நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்

ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வசித்துவந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சந்தைக்குச் சென்று விறகு வெட்டிக் கொடுத்து சம்பாதித்து வந்தான். ஒருமுறை அவனுடைய ஊரை அடுத்து இருந்த இன்னொரு ஊரின் வாரச்சந்தைக்குச் சென்றிருந்தான். அங்கு பூக்கடை வைத்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து மனத்தைப் பறிகொடுத்தான். அதற்குப் பிறகு அவளைப் பார்ப்பதற்காகவே அந்த ஊரில் நடைபெற்ற சந்தைக்கு ஒவ்வொரு வாரமும் செல்லத் தொடங்கினான். அந்தப் பெண்ணிடம் எப்படியோ பேச்சுக் கொடுத்து அவள் மனத்தில் இடம் பிடித்துவிட்டான்.
இருவரும் பேசிப்பேசி தம் காதலை வளர்த்துக்கொண்டனர். அவனுக்கும் பெற்றோர் என சுட்டிக்காட்ட ஒருவரும் இல்லை. அவளுக்கும் பெற்றோர் இல்லை. அதனால் அவர்களுடைய காதலுக்குத் தடை சொல்ல ஒருவரும் இல்லை. அதனால் அவர்களாகவே ஒரு நல்ல நாள் பார்த்து ஒரு கோவிலில் தெய்வத்தின் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒரே ஊரில் வசித்தார்கள். ஒவ்வொரு பொழுதும் ஆனந்தமாகக் கழிந்தது. அவன் காலையில் எழுந்ததும் கோடரியை எடுத்துக்கொண்டு விறகுவெட்டக் கிளம்பிவிடுவான். அவளும் பூந்தோட்டத்துக்குச் சென்று பூக்களை வாங்கிவந்து மாலையாகக் கட்டி விற்பதற்காகக் கிளம்பிவிடுவாள். அவர்கள் சம்பாதித்துக் கொண்டுவரும் பணம் அவர்களுடைய தேவைக்குப் போதுமானதாக இருந்தது. இருவருடைய இல்வாழ்க்கையும் இனிமையாகக் கழிந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் நேசத்தோடு பார்த்துக்கொண்டனர். திருமணமாகி ஐந்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை பிறக்கவில்லை. அது ஒன்றுதான் அவர்களுக்கு மனக்குறையாக இருந்தது.
அக்கம்பக்கத்தில் உள்ள எல்லாக் கோவில்களுக்கும் அவர்கள் சென்று குழந்தைக்காக வேண்டிக்கொண்டனர். ஓராண்டுக்குப் பிறகு ஒரு வழியாக அவள் கருவுற்றாள். அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தைக்கு நான்கு வயது நடக்கும்போது, திடீரென அவள் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். விறகுவெட்டிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
நான்கு வயது பிள்ளையை தனியாக வளர்க்க அவன் படாத பாடுபட்டான். விறகு வெட்டச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அச்சிறுவனையும் அவன் அழைத்துக்கொண்டு செல்லவேண்டியதாக இருந்தது. அவனால் விறகு வெட்டுவதிலும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. சிறுவனையும் சரியான முறையில் பார்த்துக்கொள்ள முடியவில்லை. கடைசியாக வேறு வழி தெரியாமல், சிறுவனைப் பார்த்துக்கொள்வதற்காக இன்னொரு பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொண்டான்.
தாயில்லாத சிறுவனுக்குத் தாயாக இருந்து நல்லவிதமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பல விதங்களில் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துத்தான் அவன் அந்தத் திருமணத்தைச் செய்துகொண்டான். புதிதாக வந்த மனைவியும் தொடக்கத்தில் அச்சிறுவனிடம் மிகுந்த பாசத்தோடு இருந்தாள். சிறுவனும் அந்தப் பெண்ணிடம் கிடைத்த தாய்ப்பாசத்தில் மகிழ்ந்து கவலையில்லாமல் இருந்தான். சித்தியாக இருந்தாலும் அம்மா என்றே அழைத்து மகிழ்ந்தான்.
எல்லாமே அவளுக்கு என ஒரு குழந்தை பிறக்கிறவரை சரியாகத்தான் இருந்தது. அதற்குப் பின் அவள் குணம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அந்தச் சிறுவனை அவள் வெறுக்கத் தொடங்கினாள். அற்பமான விஷயங்களுக்கெல்லாம் அவன்மீது கோபம் கொண்டு வசைபாடினாள். அவனுடைய தேவைகளை உதாசீனம் செய்யத் தொடங்கினாள். அச்சிறுவன் வயதில் சின்னவனாக இருந்தாலும் தன் சித்தியிடம் ஏற்பட்டிருக்கும் வேறுபாட்டை எளிதாகப் புரிந்துகொண்டான். அதனால் தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு அவள் சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தான். அவள் அச்சிறுவனை ஓர் அடிமை போல நடத்தினாள்.
ஒருநாள் அவளை அவன் அம்மா என்று அழைத்தபோது ‘இனிமேல என்னை அம்மான்னு கூப்புடாத, புரியுதா? நானா உன்ன பெத்தேன்? யாரோ ஒருத்தி உன்ன பெத்துட்டு என் தலையில கட்டிட்டு போயிட்டா. ஒழுங்கா சித்தின்னு கூப்புடு’ என்று கடுமையான குரலில் சொன்னாள். அவனும் அன்றுமுதல் அம்மா என்று அழைப்பதை விட்டுவிட்டான். தனிமையில் இருக்கும்போது அதை நினைத்து அவனுக்கு அழுகையாக வரும். சிறிது நேரம் அழுது மனவேதனையைக் குறைத்துக்கொள்வான்.
சிறுவன் பத்து வயதைத் தொடும் வரை அவள் அமைதியாக இருந்தாள். பிறகு ஒருநாள் கணவன் நல்ல மனநிலையில் இருந்த சமயத்தில் ‘இன்னும் எத்தனை நாளுக்கு இவனை இப்படியே வீட்டுக்குள்ள வச்சிருக்கறது? பத்து வயசு ஆயிடுச்சி. இப்பவே உலகத்தைப் புரிஞ்சிக்கறதுக்கு அவனைப் பழக்கினாதானே நல்லது’ என்று சொன்னாள்.
‘சரி, அதுக்கு இப்ப என்ன செய்யலாம்?’ என்று கேட்டான் கணவன்.
‘நீ வேலைக்குப் போற இடத்துக்கு அவனையும் அழைச்சிட்டு போய் நாலு விஷயங்களை கத்துக் கொடுக்கறதுதான் நல்லது.’
‘விறகுவெட்டக் கத்துக் கொடுக்கணும்னு சொல்றியா?’
‘அதுல என்ன தப்பு? மெல்ல மெல்ல பழகினாதான எல்லாத்தயும் கத்துக்க முடியும்.’
‘அதுக்கென்ன இப்ப அவசரம்? அவனால ஒழுங்கா கோடாலியை தூக்கி நிறுத்தமுடியுமான்னு கூட தெரியலை. உடம்புல சக்தி வேணாம? இன்னும் கொஞ்சம் நாள் போவட்டும். பார்ப்போம்.’
ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அந்தப் பேச்சு தொடங்கியது.
‘வயசுப்பிள்ளை இப்படி ஒரு வேலையும் செய்யாம சுத்திட்டு சுத்திட்டு வந்தா, எதிர்காலத்துல எதுக்கும் உருப்படியில்லாம போயிடுவான். நான் சொல்றத கேளு. ஏதாவது ஒரு வேலைக்கு அவனை அனுப்பு. அதுதான் அவனுக்கும் நல்லது. நமக்கும் நல்லது.’
‘அனுப்பலாம். அனுப்பலாம். இரு. கொஞ்ச நாள் போவட்டும்.’
