Reading view

அசோகமித்திரன் இருந்த வீதி

 


அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட் செங்கலை எடுத்து, முன் சக்கரத்தில் போட்டு ஆட்டோவை நிறுத்துவதற்காக நானும் குப்பை ஆட்டோவுக்குப் பின்னால் குப்பைக்காரருடன் ஓட, தெருவின் முனையில் முன்சக்கரம் இடதுபக்கமாக திரும்பி, அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் ஏற்றத்தில் வேகம் தடைபட்டு நின்றது வண்டி. அதற்குள் தெரு முழுவதும் பரபரப்பாகிச் சிறுவனின் அப்பா ஓடிவந்து அவன் முதுகில் ரெண்டு மொத்து போட்டு அழைத்துச் சென்றார். முட்டைக் கண்ணாடி போட்டிருந்த குண்டுச் சிறுவனோ தனக்கு இந்த தண்டனையெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல சாவகசமாகப் போனான். சார் எந்தப் பிரச்சனையும் ஆகவில்லை. அவன்தான் பாதுகாப்பாக நிறுத்திவிட்டானே என்று சொல்லி, அவரையும் அப்போதுதான் சம்பவ இடத்துக்குள் நுழைந்து, அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம் அம்மாவையும் ஆறுதல்படுத்தினேன். அசோகமித்திரன் வழக்கமாக நின்றுகொண்டிருக்கும் பால்கனியைப் பார்த்தபடி வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடுதிரும்பினேன். அசோகமித்திரன் விஷமத்துடன் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

  •  

பொற்பாதை

ரோமானியர்களுடன் நம் வர்த்தகம் செழிப்பாக இருந்த காலம். அவர்கள், நம் மிளகை, மசாலாப் பொருட்களை, தந்தங்களை, பருத்தியை, நவரத்தினங்களை, தேக்கை, சந்தனக் கட்டைகளை பெருமளவில் தங்கம் கொடுத்து வாங்கினார்கள். நமது வணிகம் பொருள் மிகுதி நிலையை நமக்குத் தந்தது. ரோமில், ப்ளினி,மூத்தவர்  கோபத்துடன் புலம்பினார் “ இந்தியாவுடனான நம் வர்த்தகத்தில், ஒவ்வொரு ஆண்டும் நம் அரசு 55 மில்லியன் செஸ்டர்கள் இழந்து வருகிறது.”
  •  

அல்காரிதம்-ஒரு மனித வாழ்க்கை

நம்முடைய தினசரி வாழ்க்கையில் algorithm-களின் பயன்பாடு, மற்றும் நாளாக நாளாக உருமாறிக்கொண்டேயிருக்கின்றது. இந்த automated system-த்தின் எல்லைகளற்ற அதன் தன்மையானது மனித குலத்திற்கு எவ்வகையில் உதவுகின்றன என கூறும் புத்தகமே Code Dependent. இதில் கூறப்படும் உண்மை சம்பவங்கள் யாவும் Silicon Valley-யிலிருந்து கூறப்படுபவை அல்ல.
  •  

இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட மாமனிதர்  ஜே .பி.

ஜூன் 5 1978 ல் ஜேபி   ஜனதா அரசாங்கமும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான்  பின்பற்றுகிறது. மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மக்கள் எதிர்பார்த்ததை ஜனதா அரசு கொண்டு தரவில்லை’ என்று அறிவிப்பு செய்கிறார். யார் தன்னை பிரதமர் ஆக்கினாரோ அவரையே மொரார்ஜி தேசாய் ‘ Out sider’  என இழிவாக அழைத்தார். ஜேபி நொறுங்கித்தான் போனார்.
  •  

இசைவைத் தேடும் வாழ்க்கை

மற்ற புலிகள் அனைத்தும் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், ஆனால் வேங்கை வனம் நாவலின் மச்சிலி  உண்மையில் வாழ்ந்த புலி. அதுவும் நாம் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கைவனம் நாவல் வெறும் புலியைப் பற்றிய கதை தானா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆம்/இல்லை என்று இருபதில்களும் சொல்லலாம். புலிகள் மூலமாக வரலாறு, வரலாற்று புனைவு, போர், அதிகாரம், படிநிலை, காலனித்துவம், சூழியல், காதல், அறம், துரோகம், மனித-விலங்கு உறவு, இயற்கையின் வலிமை, இயற்கை மீதான ஆதிக்கம் போன்ற பல பரிமாணங்களை இந்நாவல் ஆராய்கிறது.
  •  

வேங்கை வனம் நாவல்: ஒரு சூழலியல் ஆவணம்

துவக்கத்திலிருந்தே கோட்டையில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது புலிவேட்டை. புலிவேட்டைகள் மிகக் கொடூரமாக நடந்திருக்கின்றன. நேரடியாகப் புலியின் வாயிலேயே ஈட்டியை சொருகுவது, ஒரே சமயத்தில் வாளால் வெட்டியும் ஈட்டியால் குத்தியும் புலிகளைக் கொல்வது தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. பல புலிகள் இதில் இருக்கின்றன. பாஹினி, மோஹினி, கிருஷ்ணவேணி என்னும் கிருஷ்ணா, சுல்தான் புரி , சுல்தான் புரியின் குட்டியான மற்றோரு  சுல்தான் புரி, பிறகு மச்சிலி
  •  

தமிழ் நாவல்கள் 2025

ஆசிரியர் வஹிதாவை வர்ணித்த எந்தப் பதத்தால் நான் அப்படியொரு முகத்தைக் கற்பனை செய்தேன் என்று தெரியவில்லை. திரானே அலிதோஸ்தியின் புன்னகை முகத்தை ஒட்டிய சாயல் கொண்டவளாக வஹிதாவின் பிம்பம் என்னுள் எழும்பியது. கண்ணீரைக் கட்டுப்படுத்தும் சிவந்த கண்கள், புன்னகையைத் தேக்கி வைத்தபடியே இருக்கும் முகத்தில் அழகின் விளைவும் புரிதலின்மையும் ஒருங்கே கிளர்த்திய துயரத்தின் தடைச்சாவடி.
  •  

கலைகளை சார்ந்து இருத்தல்

மொழி வழி கலைகளில் சிறுகதை என்பது ஒரு சில பக்கங்களில், வாழ்க்கையின் மிக சிறிய பகுதியை முன்வைத்து, அதனுள் மறைந்திருக்கும் மீதி வாழ்வை படிப்பவர்கள் தேடி தேடி அடைய செய்வது. ஒரு மனிதனின் வாழ்வு, ஒப்புநோக்க அளவில் சிறு துளி மட்டுமே.  இந்த துளியில் இருந்து காட்சிக்குள் அடங்கா பெரு மழையை, பெரு விரிவை அவன் எண்ணி எண்ணி அறிவதை போலவே சிறுகதை வாசிப்பு என நாம் எடுத்துக்கொள்ளலாம்.  
  •  

கய்த பூவு

ரோசாளை முதலில் பெண் பார்க்க வநதவன் தன்னைப் பார்த்துத்தான் கையசைப்பதாக நினைத்து அவளும் கையசைத்தது குற்றமாகிப் போய் தடைப்பட்ட திருமணம் ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்காட்டி தடைபட்ட மயமாகிப் போகிறது. ஒரு பெண்ணுக்குத் திருமணம்தான் வாழ்க்கையில் மிக முக்கியமான தகுதியாகப் பார்க்கப்படும் பாழாய்ப்போன சமூகத்தை சபிப்பதைத் தவிர வேறென்ன செய்வது?  
  •  

கரிசல் குயில் - நமது மண்ணின் குரல்!

‘மண்ணெண்ணெய் விளக்கினில் பாட்டெழுதி இந்த மண்ணுக்கு கொண்டு வந்தேன்’  என்று மக்கள் கூட்டங்களை ஆரம்பித்து வைத்த குரல் அவருடையது. “உடலில் ஊறி வரும் உதிரம் முழுவதும் என் விழியில் ஊறி வரும் தோழா” என அடி வயிற்றிலிருந்து கேவலை வெளிப்படுத்திய குரல் அவருடையது. ”எங்களைத் தெரியலையா, எங்கள் இசையைப் புரியலையா?’ என நெஞ்சை நிமிர வைத்த குரல் அவருடையது. “தோழர்களே, தோழர்களே, தூக்கம் நமக்கில்லை தோழர்களே!” என நாடி நரம்பெல்லாம் துடிக்கச் செய்த குரல் அவருடையது. எளிய மக்களுக்கு நெருக்கமான மண்ணின் குரல் அவருடையது.

  •  

இங்கிருந்துதான் வந்தான் - 2

உட்காரச் சொன்னார். தரையில் உட்கார்ந்தான். ஒன்றும் புரியாமல் முதலாளியைப் பார்த்தான். உள்ளே சென்று சாப்பாட்டுத் தட்டைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தார். “முதலாளி நா மேலேயே சாப்பிட்டுக்கிறேன்” எழுந்தான். ”அட உக்காருப்பா” என்றவர் கொஞ்சம் தள்ளி மேஜையில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை எடுத்துத் திறந்தார். முத்தையாவுக்கு கைகால்கள் எல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தன. அவன் முன் இருந்த தட்டிலில் அப்படியே தலைகீழாய் கொட்டினார். அவன் முகம் பார்த்து, ”ம்… ஆசை தீரச் சாப்பிடு” என்றார்.

  •  

இங்கிருந்துதான் வந்தான் - 1

தன் வாழ்வில் சந்தித்த மேடுகளும் பள்ளங்களும், இருட்டும் வெளிச்சமும் அப்படியே யாருக்கும் வாய்க்காது எனத் தோன்றியது. அவனுக்கே சில நேரங்களில் அதிசயம் போலத் தோன்றும். வடமலைக்குறிச்சி பழனி ஒயின்ஸில் சரக்கு அடித்து விட்டு நட்ட நடு ராத்திரியில் மூப்பர் சமாதி மேல் உட்கார்ந்து சுருட்டு புகைத்துக் கொண்டு குறி சொன்ன அந்த சின்ன முத்தையா இந்த பெரிய முத்தையா எப்படி இருப்பான் என்று அறிந்திருந்தானா?

  •  

எழுத அவரிடம் நிறைய இருந்தன

எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி பெ ட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்திற்கு வெளி பூராவும் ஈசல்கள் அங்குமிங்கும் அலைக்கழிந்து பறந்து கிடந்த 2005...

  •  

கரானா – மறையும் சுவடுகள் – ஹிந்துஸ்தானி இசை உலகம்

சிறுவனான சந்திரகாந்தின் பயிற்சியிலிருந்து கதை முஸ்தபாவின் நாட்குறிப்புக்குள் சென்று சேரும் இடம் கரானாவின் வரலாற்றை சொல்லத் தொடங்கும் இடம். ஜாபர் கான் என்பவர் யார்? அவரது இசையின் தொடக்கம் என்ன எனும் கேள்விகளிலிருந்து கரானாவின் ஆரம்ப காலங்களுக்குள் கதை செல்கிறது. சுதந்திரத்துக்கு முன்னான காலத்தில் அமைந்திருப்பதால் வரலாற்றின் சிறு பின்னல்களும் கதையினூடாகச் சொல்லப்படுகிறது. நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய வகையில் வரலாற்றுப் பாடம் இல்லை. அது இந்த நாவலின் வேகத்துக்கு உதவியிருக்கிறது என்றாலும் நாவலின் பலகீனமும் இதுதான். பல தலைமுறைகளின் கதையைச் சொல்ல முற்படும்போது நாம் கால மாற்றத்தையும், மனிதர்களின் எழுச்சி வீழ்ச்சிகளை மட்டும் எதிர்பார்ப்பதில்லை.
  •  

பிரதி கர்ப்பம்

Pa Raghavan

எப்போதாவது எழுதுபவர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எப்போதாவது மட்டும் எழுதாமல் இருப்போருக்கு மட்டுமே இந்த வலியின் தீவிரம் புரியும்.

ஒரு பெரிய நாவல் அல்லது ஏதாவது ஒரு புனைவல்லாத நூலை எழுத ஆரம்பிப்பேன். முன்னதாகப் பல மாத காலம் – சில சமயம், சில வருட காலம் அதற்காக உழைத்திருப்பேன். தகவல்கள் தேடித் திரட்டித் தொகுத்து, ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்த பின்புதான் எழுதலாம் என்றே தோன்றும். அதன் பிறகு நல்ல நாள் பார்த்து, ஊர் உலகத்தில் வசிக்கும் அனைத்து தெய்வங்களையும் சகாயத்துக்குக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு, என்னைக் காக்கும் சித்தர்களைத் தொழுது, மனத்துக்கண் தாற்காலிக மாசிலனாகி, செயலொன்றே சித்தம் என்று ஆரம்பித்திருப்பேன். பத்திருபது நாள்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எழுதி நூறு, நூற்றைம்பது பக்கங்கள் அல்லது பதினையாயிரத்தில் தொடங்கி இருபதாயிரம் சொற்கள் வரை எழுதி முடித்திருப்பேன். ஏதாவது ஒரு காரணத்தினால் ஒன்றிரண்டு நாள்களுக்கு எழுத முடியாமல் போகும். பிறகு எனக்கே தெரியாமல் சுதி பிசகி நின்றுவிடும்.

