Reading view

சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்

Pa Raghavan

தடித்த புத்தகங்களுக்கு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை நம்மை யதார்த்த வாழ்விலிருந்து கடந்து ஒரு வெவ்வேறு பரிணாமத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவம் சும்மா ஒரு ஓய்வு அல்ல – முழுமையான விடுதலை. ஒரு எழுத்தாளன், “இனி சொல்ல ஒன்றுமில்லை” என்ற வரைக்கும் சொல்லத் துணியும் போது, அந்தச் சொற்களுக்குள் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம்.இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்வரையும் சொல்லித் தீர்ப்பதற்கான சுதந்திரம் பெற்ற ஜீவிகளவை என்பதும்தான்.

முன்மாதிரிகள் ஏதுமற்ற நாவலென்பதாலேயே சலத்தின் மீது எனக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பற்றாக்குறைக்கு பள்ளி மாணவன் போல குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்த பாராவைக் காண நேர்கையில் ஆர்வம் அதிகரித்து விட்டது.

வால்கா முதல் கங்கை வரையில் மட்டுமே இக்காலகட்டத்தை போகிறபோக்கில் கண்ட நினைவு. மற்றபடி நவீன இலக்கியவெளியில் காணாத கதைக்களம்.

முதலில் வேதங்கள் நான்கில் மற்றவைக்கும் அதர்வணத்திற்குமான வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த உதாரணம் ஓரளவு பொருந்துமென்று நினைக்கிறேன். காலகாலமாக மன்னர்களுக்கும் வள்ளல்களுக்கும் மட்டுமே இலக்கியங்கள் என்றிருந்த நிலையை எப்படி பாரதி எளிய வடிவில் இலகுவாக மக்களை நோக்கித் திருப்பினானோ அது போல தேவர்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டுமே இருந்த வேதங்களை கடந்து மக்களுக்காக, அவர்களின் அன்றாடங்களுக்காக உருவான மந்திரங்களைக் கொண்டது அதர்வண வேதம்.

திரிவேதங்கள் என்று சொல்லி முதல் மூன்று போதுமென ஒரு கூட்டம் முயன்றும் அதர்வணத்தை மக்களிடமிருந்து அவர்களால் பிரிக்க முடியாமல் போகவே வேறு வழியின்று சதுர்வேதங்களாக்கினர் என்றொரு கருத்துமுண்டு.
மன்னர்களுக்கான யாகங்கள், வழிபாடுகள் பற்றிய முதல் மூன்று வேதங்களால் மக்களுக்கென்ன பயன்? மாறாக அதர்வணத்தில் அனைத்தும் மக்களுக்கே!

வாழ்வியல் சடங்குகளுக்கான மந்திரங்கள்
நோய்கள் நீங்கும் மந்திரங்கள்
வளமும் பசுமையும் பெற வேண்டிய மந்திரங்கள்
தினசரி வாழ்வின் பயன்படும் வழிபாட்டு முறைகள்
இவை அனைத்தும் நேரடியாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தவை.

அதுவும் மட்டும் இல்லாமல், ஆயுர்வேதம் என்ற மருத்துவ முறை கூட அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகவே சொல்லப்படுகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த நம்பிக்கைகளுக்கு பழக்கங்களுக்கெதிராக நிகழ்ந்த கலகமாகவே அதர்வண வேதம் பார்க்கப்படுகிறது.
இன்னொரு விசயம், மற்ற வேதங்களைப் போல் பல நூறு ரிஷிகளால் அல்லாமல் பெரும்பாலும் ஒரே நபரால் உருவாக்கப்பட்டது. அதனாலேயே அதர்வன் பெயரிலேயே அழைக்கப் படுகிறது. அடுத்து இதில் அதிகம் பங்களித்தவர் அங்கீரச மகரிஷி.

இது போன்ற தகவல்களெல்லாம் கடவுளைத் தேடி “சாத்தானின் கடவுளுக்காக” பயனித்திருக்கையில் பாராவுக்கு கிடைத்திருக்கும். மேலும் உண்மையில் வேத வரிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கும் நடைமுறையிலிருப்பதற்குமான வேறுபாட்டின் அழுத்தமே அவரை சலத்தை எழுத வைத்திருக்கும் என அவதானிக்கிறேன் அது பிழையாகவும் இருக்கலாம்.

ஆதி, அந்தம் அறியாத அதர்வனைக் குறித்து பாரா உண்டாக்கியிருக்கும் சித்திரம் பிடித்திருந்தது. குறிப்பாக அவனது உயரம், எப்போதும் மூடியிருக்கும் ஒற்றைக்கண், மௌனத்தை ஆயுதமாக கையாலும் லாவகம். புரிந்துக் கொள்ளாதவர்களிடம் எதற்காக பேசிக் கொண்டு!

சாரன் – அது நாம்தான், கிட்டத்தட்ட வாசகனை பாத்திரமாக களமிறக்கியிருக்கிறார். ஏதுமறியாது ராஜனின் ஆணைக்கினங்க சர்சுதி கரையோரமாக மாறிமாறி ஒவ்வொரிடமும் கதைக் கேட்டு நடப்பது சாட்சாத் நாமேதான்.

கதிரவன் ரத்தினவேல்

(உனக்கு எப்படி Naruto பற்றி இவ்வளவெ தெரிந்திருக்கிறது என்ற கேள்விக்கு நான் அங்கே இருந்தேனே என்று அத்தொடரின் முக்கிய காட்சியில் பார்வையாளர் இடத்தில் வெகுஜனத்தில் ஒருவனை போட்டோஷாப் மூலம் அமர்த்தியிருக்கும் மீம் ஒன்று அனிமி வட்டத்தில் பிரபலமானது. அதனை சலத்திற்கும் பொருத்தலாம். நானும் நூறு நாளும் அந்த ஆத்தோரமாதாங்க நடந்துட்டுருந்தேன், என்னை பாக்கலையா நீங்க!?)

குத்சன் – சூத்திர முனி – மூட முனியென்பதே பொருந்தும். கர்ணனைப் போல் வாழ்வில் அனைத்து இடங்களிலும் தவறிழைத்து வஞ்சிக்கப்படுபவனாகத்தான் தெரிந்தான். உணர்ச்சியை மட்டும் வென்றிருந்தால் எங்கோ சென்றிருப்பான். சாரன் இவன் குறித்து அதர்வனிடம் சொல்லும் ஓரிடம் வரும். “அவனுக்கு மட்டும் நீ கற்பித்திருந்தால் உன் சொல் ஒன்று கூட இவ்வுலகில் மறையாதபடிக்கு செய்திருப்பானவன்”

மாறி மாறி நேசிக்கும் வேண்டப்பட்ட விரோதிகள். நியாயத்திற்கும் தர்மத்திற்கும் இடையேதான் எவ்வளவு தூரம்.

ஆரியவர்த்தம் ஓரளவு கங்கைக்கரையில் அமைந்து விட்ட காலகட்டம். ஆரியர்களுக்கும் பூர்வகுடிகளுக்கும் ஒப்பந்தம் ஏதுமில்லா அமைதிக்காலம். அப்போது ஒரு தேசத்தில் இருந்து தனது ராஜனின் ஆணைக்கினங்க ஒரு மகரிஷியைக் கொல்வதற்காக செல்லும் சாரனிடமிருந்து கதை துவங்குகிறது. அவன் நோக்கம் நிறைவேறுவதுடன் கதை நிறைவுறுகிறது என்று மட்டும் சொன்னால் அதைவிட பித்தலாட்டம் வேறேதுமில்லை. ஆனால் அதுதான் கதைச்சுருக்கம்.

செல்லும் சாரன் யார்,
கொல்லப்பட வேண்டிய ரிஷி யார்,
ஏன் கொல்லப்பட வேண்டும்?
எதற்கு இவனுக்கு இந்த பணி வந்து சேர்கிறது?
வழியில் இவன் காண்பவர்கள்,
அவ்வனுபவங்கள்,
அக்காலகட்டத்தில் தேசத்தில் மக்களின் நிலை,
அவர்களது வாழ்க்கை முறை,
வழிபாடுகள்,
வர்ணமுறை,
யுத்தம்,
மாயம்,
பைசாசங்கள்,
தேவதைகள்,
தெய்வங்கள்,
கந்தர்வன்,
அனைத்திற்கும் மேலாக கூடவே வரும் சர்சுதி.

இதெல்லாம் கூட சரி, நான் முற்றிலும் எதிர்பாராதது காலப்பயணம். Time traveler’s wife எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதை நினைவூட்டும்படி ஓரிடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்ததை நான் எப்படி அறிந்திருப்பேன்?

சரி, ஆனால் நான் தான் இன்னும் பிறக்கவேயில்லையே? பிறக்காதவர் எப்படி அவ்வபோது அதர்வணுடன் இருந்தீர்கள்?

இறந்த பின்னும் எப்படி என்னுடன் அதர்வண் இருக்கப் போகிறானோ அப்படி!

குத்சன் பாத்திரம் தனி, அவனது வாழ்க்கையை, உணர்ச்சிகளை பற்றி மட்டுமே நிறைய எழுதலாம். எப்போதும் முதலில் அவன் பக்கமே நியாயம் இருப்பதாகத் தோன்றும். ஆனால் நியாயம் வேறு தர்மம் வேறு என்பது பின்னால்தான் புரியும்.

ரிதமென்றால் என்ன என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புரிந்தும் புரியாமலே வந்துக் கொண்டிருக்கையில் அந்த யானைக் கொலையையொட்டிய மறுபிறப்பில் அனைத்தும் தெளிந்து விடும். எதை மாற்ற முடியாததோ அதுவே ரிதம்.

பல மாயாஜாலக் காட்சிகள் குத்சனையோட்டியே நிகழ்கின்றன. வாசிப்பில் சில நேரம் கற்பனைக்கு சவால்விடும் காட்சிகள் நிகழும். விஷ்ணுபுரத்தில் இறுதியில் நிகழும் ஊழிக்கூத்தினைப் போல. அஹிர்புத்தன்யன் என்றொரு தெய்வத்தை எங்குக் கண்டடைந்தாரோ! ஆனால் போகிறபோக்கில் சொல்லியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நானும் தேடினேன்.

மாபெரும் சமுத்திரத்திலிருந்து நீரினையே உடலாகக் கொண்டு சர்ப்பமாக அஹிர்புத்தன்யன் எழுவதாகக் கண்ட கற்பனையை சாமான்யன் கண்டிருந்தால் கோவில் கட்டக் கிளம்பியிருப்பான். சர்சுதியோடு இணைக்கும்படியான தெய்வத்தைக் கொண்டுவந்ததெல்லாம் தரமான செய்கை. நீரே தெய்வமாகி!

ஆனால் நான் எதிர்பார்த்திருந்தது மக்களின் வாழ்வியல்கள் பேசும் அதிக அத்தியாயங்களை! ஊருக்கு வெளியே ஆசிரமமென்று போனதால் எனக்கு ஏமாற்றமே! என்ன செய்வது? ஜனத்திரள் இல்லாமல் சாகசங்கள் இராது, அதை எதிர்பார்க்காமல் வாசிப்பது எனக்கு சிரமமே!

இத்தனை நூறு பக்கங்களையும் வாசிக்க வைப்பதற்கான பாராட்டு, கதையைக் காட்டிலும் எழுத்து நடைக்கே சென்றடைய வேண்டும். இத்தனை எளிமையாக இல்லாவிட்டால் இவ்வளவு பக்கங்கள் வாசிக்க இயலாது.

முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வரிகளை நான் மிகவும் இரசித்தேன்.

நான் சாரன், நான் அதர்வன், நான் குத்சன்

இவ்வரிகள் வருகையில் இனம்புரியாத உவகைக்குள்ளாவேன். அதை மட்டும் மனதிற்குள் base voice ல் சொல்லிக் கொள்வேன்.

சலம் ஒரு தொடக்கம்தான். பாரா தொட்டிருக்கும் களத்தைக் கடந்து நடக்கத் தொடங்கினால் பற்பல சர்ச்சைகளையும் ஏன் கலவரங்களையுமே காண நேரிடலாம்.

சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக் கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்லாம் சலம் படிக்க வாய்ப்பேயில்லை என நினைத்து ஆறுதல் கொள்கிறேன்.

அக்கால கட்டத்தைய மக்களது வாழ்வியல் குறித்து பல தகவல்கள் பேசப்பட்டுள்ளன. நான் அவற்றைக் குறிப்பெடுத்து வைக்காததால் விரிவாக பேச முடியவில்லை. வேறு யாரேனும் பேசக்கூடும் என்று நம்புகிறேன். குறிப்பாக என்னென்ன வகையான உணவுகள்! அதிதியாக சாரன் தங்கியிருக்கையில் கவனிப்பாக பரிமாறப்படும் உணவுகளை மட்டும் குறித்து வைத்து கற்பனை செய்துப் பார்த்தேன்.
புதினத்திற்கு புதிய களம். பக்கங்களின் எண்ணிக்கையைக் கண்டு மிரளாமல் வாசித்தால் புது அனுபவம் கிட்டும்.

சலம் – நாவல் வாங்க இங்கே செல்க.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

சல்மான் ருஷ்டி - மரணத்தை மறுத்த சொற்களின் கதை

 


ஒரு இலக்கியப் படைப்பு மீது 30 வருடங்களாகத் தீராத வன்மம் கொண்டு அலைந்த பழியின் வடிவம், கடைசியில் ஒரு கத்தியாக உருமாறி, அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளனின் மீது, கிட்டத்தட்ட தன் பழியை நிறைவேற்றிக் கொண்டது. அந்தக் கத்தியிலிருந்து, உயிர்தப்பி மீண்ட நினைவுகளின் பதிவுதான் சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’. கருத்தியல் ரீதியான, கலாசார அடிப்படையிலான, அடையாள அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்களும் கூர்மையான கத்தியாக மாறிய பயங்கரத்தைத் தான் இந்நூல் விவரிக்கிறது.

சல்மான் ருஷ்டியின் புத்தகத் தலைப்பு கூறுவதைப் போலவே, கொலை முயற்சி மீதான ஆழ்தியானங்களே இப்புத்தகம். சல்மான் ருஷ்டி மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சர்வதேச அளவில் குரோதம் ஏற்படுவதற்கும் கோமேனியின் மரண ஆணைக்கும் காரணமான ‘சாத்தானின் வசனங்கள்’ நூலை இரண்டு பக்கங்களுக்கு மேல், அவரைக் கத்தியால் குத்திய இளைஞன் ஹதி மதார் படிக்கவில்லை. சல்மான் ருஷ்டியை கொலை செய்வதற்கு அவனுக்கு அவரைப் பற்றிய இரண்டு யூ டியூப் காணொளிகள் போதுமானதாக இருந்திருக்கிறது.

சாத்தானின் வசனங்கள் நூல் பிரசுரமாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன. சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையிலும் உலக மக்களின் வாழ்க்கையிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. சுதந்திரமான சிந்தனைகளுக்கும் அதை வெளிப்படுத்தும் கலைஞர்கள், சிந்தனையாளர்களுக்கும் பாதுகாப்பான இடமென்று கருதப்படும் அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் ஷெடாக்வ வட்டரங்கத்தில் பெரிய பாதுகாப்போ அச்சுறுத்தலோ இல்லாத அந்தரங்கமான சூழலில் ஹதி மதாரின் கத்தி தன்னை நோக்கி விரைந்துவருவதைக் கூர்ந்து சல்மான் ருஷ்டி பார்ப்பதன் வழியாக இந்த நினைவுப் பதிவு தொடங்குகிறது.

சல்மான் ருஷ்டி பல நொடிகளுக்கு முன்பாகவே தன்னைக் கொலைசெய்ய வருபவனைப் பார்த்துவிடுகிறார். ஆனால், முதுகைக் கூடத் திருப்பாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். “சரி, நீதான் அது. இந்தத் தருணம்தானே உனக்கு வேண்டும், எடுத்துக்கொள். ஆக, இறுதியில் அது வந்துவிட்டது. மேன்மைமிக்க அந்த நிகழ்வு” என எதிர்கொள்கிறார்.

விதிவசப்பட்டது போல சல்மான் ருஷ்டி, அந்தக் கொலைமுயற்சியை எதிர்கொள்கிறார்.

 தாக்குதலுக்கு வந்தவன் தனது உடலில் இயங்கிய 27 நொடிகள் அந்தரங்கமானது என்கிறார். கத்திக்கு இருக்கும் அந்தரங்கம் துப்பாக்கிக்கு இல்லை என்றும் நம்மிடம் பகிர்கிறார்.

தாக்குதலைச் சற்று முன்னரே அறிந்திருந்தும் சல்மான் ருஷ்டி ஏன் செயல்படவில்லை என்று உறவினர்களும் நண்பர்களும் சம்பவத்துக்குப் பிறகு அவரிடம் கேட்கின்றனர். ஒரு திடமான நிச்சயமான எதார்த்தத்துக்குள் வன்முறை என்னும் நிகழ்ச்சி அரங்கேறும்போது அங்கேயிருப்பவர்களை புதிய எதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாதவண்ணம் குழப்பிவிடுகிறது என்ற பதில் தவிர ருஷ்டிக்கு வேறெந்த பதிலும் இல்லை.

எழுத்தாளர்கள், வாசகர்கள் கூடியிருக்கும் மேடையில் உரை நிகழ்த்துவதற்காக காத்திருந்த சல்மான் ருஷ்டியின் உடல் மீதும் இப்படித்தான் வன்முறை ஏற்கெனவே இருந்த எதார்த்தத்தை நொறுக்கி முன்னேறியது.

சல்மான் ருஷ்டியின் வலதுபக்கத் தாடை அவன் கையால் முதலில் தாக்கப்படுகிறது. அடுத்து கழுத்தில் கத்தி இரண்டு முறை பாய்கிறது. அடுத்து மார்பில் காயம். நெற்றியில் காயம். கல்லீரலைக் கிட்டத்தட்ட சேதாரப்படுத்தி விட்டது. மூளையில் இன்னும் ஒரு மில்லிமீட்டர் கூடுதலாக இறங்கியிருந்தால் ‘கத்தி’ என்ற இந்தப் படைப்பே கிடைத்திருக்காது. வலது கண் நிரந்தரமாகப் பறிபோகும் அளவுக்கு கண்ணில் சேதம்.

மருத்துவமனையில் நினைவு திரும்பியவுடன் அந்தக் கொலையாளியுடன் அந்தரங்கமாகச் செலவிட்ட 27 நொடிகள் மீதான தியானத்தை நம்மிடம் பகிர்கிறார் ருஷ்டி. அந்த 27 வினாடிகளில் பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே என்ற மந்திரத்தைச் சொல்லிவிடலாம். மத ரீதியானதைத் தவிர்த்தால், சேக்ஸ்பியரின் 14 வரிக்கவிதைகளில் ஒன்றை எளிதாகப் படித்துவிடலாம். கொலைக்கு முயற்சித்த தாக்குதலாளியுடன் தான் செலவிட்ட அந்தரங்கத்தையும் தனக்கு நெருக்கமான வாசகன் தன் எழுத்தின் மீது செலுத்தும் அந்தரங்கத்தையும் நினைவுகூர்கிறார்.

கத்தியை ஒரு கருத்துருவமாக பல தூக்கமற்ற இரவுகளில் யோசித்துப் பார்த்திருக்கிறார் ருஷ்டி. மொழியும் ஒரு கத்திதான் ;அது உலகத்தை வெட்டி அதன் அர்த்தத்தை, அதன் அகத்தில் நடக்கும் வேலைகளை, அதன் ரகசியங்களை, அதன் உண்மைகளை வெளிக்காட்டக்கூடியது என்கிறார். படிப்பவர்களின் கண்களைத் திறந்து அழகை உருவாக்கக் கூடியது மொழி என்கிறார். அத்துடன் மொழிதான் என்னைத் தாக்கவரும் ஆயுததாரியுடன் சண்டையிடுவதற்கான கத்தி என்றும் குறிப்பிடுகிறார்.

போர்ஹேயின் சிறுகதை ஒன்றில் வருவதுபோல, கையில் வைத்திருப்பவனுடையதல்ல; ஆயுதத்திலேயே வன்மமும் பழியும் காலம்காலமாக உறைந்திருக்கிறதென்பதைப் போல, தனக்கென்று உயிர்வந்ததைப் போல, சல்மான் ருஷ்டியின் உடலின் மீது குத்தியும் வெட்டியும் தனது ஆட்டத்தை கத்தி நிகழ்த்திக் கொண்டிருந்திருந்ததாகச் சொல்கிறார் ருஷ்டி.

கடவுளோ மதமோ ஏதுமற்ற வேசிமகன் என்று தன்னைப் பற்றிக் கேலியாக விவரிக்கும் சல்மான் ருஷ்டி, மரணத்தின் முனையில் இயற்கையை மீறிய எந்தப் புலன்கடந்த அனுபவமும் நிகழவில்லை என்று கூறுகிறார். “என் உடல் இறந்துகொண்டிருந்தது, தன்னோடு என்னையும் எடுத்துக்கொண்டு போகிறது. உடல் சார்ந்த தீவிரமான உணர்வு அது.” என்றே குறிப்பிடுகிறார். ஆன்மாவின் அழிவின்மையில் நம்பிக்கை இல்லாதவனான தனக்கு இந்த கொலைமுயற்சி சம்பவம் அதை உறுதிப்படுத்தியதென்றும் கூறுகிறார். உடலும், ‘நானும்’ மரணத்தின் விளிம்பிலேயே அந்தச் சம்பவத்தில் இருந்ததாக ருஷ்டி குறிப்பிடுகிறார்.

அற்புதங்கள் என்று எதிலுமே நம்பிக்கை இல்லாத சல்மான் ருஷ்டி தனது மறுபிழைப்பு ஒரு அற்புதம் என்று சொல்லப்படுவதை முரண்நகையாகத் தெரிந்தாலும் நம்புகிறார்.

கலையும் எழுத்தும் தொடர்ந்து வைதீகத்துக்கு சவால் விட்டு வெல்லும் அற்புதம் என்கிறார். தனது மறுபிறப்பை தான் எழுதிய சொற்களின் வெற்றி என்றும் தனது விஜயநகரம் நாவலின் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிடுகிறார்.

“காலம் ஒப்புக்கொண்ட கருத்துகள் தன்னுடைய எதிரிகள் என்பதைக் கலை அறியும். ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்துகள் என்பவை அர்த்தமிழந்த தேய்வழக்குகளே. அவற்றைப் போன்றவையே சித்தாந்தங்களும். கண்ணுக்குத் தெரியாத வானத்துக் கடவுள்களின் ஒப்புதலைச் சார்ந்தவை, அப்படிச் சாராதவை என்று அவை இரண்டு வகைகளில் உள்ளன. சிந்திக்கவும் ஒன்றைப் புதுக்கிளர்ச்சியோடு பார்க்கவும் நம்முடைய உலகத்தைப் புதுப்பிக்கவுமான நமது திறன், கலை இல்லாவிட்டால் வாடி உதிர்ந்துவிடும்”

அந்தக் கொலைத் தாக்குதல் நடைபெற்று சுற்றியிருந்த விருந்தினர்கள் பார்வையாளர்களால் தாக்குதலுக்கு வந்தவன் தடுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் தரையில் சல்மான் ருஷ்டி கிடக்கும்போது சத்தம்போட்டு அழுததை எல்லாரும் பார்த்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் தனக்கு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் ருஷ்டி, உடல் வலி எதையும் உணராத தன்மை தனக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தனது நினைவில் வலியின் பதிவு மட்டும் இல்லாமல் போனதை விந்தையோடு குறிப்பிடுகிறார்.