‘பெத்தவளா இருந்தா, இப்படி ஒன்னுத்துக்கும் உதவாதவனா வளர்ப்பாளா? மாத்தாந்தாயா இருந்ததாலதான் இப்படி தறுதலையா வளர்த்திருக்கான்னு எதிர்காலத்துல என்னை யாரும் விரலை நீட்டி சொல்லிடக் கூடாது. அந்த பயத்தாலதான் நான் சொல்றேன். அத நீ புரிஞ்சிக்கணும்.’
‘சரி, அவனை இப்ப என்ன வேலைக்கு அனுப்பலாம். அதையும் நீயே சொல்லு.’
‘எங்கயும் அவன் வேலைக்குப் போவவேணாம். யாருகிட்டயும் கைகட்டி வேலை செய்யவும் வேணாம். இங்க பாரு. நம்மகிட்டயே ஏழு பசுமாடுங்க இருக்குது. அந்த மாடுங்களை தினமும் விளையாட்டா ஏரிப்பக்கமோ, காட்டுப்பக்கமோ, மலையடிவாரத்துக்கோ ஓட்டிட்டுப் போய் மேய்ச்சிட்டு வந்தாவே போதும். அதுவும் ஒரு வேலைதான?’
அவள் எடுத்துச் சொன்ன விதம் அவனுக்கும் ஏற்புடையதாகத் தோன்றியது. ‘சரி, ஏதாவது செய்’ என்று அவளுடைய விருப்பத்துக்கு விட்டுவிட்டான்.
அடுத்தநாள் காலையில் அவள் தொழுவத்தில் இருந்த ஏழு பசுமாடுகளையும் அழைத்துவந்து அவனிடம் கொடுத்தாள். ‘ஊருக்கு வெளியில மலையடிவாரத்துல பச்சைப்பசேல்னு நல்ல புல்வெளி இருக்குது. அங்க கொண்டுபோய் மேய்ச்சிட்டு வா’ என்று சொன்னாள். மதிய உணவுக்காக ஒரு பாத்திரத்தில் பழைய சோற்றை நிரப்பிக் கொடுத்து அனுப்பிவைத்தாள்.
மலையடிவாரத்தின் பக்கமாக நல்ல பசுமையான புல்வெளி இருந்தது. அந்தப் புல்வெளியின் பக்கம் பசுக்களை மேய விட்டுவிட்டு, அவற்றின் பின்னாலேயே பாட்டுப் பாடி திரிந்தான். ஒவ்வொரு பசுவுக்கும் அவன் ஒரு பெயர் சூட்டியிருந்தான். அந்தப் பெயரைச் சொல்லித்தான் அவன் அந்தப் பசுவைக் கூப்பிட்டான். எந்தப் பசுவையும் அவன் பசுவாகவே நினைக்கவில்லை. தன் வயதை ஒத்த சிறுவர்களாகவே அவற்றை அவன் நினைத்தான். ஏழு பசுக்களும் அவனுக்கு ஏழு நண்பர்கள்.
மதிய வேளையில் வெயில் உச்சிக்கு ஏறியதும் பசுக்களை பக்கத்தில் இருந்த குளத்துக்கு அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்கவைத்தான். பிறகு மெதுவாக அவற்றை ஓட்டி வந்து நிழலில் உட்கார்ந்து இளைப்பாறவைத்தான். அதற்குப் பிறகுதான் அவன் தான் கொண்டுவந்திருந்த தூக்குவாளியைத் திறந்தான். தூக்குவாளியில் நிறைந்திருந்த நீராகாரத்துக்குள் கையை விட்டு சோற்றைப் பிசைந்தான். அப்போது அருகில் இளைப்பாறிக்கொண்டிருந்த பசுக்கள் எல்லாம் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன.
‘என்னங்கடா, சோறு சாப்புடறீங்களா?’ என்று கேட்டான். அவை தலையசைத்ததைப் பார்த்துவிட்டு அவை ஆமாம் என்று சொல்வதாக அவன் நினைத்துக்கொண்டான். ‘ஆகா, உங்களுக்கும் சோறு சாப்பிடணும்ன்னு ஆசை வந்துடிச்சா?’ என்று கேட்டுக்கொண்டே ஏழு பசுக்களுக்கும் நடுவில் சென்று உட்கார்ந்துகொண்டான்.
முதலில் அவன் ஒரு கை நிறைய சோற்றை அள்ளி சாப்பிட்டான். அடுத்து மீண்டும் கை நிறைய சோற்றை அள்ளி முதல் பசுவின் வாய்க்குள் ஊட்டினான். அந்தப் பசு பழைய சோற்றை ருசித்துச் சாப்பிட்டு அசைபோட்டது. இப்படியாக அவனும் ஏழு பசுக்களும் சாப்பிட்டு முடித்தார்கள். அதற்குப் பிறகு அவன் அவற்றுக்கு கதைகள் சொன்னான். அவற்றின் முன்னால் பாட்டுப் பாடி ஆடினான். அவையும் அவன் சொல்வதையெல்லாம் புரிந்துகொண்டதுபோல தலையை உயர்த்தி ம்மே ம்மே ம்மே என்று விதம்விதமாக குரலெழுப்பி உடலைக் குலுக்கின.
அவன் சாப்பிட்ட பழைய சோறு கொஞ்ச நேரத்துக்குக் கூட தாங்கவில்லை. அடுத்து சிறிது நேரத்திலேயே மறுபடியும் பசிக்கத் தொடங்கியது. ஆயினும் சாப்பிட வழி இல்லாத இடத்தில் அதைப்பற்றி நினைப்பதால் ஒரு பயனுமில்லை என்ற எண்ணத்துடன் மெளனமாக பசுக்கள் பின்னால் நடந்துசென்றான்.
அவனுடைய மெளனத்தைக் கொண்டே அவனுடைய மனநிலையை உணர்ந்துகொண்ட ஒரு பசு, அவனுக்குப் பின்னால் வந்து அவனை முட்டி தலையாலேயே தள்ளிக்கொண்டு சென்றது. இன்னொரு பசுவுக்கு அருகில் வந்ததும் அவனைக் கீழே தள்ளியது. அவன் அந்தப் பசுவின் பால்மடிக்கு அருகில் விழுந்தான். அதன் மடியில் பால் குடி என்பதுபோல தன் கொம்பால் அவனை முட்டி முட்டி உணர்த்தியது. முகத்துக்கு அருகில் பால்மடியைப் பார்த்ததும் பசு சொல்லவருவது என்ன என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அடுத்த கணமே அவன் அதன் மடியில் பால் அருந்தத் தொடங்கினான். பால் வயிற்றில் நிறையத் தொடங்கியதும் அவன் பசி அடங்கியது. அதற்குப் பிறகு பசிக்கிற வேளையில் எல்லாம் அவனுக்கு பசுவின் பாலே அமுதமானது.
அவனுக்கு பழைய சோற்றைக் கொடுத்து அனுப்பும் அவனுடைய சித்தி, தன்னுடைய சொந்தப் பிள்ளைக்கு மட்டும் பலவிதமான கறிகளோடு ருசியாக சோறு சமைத்துப் போட்டு, அவன் சாப்பிடுவதை பக்கத்தில் உட்கார்ந்து அழகு பார்த்தாள்.
இரவிலும் அவனுக்கு எல்லோரும் சாப்பிட்டு எஞ்சிய சோறுதான் கிடைத்தது. அவன் எதைப்பற்றியும் எந்தக் குறையும் சொன்னதில்லை. பசி அடங்க ஏதோ ஒரு சாப்பாடு என்பதுதான் அவன் கணக்கு. சாப்பிட்டு முடித்ததும் பசுக்களோடு சேர்ந்து தொழுவத்திலேயே படுத்துக்கொண்டான்.
