Reading view

மணிப்பூர்: மனிதநேயத்தின் மரண ஓலம்

இந்திய பெருநிலத்தை இணைக்கும் காப்பியமான மகாபாரதத்தில், 'மணிபூரம்' பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. அர்ஜுனனின் தீர்த்தயாத்திரை பாதையில் மணிபுரம் பற்றியும், நாகர்களும் பற்றியும் வருகின்றது. அவன் நாகர்களின் இளவரசியை மணந்து பப்ருவாஹனன் எனும் பிள்ளை பிறப்பதும், அந்தப் பிள்ளை. தந்தையை கொல்வான் என்கிற விதி கொண்டவனாகவும் முன்கூட்டியே அறியப்படுகிறான். கிட்டத்தட்ட, கிரேக்க தொன்மத்தில் ஈடிபஸுக்கு வாய்த்த அதே தீர்க்கதரிசனம்தான்.

தொன்மங்களில் வரும் மணிபூரம் இன்றைய ஒடிஷாவில் இடம்பெறும் பகுதியா, அல்லது வடகிழக்கு பகுதியா என்கிற வரலாற்று சர்ச்சைகள் உண்டு.
இயற்கையாக அமைந்த லோக்தாக் நன்னீர் ஏரியும், இம்பால் நதியும், சிறு ஆறுகளும், கூப்ரு மலையும், குன்றுகளும் சூழ்ந்த பள்ளதாக்கு இன்றைய மேதி (Meitei) இன மக்களின் வாழ்விடம். மேதி மக்களின் தொன்மங்களில் கூப்ரு ஒரு முக்கிய கடவுள்.
மேதிக்களிடையே சனமாஹிஸம் எனும் நாட்டார் சமயமும் பிரபலமாக இருந்தது. கங்க்ளா கோட்டை கொண்டு ஒரு சாம்ராஜ்யமும் அமைத்திருந்தனர்.
18ம் நூற்றாண்டில் சாந்திதாஸ் கோஸ்வாமியின் "பிஜோய் பாஞ்சாலி' காவியம், இந்த நிலத்தை மகாபாரத மணிபூரத்துடன் தொடர்புபடுத்தி, மேதி இன அரசர்கள், அர்ஜுணன் வழி வந்தவர்கள் என்கிறது. அதைத் தொடர்ந்து மேதி அரசர்களும் வைணவ சமயத்தை தழுவுகின்றனர். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் கையகப்படுத்தும்வரை அது மணிப்பூர் சமஸ்தானம்தான்.
இதற்கிடையே பர்மிய ஆக்கிரமிப்பையும், மங்கோலிய படையெடுப்பையும் எதிர்கொண்டது இந்த பள்ளதாக்கு. இந்திய சுதந்திர போராட்டத்தின் பின்ணணியில், மணிப்பூர் சமஸ்தானம் பர்மாவிலிருந்து பிரிந்து இந்திய யூனியன் பிரதேசத்தோடு இணைந்து கொண்டது.
வடகிழக்கு மலைப்பிரதேசங்கள், பர்மிய பிரதேசம் (இன்றைய மியான்மர்), வங்கதேசம் (இன்றைய மேற்கு வங்க மாநிலமும், பங்களாதேஷ் நாடும் இணைந்த நிலம்) என்று பல இடங்களில் கிட்டத்தட்ட 50 வகை இனக் குழுக்கள் உள்ளடக்கிய மக்களை 'குக்கி' மக்கள் என்றழைக்கின்றனர்.




இந்திய பெருநிலத்தை இணைக்கும் காப்பியமான மகாபாரதத்தில், 'மணிபூரம்' பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. அர்ஜுனனின் தீர்த்தயாத்திரை பாதையில் மணிபுரம் பற்றியும், நாகர்களும் பற்றியும் வருகின்றது. அவன் நாகர்களின் இளவரசியை மணந்து பப்ருவாஹனன் எனும் பிள்ளை பிறப்பதும், அந்தப் பிள்ளை. தந்தையை கொல்வான் என்கிற விதி கொண்டவனாகவும் முன்கூட்டியே அறியப்படுகிறான். கிட்டத்தட்ட, கிரேக்க தொன்மத்தில் ஈடிபஸுக்கு வாய்த்த அதே தீர்க்கதரிசனம்தான்.