கொலை மூர்க்கத்தோடு கத்தியால் தாக்கிக் கொண்டிருப்பவனை நிராயுதபாணிகளாக இருந்த விருந்தினர்களும் பார்வையாளர்களும் பாய்ந்து பின்விளைவு எதையும் பொருட்படுத்தாது தடுத்த நடவடிக்கையை மாபெரும் வீரச்செயல் என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். கூட்டத்துக்குப் பாதுகாவலாக வந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், ருஷ்டியின் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை தனது கட்டைவிரலால் பொத்தி அடைக்கிறார். கழுத்து தமனியிலிருந்து வெளியே பாயும் ரத்தம் உயிர் ரத்தம் என்பதை உணர்ந்து அந்தக் காரியத்தைச் செய்கிறார். அவரை ருஷ்டி, திரு.கட்டைவிரல் என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

நவீன உலகின் மகத்தான ஆயுதங்களோடு உலகம் முழுவதும் மற்றமை மீது உயிர் பெற்றிருக்கும் மாபெரும் வெறுப்புக்கும் அதை முறியடித்த பயன்கருதாத நேசத்துக்கும் இடையில் மீட்கப்பட்ட ஒரு எழுத்துக் கலைஞனின் கதைதான் ‘கத்தி’.

சாத்தானின் வசனங்கள் மீதும் அதை எழுதியவன் மீதும் வைக்கப்பட்ட அவதூறைப் பற்றி அவர் சொல்லும்போது, நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கும் இடையேயான சண்டை என்று குறிப்பிடும் ருஷ்டி, தன்னைக் கொலை செய்தவனுக்கு சிரிக்கத் தெரியாததனாலேயே கத்தியை எடுத்து கொல்ல முயல்வது சாத்தியமானது என்று விமர்சிக்கிறார்.

“கலை, தன்னை ஒடுக்குபவர்களைக் கடந்து அது நீடித்து நிற்கிறது. கவிஞர் ஓவிட், அகஸ்டஸ் சீஸரால் நாடுகடத்தப்பட்டார்; ஆனால் ஓவிட்டின் கவிதை ரோம சாம்ராஜ்யத்தைக் கடந்து வாழ்கிறது. கவிஞர் மாண்டல்ஸ்டாமின் வாழ்க்கையை ஜோசஃப் ஸ்டாலின் சிதைத்தார்; ஆனால் அவருடைய கவிதை சோவியத் யூனியனைத் தாண்டி நிற்கிறது. ஜெனரல் ஃபிராங்கோவின் அடியாட்களால் கவிஞர் லோர்கா கொலை செய்யப்பட்டார்; ஆனால், அவருடைய கலை ஃபிராங்கோவின் அரசியல் கட்சியான ஃபலாஞ்சின் பாசிசத்தைத் தாண்டி நிலைத்திருக்கிறது.”

நாம் கதைகள் ஒன்றுக்கொன்று நடத்தும் உலகப்போர் காலகட்டத்துக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று ருஷ்டி உரைக்கிறார். எதார்த்தம் குறித்த மாறுபட்ட விளக்கங்களுக்கிடையிலான போர் என்று வலியுறுத்தும் ருஷ்டி அதனுடன் எப்படி போராடுவது என்பதை நாம் பயிலவேண்டிய அவசியமுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.



ரஷ்யாவில் ஒரு கொடுங்கோலன் தோன்றி உக்ரைனை அந்தக் கொடூரம் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். உக்ரைன் மக்களை நாஜிக்கள் என்று குற்றம்சாட்டுமளவுக்கு அந்த கதை சென்றுவிட்டது. அமெரிக்காவோ மத்திய கால மனநிலைக்குச் சென்று கருப்பின மக்கள், பெண்களின் உடல் மீது வல்லாதிக்கத்தைச் செலுத்த தொடங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மதவெறுப்புக் கருத்துகளை இந்தக் கதைகள் நியாயப்படுத்துவதைக் குறிப்பிட்டு, இந்தியாவில் எழுச்சிபெறும் இந்து மதவாதம் மற்றும் அதன் அரசியல் சர்வாதிகாரம், வன்முறை மூலம் ஜனநாயகத்தை படிப்படியாகச் சிதைத்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாறு இதனால் பொய்யான கதைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதைத் துயரத்துடன் குறிப்பிடுகிறார்.

சர்வாதிகாரிகள், ஜனரஞ்சகத் தலைவர்கள், முட்டாள்கள் சொல்லும் கதைகளை எப்படி எதிர்கொள்வது?

அவர்கள் சொல்லும் கதைகளை செல்லாமல் போகச் செய்யும் வலுவான கதைகளை நாம் சொல்ல வேண்டும். மனிதர்கள் வாழ விரும்பும் கதைகளை நாம் சொல்லவேண்டும்.

சல்மான் ருஷ்டி தன் மீது நடந்த கொலைமுயற்சிக்கு முன்பு டிஷானி  தோஷிக்குக் கொடுத்த நேர்காணலொன்றின் வழியாக நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் இன்னொரு நெருக்கடியையும் சுட்டிக்காட்டுகிறார்.

(நன்றி: அகழ் இணையத்தளம்)

  •  

கிராமியத்தைக்‌ கண்டறியும்‌ அகழ்வாராய்ச்சி


(நல்லம்மா (நாவல்‌) - சூரங்குடி அ.முத்தானந்தம்‌

விலை : ரூ. 125, அருவி வெளியீடு, 5-D, பொன்னம்பலம்‌ சாலை, கே.கே.நகர்‌, சென்னை-78, கைபேசி: 9444302967, விற்பனை உரிமை: தோழமை வெளியீடு)


அறுபது வயதுப்‌ பெரிய முதலாளிக்கு மூன்றாந்தாரமாய்‌ கழுத்தைக்‌ கொடுத்தவள்‌ நல்லம்மா. மூத்தவடியாள்‌ ரெண்டுபேருக்கும்‌ பிள்ளை இல்லையென்று, மூன்றாவதாய்‌ கட்டிவைக்கப்பட்ட சொந்தத்‌ தங்கச்சி மகள்‌ “சொந்தமான சொந்தம்‌”.

எங்கள்‌ ஊர்‌ மேலத்தெருவில்‌ ஒரு சிறுமி; நிலபுலன்களோடு எப்போதும்‌ தாளிதம்‌ செய்யப்பட்டு வாசனை ஜோராய்‌ வரும்‌ வாழ்க்கை; சேட்டை கூடுதல்‌ - சிறு பிராயத்துக்‌ குறும்பு என்று சொல்லக்கூடாது. அக்குறும்பு என்று சொல்வார்கள்‌. செழுப்பமான வீட்டுப்‌ பிள்ளைகளுக்கு இது வரைமுறை இல்லாமல்‌ எகத்தாளிபோடும்‌. சிறுவர்‌, பெரியவர்‌, ஆம்பிளை, பொம்பிளை என்ற பேதமில்லாமல்‌ கேலி செய்து சீண்டுதல்‌ செய்வாள்‌.

தெரு முக்கில்‌ பந்தாவாய்‌ நின்று பேசிக்‌ கொண்டிருந்தது ஒரு இளவட்டம்‌. “அது நிக்கிற 'ஷோக்கைப்‌' பாரு. ராஜா வீட்டு வேலைக்காரன்‌ மாதிரி. போய்‌ வேட்டியை இழுத்துப்‌ போட்டு வாடி”

குமரிகள்‌ தூண்டிவிட்டார்கள்‌. பராக்குப்‌ பார்ப்பது போல்‌ பக்கத்தில்‌ போய்‌ வேட்டியை இழுத்து விட்டு விட்டு ஓட்டம்‌ கிண்ணிவிட்டாள்‌ இந்தக்‌ கோட்டிச்சி.

சேட்டைகள்‌ செய்கிற - தராதரம்‌ இல்லாமல்‌ வம்படிக்கிற அந்தச்‌ சிறுமி மல்லம்மா.

சொந்த பந்தமும்‌ சொத்துபத்தும்‌ விட்டுப்‌ போகக்‌ கூடாதென்றுசெய்து வைத்த கல்யாணம்‌. கல்யாணமான பிறகும்‌ அதே மாதிரி கட்டுப்பாடில்லாமல்‌ ஊர்‌ சுற்றி வருகிற இந்தச்‌ சிறுபெண்ணின்‌ பெயர்‌ நல்லம்மா. முதலாளியைக்‌ கைப்பிடித்த கொஞ்ச நாளிலேயே நல்லம்மா ஒரு பிடி உயரம்‌ (!) வளர்ந்து விட்டாள்‌; உருப்பட்டு விட்டாள்‌. கடைத்‌ தெருவுக்குப்‌ போனால்‌ கண்ட கண்ட சாமான்களையெல்லாம்‌ வாங்கி வருவாள்‌. அடிக்கடி பஸ்‌ ஏறிப்போய்‌ சினிமா பார்த்து வருவாள்‌ - அஞ்சாறு தண்டித்‌ தரத்துப்‌ பிள்ளைகளைச்‌ சேர்த்துக்‌ கொண்டு! யாராவது தப்பித்‌ தவறி கேட்டுவிட்டாலோ ஒரு அகப்பை கறிக்குப்‌ பிடுங்கி விடுவாள்‌.

அவளை முன்வைத்து ஆரம்பிக்கிற நாவல்‌ பலபேரைக்‌ கொண்டுவந்து தனக்குள்‌ சேர்க்கிறது. அந்த ஒரு வாழ்க்கையில்‌ தொடங்கி சுற்றியுள்ள பல வாழ்க்கையையும்‌ வளைக்கிறது. அந்த வாழ்வுக்குள்‌ கிராமிய கலாச்சார அம்சங்களையெல்லாம்‌ விரிவாய்‌ முன்வைக்கிறது.

வேளாண்மை அழிவாகிக்‌ கொண்டு வருகிறது. அதன்‌ சங்கிலியான உறவு வகை, கூட்டுணர்ச்சி, பழக்க வழக்கம்‌, பண்பாடு இன்று அறுபட்ட வாலாய்த்‌ துடிக்கின்றன. புள்ளிவிவரத்‌ துறைபோலவோ அல்லது போனான்‌ வந்தான்‌ கதை போலாவோ பட்டியலிடுவதில்‌ கிடைப்பதைவிட ஒரு நாவலின்‌ அனுபவமாய்‌ பதிவு செய்யப்படுகிற போது அதற்கு ஒரு தனி வெளிச்சம்‌ கிடைக்கிறது. இரு கைகளிலும்‌ ஏந்தி ஏந்திக்‌ குடிக்கும்‌ பதநீர்‌ போல்‌ சுவை தருகிறது.

ஆதிகாலத்து வெண்கலக்‌ கும்பாவைக்‌ கழுவி எடுத்துவந்து மீனாட்சி பானையைத்‌ திறந்து, அதில்‌ நல்லா மூணு கை கம்பஞ்‌சோறு வைத்து, புருசனுக்கு முன்னால்‌ வைக்கிறாள்‌. களிமண் போல இருக்கும்‌ சோற்றை சமதளப்படுத்தி அதன்‌ நடுவே கலையாக ஒரு பெரிய குழியும்‌ உண்டு பண்ணினார்‌ சம்முகம்பிள்ளை. அது நல்ல பதியம்‌ போடுவதற்கு ஆக்கப்பட்ட இடம்‌ போலிருந்தது. அதில்‌ ஓர்‌ அகப்பை கீரைக்குழம்பை ஊற்றினாள்‌ மீனாட்சி.

கும்பாவிலுள்ள சோற்றில்‌ ஒரு பக்கமாக இருந்து ஒரு பருத்திக்காய்‌ அளவு எடுத்து கீரைக்குழம்பில்‌ நன்றாக முக்கிப்‌ புரட்டிவிட்டு வாயில்‌ அண்ணாக்கப்‌ போட்டு 'களக்‌'கென்று முழுங்கினார்‌ சம்முகம்பிள்ளை. இப்படி களக்‌, களக்கென்று ஒரு கும்பாச்சோறும்‌ பல்லிலே ஒட்டாமல்‌, அடி நாக்கில்‌ மட்டும்‌ பட்டு உள்ளே போன மாயம்‌ தெரியவில்லை. பசு வெண்ணை போலிருக்கிறது. அந்தக்‌ கம்மஞ்சோற்றுக்கு கீரைக்குழம்பு வாசத்துக்கும்‌ நாமும்‌ புள்ளிக்கு ஒரு கும்பாச்சோறு தின்னலாம்‌. வேறு வெஞ்சனம்‌ (தொடுகறி) அதுக்குத்‌ தேவையில்லை என்பதுபோல்‌ இருக்கும்‌.

சம்முகம்பிள்ளை சாப்பிடுவதையே உன்னிப்பாகக்‌ கவனித்துக்‌ கொண்டிருந்த நல்லம்மா கேட்டாள்‌, “அண்ணே, நீங்க சோத்துல குழம்பு ஊற்றிப்‌ பிசைஞ்சு சாப்பிட மாட்டிளா?”

“ஒங்க விட்ல நெல்லுச்சோறு. அதை அப்படிப்‌ பிசைஞ்சுதான்‌ சாப்பிடனும்‌. இது கம்மஞ்சோறு. இதை இப்படி களக்‌, களக்குன்னு குருட்டுக்‌ கோழி தவிட்டை முழுங்குற மாதிரித்தான்‌ முழுங்கணும்‌.”

“ஆமா தொட்டுக்கொள்றதுக்கு வேறு ஒண்ணும்‌ வேண்டாமா?”

“வேண்டாம்‌. இந்தக்‌ கீரக்குழம்பு இல்லாவிட்டாலும்‌ பரவாயில்ல. ஒரு பட்ட மொளகா வத்தலும்‌, ரெண்டு உப்புக்கல்லும்‌ இருந்தாப்‌ போதும்‌. ஒரு கலயம்‌ கஞ்சியா இருந்தாலும்‌ கூட உள்ள பேகிற போக்குத்‌ தெரியாது சரசரன்னு.”

"அவியல்‌, பொறியல்‌, பச்சடி, கூட்டு, சாம்பார்‌, ஈசல்‌, புளிக்கறி, மோர்‌ எல்லாம்‌ நீங்க சாப்பிடதில்லையா?”

“சாப்பிட்டிருக்கோம்‌; இழவு வீடு, கல்யாண வீடுகள்ல”

இருவேறு வர்க்கங்கள்‌ உரையாடுகின்றன. மேட்டுப்‌ புஞ்சையிலிருந்து சிறு பொன்‌ குஞ்சும்‌ பள்ளத்தாக்கிலிருந்து தின்று கொட்டை துப்பிய அனுபவசாலியும்‌.

ஒன்றுக்கொன்று எதிரான இந்த வர்க்கங்கள்‌ உணவு வகைகளில்‌ பழக்க வழக்கங்களில்‌ முட்டிக்‌ கொள்கின்றன. அதையும்‌ வெகு கவனமாய்‌ நிதானத்துடன்‌ ஆவணப்படுத்துகிறார்‌ முத்தானந்தம்‌.

கீ காடுகள்ல சில மொதலாளி மார்க வீடுகள்ல மொதலாளி வீட்டார்க்கு ஒரு சாப்பாடும்‌, வேலைக்காரர்களுக்கு ஒரு சாப்பாடும்‌ நடக்கிறது. மொதலாளியின்‌ இனத்தச்‌ சேர்ந்தவர்களுக்கு குதிரைவாலிச்‌ சோறும்‌ பருப்புக்‌ கறியும்‌; மத்தவங்களுக்கு கம்மஞ்‌ சோறும்‌ கீரக்‌ குழம்பும்‌; அவங்களுக்கு நெல்லரிசித்‌ தோசைன்னா, இவுகளுக்குக்‌ கம்பரிசித்‌ தோசை. இல்லாட்டா சோளத்தோசை. இட்டிலியோ, வடையோ கூலிக்காரர்களுக்குக்‌ கிடையாது. மொதலாளிமார்களுக்கு கேரட்‌, பீன்ஸ்‌, தொடுகறி; இவுகளுக்கு கானப்‌ பருப்புத்‌ துவையல்‌ மட்டும்‌. அவுகளுக்கு அவியல்‌, பச்சடியின்னா, இவுகளுக்கு பச்ச மொளகாயும்‌, உப்புக்கல்லும்‌. பாலும்‌, மோரும்‌ அவுகளுக்கு; நீச்சுத்‌ தண்ணியும்‌ புளிச்ச தண்ணியும்‌ இவுகளுக்கு. அவுகளுக்கு சில்வர்‌ கிளாஸ்‌, இவுகளுக்கு ஈயக்‌ கிளாஸ்‌. தாழ்த்தப்பட்டவர்களுக்கு சிரட்டை. அவுகளுக்கு வீட்டுக்குள்ளே சாப்பாடு; இவுகளுக்கு வெளியே வானம்‌ பார்த்த இடத்தில்‌.

இன்றுபோல்‌ தனி டம்ளர்‌ கூட இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொட்டங்குச்சி என்று சொல்லப்படும்‌ சிரட்டையில்‌ வழங்கினார்கள்‌.

ஐம்பது வருசங்களுக்கு முந்தி நடந்த இவை இன்னும்‌ வித்தியாசப்‌பட்டுப் போகவில்லை. தமிழகத்தில்‌ இரண்டாயிரம்‌ கிராமங்களில்‌ இரட்டைத்‌ தம்ளர்‌ முறை இருக்கிறது என்று சட்டப்பேரவையில்‌ கேள்வி எழுப்பப்பட்டபோது, இல்லை இரண்டே இரண்ட ஊர்களில்தான்‌ இருக்கிறது என்று சமகால இழிவைத்‌ தாங்கிப்‌ பிடிப்பவராக பதிலளித்தார்‌ முதலமைச்சர்‌ கருணாநிதி.

கடந்த காலம்‌ பதிவு செய்யப்பட்டால்‌ அது வரலாறு - கடந்த காலம்‌ நிகழ்காலத்துக்கு ஏதொரு பங்களிப்பும்‌ செய்யாதபோது வரலாற்றுக்‌ குறிப்பாக இழிவைச்‌ சுமந்து நிற்கிறபோது அந்த நிகழ்வில்‌ நாம்‌ ஒரு மனிதக்‌ கூறாக இருந்தோம்‌ என்பது எத்தனை கேவலம்‌.

***

கூட்டாக வாழுதல்‌ கிராமிய சமுதாயப்‌ பண்பாடு. இணைந்து ஒருத்தருக்கொருத்தர்‌ ஒத்தாசையாக இருத்தல்‌ அல்லாமல்‌ வேளாண்மைச்‌ சமுதாயம்‌ இயங்க முடியாது. விதை போடுதல்‌ முதல்‌ வெள்ளாமை வீடு வந்து சேருகிறவரை அவரவர்‌ உழைப்பு இருந்தாலும்‌ இந்தக்‌ கூட்டுதான்‌ வேளாண்மையை முழுமையாக்குகிறது. வேளாண்மை அடிப்படையில்‌ கட்டப்பட்டது அவர்களின்‌ உறவு. அதனால்‌ உறவுகள்‌ நெருக்கமாக இருக்கின்றன. வீடுகளும்‌ வீதிகளும்‌ நெருக்கமாய்‌ கூட்டு வாழ்க்கையை அடையாளப்படுத்துகின்றன.

கொண்டாடுதலுக்கும்‌ நடத்துதலுக்கும்‌ வித்தியாசம்‌ உண்டு. ஒன்றை ஒருவர்‌ நடத்துகிறார்‌ என்றால்‌, தன்முயற்சியால்‌ மேற்கொண்டு செலுத்துகிறார்‌ என்று பொருள்‌. ஒரு தொழில்‌ அல்லது ஒரு காரியம் அல்லது ஒரு குடும்பம்‌ அல்லது ஒரு இயக்கம்‌ ஒருவர்‌ நடத்துகிறார் என்கிறபோது அவருடைய உழைப்பால்‌, முயற்சியால்‌ நடத்தப்படுகிறது என்று அர்த்தமாகிறது. (இப்போது இயக்கங்கள்‌ தனியொரு மனிதனாலேயே நடத்தப்படுகின்றன) ஆனால்‌ கொண்டாடுதல்‌ அதுவல்ல. கொண்டாடுதல்‌ கூட்டமாக செய்யப்படுவது.

கிராமிய சமுதாயத்தில்‌ திருமணம்‌ நடத்தப்படுவதில்லை. கொண்டாடப்பட்டது. ஊர்கூடி திருமணத்தைக்‌ கொண்டாடியது.

சம்முகம்பிள்ளை வீட்டில்‌ குத்துவிளக்கை ஏற்றி வெறும்‌ குலவைச்‌ சத்தத்தோடுதான்‌ 'சிம்பிளாகக்‌' கல்யாணம்‌ என்று முதலில்‌ பேச்சு. ஆனால்‌ அந்த ஊர்‌ இளவட்டப்‌ பையன்களும்‌, சம்முகம்‌ பிள்ளையோடு சேர்ந்து உழுபவர்களும்‌ மொத்தத்தில்‌ அந்தக்‌ கிராமமே சேர்ந்தும்‌ திட்டத்தை அடியோடு மாற்றிவிட்டிருந்தார்கள்‌.

கல்யாணத்தப்போ, ஊரிலுள்ள வாரிவளைகளையும்‌, தென்னந்‌ தட்டிகளையும்‌ பொறுக்கி வந்து விசாலமான பந்தல்‌ போட்டார்கள்‌. ஏரோப்ளேன்‌ பந்தல்‌. ஊருக்கு வெளுப்பவர்கள்‌ வண்ண வண்ணச்‌ சீலைகளைக்‌ கொண்டுவந்து “மாத்துக்‌” கட்டினார்கள்‌. இளநீர்க்‌ குலைகள்‌, பூவிரிகள்‌ தொங்க விடப்பட்டன. பனை ஓலையால்‌ விதவிதமாகச்‌ செய்யப்பட்ட தோரணங்களைப்‌ பந்தலில்‌ கட்டினார்கள்‌. வண்டி மாடு வைத்திருக்கும்‌ ஒருவர்‌ வாழை மரத்துக்குப்‌ போய்விட்டு வந்திருந்தார்‌. பலசரக்குக்‌ கடைக்காரர்‌ பாலமுருகன்‌ வேண்டிய அளவு சாமான்களை வாங்கிக்‌ கொள்ளச்‌ சொல்லியிருந்தான்‌. மொய்‌ எடுத்து அவனுக்குப்‌ பணம்‌ அடைத்தால்‌ போதும்‌. காய்கறிச்‌ செலவை கந்தம்மா டீச்சர்‌ ஏற்றுக்‌ கொண்டார்‌. ரேடியோ செட்டுக்காரன்‌ திருப்பதி இலவசமாகக்‌ குழாய்களைக் கட்டி அவிழ்த்துப்‌ போவதாகச்‌ சொன்னான்‌. கோல்டன்‌ என்டர்பிரைஸின் கல்யாணி கவரிங் அயிட்டங்களும் ரெடி. திருமாலுகந்தான்‌ கோட்டை மேளமும்‌ வந்து இறங்கிவிட்டது. பள்ளிக்‌ கூடத்திலிருந்து வந்து  குவிக்கப்பட்டிருந்த பெஞ்சு, நாற்காலிகளில்‌ ஏகப்பட்ட கூட்டம்.

