Reading view

தமிழியல் தேடல்(4) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பொக்கிஷமாய் திகழும் பதிப்பகங்கள்”

தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு ஆய்வு விருந்து படைக்கும் வகையில், அரிய நூல்களை வெளியிடுகிற பதிப்பகங்களின் பட்டியலும் நூற்பட்டியலும் இக்கட்டுரையில் தொகுத்துக்  கொடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வுத் தேடலில் உழன்று வரும் ஓர் ஆய்வாளருக்கு அடிப்படைத் தேவைகளாகவும் ஆய்வுத்திறவு ஊற்றுகளாகவும் ஆய்வு நூல்கள் விளங்குகின்றன. ஆய்வுத் தேடலின் அடிநாதமே சான்றாதாரங்களைத் தேடித் திரட்டுதல்தான். ஆய்வுச் சான்றாதாரங்களை முதன்மை, துணைமை என இருவகையாகப் பகுப்பர். ஆய்விற்கு முத்தாய்ப்பானவை முதன்மைச் சான்றாதாரங்கள் என்றால், ஆய்விற்குச் செழுமைச் சேர்ப்பன துணைமைச் சான்றாதாரங்கள்.

ஆய்வுலகில் காய்த்தலுவத்தலில்லா துணிபுகளை நிலைநாட்ட, முதன்மைச் சான்றாதாரங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலான துணைமைச் சான்றாதாரங்களை வகுத்தளித்தல் அவசியம். அவ்வண்ணம், துணைமைச் சான்றாதாரங்களைப் பெற பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பதிப்பகங்கள் துணை செய்கின்றன.

1) மணிவாசகர் பதிப்பகம் – மெய்யப்பன் பதிப்பகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய ச.மெய்யப்பன் என்பவரால் மணிவாசகர் பதிப்பகமும், மெய்யப்பன் பதிப்பகமும் தொடங்கப்பட்டது. மணிவாசகர் பதிப்பகத்தில் 3450 நூல்களும், மெய்யப்பன் பதிப்பகத்தில் 750 நூல்களும் வெளிவந்துள்ளன. இவ்விரு பதிப்பகங்களும் சங்க நூல்கள் முதல் சமகால நூல்கள் வரை மிகக் குறைந்த விலையில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

 நூற்பட்டியலைக் காண

மணிவாசகர் பதிப்பகம்

https://drive.google.com/file/d/1Ne2HQz5HynxPC2cMh8SMqpMMcFPUSBmX/view?usp=drivesdk

மெய்யப்பன் பதிப்பகம்

https://drive.google.com/file/d/1NaHTMCZiHYUvK8CaIsOzY2sdnAXYivnA/view?usp=drivesdk

2) தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

திருவரங்கம் பிள்ளை, வ.சுப்பையா பிள்ளை, மா.திரவியம் பிள்ளை ஆகிய மூவரும் சேர்ந்து சைவமும் தமிழும் வளர்க்க 1920ஆம் ஆண்டுச் செப்டம்பா் மாதம் தொடங்கிய பதிப்பகம்தான் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ் பதிப்புலகில் நூற்றாண்டுகளைக் கடந்து வலம்வரும் சிறப்பு இந்நூற்பதிப்புக் கழகத்திற்கே உரித்தானது.

சைவ இலக்கியங்கள், இலக்கணங்கள் தொடர்பான நூல்களைத் தொடர்ந்து அச்சிற் பதிப்பித்து வருகிறது. கழகத்தின் குறிப்பிடத்தக்க பணியாகக் கழகத் தமிழகராதியைச் சுட்டலாம். இதன் முதல் பதிப்பு கடந்த 1964-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, தற்போது வரை 100 பதிப்புகளைக் கண்டுள்ளது.

தேவநேய பாவாணா், செங்கல்வராயப் பிள்ளை, தா.கோவிந்தன், சீனி. வேங்கடசாமி, மா.ராசமாணிக்கனாா், சோமசுந்தரனாா், ஒளவை துரைசாமி பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர் பலரின்  படைப்புகளைக் கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ் ஆய்வுலகுக்குக் கழகம் நடத்தி வந்த ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழின் பங்கு அளப்பரியது.

3) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமானது 41 செவ்வியல் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள், அகராதிகள், அடைவுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து நூல்களும் 50% கழிவு விலையில் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன. 500 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்குவோருக்கு அஞ்சல் செலவு கிடையாது. தற்பொழுது, செவ்வியல் நூல்களைச் செம்பதிப்பாக அச்சிற் பதிப்பித்து வருகின்றனர். இதுவரை இறையனார் களவியல், ஐங்குறுநூறு (மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை), கைந்நிலை ஆகிய நூல்களுக்குச் செம்பதிப்பு வந்துள்ளது.

புத்தகப் பட்டியலைக் காண –

4) தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் பள்ளிகளில் கல்விப்புலம் சார்ந்த பாடப் புத்தகங்களை உருவாக்கத் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது, உலக வரலாறு, இந்திய வரலாறு, சங்க இலக்கியம், சிறார் இலக்கியம் தொடர்பான நூல்களை அச்சில் பதிப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சிலவும் இதன்வழி வெளிவந்துள்ளன. நாட்டுமையாக்கப்பட்ட நூல்களைக் மிகக்குறைந்த விலையில் வாங்க இந்நிறுவனம் ஒரு வரம். இந்நிறுவனத்தின் வெளியீடான தமிழ்-தமிழ் அகரமுதலி முக்கிய நூலாகும்.

நூல்களைப் பெற –

5) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

https://textbookcorp.tn.gov.in/publication_tam.php

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதுவரை 494 நூல்களை அச்சு வாகனம் ஏற்றியுள்ளது.  பெரும்பாலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பயின்றவர்களின் ஆய்வுகளை நூலாகக் கொணர்ந்துள்ளது.

நூற்பட்டியலைக் காண,

https://ulakaththamizh.in

6) பாரி நிலையம்

தமிழியல் ஆய்வு உலகிற்குப் பாரி நிலையத்தின் பங்கு அளப்பரியது. இதுவரை 7,000 – 8000 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளது.

மு.வரதராசானாரின் 90-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பிரசுரமாகியுள்ளன. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரனார் போன்ற ஆளுமைகளின் படைப்புகளை வெளியிட்டுள்ளனர்.

7) உமா பதிப்பகம்

உமா பதிப்பகம் 1986இல்  இராம. இலட்சுமணன் என்பவரால் தொடங்கப்பட்டது. செவ்விலக்கிய நூல்கள், பக்தி இலக்கியங்கள், இதிகாச, புராண நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்துள்ளது.

வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் கம்பராமாயண உரை நூல்களைப் பதிப்பித்தது உமா பதிப்பகத்தின் குறிப்பிடத்தகுந்த முயற்சியாகக் கருதப்படுகிறது.

8) அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம்  வாயிலாகத் தமிழ் ஆய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன.

அண்ணா பல்கலைக் கழக நூற்பட்டியலைக் காண,

http://sekalpana.blogspot.com/2009/04/blog-post_15.html

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் ஏப்ரல் 14 (தமிழ்ப் புத்தாண்டு) மற்றும் செப்டம்பர் -15 (தமிழ்ப் பல்கலைக் கழக நிறுவன நாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள்) ஆகிய நாட்களில் 50% சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கின்றன. மற்ற நாட்களில் 25% கழிவு விலையில் புத்தகங்கள் கிடைக்கின்றன.

நூல்களைக் காண,

9) உ.வே.சா. நூல் நிலையம்

உ.வே.சா நூலகம் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நூலக வளாகத்தில் உ.வே.சா. நூல்நிலையம் செயல்படுகிறது.

உ.வே.சா பதிப்பித்த நூல்கள் முதல் எழுதிய நூல்கள்வரை அனைத்தும் இங்குக் கிடைக்கின்றன.

உ.வே.சா வின் அருங்கொடைகளைக் காண , https://uvesalibrary.org/publications/

10) தமிழ்மண் பதிப்பகம்

தமிழறிஞர்களின் நூல்களை முழுமையான படைப்புத் தொகுதிகளாகத் தமிழ்மண் வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பகத்தின் தனிச்சிறப்பாக 45,000 பக்கங்களில் அறிஞர் அண்ணாவின் 123 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைக் கடந்த 2019இல் வெளியிட்டுள்ளது.

 கா.அப்பாத்துரையார், வ.சு.ப.மாணிக்கம், இளங்குமரனார்,  மறைமலை அடிகள், ந.சி.கந்தையா பிள்ளை, தேவநேயப் பாவாணர், சாமி சிதம்பரனார், திரு.வி.க., மயிலை.சீனி.வேங்கடசாமி ஆகிய தமிழறிஞர்களின் பங்களிப்புகளை முழுத் தொகுப்பாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கப் பணியாகும்.

நூல்களைக் காண,

https://drive.google.com/file/d/1NiyqYNAkq5yLf6y4fQK4n5S1tONP245e/view?usp=drivesdk

11) வனிதா பதிப்பகம்

தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட பெருமைக்குரியது வனிதா பதிப்பகம். தமிழ் முதுகலைப் பட்டதாரியான அம்சவேணி இப்பதிப்பகத்தைக் கடந்த 1978ஆம் ஆண்டுத் தொடங்கினாா். 3000 தலைப்புகளில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்கள் தொடர்பான பல ஆய்வு நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நூல்களைப் பெற,

https://vanithapathippagam.com/bookdetails.php

12) காவ்யா பதிப்பகம்

பேரா. சண்முகசுந்தரம் அவர்களால் 1981ஆம் ஆண்டுக் காவ்யா பதிப்பகம் தொடங்கப்பட்டது. தொகுப்பு நூல்களுக்குப் பெயர் பெற்ற பதிப்பகம். தமிழ் ஆய்வுலகிற்குப் பல அருங்கொடைகளை வாரி வழங்கியுள்ளது.

13) ஆழ்வார்கள் ஆய்வு மையம்

தமிழ்ப் பதிப்புச் சூழலில் வைணவ இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளை வெளியிடும் குறிப்பிடத்தக்கப் பதிப்பகம். புராணங்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளது.

நூற்பட்டியலைக் காண,

https://bookday.in/aiwargal-aivu-maiyam-book-price-list/

14) பரிசல் பதிப்பகம்

பரிசல் பதிப்பகம் தமிழ் ஆய்வுலகிற்கு அரிய நூல்கள் பலவற்றை அச்சு வாகனம் ஏற்றும் மகத்தான பணியைச் செய்து வருகிறது. சமகால ஆய்வாளர்கள் எழுதிய பல ஆய்வு நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பகத்தைச் சிவசெந்தில்நாதன் அவர்கள் நடத்தி வருகிறார். இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பா.ரா.சுப்பிரமணியன் பெயரிலான இளம் ஆய்வறிஞர் விருதை ஆண்டுதோறும் பரிசல் பதிப்பகம்  வழங்கி வருகிறது.

வெளியீடுகளைக் காண,

https://www.commonfolks.in/books/parisal-putthaga-nilayam

15) அறவாணர் தமிழ்க்கோட்டம்

அற இலக்கியங்களில் ஆழங்கால் கொண்டு, ஆய்வுவெளியில் பல திறப்புகளை உருவாக்கித் தந்தவர் பேரா.க.ப.அறவாணர். இவர் பெயரில் செயல்படும் இப்பதிப்பகத்தை, இவரது துணைவியர் தாயம்மாள் அறவாணர் அவர்கள் நிர்வகித்து வருகிறார். க.ப.அறவாணரின் ஆய்வு நூல்கள் அனைத்தும் இங்குக் கிடைக்கின்றன.

காலச்சுவடு, நியூ செஞ்சுரி புத்தகநிலையம், அடையாளம், பாரதி புத்தக நிலையம், சாகித்ய அகாதெமி வெளியீடு போன்றவை ஆய்வாளர்கள் அறிந்த பதிப்பகங்கள். ஆகையால் இத்தொகுப்பில் அவை விரிவாக  விவரிக்கப்படவில்லை.

பொருளாதாரப் பயன் கருதாது, ஆய்வுலகில் புதுப்புது செல்நெறிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் பதிப்பகங்கள் ஆய்வு மாணவர்களுக்குப் பொக்கிஷம்தான்.

The post தமிழியல் தேடல்(4) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பொக்கிஷமாய் திகழும் பதிப்பகங்கள்” appeared first on Kaanalvari.

  •  

தமிழியல் தேடல் (3) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிறுவனங்கள்”

தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு மத்திய-மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் வழங்கும் ஆய்வு உதவித்தொகை பற்றிய விவரங்களைப் விளக்குகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளை முடிந்த பின்னர், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் மனத்தின்கண் விரியும். முனைவர் பட்டம் படிக்கலாமா என்ற யோசனை அகத்தினூடே எட்டிப் பார்க்கும் பொழுது, பொருளாதாரத்திற்கு என்ன செய்வது என்ற எண்ணம் அதனைத் தடுத்து நிறுத்தி முட்டுக் கட்டை போடும்.

‘இன்னும் எத்தனை வருஷம்தான் படிப்ப? வேலைக்குப் போற எண்ணம் இல்லையா? பணம் சம்பாதிக்காமல் என்ன பண்ற?’ போன்ற கேள்விகள் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மீது வளைத்து வளைத்துத் தொடுக்கப்படும் கணைகளாகும்.

ஆய்வுத்தேடலுக்கான செலவினங்களுக்கும், முனைவர் பட்டம் பயிலும் போது ஏற்படும் பொருளாதாரத் தேவைகளைப் நிவர்த்திச் செய்து கொள்ளவும் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை அவசியமாகிறது. அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் பயில்வோருக்கு உதவித்தொகை வழங்க ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அதனை ஒப்பிடும் போது, கலைப்புல ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் உதவித்தொகையும் குறைவு; நிறுவனங்களும் குறைவு.

தமிழ் ஆய்வு மாணவர்கள் பெரும்பாலானோர் JRF மட்டும்தான் ஆய்வு உதவித்தொகை என்ற எண்ணம் பூண்டுள்ளனர். JRF- க்கு இணையான உதவித்தொகை வழங்கும் பல நிறுவனங்கள் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுலகில் உள்ளன.

தமிழில் முழுநேர முனைவர் பட்டம் பயில்வோர் ஏதேனும் ஓர் உதவித்தொகையைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தைத் தார்பரியமாகக் கொண்டு, ஆய்வு உதவித்தொகை வழங்கும் சில நிறுவனங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

1) UGC NET – JRF

பல்கலைக்கழக மானியக் குழுவானது, 1989-ம் ஆண்டுமுதல் தேசிய தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு இரண்டு தாள்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தாள் 1 பொதுத்தாள். இதில் 50 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாள் பாடம் சார்ந்தது. இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். Cut off மதிப்பெண்கள் அடிப்படையில் NET தேர்ச்சி பெற்றவர்களும் , JRF தேர்ச்சி பெற்றவர்களும் அறிவிக்கப்படுகிறார்கள்.

JRF பெற்ற மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆய்வு உதவித்தொகையாக 37,000 ரூபாயும், HRA-க்காக குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுகிறது. இதர செலவினங்களுக்கு (contingency) ஆண்டுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது. இரண்டாண்டுகளுக்குப் பின்பு, SRF தகுதி உயர்வு பெற்றவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்கப்படுகிறது.