அப்படி நிற்கும் பிரதிகளைச் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடரப் பார்ப்பேன். பெரும்பாலும் முடியாது. எனவே மீண்டும் முதலிலிருந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி எழுதி நிறைவு செய்த நூல்கள் சில உண்டு.

உதாரணமாகக் கபடவேடதாரி. இந்த நாவலை மூன்று முறை கிட்டத்தட்ட முழுமைக்கு அருகே கொண்டு சென்று நிறுத்தி, நிறுத்தி, மீண்டும் முதலில் இருந்து தொடங்கி, நான்காவது முறைதான் எழுதி முடிக்க முடிந்தது. என்ன காரணம் என்று கேட்டால், தெரியாது. பூனைக்கதையின் இரண்டாம் பாகத்தை மட்டும் முழுதாக இரண்டு முறை எழுதியிருக்கிறேன். இறவானில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தை மட்டும் பதினேழு முறை மாற்றி மாற்றி எழுதிப் பார்த்தேன். முற்றிலும் வேறு வேறு வடிவங்களில்.

அரசியல் நூல்கள் எழுதும்போது இது அடிக்கடி நடக்கும். 9/11, ஐ.எஸ்.ஐ., காஷ்மீர் (நினைவுப் பிசகால் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்.)  சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு – மூன்றையும் முழுதாகவே இரண்டு முறை எழுதியிருக்கிறேன். வட கொரியா எழுதும்போது குறைந்தது இருபது முறையாவது வேலை தடைப்பட்டு நின்றது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என் மனைவிக்குக் கூடச் சொல்லாமல் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்துவிட்டு, இறுதியில் அவளது ஆலோசனை இல்லாமல் அதை எழுதி முடிக்கவே முடியாது என்று தோன்றிய பின்புதான் ஒருநாள் காலை நடையின்போது நான் அதை எழுதிக்கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னேன். பிறகு எழுத்துக்கான திட்டத்தை அவள் சொன்னபடி வகுத்துக்கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கி, ஐந்து மாதங்களில் முற்றிலும் புதிய பிரதி ஒன்றை எழுதி நிறைவு செய்து அச்சுக்குக் கொடுத்தேன். இவையெல்லாம் எப்படியாவது முடித்துவிட்ட புத்தகங்கள்.

ஆனால் இன்று வரை ஏன் நின்றது என்றும் தெரியாமல், எப்படித் தொடர்வது என்றும் புரியாமல் போட்டு வைத்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேலே (மேலே உள்ள படத்தில் இருக்கும் கோப்புகளை எண்ணிக்கொள்ளுங்கள்). இதில் மூன்று நாவல்களும் அடங்கும்.

எழுதும் விஷயத்தில் நான் மிகுந்த கவனமும் கூர்ந்த அக்கறையும் கொண்டவன். மனத்துக்குள் முற்றிலும் தயாராகாமல் எழுதத் தொடங்கியதே இல்லை. கருவும் மொழியும் உருத் திரண்டு, ஒத்திசைவாய் வருவதை உறுதி செய்துகொள்ளாமல் ஆரம்பிக்க மாட்டேன். நாவல் என்றால் களமும் மொழியும். கதாபாத்திரங்களையோ சம்பவங்களையோ சிந்திக்க மாட்டேன். அது எழுத எழுதத் தன்னால் வந்துவிடும். சலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதர்வன் அதன் கதாநாயகனாக இருப்பான் என்றுதான் நினைத்தேன். ஆனால், எழுதத் தொடங்கிய பத்தாவது அத்தியாயத்தில், ‘நீ யார் அதை முடிவு செய்வது?’ என்று நாவல் குத்சனை யானை மீது ஏற்றிக்கொண்டு போய்விட்டது.

அப்படி நடப்பது சாதாரணமான விஷயம். எல்லோருக்கும் எப்போதும் நடக்கும். அதுவல்ல என் சிக்கல். எவ்வளவுதான் உரிய ஆயத்தங்களுடன் எழுத உட்கார்ந்து, காலமும் நேரமும் சகாயம் செய்தாலும்கூடச் சில புத்தகங்கள் பாதியில் நின்றுவிடும். இறுதிவரை அதைத் தொடர்ந்து முடிக்க வழி புலப்படாது.

‘முதல் நாவலைத் தொடங்கினேன். பாதியில் நின்று, மிகுந்த மனச்சோர்வாகிவிட்டது’ என்று சொல்லிக்கொண்டு பலபேர் வருவார்கள். அப்படிப் பாதியில் நின்றதற்கெல்லாம் சோர்ந்து போவதென்றால் இந்நேரம் நான் மனநோய் விடுதியில்தான் இருந்திருப்பேன் என்று சொல்வேன். எழுதுபவனுக்கு அடிப்படையில் ஓர் எருமைமாட்டுத்தனம் தேவை. எழுத்து தொடங்கி வாழ்க்கை வரை எதையும் உணர்ச்சிவசப்படாமல், நிதானம் குலையாமல் அணுகத் தெரிவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். சொல்கிறேனே தவிர, வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் தடுமாறி விழுந்திருக்கிறேன். ஆனால் எப்போதும் எழுத்தில் அப்படி நிதானம் தவறியதில்லை. அப்படியும் சில பிரதிகள் தேங்கிவிடுகின்றன.

இவ்வாறு நின்றுபோன புத்தகங்களைக் குறித்து ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சொக்கனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எழுதி முடித்து இன்னும் அச்சாகாத புத்தகங்களைக் குறித்து அவன் சொன்னான். அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏதுமில்லை. பல வருடங்கள் காத்திருந்து இரண்டு சிறுவர் நூல்கள் பிரசுரமாயின. நானே வேண்டாம் என்று நிறுத்தி வைத்த ஓர் அரசியல் நூலை (ஹமாஸ்), இப்போது வெளியிடலாம் என்று நினைத்து, சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்தேன். வேறு வருந்தத்தக்க அனுபவங்கள் ஏதும் பதிப்பு சார்ந்து எனக்கு ஏற்பட்டதில்லை.

ஆனால், இந்த நின்று போன புத்தகங்கள் அடங்கிய ஃபோல்டரைப் பார்க்கும் போதெல்லாம் சிறிது துக்கம் எழும். உடனே அதை மூடி வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஏனென்றால், அத்துக்கத்தைப் பெருக அனுமதித்தால் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஒரு நாவலை எழுத ஆரம்பித்தேன். அது மட்டும் வெளிவருமானால் அநேகமாக அனைத்து உலக மொழிகளுக்கும் செல்லக்கூடிய தகுதியுடன் இருக்கும் என்று தீர்மானமாகத் தோன்றியது. கருவாக மனத்தில் அது விழுந்தபோதே அதிலிருந்த சர்வதேசத்தன்மையைக் கண்டுகொண்டேன். வாழ்வில் வேறெதற்குமே தராத உழைப்பினை அதற்குச் செலுத்தியிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக் காலம், தரவு சேகரிப்புக்கும் ஆய்வுக்குமே செலவானது. எனக்கு வருமானம் தரக்கூடிய அனைத்துப் பணிகளையும் உதறிவிட்டு (எழுத்துப் பயிற்சி வகுப்புகள் உள்பட.) முழு மூச்சாக அந்நாவலை எழுத ஆரம்பித்தேன்.

வழக்கத்துக்கு விரோதமாக அதன் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு குறுநாவல் அளவுக்குப் பெருகிக்கொண்டே சென்றது. அது நான் எண்ணிப் பார்த்திராதது. அத்தியாயங்களை ஆகக் கூடியவரை சிறிதாக அமைப்பதையே எப்போதும் விரும்புவேன். ஆனாலும் என் கட்டுப்பாட்டை மீறி, ஒவ்வோர் அத்தியாயமும் ஐயாயிரம், ஆறாயிரம் சொற்களுக்கெல்லாம் சென்றுகொண்டிருந்தது.

சரி, என்னதான் ஆகிறதென்று பார்ப்போம் என்று எழுதிக்கொண்டே இருந்தேன். ஒன்பது அத்தியாயங்கள் ஓடி, ஓரிடத்தில் முட்டிக்கொண்டு நாவல் நின்றது.

எழுதிய வரை புத்தகமாக்கினால் நிச்சயமாக அறுநூறு பக்கங்கள் வரும் என்று தோன்றியது. ஆனால் அது நான் எழுத நினைத்திருந்த நாவலின் இருபது சதம்கூட இல்லை. என் மொத்த சக்தியையும் திரட்டி அடுத்த அத்தியாயத்துக்குள் நுழைந்துவிடப் பல மாதங்கள் முயற்சி செய்தும் நடக்கவில்லை. எத்தனையோ நாள் இரவெல்லாம் துக்கம் பொங்கிக் கண்ணீர் வரும். என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கும் சித்தர்களெல்லாம் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களோ என்றெல்லாம் அஞ்சி நடுங்கி, உறக்கத்தில் அலறி எழுந்திருக்கிறேன். நான் அப்படி உறக்கத்தில் அலறி எழுந்துகொள்வதற்கு என் மனைவியும் மகளும் வேறு பல குடும்பக் காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டிருந்ததை வைத்தே ஒரு கதை எழுதலாம் போலிருந்தது.

இது இப்படியே நீடித்தால் உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. ஒருநாள் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்குச் குடும்பத்துடன் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வந்தேன். அன்றிரவு உறக்கத்தில் சலத்தின் ஊற்றுக்கண் திறந்துகொண்டது. அது, யதி எழுதுவதற்கு முன்னால் மனத்தில் உதித்த கரு.

எழுத ஆரம்பித்து முடிக்க முடியாதிருப்பவை பற்றிய வருத்தங்கள் நிச்சயமாக எனக்குண்டு. முடித்தவை குறித்த நினைவுகளால் அதனை மறைத்து வைத்துக்கொள்கிறேன். பிரதிகளின் கர்ப்பகாலம் தெரிந்துவிட்டால் எழுதுவதில் உள்ள புதிர்த்தன்மை நீர்த்துவிடும் என்று இதற்கு சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

அசோகமித்திரன் இருந்த வீதி

 


அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட் செங்கலை எடுத்து, முன் சக்கரத்தில் போட்டு ஆட்டோவை நிறுத்துவதற்காக நானும் குப்பை ஆட்டோவுக்குப் பின்னால் குப்பைக்காரருடன் ஓட, தெருவின் முனையில் முன்சக்கரம் இடதுபக்கமாக திரும்பி, அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் ஏற்றத்தில் வேகம் தடைபட்டு நின்றது வண்டி. அதற்குள் தெரு முழுவதும் பரபரப்பாகிச் சிறுவனின் அப்பா ஓடிவந்து அவன் முதுகில் ரெண்டு மொத்து போட்டு அழைத்துச் சென்றார். முட்டைக் கண்ணாடி போட்டிருந்த குண்டுச் சிறுவனோ தனக்கு இந்த தண்டனையெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல சாவகசமாகப் போனான். சார் எந்தப் பிரச்சனையும் ஆகவில்லை. அவன்தான் பாதுகாப்பாக நிறுத்திவிட்டானே என்று சொல்லி, அவரையும் அப்போதுதான் சம்பவ இடத்துக்குள் நுழைந்து, அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம் அம்மாவையும் ஆறுதல்படுத்தினேன். அசோகமித்திரன் வழக்கமாக நின்றுகொண்டிருக்கும் பால்கனியைப் பார்த்தபடி வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடுதிரும்பினேன். அசோகமித்திரன் விஷமத்துடன் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

  •  

என் மலாய் சிறுகதை நூல் வெளியீடு

நூலை ஷோப்பியில் வாங்க: https://my.shp.ee/1vFtmrs நேற்று (பிப்ரவரி 1) எனது முதல் மலாய் சிறுகதை தொகுப்பான ‘Pita Suara Mona Fandey’ மாற்று புத்தகக் கண்காட்சியில் வெளியீடு கண்டது. இந்தக் கண்காட்சி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை சென்ட்ரல் மார்க்கெட்டில் (Central Market) நடைபெறுகிறது. மாற்று புத்தகக் கண்காட்சி (Kuala Lumpur Alternative Bookfest – KLAB) என்பது மலேசியாவில் தனி நபர்கள் முயற்சியில் இயங்கும் பதிப்பகங்களும் மாற்று குரல்களை வெளிப்படுத்தும் எழுத்தாளர்களும் இணைந்து […]
  •  

