Reading view

சாரி டமில் மதர்

இவர், இவரது காமர்ஸ் ஆசிரியரால் 'படிக்கிற, வாசிப்பில் ஆர்வமுள்ள பெண்' என 'விளக்கும் வெளிச்சமும்' நூலின் இலவசப் பிரதியை அனுப்பும்படி பரிந்துரைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளில் ஒருவர். பிகாம் முதல் ஆண்டு. (17 வயது இருக்குமா) 

எனவே, புத்தகம் அனுப்பிவிட்டு, இவரையும் இவரைப்போல இலவசப் புத்தகம் பெற்றவர்களையும் FREE BOOK என்று பெயரிட்டு  ப்ராட்காஸ்ட் பட்டியலாக்கிக்கொண்டேன்.

இவர்களுக்கு இன்று மெட்ராஸ் பேப்பரில் வெளியான என் கதையின் சுட்டியைக் காலை 6:42க்கு அனுப்பிவைத்தேன். 

ஓசிங்கறதுக்காகதான வந்தோம் என்பதைப்போல, FREE BOOK கோஷ்டிகளில் பதில் போட்டதே ஓரிருவர்தான். அதிலொன்று இந்தப் பெண்.

Okei sir 9:11 AM

Story super sir 9:15 AM 

என்று வந்ததும் என்னது 1700+ வார்த்தைகள் கொண்ட கதையை நான்கே நிமிடத்தில் படித்துவிட்டதா என்று மிரண்டுபோனேன். பிறகுதான் உறைத்தது கதை முழுதாக வெளியாகியிருக்காதே என்பது. அப்புறம் எப்படி இந்தப் பெண் சூப்பர் என்கிறது என்று, 

மெட்ராஸ் பேப்பர் சந்தாதாரரா நீங்க 11:20 AM 

எனக் கேட்டேன் 

No sir 11:48 AM 

படிக்காமையே ஸ்டோரி சூப்பர் சாரா 12:32 PM 

என்று சொல்லிவிட்டு ஒரு வேளை நாம் அனுப்பிய புத்தகத்தைப் படித்துவிட்டு அதற்கு பதிலளித்திருக்குமோ. அதை நாம் தான் தவறாக ஓய்வுபெற்ற... கதைக்கு என்று எடுத்துக்கொண்டுவிட்டோமோ என்று நினைத்து,

நீங்க படிச்சுட்டேன்னு எதைச் சொல்றீங்க 12:53 PM 

என்று கேட்டு வைத்தேன். 

இதற்கிடையில் பாராவுக்கு போன் அடித்தால், 

'இப்ப பேச முடியாது. சாதம் வெச்சுக்கிட்டு இருக்கேன்' என்றார். 

'கதையை முழுசா போட்டுட்டீங்க' என்று பதறினால், 

'நீங்க லாகின்ல இருப்பீங்க. லாக் அவுட் ஆகிட்டுப் பாருங்க' என்றார்.

'இல்ல எனக்கு முழுசா தெரியுதே' என்றேன், பதற்றத்தில் லாகின் ஆகியிருப்பதை கவனிக்காமலே. 'நீங்க கம்பூட்டர்ல பாக்கறீங்க. நான் மொபைல்ல சொல்றேன்' என்றதோடு நில்லாமல் என் தரப்பை நிரூபிக்க படங்களாக எடுத்து அவருக்குப் போட்டுத் தாக்கினேன். 

அவரோ, 'அப்படியெல்லாம் தனித்தனியா கிடையாது. எல்லாத்துலையும் ஒரே மாதிரிதான் தெரியும். கோளாறு உங்க கிட்டதான். எங்கிட்ட சரியாதான் இருக்கு. மூணு பாராதான் தெரியுது' என்றார். 

Tabல் போய் லாகின் ஆகி, 'இங்கையும் தெரியுது பாருங்க' என்று டேபோடு ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டுத் திருப்பித் தாக்கினேன்.

'படிச்சா படிச்சிட்டுப் போகட்டும். அதனால என்ன இப்போ. இப்ப என்னால எதுவும் பண்ணமுடியாது. அப்பறம் பாத்துப்போம்' என்று சொல்லிவிட்டார் அவருக்கிருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளில். 

அப்புறம் ஹவ்ஸ் எம்டி கொஞ்சம் பார்த்துத் தூங்கி எழுந்ததும் லாக் அவுட் பண்ணிவிட்டு லாகின் பண்ணாமல் பார்த்தால், மூன்றாவது பத்தி முடிவில்' முழுவதும் வாசிக்க...' இருந்தது. 

