Reading view

வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.

ஒரு வார காலக் கடும் பனிப்புயலுக்குப் பிறகான ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் மினுமினுவென்றும் கொஞ்சம் சொதசொதவென்றும் இருந்தது. நான் பிரெஞ்சு இலக்கியப் பேராசிரியராய் இருந்த பெண்கள் கல்லூரியை ஒட்டிய சிறிய மலைநகரத்தில், வழக்கமான பின்மதிய வேளை உலாத்தலின்போது, ஒரு வீட்டின் சாரல்தடுப்புப் பலகையில் வரிசையாய்த் தொங்கிய பனிக்கூரிகள்[1] என் கவனத்தை ஈர்க்க, நின்றேன். அவற்றுக்குப் பின்னாலிருந்த வெள்ளைப் பலகையில் அவற்றின் கூரிய நிழல்கள் தெள்ளந்தெளிவாய்த் தெரிந்தன. எனவே பனிக்கூரிகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் நிழலும் பார்க்கக்கூடியதாய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை. மேற்கூரை வெளிப்பக்கம் அதிக தூரம் நீட்டிக்கொண்டிருப்பதால் இருக்கலாம் அல்லது நான் பார்க்கும் கோணம் தவறாக இருக்கலாம் அல்லது சரியான பனிக்கூரிலிருந்து விழும் சரியான துளியை நான் பார்க்காது தவறவிட்டிருக்கலாம். கண்கட்டு வித்தை போல, கூர்முனைகளில் நீர்த்துளிகள் மாறி மாறிச் சொட்டுவதில் காணப்பட்ட லயம், என்னை ஏமாற்றிப் பரிகசிப்பதுபோல் தோன்றியது. அப்படியே அடுத்தடுத்த வீடுகளின் மேற்கூரை முனைகளில் தொங்கும் பனிக்கூரிகளைப் பார்வையிடும் ஆர்வம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிக்கொண்டு கெல்லி சாலையில், சரியாக, சில வருடங்களுக்கு முன்பு டி. குடியிருந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தியிருந்தது. நான் பணிபுரியும் அதே பெண்கள் கல்லூரியில் பயிற்றுநராக அவன் பணியாற்றிய காலத்தில் அந்த வீட்டில்தான் தங்கியிருந்தான்.

அந்த வீட்டை ஒட்டியிருந்த கார் நிறுத்தத்தின் கூரை முகப்பில் நீலவண்ண நிழற்பின்னணியில் தெள்ளந்தெளிவான பனிப்படிகக் கூம்புகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, என் தேடலுக்கான பரிசாக ஒரு காட்சி கிட்டியது. ஆச்சர்யக்குறியின் அடிப்புள்ளி அதன் இடத்திலிருந்து சற்றுக் கீழே சறுக்கியது போல் – இளகிச் சொட்டும் துளியை முந்தும் நோக்கோடு அவசரகதியில் ஓடியது போல் – இருந்தது. அந்த இரட்டை மினுமினுப்பு மகிழ்ச்சி அளித்தது என்றாலும் முழுமையான திருப்தி ஏற்படவில்லை. மாறாக, ஒளி மற்றும் நிழல் சார்ந்த என் தேடலுக்கான பசியைக் கூடுதலாகத் தூண்டிவிட்டது. என் ஒட்டுமொத்த இருப்பும் உலகக் கிண்ணத்துக்குள் உருளும் ஒற்றை விழிப்பந்தாக என்னை மாற்றிவிட்டதைப் போன்ற உணர்வுநிலையில் நான் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தேன்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பின்புற வளைவில் தகதகக்கும் கதிரொளியின் வைரப் பிரதிபலிப்பைக் கண்ணுற்றேன். இளகும் பனி காரணமாக, அனைத்துப் பொருட்களிலும் தெள்ளிய சித்திரத் தோற்றம் தென்பட்டது. ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்திருந்த பனித் தோரணங்களிலிருந்து உருகிய நீர், சரிவான தெருவில் சிற்றோடை போல் ஓடி மெதுவாக அடுத்தத் தெருவுக்குத் திரும்பியது. கட்டிடங்களுக்கு இடையில் எப்போதும் கவனத்தை அவ்வளவாக ஈர்த்திராத குறுகிய நடைபாதைகள் இப்போது செங்காவி மற்றும் அடர்சிவப்பு வண்ணப் பொக்கிஷங்களைத் திறந்துகாட்டிக்கொண்டிருந்தன. வரிவரியாய் இருந்த பள்ளங்களில் பனி படர்ந்து அலங்கரித்திருந்த குப்பைத்தொட்டியையும், அதன் மூடியின் மையத்தில் தொடங்கி விளிம்பு வரை பரவியிருந்த உறைபனியின் அலைவரிகளையும் முதன்முறையாகப் பார்த்தேன். கடந்த வெள்ளிக்கிழமை பனி அகற்றும் வாகனத்தின் உலோகத் தடுப்பால் ஒதுக்கிவைக்கப்பட்ட பனிக்குவியல்கள், சாலையோரங்களில் வரிசைகட்டி நிற்கும் இளம் பெங்குவின்களைப் போன்று தோற்றமளித்தன.

மேட்டில் ஏறி, இறக்கத்தில் இறங்கி, மெதுவாய் மங்கிக்கொண்டிருக்கும் தொடுவானம் நோக்கி நேராக என நான் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தேன். என் மொத்தக் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்த விஷயங்களின் தொடர்நிகழ்வு, இறுதியில் என்னை, வழக்கமாக நான் உணவருந்தும் இடத்தை விட்டு வெகு தொலைவில் அழைத்துச் சென்றிருந்தது. எனவே ஊர் எல்லையிலிருந்த, இதுவரை நான் உணவருந்தியிராத ஒரு உணவகத்தில் இரவுணவை முடிக்க முடிவு செய்தேன். உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது எந்த ஆரவாரமும் இன்றி இருள் கவியத் தொடங்கியிருந்தது.

ஈரப்பனித்தரையின் மீது விழுந்திருந்த வாகனத் தரிப்பிட மானி[2]யின்  மெலிந்து நீண்ட நிழல், விநோதமாய் ஒளிரும் சிவப்பு வண்ணத்தோடு, ஒல்லிப் பிசாசைப் போலத் தோன்றியது. நடைபாதை மீது ஒளிர்ந்துகொண்டிருந்த உணவகத்தின் அடையாள விளக்கின் சிவப்பு நிற ஒளி தெறித்துதான் அந்தத் தோற்றம் எனப் புரிந்தது. அதே போன்றதொரு விநோத நிழலை நீல நிற ஒளியில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அதே இடத்திலேயே அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து டி. போலியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி இறங்கினான். ஆல்பனியிலிருந்து பாஸ்டன் செல்வதாகவும் போகும் வழியில், தான் முன்பு குடியிருந்த அந்த ஊருக்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

ஒருவருக்கு ஒரு ஊரில் வலியும் வேதனையும் தரக்கூடிய, துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்து, பிறகு அவர் அந்த ஊரை விட்டுப் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் அவர் அந்த ஊருக்கு வரும்போது அவருடைய உணர்வுகள் எப்படி இருக்கும்? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேதனை தருவதாக இருக்கும். பழைய நினைவுகள் அவரை வாட்டி வதைக்கும். ஆனால் தங்களது மீள்வருகையின் போது எதுவுமே நடக்காதது போல், எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் அங்கு வளைய வருபவர்களைப் பார்க்கும்போது எனக்கு வலியும் வேதனையும் உண்டாவதோடு தனிப்பட்ட முறையிலும் வெறுப்பும் எரிச்சலும் ஏற்படும். இதை என் வாழ்க்கையில் பல தடவை கண்டிருக்கிறேன்.   

அவன் என்னை உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். சற்று முன்பு நான் போன அதே உணவகம். மேம்போக்கான நல விசாரிப்புக்குப் பிறகு இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாமல் கடுமையான மௌனம் நிலவியது. அந்த மௌனத்தைக் கலைப்பதற்காக, அவன் சம்பந்தா சம்பந்தமின்றி சொன்னான், “சிந்தியா வேய்னின் இதயத்தில் பிரச்சனை இருக்குமென்று நான் நினைத்தே பார்த்ததில்லை. அவள் போன வாரம் இறந்துவிட்டதாக என்னுடைய வழக்கறிஞர் சொன்னார்.”

2

அவன் இப்போதும் இளமையோடும், அதே திமிரோடும் அதே கபடத்தோடும் காணப்பட்டான். சிந்தியாவின் தங்கை சிபிலுடன் அவனுக்கு இருந்த மிக மோசமான உறவையோ, சிந்தியா என்னை அழைத்து பாஸ்டனுக்குச் சென்று டி.யைச் சந்தித்துப் பேசுமாறு என்னிடம் மன்றாடியதோ, சிபிலை அவன் சந்திப்பதை நிறுத்த வேண்டும் அல்லது அவன் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும், எதற்கும் ஒத்துவரவில்லை என்றால் அவனைக் கல்லூரியை விட்டே துரத்தவேண்டும் என்று சொன்னதோ, எதுவுமே அறியாத, அழகும் மென்மையும் கொண்ட அதே மனைவியோடும் அவன் இப்போதும் வாழ்ந்துகொண்டிருந்தான். மிகையுணர்வுக்கு ஆளான சிபிலின் வெறித்தனமான பேச்சின் பரிமாணம் அவன் மனைவியை ஒரு அடங்காப்பிடாரியாக சித்தரித்திருந்தது. நான் அவனை உடனடியாகவே மடக்கிவிட்டேன். அவனோ, எங்களைக் கவலைப்படவேண்டாம் என்றும், சிபிலை விட்டு தான் போய்விட முடிவு செய்துவிட்டதாகவும், கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியோடு ஆல்பனிக்குச் சென்று அவனுடைய அப்பாவின் பண்ணையில் வேலைபார்த்துப் பிழைத்துக் கொள்ள இருப்பதாகவும் சொன்னான். சிக்கலான பிரச்சனையாக உருமாறி வருடக்கணக்காக இழுபறியாக இருக்கக்கூடும் என்று அச்சுறுத்திய அந்த விஷயம், எங்களுடைய தொடர்ச்சியான இரகசியக் கலந்துரையாடலால் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மறுநாள் பிரெஞ்சு இலக்கியத்துக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெரிய வகுப்பறையில் நான் என்னுடைய உயர்மேஜையில் அமர்ந்திருந்தேன். சிபில் உயர் குதிகாலணி அணிந்து கையில் பெட்டியுடன் வகுப்பறைக்கு வந்தாள். மற்ற மாணவர்கள் தங்கள் புத்தகப் பைகளை வைத்திருக்கும் மூலையில் பெட்டியை வைத்தாள். தனது மெலிந்த தோளில் ஒரு பக்கமாகத் தொங்கவிட்டிருந்த ரோம அங்கியை அவிழ்த்து மடித்து பெட்டிக்குள் வைத்துவிட்டு இன்னும் இரண்டு மூன்று மாணவிகளோடு சேர்ந்து என்னிடம் வந்து தேர்வு முடிவுகளை நான் எப்போது அவர்களுக்கு அனுப்புவேன் என்று கேட்டாள். எல்லா விடைத்தாள்களையும் வாசித்துத் திருத்த, ஒரு வார காலம் எடுக்கும் என்று சொன்னேன். டி. எடுத்திருந்த முடிவைப் பற்றி அவளிடம் ஏற்கனவே சொல்லியிருப்பானா என்று நான் சந்தேகப்பட்டதும் கூட நினைவுக்கு வந்தது. கடமை தவறாத என்னுடைய இந்தச் சின்னஞ்சிறு மாணவியை எண்ணி எனக்குப் பெரும் வருத்தமும் கவலையும் உண்டாயின. தேர்வு நடைபெற்ற இரண்டரை மணி நேரமும் நான் மீண்டும் மீண்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். குழந்தைகளைப் போன்று இறுக்கமாக அணிந்திருந்த சாம்பல் வண்ண ஆடை, அலையலையாக சுருட்டிவிடப்பட்ட கருங்கூந்தல், அப்போது பிரபலமாக இருந்த, சல்லாத்துணி மறைப்புடன் கூடிய, சிறிய, பூப்போட்டத் தொப்பி, அதற்குக் கீழே நவீன பாணி ஓவியம் போன்று தோல்நோயால் உண்டான தழும்புகளோடு கூடிய முகம், தோல்நோய் சிகிச்சைக்கான செயற்கை விளக்கொளியால் கருத்த தேகம் என அழகைக் குலைக்கும் அனைத்து அம்சங்களும் அவளிடம் காணப்பட்டன. எனவே செக்கச் செவேலென்று வெடித்துக்கிடக்கும் உதடுகளுக்கிடையில் வெளிறிக் காணப்பட்ட ஈறும் பற்களும், கருத்த இமைகளுக்குக் கீழே தென்பட்ட நீர்த்த மை நிற நீல விழிகளும் மட்டுமே அவளுடைய அழகை எடுத்துக்காட்டக் கூடியனவாக இருந்தன.

அடுத்த நாள், கன்னாபின்னாவென்று இருந்த நோட்டுப்புத்தகங்களை அகர வரிசைப்படி அடுக்கிவைத்து, குளறுபடியான கையெழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன். எப்படியோ தவறுதலாக வரிசை மாறி முன்னால் வந்துவிட்ட வாலேவ்ஸ்கி மற்றும் வேய்ன் இருவரின் நோட்டுப்புத்தங்களையும் கையிலெடுத்தேன். முதலாவது வெளிப்பகட்டு காட்டும் மிகத் தெளிவான கையெழுத்துடன் அழகாக இருந்தது. ஆனால் சிபிலுடையது எப்போதும் போல ஏகப்பட்டக் கிறுக்கல்களோடு பற்பல சாத்தான்களின் பிடியில் அகப்பட்டது போல கொடுமையாக இருந்தது. அவள் முதலில் வெளிறிய கடினமான பென்சிலால் எழுத ஆரம்பித்திருந்தாள். அழுத்தி அழுத்தி எழுதியதில் தாள் முழுவதும் கருப்பு நிறமானதோடு பின்பக்கமும் அச்சு படிந்திருந்தது. நல்லவேளையாக, கொஞ்ச நேரத்திலேயே பென்சிலின் கூர் உடைந்துபோனது போலும். அடுத்து அவள் அழுத்தமாகவும் மொத்தமாகவும் எழுதக்கூடிய, கிட்டத்தட்ட கரிக்கட்டை போன்ற பென்சிலால் எழுதியிருந்தாள். அவ்வப்போது அதன் மழுங்கிய முனையை வாயில் வைத்து வைத்து எழுதிய காரணத்தால் காகிதத்தில் உதட்டுச்சாயக் கறையும் சேர்ந்திருந்தது. நான் எதிர்பார்த்ததை விடவும் அவளுடைய விடைத்தாள் மிக மோசமாக, அடிக்கோடுகள், வரிசை மாற்றுகள், தேவையில்லாத அடிக்குறிப்புகள் என அவநம்பிக்கையின் அனைத்துக் குறியீடுகளையும் பயன்படுத்தி, அவளால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் சரியாகச் செய்துமுடிக்க முயற்சி செய்ததைப் போன்று இருந்தது. அடுத்து அவள் மேரி வாலெவ்ஸ்கியின் மைப்பேனாவை இரவல் வாங்கி பிரஞ்சும் ஆங்கிலமும் கலந்து இவ்வாறு எழுதியிருந்தாள்: ‘இந்தப் பரிட்சை முடிந்ததும் என் வாழ்க்கையும் முடிந்துவிடும். விடைபெறுகிறேன், பெண்களே! மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களுக்கு, தேர்வில் ‘டி’ வாங்குவதை விடவும் மரணம் சிறந்ததல்ல, ஆனால் டி. இல்லாத வாழ்க்கையை விடவும் மரணம் சிறந்தது என்று நான் சொன்னதாக என் அக்காவிடம் தயவுசெய்து சொல்லிவிடுங்கள்.’

நான் உடனடியாக சிந்தியாவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது, எல்லாம் முடிந்துவிட்டதாக – காலை எட்டு மணிக்கே எல்லாம் முடிந்துவிட்டதாகச் சொன்னாள். நான் அங்கு வரும்போது சிபில் எழுதியிருந்த குறிப்பை எடுத்துவரச் சொன்னாள். வழியும் கண்ணீரோடு குறிப்பை வாசித்த அவள், பிரெஞ்சு இலக்கியத் தேர்வோடு, சிபில் தன்னைத் தொடர்புபடுத்தி எழுதியிருந்த ஒப்புமை வரிகளில் இருந்த புத்திசாலித்தனத்தை வியந்தாள். சிபிலின் நோட்டுப் புத்தகத்தைக் கீழே வைக்காமலேயே இரண்டு குவளைகளில் மதுவை நிரப்பினாள். சோடா நீரோடு கண்ணீரும் சேர்ந்து தெறிக்க, மீண்டும் அந்தத் தற்கொலைக் குறிப்பை வாசிக்கலானாள். அப்போது அதிலிருந்த இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். சிபில் ‘பெண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்த பிரெஞ்சு வார்த்தைக்கு ‘வேசி’ என்ற பொருளும் இருப்பதால், மாணவிகள் தவறுதலாக அந்த வார்த்தையைப் பயன்படுத்த நேரிடும் என்று அமெரிக்க அகராதிகளில் ‘பெண்’ என்றே அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டேன். சுவாரசியமற்ற அந்த அற்ப விஷயங்கள் சிந்தியாவை துக்கத்தின் அடியாழத்திலிருந்து பெரும் திணறலோடு மேற்பரப்புக்குக் கொண்டுவந்து சற்றே இலகுவாக்கின. பிறகு தொய்ந்துபோன அந்த நோட்டுப் புத்தகத்தை, சொர்க்கத்திற்குச் செல்வதற்கான கடவுச்சீட்டு போல கையில் இறுக்கமாகப் பிடித்தவாறு, மாடியில் இருந்த சிறிய குளிர்ச்சியான படுக்கையறைக்கு என்னை அவள் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த இரண்டு காலி மாத்திரைப் புட்டிகளையும், ஆதி முதல் அந்தம் வரை டி. அறிந்திருந்த அழகிய இளம் உடல் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, கீழே கவிழ்ந்து கிடந்த படுக்கையையும் ஒரு  போலீஸ்காரரிடம் அல்லது பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பான அயர்லாந்துக்காரரிடம் காட்டுவது போல் என்னிடம் காட்டினாள்.  

3

சிந்தியாவின் தங்கை இறந்து நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, சிந்தியாவை நான் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினேன். அந்தச் சமயம் நான் பொது நூலகத்தில் துறை சார்ந்த ஆராய்ச்சிக்காக நியூயார்க் சென்றிருந்தேன். அவளும் அப்போது அங்கு குடிபெயர்ந்திருந்தாள். ஏதோ ஒரு விநோதக் காரணத்துக்காக (கலையுணர்வு காரணமாக இருக்கலாம் என்பது என்னுடைய தெளிவற்ற யூகம்) குளிர்நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத மக்கள் வசிக்கும் ‘குளிர்ந்த நீர் குடியிருப்புகள்’ என்று சொல்லப்படுகிற, நகரத்தின் குறுகிய தெருக்களின் கீழ்த்தளக் குடியிருப்புகளுள் ஒன்றில் அவள் தங்கியிருந்தாள்.

வெறுப்பூட்டும் அவளுடைய நடவடிக்கைகளோ, மற்ற ஆண்களின் கண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரியும் அவளது தோற்றமோ என்னைத் துளியும் ஈர்க்கவில்லை. அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் பெரிய நீலநிறக் கண்கள். அவளுடைய அடர்ந்த கரிய புருவங்களுக்கு இடைப்பட்டப் பகுதியும் மூக்குத்துவாரத்தின் இருபக்கப் புடைப்புகளும் எப்போதும் மினுமினுவென்று காணப்பட்டன. அவளுடைய தோல் சொரசொரவென்று ஆண்களுடையதைப் போன்று இருந்தது. வண்ணமீன் தொட்டியைப் பார்ப்பது போன்று குறுகுறுவென்று அவள் நம்மைப் பார்க்கும்போது அந்த ஓவியக்கூடத்தின் துல்லியமான விளக்கொளியில் அவளுடைய முப்பத்திரண்டு வயது முதிர் முகத்தின் குழிகளைக் காணமுடியும். அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் பெரும் விருப்பம். ஆனால் அதில் அவ்வளவு நேர்த்தி இருக்காது. அசிரத்தை காரணமாக அவளுடைய பெரிய முன்பற்களில் உதட்டுச்சாயத்தின் சிவப்புக் கறை படிந்திருக்கும்.

அவள் வசீகரமான அடர்நிறத்தில் இருந்தாள். மோசம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஓரளவு நன்றாகவும் விதவிதமாகக் கலந்துகட்டியும் உடுத்தினாள். நல்ல உடல்வாகு என்று சொல்லும்படியும் இருந்தாள். ஆனால் யாவற்றிலும் ஏனோதானோவென்ற ஒரு அலட்சியம் இருந்தது. அவளுடைய மெத்தனத்தை நான் அரசியலில் இடதுசாரிக் கோட்பாடுகளோடும், கலையில் மேம்பட்ட கொச்சைத்தன்மையோடும் மறைமுகமாகத் தொடர்புபடுத்தினேன். எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய சுருள் கேசத்தை நடுவகிடு எடுத்து ஓரளவு படியவைத்து பின்னால் சிறு கொண்டையாக உயர்த்தி முடிந்திருக்காவிட்டால், பார்ப்பதற்கு பரட்டையாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். அவள் பளீரென்ற நிறத்தில் விரல் நகங்களில் நகப்பூச்சு பூசியிருந்தாள். ஆனால் நகங்கள் மிக மோசமாகக் கடிக்கப்பட்டிருந்ததோடு தூய்மையாகவும் இல்லை.