தொன்மங்களில் வரும் மணிபூரம் இன்றைய ஒடிஷாவில் இடம்பெறும் பகுதியா, அல்லது வடகிழக்கு பகுதியா என்கிற வரலாற்று சர்ச்சைகள் உண்டு.
இயற்கையாக அமைந்த லோக்தாக் நன்னீர் ஏரியும், இம்பால் நதியும், சிறு ஆறுகளும், கூப்ரு மலையும், குன்றுகளும் சூழ்ந்த பள்ளதாக்கு இன்றைய மேதி (Meitei) இன மக்களின் வாழ்விடம். மேதி மக்களின் தொன்மங்களில் கூப்ரு ஒரு முக்கிய கடவுள்.
மேதிக்களிடையே சனமாஹிஸம் எனும் நாட்டார் சமயமும் பிரபலமாக இருந்தது. கங்க்ளா கோட்டை கொண்டு ஒரு சாம்ராஜ்யமும் அமைத்திருந்தனர்.
18ம் நூற்றாண்டில் சாந்திதாஸ் கோஸ்வாமியின் "பிஜோய் பாஞ்சாலி' காவியம், இந்த நிலத்தை மகாபாரத மணிபூரத்துடன் தொடர்புபடுத்தி, மேதி இன அரசர்கள், அர்ஜுணன் வழி வந்தவர்கள் என்கிறது. அதைத் தொடர்ந்து மேதி அரசர்களும் வைணவ சமயத்தை தழுவுகின்றனர். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் கையகப்படுத்தும்வரை அது மணிப்பூர் சமஸ்தானம்தான்.
இதற்கிடையே பர்மிய ஆக்கிரமிப்பையும், மங்கோலிய படையெடுப்பையும் எதிர்கொண்டது இந்த பள்ளதாக்கு. இந்திய சுதந்திர போராட்டத்தின் பின்ணணியில், மணிப்பூர் சமஸ்தானம் பர்மாவிலிருந்து பிரிந்து இந்திய யூனியன் பிரதேசத்தோடு இணைந்து கொண்டது.
வடகிழக்கு மலைப்பிரதேசங்கள், பர்மிய பிரதேசம் (இன்றைய மியான்மர்), வங்கதேசம் (இன்றைய மேற்கு வங்க மாநிலமும், பங்களாதேஷ் நாடும் இணைந்த நிலம்) என்று பல இடங்களில் கிட்டத்தட்ட 50 வகை இனக் குழுக்கள் உள்ளடக்கிய மக்களை 'குக்கி' மக்கள் என்றழைக்கின்றனர்.
"இது என் நிலம்" என்று ஆர்பரிப்புடன் கூவும் பூர்வ குடியினரை, சற்றே வளர்ந்த நாகரிக மக்களான மாயர்கள் அடிமைப்படுத்தி செல்வதை, 'அபோகலிப்டோ' திரைப்படத்தில் பார்க்கலாம். திரைப்படத்தின் முடிவில் ஐரோப்பியரின் கப்பல் (ஸ்பானியர்கள்) அமெரிக்க கடற்கரையை வந்தடையும் காட்சி வரும். ஐரோப்பிய காலனியாதிக்கம் அந்த நிலத்தின் பெரும் அரசுகளை நிர்மூலமாக்கி, பூர்வகுடிகளை பெருமளவில் அழித்த பின்னாள் வரலாறு அந்தக் காட்சியின் வழியே நமக்கு காட்டப்படுகிறது.
பழங்குடி இன மக்களுக்கான ஆகப் பெரும் பிரச்னையே அவர்கள் நாகரிக வளர்ச்சியில் நிலமுடையவர்களாக பரிணமிக்க விடாமல், வளர்ந்த நாகரிக மக்கள் அழுத்தம் கொடுப்பதுதான். காடுகளை பாதுகாக்கும் அளவிற்கான முக்கியத்துவத்தை, அந்தக் காடுகளில் உறையும் குடிகளுக்கு அளிக்க நவீன அரசுகள் முற்படுவதில்லை.
பிரிட்டிஷாரின் காலனியாதிக்க காலத்தில், குக்கி இன மக்கள் ஆங்கிலேய அரசுடன் போரிட்டு, தோற்றதும், மெது மெதுவே, கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகையால், கிறிஸ்துவ மதத்தை தழுவுகின்றனர்.
