Reading view

விட்டோரியோ ஸ்டோராரோ : ஒளியின் ஞானம்.

உலகப் புகழ்பெற்ற சினிமா ஒளிப்பதிவாளர் விட்டோரியோ ஸ்டோராரோ தனது திரையுலக அனுபவத்தையும் ஒளி பற்றிய ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளும் சிறப்பான உரை. ஒளிப்பதிவாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை ஈடுபாடுகள், காட்சிகளை உருவாக்குவதில் வெளிப்படும் உன்னத கலையாற்றல் பற்றி விவரிக்கிறார்.

இளம் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய காணொளி.

இதில் ஸ்டோராரோ இருளுக்கும் ஒளிக்குமான தொடர்பை, உணர்ச்சிகளுக்கும் வண்ணங்களுக்குமான தொடர்பை மிக அழகாக விவரிக்கிறார். பிளேட்டோவின் ஞானம் மற்றும் காரவாஜியோ ஒவியங்களிலிருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைச்  சொல்கிறார். அவரது புகழ்பெற்ற திரைப்படங்களான தி கன்ஃபார்மிஸ்ட் தி லாஸ்ட் எம்பரர், ரெட்ஸ் அபோகாலிப்ஸ் நவ் படங்களின் ஒளிப்பதிவு குறித்தும் சிறப்பாக விவரிக்கிறார்.

  •  

நடமாடும் சினிமா

நான்ஸி நிமிபுட்ரின் இயக்கியுள்ள ONCE UPON A STAR என்ற தாய்லாந்து திரைப்படத்தைக் காணும் போது எனது சிறுவயது நினைவுகள் பீறிட்டன.

எனது கிராமத்தில் பீடிக்கம்பெனி சார்பாக இலவசமாகத் திரையிடப்படும் திரைப்படங்களைக் கண்டிருக்கிறேன். ஒரு வேனில் பீடி விளம்பரம் செய்தபடியே கிராமத்தை சுற்றிவருபவர்கள் இரவில் ஊர் மைதானத்தில் திரைக்கட்டி படம் போடுவார்கள். 16mm ஃபிலிம் புரொஜெக்டர் பயன்படுத்துவார்கள். எம்.ஜி.ஆர் படமா, சிவாஜி படமா என்பது எந்தப் பீடிக்கம்பெனி என்பதற்கு ஏற்ப மாறுபடும்.

வா ராஜா வா, கோமாதா என் குலமாதா, காவல்காரன். தாய்க்கு தலைமகன், சவாலே சமாளி போன்ற திரைப்படங்களைத் திரையிட்டுப் பார்த்திருக்கிறேன்.

மாலை ஆறு மணிக்கெல்லாம் திரைக்கட்டி விடுவார்கள். ஆனால் என்ன படம் என்று சொல்ல மாட்டார்கள். பீடி விளம்பரத்திற்கான நோட்டீஸ். இலவச பீடி விநியோகம் நடந்து முடிந்த பின்பே படத்தைத் திரையிடுவார்கள். ஆபரேட்டர் அருகில் அமர்ந்து கொண்டு ஓடி முடித்த ரீல்களைப் பத்திரமாக மரப்பெட்டிக்குள் வைப்பதற்கு உதவி செய்வான் கூடப் படித்த முத்துராமன். இதற்காக அவனுக்கு எட்டணா கிடைக்கும்.

படம் ஆரம்பிக்கும் முன்பாக இடம் பிடிக்க ஊர்மக்கள் பாய் அல்லது சாக்குக் கொண்டு வந்து விரித்துவிடுவார்கள். மாட்டுவண்டியை ஒரமாகப் போட்டு அதில் அமர்ந்து படம் பார்ப்பவர்களும் உண்டு. சைக்கிளில் அமர்ந்து பார்ப்பவர் உண்டு. கயிற்றுகட்டிலைக் கொண்டு வருகிறவர்கள் ஒரமாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டுப்பாடு. பீடி விளம்பரத்திற்கும் கோமாதா என் குலமாதாவிற்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. அதை நிறைய முறை போட்டிருக்கிறார்கள்.

ஒருமுறை மின்சாரம் துண்டிக்கபட்ட போது இருட்டிற்குள் யாரோ ஒரு ரீலைத் திருடிக் கொண்டுபோய்விட்டார்கள். பீடிக் கம்பெனி ஆட்கள் ஊர் முழுவதும் தேடியும் அந்த ரீல் கிடைக்கவில்லை. அந்த வருஷத்தோடு அந்த பீடிக்கம்பெனி வருவது நின்று போனது.

மருந்துக் கம்பெனி விளம்பரத்திற்காக ஊர் ஊராகச் சென்று படம் காட்டும் குழுவினரைப் பற்றியதே ONCE UPON A STAR திரைப்படம்.

இன்று திரைப்படங்களில் ஒரு நடிகருக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசுவது போல இவர்கள் மௌனப் படத்தைத் திரையிட்டு அதில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். பெண் குரலில் கூட ஆணே பேசுகிறான்.

ஒரு பழைய வேன். அதற்குள் ஒரு 16mm ஃபிலிம் புரொஜெக்டர், படப்பெட்டி, மைக், திரை மற்றும் இதர உபகரணங்கள். விற்பனைக்கான மருந்துகள். நான்கு பேர் அதில் தொலை தூர கிராமங்களை நோக்கி பயணம் செய்கிறார்கள்.

காவோ, மனித் மற்றும் மேன் என மூவர் அந்தப் பயணக்குழுவில் இருக்கிறார்கள். மூவரில் மனித் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்கிறான். அவன் திறமைசாலி. சினிமாவில் சாதிக்க வேண்டும் எனக் கனவு காணுகிறவன்.

புகழ்பெற்ற திரைப்பட நடிகர் மித்ர் சாய்பாஞ்சா படங்களை அதிகம் காட்டுகிறார்கள். அவருக்கு மனித் குரல் கொடுக்கிறான் இலவசமாகத் திரையிடப்படும் படத்தின் இடைவேளையில் தங்களின் மருந்துகளை விற்பனை செய்கிறார்கள். அதன் வசூலுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது.

மருந்துக் கம்பெனிகளுக்குள் போட்டி என்பதால் எந்த நடிகருக்கு யார் சிறப்பாகக் குரல் கொடுப்பவர். எந்தப் படத்திற்குக் கூட்டம் அதிகமாகச் சேர்கிறது என்பதில் பலத்த போட்டி ஏற்படுகிறது.

மனித்தின் குழுவில் ருவாங்கே என்ற இளம்பெண் இணைந்து கொள்கிறாள். கதாநாயகிக்கு குரல் கொடுக்கிறாள். அது மிகுந்த வரவேற்பை பெறுகிறது. அதன்பிறகு அவர்கள் ஜோடியாகச் செயல்பட ஆரம்பிக்கிறார்கள். தன்னை யாரும் நெருங்க கூடாது என்பதற்காகத் தனக்குச் சிபிலிஸ் நோய் இருப்பதாகப் பொய் சொல்கிறாள் கே.

காவோவும் மனித்தும் கேயைக் காதலிக்கிறார்கள், அவள் யாரை விரும்புகிறாள் என்பதை அறிந்து கொள்ளத் தனித்தனியாக அணுகுகிறார்கள், கே தனது எதிர்காலத்திற்கெனத் திட்டம் வைத்திருக்கிறாள். அதை அறிந்து கொள்ளும் மனித் அவள் தனது விருப்பத்தின்படி செயல்பட அனுமதிக்கிறான்.

நால்வரின் பயண அனுபவமும், அவர்களுக்குள் ருவாங்கேயை காதலிப்பதில் ஏற்படும் போட்டியும், திரையிடுவதில் ஏற்படும் பிரச்சனையும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தீரவத் ருஜிந்தமின் ஒளிப்பதிவும் மனித் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுகோல்லாவத் கனாரோட் நடிப்பும் சிறப்பானது.

1960களின் பிற்பகுதியில் தாய்லாந்தின் கிராமப்புற பார்வையாளர்கள் எப்படியிருந்தார்கள். அன்றைய திரையுலகம் எவ்வாறு இயங்கியது என்பதைப் படம் உண்மையாக விவரிக்கிறது. திரை நட்சத்திரத்தின் வாழ்க்கையும் குரல் கொடுப்பவரின் வாழ்க்கையும் ஒரே புள்ளியில் இணைகின்றன.

தாய்லாந்தின் அழகிய கிராமப்புறப் பகுதிகள் வழியாகச் செல்லும் இந்தச் சினிமா பயணம் தாய்லாந்து சினிமாவின் புகழ்பெற்ற நட்சத்திரம் மித்ர் சாய்பாஞ்சாவுக்குச் சிறப்பான அஞ்சலியை செலுத்துகிறது

••

  •  

நிதானப் புரிதல்கள்

          -ரவி அல்லது

    இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த மன நெருக்கடிக்கு இவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது.  கடந்த ஒரு மாதமாக எல்லோரிடமும் விவாதங்கள் நடந்தபடிதான்  இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். அடுத்து என்ன படிக்க வைப்பது அதை எங்கு படிக்க வைப்பது என்கிற ஆலோசனைகளுக்கு  கொஞ்சமும் பஞ்சமில்லை. 

இவ்வளவிற்கும் பெருமாள் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர் மனைவி மல்லிகா படித்தவர். படிக்கப்போகும் மதியரசி விவரமான பிள்ளை. இங்கு அறிவாளியாக இருந்தாலும் எதிர்காலம் பற்றிய சுய கணிப்புகள் இருந்தாலும் சொந்த பந்தங்களின்  ஆலோசனைகள் முக்கியம். எல்லோரும் எந்த திசை நோக்கி ஓடுகிறார்களோ  அதில் ஓட வேண்டும். 

மதியரசியைவிட அவள் அண்ணன்தான் பாவம். எல்லோரையும் அனுசரித்து போகும் குணமுடையவன். அவன் படிப்பின் ஆரம்பமும் அப்படித்தான் அமைந்தது. மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று மக்கள் தீவிரமாக பைத்தியம் பிடித்த காலத்தில் அவன் பிறந்தது. பாவம் அவன் செய்த தவறில்லை. 

மாநிலத்தில் முதல் இடம் பிடித்து அதனால் கல்லா கட்டிய பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் தான் அவனைச் சேர்த்தார்கள். வெளி முகப்பின் அலங்காரத்திற்கும்  உள்ளே நடந்து கொண்டு இருப்பது முற்றிலும் வேறாக இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் நன்றாகப் படித்ததால் அதன் நன்மைகளை  பள்ளிகள் அறுவடைகள்  செய்கிறது என்பதனை மல்லிகா கொஞ்ச நாளில் புரிந்து கொண்டார். 

“எனக்கு என்னமோ தவறான பள்ளியில சேர்த்துட்டோமோன்னு கவலையாக இருக்குங்க. “

“எப்படிச் சொல்றே. “

“குறைந்த சம்பளத்துக்கு கண்ட பேரை ஆசிரியராக போட்டு வச்சிருக்காங்க.”

“அப்படி எல்லாம் பண்ண முடியாது. அதுக்கெல்லாம் ரூல்ஸ் இருக்கு. உன் மகனை ஒழுங்காப் படிக்க வைக்கிற வேளையைப்  பாரூ. வீட்டில் ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுத வச்சி. வீட்டில் படிக்கிறானான்னு கவனி.”

பெருமாள் வாத்தியார் காலையில் வயலுக்குப்போவது பள்ளி முடித்து வயல் வேலைகள் நடைபெறுவதை பார்த்து கூலி கொடுத்துவிட்டு வருவது. பிறகு சமூகநலப் பணிகள் என்று நண்பர்களோடு ஏதாவது எங்காவது கூட்டங்கள் அது தொடர்பான வேலைகள் என்று இருந்ததால் அன்பரசன் படிப்பு முழுவதும் மல்லிகாவே கவனிக்க வேண்டியதாகிவிட்டது. 

எல்லாப் பள்ளிகளும் மனப் பாடம் செய்வதற்கு பயிற்சி அளித்தது போல அன்பரசன் பள்ளியும் அதைத்தான் செய்தது. தேர்ந்த மனப்பாடம் செய்தவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றார்கள். அவனை அந்தப் பள்ளியில் சேர்த்த பிறகும் சிலர் சரியாக வாந்தி எடுத்ததில் மாநிலத்தின் முதல் இடங்களுக்குள் இருந்தார்கள். 

கல்யாணம், காட்சிகளுக்கு ‘பையன் எங்கே படிக்கிறான்’ என்ற கேள்விக்கு பள்ளியின் பெயரை சொல்வது அவர்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பெருமையாக இருந்தது. 

விரைந்தோடி பணம் பண்ணும் உலகில் அன்பரசனைப் போன்றவர்களுக்கு தகுந்த மாதிரி சொல்லிக்கொடுக்க இங்கு யாருக்கும் நேரமும் இல்லை அதற்கான பொறுமையும் இல்லை. அவன் மத்திமத்தின் கீழேயே மதிப்பெண்கள் எடுத்தான். 

பெருமாள் வாத்தியார் அவனை மருத்துவராக்கும்  பெரும் கனவில் இருந்தார். அதற்கும் காரணம் இருக்கிறது. அவர் படிக்கும்போது அவர்தான் வகுப்பின் முதல் மாணவன். அவர் பதினோராம் வகுப்பு படிக்கும் போது அன்றைய அரசின் கல்வியாளர்கள் பஸ்ட்  குரூப்பில் இருந்த பயாலஜியை  எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக காமர்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சென்ட்ரல் மெஷினிஸ்ட் என்று வைத்து பரிசோதித்து பார்த்து அடுத்த வருடமே  பழையபடி கொண்டு வந்துவிட்டார்கள். 

அப்போது அதுபோல கல்வி மாற்றம் நிகழாமல் இருந்திருந்தால் மருத்துவர் பெருமாளாக மாறி இருந்திருப்பார். 

அன்பரசன் அதற்குப் பரிகாரமாக மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். விதியை அவர் அதிகமாக நம்புவதால் தன் மகன் வாழ்க்கையில் அது சரியாக அமைந்துவிடுமென  நினைத்தார். 

விதி வினோதமாக அவர் வாழ்க்கையிலும் விளையாடியது. ஆவரேஜ்  மதிப்பெண்களில் அன்பரசன் வெற்றி பெற்று இருந்தான். நீட் எக்ஸாம் மார்க்கை கிராஸ் செக் பண்ணதில் மைனசில் போனாலும் ஆச்சரிப்படுவதிற்கில்லை. அவரால் பணம் கொடுத்துக்கூட மருத்துவராக்க முடியாத  மனவேதனை அடைந்தார். அவன்  மதிப்பெண்களைப் பார்த்து கண்ணீர் விட்டு கேவிக் கேவி அழுதார். 

மதியரசி, அன்பரசன் இருவருமே அப்பா அழுது இதுவரைப்  பார்த்ததில்லை. மல்லிகா ஒரு பக்கம் அழுது கொண்டு இருந்தார். அன்பரசன் அப்பா அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் இருந்தான்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பெரும்பாலும் ஏதாவது பேசி எல்லோரையும் மாற்றுவது மதியரசிதான். மதியரசி ஏதாவது செய்தால் தேவலாமென்று அம்மாவும் மகனும் நினைத்தார்கள். 

“இப்ப உட்கார்ந்து அழுவுறீங்களே அப்பா. ஒரு நாளாவது அவன் என்னப் படிக்கிறான். எத்தனை மார்க் வாங்கிறான். ஸ்கூலுக்குள்ள என்ன நடக்குதுன்னு நீங்கள் பார்த்தீங்களாப்பா. “

அவர் மனைவியைப் பார்த்தார். மல்லிகா இதற்குப் பேச வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். மல்லிகா அழுகையை நிறுத்தாமல் இருந்தது அவருக்கு கடுப்பாக இருந்தது. உன்னை நம்பித்தானே  அவனை ஒப்படைச்சேன் என்று அவர் நினைத்ததாலும் அப்படி அவருக்கு தோன்றி இருக்கலாம். 

மதியரசி பேசியதில் அன்பரசனுக்கு கொஞ்சம் பயம் குறைந்தது. 

“அம்மாவை ஏம்ப்பா  பாக்கிறீங்க. பயலாஜிக்கல் பேரு எதுவும் மண்டையில நிக்க மாட்டேங்குதுன்னு என்கிட்ட எத்தனை நாள் அழுது இருக்கான் தெரியுமாப்பா. “

அவர் யார் பேசினாலும் கேட்கும் மனோநிலையில் இருந்தார். மதியரசி தன் தந்தையோடு அதிகம் பழகியதால் பலமுறை அவரது அப்பா பேசுவது போல மதியரசியின் பேச்சு இருப்பதாக நினைப்பார். 

“டாக்டர் படிப்பைப் பத்தி உங்களுக்கு என்னப்பா தெரியும். நீட் வேணும்ன்னு  ஒன்றிய அரசு சொல்லுது. நீட் வேண்டாம் என்று மத்திய அரசு சொல்லுது. இரண்டு பேருமே  தனக்கான சரியான நியாங்களைச் சொல்றாங்க. அதுக்குள்ள நான் போக விரும்பல.அந்த நீட் கொய்ஸ்ட்டீன் பேப்பரைப்  பார்த்தீங்களா. அதுக்கும் அவன் டாக்டராகுறதுக்கும் என்னப்பா சம்பந்தம். எல்லாமே ஹைப்போதட்டிக்கல் கொஸ்ட்டீன்ம்ப்பா. தற்கொலை செஞ்சுக்கிற தற்குறிகளை நினச்சாதான் வெறுப்பாக இருக்கு. முதல் அவுங்க அப்பா,அம்மாவை தூக்கில போடணும். அதெல்லாம் நமக்குத் தேவை இல்லாதது.”

“…. “

“அவன் வயசும் வாலிபமும் தொலைஞ்சுப் போயிரும்பா. இன்னைக்கு எம். பி. பி. எஸ் மட்டும் படிச்சா போதாதுப்பா. எம்.டியும் முடிக்கனும். அத முடிச்சு ப்ராக்ட்டீஸ் செய்து வெளியே வர்றதுக்குள்ள முப்பத்தி ஐந்து வயது வந்துரும். அதன் பிறகு அவன் செட்டிலாக  கொஞ்ச வருசம். நாற்பது வயசுல அவன் கல்யாணம் பண்ணா . அவன் பையன் காலேஜூக்கு போகும்போது அவனுக்கு அறுபது வயசாகும்ப்பா. பொம்புளைப்புள்ளைங்க நிலமை அதைவிட மோசம்ப்பா. பணவீக்கம் மாதிரி இது கல்வி வீக்கம்ப்பா. ஒரு துறையைத் தூக்கிப்பிடிக்கிறேன்னு மற்ற அனைத்தையும் சர்வ நாசமாக்கிக்கிட்டு வர்றாங்க. முதல்ல நீட்டுக்கு  எக்ஸ்ட்ரா ஒரு வாய்ப்பு மட்டும் கொடுக்கனும். இருக்கின்ற பிரைவேட் நீட் ட்ரைனிங்க் சென்டரை  குளோஸ் பண்ணிட்டு பள்ளிகளில் வைக்கலாம். இல்லேன்னா இந்த நீட்டைத் ….  “

அப்போது யாரோ அன்பரசன் ரிசல்ட்ப் பற்றி கேட்கப் போன் செய்தார்கள். 

“அவன் குறைச்சலாக மார்க் எடுத்ததும் ஒரு வகையில் நல்லதுதாம்பா. ஏதாவது இஞ்சினியரிங் படிச்சிட்டு. அவன் வாழ்க்கையை ஜாலியாக ஓட்டட்டும்பா. “

ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு ஆசுவாசத்துக்குள் போனது. 

“அப்பா… போனைக் குடுங்க. அம்மா மூட் அவுட்டாக இருக்காங்க. வெளியில் புட் ஆர்டர் பண்ணலாம். “

போனை எடுத்துக்கொண்டு போகும்போது

“கிரேட்… எஸ்கேப் ப்ரோ. ” மதியரசி. 

‘தின்னிக்கோழி’ என்று மல்லிகா சிரித்தார். 

“டேய்… இங்க வாடா. நமக்கு என்ன மார்க் வாங்க முடியுமோ அதான்டா. தூக்கிப்போட்டுட்டு  ஜாலியாக இரு. டாக்டரைவிட அதிகமாக சம்பாதிக்கனும்ன்னு ஒரு ஆசை வை. இல்லை எதிர்காலத்தில் சாதிக்கனும்ன்னு ஒரு வெறியை வச்சுக்க. ” என்றார் பெருமாள் வாத்தியார்.

“மார்க்கை  கொஞ்சம் சேர்த்து சொல்வோமாங்க. ” மல்லிகா. 

” இல்லை. அப்படியே சொல்வோம். அது நம்மல கூச வைக்கும் பார்த்தியா. அதுதான் அவனுக்கு வெற்றியடைனும்ங்கிற வெறியைக்  கொடுக்கும். “

மதியரசன் இதற்கிடையே அவனாகவே ஒரு மார்க்கை மனதிற்குள் ரெடி செய்து அதன் கூட்டுத்தொகை போட்டு வைத்தது வீணாகிப்போனதே என்று கவலைப்பட்டான். அப்பா இந்தப் பிரச்சினையை இதோடு விட்டாரே என்பதே அவனுக்கு இப்போது பெரிய நிம்மதியாக இருந்தது.

அவர்கள் அவர்களுக்குள் எப்போதும் ஒரு சந்தோசத்தை ஒரு மகிழ்ச்சியை ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் ஊரோடு  பயணிப்பது தான் சிரமத்திலும் சிரமம். 

இப்படியாக போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையின் போக்கில் வந்த இந்த வருடத்தில் ஐநூறுக்கு நானூற்றி தொன்னூற்றி ஐந்து மதிப்பெண் பத்தாம் வகுப்பில் எடுத்திருக்கும் மதியரசி பெரும் மன நெருக்கடியில் சிக்கித் தவித்தாள்.

அன்பரசனுக்கு பிறகு ஐந்து, ஆறு ஆண்டுகள் கழித்துதான் மதியரசி பிறந்தாள். மதியரசி பள்ளியில் சேர்க்கும் வயதில் மல்லிகா உடல் சுவாதீனத்தில் சிக்கிக் கொண்டதால் அவளை பெருமாள் வாத்தியாரின் அப்பாவுடன் அவளை இருக்க வைக்க வேண்டியதாகிவிட்டது பெருமாள் வாத்தியாரின் அப்பா நேர்மைக்குப் பேர் போனவர். ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர். 