கஷ்டம் கொடுத்தால் அவனாகவே வீட்டைவிட்டு ஓடிப் போய்விடுவான் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எல்லாக் கஷ்டங்களையும் அவன் சகித்துக்கொள்வதைப் பார்க்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
என்றைக்காவது அவன் மனச்சோர்வில் முகம்சுருங்கி உட்கார்ந்துவிட்டால், ஒவ்வொரு பசுவாக அவனை நெருங்கிவந்து அவன் முதுகில் முட்டும். அவன் தோள்பட்டையை நாவால் நக்கும். எழுந்து வா என்று சொல்வதுபோல ம்மே என்று குரல் கொடுக்கும்.
பழைய சோறு சாப்பிட்டாலும் அவன் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவே இருந்தான். சத்தான உணவுகளைப் பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுத்தாலும் அவள் பெற்ற சிறுவன் எலும்புத் தோற்றத்துடன் குச்சியாகவே இருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க அவளுடைய எரிச்சல் பலமடங்கு கூடுதலானது. மனத்தில் பொறாமைத்தீ பற்றி எரிந்தது.
அந்தப் பொறாமைத்தீயிலேயே அவள் மனம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வெந்து கொதிப்பேறியது.
அவன் இருபது வயது இளைஞனாக வளர்ந்து நின்றான். ஐந்து வயதில் இருந்த அமைதியைவிட அப்போது இன்னும் கூடுதலான அமைதி அவனிடம் குடிகொண்டிருந்தது. அவன் வீட்டுக்குள் செல்வதே குறைந்துவிட்டது. சாப்பிடுவதற்கு மட்டுமே அவன் வீட்டுக்குள் சென்றான். மற்றபடி பகல் முழுக்க மலையடிவாரத்துப் புல்வெளியிலும் மரத்தடியிலும் இரவு முழுக்க மாட்டுத்தொழுவத்திலும் கழித்தான்.
அவனுடைய வாட்டசாட்டமான தோற்றத்தையும் மகிழ்ச்சியான முகத்தையும் பார்க்கப்பார்க்க அவள் மனச்சங்கடம் பெருகியது. தான் பெற்ற மகன் அதுபோல இல்லையே என்று நினைத்துப் பொறாமைப்பட்டாள். அவனை எப்படியாவது அந்த வீட்டைவிட்டு வெள்யேற்றினால்தான் நிம்மதியாக இருக்கமுடியும் என்று அவள் நினைத்தாள்.
அடுத்தநாள் காலை. கோடாலியை எடுத்துக்கொண்டு சந்தை நடைபெறும் ஊருக்கு விறகு வெட்டுவதற்காக அவன் புறப்பட்டான். அப்போது அவள் கட்டிலிலேயே படுத்துக்கொண்டு வலிப்பதுபோல முனகியபடி இருந்தாள். ஒரு கருப்புத்துணியை எடுத்து நெற்றியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு வலியால் துடிப்பதுபோல நடித்தாள்.
‘ஏன், என்னாச்சி?’ என்று அவளுக்கு அருகில் வந்து கேட்டான் விறகுவெட்டி.
‘தலையே வெடிக்கிற மாதிரி வலிக்குது.’
அவன் அவள் நெற்றியைத் தொடுவதற்காகக் குனிந்தான். ‘ஐயையோ, தொடாதீங்க. வலி தாங்க முடியலை’ என்று கண்ணீர் விட்டு அழுதாள்.
‘சரி, கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ. நான் ஓட்டமா ஓடிப்போய் நாட்டு வைத்தியரை அழைச்சிட்டு வரேன்.’
‘அதெல்லாம் வேணாம், இங்க பக்கத்திலயே இரு.’
‘பக்கத்திலயே நின்னுட்டிருந்தா, எப்படி குணமாவும் சொல்லு. பைத்தியமா நீ?’
‘நான் சொல்றதை கோபப்படாம கேக்கறதா இருந்தா, இத எப்படி குணப்படுத்தறதுன்னு நானே சொல்றேன். இதுக்கு என்ன மருந்துன்னு எனக்கு நல்லா தெரியும்.’
‘என்ன மருந்து, சொல்லு. எங்க இருந்தாலும் தேடிப் பார்த்து வாங்கியாறேன்.’
‘கண்டிப்பா எடுத்துவரேன்னு சத்தியம் பண்ணு. அப்பதான் சொல்வேன்.’
‘உன் தலைவலி நல்லாவறதைவிட வேற எது எனக்கு முக்கியம்? எதை எடுத்துட்டு வரணும்னு சொல்லு. ஒரே ஓட்டமா ஓடிப் போய் எடுத்துட்டு வரேன்.’
‘சத்தியம் பண்ணு.’
‘எதுவா இருந்தாலும், எங்க இருந்தாலும் சத்தியமா எடுத்துட்டு வரேன். போதுமா? சொல்லு. எங்க இருக்குது மருந்து?’
‘உன் பெரிய பையனை கொன்னு, அவனுடைய ரத்தத்தை எடுத்துட்டு வா. அதைக் கொண்டுவந்து என் நெத்தியில பூசு. அப்பதான் என் வலி சரியாவும். இதை நீ செஞ்சா, இங்க உன் கூட நான் இருப்பேன். இல்லைன்னா என் புள்ளைய தூக்கிகிட்டு என் அம்மா வீட்டுக்குப் போயிடுவேன்.’
‘என்ன சொல்ற நீ? கைக்கு உசந்த புள்ள அவன். அவனைப் போய் எப்படி கொல்றது?’
‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவனைக் கொன்னு ரத்தத்தை எடுத்துவந்த பிறகு எங்கிட்ட பேசு. இப்ப கெளம்பு.’
என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த மனைவியை ஒருமுறை அவன் பார்த்தான். பிறகு ஒரு பெருமூச்சோடு கோடாலியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். அவனுடைய கால்கள் தாமாகவே மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கின. அவனுடைய முதல் மனைவியின் முகமும் மகனுடைய முகமும் மாறி மாறி அவன் நெஞ்சில் எழுந்து மறைந்தன.
கோடாலியோடு நடந்து வந்த விறகுவெட்டியை பசுக்கள்தான் முதன்முதலில் பார்த்தன. அவனுடைய வருகையின் நோக்கத்தை அவை எப்படியோ தம் நுண்ணுணர்வால் புரிந்துகொண்டன. ஒரு அப்பாவாக இருந்துகொண்டு இந்தக் காரியத்தை செய்யத் துணிந்துவிட்டானே என்று நினைத்து அவன் மீது அருவருப்பு கொண்டன. உடனே அந்த மரத்தடியில் நிழலில் உட்கார்ந்திருந்த இளைஞனை அவன் சுலபமாக நெருங்கி விடாதபடி அரண்போல சுற்றி வளைத்துக்கொண்டு நின்றன.
பசுக்களுக்கு அருகில் நெருங்கி வந்த பிறகு விறகுவெட்டி தன் மகனைப் பெயர் சொல்லி அழைத்தான். தன் அப்பா தன்னைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்திருப்பதை உணர்ந்த அந்த இளைஞன் ஆச்சரியத்தோடும் குழப்பத்தோடும் எழுந்து நின்று பார்த்தான். அவரை நெருங்குவதற்காக அடியெடுத்து வைத்தான். ஆனால் பசுக்கள் அவனை அடியெடுத்து வைத்து விடாதபடி முதுகாலும் கொம்பாலும் முட்டிமுட்டித் தடுத்தன. அவை தன்னைத் தடுக்கவேண்டுமென்றால் ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்பதை அவன் புரிந்துகொண்டு நின்ற இடத்திலேயே நின்றான்.