சுதந்திர இந்தியாவின் பெரினியல் பிரச்னைகளில் ஒன்றான எல்லைப்புற அகதிகள் பிரச்னையும் மணிப்பூர் பள்ளதாக்கை இம்சிக்கின்றது. குக்கி பழங்குடியினரின் பல நெருங்கிய இனங்கள் மியான்மரிலிருந்து, இந்திய நிலங்களுக்கு புலம்பெயர, மலையக மக்களுக்கும், பள்ளதாக்கு மக்களுக்கும் இடையே பெரும் விரிசலை உண்டு பண்ணிவிட்டது. இதில் மத வேற்றுமையும் ஓர் அடிநாதமாக இணைய, தற்போதைய கலவர சூழல் வெடித்து கிளம்பியிருக்கிறது.
மனித இனத்தின் தொடக்கத்தில் இருந்தே, ஆண் மையச் சமூகமான நாம், பெண்களை மூன்று தளங்களில் இருத்தி வருகிறோம்.
தாய் என தொழும் பக்தி பொங்கும் இடம்.
பொன், மண், பொருள், பணியாள் போல உடைமைகளில் ஒன்றாக பெண்ணையும் கருதுவது.
மூன்றாவதாக தன்னுடைய சந்ததியை பெருக்கி தரும் இன்றியமையாத கருவி.
சக மனிதராக பெண்களை நிறுத்தி இயல்பானதொரு குடிமைச் சமூகமாக பழகிவருவது மிகவும் அரிது. அதிலும், போர்கள், சண்டைகள் என வரும்போது பெண்களை அபகரிப்பது, வண்புணர்வு செய்வது, கொடுமைப் படுத்துவது ஒரு யுத்த உக்தியாகவே நம் சமூகங்களில் நிகழ்ந்து வருகிறது.
அண்மையில் இணையத்தில் பரவிய வீடியோவில் குக்கி இன பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, பொதுவெளியில் மானபங்கபடுத்தி, வண்புணர்ச்சி செய்கின்றனர் மேதி இன கொடுங்கோலர குழு, எத்தகைய மானுட அவலம் இது. இந்த கோரச் செயலில் ஈடுபட்ட மனிதர்கள், அதை படமெடுத்தவர்கள், அதை பரப்பிவிட்டவர்கள் என எத்தனை ஈனப்பிறவிகள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்த கோர வீடியோக் காட்சிகளைக் கண்ட பலருடைய எதிர்வினைகளும், அந்த பேரதிர்ச்சியைக் கடந்து, இந்த அவமானத்தை எப்படி அரசியல் தரப்பில் வைத்து ஆதாயம் சேர்ப்பது என்ற முனைப்பில் இருந்தன.
இன்றைய சோஷியல் மீடியாவின் மாபெரும் துயரம் இப்படி அடிப்படை மானுடப் பண்புகளைத் துறந்து, இணைய வெளியின் வீச்சிற்கு நம்மை நாமே பலி கொடுப்பதுதான்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், ஒரு தாய்க்கு மகனாகவோ, ஒரு பெண்ணிற்கு இணையராகவோ, அல்லது ஒரு பெண்ணிற்கு தந்தையாகவோ இருக்கப்பட்ட எவரொருவரும், அந்த இரு பெண்களுக்கு நேர்ந்த கொடுமைக்கென, பொறுப்பேற்று தலைகுனிந்து நிற்க வேண்டும்.
தங்களுக்கான கலாச்சாரம், நிலம், மொழி, மதம் என குழுவாக ஏற்றுக் கொண்டு வாழ்வது இந்த பூமியில் முக்கியமானதுதான். அதன் முரண்களும், பெறுதல்களும், இழப்புகளும் அலசி தீர்க்கப்பட வேண்டியது, மனிதநேயம் பரப்பும் விரிந்த குடையின் கீழ்தான்.
பிறரை பலி கொள்ளும் வேற்றுமை நெருப்பில் குளிர்காய முனைவோரயும், அந்த நெருப்பு உட்செரித்துப் போகும் காலம் வாராமல் போகாது.


உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •  

கிஷ்கிந்தா காண்டம் – நினைவெனும் இருட்குகையின் இரகசிய வெளிச்சம்

கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் வனப்பகுதியை ஒட்டி வாழும் குடும்பம் ஒன்றின் கதை. ஒவ்வொன்றிலும் கச்சிதம் எதிர்பார்க்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் அப்பு பிள்ளா (விஜயராகவன்). அவருடைய மகன் அஜய் சந்திரன் (ஆசிப் அலி). மனைவியை புற்றுநோய்க்கு பறிகொடுத்துவிட்டு, காணாமல் போன மகனும் இன்றி நிர்க்கதியாக நிற்கிறார் அஜய் சந்திரன். அவருடைய வாழ்வில் புது நம்பிக்கையாக மறுமணம் நிகழ்கிறது. அவருடைய குடும்பத்தில் நம்பிக்கையும், கனிவும் ததும்ப கலக்க முயல்கிறார் மனைவி அபர்ணா (அபர்ணா பாலமுரளி).  

வனத்தை ஒட்டிய அவர்கள் வீட்டைச்சுற்றி குரங்குகளின் நடமாட்டம்.  திடீரென்று துப்பாக்கி குண்டுகளின் தடங்கள் கிடைக்கிறது. அப்பு பிள்ளாவின் துப்பாக்கி காணாமல் போனது தெரிய வருகிறது. அப்பு பிள்ளாவிற்கு ஞாபக மறதி இருப்பது படிப்படியாக தெளிவாகிறது. அவர் நினைவில் இருப்பது என்ன, அவர் மறந்துவிட்டது என்ன என்பது இருட்குகை. அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களின் உலகம் அது.

ஏன் துப்பாக்கி காணாமல் போனது? அவரின் பேரன் எங்கு போனான்? ஏன் அவர் கதவை எப்போதும் அடைத்துவைத்துக் கொள்கிறார்? முன்னாள் நக்சல் இயக்கத்தினரை ஏன் சந்திக்கிறார்? குரங்குகள் மட்டும் சாட்சியாக நிற்க அவர் ஏதேனும் குற்றம் புரிந்தாரா? அப்பு பிள்ளாவின் நினைவு திரும்புமா? துப்பாக்கியும், தொலைந்துபோன குண்டுகளும் திரும்பக்கிடைக்குமா? 

கடந்து போன காலத்தின் உண்மையைக் கண்டறிய சிசிபஸ் போல அப்பு பிள்ளா முனைகிறார். உண்மையின் உச்சியை அடைந்ததும், தெளிவை விட குழப்பங்களும், கவலைகளும் வந்தடைகின்றன.  மீண்டும் முதலில் இருந்து உண்மையைத் தேடுகிறார். சளைப்பும், சலிப்பும் அவரை நிறுத்த முடியவில்லை. ஏன்? 

கிஷ்கிந்தா காண்டம் த்ரிஷ்யம் படத்தைப் போன்ற சாயலை சற்றே கொண்டது. ஆயினும், இக்கதையின் முதன்மைக் கதை மாந்தர்கள் புத்திசாலிகள் இல்லை. அழுகை, நோய்மை, இயலாமை அவர்களைப் பீடிக்கிறது. அரவணைப்பின்றி நெருக்கும் உலகத்தின் ஊடாக அவர்களால் பத்திரமாக மீண்டுவரும் முயற்சி என்னானது என்பதே கதை.  இத்தனை மனதுக்கு நெருக்கமான, உணர்ச்சிப்பூர்வமான, நெகிழ்ச்சியான திரைப்படத்தைப் பார்த்து வெகுநாட்கள் ஆகிறது. மறக்காமல் பாருங்கள். 

  •  

‘Kathal’ – சமகாலம் குறித்த சலிப்பூட்டாத எள்ளல்

உருவகக் கதைகள் நம்மை உண்மையான உலகங்களுக்கு அழைத்துச் செல்லும் அற்புதச் சாவிகள். ‘Kathal’ எனும் இந்தித்திரைப்படம் காணாமல் போன எம்.எல்.ஏ.வின் Uncle Hong ரகப் பலாக்களைத் தேடும் தலித் பெண் ஆய்வாளர் பற்றிய கதை. இது உண்மையில் பலாக்காயை திருடியவரை கண்டுபிடிக்கும் பயணமில்லை.

முதல் காட்சியே அதகளம். இந்திய சினிமா காவல்துறையின் Chase காட்சிகள் எப்படியிருக்கும் என வழமையாக விதித்து வைத்திருக்கும் விதிகளை எல்லாம் விளையாட்டாக அத்தொடர் காட்சி குலைக்கிறது. இது பிற படங்களைப் பகடி செய்யும் முயற்சியல்ல. யதார்த்தத்திற்கு நெருக்கமான காட்சியனுபவத்தைத் தரும் முயற்சியாகவே திரையில் கதை வளர்கிறது.

அதிகாரம், அரசியல், சாதி, பாலினம், ஊடகம் எனப்பலவற்றின் மீதான நகைச்சுவையால் ஆன வெளிச்சம் இப்படம். இதில் காதைக் கிழிக்கும் சண்டைக்காட்சிகள், அதிரடிக்கும் பஞ்ச் வசனங்கள், ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறை அறவே இல்லை. தொலைந்து போன பெண்களை விட அரசியல் தலைவரின் பலாப்பழம் ஏன் முதன்மையானதாகத் தேடப்பட வேண்டிய ஒன்றாகிறது? பதவி உயர்வே வேண்டாமென்று ஒரே ஊரில் சமையல் வேலைகளுக்கான ஆளாக ஏன் பெண்களைக் குடும்ப அமைப்பு நடத்துகிறது?