முதலாளி வீட்டிலிருந்து சேலை, வேட்டி வந்திருந்தன. குமாரசாமிக்கு ஒரு வேட்டி துண்டோடு ஒரு சட்டையும்‌, சுப்பம்மா பிள்ளைக்கு ஒரு பாவாடையும்‌, சட்டையும்‌ எடுத்ததோடு பூ, சந்தனம்‌, குங்குமம்‌, வெத்தலை பாக்கு சகிதமாக ராசகோபால்‌ நாயக்கர்‌ வீட்டோடு வந்திருந்தார்‌. திருச்தெந்தூர்த்‌ தேவர்‌ தோட்டத்தில்‌ இருந்து வாழைத்தார்களும்‌ இலைக்கட்டுகளும்‌ வந்து இறங்கியிருந்தன. வியாபாரி நாயக்கர்‌ ரூபாயாகச்‌ செய்ய இருந்தார்‌. தாலிச்‌ செலவு மட்டும்தான்‌ சம்முகம்‌ பிள்ளையைப்‌ பொறுத்தது. அந்த ஆட்டுக்காரப்‌ பையன்கள்‌ கொம்பில்‌ பூச்சுற்றப்பட்ட ஒரு வெள்ளாட்டங்கிடாயோடு வந்து பந்தலில்‌ ஓரத்தில்‌ நின்றிருந்தார்கள்‌ - அன்பளிப்பாகக்‌ கொடுக்க.

- இது 2005ஆம்‌ ஆண்டு! ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய கிராமம்‌ கொண்டாடிய திருமணம்‌. சாதிகள்‌ தாண்டியும்‌ சாதிகள்‌ ஒன்றாகியும்‌ திருமணத்தை நடத்தினார்கள்‌. கல்யாண மாப்பிள்ளை சம்முகம்பிள்ளை என்ற உழைப்பாளி குற்றம்‌ குறை சொல்ல முடியாத ஆள்‌ என்பது கவனத்தில்‌ கொள்ள வேண்டிய ஒரு அம்சம்‌. எதற்கெடுத்தாலும்‌ அரிவாள்‌ தீட்டும்‌ சாதியக்‌ கலாச்சாரம்‌ தலைகாட்டுகிற இந்த நாளில்‌ சாதி தாண்டிய ஒற்றுமை எங்கும்‌ இல்லை.

முற்றத்தில்‌ புதுமணல்‌ பரப்பி, பசிய புதிய மூங்கில்‌ கழை நட்டு தென்னங்கீற்றுப்‌ பந்தல்போட்டு, பெரியவர்கள்‌ முன்னின்று நடத்திய திருமணம்‌ பற்றி சங்கப்பாடல்‌ தெரிவிக்கிறது. சங்கப்‌ பாடலிலக்கியம்‌ முதற்கொண்டு அ.முத்தானந்தத்தின்‌ 'நல்லம்மா' நாவலிலக்கிய காலம்‌ வரை திருமணங்கள்‌ அவரவர்‌ வீட்டு முற்றத்தில்‌ நடந்தன. ஊர்‌ கூடிச்‌ செய்தார்கள்‌.

ஊரார்‌ ஒன்று கூடி, பெரியோர்‌ முன்னிலையில்‌ நடந்த தமிழர்‌ பண்பாடு மறைந்து ஐயர் வைத்து திருமணம்‌ செய்யும்‌ ஆரியப்‌ பண்பாடு முன்னுக்கு வந்தது. கல்யாணமும்‌, அவரவர்‌ சாதியில்‌, அவரவர்‌ கூடிக்‌ குலாவுதல்‌ என்ற 'சாதிப்‌ பகுமாணங்கள்‌' (பெருமை) மேலே வந்தன.

தங்கம்‌, நகை, சொத்து, பணம்‌ என்ற கட்டுமானத்தில்‌ உருவான சமூகத்தில்‌ உறவுகள்‌ தூர ஒதுங்கிவிட்டன.

கிராமிய சமுதாயத்தில்‌ அட்டுப்பிடித்த, கறைபடிந்த பக்கங்களும்‌ உண்டு.

சாதாரணமாக அந்த வீட்டின்‌ நடுக்கூடத்தில்‌ ஒரு பெரிய கேங்கே கிடந்தது. எல்லாருமே முதலாளிமார்கள்‌ வீட்டு அம்மாக்கமார்களும்‌, பசையுள்ள பெரிய வீட்டுப்‌ புள்ளிக்காரிகளுமே ஆவார்கள்‌. வடக்கு வீட்டம்மா, மேல வீட்டம்மா, பிளஷர்‌ வீட்டுக்காரி, நடுவீட்டம்மா, மூணுமாடி முனீஸ்வரியம்மா, மயில்வீட்டம்மா, காரவீட்டுக்காரி, டாப்பு வண்டி சங்கரம்மா, கம்மாய்க்‌ கரை வீட்டம்மா, தானா கூனா தீனா மூனாவீட்டம்மா, மீயென்னாச்‌ சூனா பெண்டாட்டி, தோணி வீட்டம்மா, வேம்பாத்துக்காரி, சிங்கம்பட்டிச்‌ செல்லம்மா, ஜவுளிக்‌ கடைக்காரர்‌ பெண்டாட்டி, பெட்டி ஆபீஸ்‌ பிள்ளை வைப்பாட்டி, கீகாட்டுக்காரி, கிராம முன்சீப்‌ பெண்டாட்டி, பம்புசெட்டு பாப்பாத்தியம்மா, பாம்படக்காரி பாப்பு, பெரிய முதலாளி வீட்டு மருமகள்‌ மேல்‌ வண்டி ரங்கம்மா என்று இப்படியொரு பெரிய கூட்டம்‌ நல்லம்மா வீட்டு பொம்பளைக யாரும்‌ அந்தந்தக்‌ கூட்டத்தில்‌ எந்தக்‌ காலத்திலும்‌ கலந்து கொண்டது கிடையாது. அது அவர்களுக்குப்‌ பிடிக்காத விசயமும்‌ கூட.

இந்தப்‌ பெரிய வீட்டுப்‌ பொம்பிளைகள்‌ வேலை வெட்டி இல்லாதவர்கள்‌. வீட்டு வேலைக்கு ஆள்‌ வைத்திருப்பவர்கள்‌. வேளாவேளைக்கு பலகாரங்களும்‌ சோறும்‌, பாலும்‌, பழமும்‌ அவர்கள்‌ இருக்கும்‌ இடந்தேடி வரும்‌. தின்ன சோறு செரிக்கணுமே. அதற்காகத்தான்‌ பகலெல்லாம்‌ ஊர்ப்பொரணி பேசி நேரத்தைக்‌ கழிக்கிறார்கள்‌. அதுதான்‌ அவர்களது பிரதான சோலியும்‌ ஆகும்‌. இந்தக்‌ கீழ வீட்டு முதலாளி வீட்டை பொரணி மன்றம்‌ என்று ஊருக்குள்‌ பேசுவார்கள்‌. ஒருவரைக்கூட அவர்கள்‌ விட்டு வைப்பதில்லை பொரணி பேசுவதில்‌ (பக்‌. 159-160).

ஊர்ப்‌ பொரணி பேச ஒன்றுகூடல்‌ என்பது கிராமிய அம்சம்‌. காட்டு வேலை, வீட்டு வேலை எதுவும்‌ செய்யாமல்‌ சும்மா இருக்கிற காலத்தில்‌ வீட்டுப்‌ பெண்களின்‌ பழக்கம்‌ இது. உழைக்கும்‌ பெண்கள்‌ கூட வேலை இல்லாமல்‌ ஓய்வாக இருக்கிற காலங்களில்‌ ஊர்க்கதை பேசுவதுண்டு. கிராமிய வாழ்வு முறை ஒருவருக்கொருவரான நெருக்கம்‌ இதற்கான உந்து சக்தியாய்‌ இருக்கிறது.


தூரந்‌ தொலைவான இடங்களிலிருந்து வரும்‌ விவசாயிகள்‌ சந்தித்தால்‌ முதல்‌ விசாரிப்பு - ஒங்க ஊர்ல மழை எப்படி?

வேளாண்மை வானத்திற்குக்‌ கீழே நடக்கிற சூதாட்டம்‌ என்பது ருசுப்படுத்தப்பட்டு வருகிறது தமிழ்நாட்டில்‌. அது பற்றி முத்தானந்தம்‌ பேசுகிறார்‌,

போன வருசமாவது சம்சாரிகளுக்கு கால்‌ வெள்ளாமை, அரை வெள்ளாமை வந்து சேர்ந்திருந்தது. அந்த வெள்ளாமைகளையும்‌, காடு கரைகளில்‌ நக்கி நக்கி எடுத்து வந்த வரவும்‌ கூட தச கூலிக்கே சரிக்கட்டிப்‌ போனது. மிச்சத்துக்கு வழியில்லை. இடுப்பொடியாய்ப்‌ பாடுபட்டதுதான்‌ மிச்சம்‌.

இந்த வருசம்‌ அந்த வெள்ளாமையும்‌ கூடக்‌ கிடையாது.

வருண பகவான்‌ கரிசல்‌ காட்டு மக்களை நல்லாப்‌ போட்டு எடுத்துவிட்டான்‌.

பூமியில்‌ ஒரு பொட்டு மழை பெய்யவில்லை.

வானம்‌ பார்த்த பூமி ஏங்கித்‌ தவித்ததுதான்‌ கண்டது.

பச்சை என்பதே கண்ணுக்குத்‌ தெரியாமலே போயிற்று. எல்லா இடங்களிலும்‌.

கரிசல்‌ தாய்‌ கன்னங்கரேலென்று பிறந்த மேனியாகக்‌ கிடக்கலானாள்‌. செல்வம்‌ பொழியக்‌ கூடிய பிஞ்சைகள்‌ சீரழிஞ்சு கிடந்தன.

தங்கம்‌ விளையும்‌ பிஞ்சைகள்‌ கூடத்‌ தரங்கெட்டுக்‌ கிடந்தன.

கண்மாயில்‌ குருவி குடிக்கத்‌ தண்ணீர்‌ கிடையாது.

கிணறுகளில்‌ கருவாடு காயப்போடலாம்‌.

வருசம்‌ முன்னூத்து அறுபத்தஞ்சு நாளும்‌ வெள்ளை வெயில்‌ அடித்தால்‌ அப்படி?

பகவானுக்கல்லவா தெரியணும்‌!

அவன்‌ யார்‌ வீட்டில்‌ போய்‌ படுத்துக்‌ கொண்டானோ?

அவர்களுக்கும்‌ வைப்பாட்டி வீடுகள்‌ எல்லாம்‌ இருக்காமே?

ஜோசியர்கள்‌ கணக்குப்படி ரெண்டரை வருசம்‌, மூன்றரை வருசம்‌ என்று போய்‌ இருந்து கொள்வானாமே! (பக்‌. 59).

- ஜனங்கள்‌ புலம்பித்‌ தவித்தார்கள்‌.

பஞ்சத்தைப்‌ பேசியாயிற்று; மழைக்காலம்‌ எப்படி?

ரெண்டு வருசங்களாய்ச்‌ சும்மா கிடந்த கரிசல்‌ மண்ணில்‌ பெய்த மழையால்‌ சேறும்‌ சகதியும்‌ மண்டிப்‌ போய்க்‌ கிடந்தன. காலில்‌ ஒட்டிய களிமண்‌ அவர்களுக்கு “பூட்ஸ்‌” போட்டது மாதிரி இருந்தது. சில பேர்களுக்கு கரண்டைக்கால்‌ முங்க பிசுபிசுத்தது சேறு. அவர்கள்‌ மந்தைப்‌ புஞ்சைப்‌ பக்கம்‌ வெளிக்கப்‌ போய்வருவதுதான்‌ சங்கடம்‌. 'சக்‌'கென்று உட்கார்ந்து கொல்லைக்குப்‌ போக முடியாது. உட்கார்ந்தால்‌ பெருந்‌தொடை எல்லாம்‌ சேறாகிப்போய்விடும்‌. கொஞ்சம்‌ யோசனையும்‌ உள்ள கரிசல்‌ காட்டுக்காரர்கள்‌ கம்மந்தட்டை முடி ஒன்றைக்‌ கையில்‌ எடுத்துக்‌ கொண்டு போய்க்‌ கால்க்கெண்டை சதைக்கும்‌ தொடைக்கும்‌ இடையில்‌ வைத்துக்‌ கொண்டு சேறு ஒட்டாமல்‌ கொல்லைக்கு இருந்துவிட்டு வருவார்கள்‌. சிலருக்குச்‌ 'சீசீ' என்றிருக்கும்‌. அதற்காக மழை பெய்வதை வெறுக்க முடியுமா?” (பக்‌. 94-95)

அதற்காக அந்த வாழ்க்கையை வெறுக்க முடியுமா? இப்போதும்‌ கழிப்பறைகள்‌ இல்லாத பூமியாகத்தான்‌ நாறுகிறது. ஊரைச்‌ சுற்றி மந்தையை நோக்கி நடக்கும்‌ பாதைகளெல்லாம்‌ மனிதக்‌ கழிவால்‌ நாறிக்‌ கொண்டிருக்கிறது. மனிதக்‌ கழிவுகள்‌ காய்ந்தும்‌, காயாமலும்‌ ஊர்‌ முங்க முங்க வாசம்‌ வீசுகிற அங்கே கொக்கோ கோலாவும்‌, பெப்சியும்‌ கிடைக்கிறது.

***

ஊரின்‌ புறச்சூழல்கள்‌ மட்டுமல்ல. வாழ்க்கைக்கு உள்ளேயும்‌ நாறிப்போய்விட்டது நல்லம்மாவுக்கு! வீட்டு வேலையாளாய்‌ அமர்த்தப்பட்ட “கோணமண்ட மாப்ள” குமாரசாமியுடன்‌ சேர்க்கை கொண்டதால்‌ சொந்த மாமனான முதலாளிக்‌ கிழத்துக்கு மூன்றாந்‌தாரமாய்‌ வாழ்க்கைப்பட்டதை நல்லம்மா யோசிக்கிறாள்‌. இந்தத்‌ தப்புக்கான காரணங்களையும்‌ காரண கர்த்தாக்களையும்‌ அவள்‌ அறிவாள்‌.

“ஒவ்வொரு பொண்ணும்‌ கை நிறைஞ்ச பணத்தைக்‌ விடக்‌ கண்‌ நிறைஞ்ச புருசனைத்தானே விரும்புவா? பணமும்‌ சொத்தும்‌ நகையும்‌ இருக்குன்னு ஒரு வயசாளிக்கு என்னைக்‌ கொண்டு தானம்‌ கொடுத்துட்டாங்களே.. மொதலாளிக்குப்‌ புள்ள இல்லையின்னா இருக்கிற சொத்துக்கள இல்லாதவங்களுக்கு பகுந்து கொடுத்துட்டுப்‌ பேரும்‌ புகழுமாய்‌ போய்ச்சேர வேண்டியதுதானே. போகிற எடத்துலயாவது புண்ணியம்‌ கெடைக்கும்‌. புள்ள வேணுமாம்‌ புள்ள! புள்ள இல்லாட்டாக்‌ கொள்ளி வேகாதோ?” (பக்‌. 90)

உடைமை அடிப்படையில்‌ உறவைக்‌ கோர்த்துக்‌ கொள்வது கிராமிய அமைப்பு. உலகளாவிய தகவல்‌ தொழில்நுட்பம்‌ கூட அவர்களின்‌ கதவுகளைத்‌ தட்டி அசைக்க முடியவில்லை. நுகர்வுப்‌ பொருட்களின்‌ கூடாரமாக கிராமங்கள்‌ ஆக்கப்பட்டு வருவது தவிர, எந்தத்‌ தகவல்‌ தொழில்நுட்பமும்‌ வாழ்க்கை உறவுகளை மாற்றிப்போட முடியவில்லை.

நல்லம்மாளின்‌ யோசிப்பு சரியே. வேலைக்கார குமாரசாமியை நேசித்துக்‌ கூடிக்‌ குழந்தை பெற்றுக்‌ கொண்டதும்‌ சரிதான்‌. இந்த நடப்புக்கான மூல காரணங்களையும்‌ அதற்கான மூலகர்த்தாக்களையும்‌ யோசித்ததும்‌ சரியே!

நல்லம்மா சாயலிலேயே முதல்‌ இரண்டு குழந்தைகள்‌ இருக்க - இந்த மூணாவது குழந்தை குமாரசாமியை அப்படியே உறிச்சி வைச்சது மாதிரி பிறக்கிறது.

அதே கால்‌ வகுப்பு; அதே கைச்‌ சைஸூ. அதே இல்லிக்‌ கண்ணு. அதே சோணக்காது. அதே சப்பட்ட மூக்கு. அதே ஏரோப்ளேன்‌ மண்டை.

இந்த உடைப்புக்கான நியாயத்தை கட்டுப்பாடான கிராமிய சமூகம்‌ ஏற்க மறுக்கிறது. ஆனால்‌ அவள்‌ சார்பாக நியாயமான பேச்சுப்‌ பேசியவர்களும்‌ இருந்தார்கள்‌.

“இந்தச்‌ சின்னஞ்சிறு வயசுல அவ எப்படி இருப்பா? அவ என்ன மரக்கட்டையா? இல்ல தட்டைக்‌ கட்டா? செல கெழவங்க மாதிரி இந்தக்‌ கெழவன்‌ துள்ளி விளையாடுகிறவர்‌ மாதிரியா இருக்காரு”

“நல்லம்மா என்ன ஊர்ப்‌ பொதுக்கிணறு மாதிரியா இருக்கா? நாலு பேறு வாளி போட்டுத்‌ தண்ணி எடுக்கிறாப்போல? அவ ஒருத்தன்‌ கிட்ட உத்தமியா இருக்கா”

இங்கே அத்துமீறல்‌ ஒருவித நியாயமாகிவிடுகிறது. எப்போதும்‌ எதிர்க்கேள்வியை நிறுத்தி அத்துமீறல்‌ தன்னை நிலைநிறுத்திக்‌ கொள்கிறது.

“அவ விரல யாராலும்‌ மடக்க முடியுமா?.. ஒலகத்துல மீன்‌ திங்காத கொக்கு இருக்கவா செய்யுது?”

வித்தியாசப்பட்ட வாழ்க்கையைப்‌ பேசியிருக்கிறார்‌ படைப்பாளி. பல கண்களுக்கு இது விபரீதமான வாழ்க்கையாய்‌ தெரியலாம்‌. அருவறுத்து ஒதுக்க வேண்டியதாகப்‌ படலாம்‌.

இந்த வித்தியாசமான வாழ்க்கையினூடேயே அந்த நிலத்துக்கே உரித்தான பண்பாட்டுக்‌ கூறுகளை கோர்த்துத்‌ தருகிறார்‌.

புதைந்து போய்க்‌ கொண்டுள்ள கிராமியக்‌ கலாச்சாரத்தை அகழ்ந்து எடுத்து விரிக்கும்‌ வேலையை தன்‌ தோளில்‌ போட்டுக்‌ கொண்டு செய்கிறவராக முத்தானந்தம்‌ இருக்கிறார்‌.

மனுசன்‌ சொல்ல முடியாததை சொலவடைகள்‌ சொல்லி விடுகின்றன. ஒரு பழமொழி ஒரு முழுமனுசன்‌ மாதிரி; முழு ஆளை அப்படியே தத்ருபமாக காட்டி விடுகிறது. சொலவடையோடு சொல்லாடலும்‌ அள்ள அள்ள வற்றாமல்‌ வந்து கொண்டிருக்கிறது. (கிறங்கிக்‌ கிறுகிறுத்து, வேலை கெடக்கு ஒரு கோட்டைக்கு, வாயிழந்து கேட்பது, இருவாயும்‌ பொன்‌ சொரிய, சிப்பாணி அள்ளிக்‌ கொட்டுது, எக்கடையும்‌ எகடாசியும்‌ அத்தம்‌ தொத்தம்‌, பழசு பட்டை).

***

ஆனால்‌ சமகாலப்‌ படைப்புக்களின்‌ மொழி சாதுரியம்‌, குயுக்தி, வியூகம்‌ இவை பற்றி சில கேள்விகள்‌ எழுகின்றன. யதார்த்தம்‌ இன்று பல்வேறு எடுத்துரைப்பு முறை, கதை சொல்லல்‌, தொழில்‌ நுட்ப முயற்சிகளைத்‌ தனதாக்கிக்‌ கொண்டுவிட்டது.

எந்தக்கால வாழ்க்கையை விரித்து வைத்தாலும்‌ எந்தக்கால மனுசர்களைச்‌ சித்தரிப்பு செய்கிறபோதும்‌ சமகால நவீனப்‌ போக்கு வெளிப்பட்டுக்‌ கொண்டிருக்க வேண்டும்‌.

இலக்கிய வெளிப்பாட்டு மொழி ஒவ்வொரு காலகட்டமாய்‌ அதன்‌ வளர்ச்சிக்குப்‌ பொருந்த அமைகிறது. வளர்ச்சியை முன்னெடுக்கும்‌ நடையாக மாறுகிறது. ஒரு காலகட்டத்தின்‌ இலக்கிய மொழி - அடுத்த கட்டத்துக்குப்‌ பொருத்தமில்லாமல்‌ போகலாம்‌. ஆனால்‌ அது தன்னிடம்‌ தரப்பட்ட படைப்பு வேலையை பூரணமாக குறிப்பிட்ட காலத்தில்‌ செய்து முடித்திருக்குமானால்‌ அதுதான்‌ வெற்றி.

முத்தானந்தம்‌ கைக்கொண்டிருக்கிற நேரடிச்‌ சொல்முறை அதில்‌ ஒன்று.

வட்டாரக்‌ கலாசாரத்தைப்‌ பேச் வெவ்வேறு உத்திகள்‌ இருக்கின்றன. ஏகப்பட்ட வெளிப்பாட்டு முறைகள்‌ நவீனமாகிய கடலில்‌ 'கெத்கெத்‌'தென்று கிடக்கின்றன.

மண்சுவர்‌ வைத்து அதன்மேல்‌ நைப்புமணல்‌ பூசி தேய்ப்புப்‌ பலகை (தீத்துப்‌ பலகை) வைத்து தேய்த்து வீடு கட்டும்‌ பாணி இந்த எழுத்து முறை. இன்று விஞ்ஞானம்‌ கட்டடக்‌ கலையை எங்கோ உயரத்தில்‌ தூக்கிக்‌ கொண்டுபோய்‌ வைத்துவிட்டது.

காணாமல்‌ போய்விட்ட குமாரசாமி கிடைத்துவிட்டான்‌. அவனைக்‌ காணாமல்‌ போக்கடித்து கதையில்‌ ஒரு திருப்பத்தை கொண்டு வர வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே குடும்பக்‌ கட்டுப்பாடு பிரச்சினை திடீரென வந்து குதிக்கிது. அவன்‌ கிடைத்துவிட்ட சேதி கேட்டு மகிழ்ந்து போன நல்லம்மாவின்‌ இரண்டு கண்களும்‌ முகட்டைப்‌ பார்த்தபடியிருந்த அந்த யோசிப்பு - ஒரு நல்ல மனுசனை இந்த அலைக்கழிப்பு செய்திட்டமே என்ற வருத்தமாக மாறுகிறது. தன்பக்கம்‌ அதற்குப்‌ பண்ண வேண்டிய பரிகாரங்களைப்‌ பண்ணி முடிக்க வேண்டும்‌ என்று நினைத்தாள்‌. இது ஒரு முக்கியமான கட்டம்‌.

ஆம்பிளை மாதிரி கைவீசி நடந்தாள்‌. ராசகோபால நாயக்கர்‌ வீடு. அவருக்கு வலதுபுறம்‌ ஆட்டுகிடை கீதாரிக்‌ கோனார்‌. அவருக்கும்‌ பக்கத்தில்‌ மேகாட்டு வியாபாரி நாயக்கர்‌. இரும்புக்‌ கட்டிலில்‌ ராசகோபால்‌ நாயக்கர்‌ சம்சாரம்‌, தாயார்‌ இவர்களின்‌ சபையில்‌ தன்னால்‌ வாழ்வு தொலைந்த குமாரசாமியின்‌ மறுவாழ்வுக்கு தான்‌ செய்யப்போகிற ஏற்பாடுகளை வரிசையாய்‌ சொல்கிறாள்‌.

“நீ சொல்றதெல்லாம்‌ சரிதான்‌... இருக்கிற வரைக்கும்‌ நாலுபேருக்கு நல்லது செய்துட்டுப்‌ போகணும்னு சொன்ன பாரு. அது எனக்கு ரொம்பப்‌ பிடிச்சிருக்கு. யாரு கொறை சொல்லப்போறா?”

கடைசியாய்‌ ராசகோபால்‌ நாயக்கர்‌ சம்சாரம்‌ சொல்கிற இந்தச்‌ சொல்‌ வாழ்வாய்‌ காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்‌.

என்னென்ன செய்வதாகச்‌ சொல்கிறாளோ, அதை வாழ்வாய்‌ வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்‌.

சொல்வகையாக இல்லாமல்‌ நல்லம்மாவின்‌ அடுத்த கட்ட வாழ்வாக நடத்தப்பட்டிருந்தால்‌ முழுமையாகி இருக்கும்‌.

நல்லம்மாவின்‌ வாய்‌ வார்த்தையாக 'நாவலை' சட்டென்று முடித்துவிட்டார்‌.

இந்த இடத்தில்‌ கதை சொல்லலுக்கு ஏற்பட்ட பள்ளம்‌, கன்னத்தில்‌ விழுகிற குழி போல்‌, அழகுப்‌ பள்ளமாக இல்லை.

திரைப்படம்‌ பாணியில்‌, நாடக முறையில்‌ வேகவேகமாய்‌ முடிக்கப்‌ பெற்ற நல்லம்மா, இன்னும்‌ நாலு எட்டு நடந்திருக்க வேண்டும்‌.

- பா.செயப்பிரகாசம்‌, ஜூலை 2007

  •  

இருள்‌ என்பது குறைந்த ஒளி - முன்னுரை

(வெளியீடு: அகரம்‌, மனை எண்‌.1, நிர்மலா நகர்‌, தஞ்சாவூர்‌ - 613007, தொலைபேசி: 04362239289, விலை : ரூ. 75/-)


இரு ஆண்டுகள்‌ முன்‌ எழுத்தாளர்‌ சி.சண்முகசுந்தரம்‌ தஞ்சையில்‌ ஒரு இலக்கிய நிகழ்வுக்கு அழைத்திருந்தார்‌. அந்நிகழ்வில்‌ முத்துப்பேட்டை இரா.மோகன்ராஜன்‌ எனக்கு அறிமுகமானார்‌. அங்கிருந்து அவர்‌ முத்துப்பேட்டை திரும்ப இரண்டு மணிநேரமாகும்‌. அந்நிகழ்விலும்‌ அடுத்த ஆண்டு இலக்கிய நிகழ்வின்போதும்‌ கூட்டம்‌ முடியும் முன்னரே காணாமல்‌ போயிருந்தார்‌.

இப்படியான ஒரு படைப்பாளியை - பல ஆண்டுகள்‌ முன்னரே சந்தித்திருக்க வேண்டுமே. எத்தனை பெரிய இழப்பு இது என கையில்‌ ஏந்தி நிற்கிற சிறுகதைகளின்‌ தொகுப்பு உணர்த்துகிறது.

ஒவ்வொரு படைப்பும்‌ ஓவ்வொரு அதிசயத்தை தனக்குள்‌ சேமித்திருக்கிறது. வாசிக்க வாசிக்க முகிழ்த்து முகிழ்த்து மேலெழுந்து என்‌ வாசிப்பை, கிரகிப்பை விரிவடைய வைத்தது.

அங்கீகரிப்பு காலத்தில்‌ நிகழவேண்டும்‌. ஆடிப்பட்டம்‌ தேடி விதைக்க நாம்‌ போயாக வேண்டும்‌. என்னை எடுத்துக்கோ, எடுத்துக்கோ என கூவிக்கொண்டு விதை வராது. கூவி நம்‌ கைகளில்‌ தாவி உட்கார முயலுகிற விதைகள்‌ நல்விதைகள்‌ அல்ல. சோடை போனவை. நிலவொளி என்ற சிற்றிதழ்ப்‌ பட்டத்தில்‌ அவ்வப்போது இந்த விதை முளைத்து - பளிச்சென வளர்ந்து முகம்‌ காட்டியிருக்கிறது. இதுபோன்ற சிற்றிதழ்கூட - சிற்றிதழை தேடித்தேடி அலைகிறவர்களின்‌ பார்வைக்கு கிடைக்காமல்‌ போயுள்ளதே என்பது அவலம்‌.

இலக்கிய உலகின்‌ பிரபலங்களில்‌ பலரும்‌ இதுபோல்‌ சிற்றிதழ்களில்‌ காலூன்றி வந்தவர்கள்‌. சிற்றிதழ்கள்‌ எனும்‌ கணவாய்‌ வழியே காற்றாய் வீசி சமவெளியாய்‌ உருவானவர்கள்‌ அந்த அளவுக்கு அவர்களது விரல்களுக்குள்‌ எழுதும்‌ திறனும்‌ கட்டுண்டு, பெய்து கொண்டிருந்தது. வணிக இதழ்களுக்கு இடம்‌ மாறியதும்‌, குடிபெயர்வு அவர்களைக்‌ காணாமல்‌ போகவைத்து அவர்கள்‌ இருந்தார்கள்‌; எழுத்துக்கள்‌ இல்லை.

அறியப்பட்ட எழுத்தாளர்கள்‌ இளங்குருத்துக்களைக்‌ கண்டறிந்து வளர்த்துவிடாத தவறுகளை மீண்டும்‌ மீண்டும்‌ செய்கிறார்கள்‌. அதற்கான அக்கறையோ, அக்கறையின்மைக்கான வருத்தமோ இல்லை. அறியப்பட்ட படைப்பாளிகள்‌, புதிய பேனாக்காரர்களுக்கு காது கொடுத்து கைவாகு தந்து, வழிகாட்டி தூக்கிவிட கணிசமான நேரம்‌ ஒதுக்குவதை, கடமையாகக்‌ கொள்வோமாக. ஆனால்‌, எந்த வழிகாட்டுதலுக்கும்‌ திசைப்‌படாமல்‌, தன்னை முந்தி நிறுத்தும்‌ பேராசை கொண்டலையும்‌ சில பிரகிருதிகளும்‌ இருக்கிறார்கள்‌ என்பதைக்‌ குறித்துக்‌ கொள்கிறோம்‌.

கடிதங்கள்‌ கோர்த்து கதை எழுதலாமா? எழுதலாம்‌ என்கிற முன்‌ மாதிரிச்‌ சோதனைகள்‌ பிறமொழிகளிலே எடுத்துக்கொள்ளப்‌பட்டுள்ளன. சிறுகதை என்ற ஆதிவடிவமே - ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு வந்ததாகையால்‌, அதிலான பல்வேறு வடிவச்‌ சோதனைகளும்‌ நம்‌ தாய்மொழிக்குத்‌ தாவியுள்ளன.

கடிதங்களாலான புதுவகை படைப்புக்கள்‌ வரிசையில்‌ மோகன்ராஜ்‌ இருகதைகளைத்‌ தருகிறார்‌. பெயர்‌ அறியா ஒரு பறவை; வண்ணக்‌ கலவையில்‌ விழுந்து எழுநீது வந்ததுபோல்‌ ஜொலிக்கும்‌ ஒரு பறவை. இமயா என்று அதற்கு ஒரு பெயர்‌ கொடுத்து, அந்தப்‌ பறவையுடன்‌ கற்பனையான உரையாடுதலை (காதல்‌ வயமான - பேரன்பு வசமான என்றும்‌ சொல்லலாம்‌) நிகழ்த்துகிற தமிழ்‌ என்ற பிஞ்சு நெஞ்சின்‌ பாடல்‌ இசைக்கப்படுகிறது. பால்ய காலத்தின்‌ ஓவ்வொரு நகர்வும்‌ பறவையிடம்‌ பேசுவது போல்‌ வெளிப்படுத்தப்படுகிறது. கடைசியாய்‌ அது என்ன தமிழுக்கு அப்பா எழுதிய கடிதம்‌? கடிதமா? தன்னைக்‌ கால்‌ பிடித்து இழுத்துச்‌ சுருட்டிய பொருளாரார இழப்புக்களில்‌ மாட்டிக்கொண்ட தந்தை செல்ல மகனிடமிருந்து மட்டுமல்ல, உலககிலிருந்தும்‌ விடைபெற்றுக்‌கொள்ளும்‌ இறுதிக்‌ குறிப்புக்களா? என்னை மன்னிப்பாயா தமிழ்‌ என்று கடைசியாய்‌ கேட்பது என்ன? ரொம்ப ரொம்பப்‌ பூடகமாக வெளிப்படுத்துவதும்‌ கலைப்டடைப்பின்‌ ஒருவகைதான்‌.

பிஞ்சு நெஞ்சங்களின்‌ நினைவோட்டங்களுக்கும்‌, பெற்றோர்‌, குடும்பம்‌, கல்விநிலையம்‌, ஆசிரியர்‌, சமுதாயம்‌ இவைகளின்‌ செயல்களுக்குமான முரண்பாடுகளைச்‌ சித்தரிப்பதில்‌ மோகன்ராஜ்‌ கூடுதல்‌ அக்கறை கொள்கிறார்‌. இறகு விழும்‌ மண்‌, மின்மினியும்‌ சில வண்ணத்துப்‌ பூச்சிகளும்‌ சிட்டு, இமயா, அனாமிகா எனப்‌ பல கதைகள்‌.

குழந்தைமையைச்‌ சிதறடிக்கிற ஆங்கில ஆதிக்கம்‌ பற்றி - நம்‌ பிள்ளைகளை ஆங்கிலப்‌ பண்பாட்டுக்குள்‌ அடக்க முயலுகிற காண்வென்ட்‌ கலாச்சாரம்‌ பற்றி எவ்வளவோ எடுத்தெடுத்துப்‌ பேசிவிட்டோம்‌. ஆனால்‌ இன்னும்‌ இன்னும்‌ குழந்தைமைக்‌ கொலைகள்‌ நடைபெற்றுக்‌ கொண்டேயிருக்கின்றன. தம்‌ செல்லங்களின்‌ குழந்தைத்தனம்‌ கொலையாக பெற்றோர்களும்‌ களிப்போடு அனுமதித்துக்‌ கொண்டேயிருக்கிறார்கள்‌. தண்ணீர்‌ வேண்டும்‌ என்று சொல்லக்கூடாது; அது தப்பு, வாட்டர்‌ என்று சொல்லவேண்டும்‌. வகுப்பில்‌ அப்படித்தான்‌ கேட்க வேண்டுமென்று அம்மா சொல்லியனுப்புகிறாள்‌. இனிமேல்‌ அம்மான்னு எல்லாம்‌ கூப்பிடக்கூடாது. மம்மின்னுதான்‌ கூப்பிடனும்‌. அதையும்‌ அம்மாதான்‌ கண்டிப்பாகச்‌ சொல்கிறாள்‌. வணிக வியாபாரம்‌ நடக்கிறது. செய்கிறவர்கள்‌ குழந்தைப்‌ பலி கேட்கிறார்கள்‌. சிட்டு இதுபோல்‌ இவர்களுக்குக்‌ கொடுக்கப்பட்ட குழந்தைப்‌ பலி அனு என்ற அனாமிகா - ஒரு குளோனிங்‌ குழந்தை. மற்ற குழந்தைகளுக்கும்‌ அனுவுக்கும்‌ நிறைய வேறுபாடு உண்டு. அனு இயற்கைக்கு மாறான படைப்பு; மறுப்பான படைப்பு. மருத்துவம்‌ அனுவை மனித வாசனையே அண்டாத கட்டிடத்தில்‌ ஆய்வுக்கூடத்தில்‌ அடைத்து வளர்க்கிறார்‌.

குளோனிங்‌. பிரதியாக்கக்‌ குழந்தைகளோட குண வித்தியாசங்களை நிறம்‌ பிரிக்கவும்‌, அடையாளப்படுத்தி வரையறுக்கவும்தான்‌ இந்த ஆய்வு. அனு ஏன்‌ முக்கியம்னு இனி நான்‌ சொல்ல வேண்டியதில்லையல்லவா?

மருத்துவர்‌ விளக்குகிறார்‌. கண்ணாடித்‌ தொட்டிக்குள்‌ வளர்க்கப்படும்‌ போன்சாய்‌ செடி அது. அந்தச்‌ செடி தொட்டியின்‌ சிறு வெடிப்பில்‌ கசிந்த ஒளியைப்‌ பிடித்து, மேலே வளர்ந்து, சுய சந்திப்பில்‌ அய்க்கியமாகிறது. குளோனிங்‌ - சுயமாகச்‌ சிந்திக்கலாமா? அது வரைந்த ஓவியங்களும்‌, அதன்‌ காட்சிகளும்‌ மூடிவைக்கப்பட்ட அறைக்குள்‌ எந்தப்புற உலகிலிருந்து கிடைத்தன? சுயம்‌ அடக்கப்பட்ட அனு கொஞ்சம்‌ கொஞ்சமாய்‌ விரிந்து வார்த்தைகள்‌ ஓங்கரித்து அம்மா, அம்மா என்று விசும்பி, அலறலாய்‌ கதறலாய்‌, கதவு, சன்னல்‌ தாண்டி ஆகாயம்‌ நிறைத்து திடுமென அதிர்ந்து பின்‌ பெருகிற்று.

சோதனைக்காகக்கூட, சிலவற்றைச்‌ செய்யக்கூடாது என்பதை இப்படைப்பு உணர்த்துகிறது. தனது புலனடக்கத்தைச்‌ சோதனை செய்ய ஒரு - இளநங்கையுடன்‌ இரவு முழுதும்‌ நிர்வாணமாய்‌ இருந்து காந்தி செய்து பார்த்த 'சத்திய சோதனை' தான்‌ இது. எவரும்‌ தொடாததொரு கதைப்பொருளை எடுத்து, மிக நுட்பமான அறிவியல்‌ மொழியாய்‌ அதனைக்‌ கையாளுகிற மோகன்ராஜ்‌, நம்‌ புருவங்களை அவரை நோக்கி உயர்த்தச்‌ செய்துவிடுகிறார்‌.

கடித வகையிலான, குறிக்கப்படவேண்டிய இன்னொரு கதை - இராவணதேசம்‌. இனி அது இராவணதேசம்‌ அல்ல. இராசபக்க்ஷேக்களின்‌ தேசம்‌. இராவணன்‌ யார்‌ என்பதைத்‌ தெரிந்து கொண்டார்‌. தமிழ்ப்‌ பாரம்பரியத்தில்‌ வந்து ஆரிய ராமனை எதிர்த்துப்‌ போரிட்டவன்‌ என்ற புரிதல்‌ கொண்டால்‌, இந்த தலைப்பின்‌ அர்த்தத்தில்‌ பயன்படுத்தியிருக்கமாட்டோம்‌. சில சொல்லாடல்களை, உண்மை அறிந்து, பொருள் தெரிந்து பயன்படுத்துவோமாக. ஆரியக்‌ கலாச்சார, ஆதிக்கத்தை இன்னும்‌ ஊன்றி நிற்திறவர்களே இராவண வதம்‌ என ராம லீலா - என கொண்டாடுவார்கள்‌.

விடுதலை இயக்கத்தில்‌ தன்னை இணைத்துக்கொண்ட பெண்‌ போராளியின்‌ கதை. முத்துப்பேட்டையில்‌ வாழுகிற கோமதிக்கும்‌, சாவகச்சேரி, மாங்குளம்‌, பரந்தன்‌, 9ஏ-வன்னி நெடுஞ்சாலை, வவுனியா என்று ஒரு லெக்கு (இடம்‌) என்றில்லாமல்‌ பெயர்ந்து, பெயர்ந்து போராடிப்‌, போராடி போய்க்‌ கொண்டிருக்கிற ஊர்மிளை என்ற போராளிக்கும்‌ இடையிலான கடித உரையாடல்‌ கதையாய்‌ விரிகிறது.

விடுதலைப்‌ போருக்கு மக்களை அணியமாகும்படி ஆயிரக் கணக்கில்‌ அணிதிரட்டிய கவிதைகள்‌. ஊர்மிளையின்‌ வாழ்வினூடாகவே கூட்டம்‌ கூட்டமாக வருகின்றன. இனபேதம்‌, அடக்குமுறை, இன்னார்‌ இவர் யார்‌ என வேறுபாடில்லாத மனிதச்‌ சிதைப்பு, போராளி, போர்க்களம்‌ என நிலைமைகளின்‌ படிப்படியான தன்மைக்குப்‌ பொருத்தமாய்‌ கவிதைகளை தொகுத்துத்‌ தந்திருக்கிற முறைமை வெகுவாகக்‌ கவருகிறது. கோமதி, ஊர்மிளை இருவரும்‌ கவிதைகளால்‌ வாழ்பவர்கள்‌. ஊர்மிளை போர்க்கள இலக்கியமாகவே வாழ்கிறாள்‌.

மகன்‌ விமலனை டாக்டராக்க வேண்டுமென்பது அம்மாவின்‌ கனவு. ஈழத்தில்‌ வாழ்பவர்களுக்கு இப்படியொரு கனவு உண்டாகலாமா? தகாத கனவு. இந்தியாவுக்கு கரை தாண்டி விட்டால்‌ போதும்‌. நல்லூர்க்‌ கந்தையன்‌ அருளில்‌, அவனுடைய டாக்டர்‌ லட்சியத்தை யாராலும்‌ ஓன்றும்‌ செய்ய ஏலா. அம்மா மட்டுமல்ல; விமலனுமே நினைக்கிறான்‌. எண்டாலும்‌ கரை கண்ணுக்கு எட்டிய மட்டும்‌ மறைஞ்சிதான்‌ கெடக்குது? சிங்கள இராணுவ வெறியாட்டத்தில்‌ அவனுடைய மாமாவும்‌, மாமா குடும்பமும்‌, அவனுடைய மனதில்‌ வாழும்‌ ஆனந்தியும்‌ நசுங்கிச்‌ சப்பழிய, அவனுடைய டாக்டர்‌ கனவும்‌ நொறுங்கிப்போகிறது; தூரத்தில்‌ லாந்தர்‌ எரிய, இந்தியாவுக்கு கடத்திப்‌ போக தோணி வருகிறது; கரையில்‌ தோணிக்காக நின்றவன்‌ திரும்புகிறான்‌, டாக்டராகவில்லை. போராளியாகிறான்‌.

இருள்‌ என்பது குறைந்த ஒளி - என்பது இக்கதையின்‌ தலைப்பு. இருளே வழிநடத்தும்‌ ஒளியாக உள்ளது என்ற வித்தியாசமான பொருளைத்‌ தனக்குள்‌ அடக்கியிருக்கிறது. இந்தக்‌ கதை மட்டுமல்ல, இராவண தேசம்‌, சிறுகதை, இறகு விழும்‌ மண்‌ என்ற கதைகள்‌ ஈழதேசம்‌ பற்றிய படைப்புக்கள்‌. இந்த அனைத்தும்‌ ஈழத்‌ தமிழ்‌ மொழியிலேயே நடத்தப்படுகிறது. ஈழ மண்ணில்‌ கால்‌ பதித்து வந்தவரும்‌ இல்லை; ஈழத்தில்‌ வாழ்ந்தவரும்‌ இல்லை. ஈழத்தமிழர்‌ போலவே, பிரதேச மொழியைக்‌ கையாண்டிருப்பது ஆச்சரியம்‌ தருகிறது. முத்துப்பேட்டை, கோடிக்கரை எல்லாமும்‌ ஈழமக்களின்‌ அடைக்கலக்‌ கூடுகள்‌. போராளிகளும்‌, அகதிகளுமாய்‌ அங்கேயே தங்கியிருந்த மக்களுடன்‌ மக்களாய்‌ தன்னைக்‌ கரைத்துக்‌ கொண்டதும்‌, போராளிகளுள்‌ தன்னை இணைத்துக்‌ கொண்டதும்‌, அந்த மொழி லாவகமாய்க்‌ கையனையக்‌ காரணமாகலாம்‌. மொழி போலவே, கதைகளின்‌ கருக்களும்‌ அங்கிருந்தே கிடைத்திருக்கின்றன.

பள்ளிக்கூடம்‌ போகிறபோதே காணாமல்‌ போகிறார்கள். பள்ளிக்கூடத்திலிருந்தும்‌ காணாமல்‌ போகிறார்கள்‌. போராளியாக குழந்தைப்‌ போராளிகள்‌ பற்றிய மற்றொரு கதை.

மாஸ்றர்‌, நான்‌ ஒங்களுக்குச்‌ சொல்றதா எண்ணக்கூடாது. எண்டாலும்‌ மாஸ்றர்‌ நாங்களும்‌ கொஞ்சம்‌ யோசிக்க வேணும்‌. விதி, தலைவிதி யெண்டு ஒண்டுமில்லதானே.... இண்டைக்கு எங்கட மக்கள்‌ மேலே எதிரியானவன்‌ ஒரு முற்று முழுதான யுத்தத்தை திணிச்சு இருக்கான்‌. சண்டை நிறுத்தமென்பதெல்லாம்‌ வெறும்‌ கண்துடைப்பு. அவைகள்‌ (அவர்கள்‌) தம்மை போருக்குத்‌ தயார்‌ செய்யப்‌ போடுற நாடகம்‌. இதிலை தெரிஞ்சோ, தெரியாமலோ நாங்கள்‌ எங்கட ஆட்கள ஒவ்வொருத்தரையா பலிகொடுத்துக்‌ கொண்டிருக்கிறம்‌. இந்தச்‌ சமயத்தில எங்களக்கு என்ன எண்டு கிடந்தா, எங்கட மக்கள்‌ கதி? இனியெங்கட மக்கள்‌ அவையிண்ட தலைமுறையெண்டு கதைக்க ஆட்கள்‌ ஏதும்‌ காணாது போய்விடும்‌ மாஸ்றர்‌.

மாணவப்‌ போராளியாகிவிட்ட குமரன்‌ கதைக்கிறான்‌. அஞ்சு வயசிலை ஆமிக்காரன்‌ துண்டிச்ச கைவிரல்களோடும்‌, இரும்புத்‌ தகடு பொருத்திய கால்களோடும்‌ கெந்திக்‌ கெந்தி நடந்த குமரன்‌ சொல்வான்‌ மாஸ்றர்‌, கேளுங்கோ. ஆமிக்காரன்‌ ஊனமாக்கிப்‌ போட்டுப்‌ போனானெண்டு மூலையிலை முடங்கியா போயிட்டன்‌. இல்லை மாஸ்றர்‌. எண்ட அந்த வயசிலை நான்‌ யாருக்கு எதிரியா கிடந்திருக்க ஏலும்‌, கொல்லுங்கோவன்‌.

அறம்‌, தர்மம்‌, நியாயக்‌ கோட்பாடுகள்‌ பேசுகிற எவரிடமும்‌ இந்தக்‌ கேள்விக்குப்‌ பதிலுண்டா?

இன்னொரு முக்கியமான கேள்வி மாஸ்றருக்கு இருக்கிறது. அது கிடக்குது குமரன்‌ - அண்டைக்கு உம்முடைய சகோதரனை சுட்டுப்போட்ட ஆட்கள்கூட நீரும்‌ கிளம்பிப்‌ போனீறாரேமே?

குமரனுக்கு செல்லடி காயத்தில்‌ சயனைட்‌ வெச்சதுபோல்‌ கிடந்தது. எது மாஸ்றர்‌? அவன்‌ துரோக இயக்கத்திலை இருந்து எங்கட இனத்துக்கும்‌ மக்களுக்கும்‌ துரோகஞ்‌ செய்தவை. மற்றது, எமது இயக்க ஆட்கள்‌ முதுகிலயும்‌ குத்தினவை. ஆகையால்‌ எமது மக்களின்‌ விருப்பப்படியே தண்டனை குடுக்க வேண்டியதாகிப்‌ போச்சுது.

மாஸ்றரின்‌ அந்தக்‌ கேள்வி அவரது கேள்வி மட்டுமல்ல; விடுதலையை நேசிக்கிற நம்முடைய கேள்விகளும்தான்‌.

சகல இயக்கங்களும்‌ இணைந்து ஒரு பெரிய வேலைத்‌ திட்டத்தின்‌ அடிப்படையில்‌ ஒரு பொதுத்‌ தலைமையை உருவாக்குவதன்‌ மூலம்‌ எதிர்நோக்கும்‌ பிரச்னைகளைத்‌ தீர்க்கலாம்‌. 

(மு.திருநாவுக்கரசு, ஈழ அரசியல்‌, வரலாற்று ஆய்வாளர்‌ - நூல்‌: இந்தியாவும்‌ தமிழீழ விடுதலைப்‌ போராட்டமும்‌ - பக்‌.31),

ஒரு பொதுத்‌ தலைமையை உருவாக்க எந்தப்‌ போராளி இயக்கமும்‌ தயாரில்லை. தமிழக அரசியல்‌ தலைமைகள்‌ போலத்தான்‌; அத்தனை ஆயிரம்‌ பேரைக்‌ காவுகொடுத்த கடைசி நேரங்களிலும்‌ அவரவர்‌ இயக்க அடையாளத்தைக்‌ காப்பதிலும்‌ அவரவர்‌ தலைமையை முன்னிறுத்துவதிலும்‌ கவனமாகச்‌ செயல்பட்டனர்‌. பிரச்னையைத்‌ தீர்ப்பதோ, பிரச்னையோ பெரிதல்ல. மக்களோ, மக்களின்‌ பிரச்னைகளோ, எதுவாயினும்‌ மேலானதாய்‌ இயக்கம்‌ அவர்களை நடத்தியது.

போராளிக்‌ குழுக்களும்‌ அவ்வாறே! அவர்களின்‌ பேச்சுவார்த்தை மேசையில்‌ துப்பாக்கி நடுவில்‌ இருந்தது. துப்பாக்கி முன்னால்‌ உட்கார்ந்திருந்தது; போராளிகள்‌ பின்னால்‌ உட்கார்ந்திருந்தார்கள்‌.

இயக்கங்களுக்குள்‌ சனநாயகம்‌, இயக்கக்‌ கூட்டுக்குள்‌ சனநாயகம்‌, பொது தலைமைப்‌ பீடத்துள்‌ சனநாயகம்‌ என எங்கும்‌ சனநாயகம்‌ நிலவினால்தான்‌ - சனநாயக ரீதியாகத்‌ தீர்மானம்‌ எடுக்கப்பட்டால்தான்‌ சரியான வெற்றியை அடையமுடியும்‌. அல்லது தோல்வியைத்தான்‌ தழுவவேண்டி ஏற்படும்‌.

(மூ. திருநாவுக்கரசு, ஷ நூல்‌ பக்‌.31)

இந்த வாசகம்‌ முன்வைக்கப்பட்ட 1985லும்‌ எந்தக்‌ குழுவும்‌ கருத்தில்‌ கொள்ளவில்லை. இப்போதும்‌ அதேகாட்சி நீடிப்பதுதான்‌ அவலம்‌. இயக்க சனநாயகம்‌, இயக்கங்களுக்குள்‌ சனநாயகம்‌ என எவரொருவருமே அக்கறை கொள்ளவில்லை. அக்கறை கொண்டு முயற்சி மேற்கொண்டோரும்‌ புறமொதுக்கப்பட்டனர்‌ (முடிவிலாப்‌ பயணத்தின்‌ முடியாத வரலாறு - எஸ்‌.எம்‌.கோபாலரத்தினம்‌, நூல்‌ வெளியீடு, தோழமை பதிப்பகம்‌, சென்னை.)

பேனாவுக்குப்‌ பேனா தான்‌ பேசவேண்டும்‌; துப்பாக்கி பேசுதல்‌ கூடாது. அது அரச பயங்கரவாதம்‌; தாதாக்கள்‌ பயங்கரவாதம்‌. கவிஞர்கள்‌ செல்வி, சிவரமணி - கவிதைகளால்‌ விமரிசித்தவர்கள்‌ - உலலிருந்தே அகற்றப்பட்டு விட்டனர்‌. மனித உரிமைப்‌ போராளி - ரஜினியின்‌ கொலைச்‌ சேதியைக்‌ காற்றில்‌ பறக்கவிட்டாயிற்று. எங்கெல்லாம்‌ மனிதம்‌ துளிர்க்குமோ, துளிர்க்கச்‌ செய்ய எழுத்துக்கள்‌ பேசுமோ - அங்கு மனிதமும்‌ எழுத்தும்‌ துப்பாக்கியால்‌ மெளனிக்கப்‌பட்டன.

அவனை விதைத்த அடுத்த கணம்‌

அதோ

அடுத்தடுத்துள்ள கல்லறை நோக்கி

ஓடின கால்கள்‌

கண்ணீர்ப்‌ பூக்களைத்‌

தூவின கைகள்‌.


அவன்‌ விதை குழிக்கு

மண்ணிட்ட கரங்கள்‌

அனைத்துமே....

தத்தம்‌ மக்களுக்காய்‌

மண்ணிட்டிருந்தன.


எந்த மகனுக்காய்‌

என்‌ கால்களை நகர்த்த?

நேற்று விதையுண்டு போன

மூத்தவனுக்கா - இல்லை

இப்போதுதான்‌ விதைக்கப்பட்ட

என்‌ இளைய குஞ்சுக்கா?

எந்த மகனுக்காய்‌ என்‌ கால்களை நகர்த்த என்ற கவிதை - அ.காந்தா அன்னையாக எழுதியது; அன்னையருக்காக எழுதியது.

மகனையோ, மகளையோ இழக்கிற சோகம்‌ - தாய்க்குப்‌ பெரியது. எதிரியால்‌ அழிந்தாலென்ன? இயக்கங்களால்‌ அழிக்கப்‌பட்டாலென்ன? எதிரியைத்‌ தாய்க்கும்‌, தந்தைக்கும்‌ குடும்பத்துக்கும்‌ தெரியும்‌. ஆனால்‌ இயக்கமும்‌ உயிர்‌ எடுக்கும்‌ என்பது என்ன காரணமாயினும்‌ - சொந்த உயிர்களின்‌ மரணத்தைத்‌ தாங்க இயலுமா?

மனச்சாட்சியோடு பேச வந்தவர்களுக்கும்‌ ஆயுதமே பேசிற்று. ஆயுதங்களற்ற விமர்சனவெளி - கருத்துரைப்பு வெளி (Space) இப்போது உருவாகியிருக்கிறது. உருவாகியுள்ள இந்த சனநாயக வெளியை ஒற்றைப்‌ பிம்பப்‌ போற்றுதல்‌ முறையால்‌ அழித்துவிடல்‌ வேண்டாம்‌. எங்கும்‌ எதிலும்‌ சனநாயகம்‌ வேண்டியே எதிரிகளை நோக்கி போராடிக்‌ கொண்டுள்ளோம்‌. இங்கும்‌ இதிலும்‌, சனநாயகம்‌ என்ற முனைப்பு - வாசிப்பை, சந்திப்பை விரிவுபடுத்தும்‌; ஒற்றை வாசிப்ப்பு, ஒற்றைச்‌ சிந்திப்பு என்று அரசியல்‌ தலைமைத்துவங்களால்‌ நம் மீது ஏற்றப்பட்டுள்ள சுமையை வீசி எறிவது விடுதலைக்கு அவசியம்‌.

இப்போது அடைபட்ட கதவுகள்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாய்த்‌ திறந்து விமரிசனம்‌, சுய விமரிசனம்‌ என மேலெழுந்து வருகின்றன. அவை,

  • கோவிந்தனின்‌ - புதியதோர்‌ உலகம்‌ செய்வோமாக
  • செழியனின்‌ - வானத்தைப்‌ பிளந்த கதையாக
  • சேரனின்‌ - நீ இறங்கும்‌ ஆறு, ஊடறுவாக
  • கணேச அய்யரின்‌ - ஈழப்போரில்‌ எனது பதிவாகளாக
  • சயந்தனின்‌ - ஆறா வடுவாக
  • அ.ரவியின்‌ - வீடு நெடும்‌ தூரமாக

என்று சுயகுரல்கள்‌ கேட்கத்‌ தொடங்கியுள்ளன.

அது இயக்க அதிகாரம்‌, குழுவின்‌ அதிகாரம்‌, அரசதிகாரம்‌, தனிமனித அதிகாரம்‌ என்பன எங்கிருப்பினும்‌ சனநாயகத்தின்‌ சவப்பெட்டிகள்‌ மீது நடக்கின்றவைதாம்‌. சனநாயகமற்ற மனக்‌கட்டுமானம்தான்‌ ஆண்‌. நரிக்கு இடம்கொடுத்தா, கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்‌. சிங்கம்‌, புலி, கரடி - போன்ற மேல்வர்க்கம் மட்டுமல்ல; நரி போன்ற கொத்தனார்‌, மேஸ்திரி, கங்காணி, சூபர்வைசர்‌ போன்ற சாமானிய நிலைக்கு மேலே இருக்‌கிற கூட்டம் என்ன ஆட்டம்‌ ஆடும்‌ என்பதைச்‌ சித்தரிக்கிறது நிலாக்‌ காய்ச்சல்.

வேலை வழங்குபவர்தான்‌ அதிகாரம்‌ கொண்டவர்‌, இன்‌றைய அமைப்பில்‌, வேலை வாங்குபவனும்‌, வேலை வழங்குபவனாக தன்னைக்‌ கருதிக்‌ கொள்கிறான்‌. கொத்தனார்‌, மேஸ்திரி, கங்காணி எனப்படுபவர்களெல்லாம்‌ இடைநிலைக்‌ கூலிகள்‌. கீழிருக்கும் கூலிகளை மேய்க்கும்‌ அதிகாரம்‌ தம்கைகளில்‌ தரப்பட்டதும், அல்லது எடுத்துக்‌ கொண்டதும்‌ கள்‌ குடித்த குரங்காக ஆடுகிறார்கள். கீழிருப்‌பவர்கள்‌ எடுபிடிகள்‌ மட்டுமல்ல; அவர்கள்‌ வாழ்வும்‌ தம் கைப்பிடிக்குள்‌ அடக்கம்‌ என்றெண்ணுகிற கொத்தனார்களின் ஆட்சியில்‌ கணவனை இழந்து கர்ப்பமாயிருக்கிற இளம்‌ விதவை படும்பாட்டை - மிகைப்படுத்தலின்றி - இயல்பான எடுத்துரைப்பிலே சொல்லிப்‌ போகிறது - இது ஒரு நல்ல கதை.

மீண்டும்‌ எனது வருத்தத்தைப்‌ பதிவுசெய்துகொள்ள விரும்புகிறேன்‌. வாசிப்போரைத்‌ தனது கட்டுக்குள்‌ வைத்திருப்பது சாதாரணமானது அல்ல. பிரமாண்ட வடிவிலான கலை வெளிப்பாட்டுப்‌ பணியை கைக்குள்‌ வைத்திருக்கும்‌ மோகன்ராஜ்‌ போன்ற விதைகள்‌ ஏன்‌ அறியப்படவில்லை? எழுத்தில்‌ தொடர்ச்சியை ஏன்‌ வழங்காதிருக்கிறார்‌ அவர்‌?

வருத்தம்‌, நிதரிசனமாய்‌, வெளிப்படையாய்‌ தெரியும்‌ இழப்பிலிருந்து பிறக்கிறது. 

- பா. செயப்பிரகாசம்‌, ஏப்ரல் 2013

  •  

இகழ்தலும் வியத்தலும் இலமே – கு.பத்மநாபன்

இகழ்தலும் வியத்தலும் இலமே

கு.பத்மநாபன்

தர்மபுரி கல்லூரி மாண்பமை முதல்வர் பேராசிரியர் கோ கண்ணன் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடன் மணியன் பிள்ளை என்ற புத்தகம் குறித்து என்னிடம் பேசிய நினைவு. அது ஒரு மொழிபெயர்ப்பு என்பதோ, சுயசரிதை என்பதோ அப்போது என் மனதில் பதிவாகி இருக்கவில்லை.

புதிதாக ஒன்றை கேள்விப்படும் போது மனது தெரிந்த ஏதோ ஒரு நினைவோடு அதனைச் சேர்த்துத் தொகுத்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.

சங்குதேவன் என்ற திருடனைப் பற்றிய புதுமைப்பித்தனின் கதை காரணமாகவோ மணியன் பிள்ளை என்ற பெயர் காரணமாவோ திருடன் மணியன் பிள்ளை நூல் 1930களில் எழுதப்பட்ட ஒரு தமிழ் சுயசரிதை என்றும், அது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் பதிப்பிக்கப்பட்டு இருக்கும் என்றும் பதிந்து விட்டது. ஆனால் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய போதுதான் உண்மையில் அது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்றும், மாத்ருபூமி மலையாள இதழ் உதவி ஆசிரியர்  ஜி. இந்து கோபன் என்பவரால் எழுத்தாக்கம் செய்யப்பட்டு குளச்சல் மூ யூசுப் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு சுயசரிதை நூல் என்பதுடன் இந்த மொழிபெயர்ப்புக்காக திரு குளச்சல் மூ யூசுப் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரியவந்தன.

400 பக்கங்களுக்கு மேல் அமைந்த நீண்ட சுயசரிதை இது. வாசிக்கத் தொடங்கியவுடன் மணியன் பிள்ளையைத் திருடராகவே படைத்து, திருடனாகவே உலவ விட்டு, ஒரு திருடனாகவே இந்த உலகில் இருந்து விடுபடச் செய்ய வேண்டும் என கண்ணுக்குத் தெரியாத அந்த மாயக்கரம் விரும்பி விட்டது என்பது, தெரியத் தொடங்கி விடுகிறது.

கொல்லத்துக்கு அருகில் வாழத்துங்கல் என்ற சிற்றூரில் ஒரு பணக்காரக் குடும்பத்தின் கடைசி ஆண் வாரிசாக மணியன் பிள்ளை பிறக்கிறார்.  சகோதர உறவில் கைக்கு வந்த சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மணியன் பிள்ளையின் அப்பா விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.

புத்தகம் இல்லை என்பதற்காகவே, முதல் ரேங்க் வரும் மணியன் வகுப்பில் பெஞ்சின் மீது ஏறி நிற்கும் நிலைமை ஏற்படுகிறது. தங்கமும் வெள்ளியும் இருக்கும் குடும்ப நகைப்பெட்டியை உறவினர்கள் வீட்டுக்குத் தலையில் தூக்கி வந்து மணியனும் அவனுடைய அக்காவும் வைக்கிறார்கள். குடும்ப நகைகள் போகட்டும், அவர்களுக்கு தலைச்சுமை கூலி கூட கிடைப்பதில்லை. நகரத்து ஹோட்டலில் எச்சில் இலையில் இருக்கும் சோற்றுப் பருக்கைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவன் மணியனின் சித்திரம் கண்ணுக்குத் தெரிகிறது.

அங்கிருந்து மெல்ல மெல்ல மணியனைக் குற்ற உலகம் தன் கையில் எடுத்துக் கொள்கிறது. விதியின் மாயக்கரங்களில் மணியன் பிள்ளை ஏறியும் இறங்கியும் ஆடும் ஆட்டம்தான் இந்த சுயசரிதை.  ஏணியில் ஏறியும், பாம்பில் இறங்கியும் அவன் ஆடும் பரமபத விளையாட்டில் அவனுக்கே ஆன அறம்/ பாவம் குறித்த விழுமியங்கள் தொடர்ந்து இருக்கவே செய்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நிகழ்வு உட்பட பல நிகழ்வுகள் மணியன் பிள்ளையின் உள்ளே இருக்கும் அறம் குறித்த பிரக்ஞை காரணமாக இறுதி வரை துயரத்துடன் நினைவு கூறப்படுகின்றன.

இது இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படித்தானே நடக்க முடியும், என்று மணியன்பிள்ளை கேட்பதாக முழு சுயசரிதையையும் தொகுத்துக்கொளள முடியும்.

மணியன் பிள்ளையாக, சலீம் பாட்ஷாவாக, பெந்தக்கோஸ்தெ கிறித்துவனாக மணியன் பிள்ளைக்குத்தான் எத்தனை முகங்கள்.

மைசூர் பகுதியில் குடியேறி நிலத்தை குத்தகைக்கு எடுத்துப் புகையிலை வியாபாரம் செய்து  மணியன் ஒரு பெரும் புள்ளியாக உருவாவது சுயசரிதையின் சுவாரசியமான பகுதி. அப்போது கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக புகழ்பெற்ற சோசியலிஸ்ட் ராமகிருஷ்ண ஹெகடே இருக்கிறார். ஆளும் காங்கிரஸ் சார்பில் மாநில முதல்வராக இருப்பவர் குண்டு ராவ். மணியன் பிள்ளையைத் தங்கள் கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று இரண்டு கட்சிக்காரர்களும் கேட்டுக் கொள்கிறார்கள். குண்டு ராவையும் ஹெகடேவையும் மணியன் தனித்தனியே சந்திக்கிறார். வெற்றி பெற்றால் அமைச்சரவையில் கூட இடம்பெறும் வாய்ப்பு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அமையக்கூடும். ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கோயிலில் மணியன் பிரச்சாரம் தொடங்குகிறார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் தொடர்பான பணம் வெளியில் நிலுவையில் இருக்கிறது.

மெகருன்னிசா  என்பது மைசூரில் சலீம் பாட்ஷாவாகப் புகழுடன் வளர்ந்து வரும் மணியன்பிள்ளை என்ற மலையாளத் திருடனின் மனைவி பெயர்.

இன்னும் சில நாட்களில் தேர்தல் என்று விறுவிறுப்பாக எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. அப்போது ஒரு நாள் ஏதோ ஞாபகமாக மணியன் தனியே நடந்து வந்து கொண்டிருக்கும்போதுதான் “நில்லு, ஓடாதே மணியன் பிள்ளெ” என்ற குரல் கேட்கிறது. அது அவரைத் தேடி வரும் கேரள போலீஸ்காரர்களின் குரல். ஒரு பழைய குற்றவாளி பழைய வழக்கிற்காகப் பிடிப்படுகிறான். அரசியல்வாதி சலீம் பாஷாவின் சாம்ராஜ்யம்  திடீரென்று அப்படியே சரிகிறது. உண்மையில் இது ஒரு திரைப்படக்காட்சி போலத்தான் இருக்கிறது. ஒரு சாதாரணத் திருடன்  கோடீஸ்வரனாகி அரசியலில் ஈடுபட்டு அமைச்சர் ஆவது எல்லாம் வணிக சினிமாக்களின் காட்சிகள் என்று இந்த சுயசரிதையைப் படிப்பதற்கு முன்பு வரை நினைத்திருந்தேன்.

இதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வந்து மர வியாபாரம் செய்யும் மணியன் பிள்ளையை, ஒரு தேநீர்க் கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் மணியன் பிள்ளையை, ஆட்டோ ஓட்டி பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் மணியன் பிள்ளையை, ஒரு சிறந்த திருடன் என்பதற்கு வகை மாதிரி வடிவமாக  படைக்க வேண்டும் என்று ஊழ் நினைத்திருக்கிறது போலும்!

இந்த சுயசரிதை திருடர்கள், காவல் துறையில் இருப்பவர்கள், நீதிபதிகள் என்று சமூகத்தின் பல அடுக்குகளில் இருப்பவர்கள் குறித்த ஒரு வண்ணமயமான உலகைத் திறந்து காட்டுகிறது.

கோட்டும் சூட்டும் போட்டு பணக்கார மது விடுதிகளிலும், உணவகங்களிலும், முதல் வகுப்பு ரயில் பெட்டியிலும் மட்டுமே கை வைக்க விரும்பும் சுகா என்ற திருடன், மீனை மட்டுமே திருடும் ஒரு முஸ்லிம் திருடன், நாளை விடுதலை என்று தெரிந்தும் தப்பிச் செல்வதில் இருக்கும் சுவாரசியம் காரணமாகச் சிறையில் இருந்து தப்பித்து மறுபடியும் மறுபடியும் மாட்டிக்கொள்ளும் ஒருவன், தெருவோர விபச்சாரிகளிடம் சென்று ஆணுறுப்பு வீங்கி சீழ் பிடித்து வேதனைப்படும் ஒரு திருடன் என்று எத்தனை வகைத் திருடர்கள்!

அடுத்து பாலியல் தொழிலாளர்கள். பொன்னம்மாள் போன்ற குடிசையில் வாழும் சாதாரண விபச்சாரிகள், ஒரு போலீஸ்காரன் கன்னத்தில் ஓங்கி அறை வைக்கும் அளவு பலமும் தைரியமும் கொண்ட சந்திரிகா போன்ற விபச்சாரிகள், படப்பிடிப்பு இடைவெளியின் போது உயர்ந்த நட்சத்திர விடுதிகளுக்கு வந்து ஒரு மணி நேரம் இருந்து சம்பாதித்துப் போகும் துணை நடிகைகள்.

போலீஸ்காரரிடையேயும்தான் எத்தனை வகை. காவல்துறையினர் குறித்துப் பொதுவாக முன்வைக்கப்படும் கருப்பு வெள்ளைச் சித்திரத்தை இந்த சுயசரிதை கலைத்துப் போடுகிறது. திருடனின் காசில் கிடைத்தவரை சுருட்டிக் கொள்ளும் போலீஸ்காரர்கள், அதேசமயம் திருடனைத் திருத்தி வாழ வைக்க வேண்டும் என்பதற்காகக் கடைசிவரை பாடுபடும் காவல்துறை அதிகாரிகள்,  ஜெயிலில் கிடைக்கும் சப்பாத்திகளைத் தொப்பிக்கு அடியில் தலையில் மறைத்து வைத்துக் கொண்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வதால் சப்பாத்திப் பிள்ளை என்றே பெயர் வாங்கும் ஒரு போலீஸ்காரர், திருடனுடைய ஒரு கையில் விலங்கு மாட்டி அவனுடன் உட்கார்ந்து  ரயிலில் சீட்டு விளையாடும் போலீஸ்காரர், பேருந்தில் திருடனை  உட்கார்த்தி வைத்துவிட்டுக் கடைக்குச் செல்லும் போது பேருந்து புறப்பட்டு விட பேருந்தின் பின்னால் மூச்சிரைக்க ஓடிவரும் பரிதாபமான போலீஸ்காரர்கள்.

நீதிபதிகள் குறித்தும் நிறைய பதிவுகள் நூலில் உள்ளன. பொதுவாகவே கடுகடுப்பான, சனியன் சனியன் என்று திட்டிவிட்டுப் பேச ஆரம்பிக்கும் பெண் நீதிபதி,  மணியன் பிள்ளை தன் வழக்குக்காகத் தானே வாதிடும்போது அவனுடைய வாதத் திறமையில் மெய்மறந்து வியக்கும் நீதிபதிகள்

இப்படி இப் புனைவு வாசகனுக்கு இந்த நாவல் வழங்கும் அனுபவங்கள் பல.

சுயசரிதை என்று எழுத நினைத்து நாவல் என்று இங்கு எழுதி இருக்கிறேன். இதனை நான் அழிக்கப் போவதில்லை, திருத்தவும் போவதில்லை. காரணம், வாசிக்கும் போது பல நேரங்களில் இது ஒரு நாவல் என்று என்னுள் தோன்றிய எண்ணத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் நாவல் என்ற வார்த்தையை என் ஆழ் மன வெளிப்பாடாகவே நினைத்து அப்படியே விட்டு விடுகிறேன்.

ஒருவன் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் அவன் குற்றம் செய்யாத போது நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்திலிருந்து கிடைத்த லாபத்தின் ஒரு சிறு பகுதி அவனுடைய அடிப்படை வாழ்க்கைத் தேவைக்காக அவனுக்கு வழங்கப்படலாம். இந்த அடிப்படையில் திருடன் மணியன் பிள்ளை நேர்மையான முறையில் சம்பாதித்த சொத்தில் இருந்து ஒரு நாலு லட்சம் ரூபாய் அவனுக்கு நீதிமன்றம் வாயிலாகக் கிடைக்கிறது. இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவது கர்நாடக உயர்நீதிமன்றம். இங்கும்கூட மணியனுக்கு எதிராகவே பகடை உருள்கிறது. இப்படி ஒரு திருடனுக்கு கிடைக்கும் பணம் அவனைப் போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் தேவையற்ற சலுகையாகப் போய்விடும் என்று கர்நாடக அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து விடுகிறது. இப்போது மணியன் பிள்ளைக்குப் பணம் கிடைக்க வேண்டும் என்றால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்று வர வேண்டும். அடுத்த வேளைத் தேவைக்கு ஏதோ ஒரு வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்க வேண்டிய மணியன் பிள்ளை போன்றவர்களுக்கு அதெல்லாம் இயல்வதில்லை. ஏதோ ஒரு பழைய வழக்கில் சேர்க்கப்பட்டு மணியன் பிள்ளை கைது செய்யப்படும் நிலையில் இந்த சுயசரிதை முடிவடைகிறது.

“மொழிபெயர்ப்பு  தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்காக தொலைபேசியில் அழைத்த போது பிள்ளையின் செல்போன் செயல்படவில்லை. மலையாள ஆசிரியர் ஜி இந்து கோபனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மணியன்பிள்ளை பழைய வழக்கு ஒன்றின் காரணமாகத் தற்போது சிறையில் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன்” என்று மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மூ யூசுப் எழுதுகிறார்.

ஏப்ரல் 9, 2024 உகாதி (தெலுங்கு புத்தாண்டு) அன்று மாலைப் பொழுதில் இந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். இரவு நேரங்களில் தனியே இருந்து இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். தெருவில் தூரத்தில் கேட்கும் நாய் குரைக்கும் ஓசையும், எங்கோ செல்லும் வண்டிகளின் சத்தமும் ஒரு அமானுஷ்ய அனுபவத்தை நிச்சயம் வழங்கும்.

இந்த சுயசரிதையில் இடம் பெற்றுள்ள நாய்கள் குறித்து ஒரு சிறு குறிப்பு தனியே எழுத வேண்டும்.

போன வாரம் ஒரு நாள் குப்பத்தில் இறங்கி தனியே நடந்து வந்து கொண்டிருந்தேன். எங்களைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு ரயில்வே நிலையங்களில், பேருந்து நிலையங்களில், சாலைகளை கடக்கையில் வேறுபட்ட அனுபவங்கள்.

பகலிலும் மெல்லிய போதையில் எங்கள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் விளிம்பு நிலை மனிதர்கள். சிலர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் அவ்வப்போது அமைவதுண்டு.

குப்பம் ரயில் நிலைய நடைமேடைகளைக் கடக்க அமைக்கப்பட்டிருக்கும் மரப் படிக்கட்டுகளில் தனியே நடந்து வருகிறேன். கையைப் பிடித்துக் கொள்ளும் ஒருவர் சேலம் செல்ல வேண்டும் டிக்கெட் வாங்க காசு இல்லை என்கிறார். முதலாளி சம்பளம் கொடுக்கவில்லை என்றும், வேலையை விட்டுவிட்டு வந்து வட்டேன் என்றும் ஏதேதோ சொல்கிறார். பயணத்தில் இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கும் என் மனதில் இவர் ஒரு தமிழ்நாட்டு மணியின் பிள்ளையாக இருக்குமா என்ற எண்ணம்  எழாமல் இல்லை.

  •  

சக்ஸஸ் ஃபார்முலா – போஜன் மதிப்புரை

மொத்தம் 30 தலைப்புகளும் 109 பக்கங்களும் கொண்ட இந்த புத்தகம் ஒரு மோட்டிவேஷன் வகை சார்ந்த புத்தகம் என்று சொல்லலாம். இதில் சொல்லப்பட்டு இருக்கும் உள்ளடக்கம் என்ன என்பதை பார்ப்போம் .

எப்படி பிளான் பண்ண வேண்டும் : புத்தகத்தின் முதல் தலைப்பு இது தான் எந்த ஒரு செயலை செய்யும் முன் எப்படி திட்டம் இட வேண்டும் அந்த திட்டம் தோற்கும் போது அதை எப்படி மாற்றி கொள்ள வேண்டும் என்பதை 10 வழிமுறைகள் உடன் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

எண்ணங்கள் சீரானால் பழங்கங்கள் செம்மையாகும் : புத்தகத்தின் இரண்டாவது தலைப்பு இது பொதுவாக ஒரு பிரச்சனை ஏற்படும் போது அதற்கு எப்படி தீர்வு வரும் என்பதை யோசிக்கிறோம் அதற்கு ஆசிரியர் ஜர்னலிங் என்ற முறையை சொல்லி 10 வழி முறைகளையும் சொல்லி இருக்கிறார்.

நீங்களும் சி.இ.ஓ . ஆகலாம் புத்தகத்தின் நான்காவது தலைப்பு இது உண்மையில் எனக்கு இந்த தலைப்பு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது, ஒரு பிரச்சனை நமக்கு வருகிறது என்றால் அதை மற்றவர்கள் மீது பழி சொல்லாமல் அதை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்று 10 வழி முறைகள் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

ஏன் எதற்கு என்ற கேள்வி கேளுங்கள் : பொதுவாக சில சமயங்களில் தெளிவு இல்லாத போதும் தெரிந்த மாதிரி கேள்வி கேக்காமல் கடந்து செல்வோம் அப்படி செய்ய கூடாது என் சொல்கிறார் ஆசிரியர். அது மட்டும் இல்லமல் கேள்வி கேக்க சில வழி முறையை பற்றியும் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியை வரவேற்க்க தோல்வி அவசியம் : புத்தகத்தின் 11 தலைப்பு இது பொதுவாக தோல்வி ஒரு அவமான செயலாகவே பார்க்கப்படுகிறது தோல்வி அடைந்து விட்டால் அன்று நாள் ஒரு இருண்ட நாளாகவே பார்க்கிறோம் நான் பள்ளி படிக்கும் பொது 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளை சொல்லலாம். அன்று தேர்வில் தோல்வி அல்லது நினைத்த மதிப்பெண்ணை அடைய முடியாமல் போகும் மாணவர்களின் தவிப்பு சொல்ல முடியத ஒன்று. ஆனால் ஆசிரியர் சொல்லி இருப்பது தோல்வி என்பது இன்னொரு முயற்சி தான் தவிர அது அவமான அல்ல என்பதை சொல்லி இருக்கிறார்.

வேண்டாம் என்று சொல்லி பழகுங்கள் : உண்மையில் 13 தலைப்பாக வரும் இந்த விஷயம் எல்லாருக்கும் நடக்கும் ஒரு விஷயம் தான் பொதுவாக ஒரு வேலை அல்லது அளவுக்கு மீறிய வேலை கொடுக்கும் போது அதை ஏற்றுக்கொண்டு மன உள்ளச்சளுக்கு ஆளாகிறோம். இந்த புத்தகத்தில் ஆசிரியர் சொல்லும் விஷயம் சில விஷயங்களுக்கு நோ இல்லை என்று சொல்லி பழக வேண்டும் என்கிறார்.

முன்னேற்றத்தை தடுக்கும் காலம் தாழ்த்துதல்: புத்தகத்தின் 17 தலைப்பு இது பொதுவாக ஒரு செயல் செய்யும் போது யோசித்து செய்வது என்பது வேறு ஆனால் அதை காலம் தாழ்தி செய்வது ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.அப்படி காலம் தாழ்த்துவதால் என்ன சிக்கல் வரும் அதை எப்படி சரி செய்வது என சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியை ஈர்க்க வேண்டும் துரத்த கூடாது : புத்தகத்தில் 21 தலைப்பு இது வெற்றி என்றால் என்ன அது பயணமா அல்லது முடிவா அல்லது இலக்கா என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.இதை படிக்கும் போது வெற்றி பற்றி ஓரளவு புரிதல் வரும்.

செயல்களை ரகசியம் ஆக்குவோம் : இந்த தலைப்பு யாருக்கு பொருத்தி போகுதோ இல்லையோ கண்டிப்பாக எனக்கு பொருந்தும் ஒரு விஷயம் உண்மையில் நம் செயல் திட்டத்தை ரகசியமாக செய்யாமல் எல்லாருக்கும் அறிவித்து விட்டு செய்து பிறகு அதில் ஏமாற்றம் அடைகிறோம்.உண்மையில் இதை மாற்ற என்ன வழி என்பதை சொல்லியும் இருக்கிறார்.

28 தலைப்பு நேரமும் பொன்னும் ஒன்றல்ல : நேர நிர்வாகம் என்று சொல்ல படுவது உலகில் உள்ள அனைவருக்கு 24 நேரம் தான் ஆனால் சில பேர் அதில் வெற்றி பெற்றவர்களாக இருக்க காரணம் நேர திட்டமிடல் இதை பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியின் முதல் படி : புத்தகத்தின் கடைசி தலைப்பு இது தான் ஒருவர் வாழ்வில் வெற்றி பேர் வேண்டும் என்றால் பிறர் என்ன சொல்வார்களோ என்று நினைக்காமல் அல்லது பிறர் சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேணும் . அதற்கு தடையாக எது இருக்கிறதோ அதற்கு நோ சொல்ல பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
மிகவும் சிறிய புத்தகம் என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய புத்தகம் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவுக்கு தகவல் இருக்கிறது.

Boje Bhojan

The post சக்ஸஸ் ஃபார்முலா – போஜன் மதிப்புரை appeared first on Naseema Razak.

  •  

வாசன் மலர்

Pa Raghavan

நேற்று எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலரைச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். படித்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டதால் சில விவரங்கள் மறந்திருந்தன. ஒரு கட்டுரையை முழுக்கப் படித்தேன். செய்ய இருந்த வேலையெல்லாம் மறந்து போய் அடுத்தடுத்து எட்ட கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நிறுத்தவே மனம் வரவில்லை.

உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம் ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப் புத்தகத்தினும் சிறப்பானது, வீரியம் மிக்கது. வாசன் என்ற ஆளுமையை நேரில் கண்டு பழகியவர்களின் அனுபவங்கள்தாம். ஆனால் எதுவுமே வெறும் துதிக் கட்டுரைகள் அல்ல. ஒரு வெற்றியாளரைக் குறித்து எழுதும்போது அவர் வெற்றியடைந்த கதையைச் சொல்வதினும், அவரது எந்தெந்தத் திறமைகள், குணங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தின என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான் சரியான எழுத்தாக இருக்கும். இம்மலர் அதனைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.

வாழ்க்கை வரலாறுகள், தன்னம்பிக்கை நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், வெற்றிக் கதைகள் எழுத விரும்புகிறவர்கள் இதனை மனத்தில் கொள்ள வேண்டும். சும்மா ஒருவர் போராடினார், கஷ்டப்பட்டார், இரவு பகலாக உழைத்தார், புதிதாக யோசித்தார், நிறைய தோற்றார், இறுதியில் ஜெயித்தார் என்று எழுதுவது எந்த வகையிலும் படிப்பவர்களுக்கு உத்வேகம் தராது. உபயோகமாகவும் இராது.

ஒவ்வொரு மனிதருக்கும் நூற்றுக் கணக்கான நிறங்கள் இருக்கும். இந்த நிறம் என்பது குணத்தையும் உள்ளடக்கியதுதான். நல்லவர் என்பது பொதுவான பண்பு. ஒருவர் எல்லோரிடத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா காலக் கட்டத்திலும் நல்லவராகவே இருக்க முடியாது. அவருக்குக் கோபமே வராது என்பது சரியான கணிப்பு அல்ல. கோபமே இல்லாமல் ஒரு முழு வாழ்வை வாழ்ந்து முடிக்க முடியாது. அதே போலத்தான் அவர் இரக்க சுபாவமுள்ளவர், அவர் நகைச்சுவையாகப் பேசுவார், அவர் எப்போதும் சிந்தனை வயப்பட்டிருப்பார் என்பன போன்ற விவரிப்புகளும்.

ஒரு சராசரி மனிதன் சாதனையாளன் ஆவதற்கு (அது நோக்கமாக இல்லாவிட்டாலும்) சில பயிற்சிகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டியிருக்கும். தெரிந்து செய்யலாம், இயல்பாகவும் செய்யலாம். அதுவல்ல முக்கியம். ஆனால் குறிப்பிட்ட பயிற்சிகளில் மனம் ஒருமுகப்படுவதற்கு அவரை உந்தித் தள்ளும் இயல்புகள் எவை என்று பார்ப்பது முக்கியம்.

இந்த மலரில் அசோகமித்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். வாசனுக்கு திறமைமிக்க ஊழியர்கள் பலர் தாமாகவே கிடைத்தார்கள் என்று அதில் சொல்கிறார். நாம் உடனே என்ன நினைப்போம்? அது அவரது அதிர்ஷ்டம்.

ஆனால் வேறொரு கட்டுரையில் வாசன் தமது ஊழியர்களை எப்படிக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் என்பதை இன்னொருவர் எழுதுகிறார். திறமையை இனம் காண்பது – கிடைத்த திறமைசாலிகளைத் தக்க வைத்துக்கொள்வது என்று இரண்டு விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.

ஒரு வட நாட்டு நடிகை இங்கே நடிக்க வந்தபோது அவரை ஒரு மதன மாளிகையில் தங்க வைத்து, பிரமித்துப் போகும் அளவுக்கு உபசரித்த கதையை ஒருவர் எழுதியிருக்கிறார். அடுத்தப் பக்கத்திலேயே இன்னொரு நடிகைக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்து மிரட்டிய கதை வருகிறது. இரண்டுக்குமே தொழில் சார்ந்த காரணங்கள்தாம். நியாயமான காரணங்கள். ஆனால் இரண்டு சம்பவங்களின்போதும் தனிப்பட்ட ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இல்லாமல்தான் அவர் நடந்துகொண்டிருக்கிறார். எப்போதும் சமநிலையில் இருப்பது வெற்றிக்கு மிக முக்கிய சூட்சுமம் என்பார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் இந்த இரு சம்பவங்களும் வாசன் என்னும் ஆளுமையின் சமநிலை குலையாத மனப்பாங்கைப் புரியச் செய்துவிடுகின்றன.

அந்நாளில் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நடிக்கும் படங்களில் அவரது நகைச்சுவைப் பகுதிகளை அவரே எழுதி, இயக்கிக் கொடுத்துவிடுவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. வாசனும் அவரைத் தமது ஒரு படத்துக்கு அழைத்தார். என்.எஸ்.கே. தனது பாணியில் ஒரு நகைச்சுவைப் பகுதியை எழுதி, இயக்கிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் போட்டுப் பார்த்தபோது வாசனுக்கு நிறைய விஷயங்கள் இடித்தன. எனவே கிருஷ்ணன் கொடுத்த மொத்தப் படச் சுருளில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அது எப்படி நான் எடுத்துத் தந்ததை நீங்கள் வெட்டலாம்?

வாசன் அவரை உட்கார வைத்து முழுப் படத்தையும் போட்டுக் காட்டியிருக்கிறார். நீக்கப்பட்ட காட்சிகளை ஏன் நீக்கினேன் என்று விளக்கியிருக்கிறார். சும்மா சுற்றி வளைத்துத் தனது செயலை நியாயப்படுத்துவதல்ல. ஒரு வரி. ஒரே ஒரு விளக்கம். அவ்வளவுதான். நீங்கள் செய்தது சரி என்று சொல்லிவிட்டு கிருஷ்ணன் எழுந்து சென்றுவிட்டார்.

அந்த ஒரு வரி விளக்கம் வாசன் எவ்வளவு பெரிய திரைக்கதை வல்லுநர் என்பதை விளக்கிவிடுகிறது.

இந்தக் கட்டுரை முடியும் இடத்தில், வாசன் சினிமா கற்றுக்கொண்ட ஆரம்பக் காலம் குறித்த வேறொரு கட்டுரை இருக்கிறது. இரண்டையும் இணைத்து சிந்தித்தால், நேர்த்தியாகக் கற்றுக்கொள்ளும் ஒரு தொழில் தருகிற தன்னம்பிக்கை, எம்மாதிரி நெருக்கடி சமயங்களில் எவ்வளவு சிறப்பாக வேலை செய்யும் என்பது விளங்கிவிடும்.

தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு வெற்றியாளரின் வாழ்வும் இந்த மலருக்கு நிகரானதல்ல. இத்தனைக்கும் இது ஒரு தொகுப்பு நூல்தான். கால வரிசைப்படுத்தலோ, வெற்றி சூட்சுமங்களை விளக்கும் நோக்கமோ இதில் கிடையாது. வாசன் என்னும் ஆளுமையின் நினைவைப் போற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்டதுதான். ஏராளமான நபர்கள், ஆளுக்கொரு விதமாக அவரவர் மொழியில், அவரவர் அனுபவத்தை எழுதியிருப்பதுதான். எந்த ஒழுங்கு வட்டத்துக்குள்ளும் அடங்காது.

இருப்பினும் ஒரு சிறந்த வெற்றி நூல் / வாழ்க்கைச் சித்திர நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க இது ஒரு மகத்தான கையேடு. இப்போது அச்சில் இருக்கிறதா, கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

சல்மான் ருஷ்டி - மரணத்தை மறுத்த சொற்களின் கதை

 


ஒரு இலக்கியப் படைப்பு மீது 30 வருடங்களாகத் தீராத வன்மம் கொண்டு அலைந்த பழியின் வடிவம், கடைசியில் ஒரு கத்தியாக உருமாறி, அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளனின் மீது, கிட்டத்தட்ட தன் பழியை நிறைவேற்றிக் கொண்டது. அந்தக் கத்தியிலிருந்து, உயிர்தப்பி மீண்ட நினைவுகளின் பதிவுதான் சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’. கருத்தியல் ரீதியான, கலாசார அடிப்படையிலான, அடையாள அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்களும் கூர்மையான கத்தியாக மாறிய பயங்கரத்தைத் தான் இந்நூல் விவரிக்கிறது.

சல்மான் ருஷ்டியின் புத்தகத் தலைப்பு கூறுவதைப் போலவே, கொலை முயற்சி மீதான ஆழ்தியானங்களே இப்புத்தகம். சல்மான் ருஷ்டி மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சர்வதேச அளவில் குரோதம் ஏற்படுவதற்கும் கோமேனியின் மரண ஆணைக்கும் காரணமான ‘சாத்தானின் வசனங்கள்’ நூலை இரண்டு பக்கங்களுக்கு மேல், அவரைக் கத்தியால் குத்திய இளைஞன் ஹதி மதார் படிக்கவில்லை. சல்மான் ருஷ்டியை கொலை செய்வதற்கு அவனுக்கு அவரைப் பற்றிய இரண்டு யூ டியூப் காணொளிகள் போதுமானதாக இருந்திருக்கிறது.

சாத்தானின் வசனங்கள் நூல் பிரசுரமாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன. சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையிலும் உலக மக்களின் வாழ்க்கையிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. சுதந்திரமான சிந்தனைகளுக்கும் அதை வெளிப்படுத்தும் கலைஞர்கள், சிந்தனையாளர்களுக்கும் பாதுகாப்பான இடமென்று கருதப்படும் அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் ஷெடாக்வ வட்டரங்கத்தில் பெரிய பாதுகாப்போ அச்சுறுத்தலோ இல்லாத அந்தரங்கமான சூழலில் ஹதி மதாரின் கத்தி தன்னை நோக்கி விரைந்துவருவதைக் கூர்ந்து சல்மான் ருஷ்டி பார்ப்பதன் வழியாக இந்த நினைவுப் பதிவு தொடங்குகிறது.

சல்மான் ருஷ்டி பல நொடிகளுக்கு முன்பாகவே தன்னைக் கொலைசெய்ய வருபவனைப் பார்த்துவிடுகிறார். ஆனால், முதுகைக் கூடத் திருப்பாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். “சரி, நீதான் அது. இந்தத் தருணம்தானே உனக்கு வேண்டும், எடுத்துக்கொள். ஆக, இறுதியில் அது வந்துவிட்டது. மேன்மைமிக்க அந்த நிகழ்வு” என எதிர்கொள்கிறார்.

விதிவசப்பட்டது போல சல்மான் ருஷ்டி, அந்தக் கொலைமுயற்சியை எதிர்கொள்கிறார்.

 தாக்குதலுக்கு வந்தவன் தனது உடலில் இயங்கிய 27 நொடிகள் அந்தரங்கமானது என்கிறார். கத்திக்கு இருக்கும் அந்தரங்கம் துப்பாக்கிக்கு இல்லை என்றும் நம்மிடம் பகிர்கிறார்.

தாக்குதலைச் சற்று முன்னரே அறிந்திருந்தும் சல்மான் ருஷ்டி ஏன் செயல்படவில்லை என்று உறவினர்களும் நண்பர்களும் சம்பவத்துக்குப் பிறகு அவரிடம் கேட்கின்றனர். ஒரு திடமான நிச்சயமான எதார்த்தத்துக்குள் வன்முறை என்னும் நிகழ்ச்சி அரங்கேறும்போது அங்கேயிருப்பவர்களை புதிய எதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாதவண்ணம் குழப்பிவிடுகிறது என்ற பதில் தவிர ருஷ்டிக்கு வேறெந்த பதிலும் இல்லை.

எழுத்தாளர்கள், வாசகர்கள் கூடியிருக்கும் மேடையில் உரை நிகழ்த்துவதற்காக காத்திருந்த சல்மான் ருஷ்டியின் உடல் மீதும் இப்படித்தான் வன்முறை ஏற்கெனவே இருந்த எதார்த்தத்தை நொறுக்கி முன்னேறியது.

சல்மான் ருஷ்டியின் வலதுபக்கத் தாடை அவன் கையால் முதலில் தாக்கப்படுகிறது. அடுத்து கழுத்தில் கத்தி இரண்டு முறை பாய்கிறது. அடுத்து மார்பில் காயம். நெற்றியில் காயம். கல்லீரலைக் கிட்டத்தட்ட சேதாரப்படுத்தி விட்டது. மூளையில் இன்னும் ஒரு மில்லிமீட்டர் கூடுதலாக இறங்கியிருந்தால் ‘கத்தி’ என்ற இந்தப் படைப்பே கிடைத்திருக்காது. வலது கண் நிரந்தரமாகப் பறிபோகும் அளவுக்கு கண்ணில் சேதம்.

மருத்துவமனையில் நினைவு திரும்பியவுடன் அந்தக் கொலையாளியுடன் அந்தரங்கமாகச் செலவிட்ட 27 நொடிகள் மீதான தியானத்தை நம்மிடம் பகிர்கிறார் ருஷ்டி. அந்த 27 வினாடிகளில் பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே என்ற மந்திரத்தைச் சொல்லிவிடலாம். மத ரீதியானதைத் தவிர்த்தால், சேக்ஸ்பியரின் 14 வரிக்கவிதைகளில் ஒன்றை எளிதாகப் படித்துவிடலாம். கொலைக்கு முயற்சித்த தாக்குதலாளியுடன் தான் செலவிட்ட அந்தரங்கத்தையும் தனக்கு நெருக்கமான வாசகன் தன் எழுத்தின் மீது செலுத்தும் அந்தரங்கத்தையும் நினைவுகூர்கிறார்.

கத்தியை ஒரு கருத்துருவமாக பல தூக்கமற்ற இரவுகளில் யோசித்துப் பார்த்திருக்கிறார் ருஷ்டி. மொழியும் ஒரு கத்திதான் ;அது உலகத்தை வெட்டி அதன் அர்த்தத்தை, அதன் அகத்தில் நடக்கும் வேலைகளை, அதன் ரகசியங்களை, அதன் உண்மைகளை வெளிக்காட்டக்கூடியது என்கிறார். படிப்பவர்களின் கண்களைத் திறந்து அழகை உருவாக்கக் கூடியது மொழி என்கிறார். அத்துடன் மொழிதான் என்னைத் தாக்கவரும் ஆயுததாரியுடன் சண்டையிடுவதற்கான கத்தி என்றும் குறிப்பிடுகிறார்.

போர்ஹேயின் சிறுகதை ஒன்றில் வருவதுபோல, கையில் வைத்திருப்பவனுடையதல்ல; ஆயுதத்திலேயே வன்மமும் பழியும் காலம்காலமாக உறைந்திருக்கிறதென்பதைப் போல, தனக்கென்று உயிர்வந்ததைப் போல, சல்மான் ருஷ்டியின் உடலின் மீது குத்தியும் வெட்டியும் தனது ஆட்டத்தை கத்தி நிகழ்த்திக் கொண்டிருந்திருந்ததாகச் சொல்கிறார் ருஷ்டி.

கடவுளோ மதமோ ஏதுமற்ற வேசிமகன் என்று தன்னைப் பற்றிக் கேலியாக விவரிக்கும் சல்மான் ருஷ்டி, மரணத்தின் முனையில் இயற்கையை மீறிய எந்தப் புலன்கடந்த அனுபவமும் நிகழவில்லை என்று கூறுகிறார். “என் உடல் இறந்துகொண்டிருந்தது, தன்னோடு என்னையும் எடுத்துக்கொண்டு போகிறது. உடல் சார்ந்த தீவிரமான உணர்வு அது.” என்றே குறிப்பிடுகிறார். ஆன்மாவின் அழிவின்மையில் நம்பிக்கை இல்லாதவனான தனக்கு இந்த கொலைமுயற்சி சம்பவம் அதை உறுதிப்படுத்தியதென்றும் கூறுகிறார். உடலும், ‘நானும்’ மரணத்தின் விளிம்பிலேயே அந்தச் சம்பவத்தில் இருந்ததாக ருஷ்டி குறிப்பிடுகிறார்.

அற்புதங்கள் என்று எதிலுமே நம்பிக்கை இல்லாத சல்மான் ருஷ்டி தனது மறுபிழைப்பு ஒரு அற்புதம் என்று சொல்லப்படுவதை முரண்நகையாகத் தெரிந்தாலும் நம்புகிறார்.

கலையும் எழுத்தும் தொடர்ந்து வைதீகத்துக்கு சவால் விட்டு வெல்லும் அற்புதம் என்கிறார். தனது மறுபிறப்பை தான் எழுதிய சொற்களின் வெற்றி என்றும் தனது விஜயநகரம் நாவலின் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிடுகிறார்.

“காலம் ஒப்புக்கொண்ட கருத்துகள் தன்னுடைய எதிரிகள் என்பதைக் கலை அறியும். ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்துகள் என்பவை அர்த்தமிழந்த தேய்வழக்குகளே. அவற்றைப் போன்றவையே சித்தாந்தங்களும். கண்ணுக்குத் தெரியாத வானத்துக் கடவுள்களின் ஒப்புதலைச் சார்ந்தவை, அப்படிச் சாராதவை என்று அவை இரண்டு வகைகளில் உள்ளன. சிந்திக்கவும் ஒன்றைப் புதுக்கிளர்ச்சியோடு பார்க்கவும் நம்முடைய உலகத்தைப் புதுப்பிக்கவுமான நமது திறன், கலை இல்லாவிட்டால் வாடி உதிர்ந்துவிடும்”

அந்தக் கொலைத் தாக்குதல் நடைபெற்று சுற்றியிருந்த விருந்தினர்கள் பார்வையாளர்களால் தாக்குதலுக்கு வந்தவன் தடுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் தரையில் சல்மான் ருஷ்டி கிடக்கும்போது சத்தம்போட்டு அழுததை எல்லாரும் பார்த்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் தனக்கு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் ருஷ்டி, உடல் வலி எதையும் உணராத தன்மை தனக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தனது நினைவில் வலியின் பதிவு மட்டும் இல்லாமல் போனதை விந்தையோடு குறிப்பிடுகிறார்.

கொலை மூர்க்கத்தோடு கத்தியால் தாக்கிக் கொண்டிருப்பவனை நிராயுதபாணிகளாக இருந்த விருந்தினர்களும் பார்வையாளர்களும் பாய்ந்து பின்விளைவு எதையும் பொருட்படுத்தாது தடுத்த நடவடிக்கையை மாபெரும் வீரச்செயல் என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். கூட்டத்துக்குப் பாதுகாவலாக வந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், ருஷ்டியின் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை தனது கட்டைவிரலால் பொத்தி அடைக்கிறார். கழுத்து தமனியிலிருந்து வெளியே பாயும் ரத்தம் உயிர் ரத்தம் என்பதை உணர்ந்து அந்தக் காரியத்தைச் செய்கிறார். அவரை ருஷ்டி, திரு.கட்டைவிரல் என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

நவீன உலகின் மகத்தான ஆயுதங்களோடு உலகம் முழுவதும் மற்றமை மீது உயிர் பெற்றிருக்கும் மாபெரும் வெறுப்புக்கும் அதை முறியடித்த பயன்கருதாத நேசத்துக்கும் இடையில் மீட்கப்பட்ட ஒரு எழுத்துக் கலைஞனின் கதைதான் ‘கத்தி’.

சாத்தானின் வசனங்கள் மீதும் அதை எழுதியவன் மீதும் வைக்கப்பட்ட அவதூறைப் பற்றி அவர் சொல்லும்போது, நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கும் இடையேயான சண்டை என்று குறிப்பிடும் ருஷ்டி, தன்னைக் கொலை செய்தவனுக்கு சிரிக்கத் தெரியாததனாலேயே கத்தியை எடுத்து கொல்ல முயல்வது சாத்தியமானது என்று விமர்சிக்கிறார்.

“கலை, தன்னை ஒடுக்குபவர்களைக் கடந்து அது நீடித்து நிற்கிறது. கவிஞர் ஓவிட், அகஸ்டஸ் சீஸரால் நாடுகடத்தப்பட்டார்; ஆனால் ஓவிட்டின் கவிதை ரோம சாம்ராஜ்யத்தைக் கடந்து வாழ்கிறது. கவிஞர் மாண்டல்ஸ்டாமின் வாழ்க்கையை ஜோசஃப் ஸ்டாலின் சிதைத்தார்; ஆனால் அவருடைய கவிதை சோவியத் யூனியனைத் தாண்டி நிற்கிறது. ஜெனரல் ஃபிராங்கோவின் அடியாட்களால் கவிஞர் லோர்கா கொலை செய்யப்பட்டார்; ஆனால், அவருடைய கலை ஃபிராங்கோவின் அரசியல் கட்சியான ஃபலாஞ்சின் பாசிசத்தைத் தாண்டி நிலைத்திருக்கிறது.”

நாம் கதைகள் ஒன்றுக்கொன்று நடத்தும் உலகப்போர் காலகட்டத்துக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று ருஷ்டி உரைக்கிறார். எதார்த்தம் குறித்த மாறுபட்ட விளக்கங்களுக்கிடையிலான போர் என்று வலியுறுத்தும் ருஷ்டி அதனுடன் எப்படி போராடுவது என்பதை நாம் பயிலவேண்டிய அவசியமுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.



ரஷ்யாவில் ஒரு கொடுங்கோலன் தோன்றி உக்ரைனை அந்தக் கொடூரம் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். உக்ரைன் மக்களை நாஜிக்கள் என்று குற்றம்சாட்டுமளவுக்கு அந்த கதை சென்றுவிட்டது. அமெரிக்காவோ மத்திய கால மனநிலைக்குச் சென்று கருப்பின மக்கள், பெண்களின் உடல் மீது வல்லாதிக்கத்தைச் செலுத்த தொடங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மதவெறுப்புக் கருத்துகளை இந்தக் கதைகள் நியாயப்படுத்துவதைக் குறிப்பிட்டு, இந்தியாவில் எழுச்சிபெறும் இந்து மதவாதம் மற்றும் அதன் அரசியல் சர்வாதிகாரம், வன்முறை மூலம் ஜனநாயகத்தை படிப்படியாகச் சிதைத்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாறு இதனால் பொய்யான கதைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதைத் துயரத்துடன் குறிப்பிடுகிறார்.

சர்வாதிகாரிகள், ஜனரஞ்சகத் தலைவர்கள், முட்டாள்கள் சொல்லும் கதைகளை எப்படி எதிர்கொள்வது?

அவர்கள் சொல்லும் கதைகளை செல்லாமல் போகச் செய்யும் வலுவான கதைகளை நாம் சொல்ல வேண்டும். மனிதர்கள் வாழ விரும்பும் கதைகளை நாம் சொல்லவேண்டும்.

சல்மான் ருஷ்டி தன் மீது நடந்த கொலைமுயற்சிக்கு முன்பு டிஷானி  தோஷிக்குக் கொடுத்த நேர்காணலொன்றின் வழியாக நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் இன்னொரு நெருக்கடியையும் சுட்டிக்காட்டுகிறார்.

(நன்றி: அகழ் இணையத்தளம்)

  •  

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களின் 'காடு' சிறுகதைத் தொகுப்பு - வாசகர் மதிப்புரை


பொதுவாக எனது வாசிக்கும் ஆர்வம் வரலாற்று நூல்களிலும், கட்டுரைத் தொகுப்புகளிலும் இருக்கும் அளவிற்கு சிறுகதை தொகுப்புகளில் இருப்பதில்லை. (காரணம் கதைகளைப் படித்து முடித்ததும் அதன் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதில் என்னால் வெளிவர முடிவதில்லை)

ஆனால், காடு சிறுகதை தொகுப்பின் முதல் கதையின் முதல் வரியைப் எதேச்சையாக படித்த போது அவ்வரியே அக் கதைக்குள் என்னை இழுத்துச் சென்றது.

"கடவுள் எவ்வளவு உயரம் இருப்பார் தெரியுமா?" என்ற அந்த வரியே
அட என ஆச்சரியப்பட வைத்து கதை முழுவதையும் வாசிக்கச் செய்தது.

சமூகத்தில் நாம் பார்க்கக்கூடிய, காதால் கேட்கக்கூடிய ஒரு  சம்பவம்தான் கதையின் மையக்கரு. ஆனால் ஆசிரியர் அதை சொல்லிய விதம் அடடே போட வைக்கிறது.

கதையில் இருக்கும் ஒரு பாராவை அப்படியே தருகிறேன் பாருங்கள் எத்தனை ரசனையுடன் எழுதி இருக்கிறார் என்று.

"கரிசல் பூமியில் ஆண்களும் கர்ப்பம் கொள்வது உண்டு. கொத்தமல்லி காடு வெளேரென்று பூக்கிற போது ஒவ்வொரு ஆணும் கர்ப்பம் கொள்கிறான். மசக்கையின் ஆயாசமும், களைப்பும் அவன் முகத்தில் தெரிகிறது.
பருவ மாறுதல்களால் தீட்டுப்படாமல் காடு விளைந்து விட வேண்டும் என்று அவன் கவலைப்படுகிறான். விளையப்போகும் மல்லி செடி அரும்பு காயாகி கனம் அதிகரிக்கின்ற கணமெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணின் முக அழகு வந்து விடுகிறது. பிரசவ வேதனையுடன் ஒவ்வொரு நாளும் காட்டை நெருங்குகிறான். நட்சத்திர துகள்கள் மண்ணில் உதிர்ந்து விட்டது போல் காடெல்லாம் கொத்தமல்லி பூத்திருக்கிறது".

எதையும் நாம் சொல்லும் விதத்தில் தான் அதன் ரசனை அமைகிறது. 

காலத்தில் கரையாது ஐயா தங்களின் எழுத்து.

- கௌரேஇ கணேசன் 

  •  

நூல் மதிப்புரை: இளங்கோ கிருஷ்ணனின் பட்சியின் சரிதம்

நூல்-மதிப்புரை: சமயவேல் 

                           

                                                          ஜடாயுவைப் போன்று கதறும்

                                                                            ஒரு பட்சியின் சரிதம்                      

 

                                    ஒரு கவிதையை  வெறும் உள்ளடக்க ரீதியாக அணுக எத்தனிப்பது அந்தக் கவிதைக்கு ஆபத்தை உண்டாக்குகிற காரியம் என்று எண்ணுகிறேன். வெறும் உள்ளடக்க ரீதியான அணுகல்களை அனுமதிக்கும் ஒரு கவிதையை தோல்வியுற்ற கவிதை என்று கூறினால் இந்த அரங்கில் இருப்பவர்களில் எத்தனை பேர் அதை சம்மதப்பீர்கள் என்று தெரியவில்லை. கவிதையைப் பற்றி பேசுவதே கூட ஒரு பெரிய அபத்தம் என்று ஒருமுறை எண்ணியிருக்கிறேன். எத்தனையோ பேர் எத்தனையோ காலம் பேசினாலும் ஒரு சிறந்த கவிதையில்  இன்னும் கூறப்பட முடியாத, அணுகப்பட முடியாத, புரிந்து கொள்ள முடியாத ஒருபுதிர்த்துகள் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தக் துகள்தான் அந்தக் கவிதைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாயலைக் கொடுத்து வருகிறது. இப்படியெல்லாம் நான் கூறுவது ஒரு முழு முற்றான முடிவு அல்ல. ஏனெனில் இன்று எதைப்பற்றியும் ஒரு முழுமுற்றான முடிவுக்கு வரமுடியவில்லை. முழுவதுமாக நம்மை ஒப்படைப்பதற்கான வெளியோ, இயக்கமோ, மனிதர்களோகூட நம்மிடம் இல்லை. எனவேதான் 2000க்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்களின் கவிதைகளில் உள்ளடக்கமே இல்லை என்னும் குற்றச்சாட்டுகளையும் மீறி இன்றைய இளம் கவிஞர்களின் கவிதைகளை விரும்பி வாசித்து வருகிறேன். இந்த விஷச் சூழலில் என்ன உள்ளடக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு இளம்கவி எதிர்த்துக் கேட்டால் கூறுவதற்கு என்னிடம் பதிலேதும் இல்லை. எனக்கான கருத்துருவங்களை உருவாக்கி அதைத் தலையில் தூக்கிக்கொண்டு அலையும் திராணியும் எனக்கில்லை.

                                  இளங்கோ கிருஷ்ணனின் பட்சியின் சரிதம் தொகுப்பில் மூன்று வகையான கவிதைகளைப் பார்க்கிறோம்.

                 1) பெருங்கதறல், ஓலம், ரணத்தில் புரளும் வலியின் கூச்சல்,  சகிக்க முடியாத தோல்வி, கோபம், பெருங்கோபம், அவமானம், கேவலம், தனிமை, முழுத்தனிமை, ஏமாற்றம், ஏக்கம், முழுமுற்றான நெருக்கடியில் நசுங்கும் முகம், என்று மனித மொழியிலிருக்கிற அத்தனை எதிர்மறைச் சொற்களையும் ஒன்று திரட்டி நமக்குள் பாய்ச்சி நம்மையும் துடிக்க வைக்கும் 'துயரி' ஒருவரால் எழுதப்பட்ட கவிதைகள்.

 

                 2) மெல்லிய நம்பிக்கைகளுடன் கூடிய யௌவனச் சொற்களால் நிரம்பிய கவிமொழிச்சித்திரங்கள்.

 

                 3) இருப்பின் முழுமுற்றான நெருக்கடிகளின் விளிம்பில், தத்துவக் குளத்தில் விழுந்து விடாமல், வெறும் மனித எத்தனத்தில் எல்லை தாண்டி துள்ளிக் குதிக்கும் தற்பகடிக் கவிதைகள்

 

                 முதல் வகைப்பட்ட, துயரி ஒருவரால் எழுதப்பட்ட கவிதைகளே இந்தத் தொகுப்பு முழுவதும் நிரம்பியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளையும் ஒரு சேரப் படித்துவிட முயன்றால், நீங்கள் ஒரு பெருந்துக்கத்தில் ஆழ்வதைத்தவிர வேறு வழியில்லை


                      கொட்டும் மழையில்/எங்கொதுங்கி தப்பிக்க/எங்கொதுங்கி தப்பிக்க/ஓடும் ஒரு லாரியின்/ சக்கரத்தினடியில்என்று ஒரு சிறிய கவிதை. கொட்டும் மழை ஒரு எதார்த்தம் எனில் கவிஞனுக்குக் கிடைக்கும் மாற்று எதார்த்தம் ஓடும் ஒரு லாரியின் சக்கரத்தினடியில் இருக்கிறது. நித்ய முரண்களின் கருப்பு இடைவெளிகளில் அலையும் சீரிய கவிகளின் வரிசையில் இளங்கோ கிருஷ்ணனும் இடம் பிடித்துவிட்டார்.

           இன்னொரு கவிதையில்இதயம் பிளக்கும் காதலின் துயரத்தைச் சொல்ல உடலெங்கும் குருதி வழிய மலை ஏறிப் போய் ஒரு பாறாங்கல்லின் முன் நிற்கிறார். ‘அதன் காலடியில் சரிந்து குமுறுகிறீர்கள்/ வாஞ்ஞையாய் முதுகு வருடி அணைத்துக் கொள்ளவா போகிறது/ பாறாங்கல் அது வெறும் பாறாங்கல்என்று கவிதை முடிகிறது. மக்கள் மொழியில் துயர்ச்சொல்லாக வழங்கும் பாறாங்கல்லை கவிதைக்குக் கடத்தி அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்.

 

           ஒரு மரத்தை நம் வழிக்குக் கொண்டு வரஎன்னும் கவிதையில் அதிகாரத்தின் கொடூரமான சொற்களால் அந்த மரத்தைக் கொலை செய்கிறார். பிறகுகதவுகள்/ நாற்காலிகள்/ மேசைகள் அல்லது சவப்பெட்டிகள்/ என்ன வேண்டுமானாலும் செய்வோம்அதிகாரம் பற்றிய உலக மொழிகளில் இருக்கிற பல கொடுமையான கவிதைகளோடு இந்தக் கவிதையும் சேர்ந்து கொள்கிறது. இன்னொரு கவிதையில்சுகவீனமாய் இருந்த என் குழந்தை/ மரணித்த செய்தி கிடைத்துப் பல நாட்கள் ஆயிற்று/ நான் போக வேண்டும்/ என்னை விட்டுவிடுங்கள் நண்பர்களேஎன்று கதறிஎனக்கு இப்பொழுது தேவை/ ஒரு நிம்மதியின் சிகரெட்என்கிறார். நிம்மதியின் சிகரெட் எந்தக் கடையிலும் கிடைப்பதில்லை என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

           நகரத்தின் அடர்த்தியில் வழி தவறிய இசைத்துணுக்கொன்று…………………… நம்பிக்கைகள் மெல்லச் சரிந்துகொண்டிருக்கும் நாளில் பலத்த குண்டு வெடிப்பின் ஓசையில் உடல் சிதறிப் போகிறது.இந்த நாள் என்னும் கவிதையில்நம்பிக்கை/ ஒரு புளுகனின் சொற்கள்/ ஆசையோ/ கிழட்டுத் தேவடியாளின் சுருக்குப் பை சபித்திலின் சூறை/ நாறிக்கொண்டிருக்கும் சாக்கடையோர/ புதர் மேட்டில் அரும்புகிறது/ என் ஆசுவாசத்தின் புல்/” என்றெல்லாம் எழுதுகிறார்.

            இது போல் பட்சியின் சரிதம் கவிதையும் ஒரு துயரக் கதைதான். பீடிகை-காதைகள்-அந்தம் என்று வரிகளுக்கு நடுவில் துணைத் தலைப்புகளிட்டு வாசிப்பவர்களை கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளச் செய்கிறார். ஆனால் பட்சியின்கரும்பழுப்புச் சிறகுகள்/ நிலமுரசிக் கிழிகின்றன/ ரணம் பொறுக்காமல் மீண்டும் சடசடக்கிறதென் சிறகுகள்இத் தொகுப்பின் மையமாகவும் தலைப்பாகவும் பட்சியின் சரிதம்கவிதை அமைந்துவிடுகிறது. இந்தக் கவிதையை அமைப்பதில் கவிஞன் தனது பாரம்பர்யத்தின் சுதந்திரங்களை பயன்படுத்தியிருப்பது புதிய முயற்சியாக வெற்றியடைந்திருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

            வாழ்வின்ஓசைகளைச் சகிக்கவியலாமல்/ ஒரு கத்தியை எடுத்து காதின் மேல் வைக்கிறார்.” எனும் வரிகளுடன் கூடிய வான்காவின் காது கவிதையும் நவீன வாழ்வின் பெரும்பரப்பு முற்றிலுமாக சகிக்கமுடியாதபடி இருப்பதை இந்தக் கவிதை அதன் மொத்த வலியுடனும் சொல்லிவிடுகிறது.

 

 

                                   இதே வரிசையில் தீக்குச்சி என்று ஒரு கவிதை இருக்கிறது. இளங்கோ கிருஷ்ணன் கவிதை என்னும் பிரத்யேகமான அடையாளத்துடன் கூடிய கவிதை இது. தீக்குச்சிக் கவிஞர்கள் ஒரு குப்பைத்தொட்டிக்குள் விழுந்து கிடக்கிறார்கள். ஒரு தீக்குச்சிதன்னை ஒருத்தி தொட்டு/ மெழுகுவர்த்தி கொழுத்தினாள் என/ பெருமை பீற்றிக் கொண்டது.” ஒரு மனிதனைக் கொழுத்த வல்ல தீக்குச்சிகள் இவையாம். ஆனால் தானே நகரத் தெரியாமல் இதவிடப் பெரிய நாற்றத்திற்கு இடம் பெயர்கின்றன தீக்குச்சிகள். இந்தக் கவிதையின் தொடர்ச்சியாக இத் தொகுப்பிலுள்ள பகடிக் கவிதைகளைக் குறிப்பிடலாம். ஈழப்பெருங்கொலை நிகழ்வுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஒரு சீரிய கவிஞனின் வெளி இப்படியானதாகத்தான்  இருக்க முடியும் என்றும் கருதுகிறேன். அல்லது இன்றைய இந்திய வாழ்வே இப்படித்தான் இருக்கிறதென்றும் கொள்ளலாம்.

 

             கவிஞனுக்கு இருக்கும் தார்மீக உரிமையில் அவன் எதையும் குரலுயர்த்திக் கேள்வி கேட்க முடியும். பூட்ஸ் அணிந்த சிறுமி என்னும் கவிதை பெருங்குரலெடுத்து ஒரு கேள்வியை நம்முன் வைக்கிறது. “எவ்வளவு போராட்டம்/ எவ்வளவு சிரமம்/ யாராலும் கழட்ட இயலாத/ ஒரு பூட்ஸை யார் அவளுக்கு மாட்டிவிட்டது/ முடிவற்ற இந்தச் சாலையில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது அவள் வீடு.”  யாராலும் கழற்ற முடியாத பல பூட்ஸ்களை தினம் தினம் நம் வீடுகளில் நமது குழந்தைகளுக்கும் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கும் நம்மை சாட்டையால் விளாசுகிறது இந்தக் கேள்வி.

