Reading view

அமீராவும் ஆலிவ் மரமும் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அன்று காலை, அமீரா எழுந்ததும் முதன்முதலில் பார்த்தது, கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையின் மீது இருந்த ஒரு ஆலிவ் விதையைத் தான். “அம்மா! அம்மா! இந்த ஆலிவ் விதையை யார் இங்கே வைத்தார்கள்?” என்று கேட்டுக்கொண்டே, தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அமீரா. அமீராவின் அம்மாவும், தாத்தா முஹமதும் திண்ணையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர்.  அமீரா கையில் வைத்திருந்த ஆலிவ் விதையைப் பார்த்ததும், “இதுக்காகவா எழுந்தவுடன் ‘அம்மா, அம்மா’ என்று ஓடிவந்தாய்?” என்று கேட்டார் […]

Source

  •  

நீ வேறு, நான் வேறு – புதிய தொடர்

Pa Raghavan

இது காலம் கருதி ஆரம்பிக்கப்படுகிற தொடர். வரலாற்றால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் மறுமலர்ச்சி சரித்திரம்.

நமக்குப் பாலஸ்தீனப் பிரச்னை தெரிந்த அளவுக்குக் குர்திஸ்தான் பிரச்னை தெரியாது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அறிவோம். ஆனால் உய்குர் படுகொலைகள் பற்றி அறியமாட்டோம். அப்படித்தான், காஷ்மீர் பிரச்னையில் செலுத்தும் கவனத்தை பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் செலுத்தத் தவறினோம்.

இரண்டுக்கும் சம வயது. இரண்டுக்கும் காரணம் பாகிஸ்தான். ஒரே வித்தியாசம், காஷ்மீர் ஒன்றுபட்ட இந்தியாவின் ஓர் அங்கம். பலூசிஸ்தான் வஞ்சகத்தால் பாகிஸ்தானுடன் ஒட்ட வைக்கப்பட்ட, தனித்துவம் மிக்க ஓர் இனத்தவரின் மண். தனது சுதந்தரத்துக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான், காஷ்மீர் மீது படையெடுத்து எப்படி அதன் ஒரு பகுதியை அபகரித்ததோ, அதையேதான் பலூசிஸ்தானிலும் செய்தது. ஆனால்  ஒரு பகுதியல்ல. பலூச் மக்களின் மொத்த நிலத்தையும் எடுத்து விழுங்கிவிட்டது.

ஒரு வகையில் அது பிரிட்டனின் கூட்டுச் சதி. இன்னொரு வகையில் பாகிஸ்தானின் பிரத்தியேக சூழ்ச்சி வலை. எப்படியானாலும் இன்றுவரை பலூசிஸ்தான் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியா தம் பக்கம் நிற்க வேண்டும் என்று இன்றைக்குக் கோரிக்கை வைத்து, சுதந்தரப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.

இம்மாதம் (மே 2025) இரண்டாம் தேதி தொடங்கிய பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் ஒன்பதாம் தேதி அதன் உச்சத்தைத் தொட்டு, சுதந்தர பலூசிஸ்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகம் திகைக்க ஒரு நாளாக அன்று ஆகிப் போனது. உண்மையில் பலூசிஸ்தானை நாம் பொருட்படுத்திக் கவனிக்கத் தொடங்கியதே அதன் பிறகுதான். ஆனால் அந்த ஓர் அறிவிப்பின் பின்னால் எழுபத்தேழு ஆண்டுக் கால அடக்குமுறையும் மிதிபட்ட வேதனையும் வதைபட்ட வலியும் இழப்பின் கண்ணீர்க் கறையும் உண்டு.

பாகிஸ்தானின் முகம் என்று நாம் அறிந்த ஒன்றனுக்கு அப்பால் இன்னொரு முகம் அதற்குண்டு. அது இன்னும் பயங்கரமானது. மேலும் கொடூரமானது. ஈவு இரக்கமற்றது. நியாய தருமங்களைச் சற்றும் கருதாதது. பலூசிஸ்தான் மக்கள் அதைத்தான் இத்தனை ஆண்டுக் காலமாகவும் கண்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள். இது அவர்கள் விடுபடத் துடிக்கும் காலம்.