உண்மையை உரக்கச் சொல்லும் சின்னஞ்சிறிய ஊடகவியலாளர் ஒருவர் இப்படத்தில் கைது செய்யப்படுகிறார். முழுக்க, முழுக்கச் சோகமயமனதாக மாற்ற சகல வாய்ப்புகளும் உள்ள காட்சி அது. அங்கே பிளந்து கொண்டு வெளிப்படும் பகடியும், இசையும், பத்திரிகையாளராகத் தோன்றுபவரின் நடிப்பும் சமகாலத்தின் மீதான நுண்மையான கேலியாக அமைகிறது. ‘நான் ரொம்பப் பிரபலமாகிட்டேன். இவங்க அடிச்ச அடியில என் பிருஷ்டம் மட்டும் இரண்டு இன்ச் வீங்கிருச்சு’ என அவர் இறுதியாகத் தோன்றும் காட்சியில் பேசுகையில் மிதமான கற்பனையுலகினில் உண்மையின் கூர்மையான வெளிப்பாடு சாத்தியப்பட்டிருக்கிறது.

தீவிரமான சண்டைக்காட்சியில் அடித்து நாயகிக்குக் கை வலிக்கிறது. கதவை உடைக்கப் போகும் நாயகன் அதற்கான திராணியின்றி நாயகியின் கைகளில் விழுகிறான். காணாமல் போன பலாப்பழத்திற்குப் பரிசு என்றவுடன் அதைப்போன்ற போலிப் பலாக்கள் பல வரிசையில் வந்து நிற்கின்றன. எம்.எல்.ஏ.வின் புகழ்பாடும் பேனர் பழைய பேப்பர் கடைக்குப் போவதற்காக நின்றபடியே பலாப்பழ திருட்டிற்கு உடந்தையாகிறது. இடையே மிக மென்மையான காதல் கதை ஒன்று மனதோடு உறவாடுகிறது.

இக்கதை தலித் காவல் ஆய்வாளர் உயர்சாதி காதலன் பதவி உயர்வுக்காக உழைக்கும் திரைப்படம் என்றும் அணுகப்படக்கூடும். ஆயினும், இப்படம் சாதிச்சுவரின் ஓரிரு செங்கல்களை நகைச்சுவை சுத்தியல் கொண்டு உடைக்கிறது. சாதிப்பெருமிதங்களை முன்னிறுத்தும் உலகினை கூர்வேல் கொண்டு எதிர்க்கவில்லை. அதற்கு மாறாகக் கிச்சு கிச்சு மூட்டுகிற பாவனையில் தலையில் ஒரு குட்டுக் கொட்டுகிறது. உலகை மாற்றும் வேகம் இக்கதையின் நாயகர்களிடம் இல்லை. படம் முடிகையில் தேடியது கிடைத்ததா என்பதைவிட ஏன் இதைப்போய்த் தேடினார்கள் என்கிற வினாவே கடத்தப்படுகிறது. மறக்காமல் பாருங்கள். காணாமல் போகும் எளியவர்களின் மீதான அக்கறைமிக்க நுண்மையான ஆக்கம் இத்திரைப்படம். இத்திரைப்படத்தை தமிழிலேயே நெட்பிளிக்ஸில் காணலாம்.

  •  

டாடா குழுமத்திடம் இருந்து தன்னம்பிக்கை தரும் கதைகள்

 கல்லூரி மூத்தவர் ஒருவரின் பிறந்தநாளுக்காக என்ன புத்தகத்தை வாங்கலாம் என்று அவரிடமே கேட்டேன். ‘#Tata Stories- 40 Timeless Tales to Inspire You’ என்கிற ஹரிஷ் பட் எழுதிய நூலினை தேர்வு செய்தார். டாடா குழுமத்தின் ‘பிராண்ட் பாதுகாவலராக’ திகழும் நூலாசிரியர் டாடா தொடர்புடைய விறுவிறுப்பான, சுவையான நாற்பது நிகழ்வுகளை அடுக்கிச் செல்கிறார். உத்வேகமூட்டும் கதைகள் என்கிற வரையறை என்பதால் பெருமிதமிக்க, உற்சாகமான நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார். 

