Reading view
நீ வேறு, நான் வேறு – புதிய தொடர்
இது காலம் கருதி ஆரம்பிக்கப்படுகிற தொடர். வரலாற்றால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் மறுமலர்ச்சி சரித்திரம்.
நமக்குப் பாலஸ்தீனப் பிரச்னை தெரிந்த அளவுக்குக் குர்திஸ்தான் பிரச்னை தெரியாது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அறிவோம். ஆனால் உய்குர் படுகொலைகள் பற்றி அறியமாட்டோம். அப்படித்தான், காஷ்மீர் பிரச்னையில் செலுத்தும் கவனத்தை பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் செலுத்தத் தவறினோம்.
இரண்டுக்கும் சம வயது. இரண்டுக்கும் காரணம் பாகிஸ்தான். ஒரே வித்தியாசம், காஷ்மீர் ஒன்றுபட்ட இந்தியாவின் ஓர் அங்கம். பலூசிஸ்தான் வஞ்சகத்தால் பாகிஸ்தானுடன் ஒட்ட வைக்கப்பட்ட, தனித்துவம் மிக்க ஓர் இனத்தவரின் மண். தனது சுதந்தரத்துக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான், காஷ்மீர் மீது படையெடுத்து எப்படி அதன் ஒரு பகுதியை அபகரித்ததோ, அதையேதான் பலூசிஸ்தானிலும் செய்தது. ஆனால் ஒரு பகுதியல்ல. பலூச் மக்களின் மொத்த நிலத்தையும் எடுத்து விழுங்கிவிட்டது.
ஒரு வகையில் அது பிரிட்டனின் கூட்டுச் சதி. இன்னொரு வகையில் பாகிஸ்தானின் பிரத்தியேக சூழ்ச்சி வலை. எப்படியானாலும் இன்றுவரை பலூசிஸ்தான் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியா தம் பக்கம் நிற்க வேண்டும் என்று இன்றைக்குக் கோரிக்கை வைத்து, சுதந்தரப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
இம்மாதம் (மே 2025) இரண்டாம் தேதி தொடங்கிய பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் ஒன்பதாம் தேதி அதன் உச்சத்தைத் தொட்டு, சுதந்தர பலூசிஸ்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகம் திகைக்க ஒரு நாளாக அன்று ஆகிப் போனது. உண்மையில் பலூசிஸ்தானை நாம் பொருட்படுத்திக் கவனிக்கத் தொடங்கியதே அதன் பிறகுதான். ஆனால் அந்த ஓர் அறிவிப்பின் பின்னால் எழுபத்தேழு ஆண்டுக் கால அடக்குமுறையும் மிதிபட்ட வேதனையும் வதைபட்ட வலியும் இழப்பின் கண்ணீர்க் கறையும் உண்டு.
பாகிஸ்தானின் முகம் என்று நாம் அறிந்த ஒன்றனுக்கு அப்பால் இன்னொரு முகம் அதற்குண்டு. அது இன்னும் பயங்கரமானது. மேலும் கொடூரமானது. ஈவு இரக்கமற்றது. நியாய தருமங்களைச் சற்றும் கருதாதது. பலூசிஸ்தான் மக்கள் அதைத்தான் இத்தனை ஆண்டுக் காலமாகவும் கண்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள். இது அவர்கள் விடுபடத் துடிக்கும் காலம்.
இருபதாண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் வரலாற்றை எழுத நேர்ந்தபோது பலூசிஸ்தான் விவகாரம் குறித்துப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் காஷ்மீரை மையப் புள்ளியாக வைத்து இந்தியா-பாகிஸ்தான் உறவு மற்றும் பகையின் கதையாக அது விரிந்தபோது பலூசிஸ்தான் பிரச்னை இயல்பாகவே அந்தக் கண்ணியில் விடுபட்டுப் போனது. இப்போது அதற்கு நேரம் அமைகிறது.