ஏழு பசுக்களும் ஆக்ரோஷமாக விறகுவெட்டியைப் பார்த்து குரலெழுப்பின. நெருங்கி வந்துவிடாதபடி கொம்பைச் சுழற்றி மிரட்டின. அதைப் பொருட்படுத்தாமல், மகனைக் கொல்லும் ஆவேசத்துடன் கோடாலியை உயர்த்திப் பிடித்தபடி முன்னோக்கி நடந்துவந்தான்.
அக்கணமே ஒரு பசு கண்ணைமூடி கண்ணைத் திறக்கும் வேகத்தில் அவனை நோக்கி அடியெடுத்துவைத்து முன்னால் சென்று தன் கொம்பால் அவனை முட்டித் தள்ளியது. இன்னொரு பசு முன்னேறி வந்து அவன் கால்களை மிதித்தது. மற்றொரு பசு வேகமாக வந்து அவனுடைய தோள் மீது காலால் உதைத்தது. கோடாலி ஒருபக்கம் நழுவிவிழ, அவன் இன்னொரு பக்கம் விழுந்து உருண்டான். நீண்ட கொம்புடைய ஒரு பசு அவனைத் தன் கொம்பாலேயே முட்டிக்கொண்டு சென்று உருட்டிவிட்டது. இன்னொரு பசு காலால் எட்டி உதைத்து தள்ளிவிட்டது. அவன் உருண்டோடி கீழே விழுந்தான். அடுத்த கணமே விறகுவெட்டி மீண்டும் நெருங்கிவிடாதபடி இளைஞனை தன் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு மலை உச்சியை நோக்கி நடந்தது பசு. பிற பசுக்களும் அந்தப் பசுவுக்குப் பாதுகாப்பாக சுற்றிவளைத்தபடி கூடவே நடந்தன.
பசு முட்டி உருட்டிவிட்டதால் ஏற்பட்ட சோர்வும் அவமானமும் விறகுவெட்டியைப் பாடாய்ப் படுத்தின. பசுக்கள் சூழ தன் மகன் தப்பித்துச் செல்லும் திசையையே ஒருவித இயலாமையோடு பார்த்தான். ‘சரி, இதுவும் நல்லதுக்குத்தான்’ என மனத்துக்குள் ஆறுதலாக நினைத்துக்கொண்டான். அப்போதுதான் தன் மனைவி ரத்தம் எடுத்துவரச் சொன்ன கோரிக்கை அவனுடைய நினைவுக்கு வந்தது. மகனே தப்பித்துப் போய்விட்ட பிறகு, ரத்தத்துக்கு என்ன செய்வது என நினைத்துக் குழம்பினான்.
அப்போது அவன் விழுந்துகிடந்த மரத்தைச் சுற்றி இரண்டு அணில்கள் ஓடி விளையாடுவதைப் பார்த்தான். உடனே அவற்றை நோக்கி தன் கோடாலியை வீசினான். கோடாலியின் கூர்மையான பகுதியில் வெட்டுப்பட்டு ஓர் அணில் அந்த இடத்திலேயே இறந்தது. அந்த ரத்தம் கோடாலியின் கூர்மையான பகுதியில் படிந்து சொட்டியது. விறகுவெட்டி இறந்துகிடந்த அணிலை நோக்கி வேகமாகச் சென்றான். தன்னிடம் இருந்த துணியை அணிலின் ரத்தத்தில் தோய்த்து நனைத்தான். பிறகு அத்துணியைப் பாதுகாப்பாக தன் பைக்குள் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
அவன் தொலைவில் வரும்போதே அவன் வருகையை உணர்ந்துகொண்ட அவனுடைய மனைவி வேகவேகமாக கட்டிலுக்கு அருகில் சென்று படுத்துக்கொண்டாள். அம்மா அம்மா என்று வலியில் முனகுவதுபோல முனகத் தொடங்கினாள்.
அவளைப் பெயர் சொல்லி அழைத்தபடி வீட்டுக்குள்ளே வந்த விறகுவெட்டி ‘இதோ, நீ கேட்ட ரத்தம். அவனைக் கொன்று எடுத்துவந்துட்டேன்’ என்று ரத்தம் தோய்ந்த துணியை எடுத்து நீட்டினேன்.
‘நீங்களே நெத்தியை சுத்தி கட்டிவிடுங்க. வலி தாங்கமுடியலையே’ என்று கிணற்றிலிருந்து பேசுவதுபோல பேசினாள் அவள். கட்டிலில் அவளுக்கு அருகில் உட்கார்ந்த விறகுவெட்டி ரத்தம் படிந்த துணியை அவளுடைய நெற்றியைச் சுற்றி கட்டினான்.
சில நிமிடங்களிலேயே ‘அப்பாடி, இப்பதான் வலி போச்சி’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் அவள்.
மலை உச்சிக்கு இளைஞனை அழைத்துச் சென்ற பசுக்கள் அங்கிருந்த ஓர் ஆலமரத்தின் நிழலில் இறக்கிவிட்டது. ஒவ்வொரு பசுவையும் கட்டியணைத்து அதன் நெற்றியில் நன்றியோடு முத்தம் கொடுத்தான் அவன். இனி வீட்டுப்பக்கம் செல்வதில் பொருள் இல்லை என்று அவன் மனம் நினைத்தது. பசுக்களுக்கும் அந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனமில்லை. இந்த பூமியில் வாழ்ந்த காலம் போதும் என அவை நினைத்தன.
ஏழு பசுக்களும் ஒருகாலத்தில் தம் முன்னோர்கள் வாழ்ந்த காமதேனுவின் உலகத்துக்குச் செல்லப் போவதாக அவனுக்கு வெவ்வேறு குரல்மாற்றத்தின் மூலம் உணர்த்தின. ‘கவனமாக இரு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது’ என்று அவனை வாழ்த்தின. பிறகு இரு புல்லாங்குழல்களைப் பரிசாகக் கொடுத்தன.
‘நாங்க வேற உலகத்துல இருந்தாலும் உன்னை எப்பவும் நினைச்சிட்டிருப்போம். நீ எங்களுக்குப் புள்ளை மாதிரி. நீ மகிழ்ச்சியா இருக்கற சமயத்துல இந்தப் புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அந்த இசையைக் கேட்டு நீ சந்தோஷமா இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். நீ துக்கமா இருக்கற சமயத்துல இந்த இன்னொரு புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அதைக் கேட்டு நீ துன்பத்துல இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். உன் உதவிக்கு உடனே நாங்க வந்து உன் துன்பத்தைப் போக்குவோம்’ என்று மூத்த பசு சொன்னது.
பிறகு அவனை அந்த ஆலமரத்தடியில் உட்காரவைத்துவிட்டு, அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு தம் உலகத்துக்குச் சென்றன. அவன் அந்த மரத்தடியையே தன் உலகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதற்குக் கற்றுக்கொண்டான். பசிக்கும் நேரங்களில் மலைப்பகுதியில் இருக்கும் செடிகளிலும் மரங்களிலும் பழுத்துத் தொங்கும் கனிகளைப் பறித்துச் சாப்பிடுவான். எதுவுமே கிடைக்காத நேரத்தில் துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய புல்லாங்குழலை எடுத்து வாசிப்பான். சில நொடிகளில் ஏழு பசுக்களும் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து அவனுக்குத் தன் பாலையே உணவாகக் கொடுத்து பசியாற்றிவிட்டுச் செல்லும். சந்தோஷமான நேரங்களில் அவன் வாசிக்கும் புல்லாங்குழலின் இசையைக் கேட்டு, அவையும் சந்தோஷத்துடன் அவனை நினைத்துக்கொள்ளும்.
ஏறத்தாழ இப்படியே ஒரு ஆண்டுக்கும் மேல் காலம் நகர்ந்துவிட்டது. ஒருநாள் அந்த மலைத்தொடரின் வேறொரு பக்கத்தில் ஆட்சி செய்துவந்த ஒரு சிற்றரசனின் மகள் தன் தோழிகளோடு விளையாடிபடியே அந்த மலையடிவாரத்துக்கு வந்தாள். அங்கே ஒரு கிணறு இருந்தது. விளையாடிய களைப்பில் அனைவரும் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அருந்தினர். ஒருத்தி வாளியைச் சாய்த்து நீரை இறைக்க இன்னொருத்தி கைகளைக் குவித்து அந்த நீரை வாங்கி அருந்தினாள். இளவரசி நீரருந்த வந்தபோது அவளுடைய நெருங்கிய தோழி வாளியைச் சாய்த்து நீரை ஊற்றினாள்.
அவள் தண்ணீர் அருந்தும்போது பொன்னிறமான ஓர் இழை குவிந்த கைக்குள் விழுந்ததைப் பார்த்தாள். உடனே தண்ணீர் அருந்துவதை நிறுத்திவிட்டு, அந்தப் பொன்னிழை என்ன என்று பார்த்தாள். அது என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. எங்கிருந்து பறந்து வந்திருக்கும் என சுற்றுமுற்றும் திரும்பித்திரும்பிப் பார்த்தாள். அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அதைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தம் அரண்மனைக்குத் திரும்பி நடந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் நடந்தனர்.
சிறிது தொலைவு நடந்த பிறகு ஏதோ ஒரு உள்ளுணர்வின் தூண்டுதலால் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அப்போது அவள் கண்களுக்கு ஆலமரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருக்கும் இளைஞனின் உருவம் தெரிந்தது. அவனுடைய தலைமுடி பொன்னிழைகளைப்போல படிந்திருப்பதையும் பார்த்தாள். அக்கணமே மணந்தால் அவனைத்தான் மணக்கவேண்டும் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தாள்.
வீட்டுக்குச் சென்றதுமே ஒரு கருப்புத்துணியை எடுத்து தன் நெற்றியைச் சுற்றி இறுக்கமாகக் கட்டிக்கொண்டு படுத்துவிட்டாள் இளவரசி. அவள் சோர்ந்து படுத்திருக்கும் செய்தி அப்போதே அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அரசன் அவளுடைய அந்தப்புரத்துக்கு ஓடோடி வந்தான். அரசனுக்கு அவள் ஒரே மகள். தாயில்லாமல் வளர்க்கப்பட்ட செல்ல மகள். அவளை படுக்கையிலிருந்து எழுப்பி உட்காரவைக்க அரசன் மிகவும் முயற்சி செய்தான். ஆனால் அவள் எழுந்திருக்கவே இல்லை.
‘என்னம்மா, உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி படுத்திருக்கே? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. உனக்குத் தேவையானது எங்க இருந்தாலும், அதைக் கொண்டுவந்து உன்கிட்ட சேர்க்கறேன்’ என்றான் அரசன்.
அவள் அதைக் கேட்ட பிறகு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள். ‘நம்ம நாட்டு எல்லைக்கு வெளியே இருக்கிற மலையடிவாரத்துல ஒரு ஆலமரம் இருக்குது. அந்த மரத்து உச்சியில ஒரு இளைஞன் உட்கார்ந்திருக்கான். அவனை நான் பார்த்தேன். அவன் தலைமுடி தகதகன்னு தங்கம் மாதிரி மின்னுது. அவன் ரொம்ப அழகா இருக்கான். அவனை எப்படியாவது எனக்கு கல்யாணம் செஞ்சி வைங்க. நீங்க செஞ்சு வைக்கறேன்னு எனக்கு சத்தியம் செஞ்சாதான், நான் இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பேன்’
‘அவ்ளோதானே? அதுக்கு ஏன் இப்படி அடம் பிடிக்கணும்? இப்பவே ஆளுங்கள அனுப்பி அவனை அழைச்சிட்டு வரச் சொல்றேன். ஒரு இளவரசியே ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லும்போது, வேணாம்ன்னு சொல்றவங்க இந்த உலகத்துல இருக்கறாங்களா என்ன?’
‘அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல எனக்கு நீங்க சத்தியம் பண்ணுங்க. அப்பதான் எனக்கு நம்பிக்கை வரும்.’
‘சத்தியமா அவனை உனக்கு கட்டிவைக்கறேன். போதுமா? எழுந்திரும்மா.’
உடனே அரசன் நம்பிக்கைக்கு உரிய ஏழு வேலைக்காரர்களை அழைத்து விவரத்தைச் சொல்லி ‘அந்த இளைஞனை எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சி உடனடியா அழைச்சிட்டு வாங்க’ என்று கட்டளையிட்டான். வேலைக்காரர்கள் அனைவரும் கூட்டமாக மலையடிவாரத்தை நோக்கிச் சென்றனர்.
அவர்கள் முதலில் அரசன் குறிப்பிட்ட கிணற்றை அடைந்தார்கள். அதற்குப் பின் அந்த ஆலமரத்தை நோக்கிச் சென்றார்கள். உச்சிக்கிளையில் இளைஞன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த பிறகுதான் அவர்கள் நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கினார்கள்.
அந்த இளைஞனை கைதட்டி அழைத்து ‘உன் கூட ஒரு விஷயம் பேசணுமாம். ராஜா உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னாரு’ என்றார்கள்.
‘அதெல்லாம் வரமுடியாது. போங்க’ என்று பதில் சொன்னான் அந்த இளைஞன். அரசனின் அழைப்பை ஒருவன் மறுப்பான் என்பதையே அவர்களால் நம்பமுடியவில்லை. எதை எதையோ சொல்லி கெஞ்சியும் பார்த்தார்கள். ஆனாலும் அவன் இறங்கி வரவில்லை. அவனைப் பிடிப்பதற்காக அந்த மரத்தின் மீது ஏறத் தொடங்கினார்கள்.
அதைப் பார்த்ததும் துன்ப நேரங்களில் இசைக்கும் புல்லாங்குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான் இளைஞன். அந்த இசை விண்ணுலகத்தில் இருக்கும் பசுக்களுக்குக் கேட்டது. தம் மகன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் என்பதை அவை புரிந்துகொண்டன.
அக்கணமே ஏழு பசுக்களும் கூடி ஆலமரத்தை நோக்கி வந்தன. அரசனின் பணியாட்கள் இளைஞனிடம் வம்பு செய்துகொண்டிருப்பதைப் பார்த்தன. உடனே அந்த ஆட்களோடு அவை மோதின. தம் கொம்புகளால் அவர்களை முட்டி கீழே தள்ளின. அவர்கள் தரையில் விழுந்து உருண்டார்கள். திடீரென நிகழ்ந்த தாக்குதலால் திகைத்த வேலைக்காரர்கள் அக்கணமே தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் அரண்மனைக்கு ஓடினார்கள். பசுக்கள் எல்லாம் கூடி இளைஞனுக்கு ஆறுதல் கூறின. அவன் பசிக்கு பால் கொடுத்துவிட்டு, விண்ணுலகத்துக்கு விடைபெற்றுக்கொண்டு சென்றன.
அரண்மனைக்கு ஓடிய வேலைக்காரர்கள் அரசனிடம் நடந்த விவரங்களையெல்லாம் சொன்னார்கள். ‘இது என்ன, விசித்திரமா இருக்குதே’ என்று குழம்பினான் அரசன்.
பிறகு முப்பது பேரை அழைத்துக்கொண்டு அவனே நேரில் அந்த இடத்துக்குச் சென்றான். அவர்கள் கூட்டமாக தன்னை நோக்கி வருவதை மர உச்சியிலிருந்து இளைஞன் பார்த்துவிட்டான். உடனே வழக்கம்போல துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான். உடனே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் அந்த இடத்துக்கு விரைந்துவந்தன. ஒரு சிறிய படையே தன் மகனை எதிர்ப்பதற்குத் திரண்டு வருவதைப் பார்த்த பசுக்கள் அவர்களை எதிர்கொண்டன. ஒவ்வொருவரையும் கால்களால் உதைத்து கீழே உருட்டிவிட்டன. கொம்பால் முட்டி காயப்படுத்தின. அந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அரசனின் படை வேறு வழியில்லாமல் பின்வாங்கி அரண்மனைக்குத் திரும்பியது.
அரசன் தோல்வியோடு அரண்மனைக்குத் திரும்பிவந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இளவரசி நிராசைக்குள்ளானாள். மனவேதனையுடன் எழுந்திருக்க விருப்பமில்லாமல் படுக்கையிலேயே படுத்திருந்தாள். அந்தச் செய்தியை அறிந்த அரசனின் மனம் துயரத்தில் மூழ்கியது.
அந்தப் பிரச்சினையை எப்படி கையாள்வது என்று புரியாமல் இரவு முழுதும் தூக்கமின்றி அரண்மனைத் தோட்டத்தில் உட்கார்ந்தபடி யோசனையில் மூழ்கியிருந்தான் அரசன்.
அப்போது பொழுது விடிந்தது. சூரியனின் ஒளிக்கதிர்கள் தரையைத் தொடும் முன்பே தோட்டத்தில் இருந்த மரங்களில் காகங்கள் கூடி கரையும் சத்தம் எழுந்தது. வானத்திலும் சில காகங்கள் கூட்டம்கூட்டமாகப் பறந்து செல்வதைப் பார்த்தான். காகங்களின் காட்சியும் அவற்றின் சத்தமும் அச்சமயத்தில் அவனுக்கு ஆறுதலாக இருந்தன.
‘இறைவனுடைய படைப்புல நீங்க எல்லாம் ரொம்ப கொடுத்து வச்ச உயிரினம். எந்தத் துயரமும் இல்லாம ரொம்ப ஆனந்தமா இருக்கீங்க. என்னை மாதிரி எந்தக் கஷ்டமும் உங்களுக்கு இல்லை’ என்று மனத்துக்குள் நினைத்து பெருமூச்சுவிட்டான்.
அப்போது அவன் முன்னால் ஒரு காகம் வந்து உட்கார்ந்து அவனை நோக்கி குரல் கொடுத்தது. முதலில் அந்தச் சத்தத்தை அரசன் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. தொடர்ச்சியாக அந்தக் குரல் எழுந்ததும் ஆர்வத்துடன் அந்தக் காக்கையின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அந்தக் காக்கை தன்னை நோக்கித்தான் தலையை அசைக்கிறது என்று நினைத்துக்கொண்டு அதைப் பார்த்து புன்னகைத்தான்.
உடனே அந்தக் காக்கை அரசனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தது. அரசனின் மனம் வியப்பில் மூழ்கியது. ‘அரசே, உனக்கு என்ன கவலை? என்னிடம் சொல். என்னால் முடிந்த உதவியை உனக்குச் செய்கிறேன்’ என்று சொன்னது.
தன்னோடு பேசும் காக்கையைப் பார்த்து அவனுடைய ஆச்சரியம் பல மடங்காகப் பெருகியது. எல்லாம் கடவுளின் கருணை என நினைத்துக்கொண்டு மனத்துக்குள்ளேயே கடவுளுக்கு நன்றி சொன்னான். நடந்த விஷயங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் அந்தக் காக்கையிடம் விரிவாகச் சொன்னான் அரசன்.
‘அவன்கிட்ட அதிசயமான ஒரு புல்லாங்குழல் இருக்குது. எங்களைப் பார்த்ததும் அவன் அதை எடுத்து வாசிச்சான். உடனே எங்கிருந்தோ பெரிய பெரிய கொம்பு இருக்கிற பெரிய பெரிய பசுக்கள் ஆகாயத்துலேர்ந்து வந்து எங்களை முட்டி மோதி விரட்டியடிச்சிடுச்சி. அந்தப் புல்லாங்குழலை அவன்கிட்டேர்ந்து எப்படியாவது எடுத்துட்டோம்ன்னா, அவனை ரொம்ப சுலபமா நம்ம வழிக்குத் திருப்பிடலாம்.’
அதைக் கேட்டதும் ‘கவலைப்படாதே. என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு பறந்துபோனது காக்கை. அரசனும் தன் தினசரி வேலைகளைப் பார்க்க நிம்மதியாக அரண்மனைக்குத் திரும்பினான்.
அரசன் குறிப்பிட்ட மலையடிவாரத்துக்குப் பறந்துசென்ற காக்கை, அங்கிருந்த ஆலமரத்தையும் அதன் உச்சியில் உட்கார்ந்திருந்த இளைஞனையும் பார்த்தது. ஒருகணம் அவன் அழகைப் பார்த்து ரசித்தது. ‘இப்படிப்பட்ட அழகன் மேல இளவரசி ஆசைப்பட்டதுல ஆச்சரியமே இல்லை’ என்று நினைத்துக்கொண்டது. அவன் உட்கார்ந்திருந்த கிளைக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு கிளைக்குச் சென்று சத்தம் காட்டாமல் அமர்ந்து அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தது.
அப்போது அவன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புல்லாங்குழலை இசைத்துக்கொண்டிருந்தான். அந்த இனிய இசை மயக்கம் தருவதாக இருந்தது. அந்த இசையில் மயங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்த காக்கைக்கு சில கணங்களுக்குப் பிறகுதான் தான் வந்த வேலை நினைவுக்கு வந்தது. ‘ஓ. இந்தப் புல்லாங்குழலை வச்சிகிட்டுதான் ஆகாயத்துலேர்ந்து பசுக்களை வரவழைக்கிறியா?’ என்று நினைத்துக்கொண்டு மெல்ல அவனுக்கு அருகில் பறந்துவந்து சட்டென அந்தக் குழலை தன் அலகால் கவ்விக்கொண்டு பறந்துபோனது.
சற்றும் அதை எதிர்பார்க்காத இளைஞன் அதிர்ச்சியில் மூழ்கினான். இப்படி ஏமாந்துவிட்டோமே என நினைத்து துயரத்தில் மூழ்கினான். சிறிது நேரம் என்ன செய்வது என்றே அவனுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடு அந்தக் காக்கை பறந்துபோன திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
பிறகுதான் அவனுக்கு துன்பத்தில் இருக்கும்போது இசைக்கத்தக்க இன்னொரு குழலின் நினைவு வந்தது. உடனே அதை எடுத்து இசைக்கத் தொடங்கினான். அடுத்த கணமே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் இறங்கி வந்தன. ‘என்ன மகனே, என்ன துன்பம்?’ என்று கேட்டன. அவன் நடந்த செய்தியையெல்லாம் அவற்றிடம் சொன்னான்.
‘போகட்டும் விடு. நடந்ததை நெனச்சி கவலைப்படாதே. உனக்கு இன்னொரு புல்லாங்குழல் தரேன்’ என்று பசுக்கள் ஆறுதல் கூறின. புத்தம்புதிதாக இன்னொரு குழலை வரவழைத்து அவனிடம் அளித்தன. பிறகு அவனோடு சிறிது நேரம் கொஞ்சியிருந்துவிட்டு விண்ணுலகத்துக்குத் திரும்பின.
புல்லாங்குழலை எடுத்துச் சென்ற காக்கை அரண்மனைக்குச் சென்று அரசனிடம் கொடுத்தது. அரசன் அந்தக் காக்கைக்கு பலமுறை நன்றி சொன்னான். ‘கவலைப்படாதே அரசே. எந்த சமயத்தில் உனக்கு உதவி தேவைப்பட்டாலும் என்னை ஒரு நொடி நினைச்சிக்கோ. நான் வந்து என்னால முடிஞ்ச உதவியைச் செய்றேன்’ என்று சொல்லிவிட்டு பறந்துபோனது. இனி, இளைஞனை வசப்படுத்தி அழைத்துவருவது எளிதான விஷயம் என நினைத்தான் அரசன்.
அடுத்தநாள் காலையில் ஏற்கனவே மலையடிவாரத்துக்குச் சென்று திரும்பிய வீரர்களை அழைத்து அந்த இளைஞனை அழைத்துவரும்படி சொன்னான். அவர்கள் அங்கு செல்லவே அஞ்சினர். ‘ஐயோ, அங்க அந்தப் பசுக்கள் வந்து முட்டுமே’ என்று நடுங்கிக்கொண்டே சொன்னார்கள். ‘அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நான் சொல்றத நம்புங்க. போய் அழைச்சிட்டு வாங்க’ என்று அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பிவைத்தான்.
காலையில் சென்ற வீரர்கள் அனைவரும் மாலையில் காயங்களோடு ஓடிவந்து அரசன் முன்னால் நின்றார்கள். ‘நீங்க போ போன்னு சொன்னதால நாங்க கெளம்பிப் போனோம். நீங்க வரவே வராதுன்னு சொன்ன பசுக்கூட்டம் இந்த முறையும் வந்துடுச்சி. எங்களையெல்லாம் முட்டிமுட்டி விரட்டியடிச்சிடுச்சி. அந்த இளைஞன் ரொம்ப கெட்டிக்காரனா இருக்கான். அவன்கிட்ட ஏதோ மந்திரம் இருக்குது. ஒரு புல்லாங்குழல எடுத்து ஊதினா, எல்லாமே நடக்குது’ என்று முறையிட்டார்கள்.
அவர்களை அனுப்பிவிட்டு தனிமையில் உட்கார்ந்து ரொம்ப நேரம் யோசனையில் மூழ்கினான் அரசன். அவனுடைய புல்லாங்குழலை காக்கை எடுத்துவந்த பிறகு இன்னொரு புல்லாங்குழல் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று நினைத்துக் குழம்பினான்.
அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எப்படி என பல கோணங்களில் யோசித்துப் பார்த்தான். ஒன்றும் பிடி கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் காக்கையிடம் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என முடிவு செய்தபடி அதை மனத்துக்குள் நினைத்து தியானித்தான். அடுத்து சில கணங்களிலேயே அவனுக்கு எதிரில் கா கா என கரைந்தபடி காக்கை தோன்றியது.
‘துக்கத்துக்கு என்ன காரணம்? இன்னும் பிரச்சினை ஓயவில்லையா?’ என்று கேட்டது. அரசன் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் காக்கையிடம் பகிர்ந்துகொண்டான்.
காக்கை எந்தப் பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் யோசித்தது. ‘ஏதோ ஒரு பிழை நடந்திருக்குது. ஒரு ரெண்டுநாள் பொறுத்துக்கோ. நானே கண்டுபிடிச்சி சரி செய்றேன்’ என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது.
இளைஞன் உட்கார்ந்திருந்த ஆலமரத்தின் வேறொரு கிளையில் சத்தம் காட்டாமல் அமர்ந்தபடி அவனுடைய நடவடிக்கைகளை ஒன்றுவிடாமல் கவனிக்கத் தொடங்கிது காக்கை. நாலைந்து நாட்கள் அவனைக் கவனிக்கும் வேலை நீடித்தது. அப்போதுதான் அவனிடம் இரண்டு புல்லாங்குழல்கள் இருப்பதையும் துக்கமான நேரத்தில் இசைக்க ஒரு குழலையும் மகிழ்ச்சியான சமயத்தில் இசைக்க இன்னொரு குழலையும் அவன் மாறிமாறிப் பயன்படுத்தும் ரகசியத்தையும் அது கண்டுபிடித்தது. கடந்த முறை குழலை எடுக்கும்போது என்ன பிழை நடந்தது என்பதை காகத்துக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. மேலும் ஒரு நாள் காத்திருந்து அவன் மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக இளைஞன் மகிழ்ச்சிக்குழலை இசைத்துக்கொண்டிருந்த சமயத்தில், சந்தடி காட்டாமல் அவனுக்கு அருகில் சென்று, அவன் தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்த துன்பக்குழலைக் கவ்விக்கொண்டு பறந்துசென்றது.
விண்ணுலகத்திலிருந்த பசுக்கள் இளைஞனின் இன்பக்குழலின் இசையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தன. தன் மைந்தன் நலமாகவே இருக்கிறான் என நினைத்து மகிழ்ச்சியடைந்தன.
குழலின் இசையில் தன்னை மறந்து கண்ணை மூடி லயித்திருந்த இளைஞன் நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் கண்களைத் திறந்தான். சிறிது நேரத்துக்குப் பிறகுதான் தனக்கு அருகில் வைத்திருந்த துன்பக்குழலைக் காணவில்லை என்பதை அவன் உணர்ந்தான். கீழே எங்காவது விழுந்திருக்குமோ என அவனுக்கு சந்தேகம் வந்தது. மரத்திலிருந்து இறங்கிவந்து தரையெங்கும் தேடிப் பார்த்தான். கிடைக்கவில்லை. கிளையிடுக்குளில் சிக்கியிருக்குமோ என்ற சந்தேகத்துடன் ஒவ்வொரு கிளையாக ஏறி நின்று மீண்டும் தேடிப் பார்த்தான். அங்கும் கிடைக்கவில்லை. மனமுடைந்து மரத்திலிருந்து கீழே இறங்கிவந்தான்.
புதையலைப்போல தனக்குக் கிடைத்த அபூர்வமான குழலைத் தொலைத்துவிட்டோமே என அவன் மனம் துயரத்தில் மூழ்கியது. தான் குழலைத் தொலைத்த செய்தியை எப்படியாவது தன் பசுக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என நினைத்தான். ஆனால் தன்னிடம் துன்பக்குழல் இல்லாத நிலையில் அச்செய்தியைத் தெரிவிப்பது எப்படி எனப் புரியாமல் குழம்பினான். பித்துப் பிடித்தவனைப்போல மகிழ்ச்சிக்குழலை எடுத்து மீண்டும் மீண்டும் இசைத்தான் அவன். விண்ணுலகத்தில் இருந்தபடி அந்த இசையின் நாதத்தைக் கேட்ட பசுக்கள் தன் மைந்தன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதைத் தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு அவையும் மகிழ்ச்சியில் திளைத்தன.
அப்போது தொலைவில் அரசன் அனுப்பிய ஆட்களின் கூட்டமொன்று ஆலமரத்தை நெருங்கிவருவது தெரிந்தது. அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் அவன் மரத்தடியிலேயே அமைதியாக நின்றான். அவனை நெருங்கிவந்த அரசனின் ஆட்கள் அவனைத் தூக்கி ஒரு சிம்மாசனத்தில் உட்காரவைத்து, அதைத் தூக்கிக்கொண்டு ஊரை நோக்கி நடந்துசென்றனர். கடுமையான தாக்குதலை எதிர்பார்த்திருந்த அவன் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தபடி அரண்மனையின் வாசலிலேயே அரசன் நின்றிருந்தான். ‘வருக வருக’ என இளைஞனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.
அந்தப்புரத்திலிருந்த இளவரசியை தோழிகள் அழைத்துவந்தனர். அவளுக்கும் அவனுக்கும் அரசன் திருமணம் செய்துவைத்தான். அங்கிருந்த அவைப் பெரியவர்கள் அவனை மகிழ்ச்சியோடு வாழ்த்தினர்.
ஆசைப்பட்ட கணவன் கிடைத்ததை ஒட்டி இளவரசி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். ஆனால் அந்த இளைஞனால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியவில்லை. அங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என அவன் விரும்பினான். ஆனால் அதற்குச் சரியான வழி தெரியாமல் தவித்தான்.
ஒரு மாதம் கழிந்தது. அந்த இளைஞன் முகம் மலரவே இல்லை. குழல் இசைப்பதையும் விட்டுவிட்டான். ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்துக்குச் சென்று நெடுங்காலமாக தான் தங்கியிருந்த ஆலமரத்துக்கு அடியில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவான். அவனிடம் மகிழ்ச்சிக்குழல் மட்டுமே இருந்தது. மகிழ்ச்சியே இல்லாத அத்தருணத்தில் அக்குழலை எடுத்து இசைக்க அவன் மனம் விரும்பவில்லை. அமைதியாக உட்கார்ந்திருப்பான். தன் அன்புக்குரிய பசுக்கள் எங்காவது தென்படுகிறதா என அங்குமிங்கும் தேடிப் பார்ப்பான். பிறகு ஏமாற்றத்தோடு திரும்பிவிடுவான்.
இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது. துயரம் படிந்த இளைஞனுடைய முகம் மலரவே இல்லை. இளவரசியோடு முகம் கொடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று அவள் கேட்டாலும் அவன் ஒரு பதிலும் சொல்வதில்லை.
ஒருநாள் அவன் வழக்கம்போல காலை உணவுக்குப் பிறகு மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போது அவனுக்குத் தெரியாமல் அந்த இளவரசியும் அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள்.
விண்ணுலகத்தில் வசித்துவந்த பசுக்களும் இளைஞனிடமிருந்து ஒரு செய்தியும் இல்லையே என நினைத்து குழப்பத்தில் மூழ்கியிருந்தன. இன்பக்குழலின் இசையும் வரவில்லை, துன்பக்குழலின் இசையும் வரவில்லை என்பதால் ஏதோ ஒரு சிக்கலில் அவன் சிக்கியிருப்பதாக அவை நினைத்தன. எதுவாக இருந்தாலும் ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம் என நினைத்து அதே நாளில் அவையும் பூமிக்கு வந்து சேர்ந்தன.
வழக்கமாக இளைஞன் உட்கார்ந்திருக்கும் மரக்கிளையில் அவன் காணவில்லை. ஆலமரத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் அவனைத் தேடிப் பார்த்தன பசுக்கள். எங்கும் அவன் தென்படவில்லை. ஆளுக்கு ஒருபக்கம் நடந்து சென்று தேடிப் பார்க்கலாம் என முடிவெடுத்து ஒவ்வொரு பசுவும் ஒவ்வொரு பக்கம் நடந்துசென்றது.
மலையடிவாரத்தை நோக்கி வந்த இளைஞன் மரத்தை நெருங்கிவரும் சமயத்தில் தன்னை நோக்கி வரும் ஒரு பசுவைக் கண்டான். தன் குழலோசை கேட்காமல் விண்ணுலகத்திலிருந்து தம் பசுக்கள் பூமிக்கு வர வாய்ப்பே இல்லை என நினைத்து முதலில் அப்பசுவை அவன் பொருட்படுத்தாமல் நடந்து போய்க்கொண்டே இருந்தான். சிறிது தொலைவு சென்ற பிறகுதான் தோற்றத்தில் தன் பசுவைப்போலவே அப்பசுவும் காணப்பட்டதால் ஒரு சின்ன சந்தேகத்துடன் நின்றான்.
ஒரு காலத்தில் பசுக்களை அழைக்க வழக்கமாக எழுப்பும் ஓசையை எழுப்பி அதை அழைத்தான். அவன் அழைப்புக்குரலைக் கேட்டதும் அந்தப் பசு திரும்பிப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டது. உடனே ஓடோடி வந்தது. அவனும் அதை நோக்கி ஓடினான். அதன் கழுத்தைப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டான். அதன் முதுகில் ஏறிப் படுத்தான். ம்மே ம்மே என வெவ்வேறு விதமாக குரலெழுப்பி அவனும் பசுவும் கொஞ்சினர். மறைவிடத்திலிருந்து அக்காட்சியைப் பார்த்த இளவரசி ஆச்சரியத்தில் உறைந்துபோனாள். முதன்முறையாக அந்த இளைஞன் முகம் மலர்ந்திருப்பதை அவள் பார்த்து மகிழ்ந்தாள். அவள் விழிகளிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வடிந்தது.
அந்தப் பசு எழுப்பிய குரலைக் கேட்டதும் வெவ்வேறு திசைகளில் அவனைத் தேடிக்கொண்டிருந்த பிற பசுக்களும் அந்த இடத்தை நோக்கி ஓடிவந்தன. இளைஞனைப் பார்த்ததும் அவையும் மகிழ்ச்சியில் துள்ளின. ஒவ்வொன்றும் ஓடிவந்து அவனை முட்டி தன் ஆனந்தத்தைத் தெரிவித்தது. ஏழு பசுக்களிடையில் அவன் ஒரு சிறுவன் போல மகிழ்ச்சியோடு நின்றிருந்தான்.
கொஞ்சல் எல்லாம் முடிந்த பிறகு அப்பசுக்களிடம் தன்னிடமிருந்த துன்பக்குழல் தொலைந்துபோன செய்தியைத் தெரிவித்தான் அவன். குழல் இசைக்காமல் போனதற்கு அதுதான் காரணம் என்றும் தெரிவித்தான். ‘கவலைப்படாதே’ என்று சொன்ன ஒரு பசு அவனுக்கு புதியதொரு குழலைக் கொடுத்தது. ‘இனிமேல் நீ இதையே துன்பக்குழலா பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்தது. ஒரு பெரிய புதையலைப் பெற்றுக்கொள்வதுபோல அவன் அக்குழலைப் பெற்றுக்கொண்டான்.
இளைஞனும் பசுக்களும் உரையாடலில் மூழ்கியிருந்த நேரத்தில் இளவரசி தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள். பசுக்களின் முன்னால் தோன்றி வணங்கினாள். இளைஞன் அவளை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நடந்த விஷயங்களையெல்லாம் பசுக்களிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அவளை பசுக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தினான்.
அவனுடைய குழல் தொலைந்துபோனதற்கு தானும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்துவிட்டதாகத் தெரிவித்து இளைஞனிடமும் பசுக்களிடமும் மனமார மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் அவள்.
‘அவன் மேல நான் வச்ச ஆசைதான் எல்லாத்துக்கும் காரணமே தவிர, எனக்கு வேற எந்த கெட்ட நோக்கமும் இல்லை.’
அவளுடைய முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்த காதலை அந்த இளைஞனும் புரிந்துகொண்டான். அந்தப் பசுக்களும் புரிந்துகொண்டன.
‘நூறாண்டு காலம் மாறாத அன்போடு நீடித்து வாழ்க’ என இருவரையும் பசுக்கள் வாழ்த்தின. இருவரும் பசுக்களின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.
‘குழல்களை பத்திரமா வச்சிக்கோ. எப்ப வேணும்ன்னாலும் எங்களை நீ கூப்பிடலாம்’ என்று சொல்லிக்கொண்டே விடைபெற்று ஆகாயத்தில் பறந்துசென்றன.
பசுக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய பிறகு இளவரசியும் இளைஞனும் வெகுநேரம் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து கதை பேசினார்கள். இளைஞன் தன் கதையை முழுமையாக அவளுக்கு விரிவாகச் சொல்லத் தொடங்கினான். பொழுது சாயும் வரைக்கும் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குப் பிறகு இருவரும் அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
0
The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள் appeared first on கிழக்கு டுடே.