டாடா  சுமோ என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்திருப்போம். சுமோ என்பது என்ன? வெகுகாலமாக ஜப்பானிய தற்காப்பு கலையின் தாக்கத்தில் வைக்கப்பட்ட பெயர் என்றே எண்ணிக்கொண்டு இருந்தேன். சுமந்த் மோல்காவ்கர் எனும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரின் நினைவாகவே அப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. லாபம் என்பதை சந்தையில் கிட்டியவரை அடிப்போம் என்பதாக இல்லாமல், நல்ல தரமான வண்டிகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து பெற வேண்டும் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. எதிலும் ஆகச்சிறந்த ஒன்றை எட்ட வேண்டும் என்கிற சிந்தனையே  அவரை செலுத்தியிருக்கிறது. புனேவில் டாடா மோட்டார்ஸ் ஆலையை துவக்கிய போது 15 இலட்ச ரூபாய்  செலவில் பெரிய ஏரி  ஒன்றையும் உருவாக்கினார் மிஸ்டர். சுமோ. இன்றைக்கு அது 245 ஏக்கர் ஈரநிலமாக விரிந்து நிற்கிறது. 

ரத்தன் டாடா  ஒரு கனவு கண்டார், “ஜென் கார் அளவில், அம்பாசிடர் போன்ற உள் வசதிகளோடு, மாருதி 800-ன் விலையில் ஒரு காரினை உருவாக்க வேண்டும்”. புதிதாக ஒரு ஆலையை இத்தகைய கார்களை உற்பத்தி செய்ய வைக்க வேண்டுமென்றால் 2 பில்லியன் டாலர் செலவாகும் என்று தெரிந்தது. அது மலைப்பைத் தரும் முதலீடு. சாத்தியமற்றதும் கூட. தீர்வு? ஆஸ்திரேலியாவில் செயலிழந்து போன நிஸான் கார் உற்பத்தி ஆலை ஒன்றை முழுதாக பிரித்தெடுத்து அப்படியே இந்தியாவிற்கு கொண்டு வந்து ஆலையை உருவாக்கினார்கள். ஐந்தில் ஒரு பங்கு செலவில் இண்டிகா இந்தியாவிற்கு கிடைத்தது. 


ஓசூரில் இயங்கும் டைட்டன் நிறுவனத்தை உருவாக்கியவர்  ஸெர்ஸேஸ்  தேசாய். தமிழ்நாடு அரசோடு இணைந்து வர வெறும் கைக்கடிகார நிறுவனம் ஒன்றை உருவாக்கவில்லை. பல நூறு தொழிலாளர்களின் எதிர்காலத்தை உருவாக்கினார். நாமக்கல், கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து உள்ளூரிலேயே தமக்குத் தேவையான தொழிலாளர்களை திறனோடு தயார்படுத்தினார். வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக டைட்டன் பள்ளியையும் உருவாக்கினார். எங்கிருந்தோ ஓசூர் வந்த அவர், அங்கேயே மரணித்தார். தங்களுடைய மைந்தராக அவரை தத்தெடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு கண்ணீர்விடை கொடுத்தார்கள். 


கோஹினூர் வைரத்தை போல இரு மடங்கு அளவில் பெரிய ஜூப்ளி  வைரத்தினை ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் டோரப்ஜி டாடா  தன்னுடைய மனைவி  மெஹெர்பாய்க்கு பரிசாக கொடுத்தார். உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு டாடா குழுமத்தின் உருக்காலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை 1924-ல் வந்தது. தன்னுடைய சொத்துக்கள், விலை மதிக்க முடியாத காதற்பரிசு அனைத்தையும் அடமானம் வைத்து நிலைமையை சமாளித்தார்கள்  தம்பதிகள். விரைவில் நிலைமை சீரானதும் அனைத்தையும் மீட்டார்கள். 1930, 1932-ல் முறையே மனைவி, கணவன் இறந்து போனார்கள். தங்களுடைய சொத்துக்களை முழுவதும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருந்தார் டோரப்ஜி டாடா. அந்த ஜூப்ளி வைரம் விற்கப்பட்டு அதில் கிடைத்த வருமானத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனை கட்டப்பட்டது. 


