Reading view

குஜராத் மீல்ஸும், காஷ்மீர் டீயும் . . .

நீண்ட நாட்களாகவே மனோஜ் சொல்லிக் கொண்டிருந்த குஜராத் மீல்ஸ் கடைக்கு இன்று அழைத்துச் சென்றான். ஒளிப்பதிவாளர் மார்ட்டினின் புல்லட் பின்னால் நான் அமர்ந்து கொள்ள, முன்னால் ‘பெண்கள்’ வாகனம் ஒன்றில் மனோஜ் வேகமாக சென்று கொண்டிருந்தான். அவ்வப்போது நாங்கள் வழி தவறி மனோஜை தொடர்பு கொண்டு ‘எங்கேடா இருக்கே? இன்னும் எவ்வளவு தூரம்டா?’ என்று கேட்டுக் கொண்டே பயணித்தோம். சுட்டெரிக்கும் வெயிலில் பசியும் சேர்ந்து கொள்ள, வாடி வதங்கி செல்லும்போது எக்மோர் ரயில்வே நிலையம் வந்தது.

‘மார்ட்டின்! இவன் நம்மள கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல ஏத்தி நாஞ்சில் நாட்டுல ஏதோ சாப்பாட்டுக் கடைக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு பிளான் பண்றான்’ என்றேன்.
‘சேச்சே! அப்படில்லாம் இருக்காது’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கினார், மார்ட்டின்.

அடுத்த ஃபோனில் ‘பக்கத்துல வந்துட்டோம் ஸார்’ என்றான் மனோஜ். அடுத்து புரட்சி தலைவர் டாக்டர எம் ஜி ஆர் மத்திய ரயில் நிலையம் . . . ஸ்ஸ்ஸ் . . . எங்கே விட்டேன்? ஆங்! சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் இந்த முறை மார்ட்டினுக்கும் சந்தேகம் வந்தது. ‘ஏங்க? இவன் குஜராத் மீல்ஸை குஜராத்துக்கேக் கூட்டிட்டுப் போய் சாப்பிட வைப்பானோ?’ என்றார். இந்த முறை மனோஜே ஃபோன் பண்ணி ‘பக்கத்துலதான் ஸார்’ என்றான். பதிலுக்கு நான் சொன்ன பீப் வார்த்தைகளை வழக்கம் போல கண்டுகொள்ளாமல் ஃபோனை வைத்தான்.

ஒரு வழியாக பிராட்வே மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து உள்ளே சென்று குஜராத் கடையை அடைந்தோம். மார்ட்டின் பரவசமானார். ‘நான் குஜராத்துக்கு போனதே இல்லங்க’ என்றார். கொஞ்சம் நெருக்கடியான இடம்தான். பல ஆண்டுகளாக புகழ் பெற்று விளங்கக் கூடிய கடை என்பது அதன் வாடிக்கையாளர்களைப் பார்க்கும் போது தெரிந்தது. அவர்களில் ஒருவன் மனோஜ்.



வழக்கமாக தனக்கு ஹிந்தி தெரியாது என்று (என்) தலையில் அடித்து சத்தியம் செய்யும் மனோஜ் சரளமாக ஹிந்தி பேசி எக்ஸ்டிரா சப்பாத்திகளை வாங்கிக் கொண்டான். முறைத்த என்னைப் பார்த்து ‘அன்லிமிட்டட் ஸார்’ என்றவன், சப்ளையரைப் பார்த்து என்னைக் காண்பித்து ஹிந்தியில் ஆபாசமாக ஏதோ சொன்னான். என் தட்டில் மேலும் சப்பாத்திகள் விழுந்தன. தொடு கறிகள், ஊறுகாய், சோறு, சாம்பார், ரசம் என்று மேலும் உணவுவகைகள் அணிவகுத்து வந்து சேர்ந்தன. இந்த முறை கிளுகிளுப்பாக ஹிந்தியில் ஏதோ கேட்டான் மனோஜ். எனக்கு அந்த ஒலி ‘ஊ சொல்றியா மாமா’வாக ஒலித்ததால் மஞ்சள் நிறத்தில் வந்த அந்த திரவத்தை மறுத்தேன். மார்ட்டினுக்கு ‘ஓ சொல்றியா மாமா’வாக அது ஒலித்திருக்க வேண்டும். ஒரே மடக்கில் குடித்து முடித்தார். மாம்பழ ஜூஸுங்க. ஓவர் தித்திப்பு என்றார்.

வழக்கம் போல நண்பர்கள் குழுவுக்கு சாப்பாடு புகைப்படங்கள் அனுப்பி வைத்தேன்.



விக்னேஷ் சுப்பிரமணியம் (விக்கி) ‘அண்ணாச்சி! அதென்ன ஓலைச்சுவடி மாதிரி சுருட்டி வச்சிருக்கான்?!’ என்று கேட்டார்.

அது ‘அப்பளம் மேலகரத்துத் தம்பி’ என்றேன்.

‘அது பப்பட்லா’ என்றார் ரஜினி ரசிகர் என்கிற கவிஞர் ஹரன் பிரசன்னா.
‘நம்மூர்ல அதை அப்பளம்னுதானவே சொல்லுவோம்’ என்றேன்.
‘அப்பம் ரெண்டெண்ணம் வாங்கி நொறுக்கிப் போட்டு தின்னுங்க அண்ணாச்சி’ என்றார்.
‘அதெல்லாம் முடிச்சுட்டுத்தானவே ஃபோட்டோவே போட்டேன்’ என்றேன்.
‘ஒரு திருநவேலிக்காரனா ரொம்பப் பெருமையா இருக்கு அண்ணாச்சி’ என்று ஒருசில ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை அனுப்பி வைத்தார் பிரசன்னா.



சாலிகிராமம் வந்து சேரும் போது மார்ட்டினின் முதுகில் சாய்ந்து உறங்கியிருந்தேன். உறக்கம் கலையும்போது என் வீட்டுக்கு அருகே உள்ள Tea time கடையில் வண்டி நின்றது. வழக்கமாக நானும், மார்ட்டினும் அங்கு தேநீர் அருந்துவதுண்டு. ‘எனக்கு மாம்பழ ஜூஸ் குடுத்துட்டு அவன் தப்பிச்சுட்டான். நெஞ்சுக்குள்ளேயே நிக்குது. ஒரு இஞ்சி டீ அடிப்போம்’. புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார், மார்ட்டின். நான் ‘காஷ்மீர் டீ’ சொன்னேன்.

‘ஏன் காஷ்மீர் டீ?’ என்று கேட்டார், மார்ட்டின்.

‘நான் காஷ்மீருக்கு போனதில்ல. அதான்’ என்றேன்.

The post குஜராத் மீல்ஸும், காஷ்மீர் டீயும் . . . appeared first on வேணுவனம்.

  •  

நட்சத்திரமும் பட்டாம்பூச்சிகளும்

"ப்ரியங்கா மோகன் அவ்வளவு ஒண்ணும் அழகா இல்லையே?"
 
"டாக்டர் பாரு."
 
(டாக்டர் படம் பார்த்த பின்)
 
"ப்ரியங்கா மோகன் அவ்வளவு ஒண்ணும் அழகா இல்லையே?"
 
"டாக்டர் பாரு."
 
*
 
'ஒரு நிமிடத்தில் ப்ரியங்கா மோகனை விரும்பத் தொடங்குவது எப்படி?' என்றுதான் இந்தக் கட்டுரைக்கு முதலில் தலைப்பிட்டேன். ஆனால் ரொம்ப சுயமுன்னேற்றத்தனமாக இருந்தது என்பதாலும், கவித்துவம் ஒரு சிட்டிகை குறைகிறது என்பதாலும் மாற்றினேன். ஆனால் இலக்கு அதேதான் - ஒரு டஜன் வீடியோக்கள் வழி அவரை எல்லோருக்கும் பிடித்துப் போகச் செய்வது!

ப்ரியங்கா மோகனை முதன் முதலாக அக்டோபர் 10ம் தேதிதான் பார்த்தேன். டாக்டர் வெளியான‌ இரண்டாம் நாள் மாலை சுமார் 7:15 மணிக்கு பிவிஆர் வேகா சிட்டி அரங்கில். So Baby பாடலில் டாக்டர் வருண் முதன்முதலாக பத்மினியை பார்க்கும் போதுதான் ரைட்டர் சிஎஸ்கேவும் முதன் முதலாக ப்ரியங்காவைப் பார்க்கிறான். முகத்தில் ஒளியும் நிழலும் விளையாட்டு நிகழ்த்தும் காவியச் சாயை நிரம்பிய‌ நடனக் காட்சி! "தீக்குச்சி கிழித்த மின்னல்... / முகிலின் வெடிமருந்து பிளந்த இமைக்கணம்..." என்ற பிரமிள் வரிகளைத்தான் அந்தக் கணத்தை விவரிக்கத் துணைக்கழைக்க வேண்டியிருக்கிறது!

படம் முடிந்தவுடன் போட்ட முதல் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்: "கோட்டை எல்லாம் அழிங்கடா. முதல்ல இருந்து போடனும். The name is ப்ரியங்கா அருள்மோகன்." அங்கேதான் எல்லாம் தொடங்கியது. வெறும் நாற்பது நாட்களில் இத்தனை பிடித்துப் போவது ஆச்சரியம்தான். இத்தனைக்கும் அனு ஸிதாராவை ஏற்கெனவே உபாசனை செய்து கொண்டிருந்த சூழல். எனக்கு வெவ்வேறு காலகட்டத்தில் உலகின் உச்ச அழகிகளாகத் தோன்றியோர் எனப் பார்த்தால் நால்வரைச் சொல்ல முடிகிறது: ஐஸ்வர்யா ராய் (1994 - 2007), தீபிகா படுகோன் (2008 - 2018), அனு ஸிதாரா (2019 - ). இப்போது ப்ரியங்கா மோகன் (2021 - ).

ப்ரியங்கா மோகனிடம் பல நடிகைகளின் சாயல் இருக்கிறது. எனக்குத் தோன்றியவர்கள்: 1) ரெஜினா கஸாண்ட்ரா 2) அஞ்சலி 3) சுனைனா 4) கீர்த்தி சுரேஷ் 5) மஹிமா நம்பியார் 6) ப்ரியா பவானிசங்கர் 7) இந்துஜா ரவிச்சந்திரன் 8) அனுஷ்கா 9) ஸ்ரீதிவ்யா 10) மஞ்சிமா மோகன் 11) அப்புறம் last but not the least  -அனு ஸிதாரா. (சொல்லப் போனால் ப்ரியங்கா மோகன் என்பதே அனு ஸிதாராவின் அம்சம்தான். இந்த விதந்தோதல்கள் யாவும் மறைமுகமாக அவருக்கே போய்ச் சேருகிறது! விஷ்ணுவை மட்டுமே வணங்கும் விசுவாச வைணவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் இஷ்டமானவனாக இருப்பதில்லையா!)

இத்தனை ரசித்ததில் கண்டறிந்தது ப்ரியங்கா மோகனுக்கு மூக்கின் நுனியில் ஒரு ரகசிய மச்சம் இருக்கிறது. முதல் பார்வைக்கும், மறுபார்வைக்கும், வெறும் பார்வைக்கும் சிக்காமல் குறிப்பிட்ட பாகையில் தலை சாய்க்கையில் மட்டுமே இயற்கை அருளால் சாத்தியமாகும் திவ்யதரிசனம்!

அவருடையது ஒரு முதிர்ந்த‌ சிறுமியின் உடல்மொழி. பதின்மத்தில் நமக்கெல்லாம் கற்பனையில் ஒரு காதலி இருந்திருப்பாளே, அப்பெண் நம் மனதிலிருந்து உயிர் பெற்றெழுந்து வந்து நம் முன் நின்றால், அதுதான் ப்ரியங்கா மோகன். சற்று முன் மலர்ந்த பூவில், விடியலின் சிறுபனித் துளிகள் சில படர்ந்தது போல அத்தனை புதியதான, பரிசுத்தமான முகம்! எவ்வளவு பார்த்தாலும் தீராத, திகட்டாத வதனம்!

இதற்கான என் நன்றியுணர்வின் காரணமான சிறுஎதிர்வினைதான் ஃபேஸ்புக்கில் தினம் போடும் #TheMostBeautifulGirl தொடர். இன்று பலரும் அதில் பங்கேற்கிறார்கள். அது அழகைக் கொண்டாடும் ஒரு திருவிழா. ஊர் கூடித் தேரிழுத்தல். தேரில் இருப்பது ப்ரியங்கா மோகன். தேர் தமிழ்ப் புத்தகங்கள்!


அவர் கழுத்தின் பக்கவாட்டுக்கும் காதுக்கும் இடையேயான பிரதேசத்தில் மூன்று பட்டாம்பூச்சிகளை டாட்டூ குத்தியிருக்கிறார். அவர் இதுகாறும் படங்களில் ஏற்ற பாத்திரங்களில் எல்லாம் அப்படியான ஒரு சிறகடிப்புத்தனம் இருக்கிறது. தனித்துவமான நட்சத்திரமான அவரை அந்த அழகிய டாட்டூவுடன் காணும் போது வண்ணத்துப் பூச்சிகளின் மூன்று குணங்கள் நினைவு வருகின்றன - அழகு, நளினம், மென்மை. பல பண்டைய கலாசாரங்களிலும் வண்ணத்துப் பூச்சி என்பது ஆன்மாவின் குறியீடு. அவரது கோடிக்கணக்கான விசுவாச ரசிகர்களின் ஆன்மா அவரிடத்தே பறப்பதாகவும் கருதலாம்.

ப்ரியங்கா மோகன் இன்று 27 வயது பூர்த்தி செய்கிறார். அன்னை கன்னடம், தகப்பன் தமிழ். எங்களூர் பெங்களூரில் பொறியியல் படித்திருக்கிறார். அவரது அழகின் தகுதிக்கேற்ற உயரத்தை, புகழை இன்னும் அடையவில்லை என்றே சொல்வேன். சமூக வலைதளங்களில் அவர் மிகக் குறைச்சலாகப் புழங்குவதும், ஃபோட்டோஷூட்கள் அதிகம் நிகழ்த்தாததும்தான் காரணம் எனத் தோன்றுகிறது.

விரைந்து அவற்றை நிவர்த்தி செய்து வெல்ல‌ வாழ்த்துக்கள். அழகும் வளமும் பல்கிப் பெருகட்டும்!

https://www.instagram.com/priyankaamohanofficial

https://twitter.com/priyankaamohan

*

நானறிந்த வரை ப்ரியங்காவின் முதல் ஒளி ஊடக அறிமுகம் சென்னையில் இருக்கும் MANAM என்ற ஜவுளிக் கடையின் தொலைக்காட்சி விளம்பரம்தான். செப்டெம்பர் 2018ல் வெளியாகி இருக்கிறது. அதிலேயே பிரமாதமாக இருக்கிறார்! அதில் வரும் வசனம் ஒன்று: "கல்யாணப் பொண்ணு ராணி மாதிரி இருக்க வேணாம்?" (இதில் முன்னாள் பாரதி கண்ணம்மா ரோஷினியும் ஓரமாக வருகிறார்.)

ப்ரியங்கா மோகன் நடித்த முதல் படம் Ondh Kathe Hellaவில் (கன்னடம்) மார்ச் 2019ல் வெளியானது. கிரிஷ் ஜி என்ற புதியவர் இயக்கியது. அமானுஷ்யப் படம். சின்ன பட்ஜெட். எல்லோருமே புதுமுகங்கள். ப்ரியங்காவுக்கு எந்தத் தனித்துவமும் இல்லாத பாத்திரம். அழகு, முகபாவம் என எதற்கும் வாய்ப்பற்ற படம். மொத்தமாகவே இரண்டு காஸ்ட்யூம்க‌ள். சொந்தக் குரலும் இல்லை. ஆவியை அண்ணாவென விளித்துக் கெஞ்சும் இறுதிக் காட்சியின் ஒரு துளி தவிர படத்தில் வேறெங்கும் ப்ரியங்கா மோகனின் ஆளுமை வெளிப்படவில்லை. அவரே மறக்க விரும்பும் படமாக இது இருக்கலாம். நாமும் மறப்போம்.

ப்ரியங்காவின் இரண்டாவது படமாகவும் தெலுங்கில் முதல் படமாகவும் அமைந்தது Nani's Gang Leader. 2019 செப்டெம்பரில் வெளியானது. யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் எடுத்தது. நானி நாயகன். பெரும்பாலும் சுவாரஸ்யமான படமே. பழிவாங்கும் கதை. டாக்டர் போன்ற கதைச் சூழல்தான். எனவே இதிலும் அழகு டாலாகவே ப்ரியங்கா வருகிறார். இதிலும் மக்கு போல் காட்டுகிறார்கள். ஒரு காட்சியில் வீடியோ கட்டுப்பாட்டு அறையில் நானியிடம் டாடி - மம்மி எனச் சொல்லி ஒரு முகபாவம் காட்டுவார் - இணையற்ற கலாப்பூர்வ உச்சம்! அதே போல் நானியிடம் சட்டை பொத்தானை நெகிழ்த்தச் சொல்லும் காட்சியில் அவர் பார்க்கும் வசீகரப் பார்வை, அடடா! 

இந்தப் படத்திற்கு இசை அநிருத். Ninnu Chuse Anandamlo என்ற ரொமான்ஸ் montage பாடல் இது.

அடுத்தது Hoyna Hoyna பாடல். அன்பிற்கான montage என்றாலும் இதிலும் ரொமான்ஸ் உண்டு.

கடைசியாக‌ Ra Ra என்கிற எழுச்சிப் பாடல். (இதில் குறைந்த நேரமே ப்ரியங்கா வருவார்.)

ப்ரியங்கா நடிப்பில் வெளியான மூன்றாவது படம் Sreekaram (தெலுங்கு). மார்ச் 2021ல் வெளியானது. கிஷோர் பி என்ற புதியவர் இயக்கி இருக்கிறார். நாயகன் சர்வானந்த் (எங்கேயும் எப்போதும் படத்தில் வந்தவர்). பசுமை விகடன் பாணி விவசாயக் கதை. சுமாரான படம். ப்ரியங்கா நடித்ததில் இதில்தான் screen time அதிகம். அதனாலேயே கொண்டாட்டத்துக்கு உரியதாகிறது. வழமை போலவே மெழுகு பொம்மை! மிகச் சிறிய பருக்களும் அழகூட்டவே செய்கின்றன. மற்ற படங்கள் போல் இதில் அவர் அழகான முட்டாள் அல்ல. ஆனால் அதை விடக் கொடுமையாக ப்ரியங்கா சர்வானந்தைக் காதலிக்கக் கோரி பின்னால் நச்சரித்துக் கொண்டு சுற்றுவதுதான். படம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

இதில் வரும் ரொமான்ஸ் பாடல் Bhalegundi Baalaa. ஒரு முரட்டுக் குழந்தையின் புன்னகை மாதிரி அழகு!

Hey Abbayi என்பது இதில் வரும் stalking பாடல். ப்ரியங்காவை அதீத உற்சாகத்துடன் காட்டிய பாடல்.

இப்படத்தின் எழுச்சிப் பாடல் இது (Title Track). இடையிடையே சில காட்சிகளில் மட்டும் வருவார்.

அடுத்தது சென்ற மாதத்தில் டாக்டர் வெளியானது. சிவகார்த்திகேயன் நாயகன். நெல்சன் திலீப்குமார் இயக்கம். டார்க் ஹ்யூமர் வகை குற்றவியல் கதை. ப்ரியங்கா மோகனை மிக ரசிக்க முடிந்த படம். (ஆனால் அவசியமின்றி அவரது பாத்திரம் முட்டாள் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.) ப்ரியங்கா மோகனின் தனித்துவம் டாக்டர் படத்தை நான்காம் முறை பார்க்கும் போதும் முதல் முறை பார்த்தது போன்ற அதே பரவசத்தையும் புல்லரிப்பையும் ஏற்படுதிய‌துதான். அவரது இருப்பால் ஒரு Fairy Tale-ஐ லாஜிக் பார்க்காமல் ரசிப்பது போல் டாக்டர் படத்துடன் நம்மால் ஒன்ற முடிகிறது.

இப்படத்தின் So Baby பாடல் அழகை அணு அணுவாய் ஆராதிக்கும் கலாரசனை! தமிழ் சினிமாவில் இத்தனை அழகான கதாநாயகி அறிமுகப் பாடல் வேறேதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அழகாய் இருப்பதாகச் சொன்னதும் பொதுவாக‌ இளித்து அந்தப் புகழ்ச்சியை சற்றே மங்கச் செய்வதே பெண்டிர் வழக்கு. ஆனால் இப்பாடலில் சிவகார்த்திகேயன் "But you look beautiful" என்றதும் "Thank you" என்று சொல்லி விட்டு அரைக் கணம் இடைவெளி விட்டு மெல்லத் தலையசைக்கிறார் ப்ரியங்கா மோகன். உடனே அப்புகழ்ச்சி போதாமல் போன குற்ற உணர்வில் நம் மனம் துணுக்குறுகிறது.

அடுத்து பெரிய ஹிட் அடித்த செல்லம்மா பாடல்.  எனக்குப் பாடல் பெரிய உவப்பில்லை என்றாலும் அழகு டாலுக்காகப் பார்க்கலாம். குழந்தைமையும் குமரித்தன்மையும் பிணையும் சூட்சமப் புள்ளி.

அடுத்து டாக்டர் படப் பாடல் வெளியீட்டு நிகழ்வில் இதே செல்லம்மா பாடலின் வீடியோவை முதல் முறை பார்க்கும் போது ப்ரியங்காவின் முகபாவங்கள். எனக்கு அசல் பாடலின் வீடியோவை விடவும் இதுவே மிகப் பிடித்தது. இதில் புன்னகை செய்வது போல் பாவனை செய்து விட்டு அதை முழுக்க நிறைவேற்றாமல் ஏமாற்றுவார் - லேசாக இதழ்கள் விரிப்பது போல் வந்து போக்குக் காட்டி விட்டு மலராத ஒரு சன்னப் பூவின் கள்ளத்தனக் கவித்துவம் போல! (மொபைல் எனில் portrait-ல் பார்க்கவும்.)

நெஞ்சமே நெஞ்சமே பாடல் படத்தில் குழந்தையைத் தேடும் montage பாடலாக வருகிறது. (ஆனால் வரிகளைக் கொண்டு பார்க்கும் போது அது பிரிவுத் துயர் அல்லது காதல் தோல்விப் பாடல்தான். அனேகமாக சிவகார்த்திகேயனை ப்ரியங்கா மறுத்த பின் வரும் பாடலாக இருந்திருக்கக்கூடும்.) இதன் சிறப்பு அழுகையிலும் அழகாக இருப்பது எப்படி என்று பாடம் நடத்தியிருப்பார் ப்ரியங்கா!

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் வேண்டாம் என ப்ரியங்கா மோகன் மறுத்துப் பேசும் காட்சிகள். அவரது உச்சப் பங்களிப்பு என அதையே சொல்லத் தோன்றுகிறது. அதன் ஒரு பகுதி வீடியோ மட்டும் இதில். (ப்ரியங்கா மோகன் இப்படிச் சொன்னால் இறந்த‌ ஒருவன் உயிரோடு எழுந்து வரக்கூடும்.)

இந்தத் தருணத்தில் பிகே வர்மா, கீர்த்தன் பூஜாரி, மிரொஸ்லா கூபா ப்ரோஸெக், ஜெ யுவராஜ், விஜய் கார்த்திக் கண்ணன், கேஎம் பாஸ்கரன், ஆர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி - ஒளிப்பதிவாளர்கள் கண்கள் வழியேதான் நாம் ப்ரியங்கா மோகனின் பேரழகை ரசித்துக் கொண்டிருக்கிறோம். 

*

அடுத்து ப்ரியங்கா மோகன் நடிப்பில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படம் (இயக்கம் சிபி சக்ரவர்த்தி), சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் (இயக்கம் பாண்டிராஜ்) ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அடுத்து விஜய், அஜீத், ஷங்கர், மணி ரத்னம் என மேலேறுவார் என்பதில் ஐயமில்லை.

அது போக டிக்டாக் என்றொரு பழைய படத்தைத் தூசு தட்டுகிறார்கள் போலிருக்கிறது. மதன குமார் என்பவர் இயக்கம். (அதில் ப்ரியங்கா சற்றே தாராளமாக நடித்திருப்பதாகவும் இப்போது டாக்டர் தந்த வெளிச்சத்தால் அதை வெளியிட முயற்சிப்பதாகவும் ப்ரியங்கா தடுக்கப் போராடுவதாகவும் கிசுகிசு. ஆனால் ட்ரெய்லரை வைத்துப் பார்த்தால் ப்ரியங்கா ஏதும் ஆபாசமாக நடித்திருப்பது போல் எனக்குத் தெரியவில்லை; இன்னொரு நடிகைதான் அவ்வாறு வருகிறார். இவர்கள் சும்மா ஊகத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, எனக்கு ஒன்று புரியவில்லை. என்ன மாதிரி நடித்தாலும் நமது மெழுகு டாலை ஒருவர் தவறாகவே பார்க்க முடியாது. அப்படி இருக்க எந்தப் படம் வந்தால் என்ன!)

அவரது அப்பா அருள்மோகனுக்கும் நமக்குப் பெயர் தெரியாத அம்மாவுக்கும் அன்பு. அதிதியாக‌, ப்ரியாவாக‌, சைத்ராவாக, பத்மினியாக இன்னும் நூறு பாத்திரங்களாக இவ்வையத்தை உய்விக்க வாழ்த்துக்கள்! பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கட்டும். வானை முட்டி நட்சத்திரம் தொடட்டும்.

***

  •  

Game of Thrones: கதாபாத்திரங்களின் கலைடாஸ்கோப்


2022 டிசம்பர் மாத மத்தியில் Game of Thrones பார்க்கத் தொடங்கினேன். மொத்தம் 8 சீசன், 73 எபிஸோட்கள். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் வேறு திரைப்படமோ வலைத்தொடரோ பார்க்கத் தோன்றாத அளவு தன்னுள் என்னை ஈர்த்துக் கொண்டது. இதில் தனிப்பட்டு நான் வியக்கும் விஷயம் முழுக்க ஆங்கிலத்திலேயே நான் பார்த்து முடித்த முதல் வெப் சீரிஸ் இதுதான். நண்பர்களின் உள்ளீடுகளோடு பல சந்தேக நிவர்த்திகளோடு பார்க்க ஆரம்பித்தாலும் போகப் போக எனக்கே புரியுமளவு அதன் கதையும், நடிகர்களின் உடல் மொழியும் எனக்கு பரிச்சயமாகி நெருக்கமாகிப் போனது நிச்சயம் அதன் வெற்றிதான்.


ஓர் இரும்புச் சிம்மாசனம். முள் கிரீடம் மாதிரி உறுத்தக் கூடிய ஓர் அரியணை. அதன் வடிவமைப்பே அரச பதவி என்பது எத்தனை மோசமான வலி தரும் போதை என்பதை உணர்த்துவது போல்தான் இருக்கிறது. அந்தச் சிம்மாசனத்திற்குத்தான் ஏழு அரச  குடும்பங்களுக்குள் போட்டி. ரத்தம் தெறிக்க வெறியுடன் நடக்கும் ஒரு மஹா சமர்.

தொடரின் முக்கிய அம்சம் அதன் பிரம்மாண்டம். மிக அதிக செலவு செய்து எடுத்த தொடராக GOT இருக்கும் என யூகிக்கிறேன். இன்னொரு முக்கிய அம்சம் நடிகர்கள் தேர்வு. மிகையாகத் தோன்றினாலும் - வழிபோக்கனாய்க் கடப்பவனைக் கூட அழைத்து ஆஸ்கார் தரலாம் எனுமளவு அத்தனை கதாபாத்திரங்களும் பொருத்தமான நடிப்பு.

GOT தொடர் எனக்கு மிகப் பிடித்திருப்பதால் அதன் நிறை குறைகளைப் பட்டியலிட்டு விமர்சிப்பது என்பதை விடவும் அதில் என்னை ஈர்த்த கதாபாத்திரங்களை நினைவு கூர்வதன் வழியே தொடரை மறுபடி மானசீகமாகப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

*

(1)
ஏழு ராஜ்யங்களுக்குள்ளான‌ (Kingdoms) போட்டி என்பதுதான் கதை என்றாலும் முக்கியப் போட்டி ஸ்டார்க் (Stark) குடும்பத்துக்கும் லானிஸ்டர் (Lannister) குடும்பத்துக்குமானது என்றே மனம் பதிவு செய்து வைக்கிறது. முதலில் அறிமுகமாவது ஸ்டார்க் குடும்பம். நம்மை அவர்  குடும்பத்தில் ஓராளாய் ஆக்குமளவு அதன் தலைவர் நெட் ஸ்டார்க்கின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நேர்மை, அறம், வாக்குத் தவறாமை என ஓர் அரசனுக்கான சகல‌ தகுதிகளோடும் மின்னும் மனிதர். அவருக்குப் பின் அவர் குடும்ப வாரிசுகள் சிலரின் குணநலன்கள் மாறிப் போன போதும் கூட கடைசி வரை ஸ்டார்க் வம்சம் மீது நிலைத்து விடும் ந‌ம் மரியாதைக்கு நெட் ஸ்டார்க்தான் முக்கியக் காரணம். நெட் ஸ்டார்ட் ஆக நடிகர் ஷான் பீன் வந்து, வாழ்ந்து நம்மை அசைத்து விடுகிறார்.

(2)
இச்சண்டையில் “சிம்மாசனம் ஆதி முதலே எங்களுடையது” எனக் களமிறங்குகிறாள் டார்கேரியன் (Targaryen) வம்ச டனேரஸ். கம்பீரமும், வீரமும் உடன் நற்குணமும் கலந்து செய்த பாத்திர வார்ப்பு கலீசி. சிறிய உருவம், சிறிய முகம். அப்படியான தோற்றமுடைய ஒருவர் அழுத்தமான வசனங்களைப் பேச தன்னம்பிக்கையும், கம்பீர உடல் மொழியும் வேண்டும். கலீசியாக வரும் எமிலியா க்ளார்க்கிற்கு அந்த இரண்டும் வாய்த்திருக்கிறது. குருவி தலையில் பனம் பழம் போல் இருந்தாலும் ‘ட்ராகன்களின் தாய்’ எனும் கனமான கதாபாத்திரத்தைச் சிறப்பாக ஏற்று நிற்கிறார். எல்லாம் தாண்டி ஒரு கள்ளமற்ற‌ சிரிப்பு வாய்த்திருக்கிறது எமிலியாவிற்கு. அவரிடம் ஈர்த்தவற்றில் அச்சிரிப்பு முக்கியமானது!

(3)
அடுத்து ஆர்யா ஸ்டார்க். தொடர் தொடங்குகையில் சின்னஞ்சிறுமியாய் அறிமுகமாகும் பாத்திரம். வாட்சண்டையிலும் அம்பெய்வதிலும் ஆர்வம்மிக்க துடுக்குத்தனமான சிறுமி. துரோகங்களை எதிர்கொள்ளும் ஓர் எளிய மனமுடைய‌ சிறுமியை, அதன் இன்னல்கள் காலப்போக்கில் அழுத்தி ஓர் ஆக்ரோஷமான நாயகியாக‌ ஆக்குகிறது என்பதற்கான உதாரணம் ஆர்யா. பணிப்பெண்ணாக ஊடுருவும் ஆர்யா ஸ்டார்க்குக்கும் டைவின் லானிஸ்டருக்கும் நடக்கும் உரையாடல்கள் அத்தனை சுவாரஸ்யமானவை. ஆர்யாவாகச் சிறப்பாக நடித்திருக்கிறார் மெய்ஸி வில்லியம்ஸ்.

(4)
சான்சா ஸ்டார்க் பேராசையும், சுயநலமும் கொண்ட இயல்பான பெண் கதாபாத்திரம். எவ்வளவு மோசமான பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த அழகை ரசிக்கவே அத்தனை அழிவையும் சந்திக்கலாம் என்று நாம் எண்ணுமளவு ஓர் அழகு. GOT தொடரில் மிக அழகான பெண் இவர்தான். பூ மாதிரி எனப் பெண்களை தமிழில் வர்ணிப்பதுண்டு. சான்சா பூவேதான். அது தாண்டி அப்பாத்திரம் அசாத்திய உயரம் கொண்டிருக்கிறது. சான்சாவின் ஆங்கில உச்சரிப்பு கவர்கிறது. கோபமாய்ப் பேசினால் வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று கருணையுடன் அவள் பேசுவது போலிருக்கிறது. அப்பாத்திரத்தில் அழகாக நடித்திருக்கும் நடிகையான‌ சோஃபியின் பெயருமே அழகாய்தான் இருக்கிறது.

(5)
நெட் ஸ்டார்க் இறந்த பிறகும் ஒரு விதத்தில் அவரது வாரிசுகளின் வழி அவரது குணம் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். எதிரில் லானிஸ்டர் குடும்பத்தின் வாரிசுகளின் குணங்களில் டைவின் லானிஸ்டர் தெரிந்து கொண்டே இருப்பார். ஒரு வயதேறிய‌ பாத்திரத்தை இத்தனை ரசிக்க முடியுமா என நானே என்னைப் பல முறை கேட்டுக் கொள்ளுமளவு அத்தனை பிடிக்கும். (அதன் விளைவுதான் ரஜினி இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டும் என்ற என் ஆசை.) ஒல்லியான உயரமான உறுதியான தேகம். What a man! என வாய் பிளக்க வைக்கும் கம்பீரம். வசன உச்சரிப்பில் வேகம், ஸ்டைல். ஒரு காட்சியில் பத்து பேர் இருந்தாலும் நம் கண்கள் இவரைத் தாண்டி வேறெங்கும் பாராது எனுமளவு ஆளுமை. டைவின் அறிமுகமாகும் காட்சியே அட்டகாசமான உரையாடல். மானின் தோலை உரித்துக் கொண்டே மகன் ஜெய்மியுடன் அவர் உரையாடும் அந்த கணமே “யார்ரா இந்தாளு!” என நிமிர்ந்து அமர வைக்கிறார். இன்னும் பல காலத்திற்கு என்னைக் கவர்ந்த பாத்திரமாக டைவின் லானிஸ்டர் இருப்பார். இந்தப் பாத்திரத்தில் நடித்திருப்பவர் சார்ல்ஸ் டான்ஸ். ருத்ரதாண்டவமே ஆடித்  தீர்த்திருக்கிறார் எனலாம்.

(6)
செர்சி எனும் நீலாம்பரி. லானிஸ்டர் வம்சத்தின் மூத்த வாரிசு. தொடரின் எதிர்மறை கதாபாத்திரங்கள் பலவற்றை நாளடைவில் ரசிக்க முடிந்தது. அதாவது எதிர்மறைக் கூறுகளின் நியாயங்களோடு ஏற்க முடிந்தது. ஆனால் கடைசி வரை வெறுத்த ஒரு பாத்திரம் செர்சி! அதுவே அவரது நடிப்பின் வெற்றி. அவர் தண்டனை பெற்று தெருவில் நிர்வாணமாய் நடந்து வரும் காட்சி ஒன்று உண்டு. அதைப் பார்த்த பின் எப்படி அப்படி நடித்தார் என்ற கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. காரணம் நிர்வாணம் மட்டுமல்ல. அந்த நிர்வாண நடையில் அவரது முக பாவமும் உடல் மொழியும். அவமானம் உழன்ற அந்த உடல்மொழி, அதன் பின்னான பழிவாங்கலை ஆலோசிக்கும்  முகம் என மிரட்டி இருந்தார். லீனா ஹேடி இந்தப் பாத்திரத்தில் நடித்து இதற்கு நியாயம் செய்துள்ளார்.

(7)
நெட் ஸ்டார்க்கின் எல்லா நல்ல‌ம்சங்களும் கொண்ட வாரிசு ஜான் ஸ்னோ. “நீ எப்படியாவது ஜெயிச்சுடறா” என மனம் மன்றாடும் அளவு பிடித்த ஹீரோ. ஆனால் இறுதியில் வாரிசு என்பதே முக்கியத் திருப்பமாகிப் போகிறது. சரி, நல்லவர்களைப் பற்றி அதற்கு மேல் கூற என்ன இருக்கிறது! இதில் கிட் ஹாரிங்டன் நடித்திருக்கிறார்.

(8)
நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு - கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே. இன்னொரு நம்பிக்கையும் உண்டு. உயரம் குறைவானோர் அதிபுத்திசாலிகளாய் இருப்பர். ஆனால் இந்த‌ இரண்டுமே நம் இந்திய படங்களில் வெளிப்படாது. உயரம் குறைந்தவர்களை வில்லனாகவோ, அதிபுத்திசாலியான கதாபாத்திரமாகவோ காட்டாமல் பெரும்பாலும் நகைச்சுவை அல்லது கோமாளி கதாபாத்திரங்கள்தாம் அவர்களுக்கு கிடைக்கும் (ஒரே விதிவிலக்கு ‘அபூர்வ சகோதரர்கள்’ கமல்). அதிலும் கூட நடிகர் உண்மையில் உயரம் குறைவானவர் அல்ல. ஆனால் இத்தொடரில் வரும் டிரியன் லானிஸ்டார் ஆச்சர்யப்படுத்துகிறார். டிரியன் நல்லவர், புத்திசாலி, குடும்பத்தால் வஞ்சிக்கப்படுபவர், காதலியால் துரோகம் இழைக்கப்படுபவர். இத்தனையும் தாண்டி பிழைத்திருக்க அவர் கையாளும் திட்டங்களும் புத்தி கூர்மையும் தொடர் நெடுக நம்மை வசீகரிக்கின்றன. ஆங்காங்கே இவர் அள்ளித் தெளிக்கும் பன்ச் டயலாக்குகள் சுவாரஸ்யம். எனக்கு பிடித்த எல்லா கதாபாத்திரங்களுடனும் டிரியன் பயணிக்கிறார். உதவுகிறார். இதில் நடித்திருக்கும் பீட்டர் டிங்க்லஜின் குரலும் கூடுதல் வசீகரம். அந்த உச்சரிப்புகளைக் கூட பெரும்பாலும் முக பாவத்திலேயே புரிய வைத்து விடுகிறார்.

(9)
ஜெய்மி லானிஸ்டர் இரட்டையராய் பிறந்த சகோதரியுடன் பிறழ் உறவு கொண்ட முகம் சுளிக்க வைக்கும் கதாபாத்திரமாக அறிமுகமாகிறார். கண்டதுமே வெறுக்கும் அளவு பிடிக்காமல் பார்க்க தொடங்கிய ஒரு கதாபாத்திரம் தொடர் நகர நகர தனக்குள் இருக்கும் நல்ல பண்புகளை சூழ்நிலைகளால் வெளிக் கொணர்கிறார். ஜெய்மிக்கும் ப்ரையனுக்குமான நட்பு அல்லது மெல்லிய ஈர்ப்பு அழகான கோடு. தன் அத்தனை நல்ல குணங்களையும் சகோதரியுடனான காதலின் காலடியில் வைத்துச் சரணடைந்து சாகிறார். டிரியன் தன் சகோதரனிடம் கூறும் ஒரு வசனம் இந்தக் கதாபாத்திரத்தின் சாரத்தை ஒற்றை வாக்கியத்தில் வெளிப்படுத்தும் - “நீ செர்சியிடம் ஏமாறவில்லை, அவள் ஏமாற்றுக்காரி என்பது தெரிந்தேதான் காதலித்தாய், காதலிக்கிறாய்”. தன்னை பயன்படுத்திக் கொள்வது தெரிந்தும் காதலுக்காக தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒரு கதாபாத்திரம். நிக்கோல் காஸ்டர்-வால்டவ் என்பவர் இப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

(10)
இந்த முக்கியமானவர்கள் தாண்டியும் ஏகப்பட்ட பாத்திரங்கள் எனக்குப் பிடித்திருந்தன‌. அதில் என்னை மிகக் கவர்ந்தவர் சர் ஜோரா. இன்னொருவர் சர் டோவஸ். மார்கரியின் பாட்டியாக வரும் பெண்மணியும் மிகப் பிடித்திருந்தது. கொடூர சைக்கோ பாத்திரமான ராம்சேவை பற்றி எழுதக் கூட பிடிக்கவில்லை என்னுமளவு சிறப்பாக‌ நடித்திருக்கிறார்.

*

நான் புரிந்து கொண்ட வரை Game of Thrones-ல் நல்லவர் - கெட்டவர் என்பதை விடவும் நல்லவை, கெட்டவவை பற்றிப் பேசுகிறது. துரோகம், கீழ்மை, அதனூடே வெளிப்படும் மனிதம் எல்லாம் கலந்ததுதான் மானுடம் என்ற கருத்து தொடர் நெடுகிலும் கடத்தப் பட்டுக் கொண்டே இருக்கிறது. அரச‌ பதவி என்பது தலைக்கு மேலேயும், இருக்கைக்கு கீழேயும் கத்திகளுடைய ஓர் அதிகார இருக்கை என்பதும் நமக்கு நன்கு உறைக்கிறது.

GOT ஒரு கதை என்பதை விட ஓர் அனுபவம் என்றே சொல்வேன். நிச்சயம் பார்க்கலாம்.

(பின்குறிப்பு: எண்ணற்ற நிர்வாணக் காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் உண்டு.)

***

  •  

ஃபகத் எனும் சாத்தான்

ரஜினியைத் தவிர திரையில் இன்னொருவரை இத்தனை ரசிப்பேன் என‌ 'வேலைக்காரன்' படம் வருவதற்கு முன் எவராவது சொல்லியிருந்தால் நானே நம்பி இருக்க மாட்டேன். தலைவர் நடித்த‌ 'வேலைக்காரன்' இல்லை; தலைவன் நடித்த‌ வேலைக்காரன். தலைவர் ரஜினி; தலைவன் ஃபகத்!

சிவகார்த்திகேயன் நாயகனாக வந்து போன‌ 'வேலைக்காரன்' படத்தில்தான் எனக்கு ஃபகத் ஃபாசில் எனும் நடிகன் அறிமுகம். அதற்கு முன் நஸ்ரியாவின் கணவன் என்ற அளவில் நிழற்படங்களில் மட்டுமே பார்த்து எந்தக் கோணத்திலும் பெரிதும் கவராத ஒரு முகமாகவே மனப்பதிவு. 'வேலைக்காரன்' பார்த்த போதுதான் "என்னடா, இந்தாளு!" என்ற‌ புருவ உயர்த்தல் வந்தது.


பொதுவாவே மலையாளிகளின் தமிழ் உச்சரிப்பில் ஒரு கவர்ச்சி இருக்கும். அதுவும் ஆண்களுக்கு ஒருபடி அதிகமாகவே. அப்படி ஒரு குரல் வசீகரம்தான் நம்மை ஈர்த்திருக்கும் போல ("அட, அவளும் பெண்தானே!" மொமண்ட்) என‌ச் சுய‌சமாதானம் செய்து கடக்க முயன்றாலும் அதை மீறி சாத்தியமற்ற‌தொரு நடிப்பைக் கண்களில் கொண்டு வந்து நிறுத்திய கயவன் ஃபகத்.

அந்த படத்துக்கு பின்னும் கூட‌ ஃபகத் பற்றி அதிகமாக‌ யோசிக்கவில்லை. அந்தச் சமயத்தில்தான் 'தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்ஷியும்' படம் தேசிய விருது பெற்று பரபரப்பாக சமூக இணைய தளங்களில் பேசப்பட்டது. "அட, இந்தாளா!" என‌த் தேடி பார்த்த பிறகுதான் மொத்தமாக‌ விழுந்தேன்.

'சிவா' படத்தில் ரஜினியைப் பாத்து ஷோபனா சொல்வார்: "நீயும் உன் பரட்டை தலையும் கருப்பு தோலும். ஆனா உன்கிட்ட என்னமோ இருக்குய்யா". அந்த‌ வசனத்தை ஃபகத்துக்கும் பொருத்தலாம். வெகுஜனம் பொதுவாய் சினிமா நாயகர்களிடம் எதிர்பார்க்கும் எதுவும் இல்லாதவர். சிக்ஸ் பேக் உடலோ, பெரிய உயரமோ, மாஸ் தோற்றமோ இல்லாத (அவ்வளவு ஏன், தலையில் கேசம் கூட இல்லாத) தோற்றம் கொண்ட‌ ஓர் ஆள். ஆனால் ரசிக்க வைக்கும் நடிப்பு. வினோதம் என்னவென்றால் அந்த நடிப்பை ரசிக்கத் துவங்கி, மெல்ல அந்த உருவத்தையும் ரசிக்க ஆரம்பித்து விடுவோம். ஆம். என்னமோ ஒண்ணு இருக்குய்யா... அந்தக் கண்களில்... அந்தச் சிரிப்பில்... ❤️

'தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்ஷியும்' படத்தில் இடைவேளைக்கு முந்தைய காட்சி. நகையை எடுக்கவில்லை என மறுத்துக் கொண்டிருக்கும் திருடன் ஃபகத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார்கள், சங்கிலி வயிற்றுக்குள் இருக்கும். அப்போது வரை பார்வையாளர்களான‌ நமக்கே கூட ஃபகத்தான் எடுத்தாரா, இல்லை வேறு எவர் கைக்கும் போய் விட்டதா என்ற குழப்பம் வருமளவு எடுக்கவே இல்லை எனச் சாதிப்பார். எக்ஸ்ரே காட்சிக்கு அடுத்ததாக‌ திருட்டுக் கொடுத்த பெண்ணைப் பாத்து ஒரு விஷ‌மச் சிரிப்பு உதிர்ப்பார். அத்தனை திருட்டுத்தனத்தையும் அந்த கண்கள் பிரதிபலிக்க, அப்படி ஒரு சிரிப்பு! ('பாபநாசம்' படத்தில் எருமையைத் தோண்டி எடுக்கும் காட்சியில் கமல் ஹாசனின் பார்வையை இங்கே ஒப்பிட்டு, எது இயல்பான‌ சிறந்த நடிப்பு என யோசிக்கலாம்.)



இப்படத்திற்குப் பின்பே ரசிகை என்ற சுழலில் சிக்கினேன். அடுத்ததாகப் பார்க்க வாய்த்த படம் நார்த் 24 காதம். முற்றிலும் வேறு ஒரு கதாபாத்திரம். ஓசிடி பிரச்சனையுள்ள, எதிலும் கண்டிப்பும் கறாருமாகச் சுத்தம், ஒழுக்கத்தை கடைபிடிக்கும் பாத்திரம். பாத்திரத்தை விடுங்கள், அது எல்லா நடிகர்களும் பற்பல வேஷ‌ம் கட்டுகிறார்கள், மணிக்கணக்கில் ஒப்பனை செய்கிறார்கள், சமயங்களில் சிறப்பாக‌ நடிக்கவும் செய்து விடுகிறார்கள். ஆனால் உடல்மொழி என ஒன்று இருக்கிறதல்லவா! அந்தந்த கதாபாத்திரத்துக்கு என அவர்கள் மெனக்கெட்டு ஒரு பாடி லேங்வேஜ் கொண்டு வந்தாலும் அதைத் தாண்டி அவங்களின் சொந்த மேனரிசம் வெளிப்பட்டு விடும். கமல், ரஜினி, தனுஷ் என்ற‌ நடிப்பு அசுரர்கள் கூட எந்தப் பாத்திரத்தில் வந்தாலும் எத்தனை சிரத்தை எடுத்தாலும் அதை மீறி அதில் கமலும் ரஜினியும் தனுஷம் தெரிவார்கள். அது அவர்கள் ஆளுமையாக‌ இருக்கலாம் அல்லது அவர்கள் பிம்பம் நம்முள் ஏற்படுத்திய‌ ஆழ்மன விருப்பத்தின் விளைவாகவும் இருக்கலாம். அது அக்கதாபாத்திரத்தைத் தாண்டி அந்த நடிகர்களாக அவர்களைப் பார்க்க வைத்து விடும். ஆனால் ஃபகத்திடம் மட்டும் அது நடக்காது. அந்த கதாபாத்திரத்தின் உடல் மொழி தாண்டி அதில் ஃபகத்தை பார்க்கவே முடியாது. திருடனா, சைக்கோவா, தாழ்வு மனப்பான்மை கொண்ட‌ ஒருவ‌னா எதுவென்றாலும் நாம் அந்தப்பாத்திரத்தை மட்டுமே பார்க்க முடியும். அந்தப் பாத்திரத்தையே நாம் விரும்புவோம், வெறுப்போம், பரிதாபப்படுவோம்; ஃபகத்தை அல்ல. நார்த் 24 காதம் படத்தில் அப்படி ஒரு பாத்திரமும், அதற்கேற்ற உடல்மொழியுமாய் ஃபகத் மேலான வியப்பு அதிகரித்தது. இதை மேலும் சிலபல படங்கள் பார்த்து உறுதி செய்து கொண்டேன். இது நம்பவியலாத அசாதாரணம்! (North 24 Katham காட்சிகள்: https://www.youtube.com/watch?v=0QZwmrB1qkM)

அப்பறம் ஆர்ட்டிஸ்ட் என்று ஒரு படம். ஒரு ஓவியன். பெருங்கலைஞன். அவனுக்கு ஓவியத்தை தவிர வேறேதும் முக்கியமில்லை. வரைவதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் துணிகிற‌வன், எந்தச் சமரசமும் இன்றி தன் கலையை முன்னெடுக்கிறவன். தன் மேல் அபாரத் தன்னம்பிக்கையும், தெனாவெட்டும் நிறைந்த‌ இளைஞன். அப்படிப்பட்டவன் வாழ்க்கையில் வரும் ஒரு பெண். எந்த வேலை வெட்டிக்கும் போகாம ஓவியம் வரைவதையே முழு நேரமும் செய்கிற‌ காதலனுக்காக ஓடி ஓடி உழைத்து கேன்வாஸூம், பிரஷூம் வாங்கித் தருகிறவள். ஒரு விபத்தில் கண் பார்வையை இழக்கிறான் நாயகன். ஓவியனுக்குப் பார்வை போனால் என்னாகும்? அந்த வலியை, அதன் சிக்கல்களை விரக்தியும் பகடியுமாக‌ வெளிப்படுத்தும் கதாபாத்திரம். ஒரு கட்டத்தில் "ச்சே... என்ன கருமம்டா இந்தாளு!" என‌ நம்மையே கடுப்பேற்றும் கேரக்டர். பார்வை போன பிறகும் ஓவியம் வரைவதை விடாத முயற்சியும், இயலாமையில் வெடிப்பதுமாக‌ சைத்தானாக‌ மாறி இருப்பார். படத்தில் கதாநாயகியான Ann Augustine-க்கும் கனமான பாத்திரம். அருமையான தேர்வு; அட்டகாசமான நடிப்பு. ஆனாலும் 'மூன்றாம் பிறை'யில் ஸ்ரீதேவி பாடுபட்டு நடித்ததை விட அசால்டாக‌ கமல் ஸ்கோர் பண்ணினதைப் போல ஃபகத் இதில் நம் மனதை அள்ளிப் போய் விடுவார்.

ஃபகத்தின் கண்கள் ஒருவிதமான கண்ணாடித்தன்மை கொண்டவை. பரிசுத்தமான துல்லிய ஒளியெறியும் கண்கள். அவர் ஏற்கும் கதாபாத்திரத்தைப் பெரும்பாலும் பிரதிபலிப்பவை அந்தக் கண்கள்தாம். ஆனால் பார்வையற்ற கதாபாத்திரத்தில் அப்படி கண்கள் வழி உணர்வுகளை வெளிப்படுத்துவது சிரமம்தானே! வெளிப்படுத்துவதைக் கூட‌ விடுங்கள், அப்படியே கண்களால் பேசி நடிக்கும் ஒருவனுக்கு அதை மறைப்பது இன்னும் சிரமம் அல்லவா! ஆனால் அந்த இருளிலும் வெளிச்சம் தந்திருப்பார் ஃபகத். (Artist ட்ரெய்லர்: https://www.youtube.com/watch?v=Ml2IAPNCdTY)

'மகேஷின்ட பிரதிகாரம்' படத்தில் வியந்த விஷ‌யம் ஒரு வரிக் கதையை இந்த மலையாளிகள் எப்படி முழுநீளப் படமாக்கி விடுகிறார்கள் என்பது. அதை விட ஆச்சரியம் அந்த ஒரு வரிக் கதைக்கு இந்த ஃபகத் படம் முழுக்கக் கொடுக்கும் முகபாவங்கள். தன் காதலியின் திருமணத்தின் போது வலியோடு லேசாய்ச் சிரித்த‌படி வண்டியில் அமர்ந்திருக்கும் காட்சி ஒரு சோற்றுப்பதம். ஒரு பழிவாங்கலுக்கான காத்திருப்புதான் படம். தொளதொளவென ஒரு சட்டையும் மடித்துக் கட்டிய‌ வேட்டியுமாய் சராசரி இந்தியக் குடிமகனுக்கான அப்பாவித்தனமும் வைராக்கியமும் நிறைந்த அப்பாத்திரத்துக்கு ஃபகத் செய்தது அநியாய‌ நியாயம். ('நிமிர்' என்ற பெயரில் இப்படம் பின்னர் தமிழிலும் வந்தது.)

சுமார் 50 படங்கள் வரை ஃபகத் நடித்திருப்பதாக அறிகிறேன். இதில் அன்னையும் ரசூலும், இந்தியன் பிரணய கதா, டயமன்ட் நெக்லஸ், காட்ஸ் ஓன் கன்ட்ரி, கும்பளாங்கி நைட்ஸ், வரதன், 22 ஃபீமேல் கொட்டாயம் தொடங்கி சமீபத்திய டிரான்ஸ், ஜோஜி வரை நான் பார்த்த படங்களில் படங்களின் சுவாரஸ்யம், உள்ளடக்கம் போன்றவற்றில் முன்பின் கருத்து மாறுபட்டாலும் ஃபகத்தின் நடிப்பில் குறை தோன்றியதே இல்லை. (Kumbalangi Nights காட்சிகள்: https://www.youtube.com/watch?v=rRwIsacio0M)

உருவத்தை வர்ணித்து விடலாம், ஆனால் உணர்வுகளைச் சொற்களில் கொண்டு வருவது ரொம்பச் சிரமமான காரியம், அனுபவித்தால் மட்டுமே முழுமை பெறும். போலவே, ஃபகத் நடிப்பின் சிறப்பை நான் எப்படி விலாவாரியாய் விவரித்து எழுதினாலும் நீங்கள் பார்க்கையில் கிடைக்கும் அனுபவம் இன்னும் ஆழமானதாக‌, வேறொன்றாக‌ இருக்கும். அதனால் நீங்களே பார்த்துத் தீர்மானியுங்கள்.

தேசிய விருது, மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் என‌ வாங்கிக் குவித்திருக்கும் ஃபகத் தனக்கு ரசிகர் மன்றங்கள் அமைக்கப்படுவதை அனுமதிக்கவில்லை. தொலைக்காட்சிப் பேட்டியொன்றில், "20 முதல் 30 வயதுக்குள்ளான இளைஞர்களே அதில் அதிகம் ஈடுபடுவார்கள், அவ்வயது அவர்கள் தங்களை உருவாக்கிக் கொள்ள‌ அத்தியாவசியமானது, அதை நான் எடுத்துக் கொள்ள‌ விரும்ப வில்லை, சினிமாவுக்கு ரசிகர்கள் போதும், நடிகனுக்கு வேண்டாம்" என்று ஃபகத் சொன்ன சமூகப் பொறுப்பை வியக்கிறேன். அவரழகில் ஒரு சிட்டிகை கூடிய கணம் அது!

நான் பார்த்த எந்த படத்திலுமே ஃபகத் ஓர் ஆக்ஷ‌ன் ஹீரோவாக‌ பன்ச் டயலாக் பேசியதில்லை. சமுதாயத்தை திருத்த முன் நிற்கும் எடுத்துக்காட்டான கதாபாத்திரமோ, கம்பீரம் மிக்க டான் / காட்ஃபாதர் பாத்திரங்களிலோ வந்ததில்லை. ரொம்ப ரொம்பச் சதாரண மனிதர்களையே, சராசரி மக்களையே பிரதிபலித்த கதாபாத்திரங்கள் ஃபகத்துடையவை. அவ்வகையில் ஃபகத் உங்களை, என்னைப் போன்ற உதிரிகளை திரையில் உயிரூட்டும் ஓர் அசலான மக்களின் கலைஞன்!

மாஸ் ஹீரோவான ரஜினியை ரசித்த எனக்கு ஃபகத்தையும் பிடிக்கிறது என்பதே ஆரம்பத்தில் ஆச்சரியமாக‌ இருந்தது. ரஜினி என்பது குதூகலம், மகிழ்ச்சி என்றால் ஃபகத் என்பது நிதர்சனம், யதார்த்தம். இரண்டும் இரு வேறு துருவங்கள். ஒன்றிலிருந்து மற்றதற்கு நகர்வது கனவிலிருந்து நனவுக்குள் புகுவது போன்ற அனுபவம்! மர நிழலின் மடியிலிருந்து வெயிலின் கதகதப்பில் நுழைவது போல்! கூடுதுறைப் படிக்கட்டிலிருந்து குளிர்ந்த‌ ஆற்று நீருள் பாதம் அமிழ்த்துவது போல்!

இரண்டும்தான் வேண்டும்.

*

  •  

’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்  

கேரளத்தின் மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய் இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த் துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு நாகங்கள் பின்னிப்பிணைந்து  பக்கத்திற்கு ஒன்றாக படமெடுத்து ஆடுகின்றன
  •  

கவசத் திரை

போக்குவரத்து நிறுத்தத்தில் எங்களுக்கு எதிரில் நின்ற வண்டியில் அடுக்கடுக்காகத் தலைக்கவசங்கள். ஐம்பது, நூறு, இருநூறுகூட இருக்கலாம்.

அந்தச் சிறிய, இரு சக்கர வண்டியில் அத்தனைத் தலைக்கவசங்கள் பொருத்தப்பட்டிருந்ததே ஓர் அழகிய காட்சிதான். முதலில், இருபது அல்லது இருபத்தைந்து தலைக்கவசங்களை ஒன்றின்மீது ஒன்றாகப் பொருத்திக் கட்டிக் கோபுரம்போல் ஆக்கியிருக்கிறார்கள். பின்னர் அந்தக் கோபுரங்களை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டி மொத்தமாகத் தூக்கி வண்டியின் பின் இருக்கையில் நிறுத்திக் கட்டியிருக்கிறார்கள்.

இதனால், அந்த வண்டியை ஓட்டுபவர் ஆணா, பெண்ணா, இளைஞரா, நடுத்தர வயதா என்றுகூடப் பார்க்க வழியில்லை, ஹெல்மெட்களின் திரை அவரை மறைத்துவிடுகிறது.

சிறிது நேரத்தில் பச்சை விளக்கு எரிந்தது. எங்கள் ஓட்டுநர் அவருக்கு முன்னதாக விரைந்து செல்ல, ஆவலுடன் திரும்பிப் பார்த்தேன்.

அந்த விற்பனையாளர் (அல்லது தயாரிப்பாளர்) இளைஞர்தான். அத்தனைத் தலைக்கவசங்களின் கனத்தைச் சமாளித்துக்கொண்டு திறமையுடன் வண்டி ஓட்டினார். அவரும் ஒரு தலைக்கவசம் அணிந்திருந்தார். பின்னால் அடுக்கடுக்காகக் கட்டப்பட்டுள்ள அதே சரக்குதான்.

அவர் செல்கிற வழியில் மரங்களும் குரங்குகளும் இருந்தால் ஒரு சுவையான நவீனக் கதை நமக்குக் கிடைக்கும்!

  •