வரும் திங்கள்கிழமை முதல் (மே 19) மெட்ராஸ் பேப்பரில் நாள்தோறும் இதனை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். எப்போதும் என் உடன் இருக்கும் வாசக நண்பர்களை இப்போதும் வாசித்துக் கருத்துச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.
All rights reserved. © Pa Raghavan - 2022
பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ
நியூஸிலாந்து சங்கநாதம் தமிழ் ரேடியோ - 18 ஜனவரி 2013
பொங்கல் வாழ்த்து உரை மற்றும் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னணி பற்றி எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.
வணக்கம். முதலில் நியூஸிலாந்து வாழ் தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள். குறிப்பாய் தமிழ் கலை இலக்கிய வட்டத்தின் சங்கநாதம் வானொலி மூலமாக நாளை நடக்கவிருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் வாழும் ஒரு எழுத்தாளன் நான். எழுத்தாளன் என்பவன் முந்திய காலத்து ஞானிகள் போல சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும் என்று கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ கூறுவார். தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய், தமிழகத்தின் மனச்சாட்சியாய் நான் உங்களுடன் இந்த பொங்கல் விழாவினை பகிர்ந்து கொள்ள விழைக்கிறேன்.
எந்த நாளில், எந்த சூழலில் நீங்கள் இந்த பொங்கல் திருநாளை எடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. நாம் ஒன்றும் இல்லை நமக்கென்று ஒன்றுமில்லை. ஏதிலிகளாய் உலக வீதிக்கு நடத்தப்பட்டுள்ளோம் நாம் என்றொரு நிலை இன்று இருக்கிறது. நமக்கென்று ஒரு காலம் இருந்தது. அது ஒரு காலம். அதுதான் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருநாள் என்று பலவகையாக பெயரிடப்பட்ட அந்த நாள்.
உலகப் பரப்பில் ஒவ்வொரு இனமும் தனக்கென ஒரு தனித்த பண்பாட்டு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. ஒரு பண்பாட்டு நிகழ்வு எதன் காரணமா எக்காலத்தில் தோன்றியது என்று கண்டறிவது, அந்த ஆதி புள்ளியை கண்டறிவது கடினம். இறுதிக்கும் இறுதியாய் ஒரு நம்பிக்கையாக மட்டுமே அதற்கு விளக்கம் காணுகிறார்கள். யூகம், அனுமானம் இவற்றினால் அதை சுற்றிக் கட்டப்பட்ட கதைகளும் உண்டு. தமிழனம் எடுக்கும் பொங்கல் விழா யூகத்தின் காரணமாய், அனுமானத்தின் காரணமாய் கட்டப்பட்ட ஒரு கதை நிகழ்வல்ல. அது ஒரு நம்பிக்கை அல்ல. சங்கராந்தி போல, தீபாவளி போல, கார்த்திகை போல மூடத்தனத்தின் மேல் கட்டப்பட்டஆரிய நிகழ்வுகள் அல்ல. காலம் மாறுதலை, தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தில் காலச் சூழற்சியில் எழுந்த ஒரு மாறுதலை சுட்டும் ஒரு வரலாற்று நிகழ்வு. இனக் குழு சமூகமாக இருந்த தமிழ் இனம், வேளாண் சமூகமாக மாறியத்தின் அடையாள புள்ளி அது.