தேசிய தகுதித் தேர்வில் JRF கட் ஆப்பை நூலிழையில் நழுவ விட்டவர்களுக்கு NFOBC, NFSC பெல்லோசிப்கள் வழங்கப்படுகின்றன. தேசிய தகுதித் தேர்வு முடிவுகள் வெளிவந்த சில நாட்களில் NFOBC, NFSC தகுதிப் பட்டியல்கள் வெளியாகின்றன. இத்தொகையும் JRF-SRF -க்கு நிகரான உதவித் தொகையைக் கொண்டது.

2) ICSSR – ஆய்வு உதவித்தொகை

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (ICSSR) சமூக அறிவியல் துறைகளில் முழுநேர முனைவர் பட்டம் பயில்வோருக்கு மாதம் ரூ.20,000 வீதம் இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. மேலும், இதர செலவினங்களுக்காக (contingency) ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்படுகிறது.

ICSSR உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் வெளியாகின்றன. விண்ணப்பதைப் பூர்த்திச் செய்து பதிவு செய்தால் போதும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சில மாதங்களில் ICSSR தளத்தில் வெளியாகும்.NET தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த உதவித்தொகை பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு,

https://icssr.org/doctoral-fellowship

3) இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம்(CIL)

இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் மைசூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் யுஜிசியின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பயில்பவர்களுக்கு மாதம் ரூபாய் 20,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது.இதர செலவினங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 20,000 தருகிறது.

அதேபோல், முனைவர் பட்ட மேலாய்வுக்கு (post doctor) மாதம் 30 ஆயிரம் ரூபாயும், மற்ற செலவுகளுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்திய மொழிகள் துறைகளின்கீழ் அடங்கும் குறிப்பிட்ட சில புலங்களை மொழி நிறுவனம் வகுத்துக் கொடுத்துள்ளது.இப்புலங்களில் பயில்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு, https://drive.google.com/file/d/16EUj24z9NmpeZB_buLnJ0BX5kDnY6jBY/view?usp=drivesdk

4) சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே உதவித்தொகை

யுஜிசி-யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பயிலும் பெண் ஆய்வாளர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.குடும்பத்தில் ஒரு பெண் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தைப் பெற முடியும்.

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு இத்திட்டம் பொருந்தும். ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குடும்பத்தில் இருந்தால் இத்திட்டம் பொருந்தாது. JRF-SRF க்கு இணையான தொகை ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்கள் பெற,

https://drive.google.com/file/d/175mgtZiAv4AavFHaoqMhW6m6f4tWqlx4/view?usp=drivesdk

5) மத்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வு உதவித்தொகை (CURF)

இந்திய அளவிலான மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 8,000 வழங்கப்படுகிறது. இதன் கால அளவு ஐந்து ஆண்டுகள்.

பல்கலைக்கழக அளவிலான தகுதித் தேர்வின் மூலமாகவும், தேசியத் தகுதித் தேர்வின் மூலமாகவும் இந்த உதவித் தொகை பெற ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

(நன்றி – திரு.விக்னேஷ், ஆய்வு மாணவர்)

6) முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை (CMRF)

தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகையினை அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகளில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த உதவித்தொகை பெற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் (TRB)நடத்துகிறது.

இந்த உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. கலைத் துறைகளில் 60 மாணவர்களும், அறிவியல் துறைகளில் 60 மாணவர்களும் வழங்கப்படுகிறது.கலைத்துறை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாயும், அறிவியல் துறை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாயும் இதரச் செலவினங்களுக்காக வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கூடுதலாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.

மேலும், முழுநேர முனைவர்‌ பட்டப்‌படிப்பு மேற்கொள்ளும்‌ தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1,00,000 தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

7) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT)

செவ்வியல் இலக்கண-இலக்கியங்கள் அல்லது அதனோடு தொடர்புடைய புலங்களில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு, மாத உதவித் தொகையாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையின் கால அளவு இரண்டாண்டுகள். இதர செலவினங்களுக்கான தொகை ஆண்டுக்கு ரூபாய்.18,000.

இந்திய அளவிலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் முனைவர்பட்டம் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஏப்ரல்-மே மாதங்களில் செம்மொழி மத்திய நிறுவனத்தின் தளத்தில் வெளியாகின்றன.

அதேபோல், முனைவர் பட்ட மேலாய்வுக்கு (post doctor) மாதம் 50 ஆயிரம் ரூபாயும், மற்ற செலவுகளுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், தகவல் அறிய –

https://www.cict.in/fellowship.php

8) வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (VIT)

வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறை செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் முனைவர் பட்டம் பயில மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

முனைவர் பட்டம் பதிவு செய்த முதல் ஆறுமாதங்களுக்கு மாதம் 20000 வீதம் ஆய்வு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 25,000 ஆகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 30000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையின் கால அளவு மூன்று ஆண்டுகள்.

(நன்றி – திரு.பிரதீப், ஆய்வு மாணவர் )

9)SRM பல்கலைக்கழகம்

SRM பல்கலைக்கழகம் காட்டங்குளத்தூரில் தமிழ் ஆய்வுத்துறை இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிப்போருக்கு மாதம் ரூ.31,000 வழங்கப்படுகிறது. இத்தொகையின் கால அளவு மூன்று ஆண்டுகள்.

(நன்றி – திரு.கமலக்கண்ணன், உதவிப் பேராசிரியர்)

மௌலானா ஆசாத் ஆய்வு உதவித் தொகை, ராஜீவ்காந்தி தேசிய உதவித் தொகை போன்ற திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் மத்திய அரசால் கைவிடப்பட்டன.

மேற்சொன்னவை தவிர, தமிழ்நாடு அளவிலான பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்லூரிகளும் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றன. இவற்றை ஆய்வு மாணவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள முனைப்புடன் செயல்படுதல் இன்றியமையாதது.

The post தமிழியல் தேடல் (3) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிறுவனங்கள்” appeared first on Kaanalvari.

  •  

தமிழியல் தேடல்(2) – “ஆய்வு மாணவர்களுக்கு அருங்கொடை – முனைவர் பட்ட முன்னாய்வுத் தலைப்புகள்”

தமிழில் இதுவரை வெளிவந்த முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்புகளை உள்ளடக்கிய இணையச் சுட்டிகளைத் தொகுத்துரைக்கிறது இக்கட்டுரை.

ஓர் ஆய்வாளர் முனைவர் பட்டம் பதிவு செய்தவுடன், அவர்தம் உள்ளக்கிடக்கையில் தோன்றும் முதல் வினா ஆய்வை எங்கிருந்து தொடங்குவது என்பதுதான். தேர்வு செய்த ஆய்வுத் தளத்தில் தனக்கு நன்கு பரிச்சயம் இருப்பினும் ஆய்வுச் சிக்கலை எவ்வாறு இனங்காண்வது, கருதுகோள் எவ்வாறு அமைப்பது என அடுக்கடுக்கான ஐயப்பாடுகள் எழும்.

ஆய்வாளர் பதிவு செய்தவுடன் செய்யவேண்டிய முதல் வேலையே முன்னாய்வுகளைத் தேடுவதுதான். தமிழாய்வுப் பரப்பில் இதுவரை வெளிவந்த ஆய்வுகளைப் பார்வையிடுவதன் மூலம் அதிகம் தொட்ட இடமும், தொடாமல் விட்ட இடமும் நன்கு புலப்படும்.

ஆய்வு இடைவெளிகளைப் பூர்த்தி செய்யும் கொடுமுடிகளாகவும், ஆய்வுச் சிக்கல்களை இனங்காணும்  தோற்றுவாய்களாகவும் முன்னாய்வுகள் விளங்குகின்றன. எனவே, ஓர் ஆய்வாளர் முன்னாய்வுகளில் இருந்து தனது ஆய்வைத் தொடங்குதல் அவசியம்.

அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் பயில்வோர் அவர்தம் ஆய்வேட்டின் முதல் இயலை முன்னாய்வுகள் பற்றி விளக்குவதற்காக ஒதுக்குவர். ஆனால் தமிழாய்வில் இத்தகைய முறை இல்லை. சில ஆய்வேடுகளின் ஆய்வுச் சுருக்கத்தில் மட்டும் ஆய்வு முன்னோடிகள் பற்றி ஓரிரு வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்றன.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகத் தமிழண்ணல் பணியாற்றிய போது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளின் பட்டியலையும், ஆய்வேடு பற்றிய குறிப்பையும் சேகரித்து, ‘தமிழாய்வு’ என்னும் தலைப்பிலான ஆய்வலடங்கலை வெளியிட்டார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையானது,1982 முதல் 2000 வரை செய்யப்பட்ட முனைவர் பட்ட மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுத்தலைப்புகளை உள்ளடக்கிய ஆய்வடங்கலை வெளியிட்டது.

தொடக்கக் காலத்தில், பல்கலைக்கழக அளவில் செய்யப்பட்ட இந்த முயற்சிகள் கால வெள்ளத்தில் கைவிடப்பட்டன.

தற்பொழுது, ஒவ்வொரு பல்கலைக்கழகமாகச் சென்று முன்னாய்வுகள் தேடினால் நேரமும் பணமும் விரயமாகுமெனப் பெரும்பாலான ஆய்வாளர்கள் முன்னாய்வுகளில் அக்கறை காட்டுவதில்லை. முன்னாய்வுகளைப் பார்வையிடாமல், இதுவரை செய்த ஆய்வுகளையே தொடர்ந்து செய்தால் ஆய்வுலகம் எந்தப் பயனும் அடையாது.

எனவே, முன்னாய்வுகளின் அவசியத்தை உணர்ந்து அதனை எளிமையாக் கண்டறியும் வகையில் இணையச் சுட்டிகளைப் பின்வருமாறு தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

 

1) ஷோத்கங்கா

பல்கலைக்கழக மானியக் குழுவின்கீழ் செயல்படும் ‘INFLIBNET’ மையத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு இத்தளம் தொடங்கப்பட்டது.

பெரும்பாலான ஆய்வாளர்கள் அறிந்த தளம் இது. இத்தளத்தில் 6000-க்கும் மேற்பட்ட தமிழ் ஆய்வேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் வாரியாக ஆய்வேடு முழுமையும் இடம்பெற்றுள்ளது.

https://shodhganga.inflibnet.ac.in/simple-search

 ‘INFLIBNET’ மையத்தின் மற்றொரு தளம் ஷோத்கங்கோத்ரி. இத்தளத்தில் முனைவர் பட்ட ஆய்வுகளின் சுருக்கம் மட்டும் இடம்பெற்றுள்ளது.

https://shodhgangotri.inflibnet.ac.in/

2) தமிழ் ஆய்வுகள்

இத்தளம் திருச்சி தந்தைப் பெரியார் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.காசிமாரியப்பன் அவர்களின் நிர்வாகத்தின்கீழ் செயல்படுகிறது.

இத்தளத்தில் 3000-க்கும் மேற்பட்ட ஆய்வுகளின் தலைப்புகளும், ஆய்வு பற்றிய சிறுகுறிப்பும் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஆய்வுகளை வகைமைகள் அடிப்படையில் தேடும் வகையில், இத்தளம் எளிமைப்படுத்திக் கொடுத்துள்ளது.

https://www.tamilaivugal.org/

3) தமிழியல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஆ.மணவழகன் அவர்களால் நிர்வகிக்கப்படும் தளம். இத்தளத்தில் 1000-க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகள்,  பல்கலைக்கழகம் – தலைப்பு – நெறியாளர் – ஆய்வாளர் – ஆண்டு என்ற வரிசைக்கிரம அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://thamizhiyal.com/

மேலும், இவரின் அனிச்சம் என்ற வலைப்பதிவிலும் சில ஆய்வுத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

http://anichchem.blogspot.com/search?updated-max=2023-12-12T01:38:00-08:00&max-results=20&reverse-paginate=true

4) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நூலகத்தில், இந்தியா – தமிழ்நாடு அளவிலான பல்வேறு பல்கலைக்கழங்களில் சமர்ப்பிக்கப்பட்ட 721 முனைவர் பட்ட ஆய்வேடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வேடுகளின் ஆய்வுத்தலைப்புகள் நிறுவன நூலகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://library.cict.in/ta/td.html

5) உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளபட்ட 239 முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளும், 368 ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுத் தலைப்புகளும் கீழ்க்காணும் தளத்தில் இடம்பெற்றுள்ளன.

https://ulakaththamizh.in/home

6) தமிழ்ப் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின்கீழ் சிற்பம், இசை, நாட்டுப்புறவியல், மானுடவியல் அறிவியல்தமிழ் எனப் பல்வேறு புலங்கள் செயல்படுகின்றன. இப்புலங்கள் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் தலைப்புகள், ஆய்வடக்கம் ஆகியன பின்வரும் சுட்டியில் உள்ள கையடக்க ஆவண வடிவமைப்பில் (Pdf) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.tamiluniversity.ac.in/english/library-2/tamil-university-theses-and-dissertation/

7) தமிழாய்வு – வலைப்பதிவு

அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியராகப் பணியாற்றும் செந்தமிழ்ப்பாவை அவர்களின் வலைப்பதிவில் பாரதியார், பாரதிதாசன், அழகப்பா ஆகிய பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட சில ஆய்வேடுகளின் தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

http://thamizhaaivu.blogspot.com/2016/11/blog-post_59.html

மேலும் இவரின் மற்றுமொரு வலைப்பதிவில் சில ஆய்வுத் தலைப்புகளும், ஆய்வடக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

https://vairamani-lakshmi.blogspot.com/2011/08/tamil-research-topics-1.html

தமிழில் இதுவரை வெளிவந்துள்ள ஒட்டுமொத்தமான முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்புகள், ஆய்வுக்குறிப்புகள் ஒரே தளத்தின்கீழ் ஒருங்கிணைத்துக் கொடுக்க வேண்டும். அதனடிப்படையில், ஆய்வாளர் தெரிவுசெய்யும் தலைப்பில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியும் தொழில்நுட்பத்தைத் தமிழாய்வுத் துறையில் கொண்டு வரவேண்டும்.

தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமோ, மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனமோ இப்பணியைச் செய்தால் தமிழாய்வுலகம் பெரும் பயனடையும்.

The post தமிழியல் தேடல்(2) – “ஆய்வு மாணவர்களுக்கு அருங்கொடை – முனைவர் பட்ட முன்னாய்வுத் தலைப்புகள்” appeared first on Kaanalvari.

  •  

நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்

கதை சொல்லும் குடிகள்

எம்மில் கீழோர் மேலூர் இல்லை
ஏழைகள் யாரும் இல்லை
செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வினில் தாழ்வொன்றுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா”

“எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;”

என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. என்னுடைய சிறிய வயதில் எனது தாத்தா-பாட்டி சாதி, மதம், மொழி என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பாடிய கனியன் பூங்குன்றனாரின் வரிகளைத்தான் எனக்குள் விதைத்தார்கள். இன்றும் இந்தப் பாடல் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. நமது மீது அன்பு செலுத்த வெறும் குடும்ப நபர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது வாழ்வில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு தூய்மையான அன்பைக் கொடுத்தவர்கள் நான் சொன்ன இந்தப் பட்டியலில் இல்லாதவர்கள்தான். எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியம் என்றால் எனது வாழ்வில் அது நித்தமும் சாத்தியமாகிறது என்றே கூறலாம். அப்படி எனது தேசாந்திரி பயணத்தில் எத்தனையோ பேர் அவர்களில் ஒருவராக என்னை நினைத்து என்னிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்பார்த்தார்கள், பதிலுக்கு அவர்களும் அப்படியே இருந்து வருகிறார்கள். இந்த சமூகத்தில் மக்கள் எல்லோரும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே யாருடனாவது போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இச்செயல்முறை காலப்போக்கில் பெரும் சீரழிவைக் கொண்டு வருவது உறுதி. எப்போதும் ஓர் அவசர நிலைப் போக்கிலேயே இருப்பது முடிவில்லா சுழற்சி வட்டத்துக்குள் நம்மைத் தள்ளிவிடும்.

