நன்றி நிக்கோலஸ்
The post நன்றி நிக்கோலஸ் appeared first on Naseema Razak.
The post நன்றி நிக்கோலஸ் appeared first on Naseema Razak.
எப்போதாவது எழுதுபவர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எப்போதாவது மட்டும் எழுதாமல் இருப்போருக்கு மட்டுமே இந்த வலியின் தீவிரம் புரியும்.
ஒரு பெரிய நாவல் அல்லது ஏதாவது ஒரு புனைவல்லாத நூலை எழுத ஆரம்பிப்பேன். முன்னதாகப் பல மாத காலம் – சில சமயம், சில வருட காலம் அதற்காக உழைத்திருப்பேன். தகவல்கள் தேடித் திரட்டித் தொகுத்து, ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்த பின்புதான் எழுதலாம் என்றே தோன்றும். அதன் பிறகு நல்ல நாள் பார்த்து, ஊர் உலகத்தில் வசிக்கும் அனைத்து தெய்வங்களையும் சகாயத்துக்குக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு, என்னைக் காக்கும் சித்தர்களைத் தொழுது, மனத்துக்கண் தாற்காலிக மாசிலனாகி, செயலொன்றே சித்தம் என்று ஆரம்பித்திருப்பேன். பத்திருபது நாள்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எழுதி நூறு, நூற்றைம்பது பக்கங்கள் அல்லது பதினையாயிரத்தில் தொடங்கி இருபதாயிரம் சொற்கள் வரை எழுதி முடித்திருப்பேன். ஏதாவது ஒரு காரணத்தினால் ஒன்றிரண்டு நாள்களுக்கு எழுத முடியாமல் போகும். பிறகு எனக்கே தெரியாமல் சுதி பிசகி நின்றுவிடும்.
அப்படி நிற்கும் பிரதிகளைச் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடரப் பார்ப்பேன். பெரும்பாலும் முடியாது. எனவே மீண்டும் முதலிலிருந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி எழுதி நிறைவு செய்த நூல்கள் சில உண்டு.
உதாரணமாகக் கபடவேடதாரி. இந்த நாவலை மூன்று முறை கிட்டத்தட்ட முழுமைக்கு அருகே கொண்டு சென்று நிறுத்தி, நிறுத்தி, மீண்டும் முதலில் இருந்து தொடங்கி, நான்காவது முறைதான் எழுதி முடிக்க முடிந்தது. என்ன காரணம் என்று கேட்டால், தெரியாது. பூனைக்கதையின் இரண்டாம் பாகத்தை மட்டும் முழுதாக இரண்டு முறை எழுதியிருக்கிறேன். இறவானில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தை மட்டும் பதினேழு முறை மாற்றி மாற்றி எழுதிப் பார்த்தேன். முற்றிலும் வேறு வேறு வடிவங்களில்.
அரசியல் நூல்கள் எழுதும்போது இது அடிக்கடி நடக்கும். 9/11, ஐ.எஸ்.ஐ., காஷ்மீர் (நினைவுப் பிசகால் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்.) சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு – மூன்றையும் முழுதாகவே இரண்டு முறை எழுதியிருக்கிறேன். வட கொரியா எழுதும்போது குறைந்தது இருபது முறையாவது வேலை தடைப்பட்டு நின்றது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என் மனைவிக்குக் கூடச் சொல்லாமல் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்துவிட்டு, இறுதியில் அவளது ஆலோசனை இல்லாமல் அதை எழுதி முடிக்கவே முடியாது என்று தோன்றிய பின்புதான் ஒருநாள் காலை நடையின்போது நான் அதை எழுதிக்கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னேன். பிறகு எழுத்துக்கான திட்டத்தை அவள் சொன்னபடி வகுத்துக்கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கி, ஐந்து மாதங்களில் முற்றிலும் புதிய பிரதி ஒன்றை எழுதி நிறைவு செய்து அச்சுக்குக் கொடுத்தேன். இவையெல்லாம் எப்படியாவது முடித்துவிட்ட புத்தகங்கள்.
ஆனால் இன்று வரை ஏன் நின்றது என்றும் தெரியாமல், எப்படித் தொடர்வது என்றும் புரியாமல் போட்டு வைத்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேலே (மேலே உள்ள படத்தில் இருக்கும் கோப்புகளை எண்ணிக்கொள்ளுங்கள்). இதில் மூன்று நாவல்களும் அடங்கும்.