இருபதாண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் வரலாற்றை எழுத நேர்ந்தபோது பலூசிஸ்தான் விவகாரம் குறித்துப் படிக்கத் தொடங்கினேன்.  ஆனால் காஷ்மீரை மையப் புள்ளியாக வைத்து இந்தியா-பாகிஸ்தான் உறவு மற்றும் பகையின் கதையாக அது விரிந்தபோது பலூசிஸ்தான் பிரச்னை இயல்பாகவே அந்தக் கண்ணியில் விடுபட்டுப் போனது. இப்போது அதற்கு நேரம் அமைகிறது.

வரும் திங்கள்கிழமை முதல் (மே 19) மெட்ராஸ் பேப்பரில் நாள்தோறும் இதனை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். எப்போதும் என் உடன் இருக்கும் வாசக நண்பர்களை இப்போதும் வாசித்துக் கருத்துச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

நியூஸிலாந்து சங்கநாதம் தமிழ் ரேடியோ - 18 ஜனவரி 2013

பொங்கல் வாழ்த்து உரை மற்றும் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம்,  பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னணி பற்றி எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.



வணக்கம். முதலில் நியூஸிலாந்து வாழ் தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள். குறிப்பாய் தமிழ் கலை இலக்கிய வட்டத்தின் சங்கநாதம் வானொலி மூலமாக நாளை நடக்கவிருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் வாழும் ஒரு எழுத்தாளன் நான். எழுத்தாளன் என்பவன் முந்திய காலத்து ஞானிகள் போல சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும் என்று கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ கூறுவார். தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய், தமிழகத்தின் மனச்சாட்சியாய் நான் உங்களுடன் இந்த பொங்கல் விழாவினை பகிர்ந்து கொள்ள விழைக்கிறேன்.

எந்த நாளில், எந்த சூழலில் நீங்கள் இந்த பொங்கல் திருநாளை எடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. நாம் ஒன்றும் இல்லை நமக்கென்று ஒன்றுமில்லை. ஏதிலிகளாய் உலக வீதிக்கு நடத்தப்பட்டுள்ளோம் நாம் என்றொரு நிலை இன்று இருக்கிறது. நமக்கென்று ஒரு காலம் இருந்தது. அது ஒரு காலம். அதுதான் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருநாள் என்று பலவகையாக பெயரிடப்பட்ட அந்த நாள். 

உலகப் பரப்பில் ஒவ்வொரு இனமும் தனக்கென ஒரு தனித்த பண்பாட்டு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. ஒரு பண்பாட்டு நிகழ்வு எதன் காரணமா எக்காலத்தில் தோன்றியது என்று கண்டறிவது, அந்த ஆதி புள்ளியை கண்டறிவது கடினம். இறுதிக்கும் இறுதியாய் ஒரு நம்பிக்கையாக மட்டுமே அதற்கு விளக்கம் காணுகிறார்கள். யூகம், அனுமானம் இவற்றினால் அதை சுற்றிக் கட்டப்பட்ட கதைகளும் உண்டு. தமிழனம் எடுக்கும் பொங்கல் விழா யூகத்தின் காரணமாய், அனுமானத்தின் காரணமாய் கட்டப்பட்ட ஒரு கதை நிகழ்வல்ல. அது ஒரு நம்பிக்கை அல்ல. சங்கராந்தி போல, தீபாவளி போல, கார்த்திகை போல மூடத்தனத்தின் மேல் கட்டப்பட்டஆரிய நிகழ்வுகள் அல்ல. காலம் மாறுதலை, தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தில் காலச் சூழற்சியில்  எழுந்த ஒரு மாறுதலை சுட்டும் ஒரு வரலாற்று நிகழ்வு. இனக் குழு சமூகமாக இருந்த தமிழ் இனம், வேளாண் சமூகமாக மாறியத்தின் அடையாள புள்ளி அது.