எப்போதும் போல எனது ஆறுதல் மண்டலத்தை விட்டு ஒரு தேசாந்திரி பயணம்… ஆம்,”இருளர்களோடு ஒரு வாழ்க்கை”, இருளர் என்றாலே இந்த சமூகத்தில் மிகவும் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கா நாட்டில் சதுப்பு நிலங்களில் ஒருவகை கொக்கு இனங்கள் வசிக்கின்றன. இவை உடளவில் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். என்னுடைய சிறிய வயதில் நான் கலசப்பாக்கம் என்ற ஊரில் வசிக்கும்போது இருளர்கள் தெரு வீதியில் பாம்புகளைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்டு செல்வார்கள். ஒரு அழகிய மாலைப் பொழுதில் எனது நண்பர்கள் பத்மப்ரியா, ராஜவிக்னேஷ் ஆகியரோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது, எனது தாத்தா-பாட்டி என்னை அழைத்து நமது வீட்டிற்கு, “இருளர் பாம்புகளோடு வந்திருக்கிறார்” என்று கூப்பிட்டார்கள். எங்கள் வீட்டு வாசற்படியில் ஒரு பெரிய பாம்பை விட்டார் அந்த இருளர். பிறகு, நாங்கள் அந்த இருளரை வராண்டாவில் அமரவைத்து உணவு உபசரித்து அனுப்பினோம். அந்த இருளர் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். அப்போதிருந்தே இருளர்களது வாழ்வியல் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அப்படி பல ஆண்டுகளுக்கு முன்பாக அமுதன் பச்சைமுத்து, தன்ராஜ், பாண்டு என்ற 3 நபர்கள் என்னை இருளர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முதலில், நான் அக்கிராமம் ஏதோ பசுமையானதாக இருக்கும் என நினைத்தே சென்றேன். முட்கள் நிறைந்த அடர்ந்த காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தோம். போகும் வழியில் தன்ராஜ் மற்றும் பாண்டு இருவரும் நான் பேசும் ஒவ்வொன்றிற்கும் கவிதை வடிவில் பதில் கூறிக்கொண்டே வந்தார்கள். எல்லோரும் பாட்டுப் பாடிக்கொண்டே சென்றோம்.

வாழ்வின் ரகசியங்களை அறிந்துகொண்டே இன்று வரையிலும் ஒரு தேசாந்திரியாக மட்டுமே சுற்றித் திரிகிறேன். முதலில், என்னைப் பார்த்தபடியே ஒரு பாட்டி அருகினில் வந்தார். அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். பிறகு, எனக்கு, “கங்கா” என்று ஒரு பெயர் வைத்தார். “கங்கா என்றால் என்ன?” என்று அந்தப் பாட்டியிடம் கேட்டேன். “கங்கா என்றால் கங்கா நதி, நீ ஒரு நதி” என்றார். பள்ளிக்கூட வாசலையே மிதித்ததில்லை, ஆனால், அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு ஞானம். பிறகு காட்டுக்குள்ளே செல்லும்போது, ஒரு இருளர் செம்மரி ஆடுகளை மேய்த்துக் கொண்டபடியே சென்றார். உள்ளே செல்லச் செல்ல புதிதாக ஓர் உலகத்திற்கு நுழைவது போல் தோன்றியது. வெறும் ஓலைக்கீற்று கொட்டாய்தான் முழு வீடுமே. அதனுள் ஒரு அக்கா அழகான சின்ன சின்ன ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருவதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் ஒதுங்கி நின்றார். எனது கையை அவர் கைகளோடு இணைத்து கொண்டேன். அவரது மௌனமும், கண்ணீர்த்துளிகளும் மட்டுமே எனக்கு பதில் அளித்தன. அங்கு நடக்கவே முடியாதபடி சேரும் சகதியுமாக இருந்தது. மிக அருகிலேயே ஒரு ஓடையும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலும் தத்தித் தத்தி தாவிக் கொண்டே பாட்டுப் பாடிச் சென்றேன். பின்பு, ஒரு பெரிய மீசை வைத்த தாத்தா, (ஊரிலே பெரியவர்) எங்கள் நான்கு பேரையும் வரவேற்றார். அங்கிருக்கும் வயல்வெளிகளை எல்லாம் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பிறகு, என்னை முழுவதுமாக யாரோ  பின்னிருந்து அணைத்துக் கொண்டது போல் உணர்ந்தேன். யாரென்று பார்த்தால் இரண்டு சின்ன பெண் பூக்கள்(குழந்தைகள்). ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் என்னிடம் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, “எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?” என்று. பிறகு, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதை. “என்னைச்சுற்றி பூக்கள் மலராவிட்டால் என்ன? பூக்கள் பூக்கும் இடத்திற்கு நான் சென்றிடுவேன்”. ஏனென்றால்,அந்த இரண்டு குழந்தைகளும் எனது விரல்களைப் பிடித்த ஆரம்பத்திலிருந்து, நான் அங்கே விடைபெற்றுப்போகும் வரையிலும் என்னை விடவேயில்லை. முகத்தில் அவ்வளவு நாணம்(வெட்கம்). “இருளர்கள் என்று ஏன் அழைக்கிறார்கள்?” என்பது என்னுள் விடையில்லா வினாவாகவே இருந்து வந்தது. இருளர்கள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர் சமூகமாகும். இவர்கள் பாரம்பரியமாக காடு மற்றும் இயற்கை வளங்களின் மீது நம்பிக்கை வைத்து வேட்டையாடுதல், மூலிகை சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நான் நேரடியாக அந்தக் காட்டினுள் செல்லச் செல்ல நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. அடர்ந்த இருட்டான காடுகளில் வாழ்ந்து வருவதால் இவர்களை, ‘இருளர்கள்’ என்று அழைக்கின்றனர். நான் சந்தித்த அந்த இரண்டு பெண் சிறுமிகளும் என்னிடம், எங்கள் ஊரில் இருப்பவர்களை, ‘காவல்காரன்’, ‘பாம்புக்காரன்’, ‘வேடவர்’, ‘வேடுவர்’, ‘வில்லி’, ‘காட்டுக்காரன்’ என்று தான் அழைப்பார்கள் என கூறினர். பிறகு, அக்கா ரொம்ப தூரம் நடந்து வந்திருக்காங்க போல,வா அக்கா போலாம்” என்று கைப்பிடித்தபடியே அவர்கள் வசிக்கும் ஓர் சின்னஞ்சிறிய ஓலைக் குடிசைக்கு என்னை அழைத்துச் சென்று இளநீர் கொடுத்தனர். “எங்களுக்கு இதுதான் அக்கா சொர்க்கம்” என்று கூறினர். வரிவடிவமே இல்லாத அவர்களின் மொழி பேரழகு. “ஏன், இவர்களின் பேச்சு வித்தியாசமாக உள்ளது?” என்று கேட்டேன். “ஏரவல்லம், எருக்கா, இரவா, இருளிக்கா, கோரவா” என்ற பெயர்கள் இவர்கள் பேசும் மொழி எனக் கூறினர். இந்த மனிதர்கள் எல்லோரும் எனக்கு மிக தனித்துவமாகவே தெரிந்தார்கள். இச்சமூகத்தில் இருப்பவர்களுக்கு இவர்களின் பண்பாட்டையே புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். காட்டில் வாழ்கிறார்கள் என்பதற்காகவே இவர்களுக்கு நாகரிகம் தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தி எவ்வளவு பொய்யாக இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்துகொண்டேன். பிறகு, நானும் அவர்களோடு ஒன்றாகிவிட்டேன். தொடர்ந்து “கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழி” போன்ற விஷயங்கள் எல்லாம் நடந்தேறின. வெளியுலக மனிதர்களைக் காட்டிலும், இவர்களிடம் உள்ள பாலின சமத்துவம் வியக்க வைத்தது. அங்கே சில குழந்தைகள் கொம்பாட்டம், குச்சியாட்டம் போன்ற நடனங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நானும் ஆடி மகிழ்ந்தேன்.

பிறகு, மீண்டும் ஒருநாள் இருளர்களைப் பார்க்க வேறு கிராமத்திற்குச் சென்றேன். சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், பழங்குடியினரைச் சேர்ந்த இருளர் மக்களும் அதிகமாக வசித்து வருவதை நேரடியாகக் காண முடிந்தது. தோட்டத்தொழில் செய்யும் இருளர்கள் அங்கே பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் படாத தலை முடி, சுத்தத்தை மறந்த துணிகள் என்று மிகவும் வறிய கோலத்தில் இருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் மிகவும் மன மகிழ்வோடு மட்டுமே இருந்தார்கள் .இங்கே வாழும் இருளர் சமூகத்தினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மருத்துவ வசதிகளின் குறைபாடு மற்றும் போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாததால்,நோய் பரவல் மற்றும் சுகாதாரச் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. பணம், அதிகாரம், கவன ஈர்ப்பு, வெற்றி போன்ற நவீன வாழ்க்கை நம்முடைய உண்மையான இயல்பிலிருந்து நம்மை மேலும் மேலும் அநியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் நாம் அர்த்தமற்ற வெறுமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் சென்ற நிறைய இருளர்‌ கிராமங்களில் இன்னும் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மற்றும் ஆதரவின் பற்றாக்குறையால் சமூக முன்னேற்றம் மந்தமாக உள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது. இந்த சிக்கல்களைச் சமாளிக்க, அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடரும்…

[email protected]

The post நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன்

வாக்குகள் சீட்டாக இருந்த காலம்

வாக்குப் பதிவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இந்த இயந்திரத்தை மனிதர்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் கொந்த (hack) முடியும். – சமீபத்தில் இப்படிச் சொன்னவர் ஓர் அறியப்பட்ட ஆளுமை. அவர் இந்தியாவின் எந்த எதிர்க்கட்சித் தலைவரும் அல்லர். அவர் அமெரிக்கர், தொழில்நுட்ப ஜாம்பவான்- எலான் மஸ்க்.

வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும்போதோ சீர்திருத்தும்போதோ உள்ளேயிருக்கும் ‘சிப்பு’களில் நிரல்களை ஏதேனும் ஒரு கட்சிக்கு சாதகமாக எழுதிவிடலாம் என்பது நாள்பட்ட குற்றச்சாட்டு. கொந்தல் சாத்தியங்கள் சமீபகாலங்களில் பரவலாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இப்போது எலான் மஸ்கே சொல்லுகிறார்.

1982-இல் கேரளத்தின் பரவூர் இடைத் தேர்தலில் மெல்லப் புகுந்தது இந்த இயந்திரம். அன்று முதல் நாளது வரை இதைக் குறித்த ஐயங்களுக்குக் குறைவில்லை. விளக்கங்கள், உறுதிமொழிகள், குற்றச்சாட்டுகள், வழக்குகள்- எவையும் நின்றபாடில்லை. இதற்கிடையே, இந்த இயந்திரம் படிப்படியாகக் கால் பரப்பி, புத்தாயிரமாண்டில் நாடு முழுக்க பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

நாம் அளிக்கிற வாக்குதான் இயந்திரத்தில் பதிவாகிறதா, பதிவாகிற வாக்குதான் எண்ணப்படுகிறதா என்று அறிந்துகொள்ள இந்த இயந்திரத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. தில்லுமுல்லு நடந்தால் கண்டறிய முடியாது. ஆகவே, வழக்காடவும் முடியாது. அதனால் இதைக் கறுப்புப் பெட்டி என்று அழைப்பவர் உண்டு. இதற்காக ஒரு காகிதச் சரிபார்ப்பு (Voter Verified Paper Audit Trial- VVPAT) முறை வந்தது. ஒருவர் வாக்களித்ததும் அது ஒரு காகிதத்தில் அச்சாகி கண்ணாடிச் சில்லின் வழி வாக்காளருக்கு ஒரு சில நொடிகள் காட்சி தரும். பிறகு அதை இயந்திரம் விழுங்கி விடும். இந்தக் காகித வாக்குகளை வாக்குச் சீட்டுகளாகக் கருதி அவற்றையே எண்ணலாம். ஆனால் அதற்குத் தேர்தல் ஆணையம் ஒப்பவில்லை. குறைந்தபட்சம் ஒரு இயந்திரத்தில் எத்தனை காகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்பதையாவது எண்ணலாம். அந்த எண்ணிக்கையை இயந்திரத்தில் பதிவாகியிருக்கிற  எண்ணிக்கையோடு ஒப்பு நோக்கலாம். 2016 மாநிலத் தேர்தல்களில் சில தொகுதிகளில் ஆணையம் இதைச் செய்து பார்த்தது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரேயொரு வாக்குச் சாவடியில் மட்டும் இந்தச் சோதனை நடந்தது. இந்த மாதிரியின் அளவு நிகழ்தகவு (propablity) சித்தாந்தத்தின்படி மிகக் குறைவு என்றனர் வல்லுநர்கள். ஆனால், ஆணையம் கேட்கவில்லை. பெரும் செலவில் வாக்குப் பதிவு இயந்திரத்தோடு இணைக்கப்பட்ட VVPATஆல் குறிப்பிடத்தக்க பலன் என்னவென்று தெரியவில்லை. ஆட்டம் தொடர்கிறது.

இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு அவசியமில்லாத ஒரு காலம் இருந்தது. வளர்ந்த நாடுகள், வளராத நாடுகள் என்கிற வேறுபாடில்லாமல் எல்லா நாடுகளும் பயன்படுத்துகிற வாக்குச்சீட்டு நமது நாட்டிலும் பயன்பாட்டில் இருந்த காலம். அப்படியான காலத்தில், ஒரு தேர்தலில், ஒரு வாக்குச் சாவடியில் நான் தலைமை அலுவலராகப் பணியாற்றினேன். இந்த இயல் அதைப் பற்றியது.

ஆர்வெல்லின் ஆண்டில் நடந்த தேர்தல்

ஆண்டு: 1984. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984. அக்டோபர் மாதம் இந்திரா காந்தி சுடப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமரானார். அவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு எஞ்சி இருந்தது. என்றாலும் ராஜீவ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி. அவர் உடல் நலிவுற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். தமிழகத்திலும் ஆட்சிக் காலம் ஓராண்டு இருந்தது. எம்.ஜி.ஆரும் ராஜீவை அடியொற்றி  சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தார். அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்தன. எதிரணியில் திமுக- ஜனதா -கம்யூனிஸ்ட் கூட்டணி.

நான் மதுரையில் ஓர் அரசுத் துறையில் பணியாற்றினேன். தேர்தல் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தேன். அரசின் பழுப்புக் காகிதத்தில் நியமன ஆணை வந்தது. ‘145- சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி, அதனைச் சார்ந்த 24-மதுரை பாராளுமன்றத் தொகுதி, ஆகியவைகளுக்கு 24.12.1984-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு வாக்குச் சாவடியில் தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.’  (விருப்பம் தெரிவிக்காத சிலருக்கும் ஆணை வந்தது, அது வேறு.) வாக்குச் சாவடி  விவரம் பிற்பாடு இன்னொரு ஆணை  வழியாக வந்தது- ’52- சாந்தி வித்யாலயா நடுநிலைப் பள்ளி, விளாங்குடி’. வாக்குச் சாவடி எண்ணும் தொகுதி எண்களும் முக்கியமானவை. காரணம் எனக்குப் பின்னால் தெரிய வரும்.

