Reading view

ரோஜா முள் துரோகம் – Crime Novel

கல்யாண மண்டபத்தில் இருந்து வைஜெயந்தி தப்பித்த விஷயம் நீண்ட நேரத்திற்கு பிறகே அவளுடைய மாமா சிகாமணிக்கு தெரிய வந்தது. பெற்றோரை சிறு வயதிலேயே இழந்திருந்த வைஜெயந்தியை தாய்மாமா தான் வளர்த்து படிக்க வைத்திருந்தார். ஆனால், வைஜெயந்திக்கு அவர் பாத்திருந்த மாப்பிள்ளைக்கோ வயது நாப்பத்திரெண்டு.

புகழ்பெற்ற கம்பெனியில் ஜி.எம் ஆக இருந்த யதுநந்தன் தான் மாப்பிள்ளை. எப்பாடு பட்டாவது வைஜெயந்தியைத் திருமணம் செய்ய பிரம்மபிரயத்தனம் செய்து கொண்டிருந்த யதுநந்தன் போலீசிற்கு பணம் கொடுத்து அவளைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறார்.

அடுத்த நாள் காலை கல்யாணம் நடக்க இருந்த வேளையில், திட்டம் போட்டு வைஜெயந்தி நள்ளிரவு நேரத்தில் மண்டபத்தில் இருந்து தப்பிக்கிறாள். வைஜெயந்தி தப்பிக்க மாப்பிள்ளையின் வயது மட்டும் காரணம் இல்லை. அவள் ப்ரணேஷைக் காதலித்துக் கொண்டிருந்தாள்.

ப்ரணேஷ் – பணக்கார வீட்டு பையன், தாய் வள்ளியம்மைக்குத் தெரியாமல் தன்னுடைய காதலை வளர்த்து வருபவன். திட்டப்படி ப்ரணேஷின் நண்பன் பாண்டியுடன் மண்டபத்தில் இருந்து வைஜெயந்தி தப்பிக்க வேண்டியது. அதற்குப் பிறகு ப்ரணேஷும் வைஜெயந்தியும் கல்யாணம் செய்து கொள்வது.

எதிர்பாராத விதமாக, போலீஸ் விசாரணையில் வைஜெயந்தி மாருதி காரில் தப்பித்த விஷயம் தெரிய வருகிறது. மேற்கொண்டு விசாரித்ததில் ஒரு திடுக்கிடும் தகவல் போலீசிற்கு கிடைக்கிறது. வைஜெயந்தியைத் தான் காதலிப்பதாகச் சொல்லிய பாண்டி, மெக்கானிக்கல் ஷாப் நண்பனிடம் இருந்து, ஒரு காரை இரவல் வாங்கிச் சென்றதாக நண்பன் சொல்கிறான்.

இதற்கிடையில் ப்ரணேஷின் காதல் விஷயம் அவனுடைய அம்மா வள்ளியம்மைக்குத் தெரியவர, மேனேஜர் மற்றும் குடும்ப வக்கீலுடன் சேர்ந்து வைஜெயந்தியை விரட்ட திட்டம் போடுகின்றனர் மூவரும்.

யதுநந்தனிடம் பணத்தை வாங்கிய இன்ஸ்பெக்டர், பாண்டி வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்றபோது அவனும் வைஜெயந்தியும் வீட்டில் இல்லை. மேற்கொண்டு போலீஸ் வீட்டை அலச, வைஜெயந்தி எழுதிய டைரி அங்கு கிடைக்கிறது. டைரி முழுக்க காதல் கவிதைகள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் அக்கம்பக்கத்து ஆட்களை எழுப்பி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, திடீரென இன்ஸ்பெக்டரின் பார்வை பாண்டி வீட்டு பரண் மேலே செல்ல, அதிர்ந்தார் அவர். அங்கு கொலுசு அணிந்த ஒரு பெண்ணின் கால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்டிருந்த பெண் வைஜெயந்தி இல்லை. வைஜெயந்தியின் காதலன் ப்ரணேஷிடம் போலீஸ் விசாரித்த போது, வைஜெயந்தியைக் கூட்டி வரும்படி அவன் தான் பாண்டியிடம் கூறியதாகவும், ஆனால் இதுவரை தன்னிடம் அவளை அழைத்து வரவில்லை எனவும், பாண்டி வீட்டு பரண் மேல் இறந்து கிடந்த பெண் வைஜெயந்தியின் தோழி மோகினி எனவும் ப்ரணேஷ் கூற..

பாண்டி எதற்காக வைஜெயந்தியைக் கடத்தினான்..? யதுநந்தன்-வைஜெயந்தி திருமணம் நடந்ததா..? வைஜெயந்தி காணாமல் போனதற்கு காரணம் ப்ரணேஷின் அம்மா வள்ளியம்மையா..? பரண் மேல் இறந்து கிடந்த மோகினியைக் கொலை செய்தது யார்..? வைஜெயந்தி உயிருடன் இருக்கிறாளா..?

விறுவிறுப்புடன் நகரும் அடுத்தடுத்த நிமிடங்கள்..இன்றே வாசியுங்கள் ரோஜா முள் துரோகம்.

Casting : வைஜெயந்தி, தாய்மாமா சிகாமணி, மாப்பிள்ளை யதுநந்தன், ப்ரணேஷ், பாண்டி, மோகினி, மெக்கானிக் ஜோசப், ப்ரணேஷின் அம்மா வள்ளியம்மை.

  •