Reading view

கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள்

அடிமைத்தளை மனித இனத்துக்கு எதிரானது, அதை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை முதலில் ஆங்கிலேயர்களுக்குத்தான் தோன்றியது என வரலாறு தெரிவிக்கிறது. 1772இல் இங்கிலாந்தில் நடைபெற்ற வழக்கொன்றில் அந்த மண்ணில் வசிக்கும் அடிமையின் உரிமைகள் குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது. 1778இல் ஸ்காட்லந்தில் நடைபெற்ற மற்றொரு வழக்கில் 1772ஆம் ஆண்டின் வழக்குத் தீர்ப்பை முன்னோடியாகக் கொண்டு வேறொரு ஆப்பிரிக்க அடிமைக்கு விடுதலை வழங்கப்பட்டது.

1787ஆம் ஆண்டு மே 22ஆம் நாளில் அடிமை வாணிக ஒழிப்புச் சங்கம் இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் குவேக்கர்கள் என அழைக்கப்பட்ட சமூகத்தின் நண்பர்கள் என்ற கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். அமைதியான முறையில் எந்த வன்முறையுமின்றிப் பணியாற்றிய இந்தச் சங்கம் பின்னாளில் தோன்றிய மற்ற இயக்கங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. அடிமை வாணிகத்தின் தீமைகள் குறித்தும் ஆப்பிரிக்க மக்களின் துயர நிலை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துச் சொன்னது. சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற பிரிட்டிஷ் பாராளுமன்றம் அடிமை வாணிகத்தைத் தடைசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

1806ஆம் ஆண்டில் பிரிட்டிஷ், அமெரிக்க அரசாங்கங்கள் அடிமைகளுக்கு மறுவாழ்வளிக்கவேண்டும் என்று எண்ணம்கொண்டன. அடிமை வர்த்தகத்தோடு தங்கள் நாடுகளுக்கு எந்தத் தொடர்புமில்லை என்று அறிக்கை வெளியிட்டன. அதையொட்டி பிரிட்டிஷ் பாராளுமன்றம் அடிமை வாணிகச் சட்டத்தை 1807ஆம் ஆண்டு இயற்றியது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகக் கண்காணிப்புப் படைகளையும் அமைத்தது. ஆங்கிலேயப் பேரரசு தன்னுடைய காலனி நாடுகளில் அடிமைகளை விற்பதும் வாங்குவதும் சட்டத்துக்குப் புறம்பான செயல் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் அடிமைத்தளையை மட்டுப்படுத்தவும் காலப்போக்கில் ஒழிக்கவும் 1823இல் சங்கமொன்று அமைக்கப்பட்டது. இந்தியாவைத் தவிர மற்ற பகுதிகளில் அடிமைத்தளையை ஒழிக்கும் சட்டத்தை 1833இல் இயற்றியது. இந்தியாவில் அடிமைப்படுத்தல் தொன்றுதொட்ட வழக்கமாக நிலவியதால் 1838ஆம் ஆண்டில்தான் அடிமைத்தளையை ஒழிக்கும் பணியை நிறைவேற்ற முடிந்தது. இந்திய அடிமைச் சட்டத்தை 1843இல் நிறைவேற்றியது.

உலகளவில் நடைபெற்ற அடிமை வாணிகத்தில் ஆங்கிலேயர்களின் பங்கு 41% வரை இருந்ததால் அடிமைத்தளை ஒழிப்பு நடவடிக்கைகளினால் அடிமை வாணிகம் பெரும்பின்னடைவைச் சந்தித்தது. காலனி நாடுகளுடன் தான் கொண்டிருந்த அரசியல் உறவின்மூலம் அடிமை வாணிகத்தை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது இங்கிலாந்து. ஒப்பந்தத்தை மீறும் கப்பல்களைத் தடைசெய்யும் உரிமையையும் பெற்றது.

0

அடிமைத்தளை ஒழிப்பில் முக்கியப் பங்கு வகித்த எளிமை, சமத்துவம், அமைதி, சமூக நீதியைக் கடைபிடிப்பதில் உறுதியாகச் செயல்பட்டனர். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றுவதற்கான தூண்டுகோலாகச் செயல்பட்டனர். இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே 1670களில் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள பார்படோஸ் தீவில் அடிமைகளை நல்லவிதமாக நடத்தவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். 1688இல் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட புதிய பிரிட்டிஷ் காலனியான பென்சில்வேனியாவில் நிலவிய அடிமைத்தளையை வெளிப்படையாக எதிர்த்தனர். ஜெர்மன்டவுன் என்ற ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் அடிமைத்தளைக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

அடிமைத்தளையை மறுத்து அமெரிக்காவில் பொதுவெளியில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கை இதுதான். உலகளவில் மனித உரிமையை வரையறுத்த முதல் ஆவணமும்கூட. அந்தக் காலகட்டத்தில் இந்தச் செயல்பாடு பரவலாகக் கவனிக்கப்படவில்லை என்றாலும் அடிமைத்தளை அறத்தின்பால் சார்ந்ததா என்ற கேள்வியை பென்சில்வேனியாவைச் சேர்ந்த குவேக்கர்களிடையே எழுப்பியது. அடிமை ஒழிப்பு குறித்த எழுத்துக்களும் செயல்பாடுகளும் தீவிரமடைந்தன.

1740ஆம் ஆண்டு முதல் புதிய தலைமுறையைச் சேர்ந்த குவேக்கர்கள் அடிமை வாணிகத்துடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினர். 1775இல் பென்சில்வேனியா அடிமை ஒழிப்புச் சங்கம் உருவானது. அடிமை வாணிகத்தில் ஈடுபடுவது ஒழுக்கக்கேடான செயல் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்தினர். வட கரோலினா மாகாணத்தில் அடிமைகளை விடுவிப்பது தடை செய்யப்பட்டிருந்ததால் அங்கே வசித்த குவேக்கர்கள் வேறு மாகாணங்களுக்குச் சென்று அடிமைகளை விடுவித்தனர்.

அடிமைகள் தப்பிச் சென்று விடுதலைபெற உதவும் ’நிலத்தடி இருப்புப்பாதை’யை அமைத்து அதை வழிநடத்துவதில் குவேக்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். வட கரோலினாவில் வசித்த லீவை காஃபின் இளம்பருவ முதலே தப்பியோடும் அடிமைகளுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தார், பின்னாளில் ஒஹையோ-இண்டியானா மாகாணங்களின் நிலத்தடி இருப்புப்பாதையின் தலைவராக விளங்கினார். ஹாரியட் டப்மனும் இந்த நிலத்தடி இருப்புப்பாதையைப் பயன்படுத்திப் பல அடிமைகள் தப்பிச்செல்ல உதவினார்.

ஈலையஸ் ஹிக்ஸ் என்ற குவேக்கர் ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பினால் உருவான பொருள்களைப் பற்றிய நூலொன்றை 1811இல் எழுதினார். அப்படித் தயாரிக்கப்பட்ட பொருட்களை விலைகொடுத்து வாங்குவது தவறு என்று வலியுறுத்தினார். இவர்களைப்போல பல குவேக்கர்கள் அடிமைகளின் மேன்மைக்காகத் தன்னலமின்றி உழைத்தனர். இதனால் கோபமடைந்த அடிமை உரிமையாளர்கள் குவேக்கர்களைக் கொல்லவும் தயங்கவில்லை. குவேக்கர்கள் உயிருக்குப் பயந்து அமெரிக்காவின் மேற்குப் பகுதிக்குக் குடிபெயரவேண்டியிருந்தது.

0

என்லைட்டன்மெண்ட் எனப்படும் அறிவொளிக் காலம் தொடங்கி அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை அமெரிக்கர்களிடையே மேலோங்கியது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மஸசூஸெட்ஸ் மாகாணம் அடிமை வாணிகம் சட்டத்துக்குப் புறம்பானது என 1772இல் அறிவித்தது. 1764 முதல் 1774 வரையில் மஸசூஸெட்ஸ் மாகாண நீதிமன்றத்தில் சுமார் 17 அடிமைகள் தங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்கள்.

இதற்கிடையில் 1775இல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 13 அமெரிக்க மாகாணங்கள் தங்களின் விடுதலைக்காகப் போராடின. அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்கியது. 1783 வரையில் நடைபெற்ற இந்தப் போரின் முடிவில் பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து 13 மாகாணங்களும் விடுதலை பெற்றன. எல்லா மாகாணங்களும் ஒன்றிணைக்கப்பட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவானது. அதன் முதல் அதிபராகப் பதவியேற்றார் ஜார்ஜ் வாஷிங்டன்.

1794இல் அமெரிக்கக் கப்பல்களை அடிமை வாணிகத்துக்குப் பயன்படுத்துவதும் அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கு அடிமைகளைக் கொண்டுசெல்வதும் தடை செய்யப்பட்டன. ஆனால் இதை நடைமுறைப்படுத்த எந்த முன்னெடுப்பும் இல்லை என்பதால் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கொண்டுவருவது தொடர்ந்து நடைபெற்றது. அடிமை ஒழிப்புக் குழுவினரின் இடைவிடாத முயற்சியினால் 1804இல் அமெரிக்காவின் வடக்கு மாகாணங்கள் அனைத்திலும் அடிமை வாணிகத்துக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது. குறிப்பிட்ட வயதையடைந்ததும் அடிமைகள் ஒப்பந்தக்கூலிகளாக மாறிவிடுவர்.

1808இல் அமெரிக்கப் பாராளுமன்றம் அடிமைகள் இறக்குமதி தடைச் சட்டத்தை இயற்றியது. ஆனால் உள்நாட்டில் அடிமைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து அதில் எதுவும் சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அடிமைத்தளை தொடர்ந்து நடைமுறையிலிருந்ததால் அடிமைகளில் பலர் கனடாவுக்குத் தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே 1812இல் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது. இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லையென்றாலும் அமெரிக்கர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தித் தேசப்பற்றை விதைத்தது.

1793, 1850ஆம் ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தப்பியோடும் அடிமைகள் சட்டம் அடிமைத்தளையிலிருந்து தப்பிக்க முயலும் அடிமைகளைச் சிறைப்பிடித்து மீண்டும் உரிமையாளர்களிடமே சேர்ப்பிக்கவேண்டும் என்றது. இதை அமெரிக்காவின் வடக்கு மாகாணங்கள் கடுமையாக எதிர்த்தன. தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமைகள் வடக்கு மாகாணங்களுக்கும் அங்கிருந்து கனடாவுக்கும் தப்பிச்செல்ல முயன்றனர்.

அமெரிக்காவிலிருந்த அடிமைகளின் மொத்த எண்ணிக்கை 40 லட்சம். அவர்களில் 95 சதவீதத்தினர் தெற்கு மாகாணங்களில் வசித்தனர். அடிமைத்தளையை ஆதரிக்கும் சட்டங்களையும் செயல்களையும் தெற்கு மாகாணங்கள் பின்பற்றின. அடிமை ஒழிப்பு இயக்கத்தினால் தங்களின் விவசாயத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று நம்பின. அடிமை ஒழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்த 11 தெற்கு மாகாணங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து தாங்கள் பிரிந்துசெல்வதாக அறிவித்தன. ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான அமெரிக்க ஐக்கிய நாடுகள் இதை ஏற்கவில்லை. அந்தப் பிரிவை எதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் 1861 முதல் 1865ஆம் ஆண்டு வரையில் நடந்தது. தெற்கு மாகாணங்கள் தோல்வியடைந்து மீண்டும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இணைக்கப்பட்டன. அடிமைத்தளையை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.

0

அமெரிக்காவின் விளைநிலங்களும் பண்ணைகளும் அடிமைகளின் உழைப்பை நம்பியிருந்ததால் அடிமைத்தளை ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்தது. கிழக்குக் கடற்கரையில் வசித்த ஆப்பிரிக்க அடிமைகள் பால்டிமோர், நியூ ஆர்லியன்ஸ் போன்ற மேரிலாண்டின் மற்ற பகுதிகளுக்கும் லூசியானா, கெண்டகி, மிஸ்ஸிசிப்பி போன்ற தெற்கு மாகாணங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பெரும் விற்பனையாளர்களும் இடைத்தரகர்களும் ரொக்கமாகப் பணம்கொடுத்து அடிமைகளை வாங்கிச் சென்றனர். அடிமைகள் தேவை என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தனர்.

‘10 முதல் 25 வயது வரையிலான ஆண், பெண் அடிமைகள் 50 முதல் 100 பேர் வரை தேவை. சந்தை விலைக்கும் அதிகமாக உடனடி ரொக்கம் கொடுக்கப்படும்.’

லூசியானாவைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் 12 முதல் 25 வயது வரையிலான அடிமைகளுக்கு நல்ல விலை தருவதாக விளம்பரம் செய்தார். கெண்டகியைச் சேர்ந்த ஜேம்ஸ் காக்ஸ் 6 மாதம் முதல் 31 வயது வரையிலான 38 குழந்தைகள், பெண்கள், ஆண்களை ஜான் ஹேன்ஸிடமிருந்து 6610 அமெரிக்க டாலருக்கு வாங்கினார். குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து விற்கும் அவலமும் நிகழ்ந்தது. இதுதவிர சிறிய நில உரிமையாளர்களும் நேரடியாகத் தாங்களே வந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்றனர். நேரடியாக வாங்கினால் 400 டாலர் என்றால் தரகர்மூலமாக விற்பனைக்கு வரும் அடிமைகளுக்கு 800 டாலர்வரை விலைகொடுக்க நேரிடும்.

அடிமை உரிமையாளர்களில் சிலர் தங்களின் கோட்டத்தைத் தாண்டியோ மாகாணத்தைத் தாண்டியோ விற்பதற்குத் தயங்கினர். தங்களின் அடிமைகளுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என்ற எண்ணமும் இரக்க குணமும் காரணம். மேலும் உறவுகளைப் பிரிந்து தூரமான இடங்களுக்குச் செல்லும் அடிமைகள் துயரத்துக்கு ஆளாவர்கள், அவர்களின் உழைப்புத்திறன் குறையும் என்று நினைத்ததும் காரணம்.

அடிமைகளை விற்பது தெரிந்தால் ஊருக்குள் தங்கள் பெயர் கெட்டுப் போய்விடுமென நினைத்து அடிமைகள் ஓடிப்போய்விட்டார்கள் என்ற பொய்யைக் கசியவிட்டார்கள் சிலர். ஆனால் சத்தமில்லாமல் அடிமைகளையும் கூடவே அடிமையல்லாதவர்களையும் சேர்த்தே வேறு இடங்களில் விற்றார்கள்.

எட்வர்ட் ப்ராடஸுக்கு குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதானது. பென் ராஸ் குடும்பத்தினரும் அவர்களின் உறவினர்களில் பலரும் ஏலத்தில் விடப்பட்டனர் அல்லது மற்ற வியாபாரிகளுக்கு விற்கப்பட்டனர். செலவுகளைச் சமாளிப்பதற்காக ஹாரியட்டின் மூத்த சகோதரியான மரியா ரிட்டியும் சகோதரன் ஜேம்ஸும் வேறொருவருக்கு விற்கப்பட்டனர். ஏற்கெனவே தந்தை பென் ராஸிடமிருந்து பிரிந்து வாழ்ந்த குழந்தைகள் இப்போது தாயிடமிருந்தும் உடன்பிறந்தவர்களிடமிருந்தும் பிரிக்கப்பட்டனர்.

அடுத்து லீனா, சோஃப் என்ற ஹாரியட்டின் இன்னும் இரண்டு சகோதரிகளை வேறு மாகாணத்துக்கு விற்றார் எட்வர்ட். வீட்டைத் திரும்பிப்பார்த்து அழுது அரற்றியபடி அவர்களிருவரும் அழைத்துச்செல்லப்பட்ட காட்சி சிறுமி மிண்டியின் மனதில் பதிந்துபோனது. பொதுவாக அடிமைகளை விற்கும்போது நீதிமன்றத்தில் புதிய உரிமையாளரின் பெயருக்கு அவர்களைப் பதிவுசெய்வது நடைமுறை. ஆனால் எட்வர்ட் வரி கட்டாமல் இருப்பதற்காக அதைச் செய்யவில்லை.

மிண்டியின் இன்னொரு சகோதரிக்குத் திருமணம் முடிந்து இரண்டு மாதக் கைக்குழந்தையோடு இருந்தாள். அவளையும் ஜியார்ஜியா மாகாணத்துக்கு விற்க ஏற்பாடு செய்தான் எட்வர்ட் ப்ராடஸ். அந்தச் சகோதரியின் கணவன் தனக்குத் தெரிந்த பெரிய மனிதர் ஒருவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். அந்த மனிதரும் உன் மனைவியை என் வீட்டுக்கு அனுப்பி வை, பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தார். ஆனால் சகோதரி வந்துசேர்ந்ததும் அந்தப் பெரிய மனிதர் எட்வர்டுக்குத் தகவல் சொல்லிவிட்டார். எட்வர்டும் தாயை மாத்திரம் பிரித்து ஜியார்ஜியா மாகாணத்துக்கு அனுப்பிவிட்டான்.

ரிட் ராஸுக்கு தன் குடும்பத்தினரைப் பிரித்த எட்வர்டின் மேல் கோபமிருந்தாலும் அப்போதைக்கு எதுவும் செய்யமுடியவில்லை. சில ஆண்டுகள் கழித்துத் தன்னுடைய இளைய மகன் மோசஸை விற்பனைசெய்தபோது அதைத் தடுக்க முயற்சி செய்தார். மோசஸை வாங்கியவர் ஜியார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அவனை அழைத்துச் செல்வதற்காக எட்வர்டின் பண்ணைக்கு குதிரை வண்டியில் வந்தார். வயலில் வேலைசெய்துகொண்டிருந்த மோசஸை குதிரையைப் பிடித்துக்கொள்ள கூப்பிட்டான் எட்வர்ட். ஆனால் மோசஸை விற்கப் போகிறார்கள் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு மகனுக்குப் பதிலாக ரிட் வந்தார்.

உரிமையாளர் பணத்தை எண்ணுவதைப் பார்த்த ரிட் பையனை எதற்காக அழைத்தீர்கள் என்று கேட்டார். எட்வர்ட் பதிலேதும் சொல்லாமல் குடிக்கத் தண்ணீர் எடுத்துவரச் சொன்னான். ரிட் போனதும் மீண்டும் மோசஸை உரத்த குரலில் கூப்பிட்டுக் குதிரையை வண்டியில் பூட்டுமாறு சொன்னான். மறுபடியும் மகனுக்குப் பதில் ரிட் வந்து என்ன வேண்டுமெனக் கேட்டார். உன்னைக் கூப்பிடவில்லை மோசஸைத்தான் கூப்பிட்டேன் என்று சொன்னான் எட்வர்ட். மூன்றாவது முறை மோசஸைத் தேடி தானே விவசாய நிலத்துக்கு வந்தான் எட்வர்ட். ஆனால் ரிட் தன்னுடைய உறவினர்களின் உதவியுடன் அவனை யாருக்கும் தெரியாத இடத்தில் சுமார் ஒரு மாத காலத்துக்கு ஒளிந்துகொள்ளச் செய்தார்.

அடிமைகளை வாங்கவரும் வாணிகர்கள் அந்த ஊரிலேயே ஓரிரு மாதங்கள் தங்கியிருந்து மொத்தமாகப் பல அடிமைகளை வாங்கிய பிறகு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்புவது வழக்கம். அதற்குள் எப்படியும் மோசஸைக் கண்டுபிடித்து ஜியார்ஜியாவுக்கு அனுப்பிவிடலாம் என்று முடிவுசெய்து வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்காமல் இருந்தான் எட்வர்ட். ஆனால் ரிட்டும் அவருடைய சமூக வலைப்பின்னலைச் சேர்ந்தவர்களும் மோசஸை இப்படி ஒளித்துவைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

எட்வர்டிடம் விசுவாசமாக இருக்கும் இன்னொரு வேலையாள் மரங்களடர்ந்த காட்டுப் பகுதியில் மோசஸ் ஒளிந்திருப்பதாகத் தகவல் சொன்னான். மோசஸைப் பிடிப்பதற்காக அங்கே சென்றபோது சிறுவன் தப்பிச்சென்றுவிட்டான். மீண்டும் இன்னொரு வெள்ளைக்காரரை ரிட்டின் குடியிருப்புக்கு அனுப்பிவைத்தான் எட்வர்ட். வாசலில் நின்றபடி சுருட்டைப் பற்றவைக்க நெருப்பு கேட்ட அந்த வெள்ளைக்காரரைப் பார்த்ததும் எதற்காக வந்திருக்கிறார் என்பது ரிட்டுக்குத் தெரிந்துவிட்டது. என் மகனைப் பிடிப்பதற்கு யாராவது வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தால் மண்டையைப் பிளந்துவிடுவேன் என்று மிரட்டினார். அவர்களும் பயந்து ஓடிப்போயினர். இப்படியே பல உத்திகளைச்செய்து அந்த ஜியார்ஜியா வாணிகர் ஊர்திரும்பும் வரையில் மோசஸைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

தன்னுடைய உரிமையாளரையும் அந்தப் பகுதியின் பெரிய மனிதர்களில் ஒருவரையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்றார் ரிட். தனது குழந்தைகளை ஒவ்வொருவராக இழந்த துயரத்தில் உயிரையும் பணயம் வைத்துத்தான் இதைச் செய்தார். இருந்தாலும் தானும் தன் குடும்பத்தினரும் எட்வர்டின் சொத்துகள் என்பதும் தங்களை எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதும் தெரிந்திருந்தது.

சிறுமி மிண்டியையும் மற்ற குழந்தைகளையும் அவ்வப்போது வேறு உரிமையாளர்களின் வீட்டில் பணிசெய்ய அனுப்பிவைத்து அதற்கான விலையைப் பெற்றுக்கொள்வான் எட்வர்ட். தன்னருகில் இருக்கும் வரையில்தான் ரிட்டினால் மிண்டியைப் பாதுகாக்க முடிந்தது. பணியாற்றி இடத்தில் மிண்டியைச் சிலர் சாட்டையால் அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். அவளது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊறுவிளைவிக்கும் விதமாகக் கொடூரமாக நடந்துகொண்டனர்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள் appeared first on கிழக்கு டுடே.

  •  

கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

அடிமையல்லாத ஆப்பிரிக்கர்களின் மக்கள்தொகை காலப்போக்கில் அதிகரித்தது வெள்ளையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள், விதிகளை இயற்றி அவற்றைப் பல வழிகளில் நடைமுறைப்படுத்தினர். 1783ஆம் ஆண்டுக்கு முன் வரையில் ஆப்பிரிக்கர்களில் அடிமையல்லாதவர்களுக்கும் சொத்து வைத்திருப்பவர்களுக்கும் வாக்குரிமை இருந்தது. 1802 முதல் அந்த உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் சொத்துக்களற்ற வெள்ளையர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 1796 முதல் அடிமையல்லாத ஆப்பிரிக்கர்கள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லமுடியாது என்ற நிலை ஏற்பட்டது.

அடிமைகளை விடுவிக்கவேண்டும், அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என வலியுறுத்திய மெதாடிஸ்ட் சமயப் பிரிவும் பழைமைவாதத்துக்குத் திரும்பியது. அடிமை உரிமையாளர்களான பிரமுகர் குழுவின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதற்காக ஆப்பிரிக்கர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 1800ஆம் ஆண்டு முதல் பல சமூக, வர்த்தக, பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த ஆண்டு அடிமைகள் திட்டமிட்டிருந்த ஆயுதமேந்திய புரட்சியொன்று தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு நசுக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் வெள்ளையர்களைக் கொல்வதற்காகச் சதித்திட்டம் தீட்டியதாக இன்னொரு ஆப்பிரிக்கர் தூக்கிலிடப்பட்டார். அடிமை ஆப்பிரிக்கர்கள் விடுதலை பெறுவார்கள் என்ற நம்பிக்கை பொய்யானது.

1810களில் மேரிலாண்டின் வர்த்தகமும் பொருளாதாரமும் பல்வேறு காரணங்களால் நலிவடைந்தன. டார்செஸ்டரின் முன்னணிக் குடும்பங்கள் பின்னடைவைச் சந்தித்தன. பல நூறு ஏக்கரில் பரந்து விரிந்த நிலங்களுக்கும் பல அடிமைகளுக்கும் உரிமையாளரான ஆண்டனி தாம்சன் கடனாளியானார். கடனைத் திருப்பித் தரமுடியாததால் 1817இல் சிறையிலடைக்கப்பட்டார். ஆனாலும் தன்னுடைய பண்ணையில் விவசாயம் செய்வதையும் மர அறுப்புத் தொழிலையும் நிறுத்தவில்லை.

இன்னொரு புறம், மேரிலாண்டைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அடிமைகளை விடுவிப்பதற்குப் பதிலாக அலபாமா, மிஸ்ஸிசிப்பி, லூசியானா, ஃபிளோரிடா, டெக்சஸ் போன்ற மற்ற மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு விற்றனர். இதனால் பல அடிமைக் குடும்பங்கள் பிரிய நேரிட்டது. இது அடிமைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஹாரியட்டின் பெற்றோரும் தங்கள் குடும்பத்தில் யாரை எப்போது எங்கே விற்பார்கள் என்ற பதற்றத்துடன் இருந்தனர்.

பல நேரங்களில் அடிமைக் குடும்பங்களைத் தண்டிப்பதற்காகவும் இப்படிச் செய்தனர் வெள்ளையர்கள். பெற்றோரும் குழந்தைகளும் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டதால் அடிமைகளில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் அவதிப்பட்டனர். மூன்றில் ஒருவரின் மணவாழ்வு பாதிக்கப்பட்டது. அப்படிப் பிரிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இறந்துபோனதும் நடந்தது.

அடிமைத்தளையில் சிக்கிய ஆப்பிரிக்கர்களுக்குத் திருமணம் என்ற பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சாத்தியமில்லை என்பது தெரிந்திருந்தது. ‘இந்தப் பெண்ணை அல்லது இந்த ஆணை மரணம் அல்லது தூரம் பிரித்து வைக்கும் வரையில் உங்கள் இணையராக ஏற்றுக் கொள்கிறீர்களா?’ என மணமக்கள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகூட மாற்றிச் சொல்லப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட சொற்களின் பொருளைப் புரிந்துகொண்ட இணையர்கள் மணமுடித்த பிறகு வாழ்க்கையை நடுக்கத்துடனும் அச்சத்துடனும் நடத்தினர். தங்களின் மணவாழ்வைப் பேணுவதற்கு எதிர்கொள்ளவேண்டிய இடர்களை நன்றாக அறிந்திருந்தனர். என்றாலும் தங்களுக்கென ஒரு குடும்பமிருந்தால் அடிமை வாழ்வின் கடுமையைக் குறைக்கும், இணையர், குழந்தைகள், உறவுகளின் அருகாமை ஆறுதலைத் தரும் என நம்பினர். எனவே, மணவாழ்வு நீடித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

திருமணம் என்பது சமயச் சடங்கு மட்டுமல்ல, குடிமுறை உரிமையும்கூட. ஆனால் சட்டபூர்வமான குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே உரித்தான உரிமை. சமூகத்தில் எந்தவிதமான உரிமையுமற்ற அடிமைகள் எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடமுடியாது. அதனால் அவர்களின் திருமணங்களும் சட்டத்தாலோ கிறிஸ்தவ சமயத்தினாலோ அங்கீகரிக்கப்படவில்லை, புனிதமானதாகக் கருதப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையைக் கடத்தினார்கள்.

ஆப்பிரிக்கர்களைத் தங்களின் மற்ற உடைமைகளைப்போலத்தான் வெள்ளையர்கள் நடத்தினர். அவர்கள் வாழ்வின் எல்லா முடிவுகளையும் வெள்ளை உரிமையாளர்கள்தான் எடுத்தனர். திருமணம் செய்துகொள்ளலாமா, எப்போது செய்யலாம், யாரைச் செய்யலாம் என்று அனைத்தும் அவர்கள் கையில்தான் இருந்தது. பல நேரங்களில் மனமொவ்வா ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயத் திருமணம்செய்து வைத்தனர். அடிமைகளாக இருக்கும் கொடுமையோடு பல வாழ்வியல், உள, உணர்வுச் சிக்கல்களுக்கும் ஆளாகினர் ஆப்பிரிக்கர்கள். அதிலும் அந்த ஆணோ பெண்ணோ வேறொருவரை விரும்பியிருந்தால் அவர்களின் வாழ்வே சீர்குலைந்துபோனது.

பணத்தேவையிருந்தால் இணையரில் ஒருவரை விற்கும் முடிவை எடுப்பதற்கும் தயங்கவில்லை வெள்ளை உரிமையாளர்கள். அடிமைகளின் மனைவியருடன் தங்களின் விருப்பத்துக்கேற்பப் பாலுறவுகொண்டனர். அவர்களைத் தங்களின் பல மனைவியரோடு ஒருவராக இருக்கச் செய்தனர். அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றவர்கள் அவர்களின் குடும்பத்தினரோடு வசிக்கவிடாமல் தடுத்தனர். அல்லது அவர்களை மீண்டும் அடிமைகளாக்கும் உத்திகளைச் செயல்படுத்தினர்.

ஒரு புறம் ஆப்பிரிக்கர்களை வெள்ளையர்களுக்குக் கீழ்நிலையிலும் விலங்குகளுக்குச் சற்று மேலேயும் இருப்பவர்கள் எனச் சொன்ன கிரேக்கப் படிமத்தை நம்பியதால் அவர்களுக்கு உணர்ச்சியோ சலனமோ கிடையாது, அதனால் நெருங்கிய உறவுகளைப் பிரிவது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று கூறினார்கள். மற்றொரு புறம் உரிமையாளர்கள் அடிமைகளை இரக்கத்துடன் நல்லவிதமாக நடத்தினார்கள், உணவும் உடையும் தங்குமிடமும் தந்தனர் என்று சொன்னார்கள். தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் அந்த இரண்டு கூற்றுகளிலும் உண்மையில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அடிமைத்தளை ஆப்பிரிக்க குடும்பங்களைச் சிதைத்து மக்களின் உடலையும் உள்ளத்தையும் எப்படியெல்லாம் காயப்படுத்தியது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

தங்களிடமிருந்து பிரித்து வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்ட உறவினர்களைத் தேடி ஆப்பிரிக்கர்கள் எழுதிய கடிதங்களையும் நாளிதழ்களில் வெளியிட்ட அறிக்கைகளையும் விளம்பரங்களையும் சேகரித்து அவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அந்தக் கடிதங்கள் அடிமைகள் அடிமை உரிமையாளர்களுக்கு எழுதியவை. நாளிதழ் விளம்பரங்களை அரசு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக வெளியிட்டனர். இவற்றோடுகூட ஆப்பிரிக்கர்களுக்கிடையே அமைந்த தகவல்தொடர்பு வலைப்பின்னலின் வழியே உறவுகளைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முயன்றனர்.

அடிமையல்லாதவர்களோ விடுவிக்கப்பட்டவர்களோ இன்னமும் அடிமைகளாக இருக்கும் தங்களின் இணையரையோ குழந்தைகளையோ விடுவிக்கவேண்டும் எனக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதங்களில் தங்களின் பிரிவுக்குக் காரணமானவர்களின்மீது பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது. கோரிக்கையாகவும் கட்டளையாகவும் இறைஞ்சலாகவும் விலைகொடுத்து வாங்கும் வணிகமாகவும் எனப் பல வழிகளில் அணுகுவதையும் பார்க்கமுடிகிறது.

பெரும்பாலான ஆப்பிரிக்கர்களுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது என்பதால் கடிதங்களையும் அறிவிப்புகளையும் எழுதுவதற்கு வெள்ளையர்களின் உதவி தேவை. அதற்காக அவர்களைப் பற்றி நல்ல வார்த்தை சொல்லிப் புகழவேண்டியிருந்தது. பல மாகாணங்களில் விடுதலை பெற்றவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் அல்லது அங்கே தங்குவதற்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அடிமைத்தளையில் இருப்பவர்கள் தப்பிக்க உதவிசெய்வது சட்டத்துக்கு எதிரானது என்பதால் அவர்களின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். இந்த எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி உறவினர்களோடு மீண்டும் இணையவேண்டும் என்ற உள்ளார்ந்த உந்துதலால் அந்தச் சவால்களையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.

பிரிக்கப்பட்ட உறவினர்களைத் தேடும் முயற்சியில் இறங்கிய அடிமைகளில் சிலர் கிறிஸ்தவ சமயத்தின் கோட்பாடுகளை எடுத்துச்சொல்லி வெள்ளை உரிமையாளர்களின் உதவியைப் பெறுவதற்கு முயன்றார்கள். அவர்களைக் கீழ்ப்படியச் செய்யப் பயன்பட்ட அதே மதம் அவர்கள் தங்களின் தன்மதிப்பு, தன்னியக்கம், எதிர்க்கும் ஆற்றல் ஆகியவற்றை உணர்ந்துகொள்ள உதவியது. அவர்கள் எழுதிய கடிதங்களில் கடவுள், சொர்க்கம், மறுமை ஆகியவற்றில் தங்களுக்குள்ள நம்பிக்கையை முன்னாள் உரிமையாளர்களிடம் எடுத்துச்சொல்லித் தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு முயற்சிசெய்தார்கள்.

ஜாக் ஹன்னிபல் என்ற ஆப்பிரிக்க அடிமை முன்னாள் உரிமையாளருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய குடும்பத்தினர் எங்கே உள்ளார்கள் என்று சமயத்தை முன்னிறுத்திக் கேட்கிறார். ‘வடக்கு கரோலினாவில் இருந்தபோது நீங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்த அதே கடவுளுக்கு உண்மையானவனாக இருக்கிறேன். மெதாடிஸ்ட் தேவாலயத்தின் உறுப்பினராக இருக்கிறேன்.’

1867இல் டெக்சஸைச் சேர்ந்த ஃபேனி என்பவர் தன்னுடைய சகோதரிக்கு கடிதம் எழுதினார். தன் குழந்தைகளை வேறொருவருக்கு விற்ற ப்ரூடஸ் ஸ்லேட் என்ற மனிதரிடம் ‘என்னுடைய குழந்தைகளைப் பிரிவதற்கு அவரே காரணம். அதற்காக அவர் கடவுளிடம் முழுமையாகப் பிரார்த்தனை செய்யவேண்டும். ஆனால், என் குழந்தைகளைக் கண்டுபிடிக்க உதவினால் கடவுள் அவர் செய்த பாவங்களை மன்னிக்கக்கூடும்.’

அர்கன்சஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஈஸ்டர் வேர் என்ற பெண் தன்னுடைய தந்தையான ஜேம்ஸ் வேர் என்பவரைத் தேடி நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டார். ‘தகவல் தேவை – அலபாமா டல்லேடேகா மாவட்டத்தில் என் தந்தை ஜேம்ஸ் வேருடன் 14வது வயது வரையில் வசித்தேன். பிறகு என்னுடைய எஜமானர் ஜிமிஸ் வேர் அவரை பென் ஆவரி என்பவருக்கு விற்றார். அவரைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் அவருடைய மகளிடம் தெரிவியுங்கள்.’

*

அட்ஹவ் பேட்டிசனைப்போலவே ஆண்டனி தாம்சனும் அவருடைய நண்பர்களும் அடிமைகளை விடுவிக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். அதே சமயம் உடனடியாகச் செயல்படுத்தாமல் படிப்படியாக நிறைவேற்றினர். 1830ஆம் ஆண்டில் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஆண்டனி தாம்சனிடம் 39 அடிமைகள் இருந்ததாகப் பதிவாகியுள்ளது. 1836இல் தான் இறப்பதற்கு முன்னர் தன்வசமிருந்த அடிமைகளை விடுவிக்கும் உயிலொன்றை எழுதினார். அதன்படி ஹாரியட்டின் தந்தை பென் ராஸ் 1840ஆம் ஆண்டு அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றார். அவருடன் ஜெரி மனோகீ என்ற அடிமையும் விடுவிக்கப்பட்டார். இருவருக்கும் தலா 10 ஏக்கர் நிலத்தையும் வழங்கினார் ஆண்டனி தாம்சன். இவர்களைத் தவிர மற்ற அடிமைகளையும் எப்போது விடுவிக்கவேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டார். குழந்தைகளை 44 வயதாகும்போது விடுதலை செய்யலாம் என்று எழுதினார்.

அவர் பண்ணையைச் சேர்ந்த பெண் அடிமைகள் அருகிலிருந்த மற்ற பண்ணைகளில் வேலைசெய்த அடிமைகளையோ அடிமையல்லாதவர்களையோ மணந்தனர். சில நேரங்களில் கணவனும் மனைவியும் ஒரே உரிமையாளரின் பண்ணையில் வேலைக்கமர்த்தப்படுவதுண்டு. மனநிறைவோடு குடும்ப வாழ்க்கை நடத்தும் அடிமைகளை விளைநிலத்துக்கு அருகிலேயே குடிவைத்தால் நன்றாக வேலைசெய்வார்கள் எனச் சில உரிமையாளர்கள் நம்பியதுதான் இதற்குக் காரணம்.

இப்படி அருகருகே அமைந்த பண்ணைகளைச் சேர்ந்த அடிமைகள் மணவாழ்வில் இணைந்ததால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் வாய்ப்பு அதிகரித்தது, அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. வெள்ளை உரிமையாளர்களின் குடும்பங்களோடு சமூக, பொருளாதாரப் பரிமாற்றம் நடந்து அதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையே தொடர்பு வலுப்பட்டது.

*

ஆண்டனி தாம்சனை இரண்டாவதாக மணந்துகொண்ட அட்ஹவ் பேட்டிசனின் பேத்தியான மேரி பேட்டிசன் ப்ராடஸ் தாம்சன் எதிர்பாராதவிதமாக 1810இல் இறந்துபோனார். மேரியின் மகன் எட்வர்டையும் அவருக்குச் சொந்தமான சொத்தையும் அடிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பை ஆண்டனி தாம்சன் ஏற்றார். அதே காலகட்டத்தில் தாம்சனின் பண்ணையில் வசித்த பென் ராஸ், ரிட் அடிமைத் தம்பதியினருக்கு அடுத்தடுத்து ஐந்து குழந்தைகள் பிறந்தன. அரமிண்டா என்னும் மிண்டி என்னும் ஹாரியட் 1822இல் பிறந்தார்.

எல்லா அடிமைகளையும்போலவே ஹாரியட் பிறந்த தேதியும் யாருக்கும் தெரியாது. அறுவடைக் காலம், பழங்களைப் பறிக்கும் காலம், இலையுதிர் காலம் என்று பருவங்களைக் கணக்கில்கொண்டு பிறந்த சமயத்தைக் குறிப்பிடுவதுதான் வழக்கம். 1822ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி ஹாரியட் க்ரீனின் மகப்பேற்றுக்காக ஆண்டனி தாம்சன் மருத்துவச்சிக்கு 2 டாலர்கள் கொடுத்ததாகக் கணக்குப் புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தக் குறிப்பின் உதவியோடுதான் ஹாரியட்டின் பிறந்த தேதியையும் ஆண்டையும் கணக்கிட்டனர் வரலாற்றாளர்கள்.

ஹாரியட் பிறந்த அதே வருத்தில் எட்வர்ட் ப்ராடஸுக்கு 21 வயது முடிந்தது. அதுவரையில் மாற்றாந்தந்தையின் பாதுகாப்பிலிருந்த தன்னுடைய சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றான். தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமையைப் பெற்றான். தாயின் அடிமைகள் இப்போது எட்வர்டின் உடைமைகளாயினர். அடுத்த ஓரிரு வருடங்களில் பக்டவுன் என்ற ஊரிலிருந்த தன்னுடைய பண்ணைக்குக் குடிபோனான் எட்வர்ட். பிறகு எலிசா ஆன் கீன் என்ற பெண்ணை மணந்துகொண்டான்.

1830இல் எட்வர்டிடம் ஒன்பது அடிமைகள் இருந்தனர். ரிட்டையும் அவரது குழந்தைகளையும் மட்டும் பத்து மைல் தொலைவில் பக்டவுன் என்ற ஊரிலிருந்த தன்னுடைய பண்ணைக்குக் கூட்டிச்சென்றான் எட்வர்ட் ப்ராடஸ். பென் ராஸ் ஆண்டனி தாம்சனின் பண்ணையில் வேலைசெய்தார். எட்வர்டுக்கு ரிட்டின் எல்லாக் குழந்தைகளையும் பராமரிப்பதில் நாட்டமில்லை. ரிட்டையும் அவர் குழந்தைகளையும் அக்கம்பக்கத்துப் பண்ணைகளுக்கு வேலைசெய்ய அனுப்பிவைத்துக் கூலியைப் பெற்றுக்கொண்டான் எட்வர்ட். அத்தோடு நிற்காமல் ரிட்டின் மூத்த மகள்களைச் சட்டத்துக்குப் புறம்பாக மிஸ்ஸிசிப்பியைச் சேர்ந்த நில உரிமையாளருக்கு விற்றான். நிலைத்தன்மையோடு அமைதியாக இருந்த ராஸ் குடும்பத்தினரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன, குடும்பம் சிதறுண்டது. இளவயதில் தாயை இழந்த எட்வர்டை வளர்ப்பதில் ரிட்டின் பங்கும் இருந்திருக்கும். எனினும் ரிட்டின் குழந்தைகளை அவரிடமிருந்து பிரிப்பதில் எட்வர்டுக்கு எந்த வருத்தமும் இருந்ததாகத் தெரியவில்லை.

சிறுமியான மிண்டியின் உள்ளத்தில் இந்த நிகழ்வுகள் பெரும்தாக்கத்தை உண்டாக்கின. ‘கண்ணை மூடினால் குதிரைகளின் குளம்படிச் சத்தமும் பெண்கள், குழந்தைகளின் அலறலும் அழுகையும்தான் மனதில் தோன்றி அச்சுறுத்தும்,’ என்று பின்னொரு காலத்தில் சொன்னார் ஹாரியட் டப்மன்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள் appeared first on கிழக்கு டுடே.

  •  

கறுப்பு மோசஸ் #7 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள் – 2

மேரிலாண்ட் மாகாணத்தின் கிழக்குக் கரையில் வசித்த வெள்ளைக்காரர்களின் நிலவுடைமை, தொழில் தேர்வு, தங்கும் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஆப்பிரிக்கர்கள் இடமாறிக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம். ஆனாலும் வெவ்வேறு பகுதியில் பிரிந்து வசிக்க நேர்ந்த தங்கள் குடும்பத்தினருடனும் சமூகத்தினருடனும் ஆப்பிரிக்கர்கள் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.

மேற்கு மத்திய ஆப்பிரிக்காவிலிருந்தும் பயஃப்ரா வளைகுடா பகுதியிலிருந்தும் பெருமளவில் அமெரிக்கா வந்த ஆப்பிரிக்க இனத்தவர்களுக்கிடையேயான உறவுக்கண்ணி தொடர்ந்து வலுப்பெற்று நுட்பமான வலைப்பின்னலொன்று உருவானது. அவர்களின் குடும்ப, சமூக உறவுகளும் மொழியும் கலாசாரமும் அறுந்துவிடாமல் அடுத்தடுத்த தலைமுறைகளில் தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இடமாற வேண்டிய கட்டாயம் அந்த வலைப்பின்னல் உறுதியாக இருக்க உதவியது என்றுதான் சொல்லவேண்டும்.

பெரும்பாலான நேரங்களில், அடிமைக் குடும்பங்களின் உறுப்பினர்களில் சிலரை உரிமையாளர்கள் விற்றுவிடுவார்கள். வெள்ளைக்காரக் குடும்பங்கள் குத்தகைக்கோ விலைக்கோ வாங்கும் பண்ணை நிலங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வெகுதொலைவில் பல மைல் தூரத்திலிருக்கும். இதனால் ஒரு பண்ணையில் வேலைசெய்பவர்களில் சிலரை வேறு இடத்துக்கு அழைத்துச்செல்வார்கள். வருடத்தின் சில மாதங்கள் ஒரு இடத்திலும் மற்ற நேரங்களில் வேறு இடத்திலும் தங்கியிருந்து வேலைசெய்வார்கள். புதிய நிலமாக இருந்தால் அதைச் சீர்ப்படுத்தி விவசாய நிலமாக மாற்றுவதற்குப் பல வருடங்கள் அங்கேயே வசிக்க நேரிடும். இப்படிப் பல காரணங்களால் அடிமைக் குடும்பங்கள் பிரிய நேரிட்டது. வெவ்வேறு இடங்களில் மாறிமாறி வேலை செய்ததால் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பிலிருப்பது அவசியமானது. இதனால் சிக்கலான ஆனால் ரகசியமான, நம்பிக்கைக்குரிய தகவல்தொடர்பு, பயண வலையமைப்பொன்று உருவாகித் தொடர்ந்து செயலாற்றியது.

அடிமைகள், சுதந்திரமானவர்கள் என இரண்டு வகை ஆப்பிரிக்கர்களையும் கொண்ட இந்த வலையமைப்புதான் ஹாரியட்டின் துணிகரமான மீட்புப்பணிகளுக்கு உதவியாக இருந்தது. வெள்ளையர்களும் குவேக்கர் சமயத்தைச் சேர்ந்தவர்களும் உதவினாலும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரம் வசித்த ஆப்பிரிக்கர்களின் துணிகரமான பங்களிப்பு அளப்பரியது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அச்சமிகுந்த இருண்ட நாட்களில் ஹாரியட்டுக்குத் தேவையான பாதுகாப்பையும் ஆதரவையும் உணவு, உறைவிடத்தையும் தகவல் தொடர்பையும் தடையின்றி வழங்கியது இந்த வலையமைப்புதான்.

0

ரிட், அதாவது ஹாரியட்டின் தாய், அட்ஹவ் பேட்டிசன் என்ற வெள்ளை நில உரிமையாளரின் உடைமையாக இருந்தார். ரிட்டும் அவருக்குப் பிறக்கும் குழந்தைகளும் 45 வயதாகும் வரையில் தன்னுடைய பேத்தி மேரி பேட்டிசனின் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று உயிலெழுதி வைத்தார் அட்ஹவ் பேட்டிசன். அதற்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றுச் சுதந்திரமாக வாழலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடக்க முதலே மேரிலாண்டில் வசித்த உரிமையாளர்கள் அடிமைகளை விடுவிக்கும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. அடிமைகளின் வாழ்வில் முக்கியம்வாய்ந்த இந்த நிகழ்வு ஒவ்வொரு கோட்டத்தின் நில ஆவணத்திலும் முறைப்படி பதிவுசெய்யப்பட்டது. அடிமைகளே பணத்தைச் சேமித்துத் தங்களின் விடுதலையை விலைகொடுத்து வாங்கும் வழக்கமும் இருந்தது. சில அடிமைகள் நீதிமன்றத்தில் தங்களின் அடிமைத்தளை செல்லாது என வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார்கள். இப்படி அடிமைகளை விடுதலை செய்வதில் வெள்ளை உரிமையாளர்களின் சுயநலமும் அடங்கியிருந்தது.

இதைத் தடுப்பதற்காக 1752இல் மேரிலாண்ட் மாகாணம் முக்கியமான சட்டமொன்றை இயற்றியது. அதன்படி, உடலும் மனமும் நலமாக இருந்து பணிசெய்யும் திறனும்கொண்ட 50 வயதுக்கு மேற்படாத அடிமைகளை உரிமையாளர் விடுவிக்கமுடியாது. உடல்நலிவுற்ற ஓய்வுபெற்ற அடிமைகளைப் பராமரிக்கும் கடமையிலிருந்து உரிமையாளர்கள் தப்பிப்பதைத் தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம். உரிமையாளரின் இறுதிக்காலத்தில் அடிமைகளை விடுவிப்பதற்காக எழுதப்படும் ஆவணம் சட்டத்துக்குப் புறம்பானது. அல்லது அடிமைகளை விடுவித்த காரணத்தால் கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் போனாலும் அது செல்லாது. காலமுழுவதும் தங்களுக்காக உழைத்த அடிமைகளை உரிமையாளர்கள் பராமரிப்பதைக் கட்டாயமாக்க இந்தச் சட்டம் உதவும் என நம்பப்பட்டது.

ரிட்டின் பணிக்காலத்தைக் குறைத்தது பேட்டிசன் குடும்பத்துக்கு லாபகரமான செயலல்ல என்றாலும் அந்தக் காலகட்டத்தில் நிலவிய மனப்போக்கையொட்டியே அந்த முடிவை அட்ஹவ் எடுத்தார். 1790களில் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் அடிமைத்தளை நியாயமான செயலல்ல, அடிமைகள் விடுதலைபெறவேண்டும் என்ற எண்ணம் மக்களின் மனதில் கிளர்ந்தது. குவேக்கர் போன்ற புதிய சமயங்களும் மெதாடிஸ்ட் போன்ற கிறிஸ்தவ சமயத்தின் பிரிவுகளும் அடிமைத்தளையை எதிர்த்தன. அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்பதற்கு இறைநம்பிக்கை மட்டுமின்றிச் சமயச்சார்பற்ற சிந்தனை வலுப்பெற்றதும் காரணமாக இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற அமெரிக்கப் புரட்சியின் தன்னுரிமை, விடுதலையுரிமை ஆகிய முழக்கங்களும் இன்னொரு காரணம். இங்கிலாந்தில் எழுந்த அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்ற எதிர்ப்புக்குரல் அமெரிக்காவின் கிழக்குக் கரையில் எதிரொலித்தது. இதனால் 1790இல் மேரிலாண்ட் மாகாண பொதுச் சபையில் அடிமைகளை இறுதி உயிலின்படியும் விருப்ப ஆவணத்தின்படியும் விடுவிக்கலாம் என மாற்றியெழுதப்பட்ட சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் நில உரிமையாளர்களின் தொழில்முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. வருடமுழுவதும் உழைப்பைக் கோரிய புகையிலையைப் பயிர்செய்வதற்குப் பதிலாக கோதுமையையும் மற்ற தானியங்களையும் பயிரிட்டு ஏற்றுமதி செய்தனர். மரம்வெட்டும் தொழிலிலும் கவனத்தைச் செலுத்தினர். இந்தப் பணிகளுக்கு ஆண்களே அதிகம் தேவைப்பட்டனர். அடிமைகளை விலைகொடுத்து வாங்கி நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொள்வதைவிடவும் தேவைப்படும்போது கூலிக்கு வேலை வாங்குவது லாபகரமாக இருந்தது. இதனால் வெள்ளை நில உரிமையாளர்கள் தங்களிடம் இருந்த அடிமைகளில் பலரை விற்கும் நிலைமை நிலவியது.

அதே நேரம், மேரிலாண்ட் மாகாணத்தின் அடிமை உரிமையாளர்களில் பலர் அடிமைத்தளை ஒழிப்பைக் கடுமையாக எதிர்த்தனர். அடிமைகள் விடுதலை பெற்றால் பொருளாதார, அரசியல், சமூக இயக்கவியல் அதிகாரம் தங்களின் கைவிட்டுப்போய்விடும் என்ற அச்சத்தின் விளைவு. அடிமைகளின் விடுவிப்பை ஆதரித்தவர்களும் உடனடியாகச் செயல்படுத்தாமல் எதிர்காலத்தில் விடுவிக்கிறோம் என உயிலெழுதினர். அடிமைகளின் உழைப்புத் திறன் அதிகமாக இருக்கும் இளவயதில் முடிந்த அளவுக்குப் பயன்பெற்ற பிறகு உழைப்புத் திறன் குறைந்த நேரத்தில் விடுவித்தனர். சில உரிமையாளர்கள் அடிமைகளை விற்கும்போது குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விடுவிக்கவேண்டும் என்று ஆவணத்தில் எழுதினர். இதனால் அடிமைகளுக்காகச் செலவிட்ட தொகை கைக்கு வந்துசேர்ந்ததோடு விடுவிப்பை ஆதரித்தது போலவும் ஆயிற்று. எதிர்காலத்தில் விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையினால் அடிமைகள் விசுவாசத்தோடு இருப்பார்கள் எனவும் உரிமையாளர்கள் நம்பினர்.

0

1790 மக்கள் கணக்கெடுப்பு பட்டியலில் அட்ஹவ் பேட்டிசனின் வீட்டில் மொத்தம் ஏழு அடிமைகள் இருந்தது பதிவாகியுள்ளது. அவர் பண்ணையின் ஆடு, மாடு, குதிரைகளைப்போல அவர்களும் உடைமைகள் என்பதால் பெயர்கள் எதுவும் பதிவாகவில்லை. 1791இல் அட்ஹவ் எழுதிய உயிலிலும் ரிட்டின் தாய் மாடஸ்டியின் பெயரைக் குறிப்பிடவில்லை. ரிட் 1780களின் பிற்பகுதியில் அட்ஹவ்வின் பண்ணையில் பிறந்தாரென்பதால் அவருடைய தாயும் நிச்சயம் அங்கேதான் இருந்திருக்கவேண்டும். சொல்லப்போனால் அட்ஹவ்வின் அடிமைகள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கும் வாய்ப்பு அதிகம். உயிலில் தன்வசமிருந்த அடிமைகளைத் தன்னுடைய வருங்கால சந்ததியினருக்குப் பிரித்துக்கொடுத்தார் அட்ஹவ். கூடவே அவர்கள் விடுதலை பெறும் காலத்தையும் குறிப்பிட்டார்.

அட்ஹவ்வின் பேத்தி மேரி பேட்டிசன் 1800இல் மணந்துகொண்ட ஜோசப் ப்ராடஸ் ஓரிரு வருடங்களில் திடீரென இறந்துபோனார். வெள்ளையராகவும் நிலவுடைமையாளராகவும் இருந்தாலும் ஒரு பெண்ணால் தனியாக வாழமுடியாத சமூகச் சூழல். கைக்குழந்தையான மகனுடைய சொத்தையும் தாத்தாவின் சொத்திலிருந்து கிடைத்த வருவாயையும் பாதுகாக்கவேண்டிய கட்டாயம். அடுத்த வருடமே ஓரளவுக்கு நிலம் சொத்துடன் சமூகத்தில் நல்ல நிலையிலிருந்த ஆண்டனி தாம்சனை இரண்டாவதாக மணந்துகொண்டார் மேரி. ஆண்டனியின் முதல் மனைவியும் உயிரோடில்லை என்பதால் அவருக்கும் அது இரண்டாம் திருமணம். முதல் மனைவி மூலம் பிறந்த மகன்கள் மூவரும் பதின்பருவத்தினர். ஆண்டனியின் இல்லத்துக்கு இடம்பெயர்ந்த மேரி மகன் எட்வர்டோடு தன்னுடைய தனிப்பட்ட அடிமையான ரிட்டையும் இன்னும் நான்கு ஆண் அடிமைகளையும் கூடவே அழைத்துவந்தார்.

ஆண்டனியின் ஒன்பது அடிமைகளில் பென் ராஸும் ஒருவர். திறமையான பணியாளர். ஆண்டனியின் மரங்களடர்ந்த நிலத்தில் மரங்களை ஆய்வுசெய்யும் ஆய்வாளராகவும் மேற்பார்வையாளராகவும் வேலைசெய்தார். மேரி ஆண்டனியை மணமுடித்ததால் ரிட்டும் பென்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அடிமைகளாகினர். இருவரும் 1808இல் திருமணம் செய்துகொண்டனர். 1810இல் தாம்சன் பண்ணையில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. மேரியோடு வந்த அடிமைகளோடு பென், ரிட் தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகளும் சேர்ந்துகொண்டது காரணமாக இருக்கலாம்.

18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மேரிலாண்ட் பகுதிக்கு சுமார் 18000 அடிமைகள் வந்துசேர்ந்தனர் என்பதை வரலாற்றுப் பதிவுகள் உறுதிசெய்கின்றன. ஹாரியட் டப்மனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் புத்தகமாக எழுதிய ஃபிராங்க்ளின் சான்பார்ன் ‘ஹாரியட்டின் உடலில் வெள்ளையர் ரத்தம் ஒரு சொட்டுக்கூட கலக்கவில்லை’ என்று உறுதிபடக் கூறினார். நாளிதழ் நிருபர் ஒருவர் எழுதிய கட்டுரையில் ‘நீ அஷாந்தி இனத்தைச் சேர்ந்தவள் என்பதில் சந்தேகமேயில்லை’, என்று மற்ற ஆப்பிரிக்கப் பெண்கள் கூறியதாக எழுதினார்.

பின்னொரு நாளில் இன்னொரு நிருபரிடம் ஹாரியட் தன்னுடைய பாட்டி ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டதாகவும் தன்னுடைய தாய் ஒரு வெள்ளையரின் மகளென்றும் சொன்னதாகப் பதிவாகியுள்ளது. பென் எந்தக் கலப்படமுமற்ற முழுமையான ஆப்பிரிக்கர். அவருடைய உறவினர்கள் டார்செஸ்டர் கோட்டத்தில் வசித்தனர், ஆனால் அவருடைய பெற்றோர், உடன்பிறந்தவர்களின் பெயர் தெரியவில்லை. அவர்களில் பலர் அடிமைகள் என்றாலும் சிலர் சுதந்திரமானவர்களாக இருந்தனர்.

அஷாந்தி இனத்தவர்களை யாரும் அடிமைப்படுத்த முடியாது என்ற நம்பிக்கை நிலவியது. அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் உரிமையாளர்களுக்கு அடிபணிய மறுத்தனர், பெரிய இடைஞ்சலாக இருந்தனர். அஷாந்தி பேரரசு காலனியாதிக்கத்தை அண்டவிடாமல் போரிட்டு மற்ற ஆப்பிரிக்கப் பேரரசுகளைவிடவும் அதிக காலம் தாக்குப்பிடித்தது. அண்டை நாட்டினருடன் தொடர்ச்சியாக நடந்த கலகங்கள் பேரரசை நலிவடையச் செய்தன. அதனால் தனிநபர்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக விற்பதைத் தடுக்கமுடியவில்லை.

அஷாந்தி இனத்தவர்களின் திடகாத்திரமான உடலமைப்பினாலும் வெவ்வேறு பணிகளைச் செய்யும் திறமையினாலும் வெள்ளை நில உரிமையாளர்கள் அவர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு விலைக்கு வாங்கினர். அஷாந்தி இனம் தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் பெருமளவில் விவசாய சமூகமாகவே இருந்தது. நிலத்தையும் நீரையும் புனிதமாகக் கருதினர். பெண் முன்னோர்களின் அளப்பரிய ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு இயங்கிய சமூகமும்கூட. பெண்களை ஆலோசகர்களாகவும் தலைவர்களாகவும் ஏற்றுக்கொண்ட சமூகம்.

காடுகளில் வாழ்ந்தவர்கள் நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்து கிராமங்களையும் சிற்றூர்களையும் அமைத்து அங்கே வசிக்கத் தொடங்கினர். இயற்கை வேளாண்மையின் பயிர்ச் சுழற்சி முறையைப் பின்பற்றி மண்வளத்தை மேம்படுத்துவது குறித்த அறிவைப் பெற்றவர்கள். மண் அரிப்பைத் தடுக்கும் முறைகளைப் பின்பற்றினர். சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை எனப் பலவகைப் பயிர்களை வளர்த்தனர் என்று ஐரோப்பிய பார்வையாளர்கள் எழுதிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தத் திறன்களால்தான் அஷாந்தி இனத்தவரையும் தற்போதைய கானா நாடு அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்களையும் வேலைக்கு அமர்த்துவதில் வெள்ளை நில உரிமையாளர்கள் நாட்டம்கொண்டனர். செல்வத்தைத் திரட்டுவதற்கும் பெருக்குவதற்கும் முக்கியத்துவமளிக்கும் அஷாந்தி இனத்தவர்களின் சமூக, கலாசார செயல்முறைகளையும் வெள்ளை உரிமையாளர்கள் உணர்ந்திருக்கவேண்டும்.

இயற்கை உலகுக்கும் ஆன்மிக உலகுக்கும் பாலமாக இருக்கும் தெய்வங்கள் நீரிலும் நிலத்திலும் இருப்பதாக நம்பியது அஷாந்தி இனம். நிலம் இறந்துபோன முன்னோர்களுடன் தொடர்புகொள்ள உதவுவதாக எண்ணினர். இதனால் வாழும் நிலத்திலிருந்து இடம்பெயரும் கட்டாயத்துக்காளாகி முற்றிலும் புதிய இடத்தில் கரும்பு, புகையிலைத் தோட்டங்களில் வசிப்பது மிகுந்த மனவேதனை அளித்தது. புதிய உலகம் எனப்படும் அமெரிக்காவுக்கு வந்தபின்னரும் தங்களுடைய கலாசாரச் செயல்பாடுகளை இடைவெளியின்றித் தொடர முற்பட்டனர். இபோ, மிங்கோ, வின்னெபார், சிண்டா, சூக், பினா போன்ற ஆப்பிரிக்கப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அங்க அடையாளங்களைக் குறிப்பிட காதில் வளையம் அணியும் துளை உள்ளது என்றும் தாடையில் பச்சை குத்தப்பட்டுள்ளது என்றும் எழுதியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்கள் வெவ்வேறு பகுதிகளையும் இனங்களையும் சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அதனால் கலாசார வழக்கங்களைத் தொடர்ந்திருக்க முடியாது என்று ஒரு காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் நினைத்தனர். ஆனால் தற்போது நடந்துவரும் ஆய்வு முடிவுகள் அந்த எண்ணம் தவறு என்பதை உறுதிசெய்துள்ளன. பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை நாடுகளிலிருந்துதான் அடிமைகள் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

அடிமை விற்பனையாளர்கள் அடிமைகளை வாணிகம் செய்ய வருகையில் செஸபீக் வளைகுடாவைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி அடிமைகளை வாங்குவது வழக்கம். பெரும்பாலும் ஒரே இன, கலாசாரப் பின்னணி கொண்டவர்களை மொத்தமாக விலைகொடுத்துப் பெற்றனர். இதனால், அடிமைகளுக்கிடையே ஒத்துணர்வு நிலவும் புதிய இடம் குறித்த அச்சம் விலகி வஞ்சிக்கப்பட்ட கோபம் குறையும் என நம்பினார்கள்.

1720 முதல் 1770 வரையிலான காலகட்டத்தில் சுமார் 5300 அடிமைகள் இந்தப் பகுதிக்கு வந்தனர் என்கிறது புள்ளிவிவரம். 1783ஆம் ஆண்டு முதல் அடிமைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது. மேரிலாண்டைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அடிமைகளை கடத்திச் செல்வது, உள்நாட்டிலேயே விற்பது, அடிமைகளுக்குப் பிறந்த குழந்தைகளை அடிமைகளாக வைத்திருப்பது எனப் பல வழிகளில் அடிமைகளுக்கான தேவைகளை நிறைவுசெய்துகொண்டனர்.

1790இல் சுமார் 5300 ஆப்பிரிக்க அடிமைகளும் 500 அடிமைப்படாதவர்களும் மேரிலாண்டில் இருந்தனர். 1800இல் அடிமைப்படாதவர்களின் எண்ணிக்கை 2300ஆக உயர்ந்தது. அடிமைகளின் எண்ணிக்கை 2300ஆகக் குறைந்தது. வெள்ளையர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. எண்ணிக்கை அதிகமானதால் ஆப்பிரிக்கர்களின் நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சொல்லப்போனால், அவர்களின் அரசியல் உரிமைகளையும் பொருளாதார, சமூகத் தேர்வுகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றி ஒடுக்கினார்கள் வெள்ளையர்கள்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #7 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள் – 2 appeared first on கிழக்கு டுடே.

  •  

இலக்கியம் தரும் பாடம் #5 – அகராதி பிடித்தவன்

நமக்குப் பிடிக்காத ஒருவரை நாம் திமிர் பிடித்தவன், கொழுப்பெடுத்தவன் அகராதி பிடித்தவன் என்றெல்லாம் சொல்லுவோம் அல்லவா? அவையெல்லாம் கொஞ்சம் மென்மையான வசவுகள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அகராதி பிடித்தவன் என்ற சொல்லுக்கு நல்ல அர்த்தம் ஏதாவது உண்டா என்றால் உண்டு என்றுதான் வரலாறு கூறுகிறது. அதுவும் ஆங்கில இலக்கியத்தின் வரலாறு.

ஆமாம். மொழியை நேசிப்பவர்களுக்கெல்லாம் அந்த மொழியில் உள்ள அகராதியும் பிடிக்கும்தானே. ஆனால் ஒரு மனிதன் திமிர் பிடித்தவனாகவும் அதே சமயம் பெரிய படிப்பாளியாகவும் இருந்தால்?

அப்படி ஒருவர்தான் ஆங்கில இலக்கிய வரலாறு கொண்டாடும் மேதை டாக்டர் ஜான்சன். அவர்தான் முதன் முதலில் ஆங்கில அகராதியை உருவாக்கியவர். அவர் அகராதி பிடித்தவரும் அகராதியை வடித்தவரும் ஆவார்.

அவர் கவிதை, கட்டுரை, நாடகம் எல்லாம் எழுதினார். அவற்றை ஆங்கில இலக்கிய உலகம் ஊறுகாய் மாதிரிகூடத் தொட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அவர் செய்த இன்னொரு காரியத்துக்காக அவர் இன்றுவரை கொண்டாடப்படுகிறார். என்றும் கொண்டாடப்படுவார். அது என்ன காரியம்? அதுதான் மேலே சொன்ன அகராதி காரியம்.

1740-ம் ஆண்டு சில லண்டன் புத்தக வியாபாரிகள் ஜான்சனிடம் வந்து ஒரு ஆங்கில அகராதி தயாரித்துக்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அதற்காக அவர்கள் 1500 கினீ என்னும் பணம் தருவதாக உடன்படிக்கை செய்துகொண்டார்கள். அது கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் லட்ச ரூபாய்க்குக் கொஞ்சம் அதிகம். இன்றைய மதிப்பு மூன்று கோடிக்கும் மேல்.

மூன்று ஆண்டுகளில் அதை முடித்துவிடலாமென்றுதான் ஜான்சன் நினைத்தார். ஆனால் அதை எழுதி முடிக்க ஜான்சனுக்கு அதிக ஆண்டுகள் ஆகின. அது உலக வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட ஒரு தனிமனித சாதனை. ஏப்ரல் 15, 1755-ம் ஆண்டு பணி நிறைவுற்றது. 1752-ல் அவர் மனைவி இறந்து போனார். ஆனாலும் அகராதியை எழுதி முடிக்கும் பணியை அவர் விடவில்லை.

கிட்டத்தட்ட 173 ஆண்டுகளுக்கு, அதாவது இரண்டு நூற்றாண்டுகளாக, அவரது அகராதியே பயன்பாட்டில் இருந்தது. அவருக்கு முன்னரும் சில அகராதிகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவை ஆங்கில மொழியிலிருந்த பயன்பாட்டுச் சொற்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆக்ஸ்ஃபோர்ட் இங்க்லீஷ் டிக்‌ஷ்னரி 1884-ல்தான் பயன்பாட்டுக்கு வந்தது.

அவரது அகராதியில் மொத்தம் 42,773 சொற்கள் இருந்தன. ஆனால் சொற்களின் அர்த்தங்களை விளக்க அவர் இலக்கியத்திலிருந்து 1,14,000 விளக்கங்கள் கொடுத்திருந்தார்.

இந்த உலகிலுள்ள எந்த ஆங்கில அகராதியிலும் அல்லது எந்த அகராதியிலும் இல்லாத ஒரு விஷயம் ஜான்சனின் ஆங்கில அகராதியில் இருந்தது. ஒரு சொல்லை விளக்க அவர் இலக்கியத்திலிருந்து உதாரணங்கள் கொடுத்தார். அதுமட்டுமல்ல. சில சொற்களை விளக்கும்போது அவருக்கே உரிய நகைச்சுவை மற்றும் விமர்சனத்துடன் அந்தச் சொல்லை விளக்கினார்.

உதாரணமாக ஓட்ஸ் (Oats) என்பதை அவர் இப்படி விளக்கினார்: ‘இது இங்கிலாந்தில் குதிரைகளுக்குக் கொடுக்கப்படும் தானியமாகும். ஆனால் ஸ்காட்லாந்தில் இது மனிதர்களுக்கு உணவாக உள்ளது’.
‘Take’ என்ற சொல்லுக்கு அவர் 134 விளக்கங்கள் கொடுத்திருந்தார்.

‘Pension’ என்பதை ‘நாட்டுக்கு செய்யப்படும் துரோகத்துக்காகக் கொடுக்கப்படும் பணம்’ என்று விளக்கினார். நல்லவேளை நம் ஆட்சியாளர்களுக்கு இது தெரியவில்லை.

‘Politician’ என்ற சொல்லுக்கு, ‘சூழ்ச்சி செய்பவர்’ என்று விளக்கம் தந்தார். அந்தக் காலத்திலேயே மிகச் சரியான விளக்கத்தை அரசியல்வாதிக்குக் கொடுத்துள்ளார்.

‘Monsieur’ என்ற சொல்லுக்கு ‘திரு’ என்றுதான் அர்த்தம். ஆனால் ஜான்சன் தனது அகராதியில் அதற்கு, ‘ஃப்ரெஞ்சுக்காரரைத் திட்டும் சொல்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜான்சனுடைய காலத்தில் I, J ஆகிய ஆங்கில எழுத்துகள் ஒரே எழுத்தின் வெவ்வேறு வடிவங்களாகப் பார்க்கப்பட்டன. எனவே அவரது அகராதியில் jargon என்ற சொல் idle என்ற சொல்லுக்கு முன் வரும்.

‘X’ என்ற சொல் அவரது அகராதியில் இல்லை! இந்த எழுத்தில் எந்த ஆங்கிலச்சொல்லும் தொடங்கவில்லை என்று எழுதினார். ஃப்ரெஞ்சு அகராதியை 40 பேர் சேர்ந்து தயாரித்தார்கள். ஆனால் ஆங்கில் அகராதியை ஜான்சன் ஒருவரே முடித்தார். அதனால், ஒரு ஆங்கிலேயன் நாற்பது ஃப்ரெஞ்சுக்காரர்களுக்குச் சமம் என்றார்.
சட்டென்று அதிர்ச்சி தரும் பதில்களைச் சொல்வதில் ஜான்சன் விற்பன்னராக இருந்தார். அவரைச் சந்திக்க வந்த ஒருவர், ‘ரொம்ப நேரம் உங்களை நான் காத்திருக்க வைக்கவில்லை என்று நினைக்கிறேன்’ என்றார்.

அதற்கு ஜான்சன், ‘இல்லை ஐயா, நீங்களல்ல, நட்சத்திரங்கள்தான் என்ன வெகு நேரம் காக்க வைத்துவிட்டன’ என்றார்.

‘தனக்கு எந்த நல்லதும் செய்யாத மனிதனை அந்த இன்னொரு மனிதன் எப்படி நடத்துகிறான் என்பதை வைத்தே அவனது மதிப்பு கணக்கிடப்படும்’ என்றார்.

இன்று நாம் லண்டன் போனாலும் அங்கே உள்ள கோ ஸ்கொயர் (Gough Square) என்ற இடத்தைப் பார்க்கலாம். அங்கேதான் ஜான்சன் தன் அகராதியைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்.

லண்டன் ஒருவருக்குக் களைப்பூட்டும்போது வாழ்க்கையே களைப்பூட்டிவிடும் என்று ஒருமுறை சொன்னார். தாய்நாட்டின்மீது அவ்வளவு பாசம் அவருக்கு.

1763-ம் ஆண்டு ஜேம்ஸ் பாஸ்வெல், ஜான்சனை சந்தித்து அவருடனே இருந்தார். ஜான்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் அவரே. 1784-ல் ஜான்சன் இறந்தார். ஆனால் 1791-ல் பாஸ்வெல்லால் எழுதப்பட்ட Life of Johnson என்ற அவரது வாழ்க்கை வரலாறு இறவாப் புகழ்பெற்றது. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல் என்று அது அறியப்படுகிறது.

0

The post இலக்கியம் தரும் பாடம் #5 – அகராதி பிடித்தவன் appeared first on கிழக்கு டுடே.

  •  

இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இந்தக் காலத்தில் ‘ரிலாக்ஸ்ட்’ ஆக இருப்பதன் அவசியம் பற்றி நிறைய பேசப்படுகிறது. நான்கூட அதுபற்றி கொஞ்சம் ‘டென்ஷனுடன்’ பேசியிருக்கிறேன். மூச்சு அமைதியாக, ஆழமாக இழுத்துவிட்டால் உடல் நிதானம் அடையும். உடல் நிதானம் அடையும் அளவுக்கு மனமும் நிதானம் அடையும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன்.

அது எப்படி அடையும்? எனக்கு அடையவில்லையே என்று என்னிடம் கேள்விகள் கேட்டு பலர் என்னை ‘டென்ஷன்’ நிலைக்கு மீண்டும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

சரி நான் சொல்லவருவது என்ன? ரிலாக்ஸ்டாக இருப்பது ரொம்ப அவசியம். ஆனால் பிரச்னை ஏதும் இல்லாதபோது நாம் நிதானமாக, மனத்தளர்ச்சியுடன்தான் இருப்போம். அது இயல்பாகவே நடக்கும் விஷயமாக இருக்கும். ஆனால் ஒரு சொல், ஒரு நடவடிக்கை, ஒரு பார்வை போதும் நம்மை டென்ஷனாக்க.

நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் என்று அபூ ஜஹல் என்ற பரம எதிரி, நபிகள் நாயகத்தைப் பார்த்து ஒருமுறை சொன்னான். நபிகள் நாயகம் எல்லா வகையிலும் அழகானவர்கள். அது அவர்களோடு பழகிய, அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித் தோழர்களுக்கு மட்டுமல்ல, எதிரிகளுக்கும் தெரியும்.

அபூ ஜஹல் பரம எதிரியாக இருந்தவன். அவனுக்கும் நபிகளாரின் அழகு பற்றித் தெரியும்தான். ஆனால் அவன் நபிகள் நாயகத்தைக் கடுப்பேற்ற முயற்சி செய்தான். அதற்காகத்தான் அப்படிச் சொன்னான்.

அப்ப என்னாச்சு? நபிகளார் கோபமடைந்தார்களா? அதுதான் இல்லை. எந்த ஞானியையாவது யாராவது கோபப்படுத்திவிட முடியுமா என்ன? ஒருமுறை புத்தரைக்கூட அவர் முன்னேயே ஒரு ஊர் மக்கள் வேண்டுமென்றே அசிங்கமாகப் பேசினார்களாம். அதையெல்லாம் கேட்ட புத்தர், ‘மன்னிக்க வேண்டும். நான் அவசரமாக அடுத்த ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன வார்த்தைகளையெல்லாம் உங்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். நான் அடுத்த முறை இந்தப் பக்கமாக வரும்போது நீங்கள் அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம்’ என்று சொல்லிச் சென்றாராம்.

கோபமடையாமல் நபிகளார் அபூ ஜஹலுக்கு ஒரு பதிலைச் சொன்னார்கள். அழகான பதில். அது பதில் என்பதைவிட பதிலடி என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஓங்கி அறைவது போன்ற பதிலடி அல்ல. லேசாக கன்னத்தில் தட்டுவது போன்ற பதிலடி அது.

நபிகளார் சொன்னார்கள்: ‘நான் கண்ணாடியாக இருக்கிறேன்’.

அடடா, என்ன அழகான பதில். உன் அசிங்கத்தைத்தான் நீ என்னிடத்தில் பார்க்கிறாய் என்பதைவிட மிகச் சரியான பதிலடி வேறென்ன இருக்க முடியும்?

அப்படியொரு நிதானத்தின் உருவமாக இலக்கியத்தில், காவியத்தில் இருப்பவர் நம் ராமன். ஆமாம். கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அதைப்பற்றித்தான் சொல்ல வருகிறேன்.

‘நாளைக்கே நீ நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொள்வாய்’ என்று அப்பா சொல்லிவிட்டு அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு, ‘இல்லையில்லை, உன் தம்பிதான் பிரதமர். அதுமட்டுமல்ல, நீ பதினான்கு ஆண்டுகளுக்கு காட்டில் போய் வசிக்க வேண்டும்’ என்று சித்தி சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்?

அந்தப் பாத்திரம் நாமாக இருந்தால் வன்முறை நிச்சயம் வெடித்திருக்கும். எனக்குத்தான் உரிமை உள்ளது; அவனெல்லாம் பிரதமரா?’ என்று உரிமைக்குரல் எழும்பியிருக்கும்.

அப்படித்தான் ராமாயண காவியத்திலும் ஒரு காட்சி நடந்தது. முதல் மனைவி கௌசல்யாவின் மகனான ராமருக்கு நாளைக்கு முடிசூட்டு விழா என்று தசரதர் அறிவித்துவிட்டார். நாடு முழுவதும் மக்கள் களிப்புடன் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஏனெனில் ராமரின் அற்புத குணாம்சங்களைப்பற்றி மக்களுக்கு நன்றாகத்தெரியும்.

ஆனால், மந்தரையின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட்ட கைகேயி, தசரதரிடம் எதிர்வரம் கேட்டார். ராமருக்கு பதிலாகத் தன் மகன் பரதர் அரசாள வேண்டும் என்றார். அதோடு விட்டாரா? ராமர் பதிநான்கு ஆண்டுகள் காட்டில் வசிக்க வேண்டும் என்றும் சேர்த்துக்கேட்டார்.

அவர் ஏற்கெனவே ஒரு யுத்தத்தில் செய்த உதவிக்கு பதிலாக வரம் கொடுப்பதாக தசரததர்தான் கடந்தகாலத்தில் சொல்லியிருந்தார். அவரது தேர்க்கால் உடைந்தபோது தன் விரலைக்கொடுத்து தேரை இயக்க உதவியவர் கைகேயி. அப்போது தசரதர் கொடுத்த வரத்தைத்தான் இப்போது கேட்டார் கைகேயி.

வேறு வழியின்றி வரத்தைக் கொடுத்த தசரதர் மயங்கி விழுந்தார். அவர் மயக்கத்திலிருந்து எழுவதற்குள் கம்பர் பல வேலைகளைக் காவியத்தில் செய்துவிட்டார்.

ராமரை அழைத்த கைகேயி, நாளை நீ அரசாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டாய், உன் தம்பி பரதனே நாட்டை ஆள்வான். நீ காட்டுக்குச் சென்று பதினான்கு ஆண்டுகள் வாழவேண்டும் என்றெல்லாம் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி பேசினார்.

நாமாக இருந்தால் என்ன சொல்லியிருப்போம்? ‘நீ எங்கள் அப்பாவுக்கு இண்டாம் தாரம் தானே? முதல் மனைவியின் மகனான எனக்குத்தான் எல்லா உரிமையும் உண்டு. நான் உன்னை எதிர்த்து நீதிமன்றம் போவேன்’ என்றல்லவா சொல்லியிருப்போம்? ஆனால் ராமர் என்ன சொன்னார்?

ராமரின் முகமானது, ‘அவ்வாசகம் உணரக்கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா’ என்கிறார் கம்பர். அதாவது, கைகேயி சொன்ன அராஜகமான, அநியாயமான வார்த்தைகளைக் கேட்ட ராமரது முகம் அன்று மலர்ந்த செந்தாமரையினைவிட அழகாக ஆனதாம்.

தந்தையின் கட்டளையாக இல்லாதிருந்து, நீங்களாகவே இட்ட கட்டளையாக இருந்தாலும் நான் மறுக்க மாட்டேன் என்று வேறு ராமர் சொன்னார்.

பிரச்னை ஏதும் இல்லாதபோது அமைதியாக நேராக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ஆழமாக மூச்சு இழுத்து விடுவதல்ல உண்மையான ரிலாக்சேஷன். கடுமையான பிரச்னைக்கு மத்தியில், தனக்கு துரோகம் இழைக்கப்படும்போது அமைதியாக இருப்பதுதான் உண்மையான ரிலாக்சேஷன். அதுதான் கம்பராமாயணம் காட்டும் ரிலாக்சேஷன். இறைவன்மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் செய்த ரிலாக்சேஷன்.

உண்மையான நிதானத்துக்கு மனித வடிவம் கொடுக்க முடியுமென்றால் அதற்கான ஒரு அழகான உதாரணம் ராமாயண காவியத்தின் நாயகர் ஸ்ரீ ராமர்.

0

The post இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம் appeared first on கிழக்கு டுடே.

  •  

கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

ஹாரியட் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயர் அரமிண்ட்டா. மிண்ட்டி என்று செல்லமாகக் கூப்பிட்டார்கள். தந்தையின் பெயர் பென் ராஸ், தாய் ஹாரியட் கிரீன், ரிட் என அழைக்கப்பட்டார். பின்னாளில் தாயின் பெயரையே தனக்கும் சூட்டிக்கொண்டார். ஹாரியட்டின் பெற்றோர் இருவரும் அடிமைகள். மேரிலாண்ட் மாகாணத்தில் அமைந்த டார்செஸ்டர் மாவட்டத்தில் இருந்த பெரிய பண்ணையில் வேலைசெய்தனர். மாடிஸன் கோட்டத்தில் பிளாக்வாட்டர் என்ற சிற்றாற்றுக்கு அருகே அமைந்திருந்தது பண்ணை.

ஹாரியட் பிறந்த வருடம் 1815, 1820, 1825 என்று ஒவ்வொரு ஆவணத்திலும் பலவாறாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் பிறந்த இடம் எது என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. படிப்பறிவில்லாத அடிமைகளின் குழந்தை, அதுவும் ஐந்தாவதாகப் பிறந்த மகள். பிறந்த தேதியைக் குறித்துவைப்பது பற்றியெல்லாம் யாரும் யோசித்திருக்கமாட்டார்கள். 2004இல் ஹாரியட் டப்மனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கேட் லார்ஸன் பற்பல ஆவணங்களைச் சரிபார்த்து 1822ஆம் ஆண்டில் ஹாரியட் பிறந்தார் என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து மற்ற எழுத்தாளர்களும் அதையே ஏற்றுக்கொண்டார்கள்.

ஹாரியட்டின் தாய் வழிப் பாட்டி ஆப்பிரிக்காவிலிருந்து மாடஸ்டி என்ற அடிமைக் கப்பலில் அமெரிக்கா வந்தார் என்பது மட்டுமே தெரியும். அவரது மூதாதையர்களைப் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஹாரியட்டின் பண்புகளையும் இயல்புகளையும் கொண்டு அவர் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவின் அஷாந்தி இனத்தவராக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை உறுதிப்படுத்தும் சான்றுகளோ தகவல்களோ கிடைக்கவில்லை. ஹாரியட்டின் தாய் வழித் தாத்தா வெள்ளைக்காரராக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் அதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. ஹாரியட்டின் பெற்றோர் 1808இல் திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்பதை நீதிமன்ற ஆவணங்களைக்கொண்டு அனுமானித்தனர்.

0

வட அமெரிக்காவின் கிழக்குக் கரையில் செஸபீக் விரிகுடாவை ஒட்டிய நிலப்பகுதி பல சிற்றாறுகள் ஓடும் இயற்கை வளமிக்கது. அங்கே கப்பல் கட்டும் தொழிலோடு வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்றது. வண்டல் மண்ணின் வளத்தில் புகையிலை, கோதுமை, சோளம், பழ மரங்கள் போன்ற பயிர்கள் நன்கு வளர்ந்தன. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் வெள்ளை முதலாளிகளின் பண்ணைகளிலும் நிலங்களிலும் பெருமளவில் வெள்ளை ஒப்பந்தக்கூலிகளே வேலைசெய்தனர், சில பண்ணைகளில் அடிமைகளும் இருந்தனர். வெள்ளைத் தொழிலாளர்கள் முதலாளிகளுடன் ஒத்துழைக்க மறுத்ததால் 1730 முதல் ஆப்பிரிக்காவிலிருந்து கூட்டங்கூட்டமாக அடிமைகள் அழைத்துவரப்பட்டனர். அப்படித்தான் ஹாரியட்டின் மூதாதையர்களும் மற்ற ஆப்பிரிக்கர்களும் வலுக்கட்டாயமாக அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்படி வட அமெரிக்க நிலத்துக்கு நேரடியாக அடிமைகளாக வந்துசேர்ந்த முதல் ஆப்பிரிக்கர்கள் யார்?

0

வருடம்: 1619. இடம்: மேற்கு மத்திய ஆப்பிரிக்காவின் சாவ் பாலோ டி லுவாண்டா நகரம். போர்த்துகீசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகம். அங்கிருந்து 350 ஆப்பிரிக்க அடிமைகளை ஏற்றிக்கொண்டு பண்டைய புதிய ஸ்பெயினின் (தற்போதைய மெக்சிகோ) வேரா க்ரூஸ் நகருக்குப் பயணமானது சாவ் ஜோவா பௌடிஸ்டா என்ற பெயர்கொண்ட அடிமைக்கப்பல்.

பல வாரக் கடற்பயணத்துக்குப் பிறகு அடிமைக் கப்பல் மெக்சிகோ வளைகுடாவை அடைந்ததும் வைட் லயன் என்ற டச்சுக் கப்பலும் டிரஷரர் என்ற ஆங்கிலேயத் தனியார் கடற்படைக் கப்பலும் அதன்மீது தாக்குதல் நடத்தின. கப்பலில் இருந்த அடிமைகளில் சிலரைச் சிறைப்பிடித்தன. அவர்களுள் சுமார் 30 பேரை ஓல்ட் பாய்ண்ட் கம்ஃபர்ட் என்ற வர்ஜினியா மாகாணத்திலிருந்த ஆங்கிலேயக் காலனியில் உணவுப்பொருட்களுக்காக விற்றனர் வைட் லயன் கப்பல் குழுவினர். இது நடந்தது 1619ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25ஆம் நாள். இன்னும் சில நாட்கள் கழித்து மேலும் 2, 3 பேரை விற்றனர் டிரஷரர் கப்பலைச் சேர்ந்தவர்கள். இந்த நிகழ்வு வர்ஜினியா மாகாணத்தின் வரலாற்றை மட்டுமல்ல வட அமெரிக்காவின் எதிர்கால சமூக அமைப்பையும் அரசியலையும் ஒருசேரப் புரட்டிப்போட்டது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதிலும் அடக்குமுறை செய்வதிலும் புதிய கட்டம் ஒன்று உருவானது.

1619இல் வர்ஜினியா காலனிக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்கள் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவின் பண்டைய டோங்கா (Ndongo) பேரரசைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. தற்போதைய அங்கோலா நாட்டின் ஒரு பகுதி. மக்கள் கிம்புண்டு என்ற மொழியைப் பேசினார்கள். விவசாயத்தோடு கைத்தொழில், நெசவு, இரும்புப் பொருட்களைச் செய்யும் திறனையும் பெற்றவர்கள். இந்தப் பகுதிக்கு 16ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவுக்கு வந்த போர்த்துகீசியர்கள் இந்தப் பகுதியிலிருந்த சாவ் பாலோ டி லுவாண்டா துறைமுகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பிறகு அங்கிருக்கும் மக்களைப் பல வழிகளில் அடிமைப்படுத்தி ஐரோப்பாவுக்கும் தங்கள் குடியேற்ற நாடுகளுக்கும் கொண்டுசென்றனர். அட்லாண்டிக் அடிமை வாணிகத்தின் முதல் 150 ஆண்டுகளில் பத்தில் ஒன்பது ஆப்பிரிக்கர்கள் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுசெல்லப்பட்டனர். 1750 வரையிலும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகளவில் அடிமைப்படுத்தப்பட்டனர். இந்தத் தகவல்கள் எல்லாம் வரலாற்று ஆய்வுகள்மூலம் தெரியவந்தவை.

வர்ஜினியாவுக்கு வந்த ஆப்பிரிக்கர்களின் சட்ட நிலைமையும் எதிர்காலமும் குழப்பமாக இருந்தது. வர்ஜினியாவின் சட்டம் அடிமைத்தளையை ஏற்கவில்லை என்றாலும் உணவுக்காகப் பண்டமாற்றாக விற்கப்பட்டவர்கள் காலமுழுதும் அடிமையாக வேலைசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அடிமைத்தளை என்னும் நிறுவனத்தின் கருத்தாக்கம் 17ஆம் நூற்றாண்டில் முழுமைபெற்றது. வாழ்நாள் முழுவதையும் அடிமைகளாகவே கழிக்கும் நிலையில் பெரும்பாலானோர் சிக்கித் தவித்தனர்.

வர்ஜினியாவின் மக்கட்தொகைக் கணக்கெடுப்புப் பட்டியல் ஆண்டனி, இசபெல்லா என்ற ஆப்பிரிக்க இணையரின் பெயரைப் பதிவுசெய்துள்ளது. ஃபோர்ட் அல்ஜெர்னூன் என்ற பகுதியின் தளபதியான கேப்டன் வில்லியம் டக்கரின் இல்லத்தில் வசித்தனர். 1624இல் அவர்களின் மகன் வில்லியம் பிறந்தான். அமெரிக்க மண்ணில் பிறந்த முதல் ஆப்பிரிக்கக் குழந்தை என நம்பப்படுகிறது.

0
ஆப்பிரிக்கர்கள் அமெரிக்கா வந்துசேர்ந்து இன்றைக்கு 400 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் கடந்தகால வரலாற்றைப் பேசுகையில் ஆப்பிரிக்க அடிமைகள் என்றும் நிகழ்காலம் பற்றி உரையாடுகையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றும் அவர்களைக் குறிக்க ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆப்பிரிக்கா பல்லாயிரக்கணக்கான இனங்களையும் கலாசாரங்களையும் மொழிகளையும் கொண்டது. இந்த உண்மையைப் புரிந்துகொண்ட காரணத்தால் அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்க மக்களின் மூதாதையர்கள், சொந்த ஊர், கலாசாரம், மொழி ஆகியவை பற்றி விரிவான இனவிளக்க ஆராய்ச்சிகள் கடந்த சில பத்தாண்டுகளாக அமெரிக்காவில் நடந்து வருகின்றன.

எந்தெந்த வருடங்களில் எந்தெந்த ஆப்பிரிக்கப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வந்துசேர்ந்தனர்? எந்த நாட்டினர் அவர்களை யாரிடமிருந்து விலைகொடுத்து வாங்கினார்கள்? யாருடைய கப்பலில் அவர்கள் அட்லாண்டிக்கைக் கடந்தார்கள்? அமெரிக்காவின் கிழக்குக் கரையில் எந்தத் துறைமுகத்தில் இறங்கி எந்தப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்? ஒவ்வொருவரின் பெயரும் வயதும் பாலினமும் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதற்காக வரலாற்றாசிரியர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இனவரைவியல் வல்லுநர்களும் பல தகவல்களைத் திரட்டி ஆய்வுக்குட்படுத்தி வெளியிட்டு வருகிறார்கள்.

0

புதிய உலகம் என்றழைக்கப்பட்ட அமெரிக்காவுக்கு வந்த ஆப்பிரிக்கர்கள் பற்பல திறன்களைக் கொண்டவர்கள். உள்நாட்டு, தூரதேச வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பிரிக்க மொழிகளைத் தெரிந்து வைத்திருந்திருந்ததோடு ஐரோப்பிய மொழிகளையும் பேசினர். இதனால் சில நேரங்களில் மொழிபெயர்ப்பாளர்களாகவும் விளங்கினர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, உலோகக் கொல்லியல், மண்பாண்டத் தொழில் எனப் பல தொழில்களைச் செய்பவர்களும் இவர்களிடையே இருந்தனர்.

தொடக்கத்தில் ஸ்பானிய, டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனிகளை அமைப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஆப்பிரிக்கர்களின் குடியேற்றம் உதவியது. இவர்களுள் ஒப்பந்தக் கூலிகளும் அடிமைப்படாமல் சுதந்திரமாக வாழ்பவர்களும் இருந்தனர். நிலத்தைப் பண்படுத்தி, தங்களைப்போன்ற அடிமைகளுக்குத் தங்குமிடங்களையும் உரிமையாளர்களுக்குக் கோட்டைகளையும் கட்டினர். அன்றாட உணவுக்கான பயிர்களோடு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதிசெய்வதற்காக அரிசி, அவுரி நீலம் எனப்படும் இண்டிகோ போன்றவற்றையும் பயிரிட்டனர். கால்நடைகளையும் பன்றிகளையும் வளர்த்தனர். பைன் மரங்களை வெட்டி அவற்றிலிருந்து டர்பண்டைன், பிசின், தார் ஆகியவற்றைச் சேகரித்தனர். காலப்போக்கில் அமெரிக்காவின் சமூக, பொருளாதார, கலாசார வளர்ச்சியிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற நாட்டை நிறுவுவதிலும் ஆப்பிரிக்கர்கள் பெரும்பங்கு வகித்தனர்.

ஒரு நாட்டை நிறுவுவதற்கு அல்லும் பகலும் உடல் நோக உழைத்த ஆப்பிரிக்கர்களின் பங்களிப்பு எப்படி முழுவதுமாக மறைக்கப்பட்டது? எப்போதுமே அடிமையாக இருக்கும் துயரத்துக்கு எப்படி ஆளாகினர்? இத்தனைத் திறன்களையும் அனுபவங்களையும் பெற்றிருந்தவர்கள் எதனால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்? அவர்களின் சமூக, கலாசார வரலாறு ஏன் உலகின் கண்களுக்குத் தெரியாமல் போனது? இத்தனைக் கேள்விகளுக்கும் விடைதேட முற்பட்டனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலத்தின் சிந்தனையாளர்கள் மக்களை வகைப்படுத்துவதற்கு நிறத்தைப் பயன்படுத்தினர். ஐரோப்பாவுக்கு முதலில் வந்த ஆப்பிரிக்கர்களான சஹாரா நிலப்பகுதியைச் சேர்ந்தவர்களைத் தங்களுக்கு நிகரானவர்களாக ஏற்றுக்கொள்வதில் ஐரோப்பியர்களுக்குப் பிரச்சனை எதுவுமில்லை. ஆனால் அமெரிக்க இந்தியர்களும் ஆப்பிரிக்கர்களும் வந்தபோது அந்தப் பார்வை மாறியது.

பண்டைய கிரேக்க எழுத்தாளர்கள் உருவாக்கிய மாபெரும் உயிர்ச் சங்கிலி (Great Chain of Being) என்ற படிமம் ஆப்பிரிக்கர்களை எல்லா இன மக்களுக்கும் கீழே வைத்தது. ஆப்பிரிக்கர்கள் மனிதர்களுக்குக் கீழ்நிலை, விலங்குகளுக்குச் சற்று மேலே என்ற கிரேக்கர்களின் கருத்து எல்லோரின் பார்வையையும் மாற்றியது. நிறம், உடலமைப்பு, மனப்பாங்கு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை ஆறு முக்கியப் பிரிவுகளாக ஐரோப்பியர்கள் வகைப்படுத்தினார்கள். குரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றுவதற்கு முந்தைய கட்டமே ஆப்பிரிக்கர்கள் என்ற இனவாதக் கருத்து வலுப்பெற்றது. அதையடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் உழைப்பாளர்களின் தேவை பல மடங்கு அதிகரித்தபோது ஒவ்வொரு மனித இனமும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டவை என்ற எண்ணம் வேரூன்றியது. நாளடைவில் ஐரோப்பியர் அல்லாதவரைப் பற்றிய எதிர்மறை நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் கற்பிதங்களும் கெட்டிப்பட்டன. வெள்ளை நிறத்தவர்கள் மேன்மக்கள், கறுப்புத் தோலுடையவர்கள் இழிவான கீழ்மக்கள் என்ற எண்ணம் ஐரோப்பியர்களின் மனதில் வலுவாக விதைக்கப்பட்டது.

காரணமறிதல், பகுத்தறிதல் ஆகிய இரண்டின் வழியாக முன்னேற்றமடைய வேண்டும் என்ற கருதுகோளைக் கொண்ட விழிப்புணர்வு இயக்கம் மனிதர்களின் உரிமைகளை நிலைநாட்டும் புதிய நாடொன்று உருவாக வழிவகுத்தது. அதே நேரம் ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்துவதையும் அங்கீகரித்தது என்பது முரண்நகை. ஆப்பிரிக்கர்களின் இழிநிலையை நிறுவவும் ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தவும் வரலாற்றில் பல தகவல்கள் தவிர்க்கப்பட்டன, மறைக்கப்பட்டன. ஆப்பிரிக்க சமூக வரலாறும் கலாசாரப் பாரம்பரியமும் திரிக்கப்பட்டன, தவறாகப் பொருள்கொள்ளப்பட்டன.

இன்னொரு புறம் ஆப்பிரிக்கர்களின் வரலாறும் கலாசாரமும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டவை, எழுத்தில் பதிவு செய்யப்படவில்லை. அட்லாண்டிக் அடிமை வாணிகத்துக்கு முந்தைய பதிவுகள் கிரேக்க, அரேபிய, போர்த்துகீசிய பயணிகள், வாணிகர்கள், துறவிகள் போன்றோரால் எழுதப்பட்டவை. அடிமை வாணிகத்தினால் வட, தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு வந்தவர்களின் வாழ்வும் வரலாறும்கூட ஐரோப்பியர்களால் பதிவுசெய்யப்பட்டவை. வெள்ளையர்கள் உயர்வானவர்கள் என்ற கருத்து எவ்வளவு வேரூன்றியிருந்தது என்றால் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கறுப்பின சமூகவியலாளர்கள் சிலரும் அந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.

0

17ஆம் நூற்றாண்டில் புகையிலைப் பயிர் வட அமெரிக்காவின் பசுந்தங்கமாக இருந்தது. தொடக்கத்தில் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பிய நில உரிமையாளர்களும் அவர்களின் வேலையாட்களும் நிலத்தில் இறங்கிப் பணிசெய்தனர். செலவைச் சமாளித்து லாபம் ஈட்டுவதற்கு விளைச்சல் அதிகமாக வேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும். இன்னும் அதிகமான தொழிலாளர்கள் தேவை. இதற்குத் தீர்வாக 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய ஒப்பந்தக் கூலிகளையும் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளையும் கூட்டிவந்து இந்தப் பணியில் ஈடுபடுத்தினர்.

18ஆம் நூற்றாண்டில் வர்ஜினியா மாகாணத்தின் செஸபீக் விரிகுடா பகுதியில் புகையிலைப் பயிர் அபரிமிதமாக விளைந்தது. 1629இல் வர்ஜினியா 1.5 மில்லியன் பவுண்டுகள் புகையிலை உற்பத்தி செய்தது. 1775இல் அது 100 மில்லியன் பவுண்டாக உயர்ந்தது. அடிமை ஆப்பிரிக்கர்களும் அவர்களின் சந்ததியினரும் சிந்திய வியர்வைதான் அதற்குக் காரணம்.

வர்ஜினியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆப்பிரிக்கர்கள் பெரும்பங்கு வகித்தனர். அந்தப் பகுதியில் ஆப்பிரிக்கர்களைக் குடியேற்றுவது தொடர்ந்து நடைபெற்றது. காலனியின் பொருளாதார, அரசியல், சமூகத் தலைமையில் நில உரிமையாளர்கள் தனியாதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திய ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகவே வைத்திருந்தனர். வெள்ளை உழைப்பாளர்களின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, தடைகளை அகற்றினர். அவர்களின் ஒப்பந்தம் முடிந்ததும் நிலம் வாங்கும் வாய்ப்பையும் உரிமையையும் வழங்கும் சட்டங்களை இயற்றினர். இதன் காரணமாகக் கூலிக்கு வேலைசெய்த வெள்ளைக்காரர்கள் ஒப்பந்தம் முடிந்ததும் உரிமையாளர்களாகினர். ஆனால் ஆப்பிரிக்கர்கள் நிரந்தரமாக அடிமைகளாகவே இருந்தனர். அடிமை ஆப்பிரிக்கர்களும் அவர்களின் சந்ததியினரும் காலங்காலமாகச் சுரண்டப்பட்டனர். வர்ஜினியாவுக்கு வந்துசேர்ந்த அடிமைகள் அங்கிருந்து அமெரிக்காவின் மற்ற மாகாணங்களுக்கு இட்டுச்செல்லப்பட்டனர்.

0

வட அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்துவதில் பல வகை இருந்தது. தொடக்கத்தில் எல்லா ஆப்பிரிக்கர்களும் அடிமைகளாகவே இருக்கவில்லை. விலைக்கு வாங்கும்போது குறிப்பிடப்பட்ட ஒப்பந்தக் காலம் முடிந்ததும் விடுதலை பெற்றனர் சிலர். இன்னும் சிலர் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுதந்திர மனிதர்களாகவே வந்துசேர்ந்தனர், அதற்கான சட்ட ஆவணங்களையும் வைத்திருந்தனர். தந்தை அடிமையில்லை அல்லது வெள்ளையர், ஆனால் தாய் அடிமை என்கையில் பிறக்கும் குழந்தையின் நிலை என்ன? குழந்தை தந்தையின் பெயரைப் பின்னொட்டாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும் ஆனால் தாயின் அடிமை நிலையைப் பெற்று உரிமையாளருக்குச் சொந்தமாக அவருக்குப் பணியாற்றவேண்டும்.

செஸபீக் விரிகுடாவில் கலக்கும் ஜேம்ஸ் ஆற்றின் கரையில் ஜேம்ஸ்டவுன் என்ற குடியிருப்பை ஆங்கிலேயக் குடியேறிகள் நிறுவினர். அவர்களுக்குத் தீவிரமான உழைப்பைக் கோரும் விவசாயமோ வேறு பணிகளோ செய்யத்தெரியாது. ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துவரப்பட்ட வெள்ளைக்காரத் தொழிலாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். அடிமைகளாக வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்கள் அந்தப் பகுதியைச் சீரமைத்து வாழ்விடத்தையும் விளைநிலத்தையும் நிறுவக் கடுமையாக உழைத்தனர். ஹாரியட்டின் முன்னோர்கள் மேரிலாண்ட் மாகாணத்துக்கு அப்படித்தான் வந்துசேர்ந்தனர். அந்தப் பகுதியில் குடியேறிய வெள்ளைக்காரர்களின் உடைமையாகினர்.

ஹாரியட்டின் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அடிமைப்படுத்திய வெள்ளைக்காரர்களின் வாழ்க்கை குறித்து கிடைத்துள்ள ஆவணங்களை ஆய்வுசெய்கையில் அந்த இரு இனக் குழுக்களின் வாழ்க்கை எத்தனை வேறுபாடுகளைக் கொண்டிருந்தன என்பது தெரியவருகிறது. பாட்டிசன், தாம்சன், ஸ்டூவர்ட், ப்ராடஸ் போன்ற வெள்ளைக்காரர்களின் குடும்பங்கள் ஹாரியட் டப்மன் குடும்பத்தினரின் வாழ்வில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள் appeared first on கிழக்கு டுடே.

  •  

கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்

பண்டைய கானா நாட்டின் கடலோரப்பகுதியில் இருக்கும் அனோமன்ஸா என்ற நகருக்கு அருகே தங்கச் சுரங்கம் இருந்தது. ஐரோப்பியர்கள் முதலில் இங்கேதான் குடியேறினார்கள். நகரை எல்மினா என்று அழைத்தனர். எல்மினா என்றால் போர்த்துகீசிய மொழியில் சுரங்கம் என்று பொருள். இன்று வரையிலும் அந்தப் பெயர்தான் புழக்கத்திலுள்ளது. பின்னர் அந்தப் பகுதி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது கோல்ட் கோஸ்ட், தங்கக் கடற்கரை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் தங்கத்தை வாங்குவதற்குத் தானே நேரடியாக எல்மினா நகரத்துக்குச் சென்றார். ஐரோப்பியர்கள் வாங்கிய தங்கத்துக்கு அமெசிக் (பெர்பெர்) இனத் தரகர்கள் அதிக வரி விதித்ததுதான் காரணம்.

15ஆம் நூற்றாண்டில் கடற்கரையைப் பார்த்தபடி அமைக்கப்பட்ட பீரங்கிகளைக்கொண்ட கோட்டையொன்றை எல்மினாவில் அமைத்தனர் போர்த்துகீசியர்கள். மற்ற ஐரோப்பியர்கள் எவரும் எந்த நேரம் வேண்டுமானாலும் கடல்வழியே தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் அதை எதிர்கொள்வதற்காக அந்த ஏற்பாடு. உள்நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்கள் பெரிய தாக்குதல்களை நடத்தும் சாத்தியமில்லை என்பதும் காரணம்.

தொடக்கத்தில் கோட்டையின் நிலவறை தங்க வர்த்தகத்துக்காகக் கட்டப்பட்டிருந்தாலும் 16ஆம் நூற்றாண்டுவாக்கில் அதன் பயன்பாடு மாறியது. மேல்தளத்தை உண்ணவும் உறங்கவும் வழிபாடு செய்யவும் பயன்படுத்தினர் போர்த்துகீசிய வணிகர்கள். நிலவறையில் ஆப்பிரிக்காவின் உட்பகுதியிலிருந்து பிடித்துவந்த மக்களை அடைத்து வைத்தனர். அடிமை வாணிகக் கப்பல்கள் ஐரோப்பாவுக்கோ அமெரிக்காவுக்கோ அவர்களை ஏற்றிச்செல்லும் வரையில் வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும்கூட அடைப்பட்டுக்கிடந்தனர் ஆப்பிரிக்கர்கள். தாய்நாட்டில் அவர்கள் கடைசியாகப் பார்த்தது எல்மினாவின் இருண்ட நிலவறையைத்தான். அவர்களில் உயிர்பிழைத்தவர்களுக்கு அங்கே கட்டுண்டு கைதிகளாகக் கிடந்ததுதான் தங்கள் ஊரைப்பற்றிய கடைசி நினைவாகிப்போனது.

0

ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்தி வேறு கண்டங்களுக்கு இட்டுச்சென்றதுதான் உலகின் மிகப் பெரிய வலுக்கட்டாயமான குடிபெயர்தல் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். அந்தக் குடிபெயர்தல் ஐரோப்பியர்களின் வருகையால் அமெரிக்க நிலப்பகுதியில் வசித்துவந்த தொல்குடி இனங்களான அமெரிக்க இந்தியர்களின் அழிவை ஈடுகட்டுவதற்காக நடந்தது என்பது கூடுதல் துயரம்.

1492இல் ஹிஸ்பானியோலா தீவுக்கு கொலம்பஸ் வந்தபோது அந்த நிலத்தின் தொல்குடிகளான டைனோ இன மக்களின் தொகை பல லட்சமாக இருந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் 32,000 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இதனால் வயல்களில் பணிசெய்யப் போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு அடிமைகளைக் கொண்டுசென்ற போர்த்துகீசியர்களும் ஸ்பானியர்களும் இப்போது கப்பலை அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்தப் பக்கம் இருந்த நிலப்பகுதிக்குச் செலுத்தினார்கள். 16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக இட்டுச்செல்லப்பட்டார்கள், அவர்களில் சுமார் இருபது லட்சம் பேர் வழியிலேயே இறந்துபோனார்கள்.

1518இல் ஸ்பெயினை ஆண்ட முதலாம் சார்லஸ் மன்னன் ஸ்பெயின் நாட்டுக் கப்பல்கள் ஆப்பிரிக்க அடிமைகளை ஐரோப்பாவுக்குக் கொண்டுவராமல் நேராக அமெரிக்க நாடுகளுக்கும் தீவுகளுக்கும் ஏற்றிச் செல்லலாம் என அனுமதி வழங்கினான். அந்தச் சமயத்தில் அட்லாண்டிக் அடிமை வாணிகம் தொடங்கவில்லை என்றாலும் ஸ்பெயினிலிருந்து ப்யூர்டோ ரிகோவுக்கும் ஹிஸ்பானியோலியாவுக்கும் சென்ற கப்பல்களில் சில சமயம் ஓரிரு அடிமைகளும் மற்ற நேரங்களில் 30 முதல் 40 பேர் வரையிலும்கூடப் பயணப்பட்டனர். 1520களில் ஆப்பிரிக்காவின் சாவோ தோம் தீவிலிருந்து ஸ்பெயின் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த புதிய ஸ்பெயினுக்குப் பயணமான கப்பலில் சில நூறு அடிமைகள் இருந்தனர். 1540களில் ஸ்பெயின் குடியேற்ற நிலங்களுக்கும் தற்போதைய அமெரிக்காவின் மாகாணங்களான ஃப்ளாரிடா, நியூ மெக்சிகோ, சௌத் கரோலினா பகுதிகளுக்கும் ஆப்பிரிக்கர்கள் கொண்டுவரப்பட்டனர் என்று நம்பப்படுகிறது. இவர்களில் சிலர் ஒப்பந்தக் கூலிகள். அடிமைப்பட்டவர்களும்கூடத் தங்களுக்கான விலையைக் கொடுத்து விடுதலையைப் பெறும் வாய்ப்பு இருந்தது.

0

முக்கோண அடிமை வாணிகம் என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மூன்று கண்டங்களுக்கிடையே மூன்று கட்டங்களில் நடைபெற்ற வாணிகம் என்பதால் அந்தப் பெயர். முதல் கட்டமாக, வர்த்தகத்துக்கான துணிவகைகள், ரம் போன்ற மதுவகைகள் எனச் சரக்குகளை ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குக் கப்பல்கள் ஏற்றிச் செல்லும். இரண்டாம் கட்டத்தில், ஆப்பிரிக்க நாடுகளின் அரசர்கள் அந்தப் பொருட்களுக்கு விலையாக அண்டைநாட்டு மக்களைக் கைப்பற்றி அடிமைகளாக விற்றனர். கடைசி கட்டமாக அடிமைகளைக் கப்பலில் ஏற்றி அமெரிக்காவுக்கு இட்டுச் சென்றனர் ஐரோப்பியர்கள். அங்கே அவர்களை விற்றுப் பண்டமாற்றாக சர்க்கரை, புகையிலை, பருத்தி, நெல், விலங்கு ரோமம், தோல் போன்ற பொருட்களைக் கொள்முதல்செய்து ஐரோப்பாவுக்குக் கொண்டுபோயினர். இந்த வர்த்தகப் பயணத்தின் பாதைகள் முக்கோண வடிவில் அமைந்ததால் முக்கோண அடிமை வாணிகம் எனப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடலின் வழியே அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்கர்கள் கூட்டிச் செல்லப்பட்டதால் அந்தக் கட்டத்தை மத்திய பாதை என்றும் அந்த வாணிகத்தை அட்லாண்டிக் அடிமை வாணிகம் என்றும் குறிப்பிட்டனர்.

0

ஆப்பிரிக்காவில் அடிமைப்படுத்தல் பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வழக்கம். உள்நாடுகளில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் சஹாரா பாலைவனத்தின் வழியாக வட ஆப்பிரிக்காவுக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்வாஹிலி கடற்கரைக்கும் கொண்டுசெல்லப்பட்டு மத்தியதரைக்கடல் பகுதிகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அட்லாண்டிக் அடிமை வாணிகம் தொடங்கிய பிறகு மக்களைச் சிறைப்பிடிப்பதற்கென்றே போர்கள் நடந்தன.

பெற்றோர் வேலைக்குச் செல்கையில் வீட்டில் தனியே இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டனர். இதனால் வீடுகளில் தனியே இருக்கும் குழந்தைகளில் வயதில் பெரியவர்கள் மரத்தின்மீது ஏறி யாராவது வந்தால் மற்ற குழந்தைகளை எச்சரிக்கை செய்வார்கள். அதையும் மீறி எத்தனையோ இளவயதினர் பிடிபட்டனர். உட்புறப் பகுதிகளில் வசித்தவர்கள் மற்ற இனத்தவர்களாலோ தங்களது இனத்தைச் சேர்ந்தவர்களாலோ சிறைப்பிடிக்கப்பட்டனர். இன்னும் சிலர் உறவினர்களால் நயவஞ்சகமாக விற்கப்பட்டனர். இதனால் மக்கள் எப்போதும் அச்சத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டனர்.

பெரும்பாலும் இளவயதினரே சிறைப்பட்டதால் வயதானவர்களையும் குழந்தைகளையும் கவனிப்பதற்கு யாருமற்ற நிலை ஏற்பட்டது. வயல்களில் பணிசெய்ய ஆளில்லை. சில பகுதிகளில் சுமார் நூறு ஆண்டுக்குக் குழந்தைகளே அதிகம் பிறக்கவில்லை. ஆண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த பகுதிகளில் பலதார மணம் நடைமுறைக்கு வந்தது. வழக்கமாக ஆண்கள் செய்யும் பணிகளைப் பெண்கள் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஐரோப்பியப் பொருட்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டதால் ஆப்பிரிக்கத் தொழில்கள் நலிவுற்றன. இளவயதினர் அதிகம் சிறைப்பிடிக்கப்பட்ட பகுதிகள் ஒரு காலத்தில் வளம்கொழிக்கும் பேரரசுகளாக இருந்தாலும் நாளடைவில் வளர்ச்சியின்றி மோசமான நிலையை அடைந்தன.

சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் தப்பியோடாமலிருக்க அவர்களின் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டன. சில நேரம் அவர்களின் கழுத்தில் மரக்கட்டைகளைக் கட்டிவைத்தனர். தப்பியோடினாலும் குனிந்து ஓடையில் நீரருந்த முடியாமல் தாகத்தில் தவித்து இறக்கத்தான் வேண்டும். சிக்கியவர்கள் அவரவர் பகுதியிலிருந்து மேற்குக் கரையிலிருந்த துறைமுகங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர். வரும் வழியிலேயே பயணத்தின் கடுமை தாங்காமல் பல பேர் இறந்து போயினர்.

நாட்கணக்கில் பல மைல்கள் நடந்து மேற்குக் கடற்கரையில் இருக்கும் துறைமுகங்களுக்குச் சென்றுசேர்ந்ததும் பேன் பிடிக்காமல் இருக்கத் தலையை மொட்டையடிப்பார்கள். ஆடைகளை நீக்கி உடம்பு முழுவதும் எண்ணெய் பூசுவார்கள். அப்போதுதான் உடம்பு பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் தெரியும், அடிமை வாணிகர்கள் நல்ல விலைக்கு வாங்குவார்கள்.

ஐரோப்பிய வாணிகர்களால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் எந்த அடிப்படை வசதியுமற்ற கப்பல்களில் கால்நடைகளைப்போல அடைக்கப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 500 முதல் 600 பேர் வரையில் சென்றுசேரும் இடத்துக்கேற்ப ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரையில் பயணம் செய்யவேண்டிய கொடுமை. ஆண்களையும் பெண்களையும் தனித்தனிப் பகுதிகளில் அடைத்தனர். இரண்டிரண்டு பேராகச் சங்கிலியில் கட்டிவைத்தனர். ஒருவரின் வலது காலை அடுத்தவரின் இடது காலோடு பிணைப்பார்கள். கப்பலின் பணியாளர்கள் பெண்களை வன்புணர்வு செய்தனர்; இதனால் பெண்களில் சிலர் கருவுற்றனர். அடிமைகளுக்கு ஒரு வேளை மட்டுமே உணவும் நீரும் வழங்கப்பட்டது; பீன்ஸ், சோளம், கிழங்கு, அரிசி ஆகியவை உணவாக அளிக்கப்பட்டது. நீண்ட காலப் பயணத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் அடிமைகளுக்கு உணவு தரமாட்டார்கள். குடிநீர் இல்லாமல் தாகத்தால் தவித்து வயதானவர்கள் இறந்துபோவார்கள்.

சில நேரங்களில் விலங்கை விடுவித்து அடிமைகளை நடமாடவிடுவதும் கப்பலின் மேல்தளத்துக்கு அழைத்துவருவதும் உண்டு. அடிமைகளில் சிலர் உயிர்வாழப் பிடிக்காமல் கடலுக்குள் குதித்துவிடுவார்கள். சிலர் தப்பிச்செல்வதற்காகக் கலகம் செய்வார்கள். பெரும்பாலும் ஆண்களே கலகத்தில் ஈடுபட்டதால் பெண்களைவிடவும் அதிகம் கண்காணிக்கப்பட்டனர். கீழ்த்தளத்தில் சுகாதாரமற்ற சூழலில் பல மாதங்களுக்கு அடைத்துவைக்கப்பட்டதாலும் குளியலறை, கழிவறை வசதியில்லாததாலும் அடிமைகள் நோயால் பீடிக்கப்பட்டு அதிகளவில் இறந்துபோயினர். எந்தச் சடங்கும் சம்பிரதாயமுமின்றிச் சடலங்களைக் கடலுக்குள் எறிந்துவிடுவார்கள். கப்பல் பணியாளர்கள் கீழ்த்தளத்துக்குப் போகவே அஞ்சியதால் யாராவது இறந்தால்கூடத் தெரியாது. உயிரோடு இருப்பவர்கள் உயிரற்ற உடலோடு பல நாட்கள், ஏன் பல வாரங்கள்கூடப் பிணைக்கப்பட்டிருக்கும் அவலநிலையும் ஏற்பட்டதுண்டு. இந்தக் கொடுமைகளைத் தாங்கமுடியாதவர்கள் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதும் வாடிக்கை. அப்படி அவர்கள் கடலுக்குள் குதிப்பதைத் தடுக்கச் சுற்றிலும் வலைகட்டியிருப்பார்கள்.

அடிமைப்பட்ட துயரம், எதிர்த்துத் தற்காத்துக்கொள்ளமுடியாத கையறு நிலை, மனவழுத்தம், உளச்சோர்வு, உணவு, நீர், கழிப்பறை வசதியற்ற சூழல், கடல்பயண ஒவ்வாமை, நோய்த்தொற்று, எதிர்காலம் குறித்த விடைதெரியா கேள்விகள், சொந்த நிலத்தையும் மக்களையும் பிரிந்த சோகம் என எண்ணற்ற காரணங்களால் 15 முதல் 20 சதவீத மக்கள் பயணத்திலேயே இறந்துபோயினர். அடிமைக் கப்பல்களை மிதக்கும் கல்லறைகள் என அழைத்தனர். சுமார் 20 லட்சம் மக்கள் இப்படி இறந்துப்போனதாகக் கூறப்படுகிறது. இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 40 லட்சம் என்கிறது மற்றுமொரு கணிப்பு.

0

அலெக்சாண்டர் ஃபால்கன்ப்ரிட்ஜ் என்ற மருத்துவர் 18ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியன் தீவுகளுக்குச் செல்லும் அடிமைக் கப்பலில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பணிக்காலத்தில் பார்த்தவற்றையும் மருத்துவராகப் பணியாற்றிய அனுபவங்களையும் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். எப்படியெல்லாம் பிடிபட்டனர் என்பதை அடிமைகளிடம் கேட்டுப் பதிவுசெய்தார். கர்ப்பிணியாக இருந்த பெண்ணை அண்டை வீட்டுக்காரர்கள் மாலை விருந்துக்கு அழைத்துப் பின் அடிமை வாணிகர்களிடம் விற்றுவிட்டனர். அதேபோல வேறொரு இளைஞன் தன்னைச் சிறைப்பிடிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு தப்பிக்க முயற்சி செய்கையில் பெரிய நாயை ஏவிப் பிடித்தனர். இவற்றையெல்லாம் கேட்ட அலெக்சாண்டர் தன்னுடைய வாழ்வின் கடைசிக்கட்டத்தில் அடிமை வாணிகத்துக்கு எதிராகச் செயலாற்றினார்.

டேவிட் லிவிங்க்ஸ்டன் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர், கிறிஸ்தவச் சமயப்பரப்பாளர். 19ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் பயணம்செய்தபோது அங்கு கண்ட காட்சிகளைத் தன்னுடைய நாட்குறிப்பில் விவரிக்கிறார்.

’19 ஜூன் 1866 – மரத்திலிருந்து தொங்கிய பெண்ணொருத்தியின் உடலைக் கண்டோம். அவளால் கூட்டத்தில் இருந்த மற்றவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்கமுடியவில்லை. அதனால் வேறு யாரும் அவளைச் சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதற்காக உரிமையாளர் அவளைக் கொன்றுவிட்டார் என்று அங்கிருந்த மக்கள் விளக்கினார்கள்.

26 ஜூன் 1866 – கத்தியில் குத்தப்பட்டோ துப்பாக்கியால் சுடப்பட்டோ இறந்த பெண்ணின் உடலைக் கண்டோம். அவளால் வேகமாக நடக்கமுடியவில்லை என்பதால் கோபமடைந்த அரேபிய உரிமையாளர் தனக்கு ஏற்பட்ட இழப்பினால் ஆத்திரமடைந்து அவளைக் கொன்றுவிட்டார் என்று சொன்னார்கள்.

27 ஜூன் 1866 – பசியினால் உயிரிழந்த மெலிந்த உடல்கொண்ட மனிதனை இன்று கண்டோம். அருகில் அதேபோன்ற நிலைமையில் இருந்த இன்னும் பல அடிமைகள் இருந்தனர். போதுமான உணவில்லை என்பதால் உரிமையாளர்கள் அவர்களை அங்கேயே விட்டுவிட்டுப் போனது தெரியவந்தது. அவர்களில் பலர் சிறுவர்கள். எங்கிருந்து வந்தார்கள் என்பதைச் சொல்லக்கூடத் தெம்பில்லை.

இந்த நாட்டில் விந்தையான நோயினைக் கண்டேன். சுதந்திர மனிதர்களாக இருந்தவர்கள் அடிமைப்பட்டதால் மனமுடைந்துபோவதுதான் அந்த நோய்.’

0

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளை விலைகொடுத்து ஏற்றிச் செல்லும் ஐரோப்பியக் கப்பல்களுக்குக் காப்பீடு செய்வது வழக்கம். 1781இல் ஜோங் என்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக அட்லாண்டிக்கைக் கடக்கத் தாமதமானது. கப்பல் பணியாளர்களும் அடிமைகளும் நோய்வாய்ப்பட்டுத் தினம்தினம் செத்துக்கொண்டிருந்தார்கள். காப்பீட்டு ஒப்பந்தப்படி கடலில் தொலைந்துபோனவர்களுக்குத்தான் இழப்புத்தொகை கிடைக்கும், நோயினால் இறப்பவர்களுக்கு அல்ல. இதனால் கப்பல் தலைவன் 100க்கும் மேற்பட்ட அடிமைகளைக் கடலுக்குள் தள்ளிக் கொன்றான்.

0

அடிமை வாணிகம் சூடுபிடிக்க ஆரம்பித்ததும் அதில் பெரும்லாபம் ஈட்டவேண்டுமென்றால் அடிமைகள் ஆரோக்கியமாகப் பயணம் செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டனர் வாணிகர்கள். ஒவ்வொரு அடிமையும் 800 முதல் 1200 அமெரிக்க டாலர்கள் வரை விலைபோனார்கள். இதனால் 18ஆம் நூற்றாண்டுவாக்கில் கப்பல்களின் வடிவமைப்பு சீரமைக்கப்பட்டது. அடிமைகளின் இறப்பு விகிதம் குறையவேண்டுமென்பதற்காகக் கீழ்த்தளங்களைக் காற்றோட்டமாக அமைத்தனர். கப்பலைச் செலுத்துவதற்குப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் பயணக்காலம் குறைந்தது. கடல் பயணத்தில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளையும் கப்பலில் வைத்திருந்தனர். சில கப்பல்களில் மருத்துவர்களும் அறுவைசிகிச்சை வல்லுநர்களும் அடிமைகளுடன் பயணம்செய்தனர். இந்த மாற்றங்களால் போட்ட முதலீட்டுக்கு நட்டமின்றி அடிமை வாணிகம் சிறப்பாக நடந்தது.

ஹாரியட் டப்மனின் மூதாதையர்களும் இன்னும் பல லட்சம் ஆப்பிரிக்கர்களும் இதேபோலத்தான் சொந்த மண்ணையும் இனத்தையும் சேர்ந்த மக்களால் வஞ்சிக்கப்பட்டு ஐரோப்பிய வாணிகர்களுக்கு விற்கப்பட்டு அடிமைக் கப்பலில் வட அமெரிக்கா வந்தடைந்தனர்.

எல்லாம் சரி, வட அமெரிக்க நிலத்தில் ஆப்பிரிக்க இன மக்களைக் காலங்காலமாக அடிமைப்படுத்திக் கீழ்நிலையிலேயே வைத்திருக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? எதிர்பாராமல் நடந்த நிகழ்வொன்றுதான் அதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்கிறது வரலாறு.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம் appeared first on கிழக்கு டுடே.

  •  

இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

கவிஞர்கள் அனைவரையும் மஹாகவி என்று நாம் சொல்லுவதில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது. அப்படியானால் மஹாகவிக்கான வரையறைகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு இதுதான், இப்படித்தான் என்று பதில் சொல்லிவிடவும் முடியாது. வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை மஹாகவி என்றும் சொல்லிவிடக்கூடாது.

அப்படி வர்ணிக்கப்படும் ஒரு கவிஞரை உலகமே அப்படித்தான் என்று ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அவர் எந்த மொழியில் எழுதினாரோ அம்மொழி பேசும் மக்களாவது அவர் ஒரு மஹாகவிதான் என்பதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்ச் சமுதாயமும் உலகமும் மஹாகவிதான் என்று ஏற்றுக்கொண்ட ஒருவர்தான் நம் பாரதியார். ஆனால் அவர் ஏன் அப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார்? தமிழைப் புகழ்ந்து பாடியதாலா? குடும்பத்தைவிட கவிதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாலா? சுதந்திர தாகத்தைக் கவிதைகளில் காட்டியதாலா? கடவுளைப் புகழ்ந்து காவியங்கள் எழுதியதாலா?

ஒருவர் கவிதை எழுதக் கற்றுக்கொண்டு, இலக்கிய இலக்கணங்களைப் பின்பற்றி, அவற்றைக் கசடறக்கற்று, பின்னர் அதில் பாண்டித்தியம் பெற்று எழுதலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களும் மஹாகவி ஆகிவிடுவதில்லை. அப்படியானால் யார்தான் மஹாகவி?

இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன். மஹா கவிகள் என்று சொல்லப்பட்ட சிலரின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தேன். திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. ஆனால், பாரதியின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறு குறிப்பு கிடைத்தது. அதைப் பகிர்ந்துகொள்ளும் முகமாகத்தான் இந்தக் கட்டுரை.

இந்தக்கேள்விக்கு நான் கண்டு பிடித்த பதில் இதுதான். யாருடைய ரத்தத்தில், அணுக்களிலெல்லாம் கவிதை ஓடுகிறதோ அவரே மஹாகவி. அவர் எதையும் கற்றுக்கொண்ட பின்னர் எழுதுவதில்லை. அவர் எழுதுவார். அவரிடமிருந்து நாம்தான் கற்றுக்கொள்வோம்! அப்படிப்பட்டவர்தான் மஹாகவி. இதுதான் எனது அனுபவக் கண்டுபிடிப்பு.

மழை அதுவாகத்தான் பெய்யும். நாம் அதை வரவழைக்க முடியாது. அப்படி வரவழைக்கப்பட்ட செயற்கை மழையில் இயற்கை மழையின் அழகோ பயனோ முற்றிலுமாக இருக்காது.

மஹாகவிகளும் அப்படித்தான். அவர்கள் மழையைப் போன்றவர்கள். அவர்கள் கற்றுக்கொண்டும் எழுதுவார்கள். முறையான கற்றுக்கொள்ளல் எதுவும் இல்லாமலும் எழுதுவார்கள். கம்பனைப்போல, வள்ளுவனைப்போல, மில்டனைப்போல, ஷேக்ஸ்பியரைப் போல, நான்கு காப்பியங்கள் எழுதிய வண்ணக்களஞ்சியப் புலவரைப்போல. அப்படியொரு கவிஞரைத்தான் நம் பார்க்க இருக்கிறோம்.

அவர் நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த கவிஞர். நம் இதயத்தோடு ஒன்றியவர். நம் மரியாதைக்கு உரியவர். குடும்பத்தின் பசி போக்க, சோறு சமைக்க அரிசி வாங்கி வந்து, வழியில் அதையெல்லாம் குருவிகளுக்கு உணவாகப் போட்டுவிட்டு, ‘காக்கைக்குருவி எங்கள் ஜாதி’ என்று பாடியவர்.

ஆன்மிகத்தின் உச்சியை அனுபவத்தில் தொட்டவர். எல்லாவற்றிலும் இறைவனைப் பார்த்தவர். ‘தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்று பாடிய ஞானி.

ஆமாம். இப்படி எழுதியவர் நிச்சயம் ஒரு ஞானியாகத்தான் இருக்கவேண்டும். எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பதே ஆன்மிகத்தின் உச்சம் என்று சொல்லவேண்டும். இந்த உச்சத்தை சூஃபிகள் ‘வஹ்தத்துல் வுஜூத்’ என்று சொன்னார்கள். அந்த உச்சத்தைத் தொட்டவர் பாரதி.

அவர் கொஞ்சம் சின்ன வயதில் இருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதைப்பற்றித்தான் இங்கே சொல்ல விரும்புகிறேன். அவர் ஒரு மஹாகவி என்பதைக் காட்டிய நிகழ்ச்சி அது.

எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்று ஒரு தமிழ்ப் புலவர் இருந்தார். பாரதியை விட வயதில் மூத்தவர். ஒருநாள் மன்னர் அவையில் இருந்தபோது பாரதியின் புலமையைச் சோதிப்பதற்காக அவருக்கு ஈற்றடி கொடுத்து வெண்பா ஒன்றை பாடச் சொன்னார்கள்.

காந்திமதிநாதன் என்ற மூத்த கவிஞர் பாரதியின் வயதைப்பார்த்து அவர்மீது கொஞ்சம் பொறாமை கொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும் அரசவையில் தனக்குக் கிடைக்கும் மரியாதையைப்போல சின்னப்பையனான பாரதிக்கும் கிடைக்கிறதே என்ற பொறாமைதான்.

மன்னர் வைத்த போட்டிக்காக, காந்திமதிநாதன் என்ற அந்த மூத்த கவிஞர் வேண்டுமென்றே “பாரதி சின்னப் பயல்,” என்று ஈற்றடி கொடுத்து பாரதியை கவிதை பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்ததைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் மஹாகவிகளுக்கு கால அவகாசமோ முன் தயாரிப்போ எப்போதுமே தேவைப்பட்டதில்லை. பாரதி உடனேயே, ஆமாம் உடனேயே,

“ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கி கழ்ந்தென்னை ஏளனம்செய் மாண்பற்ற‌
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்”

என்று பாடினார்.

அவை அதிர்ந்தது. அதைக் கேட்டு சபையோர் பரிகசிக்க குறுகிப்போனார் காந்திமதிநாதன். ஏனெனில் ‘காந்திமதி நாதனைப் பார், அதி சின்னப்பயல்’ என்று காந்திமதி நாதன் மீதே விமர்சனமாக அக்கவிதை திரும்பியிருந்தது!

வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடியும் பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?

“ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற‌
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
பாரதி சின்னப் பயல்”

வயதில் இளையோன் என்று அன்போடு மழைபோல் என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். சபையிலிருந்தோர் பாரதியின் பண்பினைப் போற்றினர். இந்த நிகழ்வு நடைபெறும் போது பாரதிக்கு வயது 14தான்.

மஹாகவிகள் பிறக்கிறார்கள். உருவாக்கப்படுவதில்லை.

0

The post இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல் appeared first on கிழக்கு டுடே.

  •  

கறுப்பு மோசஸ் #4 – பண்டைய ஆப்பிரிக்காவில் அடிமை வாணிகம்

ஆப்பிரிக்க வரலாற்றின் பக்கங்களைத் திருப்பினால் அடிமைத்தளை காலங்காலமாக நடைமுறையில் இருந்தது தெரியவருகிறது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவை ஆண்ட பேரரசுகள் பொருளாதாரம், அரசியல், சமயத்தைப் பரப்புதல் என ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒன்றோடொன்று போர்புரிந்தன. அப்போது தங்கள் இனத்தைச் சேராத வேற்றினத்தவர்களைச் சிறைப்பிடித்துக் கட்டாய உழைப்பில் தள்ளின.

ஆப்பிரிக்கர்கள் தங்களுடைய உறவுமுறையினர் மட்டுமின்றி அடிமைகளின்மூலமாகவும் அரச, சமூக நிலைகளையும் செல்வத்தையும் தக்கவைத்துக்கொண்டனர். பிடிபட்ட அடிமைகள் திறனுக்கேற்ப அரண்மனைச் சேவகம், அரசரின் படை, வீட்டுப் பணி, இடைத்தரகு, வாணிகம், செய்தித் தூதுவர்கள் எனப் பலவிதமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாறாக, பண்டைய ஐரோப்பியர்கள் நிலவுடைமையின்மூலம் நிலத்தின் விளைபொருட்களின்மீதான தங்களின் உரிமையை நிலைநாட்டினர். அதன்மூலம் தங்களின் அரச, சமூக நிலையையும் செல்வத்தையும் தக்கவைத்துக்கொண்டனர்.

இரண்டு அமைப்புகளிலும் நிலத்திலிருந்தும் உழைப்பாளர்களின் உழைப்பினாலும் கிடைத்த பொருட்களையும் லாபத்தையும் உயர்குடியினர் தங்களின் உடைமையாக்கிக்கொண்டனர். அட்லாண்டிக் அடிமை வாணிகத்துக்கு முந்தைய காலத்தில் நிலம், மக்கள் இரண்டையும் யார் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்தந்தப் பகுதியின் அடிமைப்படுத்தும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பொஆ 15 முதல் 18ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் அண்டைநாட்டு மக்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக்குவது வழக்கமாக இருந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவின் செனகல், காம்பியா நதிகளுக்கிடையே இருக்கும் சிறிய பிரதேசம் செனகாம்பியா. பொஆ 14 முதல் 20ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு வசித்த மக்களில் மூன்றில் ஒருவர் அடிமையாக இருந்தனர். மேற்கு சுடானிலிருந்த கானா, மாலி, செகூ, சோங்காய், போனோமன் நாடுகளிலும் இதே நிலவரம்தான். ஆப்பிரிக்கா முழுவதும் பல நாடுகளில் ஏகான், இக்போ, துஆலா, சொக்வே, அஷாண்டி, யோரூபா, போனோ போன்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் அடிமைத்தளையில் சிக்கி உழன்றனர்.

15ஆம் நூற்றாண்டில் மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பண்டைய கானெம்-போர்னு பேரரசில் வருடத்துக்கு 5000 பேர் வரையிலும் அடிமைகளாக விற்கப்பட்டனர். ஓட்டமான் பேரரசுடன் ஏற்பட்ட அரசியல் உறவினால் போர்னு படைகளுக்குப் புதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அரசியல் ஆலோசகர்களின் வழிகாட்டுதலும் உதவியாக இருந்தது. இதன் விளைவாக, இஸ்லாமியரல்லாத அண்டைநாடுகளுடன் போரிட்டு அங்கிருந்த மக்களையும் கவர்ந்து வந்தனர்.

பண்டைய கானெம்-போர்னு பேரரசின் பெரும்பான்மையான வருவாய் அடிமை வாணிகத்தில் இருந்து கிடைத்தது என்பதால் 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் அரசே முன்னின்று இந்த வாணிகத்தை நடத்தியது. இதனால் எப்போதும் அண்டை அயலாருடன் போரிட்டுக்கொண்டே இருக்கும் கட்டாயம் வேறு. எனவே, அந்தப் பகுதியில் அரசியல் நிலைமை எப்போதும் வலுவிழந்து காணப்பட்டது. அந்தப் பகுதிகளில் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துபோனது. இன்று வரையில் மக்கள் நெருக்கம் குறைவாக இருக்கும் பகுதி அது.

20ஆம் நூற்றாண்டு வரையிலும்கூட சியரா லியோன், கேமரூன், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் மக்கள் தொகையில் சரி பாதி பேர் அடிமைகள். கிழக்கிலிருக்கும் ஜன்சிபார் தீவில் 90 சதவீதம் பேர் அடிமைகளாக இருந்தனர். எத்தியோப்பியாவில் 1930கள் வரையிலும் சுமார் 2 மில்லியன் மக்கள் அடிமைகளாக இருந்தனர். 1942இல் எத்தியோப்பிய பேரரசர் ஹெய்லே சேலஸ்ஸி அடிமைத்தளையை ஒழிக்கும் உத்தரவை வெளியிட்ட பிறகு அடிமை வாணிகம் நிறுத்தப்பட்டது.

0

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்வாஹிலி பகுதியில் வசித்த மக்கள் பெரும்பாலும் வட ஆப்பிரிக்காவுக்கும் மத்திய கிழக்கு, அரேபிய நாடுகளுக்கும் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டனர். சிலர் இந்தியா, சீனா என்று நெடுந்தொலைவுக்குப் போகவேண்டியிருந்தது. நாளடைவில், அரேபிய, பாரசீக வியாபாரிகள் இந்தப் பகுதியில் குடியேறி, ஆப்பிரிக்க இனங்களைச் சேர்ந்த பெண்களை மணமுடித்தனர். அடுத்த சில நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியில் இஸ்லாமிய மதம் பரவியது.

இஸ்லாமிய சமய விதிகளின் காரணமாக இஸ்லாமியர்களை அடிமைப்படுத்த முடியாததால் அரேபிய அடிமை வாணிகர்கள் ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளுக்கு அச்சமின்றி ஊடுருவிச்சென்று தாங்களே மக்களைக் கவர்ந்துவந்தனர். ஆண்களைவிடவும் பெண் அடிமைகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. பெண்களும் குழந்தைகளும் வீட்டுவேலை செய்தனர்; ஆண்கள் இராணுவம், கப்பல் பணியிலும் விவசாய வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

17ஆம் நூற்றாண்டு முதல் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகையினால் அரேபியர்கள் சஹாரா பாலைவனத்தை ஒட்டிய பகுதிகளுக்குச் சென்று அங்கிருக்கும் மக்களை அடிமைப்படுத்தினர். 17, 18ஆம் நூற்றாண்டுகளில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியப் பெருங்கடலிலிருந்த காலனிகளில் பணிசெய்வதற்கென 5 லட்சம் மக்களை அடிமைப்படுத்தினர். 16 முதல் 19ஆம் நூற்றாண்டு வரையில் போர்த்துகீசியர்கள் மொசாம்பிக் தீவிலிருந்தவர்களை அடிமைகளாக விலைகொடுத்து வாங்கினர். 18ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலைச் சேர்ந்த ரியூனியன், மொரீஷியஸ், மஸ்கரீன் தீவுகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிரெஞ்சுக்காரர்கள் ஒரு லட்சம் மக்களை அடிமைப்படுத்தினர். கிழக்கு ஆப்பிரிக்க இனத்தவர்கள் அமெரிக்காவுக்கும் இட்டுச்செல்லப்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பயணம்செய்த ஜெர்மானியத் தேடலாய்வாளர் குஸ்தவ் நாக்டிகல் போர்னுவிலிருந்து எகிப்தை நோக்கிக் கூட்டங்கூட்டமாக அடிமைகள் பாலைவனத்தைக் கடப்பதைப் பார்த்ததாகப் பதிவுசெய்துள்ளார். 19 மில்லியனுக்கும் அதிகமான ஆப்பிரிக்க மக்கள் சொந்த நிலத்திலிருந்து வேறு நாடுகளுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்பட்டனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். 9 முதல் 19ஆம் நூற்றாண்டு வரையில் சஹாரா பாலைவனம், செங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் என எல்லாத் தடங்களின் வழியாகவும் ஆப்பிரிக்காவின் மனிதவளம் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

0

அட்லாண்டிக் அடிமை வாணிகத்தின் தொடக்கப்புள்ளி எது? ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மக்கள் எப்போது வட அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டனர்? அட்லாண்டிக் அடிமை வாணிகத்தால் எந்தெந்த ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்? இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள பண்டைய போர்த்துகலின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பொஆ 13ஆம் நூற்றாண்டு முதல் போர்த்துகீசிய அரசர்கள் கடல்கடந்த ஏற்றுமதி வாணிகத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இஸ்லாமியக் கடற்கொள்ளையர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காகக் கடற்படைகளை அமைத்தனர். 14ஆம் நூற்றாண்டு முதலே தங்கக் காசுகள் அச்சடிப்பதற்காக சூடானில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்துவந்தனர் ஐரோப்பியர்கள். ஆப்பிரிக்காவின் வர்த்தகத் தடங்களையும் சீனா, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த பட்டு, நறுமணமூட்டிகள், ஆப்பிரிக்காவின் தங்கம் போன்ற முக்கியக் கச்சாப் பொருட்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் அரேபிய, ஆப்பிரிக்க இடைத்தரகர்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இவர்களின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு தன்னிச்சையாக வாணிகம் செய்ய விரும்பினார்கள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களான போர்த்துகீசியர்கள். ஆப்பிரிக்காவின் எந்தெந்தப் பகுதிகள் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன என்பதைத் தெரிந்துகொள்வதோடு சஹாரா பாலைவனத்தினூடாகச் செல்லும் வர்த்தகத் தடத்தின் தொடக்கப்புள்ளியைக் கண்டறியவேண்டுமெனவும் நினைத்தனர்.

கடற்பயணங்களில் ஆர்வம் கொண்ட போர்த்துகீசிய இளவரசன் ஹென்றிக்கு கடலோடி என்ற அடைமொழியுண்டு. பொஆ 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவனுடைய ஆதரவோடும் முன்னெடுப்போடும் பல முறையான கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பான நிர்வாகத் திறனால் புத்தாய்வுகளின் காலத்தைத் தொடங்கிவைத்த பெருமை ஹென்றியைச் சேரும். போர்த்துகீசியப் பெருந்தகைகள், வாணிகர்கள், கப்பல் முதலாளிகள் எனக் கடற்வாணிகத்தில் ஆர்வமுள்ளவர்களின் உதவியோடு புதிய வாய்ப்புகளைத் தேடி வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைச் சென்றடைந்தான் ஹென்றி. கூடவே கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதும் போரில் வெற்றிபெற்று மக்களின் மதிப்பைப் பெறுவதும் இலக்காக இருந்தது. இதற்கு ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பின் அனுமதியும் கிடைத்தது.

பசுந்தங்கத்தைத் தேடி வந்த போர்த்துகீசியர்கள் ஆப்பிரிக்காவில் நடைமுறையிலிருந்த அடிமைப்படுத்தும் வழக்கத்தைப் பார்த்தனர். 1441இல் ஆப்பிரிக்க அடிமைகளைச் சிறைப்பிடித்த முதல் கப்பல் பண்டைய போர்த்துகல் துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தது. பண்டைய ஆப்பிரிக்கப் பேரரசுகளான காங்கோ, பெனின், அங்கோலா ஆகியவற்றுடன் போர்த்துகலின் வர்த்தகம் தொடர்ந்தது. காங்கோ அரசர்கள் எதிரி நாட்டு மக்களைச் சிறைப்பிடித்து போர்த்துகீசியர்களிடம் விற்றார்கள்.

1470களில் போர்த்துகீசியர்கள் மேற்கு ஆப்பிரிக்காவின் கினி வளைகுடாவில் இருக்கும் சாவோ தோம், பிரின்சிபே தீவுகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தீவுகளின் வளமான நிலமும் தட்பவெப்பமும் கரும்பு விளைச்சலுக்கு ஏற்றதாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவுக்கான சர்க்கரையில் பெரும்பகுதி இந்தத் தீவுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. கரும்பு விளைவிப்பதற்குப் பெருமளவில் மனித உழைப்பு தேவை. ஆப்பிரிக்க இனத் தலைவர்களும் இடைத்தரகர்களும் அதற்குத் தேவையான உழைப்பாளர்களைச் சிறைப்பிடித்து போர்த்துகீசியர்களுக்கு விற்றார்கள்.

போர்த்துகீசிய வாணிகர்கள் துப்பாக்கி, வெடிமருந்து, துணி, பித்தளை அல்லது செம்பினாலான மணில்லா எனப்படும் வர்த்தகத்துக்கு உதவும் செலாவணி ஆகியவற்றை ஆப்பிரிக்காவில் வர்த்தகம் செய்வதற்காக எடுத்து வந்தனர். ஒரு அடிமையின் விலை 8 முதல் 10 செம்பு மணில்லா, யானைத் தந்தம் வாங்க ஒரு மணில்லா போதும். மேற்கு ஆப்பிரிக்கப் பேரரசுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுப் பொருட்களின் மீதிருந்த மோகத்தினால் அண்டைநாட்டு மக்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக விற்றனர்.

16ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்பிரிக்கப் பேரரசுகளுக்குள் ஏற்பட்ட போரினால் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. வலுவான தலைமை இல்லாத காரணத்தால் நிறைய சிறிய அரசுகளாகப் பிரிந்தன. அவற்றை ஆண்ட குறுநில மன்னர்கள் ஐரோப்பியர்களுடன் நேரடியாக வர்த்தகத்திலும் அடிமை வாணிகத்திலும் ஈடுபட்டனர். 16ஆம் நூற்றாண்டில் வருடத்துக்கு ஆயிரம் அடிமைகள் விற்கப்பட்டனர் என்றால் 17ஆம் நூற்றாண்டில் சில பத்தாயிரம் அடிமைகள் வரையில் சிறைப்பிடிக்கப்பட்டனர். பிறகு வருடத்துக்கு 45000 பேர் வரை கப்பல்களில் ஐரோப்பிய காலனிகளுக்கு இட்டுச்செல்லப்பட்டனர்.

0

இதே காலகட்டத்தில் போர்த்துகலின் அண்டை நாடும் போட்டியாளருமான ஸ்பெயினும் கடற்பயணங்களிலும் கடல் வாணிகத்திலும் ஆர்வம்கொண்டது. 1486ஆம் ஆண்டில் இத்தாலியின் ஜெனோவா நகரைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற மாலுமி ஸ்பெயினின் ஆட்சியாளர்களான அரசர் பெர்டினாண்டையும் இசபெல்லாவையும் சந்தித்தார். அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து ஆசியாவுக்குச் செல்லும் வழி தனக்குத் தெரியுமென்றும் அதற்குப் பொருளுதவி செய்யவேண்டுமென்றும் கேட்டார். ஸ்பானியர்களுக்கு ஆசியாவுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பதில் போர்த்துகீசியர்களை முந்தவேண்டுமென்ற போட்டியோடு கிறிஸ்தவத்தைப் பரப்பவேண்டுமென்ற முனைப்பும் சேர்ந்துகொண்டது. சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து 1492ஆம் ஆண்டு ஆகஸ்டு 3ஆம் தேதி கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கினார்.

பஹாமாஸ் தீவுகளை அடைந்ததும் அதுதான் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தியா என்ற முடிவு செய்தார். அங்கிருந்து கியூபாவுக்கும் மற்றொரு தீவுக்கும் சென்றார். அந்தத் தீவுக்கு ஹிஸ்பானியாலோ, அதாவது குட்டி ஸ்பெயின் என்று பெயரிட்டார். 1493இல் ஸ்பெயினுக்குத் திரும்புகையில் ஹிஸ்பானியாலோவைச் சேர்ந்த அராவக் இனமக்களை இந்தியர்கள் என அழைத்தார். அவர்களைச் சிறைப்பிடித்து ஸ்பெயினுக்குத் தன்னுடன் கூட்டிச் சென்றார். இப்படி மொத்தம் நான்கு முறை அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்காவுக்கு வந்தார்.

அடுத்த சில வருடங்களில் கொலம்பஸ் கண்டுபிடித்தது இந்தியா அல்ல, புதிய கண்டங்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவற்றுக்கு அமெரிக்கா எனப் பெயரிடப்பட்டது. எப்படியானாலும், ஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்காவுக்குப் பயணிக்கும் கடல்வழியைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ்தான். இந்தக் கண்டுபிடிப்பு அமெரிக்காவில் ஐரோப்பிய காலனியத்துக்கு வித்திட்டது. ஸ்பெயின், போர்த்துகல், மற்ற ஐரோப்பிய நாடுகள் என ஒவ்வொருவராக இந்தக் கண்டங்களிலும் தீவுகளிலும் குடியேறித் தங்கள் நாட்டின் காலனியப் பேரரசை நிறுவி, பின்னர் விரிவாக்கினர்.

ஸ்பானிய ஆட்சியாளர்கள் எதிர்பார்த்ததுபோல கொலம்பஸின் பயணங்களினால் பெருஞ்செல்வத்தை அடைய முடியவில்லை. என்றாலும் புத்தாய்வுப் பயணங்களை அவர்கள் நிறுத்திவிடவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான போரில் உதவியவர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அவர்களின் சேவைகளுக்கு ஈடுசெய்யும் விதமாக என்கோமியண்டா எனப்படும் முறையை அறிமுகப்படுத்தினர். அதாவது, அவர்கள் வெற்றிகொண்ட பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை மக்களின் உழைப்பைப் பெறும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு நிலத்துக்குரிய மக்களை அடிமைப்படுத்துவதை ஸ்பானிய ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் என்கோமியண்டா முறையைப் பின்பற்றிய ஸ்பானிய குடியேறிகள் லாபம் சம்பாதிப்பதற்காக மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர். சில இடங்களில் மக்கள் இதை எதிர்த்துப் போராடினர்.

0

அட்லாண்டிக் பெருங்கடல் பகுத்யில் ஸ்பெயின் புதிய நிலங்களைக் கண்டுபிடித்துக் கையகப்படுத்தியதைக் கண்ட போர்த்துகலும் தன்னுடைய கடற்பயணக் குழுவை அங்கே அனுப்பிவைத்தது. தானும் வலுக்கட்டாயமாக நிலங்களை ஆக்கிரமித்தது. ஸ்பெயின், போர்த்துகலைத் தொடர்ந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து நிலங்களைத் தனதாக்கிக்கொண்டன. அங்கே தங்களுடைய காலனிகளை அமைத்தன. அந்த நிலத்தின் வளங்களைத் தடையேதுமின்றிப் பயன்படுத்திப் பொருட்களை உற்பத்திசெய்தன.

இந்தப் பகுதியில் நிலவிய வெப்பமண்டலக் காலநிலை அதிகுளிர்ப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்களுக்கு இதமாக இருந்தது. கைப்பற்றிய இடங்களில் வணிகப் பயிர் எனப்படும் செல்வத்தை ஈட்டித் தரும் பயிர்களை வளர்த்தனர். பெரிய கரும்புத் தோட்டங்களை அமைத்தனர். கூடவே பருத்தியும் புகையிலையும் பயிர்செய்தனர். இந்தப் பயிர்களை வளர்ப்பதற்கு மனித உழைப்புத் தேவை. பெரும் லாபம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக அந்த நிலத்தைச் சேர்ந்த மக்களைத் துன்புறுத்திக் கடுமையாக உழைக்கவைத்தனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் மடிந்துபோயினர். அடுத்து என்ன செய்யலாம் எனச் சிந்திக்கவேண்டிய கட்டாயம்.

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு விருப்பத்தோடு குடிபெயர்ந்த மக்கள், ஒப்பந்தக் கூலிகள் போன்றோரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. குற்றம்சாட்டப்பட்ட மக்களையும் கைதிகளையும் அமெரிக்கா கொண்டுசென்றாலும் அவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருந்தது. இப்படிப் பல காரணங்களால் மக்களை அடிமைப்படுத்தி வலுக்கட்டாயமாக அங்கு கொண்டுசெல்வதே தீர்வாக இருந்தது. மக்களை அடிமைப்படுத்தி ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு கொண்டுசென்ற கப்பல் இப்போது அட்லாண்டிக்கைக் கடந்து அமெரிக்காவை நோக்கிப் பயணித்தது.

அமெரிக்காவில் அமைக்கப்பட்ட காலனிகள் ஐரோப்பிய முதலாளிகளுக்குத் தேவையான செல்வத்தையும் சர்க்கரையையும் அள்ளி அள்ளித் தந்தன. சர்க்கரை உற்பத்தி அதிக லாபம் தந்ததோடு அரசுகளின் கருவூலத்தையும் நிறைத்தது. அடிமைகளை வாங்குவதற்கான நிதியைத் தந்தது. அப்படி வாங்கப்பட்ட அடிமைகள் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு சுழற்சிபோல ஒன்று மற்றொன்றை வளர்த்தெடுத்தது. அதற்கடுத்த 40 ஆண்டுகளில் போர்த்துகீசியர்கள் அடிமைகளை அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவில் இருக்கும் தங்களின் காலனிகளுக்கு கொண்டுசென்றனர். போர்த்துகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஸ்பானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லோரும் போட்டிபோட்டுக்கொண்டு அடிமை வாணிகத்தில் ஈடுபட்டனர்.

அடிமைத்தளை, கட்டாய அடிமை வாழ்வு, கட்டாய உழைப்பு என வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எல்லா மக்களும் ஏதோ ஒரு வகையில் அடிமையாகவும் உரிமையாளராகவும் இருந்திருக்கிறார்கள் என்கிறார்கள் அட்லாண்டிக் அடிமை வாணிகம் பற்றி எழுதிய டேவிட் எல்டிஸ், டேவிட் ரிச்சர்ட்சன் என்ற வரலாற்றாசிரியர்கள். அட்லாண்டிக் அடிமை வாணிகத்தின்மூலம் போர்த்துகீசிய, ஸ்பானியக் காலனிகளுக்கு வந்துசேர்ந்த அடிமைகள் புதிய உலக நாடுகளின் சமூக வளர்ச்சியிலும் அமைப்பிலும் பெரும்பங்காற்றினர். ஆனால் கட்டாய உழைப்பில் தள்ளப்பட்ட அவர்களின் நிலை பண்டைய உலகின் அடிமைகளின் நிலையிலிருந்து பெருமளவில் மாறுபட்டிருந்தது.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #4 – பண்டைய ஆப்பிரிக்காவில் அடிமை வாணிகம் appeared first on கிழக்கு டுடே.

  •  

கறுப்பு மோசஸ் #3 – பண்டைய ஆப்பிரிக்காவின் செல்வச்செழிப்பு

நடுநிலைப் பள்ளிப் புவியியல் பாடத்தில் ஒவ்வொரு வருடமும் ஒரு கண்டத்தைப் பற்றிச் சொல்லித்தருவார்கள். அதில் ஆப்பிரிக்காவுக்கு ‘இருண்ட கண்டம்’ என்ற பெயருமுண்டு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது ஆச்சரியமூட்டியது. அடர்ந்த காடுகளையும் செழித்து வளர்ந்த தாவரங்களையும் அங்கே வசித்த வினோதமான உயிரினங்களையும் கடக்கமுடியாத கட்டுக்கடங்காத வேகங்கொண்ட காட்டாறுகளையும் இயற்கையோடு ஒத்திசைந்து வாழ்ந்த பல இனத்தைச் சேர்ந்த மக்களையும் வெளியிலிருந்து வந்த புதியவர்கள் முழுவதுமாகத் தெரிந்துகொள்ளமுடியாத காரணத்தால் இட்ட பெயர் என்பது காலப்போக்கில் புரிந்தது.

இடைக்காலத்தில் ஆப்பிரிக்கா வளங்கொழிக்கும் பல நாடுகளை உள்ளடக்கிய கண்டமாக இருந்தது. பரந்து விரிந்த பேரரசுகளையும் செல்வச் செழிப்புமிக்க நகரங்களையும் கொண்டது. மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகள் ஒட்டுமொத்த உலகநாடுகளின் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகித்தன.

ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பகுதிகளைப் பல புகழ்பெற்ற பேரரசுகள் ஆட்சிபுரிந்தன. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்த எகிப்தியப் பேரரசைப்பற்றி எல்லோரும் அறிவோம். சுமார் ஓராயிரமாண்டு ஆட்சிசெய்த குஷ் பேரரசும் அதற்கு நிகரான பெருமைகளையுடையது. பொஆமு 2000இல் அதன் புகழ் உச்சம்பெற்றது. நைல் நதியின் கரையிலுள்ள தற்போதைய சூடான் நாட்டை உள்ளடக்கியது குஷ் பேரரசு. தங்கம், யானைத் தந்தம், சாம்பிராணி, இரும்பு ஆகியவற்றின் வாணிக மையமாக இருந்தது. எகிப்தியக் குறிப்புகளில் இருந்து குஷ் பேரரசு குறித்த தகவல்களை அறிந்துகொள்ளமுடிகிறது.

எகிப்தியப் பேரரசோடு இணைந்து வர்த்தகம் செய்யும் அண்டை நாடாக இருந்தாலும் எதிரியாகவும் இருந்தது குஷ் பேரரசு. சில ஆண்டுகளுக்கு எகிப்தைக் கைப்பற்றி அதன் 25வது வம்சமாக ஆட்சிசெய்தது. அந்தக் காலகட்டத்தில் எகிப்தியக் கடவுளரை வழிபடுவது, இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி வைப்பது, பிரமிடைப்போன்ற கட்டடங்களை எழுப்புவது எனப் பல எகிப்திய வழக்கங்களைப் பின்பற்றியது. எகிப்தைவிடவும் அதிக எண்ணிக்கையில் பிரமிடுகளை குஷ் பேரரசு அமைத்தது. அதன் தலைநகரமான மெரோ இடிபாடுகளில் சுமார் 200க்கும் அதிகமான பிரமிடுகளைத் தற்போது காணலாம்.

0

வரலாற்றுக் குறிப்புகள் பூண்ட் பேரரசின் காலம் பொஆமு 2500 என்று சொல்கின்றன. எகிப்திய ஆவணங்கள் பூண்ட்டை ‘கடவுளின் நிலம்’ என்றும் தங்கம், கருங்காலி மரம், மிர் எனப்படும் நறுமணப் பொருள், விலங்குகளின் தோல், சிறுத்தைப் புலி, பபூன் இனக் குரங்குகள் எனப் பல்வகை வளத்தைக்கொண்டது என்றும் குறிப்பிடுகின்றன.

பொஆமு 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹட்ஷெப்சூட் என்ற எகிப்திய பெண் பாரோவின் ஆட்சியில் பூண்ட்டிற்கு காரவன்களையும் வாணிகக் குழுக்களையும் அனுப்பிவைத்தார். ஆனாலும் இன்று வரையில் பூண்ட் பேரரசு எங்கே அமைந்திருந்தது என்பது உறுதிசெய்ய முடியாத மர்மமாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் செங்கடலின் கரையில் தற்போதைய எரித்ரியா, எத்தியோப்பியா, சோமாலியா நாடுகள் அமைந்திருக்கும் பகுதியில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

0

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருந்த கார்தேஜ் பேரரசு ரோமானியப் பேரரசின் வைரியாக இருந்தது. கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியின் வர்த்தக மையமாக விளங்கியது. பொஆமு 8 அல்லது 9ஆம் நூற்றாண்டில் தற்போதைய டுனீசியாவில் பீனீசியர்களின் சிறிய குடியேற்றமாக இருந்த கார்தேஜ் காலப்போக்கில் பரந்துவிரிந்த பேரரசாக உருப்பெற்றது. கடற்பயணத்திலும் துணிவகைகள், தங்கம், வெள்ளி, செம்பு வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறந்தது. கார்தேஜின் தலைநகரத்தில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் வசித்தனர். அதன் துறைமுகத்தில் 220 கப்பல் துறைகள் இருந்தன.

பேரரசை விரிவுபடுத்தும் ஆசையில் ரோமானியப் பேரரசுடன் மோதியது கார்தேஜ். சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலகட்டத்தில் மூன்று பூனிக் போர்கள் நடந்தன. இறுதியில் ரோமானியர்களே வெற்றி பெற்றனர். கார்தேஜ் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டது, அதன் மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர். தற்போது எஞ்சியிருப்பது டூனிஸ் நகரிலுள்ள இடிபாடுகள் மட்டுமே.

0

ரோமானியப் பேரரசு எழுச்சிபெற்ற அதே காலகட்டத்தில் தற்போதைய எரித்ரியா, வடக்கு எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அமைந்துள்ள பகுதியில் தோன்றியது அக்ஸம் பேரரசு. பொஆ 2, 3ஆம் நூற்றாண்டுகளில் செல்வாக்குமிக்க பேரரசாக விளங்கியது என்றாலும் அக்ஸம் பற்றிய குறிப்புகள் அதிக அளவில் இல்லை. தங்கம், யானைத்தந்தம் ஆகியவற்றின் வர்த்தகத்தில் பண்டைய ஐரோப்பாவுக்கும் தூர கிழக்கு நாடுகளுக்குமிடையே முக்கியமான கண்ணியாக இருந்தது. செங்கடல் வழியாக நடைபெற்ற வாணிகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

அக்ஸம் பேரரசின் எழுத்துருவான ஜீஸ் ஆப்பிரிக்காவில் தோன்றிய முதல் எழுத்துரு என நம்பப்படுகிறது. இந்தப் பகுதியில் காணப்படும் 100 அடி உயரம்கொண்ட கற்சதுரத் தூண்கள் அக்ஸமின் தனித்துவம் வாய்ந்த கட்டடக்கலைக்குச் சான்றாக இருப்பவை. பொஆ 4ஆம் நூற்றாண்டில் அக்ஸம் பேரரசு கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது. பொஆ 7, 8ஆம் நூற்றாண்டுகளில் வீழ்ச்சியடைந்தது.

0

சோங்காய் பேரரசு 15ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. ஆப்பிரிக்காவின் பிரம்மாண்டமான செல்வாக்குமிக்க வலிமையான பேரரசு எனக் கருதப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவைவிடவும் அதிகப் பரப்பளவைக்கொண்டது. திடமான வர்த்தகக் கொள்கைகளையும் நுட்பமான நிர்வாகக் கோட்பாடுகளையும் கொண்டிருந்ததால் வாணிகம் செழித்து நாடு வளம்பெற்று விளங்கியது.

பொஆ 16ஆம் நூற்றாண்டில் அதைக் கைப்பற்றிய முதலாம் முஹம்மது அஸ்கியா மன்னனின் ஆட்சியில் அதன் சிறப்பு உச்சம் பெற்றது. புதிய நிலங்களைக் கைப்பற்றியதோடு எகிப்தின் இஸ்லாமிய காலிப்போடு கூட்டணி அமைத்தான். முக்கிய நகரமான டிம்பக்டுவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியக் கல்விச்சாலைகளை அமைத்தான். உள்நாட்டுக் கலவரத்தினால் ஆட்சி வலுவிழந்த சமயத்தில் மொரோக்கோ சுல்தான் படையெடுத்து வந்து சோங்காய் பேரரசைத் தோற்கடித்தான்.

0

சஹாரா கீழமை ஆப்பிரிக்கப் பகுதியிலுள்ள பெரிய ஜிம்பாப்வே என்றழைக்கப்படும் கல் கோபுரங்கள், சுவர்கள் ஆகியவை அடங்கிய கற்கோட்டையொன்றின் இடிபாடுத் தொகுதிகளை ஆய்வுசெய்தனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். அவை பொஆ 13 முதல் 15ஆம் நூற்றாண்டு வரையில் அந்தப் பகுதியில் ஆட்சிபுரிந்த உள்நாட்டுப் பேரரசு ஒன்றின் கற்கோட்டையின் எச்சங்கள் என்று அறிவித்தனர். தற்போதைய போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்திருக்கலாம் என்கின்றனர்.

அந்தப் பேரரசு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் ஜிம்பாப்வே பேரரசு எனக் குறிப்பிடுகின்றனர். அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சீனக் களிமண் பாண்டங்கள், அரேபிய கண்ணாடி, ஐரோப்பிய துணிவகைகள் போன்றவை அது வர்த்தக மையமாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. கால்நடைகள், விலைமதிப்புமிக்க உலோகங்கள், தங்கச் சுரங்கங்கள் எனப் பல வளங்களைக் கொண்டிருந்த அந்தப் பேரரசை இந்தியப் பெருங்கடல் துறைமுகங்களோடு இணைக்கும் வர்த்தகத் தடமும் அங்கே அமைந்திருந்தது.

பேரரசு உச்சத்தில் இருக்கையில் இங்கே சுமார் 20000 மக்கள் வசித்திருக்கலாம். 15ஆம் நூற்றாண்டில் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது கோட்டையில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

0

மாலி பேரரசு 10ஆம் நூற்றாண்டில் தோன்றி 16ஆம் நூற்றாண்டு வரையில் செழித்து வளர்ந்தது. ஆப்பிரிக்காவின் வடமேற்குக் கரையிலுள்ள தற்போதைய நைஜீரியாவை உள்ளடக்கியது. அந்தக் காலத்தில் சுமார் ஒரு கோடி குடிமக்களைக் கொண்டிருந்த பெருநகரங்கள் அமைந்த நிலப்பகுதியாக விளங்கியது. நைஜர் நதியின் கரையிலிருந்த நகரங்களில் 10000 முதல் 30000 மக்கள் வரை வசித்தனர் என்றால் பாருங்கள். மக்கள் மேம்பட்ட கல்வியறிவு கொண்டிருந்தனர். பட்டுச் சாலை வர்த்தகத்தின் மூலம் உயர்விலை ஆடம்பரப் பொருட்களை வாங்கித் துய்த்தனர். வெனிஸ், மாலத்தீவுகள் போன்ற தூரதேசங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட பொருட்கள் அங்கே விற்கப்பட்டன.

பொஆ 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாலி பேரரசை மன்சா மூசா என்ற பேரரசன் ஆண்டான். அந்த நிலப்பரப்பின் தங்கச் சுரங்கங்கள் அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில் இருந்தன. ஸ்பெயினும் மற்ற தென் ஐரோப்பிய நாடுகளும் அவற்றுக்குத் தேவையான தங்கத்தை மாலியில் இருந்து வாங்கின. ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து பல டன் தங்கம் சஹாரா பாலைவனத்தின் வழியாக ஐரோப்பாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

என்ன, மலைத்துப்போய்விட்டீர்களா. ஆம், சஹாரா பாலைவனமேதான். தொழில்நுட்பமும் போக்குவரத்தும் முன்னேறிய இந்தக் காலத்திலும் எவராலும் எளிதில் கடக்க முடியாத சுட்டுத் தகிக்கும் மணற்பரப்பைக்கொண்ட நிலப்பகுதி. ஆனால், இடைக்கால உலகின் வர்த்தக வலைப்பின்னலின் மையப்புள்ளியாக இருந்தது.

மன்சா மூசாவின் காலத்தில் மேற்கு ஆப்பிரிக்காவின் தங்கம் உலகை இயக்கும் இயந்திரமாகச் செயலாற்றியது. தங்கம், உப்பு ஆகியவற்றோடு அடிமைகளும் வாணிகம் செய்யப்பட்டனர். பீங்கான், செம்பு, கண்ணாடி மணிகள், தந்தம், தோல், ஆடைகள் ஆகிய பொருட்களும் பல தூரதேசங்களில் வாணிகம் செய்யப்பட்டன.

பேரரசன் மன்சா மூசா பொஆ 1324ஆம் ஆண்டு மெக்காவுக்குப் புனித யாத்திரை செல்கையில் 8000 காலாட்கள், 12000 அடிமைகள், 100 ஒட்டகங்கள் எனப் பெரிய பரிவாரத்தோடு போனான்; ஒவ்வொரு ஒட்டகமும் 300 பவுண்டு பசும்பொன்னைச் சுமந்துசென்றன. ஒட்டகக் கூட்டம் ஒரு மணி நேரத்தில் மூன்று மைல் தூரத்தைக் கடக்கும். சஹாராவைக் கடக்க 2500 மைல்கள் பயணிக்கவேண்டும். பசி, தாகம், மரணம் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு போராடிக் கடக்கும் சாகசப் பயணம். அப்படியொரு பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டான் மூசா. உலகின் செல்வந்தர்கள் பட்டியலின் முதலிடத்தை மன்சா மூசாவிடமிருந்து எவராலும் இன்றுவரையில் தட்டிப்பறிக்க முடியவில்லை என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

இடைக்காலத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்களின் பண்டைய வரைபடங்களிலும் சித்திரங்களிலும் செல்வத்திலும் வலிமையிலும் புகழ்பெற்ற ஐரோப்பிய பேரரசர்களுக்கு நிகரானவனாகச் சித்தரிக்கப்பட்டான் மன்சா மூசா. 1375ஆம் ஆண்டில் ஆபிரகாம் கிரஸ்கஸ் என்ற யூத வரைபடவியலாளர் தீட்டிய கடலான் வரைபடத்தில் (Catalan Map) இருக்கும் அவனுடைய ஓவியத்திலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.

0

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்வாஹிலி கடற்கரையில் அமைந்த நகர மாநிலங்கள் இந்தியப் பெருங்கடல் வழியே அரேபிய, பாரசீக, இந்திய வாணிகர்களுடன் வர்த்தகம் செய்தன. காலப்போக்கில் இஸ்லாமிய மதமும் ஸ்வாஹிலி மொழியும் இவர்களை ஒன்றிணைக்கும் காரணிகளாக மாறின. சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியாவைச் சேர்ந்த பொருட்களை இறக்குமதி செய்தன. இந்த நகர மாநிலங்களில் ஆப்பிரிக்க அடிமைகளை விற்கும் வாணிகமும் நடைபெற்றது.

15ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்கு வந்த போர்த்துகீசியர்கள் கில்வா நாட்டின் சோஃபாலா தங்கச் சுரங்கங்களோடு அந்தப் பகுதியிலிருந்த மற்ற நாடுகளையும் கைப்பற்றினர். ஆனால் ஓட்டாமான்களும் சோமாலியர்களும் கிழக்கு ஆப்பிரிக்காவில் போர்த்துகீசியர்களின் கை ஓங்குவதை விரும்பவில்லை. அவர்களின் ஒன்றிணைந்த தாக்குதலில் போர்த்துகீசியர்களின் பிடி தளர்ந்தது.

0

பொஆ 12ஆம் நூற்றாண்டில் பண்டைய ஸ்பெயின் நாட்டின் கிரனடா நகரில் வாழ்ந்த அல்-ஜுஹ்ரி என்ற புவியிலாளர் சஹாரா பாலைவனத்தினூடாக நிகழ்ந்த வர்த்தகத்தைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். ஸ்பெயினில் உள்ள அல்மோரவிட் பேரரசு தொடங்கி ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தைத் தாண்டி மேற்கு ஆப்பிரிக்காவின் கானா பேரரசு வரையிலும் வர்த்தகம் நடந்தது. சஹாரா பாலைவனத்தின் வடக்கு, தெற்கு எல்லைகளுக்குப் புறத்தே அமைந்த நகரங்கள், வட ஆப்பிரிக்கா முழுவதும், ஐரோப்பாவின் கிழக்கு, மேற்குப் பகுதிகள் என எல்லாப் பகுதிகளும் ஒன்றோடொன்று வர்த்தகத் தொடர்பிலிருந்தன.

இபின் படூட்டா என்ற வரலாற்றாசிரியர் மேற்கு சுடானில் தங்கம், வெள்ளியைப்போல உப்புப் பாளங்களைச் செலாவணியாகப் பயன்படுத்தினார்கள் என்று பதிவுசெய்கிறார். சஹாரா பாலைவனத்தின் மையப்பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட பாறை உப்பு விலைமதிப்புமிக்கதாகக் கருதப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் கிடைத்த பசும்பொன்னும் உப்பும் இடைக்கால உலகின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்தன.

சர்க்கரை, இண்டிகோ எனப்படும் நீல வண்ணம், படிகாரம், பித்தளை, யானைத் தந்தம், கருங்காலி மரம், கோரைப்புல், ஓரிக்ஸ் எனப்படும் மறிமானின் தோலில் செய்யப்பட்ட கவசங்கள் எனப் பலவிதமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றோடு ஆண், பெண் அடிமைகளின் விற்பனையும் நடந்தது என அல்-ஜூஹ்ரி எழுதியுள்ளார்.

இந்த வர்த்தகத்தை நடைமுறைப்படுத்தவும் தொடர்ந்து செயல்படுத்தவும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களின் திறமை, மனிதவளம், பார்வை, தேவை வழங்கல் கட்டமைப்பு ஆகியவை அவசியமல்லவா. வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெர்பெர் என அழைக்கப்படும் அமெசிக் நாடோடி இனத்தவர்கள் அரபி மொழியைப் பேசுவதோடு இஸ்லாமிய வர்த்தகச் சட்டங்களையும் தெரிந்துவைத்திருந்தனர். பாலைவனத்தைக் கடந்துசெல்லும் பாதைகளும் அவர்களுக்கு அத்துப்படி. ஒட்டகக் கூட்டத்தைச் சாமர்த்தியமாக வழிநடத்தும் திறமைபெற்றவர்கள். அவர்களின் உதவியின்றி எந்த வாணிகமும் நடக்கமுடியாது என்ற நிலைமை நிலவியது.

15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹான்ஸ் மெம்லிங் என்ற ஜெர்மானிய ஓவியர் குழந்தை ஏசு பிறந்தபோது பெத்லஹேம் நகருக்கு வந்து அவரைத் தரிசனம்செய்த மூன்று பேரறிவாளர்களுள் (magi – மாஜை) ஒருவரை ஆப்பிரிக்கராகச் சித்தரித்திருக்கிறார். அந்த ஆப்பிரிக்கப் பேரறிவாளர் அணிந்திருக்கும் ஆடையும் ஆபரணங்களும் அவரின் உயர் சமூகநிலையையும் செல்வச்செழிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. கடல்கடந்த அடிமை வர்த்தகமும் அயல்நாட்டவரின் ஏகாதிபத்தியமும் தலைதூக்கிய பிறகே ஆப்பிரிக்கர்கள் தாழ்ந்த நிலையில் இருக்கும் இகழப்படும் இனமாகச் சித்தரிக்கப்பட்டனர்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #3 – பண்டைய ஆப்பிரிக்காவின் செல்வச்செழிப்பு appeared first on கிழக்கு டுடே.

  •