ந. பிச்சமூர்த்தி
பிச்சமூர்த்தியைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். ஒரு காலத்தில் பாரதியைத் தவிர்த்து நான் ரசித்த ஒரே நவீன காலக் கவிஞர் அவர்தான். (ஆனால் இன்று குயிலின் சுருதி புத்தகம் – கவிதைகள் – எனக்குத் தேறவில்லை)
பிச்சமூர்த்தியின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது காதல். இன்று சரியாக வரிகள் நினைவில்லை. காதலன் வருவான், அன்று அலங்கரித்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கும் காதலி வீட்டுக்கு எதிர்பாராதவிதமாக காதலன் வருகிறான். வீடெங்கும் குப்பைகூளம், கை எங்கும் சமையல் மணம், வேளை பார்த்தா நாதர் வந்தார் அசடானேன் என்று சில வரிகளும் கேட்பது அல்ல காதல் தருவதுதான் காதல் என்று தரையில் அமர்ந்தார் என்றும், என்னைக் காணேன் என்ற முத்தாய்ப்பும் இன்னும் நினைவிருக்கின்றன. இது காதலா, பக்தனுக்கு கடவுள் காட்சி தருவதா? என்னைக் காணேன் என்ற முத்தாய்ப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே என்ற கந்தர் அனுபூதி வரிகளை நினைவுபடுத்துகிறது.
பிச்சமூர்த்தியின் கதைகளும் அப்படித்தான். எளிமையினால், காலாவதி ஆகிவிடாத முன்னோடித்தனத்தால், இன்று கிழவனாகிய எனக்கே மங்கலாகவே நினைவில் மிச்சமிருக்கும் ஒரு உலகத்தைக் காட்டுவதால் (உதாரணமாக: ஞானப்பால் சிறுகதையின் அன்னசத்திரம்), சிறு மின்னல் போல அடிக்கும் ஓரிரு வரிகளால் மனதைக் கவர்கின்றன. அவரது கதைகளின் எளிமை நம்மை ஏமாற்றிவிடலாம். ஆனால் அது மேலோட்டமான எளிமை மட்டுமே. உதாரணமாக ஞானப்பால் சிறுகதையை எளிய பண்டாரத்தில் விழிப்பு என்று எண்ணிவிடலாம். ஆனால் அது ஞானோதயம் என்று படித்தால் மனம் நிறைகிறது. அந்த மாதிரி கட்டங்களை மெலிதாகச் சொல்லிச் செல்வதுதான் அவரது பாணி. ஆன்மீகம் கீன்மீகம் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லாத என்னையே அந்தத் தருணத்தை ஆன்மீகமானதாக உணரச் செய்கிறார்.
ஆனால் அவரது சிறுகதைகளில் எதையும் நான் உலகத் தரமானது, மொழிபெயர்க்க வேண்டியது என்று கருதவில்லை. ஒன்று வேண்டுமானால் ஞானப்பால். அவர் என் கண்ணில் முன்னோடி சிறுகதை எழுத்தாளர்தான். தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்டால் அவருக்கு ஓரிரண்டு பாராக்கள் கிடைக்கலாம், அவ்வளவுதான்.
பல கதைகள் படிக்கலாம் ரகம். (1961), இரட்டை விளக்கு
முதல் ஃபிடில் சிறுகதையை சாரு நிவேதிதா சிலாகிக்கிறார். என் கண்ணில் சுமார்தான்.
மாய மான் (1961), வரிசை விளக்கு (1961), வெறும் செருப்பு (1977), நெருப்புக்கோழி, வானம்பாடி, வேப்பமரம், ஏணி, கணபதி துணை, கல் குமிழிகள், வண்டிக்காரர்கள், மண்ணாசை, பரிசு பெற்ற ஓவியம், பஞ்சகல்யாணி, மலடி மகன், கண்ணம்மா, வண்ணாத்திப்பூச்சி எல்லாம் சுமார்.
, ஈஸ்வர லீலை (1961), நெருக்கடி (1961), தலையெழுத்து (1961). ஒரு பேரட்டி (1961), கோர்ட்டு முத்திரை (1961), வயிறு, வலி, இலக்கிய வழக்கழகனார், கோணங்கள், புசிப்பு, புரட்சிகரமான ஓவியம், பெரிய கண், நாடகம் (1977), ஈயத்தவலை பேரம் (1977), ஆகாசத் தையல் (1977) போன்ற மிக எளிய கதைகளைத் தவிர்க்கலாம்.
அசோகமித்திரன் பிச்சமூர்த்தியைப் பற்றி சாஹித்ய அகடமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஒரு அறிமுகப் புத்தகம் எழுதி இருக்கிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: பிச்சமூர்த்தி பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
- பிச்சமூர்த்தி விக்கி குறிப்பு
- பிச்சமூர்த்தி பற்றி ஜெயமோகன்
- பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம் – ஜெயமோகன்
- பிச்சமூர்த்தி பற்றி சாரு நிவேதிதா (பழுப்பு நிறப் பக்கங்கள்)
- அசோகமித்திரன் எழுதிய புத்தகம் – ந. பிச்சமூர்த்தி (இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை)
- சிறுகதைகள்: