின்றன‌ என்கிற பல கேள்விகளை உருவாக்கிய கதை.

3. தொகுப்பில் உடனே வாசித்த என்னால் மறக்க முடியாத‌ நான் மிகவும் ரசித்த கதை  ‘கேசம்’. ஆதியப்பனின் காலில் இருந்த புண்களைக் கண்டு கட்டிய மனைவியே வெறுத்து ஒதுக்குகையில் எங்கிருந்தோ வரும் ஆவுடைத்தங்கம் அந்தப் புண்களைக் குழந்தைகள் போல பாவித்து தன் முடிகளையே இறகாக்கி அவர் இருக்கும், இறக்கும் வரை விரும்பி மருந்திடும் கதை. ஆதியப்பனின் காம உணர்வை மனைவி கணபதியம்மாளிடம் ஏற்படுத்திக் கொள்ள முற்படுகையில் எறும்புகள் கீழிறங்கி ஓடுவது போலவும், அதே காம உணர்வை ஆவுடையிடம் உணரும் போது கடிவாய் இல்லாத கறுப்பு எறும்புகள் லட்சக்கணக்கில் ஓடுவது போலவும் அழகான குறியீடு.

4. சைக்கிள் கடையில் வேலை பார்த்தபடி உடலில் இருக்கும் சிறு ஊனத்தோடு தன் மனதைத் தன்னை விட மூத்தவளான மரியத்திற்கு தந்துவிட்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இறுதியில் அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடையில் வந்து துடைத்து மனதை ஆற்றில் படுத்திக் கொள்கிறான்.

மரியமோ ‘வா, உனக்கு என்ன தேவைனு தெரியும்’ என்று பழனிக்குப் பல வருடங்கள் கழித்துத் தன்னை தந்துவிட்டு எந்தவிதத் தாங்கல்களும் இல்லாது அவள் சைக்கிளைத் தந்துவிட்டு கணவனற்ற பாலையில் கையில் குழந்தையோடு பயணிக்க தொடங்குகிறாள். கிளிஷேவோ என்று யோசிக்கையில் முடிவு நம்மை இல்லை என்று சொல்ல வைத்துவிடுகிறது ’மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்’ கதை.

5.  ‘லயன் சர்க்கஸ்’ நலிந்து போன சர்க்கஸ் கூடாரங்களின் நுணுக்கமான உணர்வுகளைப் பேசும் கதை. லீலாவின் முதல் கணவன் காளி, அவனைப் பார்த்துக் கொண்டே லீசாவோடு வாழும் உதவியாளன் மாரீசன், தன் சர்க்கஸ் கூடாரத்திற்காக மாரீசன் கண்முன்னே கிழட்டு அதிகாரி அறைக்குச் செல்லும் கர்ப்பிணியான லீசா, வறுமையின் பிடியிலும் மானத்தை விடாத கணேசன், எதையேனும் செய்யத் துடிக்கும் குள்ளன், இரும்புக் கம்பிகளை விலைக்குப் போட்டு விலங்குகளுக்கு இறைச்சி வாங்கும் சிறுவன், மனம் உடைந்தவன் என்று உணரப்பட்ட காளி குரங்குக்குப் பதிலாகத் தன்னையே தின்னச்சொல்லி சிங்கங்களிடையே அமர்வது என்று மனித வாழ்வின் வெவ்வேறு சூழல்களில் அறமும், அற மீறல்களுமாய் மனதை அலைக்கழிப்பு செய்யும் கதை.

6. இதோ எனது சரீரம் கதை.

உணவகம் நடத்திய படி மூன்று ஓவியங்கள் மட்டும் வரைந்து விட்டு கடைசி ஒன்றை விற்காமல் இருப்பதற்குப் பின்புலமாக அகதி வாழ்வின் இரணங்களை அது குறிப்பதாக இறுதியில் கோர்ப்பது நல்ல இணைப்பு. பாட்டி, அம்மா, நாயகி எமி மூவரும் தோற்றமாயை துணையோடு இளைஞனின் புகைப்படத்தைக் காலங்காலமாகப் பரம்பரையாக முத்தமிட்டு ஒயின் அருந்தியபடி அவனது கவிதைகளை வாசித்துக் கிறங்கிக் கிடப்பது. பிணமாக இளைஞனைக் கண்டடைந்து ஆடைகளை அணிவிப்பது, காம உணர்வு கொள்வது. இறுதியில் எமி அவன் புகைப்படம் முன் நிர்வாணமாவது என்று நம்பமுடியாத நம்பவேண்டிய கட்டாயங்களை ஏற்படுத்தும் கதை.

7. ‘ரோமம்’ சிறுகதையில் தீயில் வெந்து கருகிப்போன தாயின் நினைவில் உழன்று அவளின் நீள முடிகளைப்பொசுக்கி நுகர்ந்து அவள் இருப்பது போலான பிரமை கணேசனை எவ்வளவு தூரம் தேடித் தூண்டுகிறது எத்தனை முடிகளைத் தேடி அலைகிறது இறுதியில் மழிக்கும் இடத்தில் முடிகளைத் திருடி அவன் மேல் கிடத்திக்கொண்டு கணேசன் என்னவானான்? குளியலறை முடிகளைத் தேடிப் பொசுக்குவது, ஓர் உணர்வு மனிதனை எவ்வாறு ஆழமாக செல்லச் செல்ல ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

8. ‘மூன்று சீலைகள்.’மூன்று சேலைகளைத் தூக்கிக் கொண்டு ஊரெங்கும் திரியும் ஆசிரியராலேயே பிறழ்வென்று ஊர் சொல்வதாகச் சொல்லப்படும் கணேசன். ஒரே வருடத்தில் குடும்பத்தின் நிகழும் மூன்று சாவு. மூன்று சேலைக்குள் ஒளிந்து நிற்கும் மூன்று உறவுகளை இழந்த வெறுமை. வேறெதுவும் செய்யத் தோன்றாது மூன்று சேலைகளையும் மறுபடி மறுபடி முடிச்சிட்டுத் தொங்கும் முடிவு நோக்கி தன்னை தள்ளிக்கொள்ளும் காசி. உச்சிவெயில் கருநாய் ஊளை என்று குறைவான மாயமும் தொடர்ச் சங்கிலியாகத் தொடர்கிறது. மனதின் புதிர்களை யாரறிவார்?

9. ‘செவ்வக வடிவப் பெண்கள்’ எனும் இறுதிக் கதையும் அதிகப் பாதிப்பைத் தந்தது. பெண்களின் வித்தியாசமான அக உலகம், அபிலாஷைகள், பொம்மையை உயிரிருப்பதாய்ப் பாவித்துத் தழுவுதல், முத்தமிடல், புணர்தல் என்று முற்றிலும் அந்தரங்கமான பெண்களின் வேறொரு உலகங்களை அலசுகிறது.