ஏர் இந்தியாவை டாடா  நடத்திய காலத்தில் உலகத்தின் தலைசிறந்த வானூர்தி  சேவை நிறுவனம் என்கிற பெருமிதத்தை பெற்றது. விமான இருக்கைகள் வசதியாக இருக்கிறதா, பரிமாறப்படும் தேநீர் சுவை தரமாக இருக்கிறதா என்று ஒவ்வொன்றையும் ஜே.ஆர்.டி. டாடா  கண்காணித்து ‘நீலக்குறிப்புகளாக’ தன் குழுவினருக்கு வழங்கியது இந்த வெற்றிக்கான முதன்மையான காரணம். மேலும், வானூர்தியின் உள்ளே உள்ள திரைச்சீலைகள் வெளுத்து போகாமல் இருக்கிறதா? இடுக்குகளில் தூசி இல்லாமல் முழுமையான சுத்தம் பேணப்படுகிறதா? கழிப்பறையில் திசு பேப்பர் சரியாக வைக்கப்பட்டு இருக்கிறதா என்று அனைத்தையும் தானே அவ்வப்போது ஆய்வு செய்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். சேவை என்பது சொல்லில் இருப்பதல்ல, அது செயல்பாடு சார்ந்தது. 


IISC, TIFR என்று பெரும் பொருட்செலவில் பல்வேறு அறிவியல் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை கட்டியெழுப்பி பின்னர் தேசத்திற்கு அர்ப்பணித்த பெருமைமிக்க வரலாறும் டாடா குழுமத்திற்கு உரியது. இந்தியாவின் அணுசக்தி திட்டங்கள் துவங்கி முதல் சூப்பர் கணினி வரை பலவற்றில் டாடாவின் அழுத்தமான பங்களிப்பு உண்டு. 


இந்தியாவின் முதல் சூப்பர் கணினி ‘ஏகா’வை உருவாக்குவது என்று டாடா குழுமம் திட்டமிட்டது. குறித்த காலத்திற்குள் பெரும் சவால்களுக்கு இடையே அக்கணினி தயாராகி 20 அக்டோபர் 2007-ல் நின்றது. அந்நேரம் அக்கணினி 97 டெர்ராஃபிளாப்கள்  வேகம் கொண்டதாக இருந்தது. உலகின் டாப் 100 சூப்பர் கணினிகளில் ஒன்றாக மாற இந்த வேகத்தை 100 டெர்ராஃபிளாப்களாக கூட்ட வேண்டும். ரஷ்ய அறிவியல் அறிஞர்களின் உதவியை நாடினார்கள். சார்மினார் சிகரெட்கள், கிங் பிஷர் மதுவகைகள் பரிசுகளாக அவர்களுக்கு சென்றன. தங்களின் நிறுவனங்களின் அனுமதியோடு, அவர்கள் பத்து நாட்களுக்குள் கணினியின் வேகத்தை 118 டெர்ராஃபிளாப்களாக மாற்றி சாதித்தார்கள். இந்தியாவின் முதல் சூப்பர் கணினி கனவு சாத்தியமானது. அக்கணினி சந்திரயான் திட்டத்தில் பெரும் பங்காற்றியது.  


டாடா குழுமத்தை தோற்றுவித்த ஜாம்ஷெட்ஜி டாடா பெருங்கனவுகள் கொண்டவராக இருந்தார். உருக்காலை உருவாக்குவதற்காக அமெரிக்கா சென்றது  ஒருபுறம், மிகப்பெரிய அளவிலான நீர்மின் திட்ட உருவாக்கத்துக்காக நயாகரா அருவி நோக்கி பயணம் என்று இன்னொரு புறம் அவர் சுற்றிச் சுழன்றார். அவர் ஏன் தாஜ் ஹோட்டலை கட்டினார். அவரை நிறத்தை கொண்டு பாகுபடுத்தி ஹோட்டலுக்குள் விடவில்லை என்கிற கதைக்கு எந்த சான்றுமில்லை. தன்னுடைய வியாபாரத்தை பெருக்க இந்த ஹோட்டலை அவர் பார்க்கவில்லை. ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிடம் குத்தகை விடலாம் என்றே அவர் விரும்பினார். பெரும் வருமானம் ஈட்டும் ஒன்றாக இந்த ஹோட்டலை பார்த்தாரா? இதற்கும் பதில், ‘இல்லை!’ என்பது தான். அவர் லண்டன், பெர்லின், பாரீஸ்  என்று உலகம் முழுக்க அலைந்து, திரிந்து தன்னுடைய தாஜ் ஹோட்டலை இழைத்து, இழைத்து உருவாக்கினார். 26 லட்ச ரூபாய் செலவில் எழுந்த அந்த மாளிகைக்கு அன்றைய தேதியில் பிற தங்குமிடங்களை போன்றே ஆறு ரூபாய் வாடகையை தான் அவரும் வைத்தார். 
வேறென்ன காரணம்? அவரின் உதவியாளர் பிலிமோரியாவின் குறிப்புகளில் அதற்கான விடை இருக்கிறது, “பம்பாய் நகரத்தின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் முன்னேறிய ஹோட்டல் ஒன்று தவிர்க்க முடியாத தேவை என்று அவர் நம்பினார். வேறெந்த தொழிலதிபரும் இதனுள் நுழையவில்லை என்பதால் தான் செய்து முடிக்க வேண்டிய கடமை என்று அவர் செயல்பட்டார்’. பம்பாயில் உலகததரத்திலான ஒரு ஹோட்டலை எழுப்பினால் உலகமெங்கும் உள்ள மக்கள் இந்நகரத்தை நோக்கி பெருமளவில் வருவார்கள் என்கிற பெருங்கனவு அவரை செலுத்தியது. 