‘நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்’ என்ற சிவவாக்கியர் பாடலை சொல்லி தன் நண்பர்களிடம் கிண்டலாகக் கேட்பார். காட்டுக்குள்ள சிவனேன்னு இருந்த சித்தர்களை யாருப்பா கோயிலுக்குள்ள அடச்சது என்பார்.  இதே அவரின் இஸ்லாமிய நண்பர்களிடம் ‘தொழுகை மூமீன்களின் மெஹ்ராஜ்’ என்கிறது நபி மொழி. நீங்கள் எப்பொழுதாவது மெஹ்ராஜ் சென்று இருக்கிறீர்களா என்பார். 

இவர்களின் குடும்ப நண்பர் வீட்டிற்கு வரும் பாதர் ஒருவரிடம் ஏற்பட்ட விவாதம் அந்த பாதரின் வாழ்க்கையில் மறக்க முடியாது. ‘உங்கள் மற்றாட்டங்களில் பரலோக இராஜ்யத்திற்குள் ஏன் பிரவேசிக்கமாட்டேங்கிறீர்கள் ‘ என்று ஆரம்பித்த விவாதத்தில் பாதர் மிரண்டு போனார். பெருமாள் வாத்தியாரின் அப்பா பைபிளை இந்தளவுக்கு நுணுக்கமாக ஆராய்ந்து வைத்திருப்பார் என்று அவர் எதிர் பார்க்கவில்லை. பாதர் ‘கர்தரிடம் உங்களுக்காக ஜெபிக்கிறேன் ‘ என்றதும் அப்போது கூட இருந்த மதியரசி வாய்விட்டு பயங்கரமாக சிரித்து இருக்கிறாள். 

எழுந்து நின்ற பாதரை பெருமாள் வாத்தியாரின் அப்பா கட்டியணைத்து கொஞ்ச நேரம் கண் மூடி அமருங்கள் என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி ஏதோ சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அவர் கொஞ்ச நேரத்தில் அழ ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு இவரின் நெருங்கிய நண்பராகிவிட்டார். 

ஓஷோ ஆசிரமத்தில் பலமுறை தங்கி இருந்தாலும் ‘லைப் ஈஸ் செலிபிரேசன்’ என்பதை அவரின் சீடர்கள் மிகவும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பார். அங்கு இருக்கும் பல சீடர்களுக்கு அவர் சமாதி எங்கு இருக்கிறதென்றே தெரியவில்லை என்று ஒரு முறை மதியரசியிடம் சொல்லி இருக்கிறார். கடவுள் மறுப்பார்கள், காம்ரேட்கள், புத்திஸ்ட்டுகள் இப்படி பற்பல நண்பர்கள் அவருக்கு உண்டு. அவர்கள் எல்லோரிடமும் அவர்களின் கொள்கையின் எதார்த்தத்தை எளிய கேள்விகளால் ஆதி எதார்த்தப் புரிதலுகுள் தள்ளிவிடுவதில் வல்லவராகவும் ஆகச்சிறந்த புரிதலுடைவராகவும் அவர் இருந்தார். அவரைப்போலவே மதியரசி பேசுவது பெருமாள் வாத்தியாருக்கு பெருமையாக இருக்கும். இப்போது அவர் இருந்தால் இந்தக் கதையே வேறு தளத்தில் கூட நடந்திருக்கலாம். அதுவும் பெருமாள் வாத்தியாருக்கு தெரியும்.

இடைவிடாது வந்த போன் கால்களுக்கு சிரித்து பதில் சொல்லியபடியே இருந்தார் பெருமாள் வாத்தியார். மல்லிகாவும் மார்க்கை சொல்லியபடி இருந்தார்.’எல்லாத்திலையும் செண்டம் மார்க் எடுத்து அவ ஸ்டேட் பர்ஸ்ட் வருவான்னு எதிர்பார்த்தேன்’ என்று  அவருடைய தோழி புதுக்கோட்டை கார்த்திகா கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்தப்பக்கம் மல்லிகாவின் கல்லூரி தோழி  கோயம்புத்தூரில் இருக்கும் ஆவுடையார் கோயில் ராதாவின் மகள் பிரியாவிடம் மதியரசி ‘நான் என் பேப்பரைக் கேட்கப்போறேன். அதோட கல்வியமைச்சருக்கு தனியா லெட்டர் போடப்போகிறேன்’ என்றதும்.

பெருமாள் வாத்தியாரும் மல்லிகாவும் பேசிய போன் கால்களை பேசி முடித்துவிட்டு மதியரசி பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.

“என்னம்மா… ஆச்சு.”

“வெறுப்பாக இருக்குப்பா.”

என்று அவள் அறைக்குள் சென்றது அவர்களுக்கு கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. வெளியே வந்த அவள் ஒரு பையிலிருந்து ஐந்து கவர்களை எடுத்து பெருமாள் வாத்தியாரிடம் கொடுத்தாள்.

“அப்பா… இது நான் ஒவ்வொரு எக்ஸாம் நான் எழுதிட்டு  அன்னைக்கு வீட்டிற்கு வந்து அதே எக்ஸாம நான் வீட்டில் எழுதியது. அதை அன்றே ரிஜிஸ்டர் போஸ்ட் தாத்தாவிற்கு செய்து  நான் வாங்கி வைத்து இருப்பது. நான் என் பேப்பரை வாங்கி. அதை இந்த கவர்ல இருக்கிற பேப்பரோட ஒப்பிடச் சொல்லப்போறேன். ஒரு ஒரு மார்க் எப்படி குறைச்சதுன்னு எனக்குத் தெரியும். நான் இந்த கவர்களை பிரிக்காமல்  கல்வி அமைச்சருக்கு அனுப்பலாம்ன்னு இருக்கேம்பா. ஒரு விசயத்தை உங்க கிட்ட சொல்லாம விட்டேன்ம்ப்பா. ஒவ்வொரு எக்ஸாம் பேப்பர்ல கால் சூப்பர் வைசர் கையெழுத்து போடும்போது நேரத்தையும் போடச் சொன்னேன். அதே மாதிரி நான் எக்ஸாம் எழுதி முடித்த கடைசி பக்கத்துலையும் கையெழுத்து போட்டு நேரத்தையும் போடச்சொன்னேன். ஒவ்வொரு எக்ஸாமையும் இருபது நிமிடம்,இருபத்தி எட்டு நிமிடம், மேத்ஸ் எக்ஸாமை முத்தி இரண்டு நிமிடம் என்று அவர்கள் அனுமதித்த நேரத்தைவிட நான் முன்பாகவே முடித்திருக்கிறேன். நான் மாநிலத்தில் முதலாவதாக வருவேன் என்பது எனக்குத் தெரியும். இந்த நேர மேலாண்மை பேசு பொருளாக மாறவேண்டும் என்று ஆசைப்பட்டேம்ப்பா.”

பெருமாள் வாத்தியார் மனைவியைப் பார்த்தார். ஒவ்வொரு எக்ஸாம் முடிந்து ரூமை பூட்டிக்கொண்டது பிறகு சைக்கிள் எடுத்துக்கொண்டு வெளியே போனது இதற்குத்தான் என்பது இப்போதுதான் மல்லிகாவிற்கே புரிந்தது.

“அதோட இல்லைப்பா.வீட்டில் நம்ம வீட்டில் நான் எழுதிய எக்ஸாம்ஸை அப்படியே அன்னன்னைக்கே  டைமோட வீடியோவை மெயில்ல அப்லோட் பண்ணி வச்சிருக்கேப்பா.”

உண்மையிலையே பெருமாள் வாத்தியார் பயந்துதான் போய் இருந்தார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தடுமாறினார். அப்பாவிடம் வளர விட்டிருக்கக் கூடாதோ என்றும் யோசித்தார். மல்லிகா பேச ஆரம்பித்தது அவருக்கு கொஞ்சம் மன அழுத்தத்தை குறைத்தது.

“அண்ணனுக்கு போன் பண்ணி கேட்போம். மாமா ஊரிலிருந்து வரட்டும். அதன் பிறகு நாம் முடிவெடுக்கலாம்.”

“லூசாம்மா நீங்க. டீவிக்காரங்க எல்லாம் உங்க வீட்டு முன்னாடி இப்போ நிக்கனும்மா. என் உழைப்பப் பூராங் கொட்டி இருக்கேம்மா. தாத்தா எப்ப வருவாருன்னு அவருக்கேத் தெரியாதும்மா. அவர் இமய மலையிலேர்ந்து ஜெய்ப்பூர் போறதா சொன்னார்ம்மா. அவர் வர்ற வரையும் இவைகளை நாம் காத்திருந்து செய்ய முடியாது.”

அப்போது அன்பரசன் அவன் அம்மாவிற்கு போன் செய்து

‘புள்ளை என்ன குரூப் எடுக்குது’ என்றான். அவன் பேசியது வெளியேக் கேட்டதால்

“அடே…முட்டாப்பயளே…இங்கே என்ன நடக்குதுன்னு தெரியுதாடா.”

அவன் போனைக் கட் பண்ணிவிட்டான்.

இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பெருமாள் வாத்தியார்.

“அவன் கேட்கிறதுல என்னம்மா தப்பு இருக்கு. நாம என்ன குரூப் எடுக்கிறதுங்கிறத யோசிக்கலாம். நீ சொல்லறதுக்கு என்ன ப்ரசிசர்ன்னு கேட்போம்.”

“உங்களுக்கு உங்க பிரச்சினைப்பா.”

ஹாலில் இருந்த வாஸ்பேஷனில் முகத்தைக் கழுவிவிட்டு மதியரசி தெளிவாக பேசினாள்.

“உங்கள் ஒட்டு மொத்த கனவும் நான் தான் நிறைவேத்தனும்ன்னு எனக்கு நல்லாத் தெரியுது. அது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு முதல்ல டாக்டர் ஃபீல்ட் பிடிக்காது. அந்த இரத்தம் எனக்கு சுத்தமாக பிடிக்காது.”

“அதெல்லாம் பழகினா சரியாகும்மா.”

“கொஞ்சம் நேரம் நான் பேசும் போது இடையில் எதுவும் பேசாதீங்கப்பா. போனை இரண்டு பேரும் சைலண்ட்ல போடுங்கள்.”

அப்பாவின் அதே குணம்.அதே வார்த்தைகள். அதே ஸ்டைல்.

“டாக்டரைத் தாண்டியும் ஒரு உலகம் இருக்குப்பா. ஒருத்தர் லேசா நேவு கொண்டாலே கலங்குற ஆள் நான். என்னால அதில் உட்கார்ந்துக்கிட்டு பண அறுவடை பண்ண முடியாது. அதுக்காக வயதைத் தொலைஞ்சுப் படிச்சுட்டு சர்வீஸ் பண்ணிக்கிட்டும் என்னால உட்கார்ந்திருக்க முடியாது. அதைவிட சிறப்பான அதைவிட பல மடங்கு பணம் சம்பாதிக்கிற பல துறைகள் இருக்கு.”

‘இன்ஜினியருக்காவது படிக்கலாமே’ என்று நினைத்த மல்லிகா வெறுப்பாக அது என்ன என்றுக் கேட்டார்.

“நெறைய இருக்கு. நான் எடுக்கப்போறது காமர்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ். பிளஸ் டூ முடிச்சிட்டு சென்னையில் ஃபைவ் ஸ்டார் ரேட்டிங்கில் இருக்கிற சிஏ கோட்சிங் சென்டர்ல சேரலாம்ன்னு இருக்கேம்பா. ஒரே அட்டம்ட்ல எப்படி பாஸ் பண்ணலாம்ன்னு நான் ஒரு பிளான்  வச்சிருக்கேன்ம்ப்பா.”

“எல்லா கழுசடையும் இருக்கிற குரூப்புல்ல அது.”

“ஆமாப்பா. எல்லா ஸ்கூல்லையும். அரசு பள்ளிகளிலும் சரி தனியார் பள்ளிகளிலும் சரி. முதல் இரண்டு குரூப்பைத்தான் கவனிப்பாங்க. ஏன் அந்த டிபார்ட்மெண்ட் ஆசிரியரைக்கூட யாரும் மதிக்கமாட்டாங்க. அது எனக்குத்தெரியும். அந்த வகுப்புல ஆடிட்டர் ஆகனும்ன்னு ஒரு ஐந்து பேரோ அல்லது பத்து பேரோ அய்யர் வீட்டு பசங்க. அதே மாதிரி அய்யர் வீட்டு  பசங்க மாதிரி சில பேரும் இருப்பாங்க அவுங்க கூட நான் இருந்து படிச்சுக்கிறேன்ம்ப்பா. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில சேர்ந்து படிக்கலாம்ன்னு இருக்கேன்.”

இவ்வளவு தெளிவாக பேசும் பிள்ளையிடம்  அவருக்கு பேசுவது கொஞ்சம் அசௌகரியாக இருந்தது. இருவரும் சண்டை போட்டுக் கொள்ளப் போகிறார்களோ என்ற பயம் மல்லிகாவுக்கு இருந்தது.

“டாக்டர் துறை நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லைப்பா. ஒரு விசயத்தை சொல்லவா. என்னைக்கு உலகின் பெரு முதலாளிகள் மருத்துவத்தை விட வேறு துறையில் சிறப்பான வருமானம் இருக்கிறதென்று நினைக்கிறார்களோ அப்போதுதான் இந்த மனித வியாபாரம் ஒழியும். நீங்கள் கவனித்தீர்களா என்னன்னு எனக்குத் தெரியாது. ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமனை பெருகிக்கிட்டே இருக்கு. இப்போது உடல் உழைப்பாளிகளை அதிகமாக காண முடியுது. அதற்கு காரணம் காப்பீட்டு திட்டங்கள். இந்த ஸ்கேம். நமக்கு சரிவராதுப்பா.நம்ம குடும்பத்துக்கும் சரி வராதுப்பா. தாத்தாவைப் பார்த்தீங்களா. செம ஜாலியாக வாழ்றாருப்பா. குடும்பம்,பேரன்,பேத்தி ஞானம் . நான் வாழனும்ப்பா.”

மகளை நெஞ்சில் அணைத்து தலையை தடவினார் மல்லிகா. பெருமாள் வாத்தியார் அறைக்குள் சென்றார். முகம், கை,கால்களைக் கழுவி கண்களை மூடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். அவரின் அப்பா அவருக்கு சொல்லிக் கொடுத்தது. பல முறை அவருக்கு இது பேருதவியாக இருந்திருக்கிறது. பிறகு அவர் அறையை விட்டு வெளியே போனுடன் வந்தார்.

“தின்னிக் கோழி. உனக்கு சிக்ஸ்டி ஃபைவ் பிரியாணி அதோட சிக்கன் லாலி பாப். அண்ணன் ஒரு அய்ட்டம் முன்னாடி வாங்கிட்டு வந்தான். அது ரொம்ப நல்லா இருந்தது. மதுரை மல்லி மட்டன். மூனு பேருக்கும் பண்ணி இருக்கேன். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவும் செஞ்சிருக்கேன். நாம் சாப்பிடும் போது யாராவது வந்தால் கொடுக்கனும் இல்லையா.”

மூவரும் சந்தோஷத்திற்கு வெகு இயல்பாக மாறிவிட்டார்கள். 

‘மாநிலத்தின் டாப்பர்களில் ஒருத்தர் காமர்ஸ் குரூப் எடுக்கனுமா.’ 

‘அதுக்குப் பேசாம ஜஸ்ட் பாஸ் பண்ணி இருக்கலாமே.’ ‘உங்கள் அப்பா உங்க மகளை கெடுத்து வச்சிருக்கார்.’ போன்ற கேள்விகளுக்கு அவரிடம் சிறப்பான பதில் தயாராகவே இருந்தது.

மகளின் மார்க் மறுபரிசீலனை தான் அவரின் மண்டையைக் குடைந்தது. அதுபற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாமென அவர் இப்போது ப்ரியாகிவிட்டார். 

எந்த செய்திகளிலும் மதியரசியின் மதிப்பெண்கள் பற்றிய செய்திகள் வரவில்லை. ஒரு வேளை இனி வரலாம். வரவில்லை என்றால் அதற்கும் மதியரசியிடம் ஏதாவது சிறப்பானக் காரணம் இருக்கலாம்.

****

-ரவி அல்லது.

[email protected] 

***

  •  

குற்றமுகங்கள் 14 ஜோரூ தொங்கா

கன்யாகுமரி முதல் கஞ்சம் வரையிலான பரந்த பகுதியை உள்ளடக்கிய மதராஸ் பிரசிடென்சியில் 986 காவல் நிலையங்கள் இருந்தன. அத்தனை காவல்நிலையங்களும் ஜோரூ தொங்காவை அறிந்திருந்தன. அவன் காவல் நிலையங்களில் மட்டுமே திருடுவான். அதுவும் காவலர்கள் வசூல் செய்து வைத்துள்ள தண்டத்தொகை, லத்தி, வாள், மைக்கூடு, தொப்பி, பதிவேடு போன்றவற்றைத் திருடிக் கொண்டுவிடுவான்.

போலீஸிடம் திருடுவது என்பது பகிரங்கமான சவால். அதில் வெற்றி பெறுவதைத் தனது அசாத்திய திறமையாக ஜோரூ தொங்கா நினைத்தான். போலீஸ் நிலையத்தில் திருடு போய்விட்டால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். உயர் அதிகாரிகளுக்குத் தெரிவதற்கு முன்பாகத் திருடிய பொருளை மீட்டுவிட முயலுவார்கள். சில சமயம் ஜோரூ தொங்காவிடமே களவுக்கூலி கொடுத்து பொருளை மீட்டுப் போவதும் உண்டு.

ஜோரூ தொங்கா சித்தூரில் வளர்ந்தவன். அவனது அப்பா நாடக கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தவர். அம்மா ஒரு நடிகை என்றார்கள். ஜோரூவிற்கு மூன்று வயதாக இருக்கும் போது அவனது அம்மா தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். ஆகவே ஜோரூவை தன்னால் வளர்க்க முடியாது எனப் பாட்டி வீட்டில் கொண்டு போய்விட்டார் அவனது தந்தை. பின்பு அவன் தனது தந்தையைக் காணவேயில்லை. சித்தூரில் வசித்த பாட்டி இறந்த பின்பு அவன் மரம்செடி கொடிகள் போலத் தானாக வளர்ந்து விட்டான்

ஜோரூ இரண்டு மூன்று முறை காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். எங்கேயும் அவன் தனது குற்றங்களை மறுத்ததில்லை. “போலீஸ்காரர்களுக்குப் போதுமான கவனம் இல்லை. அதை நிரூபிக்கவே திருடினேன்“ என்பான். நீதிபதி தியோபால்ட் அதைக் கேட்டுச் சிரித்திருக்கிறார்.

“திருடிய பொருட்களை எங்கே வைத்திருக்கிறான்“ என வழக்கறிஞர் கேட்டபோது அதுக்குத் துப்புக்கூலி கொடுக்க வேண்டும் எனக் கையை நீட்டினான் ஜோரூ.

அந்தக் காலக் காவல்நிலையங்களில் இரண்டே அரிக்கேன் விளக்கு இருந்தன. இரவு ரோந்து சுற்ற தீப்பந்தங்களைப் பயன்படுத்தினார்கள். காவலர்களுக்குத் துப்பாக்கி வழங்கப்படவில்லை. நடந்து தான் ரோந்து சுற்ற வேண்டும். அதிகாரிகளுக்குக் குதிரை வழங்கப்பட்டிருந்தது.

சில காவல்நிலையங்களில் அவர்களே உணவு தயாரித்துக் கொள்ளவும் வேண்டும். ஸ்டேஷனிலே உறங்குவதற்கான போர்வை தலையணை வைத்திருப்பார்கள். காவல்நிலையத்தின் துப்பரவு பணிக்கென ஆட்களை வைத்திருந்தார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க மாட்டார்கள்.

புகார் கொடுக்க வரும் கிராமவாசிகளிடமிருந்து காய்கறிகள், தேங்காய் நாட்டுகோழி, வாத்து துவங்கி ஆடு மாடுகள் வரை இனாமாக வாங்கிக் கொள்வார்கள். அப்படி வாங்கிய ஆடு மாடுகளை ஸ்டேஷன் வாசலில் ஏலமிடுவார்கள். சந்தை வியாபாரி கோல்சா அதைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்வான். அப்படிக் காவலர்களால் இனமாகப் பெறப்பட்ட இரண்டு ஆடுகளைக் கூட ஜோரூ தொங்கா திருடியிருக்கிறான்.

திருடிய ஆட்டை காட்டுக்கோவிலில் வெட்டி ஊருக்கே கறிச்சோறு போட்டான். அந்தக் கறிச்சோறு சாப்பிடுவதற்காகக் காவலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பே அது தங்களிடம் திருடிய ஆடு என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

காட்டில் ஒற்றை யானையைப் பார்ப்பது ஆபத்து என்பது போலத் தனியே வரும் காவலருக்கு ஜோரூ தொங்காவை பார்த்தால் பயம். வாயில் ஏதோவொரு பச்சிலையை மென்று கொண்டிருப்பான். அந்த எச்சிலை காவலர் கண்ணில் துப்பிவிடுவான். அடுத்த நிமிஷம் பார்வை மறைந்துவிடும். காவலரின் பொருட்களைப் பறித்துக் கொண்டு மாயமாகி விடுவான். கண்விழித்துப் பார்க்கும் காவலர் ஒரு வெற்றிலையில் களிம்பு போல ஏதோ இருப்பது தெரியும். அதை ஜோரூ விட்டுப் போயிருப்பான். அந்தக் களிம்பை கண்ணில் போட்டுக் கொண்டால் பார்வை மீண்டும் இயல்பாகிவிடும்.

ஜோரூ எப்போதாவது பிடிபட்டு விடுவான். அப்போது வேறுவேறு ஊர்களில் இருந்து காவலர்கள் தேடிவந்து அவனை ஆசை தீர அடிப்பார்கள். அப்போது ஜோரூ வலியை மறைத்துக் கொண்டு சிரிப்பான். அத்தோடு “அடிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது, நன்றாக அடிக்கட்டும்“ என்றும் சொல்லுவான்.