ஒரு வாக்குச் சாவடிக்கு தலைமை அலுவலர் தவிர ஐந்து அலுவலர்கள். எல்லோருக்கும் பயிற்சி வகுப்புகள் நடந்தன. பத்து நாட்கள் நகரின் மூன்று-நான்கு இடங்களில் சாவடி எண்களின் வரிசைப்படி வகுப்புகள் நடந்தன. எங்கள் வகுப்பு கே.கே.நகர், சுந்தரம் திரையரங்கில் (இப்போது ஜாஸ் அர்ஸ் சினிமாஸ்) நடந்தது. மதுரை நகரின் வட்டாட்சி அலுவலர்களில் ஒருவர் வகுப்பை நடத்தினார். ஓர் ஆவணப்படமும் திரையிட்டார்கள்.

ஐவர் அணி

எங்கள் அணியில் முதல் அலுவலர் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். இரண்டாமவர் வேளாண் பொறியியல் துறையில் வரைவாளர். மூன்றாமவர் பள்ளிக் கல்வித் துறையில் கணக்காளர். நான்காமவர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி ஆசிரியர். ஐந்தாம் அலுவலர் வனத்துறையில் எழுத்தர். எல்லோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பணிகள் இருந்தன. அவை சற்றுப் பின்னால் வரும். என்னைத் தவிர எல்லோரும் நடுத்தர வயதினராய் இருந்தனர். எல்லோரும் ஆண்கள். ஏனெனில், வாக்காளர்கள் அனைவரும் ஆண்கள். அதே பள்ளியில் பெண்கள் சாவடியும் இருந்தது. அதில் அலுவலர்களும் வாக்காளர்களும் பெண்கள்.

வாக்குப் பதிவிற்கு முன்பு

தேர்தலுக்கு முந்தின நாள் ஞாயிற்றுக்கிழமை. தேர்தல் நடத்தத் தேவையான பொருட்களைத் தலைமை அலுவலரிடம் கையளித்தார்கள். எம் சாவடிக்கான பொருட்கள் பாத்திமா கல்லூரியில் வழங்கப்பட்டது.  பொருட்களின் பட்டியல் பெரிது. அவற்றில் முக்கியமானவை:

-வாக்குப் பெட்டிகள், அவற்றைப் பொதிய கித்தான் பைகள், முறுக்கு நூல், மென் கம்பி, நாடா, அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, வாக்குச் சீட்டுகளைத் தள்ளிவிட மரத் தள்ளுகோல்.

-அழியாத மை, நெகிழிக் குச்சி (மை தீட்ட), கந்தைத் துணி (வாக்காளரின் கைகளில் எண்ணெய்ப் பசை இருந்தால் துடைக்க).

-வாக்குச் சீட்டுப் புத்தகங்கள். இதில் அடிச்சீட்டும் இருக்கும். வாக்குச் சீட்டைக் கீழித்தெடுக்க இரும்புச் சட்டம்.

-தாள்கள், படியெடு தாள் (Carbon Paper), பேனா, குண்டூசி, பசை, பிளேடு, மையுறி தாள்.

-அலுவலர் அடையாள அட்டைகள், முகவர் அனுமதிச் சீட்டுகள்.

-வாக்குச் சீட்டில் குறியீடு செய்வதற்கான குறுக்கை அம்புக்குறியுள்ள ரப்பர் முத்திரை, எல்லா வாக்குச் சீட்டுகளின் பின்புறமும் பதிப்பதற்கான பிரித்தறி முத்திரை (இதில் வாக்குச் சாவடியின் எண்ணும் தொகுதி எண்ணும் இருக்கும்; எங்களது முத்திரைகள் சட்டமன்றத்திற்கு 52/145, நாடாளுமன்றத்திற்கு 52/24), மையொற்றுப் பெட்டகம் (ink pad).

-சுவரொட்டிகள்

-25க்கும் மேற்பட்ட படிவங்கள், உறைகள்

எனக்கு உதவியாக முதல் அலுவலரும் வந்தார். அவரிடம் ஸ்கூட்டர் இருந்தது. என்னிடம் சைக்கிள். இருவருமாக எல்லாப் பொருட்களையும் வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்து சேர்த்தோம்.

சாவடி அமைக்கப்பட்டிருந்த நடுநிலைப் பள்ளி ஒரு ஓட்டுக் கட்டடம். நன்றாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. துப்புரவாக இருந்தது. இரண்டு வகுப்பறைகளை இணைத்து ஒரு வாக்குச் சாவடி ஆக்கி இருந்தார்கள். அலுவலர்களுக்கான மேசை- நாற்காலி, முகவர்களுக்கான இருக்கை எல்லாம் கிரமமாக இருந்தது. இரண்டு  வாக்களிப்பு மேசைகள். அவை சற்று உயரத்தில் வைக்கப்பட்டிருந்தன. மூன்று பக்கமும் கனமான வெள்ளை அட்டையால் மறைப்பு இருந்தது. பெண்கள் சாவடியிலும் இதே விதமான ஏற்பாடுகள். இந்த வகுப்பறைகளில் இருந்த பெஞ்சுகளை வேறு அறைகளுக்கு மாற்றியிருந்தார்கள். வருவாய்த்துறை ஊழியர்கள் முந்தின தினமே வந்து பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு ஒழுங்கு செய்ததாக எங்களை வரவேற்பதற்காகக் காத்திருந்த பள்ளி ஆசிரியர் சொன்னார்.

பெண்கள் சாவடியின் தலைமை அலுவலருக்கு உதவியாக அவரது கணவர் வந்திருந்தார். இருவரும் பொருட்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டு விடை பெற்றனர். எங்கள் அணியின் முதல் அலுவலரும் விடைபெற்றுக் கொண்டார். அவர்களுக்கு வீட்டில் பிள்ளைகள் இருந்தார்கள், வேலைகள் இருந்தன. இப்போது இரண்டு சாவடிப் பொருட்களுக்கும் நான்தான் ராக்காவல். இரண்டு சாவடிக்கும் சேர்த்து ஒரு காவலர். முன்னாள் ராணுவ வீரர். அவரும் முந்தின நாள் வந்துவிட்டார். அவரது சீருடை விரைப்பாக இருந்தது. அதிலும் விரைப்பான சல்யூட் ஒன்றை எனக்கு வழங்கினார். அதை முறையாக அவருக்குத் திருப்பித் தர எனக்குத் தெரியவில்லை. காவலரும்  என்னுடன் பள்ளியில் தங்கினார். நான் ஒரு பயணப் பொதியில் மாற்று உடை, விரிப்பு, துண்டு, சோப்பு, சீப்பு முதலானவற்றை அடைத்துக்கொண்டு போயிருந்தேன். காலைக் கடன்களுக்கு என்ன செய்ய? பள்ளியில் ஒரு கழிவறை இருந்தது. பள்ளிக்கு அருகாமையில் ஒரு பொதுத் தண்ணீர்க் குழாய் இருந்தது. காலை ஆறு மணி முதல் தண்ணீர் வரும். பெண்கள் ஆறரை மணிக்கு மேல்தான் வருவார்கள். நீங்கள் இருவரும் அதற்கு முன்னர் குளித்துவிடுங்கள் என்று உள்ளூர்க்காரர் ஆலோசனை வழங்கினார். நாங்கள் அவ்விதமே செய்தோம்.

வாக்குச் சாவடி, தொகுதி முதலான விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும்,  பெரிதாக்கப்பட்ட வாக்குச் சீட்டின் மாதிரிச் சுவரொட்டிகளையும் சாவடிக்கு வெளியே ஒட்டினோம்.

சமயநல்லூர் சட்டமன்ற இடத்திற்கு அதிமுகவும் திமுகவும் மோதின. அதிமுகவின் சார்பாக ஏ.சிவக்குமார் என்பவர் போட்டியிட்டார். திமுக வேட்பாளார் எஸ்.செல்வராஜ். பின்னாளில் கலைஞர் அமைச்சரவையில் அங்கம் வகித்தார். மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ், அப்போதைய எம்.பி.யான ஏ.ஜி.சுப்பராமனுக்கு டிக்கெட் கொடுத்திருந்தது. மார்க்சிஸ்ட் வேட்பாளர், நிறைவாழ்வு வாழ்ந்து சமீபத்தில் விடை பெற்றுக்கொண்ட என்.சங்கரய்யா. நான்கு கட்சிகளின் முகவர்களும் வாக்குப் பதிவு தொடங்கும் முன்னரே வந்தனர். வாக்குப் பதிவு  அலுவர்களும் வந்தனர்.

எல்லா வாக்குச் சீட்டின் பின்னாலும் தலைமை அலுவலர் ஒப்பமிடவேண்டும். ஒரு புத்தகத்தில் 50 சீட்டுகள் இருக்கும். நான் நான்கு புத்தகங்களில் முன்னதாக ஒப்பமிட்டு வைத்தேன். வாக்குப் பெட்டிகள் காலியாக இருப்பதை முகவர்களிடம் காட்டிய பிறகு அதை மூடித் தாழிட வேண்டும். வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்களை முகவர்களிடம் காட்ட வேண்டும். அதை அவர்கள் குறித்துக்கொள்ளலாம்.

வாக்குப் பதிவுக்கான நேரம் தொடங்கும் முன்னரே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்றனர். காவலர் வரிசையை ஒழுங்குபடுத்தினார். வாக்குப் பதிவு குறித்த நேரத்தில் தொடங்கியது. போலிசார் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தனர்.

அலுவலரின் பொறுப்புகள்

வாக்காளரின் அடையாளத்தை சரிபார்ப்பது முதல் அலுவலரின் பணி. வாக்காளர் அடையாள அட்டை புழக்கத்தில் வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும். வாக்காளர்கள் பொதுவாக கட்சிகள் வழங்கும் அலுவல் சார்பற்ற அடையாளச் சீட்டைக் கொண்டு வருவார்கள். அதில் வாக்காளரது பெயர், பட்டியலில் அவரது தொடர் எண், பகுதி எண், சாவடி எண் ஆகிய விவரங்கள் இருக்கும். இந்தச் சீட்டு இல்லாமலும் வரலாம். அவர்களிடம், பெயர், முகவரி விவரங்களைக் கேட்டறிந்து பட்டியலில் அவரது பெயரைக் கண்டறிய வேண்டும். பிறகு முதல் அலுவலர் வாக்காளரின் பெயரையும் மற்ற விவரங்களையும் உரத்த குரலில் அறிவிப்பார். முகவர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம். அப்போது தலைமை அலுவலர் இடையிட்டு விசாரிக்க வேண்டும். தலைமை அலுவலர் மனநிறைவு கொண்டால் வாக்களிக்க அனுமதிக்கலாம். இதில் முகவர்களுக்கு எதிர்ப்பு இருந்தால் அதை அதற்கான படிவத்தில் பதிவு செய்யலாம். வாக்காளருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதை வாக்காளர் ஏற்கவில்லையென்றால் அவர் பிறிதொரு படிவத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யலாம்.

வருகை தந்த வாக்காளர்களின் எண்ணிக்கையையும் முதல் அலுவலர் குறித்து வைக்க வேண்டும். வாக்குப் பதிவு முடியும் முன்பு மூன்று முறை தேர்தல் அதிகாரியின் பிரதிநிதிகள் இந்த விவரங்களைப் பெற்றுச் செல்வார்கள். அலைபேசியும் கணினியும் இணையமும் இல்லாத காலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும்போதே பதிவான வாக்குகளின் கணக்கை ஆணையம் அறிவித்தது.

இரண்டாம் அலுவலரின் பணி அடையாள மை இடுவது. அரை நிமிடம் மை அழியாமல் இருக்கிறதா என்பதையும் இவர் கவனித்துக்கொள்வார்.

மூன்றாம் அலுவலரிடம் சட்ட மன்ற வாக்குச் சீட்டு இருக்கும். முதல் அலுவலர் பெயரையும்  விவரங்களையும் அறிவிக்கும் போது, பகுதி எண்ணையும் தொடர் எண்ணையும் அடிச்சீட்டின் பின்புறம் குறித்து வைப்பார். அதில் வாக்காளரின் ஒப்பம் அல்லது பெருவிரல் ரேகையைப் பெற வேண்டும். வாக்குச் சீட்டின் முனையில் பிரித்தறி சின்னம் (52/145) பதிக்கப்பட வேண்டும். வாக்குச் சீட்டுகளை தொடர் எண்களின் வரிசைப்படி வழங்கினால் முகவர்கள் குறிப்பிட்ட வாக்காளர் பெறும் வாக்குச் சீட்டின் தொடர் எண்ணைக் கணிக்கக் கூடும். இதைத் தடுப்பதற்குப் பயிற்சியின்போது ஒரு தந்திரம் சொல்லித்  தந்தார்கள்.  ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுப் புத்தகங்களை தயாராக வைத்துக்கொண்டு சீட்டுகளை வரிசை மாறி வழங்க வேண்டும்.

நான்காம் அலுவலர் இதே பணிகளைச் செய்து நாடாளுமன்றச் சீட்டை வழங்குவார்.

ஐந்தாம் அலுவலரிடம்தான் வாக்குச் சீட்டில் பதிக்க வேண்டிய குறுக்கை முத்திரை இருக்கும். இவர் மேசையின் மீதுதான் வாக்குப் பெட்டிகளும் இருக்கும். இவர் இரண்டு வாக்குச் சீட்டுகளையும் வாங்கி பிரித்தறி சின்னம் வெளித்தெரியும் விதமாக நீள வாக்கிலும் குறுக்கிலும் மடிப்பார். பிறகு சட்டமன்ற வாக்குச் சீட்டைப் பிரித்து அதனையும் முத்திரையையும் வாக்காளரிடம் கொடுப்பார். வாக்காளர் வாக்களிக்கும் அறைக்குச் சென்று முத்திரையைப் பதித்து, பிறகு சீட்டை மடித்து அலுவலரின் முன்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டியில் செலுத்த வேண்டும். அடுத்து நாடாளுமன்ற சீட்டுக்கும் இதே நடைமுறைதான்.

வாக்குப் பதிவுக்குப் பின்

அன்றைய தினம் 800 வாக்குகளுக்கு மேல் பதிவாயின. குறித்த நேரத்தில் வாக்குப் பதிவும் முடிந்தது. வாக்குப் பெட்டியைப் பூட்டி அரக்கு வைக்க வேண்டும். முகவர்கள் விரும்பினால் அதில் அவர்களது முத்திரையைப் பதிக்கலாம். நான்கு முகவர்களும். பித்தளை முத்திரைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். இளகி வரும் அரக்கின் சூடு ஆறுவதற்கு முன்பு தங்கள் முத்திரையைப்  பதித்தார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு முகவர்கள் இந்த முத்திரைகளைப் பரிசோதிக்கலாம்.

அடுத்து ஒரு முக்கியமான படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தச் சாவடிக்காக முந்தின நாள் நான் பெற்றுக்கொண்ட  வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்கள், பயன்படுத்தாத வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்கள், நீக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் எண்கள் (இருந்தால்) இவ்ற்றை ஒரு படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இவற்றிலிருந்து பதிவான வாக்குகளின்  எண்ணிக்கையை கணக்கிட்டு அதையும் பதிய வேண்டும்.

இது வாக்குப் பெட்டியில் காணப்படும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையாக இருக்கும். இந்தப் படிவத்தில் தலைமை அலுவலர் ஒப்பமிட்டு முகவர்களுக்கு வழங்க வேண்டும். இதைப் பெற்றுக்கொண்டு முகவர்கள் விடை பெற்றனர். அவர்கள் வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது இதை சரிபார்க்கலாம்.

தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட படிவங்களை நிரப்பி அவற்றுக்கான உறையில் இட வேண்டும். எல்லாப் படிவங்களிலும், உறைகளிலும் தொகுதி எண்ணையும் சாவடி எண்ணையும்  நிரப்ப வேண்டும். அலுவலர்களுக்கான மதிப்பூதியம் ரொக்கமாக என்னிடம் தரப்பட்டிருந்தது. அதைப் பெற்றுக்கொண்டு அலுவலர்கள் அனைவரும் விடை பெற்றுக்கொண்டனர். இப்போது  வாக்குப் பெட்டிகள், பயன்படுத்தாத வாக்குச் சீட்டுகள், ஏராளமான உறைகள், திருப்பி அளிக்க வேண்டிய வாக்குச் சாவடிப் பொருட்கள் எல்லாவற்றையும்  முறையாக அடுக்கி வைத்துக்கொண்டு இரண்டு சாவடிகளின் தலைமை அலுவலர்களும் ஒரு காவலரும் காத்திருந்தோம். உள்ளுர்க்காரர்கள் எங்களுக்குத் துணையாக இருந்தார்கள். இரவு 9 மணியளவில் தேர்தல் அதிகாரிகள் வந்து, எங்களிடமிருந்து எல்லாப் பொருட்களையும் முறையாகப் பெற்றுச் சென்றார்கள்.

அன்றிரவு தல்லாகுளம் வைத்தியலிங்கா லாட்ஜூக்கு சைக்கிளில் திரும்பியபோது நகரமெங்கும் வீட்டிற்குள்ளும் வீதிகளிலும் தேர்தல் பேச்சாகவே இருந்தது. 1952-இல் நடந்த முதல் பொதுத் தேர்தலைப் பற்றி தனது ‘India After Gandhi’ நூலில் ராமசாந்திர குஹா ஓர் இயலே எழுதியிருக்கிறார். 2,24,000 வாக்குச் சாவடிகள், 20 இலட்சம் வாக்குப் பெட்டிகள், 56,000 தலைமை அலுவர்கள், 2,80,000 துணை அலுவலர்கள், 2,24,000 போலிஸ் என்று பலர் இயங்கிய தேர்தல் அது. 1984 தேர்தலில் இன்னும் அதிகமான மனித வளம் பயன்பட்டிருக்கும். அதில் எனது பங்கு ஓர் அணிலைக்கால் குறைவாக இருக்கலாம். என்றாலும் நிறைவாக இருந்தது. வாக்கு இயந்திரம் வந்த பிற்பாடு அதைக் குறித்த சர்ச்சைகள் மேலெழும்போதெல்லாம் எனக்கு சமயநல்லூர் நினைவுக்கு வரும்

2024 தேர்தலில் பதிவான வாக்குகளை ஆணையம் பல நாட்கள் தாமதமாகத்தான் அறிவித்தது. அதுவும் தொகுதி வாரியாக அறிவிக்கவில்லை. கணினி இல்லாத காலத்திலேயே பதிவான வாக்குகளின் கணக்கை தொகுதி வாரியாக அடுத்த நாளே துல்லியமாக அறிவித்தது அந்நாளைய ஆணையம்.

Association of Democratic Return (ADR) என்கிற அமைப்பு, 2024 தேர்தலில், இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணப்பட்ட வாக்குகளையும் ஒப்பிட்டது. 543 தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் மட்டுமே இவை ஒத்துப் போயின. 362 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகள் கூடுதலாக இருந்தன. மொத்தம் கூடுதல்: 5.5 லட்சம் வாக்குகள்! 176 தொகுதிகளில் குறைவாக இருந்தது. மொத்தம் குறைவு: 38,000 வாக்குகள். ADR வழக்குத் தொடுத்திருக்கிறது.

சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் கணக்கு அடங்கிய படிவத்தை இணையதளத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று கோரியது ADR. ஆணையம் மறுத்துவிட்டது. காகிதச் சரிபார்ப்பும் (VVPAT) முறையாக நடப்பதில்லை. இயந்திரத்தில் தில்லு முல்லு செய்யக்கூடிய சாத்தியங்களைப் பற்றிய உரையாடல் நடந்த வண்ணம் இருக்கிறது. இவையெல்லாம் இந்த இயந்திரத்தின் மீதும் ஆணையத்தின் மீதும் நமது நம்பிக்கையைக் குறைக்கிறது.

வாக்குச் சீட்டுகள் நம்பகமானவை. ஒவ்வொரு சீட்டின் பின்புறமும் தலைமை அலுவலரின் ஒப்பம் இருக்கும். சாவடி வாரியாகப் பதிவான வாக்குகளைத் தொடர் எண்களோடு சோதிக்கலாம். வாக்காளர் அளிக்கிற வாக்குதான் எண்ணப்படுகிறது என்பதை ஐயம் திரிபற அறிந்து கொள்ளலாம். உலகின் பல ஜனநாயகங்கள் இன்றளவும் வாக்குச் சீட்டுகளைத்தான் பயன்படுத்துகின்றன. நாம் வாக்குச் சீட்டுகளுக்குத் திரும்புகிற காலம் வரும். இந்த ஐயங்கள் அப்போது இல்லாமலாகும்.

(அனுபவம் தொடரும்)

[email protected]

The post காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

சம்புரு பழங்குடிகளின் வாழ்வும் வரலாறும் – தீபா ஜெயபாலன்

வட கென்யாவின் சம்புரு மாவட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள வெப்பமான, மணற்பாங்கான நிலங்களிலும் காலத்தின் ஓட்டத்துக்கு கட்டுப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இனம், சம்புரு பழங்குடியினர். இவர்களின் மக்கள்தொகை சுமார் 2,50,000 முதல் 3,00,000 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கையோ நம் கண்களுக்கு எளிதில் படாமல் போகலாம். ஆனால், அவர்களின் வரலாறு, பண்பாடு, மற்றும் உயிர்ப்பிரியம் (love for life/living beings) ஆகியவை மண்ணோடு கலந்ததொரு சங்கமம். பழங்குடி என்பதே இன்று நாகரிகக் கோடாரிக்கு விழும் […]

Source

  •  

பாணனும் பொறாட்டும் (பகுதி – 2) – அகமது கனி

பாணனும் பொறாட்டும் (பகுதி – 2)

மலையாளப் படைப்பு : ஜெயசீலன்
தமிழாக்கம் : அகமது கனி

குறவன் குறத்தி

வடக்கன் பாட்டுகளில் காணப்படுகிற குறவனும் குறத்தியும்தான் இந்த பொறாட்டுகளில் குறிப்பிடப்படும் குறவன் குறத்தி ஆவார்கள். கை பார்த்து குறி சொல்வதில் இவர்களுக்கு பிரத்தியேகமான திறமை இருக்கிறது. குறவனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பது சாதாரண வழக்கம்தான். இரண்டு மனைவிகளும் மேடைக்கு வருவார்கள். குறவருக்கு சித்தனர் என்கிற பேரும் உண்டு. பண்டைக் காலத்தில் சமண மதம் ஏற்றுகொண்ட ஆதி திராவிடர்கள்தான் குறவர்கள். கேள்விக்காரனுடைய கேள்விகள் மூலமாக குறவனுடைய மனைவிகளின் எண்ணம் வெளிப்படுகிறது. குறவனே சொல்லுகிறான்: எனக்கு இரண்டு மனைவிகள் இளங்குடியும் முதுகுடியும். இரண்டு மனைவிகளைக் கட்டினால் இவர்களை யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்விக்காரனுடைய கேள்விக்கு குறவனிடம் பதில் இருக்கிறது.

இருகுடி கெட்டியராளுகளெ ஞான்
ஓரோன்னாயிட்டும் செய்திடாம்
வேலர்க்கில்லே ரண்டாளச்சா
வள்ளியென்னும் தைவானயுமாயி
பரமசிவனில் பார்யமாராயி   
சிரசில் வச்சு நடந்நிட்டில்லே 
கங்காதேவிய சிரசிலிருத்தி                                                                 பார்வதிதேவியக்கூட நடத்தி
இந்திரனில்லே நாலாளச்சா
ஊர்வசி மேனக ரம்ப திலோத்தம
பதினாறாயிரமெட்டும் ஸ்த்ரீகளெ
கிருஷ்ணன் கெட்டிவலிச்சிட்டில்லே?

இதையெல்லாம் சொல்கிற குறவனுக்கு குறத்தி மேலே சந்தேகந்தான். அவர்கள் இருவருக்கும் இடையேயான தர்க்கத்தின் முடிவில் குறத்திக்கும் சொல்வதற்கு விசயம் இருக்கிறது.

உத்தமியாயிட்டாணும் பெண்ணும்                                                   
லோகத்தில் இல்லா நாணு                                                                 
கத்தி எறியுந்ந தீபமாணே                                                        
சத்தியமாமல்லோ

(மற்ற பொறாட்டுகளைப் போல இங்கேயும்) குறவனுக்கு பரிபூரணமான திருப்தி இல்லாவிட்டாலும் கடைசியில் அவர்கள் ஒன்றுசேர்கிறார்கள்.

கவரனும் கவரச்சியும்

பறைச்சி பெற்றெடுத்த பன்னிரு குலத்திலே ஞானியும் வாக்குரைப்பவருமான பாக்கனாரின் வழித்தோன்றல் என்று பெருமைப்பட்டுக்கொள்கிற — பாலக்காடு மாவட்டத்திலே மலவர்க்கக்கார் (மலையர்) என்ற பெயரில் இருக்கும் இவர்கள் — பணத்தாலும் சமூக அந்தஸ்த்தாலும் கீழ்த்தட்டில் வசிக்கும் மக்களாகிய கவரர்கள்.

பாலக்காட்டின் மலையோரப் பிரதேசங்களிலும் உள் பிரதேசங்களிலும் நிறைய கவர குடில்கள் உண்டு. கூட்டமாக வசிப்பதுதான் இவர்களது விருப்பம். காட்டுக்குப் போய் மூங்கில் வெட்டி அதை பிரித்து காயவைத்து, தட்டி, வட்டி, முறம், முதலியன முடைந்து விற்றுப் பிழைப்பதுதான் அவர்களது வாழ்வாதாரம். தென்னிந்தியாவிலுள்ள திராவிட மொழிகளின் கலவைதான் இவர்களின் பேச்சுவழக்கு.

கவரனின் வரவு கானம்…….

ராராரீ ராரிரோ ராரிரங்காளி
ரூராரீ ரூரிரோ ரூரிரங்காளி
என்னங்களெ மேதி என்னெ பிரிந்தோடி
எல்லியோயுட்டாத்து
ஐதாறு திங்களாத்து பணித்தரம்
மாறோடி ஓயிற்றுட்டாத்து
பெரியிச்சேரி கஞ்ஞிவய்க்கோடி
அக்கியொந்நுமில்லாடா

புன்னப்பாற வட்டயிலோப்பயம்
விதறுகடி ஓயிற்றுட்டாத்து
விதறுகடிந்தப்போ நானும் விளுந்தப்போ
 ஆளெக்கொல்லி வந்திற்றுட்டாத்து

ஆளெக்கொல்லி என்று சொல்லப்படுவது பணத்தைக் குறிப்பதாகும். மூங்கில் மரத்தை வெட்டும்போது அதனுள்ளிருந்து நாணயங்கள் உதிர்ந்து விழுந்தன. ”ஆளெக்கொல்லி”யாகிய (அப்)பணத்தைக் கண்டு நான் பயந்தோடி வந்தேன்.

ஆனால், வீட்டில் வந்து பார்க்கும்போது கஞ்சி காய்ச்ச ஒரு மணி அரிசி கூட இல்லை. பின்னர், கூப்பன்2 கடைக்குப் போய்ப் பார்த்த போது அங்கிருந்து கடன் கிடைக்கவில்லை.இனி என்ன செய்வதென்று அறியாமல் கவரன் கலங்குகிறான்.

கவரனுடைய இந்தக் கற்பனையிலிருந்து மனித வாழ்க்கையின் சில தத்துவங்கள் இருக்கின்றன என்று தோன்றுகிறது. கவரனும் கவரச்சியும் சேர்ந்து பரியாணம்பற்ற திருவிழா பார்க்கப்போனதும், யானை மிரண்டோடிய நேரத்தில் ஆள் கூட்டத்தில் அவர்கள் பிரிந்ததும், அப்புறம் கவரச்சியே கண்டுபிடிக்கிற சிரமத்திற்கிடையில்தான், கவரன் இங்கு வந்தடைந்ததும் சொல்லப்படுகிறது. கவரச்சியைப் பார்க்கும்போது உண்டாகிற சண்டைக்கு வித்தியாசம் இருக்கிறது. கவரன் கோபப்படும்போதும் கவரச்சி பக்குவமாக பேசுவதைப் பார்க்கலாம். கதைகளும் சிறுகதைகளுமாய் நேரம் நீண்டுபோகிற பொறாட்டுகளிதான் இது.

தொட்டியன் தொட்டிச்சி

அறுவடையோடு தொடர்புடைய பாலக்காட்டிற்கு வந்துசேர்கிற சில மக்கள் கூட்டங்கள் உண்டு. ஒரே நேரத்திலே வியாபாரமும் பிச்சையெடுப்பதும் இவர்களுடைய நோக்கமாக இருக்கும். சோப்பு,சீப்பு, கண்ணாடி, ரிப்பன் போன்றன எல்லாம் விற்று நடப்பார்கள். சில நேரங்களில் இவையெல்லாம் வேண்டாமென்று வைத்துவிட்டு பிச்சையெடுக்க இறங்குவார்கள். பச்சை குத்துவதும் கைரேகை சோதிடம் பார்ப்பதும் இவர்களின் பிழைப்பின் ஒரு பகுதி. சாதாரண மிதுனப்பொறாட்டில் இருக்கிற (தம்பதி) பிரிவும் கேள்விக்காரன் காண்பித்துக் கொடுப்பதும் இந்தப் பொறாட்டிலும் உண்டு. அதற்கு அப்புறம் உள்ள சண்டை மிக வித்தியாசமானதாக இருக்கும். கணவன் மனைவி பிணக்கும் அதன் பின்னரான வாக்குவாதங்களுக்கும் முடிவில் உலகத்தைப் பற்றி சிந்திப்பதும் தத்துவம் பேசுவதும் இந்தப் பொறாட்டுகளியை வேறு தளத்திற்கு கொண்டுசெல்லும். தொட்டிச்சி அரங்கத்திற்கு வருகிறாள். தொட்டியனும் உண்டு. தொட்டியனுடைய கேள்வி …. .

தொட்டியன்: ஊருக்குப் போகலாமா புள்ள
தொட்டிச்சி: நா வர்றதில்ல
தொட்டியன்: காரணமென்ன?
தொட்டிச்சி: சண்ட
தொட்டியன்: என்ன சண்ட?
தொட்டிச்சி: எங்கேள்விக்கு பதில் சொல்லு.
பூமிக்கு முன்னே பிறந்ததாரு?
தந்தையில்லாத புத்திரனாரு?
பாலகணபதியப்பெற்றதாரு?
சிறகில்லாத பட்சியெது?
வேரில்லாத மரமெது?
இதுக்கு உத்தரம் சொல்லியே தந்தால்
பத்தினி நான் உன்கூட வருவேன்.