மிகவும் அமைதியான சுபாவமுடைய, திடீரென்று சிரிக்க ஆரம்பித்திருந்த ஒரு இளம் புகைப்படக் கலைஞனும், தெருவில் சிறிய அச்சுக்கூடம் வைத்திருந்த, வயது மூத்த இரண்டு சகோதரர்களும் அவளுடைய காதலர்களாக இருந்திருக்கின்றனர். கண்ணாடிக்குக் கீழே படியவைக்கப்பட்டிருக்கும் பொருளின் அறிவியல் துல்லியத்துடன், வெளிறிய முழங்கால்களுக்குக் கீழே மெல்லிய நைலான் காலுறையின் ஊடே காணப்படும் கரடுமுரடான கருப்பு முடிகளைப் பயமும் பதற்றமுமாக இரகசியப் பார்வை பார்க்கும்போது அல்லது அவளுடைய ஒவ்வொரு அசைவின்போதும், அவள் பூசியிருக்கும் மட்டமான வாசனைத் திரவியங்கள் மற்றும் களிம்புகளோடு, குளிக்காத அவள் உடலிலிருந்து வீசும் மோசமான வாடையை நுகர நேரும்போது, அவளுடைய காதலர்களின் ரசனையை எண்ணி எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

அவளுடைய அப்பா, அவர்களுக்கென்று இருந்த ஓரளவு சொத்தில் பெரும்பகுதியை சூதாடித் தொலைத்தவர். அவளுடைய அம்மாவின் முதல் கணவர் ஸ்லாவ்[3] வம்சாவளியைச் சேர்ந்தவர். மற்றபடி சிந்தியா வேய்ன் ஒரு நல்ல மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். இன்னும் பின்னோக்கி ஆய்ந்தால் ஏதேனும் தீவாந்தரத்தின் அரசர் அல்லது கணியர் வம்சத்தைச் சார்ந்தவளாக இருக்கலாம் என்பது என் யூகம். புதிய உலகத்தில், அற்புதமான இலையுதிர் மரங்களால் சூழப்பட்ட நிலப்பரப்பில் காலூன்றிய அவளது வம்சத்தின் ஆரம்ப கட்டத்தில் தூய திருச்சபைகளை நிறைத்தனர் விவசாய பக்தர்கள். அவர்களைத் தொடர்ந்து வியாபாரத்தில் கைதேர்ந்த வியாபாரிகளும், கல்வியிற் சிறந்தவர்களும் உருவாயினர். லெக்சிங்டன் நீராவிப்படகில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரும், சிந்தியாவின் சுழல்மேஜைக்கு அடிக்கடி வருகை தருபவருமான டாக்டர் ஜோனாத்தன் வேய்ன் (1780-1839) அவர்களுள் ஒருவர்.

நான் எப்போதும் மரபியல் வரிசையைத் தலைகீழாகப் பார்க்கவே முனைவேன். இங்கு வேய்ன் பரம்பரையை ஆராயும் வாய்ப்பு கிடைத்தபோது கடைசி வாரிசான சிந்தியா மட்டுமே கவனத்துக்கு உரியவளாக இருந்தாள். அதாவது, அவளுடைய கலைத்திறன், அற்புதமான, அழகான ஆனால் அவ்வளவாக விலைபோகாத, அவளுடைய நண்பர்களின் நண்பர்கள் எப்போதாவது வாங்கும் ஓவியங்கள், முக்கியமாக அவளுடைய வரவேற்பறையை அலங்கரித்த அற்புதமான மற்றும் கவித்துவமான ஓவியங்கள் அவளுடைய இறப்புக்குப் பிறகு என்னவாகும் எங்கே போகும் என்று தெரிந்துகொள்ள பெரிதும் விரும்பினேன். மிக நுணுக்கமாகத் தீட்டப்பட்டிருந்த உலோகப் பொருட்களின் ஓவியங்களுள் எனக்கு மிகவும் பிடித்தது, வாகன முகப்புக் கண்ணாடியின் ஒரு பக்கம் ஏடு போல் படிந்திருக்கும் உறைபனியும், கற்பனையான வாகனக் கூரையிலிருந்து வடிந்தோடும் நீர்த்துளிகளும், தெளிவான மறுபக்கத்தின் வழியாக நீலச்சுவாலை போல் ஒளிரும் வானமும் பச்சையும் வெள்ளையுமான தேவதாரு மரங்களும் தீட்டப்பட்டிருந்த, ‘வாகன முகப்புக் கண்ணாடி வழியே’ என்ற ஓவியம்.  

4

சிபிலின் காதலை சிந்தியாவும் நானும் சேர்ந்து முறியடித்துவிட்டது தற்போது சிபிலுக்குத் தெரிந்துவிட்டதாகவும் அதனால் சிபில் தன்மீது கோபமாக இருப்பதாகவும் சிந்தியாவுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தொல்வழக்கப்படி சிபிலின் ஆன்ம சாந்திக்கான சில பரிகாரங்களை (சிபிலுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு) அவள் செய்யத் தொடங்கினாள். சிபிலின் கல்லறையை குறைந்த வெளிச்சத்தில் படம்பிடித்து அந்தப் புகைப்படங்களை டி.யின் அலுவலக முகவரிக்கு ஒழுங்கற்ற கால இடைவெளியில் அவ்வப்போது அனுப்பிவைத்தாள். சிபிலின் தலைமயிரைப் போன்றே இருக்கும் தன்னுடைய தலைமயிர்க் கற்றையை நறுக்கி அதைத் தபாலில் அவனுக்கு அனுப்பினாள். அக்டோபர் 23-ம் தேதி, நண்பகல் வேளையில், இளஞ்சிவப்பும் பழுப்புமான வனாந்திரத்தின் சாலையோர விடுதியொன்றில் டி.யும் சிபிலும் தங்கியிருந்த நிகழ்வைக் குறிப்பிடும் விதமாக நியூ இங்கிலாந்து மாகாணத்தின் வரைபடத்தில் அவ்விடத்தை குறுக்குவெட்டுக் கோடுகளால் குறிப்பிட்டு அந்தப் படத்தை அவனுக்கு அனுப்பினாள். பாடம் செய்யப்பட்ட ஸ்கங்க்கை[4]  இரண்டு முறை அனுப்பினாள்.

எதையும் தெள்ளந்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசத் தெரியாமல் வளவளவென்று உரையாடக்கூடியவளான அவளால், தனக்குள் வியாபித்திருக்கும் விநோதமான ஆன்ம ஒளிவளையத்தைப் பற்றி முழுமையாக விவரிக்க இயலவில்லை. உண்மையில் அது தனிப்பட்ட வகையில் அவளுக்கு மட்டும் நேரும் புதிய விஷயமல்ல. பொதுவாகவே, ஒருவரின் மரணத்துக்குப் பிறகு அந்த ஆன்மா, அமைதியான ஆவியுலகில் ஏற்கனவே இறந்துபோனவர்களின் ஆன்மாவோடு போய் சேர்ந்துகொண்டு, அவ்வப்போது தனக்குப் பிடித்தவர்களைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பொழுதுபோக்காக வைத்திருக்கும். இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இயல்பான அந்த நுண்பொருள் கோட்பாட்டியலுக்குள் சிந்தியா சில விநோதமான நடைமுறைக் கூறுகளைப் புகுத்தினாள். 

அநாதையாய்த் திரியும் பூனைக்குட்டியை பள்ளிச்சிறுமி ஒருத்தி தூக்கி, கன்னத்தோடு கன்னம் இழைத்துக் கொஞ்சி, தன்னோடு எடுத்துச் சென்று, ஏதாவதொரு புறநகர்ப் பகுதியில் உள்ள புதரில் பத்திரமாக விட, அதை அந்த வழியாகச் செல்லும் யாரோ ஒருவர் எடுத்து, அன்போடு தடவிக்கொடுப்பதைப் போலவோ அல்லது இளகிய மனம் படைத்தப் பெண்மணி யாராவது, தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுசெல்வதைப் போலவோ, தன் விதியை இறந்துபோன நட்புகளின் ஆன்மாக்களே வழிநடத்துகிறார்கள் என அவள் உறுதியாக நம்பினாள்.

சில மணிநேரம் அல்லது தொடர்ந்து பல நாட்கள், சில சமயம் ஒழுங்கற்ற கால இடைவெளியில் மாதக் கணக்காகவோ, வருடக் கணக்காகவோ சிந்தியாவுக்கு ஏற்படும் எதுவும், இறந்துபோன நட்பு அல்லது உறவின் பழக்க வழக்கம் மற்றும் மனநிலை சார்ந்தது என்பது சிந்தியாவின் எண்ணம். அந்த நிகழ்வு ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய அளவுக்கு அசாதாரணமாக இருக்கும் அல்லது ஒருவரது வழக்கமான நாளில் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்து, நாளடைவில் ஒளிவளையம் மங்கி மறைய, அற்ப விஷயமாக மாறிவிடக்கூடிய, சின்னச் சின்ன சம்பவங்களாக இருக்கும். விளைவு நல்லதோ, கெட்டதோ, ஆனால் மூல ஆன்மா எதுவென்று கட்டாயம் அடையாளங்காண முடியும். ஒரு மனிதனின் ஆன்மாவுக்குள் ஊடுருவிச் செல்வதைப் போன்றது அது என்றாள் சிந்தியா.

எல்லாராலும் எல்லா ஆன்மாக்களையும் அடையாளங்காண இயலாது என்பதால் அவளால் அவளைத் தொடர்பு கொள்ளும் சரியான ஆன்மாவைக் கண்டறிவது சாத்தியமில்லை என வாதிட்டு அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன். கையொப்பம் இடப்படாத கடிதங்களையும் கிறிஸ்மஸ் பரிசுகளையும் யார் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ‘வழக்கமான நாள்’ என்று சிந்தியா குறிப்பிடுவது பலவீனமான ஆன்ம ஒளிவளையங்களின் கலவையாக இருக்கலாம் அல்லது காவல் தேவதையின் வழக்கமான செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கலாம். கடவுளைப் பற்றி என்ன சொல்வது? சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியை மண்ணில் வெறுக்கும் மக்கள், சொர்க்கத்திலும் அதே போன்ற ஒருவரை எதிர்பார்ப்பார்களா? மேலும் போர்கள் பற்றி? எவ்வளவு பயங்கரமான விஷயம்! இறந்த போர்வீரர்கள் உயிருடன் இருப்பவர்களுடன் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்களா? தள்ளாடும் வயோதிகர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக் கைப்பற்ற ஆவிக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்குமா?

ஆனால் சிந்தியா பொதுவிதிகளுக்கும் தர்க்க எல்லைகளுக்கும் அப்பாற்பட்டிருந்தாள். ‘தளபுள’ என்று கொதிக்கும் சூப்பைப் பார்த்தால் “ஐயோ, அது பால் (Paul)” என்பாள். அறக்கொடை நிறுவனத்தின் லாட்டரியில் அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட, நல்ல தரமான வாக்யூம் க்ளீனர் கிடைத்தால், “அன்புக்குரிய பெட்டி பிரவுன் இறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன்” என்பாள். 

என்னுடைய பிரெஞ்சு மூளையை அதிகம் எரிச்சலடைய வைத்தது எதுவென்றால் பெட்டி பிரவுனும் பாலும் உயிரோடு வாழ்ந்த காலத்துக்கே அவள் மானசீகமாகச் சென்றுவிடுவதுதான். நல்ல எண்ணத்துடன் அவர்கள் தனக்கு விதவிதமான, விநோதமான, ஏற்றுக்கொள்ள இயலாத பரிசுப்பொருட்களை அள்ளி அள்ளித் தந்தார்கள் என்றும் மூன்று டாலர் காசோலையுடன் கூடிய பழைய பர்ஸை தெருவில் கண்டெடுத்து, அதை உரியவரிடம் (இங்குதான் நடக்க இயலாத, முதிய பெண்மணி பெட்டி பிரவுன் வருகிறார்) சேர்ப்பித்ததில் ஆரம்பித்து, தன்னுடைய முன்னாள் காதலன் (இங்குதான் பால் வருகிறான்) அவனுடைய வீட்டையும் குடும்பத்தையும் தத்ரூபமான ஓவியங்களாய்த் தீட்டுவதற்கான நியாயமான தொகைக்கு பதில் அடிமட்டத் தொகை பேசி அவமானப்படுத்தியது வரை சொல்வாள். இவை எல்லாமே சிந்தியா குழந்தையாய் இருந்தபோது, எடுத்ததெற்கெல்லாம் அறிவுரை கூறி அவளைப் பாடாய்ப்படுத்திய திருமதி பேஜ் என்னும் நல்ல மனம் படைத்த முதிய பெண்மணியின் மரணத்துக்குப் பிறகே ஆரம்பித்தன. 

சிபிலின் குணாதிசயங்கள், வானவில்லின் விளிம்பைப் போல தெளிவற்றவை என்றாள் அவள். சிபிலை நான் கொஞ்சமாவது புரிந்து வைத்திருந்தால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சிந்தியாவின் வாழ்வில் சின்னச் சின்ன நிகழ்வுகளாக, அவ்வப்போது அவளைச் சூழ்ந்துகொள்ளும் அந்த ஒளிவளையத்தில் சிபிலின் ஆன்மா இருப்பதை என்னால் எளிதில் உணர்ந்துகொண்டிருக்க முடியும் என்றாள்.

சிந்தியாவின் அம்மா இறந்ததிலிருந்தே, அவளும் சிபிலும் தங்களுடைய பாஸ்டன் வீட்டை விட்டுவிட்டு, நியூயார்க் நகரத்துக்குக் குடிபெயர்ந்துவிட விரும்பினார்கள். நியூயார்க்கில் சிந்தியாவின் ஓவியங்களுக்கு நல்ல விலையும் அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் நம்பினார்கள். ஆனால் அவர்களுடைய பழைய வீடு தன் மென்கரங்களால் அவர்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டுவிட்டது. சிபில் தன் மரணத்துக்குப் பிறகு, அந்த வீட்டை சுற்றுப்புறத்திலிருந்து தனிமைப்படுத்தினாள். வீடு என்ற உணர்விலிருந்து அது சிதைந்து அழியத் தொடங்கியது. குறுகிய தெருவின் எதிர்ப்பக்கம் சாரங்களால் சூழப்பட்டு, இரைச்சலுடன், எரிச்சலூட்டும் ஒரு கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே வருடம் வசந்த காலத்தில் அந்தப் பகுதியில் பிரசித்தமான இரண்டு நெட்டிலிங்க மரங்கள் பட்டுப்போய் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு போல நின்றன. அறுபது வயதில் ஓய்வு பெற்ற, கால் நூற்றாண்டு காலத்தை நத்தைகள் பற்றிய ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்த திரு. லீவர் அவர்களின் காலைநேர நடைக்குப் பழகிய, ஏப்ரல் மாத மழையில் நனைந்து வித்தியாசமான கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், அழகிய செஞ்சாந்து நிற நடைபாதைக் கற்கள் பணியாட்களால் பெயர்த்தெடுத்து அகற்றப்பட்டன. முதியவர்களைப் பற்றிச் சொல்லும்போது, இறப்புக்குப் பிறகு, உயிரோடு இருப்பவர்களிடம் அவர்கள் காட்டும் ஆதரவும் இடையூறும் சில வேளைகளில் வேடிக்கையாக இருக்கும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

சிந்தியா ஒரு தடவை, போர்லாக் என்ற கிறுக்குத்தனமான நூலகரோடு நட்பாக இருந்தாள். அவர் ‘hither’ என்ற வார்த்தையில் உள்ள இரண்டாவது h-க்கு பதிலாக i என்பது போல் விநோதமான எழுத்துப்பிழைகளோடு அச்சாகியிருந்த பழைய புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே, தூசு படிந்த தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தைக் கழித்தார். சிந்தியாவுக்கு மாறாக, தெளிவற்ற யூகங்களால் உண்டாகும் புளகாங்கித உணர்வால் அவர் ஈர்க்கப்படவில்லை. அவர் தேடியவையெல்லாம் திட்டமிட்டதைப் போல் தோன்றும் தற்செயல்கள் மற்றும் இடைவெளிகளைப் போல் தோற்றமளிக்கும் பிளவுகள் போன்ற முரண்விநோதங்களை மட்டுமே. ஒழுங்கற்ற அல்லது இலக்கண விதிகளுக்கு மாற்றாக இணைக்கப்பட்ட வார்த்தைகள், சிலேடைகள், மாற்றெழுத்துப் புதிர்கள், வார்த்தை விளையாட்டுகள் இன்ன பிறவற்றில் விடாப்பிடியான ஆர்வக்கோளாறுடன் இருந்த சிந்தியா, அந்த பரிதாபத்துக்குரிய கிறுக்கு நூலகருக்கு உதவுவதற்காகக் கொடுத்த உதாரணங்களை, நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தபோது, சுத்தப் பைத்தியக்காரத்தனமாகவே எனக்குத் தோன்றியது.

நூலகர் இறந்துபோன மூன்றாம் நாள், அவள் ஒரு சஞ்சிகையை வாசித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அழியாக் கவிதையொன்றின்[5]  (மற்ற அப்பாவி வாசகர்களைப் போலவே அவளும் அதை உண்மையிலேயே கனவில் இயற்றப்பட்டக் கவிதையென நம்பினாள்) வரிகளைக் கண்ணுற்றதாகவும், அதிலிருந்த ‘Alph’ என்னும் வார்த்தை, Anna Livia Plurabelle (மற்றொரு கற்பனைக் கனவிற்குள் ஓடும் அல்லது அதைச் சுற்றிக்கொண்டு ஓடும் மற்றொரு புனித நதியின் பெயர்) என்பதன் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு தீர்க்கதரிசனம் காட்டுவதாகவும் அதில் கூடுதலாக இருக்கும் h என்ற எழுத்து, திரு.போர்லாக்கை வசியம் செய்திருந்த அந்த வார்த்தைக்கு வழிகாட்டும் அறிகுறி போல இருப்பதாகவும் அவள் சொன்னாள்.

எனக்கு சரியாக நினைவில்லை, ஏதோ ஒரு புதினமோ, சிறுகதையோ (யாரோ ஒரு சமகால எழுத்தாளருடையதுதான் என்று நினைக்கிறேன்), அதன் ஆசிரியரே அறியாத, கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை சிந்தியா முறைப்படுத்தினாள். அவளுடைய பொருள்விளக்கப்படி, அது அவருக்கு, இறந்துபோன தாயாரிடமிருந்து வந்திருந்த செய்தி.

5

துரதிர்ஷ்டவசமாக, சிந்தியா இந்த சாதுர்யமிக்கக் கற்பனைகளில் திருப்தியுறாமல் ஆவியுலகக் கோட்பாட்டின் மீது முட்டாள்தனமான வேட்கையைக் கொண்டிருந்தாள். கட்டணம் பெற்றுக்கொண்டு ஆவியுலகோடு தொடர்பு கொள்பவர்களின் அமர்வுகளுக்கு நான் அவளோடு செல்ல மறுத்தேன். மற்ற ஆதாரங்களின் மூலம் இதுபோன்ற விஷயங்களை அவர்களை விடவும் சற்றுக் கூடுதலாகவே நான் அறிந்திருந்தேன். எனினும், சிந்தியாவும், அச்சுக்கூடத்தைச் சேர்ந்த, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாத முக அமைப்புக் கொண்ட, அவளுடைய இரு நண்பர்களும் நடத்தும் கேலிக்கூத்துகளில் கலந்துகொள்ள சம்மதித்தேன்.

அவர்கள் பொறுமைசாலிகளாகவும், கண்ணியமாகவும், வயதில் மூத்தவர்களாகவும் அதே சமயம், சற்றே அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுடைய நகைச்சுவைப் பேச்சினாலும் நாகரிகமான நடத்தையினாலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சிறிய கனமில்லாத மேஜையைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருப்போம். மேஜையில் எங்கள் விரல்நுனி பட்டதுமே அது கிடுகிடுவென அதிர்ந்து நடுங்கத் தொடங்கும். தங்களைப் பற்றி ஆர்வத்துடன் மளமளவென்று சொல்ல முன்வந்த பற்பல ஆவிகளோடு நான் உரையாடினேன். இருப்பினும், நான் எதையாவது தவறாகப் புரிந்துகொண்டுவிட்டால் அவ்வளவுதான், அவை மேற்கொண்டு தங்களை வெளிப்படுத்த மறுத்துவிடும். ஆஸ்கார் வைல்ட் வந்து, வேகமாகவும் தப்பும் தவறுமாகவும் பிரெஞ்சுமொழியில், வழக்கமான ஆங்கிலவாத வார்த்தைகளோடு, எதற்காகவோ சிந்தியாவின் இறந்துபோன பெற்றோரைக் குற்றம் சாட்டினார். சுருக்கெழுத்தில் அதை ‘கருத்துத்திருட்டு’[6] எனக் குறிப்பிட்டேன். குறுக்கே புகுந்த ஒரு ஆவி, ஜான் மோர் என்ற பெயருடைய தானும், வில் என்ற தன் சகோதரனும் சுரங்கத் தொழிலாளிகள் என்றும் 1883-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலராடோவில் ‘க்ரெஸ்டட் பியூட்டி’ என்ற இடத்தில் ஏற்பட்ட சுரங்கச் சரிவில் மாண்டதாகவும், நாங்கள் கேட்காமலேயே முன்வந்து தகவல் சொன்னது. இந்த விளையாட்டில் அனுபவசாலியான ஃப்ரடரிக் மையர்ஸ் நான் ஓரளவு எழுதியிருந்த கவிதையை வேகவேகமாக ஒப்பித்தான். (சிந்தியா இயற்றும் சிறு பாடல்களைப் போன்று விசித்திரமான ஒற்றுமை இருந்தது)

என்ன இது? சாதுர்யமான கண்கட்டு வித்தையா?

அல்லது குறைபாடுள்ள ஆனால் மெய்யான ஒளிக்கீற்றா?

எது இந்த ஆபத்தான வழக்கத்தை உடைத்து

துன்புறுத்தும் கனவைக் கலைக்கக்கூடும்?

இறுதியாக, பயங்கரமான உறுமலுடன், மேஜை தடதடக்க, லியோ டால்ஸ்டாய் எங்கள் குழுவிற்கு வருகை புரிந்தார். அது அவர்தானா என்று மண்ணுலகில் அவரது தினசரி வாழ்வின் தனித்துவ அம்சங்களால் அவரை உறுதிப்படுத்தச் சொன்னபோது, ரஷ்யாவின் மரக் கட்டுமான வகைகளைப் பற்றியோ அல்லது வேறு ஏதோ (பலகையில் உருவங்கள் – மனிதன், குதிரை, சேவல், மனிதன், குதிரை, சேவல்) எழுத்தால் எளிதில் எழுத இயலாத, புரிந்துகொள்ளக் கடினமான, சரிபார்ப்பு சாத்தியமில்லாத சில சிக்கலான விவரணைகளைத் தந்தார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று அமர்வுகளில் பங்கேற்றேன். எல்லாமே முட்டாள்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தபோதும், அவர்களுடைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ரசிக்கவும், சிந்தியாவின் இத்தகு கொடுமையான வீட்டுக் கொண்டாட்டங்களின்போது தரப்படும் மதுவை அருந்தவும்தான் (போட்ஜியும் புட்ஜியும் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவர்கள்) நான் அவற்றில் கலந்துகொண்டேன் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அவளுடைய வீட்டின் வரவேற்பறை எப்போதும் அழுக்காக, கழுவப்படாத பழைய, வண்ணக்கலவைத் தட்டைப் போல இருந்தது. எனவே அவள், அவளுடைய வீட்டை அடுத்த, திரு.வீலரின் வசதியான வீட்டில், அவளுக்கே உரிய மையவிலக்கு மனோபாவத்துடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். 

பண்பற்ற, நாகரிகமற்ற, சுகாதாரமற்ற, கேவலத்திலும் கேவலமான வழக்கமாக, விருந்தினர்கள் அப்போதுதான் அவிழ்த்த, உடற்சூடு இன்னும் குறையாத அவர்களது மேல் கோட்டுகள், அமைதியான, வழுக்கைத் தலையரான பாப் வீலரால், அவரது தூய்மையான, அந்தரங்கமான படுக்கையறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரும் அவர் மனைவியும் படுக்கும் படுக்கையின்மீது குவித்துவைக்கப்பட்டன. மேலும் விருந்தினர்களுக்கான மதுபானங்களைக் கோப்பைகளில் அவர் ஊற்றிக் கொடுக்க, இளம் புகைப்படக் கலைஞன் அவற்றைப் பரிமாற, சிந்தியாவும், திருமதி வீலரும் ரொட்டிகளைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

தாமதமாக வருபவர்கள், ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இரண்டு கண்ணாடிகளுக்கு இடையிலான நீலச்சாம்பல்நிறக் கூடத்தில் தேவையில்லாமல் கூடிக் கூச்சலிடும் ஒரு கூட்டத்தையே பார்ப்பார்கள். சிந்தியா வழக்கமாக அழைப்பு விடுக்கும் பெண்மணிகள் அனைவருமே, திருமணமானவர்களோ, இல்லையோ, ஆனால் அலைபாயும் நாற்பதுகளில் இருந்தார்கள். ஒருவேளை, அங்கு இருப்பவர்களிலேயே தான்தான் இளையவளாக இருக்கவேண்டும் என்று சிந்தியா விரும்பியிருக்கலாம். சிலர் அவர்களுடைய வீட்டிலிருந்தே டாக்சிகளின் மூலம் வரவழைக்கப்படுவார்கள். வரும்போது முழுமையான ஒப்பனையுடனும் அழகான தோற்றத்துடனும் காணப்படும் அவர்கள், நிகழ்ச்சியின் முடிவில் எல்லாவற்றையும் இழந்திருப்பார்கள். 

வார இறுதிக் கொண்டாட்டங்களில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் சிநேகபாவம் மிக்க குடிகாரர்கள், தங்கள் அனுபவத்தால், உடனடியாகவும், மிகத் துல்லியமாகவும் போதையின் பொதுப்பகுவெண்ணைக் கண்டறிந்து, அதன் அடுத்தக் கட்டத்துக்கு முன்பு அனைவரும் ஒருவருக்கொருவர் பூரண விசுவாசத்தோடு ஒன்றிணைந்து கூட்டாக இறங்குவது, என்னை எப்போதுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

இணக்கமாகப் பேசிய பெண்மணிகளின் பேச்சில் தெனாவெட்டும், இறுக்கமான ஆண்களிடத்தில் சூலுற்றப் பெண்மையின் நாணமும் தென்பட்டன. வந்திருந்தவர்களுள் சிலர் ஏதாவது ஒரு வகையில் கலையோடு தொடர்புடையவர்களாக இருந்தனர். எனினும் எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் இல்லை, மலர்க்கீரீடம் அணிந்த தலைகள் இல்லை, முக்கியமாக, குழலூதும் பெண்கள் இல்லை.

ஒன்றிரண்டு இளைஞர்களோடு, வெளிறிய தரைவிரிப்பின் மீது கரையொதுங்கிய கடற்கன்னியைப் போன்ற தோரணையோடும், வார்னிஷ் பூசியது போல பளபளவென்று, வியர்வை பூத்த முகத்தோடும் அமர்ந்திருக்கும் சிந்தியா, ஏதேனும் ஒரு கட்டத்தில் பருப்புகள் அடங்கிய தட்டை ஒரு கையில் கவனமாக ஏந்தியவாறே ஊர்ந்து சென்று, மறு கையால் வெண்சாம்பல் நிற சோபாவில் உற்சாகமும் துடிப்புமான இரண்டு பெண்மணிகளுக்கு நடுவில் வசதியாக அமர்ந்திருக்கும் காக்கரன் அல்லது கார்க்கரன் எனப்படுகிற கலைப்பொருள் விற்பனையாளரின் திடகாத்திரமான காலில் பட்டென்று தட்டுவாள். அடுத்த கட்டத்தில், மகிழ்ச்சியும் ஆரவாரமும் வரம்பு கடந்து பெரும் களேபரமாக வெடிக்கும். கார்க்கரன் அல்லது காரன்ஸ்கி, சிந்தியாவை அல்லது அந்தப் பக்கமாகப் போகும் வேறு ஏதாவதொரு பெண்ணை தோளைப் பற்றி, அறையின் மூலைக்கு அழைத்துச் சென்று, பல் இளித்தபடி, ஆபாசமான நகைச்சுவைகளையோ, அந்தரங்கமான கிசுகிசுக்களையோ சொல்வான். அவளும் தலையாட்டிச் சிரித்தபடி அங்கிருந்து அகன்று செல்வாள். அதற்குப் பிறகு அங்கு பால்பேதமற்ற நெருக்கங்களும், கோமாளித்தனமான சமரசங்களும் சுழன்றடிக்கும். ஒருத்தியின் கணவனை (அவன் அறையின் நட்ட நடுவில் நின்றுகொண்டிருப்பான்) இன்னொருத்தியின் கொழுத்த கை வளைத்திருக்கும் அல்லது யாரோ யாரிடமோ செல்லக் கோபம் காட்டுவார்கள் அல்லது யாரோ யாரையோ விளையாட்டாய்த் துரத்துவார்கள். இவ்வளவுக்கும் மத்தியில் பாப் வீலர் அமைதியான அரைப் புன்னகையோடு, நாற்காலிகளுக்குக் கீழே காளான் முளைத்ததுபோல் ஆங்காங்கே, விருந்தினர்கள் குடித்துவிட்டு வைத்திருக்கும் காலி மதுக்கோப்பைகளை எடுத்துக்கொண்டிருப்பார்.

அதுபோன்றதொரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சிந்தியாவுக்கு, சாதாரணமாக, ஆனால் நல்ல மாதிரியாக ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய விருந்தினர்கள் சிலரைப் பற்றி அதில் விளையாட்டாய்க் கேலி செய்திருந்தேன். மேலும் அவளுடைய விஸ்கியைத் தொடாததற்கு மன்னிப்பும் கோரியிருந்தேன். பிரெஞ்சுக்காரனாகிய எனக்கு தானியத்தை விடவும் திராட்சையே பெரும் விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு, பொது நூலகத்தின் படிக்கட்டில் அவளைச் சந்தித்தேன். மேகமூட்டத்துடன் லேசான தூறலும் இருந்தபோது, கக்கத்தில் இரண்டு புத்தகங்களை இடுக்கிக்கொண்டு, அவளுடைய அம்பர் வண்ணக் குடையை விரிக்கப் போராடிக் கொண்டிருந்தாள். ஒரு நொடி அந்த இரண்டு  புத்தகங்களையும் நான் வாங்கிக்கொண்டு அவளுக்கு ஆசுவாசம் அளித்தேன். ஒன்று ராபர்ட் டேல் ஒவன் எழுதிய ‘இன்னொரு உலகின் எல்லையில் காலடித்தடங்கள், மற்றொன்று ‘ஆவியுலகும் கிறிஸ்தவமும்’ போல் ஏதோ ஒன்று.

என் தரப்பிலிருந்து எந்தத் தூண்டுதலும் இல்லாமல், திடீரென்று உணர்ச்சிக் கொந்தளிப்புடன், வக்கிரமான, விஷம் தோய்ந்த வார்த்தைகளால் அவள் பாட்டுக்கு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். நான் ஒரு போலி பகட்டுக்காரன் என்றும் நயவஞ்சகன் என்றும் வெளித்தோற்றத்தையும் நடவடிக்கைகளையும் கொண்டே மனிதர்களை எடைபோடுகிறேன் என்றும், அந்த கார்க்கரன் இரண்டு வெவ்வேறு தருணங்களில் இருவேறு கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருந்த இரண்டு பேரைக் (தற்செயல் ஒற்றுமையாக இருவரது பெயருமே கார்க்கரன்) காப்பாற்றியவன் என்றும், கூச்சலும் கும்மாளமுமாய் இருந்த ஜோன் வின்டருக்கு பார்வைக் குறைபாடுள்ள சிறிய பெண் குழந்தை இருப்பதாகவும் இன்னும் சில மாதங்களில் அவள் முற்றிலும் பார்வை இழந்துவிடுவாள் என்றும் நான் அன்று காரணமின்றி அவமானப்படுத்திய பச்சை உடையணிந்து, மார்பில் கரும்புள்ளிகளைக் கொண்டிருந்த பெண்மணி, 1932-ஆம் ஆண்டு தேசிய அளவில் அதிக விற்பனையான புதினத்தை எழுதியவள் என்றும் சொன்னாள்.

என்னவொரு விநோதமான சிந்தியா! யாரை அவள் அதிகம் நேசிக்கிறாளோ, யார் மீது மரியாதை வைத்திருக்கிறாளோ, அவர்களிடம் அவள் மிகக் கடுமையாக நடந்துகொள்வாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் ஏதோ ஒரு தருணத்தில் இருவருக்கும் இடையில் ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது அவசியம். ஏற்கனவே அவளுடைய ஆர்வக்கோளாறான ஒளிவளையங்களைப் பற்றியும் மற்ற முட்டாள்தனங்களைப் பற்றியும் ஓரளவு நான் அறிந்திருந்ததால் அதன் பிறகு அவளைப் பார்ப்பதை முற்றிலும் கைவிட்டேன்.

6

சிந்தியா இறந்துவிட்ட தகவலை டி. என்னிடம் தெரிவித்த அன்று இரவு பதினொரு மணிக்குப் பிறகு நான் வசித்த, இரண்டுதளக் குடியிருப்புக்குத் திரும்பினேன். ஒரு தளத்தில் நானும் மற்றொரு தளத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியரின் விதவை மனைவியும் குடியிருந்தோம். தாழ்வாரத்தை அடைந்ததும், தனிமைப் பயம் பீடிக்க, அடுத்தடுத்து இருந்த இரண்டு ஜன்னல்களின் ஊடாக இரண்டு வகையான இருட்டைக் கண்டேன். ஒன்று இல்லாமையின் இருண்மை. மற்றொன்று தூக்கத்தின் இருள். 

முதலாவது இருட்டைப் போக்க என்னால் ஏதாவது செய்ய இயலும். ஆனால் இரண்டாவது குறித்து எதுவும் செய்ய இயலவில்லை. என்னுடைய படுக்கை எனக்குப் பாதுகாப்பான உணர்வைத் தரவில்லை. அதன் சுருள்வில் அதிர்வுகள் என்னை மேலும் நடுக்கமுறச் செய்தன. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களுள் மூழ்க முனைந்தேன். முட்டாள்தனமாக என் கவனமெல்லாம் பாடல் வரிகளின் முதல் எழுத்துகளைக் கொண்டு அவை உருவாக்கும் சங்கேத வார்த்தைகள் என்னென்ன என்ற தேடலில் ஈடுபட்டது.

70-ஆம் பாவில் FATE, 120-ஆம் பாவில் ATOM, இருமுறை 88 & 131-ஆம் பாக்களில் TAFT[7] என்ற வார்த்தைகளும் என் கண்களுக்கு அகப்பட்டன. என் அறையிலிருந்த பொருட்களின் தன்மையில் ஏதேனும் மாறுதல் தென்படுகிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டேன். திடீரென்று அங்கே ஒரு வெடிகுண்டு விழுந்தால் கூட, சூதாட்டக்காரனின் ஆர்வக்களிப்பை விடவும் அதிகமாகவே அதை நான் எதிர்கொள்வேன் (அது எவ்வளவு பெரிய நிம்மதி) என்றும் அதே சமயம், என் அறையின் அலமாரிக்குள் இருக்கும் சின்னஞ்சிறிய புட்டி, துளி அங்குலம் நகர்ந்தால் கூட என் இதயம் வெடித்துச் சிதறிவிடும் என்றும் நினைக்கும்போது எனக்கே வேடிக்கையாக இருந்தது.

எங்கிருந்து வருகிறது என்று அறியவியலாத நுட்பமான ஒலி கூட பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில், யாரோ வேண்டுமென்றே பின்னணியில் உருவாக்கியதைப் போன்று சந்தேகத்துக்கிடமான வகையில், அறையின் அமைதி மிக அடர்த்தியாக இருந்தது. போக்குவரத்து சந்தடிகள் ஓய்ந்துபோயிருந்தன. பெர்கின்ஸ் தெருவில் ஏதேனும் கனரக வாகனம் செல்லும் சத்தத்துக்கான என் பிரார்த்தனையும் பயனின்றிப் போயிற்று. மேல்தளத்தில் வசிக்கும் பெண்மணி வழக்கமாய், பெரிய குதிகால் காலணியை அணிந்துகொண்டு டொக் டொக் என்று நடக்கும்போது அந்தச் சத்தம் என்னை எரிச்சலடையச் செய்யும். (அவள் குள்ளமாய் குண்டாய் எப்போதும் சோகம் இழையோடும் முகத்துடன் பார்ப்பதற்கு, பதப்படுத்தப்பட்ட சீமைப் பெருச்சாளியைப் போன்று காணப்படுவாள்) ஆனால் இன்று, கழிவறைக்குச் செல்லும் பொருட்டு இப்போதும் அப்படி நடந்திருந்தால் நிச்சயம் அவளை ஆசீர்வதித்திருப்பேன். விளக்கைப் போட்டும் அணைத்தும், தொண்டையைச் செருமியும், எனக்கு நானே பல முறை சத்தமெழுப்பிக் கொண்டேன். தொலைதூர வாகனம் ஒன்றில் மனக்கண்ணால் ஏறிப்  பயணிக்கத் தொடங்கினேன். ஆனால், கண்கள் சொக்கும் முன்பே அதிலிருந்து இறங்க நேர்ந்துவிட்டது. திடீரென்று ஏதோ காகிதம் கசங்கும் சத்தம் (இறுக்கமான இரவுப்பூவொன்று மலர்வதைப் போன்று கசங்கிய தாள் விரிவதாக கற்பனை செய்தேன்) குப்பைக் கூடையிலிருந்து கேட்டது. என்னுடைய படுக்கையை ஒட்டிய மேஜையில் சின்னதாக டிக் என்ற சத்தமும் கேட்டது. சிந்தியாவின் ஆவி, தன்னுடைய மட்டமான விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்று தோன்றியது. நான் சிந்தியாவை எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்.

1848-ஆம் ஆண்டு நியூயார்க்கின் ஹைட்ஸ்வில் என்னும் உட்கிராமத்தில் தட்டுதல் மூலம் இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் தொடங்கி, கேம்ப்ரிட்ஜ்ஜின் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற கோரமான தோற்றப்பாடுகள் வரை நவநாகரிக யுகத்தின் ஆவி மற்றும் அமானுஷ்யம் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மனதுக்குள் மதிப்பாய்வு செய்தேன். கணுக்கால் எலும்புகளையும் இன்ன பிற மூட்டுகளையும் பயன்படுத்தி ஆவிகளோடு தொடர்பு கொண்ட (பஃபல்லோ பல்கலைக்கழக அறிஞர்களின் கூற்றுப்படி) ஃபாக்ஸ் சகோதரிகள்; பண்டைய பெரு நாட்டில் ஏற்பட்டது போலவே எப்வர்த் அல்லது டெட்வர்த்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உண்டான ஒரே மாதிரியான மர்மமான மனநோய்[8]; புனிதமான இசையொலிக்கு ரோஜாக்கள் வீழும், அக்கார்டியன் இசைக்கருவிகள் மிதக்கும் விக்டோரியா காலத்து வெறியாட்டங்கள்; எக்டோபிளாசத்துக்கு[9]  பதிலாக ஈரமான பாலாடை வடிகட்டும் சல்லாத்துணியைப் பயன்படுத்தும் தொழில்முறை மோசடிப் பேர்வழிகள்; ஆவியுலக ஊடகப் பெண்மணி ஒருவரின் மதிப்புக்குரிய கணவரும், சோதனைக்கு உட்படுத்தியபோது, தான் அழுக்கான உள்ளாடை அணிந்திருந்ததைக் காரணமாய்க் கூறி சோதனைக்கு உடன்பட மறுத்தவருமான திரு.டங்கன்; பாஸ்டனில் ஒரு ஓய்வுநேரப் பிரார்த்தனையின்போது, வெற்றுக்கால்களும் துளையிடப்படாத காதுமடல்களுமாய் கண்முன் நின்ற வெள்ளை உருவத்தை, திரைச்சீலை இடப்பட்ட மூலையில் சற்று முன்பு தான் பார்த்தபோது உறக்கத்தில் ஆழ்ந்திருந்த, கருப்பு உடையும் இறுக்கமான பாதணிகளும், தோடுகளும் அணிந்திருந்த பணிப்பெண் மிஸ் குக்தான் என்பதை நம்ப மறுத்த அப்பாவி இயற்கை ஆர்வலர் ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்; யூசாப்பியா[10]  என்ற பெரிய, பருத்த உருவம் கொண்ட, சகிக்கவியலாத, வீச்சம் அடிக்கும் முதிய பெண்மணியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தபோதும் கூட, தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட, குள்ளமாகவும், நோஞ்சானாகவும், ஆனால் சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருந்த இரண்டு புலனாய்வாளர்கள்; குளியல் அங்கி அணிந்திருந்த நிலையில், கண்ணை மூடிக்கொண்டு, இடப்பக்கக் காலுறையைத் தடவிக்கொண்டே தொடைவரை செல்லுமாறு இளம்பெண் மார்கரியின் இனிமையான குரல் வழியே அவரை வழிநடத்திய ஆவி மூலம் அதைச் செய்து, கதகதப்பான தொடை மீது கொழகொழப்பான குளிர்ச்சியான, சமைக்கப்படாத பச்சை ஈரலைத் தொட்ட உணர்வடைந்த, அவமானத்துக்கு ஆளான, ஆவியுலக நம்பிக்கையற்ற மாயவித்தைக்காரர் என வரிசையாக நினைவுகூர்ந்தேன்.

7

உடலற்ற என் இருப்புக்கான சாத்தியத்தை மறுக்கவும் தோற்கடிக்கவும் என் சதைப்பிண்டத்திடம்[11], அதன் குற்றங்களிடம் மன்றாடிக் கொண்டிருந்தேன். ஐயோ! இந்த உச்சாடனங்களே சிந்தியாவின் அமானுஷ்யத்தன்மையின் மீதான பயத்தை அதிகரிக்கச் செய்தன. விடியற்காலையில் மீண்டும் பழைய அமைதி திரும்பி, நான் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, ஜன்னல் வழியாக செம்பழுப்பு நிறக் காலைக் கதிரொளி, சிந்தியாவால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த என் கனவை ஊடுருவித் துளைத்தது. 

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பகல் வெளிச்சம் என்னும் பாதுகாப்பான கோட்டைக்குள் இருக்கும்போது, இன்னும் கொஞ்ச நேரம் கனவு நீடித்திருக்கலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். பிரகாசமான, மிகத் துல்லியமான ஓவியங்களை வரையக்கூடிய சிந்தியா இப்போது அவளே உருவற்றவளாக, தெளிவற்றவளாக இருக்கிறாள். படுக்கையில் படுத்தபடி, வெளியிலிருந்து வரும் சிட்டுக்குருவிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே, நான் கண்ட கனவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

மனிதர்கள் பேசுவதை ஒலிப்பதிவு செய்து, பின்னோக்கி ஓடவிட்டால் கீச் கீச் என்று சத்தம் கேட்பது போல, ஒருவேளை இந்த சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சத்தத்தை ஒலிப்பதிவு செய்து பின்னோக்கி ஓடவிட்டால், மனிதர்களின் பேச்சு போல, வார்த்தைகளை வெளிப்படுத்துமோ என்னவோ? யாருக்குத் தெரியும்? நான் என்னுடைய கனவை மறுபடி பகுப்பாய்வு செய்யத் தொடங்கினேன். முன்னாலிருந்து பின்னால், பின்னாலிருந்து முன்னால், குறுக்குவாக்கில், மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக என பல பரிமாணங்களில், சிந்தியாவைப் போன்ற ஏதாவது ஒன்று, விநோதமாக, விசித்திரமாகத் தென்படுகிறதா என்று கடும் பிரயத்தனத்தோடு அதற்குள் தேடினேன்.        

