Reading view

சென்னை!

“ஜப்பான், அமெரிக்கா, சீனா மூணு பேரும் இவனுக ஒருத்தனையும் விட்றாதீங்க. எல்லாவனையும் சாவடிங்க. ஒரு தமிழனும் இருக்கக்கூடாது. இவனுகள்ல ஒருத்தனுக்கும் அறிவில்ல. சுயநலம் பிடிச்சவனுக. எல்லாத்தையும் அழிக்கணும்.. விடக்கூடாது” - காந்திசிலைக்குக் கொஞ்சம் தள்ளி நடந்தபோது கையில் பிரம்புடன் ஒருவர் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தார். கலைந்த, அழுக்கு உடை. பழுப்பான கண்களில் ஏதோ வெறி. குரல்மட்டும் அத்தனை தீர்க்கம். அதுவும் வாகன இரைச்சல்களற்ற அந்த அதிகாலை ஆறுமணிக்கு தெளிவாக நூறு அடிவரை அவர் குரல் கேட்ட இடம் மெரினா. 

**
த்தனையாவது  முறை என்று தெரியவில்லை. ஜனவரி 30-31 சென்னை சென்றிருந்தேன். சென்னையைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அது என் ஊர் என்கிறாற்போல ஒரு நெருக்கத்தை உணர்கிறேன். சனிக்கிழமை காலையில், மெரினா சென்று இரண்டு மணிநேரங்களை செலவிட்டேன். மக்கள். மக்கள். மக்கள். “நைட் கொஞ்சம் ஏறிடுச்சு மாமூ” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அருகம்புல் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்தார். யுவன் - யுவதிகள் காதில் இயர்ஃபோன். அங்கங்கே சின்னஞ்சிறார்கள், கோச்சுடன் வந்திருந்தார்கள். ஒரு கோச், ‘லேட்டா வந்தியில்ல, அவன் பேக்கையும் நீ தூக்கீட்டு ஓடு’ என்று தண்டனையாய்ச் சொன்னதை லேட்டாய் வந்த பையன் உற்சாகமாய் செய்ததைக் காணமுடிந்தது.





‘கைவிரல் தரைல தொடணும். அப்டியே இடதுபக்கம் தலையை மட்டும் திருப்புங்க. அப்டியே நிமிந்து, மறுக்கா விரல் தொட குமிஞ்சு வலது பக்கம் திரும்புங்க. டென் டைம்ஸ்’ என்ற குரல் கேட்ட இடத்தில் குழுவாக நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞனுக்கு வலதும் இடதுமாய் இளைஞிகள் இருக்க, முழு உற்சாகமாய் இருபுறமும் திரும்பிக் கொண்டிருந்தான். 


“அம்பது கிலோ மூட்டை. அப்டியே இப்டிக்கா தூக்கி, அப்டிக்கா அடுக்குவேன். இன்னா நென்ச்ச நீயி?” இளநீர்க் கடையொன்றின் முன் நான்கைந்து பெருசுகள் அமர்ந்திருக்க, ஒருவர் அவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். கேட்டவர் அத்தனை ஒல்லி. ‘ஒடம்பு இருந்தா பலம் இருக்குன்னு அர்த்தமாக்கும்?’ என்றார் அவர். ‘சரி சரி போ.. ஒனக்கு ஆள் வந்துடுச்சு’ என்று அமர்ந்திருந்தவர் சொல்ல. கிட்டத்தட்ட அவர் சைஸுக்கு ஐந்து மடங்கிருந்த ஒரு பெண்மணி மூச்சிரைக்க நடந்து வந்து, ‘என்னாங்குது ஓமக்குச்சி?’ என்று இவர்களைப் பார்த்து கேட்டுவிட்டு ‘வாய்யா போலாம்’ என்று நடந்தார்.

**

ஃபீனிக்ஸ் மால் LUXE திரையரங்கு. 150 ரூபாய் டிக்கெட். நிச்சயமாகக் கொடுக்கலாம், அந்தத் திரையரங்குக்கு. ஒவ்வொரு அடியிலும் உங்களைக் கவர ஏதோ ஒன்றை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். இசை படத்தில், சத்யராஜ் சுருட்டு பற்ற வைக்கும்போதெல்லாம் சுருட்டின் பேப்பர் கருகும் ஓசை காதுக்கருகில் கேட்கிறது. ஒலி அத்தனை துல்லியம். இந்தத் தியேட்டரில், நாயகி சாவித்திரியின் தொப்புளைக் காண்பித்த சைஸில்தான் சி செண்டர் டூரிங் டாக்கீஸ்களின் மொத்தத் திரையே இருக்கும்போல. (ஒரு குறிப்பு: தொப்புள் ரசிகரான கே.எஸ்.ரவிகுமாருக்கு சரியான போட்டி எஸ்.ஜே.சூர்யா என்றால் அது.... அதென்னது... ஆங்.. மிகையாகாது!)

வ்வொரு கடையையும் சுற்றிவரவே, நேரம் சரியாக இருக்கிறது. யார் போனாலும் HIDESIGN கடைக்குச் செல்ல மறக்காதீர்கள். ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் தோத்தார்கள்!

**
ருகாலத்தில் மந்திரமாய் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ‘ஸ்பென்சர் ப்ளாஸா’ மார்க்கெட் இழந்த நடிகையாக (படு மொக்கையான, பல பேர் சொன்ன உதாரணம்) பொலிவிழந்து நிற்க, அதைத் தாண்டி எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. இதைப் போன்ற மால்களை மக்கம் ஈக்களாய் மொய்க்க, சுத்தமும், சுதந்தரமும்தான். போலவே, கஸ்டமர் கேர். எந்தக் கடையிலாவது ‘இது என்ன விலையிருக்கும்?’ என்று உங்கள் மனதுக்குள் நினைத்தால் ‘நைன் ஹண்ட்ரண்ட் சார்’ என்று தோளுக்கருகே குரல் கேட்கும். வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அவர்கள் முகம் அஷ்டகோணலாவதுமில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு கடை விடாமல் போய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்று கூட வாங்காமல். ஒரு கடையிலும் அவரை தடுக்கவோ, வேண்டாமென்று சொல்லவோ இல்லை.

**

த்தனை முறை  சென்றாலும் இடங்கள், வழிகள் என்றால் எனக்கு தடுமாற்றம்தான். முகவரி கேட்டால் ஆட்டோகாரர்கள் அத்தனை பாந்தமாக உதவுகிறார்கள். "உட்லண்ட்ஸ்னா நியூ உட்லண்ட்ஸா? நேரா போங்க. யாரையும் கேட்கவேணாம். ஒண்ணு, ரெண்டு, மூணு... நாலாவது சிக்னலாண்ட லெஃப்ட். அங்கிருந்து நேரப்போனீங்கன்னா.. ஒண்ணு.. ரெண்டு.. மூணு.. நாலு.. அஞ்சாவது சிக்னலாண்ட லெஃப்ட் எடுங்க. ஃப்ளை ஓவர் வரும். அதுல போகக்கூடாது. கீழ போனீங்கன்னா... ஆமா எங்கிருந்து வர்றீங்க?"

"திருப்பூர்"

"அப்ப வேணாம். கஷ்டம்.. நீங்க என்ன பண்றீங்க.. நேராப் போய்ட்டேஏஏஏஏ இருங்க. நாலாவது சிக்னல்ல லெஃப்ட் எடுங்க. யாரையும் கேட்கவேணாம்... " என்று தொடர்ந்தார்.

வழி சொல்கிற அனைவரின் வாயிலும் "யாரையும் கேட்கவேணாம்" தவறாமல் வருகிறது. 

சனிக்கிழமை காலை மெரினா வாக்கிங் போனேன் அல்லவா? அன்று மாலை நண்பர் அப்துல்லாவைச் சந்தித்தபோது “அண்ணே.. நாளைக்கு சாந்தோம் பீச் போலாம்னிருக்கேன். எப்டிப் போறதுண்ணே?” என்றேன். 

“இன்னைக்கு எங்க போனீங்க?”

“வீரமா முனிவர் சிலைக்குப் பக்கத்துல காரை நிறுத்தீட்டு, ஒரு கிலோ மீட்டர் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போனேன்”

“அதாண்ணே சாந்தோம் பீச்”

ஓஹோ என்று வழிந்துவிட்டு வந்தேன். 

ஞாயிறு திரும்பும்போதுதான் ஞாபகம் வந்தது. நான் கேட்க நினைத்தது பெசண்ட் நகர் பீச். 

****



  •  

சென்னை புத்தகக் காட்சி – சில அனுபவங்கள்

அண்ணாகண்ணன்

சென்னை புத்தகக் காட்சியில் கடந்த ஆண்டுகளில் நுழைவுச் சீட்டு எடுக்கும் இடத்திற்கு வலது புறம், பொதுவாக யாரும் நுழையும் வகையில் கழிவறை இருந்தது. இந்த ஆண்டு அதை, அரங்கிற்குள் நுழைந்து செல்வது போல் அமைத்துள்ளார்கள். ஆக, நுழைவுச் சீட்டு எடுத்த பிறகு தான் கழிவறைக்கே செல்ல முடியும். அவசரத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும் அந்தக் கடைசிக்குச் சென்று நுழைவுச் சீட்டு வாங்கி, மீண்டும் இந்தக் கடைசிக்கு வந்து அரங்கிற்குள் நுழைந்து செல்ல வேண்டும். இது, மிகவும் சில்லரைத்தனமானது. அடிப்படை வசதிகளையும் தாமதப்படுத்துவது, மக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும்.

அரங்கிற்குள் நுழைந்து தண்ணீர் குடிக்கலாம் எனத் தேடினால், கோடியில் ஓர் இடத்தில் தண்ணீர் கேன் வைத்திருக்கிறார்கள். ஆவலாக அருகில் சென்றால், அதில் டம்ளர் ஏதும் இல்லை. தண்ணீர் பாட்டில் வைத்திருப்பவர்கள் அதில் பிடித்துக் குடிக்கலாம். மற்றவர்கள் எப்படிக் குடிப்பது? நான் தண்ணீர் குடிக்காமலே வெளியில் வந்தேன். நடுவில் தண்ணீர் நிறைந்த பாட்டில்களுக்கு என்றே ஒருவர் கடை போட்டிருந்தார். அவரிடம் வாங்க வேண்டிய கட்டாயத்தைப் பபாசி ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்தது.

முன்னர், நுழைவாயிலில் டிக்கெட் கவுன்ட்டர்கள் நிறைய இருக்கும். எதில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். இந்த முறை அதே போல் இருந்தாலும், ஏதோ ஒன்றில் மட்டும் நுழைவுச் சீட்டுகள் கொடுத்தார்கள். ஏன் மக்களை இப்படி அலைய விடுகிறார்கள்? எல்லாக் கவுன்ட்டரிலும் கொடுத்தால் தான் என்ன? நுழைவுச் சீட்டுப் பரிசோதகர்களாக நிற்பவர்களே நுழைவுச் சீட்டு விற்றால் என்ன? இந்தச் செயலுக்கு எதற்கு இரண்டு பேர்?

நுழைவுச்சீட்டு வாங்கி அரங்கினுள் நுழைந்த பிறகு, ஒரு பாதையில் கடைசி வரை சென்று, அடுத்த பாதையில் திரும்பி, இந்தக் கடைசி வரை வந்தால், மூன்றாவது பாதைக்குத் திரும்ப வழியில்லை. மீண்டும் வெளியே வந்து, மீண்டும் நுழைவுச் சீட்டினைக் காட்டி, மூன்றாவது பாதைக்குத் திரும்ப வேண்டும். இப்படி ஒவ்வோர் இரண்டு வரிசைக்கும் ஒரு முறை வெளியே வந்து, மீண்டும் நுழைவுச் சீட்டினைக் காட்டிய பிறகே உள்ளே நுழைந்தேன். இது வாசகர்களின் நேரத்தை வீணடிக்கவில்லையா? ஏன் உள்ளேயே வளைந்து வளைந்து செல்லும் வகையில் அமைக்கவில்லை?

ஒவ்வொரு வரிசைக்கும் ஒருவர் பெயரைச் சூட்டி, இந்தப் பாதை, அந்தப் பாதை என வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு அடையாளம் சொல்லும்போது நான் இந்தப் பாதையில் இருக்கிறேன் என்று சொன்னால், அவர்களுக்குப் புரிவதில்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட பாதையின் நடுவில் நாம் இருக்கும்போது இது என்ன பாதை என்ற குழப்பம் எழுகிறது. பாதையின் பெயர்கள், தொடங்கும் இடத்தில் மட்டுமே உள்ளன. பெயர்கள் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பாதைக்கும் ஒன்று, இரண்டு, மூன்று என இன்னும் ஓர் அடையாளம் கொடுக்கலாம். அந்த எண்ணை அந்த வரிசையின் இரண்டு பக்கத்திலும் மிகப் பெரிய அளவில் எழுதி வைக்கலாம். தொலைவில் இருந்து பார்த்தாலும் தாம் எந்த எண் கொண்ட பாதையில் இருக்கிறோம் என ஒருவர் அறிய முடியும். அடுத்தவருக்குச் சொல்லவும் முடியும்.

அரங்கின் உள்ளே பல இடங்களில் செல்பேசி சமிக்ஞைகள் சரிவரக் கிடைப்பதில்லை. இதனால் தகவல் தொடர்பில் இடைவெளி ஏற்படுகிறது. மின்னணுப் பணப் பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது. சிக்னல் பூஸ்டர் போல் ஏதும் இதற்குச் செய்ய முடியாதா?

மிதமான கூட்டம் இருக்கும்போதே அரங்கில் வியர்வை கசகசக்கிறது. எப்போது வெளியே போவோம் என எண்ண வைக்கிறது. உள்ளிருக்கும் காற்றை வெளியே அனுப்பி, வெளியிலிருந்து புதுக் காற்றை உள்ளே அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளதா?

அரங்கிலிருந்து வெளியே வந்தால், கார் நிறுத்துமிடம் எங்கே எனக் கறுப்பு உடையணிந்த காவலரிடம் கேட்டேன். தவறாக வழிகாட்டினார். நீண்ட தூரம் நடந்து, பிறகு திரும்பி வந்து, உரிய இடம் சென்றேன். மீணடும் அவரிடம் திரும்பி வந்து, அவரால் நேர்ந்த இடரை விளக்கினேன். அவர் தான் தவறான தகவல் கொடுத்ததையே ஒப்புக்கொள்ளவில்லை. காவலர்களுக்கு உரிய பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்த வேண்டும்.

இந்தப் புத்தகக் காட்சியில் என்னை மிகவும் கவர்ந்தது, வாசகர்கள் ஓய்வெடுக்க நான்கு அரங்குகளை ஒதுக்கியதே. இது மிகவும் பயனுள்ளது. அதே போல், ஷீ டாய்லெட் எனப் பெரிய பேருந்துகளையே பெண்களுக்கான நடமாடும் கழிவறையாக வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள். இதுவும் மிகவும் பயனுள்ள செயல். அரங்கின் நடைபாதையிலேயே தேநீரும் சுண்டலும் உருண்டு வருகின்றன. களைப்பின்போது இவை சற்றே ஆறுதல் அளிக்கின்றன.

48 ஆண்டுகளாகப் புத்தகக் காட்சி நடக்கிறது. ஓராண்டில் நாம் பெறும் பாடங்களைக் கொண்டு அடுத்த ஆண்டில் மேம்படுத்த வேண்டும். ஆனால், இன்னும் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டியிருக்கிறது. நாம் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது.

  •