வேட்டைச் சமூகமாக இருந்த ஓர் இனம், வேளாண் சமூகமாய் நாகரிக உயர்வு பெறுகிறது. தம் உழைப்பை, உணவு தானியத்தை தங்களுக்கு தந்த சூரியனை, வான் மழையை, காற்றை, இயற்கையை வணங்கினார்கள் தமிழர்கள். பிள்ளைகளை போல் பொத்தி பொத்தி வளர்த்த பயிர்கள், தங்கள் தலையால் தானியம் தந்து வணங்குகிற போது, அந்த பயிர்களை கொண்டாடும் அறுவடைக்காலத்தை அவர்கள் வணங்கினார்கள். அந்த அறுவடைக்காலத்தை கொண்டு சேர்த்த, கழுத்து ஓடிய பாடுபட்ட மாடுகளை, அவர்கள் மாட்டு பொங்கல் என்ற நினைவு கொண்டார். அந்த பொங்கலை தங்களுக்கு கொண்டுதந்த உழைப்பாளிகளை, அவர்கள் காணும் பொங்கல் என்று கொண்டாடினார்கள். பொங்கல் திருநாள், உழவர் திருநாள், காணும் பொங்கல் என்று மூன்று வகையாக இவைகளை அவர்கள் வகுத்து தங்களுடைய நன்றிகளை தெரிவித்தார்கள். இந்த நேரத்தில் மே தினம் போல், மாவீரர் நாள் போல் பொங்கல் விழாவில் மேற்கொள்ள வேண்டிய சங்கர்ப்பங்கள் என உறுதி மொழிகள் உண்டு. 

பொங்கல் எனும் பழைய தமிழர் திருநாளில் தமிழர் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள்கள் என்ன?

சித்திரையில் இருக்கும் தமிழா

நித்திரையில் இருக்கும் தமிழா 

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் 

கற்பித்ததே அறிவு கோவா 60 ஆண்டுகள் 

தரணி ஆண்ட தமிழனுக்கு 

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு 

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சித்திரை திருநாளில் தொடங்குகின்ற புத்தாண்டு 60 மாதங்களும் வடமொழிப் பெயர்கள். 60 ஆண்டுகளும் வடமொழிப் பெயர்கள். நாயக்க மன்னர் ஆட்சியில்தான் இதை புழக்கத்துக்கு கொண்டு வந்தார்கள். 

நாம் இங்கே கவனிக்க வேண்டியது இந்த உழவர் திருநாளில், பொங்கல் திருநாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் என்ன. சாதி ஒழித்தல் ஒன்று. தமிழ் வளர்த்தல் மற்றொன்று. இதில் பாதியை மறந்தால் மறுபாதிக் தொலங்குவதில்லையாம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். நாம் இந்த நாளிலே சாதி பேதங்கள் கற்பித்து கொண்டு, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறோம். இன்றைய தமிழகம் இதே நிலையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் நிலைமைகள் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் சாதி பேதங்கள் பாராட்டுவது என்பது ஒவ்வொருவருடை ரத்தத்திற்கும் உள்ளேயும் ஊறி இருக்கிறது. ஆகவே சாதி ஒழித்தல் ஒன்று, தமிழ் வளர்த்தல் மற்றொன்று. 

அன்றைக்கு இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் போராடினோம். ஆனால் இந்தி ஆதிக்கத்துக்கு பதிலாக ஆங்கில ஆதிக்கம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை நாம் அன்னை மொழியாகவே ஏற்றுக் கொண்ட, ஏனென்றால் - எது ஆங்கிலத்தை இது உங்கப்பன் வீட்டு மொழியா? என்று கேட்டார் கவிஞர் காசி ஆனந்தன். ஆனால் அது அப்பனாக இல்லை. நமக்கு அம்மாவாகவே மாறி இருக்கிறது. எனவே நம்முடைய வாழ்வியல் மரபுகளில் எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய தமிழன் இடத்தில் ஆங்கிலம் அமர்ந்து கொண்டிருக்கிறது. 