தொட்டியன்: பூமிக்கு முன்னே பிறந்தது ஜாம்பவான்
தந்தையில்லாது பிறந்தது விஷ்ணுபகவான்
பாலகணபதி தன் மாதாவு பார்வதி
சிறகில்லா பட்சி ஆத்மாவுதானே
வேரில்லா மரம் ஆகாசந்தானே
இப்படியாக்குமது அதுக்கெல்லாம் உத்தரம்
பத்தினி எங்கூட வருவாயடி

தொட்டியனுடைய பதிலில் திருப்தியாகி அரங்கிலிலுள்ள சபையோர்களை வணங்கி தொட்டியனும் தொட்டிச்சியும் மேடையிலிருந்து வெளியேறுகிறார்கள்.

சக்கிலியன் – சக்கிலிச்சி

இது ஒரு நீண்ட பொறாட்டுகளி ஆகும். சக்கிலியர்கள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து குடியேறியவர்களாவார்கள். இவர்கள் தமிழும் தெலுங்கும் பேசுவார்கள். செருப்பு தயாரிப்பது இவர்களது தொழில்.

தப்பட்டை என்கிற வாத்தியக் கருவி கொட்டுகிற வழக்கமும் உண்டு. மேலும் காளை இறைச்சியையும் எருமை இறைச்சியையும் இவர்கள் உண்ணுவார்கள். அதனாலே சக்கிலியனைப் பார்த்த கேள்விக்காரன், அயித்தம் (அசுத்தம் மற்றும் தீண்டாமை) இருக்கிறது என்று சொல்கிறான். அதனை எதிர்த்து சக்கிலியன் கேள்வி கேட்கிறான்.

சக்கிலியன் : எதனாலே அயித்தம்?
கேள்விக்காரன்: செத்த மாடு, புழுத்த மாடு தின்கிறதாலே அசுத்தம்.
சக்கிலியன் : அசுத்தமானது எங்கு இருக்கிறது சாமி?
கேள்விக்காரன்: மனசுக்குள்ளே இருக்கிறது.
சக்கிலியன் : மனசுக்குள்ளே இருக்கிற அயித்தம் எப்படி போகும் சாமி?
கேள்விக்காரன்: ஆற்றிலே போய் வீழணும்.
சக்கிலியன் : ஆற்றிலே முழுகியது தேகமா, மனசா சாமி?
கேள்விக்காரன்: தேகம்.
சக்கிலியன் : அப்போது தேகத்தில் இருக்கிற அயித்தம் எப்படிப் போகும் சாமி?.. அது போகாது சாமி? அது ஒரு நினைப்புதான்!

பிறகு, சக்கிலியனுடைய பாட்டிலும் மனிதனின் பிறப்பு முதல் அவனது வளர்ச்சியில் உண்டாகிற மாற்றங்களும் ஜாதி என்கிற பெயரில் உண்டாக்குகிற தப்புகளும் சொல்கிறான். ஆணும் பெண்ணும் அல்லாத மற்றொரு ஜாதி பூமியில் இல்லை என்கிற உண்மையைச் சொல்கிறான். சக்கிலியன் சக்கிலிச்சியுடைய விவாதம் வேதாந்தமாகவும் தத்துவமாகவும் இருக்கிறது.

மண்ணான் – மண்ணாத்தி

மண்ணானும் மண்ணாத்தியும் என்கிற பொறாட்டில் இருக்கிற தள்ள மண்ணாத்தி பொறாட்டு பற்றித்தான் சொல்கிறார்கள்.

தள்ள மண்ணாத்தியும் ஆசானும் அருள்வாக்குரைப்பவரும் அரங்கத்திற்கு வருகிறார்கள். பாலக்காட்டுக்காரர்களுக்கு பழக்கமான இந்த அருள்வாக்கு சொல்பவர்கள் ஈழுவர்களும் செறுமக்களும் ஆவார்கள். அருள்வாக்கு சொல்பவர்களை இங்கு தம்பாட்டி என்று சொல்வார்கள். தம்பாட்டி உடல்குலுக்கி அருள்வாக்கு உரைப்பார். கையில் வாளெடுத்து தம் தலையில் வெட்டப்போவார். இந்த சந்தர்ப்பத்தில் ஆசான் சொல்கிறார்: தம்பாட்டி கையினாலே தாங்கித்தான் வெட்டுவார்.

அப்போது அருள்வாக்குரைப்பவர் சொல்வார் – வேகமாய் வெட்டினால் என் மண்டை பிளந்துவிடாதா? மகனே, மனைவியும் நான்கு பிள்ளைகளும் உண்டு.. உனக்குத் தெரியாதா?

அருள்வாக்குரைப்பவரிடம் தங்கள் துன்ப துயரங்களும் போக்க வேண்டி கோரிக்கை வைக்கிறார்கள். கல்லையும் நெல்லையும் பிரித்துக் கொடுப்பதுபோல் வாழ்க்கையில் துன்ப துயரங்களை தீர்த்துக் கொடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

அப்போது, “நீங்கள் ஒரு கோழிக்குஞ்சை விடுங்கள்” என்று அருள்வாக்குரைப்பவர் சொல்கிறார்.

கடைசியில், ”நான் இல்லாத நேரத்தில் – என் வீட்டில் பண்ட பாத்திரங்கள் திருடுபோயிருக்கின்றன. களவாடிக்கொண்டு போனது யாரென்று சொல்லுங்கள்” என்கிறார்கள். அதற்கு அருள்வாக்குரைப்பவர் சொல்கிறார்: அது தெரிந்தால் நான் இங்கு எதற்கு வேசங்கட்டி உட்கார்ந்திருக்கேன்”.

அருள்வாக்குரைப்பவர், தன் கையில் உள்ள வாளை வீசி எறிகிறார். பகுத்தறிவான சிந்தனை மூடநம்பிக்கைக்கு எதிரான அடியாய் இங்கு மாறுகிறது. திறமையுள்ள ஆட்டக்காரர்கள் தம் மனோதர்மத்தை பயன்படுத்தை இந்த ஆட்டத்தை இன்னும் சிறப்பாக மாற்ற முடியும்.

(தொடரும்)

  •  

நீண்டகால மௌனத்தின் நீண்ட நாவுகள்

நீண்டகால மௌனத்தின் நீண்ட நாவுகள் அபி கவிதைகளுடன் எளிய தரிசனம் – கண்டராதித்தன்

 

  கவிதை விஷயத்தின் ஒருமை, முழுமை எனும் வடிவத்தெளிவுகள் கவிதையின் அந்தகாரத்தில் காணாமல் போய்விடலாம். இன்னொன்று ; எந்த விஷயமும் மனசில் இல்லாமல்,அடிப்படைக் கவித்துவ உணர்ச்சியின் வேகச்சுழற்சியில்,; அந்த வேளையில் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிக்கொண்டு கவிதை வெளியே வந்துவிடலாம்.முயற்சி, திட்டம், தீர்மானம் இல்லாமலும், அப்படி இருந்தால் அவைகளைத் தப்பியும் பிறந்துவிடும் ஒன்றை நேர்வது என்னாமல் எப்படிச் சொல்வது? மற்றபடி கவிதையின் எழுத்து வடிவாக்கத்தில் பிரக்ஞை மட்டத்தில் கவிஞனின் அடித்தல் திருத்தல் கூட்டல் குறைத்தல் நிகழ்கின்றன. இவை கவிஞனின் உழைப்பு அல்ல. பிறந்த கன்றை ரொம்ப நேரம் நக்கிக்கொண்டிருக்கும் பசு அவன்.

அபி

கவிஞர்கள் தத்துவ ஞானிகளுடனும், நாவலாசிரியர்களுடனும், சிறுகதையாசிரியர்களுடனும் தங்களை நெருக்கமாக உணர்திருப்பர். அந்த வகையில் ஹபிபுல்லா என்ற இயற்பெயர் கொண்ட அபி லா.ச.ரா மற்றும் மௌனி ஆகியோரை தன் அகநோக்கின் முன்னோடியாக இனம் காண்கிறார். இந்த இடத்திலிருந்து நாம் அபியின் கவிதையை அதன் பொருண்மையை, தீவிரத்தை, மொழியின் லகுவான மற்றும் தீவிரத்தன்மையான படிமத்தை பொருத்திப்பார்த்து தொடங்கலாம்.

    1967 ல் தன் முதல் கவிதையை எழுதத் தொடங்கிய அபி,1974 ஆண்டு மீராவின் அன்னம் பதிப்பகம் மூலம் தன் முதல் கவிதைத் தொகுப்பை கொண்டுவருகிறார். தற்போது அடையாளம் பதிப்பகம் அபியின் மொத்த கவிதைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

அபி தன்தொடக்கால கவிதைகளிலிருந்தே தமிழ் நவீன கவிதை இருந்த வடிவத்திலிருந்து மெல்ல விலகி முழுக்க முழுக்க அகவொளி தரிசனம் கூடிய மொழியுடனும், வரிகள் கலைந்தும் காலத்தையும் பொழுதுகளையும  சிந்தனையையும் மயக்க நிலையில் இருக்குமாறு எழுதி வருகிறார்.

பெரும்பாலான கவிதைகள் ஆழ்மனச்சிந்தையில் சென்று வாசிக்கும்படி இருப்பதும், நேரடியாக புலப்படாத அனுபவப்பங்கீடும் அவரது கவிதைகளின் மிகு சிறப்பெனக் கூறலாம்,

மாலை நேரம் சுறுசுறுப்படைகிறது

இருந்த இடத்தலேயே

முடிவின்மையின் சேமிப்புக்கு

ஒரு புள்ளியைப் பிரித்துக்கொடுக்கிறது

– என்ற வரியிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு கவிதையை வாசிக்கும்போது அந்த முழுநாளையும் ஒரு கௌரவமானதாக மாற்றும் தன்மை ஒருசில கவிஞர்களுக்கே உரித்தானது.அபி அந்த வரிசையில் வருபவர். தனது கவிதைகளின் மூலம் பொழுதை மிதக்கும் தண்ணீர்ப் பந்தைப்போல மாற்றித்தருபவராகவும் உள்ளார். “என்ற ஒன்று”, “மௌனத்தின் நாவுகள்”, அந்தரநடை, மற்றும் சில கவிதைகள், மாலைவரிசைக் கவிதைகள் என இருநூறுக்கும் குறைவான கவிதைகள் அடங்கியது அபியின் கவிதையுலகம்.

         சமகாலத்தை நேரடியாகப் பிரதிபலிக்காத மொழிநடையில், அபியின் படிம உத்திகள் கவிதையின் மைய அச்சிலிருந்து விலகிய பாவத்தில் அனுபவ விளைவுகளை ஏற்படுத்கிறது. உதாரணத்திற்கு மௌனத்தின் நாவுகள் என்ற தொகுப்பில் உள்ள “உள்பகை” என்ற கவிதையின் ஒருபகுதியை வாசிக்கலாம்.

இருட்டை மீறிச் சீறும்

விரலின் வெறிப்பில்

வெளிக்கோடுகள் மூட்டுவிட,

உள்ளிருக்கும் அலறல் எல்லாம்

அகண்டத்தில் தூசாய்ப் பரவும்; நான்

லேசாகிப் பறந்து

மௌனத்தில் விழிகளில்

பூவிழுவேன்; வேண்டாம், நீட்டாதே!

        –

  அபி தனது கவிதை உத்திகளை எளிமையாகத்தோன்றும் படிமத்திற்கும், நான் என்ற ஒருவனின் அகக்குரலுக்கும் அவனது அக உலகத்திற்குள்ளும் போக வர உள்ள வழியாக வைத்துக்கொண்டுள்ளார்.அதுவே பிசிறில்லாத அக, புறச்சித்திரங்களை வழங்குகிற கவிதைகளாகிறது.

இதனாலேயே அபியின் கவிதைகள் பொதுப்புத்தியில் ஏற்கனவே கவிதை குறித்து இருக்கின்ற மதிப்பீடுகளிலும்     குறியீட்டிலிருந்தும்,அதன் மனநிலைகளில் இருந்தும் விலகி நிற்கிறது.

   எழுத்து காலகட்டத்திற்கு முன்பாகவே நவீன கவிதை   உருவாவிட்டது. ஆனால் நவீன கவிதை தமிழில் உருவாவனதிலிருந்தே கவிதையின் உள்ளீடு, கருத்தியல், வடிவம் போன்றவை குறித்து தர்க்க ரீதியில் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

அழகியல் மற்றும் அகம் சார்ந்த கவிதைகளை மட்டும் விரும்புகிறவர்கள் ஒரு பிரிவாகவும் அதன் அரசிலயற்ற தன்மையை விமர்சனம் செய்கின்றவர்கள் ஒரு பிரிவாகவும் எப்போதும் உள்ளனர். நூற்றாண்டு காணவிருக்கும் தமிழ் நவீன கவிதை வடிவத்தில் இக்குரல்கள் அடங்கிவிடாது என்பதே உண்மை. ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு விதமான கருத்தியலுக்கும் ஏற்ற இறக்கங்கள் வந்துபோவதை நாம் காண்கிறோம்.

அபியின் கவியுலகம் அகம் சார்ந்த பாடுபொருட்களுடன் கூடுதலான அரூபத் தன்மையைத் தன்னகத்தே கொண்டதாகவும் உள்ளது. எளிதில் வாசிக்க முடிகிற நடையில் இருக்கிற அவரது கவிதைகள் எளிதில் அனுபவத்தைத் தருவதாக இருப்பதில்லை. அயர்ச்சி தராத அந்த மொழிப் பிரயோகத்தை கணக்கில் கொண்டால் அக்கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு தரிசனத்தைத் தருவதாகவும்  உள்ளது.

       ஒரு வசதிக்காக அபியின் மாலை வரிசைக்கவிதைகளை இங்கு எடுத்துக்கொள்ளலாம். இக்கவிதைகள் நாம் அன்றாடம் காணும் மாலைகள் அல்ல, இவற்றை வாசிக்கும்போது நாம் பிரத்யேகமான வாகனத்தில் அமர்ந்து அமைதியாக பயணிக்கும் உணர்வு மேலிடுவதை உணரமுடியும். மொத்தமாக இக்கவிதைகளை வாசிக்கும்போது இரண்டு விதமான உணர்வுகளும் வந்துபோகின்றன.

  அது மிக ஆத்மார்த்தமான மொழியும்,அதன் எளிமையும் பிரமிப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அதே சமயம் கவிதை வடிவத்தின் ஒழுங்கின்மை மீது லேசான விலகல் வந்துபோவதையும் தவிர்க்க முடியவில்லை.

                      மாலை – எது

தூசி படிந்த புளிய மர வரிசையை

வைதுகொண்டே

மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்

வண்டுகளும் பறவைகளும்

தோப்புகளுக்குள்

இரைச்சலைக் கிளறி

எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன

இருண்டு நெருங்கி வளைக்கும்

மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்

இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்

ததும்புகிறது

என்வலி

பொழுது நிரம்புகிறது

ஒரு இடுக்குவிடாமல்

00   000     00

தூசிபடிந்த இரைச்சலுக்கடியில்

சாத்வீக கனத்துடன்

இது எது

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்

இடறாத என் பாதங்களினடியில்

இது எது

என் சாரங்களின் திரட்சியுடன்

வலியுடன்

அலங்கரித்த விநோதங்களை

அகற்றிவிட்டு

எளிய பிரமைகளின் வழியே

என்னைச் செலுத்தும்

இது எது?

இக்கவிதை கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் நிகழ்வதாகவும் ஒழுங்கற்ற வடிவம் கொண்டதாகவும் உள்ளது. மேற்பூச்சாக இத்தன்மை கொண்டது எனலாமே ஒழிய அபியின் கவிதையைப் பொருத்தவரை இது சாதாரணமாக நிகழ்வதுதான்.

  தற்செயலாக அபியின் இக்கவிதைகளை பல்லவர்கால கோவில் உள்ள பனமலைப்பேட்டை என்ற ஊருக்குச் செல்லும் வழியில் மலைகள் சூழ்ந்த பகுதியில் அமர்ந்து வாசித்தது ஞாபகத்திற்கு வருகிறது. எதிரில் ஒரே ஒரு பாறை  மலை அளவிற்கு நின்றிருந்தது. பின்புறத்தில் மிகப்பெரிய பனமலை ஏரி நீர் பாயும் பசுமையான வயல்வெளிகள், பக்கவாட்டில் சிதிலமான சாலை என அற்புதமான மனவெழுச்சியைத் தருகிற இடத்தில் இக்கவிதையை வாசிக்க நேர்ந்தது.

இக்கவிதையை வாசிக்கும்போது நம்முள் எழும் பேருணர்ச்சி

இருண்டு நெருங்கி வளைக்கும்

மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்

இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்

ததும்புகிறது

என்வலி

பொழுது நிரம்புகிறது

ஒரு இடுக்குவிடாமல்

  என்கிறபோது தீவிரமும், சாந்தமும், அமைதியும் ஒருங்கே நிகழ்கிறது. இப்போது ஆச்சரியமளிக்கிற ஒரு பெருவெளி, திரண்டதுக்கம், மகிழ்ச்சி, பெரும் பாறை தரிசனம் என பலதரப்பட்ட பேருணர்ச்சிகளுடன் நம் மனம் நிரம்பி வழிகிறது, அது அந்தியாகவே இருக்கும்போது இன்னும் கூடுதல் அழகியலைத் தருகிறது. அபியின் தன் கவிதைகளின் வழியாக நம்மை பூமியிலிருந்து பிரபஞ்ச வெளிக்கு அழைத்துச்செல்லும் ஊஞ்சலாட்டத்தை நிகழ்த்திக் காட்டுகிறார்.

       நாளின் இரண்டு பொழுதுகளுக்குச் சற்று  கூடுதலானஅழகுண்டு, இந்த மத்தியானமும், மாலையும் ஒரு நாளின் பல்வேறு பிரமாண்டங்களைக் கற்றுக்கொடுப்பவை அந்த இரண்டு பொழுதுகளின் அமைதியின் மீது மனித குலத்தின் ஆன்மாவை உணர முடியும்.

மாலை – பயில

உருவினில் மறைந்து

உருவிழந்த

மாலையைப்

பயின்று கொண்டிருப்பேன்

மணல் பிசைந்து

மாலையின் துடிப்பைக் கணிப்பேன்

பயில-

அரவமற்ற

என் மூலைகளினுள்

உறிஞ்சப்படுவேன்

சிடுக்கான இக்கவிதை மனதை மேலோட்டமாக வைத்துக்கொள்வதிலிருந்து விலகி இந்த மாலையைப் பார்ப்பதாகவும், விலகிய மனோபாவத்தில் பார்ப்பதாகவும், பின்னர் அதை உணர்ந்தும் பயின்றும் தன்னுள் தன்னை கரைத்துக்கொண்டதாகவும் உள்ளது.

        குழப்பமான, நிராதரவான, மகிழ்ச்சியற்ற, துயர் மிகுந்த காலத்தில் அபியின் கவிதைகளை  படிப்பது மனோதிடத்தை சோதிப்பதாகவே இருக்கும். வெகுஜனக் கவிதைகளிலும், சிறுபத்திரிக்கை கவிதைகளிலும் இருந்து தனித்த பென்சில் கோடு போன்ற ஒரு பாதையில் விலகிச் செல்லும் கவிதைகள் இவை.

  ஒரு பாமரத்தனமான  கவிதை வாசகனாகவே எப்போதும் அபியின் கவிதைகளை வாசிக்க முற்படவேண்டும். இதற்கு முன்  நம் வாசிப்பில் இருந்த கவிதைகளை இவை சற்று தள்ளி வைக்க முற்படும் அல்லது நாம் அபியின் கவிதைகளிடமிருந்து தள்ளி நின்று பார்த்துச் செல்லவே அக்கவிதைகள் கோரும். தெளிவற்ற மனநிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள  இசை, வாசிப்பு மற்றும் பயணம் என பல்வேறு விடுபடுதல்களை நோக்கி நாம் நகர முற்படுவோம். சிலருக்கு வாசிப்பும் எழுத்தும் குழப்பத்தை விடுவிக்கும். அபியின் கவிதையுலகு மனிதன் எப்போதும் கண்டிராத ஒரு மர்ம பிரதேசத்திற்குள் கைவிளக்கோடு நுழைவது போன்றது. அவை  தனித்துவமான எளிமையையும்,அரூபத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளவை, அபியின் கவிதைகளில் அதிராத இசைத்துணுக்குள் உண்டு,தத்துவ ஞானிக்கு இடமுண்டு, மனப்பிசகு கொண்ட மனிதனுக்கு இடமுண்டு இவற்றைக்கொண்டு பாலம் பாலமான வரிகள் இல்லாமல் மிகச்சாதாரணமாக மையத்தை விட்டு விலகிய தொனியில் நம் கைப்பிடித்துக் கரைசேர்ப்பார்.

”என் சொந்த சோதனைச்சாலைக்கு” என்ற கவிதையில் உள்ள சில வரிகளைப் பார்த்தால்

யுக முகடுகளுக்கே சென்று

அங்கிருந்து

நிமிஷநுரைகளோடு

நேரங்கள் சரிவதைப்

பார்த்துக்கொண்டிருப்பேன்

மௌனத்தின் பூமியைப்

பெருமூச்சுகளால் கீறி

துக்க விதைகளை இட்டு

உயிர் நிரம்பிய தாகங்களை ஊற்றிக்

கவிதைகளை வளர்ப்பேன்

மனித நெஞ்சினுள்

சந்தை கூடி நெரியும்

அந்த நிழல்களை

நினைத்துக்கொண்டிருப்பேன்

அங்கே அந்த இதயத்தில்

ஊமைகளின் தர்க்க மேடையை

ஒரு ஞானமின்னலால்

நொறுக்கிவிட்டு

அந்த இடத்தில்

னவுகளின் சொர்கத்தை அமைப்பேன் என்கிறார்.

இக்கவிதைமுழுவதும் தொடர்ச்சியான தனித்தனி அடுக்குகளாகவே சென்று கொண்டிருக்கிறது.

நமது இளம்பருவத்தில் நமக்கு ஏற்படும் தத்துவ சந்தேகங்களை பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம், அவ்வாறு கேட்டுத் தெரிந்தது போக மீதமிருக்கிற சந்தேகங்களை அனுபவத்தில் பெற்றுக்கொள்வோம், மேலும் மீதமிருப்பதை வாசிப்பனுவத்தில் தெரிந்துகொள்வோம் என்றாலும் மேலும் மீதமிருக்கும் தத்துவக் கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் முடிவில்லாத நிறைவடையாத மனதோடு தேடல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.அதுபோல இக்கவிதையில்

என் இதயத்திற்குள்

சீற்றத்தோடு எரிகின்ற நெருப்பை

அணைத்துவிட்டு

சிந்தனையோடு எரிகின்ற

சுடர்களை ஏற்றிவைப்பேன் என்கிறபோது வாழ்வென்பது அணையாத தீபமும்,தொடர் சோதனைக் கூடமுமாக உள்ளதைக் காணலாம்.

வியர்த்தம்

வெளியேற வழிதேடி

அலைவதிலும்

விளையுமொரு வட்டம்

நம் முயற்சிகளின்

உள் ஆவி

கெஞ்சி கூடவே வந்து

வியர்த் விளிம்புவரை

புலம்பிப்பார்த்து

முணுமுணுத்து

பிந்தங்கிப்

புள்ளியாய் மறையும்.

அபியின் கவிதைகளை வாசிக்கும்போது அதன் தீவிரத்தன்மை உடனடியாக வாசக மனதைத் திறப்பதில்லை, மாறாக அக்கவிதைகளில் இருந்து ஒருவித மன விலக்கம் ஏற்படுகிறது. தீராத தேடலுடன் அவற்றை மறுபடி வாசிக்கும் போது புதியதொரு நெருக்கத்தையும் தருகிறது. கூர்மையான எளிய சொற்கள், விலகலான மொழி அமைப்பு, கலைத்துப்போடும் கவிதையடுக்கு, தத்துவம், கேள்வி, ஞானம் என பலவிதமான மனமலர்ச்சிகளை உருவாக்குபவை அவரது கவிதைகள். நள்ளிரவில் ஆளற்ற பிரதேசத்தில் பெய்த மழையின் சப்தத்திற்குக்கொப்பானவை, அந்த ஓசைக்கும் அதன் குளிர்ச்சிக்கும் நம்மை ஒப்புக்கொடுத்தால் நம் அஞ்ஞானச் சூடுதணிவதை உணரலாம்.

 

***

– கண்டராதித்தன்

The post நீண்டகால மௌனத்தின் நீண்ட நாவுகள் appeared first on வனம்.

  •  

பசுமையின் மனம் பாடும் ரகசியம்

இந்த தொட்டாற் சுருங்கி (Mimosa pudica) இலைகளை பாருங்கள். அதைத் தொட்டால், அதன் இலைகள் உடனே மூடிக்கொள்கிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் தொட்டால், அதன் எதிர்வினை குறைகிறது. ஏனெனில் அது தொடுதல் ஆபத்து இல்லை என்று புரிந்துகொள்கிறது. தொடும்போது, மிமோசா செல்கள் கால்சியம் அயனிகளை, ஒரு இரசாயன அலாரம் போல வெளியிடுவதால், இது இலைகளை மூடச் செய்கிறது. மீண்டும் மீண்டும் தொடும்போது, தாவரம் தன் ஆற்றலைச் சேமிக்க அதன் பதிலை மாற்றுகிறது.
  •  

ஈர்ப்பு அலைகள் – பகுதி 9

சூரியனை விட, மிகப் பெரிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய கருந்துளைகள், சூப்பர் நோவா என்று பல்வேறு ரட்சச அமைப்புகளை, விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், இவை யாவும், நம்மைச் சுற்றியுள்ள அமைப்புகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆக, மிகப் பெரிய விண்வெளி அமைப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, ஈர்ப்பு அலைகள். பிரபஞ்சத்தில், மிகப் பெரிய மோதல்கள் நிகழ்ந்தால் மட்டுமே, ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன
  •  

ஈர்ப்பு அலைகள் – பகுதி 8

இரண்டு அமெரிக்க தளங்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருந்தாலும், இரண்டுமே தவறாக பதிவு செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. அத்துடன், அமெரிக்க தளங்கள் இரண்டும், வட துருவத்தில் இருக்கிறது. தென் துருவத்தில் இதைப் போல வேறு எந்த அமைப்பும் இல்லை. ஜப்பானில் உள்ள KAGRA இன்னும் கட்டுமான அளவில் இருந்தது. இத்தகைய நிகழ்வை, பல்வேறு தளங்கள் பதிவு செய்தால் இரண்டு விஷயங்கள் தெரிய வரும்: 1) உண்மையில் இந்த ஈர்ப்பு அலை எந்த திசையிலிருந்து வந்தது – இது triangulation என்று சொல்லப்படுகிறது. 2) பல தளங்கள் பதிவு செய்வதில், சந்தேகமின்றி, இது ஈர்ப்பு அலை என்று தெளிவாகிறது
  •  

அறிவு அளித்த விடுதலை

பிளேட்டோ தொடங்கி கிரேக்க ரோமானிய சிந்தனையில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய மற்றொரு சிந்தனையாக “அலையும் கருப்பை” அமைந்தது. கருப்பை என்பது ஒரு விலங்கு மற்றொரு விலங்கின் உள்ளே உள்ளதாக பார்க்கப்பட்டது (Animal inside Animal).‌ ஆணின் உடல் துணை இல்லாமல் தனித்திருக்கும் பெண்ணின் கருப்பை, அதன் இயல்பான நிலையிலிருந்து வெளியேறி உடலின் வேறு இடங்களில் அமைவதால், பெண்களுக்கு மட்டுமேயான நோய்கள் தோன்றுவதாக கருதப்பட்டது. இதன் சிகிச்சை ஒரு இளமையான ஆணுடன் உறவு கொள்வது என முன் வைக்கப்பட்டது.
  •  

நான் – ஒரு போஹேமியன் பயணி;1 – காயத்ரி சுவாமிநாதன்

ஹரியானாவில் கிடைத்த உறவுகள்    

பயணங்களில் பல வகைகள் உண்டு. பல வருடங்களாக தேசாந்திரியாக இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டு வருகிறேன். என்னுடைய மிகப்பெரிய ஆசான் என்னுடைய அனுபவம் மட்டுமே. அப்படி என்னுடைய பயண அனுபவங்களை, சில நிகழ்வுகளைப் பகிர்கிறேன். அதற்கு முன்பாக, ‘பயணம்’ பற்றி சில தகவல்களைக் கூற விரும்புகிறேன். என்னைப் போல திட்டமிடாமல் தேசாந்திரியாகச் சுற்றி, அல்லது ஒரு நோக்கத்துக்காக நெடுந்தூரம் போவதுதான் பயணம். என்னைப் போல பயணம் செய்பவர்கள் பயணப்படுவதை எப்போதும் உலகத்திற்கு தெரிவிக்கமாட்டார்கள். ’லாங் வீக்என்ட்’ ஐ அனுபவிப்பதற்காக இணையதளத்தில் முன்கூட்டியே பெரும் வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டுச் செல்வதற்குப் பெயர்,  ‘சுற்றுலா’ (Tour/Trip).

சுற்றுலா என்பது உறவுகளும் உணவுகளும் சம்பந்தப்பட்டது. தேசாந்திரி பயணம் (Journey/Voyage) என்பது உணர்வுகள் சம்பந்தப்பட்டது. எடுத்துக்காட்டிற்கு என்னைப் போல எப்பொழுதும் ஒரு புதிய இடத்திற்குப் போய் அங்கே சில மாதங்கள் தங்கியிருந்து, அந்நிலப்பரப்பு, மக்கள், மொழி, உணவு, கலாச்சாரம் அத்தனையையும்  ஓரளவு கற்றுக் கொள்வதுதான் பயணம். அப்படி என்னுடைய பயணம்  எப்போதுமே என்னை செழுமையாக்குகின்றது, முழுமையாக்குகின்றது, செறிவான மனிதனாக்குகிறது மற்றும் பூமியைக் கடந்து பிரபஞ்சத்தையே கண்டடைய வைக்கிறது. எனது வாழ்வின் மிக முக்கியமான பயணமான, ’ஹிரியானா பயணம்’ பற்றி இக்கட்டுரையின் மூலம் பகிர்கிறேன்.

