Reading view

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 : அன்றே சொன்னார்கள்38  – இலக்குவனார்திருவள்ளுவன்


(காலணிகளைக் கவினுற அமைத்தனர் – தொடர்ச்சி)   வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3                                                                                                                கட்டடக்கலையில் தமிழ் மக்கள் பிற துறைகளைப் போல் பிறரால் ஒப்பிட இயலா அளவிற்கு மிகவும் முன்னோடியாக உள்ளனர். விரிவான இப்பொருளில் வானளாவிய கட்டடங்கள் குறித்து முதலில் பார்ப்போம். 19ஆம் நூற்றாண்டு வரை வானுயர் கட்டடங்கள் (skyscrapers) என்பது நினைக்க இயலாத ஒன்றாக இருந்தது. அதன் பின்னர்தான் இட நெருக்கடியாலும் மக்கள் பெருக்கத்தாலும் இது குறித்த சிந்தனை  பிற நாட்டார்க்கு வந்துள்ளது....

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 : அன்றே சொன்னார்கள்38  – இலக்குவனார்திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

திணைகள் கவிதை விருது 2025

இயற்கைப் படிமங்களில் துலங்கும் மீமெய்மையியலும்; பண்பாட்டு வேர்களில் கருக்கொள்ளும் சர்வதேசமும்…


பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ கவிதை நூலை முன் வைத்து…

– றியாஸ் குரானா

தேர்வு என்பது எப்போதும் சிலவற்றைத் தவிர்ப்பதிலிருந்தே உருவாகிறது. எதை எழுத வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது எல்லாம், குறித்த ஒரு நோக்கத்தின் தற்காலிகமான அவசியத்தின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன ஒன்று. ஆனால், திட்டமிட்டு தவிர்ப்பது என்பதுதான் தணிக்கையாகவும் புறமொதுக்கலாகவும் மாறிவிடுகிறது. தணிக்கை என்ற சொல் அநேகமாக தேர்வு என்பதில் பதிங்கியிருக்கும் மென்மையான வடிவம் என்பதில் இரண்டு கருத்தில்லாதபோதும், அதை அதன் மென்மையான அளவில் வைத்துக்கொண்டு தவிர்க்க முடியாத அவசியங்களின் அடியாக மிகக் கவனமாக தேர்வுச் செயலில் இறங்குவது இலக்கிய வெளியில் அறம்சார்ந்த ஒன்று. அந்த அறத்தை எப்போதும் தன்வசம் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் என்பதனால், விருதுக் தேர்வுக்காக என் கைவசம் கிடைத்த அனைத்து நூல்களையும் 20 முழுமையான நாட்களுக்கும் மேலாக நுணுக்கமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட முறையும், பல கோணங்களில் அணுகியும்தான் திணைகள் விருதுக்கான இறுதித் தேர்வை செய்திருக்கிறேன். அந்த வகையில், எனது இறுதித் தேர்வு என்பது ‘பூவிதழ் உமேஷ்‘ அவர்களின் ‘துரிஞ்சி’ கவிதை நூலாக இருக்கிறது. ஆனால், இந்தத் தேர்வின் போது சவாலாக இருந்த பல நூல்கள் இருந்தன. குறிப்பாக ஐந்து நூல்களைச் சொல்ல முடியும். அவற்றைக் குறித்து இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை. எனக்கு இந்த வாய்பைத் தந்த திணைகள் விருதுக் குழவினருக்கு மிகுந்த நன்றிகளும் அன்பும். கடந்த இரண்டாண்டுகளில் தமிழின் விரிந்த பரப்பிற்குள் வெளிவந்த அநேக கவிதை நூல்களை ஒரே மூச்சில் வாசிக்கக் கிடைத்ததென்பது, சமகால தமிழ்க் கவிதைகளையும் அவற்றின் இயங்குவெளியையும் அறிந்துகொள்ள பெருவாய்ப்பாகவும் இருந்தது.

சமகாலத் தமிழ்க் கவிதையின் பன்முகப்பட்ட நிலப்பரப்பில், பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ (2023) ஒரு குறிப்பிடத்தக்க அதே சமயம் ஒரு சவாலான பிரசன்னத்தை நிகழ்த்துகிறது. இதுவரையிலான தமிழ்க் கவிதையின் சில பிரதான வழக்குகளிலிருந்து தன்னைத் தனித்துக் காட்டும் ஓர் அழகியல் வேட்கையையும், புனைவின் புதிய சாத்தியங்களைத் தேடும் ஒரு முனைப்பையும் இத்தொகுப்பு வெளிப்படுத்துகிறது. தருமபுரி நிலத்தின் பிரத்தியேக மணத்தையும், அங்கு வாழும் மனிதர்களின் அகவுலகச் சிடுக்குகளையும் வெறும் யதார்த்தப் பதிவுகளாக அல்லாமல் மீமெய்மை மற்றும் மாய யதார்த்தப் புனைவுக் கூறுகளின் ஊடாக அணுகும் உமேஷின் கவிதைகள், தமிழ்க் கவிதை சார்ந்த சில மனநிலைகளை ஊடறுத்து, தனித்துவமான ஒரு திசைவழியை அக்கறைகொள்கின்றன. நவீனத்துவத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதையின் சில இயல்புகளான பதற்றமான அகவயத்தன்மை, கட்டமைப்புச் சிதறல், அசையும் படிமப் பெருக்கம் போன்றவற்றை நோக்கி நகரும் முனைப்பை கவனத்திற்கொள்ளும் அதே வேளையில், அவற்றைத் தனது பிராந்திய அடையாளத்தோடும் புனைவின் அதீத சாத்தியங்களோடும் இணைத்து, சமகாலத் தமிழ்க் கவிதையின் சில அடிப்படைகளைத் தகர்த்து வெளியேற வேண்டுமென்ற ஒரு தீவிரமான அவாவையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன. இந்த அவாவின் வெற்றி, அதன் முழுமை, மற்றும் அது எதிர்கொள்ளும் விமர்சனக் கேள்விகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பார்வை, இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள இன்றியமையாதது.

‘துரிஞ்சி‘ கவிதை நூலின் மைய உத்தி, யதார்த்தத்திற்கும் புனைவிற்குமான எல்லையைத் தொடர்ந்து கலைத்துப் போடுவதில் தங்கியிருக்கிறது. இது வெறும் அழகியல் உத்தியாக மட்டுமின்றி இருப்பையும் அறிதலையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு கருத்தியல் நிலைப்பாடாகவும் விரிகிறது. தமிழ்க் கவிதையின் சில நீரோட்டங்களில் காணப்படும் நேரடிப் பதிவுமுறை அல்லது சமூக யதார்த்தவாதச் சித்தரிப்பு முறைகளிலிருந்து இது குறிப்பிடத்தக்க அளவு விலகி நிற்கிறது. தருமபுரி நிலத்தின் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள் ஆகியவை மீமெய்மைப் பார்வையின் வழியே புதுப்பிக்கப்பட்டு, அந்நியமாக்கப்படுகின்றன. ‘எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன்‘ (பக்கம்:13) ‘பாறையின் கண்கள் போல இருக்கும் வெள்ளாட்டுக் குட்டிகள்‘ (பக்கம்:13) இந்தப் பரீட்சயநீக்கம் (Defamiliarization), பழகிப்போன பார்வைகளிலிருந்து வாசகனை விடுவித்து அனுபவத்தின் புதிய பரிமாணங்களைத் திறந்து பயணிக்கச் செய்கிறது. ‘விதைப் புத்தகம் (பக்கம்:19-22) போன்ற கவிதைகள், ‘விதை’ எனும் ஒரு எளிய கருத்தை எடுத்துக்கொண்டு அதனைத் தத்துவார்த்தமான, சில சமயங்களில் விளையாட்டுத்தனமான, பல அடுக்குகளில் விரித்தெடுக்கும் விதம், நேரடியான அர்த்த உற்பத்திக்குப் பதிலாக பன்முகப்பட்ட வாசிப்புச் சாத்தியங்களை உருவாக்குகிறது. இந்தப் போக்கு, தமிழ்க் கவிதையில் பொதுவாக நிலவிவரும் சில சித்தரிப்பு முறைகளின் வரம்புகளை மீறிச் செல்ல விழையும் ஒரு முயற்சியாகவேபடுகிறது. இத்தகைய மீறல் முயற்சி என்பது தவிர்க்கவியலாமல் சில அர்த்த உருவாக்குதலின் சிக்கல்களையும் (Hermeneutic challenges) தோற்றுவிக்கும் என்பதும் உண்மையே. படிமங்களின் அடுக்குகளும், புனைவின் தாவல்களும் சில சமயங்களில் தெளிவின்மையை நோக்கி நகர்ந்து வாசகனுக்கும் பிரதியின் உள்ளடக்கத்திற்குமான இடைவெளியை அதிகரிக்கக்கூடும். இந்த விமர்சனங்கள் தமிழில் மட்டுமல்ல உலகளவிலும் பல விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பானதும் சிக்கலானதுமான நியாயங்கள் உண்டு என்றபோதும், அர்தத்தைக் கண்டுபிடிப்பதில் பங்களிப்புச் செய்வது என்பது தேவையுடன் கூடிய சவாலான வினையாற்றும் செயல் என்பதை கவிதையை முன்வைத்து வாதிடும் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.

இக்கவிதைகளில் வெளிப்படும் கவிதைசொல்லியின் குரலும் ஆழமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் குரலின் அழுத்தம் கிராமிய வேர்களைக் கொண்டிருந்தாலும் வெறும் மண் சார்ந்த பதிவுகளாகச் சுருங்கிவிடாமல், உலகளாவிய இருப்பியல் கேள்விகளுடனும், தத்துவார்த்தமான சிந்தனைகளுடனும் உரையாடுகிறது. இந்தப் பதற்றம் ஏறிய அகவயநிலையும், அதேசமயம் புனைவின் அதீத சாத்தியங்களுக்குள் சஞ்சரிக்கும் கவிதைசொல்லியின் குரலும் தமிழ்க் கவிதைகளில் பொதுவாகக் காணப்படும் நேரடியான சமூக விமர்சனக் குரல்களிலிருந்தோ அல்லது தீவிரமான உணர்ச்சி வெளிப்பாடுகளை முதன்மைப்படுத்தும் (பாடல் மரபின் தொடர்சியை உள்ளெடுத்த நவீன கவிதை) தன்மையிலான குரல்களிலிருந்து வேறுபடுகிறது. ‘நுணா‘ (பக்கம்:14) மற்றும் ‘அமைதியின் மீது சாய்ந்துகொள்ளுதல்‘ (பக்கம்:11-12) போன்ற கவிதைகளில் வெளிப்படும் நினைவுகள்கூட, நேரடியான கடந்தகாலப் பதிவுகளாக அல்லாமல் புனைவின் புதிர்ப்பாதை வழியே வெளிப்படுகின்றன. இந்தக் குரலின் தனித்தன்மை சில சமயங்களில் ஒருவித இருண்மைக்கு வழிவகுக்கலாம் என்றாலும் அதுவே தமிழ்க் கவிதைச் சூழலில் புதிய சாத்தியங்களுக்கான தேடலாகவும் அமைகிறது. இந்தத் தேடலின் சிக்கலான பயணத்தில் உருவாக்க வேண்டிய புனைவுகள் வாசகப் பரீட்சயத்தை எட்டும்போது மென்மைப்படுத்தும் ஒன்றாகவோ அல்லது தவிர்க்க வேண்டிய ஒன்றாகவோ மாற்றமடையலாம். அதற்கான கால எல்லை என்பது தமிழ்க் கவிதை வெளிக்கு அவசியமானது.

கருப்பொருள்களை அணுகும் விதத்திலும் ‘துரிஞ்சி‘ ஒரு விலகலை நிகழ்த்துகிறது. இயற்கை, நிலம், காதல், காமம், நினைவுகள், அரசியல், மரணம் போன்ற பொதுவான கருப்பொருள்களை இத்தொகுப்பு கையாண்டாலும், அவற்றை அணுகும் பார்வை மரபானதல்ல. இயற்கை, வெறும் அழகியல் பின்புலமாகவோ, மனித உணர்வுகளின் உவமையாகவோ பயன்படுத்தப்படாமல் அதுவே ஒரு விசித்திரமான, தன்னுணர்வு கொண்ட பாத்திரமாகப் பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. ‘எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன்‘, ‘பாறைகளின் கண்கள்‘ காதல் மற்றும் காமம் சார்ந்த சித்தரிப்புகள் ‘கொள்ளுக் கொடியில் ஆடும் காமம்‘ (பக்கம்:15) ‘அழிஞ்சி பழம்‘ (பக்கம்:81-82) ‘இரண்டாவது நாளில் சந்தித்தல்‘ (பக்கம்:78) நேரடியான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தவிர்த்து வினோதமான படிமங்கள், விளையாட்டுத்தனம், சில சமயங்களில் ஒருவித அந்நியமாதல் ஆகியவற்றினூடாக வெளிப்படுகின்றன.

இது, காமம் குறித்த தமிழ் மனத்தின் சில தயக்கங்களையும் மரபான சித்தரிப்பு முறைகளையும் மீற விழையும் முயற்சியாகத் மேலோட்டமாகத் தோன்றுகிறது. ஆயினும், இந்த மீமெய்மை அடர்த்தி என்பது சில சமயங்களில் உணர்ச்சிகளின் ஆழத்தைத் தட்டையாக்கிவிடுகிறதா அல்லது வெறும் அழகியல் சாகசமாக நின்றுவிடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. சமூக யதார்த்தங்கள் குறிப்பாக வறுமை, ஒடுக்குமுறை, இடப்பெயர்வு போன்றவை நேரடிப் பதிவுகளாக அல்லாமல் மீமெய்மைப் படிமங்களின் ஊடாகவே சித்தரிக்கப்படுகின்றன. ‘உங்களுக்கு ஏன் உப்புக் கரிப்பதில்லை‘ (பக்கம்:67-68) ‘தடினிக்காய் உனக்கல்‘ (பக்கம்:35-36). இந்த மறைமுகத்தன்மை அரசியல் கவிதைகள் மீதான தமிழ்ச் சூழலின் சில எதிர்பார்ப்புகளிலிருந்து விலகிச் செல்கிறது. ‘மீனவன்‘ (பக்கம்:45-46) ‘எங்கள் பிரதமர் மிக நல்லவர்‘ (பக்கம்:76) போன்ற கவிதைகளில் உள்ள அரசியல் விமர்சனம், குறியீடுகளின் வழியே செயல்படுவதால் அது நேரடியான தாக்கத்தை இழந்துவிட்டது என்று சிலருக்கு நீர்த்துப்போனதாகவும் தோன்றலாம். இது அரசியல் கவிதையின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் குறித்த ஒரு புதிய விவாதத்தைத் தூண்டக்கூடியதாக தமிழச் சூழலில் இருக்க முடியுமே தவிர, உலகளவில் அரசியல் கவிதைகளோடு நெருக்கமுள்ளவர்களுக்கு அப்படியிருக்காது என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.

மொழியும் படிமங்களும் இத்தொகுப்பின் தனித்துவத்திற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன. வட்டார வழக்குகளை இயல்பாகப் புழங்கும்படி பாவிக்கும் அதே வேளையில் தத்துவார்த்தமான, சில சமயங்களில் அறிவார்ந்த ஒரு மொழியையும் கவிதைகள் பயன்படுத்துகின்றன. இந்த மொழி, பெரும்பாலும் உரைநடைக்கு நெருக்கமாக அதீத அலங்காரங்களைத் தவிர்த்து, அசையும் படிமங்களின் வழியாகவே தனது கவித்துவத்தை அடைகிறது. இங்கு பயன்படுத்தப்படும் அசையும் படிமங்கள், வெறுமனே காட்சிகளை விவரிப்பவையாக அல்லாமல் அறிந்துகொள்ளுதலின், அர்த்தம் உருவாக்குதலின் சவால்களையும், உணர்வுநிலைகளையும் கடத்துபவையாக பல சமயங்களில் பொருள்கோடல் சிக்கல்களைக் கொண்டவையாகவும் உள்ளன. தமிழ் மரபின் செழுமையான படிமவியல் வழக்கத்திலிருந்து (சங்க இலக்கியம் தொடங்கி) உமேஷின் படிமங்கள் வேறுபடும் இடம் எதுவென்றால், அவை பெரும்பாலும் தர்க்க ஒழுங்கைக் கலைத்துப் போடும் மீமெய்ம்மைத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இது கடந்தகால தமிழ் நவீன கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அறிவோம். அதே நேரம் இவற்றை கவிதைகள் முழுமையிலும் பயன்படுத்திய ஈழத்துக் கவிஞர் சோலைக்கிளியும் இருக்கிறார். ஆயினும், உமேஷ், தனது கவிதையை நகர்த்திச் செல்லும் வசன நடையின் எதிர்பாராத தருணங்களில் இந்த அசையும் படிமங்களை பாவிப்பதோடு, அது தேவையான இடமாகவும் கவிதையின் இயங்கும் போக்கில் அமைந்துவிடுவதுதான் குறிப்பிட்டுக் காட்டவேண்டியது. இந்தக் கவிதை சொல்லும் முறையை மேலும் செழுமைப்படுத்தும்போது தீர்க்கமான தனித்தன்மையை முழுமையாகக் கண்டடைந்துவிடலாம் என்பது எனது கணிப்பீடு. இந்த அணுகுமுறை, சங்கப் படிமங்களின் நேரடித்தன்மை இயற்கை சார்ந்த இயல்புநிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மாறுபடக்கூடியது. கவிதைகள் நகர்ந்து செலலும்போது ஏற்படும் உரைநடைத் தாளம் என்பது இடைக்கிடை மரபின் தொடர்ச்சியை சில நேரங்களில் மனதில் ஏதாவதொரு மூலையில் தட்டி எழுப்பிவிடுகிறது.

சமகாலத் தமிழ்க் கவிதைகளின் அடிப்படைகளை தகர்த்து வெளியேறும் ஆவல் இக்கவிதைகளில் எந்த அளவிற்கு நிறைவேறியிருக்கிறது என்ற கேள்வி முக்கியமானது. ‘துரிஞ்சி‘ ஒரு முழுமையான உடைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்றால் இல்லை. ஆனால், ஏற்கெனவே இருக்கும் போக்குகளின் (பின்-நவீனத்துவச் சிதறல், அகவய நோக்கு) ஒரு தீவிரமான நீட்சியாக, ஒரு புதிய அழகியல் சேர்க்கையாக அமைகிறதா என்றால் விவாதத்திற்கு இடமின்றி அதை ஏற்க முடிகிறது. மீமெய்ம்மை மற்றும் மாய யதார்த்தப் புனைவுக் கூறுகளைத் தமிழ் நிலத்தின் பிரத்யேக அனுபவங்களுடன் இணைக்கும் முயற்சியில் குறிப்பிடும் அளவு இவரது கவிதைகள் முன்னேறியுள்ளன என்பதுதான் உண்மை. இது, தமிழ்க் கவிதையை உலகளாவிய கவிதைப் பிரதிகளுடன் இணைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படலாம். இந்த பண்பாட்டுக் கலப்பு தமிழ்க் கவிதையின் தனித்துவத்தையும், உலகளாவியத் தன்மையையும் ஒருங்கே சாத்தியமாக்கும் ஒரு வழியாக அமைகிறது. ஆயினும், இந்த அடிப்படைகளைத் தானே தகர்க்கும் படியாக, சில சமயங்களில் கவிதையை வரிவரியாக நகர்திச் செல்லும் போது கவிதைச் சம்பவங்களின் சீரற்ற தன்மை, சில படிமங்களின் செயற்கைத்தன்மை அல்லது மீமெய்ம்மை உத்தியின் பாணி மிகைப்பு போன்ற விமர்சனங்களுக்கும் இடமளிக்கிறது. எந்தவொரு தீவிரமான கவிதை உருவாக்க முயற்சியும் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது இயல்பே. இந்தப் புதிய திசைவழிக்கான தேடலில், சில கவிதைகள் அடையும் வெற்றியை மற்றவை அடையாமல் போகலாம்.

முடிவாக, பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘, சமகாலத் தமிழ்க் கவிதை வெளியில் ஒரு அசாதாரணமான, தவிர்க்கமுடியாத தலையீட்டை நிகழ்த்த முயல்கிறது. அதன் மீமெய்மை அழகியல், மரபான தமிழ்க் கவிதை மனநிலையிலிருந்து விலகிச் செல்ல எத்தனிக்கும் பிரக்ஞை, நிலம் சார்ந்த அனுபவங்களை உலகளாவியப் புனைவு உத்திகளுடன் இணைக்கும் முயற்சி மற்றும் அது எழுப்பும் எண்ணற்ற அர்த்த உருவாக்கச் சாத்தியங்கள் ஆகியவை இத்தொகுப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன. இது முன்வைக்கும் விமர்சனக் கேள்விகளும் அதன் கலைத்துவச் சவால்களும்கூட அதன் உயிர்ப்பிற்கும், சமகாலத் தமிழ்க் கவிதைச் சூழலில் அது நிகழ்த்தும் உரையாடலின் முக்கியத்துவத்திற்குமே சான்றுகளாக நிற்கின்றன. அடிப்படைகளைத் தகர்க்கும் அதன் ஆவல் முழுமையாக நிறைவேறியதா இல்லையா என்பதைவிட, அத்தகையதொரு தீவிரமான கலைவேட்கையுடன் அது பயணிப்பதே அதன் தனித்துவமாகிறது. எனவே, ‘துரிஞ்சி‘, அதன் அனைத்துச் சிக்கல்களோடும் வெற்றிகளோடும் சமகாலத் தமிழ்க் கவிதையின் போக்கைக் கூர்ந்து அவதானிப்பவர்களால் அவசியம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய, ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு செறிவான, சவால்நிறைந்த கவிதை நூலாக நம்முன் நிற்கிறது. இது, தமிழ்க் கவிதை தேங்கிவிடாமல் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டிருப்பதன் அடையாளம்.

The post திணைகள் கவிதை விருது 2025 first appeared on திணைகள்.

  •  

மதார் கவிதைகள்

1.
கூவிக்கொண்டும்
அகவிக்கொண்டும்
உறுமிக்கொண்டும்
கீச்சிட்டும்
குரைத்தும்
இருந்தோம்
மொழிக்கு முன்பு
மொழி வந்தது
நாசமாய்ப் போனது
பேசிக்கொண்டு மட்டும்
இருக்கிறோம்

2
காலை
மாலையைப் போல
நடிக்கிறது

மாலையால்
இரவு போல்
நடிக்க முடிகிறது

இரவு நடிப்பதில்லை

அது அதன்
இயல்பில்

அல்லது
இரவின் வேறு வேறு வேஷங்களா பொழுதுகள்

அல்லாது
இரவின் கனவுகளா பொழுதுகள்

கனவு கலைந்து விழிப்பது
இரவாய் அல்லாது
பகலாகவே அமைவது
எவ்வளவு பெரிய
ஏமாற்று வேலை

3
நலமுடன் வரலாறு

வான் பார்த்தேன்

பறந்துகொண்டிருந்த
பறவைக் கூட்டத்துக்கு
பாரதப் பெயர்களிட்டேன்

சகுனி, குந்தி, கர்ணன்,அர்ஜுனன்…

பிறகு
குகன், ராமன், சீதை…

கண்ணகி, கோவலன்
மும்தாஜ், ஷாஜஹான்
கட்டபொம்மு, தேவராயர்
அம்பேத்கர், காரன்வாலிஸ்
ஒசாமா, ஒபாமா
காந்தி, ராஜராஜசோழன்

கணக்கு வழக்கின்றி
கலந்துவிட்ட கூட்டத்தில்
அம்பேத்கரும் ராமரும்
காந்தியும் ஹிட்லரும்
ஒசாமாவும் ராஜராஜனும்
ஒன்றாய்ப் பறக்கிறார்கள்

குழல் துப்பாக்கியை
எடுத்துக் குறிபார்த்தேன்

வைத்த குறி
பிசகாது
காலத்தைச் சுட்டு வீழ்த்தினேன்

4
இரண்டு பக்கமும்
கர்ஜிக்கும் சிங்கங்களுடன்
நினைவஞ்சலி போஸ்டர்

இறந்து இரண்டே மாதம்தான் ஆகிறது

வயது இருபது இருபத்தைந்து இருக்கலாம்

கொலையாக இருக்கலாம்

நெஞ்சு நிமிர்த்தி
மீசை முறுக்கி
முறைக்குமவனைப் பார்க்க
சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது

பாவி
அவன் கெட்டது போதாதென்று
சிங்கங்களையும்
சிரிப்பாக்கிவிட்டான்

5
எதிரொலிக்கிறது

மெளனத்தை
மனனம் செய்து
ஒப்பித்தபோது
மறந்துபோய்
பேசிவிட்ட வார்த்தை

-மதார்

The post மதார் கவிதைகள் first appeared on திணைகள்.

  •  

குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள்

1.

கண்டடைய ஏதுமில்லை
தினம் ஒரு ராகத்தை எங்கிருந்து எடுக்கின்றன பறவைகள்
பாடல் மெருகேற மெருகேற
கீழ்வானம் சிவக்கிறது
வெட்கச் சிவப்பினை தின்கின்றன பறவைகள்.

2.

இரவிடம் தான் ஒப்படைத்துவிட்டு
பிரிந்தேன் சுமையை
இந்தப் புலர் பொழுதோ
சுமையோடே விடிகிறது
செல்லும் இடமெங்கும்
சுமை தாளவில்லை
சற்று இளைப்பாறலாம் எனில்
ஏந்திக்கொள்ள யாருமில்லை
தனிமையின் பாடலை
யார் கேட்பர்.
காற்றோ கேட்காமலே
அழைத்து வருகிறது மழையை.
மழையில் கரைக்கின்றன
சுமைகள்.

3.

ஊடலுடன்
உறங்குகிறாள் மகள்
புரண்டு புரண்டு படுக்கிறேன்
உறங்கும் மகளின் முகமோ
பூரண நிலவாய்ப் பொழிகிறது
சலனமற்ற முகத்தைப் பார்த்தபடியே
காலம் நகர்கிறது.
உறக்கத்தில்
நகைக்கிறாள் மகள்
கனவின் ஊடே
தொலைத்துவிட்டாள் போலும்
ஊடலை.

4.

ராஜநடை நடக்கிறது மைனா
விளிம்பு நிலையில் இருந்து
மத்திம சாலை வரை
செல்வதும் திரும்பவுதுமாய் இருக்கிறது
பறத்தலை ஒத்தி வைத்துவிட்டு
நடத்தல்
இன்னொரு பரிமாணம்
எதிலும் இழப்பில்லை
புதிய புதிய திறவுகள்
புதிய புதிய விடியல்கள்.

5.

கதவிடுக்கிலிருந்து
வெளியேறி
அங்குமிங்கும் ஓடிய கரப்பான்
மல்லாந்து கிடக்கிறது.
கரப்பான் கிடக்க
காலம் ஓடுகிறது.
ஓடுதல் மாற மாற
கரப்பானைச் சுமந்தபடி
கூட்டமாய் ஓடுகின்றன
எறும்புகள்.

🐾

6.

நிதர்சனமாக
அம்மாவின் புகைப்படம்
மேலிருந்து கத்துகிறது
வெள்ளைப் பல்லி.
வழக்கமான நாள்
இல்லையென்கிறது
அதன் குரல்
அம்மாவின் கண்களை
காணக் காண
அதில் தான் எத்தனை காருண்யம்
அந்தக் கண்களைப் போல்
இதுவரை சந்தித்ததில்லை
இந்த வெள்ளைப் பல்லியின்
கண்களோ
நிலைக்குத்தி நிற்கிறது
நேற்று
நடுநிசியின் விழிப்பில்
கொசு வலையில்
ஊர்ந்து சென்ற அதே கண்கள்
சட்டென நினைவுகளைக் கழற்றிவிடப் பழகிவிட்டது இக்காலம்.
எப்படி மறந்தேன் நேற்றை
நதிக்கரையில் நின்றபடி
உன் சாம்பலைத் தேடிய பொழுதுகள் எங்கு உள்ளன
உன் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்து விட்டு
வெள்ளைப் பல்லியைத் தேடுகிறேன்.
எங்கேயோ ஒளிந்து கொண்ட
கௌலியின் குரல்
காற்றோடு வருகிறது.

🐾

7.

திண்மப் பொருள்களுக்கும் உயிர்களுக்கும்
என்னவொரு பிணைப்பு.
திண்மப் பொருள்கள் எப்படி இலகுவாய்
உயிருக்குள் கலந்து விடுகின்றன
அப்பாவின் கைக்கடிகாரம்
அம்மாவின் பொட்டு
தமக்கையின் ரிப்பன்
தம்பியின் கையெழுத்து
காதலியின் ஒற்றை ரோசா
நண்பனின் சட்டையென
எப்படி அவைகள்
உயிர்ப்பூத்துக்
கிளம்பி விடுகின்றன.
ஏதோவொரு பயணத்தில்
பேருந்தின்
பெயர்ப்பலகைக்கூட
நெருங்கிய உயிரின்
பிம்பமாய் எழுகிறது.
ஒரு நிமிடம்
நண்பனை என்னிடம் அழைத்து வர
அந்த ஊர்ப்பெயர் மட்டும் போதும்.
சில நேரம்
திண்மப் பொருட்கள்
மௌனத்திற்குள் அழைத்துச் சென்று விடுகின்றன.
மகள்
தூரத்திலிருந்து
ஏதோ சைகை செய்கிறாள்
அவள்
ஒரு பக்கக் காதின் சாதனமோ
என்னை முறைக்கிறது.

🐾

8.

கைக்குழந்தையோடு பிச்சை யாசிக்கும் 

சிறுமி வாகன நெரிசலுக்கிடையே 

நுழைந்து நுழைந்து மீள்கிறாள்.
சிக்னல் சிவப்பில்
ஒளிர்ந்ததும்
உள் நுழைகிறாள்
சிக்னல் பச்சையில்
ஒளிர்ந்ததும்
வெளியேறுகிறாள்
இரு வண்ணங்களுக்கிடையே சில சில்லறைகளைப் பெறுகிறாள்.
இடையே
சில முகங்கள் கைக்குழந்தையைப் பார்க்கின்றன
சில முகங்கள்
இவளைப் பார்க்கின்றன
சில பார்வைகளின் உக்கிரம் தாள முடியாது
அவளோ
சூரியனைப் பார்க்கிறாள்.
சூரியனும் முழுவீச்சில்
அவளைப் பார்க்கிறான்
அவள் விழிகளில்
சிவப்பும் பச்சையும்
மாறி மாறி விழுந்தபடியே இருக்கின்றன.
திடீரென
அவள் உடலும்
சிவப்புக்கான சிக்னல் தந்துவிட்டது.
சற்றே உணர்ந்தவள்
நெரிசலை விட்டு வெளியேற வழியின்றி பூமியை ஓங்கி உதைக்கிறாள்.
🐾

9.

உடல் ஒட்டினார் போல்
இரண்டு பனை மரங்கள்
நிற்பது அபூர்வம்.
சிறுவயதில்
பனை அருகில்
முனி இருப்பதாக உலவிய கதையை நம்பியதுண்டு.
பருவ வயதில் பழகிவிட்டது
பனையோடு தான் எங்கள் விளையாட்டு
கொழுத்தும் வெயிலில்
பனையடியில் தான் நிழலுக்காய் ஒதுங்குவோம்
காதலுக்குள் விழுந்த
மாரி அக்காவை
வெளியூர்க்காரனுடன் அங்குதான் கண்டிருக்கிறோம்.
பின்னர் அவனோடு சென்று விட்டதாய்
ஊர்க்கதை உண்டு
நாலு கழுதை வயதானபின் வெளியூர் வேலைக்குச் சென்று விட்டு
திரும்பிய ஒர் நாள்
மாலைக் கருக்கலில்
மாரி அக்காவைத்
தலைவிரிக் கோலமாய் பனை அருகில் கண்டேன்.
அவள்
முனிபோல் இருந்தாள்.

🐾
10.

மியாவ்..மியாவ்…
எனக் கத்திவிட்டு
பூனையாகிவிட்டேன்
என்கிறாள் மகள்
அவள் தோழியோ
கீ ..கீ…என்கிறாள்
அவளும் கிளியாகிவிட்டாள்
பவுடரை முகமெல்லாம்
அப்பிவிட்டு பேயாகிவிட்டேன்
என்கிறாள் ஒருத்தி
காணாத பேயைக்கண்டு
நானும் கிலி கொள்கிறேன்.
பதட்டம் தனிவதற்குள்
சிங்கத்தின் கர்ஜனை
யானையின் அம்பாரி
வண்ண மர எழுச்சியென
அதகளமாகிறது வீடு
இடையே
கிளியாய் ,பூனையாய் மாற நானும் விழைகிறேன்
குரலோ
என் சொல் கேள மறுக்கிறது
அயர்வில்
விலங்குகளோடு விலங்காய் கண் மூட
சப்தத்தை
விழுங்கிய வீட்டினுள்
கானகத்தின் அமைதி

  • குமரேசன் கிருஷ்ணன்

The post குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள் first appeared on திணைகள்.

  •  

திருச்செந்தாழை கவிதைகள்

”இது காட்டுப்பூனை… காட்டுப்பூனை”
சுற்றுலாவாக வந்திருக்கும் சீனன் கத்துகிறான்
புனுகுப்பூனைகளின் கூட்டத்தினூடே
தனது உடலைப் பயந்து பதுக்குகிறது காட்டுப்பூனை
சந்தனக்கடை முதலாளியின் காலுக்குக்கீழே
கம்பிகளால் வரிசையிட்ட சிறியதோர்
சதுரத்திற்குள் புனுகுப்பூனைகள் வசிக்கின்றன
‘நுகர்ந்து பார்’ எனும் சலுகையோடு
முதலாளி அல்லாப்பிச்சை நீட்டுகிற
அத்தர் மணக்கும் விரலின்
வாஞ்சையைப் புறக்கணித்து
சீனன் இன்னமும் கத்துகிறான்
அல்லாப்பிச்சை மந்திரிப்பார்
நாள்பட்ட வலியோடு வருபவர்களின்
நெற்றியில் அத்தர் கலந்த கருங்களிம்பை
மனதின் மெக்காவிலிருந்து
அவர் அள்ளிப் பூசும்பொழுது
சற்றே வலிமறந்த நோயுற்ற முகத்தின்
மஞ்சள் பற்கள் சிரிக்கின்றன
சீனன் கத்துகிறான்
“காட்டுப்பூனை… காட்டுப்பூனை…”
அல்லாப்பிச்சைக்குத் தெரியும்
பொய்க்கும் ஒரு உடல் உண்டு
கூசுகின்ற மனம் உண்டு .
தனக்குக் கீழே இருக்கும்
பூனைக் கூண்டின் கம்பிவரிசையை
பாதங்களால் மெல்லத் தட்டுகிறார்
இது ரமலான் மாதம்
சொர்க்கத்தின் கதவுகளை
ஏக இறைவன் திறந்தருளும் மாதம்
பரிதவித்து ஒடுங்கிய பூனையின் கண்களை
கால் விரல் நகங்கள்
“பரவாயில்லை, விடு” எனப் பார்க்கின்றன
தன்முன்னே குன்று குன்றாக
வைக்கப்பட்டிருக்கும் சந்தனப் பாளங்களை
அவரது உள்ளங்கை பிசைந்து
சிறுசிறு வில்லைகளாக ஆக்குகின்றது
கடைச்சிறுவன் கோழித்தீவன கம்பு தானியத்தை
மாவாக அரைத்து
மூட்டை கட்டி வருகிறான்
நிறமூட்டிகளும், மணமூட்டிகளும் தெளிக்கப்பட்ட
கம்பு மாவு
மணக்கின்ற சந்தனமாக வெளியே வருகிறது
தூரத்தில் சஹர் வேளைக்கான
பாங்கொலி எழுகிறது
சந்தனமெனப் பெயரிடப்பட்ட
வழிகின்ற நீருடன் இருக்கின்ற
மஞ்சள் பாளத்தை
மலமென ஒருமுறை கண்கள் பார்க்கின்றன
பன்னெடும் ஆண்டுகளாக
கண்கள் உணருகின்ற
அந்த ஒரு கண காட்சிப் பிறழ்வை
இன்றுவரை சரிசெய்யவியலாத
அல்லாப்பிச்சை பெருமூச்சுடன் குனிந்துகொள்கிறார்
வறண்டு இறுகிவிட்ட
தாவரத்தின் வேரைப்போன்ற
அந்த நோன்பிருக்க இயலாதவனின்
பாதத்தை
கம்பிக்கூண்டுக்குள்ளிருந்து
ஒரு ஈர நாவு மென்மையாகத் தடவுகிறது.

பா. திருச்செந்தாழை

The post திருச்செந்தாழை கவிதைகள் first appeared on திணைகள்.

  •  

பாத்தேறலுக்குப் புகழஞ்சலி

சிங்கப்பூரின் மூத்த மரபுக் கவிஞர்களில் ஒருவர், தீவிர தூயதமிழ்ப் பற்றாளர், 11 நூல்களின் ஆசிரியர், IceCream என்பதற்குப் பனிக்கூழ் என்ற சொல்லை வழங்கியவருமான பாவலர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது 80-ஆவது வயதில் சென்ற வியாழன் இரவு 27-மார்ச்-2025 அன்று இயற்கை எய்தினார்கள். அன்னாரது இறுதிச் சடங்கு  மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்றது.

மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.க / MIC) கட்சியின் தேசியத் துணைத்தலைவரும், தாப்பா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான டத்தோ மு.சரவணன் அவர்கள், பாத்தேறல் அவர்களின் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகச் சனிக்கிழமை 28 மார்ச் நண்பகல் சிங்கப்பூர் வந்திருந்தார்.  

பாசிர் ரிஸ்ஸில் இருக்கும் பாத்தேறல் அவர்கள் இல்லத்துக்குச் சென்று, அவரின் நல்லுடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவர் மகள் கண்ணகி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கவிமாலை நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன், கவிமாலை முன்னாள் தலைவர் இறை.மதியழகன் ஆகியோர் டத்தோ சரவணன் அவர்களுடன் கூடவே இருந்தனர். சுமார் ஒருமணி நேரம் அங்கு அமர்ந்து பாத்தேறல் ஐயாவைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.   கவிமாலைக் கவிஞர்கள் கவிஞர் கி.கோவிந்தராசு , கவிஞர் கருணாகரசு, கவிஞர் கோ. இளங்கோ, கவிஞர் பனசை நடராசன் போன்ற பல கவிஞர்களும் இல்லத்துக்குச் சென்று பாவலருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சிங்கப்பூர் கவிஞர் மறைவுக்கு டத்தோ சரவணன் அவர்கள் நேரில் வருகை புரிந்து ஆறுதல் கூறிச் சென்றது, சிங்கப்பூர் மலேசியத் தமிழ் நல்லுறவுக்கு நல்லுதாரணமாகவும், டத்தோ அவர்கள் நெஞ்சில் தமிழ் மீதும் தமிழ்ப் படைப்பாளர்கள் மீதும் உள்ள உண்மையான மதிப்பையும் அக்கறையையும் உணர்த்தும் விதமாகவும் அமைந்தது.

அவருக்கு  ‘பாத்தேறல்’ என்ற பட்டத்தை 1989 ஆம் ஆண்டு வழங்கியவர் ம.இ.க முன்னாள் தேசியத் தலைவரும் சரவணன் அவர்களின் அரசியல் வழிகாட்டியுமான, முன்னாள் மலேசியப் பொதுப் பணித்துறை அமைச்சர் அமரர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள் என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தது மேலும் நெகிழ்ச்சியாக அமைந்தது.

மாலை 6:45 மணிக்கு மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு இரா.தினகரன். கொள்கை ஆய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் திரு அருண்.மகிழ்நன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, தமிழ்முரசு இணை ஆசிரியர் கனகலதா, எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் தமிழாசிரியர் திரு முத்துமாணிக்கம், மக்கள் கவிஞர் மன்றத்தின் சார்பாக கவிஞர் இராமசாமி, முனைவர் தேன்மொழி ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள். கவிஞர் புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள் நிகழ்வை வழிநடத்தி இரங்கல் உரையாற்றினார்கள்.

பாவலரின் மகள் கண்ணகி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தி தந்தையும் நினைவுகளை வருத்தத்தோடு பதிவு செய்து, ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி கூறினார்.

தலைப்பிள்ளையான அவர் ஒரு வயதில் இருந்தபோது, தந்தையார் தனக்காக எழுதிய கவிதையை கண்ணீர் மல்கப் பாடினார். அவருடன் ஐயாவின் மகள்கள் தமிழ்க்கோதை, கலைச்செல்வி, மகன் மணிமாறச் செல்வன் ஆகியோர் இணைந்து பாடியது அனைவரையும் நெகிழச்செய்ததோடு ஒரு தந்தைக்குத் தக்க நினைவஞ்சலியாகவும் அமைந்தது.

அதன் பின் சடங்கு நிகழ்வுக்குப் பின்னர் அன்னாரது உடல் எரியூட்டப் பட்டது.

கவிமாலையில் மரபுக் கவிதை எழுதுபவர்களை ஊக்கப்படுத்துவதற்காகத் தனித்தமிழில் எழுதுபவர்களுக்கு மாதந்தோறும் ரொக்கத் தொகையைப் பரிசாக வழங்கியவர்.  கவிமாலையின் 298ஆவது மார்ச் மாதச் சந்திப்பு 29.03.2025 மாலை 6 மணிக்கு சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.  அதில் பாத்தேறலுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  பாத்தேறல் பற்றி கவிமாலை வெளியீடு செய்த வரலாறும் வரிகளும் குறும்படம் திரையிடப்பட்டது.  கவிமாலைக் கவிஞர்கள் பாத்தேறலின் கவிதைகளை வாசித்து அவரது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது அவருக்கான புகழஞ்சலியாக அமைந்தது.   

தமிழுக்கான சிந்தனை உழைப்பை வழங்கிய சிங்கப்பூர்ப் பாவலர்கள் வரிசையில் அவருக்கு நீங்கா இடம் உண்டு. பாத்தேறல் அவர்களின் படைப்புகள் அவரது புகழ் வாழ்வை உறுதிசெய்யும். வாழ்க பாத்தேறலின் புகழ்!
.
– கவிஞர் இறை மதியழகன்

30.03.2025.

The post பாத்தேறலுக்குப் புகழஞ்சலி first appeared on திணைகள்.

  •  

தன் கவிதையை அழவைத்து, தான் உளமாரச் சிரிக்கும் கவிஞன்

 

நம்மால் பேச இயலாததை நாம் மௌனத்தில் கடக்கத்தான் வேண்டும் என்கிறான் தத்துவவாதி விட்கன்ஸ்டைன். மொழிக்கு முன்னால் உணரும் விம்மலைப் பேசவும் மொழிபெயர்க்கவும் முயலுகையில் கடக்கப்படும் சிறு எட்டோ, பெருவீச்சின் சாகசமோ தான் கவிதை என்று தோன்றுகிறது.

றாம் சந்தோஷ் வடார்க்காடு-வின் மூன்றாவது தொகுப்பான‘சட்டை வண்ண யானைகள்’, தமிழ் நவீன கவிதையில் வேடிக்கை பாவத்தோடு, விழிப்பின் தீவிரத்தையும் கொண்ட காத்திரமான கவிநிகழ்வு. அது கொடுக்கும் அனுபவம் என்னவென்று விசாரிக்கும்போதுதான் விட்கன்ஸ்டைனைத் துணைக்கழைக்க வேண்டி வந்தது.

 

றாம் சந்தோஷ் வடார்க்காடு கவிதையை ஒரு முகமூடியாகப் பாவிக்கிறார். முகம் கொள்ளும் சிரிப்பை, முகம் துடித்து விம்மும் அழுகையை முகமூடிக்கு தனது நடிப்பின் வழியாகப் படிப்படியாக இடம் மாற்றும் கலை அவருடையது. முகமூடிகளே நிகழ்த்துவதாகத் தோன்றவைக்கும் கவிதைகள் என்று இதற்கு முன்னர் பெருந்தேவியின் கவிதைகளைச் சொல்லமுடியும்.

எமது அந்தரங்கத்தையும் எமது அசிங்கத்தையும் எமது வெறுப்பையும் நாம் உணரும் தனிமையையும் எம் கொந்தளிப்புகளையும் எம் இரட்டை நிலைகளையும் எம் விழிப்பையும் ஒரு முகமூடிக்கு மாற்றிவிட்டால் இயற்கையின் பாறைத்தன்மையைக் கொண்ட ஒரு அனாமதேயனாக ‘நான்’ ஆகிவிடக்கூடிய உத்தேசம், ஆசுவாசத்தை றாம் சந்தோஷின் கவிதைகள் அளிக்கின்றன.

‘உன் துயருக்கும் ஒரு பலன் உண்டா கவியே
நாலு கவிதை கிடைக்கும் ப்ரோ’
இப்படித் துணுக்குத் தன்மையையும் பாவித்தபடி தீவிரத்தின் ஊஞ்சலுக்கும் அடுத்து தாவும் தன்மையையும் சமீபத்தில் சாதித்துள்ளவர் றாம்.
எதைக் கற்றும் எந்த லாபமும் இல்லை
எதைப் பயின்றும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை
எதன் பொருட்டும் நீ பலியாவதை
நான் விரும்புவதில்லை என்று
அந்தக் கண்ணாடி முன் ஒருதரம் சொன்னேன்
அது அழுதது; நான் சிரித்தேன்.

அந்த முயற்சியில் பெரிதளவு வெற்றியையும் சில தோல்விகளையும் பெரிதளவு இசைமையையும் சின்னச் சின்ன அபசுரத்தையும் கொண்டது ‘சட்டை வண்ண யானைகள்’.

பிறப்பு இனிமையானது அல்ல. பிறப்பு குணமானதும் அல்ல. பிறப்பின் அருவருப்பை அதோடு தோய்ந்த அழகை, பிறப்பின் பயங்கரத்தை அதோடு ஒட்டிக்கொண்டுள்ள புது விழிப்பை, பிறப்பின் நசநசப்பை அதோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பை, பிறப்பின் ரண ஓலத்தை அதோடு பிரிக்கவியலாத அநாதி துக்கத்தைத் தொட்டுத் தொட்டுச் செல்வதால் றாம் சந்தோஷ் இக்கவிதைகள் வழியாக எனக்கு நெருக்கமாகிறார். பிறப்பு அத்தனை எளிதானதுமல்ல.

நண்பனுமில்லாத நண்பியுமில்லாத காதலனுமில்லாத காதலியுமில்லாத செல்லக்குட்டிகளாக இவர் தனது கவிதைகளைப் பராமரிக்கிறார். அவர்களை யார் என்று கேட்டால் ‘என் இதயம், என் பருவம், என் குழந்தைமை, என் தாய், என் தந்தை, என் அசகோதரன், மட்டுமில்லாது என் விரோதியின் அசல் வார்ப்பென்பேன் ’ என்று சமத்காரத்துடன் கூறும்போது உள்ளேயும் வெளியேயும் உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் விழிப்பை உணர்கிறோம்.

நவீன கவிதைகள், பார்த்தலாக, வெறும் பராக்காகப் பண்ணி பண்ணி தினுசு தினுசாக வனையப்படும் வஸ்துக்களாகத் தோற்றமெடுத்துவிட்ட நிலையில் றாம் சந்தோஷின் உள்ளும் புறமுமான விழிப்பு கவிதைச் செயல்பாட்டாளனான எனக்குப் புத்துணர்வை ஊட்டுகிறது.

தமிழில் வேடிக்கை என்ற சொல் இரண்டு வித்தியாசமான அர்த்தங்களில் செயல்படுகிறது. அதன் ஒரு பொருள் பார்த்தலை மட்டுமே குறிக்கிறது. நிகழ்த்திக் காட்டுவதையும் வேடிக்கை என்ற சொல் குறிக்கிறது. 

றாம் சந்தோஷின் கவிதைகளை நான் விழிப்பை உள்ளேயும் வெளியேயும் கொண்டு நிகழ்த்தும் செயல்பூர்வமான வேடிக்கை என்று சொல்வேன். தமிழில் நகுலன், கலாப்ரியா, ரமேஷ் – பிரேம், பச்சோந்தி எனக் காட்சியே கலகமாக மாறும் தீவிர வேடிக்கைக்கு ஒரு மரபு உண்டு. அந்த மரபில் மிகக் காத்திரமாக இணைந்திருப்பவர் றாம் சந்தோஷ். 

தமிழ் பக்திக் கவிதைகளின் நவீன தொடர்ச்சியாகவும் அந்த மரபின் ஒரு பகுதியான வைதீகத்தின் முதுகில் பிரம்பால் சாத்தியதுபோலச் சுளீர் தன்மை கொண்ட பதிலாக ‘மாயோன் அபிமான சர்ச்சை என்னும் மால் திரு கலகம்’ கவிதை வரிசையைச் சொல்லலாம். தமிழின் அபூர்வமான நீள் கவிதைகளில் ஒன்றாக அது திகழும்.

மைத்துனன் நம்பி
சூதனா சற்று சும்மா இரு
கோத்திரம் கேட்காதே; குலம் பொருளறியேன்
முதுகில் சாற்றிய சாதியின் வடுவுண்டு
நீ பாத்திரம் என வொன்றை நீட்டினால்
நான் இடுவேன் பத்து; போதுமா? தள்ளு.
சாலவும் தூரமிருந்து நான் வந்தேன்;

எனத் தொடங்கும் கவிதை வரிசை றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் தமிழறிஞர் பின்னணியையும், மொழி லாகவத்தையும் உணர்த்துவது. பேச்சுவழக்கை இயல்பாகத் தொனிக்க விடுதல், சமத்கார மொழி, அழுத்தமான கேலியுடன் தெலுங்கு, மலையாள விளிப்புகளையும் கவிதைக்குள் இணைத்துவிடுகிறார். இசைத்தன்மை கொண்ட கவிதைகளில் ஞானக்கூத்தனின் தாக்கத்தைப் பார்க்கமுடிகிறது.

தன்னுடனேயே விளையாடும் ஒரு சிறுவனுடைய தனி மொழி, தன் செல்லம், தன் பாவனை, தன் உரையாடலாக, ஆராட்டி, சீராட்டி, சீண்டி, பிணங்கும் அந்தரங்கமான கவிதைமொழியை தன் கவிதைகளுக்குத் தேர்ந்துள்ளார். மெனக்கெடல் தொனிக்காத ஆத்மாநாமின் அந்தரங்க உரையாடல் தன்மை றாம் சந்தோஷிடம் வேறு தீவிரத்துடன் இறங்கியுள்ளது. ஆத்மாநாமின் ‘என் ரோஜா பதியன்கள்’, ’மறுபரிசீலனை’, ‘நாளை நமதே’, ‘நன்றி நவிலல்’ கவிதைகளின் தொனி றாம் சந்தோஷில் புதுக்கப்பட்டுள்ளது.

சட்டை வண்ண யானைகள் தொகுப்பின் துவக்கத்திலுள்ள ‘பரஸ்பரம்’ கவிதையிலேயே முகத்துக்கும் முகமூடிக்கும், ஆளுக்கும் பிம்பத்துக்குமான உரையாடல், பரஸ்பரப் பரிமாற்றம் துவங்கிவிடுகிறது. புது வருடத்தை, புது அனுபவத்தைக் கொண்டாட திறக்காத சிப்பிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத் திறக்கப்படாத சொற்கள் காத்திருக்கின்றன.

குளிரும் வெயிலும் அருகருகே மாறி உட்காருமளவுக்குத் திகழ்கிறது.
அப்போது கவியின் எதிர்கால மூப்பை முகத்தில் கொண்ட மந்தி. அதன் கரத்திலோ கவிதை உரைப்பவனின் கடந்த காலப் புண்கள். அது என்னைவிடவும் அழகு. அது என்னைவிடவும் சமத்து என்று கோதிவிட்டு யாருமில்லையா உனக்கு மந்தி என்று கேட்கும்போது அந்தரங்க குரல் பிரமாண்டமான பாறைகளை உண்டாக்கி, அவற்றுக்குள் மோதி பெரும் எதிரொலியாக, அசரீரியாக, ஓலமாகத் தொனிக்கிறது. தனிமை தனது கூழாங்கல்லை உருட்டி உருட்டிப் பாறையாக்கும் சம்பவம் இந்தக் கவிதையில் நிகழ்கிறது.

யாருமில்லையா உனக்கு மந்தி
உன் மந்தை எங்கே
அது என்னைப் போலவே
என்னோடு பேசாமல் பார்க்கிறது.

கவி தனது துக்கத்தைத் திராட்சைக் கொத்தாக அந்தக் குரங்குக்கு அளித்துவிட்டான். அது பதிலுக்கு மகிழ்ச்சி என்னும் ரசமாய் மாற்றித் தருகிறது. அந்த மந்தி யார்? அண்மையிலேயே இருந்துகொண்டு அனாமதேயமாக நமக்குத் தொனித்துக் கொண்டிருக்கும் நம்மையும் உள்கொண்ட இயற்கை என்று றாம் சந்தோஷிடம் ஒரு பதில் உள்ளது.

றாம் சந்தோஷ், நல்ல கவிதைகளையும் அந்தரங்கக் குறிப்புகளோ எனத் தொனிக்கும் ஊதாரியாய் அலையும் விவரணைகளுக்கு நடுவில் வைத்துள்ளதால், வாசிப்பவன் கவிதையைத் தனியே உருவிக்கொள்ள வேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது.‘வெள்ளி பார்த்தல்’ கவிதை அதற்கு ஒரு பருக்கை உதாரணம்.

‘நாங்கள் தொடர்ந்தோம்’ என்ற இடத்தில்தான் எனக்கு வெள்ளி பார்த்தல் கவிதை தொடங்குகிறது. போகும் போது இடதுகாலையும் வரும்போது வலதுகாலையும் நனைக்கும் ஏரியைப் போலவே ஓர் அல்லாத நிஜத்தில் படர்கிறதாம் குளிர்ச்சி. உண்மையின் குளிர்ச்சியில் அகம் விரிந்து உயர்ந்து குருவியாகச் சுயம் பறக்கிறது.

விண்மீன்களின் சேய்மையை உணராமல் இருக்க, பாவனை மின்மினிகள் தீண்டித் தீண்டிச் செல்கின்றனவாம். நிலைத்த மெய்மையாக, றாம் சந்தோஷ், வானத்து விண்மீன்களைச் சுட்டுகிறார் போல. மனிதனின் உயரத்திலேயே தீண்டும் அநித்தியமான நட்சத்திரங்களான மின்மினிகளைக் கவிதைகள் என்று கொள்வோமா?

இந்தக் கவிதையில் புதிய வஸ்துகள் எதுவும் இல்லை. வெள்ளி, வண்ணத்துப்பூச்சி, மலர், நிலா, நெல்லிக்கனி என எல்லாமே பழைய வஸ்துகள். ஆனால், அத்தனை வஸ்துவும் நித்தியத்தின் சுடரில் ஒளிர்கின்றன.

அண்ணன்கள் கதை 1

நாங்கள் பாலகர்களாக இருந்தோம்
ஓர் அண்ணனுக்கே உரிய
வழமைபோல் இந்தத் தம்பியை ஏமாற்றி
என் தீனி மொத்தத்தையும் அவனே தின்றான்…
என்னை விட்டுவிட்டு
கிரிக்கெட் விளையாடப் போவான்…
என்னை ஒரு நாளும்
அவனுடைய சைக்கிளில் ஏற்றியதே இல்லை…
ஒரு நாள் காம்பஸ் அம்பால்
என் பாதத்தைக் காயப்படுத்திவிட்டான்
அப்பா அதற்கு அவனுக்கு அடி கொடுத்தார்
நான் தேம்பித் தேம்பிய அழுகையினூடே
ஒரு கையளவு சிரித்தேன்.

அண்ணன்கள் கதை 7

அவ்வப்போது தோன்றும்
அழுகை முட்டிக்கொண்டு வரும்
ஆண் மகன் அழுதால் ஆகுமா… என்றான் ஒருவன்…
அந்தத் தடியை எடுத்து அவன் தாடையை உடை என்றேன்.
பொறுப்பெல்லாம் கூடிப்போன பின்னே,
உறவுகள் விரிசல் காண்பதுறுதி…
மறுமுறை ஒட்ட நினைத்தால்…
பணமொரு பாம்பு போல் நெளியும் குறுக்கே…
அதைத்தாண்டி அண்ணனை நினைக்க…
ஆயிரம் காரணங்கள் வேண்டியதில்லை…
இரு பாலகர்கள் போனால் போதும் முன்னை
ஒரு வண்ணச் சட்டைப் போட்டு…
(உலகின் மொத்த அண்ணன்களுக்கும்
என் அண்ணன் கோபிக்கும்)

பொதுக்கழிப்பறைகளின் தேவபாதைகள்
அடைக்கப்படும்போது…

மகள்:
கழிப்பறைகளுக்கான
தேவ பாதைகள் அடைக்கப்படும் போது
நான் என்ன செய்வேன் அம்மா..
ஓர் ஆணைப்போல
கொட்டும் இப்பெரு மழையில்
பாதைகளோரமோ, ராத்திரியிலோ,
மந்தப் பகலிலோ,
கண்கள் ஆயிரம் பரப்பும் வெளிச்சத்தில்
கூச்சத்தை விலக்கியேனும்
யாரை நம்பி எதன் துணியில்,
நான் கழிப்பேன்; என் கால்களை விலக்கி…

தாய்:

துயரின் மகளே
பழகுவது எழுதி தான் என் பாசப்பெண்டே!
ராத்திரிகள் உனக்கு அருளப்படும் மட்டும்
கொஞ்சம் போல் அடக்கி வைத்திருப்பது கடினம் தான்
என்றாலும், அதுவரை நீ
தனித்திரு! விழித்திரு!
பிறகு இது வேணும் வாய்த்திருக்கிறதே என
அக்குளியலறைக்குள் செல்…
அங்கேயே கழி!
கழிக்கப்பட்ட அந்த வரிய தேவதையின் தங்க எச்சத்தைத்
தரையில் மஞ்சள் கிழங்கெனத் தேய்த்து வெளியேற்று
இப்பெத்தாம் பெரிய சமத்துவச் சாக்கடையில்,
ஆனால், சில நாட்கள் மட்டும்
என் மகளே…
தங்க மகளே…
கொஞ்சம் கொஞ்சம் போல்
உன் உடம்பில் மிளிரும் அந்த நிஜ மஞ்சளில் மட்டும்
துர் மலத்தின் நாற்றம் மாறாது மணக்கும்
அதையும் நீ பழகுவாயாக …
என் துயரின் மகளே!
வருங்காலப் பறவையே!

(உதயேந்திரம் பேரூராட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும்…)

பெரும்பொழுது: இருபத்தியோரம் நூற்றாண்டு
சிறுபொழுது: மழைக்காலம்
நித்ய பொழுது: கழிவறையறு காலம்.

 

 

 

சட்டை வண்ண யானைகள்

றாம் சந்தோஷ் வடார்க்காடு

கொம்பு வெளியீடு
விலை: 150 ரூபாய்.

The post தன் கவிதையை அழவைத்து, தான் உளமாரச் சிரிக்கும் கவிஞன் first appeared on திணைகள்.

  •  

நான் எழுதவே விரும்புகிறேன் – லி சிங் சாவ்

இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது லி சிங்சோவ் (Li QingZhou) பற்றிய தகவல்களைப் படிக்க நேர்ந்தது. சமீபத்தில் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதார்த்தமாகக் கண்ணில் பட்ட பண்டைய சீனக் கவிஞரான லி சிங்சோவ் பற்றிய நூல் வாசிப்பதற்குச் சுவாரசியமாக இருக்க உடனே எடுத்துவந்தேன். கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக அறியப்படுகிறார். 

பண்டைய காலச் சீனாவில் டாங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீனா தொடர்ச்சியாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிணைத்துச் சொங் வம்சம் நிறுவப்பட்டது. சீனாவின் வர்த்தகம் செழித்து மக்கள் ஓரளவு மகிழ்வாக இருந்தபோதும் நாட்டிற்கு அச்சுறுத்தல்கள் அதன் அண்டை நாடுகளிலிருந்து வரத்தொடங்கின. ஒவ்வொரு அரச மரபும் நாட்டின் அரசியல், கலாச்சார வளர்ச்சியை வலியுறுத்தி அண்டை நாடுகளுடன் சமாதானத்தை நாடினர். அப்போது மிங் டைனாசிடி, சொங் டைனாசிடி, தாங் டைனாசிடி, ஷாங் டைனாசிடி எனப் பல முக்கிய அரச வம்சங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அரசியல் அமைப்பினை உருவாக்கின. சீன அரச வம்சங்கள் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என நாட்டைப் பராமரிப்பதை நோக்கமாகக்கொண்டு நாட்டின் எல்லைகள் பிரிக்கப்பட்டன. அதில் ஆயிரமாண்டுகளில் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக இவர் அறியப்படுகிறார்.

லி சிங்சோவ் கி.பி 1084 ஆம் ஆண்டில் பிறந்தவர். அவரது தாய் வசதியான மற்றும் இலக்கிய ஆர்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவள். சிங்சோவ் பலவகையான புத்தகங்களையும் படிக்கத்தொடங்குகிறாள். தன் குடும்பத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கல்வியைக் கற்கும்படி லியை ஊக்குவிக்கிறார். ஒரு நாள், டாங் வம்சத்தின் நூலொன்றில் வேடிக்கையான கதை ஒன்றைப் படிக்க நேர்கிறது. அதில் விருந்தினர்களுக்கு இரவு உணவிற்கான அழைப்பிதழ்களை அனுப்பிவிட்டு விருந்திற்காக ஒரு பிரபலப் பாடகரைப் பாட அழைக்கிறார்கள். ஆனால் அதை வேடிக்கையாகச் செய்ய வேண்டுமெனத் திட்டமிடுகிறார்கள். ஒரு வேலைக்காரனைப் போலப் பாடகரை உடை அணியச் செய்து, அவர் அறைக்குள் நுழைந்தபோது யாரும் அவரைக் கவனிக்கவில்லை கீழ் வகுப்பைச் சேர்ந்தவரென நினைத்து உதாசீனப்படுத்துகிறார்கள். அவர் அறையின் பின்புறத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். விருந்தின் இறுதியில் தொகுப்பாளர் மேடையில் ஏறி, நகைச்சுவையாக “எனது நண்பர்களில் ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் நமக்காக விருந்தில் பாடல்களைப் பாடுவார் என்றவுடன் எல்லோரும் அமைதியாக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர், பாடகர் யார் என்று பார்க்கிறார்கள். அனைவரும் வியக்கும் வகையில், மோசமான ஆடை அணிந்த வேலைக்காரர் முன்னே வருகிறார்.

மேடையில் ஏறியவுடன் பாடலுக்கு இசையமைத்து, பார்வையாளர்களைப் பார்த்து உரக்கப் பாடத் தொடங்குகிறார். அந்த அறை அலறத் தொடங்கியது, காந்தக் குரலில் பாடல் ஒலிக்க, முதலில் அவர்கள் நகைச்சுவை நினைத்துச் சிரித்தனர். விரைவில் அவர்கள் பாடல் ஆழமாகத் தொட்டதால் அமைதியாகி, பாடல் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டல் பலமாக ஒலிக்கிறது. வேலைக்காரன் போல் உடையணிந்தவர் உண்மையில் டாங் வம்சத்தின் சிறந்த ஆண் பாடகர் வாங் பாயோஷன் என்று அறிந்து பலத்தக் கைத்தட்டலில் அறை அதிர்ந்தது. இக்கதையைப் படித்து முடித்ததும் அவள் வெடித்துச் சிரித்தாள். உலகம் எவ்வளவு பாசாங்குத்தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதைப் புத்தகத்தின் அட்டையைப் போல மனிதர்களை மதிப்பதாக எண்ணி வருந்துகிறாள்.

அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த அறிஞர்களால் ஈர்க்கப்பட்ட சிங்சோவ் கவிதைகளை எழுத ஆசைப்பட்டாள். ஏற்கனவே பலவிதக் கவிதைகள் புழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலானவை மோசமாக எழுதப்பட்டவை, குறிப்பாக அவை ஆண்களால் எழுதப்பட்டவை. கவிதையின் நடை மிகவும் ஆடம்பரமாகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. போரைப் பற்றியோ அவர்களின் தனிப்பட்ட லட்சியங்கள் பற்றியோ மட்டுமே இருந்தது. சிங்சோவ் தன்னால் கவிதைகளை எழுத முடியுமா, ஒரு புதிய வகைக் கவிதை நடையை உருவாக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தாள். கவிதைகள் புத்துணர்ச்சியாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்றும் உணர்ந்தாள். தன் பார்வைகளை வெளிப்படுத்த ஆடம்பர வார்த்தைகளைப் பயன்படுத்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

பிரபல அறிஞரும் சொங் வம்சத்தின் பிதாமகனாகவும் விளங்கிய வாங் அன்ஷியுடன் செல்வத்தின் மீது பேராசை கொண்ட பழங்குடியினரின் அச்சுறுத்தலையும், குறுக்கே உருண்ட கருமேகம் போல் வன்மம் திரண்டிருக்கிறதெனவும் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது தன் தந்தையிடம் கவிதை எழுதுவதைப் பற்றிக் கேட்க விரும்பினாள். அவள் அறைக்குள் நுழைந்து அவர்களின் உரையாடலைத் துண்டித்து,
“அப்பா, நான் எழுத விரும்புகிறேன்.” என்கிறாள், அவளது தந்தை லி கெஃபி அமைதியாகச் சிரித்தார். இருப்பினும், சிங்சோவ்வின் லட்சியத்தைக் கேட்டு வாங் அன்ஷி வியந்தார். அவளின் புத்திசாலித்தனத்தை மெச்சினாலும் மனரீதியாகப் பழமைவாத கொள்கைகளை ஏற்றிருந்தவர்.

“ஓ, சிங்சோவ் நீ எழுத விரும்புகிறாயா?” என ஆச்சரியத்துடன் கேட்டார். அவரது குரலில் சிறிய மறுப்பு இருந்தது.

“நான் விரும்பும் போது எழுதுகிறேன்.” என வாங் அன்ஷியின் கேள்விக்குச் சிங்சோவ் நேரடியாக அவரது கண்களைப் பார்த்து புத்திசாலித்தனமாகவும் தைரியமாகவும் பதில் சொன்னாள்.

“எனக்குப் புரிகிறது, நீ அப்படிப்பட்ட சரியான குடும்பத்தில்தான் பிறந்திருக்கிறாய்.” என வாங் அன்ஷி அவளது தந்தையைப் பார்த்து வெடித்துச் சிரித்தார். அவளது தந்தை வெட்கப்பட்டதோடு அவர்களது பேச்சுத் தொனியில் இருந்த முரண்பாட்டை உணர்ந்து முகத்தைச் சுழித்தபடிச் சென்றுவிட்டாள்.

அவளுடைய தாயார் எப்போதும் புத்திசாலித்தனமான கருத்துகளைக் குடும்பத்தினரிடம் கூறும்போது தாத்தா பரிதாபமாகப் பார்ப்பார், நீ ஆண் குழந்தையாக இருந்தால் மட்டும்தான் இதெல்லாம் சொல்ல முடியுமெனச அலட்சியப்படுத்திச் சென்றுவிடுவார். தாயாரின் திருமணத்திற்குப் பிறகும் சுவரில் ஒரு சுருளைத் தொங்கவிட்டு இங்கேயே படித்து மகிழ்ச்சியாயிரு என்று சொல்லி அவள் எழுதுவதற்கு யாரும் ஆதரவளிக்கவில்லை.
“நான் தனியாக இல்லை! படிக்க விரும்பும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். கவிதைகள் எழுத வேண்டும் என்ற என் விருப்பத்தை இப்போதே தொடங்குகிறேன்.” என்று சொல்ல, ஏளனச் சிரிப்பில் வாங் அன்ஷி வெடித்தார். அவளது வார்த்தைகளைச் சிறு பெண்ணின் ஆசை, ஏதோ உளறுகிறாள் எனத் தவறாக உணர்ந்து, அறையை விட்டு வெளியேறிச் செல்கிறார்.

சிங்சோவ் வீட்டை விட்டு வெளியில் சென்று இயற்கையை ரசிப்பதையே பெரிதும் விரும்பினாள் குடும்பத்திற்கு இளையவள் என்பதால் பெரிதாகக் கட்டுப்பாடுகளின்றிச் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தாள். தனக்கு விருப்பமானவர்களுடன் நட்பு கொள்ளும் சுதந்திரத்திடன் இருந்தாள்.

கோடைக்காலம் தொடங்கியபின் பூக்கத் தொடங்கிய பூக்களைப் பார்க்க விரும்பினாள். மலைகள், மலர்களால் மூடப்பட்டிருந்தன, தூரத்திலிருந்த பனியின் புகை பிடித்தது அவளுக்கு. சிங்சோவ் காற்றின் இனிமையான நறுமணத்தை விரும்பினார். வளைந்து நெளிந்த பாதையில் வெகுநேரம் தவித்தவள், மணிக்கணக்கில் தங்கியிருக்க ஆசைப்பட்டாள். அவள் சிறுவயதில், தன் தோழிகளுடன் தாமரை மலர்களுக்கு நடுவே ஒளிந்து விளையாடுவதும் ஆற்றங்கரைக்குச் செல்வதும் அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

அவள் பெற்றோருடன் அடிக்கடி ஒரு கோப்பை வைன் அருந்துவாள். ஒரு நாள், அவள் தந்தை அரசவைக்குச் சென்றபின் சமையலறையிலிருந்த மது போத்தலை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். பல வருடங்களாக நெருங்கிய நண்பன் ஜாவோ மிங்செங்கைச் சந்திக்க, அருகில் இருந்த மேற்குப்புற மண்டபத்திற்குச் செல்கிறாள்.

சிறிது நேரம் கழித்து, உயரமான, அழகான இளைஞன் அங்கு வருகிறான். சிங்சோவ் சிரித்துக்கொண்டே அவனுக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொடுக்கிறாள். அதை வேகமாகக் குடித்துவிட்டு நீண்ட சிரிப்புக்குப் பிறகு, அவர்கள் கவிதை எழுதுவதைப் பற்றிப் பேசுகிறார்கள். உங்களுக்குப் பிடித்த கவிஞர் யாரெனக் சிங்சோவ் அவனிடம் கேட்கிறாள். மிங்செங் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “நிச்சயமாக, அது உன் தந்தையின் குருவான சு ஷியாக இருக்க வேண்டும். அவருடைய பாணி பிரமாண்டமானது. “சு ஷியின் சகோதரியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என ஆர்வத்துடன் கேட்கிறாள். “அவள் திறமையானவள். அந்தக் குடும்பத்தில் அவளால் நல்ல கல்வியைப் பெற முடிந்ததில் ஆச்சரியமில்லை என்கிறான். இவளுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியவள்.

ஒரு பலகையில் படுத்துக்கொண்டே சிங்சோவ், “நான் அவளைப் போல அல்லது அவளை விட நன்றாகவே இருக்க விரும்புகிறேன்” என்று தளர்வான குரலில் கூறினாள். மிங்செங் அவளிடம் சவால் விடுகிறான், வரலாற்றில் பல பிரபலமான மற்றும் திறமையான பெண்கள் உள்ளனர், அவர்களைப் போலவே நீயும் நன்றாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன் என்கிறான்.

மிங்செங் அரச வம்சத்தில் பிறந்தவன். தனது வயதிற்கு ஏற்றவாறு உயரமாக, அழகான அடர்ந்த கருமையான கூந்தலுடன் இருந்தான். எல்லாவற்றையும் தீவிரமாக எடுத்துக் கொண்டான். வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தான். அவனுக்குக் கற்கள் மீது ஈர்ப்பு இருந்தது. முன்பு ஆற்றங்கரையில் இருந்து சேகரித்த ஒன்றைத் தன் பைக்குள் வைத்து எடுத்துவந்தான். அதைச் சிங்சோவ்விடம் காட்டினான். “அதன் வடிவத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றாள். சிங்சோவ் அதைக் கவனமாகப் பார்த்துவிட்டு ஆர்வமில்லாமல், “இது வெறும் கல்” என்றான். ” கற்பனை செய்து சொல்லுங்கள் என்கிறாள். சிங்சோவ் கல்லை அவள் கைகளில் பிடித்துக் கொண்டு, “ஒரு முத்தைப் போல இருக்கிறதா? அதுதான் கற்களைப் பற்றிய ஆச்சரியமான விஷயம். கலை இயற்கையில் இருந்து உருவானது. கற்களின் வெவ்வேறு வடிவங்கள் வெவ்வேறு தொனிகளைக் கொண்டுள்ளன. எனது பரம்பரையில் கற்கள், ரத்தினங்கள் அதனுடைய அழகிய வண்ணங்களுக்காகவும், வடிவங்களுக்காகவும் சேகரிப்பதை விரும்புகிறார்கள். கற்களின் பின்னால் உள்ள படைப்பாற்றலை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று சொல்கிறாள்.

“ஆனால் அது இன்னும் ஒரு கல்தானா?” என்று சிரிக்கிறாள். அவன் எரிச்சலாகி வேகமாகக் கல்லைப் பையில் போட்டுக் கொண்டு, “பெண்கள் எப்பொழுதும் குறுகிய பார்வை கொண்டவர்கள். உங்களுக்குக் கலை, அழகு பற்றி எதுவும் தெரியாது. கல்லில் நீங்கள் நினைப்பதை விட அதிகம் இருக்கிறது. கல்லை உன்னிப்பாகக் கவனித்தால் ஜென் தத்துவம் பொதிந்திருப்பதைக் காணலாம். கல்லையோ ரத்தினத்தையோ கையில் எடுத்தால் இயற்கையின் காலநிலையில் வெவ்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்ட பருவ நிலைகள் புரியும், என்கிறான்

சிங்சோவ் ஆர்வம் காட்டுவது போல் தலையை ஆட்டினாள். அவள் கண்கள் பாதிச் சிரித்துப் பாதி ஏளனம் செய்தன. அவளுக்கு எரிச்சல் வரக்கூடாது என்பதற்காக ஆற்றில் படகில் செல்வோம் என்று கிளம்பிச் செல்கிறார்கள். சிங்சோவ்வைப்போல உற்சாகமாக இல்லாவிட்டாலும் படகில் செல்வதில் மிங்செங் மகிழ்ச்சியடைகிறான். ஏரியின் ஓரத்தில் ஒரு படகைக் கண்டுபிடித்து அதை வெளியே எடுத்தார்கள். பூக்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வண்ணங்களில் மலர்ந்திருந்தன. பசுமையான ஏரி நேர்த்தியான கம்பளம் போல் இருக்கிறது, என்கிறாள்.

மதுவின் நெடியில் தூண்டப்பட்ட சிரிப்பு ஆற்றில் எதிரொலித்தது, நைட்டிங்கேல்களின் சிரிப்புடன் மிங்செங் படகை ஓட்டினான். தண்ணீரில் கைகளை நனைத்து மகிழ்கிறாள். மிங்செங் அவளை முட்டாள்தனமாகப் பார்ப்பதைக் கண்டு, அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள். அவள் கண்களில் குறும்பு தெரிந்தது.

தாமரை மலர்கள் நிறைந்த கால்வாயில் படகை வேகமாக ஓட்டினான். அவன் படகோட்டியை நிறுத்தி, துடுப்புகளை இழுத்துப் படகை அதன் விருப்பப்படி நகர்த்த அனுமதித்தான். தாழ்வான படகில் அமர்ந்து செல்ல மலர்கள் அவர்கள் மீது உரசின. ஒரு பெரிய தாமரை மலருக்குள் தன் முகத்தைப் புதைத்துச் சிரித்தாள். அவர்கள் படகில் படுத்து, வானத்தின் குறுகிய வில்லை அமைதியாகப் பார்த்தார்கள். வளிமண்டலம் வசீகரமாக இருந்தது, இயற்கையின் போதையில் மிதந்தனர்.

அந்தி சாயும் நேரத்தில் வானம் ஒருபுறமாகச் சரிந்தது. திரும்பிச்செல்லும் நேரம் வந்துவிட்டதென எழுந்து அமர்ந்து படகை மீண்டும் மேற்கு மண்டபத்திற்குத் தள்ளத் தொடங்கினான். இருப்பினும் அதிகமாக மது அருந்திவிட்டு மங்கலான வெளிச்சத்தில் தாமரைப் பூக்களைப் பார்க்கிறாள்.

                தாமரை மலர்கள் ஆற்றில் நடனமாடுகின்றன
                அந்தி வெளிச்சம் நிலத்தைச் சிவப்பாகக் குளிப்பாட்டுகிறது

இது டாங் டைனாசிட்டியின் கவிதை என்று சொல்கிறான் மிங்.

நான் சொந்தமாகக் கவிதை எழுதுவேன் என்கிறாள். பெண்களால் கவிதை எழுத முடியுமென நான் நம்பவில்லை என்கிறான்.

படகை இழுத்துத் தள்ளிக் கோபமாக இறங்கி வெளியில் வருகிறாள். வீட்டிற்கு வந்தவுடன் எதிரில் தன் தந்தை வருகிறார். எனக்கொரு கோப்பை வைன் வேண்டுமென்கிறாள். உடைகள் ஏன் நனைந்திருக்கின்றன என்கிறார். நான் மதியம் வெளியில் சென்றேன். அதைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேனெனத் தனது முதல் கவிதையை வாசிக்கிறாள்.

நான் எப்போதும்
மேற்கு மண்டபத்திற்குப்
படகில் சென்றதை நினைவில் வைத்திருப்பேன்
மகிழ்ச்சியாய்க் குடித்தோம்
தடங்கள் தொலைந்துபோய்
எங்கே செல்வது? எங்கே செல்வது?
கடல் சிணுங்கியபடி நீரைத் தெளித்தது,
இன்னும்…

தந்தை கவனமாக இக்கவிதையைப் படித்துவிட்டு வித்தியாசமாக எழுதியிருப்பதைப் பார்க்கிறார். சில வரிகளால் தனது மகிழ்வான மதியப் பொழுதை அவளால் சித்திரம் போல் வரைய முடிந்ததை எண்ணி ஆச்சரியப்படுகிறார். கடலையும், அந்தி மறைவதையும் பார்த்து கடல் சிணுங்குவதையும் அழகாகச் சொல்லமுடிகிறது. எளிமையான வரிகள் புதிய பார்வையுடன் அவளுக்குள் இயற்கையாகவே ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்டு மெச்சுகிறார்.
அவருடைய பதிலுக்காகக் காத்திருந்தவளுக்கு இதை வெளியிட வேண்டுமெனச் சொன்னதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்கிறாள். தன்னுடைய சகோதரனைவிட நன்றாக எழுதி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென நம்புகிறாள்.


அக்காலத்தில் சொங் டைனசிட்டி அச்சுத் தொழிலில் வளர்ந்திருந்தது, இலக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அவளுடைய முதல் கவிதை வெளியானவுடன் உண்மையிலேயே உன் மகள் எழுதிய கவிதைதானா எனப் பலரும் அவரிடம் கேட்டார்கள். பொதுமக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை சிறுமி வயதுக்கேற்ப ஏதோ எழுதியிருக்கிறாள் என விட்டுவிட்டார்கள்.
வருத்தத்துடன் வெளியிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடுகிறாள். அவசரமாக இறங்கி அறைக்குள் ஓடிவந்து ஒரு கவிதை எழுதுகிறாள்.

நான் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தேன்
விருந்தினர் வந்திருப்பதாகச் சொன்னார்கள்
சோவ் மிங் செங்கின் தந்தைதான்
கைகளைக் கழுவ நேரமில்லை
நெற்றியில் இன்னும் வியர்த்திருந்தது
காலில் காலணியின்றி அவசரமாக ஓடினேன்
என் கூந்தலிலிருந்து தங்க ஊசி தரையில் விழுந்தது
நான் வெட்கத்துடன் வேகமாகச் சென்றேன்
திடீரென என் மனத்தை மாற்றிக்கொண்டு
திரும்பிப் பார்க்கிறேன்
பசுமை நிற பிளம்ஸின் நறுமணம்
என் முதத்தில் தெளித்தது…

தாளை முகத்தில் வைத்து மறைத்துக்கொண்டு திரும்பிப் பார்க்கிறாள். அவளுடைய மனத்தில் மிங்செங்கின் முகம் நினைவுக்கு வருகிறது. அவன் தந்தையைச் சந்தித்த பிறகு, சிங்சோவ் உணர்ச்சிவசப்பட்டுப் படுக்கையில் படுத்தபடி அவனுடைய நினைவில் மூழ்குகிறாள். அவளால் காதலைப் பற்றிப் பெற்றோரிடம் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. இயற்கையின் அழகையும் ரகசியக் காதலையும் எண்ணியபடியே தூங்கிவிடுகிறாள்.

அன்றிரவு அவளுக்குக் கனவு வருகிறது. அதில் அவள் சென்றுகொண்டிருந்த வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் அடர்ந்த மூடுபனியில் நடந்துசெல்கிறாள். இறுதியாக மூடுபனியிலிருந்த ஒரு வழியைக் கண்டடைகிறாள். அதன் திசையில் நடக்கிறாள், மக்கள் நிறைந்த இடத்திற்கு வருகிறாள். சாலை வெள்ளை நிற எலும்புகளைப்போல் பனியால் மூடப்பட்டிருந்தது. திகிலுடன் திரும்பி ஓடி வருகையில் திடீரென ஓர் இளைஞன் அவள் கனவில் தோன்றுகிறான். அவன் மிங்செங்கைப் போலவே இருக்கிறான்.

அவள் கைகளை நீட்டி, அவனது கைகளைப் பிடிக்க முயல்கிறாள். ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு அவர்களைப் பிரித்துவிடுகிறார்கள். . கனவிலிருந்து எழுந்து , “தயவுசெய்து, என்னைக் காப்பாற்றுங்கள்!” சட்டெனக் கத்துகிறாள். அது வெறும் கனவாகவே இருந்தது. கோப்பையில் வைனை ஊற்றிக் குடித்துவிட்டு, அந்தக் கனவு எவ்வளவு தீர்க்கதரிசனமாக இருக்கப் போகிறது எனத் தெரியாமல் எழுந்து வந்து, வெளியே எட்டிப் பார்க்க கதவைத் திறக்கிறாள். பலத்த மழைக்குப் பிறகு நிலம் ஈரமாக இருந்தது. நேற்று புத்துணர்ச்சியோடும், உயர்ந்தும் இருந்த பூக்கள் இப்போது மௌனமாக வாடி, சேதமடைந்து தரையில் கிடந்தன. தரை சிவப்பு கம்பளம்போல் மூடப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் புயலின் சீற்றம், பூக்கள் வாடியது, மஞ்சள் நிறக் கிளைகள் உயரம் குறைந்து காற்றில் ஊசலாடின.

நேற்றிரவு சூறைக்காற்றுப் பலமாக வீசியது.
அதிகாலை குளிர்காற்று என்னைத் தீண்டவில்லை
இரவு நான் அதிகமாகக் குடித்திருந்ததால்
என்னுடைய பணிப்பெண்ணிடம் கேட்டேன்
கதவை யார் மூடியது?
தோட்டமெல்லாம் சோகமாகக் காட்சியளிக்கிறது
சீன கிராப் ஆப்பிள் மலர்கள்
இன்னும் பூத்துக்கொண்டிருக்கின்றன
யாருக்குத் தெரியும்? யாருக்குத் தெரியும்?
இலைகள் பசுமையாக இருந்திருக்க வேண்டும்
பூவிதழ்கள் சிவப்பு நிறத்தில் இருந்திருக்க வேண்டும்.

மீண்டும் இக்கவிதையைத் தன் தந்தையிடம் காட்டுகிறாள். அவர் தனது மகளைப் பற்றி ரகசியமாகப் பெருமிதமடைகிறார், அவளிடம் சொல்லாமல், அவளுடைய சமீபத்திய இரண்டு கவிதைகளையும் அச்சிட உத்தரவிடுகிறார். பதினேழு வயதிலேயே திறமையான இளம் பெண்ணை அனைவரும் பாராட்டினர். இந்த இரண்டு கவிதைகளும் திருமணமாகாத ஓர் இளம் பெண்ணின் துயரங்களை வெளிப்படுத்தின. அவள் இயற்கையிலும் காதலிலும் உணர்வுபூர்வமாக இருந்தாள். வாங் அன்ஷி கவிதைகளைப் படித்துவிட்டு தனது கருத்தை மாற்றிக் கொண்டு சிங்சோவ்வின் தந்தையிடம், “லி சிங்சோவ் ஒரு புதிய நடையை உருவாக்குகிறார். நம் வம்சத்தில் திறமையான ஓரிருவரால் மட்டுமே இவ்வளவு சுத்தமாகப் புதிய நடையில் எழுத முடிகிறது. இது போன்ற கவிதைகள் ஓர் இளம் பெண் எழுதியது என்று நம்புவது மிகவும் கடினம்.” என்கிறார்.

சிங்சோவ்வின் வயதைப் பொருட்படுத்தாமல் அவரது திறமையைப் பொதுமக்கள் அங்கீகரிக்கத் தொடங்கினர். அன்றைய கவிதைச் சமூகம் முரண்பாடுகள் நிறைந்த சமூகமாக இருந்தது. பெண்கள் கல்வி கற்பது சரியல்ல என்ற நெறிமுறைகளை விதித்தாலும், அரிய திறமை கொண்ட பெண் எப்போதும் ஆண்களால் மிகவும் மதிக்கப்பட்டாள். சிங்சோவ் நன்கு அறியப்பட்டதிலிருந்து, இலக்கியம், தத்துவம் மற்றும் சில சமயங்களில் அரசியல் பற்றி விவாதிப்பதற்காக, பல எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் அவளை நேரில் வந்து சந்தித்தனர்.
விருந்தினர்களை அன்புடன் வரவேற்று இலக்கியம், அரசியல் பற்றிப் பேசுகிறாள்.

சில ஆண்டுகளுக்குப் பின் மிங்செங்கையே மணந்து கொள்கிறாள். அவளுடைய கவிதைகளைக் கணவனிடம் காட்டுகிறாள். அவளைக் கண்டு ஏளனமாகச் சிரிக்கிறான். பிறகு அவளது ஆர்வத்தைப் பாராட்டி இருவரும் கவிதைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். சில சமயம் உறங்கச் செல்வது முதல் விடியற்காலை வானம் ஒளிரும் வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறாள். இந்த உத்வேகம் அவளது கவிதைகளுக்கான தனித்துவமான பாணியை வளர்க்க உதவியது என்பதை உணர்ந்தாள். நாள்தோறும் மிங்செங் அவளுக்குக் கதைகள் சொல்கிறான். கிழக்கு மலைப் பகுதியில் உள்ள ஓர் அழகான கல்லைப் பற்றிய கதை ஒன்றைச் சொல்கிறான். ஒரு நாள், இரண்டு கடவுள்கள் ஆட்சி அதிகாரங்களுக்குச் சண்டையிட்டு வானத்தில் ஒரு துளையைப் போட்டதால் வானம் அதிர்ந்தது. ராணி கிழக்கு மலையில் உள்ள கல்லை எடுக்க முயற்சி செய்தார். அந்தக் கல் திமிர் பிடித்து வர மறுத்தது ராணியை மதிக்கவில்லையெனக் கோபமாகச் சென்றுவிட்டாள். பல ஆண்டுகளாகப் பாழடைந்த மண்டபத்தில் பரிதாபமாகக் கிடந்த அந்தக் கல் அந்த ராணியிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டது. இன்னொரு கடவுள் கல்லின் நிலையை உணர்ந்து அந்தக் கல்லை ஓர் அழகிய பெண்ணாக மாற்றினார். அவள் தான் எனக்கருகில் படுத்திருக்கிறாள் என்று சொன்னதும் அவள் மகிழ்ந்து அவர்களது காதல் மேலும் தீவிரமாக வளர்ந்தது, இன்னும் கூடுதல் அன்போடு காதலித்தனர்.

ஆனால் திருமணவாழ்வில் அவர்களுக்கு மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பத்து வருடங்கள் கடந்தும், அவளுக்குக் குழந்தையில்லை போன்ற குற்றங்களைச் சுமத்தி ஒவ்வொரு நாளும் சின்னஞ்சிறு தேவைகளுக்காகத் தகராறுகள் செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும், அவள் மீதான காதல் குறையவில்லை. புத்திசாலித்தனமான மனைவியைப் பெற்றதற்கான அழுத்தத்தை மிங்செங் உணர்ந்தான். மக்கள் அவரை சிங்சோவ்வின் கணவர் என்றே அறிந்திருந்தனர். அவனைப் பெரிதாக யாரும் மதிக்கவில்லை. அதையெல்லாம் மறைத்துக்கொண்டு பண்டைய வெண்கலப் பொருட்களையும், கல்வெட்டுகளின் மறு உருவாக்கங்களையும் சேகரித்தனர். உலோகம் மற்றும் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகளைச் செய்தான்.

மிங்செங்கின் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நான்ஜிங்கிற்குத் தனியாகச் சென்றாள். பதினைந்து வண்டிகள் நிறையப் புத்தகங்களைத் தன்னுடன் எடுத்துச் சென்றாள். அதனால் வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. அங்கிருந்து திரும்பிச் சென்றபோது பத்து அறைகள் கொண்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவளுடைய உலகம் அழிந்து போவதையும், முன்னால் நிறைய வலியும் மகிழ்ச்சியின்மையும் இருப்பதையும் அவளால் பார்க்க முடிந்தது. மிங்செங் மனைவியை உதாசீணப்படுத்தினான், அவளைச் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினான். அவளால் பொறுக்க முடியாமல் கடிதம் ஒன்றை எழுதுகிறாள்.

மிங்செங்கின் தந்தை தனது மேஜையில் இருந்த கடிதத்தைப் பார்த்தார். அக்கடிதம் அவரது மருமகளால் எழுதப்பட்டது, ஆனால் அவரது மகன் அனுப்பிவைக்கிறார். கடிதத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தார். “அன்புள்ள மாமனார் எனத் தொடங்கும் கடிதம், உங்கள் மகள் என்ற முறையில், அரசியல் விவகாரங்களில், குறிப்பாக ஒரு பெண்ணாக நான் உங்களிடம் கருத்துத் தெரிவிப்பது முறையற்றது என்று எனக்குத் தெரியும். ஆனால் என் தந்தை சம்பந்தப்பட்டதால், நான் என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமெனத் தொடங்கித் தனது பிரச்சனைகளைக் கடிதமாக எழுதுகிறார். ஒரு பெண் எப்படி என்னுடைய அரசாட்சியைப் பற்றிக் கருத்துச் சொல்லமுடியுமெனக் கடிதத்தைக் கிழித்து விட்டு, தன் குடும்பத்திற்கும் அவளுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லையென அவருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துவிதமான சலுகைகளையும் தடைசெய்கிறார்.

பிறகு மிங் நலம் குன்றிப் படுத்த படுக்கையாக இருக்கிறான். அவனைச் சந்தித்து அப்படியொரு கடிதம் எழுதியதற்காக வருந்துகிறாள். நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட அரசியலைப் பற்றிக் கருத்தினைச் சொன்னதற்கு மிங்கிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறாள். மிங் கடைசியில் தான் இறந்தபின் அவளை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வலியுறுத்து, ஒரு பெண் எவ்வளவு பிரபலமடைந்திருக்கிறாள் என இந்த உலகம் அறிய வேண்டுமெனச் சொல்கிறான். அவளது மடியில் தலையைச் சாய்த்தபடி கடைசியில் இறந்து போகிறான்.

அவன் கேட்டுக்கொண்டது போல் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு தொடர்ந்து எழுதினாள். இரண்டாவது திருமண வாழ்வு சரியாக அமையாமல் அதிலிருந்து விவாகரத்து பெற்று நாடு திரும்புகிறாள். அவளது கவிதைகள் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருந்தன. ஒரு வயதான பெண்மணியாக இருந்தாலும் தொடர்ந்து சமூகத் தாக்கங்களைப் பெருமிதத்துடனும் ஆணவத்துடனும் எழுதினாள். மறையும் சூரியனின் மகிமையையும் உருகும் தங்கம் போன்ற மலையில் விழும் கதிர்களையும் மாலையில் மேகங்கள் தைரியமாக உலா வருவதையும் வசந்தத்தின் நறுமணத்தையும். விளக்குத் திருவிழாவின் அழகிய பருவ நிலையைப் பற்றியும் எழுதுகிறாள்.

 

பெண் குழந்தையாக அறையில் இருந்தோம்.
நாங்கள் நகைகளை அணிந்தோம்,
எங்கள் கூந்தலில் வைரங்களை அணிந்தோம்,
எங்கள் கழுத்தில் தங்க நெக்லஸை அணிந்தோம்,
ஒவ்வொரு பெண்ணையும் கவனமாக உருவாக்கினோம்.
இப்போது வயதாகிச் சோர்வாக இருக்கிறேன்.
என் கூந்தலை அலங்கரிப்பதில் அக்கறை இல்லை.
நான் திரைச்சீலைக்குப் பின்னால்
சன்னலுக்கருகில் ஒளிந்துகொண்டு
கடந்து செல்லும் மற்றவர்களின் சிரிப்பை
என் காதுகளில் எதிரொலிப்பதைக்
கேட்கவே விரும்புகிறேன்.

என்று எழுதி தா வயதாகிவிட்டதாக உணர்ந்தாள். கவிதைகளுக்காகச் செலவிட்ட பொழுதுகளை எண்ணி முதுமையில் நிம்மதி கண்டாள். அவள் தன் கடந்தகாலப் புகழ், திருமணம், துரோகம், காதல் என அனைத்தையும் எண்ணிப்பார்த்தாலும் அவள் தனது செயல்களில் தவறிழைத்திருக்கிறாளா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். முதுமையில் மனம் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக உணர்ந்தாள்

கி.பி 1155 இல் அவள் இறந்தபோது அவளுக்குச் சுமார் எழுபது வயது. மரணத்திற்குப் பிறகு, அவரது கவிதைகள் பிற்கால நூற்றாண்டுகளில் அறிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பெண் என்ற காரணத்தில் முறையான கல்வி கற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவளுக்கு ‘ஆயிரம் ஆண்டுகளில் முதல் பெண் கவிஞர்’ என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். பிறகு அவருடைய கவிதைகளைத் தொகுத்தனர், அதில் பல கவிதைகள் காணாமல் போயின, கிடைத்தவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டனர். லி சிங்சோவ் சுமார் நூறு கவிதைகளை மட்டுமே விட்டுச் சென்றுள்ளார். எல்லா வகையிலும் சிறந்த எழுத்தாளர், இருப்பினும், குறிப்பாக இலக்கணம் படித்த ஆண்கள் மட்டுமே நாள்தோறும் வேலையின் ஒரு பகுதியாகக் கவிதை எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் லி சிங்சோவ் எழுதினார் என்பது பெருமைக்குரியது.

கவிதையை நேர்மையாக அணுகியவர். லி சிங்சோவ் பெண்ணாக இருந்து, மாறுபட்ட வாழ்வியல் முறையில் அரச வம்சத்தைச் சார்ந்த பணக்கார, படித்த குடும்பத்தில் பிறந்தாலும் கவிதையில் நேர்மையையும் அதன் தரநிலைகளில் எந்தவிதச் சலுகையுமின்றிச் சிறந்த கவிஞராக வலம் வந்தவர்.

 

The post நான் எழுதவே விரும்புகிறேன் – லி சிங் சாவ் first appeared on திணைகள்.

  •  

கார்த்திக் திலகன் கவிதைகள்

1)
குளத்தின் மேற்பரப்பில் சொற்களைப் பரப்பி வைத்து
கரையில் அமர்ந்து கல்லெறிகிறேன்
அழகழகாய்த் தெறிக்கின்றன
சொற்கள்

2)
பூமி ஓர் இடத்தில் துக்கத்தில் கசிந்தது
மரங்களின் எல்லா இலைகளும் துக்கமாக இருந்தன
வானம் லேசாகத் தூரலிட்டு
அழத் தொடங்கியது
ஏனின்று உலகம் துக்கமயமாக இருக்கிறது என்று கேட்டேன்
சந்தோஷங்கள் அனைத்தும் இன்று துக்கத்தின் வேடம் தரித்து
நடித்துக் கொண்டிருக்கின்றன என்றார்கள்
சந்தோஷங்களுக்கு
இப்படி ஓர் ஆசையா

3)
அ)
புயல் காற்றையும் இளங்காற்றையும் அந்த மரம்
ஒரே மாதிரி வரவேற்கிறது
எனக்குத் தெரிந்து நிச்சயமாக
அந்த மரம் புத்தனாகிவிட்டது

ஆ)
ஒரு பட்டாம்பூச்சி
என் வீட்டு வாயில் படிக்கு
உள்ளேயும் வெளியேயும் பறந்து கொண்டிருக்கிறது
நான் வெகு நேரமாக வாசலிலேயே காத்திருக்கிறேன்

இ)
பறவையின் வயிற்றில் அமர்ந்து
விதைகளாகப் பறந்து செல்கிறது மரத்தின் கனவு

ஈ)
உறவுக்கு முன்பான கணங்கள்
உறவுறும் கணத்தை விட மகத்தானவை

உ) இந்தத் தோட்டத்து மலர்கள் ஒவ்வொன்றும்
தண்னொளி வீசி தனிமையில் மூழ்கி இருக்கிறது
பூப்பதை விட ஒரு நற்செயலை செடியால் செய்ய முடியாது

4) வெறிச்சோடி கிடக்கும்
மதியத்தின் வீதியில்
சொர்க்கத்தில் இருந்து தப்பி வந்த
பொன்னிற நிழல்கள் நடந்து செல்கின்றன
அதன் பாத சுவடுகளை உருகி உருகி
காதலிக்கிறது மஞ்சள் வெயில்

5)
நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது
திடீரென நான் காணாமல் ஆகிவிட்டேன்
வெட்டவெளியில் இருந்து ஓர் உருவத்தை
அழிப்பான் கொண்டு அழிக்க முடியும்
என்பதை அவரால் நம்ப முடியவில்லை
மாய உலகத்தின் புதிர் பாதையில்
என்னை உடைத்து உடைத்து
வழியெல்லாம் போட்டுக் கொண்டே செல்கிறேன்
காத்திரு நண்பனே
சரியாக வழி கண்டுபிடித்து
உன்னிடம்
திரும்ப வந்து விடுகிறேன்

6)
புல் நுனி ஒரு பனித்துளியின்
மதிப்பை உயர்த்திப் பிடிப்பதைப்போல
நானுன்னை
உயர்த்திப் பிடிக்கிறேன்
சிந்தி விடாதே கண்ணே
வெறும் நீர் தீற்றலாக

7)
நான் விழித்திருக்கும் போது
கனவு தோன்றுகிறது உறங்கும்போது
நினைவு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது
நான் கனவிழந்து
மருத்துவ மனையில்
அனுமதிக்கப் பட்டிருந்தேன்
என்னைப் பரிசோதித்து
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள்
மனநிலையிலும்
நல்ல முன்னேற்றம் இருக்கிறது விரைவில் இவருக்கு
கனவு திரும்பி விடும் என்று

8)
அவ்வளவு கோபமாகச் சொல்ல
வேண்டிய விஷயத்தை
இவ்வளவு செல்லமாக உன்னால்
எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்கிறாய்
ஒன்று உனக்குச் சொல்லட்டுமா
என் மனக்காட்டின்
சொல் விலங்குகள் அத்தனையும்
அவ்வளவு இளங்குட்டிகள்
அவற்றை அப்படியெல்லாம்
அழுத்தி உச்சரிக்க முடியாது

9)
என் உயிர்ப்பும் துடிப்பும் கண்டு
ஒரு படகுக்குரிய மரியாதையை
நீர் எனக்கு வழங்குகிறது
நான் மிதக்கிறேன்
நீரில் ஏற்றப்பட்ட
திருவிளக்கை நோக்கி
கிழக்கு முகமாக நீந்துகிறேன்
எதையும் நனைக்கும் நீரால்
எனக்குள் மிதக்கும் எண்ணங்களை
நனைக்க முடியவில்லை

10)
இளம் காலை நேரம் படுக்கையை
விட்டு எழுந்து அமர்கிறாள்
பௌர்னிகா
அருகில்
ஆடை கலைந்து
குழந்தையைப் போல
படுத்திருக்கும்
கணவனைப் பார்த்து
புன்னகைத்தாள்
அவன் மார்பில்
ஒட்டி இருந்த
ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில்
வைத்துக் கொள்கிறாள்.

 

The post கார்த்திக் திலகன் கவிதைகள் first appeared on திணைகள்.

  •  

வேல் கண்ணன் கவிதைகள்

1.முகவாதம்

நேற்றிலிருந்து
இடப்பக்க முகம் வலிக்கிறது
முகவாதம் பீடித்த
அப்பாவை மருத்துவமனைக்கு
தனியாக அனுப்பிய நாட்கள்
கடந்து பல வருடங்கள் ஆகின்றன

2.ஒவ்வொரு முறையும்

உன்‌ வாசல் தேடி
பிச்சை கேட்டு வந்த போதும்
மறுத்த போதும்
கதவுகளை அறைந்து சாத்திவிட்டு
சென்ற போதும்
நிறைந்து போன‌ எனக்கு
நீ காணாமல் சென்ற போது
பசித்தது

3.

உச்சியில் மலர்ந்த
பூவின் மீது
உனக்கு அலாதி பிரியம்
வாசத்தைக் கொய்ய
மலையேறத் துவங்கினேன்
ஏற‌ ஏற‌
வெளிச்சம் பாய்ச்சுகிறது

உச்சியில்
எனக்கும்
வானத்தில் பூத்திருக்கும்
மலருக்குமிடையே
தூரம் பூத்திருந்தது

4.
நாமொன்றைத் தொடங்கினோம்
எவ்வளவு அழகாய் இருக்கிறது
பின் நடந்தவைகளைத் தவிர்க்கிறேன்
இது போதுமானது
“நாமொன்றைத் தொடங்கினோம்”

5. இந்திரியம்

தொலைந்து போன
பெரியண்ணன்
நீண்ட நாள் கழித்து வீடடைந்தான்
அறைக்குள் ஆடை களைந்தான்
அம்மணமாய்க் குளித்தான்
சேலைத் தலைப்பை வாயில் பொத்திக் கொண்டாள் அம்மா
பயந்து பக்கத்து வீட்டில் ஒளிந்தாள் சின்னத் தங்கை

ஈரத்துடன்
கால்களைப் பரப்பிய படி உறங்கியவன்
வலப்புறம் ஒருக்களித்தான்

இம்முறை படுக்கை விரிப்பை
துவைக்கும்போது
அம்மாவை துணைக்கு
கூப்பிடக் கூடாது

The post வேல் கண்ணன் கவிதைகள் first appeared on திணைகள்.

  •  

கதிர்பாரதி கவிதைகள்

சலோமியின் மீன் பருவக் கண்கள்

1
யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள்
சலோமி.
யேசு உயிர்த்துவிட்ட பிற்பாடும்
‘கல்லறையில் யேசுவைக் காணவில்லையே’ எனக்
கலங்கிய மூவருள் ஒருவள் சலோமி.

இல்லையில்லை
யேசுவின் காதலிகளில் ஒருத்தியே சலோமி.

அவையெல்லாம் கிடையாது,
சலோமி என்பவள் யேசுவின் பன்னிரு சீடர்களில்
இருவருக்கு அம்மா.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
யேசுவின் தாய் அருள்நிறைக் கன்னி மரிக்கு
நேரிளையத் தங்கையவள்.
ஆக, அவள் யேசுவுக்கு அருள்நிறைச் சித்தி.

இவையெதுவும் உண்மையல்ல
கன்னி மரிக்குப் பிரசவத் தொண்டுசெய்த
மருத்துவத் தாதி சலோமி.
ஆண் வாசம் அறியாமால் பிள்ளையீன்ற கன்னி மரிக்கு
இரண்டாம் சாட்சியானவள் சலோமி.
யேசுவை முதன்முதலில் கிறிஸ்துராஜா என
மனத்தில் கண்டுகொண்டவள் சலோமி.
கொதியெண்ணெய்க் கொப்பரைக்குள் விழுந்து
எரிக் காயங்களின்றி மீண்ட
புனித யோவானைப் பெற்றவள் சலோமி.

மேக்தலீனாவின் பரிமளத் தைலத்துக்குத்
தன்னிரு பாதங்களைக் கொடுத்தார் யேசு.
வெரோனிக்காவுக்குத் தன் பாடுகளின் ரத்தமுகத்தை
ரோஜாவாக்கிக் கொடுத்தார்.
சலோமிக்கு ஏன் ஒன்றும் தரவில்லை?

இவற்றையெல்லாம்விட முக்கியம்
எங்களூரிலும் ஒரு சலோமி வாழ்ந்தாள்.
அகலக் கால் எட்டவைத்து நடக்கும் ஆண்மூச்சுக்காரி.
அவளின் மீன் பருவக் கண்களில் மூழ்கி
எதிர்மீன்கள் பிடித்து மண்ணுக்குள் போனார்
ஜான் கார்ல் மாக்ஸ் மாமா.
அவர் கல்லறைக்கு மாதா சாம்பிராணி தூபமிடத்தான்
நான் இப்போது போய்க்கொண்டிருக்கிறேன்.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

2.

சலோமியிடம் ஒரு மனக் கடிகாரம் உண்டு.

உலைக்கால் விண்மீன்கள் வானில் பூக்கும்
‘மீ’அதிகாலையில் கண் விழிப்பாள்.
அவித்த நெல்லை தலைச்சுமைந்து அரிசியாக்க
கால் மணிக் காலத்தில் அரைக் கி.மீ. கடப்பாள்.
இரு வருடங்களுக்கு ஒரு பிள்ளை கணக்கில்
நான்கு வருடங்களில் மூன்று பிள்ளைகள்.
ஆம்… அதொலொன்று ரெட்டைப் பிரசவம்.

எப்போதும்
புயல் வேகம் புயல் வேகம்.
மரணத்தையும் தாண்டிப் பாய்ந்துவிட்டாள்.
ஆனால், அவள் பனியீர நத்தை.

அவளின் மீன்கள்
கண்ணீரை உண்டு தண்ணீரைச் சுவைத்த கதை
உங்களுக்குத் தெரியாமல் இருக்கட்டும்.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

3

சலோமியின் கண்களில்
மீன் பருவம் துள்ளிய தொடக்கத்தில்
தூண்டில்களை வெறுத்தாள் இல்லை.
அவற்றைத் தாண்டிப் போய் நீந்தினாள்.
நீந்தினாள் எனவும் சொல்வதற்கில்லை.
பொறிகளுக்கு ஒதுங்கினாள்.
ஒதுங்கினாள் என வரையறுக்க முடியாது
அவள் நீரிலேயே இல்லை.
‘சலோமி இல்லை’ என்று சொல்லிவிட முடியாது
இருக்கிறாள் ஒரு விரியனுக்கு இணைவியாக.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

4

சலோமி பிறந்தபோது
அவள் வீட்டுக் கூரையில்
இரு எரிவிண்மீன்கள் இறங்கின.

அவ்விண்மீன்களே
பருவத்தில் கண்களிலும் ரவிக்கைக்குள்ளும்
ஒளிரும் தனிமமாக அவளை மாற்றின
இரவில்.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

5

சலோமியும் மலர்க்கொடியும்
மனம் நெருங்கிய தோழிகள்.
இருவரும்
சிறுபாவாடை கட்டிய பொன்வண்டுகளாகப்
பறந்து பறந்து சுற்றிவந்தார்கள்
பால்ய வனத்தில்.

ஒரே ஊர்தான் என்றாலும்
பதின்பருவத்தில் இருவரும்
தனித்தனியே பிரிந்திருக்கப் பழகினார்கள்.
அவர்கள் இருந்த இடம்
அவரவர் வீடுகளாய் இருந்தன.
வாசல் தாண்டி வெளிவருவதற்குள்
பொன்வண்டுகளை ஈசல்பூச்சிகளென
நம்பவைத்தனர்.

பிறகுதான்
கல்யாணத் தீப்பெட்டியில்
பொன்வண்டுகள் தனித்தனியே அடைந்தன
வெவ்வேறு ஊர்களில்.

பொன்வண்டுகளுக்கு
மரக்கிளையில் வாழ்வதைவிட
தீப்பெட்டிக்குள் வாழ்வது சலித்தபோது
சலோமிக்கு இரண்டு குட்டிப்பொன்வண்டுகள்.
மலர்க்கொடிக்கு
மூன்றாமாண்டு நினைவு அஞ்சலி நாள்

The post கதிர்பாரதி கவிதைகள் first appeared on திணைகள்.

  •  

மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா

Pa Raghavan

நண்பர்களுக்கு வணக்கம்.

மெட்ராஸ் பேப்பர் வார இதழ், மூன்று வருடங்களை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜூ 1, 2025 – இன்று  ஆண்டுவிழா.

* இது என்ன பத்திரிகை, எப்படி இருக்கும், எத்தனை நாள் தொடர்ந்து வரும் என்று எது குறித்தும் சிந்திக்காமல், என் மீது கொண்ட நம்பிக்கையினால், கேள்விப்பட்ட மறு கணமே முதல் ஆயுள் சந்தா அளித்து ஆரம்பித்துவைத்த நண்பர்கள் ஏ.எஸ். புவனேசுவரன், மாம்பலம் சந்திரசேகர்;

* தமிழ்ப் பத்திரிகை உலகில் மிகவும் தாமதமாகத் தோன்றினாலும் தனித்துத் தெரியவும் தரத்தினால் மட்டுமே அடையாளம் காணப்படவும் அடித்தளம் அமைத்துத் தந்து, இன்றுவரை இடைவெளியின்றித் தம் எழுத்தால் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கும் விமலாதித்த மாமல்லன், எஸ். சந்திரமௌலி;

* இதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அனைத்து விதங்களிலும் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கும் பத்மா அர்விந்த், தி.ந.ச. வெங்கடரங்கன்;

* சகலவிதமான நெருக்கடி நேரங்களிலும் நிபந்தனையற்று என்னோடு நிற்கும் செல்வ முரளி, நஸீமா ரஸாக்;

* மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் என்று என் மாணவர்கள் இன்று எங்கெங்கும் கொண்டாடப்பட முக்கியமான காரணம், தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் அவர்களது புத்தகங்கள். என் சொல் அன்றி வேறெதையும் கருதாமல் மெட்ராஸ் பேப்பர் பெயரிலேயே ஒரு இம்ப்ரிண்ட் தொடங்கி அவர்களுடைய முதல் புத்தகங்கள் வெளிவர வழி செய்யும் ஜீரோ டிகிரி ராம்ஜி நரசிம்மன்;

* ஆயிரத்தெட்டு பேமெண்ட் கேட்வே இம்சைகள் இருந்தாலும் சகித்துக்கொண்டு சந்தா செலுத்திப் படிக்கும் வாசக நண்பர்கள்;

* டெட்லைன் கெடுபிடிகளுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு, தமது அன்றாடப் பணிகளுக்கிடையில் தொடர்ச்சி விடுபடாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள்

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இன்று மாலை ஆறு மணிக்கு ஆண்டு விழா கூகுள் மீட் வழி நடைபெற உள்ளது. பத்திரிகையாளர் சந்திரமௌலி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வாழ்த்துரை வழங்குகிறார். வேறு யாரும் பேசப் போவதில்லை. இந்நிகழ்ச்சி முற்று முழுதாக வாசகர் விழாவாக நடைபெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம்.

மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இருப்பார்கள். நானும் இருப்பேன். வாசகர்கள் அனைவருடனும் கலந்துரையாடலாம். கேள்விகள் கேட்கலாம். மெட்ராஸ் பேப்பர் தொடர்பான தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். எழுத்து-பத்திரிகை-வாசிப்பு சார்ந்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், பேசலாம், விவாதிக்கலாம்; காத்திருப்போம்.

கூகுள் மீட்டின் அதிகபட்சக் கொள்ளளவு 100. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை. நிகழ்ச்சி சரியாக மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். ஐந்து மணிக்கு என் வாட்சப் சேனலில் லிங்க் தருவேன்.

வருக.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

தலை துண்டிக்கப்பட்ட கோழி

      – ஹொரேஷியோ குய்ரோகா ( உருகுவே)

மாஸினி பெராஸ் குடும்பத்தின் மூளை வளர்ச்சி குன்றிய நான்கு பையன்களும் உள்முற்றத்தில் அடைந்து கிடந்த பெஞ்சிலேயே நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அவர்களின் நாக்குகள் எப்போதும் உதடுகளுக்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கும். கண்கள் கலங்கியும் தலையைத் திருப்பும்போது வாய்கள் பிளந்து கொண்டும் இருக்கும்.

    மண்தரை,  மேற்புறம் செங்கற் சுவரால் மூடப்பட்டு இருந்தது அந்த உள் முற்றம். சுவருக்கு இணையாக  ஐந்து அடி தள்ளி இருந்த அந்தப் பெஞ்சில்தான் நான்கு பேரும் அமர்ந்து சலனம் இல்லாமல் சுவரையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சுவருக்குப் பின்னால் சூரியன் மறைந்த பிறகு அவர்களுக்கு உற்சாகமாகிவிடும். மங்கிய விளக்கு ஒன்றுதான் அவர்களின் கவனத்தை முதலில் ஈர்க்கக் கூடியது. அப்போது அவர்களின் கண்களில் மெலிதாக ஓர் ஒளி தோன்றும்‌. இறுதியில் எல்லாரும் சேர்ந்து பெருங்குரலுடன் உரத்துச் சிரிப்பார்கள். நால்வருக்கும் உவகை தொற்றிக் கொள்ளும். உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த சூரியன் அப்போது ஓர் உணவுப் பண்டமாக தோன்றும் அவர்களுக்கு.

    சில நேரங்களில் பெஞ்சில் வரிசையாக அமர்ந்து கொண்டு மணிக் கணக்கில் தள்ளு வண்டியின் ஓசையை நகலாக்கி முணுமுணுத்துக் கொண்டு இருப்பார்கள். பிறகு சத்தத்தை உயர்த்திக்கொண்டே நாக்கைக் கடித்துக் கொண்டும் பூனைக் குரலெடுத்தும் முற்றத்தைச் சுற்றி சுற்றிச் சுற்றி ஓடுவார்கள். ஆயினும் முட்டாள்களுக்கே உரிய மந்தத்தன்மை மேலிட அந்த நாளின் மீதத்தைப் பெஞ்சில் அமர்ந்தே கழிப்பார்கள். கால்கள் அசையாமல் இருக்கும்.கோழை வழிந்து கால் சட்டைகளையும் நனைக்கும்.

     மூத்தவனின் வயது 12. இளையவனுக்கு 8.  அழுக்கும் அருவருப்பும் கொண்ட அவர்களின் தோற்றமே அவர்களது தாயின் அலட்சியத்திற்குச் சான்று தருவதாக இருக்கும்.

     ஆனாலும் ஒரு காலத்தில் பெற்றோருக்கு அவர்கள் மகிழ்வைத் தந்தவர்கள் தான். மாஸினி – பெர்த்தா தம்பதிக்கு ஆண் பெண் மற்றும் கணவன் மனைவிக்கு இடையேயான தன்னலம் மேலிடும் எதிர்பார்ப்பு ஒன்றும் இருந்தது : மகன்.

நோக்கம் எதுவும் இல்லாத, இழிந்த தன்னலத்தில் இருந்து விடுபட்ட பாசத்தை விட அன்பு கொண்ட இருவருக்குப் பெரும் மகிழ்ச்சியை எது தந்துவிடும். காதலை விடத் தீதானது எது.? அதிலும் புதுப்பிக்க வாய்ப்பு இல்லாத காதலை விட..?

     பதினான்கு மாதங்களில் மகன் வந்தடைந்தான். மகிழ்ச்சியின் எல்லையை அடைந்ததாக அவர்கள் நினைத்தார்கள். ஒன்றரை ஆண்டுகளில் அழகும் வளமும் பெற்று விளங்கியது குழந்தை. ஆனால் இருபதாவது மாதத்தின் இரவொன்றில் பயங்கரமான நடுக்கத்துடன் அதன் உடல் சீர்குலைந்தது. காலையில் தனது பெற்றோரைக் கூட அதனால் அடையாளம் காண இயலவில்லை. டாக்டர் தனது மருத்துவ அறிவைக் கொண்டு, பெற்றோரின் உடல் வலிமையில் உள்ள சமநிலைக் குலைவு காரணமாய் இருக்கலாம் எனக் கண்டு கொண்டார்.

     சில நாட்களில், சூம்பிக் கிடந்த பையனின் கைகள் இயல்புக்குத் திரும்பின. ஆனால் அந்தக் குழந்தையின் அறிவுத்திறன், ஆன்மநலம், அகத் தூண்டுதல் எல்லாம் நிரந்தரமாகக் காணாமல் போனது. அவன் எப்போதும் தனது தாயின் மடியில் கிடந்தான். பிதற்றிக் கொண்டிருந்தான். நொண்டி நடந்தான். குணமாகும் எல்லா வாய்ப்புகளும் வீணாயின.

     ‘என் மகனே.. என் அன்புச் செல்வமே..’ என்று தனது முதல் குழந்தையின் பரிதாப நிலை குறித்துத் தேம்பிக் கொண்டிருந்தாள் அவனது தாய்.

     வெளியே தனித்திருந்த தகப்பனிடம் மருத்துவர் சொன்னார் : ‘உங்களுக்கு மட்டுமே நான் சொல்ல முடியும். இதைக் குணப்படுத்துவது சிரமம். குழந்தையின் அறிவு மட்டும் உதவினால் கொஞ்சம் முயன்று பார்க்கலாம். அவ்வளவுதான்.’

     ‘சரி. சரி.. ‘ மாஸினி இணங்கினான். ‘எனக்கு ஒன்றைத் தெளிவு படுத்துங்கள்.  இது பரம்பரை வியாதியா.. அல்லது..?’

     ‘இது பற்றி உங்கள் குழந்தையைப் பார்த்த போது நான் நினைத்ததை உங்களிடம் கூறி விட்டேன். தந்தை வழியில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ‌தாயைப் பொறுத்தவரை அவளது நுரையீரலில் இருந்து ஒலி சீராக வெளிப்படுவதில்லை. வேறொன்றுமில்லை. ஆனால் அவளின் சுவாசம் ஏறுக்கு மாறாக இருக்கிறது. அதையும் சரியாகப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.’

     மன உறுத்தல் தந்த தொந்தரவால் மாஸினி தன் மகன் மீதான பாசத்தைப் பெருக்கிக் கொண்டான். அந்த மூடக்குழந்தை தனது மூத்தோரின் அறிவுத் திறனைத் திருப்பித் தந்து விடுகிறது. அதே நேரம் மனைவி பெர்த்தாவின் இளம் தாய்மையின் தோல்வி குறித்து ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில் அவன் இருந்தான்.

     இயல்புக்கு ஏற்றவாறே, தமது அடுத்த குழந்தை மீதான எல்லா நம்பிக்கைகளையும் திரட்டி வைத்துக் கொண்டனர் அந்தத் தம்பதியினர். இன்னொரு மகன் பிறந்தான். அவனது மழலைச் சிரிப்பும் ஆரோக்கியமும் அவர்களது துயரைத் துடைத்து மகிழ்ச்சியை மீளக் கொண்டு வந்தது.  ஆனால் 18 மாதங்களில் முதல் குழந்தையின் நிலையே திரும்பியது. தொடர்ந்து விடிந்த காலையில் அதுவும் முட்டாளாகவே விழித்தது.

     பெற்றோர் முற்றிலும் நம்பிக்கையை இழந்தனர். அவர்களின் இரத்தம், அன்பு எல்லாம் பழிக்கு ஆளானதே. குறிப்பாக அவர்களின் காதல்..! அவனுக்கு வயது இருபத்தெட்டு. அவளுக்கு இருபத்திரண்டு. இளமையும் பேரார்வமும் இயல்பான வாழ்வுக்குரிய ஓர் உயிர் அணுவை உற்பத்தி செய்ய முடியவில்லையே. அழகோ அறிவோ கொண்டிருந்தாக வேண்டுமென்று தமது முதல் மகனையே நினைக்கவில்லையே. இப்போதோ அதைப்போலவே இன்னொன்று.

இரண்டாவது பேரிழப்புக்குப் பின்னர் அவர்களின் காதல் இன்னும் ஒரு பைத்தியக்காரத்தனத்தை மீளக்கொணர்ந்தது. தம் இளமை மீதான புனிதமான நம்பிக்கை அது. அதன் பயனாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.‌ ஆனால் முந்தைய பிள்ளைகளுக்கு நேர்ந்த கதிதான் அவற்றிற்கும்.

     தொடர்ந்த தோல்விகள் தந்த கசப்பினால் பெற்றோரின் இரக்க சிந்தை மீண்டது. நான்கு பிள்ளைகளின் காவல் விலங்குக்குரிய தன்மையைத் தம் உள்ளுணர்வால் எதிர்கொண்டனர். பையன்களால் உணவை விழுங்கத் தெரியாது. நகரவோ உட்காரவோ கூட முடியாது. இறுதியில் எழுந்து நடக்கத் தொடங்கினர். தம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் இருப்பதைத் தெரியாமல் அவற்றைத் தாக்கினர். குளிக்க வைக்கும் போது முகத்தைக் கழுவி விடும் வரை கோழையை உமிழ்ந்து கொண்டும், குரல் எழுப்பிக் கொண்டும் இருந்தனர். உணவோ, கண்ணைப் பறிக்கும் நிறமோ, இடிச் சத்தமோ மட்டுமே அவர்களை கிளர்வுறச் செய்தன. பிறகு அவர்கள் உரத்துச் சிரிப்பார்கள். ஏதோ கோளாறில் கொந்தளிப்பார்கள். நாக்கைத் துருத்திக் கொண்டு உமிழ்நீரைக் கடலாய்க் கொட்டுவார்கள். அதே நேரம் சிலவற்றைப் போலச் செய்யும் திறமையையும் அவர்கள் ஈட்டிக் கொண்டனர். அதைத்தவிர வேறொன்றுமில்லை.

     மரபு வழியிலான அச்சுறுத்தல் எல்லாம் அந்த இரட்டையரோடு முடிந்துவிட்டது என எண்ணினர். ஆனால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தணிக்க அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே இன்னொரு குழந்தையைப் பெற விருப்பம் வந்து விட்டது அவர்களுக்கு.

     நம்பிக்கைகள் திருப்தி தரவில்லை. அதன் காரணமாக நிராசையும் எரிச்சலும் தோன்றி கணவன் மனைவிக்குள் தீராக் கசப்பை ஏற்படுத்தி விட்டது. அதற்குள் தமது குழந்தைகளின் அப்போதைய நிலைமைக்கான பொறுப்பை யார் பகிர்ந்து கொள்வது என்ற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்து விட்டது. தாம் பெற்றுவிட்ட நான்கு விலங்குகளுக்கும் செய்ய வேண்டிய பரிகாரம் ஏதுமில்லை எனத் தெரிந்தவுடன் ஒருவருக்கொருவர் பழி சுமத்தத் தொடங்கிவிட்டனர்.

     அந்த மாற்றம் இப்படித் தொடங்கியது : ‘உனது பிள்ளைகள்..’ அதனாலேயே தம்மில் ஒருவரை விழ வைத்தும் பழிதூற்றியும் குற்றம் சுமத்திக் கொண்டனர்.

     ‘எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்..’

  அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த மாஸினி கைகளைக் கழுவித் துடைத்துக்கொண்டு பெர்த்தாவிடம் சொன்னான் ‘நீ குழந்தைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..’

     அவன் சொன்னதைக் கேட்காமல், எதையோ படித்துக் கொண்டிருந்தாள் அவள்.

     ‘இதுதான் முதல் தடவை..’  சிறு மௌனத்திற்குப் பிறகு சொன்னாள் ‘நீ உன் பிள்ளைகள் நிலை பற்றிய அக்கறையைச் சொல்கிறாய்.’

     தலையை அவன் பக்கம் திருப்பி, வலிந்து வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் மாஸினி சொன்னான் : ‘நம்முடைய பிள்ளைகள் என்று நினைக்கிறேன்..’

     ‘சரிதான். அவை நமது பிள்ளைகள் தான். இதைச் சொல்லத்தான் நீ விரும்புகிறாயா?.’ கண்களை உயர்த்திக் கொண்டே கேட்டாள்  அவள்.

     மாஸினி தெளிவாகச் சொன்னான் : ‘நிச்சயமாக நான் தான் இதற்குக் காரணம் என்று நீ சொல்ல மாட்டாய் இல்லையா.?’

     வெளுத்த புன்னகையுடன் ‘இல்லை.. ஆனால் நானும் இல்லை என்று தான் நினைக்கிறேன். அது தான் எனக்குத் தேவை’ என்று முணுமுணுத்தாள் பெர்த்தா.

     ‘என்னது. என்ன தேவை உனக்கு..?’

      ‘குற்றத்தை என் மீது மட்டும் சுமத்த முடியாது என்பதை நினைத்துப் பாருங்கள். அதைத்தான் சொன்னேன்.’

     ஒரு கணம் அவளைப்  பார்த்தான். காயப்படுத்தும் விருப்பம் கூட தோன்றியது.

     ‘சரி. விட்டுவிடலாம்..’ இறுதியாகச் சொல்லிவிட்டுக் கைகளைத் துடைத்துக் கொண்டான்.

    ‘உன் விருப்பப்படியே. ஆனால் நீ சொல்வது..?’

    ‘பெர்த்தா..’

    ‘உன் விருப்பம் தான்..’ இதுதான் அவர்களின் முதல் மோதல். பிறகு அதைத் தொடர்ந்து கொண்டார்கள். தவிர்க்க முடியாத சமரசத் தீர்வை நோக்கி அவர்கள் திரும்பும் போது இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆர்வம் இருவருக்கும் ஏற்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டு வருடத் துயர்மிகு நாட்களுக்குப்பிறகு இன்னொரு பேரிடருக்கு அவர்கள் தயாராகவே இருந்தனர். ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை. நன்றாகவே பிறந்தது குழந்தை. தமது ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் புதிய மகளின் மீது செலுத்தினர். அவர்களின் தொல்லையைச் சாதகமாக எடுத்துக்கொண்டு அது மோசமாக நடந்து கொள்ளத் தொடங்கியது. அதன் பிறகான ஆண்டுகளிலும் தனது நான்கு பையன்களை நன்றாகக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆயினும் பெர்டிடா (மகள்) பிறந்தபின் அது குறையத் தொடங்கியது என்றானது. அவர்களைப் பற்றிய நினைவே அவளை அச்சமடையச் செய்தது. கட்டாயமாகச் செய்ய வேண்டிய சில காரியங்கள் கொடுங்கனவாய் ஆயின. மாஸினிக்கும் இதே நிலைதான். ஆனால் சிறிய அளவில்.

     இருவர் மனதிலும் நிம்மதி இல்லை. மகளின் முரண்டு, பிடிவாதம் இப்போது கட்டவிழும் நிலைக்கு வந்துவிட்டது. அவளை இழந்து விடுவோம் என என்று நினைவே அவர்களுக்குப் பயங்கரத்தைத் தந்தது.  திடமற்ற தமது மரபுக் கோளாறு ஏற்படுத்திய கசப்பு அவர்களைச் சுட்டது. மகளின் குடற்கொடி வீங்கியும், பித்தநீர் அதிகமாகத் தேங்கியும் காணப் பட்டது. மெதுவாக தொட்டாலே அது நஞ்சு போல் வழிந்து சிதறியது.

     அன்றைக்குத் தோன்றிய மோசமான கருத்து வேறுபாடு ஒருவரை ஒருவர் அவமதித்துக்கொள்ளும் நிலைக்குப் போனது. இதயங்களைக் குரூரத்தால் நிறைத்துத் துன்புறுத்திக் கொண்டனர். அதன் முன்னர் தமது தோல்விகளால் கட்டுண்டு கிடந்தவர்களிடம் குடிகொண்டு இருந்த தனிக் குணம் வெற்றிகரமாக வெளிவந்துவிட்டது. இயல்பு பிசகிப் பிறந்த நான்கு பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு வெறுப்பை உருவாக்கி அடுத்தவரைத் துன்புறுத்தியது.

     இந்த உணர்வினாலேயே அந்த நான்கு பையன்கள் மீதும் அவர்களுக்குப் பாசம் தோன்றும் வாய்ப்பு ஏற்படவில்லை. வேலைக்காரிதான் அவர்களைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, உணவு ஊட்டி, உறங்கச் செய்தாள். எல்லா முரட்டுத்தனங்களையும் சகித்துக் கொண்டு தாய் அவர்களை ஒருநாளும் குளிப்பாட்டியது இல்லை. ஒரு நாளின் பெரும் பகுதியை அவர்கள் சுவர்களைப் பார்த்தே கழித்தார்கள். பெற்றோரின் அன்பும் சீராட்டும் அறவே கிட்டவில்லை அவர்களுக்கு.

     மகள் பெர்டிடாவுக்கு நான்காவது பிறந்தநாள். அவளுக்குக் கொடுத்த  ஏராளமான இனிப்பு வகைகளை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவற்றை உண்ட மகள் குளிர் காய்ச்சலால் அவதிப்பட்டாள். குழந்தை இறந்து விடுவாளோ அல்லது அவளின் நான்கு சகோதரர்களைப் போல புத்தி பேதலித்துத் திரிவாளோ என்ற அச்சம் தோன்றிக் கவலையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு

     மூன்று மணி நேரமாக அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. பிறகு மாஸினியின் வழக்கமான அவசரமே ஓர் உரையாடலுக்கு உந்திச் செலுத்தியது.

     ‘ஓ.. கடவுளே. இதைவிட உன்னால் மெதுவாகக் கால் வைத்து நடக்க முடியாதா..?  எத்தனை தடவை உனக்கு..?

      ‘சரி.  மறந்து விட்டேன். திருத்திக் கொள்கிறேன். வேண்டுமென்றே நான் அதைச் செய்யவில்லை’

       ஏளனமாகப் புன்னகைத்தாள்.

      ‘இல்லை. இல்லை.. நானும் உன்னை நினைத்துச் சொல்லவில்லை..’ என்றாள்.

       ‘உன்னைப்போல நானும் அதை நம்ப மாட்டேன். உனக்கு அழிவு காத்திருக்கிறது..’

    ‘என்ன.. என்ன சொன்னாய்..?

     ‘ஒன்றுமில்லை..’

      ‘அப்படியா..?  எதையோ நீ சொல்வதை நான் கேட்டேன். அது என்ன என்பது எனக்குத் தெரியாது. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். உனக்குப் போலவே இன்னொரு தந்தையை நான் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.’

     வெளிறிப் போனான் மாஸினி.

     ‘கடைசியாக..’ பற்களை இறுகக் கடித்துக் கொண்டே சொன்னான். கடைசியில் நீ ஒரு வஞ்சகியாகி விட்டாய். செய்ய விரும்புவதை நீயே சொல்லிவிட்டாய்..’

     ‘ஆம். நான் வஞ்சகிதான். ஆனால் எனக்கு ஆரோக்கியமான பெற்றோர் இருக்கிறார்கள். என்ன கேட்கிறதா.. ஆரோக்கியமான பெற்றோர். என் தந்தை பைத்தியமாகிச் சாகவில்லை. மற்றவர்களைப் போலவே எத்தனையோ பிள்ளைகளை நான் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். இதோ இவர்கள் எல்லாம் உன்னுடைய பிள்ளைகள். அதாவது அந்த நான்கு பேர்.’

     திரும்பிப் பார்த்து வெடித்தான் மாஸினி. ‘பேரழிவுக்குரியவளே. இப்படித்தான் உன்னை அழைக்க நினைத்தேன். அதையே சொல்கிறேன். நீ போய் மருத்துவரைக் கேள் – நான்கு பையன்கள் இப்படி இருக்க யார் காரணம் என்று. மூளைக் கோளாறு யாருக்கு..? என் தந்தைக்கா அல்லது உன் அழுகிப்போன நுரையீரலுக்கா..? சொல் பார்ப்போம்.’

     வன் சொற்கள் உயர்ந்தன. பெட்ரிடா விடமிருந்து வெளிப்பட்ட ஒரு முனகல் ஒலி அவர்களின் வாயை அடைத்தது. அதிகாலையில் மகளின் அஜீரணக் கோளாறு சரியாகிவிட்டது. புதிதாக மணமான தம்பதிகளுக்கு இதுபோன்ற சண்டை சச்சரவுகளும் சமாதானமும் தவிர்க்க இயலாதே, அதைப்போல.

     ஆரவாரமான நாள் ஒன்று விடிந்தது. பெர்த்தா படுக்கையில் இருந்து எழுந்த போதே இரத்த வாந்தி எடுத்தாள். அவளது உணர்ச்சிப் போக்கும், பயங்கரமான முந்தைய இரவும் தான் சந்தேகத்துக்கு இடமில்லாத காரணம். மாஸினி அவளை நெடுநேரம் தழுவி அணைத்துக் கொண்டான். அவள் தேம்பிக் கொண்டிருந்தாள். இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

     பத்து மணிக்கு, மதிய உணவுக்கும் பிறகு வெளியே சென்று வர முடிவு செய்தார்கள். ஒரு கோழியை அடித்துச் சமைக்கவும் வேலைக்காரிக்கு உத்தரவிட்டனர்.

     அந்த ஒளி மிகுந்த நாள் நான்கு பையன்களையும் ஒருசேர பெஞ்சுக்கு வரவழைத்துவிட்டது. சமையலறையில் வேலைக்காரி கோழியின் கழுத்தை வெட்டும்போது இரத்தம் சிறிதளவே வெளியேறச் செய்து கொண்டிருந்தாள். ( இது பெர்த்தா தனது அம்மாவிடம் கற்றுக் கொண்டது. பயனுள்ள வழிமுறை. கறி வாடாமலே இருக்கும் ). வேலைக்காரி தனக்குப் பின்னால் ஏதோ மூச்சு விடுகிற ஒலியைப் போல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது அந்த நான்கு பையன்களும் தோள் மீது தோள் வைத்துச் சாய்ந்து வியப்புக்குரிய அந்த செயலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிவப்பு.. சிவப்பு நிறம்..

      ‘அம்மையீர். பையன்கள் இங்கே சமையலறைக்குள் வந்து விட்டார்கள்.’

       உடனடியாக அங்கே வந்தாள் பெர்த்தா. உணவுத் தயாரிப்பை அவர்கள் பார்ப்பதை அவள் விரும்புவதில்லை. மறதி, மன்னிப்பு, மற்றும் மகிழ்ச்சியை மீட்க எனத் தொடர்ந்த அந்தச் சில மணி நேரத்தில் இதுபோன்ற பயங்கரக் காட்சியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இயல்பாகவே கணவன், மகள் மீதான அன்பின் உச்சம், அந்த நான்கு ராட்சசர்களின் மீதான வெறுப்பு ஆகியவை இதற்குக் காரணம்.

     ‘அவர்களை வெளியே அனுப்பு மரியா.. துரத்தி விடு..’

      நெருக்கிக் கொண்டும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் போய்த் தமது பெஞ்சில் அமர்ந்தனர். விலங்குகள் போன்ற அந்த நான்கு பேரும்.

     மதிய உணவுக்குப் பிறகு அனைவரும் வெளியே சென்று விட்டார்கள். வேலைக்காரி பியூனஸ் அயர்சுக்குப் போயிருந்தாள். தம்பதியினரும் குழந்தையும் அண்மையில் இருந்த கிராமத்து வீடுகள் வழியாக நடந்து கொண்டிருந்தனர். சூரியன் மறையும் நேரம் திரும்பினர். எதிர்ப்படும் அயலாரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு வர பெர்த்தாவுக்கு விருப்பம். அவளது மகளோ வேகமாக ஓடி வீட்டிற்குப் போனாள்.

     இதற்கிடையில் அந்த நான்கு பையன்களும் நாள் முழுவதும் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார்கள். சூரியன் இப்போது சுவர்களுக்கு அப்பால் மறையத் தொடங்கியது. வழக்கத்தை விடவும் நெடுநேரம் அவர்கள் சுவரையே தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களது பார்வைக் கோட்டிற்கும் சுவருக்கும் இடையில் ஏதோ ஒன்று வந்துவிட்டதைக் கண்டனர். அவர்களது சகோதரி. ஐந்து மணி நேரம் பெற்றோருடன் நடந்து சோர்ந்து போனவள் அந்த இடத்தையே சுற்றுமுற்றும் பார்ப்பது தெரிந்தது. சுவருக்குக் கீழ் நின்று கொண்டு யோசித்தவாறு அதன் உச்சியை பார்த்தாள் அவள். அதன் மேல் ஏறிவிட ஆசை தோன்றியது. இறுதியாக அங்கே கிடந்த ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு ஏற முயன்றாள். ஆனாலும் அதன் உச்சியை அவளால் அடைய முடியவில்லை. பிறகு ஒரு மண்ணெண்ணெய் டப்பாவை எடுத்து வந்து நாற்காலியின் மேல் செங்குத்தாக வைத்து ஏறினாள். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று விட்டாள்.

     நான்கு பையன்களும் தமது சகோதரி எப்படிப் பொறுமையாகக் காலூன்றி, சமநிலை குறையாமல் சுவர் மீது ஏறி, அதன் உச்சியில் கழுத்தைத் தனது சோர்ந்து கைகளால் தாங்கிக் கொண்டு நிற்கிறாள் என்பதைப் பார்த்தார்கள். அவள் கால் விரல்களை ஊன்றிக்கொண்டு இன்னும் மேலேற முயல்வதும் அவர்களுக்குத் தெரிந்தது.

     அவர்களின் வெறித்த பார்வைகள் கிளர்வு கொண்டன. அத்தனைக் கண்களும் பளிச்சிட்டன. முன்னே இருக்கும் சகோதரி ஒரு பேருணவாகத் தெரிந்தாள் அவர்களுக்கு. மெதுவாகச் சுவரை நெருங்கினர். அந்தச் சிறு பெண் சுவரின் மேல் இருபுறமும் கால்களை அகட்டிப் போட்டுக் கொண்டு இருந்தாள். எந்நேரமும் அடுத்த பக்கத்தில் அவளால் விழுந்து விட முடியும். ஆனால் ஒரு காலை யாரோ இழுத்துப் பிடிப்பதை உணர்ந்தாள். கீழே இருந்து உறுத்துப் பார்க்கும் எட்டுக்கண்களும் அவளைப் பயமுறுத்தின.

     ‘விடுங்கள்.. நான் போக வேண்டும்..’ கால்களை உதறிக் கொண்டு கதறினாள். ஆனால் ஒரு கணத்தில் முழுமையாக பிடிபட்டு விட்டாள்.

     ‘அம்மா..ஆ.. அம்மா..  அப்பா..’ உரக்கக் கத்தினாள். இன்னும் அவள் சுவரின் உச்சியைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் மெல்ல மெல்லப் பிடி விலகிக் கீழே இழுக்கப்பட்டுத் தரையில் விழுந்தாள்.

      ‘அம்மா.. ஓ. அம்..’ தொடர்ந்து குரல் எழுப்ப முடியவில்லை. அவர்களில் ஒருவன் அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இறக்கை போல் இருந்த காது முடிச்சுருளை விலக்கி விட்டான்.  மற்ற மூவரும் அவளது ஒரு காலைப் பிடித்து இழுத்துக் கொண்டே சமையலறை நோக்கிப் போயினர். காலையில் அங்கு தான் ஒரு கோழி தன் இரத்தத்தைச் சிந்தியிருந்தது. இறுகப் பிடிக்கப்பட்ட அவளது உடலில் இருந்து உயிர் நொடிக்கு நொடி பிரிந்து கொண்டிருந்தது.

     திரும்பும் வழியில் மாஸினிக்குத் தன் மகளின் குரலை தூரத்திலிருந்து கேட்டது போல் தோன்றியது.

     ‘உன்னைக் கூப்பிடுகிறாள் என்று நினைக்கிறேன்..’ பெர்த்தாவிடம் சொன்னான்.

     கவனித்தார்கள். அசௌகரியமாக உணர்ந்தார்கள். குரல் ஏதும் கேட்கவில்லை. உடன் உரையாடிக் கொண்டிருந்தவர்களிடம் குட் பை சொல்லிவிட்டுத் தொப்பியைத் தலையில் மாட்டிக் கொண்டாள் பெர்த்தா. மாஸினி வேகமாக வீட்டுக்குள் போய் உள் முற்றத்தை அடைந்தான்.

     ‘பெர்டிடா..!’

     பதில் இல்லை.

     ‘பெர்டிடா..!’  குரலை உயர்த்திக் கூப்பிட்டான்.

     அந்த மௌனம் ஏதோ ஒரு கெட்ட நிமித்தமாக நெஞ்சில் நுழைந்து ஓடி முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தது.

     ‘மகளே. என் மகளே..!’ வெறிபிடித்தாற்போல் வீட்டின் பின்பக்கமாக ஓடினான். சமையலறையைக் கடக்கும் போது தரை முழுவதும் இரத்தம் கொட்டியிருப்பதைப் பார்த்தான்‌. பாதி மூடியிருந்த கதவை ஓங்கித் தள்ளினான். பயங்கரமான குரல் அவனிடமிருந்து எழுந்தது.

      ஏற்கனவே ஓடத் தொடங்கி விட்ட பெர்த்தா தனது கணவனின் அபயக் குரலை கேட்டுக் கதறிக்கொண்டே வீட்டில் நுழைந்தாள். சமையலறையை நெருங்கும் போது மரணத்தில் வெளிறிக் கொண்டிருந்த உடலுடன் மாஸினி வழியை மறித்துக் கொண்டு நின்றான். நெருங்கிய அவளைப் பின்னுக்கு இழுத்தபடியே ‘உள்ளே போகாதே. போகாதே..!’ என்று கூச்சலிட்டான்.

     இரத்தச் சகதி கொண்ட தரையைப் பார்த்தாள் பெர்த்தா. கம்மிய குரல் ஒன்று மட்டுமே அவளிடம் இருந்து வெளிப்பட்டது. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கணவன் மீது சாய்ந்தபடியே மெதுவாக தரையில் வீழ்ந்தாள்.

000

ஹொராசியோ சில்வஸ்தர் குயிரோகா போர்தஸா*

( 1978 – 1937 )

உருகுவேயில் பிறந்து அர்ஜென்டினாவிற்குக் குடி பெயர்ந்தவர்.

இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளுக்கேயுரிய பூடக, மாயத் தோற்ற வகை எழுத்துகளின் முன்னேர் இவர்.

முதல் புதினம் எழுதிய எட்கர் அலன் போ-வின் பாதிப்பில் தொடங்கி சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் எனப் பயணித்தவர்.

இயற்கை – மனித முரண் மீது தன் படைப்பு மனத்தைத் திருப்பியவர். அடர் வனங்களில் வாழ முயன்றவர்

திகில், நோய், மனப்பிறழ்வு எனப் பல இயல்புகளை எழுத்தாக்கினார்.

குறிப்பிடத்தக்க படைப்புகள் :

Feather Pillow

The Wild

The Slaughtered

Anaconda

Exiles

Drifting

000

அவைநாயகன்

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சூழலியல் செயல்பாட்டாளர்.

சூரியச் செதில்கள், காடுறை உலகம் இவரது கவிதை நூல்கள். ஞானப் பறவை (ரிச்சர்ட் பாக்) கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது (மாயா ஏஞ்சலோ) இந்தியா அழைக்கிறது (ஆனந்த் கிரிதர் தாஸ்) டெர்க் உஸாலா (விளாதிமிர் கே ஆர்சென்யேவ்) ரஷோமோன் திரைக்கதை (அகிரா குரஸாவா ஷினோபு ஹஷிமோட்டோ) ஆகியவை மொழிபெயர்ப்புகள்.

The post தலை துண்டிக்கப்பட்ட கோழி first appeared on Nadukal.

  •  

பி ற் ப க ல்

சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான். மூடிக் கொண்டிருக்கும் கதவிடுக்கின் வழியே உள்ளே வராந்தாவில் இவன் வெளியே போகிறதைப் பார்த்தபடி சமையலுக்கு உதவி செய்யும் ரூப் தல்வார் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பத்துவருடங்கள் பழகிய இடத்தைவிட்டுப் போகும்போது ஏற்படும் மனத்தவிப்பில் அவனால் எதையும் சரியாக யோசிக்க முடியவில்லை. மிக நெருங்கிய மனிதர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக வந்து நினைவைப் பின்னிழுத்தன. அவர்கள் உறவினர்கள் போலாகிவிட்டனர்.

கதவுகளுக்கு சற்றுத்தள்ளி வெளியே நின்று புகைபிடித்துக் கொண்டிருந்த சிறைக்காவலன் இளித்தான். “முபாரக் ஹோ”(வாழ்த்துக்கள்). பச்சன் சிங் கையில் வைத்திருந்த பத்து ரூபாயைக் கொடுத்தான், இப்போது அவன் புன்னகைத்தான். பிச்சை எடுத்தே பழகிய கைகள். முன்னால் பரந்துகிடந்த வெட்டவெளிப் பொட்டலில் சூரிய ஒளி மிக அதிகமாக இருந்ததால் கண்கள் கூசின. நிறம் மங்கிய செம்மண் நிலத்தில் சிறிது தூரத்திற்கு புல் பூண்டு கூட இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. வெய்யிலின் சூடு முகத்தில் எரிந்தது. சற்றுத் தள்ளி நின்ற ஒரே வேப்ப மரத்தடிக்குச் சென்றான். ‘அப்பாட’ என்றிருந்தது. மரத்தடியில் நிலக்கடலை விற்றுக் கொண்டிருந்த கிழவி அவனைப் பார்த்தாள். இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டான்.

யாரையுமே காணவில்லை. பரோலில் வெளிவரும் நாட்களில் கூட்டமாக இருக்கும். கிழவி அவன் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் சொன்னாள் ”இன்னைக்கு மூணு மணிக்கு மேல்தான் ஆட்கள் வருவார்கள்”. பின்னர் சற்றுத் தயங்கியபடி குரலைத் தணித்துக் கொண்டு கேட்டாள் “இப்பத்தான் வெளியே விட்டாங்களா?” “ஹூம்” என்று தலையசைத்தான்.

என்ன செய்வது? தன்வீர் சிங் ஏன் வரவில்லை?. கிழவியைப் பார்த்துச் சொல்வதுபோல் “வர்ரேன்” என்று சொல்லிவிட்டு துணிப்பையை தோளில் போட்டு நிலக்கடலையைக் கொறித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். மெயின்ரோடு சற்று தூரத்தில் தெரிந்தாலும் நடக்க நடக்க போய்க்கொண்டே இருந்தது.

அம்மா உயிரோடிருந்தால் இந்தக் கிழவிபோல் இருப்பாளோ? இவளைவிட வயது அதிகம். தன்வீர் சிங் எங்காவது கண்ணில் படுகிறானா என்று அவ்வப்போது சுற்றும்முற்றும் பார்த்தான். யாரையுமே காணவில்லை. வெய்யில் தலையிலும் முகத்திலும் உக்கிரமாக எரித்தது.

சிறைக்கூண்டுக்குள் வெக்கை அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் வெய்யில் முகத்திலோ உடம்பிலோ விழாது. வெகுதூரம் நடக்கக் கஷ்டமாக இருந்தது. நடக்கிற பழக்கம் விட்டு ரொம்ப வருஷங்களாகி விட்டது. ஆறு கிலோமீட்டர் நடந்து வாராவாரம் சினிமா பார்த்தவன். இப்போது சுத்தமாக நடக்கமுடியவில்லை. எங்கே போவது? என்று யோசித்தான். அம்மா போன வருடம் வரை இருநதாள். வீட்டிற்குப் போகலாம். அங்கிருந்து பல வருடங்களாகி விட்டன. அது யாரோ வேறொருவருடைய வீடுபோல் நினைவில் நின்றது. வேறு வழியில்லை. அங்கேதான் போகவேண்டும்.

சித்திமகன் தன்வீர் சிங் பக்கத்து வீடான இவன் வீட்டிலும் இருக்கிறான். சின்னதாக இரண்டு அறைகள்தான். “நீ வரும்வரை” என்று அவன் சொன்னது தெளிவாக நினைவு வந்தது. அவன் தன்னைக் கண்டு பயப்படக்கூடும். இருந்தாலும் பாசம் உள்ளவன். முடிந்தபோதெல்லாம் சிறைக்கு வந்து பார்ப்பான். கையைவிட்டுப் போகாதிருந்த மீதி நிலத்தில் விவசாயம் பார்த்தான். அது கட்டுபடியாகாததால் மற்ற நேரங்களில் டிரைவர் வேலை, சுண்ணாம்பு அடிப்பது, பைப் ரிப்பேர் என்று ஏதாவது செய்து பிழைத்துக் கொண்டிருந்தான்.

மெயின் ரோட்டில் இரைச்சல் காதை அடைத்தது. கார்களும் பஸ்களும், ஆட்டோக்களுமாக சாலையை நிறைத்து வழிந்து போய்க்கொண்டிருந்தன. உலகத்திலே தன்னந்தனியாக விட்டதுபோல் உணர்ந்தான். இடப்பக்கம் திரும்பி பஸ்ஸ்டாண்டை நோக்கி நடந்தான். எல்லோரும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தனர். பஸ் ஸ்டாண்டிலும் கூட்டமாக இருந்தது. நடக்க வலுவில்லையோ? எல்லோர் கைகளிலும் மினுங்கும் தோல்பைகள், சின்ன பிரிஃப்கேஸ்கள். இப்போது யாரும் துணிமூட்டையைத் தூக்குவதில்லையோ?. அது தோளை அழுத்தியது.

ஒரு வழியாக பஸ்பிடித்து கிராமத்திற்கு வர இரண்டு மணி நேரத்துக்கு மேலானது. தெருவுக்குள் ஒன்றிரண்டு பெண்கள் இவனைக் கண்டதும் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு பார்த்தார்கள். அடையாளம் தெரிந்ததோ இல்லையோ? அவனது வீட்டை தூரத்திலிருந்து கவனித்தான். மிக மோசமான நிலையில் இருந்தது. சுவர்களில் காரை பெயர்ந்தும் வெள்ளையடிக்காமலும், இது ஒரு வீடா? சிறையில் புதுசாக இல்லாவிட்டாலும் சுத்தமாக இருக்கும். அரசாங்கச் செலவில் ரிப்பேர் பார்ப்பார்கள். வீட்டை நினைத்து வெறுப்பாக இருந்தது. இனி இதில்தான் இருக்கவேண்டும். யாராவது சிமெண்ட் பூசி ரிப்பேர் பார்க்கக்கூடாதா? தன்வீர் சிங் மேல் கோபம் வந்தது. அவனுக்கென்ன வருமானம் என்று யோசித்த போது அவனும் பாவம் என்ன செய்வான் என்று தோன்றியது.  நிலையான வருமானம் கிடையாது. அவன் வீடும் இடிந்து விழுவது மாதிரிதான் இருக்கிறது. அவன் ஒருவன் தான் நெருங்கிய சொந்தக்காரன்.

லொடலொட என்று ஆடிக் கிடந்த கதவைத்தள்ளித் திறந்து உள்ளெ நுழைந்தான். யாரும் வீட்டில் இல்லை. ஒரு தரைவிரிப்பும் கால் உடைந்து போன ஒரு நாற்காலியும் தண்ணீர்க் குடமொன்றும் இருந்தன. வெளியே வந்து குட்டித்திண்ணையில் உட்கார்ந்தான். வீட்டை ரிப்பேர் பார்ப்பது அப்புறம். அடுத்தவேளைச் சாப்பாடு? தன்வீர் சிங் எத்தனை நாளுக்குப் போடுவான். சிறையில் சம்பாதித்த பணத்திலிருந்து கொடுக்க வேண்டியதுதான். அது எத்தனை நாளுக்குத் தாங்குமோ? சிறையில் மணியடித்தால் தட்டைத்தூக்கிக் கொண்டு போகலாம். இப்போது எங்கே போவது?

படிப்பு மண்டையில் ஏறாததால் எட்டாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்கூடம் போகவில்லை. வாடகைக்கு டிராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தான். பிறகு கடனுக்கு டிராக்டர் வாங்கி வாடகைக்கு விட்டுப் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.

வெளியில் போயிருந்த தன்வீர் சிங்கின் மனைவி அவசரம் அவசரமாக வந்தாள். அவனைப் பார்த்து திடுக்கிட்டு விருட்டென்று முந்தானையால் மூடிக் கொண்டாள். “நமஸ்தேஜி. அவங்க உங்களைப் பார்க்கத்தான் போனாங்க இன்னும் வரலை. உங்களைப் பார்க்கலையா?

“இல்லை” என்று தலையசைத்தான்.

“அப்ப திரும்பி வந்திட்ருப்பாங்க. நான் ‘சாய்’ போட்டு வரேன்” சொல்லிவிட்டு அடுத்திருந்த அறைக்குள் போனாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். அவன் தங்கை இப்படி பெரிய பெண்ணாக அழகாக இருந்திருக்கக் கூடும். சின்ன வயதில் கண்மண் தெரியாத கோபத்தில் அப்படிச் செய்துவிட்டான். அவர்களுக்குப் பதின்மூன்று வயதிருக்கும். இப்போது நினைத்தாலும் துக்கம் மனதைக் கவ்வியது. நினைந்து நினைந்து வருந்தி மனதில் கல்லில் செதுக்கியது போலாகி விட்டது.

சிறையில் அவனும் என்னென்னவொ செய்தான். அவனுக்கும் ஏதேதோ நிகழ்ந்தது. சட்டப்படி அதெற்கெல்லாம் தண்டனை கொடுத்தால் அவன் வெளியே வந்திருக்கவே முடியாது.

அசதியாகயிருந்தது. உள்ளே போய் விரிப்பில் படுத்துத் தலையை மடித்த வலது கையில் வைத்தபடி கண் அசந்தான். சோனம் ‘சாய் கொண்டுவந்து அவனைப் பார்த்துவிட்டு திரும்பிப் போனாள்.

தன்வீர் சிங் வந்திருக்க வேண்டும். “ப்ச்சன் சிங் வந்துவிட்டானா?” சோனத்திடம் அவன் கேட்டது இவன் காதிலும் விழுந்தது. அசந்து தூங்கியிருந்தான். மேலெல்லாம் வேர்த்திருந்தது. பக்கத்தில் வைத்திருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.

உள்ளே வந்த தன்வீர் வருத்த்ததுடன் களைத்துப் போன குரலில் சொன்னான் “நமஸ்தேஜி.. பஸ் கிடைக்காமல் போய்ச்சேர நேரமாகிவிட்டது. அதற்குள் நீங்க கிளம்பீட்டீங்க. சிறைக்காவலன் சொன்னான்” அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவனைத் தேடி வரவும் ஆள் இருக்கிறது. சீக்கிரம் வந்தும் என்ன செய்வது? ஒன்றுமில்லை” விரக்தியில் அவன் பேசுவதைப் புரிந்துகொண்டு தன்வீர் இதமாக தொடங்கினான் “இருந்தாலும்…..” தொடர முடியவில்லை. தன்வீர் சிங் சோனத்தைக் கூப்பிட்டுக் கேட்டான் “சாப்பாடு தயார் பண்ணிட்டியா? …. ஒன்றே முக்காலாகிவிட்டது. எனக்கும் பசிக்கிறது.”

“நீங்க குளிச்சிட்டு வந்திருங்க”என்று தன்வீர் சொன்னதும் பச்சன் சிங் குளிக்கப் போனான்.

சாப்பிடும் போது பச்சன் வீட்டைக் கவனித்தான். எளிமையாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. மனைவி நச்சரித்திருப்பாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். கைகளில் வளையல்கள் குலுங்கின. அவள் வரும்போதெல்லாம் ஏதோவொரு வாசனை வந்தது. சாப்பிடும் போது நடு நடுவில் பெருமூச்சு விட்டான். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?”

“ஒரு பொண்ணு இரண்டு பையன்கள். மூத்தவன் ஏழாவது இன்னொரு பையனும் பொண்ணும் மூன்றாவது. இரட்டைப் பிள்ளைகள்”

“உன் அண்ணன் மான்சிங் எங்கே?”

“அவன் பாம்பே போய்ட்டான். அங்கெ நல்ல சம்பாத்தியம். ஆனா பிள்ளைகள் இல்ல” வருத்தப்பட்டான். பிள்ளைகள் பிறப்பது கடவுள் கொடுக்கும் வரம்… வச்சு வளக்றது ரொம்பக் கஷ்டம்.” சடக்கென்று. நிறுத்திக் கொண்டான்.

சற்று நேரம் அமைதி நிலவியது. பிறகு தன்வீர் சொன்னான் ”ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் கடைவரைக்கும் போய்ட்டு வர்ரென்”.

”கடைவேற வச்சிருக்கயா?” என்று ஆச்சரியத்துடன் பச்சன்சிங் பார்ப்பதைப் புரிந்து கொண்டு தொடர்ந்தான். “இந்தக் கிராமத்ல என்ன கடை. எல்லோரும் அப்படியே சொல்லி பழக்கம் ஆயிடிச்சு. தெருக்கடைசியில கூரை போட்டு டெய்லரிங் மெஷின் வச்சிருக்கேன். கூட ஒரு சின்னப் பையன் இருக்கான்…. ஹூம்”… பெருமூச்சுவிட்டுத்தொடர்ந்தான் “ பன்டி இறந்து போய்ட்டான்ல அவன் பையன்” ஏதோ அரைகுறையாய் கேள்விப்பட்டிருந்தான் .

“பன்டி எப்படி இறந்தான்?”

”யாரோட  பைக்கையோ எடுத்திட்டு மெயின் ரோட்ல போயிருக்கான். லாரிக்காரன் அடிச்சிட்டுப் போய்ட்டான். லைசென்ஸ் இல்லாததால கேஸும் ஒண்ணும் ஆகல. ஒரு பைசா கிடைக்கல”.

பச்சன்சிங்கிற்கு என்னவோ போலிருந்தது. சிறைக்குப் போவதற்கு முன்னால் இருவரும் ஒன்றாக அலைந்தவர்கள்.

“அவன் பெண்டாட்டி?”

“இன்னொருத்தன் கூட இருக்கா. எப்பவாவது இந்தப்பக்கம் வருவா. பன்டியப் பத்திப் பேச்செடுத்தாலே ஓ’ன்னு அழ ஆரம்பிச்சிருவா.”

“பையன் எங்க இருக்கான்?”

“அவகூடத்தான்”

ஜீரணிக்க முடியவில்லை எதையும். பன்டி பெண்களைப் பற்றிக் கறாறாக பேசுவான். ஆண்கள் எப்படியிருந்தலும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அவன் மனைவியும் பிள்ளையும் யார் வீட்டிலோ?” தலைவிதி. உலகமே தலைகீழாக மாறிவிட்டது. பத்துவருடத்துக்குள்.

தன்வீர் தொடர்ந்தான் “அவ பாவம் என்ன செய்வா? தனியா இருக்கிற பொம்பளைய யாரு விடுவா? சாப்பாட்டுக்கு…? சரி நான் இதோ வர்ரேன்” அவன் வெளியே போய்விட்டான்.

இரண்டு நாட்களுக்குள் கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. தெருவில் நடந்தால் எல்லோரும் அவனையே பார்த்தாலும் யாரும் பேசவில்லை. முகங்கள் தெரிந்த மாதிரியிருந்தாலும் சரியாக இனங்காண முடியவில்லை. மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. நான் ரொம்ப நல்லவன் என்று எல்லோரிடமும் சொல்லவேண்டும். ஆனால் சொல்லமுடியவில்லை.

தன்வீரின் குழந்தைகள் மூன்றும் அவனிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்களிடம் பேசும் போதும் விளையாடும் போதும் மனம் லேசானது. ஒன்றிரண்டு முறை தன்னை அறியாமலேயே புன்னகைத்தான். குழந்தைகளின் ஸ்பரிசம் இவ்வளவு மென்மையாக இருக்குமா? தங்கைகள் கையில் ராக்கி கட்டியது நினைவு வந்தது. கைகள் மிகமென்மையாக இருந்திருக்கும். இப்போதும். பெண்களின் கைகள் எப்பவும் மென்மையாக இருக்குமாம். இன்னும் தொட்டதில்லை. சிறையில் ‘ஆஸாராம்’ என்ற ஹரியானா பயில்வான் முதல்முறை அவன் கையைப்பிடித்து பெண்களின் கைபோல இருப்பதாகச் சொன்னான். பச்சன் சிங்குக்கு அப்போது வயது பதினெட்டு.

சிலநாட்கள் வீட்டை நினைத்து இவன் அழும்போது கன்னத்தையும் தலையையும் ஆஸாராம் வருடிக் கொடுத்தான். பச்சன் சிங்குக்கு இதமாக, ஆறுதலாக இருந்தது. கைதிகளை உலவவிடும் போது இவனை அழைத்து பிரியாணி கொடுத்தான். கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது பலகாரம் கொடுத்தான். சில நாட்கள் கழித்து ஜெயிலரிடம் சொல்லி தன் கூண்டுக்குள்ளேயே பச்சன் சிங்கையும் வைத்துக் கொண்டான். ஆஸாராமை நினைத்தால் அழுகை வந்தது. அவனைப் போல் அமைதி கொடுத்தவன் யாருமில்லை. விடுதலையாகி வரும் போதும் அவ்வளவு பெரிய பயில்வான் சின்னக் குழந்தை போல அழுதான். சிறுவனுக்காக இவ்வளவு பெரிய ஆள் அழுவதை எல்லோரும் பார்த்தார்கள். சிலர் ஆறுதல் சொன்னார்கள் சிலர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தனர். இவனுக்கும் கண்ணீர் முட்டியது. அடக்கிக்கொண்டான். நடந்ததை எல்லாம் யாரிடமும் சொல்லமுடியாது. இன்பமும் துன்பமும் சேர்ந்தே வந்தன. சேர்ந்தே போய்விடுமா?

பதினைந்து வருடங்களுக்கு முன் இரு தங்கைகளும் குடும்பத்தின் மானத்தைக் கப்பலேற்றி விட்டார்கள். பதினெட்டு வயது கிஷனுடன் கோயிலுக்குப் போனவர்கள் மூன்று நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்கள். பையன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். இருவரையும் பார்க்கப் பார்க்க பச்சன் சிங்குக்குக் கோபம் ஏறிக் கொண்டே இருந்தது. ஒரு கிறுக்கனைப் போல் தலையில் கிர்ரென்று ஏதோ ஏறியது. சிறுவனாக இருந்தாலும் முடிந்தமட்டும் தங்கைகளைக் கன்னத்திலும் கைகளிலும் அடித்தான். அவ்வப்போது உதைத்தான். அப்பா வந்தபிறகு ரகளை அதிகமாகிவிட்டது. அப்பாவும் சித்தப்பாவும் தொடர்ந்து கத்திக் கூப்பாடு போட்டனர். அம்மாவையும் சித்தியையும் விட்டு விட்டு மாறி மாறி அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர். வீட்டைச்சுற்றி ஓரே கூட்டம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவன் காதில் எல்லாம் விழுந்தாலும் எதுவும் பதியவில்லை. அவனும் அப்பாவும் சித்தப்பாவும் கெட்ட வார்த்தைகளை கூவிக் கொண்டு, தங்கள் கோபத்தைக் கிளறிவிட்டு உள்ளே போய்த் தங்கைகளை உதைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாமே கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டிருந்தது.

இரு தங்கைகளையும் அப்பா ஒரு சிறிய அறையில் பூட்டி வைத்துவிட்டார். இதே அறைதான். இப்போது வேறு அறையாகத் தோன்றியது. அன்று கலகலத்த வீடும் குடும்பமும் இன்று இல்லை. பெண்கள் ஒப்பாரி வைத்துபோல் அழுது கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு ஏற்பட்ட களங்கம் எப்படிப் போகும்? மற்றப் பெண்களுக்குத் திருமணம் வாய்க்குமா? யார்யாரோ என்னவெல்லாமோ கேட்டார்கள். இனிமேல் எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பார்களே? வன்மம் அவனுக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அது தணிய வழியில்லை. அப்பாவும் சித்தப்பாவுமே தங்கைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாட்களாக வீட்டில் யாரும் சரியாகச் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. திடீரென்று அடிகளும் அழுகையும் ஓலமும் கேட்டன. மூன்றாம்நாள் ராத்திரி பதினொருமணிக்கு அப்பா அவனைக் கூப்பிட்டார். சித்தப்பாவையும் அவனையும் இரண்டு பெண் தங்கைகளின் கை கால்களைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி கயிறு வைத்துக் கட்டினார். இரண்டு பெண்களும் சாப்பாடு தண்ணீரில்லாமல் அழக்கூடச் சக்தியின்றி முனகினர். கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. பயத்திலும் வெட்கத்திலும் கூனிக் குறுகி முடிந்தமட்டும் அரைமயக்கத்தில் இரைஞ்சினர். “இனிமே பண்ணமாட்டோம்ப்பா…அப்பா ஒரு தடவை மன்னிச்சிடுங்க …சாச்சா இனிமே பண்ணமாட்டோம்.. வீட்டைவிட்டே வெளியே போமாட்டோம். பர்தா (முகத்திரை) போட்டுட்ருப்போம். கட்டிப் போட்டிருந்தாலும் துடித்துத் துள்ளின பிள்ளைகளை கட்டுப்படுத்த குடியவில்லை. அவனும் ஏதோ ஒரு வெறியில் அழுத்திப் பிடித்தான். சித்தப்பாவும் கால்களை அழுத்திப் பிடித்தார். அப்பா போய் அரிவாளை எடுத்து வந்தார். தங்கைகள் ஓ வென்று அலறினர். மூச்சிரைக்க அப்பாவும் இருவரைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவனிடம் சொன்னார் “கழுத்தை அறு” அவ்வளவு நேரம் அடக்கிப்பிடித்த் வெறியும் கோபமும் அவனிடம் ஜிவ்வென்று ஏறியது. அறுத்ததும் ரத்தம் கழுத்திலிருந்து சளசளவென்று கொப்பளித்து, உடல் துடிக்கத் துடிக்க வெளியேறியது.

அந்த நேரத்திலும் தங்கைகளின் கைகள் மிருதுவாகத்தான் இருந்திருக்கும். அப்போது அவனுக்குத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து இற்று விழத்தயாராக இருக்கும் கரையான் அரித்துப் போட்ட இதே அறைதான். இப்போது ரத்தக்கறை இல்லை. ஆனால் மனதில் புழுவாக தான் செய்த குற்றம் அரித்துக் கொண்டிருந்தது.

பச்சன் சிங் பாயிலிருந்து எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். இந்த அறையும் அடுத்த அறையும் குடும்பத்துக்குள் இருக்கிறது. மற்றதெல்லாம் கேஸிலும் மற்றச் செலவுகளிலும் கரைந்து விற்றாகிவிட்டது.

பத்தாண்டுகளுக்கு மேல் ஆஸாராமும் போலிஸும், ஜெயிலர்களும் அவனை என்னென்னவோ பாடாய்ப் படுத்தினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி.

இரண்டு வாரம் போயிருக்கும் பச்சன்சிங்கிற்கு காய்ச்சல் வந்தது விடவேயில்லை. இடைவிடாத வலி. நேராக உட்கார முடியவில்லை. ஆசனவாயில் புண். பரவிவிட்டிருந்தது. டாக்டர் சிறையில் நடந்ததைப் புரிந்து கொண்டிருந்தார். டாக்டர் வேறு ஏதோ கேட்க முனைந்தபோது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பிறகு அவர் எதுவும் கேட்கவில்லை.

இன்னொரு நாள் டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்போது டாக்டரின் வயதான உதவியாளன் இவன் முதுகுக்குப் பின்னால் அவரிடம் சொன்னது காதில் விழுந்தது. “குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றிவிட்டான். பூராப் பழியையும் தானே ஏற்றுக் கொண்டான். இப்போதுதான் விடுதலையாகி வந்திருக்கிறான்.

பச்சன் சிங்குக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. உடம்பு வலி, காய்ச்சல், நோய், தீராத மன உளைச்சல், சிதிலமடைந்த வீடு, நிம்மதியின்றிச் செத்துப் போன அம்மா, அப்பா, சித்தப்பா, தங்கைகள். சிறையில் தான் பட்ட அவமானங்கள், கொடுமைகள். மானம் என்றால் என்ன என்பது இப்போது அவனுக்குப் புரிவது மாதிரி இருந்தது. இத்தனைபேர் அனுபவித்த துயரங்களை தவிர்த்திருக்கலாமோ? டாக்டரின் உதவியாளனுக்கு அது தெரிய வாய்ப்பில்லை.

000

வேலு இராஜகோபால்

இதுவரை சுமார் பதினைந்து கதைகள் இணைய, அச்சுப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக, நவீன விருட்சம், அம்ருதா, அமுத சுரபி, மயிர் இணைய இதழ் கல்கி ஆன்லைன்.

மற்ற பதிவுகள்

The post பி ற் ப க ல் first appeared on Nadukal.

  •  

வெக்கை தணிந்தது…

வெயிலின் கோரம் உச்சமடைந்துவிட்டுருந்தது. வெளியில் தலைக்காட்டினால் தலைமயிர்களைப்  பொசிக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்னுமளவிற்கு வெப்பம். மயிரில்லா சொட்டையாகவோ, மொட்டையாகவோ இருக்குமாயின் மூளையைக் கரைத்து நீராவியாக்கி தன்வசம் உறிஞ்சிக்கொள்வது போல கதிரவன் அனல்களைக் கக்கிக்கொண்டிருந்தது. வேர்க்க விறுவிறுக்க அக்கம் பக்கம் பங்காளி முறைக்காரர்கள் எல்லாரது வீடுகளிலும் விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாமியானா பந்தல் போடுபவனுக்கு இந்தச் சமயத்தில் கிராய்க்கி ஜாஸ்த்தி. “கட்டுப்படி ஆகாதுங்கண்ணோவ், இந்த ரேட்டுனா பண்ணிக்கலாமுங்க” என்று கிராய்க்கு பண்ணுவார்கள். எப்படியும் முப்பதிற்கும்  மேற்பட்ட பங்காளி வகையராக்கள் வீடுகளிலும், காட்டு கொட்டாய்களிலும் சாமியானா பந்தல்களும் அதற்குப் போட்டியாக தென்னங்கீற்று பந்தல்களும், சீரியல் லைட்டுகளும் திருவிழாவின் பிரம்மாண்டத்தைக் கண்களுக்கு காட்டிக்கொண்டிருந்தன. ஆம்பளை ஆட்கள் தலையில் துண்டையும், பொம்பளை ஆட்கள் முந்தானையை முக்காடாகவும் வெயிலின் வெப்பத் ததும்பல்களைத் தாங்க முடியாமல் தலையில் போட்டுக்கொண்டு தார் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர் சேந்தமங்கலத்தின்  ஒரு கிராமத்தை நோக்கி.

மொட்டை வெயிலென்றும் பார்க்காமல் உறவுக்காரர்களைப் பார்க்க, தனக்காக அவ்வளவு தூரம் வந்து அழைத்ததற்கு மரியாதை செலுத்த, பங்கு பங்காளிகளின் அழைப்பை ஏற்காமால் போனால் உறவில் பிசகு ஏற்படுவதைத் தடுக்க, மாமன் மச்சான்களின் அழைப்பை ஏற்று குடும்பத்தோடு வந்து அவர்களை கௌரவிக்க, பொண்ணுக் கொடுத்த வீட்டிற்கு சம்பந்திங்களும், தங்கையை அக்காளை கட்டிக் கொடுத்த வீட்டிற்கு அண்ணன்களும் தம்பிகளும் சீர் செய்ய, நண்பனின் அழைப்பை ஏற்காமல் போனால் தங்களுக்காக வாங்கி வைத்த குவாட்டர் வீணாகிவிடுமே என்ற கவலையின் காரணமாக, அத்தைப் பெண்ணை வம்பிழுக்க, எப்பொழுதோ பார்த்த மாமன் மகனை ஆசை ஆசையாய்ப் பார்க்க, கொழுந்தியாளின் அன்பான அழைப்பிற்காக, நங்கையா கூப்பிட்டுப் போகவில்லை என்றால் முகத்தினை சுழித்துக் கொள்வாள் என்பதற்காக, பேரன்களையும், பேத்திகளையும் கண்டு ஆரத் தழுவுவதற்காக முக்கு ரோட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கின்றனர் பலர்.

ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை சாமி செய்து கல்யாணத்துக்கு அழைப்பு விடுக்கிற மாதிரி பஸ் ஏறி, பஸ் இல்லா ஊருக்கு நடையோ நடவென்று நடந்து ஒரு சொந்தக்காரர்கள் விடாமல் அனைவரிடமும்  “தெவத்துக்கு வந்தரணும் கண்டிப்பா, அல்லாரு வந்தரணு, நம்ம ஊட்டுக்குத்தான் மொதல்ல வரோணும்” என்று நான்கைந்து அழைப்புகள் ஒரு ஊரிலிருந்து வந்துவிடுவதன் பொருட்டு நம்ம வீட்டில்தான் முதலில் சாப்பிட வேண்டும் என்று வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்துவிட்டு வருவார்கள். கல்யாணவிழா தோற்றுப்போகும். சாமி செய்து கிடா விருந்து வைத்து, சம்பந்தி வீட்டாரிடம் சீர் வாங்குவதில் இருபத்தைந்து முதல் அறுபது வரை உள்ள மாப்பிள்ளைமார்களுக்கு அப்படி ஒரு பெருமிதம். சீர் செய்யவில்லை என்றாலும் என் மாமனார், என் மச்சான், என்று முன் வந்து நிற்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். குறைந்தபட்சம் தேங்காய் பழத்தடட்டாவது சீராக எடுத்துக்கொண்டு முன்வந்து நிற்கவேண்டும் மரியாதை செய்ய. அதற்கும் பங்கம் வந்துவிட்டால் பிணக்கு ஏற்பட்டுவிடும் உறவுகளில்.

சின்னசாமியும் அவரின் அண்ணன் பையனும்  நேற்று இரவு பஸ்ஸை பிடித்து வந்து சேருவதற்கும் பூஜை முடிந்து கிடா வெட்டுவதற்கும் சரியாக இருந்தது. அக்காள் கணவரின் குணம் தெரிந்தே சின்னசாமி “ராத்திரியே நாம போய்டலாம்” என்று கல்லூரி முடித்துவிட்டு வேலைத் தேடி கொண்டிருக்கும் தனது அண்ணன் மகன் ‘அருளை’ அவசர அவசரமாக அழைத்துக்கொண்டு வந்தார். ஒரு வெள்ளை வேட்டி,வெள்ளைத் துண்டு, தேங்காய் பழம் பூ என்று தாம்பூலத் தட்டில் வைத்துக் கொடுத்தார் சின்னசாமி. இரவின் சீரியல் செட் வெளிச்சத்திலும் அக்காள் கணவரின் முகம் கருத்தது. பணமில்லா இடத்தில் மனிதர்களின் பிரியம் வற்றி வரக் கிணறாகத்தான் இருக்கும் என்பதற்கு அவரது நடவடிக்கைகள் ஒரு சாட்சி. அங்குதான் அலட்சியம் அதிகமாகி குப்பைகள் மட்டுமே கொட்டப்படும். ‘வாங்க’ என்று  ஒரு வாய் கூப்பிடவில்லை அக்காள் கணவர். மாமான் ‘பொங்கப் பொங்க’ சீர்வரிசை கொண்டு வந்திருக்க வேண்டும், ஒரு நாள் முன்னாடி வந்து வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்பார். மனிதனின் எதிர்பார்புகளை, கிடாய்களைக் காணிக்கையாகப் பெறும் அந்தக் கடவுளாளையே சரிவர நிறைவேற்ற முடியாது. சாமாணியனால் எப்படி நிறைவேற்ற முடியும்?

“ஊட்டுல ரண்டு பேரும் வரலையா” மரகதம் அக்காள் கேட்க.

“எங்க கடைய எடுத்து வச்சிட்டு இந்நேரத்துக்கு பொறப்பட வச்சி கூட்டியார நேரமாயிடும், அதான் நானும் அருளும் ஓடியாந்தோம், காத்தால நேரமே வரச்சொல்லியிருக்கேன்” சின்னசாமி பதிலளித்து விட்டு அருளைப் பார்த்தார்.

“உங்கப்பன் என்ன பன்றான், வரமாட்டானே மினிஸ்டரு” என்றாள்.

அவ்வளவு நேரம் இருக்கமாக இருந்த அருளின் முகம் அத்தையின் முகத்தைப் பார்த்ததும், அவள் வாயில் இருந்து சொற்கள் உதிர்ந்ததும் கொஞ்சம் தளர்வு பெற்று சிரித்தது. மாமன் எவ்வளவு அலட்சியம் அவமரியாதை பண்ணினாலும் அத்தை தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று நினைத்தே எதையும் பெறுத்துக்கொள்வான். அத்தையிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது பற்றற்று பற்றுதலாய் இருப்பான்.

சின்னசாமியின் அண்ணன் பெரியசாமிக்கு மாமனை அறவே பிடிக்காது, இது போன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்த்து விடுவார். தாமரை இலையும் தண்ணீருமாய் இருப்பார். அவரின் குணம் அறிந்தே அத்தை  பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. அவரைத் தெரிந்த யாருக்கும் தவறாக எடுத்துக்கெள்ள மனம் இராது. இப்படி சொந்தங்கள் கூடி கொண்டாடும் நிகழ்ச்சியை பெரியசாமி தவிர்ப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. பொருளாதார நிலையை வைத்து ஏளனங்கள் எக்காளமிடும். புத்திமதிகள் நாலாபுறமும் அம்புகளாய் வந்து குத்திக் கிழிக்கும். அலட்சியம், அசட்டை எலக்காரம் என எல்லா வகைகளிலும் தன்மானத்தை சீண்டிய வண்ணமே மாமன் மச்சினன் வீடுகளில் நடக்கும். பெரியசாமியைத் தவிர குடும்பத்தில் மற்றவர்கள் இவற்றை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் மரியாதை செலுத்தியவண்ணம் பொறுமையாக இருப்பார்கள்.

“இந்தா புடிங்க ஆளுக்கு அர பவுனு எடுத்து வைங்க, நல்ல நாளு அதுவுமா முனுமுனுத்துட்டே இருப்பான் அந்தாளு கருமம்” என்று சின்னசாமியிடம் பணத்தைத் திணித்தாள், மரகதம் போனமுறை வீட்டின் கிரகபிரவேஷம் விஷேசத்திற்கு சீர் செய்வதற்காக.

“மிச்ச காசுல ரெண்டு பேரையும் நல்ல சேலையா எடுத்துக்க சொல்லு” என்று தம்பி மனைவிகளின் மீது பச்சாதாபம் பட்டாள். அவ்வளவு நெருக்கம் காட்டுவாள் பெற்ற வீட்டாரிடம் மரகதம். அவளுக்காகவே அவமரியாதைகளைப்  பொறுத்துப் பொறுத்து அதுவே கட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும் போலாயிற்று.

பெரியசாமி, சின்னசாமி மற்றும்  மரகதம் செங்கோட்டு வேலவர் குடியிருக்கும் ஊரில் பிறந்தவர்கள். மலை அடிவாரத்தில் சின்னசாமியும் அவரது மனைவியும் பூக்கடை நடத்தி வயிற்றைக் கழுவி வருகிறார்கள். பெரியசாமியின் மனைவி அடிவாரத்தில் பழக்கடை வைத்திருக்கிறாள். விஷேச நாட்களில் வியாபாரம் நன்றாக இருக்கும். மற்ற நாட்களில் வெறுங்கைதான் முழம் போடும். எல்லா நாட்களுமே விஷேச நாட்களாக இருந்துவிடாதா என்பது இவர்கள் போன்ற அடிமட்ட வியாபாரிகளின் ஏக்கம். பெரியசாமிக்கு டிரைவர் வேலை. தத்தளிக்கும் கடலில் மரக்கலம் அங்கலாடுவது போல இவர்களது வாழ்க்கையும் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

“நானும் போய் பொண்ணெடுத்துருக்கறன் பாரு, எல்லாரு ஊட்டுலயும் பாரு சம்பந்தி ஊட்டாருங்க என்னென்ன மொற செய்யறாங்க, இங்க ஒரு சீலத்துணிக்குக் கூட நா காங்கமாட்டிக்கறன்” என்று கெடாவெட்டின் போது அவ்வளவு கூட்டத்திலும் பொறு பொறுவென்றிருந்தார் மாமன்காரன். மரகதம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டாள் “என்னத்தையாவது ஒளரிக்கிட்டு இரு” என்று அவரை அசட்டையாகக் கையாளுவாள்.

கிடா வெட்டு முடிந்து இரவு கூறுபோடும் வேலைகள் நடந்த வண்ணம் இருந்தது.

சின்னசாமியும் அருளும் அதில் பங்கு கொண்டனர். சின்னசாமி குடலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அலசோ அலசோவென அலசி சுத்தப்படுத்தி பாங்கு செய்து கொண்டிருந்தார். அருள், சித்தப்பா சொல்லும் வேலைகளைச் செய்த வண்ணம் உதவியாய் இருந்தான்.

“என்னா உந்தம்பி ஊட்டுகாரிகள காணம்”

“ஆமா காணம், வேல வெட்டி இல்ல பாரு, காத்தால வந்துருவாங்க”

“அதென்ன காத்தால, வந்து கூடமாட வேல செஞ்சாதான ஆவும் போவும்”

“சின்னசாமி புள்ளைக்கு தெரட்டி வச்சாங்களே, அப்ப என்ன பண்ண நீயி வேணும்னே லேட்டு பண்ணி லேட்டு பண்ணிதான கூட்டிப்போன, நீ போயி கூடமாட வேல செஞ்சியா இல்ல என்னதான் செய்யவுட்டியா”

“நானென்னத்துக்கு வேல செய்யோனு, மொய்யி மட்டு இருவதாயிரம் வச்சன், அவ்ளோ மொய்யி ஆரு வச்சாங்க”

“இருவதாயரம் மொய்ய வச்சிட்டு அத நாப்பதாயர தடவ சொல்லி காமிச்சுப்புட்ட, ஊரெல்லாம் சிரிக்குது”

“ஆமா சொல்லோணும், சேந்தமங்கலத்துக்காரனோட அரும தெரியவாண்டாமா?”

“சோத்தாங்கையி கொடுக்கறது நொட்டாங்கைக்கு தெரிய கூடாது, இப்படி நீயே போய் பீத்திகரத போய் அரும எருமனு பெனாத்திக்கிட்டு இரு”

“ஏ உங்கப்பன் செத்தப்ப காரிய செலவுக்கு தடுமாறிட்டு இருக்கும் போது, நாந்தான கொடுத்தேன், நா மட்டும் கொடுக்கலனா அன்னிக்கி பொணத்தோட சேந்து எழவு ஊடு நாறிப்போயிருக்கும்”

“எங்கடா இத சொல்லலியேனு பாத்தேன், இப்புடி கொடுத்துப்புட்டு அவிங்கள அசிங்கப்படுத்துறதுக்கு நீ கொடுக்காமலே இருந்திருக்கலாம், அப்படி எழவெடுக்க கூட நாதியில்லாம போய்டல அங்க, பெரும மசுருக்கு நீயே கொண்டோயி நீட்டிட்டு, வியாக்கானம் பேசுறியா, இந்த லச்சணத்துல ஊருல நியாயம் பேசுற பெரிய மனுசன். உன் நாயத்துல கொண்டோயி பொட்ட நாய உடு” என்றாள் மரகதம் கோவமாக.

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாயிற்று, அவளின் பதில்களுக்குப் பதிலடி கொடுப்பது அவரது நோக்கமல்ல. அவள் வீட்டாரை மட்டம் தட்டியாயிற்று. மரகதத்தை வெறுப்பேற்றியாயிற்று. அது போதும் அவள் திரும்ப பேசியதைப் பற்றிக் கவலையேதும் இல்லை அவருக்கு. அவ்விடம் விட்டு நகர்ந்து சமையல் வேலைகளைப் பார்க்க சென்றார்.

இரவு முதல் இப்பொழுது விருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரை அனைவரிடமும் நன்றாக குசலம் விசாரித்தார். முகம் மலர்ந்து வரவேற்றார். விழுந்து விழுந்து உபசரித்தார் மச்சினனையும், மச்சினன் பையனையும் தவிர.

சின்னசாமியின் மனைவி மற்றும் மகளும், பெரியசாமியின் மனைவியும் வேகாத வெயிலில் செருப்பு தேயத் தேய நடந்து வந்து கொண்டிருந்தனர். பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீர் பத்தவில்லை. பேருந்தை உருட்டி எடுத்துவிட்டான். பேருந்து பாதி வழியில் வந்துகொண்டிருந்த போதே தண்ணீர் தீர்ந்துவிட்டது. தண்ணீர் தாகம், பாட்டிலில் உள்ள கடைசி சொட்டினை உறியும்படி இருந்தது.

வரும்பொழுதே ஊரின் அனைத்து வீட்டுக்கும் வரும் விருந்தினர்களைக் காண நேர்ந்தது. அவர்களுடன் ரெண்டு வார்த்தை கலந்துகொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கும் மேலும் இரண்டு வீடுகளில் அழைப்பு இருந்தது.

“வா செத்த நேரம் உக்கோரு” என்று பெரியசாமியின் மனைவி சொல்ல சாலையின் ஒரு வேப்பமர அடியில் சிறிய கல்லுக்கட்டு இருந்த இடத்தில் உட்கார்ந்தார்கள்.

“மதிய நேரத்துக்கு இங்கேயே அல்லாரும் சாப்புட்டுருவம். மரகதக்கா ஊட்டுக்காரரு அவ்வளவுதான் பேசியே கொன்னுருவாரு அல்லாரும் சாப்படாம போனா. இங்க தின்னுட்டு பொழுதோடயா போயி ஆளுக்கொரு ஊட்ல தலைய காட்டிட்டு கொஞ்சமா சாப்புட்டு  வந்துருவோம்” பெரியசாமியின் மனைவி அவரின் குணமறிந்து கூறினாள்.

அந்த வேப்பமரம் வெக்கையைக் கொஞ்சம் தணித்து, லேசாக காற்றினை கொடுக்க அது அவர்களின் வியர்வையை ஆவியாக்கி குளிர்காற்றாய் உடல்களைத் தழுவியது. சின்னசாமியின் பெண்  துவண்டு போய்விட்டாள். அங்கேயே அம்மாவின் மடியில் சாய்ந்துகொண்டாள். அவளின் விலகிய தாவணியைச் சரிசெய்துவிட்டாள் அவளின் அம்மா. மூவருக்கும் அங்கேயே அப்படியே தூங்கிவிடலாம் போலிருந்தது.

“என்னா பூக்காரமூடும், பழக்காரமூடும், களச்சி போயிட்டிங்களாட்டம். வாங்க வாங்க கறி தீந்துபோயிட போவுது, பந்திக்கு முந்தரதில்லியா” என்று அவர்களை ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு விருந்திற்கு மக்கள் நடந்து போய்கொண்டும், ஆங்காங்கே மரத்தடியில் நின்று கொண்டும் இருந்தனர்.

“இப்பவே லேட்டு, போனதுமே உங்கப்பன் சிடுசிடுங்கும், எந்திரி” என்று பிள்ளயை எழுப்பினாள்.

“புள்ளைக்கு பூவு வச்சூடலாம்ல, வெறுந்தலையா போட்டு கூட்டியார, நானும் இப்பதான் பார்க்கறேன்”

“ரெண்டா நேரமா இருக்குது, காத்துகீத்து அடிச்சிரும்னுதான் வைக்கல, ஆனா வூனா பொசுக்குனு காச்சல்ல உழுந்துருது, பையில வச்சிருக்கேன் அங்க போய்ட்டு வச்சூடறேன்”

“நல்லா சாப்புடு புள்ள, எலும்பா இருந்தீனா எப்புடி” என்று பெரியம்மாவின் புத்திமதிகளை கேட்டவாறு எழுந்து நடந்தாள். மீண்டும் வெயிலின் பிள்ளைகள் போல் நடக்க ஆரம்பித்தனர்.

மரகதத்தின் வீட்டை எட்டும் முன்னே ஐந்தாறு வீடுகள் கடந்து வருகையில் கறிக்குழம்பின் வாசம் மூக்கை துழைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் பசியை அதிகமாக்கிக் கொண்டே இருந்தது. என்னென்ன வகைகள் இருக்கும் என்று தங்களுக்குள் அவர்கள் யோசிக்காமல் இல்லை. தாகத்தின் நினைப்பு தப்பிப்போய் அசைவத்தின் நினைவலைகள் சூழ்ந்துகொண்டன. சுமார் இரண்டு கிலோ மீட்டர் பாதங்கள் நடந்து தேய்ந்த களைப்பு சட்டென கலைந்தது. அசைவத்தின் ருசியை ருசிக்க எண்ணங்கள் ஆர்பரித்துக்கொள்ள, வீட்டின் முன் போடப்பட்டுள்ள பந்தலின் உள் நுழைந்தனர்.

சின்னசாமியும், அருளும் பந்தி பரிமாறுவதில் மும்மரமாக இருந்தனர். முகம் வாட்டமுடையதாகவே இருந்தது இருவருக்கும். இரவு சரியாக தூங்கியிருக்கமாட்டார்கள் என்று நினைத்தார்கள். கண்கள் மரகதத்தைத் தேடின. நாத்தனார் மிடுக்கு சிடுக்கெல்லாம் இல்லாமல் கூடப் பிறந்தவள் போல் பாசம் காட்டுபவளைக் கண்கள் காண ஆவலுடன் இருந்தன. இருவரும் இயல்பாக அக்கா என்றே அழைக்க விருப்பப்பட்டனர் ஆரம்பத்திலிருந்தே.

இவர்களைக் கண்டதும் புன்னகை பொங்க ஓடோடி வாந்தாள் மரகதம். 

“வாங்க வாங்க நேத்தே வந்துருக்கலாம்ல, சரி வாங்க” என்று இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டாள்.

கொண்டுவந்த பூவையும் பழங்களையும் மரகத்திடம் கொடுத்தனர். மரகதம் ஆசை ஆசையாய் பொறந்த வீட்டு சீராக நினைத்து உரிமையோடு வாங்கிக்கொண்டாள்.

தாகத்தில் நாக்கு வறன்டவர்களுக்கு செம்பில் தண்ணீர் கொடுத்தாள். ஒரே மொடக்கில் தாகம் தீர தீர தண்ணீரைக் கண்டு பல நாள் ஆனது போல பருகினார்கள். ‘வெயில்ல வந்தது ரொம்ப தாகம் போல’ என்று திரும்பவும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

இரண்டு பேரும் பசி மறந்து போய் சற்று முன் இருந்த அசைவத்தின் மீதான ஆர்ப்பரியம் மறந்தவர்களாக, தாகம் தீர்ந்தவர்களாகப் பந்தி பரிமாறுதலில் பங்கு கொள்ள எண்ணி  புது உற்சாகமுடன் ஈடுபட முற்பட்டனர்.

“அட உக்காருங்க செத்த நேரம், அதலாம் அவுங்க பாத்துக்குவாங்க, வெயில்ல களச்சி போய் வந்துருப்பிங்க” என்று தடுத்தாள் மரகதம்.

“இல்லக்கா சாப்புட்டுக்கலாம் பொறுமையா” என்று உற்றார் உறவினர் வீட்டு வேலைகளில் விஷேசங்களில் பங்குகொள்ளும் நாகரீகத்தினைப் பொருட்டு வேலையில் மும்மரமாகினர்.

பிள்ளை ச்சேரில் உட்கார்ந்து கொண்டாள். மிகவும் களைப்புற்று காணப்பட்டாள். ச்சேரில் தலையை ஒருபுறமாக சாய்ந்தவாறு அமர்ந்து இருந்தாள். 

வந்தவர்களை வா என்று ஒரு வார்த்தை கூப்பிடவில்லை மரகதத்தின் கணவர். முகத்தினைக் கூட அவர்கள் பக்கம் தப்பித் தவறி திருப்பிவிடக் கூடாது என்று கவனமாக இருந்தார். அதுவரை வந்திருந்த அனைவருக்கும் பார்த்து பார்த்து வரவேற்று சாப்பிட வைத்து, நல்லபடியாக பேசிக்கொண்டிருந்தவர், தேவையில்லாத, அநாவசியமான கோபத்தை வழியன தன்னுள் புகுத்திக் கொண்டவராகக் காணப்பட்டார். இவர்களுக்குத் தண்ணீர் தெளிக்காது வாடிப்போன பூ போன்று பொக்கென்று முகம் வாடிப்போயிற்று.

பந்தி  பரிமாறுவதில் மும்மரமாகத் தங்களை இணைத்துக்கொண்டனர். தண்ணீர் மட்டுமே போதுமென எண்ணிக் குடித்து குடித்து வியர்வையாய் வெளியேற்றிக் கொண்டிருந்தனர். கூட்டம் கனமென பெய்து கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வரும் தூறல் மழைப் போல ஒன்றிரண்டு பேராக வருவதும் போவதுமாக இருந்தனர்.

மரகதம் “சாப்புட சொன்னா  சாப்புட மாட்டனு பண்றிங்க” என்று மிகவும் சலித்துக்கொண்டாள். 

வேலை ஓரளவு முடிந்து மிகவும் சோர்வுடையவர்களாக ச்சேரினை பந்தலின் ஒரு பக்கமாக போட்டு உட்கார்ந்தனர். சின்னசாமிக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. உட்கார்ந்தவாறே தூங்க ஆரம்பித்தார். மரகதம் மிகவும் கோபம் கொண்டவராகவும், தம்பிகள் வீட்டினை அவமானப்படுத்துவதை எண்ணி வருத்தமாகவும், விருந்தாளிகள் வந்து போகும் வேளையில் வெளிப்படையாக எதையும் பேசமுடியாமல் வாயைக் கட்டிக்கொண்டாள். ஊமையாகத் தோற்றமளித்தாள்.

இந்த இடம், பொருள், ஏவல் எல்லாம் அவளுக்குத்தான் அவளின் கணவருக்கு இல்லை. ஊர் நியாயம் பேசும் பெரிய மனுசன் என்றுதான் பெயர். வீட்டு காரியங்களில் சின்னப்பிள்ளைகள் தேவலாம் போல் இருக்கும். ஓலைக் கொட்டாயின் மீது விழுந்த மழையாய் பேச்சு படபடவென்று பேசுவார். அதனால் மற்றவர்களின் மனம் வாடுவதெல்லாம் நினைத்துப் பார்க்காத மண்ட கணம் உடையவராய் வாயிலே ஆட்டம் கட்டிக்கொண்டிருப்பார்.

பந்தியே முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒரு வார்த்தை அவர்களைச் சாப்பிட சொல்லவில்லை. சின்னசாமியும் அருளும் காலையிலிருந்தே சாப்பிடவில்லை. மரகதம் கேட்டதற்குச் சாப்பிட்டுவிட்டோம் என்று கூறிவிட்டனர். மிகவும் சோர்வடைந்தவர்களாய்க் காணப்பட்டனர். இன்னும் சிலபேர் சாப்பிட்டுக் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை மரகதம் கவனித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கு மேல் பொறுக்கமாளாது என்பது போல, நியாயத்தை இப்பொழுதே கேட்டாங்க வேண்டும் என்னும் உத்வேகத்தில் அவர்கள் அருகே வந்து தனக்கென ஒரு சிம்மாசனமாக ஒரு ச்சேரை நகர்த்தி அமர்ந்தார் மரகத்தின் கணவர்.

“நேத்திக்கே வராம அப்புடி என்ன வேல,  நா நீங்க வருவிங்க வருவிங்கனு பாத்துக்கிட்டு கெடக்கேன், அவுங்களும் பூச முடிஞ்சதும்தான் வராங்க” என்று ஆரம்பித்தார்.

“அப்புடி என்னத்த சம்பாரிச்சு, என்னத்த நப்பி வச்சுட்டிங்க, இல்ல எங்களுக்குத்தான் சீரு செனத்தினு செஞ்சுபுட்டிங்களா” அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைக்க ஆயத்தமாகிவிட்டார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இவரின் பேச்சுக்கள் கேட்காமல் இல்லை. மரகதம் அவ்வப்போது மிதமான எதிர்வினையாற்றினாள். இருந்தும் நிறுத்தின பாடு இல்லை. நாமும் சத்தம் போட்டால் பெரிய சண்டையாகி விடும், அனைவரின் முன்பும் எதற்கு சங்கடம் என்று இதழ்களைப் பிரிக்காமல் இறுக்கமாக ஒட்டிக் கொண்டாள்.

‘ஊர் நாயம் பேசும் பெரிய மனுசன் அவரப்போயி நாம என்னனு பேசுறது. என்னதான் சொல்லி காமிச்சு அசிங்கப்படுத்தினாலும் ஆத்திர அவசரத்துக்குனா அக்காவிடம்தானே கையேந்துகிறோம். நம்ம நிலைமையைதான் நாம் நொந்துக்கனும்’ என்று அவமானங்களை அமைதியாய் கடப்பதே சாலச்சிறந்த செயல் என்னும் தோரணையில் அவரின் பேச்சுக்களுக்கு எதிர்வினையோ, பதில்களோ தரமால் அமைதி காத்தனர்.

வெற்றிலை இரண்டினை எடுத்தான் அருள். நன்றாக பாங்கு செய்து சுண்ணாம்பு தடவி பாக்கினை வைத்து நான்றாக சுருட்டி கடவாய் பல்லில் திணித்தான். சாப்பிடாமலே வெற்றிலைப் பாக்கு போடுவதன் அர்த்தம் அவனுக்குத் தவிர அங்கு யாருக்கும் விளங்கவில்லை. நன்றாக ருசித்தவாறு அவசரம் இல்லாமல் மதிய நேர பசுவின் அசைப் போல் நிதானமாக மென்றுகொண்டே அவரின் பேச்சுக்களுக்குச் செவிக்கொடுத்திருந்தான்.

“என்னத்த பொழப்பு நடத்துறிங்க. சொந்த ஊருலதான இருக்கறிங்க ஒரு சென்டு நெலமாவது இருக்குதா? இப்புடியே இருந்தா எப்புடி? நா என் மச்சினமூடுனு பெருமையா சொல்லிக்க வாண்டாமா? ஒரு நல்ல நாளு பெரிய நாளுனு எதுனா செஞ்சு சப நெறஞ்சால பரவால, நான்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். திரும்ப எதுவும் வரக்காணம்” இடைவிடாது அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் கேள்விகளை மட்டும் அவர்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தார் அந்த உத்தமர். அவர்களும் செக்கில் விழுந்த மழைநீராய் ‘சிவனேனு’ பதிலளிக்கும் எண்ணமே இல்லாமல் இருந்தனர்.

“உங்கூட்டுலையும் பொண்ணுருக்கு, எம்பையனுக்கு பொண்ணு கேக்க வரணும்னா நல்லா ஊடு கீடு கட்டி, பவுனலாம் சேத்தி வச்சி வசதி வாய்ப்பா இருந்தாதான பரவால” என்று கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருக்கும் தன் மகனைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

சொன்னதுதான் தாமதம் வாயில் நிரம்பி இருந்த அடர் செந்நிற திரவத்தைப் பந்தலின் பந்தக்காலின் அடியில் ‘பொளிச்’ என்று  துப்பிவிட்டு, “அப்புடி வசதியா இருந்தாதான் பொண்ணெடுப்பனா, நீரு என்ன மசுருக்கு சொந்தக்காரனு இருக்கீரு, வசதியா இருக்கவங்கள மட்டும் விருந்துக்கு கூப்டவேண்டிதான, எங்கள என்ன வெளக்கெண்ணைய்க்கு கூப்டீங்க” என்று கோவமாகப் பேசி, இதுவரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இழிவுபடுத்தியமைக்குப் பழிவாங்கியவனாய் திருப்தி அடைந்தான்.

“இன்னும் என்னா உக்காந்துக்கிட்டு இருக்கிங்க, வாங்க போலாம், ஏய் எந்திரிப்புள்ள” என்று தங்கச்சியும் உசிப்பிவிட்டு யாரையும் எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான்.

மாமன்காரன் வாயடைத்துப் போய்விட்டார். முகத்தில் ஈ ஆடவில்லை. இப்படி ஒரு பதிலையும், அதுவும் ஊமை போல அமைதியின் சொரூபமாய் இருக்கும் அவன் வாயிலிருந்து உதிர்ந்ததை அவரால்  இன்னும்  நம்ப  முடியவில்லை. விருந்தினர்கள் முன்பு அவருக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. மரகதத்திற்கும் திடுக்கென இருந்தது, நெஞ்சு படபடத்தாள். இருந்தும் மனதிற்குள் கொஞ்சம் ஆனந்தம்தான் ஒரே பேச்சில் கணவரின் வாயைக் கட்டிவிட்டான் என்று. மருமவன் சாப்பிடாமலே போறானே என்னும் மனக்குறையுமாய் இருந்தாள். இதற்கு மேலும் அவர்களை வற்புறுத்தி சாப்பிட சொல்வதில் அர்த்தம் இல்லை என்று அமைதியானாள்.

சின்னசாமியும், சித்தியும் அவனின் அம்மாவும் ‘என்ன இந்தப் பையன் இப்புடி பேசிப்புடிச்சி’ என்று பதற்றமானார்கள். அவனை ஏதும் சொல்வதற்கு வாய்பளிக்காமல், இன்னும் அங்கு நின்றால் பாவம் தன்னைப் பிடித்துக்கொள்ளும் என எட்டு வைத்து எட்டிப்போனான். இருந்தாலும் நமக்கில்லா ரோசம் அவனுக்காவது இருக்கே என்று அவன் பின்னே அவன் பாதத் தடத்தினை தங்களுக்கான பாதையாகப் பாவித்து அமைதியாய் அனிச்சையாக எழுந்து சென்றனர். மரகதம் அவர்களைத் தடுக்கவில்லை.

வெக்கை இன்னும் தாழ்ந்தபாடில்லை, முன்பிருந்த அதே காந்தல் தான். ஆனால் இம்முறை வெப்பம் வெளி உடலுக்கு மட்டுமே. உள்ளூர இருந்த காந்தல் குறைந்திருந்தது. மனதிற்குள் ஈரக்காற்று வருடிக் கொண்டிருந்தது. எல்லாரது மனதும் லேசாக ஆனது. தெரிந்த, பழக்கப்பட்ட வழிதான் என்றாலும் அவன் பாதங்கள் வழிகாட்ட பின் சென்றார்கள்.

வெக்கை தணிந்தது.

000

சொந்த ஊர் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். 2019 ல் இருந்து புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டு புத்தகங்கள் வாசிக்கத் தெடங்கினேன். மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டம் 2022 முதல் நடத்தும் புத்தகத் திருவிழாவில் தன்னார்வளராக இணைந்து எனது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறேன். “புதுச் சட்டை” என்ற என் முதல் சிறுகதை திரு.பொன்குமார் அவர்கள் தொகுத்த நாமக்கல் மாவட்ட சிறுகதைகள் புத்தகத்தில் வெளியானது. 

The post வெக்கை தணிந்தது… first appeared on Nadukal.

  •  

செங்கொடி நிறத்தையொத்தது தக்காளியின் வண்ணம்

கிணற்றை மேலிருந்து எட்டிப்பார்த்து “இனிமே கெணத்துக்குள்ள இந்த சோப்பு, ஷாம்பு  போட்டு குளிக்கிற சோலிய விட்டுப்போடுங்க. அப்படி குளிக்கிறதா இருந்தா -இந்த கெணத்துப் பக்கம் வராதிங்க” என்று மூஞ்சில அடிச்சாப்புல பேசினான் பழனி. 

   கிணற்றுக்குள் குளித்துக்கொண்டிருந்தவர்களின் சிலபேர் மனதில்  ’சோப்புப்போடக்கூடாது,மயிறு போடக்கூடாதுன்னு பேசுறான் -என்னமோ சொந்த தோட்டங்கெணக்கா.. ‘என்று நினைப்போடியது.

      “செரி மாமா ,இனிமே கெணத்துக்குள்ள சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கமாட்டாங்கே” என்று வேகமாக சொன்னான் குளித்துக்கொண்டிருந்த பாண்டி.

      “ஆமா இதுமாதிரி முப்பத்துரெண்டு தடவை சொல்லிட்டிங்க. நீங்க இப்படி சொல்றத கேட்டு கேட்டு காது புளிச்சுப்போச்சு..” என்று கோபமாக சொன்னான் பழனி.

சிறிதுநேர அமைதிக்குப்பிறகு..

    “பொழுதுபோகாம வெளையாட்டுக்கா சொல்றேன்….நீங்க கெணத்துக்குள்ள சோப்பு, ஷாம்பு போடுறத்தண்ணிய காய்கறிகளுக்கு மோட்டார் போட்டு பாய்ச்சினா காய்கறிக எல்லாம் ஏதோ ஒரு மாதிரி சூம்பி போயிதான் காய்க்கும். அதிகமா சூத்த உழுகும் – இதெல்லாம் ஒங்களுக்குத் தெரியுந்தானே…? நானே அடுத்தவங்க தோட்டத்தை சாவியத்துக்கு (குத்தகை) எடுத்து விவசாயம் பார்த்துக்கிட்டு இருக்கேன். அதப்புரிஞ்சுக்காம.. இப்படி பண்ணுறிங்களே” என்றான் எரிச்சலில் பழனி.

ஊரில் சாவியத்துக்கு வருகிற தோட்டங்கள் நாலஞ்சு இருந்தாலும்- இந்த தோட்டம்தான் பழனிக்கு கண்ணில்பட்டது. ஊரின் எதுப்பத்தில் இருப்பதால் நாலு எட்டில் வீட்டிலிருந்து வந்துவிடலாம். அதுவுமில்லாமல் கோடைகாலத்தில்கூட, இந்த தோட்டக்கிணற்றில் ஒரு குறுக்கமளவு பாய்ச்சுகிற தண்ணீர் ஊறும்.

இந்த தோட்டத்தை சாவியத்துக்கு(குத்தகை) எடுப்பவர்,வருஷத்துக்கு எட்டாயிரம் ரூபாய் கட்டணும் தோட்டத்து உரிமையாளருக்கு.

கட்டிட வேலைக்குப் போய்க்கொண்டிருந்த பழனி. ஒருநாள் வேலையின்போது சாரத்திலிருந்து விழுந்து காலில் வசமான அடிபட்டு ஆஸ்பத்திரிக்கும்,வீட்டுக்கும் அழைந்தபோதுதான் திடீரென்று பேசாம இனி கட்டிட வேலைக்குப் போறத விட்டுட்டு நாலு ஆட்டுக்குட்டி,ஒரு பசுமாடு வாங்கி -ஏதாவது தோட்டத்த சாவியத்துக்கு எடுத்து, காய்கறி,பயிர்,பருத்தி ஏதாவது போட்டு… ஆடுமாடுகளுக்கு எதாவது நாத்து, கீத்து விதைச்சு அப்படியே பொழப்ப ஓட்டவேண்டிதுதான் என்ற யோசனை வந்தது.

அவனுக்கு விவசாயத்தில் ஏற்கனவே கொஞ்சம் அனுபவமிருந்தது. அப்பா இருக்கும்வரை அவருடன் சேர்ந்து கரிசக்காட்டில் கூடமாட விவசாயம் பார்த்தான். படிக்கும்போது விடுமுறை நாட்களில் அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க காட்டுக்கு போவான்.

பழனியுடைய மூன்று அக்காகளின் திருமண செலவுக்காக – அவனுடைய அப்பா இரண்டு கரிசக்காடுகளை விற்ற பிறகு பழனிக்கும் விவசாயத்திற்கும் இடைவெளி அதிகம் ஆகிப்போனது.

அதுவுமில்லாமல் பழனி சோட்டுடைய வயதுக்காரர்கள் பெரும்பாலும் கல்கிடங்கு, கட்டிட வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும்- இவனும் அந்த மாதிரி வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.

தோட்டத்தை சாவியத்திற்கு எடுக்கிற விஷயத்தை பழனி தன் மனைவியிடம் வந்து சொன்னபோது சந்தோஷப்பட்டு சரி என்றாள். அதற்குப்பிறகு அவள் ‘யாரு தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்துப் பார்க்கப்போறிங்க’ என்று கேட்டாள். அதற்கு ‘குருசாமி தோட்டத்த எடுத்துப் பார்க்கப்போறேன்’ என்று பழனி சொன்னதும்,அவளுக்கு அந்த நொடியே எரிச்சல் வந்தது.

அவள் அப்படி எரிச்சல் படுவதற்கு காரணம் இருந்தது.

பழனி சாவியத்துக்கு எடுத்திருக்கும் தோட்டத்தின் வடக்குப்புறம் ஒரு காட்டைத்தாண்டி சுப்புச்சாமி காடு இருந்தது. 

சுப்புச்சாமியுடைய அப்பா பல வருஷத்துக்கு முன்னால் பழனியோட அப்பாவிடம் வாங்கிய கடனை அடைக்க  முடியாததால் தனக்குச் சொந்தமான காட்டை வாங்கிய கடனுக்காக வச்சுக்கிறச்சொல்லி தந்தார் .

இப்போது மாதிரி அப்போ உடனுக்குடன் பத்திரப்பதிவு செய்யும் பழக்கம் இல்லை. வாங்குனு துட்டுக்கு இந்தா இந்த காட்ட வச்சுக்கோ என்று கடன் வாங்கியவர் சொன்னால் போதும்- அடுத்த நொடியே கடன் கொடுத்தவருக்கு சொந்தமாகிவிடும் நிலம். அப்போதிருந்த மனிதர்கள் சொன்ன சொல்லுக்கு உண்மையாக இருந்தார்கள்- அதனால் அப்போது பத்திரப்பதிவு எதுவும் செய்யாமல் காட்டை பயன்படுத்த ஆரம்பித்தார் பழனியுடைய அப்பா. அதுவே பின்னாளில் வினனையாகிப்போனது.

பழனி கொஞ்ச வருடம் கழித்து காட்டை தன் பெயரில் பத்திரப்பதிவு செய்ய சுப்புச்சாமியை அழைத்தபோது காட்டு விலையின் மதிப்பு கூடியிருந்தது. அதனால் சுப்புச்சாமி ஒன்னுக்கு ரெண்டா மண்டக்கனமா ஏதாவது சொல்ல ஆரம்பித்தான்

”அந்தக் காலத்தில் எங்கப்பாவ எப்படியோ ஏமாத்திதான

காட்ட வாங்குனிங்க.. அவர மாதிர நானு ஏமாற ஆளில்ல”னு சொல்லி,  காட்டை ஏழுதித்தர மறுத்தான்.

அவன் அப்படிச் சொல்வதைப் பார்த்துவிட்டு பக்னு ஆகிப்போச்சு பழனிக்கு.  கோபத்தில் “ஏன்டா இப்படி மாத்திப் பேசுற. உங்கப்பா

எங்கப்பாகிட்ட அன்னைக்கு வாங்குன காசு மதிப்புக்கு இந்த காட்டை வச்சுக்கிற சொன்னார். இன்னைக்கு இந்த காட்டோட மதிப்பு கூடியதுமே நீ ஏன் இப்படி பேசுற” என்றான் கோபத்தில்.

”அதெல்லாம் தெரியாது, எனக்கு இந்த காடு இன்னைக்கு எவ்வளவு மதிப்புப்போதோ அதத்தந்தா எழுதித்தாரேன்” என்றான் திமிறாக சுப்புச்சாமி. அவன் அப்படிச் சொல்வதைப் பார்த்துவிட்டு படக்குனு மல்லுக்குப் பாய்ந்தான் பழனி.

கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் வரைப்போயி இறுதியில் தீர்ப்பு சுப்புச்சாமிக்குதான் சாதகமாய் வந்தது.  

அதிலிருந்து பெரும் பகையாகிப்போனது.

பழனி மனைவி பெரும்பாலும் மற்றவர்களுடன் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ நினைப்பவள்- அதனால்தான் சுப்புச்சாமி காட்டுக்கு பக்கத்திலிருக்கிற அந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுக்க வேண்டாமென்றாள். அதையும் மீறித்தான் அந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்தான் பழனி.

மீண்டும் கிணற்றுக்குள் குளித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, திடீரென்று இனி இவெங்கள சொல்லி பயனில்லை.நாளைக்கு தக்காளிச் செடி காயெடுத்தப் பிறகு இவெங்க வாட்டுக்கு சோப்பு,ஷாம்பு போட்டு குளிப்பாங்கெ. அதுக்கு முன்னாடி நாம சுதாரிச்சு கெணத்துப் படியை வேலிமுள்ள வச்சு அடைச்சு வைத்துவிடுவதுதான் நல்லது. இல்லேனா நம்ம பொழப்பு கெட்டுப்பபோகும் என்று நினைத்துக்கொண்டே தக்காளி நட்டியிருந்த பாத்திகளைப் பார்த்தான் பழனி. அப்போது மூனு,நாளு ஆடுகள் தக்காளிச் செடிகளை கடித்துக்கொண்டிருந்தன.

 “ஏய்..ச்சூ ..”என்று அரட்டிக்கொண்டே கீழே கிடந்த கற்களை எடுத்து எறிந்தான் உச்ச கோபத்தில்.

ஆடுகள் களைந்து ஓடின.அதன் பின்னாடியே வெளமெடுத்து விரட்டிக்கொண்டே  ஓடினான். “ஆடுகள கட்டிப்போட்டு வளர்ப்பாங்கெளா… பெரிய மயிரு மாதிரி அவுத்துவிட்டு வளர்க்குறாங்கே..இன்னோரு தடவ வந்திச்சினா.. வசமா ஏதாவது செஞ்சு போடணும். அப்பதான் ஆடுகள அவுத்து விடமாட்டாங்கெ.. அவன் அவன் கடன்வாங்கி கப்பவாங்கி வெவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காங்கே” என்று ஏதேதோ புலம்பிக்கொண்டு ஓடி களைத்துப்போயி நின்றான். ஓடியாந்ததால் சாரத்திலிருந்து விழுந்து அடிபட்ட காலு சுருக்சுருக்னு குத்தியது .

திரும்பி வந்து பாத்திகளைப் பார்த்தான். ஆடுகள் கடித்ததால் தக்காளிச்செடிகள் மொட்டக்கட்டையாக இருந்தன.

இதை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று நினைத்ததுமே நினைவு

பின்னோக்கிப்போனது பழனிக்கு.

தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்ததுமே முதல்வேலையாக திக்கம்திக்கம் முளைத்திருக்கும் மஞ்சனத்தி செடிகளை வாச்சாத்தால் தூர்வரை வெட்டி எடுத்தான் பழனி. பிறகு ஆங்காங்கே முளைத்திருக்கும் அருகுகளை மம்பட்டியால் கொத்தினான். தண்ணி ஓடும் வாய்க்கால்களின் இருபுறமும் நல்ல மேடுபடுத்தினான்.

இந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்ததில் பழனி மனைவிக்கு ஆரம்பத்தில் கோபமிருந்தாலும், போகப்போக அவளும் பழனியோட சேர்ந்து தோட்டத்தில் வந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள் .

என்னதான் வேலை பார்த்தாலும் அவளுக்கு உள்ளூர ஒருவித பயம் இருக்கத்தான் செய்தது.

தோட்டத்தில் எப்பையாவது ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கும்போது தற்செயலாக சுப்புச்சாமி காட்டை பார்க்கும்போதெல்லாம், படுபாவிப்பையன் வாங்குன காசுக்கு காட்டை எழுதித்தரமாட்டெனு சொல்லிட்டானே…என்று சுப்புச்சாமியை மனதுக்குள்ளே வைதாலும்-அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள்.

    இதேமாதிரி எதோ ஒரு நினைப்பில் பழனி, சுப்புச்சாமி காட்டைப் பார்த்து கோபப்படும்போதெல்லாம் “இதுக்குதேன் இந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுக்கவேண்டுமென்னு தலையில அடிச்சு அடிச்சுச் சொன்னேன். மண்ணோடு மனுஷன் மல்லுக்கட்டுன பெழைச்சுக்கலாம். மனுஷனோடு மனுஷன் மல்லுக்கட்டுனா பெழைக்கமுடியுமா..?” என்று கோபப்பட்டு சத்தமிடுவாள்.

    அப்படி ஒருநாள் அவள் வையும்போதுதான் பேச்சை மாற்றுவதற்காக “செரி செரி கொச்சுகொச்சுனு சொல்லாத தோட்டத்தில என்ன விதைக்கலாம்னு சொல்லு”என்றான் .

அவள் “தக்காளி நாத்து போடுவோம் ஒரு குறுக்கத்துக்கு.. மிச்ச ஒரு குறுக்கத்தில சோள நாத்து வெதைச்சிடுவோம் ஆடுமாடுளுக்கு”என்றாள் வேகமாக.

பழனி “தக்காளிக்குப் பதிலாக கத்தரி நாத்து இல்லேனா மிளாகச்செடி போடுவோமா..?”என்றான்.

அவள் விடாப்பிடியாக “தக்காளி நாத்தே போடுவோம்.. போனாவாட்டி இராமசாமி சின்னையா அவரு தோட்டத்துல தக்காளி நாத்து நட்டிதான் நல்ல விலைக்கு போட்டார்” என்றாள்

பிறகு என்ன நினைத்தானோ பழனி. அவள் சொல்வதற்கு சரி என்றான்

முதலில் தோட்டத்தை டிராக்டரின் சட்டிக் கலப்பை கொண்டு உழுதான். அதற்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபா வந்தது. பிறகு ஒரு மழைக்குப்பிறகு டிராக்டரின் கொற்கழுப்பை (பல்லுக்கலப்பை) கொண்டு உழுதான்.

உழுத கரிசமண் பொறித்த ஆட்டு(ஆடு) இரத்தம்போல காட்சியளித்தது .

விருதுநகர் விதைக்கடைகளில் தக்காளி விதை வாங்கிவந்து தோட்டத்தின் ஈசான மூலையில் பன்னிரெண்டுக்கு பன்னிரெண்டு அளவை மூன்று பங்காக பிரித்திருந்த பாத்திகளில் தக்காளி விதையை பாவி, தண்ணியை விட்டான் பழனி.

பிறகு உழுது போட்டதை முழுவதும் பாத்தி கட்டுவதற்கு மூன்று வேலை ஆட்களை ஏற்பாடு செய்தான் பழனி. ஒரு குறுக்கத்தை முழுவதும் பாத்திகட்ட அந்த மூன்று ஆட்கள் நாலு நாட்கள் எடுத்துக்கொண்டனர்.

தக்காளி நாத்து பிடுங்கி நட்டும் அளவு வளர்ந்தபிறகு பத்து வேலை ஆட்களைக்கொண்டு ஒரே நாளில் ஒரு குறுக்கத்திற்கு முழுவதும் நட்டி முடித்தான்.

தக்காளி நாத்து நட்டிய ஆரம்பத்தில் ஐந்து ஆட்கள்வீதம் என ஒரு குறுக்க பாத்தி முழுவதும் களையெடுக்க ஒருவாரம் ஆனது.அந்த ஒரு வாரத்தில் களை எடுத்த கூலி ஆறாயிரம் வந்தது.

இப்போதே இப்படியின்ன.. செடி பூவெடுக்கேல இன்னொரு களை எடுக்கனும்.. பிறகு செடி காய்வைக்கேல ஒரு களை எடுக்கனும்.. யப்பா என்று மனதுக்குள்ளே ஒருவித அயற்சி வந்தது பழனிக்கு.

இதனால் என்னவோ தக்காளி எப்படியாவது நல்ல விலைக்குப்போகணும் என்று அப்பைக்கப்ப வேண்டாத தெய்வமில்லை.

நாளாகநாளாக பாத்திமுழுவதும் பசேரென்று தக்காளி நாத்து வளர்ந்து வருவதைப்பார்க்க அவ்வளவு சந்தோஷமாகியிருந்து பழனிக்கும்-அவனது மனைவிக்கும்.

இனி கொஞ்ச நாளில் செடி காய் வைத்துவிடும் என்ற நினைப்பே அவனுக்கு சந்தோஷத்தை தந்தது.

அப்படிப்பட்ட சந்தோஷதத்தை அழிக்க வந்த அந்த ஆடுகளை இபபோது நினைக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது.

 பையிலிருந்த பீடி ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டே ஆடுகளால் கடிபட்ட இலையை தடவிக்கொண்டு தற்செயலாக சுப்புச்சாமி காட்டைப்பார்த்தான் பழனி.

 சுப்புச்சாமி அவனது காட்டில் ஏதோ வேலையில் மும்மரமாக இருந்தான். அப்போது அவனருகே உள்ள வேப்பமர நிழலில் காலையிலிருந்து மஞ்சனத்தி செடியில் கட்டிப்போடப்பட்டிருந்த அவனது ஆடுகள் அசைபோட்டுக்கொண்டிருந்தன.

      **********************************

       “சொன்னா கேட்டயா..? மானாங்கணியா அவங்க தக்காளி போட்டு நல்ல வெலைக்கு போட்டாங்க… இவங்க தக்காளி போட்டு நல்ல வெலைக்கு போட்டாங்கன்னு சொல்லி இப்படி மண்ணாக்கிட்டயே பொழப்ப.. இப்ப தக்காளி கிலோ ரெண்டு ரூபாயக்குதான் அருப்புக்கோட்டை, விருதுநகர் சந்தையில வாங்குறாங்கே.. இந்த ரெண்டு ரூபாய் புளுத்திக்குதேன் இத்தன நாளு தக்காளி நாத்து நட்டி இருபதாயிரத்துக்கு மேல முதல்போட்டு இப்படி நாயா ஒழச்சம்மா..வக்காளி நெனச்சாலே எரிச்சக்கூதியாயிருக்கு.. ஏதோ சொல்லுவாங்களே உன்னி புடிச்ச மாட்டையே (மாடு)உன்னி புடிக்கும்னு.. அதுமாதிரிதான் நம்ம நெலம ஆகிப்போச்சு.. மூசாம கத்திரிக்கா, மெளகாய் போட்டிருந்தாகூட நல்ல விலைக்கு போயிருக்கும்..தேவையில்லாம ஓம்பேச்சைக்கேட்டு.. ச்சேய் தோட்டத்துபக்கம் போகவே எரிச்சலாயிருக்கு.. என்னத்தான் செருப்பால அடிச்சிக்கிறணும்.. வெவசாயம் பார்த்து பெழைக்கிறதுக்கு பதிலா.. நாலுசுன்னியப் பார்த்து ஊம்பிட்டுப் போயிறலாம்”என்றான் கோபமாக பழனி.

     “இப்படி நடக்கும்னு நம்மளுக்கின்னா தெரியுமா.. எல்லாம் நம்ம தலையெழுத்து..“ என்று புலம்பினாள் பழனியோட மனைவி.

அதற்கு பதில் பேசாமல் பீடியை எடுத்து பற்ற வைத்தான் பழனி.

  “நடந்தது.. நடந்திருச்சு.. இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம். நாளைக்கு வெள்ளைனையா அருப்புக்கோட்டைக்குப்போயி தக்காளியை போட்டுவாங்க”என்றாள்.

“ஆமா கிலோ ரெண்டு ரூபா புளுத்திக்கு அத பஸ்ஸில ஏத்தி அதுக்கு லக்கேஜ் எடுத்து நொட்டுறாங்கே..”

 “ச்சீ அப்படி பேசாதிங்க.. ரொம்ப நாளைக்குப்பிறகு நாம வெவசாயம் பார்த்து மொதமொத வெளஞ்சத.. அதப்போயி இப்படி எகத்தாளமா பேசணும்னா.. சாமி நமமளப் பார்த்து சிரிச்சடப்போகுது”

“அதேன் சாமி ஏற்கனவே நம்ம பொழப்ப பார்த்து சிரிச்சிருச்சே.. இனி புதுசா சிரிக்கணுமாக்கும்”

“மொத மொத வெளஞ்சது.. அதுக்காகனாச்சும்.. போயி சந்தையில போட்டுட்டு வாங்க.. இல்லேனா நான் போயி போட்டுட்டு வாறேன்” என்றாள் வேகமாக பழனியோட மனைவி.

அவள் அப்படிச்சொன்னதுமோ அரைகுறைமனதோட “செரி நானே போயிட்டு வாரேன்” என்றான் மனது நொந்து பழனி.

மறுநாள் காலை அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தில் தக்காளியை கொண்டு செல்வதற்கு  ஊரின் பேருந்து நிறுத்தத்தில் ஆயுத்தமாக நின்றான் பழனி. அவனருகே இரண்டு பெட்டிகளிலிருந்த தக்காளிகள் புரட்சிக்கு பேர்போன செங்கொடி நிறத்தில் இருந்தன.

அந்தப்பேருந்து சாத்தூர், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்,கோட்டூர் குருசாமி கோவில் வழியே கடந்து வருவதால் ஏற்கனவே கூட்டமாக வந்தது. பஸ் வந்து நின்றதுமே கூட்டத்தைப் பார்த்து மலைத்துப்போனான் பழனி.

பஸ்ஸின் சைடு டிக்கிகளில் ஏற்கனவே பூக்கள் மூடை காய்கறி மூடைகள் அடைத்துக்கிடந்தன. அதனால் அதுக்குள்ளே ஏற்றி அடைக்க முடியாது. ஏற்கனவே பஸ்ஸுக்குள் கூட்டமாக இருப்பதால் உள்ளேயும் ஏற்ற முடியாது. இந்த பஸ்ஸை விட்டால் இன்னும் ஒரு மணிநேரம் காத்துக்கிடக்கணும் என்று நினைக்கும்போது எரிச்சலாக வந்தது.அதனால் என்னவோ பழனி தக்கிமுக்கி தக்காளிப்பெட்டியை படியில் இருப்பவர்களை விலகச்சொல்லி உள்ளே ஏற்ற பார்த்தான்.

அதுக்குள்ள பஸ்ஸுன் நடத்துனர் எரிச்சல்பட்டு “ஏய் தக்காளிப்பெட்டியை உள்ள ஏத்தி எடஞ்சல் பண்ணாத..” என்றார்.

தக்காளிப்பெட்டியை சுமந்துகொண்டு வியர்த்து விறுவிறுக்க“பெறகு எங்க ஏத்த, ஒசக்கவா” என்றான் பதட்டத்தில்.

“ஆமய்யா..வேமா டாப்ல ஏத்துய்யா..” என்று எரிச்சல்பட்டு பேசினார் பஸ் நடத்துனர்.

பதினாலு கிலோ தக்காளிப்பெட்டியை தலையில் சுமந்து கொண்டே வேகமாக அரக்கப்பரக்க பஸ்ஸின் பின்புறமுள்ள ஏணிப்படிக்கட்டுகளில் ஏறி பஸ் மேற்கூரையில் போயி இறக்கி வைக்கும்போது கால் சுள்ளுனு வலித்தது பழனிக்கு. இந்த வலியில் இன்னொரு தக்காளிப்பெட்டியையும் பஸ்ஸின் உயரே ஏற்றினான்.

பஸ்ஸுக்குள் உள்ளவர்களுக்கு டிக்கெட் போட்டுவிட்டு மெட்டுக்குண்டு ஊர் வந்ததும் உள்ளிருந்து இறங்கி பஸ்ஸுன் மேற்கூரையில் உள்ளவர்களுக்கு டிக்கெட் போட ஏறினான் பஸ் நடத்துனர்.

  பழனி முப்பது ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட்கள் எடுத்தான். ஒன்று அவனுக்கு -மற்ற இரண்டு டிக்கெட் ,தக்காளிப்பெட்டி லக்கேஜ்களுக்கு.

எடுத்த டிக்கெட்டை சட்டையின் மேல்பையில் வைத்துவிட்டு, மனதுக்குள்ளே கணக்குப்போட ஆரம்பித்தான்

கொண்டுபோறது இருபத்தெட்டு கிலோ தக்காளி. ஒரு கிலோ ரெண்டு ரூபாய்க்குத்தன் போகுது.மொத்தமா போட்டாக்கூட அறுபது ரூபாய்கூட வராது.. இதுக்கு லக்கேஜ் டிக்கெட், எனக்கு டிக்கெட்டு, டீ செலவு …ச்சீ நெனச்சாலே எரிச்சலாத்தான் வருது என்று நினைத்துக்கொண்டே பீடியை பற்ற வைத்து ஊத ஆரம்பித்தான் பழனி.

பஸ் ஒவ்வொரு ஸ்டாப்பாக கடந்து பாலவநத்தம் ஸ்டாப் வந்து நின்றதும் திடீரென்று பஸ்ஸில் டிக்கெட் செக்கர் (பரிசோதகர்) ஏறினார்.

கொஞ்ச நேரத்தில் பஸ்ஸூக்குள் டிக்கெட் பரிசோதித்துவிட்டு, பஸ்ஸின் மேற்கூரையில் பரிசோதனை பண்ண ஏறினார் பரிசோதகர். ஒவ்வொரு ஆளாய் பரிசோதித்து வந்தவர், பழனியிடம் வந்ததும்,தக்காளிப்பெட்டி லக்கேஜ் எல்லாம் கணக்குப்பண்ணி மூன்று டிக்கெட்டை எடுத்து காண்பிக்கச் சொன்னார்.

    டிக்கெட் எடுத்தாச்சே என்ற மிதப்பில் மேல்சட்டைப்பையிலிருந்து  டிக்கெட்டை எடுத்தான்.ஒரு டிக்கெட் குறைந்தது. அப்போது திறுதிறுனு முழித்தான். பீடி எடுக்கேல டிக்கெட் விழுந்திருச்சுபோல என்ற யோசனை ஓடியது பழனிக்கு.

“என்னய்யா.. ஒரு டிக்கெட் குறையுது. இப்படி ஏச்சுதான் இந்த தக்காளிப்பெட்டியை ஏத்திட்டு வாரயா.. லக்கேஜ் எடுக்காம ஒன்னும் எடுக்காம வர- இதுன்ன ஒங்கொப்பன் வீட்டு பஸ்ஸா.. ஒன்னமாதிர நாலுபேரு இப்படி பண்ணுனா புளுபுளுப்புனு இருக்கும்…ஒனக்கெல்லாம் அறிவில்ல…கட்டுய்யா  பைன்ன (அபராதம்)என்றார் டிக்கெட் பரிசோதகர்.

“சார் லக்கேஜ் டிக்கெட்டெல்லாம் எடுத்துட்டேன் சார்.. எப்படியோ டிக்கெட் கீழே விழுந்திருச்சு.. வேணும்னா கண்டெக்டர கூப்பிட்டு கேளுங்க ” என்றான் அத்தனேபேர் முன்னிலையில் பதட்டப்பட்டுக்கொண்டே பழனி.

பரிசோதகர் விசில் அடித்தார். பஸ் நின்றது. சில அழைப்புகளுக்கு பிறகே பஸ் நடத்துனர் பஸ்ஸின் மேற்கூரைக்கு வந்தார்.

பஸ் நடத்துனரைப் பார்த்து பரிசோதகர் “இந்தாளு தக்காளிக்கு லக்கேஷ் டிக்கெட் எடுத்தானா..? ”என்றார்.

அத்தனை கூட்டத்திற்கு டிக்கெட் கொடுத்திட்டு வந்ததால் நடத்துனருக்கு சரியாக ஞாபகமில்லை -அதனால் பழனி டிக்கெட் எடுத்தானா என்ற சந்தேகத்தில் பதில் சொல்லமுடியாமல் திறுதிறுனு முழித்தார் நடத்துனர்.

“என்னய்யா இப்படி முழிக்கிற.. நீயெல்லாம் என்னத்ததேன் இத்தன வருஷம் கண்டெக்டரா இருந்தயோ..”, என்றார் பரிசோதகர்.

பிறகு பழனியைப்பார்த்து “நீ டிக்கெட்டா எடுத்தயோ.. இல்லையோ எனக்குத்தெரியாது- ஆனா இப்ப ஓங்கிட்ட லக்கேஜ் டிக்கெட் இல்லை.. அதனால இப்ப நீ பைன் கட்டித்தான் ஆகணும்”என்றார் பரிசோதகர்.

“நான் டிக்கெட் எடுத்தேன் சார்” என்றான் பழனி கெஞ்சிய குரலில்.அப்போது எல்லோரும் அவனை அனுதாபமாக பார்த்தனர்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது  அபராதத்தைக்கட்டு”என்றார் பரிசோதகர் மண்டக்கணமாக.

கெஞ்சிப்பார்த்தான் பழனி. பரிசோதகர் விடுவதுமாதிரி தெரியவில்லை.

அப்போது கோபத்தில் தக்காளிப்பெட்டியை ஒரு பார்வை,பரிசோதகரை ஒரு பார்வை பார்த்த பழனி.

இந்த தக்காளிப்பெட்டிக்குத்தான லக்கேஜ் எடுக்குல.. இது இருந்தாதான பிரச்சனை என்று சொல்லிக்கொண்டே  தக்காளிப்பெட்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வலிகடுக்கும் கால்களால் எத்தி பஸ்ஸின் மேற்கூரையிலிருந்து சரித்துவிட்டான் பழனி. அப்போது பதட்டத்தில் “ஏய் ஏய்”என்று கத்தம்போட்டார் பரிசோதகர்.

பஸ்ஸின் மேற்கூரையிலிருந்து சிவப்பு அருவிபோல கீழே கொட்டிய தக்காளிகள் சாலையெங்கும் உருண்டு பரவி திசைதிசைக்கு சிதறின. பரிசோதகர், கண்டெக்டர், பஸ்ஸில் இருந்தவர்கள் சாலையில் போவோர்  வருவோர் எல்லோருக்கும் அப்போது எப்படியோப்போனது.

சாலையில் சிதறிய தக்காளிகளைப் பார்த்ததும் ஆங்காங்கேயிருந்த பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன.

 கண்கலங்கிக்கொண்டே பஸ்ஸிலிருந்து படபடவெனு இறங்கி குதித்து  வெக்குவெக்குனு பஸ் போகிற எதிர்திசையில் நடையைக் கட்டினான் பழனி. அப்போது ரொம்பப்பேர் ஓடிப்போய் பழனி கையைப்பிடித்து இழுத்து தாஜா பண்ணினர். அவன் எல்லோர் கைகளையும் உதறிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

பழனி போவதையே  பார்த்துக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ‘ச்சே எல்லாம் என்னாலதான். ஒரு லக்கேஷ் எடுக்காததிற்குப்போயி இப்படி அவன பாடாய்படுத்திட்டமே..கொஞ்சம் பொறுத்துப்போயிருக்கலாமோ.. “ என்று தன்னையறியாமலே கண்கலங்கினார்.சிலநொடியில் விசில் சத்தம் கேடடதும் பஸ் நகர ஆரம்பித்தது. அப்போது டயர்களுக்கு அடியில் கிடந்த   தக்காளிகள் நசுங்கி தெரித்தன.

   வெறுப்பில் நடக்கநடக்க வியர்வை அதிகரித்தது பழனிக்கு. பீடியை எடுத்து பற்றவைத்தான். எப்போதாவது சரக்கு அடிக்கும் பழக்கம் கொண்டவன்- இன்று சாலையில் இடதுபுறம் ஒரு ஒயின்ஷாப் தட்டுப்பட்டதுமே ஒரு குவாட்டர் வாங்கப்போனான்.

   குவாட்டர் பாட்டிலில் போட்டிருந்த விலையைவிட, கமிஷனாக கூடுதலாக ஐந்து ரூபாய் கேட்டான் ஒயின்ஷாப்பின் சேல்ஸ்மேன்.

தன் சட்டைப்பையிலிருந்து ஜந்து ரூபா எடுத்து சேல்ஸ்மேனுக்கு கமிஷனாக கொடுத்தபோது, திடீரென்று பழையது ஒன்று ஞாபகம் வந்தது பழனிக்கு.

 அப்போது பழனி பன்னிரென்டு படித்துட்டு ஆறேழு வருஷம் நிலையான வேலையில்லாமல் அழைந்தபோது, தமிழக அரசு ஒயின்ஷாப்பு வேலைக்கு சேல்ஸ்மேன், சூப்பர்வைசர் பிரிவுகளில் ஆள் எடுத்தது.

    இந்த விஷயத்தை தெரிந்த பழனியுடைய பெரியப்பா மகன்

சேல்ஸ்மேன் வேலைக்கு பழனிக்கும், தனக்கும் சேர்த்து விண்ணப்பம் வாங்கி வந்தான்.

விண்ணப்பத்தை நிரப்பிய பழனி- அப்பாகிட்ட போயி “ஒயின்ஷாப்பு வேலைக்கு ஆள் எடுக்குறாங்க கவர்மென்ட். அதுக்குதான் இந்த விண்ணப்பம்.வேலைக்கு சேரணும்னா முன்கூட்டியே ஐம்பாதயிரம் ரூபா கவர்மெண்டுக்கு கட்டணுமாம்” என்றான்.

    விஷயத்தை புரிந்துகொண்ட அவர் “ஏன்டா.. சம்சாரி வீட்ல பொறந்திட்டு போயும் போயும் சாராயக்கடையில வேலை பார்க்கப்போறிங்கிற..“ என்று சொல்லிக்கொண்டே கோபத்தில் விண்ணப்பத்தை சரட்டுசரட்டென்று கிழித்தெறிந்துவிட்டார்.

இதை இப்போது நினைக்கும்போது அப்பாமேல் அவ்வளவு கோபம் வந்தது பழனிக்கு.

இப்போது ஒயின்ஷாப்பில் வேலை பார்ப்பது எவ்வளவு பெரிய கௌரவம். ஒயின்ஷாப்பில மட்டும் இன்னியாரம் வேலைக்கு சேர்ந்திருந்தா சம்பளத்துக்கு சம்பளம்.. குவாட்டருக்கு அஞ்சு ரூபாய் கமிஷன்னு.. நல்லா வாழ்ந்திருக்கலாம்.

தேவையில்லாம அப்பா செஞ்ச வேலையால, இப்ப இரண்டு ரூபாய்க்கு விக்கிற தக்காளியை தூக்கிட்டு ஊரெல்லாம் அசிங்கப்பட்டு தெரிய வேண்டியாதிருக்கு.. எல்லாம் என் தலையெழுத்து என்று எண்ணிக்கொண்டே விரக்தியில் குவாட்டர் பாட்டிலை திறந்து அப்படியே ராவாக வாயில ஊத்தினான்.

தக்காளி விலை சரிவு, பஸ்ஸில் பரிசோதகர் நடத்திய விதம் ஆகியவற்றால் நெஞ்சு வயிறெல்லாம் பழனிக்கு ஏற்கனவே எரிந்துபோனதால் -இந்த ராவான குவாட்டரின் எரிச்சல் அவ்வளவாக தெரியவில்லை. போதை  ஏறியதும் எல்லாம் அந்த முண்டையால வந்தது என்று மனதுக்குள்ளே தன் மனைவியை வைதான் பழனி.

சிலநொடியில் தோட்டத்தில் காய்த்து நிற்கிற தக்காளிதான் கண்முன்னே வந்து வந்து எரிச்சலைத் தந்தது.

   கொஞ்ச நேரத்தில் தோட்டத்திற்கு வெக்வெக்னு வந்த பழனி கையில் ஒரு மூங்கில் கம்பை எடுத்துக்கொண்டு சிவிரென்று காய்த்து தொங்குகிற தக்காளியையெல்லாம் அடித்து சாய்க்க நெருங்கினான்.

இவனுக்கு முன்னாடியே நாலைந்து ஆடுகள் தக்காளிகளை கடித்து மேய்ந்து நாசம் பண்ணிக்கொண்டிருந்தன.

நாம பண்ண நினைத்ததை இந்த ஆடுகள் பண்ணிக்கொண்டிருக்கே என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டே, -அதற்கு உறுதுணையாக பழனியும் கையில் வைத்திருந்த மூங்கில் குச்சியால் விளைந்து கொழுத்திருந்த தக்காளிகளை சராமாரியாக அடிக்க ஆரம்பித்தான். அவன் வெறுப்பில் அடிபட்டு விழுந்த தக்காளியிலிருந்து சாறுகள் வெதுவெதுப்பாக வடிந்தன-அவனின் கண்ணீரைப்போல..!

அப்பொழுது பக்கத்து காட்டிலிருந்த சுப்புச்சாமி கட்டிப்போட்டிருந்த தன்னுடைய ஆடுகளை காணோமே என்ற பதட்டத்தில் பழனி சாவியம் பார்க்கிற தோட்டத்தை  நோக்கி  ஓடி வந்துகொண்டிருந்தான். அப்போது பழனி பக்கத்தில் சுப்புச்சாமியுடைய ஆடுகள் தக்காளிகளை மேய்ந்துகொண்டிருந்தன.

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

The post செங்கொடி நிறத்தையொத்தது தக்காளியின் வண்ணம் first appeared on Nadukal.

  •  

காது குத்து

               மெத்தைக் கட்டிலின் ஓரத்தில் படுத்திருந்த மேனகாவை எழுப்ப அவனுக்கு பயமாக இருந்தது. ஆனால் எழுப்பியே தீர வேண்டும். சின்னவன் சுகனை அவளுக்கு அண்டையில் படுக்க வைத்து அவள் தட்டிக் கொண்டிருக்கிறாள். அவன் தூங்கினாலும் கலைந்து நெளிந்தாலும் விளிம்பில் தவறிக் கீழே விழும் அபாயம் அதிகம். எழுப்பினால் இந்த இராத்திரியில் ஒரு போர்க்களம் நிச்சயம் என்பதால் என்ன செய்வதெனத் தெரியாமல் குட்டி போட்டப் பூனையாக கட்டிலையே சுற்றி சுற்றி வந்தான்.

கால்மாட்டில் போய் கொஞ்ச நேரம் நின்று அவளையே பார்த்தான். சற்று தள்ளி நடுக்கட்டிலில் தாராளமாய் படுத்துறங்கும் பெரியவள் ஷாலினியைப் பார்த்தான். மேனகா மீது ஆத்திரமாக வந்தது. அவன் மீதான கோபத்தில் வேண்டுமென்றே செய்கிற இந்த வினையை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் முழித்தான். மெல்ல கொலுசின் மீது கை வைத்து காலை உலுக்கினான். கண்களைத் திறக்காமலேயே கணநேரத்தில் உதைப்பது போலத் தூக்கிச் சொண்டிய கால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.

‘அட சனியனே முழிச்சிட்டுதான் படுத்துருக்கியா?’

வெளியறைக்குச் செல்வது போல பாசாங்கு காட்டி

“இந்த வெளையாட்டுலாம் காலையில வச்சிக்க.. புள்ளைய தூக்கி நடுவாக்குல போட்டுப் படு” என்றான் சத்தமாக.

“எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. நீ போய் தூங்குற வேலையப் பாரு” என அவளிடமிருந்து சன்னமாக பதில் வந்தது. அதன் பொருள் ‘தூங்கித்தான் பாரேன்’ என்பதென அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இயலாமையில் காலை தரையில் உதைத்துக் கொண்டான்.

“இப்ப என்ன? உன் குடும்பத்தையே கூப்பிடணும். அவ்வளவு தானே? சரி காலைல போய் நேர்லயே சொல்லிட்டு வர்றேன் போதுமா?”

“ஒண்ணும் தேவையில்ல.. உனக்குத் தேவை மடியில உக்கார வைக்க ஒரு மாமன் தான? என் தம்பிய கூட வர வேணாம்னு சொல்லிடுறேன். உன் சொந்தத்துல ஒரு மாமன ரெடி பண்ணு” அவளிடமிருந்து அலட்சியமாக பதில் வந்தது.

மனதுக்குள் நினைத்துக் கொண்டான். தனது சொந்தத்தை இழுக்கத் தொடங்கி விட்டாள்.

‘ரைட்.. சாமி இப்போதைக்கு மலை ஏறாது’

எதுவும் பேசாமல் மீண்டும் வாசலில் நின்று எட்டிப் பார்த்தான். சுகனது வலது கால் கட்டிலை விட்டு வெளியே நீண்டிருந்தது. இந்தக் கிறுக்கியை நம்பவும் முடியாது. அப்படியே தூங்கிப்போய் விடுவாள்.

தலைமாட்டிலிருந்த இரண்டுத் தலையணைகளை எடுத்து சத்தம் காட்டாமல் குனிந்து சுகனுக்கு நேராக தரையில் வைத்தான். பிள்ளை தவறினால் கீழே விழும் கோணத்தை ஆராய்ந்து தலையணையை நகர்த்தி நகர்த்தி அவன் வைத்துக் கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தாள். சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். இன்னொரு பக்கம் பாவமாகவும் இருந்தது.

ஷாலினிக்கு முடி இறக்கும்போது அவன் தாத்தா தவறிவிட்டதால் விமரிசையாக செய்ய முடியவில்லை. சுகனுக்காவது விலாவாரியாக செய்யலாமென நினைத்தால் துட்டு தேறாதென தட்டிக் கழிக்கிறானென்ற எரிச்சல் அவளுக்கு.

உள்விளக்கை அணைத்துவிட்டு வெளியே வாசலுக்கு வந்து காற்றோட்டமாக அமர்ந்தவனின் முகத்துக்கு நேராக விட்டில்கள் பறந்தன. ச்சூ போ! எனத் தட்டிவிட்டான். ஒரு சுற்று அலைந்து வந்து மீண்டும் முகத்தை மேலும் கீழுமாய் அளவெடுத்துக் கொண்டிருந்தவற்றை விரட்டத் தோன்றாமல் விளக்கொளியிலிருந்து விலகிப்போய் அமர்ந்து மாமனார் வீட்டுக்கு செல்வது பற்றி யோசிக்கத்தொடங்கினான். பதினான்காம் நெம்பர் பஸ் தூரத்தில் செல்வது வெளிச்சப்புள்ளியாகத் தெரிந்தது.

அடுத்தநாள் மாமனார் வீட்டில் அவரது இரண்டு அண்ணன்களுக்கும் சொல்லியே ஆகவேண்டுமென கறாராக சொல்லிவிட்டார்கள். இவன் பாத்ரூம் போவது போல வெளியே வந்து மேனகாவை அழைத்தான்.

‘என்னடி இது? உங்க பெரியப்பாக்களுக்கும் சொல்ல சொல்றாங்க? இதுக்குத் தான் உன் தம்பி மட்டும் போதும்னு சொன்னேன். கேட்டியா நீ?’

மறுமுனையில் அவள் குரல் அலட்சியமாக ஒலித்தது.

‘நீதான் வெறும் சக்கரைப்பொங்கல்னு சொல்லிட்டியே? அப்புறம் என்ன வலிக்குது? நான் அரைப்படி சேத்துப்போட்டு பொங்க மாட்டனா?’

அவன் ஆபத்தான காலங்களில் பயன்படுத்தும் அஸ்திரத்தை எடுத்தான்.

‘பாப்பா… அங்கலாம் சொன்னா அப்புறம் எங்க சித்தப்பா வீட்டுக்கும் சொல்லணும். இல்லனா பாரு பொண்டாட்டி வூட்டு ஆளுங்கள மட்டும் கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டான்னு பேர் வச்சிடுவாங்க.. ப்ளீஸ் பாப்பா’

அவள் அதற்கும் அசரவில்லை. ‘பரவால்ல சொல்லு. நான்தான பொங்கப் போறேன்? நீயா செய்யப்போற? கூட மாட எங்க அம்மா இருக்குல்ல.. வெறும் சக்கர பொங்கலுக்கு எதுக்குடா இவ்வளவு பொலம்பல்?’

கிடா வெட்டாததை தெளிவாக குத்திக் காட்டுகிறாள். தாளமுடியாத எரிச்சலை அடக்கியபடிப் பேசினான்.

‘இப்ப என்ன சொல்ல வர்ற? நீ சொல்ற ஆளுங்கள எல்லாரையும் அழைச்சிடுறேன். ஆனா நானு எக்கேடு கெட்டா உனக்கு என்ன வலிக்குது? கடன் நான் தான கட்டணும்?’

‘என்ன கடன் பண்றாங்க உனக்கு? இதுக்கே இப்படி.. இன்னும் கெடா வெட்டி விருந்து வச்சா வயிறு பொங்கிடும் போல..’

மீண்டும் அதையே… எதுவும் பேசாமல் போனை அணைத்தான்.

மனதுக்குள் எதையோ முணுமுணுத்துக் கூட்டினான்.

‘ரெண்டு ,மூணு ஒரு ஏழு மொத்தமா இருவது டிக்கெட் வரும். அதுக்கு தனியா ஒரு டிராவல்ஸ் பேசணும். சாமி சோறுன்னாலும் அதுக்குன்னு வெறும் சக்கர பொங்கலையேவா போட்டு கூட்டி வர்றது? முடியெறக்க ஆளு வர்றதுக்குள்ள பசிக்கிதுனு கதறுங்க.. ஒரு நாலு கிலோ ரவையாச்சும் கிண்டிப் போடணும். அதுக்கூட பெரிய செலவு இல்ல. ரிட்டர்ன் வர்றப்ப கண்டிப்பா ஒரு ஓட்டல்ல இறக்கித்தான் ஆவணும். சைவம்னு வச்சாக்கூட எம்பது ஒரு இருவது எட்டு ரெண்டு பதினாறு.. அங்க ஒரு ஆயிரத்தி அறுனூறு. வண்டிக்காசு ஒரு எட்டு பூஜ சாமான் ரெண்டாயிரம் எப்படிப் பார்த்தாலும் பன்னெண்டு பதிமூணு ஆயிடும் போலருக்கே’

சேகர் போன வாரமே வந்து சலித்துக்கொண்டது ஞாபகம் வந்தது. போர் போட்டபோது வாங்கிய தொகையில் இன்னும் இருபதாயிரம் பாக்கி நிற்கிறது. வடுகத்தம்பட்டி கனகு மாமாவுக்கு வேறு மாடு பிடித்தக் காசு இன்னும் தராமல் இருக்கிறான். எதையும் புரிந்து கொள்ளாமல் மேனகா செலவு இழுத்து விடுவதாகத் தோன்றியது.

தட்டைக் கழுவி ஊற்ற வெளியே வந்த அத்தையிடம் மற்ற வீடுகளில் சொல்லிவிட்டு வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான்.

மறுநாள் காலை சித்தப்பா வீட்டுக்கு சொல்லப் போனபோது சித்தப்பா அவருடைய பங்கு நியாயத்தைச் சொன்னார்.

‘மொட்ட அடிக்கிற சரி.. உன் குடும்பத்தோட முடிஞ்சா பரவாயில்ல. பெரிய மாமனாருங்க வராங்க.. நான் வரேன்.. உன் மாமன் வேற வரான்னு சொல்ற.. இத்தன குடும்பத்த கூட்டிட்டு போயி வெறும் சக்கரப் பொங்கல போட்டு அனுப்புறது என்னா கதை?’

இவன் திக்கென நிமிர்ந்தான்.

‘அதுக்கு?’

‘அதுக்கு என்னானா என்ன சொல்றது? மேனகாவ பொண்ணு கேட்டுப் போனப்பவே கஞ்சப்பயகுடும்பம்னு உன் பெரிய மாமனாரு கேவலமா பேசுனாப்ல.. பாப்பாவுக்கு மொட்ட அடிச்சப்பவும் ஒண்ணும் செய்யல’

‘அது தாத்தா செத்ததால ஒண்ணும் செய்யாம வுட்டாச்சு’ என்றான் அவசரமாக.

‘ஆமாமா.. அதனால தான் சொல்றேன். இப்பவும் செய்யாம வுட்டா நல்லாருக்காதுல்ல. கோழியாவது புடிச்சிக்கலாம். ஒரு ரெண்டரை கிலோவுல நாலு நாட்டுச் சேவல் புடிச்சா போதும். நெறமா செஞ்சிப் போட்டுடலாம்’

‘அடச்சை..’ மனதுக்குள் சிரித்துக் கொண்டான். எருக்குழியை கிளறி நாசம் செய்கிறதென பக்கத்து காட்டுக்காரன் போட்ட சண்டையில் புரட்டாசி முடிந்த மறுநாளே இருபது உருப்படிகளை குஞ்சும் கோழியும் சேவல்களுமாக கொண்டு போய் டவுன் கடையில் விற்றுவிட்டு வந்திருந்தான்.

சித்தப்பா தன்மானத்தை வேறு தொட்டுக் காட்டிவிட்டார். இதற்கு மேல் மறுப்பு சொல்ல முடியாது. அவன் கடைக்குச் சென்றபோது மாலைக் கருக்கல் ஏறியிருந்தது. உள் நுழையும் முன்பே நிதானமாக கூண்டில் பார்வையை ஓட்டினான். பதினைந்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் கீழடுக்கிலும் ஐந்தாறு சேவல்கள் மேலடுக்கிலும் நின்றிருந்தன. அவற்றில் மூன்று சேவல்கள் தன்னுடையதைப் போலத் தோன்றியது. அவற்றையே பிடித்துக் கொள்ளலாமென விலை கேட்டான்.

‘உயிர் எடை கிலோ நானூறு வரும்ண்ணா..’

‘என்ன லோகு.. முந்நூத்தம்பதுக்கு தானே என்கிட்ட வாங்குன? அதுக்குள்ள விலை ஏறிடுச்சா? குறைச்சு சொல்லு’

‘கட்டுப்படியாவாதுண்ணா.. நோம்பி நேரம்.. இந்த வெலைக்கே கிடைக்கலண்ணு ஆளா பறக்குறாங்க’

‘கொடுமையா இருக்குது லோகு..’ தன் சேவல்கள் தன்னிடமே விலையேறி வருவதை நினைத்து சிரிப்பதா அழுவதா என யோசித்தான். காதுகுத்து முடித்து மொத்தமாக பார்த்துக் கொள்ளலாமென முடிவெடுத்துக் கொண்டு கோழிகளை வண்டியில் கட்டினான். மொத்தம் ஐந்து சேவல்கள். குடல், முடி நீங்கலாக பதிமூன்று கிலோ தேறுமென கணக்கு போட்டான். இது ஒன்றும் பெரிய விஷயமாகப் படவில்லை. இவனுக்கே கொஞ்சம் பக்குவம் தெரியும். மேனகாவின் தாய்மாமா மனைவி நன்றாக சமைப்பாள். வேறு வழியில்லை. அவர்களிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட வேண்டியது. வண்டியை கிழக்காக தலைச்சங்காடு பக்கம் திருப்பினான்.

வண்டியை வாசலில் நிறுத்தியதும் மேனகாவின் தாய்மாமா ஓடிவந்து வரவேற்றார். களத்தில் கட்டிலைப் போட்டு அமர்ந்தார்கள். உள்ளறையில் சின்னத்திரையில் மிளிர்ந்த இனிமே தான் ஆரம்பம் சீரியல் வெளியிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது.

‘அதெல்லாம்  பிரச்சினையில்ல. ஒரு இருவது இருவத்தஞ்சு டிக்கெட்டுனா நாமளே சமாளிச்சிடலாம். நான் வந்துடுறேன்..’ என டீயை ஆற்றியபடியே மேனகாவின் அத்தை சொன்னதும் இவனுக்கு நிம்மதியாக இருந்தது. டீயை ஊதிக் குடித்து எழும்பவும் மேனகாவின் சின்ன தாத்தா மகன் வண்டியை வந்து நிறுத்தவும் சரியாக இருந்தது. இவன் அந்த அந்தியிலும் வியர்த்துப்போய் நின்றான். அவர்கள் குடும்பத்தில் மூன்று பேர் அண்ணன்தம்பிகள்.

‘யாரு மருமகப்பிள்ளையா? வாங்க வாங்க.. காதுகுத்தாமே.. கேள்விப்பட்டேன். என்னைக்கு?’

‘நாளாறன்னிக்கு மாமா.. நாளைக்குத்தான் வந்து சொல்லலாம்னு இருந்தேன்’ என வழிந்தான்.

‘அதுக்கென்ன மாப்ள.. அதான் குத்துக்கல்லாட்டம் இங்கேயே நிக்கிறனே.. இங்க சொன்னா போதும்’ என அவர் மீசையை நீவியபடி சிரித்தார்.

‘இல்ல மாமா.. மத்த ரெண்டு மாமாவுக்கும் சொல்லணும்ல.. ‘ என இழுத்தான்.

‘அட.. என்கிட்ட சொன்னா என்ன? எந்தம்பிகளுக்கு சொன்னா என்ன? நீங்க தனியாளா சின்னப்படுறது தெரியாதா எங்களுக்கு? இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. நீங்க மத்த வேலைய பாருங்க.. நாங்க கண்டிப்பா வந்துடுவோம்.. எனக்கும் டீ போடு கண்ணு’ என்றபடியே சேரில் அமர்ந்து கால்களை நீட்டி முறுக்கி கொட்டாவி விட்டவரை வெறித்துப் பார்த்தான். வரும் வழியில் எத்தனை பேரென எண்ணிக் கொண்டே வந்தான். இப்போது எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியிருந்தது.

நல்ல இருளில் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வாசல் விளக்கு வெளிச்சத்தில் மாட்டுக் கொட்டகை பைப்பில் யாரோ கிடாவை கட்டியிருந்தார்கள். அது புது இடத்தில் நிற்காமல் கத்திக் கொண்டே வட்டமாக மண் பறித்துக் கொண்டிருந்தது.

வண்டிச் சத்தம் கேட்டு வெளியே வந்த மேனகா அவனைக் கூர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டு களத்திலேயே நின்றாள். அந்த சிரிப்பில் விஷமத்தனம் இருப்பதாகப்பட்டது. கோழிகளை கீழே இறக்கி வைத்தபடி ‘யாருது ஆடு? அவுந்துக்கிட்டு வந்துடுச்சா?’ எனக் கேட்டவனை சிரிப்பை நிறுத்திவிட்டு பரிதாபமாகப் பார்த்தாள் அல்லது பரிதாபமாக பார்ப்பது போல நடித்தாளென்றும் சொல்லலாம். முகத்தை இயல்பாக வைக்க முயற்சித்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பதை கவனிக்கையில் அவனுக்கு அப்படித்தான் தோன்றியது.

‘உன்னத்தான் கேட்குறேன்.. கெடா யாருது?’

‘நம்மளது தான்.. ‘ மீண்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டே.

‘மேனகா.. ஏற்கனவே செம்ம டென்ஷன்ல வந்துருக்கேன். வேணாம் ப்ளீஸ்’

‘தெரியும்.. இப்பதான் மாமா போன் பண்ணார். சின்ன தாத்தா வீட்ல வந்துருந்தாங்களாமே..’

அவள் சிரிப்புக்கான காரணம் புரிந்தது.

‘அத விடு. கெடா யாருது?’

‘நம்மளது தான்..’

அவன் நேராக தொட்டிக்குப் போய் வாளித் தண்ணீரை எடுத்து தலைக்கு ஊற்றிக்கொண்டான். சத்தம் கேட்டு அவன் அம்மாவும் வெளியே வந்தாள்.

‘இப்ப சொல்லப் போறியா இல்லையா?’

‘நான் என்னப்பா பண்ணேன். உங்க மாமா சொன்னாருனு வெடிமூக்கன் தான் வந்து கட்டிட்டுப் போனாரு’

அவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. ‘அவன் எதுக்கு இத வந்து கட்டிட்டுப் போனான்?’ அவளை வேகமாக நெருங்கியவனை குறுக்கே புகுந்து அம்மா தடுத்தாள்.

‘அவக்கிட்ட எதுக்குடா எகிறுற? உன் மாமனுக்கு போன் பண்ணிக் கேளு’

மாமா போனை எடுத்ததும் அடக்கிக் கொண்டு கேட்டான்.

‘மாமா.. அவன் கெடா எதுக்கு இங்க நிக்கிது?’

‘அட நீ சொன்னனு தானப்பா அவன் சொன்னான்..’

‘என்னனு?’

‘காதுகுத்துக்கு கெடா வேணும்னு தம்பி சொன்னாப்ல.. நம்மகிட்ட பதமா இருக்கு.. என்ன பண்றதுன்னு கேட்டான். சரி போய் வீட்ல கட்டிட்டு போன்னு சொன்னேன்’

‘நான் எங்க மாமா கெடா கேட்டேன்? கோழி மட்டுந்தான் சொல்லிட்டு இருக்கேன்..’

‘அப்படியா? ஊருல நீ கோழினு யாருகிட்டயாவது சொல்லியிருப்ப.. அவங்க கெடாவும்னு நினைச்சிருப்பாங்க. அதனால என்னடா இப்ப? செய்யறதே செய்யுற? கிடா வெட்டாம என்ன காதுகுத்து?’

‘காசு இருந்தா செய்ய மாட்டனா மாமா? ஏற்கனவே ரொம்ப டைட்ல போகுது? ஒண்ணுமே புரியல’

‘அடப்போடா.. எவன் இப்ப கடன் வாங்காம விசேசம் பண்றான்? அப்புறம் உன் மாமனார் வீட்ல வெறும் கோழிக்கறிய மட்டும் போட்டு வரும்படி வாங்கிக்கிட்டான்னு சொல்ல மாட்டாங்களா? அதெல்லாம் சீர் வரும்ல? அதுல சமாளிச்சிக்கலாம்’

‘என்னவோ போங்க.. என்னை கேட்காமலேயே எல்லாம் நடக்குது. இப்ப வெடிமூக்கனுக்கு எப்படி காசு தர்றது?’

‘அட அவன் ஒரு ஆளு.. அதெல்லாம் சொல்லியாச்சு. உடனேலாம் காசு தர வேண்டியது இல்லடா.. குவாட்டருக்கு மட்டும் கொஞ்சம் கவனிச்சு விட்டுடு.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குடுத்துக்கலாம்’

அவன் எதற்கும் சமாதானமடையாமல் முனகியபடியே போனை அணைத்தான். ஓடிப்போய் மீண்டும் தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொண்டவன் தொட்டியின் மீதே அமர்ந்து கொண்டான்.

வெடிமூக்கனைப் பற்றி ஊருக்கே நன்றாகத் தெரியும். தண்ணி போடும் வரை குழைந்துப் பேசுவான். போதையேறியதும் நடு இரவில் வந்து நின்று கொண்டு சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவான்.

‘ஒரு குவாட்டர வாங்கி ஊத்திவுட்டு என் கிடாய லவட்டிக்கிட்ட பாத்தியா?’  என வில்லத்தனமாகச் சிரித்து மானத்தை வாங்கி விடுவான். இது போன்ற காட்சிகள் ஏற்கனவே ஊரில் நடந்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் அண்டா, மானிய விலையில் வாங்கிய சொட்டு நீர் பைப்புகள், ஊன்றுவதற்காக வைத்திருந்த ஒட்டுரகத் தென்னங்கன்று என பொருட்கள் வேறு வேறாக இருந்தாலும் சத்தம் அதுவாகத் தான் இருக்கும்.

திரும்பி கிடாவைப் பார்த்தான். எப்படியும் பன்னிரண்டு கிலோ தேறும். பதமான இளங்குட்டி. அடுத்த ஒரு நாளுக்குள் தேடியலைய முடியாது. எதுவும் பேசாமல் எழுந்து வீட்டுக்குள் போனான். சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் மேனகா சமாதானம் செய்வதுபோல பக்கத்திலேயே நின்றிருந்தாள்.

‘ஒண்ணும் வேணாம். எல்லாம் சமாதானம் ஆகிட்டேன்..’ என நிமிர்ந்துப் பார்த்து சிரித்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

‘என்ன சங்கதி? நம்பவே முடியல..’

‘பின்ன? சாமி காரியம்ல.. சலிச்சிக்கிட்டா செய்ய முடியும்? ‘

என்றவனின் தலையை பரிவாகக் கோதிவிட்டவளை ஏக்கமாகப் பார்த்தான்.

‘ஆனா இதோட போதும்ப்பா.. இதுக்கு மேல பாடி தாங்காது’

மேனகா கலகலவென சிரித்தாள். இவன் அதை பயன்படுத்திக் கொண்டான்.

‘எப்படியும் கிடா விருந்துனு ஆகிடுச்சு. பங்காளிங்க ஊர்ல முக்கியமான ஆளுங்ககிட்ட போய் சொல்லிட்டு வந்துடுறேன்’

‘ஆமா.. நானே சொல்லணும்னு நினைச்சேன். காலைல மொத வேலையா அதப் பாருங்க.. ‘ என்றபடி சுகனிடம் நகர்ந்தவளை நிறுத்தினான்.

‘அப்படியே…’

அவள் என்னவென்பது போலப் பார்த்தாள்.

‘இல்ல.. எல்லாருக்கும் சொல்றதுனு முடிவாகிடுச்சு. அப்படியே மதிவதனிகிட்டயும் சொல்லட்டுமா?’

‘அதான பாத்தேன்..’ இதற்காகத் தானா உன் கோபம் காணாமல் போனதென்பது போலப் பார்த்தாள்.

மதிவதனியை அவன் ஒரு காலத்தில் காதலித்தான். தூரத்து உறவு முறை. மதிவதனியின் குடும்பம் வசதியாக இருந்ததில் இவனுக்கு பெண் தர மறுத்தது. இருவரும் ஊரை விட்டுப் போய் திருமணம் செய்து கொள்ளுமளவுக்குச் சென்று அடிதடியாகி கண்ணீரோடு பிரிந்ததெல்லாம் தனிக்கதை. அதன்பிறகு மதிவதனி ஓமலூருக்கு மேற்கே ஒரு வி.ஏ.ஓ.வை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டாள். திருமணமானப் புதிதில் அனைத்தையும் மேனகாவிடம் சொல்லி அழுதிருக்கிறான். அவன் நேர்மையை மேனகா நிரம்ப நேசித்தாள்.

இளையராஜாவின் ‘மாலை கருக்கலில் சோலைக் கருங்குயில்..’ பாடலை அவன் கேட்கும்போதெல்லாம் ‘ஓ… மதிவதனி ஞாபகமோ…’ என கூடவே கேலியாகப் பாடுவாள். மதிவதனியும் ஊருக்கு வரும்போதெல்லாம் அவன் வீட்டுக்கு வந்து பேசிவிட்டுப் போவாள். என்ன பேசினாலும் இனிமேல் ஒன்றும் நடக்காதென்ற ஏக்கப் பார்வைகள் இருவரிடமுமே எழுவதை அவள் சென்றபிறகு மேனகா கிண்டல் செய்வாள். அவனை ஒன்றும் தெரியாதது போல பம்மவிட்டு இரசிப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.

‘ப்ளீஸ்ப்பா.. கூப்பிடுறேனே..’

ஏற்கனவே நொந்திருப்பவனை கெஞ்சவைக்க வேண்டாமென முதலிலேயே சம்மதம் தெரிவித்ததில் அவன் வெட்கம் கொண்டான்.

‘ஐயே.. வலியுது பாரு..’ என சிரித்தபடியே சுகனிடம் சென்று படுத்தாள்.

அவர்கள் அதிகாலையிலேயே கோயிலை அடைந்திருந்தார்கள். அவனது குலதெய்வம் திட்டக்குடிக்கு கிழக்கே அமைந்திருந்தது. எப்படியும் போய் வருவதற்குள் பொழுதாகிவிடுமென்பதால் இந்த அதிகாலை புறப்பாடு. சமையலுக்கு ஐந்தாயிரம் ரூபாயில் ஆள் பேசியிருந்தான். மாமாவிடம் வண்டி வாடகை இதர செலவுகளுக்கென கையிருப்பு போக இருபதாயிரம் கடன் வாங்கியாயிற்று. ஒரு மினி ஆட்டோ தனியாக தயார் செய்து கிடாவோடு சமையல் பாத்திரங்களை அதில் இட்டு நிரப்பியிருந்தார்கள். ஒரு டிராவல்ஸ் வாகனம் இரண்டாகியிருந்தது. அது மட்டுமின்றி பெரிய மாமனார் வகையறாக்கள் தனி வண்டி ஏற்பாடு செய்து வருவதாகச் சொன்னார்கள். அதற்கு தன்னிடம் காசு கேட்க மாட்டார்கள் என மேனகா உறுதியளித்தது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனால் பிரச்சினை வேறு மாதிரியாக உருவெடுத்திருந்தது. பெரிய மாமனாரின் மகன்கள் வெடிமூக்கனோடு கூட்டு சேர்ந்திருந்தார்கள். ‘மாப்ள வீட்டு காதுகுத்துல கச்சேரி இல்லனா எப்படி? அதான் மாப்ளைக்கு சிரமம் வேணாம்னு நாங்களே செலவு பாத்துக்கிட்டோம். கடைசில கணக்கு சொல்றோம்’ என்பதை அவர்கள் ரொம்பவும் சீரியசான தொனியில் சொன்னார்கள்.  குவாட்டர் பாட்டில்கள் நிரம்பிய இரண்டு அட்டைப் பெட்டிகள் இறக்கப்பட்டு அருகிலிருந்த முள்காட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்ததிலிருந்து அவனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. அடிக்கடி கருப்பனாரை திரும்பிப் பார்த்து ‘அமைதி அமைதி’ என சொல்லிக் கொண்டான்.

பொங்கலிட்டு முடித்து கிடாய்க்கு மாலையிட்டு சாமி முன் நிறுத்தினார்கள். தீர்த்தம் விழுந்ததுமே துளிர்த்தல் நலம். ஆனால் உடனடியாக வாக்கு கிடைக்காதது கண்டு அனைவரும் பதட்டமடைந்தனர். மேனகா கீழே விழுந்து உருண்டு வேண்டினாள்.

‘சோதிக்காத சாமி.. எப்படியாவது என்னை காப்பாத்தி விடுப்பா..’ கொஞ்சம் விட்டால் அழுது விடுபவன் போல இவனும் மனமுறுகினான்.

கைமாற்றி தீர்த்தம் தெளித்தார்கள். மூன்றாவது முறையாக தெளிக்கச் சொன்னபோது பூசாரி மறுத்தார். ‘என்னமோ குறையிருக்கு.. பாத்து சரி பண்ணுங்க’ என்றார். அதற்குள் தகவல் பரவி கச்சேரியில் மையமிட்டிருந்தவர்கள் உட்பட கூட்டம் கூடிவிட்டது. ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். அவனது அம்மாவை வந்து வேண்டச் சொன்னார்கள். அவள் தெற்கு பார்த்து தூணில் பிடிவாதமாக அமர்ந்திருப்பதைக் கண்டு மாமா ஓடிப்போய் அழைத்தார்.

அவள் ஒரே திசையைப் பார்த்தபடி ‘அது எப்படிடா துளுக்கும்? நான் தான் ரெட்டக் கிடா வெட்டுறதா வேண்டியிருந்தேனே..’ என்றதும் கூட்டத்தில் சலசலப்பு பரவியது.

‘அடக் கொடுமையே.. இதென்னடா கூத்து?’ என்று யாரோ கூவினார்கள்.

இவன் முறைப்பதைப் பார்த்ததும் எழுந்து நின்று ‘இவன் தான் சக்கர பொங்கலோட போகட்டும் னு முனகிகிட்டே இருந்தான். அப்புறம் பொங்கல் கோழியாச்சு கோழி கிடாயாச்சு.. ரெட்டக் கிடானு சொல்லியிருந்தேன்னா என்னை ஒரு வழி பண்ணியிருக்க மாட்டான்? எப்படி முறைக்கிறான் பாரு..’ என கொண்டையை அவிழ்த்து முடிந்தாள்.

பூசாரி ஓடிவந்து ‘ஒண்ணும் தப்பில்ல.. நமக்கு தெரிஞ்ச இடத்துல பேசிட்டேன்.. இப்பவே போனீங்கன்னா இன்னொரு கிடா புடிச்சிட்டு வந்துடலாம்’ என்றார்.

அவன் கிடாவைத் திரும்பி பரிதாபமாகப் பார்த்தான். அது ஈரம் பரவிய சுகத்தில் நின்றபடியே கண்களை சொக்கியிருந்தது.

வெடிமூக்கனை அழைத்து தான் விசேஷங்களுக்கு மட்டும் அரிதாகப் போட்டுக்கொள்ளும் அரை பவுன் மோதிரத்தை கழட்டிக் கொடுத்தான். 

‘வடக்க போய் பாலம் ஏறி இறங்குனா டவுனு.. ஏதாவது ஒரு அடகுக்கடைய புடி. அப்புறம் வெரசா பூசாரி சொன்ன எடத்துக்கு போய்ட்டு வந்துடு’  எனக் கூறி உடன் ஒரு பங்காளியை வண்டியில் ஏற்றி அனுப்பினான். திரும்பி வந்து பெண்களோடு உற்சாகமாக நியாயம் பேசிக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தான்.

‘ரெண்டு கெடாவையும் ஜோடியா நிறுத்தி தீர்த்தம் போட்டும் துளுக்காம இருக்கட்டும்… அப்புறம் இருக்கு உனக்கு..’ என மனதுக்குள் பொருமிக் கொண்டான்.

சரியாக ஒரு மணிநேரம் கழித்து வெடி மூக்கனும் பங்காளியும் கிடாயோடு வந்து சேர்ந்தார்கள். அதற்கும் குளிப்பாட்டி திருநீறு வைத்து இரண்டையும் ஜோடியாக நிறுத்தினார்கள். பூசாரி ஆகாயத்தை நோக்கி நெடுநேரம் வேண்டிவிட்டு,

‘சோதிக்காம வாக்கு குடுடா கருப்பா..’ என்றபடி தீர்த்தம் தெளித்த மறுநொடியில் இரண்டும் சொல்லி வைத்தாற்போல் தலையாட்டின.

பூசாரி வீச்சரிவாளை ஓங்கியிறக்க அவன் அம்மா அருள் வந்து ஆடத் தொடங்கியிருந்தாள். இவன் மேனகாவைத் தேடினான். அவள் உதடுகளை மடக்கி மீண்டும் சிரிப்பை அடக்கியவாறு தூணோரம் ஒளிந்தபடி நின்றிருந்தாள். இவன் கவனத்தை சாமி பக்கம் திருப்பி மீண்டும் அமைதி அமைதியென சொல்லிக் கொண்டான். மீண்டும் மேனகாவை பார்க்கையில் அவள் மதிவதனியை வரவேற்றுக் கொண்டிருந்தாள். இவன் தலையை சரிசெய்தபடியே அனைத்தையும் மறந்து அவளருகில் ஓடினான்.

காதுகுத்து முடிந்து சீர் நடக்கையில் மாமனார் போட்ட ஒன்றரை பவுன் சங்கிலியை கவனித்தான். தோடு ஒரு இரண்டு கிராம். அடகுக்கு வைத்தால் இந்தக் கடனை அடைத்துவிடலாம். மொய்ப்பணமாக எப்படியும் பத்தாயிரம் தேறுமென்ற நம்பிக்கையோடு சபையில் அமர்ந்திருந்தவனை மாமா வலுக்கட்டாயமாக எழுப்பி தனியாக அழைத்துப் போனார்.

‘என்ன மாமா?’

‘கூட்டத்த பாத்தியா? ‘

அவன் அப்போது தான் கவனித்தான். நினைத்ததை விட கூட்டம் ஜோராக வந்திருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டிலிருந்து பிள்ளைகளோடு மூன்று நான்கு பேர் கூட வந்திருந்தனர்.

‘என்ன மாமா இது? நூத்தியம்பது இலைக்குத் தான் சொல்லியிருந்தேன். முந்நூறுக்கும் மேல வரும் போலருக்கே..’

‘உள்ளூர்ல மேற்க ஒரு கிடாவிருந்து திடீர்னு கேன்சலாகிடுச்சுடா. அது நடந்துருந்தா இங்க குறைஞ்சிருக்கும்’

உள்ளூர்வாசிகளைத் தாண்டியும் முகம் தெரியாத வெளியூர்காரர்கள் நிறைய பேர் நின்றிருந்தனர். உற்று கவனித்தபோது நிறைய கரைவேட்டிகள் தென்பட்டன. பெரிய மாமனார் கட்சிக்காரர். சரக்கு கச்சேரி என்றவுடன் நிறைய கட்சியாட்களையும் அழைத்து வந்துவிட்டதை புரிந்து கொண்டான். அவனுக்கு ஏற்கனவே மேனகாவின் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தது.

‘இப்ப என்ன மாமா பண்றது?’

‘ஆளுக்கு நாலு துண்டு கூட வைக்கலன்னா மானக்கேடா போய்டும்டா’ மாமா கவலைப்பட்டார்.

‘அதுக்கு என்ன செய்றது? என்ன முடியுமோ அததான் செய்ய முடியும்..’

‘அதெல்லாம் சிறப்பா செஞ்சிடலாம். ஒண்ணும் கவலப்படாத..’ என்ற சித்தப்பா மகன் முத்துவின் குரல் கேட்டு பின்னால் திரும்பினான்.

‘எப்படி முத்து சரியாவும்?’

‘நம்ம மலையன் மவன் இப்பதான் ஊருல இருந்து கிளம்பியிருக்கான். என் கிடாய தூக்கி கார்ல போட்டுகிட்டு வரச் சொல்லியிருக்கேன்.. இந்த ரெண்டு கிடாயயும் துண்டு போடுறதுக்குள்ள அவன் வந்துடுவான். உடனே இதையும் உறிச்சு ரெடி பண்ணிடலாம். விடு’

அவன் எரிச்சலாக முத்துவைப் பார்த்தான். ‘எதுக்கு முத்து தேவையில்லாத வேல.. இருக்கிற செலவ எப்படி சமாளிக்கிறதுனே தெரியல.. என்கிட்ட சுத்தமா காசு இல்ல.. ‘ எனக் கத்தியவனை யாரோ ஓடிவந்து சமாதானம் செய்தார்கள்.

‘அட நீ ஒருத்தன்.. நான் காசா கேட்குறேன் உனக்கு. நான் உனக்கு தரவேண்டியது இருக்குல்ல. அந்த கணக்கு வழக்குல வச்சிக்கப்பா.. விசேசத்துல எது சரியில்லனாலும் சோறு தான் முக்கியம். அதுவும் கறி விருந்துனா சொல்லவே தேவையில்ல. நம்ம மாணிக்கம் மவன் வரதனுக்கு என்ன பேரு? துண்டுக்கறி வரதன்.. கிணறு வெட்டி தண்ணி வந்ததுக்கு கறிவிருந்து ஆக்கிப் போடுறேன்னு ஊரையே கூட்டிப்புட்டான். புடிச்சது ஒத்தக் கிடா. இலைக்கு ரெண்டு துண்டு கூட வைக்க முடியாம தடுமாறி தத்தளிச்சி பந்தியிலயே எனக்கு உனக்குனு பெரிய கைகலப்பாகிடுல..? அன்னைக்கு அமைஞ்ச பேரு துண்டுக்கறி வரதன்னு. அவன் பேரன் தலையெடுத்து வந்தும் இன்னும் அந்தப் பேரு போகல.. நீ பேசாம இரு. எல்லாம் நாங்க பாத்துக்கறோம்.’ என அலட்டிக் கொள்ளாமல் அவன் சொல்லிவிட்டுச் சென்றபிறகு இவனுக்கு எல்லாம் புரிந்தது.

இவனது பம்புசெட் மோட்டாரை மூன்று வருடங்களுக்கு முன்பு எடுத்துப் போனவன் அவன் கிணற்றிலேயே வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறான். இவன் இப்போது மேல் மோட்டாரை விற்றுவிட்டு தண்ணி மோட்டார் போட்டுக் கொள்ளும் முடிவிலிருக்க  அவனிடமிருக்கும் தனது பழைய மோட்டாரையும் கொடுத்துவிட்டு மாற்றினால் தொகை கணிசமாகக் குறையுமென்ற நினைப்பிலிருந்தான். இப்போது முத்து தனது கிடாயை வைத்து அந்த நினைப்பைத் தான் முட்டித்தள்ளிவிட்டுப் போகிறான்.

மூன்றாவது கிடாயும் வந்திறங்கிய போது இங்கு கறி பாதி வெந்திருந்தது. கோழிக்கறியும் இன்னொரு பாத்திரத்தில் வறுவலாகத் தயார் நிலையிலிருந்தது. மூன்றாவது கிடாயை அரக்கப் பரக்கத் துண்டாக்கி தனிப்பாத்திரத்திலிட்டு வேக வைத்தார்கள். சீக்கிரம் வேக செவன் அப் ஊற்றி கொட்டாங்குச்சிகளை போட்டார்கள். அனைத்தையும் கலந்து சாமிக்கு படையலிட்டபோது மணி நான்காகி இருந்தது. பந்தி விரித்து முதல் இலைக்கு சுகனின் கையால் பரிமாறினாள் மேனகா.

விருந்து முடித்து ஒவ்வொருவராக விடைபெற்றுப் போக பாத்திரங்களைக் கழுவி ஆட்டோவில் ஏற்றினார்கள். எல்லோரும் வண்டியில் ஏறியப்பின் அவன் கருப்பனாரிடம் சென்று கைகளைக் கூப்பினான். குலுங்கியழுதப்படி பேசத் தொடங்கினான்.

‘என்னமோ என் சூழ்நிலை சாமி.. எங்கப்பனும் ஊர் பூரா கடன் வாங்கித்தான் செத்தான். தனியா போராடி வந்தேன். எம்மவனுக்கும் அந்த நெலம வந்துடக்கூடாதுன்னு தான் கொஞ்சம் மனசு கூசிப் போச்சு. கொஞ்சம் யோசிச்சு யோசிச்சு செஞ்சிட்டேன். எதுவும் நினைச்சிக்காத சாமி.. நீ நினைக்க மாட்ட.. உனக்குத்தான் என் பொழப்பு என்னானு தெரியுமே..’ என்றபடி விழுந்து கும்பிட்டான்.

வண்டியிலேறி கோயிலைக் திரும்பிப் பார்த்தான். சாமியிடம் அழுதுவிட்டப் பிறகு அனைத்தும் கரைந்திருந்தது.

வீடு திரும்பியதும் மேனகாவிடம் கிண்டலாகக் கேட்டான்.

‘எப்படியோ சக்கரப் பொங்கல கறி விருந்தா மாத்திட்ட.. அதுவும் மூணு கிடா. இப்ப சந்தோசமா?’

அவள் எதுவும் பேசாமல் டீ கொதிப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

‘அம்முக்கல்லி வாயத் திறக்குறாளா பாரு? மாமியாரும் மருமவளும் சேர்ந்துக்கிட்டு நல்லா தலைல மொளகா அரைச்சிட்டீங்க இல்ல..?’

அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள். முறைத்தது போலிருந்தது. ‘இப்போது நம் கைதானே ஓங்கியிருக்கிறது.. முறைக்க வாய்ப்பில்லையே’ என அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் டீயை டம்ளர்களில் ஊற்றிக்கொண்டே கேட்டாள்.

‘அதெல்லாம் இருக்கட்டும்.. நான் கவனிக்கலன்னு நினைச்சியா? அதென்ன மதிவதனி இலைக்கு மட்டும் ரெண்டு மூணு தடவ கறி போகுது.. தலைக்கறி வேற தனியா போகுது.. என்ன விஷயம்?’

பதில் வராததால் டீயை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

ஆளைக் காணவில்லை.

000

ந.சிவநேசன்.

சேலம் மாவட்டம் ஆரியபாளையம் சிற்றூர். ஆசிரியர் பணி. கவிஞர் மற்ரும் சிறுகதை ஆசிரியர். கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதயங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல் ஆகியவை இவரது நூல்கள். தொடர்ந்து இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்.

The post காது குத்து first appeared on Nadukal.

  •  

36 B 

சித்தார்த் தனது மனைவி வைஷ்ணவியிடம்  தான் தோற்றுவிடுவோம் என்கிற கட்டத்தை அடைந்திருந்தான். அவனால் முழுமையாக அவளோடு எந்த விதத்திலும் ஈடுபட முடியவில்லை. அது வைஷ்ணவிக்குத் தெரிந்து விடும் என்கிற அச்சம் அவனை மேலும் தொந்தரவுக்கு ஆளாக்கியது. அவனுடல் இப்படி ஒரு மரக்கட்டை போல் உணர்வற்றுக் கிடக்கும் என ஒருநாளும் அவன் நினைக்கவில்லை. வைஷ்ணவி எவ்வளவு முயன்றும் அவனால் இயல்புக்குத் திரும்பி கிளர்ச்சியுற முடியவில்லை. எத்தனை குரல்கள் அவனை ஆட்டுவித்து மகிழ்வித்திருக்கும், இன்று வைஷ்ணவி குரல் அவனுக்குக் காதுக்குள் நுழையவேயில்லை. சிறுநீர் கழித்து விட்டு வருகிறேன் எனும் சாக்கில் பாத்ரூமிற்கு சென்று  அவனது போனை எடுத்தான். கற்பனைக்கும் நிஜத்திற்குமான பெரிய நீண்ட இடைவெளி உடைய சுவரொன்று அவன் முன் தனது உயரத்தை அதிகப்படுத்தியபடியே வளர்ந்து கொண்டே சென்றது.

**********

சித்தார்த் உடல் நடுங்கியபடி இருந்தது. அவனது தொடைகள் நிற்காமல் ஆடியபடியே இருந்தன. அவள் அவன் நெற்றியில் முத்தமிட்டவாறு மூக்கில் இருந்து கீழிறங்கி உதடுகளை மாறிமாறி முத்தமிட்டு முன்னேறியபடியே இருந்தாள். காதோரங்களை தனது நாவால் ஈரப்படுத்தினாள். காது நரம்புகளை லேசாகக் கடித்தாள். அவன் காதுகளில் சுருள் முடிகளால் திரண்ட அவனது மார்பை வர்ணித்தபடி அவள் ஹஸ்கி குரலில் சொன்னவை அவன் உடலின் உள் நரம்புகளில் ஆளில்லாக் காட்டில் தீடீரெனப் பற்றியெரியும் தீப்போல சரசரவென வேகமாக மேலேறின. அவள் அடுத்தடுத்ததாக தீவிரத்தன்மையோடு இடுப்பு நோக்கி இறங்க ஆரம்பித்த நொடிகளில்

‘ஏய், ஏய் நோநோ ப்ளீஸ் அங்கே போகாத?’

‘டர்ட்டி ராஸ்கல் போகாதனா போடின்னுதான் அர்த்தம். குத்துனன்னா பாரு. செம ட்ரிக்கி ஆம்பளடா நீ…நான் அப்படித்தான் போவேன்’ தலைமுடிகள் அவள் இடுப்பு வரை தொங்க அதை இழுத்துக்கட்டியவள் மல்லார்ந்த நிலையில் தன் தலையை பின்புறமாக வளைத்து அவனது தொடைகள் நடுவே இரண்டு கைகளையும் ஊன்றினாள்.

‘அடிப்பாவி, என்ன வேலையெல்லாம் பண்ற?’

ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணா …உன்ன புரட்டிப் போட்டு ம்ம்ம் …ஓகேவா? என மெலிதான குரலில் சொல்லி ஹாஹாஹா எனச் சிரித்தவாறே  கீழிறங்கி இதெல்லாம் சித்துக்காத்தான் எனக் கண்ணடித்து அவனுடைய பேண்ட் சிப்பைக் கழட்டினாள். வெறிகொண்ட உடலின் கிளர்ச்சி அண்டசராசரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது போல பேரதிர்வாக  நடுங்கச் செய்ய அவனது மூளை வரை நரம்புகள் அதிர பேச்சற்று கண்கள் மேல்நோக்கிப்போக முனகியபடியே ‘ஏய், விட்றி விட்றி’ என செல்லமாகக் கத்திக் கொண்டிருந்தான். 

அவளின் கேசங்கள் அவன் மார்பு முழுவதும் பரவிக் கிடந்தன. மிகவும் மிருதுவாக முடிக்கற்றைகளை அவற்றிற்கு வலிக்காமல் ஒத்தியெடுத்தவாறு அவள் ரசனையோடு தன்னை ஆள்வதை நினைத்துப் பூரிப்பில் கிடந்தான். அவள் மிகத் தீவிரமாகவும், முரட்டுத் தன்மையோடும் நடந்து கொண்டது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் செல்லமாக அவளைக் கடிந்துகொண்டது அவளுக்கு மேலும் கிறக்கத்தை உண்டு செய்ய  முன்னிலும் தீவிரமாக அவன் மேல் முன்னும் பின்னுமாக வேகவேகமாக இயங்க ஆரம்பித்தாள். அனைத்தும் முடிந்த போது உஷ்ண மூச்சின் சப்தங்கள் அறையின் சுவர்களிலும் ஒலிக்க படுக்கையில் தளர்வான உடலோடு தனியே கிடந்தவன் சற்று நேரத்தில் எழுந்து கொண்டான். 

அவனுக்குக் கொஞ்ச நேரம் நன்கு கண்ணயர்ந்து தூங்க வேண்டும் போலிருந்தது. ஆனால் தூக்கம் வரவில்லை. பறவைகளின் க்ரீச் க்ரீச் குரல்களோடுமலைப் பிரதேசம் முழுவதும் மெல்ல மெல்ல விடிந்தது திரைச்சீலைகள் வழியாகத் தெரிந்ததும் போர்வையை விலக்கிவிட்டு எழுந்து சென்று பல்துலக்க ஆரம்பித்தான். அவன் காதுகளில் மட்டும் குறுகுறுவென

அவளின் குரல் ஒலித்தபடியே இருந்தது. அதை நினைத்தவுடன்  அவன் பற்கள் பிரஷ்ஷை வாயில் வைத்தவாறு கிட்டிக் கொண்டது. இது அவனுக்குப் புதிதல்ல என்றாலும் நிஜத்தில் எந்தச் செயல்களும் இல்லாமலேயே சாதாரணமாக பல் துலக்குகையில் நினைக்கும் போது கூட ஒரு குரலுக்கு கிளர்ச்சியின் பேரின்பத்தை, கலவியின் முழு உச்சத்தை, தளர்ந்து கிடந்த உடலுக்குள் மேலும் ஒரு உன்மத்தத்தை வழங்க முடிகிறதை எண்ணி சிரித்துக் கொண்டான். 

தனது காமத்தின் பெருந்தீயின் முன் அவன் உடல் எரிந்தபடியே இருந்தது. போதாமைகளால் நிரம்பியிருந்த உடலின் முன் அவன் மனம் ஒரு செல்லமான நாய்க்குட்டி போல வாலாட்டிக்கொண்டு விசுவாசமாக நின்றது. தனது சக்திக்கு அப்பாற்பட்ட தனது கற்பனைகளின் வேகம் தாண்டிய ஒரு கலவியைக் கண்டடைந்துவிடவேண்டும், ஒரு பெண்ணின் உடலுக்குள் முழுவதுமாக தன் உடல் புகுந்து வெளிவந்தால்தான் அது அடங்கும் 

என்கிற அவனது உடல் வேட்கையின் தீவிரம் நின்றெரியும் விளக்கினைப்போல பிரகாசமாகவும், நீண்ட வருடங்களாக தன்வயமற்றுப் பித்தேறிய சாத்தானைப் போலவும் தொடர்ந்து வந்ததை அவன் அறிந்திருந்தான். அது அவனை இரவும் பகலும் தூங்கவிடாமல் செய்தது. 

மறுநாள் இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். நடுரோட்டில் நின்று கொண்டிருந்த வண்டிகளில் வரிசையாக ஹாரன்கள் அடித்தன. 

‘டேய் ஊட்ல சொல்ட்டு வந்துட்டியாடா மொள்ளமாரி. சாவகாசமா ஆட்டிக்கிட்டு வராம்பாரு ?’ என்று காரின் உள்ளிருந்து டிரைவர் ஒருவன் கத்தினான். டூவீலரில் வந்த ஒருவன் இறங்கி வந்து ‘என்ன ப்ரோ! கனவைக் கொஞ்சம் ஓரமாகப் போய் காணுங்க’ என்றவுடன் வெட்கமாகவும், அசிங்கமாகவும் போய்விட்டது அவனுக்கு.

முந்தைய இரவில் நடந்த கூடலில் தன்னுடலை அவள் கையாண்டது இன்னும் மிச்சமிருப்பது போல, அந்த ஸ்பரிசம் மேலே படர்ந்தும் அப்படித் தான் போவேன் என்று சொல்லும் அவள் குரலாக மாறியும் அதன் குறுகுறுத்த உணர்வு உடலில் இருந்து விலகாமல் ஒட்டியபடியே இருந்தது. காலையில் இருந்து எங்கே திரும்பினாலும் அதன் நினைவு வந்தவுடன் மனமே அந்தக்குரலை, அந்த நினைவைக்கிளறி உடலை ஒரு வித முறுக்கோடு சிலிர்க்கச்செய்தது. அந்த இடத்திலேயே நின்று சுற்றி நடக்கும் எதையும் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் இடத்தை விட்டு நகராமல் வம்பு செய்தது.

அவனுக்குக் குரல்தான் எல்லாம். அவனுக்குக் குரல் ஒன்றே போதும். குரல்கள் தான் அவனுக்கு உடல். குரல்களே அவனுக்குக் கிளர்ச்சி. குரல்களோடு வாழ்வது அவனைப் பொறுத்தவரை ஓர் உடலின் மொத்த இன்பத்துக்குமான தொடக்கமும் முடிவும். இந்தக் குரல்கள் அவன் அன்றாடங்களில் கலந்தவை. குளிக்கும் போது கூட சில குரல்கள் அவனை ஆட்கொண்டு பல கரங்களாக உருவெடுத்து ஒரு பெண்ணாக இல்லாது பல பெண்களாக மாறி அங்கங்களை வருடும். தன்னை இத்தனை பெண்கள் ஒரு சேர அந்தக் குரல்கள் வழி ஆள்வதில் யாருக்கும் இல்லாத பெருமிதமும், கர்வமும் அவனுக்கு உண்டு. அந்த அளவுக்கு தன் உடல் மேல் அவனுக்கே முற்றிய நிலையிலான பிரேமை இருந்தது.

அவனுக்கு நிஜத்தில் ஒருத்தி தேவையே இல்லை. அப்படிப் போனாலும் இந்தச் சுகத்தின் அதே தன்மையோ, அதே அளவோ அதற்கு மிஞ்சிய ஒன்றோ அதில் கிடைக்காது என்று தீவிரமாக அவன் மனமே நம்பத்தொடங்கியிருந்தது. 

இந்தக் குரல்களால் அவற்றின் உலுக்கல்களால் ஒரு நிஜப் பெண்ணிடம் தான் தோற்றுவிடுவோமோ என்று கூட தோன்றி அது ஆழமாக மனதின் உட் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டது. அதுவுமன்றி சித்தார்த் தான் ஆள்வதைவிட பெண்கள் தன்னை ஆளவேண்டும் என்பதையே அதிகமாக விரும்பினான். ஒவ்வொரு பெண்ணும் தன் மீது இயங்கும் போது ஒரு மலை உச்சியின் உயரத்தில் நின்று அந்த உணர்வை ஆழமாக சுவாசித்து சந்தோஷமாக கத்திக் கொண்டாட வேண்டும் போலிருக்கும்.

கொடைக்கானலின் மலைக்கிராமமான பூம்பாறையில் வசித்து வந்த சித்தார்த் பூம்பாறையின் வ்யூ பாய்ண்ட்டிற்கு வந்து செல்லும் இடத்தில் கைப்பைகள், ஆண் பெண் இருபாலருக்குமான உள்ளாடைகள் என தனித்தனியே இரண்டு சிறிய கடைகளை வைத்திருந்தான். இரண்டு கடைகளுக்கும் நடுவே ஒரு சுவரைப் பிளந்து சந்து போல உருவாக்கிக் கண்ணாடி கதவு வைத்து அதன் வழியே அனைவரும் போய்க் கொள்ளும் வசதியும் இருந்தது. கைப்பைகள் வாங்க வரும் பெண்கள் அப்படியே இந்த கடையில் என்ன இருக்கிறது என்றும் பார்க்க வருவார்கள். ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் சித்தார்த்திற்கு அவளின் அங்க அளவுகள் துல்லியமாக புலப்பட்டு விடும். தனது கடைப் பணிப்பெண்ணை விட்டு சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு இந்த அளவில் காண்பிக்குமாறு சொல்வான். அவன் அதைத்தான் சொல்கிறான் என்பது வாடிக்கையாளருக்குப் புரியாதவாறு சொல்லி அனுப்புவான். அப்படி ஒரு பெண்ணின் அளவைச் சொல்வதிலும், அவள் உடைமாற்றும் அறையில் அந்த ஆடையுடன் எப்படி இருப்பாளெனக் கற்பனை செய்து பார்ப்பதும், பில் போட வரும் போது அதன் பிராண்டைச் சொல்லி, அவள் உள்ளாடையின் அளவை அவனே சொல்லும் போது சம்பந்தப்பட்ட பெண்ணின் நாணும் முகபாவத்தை அவளறியாது காண்பதுமென அவன் எந்தெந்த வழிகளில் முடியுமோ அதிலெல்லாம் தனது வேட்கையை மடைமாற்றித் தாகத்தைத் தணிக்க முயன்று கொண்டே இருந்தான்.

ஒருபோதும் தனக்கு இப்படி இதில் எல்லாம் ஒரு கிளர்ச்சி மனநிலை இருப்பதை காட்டிக்கொள்ளாமல் மிகச் சாதாரண மனநிலையோடு உரையாடசித்தார்த்தால் முடிந்தது. அப்படியான ஒன்றன் வசம் தன்னை ஒப்படைத்துக் கொண்டு தள்ளி நின்று தனக்கு நடப்பதை ரசிப்பது அவனுக்கு அவன் விரும்பிய இன்பமாக இருந்தது.

காலையில் தனது கடையைத் திறந்தவுடன் முதல் போன் காலாக அவள் அழைத்திருந்தாள். 

‘டேய், சித்து எங்கடா இருக்கே?’

‘கடைல தான். வேறெங்க இருப்பேன்?’

‘இன்னர் வேர் வாங்கக்கடைக்கு வரலாம்னு இருந்தேன். அப்டியே நீ இருந்தா உன்னப் பாத்துடலாம்னு கால் பண்ணேன் டா?’

‘ஒரு ஆம்பளகிட்ட போய் இன்னர் வேர் வாங்கறதப் பத்தி சொல்ற?’

‘அதனாலென்ன நீ என் பிரண்ட். இதெல்லாம் சொல்ற அளவுக்கு இவ்வளவு க்ளோசா பிஹேவ் பண்றேன்னா நீ எவ்வளவு நல்லவனா இருக்கணும்?’

‘நான் நல்லவன்னு நீயே நம்பிடுவியா?’

‘எத்தனையோ சந்தர்ப்பங்களில் நான் உன்னோட தனியா இருந்துருக்கேன். வண்டியில் வந்திருக்கேன். ஒரு முறை கூட நீ என்ன தப்பா பாத்ததில்ல. பேசியதில்ல. இதைவிட வேறென்ன வேணும். ஐ லவ் யுவர் ஆட்டிட்ட்யூட் சித்து.’

‘அப்படிப் பாத்திருந்தா என்ன பண்ணுவ?’

‘ஹே, உனக்கு என்னாச்சு காலைல இன்னிக்கு. உன்னால கனவுல கூட என்ன அப்படி நினைக்க முடியாது.

உன்னப் பத்தி உனக்கே தெரியாது. நீ அவ்ளோ நல்லவன். சரி வை. நான் வரேன்.’ பதிலுக்கு காத்திராமல் போனைத் துண்டித்தாள். தன் பற்றிய இப்படியான ஒரு நல்ல பிம்பமே அவனுக்கு கிறங்கும் மனநிலையை ஆரம்பமாக்கி அவனைத் தூண்டும்.

சித்தார்த்தின் மூளையில் இருக்கும் ஒரு பத்து நரம்புகள் தலையை விட்டு வெளியே வந்து பெண்களாக உருவெடுத்து, அந்தப்பெண்களின் குரலாக மாறி ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு தொங்குவது போல தரையைத் தொட்டு இழுத்துப் பிடித்தபடி நின்றன. சற்று நேரத்தில் 

அந்தக் கிளைகளில் இருந்து ஒவ்வொரு குரலாக தன்னை நோக்கி வந்து தன் உடல் அங்கங்களை நீவி வருடுவது போலவும் கட்டியணைத்து முத்தங்கள் தருவது போலும் இருந்தன. திடீரென அந்தக் குரல்களில் ஒரு வித குரூரமான ஒலி ஒட்டிக்கொண்டது. அவை அவனை கழுத்துப் பகுதியை நோக்கி நெருங்கி வந்து தங்கள் கரங்களால் குரல்வளையை நெறித்து மூச்சை நிறுத்துவது போலவும் தோன்றியது.

பின்னர் ஒவ்வொரு குரலாக தன்னை விட்டு நீங்கிச் செல்வது போலவும் மீண்டும் அவை ஒவ்வொன்றும் ஒரு திசையில் நின்று இழுத்து தன்னைக் கட்டியிருப்பது போலவும் மீண்டும் தன்னை நெருங்குவது போலவும் கொஞ்சுவது போலவும் குரல் வளையைக் கவ்விக்கடிப்பது மாதிரியும் அதேபோல் தோன்றியது.

சில நாட்களாகவே இது தொடர்ந்தது. முதலில் மிகச் சாதாரணமாக நினைத்தவனுக்கு பின்னர் எப்போது தூங்க நினைத்தாலும் இப்படி நிகழ்வது நடந்தது. உறக்கம் அற்ற விழிப்பு நிலையிலும், உறங்க முடியாத மாய நிலையிலும் மாறி மாறி அவதிக்குள்ளாகியிருந்தான்.

இப்படி உறக்கம் கெடுவதை யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்தான் சித்தார்த். தனக்கு மனப் பிறழ்வு இருக்குமோ என்கிற சந்தேகம் அவனுக்கு வந்தது. இந்த விஷயம் தவிர நாம் மற்ற நேரங்களில் சாதாரணமாகத்தானே இருக்கிறோம் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டான். ஏன் இப்படி முழு நேரமும் காமத்தால் துரத்தப்படுகிறோம், ஏன் இப்படி உணர்வுகள் கரைபுரண்டு ஓடுகின்றன? இந்த எண்ணங்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை இல்லையா? இந்தக் குரல்களின் விநோத ஒலிகளை நிறுத்தவே முடியாதா? தனது மனமும் உடலும் இந்தக் குரல்களின் நீரினால் ஊறிஊறி அதனுள் அமிழ்ந்து ஒரு பந்து போலக் கிடக்கிறது. பின் உடனே அதுவே  அசுரவேகமாக வெளிவந்து ஆட்டுவிக்கிறது. அதுவே தனது உடலை, மனதை சிதைத்து சிதைத்து பிய்த்துத் தூக்கி வெளியே போட்டுவிடுமா?

பத்து நரம்புகள் இப்போது எண்ணிக்கையில் அதிகமாகி தலையின் நரம்புகள் அனைத்தும் தலைக்கு வெளியே தொங்குவது போல் தோன்றியது அவனுக்கு. சடாரென்று அவனது மூளையில் இருந்த மரத்தின் கிளைகளில் ஒன்றாக அந்த முதல் நினைவு சுழன்று சுழன்று வெளியே கழண்டு வந்து விழுந்தது. சித்தார்த் ஆறாவது படிக்கும் போது ஒரு நாள் பக்கத்து வீட்டு சண்முகநாயகி அக்கா சில புத்தகங்களை பேப்பர் கடையில் வாங்கி வரச்சொன்னாள். 

வந்தவுடன் தன் குரலால் அந்த புத்தகத்தில் இருப்பதைப் படிக்கத் தொடங்குவாள். அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு அவற்றை அவள் படிக்கும் போது மிகவும் நீண்டு வளைந்து நெளிந்தபடி இருக்கும் பாம்பு ஒன்று விடும் மூச்சைப்போல சீறும் சப்தத்துடன் அவள் குரல் கேட்பது அவன் காதருகே கேட்கும். அது அவன் உடலின் உள்ளே இன்னதென்று சொல்லத் தெரியாத ஒரு புதுவித உணர்வைத் தோற்றுவிக்கும். அவள் அந்த புத்தகத்தை படித்துக் காண்பிப்பதோடு மட்டுமில்லாமல் 

அதன்படி தன்னிடம் நடந்து கொள்ளவும் கைகளால் கைகளை அழுந்திப் பிடித்துக் கட்டளை இடுவாள். கைகள் நடுங்க பயத்துடன் அவன் அவளைத் தொட்டவுடன் அவளிடம் இருந்து கிளம்பும் குரலின் ஒலியானது ஒற்றை சலங்கை வைத்துப் போட்டுக் கொள்ளும் கொலுசின் ஒலி போல மெதுமெதுவாகக் கிளம்பி முழுவதும் சலங்கை வைத்துப் போட்டுக் கொள்ளும் கொலுசென மாறி ஜலஜலஜலவென அதிகமான சப்தத்தோடு காதுகளில் ஒலிக்கும். அந்த தாளநயத்திற்கேற்ப அவனை இயங்கப் பழக்குவாள். நாயகி அக்காவிடம் தொடங்கியது இந்தக் குரல் மயக்கம். நாயகி அக்காவின் குரல் செல்லுமிடமெல்லாம் ஒலிக்க ஆரம்பித்தது. அந்தக் குரலை நினைத்துக் கண்களை மூடினால் மட்டும் போதும். வானின் உச்சியில் பறந்தபடி தனது உடல் புணரப்படுவது கண்களில் ஆடும். இன்று வரை எத்தனை குரல்கள். எத்தனை கிளைகள். மரம் முழுவதும் சிறியதும் பெரியதுமாய் நீண்டு வெளியேறி விரவிக் கிடந்த கிளைகள் போல இத்தனை வருடங்களாக அதன் பொந்துகளில் பதிந்து போன நினைவுகளாக, அதன் நீட்சிகளாகவே இந்தக் குரல்கள் அவனை ஒரே நேரத்தில் மகிழ்விக்கவும், துன்பிக்கவும் ஏதுவாகக் கட்டிப்போட்டு தங்கள் கோரப்பற்களால் சிரிக்கின்றன. 

எல்லாம் போகட்டும். இந்தத் தூக்கத்தை இனி எப்படி வரவழைப்பது. இந்தக் குரல்களில் இருந்து எப்படி தப்புவது என யோசிக்க யோசிக்க அவனுக்கு உடல் முறுக்கி கோபம் அடைபட்ட அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரின் பாய்ச்சலோடு பாய்ந்து வெகுண்டு கிளம்பியது. அதன் வேகம் தாங்காமல் ஒரு பிரச்சினையினை சரிசெய்ய மருந்து தேடாமல் அவன் மீண்டும் உள்ளே அதன் பாதையிலேயே நடந்து நடந்து அதைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டிருந்தான். மிகமிக ஆழமாக தோண்டப்பட்ட கிணற்றின் அடியில் தவறி விழுந்துவிடும் பொருட்களாக எண்ணங்கள் வெளிவராது அவனின் உள்ளேயே கிடந்தன. அவற்றை பாதாளக்கரண்டி விட்டு எடுப்பதாய் நினைத்து இன்னும் ஆழத்தில் தோண்டிப் போட்டவாறிருந்தான்.

கடைக்கு அவள் வந்துவிட்டிருந்தாள். 

‘ஹே, சித்தூ என்னடா பயங்கரமான யோசனை போல?’ 

‘ஒண்ணுமில்ல டி. லைட்டா தலைவலிச்சுது அதான்.’

தொப்புள் தெரியும் ஷார்ட்டான கறுப்பு நிற டாப்ஸில் இருந்தாள். அவளது நெக் செய்ன் க்ளீவேஜைத் தொட்டு ஆடியபடியிருந்தது. லேயர் கட் முடிகள் அலை அலையாக மார்பில் புரண்டபடி இருந்தன. யாருடனோ போனில் பேசியபடியே போனை கட் செய்தவாறு பணிப்பெண்ணிடம் அளவுகள் சொல்லப்போனாள். பின்புற ஜீன்ஸ்க்கு மேல் அவளது பேன்ட்டிஸ் காபி பிரவுன் நிறத்தில் தெரிந்தது.

அவளின் பளீரென்ற நிறத்தில் இருந்து முழுவதுமாக விலகிய ஜீன்ஸ் வழியே காபி பிரவுன் நிறம் பளிச்சென்று தெரிந்தது அவள் கவர்ச்சியை மேலும் எடுத்துக்காட்டியது. 

எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மீண்டும் வந்தவள் பையைக் கையில் வைத்தபடியே ‘ஊய், நாலு எடுத்துருக்கேன் பில் போடு.’

‘சைஸ் பொறுத்து விலை மாறும்  நீ எடுத்த சைஸ் சொல்லு.’ அவனும் பையைக் கேட்கவில்லை.

‘ஹே, மாடு மாடு! காதைக் கொண்டா  என்று அடிக்குரலில் அவளுடைய அளவைச் சொன்னவள் இப்ப டயட்லாம் இல்ல நல்ல சாப்டு சாப்டு ஏத்திட்டேன். எல்லாமே மாறிப்போச்சு…இன்னும் ஏதோ சொன்னவள்..ஷ்ஷ் பில்ல போடு போடு’ என்று அவசரப்படுத்தினாள்.

வேலை முடிந்து கடையைப் பூட்டி  வீட்டுக்குச் செல்ல இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. சாப்பிட்டு முடித்ததும் முன் கதவைப்பூட்டி படுக்கையறைக்குள் நுழைந்து செல்லைப் படுக்கையில் பக்கத்தில் வைத்துவிட்டு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக வழக்கம் போல அவனது உடல் விழிக்க ஆரம்பித்திருந்தது. கருநிற இரவில் விழித்த உடல் நாலாபுறமும் அதே இருளில் அதன் கருநிறத்திலேயே இருக்கும் பூனையின் கண்களின் மிளிர்வோடு பிரகாசித்தது. விகசித்துக் கிளம்பிய உடலுக்குள் பல்வேறு நரம்பின் முடிச்சுகள் அவிழ்த்தும் இறுக்கியும் சுருக்குப் பையினை இழுத்து இழுத்து மூடிமூடித் திறப்பது போல ஒரு விளையாட்டை நிகழ்த்த ஆரம்பித்தது.