எழுதும் விஷயத்தில் நான் மிகுந்த கவனமும் கூர்ந்த அக்கறையும் கொண்டவன். மனத்துக்குள் முற்றிலும் தயாராகாமல் எழுதத் தொடங்கியதே இல்லை. கருவும் மொழியும் உருத் திரண்டு, ஒத்திசைவாய் வருவதை உறுதி செய்துகொள்ளாமல் ஆரம்பிக்க மாட்டேன். நாவல் என்றால் களமும் மொழியும். கதாபாத்திரங்களையோ சம்பவங்களையோ சிந்திக்க மாட்டேன். அது எழுத எழுதத் தன்னால் வந்துவிடும். சலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதர்வன் அதன் கதாநாயகனாக இருப்பான் என்றுதான் நினைத்தேன். ஆனால், எழுதத் தொடங்கிய பத்தாவது அத்தியாயத்தில், ‘நீ யார் அதை முடிவு செய்வது?’ என்று நாவல் குத்சனை யானை மீது ஏற்றிக்கொண்டு போய்விட்டது.
அப்படி நடப்பது சாதாரணமான விஷயம். எல்லோருக்கும் எப்போதும் நடக்கும். அதுவல்ல என் சிக்கல். எவ்வளவுதான் உரிய ஆயத்தங்களுடன் எழுத உட்கார்ந்து, காலமும் நேரமும் சகாயம் செய்தாலும்கூடச் சில புத்தகங்கள் பாதியில் நின்றுவிடும். இறுதிவரை அதைத் தொடர்ந்து முடிக்க வழி புலப்படாது.
‘முதல் நாவலைத் தொடங்கினேன். பாதியில் நின்று, மிகுந்த மனச்சோர்வாகிவிட்டது’ என்று சொல்லிக்கொண்டு பலபேர் வருவார்கள். அப்படிப் பாதியில் நின்றதற்கெல்லாம் சோர்ந்து போவதென்றால் இந்நேரம் நான் மனநோய் விடுதியில்தான் இருந்திருப்பேன் என்று சொல்வேன். எழுதுபவனுக்கு அடிப்படையில் ஓர் எருமைமாட்டுத்தனம் தேவை. எழுத்து தொடங்கி வாழ்க்கை வரை எதையும் உணர்ச்சிவசப்படாமல், நிதானம் குலையாமல் அணுகத் தெரிவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். சொல்கிறேனே தவிர, வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் தடுமாறி விழுந்திருக்கிறேன். ஆனால் எப்போதும் எழுத்தில் அப்படி நிதானம் தவறியதில்லை. அப்படியும் சில பிரதிகள் தேங்கிவிடுகின்றன.
இவ்வாறு நின்றுபோன புத்தகங்களைக் குறித்து ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சொக்கனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எழுதி முடித்து இன்னும் அச்சாகாத புத்தகங்களைக் குறித்து அவன் சொன்னான். அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏதுமில்லை. பல வருடங்கள் காத்திருந்து இரண்டு சிறுவர் நூல்கள் பிரசுரமாயின. நானே வேண்டாம் என்று நிறுத்தி வைத்த ஓர் அரசியல் நூலை (ஹமாஸ்), இப்போது வெளியிடலாம் என்று நினைத்து, சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்தேன். வேறு வருந்தத்தக்க அனுபவங்கள் ஏதும் பதிப்பு சார்ந்து எனக்கு ஏற்பட்டதில்லை.
ஆனால், இந்த நின்று போன புத்தகங்கள் அடங்கிய ஃபோல்டரைப் பார்க்கும் போதெல்லாம் சிறிது துக்கம் எழும். உடனே அதை மூடி வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஏனென்றால், அத்துக்கத்தைப் பெருக அனுமதித்தால் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.
இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஒரு நாவலை எழுத ஆரம்பித்தேன். அது மட்டும் வெளிவருமானால் அநேகமாக அனைத்து உலக மொழிகளுக்கும் செல்லக்கூடிய தகுதியுடன் இருக்கும் என்று தீர்மானமாகத் தோன்றியது. கருவாக மனத்தில் அது விழுந்தபோதே அதிலிருந்த சர்வதேசத்தன்மையைக் கண்டுகொண்டேன். வாழ்வில் வேறெதற்குமே தராத உழைப்பினை அதற்குச் செலுத்தியிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக் காலம், தரவு சேகரிப்புக்கும் ஆய்வுக்குமே செலவானது. எனக்கு வருமானம் தரக்கூடிய அனைத்துப் பணிகளையும் உதறிவிட்டு (எழுத்துப் பயிற்சி வகுப்புகள் உள்பட.) முழு மூச்சாக அந்நாவலை எழுத ஆரம்பித்தேன்.
வழக்கத்துக்கு விரோதமாக அதன் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு குறுநாவல் அளவுக்குப் பெருகிக்கொண்டே சென்றது. அது நான் எண்ணிப் பார்த்திராதது. அத்தியாயங்களை ஆகக் கூடியவரை சிறிதாக அமைப்பதையே எப்போதும் விரும்புவேன். ஆனாலும் என் கட்டுப்பாட்டை மீறி, ஒவ்வோர் அத்தியாயமும் ஐயாயிரம், ஆறாயிரம் சொற்களுக்கெல்லாம் சென்றுகொண்டிருந்தது.
சரி, என்னதான் ஆகிறதென்று பார்ப்போம் என்று எழுதிக்கொண்டே இருந்தேன். ஒன்பது அத்தியாயங்கள் ஓடி, ஓரிடத்தில் முட்டிக்கொண்டு நாவல் நின்றது.
எழுதிய வரை புத்தகமாக்கினால் நிச்சயமாக அறுநூறு பக்கங்கள் வரும் என்று தோன்றியது. ஆனால் அது நான் எழுத நினைத்திருந்த நாவலின் இருபது சதம்கூட இல்லை. என் மொத்த சக்தியையும் திரட்டி அடுத்த அத்தியாயத்துக்குள் நுழைந்துவிடப் பல மாதங்கள் முயற்சி செய்தும் நடக்கவில்லை. எத்தனையோ நாள் இரவெல்லாம் துக்கம் பொங்கிக் கண்ணீர் வரும். என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கும் சித்தர்களெல்லாம் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களோ என்றெல்லாம் அஞ்சி நடுங்கி, உறக்கத்தில் அலறி எழுந்திருக்கிறேன். நான் அப்படி உறக்கத்தில் அலறி எழுந்துகொள்வதற்கு என் மனைவியும் மகளும் வேறு பல குடும்பக் காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டிருந்ததை வைத்தே ஒரு கதை எழுதலாம் போலிருந்தது.
இது இப்படியே நீடித்தால் உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. ஒருநாள் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்குச் குடும்பத்துடன் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வந்தேன். அன்றிரவு உறக்கத்தில் சலத்தின் ஊற்றுக்கண் திறந்துகொண்டது. அது, யதி எழுதுவதற்கு முன்னால் மனத்தில் உதித்த கரு.
எழுத ஆரம்பித்து முடிக்க முடியாதிருப்பவை பற்றிய வருத்தங்கள் நிச்சயமாக எனக்குண்டு. முடித்தவை குறித்த நினைவுகளால் அதனை மறைத்து வைத்துக்கொள்கிறேன். பிரதிகளின் கர்ப்பகாலம் தெரிந்துவிட்டால் எழுதுவதில் உள்ள புதிர்த்தன்மை நீர்த்துவிடும் என்று இதற்கு சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்.
All rights reserved. © Pa Raghavan - 2022
ஜெயமோகனின் இந்தக் குறிப்பும் இதன் கீழே தரப்பட்டுள்ள இளங்கோ கிருஷ்ணனின் குறிப்பும் மிகவும் முக்கியமானவை. சொல் ஊன்றிப் படித்துப் பாருங்கள். சமூக ஊடகங்களின் மீது கலைஞர்களுக்கு வரக்கூடிய இயல்பான விலகலும் அச்சமும் சந்தேக உணர்வும் சேதாரங்கள் சார்ந்த வருத்தமும் புரிந்துகொள்ளப்படக்கூடியவைதாம். படைப்பூக்கத்தைக் கெடுக்கும் எவ்வித சக்தியானாலும் விட்டு விலகிச் சென்றுவிட விரும்புவதே எந்தக் கலைஞனும் விரும்பக் கூடியது.
ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளமும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதர கலைஞர்கள் செயல்படுவதற்கான இடமல்ல. மாறாக, செய்தவற்றை, செய்பவற்றைப் பற்றிய தகவல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. அதற்காக அவற்றைக் கட்டிக்கொண்டு மாரடிக்க வேண்டுமா என்றால், இன்றைய சூழ்நிலையில் வேறு வழியில்லை. ஓர் எழுத்தாளன், சிறுபான்மை சமூகத்தவரான வாசகர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ள உதவும் ஒரே வழி அதுதான். அதை எதற்கு மூடி வைக்க வேண்டும்?
எழுத்தாளன் என்பவன் ஒரு மனிதனும் கூட. அவன் ஒரு மகன். கணவன். தந்தை. வேலை பார்த்து சம்பளம் வாங்கும் ஊழியன். அதிகாரி. அறிவாளி. அசடன். மூடன். ஞானி. சோம்பேறி. தலைவன். தொண்டன். நண்பன். எதிரி. நல்லவன். கெட்டவன். வாழ்வில் எவ்வளவோ சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப, இடங்களுக்கேற்ப, மனநிலைக்கேற்பத் தயாரித்து அணிந்துகொள்ளும் முகங்களில் ஒன்றாக இதனையும் கருத முடிந்துவிட்டால் போதும். சிக்கலே இல்லை. சமூக வெளியில் கலைஞன் ஒரு வேடிக்கை பார்ப்பவன் மட்டுமே.
நான் சமூக வெளியை எப்படிக் கையாள்கிறேன்?
1. மிக நிச்சயமாக ஒரு ஷோ-கேஸாக மட்டும்.
2. இளைப்பாறலுக்காக மட்டும்.
3. மொழி சார்ந்த சில எளிய பயிற்சிகளைச் செய்து பார்க்க மட்டும்.
4. பொது மனநிலையை அவ்வப்போது மென்மையாகக் கிளறிப் பார்த்து, விளைவுகளைக் கவனிப்பதற்கு மட்டும்.
5. நான் வாழும் காலம் எவ்வாறெல்லாம் உருமாறி வருகிறது என்று தெரிந்துகொள்வதற்காக மட்டும்.
தீவிரமாக எதையும் நான் சமூக வெளியில் எழுதுவதில்லை. முக்கியமாக அரசியலை அறவே தவிர்க்கிறேன். என்னை மீறி ஒரு சில சந்தர்ப்பங்களில் அரசியல் பேசப் போகும்போது பெரும்பாலும் அது கொதிநிலையைத் தாண்டி வெடிநிலையைக் கண்டுவிடுவதை விழிப்புணர்வுடன் கவனித்திருக்கிறேன். அதனாலேயே தவிர்ப்பதில் கவனம் செலுத்துகிறேன்.
அதேபோல, மறுமொழிகளைப் பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்தத்தக்க எதிர்வினை என்பது எப்போதாவது வருவது. அவற்றுக்கு உடனடியாக பதிலளிக்கிறேன். மற்றபடி அருமை, சூப்பர், கண்கள் பனித்தன வகையறாக்களை அப்படியே விட்டுவிடுகிறேன். இதை அகம்பாவமாகக் கருதும் பலர் என்னை விட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள். அது குறித்தும் கவலை கொள்வதில்லை. மிக மிகச் சிறிய இவ்வாழ்வில் நாம் செயலாற்றுவதற்கான நேரம் அதனினும் சொற்பமானது. அதையும் இப்படி வீணடிப்பது பாவமென்றே கருதுகிறேன்.
இன்னொன்று. அல்காரித அடிப்படையில் ஃபேஸ்புக்கில் பொருத்தமில்லாத நபர்களுக்கு என் குறிப்புகள் சென்று சேரும்போது வருகிற தடாலடி மறுமொழிகள் சம்பந்தப்பட்டது. உண்மையில் அவை எனக்கு ஸ்டிரெஸ் பர்ஸ்டர். அவற்றை வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது எப்படி அனுபவிப்பேனோ அப்படி அனுபவித்து ரசிக்கிறேன்.
இந்த விஷயத்தில் நகைச்சுவை அம்சத்துக்கு அப்பால் மிகப்பெரிய லாபம் ஒன்றும் உள்ளது. நாம் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்கிற எண்ணம் எல்லா எழுத்தாளர்களுக்கும் எப்போதாவது நிச்சயமாக வரும். அது கணப் பொழுது அகம்பாவமாக உருவெடுத்து நிற்கும். அப்படி அது உருவெடுக்கும்போதெல்லாம் மேற்படி அறியாத வட்டத்துப் புதிய மறுமொழிஞர்களின் சொற்கள் எனக்கு ஞானமளிக்கின்றன.
‘டேய், யார்றா நீ’ என்று தொடங்குவார்கள். சட்டென்று சாதியைத் தாவிப் பிடிப்பார்கள். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் ‘போடா சங்கி’ என்பார்கள். அல்லது இருநூறு ரூபாய் உபி என்பார்கள். ‘யோவ் பெரிசு, அடங்குய்யா’ என்பார்கள். அவர்களிடம் உள்ளதெல்லாம் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று வசைகள்தாம். அவர்கள் வாசகர்கள் அல்லர். தினத்தந்திகூடப் படிக்காதவர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஒவ்வொருவருக்கும் சொரிந்துகொள்வதற்கு ஏதோ ஒரு சுவர் இருக்கும். அதற்கு முதுகையும் நமக்கு முகத்தையும் கொடுத்து நிற்பார்கள்.
உண்மையில் பெரும்பான்மை சமூகம் என்பது அதுவே. ‘என் வாசகர்கள், என் ரசிகர்கள், என் வட்டம்’ என்பதெல்லாம் வெறும் மாயை அன்றி வேறல்ல. மனிதர்களில் சிறுபான்மையினரான வாசகர்களின் கூட்டத்தில் என்னைப் படிக்கவும் ஓரிருவர் உள்ளார்கள் என்ற அளவோடு நிறைவடைந்து விலகிக்கொள்கிறேன். இந்த ஞானம் பெரிதல்லவா? இது சமூக வெளியை அன்றி வேறெங்கும் கிடைக்காது.
என்னுடைய மாணவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இவைதாம்:
1. சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக்கொண்டிருங்கள். ஆனால் உங்கள் செயல்பாடென்பது எழுத்து சார்ந்த உங்களுடைய பயிற்சியாகவும் பரீட்சைகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும். கோடிக்கணக்கான மனிதர்களால் நிறைந்த அவ்வெளியில் உங்களுடைய பிரத்தியேக வாசகர்கள் வந்து சேரும்வரை பொறுமை காப்பது அவசியம்.
2. விமரிசனம் செய்யாதீர்கள். அரசியல், சினிமா, புத்தகங்கள் எதுவானாலும் சரி. விமரிசன மனோபாவம் எழுத்தாளனைக் கொல்லும். செய்தே தீர வேண்டுமென்றால் சமூக ஊடகங்களில் செய்யாதீர்கள். தனியே வேறெங்காவது ரகசியமாகச் செய்துகொள்ளுங்கள்.
3. நீங்கள் எழுதிப் பார்க்க / பயிற்சி செய்யத்தான் சமூக ஊடகம். அதில் வருகிற பிறவற்றைப் படித்துப் பொழுதை நாசம் செய்யாதீர்கள். அப்படியானால் உன்னை மட்டும் நான் ஏன் படிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் எகிறும். கண்டுகொள்ளாதீர்கள். பயிற்சியாக நீங்கள் எழுதுவது சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்குமானால் திருட்டுத்தனமாகவேனும் வந்து படித்துவிட்டுப் போகத்தான் செய்வார்கள்.
4. யாருமே உங்களைப் படிக்காவிட்டாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் அங்கே இருப்பது, உங்கள் பயிற்சிக்குத்தானே தவிர, அடுத்தவர் அபிப்பிராயத்துக்கல்ல.
5. இறுதியாக. கும்பல் என்றால் இரைச்சல் இருக்கத்தான் செய்யும். சாமர்த்தியம் இருக்குமானால் அதை ஒரு சிறந்த தியானப் பொருள் ஆக்கிக்கொள்ள முடியும்.
All rights reserved. © Pa Raghavan - 2022