என்னால் கொஞ்சம்தான் ஆராய முடிந்தது. மஞ்சள் நிறத்தில் மேகமூட்டம் போல் சூழ்ந்து என்னை எதையும் யோசிக்கவிடாமல் செய்தது. எல்லாமே தெளிவற்று மங்க ஆரம்பித்தன. சிந்தியாவுடைய கத்துக்குட்டித்தனமான வார்த்தை விளையாட்டுகள், பசப்பும் பாசாங்குமான ஏமாற்றுவித்தைகள், ஆன்மீக வெறியாட்டங்கள் என நினைவடுக்கில் வந்த யாவும் ஏதோ மர்மமான பொருளைத் தருவதுபோல் தோன்றின. எல்லாமே மஞ்சளாகி, மங்கி, மாயமாகித் தொலைந்து போயின.

பின்குறிப்பு – மூலக்கதையான ஆங்கிலத்தில் கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை வரிசைப்படுத்தும்போது ‘பனிக்கூரிகள் சிந்தியாவால், தரிப்பிட மானி என்னால் – சிபில்!’ என்பதாக இருந்தது அது.


[1] பனிக்கூரிகள் (icicles) – கூரையின் மேற்பரப்பிலிருந்து உருகிச் சொட்டும் நீர்த்தாரைகள் உறைந்த நிலையில் ஒன்றிணைந்து, கூரான கத்திகளைப் போன்று தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.

[2] வாகனத் தரிப்பிட மானி – Car parking meter

[3] ஸ்லாவ் மக்கள் – மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களுடைய மொழி ஸ்லாவோனிக் மொழி.

[4] ஸ்கங்க் (skunk) – தமிழில் முடைவளிமா எனப்படும் கருப்பு வெள்ளை நிற விலங்கு. ஆபத்து நேரத்தில் எதிரியின் மீது அது பீச்சும் திரவத்தின் முடை நாற்றம் கடுமையாக, சகிக்கமுடியாததாக இருக்கும்.

[5] அழியாக் கவிதை – கனவில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ‘குப்ளா கான்’ (அல்லது கனவுக்காட்சி) என்ற கவிதையை எழுதியவர் கவிஞர் சாம்வேல் டெய்லர் கோல்ரிட்ஜ். 1797-ஆம் ஆண்டு ஒருநாள் இரவு தூங்கும்போது (அபின் போதையில் இருக்கும்போது என்றும் சொல்லப்படுகிறது) கவிஞருக்கு இக்கவிதை வரிகள் தோன்றியதாகவும் மறுநாள் அவ்வரிகளை நினைவிற்கொண்டுவந்து கவிதையை இயற்றிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து ஊரான போர்லாக்கிலிருந்து எதிர்பாராமல் வந்த ஒருவரால் எழுத்து தடைபட்டு பிறகு வரிகள் நினைவுக்கு வராமல் கவிதை முற்றுப்பெற இயலாமலேயே போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் விறுவிறுப்பானப் படைப்பாற்றலுக்கு இடையூறு தருபவர்களை ‘போர்லாக்கின் ஆள்’ அல்லது ‘போர்லாக்’ என்று அங்கதமாகக் குறிப்பிடுவது வழக்கமாயிற்று.

[6] கருத்துத்திருட்டு – ஆஸ்கார் வைல்ட் எழுதி 1890-ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ‘The Picture of Dorian Gray’. சிபில் வேய்ன் என்ற கதாபாத்திரம் அதில் இடம்பெற்றுள்ளது.

[7] வில்லியம் ஹோவார்ட் டஃப்ட் – ஐக்கிய அமெரிக்காவின் 27-வது குடியரசுத் தலைவராக 1909 முதல் 1913 வரை பதவி வகித்தார். பின்னாளில் 1921-1930 வரை ஐக்கிய அமெரிக்காவின் தலைமை நீதிபதியாக இருந்தார். இரண்டு பதவிகளையும் வகித்த ஒரே ஆளுமை என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

[8] 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் தென்னமெரிக்காவை (கொலம்பஸால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய அமெரிக்கா) இன்கா பழங்குடிப் பேரரசு ஆட்சி புரிந்தது. இன்கா மக்கள் அனைவருக்கும் பொதுவான, காரணம் புலப்படாத மனநோய் இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இன்கா மக்களை மட்டுமன்றி அரச குடும்பத்தையும் இந்நோய் பீடித்ததாகத் தெரிகிறது. தாவரங்களும் தாதுக்களும் அதற்கான சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

[9] எக்டோபிளாசம் – அமானுஷ்யக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிசுபிசுப்பான, அருவருப்பான, மர்மமானப் பொருளைக் குறிக்கும்.

[10] யூசாப்பியா பல்லாடினோ – பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஆவியுலகத் தொடர்பாளர். அவரது அமானுஷ்ய நிகழ்வுகள் யாவும் ஏமாற்றுவித்தைகளே என்று நிரூபிக்க முயன்ற பல மாயவித்தைக்காரர்களும் தந்திரவாதிகளும், இறுதியில் யூசாப்பியா ஒரு புத்திசாலி தந்திரி என்ற முடிவுக்கு வந்தனர். 

[11] தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன், மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். – பரிசுத்த வேதாகமம், கலாத்தியர் அதிகாரம் 6.8

மூல ஆசிரியர் குறிப்பு:

விளாதிமிர் நபகோவ் (1899-1977)

ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், மற்றும் பூச்சியியல் வல்லுநர். முக்கியமாக வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய இவரது ஆய்வுக் குறிப்புகளும் உலகளாவிய வண்ணத்துப்பூச்சிகள் சேகரிப்பும் இன்றும் விஞ்ஞானிகளால் வியப்புடன் பார்க்கப்படுகின்றன. இவர் தன் எழுத்து மூலம் கிடைத்த வருவாயை வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார்.

1919-ஆம் ஆண்டு அவரது குடும்பம் இங்கிலாந்துக்குச் சென்றது. நபகோவ் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்லாவிக் மற்றும் ரோமானிய இலக்கியங்களில் பட்டம் பெற்றார். அதன்பின் குடும்பம் பெர்லினில் குடியேறியது. ஒரு பதிப்பகத்தாரின் வேண்டுகோளின்படி ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் கதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புதான் இவருடைய முதல் படைப்பு.

இவரது ‘லோலிடா’ நாவல் மிகப் பிரசித்தமானது. ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் பல படைப்புகளை அளித்துள்ளார். விளாதிமிர் சிரின் என்பது இவரது புனைபெயர். 

1951-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘வேய்ன் சகோதரிகள்’ கதையை New Yorker பத்திரிகை வெளியிட மறுத்து, திருப்பி அனுப்பிவிட்டது. நபகோவ் அதன் எடிட்டருக்கு அக்கதையின் கட்டமைப்பைப் பற்றியும் மறையெழுத்துப் புதிர் பற்றியும் விளக்கி எழுதினார். கடைசி பத்தியின் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு கதையின் முடிச்சை அவிழ்ப்பது, ‘இலக்கியத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு The Hudson Review பத்திரிகையில்தான் முதன் முதலாக இக்கதை வெளியானது. 1961-ஆம் ஆண்டு நபகோவும் அவர் மனைவியும் சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரியூ நகருக்குச் சென்று தங்கினர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அங்கேயே எழுத்திலும் வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியிலும் கழித்த நபகோவ், தனது 78-வது வயதில் நுரையீரல் பாதிப்பால் இறந்தார்.

The post வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ் first appeared on கனலி.

  •  

நிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின்

நிலைய அதிகாரிகளைச்1 சபிக்காதவர்கள் யாராவது உண்டா? அவர்களோடு சர்ச்சையில் ஈடுபடாதவர்கள் எவராவது உண்டா? ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்று, அவர்களுடைய அராஜக நடவடிக்கை, திமிர், அலட்சியப்போக்கு போன்றவற்றைப் பற்றி, ஒன்றுக்கும் உதவாத புகார்களைப் பதிவு செய்வதற்காக, அவர்களிடமே புகார்ப் புத்தகத்தைக் கோராதவர்கள் யாராவது உண்டா? பழங்காலத்து நீதிமன்றக் காரியதரிசிகளைப்போல அல்லது குறைந்தபட்சம் முரோம் காட்டின் கொள்ளையர்களைப்போல அவர்களை மனிதகுலத்தின் சாபக்கேடு எனக் கருதாதவர்கள் யார்?

சரி, நாம் இப்போது நியாயத்தின் பக்கம் நின்று பார்ப்போம். நம்மை அந்த நிலைய அதிகாரியின் இடத்தில் பொருத்தி, இன்னும் சற்றுப் பரிவோடு அவர் நிலையைப் பரிசீலிப்போம்.

நிலைய அதிகாரி என்பவர் யார்? சமூகத்தின் கடைக்கோடி வகுப்பைச் சேர்ந்த ஒரு உண்மைத் தியாகி. உடல்ரீதியான தாக்குதல்களிலிருந்து அவரைத் தற்காக்க உதவும் கேடயம்தான் அந்த அதிகாரப் பதவி. ஆனால் எல்லா நேரமும் அது உதவும் என்றும் சொல்லிவிட முடியாது. (வாசகர்களின் மனசாட்சிக்கு இந்த இடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்).

அந்தச் சர்வாதிகாரியின், ஆம், இளவரசர் வாஸம்ஸ்கி2 அவர்களை அப்படித்தான் வேடிக்கையாகக் குறிப்பிடுவார், அந்தச் சர்வாதிகாரியின் பணிதான் என்ன? கப்பலின் கீழ்த்தளத்தில் அடைபட்டுக் காலமெல்லாம் துடுப்பு வலிக்கும் வாழ்நாள் அடிமையைப் போன்றவன் அல்லவா அவன்? அவனுக்கு இரவும் பகலும் ஓய்வு ஒழிச்சல் என்பதே கிடையாது.

அலுத்துக் களைத்துவரும் பயணிகள் தங்கள் பயணத்தின் ஒட்டுமொத்த சலிப்பையும் நிலைய அதிகாரியின் மீதுதான் இறக்குவர். சாதகமற்ற வானிலையாகட்டும், மோசமான சாலையாகட்டும், சொல்பேச்சை மதியாத வண்டியோட்டியாகட்டும், சண்டித்தனம் பண்ணும் குதிரையாகட்டும் – எதுவாக இருந்தாலும் பழி என்னவோ நிலைய அதிகாரியின் மேல்தான். நிலைய அதிகாரியின் எளிய வீட்டிற்குள் நுழைந்த கணமே பயணியின் கண்களுக்கு நிலைய அதிகாரியைப் பார்த்தால் எதிரி போலவே தோன்றும்.  எதிர்பாராத விருந்தாளியாய் வந்திருக்கும் பயணிக்கு மாற்றுக் குதிரையைக் கொடுத்து எவ்வளவு விரைவாக அவரை அங்கிருந்து அனுப்பிவைக்கிறாரோ அவ்வளவு பாக்கியசாலி அந்த நிலைய அதிகாரி. கைவசம் மாற்றுக் குதிரைகள் இல்லையென்றால்… கடவுளே! என்ன மாதிரியான வசவுகளும், மிரட்டல்களும் அவர் மீது சரமாரியாகப் பாயும்!

அடைமழை, ஆலங்கட்டி மழையென எதையும் பாராமல் அவரைக் குதிரை லாயத்துக்கு ஓடவைப்பார்கள். எந்நேரமும் சிடுசிடுப்பும் ஆத்திரமுமாக ஏவிக் கொண்டிருக்கும் பயணிகளிடமிருந்து சற்றே விடுபடும் பொருட்டு, நடுங்கவைக்கும் உறைபனிக் குளிரிலும், பனிப்புயல் வீசும் தருணங்களிலும்கூட வீட்டின் முன்பக்கத் தாழ்வாரத்தில் சற்றுநேரம் நின்று ஆசுவாசம் பெற்றுத் திரும்புவார் பரிதாபத்துக்குரிய அந்த நிலைய அதிகாரி.

ஒரு ராணுவ ஜெனரல் வருகிறார். நிலைய அதிகாரி பயந்து நடுங்கியபடி அவர் வசமிருந்த கடைசி இரண்டு குதிரைகளை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அவற்றுள் ஒன்று அஞ்சல் அலுவலருக்கானது. ஜெனரலோ, ஒரு நன்றிகூட சொல்லாமல் குதிரைகளை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார். ஐந்து நிமிடங்கள் கழித்து வாசலில் அழைப்பு மணி! அஞ்சல் அலுவலர் அஞ்சல் குதிரைகளைப் பெறுவதற்கான ஆணையை மேஜைமீது விசிறியடிக்கிறார். நடந்தவற்றை மனத்தராசில் நிறுத்திப் பார்த்தால் நிலைய அதிகாரியின் மீது ஆத்திரம் வருவதற்குப் பதிலாக கழிவிரக்கம்தான் உண்டாகும். இன்னும் கொஞ்சம் சொல்கிறேன், கேளுங்கள்.

இருபதுவருட காலம் ரஷ்யாவிற்குள் குறுக்கும் நெடுக்குமாகக் கிட்டத்தட்ட எல்லா திக்குகளிலும் பயணம் செய்திருக்கிறேன். நிலையங்கள் இருக்கும் எல்லா சாலைகளையும் கிட்டத்தட்ட அறிவேன். பல தலைமுறைகளைச் சார்ந்த வண்டியோட்டிகளோடு எனக்குப் பரிச்சயம் உண்டு. நிலைய அதிகாரிகளைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமில்லாதவர்கள் வெகு சிலரே. வியாபார நிமித்தமாகத் தொடர்பில் இல்லாதவர்கள் சிலர். பயணத்தின்போது நான் குறிப்பெடுத்து வைத்திருக்கும், என்னுடைய கவனத்தைக் கவர்ந்த சுவாரசியமான விஷயங்களைக் கூடிய விரைவிலேயே பிரசுரமாக்குவேன் என்று நம்புகிறேன்.   

இப்போதைக்கு நான் சொல்வது ஒன்றுதான், பொதுமக்களின் பார்வைக்கு, நிலைய அதிகாரிகளின்மீது தவறான வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. அவப்பெயருக்கு ஆளான அந்த அலுவலர்கள் உண்மையில் அமைதியான சுபாவத்தினர், உதவும் இயல்பினர், சமுதாய ஒப்புரவு மிக்கவர்கள், பணிவு காட்டுவதில் தேர்ந்தவர்கள், பணத்துக்கு அதிகம் ஆசைப்படாதவர்கள். அவர்களுடனான (பயணிக்கும் பெரும்பாலான கனவான்கள் காரணமே இல்லாமல் வெறுக்கக்கூடிய) உரையாடல்கள் சுவாரசியமாகவும் தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை, அரசு அலுவல் நிமித்தம் பயணிக்கும் ஆறாம் வகுப்பு3 அலுவலர்களின் உரையாடல்களை விடவும் இவர்களுடனான உரையாடல்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவ்வளவையும் நான் சொன்ன காரணத்தால் எனக்கு மதிப்புக்குரிய நிலைய அதிகாரிகளுள் பலர் நண்பர்கள் என்பது சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். இருப்பினும், அவர்களுள் ஒருவரைப் பற்றிய நினைவுகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. சூழ்நிலை ஒருமுறை எங்களை ஒன்று சேர்த்தது. என்னுடைய அன்பான வாசகர்களுக்கு நான் இப்போது அவரைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்.

1816-ஆம் ஆண்டு மே மாதம் நான் அந்த மாகாணத்தின் வழியே பயணம் செய்ய நேர்ந்தது. இப்போது அந்தச் சாலை இல்லை. முற்றிலும் சிதைந்துவிட்டது. அப்போது நான் கீழ்மட்டப் பதவியில் இருந்தேன். நிலையங்களுக்குச் சென்று இரண்டு குதிரைகளைக் கட்டணம் செலுத்திப்பெற வேண்டும். உயர்பதவியில் இல்லாத காரணத்தால் நிலைய அதிகாரிகள் மத்தியில் எனக்குப் போதிய வரவேற்போ கவனிப்போ கிடைக்காது. அதனால் எனக்கு உரிமையானது என்று என் மனதுக்குத் தோன்றுவதை வலிந்து எடுத்துக்கொள்வதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். ஒருமுறை ஒரு நிலைய அதிகாரி, எனக்கென்று தயார் செய்யப்பட்டக் குதிரைகளை, அப்போது வந்த உயர் அதிகாரிக்குத் தந்துவிட்டார். இளமைத்துடிப்பும் உணர்வுவேகமும் கொண்டிருந்த நான் அவரது கயமையையும் கோழைத்தனத்தையும் கண்டு ஆத்திரம் கொண்டேன். அதெல்லாம் பழைய கதை. கவர்னருடைய விருந்தில் கலந்துகொள்ளும்போது பரிமாறுபவன் வரிசைக்கிரமமாகப் பரிமாறாமல் எனக்குப் பிரத்தியேகமான கவனிப்பை வழங்குவதை இயல்பாய் நான் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்தவை. இப்போதெல்லாம் முன்னிறுத்தப்படுவதும் பின்தள்ளப்படுவதும் அதனதன் இயல்பிலேயே நடப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

‘பதவிக்கு மரியாதை’ என்ற பொதுவிதிக்குப் பதிலாக ‘மனதுக்கு மரியாதை’ போன்ற மாற்று விதி ஏதேனும் புழக்கத்துக்கு வருமானால் நம்முடைய நிலைமை என்னாகும்? என்னென்ன பிரச்சினைகள் எழும்? விருந்தின்போது பணியாட்கள் யாருக்கு முன்னுரிமை தருவார்கள்?

இப்போது நான் சொல்லவந்த கதைக்கு வருவோம். 

அன்று வெயில் மிகக் கடுமையாக இருந்தது. அடுத்த நிலையம் சுமார் இரண்டு மைல் தூரத்திலிருந்தபோது மழை தூறத் தொடங்கியது. சற்று நேரத்தில் கன மழையாக அடித்துப் பெய்தது. நான் முழுக்க நனைந்துவிட்டேன். நிலையத்துக்கு வந்ததும் முதல் வேலையாக என்னுடைய உடைகளை மாற்றினேன். அடுத்து, கொஞ்சம் தேநீர் கேட்டேன்.

“ஏ, தூன்யா! தேநீர்ப் பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு கொஞ்சம் க்ரீம் எடுத்துக்கொண்டு வா” நிலைய அதிகாரி உரத்தக் குரலில் கத்தினார்.

தடுப்புக்குப் பின்னாலிருந்து வெளியே வந்த சுமார் பதினான்கு வயது மதிக்கத்தக்க சிறுமி வீட்டின் முன்பக்கம் ஓடினாள். அவளுடைய அழகு என்னை மிரளவைத்தது.

“உங்கள் மகளா?” நான் நிலைய அதிகாரியிடம் கேட்டேன்.

“ஆமாம், என் மகள்தான். கெட்டிக்காரி, சமர்த்து, இறந்துபோன அவளுடைய அம்மாவைப் போலவே” அவர் பெருமிதம் தொணிக்கச் சொன்னார்.

பிறகு அவர் என்னுடைய பயண அனுமதிச்சீட்டைப் பதிவு செய்யத் தொடங்கினார். நான் அவருடைய அந்த எளிய இல்லத்தில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஓவியங்கள் ‘வழிதவறிய மைந்தன்’ கதையைப் பிரதிபலித்தன.

முதல் ஓவியத்தில் அமைதியிழந்த இளைஞன், தளர்வாடையும் இரவுக் குல்லாயும் அணிந்திருந்த முதிய தந்தையிடமிருந்து ஆசியையும் பை நிறைய செல்வத்தையும் அவசரமாகப் பெற்றுக்கொண்டு விடைபெறும் காட்சி. இரண்டாவது ஓவியம் அவனுடைய கீழ்த்தரமான வாழ்க்கையை விதவிதமான வண்ணங்களில் சித்தரித்தது. போலியான நண்பர்களும் கூச்சநாச்சமற்றப் பெண்களும் சூழ்ந்திருக்க, அவன் ஒரு மேஜையில் அமர்ந்திருந்தான். மூன்றாவது ஓவியத்தில் மிகவும் நொடித்துப்போன நிலையில் கந்தலும் முக்கோண மூலைத் தொப்பியும் அணிந்திருந்த அந்த இளைஞன் பன்றிகளை மேய்த்துக்கொண்டு, அவற்றின் உணவைப் பகிர்ந்துண்ணும் காட்சி. அவனுடைய முகத்தில் ஆழ்ந்த துயரும் தவறை உணர்ந்ததால் உண்டான கழிவிரக்கமும் வெளிப்பட்டன. கடைசி ஓவியம், அவன் தந்தையைத் தேடிவரும் காட்சியைக் குறித்தது. அதே தளர்வாடையுடனும் அதே இரவுக் குல்லாயுடனும் காட்சியளிக்கும் அந்த நல்ல மனிதர், மகனை எதிர்கொண்டு அழைக்க ஓடுகிறார். ஊதாரி மைந்தன் அவரெதிரில் மண்டியிட்டிருக்கிறான். தொலைவில் சமையற்காரர் விருந்து ஏற்பாட்டிற்காகக் கொழுத்த கன்றைக் கொல்கிறார். மூத்த மகன் எல்லோருடைய திடீர் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன என்று பணியாட்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு ஓவியத்தின் அடியிலும் பொருத்தமான ஜெர்மானிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றையும் அவற்றோடு அன்று நான் அவ்வீட்டில் கண்ட பால்சம் பூத்தொட்டிகள், புள்ளிபோட்ட திரைச்சீலை, படுக்கை என என்னைச் சுற்றிலும் இருந்தவற்றை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அடுத்து நான் அந்த நிலைய அதிகாரியைப் பார்த்தேன். உற்சாகமும் உறுதியும் வாய்ந்த, சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அம்மனிதரின் மேலங்கியில் மங்கிப்போன ரிப்பன்களோடு கூடிய மூன்று பதக்கங்கள் காட்சியளித்தன.

என்னுடைய பழைய வண்டியோட்டியின் கணக்கைக் கிட்டத்தட்ட சரிபார்த்து முடிக்கும்போது தூன்யா தேநீர்க் குவளையோடு வந்தாள். மதர்ப்புடன் காணப்பட்ட அந்தச் சின்னஞ்சிறு பெண் தன்னைப் பற்றிய என் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள விழைவதுபோல் என்னை ஏறிட்டாள். பிறகு தன் விழிகளைத் தழைத்துக்கொண்டாள். நான் அவளிடம் பேசத் தொடங்கினேன். எல்லாம் தெரிந்த பெரிய மனுஷிபோலத் துளியும் தயக்கமின்றி என் கேள்விகளுக்குப் பதில் அளித்தாள். நான் அவளுடைய அப்பாவுக்கு ஒரு கோப்பையில் மதுவை நிரப்பிக் கொடுத்தேன். பிறகு அவளுக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுத்துவிட்டு நானும் எனக்கு எடுத்துக் கொண்டேன். பிறகு நாங்கள் மூவரும் ஏற்கனவே பழக்கமானவர்களைப்போலச் சரளமான உரையாடலில் ஈடுபட்டோம்.

குதிரைகள் ஏற்கனவே தயாராகிவிட்டன. ஆனாலும் நிலைய அதிகாரியையும் அவருடைய மகளையும் விட்டுப்பிரிய எனக்கு மனமே வரவில்லை. ஒரு வழியாக அவர்களிடம் விடைபெற்றேன். தந்தை என்னுடைய பயணம் இனிதாக அமைய வாழ்த்தினார். மகள் வண்டிவரை வந்து வழியனுப்பினாள். தாழ்வாரத்தைக் கடக்கும்போது நின்று, அவளை முத்தமிட அனுமதி கேட்டேன். தூன்யா சம்மதித்தாள். அதன் பிறகு எத்தனையோ அற்புதமான முத்தத் தருணங்களை என்னால் கணக்கிட இயலும் எனினும் நினைவில் நீண்டகாலம் நிலைத்திருக்கும் அதைப்போன்ற மிக இனிமையான ஒன்றை இதுவரை நான் பெற்றதில்லை.

வருடங்கள் பல கடந்துவிட்ட நிலையில் மறுபடியும் சூழ்நிலை என்னை அதே சாலை வழியே அதே இடத்துக்குக் கொண்டு சென்றது. முன்பிருந்த நிலைய அதிகாரியின் மகளை மீண்டும் சந்திக்கப்போகும் நினைவு மகிழ்ச்சியை அளித்தது. “ஆனால்… அதே நிலைய அதிகாரி இப்போதும் அங்கேயே இருப்பாரா? இல்லையேல், பணிமாற்றம் பெற்றிருக்கலாம். தூன்யாவுக்கும் திருமணமாகியிருக்கலாம்” பல சிந்தனைகள் எழுந்தன. இருவரில் ஒருவர் இறந்துபோயிருக்கலாம் என்ற எண்ணம்கூட இடையிடையே மின்னல் போல் வெட்டியது.

நான் குறிப்பிட்ட அந்த நிலையத்தை முன்கணிப்போடும் வருத்தத்தோடும் நெருங்கினேன். அந்தச் சிறிய நிலையத்துக்கு முன்னால் குதிரைகள் நிறுத்தப்பட்டன. அறைக்குள் நுழைந்தவுடனேயே ஊதாரி மைந்தன் ஓவியங்களை அடையாளம் கண்டுகொண்டேன். மேஜையும் படுக்கையும் அதே இடத்தில் இருந்தன. ஆனால் ஜன்னல் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பால்சம் பூந்தொட்டிகளைக் காணவில்லை. மேலும் அந்த இடம் முழுவதும் அழுக்கடைந்தும் சிதிலமடைந்தும் காணப்பட்டது. நிலைய அதிகாரி தன்னுடைய ரோம அங்கிக்குள் புதைந்து தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். என்னுடைய வருகைச் சத்தம் அவரை எழுப்பிவிட்டது. அவர் எழுந்து உட்கார்ந்தார். நிச்சயமாக அவர் சிமியோன் விரின்4தான். ஆனால் எவ்வளவு வயதானவராகக் காட்சியளிக்கிறார்!

என்னுடைய பயண அனுமதிச்சீட்டைப் பதிவு செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது நான் அவரைப் பார்த்தேன். நரைத்தத் தலைமயிர், நீண்ட காலமாகச் சவரம் செய்யப்படாத முகம், அதிலிருந்த அளவுக்கு அதிகமான சுருக்கங்கள், கூன் விழுந்த முதுகு எனக் காட்சியளித்த அவரைப் பார்த்தபோது திடமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த ஒருவரை மூன்று நான்கு வருட கால இடைவெளி அதற்குள் இவ்வளவு பலவீனமான முதியவராக எப்படி மாற்றியது என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது. .

“உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா? நாம் ஏற்கனவே பழக்கமானவர்கள்” என்றேன்.

“இருக்கலாம், இது ஒரு நெடுஞ்சாலை. இங்கே பல பயணிகள் வருவார்கள், போவார்கள்” என்றார் அவர் சுரத்தில்லாமல்.

“உங்கள் மகள் தூன்யா நன்றாக இருக்கிறாளா?” நான் தொடர்ந்தேன்.

முதியவர் வெறுப்புடன் முகத்தைச் சுழித்தார். பிறகு “கடவுளுக்குத்தான் தெரியும்” என்றார்.

“அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதோ?” நான் கேட்டேன்.

நான் கேட்டது காதில் விழாததுபோல் அவர் என்னுடைய பயண அனுமதிச் சீட்டைப் பார்வையிட்டு அதிலிருக்கும் விவரங்களை மெல்லிய குரலில் வாசித்தார். அவரைக் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு, குடிக்க ஏதாவது வேண்டுமென்று கேட்டேன். தூன்யாவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் என்னைத் தூண்டியது. ஒருவேளை மதுவருந்தும் நேரத்தில் அவர் தன்னுடைய இறுக்கத்தைத் தளர்த்தி என்னோடு பழையபடி உரையாடுவார் என்று நம்பினேன். நான் கணித்தது தவறாகவில்லை. நான் அவரிடம் மதுக்கோப்பையை கையளித்தபோது அவர் மறுக்கவில்லை. மது அவருடைய துயரார்ந்த மௌனத்தைக் கலைப்பதை நான் அவதானித்தேன். இரண்டாவது கோப்பையின்போது அவர் பேச ஆரம்பித்தார். அவருக்கு என்னை ஞாபகம் வந்துவிட்டது அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. அப்போது அவர் சொன்ன கதை ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அதே சமயம் என்னை ஆழமாகப் பாதிப்பதாகவும் இருந்தது.

“அப்படியென்றால் உங்களுக்கு என் மகள் தூன்யாவைத் தெரியும்?” அவர் ஆரம்பித்தார். “ஆனால் தூன்யாவை யாருக்குதான் தெரியாது? ஆ… தூன்யா, தூன்யா! எப்படிப்பட்டப் பெண் அவள்! இந்த வழியாகப் போகும் எல்லோருமே  அவளைப் பாராட்டுவார்கள். அவளைப்பற்றித் தவறாக ஒருவரும் ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. பெண்கள் அவளுக்குக் கைக்குட்டை, கம்மல் என ஒன்று மாற்றி ஒன்று பரிசாகத் தந்துகொண்டே இருப்பார்கள். கனவான்கள் பகலுணவுக்கோ இரவுணவுக்கோ நிறுத்துவதுபோல் வேண்டுமென்றே இங்கே நிறுத்துவார்கள். அவளை அப்போதுதான் நீண்டநேரம் பார்த்து ரசிக்க முடியும் என்பதுதான் உண்மை. கடுங்கோபத்தில் இருப்பவர்கூட அவள் முன்னால் அமைதியாகி என்னிடம் அன்பாகப் பேசுவார். நீங்கள் நம்புவீர்களோ, மாட்டீர்களோ, விரைவஞ்சல் ஊழியர்களும் வழக்காடுமன்றத் தகவற்தூதர்களும் தங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாமல் அவளிடம் அரைமணிநேரம் கூட நின்று பேசுவார்கள்.

இந்த வீட்டை நேர்த்தியாகப் பராமரித்தவள் அவள்தான். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கைப் பேணுவாள். எல்லாப் பொருட்களையும் தயாராக வைத்திருப்பாள். எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக்கொண்டாள். ஆனால் நான்? கிழட்டு முட்டாள் மாதிரி, அவளை அன்பாகப் பார்த்துக்கொண்டேனே தவிர, அந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. நான் என் மகளை நேசிக்கவில்லையா? நான் அவளுக்குச் செல்லம் கொடுக்கவில்லையா? மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரவில்லையா? ஆனால்… முடியாது, யாராலும் கெடுவினையிலிருந்து தப்ப முடியாது. என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதிலிருந்து நழுவ முடியாது.”

அவர் கடந்துபோன துயரத்தை என்னிடம் விரிவாகச் சொல்லத் தொடங்கினார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலைப்பொழுது. நிலைய அதிகாரி புதிய பதிவேட்டைத்  தயார் செய்துகொண்டிருந்தார். மகள் தடுப்புக்குப் பின்னால் அமர்ந்து ஏதோ தைத்துக்கொண்டிருந்தாள். அப்போது வீட்டு வாசலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. மென்கம்பளிக் குல்லாயும் ராணுவச் சீருடையும் அணிந்து கழுத்துக்குட்டை சுற்றிய ஒருவன் உள்ளே நுழைந்தான். குதிரைகள் வேண்டுமென்று கேட்டான்.  அப்போது குதிரைகள் எதுவுமே நிலையத்தில் இல்லை. எல்லாக் குதிரைகளும் வெளியில் போயிருந்தன. அதைச் சொன்னவுடனேயே அவனுடைய குரலோடு சேர்ந்து சாட்டையும் உயர்ந்தது. இம்மாதிரியான சூழல்களுக்குப் பழக்கப்பட்டுப்போன தூன்யா சட்டென்று தடுப்புக்குப் பின்னாலிருந்து ஓடிவந்து, பயணியைப் பார்த்துக் கனிவோடு ‘உண்பதற்கும் குடிப்பதற்கும் ஏதாவது கொண்டுவரவா?’ என்று கேட்டாள். தூன்யாவின் வருகை வழக்கமான மாற்றத்தை உண்டாக்கியது. பயணியின் கோபம் குறைந்தது. அவன் குதிரைகள் வரும்வரை காத்திருக்கச் சம்மதித்ததோடு இரவுணவையும் கோரினான். நனைந்திருந்த குல்லாயையும், இராணுவ உடையையும், கழுத்துக்குட்டையையும் களைந்த பிறகு, அந்த இளம் வீரன் உயரமாகவும், மெலிந்த உடல்வாகுடனும் கன்னங்கரு மீசையுடனும் காட்சியளித்தான். அவன் நிலைய அதிகாரியுடனும் அவர் மகளுடனும் இயல்பாகவும் இனிமையாகவும் உரையாடத் தொடங்கினான். இரவுணவு பரிமாறப்பட்டது. அதற்கிடையில் குதிரைகள் வந்துவிட்டன. நிலைய அதிகாரியின் உத்தரவின் பேரில் பயணியின் கிபிட்காவில்5 குதிரைகளுக்குச் சேணம் பூட்டப்பட்டன. தீவனம் வைக்கப்படாமலேயே அவை தங்களுடைய அடுத்தப் பயணத்துக்கு ஆயத்தப்படுத்தப்பட்டன. குதிரைகள் தயாராக இருப்பதை அறிவிப்பதற்காக, நிலைய அதிகாரி அறைக்குள் நுழைந்தபோது அவ்விளைஞன் கிட்டத்தட்ட சுயநினைவு இல்லாமல் விசிப்பலகைமேல் கிடப்பதைக் கண்டார். அவன் சுகவீனமாக இருந்தான். தலைவலிப்பதாகச் சொன்னான். இந்த நிலையில் அவனுடைய பயணத்தைத் தொடர்வது சாத்தியமில்லை என்றானது. இப்போது என்ன செய்வது? நிலைய அதிகாரி தன்னுடைய படுக்கையில் அவனைப் படுக்க வைத்தார். நோயாளி மறுநாள் காலைக்குள் குணமாகவில்லை என்றால் அடுத்த ஊரில் உள்ள மருத்துவரை அழைக்க முடிவு செய்தார்.

மறுநாள் இளைஞனின் நிலைமை இன்னும் மோசமானது. அவனுடைய வேலையாள் மருத்துவரை அழைக்கச் சென்றான். வினிகரில் தோய்த்த கைக்குட்டையை இளைஞனின் தலையைச் சுற்றிக் கட்டுப் போட்டுவிட்டு, தையல் வேலை செய்தபடி தூன்யா அவன் பக்கத்திலேயே இருந்தாள். நிலைய அதிகாரி பார்த்தபோது அவன் மூச்சுவிடத் திணறினான். மிகவும் கஷ்டப்பட்டு சில வார்த்தைகளை உச்சரித்தான். ஆனால் இரண்டுமுறை காஃபி குடித்தான். முணகியபடி இரவுணவு கோரினான். தூன்யா அவனை விட்டுக் கொஞ்சமும் நகரவில்லை. அவன் தொடர்ச்சியாகக் குடிப்பதற்கு ஏதாவது கேட்டுக்கொண்டே இருந்தான். தூன்யா தானே எலுமிச்சைகளைப் பிழிந்து சாறு தயாரித்துக் குவளை நிறைய அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

நோயாளி அவ்வப்போது கொஞ்சம் பழச்சாறு அருந்தி உதடுகளைச் சற்றே ஈரப்படுத்திக்கொள்வான். பிறகு தூன்யாவிடம் குவளையைத் திருப்பிக் கொடுக்கும்போதெல்லாம் தன் நன்றியைத் தெரிவிப்பதுபோல் அவளுடைய கையை அழுத்திப் பிடிப்பான். மருத்துவர் இரவுணவு சமயத்தில் வந்தார். அவர் நோயாளியின் நாடியைப் பரிசோதித்துவிட்டு அவனுடன் ஜெர்மன் மொழியில் உரையாடினார். பிறகு நிலைய அதிகாரியிடம் ரஷ்ய மொழியில், ‘நோயாளியின் தற்போதைய தேவை ஓய்வு மட்டுமே. இரண்டுநாள் ஓய்வுக்குப் பிறகு அவர் பயணத்தைத் தொடரலாம்’ என்றார். ராணுவ வீரன் மருத்துவரின் வருகைக்கான கட்டணமாக இருபத்தைந்து ரூபிள் கொடுத்துவிட்டு, இரவுணவையும் அவர் தங்களோடு சேர்ந்து உண்ணுமாறு அழைப்பு விடுத்தான். மருத்துவர் சம்மதித்தார். இருவரும் அருமையான இரவுணவை உண்டுமுடித்தனர். ஒயின் குடித்தனர். பிறகு முழு திருப்தியோடு ஒருவருக்கொருவர் விடைகொடுத்தனர்.

மற்றுமொருநாள் போனது. ராணுவ வீரன் முழுவதுமாகக் குணமடைந்துவிட்டான். அவன் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டான். நிலைய அதிகாரியிடமும் தூன்யாவிடமும் மாறி மாறி தொடர்ச்சியாகக் கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருந்தான். ஏதேதோ பாடல்களைச் சீட்டியடித்தான். வந்துபோகும் பிற பயணிகளோடு அளவளாவினான். அவர்களுடைய வருகைப் பதிவை பதிவேட்டில் பதிந்தான். எந்த அளவுக்கு நிலைய அதிகாரியின் மனதைக் கவர்ந்திருந்தான் என்றால் மூன்றாம்நாள் அவன் புறப்படும்போது இப்படியொரு அற்புதமான விருந்தாளியை வழியனுப்ப மனமில்லாமல் அவர் வருந்தினார். 

அன்று ஞாயிற்றுக்கிழமை. தூன்யா ஞாயிறு பூசைக்குத் தேவாலயம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். ராணுவ வீரனின் கிபிட்காவும் தயாராகிவிட்டது. அவன் நிலைய அதிகாரியிடம் அவருடைய உபசரிப்புக்கும் விருந்தோம்பலுக்கும் நன்றி கூறினான். தூன்யாவிடம் விடைபெற்றுக்கொண்டதோடு, அவள் விரும்பினால், ஊரின் எல்லையில் உள்ள தேவாலயம் வரையிலும் தன்னோடு வரலாம் என்றும் அழைப்பு விடுத்தான். தூன்யா தயங்கினாள்.

“நீ எதற்காகப் பயப்படுகிறாய், தூன்யா? மேன்மைக்குரிய இவர் ஒன்றும் ஓநாய் அல்லவே. உன்னைத் தின்றுவிடமாட்டார். தேவாலயம் வரையிலும் அவரோடு சென்றுவா, மகளே” நிலைய அதிகாரி மகளிடம் சொன்னார்.

தூன்யா கிபிட்காவில் ஏறி ராணுவ வீரனின் அருகில் அமர்ந்துகொண்டாள். பணியாள் படக்கென்று குதித்தெழுந்து வண்டியோட்டிக்கு அடுத்தாற்போல் அமர்ந்துகொண்டான். வண்டியோட்டி விசில் அடித்ததும் குதிரைகள் பெரும் பாய்ச்சலுடன் புறப்பட்டன.

பரிதாபத்துக்குரிய அந்த நிலைய அதிகாரிக்குத் தான் எந்த நம்பிக்கையில் தன் மகளை முன்பின் அறிந்திராத ராணுவ வீரனோடு செல்ல அனுமதித்தோம் என்பது புரியவே இல்லை. எது அவர் கண்ணைக் கட்டிவிட்டது? எது அவரை யோசிக்கவிடாமல் தடுத்தது? அரைமணி நேரம் கழிவதே பெரும்பாடானது. நேரம் செல்லச் செல்ல அவர் உள்ளத்தில் அமைதியின்மையும் அலைக்கழிப்பும் உண்டாயின. அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க இயலாமல் உள்ளுக்குள் உண்டான உறுத்தல் காரணமாக மகளைத்தேடி அவரே தேவாலயத்துக்குப் புறப்பட்டார். ஆலயத்தை வந்தடைந்தபோது, ஏற்கனவே பூசை முடிந்து மக்கள் கலைந்துவிட்டிருந்தனர். தூன்யாவை ஆலயத்தின் முகப்பிலும் வளாகத்திலும் தேடினார். எங்கும் காணவில்லை. ஆலயத்தின் உள்ளே பதற்றத்தோடு ஓடினார். பாதிரியார் திருப்பலிபீடத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார். உதவியாளர் மெழுகுத்திரிகளை அணைத்துக்கொண்டிருந்தார். இரண்டு முதிய பெண்மணிகள் ஒரு மூலையில் இன்னமும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தூன்யா அங்கு இல்லை.

தளர்ந்துபோயிருந்த அத்தந்தை பெரும் பிரயத்தனத்துடன் தன் சக்தியை ஒன்றுதிரட்டி, அந்த உதவியாளரிடம், தன் மகள் தூன்யா பூசைக்கு வந்திருந்தாளா என்று கேட்டார். உதவியாளர் அவள் வரவில்லை என்று சொன்னார். என்ன செய்வதென்று புரியாத நிலைய அதிகாரி நடைபிணமாகத் திரும்பினார். அவருக்கு ஒரே ஒரு நம்பிக்கை எஞ்சி இருந்தது. தூன்யா இளவயதுப் பெண்களுக்கே உரிய துடுக்குத்தனத்தோடு அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் அடுத்த ஊரில் இருக்கும் அவளுடைய ஞானத்தாயைப் பார்க்கச் சென்றிருக்கலாம் என்னும் எண்ணம்தான் அது.

உள்ளுக்குள் வதைக்கும் வேதனையோடும் குழப்பத்தோடும் மகளை எந்தக் குதிரை வண்டியில் வழியனுப்பி வைத்தாரோ அந்தக் குதிரைவண்டி திரும்பி வருவதற்காகக் காத்திருந்தார். வண்டி வரவில்லை. மாறாக, தூன்யாவும் ராணுவ வீரனும் இருந்த அந்த வண்டி அடுத்த ஊரைக் கடந்து சென்றுவிட்டது என்ற பயங்கரச் செய்திதான் வந்தது. அன்று மாலை அவர் தனியாகவும் மிதமிஞ்சிய போதையோடும் விடப்பட்டார். அந்த முதிய தந்தையால் தன்மகள் தன்னை விட்டுச் சென்றுவிட்ட துயரத்தைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. வீட்டுக்குள் நுழைந்த கணமே தன் படுக்கையில், முந்தைய தினம் அந்த ஏமாற்றுக்கார இளைஞன் படுத்திருந்த அதே படுக்கையில் விழுந்தார். நடந்தவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து பார்த்தபோது, அவன் நோய்வாய்ப்பட்டதாகச் சொன்னது எல்லாமே நாடகம் என்ற முடிவுக்கு வந்தார்.

கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலைய அதிகாரி, அடுத்த ஊருக்கு அனுப்பப்பட்டார். அவர் திரும்பிவரும்வரை அவருடைய இடத்தில் வேறொருவர் நியமிக்கப்பட்டார். ராணுவவீரனைப் பரிசோதித்த அதே மருத்துவர்தான் நிலைய அதிகாரியையும் பரிசோதித்தார். ராணுவவீரனைத் தான் பரிசோதித்தபோது அவனுக்கு உடல்ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதையும் ஏதோ கெட்ட எண்ணத்துடன்தான் அவன் அப்படி நடிக்கிறான் என்பதையும் தான் சந்தேகித்ததாகவும், அவனுடைய சாட்டை அடிக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்ததாகவும் மருத்துவர் உறுதியாகச் சொன்னார். அந்த ஜெர்மானிய மருத்துவர் உண்மையைத்தான் சொல்கிறாரா அல்லது தன்னுடைய கூர்மதியைப் பறைசாற்ற விரும்பி அவ்வாறு சொல்கிறாரா என்பது தெரியவில்லை என்றாலும் அவரது கூற்று, அந்தக் கையாலாகாதத் தந்தையை எந்த விதத்திலும் ஆற்றுப்படுத்தவில்லை. ஓரளவு உடல்நிலை தேறியதும், அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் இரண்டு மாத விடுப்பு பெற்றுக்கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல், மகளைத்தேடி தானே புறப்பட்டார் தந்தை. பதிவு செய்யப்பட்டிருந்த அனுமதிச் சீட்டைக்கொண்டு கேப்டன் மின்ஸ்கி6 ஸ்மோலன்ஸ்கிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றிருப்பதை அறிந்துகொண்டார். தூன்யா தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே செல்வதாகத் தெரிந்தபோதிலும் வழி நெடுக அழுதுகொண்டே சென்றதாக அவர் பயணித்த வண்டியின் வண்டியோட்டி சொன்னார்.