வேட்டைச் சமூகமாக இருந்த ஓர் இனம், வேளாண் சமூகமாய் நாகரிக உயர்வு பெறுகிறது. தம் உழைப்பை, உணவு தானியத்தை தங்களுக்கு தந்த சூரியனை, வான் மழையை, காற்றை, இயற்கையை வணங்கினார்கள் தமிழர்கள். பிள்ளைகளை போல் பொத்தி பொத்தி வளர்த்த பயிர்கள், தங்கள் தலையால் தானியம் தந்து வணங்குகிற போது, அந்த பயிர்களை கொண்டாடும் அறுவடைக்காலத்தை அவர்கள் வணங்கினார்கள். அந்த அறுவடைக்காலத்தை கொண்டு சேர்த்த, கழுத்து ஓடிய பாடுபட்ட மாடுகளை, அவர்கள் மாட்டு பொங்கல் என்ற நினைவு கொண்டார். அந்த பொங்கலை தங்களுக்கு கொண்டுதந்த உழைப்பாளிகளை, அவர்கள் காணும் பொங்கல் என்று கொண்டாடினார்கள். பொங்கல் திருநாள், உழவர் திருநாள், காணும் பொங்கல் என்று மூன்று வகையாக இவைகளை அவர்கள் வகுத்து தங்களுடைய நன்றிகளை தெரிவித்தார்கள். இந்த நேரத்தில் மே தினம் போல், மாவீரர் நாள் போல் பொங்கல் விழாவில் மேற்கொள்ள வேண்டிய சங்கர்ப்பங்கள் என உறுதி மொழிகள் உண்டு.
பொங்கல் எனும் பழைய தமிழர் திருநாளில் தமிழர் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள்கள் என்ன?
சித்திரையில் இருக்கும் தமிழா
நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம்
கற்பித்ததே அறிவு கோவா 60 ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சித்திரை திருநாளில் தொடங்குகின்ற புத்தாண்டு 60 மாதங்களும் வடமொழிப் பெயர்கள். 60 ஆண்டுகளும் வடமொழிப் பெயர்கள். நாயக்க மன்னர் ஆட்சியில்தான் இதை புழக்கத்துக்கு கொண்டு வந்தார்கள்.
நாம் இங்கே கவனிக்க வேண்டியது இந்த உழவர் திருநாளில், பொங்கல் திருநாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் என்ன. சாதி ஒழித்தல் ஒன்று. தமிழ் வளர்த்தல் மற்றொன்று. இதில் பாதியை மறந்தால் மறுபாதிக் தொலங்குவதில்லையாம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். நாம் இந்த நாளிலே சாதி பேதங்கள் கற்பித்து கொண்டு, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறோம். இன்றைய தமிழகம் இதே நிலையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் நிலைமைகள் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் சாதி பேதங்கள் பாராட்டுவது என்பது ஒவ்வொருவருடை ரத்தத்திற்கும் உள்ளேயும் ஊறி இருக்கிறது. ஆகவே சாதி ஒழித்தல் ஒன்று, தமிழ் வளர்த்தல் மற்றொன்று.
அன்றைக்கு இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் போராடினோம். ஆனால் இந்தி ஆதிக்கத்துக்கு பதிலாக ஆங்கில ஆதிக்கம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை நாம் அன்னை மொழியாகவே ஏற்றுக் கொண்ட, ஏனென்றால் - எது ஆங்கிலத்தை இது உங்கப்பன் வீட்டு மொழியா? என்று கேட்டார் கவிஞர் காசி ஆனந்தன். ஆனால் அது அப்பனாக இல்லை. நமக்கு அம்மாவாகவே மாறி இருக்கிறது. எனவே நம்முடைய வாழ்வியல் மரபுகளில் எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய தமிழன் இடத்தில் ஆங்கிலம் அமர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே இந்த பொங்கல் திருநாளில் நாம் சூளுரைக்க வேண்டியவை - போலி போலியான உறுதிமொழிகள், பாவனைகள் செய்தல் அன்றி உண்மையாகவே நாம் உழைக்கும் மக்களுக்காக, உழவர்களுக்காக, பாடுபடும் மக்களுக்காக நாம் உறுதி ஏற்போமேயானால், ஜாதி ஒழித்தலும், தமிழ் வளர்த்தலும், உலகமயமாதலை எதிர்த்தலும் என்ற மூன்று கோட்பாடுகளை முன்வைத்து இந்த பொங்கல் திருநாளில் நாம் உறுதி ஏற்போம். உறுதி ஏற்போம்.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.