பாராவுக்கு, 

சாரி. உங்க சமையலைக் கெடுத்துட்டேன். லாகின் ஆகிப் படிச்சா முழுசாதான் தெரியும். தெரியலேன்னாதான் புகார் பண்ணணும். தெரியுதேனு கம்ப்ளெய்ண்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்😂😂😂 1:03 PM 

என்று வாட்ஸப் செய்தேன். 

பதிலுக்கு பாரா 😡1:19 PMக்கு போட்டுக் கடுப்பைக் காட்டினார். 

சாப்பிட்டுவிட்டு மூன்று தோட்டங்களுக்கும் நீரூற்றிவிட்டு வந்தால் செல்வமுரளி, 

இப்போது சரியாக இருக்கிறது. செக் பண்ணிவிட்டேன் 1:35 PM

💐சாரி💐

இது முழுக்க முழுக்க என் சொதப்பல் மட்டுமே 1:35 PM 

பதிலுக்கு அவர், 

இல்லை சார் இந்த விழிப்புணர்வு. இருந்தால் மட்டுமே நம்மால் நிற்க முடியும்🙏🏻1:37 PM 

என்றார்.

திரும்ப ஹவ்ஸ் எம்டி கொஞ்சம் நெட் கொஞ்சம் என மேய்ந்து வெட்டி முறித்த களைப்பில் தூங்கி எழுந்திருக்கும்போது மணி 8 PMஐ நெருங்கிக்கொண்டிருக்கவே, சஸ்கா மஸ்கா பிஸ்கெட் பாக்கெட்டை காலி பண்ணிவிட்டு காபி பண்ணிக்கொண்டு ஹாலில் உட்கார்ந்து போனை பார்த்தால், 

நான் அனுப்பிய கதையின் லிங்கை போட்டு 

This one sir 6:55 PM என்று சொல்லியிருந்தது மதுரை தியாகராயர். 

'முழுவதும் வாசிக்க...' வரையிலான ஸ்கிரீன்ஷாட்டைப் போட்டு 

இவ்வளவுதான படிச்சிருப்பீங்க 8:02 PM 

என்றேன். 

Yes sir 8:32 PM 

என்று பதில் வந்தது. 

இது சும்மா சாம்ப்பிள். ஜஸ்ட் மூணு பாராதானே. இதைப் படிச்சிட்டா கதை படிச்சிட்டேன்னு சொல்றீங்க😂😂😂

உங்களுக்கு நான் அனுப்பின புக்கு புரிஞ்சிதா 8:36 PM 

Innu complete pannala sir 8:38 PM 

Going on 8:38 PM 

என்ன புக்கு 8:38 PM 

But kjm confuse aa iruku but I'm reading 8:38 PM 

Vilakum velichamum 8:39 PM 

வாசிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் என்று ஒரே ஒரு பையனைத் தவிர பட்டியல் முழுக்கப் பெண்கள் பெயர்களாய்க் கொடுத்துமாணவர்களைப் படிக்க ஊக்குவித்துக்கொண்டிருப்பதாய் கூறிக்கொண்டு - 'வாசிப்பை நேசிப்போ'மில் பாராவின் பதிவைப் பார்த்து இலவசத்திற்கு வந்த அந்தக் கல்லூரி ஆசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் - மூன்று பத்திகளைப் படித்துவிட்டுமுழுவதும் வாசிக்க என்பதுகூடப் புரியாமல் கதையைப் படித்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்ணை பட்டியலில் சேர்த்திருக்கிறீரே பட்டியல் மொத்தமும் இந்த அளவில்தான் படிப்பு வாசனை இருக்கிறதா என்று கேட்க. 

வாசிப்புப் பழக்கம் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. வாசிக்கிற பழக்கம் உள்ளவர்களில்கூட எல்லோருக்குமானதில்லை இலக்கியம்.