“முடியுமானால்… தொலைந்துபோன என் ஆட்டுக்குட்டியைக் கண்டுபிடித்து வீட்டுக்குக் கொண்டுவருவேன்” நிலைய அதிகாரி நினைத்துக்கொண்டார்.

அதே நினைவோடு அவர் பீட்டர்ஸ்பர்க்கை அடைந்தார். இஸ்மைலோவ்ஸ்கி பட்டாளத்தின்7 ஓய்வுபெற்ற கடைநிலை வீரரும் நிலைய அதிகாரியின் பழைய நண்பருமான ஒருவரின் குடியிருப்பில் தங்கித் தன் தேடுதலைத் தொடங்கினார். கேப்டன் மின்ஸ்கி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்தான் இருக்கிறான் என்பதையும் டிம்யூத் ஹோட்டலில் தங்கியிருக்கிறான் என்பதையும் விரைவிலேயே கண்டுபிடித்துவிட்டார். அவனைச் சந்திக்க முடிவு செய்தார்.

மறுநாள் அதிகாலையிலேயே புறப்பட்டு கேப்டன் மின்ஸ்கியின் குடியிருப்புக்குச் சென்றார். நுழைவுக்கூடத்தில் நின்றபடி, மேன்மைக்குரியவரைக் காண்பதற்காக ஒரு முதிய ராணுவவீரன் வந்திருப்பதாகச் சொல் என்று அங்கிருந்த ராணுவ சேவகனிடம் அறிவித்தார். பூட்ஸ்களைத் துடைத்துக் கொண்டிருந்த அவன், தங்கள் எஜமானர் இன்னமும் உறங்கிக்கொண்டிருப்பதாகவும் காலை பதினொரு மணிக்கு முன்னால் யாரையும் சந்திக்க மாட்டார் என்றும் கூறினான். நிலைய அதிகாரி திரும்பிச் சென்றுவிட்டு, சேவகன் குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் வந்தார். இரவுநேரத்துத் தளர்வாடையும் சிவப்புநிறக் குல்லாயும் அணிந்திருந்த மின்ஸ்கி தானே வெளியில் வந்தான்.

“உங்களுக்கு என்ன வேண்டும், நண்பரே?” அவன் கேட்டான்.

முதிய தந்தையின் இதயம் துடித்தது. கண்ணீர் பெருகியது. நடுங்கும் குரலில் அவர் சொன்னார், “மேன்மைக்குரியவரே! தாங்கள் எனக்கொரு பேருதவி செய்ய வேண்டும்…”

மின்ஸ்கி அவரை உற்றுப் பார்த்தான். சற்றுக் குழம்பியவனாய், அவரைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டான்.

“மேன்மைக்குரியவரே! போனது போய்விட்டது. என் மகள் தூன்யாவையாவது என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவளை உங்களுடைய விளையாட்டுப் பொம்மையாக ஆக்கிவிட்டீர்கள். மிச்சமிருக்கும் வாழ்க்கையையும் அழித்து அவளை நாசமாக்கிவிடாதீர்கள்”

“நடந்து முடிந்த எதையும் மாற்ற முடியாது” அவன் கிட்டத்தட்ட குழம்பிய நிலையிலிருந்தான். “உங்கள் முன்னால் நான் குற்றவாளியாக நிற்கிறேன். உங்களிடம் மன்னிப்புக் கோரவும் தயாராக இருக்கிறேன். ஆனால் தூன்யாவை விட்டுவிடுவேன் என்று மட்டும் நினைக்காதீர்கள். அவள் மகிழ்ச்சியாக இருப்பாள், நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் எதற்காக அவளை மீளப் பெற நினைக்கிறீர்கள்? அவள் என்னை நேசிக்கிறாள். இனி அவளால் அவளுடைய முந்தைய வாழ்க்கையை வாழ முடியாது. நடந்தவற்றை முற்றிலும் மறந்துவிட அவளாலும் முடியாது. உங்களாலும் முடியாது.”

அவன் எதையோ அவருடைய சட்டைக்கை மடிப்பினுள் திணித்துத் தள்ளியபடி, அறைக் கதவைத் திறந்தான். என்ன ஏது என்று புரிந்துகொள்வதற்குள்ளாகவே தெருவில் நின்றிருக்கக் கண்டார். அதிர்ச்சியில் உறைந்தவராய் வெகுநேரம் அவர் அப்படியே அங்கேயே நின்றிருந்தார். பிறகுதான் தன்னுடைய சட்டைக்கை மடிப்பில் ஏதோ தாள்சுருள் இருப்பதைக் கவனித்தார். வெளியில் எடுத்துப் பார்த்தபோது ஐந்தும் பத்துமாய்ப் பல ரூபிள் தாள்கள் சுருட்டிவைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மீண்டும் அவர் கண்களில் கண்ணீர் தளும்பியது. இம்முறை கொந்தளிக்கும் ஆத்திரத்தின் கண்ணீர்! அவர் பணத்தாள்களைக் கசக்கிப் பந்தாக்கி தரையில் வீசியெறிந்தார். பூட்ஸ் கால்களால் அதை ஆத்திரம் தீரும்வரை மிதித்தார். பிறகு அங்கிருந்து விலகி நடந்தார்.

சற்று தூரம் சென்றதும் என்ன நினைத்தாரோ, நின்றார். மீண்டும் அந்த இடத்துக்குத் திரும்பினார். ஆனால் பணச்சுருள் அங்கே இல்லை. நன்கு உடையணிந்த வாலிபன் ஒருவன் அவர் திரும்பிவருவதைப் பார்த்து, அவசரமாக அங்கிருந்த நான்கு சக்கரக் குதிரைவண்டியில் தாவி ஏறி, வண்டியோட்டியிடம், “சீக்கிரம் போ” என்று கத்தினான்.

நிலைய அதிகாரி அவனைப் பின்தொடரவில்லை. அவர் தன்னுடைய ஊருக்கே திரும்பிவிட முடிவுசெய்தார். ஆனால் போவதற்கு முன்பு ஒரு முறையாவது தூன்யாவைப் பார்த்துவிட விரும்பினார். அதனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின்ஸ்கியின் குடியிருப்புக்குச் சென்றார். தங்கள் தலைவர் யாரையும் பார்க்க மாட்டார் என்று சொன்ன சேவகன் அவரைப் பலவந்தமாய், நுழைவுக்கூடத்துக்கு வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு, கதவை அறைந்து மூடினான். நெடுநேரம் கதவுக்கு வெளியே காத்திருந்துவிட்டு, பிறகு அங்கிருந்து வெளியேறினார் நிலைய அதிகாரி.

அன்றையதினம் மாலை அவர் தூய அடைக்கல அன்னை ஆலயத்தின் பூசை முடிந்து லிட்டெனியா சாலைவழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு அழகான நான்கு சக்கரக் குதிரைவண்டி வேகமாக அவரைக் கடந்துபோனது. அது மின்ஸ்கியின் வண்டி என்பதை உடனடியாக நிலைய அதிகாரி அடையாளம் கண்டுகொண்டார். அந்த வண்டி அங்கிருந்த மூன்றுமாடிக் கட்டடத்தின் முன்னால் அதன் வாசலை ஒட்டி நின்றது. கேப்டன் மின்ஸ்கி படிக்கட்டில் ஓட்டமாக ஏறி ஓடினார். நிலைய அதிகாரியின் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் உதயமாகி மகிழ்ச்சி பரவியது. அவர் வண்டியோட்டியை அணுகி, “இது யாருடைய வண்டி, நண்பரே? மின்ஸ்கியுடையதுதானே?” என்றார்.

“அவருடையதேதான். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றான் அவன்.

“உங்கள் முதலாளி அவருடைய தூன்யாவுக்கு ஒரு கடிதம் தரச்சொல்லி என்னிடம் கொடுத்திருந்தார். ஆனால் தூன்யாவின் முகவரியை நான் தவறவிட்டுவிட்டேன்.” என்றார்.

“அவள் இங்கேதான் இரண்டாவது தளத்தில் குடியிருக்கிறாள். ஆனால் நீங்கள் உங்கள் கடிதத்தோடு தாமதமாக வந்துவிட்டீர்கள். இப்போது அவரே அவளுடன்தான் இருக்கிறார்.”

“அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை” நிலைய அதிகாரி படபடக்கும் இதயத்தோடு பதில் சொன்னார். “உங்களுடைய தகவலுக்கு நன்றி. என்னுடைய பணியை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று நான் அறிவேன்” அவர் சொல்லிக்கொண்டே படிகளில் ஏறினார்.

கதவு தாழிடப்பட்டிருந்தது. அவர் அழைப்புமணியை அழுத்தினார். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் வலி நிறைந்ததாக இருந்தது. ஒரு வழியாகச் சாவி திருகப்படும் சத்தத்தைத் தொடர்ந்து கதவு திறக்கப்பட்டது. இளவயதுப் பணிப்பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

“அவ்தோட்யா செமியோனோவ்னா8 இங்குதானே வசிக்கிறார்?” அவர் கேட்டார்.

“ஆமாம், உங்களுக்கு என்ன வேண்டும்?” அவள் கேட்டாள்.

நிலைய அதிகாரி பதில் எதுவும் சொல்லாமல் அறைக்குள் நுழைந்தார்.

“நீங்கள் உள்ளேபோக முடியாது. நீங்கள் உள்ளேபோக முடியாது” பணிப்பெண் அவர் பின்னாலேயே கத்திக்கொண்டு வந்தாள், “அவ்தோட்யா செமியோனோவ்யா இப்போது ஒரு விருந்தினரோடு இருக்கிறார்.”

அவளுடைய கத்தலைப் பொருட்படுத்தாமல் நிலைய அதிகாரி நேராக உள்ளே சென்றார். முதலிரண்டு அறைகளும் இருட்டாக இருந்தன. மூன்றாவது அறையில் விளக்கு எரிந்தது. திறந்திருந்த அந்த அறைக்கதவின் முன்வந்து நின்றார். அறைகலன்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்த அவ்வறையில் மின்ஸ்கி ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்திருந்தான். மிகவும் நளினமாக நவநாகரிக உடையணிந்திருந்த தூன்யா, சேணத்தின்மீது அமர்ந்திருப்பவளைப் போல் நாற்காலியின் கைப்பிடிமீது அமர்ந்திருந்தாள். மின்ஸ்கியை மிகுந்த கனிவோடு பார்த்தபடி, அவனுடைய கன்னங்கரிய சுருள்முடிக் கற்றையைத் தன் அழகிய விரல்களால் சுருட்டிக்கொண்டிருந்தாள்.

பாவம் அந்த நிலைய அதிகாரி! தன் மகளை இதுவரை இவ்வளவு அழகாகப் பார்த்ததே இல்லை. தன்னுடைய விருப்பத்துக்கு மாறாய் அவள் அழகை உள்ளுக்குள் வியந்தார்.

“யார் அங்கே?” நிமிர்ந்து பார்க்காமலேயே அவள் கேட்டாள்.

அவர் அமைதியாக இருந்தார். பதில் ஏதும் வராமல் போகவே, அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். அவ்வளவுதான். அலறியபடி மயங்கிக் கீழே விழுந்தாள். அதிர்ச்சியோடு அவளை அவசரமாகத் தூக்கச் சென்ற மின்ஸ்கியின் பார்வையில் அறை வாசலில் நின்றிருந்த முதியவர் தென்பட்டார். அவன் தூன்யாவை அப்படியே விட்டுவிட்டு, ஆவேசத்துடன் அவரைநோக்கி வந்தான்.

“உங்களுக்கு என்னதான் வேண்டும்?” பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான். “எதை அபகரிப்பதற்காக திருடனைப்போல என் பின்னாலேயே சுற்றுகிறீர்கள்? அல்லது என்னைக் கொல்ல நினைக்கிறீர்களா? இங்கிருந்து போய்த் தொலையுங்கள்” வலிமை மிகுந்த கரத்தால் அவருடைய கழுத்துப்பட்டியை முரட்டுத்தனமாகப் பிடித்திழுத்து படிக்கட்டில் கீழே தள்ளினான்.

முதிய தந்தை தங்குமிடத்துக்குத் திரும்பினார். மின்ஸ்கியின் மீது புகார் மனு அளிக்கும்படி அவருடைய நண்பர் அறிவுறுத்தினார். ஆனால் நிலைய அதிகாரி மறுத்துவிட்டதோடு, இனி இந்த விஷயத்தில் மேற்கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை என்றும் கூறினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் பீட்டர்ஸ்பர்க்கை விட்டுப் புறப்பட்டு ஊருக்குத் திரும்பிச்சென்று தனது வழக்கமான நிலையப் பணிகளில் ஈடுபடலானார்.

அவர் கதையின் முடிவுக்கு வந்தார். “இது மூன்றாவது வருடம். தூன்யா இல்லாமல், அவளைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாமல் நான் வாழ்ந்துகொண்டிருக்கும் மூன்றாவது வருடம் இது. அவள் உயிரோடு இருக்கிறாளா, இல்லையா என்பது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. பயணிகளாக வரும் பொறுக்கிப்பயல்கள் மயக்கி வசப்படுத்தி, கொஞ்சநாள் அனுபவித்துவிட்டு பிறகு நிர்க்கதியாக விட்டுவிடும் பெண்களுள் அவள் முதல் பெண் கிடையாது. கடைசிப் பெண்ணும் கிடையாது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர்களைப்போல ஏராளமான முட்டாள் பெண்பிள்ளைகள் உண்டு. இன்றைக்கு சாட்டினும் வெல்வெட்டும் உடுத்தியிருப்பார்கள். நாளை சாராயக்கடைகளின் தெருக்களில் மோசமான குடிகாரத் தறுதலைகளோடு திரிந்துகொண்டிருப்பார்கள். தூன்யாவும் அவர்களுள் ஒருத்தியாகக் கெட்டுச் சீரழிந்துவிடுவாளோ என்று நினைக்கும்போது, எனக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும் பரவாயில்லை, அவள் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே செத்துப்போய்விடவேண்டும் என்று விரும்புகிறேன்.”

நிலைய அதிகாரியான என் நண்பர் சொன்ன கதை இதுதான். கதையின் நடுநடுவே பல தடவை கசியும் கண்களை மேலங்கியின் நுனியால் நாசுக்காகத் துடைத்தபடி சொன்னார். கதையைச் சொல்லும்போது கூடவே உள்ளேபோன ஐந்து கோப்பை மதுவும் துக்கத்தை அதிகமாகத் தூண்டிவிட்டிருந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் கதை என்னுடைய மனதின் அடியாழத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அவரிடமிருந்து விடைபெற்று வந்த பிறகும் வெகுகாலம் நிலைய அதிகாரியின் நினைவு என் மனதை விட்டு அகலவில்லை. அதைப் போலவே அந்தப் பாவப்பட்ட பெண் தூன்யாவையும் வெகுகாலம் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்தச் சிறிய ஊரின் வழியாக என் பயணம் அமைந்தது. சட்டென்று எனக்கு என் பழைய நண்பரின் நினைவு வந்தது. அவர் நிர்வகித்துவந்த நிலையம் இப்போது இல்லை என்று கேள்விப்பட்டேன். ‘அந்த முதிய நிலைய அதிகாரி இன்னும் உயிரோடு இருக்கிறாரா?’ என்ற என் கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் கிடைக்கவில்லை. நானே நேரில் சென்று விசாரித்து அறிந்துகொள்ளலாம் என்று முடிவுசெய்து பக்கத்து ஊரில் குதிரைகளை இரவல்பெற்று அவருடைய ஊருக்குக் கிளம்பினேன்.

அது ஒரு இலையுதிர்காலம். சாம்பல்நிற மேகங்கள் வானை மூடியிருந்தன. அறுவடை முடிந்த வயல்களினூடாகக் குளிர்க்காற்று வீசியது. உதிர்ந்த சிவப்பு மற்றும் மஞ்சள் இலைகள் காற்றோடு கலந்திருந்தன. நான் அந்தச் சிற்றூரை அடைந்தபோது மாலை நேரமாகிவிட்டது.

நான் நேராக நிலையத்துக்குச் சென்றேன். தாழ்வாரத்தில், முன்பொரு நாள் தூன்யா என்னை முத்தமிட்ட அந்த இடத்தில் ஒரு பருத்தப் பெண்மணியைச் சந்தித்தேன். என்னுடைய கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர், நிலைய அதிகாரி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும் இப்போது அந்த வீடு தேறல் வடிப்பகமாக இருப்பதாகவும், தான் தேறல் வடிப்பவரின் மனைவி என்றும் சொன்னார். தேவையில்லாமல் ஏழு ரூபிள்களைச் செலவு செய்துவிட்டோமே, இங்கு வந்தது உபயோகமில்லாமல் போயிற்றே என்று என்னை நானே நொந்துகொண்டேன்.

“எதனால் அவர் இறந்துபோனார்?” நான் அப்பெண்மணியிடம் கேட்டேன்.

“குடிதான். வேறென்ன? பாவப்பட்ட தகப்பன்!” அவர் சொன்னார்.

“அவருடைய கல்லறை எங்குள்ளது?”

“ஊருக்கு வெளியே.. அவருடைய மனைவியின் கல்லறைக்குப் பக்கத்தில்”

“யாராவது எனக்கு அந்த இடத்தைக் காட்ட முடியுமா?”

“தாராளமாக. ஏ, வான்கா! பூனையோடு விளையாடியது போதும். இதோ, இந்தப் பெரிய மனிதரை கல்லறைத் தோட்டத்துக்கு அழைத்துச்சென்று, நிலைய அதிகாரியுடைய கல்லறை இருக்குமிடத்தைக் காட்டிவிட்டு வா!”

அப்பெண்மணியின் அழைப்பைக் கேட்டு, கந்தலாடையோடு செம்பட்டைத் தலைமயிரும் மாறுகண்ணுமாய் இருந்த சிறுவன் ஓடிவந்து கல்லறைத் தோட்டம் இருக்கும் திசையில் எனக்கு முன்னால் நடக்கத் தொடங்கினான்.

“இறந்துபோனவரை உனக்குத் தெரியுமா?” போகும் வழியில் அச்சிறுவனைக் கேட்டேன்.

“எனக்குத் தெரியுமாவா? அவர்தான் எனக்கு ஊதுகுழாய் செய்வதற்குச் சொல்லிக்கொடுத்தார். சாராயக்கடையிலிருந்து அவர் வெளியில் வரும்போது நாங்கள் எல்லோரும் அவர் பின்னால் ஓடிச்சென்று, “தாத்தா… தாத்தா… கொஞ்சம் பருப்பு கொடுங்க” என்று கேட்போம். அவரும் நாங்கள் கொறிப்பதற்குக் கொஞ்சம் பருப்புகளை அள்ளிக் கொடுத்துவிட்டுப் போவார். அவர் எப்போதும் எங்களோடு விளையாடுவார்.”

“இந்த வழியாகப் போகும் பயணிகள் யாராவது அவரைப் பற்றிக் கேட்கிறார்களா?”

“இப்போதெல்லாம் குறைவான பேர்தான் இந்த வழியாகப் போகிறார்கள். வரிவிதிப்பவர் எப்போதாவது இந்தப் பக்கமாகப் போவார். ஆனால் இறந்துபோனவர்களைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படமாட்டார். போன கோடைக்காலத்தில் இந்தப் பக்கமாகப்போன ஒரு சீமாட்டி பழைய நிலைய அதிகாரியைப் பற்றி விசாரித்தாள். பிறகு அவருடைய கல்லறைக்குப் போனாள்.”

“அவள் எப்படி இருந்தாள்?” நான் ஆர்வத்தோடு கேட்டேன்.

“மிகவும் அழகாக இருந்தாள். ஆறு குதிரைகள் பூட்டிய கூண்டுவண்டியில் வந்திருந்தாள். அவளோடு மூன்று குழந்தைகளும், ஒரு தாதியும் வந்திருந்தார்கள். கூடவே ஒரு சிறிய கருப்பு நாயும் இருந்தது. நிலைய அதிகாரி இறந்துவிட்டார் என்று சொன்னதுமே அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். பிறகு அந்தக் குழந்தைகளிடம், ‘இங்கேயே அமைதியாக உட்கார்ந்திருங்க. நான் கல்லறைக்குப் போய்விட்டு வருகிறேன்’ என்று சொன்னாள். நான் வழிகாட்டுகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவள், ‘எனக்கு வழி தெரியும்’ என்று சொல்லிவிட்டு, எனக்கு ஐந்து கோபெக் கொடுத்தாள். எவ்வளவு நல்ல சீமாட்டி!”

நாங்கள் கல்லறைத் தோட்டத்தை அடைந்தோம். திறந்தவெளியாக குறைந்தபட்ச மறைப்புமின்றி இருந்த அந்த இடத்தில் ஆங்காங்கே மரச்சிலுவைகள் நடப்பட்டிருந்தன. நிழலுக்கு அங்கே ஒரு மரம் கூட இல்லை. என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட மோசமான கல்லறைத் தோட்டத்தை நான் பார்த்ததே கிடையாது.

“இதுதான் நிலைய அதிகாரியின் கல்லறை” குவித்துவைக்கப்பட்டிருந்த மணல்மேட்டின் மீது தாவிக் குதித்தபடி சொன்னான் சிறுவன். மணல்மேட்டில் கருப்பு நிறத்தில் செப்பு உருவம் பொறிக்கப்பட்டிருந்த சிலுவை நடப்பட்டிருந்தது.

“இங்கேதான் அந்த சீமாட்டி வந்தாளா?” நான் கேட்டேன்.

“ஆமாம். நான் தூரத்திலிருந்து பார்த்தேன். அவள் இங்கேதான் இந்த மணல்மேட்டின் மீது படுத்துக்கிடந்தாள். ரொம்ப நேரம் அப்படியே கிடந்தாள். பிறகு அவள் ஊருக்குள் போய் பாதிரியாரை வரச்சொன்னாள். அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டாள். எனக்கு ஐந்து கோபெக்கும் கொடுத்துவிட்டுப் போனாள். எவ்வளவு நல்ல சீமாட்டி!” வான்கா சொன்னான்.