“இவ்ளவு அடியும் உதையும் வாங்கிச் சிறைக்குப் போகிறாயோ. இந்தத் திருட்டில் உனக்கு என்ன லாபமிருக்கிறது“ என இன்ஸ்பெக்டர் நானாபாய்க் கேட்டிருக்கிறார். “இதெல்லாம் ஒரு விளையாட்டு, இருட்டு இல்லேன்னா நட்சத்திரத்தால ஜொலிக்க முடியாது, அப்படித் தான் திருடனும் போலீசும்“ என்றான் ஜோரூ.

இப்படியே ஜோரூ தொங்காவை விட்டுவைத்தால் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என நினைத்த போலீஸ் சூப்பிரண்டன்ட் டைரெல் அவனது இரண்டு பாதங்களையும் அம்மிக்கல்லால் நசுக்கி நடக்க முடியாமல் செய்தார். அவனால் கால்களைத் தரையில் ஊன்றவே முடியாமல் போனது.

அதன்பிறகான காலத்தில் வாரம் ஒருமுறை ஜோரூ தொங்கா கைகளைத் தரையில் ஊன்றி இழுத்து இழுத்து ஊர்ந்து வந்து காவல்நிலையத்தின் முன்பாகச் சப்தமிடுவான்.

அவனது குரலைக் கேட்ட மாத்திரம் ஏதாவது ஒரு காவலர் வெளியே வந்து அவனது சோற்றுச் செலவிற்கான சில்லறைகளைக் கையில் கொடுத்து அனுப்பி வைப்பார்.

அப்போது காவலரை குனியச் சொல்லி அவரது தொப்பியை எடுத்து வானை நோக்கி வீசி “காக்கா தூக்கிட்டுப் போயிருச்சி“ என்று சிரிப்பான் ஜோரூ.

செல்லமாக அவனது தலையில் தட்டி “உன்னைத் திருத்தமுடியாதுடா“ என்று மண்ணில் விழுந்த தொப்பியை எடுத்து அணிந்து கொள்வார் காவலர்.

••

  •  

எண்ணங்கள் வளமானால் எழுத்துகள் வசீகரமாகும்

இலக்கிலக்கிய உலகில் வலுவான எழுத்துத் திறனோடு, அனுபவங்களை உணர்வு மாறாமல் எழுதும் வித்தையோடு வலம் வந்து கொண்டிருக்கும் திரு கி இரகுநாதன் அவர்களுக்கு என் முதல் வணக்கம்.

இனிய வணக்கம் விஜிம்மா.

 » Read more about: எண்ணங்கள் வளமானால் எழுத்துகள் வசீகரமாகும்  »
  •  

குற்றமுகங்கள்- 13 பச்சைஅங்கி பிஸ்வாஸ்

அந்த வழக்கு 1879ம் ஆண்டுக் கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நாகோஜி என்ற சாமியாரைக் கொலை செய்ததாகப் பச்சை அங்கி பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பிறவி ஊமை என்றும் நாகோஜியின் சீடராகப் பல ஆண்டுகள் இருந்தவர் என்றும் சொன்னார்கள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸ் நீதிமன்றத்தில் பேசினார். அதுவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பதில் அளித்தார். ஆகவே அவர் யார். எதற்காக இப்படி ஒளிந்து வாழ்கிறார் என்பதைக் கண்டறியும் படியாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

பச்சை அங்கி பிஸ்வாஸிற்கு நாற்பது வயதிருக்கும். ஆறடிக்கும் மேலான உயரம். தீர்க்கமான கண்கள். தோள்பட்டை வரை புரண்ட சுருண்ட கேசம். கீழ் உதட்டில் ஒரு மச்சம்.

ஒரு மனிதனின் கடந்தகாலத்தைப் போன்ற புதிர்பாதை வேறு எதுவுமில்லை. அதுவும் தன்னை மறைந்துக் கொள்ள விரும்புகிறவன் தனது கடந்தகாலத்தை அழிப்பதில்லை. பல்வேறு கடந்தகாலங்களை உருவாக்கி விடுகிறான். இதில் எது உண்மை என யாராலும் கண்டறிய முடியாது.

பச்சை அங்கி பிஸ்வாஸ் என்பது இறந்துவிட்டதாகக் கருதப்படும் நீலாம்பூர் ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி என்று சொன்னார்கள். அதற்குக் காரணம் ஷியாம் சௌத்ரியின் இடது கையில் இரண்டு விரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அது போலவே பச்சை அங்கி பிஸ்வாஸிற்கும் விரல்கள் ஒட்டிக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்தார்கள்.

அந்த உண்மை வெளிப்பட்டவுடன் ஷியாம் சௌத்ரியின் மனைவி பார்கவி மற்றும் மாமனார் ரதீஷ் பாபு  எவ்வளவு செலவு செய்தாவது பிஸ்வாஸை வழக்கிலிருந்து விடுவிக்க முன்வந்தார்கள். இதற்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ரோலன் ஸ்மித்தை நியமித்தார்கள்.

ஷியாம் சௌத்ரியின் வீட்டுபணியாளர்கள். கணக்கர், மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்கள். ஆனால் நீதிமன்றத்தில் பச்சை அங்கி பிஸ்வாஸ் தான் ஷியாம் சௌத்ரி இல்லை என்று உறுதியாகச் சொன்னார். அதைக் குடும்பத்தினர் நம்பவில்லை. ஷியாம் சௌத்ரி ஏன் வீட்டை விட்டு ஒடினார். அவர்கள் குடும்பத்திற்குள் என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. அதற்குச் சௌத்ரி குடும்பம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

பணியாளர்களில் ஒருவர் மட்டும் அது ஷியாம் சௌத்ரியில்லை. அவரைக் கொல்வதற்கு ஷியாம் சௌத்ரியின் மனைவியே ஆள் அனுப்பிவைத்தார். அதை நேரில் கண்டிருக்கிறேன் என்றார்.

அந்தப் பணியாளர் பித்துபிடித்தவர் என்று சொல்லி சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க கூடாது என வழக்கறிஞர் வாதிட்டார். ஷியாம் சௌத்ரியை ஏன் அவரது மனைவியே கொல்ல முயன்றார் என நீதிமன்றம் விசாரிக்க முற்படவில்லை.

அதே நேரம் பர்த்வானில் உள்ள கோவில்பூசாரி கங்காராம் அது தனது இளைய மகன் ராதாநாத் என்று அடையாளம் காட்டினார். அவன் கோவில்பணிகளில் தனக்கு உதவியாக இருந்த நாட்களில் மங்கள் தேப்பின் மனைவி சாரதாவோடு பழக்கம் ஏற்பட்டு அவளைக் கூட்டிக் கொண்டு ஒடிப்போனான் என்று அடையாளம் காட்டினார்.

நீதிமன்றம் சாரதாவைக் கண்டறிந்து சாட்சியம் சொல்ல அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். காசியின் படித்துறை ஒன்றில் பிச்சைக்காரியைப் போல வாழ்ந்து கொண்டிருந்த சாரதாவை அவர்கள் கண்டறிந்து நீதிமன்றம் அழைத்து வருவதற்கு ஒன்பது மாதங்களானது.

அவள் பச்சைஅங்கி பிஸ்வாஸைப் பார்த்த மாத்திரம் அது தனது காதலன் ராதாநாத் இல்லை. அவன் என் முன்னே நின்றிருந்தால் வெறும் கையால் கொன்றுவிடுவேன் என்று சொன்னாள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸை தான் காசியில் படகோட்டியாகப் பார்த்திருக்கிறேன். தங்க கருடன் கொடியுடன் படகில் சுற்றியலைந்த திருடன் துலால் என்றாள். இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கங்கையில் படகோட்டுகிறவர்கள் மற்றும் வாரணாசியின் காவல் அதிகாரி இருவர் சாட்சியம் சொல்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள்.

அவர்கள் பச்சை அங்கி பிஸ்வாஸை பார்த்த மாத்திரம் அது துலால் தான் என்று உறுதியாகச் சொன்னார்கள். கங்கை நதித் திருடன் துலால் கர்ணனைப் போல நதியில் மிதக்கவிடப்பட்ட குழந்தை என்றார்கள். அவனைப் படகோட்டி விஸ்வன் வளர்த்தான். இளைஞனான துலால் படகில் செல்லும் பயணிகளைத் தாக்கி அவர்களின் நகை பொருட்களைக் கொள்ளையடித்தான். நதியில் அவனைத் துரத்திச் சென்று எவராலும் பிடிக்க முடியாது. யாரோ ஒரு பெண்ணின் காதலில் விழுந்தான். அவள் சென்ற படகு நதியில் மூழ்கியதில் அவள் இறந்துவிட்டாள்.  அதன்பிறகு  துலாலை கங்கையில் காணமுடியவில்லை.  . அவனுக்கு என்ன ஆனது, எதற்காக இப்படி ஊமை போல ஒளிந்து வாழ்ந்து சாமியாரைக் கொலை செய்தான் என அவர்களுக்குப் புரியவில்லை.

பச்சை அங்கி பிஸ்வாஸ் தனக்குப் படகோட்டத் தெரியாது என்பதோடு தான் வாழ்நாளில் காசிக்கு சென்றதேயில்லை என நீதிமன்றத்தில் பதில் அளித்தார். அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டறிவது எளிதானதில்லை என நீதிமன்றம் உணர்ந்து கொண்டது.

அதே நேரம் வீட்டைவிட்டு ஒடிய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரிக்கு, கோவில் பூசாரி ராதாநாத்திற்கு, திருடன் துலாலிற்கு என்ன ஆனது, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, எங்கே ஒளிந்து வாழுகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. அவர்கள் குறித்த தனி வழக்கு நீதிமன்றத்திற்கு வராதவரை அதை விசாரிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவு செய்தது.

வழக்கின் புதிய திருப்பமாகப் பச்சை அங்கி பிஸ்வாஸைப் போலவே கொல்லப்பட்ட துறவி ஏகோஜிக்கு இரண்டுவிரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன என்று அவரது சீடர்களில் ஒருவன் சாட்சியம் அளித்தான்.

துறவி நாகோஜி தான் பழைய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி எனத் தெரிந்தவுடன் பச்சை அங்கி பிஸ்வாஸைத் தூக்கிலிட வேண்டும் என ஷியாம் சௌத்ரியின் மாமனார் கூக்குரலிட்டார். தான் நியமித்திருந்த வழக்கறிஞரை பிஸ்வாஸிற்கு எதிராக வழக்காடும்படி உத்தரவிட்டார்.  

ஒரு நட்சத்திரம் வானில் ஒளிந்து கொள்ள முடிவு செய்தால் யாரால் கண்டுபிடிக்க முடியும். அப்படித்தான் பிஸ்வாஸ் வாழ்க்கையும் ஆனது.

நாலரை ஆண்டுகள் இந்த வழக்கு நடந்தது, முடிவில் பச்சை அங்கி பிஸ்வாஸ் கொலை செய்ததற்கான சாட்சியம் எதுவும் கிடைக்கவில்லை என விடுதலை செய்யப்பட்டார். அவர் யார் என்ற உண்மை கண்டறியப்படவேயில்லை. வானில் செல்லும் பறவைகள் தனது தடயம் எதையும் விட்டுச் செல்வதில்லை. சில மனிதர்களின் வாழ்க்கையும் அது போலத் தான்.

இதன் நான்கு மாதங்களுக்குப் பிறகு மிர்சாபூர் படித்துறையில் ஒருவர் இறந்துகிடந்தார். யாரோ அவரை அடித்துக் கொன்றிருந்தார்கள். இறந்துகிடந்தவர் அணிந்திருந்த பச்சை அங்கியை வைத்து அவர் பிஸ்வாஸ் தானா எனச் சந்தேகம் வந்தது. ஆனால் அதையும் எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

••

  •  

புவனாவின் சமையலறை

குறுங்கதை

••

கண்ணாடி முன்னால் நின்றபடியே ஸ்ரீநாத் சப்தமாகச் சொல்வது கேட்டது.

“ நேரமாகிருச்சி.. லஞ்ச் பேக் பண்ணிட்டயா.. சாப்பிட டிபன் ரெடியா“

புவனா ரசம் வைப்பதற்காகக் கொத்தமல்லி தழைகளும் தக்காளியும் எடுத்து சமையல்மேடையின் மீது வைத்திருந்தாள். பத்து நிமிஷம் இருந்தால் ரசம் ரெடியாகிவிடும். ஆனால் நேரமாகிவிட்டது என அவசரப்படுத்துகிறார். ரசம் வைக்க வேண்டாம் என முடிவு செய்தபடியே லஞ்ச்பாக்ஸில் அவசரமாகச் சோறு, குழம்பு, முட்டைக்கோஸ் பொறியல். வெண்டைக்காய் பச்சடியை, எடுத்து வைத்தாள். மோரை பாட்டிலில் ஊற்றினாள்.

சாப்பிடுவதற்காக இட்லியும் தேங்காய் சட்னியும் தட்டில் வைத்து டேனிங் டேபிளில் கொண்டு போய் வைத்தாள். ஸ்ரீநாத் தட்டைக் கவனிக்காமலே சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்பினான்.

அலாரம் அடித்து நின்று போனது போலானது வீடு. டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்தபடியே விரல்நுனியால் தேங்காய் சட்னியை தொட்டு ருசித்தாள். உப்பு குறைவாக இருந்தது. அவர்களுக்குத் திருமணமாகி பதினாலு வருஷங்கள் ஆகிவிட்டது. குழந்தைகள் இல்லை. அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு. ஸ்ரீநாத் விடுமுறை நாளில் கூட குறித்த நேரத்தில் தான் சாப்பிடுவார். ஆகவே அவசரமில்லாமல் ஒரு நாள் கூட அவளால் சமைக்க முடியவில்லை. அடிப்பிடித்துக் கொண்ட குக்கரை கழுவும் போது தனது வாழ்க்கையும் அப்படி ஆகிவிட்டதோ என அவளுக்குத் தோன்றும்.

ஸ்ரீநாத் படிப்பதற்காக வாங்கி வெறுமனே புரட்டிவிட்டு போட்ட தினசரி பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு ஹாலிற்குச் சென்றாள். சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பேப்பர் படித்தாள். இனிமேல் தான் குளிக்க வேண்டும்.

பத்தரை மணிக்கு தான் டிபன் சாப்பிடுவாள். மதிய உணவைச் சாப்பிட மூன்று மணியாகிவிடும். அதுவும் தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவாள். சில சமயம் ஜன்னலோரமாகத் தரையிலே படுத்து பகல் உறக்கம் கொள்வதும் உண்டு.

அன்றைய மாலையில் இரவுக்கான சப்பாத்தி செய்வதற்காகக் கோதுமை மாவு எடுக்கப் போகும் போது தக்காளியும் கொத்துமல்லியும் பிரிட்ஜில் வைக்காமல் வெளியே இருப்பதைக் கவனித்தாள். கழுவிய ஈரம் கூட மாறாமல் புதிதாக இருப்பது எப்படி என யோசித்தபடியே அதைச் சமையல் மேடையிலே விட்டுவைத்தாள். அன்றிலிருந்து அவளது சமையலறையினுள் ஒரு மாற்றம் உருவானது.

கீரையோ, காய்கறியோ எதுவும் சமையலறைக்குள் வந்துவிட்டால் வாடுவதில்லை. பழங்கள் கெட்டுப் போகாமல் இருந்தன. கறிவேப்பிலை வாடவில்லை. தோசை மாவு கெட்டுப்போகவில்லை. கேரட் நிறம் இழக்கவில்லை. தனது பிரிட்ஜில் இருந்த பொருட்கள் அத்தனையும் வெளியே எடுத்து போட்டுவைத்தாள். எதுவும் கெடவில்லை. எதுவும் அழுகிப்போகவில்லை. இந்த உலகிலிருந்து சமையலறை துண்டிக்கப்பட்டுவிட்டதோ எனத் தோன்றியது.

தனது சமையலறை இப்படி மாறிப்போனதை நினைத்துப் புவனா சந்தோஷம் கொண்டாள். அந்தச் சந்தோஷத்தின் அடுத்த நிலையைப் போல அவளுக்குச் சமையலறையில் இருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பாடிக் கொண்டிருப்பது கேட்கத் துவங்கியது.

டம்ளரின் பாடலும் கரண்டியின் பாடலும் வேறு வேறாக ஒலித்தன. கண்ணாடி பாட்டில்கள் கனத்த குரலில் பாடின. வெட்டுக்கத்தியின் குரல் விநோதமாகயிருந்தது. மாபெரும் இசைக்கூடம் ஒன்றினுள் இருப்பதைப் போல உணர்ந்தாள்.

வீட்டின் சமையலறை அற்புதத்தின் நிகழ்வெளியாக மாறிவிட்டதை ஸ்ரீநாத்திடம் சொன்ன போது அவன் கோபித்துக் கொண்டான். இதெல்லாம் அவளது பகற்கனவு எனத் திட்டினான். அத்தோடு இதை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதே என எச்சரிக்கையும் செய்தான். புவனா தலையாட்டிக் கொண்டாள்.

ஒவ்வொரு நாளும் சமையலறைக்குள் நுழைந்தவுடன் அவள் பரவசமடைந்தாள். தேநீர்குவளையுடன் சேர்ந்து பாடினாள். தண்ணீர் பானையின் சங்கீதத்தைக் கேட்டு ரசித்தாள். வெண்கல ஸ்பூனின் உரத்த குரல் அவளுக்குப் பிடித்திருந்தது.

அதன் பிந்திய நாட்களில் தன்னிடம் ஒரு மாற்றம் உருவாகிவருவதை உணர்ந்தாள். சமையல் அறைக்கு வெளியே ஒரு வயதிலும் சமையலறைக்குள் இன்னொரு வயதிலும் இருப்பது போன்ற உணர்வது. அது நிஜமா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த உணர்வு அவளுக்குச் சந்தோஷத்தையும் தந்தது. சங்கடத்தையும் தந்தது. சமையலறைப் பொருட்களைப் போலத் தானும் மாறாத இளமையுடன் இருக்க முடியுமா என ஏங்கினாள். அந்த ஏக்கம் வாடாத கீரைகளை, அழுகாத பழங்களைத் தொடும் போது வளர்ந்தது.

இந்த ஏக்கம் முற்றிய ஒரு நாளில் ஹோல்டரில் வைத்திருந்த ஒரு முட்டை தவறி தரையில் விழுந்து உடைந்து போனது. குனிந்து அதைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பிய போது பச்சைக்காய்கறிகள் அவள் கண்முன்னால் வாட ஆரம்பித்தன. அவசரமாகத் தண்டுக்கீரை வாடிப்போனது. கறிவேப்பிலையின் இலைகள் உதிர்ந்து போயின. பாத்திரங்கள் வாய் மூடி மௌனமாகின.

வாடிக் கொண்டிருக்கும் காய்கறிகள் பழங்களிடம் என்னடா ஆச்சு உங்களுக்கு என்று கேட்டாள். பதிலற்ற மௌனம் சமையலறையில் நிரம்பியது.

அடுத்த நாளில் அது வழக்கமான சமையலறையாக மாறியது. புவனா அதைப் பற்றி ஸ்ரீநாத்திடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை

  •  

தாகூரின் ஓவியங்கள்

தாகூரின் ஓவியங்கள் குறித்த சிறந்த ஆவணப்படம் Painter Rabindranath.

இதனை சுகந்தா ராய் இயக்கியுள்ளார்.

பன்முக ஆளுமை கொண்ட தாகூர் தனது அறுபது வயதிற்குப் பின்பாகவே ஓவியம் வரையத் துவங்கினார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

1930களில் இவரது ஓவியக் கண்காட்சி ஐரோப்பாவில் நடைபெற்றிருக்கிறது.

அவரது 1700 ஓவியங்கள் ரவீந்திர சித்ரவளி என நான்கு புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

  •  

சாதுரியம் (சிறுகதை)

லோ. பாலமுருகன் 

ட்ரீங்..ட்ரீங்” போன் ஒலித்தது.’ராமின் மனைவி கலா, “என்னங்க நான் அடுப்பு வேலையா இருக்கேன், உங்க போன் அடிச்சுகிட்டே இருக்குது என்னன்னு தான் பாருங்களேன்”.

தனது ரூமின் கதவை உள் பக்கமா சாத்திக்கொண்டு ஃபைலை தேடும் போது, அவனுக்கு தன் மனைவி சத்தம் போட்டு கூப்பிட்டது கேட்கவே  “சரி கலா நான் பார்க்குறேன்”. என்றான். அறையிலிருந்து அவசர அவசரமாக வெளியே வந்து ரிஸீவரை எடுத்து ஹலோ! என்றான்” ராம்.

“சார் நான் அசோக் பேசுறேன்”. ‘சொல்லுங்க என்ன?”

“நீங்க வீட்டுமனை ஏதாவது பார்க்கிறீங்களா?” ‘ஆமாம் நாங்க பார்த்து வருகிறோம் அதுகென்ன இப்போ?’

“ஒன்னுமில்ல, உங்களுடைய ரிபரன்ஸ் எனக்கு எங்க கம்பெனி அனுப்பியிருந்தாங்க. அதான் உங்களுக்குப் போன் போட்டுப் பார்த்தேன்”.

“ஓக்கே எந்த இடத்தில் இருக்கு நீங்க சொல்ற இடம்?”

“அசோக் நகர் தெரியுமா சார்?” ‘தெரியும் சொல்லுங்க’.

“அங்கே 7ஆம் அவின்யூவில் ஒரு கிரவுண்ட் இருக்கு”.

“எவ்வளவு சொல்ராங்க?”

“அதெல்லாம் நாம இடத்தைப் பார்த்த பிறகு பேசிக்கிலாமே?”

“உங்க இடத்தின் லொகேஷன் கொஞ்சம் ஷேர் செய்ய முடியுமா?”

“இதோ இப்பவே அனுப்புறேன் சார்” போன் துண்டிக்கப்பட்டது “…………” இரண்டு மூன்று நிமிடம் ஒரே மௌனம் நிலவியது வீட்டில்.

கலா, “என்னங்க யாரு போன்ல?” அது ஒன்னுமில்ல. நாம இடம் பார்க்கிறோமில்ல அது சம்பந்தமாகத் தான் அசோக் என்பவர் பேசியிருந்தார். “ நான் அவரிடம் இடத்தின் லொகேஷனை கேட்டிருக்கேன்”.

“அப்படியா எப்போ நாம போய்ப் பாக்கலாம்?” “உனக்கு இந்த வாரம் சனி கிழமை கம்பெனியில் வேலை உள்ள தா?”

“இல்லை” என்றாள் கலா”.

‘சரி அப்படினா நான் அசோகிடம் நாங்க இந்த வாரம் சனி கிழமை மத்தியம் வருகிறோம் என்று சொல்லிடுறேன்.

***

ராம், ஒரு கார் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இன்ஞினியராகப் பணிபுரிகிறான். கலா, சாப்ட்வேர் கம்பெனில் புரோகிராமராக வேலை செய்கிறாள். நல்ல வருமானம் இருவருக்கும், சுமார் வருடம் ஏழு லட்சம் சி.டி.சி வாங்குறான் ராம். கலாவும் இவன் வாங்கும் அறவிற்கு தான் பெறுகிறாள். வருடத்திற்குப் பார்க்கப் போனால் இருவரது சம்பளமும் பிடித்தம் போகச் சுமார் பன்னிரண்டு லட்சம் கைக்கு வரும். அதனாலேயே அவர்கள் ஒரு சொந்த வீடு இருந்தால் நல்லா இருக்கும் என்று பல வருடங்களாகத் இடம் தேடி வருகின்றனர்.

தற்போது இருவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 500 ஸ்கொயர் ஃபீட் இடத்தில் அவர்களது வாழ்வை நடத்திவந்தனர். அவர்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை, அதனாலேயே அவர்கள் இப்போது  மும்முரமாக வீட்டுமனை வாங்க முயலுகிறார்கள், அதில் ஒரு சிறிய வீடு கட்டவேண்டும் என்று ஆசை.

‘பிள்ளைகள் பிறந்தவுடன் அனைவரும் புது வீட்டில் வசிக்கத் துடங்கிடலாம் என்று யோசித்திருந்தனர்’.

“ஏண்டிமா கலா கிளம்பியாச்சா?”

“என்னங்க சும்மா தொனத்தொனன்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தா எப்படிக் கிளம்ப முடியும்?”

“சரி நான் இனி உன்னைக் கூப்பிடல, கொஞ்சம் சீக்கிரம் ரெடியாயிட்டு வெளியே வந்தா போதும்”

“இதோ இரண்டு நிமிஷம் கொடுங்க வந்துடுறேன்”.

அறையின் கதவு திறக்கப்பட்டது, கலா அறையினுள்லிருந்து வெளியே வந்தாள். “ வாங்க போகலாம், ஏன் இன்னும் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கீங்க?”

ராம், அவளை அப்படியே கண்ணோடு கண் பார்த்தான். “……” ‘சில விநாடிகள் இருவரிடத்திலும் மௌனம் நிலவியது’. அடுத்த அடுத்த விநாடிகளில் இருவரும் வீட்டின் முகப்பு கதவை தாளிட்டு சாத்தி விட்டு வெளியே வந்தனர்.

ராம் ஸ்கூட்டரை உதைத்தவுடன் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகிவிட்டது, “டப்பு..டப்பு..ட்ரூ..ட்ரூ” சத்தம் எழுப்பியது வண்டி. கலாவும் ஸ்கூட்டர் பின் புறம் அமர்ந்துகொண்டாள். ஸ்கூட்டர் விரைந்தது அந்த இடத்தின் லொகேஷனை நோக்கி. ஒரு மணி நேரம் வண்டியில் பயணம் செய்து பார்க்க வேண்டிய இடத்தை வந்து அடைந்தனர் இருவரும்.

“ஹலோ சார்!” “ஹலோ மேடம்!”

“நான் அசோக்”

“ஹலோ ஹவ் ஆர் யூ?”

“சார் ஐ அம் ஃபைன்”

“சொல்லுங்க எந்த இடம்?” இதோ இப்படி வாங்க, இங்க பாருங்க மொத்தம் ஒரு கிரவுண்ட் இருக்கு.” “உங்களுக்கு வேண்டுமானால் நீங்க அரைக் கிரவுண்ட எடுத்துக்கலாம்”.

‘இதில அட்வான்டேஜ் ஒன்னு இருக்கு யார் முதலில் நிலத்தை வாங்குகுறாங்களோ! அவர்கள் நிலத்தின் முகப்பு பகுதியை வச்சுக்கலாம். பிறகு வாங்குபவர்களுக்கு நிலத்தின் பின் புறம் தான்’.

***

ராம் மற்றும் கலாவிற்கு இடத்தைப் பார்த்த உடனே அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது, அசோகிடம் விலை என்ன என்று கேட்டனர். “சார் இடத்தின் ஓனர் ஒரு கிரவுண்டு என்றால் ஒரு விலை சொல்ராரு, பாதிப் பாதியாக வாங்கினால் வேறு விலை”.

“ஓக்கே சொல்லுங்க என்ன விலை ஒரு முழுக் கிரவுண்டுக்கு?” ஸ்கொயர் ஃபீட் 6000 ரூபாய், “உங்களுக்கு எத்துணை ஸ்கொயர் ஃபீட் வேண்டும்?””எங்களுக்கு அரைக் கிரவுண்டு வேண்டும்”.

“அப்படினா மொத்தம் நீங்க 1200 ஸ்கொயர் ஃபீட் கேட்கிறீங்க”.

“ஆம் சரியே எங்களுக்குப் பாதிக் கிரவுண்டுதான் வேண்டும், அதுவும் முகப்பு பகுதி”.

“ஆல்ரைட் சார் முழுக் கிரவுண்டை நான் சப்-டிவிஷன் செய்ய வேண்டும் முதலில்”. 1200 ஸ்கொயர் ஃபீட், இரண்டா பிரிக்க வேண்டும். டோக்கன் அட்வான்ஸ் கொடுத்தா நான் அடுத்த வேலையை ஆரம்பித்து விடுவேன்.

ராம் மற்றும் கலா இருவரும் தங்களின் முகத்தை ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர். “ராம், கேட்டான் என்ன கலா இடம் புடிச்சிருக்கா?” ‘அவள் “இவ்வளவு வருஷமா பார்த்ததுல” இந்த இடம் கொஞ்சம் நல்லா இருக்கிற மாதிரி தெரியிது, அதனால் பேசாம இந்த இடத்தை முடித்து விடுங்க என்றாள்’.

“முடிவா ஸ்கொயர் ஃபீட் ரேட்டை ஃபைனல் செய்யுங்க, நாங்க இந்த அரைக் கிரவுண்டை வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.” என்றான் ராம்.

“சார் அதான் நான் முதலிலே சொன்ன மாதிரி ஸ்கொயர் ஃபீட்6000 ரூபாய்”

“ஸ்கொயர் ஃபீட்6000 ரூபாய் ரொம்ப அதிகம் கொஞ்சம் குறைத்து சொல்லுங்க”.

“இதில் எனக்கு ஒன்னும் லாபமில்ல ஓனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் உங்களுக்குச் சொன்னேன்”.

“முடிவாக ‘எவ்வளவு’ன்னா கொடுப்பார்”.

“ஸ்கொயர் ஃபீட் 5800 ரூபாய் என்றால் கொடுப்பார் சார்”.

“நல்ல யோசித்த பிறகு சொல்றேன் ஸ்கொயர் ஃபீட் 5500 ரூபாய் என்றால் உடனே நாங்க இந்த இடத்தை வாங்கிக் கொள்கிறோம். வேண்டுமானல் போன் போட்டு ஓனரிடம் பேசி ஒரு முடிவு எங்களுக்குச் சொல்லுங்க”.

***

தொலைப்பேசியில் பேசிய பிறகு அசோக் இவர்களிடம் ஸ்கொயர் ஃபீட் 5500 ரூபாய் ஓக்கே என்று கூறி விட்டார் ஓனர் என்றான்.. இவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி, இருந்து இருந்து ஒரு நல்ல இடம் அமைய போகிறது என்று மனதில் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.

“சார் டோக்கன் அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்குறீங்க?”

“உங்க ஜீ.பேவில் டோக்கன் அட்வான்ஸ் 5000 ரூபாய் உடனே செலுத்துகிறேன்”.

“உங்களுக்குக் கம்பெனி ரூல்ஸ் தெரிவிக்கிறேன். ஏனெனில் முதலில் சப்-டிவிஷன் செய்ய வேண்டும். அதற்குச் செலவாகும், அதை ஓனர் கொடுக்க மாட்டார்”. நீங்கள் தான் இந்தக் கிரவுண்டை வாங்கும் பணத்திலிருந்து சப்-டிவிஷன் சார்ஜை செலுத்தவேன்டும்.

“சப்-டிவிஷன் செய்வதற்குக் குறைந்தது எவ்வளவு செலவாகும்?” அரசாங்க வேலை அல்லவா குறைந்தது ஒரு லட்சம் ஆகும்”.

“நீங்கள் எனக்கு இரண்டு தவனையாகச் செலுத்துங்க., நான் மற்ற காரியங்களைப் பார்கிறேன்”.

“இல்லை முதலில் இடத்துடைய பத்திரத்தின் நகல் எங்களுக்கு வேண்டும்”. அதை நாங்கள் எங்கள் அட்வகேட் இடம் காண்பித்து வில்லங்கம் ஏதேனும் உள்ள தா என்று சரி பார்த்த பிறகு நீங்க கேட்ட தொகையைக் கொடுக்க முடியும்”.

“அதுவும் சரியே, இன்று சாயங்காலம் நான் உங்களிடம் இந்த இடத்தின் பத்திரத்தின் நகலை தருகிறேன்”. இதற்குப் பிறகு ராம் மற்றும் கலா தங்களுடைய ஸ்கூட்டரில் கிளம்பி வீடு வந்தடைந்தனர்.

***

சாயங்காலம் அசோக் சொன்னபடி பத்திரத்தின் நகலை ராமிடம் கொடுக்க. அதை வாங்கிப்பார்த்தான் ராம், எங்களுக்குக் குறைந்தது மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும். இந்தப் பத்திரத்தின் நகலை எங்களுடைய அட்வகேட் இடம் கொடுத்து வில்லங்கம் சரிபார்த்த பிறகு, நான் உங்களுக்குத் போன் போட்டு பேசுறேன் சரியா?”.

அடுத்த நாள் அட்வகேட் இடம் பத்திரத்தின் நகலை கொடுத்து சரி பார்க்க சொன்னான் ராம். அட்வகேட் பத்திரத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, “உங்களுக்கு ஓரல் கன்சல்டேஷன் வேண்டுமா? அல்லது ரைட்டப்பில் வேண்டுமா என்று கேட்டார்”.

“அட்வகேட் சார் எங்களுக்குக் கிளியரன்ஸை ரைட்டப்பில் கொடுத்துடுங்க அதான் சரியாக இருக்கும்”.

“அப்போ போயிட்டு இரண்டு நாள் கழித்து வாங்க என்னுடைய டீம் இதை அனைத்தையும் ஸ்கூர்டனைஸ் செய்து எனது பார்வைக்கு வைப்பார்கள். நான் அதை ஒரு தடவை பார்த்துவிட்டு உங்களுக்கு ரைடிங்கில் கொடுத்துடுறேன்.“

இரண்டு நாள் ஆனவுடன் ராம் அட்வகேட் இடம் போன் போட்டுப் பேசினான். அட்வகேட் இன்னும் இரண்டு நாள் வேண்டும் என்று அவனிடம் கூற. அவனும் சரியென்று கூறினான். இதற்கிடையில் அசோக் போன் போட்டு “சார் என்ன ஆச்சு?”

“எங்களுக்கு, அட்வகேட் இன்னும் பேப்பரை கொடுக்க வில்லை இன்னும் இரண்டு நாள் தவனைக் கேட்டிருக்கிறார்கள். மேலும் இரண்டு நாட்கள் வேண்டும் என்றான்” ராம்.

ஆனால் மறு முனையில் அசோக் கூறினான். “சார் பேப்பர் வரது வரட்டும், நீங்க கொடுக்க வேண்டி அட்வான்ஸ் அமௌன்ட் கொடுத்தா நல்லா இருக்கும். நிறைய நபர்கள் வந்து இதே இடத்தைப் பார்த்துவிட்டுப் போய்யிருக்கிறார்கள்”.. அவர்கள் எல்லாம் டோக்கன் அட்வான்ஸா லட்ச கணக்கில் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். “நான் தான் உங்களிடம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கியதால் ஒன்றும் பேசாமல் இருக்கிறேன் என்றான்.”

“எப்படிப் பேப்பர் வராமல் கொடுப்பது?”

“இந்த இடம் எந்த வில்லங்கமும் இல்லாத இடம். என்ன நம்பி பணத்தைக் கொடுங்க, நான் உங்களுக்கு ரிசிப்ட் தருகிறேன் என்றான்” அசோக்.

ராம் சிறிது நேரம் யோசித்து விட்டு “சரி நான் உங்களுக்குப் பார்ட் பேமென்ட் தரறேன் அதற்கு ரிசிப்ட் கொடுங்க என்றான்.” ‘எப்போதும் முடிவெடுக்கும் முன்னர்க் கலாவிடம் ஒரு வார்த்தை கேட்பான் ராம். ஆனால் இந்த முறை ஏனோ அவன் அவளிடம் கேட்கவில்லை.’

***

மறுநாள் காலை எழுந்தவுடன், “கலா நான் உன்னிடம் கேட்காமலே அட்வான்ஸ் அமௌன்ட் கொடுப்பதாகச் சொல்லிவிட்டேன் அசோகிடம்.” ‘அவள் ஒரு வினாடி யோசித்தாள் “……” மௌனம் நீலவியது அங்கு. பிறகு குளித்து முடித்த பின்னர்க் காலை உணவு உண்ட பிறகு, நேரே லாக்கரில் உள்ள காசோலையை எடுத்து அதில் அட்வான்ஸ் அமௌன்டை எழுதி தன் பையில் வைத்துக்கொண்டு அசோக்கை பார்க்க சென்றான்.’

செல்லும் வழியில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது, ‘ஒரு முறை ஏன் நாம் அட்வகேட் இடம் நேரே சென்று பார்க்க கூடாது. முடிந்தால் அவர்களிடம் நேராக ஒபினியன் வாங்கி விடலாம். பிறகு அசோகிடம் போய் அட்வான்ஸ் அமௌன்டை கொடுக்கலாம் என்று மனதில் எண்ணியவுடன் நேரே ஸ்கூட்டரை அட்வகேட் இடத்திற்குச் செலுத்தினான்.’ “அங்கு வந்து அவர்களிடம் நேரே கேட்டான்”., “பதில் அவர்கள் சாதகமாகச் சொன்னார்கள்.” அதாவது பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை என்று. நாளை வாங்க ரைட்டப்பில்  கொடுத்துவிடுகிறேன் என்று அட்வகேட் கூறினார் ராமனிடத்தில்.”

உடனே காசோலையை எடுத்துக்கொண்டு அசோக்கை பார்க்க சென்றான் ராம். கிளம்பும் முன்னர் மறுபடியும் ‘ஒரு முறை அட்வகேட் இடம் சார் எல்லாம் சரி தானே? ஏனெனில் நான் அட்வான்ஸ் அமௌன்ட கொடுக்கப் போறேன்.’

“எவ்வளவு அட்வான்ஸ் அமௌன்ட கொடுக்கப் போறீங்க?”

“முதல் தவனையாய் 25000 ரூபாய் கொடுக்கப் போகிறேன், பிறகு படிப்படியாகப் பணத்தைக் கொடுத்துவிடுவேன்”.

“ஓக்கே பணத்தைக் கொடுங்க பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை அதனால் நீங்க கொடுக்கலாம்”.

“நன்றி சார்” நாளை வந்து ரைட்டப்பில் வாங்கிக்கொண்டு போறேன்”.

ஸ்கூட்டர் கிளம்பி நேரே அசோக் இருக்கும் இடத்திற்கு வந்து அடைந்தது. ராம் தன் பையில் உள்ள காசோலையை எடுத்து அசோகிடம் கொடுக்க, அதை அசோக் முக மலர்சியுடன் பெற்றுக் கொண்டான். பின் அசோகிடம் லோன் வாங்கித் தான் இந்த இடத்தை வாங்குறோம் என்றான் ராம்.

“,நாங்கள் எங்களுக்குத் தெரிந்த வங்கியில் லோன் ஆர்கனைஸ் செய்திடுவோம்”.

“இல்லை எனக்குத் தெரிந்த நபர் இருக்கிறார் அவர்

மூலம் நான் லோன் பெற்றுக் கொள்வேன்”. என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான் ராம்.

போன் போட்டு தனக்கு தெரிந்த லோன் கொடுக்கும் நபரிடம் அப்பாயின்மென்ட் கேட்டுப் பேசினான். அவரு ஒரு தேதி சொல்லி ராமை அவரிடத்திற்கு வரச் சொன்னார். இரண்டு மூன்று நாட்கள் அப்படியே சென்றது. மீண்டும் அட்வான்ஸ் அமௌன்டை கேட்டு அசோக் போன் போட்டு ராமிடம் கேட்க இப்ப தான் கொடுத்தேன் அல்லவா என்று ராம் சொல்ல.

“நான் தான் அரசாங்க வேலை என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா பணம் இருந்தால் மட்டும் காரியம் நடக்கும் இல்லை என்றால் அப்படியே போட்டு விடுவார்கள்.”

“சரி நாளை உங்களைப் பார்க்றேன் நான் உங்களைப் பார்க்கும் போது ஒரு பார்ட் பேமென்ட் செய்றேன்”. என்றான் ராம்.

***

டுத்த நாள் காலை அலுவலகம் செல்லும் முன்னர் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து ஒன்பதிலிருத்து பத்து மணிக்குள் அசோக் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் முன்னரே சொல்லியிருந்த மாதிரி அவன் எடுத்து வந்த பணத்தை அசோகிடம் கொடுத்துவிட்டு சப்-டிவிஷன் பேப்பர் எப்போது கைக்கு வரும் என்று கேட்டு விவரம் அறிந்து கொண்டு நம்பிக்கையுடன் அலுவலகம் கிளம்பும் முன்னர். “ட்ரிங்..ட்ரிங்” தொலைப்பேசி மணி அடித்தது. யார் என்று பார்க்கையில் அந்தப் பக்கம் அவனது நண்பர் அவர்தான் வங்கி லோன் ஆர்கனைஸ் செய்து பொடுப்பவர் என்று அறிந்துகொண்டவுடன்.

“ஹலோ சார் எப்படி இருக்கீங்க?””

“கடவுள் புன்னியதில் நல்லா இருக்கிறேன் ராம்”

“நீங்க சிறிது நேரம் என்னுடைய ஆபீஸுக்கு வர முடியுமா?”

“அதற்கு என்ன சார், கட்டாயம் வருகிறேன்” பக்கத்தில் தான் உள்ளது உங்க ஆபீஸு”. நண்பரின் ஆபீஸுக்கு விரைந்தான் ராம். அங்கு அவரைப் பார்த்து லோன் சம்பந்தமாகச் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சமயத்தில் ராமின் நண்பர் “ எந்த இடம் என்று சொன்னீர்கள்?”

“அதான் சார் அசோக் நகர் 7வது அவின்யூ “. “………” ‘சிறிது நேரம் ராமுடைய நண்பர் மௌனமாக இருந்தார்’

‘மௌனத்தை உடைக்கும் வகையில் ராம் அவரிடம் ஏன் சார் மௌனம் என்றான்.

“ஒன்னுமில்ல பத்திரத்தையெல்லாம் சரிவர அட்வகேட் இடம் கொடுத்து சரிபார்த்தாச்சா?”

“அதெல்லாம் அட்வகேட் அவர்கள் சரி வில்லங்கமெல்லாம் இல்லை என்று சொன்ன பிறகுதான் அட்வான்ஸ் அமௌன்ட் எல்லாம் கொடுத்திருக்கேன்.”

“சுமார் எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்திருக்கீங்க”.

“சார் அது வந்து வந்து”

“சும்மா சொல்லுங்க”

“சுமார் ஒரு லட்சம் கொடுத்திருக்கேன் சார்”

“நான் சொல்றதை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.” நீங்க சொன்ன இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழே வரும் போல் தோன்றுகிறது.”

“ஒரு முறை முனிசிபல் கார்ப்பரேஷன் போய் அந்த இடத்தைப் பற்றி விசாரிங்க.” பிறகு மற்ற ஃபார்மாலிடீஸ் எல்லாம் செய்யலாம்”.

“என்ன சார் பயமுறுருத்துறீங்க”.

“பயப்பட வேண்டாம் முதலில் போய் விசாரிங்க, ஒரு வேளை அந்த இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட கீழ் வரவில்லை என்றால் நல்லதுதானே!”

“சரி சார் நான் முதலில் போய் விசாரிக்கிறேன்”. ஸ்கூட்டர் நேரே மறுபடியும் அசோக்கிடம் வந்து அடைந்தது.

“எனக்கு இப்போதுதான் தெரியவந்தது நீங்க எங்களுக்குக் காண்பித்த இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழ் வருகிறதாமே?”

“அப்படியா சார்” “அப்படி இருந்தால் நாங்க உங்களுக்கு என்.ஓ.சி வாங்கிக் கொடுத்திடுவோம்”

“யாரிடமிருந்து என்.ஓ.சி வாங்கிக் கொடுப்பீர்கள்”

“அரசாங்கத்திடமிருந்து தான்” குழப்பத்துடன் அலுவலகம் செல்லாமல் வீடு திரும்பினான் ராம்.

***

ண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது இந்த விஷயம். ராம் யோசீக்கத் தொடங்கினான், எங்குக் கேட்பது யாரை நாடுவது என்று இருக்கையில். அவனுக்கு ஒரு யோசனை உதித்தது. ‘ஏன் கூகிலில் தேடி பார்க்க கூடாது. அதில் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டைப் பற்றித் தகவலிருந்தால்! ‘ஏன் நாம் அதிலிருந்து எடுத்து அவர்களிடம் உதவி கேட்க கூடாது?’ பெரிய போராட்டத்திற்குப் பிறகு தகுந்த நபரின் விவரங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு. அவரிடம் மின் அஞ்சல் மூலம் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கேட்டான்.’