எனவே இந்த பொங்கல் திருநாளில் நாம் சூளுரைக்க வேண்டியவை - போலி போலியான உறுதிமொழிகள், பாவனைகள் செய்தல் அன்றி உண்மையாகவே நாம்  உழைக்கும் மக்களுக்காக, உழவர்களுக்காக, பாடுபடும் மக்களுக்காக நாம் உறுதி ஏற்போமேயானால், ஜாதி ஒழித்தலும், தமிழ் வளர்த்தலும், உலகமயமாதலை எதிர்த்தலும் என்ற மூன்று கோட்பாடுகளை முன்வைத்து இந்த பொங்கல் திருநாளில் நாம் உறுதி ஏற்போம். உறுதி ஏற்போம்.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  •  

கல்லுக்குள் ஈரம் - ர.சு.நல்லபெருமாள்

அகிலன், நா.பா போன்ற எழுத்தாளர்களின் நாவல்களை படிக்கும் போது "இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எந்த கிரகத்தில் வசிக்கின்றார்கள்" என்ற எண்ணம் ஏற்படும்.  நாவலில் அனைவரும் தத்துவமாகவும், உயர்ந்த லட்சியங்களை பற்றியும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்த நாவல் கொஞ்சம் தப்பியிருந்தால் அந்த வகையில் விழுந்திருக்கும்.

சுதந்திர போராட்ட காலத்து நாவல். கல்கி  சுதந்திர போராட்டத்தை பின்புலமாக வைத்து பல நாவல்கள் எழுதியிருக்கின்றார் அலையோசை, தியாகபூமி, சோலைமலை இளவரசி. ஆனால் அவரின் நாவல்களில் அனைவரும் கற்பனை பாத்திரங்களே. இந்நாவலில் கற்பனை பாத்திரங்களுடன் பல சுதந்திர போராட்ட வீரர்களும் பாத்திரங்களாக வருகின்றனர். காந்தி, சிதம்பரம் பிள்ளை, பாரதியார், வாஞ்சி நாதன், ராஜாஜி, நேரு.

இன்றும் காந்தியின் அஹிம்சை வழி போராட்டம்தான் சுதந்திரம் பெற உண்மையான காரணமா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவர் ஆயுத வழி சென்ற பலரை தன் பக்கம் திரும்ப வைத்தார் என்றால், அதை எளிதாக நம்ப முடியும். அவர் மீது பலருக்கு அத்தகைய பக்தி இருந்துள்ளது. அப்படி ஆயுத வழி சென்ற ஒரு சுதந்திர்ப் போராட்ட வீரனின் கதைதான் இது. 

கதையை ஒரு ட்வீட்டில் சொல்லிவிடலாம். ஆயுதப் போராட்டத்தின் வழி சென்ற நாயகனை, நாயகி தன் தியாகத்தால் அஹிம்சை வழி திருப்பினாள்.
 
கதையை சுவாரஸ்யமாக்குவதே கதையை பல உண்மை சம்பவங்களுடன் பிணைத்து சொல்லியிருப்பதே, அதீத கற்பனை ஏதும் இல்லை. கதை பாத்திரங்கள் எதுவும் ஞான திருஷ்டி அடைந்து காலத்தில் முன்னே சென்று அருள்வாக்கு சொல்வதில்லை. சில இடங்களில் பிரச்சார தொனி வந்தாலும் பெரிதாக உறுத்தவில்லை. கதைக்குள் ஒரு சிறிய சஸ்பென்ஸ் வைத்திருப்பதாக எண்ணி ஆசிரியர் எழுதிய சம்பவங்கள் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கின்றது, பள்ளி குழந்தை கூட கண்டு பிடித்துவிடும் அதை. 

நாவல் இறுதிக் கட்ட சுதந்திரபோரின் காலத்தில் நடக்கின்றது. சுதந்திர போரட்ட காலத்தை ஓரளவிற்கு அறிந்து கொள்ள உதவும் இந்த புத்தகம். ஒரு காலத்தில் மக்களிடையே எப்படிப்பட்ட தீவிர உணர்ச்சி பரவியது, எப்படி பலர் சுதந்திர போரில் எதற்கும் துணிந்து இறங்கினார்கள் என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ள உதவும். 