நானும் அவனுக்கு ஐந்து கோபெக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன். என் பயணத்தைக் குறித்தோ, ஏழு ரூபிள் செலவானதைக் குறித்தோ இப்போது என்னிடம் எந்த வருத்தமும் இல்லை.

1 நிலைய அதிகாரி (Station master or Postmaster) – 19-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நெடுந்தொலைவு
பயணத்துக்கு குதிரை வண்டிகள் பயன்பாட்டில் இருந்தன. ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும்
பயணிகள் அந்த ஊரின் நிலையத்தில் பதிவு செய்த பிறகே பயணத்தைத் தொடரவேண்டும்.
பயணிகளுக்கு முறையான பயண அனுமதிச்சீட்டு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதும், அதை
பதிவேட்டில் பதிவு செய்வதும், தேவைப்படுபவர்களுக்கு முக்கியமாக அரசு அதிகாரிகளுக்கு மாற்றுக்
குதிரைகளை ஏற்பாடு செய்வதும், பயணித்துக் களைத்தக் குதிரைகளுக்கு ஓய்வும் தீவனமும் அளித்து
அடுத்தப் பயணத்துக்குத் தயாராக வைத்திருப்பதும் நிலைய அதிகாரியின் பொறுப்பு. நிலைய அதிகாரி
24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்பதால் நிலையமே அவருடைய வீடாக இருக்கும்.


2 இளவரசர் வாஸம்ஸ்கி (1792-1878) – ரஷ்யாவின் பண்டைய ரூரிக் அரசவம்சத்தைச் சேர்ந்த
இளவரசரும், அற்புதமான கவிஞரும் ஆவார்.

3 ரஷ்யாவின் அரசு அலுவலர்கள் 14 வகுப்புகளாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். பதினான்காவது
வகுப்புதான் கடைநிலை வகுப்பு.


4 சிமியோன் விரின் – கதையின் நாயகனான நிலைய அதிகாரியின் பெயர்.


5 கிபிட்கா – ரஷ்யாவில் குதிரைகள் இழுக்கும் கூண்டு வண்டியின் பெயர்


6 கேப்டன் மின்ஸ்கி – ராணுவ வீரனின் பெயர்


7 இஸ்மைலோவ்ஸ்கி பட்டாளம் – ரஷ்யப் பேரரசின் காலாட்படையைச் சேர்ந்த முதல்நிலை
பாதுகாப்புப் படைப்பிரிவின் ஒரு பகுதி.


8 அவ்தோட்யா செமியோனோவ்னா – தூன்யாவின் இயற்பெயர்.

*********

அலெக்ஸாண்டர் புஷ்கின் (1799 – 1837)

ரஷ்ய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமையான இவர் சிறந்த கவிஞர், நாடகாசிரியர் மற்றும் நாவலாசிரியர். அலெக்ஸாண்டர் புஷ்கின் நவீன ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடி என்று பெருமையோடு குறிப்பிடப்படுகிறார். உரைநடைக் கவிதை, வர்ணனைக் கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் தனது முத்திரையைப் பதித்தவர். இவரது தனித்துவமான எழுத்தோட்டமும் யதார்த்தமான கண்ணோட்டமும் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கின. சொந்தப் பகை காரணமாக, பிரெஞ்சு ராணுவ அதிகாரியான ஜார்ஜஸ் டியாந்தஸ் உடன் இவரே ஏற்பாடு செய்த ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கிச் சண்டையில் படுகாயமுற்று தனது 37-வது வயதிலேயே இறந்தார்.

புஷ்கினின் ‘நிலைய அதிகாரி’ சிறுகதை திரைப்படமாகவும் நாடகமாகவும் பலமுறை மறுவாக்கம் பெற்றுள்ளது.

 

The post நிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின் first appeared on கனலி.

  •  

இல்லை என்பதே பதில் உலகச் சிறுகதைகள் – ரிஷான் ஷெரீப்:

ரிஷானின் உலகச்சிறுகதைகள் மொழிபெயர்ப்பு வரிசையில் மற்றுமொன்று.  இதில் இந்திய/தென்ஆப்பிரிக்க, அங்கோலா, எகிப்து, செனகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அஹமத் ஈஸொப்பின் கதையில் முப்பது வயதை ஒட்டிய முஸ்லீம் சகோதரிகள் இருவர் குடும்பத்தாலும், சமூகத்தாலும் கைவிடப்பட்ட Victims என்பது வெளியே தெரியாதவாறு அவர்களை குற்றம்சாட்டும் தொனியில் கதை முழுதும் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

மரியமா பாவின் கதையில் வயதான ஆண்கள் வயதான மனைவியை விட்டு இளம்பெண்ணை மணந்து கொள்கிறார்கள்.  இந்தியாவின் பானு உட்பட முஸ்லீம் பெண்கள் எழுதும் கதைகளில் வயதான அல்லது நான்கு குழந்தைகள் பெற்று உடல்குலைந்த மனைவியைக் கணவன் கைவிட்டுச் சிறுபெண்ணை மணத்தல் அடிக்கடி நிகழ்கிறது.

நஜீப் மஹ்ஃபூஸ் நோபல் பரிசை வென்றவர். நோபல் ஜூரி இவர் குறித்துக் கூறிய Nuanced Story telling இந்தக்கதையில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  

ராவுல் டேவிட்டின் கதையில் இந்தியப் புராணக்கதைகளில் இருக்கும் சிடுக்கு போடப்படுகிறது.  சம்பந்தப்பட்டவர்கள் நூல் அறுந்து போகாமல் எவ்வாறு அவிழ்க்கிறார்கள் என்பதே கதை.  பார்வைக்கு எளிதாகத் தோன்றினாலும் நுட்பமான கதை.  சம்பந்தப்பட்ட மூவரின் பதில்கள் ஆச்சரியமூட்டுபவை.

ரிஷான் மிக வேகமாக, தெளிவாக (இந்த நூல் உட்பட) மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் மொழிபெயர்க்கும் வேகத்தில் நம்மால் வாசிக்க முடியவில்லை என்பதே அவருக்கு நாம் வழங்கும் பெரிய Credit.

பிரதிக்கு:

Dravidian Stock

முதல்பதிப்பு 2023

விலை ரூ.90.

  •  

அம்மாவை எனக்குப் பிடிக்கும் –  வசுதேந்த்ரா-  கன்னடத்திலிருந்து தமிழில் கே.நல்லதம்பி:

வசுதேந்த்ரா என்றவுடன் தவிர்க்க இயலாது Red Parrot எனும் சிறுகதை நினைவுக்கு வருகிறது.  The Unforgiving City and Other Stories தொகுப்பிலுள்ள பன்னிரண்டு கதைகளில் ஒன்று.  அவரது மோகனசாமி ஒரு Queer Literature.  மூன்று நாவல்கள் எழுதியுள்ளார். இத்தொகுப்பை கதை, கட்டுரை,  Autofiction என்று எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம்.

தலைப்பு அம்மா குறித்து என்ற போதிலும் அக்கா, அப்பா ஆகிய இருவரது Strong presenceம் இந்தத் தொகுப்பில் வந்திருக்கிறது.  

தொகுப்பின் முதல் அத்தியாயத்தை வாசித்த பின் சிறிதுநேரத்துக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை.  சுயபகடியாக பாதிவரை சென்று சட்டென்று Serious tone ஆக மாறுகிறது. வயதானவர்கள் மலஜலத்தின் கட்டுப்பாட்டை இழப்பது இயல்பு,  அதை இவ்வளவு ஆழமாக வாசிப்பது எனக்கு இதுவே முதல்முறை.  இன்னொரு வகையில் இது Escapist Son’s confession. 

ஒரு முறை வாசித்துவிட்டு முதலில் இருந்து தொடங்குங்கள், அம்மா ஏன் திட்டவில்லை என்பதற்குப் புதிய கண்ணோட்டம் கிடைக்கும்.  கடைசிவரி ஒரு நல்ல கவிதையின் கடைசிவரி போலத் தன்னைத்தானே முடித்துக் கொள்கிறது.

அம்மா குறித்த பல முக்கியமான தருணங்கள் நூலெங்கிலும் வருகின்றன.  தலைப்பே அம்மா குறித்துத் தானே.  என் வரையில் அம்மாவின் குணாதிசயம் நன்றாக வெளிப்படும் மற்றொரு தருணம் சொந்தக்காரரிடம் கடன்வாங்கி மூன்று மாதங்கள் மூச்சுத்திணறியது போல் மகன் கடன்வாங்கி மாட்டிக் கொள்ளக்கூடாது என்று தடுத்துவிட்டு மகனிடம் மாட்டிக் கொள்வது.

அம்மாவைப் போல் அக்காவின் தனிப்பட்ட தகவல்கள் நூலில் இடம்பெறவில்லை.  சிறுவயதில் தம்பியைச் சீண்டிக் கொண்டு, Bossy Sis ஆக இருந்து கல்யாணம் ஆனவுடன் பெரிய மனுஷியாக அறிவுரை கூறும் சராசரி இந்தியப்பெண்.  அக்கா 

யார் உதவியுமில்லாது டிவியை ரிப்பேர் செய்ததை வைத்துத் தோன்றுகிறது, அவளை ஆண்பிள்ளை போல் படிக்க வைத்திருந்தால் எவ்வளவோ சாதித்திருப்பாள்.

அப்பாவும் ஒரு சராசரி இந்தியத்தந்தை.  கண்டிப்பாக ஆனால் தனக்குக் கிடைக்காததெல்லாம் தன் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எந்த. சிரமத்தையும் எதிர்கொள்ளும் தந்தை.

மகனின் முதல்மாத சம்பளத்தைக் கேட்டுப் பொறாமை கொள்ளும் போது மிக நெருக்கமானவராகிறார்.  (  தம்பி தேசவிரோத செயல்கள் எதுவும் செய்யவில்லையே!)

வசுதேந்திராவின் இந்தத் தொகுப்பும் வழமைபோல் நவீனத்துவம் கன்னட கலாச்சாரத்தில் தோய்ந்த எழுத்து.  இங்கிலாந்து சென்று திரும்பியதும் பசுதானம் செய்வது அதனால் தான்.  Subtle Humour வசுதேந்த்ரா எழுத்தின் பலம்.  சற்று கவனம் சிதறினால் புன்னகைக்கும் தருணமும் தவறிவிடும்.  எல்லாவற்றையும் விட மேலாக நான் கருதுவது இவரது எழுத்தில் இருக்கும் நேர்மை.  எழுத்தில் Honesty என்பது முகம்தெரியாதவரையும் நெருக்கமாக்கி விடும்.

பாவண்ணன் கன்னடத்திலிருந்து தமிழுக்கு நிறையவே மொழிபெயர்த்துக் கொண்டிருந்தவர் திடீரென நிறுத்திவிட்டார்.  நல்லதம்பி அந்த இடைவெளியே தெரியாமல் நல்ல மொழிபெயர்ப்பாலும், நூல்களின் தேர்வாலும் அற்புதமாகக் கையாண்டு வருகிறார்.  இந்த நூலும் துல்லியமான மொழிபெயர்ப்பு.  நல்லதம்பி மொழிபெயர்ப்பை நிறுத்துமுன் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் வாய்க்க வேண்டும்.  அந்த Anxietyஐ நல்லதம்பி ஒவ்வொரு புதுநூலிலும் ஏற்படுத்துகிறார்.

பிரதிக்கு:

Two Shores Press 89036 65360

முதல்பதிப்பு 2025

விலை ரூ.350.

  •  

இல்லை என்பதே பதில் உலகச் சிறுகதைகள் – ரிஷான் ஷெரீப்:

ரிஷானின் உலகச்சிறுகதைகள் மொழிபெயர்ப்பு வரிசையில் மற்றுமொன்று.  இதில் இந்திய/தென்ஆப்பிரிக்க, அங்கோலா, எகிப்து, செனகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அஹமத் ஈஸொப்பின் கதையில் முப்பது வயதை ஒட்டிய முஸ்லீம் சகோதரிகள் இருவர் குடும்பத்தாலும், சமூகத்தாலும் கைவிடப்பட்ட Victims என்பது வெளியே தெரியாதவாறு அவர்களை குற்றம்சாட்டும் தொனியில் கதை முழுதும் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

மரியமா பாவின் கதையில் வயதான ஆண்கள் வயதான மனைவியை விட்டு இளம்பெண்ணை மணந்து கொள்கிறார்கள்.  இந்தியாவின் பானு உட்பட முஸ்லீம் பெண்கள் எழுதும் கதைகளில் வயதான அல்லது நான்கு குழந்தைகள் பெற்று உடல்குலைந்த மனைவியைக் கணவன் கைவிட்டுச் சிறுபெண்ணை மணத்தல் அடிக்கடி நிகழ்கிறது.

நஜீப் மஹ்ஃபூஸ் நோபல் பரிசை வென்றவர். நோபல் ஜூரி இவர் குறித்துக் கூறிய Nuanced Story telling இந்தக்கதையில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  

ராவுல் டேவிட்டின் கதையில் இந்தியப் புராணக்கதைகளில் இருக்கும் சிடுக்கு போடப்படுகிறது.  சம்பந்தப்பட்டவர்கள் நூல் அறுந்து போகாமல் எவ்வாறு அவிழ்க்கிறார்கள் என்பதே கதை.  பார்வைக்கு எளிதாகத் தோன்றினாலும் நுட்பமான கதை.  சம்பந்தப்பட்ட மூவரின் பதில்கள் ஆச்சரியமூட்டுபவை.

ரிஷான் மிக வேகமாக, தெளிவாக (இந்த நூல் உட்பட) மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் மொழிபெயர்க்கும் வேகத்தில் நம்மால் வாசிக்க முடியவில்லை என்பதே அவருக்கு நாம் வழங்கும் பெரிய Credit.

பிரதிக்கு:

Dravidian Stock

முதல்பதிப்பு 2023

விலை ரூ.90.

  •  

அம்மாவை எனக்குப் பிடிக்கும் –  வசுதேந்த்ரா-  கன்னடத்திலிருந்து தமிழில் கே.நல்லதம்பி:

வசுதேந்த்ரா என்றவுடன் தவிர்க்க இயலாது Red Parrot எனும் சிறுகதை நினைவுக்கு வருகிறது.  The Unforgiving City and Other Stories தொகுப்பிலுள்ள பன்னிரண்டு கதைகளில் ஒன்று.  அவரது மோகனசாமி ஒரு Queer Literature.  மூன்று நாவல்கள் எழுதியுள்ளார். இத்தொகுப்பை கதை, கட்டுரை,  Autofiction என்று எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம்.

தலைப்பு அம்மா குறித்து என்ற போதிலும் அக்கா, அப்பா ஆகிய இருவரது Strong presenceம் இந்தத் தொகுப்பில் வந்திருக்கிறது.  

தொகுப்பின் முதல் அத்தியாயத்தை வாசித்த பின் சிறிதுநேரத்துக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை.  சுயபகடியாக பாதிவரை சென்று சட்டென்று Serious tone ஆக மாறுகிறது. வயதானவர்கள் மலஜலத்தின் கட்டுப்பாட்டை இழப்பது இயல்பு,  அதை இவ்வளவு ஆழமாக வாசிப்பது எனக்கு இதுவே முதல்முறை.  இன்னொரு வகையில் இது Escapist Son’s confession. 

ஒரு முறை வாசித்துவிட்டு முதலில் இருந்து தொடங்குங்கள், அம்மா ஏன் திட்டவில்லை என்பதற்குப் புதிய கண்ணோட்டம் கிடைக்கும்.  கடைசிவரி ஒரு நல்ல கவிதையின் கடைசிவரி போலத் தன்னைத்தானே முடித்துக் கொள்கிறது.

அம்மா குறித்த பல முக்கியமான தருணங்கள் நூலெங்கிலும் வருகின்றன.  தலைப்பே அம்மா குறித்துத் தானே.  என் வரையில் அம்மாவின் குணாதிசயம் நன்றாக வெளிப்படும் மற்றொரு தருணம் சொந்தக்காரரிடம் கடன்வாங்கி மூன்று மாதங்கள் மூச்சுத்திணறியது போல் மகன் கடன்வாங்கி மாட்டிக் கொள்ளக்கூடாது என்று தடுத்துவிட்டு மகனிடம் மாட்டிக் கொள்வது.

அம்மாவைப் போல் அக்காவின் தனிப்பட்ட தகவல்கள் நூலில் இடம்பெறவில்லை.  சிறுவயதில் தம்பியைச் சீண்டிக் கொண்டு, Bossy Sis ஆக இருந்து கல்யாணம் ஆனவுடன் பெரிய மனுஷியாக அறிவுரை கூறும் சராசரி இந்தியப்பெண்.  அக்கா 

யார் உதவியுமில்லாது டிவியை ரிப்பேர் செய்ததை வைத்துத் தோன்றுகிறது, அவளை ஆண்பிள்ளை போல் படிக்க வைத்திருந்தால் எவ்வளவோ சாதித்திருப்பாள்.

அப்பாவும் ஒரு சராசரி இந்தியத்தந்தை.  கண்டிப்பாக ஆனால் தனக்குக் கிடைக்காததெல்லாம் தன் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எந்த. சிரமத்தையும் எதிர்கொள்ளும் தந்தை.

மகனின் முதல்மாத சம்பளத்தைக் கேட்டுப் பொறாமை கொள்ளும் போது மிக நெருக்கமானவராகிறார்.  (  தம்பி தேசவிரோத செயல்கள் எதுவும் செய்யவில்லையே!)

வசுதேந்திராவின் இந்தத் தொகுப்பும் வழமைபோல் நவீனத்துவம் கன்னட கலாச்சாரத்தில் தோய்ந்த எழுத்து.  இங்கிலாந்து சென்று திரும்பியதும் பசுதானம் செய்வது அதனால் தான்.  Subtle Humour வசுதேந்த்ரா எழுத்தின் பலம்.  சற்று கவனம் சிதறினால் புன்னகைக்கும் தருணமும் தவறிவிடும்.  எல்லாவற்றையும் விட மேலாக நான் கருதுவது இவரது எழுத்தில் இருக்கும் நேர்மை.  எழுத்தில் Honesty என்பது முகம்தெரியாதவரையும் நெருக்கமாக்கி விடும்.

பாவண்ணன் கன்னடத்திலிருந்து தமிழுக்கு நிறையவே மொழிபெயர்த்துக் கொண்டிருந்தவர் திடீரென நிறுத்திவிட்டார்.  நல்லதம்பி அந்த இடைவெளியே தெரியாமல் நல்ல மொழிபெயர்ப்பாலும், நூல்களின் தேர்வாலும் அற்புதமாகக் கையாண்டு வருகிறார்.  இந்த நூலும் துல்லியமான மொழிபெயர்ப்பு.  நல்லதம்பி மொழிபெயர்ப்பை நிறுத்துமுன் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் வாய்க்க வேண்டும்.  அந்த Anxietyஐ நல்லதம்பி ஒவ்வொரு புதுநூலிலும் ஏற்படுத்துகிறார்.

பிரதிக்கு:

Two Shores Press 89036 65360

முதல்பதிப்பு 2025

விலை ரூ.350.

  •  

மொழிபெயர்ப்புக் கொடுமைகள்

எல்லாத் துறைகளிலும் கடினமான வேலைகளை எளிதாக்க இயந்திரங்களின் வருகை நிகழ்கிறது. அந்த இயந்திரங்களின் வேலைகளை மேலும் எளிதாக்க கணினிகள் வருகின்றன. கணினிமயத்தையும் மேலும் எளிதாக்க, செயற்கை நுண்ணறிவு வருகிறது. இந்த ஒவ்வொரு கட்டத்திலும், அந்த வேலை எளிதாகச் செய்யப்படுவது மட்டுமின்றி, உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் தரமும் மேலும், மேலும் மேம்பட்டுக் கொண்டே வருகிறது. ஆனால், ஒரே ஒரு விசேஷமான துறையில் மட்டும் இந்த மாற்றங்கள் தலைகீழாக மாறிக்கொண்டு வருகிறது. இலக்கிய வகைமைகளில் மிகக் கடினமானதும், அதே சமயம் அதிகம் கவனிக்கப்படாததுமாகிய மொழிபெயர்ப்பு வகைமைதான் அது.

மொழிபெயர்ப்பு என்பது துவக்ககாலத்திலிருந்தே கடினமான ஒன்றுதான்.  ஏதோ திடீரென்று மனதில் ஒன்று தோன்றியது. உடனடியாக கையில் கிடைத்த பேப்பரில் எழுதி இலக்கியம் படைத்து முடித்துவிடுவதாக இல்லை இது.  உங்கள் முன் மூலநூல் நந்தி போல் நிற்கிறது. மூல ஆசிரியன் நந்தியின் எஜமானனாக எப்போதும் நிற்கிறான். எனது படைப்பை என்ன செய்து தொலைக்கப் போகிறாய்? என்ற கவலையோடு மொழிபெயர்ப்பாளனை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.  மற்ற வகைமை எழுத்துகளை விட மொழிபெயர்ப்பிற்கு அறிவுரைகளும், ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் கூடுதலாகவே இருக்கின்றன.  மொழிபெயர்ப்பு எதுவும் செய்யாத பெருந்தகைகள் பலரும் கூட எப்படி மொழிபெயர்ப்பது என்று பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

மூல ஆசிரியன் சுதந்திரப் பறவையாக இருக்கிறான். மொழிபெயர்ப்பாளன் கூண்டுப் பறவையாக இருக்கிறான். அவனுக்கு சொந்த நடை கிடையாது. மூல ஆசிரியனின் நடையைத்தான் நடக்க வேண்டும்.  அவனுக்குத் தரப்படும் அறிவுரைகளைப் பாருங்கள்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஒவ்வொரு சொல்லாகப் பெயர்த்து எழுதுவதல்ல, என்கிறார் ஒருவர்.

மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு மொழிக்கும் இருக்கும் அதற்கே உரித்தான மரபைப் பேண வேண்டும் என்கிறார் ஒரு அறிஞர்.

மொழிபெயர்ப்பு என்பது சீமை ஓட்டைப் பிரித்து விட்டு. கீற்று வைக்கும் வேலை என்கிறார் கு.ப.ராஜகோபாலன்.

மொழிபெயர்ப்பு என்பது சொல்லுக்குச் சொல் என்று பெயர்த்துத் தருவதன்று என்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அந்த மொழி புழங்கப்படும் பகுதியின் பண்பாடு, கலாச்சாரத்தை புரிந்து கொண்டு சொற்களைப் போட வேண்டும் என்கிறார் அவர். சரிதான். Meenakshi Temple Car Festival  என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் படிக்கும் போது எனக்கு மீனாட்சியின் பிரும்மாண்டமான தேர் ஆடி ஆடி, அசைந்து, அசைந்து வருவது தெரிகிறது. ஒரு அமெரிக்கர் படித்தால், அவர் கண் முன் வரிசையாக கார்கள் அல்லவா வந்து போகும்? அவருக்கு கற்பு என்பதை எந்த ஆங்கிலச் சொல்லால் நான் புரியவைக்க முடியும்?

மொழிபெயர்ப்பாளன் தன் மொழிக்கு முற்றிலும் புதிதான ஒரு விஷயத்தை மொழிபெயர்க்கும் போது, புதிய புதிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாகவும் இருக்கிறது.  இப்படிக் கண்டு பிடிக்கப் பட்ட அத்தனை புதிய சொற்களும் காரணப் பெயர்கள்தான். மிளகு போன்று காரம் கொண்ட ஒரு காய் மிளகாய் ஆனது. புகைக்கப் பயன்பட்ட இலை புகையிலை ஆனது. வள்ளிக் கிழங்கு போல் நீள நீளமான கிழங்குகளை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு அந்நியன் உருண்டை உருண்டையாகக் கொண்டு வந்த கிழங்கைப் பார்த்ததும் உருளைக் கிழங்கு என்று பெயர் வைக்கத் தோன்றியது. நுனியில் துளையின்றி தலையில் சிறு குண்டைச் சுமந்து கொண்டிருந்த ஊளி குண்டூசி ஆனது. சவுக்கால் விரட்டி ஓட்டிய வண்டிக்கு பதிலாக காலால் மிதித்து ஓட்டும் வண்டி வந்த போது மிதிவண்டி என்று பெயர் பெற்றது.

தமிழில் புதுச் சொல் கண்டுபிடிக்கத் தெரியாத போது, அவசரத்திற்கு வடமொழியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். முடிந்த போது அதற்கு தமிழிலும் சொல்லை உருவாக்கினார்கள். முதன்முதலில் census  என்பது இப்படித்தான் குல ஸ்திரி புருஷ பால விருத்ய ஆயவ்யய பரிமாண பத்திரிகை என்று ஏதோ அமாவாசை தர்ப்பண மந்திரத்தின் சாயலில் சொல்லப்பட்டது. பின்னர் மக்கள்தொகை கணக்கெடுப்பானது. ஸர்வகலாசாலையாக  இருந்த University பின்னர் பல்கலைக்கழகமானது.  உப அத்யட்சகராக இருந்த  Vice Chancellor இப்போது துணைவேந்தராகி இருக்கிறார்.  உ.வே.சாவும், வையாபுரிப் பிள்ளையும் லெக்சரர் என்று குறிப்பிட்ட Lecturer இன்று விரிவுரையாளராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு என பல காலம் விவாதித்து விவாதித்து கலைச்சொற்கள் புதிது புதிதாய் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆனாலும், மொழியின் இந்த நுட்பங்கள், இந்த விதிகள் எல்லாம் எல்லா மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தெரிவதில்லை. தெரிந்தாலும் கூட, அவற்றை அக்கறையோடும், கவனத்தோடும் கடைப்பிடிப்பதில்லை. மனிதர்களின் நிலையே இப்படி என்றால், கணினியும், செயற்கை நுண்ணறிவும் என்ன செய்யும்? எல்லாமாகச் சேர்ந்து  மொழிபெயர்ப்புகளை, மொத்தத்தில் தமிழ் மொழியைக் குதறிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

This is a flower  என்றால் இது ஒரு மலர்.

This is a dog என்றால் இது ஒரு நாய்.

This is my father என்றால் இவர் என் அப்பா.

இந்த இடத்தில் This என்பது இது என்பதற்குப் பதிலாக இவர் என்று மாற வேண்டும் என்பது தமிழ் அறிந்தவனுக்கு இயல்பாகவே தெரியும். ஆனால் இயந்திரத்திற்குத் தெரியாது. நாம் அதற்குக் கற்றுத் தர வேண்டும். அப்படிக் கற்றுத் தராமல் அது சொல்வதை அப்படியே எழுதுவதுதான் இன்று மொழிபெயர்ப்புகளில் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.  I have 50 rupees என்பதை நான் ஐம்பது ரூபாய் வைத்திருக்கிறேன் என்று சொல்லும் கணினி, I have a house at Chennai  என்பதை அதே போல் நான் சென்னையில் ஒரு வீடு வைத்திருக்கிறேன் என்கிறது. சென்னையில் எனக்கு ஒரு வீடு இருக்கிறது என்றால் ஒரு பொருள். ஒரு வீடு வெச்சுருக்கேன் என்றால் வேறொரு பொருள் என்பதை அது அறியாது.  You ought to take practice, you must take medicine  போன்ற வரிகளை எல்லாம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும், மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கணினி சொல்லிச் சொல்லி நமது அன்றாட பேச்சிலேயே அது சகஜமாகி விட்டது. பயிற்சியை செய்ய வேண்டும்.  மருந்தை, உணவை உட்கொள்ள வேண்டும். சாப்பிட வேண்டும்.

மொழியின் பயன்பாட்டில் இப்படியாக ஏற்பட்டுள்ள மாற்றம் இன்று வரக்கூடிய பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் இயல்பாகவே வெளிப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் and என்று மூலநூலில் வரும் இடங்களில் எல்லாம் மற்றும் என்று போடுகிறார்கள். தமிழில் உம் என்பதும் இருக்கிறது, உம்மைத் தொகையும் இருக்கிறது என்பதே தெரியவில்லை.. அல்லது மறந்து விட்டது.

அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் என்ற அபுனைவு மொழிபெயர்ப்புகளை விட புனைவுகளின் மொழிபெயர்ப்பில்தான் மொழிவதை அதிகமாக நடக்கிறது. ( விதிவிலக்குகளும் உண்டு. அது பின்னர்) காரணம் புனைவுகளில் பாத்திரங்கள், தங்களது கலாச்சாரம், பண்பாடு சார்ந்த மொழியில் உரையாடுகிறார்கள். அதை கணினியும், மொழிபெயர்ப்பாளர்களும் இயந்திர கதியாக மொழிபெயர்க்கிறார்கள்.  இப்படி இயந்திரகதியில் மொழிபெயர்த்து மொழிபெயர்ப்பாளர்கள் மொழிக்கும், நமக்கும் செய்யும் கொடுமை கொஞ்சநஞ்சமல்ல.. நண்பர்கள் சிரிக்கவும், அதே சமயம் வேதனைப்படவும் இங்கே அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் மிகப் புகழ்பெற்ற நாவல் அது.  இரண்டாம் உலகப் போர் பற்றிய மிக முக்கியமான நாவல். திரைப்படமாகவும் அந்தக் காலத்தில் வந்தது.  உளவாளிகளை ஆங்கிலத்தில் Agent  என்பார்கள் அல்லவா? நம் மொழிபெயர்ப்பாளர் அதை தரகர் என்றே நாவல் முழுக்க மொழிபெயர்த்திருப்பார்.  ஓரிடத்தில்  Can’t avoid telling  என்று வரும். அது தமிழில்  ‘சொல்லிவிடுவதை தவிர்க்க முடியாதவரானார்‘ என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கும்.  நாவலில் ஓரிடத்தில், Took some digging to find him என்பார்கள். நம் நண்பர் அதை  ‘தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஆள், கொஞ்சம் பள்ளம் தோண்டி வேட வேண்டியதாச்சு‘ என்று எழுதியிருப்பார்.  தன்னை காதலிக்கும் பெண்ணிடம் நாயகன் You are seventeen. I am very old thirty five என்பான். தமிழில் இது ‘நீ பதினேழு. நான் மிகவும் கடந்த முப்பத்தியைந்து‘ என்று வரும்.  He let me think he was still in the army  என்பதை ‘இன்னும் அவர் ஆர்மிலதான் இருக்கார் எனும் பதிவை அவர் எனக்குள்ளே நிலை நிறுத்தினார்‘ என்று மொழிபெயர்த்தால் நான் எப்படிப் படிப்பேன்?  உச்சபட்டசமாக ஒரு கொடூர மொழிபெயா்ப்பைச் சொல்கிறேன். Even if the Rangers search the area, they won’t bother with the beach, because, the signs say it is mined  என்ற இந்த வரி ‘ரேஞ்சர்கள் தேடுதல்ல ஈடுபட்டாலும், அவங்க பீச்சைப் பற்றி பொருட்படுத்த மாட்டாங்க.  ஏன்னா, அது சுரங்கப் பகுதியா மாறியிருக்குன்னு குறிப்பு இருக்கு‘ என்று எழுதப்பட்டிருக்கிறது.

மற்றொரு புகழ்பெற்ற ஆங்கில  பெண் மர்மநாவல்ஆசிரியையின் நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பு படுபயங்கரமாக இருக்கும். Weather is not going to present difficulties. It looks as though it had set in fine  என்பதை ‘வானிலை எந்த தொந்தரவும் தரப்போவதில்லை. அது கோவையாக அமைந்து விட்டது‘ என்று மொழிபெயா்த்துள்ளார்கள். அது ஏன் எனது மதுரையாக அமையவில்லை? என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம் !

……….. sat down on the edge of the bed. It was not, he, thought like anyone else sitting on your bed. It was as unsubstantial as though a fairy had poised itself for a minute  என்பதை ‘அவள் அப்படி அமர்வது வேறு யாரோ போல் இல்லாது, சூட்சுமப் பொருளாய்க் காணப்படும் ஏதோ ஒரு தேவதை வந்தமர்ந்தாய்ப் பொருள் கொண்டார்‘ என்று மொழிபெயர்த்திருப்பார்கள்.

இதைவிடக் கொடுமை மற்றொரு புகழ்பெற்ற நாவல் கம் திரைப்படத்தின் மொழிபெயர்ப்பு.  திரைப்படத்தின் தமிழ் வசனங்கள் எவ்வளவோ அற்புதம் என்று சொல்லலாம்.  அதிலிருந்து ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன். நாவலில், There existed only one person on earth to whom he could pass the torch. மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதர் தனது பொறுப்பை அடுத்து ஒருவரிடம் ஒப்படைப்பது பற்றி நினைப்பது பற்றிய வரி இது. மொழிபெயர்ப்பாளர் அவர் அந்த ரகசிய விளக்கை ஒரே நபரிடம்தான் தர முடியும் என்று எழுதிவிட்டார். பின்னே, Torch என்றால் விளக்கு இல்லாமல் வேறு என்னவாம்?

அபுனைவுகளிலும் இப்படி அவ்வப்போது,  நடக்கவே செய்கிறது. புகழ்பெற்ற ஒரு அபுனைவு நூல்.  கதைசொல்லி தன் காதலனை ஒரு ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள். அந்த சந்திப்பின் போது அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொள்கிறார்கள். மூல நூலில் They met in a hotel room. They decided to get married in that meeting  என்று இருந்திருக்கக் கூடும். தமிழ் மொழிபெயர்ப்பில், அந்தக் கூட்டத்தில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தார்கள் என்று வருகிறது. காம்ரேடுகளுக்கு Meeting  என்றாலே கூட்டம், தீர்மானம் தானே !

பல ஆண்டுகளுக்கு முன் ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்த்த பட்டாம்பூச்சி நாவலின் அணிந்துரையில் சுஜாதா Traffic was paralysed  என்பதை போக்குவரத்திற்கு பக்கவாதம் ஏற்பட்டது என்று சொல்லக் கூடாது என்று எழுதியிருப்பார். ஆனால், இன்று மொழிபெயர்ப்புகளுக்கு எல்லாப் பக்கங்களிலும் வாதமாகிவிட்டது !

செய்திப் பத்திரிகைகளின் கொடுமை அதற்கு மேல் ! இப்போது கிரிக்கெட் செய்திகளில் எல்லாவற்றிலும் இலக்கு துரத்தப்பட்ட போது என்கிறார்கள். சர்க்கரை நோய் பற்றிய கட்டுரையில் ஒரு பெரிய மருத்துவர் சர்க்கரை நோயைப் பராமரித்தல் என்கிறார். Maintaining the diabetes  என்பதைச் சொல்ல வருவதாக நான் புரிந்து கொண்டேன். தமிழில் இதை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்று எழுத வேண்டும். பராமரித்தல் என்பது ஒன்றை அக்கறையாக கவனித்து மேம்படுத்துதல் என்ற பொருளில் பயன்படுத்த வேண்டிய சொல். தோட்டத்தை பராமரித்தால் அது செழித்து வளரும். நூலகத்தைப் பராமரித்தால், நூலகம் சிறப்பாக வளரும். சர்க்கரை நோயை பராமரித்தால் அது வளருமேயன்றி, குறையாது !

நந்தனார் படத்தில் நடித்த ஒரு துணை நடிகர் பற்றிய குறிப்பில் அப்படத்தின் credits ல் அவர் வேலாயுதம் என்று குறிப்பிடப்படுவதாக சொல்ல வரும் கட்டுரையாளர் அவர் அப்படத்தில் வேலாயுதம் என்று வரவு வைக்கப்பட்டிருக்கிறார் என்கிறார் ! நான் நவீன சீத்தலைச் சாத்தனாராக என் பேனாவால் தலையில் குத்திக் கொள்கிறேன் !

மொழித் தூய்மையை விட கருத்துத் தெளிவிற்குத் தான் முக்கியத்துவம் தரவேண்டும். மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமே என்றெல்லாம் எத்தனையோ சப்பைக்கட்டுகள் சொல்லலாம். ஆனால், இயந்திரகதியான இத்தகைய மொழிபெயர்ப்புகளில் மொழி, கருத்து எல்லாமே சிதைக்கப்படுகிறது.  மொழிபெயர்ப்பாளனுக்கு இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி வேண்டும் என்பது போய் ஏதேனும் ஒரு மொழி அரைகுறையாகத் தெரிந்தால் போதும், மற்றதை செயற்கை நுண்ணறிவு பார்த்துக் கொள்ளும் என்று ஆகிவிட்டது.  அப்படி அது பார்த்துக் கொள்வது மிக மிகக் கேவலமான வகையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளக் கூட முடியாத அளவிற்கு நம் தமிழறிவு போய் விடுமோ என்று மெய்யாகவே எனக்கு அச்சமாக இருக்கிறது !

அரசு அலுவலகங்களில் எல்லா வேலைகளையும் கணினியில் ஒரு முறை செய்து விட்டு,  வழக்கமான பழைய பாணியிலும் ஒரு முறை செய்யும் நடைமுறை இன்றும் இருக்கிறது. அது போல, மொழிபெயர்ப்பையும் கணினி துணையோடு செய்தாலும், ஒரு முறை  நேரடியாக நம் மொழியறிவின் துணையோடும்  செய்தால்தான் சரிப்படும் என்று தோன்றுகிறது.

ஆனால், அதற்கு நாம் நிறைய உழைப்பைப் போட வேண்டும் !  மன்னிக்கவும்…. உழைக்க வேண்டும் !

சிற்றுளி அக்டோபர் – டிசம்பர் 2024 இதழில் வெளியான கட்டுரை.

  •  

தந்தையர்களும் தனயர்களும் – குர்கன் கான்ஜியன் –  ஆங்கிலத்திலிருந்து தமிழில் த.சித்தார்த்தன்:

கான்ஜியன் ஆர்மீனிய எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், ஓவியர், Illustrator.  கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் உட்பட பத்து நூல்களை எழுதியுள்ளார்.

ஆர்மீனியா வழங்கும் நிதிஉதவித் திட்டத்தில் உருவான நூல் இது.  ஆர்மீனியா மட்டுமல்ல பல நாடுகள் இது போலத் தங்கள் நாட்டுப் படைப்புகள் வேற்றுமொழிகளுக்குச் செல்வதை ஊக்குவிக்க இந்த நிதித்திட்டம் பயன்படுகிறது.  சில திட்டங்களில் மொழிபெயர்ப்பாளரே நேரடியாகப் பங்குபெறவும் இயலும்.  ஊதியம் ஒரு நூலுக்கு இந்திய ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மேல்.  தேடுங்கள் கண்டடைவீர்கள்.

ஆர்மீனியாவின் தலைநகரில் பெரும்பான்மைக் கதை நிகழ்கிறது.  அவர்களது கலாச்சாரம், உணவு, பழக்கவழக்கங்கள் நாவலில் பதிவாகி இருக்கின்றன.  சோவியத் ஆதிக்கத்தில் வெகுகாலம் இருந்து, சோவியத் துண்டானதும் 1991ல் சுதந்திரமடைகிறது ஆர்மினியா.  அதனால் அங்கங்கே நாவலில் வெளிப்படும் ரஷ்ய வெறுப்பை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

இசைக்கலைஞனும், சுகவாசியுமான தந்தை காணாமல் போனபின்,  இன்னொரு மனைவிக்குப் பிறந்த அவரது வேறொரு மகன் அவரது வீட்டுக்கு வருகிறான்.  சமவயது கொண்ட பாதிசகோதரர்கள் குணாதிசயத்தால் முற்றிலும் வேறுபட்டவர்கள்.  அவர்களது சாகசங்களும், தந்தை எங்கு சென்றார் என்பதைக் கண்டுபிடிப்பதுமே இந்த நாவல்.

குரோபோ நாவலின் கடைசியில் நான் பிரச்சனைகளைத் தீர்ப்பவன் அல்ல, ஏற்படுத்துபவன் என்கிறான்.  ஆனால் அவன் ஏற்படுத்தும் பிரச்சனைகள் ஏதோ ஒரு தீர்வை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை.  நாவலில் எல்லாக் கதாபாத்திரங்களுமே திருத்தமாக வந்திருக்கின்றன.  பெண்கள் காமத்தைப் பத்திரமாக ஒளித்து வைத்திருக்கிறார்கள்.

நாவலில் ஒரு Story line இல்லை.  பரபரப்பான சம்பவங்கள் இல்லை.  நாவல் மென்கதியில் செல்கிறது.  ஆனால் நம்மை அறியாத நிலத்திற்கு உடனே இழுத்துச் செல்கிறது.  அதற்கான Credit சித்தார்த்தனுக்கே செல்ல வேண்டும்.  மூலநூலின் தொனியை தமிழில் கொண்டு வர முயன்றிருக்கிறார்.  நாவலின் ஆங்கிலத் தலைப்பு முற்றிலும் வேறு, அடுத்ததாக இதே பெயரில் துர்கனேவ்வின் புகழ்பெற்ற நாவல் இருக்கிறது.  அதே தலைப்பை வைக்கக் காரணம் என்னவாக இருக்கும்?

பிரதிக்கு:

தடாகம் 98400 70870

முதல்பதிப்பு ஜனவரி 2025

விலை ரூ.450.

  •  

சோற்றுப்பாடு –  கோபிநாத் மொகந்தி-  தமிழில் சசிகலா பாபு:

கோபிநாத் அரசு அதிகாரியாகவும்,  வருகைப் பேராசியராகவும் பணிபுரிந்தவர்.  ஞானபீட விருதை ஒடிய மொழிக்காகப் பெற்றவர்.  இவருடைய இந்த நாவல் 1971ல் வெளியாகியுள்ளது.

இந்த நாவல் வெளியாகி ஆறே ஆண்டுகளில் ஆதவனின் காகிதமலர்கள் வெளியாகியது.  Hypocrisy, சுற்றுச்சூழல், Extra marital affair மட்டுமன்றி எத்தனையோ விஷயங்களைத் தொட்டிருப்பார் ஆதவன்.  கோபிநாத் மொகந்தியை நமக்குத் தெரிந்த அளவிற்கு ஆதவனைத் தமிழுக்கு வெளியே தெரியுமா?  வருத்தமாக இருக்கிறது.

பலிதத்தா ஒருவர் சாப்பிடும் உணவை இருவர் பகிரமுடியும் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்கிறான்.  குள்ளமும் அவலட்சணமுமான பலிதத்தாவிற்கு சரோஜினி என்றொரு ரோஜா.  பன்றிவிட்டையை எஜமானின் தோட்டத்திற்குச் சேகரித்துக் கொண்டிருந்த பலிதத்தாவும்,  கணவனே கண்கண்ட தெய்வம் என்று சேலையில் பொறித்துக் கொண்ட சரோஜினியும் வெகுவாக மாறுவதைச் சொல்வதே இந்த நாவல்.

சோற்றுப்பாட்டிற்குத் தொடங்கும் சாகசம், பின்னர் இன்னும் இன்னும் என்று தேடுகிறது.  பணம் என்பது state of mind.  திருப்தி என்பது Infinity.  எதை இழந்து எதைப் பெறுகிறோம் என்பது தான் கடைசியில் நம்மை நாமே கேட்டுக் கொள்ளப்போகும் கேள்வி. Another hopeless rat race.

சோறு தண்ணீர் என்ற பெயரில் நேஷனல் புக்டிரஸ்ட் வெளியீடாக வந்த நாவல் இது.  கோபிநாத் ஒப்பீட்டளவில் நம் நா.பா போல் ஒரு எழுத்தாளர்.  சில எழுத்தாளர்களுக்கு விபரீத ராஜயோகம் எப்படியோ வந்து சேர்கிறது.   இந்த நாவலை எவ்வளவோ நுட்பமாக,  ஆழமாக Present செய்திருக்க முடியும்.  Only consolation is Sasikala’s beautiful translation.  She is too meticulous.

பிரதிக்கு:

தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம்

முதல்பதிப்பு மார்ச் 2023

விலை ரூ.320

  •