'படிப்பதில் ஆர்வமுள்ளவர்கள்என்று ஆசிரியர், (அவரும் வணிகவியல் பேராசிரியர் தமிழ்ப் பேராசிரியர் அன்று என்பது முக்கியம். புலவர் பண்டிதர்களாக இருந்த காலத்திலிருந்தே தமிழைய்யாக்களுக்கும் நவீனத்துக்கும் எந்த சம்பந்தமும் இருந்ததில்லை. அப்புறம்தானே தற்காலத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு நவீன இலக்கியத்தின் வாசனை தெரிய) தேர்ந்தெடுத்த மாணவியே முழுவதும் வாசிக்க... என்று போட்டிருந்தும் இப்படி மூன்று பாராக்களையே முழு கதையாக  நினைப்பவராக இருந்தால், அஜித் விஜய் உதய்னா திமுக திராவிடம் பெரியார் பகுத்தறிவு என்று பேஸ்புக்கில் திரிந்துகொண்டிருக்கும் பசங்களை என்ன சொல்வது. 

இன்னும் பத்திருபது ஆண்டுகளில் புத்தகம் என்கிற வஸ்து இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

சாரி டமில் மதர்.

  •  

மீனாட்சி திருக்கல்யாணம்

ஒரு நண்பர்கள் சந்திப்பின் போது, புதியதாக அறிமுகமான ஒருவர், "நீ பேசறதைக் கேட்டா அப்படியே மதுரைக்காரன் பேசறதைப் போலவே இருக்கு." என்றார். இத்தனைக்கும் மதுரையில் வாழ்ந்த காலத்தில் அந்த வட்டார வழக்கின் சுவடு அவ்வளவாக என் மீது படிந்திருந்ததாக நினைவில்லை. நாம் வளர்ந்த சூழலின் இயல்புகள் எங்கோ நம் மீது ஆழமான தாக்கங்களை விளைவிக்கின்றது. நாம் அச்சூழலிலிருந்து விலகி செல்லச்செல்ல நம் மனது அதன் மீதான பிடிப்புகளை இறுக்கிக் கொள்கின்றன போலும்.

அண்மையில் நடந்தேறி சித்திரை திருவிழா உற்சவங்கள் நமது நிலத்தின் பண்பாட்டு மையத்தை, நமக்கு அறிமுகமான வரலாற்று தகவுகள் அல்லது புராண உருவாக்கங்களைக் கொண்டு மேலும் நாம் ஆய்ந்தறிய உதவுகின்றன.



மூன்று தெய்வ வழிபாடு:

மீனாட்சி திருக்கல்யாண உற்சவத்தை ஒட்டி, கொண்டல் வண்ண கூடலழகரும், தழல் வண்ண சொக்கநாதரும் நின்றிருக்க இடையே மரகத வண்ணத்தில் மீனாட்சி இருக்கும், சிற்பம் ஒன்று iconographyல் முக்கியத்துவம் பெறுகிறது . இந்த மூன்று தெய்வ சிற்பமானது இந்திய நிலத்தின் பல பகுதிகளை ஒன்றிணைக்கும் ஒரு பண்பாட்டு அடையாளம் எனலாம். அந்தந்த பகுதியில் அதற்கான தொன்ம வரலாறு, பின்புலக் கதைகள் மாறி மாறி வழங்கப்பட்டாலும், வடக்கே பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலிருந்து தெற்கே அண்ணன்மார் ஆலயம் வரை, இருள் வண்ண, ஒளிவண்ண தெய்வங்களுடன் ஒரு பெண் தெய்வம் இடம்பெற்றிருக்கும் மூன்று தெய்வ சிற்பங்களைக் காணலாம்.

தாய் தெய்வ வழிபாடு:


திரிபுரம் எரித்த விரிசடை இறையனார் சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்ததாக சங்க இலக்கியம் கூறுகின்றது. மதுரையைச் சுற்றி சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பற்றி புராணக் கதைகளில் ஒன்றாக அவர் மீனாட்சியை மணம் கொண்ட புராணமும் உண்டு. குமரக்கடவுளின் இரண்டு படைவீடுகள் மதுரையைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. அழகர் மலையில் உறையும் பரமன் தலம், வைணவ திவ்யத்தலங்களில் முக்கியமானது. கடவுள்களுக்கு இடையே இவ்வளவு போட்டிகள் இருந்தும், மதுரையின் அரசுரிமை காலத்துக்கும் மீனாட்சி தாய்க்குத்தான்.

சிலப்பதிகாரம் குறிப்பிடும் கோவில் வழிபாடுகளில் பெண் தெய்வம் சொல்லப்படவில்லை. ஆனால் அதன் முதன்மை நாயகியான கண்ணகி கொற்றவையின் ஒரு வடிவம் என்பதற்கு ஏற்ப, மதுரை நகரை தீயிட்டு அழிக்கிறாள். கண்ணகி எனும் பத்தினி படிமத்திற்கு முன்மாதிரியாக திருமாவுண்ணி எனும் பாத்திரம் சங்கப் பாடல்களில் பாடப்பட்டிருக்கின்றது.