 

                            உருளைக்கிழங்கு பொடிமாஸ், அதற்கே, அகவன் குறிப்புகள், கிரகர் சோம்சா எனும் கரப்பான் பூச்சி, காப்பி நதி, ஞாயிறு போற்றுதும், பெப்பரேக்கள் கதை முதலிய கவிதைகளைப் தற்பகடி அல்லது சுயஎள்ளல் கவிதைகள் எனலாம். இந்தத் தொகுப்பிலேயே எனக்குப் பிடித்த கவிதை இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ். புயலில் சிக்கியிருக்கும் கப்பலை மனநோயாளிக்கடவுள் வழங்கிய இரண்டு உருளைக்கிழங்குகள் மூலம் எப்படிக் காப்பாற்றுவீர்கள்? மிகுந்த படைப்பூக்கம் கொண்ட சொற்களுடன் கூடிய இந்தக் கவிதையை முழுவதும் வெற்றியடைந்த கவிதையாகக் கொள்ளலாம். புயலில் சிக்கியிருக்கும் வாழ்வை உருளைக்கிழங்குகளையொத்த எக்ஸ் எக்ஸ் எக்ஸ்களைக் கொண்டு எப்படிக் கரை சேர்க்க முடியும்?

                           மெல்லிய நம்பிக்கைகளுடன் கூடிய யௌவனச் சொற்களால் நிரம்பிய மூன்றாம் வகைக் கவிதைகள் இத் தொகுப்பில் இரண்டோ மூன்றோதான் இருக்கின்றன.

            தாண்டவம் என்று ஒரு எளிய சித்திரம்.

                வெயிலில்

                புரண்டு

                புரண்டு 

                பின்னிக்கிடக்கிறார்கள்

போதும். நடப்பட்ட இரண்டு வேல்கள். ஒன்று சக்தி அடுத்தது சிவம்.  நிழல்கள்

மட்டும்தான் பின்னிப் புரள முடியும் அல்லது இருளில் மறைய முடியும். நிஜமான சக்தியும் சிவனும் அல்ல. இப்படி ஒரு அற்பமான எளிய கவிதையில் இரண்டு மூன்று பரிமாணங்கள் எப்படி வந்தன? கவிதையின் புதிர்ப்பாதையை நாம் விளக்கத் தேவையில்லை.      

 

               பாதானி என்னும் கவிதை ஒரு அற்புதமான சின்னஞ்சிறு சித்திரம்.              

                அழகான பாதானி மரத்தினடியில்

                நின்று கொண்டிருந்தவளுக்குப்

                பாதானி என்று பெயரிட்டேன்

                பக்கம் சென்ற போது

                அவள் பார்வையிலிருந்த அந்நியம்

                மனதைக் கீறியது

                என்னைத் தெரியவில்லையா பாதானி

                என்று அடிமனம் கத்தியது

                திடீரெனத் திரும்பிப் பார்க்கிறாள்

                கலகலவெனச் சிரித்தன பாதானி இலைகள்

 

பாதானி என்ற ஒரு சொல்லே போதும். ஆனால் அந்தச் சொல்லுடன் இலைகள் என்னும் சொல். பிறகு கலகலவெனச் சிரித்தன. கலகலவெனச் சிரித்தன பாதானி இலைகள். இந்தக் கடைசி வரி முந்தைய எல்லா வரிகளையும் விழுங்கிவிடுகிறது. கவிதை இந்த ஒரு வரியைத் தொட்டுத் தொட்டு எல்லா வரிகளுக்கும் பரவுகிறது. அல்லது எல்லா வரிகளிலும் திரள்கிற கவிதையைக் கடைசிவரி தாங்கி நிற்கிறது. இது ஒரு உளடக்கமற்ற கவிதைதான். ஆனால் இது சிறந்த கவிதை ஆகிவிட்டது. 2005க்குப் பிறகு எழுதத் தொடங்கியவர்கள் என்று நிலாரசிகன் குறிப்பிடுகிற இளம் கவிஞர்களில் பலர் இது மாதிரியான உள்ளடக்கமற்ற கவிதைகளைத்தான் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். இது பற்றி இன்னும் விரிவாகப் பேச இடமிருக்கிறது என்று கருதுகிறேன்.

 

             

 

 

      

 

               

  •  

'திருச்சி ஜெயில்' பற்றி கலாரசிகன்

சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகங்களில், உங்களை ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டி, பக்கத்துக்குப் பக்கம் குறித்து வைத்து, அதே நினைவில் நெகிழவைத்த புத்தகம் எது என்று யாராவது என்னைக் கேட்டால், தயக்கமே இல்லாமல் நான் குறிப்பிடும் புத்தகம் எல். எஸ். கரையாளர் எழுதிய 'திருச்சி ஜெயில்' என்பதாகத்தான் இருக்கும். 1941-இல் நவயுக பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டு, 80 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது அந்தப் புத்தகம்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளிக்கூட நாள்களில் நிறைய கேள்விப்பட்ட பெயர் எல். சட்டநாத கரையாளர். சட்டம் படித்த அந்த செங்கோட்டைக்காரர், தனது 27-ஆவது வயதில் கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர். தனது 58-ஆவது வயதில் காலமான சட்டநாத கரையாளர், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவர்.

காந்தியடிகள் மீது அவருக்கு இருந்தது மட்டற்ற பக்தி. 1940-ஆம் ஆண்டு சங்கரன்கோவிலில் தனிநபர் சத்தியாகிரகம் செய்து சிறைதண்டனை பெற்றார். தென்காசி தாலுகா கமிட்டித் தலைவரான கரையாளர் சங்கரன்கோவிலில் சத்தியாகிரகம் செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா? சட்டப்பேரவை உறுப்பினராக டி. எஸ். சொக்கலிங்கம் (தினமணி முன்னாள் ஆசிரியர்) தென்காசியில் சத்தியாகிரகம் செய்யத் தீர்மானித்தார் என்பதுதான்.

'1940 டிஸம்பர் மாதம் 4-ஆம் தேதி நான் கைது செய்யப்பட்டேன். 1941, மே மாதம் 23-ஆம் தேதி விடுதலையடைந்தேன். இதற்கிடையே நான் கண்டதும் கேட்டதும், நான் அனுபவித்த சுகமும் கஷ்டமும்தான் இந்நூலாக வெளிவந்திருக்கிறது” - இந்தளவுதான் அவர் புத்தகத்துக்கு எழுதியிருக்கும் முன்னுரை.

அணிந்துரை தந்திருப்பது யார் தெரியுமா? சென்னை ராஜதானியின் பிரதமர், மத்திய-மாநில அமைச்சர், ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்த ப. சுப்பராயன்.

சிரிப்பும், சுவாரசியமுமாக சிறைச்சாலை அனுபவங்களைத் தேர்ந்த எழுத்தாளர் போல சட்டநாதகரையாளர் எழுதியிருப்பதை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியதில் வியப்பென்ன இருக்கிறது? அவருடன் வேலூர், திருச்சி சிறைகளில் கழித்த 245 தியாகிகள் குறித்த குறிப்பு அல்லது சம்பவம் இந்தச் சிறிய புத்தகத்தில் இருக்கிறது. ராஜாஜி, டி. எஸ். சொக்கலிங்கம், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கே. சந்தானம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அவருடன் சிறையில் இருந்த ஆளுமைகள் குறித்த பதிவுகளைப் படித்தால்தான் ருசிக்கும். சொல்லி விளக்கமுடியாது.

ஜாதி, மத பேதமின்றி, மொழி துவேஷமின்றி விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தியாகிகள் உண்மையான சமத்துவ உணர்வுடன் இருந்தார்கள் என்பதை சட்டநாத கரையாளரின் ‘ஜெயில் டைரி’ படம்பிடித்துக் காட்டுகிறது. படிக்கத் தவறாதீர்கள் என்று நான் பரிந்துரைக்கும் புத்தகம் இது!

- கலாரசிகன்

(நன்றி: தினமணி, 10-07-2022)

'திருச்சி ஜெயில்' நூல் வாங்க

Azhisi ((12% off + Free Delivery)

https://cutt.ly/TLj1rnt

CommonFolks (5% off)

https://cutt.ly/nLj1yRT

Panuval (5% off)

https://cutt.ly/6Lj1it7

BooksPage

https://cutt.ly/TLj1pel

DialForBooks

https://cutt.ly/TLj1aA0

  •  

கோவையின் சிற்பியின் இந்தியப் பயணம்

சே.ப.நரசிம்மலு நாயுடு

ஆரியர் திவ்வியதேச யாத்திரையின் சரித்திரம்

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு தன்னுடைய ‘திவ்வியதேச யாத்திரை சரித்திரம்’ நூலின் (அடையாளம் பதிப்பகம்) நூன்முகத்தில் “திவ்யஸ்தல யாத்திரை மாந்தர்க்கு சித்த சுத்தி முதலியன தப்பாது விளைவிப்பதோர் ஞானசாதனமாகும் என்பது யுக்தி அனுபவமாக சித்தமாக இனிது அறியப்படுதலின் அது சுருதிமொழி மாத்திரையாய் வருவதொன்றன்று….” என்று கடுந்தமிழ்நடையில் ஆரம்பித்தாலும் நல்லவேளையாக இந்தநடையை நூலில் கொண்டுவராமல் பெரும்பாலும் பேச்சுநடையிலேயே எழுதியிருக்கிறார். தென்னாட்டு, வடநாட்டு மக்களில் யார் சுத்தமானவர்கள் என்று ஒப்புநோக்கி கடைசியில் இவ்வாறு தீர்ப்பளிக்கிறார். “தென்தேசத்தாரின் பாத்திரங்களின் அழுக்கும் பிரயாகை ஜனங்களின் வஸ்திரங்களின் அழுக்கும் சமம் என்றும், தென்தேசத்தாரின் வஸ்திரசுத்தியும் பிரயாகை தேசத்தாரின் பாத்திரசுத்தியும் சமமென்றும் சொல்லலாம்”. பயணஇலக்கியத்தின் முன்னோடி நூலான இது பதிப்பு கண்டது 1889 ஆம் வருடம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

1886 ல், கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள கோயம்புத்தூரின் பிரதிநிதியாகக் கலந்துகொள்வதோடு குடும்பத்தோடு திவ்யதேச யாத்திரை செய்யவும் முடிவு செய்து 1886 டிசம்பர் 5ஆம் தேதி கோயம்புத்தூரிலிருந்து புகைவண்டியில் கிளம்பி ஆற்காடு, ரேணிகுண்டா, ரெய்ச்சூர், மன்மார், சோக்பூர், ஜபல்பூர் வழியாக அலகாபாத்தை அடைகிறார். வழியில் காசி,பிரயாகை முதலிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகள் தொல்லை தாங்காமல், தன்னுடைய தூரவீசிணியை (பைனாகுலர்) இழந்த வருத்தத்தோடு, சென்னையில் முன்னர் வசித்த, பல மொழிகளும் பேசத்தெரிந்த ரங்காராவ் என்ற பிராமணரை பணம் கொடுத்து உதவியாளராக அமர்த்திக்கொள்கிறார். அலகாபாத்து, காசி, கயா முதலிய எல்லா இடங்களிலும் ’ஆயிரம் தேள் கொட்டுவதுபோன்ற’ குளிரில், புண்ணியநதிகளில் ஸ்நானம் செய்தும், பிரார்த்தனைகள் பல செய்தும், பித்ருக்களுக்கு திவசம் கொடுத்தும் வந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்வதோடு அந்தந்த இடங்களின் பூர்வசரித்திரம் மற்றும் தற்கால நிலைமை குறித்து விளக்கியும் செல்கிறார். பின்னர் கயாவில் தன் குடும்பத்தை ஒரு பிராமணர் வசம் ஒப்புவித்துவிட்டு, தான்மட்டும் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்று மீள்கிறார். அன்றைக்கிருந்த குறைந்த பிரயாணவசதிகளைக் கொண்டுபார்த்தால் இது ஒரு சாகசப்பயணமேதான்.

பிரயாகையில் ‘எக்கா’ எனப்படும் ஒற்றைக்குதிரைவண்டிதான் முக்கியமான போக்குவரத்து சாதனம். இரண்டுபேர் இடுக்குப்பிடித்தாற்போல பயணம் செய்யலாம். ‘தென்தேசத்து ஒற்றை மாடு, இரட்டை மாட்டு வண்டி போல் செய்துகொண்டு சுகப்படத்தெரியாமலிருப்பதுவன்றியில், கபிலை ஏற்றமிறைக்கும் மாடுகளை பின்போகப் பழக்கிவைக்காமல் ஒவ்வொரு இரைப்புக்கும் அவிழ்த்துக்கொண்டுபோய்க் கட்டி காலத்தை வீணாக்குகிறார்கள். இது விஷயத்தில் யாம் இரண்டொரு முறை சொல்லிக்கொடுத்தும் அவர்கள் அனுசரிக்கப் பிரியம்கொள்வதாய்த் தோன்றவில்லை’ என்கிறார்.

பிரயாகையில் நாயுடுவுக்கு ஒரு விந்தையான அனுபவம் நேர்கிறது. அவருடன் அழைத்துச் சென்ற ராமாராவின் சகோதரி மகளுக்கு பேய் பிடித்துவிடுகிறது. அதாவது சிலநாட்களுக்கு முன் கங்கையில் குளிக்கச் சென்று, எல்லோரும்பார்க்க ஆற்றோடுபோய்விட்ட அவள்கணவன், இரவில் கனவில் வந்து ‘வா, போய்விடலாம்!’ என்று அழைக்கும் நேரம் அவளுக்கு உடலை முறுக்கிக்கொண்டு பேய் பிடித்தாற்போல ஆகிவிடுகிறது. அன்றும் அப்படியே நேர, தாங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று அந்தப்பெண்ணின் தாயார் முறையிட, தன்னுடன் அழைத்துச் சென்ற மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காதபோது, சிறிது வேப்பிலையை முகத்திற்குநேரே வீசி, தனக்குத்தெரிந்த மந்திரங்களைச் சொல்கிறார். அந்தப் பெண் நலமடைகிறாள். இதேபோன்ற அனுபவம் அவருக்கு காசியிலும் நேர்கிறது.

காசியில் நாயுடு தங்கியிருக்கும் பிராமணரின் வீட்டில் வேலைசெய்து கொண்டிருக்கும் வேணுபாய் என்கிற மராட்டிய பிராமணப்பெண்ணுக்கும் இதே போன்ற ஒரு நிலை ஏற்படுகிறது. இவள் தன்னுடைய அண்ணன், தம்பி மனைவியரின் கொடுமை தாங்காமல் காசிக்கு ஓடிவந்த இளம்விதவை. இதுபோன்ற பலரையும் தொடர்ந்து காண்கிறார். காசியின் மூன்று கஷ்டங்கள் ராண்டி, சாண்டி(மாடுகள்), படீல் என்கிறார் நாயுடு. ராண்டி என்றால் விதவைகள். வீட்டில் குடும்பத்தாரின் கொடுமை தாளாத இளம்விதவைகள் காசியில் கங்காஸ்நானம் செய்து, இறைவனை வழிபட்டால் அடுத்தஜென்மத்திலாவது தீர்க்கசுமங்கலிகளாக இருக்கலாம் என்கிற நம்பிக்கையில் ஊரைவிட்டுக் கிளம்பி வந்துவிடுகிறார்கள். இவர்களை ஆரம்பத்தில் பிதுர், சிரார்த்த காரியங்களுக்கு வேலைக்கு வைத்துக்கொள்ளும் பண்டாக்கள் அவர்கள் பருவமடைந்த பிறகு விபசாரத்தில் ஈடுபடுத்திவிடுவதோடு, ராணிபோல இருக்கும் தம் மனைவிமார்களுக்கு வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொள்கிறார்கள். ’காசி மகாபுண்ணிய க்ஷேத்ரமாகையால் விபசாரத்தை தோஷமாகப் பாராட்டக்கூடாது என்கிறார்கள் சிலர். என்ன நியாயமோ தெரியவில்லை?’ என்கிறார் நாயுடு. இளம்விதவைகள் படும் பாடுகளை வங்கஇலக்கியத்தின் மூலம் அறிந்த நமக்கு இவர்களில் எத்தனைபேர் அந்தந்த வீட்டாராலேயே கொண்டுவந்து விடப்பட்டர்களோ என்ற கேள்வி எழாமலில்லை. காசியின் இன்னொரு துயரமாக நாயுடு குறிப்பிடுவது கழிவறை வசதியின்மை. அடுக்கடுக்கான மாடி வீடுகள். ஆனால் ஒரு வீட்டிலும் தனிப்பட்ட கழிப்பறை என்று கிடையாது. ஒரு தளத்தை மட்டும் அதற்கென்று ஒதுக்கி விடுகிறார்கள். சுத்தம் செய்வதும் கிடையாது.

பிரயாகையில், காசியிலும் நாயுடு பார்க்கச்சென்ற கலாசாலைகளில் இவரை உரையாற்றச் சொல்ல இவரும் தயக்கத்தோடு ஆழ்வார்கள், நாயன்மார்கள் பெருமையைக்கூறி ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். இதேபோல கல்கத்தா காங்கிரஸில் ஒரு கலந்துரையாடலுக்கு தலைவராக இருக்க வாய்ப்புக் கிடைக்கிறது. பெயரளவில் கேள்விப்பட்டிருந்த அத்தனை தேசியத்தலைவர்களையும் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. ’கல்கத்தா நகரமண்டபத்தைப் போல ஒரு அழகான கட்டிடத்தை இந்து தேசத்திலேயே கண்டதில்லை. வந்து கூடியிருந்த மூவாயிரம் ஜனங்களில் எத்தனைவிதமான தொப்பிக்காரர்கள், உடுப்புக்காரர்கள், பாஷைக்காரர்கள், மீசைக்காரர்கள்? அத்தனை பேரும் ‘தேசாபிமானம்’ என்னும் பொதுவிஷயத்திற்காக ஆயிரக்கணக்கான மைலைக் கடந்து வந்து கூடியிருந்த அழகை வருணிக்க அந்தக் கம்பநாட்டார் பிறந்து வந்தாலன்றி என்னால் முடியாது’ என்கிறார் நாயுடு. அங்கு ஹூக்ளி நதியில் நண்பர்களோடு சிறு கப்பலில் பயணம் செய்து வந்து ஒரு ஆங்கிலேயபாணி நடன நிகழ்ச்சிக்குச் செல்லுகிறார். அங்கு வங்காள பாபுக்கள் இசைத்த மேற்கத்திய இசையை கேட்டுக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த ஷியாமாராவ் விட்டல் என்கிற பம்பாய் ஹை கோர்ட் வக்கீல் நாயுடுவின் கையைப்பிடித்துக்கொண்டு ’இந்த கீதம் கோயம்புத்தூர் ராகவய்யர் கீதத்தைவிட சுகமாக இருக்கிறதா என்ன?’ என்று கேட்க, நம்மூர்க்காரர் பெயர் எங்கெல்லாம் பரவியிருக்கிறது என்று ஆனந்தப்படுகிறார் நாயுடு.

லாகிரிவஸ்துகள் மற்றும் பெண்களின் மீதான வடநாட்டு மக்களின் மிதமிஞ்சிய மோகம், தேங்காய் பருமனுள்ள கொய்யாப்பழங்கள் மற்றும் பிற கனிகள், முஸ்லீம் படையெடுப்புகளினால் ஏற்பட்ட சிதிலங்கள், சமண பௌத்தத் தலங்கள், விவசாயச் செய்திகள், ஆங்காங்கு தாம் கண்ட தொழில்துறை முன்னேற்றங்கள், ரயில் பயணத்தில் இந்திய மக்களைப் பற்றி தவறாகப்பேசிய வெள்ளையருடன் விவாதத்தில் ஈடுபட்டது, சென்னை பீப்பிள்’ஸ் பார்க் தீ விபத்து, ‘பாஞ்ச் ரூபியா ஆவ்’ என்று அழைக்கும் வெள்ளைக்கார வேசிகள் என்று பல செய்திகளைப் பதிவுசெய்கிறார் நாயுடு. அவருக்கு வரும் கடிதங்களும், தந்திகளும் மொத்தமாக ஒருவர் மூலம் சேகரிக்கப்பட்டு அவரிடம் வந்து சேர்வதாக ஏற்பாடு.  அவருடைய முக்கிய உறவினர் இறந்த செய்தியே அவருக்கு தாமதமாகத்தான் வந்து சேர்கிறது. இன்றைக்கு அரைமணிநேரம் ‘ஃபோன் சிக்னல்’ இல்லாவிட்டால் ஏற்படும் நம்முடைய பரிதவிப்பின் பின்னணியில் இதைப் புரிந்துகொள்ளலாம். பாட்னா, அயோத்தி, கான்பூர், லக்னோ, மும்பை, டெல்லி, ஆஜ்மீர், உஜ்ஜயினி, ஆந்திரா, கர்நாடகா என்று கிட்டத்தட்ட மூன்று மாதகாலம் விரிந்த ஒரு பயணத்திற்குப்பிறகு 1887 பிப்ரவரி 25 ஆம் தேதி கோயம்புத்தூர் வந்து சேர்கிறார் நாயுடு.

அலகாபாத் திரிவேணிசங்கமத்தில் கோயம்புத்தூர் வாசிகளுக்காக நாயுடுவின் பிரார்த்தனை – ’ஓ! கோயம்புத்தூர் மகாஜனங்களே! அடியேம் உங்களுடைய அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரரென்று மதித்து தேசாபிமானத் தொழிலைச் செய்ய கலீகட்டணத்திற்கு அனுப்பினீர்கள். நாமும் அதற்கிசைந்து வருகையில் இந்தப் புண்ணிய ஷேத்திரத்தை தரிசிக்க இடமாயிற்று. ஆகவே உங்களையும் எமது பெரிய உபகாரிகளாக மதித்து உங்களுக்கு பூரண சுகவாழ்வைப் பிரசாதிக்கும்படி இந்தப் புண்ணியஷேத்திரத்தில் பரமாத்வாவைத் தியானிக்கிறோம். அவரும் அப்படியே பிரசாதித்தருள்வாராக. ஓ! கோயம்புத்தூரே, உனக்கு மங்களமுண்டாவதாக! ஓம் தத் சத், ஹரி ஓம்!’

தனக்கு இந்த வாய்ப்பளித்த கோயம்புத்தூருக்கு நாயுடு திரும்பிச் செய்தவை ஈடுசெய்யமுடியாதவை. ஊர் திரும்பியதும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்துகொண்டு தாம் இந்தியா முழுதும் கண்ட தொழிற்சாலைகளைப் பற்றிப் பேசி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டியது, போத்தனூர் சர்க்கரை ஆலை, பீளமேடு ஜின்னிங் மில்லுகள் போன்றவற்றை அமைக்க முக்கியக் காரணியாக இருந்து தொழிற்புரட்சியைத் தொடங்கி வைத்தது, சிறுவாணியிலிருந்து கோயம்புத்தூருக்கு குடிநீரைக் கொண்டுவந்தது என்று நிறைய. இதற்கான விதைகளெல்லாம் அவர் மனதில் அந்த நெடிய யாத்திரையிலேயே விழுந்துவிட்டிருந்தன.

கிருஷ்ணன் சங்கரன்

***

  •