இரண்டு தினங்களுக்குள் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டிலிருந்து பதில் வந்திருந்தது. பதிலை படித்தவுடனே கவலையில் ஆழ்ந்தான் ராம். ஏனெனில் பதில் அவனுக்குச் சாதகமாக இல்லை. இவர்கள் அட்வான்ஸ் கொடுத்து வாங்க போகும் இடம் சரியாக ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழ்தான் வருகிறது.. அந்த மின் அஞ்சலில் தாங்கள் இடத்தை வாங்க வேண்டாம், ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் நிலத்தைத் தோண்டி பார்க்க வாய்ப்பு உள்ளது என்று எழுதியிருந்தது. அடுத்த நாள் காலை அவன் முனிசிபல் கார்ப்பரேஷன் சென்று அங்கும் விசாரித்தான். அவர்களும் இடத்தை வாங்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள். பதற்றத்துடன் அட்வகேட் இடம் வந்து நிலவரத்தை சொன்னான்.

“அதற்கு அட்வகேட் நாங்க பத்திரத்தில் வில்லங்கம் ஏதேனும் உள்ள தா என்று தான் பார்ப்போம். மற்றது எல்லாம் நீங்க தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்”. என்ன செய்வது என்று தெரியாமல் அசோகிடம் வந்து பணத்தைத் திருப்பித் தரும்படி சொன்னான்.

“சார் வேறு இடம் வேண்டுமானாலும் நான் காட்டுகிறேன் என்று ராமிடம் சொல்ல.”

“வேறு வழியின்றி இரண்டு இடத்தைப் பார்வையிட்டனர் ஆனால் எதுவும் அவர்களுக்குப் படிக்கவில்லை”

“பணத்தைத் திருப்பிக் கேட்டனர்”

“சப்-டிவிஷன் செய்வதற்குக் கொடுத்து விட்டேன், இந்த நிலத்தை விற்றுதான் உங்களுக்குப் பணம் தர முடியும் என்று கூறி விட்டான் “அசோக்.

வருஷங்கள் உருண்டோடியது ஒன்ற, இரண்டு, மூன்று….. என வருடங்கள் சென்றது தான் மிச்சம். இவர்களது பணம் இவர்கள் கையில் திரும்பி வரவில்லை.

“எப்ப அசோகிடம் கேட்டாலும் நிலத்தை விற்றுதான் பணத்தைத் தர முடியும் என்று ஒரே பதிலை கூறிக் கொண்டு வந்தான்.

எவ்வளவோ முயற்சி செய்து பார்த்த பின்பு ராம் ஒரு கட்டத்தில் அசோக் பொய் மேல் பொய் சொலிக் கொண்டுதான் இருக்கிறான். அவனிடத்திலிருந்து ‘பணத்தைத் திருப்பிக் வாங்குவது என்பது முடியாத காரியம்.’ ‘எப்படி இவனிடமிருந்து இந்தப் பணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளவது’. ‘போலீஸிடம் செல்லலாமா?’ இல்லை அவர்களிடம் சென்றால் நாம் அலைய வேண்டியது இருக்கும். ‘அப்படி அவர்களிடம் செல்லவதாக இருந்தால் முதல் வருடத்திலேயே போயிருந்திருக்கலாமே.’ என்ன செய்யலாம்? இந்த மூன்று வருஷங்களாக யோசித்துக் கொண்டிருந்த ராம்.. கடைசியாக அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது ஏன் நாம் முகநூலில் அசோக் கொடுத்த ரிஸிப்ட் எல்லாத்தையும் சேர்த்து அவனுடைய போட்டோவும் அதனுடன் இணைத்து, இந்த மாதிரி இவன் என்னை ஏமாற்றி விட்டான்.’ ‘அனைவரும் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.’ ‘இந்த நபரிடம் பணம் கொடுக்கும் முன் ஒரு தடவைக்கு மேல் யோசித்து விட்டுப் பணத்தைக் கொடுங்க என்றெல்லாம் அதில் எழுதி முகநூலில் பகிரிந்தான் ராம்’.

மூன்று வருஷங்களாக போராடிய ராமுக்கு ஒரு மாதத்திற்குள் ஒரு போன் வந்தது.

“சார் நான் அசோக் பேசுறேன்”

“என்ன அசோக் மூன்று வருஷமாக நாங்க தான் போன் போட்டு உன்னுடன் பேசுவோம்.” “ முதல் முறையாக நீ எங்களுக்குப் போன் போட்டு பேசிக் கொண்டிருக்க. என்றான் ராம்.

“சார் நான்தான் தருகிறேன் என்று சொல்றேன் அல்லவா பிறகு ஏன் முகநூலில் என்னைப்பற்றிப் பகிர்ந்தீர்கள்?”

“நாங்க ஒன்னும் பொய் சொல்லவில்லை மூன்று வருஷங்களாகப் போராடி பார்த்தோம் ஆனால் உன்னிடமிருந்து ஒரு பைசா கூட வாங்க முடியவில்லை அதான் எல்லா ஆதாரத்தையும் இணைத்து முகநூலில் பகிர்ந்தேன். என்னைப் போன்று வேறு யாரேனும் இது போன்று மாட்டிக் கொள்ளக் கூடாதுனு தான்.”

“சார் முகநூலிலிருந்து அந்தப் பதிவை நீக்குங்கள்”. “நான் உங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்”. ‘நீங்கள் போட்ட இந்தப் பதிவால் என் வேலை பறிபோனது எனது கம்பெனியிக்கு யாரும் வர மாட்டேங்கிறாங்க’.

“சரி பணத்தைக் கொடு நான் பதிவை நீக்கி விடுகிறேன்” என்றான் ராம். இதற்குப் பிறகு ராம் மற்றும் கலாவிற்குச் சிறிய தெம்பு வந்தது.

அவர்களுடைய பணம் அவர்களிடம் திரும்பி வந்து விடுமென்று.”

  •  

இசையே வாழ்க்கை

சிறந்த இசைக்காக ஐந்து ஆஸ்கார் விருதுகள், 26 கிராமி விருதுகள் , ஏழு பாஃப்டா விருதுகள் , மூன்று எம்மி விருதுகள் மற்றும் நான்கு கோல்டன் குளோப் விருதுகள் பெற்றுள்ள இசைக்கலைஞர் ஜான் வில்லியம்ஸ் பற்றிய ஆவணப்படம் Music By John Williams. இதனை லாரன்ட் பௌசெரியோ இயக்கியுள்ளார்.

92 வயதான ஜான் வில்லியம்ஸ் தனது பெற்றோர் மற்றும் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஜாஸ் இசை மீதான அவரது தீராத ஆர்வம். மற்றும் பியானோ நிகழ்ச்சிகளை நடத்திய நாட்களைப் படம் அழகாக விவரிக்கிறது.

ஜான் வில்லியம்ஸின் தந்தை ஒரு இசைக்கலைஞர். ஹாலிவுட் திரைப்பட இசைக்குழுவில் பணியாற்றியவர். ஆகவே தனது மகனை சிறந்த பியானோ இசைக்கலைஞராக உருவாக்க சிறுவயது முதலே பயிற்சிகள் கொடுத்திருக்கிறார்.

திரையுலகில் ஜான் வில்லியம்ஸ் அறிமுகமான போது சந்தித்த நெருக்கடிகள் ஏராளம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் நட்பு அவரைத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக மாற்றியது. அவர் வழியாகவே இயக்குநர் லூகாஸ் அறிமுகமாகியிருக்கிறார். ஸ்டார் வார்ஸ் உருவாகியிருக்கிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்திற்கு அவர் எவ்வாறு தனித்துவமாக இசையமைக்கிறார் என்பதை விவரிப்பது சுவாரஸ்யமானது. Superman, Harry Potter, ET, Jaws, Indiana Jones, Schindler’s List, Saving Private Ryan, Harry Potter series. போன்ற படங்களின் இசையமைப்பு குறித்து ஜான் வில்லியம்ஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இசையமைப்பதற்காக வீட்டில் தனியறை இல்லாத காலங்களில் ஸ்டுடியோவிலே நாள் முழுவதையும் கழித்தேன். எனது மனைவி பார்பரா ரூயிக் ஒரு பாடகி. ஆகவே அவர் எனது இசை ஆர்வத்தைப் புரிந்து கொண்டார். பரபரப்பான திரையிசைப் பணிகளுக்கு நடுவே 41வயதில் திடீரென மனைவியை இழந்த போது வாழ்க்கை முற்றிலும் வெறுமையாகிப் போனது. அப்போது என்னை மீட்டது இசையே. இசை தான் எனது வாழ்க்கை. எனது மீட்சி என்கிறார் ஜான் வில்லியம்ஸ்

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் தான் மிகவும் குறைவாகவே சினிமா பார்க்க கூடியவன் என்கிறார். ஜான் வில்லியம்ஸின் சிரிப்பு அத்தனை அழகானது. அவரும் ஸ்பீல்பெர்க்கும் சந்தித்துக் கொள்ளும் போது வயதைக் கடந்து இருவரும் பதின்வயது நண்பர்களாகி விடுகிறார்கள்.

கிளாசிக்கல் இசை நிகழ்ச்சி. புகழ்பெற்ற இசைக்க்குழுவை வழிநடத்தும் இசை நடத்துனர் பணி என அவரது பன்முகத்திறமையை ஆவணப்படம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையை அவர் மக்கள் முன்பாக நேரடியாக நிகழ்த்திக் காட்டும் நிகழ்வு சிலிர்ப்பூட்டுகிறது.

“Music is enough for a lifetime, but a lifetime is not enough for music.”என்கிறார் ஜான் வில்லியம்ஸ். நிகரற்ற இசையமைப்பாளரின் ஆளுமையை இந்த ஆவணப்படம் சிறப்பாக விவரித்துள்ளது.

  •  

சமையற்கலைஞரின் ஞானம்.

நீங்கள் விரும்பும் ஒரு தொழிலைத் தேர்வு செய்து அதில் உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்து உச்சநிலையை அடைய முடிந்தால் அதுவே வாழ்வின் உண்மையான வெற்றி என்கிறார் சமையற்கலைஞர் ஜிரோ ஓனோ.

ஜப்பானின் புகழ்பெற்ற உணவகம் சுகியாபாஷி ஜிரோ. தோக்கியோவில் உள்ளது. பத்து இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறியதொரு உணவகம். அங்கே சுஷி எனப்படும் மீன் உணவு புகழ்பெற்றது. ஒரு மாதகாலத்திற்கு முன்பு பதிவு செய்தால் மட்டுமே சாப்பிட இடம் கிடைக்கும்.

அங்கே உணவிற்கான கட்டணம் அதிகம். ஆனால் அதன் தரத்திற்காக அவ்வளவு பணம் கொடுக்கலாம் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

ஜிரோ தனது உணவகம் பற்றிய அனுபவங்களையே பகிர்ந்து கொள்கிறார். ஆனால் அதில் வெளிப்படும் ஞானம் நம் அனைவருக்கும் பொதுவானது. அவர் வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எதுவென அடையாளம் காட்டுகிறார். தனது வேலையை ஒருவர் எவ்வளவு நேசமிக்க முடியும் என்பதற்கு அடையாளமாக இருக்கிறார்.

ஜப்பானின் உயரிய விருதுகளில் ஒன்று இந்த உணவகத்தை நடத்தும் ஜிரோ ஓனோவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருதுவழங்கும் நாளில் கூட அவரது உணவகத்திற்கு விடுமுறை விடப்படவில்லை. காலையில் விருது பெற்றுவிட்டு மதியம் தனது உணவகத்திற்க்கு வந்துவிட்டார்.

எண்பது வயதைக் கடந்த அவரது அனுபவங்களையும் அவரது இரண்டு மகன்களையும் பற்றிய ஆவணப்படம் Jiro Dreams of Sushi மிக நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது

இது சுஷி  உணவகம் பற்றிய ஆவணப்படமாக இருந்தாலும் ஜிரோ ஓனோவின் வாழ்க்கை மற்றும் ஜப்பானிய உணவு முறைகள், சந்தை மற்றும் மாறிவரும் உணவுப்பழக்கம். தந்தை மகன் உறவு பற்றியதாகவும் விரிகிறது. புகழ்பெற்ற தந்தையின் நிழலில் வளரும் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனைகளை அவரது இரண்டு மகன்களும் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார்கள்.

தனது உணவகத்திற்கு ஒருவர் பயிற்சியாளராக வந்தால் பத்தாண்டுகளுக்கு பின்பே அவருக்கான பதவி கிடைக்கும். அதுவரை அவர் உணவு தயாரிப்பதில் தனது ஈடுபாட்டினைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார் ஜிரோ.

சமைப்பதில் காட்டும் அவரது ஆர்வத்தை அதை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவதிலும் காட்டுகிறார். சாப்பிடுகிறவர்கள் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியே அவரை சந்தோஷம் கொள்ள வைக்கிறது. தியானப்பயிற்சி அளிக்கும் குருவைப் போலவே அவர் நடந்து கொள்கிறார்.

மீன் உணவுகளை சமைக்கும் அந்த உணவகத்திற்குத் தேவையான மீன்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்பதையும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதில் டூனா மீன்களை விற்பனை செய்பவரின் நேர்காணல் சிறப்பாக உள்ளது. இது போல அவர்கள் பயன்படுத்தும் அரிசி. அதை வேக வைக்கும் விதம். உணவு சமைப்பதற்கான மரபான முறைகள், பரிமாறும் விதம் ஆகியவையும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடல் உணவுகளை மட்டுமே அவர் தனது உணவகத்தில் வழங்குகிறார். மதுவோ, வேறு சிற்றுண்டிகளோ அங்கு வழங்கப்படுவதில்லை. எவ்வளவு புகழ்பெற்றிருந்தாலும் அதிக இருக்கைகளை அவர் உணவகத்தில் ஏற்படுத்தவில்லை. இசை நிகழ்ச்சியின் நடத்துனர் எவ்வளவு கவனமாக இசையை நிகழ்த்துவாரோ அது போலவே உணவகத்தை நடத்துகிறார். இதன் மாறாத தரத்தின் காரணமாக உலகின் 6வது சிறந்த உணவகமாக தரவரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒருவர் தனது வேலையில் முழுமையாக  மூழ்குதல்  வேண்டும். அதன் வழியே தனது திறமையை மேம்படுத்திக் கொண்டேயிருக்க முடியும்.   தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாடு இல்லாத எவராலும் உச்சநிலையை அடைய முடியாது. ஆகவே வணிக வெற்றிகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தனது திறமைகளை ஒருவர் இடைவிடாமல் மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு அயாரத உழைப்பும் புதியன செய்வதில் நாட்டமும் முழுமையான ஈடுபாடும் தேவை.

ஒவ்வொரு நாளும் தனது தரத்தை விட்டுக் கொடுக்காமல் உணவு தயாரிப்பது எளிதானதில்லை. ஆனால் அதில் வெற்றி அடைவதன் மூலமே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும் என்கிறார் ஜிரோ. தனது வேலையின் மீது ஒருவர் சலிப்படைந்து அதை பற்றி புகார் சொல்லிக் கொண்டேயிருந்தால் அவரால் வெற்றியை அடைய முடியாது. வாடிக்கையாளர்களின் அன்பை பெறுவதற்கு அவர்களுக்கான இருக்கை துவங்கி அவர்கள் வலது கை பழக்கம் கொண்டவர்களா இடது கை பழக்கம் கொண்டவர்களா என்பது வரை அறிந்து வைத்து அதற்கேற்ப உணவு பரிமாற வேண்டும் என்றும் சொல்கிறார். 

வெப்பநிலையைப் பொறுத்து மணமும் சுவையும் மாறுபடக்கூடியது. ஆகவே சூடான உணவை எப்படி வழங்குவது என்பதை கவனமாகத் திட்டமிட வேண்டும்.  உணவகத்தில் அனைவரும் இணைந்து ஒரே அலைவரிசையில் வேலை செய்யும் போது தான் சாத்தியமாகும், என்று சொல்கிறார் ஜிரோ

ஜிரோவின் மூத்த மகன் யோஷிகாசுவுடனான அவரது உறவு மற்றும் இளையமகனின் ஆதங்கம், தனது மரபை பிள்ளைகள் தொடர்வதில் உள்ள மகிழ்ச்சி ஆகியவற்றை ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். 85 வயதான ஜிரோ ஓனோ, உணவு சமைப்பதை கலைப்படைப்பாக மாற்றுகிறார். அதை ஆவணப்படத்தில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

••

  •  

மண்டியிடுங்கள் தந்தையே மொழியாக்கம்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் இந்தி மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்புகள் ஆண்டின் இறுதிக்குள் வெளியாக கூடும்.

  •  

வழிவிடும் வானம்

குட்டி இளவரசன் நாவலை எழுதிய பிரெஞ்சு எழுத்தாளர். அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் ( Antoine de Saint-Exupery) வாழ்க்கை வரலாற்றை மையமாக் கொண்டு Saint-Exupéry திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை இயக்கியிருப்பவர் பாப்லோ அகுவேரோ. 2024ல் வெளியான திரைப்படம்.

எக்சுபெரி தபால்கள் கொண்டு செல்லும் விமானத்தின் விமானியாகப் பணியாற்றியவர். ஏர்மெயிலில் தான் பணியாற்றிய அனுபவங்களை இரண்டு நாவல்களாக எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் கதை 1930ல் நிகழ்கிறது. பிரெஞ்சு நிறுவனமான ஏரோபோஸ்டெலின் அர்ஜென்டினா கிளையில் விமானிகளாக ஹென்றி குய்லூமெட் மற்றும் எக்சுபெரி பணியாற்றுகிறார்கள்.

ஒருமுறை தபால் கொண்டு செல்லும் விமானம் கடுமையான புயல்மழைக்குள் சிக்கிக் கொள்கிறது. காற்றின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் விமானி எக்சுபெரி தடுமாறுகிறார். இன்றிருப்பது போல அன்று நவீன உபகரணங்கள் விமானத்தில் கிடையாது. அவரது நண்பரான ஹென்றி குய்லூமெட் இன்னொரு விமானத்தில் பறந்தபடியே உதவிகள் செய்கிறார். இருவரும் இணைந்து முடிவில் தரையிறங்கும் பாதையைக் கண்டறிகிறார்கள். விமானம் பத்திரமாகத் தரையிறங்குகிறது. மனிதர்களை விடவும் அவர்கள் கொண்டு வந்த தபால்களே முக்கியமானது எனச் சொல்கிறது விமான நிறுவனம்.

படத்தின் இந்தத் துவக்க காட்சிகள் சிறப்பாக உள்ளன. விமான நிறுவனம் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி ஆட்குறைப்பில் ஈடுபட முனைகிறது. இதனை ஏற்க மறுத்த எக்சுபெரி ஆண்டிஸ் மலைத்தொடரைக் கடந்து வருவதற்கான மாற்றுவான்வழியை உருவாக்க முனைகிறார். விமானத்தில் புதிய விளக்குகள் பொருத்தப்படுகின்றன. புதிய வழித்தடம் திட்டமிடப்படுகிறது.

அர்ஜென்டினாவிற்கும் சிலிக்கும் இடையில் தபால்பைகளைக் கொண்டு செல்வதற்காக ஹென்றி குய்லூமெட் விமானத்தில் புறப்படுகிறார். 1930 ஜூன் 13 வெள்ளிக்கிழமை மோசமான வானிலை காரணமாக விமானம் ஆண்டிஸ் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகிறது.

மனித நடமாட்டமேயில்லாத பகுதியில் உறைபனியின் ஊடாக உயிருக்கு போராடிய நிலையில் ஹென்றி குய்லூமெட் நடக்கிறார். அவரைக் கண்டறிந்து மீட்பதற்காக எக்சுபெரி அதே பாதையில் பயணிக்கிறார். Wind, Sand and Stars புத்தகத்தில் அந்த அனுபவம் விவரிக்கபட்டிருக்கிறது

சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தத் தேடலில் எப்படி எக்சுபெரி ஈடுபடுகிறார் என்பதே படத்தின் மையக்கதை.

அந்தக் கால விமானப்போக்குவரத்து நிறுவனங்களின் செயல்பாடுகள். மின்விளக்குகள் இல்லாத ஒடுதளங்கள் மற்றும் விமான நிலையத்தின் தொடர்பு அறை, என நூற்றாண்டுகளுக்கு முந்தைய விமானசேவையைத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார்கள்.

1929 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவுக்குக் குடிபெயர்ந்த, செந்த்-எக்சுபெரி, அங்குப் பிரெஞ்சு விமான அஞ்சல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சதர்ன் மெயில் மற்றும் நைட் ஃப்ளைட் ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். தமிழில் விடியலைத் தேடிய விமானம் என வெளியாகியுள்ளது. பறத்தலின் இன்பத்தை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.

இதில் இரவுநேர விமானப்பயணத்தின் நிஜமான சவால்களை எழுதியிருக்கிறார். மேலும் விமானியின் மனநிலை மற்றும் வானிலிருந்து காணும் அழகிய காட்சிகள். விமானிகளுக்குள் உருவாகும் நட்பு மற்றும் நிர்வாகத்தின் கெடுபிடிகள் பற்றியும் சிறப்பாக எழுதியிருப்பார். இந்த அனுபவங்களையே இப்படமும் விவரிக்கிறது.

குறிப்பாக நண்பரைத் தேடி மேற்கொள்ளும் ஆண்டிஸ் மலைப் பயணத்தின் போது வெளிப்படும் நிலவெளிக்காட்சிகள் அபாரமானவை. விமானத்துடன் நாமும் கூடவே பறப்பது போன்று அழகான காட்சிகள். ஒளிப்பதிவாளர் கிளேர் மாதன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எக்சுபெரியின் எழுத்துலகம் பற்றியோ, சொந்த வாழ்க்கை பற்றியோ படம் அதிகம் கவனம் கொள்ளவில்லை. மாறாக அவரது நட்பு மற்றும் துணிச்சலான பறத்தலை மட்டுமே விவரிக்கிறது.  விமானியான எக்சுபெரியின் உலகை மட்டுமே நாம் காணுகிறோம்.

விமானத்தில் பறந்தபடியே அவர் கனவு காணுகிறார். அல்லது உலகம் கனவில் வெளிப்படும் காட்சிகள் போன்று தோற்றமளிக்கிறது.  தனது சொந்த உடலை இயக்குவது போலவே விமானத்தைக் கையாளுகிறார். உறுதியான நம்பிக்கையும் தைரியமும் ஆழ்ந்த அன்புமே அவரை இயக்குகிறது.

