Reading view

வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

தொடக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவது எளிது. விடை கண்டுபிடிப்பது கடினம். இருந்தும், மனித மனம் தீரா ஆர்வத்தோடு இது எப்படித் தொடங்கியது, அது எப்படித் தொடங்கியது என்று எல்லாவற்றைக் குறித்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது இயல்பானதுதான் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி.

வரலாற்றின் தொடக்கப்புள்ளி எது? வரலாறு உதித்தது இங்கேதான் என்று எந்த இடத்தையும் முதல் வரலாற்றுப் பிரதியை உருவாக்கியவர் இவரே என்று எவரையும் திட்டவட்டமாகக் குறிப்பிடுவது கடினம். வரலாற்றின் ஆரம்பப் புள்ளி என்று கற்பனையை வேண்டுமானால் குறிப்பிடமுடியும். கடந்த காலத்தின் நினைவுகளைக் கற்பனைக் கூட்டி வண்ணமயமான கதைப் பாடல்களாகவும் தொன்மக் கதைகளாகவும் பண்டைய மக்கள் உருமாற்றினர். அதுதான் அவர்களுக்கு வரலாறாகத் தோன்றியிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான நிகழ்வுகளை அழகிய கதைகளாகவும் பாடல்களாகவும் உருமாற்றும்போது நினைவில் வைத்துக்கொள்வது எளிது; மற்றவர்களுக்குச் சுலபமாகக் கடத்தவும் முடியும்.

எழுத்துமுறை கண்டுபிடிக்கப்படும்வரை வாய்வழிக் கதைகளே வரலாறாகத் தோற்றம் கொண்டிருந்தன. எழுத்தில் பதிவு செய்யும் முறையைச் சில சமூகங்கள் கடைபிடிக்கத் தொடங்கியபோது அது மேலதிகப் பயன் தருவதாக அமைந்தது. ஒரு கதையையோ பாடலையோ கேட்டு சிறிது காலம் கழித்து. நினைவிலிருந்து மீட்டெடுக்கும்போது பிசகுகளும் மாற்றங்களும் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. எழுத்தில் பதிவு செய்யும்போது நிரந்தரத்தன்மை ஏற்பட்டுவிடுகிறது. தவிரவும், வாய்வழிக்கதைகள் சிறு குழுக்களிடையே தழைத்திருக்குமே தவிர தூர தேசங்களுக்கு அவ்வளவு எளிதில் சென்று சேராது. எழுதப்பட்ட கதைகளுக்கு எல்லைகள் கிடையாது. யாரெல்லாம் வாசிக்க முடியுமோ அவர்களுக்கெல்லாம் சென்று சேர்ந்துகொண்டே இருக்கும். மனிதப் பண்பாட்டு வரலாற்றில் எழுத்து, சந்தேகமின்றி ஒரு புதிய மைல்கல்.

0

வரலாற்று மரபு கிரேக்கத்திலிருந்து தொடங்குகிறது என்று ஐரோப்பியர்கள் பெருமிதம் கொள்வதுண்டு. ஆனால் எகிப்து, மெசபடோமியா, சிரியா ஆகிய பகுதிகளில் கடந்த காலத்தைப் பதிவு செய்யும் வழக்கம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. ஹோமருக்குச் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட ஒரு காவியம், கில்காமேஷ். எழுத்தில் கிடைக்கும் முதல் கில்காமேஷ் பிரதி பொஆமு 2100 ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சாகசம், வீரம், அறம், துயர் அனைத்தையும் உள்ளடக்கிய அபாரமான கதைப்பாடல் இது. கில்காமேஷ் நாம் அறிந்த முதல் நாயகனா என்று தெரியாது. ஆனால் முதல் துயர நாயகன் என்று சொல்லமுடியும் என்கிறார் கில்காமேஷை மொழிபெயர்த்த என்.கே. சாண்டர்ஸ். மெசபடோமியாவைச் சேர்ந்த உருக் எனும் சுமேரிய நகரின் மன்னர், கில்காமேஷ். பாதி கடவுள், பாதி மனிதன். எந்த அளவுக்கு மக்கள் அவரை நேசித்தார்களோ அதே அளவுக்கு அவரைக் கண்டு அஞ்சியிருக்கிறார்கள். தனது நண்பன் என்கிடுவின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கில்காமேஷ், சாகாவரம் வேண்டும் எனும் துடிப்போடு மேற்கொள்ளும் பயணம், மரணத்தை வெல்லமுடியாது எனும் கசப்பான உண்மையை ஏற்பதில் வந்து முடிவடைகிறது.

அக்காடிய மொழியில் இயற்றப்பட்ட இந்த முற்றுப்பெறாத காவியத்தை இலக்கியவாதிகள் மட்டுமின்றி வரலாற்றாளர்களும் ஆராய்ந்து வருகின்றர். காரணம், பல அசாதாரணமான செயல்கள் இடம்பெற்றிருந்தாலும் கில்காமேஷ் முழுக் கற்பனை கதையல்ல. சுமேரிய மன்னர்களின் பட்டியலில் கில்காமேஷின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் ஆண்டதாகச் சொல்லப்பட்ட காலம் (126 ஆண்டுகள்) அசாதாரணமானதாக இருக்கிறது.

0

யூத மரபுக்கென்று பண்டைய வரலாற்றெழுதியலில் ஓர் இடம் இருக்கிறது. விவிலியச் சட்ட நூல்களின் தொகுப்பான எபிரேய விவிலியம் (டனாக்) தனித்தன்மை வாய்ந்த ஒரு பிரதி. யூதர்களின் புனித நூல், கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு. பொஆமு 10 முதல் 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இயற்றப்பட்ட இந்தப் பிரதியில் வரலாற்றின் சில கூறுகளைக் காணலாம். உலகம் உருவான தருணத்திலிருந்து ஜெருசலேமின் வீழ்ச்சி (பொஆமு 586) வரையிலான நிகழ்வுகள் காலவரிசைப்படி விவரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விரிந்த அளவில் ஒரு நிலப்பரப்பின் கதை இதற்குமுன்பு சொல்லப்பட்டதில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது எபிரேய விவிலயத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியும். தேசங்களின் வரலாற்றை நவீன முறையில் எழுதும் வழக்கம் பின்னர் உருவாகி வந்த ஒன்று. அவ்வழக்கத்துக்கு முன்னோடியாக யூதர்கள் திகழ்ந்தனர்.

யூதர்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் மிகுதியாக இடம்பெற்றிருக்கின்றன என்றாலும் இன்னொரு பக்கம் தொன்மக் கதைகளும் தாராளமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதனிடம் முடிவடைந்தாலும் கடவுளிடமிருந்துதான் தொடங்குகிறது இப்பிரதி. கடவுள் எவ்வாறு உலகைப் படைத்தார் என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிப் பகுதியான ஜெருசலேமின் வீழ்ச்சியில் கடவுள் தோன்றவில்லை. பாபிலோனியாவால் ஜெருசலேம் முற்றுகையிடப்பட்டதும் வீழ்த்தப்பட்டதும் விவரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் நடந்ததுதான். கற்பனை மாந்தர்கள் ஒரு பக்கம் வருகிறார்கள். இன்னொரு பக்கம், பல வரலாற்று மாந்தர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

‘மனிதச் செயல்பாடுகளைவிடக் கடவுள்களின் செயல்பாடுகளே இப்பிரதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனிதர்கள் குறித்து மனிதர்களுக்காக இயற்றப்பட்டவை என்பதைவிட மனிதர்கள் கடவுளைப் புரிந்துகொள்வதற்காக இயற்றப்பட்ட பிரதிகள் என்றுதான் இவற்றை அழைக்கமுடியும். இத்தகைய பிரதிகளை வரலாறு என்று அழைக்க இயலாது. பண்டைய சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, எபிரேயப் பதிவுகளை பகுதியளவிலான வரலாறு என்று வேண்டுமானால் அழைக்கலாம். உண்மையான வரலாறு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க முடியாது. வரலாறு எனும் சமூக அறிவியல் துறை ஒரு நவீன கண்டுபிடிப்பு ’ என்கிறார் ஆங்கிலேய வரலாற்றாளரும் தத்துவவியலாளருமான ஆர்.ஜி. காலிங்வுட்.

வரலாற்றுத் தகவல்கள் இருப்பதாலேயே இவற்றையெல்லாம் வரலாறாகக் கொள்ளமுடியாது. கதைகள் இருப்பதாலேயே இவற்றை வரலாற்றாளர்கள் புறக்கணிக்கவும் முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் கற்பனையும் உண்மையும் கலந்த பிரதிகள் உயிர்த்திருக்கின்றன. இப்பிரதிகளில் விருப்பு வெறுப்பற்ற அணுகுமுறை கிடையாது. வேண்டுபவர்களை உயர்த்தியும் வேண்டாதவர்களைத் தாழ்த்தியும் பார்க்கும் போக்கே நிலவியிருக்கிறது. கடந்த காலம் குறித்து என்ன எழுதப்பட்டிருந்தாலும் அதை வரலாறு என்று நாம் ஏற்றுக்கொண்டுவிடக்கூடாது. கிரேக்க வரலாற்றெழுதியல் தோன்றுவதற்கு முந்தைய பிரதிகளை இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் காலிங்வுட்.

0

மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்று கிரேக்கம் அழைக்கப்படுகிறது. இலக்கியம், ஜனநாயகம், வரலாறு, தத்துவம், அரசியல், அறிவியல் என்று தொடங்கி அனைத்துத் துறைகளும் கிரேக்கத்தின் மடியில்தான் பிறந்து, வளர்ந்து, தழைத்தன என்பது மேற்கத்திய சமூகங்களின் பொதுவான நம்பிக்கை.

மேற்கத்திய வரலாற்றுப் பதிவுகளை ஐந்து பிரிவுகளின்கீழ் தொகுக்கமுடியும். கிரேக்கச் செவ்வியல் பதிவுகள், கிரேக்க ரோமப் பதிவுகள், ரோமப் பதிவுகள், யூதப் பதிவுகள், கிறிஸ்தவப் பதிவுகள். கிரேக்கச் செவ்வியல் காலத்தின் தொடக்கத்திலிருந்து (பொஆமு 6-5ஆம் நூற்றாண்டு) ரோமப் பேரரசின் வீழ்ச்சி (பொஆ 6-5ஆம் நூற்றாண்டு) வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பதிவுகள் இவை. உருவானவை ஏராளம் என்றாலும் கிடைத்திருப்பவை குறைவுதான்.

நாம் பார்த்த பிற மரபுகள்போலவே கிரேக்க வரலாற்று மரபும் வாய்வழிக்கதைகளிலிருந்தே தொடங்குகிறது. சுமேரியர்களுக்கு கில்காமேஷ் என்றால் கிரேக்கர்களுக்கு ஹோமர் (பொஆமு 8ஆம் நூற்றாண்டு). கில்காமேஷ் போலவே ஹோமரின் இலியட், ஒடிசி இரண்டும் வாய்மொழிக் கதைகளாக நீண்டகாலம் மக்களிடையே புழங்கி பின்னர் எழுத்து வடிவம் பெற்றவை. கில்காமேஷ்போலவே இவற்றிலும் கடவுள்கள் வருகிறார்கள். கில்காமேஷை இயற்றியவர் யார் என்பது தெரியாது. ஹோமர் என்றொருவர் (ஒருவரா, சிலரா, பலரா?) இருந்தார் என்பதுகூட உறுதியானதல்ல. டிரோஜன் போர் எனும் உண்மை நிகழ்வுதான் இலியட், ஒடிசி இரண்டுக்குமான அடிப்படை என்றாலும் காலிங்வுட் வரையறுப்பதுபோல் இவை வரலாற்றுப் பிரதிகள் கிடையாது. கடந்த காலம் குறித்த நினைவுகளிலிருந்து கிளர்த்தெழுந்த செழிப்பான கற்பனைக் கதைகள்.

0

நாம் இதுவரை பார்த்த பிரதிகளில் சில பொதுப்பண்புகளைக் காணமுடியும். கடவுள்களும் அரைக் கடவுள்களும் அசாதாரண ஆற்றல்மிக்க ஆட்சியாளர்களும் பண்டைய படைப்புகளில் மிகுந்திருந்தனர். ஆட்சியாளர்களின் பட்டியல், குல வரிசை போன்றவற்றிலும் மிகை கலந்தே இருந்தது. கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் எந்த எல்லைக்கோட்டையும் அப்போதைய மக்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை.

கில்காமேஷ் தொடங்கி ஒடிசி வரையிலான படைப்புகளில் இயற்கை ஒரு முக்கியச் சக்தியாகத் திகழ்கிறது. இன்று நாம் இயற்கையிலிருந்து விலகி நிற்கிறோம். அப்போதைய மக்கள் இயற்கையைத் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகக் கண்டனர். இடி, மின்னல், மழை, வெள்ளம் அனைத்தும் அவர்களுக்கு இயற்கையின் உயிரோட்டமான செயல்பாடுகள்.

வரலாற்றுக்கு முந்தைய மக்களின் சிந்தனையோட்டத்தில் மூன்று பிரதான அம்சங்கள் காணப்படுகின்றன என்கிறார் நவீன வரலாற்றெழுதியல் குறித்த விரிவானதோர் அறிமுக நூலை எழுதியிருக்கும் சஷி பூஷன் உபாத்யாய். முதலாவது, காலம் குறித்த பார்வை. காலத்தைத் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கும் சக்கரமாகக் அவர்கள் கண்டனர். முன்பொரு காலத்தில் என்னவெல்லாம் நடந்ததோ அவைதான் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன. இனியும் நடக்கும். மேலே இருப்பது கீழே வரும், கீழே இருப்பது மேலே வரும். இதுதான் வாழ்க்கை.

இரண்டாவது, தொன்மத்தின்மீதான மரியாதை. கடந்த காலம் தொன்மங்களிலிருந்து தொடங்குகிறது என்று பண்டைய மக்கள் நம்பினார்கள். அசாத்தியங்களும் அதிசயங்களும் அவர்களைப் பொறுத்தவரை மனித வாழ்வோடு ஒன்று கலந்தவை, இயல்பானவை. மூன்றாவது, மனித ஆற்றல் குறித்த பார்வை. மனிதர்கள் ஆள்பவர்கள் அல்லர், ஆளப்படுபவர்கள். நன்மையும் தீமையும் மனிதர்களின் செயல்பாடுகள்மூலம் வருபவை அல்ல. கடவுள்களும் இன்னபிற இயற்கைச் சக்திகளும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். எனவே மனித ஆற்றல் எல்லைக்குட்பட்டது என்று அவர்கள் கருதினார்கள்.

இந்தப் பொதுத்தன்மைகளிலிருந்து பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல் உரித்து, விடுபடுவதற்கு நீண்ட அவகாசம் பிடித்தது வரலாறுக்கு. ஹெரோடோடஸின் வரவுக்குப் பிறகு வரலாறு ஒரு புதிய பாதையில் நடைபோட ஆரம்பித்தது.

(தொடரும்)

The post வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள் appeared first on கிழக்கு டுடே.

  •  

வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

‘அழகு என்றால் என்ன’, எனும் கேள்விக்கு விடை சொல்லமுடியாதவர்களுக்கும் அச்சொல் எதை உணர்த்துகிறது என்பது தெரியும். வரலாறுக்கும் இது பொருந்தும் என்கிறார் ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க வரலாற்றாளர் ஜான் லூகாக்ஸ். வரலாற்றை எப்படி வரையறுப்பது என்பதை வரலாற்றாசிரியர்கள் விவாதித்துக்கொள்ளட்டும். எளிமையாகச் சொல்லவேண்டுமானால் வரலாறு என்பது மனிதகுலத்தின் நினைவுத் தொகுப்பு என்கிறார் லூகாக்ஸ்.

கடந்த காலம் என்பது அளவிட முடியாத அளவுக்குப் பெரியது. நம் வசதிக்கு மூன்று பிரிவுகளாகக் கடந்த காலத்தைப் பிரித்துக்கொள்ளலாம் என்கிறார் லூகாக்ஸ். முதலாவது, ஒட்டுமொத்தக் கடந்த காலம். இது நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு மிகப் பெரியது. இரண்டாவது, நினைவுகளாக மட்டும் எஞ்சியிருக்கும் கடந்த காலம். இது ஒட்டுமொத்தத்தில் ஒரு சிறு பகுதி. அந்தச் சிறு பகுதியில் ஒரு சிறு துண்டுதான் எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மூன்றாவது பிரிவு. பதிவு செய்யப்பட்ட நினைவுகள் என்று அந்தச் சிறு துண்டு பகுதியை அழைக்கலாம். வரலாறு என்பது சான்றுகளின் அடிப்படையில் எழுதப்படுவது என்பதால் எழுத்துப்பூர்வமான பதிவுகள் கொண்ட காலத்தை மட்டுமே வரலாற்றாளர்கள் தொடக்கத்தில் ஆராய்ந்து வந்தனர்.

அப்படியானால் எழுதப்படாத காலங்கள் எல்லாம் இருளில் மூழ்கிக்கிடக்க வேண்டியதுதானா? அவற்றை நாம் புறக்கணித்துவிடவேண்டுமா? வேறு வழியில்லை, அவ்வாறுதான் செய்தாகவேண்டும். அதிலும் எழுத்தில் உள்ள எல்லாமே அல்ல; முறையாக எழுதப்பட்ட பிரதிகளை மட்டுமே வரலாறாகக் கொள்ளமுடியும் என்று வரலாற்றாளர்கள் வாதிட்டனர். வரலாறு விரிவடைய, விரிவடைய இந்நிலை மாறத் தொடங்கியது.

நம் தனிப்பட்ட வரலாற்றை இதற்கு உதாரணமாக அளிக்கிறார் லூகாக்ஸ். நம் ஒவ்வொருவருக்கும் குழந்தைப் பருவம் என்றொன்று இருந்தது. பள்ளி, கல்லூரி என்று படிப்படியாக வளர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்திருப்போம். நம்முடைய குழந்தைப் பருவமும் பள்ளிக் காலமும் கல்லூரிக் காலமும் நம் வரலாற்றின் இன்றியமையாத பகுதிகள். ஆனால் அந்தக் காலகட்டங்கள் குறித்து நம்மிடம் எழுதப்பட்ட பதிவுகள் இருக்கின்றனவா? ஒன்றிரண்டு கடிதங்கள் கிடைக்கலாம். சில புகைப்படங்கள் இருக்கலாம். சில, பல பொருள்களும் சேகரிப்புகளும் அகப்படக்கூடும். எதுவுமே அகப்படாமலும் இருக்கலாம். நாம் குழந்தைப் பருவம் என்றொன்றைக் கடந்துதான் வந்துள்ளோம் என்பதற்குச் சான்றளிக்க நம்மிடம் என்ன இருக்கிறது? எதுவும் இல்லை என்றால் நாம் பிறந்திடவே இல்லை என்று கொள்ளமுடியுமா?

ஆக, எழுத்து மட்டுமே ஒரே சான்று என்று கருதமுடியாது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் புரிந்துகொள்ள அப்போது வாழ்ந்தவர்கள் விட்டுச் சென்றுள்ள சின்னச் சின்ன பொருள்களையும் சின்னச் சின்ன நினைவுகளையும் சேகரிக்க முயற்சி செய்யவேண்டும். சேகரித்தவற்றைக் கவனத்தோடு ஆராய்ந்து அக்காலகட்டத்தின வரலாற்றைக் கட்டமைக்க வேண்டியிருக்கும். எழுத்துமுறை உருவாவதற்கு முந்தைய காலத்தை அறிந்துகொள்ள வேறு வகையான கருவிகளையும் வேறு வகையான அணுகுமுறைகளையும் வரலாற்றாளர்கள் கண்டறிந்து, கையாள ஆரம்பித்தனர். இந்த மாற்றத்தின் கதை என்பது வரலாற்றின் கதையும்தான்.

கடந்த காலத்தை நினைவுகளாகக் கொண்டு லூகாக்ஸ் மூன்றாகப் பிரித்ததைப்போல் வரலாற்றை மூன்று பெரிய பகுதிகளாக அத்துறை சார்ந்தவர்கள் பிரிக்கிறார்கள். (இந்தப் பிரிவுகளெல்லாம் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டவைதான். காலம் எந்தப் பிரிவுகளுக்கும் அடங்காதது). எழுத்து கண்டுபிடிக்கப்பட்டதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தைய காலம் என்று அழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த கடந்த காலம் என்று லூகாக்ஸ் குறிப்பிட்டது இதைத்தான். எழுத்து உருவான பிறகான காலம் என்பது வரலாற்றுக் காலம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்டது வரலாற்றுத் தொடக்க காலம். அதாவது, எழுத்துகள் இல்லாத காலத்திலிருந்து எழுத்துகள் உருவாகத் தொடங்கிய காலம். இந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய நினைவுகளை வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவர்கள் அங்குமிங்குமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். மற்றபடி, இவர்கள் குறித்து நமக்கு அதிகம் தெரியாது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பழைய கற்காலம், இடைக்காலக் கற்காலம், புதிய கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக்காலம் என்றெல்லாம் பிரிக்கிறார்கள். இந்தக் காலங்களைக் கண்டறிவதற்குத் தொல்லியல் நமக்கு பெரும் உதவி செய்கிறது.

தொல்லியல்போல் சமயம், சமூகவியல், பொருளாதாரம், அரசியல், இலக்கியம், தத்துவம் என்று தொடங்கி மரபியல்வரை பல துறைகளோடு வரலாறு உரையாடுகிறது. வரலாறு ஒரு சமூக அறிவியல் துறையாகச் செழிப்படைந்ததற்கு இந்த உரையாடல் ஒரு முக்கியக் காரணம். வரலாறு எனும் துறையின் வளர்ச்சிக்கும் அதன்மூலம் கடந்த காலம் குறித்த நம் பார்வையின் வளர்ச்சிக்கும் இந்த உரையாடல் எவ்வாறு உதவியது என்பதைப் பார்க்கப்போகிறோம்.

0

மனிதனின் வரலாற்றுத் தேடல் எப்போது, எங்கே தொடங்கியது என்பதைக் கண்டறிவது கடினம். கடந்த காலத்தை எழுத்தில் பதிவு செய்யும் வழக்கம் எப்போது தொடங்கியது என்பதை வேண்டுமானால் நமக்குக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் விவரிக்கலாம். எகிப்திலும் மெசபடோமியாவிலும் காணப்படும் 5000 ஆண்டு பழமை வாய்ந்த சித்திர எழுத்துகளை ஆராய்ந்தபோது கடந்த காலம் குறித்த சில குறிப்புகளைக் கண்டடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தங்களை ஆண்டு வந்த வெவ்வேறு மன்னர்களின் பெயர்களை அவர்கள் பட்டியல்போல் தயாரித்து வைத்திருந்தார்கள்.

உலகின் பழமையான வரலாற்று மரபுகளில் ஒன்று சீனர்களுடையது. கடவுளோடு உரையாடும் திறன் பெற்ற ஆன்மிகத் தலைவர்களைச் (ஷாமன்கள்) சந்தித்து கடவுள் அருளிய செய்திகளை, தகவல்களை, கதைகளைக் கேட்டு வாங்கி எழுத்தில் பதிவு செய்பவர் ‘ஷி’ என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் கடவுளின் இடத்தை மன்னர் பிடித்துக்கொள்ள அவர் கூற்றுகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தார். நாளடைவில் ‘ஷி’ எனும் சொல் வரலாற்றாசிரியரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, வரலாறு எனும் துறையைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் கண்டது. கடந்த காலத்தின் பதிவுகள் என்பது சீனர்கள் இச்சொல்லுக்கு அன்று அளித்த பொருள். கடந்த காலத்தைச் சேர்ந்த எல்லா நிகழ்வுகளையும் அல்ல, எகிப்து, மெசபடோமியப் பதிவுகள்போலவே அரண்மனைப் பதிவுகளாகவே சீனர்களின் வரலாறு திகழ்ந்தது.

இந்தியாவில் ‘இதிஹாசா’ என்னும் சமஸ்கிருதச் சொல் வரலாற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இச்சொல்லின் பொருள், ‘இதுதான் நடந்தது’. குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதை நேரடியாகக் கண்டவரின் வாக்குமூலமாக இதிகாசம் கருதப்பட்டது. ராமாயணமும் மகாபாரதமும் இதிகாசம் என்று அழைக்கப்பட்டாலும் அவை நேரடியாகக் கண்டு எழுதப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்பது வெளிப்படை.

கடந்தகாலம் குறித்த பதிவுகள் அரபு மொழியில் ‘கபர்’ என்று அழைக்கப்பட்டன. தகவல் அல்லது செய்தி என்பது இதன் பொருள். பின்னர் ‘தாரிக்’ எனும் சொல்லும் புழக்கத்துக்கு வந்தது. இச்சொல் வம்சாவளியைக் குறிக்கிறது. தாரிக் முதலில் பயன்படுத்தப்பட்டது பொஆ 644இல்.

கடந்த காலம் குறித்த பலவிதமான பதிவுகளில் எது சரியென்பதைத் தேர்ந்தெடுக்கும் திறன் பெற்றவரை ‘ஹிஸ்டர்’ என்று கிரேக்கர்கள் அழைத்தனர். நபரைக் குறிக்கும் இச்சொல் அந்நபரின் திறனைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஹிஸ்டரில் இருந்து பிறந்த சொல், ‘ஹிஸ்டோரியா.’ இதன் பொருள் அறிந்துகொள்ளுதல், அறிவை நாடிச் செல்லுதல், அவ்வாறு நாடிச்செல்லும்போது கிடைக்கும் அறிவு ஆகிய மூன்றையும் குறிக்கும். இதிலிருந்துதான் வரலாறு என்பதற்கு நாம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொல் உருவானது. கிரேக்கத்திலிருந்து லத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்குச் சென்று பின்னர் ஆங்கிலத்துக்கும் வந்து சேர்ந்தது.

எகிப்தியர்கள், சீனர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், கிரேக்கர்கள் உள்ளிட்டோர் கடந்த காலத்தின்மீது கொண்டிருந்த ஆர்வம்தான் நவீன வரலாறாக இன்று செழித்து வளர்ந்திருக்கிறது. சமகாலம்போல் கடந்தகாலமும் முக்கியம் என்று அவர்கள் கருதியிருக்கிறார்கள். தேடலைத் தொடங்கியிருக்கிறார்கள். கிடைத்ததை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இன்றைய வரலாற்றாளர்கள் செய்வதும் இதையேதான். ஆனால் கடவுள், மன்னர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்கள், சாமானியர்கள் எனும் பாகுபாட்டை வரலாறு கைவிட்டுவிட்டது. பெயர் தெரியாத ஒரு பழங்கால மனிதரைக் குறித்து கிடைக்கும் ஒரு சிறு தடயமும்கூட முக்கியமானதே. மண் பானை, கல்வெட்டு, கிழிந்த ஆடையின் ஒரு பகுதி, நாணயம், சத்திரம், கோவில் எல்லாமே ஒரு வரலாற்றாளருக்கு முக்கியமான சான்றுகள். முறையான பிரதிகளும் மனதை மயக்கும் அழகிய ஓவியங்களும் மட்டுமல்ல, பாறைக் கிறுக்கல்களும் குகை ஓவியங்களும்கூடக் கடந்த காலத்தின் சான்றுகள்தாம். இந்தப் பெரும் பாய்ச்சல் எவ்வாறு நிகழ்ந்தது என்னும் கேள்வி எழும்போது நாம் வரலாற்றின் வரலாறு எனும் புதிய துறைக்கு வந்து சேர்கிறோம்.

இலக்கியம், தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் என்று தொடங்கி ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. நிலங்களுக்கும் மக்களுக்கும் எப்படி வரலாறு இருக்கிறதோ அப்படியே வரலாற்றுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. வரலாற்றெழுதியல் (Historiography) என்று அத்துறை அழைக்கப்படுகிறது. இது வரலாறு எழுதப்படும் முறையை ஆராய்கிறது. வரலாற்றாளர்களையும் அவர்கள் படைப்புகளையும் ஆராய்கிறது. பண்டைய காலம் முதல் இன்றுவரையிலான வரலாற்றின் வளர்ச்சியை ஆராய்கிறது. வரலாற்றாளர்கள் கடந்த காலத்தை இதுவரை எவ்வாறு அணுகியிருக்கிறார்கள், அவர்களுடைய அணுகுமுறைகள் ஏன் வேறுபடுகின்றன, அந்த வேறுபாடுகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது போன்ற கேள்விகளை வரலாற்றெழுதியல் எழுப்புகிறது. வரலாறு என்பது கடந்த காலத்தின் கதை என்றால் அக்கதை எழுதப்பட்ட கதையை விவரிப்பது வரலாற்றெழுதியல்.

ஒரு வரலாற்றுப் பிரதியின் பின்னணி, அதை எழுதியவரின் பின்னணி, அந்தப் பிரதியின் நோக்கம், அதன் பங்களிப்பு, குறைபாடு ஆகியவற்றை வரலாற்றெழுதியல் ஆராய்கிறது. ஒரு வரலாற்றாளர் எத்தகைய தரவுகளைச் சேகரித்திருக்கிறார் என்பதையும் அவர் அத்தரவுகளை எவ்வாறு கையாண்டு எத்தகைய முடிவுகளுக்கு வந்து சேர்கிறார் என்பதையும் வரலாற்றெழுதியல் கவனத்தில் கொள்கிறது. ஏன் சில தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன, ஏன் சிலவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? ஒரு பிரதி யாருக்காக எழுதப்படுகிறது? அது எவ்வாறு பார்க்கப்படுகிறது? அதில் பிரச்சினைக்குரிய அம்சங்கள் இருக்கின்றனவா? ஆம் எனில் எத்தகைய பிரச்சினைகள்? இந்தப் பிரதி இதே பொருளில் வெளிவந்த முந்தைய பிரதிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது, எத்தகைய புதிய பார்வைகளை அளிக்கிறது அல்லது அளிக்கவில்லை? இதுபோல் நூறு கேள்விகளை வரலாற்றெழுதியல் அனுமதிக்கிறது. வரலாறு எப்படிக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு துறையோ அதுபோலவே வரலாற்றின் வரலாறும் கேள்விகளையே மையப்படுத்தி இயங்கும் துறை.

(தொடரும்)

The post வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும் appeared first on கிழக்கு டுடே.

  •  

வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

வரலாற்றின் கதையை ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது, ஒரு பொருளை எடுத்துக்கொண்டு விரிவாக உரையாடுவதற்கு முன்பு, அப்பொருளுக்கான விளக்கத்தை நாம் ஆராய வேண்டும். அதுவே மரபான அறிமுக முறை. இரண்டாவது, கேள்விகளை எழுப்புவதுதான் வரலாற்றின் அடிப்படையான குறிக்கோள். விடைகள் கிடைப்பது அரிது அல்லது கிடைக்காமலே இருப்பதுதான் இயல்பு என்று தெரிந்தும் வரலாறு புதிய கேள்விகளை எழுப்புவதை நிறுத்திக்கொள்வதில்லை. எனவே நாமும் கேட்கலாம். வரலாறு என்றால் என்ன?

இக்கேள்விக்குப் பலவிதமான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. சிலவற்றை மட்டும் பார்வையிடுவோம். இது எவ்வாறு நிகழ்ந்தது என்னும் கேள்வியை நீங்கள் எழுப்பும்போது கிடைக்கத் தொடங்கும் விடைகள்தான் வரலாறு என்கிறார் அர்னால்ட் டாய்ன்பி. நாகரிகமடைந்த மனிதர்களின் கடந்தகாலச் சிந்தனைகளும் செயல்பாடுகளும்தான் வரலாறு என்கிறார் வில் டியூரன்ட். நிகழ்காலத்தைக் கடந்த காலத்தோடு அர்த்தமுள்ள வகையில் இணைத்துத் தெளிவாக விளக்கும் துறையே வரலாறு என்கிறார் ஈ.ஹெச். கார். பல்வேறு நிகழ்வுகள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதையும் சிந்தனைகள் எவ்வாறு வளர்ச்சியடைகின்றன என்பதையும் விவரிப்பதே வரலாறு என்கிறார் ஈ.ஜே. ராப்சன். குறிப்பிட்ட ஒரு காலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பொரு காலத்தில் நிகழ்ந்தவற்றில் தகுதியானவை என்று கருதுபவற்றைப் பதிவு செய்வதன் பெயர்தான் வரலாறு என்கிறார் ஜேக்கப் பர்க்ஹார்ட்.

வரலாறு எனக்குக் கற்றுக்கொடுத்ததெல்லாம் ஒன்றுதான். மனித குலம் மாறவேயில்லை. பழைய நடிகர்கள் மறைந்து, புதியவர்கள் தோன்றிக்கொண்டிருக்கிறார்களே தவிர, திரைக்கதை என்னவோ ஒன்றுதான் என்கிறார் ரிச்சர்ட் எவான்ஸ்.

இறந்தகாலத்தை நாம் ஏன் திரும்பிப் பார்க்கவேண்டும்? நிகழ்காலப் பிரச்சினைகளை விட்டுவிட்டு ஏன் கற்காலம், இரும்புக் காலம், மௌரியர் வரலாறு, கிரேக்க வரலாறு என்று நேரம் கழிக்கவேண்டும்? மண்ணில் புதைந்திருக்கும் கற்கோடரி எவ்வளவு பழையது, தூணிலும் பாறையிலும் அசோகர் என்ன பொறித்து வைத்திருக்கிறார், குகை ஓவியங்களில் காணப்படும் வண்ணம் எங்கிருந்து வந்திருக்கும், எகிப்திய மம்மியின் ஆடை எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று தொடங்கி ஒவ்வொரு காலகட்டம் குறித்தும் ஒவ்வொரு நிகழ்வு குறித்தும் கிடைக்கும் ஒவ்வொரு சிறு சான்று குறித்தும் எழுப்பப்படும் எண்ணற்ற கேள்விகளால் யாருக்கு, என்ன பலன்?

நம் காலத்தின் வேர் கடந்த காலத்தில் புதைந்திருக்கிறது. கடந்த காலத்தைத் தெரிந்துகொள்ளாமல் நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. அதனால்தான் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று ஒரு துப்பறிவாளர் போல் வரலாற்றை ஆராய வேண்டியிருக்கிறது என்கிறார் ஜவாஹர்லால் நேரு. வரலாற்றுக்கு அவர் அளிக்கும் விளக்கம் இது. இயற்கை, இயற்கைச் சக்திகள், விலங்குகள், காடுகள், அழுத்திச் சுரண்டும் சக மனிதர்கள் ஆகியோருக்கு எதிராக மனிதன் காலம் காலமாக மேற்கொண்டுவரும் போராட்டத்தின் கதைதான் வரலாறு.

மனிதர்கள் தங்கள் சொந்த வரலாற்றை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால் தாங்கள் விரும்பிய வண்ணம், விரும்பித் தேர்ந்தெடுத்த சூழலில் அதை உருவாக்கிக்கொள்ளமுடியாது. கடந்தகாலம் நமக்களித்த, ஏற்கெனவே நிலவிவரும் சூழல்களில்தான் வரலாறு உருவாகிறது என்கிறார் கார்ல் மார்க்ஸ். அவரைப் பொருத்தவரை கடந்த காலம் என்பது இறந்து, மறைந்துவிட்ட காலமல்ல. கடந்த தலைமுறைகளின் மரபுகளை நாம் இன்னமும் சுமந்து கொண்டிருக்கிறோம். ஒரு கொடுங்கனவாக அந்த நினைவுகள் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கின்றன என்கிறார் மார்க்ஸ். இறந்த காலம் என்றொன்று கிடையாது; வரலாறு நம்மிடையே உயிர்த்திருக்கிறது என்பதுதான் டி.டி. கோசாம்பியின் கருத்தும்.

வரலாறு ஒரு பலனற்ற, பணமற்ற துறை; எனவே தேவையற்றது என்று கருதுபவர்களுக்கும் பஞ்சமில்லை. வகுப்பறைமூலமே வரலாறு ஒருவருக்கு அறிமுகமாகிறது என்பதால் ஆசிரியரின் குறைகளும் குற்றங்களும் வரலாற்றின் குறைகளாகவும் குற்றங்களாகவும் மாறி நிற்பதைப் பார்க்கிறோம். மூச்சுமுட்டச் செய்யும் அளவுக்குத் தேதிகளையும் பெயர்களையும் அறிமுகமற்ற இடங்களையும் மாணவர்கள்மீது கொட்டிக் கவிழ்த்து, வரலாறு என்றாலே தெரித்து ஓடக்கூடிய அளவுக்கு அவர்களை மாற்றி வைத்திருப்பதில் ஆசிரியர்களுக்கும் அவர்கள் கையில் ஏந்தியிருக்கும் பாடப்புத்தகங்களுக்கும் பங்கு இருப்பதை ஒருவராலும் மறுக்கமுடியாது. இவற்றையெல்லாம் கடந்து வரலாற்றை ஒரு விருப்பத் துறையாகத் தேர்ந்தெடுத்து, கற்று, பட்டம் பெற்று வெளிவரும் ஒரு மாணவருக்கு இன்றைய பொருளாதாரக் கட்டமைப்பு எதை அளிக்கிறது என்று கேட்டால் ஏமாற்றத்தைத் தவிர எதையும் அளிப்பதில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நம் வாழ்வோடும் வாழ்வியல் சிக்கல்களோடும் எந்த வகையிலும் தொடர்பற்று அருங்காட்சியகக் காட்சிப்பொருள்போல் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைந்து கிடக்கிறது வரலாறு. பலன் கருதாது அறிவுத் தேடலில் ஈடுபடுவோர்கூட ஒரு கட்டத்தில் ஓய்ந்து விடுகின்றனர். தேடல் விரிவடைய, விரிவடையத் தெளிவின்மையும் குழப்பமும் இருளும்தான் கிடைக்கும் என்றால் இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஆர்வத்தை நீட்டித்துக்கொண்டே போகமுடியும்?

வரலாற்றின்மீதான அவநம்பிக்கைக்கும் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. வரலாற்றைவிடவும் கவிதை தத்துவார்த்தமானது, தீவிரமானது என்கிறார் அரிஸ்டாட்டில். உண்மையைக் கண்டறிவதுதான் வரலாற்றின் நோக்கம் என்பதை புளூடார்க் நம்பத் தயாராக இல்லை. வரலாறு என்பது இறந்தவர்கள்மீது மேற்கொள்ளப்படும் தந்திரங்கள் என்கிறார் வால்டேர். ஜேன் ஆஸ்டின் வரலாற்றின்மீது வைக்கும் விமரிசனங்கள் பல இன்றும் பொருந்தக்கூடியவை. அவருடைய நாவலொன்றில் இடம்பெறும் வரிகள்தான் என்றாலும் அவற்றை அவருடைய கருத்தாகவே கொள்வதற்கு இடமிருக்கிறது. ‘உங்கள் புனித வரலாறுமீது எனக்கு ஆர்வமில்லை. ஆர்வம் கொள்ளவும் முடியாது. கடனே என்று சிலவற்றைப் படித்திருக்கிறேன். என்னைக் கோபமுறச் செய்யாத, சலிப்படையச் செய்யாத எதையும் வரலாற்றில் நான் கண்டதில்லை. போப்பாண்டவர்களுக்கும் அரசர்களுக்குமான மோதல்கள், போர்கள், கொள்ளை நோய்கள்… ஒவ்வொரு பக்கத்திலும் இவைதான் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் உபயோகமில்லாத ஆண்களைக் காண்கிறேன். பெண்கள்? பெரும்பாலும் காண இயவில்லை. மிகவும் சோர்வாக இருக்கிறது.’

என்ன பெரிய எகிப்திய நாகரிகம்? என்ன பெரிய பிரமிட்? நைல் நதியில் எறிய வேண்டிய ஒரு சடலத்துக்குப் பிரமாண்டமான ஒரு கல்லறை தேவையா? அதைக் கட்டுவதற்கு இவ்வளவு பேர் திரண்டு வந்து பணியாற்றி, உயிரைக் கொடுக்கவேண்டுமா? என்ன பெரிய வரலாறு என்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறார் ஹென்றி டேவிட் தொரோ.

0

வரலாறு கடவுளும் அல்ல, சாத்தானும் அல்ல. அதை ஓர் அருமருந்தாகவும் கருதவேண்டியதில்லை, கொடுஞ்சாபமாகக் கருதி அஞ்சவேண்டியதும் இல்லை. அது மனிதர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு சமூக அறிவியல் துறை. மாசு மருவற்ற மனிதன் எப்படி இல்லையோ அப்படியே மாசு மருவற்ற வரலாறும் இல்லை.

வரலாறு என்பதைவிட, யாருடைய வரலாறு என்பது முக்கியம் என்கிறார் மால்கம் எக்ஸ். ‘நம் ஆற்றலை நாம் பயன்படுத்தவேண்டும். நம் வரலாற்றின்மீது நாம் பெருமை கொள்ளவேண்டும். நம் பண்பாட்டை நாம் வெளிப்படுத்தவேண்டும். நாம் என்பதில் பெருமை கொள்ளவேண்டும். அப்போதுதான் நம் வரலாறு உருவாகத் தொடங்கும்.‘ அவருக்கு மட்டுமல்ல பலருக்கு வரலாறு ஓர் அரசியல் கருவியாக இருந்திருக்கிறது. இன்றும் இருந்துவருகிறது. ஆனால் வரலாற்றின் பணி நம் பெருமிதங்களை மீட்டெடுப்பதோ நம் மரபுகளை வலுப்படுத்துவதோ அல்ல. அதன் ஆழத்தையும் அகலத்தையும் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது இதை உணரமுடியும்.

வரலாற்றாளர்கள் கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்கிறார்கள் என்னும் வாதத்தை ஆர்தர் மார்விக் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த காலத்தை எப்படி நம்மால் மறுகட்டுமானம் செய்யமுடியும்? கடந்த காலம் மறைந்துவிட்டது. அதற்கு உயிரூட்டும் ஆற்றல் ஒருவருக்கும் கிடையாது. ஒரு வரலாற்றாளரால் செய்யமுடிந்ததெல்லாம் கடந்த காலம் குறித்த அறிவை உருவாக்குவது மட்டுமே. அந்த வரலாற்றாளர் எத்தகையவர், அவர் படைப்பு எத்தகையது என்பதைப் பொருத்து அவர் உருவாக்கி, அளிக்கும் அறிவின் தன்மை அமையும். இந்த வாதத்தைக் கொண்டு பார்த்தால் வரலாறு என்பது கடந்த காலம் குறித்து வரலாற்றாளர்கள் திரட்டியிருக்கும் அறிவின் தொகுப்பு என்று கொள்ளமுடியும். அந்த அறிவு எவ்வாறு திரட்டப்பட்டது, எவ்வாறு பரப்பப்பட்டது என்பதும் வரலாறுதான்.

கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அழுத்தமான தொடர்பு இருக்கிறது என்றாலும் நாம் தற்சமயம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் யாவற்றையும் வரலாறு தீர்த்துவிடும் என்று எளிமைப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஒன்று நிச்சயம். கடந்த காலம் குறித்த அறிவு இல்லாமல் நிகழ்காலச் சிக்கல்களை நம்மால் அணுகக்கூட முடியாது.

அடிக்கடிச் சொல்லப்படுவதுபோல் வரலாறு திரும்புவதில்லை. கடந்த காலத்தில் என்ன நடந்ததோ அதுவேதான் இப்போதும் நடக்கிறது என்று வாதிட முடியாது. சாயல் இருக்கலாம். ஒப்பீடுகள் செய்துகொள்ளலாம். வரலாறு ஓர் உயிரி அல்ல என்பதால் மீண்டும் தன்னையே நிகழ்த்திக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இல்லை. ஒரு நிகழ்வை இன்று நாம் திரும்பிப் பார்க்கும்போது ஒரு பொருளும் நாளை பார்க்கும்போது வேறொரு பொருளும் நமக்குக் கிடைக்கலாம். அதே நிகழ்வுதான் என்றாலும் பொருள் மாறுவதற்குக் காரணம் நாம். நாம் அளிக்காவிட்டால், நாம் உணராவிட்டால் கடந்த காலத்துக்குப் பொருள் இல்லை. ரொமிலா தாப்பரின் பார்வையும் இதுதான்.

கடந்த காலம் உன்னதமானது, தூய்மையானது, சிக்கல்களற்றது என்றெல்லாம் நாம் சொல்லும்போது நாம் நம் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் கடந்த காலத்தின்மீது ஏற்றி, மகிமைப்படுத்துகிறோம். உன்னதமான, தூய்மையான, சிக்கல்களற்ற காலம் என்றொன்று எப்போதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. எந்தப் பேரரசின் கீழும் – அவர் எவ்வளவு அற்புதமானவராக இருந்தாலும் — அப்படியொரு சமூகம் நிலவியதில்லை. இருந்தும் அப்படியொரு கனவோடு நாம் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதற்குக் காரணம் கடந்த காலமல்ல, நிகழ்காலம். இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சூழலே அத்தகைய ஏக்கங்களை நமக்கு ஏற்படுத்துகிறது. வரலாற்றாளர்கள் கடந்த காலத்தை இப்படி உணர்வுப்பூர்வமாக அணுகுவதில்லை.

வரலாற்றைக் காலம்தோறும் ஏற்படும் படிப்படியான வளர்ச்சிக் கட்டங்களாகவும் அணுகத் தேவையில்லை. பழங்குடிச் சமூகத்திலிருந்து இன்றைய நவீன அறிவியல், தொழில்நுட்பக் காலத்துக்கு நாம் வந்து சேர்ந்த கதையாக வரலாற்றைக் குறுக்கமுடியாது. எல்லாக் காலங்களிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எல்லாக் காலங்களிலும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. காலத்துக்கு ஏற்ப எல்லாக் காலங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி நடைபெற்றிருக்கிறது. எல்லாக் காலங்களும் பிழைகளை, குற்றங்களை, சறுக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றன. வீழ்ச்சி, வளர்ச்சி என்று ஒரேயொரு அம்சத்தை மட்டும் கொண்டு வரலாறு இயங்குவதில்லை.

ஏன் வரலாறு? வரலாற்றால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு ஆர்தர் மார்விக் அளிக்கும் பதில் கேள்வி இது. கடந்த காலம் குறித்து எதுவும் தெரியாத ஒரு சமூகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தச் சமூகம் எப்படி இயங்கும் என்று யோசித்துப் பாருங்கள். வரலாறு என்ன செய்யும் என்பது புரியும்.

0

வரலாறு எனும் துறை எப்படி, எங்கே தோன்றியது? தோற்றுவித்தவர்கள் யார்? அது எப்படி வளர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்தது? வரலாற்றாளர் என்பவர் யார்? அவர் எவ்வாறு இயங்குகிறார்? அவர் எத்தகைய கருவிகளைக் கையாள்கிறார்? வரலாறு எப்படி எழுதப்படுகிறது? உண்மையைக் கண்டறிவது வரலாற்றின் பணி அல்ல என்றால் அதன் பணிதான் என்ன? வரலாற்றுக்கென்று தனித்த குறிக்கோள் ஏதேனும் இருக்கிறதா? வரலாறு மேற்கத்தியக் கண்டுபிடிப்பா? வரலாறு ஏன் ஒரு போராட்டக்களமாகத் திகழ்கிறது? கடந்த காலத்தை ஏன் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்? அதற்கு முன்னால், தெரிந்துகொள்வது சாத்தியம்தானா? பார்ப்போம்.

(தொடரும்)

The post வரலாற்றின் கதை #1 – அறிமுகம் appeared first on கிழக்கு டுடே.

  •