எல்லாம் செயல் கூடும்

Dr Satya, Dr Bhumi, Thirunavukarasu, Chitran, Suneel, Manasa Bottom row- Prabahakaran Krishnammal Sabarmathi Sudhir Chandran 
 சிபியின் நடைபயண நாட்குறிப்புகளை வாசித்தபோது இதுவரை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை சந்திக்காதது  பெரும் பிழை எனும் உணர்வு வலுபட்டது. இன்ன காரணம் என்றில்லை. சுணக்கம், அல்லது முனைப்பின்மை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட்டமிடல் ஏதுமின்றி பிப்ரவரி 2 ஆம் தேதி அவரை நேரில் சென்று சந்திப்பது என்று முடிவு செய்து கொண்டேன். குக்கூ சிவராஜிடம் கிருஷ்ணம்மாள் அங்கு இருப்பார்களா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு ஞாயிறு மதியம் புறப்பட்டோம். மனைவி மக்களுடன் சென்றேன். உடன் எழுத்தாளர்கள் சித்ரனும் பிரபாகரனும் வந்தார்கள். குழந்தைகளுக்கு இந்த நூறு வயது பாட்டியை காண்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். காந்தியை கண்ட விழிகளை அவர்களும் காண வேண்டும். காந்தியை கண்ட விழிகள் இந்த தளிர்களையும் காண வேண்டும். எத்தனை பெரிய காலமாற்றத்தில் சாட்சியாக அவர் நம்முன் வாழ்கிறார். இங்க தான் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் இரண்டு வாரம் தங்கினார் என்றொரு அறையை கைகாட்டினார். காமராஜர் இங்கயே தான் இருப்பார். எங்க வீட்டுக்காரர் இருந்தா வெளிலயே இருக்கிறதை எல்லாம் ஊதி முடிச்சுட்டு உள்ளே வருவார் என்று சொன்னார். வயதுக்குரிய உடல் மாற்றங்கள். மதியம் குட்டி தூக்கத்திற்கு பின் எங்களை காண வந்தார். 




காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே உள்ள ஊழியரகத்தில் தான் அவரை சந்தித்த்தோம். க்ரிஷ்ணாம்மாளின் சகோதரி மகனான இளங்கோ எங்களுக்கு உதவினார். பிள்ளைகள் வெளியே படிப்பதாகவும். அவர் பத்தாண்டுகளாக இங்கேயே இருப்பதாகவும் சொன்னார். கென்யா நாட்டை சேர்ந்த இருவர் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்கள். சர்வோதய தினத்திற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நடன வகுப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. சபர்மதி அவர்களுடன் சென்று விட்டாள். மலைகள் சூழ அழகிய இடம். உண்டு முடித்து ஓய்வெடுக்கும் நேரம். சற்று நேரம் கூடத்தில் அமர்ந்திருந்தோம். மெல்ல எங்களை நோக்கி நடந்து வந்தார். வயதிற்குரிய நினைவு தடுமாற்றம், குரல் தடுமாற்றத்தை கழித்துவிட்டால் திடமாக உள்ளார். கத்தி பேச வேண்டியிருக்கவில்லை. தொலைவில் நடந்து செல்லும் பெண்களை சரியாக பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு பார்வை நன்றாகவே இருந்தது. கூடத்தில் ஜெகந்நாதனின் படம் ஒரு பக்கமும் டாக்டர் சவுந்தரம் ராமச்சந்திரன் அவர்களின் படம் இன்னொரு பக்கமும் மாட்டப்பட்டு இருந்தது. இன்னும் நிறைய படங்கள் மாட்டப்படுவதற்காக அங்கு இருந்தன. “இந்த இடம் ஊழியரகம்… வேலை செய்யிறவங்க வந்து தங்குறதுக்குன்னு உள்ள இடம். போலீஸ் தேடிக்கிட்டு இருந்த இங்க வந்துருவாங்க” என்று சிரித்தார்.    கிளம்புவதற்கு முன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்  வாழ்க்கை  வரலாறு நூலான ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலை வாசித்திருந்தேன். பிரிட்டிஷ் காவலர்கள், சுதந்திர இந்தியாவின் காவலர்கள் என எல்லோரும் அவரை விரட்டி இருக்கிறார்கள். பலமுறை பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறை சென்றிருக்கிறார்கள். அடிப்படை மனிதநேயம் இன்றி நடத்தப்பட்டிருக்கிறார்கள். கொள்கைக்காக சிறை என்பதை பெருமையாக எண்ணிய தலைமுறையின் இறுதி கன்னி. பண்ணையார்கள், கம்யூனிஸ்டுகள், காவலர்கள் என எல்லோருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டுள்ளார்கள். எதிர்ப்பு என்றால் வெறும் கருத்து பூசல் இல்லை. உதாரணமாக இந்த நிகழ்வை குறிப்பிடலாம். வினோபா தமிழகம் வருவதற்கு முன் பூதான பயணம் குறித்து ஏற்பாடுகளை செய்வதற்கு பயணிக்கும் போது ஒரு கிராமத்தில் அந்த ஊர் நிலக்கிழார் நன்கு உபசரித்து கைக்குழந்தையுடன் வரும் கிருஷ்ணம்மாளை தங்க வைக்கிறார். அன்றைய தினக்கூலி கேட்டு வரும் வேலையாட்களுக்கு விளக்கு வைத்துவிட்டதால் பணம் கொடுத்தால் லட்சுமி போய்விடும் எனும் காரணத்தை கூறி பண்ணையார் கூலி வழங்க மறுக்கிறார். விருந்தாளியாக சென்ற இடத்தில நமக்கேன் பொல்லாப்பு என ஒதுங்கி நிற்காமல் பண்ணையாரை கண்டிக்கிறார். எங்கள் வீட்டில் இருந்து கொண்டே எங்களை கண்டிப்பீர்களா என்று சொல்லி பெட்டி படுக்கைகளை தூக்கி தெருவில் வீசுகிறார்கள். இரவெல்லாம் கைக்குழந்தையுடன் வெட்டவெளியில் படுத்துறங்கினார். நீதிக்காக பிரச்சாரம் செய்வது சுலபம். நீதிமான்களாக காட்டிக்கொள்வது அதைவிட சுலபம். களத்தில் கண்முன் தெரியும் அநீதிக்கு ஆற அமர எதிர்வினை ஆற்றாமல் உடனடியாக ஆற்றுவதற்கு பெரும் துணிச்சல் வேண்டும். மடத்தின் விருந்தாளியாக தங்கியிருந்தபோது சீனாவை போல் மக்களாக வன்முறையில் இறங்கி பிடுங்கிக்கொள்வதற்கு முன் மடத்தின் நிலத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொல்லப்போக மடத்தினர் கிருஷ்ணம்மாளை வெளியேற சொல்கிறார்கள். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்ததை பற்றி எங்களிடம் சொன்னார். வீட்டிற்கே சென்று நிலமற்ற ஏழை பெண்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். திருவாரூரில் அம்மனுக்கு அவல் பாயாசத்திற்கு என 250 ஏக்கர் எழுதி வைத்துள்ளார்கள். அதை பிரித்து கொடுக்க வேண்டும். அம்மன் அடுப்பில் பாயாசம் வைக்க மாட்டாள். அடுப்பெரிய வேலை பார்க்கும் பெண்களுக்கு அந்த நிலத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். “அரசு எல்லாம் கொடுத்துருச்சு.. நான் இப்ப திருவாரூருக்கு போகணும், கொஞ்சம் வெய்யில் குறையட்டும்னு பாக்குறேன். ஒரு ரெண்டு நாளுல போயி எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்திருவேன்” என்றார். பழைய நினைவுகளை இப்போது சொல்கிறாரா, அல்லது உண்மையிலேயே செல்ல வேண்டும் என சொல்கிறாரா என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை. 

ஜெகந்நாதன் உழுபவர்களுக்கே நிலம் எனும்  நம்பியவர். அதுவே இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை தீர்க்கும் என்று ஆழமாக நம்பினார். வினோபாவுடன் பூதானத்தில் நெருங்கி வேலை செய்தாலும் அவருடைய வழிமுறைகள் மீது விமர்சனம் இருக்கிறது. சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான முதல் சத்தியாகிரகம் செய்யும்போது காங்கிரஸ் காரர்களே ஜெகந்நாதனை எதிர்க்கிறார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சரி, சொந்த அரசுக்கு எதிராகவே சத்தியாகிரகம் செய்வதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் தவறென்று இருந்தால் சத்தியாகிரகத்தை கைக்கொள்வேன் என்கிறார். வெவ்வேறு அமைப்புகளுடன் இயைந்து செயல்படுகிறார்கள், அமைப்புகளை தோற்றுவிக்கிறார்கள். அமைப்புகள் முக்கியமானவை, ஆனால் அவற்றுக்கு சில வரையறைகள் உள்ளன.  தாங்கள் அறம் என்று நம்புவதற்கு இடையூறாக தாங்கள் உருவாக்கிய/ பங்கெடுத்த அமைப்புகள் வந்தால் அவற்றை உதறி முன்னகரும் திண்மை பெரும்பாலானவர்களுக்கு இருக்காது. அமைப்புகள் அளிக்கும் பாதுகாப்பில் சுருங்கிக்கொள்ள தோன்றும். அமைப்புகளை பாதுகாப்பதை கடமையென கொள்வார்கள். அமைப்புகளின் நோக்கமே முக்கியம். காந்தியின் வழிமுறையும் அதுதான். ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலில் குமரப்பா வினோபாவுடன் பிணக்கு கொள்ளும் இடம் அபாரமான சிறுகதைக்குரிய பகுதி. காந்தியும் அய்யன்காளியும் உரையாடும் மெல்லிய நூல் போன்ற ஒரு பகுதி. குமரப்பா வினோபாவின் உன்னத இலட்சியத்தை புரிந்து கொண்டார். ஆனால் வினோபா நடைமுறைவாதியாக இல்லை எனும் வருத்தம் அவருக்கு உண்டு. பூதானத்தில் தானமாக அளிக்கப்பட பெரும்பகுதி நிலம் தரிசு தான். வினோபாவை பொறுத்தவரை இந்த அளவிற்காவது இந்த மாற்றம் நடக்கிறதே, இப்போது தரிசை கொடுத்தாலும் நாளை நல்ல நிலத்தை கொடுப்பார்கள் என்று நம்புகிறார். குமரப்பாவோ கையெழுத்து இட்டு சேகரியுங்கள், உடனடியாக  பகிர்ந்து கொடுங்கள், பாசன வசதி ஏற்படுத்தி கொடுங்கள் என்கிறார். வினோபா அவை இப்போதைய தமது பணியல்ல என நம்புகிறார். விவசாய நிலத்தில் அறுவடைக்கு பிறகு தீ வைக்கப்படுவதை காட்டி குமரப்பாவிடம் சொல்கிறார்.  “அவர்கள் பழைய நிலத்திற்கு தீ வைக்கிறார்கள். நான் பழைய சமூகத்திற்கு தீ வைக்கிறேன். பழைய சமுதாயத்தின் நடைமுறைக்கு தீ வைக்கிறேன். அடுத்த தலைமுறை வரும் உழத்தொடங்கும். புதிய விதைகளை விதைக்கும். என் பணி தீ வைப்பது தான்.” குமரப்பாவிற்கு இந்த பதில் நிறைவளிக்கவில்லை.  நடைமுறையை கணக்கில் கொள்ளாத பதில் என்கிறார். விருந்துக்கு வாருங்கள் என அழைத்து இலையில் உப்பை மட்டும் பரிமாறுவது போல உள்ளது . இன்று முதலில் உப்பை சாப்பிடுங்கள், நாளைக்கு சாப்பாடு போடுவேன், அடுத்தநாள் சாம்பார் ஊற்றுவேன் என்பதை போல் உள்ளது உங்கள் பேச்சு என விமர்சிக்கிறார். தினமும் காலை (காலை என்று சொல்லலாமா என தெரியவில்லை) 2.30 மணிக்கு எழும் வழக்கத்தை கொண்டிருந்தவர் என்றார் கிருஷ்ணம்மாள். ஆதி சங்கரரின் பாடல்கள் அனைத்தையும் பாராயணம் செய்வது அவர் வழக்கம். பஜ கோவிந்தம் என சொல்லும்போது அரிக்கேன் விளக்கை தூக்கிக்கொண்டு கிருஷ்ணம்மாள் முன்னே நடக்க தொடங்குவார். விடிவெள்ளியை பார்த்து நிற்கும் வினோபா சொல்கிறார். விடிவெள்ளி வந்துவிட்டது சூரியன் விரைவில் உதித்துவிடும் தானே. குமரப்பா கிளம்பும் செய்தி அறிந்து குடிலுக்கு செல்கிறார். அங்கே எல்லா பொருட்களும் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கின்றன. வினோபா அவற்றை ஒழுங்காக பெட்டியில் அடுக்கி தருகிறார். ஒரேயொரு விவசாயி கலப்பையுடன் சென்று கொண்டிருக்கிறான். வினோபாவும் குழுவும் நடக்கும்போது எதிர்திசையில் நடக்கும் விவசாயியின் திசையில் குமரப்பா நடக்கிறார். காந்தியம் என்பது வெறும் ஆன்மிகம் அல்ல. வறட்டு லட்சியவாதம் அல்ல. நடைமுறை பயனை எப்போதும் கணக்கில் கொள்வது. உடனடி விஷயங்களை காலாதீதமான விழுமியங்களை கொண்டு எதிர்கொள்ள முற்படுவது. வினோபா காந்தியை காட்டிலும் மேலான ஆன்மீக வாதியாக இருக்கலாம் ஆனால் அவரால் காந்தியாக ஆக முடியாது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒருவகையில் காந்தியை சாராம்சமாக உள்வாங்கியவர்கள். காந்தி எதை செய்திருப்பாரோ அதையே இவர்களும் பல சமயங்களில்  செய்தார்கள்.   


நூலிலும் நேர்பேச்சிலும் வினோபாவை பற்றிய பல சுவாரசியமான சித்திரங்கள் வருகின்றன. வினோபா நாளுக்கு பதினெட்டு முறை தயிர்சாதமும் தேனும் உண்பார். ஒவ்வொரு முறையும் பகவத் கீதையின் முழு அத்தியாயத்தையும் பாராயணம் செய்துவிட்டு ஒரு கவளத்தை உண்பார். வினோபாவிற்கு உடலநிலை சரியில்லாமல் பீகாரில் இருந்தபோது இந்தியா முழுக்க தலையில் சோற்றையும் பருப்பையும் சுமந்தபடி சர்வோதய ஊழியர்கள் அவரை காண வருகிறார்கள். பிள்ளையை விட்டுவிட்டு வா என்றாலும் பூமி கையை இறுக பற்றிக்கொண்டதால் முதல் சில ஆண்டுகள் இவர்களுடனேயே திரிகிறார். மாணிக்கவாசகரின் அச்சோ பத்திலிருந்து முத்தி நெறி பாடலை வினோபா பாடுவாராம். அப்போது அவருக்கு ஓய்வெடுக்க வேண்டும் என பொருள் என்றார். பேசும்போதெல்லாம் குரலில் தெரிந்த நடுக்கம் பாடும்போது இல்லை. வள்ளலாரின் ‘எல்லாம் செயல் கூடும்’ பாடலை கொஞ்சமும் பிசிறின்றி பாடினார்.


 துறவியாக செல்ல இருந்தவரை பிடித்து கிருஷ்ணம்மாளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். கதர் துண்டை தலையில் அணிவிப்பது தான் திருமணம். ஜெகந்நாதனும் கிறிஸ்து குல ஆசிரமத்தில் சிலர் தங்களது உடல் தேவைகளை முறையற்ற வழியில் தீர்த்துக் கொள்வதை பார்த்து சமூக வாழ்விற்கு நல்ல இல்வாழ்வு தேவை எனும் முடிவுக்கு வருகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை பற்றி சொல்லும்போதெல்லாம், அவர் என்றோ எங்க வீட்டுக்காரர் என்றோ தான் சொல்கிறார். திருமணமான தொடக்கத்தில் தன்னை தனியாக விட்டுவிட்டு அவர் அலைந்தது பற்றிய  குறை இப்போதும் கூட இருப்பதாக பட்டது. கீழே சிமெண்டு தரையை காண்பித்து இது அவரே தன் கையால போட்டது இன்ன வரை இருக்குது என்றார். ஜெகந்நாதன் போன்ற கணக்கற்ற தொண்டர்கள் தன்னலமற்று உழைத்த நிலத்தில் தான் நாம் எல்லோரும் இன்று  நிற்கிறோம். ஜெகந்நாதன் மண் பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். போட்டதை போட்டபடி விட்டுவிட்டு அடுத்தடுத்து பயணிக்க அதுவே எதுவாக இருக்கும். இந்தியா முழுக்க கால்நடையாக அலைந்து  திரிந்திருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் நடந்தே சென்றிருக்கிறார்கள்.



ராலே கெய்தான் பற்றி சொல்லி கொண்டிருந்தார். கெய்தான் அமெரிக்க மிஷனரி. இந்திய விடுதலை பற்றி பேசியதால் மிஷனரியில் இருந்து நீக்க பெறுகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நெருங்கிய சகாக்களில் ஒருவர். கெய்தான் எல்லாருக்கும் வேலைகளை பிரித்து கொடுப்பாராம். மதியம் வரிசையாக எல்லோர் கைகளையும் சோதிப்பாராம். உடல் உழைப்பிற்கான தடயம் தென்பட்டால் தான் சோறு. மீண்டும் மாலையும் இதே சோதனை நடக்கும். அப்போது உழைத்தவர்களுக்கு ஆளுக்கு இரண்டு சர்க்கரை வள்ளி கிழங்கு கொடுப்பார் என்றார்.   

‘சுதந்திரத்தின் நிறம்’ இறால் பண்ணைக்கு எதிரான போராட்டம் நிறைவு பெறாத காலத்தில் எழுதிய வாழ்க்கை சரிதை.  சரியாக சொல்வதானால் நீண்ட நேர்காணல்,  கூடவே லாரா கோப்பாவின் இந்தியா குறித்த அவதானிப்புகள் நிறைந்த நூல். கிருஷ்ணம்மாள் அவர்களின் மகன் டாக்டர் பூமியிடம் ஒரு முழுமையான வரலாறை  எழுத வேண்டியதன் அவசியத்தை கூறினேன். வாக்கரசியலுக்கு வெளியே இயங்கும் மகத்தான மனிதர்களை நாம் கண்டுகொள்வதில்லை. முதுகுளத்தூர் கலவரத்தின் போது அமைதியை உருவாக்க ஊர் ஊராக செல்கிறார்கள். கீழ்வெண்மணி கொடுமையின் போது முதல் மனிதர்களாக சென்று சேர்கிறார்கள். காந்தி, வினோபா, ஜெ.பி என மகத்தான மனிதர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்கள்.  சமகால அரசியல் விவாதங்களில் அவர்கள் இடம்பெறாமல் போகலாம். வாக்கரசியலே உரையாடலை தீர்மானிக்கும் ஆற்றலாக உள்ளது. ஏதோ ஒரு கட்சியின் ஓட்டு வங்கிக்கு உதவாத ஆளுமைகளை இங்கே நினைவில் நிறுத்துவது கடினம்.  மக்கள் நினைவுகளில் இவர்கள் என்றென்றும் நீடித்திருப்பார்கள். எத்தனை மகத்தான பெருவாழ்வு! சொற்களில் உழன்று கொண்டிருப்பவனாக மட்டும் இருப்பதற்காக  வெட்கினேன். தன் கையால் குழந்தைகளுக்கு ரொட்டி கொடுத்தார். பூமி அவர்களுடனும், சத்யா அவர்களுடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். 


கிளம்பும் முன் அவர்களிடம் ‘தமிழகம் உங்களுக்கு ரொம்பவே கடன் பட்டிருக்கு’ என்று சொல்லி  வணங்கினேன். ‘கடன் என்ன..கடமையை செய்யிறோம். அவ்வளவுதான்’ என்றார் அலட்டிக்கொள்ளாமல். ஆதர்ச எழுத்தாளரான யுவன் சந்திரசேகருடன் அவருடைய நாவல்கள் பற்றி உரையாடும்போது துறவு அல்லது குடும்பத்தை விட்டு வெளியேறுவது என்பது அவரது கதைகளில் தொடர்ந்து தொழிற்படுவதை பற்றி கேட்டேன். “வெளியேறி எங்க போறான்? குடும்பம்ங்கிற சின்ன வட்டத்தை விட்டு வெளியேறி போறவன் உலகமே தனது குடும்பங்கிற பெரிய வட்டத்திற்குள்ள போறான்னு பாக்கலாம் இல்லையா” என்றார். ஜெகந்நாதன் துறவியாக வேண்டும் என்று விழைந்து இல்லறத்தில் ஈடுபட்டவர். அவரை துறவி என்பதா இல்லறத்தார் என்பதா. எல்லா துறவிகளும் இல்லறத்தார் தான். புவி முழுமையும் அவர்களது குடும்பம். தன்னலமற்று நோற்கப்படும் யாவையும் நோன்பே. நான் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து உள்ளூர அனத்தல் பெருகியது. இந்த அனத்தல் நல்லதற்கே. உள்ளூர ஒலிக்கும் சன்னமான ஆனால் திடமான குரல் செவியில் விழக்கூடும்.






  •  

ஒரு காந்திய பயணம்

 

ஈரோடு- திருப்பூர்  அறக்கல்வி மாணவர்கள் வாக்குக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி கோவை போத்தனுர் காந்தி ஆசிரமத்திலிருந்து வேதாரண்யம் சத்தியாகிரக நினைவிடம் வரையில் 400 கிலோமீட்டர்கள் நடந்து தங்கள் யாத்திரையை  ஜனவரி 28 ஆம் தேதி நிறைவு செய்தார்கள்.  யாத்திரை எனும் சொல்லை குறித்து யோசித்து கொண்டிருந்தேன். தண்டி பயணம் என சொல்லவில்லை, யாத்திரை என்றே சொல்லியிருக்கிறார்கள். இயல்பாக பயணம் எனும் சொல்லுக்கு இருக்கும் உலகியல் வரையறைக்கு அப்பால் யாத்திரை எனும் சொல்லுக்கு ஒரு ஆன்மீக பொருள் சேர்கிறது. பயனத்திற்கொரு புனித நோக்கு சேரும்போது அது யாத்திரையாக ஆகிறது. 

                        


சிபி, அனுஸ்ரீ, சௌமியா ஸ்ரீ, கௌதம், லைலா பானு, அர்ச்சனா ஆகியோர் தான் மொத்த பயணத்தை நிறைவு செய்த அறுவர். கொடைக்கானல் சபரீஷ் இவர்களுடன் ஏறத்தாழ ஒரு வாரம் நடந்திருப்பார். சரண்யாவும் நான்கைந்து நாட்கள் நடந்தார் என்று எண்ணுகிறேன். சந்தானிகா, ஸ்ரீவித்யா, மோகன் ராஜ் ஆகிய மாணவர்கள் இரண்டு மூன்று நாட்கள் நடந்திருப்பார்கள். கண்டனூர் நாராயணனும் அவரது பனிரெண்டு  வயது மகன் ராம் சிதம்பரமும் இரண்டு நாட்கள் நடந்தார்கள். இந்த பயண நோக்கத்தை பற்றி நிறைய பேசலாம், ஆனால் 18 நாட்கள் நீண்ட நடை பயணம் என்பதே  நடந்தவர்களுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருக்கும். உணவிற்கோ தங்குமிடத்திற்கோ பெரிய திட்டமிடல் இல்லாமல் மக்களை நம்பி நடந்தார்கள்.  சிறு இடர்களுக்கு  அப்பால் நான்கு பெண்கள் கொண்ட குழுவிற்கு எந்த தொந்தரவும் இல்லை.   


புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும்போது குடும்பத்துடன் சென்று சந்தித்து வந்தோம். நடந்து நடந்து கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தது. அனைவரும் பிளாஸ்திரிகள் ஒட்டியிருந்தார்கள். வாடை காற்றிலும் மழையிலும் நடந்ததால் லேசான உடல்நலமின்மை சிலருக்கு.  பிறகு வேதாரண்யத்தில் நிகழ்ந்த நிறைவு நாள் விழாவிலும் பங்கு கொண்டேன். மணப்பாறை- புதுக்கோட்டை வழியில் சித்தூர் எனும் கிராமத்தில் இருந்த கருப்பர் கோவில் வாசலில் மதிய ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது சென்று சேர்ந்தோம். அன்று மனைவியின் பிறந்தநாள் என்பதால் மதிய உணவு எடுத்து வருவதாக திட்டம். ஆனால் நாராயணன் கொண்டு வந்த காலையுணவை மதியம்தான் சாப்பிட முடியும் என்று சொல்லிவிட்டார்கள். முந்தைய நாள் தங்கிய இடத்தில அந்த அளவு கவனிப்பு. நடந்து நடந்து இளைப்பீர்கள் என்று பார்த்தால் ஒரு சுற்று பெருத்ததாக தெரிகிறதே என கேலி செய்து கொண்டிருந்தோம். அதுவரையிலான பயணத்தில் அவர்கள் ஆகப்பெரிய சவாலாக உணர்ந்த விஷயத்தை பற்றி பேசினோம். மலைகளுக்கு இடையே இருளில் நடக்கும்போது தனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக திட்டமிட்ட ஊரை அடைவதற்கு முன்பே வேறொரு ஊரில் தங்குமிடம்  தேடும் நெருக்கடி ஏற்பட்டதை பற்றி அனுஸ்ரீ கூறினார். தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்ததாக சொன்னார். சாலைகளில் துரத்தி வந்த குடிகாரர்கள், அனுமதி அளிக்காத தந்தை, உடல் ஒத்துழைக்குமா எனும் ஐயம் என வேறு வேறு விஷயங்களை சொன்னார்கள். தெரு நாய்களை எப்படி சமாளித்தீர்கள் என்றால் கண்டுகொள்ளாமல் திடமாக நடந்து வந்தால் விட்டுவிடும் என்றார்கள். பயணத்தின் ஊடாக சில நுட்பங்களை கண்டடைந்துள்ளார்கள். ஆண்கள் இருக்கும் வீட்டில் கழிவறை உபயோகிக்க கோரினால் அனுமதிப்பார்கள் என்பது அப்படியான ஒரு கண்டுபிடிப்பு. மாவட்டங்கள் தோறும் தங்களது பிரச்சாரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எதிர்ப்பு சார்ந்தும் சில விஷயங்களை சொன்னார்கள். பொதுவாக மனிதர்களின் நல்லதன்மை மீது நன்னம்பிக்கை ஏற்பட்டதாகவே சொன்னார்கள். பிளாஸ்டிக் பேட் பால் கொண்டு சுதீருடன் சிபியும் கௌதமும் விளையாடினார்கள். நாராயணன் ஏற்பாட்டில் இட்டிலி, இடியாப்பம், கவுனி பாயாசம் ஆகியவற்றை மதிய உணவாக உண்டோம். எங்களுடன் வந்த சிங்கப்பூர் கணேஷ் பை நிறைய நார்த்தம் பழத்தை கொண்டு வந்தார். உண்டு முடிக்கும் சமயத்தில் திண்டுக்கல்லில் இருந்து உமையாள் தேனப்பன் தம்பதியினர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மாணவர்களின் உடைகளை துவைத்து காயப்போட்டு கொண்டு வந்திருந்தார்கள். முதல்முறையாக அவர்களை சந்தித்தேன். தேனப்பன் கட்டுமான பொறியாளராக உள்ளார். உமையாள் ‘வேதாத்திரி மகரிஷி’ வாழ்க வளமுடன் யோக பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாலை நான்கு மணிக்கு மீண்டும் நடக்க தொடங்கிய போது சுதீரும் அவர்களுடன் நடந்து வருவதாக பிடிவாதம் பிடித்தான். கொஞ்ச தூரம் நடந்தபிறகு நிறைவுநாளில் அவர்களுடன் நடக்கலாம் என்று உறுதியளித்து அழைத்து கொண்டேன். 


நிறைவு நாள் அன்று மதியம் அம்மாவும் என்னுடன் வந்தார். சுதீர், நாராயணன், அவரது மகன் ராம் சிதம்பரம், சிங்கப்பூர் கணேஷ் என எல்லோரும் புறப்பட்டோம். ரோட்டரி சங்கம் ஆங்காங்கு மாணவர்களுக்கு வரவேற்பு அளித்து வந்தது. இறுதி நான்கு கிலோமீட்டர் இருக்கும் போது வந்து சேர்ந்தோம். சுதீர், ராம், நாராயணன், கணேஷ் என எல்லோரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அறப்போர் ஜெயராமன், கிருஷ்ணன், குக்கூ நண்பர்கள் என ஒரு திரள் நடந்து வந்தது. நானும் அம்மாவும் வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்தோம். அரசு சித்த மருத்துவர் ரமேஷ் குமார் வேதாரண்யத்தில் தான் பணிபுரிகிறார். எனது கல்லூரி இளவல். பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. சத்தியாகிரக நினைவிடத்தில் கூட்டம் நடந்தது. ரோட்டரி சங்க கூட்டம் எப்படி நடக்குமோ அப்படி நடந்தது. நிறைய உரைகள். மாணவர்கள் தங்களது அனுபவங்களை செறிவாக பகிர்ந்து கொண்டார்கள். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அறப்போர் ஜெயராமன், பேராசிரியர் பழனித்துரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாரிசுகளான இருவரை நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அறக்கல்வி ஆசிரியர்களான அனீஸ் நாயரும், லோகமாதேவி அவர்களும் நிறைவு விழாவிற்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் கையெழுத்திட்ட சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

கிருஷ்ணன் மாணவர்கள் மீது விழுந்திருக்கும் பொறுப்பு சுமையை பற்றி பேசினார். காந்தியிடம் இந்த சிக்கல் உண்டு. காந்திக்கு எல்லாவற்றிலும் தான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனும் சிக்கல் உண்டு. காலப்போக்கில் அது தான் மட்டும் என்பதாக இல்லாமல், மனைவி பிள்ளைகள், சீடர்கள் என தன்னை சார்ந்த எல்லோருமே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இது ஒரு நெருக்கடி. ஹரிலால் இந்த நெருக்கடியில் தாக்குபிடிக்காமல் உதிர்ந்தவன். உள்ளத்திண்மையை சோதிக்கும் சோதனைகள் இனிதான் வரக்கூடும். அப்போது அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். 


கரியப்பட்டணம் எனும் ஊரில் விஜயலக்ஷ்மி எனும் வாசகர் வீட்டில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடை பயணம் முடித்த மாணவர்கள் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் பெருமிதம் குடிகொண்டிருந்தது. கௌதம் ஒரு மூலையில் தனியே அமர்ந்திருந்தான். சௌமியா ஸ்ரீ அழுது கொண்டிருந்தாள். சுமார் இருபது நாட்கள் ஒன்றாக செய்த பயணம். திரும்ப முடியாத காலத்துளிகளால் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்நினைவுகள் வாழ்நாள் சேகரம். பெரும் யாத்திரைகள் எந்த அளவிற்கு புறத்தில் நிகழ்கிறதோ அதே அளவிற்கு அகத்திற்குள்ளும் நிகழும். 


விஜயலஷ்மியின் இல்லம் அழகாகவும் விசாலமாகவும் இருந்தது. இரவு நெடுநேரம் பாட்டு, பேச்சு, கொண்டாட்டம் என சென்று கொண்டிருந்தது. முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் வரையிலான பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது. நிரம்பி ததும்பும் நீர் நிலைகள். வயல் வெளிகள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிராதப ராமபுரம் எனும் ஊரில் ஊராட்சி தலைவராக உள்ளவரை சந்தித்தோம். முழு மூச்சுடன் முன்மாதிரி ஊராட்சியாக கொண்டுவர முனைகிறார். அவரது முயற்சிகள், இலட்சியங்கள் குறித்து பேச முடிந்தது. தன்னலமற்ற செயல் ஒத்த மனமுடையவர்களை ஒன்றிணைக்கும். 

காலை எழுந்து உணவு உண்டுவிட்டு கோடியக்கரை சென்றோம். தை அம்மாவாசையை என்பதால் கடற்கரையில் கூட்டம். குரங்குகளுக்கு உணவிட வேண்டாம் என வனக்காவலர்கள் அறிவுறுத்தினார்கள். கடலில் குளிக்க வேண்டும் எனும் திட்டத்தை நீரை பார்த்ததும் மாற்றி கொண்டேன். நான்கைந்து வண்டிகளில் வனவிலங்கு சரணாலயத்திற்குள் சென்றோம்.  வெளி மான், காட்டு பன்றி, கீரி, கலைமான் ஆகியவற்றை பார்த்தோம். நாராயணனும் ராம் சிதம்பரமும் எங்களுக்கு விதவிதமான பறவைகளை சுட்டி  காட்டினார்கள். உபயம் பறவை பார்த்தல் வகுப்பு, வெள்ளிமலை. ராஜராஜன் எழுப்பியதாக நம்பப்படும் பொன்னியின் செல்வன் புகழ் கலங்கரை விளக்கத்தை கண்டுவிட்டு திரும்பினோம். திரும்பும் வழியில் இரண்டு நரிகளை கண்டோம். (நாங்கள் மட்டுமே கண்டோம் என்பதில் சற்று கூடுதல் பெருமை).     


400 கிலோமீட்டர் வாக்குக்கு பணம் பெறாதீர்கள் எனும் செய்தியை தாங்கி ஆறு மாணவர்கள் நடந்து வருகிறார்கள். இது இந்த ஊர்களில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? இன்றைய அரசியல் சூழலில் இவர்களின் சன்னமான ஆனால் திடமான குரல் எடுபடுமா? எல்லா அறமின்மைகளும் இயல்பாக்கம் அடையும் காலகட்டம் இது. தேர்தலுக்கு நாளிருக்கிறது. இவர்களிடம் வாங்க மாட்டேன் என உறுதி அளித்தவர்கள் அந்த சொல்லை காப்பாற்றுவார்களா? எந்த கேள்விக்கும் துலக்கமான விடை என ஏதுமில்லை. உடலை மெய் என்று குறிக்கிறது தமிழ் மொழி. உடலை வருத்துதல் என்பது மெய் வருத்தம். உடலே நமக்கு முன் இருக்கும் தூலமான மெய். உடலை காப்பதே நம் அடிப்படை விசை. அதன் எல்லைகளை நகர்த்தி, அதையே பணைய பொருளாக வைக்கும் போது நாம் நம்பும் விஷயத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறோம். அதற்கொரு ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். சிறிய அளவிலாவது மாற்றங்கள் நிகழும். விதிமுறைகள் நாமே வகுத்து கொண்டவை. நமக்குள்ளாக ஏற்படுத்தி கொண்ட பொது ஒப்பந்தம். வாக்களிப்பது நம் கடமை. வாக்குகள் சந்தை சரக்குகளாக மாறும் போது நம் நலத்திற்காக நாம் ஏற்படுத்திய அமைப்புகளையும், விதிகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறோம். பொது அமைப்புகள், பொது விதிகள் சுயநல தேவைகளுக்காக அலட்சியப்படுத்தப்படும் தோறும் பலவீனமடையும். காந்தியம் தனிமனிதனை மாற்றத்தின் அலகாக கொள்கிறது. இந்த பயணத்தின் ஊடே வெகு சில தனியர்கள் மாறினாலும் கூட சரிதான். முனை மாணவர்களை மனதார வாழ்த்துகிறேன்.   


  •  

புக் பிரம்மா இலக்கிய விழா

 

சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் பாவண்ணன் ஆகஸ்ட் 9, 10, 11 தேதிகளில் பெங்களூரில் புக் பிரம்மா இலக்கிய விழா நடக்க இருப்பதாகவும் சிறுகதை அமர்வில் பேச முடியுமா என்றும் கேட்டார். ஒப்புக்கொண்டேன். இலக்கிய சந்திப்புகளில் பங்கேற்பது எனக்குப் பிடிக்கும். வேறெதைப் பற்றிய  சிந்தனையுமின்றி   இலக்கியத்திற்குள்ளேயே ஊறிக் கிடப்பது. இரவுகளில் உறங்க முடியாது. உருபெறாத சொற்களும் கருத்துக்களும் மூளைக்குள் ரீங்காரமிடும் இனிய அவஸ்தை பீடிக்கும். இலக்கியத்தை பேசுவதும் கேட்பதும் அசைபோடுவது ஒரு அலாதியான லாகிரி.  விஷ்ணுபுர விழாக்களில்  காவிய முகாம்களில் அத்தகைய அனுபவத்தை‌ வேண்டியே தவறாமல் செல்வேன். அண்மைய காலத்தில் ஏலகிரி புரவி கூடுகை இத்தகைய தீவிர அனுபவத்தை அளித்தது. 


எட்டாம் தேதி இரவு புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை பேருந்தில் சென்று சேர்ந்தேன். எனக்காக அவர்கள் பதிவு செய்தது குளிர்சாதன வசதியும்  படுக்கை வசதியும் கொண்ட பேருந்து. ஆனால் வாரம் மூன்று நாட்கள் மட்டுமே குளிர்சாதன பேருந்து இயக்கப்படுவதாக சொல்லிவிட்டார்கள். மடிவாலாவில் கமலாலயன் என்னுடன் இணைந்து கொண்டார்.  கோரமங்களா செயின்ட் ஜான்ஸ் கலையரங்கத்தில் நிகழ்வு நடந்தது. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்குமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  மல்லிப்புரம் ஜெகதீஷ் குமாருடன் அறையை பகிர்ந்து கொண்டேன். ஜெகதீஷ் சவரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த தெலுங்கு எழுத்தாளர். அவர்கள் ஓரிஸா, ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்கிறார்கள். பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரது மகள் ஆயுர்வேதம் பயில்வதாக சொன்னார். 


தமிழகத்திலிருந்து ஒரு பட்டாளமே வந்திருந்தது. எழுத்தாளர் கமலாலயன், கவிஞர் சுகிர்தராணி, நாவலாசிரியர் பா. கண்மணி, கவிஞர் சுஜாதா செல்வராஜ் ஆகியோரை முதன் முறையாகச் சந்தித்தேன். எழுத்தாளர் அபிலாஷும் பல்லவியும் இரண்டு நாட்கள் வந்திருந்தார்கள். பெங்களூரில் வசிக்கும் யாத்ரா நீலா எனும் பெயரில் எழுதி வரும் மனோஜ், நண்பர் ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா ஆகியோருடன் கொஞ்சம் உரையாட முடிந்தது. ஸ்டாலின் ராஜாங்கம் பல நாட்களாக கேட்டு துரத்திக் கொண்டிருந்த புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தார். நாவலுக்கு வேண்டிய சில ஆவணங்கள் குறித்து அண்ணனுடன் உரையாடினேன். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யும் ஜனனி கண்ணன், சியாமளா, ராதிகா, ப்ரியம்வதா, சுசித்ரா, ஐஸ்வர்யா  ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஏறத்தாழ ஒரு இயக்கம் போல தமிழ் ஆக்கங்கள் ஆங்கிலத்தில் சென்றடையும் காலம் வெகு தொலைவில் இல்லை எனும் நம்பிக்கை ஏற்பட்டது. ஜனனியும் ராதிகாவும் தொழில்முறை ஆர்க்கிடெக்டுகள். ஐஸ்வர்யா கல்லூரி பேராசிரியர் என்பதால் வண்டி வைத்து முப்பது மாணவர்களை அரங்கிற்கு அழைத்து வந்திருந்தார். சுசித்ரா விஞ்ஞானி, பிரியம்வதா பட்டய கணக்காளர். வெவ்வேறு தொழில் பின்புலம் கொண்டவர்கள் மொழியாக்கத்தை ஈடுபாட்டுடன்  செய்து வருகிறார்கள். எழுத்தாளர் சர்வோத்தமன் வந்திருந்தார். பிள்ளை வளர்ப்பு சார்ந்த பிலாக்கணங்களை பகிர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிக் கொண்டோம். மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பியுடன் அவர் மொழியாக்கம் செய்த ‘ஓடை’ நாவல் குறித்து பேசினேன். அண்மையில் வாசித்த சிறந்த நாவல்களில் ஒன்று. பைரப்பாவின் ‘வம்ச விருக்ஷம்’ ஜீரோ டிகிரி வெளியீடாக வந்துள்ளது. பணி ஓய்வுக்கு பின் மொழியாக்கம் செய்யத் தொடங்கி பத்தாண்டுகளுக்குள் ஐம்பத்தி மூன்று நூல்கள் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்குமாக செய்திருக்கிறார். இது ஐயமின்றி ஒரு சாதனை. இப்போது சொந்தமாக நாவல் எழுத விரும்புவதால் மொழியாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார். தீபு ஹரி, எம். கோபாலகிருஷ்ணன், கார்த்திக், சு. வேணுகோபால், கயல் ஆகியோருடன் அமர்ந்து தமிழில் நடக்கும் இலக்கிய போட்டிகள் பற்றி ஒரு விவாதம் நடந்தது. தமிழ் சினிமாவில் நீதிபதியாக நடிக்கத்  தொடங்கினால் சாகும்வரை அதே பாத்திரம்தான். அந்த நிலைமை சு. வேணுகோபாலுக்கு ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் ஏற்பட்டது. அத்தனை போட்டிகளுக்கு நடுவராக உள்ளார்.‌ நண்பர் ‘பாகேஸ்ரீ’ எஸ். சுரேஷ் இந்துஸ்தானி இசையை பின்புலமாக கொண்ட ‘கரானா. எனும்  நேரடி ஆங்கில நாவலை எழுதியுள்ளார். இந்நாவல் எழுதும்போது இதன் வடிவம் சார்ந்து சிலமுறை உரையாடியிருக்கிறேன். கீதா ராமசாமியின் ‘ஹைதராபாத் புக் ட்ரஸ்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பிரதியை கீதாவிடமிருந்து பெற்றுக்கொண்டேன். எஸ். சுரேஷ் முதல்நாள் வந்திருந்தார். சாகித்திய அகாதமியில் முக்கிய பங்காற்றும் நண்பர் ராஜ்மோகன் அவர்களை இரண்டாம் நாள் மதியம் சந்தித்தேன். பெரிதாக உரையாட முடியவில்லை. கனிஷ்கா குப்தா, கண்ணன், பெருமாள் முருகன் ஆகியோருடன் கொஞ்ச நேரம் பேசினேன். நண்பர்கள் கார்த்திக்,  சுரேஷ் பிரதீப், காளி, ஜீவா, இரம்யா. சாம்ராஜ் ஆகியோருடன் நிறையவே பேச முடிந்தது. சேர்ந்து அமர்வுகளுக்கு சென்றோம். எழுத்தாளர் விஷால் ராஜா, ஓவியர் ஏ.வி. மணிகண்டன், கிருஷ்ணபிரபா ஆகியோர் வந்திருந்தனர். என்னுடன் யுவ புரஸ்கார் வாங்கிய கன்னட எழுத்தாளர் பத்மநாப பட், பல ஆண்டுகளுக்கு முன்  சந்தித்த கன்னட எழுத்தாளர் விக்ரம ஹத்வாரா ஆகியோரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மும்பை கேட்வே இலக்கிய விழாவில் என் அறைத் தோழராக இருந்த வேம்பள்ளி ஷெரீபும் வந்திருந்தார். ஷெரீப் ‘ஜும்மா’ என்றொரு சிறுகதை தொகுதி எழுதியுள்ளார். ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர். இப்போது பத்திரிக்கையாளராக பணியாற்றுகிறார். இஸ்லாத்தின் உள்ளூர் பண்பாட்டு வேர்களைப் பற்றி பேசுவதால் ஜாகிர்ராஜாவுடன் ஒப்பிடத்தக்க எழுத்தாளர் என புரிந்துகொண்டேன். ஜீரோ டிகிரி ராம்ஜியுடன் ஆங்கில பதிப்பு சூழல் குறித்து உரையாடினோம். நம்பிக்கை தருவதாக ஏதுமில்லை. நம் பணி எழுதுவதே என்பதை நினைத்துக்கொண்டேன். 

       

‘புக் பிரம்மா’ நிகழ்வின் முதன்மை அனுபவம் என அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்த்துக்கலைகளைச் சொல்லலாம். முதல் நாள் மானஸி சுதிர் குழுவினர் கன்னட கவிதைகளை நடித்தும் பாடியும் காட்டினார்கள். தென்னக மொழிகளில் கன்னடமே கவனிக்கச் சிரமமாக உள்ளது என்பதை கண்டு கொண்டேன். எனினும் இசையும் நடிப்பும் சிறப்பாக இருந்தது. கன்னடத்திலும் மராத்தியிலும் வலுவான நவீன நாடக மரபு உண்டு. நடிகர் பிரகாஷ் ராஜ் நிர்திகந்தா எனும் நாடகப் பள்ளியை மைசூரில் நடத்தி வருகிறார். டாக்டர் ஸ்ரீபாத் பட் கவிதைகளுக்கு இசையமைத்து அரங்கேற்றினார். முதல்நாள் டாக்டர் பட் இன்னொரு குழுவினரைக் கொண்டு வசன கவிதைகள், கன்னட இலக்கியத்தின் வெவ்வேறு காலகட்டத்தின் கவிதைகளை ‘கன்னட காவிய காஞ்சா’ எனும் நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டினர். அதில் பாடிய பெண்ணின் குரல் அணன்யா பட்டின் குரலையும் வீச்சையும் நினைவுப்படுத்தியது. ‘பரா பரா பரா பிரம்மராக்ஷசா’ எனும் கோரஸ் குரல் இப்போதும் மனதில் உள்ளது. நானும் கார்த்திக் பாலசுப்பிரமணியனும் நிகழ்த்துக்கலை எவற்றையும் தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். கடைசி நாள் மதியம் பரதநாட்டியம் மட்டும் தவறவிட்டோம். 


இரண்டாம் நாள் சுரேஷ் பிரதீப்பும் இணைந்து கொண்டார். இரண்டாம் நாள் காலை பிந்து மாலினியின் இசை நிகழ்ச்சி. தன்னை உஸ்தாத் ரஷீத்கானின் சீடர் எனக் கூறினார். அவரது கணவர் தான் பாடகர் வாசு தீக்ஷித் என  அறிந்துகொண்டேன். வாசு பாடிய ‘ராகி தந்திரா’ எனக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று. வெவ்வேறு மொழிகளில் இருந்து இசைத்தார். ‘அருவி’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாரதியின் ‘பகைவனுக்கருள்வாய் நன் நெஞ்சே’ பாடலை நான் இதுவரை கேட்டிராத புதிய மெட்டில் பாடினார். 


உள்ள நிறைவிலோர் 

கள்ளம் புகுந்திடில்

உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே

தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்

சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே! 


வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது

வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற

சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே!

தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!

அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்

அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! 



இவ்வரிகளை அவர் பாட கேட்ட போது வெளியே இருக்கும் பகைவர்களை விட உள்ளே இருக்கும் பகைவனை அருள்வழி மீட்க கோருகிறார் பாரதி எனப் புரிந்துகொண்டேன். அத்வைத  வேதாந்தியாக பாரதியின் பாடலை இப்படியும் பொருள் கொள்ள இடமுண்டு. தனது இழிவுகளை கருணையுடன் அணுகுவது அத்தனை எளிதல்ல. நிகழ்வு முடிந்ததும் அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசினோம். பெங்களூரிலும் சென்னையிலுமாக இருப்பதாக சொன்னார். முன்னரே மொழிபெயர்ப்பாளர் செங்கதிரின் கபீர் கவிதை வெளியீட்டு விழாவில் இவர் முழுக்க முழுக்க கபீர் பாடல்களை பாடியதாக எம். கோபாலகிருஷ்ணன் நினைவுகூர்ந்தார். ஏகதாரா போன்ற ஒரு தந்தி வாத்தியத்தை மீட்டியபடி வேறெந்த பக்கவாத்தியங்களும் இல்லாமல் அபாரமாக பாடினார். மதியம் கிடார், பாஸ் கிடார், டிரம்ஸுடன் ஒரு கவிதை நிகழ்த்துக்கலை அரங்கை நிர்திகந்தா வழங்கினார்கள். மூன்றாம் நாள் பிரகாஷ்ராஜ் இதே குழுவினருடன் கவிதை வாசிப்பு ஒன்றை நிகழ்த்தினார். தமிழில் இருந்து ஆதவன் தீட்சன்யா, முகுந்த நாகராஜன், விடுதலை சிகப்பி ஆகியோரின் கவிதைகளை அவருக்கே உரிய முறையில் வாசித்தும் நடித்தும் காட்டினார். அதே பேசு பொருள் உள்ள வெவ்வேறு மொழிக் கவிதைகளை கோர்த்து ஒன்றாக்கி வழங்கிய முறை சிறப்பாக இருந்தது. இத்தகைய நான்கு மொழி திருவிழாவிற்கு அவர் சரியான பிரதிநிதியும் கூட. ‘நீங்கள் ஏன் அரசியல் இல்லாமல் எழுதக்கூடாது’ எனும் கவிதை, பிரெக்டின் ‘பிரமிடுகளை யார் கட்டியது?’ ஆகிய‌ கவிதைகள் வாசிக்கப்பட்டன.  ஸ்ரீ ஸ்ரீயின் தெலுங்கு கவிதையை ஆவேசமாக வாசித்த போது  புல்லரித்தது. போராட்ட கவிதைகளும் அரசியல் கவிதைகளும் இயல்பிலேயே நிகழ்த்துக்கலைக்கு அணுக்கமாக உள்ளதாக  தோன்றியது. தமிழைப் பொறுத்தவரை ரவி சுப்பிரமணியம் சில கவிதைகளுக்கு ராகங்களின் அடிப்படையில் இசையமைத்துள்ளார். கூத்துப்பட்டறை சில கவிதைகளை நடித்திருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டேன். மேற்சொன்ன பாணியிலான நவீன இசையமைப்பை முயன்று பார்க்கலாம் எனத் தோன்றியது. எல்லா கவிதைகளுக்கும் இசையமைக்க முடியாது. ஆத்மாநாம் கவிதைகளை ஜாஸ் இசைப் பாணியில் கேட்டால் சிறப்பாக இருக்கும் எனும் எண்ணம் தோன்றியது. இரண்டாம் நாள் மாலை ஆர். கே. பத்மநாபா அவர்களின் கர்நாடக இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புரந்தரதாஸர், பாபநாசம் சிவன், தியாகராஜரின் பாடல்களை பாடினார். மயில், குதிரை, மணியோசை என வெவ்வேறு தானங்களை பாடிக்காட்டினார். கலையின் ஊற்று இயற்கையை நகலெடுப்பது தானோ எனும் கேள்வி எழுந்தது. மூன்றாம் நாள் காலையில் பண்டிட் வெங்கடேஷ் குமாரின் இந்துஸ்தானி கச்சேரி சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடந்தது. இந்த இலக்கிய விழாவின் சிகர அனுபவம் இதுதான். ஆயிரம்பேர் கொள்ளளவு கொண்ட கலையரங்கம் முழுமையாக நிரம்பியிருந்தது. மியாங் கி தோடியையும், ஜான்பூரி ராகத்தையும் விரிவாகப் பாடினார். அக்கா கேளவ்வா எனும் அக்கம்மாதேவி பாடல் நாட்டுப்புற மெட்டில் பாடியபோது மொத்த அரங்கமும் ஆட்கொள்ளப்பட்டது. ‘அக்கா கேளவ்வா மன்சூர் பாடி பிரபலப்படுத்தியது. கொல்கத்தா சென்றபோது அங்கே இந்த பாடலை பாடச்சொல்லி கேட்டார்கள். இசைக்கு மொழி கிடையாது’ என்றார்.‌ வெங்கடேஷ்குமாரை இணையத்தில் நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் நேரில் கேட்கும் அனுபவம் என்பது முற்றிலும் வேறு என்பதை உணர்ந்து கொண்டேன். இதுவே நான் நேரில் கேட்கும் முதல் இந்துஸ்தானி கச்சேரி. எங்கெங்கோ அழைத்துச் சென்றது. பாடும்போது வெங்கடேஷ் குமாரின் கை அடவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அவை நடனம் போல இருந்தன. அல்லது அவருடலே மீட்டப்படுவதான எண்ணம் ஏற்பட்டது. நேரில் இசை கேட்கும்போதெல்லாம் நாம் எத்தனைச் சிறியவர்கள் எனும் உணர்வு எப்போதும் ஏற்படும். அப்போது, அங்கே, நாளையற்று நிகழும் இசை எழுத்தை விட மேலானது என தோன்றும். இசையின் தற்காலிகத்தன்மையே அதை அரிதாக ஆக்குகிறது. 



இறுதி நாள் மாலையில் யக்ஷகானம் நடந்தது. கெரெமனே சிவானந்த ஹெக்டே குழுவினர் வழங்கினார்கள். யக்ஷகானமும் கதகளியும் செவ்வியலும் நாட்டார் தன்மையும் கச்சிதமாக முயங்கிய வடிவம் என்றார் ஜெயமோகன். கதகளியை இணையத்தில் பார்க்க முயற்சித்துள்ளேன். நிகழ்த்துக்கலைகள் நேரில் பார்க்காமல் ருசிக்காது. நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கே உரிய பெரும் வீச்சுடைய குரலில் பாடினார்கள். ராமன், இலட்சுமணன், சீதை தண்டகாரண்யத்தில் குடிலமைத்து வசிக்கும்போது சூர்ப்பணகை ராமனை காமுறுகிறாள். அவன் மறுத்து இலட்சுமணனிடம் அனுப்புகிறான்‌ அவன் கோபப்பட்டு மூக்கை அறுத்துவிடுகிறான். இதுதான் நாடகம். இராமனுக்கும் சீதைக்குமான உரையாடலும் இராமனுக்கும் சூர்ப்பனகைக்குமான உரையாடல்களும் எள்ளல் நிறைந்ததாக இருந்தது. அரக்கியாகவும் அழகியாகவும் வரும் சூர்ப்பணகை பார்வையாளரின் பாராட்டைப் பெற்றார். அரக்கி சூர்ப்பணகையின் நடிப்பை கவனித்தபோது தான் ரஜினியின் வில்லன் நடிப்பு எங்கே வேர்கொண்டுள்ளது என்பதை கவனிக்க முடிந்தத. ரஜினி இளமையில் யக்ஷகானத்தில் நடித்திருக்கிறார். சூர்ப்பனகையின் அட்டகாச சிரிப்பும் நடையும் ரஜினியை எனக்கு நினைவுபடுத்தியது.


 இந்திய அழகியல் பற்றி சொல்லும்போது செவ்வியலுக்குள்  நாட்டார் தன்மையும் நாட்டார் தன்மைக்குள் செவ்வியலும் முயங்கி இருக்க வேண்டும் என்றார். இந்நாடகத்தில் ராமனின் தங்க கிரீடத்தின் உச்சியில் நான்கு மயிற்பீலிகள் இருந்தன. சூர்ப்பனகையின் கிரீடம் முழுக்கவே மயிற்பீலிகளால் ஆனதாக இருந்தது. தங்க மகுடம் செவ்வியல் என்றால் மயிற்பீலி நாட்டார். கண்ணன் சூடும் ஒற்றை மயிற்பீலி அவனை பித்தனாகக் காட்டுகிறது. சமநிலையில் கொஞ்சம் பித்தை அணிந்தவன். யக்ஷ கானத்தைக் காணும் போது வேறு சில எண்ணங்களும் தோன்றியது. சீதை மட்டுமே ராட்சசர்களின் குரல்களை கேட்கிறாள். அஞ்சி அபயம் வேண்டுகிறாள். மொத்த நாடகத்திலும் அசுவாரசியமான பாத்திர வார்ப்பாக உள்ளவள் சீதைதான். ராமனிடம் அபயம் வேண்டும் பேதை . அவ்வளவுதான் அவள் பங்கு. நேர்மாறாக சூர்ப்பணகை கட்டற்றவள். பசியும் வேட்கையும் கொண்டவள். இந்த நாடகத்தில் சூர்ப்பணகையை சீதையின் மாற்று ஆளுமையாக உளவியல் கோணத்தில் காண இடமுள்ளதாக தோன்றியது. சூர்ப்பனகையின் வருகையை சீதையே முன் உணர்கிறாள். சூர்ப்பணகை வந்தபிறகு அவளின் முன் எதையுமே பேசவில்லை. இது பல சாத்தியங்களை கிளர்த்தியது.  அழகியாக மாறிய சூர்ப்பணகை ஏறத்தாழ சீதையின் அதேவிதமான ஆடை அணிகளை அணிகிறார்.  ‘தி.ஜாவின் கதையுலகில் அத்தனை குலபெண்டிருக்குள்ளும் பரத்தையர் இருக்கிறார்கள். ஜி. நாகராஜன் கதையுலகில் அத்தனை பரத்தையரிலும் குலப்பெண்டிர் உள்ளார்கள் என்பதே  என் அவதானிப்பு’ என யுவன் சந்திரசேகர் கூறியது நினைவுக்கு வருகிறது. குரல் கேட்பது, சமூக பொதுவரையறைக்கு பொருந்தாத இச்சைகளையும் நடத்தைகளையும் வெளிப்படுத்துவது ஆகியவை பிளவாளுமையில் முக்கியமான அறிகுறிகள். இந்திய ஆழ்மனதில் இந்த குலப்பெண்டிர் பரத்தையர் இருமை இன்றுவரை வெளிப்படுவதாக தோன்றியது.  சினிமாக்களில் நாணமுடைய பாந்தமான நாயகி கனவுகளில் கவர்ச்சி நடனம் புரிவார். தெலுங்கு சினிமாக்களில் இரண்டு நாயகிகள் உள்ள திரைப்படங்கள் அண்மைய காலம் வரை உண்டு. படையப்பா நீலாம்பரி சூர்ப்பனகை என்றால் சவுந்தர்யா சீதை. சூர்ப்பணகையை சீதையின் இன்னொரு சாத்தியம் என வாசித்தால் புனைவாக வேறொரு கோணத்தில் ராமாயணத்தை எழுத முடியும் எனத் தோன்றியது. 




போபால், சிம்லா, சிங்கப்பூர், டெல்லி என பல்வேறு இலக்கிய விழாக்களில் பங்கேற்றிருக்கிறேன். வெளியிடங்களில் வேற்று மொழி அரங்குகளுக்கு செல்வதே வாடிக்கை. பிற மொழிகளில் என்ன நிகழ்கிறது என்பதை கவனிப்பேன். இது ஒரு கற்றல் அனுபவம் என்பதால் அமர்வுகளைத் தவிர்த்துவிட்டு ஊர் சுற்றவதில் எனக்கு பெரிய நாட்டமிருப்பதில்லை. பல்வேறு மொழியினருடன் உரையாடுவதும் அவர்கள் மொழியில் என்ன நிகழ்கிறது என்பதையும் அரைகுறை இந்தியையும் ஆங்கிலத்தையும் கொண்டு புரிந்துகொள்ள முயற்சிப்பேன். இத்தகைய கூடுகைகளில் சந்திப்பவர்களுடனான உறவை  தொடர்ந்து பேணும் தெம்பு எனக்கு பொதுவாக கிடையாது. மீண்டும் சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வோம். தமிழைப் பொருத்தவரை காளிப்ரஸாத், இரம்யா, கயல், சுரேஷ் பிரதீப் பங்கேற்ற மொழியாக்க அமர்விலும், ஸ்டாலின் ராஜாங்கம், சுகிர்தாராணி, கமலாலயன் பங்கேற்ற தலித் இலக்கியம் தொடர்பான அமர்விலும் பார்வையாளராக பங்கேற்றேன். மொத்தமே 50 நிமிடங்கள் என்பதால் கேள்வி பதில்களுக்கு நேரமில்லை. எங்கள் அமர்வில் இயக்குனர் வசந்தும் பிரகாஷ்ராஜும் பார்வையாளர்களாக பங்கேற்றார்கள். 


‘இந்திய பதிப்புத்துறை நிலவரம்’ பற்றிய அரங்கில் காலச்சுவடு கண்ணன், வசுதேந்திரா, கீதா ராமசாமி. டி சி புக்ஸ் ரவி ஆகியோர் பங்கு கொண்ட அமர்வில் ஒவ்வொரு மொழியிலும் பாதிப்பு நிலவரம் பற்றி பேசப்பட்டது. இளையவர்கள் புத்தங்கள் படிப்பதில்லை என எவரேனும் சொல்லிவிட்டால் அவர்களுக்கு வயதாகிவிட்டது இளையவர்களுடன் தொடர்பில் இல்லாமல் உள்ளார்கள் என்றாகிறது என்றார் கண்ணன். இந்த உரையாடலில் மலையாள சூழலைப் பற்றி டிசி ரவி பேசியவை வியப்பையும் நம்பிக்கையையும் அளிப்பவை. கொரோனா காலத்தில் புத்தக விற்பனையை தக்கவைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட நூதன முயற்சிகளை பற்றி சொன்னார். ஸ்விக்கியுடன் ஒப்பந்தம் செய்து உணவுடன் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. புத்தகங்களை ‘அத்தியாவசிய  பொருட்களாக’கேரள அரசு கருதியது என்றார். புத்தகக் கடை, சலூன், வொர்க்ஷாப் ஆகியவை திறந்திருந்தபோது அவை சட்டத்திற்கு புறம்பானவை என மத்தியிலிருந்து அறிவுறுத்தல் வந்தபோது சலூனும் பணிமனையும் மூடப்படுகின்றன. கேரளத்தின் வாசிப்பு பண்பாடு சார்ந்து நமக்கு சிலவற்றை முக்கியமாக உணர்த்துகிறது. ‘இன்றைய மலையாள நாவல்கள்’ அமர்வில் சுபாஷ் சந்திரன் பேசினார். உலகளாவிய கருப்பொருட்கள் மலையாள நாவல்களில் பேசப்படுவதை கூறினார்கள். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு பல படைப்புகள் வந்துள்ளன, பதிலுக்கு இங்கிருந்து மலையாளத்திற்கு படைப்புகள் போகவில்லையே எனும் கேள்விக்கு ‘தமிழே மலையாளத்தின் வேர். ஆனால் தமிழிலிருந்து துண்டித்துக்கொள்ள மலையாள கருத்துலகம் விழைகிறது. அது பிழையானது.’ என்றார் சுபாஷ். கன்னட சிறுகதை விவாத அரங்கில் எங்களால் உரையாடலை  கவனிப்பது சிரமமாக இருந்தது. துளு, கொடவா, கொங்கணி, பியரி மொழி பற்றிய அரங்கிற்கு சென்றேன். சற்று உன்னிப்பாக கவனித்தால் தோராயமாக உரையாடலை புரிந்துகொள்ள முடிந்தது. ‘தெலுங்கில் பெண்களின் சுயசரிதை’ பற்றிய அமர்வு சுவாரசியமாக இருந்தது. மிருணாளினி, காத்யாயனி வித்மஹே, மல்லேஸ்வரி, ஜோதி ஆகியோர் பங்கேற்றார்கள். நல்ல தயாரிப்புடன் செறிவாக இருந்தது. தெலுங்கு இலக்கியத்தை பற்றிய பொது பார்வையை இந்த புக் ப்ரம்மா இலக்கிய விழா மாற்றியுள்ளது. தன்வரலாறில் பெண்கள் எந்த அளவு தணிக்கை செய்துகொள்கிறார்கள், துணிச்சலான  சித்தரிப்புகள் எழுதப்படுவதாலேயே ஒரு நூல் சிறந்ததாக ஆகுமா போன்ற கேள்விகள் விவாதிக்கப்பட்டன. கணவர்களை பற்றி பெண்கள் எழுதும் நினைவு குறிப்புகளில் வரிகளுக்கு இடையே வாசிக்க இடமுண்டு என சில உதாரணங்களை காட்டினார்கள். ‘தெலுங்கில் உள்ள விளிம்புநிலை குரல்கள்’ அமர்வில் ஜெகதீஷ் குமார், ஷெரிப் மற்றும் கோகு ஷ்யாமளா பங்கேற்றார்கள். அண்மையில்  தெலுங்கு எழுத்தாளர் ரமேஷ் நாயக் அமர்வை நடத்தினார். ரமேஷ் நம்பிக்கையூட்டும் கவி.  பழங்குடி இனத்தை சேர்ந்த தெலுங்கு கவிஞர். சீரிய அழகியல் நோக்கும் அரசியல் புரிதலும் கொண்டவர். வருங்காலத்தில் பெரிதாக பேசப்படுவார் என  நம்புகிறேன்.மலைப்பகுதியில் மருந்துகள் வந்து சேர்வதற்கு முன்னர் மது புட்டிகள் வந்துவிட்டன என தனது அங்கலாய்ப்பை பதிவுசெய்தார். தன்  மண்ணையும் மக்களையும் எழுதுவதே தன் கடைமை என்றார். ஜெயமோகனின் அறம் ‘நெம்மி நீலம்’ எனும் தலைப்பில் அவினேனி பாஸ்கர் மொழியாக்கத்தில் சாயா  பதிப்பகத்தால் தெலுங்கில் வெளியிடப்பட்டது. விவேக் ஷான்பாக், வசுதேந்திரா, மிருணாளினி பேசினார்கள்.  எதிர்பாராத அளவிற்கு தெலுங்கில் இந்த தொகுப்பு வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் எப்போதும் அவரை சூழ்ந்து உரையாடினர். வெளியீட்டிற்கு கொண்டுவந்திருந்த ஐம்பது பிரதிகளும் விற்றுப்போயின என்றார் பாஸ்கர்.    


தொடக்கவிழாவில் ஹெச்.எஸ். ஷிவப்ரகாஷ், விவேக் ஷான்பேக், ஜெயமோகன், வோல்கா ஆகியோர் பங்கேற்ற அமர்வில் சுருக்கமாக தமிழில் நிகழும் இரு போக்குகள் குறித்து ஜெயமோகன் பேசினார். அவரது அவதானிப்பையொட்டி மறுநாள் சிறுகதை அரங்கில் பேசினோம். இக்காலகட்டத்தின் முதன்மை சிக்கல் என்பது வெறுமை. ஆனால் அது எழுபது எண்பதுகளின் பற்றாக்குறையால் விளைந்த வெறுமையல்ல. மாறாக எல்லாவற்றின் மிகையால் விளைந்த வெறுமை. Problem of plenty. இந்த வெறுமையே இன்றைய காலத்தின் தத்துவ சிக்கல். அதை நேர்கொண்டு எழுதுவது ஒரு போக்கு என்றால் அங்கிருந்து ஆன்மிகமான நன்னம்பிக்கையும் லட்சியவாதத்தையும் நோக்கிச் செல்வது இன்னொரு போக்கு. விஷால்ராஜாவின் கதைகளை மானுடத்தின் மீதான நன்னம்பிக்கையை பேசும் கதைகள் என  சொல்லலாம். ரம்யா ஆண்டி சுப்பிரமணியம், பாலாமணி, இடா ஸ்கட்லர் போன்ற கதை மாந்தர்களைக்கொண்டு எழுதிய கதைகளை லட்சியவாத கதைகள் என சொல்லலாம். அஜிதனின் மைத்ரி, அல் கிஸா, மருபூமி போன்றவற்றை மேற்சொன்ன வரிசையில் வைக்க முடியாது. அவை சரத்சந்திரரின் வங்காள நாவல்களின் நவீன வடிவம் என சொல்லத் தோன்றுகிறது. கற்பனாவாதமென்பது எல்லா காலங்களிலும் இணையான மெல்லிய சரடாக உடன் பயணித்து வரும் போக்கு என்பதே என் பார்வை. பாலோ கொயெல்ஹோவின் ரசவாதி, ஜோனாத்தன் லிவிங்ஸ்டன் தி சீ கல் போன்றவை நவீனத்துவ காலகட்டத்தின் போது எழுதப்பட்டவைதான். அஜிதனின் இந்த நவ கற்பனாவாத கதைகளும் கூட ஏதோ ஒருவகையில் அந்த வெறுமையின் பள்ளத்தை  நிரப்பும் முயற்சிதான். அஜிதன் தனித்த பாதையில் செல்கிறார். அது ஒரு தனிப்போக்காக மாற வேண்டுமென்றால் அவரைப்போல மூன்று நான்கு பேர் எழுத வேண்டும். ஜெ முன்வைத்த வாழ்வின் தத்துவமற்ற வாழ்வின் நுன்மையை பேசும் அழகியல் தரப்புக்கு நான் சரியான பிரதிநிதியா எனும் ஐயம் எனக்குள்ளது.  


 ஜெயமோகனுக்கு புக் ப்ரம்மா வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது மிக மகிழ்ச்சியான தருணம். ஆனால் இந்த விருது அறிவிப்பை இத்தனை ரகசியமாக பேண வேண்டுமா என்பதை பரிசீலிக்க வேண்டும். சுசித்ராவுடன் ஒருமணிநேரம் ஆங்கிலத்தில் தங்குதடையின்றி உரையாடினார். இந்திய ஆங்கில இலக்கியத்தின் மேம்போக்கான தன்மை குறித்து பேசினார். ஜெ தன்னை செவ்வியல் மரபின் தொடர்ச்சியாகவே எப்போதும் முன்வைப்பவர். இம்மேடையில் தன்னை  Bard என்றே முன்வைத்தார். வாழ்க்கையை பாடும் கவி. அவரது கோணத்திலிருந்து காஃப்காவையும் காமுவையும் நிராகரிக்கும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் மனிதர்  என்பவர்  குழு என்பதிலிருந்து புத்தொளி காலகட்டத்தின் வழியாக பயணித்து தொழில் புரட்சியையும் முதலீயத்தையும் கடந்து தனது சுயத்தை கண்டடைந்துள்ளார். தனி மனிதர் எனும் கருத்தை வந்தடைய இத்தனை ஆயிரம் ஆண்டுகால பரிணாமத்தை கடந்து வரவேண்டியிருக்கிறது. ஆகவே தனி மனித பிரக்ஞையை அத்தனை எளிதில் விட்டுக்கொடுக்க முடியாது என்றே கருதுகிறேன். தனி சுயத்திற்குள் அடுக்குகளாக புதைந்திருக்கும் பொது சுயத்தை கண்டுகொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதையே ஜெயமோகன் பேசுகிறார் என்றும் எண்ணுகிறேன். துண்டிக்கப்பட்ட தனி சுயம் என ஏதுமில்லை என்பதே அவரது வாதம். அது உண்மையும் கூட. ஏதேனும் பேரழிவு ஏற்பட்டு சொற்ப மனிதர்கள் மட்டும் எஞ்சியிருந்தால் தனிமனித சுயத்தை விட்டுக்கொடுத்து பிழைத்திருக்கும் வழியை பார்க்கக்கூடும். தனி சுயம் பொது சுயம் இவ்விரு நிலைகளுக்கு இடையேயான சமன்பாடு முக்கியமானது. தனி மனிதர் எனும் கருத்தாக்கம் இருக்கும்வரை அவரை வழிநடத்தவும் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் அமைப்புகள் இருக்கும்வரை காப்காவும் காமுவும் இருப்பார்கள் என்றே நான் எண்ணுகிறேன். இந்திய அழகியல் பற்றிய உரையாடலின் போது அனந்தமூர்த்தி நல்ல எழுத்தாளர் ஆனால் அவரைவிட பைரப்பாவே சிறந்த எழுத்தாளர் என்றார். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அசோகமித்திரனை இந்தியத்தன்மை குறைந்த எழுத்தாளர் என சொன்னது எனக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தியத்த்ன்மையின் மிக முக்கியக்கூறு அதன் ‘உள்ளடக்கும் தன்மை’. இந்தியத்தன்மை என நாம் சொல்வதே பல்வேறு பண்பாட்டுக்களின் தாக்கத்தினால் தொடர்ந்து உருமாறும் பண்பாட்டைத்தான். நவீன இலக்கிய வடிவத்தை நாம் மேற்கத்திய இலக்கியத்திலிருந்து உரையாடி பெற்றுக்கொண்டோம். நமக்கான தனிவழிகளில் பயணிக்கிறோம். ஹெமிங்வேயோ, வுட்ஹவுசோ தமிழ் அகத்துடன் உரையாடி தமிழ் வாழ்க்கையை காணவும் எழுதவும் ஒரு கருவியாக ஆகிறார்கள் என்பதே உண்மை. அசோகமித்திரன் இந்திய ஆங்கில எழுத்தாளர் போல தனக்கு தெரியாத வாழ்க்கையை அந்நியமாக எழுதவில்லை. அவர் பார்த்த, புழங்கிய கீழ் நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் வாழ்வையே எழுதினார். ஜெ எப்படி தன்னை bard என பிரகடனப்படுத்துகிறாரோ அப்படி அசோகமித்திரன் சாமானிய மனிதர்களின் கதைகளை சொல்லும் bard. முன்னர் ஒரு நேர்காணலில் தனது கதைகள் சாமானியர்களுக்கான புகழஞ்சலி (tribute) என குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது. அவரும் இந்திய வாழ்க்கையை, இந்தியர்களின் வாழ்க்கையையே எழுதினார். ‘ஒற்றன்’ ‘18 ஆவது அட்சக்கோடு’ என நாவல்களில் பொதுவாக அவருடன் தொடர்புபடுத்தப்படும் கட்டுக்கோப்பை மீறி வெளிப்பட்ட தருணங்கள் உண்டு. ‘பிரயாணம்’ மாதிரியான மறைஞான கதைகளை எழுதியுள்ளார். அவரது அழகியல் நிலைப்பாடு அவரெழுதிய வாழ்க்கையின் நம்பகத்தன்மையை குலைக்காது. எனது பாதை என்பதை ஜெக்கும் அமிக்கும்  இடைப்பட்ட பாதையாக காண்கிறேன் என்பதால் என்னால் இருவரின் அழகியலையும் புறம் தள்ள முடியாது. 


வயிறை பதம்பார்க்காத எளிய உணவுகள், இனிமையான சூழல், நண்பர்கள், நல்ல நிகழ்ச்சிகள் என மூன்று நாட்கள் கடந்ததே தெரியவில்லை. தமிழ் அமர்வுகளை பாவண்ணன் ஒருங்கிணைத்துள்ளார். அழைக்கப்பட்டவர்கள் பற்றியும் விடுபட்டவர்கள் பற்றியும் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்ததை கவனித்தேன். சாகித்ய அகாடமியின் சில கூட்டங்களுக்கு சென்றவன் என்ற முறையில் தமிழ் நவீன இலக்கிய வெளிக்கு வெளியே தொடர்பே அற்று இருப்பவர்கள் பலரை கூட்டங்களில் சந்தித்து வியந்திருக்கிறேன். தமிழ் நவீன இலக்கிய வெளியில் இருந்து எவர் அழைக்கப்பட்டாலும் சரிதான் என்பதே என் நிலைப்பாடு. மொழியை, கருத்துக்களை சரியாக பிரதிநித படுத்துகிறாரா என்பது மட்டுமே கேள்வி.   அழைக்கப்பட்டவர்களில் எனக்கும் சிலரின் மீது விமர்சனங்கள் உண்டு. பொறுப்பாளராக என்னை நியமித்திருந்தால் நான் வேறு எழுத்தாளர்களை அழைத்திருப்பேன். இப்படி ஒவ்வொரு எழுத்தாளரும் சிலரை அழைக்கக்கூடும். இது நாற்பது ஆண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர் பாவண்ணனின் தேர்வு. அதற்கப்பால் விவாதிக்க ஏதுமில்லை. இலக்கிய கூடுகைகளுக்கு  கொஞ்ச நாட்களுக்கு ரத்தம் சூடாகி நாடி நரம்பு முறுக்குடன் இருக்கும். படிக்காமல் விட்ட தடித்தடி புத்தகங்கள் என்னை அழைக்கின்றன. பார்ப்போம்.  


  


  •