ஒவ்வொரு கூடலிலும் அவன் தான் ஒரு வாளிப்பான அரசன் போல, மல்யுத்த வீரன் போல, இந்த உலகின் மிக கவர்ச்சியான ஆண் போல, திரட்சியான தோள்கள்,மார்பகங்கள் கொண்டவன் போல, அங்கம் எங்கும் முடிகள் திரண்டு கிடப்பவன் போல, வாளிப்பான பண்டைக்கால வீரன் போல, வெற்றிகளால் மிதந்து மமதையேறிய ஆண் போல இப்படி பலவாறான தோரணைகளில் தன்னை நினைத்துக் கொள்வான். தன் மமதைகளை, வீரத்தை வாளிப்பான உடலை தீவிரமாக அடக்கியாளும் பெண்கள், தன்னை வேட்டையாடி அவர்கள் முன் கிடத்தி தன் சதைகளை உண்ணும் மிருகத்தின் சாயலில் இருக்கும் பெண்களே அவனது தேர்வாக இருந்தது. அவர்களது குரலோடு, தனக்குத் தோன்றும் அத்தனை கற்பனைகளையும் ஒரு நேர்க்கோட்டில் நேர்த்தியாக இழுத்துக் கட்டிவிடுவான். கற்பனை வெளியின் கதவுகள் அவனுக்காக எப்போதும் திறந்தே இருந்தன.

வாசலில் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு குழைந்து கிடந்த உடலைத் தூக்கிக்கொண்டு எழுந்து சென்று திறந்தால் அவள் நின்றிருந்தாள். 

பாக்குக்கலரில் ‘ச்சியர்ஸ்’ என்று வாசகம் எழுதிய டி ஷர்ட் அணிந்திருந்தாள். அவள் நிறத்திற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. வெளிர் ஊதா நிற த்ரீஃபோர்த் ஜீன்ஸ் அவளின் அழகான வழுவழுப்பான கெண்டைக்கால்களைக் காட்டியது.

முடியை நன்கு மேலே தூக்கி குதிரை வால் போட்டிருந்தாள். அதனோடு சேராத சில முடிகள் முன்புறத்தில் சுருண்டும், குட்டியாகவும், நீளமாகவும் இருந்தன. கொஞ்சம் நீளமான ஒரு முடிக்கற்றையை காதோடு இழுத்து செருகியிருந்தாள்.

அது அவள் லேசாக தலையை அசைத்தவுடன் அந்த முடியும் கூடவே முன்புறம் வந்து ஆடியது. தன்னை மறந்து அவளை ரசித்தபடி நின்றவனிடம் கண்களுக்கு இடையே சொடுக்குப் போட்டபடி கேட்டாள்.

‘உள்ள கூப்டமாட்டியா?’

‘வா வா.’

‘சும்மா தான் வந்தேன். ம்ம், அவ இல்லனு தெரியும்’ என்றாள் அவளாகவே.

ஏற்கனவே நிறைய முறை வந்து பழக்கப்பட்ட இடத்தில் இருப்பது போல மிக இயல்பாக அவன் சொல்லாமலே சோஃபாவில் அமர்ந்தாள். பேச்சு நின்று என்ன செய்ய வேண்டும் என இருவருக்கும் தோன்றாத ஒரு சூழலில் இவனைக் கவனிக்காதது போல் டைட்டாக இருந்த அவள் டிஷர்ட்டை எந்தவொரு முன்யோசனையும் இல்லாமல் தற்செயலாக கழட்டுவது போல உட்கார்ந்தபடியே கழட்டினாள்.

‘ஏய், ஏய் என்ன பண்ற?’ என்று பதறினான் சித்தார்த்.

‘ஏன் கழட்டக்கூடாதா உன் முன்னாடி?’

‘காலைல என் இன்னர் சைஸ் தெரியாதுன்னல்ல இப்ப பாத்துக்க’  என்றாள்.

‘ஏய், சீரியசாவே என்ன பிராண்ட் வாங்குன அதைப்பொறுத்தும் சைஸ் மாறும்னுதான் கேட்டேன்.’

‘ஓ, உனக்கு பிராண்ட் சைஸ் எதுவுமே தெரியாது…நான் தான் உன் காதுல வந்து சொல்லணும், அப்பத்தான் தெரியும்’ என்றவாறே அவனை நெருங்கி வந்தாள்.

‘ஹேய், அப்படி லாம் இல்ல’எனச் சொல்லி முடிப்பதற்குள் அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு  உண்மையாகவே தெரியாதா என அவன் மேலுதட்டில் இருந்து கீழுதடு வரை ‘S’ வடிவத்தில் வரைந்த படி கேட்டாள். அவன் பதிலுக்குக் காத்திராமல் அவனைக் கட்டிலில் தள்ளியவள் ‘எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் சித்து. நீதான் கண்டுக்கவே மாட்ற.. நான் எப்படி உனக்கு புரியவைக்கறதுனு தெரியல..நீ எனக்கு வேணும் சித்து..அப்டியே அப்டியே வேணும்’ என்றாள்.

அவள் சொல்லச்சொல்ல அவனுக்குக் கண்கள் சுழன்று உடலின் நாளங்கள் இரத்தத்தை எல்லா இடங்களுக்கும் வேகவேகமாக அனுப்பின. அந்தக் குரலின் அதிர்வு உடல் முழுவதும் விறுவிறுவென பரவியது. குரல் அவன் உடல் முழுவதும் பரவியவுடன் ஆழமான மூச்சிழுத்துக் கஞ்சாவை உள்ளே விடுபவனின் போதையென நிலைகொள்ளாமல் தவித்தது. ஒவ்வொரு உறுப்பாக அதீதங்களால் திக்குமுக்காடி செயலற்றுப் போய் தண்ணீரின் மேல் மிதப்பது போல எடையற்றதாக மாறியது. 

தனது எடையற்ற உடலை அவள் தன் மேல் இயங்க வாகாகக் கொடுத்தான். பாக்கு நிற டி ஷர்ட் மூலையில் கிடக்க அவன் தேகத்திற்கு எரிபொருளை ஊற்றியபடியே இருந்தாள். அவளின் ஒவ்வொரு தொடுகைக்கும் இவன் உடல் துள்ளித்துடித்து துள்ளித்துடித்து நின்றது.

காலையில் அவள் கடைக்கு வந்ததும், ஆடை மாற்றுவது அவன் கேமராக் கண்களில் தெரிவதும், அவள் அளவைக் கொஞ்சிய படியே சொல்லியவுடன் அந்தக்குரலால் அவன் உடலுக்கு ஒரு கிறுகிறுப்பு தட்டியதும் மனதில் வந்தவுடன் அவனும் தீவிர இயக்கத்திற்கு தயாராக ஆரம்பித்தான். நடப்பதெல்லாம் உண்மையா பொய்யா மாயையா என அவனுக்கே குழப்பம் ஆகியிருந்தது. அதற்குள் அவள் முதுகில் கடிதடம் ஏற்படுத்தி இருந்தாள்.

சித்தார்த் கொஞ்சம் கொஞ்சமாக மெய் மறந்து அவளிடம் தன்னை இழந்து கொண்டிருந்தான். அவன் பிட்டத்தை ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு அவன் காதருகே வந்தவள் காது மடல்களின் நெருக்கத்தில் வந்து 

‘ஹே, மாடு மாடு நல்லா கேட்டுக்க, வேணும்னா பாத்துக்க’ என்று தன்னுடைய அளவை மீண்டும் ஒருமுறை கொஞ்சு குரலில் வெட்கம் மேலிடச் சொன்னாள்.  இப்ப டயட்லாம் இல்ல நல்ல சாப்டு சாப்டு ஏத்திட்டேன். எல்லாமே மாறிப்போச்சு…கிண்ணுனு இருக்கடா. ஆனால் ஒண்ணுந்தெரியல உனக்கு!’ என்றவள் தனது உள்ளாடையின் நெருக்கத்தோடு கழுத்துப்பகுதிகளை அமிழ்த்தியபடி இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனாள்.

சித்தார்த்திற்கு உடல் நடுங்கியபடி இருந்தது. அவனது தொடைகள் நிற்காமல் ஆடியபடியே இருந்தன. மெதுமெதுவாக நடுக்கம் குறைந்து தொடைகள் தளர்ந்து இயல்புக்குத் திரும்பி சில நிமிடங்களில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் படுக்கையில் பக்கத்தில் கிடந்த போனை எடுத்து அன்று காலையில் அவளின் குரலில் அவன் பதிவு செய்திருந்த ரெகார்டை ஆஃப் செய்தான்.

000

கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக  கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்டசோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி. 

இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ்,

கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி‌, சிற்றுளி ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

கலகம் இணைய இதழ், நடுகல் இணைய இதழ், வாசகசாலை இணைய இதழ், தமிழ்ப்பல்லவி அச்சு இதழ் ஆகியவற்றில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன.

The post 36 B  first appeared on Nadukal.

  •  

முகங்கள்

முகங்கள்-

நம்மைக் கடந்து செல்லும் அல்லது நாம் கடந்து போகும் மனிதர்களில் ஒரு சில முகங்கள் தனது செய்கையாலோ அல்லது வேறு ஏதோ ஒரு விதத்திலோ நம் மனதுக்குள் ஏறி உட்கார்ந்து கொள்ளும்; ஆனால் சில முகங்களோ நமக்கு வெறுப்பை மட்டுமே கொடுக்கும், இப்படிக் கடந்து வந்த முகங்களில் சில முகங்களை நம்மால் மறக்கவும் முடியாது, மனதில் இருந்து எளிதில் விலக்கி வைக்கவும் முடியாது.

கடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்களைப் பற்றி, நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள்; வாசித்திருப்போம். எனக்குத் தெரிந்த நண்பர் ‘முகங்கள்’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அவர் சந்தித்த முகங்கள் குறித்த அருமையான சிறுகதை போன்றதொரு தொகுப்பு அது.

நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில் சிலரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கும். யாரும் நமக்குப் படிப்பித்துக் கொடுப்பதில்லை என்றாலும் நாம் விருப்பப்பட்டதை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம். நம்மிடம் இருந்து அவர்கள் எதைக் கற்றுக் கொண்டார்கள் என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. ஒருவேளை நமக்குத் தேவையானது அவர்களிடம் இருக்கும் பட்சத்தில் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்… அந்த இடத்தில் பெரியவன் சிறியவன் என்ற பேதமெல்லாம் தேவையில்லை என்பதே என் எண்ணம்.

வேலை நிமித்தம் தினமும் ஓடிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு வாழ்க்கையில் தினம் தினம் நிறைய முகத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். அதில் சில முகங்கள் அவர்களின் செய்கையால் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்கள். இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் நான் சந்திக்கும் முகங்களில் பல முகங்கள் பரிதாப முகங்களே. நம்ம நாட்டில் இருந்து வந்தவர்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து இங்கு வந்து வேலை செய்யும் மனிதர்களில் இந்த பரிதாப முகம் கண்டிப்பாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன் முகநூலில் ஒரு கவிதை வாசித்தேன். கவிதையின் சாராம்சம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இருவரின் மனைவியர் பற்றியதாய் இருந்தது என்றாலும், இரண்டு மனைவியரில் ஆரம்பிக்கும் கவிதை பயணித்துப் போய் இறுதியில் முடியும் போது அந்த மனிதர்களில் முடியும். அவர்கள் இருவரும் ஒரே கம்பெனியில்தான் வேலை செய்கிறார்கள்; கட்டிட வேலை. இவர் மனதை அவர் அறியாது அவர் மனதை இவர் அறியாது வேலை பார்ப்பதாய் கவிதை பேசிச் செல்லும். ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் வலிகள், கவலைகள் இருக்கும். அது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். மிகவும் நெருக்கமான நட்பாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு ஒருவர் தங்கள் கஷ்டங்களை, கவலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அப்படியில்லை என்றால் வேலை நிமித்தம் பேசுவதுடன் சரி, வலிகளை யாரும் பகிர்ந்து கொள்வதில்லை.

சில வருடங்களுக்கு முன் நாங்கள் -நானும் இன்னொரு தமிழ் நண்பரும் -காலையில் பேருந்து ஏறும் இடத்தில் சற்றே கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும் என ஜன்னல் வழியாக துண்டு போடுதல், குழந்தையை வீசுதல் எல்லாம் இருக்காது; அதற்கான வாய்ப்பும் இல்லை. காரணம், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் என்பதால் சன்னல் எல்லாம் இருக்காது. கண்ணாடி அடைத்திருக்கும். அடித்துப் பிடித்து ஏறவும் தேவையில்லை; எல்லாரும் ஏறும் வரை பேருந்து நிற்கும் என்பதால் ஒவ்வொருவாராக இடிக்காமல், தள்ளாமல் ஏறுவார்கள். நாங்களும் அப்படித்தான் நமக்கு முன் நிற்பவர் ஏறட்டும் எனக் காத்திருப்போம்.

அப்படியான நாட்களில் இடையில் திடீரென ஒருத்தன் வர ஆரம்பித்தான். அவன் பாகிஸ்தானி, கையில் வைத்திருக்கும் லேப்டாப் பேக்கில் மதிய சாப்பாட்டை வைத்துக் கொண்டு ஏறுவான்.  பேருந்து வந்ததும் ஓடிப் படிக்கு அருகில் நின்று கொள்வான். யாராவது அவனுக்கு முன்னே ஏற முனைந்தால் இடித்துத் தள்ளுவான். உள்ளிருந்து இறங்குபவர்களுக்கும் வழி விடமாட்டான்.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மொபைலில் முகம் பார்த்து, அதை அஷ்டகோணலாக்கி என்னென்னமோ செய்வான். அவன் இருக்குமிடத்துக்கு அருகில் அமர்பவர்கள் அவனுடன் உரசி விடாமல் இருக்க, ரோபோ போல் உட்கார்ந்து கொள்வான். அவனைப் பார்த்தாலே பேருந்தில் பயணிக்கும் யாருக்குமே பிடிப்பதில்லை. ஒருநாள் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற போது அவன் கோபமாய் காலை உதறுகிறான்; வாய்க்குள் ஏதோ முணங்குகிறான். அதைப் பார்த்து மற்றவர்களுக்கு வந்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! எல்லோருக்கும் அத்தனை மகிழ்ச்சி.

இங்கு பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் இல்லை என்றாலும் ரோட்டைக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட சுரங்க நடைபாதையில் எப்போதேனும் சிலர் அமர்ந்து பிச்சை எடுப்பார்கள். இவர்களில் ஆண்களும் பெண்களும் அடக்கம். அப்படித்தான் ஒருமுறை ஒரு நடுத்தர வயது மனிதன் என்னமோ பைபாஸ் சர்ஜரி செய்தது போல் மிகப் பெரிய பேண்டேஜ் ஒட்டி அது தெரிய, சட்டையைக் கழட்டி விட்டு உட்கார்ந்திருந்தான். அது பார்ப்பவர்களை ஏமாற்றி, பரிதாபப்பட்டு கையில் இருப்பதைப் போட்டு விட்டுப் போவார்கள் என்ற எண்ணத்தில்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. கடந்து போனவர்கள் அவனைப் பார்த்தபடி பயணித்தார்கள். அவனைப் பார்க்கும் போதே கடுப்புத்தான் வந்தது. உழைக்கச் சோம்பேறிப்பட்டுக் கொண்டு இப்படி பிச்சை எடுப்பதில் என்ன கிடைத்துவிடும். இதற்கு ஊரில் இருந்திருக்கலாமே.

மற்றொரு முறை அலுவலகம் விட்டு பேருந்தில் வந்து இறங்கி, ரோட்டைக் கடப்பதற்காக சுரங்க நடைபாதை வழி  நடந்த போது ஒரு அரபிப் பெண்மணி, அரபி என்றாலும் உள்ளூர்க்காரி அல்ல வேறு நாட்டிலிருந்து வந்தவள்தான். ஓரு ஓரமாக உட்கார்ந்து, தனக்கு முன்னே ஒரு பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தார்; அதில் சில சில்லறைகளும் கிடந்தன. அவளருகே ரோஜா மலர் போல ஒரு பெண் குழந்தை, மூணு நாலு வயதிருக்கும்… அமர்ந்திருந்தது. அம்மா என்ன செய்கிறாள் என்பது தெரியாமல் அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணோ மகளுக்கு முத்தம் கொடுத்து அரபியில் ஏதோ சொன்னாள். உண்மையில் அவள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் இருக்கலாம் இருப்பினும் குழந்தையை அருகமர்த்தி பிச்சை எடுத்தது மனசுக்கு வருத்தத்தையே கொடுத்தது.

இதைவிட இன்னொரு விதமாய் பிச்சையெடுக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் வரும்போது காரில் வந்து, காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு இடத்துக்கு நடந்து போய் பிச்சை எடுப்பார்கள். கடை கடையாகவும் போவதுண்டு. ஒரு குறிப்பிட்ட நேரம் பிச்சை எடுத்தபின் மீண்டும் தங்கள் காருக்குப் போய் கிளம்பிப் போய்விடுவார்கள். பணக்காரப் பிச்சைக்காரர்களோ என்னவோ… யார் கண்டா.?

நண்பர்களுடன் பேசிச் கொண்டிருக்கும் போது ஒரு பெண் எங்களைக் கடந்து போனார். கொஞ்சத் தூரம் போனவர் திரும்பி வந்து ‘நீங்க தமிழா..?’ என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னதும் அவர் வேறொரு இடத்தில் இருந்து தோழியை நம்பி வந்து, அவரால் ஏமாற்றப்பட்டேன் என்று ஒரு கதையைச் சொன்னார். அதன்பின் பேசியதில் நிறையச் சொன்னார். பேருந்துக்குக் கூட கையில் பணமில்லை என்றார். நண்பர் பேருந்து நிலையத்தில் விடுகிறேன். அங்கிருந்து பஸ் ஏறிப் போங்க என்றதும் சரி என்றார். முன்னுக்குப் பின் முரணாகவே பேசினார். நாங்கள் விபரத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் காரை எடுத்துக் கொண்டு வந்து கூட்டிச் சென்றார். காரில் போகும் போது என்னைக் காவல் நிலையத்திற்கு கூட்டிப் போங்க என்று சொல்லவும், இதென்னடா உதவி செய்ய வந்து உபத்திரவமாப் போச்சே என நினைத்த நண்பர், எனக்கு வேலை இருக்குங்க. இந்தா பேருந்து நிலையத்துக்குள்ளே காவல் நிலையம் இருக்கு. போய் பாருங்க… உங்க பிரச்சினையைச் சொல்லுங்க எனச் சொல்லிவிட்டு வந்தார். எங்களிடம் வந்து தேவையில்லாம மாட்டிக்கத் தெரிந்தேன் எனப் புலம்பினார்.

அதன்பின் டீ குடிக்கலாம் என ஒரு மலையாளி கடைக்குப் போனோம். டீயை வாங்கிக் கொண்டு காருக்கு அருகில் நின்று பேசிக் கொண்டே குடித்தோம். அப்போது ஒருவர் வந்தார், எங்களைப் பார்த்ததும் ஒரு பையைத் திறந்து மாத்திரைகளை எடுத்துக் காண்பித்து, உடம்புக்கு முடியலை, மாத்திரை சாப்பிடுறேன். தீர்ந்து போச்சு; இப்ப வாங்கணும் நூறு திர்ஹாம் வச்சிருந்தாக் கொடுங்க என இந்தியில் கேட்டார். அவரைப் பார்க்கும் போது உடம்பு முடியாதவரைப் போலெல்லாம் இல்லை. இப்படி பலரிடம் கேட்க, ஒரு சிலர் பணம் கொடுக்கலாம், அது அவருக்கு அன்றைய தினச் செலவுக்குப் போதுமானதாகவும் இருக்கலாம்.

நண்பர் அவரிடம் என்ன ஏது என விசாரிக்கும்போது அந்தக் கடையில் வேலை பார்க்கும் மலையாளிப் பையன் இவர் தினமும் மாத்திரை வாங்குறார் எனச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போனான். உடனே எங்களின் நண்பர் இப்பத்தான் ஒருவருக்கு உதவிட்டு வந்தோம். இன்னைக்கு இது போதும் என்று சொல்ல, அவர் ஏதோ திட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

இங்கே எல்லாக் கட்டிடங்களிலும் – பெரும்பாலும் அலுவலகங்கள் இருக்கும் கட்டிடங்கள் – கழிப்பறைகளை அடிக்கொரு தரம் சுத்தம் செய்ய அதற்கென பணியாட்கள் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலும் இந்தியர்களும் (குறிப்பாக தமிழர்கள், தெலுங்கர்கள்) வங்கதேசத்தவர்களுமே இந்த வேலைக்கு வருவார்கள். பார்க்கும் வேலைக்கு வாங்கும் சம்பளம் ரொம்பக் குறைவுதான். அவன்தான் சுத்தம் செய்கிறானே என்ற நினைப்பில் பாத்ரூமைப் பயன்படுத்துபவர்கள் அலங்கோலம் செய்து விட்டுப் போவதைப் பார்க்க வேண்டுமே… சுத்தம் செய்பவனும் மனிதன் தானே என்ற எண்ணம் ஏற்படுவதேயில்லை.

அதுவும் சிலர் பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் விடுவதே இல்லை. பாகிஸ்தானிகளோ வெஸ்டர்ன் டாய்லெட்டில் மேலே ஏறிதான் இருப்பார்கள். சரி இருந்துட்டு சுத்தம் பண்ணிட்டு போவானுங்களான்னா அதுவும் இல்லை.வயல்ல நாத்துப் பறிச்ச மாதிரியே போட்டு வச்சிருப்பானுங்க… அதைச் சுத்தம் செய்பவர்கள் நம்மிடம் எப்படிப் போட்டிருக்காங்க பாருங்க எனச் சொன்னாலும் தனது பணி இதுதானே என்பதாய் சுத்தமாகத் துடைத்து எடுப்பார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்து பார்க்கும் போது மீண்டும் அதே போல் தொளி அடித்துப் போட்டு வைத்திருப்பார்கள்.

இங்கு எல்லா அலுவலகத்திலும் ஒரு சிறிய கிச்சம் – டீ, காபி போட, சாப்பாட்டை சூடு பண்ண – இருக்கும். நாங்க எல்லாருமே அதைப் பயன்படுத்துவோம். சாப்பிட்ட பாத்திரங்களை அங்குதான் கழுவுவோம். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு நண்பரும் சாப்பிட்டு விட்டுப் பாத்திரங்களை அங்குதான் கழுவுவார். அவர் அந்தச் சிறிய அறைக்குள் வந்து சென்றார் என்பதை அந்த அறையெங்கும் சிதறிக் கிடக்கும் தண்ணீர் சொல்லும். ஒவ்வொரு நாளும் ஆபீஸ் உதவியாளராய் இருக்கும் நம்ம ஊரு அண்ணன் ஒருவர், பாருங்க… அவனுங்கதானே சுத்தம் பண்ணுறானுங்கன்னு நினைப்பாரு போல எனப் புலம்புவார். சுத்தம் பண்ணுபவன் இருக்கானுல்ல பண்ணிக்கட்டும் என்ற மனநிலை இவரைப் போன்றோருக்கு. இவர்கள் தங்கள் வீடுகளில் இப்படிச் செய்வார்களா என்றால் சத்தியமாகச் செய்யமாட்டார். ஏன்னா அது அவர்களின் வீடு அல்லவா…!

இதேபோல் தற்போது எங்கள் அலுவலகத்திற்கு வந்திருக்கும் ஒரு பாலஸ்தீனி, மதியம் சாப்பிட்டு விட்டு கிச்சனில் வந்து வாய் கொப்பளிக்க ஆரம்பித்தான். அது காபி, டீ சாப்பிட்ட கோப்பைகள், தட்டுகள் கழுவ பயன்படுத்துவது அதில் வாய் கொப்பளித்துத் துப்பலாமா என்ற எண்ணம் துளி கூட அவருக்கு இல்லை. நாம சொன்னால் நீ யார் சொல்ல என்று சொல்லுவார்கள். இதே சில அரபி பெண்கள் சொன்னதும் இனி இங்க கழுவலை என்று சொன்னவன், இப்போதெல்லாம் சாப்பிட்ட பாத்திரத்தை ஆபீஸ் பாயிடம் கழுவக் கொடுத்து விடுகிறார். நாம் சாப்பிட்ட பாத்திரத்தைக் கழுவ அவர்கள் அங்கு வேலைக்கு வரவில்லையே, டீ, காபி கொடுக்க… பிரிண்ட் கொடுத்ததை எடுத்துக் கொடுக்க… சின்னச் சின்ன வேலைகள் பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள் என்பது கூட தெரியாதவனல்ல அவன் என்றாலும் நான் இஞ்சினியர், இவர்கள் பாத்திரம் கழுவுபவர்கள் என்ற எண்ணம். இரு நாட்களுக்கு முன் ஒரு அரபி பெண் ஆபீஸ் பாய் இருவரிடம் அவன் கழுவ மாட்டானா..? அவன் தின்ன பாத்திரத்தை நீங்க ஏன் கழுவுறீங்க…? எனக் கத்திக் கொண்டிருந்தது என்றாலும் இன்று வரை சாப்பிட்ட கழிவுகளைக் கூட குப்பைக் கூடையில் போடாமல் அப்படியேதான் வைத்துச் செல்கிறான். அதைக் கழுவித் துடைத்து அவனிடம் கொண்டு போய்க் கொடுப்பவருக்கு அவனின் அப்பா வயது. நானுமே அவரைப் பல முறை திட்டியிருக்கிறேன் இந்த வேலைகள் எல்லாம் பார்க்க முடியாது எனச் சொல்லுங்கள் என.

நான் முன்பு தங்கியிருந்த அறை இருந்த கட்டிடத்தில் ஒரு மலையாளி ஹோட்டல். அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் வேலை செய்கிறார். ஆரம்பத்தில் அவரும் மலையாளி என்றுதான் நினைத்தேன். தினம் செல்வதால் அவருடன் பழக்கம் ஏற்பட, அவர் வேலூர்க்காரர் என்பதை அறிய முடிந்தது. ஒரு ஆள், எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். மிகவும் சுறுசுறுப்பானவர். ஊருக்குப் பேத்தியைப் பார்க்கப் போறேன் என்று சொன்னபோது அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஊருக்குப் போய் திரும்பி வந்து விட்டார். இப்போதும் பம்பரமாக சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஊர்ல போய் இருக்கலாமே என்று கேட்டால் அங்க இருந்து என்ன பண்ண… இன்னமும் கடனிருக்கு; ஏதாவது ஒரு செலவு வந்துருது என்று சொல்லிக் கொண்டே வேகவேகமாக சுத்தம் பண்ணி கொண்டு இருப்பார். அந்த ஹோட்டல் அவரால்தான் ஓரளவுக்கு ஓடியது என்றாலும் திடீரென அதை விட்டு விட்டு – கடன் அதிகமானதால் – ஊருக்கு ஓடிவிட்டான் மலையாளி. இவர் என்ன செய்வதெனத் தெரியாது நின்று நண்பர்கள் உதவியால் மற்றொரு கடையில் வேலைக்குப் போனார். இப்போது கனடாவில் இருக்கும் மகளுடன் மகிழ்வாக வாழ்வைக் கழிக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்னர்  பார்த்த நிகழ்வு இது. நானும் நண்பரும் பேருந்துக்கு நிற்கும் இடத்துக்கு அருகில் ஒரு பிலிப்பைனி வந்து நிற்பதும், பெண்களுக்கான சிகரெட் இங்கு எல்லாக் கடைகளிலும் விற்பனையில் இருக்க, சில ஆண்களே பெண்கள் சிகரெட்டை வாங்கிப் பிடிக்கும் போது இந்தப் பெண்ணோ ஆண்கள் சிகரெட்டை வாயில் வைத்து ஊது ஊது என்று ஊதுவாள். தள்ளி வாங்க விட்டா புகையால நம்மளைக் குளிப்பாட்டிருவா போலன்னு நண்பர் சிரித்துக் கொண்டே சொல்வார். அதே இடத்தில் சற்று தள்ளி கையில் சிகரெட்டுடன் ஒரு பெண்ணும் (ஆந்திரா) மூணு பசங்களும் அடிக்கும் லூட்டி இருக்கே; அப்பப்பா எல்லாரும் அவர்களைத்தான் பார்ப்பார்கள். நம்ம ஊரா இருந்தா என்ன தங்கச்சி இந்த லாத்துதுன்னு கொமட்டுல ரெண்டு குத்துவிடுவாங்க… இங்க எல்லாம் சகஜம்தானே… அதனால் அவங்க ஆட்டம் நிற்பதே இல்லை.  இப்போது எல்லாரும் பல வகை நறுமணங்களுடன் விற்கும் மின்னணு சிகரெட்டுகளை வாங்கி, ஊத ஆரம்பித்துவிட்டார்கள்.

இங்கு மலையாளியுடன் வேலை பார்த்தாலும் எகிப்துக்காரனுடன் வேலை பார்ப்பது என்பது மிகவும் சிரமம். அவர்கள் வேலையே பார்க்கமாட்டார்கள். வேலை பார்ப்பவனை ஏறி மேய்வதும், போட்டுக் கொடுத்தலுமே அவர்கள் வேலை. அப்படிப்பட்ட கூட்டத்தில் முன்பு ஒரு நண்பருடன் வேலை செய்தேன். அவன் வேலை செய்யமாட்டான் என்றாலும் நமக்கு மிகவும் நெருக்கமாய், புதிய வேலையைச் செய்யச் சொல்லி, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பான், மேலும் நமக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்பவனாகவும் இருந்தான். அதன் பின்னர் அதே போல் எகிப்து நண்பர் ஒருவருடன் வேலை பார்த்தேன். அவர் மிகவும் நல்லவர்… இவர் எகிப்துக்காரரா என்று நினைக்கத் தோன்றும். வேறு கம்பெனிக்குப் போனாலும் இப்போது என்னுடன் தொடர்பில் இருக்கிறார். இப்ப புதிதாய் ஒருத்தனும் எங்க புராஜெக்ட்டுக்கு வந்திருக்கான். இவன் நான் எகிப்துக்காரன்டா என வந்த உடனே நிரூபிச்சிட்டான்.

இப்படிப் பல முகங்களை – மனிதர்களை – சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். இப்படியான நிறைய முகங்களை நமது பயணங்களில் சந்திக்கலாம். நம்முடன் நிறைய விசயங்கள் பேசிக் கொண்டே வருவார்கள். அதன் பின் அவருக்கும் நமக்கும் தொடர்பே இருக்காது என்றாலும் அந்த முகம் மறக்கவே மறக்காது. அப்படித்தான் இங்கே நான் பேசிய மனிதர்களுடைய முகம் என்னால் இன்னமும் மறக்க முடியாத முகங்களாய்…

000

நான் பரிவை சே,குமார், நித்யா குமார் என்ற பெயரில் முகநூலில் இருக்கிறேன்.

கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் விருப்பம். இதுவரை எதிர்சேவை, வேரும்

விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு

என்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும்

எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன்

பொற்கிழி விருது பெற்றிருக்கிறேன்.

The post முகங்கள் first appeared on Nadukal.

  •  

நாம தான தைரியமா வளர்க்கணும்!

கோடை விடுமுறை! ஒரு மாதம் பள்ளி விடுமுறை. நண்பர்கள் சேது, கோபி மற்றும் சேகர் மூவருக்கும் பொழுது போவதே மிகக் கடினமாக இருந்தது.

அவர்களுடைய பாரதி தெருவில் காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை கண்ணாம்பூச்சி அல்லது ஓடிப் பிடித்து விளையாடுவார்கள்.

மட்டையை எடுத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தான் அவர்களுக்கு ஆசை. ஆனால், ”தெருவில விளையாடதீங்க பசங்களா” என யாராவது கத்துவார்கள்.

உடனே சேதுவின் அம்மாவோ அல்லது சேகரின் அப்பாவோ வெளியே வந்து அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று விடுவார்கள்.

“நேத்திக்கி கடைத்தெருவில பாபுவைப் பாத்தேன்டா. அடுத்த வருஷம் அவன் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிள்ல தான் வருவானாம்”என்றான் கோபி.

“அவன் தான் அரையாண்டு விடுமுறை சமயத்திலேயே சைக்கிள் கத்துகிட்டானே! அவங்க அக்கா கத்து கொடுத்தாங்களாம்” சேகர்.

“பசங்களா, உள்ள வாங்க! தெருவில வேலைக்கி போறவங்க வண்டில்லாம் வரும். உள்ள வந்து விளையாடுங்க” சேதுவின் அம்மா.

சேதுவின் வீட்டுத் தோட்டத்தில் சிறிது நேரம் பந்து விளையாடினர்.

“சரிடா!  நா வரேன். சாயந்திரம் எங்க சித்தி வீட்டுக்குப் போறேன். பத்து நாள் கழிச்சு தான் வருவேன்” என விடை பெற்றான் கோபி.

“தினமும் ஒரு பக்கம் கையெழுத்து பயிற்சி எழுதணும். ரெட்டை வரி நோட்டு வாங்கணும்” என்றான் சேது.

“ஆமா! நான் இப்போ போய் வாங்கிட்டு வரப் போறேன்” என்று சொல்லி பையில் இருந்த ஐம்பது ரூபாய் தாளைக் காட்டினான் சேகர்.

“இருடா! நானும் வரேன்” என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் கெஞ்சி பணம் வாங்கி வந்தான் சேது.

“ஜாக்கிரதையா ஓரமா போயிட்டு, ஓரமா வரணும்.”

“சரிம்மா! எப்பவும் பள்ளிக்கூடத்துக்கு போற பாதை தான! தைரியமா இரு! சேகரோடத் தான் போறேன்”.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் தெருவில் நல்ல இணைய வசதியும் கிடையாது. அவர்கள் வீடுகளிலும் நல்ல கைபேசியோ அல்லது நல்ல தொலைக்காட்சிப் பெட்டியோ கிடையாது. அந்தத் தெருவில் விளையாட ஒரு சிறு மைதானம் கூடக் கிடையாது.

வழக்கம் போல அவர்கள் தெரு முனை வரை கோலி விளையாடிக் கொண்டே சென்றார்கள்.

சைக்கிள் கடைக்கு அருகில் தான் நோட்டுபுத்தகம் வாங்கும் கடை!

அவர்கள் கால்கள் தாமாகவே சைக்கிள் கடை முன் நின்றன.

“பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சே! எங்கடா வந்தீங்க?” என்றார் சைக்கிள் கடைக்காரர்.

பதில் ஒன்றும் சொல்லாமல் சைக்கிள்களைப் பார்த்துக் கொண்டு இருந்தனர் நண்பர்கள் இருவரும்.

”கடை முன்னாடி நிக்காதீங்க! போங்க போங்க!“ என விரட்டினார் கடைக்காரர்.

“அவர் சைக்கிள் வேணும்”சேகர்.

“ஒரு மணி நேரத்துக்கு பத்து ரூவா”

“அன்னிக்கி ஒரு ரூவான்னு சொன்னீங்க”

“அது அன்னிக்கி! இது இன்னிக்கி”

சேகர் தன் பையில் இருந்து ஐம்பது ரூபாயை எடுத்தான்.

“சைக்கிள் ஓட்டத் தெரியுமா?”

“தெரியும், தெரியாது” ஓரே நேரத்தில் இருவரும் பதிலளிக்க, ”சரி, இன்னொரு இரனூறு ரூவாயக் கொடுத்துட்டு எடுத்துட்டுப் போங்கடா” என்றார் கடைகாரர்.

”அங்கிள், நாங்க சைக்கிள் வாடகைக்குத் தான் கேக்குறோம். வாங்க இல்ல” என்றான் சேகர்.

“ஆஹா! வந்துட்டாங்கடா மைசூர் மஹாராஜா பேரங்க! இருநூத்து ஐம்பது ரூவாயில சைக்கிள் வாங்க! போங்கடா” என விரட்டினார் கடைக்காரர்.

அப்போது நளினமாகச் சிரித்தபடி ஒரு இளைஞன் கடைக்குள் நுழைந்தான்.

“என்ன மாமா! சின்ன பசங்களை விரட்டிகிட்டு இருக்கீங்க” எனக் கேட்டான்.

“வாப்பா பிரபு! இந்தப் பசங்களுக்கு சைக்கிள் கத்துக்கணும். அவர் சைக்கிள் கேக்குறாங்க!”

“ம்ம்… சரியான உயரம் தான்! கால் எட்டும்! கொடுக்கலாமே!”என்றான் பிரபு.

“நீ ஊருலேந்து வந்துருக்க. உனக்கு இதெல்லாம் புரியாது. இவனுக சைக்கிள அக்கு வேறா ஆணி வேறா ஆக்கிட்டா யாரு ரிப்பேருக்குக் காசு தருவா? இல்ல… இவனுகளே கீழே விழுந்து கால கையை உடைச்சுகிட்டா… யாரு பதில் சொல்றது. சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா குடுக்கலாம்”.

“சைக்கிள் குடுத்தா ஓட்டக் கத்துக்குவோம்” என சேகர் சொல்ல, பிரபு சிரித்துவிட்டான்.

“அப்போ கத்துக்கிறதுக்கு சைக்கிள் தர மாட்டீங்களா?” சேது.

“பெரியவங்க யாராவது சொன்னா தான் தருவேன்”

“மாமா, நான் சொல்றேன், தாங்க மாமா!”

“பிரபு, புரியலயா உனக்கு! சின்னப் பசங்கடா! தனியா எங்கனா போயி…”

“மாமா! நானும் லீவுல சும்மா தான இருக்கேன். நானே அவங்களோட போறேன். இந்தாங்க இருநூறு ரூவாய், வாடகை எவ்வளவு? தைரியமா குடுங்க நான் பாத்துக்கறேன்” என்றான் பிரபு.

இருநூறு ரூபாய் தாளும், பிரபுவின் நம்பிக்கையான பேச்சும் கடைக்காரரை சைக்கிள் தர முடிவு செய்ய வைத்தது.

“பாத்துப்பா! உனக்காகத் தான் குடுக்கறேன்”என்றார்.

“தேங்ஸ் அண்ணா!” என்றனர் சேதுவும் சேகரும்.

”வடக்குத் தெருவில ரெண்டு ஆலமரம் இருக்குல்ல அங்க போயிரலாம். வண்டி எதுவும் வராது. கல், மேடு பள்ளம் இருக்காது.” என்றபடி அவர்களை அழைத்துச் சென்றான் பிரபு.

“யார் கூப்பிட்டாலும் இப்படி வந்துடுவீங்களாடா!” பிரபு.

“உன்னத் தெரியுண்ணே! நல்லாவே தெரியும். மூணாம் வருஷம் நம்ம பள்ளியில பரிசு வாங்கினயே!” சேகர்.

படிப்பிலும் விளையாட்டிலும் படு கெட்டி பிரபு. சேதுவும் சேகரும் படிக்கும் பள்ளியின் முன்னாள் மாணவன்.

“ஒரு காலை அந்தப்பக்கம் போடு. பெடல்… பெடல்… காலை வை… அழுத்து! ஊம்! இன்னும் வேகமா! ஹேண்டில பிடி…”

பிரபுவின் கட்டளைகள் தெளிவாக இருந்தன. சிறுவர்கள் இருவரும் நன்றாகவே கற்றுக் கொண்டனர்.

சைக்கிள் கற்றுக் கொண்டு விட வேண்டும் அவர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

“முதுகை நிமித்தி உட்காரு!”

ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

“சரி! வாங்க போகலாம். சைக்கிள விட்டு இறங்கு சேகர்! நல்லா கத்துக்காம ரோட்ல ஓட்டக் கூடாது.”

இறங்கும் போது, சேகர் துள்ளிக் கொண்டு குதித்தான். சைக்கிளோடு சரிந்து விழுந்து, காலில் சில சிராய்ப்புகள்!

பிரபு பக்கத்தில் ஒரு கடையில் தண்ணீர் வாங்கி காயத்தை கழுவி விட்டான். இருவருக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தான்.

“தேங்ஸ் அண்ணா!” என சேதுவும் சேகரும் சொல்லிய போது தேநீரின் தெம்பும் அதில் தெரிந்தது.

“ஏண்டா! ஒரு ஒரு பைசாவையும் பாத்து பாத்து செலவு பண்ணிகிட்டு இருக்கேன். ஐம்பது ரூவா குடுத்து விட்டா, பத்து ரூவாய்க்கு சைக்கிள் விடுவியா? கீழே விழுந்து பெருசா அடி பட்டா… வரட்டும் உங்க அப்பா…“ சேகரின் அம்மா அடிக்காத குறைதான்.

மறுநாள் காலை .

“நா தர மாட்டேன் தான்யா சொன்னேன். கேளுங்க உங்க பசங்களையே! அந்த பிரபு தம்பி உறுதி குடுத்ததாலத் தான…” எனக் கடைகாரர் தன்னிலை விளக்கம் தந்து கொண்டு இருந்தார்.

“அது சரி, விழுந்து வாரி, அடிபட்டா… நீ தருவியா ஆஸ்பத்திரிக்குப் பணம்! இல்ல அந்த பிரபு வருவானா?” படபடத்தார் சேகரின் அப்பா.

”அண்ணா!” என சேகர் குரல் கொடுக்க, “அதோ வந்துட்டான் பிரபு! அவன்கிட்டயே பேசுங்க” என கடைக்காரர் சொல்ல, சேகரின் அப்பா ஆக்ரோஷமாகத்த்தான் திரும்பினார்.

ஆனால், பிரபுவின் புன்னகையும் வசீகரமும் கம்பீரமும் அவரை ஈர்த்தது.

குரலைத் தாழ்த்தி, “என்ன தம்பி!” என்றார்.

பிரபு அவர் கைகளைப் பற்றிக் குலுக்கினான்.

“ஐயாம் பிரபு! சேகர் ரொம்ப சூட்டிகையான பையன் சார்! “

“சந்தோஷம் “ உண்மையில் பையனைப் பற்றிய பாராட்டு சந்தோஷத்தைக் கொடுத்தது., “நீ..ங்க என்ன படிக்கீறீங்களா?”

“ஆமாம் சார், சென்னையில எம்.ஐ.டி ல படிக்கிறேன்.”

“அப்பா! அண்ணன் எங்க ஸ்கூல்ல ஃபுட்பால் டீம் கேப்டனா இருந்தாரு!”

”சேகரும் பிரமாதமா வருவான். என்னமா சொல்றத டக்குன்னு புரிஞ்சுக்கிறான்.”

“ஆனா அவன் கொஞ்சம் பயந்த சுபாவக்காரன்” என்றார் சேகரின் அப்பா.

“யாருக்கு பயம்? அவனுக்கா? அப்படி பயப்படுறவன் மாதிரி தெரியல்லையே ! பெரியவங்க முன்னால கொஞ்சம் பயபக்தியா, அடக்க ஓடுக்கமா இருப்பானாருக்கும். நல்ல தைரியசாலி தான்” என்றான் பிரபு. 

“இப்பக் கூட பாருங்க! கீழே விழுந்து தான வாரியிருக்கான். ரோட்டில விழுந்துடுவான்னு பயம்….” சேகரின் அப்பாவை முடிக்கவிடவில்லை பிரபு.

“நாம தான தைரியமா வளர்க்கணும். பயப்படாம இருக்கக் கத்துத் தரணும்.”

பிரபுவின் புன்னகையும் நம்பிக்கையும் சேகரின் அப்பாவுக்குத் தொற்றிக் கொண்டது.

கடைக்காரரும் இணைந்து கொண்டார். ”இந்த வயசில சைக்கிள் கத்துக்கலேன்னா எப்படி? கால் நல்லா எட்டுது. அப்புறம் என்ன?” என்றார்.

“இல்லப்பா! யார் அவனோட தினம் ஓடறது?”

“அதான் நான் இருக்கேனே! இன்னும் இருபது நாள் இங்கதான் இருப்பேன்” பிரபு.

விடுமுறை முடிவதற்குள் சேது, சேகர் மட்டுமல்ல, அவனது பள்ளி மாணவர்கள் அநேகம் பேர் பிரபுவின் தயவில் சைக்கிள் கற்றுக் கொண்டார்கள். மாலை வேளைகளில் ஃபுட்பாலும் விளையாடினார்கள்.

தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்கள் கண்களில் மின்னின. 

000

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

The post நாம தான தைரியமா வளர்க்கணும்! first appeared on Nadukal.

  •