10. ‘வண்டுகள்’ காம உணர்வை புத்தப் பௌர்ணமி அன்று மலையுச்சியில் புணர்ந்து பூரணியோடு இணைந்து வெளிப்படுத்தும் வகையிலும், பிறகு ஒவ்வொரு ஜோடி வண்டுகளை நசுக்கி நாயகன் தன் உணர்வுகளைச் சொல்வதைக் குறியீடாகவும்,

11. ‘பரிராஜா’ கல்லூரிப் பேராசிரியர் ஆய்வுக்கு ஒவ்வொரு உயிரினமாகப் பயன்படுத்தி மீண்டும் அனுப்பும் விதமாகவும், வேலையில்லாதவர்கள் பணத்துக்காக, பணத்தைப் பார்க்கிற ஆர்வத்தில் ஒவ்வொரு கட்டமாக நகர்வதையும் அவர்களை நகர்த்தி தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வதையும் சுருங்கச் சொல்லி நிறைய அர்த்தங்களைத் தேடவும் தரவும் செய்கின்றன.

எல்லாப் பிறழ்வுகளிலுமே ஆண்கள் பெண்கள் என்கிற வேறுபாடற்று நீதியோ போதனைகளோ அற்று அவரவர் உடல் சார்ந்த உணர்வுகளை உணர்வுகளாக மட்டுமே கையாண்டிருப்பதால் அது ஆபாசக் கதைகளுக்குரிய தோற்றத்தைத் தராமல் மடைமாறி பிறழ்வு அதற்கான காரணிகள் மூலங்கள் தற்போது நடப்பது என்ற அளவில் உருமாறி நகர்ந்து விடுகிறது.

சாதாரணமான மனநிலையில் வாசிக்க முடியாத கதைகள் நிறைய இருக்கின்றன தொகுப்பு முழுவதும். ஆழ்ந்த மனநிலையில் வாசிக்கும் போது மட்டுமே அதன் வீரியங்கள் காணக்கிடைக்கின்றன. நுண்ணுணர்வு சார்ந்த, அதுவும் பாலுறவுகளின் பிறழ்வு சார்ந்த நுட்பமான விஷயங்களை அநாயசமாகக் கையாண்டு இருக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.!


– சுபி.

நூல் தகவல்:

நூல் :   கேசம்

ஆசிரியர் : நரன்

வகை :   சிறுகதைகள்

வெளியீடு :   சால்ட் 

வெளியான ஆண்டு :   2018

பக்கங்கள் : 127

விலை : ₹  200

நூலினைப் பெற +91 93 63 00 74 57

The post நரன் எழுதிய “கேசம்” – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

  •  

வானம் பார்த்து துப்புதல்


ஷஹிதா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த ஜே.எம்.கூட்ஸியின் மானக்கேடு (Disgrace) நாவலை முன்வைத்து விமர்சனக் கட்டுரை. 

 

ருத்துவரை அணுகி ஆண்மை நீக்கம் செய்துகொண்டால் என்ன என்று சிந்திக்கும் அளவிற்கு கட்டடற்ற பாலியல் விழைவால் சிக்கலான வாழ்க்கையை வாழ்பவன்,  தன்னுடைய உயரம், தோற்றம், ஆலிவ் நிறச்சருமம், அலையாயும் கேசம், காந்தத்தன்மை இவைகளின் தீர்க்கத்தால் மோகிக்கும் பெண்களையெல்லாம் படுக்கையறைக்கு வரவழைத்து விடலாம் என்று நினைத்து அப்படியாகவே அதன் செயல்முறை வெற்றியில் பத்தாண்டுகள் வாழ்ந்து, இலையுதிர் காலத்தில் யுக்திகள் செல்லாக் காசாகும்போது அவன்  நாடிச் செல்வது பாலியல் விடுதிகளை.

பாலியல் இச்சையும் அதற்கான ஈர்ப்பும் இணக்கமும் எல்லோரிடமும் ஒரேமாதிரியாக அமைவதுமில்லை எழுவதுமில்லை. சொராயா ஒரு நிறுவனத்தின் பாலியல் தொழிலாளி. மகளின் வயதுடையவள் என்றாலும் ஒரு வருடமாக பிரதி வியாழன் மதியவேளைகளில் அவளை நாடிச் செல்வது அவனது வழக்கம். அவளை மட்டுமே நாடிச்செல்வதற்கு  இணக்கமும் ஈர்ப்பும் உபரியாக அவளிடமிருந்து அவனுக்கு கிடைப்பதால் இருக்கலாம். ஒருநாள் கடைத்தெருவில் பிள்ளைகளுடன் சேர்த்து அவளைபார்த்த பிறகு, அவளும் அவன் பார்ப்பதைப் பார்த்தப்பிறகு இருவருக்குமான தொடர்பு துண்டித்து போகிறது.  

இவன் பித்தத்தை அவள் தெளிவித்ததாலா? அல்லது இவனது பித்தம் அவளால் தலைக்கேறியதாலா? அவளை மறக்க முடியாமல் துப்பறியும் நிறுவனத்தின் உதவியால்  விலாசம் கண்டறிந்து அவள் முன்னால் போய் மீண்டும் நிற்கிறான்;

ஒரு பெண்நரியின் கூண்டுக்குள் அவளுடைய கன்றுகள் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்துவிட்ட கொன்றுண்ணி வேறு எதை எதிர்பார்க்க முடியும்? டேவிட் லூரிக்கு நேர்வதும் கிடைப்பதும் இந்தக் கேள்வியினால் முகிழும் பதில்.

நாவலின் முதல் அத்தியாயம் சிறுகதையாக முற்று பெற்றாலும், அடுத்தடுத்து அவனது உணர்வின் உணர்ச்சியின் அறிவின் ஒட்டுமொத்த திசையையும் யூகிக்க வைக்கிறது, வாசிக்கவும் நகர்த்துகிறது.  

இனம், மதம், சாதி, மொழி, பதவி, செல்வம், அறிவு, அதிகாரம், நிலப்பரப்பு போன்ற பாகுபாட்டால் மட்டும் வேற்றுமையின் நிராகரிப்பு ஏற்படுவதில்லை.  அது மனிதக்குலத்தில் ஆண் பெண்ணுக்கு இடையிலும் கூட நிலவுகிறது. குறிப்பாக ஆண்கள் பெண்களை பயன்படுத்திக் கொள்ளும் நைச்சியம் – இதில் பொதுப்படையானது அடிமைப்படுத்துதல், யார் யாரை அடிமைப்படுத்துகிறார்கள்? என்பதற்கான பதிலில் ஒருபக்கம் விடுதலைக்கான உணர்வு வெறியாகவும் இன்னொரு பக்கம் ஆளுமைக்கான ருசி வெறியாகவும்  தத்தம் நியாயங்களோடு சமர் புரிகிறது.

தன்னால் பிறருக்கு நேரும் அவமானங்கள் அறிவினாலும், பிறரால் தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தோருக்கு நிகழக்கூடிய அவமானங்களை உணர்ச்சியின் கண்கொண்டு பார்க்கப்படும்போது முதல் பிம்பம் அந்நியமாகவே தெரியும்.