பண்டைய இனக்குழு வழக்கங்களில் தாய் தெய்வ வழிபாடு முதன்மையானதாகவும், உக்கிரமானதாகவும் இருந்திருகின்றன. திரௌபதி, சாமுண்டி, துர்க்கை என்ற பல பெண் தெய்வங்கள் உக்கிரத்தின் உச்சத்திற்கு சென்று தங்களுக்கான பலியினைப் பெற்றுக் கொண்டதை இன்றும் வைபவங்களாகக் கொண்டாடப்படுகின்றன. மீனாட்சியோ பட்டாபிஷேகம் செய்யப்பட்ட அரசியாக எட்டுதிக்கிலும் சென்று வெற்றி கொண்டவள். ஓர் இனக்குழு, தங்களுக்கென கொண்ட காவல் தெய்வத்தின் மூலம் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வது போலத்தான் இந்த திக்விஜயங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

உக்கிர போர்களின் விளைவாக பலி கொள்ளுதலுக்கு மாறாக மீனாட்சியின் திக்விஜயத்தின் முடிவில் சொக்கநாதருடன் திருமணம் ஆகின்றது. பண்டைக்கால தாய்வழிச் சமூகம், தந்தைமை (Patriarchal) சமூகமாக மாறியதை உணர்த்தும் வைபவமாக இந்த திருக்கல்யாண உற்சவத்தைக் கொள்ளலாம்.

வைணவ சமயத்தை முதன்மையாக பின்பற்றிய நாயக்கர்கள் மதுரையை ஆண்ட காலத்தில், மக்கள் பண்பாட்டு தளத்தில் பல சீர்திருத்தங்கள் நிகழ்த்தியதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள். பிறகு நடந்த பல மாறுதல்களுக்கும் நாயக்கர் காலத்தை ஒரு காரணியாக பயன்படுத்துவதும் உண்டு.

அப்படியாக ஒன்றிணைக்கப்பட்ட பல்வேறு சமய வழிபாடுகளுக்கும், புனைந்து கொண்ட புராண கதைகளுக்கும் இடையே மதுரையின் அரசி பட்டம் மட்டும் அன்னை மீனாட்சியை விட்டகலவில்லை.

சாமி மனிதனாதலும், மனிதன் சாமியாதலும்:

அழகர் மலையை விட்டு இறங்கிவரும் சுந்தரராஜ பெருமாள், 'கள்ளர்' உருக் கொள்கிறார். தங்கையின் திருமணத்திற்காக பொருள் கொண்டு செல்வதால், கள்வர்களின் தாக்குதலை சமாளிக்க அந்த உபாயம் என்று அதற்கு ஒரு கதையும் சொல்லப்படுவது உண்டு. அதனால் கள்ளழகர் என்றப் பெயரும் பெறுகிறார்.
மற்றொரு தொன்மத்தில், கள்ளர் வேடமிட்டு சொக்கநாதர் மீனாட்சியை கடத்திக் கொண்டு போனதாக வரும்.

மதுரையிலும், அதன் சுற்றியிருக்கும் கிராமங்களிலும் இருக்கும் திரளான கள்ளர் சமுதாயத்தினர், மலையிலிருந்து இறங்கி வருபவரை அலை அலையாகச் சென்று எதிர்சேவை செய்து தங்களுக்கு பிரியப்பட்ட கள்ளழகராக கொள்கின்றனர்.

இராமன், மீனாட்சி, முருகன் என்று முழு ஒப்பனைகளோடும் நீர் நிறைந்த தோல்பையில் நீள் குழாயை வைத்து மக்கள் மீது நீரைப் பீய்ச்சியடித்தபடியும் செல்லும் சாமிகள் மற்றொருபுறம்.

மலையில் இருந்து இறங்கி வந்த சாமி மனிதனாகவும், அதற்கெதிரே செல்லும் மனிதன் சாமியாகவும் இந்தத் திருவிழாக்கள் ஒரு தலைகீழாக்கத்தை நிகழ்த்துகின்றன.

எதிர்காலத்தில் விண்கலமேறிப் போகும் மனிதனை எதிர்கொண்டு ஏதோ ஒரு கடவுளும் இது போல ஆசி அளிக்க நின்றாலும் ஆச்சர்யமில்லை.


உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •