Reading view
கார்காலக் குறிப்புகள் - 91
கார்காலக் குறிப்புகள் - 80
கேள்விகளும் பதில்களும்
இரு மாதங்களுக்கு முன்பு கனடாவிலிருந்து
நண்பர் அகிலன் கேட்ட கேள்விகளும்
அவற்றுக்கு நான் அளித்த பதில்களும்
1. தனிநாயகம் அடிகளார் எழுதிய Nature in Ancient Tamil poetry என்னும் நூலை நிலஅமைப்பும் தமிழ்க் கவிதையும் என்ற பெயரில் மொழிபெயர்த் திருந்தீர்கள். அவர் இறந்து நீண்ட காலத்தின் பின் இவ்வரிய நூலை மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் என்ன? தனிநாயகம் அடிகளாரிடம் கல்வி கற்றதன் காரணமாக இம்மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டீர்களா?
முதலில் ஒரு யூகத்தைக் களைந்துவிடுகிறேன். நான் தனிநாயகம் அடிகளாரிடம் கல்வி கற்றவன் அல்ல. அதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனால் ஒரு வேடிக்கை தெரியுமா? நான் ஏழாம் வகுப்பு படித்தபோதே தனிநாயகம் அடிகளாரின் ஒன்றே உலகம் என்ற (பயண) நூலைப் பரிசாகப் பெற்றேன். அவரது பிற படைப்புகளையும் பின்னர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சியில்தான் நான் நீண்டகாலம்–32 ஆண்டுகள் (1975 முதல் 2007 வரை) கல்லூரிப் பேராசிரியனாகப் பணிபுரிந்தேன். அங்கு தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பை வைத்து நடத்திவருபவர் அருட்திரு. அமுதன் அடிகளார். அவர் தனிநாயகம் அடிகளோடு தொடர்புடையவர். அவர்தான் தனிநாயகம் அடிகளாரின் நூலை மொழிபெயர்த்துத் தருமாறு எனக்குக் கூறினார். அதனை நான் நிறைவேற்றினேன், அவ்வளவுதான்.
2. ரஷ்ய இலக்கியங்கள் தமிழகத்தில் மாத்திரமல்ல இலங்கையிலும் அதிக செல்வாக்குச் செலுத்தின. அத்தோடு தமிழில் ரஷ்ய உருவவாதம் குறித்து வெளிப்படையாக யாரும் பேசாத நிலையில் உங்களின் ‘ரஷ்ய வடிவ வியல்’ கட்டுரை ஈழத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் பழங்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்து பேசும் பலர் அண்மைக்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்து பேசப்படாமைக்கான காரணம் என்ன?
அண்மைக்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்துப் பேசாமைக்குக் காரணம், அதற்கான தேவையின்றிப் போனதுதான் என்று நினைக்கிறேன். (கலாச்சார மாற்றம்தான் அதற்கான தேவை). எங்கள் சிறுவயதில் டால்ஸ்டாய் ஒரு பெரிய ஆதரிசமாக இருந்தார். ஆனால் தாஸ்தாயேவ்ஸ்கி குறித்து அப்போது அதிகம் கேள்விப்பட்டதில்லை.
நான் அதிகமும் ஈடுபாடு கொண்ட துறை இலக்கியக் கொள்கை. இன்றைய இலக்கியக் கொள்கை பற்றிப் பேச முனையும் எவரும் வடிவஇயல் வாதங்களான அன்றைய மேற்கத்திய வடிவஇயலையும் (Western Formalism) ரஷ்ய வடிவஇயலையும் (Russian Formalism) குறித்துப் பேசாமல் இருக்க முடியாது அல்லவா? மேலும் பக்தின் போன்றோர் அறிமுகப்படுத்திய பலகுரல் தன்மை போன்றவை இன்றைய இலக்கிய அடிப்படைகளாக உள்ளன. பழங்கால ரஷ்ய இலக்கியத்தில் பூஷ்கின், டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி போன்ற பல ஆதரிசங்கள் இருந்தனர். அந்த அளவுக்குப் பின்னால்வந்த ரஷ்ய எழுத்தாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட நோக்கம் கருதி ரஷ்ய நாவல்களையும் படைப்புகளையும் மொழிபெயர்ப் பில் அளித்துவந்த என்சிபிஎச் போன்ற நிறுவனங்களும் அதை நிறுத்திக் கொண்டன என்பது முக்கியக் காரணம்.
3. தமிழவன், தி.சு.நடராசன், பிரம்மராஜனைப் போன்று கவிதை இலக்கியம் குறித்து தமிழகத்தில் ஆழ, அகலமாக எழுதியவர்களுள் நீங்களும் ஒருவர். தெலுங்கு கவிஞர் வரவர ராவினால் சிறையில் இருந்து எழுதப்பட்ட கடிதங்களை சிறைப்பட்ட கற்பனை என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருந்தீர்கள். ஆயினும் ஒப்பீட்டளவில் கவிதைகள் குறித்தான உங்களுடைய மொழிபெயர்ப்புகள் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?
இரண்டு காரணங்கள்: ஒன்று, எனக்கு அடையாளம் பதிப்பகத்திலிருந்து தான் மொழிபெயர்ப்புக்கான நூல்கள் கிடைத்தன. அடையாளம் சாதிக் உரைநடையில் ஆர்வம் காட்டியதுபோல கவிதையில் ஆர்வம் காட்டவில்லை என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் அவர் அளித்த நூல்களையே நான் மொழிபெயர்த்தேன்.
இரண்டாவது, அன்றைய இலக்கிய நண்பர்கள் சிலர், கவிதை மொழிபெயர்ப்பு மிகவும் கடினமானது, அதைச் செய்யவேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தினார்கள். (இது பிழையானதொரு கருத்து என்று தெரிந்தாலும், மாற்றிக்கொள்ளவில்லை.)
4. ஆங்கிலத்தைப் போன்று இந்தி மொழியிலும் புலமைத்துவம் கொண்டவர் நீங்கள். ஆயினும் இந்தியில் இருந்து ஒரு சிறந்த மொழிபெயர்ப்பை உங்களால் ஏன் தரமுடியவில்லை?
வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக நான் சந்தை நிலவரத்துக்குக் கட்டுப்பட்டு (அடையாளம், எதிர் போன்ற பதிப்பகங்களின் பார்வையில்) மொழிபெயர்ப்புகளைச் செய்தவன். அவர்கள் எனக்கு நல்ல இந்தி நூல்கள் எதையும் மொழிபெயர்ப்புக்கெனப் பரிந்துரை செய்ய வில்லை. மேலும் என் ஆங்கிலப் புலமை நாடறிந்த ஒன்று. (தமிழ் வகுப்பு களையே ஆங்கிலத்தில் நடத்துபவன் என்று அக்காலத்தில் பேசப்பட்டவன் நான்.) அதனால் இந்தியில் இருந்து மொழிபெயர்ப்பதில் அக்கறை காட்ட வில்லை. அத்துடன், ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியில் அதே அளவு சிறந்த இலக்கியங்கள் இருந்ததாக (இன்றும்!) எனக்குத் தோன்ற வில்லை.
5. ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகளாக நீங்கள் எதனைக் கருத்துகிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை, ஒன்றே ஒன்றுதான். நேர்மை. அதாவது எந்த விதத்திலும் மூலத்தின் கருத்துகளைப் பிறழ உணர்த்தலாகாது. அதற்கு அடுத்த நிலையில்தான் இலக்கிய அழகு, நடை போன்றவை வருகின்றன. அழகிற்காக, அலங்காரத்திற்காக, நடைக்காகக் கருத்துகளை மாற்றுபவனை மொழிபெயர்ப்பாளன் என்று கூற முடியாது. தழுவலாளன் என்று வைத்துக் கொள்ளலாம்.
6. ஈழத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாட்டின்போது உங்களால் மொழிபெயர்க்கப் பட்ட சாமுவேல் பி.ஹண்டிங்டனின் ‘நாகரிகங்களின் மோதல்’ என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது. உலக ஒழுங்கின் மறு ஆக்கமான நாகரிகங்களின் மோதல் குறித்துப் பேசும் இந்நூல் பனிப்போருக்குப் பின்னரான உலக அரசியல் நிலையை தமிழ் உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இந்நூலாக்கத்தின் போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவப் பகிர்வை கூறமுடியுமா?
அச்சமயத்தில் இருந்த மனநிலையை இப்போது என்னால் சொல்ல முடிய வில்லை. அதை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த ஒரே சந்தர்ப்பம், ஆனந்தவிகடன் பரிசளிப்பு விழாவின்போது. ஆனால் கருத்துரையாளர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மேடை என்பது ஜனரஞ்சகத்துக்கானது, கருத்துகளுக்கானதல்ல. என்னைப் பொறுத்தவரை என்றைக்குமே அமெரிக்காவின் (நாகரிகம் உள்ளிட்ட) ஆதிக்கக் கொள்கைகளுக்கு எதிரானவன். அதற்கு ஓரளவு இந்த நூல் உதவுமோ என்ற எண்ணம்தான் மொழிபெயர்ப்பின்போது எனக்கு இருந்தது. அவ்வாறில்லாமல் போய்விடக் கூடாதே என்ற அச்சமும் இருந்தது.
7. காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் போரினால் அலைக்கழிக்கப்பட்டு நொந்து நொடிந்து வாழும் மக்களின் இயல்பு வாழ்வை நுட்பமாக வரையும் சித்திரமே பஷரத் பீரின் ‘ஊரடங்கு இரவு’ இந்நூலை எச்சூழலில் மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டது?
அன்றல்ல, இன்றுவரை காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரானவன் நான். (இன்றைய பிரதமரின் நோக்கில் காஷ்மீர் துண்டாடப் பட்டு பிரிக்கப்பட்டது, காஷ்மீர்ப் “பண்டிதர்களை” வெளிப்படையாக ஆதரித்து அவர்களுக்காக முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற செயல்களையும் நான் ஆதரிக்கவில்லை. அதனால் திரு. கண்ணன் (காலச்சுவடு) ஊரடங்கு இரவு நூலை மொழிபெயர்க்கமுடியுமா என்று கேட்டபோது உடனே ஒப்புக் கொண்டேன்.
8. 1993இல் புக்கர் விருதைப் பெற்ற மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றே சல்மான் ரூஷ்தியின் நள்ளிரவின் குழந்தைகள். இந்தியா தன்னாட்சி நாடாக சுதந்திரமடைந்த நிலையில் நவீனத்துவத்துக்கும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் இடையில் போராடும் சலீம் சினாயின் வாழ்வைப் பிரதிபலித்ததே நள்ளிரவின் குழந்தைகள் நாவல். இந்நிலை இந்தியாவில் இன்னும் தொடர்வதாக நீங்கள் நம்புகிறீர்களா?
கண்டிப்பாக. நான் சிறுவயதில் (ஏறத்தாழ ஐம்பத்தாறு ஐம்பத்தேழு ஆண்டு களுக்கு முன்பு) வேலூருக்கு அருகிலுள்ள விரிஞ்சிபுரம் என்ற ஊரில் வாழ்ந்தேன். இன்றும்கூட அங்கு பஸ்நிலையத்துக்கு மேற்குப்புறம் முஸ்லிம்கள் குடியிருப்பு தனியாக இருப்பதைக் காணமுடியும் என்றே நினைக்கிறேன். மேலும் என் சொந்த ஊர் ஆர்க்காடு. அதற்கு அருகிலேயே விஷாரம் என்ற முஸ்லிம்களின் தனிக்குடியிருப்பு (ஊர்) இருந்தது. உயர்ந்த அடுக்கு மாளிகைகள், குறுகிய, நெருக்கமான தெருக்கள், அழகும் சுகாதாரமும் அற்ற சூழ்நிலைகள் என்பன அவர்களைத் தனியே பிரித்துக் காட்டின. அங்குள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை ஏறத்தாழ சலீம் சினாயின் அனுபவத்தை எனக்கு 1965 வாக்கிலேயே அளித்தது என்று கூறலாம். அக்காலத்தில் (1960-70) அந்த முஸ்லிம்களால் நமது (பொது இந்திய, தமிழக) வாழ்க்கையுடன் ஒட்ட முடியவில்லை என்றே உணர்ந்தேன்.
9. மாவோயிஸ்ட்கள் குறித்து தன் முன்னே நடந்த, தன்னைப் பாதித்த சம்பவங்களை மையமாகக் கொண்டு அருந்ததிராயால் எழுதப்பட்ட நூலே ‘புரோக்கன் ரிபப்ளிக்’. இதனை ‘நொறுங்கிய குடியரசு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருந்தீர்கள். இந்நூல் வெளிவந்து சில காலத்துக்குள்ளேயே விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிந்தேன். இந்நூலை மொழிபெயர்க்கும் போதே இந்நூல் அமோக வரவேற்பினை பெறும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்களா? இவ்வாறான சூழலில் பதிப்பகங்கள் உங்களுக்கு றோயல்டி தருகின்றதா?
பொதுவாக அருந்ததிராயின் எழுத்துத்திறனில் எனக்கு நம்பிக்கை அதிகம்.
அதனால் அந்த நூலை மொழிபெயர்த்தேன். அது நல்ல வரவேற்புப் பெறும் என்பதற்கான அறிகுறிகள் முன்னரே தெரிந்தன. ஆனாலும் காலச்சுவடு கண்ணன், அந்த நூலைப் பற்றிய அருந்ததி ராயுடனான விவாதங்களில் எனக்கு இடமளிக்காமல் வேறு எவ்வெருக்கோ வாய்ப்பளித்தார். (அதனால் ஏற்பட்ட கசப்பில் பிறகு அவருக்காக எந்த நூலையும் நான் மொழிபெயர்க்க வில்லை.)
கேரள ராயல்டி மரபு திரு. கண்ணனுக்கு நன்கு தெரியும் என்றாலும் அவர் அதைப் பின்பற்றவில்லை. பொதுவாக எனக்கு தமிழ்ப் பதிப்பாளர்கள் ராயல்டி தருவதில்லை. அந்த நூல்கள் வெளிவந்தவுடனே (அவர்கள் அளவில் தகுதியானது என்று நினைக்கின்ற, பல சமயங்களில் சிறிய) ஒரு தொகையினைத் தந்துவிடுவார்கள். அவ்வளவுதான். அதற்குப் பிறகு நூலுக்கும் நமக்கும் தொடர்பில்லை. கேரளாவில் முறையான ராயல்டி தரும் மரபு இருக்கிறது. அதைப்பற்றி அடையாளம் சாதிக்-உடன் விவாதித்தும் இருக்கிறேன். அங்கே நூல்கள் விற்பனை அதிகமாக உள்ளது, இங்கு தமிழ்ச் சூழலில் நூல்கள் விற்காதநிலை-தேக்கம்தான் உள்ளது என்று அவர் காரணம் சொல்வார்.
10. ‘டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள்’, ‘பேற்றுச்செவிலியர் கையேடு’ , ‘இணை மருத்துவம், மாற்றுமருத்துவம், உங்கள் உடல்நலம் ‘,‘தலைமுடி இழப்பு-மருத்துவம்’, ‘மூல வியாதி’, ‘ஐம்பது உடல்நலக் குறிப்புகள்’ என அதிகளவான மருத்துவநூல்களை மொழிபெயர்க்கும் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களை இலக்கிய வெளி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
பெரும்பாலும் நான் மொழிபெயர்க்கவேண்டிய நூல் எந்தத் துறையைச் சேர்ந்ததோ, அந்தத் துறையில் அடிப்படை நூல்களைப் படித்துவிடுவது எனது வழக்கம். அதனால் எனக்கு எந்தத் துறையிலும் மொழிபெயர்ப்பது எளிதாகவே இருந்தது. சிரமங்கள் என்று குறிப்பாக எதுவும் ஏற்பட்ட தில்லை. (இன்னும் இது பற்றிப் பேசவேண்டுமானால் விரிவான களம் வேண்டும்.) எனது மொழிபெயர்ப்பின் அடிப்படை, என் பரந்த படிப்பு. நான் படித்த துறைகள் மிகுதி. அநேகமாக கலையியல், மனிதவியல், அறிவியல் துறைகள் எல்லாவற்றிலும் எனக்குப் பரிச்சயம் உண்டு.
கலைச்சொல் உருவாக்கலில் பல சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதில் எனக்கு அக்காலக் கலைக்கதிர் பத்திரிகை, திரு. ஜி. ஆர். தாமோதரன் மேற்பார்வை யில் வெளிவந்த கலைச் சொல் உருவாக்க நூல்கள், மணவை முஸ்தபா வின் கூரியர் இதழ் போன்றவை ஊக்கமளித்தன. நானாகவும் நிறையச் சொற்களை மொழிபெயர்த்தேன். பொதுவாக, கலைச் சொல்லாக்கத் துறையில் எனக்கு முன்னர் இருந்தவர்கள் நல்ல பாதையை எனக்குச் செப்பனிட்டுத் தந்திருந்தார்கள் என்றே நினைக்கிறேன். குறிப்பான கலைச்சொல்லாக்கத்தைவிட, எடுத்துக் கொண்ட நூலின் கருத்து வாசகர்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதில்தான் எனது அக்கறை. தமிழ் பயின்றவன் என்பதைவிட அடிப்படையில் நான் ஓர் அறிவியல் மாணவன். பி.எஸ்சி இயற்பியல் எனது தலைமைப்பாடம். அதைப் படிக்கும்போதே விரிவாக அறிவியல்துறையில், குறிப்பாக மருத்துவத் துறையில் பல நூல்களையும் நான் படித்திருந்தேன்.
11. ‘கீழையியல் தத்துவம்’, ஸ்டீவ் புரூஷீன் ‘சமூகவியலின் அடிப்படைகள்’, ‘பின்நவீனத்துவம்’ ‘உலகமயமாக்கல்’, டிலான் இவான்சின் ‘உணர்வெழுச்சி ‘, டேவீட்எஃப் ஃபோர்டுவின் ‘இறையியல்’ என கோட்பாட்டு நூல்களை அதிகளவில் மொழிபெயர்த்து தந்த சிறந்த ஆளுமைகளில் நீங்களும் ஒருவர். இது தவிர கோட்பாட்டியல் சார்ந்து நிறையக் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து எழுதியுள்ளீர்கள்.அவ்வாறு மொழிபெயர்க்கும்போது சாதாரண தமிழில் பயின்று வராத சொற்களைத் தமிழ்ப்படுத்த வேண்டிய சூழல் உங்களுக்கு ஏற்படும். அவ்வாறு உங்களால் உருவாக்கப்பட்டு இன்று தமிழில் வழக்கத்தில் உள்ள கலைச்சொற்கள் குறித்து உங்கள் அனுபவப் பகிர்வுகளை எம்மோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? அடையாளம் பதிப்பகத்துக்காகவே இந்நூல்களை அதிகம் மொழிபெயர்த்திருந்தீர்கள் இது எதனால் விளைந்தது?
அடையாளம் பதிப்பத்துடனான என் தொடர்பு ஏறத்தாழ 2006இல் ஏற்பட்டது. முதன்முதலில் அவர் உலகமயமாக்கல் நூலை மொழிபெயர்த்துத் தர முடியுமா என்று கேட்டார். நான் இசைந்து மொழிபெயர்ப்புச் செய்தேன். அதிலிருந்து பல்வேறு துறைகளிலும் எனது மொழிபெயர்ப்புகள் அடையாளம் பதிப்பகத்துக்காகத் தொடங்கின. அடையாளம் பதிப்பகத்துடனான என் தொடர்பு, என் மொழிபெயர்ப்பு, கலைச்சொல் லாக்கப் பாதையில் ஒரு மைல்கல். பின்னர் சில நூல்களை எதிர் வெளியீட்டிற்காகவும் மொழிபெயர்த்தேன்.
முதன்முதலில் குளோபலைசேஷன் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்துவதி லேயே ஒரு சிக்கல்- இதை உலகமயமாதல் என்பதா, உலகமயமாக்கல் என்பதா? “குளோபலைஸ்” என்ற சொல்லை ஆராயும்போது அது வேண்டு மென்றே (சிலரால்) செய்யப்படும் முன்னெடுப்பைத்தான் காட்டுகிறது. தானாக எதுவும் ‘குளோபலைஸ்’ ஆக முடியாது. எனவே உலகமயமாதல் என்பதைவிட உலகமயமாக்கல் என்பதே பொருத்தமாக இருக்கமுடியும். அதேபோல வெப்பமயமாதலா, வெப்பமயமாக்கலா? இம்மாதிரிச் சிறு சொற்கள் தொடங்கி, மிகத் துல்லியமான கலைச் சொற்களை உருவாக்குவது வரை பல நிலைகளில் சந்தேகங்கள் ஏற்படும். அவற்றை விரிவாக ஒரு நூலாகத் தான் எழுத முடியும்.
முதன்முதலில் நான் ஸ்ட்ரக்சுரலிசம் நூலைத் தமிழில் அளித்தபோதே (1990) நிறையக் கலைச் சொற்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த நூலிலேயே நூற்றுக்கணக்கான கலைச் சொற்களை நான் உருவாக்கியிருப்பதை நீங்கள் காண முடியும். தமிழவன் எந்தச் சிரமமும் படாமல் ஸ்ட(?)ரக்சுரலிசம் என்றே தன் நூலுக்குப் பெயரிட்டிருந்தார். நான் (பொருள் அடிப்படையில்) அமைப்புமையவாதம் என்று அதைக் கையாண்டி ருந்தேன். பிறகு அச்சொல் அமைப்புவாதமாகி, இன்று அமைப்பியம் என்ற சொல்லாகியிருக்கிறது. இதிலிருந்தே, நான் பொருளை உணர்ந்து அதற் கேற்பச் சொல்லை உருவாக்குபவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இனிமேல்தான் நான் எந்தஎந்தச் சூழ்நிலையில் எந்தெந்தக் கலைச்சொற் களை என் நூல்களில் உருவாக்கியுள்ளேன் என்பதை ஆராய வேண்டும். இதை நானே செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை.
முதன்முதலில் அமைப்புமைய வாதம், தொடர்பியல் கோட்பாடுகள் என்ற நூல்களை 1990இல் எழுதிய போதே கலைச்சொல் உருவாக்க முயற்சிகள் என்னிடம் தோன்றிவிட்டன. எவ்வளவு கலைச் சொற்களை நான் உருவாக் கியிருக்கிறேன், அது பற்றிய முறையான எனது நோக்கு என்ன என்பதைத் தனியாகத்தான் ஆராய வேண்டும்.
(வேறு செல்வாக்கு மிகுந்த ஆளாக இருந்தால் இதை ஆய்வு மாணவர்கள் இந்நேரம் செய்திருப்பார்கள்!)
பெரும்பாலும் எனது உள்ளுணர்வையும் என் அடிப்படையான அறிவுசார் நோக்கையும் நம்பியே நான் கலைச்சொற்களை உருவாக்குகிறேன். இதற்கு எனக்கு முன்னோடிகள் இல்லை.
நான் உருவாக்கிய பலசொற்கள் இப்போது பொதுப் பயன்பாட்டில் உள்ளன. உதாரணமாக 1980இல் நான் உருவாக்கிய சொல் பின்னூட்டம் (Feedback) என்பது. இன்று அச்சொல் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது. நான் உருவாக்கி, இன்று பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்கள் பற்றி எனக்குக் கணக்குத் தெரியவில்லை. அதைப்பற்றி நான் மிகுதியாக அக்கறை கொள்ளவும் இல்லை. நம் நாட்டில் இண்டெக்ஸ் (Index-பொருளடைவு) என்பதை நூல்களில் சேர்க்கும் வழக்கம் இல்லை. என் நூல்கள் ஒவ்வொன்றுக்கும் அப்படி இண்டெக்ஸ் சேர்த்தால் நான் உருவாக்கிய சொற்களை எளிதாகவே கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
12. சமஸ்கிருதத்திலும் இந்திய ஆய்விலும் முனைவர் பட்டம் பெற்ற சமய வரலாற்று அறிஞர் வெண்டி டோனிகர் எழுதிய “இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு” நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள். இந்தியாவில் இந்நூலை ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட போது இந்நூலை தடை செய்யவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்துத்துவவாதிகள் வழக்குத் தொடுத்த சம்பவப்பின்னணி யையும் இதனை தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியநிலையும் ஏன் ஏற்பட்டது என்பதை எமக்கு கூறமுடியுமா?
வெளியான நூல்கள் தடைசெய்யப்படுவது போன்ற அரசியல் விஷயங் களில் நான் அதிகமாக அக்கறை காட்டியதில்லை. ஆங்கிலத்தில் நிறைய நல்ல நூல்களுக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். அதனால் அவற்றின் பிராபல்யமோ, மொழிபெயர்ப்புத் தன்மையோ குறைந்ததில்லை.
இம்மாதிரிச் சோதனைகள் எல்லாம் முடிந்தபிறகுதான் எதிர் வெளியீடு அனுஷ் இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு நூலுக்கான உரிமையை வாங்கி, என்னை மொழிபெயர்க்குமாறு சொன்னார். நூலை மொழிபெயர்க்கும் முன்பு அதை ஒருமுறை படித்துப் பார்ப்பது இயல்புதானே? அம்மாதிரி அந்த நூலைப் படிக்கும்போது அதைச் சிறப்பாக மொழிபெயர்த்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் ஏற்பட்டது. அப்போது அந்த நூல் பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொண்டேன். இதுபோலவே அடையாளம் பதிப்பகத்திற்கான ஒரு மதசம்பந்தமான நூலை மொழிபெயர்க்கும்போதும் அனுபவம் ஏற்பட்டது. மொழிபெயர்ப்புக்கான நூல்களைப் பதிப்பகத்தினர் அளிக்கும்போதே இந்தப் பிரச்சினைகள் தீர்ந்தபிறகு அனுமதி வாங்கித்தான் செய்கிறார்கள். எனவே இதில் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை. இருந்தால் பதிப்பகத்துக்குத் தான் இருக்கமுடியும்.
13. நவீன அரசியலின் இடர்பாட்டை விளக்கி நிற்கும் சிறந்த நூல்களில் ஒன்றே உங்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஹெரால்டு ஜே.லாஸ்கியின் ‘அரசியலின் இலக்கணம்’. இன்றைய சூழலில் அரசு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் முக்கியத்துவம் குறித்து இந்நூல் விளக்கிச் செல்கிறது. லாஸ்கியின் சிந்தனைகள் இந்திய அரசியலிலும் தமிழ்நாட்டிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறதே இக்கருத்தின் உண்மைநிலை குறித்து கூறமுடியுமா?
லாஸ்கியின் சிந்தனைகள் இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் இதனை அன்றிருந்த, இன்றுள்ள அரசியல்வாதிகள் பலரும் படித்திருந்தால் இந்தியாவில் அரசியலின் போக்கே வேறுவிதமாகத்தான் இருந்திருக்க முடியும்.
அல்லது அரசியல்வாதிகள் படிப்பது வேறு, நடப்பது வேறு என்று காரணம் சொல்வீர்களா? அல்லது கட்சிகளின் கருத்தியல்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பீர்களா?
அறிஞர் அண்ணா இந்த நூலைப் படித்திருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. அவரது சமகாலத் தோழர்கள் (பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோர்) இதைப் படித்திருக்கலாம். பின்னர் வந்த “அறிஞர்கள்” (இருபதாயிரம் நூல்களைப் படித்திருப்பதாகப் பெருமையடித்துக் கொண்ட ‘அறிஞர்கள்’ உட்பட) எவரும் இந்த நூலைப் படித்திருப்பர் என்று எனக்குத் தோன்றவில்லை. இன்றைய நிலையில் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பேராசிரியர்கள், அறிஞர்கள் சிலர் வாங்கிச் சென்று மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது என்று எழுதினர். அது எனக்கு மகிழ்ச்சியளித்தது.
14. கேரள எழுத்தாளர் மனுஜோசப் எழுதிய சீரியஸ்மென் நாவலை ‘பொறுப்பு மிக்க மனிதர்கள் என்ற பெயரில் தமிழாக்கம் செய்திருந்தீர்கள். இப்புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் சுதிர் மிஸ்ரா ஒரு திரைப்படத்தை வெளியிட்டார் என அறிய முடிகிறது. அது குறித்து ஏதேனும் கூறமுடியுமா? மற்றும் இந்நாவலை மொழிபெயர்த்தமைக்காக சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை 2016 ஆம் ஆண்டு பெற்றிருந்தீர்கள். வண்ணதாசனுக்கும் உங்களுக்கும் ஒரேகாலப்பகுதியில் இவ்விருது கொடுக்கப்பட்டது. அது குறித்த நினைவுகளை எம்மோடு இரமீட்டிப் பார்க்க முடியுமா?
சுதீர் மிஸ்ரா சீரியஸ் மென் என்ற தலைப்பிலேயே இந்தியில் இந்தப் படத்தை இயக்கி வெளியிட்டார் (2020) என்பதும், அவர் பல படங்களைச் சிறப்பாக இயக்கியவர் என்பதும் தெரியும். மற்றப்படி அதற்கு மேல் எனக்குச் செய்தி எதுவும் தெரியாது. அந்தப் படத்தைக் காணும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
தமிழ் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும், நல்ல வரவேற்புப் பெறும் என்பது எனக்கு அந்த நாவலை மொழிபெயர்த்தபோதே தெரியும். வண்ணதாசனுக்கும் எனக்கும் விருதுகள் ஒரேசமயத்தில் தரப்படவில்லை. எனக்கு மொழிபெயர்ப்புக்கான விருது அகர்தாலாவில் தனியாக அளிக்கப் பட்டது. அவருக்கு தில்லியில் அளித்தார்கள் என்று கேள்விப்பட்டேன். அக்காலப்பகுதியே குழப்பமானதாக இருந்தது. ஏன் என்று எனக்கு இப்போது நினைவில்லை.
15. அண்மைக்கால மொழிபெயர்ப்புகள் பல குறைபாடுகள் உடையதாகவே வருகிறது. குறிப்பாக வியாபாரச் சந்தைகளை மையப்படுத்தி இம் மொழிபெயர்ப்புக்கள் செய்யப்படுவதால் தரமான மொழிபெயர்ப்புகளை வாசகர் கண்டடைய முடியாமல் போகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டு உண்மையே என்பதை அனுபவத்தில் என்னால் உணர முடிகிறது. குறிப்பாகச் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகச் சந்தை நிகழும்போது இது பெரிய வேதனையையே ஏற்படுத்துகிறது. கிழக்கு போன்ற பெரிய பதிப்பகங்கள் பல தாறுமாறாக மொழிபெயர்ப்பு நூல்களை, அவற்றின் தேவை தரம் தகுதி பற்றிய எண்ணம் எதுவுமின்றி வெளியிடுகின்றன. விற்கும் என்று தெரியவந்தால் போதும், வெளியிட்டு விடுவார்கள்! இன்றுள்ள மோசமான நிலைக்குப் பதிப்பகங்களே காரணம்.
மொழிபெயர்ப்பாளர்கள் பதிப்பாளர்களை நம்பியே வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஒரு நல்ல நூலை மொழிபெயர்த்தால்கூட, இது மார்க்கெட்டில் நன்றாகப் போகுமா என்று “ஆராய்ந்து தெளிந்த” பிறகே பதிப்பாளர்கள் எங்களிடமிருந்து பிரதியைப் பெறுகின்றார்கள். அல்லது
சந்தையை முன்வைத்து, இந்தக் குறிப்பிட்ட நூலை மொழியாக்கம் செய்யமுடியுமா என்றுதான் பதிப்பகத்தினர் எங்களைக் கேட்கிறார்கள். சந்தையில் விற்காவிட்டால் நாங்கள் ஏன் வெளியிட வேண்டும் என்பது அவர்களின் கேள்வி. நூலின் தற்காலத் தேவை பற்றியோ, தரம் பற்றியோ அவர்களுக்கு அக்கறை இல்லை. அண்மையில் இந்த நிலை மாற வாய்ப்பில்லை என்பதுதான் என் கருத்து. ஒரு நூலைப் பதிப்பித்தல் என்பது அதிகமாகப் பணம்போட்டு, விற்கும் என்ற எதிர்பார்ப்பை நம்பிச் செய்யப்படும் ஓர் ஊகவணிகம். இதில் மொழிபெயர்ப்புக்குச் சாதகமான நிலை நிலவவில்லை என்பது உண்மை.
திருக்குறள் பெருமாள்
திருக்குறள் பெருமாள் (15.11.1914 – 28.07.2005)
[திருக்குறள் பெருமாள் புதுவை மாநிலத்தின் மூர்த்திக்குப்பம் ஊரினர். திருக்குறளையும் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் அனைத்தையும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர். கடலூரிலிருந்து தென்மொழி இதழ் வெளிவந்தபொழுது, அதன் ஆசிரியர் பெருஞ்சித்திரனாருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் உதவியாக இருந்தவர். இவரின் இல்லம் தனித்தமிழ் அன்பர்கள் தங்கிச்செல்லும் இடமாக இருந்துள்ளது. பிரெஞ்சிந்திய விடுதலைப்போருக்குத் துணைநின்றவர். பாரதிதாசன், திருக்குறள் முனுசாமி ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அஞ்சல்காரராகவும் ஆசிரியராகவும் பணியாற்றி, நல்ல தமிழ்த்தொண்டர் என அனைவராலும் பாராட்டப்படுபவர்.]
திருக்குறள் குறட்பாக்களையும், பாவேந்தர் பாரதிதாசனார் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் பேரறிவு பெற்றிருந்தவர் திருக்குறள் பெருமாள் ஐயா. புதுவை மாநிலம் பாகூருருக்கு அருகில் உள்ள மூர்த்திக்குப்பம் என்னும் ஊரில் வாழ்ந்த நாகப்பன், அமிர்தம்மாள் ஆகியோரின் மகனாக 15. 11. 1914 இல் பிறந்தவர்.
ஐந்தாம் அகவையில் திண்ணைப்பள்ளியில் அரியாங்குப்பம் ஜெகநாத ஆசிரியரிடம் கல்வி பயின்றவர். “அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை” என்று ஓதிப் படிப்பைத் தொடங்கியவர். இரண்டாம் வகுப்பு வரை மட்டும் படித்தவர். அப்பொழுது இவருக்கு குறிலும் நெடிலும் அறிமுகம் ஆயின. பாகூர்ப் பகுதியில் மேலும் படிக்க வாய்ப்பு இல்லாததால் தந்தைக்குத் துணையாக உழவுத்தொழிலில் ஈடுபட்டவர். ஊரில் பெரியோர்கள் – சான்றோர்கள் செய்யும் சொற்பொழிவுகளைக் கேட்டு, அரிய செய்திகளை மனத்துள் பதித்ததால் திருக்குறள் படிக்கும் ஆர்வம் இயல்பாக இவருக்கு ஏற்பட்டது.
மூர்த்திகுப்பத்துக்கு அருகில் உள்ள மணப்பட்டு என்னும் சிற்றூரில் 1944 முதல் 1950 வரை சிற்றூர்ப்புற மாணவர்களுக்குக் கல்வியைக் கற்பித்தவர். இவரிடம் பயின்ற பல மாணவர்கள் புதுச்சேரியில் ஆசிரியர்களாகவும் அதிகாரிகளாகவும் அமைச்சர்களாகவும் உயர்ந்துள்ளனர். “சத்திய சோதனை” என்னும் நூலினைப் படித்து, நாட்டு மக்களுக்காக உழைத்த பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட பாடலைப் பாடிக்காட்டியதை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு யாரோ தெரிவித்துவிட்டனர். இதனால் ழாந்தர்மேரி என்ற காவல்துறை அதிகாரி இவருக்குப் பல்வேறு தொல்லைகளை வழங்கியுள்ளார். அதனால் அருகில் உள்ள ஆங்கில இந்தியப் பகுதியான கடலூருக்குச் சென்றார். அங்கு இயங்கிய “பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டக்குழு”வில் 20.04.1950 இல் இணைந்து, கடலூருக்கு அருகிலுள்ள புதுவைப் பகுதிகளில் விடுதலைக்குக் குரல்கொடுத்தவர். தொண்டர்படைத் தலைவர் நெதலாவுக்கும் புதுவை வழக்கறிஞர் செல்லான் நாயக்கர் அவர்களுக்கும் ஒற்றனாக இருந்து, விடுதலைப் போராட்டச் செய்திப் பரிமாற்றத்திற்குத் துணைநின்றவர். அப்பொழுது புதுக்குப்பம் சி. நாராயணசாமி அவர்களுக்கு உதவிபுரிந்தவர்.
திருக்குறள் பெருமாள் உடல் வலிமையும் மன உறுதியும் மிக்கவர். துணிச்சல் மிகுதியாக இருந்ததால் யாருக்கும் அஞ்சாமல் பொதுப்பணிகளில் ஆர்வமாக ஈடபட்டவர்.
திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களின் “குறள்மலர்” என்ற வார இதழுக்குத் தொண்டாற்றியுள்ளார். இந்த இதழ் கடலூரிலிருந்து வெளிவந்தது. 1949 முதல் தொடங்கப்பட்ட திருக்குறள் அச்சகத்திலிருந்து இந்த இதழ் வெளிவந்தது. குறள்மலர் இதழில் பணியாற்றியதாலும், திருக்குறளை மக்களிடம் தொடர்ந்து பரப்பியதாலும் இவர் “திருக்குறள் பெருமாள்” என்று அழைக்கப்பட்டார். குறள் மலர் அச்சகத்திற்குப் பாவேந்தர் பாரதிதாசன் வந்து தங்கும்பொழுது, “என்னா பெருமாள் சிங்கம்” என்று அன்பொழுக அழைப்பதுண்டு. திருக்குறளார் முனுசாமி நா. பெருமாள் அவர்களை நண்பர்களிடத்து அறிமுகம் செய்யும்பொழுது சித்தன் என்றும், தொண்டன் என்றும் திருக்குறள் தூதன் என்றும் அறிமுகப்படுத்துவது உண்டு.
திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் விழுப்புரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 1952 முதல் 1957 வரை கடமையாற்றியபொழுது திருக்குறளாருக்குத் தொண்டராகவும், பாதுகாவலராகவும் அவரின் வீட்டுக்குப் பொறுப்பாளராகவும் விளங்கிய பெருமை திருக்குறள் பெருமாள் ஐயாவுக்கு உண்டு.
1955 ஆம் ஆண்டு பாவேந்தரிடம் சென்று அவர் பெயரால் இயங்கும் புதுவை வடக்குச் சுற்றுச்சாலையில் ஏழைகளுக்காக அமைந்திருந்த பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் பாவேந்தரின் அச்சகத்தில் அச்சுப்பணியில் துணைநின்றவர்.
குப்பம்மாள், திருக்குறள் பெருமாள்03.07.1957 இல் திருக்குறள் பெருமாள் - குப்பம்மாள் திருமணம் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்கள், பெரியோர்கள் முன்னிலையில் தமிழ்த் திருமணமாக மூர்த்திக்குப்பத்தில் இவரின் திருமணம் நடைபெற்றது. திருக்குறள் பெருமாள் அவர்களுக்குச் சூரியநாராயணமூர்த்தி, புகழேந்தி, குறிஞ்சி என்னும் மூவர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். சூரிய நாராயணமூர்த்தி என்பது தமிழின் செம்மொழிப் பெருமையை உலகுக்கு நினைவூட்டிய “பரிதிமாற்கலைஞர்” சூரியநாராயண சாத்திரியின் நினைவாக வைக்கப்பட்ட பெயராகும். சூரியநாராயண சாத்திரி என்பதில் சாத்திரி என்பதை நீக்கிவிட்டு, மூர்த்திக்குப்பம் ஊர்ப்பெயரின் முன்னொட்டை இணைத்து, சூரியநாராயண மூர்த்தி என்று திருக்குறள் பெருமாள் தம் முதல் மகனுக்குப் பெயரிடுமாறு சொல்லி, பாவேந்தர் இப்பெயரைச் சூட்டினார். சூரியநாராயணமூர்தியைப் பாவேந்தரும் அவர் மனைவியார் பழநியம்மாள் அவர்களும் அன்பொழுக வாழ்த்தியவர்கள் ஆவர்.
திருக்குறள் பெருமாள் அவர்களின் மனைவி குப்பம்மாள் அவர்கள் அன்பும் பண்பும் நிறைந்த பெருமைக்குரிய அம்மையார் ஆவார். தென்மொழிக் குடும்பமும், தனித்தமிழ் இயக்க அன்பர்களும் மூர்த்திக்குப்பம் வந்தால் கடல்மீனும் நண்டும் இறாலும் கொண்டு இனிய சுவைமிகு குழம்பினைப் படைத்து விருந்து புரப்பதை வழக்கமாகக் கொண்டவர். எண்பத்தைந்து அகைவைக்கு மேல் நலதுடன் வாழ்ந்துவரும் குப்பம்மாள் அவர்களை நல்ல நினைவாற்றலும் பார்வைப் பொலிவும் கொண்டு தம் கடந்த கால வாழ்க்கையை இன்றும் நினைவுகூர்கின்றார். தென்மொழி அன்பர்களுக்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தினர்க்கும் தாம் ஆற்றிய தொண்டுகளை நினைவுகூர்ந்து தொடர்பினை நினைவூட்டுகின்றார். அதுபோல் இவர்களின் பிள்ளைகள் பாவலரேறு அவர்களின் குடும்பத்தின்மேல் கொண்டிருந்த பற்றினையும் அன்பினையும் கேட்கும்பொழுது இவர்களின் தமிழ்ப்பற்றும் பாசமும் வெளிப்படுகின்றது. அதனால்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் திருக்குறள் பெருமாளைப் போற்றிப் பாடியபொழுது குடும்பத்தலைவி குப்பம்மாளின் சிறப்பினை,
“முப்பொழு திருப்பினும் முகங்கோ ணாத
குப்பம்மாள் எனும் குடித்தனக் காரிக்குச்
செப்பமாய் அமைந்த சிறப்பெலாம் என்னெனின்,
ஒப்புரைக் கில்லாத் தென்மொழி உழைப்பால்
உடலும் நெஞ்சமும் ஒருங்குறச் சோர்ந்து,
கடற்கரை நண்ணும் காலத்தி லெல்லாம்,
கையில் கிடைத்ததை, மடியில் நிறைத்ததை,
பையில், பானையில் கைவிட்டுத் துழவிக்
கொஞ்சங் கொஞ்சமாய்க் கூட்டிச் சேர்த்ததை
எஞ்சுத லின்றி எடுத்தெடுத் தீந்து
தென்மொழிக் குடும்பம் தின்று மகிழ்வதைத்
தன்விழிப் பருப்பால் தான்விழுங் குவதே!
பெருமாள் பெற்ற பெருமை எல்லாம்
திருக்குறள் ஒன்று! தேய்விலா அன்பின்
குப்பம்மாள் எனும் குணக்குன்று ஒன்று!”
என்று போற்றிப்பாடியுள்ளார்.
திருக்குறள் பெருமாளின் தனித்தமிழ்ப் பற்று
திருக்குறள் பெருமாள் தமக்கு அமைந்த திருக்குறள் புலமையாலும் திருக்குறளார் முனுசாமியின் தொடர்பாலும் பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பாலும் தமிழ் உணர்வுடன் இயங்கினார். அப்பொழுது(1959) கடலூரில் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழ் தொங்கப்பட்டது. தமிழ் உணர்வாளர்கள் வந்து குழுமும் இடமாகக் கடலூர் மாறியது. தமிழ்ப்பற்று நிறைந்த திருக்குறள் பெருமாள் அவர்களின் குடும்பம் பெருஞ்சித்திரனாரின் குடும்பத்துடன் நன்கு பழகும் வாய்ப்பினைப் பெற்றது. அதுபோல் பெருஞ்சித்திரனாரும் தம் குடும்பத்தாருடன் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து மூர்த்திகுப்பம் வந்து, தங்கி, விருந்துண்டு செல்லும் தொடர்பினைக் கொண்டிருந்தனர். பெருஞ்சித்திரனாரின் நம்பிக்கைக்குரிய பெரியோராகத் திருக்குறள் பெருமாளும் அவர் குடும்பத்தினரும் விளங்கினர். அதுபோல் பேராசிரியர் தங்கப்பா உள்ளிட்டவர்களும் திருக்குறள் பெருமாளுடன் நல்ல தொடர்பில் இருந்தவர். திருக்குறள் பெருமாள் இல்லத்துக்குத் தனித்தமிழ் அன்பர்கள் பலரும் வந்து செல்லும் சூழல் அக்காலத்தில் இருந்தது. ஓலை வேயப்பட்ட தோப்பும் துரவுமாக இருந்த இயற்கை எழில் கொஞ்சிய திருக்குறள் பெருமாளின் இல்லம் தனித்தமிழ் அன்பர்கள் வந்து, தங்கிச்செல்லும் வேடந்தாங்கலாக இருந்துள்ளது.
திருக்குறள் பெருமாள் 1961 இல் அஞ்சல்துறையில் அஞ்சல்காரராகப் பணியில் இணைந்தார். 26 ஆண்டுகள் இப்பணியில் இருந்தவர். இதனால் அஞ்சல்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும்பொழுது அனைவரிடமும் நல்ல தமிழில் உரையாடித் திருக்குறளைச் சொல்லி, அனைவரிடத்தும் திருக்குறள் ஈடுபாட்டினை ஏற்படுத்தியவர். மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் திருக்குறள் பற்றை ஏற்படுத்தியவர். முதியோர் பள்ளியில் உருவா 20 பெற்றுக்கொண்டு மாலைநேர ஆசிரியராகவும் பணியாற்றினார்.
திருக்குறள் பெருமாள் அவர்களின் நாட்டுப்பற்றினைப் போற்றும் வகையில் 02.08.1975 ஆம் ஆண்டு புதுச்சேரியின் மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் “தியாகி” என்ற பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்துள்ளார். நிறுவனங்களில் வேலை, கணக்கர் வேலை, சங்கிலி பிடித்து நிலம் அளக்கும் வேலை, மின்பணி, துறைமுக வேலை, ஆசிரியர் வேலை, உழவுத்தொழில், கொத்துவேலை, அச்சக வேலை எனப் பல வேலைகளைச் செய்தாலும் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தம் கண்களாகப் போற்றியவர். வறுமையிலும் எளிமையிலும் செம்மாந்த வாழ்க்கை நடத்திய இவர் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற பெருந்தகையாக வாழ்ந்துள்ளார். தம்மிடம் இருக்கும் கைப்பொருளைப் பிறருக்கு ஈந்துவக்கும் ஈகை உள்ளத்தினர்.
திருக்குறளிலும், பாவேந்தர் பாடல்களிலும் இவருக்கு இருந்த புலமையையும் பயிற்சியையும் அறிந்த தமிழ் உணர்வாளர்கள் தம் ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இவரை அறிமுகம் செய்து உரையாற்றச் செய்துள்ளனர்.
பாகூர் வீரப்பன் ஆசிரியருடன் திருக்குறள் பெருமாள் இணைந்துகொண்டு இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் புதுதில்லி வரை தேசிக்கொடியைக் கையில் ஏந்தியவாறு சென்று கோரிக்கை வைத்தனர். மேலும் திருக்குறள் பெருமாள் அவர்களும் கோவைத் தொழிலதிபரும் அறிவியல் அறிஞருமான ஜி.டி. நாயுடு அவர்களும் நட்புடன் பழகியுள்ளனர்.
பாவேந்தரின் சத்திமுற்றப்புலவர் நாடகத்தை முழுவதுமாக மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல்பெற்ற திருக்குறள் பெருமாள் பறம்புக்குடியில் நடைபெற்ற உலகத் தமிழ்க்கழக மாநாட்டில் அதனை நடித்துக்காட்டியவர்.
08.02.1985 இல் “நடமாடும் தமிழ்” என்ற பட்டம் வழங்கப்பெற்றவர். சென்னைப் பாவேந்தர் பாசறை அமைப்பினர் “பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர்” (29.04.1998) என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
இவர்தம் தமிழ்ப் பணியைப் போற்றும் வகையில் 1990 செப்டம்பர் முதல் தேதியிலிருந்து வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கட்குப் புதுவை அரசின் கல்வித்துறை வழங்கும் உதவித்தொகையைப் பெற்றவர்.
தமிழ்நாடு அரசு புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவின் பொழுது(1991) பாவேந்தர் புகழ் பரப்புநர் என்று சான்று வழங்கிச் சிறப்பித்தது.
திருக்குறள் பெருமாள் அவர்களின் தமிழ்ப்பற்றையும், பாவேந்தர் பாடல்களிலும் திருக்குறளிலும் இவருக்கு இருந்த புலமையினையும், மாண்புநிறைந்த பண்புநலன்களையும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மிகச் சிறந்த பாடல் ஒன்றியற்றி இவர்தம் பெருமையை நிலைப்படுத்தியுள்ளார். அப்பாடல் இதோ:
திருக்குறள் பெருமாள்!
துருவுந் தூசியும் துவைந்த புழுதியும்
எருவுஞ் சேறும் இறுகக் காய்ந்தே,
உருளை ஓரத்தும், உட்புற அச்சிலும்,
இருகால் மிதியிலும், கம்பிகள் இடுக்கிலும்,
அடையடை யாக அப்பிக் கிடந்து,
கடகடத் தாடுங் கற்கா லத்துக்
கட்டை வண்டிபோல் காட்சி யளிக்கும்
குட்டை யான மிதிவண்டிக் கூடு.
அமரும் இருக்கையில் ஆயிரம் கிழிசல்!
சுமைகள் வைத்திடுஞ் சுமப்பான் ‘தொட! தொட!’
கால்மிதிக் கட்டைகள் கழன்று கழன்று
சாலையில் ஆளைச் சாய்த்திடும் நாடகம்!
கிழிசல் வேட்டி ஓரத்தைச் சுருட்டி
மைசேர் பற்களால் மென்று குதப்பி
ஆளைத் தள்ளும் ‘அழகிய’ தொடரி!
ஏனிவ் விரைவென இடையிடை மடங்கி
ஊன்றிக் கொள்ளும் ஒற்றைக்கால் தாங்கி!
கணகணக் காத கருந்தலைப் பருமணி!
தொணதொணக் கின்ற தொடரிச் சக்கரம்!
உராய்ந்து கிரீச்சிடும் நெளிந்த உருளைகள்!
மரமரக் கின்ற மண்பொதி தடைகள்!
இத்தகு பெருமையோ டெவ்விடத் தாகிலும்
தத்தட தடவெனும் மிதிவண்டி ஒன்று
சாய்ந்த நிலையில் சாலையோ ரத்துக்
காய்ந்த உடலொடு காண்பீ ராயின்
அந்த வண்டிதான் திருக்குறள் பெருமாள்
சொந்த வண்டி-எனச் சொல்லுக துணிந்தே!
அந்த வண்டிக்கு அண்மையில் உள்ள
சந்திலோ பொந்திலோ சாலைக் கடையிலோ
எங்கோ தான்அவர் இருந்திடல் வேண்டும்!
இங்கவர் தோற்றம் எப்படி என்றால்,
இயம்பிடு கின்றேன்; மனத்தில் இறுத்துக;
நயம்படும் அவர்புகழ் நாற்புறம் நாட்டுக!
கோணியில் தைத்த குப்பா யம்போல்
சாணி நிறத்தினில் தொளதொள சட்டை!
ஏறியும் இறங்கியும் ஏழெட்டுக் கிழிசலால்
மாறியும் மடிந்தும் தொங்கிடும் வேட்டி!
உழைப்பின் மிகுதியால் ஓதந் தாக்கிடும்
தலைப்புறம் மறைக்குமோர் தலைமுண் டாசு!
முண்டாசின் உட்புறம் கறுப்பும் வெளுப்புமாய்
உண்டு. இல்லை எனுமா றுரைக்குந் தலைமயிர்!
மொச்சைக் கொட்டைபோல் இருந்த பல்லெலாம்
பச்சுப் பச்சென விழுந்திட்ட பைவாய்!
வாய்மிசை மருங்கிலும் முகவாய்ப் புறத்திலும்
தோய்ந்த வெண்மயிர் துளிர்த்த ஒளிமுகம்!
தளர்ந்த மேனி; தளராத வீறு!
கிளர்ந்த நகைமுகம்; கிறக்கிடும் உரைத்திறன்
உருக்குலைத் திட்ட உடல்தான் என்னினும்
கருக்குலை யாத கழகத் தமிழ், அவர்!
சாறு பிழிந்த சக்கைதான் எனினும்
வீறு குறையாத் தீந்தமிழ் வேங்கை!
பாரதி தாசனார் பாடல்கள் முற்றும்
ஊரதி ரும்படி உணர முழக்கித்
தெருத்தெரு வாகத் திண்ணை திண்ணையாய்த்
திருக்குறள் பயிற்றிடும் திறல்மிகு ஆசான்!
அலைவுறும் விழிகளால் அள்ளி விழுங்கி
உலைப்பட் டடைபோல் உருப்பல சமைக்கும்
அங்காந்த நெஞ்சம்! அயர்விலா விளைவு!
மங்காத உணர்வு! மலையாத துணிவு!
‘உருவுகண் டெள்ளாமை வேண்டும்’ என் குறட்கே
ஒருதனி உருவமாய் உலவுந் திருக்குறள்!
சட்டைப் பையினுள் கைவிட் டெடுத்தால்
கற்றைப் பழந்தாள்; கணக்கிலாக் குறிப்புகள்!
கடைக்குறிப் பன்று! காலங் காலமாய்
இடையிடைக் கேட்டவை, எண்ணத் தெழுந்தவை,
பாக்களின் அடிகள், பற்பல கருத்துகள்,
நீக்கமற் றவரின் நினைவினில் தோய்ந்த
குறட்பா விளக்கம்-எனுந்தாட் குவியல்
வரவும் செலவும் சட்டைக்கு வாரா.
கைப்பிடி அறுந்து தொளையிட்டு முடிந்த
பையொன்று கையில்; அதனுள் பலபடி!
மூர்த்திக் குப்பம் எனும்மூ தூரின்
சீர்த்திக் கிவருடைச் சிறப்பைக் கூறலாம்!
அஞ்சற் காரராய் ஆற்றும் பணியுடன்
எஞ்சும் பொழுதெலாம் எந்தமிழ்த் தொண்டராய்
உலாவரு கின்றார்; ஊரவர் இவர்பால்
பலாப்பழந் தீக்களாய்ப் பறப்பதைப் பார்க்கலாம்!
மடல்கள் கொடுப்பார்; மக்களைக் கண்டால்
சடக்கென இறக்குவார்; சாலையென் றாலும்,
சிற்றுண்டி, தேநீர்ச் சிறுகடை யெனினும்,
வெற்றிலை பாக்கு விற்பவர் என்னினும்,
அவலிடிக் கின்ற ஆயாள் எனினும்,
துவளாத நெஞ்சோடு துணிந்து, ஆங் கிறங்கி,
நலங்கேட் பதுபோல் நாலைந்து குறட்பா
வலிந்து புகுத்தித், தமிழ்வர லாறு,
“படிபடி’ என்னும் பாவேந்தர் பாடல்,
அடிதொறும் எதுகை அடுக்கி வரும், அவர்
‘சத்தி முத்தப் புலவ’ரின் பாட்டுள்
ஒத்த நிகழ்ச்சிக் கோரிரண் டடிகள்
நொண்டி யடிப்பது போல் சில நொடிகள்
வண்டியை ஒருகையில் பிடித்த வாறே
கொட்டி விட்டுக் குபுக்கெனத் தாவி
ஒட்டு வண்டியை ஒட்டிச் செல்லுவார்!
‘தென்மொழி’ப் படைஞர்க்கு அடைவீடு அவர்மனை!
பன்மாண் திறலோ டிதழ்வினை பகிர்ந்து,
தேர்ந்து முடித்துத் திங்களில் ஒருமுறை-
காரியும் ஞாயிறும் கடற்கரை அடுக்கும்
முழுப்பொழு தெல்லாம் மூர்த்திக் குப்பம்
திருக்குறள் பெருமாள் சிறுகுடில் திண்ணை
தூளி படுக்கும்!
தென்மொழித் தம்பியர்
தோளொடு தோள்கள், தூய்தமிழ் நெஞ்சுகள்
கலந்துற வாடும் கருத்துப் பொழிவுகள்,
புலந்துண வுண்ணும் பொலிந்த காட்சிகள்,
நாட்டுதற் கியலா நாடக இலக்கியம்!
ஊட்டுதற்கலையும் உள்ளமும் கையுமாய்
முப்பொழு திருப்பினும் முகங்கோ ணாத
குப்பம்மாள் எனும் குடித்தனக் காரிக்குச்
செப்பமாய் அமைந்த சிறப்பெலாம் என்னெனின்,
ஒப்புரைக் கில்லாத் தென்மொழி உழைப்பால்
உடலும் நெஞ்சமும் ஒருங்குறச் சோர்ந்து,
கடற்கரை நண்ணும் காலத்தி லெல்லாம்,
கையில் கிடைத்ததை, மடியில் நிறைத்ததை,
பையில், பானையில் கைவிட்டுத் துழவிக்
கொஞ்சங் கொஞ்சமாய்க் கூட்டிச் சேர்த்ததை
எஞ்சுத லின்றி எடுத்தெடுத் தீந்து
தென்மொழிக் குடும்பம் தின்று மகிழ்வதைத்
தன்விழிப் பருப்பால் தான்விழுங் குவதே!
பெருமாள் பெற்ற பெருமை எல்லாம்
திருக்குறள் ஒன்று! தேய்விலா அன்பின்
குப்பம்மாள் எனும் குணக்குன்று ஒன்று!
தப்பில் லாமல் தமிழ்ப்பணி செய்யும்
திருக்குறள் பெருமாள் குடும்பம்
இருக்குநாள் எல்லாம் இருக்குமெந் தமிழே!
- பாவலரேறு பெஞ்சித்திரனார், கனிச்சாறு தொகுதி 3, பாடல் 132
திருக்குறள் பற்றுடனும், தமிழ் உணர்வுடனும் வாழ்ந்த திருக்குறள் பெருமாள் 28.07.2005 இல் இயற்கை எய்தினார். புதுவையிலும் தமிழகத்திலும் வாழும் தமிழ் உணர்வாளர்களால் இன்றும் இவரின் பணி நினைவுகூரப்படுகின்றது.
புதுவைத் தமிழறிஞர்கள் அனைவராலும் போற்றப்படும் திருக்குறள் பெருமாள் அவர்களின் புகழ்வாழ்க்கை நூற்றுப்பத்து ஆண்டுகளைக் கடந்துள்ளது. எனவே அவர் நினைவைப் போற்றும் வகையில் அவர் பெயரை ஏதேனும் ஒரு நிறுவனத்திற்குச் சூட்டி, அவர் பணிகளை என்றும் நிலைநிறுத்துவது கற்றறிந்தோர் கடமையாகும்.
மூர்த்திக்குப்பத்தில் உள்ள திருக்குறள் பெருமாள் வீடு(இன்றையத் தோற்றம்)
குப்பம்மாள், மு.இளங்கோவன், பெ. புகழேந்தி
நன்றி:
திரு. பெ. சூரியநாராயணமூர்த்தி
திரு. பெ. புகழேந்தி
திரு. திருநாவுக்கரசு (நண்பர்கள் தோட்டம்)
இந்தி ஏன் தேவையில்லை?

இந்தி எந்த பிரச்சனைக்கான தீர்வு?
இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை என்ற கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஒன்றிய அரசு வெளியிடும் ஆணைகள், அறிக்கைகள் மற்றும் செய்திகள் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்றால், அவற்றை அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு மொழியில் வெளியிட்டாக வேண்டும். அந்த வகையில் ஒரு பொது மொழி கட்டாயம் தேவை. மேலும், பல்வேறு மொழிகளை பேசுபவர்கள், இணைந்து பணியாற்றும் போது, அவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், உரையாடவும் ஒரு பொது மொழி தேவைப்படுகிறது.
நம் முன் என்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதை தெளிவாக வரையறுத்தால்தான் அதற்கான தீர்வுகளை எட்ட முடியும். இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி தேவை என்பது ஒரு பிரச்சனை. அதே போல், பிற நாடுகளோடு தொடர்பு கொள்ள ஒரு பொது மொழி வேண்டும் என்ற இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. ஆகவே, நம் முன்னால் இரண்டு சிக்கல்கள் இருக்கிறது.
- இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி வேண்டும்
- உலக நாடுகளுக்குள் ஒரு பொது மொழி வேண்டும்
உலக நாடுகளுக்கான பொது மொழியாக ஆங்கிலம் வலுவான இடத்தை பிடித்து விட்டது. காரணம், அந்த மொழியில் ஏராளமான நூல்கள் மற்றும் தகவல்கள் தினமும் எழுதப்பட்டு வருகிறது. அறிவியல் நூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே எழுதப்படுகிறது. ஆகவே உலகின் மற்ற நாடுகளோடு போட்டி போட, ஆங்கில அறிவும் அவசியம் என்றாகி விட்டது. இதை, இந்தி வேண்டும் என்று சொல்பவர்களும் மறுக்கவில்லை. அதனால்தான் இந்தி பேசுகிற மாநிலங்களிலும் ஆங்கிலம் கட்டாயப்பாடமாக இருக்கிறது.
இந்தி பேசுகிற மாநிலங்களிலும் ஆங்கிலம் கற்கிறார்கள், நாமும் ஆங்கிலம் கற்கிறோம் எனும் போது, இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி வேண்டும் என்ற பிரச்சனைக்கான தீர்வு எளிதாகி விடுகிறதே! ஆங்கிலம்தானே அந்த பொது மொழியாக இருக்க முடியும்? ஆனால் இங்குதான் புதிதாக ஒரு பிரச்னையை கிளப்புகிறார்கள். உலக நாடுகளோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் இருக்கட்டும், ஆனால் இந்தியாவுக்குள் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பதே இந்தியை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு! இரண்டு சிக்கல்களுக்கு ஒரு தீர்வு இருக்கும் போது, எதற்காக தனித்தனியாக இரண்டு தீர்வுகள்?
இந்தி பேசும் மாநிலங்களிலும் ஆங்கிலம் கட்டாயப்பாடமாக இருக்கும் போது, அவர்களால் ஏன் நம்மோடு ஆங்கிலத்தில் உரையாட முடியாது? எதற்காக இன்னொரு இணைப்பு மொழி? பள்ளியில் ஆங்கிலம் படித்தாலும் அவர்களால் நம்மோடு ஆங்கிலத்தில் உரையாட முடியாது என்றால், பள்ளியில் இந்தி படித்து விட்டு நம்மால் மட்டும் எப்படி இந்தியில் உரையாட முடியும்?
பொது மொழி வேண்டும் என்ற பிரச்னைக்கு எளிதான தீர்வு இருக்கும் போது, அவர்கள் இந்தியும் வேண்டும் என்ற வாதத்தில் இறுதியாக வந்து நிற்பது “என்ன இருந்தாலும் ஆங்கிலம் அந்நிய மொழி அல்லவா? இந்திதானே நமது மொழி. இந்தி பொது மொழியாக இருந்தால்தானே பெருமை” என்ற புள்ளியில்தான். ஆகவே, அவர்கள் பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறுவது தங்களின் பெருமைக்காகத்தானே தவிர பிரச்சனைக்கான தீர்வாக அல்ல. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேண்டுமானால் இந்தி பொது மொழி என்பது பெருமையாக இருக்கலாம். பிற மொழியினரை பொறுத்த வரை ஆங்கிலமும் வேற்று மொழிதான், இந்தியும் வேற்று மொழிதான். ஆங்கிலத்தையும் இந்தியையும் ஒரே தராசில் வைத்து எடை போட்டு, ஆங்கிலத்தில் அறிவியல் நூல்கள் அதிகம் இருப்பதை உணர்ந்து அதை தேர்வு செய்கிறோம் நாம்.
இந்தி படிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் வைக்கும் மற்றொரு வாதம், இந்தி படித்தால்தான் அரசு பணிகள் கிடைக்கும் என்பது. இந்தி படித்தால்தான் குறிப்பிட்ட சில அரசு பணிகள் கிடைக்குமானால் அந்த சட்டத்தை அல்லவா நாம் கேள்வி கேட்க வேண்டும்? இந்த நாட்டில் அனைத்து மொழிகளும் சமம், ஆனால் ஒரு மொழி மட்டும் உசத்தி என்பதை எப்படி ஏற்றுகொள்வது?
இந்தி படித்தால் வேலைவாய்ப்பு பெருகுமா?
2017ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு Economic Survey என்ற பொருளாதாரம் குறித்த கணக்கெடுப்பு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்பவர்கள் குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டது. அந்த அறிக்கை அரசு இணைய தளத்தில் இருக்கிறது. அதன் லிங்க் இதோ https://www.indiabudget.gov.in/budget2017-2018/es2016-17/echap12.pd
இந்த அறிக்கையின் படி, பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதில் முதலிடத்தில் இருப்பது உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்.
அத்தனையும் இந்தி பேசும் மாநிலங்கள்!!
268ஆம் பக்கத்தில் இந்த தகவல் இருக்கிறது. எண்ணிக்கை மைனசில் செல்ல செல்ல, வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் அதிகம் என்று பொருள்
இந்த புள்ளிவிவரங்கள் மூலம், இந்தி பேசப்படுகிற மாநிலங்களில் இருந்துதான் அதிகமான எண்ணிக்கையில் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு செல்கிறார்கள் என்பது தெளிவா தெரிகிறது. இந்தி சோறு போடாது, உழைப்புதான் சோறு போடும் என்பது தெரிகிறது. இந்திக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது புரிகிறது
மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதில் என்ன பிரச்சனை?
அன்றாட வாழ்வில் பயன்படுத்தினால், எந்த ஒரு மொழியையும் இரண்டு மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். அன்றாட தேவைகளுக்கான சொற்களை இரண்டே நாட்களில் கூட கற்றுக்கொள்ளலாம். தேவை என்று வரும் போது மனித மூளை அசாத்திய வேகத்தில் வேலை செய்யும்.
ஆனால், பயன்பட போகிறதா இல்லையா என்று தெரியாமல் ஒரு மொழியை, அதுவும் பள்ளிப்பருவத்தில், கற்பது தேவையற்ற சுமையே. அந்த நேரத்தில் அவர்களை விளையாட அனுமதித்தால், அதுவே குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி.
தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தாமல் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள் எளிதில் எந்த மொழியையும் கற்று கொள்வார்கள் என்று கூறுவது, புத்தகத்தின் வாயிலாக கற்றுக்கொள்வதற்கு பொருந்தாது. தினமும் பேச பயன்படுத்தும் மொழியை மட்டுமே குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள்.
கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி. உங்களில் எத்தனை பேருக்கு கல்லூரி முடிக்கும் போது ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிந்தது? 12 ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலம் படித்தும் நம்மால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிவதில்லை. ஆனால் வேலையில் சேர்ந்து ஆங்கிலத்தில் கட்டாயம் பேசி ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது, சில மாதங்களில் எளிதாக பேச வந்துவிடுகிறது. ஆகவே, ஒரு மொழியை பள்ளியில் படித்தால் அந்த மொழியில் பேச வந்து விடும் என்கிற வாதமே அடிப்படை இல்லாதது.
தனியார் பள்ளிகளில் இந்தி
தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கிறார்களே! தனியார் பள்ளிகளில் சேர முடியாத ஏழைக் குழந்தைகள் எப்படி இந்தி கற்பார்கள்? ஆகவே அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
சில தனியார் பள்ளிகளில் நீச்சல் கூடத்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். குதிரை ஏற்றமும் கற்றுக்கொடுக்கிறார்கள். ஏழைக்குழந்தைகள் நீச்சல் கற்க வேண்டாமா? ஆகவே அரசு பள்ளிகளில் நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பலாமே! இந்தி கற்றுக்கொள்வதை விட நீச்சல் கற்றுக்கொள்வது முக்கியமாயிற்றே! உயிரை காக்குமே!
அது ஏன் முடியாதென்றால், இருக்கிற நிதியை அதை விட முக்கியமான பாடங்களை கற்றுக்கொடுக்க செலவு செய்ய வேண்டும். நம்மிடம் எல்லையற்ற அளவு நிதி இருக்கிறதென்றால், எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கலாம். ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. ஒரு நாளில் பள்ளியில் மாணவர்கள் இவ்வளவு நேரம்தான் செலவிட முடியும் என்று இருக்கிறது. இருக்கிற நிதியில், கிடைக்கிற நேரத்தில் மாணவர்களின் அடிப்படை கல்விக்கு தேவையானதை மட்டும் கற்றுக்கொடுத்தால் போதுமானது. இந்தி மொழி அந்த அடிப்படை கல்வியில் வராது.
தனியார் பள்ளிகளில் கொடுப்பதை எல்லாம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால், அந்த தனியார் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அவ்வளவு பணத்தை ஒவ்வொரு அரசு பள்ளி மாணவருக்கும் அரசு செலவு செய்தாக வேண்டும். அவ்வளவு நிதி வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் பட்ஜெட் இப்போது இருப்பதை போல நான்கு மடங்கு அதிகமாக வேண்டும். பட்ஜெட் நான்கு மடங்கு அதிகமாக வேண்டுமென்றால் வரியை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும். செய்வோமா?
மூன்றாவது மொழியை கற்பதில் என்ன ஆபத்து இருக்கிறது?
பயன்படாமல் போனால் என்ன? ஒரு மொழியை கற்றுக்கொண்டால் குடியா மூழ்கிப் போய் விடும் என்ற கேள்வி எழலாம்.
முதலில் உத்திர பிரதேசத்தில் இந்த ஆண்டு (2020) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகளை பார்த்து விடுவோம். செய்தியின் லிங்க்:
https://www.thanthitv.com/News/India/2020/06/30091831/1481674/Uttar-Pradesh.vpf
மொத்தம் 7.95 இலட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி அடைந்தனர்! இந்தி பேசும் மாநிலத்திலேயே இத்தனை மாணவர்கள் இந்தியில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.
அடுத்ததாக குஜராத் மாநில ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை பார்ப்போம்.
செய்தியின் லிங்க்:
இந்தி பாடத்தில் தேர்ச்சி அடைந்தவர்கள் 66.71 விழுக்காடு. தோல்வி அடைந்தவர்கள் 32.29 விழுக்காடு! அத்தனை மாணவர்களின் வாழ்விலும் ஒரு ஆண்டு வீண்! தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில் பெரும் பகுதியினர் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்!
தமிழ்நாட்டில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருக்காது என்று வைத்துக்கொள்வோம். சென்ற ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9.7 இலட்சம். அதில் 5% மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி அடைகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, 48 ஆயிரத்து 500 மாணவர்கள் தோல்வி அடைவார்கள்.
அப்படி மாணவர்களின் ஒரு ஆண்டு படிப்பை பணயம் வைத்து படிக்கிற அளவுக்கு இந்தியில் என்ன இருக்கிறது? உயர்ந்த இலக்கியங்கள் இருக்கிறதா? அல்லது ஆங்கிலம் போல வேறு எந்த மொழியிலும் இல்லாத அறிவியல் புத்தகங்கள் இருக்கிறதா?
எதிர்காலத்துக்கு தேவைப்படுகிற கணக்கு, அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களையே அனைத்து மாணவர்களும் எளிதாக கற்று தேர்ச்சி அடையும் நிலையை நம் நாடு இன்னும் எட்டவில்லை. இந்த நிலையில் கூடுதலாக ஒரு சுமை தேவையா?
வேற்று மாநிலத்தவரை அவர்கள் தாய்மொழியில் கற்க விடாமல் தடுக்கிறோமா?
தமிழகத்தில் எந்த மொழியையும் கற்பதற்கு தடை இல்லை. தமிழகத்தில் மொழிவாரி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்கும் வசதி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
2016ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட மொழிவாரி சிறுபான்மையினருக்கான 52வது அறிக்கையில் இதை பற்றிய புள்ளிவிவரங்கள் இருக்கிறது. அறிக்கை அரசு வலைத்தளத்தில் இருக்கிறது. அதன் லிங்க்: http://www.minorityaffairs.gov.in/sites/default/files/2.%2052nd%20Report%20English.pdf
அறிக்கையின் 136ஆம் பக்கத்தில், தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மை மொழிகளுக்கான பள்ளிகளின் எண்ணிக்கை, மற்றும் அதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் இருக்கிறது. அதில் தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம், இந்தி, இவ்வளவு ஏன், குஜராத்தி மொழியில் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் கூட இருப்பதை காணலாம்.
ஓசூர் பகுதிகளில், பல அரசு பள்ளிகளில் தெலுங்கு மற்றும் கன்னட வழி கல்வி பயிற்றுவிக்க படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், சில அரசு பள்ளிகள் மலையாளம் பயிற்றுவிக்க படுகிறது.
இது தவிர, புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க உதவி வழங்கப்படுகிறது. பெங்காலி, ஓடியா மொழிகளிலேயே அவர்களுக்கு பாட புத்தகம் வழங்கப்படுகிறது.
இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்ட கல்விக் கொள்கை ஆவணத்தில் இருக்கிறது. அதன் லிங்க்: https://cms.tn.gov.in/sites/default/files/documents/schooledu_e_pn_2016_17.pdf
இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, தமிழ்நாடு பாடநூல் நிறுவனமே இந்தியில் புத்தகங்களை அச்சடித்து வழங்குகிறது!
புத்தகத்தின் லிங்க்: http://tnschools.gov.in/media/textbooks/5th_Hindi_Final_19-03-19.pdf
இதில் இருந்தே தெளிவாகி இருக்கும். மாற்று மொழியினர் தங்கள் மொழியை கற்க தமிழகம் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஒரு படி மேலே போய் உதவி செய்து வருகிறது. ஆனால், திணிக்க நினைத்தால், எதிர்ப்பு கிளம்பும்!
நம்மை இந்த அளவுக்கு இந்தியை படிக்க சொல்லி வற்புறுத்துபவர்கள், அவர்கள் மாநிலங்களில் மொழிவாரி சிறுபான்மையினர் தங்கள் மொழியை கற்க என்ன வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா?
அதே மொழிவாரி சிறுபான்மையினருக்கான 52வது அறிக்கையில், 50ஆம் பக்கத்தில், உத்திர பிரதேசத்தின் இலட்சணத்தை காணலாம்.
எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை!! இதுதான் இந்தி பேசும் மாநிலங்களின் இரட்டை வேடம். இத்தனை ஆண்டுகளாக, பிற மாநிலங்கள் மூன்று மொழி கற்க வேண்டும் என்று சட்டம் போட்டவர்கள், தங்கள் மாநிலங்களில் இது வரை மற்ற மாநில மொழிகளை மூன்றாவது மொழியாக கற்க அனுமதித்தார்களா? இல்லை!
மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் தேர்வு செய்யலாம் என்ற புதிய உருட்டு
தற்போது மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று சமரசம் செய்தது போல் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அது நடக்காது என்று தெரியும். ஒரு வகுப்பில், ஒரு மாணவன் மட்டும் பெங்காலி மொழி கற்க விரும்பினால், அந்த மாணவனுக்காக மட்டும் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியுமா? குறைந்த பட்சம் 20 மாணவர்கள் வேண்டும், 30 மாணவர்கள் வேண்டும் என்று புதிதாக ஒரு சட்டத்தை கொண்டு வருவார்கள். கடைசியில், அனைத்து மாணவர்களும் இந்தி மொழியையே கற்கும் நிலைமை வரும்.
மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் தேர்வு செய்ய தேவையான அளவு நிதியை ஓதுக்குவோம் என்று ஒன்றிய அரசு கூறுமேயானால், அதை முதலில் ஒரு இந்தி பேசும் மாநிலத்திலோ, குஜராத்திலோ செயல் படுத்தி காட்டட்டும்.
குஜராத்தில் அடிப்படை கல்வியை கற்றுக்கொடுக்கவே தேவையான அளவு ஆசிரியர்கள் இல்லை. உபி, பிகார் மாநிலங்களில் இன்னும் மோசம். இரண்டு மொழிகளை கற்றுக்கொடுக்கவே நிதியை ஒதுக்காத அரசுகளா அத்தனை மொழிகளுக்கு நிதி ஒதுக்க போகிறது? இருக்கிற நிதி அனைத்தும் இந்தி சமஸ்கிருதத்துக்கே செலவிடப்படும்!
இந்தி பேசும் மாநிலங்களில், தென்னிந்திய மொழியை கற்க மாட்டார்கள். சமஸ்கிருதத்தையே விரும்புவார்கள். காரணம், இந்தி பேசுபவர்களுக்கு, சமஸ்கிருதம் படிப்பது எளிது. அவர்களுக்கு மூன்றாவது மொழி படிப்பது எளிதாகி விடும். ஆனால், தமிழகத்து மாணவர்களுக்கு சுமையாகி விடும்.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி.
இந்தி பேசப்படும் மாநிலங்களில் சமஸ்கிருதம்.
இதுவே அவர்கள் திட்டம்.
பிற மொழிகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க தேவையான அளவு நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காது என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு.
செம்மொழிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு என்ற கேள்விக்கு, 3.2.2020 அன்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் சிங்க் படேல் அளித்த பதில் இது. மக்களவை வலைத்தளத்தில் இருக்கிறது. லிங்க் http://164.100.24.220/loksabhaquestions/annex/173/AU171.pdf
மூன்று ஆண்டுகளுக்கும் செலவிடப்பட்ட மொத்த தொகை
சமஸ்கிருதம் – 643.84 கோடி
தமிழ் – 22.94 கோடி
644 கோடிக்கும் 23 கோடிக்கும் இடையே கடலளவு தூரம் இருக்கிறது. இதுதான் இவர்கள் பிற மொழிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். ஒன்றிய அரசின் தமிழ் மொழி பாசமெல்லாம் பேச்சளவில் மட்டுமே… செயலில் இருக்காது என்பதை அமைச்சர் கொடுத்த இந்த புள்ளிவிவரத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.
இந்தி திணிக்கப்படுவதின் உள்நோக்கம் என்ன?
- குறிப்பிட்ட அந்த நான்கு மாநிலங்களின் ஓட்டு! அந்த நான்கு மாநிலங்களில் இடங்களை அள்ளினால், மத்தியில் பெரும்பான்மை ஆட்சி அமைப்பது எளிது
- இந்தியா முழுக்க ஒற்றை கலாச்சாரம் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குறிக்கோள்.
- அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் எளிதாகி விடும்
- கல்வியை முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முதல் படி
கட்டுரைச் சுருக்கம்
- இந்தி பேசுபவர்களும் ஆங்கிலம் கற்பதால், ஆங்கிலம் பொது மொழியாக இருப்பதே எளிதான தீர்வு.
- இந்தி மொழிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கு இந்தி மொழி பேசும் மாநிலங்களின் பொருளாதார பின்னடைவே எடுத்துக்காட்டு
- புத்தகங்களில் படிப்பதன் மூலம் ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடியாது. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்
- மூன்றாவது மொழி மாணவர்களுக்கு ஒரு தேவையற்ற சுமை. ஒரு ஆண்டு பின்தங்கும் ஆபத்து இருக்கிறது. இடைநிற்றல் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது.
- தமிழகத்தில் பிற மொழியினர் அவர்கள் மொழியை கற்க வசதி இருக்கிறது.
- மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் கற்கலாம் என்பதை நடைமுறைப்படுத்துவது இயலாது.
நன்றி