எப்படி தன்னுடைய மகள் லூசிக்கு நேர்ந்தது விருப்பத்திற்கு மாறான வல்லுறவோ, 20 வயது கல்லூரி மாணவியுடன் 53 வயது பேராசிரியர் டேவிட் லூரி தன் இச்சையைத் தீர்த்துக் கொள்வதும் வல்லுறவே… மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர் நம்மிடம் சொல்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்பிற்கு போதிய அவகாசம் அவளுக்கு வழங்கப்பட்டதா? அங்கு ஒரு அத்துமீறல் நிகழ்த்தப்படுகிறது. அவளது விருப்பதைக் குறித்தெல்லாம் துளியும் கவலையில்லாது ஆக்கிரமித்து, உணர்ச்சிகள் வடிந்ததும் அகத்தாய்வு செய்து, தன்னுள் கிளர்ந்தெழும் இன்பத்தின் வேட்கை  போதாமையின் தவிப்பில்தான் என்று சமாதானமாகும் டேவிட் லூரி தன் அனுபவத்தின், அறிவின், மற்றவர்களின் சுதந்திரத்தின் மீதான ஞானம் சிறிதுமில்லாத முதியவனாகவே இருக்கிறார். 

புலன்கள் மரத்து போவதற்கு முன்பான இறுதி எழுச்சி மூளையை செயலிழக்க வைத்துவிடுமா என்ன?புலன்களுக்கான இனிய விருந்தின் இறுதி இருக்கையை விடாமல் பற்றிக்கொள்ளும் லூரியைப் போன்ற முதியவர்கள் அசூரத்தனமாக வளர்ந்து பலனளிக்கும் அவமானதை மட்டுமே விதைக்கிறார்கள். 

“செயலுறாத வேட்கைகளைப் பாதுகாத்து மறைத்து வைத்து வளர்ப்பதைக் காட்டிலும் குழந்தையாக இருக்கும் போதே அதைக் கொன்று விடுவது  நல்லது” என்கிற ப்ளேக்கின் வரிகள் வெற்றுபடிமமாக டேவிட் லூரியின்  மனதில் மேலோட்டமாகப் படிந்திருப்பதால்தான் என்னவோ பைரன் குறித்து அவரது ஆய்வும் புத்தகமும் எழுதப்படாத மனமயக்கமாக நிறைவேறாமல் போகிறது.

அவமானம் சமூகத்தின் பார்வையால் மட்டும் ஏற்படுவதில்லை, அகவுணர்ச்சியாலும் ஏற்படும். அதன் வல்லமை பாதிக்கப்பட்டவர் பாதிப்பை ஏற்படுத்தியவர் இருவரையும் காயப்படுத்தும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக காயம் ஏற்படுகிறது. அதை அவர்கள் கவனிக்காமல் போகும்போது அது சீழ்பிடித்து ரணமாகி உயிரையும் பறித்து விடுகிறது. நெருக்கமாக இருப்பவர்களின் மீதும் அதீத தாக்கத்தையும் ஏற்படுத்தும். எந்தளவிற்கு என்பது  அது கற்பனையினால் பாதிக்கப்பட்ட நபரின் காயத்தின் வடிவத்தைப் பார்த்து வலியை உருவகித்துக் கொள்ளல், உண்மையில் ஒருபோதும் ஒருவரின் வலியையும் அவமானத்தையும் தனதாக்கிக்கொள்ள இயலாது. கற்பனை ஒருபோதும் உண்மையாகாது. பாவனை பொய்மையை மட்டுமே விட்டுச்செல்கிறது. பேராசரியர் தன்மகளிடம் பிரயோகித்து தோற்றுப்போவதைப் போல.

இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் ஷஹிதா கூட்ஸி நாவலை மொழியாக்கம் செய்தது சவால் நிறைந்த பணியாக இருந்தது என்கிறார், மறுப்பதற்கில்லை. ஆனால் மொழிபெயர்ப்புக்கு தேர்ந்தெடுக்கும் சொற்கள் (தமிழைப் பொறுத்தவரை) வாசிப்பிற்கான இடறலைத் தந்துவிடும் வகையில் தேர்வுசெய்யக் கூடாது. மூலத்தின் நெருக்கத்திற்கு அது தடையை ஏற்படுத்துகிறது.  தமிழ் மொழியில் சொற்களுக்கா பஞ்சம்? கண்ணியப்படுத்துகிறாளில்லை, கழுவுகிறாளில்லை, நிகழ்கிறதில்லை… என்று சுய வழக்கு வழியே எழுதினால்  அது பொருந்தாத சாயலையே தருகின்றன. நாட்டுப்புற உழத்தி, இயக்காழி என்பதெல்லாம் பத்திகளோடு பொருந்திப் போகிறதா? நாவலில் புணர்ச்சி விதிகளுக்கு மாறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பல இடங்களையும்  காட்டலாம்…  ஆனால் இவ்வளவையும் மீறி இந்நாவல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்றால் கூட்ஸியின் எழுத்து வல்லமையை தன்னால் முடிந்தவரை பிரதிபலித்திருக்கும் மொழிபெயர்பாளர் ஷஹிதாவின் முயற்சி. வாழ்த்துகள் ஷஹிதா.

2003இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, இருமுறை புக்கர் பரிசு, மூன்றுமுறை CNA விருது பெற்றிருக்கும் நாவலாசிரியர், கட்டுரையாளர், பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஜான் மாக்ஸ்வெல் கூட்ஸி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் (1940) பிறந்து வளர்ந்தவர். அவருடைய தந்தை டச்சு பின்புலமும், தாயார் டச்சு-ஜெர்மன்-போலீஷ் மொழி பேசுபவராகவும் இருந்தனர். அவ்வப்போது ஆங்கில இலக்கிய உலகில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கூட்ஸி 2002இல் ஆஸ்திரேலியாவுக்கு குடிப்பெயர்ந்து 2006இல் அதன் குடிமகனாகி தற்போதுவரை அடிலெய்டில் வசித்து வருகிறார்.

பிரிவினைவாதத்துக்குப் பிந்தைய ஆப்பிரிக்க சமூகம் விலங்குகள் நலன் என்ற இரண்டு புறஎல்லைகளை மீறி சகிக்க முடியாத மனித மனங்களின்  உள்தரிசனத்தையும் இந்நாவல் தருகிறது. ‘உலகை மாற்றிய நூறு புத்தகங்கள்’ என்று பிபிசி பட்டியலிட்ட நாவல்களில் இதுவும் ஒன்று. எதிர் வெளியீடு இந்நாவலை தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள்.


நூல் தகவல்:

நூல் :  மானக்கேடு

ஆசிரியர் : ஜே.எம்.கூட்ஸி 

தமிழில்ஷஹிதா 

வகை :    மொழிபெயர்ப்பு - நாவல்

வெளியீடு :  எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு :  2022

விலை : ₹  399

நூலைப் பெற :  ethirveliyeedu.com/products/மானக்கேடு 

The post வானம் பார்த்து துப்புதல் appeared first on Vimarsanam Web.

  •  

இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை


நாம் பெரும்பாலும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளக்கூடிய சில கேள்விகளுக்கு விடைச் சொல்லும் புத்தகம் தான் இது. உதாரணமாக, பேய் இருக்கா இல்லையா? சாதி என்றால் என்ன? மேல் சாதி, கீழ் சாதி என எதை வைத்துச் சொல்கிறார்கள்? மனசு எங்கே இருக்கு? என்பதைப் போல் அடிக்கடி நம் செவிகளும் கேட்ட கேள்விகளான உனக்கு மூளை இருக்கா? சமைப்பது யாருடைய வேலை?, நீங்க என்ன சாதி? என்ற கேள்விகளுக்குப் பதிலையும்;

கண்ணாடி முன்னால் நில்லுங்கள்!
கொஞ்சம் வரலாறு,
சாமி கண்ணைக் கெடுத்திடும்!
கொஞ்சம் புவியியல்,
இருட்டு எனக்குப் பிடிக்கும்
என்ற தலைப்புகளில் புதிய பல தகவல்களையும் சொல்லும் புத்தகமாய் எழுதப்பட்டுள்ளது.

யாராவது ஒரு வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால், உனக்கு மூளை இருக்கா? இல்லையா? என்று கேட்போம். அதே அந்த வேலையை ஒருவர் திறம்படச் செய்து விட்டால், “என்ன மூளை அவனுக்கு!” என்று சொல்வோம். சிறு பிள்ளைகளைத் திட்டும் பொழுது ” மூளை இல்லாத முண்டம்” என்றெல்லாம் திட்டுவதும் உண்டு. அப்படிப்பட்ட மூளையின் பங்கு என்ன? மூளை எங்கு உள்ளது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் மூளை இருக்குமா? இல்லை… இல்லை… மூளையின் அளவு எல்லோருக்கும் 1 கிலோ முதல் 1.4 கிலோ எடை அளவு தான் இருக்கும். ஆனால், ஓர் உறுப்பை எந்த அளவிற்குப் பயன்படுத்துகின்றோமோ! அந்த அளவிற்கு அதனுடைய வளர்ச்சியும், அதைப் பயன்படுத்தாமல் விட்டால் நாளடைவில் அது அழிந்தும் விடும் என்பதற்குச் சான்றாகச் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணம் மூளை தான். அதனால், மனிதர்களிடம் இருக்கக்கூடிய அனைத்து மூளைகளும் “சமமாக நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்பட வேண்டும்.” பொது நன்மைக்காக நம்முடைய மூளைகள் யோசிக்க வேண்டும். புதிது புதிதாக நம் மூளை யோசிக்க வேண்டும். இல்லாவிடில் அது பழசாகிவிடும் என்பதை உணர்த்துகிறது.

சமைப்பது யாருடைய வேலை? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் முதலில் பெண்களைத் தான் சொல்வார்கள். ஆனால், சமையல் என்பது பெண்களுக்கான வேலை மட்டும் கிடையாது. ஆண்களுக்கும் நன்றாகவே சமைக்கத் தெரியும். அப்படித் தெரியாவிடினும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். வளரும் போதே ஆண் பிள்ளைகளுக்கும் சமைக்க கற்றுக் கொடுக்க வேண்டும். என்பதை ஒரு தெளிவான பார்வையுடன் சொல்லி, “நீ வீட்டில் சும்மா தானே இருக்கிறாய்? நான் தான் சம்பாதிக்கிறேன்.” என்று இனி பெண்களைப் பார்த்து ஆண்கள் கேட்டால், அதற்கு ஒரு பதில் சொல்லப்பட்டுள்ளது. அது, அப்பா வாங்கும் சம்பளத்தில் 1 பங்கு அப்பாவுக்கும், +0.8 பங்கு அம்மாவுக்கும், +0.6 பங்கு ஒரு குழந்தைக்கும், +0.6 பங்கு இன்னொரு குழந்தைக்கும் உண்டாம். இனி சட்டம் தெரியாமல் எந்த ஆணாவது பேசினால் இதைச் சொல்லிவிடலாம் பதிலாக!

நாம் யாரிடமாவது கொஞ்சம் நன்றாகப் பேசி பழகி விட்டால் போதும், அடுத்து அவர்கள் தெரிந்து கொள்ள நினைப்பது என்ன சாதி? என்றுதான். அந்தச் சாதிக்கான விளக்கம், சாதி வந்த கதைகளையெல்லாம் சொல்லிவிட்டு, இன்றைக்கு இரண்டு சாதி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவை மேல்சாதி, கீழ்சாதி என்பது சரிதான் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு சாதி. “முட்டாள் சாதி”.

சாதியாவது, கீதியாவது எல்லோருமே குரங்கின் பேரப்பிள்ளைகள் தான் என்பவர்கள் எல்லாம் ஒரு சாதி, மனிதச் சாதி அதாவது “அறிவாளி சாதி “.

இன்றைக்குத் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரக்கூடியதை நன்கு கவனித்தால்,
பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா?
முகப்பரு போக வேண்டுமா? உடம்பில் நாற்றம் வருகிறதா?
பல் பளிச்சிட வேண்டுமா?
என ஏதோ நாமெல்லாம் ஒட்டுமொத்தக் குறையுடன் பிறந்ததைப் போல, ஒவ்வொன்றையும் குறையாகக் காட்டி விளம்பரப்படுத்தப்படுகிறது. விளம்பரப்படுத்தப்படும் அனைத்தையும் சாடியுள்ள புத்தகம்.

மேலும், நிறம் என்பது அழகு அல்ல; உழைப்பும், படிப்பும் நல்ல பேச்சும், நல்ல பழக்கமும் தான் அழகு; என “கண்ணாடி முன்னால் நில்லுங்கள்” என்ற கட்டுரை சொல்லியுள்ளது.

‘வரலாறு’ என்றாலே ஓர் அறுவை என்பதைப் போல பள்ளி நாட்களிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. ஆம்! வரலாற்றில் ராஜா, ராணி, நாடு, போர், ஆட்சி மட்டும் இருந்தால் அறுவையாகத் தானே இருக்கும். ஒரு ராஜா நாட்டை ஆண்டு, அவன் ராஜபோக வாழ்க்கை வாழ அவன் உழைத்தானா? உழைத்தது மக்கள்; போரில் போராடி உயிரை விட்டது மக்கள்; அவர்கள்தான் வரலாறு. “ராஜாக்களை பேசுவது மட்டுமல்ல, மக்களைப் பேசுவதும் தான் வரலாறு” என்பதைச் சொல்லியவிதம் அருமை.

சிலர் சின்ன பிள்ளைகளிடம் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். “அப்படியெல்லாம் பேசக்கூடாது… சாமி கண்ணைக் கொத்திவிடும்…” என்று! அப்படி மூடநம்பிக்கையான, பாம்பு பால் குடிக்குமா?, பாம்பு டான்ஸ் ஆடுமா?, கிழமைகளில் நல்ல கிழமை, கெட்ட கிழமை என்று உண்டா?, ஏன் வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமைக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுகள்? என இந்தக் கேள்விகளுக்கான தக்க அறிவியல் விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும், ஜோசியம் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைத் தொடுத்து, “அறிவியல் தான் இனி வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

பூமி எவ்வாறு தோன்றியது? 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கொதிக்கும் பாறைக் குழம்பாக இருந்தது பூமி. அங்கே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்ததால் பூமி நிரம்பிப் பல காலம் நீர்க்கோளமாகவே இருந்ததாகவும், பிறகு நீர் ஆவியாகி நிலப்பரப்பு வெளியில் தோன்ற ஆரம்பித்த பின்பு அதுதான் கண்டங்களாகவும், கடலாகவும் மாறியது என்பதையும், நிலப்பரப்பு தோன்றிய போது ஏழு கண்டங்களெல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே கண்டம் தான், அது “பாங்கீ கண்டம்” அப்போது மனிதன் கிடையாது.

அதன் பிறகு இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது. ஏனென்றால், பூமியின் மேற்பரப்பில் இருந்த “டெக்டோனியம் பிளேட்டுகள்” (பூமி முட்டை போல் இருக்க, அதன் ஓட்டின் மேல் தான் கடலும், கண்டமும் இருந்தது. அந்த ஓடு உடைந்து பத்துத் தட்டுகளாய் மிதந்தது. அதுதான் டெக்டோனியம் பிளேட்) நகர்ந்ததால் மேல் பகுதி “லாராஷிய கண்டமாகவும்”, கீழ்ப்பகுதி “கோண்ட் வானா” கண்டமாகவும் பிரிந்தது.

முன்பு இந்தியா நான்கு பக்கம் கடலாக இருந்ததையும், பிறகு மூன்று பக்கம் கடலைக் கொண்டதாக மாறிய நிகழ்வையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இந்தப் புத்தகம் அமைந்தது.

இப்படி உருவான இந்தப் பூமி எப்படியெல்லாம் கூறு போட்டு,
உன் நாடு, என் நாடு
உன் இனம், என் இனம்
உன் மொழி, என் மொழி
உன் சாதி, என் சாதி என்று மாற்றிய மனிதர்களுக்கு ஒன்று சொல்லியுள்ளார்.

“டெக்டோனியம் பிளேட் நகராத வரைக்கும் தான் இந்தியாவுல இருக்க முடியும். அதுவரைக்கும் வாய பொத்திக் கிட்டு இருக்கணும். வரலாறும் தெரியாம, புவியியலும் தெரியாம முட்டாள் தான் உன் நாடு, என் நாடு என்று சொல்லுவான்.” என்று இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் இந்த உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வாசகர்களாகிய நமக்கு வைத்துள்ளார். நிறைவாக “இருட்டை எனக்குப் பிடிக்கும்” என்ற கட்டுரையின் வாயிலாக நமக்கும் இருட்டைப் பிடிக்க வைத்துள்ளார். உங்களுக்கும் பிடிக்க வேண்டுமா? படித்துப் பாருங்கள் புத்தகத்தை…


நூல் தகவல்:

நூல் : இருட்டு எனக்குப் பிடிக்கும் 

ஆசிரியர் :  ச. தமிழ்ச்செல்வன்

வகை :   கட்டுரை 

வெளியீடு :  வாசல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2017

பக்கங்கள் : 80

விலை : ₹  70

 

The post இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

  •  

சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய “மார்க்சியம் என்றால் என்ன?” – ஒரு பார்வை


ப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் பற்றி மார்க்ஸ் சொல்லும்போது ” இன்னொரு நான்” என்றார் . மாற்றம் ஒன்றே மாறாதது என்கிற இயற்கை இயங்குவியல் தத்துவத்தை உலகிற்குச் சொன்ன தத்துவ மேதை.

ஞானப்பால் பருகாத ஞானி. ஊமை உழைப்பாளர்களின் உரிமைக் குரல். வறுமைyயையும் அறியாமையையும் பயன்படுத்தி மக்களைத் திசைதிருப்பச் செய்யும் சொர்க்கம் நரகம் என்ற கற்பிதங்களிலிருந்து மக்களை மீட்ட சமத்துவ போராளி.

ஒரு ஞானி உருவாக அசரீரியும் கேட்கவேண்டியதில்லை, ஞானப்பழம் அருந்த வேண்டியதில்லை, கலைகளில் ஆர்வமும் சமூக பார்வையையுமே ஒரு பண்பட்ட சமூக சேவகனை உருவாக்கச் செய்யும் என்பதற்குச் சிறந்த உதாரணம் மார்க்ஸ்.

சேக்ஸ்பியரின் மனித உணர்வைப் பொங்கச் செய்யும் எழுத்துக்களில் லயித்துப் போனதும், தொடர் வாசிப்புமே மார்க்ஸை தத்துவார்த்தமாக சமூகத்தை நேசிக்கச் செய்தது.

ஒரு காதலால் என்ன செய்துவிட முடியும் என்கிற கேள்விக்கு எல்லா பதிலுமாக இருந்தார் மார்க்ஸ். ஒரு காதல்தான் அவரை கவிஞனாக்கி இருக்கிறது . ” ஜென்னி மட்டும் இல்லை என்றால் நான் சாதாரண மனிதனாகவே வாழ்ந்து இறந்திருப்பேன் ” என்கிறார் கவிஞன் மார்க்ஸ்.

ஏங்கல்ஸின் 44 ஆண்டுக்கால நட்பு தொழிலாளர் வர்க்க பேராற்றலை உலகிற்குத் தெரிய வைத்தது. ஆனால் ரஷ்யக் குடியுரிமையைத் துறந்த மார்க்ஸ் கடைசி வரை எந்த நாட்டின் குடிமகனாகவும் வாழ முடியாமல் தவித்ததுதான் பெரும் கொடுமை.

ஏழு குழந்தைகளைப் பெற்ற மார்க்ஸ் ஜென்னி தம்பதியர் நான்கு குழந்தைகளை இழந்தும், குழந்தைகள் பிறந்த போது தொட்டில் வாங்கவும், இறந்தபோது சவப்பெட்டி வாங்கவும் இயலாத வறுமை இருந்தபோதும் கூட ஒரு நாளும் அவர்களின் தத்துவார்த்தத்தைக் காவு வாங்காதது பேரதிசயம்.

” உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் !
“நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை பெறுவதற்கோ பொன்னுலகம் இருக்கிறது ! “

என்ற முழக்கங்கள் தான் இன்று வரை வர்க்கப் போர்களின் சங்கநாதமாக இருக்கிறது.

கலைகள் மீது நாட்டம் கொண்ட மனம் தான் நாகரீகமான மனநிலையை, பண்பாட்டை உருவாக்க ஒருவனை உந்தித் தள்ளுகிறது . ” உலகே மாயம் வாழ்வே மாயம் ” என வாழ்வை வெறுக்கச் செய்யும் பழைய தத்துவ வேதாந்தங்களைப் புறம் தள்ளி விடுகிறது. எந்த கடவுளும் கொடுக்காத வரமாய், தவமும் பண்ணத் தேவையில்லாத தத்துவமாய் இருக்கும் மார்க்ஸியம் பற்றி நாம் அறிந்துகொள்ள ஒரு தொடக்கநிலை கையேட்டைத் தந்திருக்கிற சு.பொ. அகத்தியலிங்கம் நூலாசிரியருக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.

ஜெர்மனின் தத்துவம், பிரிட்டிஷ் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் இவை மூன்றையும் உள்வாங்கிய மார்க்ஸியம் ஒரு சமூகத்தை ஊடறுத்துப் பார்க்கும் பொதுத்தன்மையை சமூகப்பார்வையை நமக்குள் விதைத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

எந்திரத்தனமாக எதையும் அணுகாமல் இயக்கத்தோடு இணைந்து பார்க்கும் பொருள்முதல்வாத தத்துவமே மார்க்ஸியத்தின் தனித்துவமாக நாம் அறிந்து கொள்ள இந்நூல் மிக எளிமையாக நமக்கு வழிகாட்டுகிறது. கருத்து முதல்வாதம் என்பது எந்த விமர்சனமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளும் ,அதாவது குருட்டு நம்பிக்கையின் உச்சபட்ச மூடத்தனம். பொருள் முதல்வாதம் எதையும் சந்தேகிப்பதும் கேள்வி கேட்பதுமே ஆகும். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் மழையை எதிர்பார்த்துக் காத்திருப்பது கருத்து முதல்வாதம், பொழிகின்ற மழைநீரை எக்காலத்திற்கும் சேகரிக்கக் குளம் வெட்டி வைப்பது பொருள் முதல் வாதம் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

தான் தன்னை அறிந்து தனக்குள் ஒடுங்கிக் கொள்ளச் செய்யும் ஆன்மீகத்தால் சமூகத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லை. சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட மனிதக் குலம் தான் இதுவரை முன்னேறி வந்துள்ளது. இந்திய மண்ணிற்கு மிக அவசியமான ஒன்றாகவும் இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் தான். நம் உடலிலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. பழைய செல்கள் அழிவதும் புதிய செல்கள் உருவாவதுமான இயக்கவியல் தத்துவம் விஞ்ஞானப்பூர்வமானது.

மாற்றம் நிகழும் என்றால் ஒழுக்கத்திலும் மாறுமா என்கிற கேள்வி மிக நுட்பமானது.. ஆம் மாறும்… என்பதே பதில். சாதிய ஒடுக்குமுறையும், பெண் அடிமைத்தனத்தையும் நிறுவிய போது சாஸ்திரச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவளாகப் பெண் இருந்தாள். ஒழுக்க ரீதியாக அனைத்து அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடந்தாள். ஆனால் இன்று அதுவும் மாறிக்கொண்டிருக்கிறது. ஒழுக்கத்தின்பால் சொல்லப்பட்ட கற்பிதங்களை உடைத்தெறிந்துவிட்டு தன் சுயத்தையும் அடைந்து சமூகத்திலும் தன்னை பங்கெடுத்துக்கொள்ளத் தயாராகிவிட்டதும் மாற்றமே.

மனிதக்குலமும் அதன் வளர்ச்சியும் கூட நூலில் முன்னிறுத்திச் சொல்லப்பட்டிருக்கிற விதமும் அருமை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற பூமி நம்முடையது அல்ல பல கோடி பேர் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்ந்து மறைந்து இருக்கிற வரலாற்றைச் சுமந்து நிற்கும் நிலமே. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விளைவும் நமக்கு முன்னால் வாழ்ந்துவிட்டுப்போன எச்சங்களே. ” நம் குழந்தைகள் நம் குழந்தைகள் அல்ல நம் வழியாகப் பூமிக்கு வந்தவர்கள் ” என்பதைப்போல ஒவ்வொரு தனி மனிதனும் தனியாகவும் சமூகத்தின் அங்கமாகவும் இருக்கின்றான் என்பதுதான் மெய்.

மொத்தத்தில் உலகமே மாயை என்கிற அஞ்ஞான பிதற்றைத் தவிடு பொடியாக்கும் மார்க்ஸியப் பார்வை கொண்ட இந்நூல் பல கற்பிதங்களைக் கட்டுடைக்கிறது. இரவில் தெரியும் நட்சத்திரம் பகலில் தெரியவில்லை என்றால் அது மாயை என்று பொருள் அல்ல , சூரிய பேரொளி தாண்டி நம்மால் பார்க்க முடியவில்லை என்பதே விஞ்ஞானம்.

ஒவ்வொரு விளைவுக்கும் காரணம் இருக்கிறது அவசியத்துக்கும் தற்செயலுக்குமான தொடர்பு பல நேரங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

சாராம்சம் மற்றும் தோற்றம் பற்றி விளக்கும்போது, பாலியல் துன்புறுத்தல் மிக மோசமானது. இது தோற்றம்தான் பாலின சமத்துவமின்மையே பெண்களைப் போகப்பொருளாகப் பார்க்கச் செய்கிறது என்பதே அதன் சாராம்சம் என்பது புரிந்து கொள்ளக்கூடிய விளக்கமாக இருக்கிறது.

மற்றொரு முக்கிய குறிப்பாக இந்நூலில் பார்க்க வேண்டிய அம்சமாக நான் நினைப்பது, வேத மறுப்பு என்பது தமிழர்களின் மரபாக இருக்கிறது என்பதை வலியுறுத்திச் செல்கிறது. அறிவென்பது ஏற்கனவே வடிவமைக்கப்பட்டதல்ல, சிந்தனை செய்தல், கற்பனை செய்தல், முடிவெடுத்தல், சரிபார்த்தல், என மனித வாழ்வின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவு வளர்ச்சியடைகிறது இருளை விரட்டிய மின்சாரத்தைப் போல.

முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்கிற வாதம் எல்லா காலத்திற்கும் பொருந்தாது. அறிவும் அறிந்துகொள்வதும், மனிதக் குலத்தின் தொடர் முயற்சியினால் நடப்பது. அறியாமையும், வேதங்களும், இதிகாசங்களும், இறைவனால் படைக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிற வேத நூல்கள் மக்களைப் பிளவுபடுத்தியும் பெண்களை அடிமைப்படுத்தியும் பார்த்தன. அறிவும் ஆராய்ச்சியுமே மனிதப் பண்பை வளர்த்தது. வாழ்வை சமூகத்தை மேம்படுத்தியது. மொத்தத்தில் தமிழர் மரபு என்பது அறிவு சார்ந்தது அறிவியல் சார்ந்தது என்பதை அறிய வைத்திருக்கிறது இந்நூல். வர்க்கப் பேயை மார்க்ஸியமும் சாதிப் பேயை விரட்ட பெரியார் போன்றோரும் கையில் எடுத்த அறிவியலின் தேவையே இனிவரும் மனிதக் குலத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் சரியான மருந்து என்பதை உணர்வோம்.