இறுதிப்பகுதிகளை படிக்கும் போது உங்களுக்கு ஹேராம் நினைவிற்கு வந்தால் கமல் பொறுப்பல்ல. அவர் இந்த புத்தகத்திலிருந்துதான் சுட்டிருப்பார் என்று எல்லாம் சொல்லவில்லை, ஹாலிவுட் கதைகளிலிருந்து இன்ஸ்பையர் ஆவது போல இந்த நாவலிலிருந்து இன்ஸ்பையர் ஆகியிருக்கலாம். 

ஓரளவிற்கு பெரிய புத்தகம்தான், அங்கங்கு வரும் சின்ன சின்ன சம்பிரதாய ஆசிரியர் கூற்றுக்களை தவிர்த்து பார்த்தால் சுவாரஸ்யமான நாவல்தான்.

படிக்கலாம். 
  •  

ராமோஜியம் - இரா.முருகன்



முதலிரவில் மனைவி மூக்குபொடி டப்பாவைத் தேடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வித்தியாசமான கற்பனையில் விளைந்த நாவல். 

நாற்பதுகளில் சென்னையில் வாழும் ஒரு தம்பதியரின் தினசரி அனுபவங்களின் ஒரு சிறியத் தொகுப்பு. கருப்பு வெள்ளை பிண்ணனியில் சென்னை, டில்லி, கும்பகோணம் போன்ற இடங்களில் சுற்றித் திரிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும், அந்த வாய்ப்பைத் தவற விடாமல் இருக்க இந்த நாவலைப் படிக்கலாம்.

தேவனின் துப்பறியும் சாம்பு, சிஐடி சந்துரு போன்ற தேவனின்  புத்தகங்களைப் படிக்கும் போது சென்னையைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கும். நாற்பதுகளின் சென்னை, கொரட்டூர் கிராமம், வெளாச்சேரி கிராமம், ஊரை விட்டு எங்கோ இருக்கும் குரோம்பேட்டை, பங்களாக்கள் நிறைந்த நுங்கம்பாக்கம், வளர்ந்து வரும் மேற்கு மாம்பலம், ட்ராம் வண்டிகள் என்று,  ஒரு கருப்பு வெள்ளையில் ஒரு நகரம் நம் கற்பனையில் உருவாகிவரும். அந்தக் கற்பனையை இன்னும் விரிவாக்கும் இந்தப் புத்தகம்.

நாற்பதுகள். இரண்டாம் உலகப்போரின் காலம். சுதந்திர போரின் உச்சக்கட்டம். உலகப்போர்களின் காலத்தை இன்று நாம் ஓரளவிற்கு கொரானா காலத்தில் உணர முடிகின்றது. அந்த நாற்பதுகளில் நடக்கின்றது இந்த நாவலின் கதை.

ராமோஜிராவ், மதறாஸ் மாகாண, பிரிட்டீஷ் அரசின் ஊழியன். அவனது மனைவி ரத்னா பாய். இவர்களின் வாழ்வின் அனுபவங்கள்தான் நாவல் முழுவதும். ராமோஜி ஏ.ஆர்.பி வார்டனாவது, அவனது சினிமா அனுபவங்கள், இருவரும் டெல்லி சென்ற அனுபவம், கும்பகோணம் சென்ற அனுபவம், யுந்த கால அரசாங்கத்தின் வேலை என்று சென்று கொண்டே இருக்கின்றது. இதன் நடுவே ஏகப்பட்ட தகவல்களைக்  கொட்டியிருகின்றார்.

சென்னைநகர் வீதிகளின் பங்கர்கள், கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட வீடுகள், குறைவான வெளிச்சத்தில் வாழும் குடும்பங்கள், விறகு முதல் அரிசி வரை ரேஷன், ஊருக்கு சென்றாலும் ரேஷன் கார்டை கொண்டு செல்ல வேண்டிய நிலை, டீ யை மக்களிடம் கொண்டு சேர்க்க போராடும் டீ போர்ட், சென்னை முதல் டெல்லி வரையிலான ரயில் பயணத்தில் என்ன என்ன ஊர்கள் வரும், எங்கு என்ன கிடைக்கும், என்று பலவித தகவல்கள். 