இந்த நூலில் இன்னும் பற்பல சுவையான கதைகளும், ஆளுமைகள் குறித்த எழுத்தோவியங்களும் உண்டு. ஒரே ஒரு கடிதத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு இக்கதை மழையில் இருந்து விடைபெறலாம். ஜே.ஆர்.டி.டாடாவின் வாழ்க்கையை செலுத்தும் விழுமியங்கள் யாவை என்று 06-08-1965-ல் பன்சாலி எனும் ஆசிரியர் கேட்டிருந்தார்.
13-09-1965-ல் இக்கடிதத்திற்கு ஜே.ஆர்.டி.டாடா பதில் எழுதினார். அதில், தன்னை ஒரு எளிய மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் கீழ்கண்ட விழுமியங்களை பட்டியலிடுகிறார்,


ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பு இரண்டுமில்லாமல் மதிப்புமிக்க எதையும் வாழ்க்கையில் வென்றிட இயலாது. முகத்தின் முன் சொல்லப்படும் துதிகள், கவர்ச்சிமிக்க சொற்களில் ஒருவர் ஏமாந்து விடக்கூடாது. தன்னுடைய சுய அறிவை பயன்படுத்தி தனக்காக தானே சிந்திக்க வேண்டும். 

எடுத்துக்கொண்ட செயல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதில் மகத்துவத்திற்கும், கச்சிதத்திற்காகவும் ஒருவர் அயராது உழைக்க வேண்டும். சிறந்ததை விட சற்றே தரங்குறைந்த இரண்டாம் தரம் எதையும் பெற்றுவிட்டதற்காக திருப்தியடையக்கூடாது. 

தாய்நாட்டின் நலன்கள், அதன் மக்களுக்கு பயன்படும் வகையில் இல்லாத சாதனை, வெற்றிகள் பொருளற்றவை. இவை நேர்மையான, முறையான வழியில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். 

சக மனிதர்களிடம் நல்லுறவை பேணுவது தனிப்பட்ட வெற்றிகளை கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் வெற்றிக்கும் இன்றியமையாதது ஆகும்.”

  •  

பிரிதலின் பருவகாலம்

அந்திவேளையில் மேகம் தூறுகையில்  விடைபெறல்கள் அமைந்துவிட்டால் நன்றாக இருக்கும். 

சொற்கள் அருகி விக்கி நிற்கையில் பிரிதல்கள் நிகழ்கின்றன. 

அலைபேசியின் ஊடாக அழுது அயர்ந்து போன முகங்கள் உடைந்து மறைகின்றன. 

புன்னகைத்தபடி கையசைத்து விலகுகையில் சன்னலோரம் பிரியமிக்க உறவொன்று  எட்டிப்பார்க்கையில் கேவல்கள் மின்னி அறைகின்றன. 

துயர்மிக்க காலங்களை கடக்கும் வண்ணம் விழாவொன்று நிகழ்கிறது. 

உடைந்தபடி உருகி வழியும் இசைச்சரம் ஒன்றின் தொடர்பறுந்து செவி துடிக்கையில் பிரிவுக்காலத்தின் வெம்மை இளைப்பாறுகிறது.

 ஒவ்வொரு பிரிதலின் கணத்தினிலும் புதிய நடுக்கங்கள் கரம் சேரும். 

ஆயினும், பிரிவைக் கடக்கும் பயணத்தில் புதிதாய் பூக்கும் தழும்பொன்றின் நேசம் மட்டும் எப்போதும்  உடனிருக்கும். – பூ கொ சரவணன்

  •  

அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’

‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

  •  

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம்.  சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில்...

The post யாதும் ஊரே யாவரும் கேளிர்  first appeared on Her Stories.

  •