மனிதக் குலத்திற்கு எதிரான பாசிசத்தையும் பிளவுபடுத்தும் மதவாதத்தையும் துடைத்தெறிவோம். கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகச் சேவகம் செய்யும் முதலாளித்துவப் போக்கு இந்தியத் தேசத்தை விலை பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதனால்தான் மூலதனம், கூலி, உழைப்பு ,லாபம், என பல்வேறு பொருளாதார கட்டுரைகளில் மார்க்ஸ் சொன்னது எதுவும் பொய்யில்லை என்பது எல்லா காலகட்டத்திலும் நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது.

மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தை ஊன்றிக் கற்பதும், அமைப்பாக ஒன்றிணைந்து செயல்படுவதுமே இன்றைய தேவை என்பதைப் புரிந்து அஞ்ஞானம் அகற்றி விஞ்ஞானம் நோக்கி விரைந்திடுவோம் தோழர்களே.


நூல் தகவல்:

நூல் : மார்க்சியம் என்றால் என்ன? -  ஒரு தொடக்கநிலைக் கையேடு

ஆசிரியர் :  சு.பொ.அகத்தியலிங்கம்

வகை :   கட்டுரை - அரசியல்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

வெளியான ஆண்டு :  2018

பக்கங்கள் : 136

விலை : ₹  120

நூலைப் பெற  : பாரதி புத்தகாலயம் இணையதளம் (Click Here)

 

The post சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய “மார்க்சியம் என்றால் என்ன?” – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

  •  

வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன்


பகுத்தறிவும். கற்பனையுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற சிறப்புக் குணங்கள். நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் அறிவு. யாரால் சொல்லப்பட்டாலும் அதன் மெய்ப்பொருள் காணும் திறனையே அறிவு என்கிறோம். பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த பின் தீட்டென்று குளிப்பது பழைய நம்பிக்கை. குழந்தையைப் பார்க்கவே குளித்துவிட்டுச் செல்வதே அறிவான செயலென அறிவுறுத்தித் துவங்குகின்றன வினிதா மோகனின் கதைகள்.

வளரிளம் பருவத்தின் பால் சார்ந்த உந்துதல்கள். அதன் தப்பிதங்கள், எதிர் பாலினம் மீதான வெறுப்புகள், பயங்கள் இவை ஏற்படுத்தும் வாழ்கைப்போக்கு மாற்றங்கள் பற்றிய அகத்தியனின் கதை. இரு நடு வயதினரிடையேயான முதிர்ந்த உரையாடலாக அமைந்துள்ள விதம் சிறப்பு. மானுடரின் அடிப்படை இச்சையான பாலியல் விருப்புகளைப் பதின்ம வயதினர் எதிர்கொள்வது எப்படி என்றும். அதை உன்னதப்படுத்தி உயர்நோக்கச் செயல்களாக்கிக் கொள்வது எப்படி என்றும் அருமையாகக் கூறும் கதை பாடநூலில் இடம் பிடிக்கும் தரம் உடையது.

தம்மிடையே உள்ள திறன் குறைந்தவர்களையும். குறைபாடுகள் கொண்டவர்களையும், ஒரு சமூகம் நன்றாக நடத்தும் விதமே அச்சமூகத்தின் மேம்பட்ட தரத்தின் ஒரு குறியீடு. அர்த்தநாரீசுவரியின் அக்கறை. அர்த்தநாரிகள் மீதான நூலாசிரியரின் கவனம் போற்றுதற்குரியது. நம் கோவில்களில் சுத்தம் குறைந்த நிலையைக் கண்ணுறும் வினிதா மோகனின் அழகுணர்வு பதற்றம் கொள்கிறது. நம் மரபை மறுக்காமல் அதைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும். தூய்மை வேண்டும் உந்துதலை நமக்கு மடைமாற்றம் செய்யும் நூலாசிரியரின் அழகு மனம் ஒரு கோவில்தான்.

கொரோனா காலகட்டத்தை நம் சமூகம் எதிர்கொண்ட விதத்தை. அந்நோய் பற்றிய நுண் விவரங்களை, சிகிச்சை முறைகளை. புள்ளி விவரங்களை வரலாற்றில் பதிவு செய்து வைக்கிறார் நூலாசிரியர் தன் மூன்று கதைகள் மூலமாகச் சேவையில் இன்புறுகிறார். பிறர் பசிப்பிணி நீக்குவதில் களிப்படைகிறான் இளைஞன் ஒருவன். தன் அறிவைப் பயன்படுத்திச் சுரண்டாமல், எளிய மனிதர்கள் மீது அன்பும். அக்கறையும் கொள்கிறான் அவன். தன் தாத்தாவின் சொற்களை மனதில் கொண்டு. சேவை மையம் துவக்கி, அதற்காக விருதுகள் பெறும் அந்த மானுட நேசம் கொண்டவனின் கதையைப் படித்து என் அகம் மகிழ்ந்தது.

கொரோனா முதல் அலை துவங்கும்போதே நோய்த் தொற்று ஏற்பட்ட இளம் செவிலி மகிழ் வெண்பா, தன் ஏழ்மைக் கவலை. திருமணக் கவலை. நோயின் சிரமங்கள் ஆகியவற்றைத் திறனுடன் எதிர்கொண்டு ஆனந்தமாய் டிக்டாக்கில் பதிவுகள் போடுகிறாள். மகிழ்ச்சி என்பது சூழல் சார்ந்தது அல்ல அவரவர் மனநிலை சார்ந்தது என்று அவள் மூலமாக அறிவிக்கிறார் நூலாசிரியர்.

கொரோனாவில் தன் தந்தை இறந்து விடுகிறார். இறுதிச் சடங்குகளை நிறைவாகச் செய்ய இயலாத சமூகச்சூழல் அவளுக்கு வருத்தம் தருகிறது ஆயினும் தன் தந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதுதான் அவருக்குத் தான் செய்கிற சிறப்பான இறுதி மரியாதை என உணரும் மகள் அவர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் பதிப்பித்து நிறைவடைகிறார். படிக்கும் எம் வாசக உள்ளமும் நிறைகிறது.

சாதி அடுக்குகள் மீதான தன் கோபத்தை இரு கதைகள் மூலம் பறைசாற்றுகிறார் நூலாசிரியர் வினிதாமோகன். கொங்கு வேளாளர் திருமணவிழா. எழுதிங்கள் சீர் விழா பற்றிய நுண் விவரணைகளுடன் செல்கிறது முதல் கதை. தர்க்கமனம் கொண்ட யாழினி. கேள்விகளாய்க் கேட்க மரபின் முகமாய் நின்று அருமையாய்ப் பதிலுரைக்கிறார் அருமைக்காரர் பெரியப்பா. தொல்காப்பியத்தில் கற்பியல் மேற்கோள்களைக் காட்டி. ஈரோட்டறிஞர். கல்வெட்டு ஆய்வாளர் செ. ராசு அவர்களின் நூலாதாரங்களைக் கொண்டு. சீருடன் வாழவே நம் சீர்கள் என்று விளக்குகிற பொன்னுசாமி பெரியப்பாவுக்கு எம் வணக்கங்கள் உரித்தாகுக. ஆயினும் கூட இந்த சாதிசார்ந்த சடங்குகள். சாதிக்கொரு நீதியென நிலைநாட்டுகிற நோய்க்கூறுகளாக உள்ளனவே சரிதானா? என யாழினியாய் மனச்சோர்வும் கொள்கிறார் நூலாசிரியர். பெண்களைச் சமையலறைக்குள் ஒடுக்குவதையும். தலித்துகளைச் சேரிக்குள் ஒடுக்குவதையும் ஒப்பிட்டு அடுக்குமுறை அதிகாரங்களைச் சாடுகிறார் வினிதா மோகன். சாதிமதமில்லாதவர் என்று எல்லோரும் பெருமையுடன் சான்றிதழ் கோர வேண்டும் என்கிற அவரின் கனவு மெய்ப்படுக.

சூழலியல் சார்ந்த, இயற்கையைப் பேணுகிற வாழ்வு வேண்டும் என்று நெறியுறுத்தும் கதையில் காடு ஆள்பவனுக்கு குவரன் என்று பெயர் சூட்டியது சிறப்பு. மழை வடிவில் இறைத்தூதனைக் காணும் ஒப்புமை அழகு. கானகத்துப் பறவைகளின் சுருதியும். லயமும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடச் செய்கின்றன நூலாசிரியரின் வர்ணனைகள். காலமாற்றத்தில். இயற்கையின் நேசன்களை நாம் புத்தி பேதலிக்கச் செய்து விடுகிறோமே கடவுளே!!!. மரணித்த முல்லைநாதனைப் பார்க்கும்போது செந்தூரனுடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்கிவிடுகின்றன.

பூப்படைவதைக் கொண்டாடும் ருதுமங்களச்சீர் கதையிலும் அந்த நிகழ்வு பற்றிய வர்ணனைகளைப் பாங்குடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். தெரட்டி. மனை. குடிசை கட்டுதல் போன்ற வட்டார வழக்குச் சொல்லாடல்கள் சிறப்பு. தாய்மாமனின் உரிமைகள், கன்னித்தீட்டு போன்ற விவரணைகளைச் சொல்பவர். இந்தச்சடங்கு தேவைதானா? என்று உரக்கக் குரலெழுப்புகிறார். பெண்களின் சமத்துவம், சுதந்திரம் போன்றவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன என்றும், செயல்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கிய கனவுடனும் கதையை நிறைவு செய்கிறார் வினிதா மோகன்.

இளையோர்களின் கைப்பிடித்து நூலகத்திற்குள் அழைத்துச்சென்று வாசிப்பின் இன்பத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கக் கோருகிற கதையும் மனம் கவர்கிறது. நம்மை அறிவுள்ளோராக. பண்பட்ட மனிதர்களாக மாற்றும் ஓர் அதிசயம் புத்தங்களுக்குள் ஒளிந்துள்ளது என இளவல்களுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர். அறிவே அற்றம் காக்கும் கருவி என்ற நம் வள்ளுவப் பேராசானின் குறளை. நூலெங்கும் எதிரொலிக்கிறார் வினிதா மோகன்.

சமூகமாக. சுமுகமாக வாழ மனிதர்கள் கண்டுபிடித்த மிகத் திறன் வாய்ந்த கருவி அறம் தான் என்பார் என் அன்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன். கருணை, அறம். நேர்மை, இரக்கம். நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்துமே மனிதனின் அடிப்படை இயல்புகளான தன்னலம். காமம். மூர்க்க குணங்களுக்கு எதிரானவை. ஆகவே அறம் சார்ந்த செய்திகள் சான்றோர்களாலும், நூலாசிரியர்களாலும் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படவேண்டிய தேவை இங்கு அதிகம் உள்ளது. பேரிலக்கியங்கள் அனைத்தும் அறப்பிரச்சார ஆக்கங்களே. அந்த வரிசையின் தொடர்ச்சியே என வினிதா மோகனின் கதைகள் என்ற இப்புனைவு நூலைக் கொள்ளலாம்.

காந்தியடிகள் பற்றிய, அம்பேத்கர் பற்றிய விவாதங்களைத் துவக்கி வைத்து அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தொடர் வாசிப்புகளுக்கும் வழிகாட்டுகிறார் வினிதா மோகன். I.A.S.,I.T.S., T.N.P.SC தேர்வுகள் பற்றிய செய்திகளும். Black Chain Technology போன்ற நவீனத் தகவல்களும், இளந்தலைமுறையினரின் தேடலுக்கான தூண்டுதல்களாக நிச்சயம் அமையும்.

கரூரின் காவிரியைப் போல, தெளிவாக மென்நடையில் சொல்லுமிடமெல்லாம் செழிப்பாக்கிக்கொண்டே செல்லுகிற, தன் கதைகள் சொல்லும் திறன் மூலம். மனம் கவர்கிறார் இந்நூலாசிரியர் வினிதாமோகன்.

நூல்பல காண்க என்று நட்புடன் வாழ்த்துகிறேன்.


– மருத்துவர் க. கண்ணன்
கபிலா மருத்துவமனை, கரூர்.

நூல் தகவல்:

நூல் :  கர்ஜனை

வகை :   சிறுகதைகள்

ஆசிரியர் : வினிதா மோகன்

வெளியீடு :  எழிலினி பதிப்பகம்

 ஆண்டு :  முதல் பதிப்பு 2023

பக்கங்கள் : 160

விலை:  ₹ 300

நூலைப் பெற : https://www.emeraldpublishers.com

The post வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன் appeared first on Vimarsanam Web.

  •  

அகம் அல்காரிதம்

"சில துறவிகள் புரிகின்ற 'உயிர் நீத்தல்' சடங்கு போல, மெஷின்களும் தற்கொலை செய்து கொள்வதுண்டு."

The post அகம் அல்காரிதம் appeared first on அரூ.

  •  

அம்மா

நான் இட்டிருக்கும் கட்டளை அதன் அறிவிப்புகள் ஐந்து தமிழ் வார்த்தைகளுக்கு மிகாமல், உச்சரிப்பு சுத்தத்துடன் என்னைச் சிரிக்கவோ, சிந்திக்கவோ வைக்கும்படி அமைய வேண்டும்.

The post அம்மா appeared first on அரூ.

  •  

இணை

எல்லா க்வான்டம் எண்களும் ஒன்றாக இருந்தாலும், துகள் சுழலும் திசை இணைக்கு நேர் எதிராக இருக்கும். அதாவது ஒன்று வலமாகச் சுற்றினால் இணை இடமாகச் சுற்றும்.

The post இணை appeared first on அரூ.

  •