விதவிதமான மனிதர்கள். வரலாற்றிலிருந்து வந்தவர்கள், நாம் கேள்விப்பட்டவர்களின் சாயல் கொண்டவர்கள் என்று பலரை உலவ விட்டிருக்கின்றார். தெலக்ஸ் புவனா என்ற பெயரில் வரும் சினிமா நடிகை, காளிங்க ரத்னம் என்னும் நடிகர், கழுதை வளர்க்கும் ஆர்ட் டைரக்டர், ரயிலில் வரும் பிராமண பாட்டி, கங்கா - கோபு, கானோஜி ஆங்க்ரே, அருணாச்சல கவிராயர் என்று பல சுவாரஸ்யமான பாத்திரங்கள். 

முதலில் வரும் தசாபதி, காளிங்கரத்னம் என்று வந்தவுடன், சும்மா பெயர் மாற்றி வைத்து எழுதும் ஸ்பூஃப் நாவல் என்றுதான் நினைத்தேன். இல்லை. ஒவ்வொரு பாத்திரத்தையும் அழுத்தமாக பதியும்படி சித்தரத்துள்ளார். நடுவே, மோகமுள் பாத்திரங்கள் முகத்தில் மரு ஒட்டிக் கொண்டு வருகின்றன. சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது.

விஷ்ணுபுரம் மாதிரி, தற்போது நடக்கும் அனைத்தும் ஏற்கனவே நடந்தது என்பது மாதிரி, ராமோஜி, ராமோஜி ஆங்க்ரே என்ற பெயரில் கானோஜி ஆங்க்ரேயின் பிரதான தளபதியாக வருகின்றார், பின்னார் வெறும் ராமோஜியாக ஆனந்த ரங்கம் பிள்ளைக்கு உதவியாக வந்து, அருணாச்சல கவிராயரை சந்திக்கின்றார். விட்டால் அக்பரை சந்தித்த ராமோஜி, ராமனுஜரை சந்தித்த ராமோஜி எல்லாம் வருவார்கள் போல.

நாவலின் மற்றொரு முக்கிய அம்சம் உணவு. ராமோஜி தினமும் என்னென்ன உண்டான் என்று தெளிவாக இருக்கின்றது. உணவில் முக்கியம் எதை எதோடு சாப்பிடுவது என்று ஒன்று உள்ளது. அரிசி உப்புமா என்றால் அதற்கு கத்திரிக்கா கொத்ஸு சுகம், இட்டிலிக்கு சட்னி சாம்பார், ஆலு பரோட்டாவிற்கு தயிர் ஊறுகாய் என்று விதவிதமான உணவுகள். நல்ல உணவு ரசிகர் போல.

கூடவே, சங்கீதம். அதைப்பற்றியும் ஏகப்பட்ட விஷயங்கள்.

நாவல் முழுவதையும் ஒரு மெல்லிய புன்னகையுடன் மட்டுமே படிக்க முடியும். வெகு இயல்பான நகைச்சுவை, வலிந்து புகுத்தியது ஏதுமில்லை, அங்கங்கு மெல்லிய நுண்ணுர்வை தொடும் சம்பவங்கள் என்று ஒர் ஃபீல் குட் நாவல். 

அவரது மற்றொரு நாவல் அரசூர் வம்சம், அதை படித்து விட்டு, இதையும் படித்தால் இரண்டையும் ஒருவரா எழுதினார் என்று தோன்றுகின்றது. நாவலில் எப்படி காலத்தை ஒரு பாத்திரமாக்கலாம் என்று காட்டியுள்ளார் முருகன். பாத்திரங்கள், சம்பவங்கள் அந்த காலத்தை விட்டு நகர்ந்தால் ஒன்றுமில்லாமல் போகும். 

கண்டிப்பாக படியுங்கள். கிண்டிலில் கிடைக்கின்றது.




  •