ஹரியானாவில், ‘Faridabad’ ல் சாலை ஓரமாக நண்பகல் 12மணி அளவில் பசியின் உச்சத்தில் சோர்வோடு நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சிறிய பையன் அவன் மொழியில் இளநீரை விற்றுக் கொண்டிருந்தான். பிறகு சாப்பிடலாம், முதலில் ஒரு இளநீர் குடிக்கலாம் என அவனை நோக்கிச் சென்றேன். அங்கே ஒரு சிலர் ஒரு இளநீரோடு வாங்கிக் கிளம்பிவிட்டனர்.  நான் அவன் வைத்திருந்த அனைத்து இளநீரையும் சீவி அதன் தண்ணீரை நான் வைத்திருந்த எனது பாட்டிலில் அடைத்துக் கொண்டேன். மேலும் அந்தத் தேங்காய்களை ஒரு டப்பாவில் வைத்துக் கொண்டேன். நான் போகும் வழியில் யாராவது சாலையோரம் இருப்பவர்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்களுக்குக்  கொடுக்கலாம் என்று நினைத்தேன். அப்படியே நடந்தது. நான் ஏன் அனைத்து இளநீரையும் வாங்குகிறேன் என அந்த சின்னப் பையனும் மிகவும் அதிர்ச்சியாக என்னையே கூர்ந்து பார்த்தான். பிறகு அவனிடம் ஒன்று  சொன்னேன், “ஒன்றும் இல்லை, நீ வைத்திருக்கும் அனைத்தையும் எனக்குக் கொடு, ஏன் படிக்காமல் இருக்கிறாய்? போய் படி, என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்”. பிறகு அடுத்த சில மணித்துளிகளில் அக்கடையில் இளநீர் குடிக்க ஒரு வெள்ளைக்காரர் வந்தார். Home Care ஒன்று வைத்துள்ளதாகக் கூறினார். அப்பா-அம்மா இல்லாத குழந்தைகளுக்கு படிப்பு, தங்கும் வசதி எல்லாம் செய்து கொடுப்பதாகவும் கூறினார். மறு நொடியிலேயே இந்தப் பையனைப் பற்றி எடுத்துக் கூறினேன். உடனே சம்மதித்தார். அந்த ஒரு நொடியிலேயே அவன் வாழ்க்கை மாறியது. இறுதியில் அவன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டு அழுது முத்தமிட்டுச் சொன்னான், “ஒரு இளநீரை வாங்குவதே பெரிது, நீங்கள் நான் வைத்திருந்த அனைத்தையும் வாங்கி எனது பசியைப் போக்கிவிட்டீர்கள் மற்றும் எனக்கு வாழ்வு கொடுத்துள்ளீர்கள். I love you my Queen”. அவனைப் பார்த்த நிமிடத்தலே ஏதோ எனக்குள் தோன்றியது, அவனுக்கு ஏதாவது செய்திட வேண்டும் என்று. அப்படி ஒரு பாவப்பட்ட தோற்றம். அப்பா-அம்மா யாரும் இல்லை அவனுக்கு. வேறு யாரிடமோ இளநீர் வாங்கிக்கொண்டு இந்த இளநீரை விற்றுக் கிடைக்கிற காசை வைத்து வாழ்வதுதான் அவனது அன்றாட வாழ்க்கை. சில நேரம் இளநீர் விற்காமலும் போகும் எனச் சொன்னான் என்னிடம். பிறகு, ‘டாடா’ சொல்லிக் கிளம்பினேன்.

அடுத்ததாக நான் போகும் வழியில் எனது கண் முன்னே மிகப்பெரிய துணிக்கடை ஒன்று இருந்தது. அதற்குள் நுழைந்தேன். பிரமாண்டமான துணிக்கடை. ஆடம்பரமாக ஆடைகளை அணிந்துகொண்டு சாமானியர்கள் அங்கும் இங்கும் நடந்தேறிய காட்சிகள் ஆச்சர்யமாக இருந்தன. ஆனால் அங்கே நான் எனக்கு துணி வாங்குவதற்காகச் செல்லவில்லை.

கடையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே போகும்போது, ஓரே ஒரு இடத்தில் மட்டும் இருளாக இருந்தது. யாரிடமும் கேட்காமலே அங்கே சென்றேன். நான் எப்போதும் இருளில் வாழ்பவள். அதனால் இருள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு சின்ன அறை. அந்த அறை முழுவதும் சி்ன்னச் சின்ன பெண்கள். தங்கள் அன்றாட பிழைப்பிற்காக துணிகளை நெய்து வேலை செய்கிறவர்கள். அதில் ஒரு பெண் மட்டும் என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவள் அருகில் சென்று கண்ணத்தைக் கிள்ளினேன். முகத்தில் அப்படி ஒரு நாணம் கலந்த ஒரு புன்னகை. ஹிந்தியில் உரையாடினோம். என்ன வயது எனக் கேட்டேன். “எனக்கு வயது 13. அப்பா குடித்தே இறந்துவிட்டார். அம்மா உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். எனது பாட்டியுடன் இருக்கிறேன், அவருக்கும் வயதாகிவிட்டது, நான் வேலைக்குப் போனால்தான் அவர் உயிரோடு இருக்க முடியும்” எனக் கூறினார். அந்தப் பெண் தனது கைகளை மறைத்துக் கொண்டே இருந்தாள். துணி தைக்கும் கைகள் எல்லாம் புண்ணாகியிருந்தன. “மருந்து போடலாமல் ஏன் இருக்கிறீர்கள்?” எனக் கேட்டேன். “மருந்து வாங்கினால் எனக்கும் எனது பாட்டிக்கும் ஒருவேளை சாப்பாட்டிற்கான பணம் போய்விடும்” என்றாள். “சற்று இருங்கள், வருகிறேன்” எனச் சொல்லி, கடைக்கு வெளியே இருந்த மருந்தகத்தில் மருந்துகளை வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தேன். எனது கையைப் பிடித்து வாய்விட்டுச் சத்தமிட்டு அழுதாள் அந்தச் சிறிய பெண். அவளைப் போலவே அங்கே நிறைய பெண்கள், சிறுமிகள், வயதானவர்கள் இந்த வேலையைச் செய்து கொண்டிருந்தனர். இக்கடையில் தினமும் அல்ல, ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகின்றனர். ஆனால் இங்கே ஒருவரும் வந்ததில்லை. எங்களைப் பார்த்ததில்லை. ஒருவேளை எங்களை வெளியே  யாரேனும் பார்த்தால் கூட முகம் சுழித்து ஏளனமாகத்தான் பார்ப்பார்கள்” எனக் கூறினார்கள். அப்படி அந்த அறைகளில் வேலை செய்யும் ஒவ்வொருவர்களின் கதைகளைக் கேட்டுக் கொண்டே நகர்ந்து சென்றேன். இறுதியில் ஒரு அக்கா திடீரென எனது கையைப் பிடித்து அவரது அருகில் இழுத்து அவர் முதுகையும் உடம்பில் உள்ள சிறு காயங்களையும் காண்பித்து அழுதார். எனது மணம் நொறுங்கியது. பகலில் துணிகளை நெய்வது, இரவில் பாலியல் தொழில் என மேலும் பல பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போனார்.

அங்கே இருந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நினைத்து எனது மணம் கனத்துப் போனது. பிறகு எல்லோருமே ஒன்று சொன்னார்கள், “இங்கே இருக்கும் மனிதர்கள் தங்களை மிகவும் ஆடம்பரமாகக் காண்பித்துக்கொள்ள நாங்கள் நெய்த துணிகளை அணிகிறார்கள். ஆனால் எங்கள் வாழ்வில் நாங்கள் ஒருநாளும் நல்ல ஆடைகளை அணிந்ததே இல்லை”. அங்கே இருப்பவர்களில் என்னுடன் முதலில் பேசிய, ‘ஆஷா’ வின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. “ஒருநாள் கூட நான் இந்த மிகப்பெரிய கடையை முழுதாகப் பார்த்ததே இல்லை” எனக் கூறினாள். பிறகு அவளை கடைக்குள்  அழைத்துச் சென்றேன். அங்கே இருப்பவர்கள் அவர்களது, ‘LuxuryPeople’ என்ற  மிகப்பெரிய மட்டமான அடையாளத்தோடும் அதிகாரத்தோடும் என்னைத் திட்டினார்கள், “ஏன் இவளை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள்?” என்று… நான் அவர்களிடம் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன், “She is my sister, u don’t have rights to say anything about her, I just want to buy some dress for her that’s நor else  I will call the Police” என்றுச் சொன்னேன்.பிறகு அவளுக்கு என்னால் முடிந்த அளவிற்கு ஆடைகளை வாங்கிக் கொடுத்தேன். அவள் விழிகளில் பரிதாபத்தை என்னால் உணர முடிந்தது. பிறகு அவளுக்கு ஆடையும் கிடைத்தது. அந்த அறையில் இருக்கும் எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன். நான் அங்கிருந்து கிளம்பும்போது ஒருத்தி மட்டும் மிகுந்த கவலையோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வேறு யாருமல்ல, ஆஷாதான். இறுதியாக, “நீங்கள் யார், எனக்காக ஏன் இதெல்லாம் செய்கிறீர்கள்?” என்று கேட்டாள். “நீ எனது தங்கை” என மறுபடியும் கூறினேன். “எப்படி?” எனக் கேட்டாள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என பதிலளித்தேன். அவளுக்குப் புரியவில்லை. ஹிந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னேன். அவள் எனது கையை விடவேயில்லை. “உங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன், நீங்கள் இங்கேயே இருக்கலாமே, அடிக்கடி உங்களை எனது வாழ்வில் நினைத்துக்கொள்வேன்” எனக் கூறினாள்.  வேறென்ன வேண்டும் இதற்கு மேல்? பிரியாவிடைப்பெற்றேன் அங்கிருந்து..

வாழ்வதற்குப் பொருள் வேண்டும்தான். இருந்தாலும், வாழ்வதிலும் பொருள் வேண்டும். நாம் சேர்த்து வைக்கும் பொருட்களிலும், சொத்துகளிலும் இல்லை மகிழ்ச்சி. நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது மகிழ்ச்சி.

பணத்திலேயே குறியாக இருக்கும் மனிதனால் அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள முடியாது. எந்த மிருகமும் அன்பைப் பெற்று கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை, மனிதனைத் தவிர. யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை, யாரால் யார் மகிழ்விக்கப்படுகின்றோம் என்பதில்தான் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.

தொடரும்…

[email protected]

The post நான் – ஒரு போஹேமியன் பயணி;1 – காயத்ரி சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

இங்கிருந்துதான் வந்தான் - 2

உட்காரச் சொன்னார். தரையில் உட்கார்ந்தான். ஒன்றும் புரியாமல் முதலாளியைப் பார்த்தான். உள்ளே சென்று சாப்பாட்டுத் தட்டைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தார். “முதலாளி நா மேலேயே சாப்பிட்டுக்கிறேன்” எழுந்தான். ”அட உக்காருப்பா” என்றவர் கொஞ்சம் தள்ளி மேஜையில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை எடுத்துத் திறந்தார். முத்தையாவுக்கு கைகால்கள் எல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தன. அவன் முன் இருந்த தட்டிலில் அப்படியே தலைகீழாய் கொட்டினார். அவன் முகம் பார்த்து, ”ம்… ஆசை தீரச் சாப்பிடு” என்றார்.

  •  

இங்கிருந்துதான் வந்தான் - 1

தன் வாழ்வில் சந்தித்த மேடுகளும் பள்ளங்களும், இருட்டும் வெளிச்சமும் அப்படியே யாருக்கும் வாய்க்காது எனத் தோன்றியது. அவனுக்கே சில நேரங்களில் அதிசயம் போலத் தோன்றும். வடமலைக்குறிச்சி பழனி ஒயின்ஸில் சரக்கு அடித்து விட்டு நட்ட நடு ராத்திரியில் மூப்பர் சமாதி மேல் உட்கார்ந்து சுருட்டு புகைத்துக் கொண்டு குறி சொன்ன அந்த சின்ன முத்தையா இந்த பெரிய முத்தையா எப்படி இருப்பான் என்று அறிந்திருந்தானா?

  •  

தடை செய்யப்பட்ட நாவல்கள் - 6

1970களில் வாய் மொழியாக சக கைதிகளிடம் 'பூமி மனுஷ்யா' என்னும் இந்தக் கதையை சொல்லியிருக்கிறார். எழுதுவதற்கு காகிதங்கள் கூட தரப்படவில்லை. கழிவுக் காகிதங்களை சேகரித்து எழுதுகிறார். 1979ல் விடுதலை செய்யப்படுகிறார். 1980ல் நாவல் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. உடனடியாக அந்தப் புத்தகம் இந்தோனேசியாவில் ஜெனரல் சுகர்ட்டோ அரசால் தடை செய்யப்பட்டது. தோயர் பதினெட்டு வருடங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்படுகிறார்.

  •  

தடை செய்யப்பட்ட நாவல்கள் - 5

மரணத்தை எதிர்பார்த்திருக்கும் மனிதனின் கண்கள் எதையெல்லாமோ சொல்லிக் கொண்டே இருக்கிறது. அவனுக்கான இறுதி மணி அடிக்கப்பட்டுவிட்டது என்பது புரிகிறபோது, வாகனுக்குள்ளும் அந்த ஓசை கேட்டு சலனப்படுத்துகிறது. கதை முடிந்த பிறகும் அது ரீங்காரமிடுகிறது. இழப்பைத் தவிர வேறு எதையும் போர் மூலம் பெற முடியாது என்பதை உணர்த்தியபடி இருக்கிறது.

  •  

தடை செய்யப்பட்ட நாவல்கள் - 4

பிரெஞ்சு சமூக அமைப்பையும், கிறித்துவ வறட்டுத்தனங்களையும், நேர்மையற்ற நீதித்துறையையும் கடுமையாகச் சாடிய கருத்துக்கள் நாடு விட்டு நாடு அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. சிறைகள் அவருக்காக எப்போதும் வாயைப் பிளந்தபடி காத்துக் கொண்டிருந்தன. பாரிஸிலிருந்து, இங்கிலாந்துக்கு, திரும்பவும் பாரிஸுக்கு, அங்கிருந்து பெர்லினுக்கு, பிறகு ஜெனிவாவுக்கு என நகர்ந்தபடி இருந்தார். தான் ஓடிய அந்தக் கால்களைத்தான் தன் நாவலின் கதாநாயகனுக்கும் வால்டர் கொடுத்திருக்க வேண்டும்.

  •  

தடை செய்யப்பட்ட நாவல்கள் - 3

நாகரீகமற்றவர்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் கருதப்படுபவர்களிடம் இருக்கும் தாய்மையின் ஒளியை அந்த எழுத்துக்களில் தரிசிக்க முடிகிறது. இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்கள் கொடுப்பதற்கு உயிரின் துளிகளைப் போல அபூர்வமானதை வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறது. உலகைக் காப்பாற்றும் சக்தி அந்த எளிய மனிதர்களிடம் இருப்பதைக் காட்டுகிறது. உயிரோடு இருப்பவர்களைக் கொல்லும் ஒரு அமைப்பையும், செத்துக் கொண்டிருப்பவனுக்கு உயிர் கொடுக்கும் ஒரு தாயையும் தராசில் நிறுத்தி சமூகத்திடம் கேள்வி கேட்கிறது நாவல்.

  •  

தடை செய்யப்பட்ட நாவல்கள் - 2

அது மார்க் ட்வைன் எழுதிய Adventures of Huckklebery finn. அதற்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு புத்தகம் வரவில்லை' என்று எழுத்தாளர் எர்னஸ்டோ ஹெம்மிங்வே 1935ல் எழுதுகிறார். அமெரிக்காவின் மதிப்பு மிக்க கன்கார்டு நூலகமோ "மூர்க்கத்தனத்தையும், அநாகரீகத்தையும் பேசும் இந்த புத்தகம் சேரிகளுக்குத்தான் லாயக்கு. அறிவும் மரியாதையும் மிக்க மனிதர்களுக்கு ஏற்புடையதல்ல" என்று இந்த நாவல் வெளிவந்த 1885ம் ஆண்டிலேயே தடைசெய்தது.

  •