Reading view

ஜெர்சி: துவங்குகிறது இரண்டாம் இன்னிங்ஸ் -ஜி.ஏ.கௌதம்

ஜெர்சி: துவங்குகிறது இரண்டாம் இன்னிங்ஸ்

-ஜி.ஏ.கௌதம்

எல்லாரும் எதிர்பார்த்துக்கோண்டிருந்த அந்த நாளின் மாலை வேலையில், தங்களுக்குள் சிரித்தபடியே பேசிக்கோண்டும் கலாய்த்துக்கொண்டும் மொத்த கிரிக்கெட் வீரர்களும் அலுவலகத்தின் வெளியில் காத்துக்கொண்டிருக்க, சுவற்றில் சாய்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு மேலே பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறான் அர்ஜீன்.

தலையை கீழறக்கி தரையைப் பார்த்தவன் இன்னும் யாரும் வரவில்லை என்பதை உணர்ந்தபடியே மூச்சிரைக்கிறான். விளையாட்டு வீரர்கள் சூழ்ந்திருந்த கூட்டத்தின் நடுவே காக்கிச்சட்டை அணிந்த ஒருவன் எல்லோரையும் கடந்து அறிவிப்புப் பலகையில் ரஞ்சி போட்டியின் ஹதராபாத் அணியில் தேர்வான விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை ஒட்டுகிறான்.

அங்கு நின்று கொண்டிருந்த மொத்தக் கூட்டமும் சர்க்கரையை சூழ்ந்துகொண்ட எறும்புகளைப்போல அந்த பட்டியலைச்சுற்றி ஆர்வமாக தங்கள் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும்  ‘ஓ’வென்று கத்திக்கொண்டு தனது சக நண்பர்களே கட்டியணைத்துக் கொள்கிறார்கள். உடன் வந்த சில நண்பர்கள் தேர்வான தனது தோழனை தோளில் தூக்கிக் கொண்டாடுகிறார்கள். சிலர் ’ச்ச’ என்றவாறு உதறிய கைகளுடன், முகத்தை தொங்க விட்டு தலையை ஆட்டிக்கொண்டே செல்கிறார்கள்.

இவை அனைத்தையும் தூரத்தில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருக்கிறான் அர்ஜுன். கூட்டம் மெல்ல கலையத்துவங்குகிறது. பட்டியலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன், தூரத்தில் நின்று கொண்டிருக்கும் அர்ஜுனை ஒருவித ஏளனமான பார்வையுடன் பார்த்தபடி செல்கிறான். அர்ஜூனுக்கு பதட்டம் இன்னும் கூடுகிறது. ஆர்வம் கூச்சலிட மெல்ல நடந்து வந்து கூட்டத்தின் நடுவில் பட்டியலில்  உள்ள பெயர்களை வாசிக்கத் தொடங்குகிறான்.

ஒவ்வொரு பெயராக விரல் நகர்த்திப் பார்க்க, அடுத்த வரிசையில் நம் பெயர் இருக்குமோ என்ற கண்களில் ஒரு வித பயமும், ஏக்கமும் கூடுகிறது. 15-வது பெயரை அடையும் பொது இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக உயர. சட்டென்று மேலே பார்த்தவன் 12 ஆவது பெயராக தேர்வானவர்கள் பட்டியலில் தனது பெயரை பார்க்கிறான். ஒரு புறம் நிம்மதி பெருமூச்சுடனும், மற்றொரு புறம் ஒரு வித தயக்கத்துடனும் நின்று கொண்டிருக்க, அவனது கடின உழைப்பை பார்த்த சக வீரர்கள் தோளில் தட்டியபடியே வாழ்த்துகிறார்கள். ஆனால், யாரையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்புகிறான்.

யாரையோ கொலை செய்யப் போவது போன்ற ஒருவித தீவிரமான முகத்துடன் அந்த கூட்டத்திலிருந்து விலகி வெளியே வந்தவன், தனது பைக்கை எடுத்துக் கொண்டு பதட்டத்துடனும் ஒருவித வேகத்துடனும் கிளம்புகிறான். கண்களில் நீர் தேங்க ஆரம்பிக்கிறது. முகம் ஒருவித அழுகை உணர்ச்சியை ஏந்திக்கொள்ளத் துவங்குகிறது. சிமிட்டிய கண்களுடன் அருகில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு வருகிறான்.

இரண்டாவது நடைமேடையில் நின்றுகொண்டிருக்கும் அர்ஜூன் யாருக்கோ காத்திருகிறான் போல என்று நினைக்கையில், எதிரில் இருக்கும் முதலாவது நடைமேடையிலிருந்து புறப்படும் ரயில், தன்னை கடக்க துவங்கிய பிறகு, உயிர் போகும் அளவுக்கு உரத்த குரலில் ‘ஓ’ என்று கத்தத்துவங்குகிறான். தனது காத்திருப்பின் அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்த பலனாக தனது குரலில், தனது அழுகையில் அதை தெரிவிக்கிறான். கண்களை துடைத்துக் கொண்டவன் இரு கரங்களையும் உயர்த்தியவாறு மீண்டும் ’ஓ’ வென்று கத்தி அந்த ரயிலின் ஓசையோடு தனது வெற்றிக்களிப்பை யாருக்கும் தெரியாதவாறு ஒளித்து வைத்தபடியே ரயிலோடு அனுப்பி விடுகிறான்.

கனவும் யதார்த்தமும் மோதிக்கொள்ளும் இடம் அது. கனவில் நம்மை இந்தியாவின் பிரதமாரகக்கூட நினைத்துப் பார்க்கலாம். அனால் நிஜத்தில்! தெருவைத்தாண்டினால் எத்தனை பேருக்கு நம்மைத்தெரியும்? இது தான் யதார்த்தம். ஆனால் அதற்கான ஒரு நிலைக்கு நீங்கள் செல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகாலம் உழைக்க வேண்டும், காத்திருக்க வேண்டும், எத்தனை அவமானங்களை, ஏமாற்றங்களை நீங்கள் சந்திக்க வேண்டும். அது போன்ற நினைவுகளின் குவியல் தான் இந்த ஜெர்ஸி.

தனக்குப்பிடித்த காவல்துறை அதிகாரி பணிக்காக படித்து, தன்னை தயார்படுத்தி, உடலினை உறுதி செய்து, இறுதியில் எட்டாயிரம் ரூபாய் தன் தகப்பனால் லஞ்சம் கொடுக்க முடியாமல் போனதால் காவல்துறை காலணிகளை கழற்றிவிட்டு விவசாய பூமியில் கால் ஊன்றியபோது தனது மனதில் ஏற்பட்ட வலியை ‘சாமி’ திரைப்படத்தில் ஆறுச்சாமிக்கு (விக்ரம்) தகப்பனாக வரும் சொக்கலிங்கம் (விஜயகுமார்) கதாப்பாத்திரம் விவரிக்கும்.

அது போல, தனக்கு மிகப்பிடித்த வேலை கிடைக்காமல் கிடைத்த ஏதோ ஒரு வேலையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்களின் நிலை என்பது கிட்டத்தட்ட மனதில் ஒரு பெண்ணை நினைத்துக்கொண்டு விருப்பமின்றி இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் நிலைக்கு இணையானது. அந்த வகையில் குடும்பத்திற்கென தன் ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டு மாதமானால் வருமானம் வருகிறதே என ஏதோ ஒரு வேலைக்குச் செல்லும் நடுத்தர குடும்பங்களில் பிறந்தவர்களில் சற்றும் மாற்றம் இல்லாதது அர்ஜூனின் வாழ்க்கை.

இளமையின் துவக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டினை தன் லட்சியமாக கொண்டிருந்தவன், அதன் மூலம் கிடைக்கும் அரசாங்க வேலையால் தன் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ள வேண்டிய சூழல். கிட்டத்தட்ட தோனி சிக்கிக்கொண்டு மீண்டுவந்த இடம் அது. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அர்ஜூனுக்கு அமையப்பெறவில்லை என்பது தான் கொடுமை. காலம் வீசும் வலையில் தப்பித்த தோனிக்கு பதிலாக இயற்கை விழுங்கியது அர்ஜூனின் ஆசைகளை. “வாழ்க்கை இப்படியே போயிடுமா சார்?” என்று ஆதங்கப்படும் போது, “வேலையை விடு. கிரிக்கெட்டில் கவனம் செலுத்து” என்று சொல்லும் அளவுக்கு அர்ஜூன் குடும்பச் சூழல் இல்லை. தோனியைப்போல அவர் தனி நபராகவும் இல்லை. மனைவி, பிள்ளை என்ற குடும்பச் சுமைகள் வேறு.  

அதே சமயம் அரசு வேலையிலும் விழுகிறது அடி. உணவு ஆய்வாளருக்கான வேலை பறி போகிறது. ஆண்டுக்கணக்கில் அதை மீண்டும் பெற காத்திருக்கிறான். அதற்காக முழு ஈடுபாடும் காட்டாத அர்ஜூனை கடிந்துகொள்கிறாள் சாரா. விரைவில் வேலைக்கு போனால் குடும்பத்தின் நிலை மாறும் என்பது சாராவின் கணிப்பு. ஆனால், வழக்கு அனுமார் வாலைப்போல நீண்டு சென்றுகொண்டே இருக்கிறது.

நடுத்தர குடும்பத்தில் பிறக்கும் தங்கள் பிள்ளைகளை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனவு காணும் பெற்றோர், யதார்தத்தில்  பிள்ளைகள் ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியாத அளவுக்கு எப்படியெல்லாம் பெற்றோர்களை (குறிப்பாக அப்பா) கடன் சுமையும், நிதி நெருக்கடியும் வாழ்க்கைச்சூழலும், அவர்களை நசுக்குகிறது என்பதை அர்ஜூனின் கதாப்பாத்திரம் மூலம் வரைபடமாக்கியிருக்கிறது.

தனது பிறந்த நாளன்று இந்திய அணியின் ஜெர்ஸியை கேட்கும் மகனுக்கு வாங்கிக்கொடுக்க ஐநூறு ரூபாய் இல்லாமல் முடியாமல் தவிக்கிறான். அவனது பிறந்தநாள் முடிவதற்கு முன் நிச்சயம் வாங்கித்தருவதாக வாக்களிக்கிறான். உங்கள் பால்ய வயதில், நீங்கள் கேட்ட ஏதோ ஒரு பொம்மையை, “அடுத்த முறை வரும்போது கண்டிப்பா வாங்கித்தருகிறேன்” என சிரித்துக்கொண்டே செல்லம் கொஞ்சிய உங்கள் பெற்றோரை உங்களால் நினைவு கூற முடிந்தால், அவர்களுக்குள் இருக்கும் வலியையும் உங்களால் இப்போது உணர முடியும். எந்த தகப்பனும் தன் மகன் முன்னால் தோற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருப்பார். ஆனால் அவர்களைத்தான் இந்த சமூகம் தன் பிள்ளைகள் முன்னால் மண்டியிட வைக்கிறது.

எங்கு முயற்சி செய்தும் பணத்தை புரட்ட முடியவில்லை. மகனுக்கான பிறந்தநாள் முடியப்போகிறது. ஆசையாக காத்துக்கொண்டிருக்கும் மகனுக்காக, வேறு வழியின்றி மனைவி சாராவிடம் பணம் கேட்கிறான். இல்லை என பதில் வருகிறது. என்ன செய்வது என்று தெரியாமல், அவள் வெளியே சென்றிருக்கும் சமயம் பார்த்து அவளது பையிலிருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் போதே சாரா பார்த்துவிடுகிறாள்.  “சொந்த வீட்டில் திருடுகிறாயே வெட்கமாக இல்லையா” என்ற அவளின் கேள்வியில் குறுகிப்போகிறான் அர்ஜூன்.  பறிக்கப்பட்ட அவனது வேலையை திரும்ப பெறுவதற்கான வழக்கை தொடர்ந்து நடத்துவதற்காகத்தான் இப்படி பணத்தை சேமித்துக்கொண்டிருப்பதாக சொல்லி அழுகிறாள். இதை பார்க்கும் மகனும் “இனி என்னை எல்லோரும் திருடனின் மகன் என்று அழைக்கப்போகிறார்கள்” என்று கூறி அப்பாவை வெறுக்கத்துவங்குகிறான். மன்னித்துவிடச்சொல்லி கேட்பதை தவிற வேறு வழியற்று தவிக்கிறான் அர்ஜூன்.

காலமும், சூழலும் மாற மனிதர்களின் வாழ்க்கைச்சூழலும் மாறுகிறது. அந்தந்த கால கட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவின் விளைவாகத்தான் அவர்களது வருங்காலம் அமையப்பெறுகிறது. அது போல, ‘நாம் தவறுதலாக இவனைத்தேர்ந்தெடுத்து விட்டோமோ’ என்று நினைக்கும் சூழலில் தவிக்கிறாள் சாரா. பணக்கார குடும்பப்பிண்ணனியில் வளர்ந்த சாரா, அர்ஜூன் மீதிருந்த அதீத அன்பின் காரணமாக அவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி, தன் வாழ்க்கையை புதிதாக துவங்குகிறாள். ஆனால் அவளுக்கு தன் வாழ்க்கை இப்படியொரு நரகமாகும் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை. வேலையிழந்து போகும் கணவனால், தான் வேலைக்கு சென்று குடும்பத்தின் பாரத்தை தாங்கிக்கொள்ள வேண்டிய சூழல்.

கிரிக்கெட்டிலும் வெற்றி பெறவில்லை. வேலையும் இழந்தாயிற்று. இப்படிப்பட்ட சூழலை எதிர்நோக்கும் ஒற்றைப்பெண்மணியாக பலவீனமுற்று போகும் மனதில் அர்ஜூன் மீது ஆத்திரம் கொள்ளத்துவங்குகிறாள். “எல்லாம் என் நேரம். இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” என்று புலம்பும் அளவுக்கு அவளை வாழ்வின் மூலையில் நிறுத்துகிறது காலம்.

இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கை அவருக்கு எப்படியாவது வேலை பெற்றுக்கொடுத்து விடவேண்டும் என்று. எனவே கடுகு டப்பாவில் நம் அம்மாக்கள் ஒளித்து வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்களைப்போல, வழக்கறிஞருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்திற்காக தன் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து சேமித்து வைக்கிறாள். அதை புரிந்துகொள்ளாமல் திருட முற்படும் கணவனை யார் தான் சகித்துக்கொள்வார்கள். ஆனால் அவள் சகித்துக்கொள்கிறாள். பேசாமலிருந்தாலும் எத்தனை இன்னலிலும் அவனுடனிருக்கிறாள். இப்படியான எந்த சூழலிலும் உருக்குலையாத ஒரு உறவு தான் எத்தனை ஆண்டுகளானாலும் நீடிக்கிறது.

மனைவி ஏற்கனவே வெறுத்து விட, மகனும் ஒதுக்கத்துவங்கும் வேளையில் இனி இழக்க எதுவுமில்லை என்றான பின், மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிவெடுக்கிறான் அர்ஜூன். ‘சத்யா’ திரைப்படத்தில் வரும் கமல்ஹாசனைப்போல ரௌத்திரம் பழகும் அதே அர்ஜூன், தனது முப்பதுகளில் நிதானமானமும் அமைதியும் சூழ கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் மீண்டும் காத்திருக்கத்துவங்குகிறான். நாட்கள் செல்கின்றன. ஒரு நாள் திறக்கிறது கதவு.  தான் மீண்டும் விளையாட நினைப்பதாக வாரியத்தில் இருப்பவர்களிடம் தெரிவிக்கிறான். கிரிக்கெட்டிலிருந்து ஒரு வீரன் வெளியேறும் வயதில் இப்போது ஒருவன் உள்ளே வர விரும்புவதை பார்த்து, கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் ஆச்சரியமுற்று போகிறார்கள். ஆனால் அவன் காத்திருப்பு வீண் போகவில்லை. ரஞ்சிக்கோப்பையில் விளையாட இடம் கிடைக்கிறது.

பத்தாண்டுகள் கழித்து நீண்ட காலத்திற்குப்பிறகு மட்டையை தொடும் ஒரு வீரனின் உணர்வும், கண்டம் தாண்டி பறக்கும் பறவை தான் விட்டுவந்த கூட்டை மீண்டும் அடையும் பறவைக்கு சமம். ஏனென்றால், காலம் மாறியிருக்கும். தன்னோடு விளையாடும் விளையாட்டு வீரர்களின் தலைமுறை மாறியிருக்கும். விளையாட்டின் விதிகள், நுட்பங்கள் மாறிருக்கும். காலம் மாற பிரத்யேகமான விதிகளும் மாறுகின்றன. கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் சச்சின், சேவாக் காலம் முதல் இப்போதிருக்கும் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் வரை அந்தந்த சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப மாறிய ‘ரவிச்சந்திரன் அஸ்வின்’ போல புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

கிரிக்கெட் போன்ற வணிகத்துவமான விளையாட்டில் வயது ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. தங்கள் இளமையின் துவக்கத்தில் தன்னோடு விளையாடிக்கொண்டிருந்த பலரும் கால மாற்றத்தில் காணாமல் போய்விடுவார்கள். அப்படியாக காலம் மாற அடுத்தடுத்த தலைமுறையினரிடம் அர்ஜூன் போட்டி போட வேண்டிய சூழலில் “டேய் அங்கிள்டா” என இளம் வீரர்கள் அவன் காது படவே பேசுகிறார்கள்.  ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் அவனது வயதை சக வீரர்கள் முன்னிலையில் கேலி செய்யும் பேச்சுக்களைக்கூட பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்கிறான்.  36 வயதில் இப்போது தேவையில்லாமல் அணியில் சேர்ந்து தொல்லை கொடுக்கிறான் என பயிற்சியாளார் நினைத்தாரோ என்னவோ பயிற்சியின் போது அர்ஜூன் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறான்.  ஆனால் அனைத்திற்கும் பொறுமையாக அர்ஜூன் காத்திருக்கிறான்.

வயது கூடியதால் உடலளவில் ஏற்படும் மாறுதல்களுடனும், ஆரோக்கிய குறைபாடுகளுடனும் தடுமாறுகிறான். அத்தோடு இணைந்து புறப்படுகிறது இன்னோர் பிரச்சனை ‘இதயக் கோளாரு’. ஆம். அர்ஜூன் விளையாடாமல் போனதற்கு இன்னோர் காரணமும் இருக்கிறது, அவன் உடற்தகுதி.

அவனது இதயம் பலவீனமாக இருப்பதாகவும் அதிக உடல் சிரத்தை அவனை குலைத்துவிடுமென்றும், இன்னும் மோசமானால் உயிரையே பறித்துவிடுமென்றும் அவனது இளமைக்காலத்திலேயே மருத்துவர் எச்சரித்திருக்கிறார். இருப்பினும், தன் உயிரை பணயம் வைத்து தனது நாற்பதாவது வயதில் மீண்டும் ரஞ்சிப்போட்டியில் களம் இறங்குகிறான் அர்ஜூன். தனது இருபதுகளின் நடுப்பகுதியில் இருந்த இளமைக்கான துடிப்பும் வீரமும் சற்றும் குறைச்சலின்றி அவரது மட்டை களத்தில் வெளிப்படுத்துகிறது. நன்றாக ரன்களை சேர்க்கிறார். பத்திரிக்கைகளில் அவன் பெயர் வெளிவருகிறது. இவன் எங்கே உருப்படப்போகிறான் என நினைத்த சாராவுக்கு அவன் மீது நம்பிக்கை பிறக்கிறது.

போட்டிக்கு இடையிடேயே மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறான். இருந்தாலும் அதிவேக ஓட்டம், நாள் முழுக்க நிற்கும் உடலின் அயர்ச்சி அவனை மிகவும் களைப்படையச்செய்கிறது. இனிமேலும் தொடர்ந்தால் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அணியை காக்க, தன் உயிரையே தியாகம் செய்கிறான். காலங்கள் கடக்கிறது. 2019ம் ஆண்டு அர்ஜூனின் வாழ்க்கை வரலாறு ‘ஜெர்சி’ என்ற புத்தகமாக வெளியாகிறது. அப்போது பேசும் கிரிக்கெட் வாரியத்தலைவர், அன்று அர்ஜூன் வெளிப்படுத்திய திறமையான ஆட்டத்தினால், அடுத்து இங்கிலாந்தில் நடைபெறவிருந்த தொடரின் இந்திய கிரிக்கெட் அணியில் அவர் பெயரும் இடம்பெற்றிருந்ததை குறிப்பிடுகிறார். அர்ஜுனின் பெயர் பொறித்த ஜெர்சியை வெளியிட்டு அவனுக்கு மரியாதை செய்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். சிறுவயதில் ஜெர்சி கேட்ட மகனிடம், அவனது தந்தையின் ஜெர்சியை அளிக்கிறது கிரிக்கெட் வாரியம்.

இப்படத்தை மேலும் நம்மோடு பொருந்திப்போவதற்கு துணை நிற்பவை இப்படத்திற்காக மிகச்சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்ட கதாப்பாத்திரங்கள். அவர்கள் தான் தேவ தூதர்களாக அர்ஜூனுடன் துணை நிற்கிறார்கள்.

  • அர்ஜூனுக்கு ஏற்கனவே நிறைய கடன் கொடுத்திருந்த கடையின் உரிமையாளர், அவன் மகனிடம் “உனக்கு ஜெர்ஸி இல்லை” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாமல், “உன் அளவிற்கான ஜெர்ஸி இன்னும் கடைக்கு வரவில்லை. அதனால் இப்போதைக்கு இதை வைத்துக்கொள்” என சச்சின் போஸ்டர் ஒன்றை சுருட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்துகிறார்.
  • எல்லோருக்கும் முன்னால் அர்ஜூனுக்கு ஆதரவளிப்பதாக காட்டிக்கொள்ளாமல், தனக்கு பிடிக்காதது போலவே நடத்தினாலும், வீரர்களை தேர்வு செய்யும் தேர்வு அதிகாரியிடம் அர்ஜூனின் முந்தைய சாதனைகளையும், நியூசிலாந்துடனான சிறப்பான ஆட்டத்தையும் குறிப்பிட்டு அவனுக்கு ரஞ்சிக்கோப்பையில் விளையாட அனுமதி பெற்றுத்தருகிறார் கர்நாடக கோச் ராமப்பா (சம்பத் ராஜ்).
  • இந்த தொடரில் விளையாடினால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என அர்ஜூனை விளையாட வரவழைத்து அதில் அவன் சிறப்பாக ஆடியதை வைத்து, கர்நாடக கோச்சின் கவனத்தை பெறவும், இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கும் வழிவகை செய்கிறார் அவனது முன்னால் கோச் மூர்த்தி (சத்யராஜ்).
  • அர்ஜூன் விளையாடுவதை அவனுக்கே தெரியாமல் புகைப்படம் பிடித்து, அதை நாளிதழில் கட்டுரையாக வெளியிடுகிறார் நிருபர் ரம்யா (சனுஷா).

இவர்களுடன்,  எந்த சூழலிலும் அர்ஜூனை விட்டு விலகாத அவன் நண்பர்கள் என அர்ஜூன் தன் வாழ்நாளில் அதிகம் சம்பாதித்திருந்தது இவர்களைத்தான்.

படத்தின் துவக்கம் முதல் இறுதி வரையிலும் படத்தை தாங்குவது நானி ஒருவர் மட்டுமே. மொத்தக்கதையும் அவரை சுற்றியே நடக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஏமாற்றத்தின் அறிகுறியையும், குற்ற உணர்வுகளையும் மட்டுமே சுமக்கும் கதாப்பாத்திரத்தை தொடர்ந்து பார்ப்பது என்பது சில சமயம் பார்வையாளர்களுக்குமே கூட ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது. இருந்தாலும், அப்படியேதும் நிகழாத வண்ணம் மிகச்சிறப்பாகவே கையாண்டிருக்கிறார் இயக்குநர். நவீன் நூலியின் படத்தொகுப்பில் 1986-ல் 26 வயதான அர்ஜுன் மற்றும் 1996-ல் 36 வயதான அர்ஜுன் ஆகிய இரண்டு காலவரிசைகளுக்கு இடையில் மாறுகிறது திரைக்கதை. விளையாட்டுப் போட்டியாகட்டும், குடும்பங்களுக்குள் சூழும் பிரச்சனைகளாகட்டும், நாயகனின் கண்ணீர், ஏமாற்றம், வெற்றி, பெருமிதம் என படத்தின் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவாறு அனிரூத்தின் இசை மிகச்சரியாக பொருந்திப்போகிறது. குறிப்பாக ரயில்நிலையம் காட்சி.

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான திரைப்படம் என்பதால் நகம் கடிக்கும் விறுவிறுப்பான காட்சிகளை நீங்கள் எதிர்பார்த்தால், கொஞ்சம் ஏமாந்து தான் போவீர்கள். ஏனெனில் இது உறவுகளுக்கும், மனதிற்கும் இடையே நிகழும் போராட்டம். இத்திரைப்படத்தை இயக்கிய கௌதம் தின்னனூரிக்கு, இது இரண்டாவது திரைப்படம். இருந்தும் இத்திரைப்படத்திற்கு தேசிய விருதுக்கு கிடைத்தது மிகச்சரியானதொரு தேர்வு. அதனால் தான் ஆறாவது ஆண்டைக் கடந்தும் இத்திரைப்படம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

இத்திரைப்படத்தின் அடையாளமாக மாறிப்போன ரயில் காட்சி ஏதோ ஒரு வகையில் தன்னோடு தொடர்புபடுத்திக் கொள்வதாக அதிக அளவில் நண்பர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். வலி எல்லோருக்கும் பொதுவானது. அவன் அடைந்த அவமானங்கள், காத்திருப்புகள், ஏக்கங்கள், அவனது வலிகள். இதை நாமும் கடந்திருப்போம். பார்த்துக் கொண்டிருப்போம். பார்க்கப்போகிறோம்.

ஏதோ ஒரு தருணம் நம்முடைய நீண்ட நாள் காத்திருப்பு நிஜமாகி போகும்போது அதை இப்படியாக சிலர் கண்ணீரின் வழியே தெரிவிக்கிறார்கள். சிலர் தனது வெற்றியின் வழியே தெரிவிக்கிறார்கள். 

வெற்றியை விட ஆகச்சிறந்த பழி வாங்கல் ஏதுமில்லை.

சினிமா சினிமான்னு போனியே! எவ்ளோ சம்பாதிச்ச?, புடிச்ச வேலைன்னு போனியே! எவ்ளோ சேர்த்து வச்சிருக்க?, எப்போ கல்யாணம்?, கடனை எப்படி அடைப்ப?, குடும்பத்த எப்படி பாத்துக்கப்போற?, இனிமேல் என்ன பண்ன போற? இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் சூழல் இல்லாவிட்டாலும் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் அதற்கான பதிலை தேடி எடுத்துத்தருகிறது. வாழ்க்கை ஒன்றும் அத்தனை குரூரமானது இல்லை. நம்பிக்கையோடு போராடுபவர்களை அது அத்தனை எளிதில் கைவிடுவதில்லை.

உண்மையில் ரயில் நிலையத்தில் அழுதுகொண்டிருப்பது அர்ஜீன் மட்டும் அல்ல. வாழ்வின் பல தருணங்களில் ஒதுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, ஒரு சமயம் மனம் வெடித்து “எனக்கும் சரியான நேரம் வரும். நானும் ஜெயிப்பேன்” என்று கத்திக்கூட சொல்ல முடியாமல், அத்தனை அவமானங்களையும் தனக்குள் புதைத்துக்கொண்டு பொறுமையாக தனக்காக உதிக்கும் அந்த ஒரு நாளுக்காக நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்த, காத்துக்கொண்டிருக்கும் நீங்களும் நானும் தான்…

தொடர்புக்கு: [email protected]

  •  

புகையும் நிஜங்கள்

வீட்டிலிருக்கும் பெண்டுகள் சவத்துடன் சுடுகாடு செல்கிற வழக்கம் அவனது குடும்பத்திலும் இல்லை. வீதி வரை உறவு.  அதனாலேயே அவர்களுக்கு எரியும் நாற்றம் பரிச்சயமில்லை. ஆனால், இந்த வீட்டிற்கு வந்தபிறகு அதுவே  ஒரு வித ஒவ்வாமை போல் அம்மாவிற்கு ஆகிவிட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. மனைவிக்கும், குழந்தைகளுக்கு பழகிப் போன நாற்றம் அவனது அம்மாவிற்கு மட்டும் அப்படியென்ன வினோதமாய்? கேள்விகள் அவனது மண்டையைக் குடைந்த வண்ணம் இருந்தன. 
  •  

விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்

புனைவு வனம் எழுத்தாளர் கணேஷ் ராம் உடன் ‘தெப்பம்’ குறுநாவல் குறித்த உரையாடல்: சொல்வனம்.காம்: ஆசிரியரை சந்திப்போம் சொல்வனம்.காம்: புனைவு வனம்: எழுத்தாளர் ஷங்கர் பிரதாப் உடன் சந்திப்பு: ‘உயிர்வளி’ குறித்த உரையாடல் எழுத்தாளர் பாலாஜி ராஜு – Writer Balaji Raju Short Stories: Review and "விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்"
  •