நட்பின் பல்வேறு பரிமாணங்களையே குட்டி இளவரசனிலும் காணுகிறோம். அவன் எல்லோருடன் நட்பு பாராட்டுகிறான். அவனால் நரியுடன் கூட நட்பாகப் பழக முடிகிறது. ஹென்றி குய்லூமெட்டின் கதை நம்ப முடியாத நிஜம். ஒருவகையில் அவரும் ஒரு குட்டி இளவரசனே.

  •  

எஸ்.ரா 100 இணைய நிகழ்வு

நாளை 21.5.25 மாலை நடைபெறுகிற எஸ் ரா நூறு இணைய நிகழ்வில் எனது நான்கு நூல்கள் குறித்த உரைகள் இடம்பெறுகின்றன. இதனை முனைவர். வினோத், முனைவர் ஸ்ரீதர் மற்றும் முனைவர் நாகஜோதி இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்.

  •  

காசியில் குமரகுருபரர்

முனைவர் ந.பாஸ்கரன்,

இணைப் பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 

                                                       

குமரகுருபரர் 1625-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்ற ஊரில் சைவ மரபில் பிறந்தார்.  சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிள்ளைப் பிராயத்தில் பேசும்வயதை அடைந்தும் அவர் பேசும்திறன் பெறவில்லை. எனவே இவர் பெற்றோர் திருச்செந்தூர் முருகனைவேண்டி  கோயிலில் தங்கி உப்பில்லாத உணவை உண்டு 40 நாட்கள் விரதம் இருந்தனர். 45-ஆம் நாள்  பேசும் ஆற்றலை அடைந்தான். இறைவனுக்கு நன்றி சொல்லிக் கடன்பட்டனர். சிறுவயதிலேயே இறைவன்மீது கந்தர்கலிவெண்பா பாடி அருளினார். இறைவன்மீது கொண்ட பக்தியின் காரணமாக தலயாத்திரை மேற்கொண்டு பலதளங்களும் சென்றுவர புறப்பட்டுச் சென்றார். அப்பொழுது தருமபுரம் ஆதீனம் வந்தார்.  ஆதீனகர்த்தரிடம் இவர் வாக்குத் தடைபட்டது அதனால் மாசிலாமணி தேசிகரையே தனது குருவாக ஏற்றார். சைவ சமயத்தை அழித்து இஸ்லாத்தைப் பரப்பும் பணியில் இஸ்லாமியர் பாடுபட்டனர். இதனை உணர்ந்த மாசிலாமணி தேசிகர் இஸ்லாத்துக்கு எதிராகநின்று சைவத்தை நிலைநாட்டும் திறன்பெற்றவர் குமரகுருபரே ஆவார்  என்பதை உணர்ந்து அவரை காசிக்கு ச் சென்று வரும்படி பணித்தார். அதனையேற்று  குமரகுருபரரும்  காசியாத்திரை சென்றார். அங்கே டில்லியை ஆண்ட முகலாய மன்னனான பாதுஷாவிடம் காசி மாநகரில் இடம்வேண்டிப் பெற்று பரமசிவனுக்கு ஒரு கோயில் கட்ட நினைத்தார். ஆனால் இந்துஸ்தானி மொழி தெரியாததால் பாதுஷாவிடம் தனது கோரிக்கையை எடுத்துக் கூற முடியாமல் தவித்தார். அம்மொழி தெரிந்த சிலர் இவருக்கு உதவுவதாகக் கூறி சாக்குப் போக்குகள் சொல்லி, பாதுஷாவை சந்திக்கவிடாமல் தடுத்து வந்தனர். அதனால் வருந்திய குமரகுருபரர், எல்லாம் வல்ல சரசுவதி தேவியைத் துதித்து சகலகலாவல்லிமாலை என்னும் பிரபந்தத்தைப் பாடினார். உடனே வாணியின் அருளினால் அவருக்கு இந்துஸ்தானி மொழியில் சரளமாகப் பேசும் ஆற்றல் கிட்டிற்று. பாதுஷாவிடம் எப்படிச்செல்வது என குமரகுருபரர் யோசித்துக் கொண்டிருந்தபோது வாணியின் அருளால் சிங்கம் ஒன்று அவர் முன் வந்து நின்றது. குமரகுருபரர் அச்சிங்கத்தின் மீதமர்ந்து நேரே பாதுஷாவின் சபைக்குச் சென்றார். திடீரென்று சபைக்கு வந்த சிங்கத்தையும் அதன்மீது கம்பீரமாக அமர்ந்துவந்த குமரகுருபரரையும் கண்ட சபையோர் அச்சமும் ஆச்சரியமும் அடைந்தனர்.

பாதுஷாவோ குமரகுருபரரை வணங்கி வரவேற்றான். பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் கூடியிருந்த சபையில்  குமரகுருபரரை உரை நிகழ்த்த வேண்டினான் பாதுஷா. குமரகுருபரரும் கலைமகளின் அருளால் இந்துஸ்தானி மொழியில் சைவ சித்தாந்தத் தத்துவத்தை மடை திறந்த வெள்ளம் போல் எடுத்துரைத்தார். அதனைக்கேட்ட பிற சமயகுருமார்கள் இந்து மதத்திலும் சைவசமயத்திலும் ஆர்வங்கொண்டனர். பாதுஷாவும் குமரகுருபரரின் சைவசித்தாந்த உரையைக் கேட்டு அகம் மகிழ்ந்தான். அவருக்கு யாதுசெய்ய வேண்டும் எனக்கேட்டான். உடனே குமரகுருபரர் காசியிலேயே தான் இருப்பதற்கு ஒரு மடம் அமைப்பதற்கு கேதார கட்டடத்தில் இடம் வேண்டினார். அப்படியே பாதுஷா அவருக்கு கேதார கட்டத்தில் இடம் தந்து உதவினார். பின்பு குமரகுருபரர் அங்கே மறைக்கப்பட்டுக்கிடந்த விசுவலிங்கப்பெருமானை வெளிப்படுத்தி சிறுகோயில்கட்டி நித்திய பூஜைகள் சைவ நியமனப்படி நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கேதார கட்டடத்தில் உள்ள கேதாரலிங்த்தை வெளிப்படுத்தி கோயில் கட்டுவித்தவர், இம்மடத்தின் கிளையைநத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் என்ற ஊரிலும் குமரகுருபர ஸ்வாமிகள் அமைத்தார். சகலகலாவல்லி மாலை 10 எளிய தமிழ்ப்பாடல்கள் கொண்டது. இதன் முதற்பாடல் 

“வெண்டாமரைக்கன்றி நின்பதம்.

தாங்க 

என் வெள்ளை உள்ளத்

தண்டாமரைக்குத் தகாது கொலோ!

சகம் ஏழும் அளித்து

உண்டான் உறங்க 

ஒழித்தான் பித்

தாக 

உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவை கொள் கரும்பே

சகல கலா வல்லியே!

ஏழு உலகங்களையும் உண்டு பாதுகாத்தவனான திருமால் உறங்கவும், அவ்வுலகங்களை அழிக்கின்ற தொழிலையுடைய சிவபெருமான் பித்தனாகி அலையவும் செய்தவனான நான்முகன் இனியதென எண்ணிச் சுவைக்கும் கரும்பைப் போன்றவளே! வெள்ளைத்தாமரையே அன்றி உனது திருவடிகளை எனது தூய்மையான வெள்ளை உள்ளம் தாங்கத்தகுதியற்றதோ? என்பதாகும். இதில் பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந் தொழில்கள் குறிக்கப்படுகின்றன. பிரும்மாவே சரஸ்வதி கடாட்சம் வேண்டித் துதித்தபாடல் இது என்பதால் மற்ற கலைமகள் தோத்திரங்களுக்கு இல்லாத மகிமை இப்பாடலுக்கு உண்டு. 

  •  

கூடுவதன் கற்பிதங்கள்

ரவி அல்லது

ஆச்சரியமாகத்தான் இருந்தது

அவர்களின் பேச்சுகளில்

பகட்டுகளைத்தவிர

வேறெதையும் காணமுடியாமல் இருந்தது.

ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அவர்கள் சலிப்பற்று 

தேர்ந்த பயிற்சி எடுத்தவர்களாக பேசிக் கொண்டே இருந்தது.

ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அவர்கள் தன்னை அறிவாளியாக 

காட்டிக் கொண்டது.

ஆச்சரியமாகத்தான் இருந்தது. 

அவர்கள் 

பரிவாளர்களாக 

தன்னைக் காட்ட முயன்றது.

ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அவர்கள் கூடும்பொழுதெல்லாம்

புறம் பேசுவதில் 

திளைத்து இருந்தது.

ஆச்சரியமாகத்தான் இருந்தது 

அவர்கள் 

கூடுமிடத்திலெல்லாம்

இவனொரு

மௌன மடையனென

பேசிக்கொண்டது.

ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அன்றொரு நாள் 

அவர்களின்

இரைச்சல்களுக்கு

இடையில் 

எறும்பொன்று 

என் மீது ஏறியது.

ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அன்று

நானும் இவர்களின் 

அரட்டைகளுக்குள் இறங்கிவிடலாமாவென

நினைக்கும்போது

எறும்பு

என் மீதிருந்து

இறங்கிப் போனது.

ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அந்த எறும்பு

அவர்களொருவரின்

கால் செருப்பிற்கு கீழே சென்றபோது

என் கைவிரல்கள் சொருகி

காத்தபோது

மிதிபட்ட

விரலைப் பார்த்து

அவர்கள் 

எனக்குச் சிரிப்பை மட்டும் தந்தது.

ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பக்கத்து இருக்கையில் 

வலிகள்

பொறுத்து.

வருகிறவர்களிடமெல்லாம் 

நான் 

சிரித்துக்கொண்டே இருந்தது.

***

-ரவி அல்லது.

[email protected].

***

  •  

மறுக்க முடியாத உண்மை! முதுமை…

பாலமுருகன்.லோ

நிறுவனத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசனுக்கு ஏனோ அவரது மனது ஒரு நிலையில் இல்லை.பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவராக மற்றவர்களுக்குக் காட்சியளித்தார். அவர் இது போன்று என்றுமே இருந்ததில்லை, ஆனால் இன்று கணேசனின் மனதில் ஒருவித படபடப்பு.

ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்தவர் அன்று காலையில் நிறுவனத்தில் நடந்தவற்றை எண்ணிய வண்ணமாகத் திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தார். என்றும் போல் அன்று கணேசன் அலுவலகம் சென்ற போது, அங்கிருந்த நண்பர்கள் சக உத்தியோகஸ்தர்கள் கணேசனைப் பார்த்து ஏதோ சூசகமாகப் பேசினார்கள். கணேசனுக்கு அலுவலகம் என்றால் நான்கு போரு நான்கு விதமாகத்தான் பேசுவார்கள் அதையெல்லாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தனகுதானே எண்ணிக்கொண்டு தனது அன்றாட வேலையைச் செய்ய முற்படத் தொடங்கிய பொழுது. சிங்க முத்துக் குமாஸ்தா கணேசனிடம் சார் மேல் அதிகாரி உங்களைத் தனது அறைக்கு அழைக்கிறார் எனச் சொல்ல.

 சரி சிங்கம் அப்போது நான் அவரைப் போய்ப் பார்த்துவிட்டு எனது மற்ற பணிகளைக் கவனிக்கிறேன். ஓக்கே சார் போங்க சீக்கிரம் இல்லையென்றால் அதற்கும் அவர் எனத்தான் சத்தம் போடுவார். கணேசனைத் தனது அறையின் நுழைவாயிலில் பார்த்தவுடன் மேல் அதிகாரி வா கணேசா இப்படி நாற்காலியில் அமர்ந்து கொள். மேற்கொண்டு நாம் பேசலாம். சார் எதற்கு என்னை அழைத்தீர்கள்? அது ஒன்றுமில்லை, அப்படியென்றால் நான் திரும்பி எனது சீட்டுக்கே போய்விடவா! உனக்குத் தெரிந்ததே! எனக்குத் தெரிந்த விஷயமா? என்ன சார் அது.

அதான் கணேசா உன் ரிடையர்மென்ட்! என்னுடைய ரிடையர்மென்டைப் பற்றி இப்போது என்ன சார்? கணேசா உணக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளன, நீ இப்போது வீ.ஆர்.எஸ் வாங்கிக்கொண்டால் உணக்கு கணிசமான தொகையை நிறுவனம் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். உன் வேலை இனி இளைய வயது நபர் ஒருவர் வந்து பார்த்துக்கொள்வார். நீ சற்று யோசித்துச் சொல். மேலும், கணேசனிடம் மேல் அதிகாரி எனக்கு நல்லது என்று என்ன தோன்றுகிறது என்றால் நீ வீ.ஆர்.எஸ் வாங்கிக்கொள்வது தான் சரி. நீ மூன்று வருடம் உழைத்தாலும் இப்போது கிடைக்கும் சம்பளத்தைக்காட்டிலும் அதிகமாகக் கிடைக்கும். கூட்டிக் கழித்துப் பாரத்தால் மொத்தத்தில் உனக்கு லாபம்தான். சரி உன் வீட்டில் கலந்து பேசி ஒரு நல்ல முடிவாக நாளை வந்து என்னிடம் சொல் என்று கூறினார் மேல் அதிகாரி. அன்று முழுவதும் கணேசனின் மனதில் இதே எண்ணம்தான் என்ன செய்வது,யாரிடம் கேட்பது, நாம் வேலையை விட்டுவிடலாமா? அப்படி வேலை விட்டால் சாப்பாட்டிற்கு என்ன வழி. சங்கர் எப்போதுதான் பட்டப்படிப்பு முடித்திருக்கிறான், இன்னும் அவன் வேலைக்குப் போக வில்லை இந்த நிலையில் எப்படி முடிவெடுப்பது என்று பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்த கணேசன் யோசித்த வண்ணமாக இருகையில். பேருந்தின் நடத்துநர் மயிலாப்பூர் இருந்தால் இறங்கிவிடுங்கள் மயிலாப்பூர் என்று கத்திக்கொண்டிருந்தது கணேசனின் காதுகளில் விழ சுய நினைவிற்கு வந்த கணேசன் வேக வேகமாகப் பேருந்திலிருந்து இறங்கி மயிலாப்பூரில் இருக்கும் தனது வீட்டிற்கு மெதுவாக நடக்க முற்பட, பத்து பதினைந்து நிமிடத்தில் வீடு வந்தடைந்தவுடன்.

லட்சுமி, கணேசனின் மனைவி வாங்க என்ன ஒருமாதிரியா காணப்படுகிறீர்களே, என்ன விஷயம் என்றால். ஒன்றுமில்லை முதலில் ஒரு டம்ளர் காப்பிக் கொண்டுவா. சரி சரி கத்த வேண்டாம் காப்பிதானே இதோ கொண்டுவருகிறேன் என்றாள் லட்சுமி. சிறிது நேரம் கழித்துக் காப்பி வந்து சேர்ந்தது, டம்ளரை லட்சுமியிடமிருந்து வாங்கித் தனது வாய் அருகில் கொண்டு போய் டம்ளரில் வழிய வழிய இருந்த காப்பியை ஊதி ஊதிக் குடித்த பிறகு கொஞ்ச நிதானம் அடைந்த கணேசன் காலையில் தனது நிறுவனத்தில் நடந்தவற்றை மனைவி லட்சுமியிடம் சொல்ல முதலில் பயந்த லட்சுமி பிறகு நிதானமாக யோசனை செய்தபடி இருந்தாள். சிறிது நேரம் கழித்துப் பொறுமையாகத் தனது கனவிடம் யோசித்துப் பார்த்ததில் நீங்கள் உங்கள் வேலையை வீ.ஆர்.எஸ் கொடுப்பதே சிறந்தது. இதனால் நமது வீட்டு நிலைமை தற்போது இருக்கும் நிலையிலிருந்து சற்று மாறுபட்டுவிடும். இன்னும் சில மாதங்களில் சங்கர் வேலைக்குப் போய்விடுவான் பிறகு என்ன அவன் தலையெடுக்க ஆரம்பித்துவிடுவான் பிறகு நமக்கு என்ன கவலை. இந்தப் பதிலைக் கணேசன் எதிர் பார்க்கவில்லை லட்சுமியிடமிருந்து, ஆனால் அவள் சொன்னதை அன்று இரவு முழுவதும் திரும்பத் திரும்ப யோசித்து எப்போது துக்கம் வந்தது என்று தெரியாமல் தூங்கி அடுத்த நாள் காலை விடியற்காலையில் தான் விழிப்பு வந்தது.

மேல் அதிகாரி கணேசனிடம் சொன்னமாதிரி வீட்டிலுள்ள அனைவரிடமும் கலந்து பேசிய பிறகு ஒரு தெளிவு வந்தது கணேசனுக்கு. அதிகாரியிடம் தன் விருப்பத்தைத் தெரியப்படுத்தினார். வீ.ஆர்.எஸ் பெறுவதாகச் சம்மதம் தெரிவித்தார் கணேசன். வீ.ஆர்.எஸ் பணத்தில் குடும்பத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவந்த பெருமிதம் இருந்தது கணேசனுக்கு. மகன் சங்கர் பொறியில் பட்டப் படிப்பைப் படித்துவிட்டு. மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறான். நல்ல வருமானம், ஆடம்பரமான வாழ்க்கை எனச் சங்கர் தனது வாழ்கையைத் தொடங்கி ஓடிக்கொண்டிருந்தான். கணேசனின் மனைவி சிறிது காலத்தில் திடீரென்று நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்து இறந்தும் விடுகிறார். கணேசனுடைய வாழ்கையில் ஒரு வெற்றிடம் உருவானது, ஒரு மனிதன் முழுமையான ஆளாக மாறுகிறான் என்றால் அவனுக்கு மனைவி வந்த உடன் தான். தற்போது கணேசன் ஒற்றையாளாக உணர்கிறார். என்னதான் பெற்ற பிள்ளை சங்கர் இருந்தாலும் கட்டின மனைவி தன்னுடன் இல்லை என்ற நிதர்சனம் தினந்தினம் வாட்டி எடுத்தது.

சங்கர் தான் வேலை செய்யும் நிறுவனத்திலே ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டான். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தனிக் குடித்தனம் சென்றுவிட்டனர். மேலும் கணேசன் தனிமையில் தள்ளப்பட்டார். தன் மனைவி இருக்கும் போது தான் குடித்த காப்பி டம்பளரைக் கூட எடுத்துக் கழுவாத கணேசன். இன்று தானாகப் பால் அடுப்பில் காய்த்துக் குடிப்பது. சின்னச் சின்ன வேலை தானே செய்வது என்று மாறிவிட்ட கணேசனால் சாப்பாடு மட்டும் மூன்று வேலை கடையிலிருந்து வாங்கிச் சாப்பிட்டு வந்தார்.கூட இருந்த ஒரு நபர் இல்லையென்றால் அருவரிடம் எவ்வளவு மாற்றங்கள் தென்படுகின்றது என்பதற்குச் சிறந்த உதாரணம் கணேசனே. சங்கர் பல முறை கூப்பிட்டும் கணேசன் சங்கரின் வீட்டிற்குப் போய்த் தங்குவதில்லை.சங்கர் இதைப்பற்றிக் கேட்டால். உனக்கு ஏன் அப்பா கஷ்டம், நீ சந்தோசமாக உன் மனைவியுடன் இரு நான் இங்கு நமது வீட்டில் நன்றாகத்தானே உள்ளேன். வேண்டுமானால் உனக்குப் பார்க்கவேண்டுமானால் நீயும் உன் மனைவியும் ஞாயற்றுக் கிழமை வந்து பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்று சங்கரிடம் பதிலைக் கூறினார் கணேசன்.அந்த வீட்டில் கணேசனுக்கு ஒரு துணை அந்தத் தொலைக்காட்சிதான். அதில் ஒளிபரப்பட்டும் நாடகங்களில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் பேச ஆரம்பித்தார் கணேசன். காலையில் எழுந்தவுடன் தனது அன்றாட வேலையை முடித்தவுடன் தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்வது வழக்கமாக வைத்திருந்தார். காலை சுமார் பதினோர் மணியளவில் தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்க்க ஆரம்பித்தார் என்றால் சுமார் இரவு பத்து மணிவரை பார்த்துக்கொண்டே இருப்பார். இடையிடையில் தனது வேலைகளை முடித்துக்கொள்வார். ஒரு கட்டத்தில் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமானதால் வீட்டினுள் மயங்கி கீழே விழுந்தவர். அப்படியே அடுத்த நாள் மத்தியம் வரை அப்படியே அவரது வீட்டிலிருந்துவந்தார். சங்கர் தொலைப்பேசியில் அழைத்துப் பார்த்து, தொலைப்பேசியை எடுக்காததால் தனது அப்பாவைத் தேடி அவனது வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் தெரியவருகிறது அவர் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்துப் பதறினான். அவரை மீட்டு எடுத்து மருத்துவமனையில் சேர்த்தபிறகு ஒரு வாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் கணேசன் அனுமதிக்கப்பட்டார். அவரது நினைவு சற்றுத் தடுமாறிக் காணப்பட்டது அதாவது கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொண்டு நிகழ்காலத்தை நினைவில் கொள்வதில் சிரமப்படுபவர்களுக்கு ஆன்டிரோகிரேட் மறதி நோய் (anterograde amnesia) என்பார்கள். அதாவது கடந்த கால நினைவுகளை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு நிகழ் காலத்தில் நடப்பதை மறந்துவிடுவது. சங்கரின் மருத்துவ நண்பர் ஒருவரால் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு ரெகுலர் வார்டுக்கு மாற்றப்பட்டார்.

மன நல மருத்துவரிடமும் ஆலோசனை பெற்ற பிறகு கணேசனை சங்கர் அவனது வீட்டிற்கு அழைத்து வந்தான். ஆனால் கணேசனால் அங்குச் சிறிது காலம் கூட இருக்க முடியவில்லை, சங்கர் நல்ல படியாகத்தான் பார்த்துக்கொண்டான். இருந்தும் கணேசனின் வயது சாப்பிடும் திறன் இவை சற்று மங்கிக் காணப்பட்டதால் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. மூப்பின் காரணமாக யூரினரி இன்ஃபெக்‌ஷன் வந்து தொற்றிக்கொண்டது. இரவு நேரங்களில் வீடு முழுவதும் திடீர் திடரென்று கணேசன் மூத்திரத்தை அடக்க முடையாத காரணத்தால் கணேசன் இருந்த இடத்திலே மூத்திரம் போய்விடுவார். சங்கர் வேறு வழியில்லாமல் தரையைச் சுத்தம் செய்து விட்டு அவரது துணிகளை வாஷிங் மிஷினில் போட்டுவிட்டு அலுவலகம் செல்லுவான். ஆனால் தினம் தினம் அவனால் இதைச் செய்ய இயலவில்லை அதனால் குழந்தைகள் அணிவார்களே அதே போல்! பெரியவர்களுக்குப் பிரத்தியேகமாக விற்கிறார்களே அடல்ட் டயப்பர் அதை வாங்கிப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு கணேசனைச் சமாதானம் செய்து அணிவித்தான் சங்கர்.

இதற்குப் பிறகு கணேனுடைய அன்றாட வேலையைக் கூடச் சங்கர்தான் செய்ய வேண்டிய நிலை. படுக்கையிலிருந்து எழுப்பி அமர வைப்பதிலிருந்து, தாங்கி பிடித்துத் தூக்கி நிறுத்திவைத்து குளியல் அறைக்குக் கூட்டிக்கொண்டு போய்க் குளிக்க வைப்பது, குளித்த பின் டயப்பர் மாற்றிவிடுவது மற்றும் கணேசனை பின் அவரது படுக்கைக்குக் கூட்டிவந்து அமர வைப்பது என்று எல்லா வேலைகளையும் அவன் செய்துவந்தான். சில சமயங்களில் கணேசனின் ஒத்துழைப்புக் கிடைக்காத பட்சத்தில் சங்கர் சிறிது கோபம் அடைவது வாஸ்தவமே. சில நாட்களில் இதும் நடப்பதுண்டு வேலைக்குச் செல்லும் முன்னர்த் தனது அப்பாவுக்குச் செய்ய வேண்டிய வேலையைச் செய்துவிடலாம் என்று அவரிடம் வந்தால். கணேசன் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து விடவே என்ன செய்வது என்று தெரியாமல் தனது ஆதங்கத்தைக் கணேசனிடமே கூறுவான் சங்கர். எல்லா வேலைகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால் ஏன் உங்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை மனசு வலிக்கிறது அப்பா என்பான், சில சமயங்களில் கடிந்து கொள்வான். ஒரு பழமொழி உள்ளது அல்லவா கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகுமா? என்பது போல் கோபத்தின் உச்சத்தில் தன் அப்பாவைக் கடிந்து கொண்ட சங்கருக்கு அன்பு பாசம் எல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது. அவரிடமிருந்த அன்பின் வெளிப்பாடே கோபமாக மாற்றியது கணேசன் ஒத்துழைக்கவில்லை என்ற போது. புரிந்து புரியாத நிலையில் கணேசன் தன் பார்வையைச் சங்கரின் கண்களைப் பார்த்துக்கொண்டே இருப்பார். இந்த மாதிரி தருணங்களில் சங்கர் தன்மனதில் நினைப்பதுண்டு இருக்கும் வரை நல்லபடியாக இருந்துவிட்டுப் போக வேண்டும். யாருக்கும் இடையூறாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் அவனது மனதில் வந்து மறையும். ஆனால் என்றுமே தவிர்க முடியாத உண்மை என்னவென்றால் முதுமையே என்று அவன் அறிவான்.

-பாலமுருகன்.லோ-

[email protected] ([email protected])

  •  

கொஞ்ச நேர வாஸ்தவங்கள்

ரவி அல்லது

 இரயில் கிளம்ப நேரம் சமீபித்திருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட கீழே உள்ள படுக்கையில் நான் உட்கார்ந்து இருந்தேன். ஆறாவது நபர் மேலே ஏறி படுத்து விட்டார். நான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த புத்தகத்தை வாங்கி  ஆறு மாதமாக படிக்க நேரம் இல்லாததால் இந்தப் பயணத்தில் படித்துவிட வேண்டும் என்று பாதிக்கு மேல் படித்து அந்த புத்தகத்திற்குள் நான் பயணித்துக் கொண்டு இருந்தேன். 

அவர்கள் அவசரமாக பெட்டி மற்றும் பைகளை கொண்டு வந்து கீழே தள்ளினார்கள் . குளிர்சாதன பெட்டியானாலும்  அவர்களுக்கு நன்றாக வேர்த்திருந்தது. 

“நம்ம சீட்டு தானே. பார்ந்துண்டேளா. “

“ஆமாம். ஆமாம். சித்த உட்காரு. சுந்தர் வெளியே நீட்டிகிட்டு இருக்கப் பேக்கை உள்ளார தள்ளிவிடு. போறவாளுக்கு தொந்தரவா  இருக்கப் படாது. “

அந்தப் பையன் சரி செய்தான். அவன் பக்கத்தில் அவனது சகோதரி அமர்ந்து இருந்தாள். அவள் வீடியோ கேம் ஆடிக்கொண்டு இருந்தாள். இருவரும் பள்ளிகளில் படிக்கும் வயதில் இருந்தார்கள். 

இரயில் புறப்பட்டு விட்டது. அறிவிப்புகள் தூரமாக கேட்டது. தாம்பரம் தாண்டுவதற்குள் இந்தப் புத்தகத்தை படித்து விடலாம் என்று தோன்றியது. 

“எக்கியூஸ்மி சார். “

நான் திரும்பி அவரைப் பொதுவாகப் பார்த்து  பின்னர் கொஞ்சம் உள்ளார்ந்துப் பார்த்துபோதுதான் தெரிந்தது. இது நாம் திருவண்ணாமலையில் சந்தித்த சங்கரன் தானே. அவர்தான். 

என்னை அவரின் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. என் முக அமைப்பு மாறிவிட்டது. நான் அவரையேப் பார்த்துக்கொண்டு இருந்ததில் மீண்டும் என்னை அழைத்தார். 

“சொல்லுங்கள் சார். “

“பொம்மணாட்டியா இருக்கா. அப்பர்லே   சீட்டு ஒதுக்கி இருக்கா. இப்பதானே  பெண்களுக்கு லோயர் பர்த் அலாட்மெண்ட் கொடுக்கிறா. இந்த டிக்கெட் முன்னாடியே போட்டது. நீங்க சித்த பெரிய மனசு பண்ணி கொஞ்சம் ஹெல்ப் பண்றேளா. இவாளோடது அப்பர் சீட்டு.”

நான் பேசியதைக்  கவனித்த படி பதில் சொல்லாமல் இருந்தேன். 

“ஸார். நான் எது கேட்டாலும் நீங்க என்னையே ஏன் சார் பார்ந்துண்டு  இருக்கேள். மனுஷாலுக்கு  மனுஷா ஒதவக்கூடாதா.”

“ஒண்ணும் பிரச்சினை இல்லை. நான் மேல போறேன். தாம்பரம் கிராஸ் பண்ணதும் மேலப்போயிக்கிறேன் சார். அதுக்குள்ள இதைப் படிச்சு முடிச்சுருவேன் சார். “

“பேஷா… படியுங்கோ. நீங்க செங்கல்பட்டுல இல்ல விழுப்புரத்தில கூட கொடுங்கோ. நோ பிராப்ளம் சார். “

படிக்கிறதுதானேடா படுபாவி. மேலே இப்பவே போனா என்னவாம் என்று அவர் நினைத்திருக்கலாம். நெற்றியில் திலகமிட்டு நேர்த்தியான அழகில் இருந்தார். 

“நான் சொன்னேனோ இல்லியோ. பகவான் நமக்கு உதவி செஞ்சுருவர்.  நாம நல்லவாளா  இருந்தா. பகவான் நம்மை சுற்றி நல்லவாளா வைச்சுண்ருவார். உன் தோப்பனாருக்குதான் இது புரிய மாட்டேங்கிறது. நல்லவாளா இருந்து என்ன சாதிச்சேள்ங்கிறா. ஏன் தோப்பனார் இருக்கிறவரை  மூஞ்சூறு வலையில ஒண்டுனது மாதிரி கிடந்தா. அவா இல்ல இவா துள்ளுறா. பகவான் எல்லாத்தையும் பார்த்துண்டுதான்  இருக்கார். “

சங்கரனின் மனைவி அவர் அப்பாவின் மேல் பிரியமாக இருக்கவேண்டும். இல்லை பொதுவெளியில் அவரை இப்படி பேசியது பிடிக்காமல் இருக்க வேண்டும். அவர் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தார். அதைப் பார்த்ததும் சங்கரனும் முகம் வாடிவிட்டார். 

ஒரு வித இறுக்கமான சூழல் மன நெருக்கடியை அளித்ததால் நான் மேலே செல்கிறேன் என்றேன். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அது போதுமானதாக  இருந்தது.  

சங்கரன் மனைவியையேப் பார்த்துக்கொண்டு இருந்தார். அதில் மனைவியின் மேல் பாசம் பொங்கியது. அப்படி பேசி இருக்கக்கூடாதோ என்றும் தோன்றி இருக்கலாம். நோ… நோ…. நான் சொன்னதுதான் சரி. அந்தாள் ஒரு துஷ்டன். அந்தாளுக்காக இவளை முகத்துக்கு நேரே பேசியிருக்கப்படாது என்றும் நினைத்திருக்கலாம். 

‘ஸாரி டி.’ என்று சங்கரன் கேட்டது என் காதுக்கே கேட்டது. பிள்ளைகள் வீடியோ கேம்மில் மும்முரமாக இருந்தார்கள்.

நான்  பேனாவை எடுத்து முதல் பக்கத்தில் எழுதிவிட்டு மீண்டும் படிக்கலாமென புத்தகத்தை பிரிந்தபோது திருவண்ணாமலை சிந்தனைகள் தொந்தரவு செய்தது. புத்தகத்தை வைத்து விட்டு கண்களை மூடிக்கொண்டேன். இரயில் மாம்பலத்தில் நிற்பதாக அறிவிப்புக் கேட்டது.

ஒவ்வொரு புதுவருடம் தொடங்கும்போதும் நான் ரமணா ஆஸ்ரமத்தில் தங்குவது வழக்கம். கடிதம் எழுதி அனுமதி வாங்கி டிசம்பர் 28 லிருந்து ஜனவரி 2ந்தேதிக்குள் இரண்டு நாள், மூன்று நாள், ஐந்து நாள் என்று சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அந்த பயண நாளின் அளவுகள் மாறும். நான் கடைசியாக சென்ற வருடத்தில் நான் சங்கரனைச் சந்தித்தேன் 

எனக்குப் பெரும்பாலும் தங்குவதற்கான இடம் ஆஸ்ரமத்தின் எதிர்ப்புறம் உள்ள குடியிருப்புகளில் ஒரு வீடு ஒதுக்கித்தருவார்கள். இங்கு பெரும்பாலும் தங்கிறவர்கள் குறைவு. சிலமுறை அந்த வளாகத்திலையே நான் மட்டும் தங்கி இருக்கிறேன். அழகான அமைதியான இடம். 

நான்கு மணிக்கு எழுந்து டிசம்பர் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அப்படியே ரமணரின் சமாதி ஹால் பெரியதாக இருக்கும் அதில் கண்களை மூடி அமர்ந்தால் நேரம் போவது தெரியாது. ஆறு மணிக்கு காலை உணவு தருவார்கள். அதை முடித்து ஆஸ்ரமத்தின் பின்புறம் வழியாக நீண்ட தூரம் மேலே நடந்தால்  ரமணர் தியானம் செய்த விருபாஷ குகை வரும் அங்கு மதியம் வரை தியானம் செய்துவிட்டு பனிரெண்டு மணிக்கு கீழே வந்து மதிய உணவுவை முடித்து கொஞ்ச நேரத் தூக்கம். மாலை குளித்துவிட்டு அவரின் சமாதி ஹாலுக்கு பக்கத்தில் அவர் இருந்த அறையில் தியானம் செய்ய அனுமதிப்பார்கள் அங்கு தியானம் செய்துவிட்டு இரவு உணவை முடித்து மீண்டும் தியானம் பிறகு தூக்கம் இப்படியாக அந்த நாட்கள் கழியும்.

விருபாஷ குகையிலிருந்து ஸ்கந்தாஸ்ரமம் சென்றால் அங்கு தியானம் முடித்து மதியம் வெளியே ஹோட்டலில் சாப்பிடுவதாக அன்றைய தினம் இருக்கும்.

இப்படியான நாள் ஒன்றின் காலையில் விருபாஷ குகைக்கு காலையில் நான் சென்று கொண்டிருந்தபோது வெண்மை நிற வேஷ்டி உடம்பில் வெண்மை நிற துண்டை சுற்றி இருந்த ஐம்பது வயது உள்ள சாமியார் என்னை அழைத்தார்.

“சாமீ…”

நான் தியானம் பயில வரும்போது குனிந்த தலை நிமிராமல் செல்லும் வழக்க முடையவன். யாரிடமும் தேவைகள் ஏற்படாதவரை பேசக்கூடாது என்ற கொள்கையுடையவன். தெரிந்தவர்கள் இருந்தால் முடிந்த மட்டும் தவிர்த்துவிடுவேன் இல்லை நானே அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்துவிடுவேன். குறைந்தபட்சம் இன்றைய நாட்களில் வாய்ப்பேச்சையாவது குறைக்க வேண்டும் என்ற புரிதலில் இதை நான் வழக்கமாக்கி இருந்தேன்.

“சாமீ… ”

நாங்கள் இருவரும் மட்டுமே அங்கு இருந்ததாலும் இரண்டாவது முறை அவர் கூப்பிட்டதாலும் நான் திரும்ப வேண்டியதாகிவிட்டது. நான் அவர் நோக்கி மேலே கையைக் காட்டி செய்கை செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். 

“சாமீ… ”

மூன்றாவது முறையும் அவர் அழைத்ததால் நான் பக்கத்தில் சென்றேன். என் வயதை விட இரண்டு மடங்கிற்கு அதிகமான வயதுடையவர் என்பதால் என்னால் தவிர்த்துவிட்டுச் செல்ல முடியவில்லை.

என் பெயர் மற்றும் ஊர் சொல்லிவிட்டு கிளம்ப நினைத்தேன். என்னை உட்காரச் சொல்லி வற்புறுத்தினார். அவர் உட்கார்ந்திருந்த குன்றானப் பகுதிக்கு சற்று தள்ளி உட்காருவது போன்றதாக சாய்ந்து நின்றேன். அது பார்ப்பவர்களுக்கு குருவிடம் சீடன் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். நான் போக வேண்டிய தூரமும் என் வேலையும் இதுபோன்ற நேர விரயங்களில் சிக்கவிடாமல் என்னை எப்போதும் துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. வெள்ளைத் தாடியில் வீதியில் இருப்பவர்  எல்லாம் ஞானி என்ற புரிதல் மாறி வெகு காலமாகி இருந்தது. ஆத்ம விஷாரம் மற்றும் நான் யார் என்று ரமணர் சொல்வது எதுவென்ற தெளிவை நான் படித்த புத்தகங்களும் நான் சந்தித்தவர்களும் எனக்குள் விதைத்திருந்தார்கள். 

நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து திருவண்ணாமலையைப் பார்த்தால் இரண்டு மலைகளுக்கு  முடிவில் நேர்த்தியாக அடுக்கப்பட்ட கட்டிடங்களாக நகரம் விரிந்து அழகாக தெரியும். கோயிலின் கோபுரங்கள் மேலும் அழகாக்கியது.  

இந்த கோணத்தில் மணியன் செல்வன் படம் வரைந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். இதையே தேர்ந்த புகைப்படக்காரர் படம் எடுத்தால் எப்படி இருக்குமென்ற சிந்தனை மின்னல் வெட்டியதாக வந்து போனது.

“சாமி… எத்தனை ஆண்டுகளாக இங்கு இருக்கிறீர்கள். ”

“அண்ணாமலையார் புண்ணியத்தில் பதினைந்து ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன்.”

“இங்கு வந்து நீங்கள் என்ன அறிந்தீர்கள் இல்லை தெரிந்தீர்கள் என்பதை எந்த பாடல்கள் எதோட துணையும் இல்லாம. நாம் இப்போது பேசிக்கொண்டது போல எளிய தமிழில் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள்.” 

அவர் ஆழ்ந்த யோசனையில்.

“நாம் என்பது ஆத்மா. ரமணர் இதை ஆத்ம விசாரம் என்று சொல்லுவார்.”

“ஆத்மா, வீடு பேற்றை அடைவது,ஞானமடையிறது,

ஆத்ம விஷாரம்,அஹம் பிரம்மாஸ்மிங்கிறதை எல்லாம் விட்டு. நான் கேட்கிறது. உங்கள் அனுபவத்தை அதற்கு முன் சொன்னவர்களின் எந்த மேற்கோளும் தேவையில்லை. இப்போது சொல்லுங்கள்.”

அவர் என் கேள்வியின் தீவிரத்தைப் புரிந்தாரா என் முகத்தின் உக்கிரத்தைப் புரிந்தாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அவர் முகம் சிறுத்து விட்டது. அதிகாலை குளிர்ந்த காற்றில் மலையின் மேல் பகுதி அலாதியான பூரித்தலைக்கொடுத்தது. அது இங்கு வந்து தங்கியதன் பலனாகவும் இருக்கலாம்.

என்னை இடைமறித்த கடுப்பு என்னிடமிருந்தாலும் அந்த மனிதரின் மேல் நான் கொண்ட அன்பு அலாதியானது. என் சக பயணி என்ற வாஞ்சைகள் மேலோங்கி இருந்தது.

“அதோ திருவண்ணாமலை தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. நாம் இருவரும் அது வேண்டாம் என்று இங்கு அமர்ந்திருக்கிறோம். உங்கள் அனுபவம் என்ன என்று கேட்டால் மௌனமாக இருக்கிறீர்கள். இந்த பதினைந்து வருடம் மனைவி,பிள்ளைகளோட இருந்திருந்தால் அவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்.”

“எத்தனைக் தெளிவு.இந்த சின்ன வயசில. எவ்வளவு தீட்சண்யம் உங்கள் பார்வையில. உங்கள் நாவில் அந்த அண்ணாமலையாரே 

பேசுற மாதிரி இருக்கு.”

“ஏன் சாமி என்னைப் புகழ்றீங்க. இதனால உங்களுக்கு என்னக் கிடைக்கப்போவுது. நான் என்னக் கேட்கிறேன்னு புரியுதா உங்களுக்கு.”

என் குரல் மாறியதில் அவர் முற்றிலும் நிலை தடுமாறிப்போனார். 

“நான் இதுமாதிரியான ஆள் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் உங்களை கடந்து சென்றுவிட்டேன். நீங்கள் தான் என்னை வற்புறுத்தி அழைத்தீர்கள். இப்போது நான் செல்கிறேன். மறுமுறை நான் இங்கு வரும்போது இதேக் கேள்வியைத் கேட்பேன். இப்போது கேட்டது மாதிரி கேட்கமாட்டேன்.அப்போதும் இதேபோல் இருந்தீர்கள் என்றால்…”

அவர் கழுத்தில் போட்டிருந்த துண்டைத் தொட்டுக்காட்டி ‘அதைக் கழுத்தில் முறுக்கிக்கேட்பேன்’ என்றேன்.

“…”

“என் வழியில் குறுக்கிட்டு நீங்கள் தான் அழைத்தீர்கள். தவறு உங்களுடையது. அடுத் முறை என்னைப் பார்த்தால் அனுபவம் பெறவில்லை என்றால் ஒளிந்து கொள்ளுங்கள் இல்லை ஊருக்கு ஓடிப்போய் விடுங்கள். யாரை ஏமாத்துவதற்கு இந்த வேசம். உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா.”

அவரிடம் நான் எந்தப்பதிலையும் எதிர்பார்க்காமல் மலையின் மேலே ஏறத்துவங்கிவிட்டேன்.

“ஸார்…. இந்த புஷ்தகத்தைக் கொஞ்சம் தர்றேளா. நான் படிச்சிட்டு தர்றேன். நாங்க இராமேஸ்வரம் போறோம். நீங்கள் எங்க போறேள்.”

நான் சிந்தனையிலிருந்து இயல்பிற்கு வருவதற்குள் சங்கரன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.

நான் சிரித்துக்கொண்டே புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.

“ஸார். நீங்கள் எங்கே இறங்கிறேள்.”

“பட்டுக்கோட்டை.”

“ இவா அண்ணாவோட ஆத்துக்காரியும் பட்டுக்கோட்டை பக்கத்தில் ஏதோவொரு வில்லேஜ்தான். எனக்கு சரியா பிடிபடல. என் ஓய்ப் தூங்கிண்டிருக்கா.”

எனக்குப் பேச்சை தொடர விரும்பமில்லை என்பதாக திரும்பி படுத்துவிட்டேன். சங்கரன் கீழே ஒரு சிறிய சதுரமான கோரைப் பாயை விரித்து கண்கள் மூடி ஏதோ முணு முணுத்தார். பிறகு மூச்சுப் பயிற்சி செய்தார்.

இரவு தியானத்தை முடித்துவிட்டு நான் எனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்குள் நுழையும்போது எதிரில் இருந்த வீட்டில் இருவர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. நான் வரண்டாவில் நின்றபடி திரும்பிப் பார்த்தேன். ஒரு வயதான பெரியவரும் இன்னொரு பையனும் அந்த வீட்டின் வரண்டாவில் உட்கார்ந்து இருந்தார்கள்.

“ஸார். கோவிச்சுக்காம செத்த நாழி இங்க வந்துட்டுப் போறேளா. நோக்கு புண்ணியமா போவும். இந்த புள்ளையாண்டான் என் பிராணனை வாங்காம ஓயமாட்டான் போல.”

நான் எந்த மறுப்பும் சொல்லாமல் அங்கு சென்று அவர்களுக்கு எதிரில் இடுப்பு உயரம் இருந்த சுவரில் உட்கார்ந்தேன். அப்பா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இருவரும் வேதம் படித்தவர்கள். மகன் பி.காம் முடித்திருக்கிறார். இவர் ஒரே மகன் திருமணமாகி ஒரு வருடத்தில் துறவறம் பூணுகிறேன் என்று இங்கு வந்து இருக்கிறார். ரமணரிடம் சொல்லிவிட்டு இமய மலைப்பக்கம் போவதுதான் அவரின் திட்டமாம். சொந்தமாக வீடு நகை பணம் என ஓரளவு வசதிகளை அப்பா வைத்து இருக்கிறார். கல்யாணமே வேண்டாம் என்றவரை சமாதானப்படுத்தி கல்யாணம் கட்டி வைத்து இருக்கிறார்கள். 

அவர் படித்த புத்தகங்கள் மற்றும் அவர் தொடர்பு வைத்திருந்தவர்கள் பேசியவைகளை இவர் புரிந்ததன் விளைவால் துறவறம் பூண்டுவிடும் அவரின் 

தனியாத ஆசையில் யாவையும் விட்விட்டு ஓடி வந்துவிட்டார்.

“இங்கு நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.அதற்குள் நான் போகா விரும்பவில்லை. புத்தர், மகாவீரர்,ரமணர் இதுபோன்ற இன்னும் எத்தனையோ பேர்களை முன்னுதாரணமாக எடுத்து பலபேர் சந்நியாசம் மேற்கொள்கின்றனர். எல்லாவற்றையும் துறத்தல் என்பது ஒரு உணர்வுத் தூண்டல் அதன் அடிப்படையில் நீங்கள் வரவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். நீங்கள் பயணித்தப் பாதையை விட்டு கொஞ்சம் வேறு மதத்தில் வேண்டாம் வேத காலங்களுக்கு

முன்பு உள்ள புத்தகங்கள் இல்லை சம்பவங்கள் தெரிந்தால் அதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது மனைவி மக்களோடு சேர்ந்து பயணித்து நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் அல்லது இங்கு வந்தால் வாங்கிச் சென்று விடலாம் என்று தேடி வந்திருக்கும் ஒன்றை அறிந்து குடும்பத்துடன் வாழ்ந்து இருக்கிறார்கள்.”

“அப்போ… ரமணர் ஏன் சார் அவா குடும்பத்தை விட்டு இங்கு வந்தார்.”

“அதுதான் ஒரு உணர்வின் வெளிப்பாடுன்னு சொல்லிட்டேனே.”

“உங்களை சாப்பிடும்போது கவனித்தேன். அந்த ஆந்திராப் பெண்ணை அரை மணி நேரத்தில் எட்டு முறை பார்த்தீர்கள்.”

அவர் என்னை கண்களால் வேண்டாம் என்று கெஞ்சினார்.

“இலையில் தண்ணீர் தெளிக்கும் போது ஒரு முறை. உருளைக் கிழங்கு கூட்டு வாங்கும்போது ஒரு முறை..”

“நீங்கள் யாரு சார். இதை எல்லாம் கேட்கிறதுக்கு. பகவானே… நீங்க நம்பாதீங்கோ.”

அவரின் அப்பா அவரை முறைத்தார்.

‘கிராதகா. யாருடா நீ. எங்கேர்ந்துடா வந்தே. துஷ்டப்பயலே. பகவானே செத்த நாழி இவாளை ஊமையாக்கப்பிடாதா.’ அவரின் கண்கள் கலங்கியதை நான் கவனித்தேன்.

“ப்ளீஸ் சார். நீங்க சொல்லுங்கோ.”

“அது தவறில்லை.அது ஒரு இயற்கைத் தூண்டல். அந்த பெண் அழைத்து வந்த ஆந்திரா இளைஞர் சாமியார் ஆடையணிவதன் ஒழுக்கத்தைக்கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். நான் இருந்தாலும் ஒரு இரண்டு முறை பார்த்து இருப்பேன். ஏன் சாரை வேண்டுமானால் காலையில் அந்தப் பெண்ணிற்கு முன்னால் உட்கார வைப்போம் அவரும் பார்க்கத்தான் செய்வார்.”

அவர் என்னை அடிக்கப்பாய்ந்தார். அவரின் அப்பா அவரைத் தடுத்தார்.

“யாருய்யா. நீ. இவர் என் தோப்பனார். எனக்கு வேதம் கற்றுக்கொடுத்த குரு. சந்தியா வந்தனம் விடாம ஓதிண்டிருக்கிற ஆச்சார சீலர்.”

பட்டென்று அவரின் அப்பா காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.

“என்னைய மன்னிச்சுருங்கோ.

கண்டவா கிட்டே உங்களை கேவலப்பட வச்சுட்டேனே. பகவான் என்னைய மன்னிக்கமாட்டான்.”

ஏதோ மந்திரத்தை ஓதியவாறு தேம்பி தேம்பி அழுதார்.

‘பகவானே.ஏன் எனக்கு எதையுமே சரியாச்செய்யத் தெரியலே. நீ பார்த்துண்டுதானே இருக்கே.

எனக்கு ஒரு வழியைக்காட்டக்கூடாதா. கண்டாவா கிட்டே அசிங்கப்பட வைக்கனுமா.”

“நான் தான் சொன்னேனே.”

என்று சொன்னதும் அவர்கள் இருவரும் ஒரு சேர திரும்பி என்னைப்பார்த்து திகைத்து நின்றார்கள். அது நான் பேசுவதற்கு தோதாக அமைந்தது.

“இது என் தூக்க நேரம். நான் காலையில் நான்கு மணிக்கு ஆஸ்ரமம் செல்ல வேண்டும். அதற்கு மூன்று மணிக்கு பிறகு முழிக்க வேண்டும். அதை விடுங்கள். நான் நேரடியாக விசயத்திற்கு வந்துவிடுகிறேன்.”

அவர்கள் ஏன் எதுவுமே குறுக்கிடாமல் இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருந்தது.

“நான் சத்தியகாம் ஜபலைப்பற்றி சொல்லவா. இல்லை நான்கு வேதங்களுக்கு முன்பிருந்த தவசீலரைப் பற்றி சொல்லவா இல்லை புத்த மடாலயத்தில் இருந்த டோயோங்கிற சிறுவனைப்பற்றிச் சொல்லவா.”

அவர் பட்டென்று 

“டோயோ…” என்றார்.

அவரின் அப்பா இரண்டு கைகளையும் தொங்கவிட்டபடி முன்பக்கம் கோர்த்த படி நின்றார்.

“அந்த மடாலயத்தின் குரு ‘ஒரு கை ஓசை’ பற்றி தன் சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட டோயோ தனக்கு கற்றுத்தருமாறு கேட்கிறான். அவர் மறுத்துவிட. அவன் ஆஸ்ரமத்தின் ஒரு இடத்தில் கண்களை மூடி அமர்ந்து விட்டு பிறகு ஓடி வந்து அது பறவைகளின் சத்தம் தானே என்கிறான். குரு இல்லை என்கிறார். கொஞ்சம் நேரம் கழித்து வந்து அது வண்டின் ரீங்காரம் தானே என்கிறான் குரு மறுக்கிறார். பிறகு அவன் கண்களை மூடி நீண்ட இருந்தபோது தூரத்தில் ஓடிய அருவியின் சத்தம் கேட்டது. குரு அதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். அந்த சிறுவனை நீண்ட நாட்களாக காணவில்லை. குரு கவலைகள் கொண்டார். பிறகு அவனைத் தேடலானார். அவனை ஒரு இடத்தில் பார்த்தார். அவன் அந்த ஒரு கை ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தான். இல்லை அவன் அந்த ஓசையாக இருந்தான்.”

கதையை அவர்கள் உள்வாங்கி உறைந்துபோனதை என்னால் காண முடிந்தது.

“இந்த கதை மற்றும் அதன் பெயர்களை ஆராய்வதை விட்டு விட்டு. அதன் அர்த்தத்தை தியானமாக்குங்கள். எதைப் படித்தாலும் பார்த்தாலும் அதன் 

அர்தத்திற்குள் பயணிக்க பழகுங்கள். விளிம்புகள் உங்களை வீடடை விடாது. ஓஷோ ஒரு இடத்தில் சொல்வார். ‘வென் டிசிபில் ரெடி. மாஸ்டர் வில் அப்பியர். சீடன் தயாரானால் குரு அங்கு வந்துவிடுவார் ’ என்பார். அதனால் இனி நீங்கள் தேடி ஓடாதீர்கள். உங்களுக்குள் இருப்பதை அறிய இங்கு ஏன் ஓடிவர வேண்டும் என்பதை புரிந்து குடும்பத்துடனும் தனியாகவும் இதுபோன்ற இடங்களுக்கு வாருங்கள்.”

“சார்… நீங்கள் ரமண மகரிஷி மாதிரியே உட்கார்ந்து இருக்கீங்க.”

ஒரு  காலைக் குத்துக்காலிட்டு ஒரு காலை மடக்கி நான் உட்கார்ந்திருப்பதை அப்போதுதான் நானும் கவனித்தேன். இதுதான் அவர்களை என்னை ஆச்சரியமாக பார்க்க வைத்து இருக்கிறது.

“இதெல்லாம் வச்சி என்னைய சாமியாரா ஆக்கிடாதீங்க. உங்கப்பா செயல் உங்கம்மாவிடம் இருக்கும் உங்கம்மாவின் செயல் உங்க அப்பாவிடம் இருக்கும் அவ்வளவு தான். இதை பெரிதாக எடுக்கத்தேவை இல்லை.”

இதைக் கேட்டதும் அவர்கள் என்னுடன் நெருங்கிப் பழகவும் நான் யாரென்று அறியவும் ஆசைப்பட்டார்கள். பிறகு கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவர்கள் பெயர் ஊர்களை அவர்களே சொன்னார்கள்.வழங்கம்போல இதுபோன்ற இடங்களில் சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்வது போல்  இங்கும் நான் தூங்க கிளம்பிவிட்டேன்.

அதன் பிறகு சங்கரன் சாரை இப்போதுதான் இரயிலில் பார்க்கிறேன்.

இரயில் நான் இறங்க வேண்டிய ஊரில் வந்து நின்றதால் நான் இறங்கி விட்டேன். பெட்டியின் அடுத்த கதவுக்கு எதிரில் அவர் நின்று படித்துக்கொண்டு இருந்ததால் ஊர் பெயரைப் பார்த்ததும் என் இருக்கையில் தேடி நான் இறங்கிய கதவுக்கு பக்கம் வழி நிற்பவர்களை விளக்கி வருவதற்குள் இரயில் கிளம்பி விட்டது. 

“சார். உங்க புஸ்தகம்.”

“சங்கரன். அது உங்களுக்கு தான்”என்றேன்.

அவர் ஏதேதோ சொல்லி கத்துவது எதுவும் கேட்காத தூரத்திற்கு இரயில் சென்று கொண்டிருக்க என்னை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே கை கூப்பி  வணங்கியபடியே மறைந்து போனார்.

நான் எக்மோரில் அவரைப் பார்த்ததும் அந்த புத்தகத்தின் அட்டைக்கு அடுத்துள்ள வெற்று ஏட்டில் 

‘நமஸ்காரம் சங்கரன் சார்.

ஒரு கை ஓசை கேட்டீங்களா.

கேட்டால்.

டோயோவை நான் விசாரித்ததாக சொல்லவும்.

அகம் பிரம்மாஸ்மி.

வாழ்த்துகள் 

வாழிய நலம் சூழ.’ என்று எழுதி இருந்தேன்.

அவர் கும்பிட்டதைப் பார்த்தால் வினாடி நேரத்தில் இதை படித்திருப்பார் என்று தோன்றியது. ரமணா ஆஸ்ரமம் அன்று செல்லும்போது சங்கரன் சாரை சந்திப்பேன் என்று எனக்குத் தெரியாது. இந்தப் புத்தகம் வாங்கும்போதும் இதை சங்கரன் சாரிடம் கொடுப்பேன் என்றும் எனக்குத் தெரியாது. 

என் பயணத்தின் போது இது போன்ற பல பேர்களை சந்தித்து இருக்கிறேன் . உலகம் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் யாரென்று தெரிவதற்கு அவர்கள் முன்பு ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் யாரும் அதைச் செய்யவே இல்லை. அதுதான் அவர்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பு. எனக்கு பெரிய ஆச்சரியம் இரண்டாவது முறையாக நான் சந்திக்கும் முதல் நபர் சங்கரன் சார் தான். அதனால்தான் நான் அந்த புத்தகத்தில் அங்கேயே எழுதினேன். இரவு முழுவதும் நான் இறக்கும்வரை சங்கரன் சார் நான் எழுதியதைப் படிக்காததற்கு நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்.

எஞ்சிய நாளின் வழித்துணைக்கு அந்த புத்தகமே அவருக்கு போதுமானது.  என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு முன்னால் என் பெயரெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டில்லைதான். பேரன்பு கொண்டு நேசிக்க பெயர் எனக்கும் எப்பொழுதும் ஒரு பொருட்டில்லைதான். 

பிறகெப்பொழுதாவது பயணத்தில் நாம் சந்திக்க நேர்ந்தால் என்னை ஆராய முற்படாமல் உங்களை என் மீது அன்பு செலுத்த வைத்துவிடுவதில் நான் கில்லாடியாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் அப்போது மறந்துவிடுவீர்கள் என்பதை உங்களிடம் இப்பொழுதே என்னால் உத்திரவாதமாக சொல்ல முடியும்.

***

-ரவி அல்லது.

[email protected]

***

  •  

யாத்ரிக்

இயக்குநர் மணி கவுல் 1966ல் பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற நாட்களில் இயக்கிய டிப்ளமோ திரைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

இதே திரைப்படக் கல்லூரியில் பயின்ற பல்வேறு இயக்குநர்கள். ஒளிப்பதிவாளர்கள் படங்களையும் FTIIOfficial இணைப்பில் காண முடிகிறது.

மணி கவுலின் படம் அவரது பிந்தைய சாதனைகளின் துவக்கப்புள்ளியாக உள்ளது.

இப்படத்தை அஜந்தாவில் படமாக்கியிருக்கிறார். இசையும் ஒளிப்பதிவும் அவருக்கே உரித்தான தனித்துவமிக்க அழகியலும் கொண்ட இந்தப்படம் எனக்குப் பிடித்திருந்தது.

இணைப்பு :

https://www.youtube.com/watch?v=1vPpUBuXNP0

  •  

குற்றமுகங்கள் -12 கண்துஞ்சார்

கண்துஞ்சார் மனிதர்களிடம் எதையும் திருடவில்லை. அவர் கடவுளிடம் மட்டுமே திருடினார். அவர் தன்னுடைய வாழ்நாளில் முப்பத்தியாறு கோவில்களில் திருடியிருக்கிறார். அதில் நகைகள், ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில் மணிகள் அடக்கம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதராஸ் ராஜஸ்தானியில் இருந்த பல கோவில்களில் மூன்று காலப் பூஜைகள் நடக்கவில்லை. கோவிலுக்கென இருந்த நிலமும் சொத்துகளும் பிறரால் அனுபவிக்கபட்டன. அது போலவே கோவிலின் நகைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் கோவில் நிர்வாகியாக இருந்த நிலச்சுவான்தார் வசமே இருந்தன. அவர்கள் விழா நாட்களின் போது மட்டுமே கோவிலுக்குரிய நகைகளைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதற்குப் பெரிய பாதுகாப்பு வசதிகளோ, காவலோ கிடையாது.

கோவில் நகைகள் அடக்கிய பெட்டகம் ஒன்றை நான்கு பேர் மாட்டுவண்டியில் கொண்டு வந்த போது அதைக் கண்துஞ்சார் ஒற்றை ஆளாகக் கொள்ளையடித்திருக்கிறார். இந்த வண்டிக்கு பாதுகாவலாக வந்தவர்கள் நாலு பேர். அவர்கள் கையில் குத்தீட்டி வைத்திருந்தார்கள். அவர்களைத் தாக்கி வண்டியோடு பெட்டகத்தைக் கண்துஞ்சார் கொண்டு போய்விட்டார்.

கண்துஞ்சாருக்கு கடவுள் மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை. ஆனால் அவர் கோவிலில் மட்டுமே திருடினார். கண்துஞ்சாருக்கு என்ன வயது என்றோ, எப்படி இருப்பார் என்றோ யாருக்கும் தெரியாது. அவரது உண்மையான பெயர் கண்துஞ்சார் தானா என்றும் தெரியாது.

கடவுளின் மீது கோபம் கொள்ளாதவர் யார் இருக்கக் கூடும். கடவுளிடம் போடுகிற சண்டை என்பது தண்ணீருக்குள் கைதட்டுவது போன்றது. யாரும் கேட்க முடியாது.

கண்துஞ்சார் வந்துவிடப்போகிறார் என்று பயந்து பல்வேறு கோவில்களில் இராக்காவல் போட்டார்கள். கண்துஞ்சார் பெயரைச் சொல்லி கோவில் நிர்வாகிகளே கொஞ்சம் நகைகளைத் திருடிக் கொண்டார்கள்.

வேப்பங்குடியில் இருந்த வேஷக்காரன் முனுசாமி சயனநாதர் கோவில் திருவிழாவின் போது கண்துஞ்சார் வேஷம் கட்டிக் கொண்டு களவு ஆட்டம் என்ற வேடிக்கை நிகழ்ச்சியை ஆடிக்காட்டிய போது தான் மக்கள் இப்படித் தான் கண்துஞ்சார் இருப்பார் என்று கண்டார்கள்.

உண்மையில் கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உருவாக்கியது முனுசாமியே. தனக்கு அவரை நேரில் தெரியும் என்றும். அவர் வெள்ளைக்காரர்களால் நாடுகடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை வாழ வைப்பதற்காகவே கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கிறார். கடவுளால் கைவிடப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அப்படி நடந்து கொள்கிறார் என்றார் முனுசாமி.

அந்தக் கதையைப் பலர் நம்பாத போதும் கண்துஞ்சாரைப் பற்றிய களவு ஆட்டம் மிகவும் புகழ்பெறத் துவங்கியது. முனுசாமியைப் போலவே தென்மாவட்டங்களிலும் சில கூத்துக்கலைஞர்கள் கண்துஞ்சார் வேஷம் கட்ட ஆரம்பித்தார்கள்.

அதன்பிறகான வருஷங்களில் கோவில் திருவிழா தோறும் கண்துஞ்சார் ஆட்டம் தவறாமல் நடைபெற்றது. இந்த வருஷம் கண்துஞ்சாராக யார் வேஷம் கட்டப்போகிறார்கள் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இந்த வேடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்ததை உண்மையான கண்துஞ்சார் அறிந்திருக்கக் கூடும். அவர் தனது திருட்டை தொடர்ந்து கொண்டேயிருந்தார்

கோவில்கொள்ளைகளைத் தடுப்பதற்காக உருவாக்கபட்ட காவல்பிரிவின் தலைவராக நியமிக்கபட்ட டக்ளஸ் ஹாமில்டன் கண்துஞ்சாரைப் பிடிப்பதற்காகக் கோவில் தோறும் மாறுவேஷத்தில் ஆட்களை உலவ விட்டிருந்தார்.

ஒராண்டிற்குப் பிறகு பெருமல்லபாடு கோவிலில் திருட முயன்றபோது கண்துஞ்சார் ஹாமில்டனின் ஆட்களால் கைது செய்யப்பட்டார். அது கண்துஞ்சார் தானா என அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் கைது செய்யப்பட்ட நபருக்கு நாற்பது வயதிருந்தது. மீசையில்லாத முகம். ஏறு நெற்றி. வழுக்கை தலை. ஒரு கண்ணில் பூ விழுந்திருந்தது. சாய வேஷ்டி கட்டியிருந்தார். உறுதியான உடற்கட்டு. இவரால் எப்படி இத்தனை கோவில்களைக் கொள்ளையடிக்க முடிந்தது என ஹாமில்டனுக்கு வியப்பாக இருந்த்து.

இது உண்மையான கண்துஞ்சாரில்லை. அவரது நகல். அவர் இப்போது வெளியே வருவதில்லை என்று பலரும் சொன்னார்கள். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடந்தது. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அது ஹாமில்டனின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

ஒருவேளை கண்துஞ்சார் தன்னைத் தேடும் நாடகத்தை முடித்து வைக்க இப்படி ஒரு ஆளை அனுப்பியிருக்கிறாரோ என்றும் நினைத்தார்.

கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உடைக்க வேண்டும் என்பதற்காகவே அவரை ஒரு மாட்டுவண்டியில் ஏற்றி ஊர் ஊராக அழைத்துப் போய்ப் பிடிபட்ட கரடியை வேடிக்கை காட்டுவது போலச் செய்தார்கள். சில ஊர்களில் மக்கள் விரும்பும் தண்டனையை அவருக்கு அளிக்கலாம் என்று சொன்னார்கள். கல்லெறிவது முதல் சாணத்தைக் கரைத்து ஊற்றுவது வரை பல்வேறு தண்டனைகளை மக்கள் அளித்தார்கள். கண்துஞ்சார் தனது வலியை தாங்கிக் கொண்டார்.

முடிவில் பெருமல்லபாடு கோவிலின் முன்பாக நரிக்கூண்டு போலப் பெரிய இரும்புக்கூண்டு ஒன்றை உருவாக்கி அதற்குள் கண்துஞ்சாரை அடைத்தார்கள். கடவுளின் கருணை இருந்தால் நீ உயிர்வாழ்வதற்காக உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள். குடிப்பதற்குத் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. நாவுலர்ந்து பட்டினி கிடந்து எலும்புகள் துருத்திக் கொண்டு புடைத்த நேரத்தில் கூடக் கண்துஞ்சார் ஒரு வார்த்தை பேசவில்லை. எவரிடமும் மன்றாடவில்லை. அது தான் அவர் கண்துஞ்சார் என்பதை அடையாளப்படுத்தியது.

ஹாமில்டன் கண்துஞ்சார் ஆட்டத்தை எங்கும் இனி நிகழ்த்தக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார்

கண்துஞ்சார் தண்ணீரும் உணவும் இன்றி மரணத்துடன் போராடிய போது ஒரு நாள் இடியுடன் கூடி பெருமழை பெய்தது. வாயைத் திறந்து மழைத்தண்ணீரை குடித்தபடி கண்துஞ்சார் சிரித்துக் கொண்டார். கடவுளுடன் அவரது கோபம் தீர்க்கபட்டது போலிருந்தது. மறுநாள் சிரித்தமுகத்துடன் கண்துஞ்சார் இறந்து கிடந்தார்.

••

  •