Reading view

1949 – 1968: ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 1

உதவி : ஜீவராசா டிலக்ஷனா

இக்காலகட்டம், 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் இயக்கம் தொடங்கியதில் முடிவடைகின்றது. இக்காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் இலங்கை என்ற ஒற்றைக்கட்டமைப்பில் இருந்து விலகி வடக்கு, கிழக்கு என்ற தமிழர் தாயகத்தை வலியுறுத்தி அதற்கு அதிகாரத்தைக் கோரும் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இக்காலகட்டத்தில் மூன்று மாற்றங்கள் இடம் பெற்றன. ஒன்று, ஒற்றை ஆட்சியில் சமவாய்ப்புக் கோரிக்கை என்பது கைவிடப்பட்டு, சமஸ்டிக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது, தாயகம் அடையாளப்படுத்தப்பட்டதும் தமிழீழ அரசியல் தமிழத்தேசிய அரசியலாக மாற்றமடைந்தது. மூன்றாவது, இதுவரை காலமும் சட்டசபைகளில் பேசுதல் அல்லது உரையாற்றுதல், கோரிக்கை மனுக்களை அனுப்புதல் என்கின்ற அணுகுமுறைக்கு மாற்றாக மக்களை இணைத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம், 1957 ஆம் ஆண்டு திருமலை யாத்திரை, 1957 – 58 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டங்கள், 1961 ஆம் ஆண்டு கச்சேரிகளின் முன்னால் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் என்பன முக்கியமானவையாகும். அகில இலங்கை தமிழரசுக் கட்சி இப்போராட்டங்களை முன்னெடுத்தது. எஸ்.ஜே.வி செல்வநாயகம், ‘தந்தை’ செல்வா என அழைக்கப்பட்டார். அவர் இக்காலகட்டத்தை நகர்த்திய முக்கிய தலைவராகக் காணப்படுகின்றார்.

• புதிய கட்சி உருவாக்க முயற்சி இடம்பெறல் 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறிய செல்வநாயகம் குழுவினர் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்துப் பிரசாரம் செய்தனர். இதற்கான முதல் கூட்டம் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் முன்றலில் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன், வன்னியசிங்கம் உட்பட இளைஞர்களின் சார்பில் சட்டமாணவராக இருந்த அமிர்தலிங்கமும் உரையாற்றினார். தொடர்ந்து கொழும்பில் ஒவ்வொரு வியாழன் இரவும் ஒவ்வொரு நண்பர் வீட்டில் சமஸ்டிக் கோரிக்கை தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. டாக்டர் வி.என். பரமநாயகம், எம்.திருவிளங்கம், வி.என். திருநாவுக்கரசு, பி. நல்லசிவம்பிள்ளை, வி.பி.சி. முத்துக்குமாரசுவாமி, எஸ்.பி. வேலாயுதப்பிள்ளை, வி. நவரத்தினம், எஸ்.டி. சிவநாயகம், அருள் தியாகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கப்பால் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் சமஸ்டி பற்றிய கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன. திருகோணமலையில் 1949 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 8 ஆம் திகதி சக்தி நிலைய ஆதரவில் சமஸ்டி பற்றிய கருத்தரங்கு இடம்பெற்றது. இராஜவரோதயம் இராமநாதன், விஜயநாதன் ஆகியோர் இக்கருத்தரங்கினை ஒழுங்கு செய்வதில் முன்னிலை வகித்தனர். மட்டக்களப்பில் ஆர்.ப. கதிர்காமர் தலைமையில் முதலாவது கூட்டம் இடம்பெற்றது. ஈ.ஆர். தம்பிமுத்து,  சாகுல்ஹமீது, செ. இராசதுரை,  இரா. பத்மநாதன்,  பாலசுப்பிரமணியம், சித்தாண்டி நாகலிங்கம், சிவஞானம், ஆசிரியர் கனகசபை ஆகியோரும் இதனை ஒழுங்குபடுத்துவதில் முன்னிலையில் நின்றனர்.

• நந்திக்கொடி ஏற்றல் 

1949 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் மூன்றாம் திகதி நல்லூர் சங்கிலித் தோப்பில் 1619 இல் அழிக்கப்பட்ட சங்கிலி மன்னனின் நந்திக்கொடியை புதிய அணியினர் மீளவும் ஏற்றினர். நந்திக்கொடி ஏற்றலின் பின்னர் ஊர்வலமாக நல்லூர் கைலாச பிள்ளையார் கோயில் வீதிக்குச் சென்றனர். அங்கு ப. முத்துக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற இருந்தது. போலீசார் கூட்டத்தினைத் தடை செய்தனர். அடுத்தநாள் நான்காம் திகதி நல்லூர்க் கூட்டம் தடைப்பட்டதைக் கண்டித்து நவாலியில் பண்டிதர் இளமுருகனார் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் தோற்றம் – 1949 டிசம்பர் 18

அகில இலங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களும், சமஸ்டிக் கோரிக்கைக் கருத்தினால் கவரப்பட்ட உறுப்பினர்களும் 1949 டிசம்பர் 18 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு மருதானையில் உள்ள அரசாங்க லிகிதர் சேவை கட்டிடத்தில் கூடி அகில இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன், வன்னியசிங்கம் ஆகியோர் கூட்ட அழைப்பாளர்களாக பத்திரிகைகள் மூலம் அழைப்பு விட்டிருந்தனர். டாக்டர் எம். திருவிளங்கம் வரவேற்புக்குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். செல்வநாயகம், கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

செல்வநாயகம் அவர்களின் தலைமைப் பேருரையின் சுருக்கம்

“யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமையாதது. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்குமுன் இங்கு வசித்த மக்கள் பல நூற்றாண்டுகளாகச் சிங்களம்பேசும் இனம், தமிழ்பேசும் இனம் என இரு தேசிய இனங்களாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். தமிழ்பேசும் மக்களில் அரைப்பங்கினரைப் பிரஜாவுரிமை அற்றோராகச் செய்யும் ஒரே நோக்குடன் அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. 

தேசியக்கொடி விடயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் தமிழ்பேசும் மக்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் உதாசீனம் செய்வதாக இருக்கின்றது. சிங்கக்கொடி சிங்கள மன்னரின் கொடியேயாகும். இன்று அது சிங்களவருடைய அதிகாரத்தின் சின்னமாக விளங்குகின்றது. அந்தக்கொடியே நடைமுறையில் இலங்கையின் தேசியக்கொடி எனக் கொள்ளப்படுகின்றது. பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் தேசியக்கொடியாக ஓர் இனத்தவரின் கொடியைக்கொண்ட நாடு வேறு எதுவும் உலகில் இல்லை. தேசியக்கொடி விடயத்தில் அரசாங்கத்தின் கொள்கை தமிழ்பேசும் மக்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது. அரசாங்கம் அவர்கள் இங்கு வசிப்பதைச் சகித்துக்கொண்டிருக்கிறது, அவ்வளவுதான்!

தமிழ்பேசும் மக்களின் எல்லாப் பிரிவினருக்குள்ளும் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கக்கூடிய வசதி வடமாகாண மக்களுக்கே இருந்தது. அவர்கள் இலகுவாகப் பிரிக்கப்படக்கூடிய பிரதேசத்தில் பெருந்தொகையினராக வாழ்ந்திருந்தது மட்டுமன்றி, அவர்களிடையே சிங்கள மக்கள் கலந்து வாழ்வதும் குறைவாக இருந்தது. அவர்களே ஆங்கிலக்கல்வியினாலும் அதிக பயன் பெற்றிருந்தனர். ஆனபடியால் இலங்கைவாழ் தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்யும் பொறுப்பு பெரும்பாலும் அவர்களையே சார்ந்திருந்தது. 

அரசாங்கத்தின் குடியேற்றக்கொள்கை எல்லாவற்றையும் விடவும் தமிழ்பேசும் மக்களுக்குக் கூடிய ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இக்கொள்கையின் ஆபத்தை கல்லோயாவில் காண்கின்றோம். கல்லோயாத் திட்டத்தின்கீழ் நீர் பாய்ச்சப்படும் பிரதேசம், தமிழ்பேசும் பகுதியாகிய கிழக்கு மாகாணமேயாகும். தமிழ்பேசும் இப்பிரதேசத்தில் அரசாங்கம் சிங்கள மக்களைக் குடியேற்றத் திட்டமிட்டுள்ளது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இது உண்மையாக இருந்தால் இன்றைய தமிழ்பேசும் பிரதேசத்தை குறைப்பதற்கே அரசாங்கம் அநீதியான முறையில் தன் அதிகாரத்தை உபயோகிக்கின்றது என்பது தெளிவு. தடுப்பார் இன்றி, இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சில வருடங்களுக்கிடையில் இந்நாட்டிலே தமிழ்ப்பிரதேசமே இல்லாதொழியும். 

ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும், ஒரு சுயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து இரண்டிற்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள சமஸ்டி அரசு இலங்கையில் ஏற்பட வேண்டும். தமிழ்பேசும் தேசிய இனம் பெரிய தேசிய இனத்தினால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க வேண்டுமேயானால் இவ்வித சமஷ்டி ஏற்படுவது அவசியமாக இருக்கிறது.

கிழக்கு மாகாணம் முழுவதையும் தமிழ் அரசின் பகுதியாக்க வேண்டுமென்றால் தமிழ்பேசும் தமிழர்களும், முஸ்லீம்களும் ஒன்று சேர வேண்டும். ஆனால் எங்களுடைய இயக்கம் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள் தமிழ்ப்பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? சிங்களம்பேசும் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? என்பதைத் தீர்மானிப்பதற்கு முஸ்லீம்களுக்குப் பூரண சுதந்திரம் இருக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது. அவர்களுக்கு என்ன வேண்டும்? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.  

நாம் வெற்றி பெறுவதற்கு அருகதையுள்ளவர்களாக வேண்டுமென்றால், நமது சமூகத்தில் இருக்கும் குறைகளைக் களைந்து அதைத் தூய்மைபெறச் செய்ய வேண்டும். தமிழ் மக்களிடையே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் மற்றவர்களால் ஒடுக்கப்படுபவர்ளாகக் கருதுகின்றனர். ‘யாம் ஒருவருக்கு கொடுமை செய்தால் தர்ம நீதியின்படி எமக்கும் பிறர் ஒருவர் அதையே செய்வார்’. தமிழ் மக்கள் அரசியல் சுதந்திரம் பெற வேண்டுமேயானால், தம் சமுதாயத்தில் உரிமையற்றவர்களாய் இருக்கும் மக்களுக்கு அவ் உரிமை வழங்க வேண்டும். மலைநாட்டில் வாழும் தமிழ் தொழிலாளர்களது நிலைமையானது இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்கக் கேவலமானதாய் இருக்கின்றது. அவர்கள் அரசியலில் தீண்டத்தகாதவர்களாகி விட்டார்கள். அவர்களுக்குப் பிரஜாவுரிைமை இல்லாமல் இருப்பது மாத்திரமன்றி தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாகவும் இருக்கிறார்கள். ஏனைய தமிழ்பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்காக எதிர்பார்ப்பது இந்தியாவை அல்ல. சுதந்திரம் விரும்பும் இலங்கைவாழ் மக்களிடமிருந்தே அவ் உதவி வருதல் வேண்டும்.”

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 

1. தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சி அரசை நிறுவும் வகையில் உழைப்பதற்காக தமிழ்பேசும் மக்களின் தேசிய நிறுவனமாக இயங்குதல். 

2. கட்சியின் பொருளாதாரக் கொள்கையாக, சோசலிசக் கொள்கையை ஏற்றுக்கொள்ளல். 

இரண்டாவது தீர்மானம் தொடர்பாக காராசாரமான விவாதம் நடைபெற்றது. இதன்போது சோசலிஸப் பொருளாதாரக் கொள்கையை இளைஞர்கள் வற்புறுத்தினர். ஆனால் பெரியவர்கள் இதனை எதிர்த்தனர். கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இருபக்கத்திற்கும் சமமான வாக்குகள் கிடைத்தன. ஈற்றில் தலைவரான செல்வநாயகம் தனது வாக்கை இளைஞர் பக்கத்திற்கு அளித்து சோசலிஸப் பொருளாதாரக் கொள்கையை ஒரு வாக்கினால் வெற்றியுறச் செய்தார்.

சோசலிஸப் பொருளாதாரக் கொள்கை, தீண்டாமையை ஒழித்தல், சமூக உயர்வு – தாழ்வுகளை இல்லாமல் செய்தல் என்பவற்றை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டதை பழமை விரும்பிகள் பலர் ஏற்கவில்லை. இதனால் அவர்கள் விலகிக்கொண்டனர்.  கட்சியை ஆரம்பிப்பதற்காக உழைத்த பலர்கூட விலகிச்சென்றனர். அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தோற்றத்துடன் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சி X தமிழ்க்காங்கிரஸ் என்ற இரு சக்திகள் இயங்க ஆரம்பித்தன. தமிழிலேயே கல்விகற்ற மத்தியதர வர்க்கத்தினர் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதான ஆதரவுத்தளமாக மாறினர்.

சோல்பரியின் யாழ்ப்பாண வருகையும், பகிஸ்கரிப்பும்

சோல்பரி அரசியல் திட்டத்தினை உருவாக்கிய சோல்பரிப் பிரபுவே அவ் அரசியல் திட்டத்தின்கீழ் மகாதேசாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1950 ஆம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். தமிழரசுக்கட்சி இவரது வருகையை பகிஸ்கரிக்க முடிவு செய்தது. இதுவே தமிழரசுக் கட்சியின் முதற் போராட்டமாகவும் இருந்தது. ‘தமிழினத்தின் வைரியை வரவேற்காதீர்’ என்ற தலைப்பில் தமிழரசுக்கட்சி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு ‘வருகையைப் பகிஸ்கரியுங்கள்’ என மக்களைக் கோரியது. இது தொடர்பாக 22-1-50 இல் யாழ். நகர மண்டபத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதி நேரத்தில் அரசாங்கத்தினால் கூட்டம் தடை செய்யப்பட்டது. கூட்ட நாளன்று மண்டபத்தைச் சுற்றிப் பொலிஸ் காவலில் நிற்றனர். ஆயிரக்கணக்கில் வந்த மக்கள் அருகில் உள்ள தனியார் ‘கராஜ்’ஜில் கூடினர். அங்கு ஒரு மேசையின்மீது ஏறி நின்று தலைவர்கள் பேசினர்.

தேசியக்கொடிப் பிரச்சினை

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தேசியக்கொடியை உருவாக்குவதற்காக குழு நியமிக்கப்பட்டது. S.W.R.D. பண்டாரநாயக்கா, கலாநிதி செனரத்பரணவிதான, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, சேர்.ஜோன். கொத்தலாவல, ஜீ.ஜீ. பொன்னம்பலம், டி.பி. ஜாயா, எஸ். நடேசன் ஆகியோர் குழுவில் அங்கம் வகித்தனர்.

இதற்கு முன்னரே தேசியக்கொடி சிங்களவர்களின் சிங்கம், தமிழ் மக்களின் நந்தி, முஸ்லீம்களின் பிறை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என ஒரு பிரேரணையை தந்தை செல்வா முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அதனை ஆமோதித்தார். ஆனால் சிங்களத்தரப்பு இதனை நிராகரித்தது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திரம் கிடைத்தபோது எந்தக் கொடியை ஏற்றுவது என்று பிரச்சினை வந்தது.  1835 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிவப்பு நிறப் பின்னணியுடன் வாளேந்தியபடி இருக்கின்ற கண்டி அரசனின் சிங்களக் கொடியே தேசியக் கொடியாக இருக்க வேண்டுமென மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் முதலியார் சின்னலெப்பை பாராளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டுவந்தார்.

ஏ.ஈ. குணசிங்கா அதனை ஆமோதித்தார். பிரதமர் டி.எஸ் சேனநாயக்காவும் வரவேற்றார். இதனால் சிங்கக்கொடியே சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது. அனைத்து மதத்தவர்களும் வழிபடும் ‘சிவனொளிபாதமலை’ தேசியக்கொடியாக இருக்க வேண்டும் என ஹண்டி பேரின்பநாயகம் வலியுறுத்தினார். தமிழ், முஸ்லீம்களை குறிப்பதற்கு செம்மஞ்சள், பச்சை நிறக்கோடுகள் வாளேந்திய சிங்கத்திற்கு வெளியே இருக்கும்வகையில் கொடி உருவாக்கப்பட்டது. 

செனட்டர் நடேசன் இதனைக் கடுமையாக எதிர்த்தார். கொடியில் தமிழர்களும், முஸ்லீம்களும் சிங்கள தேசத்தின் எல்லைகளுக்கு வெளியே இருப்பதாகவும் அந்த இரு இனங்களையும் தடுத்து நிறுத்துவதற்காக சிங்கம் தன் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் கூறி, செனட்டர் நடேசன் எதிர்ப்புத் தெரிவித்துக் குழுவை விட்டு வெளியேறினார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலமும் டி.பி. ஜாயாவும் கொடிக்கு இணக்கம் தெரிவித்தனர். 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 14 ஆம் திகதி தேசியக் கொடிக்குழு தேசியக்கொடி பற்றிய பரிந்துரையைச் செய்தது. செனட்டர் நடேசன் இதனை ஏற்கவும் இல்லை, கையெழுத்திடவும் இல்லை. 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 15 ஆம் திகதி செனட்டர் நடேசன் இது பற்றி அறிக்கை வெளியிட்டார்.. அதில் “தேசப்பிரிவினையின் குறியீடாக கொடி இருக்கும்” எனக் கூறினார். 1952 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 02 ஆம் திகதி தேசியக்கொடி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. தேசியக்கொடிக்கு ஆதரவாக 51 பேரும் தேசியக் கொடியை எதிர்த்து 21 பேரும் வாக்களித்தனர். 

வவுனியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் தேசியக்கொடியை எதிர்த்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். இடைத்தேர்தல் இடம்பெற்றபோது, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாநகர சபை மேஜர் குரே வவுனியாவில் போட்டியிட்டார். சுந்தரலிங்கம் பெருவெற்றி பெற்றார். அகில இலங்கை தமிழரசுக்கட்சியும் தேசியக்கொடியை நிராகரித்தது. “தமிழ்பேசும் சமூகம் புறக்கணிக்கப்பட இரண்டாம் தரப்பிரஜைகளாக இந்நாட்டில் வாழ்கின்றனர் என்பதைப் பிரகடனப்படுத்தும் ஒட்டுக்கொடி” எனப் பிரசாரம் செய்தது.

சிங்களக் குடியேற்றங்கள்

கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைந்தது. 1941 இல் உருவாக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டமும் சுதந்திரத்தின் பின்னரே நடைமுறையில் துரிதநிலைக்கு வந்தது. இக்குடியேற்றத்தின் மூலம் 44 குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 38 கிராமங்கள் சிங்களவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 06 கிராமங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. பட்டிப்பளையாறு என்ற தமிழ்ப்பெயர் கல்லோயா என மாற்றப்பட்டது.

மாவட்டத்தின் சனவிகிதாசாரத்தை மாற்றுவதன் மூலம் மாவட்ட அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதலே நோக்கமாக இருந்தது. இக்குடியேற்றத்தை மையமாக வைத்தே 1959 ஆம் ஆண்டு அம்பாறைத் தேர்தல் தொகுதியும், 1961 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டமும் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் தலைநகராக குடியேற்றப் பிரதேசமான அம்பாறை தெரிவு செய்யப்பட்டது.

அம்பாறை மாவட்டம் என்ற பெயர் பின்னர் ‘திகாமடுல்ல’ மாவட்டம் என மாற்றப்பட்டது. சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகா ஓயாவும், பதியத்தலாவையும் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. சிங்களப் பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி கல்முனை, சம்மாந்துறை போன்ற இடங்களுக்குச் சென்று குடியேற்றங்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டது. இக்குடியேற்றங்கள், பின்னர் திருகோணமலை மாவட்டத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோத விவசாயக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், புனிதப் பிரதேசக் குடியேற்றம், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றம் என அனைத்துவகைக் குடியேற்றங்களும் திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்கள்தான் இவற்றில் பெரியவையாக இருந்தன. மாவட்டத்தின் சனத்தொகையை மாற்றியமைப்பதில் பெரும்பங்களிப்பினைச் செய்தனர்.

அல்லைத்திட்டம், கந்தளாய்த்திட்டம், மொறவேவாத் திட்டம், மகாதிவுல்வௌத்திட்டம், பதவியாத்திட்டம் என மிகப்பெரும் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற மாவட்டமாக இருப்பது திருக்கோணமலைதான். தாயக ஒருமைப்பாட்டைச் சிதைத்தலே இக்குடியேற்றங்களின் முக்கிய நோக்கமாக இருத்தது. 1970களில் இக்குடியேற்றங்களை வால்போல இணைத்து ‘சேருவல’ என்கின்ற சிங்களத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. பிரதேசசபைகளும் உருவாக்கப்பட்டன. 

‘சேருவல’ தொகுதியின் உருவாக்கத்தால் மூதூர் என்ற இரட்டை அங்கத்தவர் தொகுதி, ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. இதன்மூலம் மூதூர்ப் பிரதேச தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் குறைவடைந்தது. பிற்காலத்தில் இக்குடியேற்றங்கள் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டது. வவுனியா வடக்கில் மகாவலித்திட்டத்தை இதற்காகப் பயன்படுத்தினர். இன்று வவுனியா வடக்குப் பிரதேச சபையில்கூட நான்கு வட்டாரங்கள் சிங்கள வட்டாரங்களாக இருக்கின்றன. முல்லைத்தீவில் ‘வெலிஓயா’ என்ற பெயரில் சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டது. 

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி வழங்கப்பட்ட சுதந்திரம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களினை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கியது. ஆட்சியாளர்கள் ஒரேநேரத்தில் தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பது, அரச அதிகாரக் கட்டமைப்பைச் சிங்களமயமாக்குவது என்கின்ற இரண்டு செயற்திட்டங்களை முன்னெடுத்தனர். முதலாவது செயற்திட்டத்தின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மொழிப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சிதைப்பு, கலாசார அழிப்பு என்பன அரங்கேற்றப்பட்டன. தேசியக்கொடி குறியீட்டு வடிவில் அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது. 1956 ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம், ஒரேநேரத்தில் தேசிய இன அழிப்பாகவும், அரசு அதிகாரக் கட்டமைப்பைச் சிங்களமயமாக்குவதாகவும் இருந்தது.

கல்லோயாத் திட்டம்

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தைத் தொடர்ந்து பிரதமர் டி.எஸ். சேனநாயக்க தனது நிரந்தர செயலாளர் சேர். கந்தையா வைத்தியநாதன், நீர்ப்பாசனப் பணிப்பாளர் ரி. அழகரத்தினம், நில அளவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ். புறோக்கியர் என்போரை ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். கிழக்கு மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பட்டிப்பளை ஆற்றினை பாரிய நீர்பாசனத் திட்டமாக்கப் போவதாக அறிவித்தார். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி அழகரத்தினத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டிப்பளை ஆறு பதுளை மாவட்டத்தில் உள்ள மடுல்சீமை மலைத்தொடரில் ஊற்றெடுத்து 56 மைல்கள் பாய்ந்தோடி, வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது. இதன் தரையில் பிரதான தமிழ்க்கிராமமான பட்டிப்பளை இருந்தது. சிறந்த விவசாய பூமி. மன்னராட்சிக் காலத்தில் இருந்தே சிறந்த விவசாயப் பிரதேசமாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இதனை வளர்க்கும் முகமாக இறக்காமம், கொண்டை வெட்டுவான், அம்பாறைக் குளங்களைப் புனரமைத்துக் கொடுத்தனர். 

அழகரத்தினம் குழுவினர் சம்மாந்துறை சென்று அங்கிருந்து மாட்டுவண்டி மூலம் பட்டிப்பளை ஆற்றின் மேல் பகுதியில் உள்ள அம்பாறை, இங்கினியாகலை ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பட்டிப்பளையாற்றை இங்கினியாகலையில் மறித்து நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கி நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பிக்கலாம் எனச் சிபாரிசு செய்தனர்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கல்லோயா அபிவிருத்திச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பட்டிப்பளை ஆறு கல்லோயாவாக மாற்றப்பட்டது. தமிழ்க் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டும் முயற்சி இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. கல்லோயா அபிவிருத்தி வேலைகளை 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இங்கினியாகலையில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க ஆரம்பித்து வைத்தார். பட்டிப்பளை ஆற்றை இங்கினியாகலையில் மறித்து அணை ஒன்றைக் கட்டி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. டி.எஸ். சேனநாயக்க அதனை ஆரம்பித்து வைத்ததால் இதற்கு சேனநாயக்க சமுத்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

கல்லோயாத் திட்டம் 12,0000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு நிலத்திலும் 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஏக்கர் வயல் நிலங்களும் இரண்டு ஏக்கர் மேட்டு நிலங்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடியிருக்க வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது. 40 குடியேற்றக் கிராமங்களில் 34 கிராமங்கள் சிங்களவர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டன. 6 கிராமங்கள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டன. 

கல்லோயாத் திட்டத்தின் முதலாவது கட்டமாக 20,000 சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 6 கிராமங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் குடியேற்றப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற கலவரத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கல்லோயாத் திட்டத்திலிருந்து விரட்டப்பட்டனர். மீண்டும் குடியேறிய மக்கள் 1958 இல் நடைபெற்ற கலவரத்தில் மீண்டும் விரட்டப்பட்டனர். மீண்டும் திரும்பிய ஒருசிலரும் 1990 இல் விரட்டப்பட்டனர். இறுதியில் கல்லோயாத் திட்டம் தனித்துச் சிங்களவர்களுக்கான திட்டமாகவே மாறியது. 

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமென ஒதுக்கப்பட்ட 1200 ஏக்கர் நிலங்களிலும் சிங்களவர்களே பயிர்ச்செய்கையை மேற்கொண்டனர். இதைவிட பொத்துவில் லகுகலவில் வாழ்ந்த 343 தமிழ்க் குடும்பங்களும் சிங்களவர்களினால் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் காரைதீவு, விநாயகபுரம், ஆலையடி வேம்பு போன்ற இடங்களில் அதிகளவாக வாழ்கின்றனர். 

1959 ஆம் ஆண்டு தேர்தல்தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. அதன்போது முதன்முதலாக சிங்கள மக்களுக்கு என அம்பாறைத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இத் தேர்தல் தொகுதியிலிருந்து முதன்முதலாக 1960 ஆம் ஆண்டு சிங்களவர் ஒருவர் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டார். 1961க்கு முன்னர் இப்பிரதேசம் மட்டக்களப்புத் தெற்கு என்றே அழைக்கப்பட்டது. 1961 இல் அம்பாறை என்ற தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. குடியேற்றப் பிரதேசமான அம்பாறை இதன் தலைநகராக்கப்பட்டது. 1980களில் இதன்பெயர் திகாமடுல்ல என மாற்றப்பட்டது. இதே காலப்பகுதியில் சிங்கள மக்களின் விகிதாசாரத்தை மாவட்டத்தில் கூட்டுவதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகாஓயா, பதியத்தலாவ பிரதேச செயலாளர் பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

திருகோணமலைக் குடியேற்றங்கள்

உலகின் எல்லா இடங்களிலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதற்கு ஆதிக்கசக்திகள் குடியேற்றங்களையே ஒரு பிரதான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைகளின் அடிப்படைகளை இல்லாமல் செய்வதற்கும், போர்க்காலங்களில் போராளிகளை இலகுவாக ஒடுக்குவதற்கும், ஒடுக்கப்படும் மக்கள் தங்களிடையே நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ளாமல் கூறுபோடுவதற்கும், தீர்வு என வரும்போது குடியேற்ற மக்களைக்காட்டி தீர்வு முயற்சிகள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குச் சார்பாகச் செல்லவிடாமல் தடுப்பதற்கும், இக்குடியேற்றங்களே அவர்களுக்குப் பெரிதும் பயன்படுகின்றன.

பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றம், அயர்லாந்தில் புரட்டஸ்தாந்தியர்களின் குடியேற்றம், கொசேவாவில் சேர்பியர்களின் குடியேற்றம், திபெத்தில் சீனர்களின் குடியேற்றம், கிழக்குத் தீமோரில் இந்தோனேசியர்களின் குடியேற்றம், பிலிப்பைன்ஸ் மிந்தானோவில் கிறிஸ்தவர்களின் குடியேற்றம் என்பன இந்த வகையிலேயே நடைபெற்றன.

உலக நாடுகளின் நிர்ப்பந்தங்களினால் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது இக்குடியேற்றங்களே பெரும் தடைகளாக விளங்குகின்றன. கிழக்குத் தீமோர் மக்களின் சுதந்திரத்தினை அங்கு குடியேறியுள்ள இந்தோனேசியர்கள் தடுத்ததையும், பாலஸ்தீன சுயாட்சி ஒழுங்காகச் செயற்படுவதை மேற்குக்கரை, காஸா பகுதிகளில் குடியேறிய யூதக் குடியேற்றவாசிகள் தடுப்பதையும் இந்தவகையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும். 

இலங்கையிலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைச் செயலற்றதாக்குவதற்கு ஆட்சியாளர்கள் குடியேற்றங்களையே ஒரு பிரதான கருவியாகப் பயன்படுத்தினர். தமிழர்களின் தனிவழி அரசியல் 1920களிலேயே உணரப்பட்டதால் அக்காலத்தில் இருந்தே சிங்களப் பேரினவாதிகளிடம் இக்குடியேற்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியிருந்தது. 1931 இலிருந்து 1947 வரையான டொனமூர் அரசியல் யாப்புக் காலப்பகுதியில் சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டே இதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த வகையிலேயே 1941 இல் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுதந்திரத்தினைத் தொடர்ந்து தமிழர் அரசியல், சமத்துவ உரிமை என்பதற்கப்பால் தாயக இறைமை என்பதனை நோக்கி வளரத் தொடங்கியது. தாயகக் குறியீடாக வடக்கு – கிழக்கு நிலப்பரப்பு என்பது எழுச்சியடைந்தது. இத்தாயக இறைமை, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைத் தடுக்கும் வகையில் ஒரு நீண்டகால இலக்கில் குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அவர்கள் பிரதானமாக தேர்ந்தெடுத்த இடமே திருகோணமலை மாவட்டமாகும். திருகோணமலை மாவட்டத்தினை கடற்கரைப்பக்கமாக வில்போல சுற்றிவளைத்து இவை மேற்கொள்ளப்பட்டன. ஏனைய தமிழ்ப்பிரதேசங்களுடனான தொடர்புகளை துண்டித்தலே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. ஒரு வில்போல நீளமாக வளைந்திருக்கும் குடியேற்றப் பிரதேசமான சேருவல தேர்தல் தொகுதியினைப் பார்க்கும்போது இவ்வுண்மை தெளிவாகப் புலப்படும்.

இந்நிலையில் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினர் இக்குடியேற்றங்களைப் பற்றியும், அதற்குப் பின்னால் உள்ள சதி முயற்சிகளைப் பற்றியும், பேரினவாதிகளின் மூலோபாயங்கள், தந்திரோபாயங்கள் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும். இவ்வறிந்து கொள்ளலே இப்புற்றுநோயை இந்த மட்டத்திலாவது இடைநிறுத்தி மேலும் வளராமல் தடுப்பதற்குரிய மார்க்கங்களைப் புலப்படுத்தும். பேரினவாதிகளின் செயற்பாட்டிற்கு மாற்றான ஒரு செயற்பாட்டுத்தளத்தையும் திறந்துவைக்கும். மாற்றுமருந்து வகைகளையும் கண்டுபிடிக்கும். 

சுதந்திரத்திற்கு முன்னர் திருமலை மாவட்டத்தில் நிரந்தரமாகக் குடியேறியிருந்த சிங்கள மக்கள் என விரல்விட்டு எண்ணக்கூடியோரே வாழ்ந்திருந்தனர். இதற்குப் புறம்பாக திருமலை நகரத்தில் மட்டும் துறைமுக வேலைகளுக்காகவும், பிரித்தானியக் கடற்படைத்தள வேலைகளுக்காகவும் தற்காலிகக் குடியேறிகள் சிலர் வாழ்ந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட விவசாயக் குடியேற்றத் திட்டங்களைத் தொடர்ந்தே, பெரும் எண்ணிக்கையானவர்கள் குடியேறத் தொடங்கினர். தொடர்ந்து இவற்றைப் பலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டவிரோத விவசாயக் குடியேற்றத் திட்டங்கள், கைத்தொழில் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற்றங்கள், மீனவர் குடியேற்றங்கள், புனிதப் பிரதேசக் குடியேற்றங்கள், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றங்கள் என்பன சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தன. இக்குடியேற்றங்களின் வளர்ச்சியினாலேயே திருகோணமலை மாவட்டத்தில் 1827 இல் 1.3% ஆக இருந்த சிங்களவர் எண்ணிக்கை, 1981 இல் 33.62% ஆக அதிகரித்தது. அதேவேளை 1827 இல் 81.82% ஆகவிருந்த தமிழர்களின் எண்ணிக்கை 36.4% ஆகக் குறைந்தது.

இனி திருகோணமலையின் முக்கிய திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களைப் பார்ப்போம்.

தொடரும்.

The post 1949 – 1968: ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 1 appeared first on Ezhuna | எழுநா.

  •  

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும் – பழமொழி

சூக் சியாங் கூட்டுக்கொலை

1942இன் பி்ப்ரவரி மாதம்.

18ஆம் தேதி யப்பானிய இராணுவ நிருவாகம் சிங்கப்பூரில் ஒரு அறிவிக்கை செய்தது. இந்த அறிவிக்கை, துண்டறிக்கைகளாக ஒட்டப்பட்டும், இராணுவ வீரர்களால் ஒலிபெருக்கி வழியாகவும் அறிவிக்கப்பட்டன. 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சீன ஆண்கள் அனைவரும் தீவின் குறிப்பிடப்பட்ட ஐந்து இடங்களில் சோதிக்கப்படுவதற்காக வரவேண்டும் என்று அந்த அறிவிப்பு சொன்னது. சிங்கப்பூர் தீவில் இருந்த ஒரு யப்பானிய இராணுவப் பிரிவுக்கு கெம்பெய்டாய் (Kempeitai) என்ற பெயரிடப்பட்டிருந்தது. அந்தப் பிரிவுதான் சிங்கப்பூரில் சோதனைகள், தண்டனைகள் போன்றவற்றை நிறைவேற்றும் பொறுப்பை வைத்திருந்தது. அறிவிப்பின்படி சீன ஆண்கள் வந்து சேரவில்லை என்று தோன்றினால் வீட்டுக்கு வீடு சோதனையிட்டு சீன ஆண்களை முகாம்களுக்கு அள்ளிக் கொண்டு போனார்கள் கெம்பெய்டாய் பிரிவினர். இந்த ஆண்கள் அனைவரும் விக்டோரியா பள்ளியின் விளையாட்டுத் திடல்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நான்கு அல்லது ஐந்து பெரிய பாரமேற்று மோட்டார் வாகனங்கள் அங்கு வந்தன. அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆண்கள் அனைவரையும் அந்த நான்கைந்து வண்டிகளில் ஏற்றிக் கொண்டு தானா மேரா(Tanah Merah) அருகே இருந்த கடற்கரைக்குக் கொண்டு போனார்கள் கெம்பெய்டாய் பிரிவினர்.

தடுக்கப்பட்டு வைத்திருந்த அனைவரின் கைகளைப் பின்புறம் வைத்து, கயிறுகளால் பிணைத்து நீண்ட வரிசையில் அவர்கள் கட்டப்பட்டார்கள். அங்கு கடற்கரை மணலில் இறக்கிவிடப்பட்ட அவர்கள் கடலைநோக்கி வரிசையாக நிற்குமாறு பணிக்கப்பட்டார்கள். பின்புறம் கைகள் பிணைக்கப்பட்ட, நீண்ட வரிசைகளில் நின்ற அவர்கள் கடலை நோக்கி ஒரே அளவில் நடக்குமாறு சொல்லப்பட்டார்கள். அவர்களது பின்புறம் வந்து நின்ற கெம்பெய்டாய் படை, தானியங்கித் துப்பாக்கிகளால் (machine guns) சட சடவென்று அவர்களைச் சுட்டது. அத்தனை சீன ஆண்களும் சிங்கப்பூர் கடற்கரையில் கொத்துக் கொத்தாக விழுந்தார்கள். அப்படி விழுந்தவர்களில் இறந்தும் இறக்காமல் இருந்தவர்களை, துப்பாக்கிக் கட்டையின் கத்திகளால் குத்திக் கொன்றார்கள் கெம்பெய்டாய் பிரிவினர். அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டபின், இயங்கு வாகனங்கள் சென்று விட்டன. கடற்கரையில் கூட்டுக் கொலை செய்யப்பட்ட சீன ஆண்களின் பிணங்கள் காக்கைகளும் வல்லூறுகளும் சிதைக்க, கிடந்து அழுகின. முறையான ஒரு அடக்கம் கூட செய்யப்படவில்லை. யப்பானியர்கள் இந்த சூக் சியாங் நடவடிக்கையால் ஏறத்தாழ 6000 சீன ஆண்களைக் கொன்றதாக பின்னாட்களில் ஒப்புக் கொண்டனர். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னரும், இளமையும் வலிமையும் கொண்டிப்பதாகக் கருதப் பட்ட சீன ஆண்கள் வளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். [1] மேற்கண்டவாறு யப்பானிய கெம்பெய்டாய் கொடுங்கோண்மைப் படை செய்த கூட்டுக் கொலைகள் பலவற்றை வரலாறு பின்னர் பதிவு செய்திருக்கிறது.

Syonan Years – Mass Clensing

இந்த நடவடிக்கைகளை யப்பானிய இராணுவம் அந்த நாட்களிலும், பின்னாட்களிலும் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்காக மேற்கொண்டதாக நியாயப்படுத்தியது. ஆனால் சூக் சியாங் படுகொலை இரண்டு மூன்று நாட்கள் இடைவெளிக்குள் நடந்தது. யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த சிங்கப்பூரில் ஒட்டுமொத்தமாக, மூன்றாண்டுகளில் ஐம்பதாயிரத்திலிருந்து லிருந்து ஒரு இலக்கம் (50,000 – 1,00,000) வரையான சிங்கப்பூரிய சீன ஆண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கணக்கீட்டை தனது தி சிங்கப்பூர் சுடோரி நூலில் திரு லீ க்வான் யூ அளிக்கிறார். சிங்கப்பூரின் சிங்லாப், பூங்கோல், சாங்கி போன்ற இடங்களின் கூட்டுப் புதைகுழிகளில் பல பிணங்கள் இட்டுப் புதைக்கப்பட்டன. [2].

அந்தப் புதைகுழிகளில் பலவற்றை, அந்தக் கட்டுப்பட்டவர்களைக் கொண்டே வெட்டுவித்தார்கள் யப்பானியர்.

அரிதானது உணவு

சிங்கப்பூர் ஒரு தீவு என்றும் அது ஒரு துடிப்பான துறைமுக வணிக நகரமாக இருந்தது என்றும் நாம் அறிவோம்; யப்பானிய ஆக்கிரமிப்புக்கு உள்ளான பிறகு போரின் மீது ஏற்பட்ட இயல்பான அச்சத்தால் வணிகப் போக்குவரத்து குறைந்தது. யப்பானிய நிருவாகம் தீவின் மக்களுக்கும் படைகளுக்கும் தேவைப்படும் உணவுப் பொருள்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. உணவுப் பொருள்களின் வரத்து இயல்பாகவே குறைந்தது. தீவிலேயே வசித்த மக்களுக்கு மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள் அரிதாயின. வெளியில் கிடைத்த பொருட்களை யப்பானிய இராணுவமும் படைகளும் முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள். செயலாக இருந்த சீன ஆண்கள் மொத்த, மொத்தமாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகளோடு, தமது குடும்பத்தின் ஏனையவர்களின் உணவுக்குப் பெண்களும் குழந்தைகளும் உடல் வலிந்து பணி செய்ய வேண்டிய தேவை எழுந்தது.

உணவுக்குத் தவிப்பு

சூழலில் இது மேலும் மேலும் நிச்சயமற்ற தன்மையையும், தினப்படி வாழ்வியல் அழுத்தத்தையும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு ஏற்படுத்தியது. பொருள் கொடுத்தாலும் இராணுவ நிர்வாகம் கொடுக்கும் உணவு அளவுக்குட்படுத்தப்பட்டதாகவே இருந்தது ( rationed supplies). ஒரு ஆணுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 12 கிலோ அரிசி என்ற கணக்கில் மட்டுமே தானியம் கொடுக்கப்பட்டது; பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்னும் குறைவான அளவு தானியம் கிடைத்தது. தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவு, போர் தொடரத் தொடர, படிப்படியாக குறைக்கப்பட்டு 1945இல் கிட்டத்தட்ட பாதியாகி ஒரு ஆணுக்கு சுமார் 5 கிலோ அரிசி மட்டுமே ஒரு மாதத்திற்குக் கிடைத்தது. மக்கள் தீவில் மரவள்ளிக் கிழங்கை அதிகம் பயிரிடத் தொடங்கினார்கள். அவித்த மரவள்ளிக்கிழங்கு, கம்போங்குகளில் நீர்நிலைகளில் கிடைக்கும் மீன் போன்ற உணவுகள் வழக்கமான உணவாயின. மக்கள் அவ்வாறு பயிரிட்டாலும் அதனை யப்பானிய இராணுவத்தினர் பறித்துக் கொண்டு போவார்கள் என்ற அச்சத்தினால், நகரத்தை விட்டு வெளியேறி மலாய் பகுதிகளுக்கு மக்கள் செல்லத் தொடங்கினார்கள். இருந்த மக்களை விவசாயம் செய்து விளைபொருட்களை உற்பத்தி செய்யும்படி, தீவின் இராணுவ நிருவாகம் வற்புறுத்தியது. தவறுகள் குற்றங்களாகக் கருதப்பட்டன; குற்றங்களுக்குக் கொடிய தண்டனைகள் அளிக்கப்பட்டன.

மொழி, கல்வி, பொது நிருவாக நிலை

யப்பானியர் அவர்களது மொழியான யப்பானிய மொழியை பள்ளிக் குழந்தைகள் முதல் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பள்ளிகளில் யப்பானிய மொழி அறிமுகப்படுத்தப்பட்டது.யப்பானிய மொழி கற்றுக் கொள்ளத் தனிப்பள்ளியையும் யப்பானிய இராணுவ நிருவாகம் தொடங்கியது. தினமும் சங்கொலி முழங்கியவுடன், மக்கள் பொது இடங்களில் குழுமி யப்பான் இருக்கின்ற திசை நோக்கி மண்டியிட்டு, யப்பானிய தேசிய கீதத்தை இசைக்க பணிக்கப்பட்டார்கள்.

யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்த சிங்கப்பூரில் ஒவ்வொரு மாதமும் சுமாராக 50 கைக்குழந்தைகள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகள், குழந்தை ஏசு தேவாலயத்தின் வாசலில் அநாதையாக விடப்பட்டன என்ற ஒரு புள்ளிவிவரம் தரும் அதிர்ச்சியிலிருந்து சமூக நிலை எவ்வாறு இருந்தது என்பதை உணரலாம்.

குற்றங்களுக்குக் கடும் தண்டனைகளும், சிறைவாசமும் வழங்கப்பட்டாலும், சிறைக் கைதிகள் மிக மோசமான நிலைமையில் இருக்க வேண்டியிருந்தது. பொது சமூகத்துக்கே தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஒன்றும் கிடைக்காத நிலையில் சிறைக் கைதிகளின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்? ஆரோக்கியமான மனிதனுக்கு 2200 கலோரி உள்ள உணவுப் பொருள் தேவைப்பட்ட நிலையில், சிறைக்கைதிகளுக்கு சுமார் 1000 கலோரி அளவுள்ள உணவுப் பொருள் மட்டுமே அளிக்கப்பட்டது.

போதிய பராமரிப்பு இல்லாதது, அளவுக்கதிகமான நெருக்கடி, ஊட்டமற்ற உணவு போன்றவற்றால் சிறைகளில் தொற்று நோய்கள் பெருகின. ஆடை, செருப்பு போன்றவற்றிற்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏறத்தாழ 14000 சிறைக்கைதிகள் இந்தக் காலகட்டத்தில் மரணமடைந்தார்கள்.

கைதிகளின் கோரநிலை

சிங்கப்பூரின் பணவிடை மாற்றப்பட்டு, யப்பானியப பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பூக்களின் படமும், வாழைமரத்தோடு கூடிய வாழைத்தார் இருக்கும் படமும் இருந்ததால் அது ‘வாழைப்பழநோட்டு’ என்ற பொருளில் பனானா கரன்சி என்று பொதுமக்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

விண்ணைத் தொட்ட விலைவாசி

சிங்கப்பூரில் ஏற்கனவே இருந்த பிரித்தானிய காலனி நிருவாகம் வெளியிட்டிருந்த பணவிடை முற்றாக யப்பானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருந்தது; எனினும் தென்கிழக்காசிய வட்டாரத்தின் மற்ற இடங்களில், அந்தப் பணவிடைக்குச் செலாவணி இருந்ததால் அது பெரிதும் மதிப்பில் விழவில்லை. ஆனால் வாழைப்பழ நோட்டுக்கு அந்த செலாவணிப் பெறுமதி சிங்கப்பூரில் இல்லையாதலால், அந்தப் பணவிடைக்கு சந்தை மதிப்பு இல்லாதிருந்ததோடு, நாள் செல்லச்செல்ல மேலும் அதன் மதிப்பு வீழ்ந்தது; அதனை வாங்குவார் அருகினார்கள். விளைவாகப் பொருட்களின் விலை விண்ணுச்சத்திற்குப் போனது. போர் தொடங்குவதற்கு முன்னர் சிங்கப்பூரில் 100 காடிக்கான (60 கிலோ) அரிசியின் விலை சுமார் 5 வெள்ளியாயிருந்தது. அதே பொருள் யப்பானிய ஆக்கிரமிப்பின் 1944 ஆம் ஆண்டு சுமார் 5000 வெள்ளிக்கு உயர்ந்தது![3]

இந்தக் காரணங்களால் ஆக்கிரமிப்புச் சிங்கப்பூரில் கள்ளச்சந்தை துடிப்பாக இயங்கியது.

பிரித்தானிய பணத்தாள்
யப்பானிய வாழைப்பழப் பணத்தாள்

கள்ளச் சந்தையில் தங்க நகைகள், மற்றும் உணவுப் பொருட்கள் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் பெற்றன. லீ க்வான் யூ தனது தி சிங்கப்பூர் சுடோரி நூலிலும் அந்நாட்களில் கள்ளச் சந்தை எவ்வாறு இயங்கியது என்றும், அப்போது பதின்மத்தில் மாணவனாக இருந்த தான் எவ்வாறு கையில் இருந்த பணத்தைக் கொண்டு, செலாவணி ஆகக் கூடிய சிறு தங்கத் தோடு போன்றவற்றை வாங்கி, பின்னர் சில நாட்கள் கழித்து விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை, எவ்வாறு தனது குடும்பத்தின் உணவு சம்பாத்திய தேவைக்குப் பயன்படுத்த முடிந்தது என்பனவற்றை விவரித்து எழுதியிருக்கிறார்.

இரணகளத்திலும் யப்பானியர்களுக்கான கிளுகிளுப்பு

சிங்கப்பூரின் வசதி படைத்த சமூகங்கள் வசித்த பல பகுதிகளில் இருந்த வீடுகள் ‘சொகுசு நிலைய’ங்களாக யப்பானிய இராணுவத்தினரால் மாற்றப்பட்டன. வீட்டுச் சொந்தக்காரர்கள் தாமே ஓடிப்போயிருந்தார்கள் அல்லது சில இடங்களில் விரட்டியடிக்கப்பட்டார்கள். கொரிய, மலாய், தாய்லாந்து மற்றும் சீனப் பெண்கள் அந்த வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள். யப்பானிய இராணுவப் படையின் காமத் தேவைகளைத் தீர்த்து வைக்கவேண்டுவதே அவர்களது பணி. அந்தப் பெண்களில் 14 வயதேயான இளஞ்சிறுமிகளில் இருந்து 35 வயது வரையான பெண்கள் வரை பலர் இருந்தார்கள். வார இறுதி நாட்களில் இந்த வீடுகள் இருந்த பகுதிகளில் நெடும் வரிசைகளில் படையினர் சாரிசாரியாகக் காத்து நிற்பார்கள். அந்த வீடுகள் இருந்த பகுதிகள் மரப் பலகைத் தடுப்புகளால் அரண் போல அமைக்கப்பட்டன. ஒரு பெண், ஒரு நாளில் ஏறக்குறைய 30 லிருந்து 40 ஆண்களுக்கு காமப்பணி செய்யவேண்டியிருந்தது. இந்த கொடும் சுமையில் பெண்கள் நோய்ப்படுவதும் இறப்பதும் பெரும் எண்ணிக்கையில் நடந்தன. அந்த எண்ணிக்கை கொரியா, பர்மா, தாய்லாந்து போன்ற இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட புதிய பெண்களால் மீண்டும் நிரப்பப்பட்டன. இந்த நிலையங்களில் சில யப்பானியப் பெண்களாலும் நிரப்பப் பட்டன; அவர்கள் யப்பானிய இராணுவ அதிகாரிகளின் தேவைக்காக மட்டும் வேலை செய்தார்கள். பெரும் சமூக அவலமாக இது நடந்தாலும், இந்த வடிகால் ஏற்பாட்டினால் ,பொது சமூகத்தில் இராணுவத்தினரால் ஏற்படும் கற்பழிப்புகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததாக சில கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

ஆக்கிரமிப்பின் ஆவணங்கள்

சிங்கப்பூர் யப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த நாட்களை அதிகாரப் பூர்வமாக விவரிக்கும் நூல்களில் முக்கியமானது லீ கெயோக் போய் (Lee Geok Boi) எழுதிய தி சியானன் இயர்சு (The Syonan Years – Singapore under Japanese rule 1942-1945) என்பது. இது இந்தக் கொடுங்காலத்தை மிகச் சரியாக ஆவணப்படுத்துகிறது. இது தவிர லீ க்வான் யூ அவர்களின் தி சிங்கப்பூர் சுடோரியின் ஒரு அத்தியாயம் பல செய்திகளை நேரடி சாட்சியாக ஆவணப்படுத்துகிறது. அப்போது லீ அவர்கள் பதின்ம வயது பள்ளி மாணவர். இன்னும் சில ஆவணங்கள், அந்த நாட்களின் சாட்சியாயிருந்தவர்கள் பலரை, பின்னாட்களில் சந்தித்து அவர்களது அனுபவத்திலிருந்த பல செய்திகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை சிங்கை மரபுடைமை ஆவணக் காப்பகம் மற்றும் சிங்கை தேசிய நூலகத்தின் கருவூலங்கள் போன்றவற்றில் காணக் கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் பொதுவான நோக்கில் பின்வரும் நான்கு விதமான வகைப்பாட்டில் இந்த கொடுங்காலத்தின் உண்மைகளைப் பதிவு செய்கின்றன. 1. சமூக, பொருளாதார நோக்கில் கள்ளச்சந்தை, கூட்டுக் கொலைகள் போன்றவற்றை ஆவணப்படுத்துவது; 2. புவியியல் நோக்கில் வாழ்வியல் இடங்களில் நிகழ்ந்த மாற்றங்கள், இடப்பெயர்வுகள்; 3. சிங்கப்பூரில் மற்றும் தென்கிழக்காசியாவில் அக்காலகட்டத்தில் இருந்த இந்தியர்களுக்கு யப்பானியர்கள் கொடுத்த அணுசரனையான சலுகை, பதவிகள், வாய்ப்புகளால் சுபாசு சந்திர போசின் இந்திய தேசியப் படையும் அதன் இயக்கம் இந்திய விடுதலைப் போரில் செலுத்திய தாக்கம் பற்றிய செய்திகள்; 4. யப்பானிய மொழியை திறந்த மனத்தோடு கற்றுக் கொண்ட சிங்கப்பூர் சமூகத்தின் சிலரோடு சமூக அளவில் யப்பானியர்கள் எந்த அளவு ஒன்ற முடிந்தது என்பது பற்றியும், அது விளைவித்த சமூக மென்மாற்றங்கள் பற்றியும்; என இந்த நான்கு நிலைகளில் இந்த ஆய்வுக் குறிப்புகள் அக்காலகட்டத்தின் நிகழ்வுகளையும், விளைவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கின்றன.

(தொடரும்)

__________

1.  The Singapore Story – Memoirs of Lee Kuan Yew – From the part of ‘The Japanese Invaders’.
2. Syonan Years – யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தின் நேரடிச் சாட்சிகள் விவரித்த சம்பவங்களில் இருந்து தொகுக்கப்பட்ட சிங்கை தேசிய ஆவணக் காப்பக குறிப்பேடுகளில் இருந்து
3. https://en.wikipedia.org/wiki/Japanese_occupation_of_Singapore – விக்கிபீடியா தளம் தரும் குறிப்பில் இருந்து.

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள் appeared first on கிழக்கு டுடே.

  •  

சம்புரு பழங்குடிகளின் வாழ்வும் வரலாறும் – தீபா ஜெயபாலன்

வட கென்யாவின் சம்புரு மாவட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள வெப்பமான, மணற்பாங்கான நிலங்களிலும் காலத்தின் ஓட்டத்துக்கு கட்டுப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இனம், சம்புரு பழங்குடியினர். இவர்களின் மக்கள்தொகை சுமார் 2,50,000 முதல் 3,00,000 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கையோ நம் கண்களுக்கு எளிதில் படாமல் போகலாம். ஆனால், அவர்களின் வரலாறு, பண்பாடு, மற்றும் உயிர்ப்பிரியம் (love for life/living beings) ஆகியவை மண்ணோடு கலந்ததொரு சங்கமம். பழங்குடி என்பதே இன்று நாகரிகக் கோடாரிக்கு விழும் […]

Source

  •  

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் (திருக்குறள் 484)

தகுதியான காலத்தை ஆராய்ந்து, அதனை ஏற்ற இடத்திலும், உலகத்தையே வென்று கைக்கொள்ள நினைத்தாலும் அது இயலும் செயலே

அதிர வைத்த குண்டுகள்

1941ஆம் ஆண்டு, திசம்பர் திங்கள் 8 ஆம் நாள். அதிகாலை 4 மணி அளவு.

சிங்கப்பூர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

யப்பானிய விமானங்கள் காகிதத்தினால் செய்தவை என்று சிங்கப்பூரில் இருந்த பிரிட்டானியப் படைத் தலைமை சொல்லிக் கொண்டிருந்தது என்று பார்த்தோம். அந்தக் ‘காகித விமானங்கள்’ வீசிய குண்டுகள் தட், தட்டென்று சிங்கப்பூரில் விழுந்தன! யப்பானியர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்தபோதும், தென்கிழக்காசியப் பகுதியின் தலைமைத்தளமாக அப்போது இருந்த சிங்கப்பூரின் காலனி நிர்வாகமோ, அங்கிருந்த பிரித்தானியப் படைகளோ எந்த வித ஆயத்தமோ, பயிற்சிகளோ கொண்டிருக்கவில்லை. ஆனால் இரண்டாவது உலகப் போரைத் தொடங்கிய ‘அச்சு நாடுகளின்'[1] முக்கியக் கூட்டாளியான யப்பானியர்களோ, தென்கிழக்காசியாவுக்கான தெளிவான திட்டமும், தீர்க்கமான தளபதிகளையும் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது உலகப் போரை செருமனி தொடங்கினாலும், அதன் முக்கியக் கூட்டாளிகளாக இத்தாலியும் யப்பானும் இருந்தன. இரண்டாவது உலகப் போரின் தொடக்கம் செருமனி போலந்தைக் கைப்பற்றியதன் மூலமே தொடங்கியது; யப்பான், தென்கிழக்காசியாவில் இந்த மூக்கூட்டணியின் பங்காளிப் பங்கை ஆற்றியது.

ஆக்கிரமிப்புத் தாக்குதலின் முக்கியப் பங்களிகளான இத்தாலிலியும், செருமனியும் பல கூட்டு ஒப்பந்தங்களை அறிவித்திருந்தன. இரண்டு நாடுகளின் தலைநகர்களான ரோம், பெர்லின் ‘இணைந்த அச்சின்’ இயக்கத்தில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே போரைத் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு நாடுகள் அச்சு நாடுகள் (Axis Countries) என்று அழைக்கப்பட்டன. இந்தத் தாக்குதலைச் சமாளித்து ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்த பிரித்தானியா,பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்த நாடுகள் (Allied Countries) என்று அழைக்கப்பட்டன.

’1941ஆம் ஆண்டு 8 ஆம் நாள் காலை 4 மணிக்கு இராபிஃல்சு பள்ளியின் ஈ பிளாக் விடுதியில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, மந்தமான ஆனால் அழுத்தமாகத் தட்டென்று கேட்ட குண்டு வெடிப்புச் சத்தம் என்னை எழுப்பியது. யப்பானோடு சண்டை தொடங்கிவிட்டது. அந்தக் குண்டுவீச்சு எதிர்பார்த்திருக்காத, வியப்பளித்த ஒன்றாக இருந்தது. தெரு விளக்குகளோ இன்னும் ஒளிர்ந்துகொண்டு இருந்தன! (போரை, தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் நாடு பொதுவாக இரவுகளில் விளக்குகளை அணைத்து விடும். அதனைக் குறிப்பிட்டே எந்த அளவு மெத்தனமாக சிங்கப்பூர் காலனி நிருவாகம் இருந்தது என்று சுட்டவே இதனைக் குறிப்பிடுகிறார் லீ க்வான் யூ) அந்தக் குண்டுகள் சிங்கப்பூரில் வீசப்படும் வரை, வான் தாக்குதலை எதிர்பார்த்துச் செய்யப்படும் அபாயச் சங்குகள் ஏதும் ஒலிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அந்தக் குண்டுவீச்சு 60 பேர்களைக் கொன்றிருந்தது; 130 பேர்களைக் காயப்படுத்தியிருந்தது; சிங்கப்பூரின் பிரித்தானிய காலனி நிர்வாகம் அந்த குண்டுவீச்சுத் தாக்குதலைப் பற்றி மிகவும் அடக்கி வாசித்தது.’ என்று அப்போது இராபிஃல்சு பள்ளியில் மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த லீ க்வான் யூ, பின்னாட்களில் தனது ‘தி சிங்கப்பூர் சுடோரி’ (The Singapore Storey) நூலின் மூன்றாவது அத்தியாயத்தில்,[2] சிங்கப்பூரின் மீது நடந்த யப்பானியக் குண்டுவிச்சு பற்றிப் பதிவு செய்திருக்கிறார்.

எதிர்பாரா புதுவரவு- தளபதி யமாசிட்டா

தெற்கு நோக்கி முன்னேறும் யப்பானியப் படைகளைச் சமாளிக்க இயலாத பிரித்தானியத் துருப்புகள், தென்கிழக்காசியப் பகுதிகளில் இருந்த நிலைகளை விட்டுவிட்டு சிறிது சிறிதாகப் பின்வாங்கி, கப்பற்படைத் தளத்தையும், மூன்று விமான இறங்குமிடங்களையும் கொண்டிருந்த தென்கிழக்காசியப் பகுதியின் பிரித்தானியத் தலைமையகமான சிங்கப்பூரை அடைகின்றன. ஆனால் சிங்கப்பூரின் கப்பற்படைத் தளத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பிரித்தானிய வீரர்கள், போர் அனுபவமோ, போதுமான பயிற்யோ, களத்தின் தீரமோ இல்லாதவர்களாக இருந்தார்கள்.

இலண்டன் நிருவாகம் சிங்கப்பூரைக் காக்கவும், சிங்கப்பூர் படைகளுக்கு உதவவும் அனுப்பிய இரிப்பல்சு, பிரின்சு ஆஃப் வேல்சு (Ripples , Prince of Wales) என்ற இரண்டு போர்க்கப்பல்களும் யப்பானிய விமானங்களால் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. மலாயாத் தீபகற்பத்தைத் தாண்டி யப்பானியர்கள் மேலும் மேலும் முன்னேறி சிங்கப்பூரை நோக்கி வருகின்றனர். ’அவர்கள் தளவாடங்கள், மோட்டார் வண்டிகள் போன்றவற்றில் வரத் தாமதமாகும்; அவர்கள் வருவதற்கான சரியான வழி இல்லை’ என்று சிங்கப்பூரில் இருந்த காலனி நிர்வாகப் படை நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் நினைத்தே பார்த்திராத ஒன்று நடந்தது. யோகர் ஆற்றின் மறுகரையில் இருந்த காடுகளை ஊடறுத்துக் கொண்டு வந்த யப்பானியப் படை மிதிவண்டிகளில் சாரிசாரியாக யோகர் பாலத்தைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தது !!! (பார்க்க படம்) [3]

சிங்கப்பூருக்குள் நுழைந்த யப்பானியப் படைக்குத் தலைமை வகித்தவர் தளபதி யமாசிட்டா (Yamashitta). அவர்கள் அதிகமான வீரர்களுடனும், மிதிவண்டிகளில் மிகக் குறைந்த போர்த்தளவாடங்களோடும் பயணித்து வருவார்கள் என்று சிங்கப்பூரில் இருந்த காலனிப் படை நினைத்தும் பார்க்கவில்லை. வியப்பின் கூறோடு, சிங்கப்பூருக்குள் நுழைந்த யப்பானியப்படையின் முன்னர் ‘உலகின் வெல்லப்படமுடியாத’ நாட்டின் படையான பிரித்தானியப்படையால் ஏழு நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்க இயலவில்லை. சிறிது கூட அணியமற்று இருந்த பிரித்தானிய சிங்கப்பூர் காப்புப் படையும், கப்பற்தளமும் யப்பானியர்களிடம் ஏழாவது நாள் வீழ்ந்தது. ஏழுநாள் நடந்த கடுமையான, ஆனால் சிறிதும் நம்பிக்கை இல்லாத சண்டைக்குப் பிறகு பிரித்தானியப் படையின் தளபதியான ஏ.இ. பெர்சிவல், யப்பானியப் படைத் தளபதியான யமாசிட்டாவிடம் சரணடைந்தார். அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது அச்சம்; தீவில் இருந்த குடிநீர் தீர்ந்து போய்விடும் என்ற அச்சம்! நீரின்றிச் சாக விரும்பாத அவர்கள் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள், சீனப் புத்தாண்டின் முதல்நாள் சரணடைந்தார்கள். ஏழு நாட்களுக்குள் சிங்கப்பூரைப் பிடித்தது யப்பான்.

அகமும் முகமும் மாறியதே…

சிங்கப்பூரின் பெயர் சோனான் என்று யப்பானிய மொழியில் மாற்றப்பட்டது. அதன் பொருள் தெற்கின் ஒளி என்பது. ஆனால் சிங்கப்பூர் சந்தித்ததோ மறக்கவியலாததொரு கொடுங்கனவு. சிங்கப்பூரின் கடிகாரங்கள் தோக்கியோ நேரத்துக்குத் திருத்தி அமைக்கப்பட்டன. காலனித்துவ ஆக்கிரமிப்பிலிருந்து சக ஆசியர்களை மீட்க வந்தவர்களாக யப்பானியர்கள் தங்களை வரித்துக் கொண்டார்கள். அவ்வாறே அறிவிக்கவும் செய்தார்கள். ஆனால் அவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த சுமார் நான்காண்டுகளில் சிங்கப்பூர் குடிமக்கள் கொடும் சித்திரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது. சீன இனத்தைச் சேர்ந்த வசதி மிக்க வணிகர்கள், போருக்கு முன்பாக யப்பானுக்கும், யப்பானிய முயற்சிகளுக்கும் எதிராகச் செயல்பட்டார்கள் என்பதை அந்தப் படை நினைவு வைத்திருந்தது. அவர்கள் குறிவைத்து ‘பாடம் கற்பிக்கப்’பட்டார்கள். நூற்றுக் கணக்கில் (ஆயிரக்கணக்கில் கூட இருக்கலாம் என்று சில செய்தி மூலங்கள் சொல்கின்றன) சீனர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்; அல்லது காணாமற் போகிறார்கள். யப்பானிய இராணுவ நடவடிக்கைகளுக்காக சீன வணிகர்களிடமிருந்து 50 மில்லியன் டாலர்கள் பணம் ‘வலிந்த நன்கொடை’யாக வசூலிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்த இந்தியத் தமிழர்களை மட்டும் சிறிது பரிவோடு அணுகுகிறார்கள் யப்பானியர். இந்தியாவும் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடுவதால் அவர்களை ஆதரிப்பதாக தங்கள் நிலையை முன்வைக்கிறது யப்பான். சிங்கப்பூரில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் கொடுமைப்படுத்தல்கள் இல்லாத கண்காணிப்பு வேலைகள் வழங்கப்படுகின்றன. இந்திய தேசியப்படையை அக்காலகட்டத்தில் உருவாக்கிக் கொண்டிருந்த இந்திய விடுதலைப் போரின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுபாசு சந்திர போசை ஆதரிக்கும்படி யப்பானிய மேலிடம் யப்பானியப் படைகளுக்கு உத்தரவிடுகிறது. இந்திய தேசியப்படையில் அதிக அளவில் சிங்கப்பூரிலிருந்த இந்தியத் தமிழர்கள் சேர்கிறார்கள். சிங்கப்பூரை பிரித்தானிய நிர்வாகத்திடமிருந்து வென்றுவிட்ட யப்பானிய இராணுவம், இந்த இந்திய தேசியப் படையின் சிங்கப்பூர்ப் பிரிவினரோடு இணக்கமாகவும், நீக்குப் போக்காகவும் நடந்து கொள்கிறது. பிரித்தானிய காலனி நிருவாகத்தின் கீழ் இருந்தபோது, சிங்கப்பூரின் இந்தியத் தமிழர்கள் நினைத்தும் பார்த்திருக்க இயலாத அதிகாரம் மிக்க பதவிகளில், யப்பான் இராணுவ நிருவாகம் அவர்களை அமர்த்துகிறது. இதே விதமான அணுசரனையாக போக்கை மலாய் இனத்தவர்களிடமும் யப்பானியப் படை காட்டுகிறது. மலாயாவின் மற்ற இடங்களில் இருக்கும் மலாய்க் காரர்கள், சிங்கப்பூரின் மலாய்க்காரர்களோடு தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். இது மலாய் இனத்தவர்களிடையேயும் யப்பானிய இராணுவப் படையைப் பற்றியும் நிருவாகத்தைப் பற்றியும் நம்பிக்கையைக் கொடுக்கிறது.

நடப்பதொரு கொடுங்கனவு

சிங்கப்பூர், யப்பானிய ஆதிக்கத்தின் கீழ் நான்காண்டுகள் இருக்கவேண்டியிருந்தது.யப்பானிய இராணுவம் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது சிங்கப்பூரில் இருந்த பலர், மலாயாவின் உள்பகுதிக்குள் சென்று விட்டால் போரின் இடர்களிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் யப்பானியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்த அதே நாள், மலாயாவின் கோத்தாபாருவிலும்(Kota Bharu) இறங்கினார்கள் என்ற செய்தி பின்னரே வந்தது. ஏற்கெனவே யப்பானியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய யோகர் ஆற்றின் மறுகரையின் சதுப்பு நிலங்கள் வழி மிதிவண்டிகளில் வந்தார்கள் என்று பார்த்தோம். இது பிரித்தானியர்கள் எதிர்பாராதது. அச்சத்தில் அப்பகுதிகளில் இருந்த பிரித்தானியக் குடும்பங்கள் பின்வாங்கி ஆற்றைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய வேண்டி வந்தது. அல்லது, தெறித்து ஓடித் தப்பிக்க வேண்டி வந்தது. மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் மத்திய கிழக்குப் பகுதிக்குச் செல்ல வேண்டிய சில ஆசுத்திரேலிய வீரர்களையும் மூன்று கலங்களில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருந்தது இலண்டனின் காலனி நிருவாகம். அவர்கள் எதிர்பார்த்திருந்தது சிங்கப்பூர் விழுந்து விடாது என்பது. ஆனால் சிங்கப்பூரை முன்னிட்டு யப்பானிய இராணுவம் நடத்திய போரின் நான்காவது நாளில், அந்த வீரர்கள் தமது ஆயுதங்களைக்கூட சுமந்து கொள்ளப் பிரியப்படாமல் இருந்ததாக, அப்போது மாணவனாக இருந்த லீ க்வான் யூ தனது சிங்கப்பூர் சுடோரி புத்தகத்தில் பதிவு செய்கிறார். இச்சமயத்தில் பிரித்தானியப் பிரதமராக இருந்த, பின்னால் பெரும் புகழ் பெற்ற வின்சுடன் சர்ச்சில் சிங்கப்பூரின் வீழ்ச்சியை இவ்வாறு பதிவு செய்கிறார், ‘ சிங்கப்பூரின் வீழ்ச்சி பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகுந்த அவமானமிக்க தோல்வியும், கொடுமையான நிகழ்வும் ஆகும்’.

சமூக இனப் பிளவு

சிங்கப்பூரில் இருந்த ஆசிய இனத்தவர்கள், பிரித்தானியர்கள் இரு சமூகத்துக்குமே யப்பானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த சிங்கப்பூரின் மூன்றரை ஆண்டுகாலம் கொடுங்கனவாகவே இருந்தது. ஏனெனில் 1800கள் முதலே பிரித்தானியர்கள் தங்களது ஆதிக்கத்தை வன்மையுடன் மற்ற ஆசிய சமூகத்தினரிடம் செலுத்தி வந்தார்கள். ஆசிய இனத்தவர்கள் அனைவருக்கும் வெள்ளையினத்தவர் என்றால், அவர் ‘துரை’. வெள்ளையினப்பெண் என்றால் அவர் ‘துரைசானியம்மாள்’. நூறாண்டுக்கும் மேலாக சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலில் பழகிப் போயிருந்த இது யப்பானியர்கள் ஆக்கிரமிப்பில் சிங்கப்பூர் இருந்த மூன்றரை ஆண்டுகளில் தவிடுபொடியானது. பற்றாக் குறைக்கு இந்தியர்களை யப்பானியர்கள் கண்காணிகளாக நடத்தத் தொடங்கியது பிரித்தானியர்களுக்கு மேலும் சித்திரவதையாக இருந்தது. யப்பானியர்களின் கடுமை சீன இனத்தவரிடமும் பிரித்தானியர்களிடமும் மிகக் கடுமையாகவும், மலாய் இனத்தவரிடம் சிறிது கடுமை குறைந்தும், இந்தியத் தமிழர்களிடம் இன்னும் கடுமை குறைந்தும் காணப்பட்டது. இந்த வேறுபாடு பிரித்தானியர்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்த விளைவு, பின்னால் மீண்டும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் வந்தபோது தெரிந்தது.ஆனால் பொதுவாக சிங்கப்பூர் சமூகத்தைப் பொறுத்தவரை, யப்பானியர்களின் ஒட்டுமொத்தக் கடுமையும், பிரித்தானியர்கள் ஆசிய சமூகத்திடம் நூறாண்டுகளாகக் காட்டி வந்த கடுமையைவிட அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம். ஒரே பகுதியைச் சேர்ந்த ஆசியர்கள் என்பதால் யப்பானியர்கள் சிங்கப்பூர் ஆசியர்களை எளிமையாகவெல்லாம் நடத்தவில்லை.யப்பானியர்கள் சிங்கப்பூரைப் பிடித்த தொடக்க சில நாட்களில் பிரித்தானியர்கள், சீனர்களின் தொழில் செல்வங்கள், வீடுகள் சூறையாடப்பட்டன. ஆனால் சீக்கிரமே யப்பானியர்கள் சிங்கப்பூரில் இவ்விதச் சூறையாடல்களுக்கு முடிவு கட்டினார்கள். சில சூறையாடிகள் பிடிக்கப்பட்டு அவர்களது தலைகள் கொய்யப்பட்டுப் பொது இடங்களில் கட்டிவிடப்பட்டன. தண்டனைகள் கொடுமையாக அரங்கேற்றப்பட்டன. கத்தியால் உடலின் மேற்தோல்கள் சீவப்பட்டதெல்லாம் தண்டனைகளாகக் கொடுக்கப்பட்டன.

யப்பானிய இராணுவம் குறிப்பிட்ட சமூகப் பெரியவர்கள், அமைப்புகளிடம் இருந்து தங்களுக்கு வேண்டியதை மிரட்டிப் பெற்றார்கள். வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள், தானியங்கள் போன்றவற்றை அள்ளிச் சென்றார்கள். சிங்கப்பூரில் எந்த உணவும் மிகுதியாக உருவாக்கவோ,பயிரிடவோ படவில்லையாதலால் உணவுப் பொருள்கள் அருமைப் பொருள்களாயின.

மக்களின் தினவாழ்வு கொடுமையானதாக மாறியது.

(தொடரும்)

__________

படம்: சிங்கப்பூருக்குள் நுழையும் யப்பானியப் படை – நன்றி சிங்கை தேசிய ஆவணக் காப்பகப் பக்கம்

1. https://www.britannica.com/topic/Axis-Powers
2. The Singapore Story – Memoirs of Lee Kuan Yew, chapter 3.
3. From Singapore Heritage Board resources – With thanks.

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு appeared first on கிழக்கு டுடே.

  •  

கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள்

அடிமைத்தளை மனித இனத்துக்கு எதிரானது, அதை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை முதலில் ஆங்கிலேயர்களுக்குத்தான் தோன்றியது என வரலாறு தெரிவிக்கிறது. 1772இல் இங்கிலாந்தில் நடைபெற்ற வழக்கொன்றில் அந்த மண்ணில் வசிக்கும் அடிமையின் உரிமைகள் குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது. 1778இல் ஸ்காட்லந்தில் நடைபெற்ற மற்றொரு வழக்கில் 1772ஆம் ஆண்டின் வழக்குத் தீர்ப்பை முன்னோடியாகக் கொண்டு வேறொரு ஆப்பிரிக்க அடிமைக்கு விடுதலை வழங்கப்பட்டது.

1787ஆம் ஆண்டு மே 22ஆம் நாளில் அடிமை வாணிக ஒழிப்புச் சங்கம் இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் குவேக்கர்கள் என அழைக்கப்பட்ட சமூகத்தின் நண்பர்கள் என்ற கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். அமைதியான முறையில் எந்த வன்முறையுமின்றிப் பணியாற்றிய இந்தச் சங்கம் பின்னாளில் தோன்றிய மற்ற இயக்கங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. அடிமை வாணிகத்தின் தீமைகள் குறித்தும் ஆப்பிரிக்க மக்களின் துயர நிலை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துச் சொன்னது. சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற பிரிட்டிஷ் பாராளுமன்றம் அடிமை வாணிகத்தைத் தடைசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

1806ஆம் ஆண்டில் பிரிட்டிஷ், அமெரிக்க அரசாங்கங்கள் அடிமைகளுக்கு மறுவாழ்வளிக்கவேண்டும் என்று எண்ணம்கொண்டன. அடிமை வர்த்தகத்தோடு தங்கள் நாடுகளுக்கு எந்தத் தொடர்புமில்லை என்று அறிக்கை வெளியிட்டன. அதையொட்டி பிரிட்டிஷ் பாராளுமன்றம் அடிமை வாணிகச் சட்டத்தை 1807ஆம் ஆண்டு இயற்றியது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகக் கண்காணிப்புப் படைகளையும் அமைத்தது. ஆங்கிலேயப் பேரரசு தன்னுடைய காலனி நாடுகளில் அடிமைகளை விற்பதும் வாங்குவதும் சட்டத்துக்குப் புறம்பான செயல் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் அடிமைத்தளையை மட்டுப்படுத்தவும் காலப்போக்கில் ஒழிக்கவும் 1823இல் சங்கமொன்று அமைக்கப்பட்டது. இந்தியாவைத் தவிர மற்ற பகுதிகளில் அடிமைத்தளையை ஒழிக்கும் சட்டத்தை 1833இல் இயற்றியது. இந்தியாவில் அடிமைப்படுத்தல் தொன்றுதொட்ட வழக்கமாக நிலவியதால் 1838ஆம் ஆண்டில்தான் அடிமைத்தளையை ஒழிக்கும் பணியை நிறைவேற்ற முடிந்தது. இந்திய அடிமைச் சட்டத்தை 1843இல் நிறைவேற்றியது.

உலகளவில் நடைபெற்ற அடிமை வாணிகத்தில் ஆங்கிலேயர்களின் பங்கு 41% வரை இருந்ததால் அடிமைத்தளை ஒழிப்பு நடவடிக்கைகளினால் அடிமை வாணிகம் பெரும்பின்னடைவைச் சந்தித்தது. காலனி நாடுகளுடன் தான் கொண்டிருந்த அரசியல் உறவின்மூலம் அடிமை வாணிகத்தை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது இங்கிலாந்து. ஒப்பந்தத்தை மீறும் கப்பல்களைத் தடைசெய்யும் உரிமையையும் பெற்றது.

0

அடிமைத்தளை ஒழிப்பில் முக்கியப் பங்கு வகித்த எளிமை, சமத்துவம், அமைதி, சமூக நீதியைக் கடைபிடிப்பதில் உறுதியாகச் செயல்பட்டனர். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றுவதற்கான தூண்டுகோலாகச் செயல்பட்டனர். இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே 1670களில் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள பார்படோஸ் தீவில் அடிமைகளை நல்லவிதமாக நடத்தவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். 1688இல் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட புதிய பிரிட்டிஷ் காலனியான பென்சில்வேனியாவில் நிலவிய அடிமைத்தளையை வெளிப்படையாக எதிர்த்தனர். ஜெர்மன்டவுன் என்ற ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் அடிமைத்தளைக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

அடிமைத்தளையை மறுத்து அமெரிக்காவில் பொதுவெளியில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கை இதுதான். உலகளவில் மனித உரிமையை வரையறுத்த முதல் ஆவணமும்கூட. அந்தக் காலகட்டத்தில் இந்தச் செயல்பாடு பரவலாகக் கவனிக்கப்படவில்லை என்றாலும் அடிமைத்தளை அறத்தின்பால் சார்ந்ததா என்ற கேள்வியை பென்சில்வேனியாவைச் சேர்ந்த குவேக்கர்களிடையே எழுப்பியது. அடிமை ஒழிப்பு குறித்த எழுத்துக்களும் செயல்பாடுகளும் தீவிரமடைந்தன.

1740ஆம் ஆண்டு முதல் புதிய தலைமுறையைச் சேர்ந்த குவேக்கர்கள் அடிமை வாணிகத்துடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினர். 1775இல் பென்சில்வேனியா அடிமை ஒழிப்புச் சங்கம் உருவானது. அடிமை வாணிகத்தில் ஈடுபடுவது ஒழுக்கக்கேடான செயல் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்தினர். வட கரோலினா மாகாணத்தில் அடிமைகளை விடுவிப்பது தடை செய்யப்பட்டிருந்ததால் அங்கே வசித்த குவேக்கர்கள் வேறு மாகாணங்களுக்குச் சென்று அடிமைகளை விடுவித்தனர்.

அடிமைகள் தப்பிச் சென்று விடுதலைபெற உதவும் ’நிலத்தடி இருப்புப்பாதை’யை அமைத்து அதை வழிநடத்துவதில் குவேக்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். வட கரோலினாவில் வசித்த லீவை காஃபின் இளம்பருவ முதலே தப்பியோடும் அடிமைகளுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தார், பின்னாளில் ஒஹையோ-இண்டியானா மாகாணங்களின் நிலத்தடி இருப்புப்பாதையின் தலைவராக விளங்கினார். ஹாரியட் டப்மனும் இந்த நிலத்தடி இருப்புப்பாதையைப் பயன்படுத்திப் பல அடிமைகள் தப்பிச்செல்ல உதவினார்.

ஈலையஸ் ஹிக்ஸ் என்ற குவேக்கர் ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பினால் உருவான பொருள்களைப் பற்றிய நூலொன்றை 1811இல் எழுதினார். அப்படித் தயாரிக்கப்பட்ட பொருட்களை விலைகொடுத்து வாங்குவது தவறு என்று வலியுறுத்தினார். இவர்களைப்போல பல குவேக்கர்கள் அடிமைகளின் மேன்மைக்காகத் தன்னலமின்றி உழைத்தனர். இதனால் கோபமடைந்த அடிமை உரிமையாளர்கள் குவேக்கர்களைக் கொல்லவும் தயங்கவில்லை. குவேக்கர்கள் உயிருக்குப் பயந்து அமெரிக்காவின் மேற்குப் பகுதிக்குக் குடிபெயரவேண்டியிருந்தது.

0

என்லைட்டன்மெண்ட் எனப்படும் அறிவொளிக் காலம் தொடங்கி அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை அமெரிக்கர்களிடையே மேலோங்கியது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மஸசூஸெட்ஸ் மாகாணம் அடிமை வாணிகம் சட்டத்துக்குப் புறம்பானது என 1772இல் அறிவித்தது. 1764 முதல் 1774 வரையில் மஸசூஸெட்ஸ் மாகாண நீதிமன்றத்தில் சுமார் 17 அடிமைகள் தங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்கள்.

இதற்கிடையில் 1775இல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 13 அமெரிக்க மாகாணங்கள் தங்களின் விடுதலைக்காகப் போராடின. அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்கியது. 1783 வரையில் நடைபெற்ற இந்தப் போரின் முடிவில் பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து 13 மாகாணங்களும் விடுதலை பெற்றன. எல்லா மாகாணங்களும் ஒன்றிணைக்கப்பட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவானது. அதன் முதல் அதிபராகப் பதவியேற்றார் ஜார்ஜ் வாஷிங்டன்.

1794இல் அமெரிக்கக் கப்பல்களை அடிமை வாணிகத்துக்குப் பயன்படுத்துவதும் அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கு அடிமைகளைக் கொண்டுசெல்வதும் தடை செய்யப்பட்டன. ஆனால் இதை நடைமுறைப்படுத்த எந்த முன்னெடுப்பும் இல்லை என்பதால் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கொண்டுவருவது தொடர்ந்து நடைபெற்றது. அடிமை ஒழிப்புக் குழுவினரின் இடைவிடாத முயற்சியினால் 1804இல் அமெரிக்காவின் வடக்கு மாகாணங்கள் அனைத்திலும் அடிமை வாணிகத்துக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது. குறிப்பிட்ட வயதையடைந்ததும் அடிமைகள் ஒப்பந்தக்கூலிகளாக மாறிவிடுவர்.

1808இல் அமெரிக்கப் பாராளுமன்றம் அடிமைகள் இறக்குமதி தடைச் சட்டத்தை இயற்றியது. ஆனால் உள்நாட்டில் அடிமைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து அதில் எதுவும் சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அடிமைத்தளை தொடர்ந்து நடைமுறையிலிருந்ததால் அடிமைகளில் பலர் கனடாவுக்குத் தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே 1812இல் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது. இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லையென்றாலும் அமெரிக்கர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தித் தேசப்பற்றை விதைத்தது.

1793, 1850ஆம் ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தப்பியோடும் அடிமைகள் சட்டம் அடிமைத்தளையிலிருந்து தப்பிக்க முயலும் அடிமைகளைச் சிறைப்பிடித்து மீண்டும் உரிமையாளர்களிடமே சேர்ப்பிக்கவேண்டும் என்றது. இதை அமெரிக்காவின் வடக்கு மாகாணங்கள் கடுமையாக எதிர்த்தன. தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமைகள் வடக்கு மாகாணங்களுக்கும் அங்கிருந்து கனடாவுக்கும் தப்பிச்செல்ல முயன்றனர்.

அமெரிக்காவிலிருந்த அடிமைகளின் மொத்த எண்ணிக்கை 40 லட்சம். அவர்களில் 95 சதவீதத்தினர் தெற்கு மாகாணங்களில் வசித்தனர். அடிமைத்தளையை ஆதரிக்கும் சட்டங்களையும் செயல்களையும் தெற்கு மாகாணங்கள் பின்பற்றின. அடிமை ஒழிப்பு இயக்கத்தினால் தங்களின் விவசாயத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று நம்பின. அடிமை ஒழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்த 11 தெற்கு மாகாணங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து தாங்கள் பிரிந்துசெல்வதாக அறிவித்தன. ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான அமெரிக்க ஐக்கிய நாடுகள் இதை ஏற்கவில்லை. அந்தப் பிரிவை எதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் 1861 முதல் 1865ஆம் ஆண்டு வரையில் நடந்தது. தெற்கு மாகாணங்கள் தோல்வியடைந்து மீண்டும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இணைக்கப்பட்டன. அடிமைத்தளையை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.

0

அமெரிக்காவின் விளைநிலங்களும் பண்ணைகளும் அடிமைகளின் உழைப்பை நம்பியிருந்ததால் அடிமைத்தளை ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்தது. கிழக்குக் கடற்கரையில் வசித்த ஆப்பிரிக்க அடிமைகள் பால்டிமோர், நியூ ஆர்லியன்ஸ் போன்ற மேரிலாண்டின் மற்ற பகுதிகளுக்கும் லூசியானா, கெண்டகி, மிஸ்ஸிசிப்பி போன்ற தெற்கு மாகாணங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பெரும் விற்பனையாளர்களும் இடைத்தரகர்களும் ரொக்கமாகப் பணம்கொடுத்து அடிமைகளை வாங்கிச் சென்றனர். அடிமைகள் தேவை என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தனர்.

‘10 முதல் 25 வயது வரையிலான ஆண், பெண் அடிமைகள் 50 முதல் 100 பேர் வரை தேவை. சந்தை விலைக்கும் அதிகமாக உடனடி ரொக்கம் கொடுக்கப்படும்.’

லூசியானாவைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் 12 முதல் 25 வயது வரையிலான அடிமைகளுக்கு நல்ல விலை தருவதாக விளம்பரம் செய்தார். கெண்டகியைச் சேர்ந்த ஜேம்ஸ் காக்ஸ் 6 மாதம் முதல் 31 வயது வரையிலான 38 குழந்தைகள், பெண்கள், ஆண்களை ஜான் ஹேன்ஸிடமிருந்து 6610 அமெரிக்க டாலருக்கு வாங்கினார். குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து விற்கும் அவலமும் நிகழ்ந்தது. இதுதவிர சிறிய நில உரிமையாளர்களும் நேரடியாகத் தாங்களே வந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்றனர். நேரடியாக வாங்கினால் 400 டாலர் என்றால் தரகர்மூலமாக விற்பனைக்கு வரும் அடிமைகளுக்கு 800 டாலர்வரை விலைகொடுக்க நேரிடும்.

அடிமை உரிமையாளர்களில் சிலர் தங்களின் கோட்டத்தைத் தாண்டியோ மாகாணத்தைத் தாண்டியோ விற்பதற்குத் தயங்கினர். தங்களின் அடிமைகளுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என்ற எண்ணமும் இரக்க குணமும் காரணம். மேலும் உறவுகளைப் பிரிந்து தூரமான இடங்களுக்குச் செல்லும் அடிமைகள் துயரத்துக்கு ஆளாவர்கள், அவர்களின் உழைப்புத்திறன் குறையும் என்று நினைத்ததும் காரணம்.

அடிமைகளை விற்பது தெரிந்தால் ஊருக்குள் தங்கள் பெயர் கெட்டுப் போய்விடுமென நினைத்து அடிமைகள் ஓடிப்போய்விட்டார்கள் என்ற பொய்யைக் கசியவிட்டார்கள் சிலர். ஆனால் சத்தமில்லாமல் அடிமைகளையும் கூடவே அடிமையல்லாதவர்களையும் சேர்த்தே வேறு இடங்களில் விற்றார்கள்.

எட்வர்ட் ப்ராடஸுக்கு குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதானது. பென் ராஸ் குடும்பத்தினரும் அவர்களின் உறவினர்களில் பலரும் ஏலத்தில் விடப்பட்டனர் அல்லது மற்ற வியாபாரிகளுக்கு விற்கப்பட்டனர். செலவுகளைச் சமாளிப்பதற்காக ஹாரியட்டின் மூத்த சகோதரியான மரியா ரிட்டியும் சகோதரன் ஜேம்ஸும் வேறொருவருக்கு விற்கப்பட்டனர். ஏற்கெனவே தந்தை பென் ராஸிடமிருந்து பிரிந்து வாழ்ந்த குழந்தைகள் இப்போது தாயிடமிருந்தும் உடன்பிறந்தவர்களிடமிருந்தும் பிரிக்கப்பட்டனர்.

அடுத்து லீனா, சோஃப் என்ற ஹாரியட்டின் இன்னும் இரண்டு சகோதரிகளை வேறு மாகாணத்துக்கு விற்றார் எட்வர்ட். வீட்டைத் திரும்பிப்பார்த்து அழுது அரற்றியபடி அவர்களிருவரும் அழைத்துச்செல்லப்பட்ட காட்சி சிறுமி மிண்டியின் மனதில் பதிந்துபோனது. பொதுவாக அடிமைகளை விற்கும்போது நீதிமன்றத்தில் புதிய உரிமையாளரின் பெயருக்கு அவர்களைப் பதிவுசெய்வது நடைமுறை. ஆனால் எட்வர்ட் வரி கட்டாமல் இருப்பதற்காக அதைச் செய்யவில்லை.

மிண்டியின் இன்னொரு சகோதரிக்குத் திருமணம் முடிந்து இரண்டு மாதக் கைக்குழந்தையோடு இருந்தாள். அவளையும் ஜியார்ஜியா மாகாணத்துக்கு விற்க ஏற்பாடு செய்தான் எட்வர்ட் ப்ராடஸ். அந்தச் சகோதரியின் கணவன் தனக்குத் தெரிந்த பெரிய மனிதர் ஒருவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். அந்த மனிதரும் உன் மனைவியை என் வீட்டுக்கு அனுப்பி வை, பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தார். ஆனால் சகோதரி வந்துசேர்ந்ததும் அந்தப் பெரிய மனிதர் எட்வர்டுக்குத் தகவல் சொல்லிவிட்டார். எட்வர்டும் தாயை மாத்திரம் பிரித்து ஜியார்ஜியா மாகாணத்துக்கு அனுப்பிவிட்டான்.

ரிட் ராஸுக்கு தன் குடும்பத்தினரைப் பிரித்த எட்வர்டின் மேல் கோபமிருந்தாலும் அப்போதைக்கு எதுவும் செய்யமுடியவில்லை. சில ஆண்டுகள் கழித்துத் தன்னுடைய இளைய மகன் மோசஸை விற்பனைசெய்தபோது அதைத் தடுக்க முயற்சி செய்தார். மோசஸை வாங்கியவர் ஜியார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அவனை அழைத்துச் செல்வதற்காக எட்வர்டின் பண்ணைக்கு குதிரை வண்டியில் வந்தார். வயலில் வேலைசெய்துகொண்டிருந்த மோசஸை குதிரையைப் பிடித்துக்கொள்ள கூப்பிட்டான் எட்வர்ட். ஆனால் மோசஸை விற்கப் போகிறார்கள் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு மகனுக்குப் பதிலாக ரிட் வந்தார்.

உரிமையாளர் பணத்தை எண்ணுவதைப் பார்த்த ரிட் பையனை எதற்காக அழைத்தீர்கள் என்று கேட்டார். எட்வர்ட் பதிலேதும் சொல்லாமல் குடிக்கத் தண்ணீர் எடுத்துவரச் சொன்னான். ரிட் போனதும் மீண்டும் மோசஸை உரத்த குரலில் கூப்பிட்டுக் குதிரையை வண்டியில் பூட்டுமாறு சொன்னான். மறுபடியும் மகனுக்குப் பதில் ரிட் வந்து என்ன வேண்டுமெனக் கேட்டார். உன்னைக் கூப்பிடவில்லை மோசஸைத்தான் கூப்பிட்டேன் என்று சொன்னான் எட்வர்ட். மூன்றாவது முறை மோசஸைத் தேடி தானே விவசாய நிலத்துக்கு வந்தான் எட்வர்ட். ஆனால் ரிட் தன்னுடைய உறவினர்களின் உதவியுடன் அவனை யாருக்கும் தெரியாத இடத்தில் சுமார் ஒரு மாத காலத்துக்கு ஒளிந்துகொள்ளச் செய்தார்.

அடிமைகளை வாங்கவரும் வாணிகர்கள் அந்த ஊரிலேயே ஓரிரு மாதங்கள் தங்கியிருந்து மொத்தமாகப் பல அடிமைகளை வாங்கிய பிறகு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்புவது வழக்கம். அதற்குள் எப்படியும் மோசஸைக் கண்டுபிடித்து ஜியார்ஜியாவுக்கு அனுப்பிவிடலாம் என்று முடிவுசெய்து வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்காமல் இருந்தான் எட்வர்ட். ஆனால் ரிட்டும் அவருடைய சமூக வலைப்பின்னலைச் சேர்ந்தவர்களும் மோசஸை இப்படி ஒளித்துவைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

எட்வர்டிடம் விசுவாசமாக இருக்கும் இன்னொரு வேலையாள் மரங்களடர்ந்த காட்டுப் பகுதியில் மோசஸ் ஒளிந்திருப்பதாகத் தகவல் சொன்னான். மோசஸைப் பிடிப்பதற்காக அங்கே சென்றபோது சிறுவன் தப்பிச்சென்றுவிட்டான். மீண்டும் இன்னொரு வெள்ளைக்காரரை ரிட்டின் குடியிருப்புக்கு அனுப்பிவைத்தான் எட்வர்ட். வாசலில் நின்றபடி சுருட்டைப் பற்றவைக்க நெருப்பு கேட்ட அந்த வெள்ளைக்காரரைப் பார்த்ததும் எதற்காக வந்திருக்கிறார் என்பது ரிட்டுக்குத் தெரிந்துவிட்டது. என் மகனைப் பிடிப்பதற்கு யாராவது வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தால் மண்டையைப் பிளந்துவிடுவேன் என்று மிரட்டினார். அவர்களும் பயந்து ஓடிப்போயினர். இப்படியே பல உத்திகளைச்செய்து அந்த ஜியார்ஜியா வாணிகர் ஊர்திரும்பும் வரையில் மோசஸைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

தன்னுடைய உரிமையாளரையும் அந்தப் பகுதியின் பெரிய மனிதர்களில் ஒருவரையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்றார் ரிட். தனது குழந்தைகளை ஒவ்வொருவராக இழந்த துயரத்தில் உயிரையும் பணயம் வைத்துத்தான் இதைச் செய்தார். இருந்தாலும் தானும் தன் குடும்பத்தினரும் எட்வர்டின் சொத்துகள் என்பதும் தங்களை எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதும் தெரிந்திருந்தது.

சிறுமி மிண்டியையும் மற்ற குழந்தைகளையும் அவ்வப்போது வேறு உரிமையாளர்களின் வீட்டில் பணிசெய்ய அனுப்பிவைத்து அதற்கான விலையைப் பெற்றுக்கொள்வான் எட்வர்ட். தன்னருகில் இருக்கும் வரையில்தான் ரிட்டினால் மிண்டியைப் பாதுகாக்க முடிந்தது. பணியாற்றி இடத்தில் மிண்டியைச் சிலர் சாட்டையால் அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். அவளது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊறுவிளைவிக்கும் விதமாகக் கொடூரமாக நடந்துகொண்டனர்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள் appeared first on கிழக்கு டுடே.

  •  

களைகட்டும் வீரபாண்டித் திருவிழா

“வாங்கண்ணே… வாங்க. உங்களுக்காகவே வந்திருக்கு பீமபுஷ்டி அல்வா. ஆரஞ்சு கலர் வேணுமா, பச்சைக்கலர் வேணுமா..? மஞ்சக்கலர் வேணுமா, ஊதாக் கலரு வேணுமா..? பல கலர்ல இருக்குண்ணே… பீமபுஷ்டி அல்வா, சின்னக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே…...

The post களைகட்டும் வீரபாண்டித் திருவிழா first appeared on Her Stories.

  •  

சிந்து, சிலை, சின்னம் - ஸ்டாலின் ராஜாங்கம்

photo courtesy: Sunil Abhiman Awachar

சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வட்டார வரலாறு 

1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் காஞ்சிபுரத்திற்கு அருகேயிருந்த அங்கம்பாக்கம் கிராமத்தின் சேரிக்குள் அதிகாலை ஒரு கும்பல் நுழைந்தது. 70க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டிருந்த அக்கும்பல் அங்கிருந்த தலித் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். தாக்குதலை முடித்த கும்பல் குடிசைகளைக் குடிசைகளைக் கொளுத்தி விட்டு அங்கிருந்த குப்புசாமி என்பவரின் வீட்டை நோக்கி முன்னேறியது. அந்த வீட்டின் வெளிப்புறக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றது. அப்போது வெளியூரிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த குப்புசாமி சேரி மக்களின் நிலைமையை அறிந்ததோடு தம்வீடு சேதப்படுத்தப் பட்டிருந்ததையும் கண்டார். தன் குடும்பத்தினரின் நிலைமையை அறிய வீட்டிற்கு உள்ளே ஓடிய அவரை மறைந்திருந்த கும்பல் கடுமையான ஆயுதங்களோடு சூழ்ந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் கதவைத் தாளிட்டுக்கொண்டு வீட்டிலிருந்த துப்பாக்கியால் தற்காப்பிற்காகக் கூரையை நோக்கிச் சுட்டார். ஆனால், கும்பல் வீட்டை வைக்கோலிட்டுத் தீயிட முயன்று கொண்டிருந்தது. பிறகு வேறுவழியில்லாத குப்புசாமி உள்ளிருந்த வாறே கும்பலை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். மொத்தம் இருபத்தோருமுறை சுட்டார். இதில் 15 பேர் காயமடைந்தனர். 9 பேர் படுகாயமுற்றனர். ஐந்து உயிர்களும் போயின. இவையெல்லாம் முடிந்தபோது காலை மணி ஆறாகியிருந்தது. பிறகு சென்னை போலீஸ் கமிஷ்னருக்கும் கலெக்டருக்கும் தந்தி அனுப்பிய குப்புசாமி, போலீசார் வந்தபின்பு துப்பாக்கியை ஒப்படைத்தார். அவரோடு ஏழு தலித்துகளும் கைதுசெய்யப்பட்டனர். 

  •  

கங்கைகொண்ட சோழபுரம்

 

நம் தமிழ்நாட்டின் முக்கியப் பெருமைகளில் ஒன்று என்றால் அது நம் வரலாற்றுச் சின்னங்களும், பிரம்மாண்டமான பழமையான ஆலயங்களும்தான். அந்த வகையில் 1090 ஆண்டுகள் பழமையான  கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. யுனெசுகோ பாரம்பரிய தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள இக்கோவில் சோழர் கட்டிடக்கலையின் ஒரு அற்புத அடையாளம்.
இராசராச சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் பிறந்தவன் மதுராந்தகன் என்ற இராசேந்திர சோழன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்று “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றவன்.
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, பெரிய சிவலிங்கத்தையும் நந்தியையும் உருவாக்கியவன் தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீசுவரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டியுள்ளான். தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து கும்பத்திற்கு அபிசேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது. புனித நன்னீராட்டு நீரை கோவிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன்மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தவன், கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்துக்கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வது வழக்கமாம். இக்கோவில் முழுவதும் வெண்மையாகக் காட்டியளிப்பதற்குக் காரணம் கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. தமிழகத்திலேயே மிகப்பெரிய இலிங்கம் இங்கு தான் உள்ளது. ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றான கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவன் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். 250 ஆண்டுகள் சோழர் பேரரசின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த கோயில், பிரமாண்டமான கலை, சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றான இக்கோவில் ஐராவதேசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில் எனப் போற்றப்பட்டு யுனெசுகோவின் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இதன் பிரம்மாண்டமான கோபுரத்தின் உயரம் 55 மீட்டர், அதாவது 180 அடி. 170 மீ உயரமும் 98 மீ அகலமும் கொண்ட ஒரு அழகான முற்றம் உள்ளது. பிரதான மூலவர் தெய்வம் 13 அடி உயரத்துடன் பிரம்மாண்டமாக நின்று அருள்பாலிக்கிறார். கட்டமைப்பின் முக்கிய பகுதி 341 அடி உயரமும் 100 அடி அகலமும் கொண்டது.

60 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன.

கருவறையில் சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கிறது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி . பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.

அண்மையில்தான் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது.
முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர், பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம்  இக்கோயிலில் அமைந்துள்ளது.

கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டான பொ.ஊ. 1035 ஆகும். கங்கைவரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.

முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த  முதலாம் குலோத்துங்க சோழனால் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும், தக்கயாகப்பரணியிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விளக்கங்களைக் காணமுடிகின்றது.  சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ள இக்கோவிலில், இசை, நடனம், வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற பற்பல கலாச்சார நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையினரால்   ஒரு பாரம்பரியமான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சரசுவதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் “ஞான சரசுவதி, ஞான லட்சுமி” என அழைக்கப்படுகின்றனர்.
9 வயது சிறுமியின் வடிவில் புன்னகைத்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிடாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். மிக அபூர்வமான இக்கோலத்தைக் கொண்டவளை “மங்கள சண்டி” என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள இலிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சி. அதேபோல் 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது.
கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும்.  இக்கோவிலின்  வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளன.  அவை முறையே  “வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும்.  வட கைலாய கோவிலில்  பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை  ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது.

சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே ‘மாளிகைமேடு’ ஆகும். செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி, விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியவை இங்கிருந்து பாடப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததும் இக்கோவில்தான்.
கங்கைகொண்டசோழீசுவரம் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் சயங்கொண்ட சோழபுரத்திருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோவிலின் பல பகுதிகளில், குறிப்பாக, பிரதான மண்டபத்தில் அற்புதமாகச் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள் உள்ளன.

ஆந்திரா, கர்நாடகா, வங்காளம் போன்ற பல இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிற்பங்கள் இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

 

 

  •  

நமீபியாவில் வாழும் ஹிம்பா பழங்குடிகள் – தீபா ஜெயபாலன்

ஹிம்பா: ஓர் அறிமுகம் அடர்ந்த பாலைவனங்கள் மற்றும் வறண்ட மலைப்பாங்கான நிலங்களால் சூழப்பட்ட நமீபியாவின் வடமேற்குப் பகுதியில் (குனேனே பிராந்தியம்) வாழும் ஓர் அரை நாடோடிப் பழங்குடியினர் தான் ஹிம்பா மக்கள். கிட்டத்தட்ட 50,000 மக்கள் தொகையைக் கொண்ட (2023 மதிப்பீடு) இவர்கள், தங்கள் பாரம்பரியத்தையும், தனித்துவமான வாழ்க்கை முறையையும் இன்று வரை கடைப்பிடிக்கின்ற இந்த பழங்குடியினர், உலகில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய கலாசார சமூகமாக விளங்குகின்றனர். ஹிம்பா மக்களின் பூர்வீகம் ஹிம்பா மக்கள், முதலில் ஹெரேரோ […]

Source

  •  

நீ வேறு, நான் வேறு – புதிய தொடர்

Pa Raghavan

இது காலம் கருதி ஆரம்பிக்கப்படுகிற தொடர். வரலாற்றால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் மறுமலர்ச்சி சரித்திரம்.

நமக்குப் பாலஸ்தீனப் பிரச்னை தெரிந்த அளவுக்குக் குர்திஸ்தான் பிரச்னை தெரியாது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அறிவோம். ஆனால் உய்குர் படுகொலைகள் பற்றி அறியமாட்டோம். அப்படித்தான், காஷ்மீர் பிரச்னையில் செலுத்தும் கவனத்தை பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் செலுத்தத் தவறினோம்.

இரண்டுக்கும் சம வயது. இரண்டுக்கும் காரணம் பாகிஸ்தான். ஒரே வித்தியாசம், காஷ்மீர் ஒன்றுபட்ட இந்தியாவின் ஓர் அங்கம். பலூசிஸ்தான் வஞ்சகத்தால் பாகிஸ்தானுடன் ஒட்ட வைக்கப்பட்ட, தனித்துவம் மிக்க ஓர் இனத்தவரின் மண். தனது சுதந்தரத்துக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான், காஷ்மீர் மீது படையெடுத்து எப்படி அதன் ஒரு பகுதியை அபகரித்ததோ, அதையேதான் பலூசிஸ்தானிலும் செய்தது. ஆனால்  ஒரு பகுதியல்ல. பலூச் மக்களின் மொத்த நிலத்தையும் எடுத்து விழுங்கிவிட்டது.

ஒரு வகையில் அது பிரிட்டனின் கூட்டுச் சதி. இன்னொரு வகையில் பாகிஸ்தானின் பிரத்தியேக சூழ்ச்சி வலை. எப்படியானாலும் இன்றுவரை பலூசிஸ்தான் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியா தம் பக்கம் நிற்க வேண்டும் என்று இன்றைக்குக் கோரிக்கை வைத்து, சுதந்தரப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.

இம்மாதம் (மே 2025) இரண்டாம் தேதி தொடங்கிய பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் ஒன்பதாம் தேதி அதன் உச்சத்தைத் தொட்டு, சுதந்தர பலூசிஸ்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகம் திகைக்க ஒரு நாளாக அன்று ஆகிப் போனது. உண்மையில் பலூசிஸ்தானை நாம் பொருட்படுத்திக் கவனிக்கத் தொடங்கியதே அதன் பிறகுதான். ஆனால் அந்த ஓர் அறிவிப்பின் பின்னால் எழுபத்தேழு ஆண்டுக் கால அடக்குமுறையும் மிதிபட்ட வேதனையும் வதைபட்ட வலியும் இழப்பின் கண்ணீர்க் கறையும் உண்டு.

பாகிஸ்தானின் முகம் என்று நாம் அறிந்த ஒன்றனுக்கு அப்பால் இன்னொரு முகம் அதற்குண்டு. அது இன்னும் பயங்கரமானது. மேலும் கொடூரமானது. ஈவு இரக்கமற்றது. நியாய தருமங்களைச் சற்றும் கருதாதது. பலூசிஸ்தான் மக்கள் அதைத்தான் இத்தனை ஆண்டுக் காலமாகவும் கண்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள். இது அவர்கள் விடுபடத் துடிக்கும் காலம்.

இருபதாண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் வரலாற்றை எழுத நேர்ந்தபோது பலூசிஸ்தான் விவகாரம் குறித்துப் படிக்கத் தொடங்கினேன்.  ஆனால் காஷ்மீரை மையப் புள்ளியாக வைத்து இந்தியா-பாகிஸ்தான் உறவு மற்றும் பகையின் கதையாக அது விரிந்தபோது பலூசிஸ்தான் பிரச்னை இயல்பாகவே அந்தக் கண்ணியில் விடுபட்டுப் போனது. இப்போது அதற்கு நேரம் அமைகிறது.

வரும் திங்கள்கிழமை முதல் (மே 19) மெட்ராஸ் பேப்பரில் நாள்தோறும் இதனை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். எப்போதும் என் உடன் இருக்கும் வாசக நண்பர்களை இப்போதும் வாசித்துக் கருத்துச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

அடிமையல்லாத ஆப்பிரிக்கர்களின் மக்கள்தொகை காலப்போக்கில் அதிகரித்தது வெள்ளையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள், விதிகளை இயற்றி அவற்றைப் பல வழிகளில் நடைமுறைப்படுத்தினர். 1783ஆம் ஆண்டுக்கு முன் வரையில் ஆப்பிரிக்கர்களில் அடிமையல்லாதவர்களுக்கும் சொத்து வைத்திருப்பவர்களுக்கும் வாக்குரிமை இருந்தது. 1802 முதல் அந்த உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் சொத்துக்களற்ற வெள்ளையர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 1796 முதல் அடிமையல்லாத ஆப்பிரிக்கர்கள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லமுடியாது என்ற நிலை ஏற்பட்டது.

அடிமைகளை விடுவிக்கவேண்டும், அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என வலியுறுத்திய மெதாடிஸ்ட் சமயப் பிரிவும் பழைமைவாதத்துக்குத் திரும்பியது. அடிமை உரிமையாளர்களான பிரமுகர் குழுவின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதற்காக ஆப்பிரிக்கர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 1800ஆம் ஆண்டு முதல் பல சமூக, வர்த்தக, பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த ஆண்டு அடிமைகள் திட்டமிட்டிருந்த ஆயுதமேந்திய புரட்சியொன்று தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு நசுக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் வெள்ளையர்களைக் கொல்வதற்காகச் சதித்திட்டம் தீட்டியதாக இன்னொரு ஆப்பிரிக்கர் தூக்கிலிடப்பட்டார். அடிமை ஆப்பிரிக்கர்கள் விடுதலை பெறுவார்கள் என்ற நம்பிக்கை பொய்யானது.

1810களில் மேரிலாண்டின் வர்த்தகமும் பொருளாதாரமும் பல்வேறு காரணங்களால் நலிவடைந்தன. டார்செஸ்டரின் முன்னணிக் குடும்பங்கள் பின்னடைவைச் சந்தித்தன. பல நூறு ஏக்கரில் பரந்து விரிந்த நிலங்களுக்கும் பல அடிமைகளுக்கும் உரிமையாளரான ஆண்டனி தாம்சன் கடனாளியானார். கடனைத் திருப்பித் தரமுடியாததால் 1817இல் சிறையிலடைக்கப்பட்டார். ஆனாலும் தன்னுடைய பண்ணையில் விவசாயம் செய்வதையும் மர அறுப்புத் தொழிலையும் நிறுத்தவில்லை.

இன்னொரு புறம், மேரிலாண்டைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அடிமைகளை விடுவிப்பதற்குப் பதிலாக அலபாமா, மிஸ்ஸிசிப்பி, லூசியானா, ஃபிளோரிடா, டெக்சஸ் போன்ற மற்ற மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு விற்றனர். இதனால் பல அடிமைக் குடும்பங்கள் பிரிய நேரிட்டது. இது அடிமைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஹாரியட்டின் பெற்றோரும் தங்கள் குடும்பத்தில் யாரை எப்போது எங்கே விற்பார்கள் என்ற பதற்றத்துடன் இருந்தனர்.

பல நேரங்களில் அடிமைக் குடும்பங்களைத் தண்டிப்பதற்காகவும் இப்படிச் செய்தனர் வெள்ளையர்கள். பெற்றோரும் குழந்தைகளும் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டதால் அடிமைகளில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் அவதிப்பட்டனர். மூன்றில் ஒருவரின் மணவாழ்வு பாதிக்கப்பட்டது. அப்படிப் பிரிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இறந்துபோனதும் நடந்தது.

அடிமைத்தளையில் சிக்கிய ஆப்பிரிக்கர்களுக்குத் திருமணம் என்ற பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சாத்தியமில்லை என்பது தெரிந்திருந்தது. ‘இந்தப் பெண்ணை அல்லது இந்த ஆணை மரணம் அல்லது தூரம் பிரித்து வைக்கும் வரையில் உங்கள் இணையராக ஏற்றுக் கொள்கிறீர்களா?’ என மணமக்கள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகூட மாற்றிச் சொல்லப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட சொற்களின் பொருளைப் புரிந்துகொண்ட இணையர்கள் மணமுடித்த பிறகு வாழ்க்கையை நடுக்கத்துடனும் அச்சத்துடனும் நடத்தினர். தங்களின் மணவாழ்வைப் பேணுவதற்கு எதிர்கொள்ளவேண்டிய இடர்களை நன்றாக அறிந்திருந்தனர். என்றாலும் தங்களுக்கென ஒரு குடும்பமிருந்தால் அடிமை வாழ்வின் கடுமையைக் குறைக்கும், இணையர், குழந்தைகள், உறவுகளின் அருகாமை ஆறுதலைத் தரும் என நம்பினர். எனவே, மணவாழ்வு நீடித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

திருமணம் என்பது சமயச் சடங்கு மட்டுமல்ல, குடிமுறை உரிமையும்கூட. ஆனால் சட்டபூர்வமான குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே உரித்தான உரிமை. சமூகத்தில் எந்தவிதமான உரிமையுமற்ற அடிமைகள் எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடமுடியாது. அதனால் அவர்களின் திருமணங்களும் சட்டத்தாலோ கிறிஸ்தவ சமயத்தினாலோ அங்கீகரிக்கப்படவில்லை, புனிதமானதாகக் கருதப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையைக் கடத்தினார்கள்.

ஆப்பிரிக்கர்களைத் தங்களின் மற்ற உடைமைகளைப்போலத்தான் வெள்ளையர்கள் நடத்தினர். அவர்கள் வாழ்வின் எல்லா முடிவுகளையும் வெள்ளை உரிமையாளர்கள்தான் எடுத்தனர். திருமணம் செய்துகொள்ளலாமா, எப்போது செய்யலாம், யாரைச் செய்யலாம் என்று அனைத்தும் அவர்கள் கையில்தான் இருந்தது. பல நேரங்களில் மனமொவ்வா ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயத் திருமணம்செய்து வைத்தனர். அடிமைகளாக இருக்கும் கொடுமையோடு பல வாழ்வியல், உள, உணர்வுச் சிக்கல்களுக்கும் ஆளாகினர் ஆப்பிரிக்கர்கள். அதிலும் அந்த ஆணோ பெண்ணோ வேறொருவரை விரும்பியிருந்தால் அவர்களின் வாழ்வே சீர்குலைந்துபோனது.

பணத்தேவையிருந்தால் இணையரில் ஒருவரை விற்கும் முடிவை எடுப்பதற்கும் தயங்கவில்லை வெள்ளை உரிமையாளர்கள். அடிமைகளின் மனைவியருடன் தங்களின் விருப்பத்துக்கேற்பப் பாலுறவுகொண்டனர். அவர்களைத் தங்களின் பல மனைவியரோடு ஒருவராக இருக்கச் செய்தனர். அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றவர்கள் அவர்களின் குடும்பத்தினரோடு வசிக்கவிடாமல் தடுத்தனர். அல்லது அவர்களை மீண்டும் அடிமைகளாக்கும் உத்திகளைச் செயல்படுத்தினர்.

ஒரு புறம் ஆப்பிரிக்கர்களை வெள்ளையர்களுக்குக் கீழ்நிலையிலும் விலங்குகளுக்குச் சற்று மேலேயும் இருப்பவர்கள் எனச் சொன்ன கிரேக்கப் படிமத்தை நம்பியதால் அவர்களுக்கு உணர்ச்சியோ சலனமோ கிடையாது, அதனால் நெருங்கிய உறவுகளைப் பிரிவது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று கூறினார்கள். மற்றொரு புறம் உரிமையாளர்கள் அடிமைகளை இரக்கத்துடன் நல்லவிதமாக நடத்தினார்கள், உணவும் உடையும் தங்குமிடமும் தந்தனர் என்று சொன்னார்கள். தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் அந்த இரண்டு கூற்றுகளிலும் உண்மையில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அடிமைத்தளை ஆப்பிரிக்க குடும்பங்களைச் சிதைத்து மக்களின் உடலையும் உள்ளத்தையும் எப்படியெல்லாம் காயப்படுத்தியது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

தங்களிடமிருந்து பிரித்து வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்ட உறவினர்களைத் தேடி ஆப்பிரிக்கர்கள் எழுதிய கடிதங்களையும் நாளிதழ்களில் வெளியிட்ட அறிக்கைகளையும் விளம்பரங்களையும் சேகரித்து அவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அந்தக் கடிதங்கள் அடிமைகள் அடிமை உரிமையாளர்களுக்கு எழுதியவை. நாளிதழ் விளம்பரங்களை அரசு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக வெளியிட்டனர். இவற்றோடுகூட ஆப்பிரிக்கர்களுக்கிடையே அமைந்த தகவல்தொடர்பு வலைப்பின்னலின் வழியே உறவுகளைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முயன்றனர்.

அடிமையல்லாதவர்களோ விடுவிக்கப்பட்டவர்களோ இன்னமும் அடிமைகளாக இருக்கும் தங்களின் இணையரையோ குழந்தைகளையோ விடுவிக்கவேண்டும் எனக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதங்களில் தங்களின் பிரிவுக்குக் காரணமானவர்களின்மீது பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது. கோரிக்கையாகவும் கட்டளையாகவும் இறைஞ்சலாகவும் விலைகொடுத்து வாங்கும் வணிகமாகவும் எனப் பல வழிகளில் அணுகுவதையும் பார்க்கமுடிகிறது.

பெரும்பாலான ஆப்பிரிக்கர்களுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது என்பதால் கடிதங்களையும் அறிவிப்புகளையும் எழுதுவதற்கு வெள்ளையர்களின் உதவி தேவை. அதற்காக அவர்களைப் பற்றி நல்ல வார்த்தை சொல்லிப் புகழவேண்டியிருந்தது. பல மாகாணங்களில் விடுதலை பெற்றவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் அல்லது அங்கே தங்குவதற்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அடிமைத்தளையில் இருப்பவர்கள் தப்பிக்க உதவிசெய்வது சட்டத்துக்கு எதிரானது என்பதால் அவர்களின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். இந்த எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி உறவினர்களோடு மீண்டும் இணையவேண்டும் என்ற உள்ளார்ந்த உந்துதலால் அந்தச் சவால்களையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.

பிரிக்கப்பட்ட உறவினர்களைத் தேடும் முயற்சியில் இறங்கிய அடிமைகளில் சிலர் கிறிஸ்தவ சமயத்தின் கோட்பாடுகளை எடுத்துச்சொல்லி வெள்ளை உரிமையாளர்களின் உதவியைப் பெறுவதற்கு முயன்றார்கள். அவர்களைக் கீழ்ப்படியச் செய்யப் பயன்பட்ட அதே மதம் அவர்கள் தங்களின் தன்மதிப்பு, தன்னியக்கம், எதிர்க்கும் ஆற்றல் ஆகியவற்றை உணர்ந்துகொள்ள உதவியது. அவர்கள் எழுதிய கடிதங்களில் கடவுள், சொர்க்கம், மறுமை ஆகியவற்றில் தங்களுக்குள்ள நம்பிக்கையை முன்னாள் உரிமையாளர்களிடம் எடுத்துச்சொல்லித் தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு முயற்சிசெய்தார்கள்.

ஜாக் ஹன்னிபல் என்ற ஆப்பிரிக்க அடிமை முன்னாள் உரிமையாளருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய குடும்பத்தினர் எங்கே உள்ளார்கள் என்று சமயத்தை முன்னிறுத்திக் கேட்கிறார். ‘வடக்கு கரோலினாவில் இருந்தபோது நீங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்த அதே கடவுளுக்கு உண்மையானவனாக இருக்கிறேன். மெதாடிஸ்ட் தேவாலயத்தின் உறுப்பினராக இருக்கிறேன்.’

1867இல் டெக்சஸைச் சேர்ந்த ஃபேனி என்பவர் தன்னுடைய சகோதரிக்கு கடிதம் எழுதினார். தன் குழந்தைகளை வேறொருவருக்கு விற்ற ப்ரூடஸ் ஸ்லேட் என்ற மனிதரிடம் ‘என்னுடைய குழந்தைகளைப் பிரிவதற்கு அவரே காரணம். அதற்காக அவர் கடவுளிடம் முழுமையாகப் பிரார்த்தனை செய்யவேண்டும். ஆனால், என் குழந்தைகளைக் கண்டுபிடிக்க உதவினால் கடவுள் அவர் செய்த பாவங்களை மன்னிக்கக்கூடும்.’

அர்கன்சஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஈஸ்டர் வேர் என்ற பெண் தன்னுடைய தந்தையான ஜேம்ஸ் வேர் என்பவரைத் தேடி நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டார். ‘தகவல் தேவை – அலபாமா டல்லேடேகா மாவட்டத்தில் என் தந்தை ஜேம்ஸ் வேருடன் 14வது வயது வரையில் வசித்தேன். பிறகு என்னுடைய எஜமானர் ஜிமிஸ் வேர் அவரை பென் ஆவரி என்பவருக்கு விற்றார். அவரைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் அவருடைய மகளிடம் தெரிவியுங்கள்.’

*

அட்ஹவ் பேட்டிசனைப்போலவே ஆண்டனி தாம்சனும் அவருடைய நண்பர்களும் அடிமைகளை விடுவிக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். அதே சமயம் உடனடியாகச் செயல்படுத்தாமல் படிப்படியாக நிறைவேற்றினர். 1830ஆம் ஆண்டில் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஆண்டனி தாம்சனிடம் 39 அடிமைகள் இருந்ததாகப் பதிவாகியுள்ளது. 1836இல் தான் இறப்பதற்கு முன்னர் தன்வசமிருந்த அடிமைகளை விடுவிக்கும் உயிலொன்றை எழுதினார். அதன்படி ஹாரியட்டின் தந்தை பென் ராஸ் 1840ஆம் ஆண்டு அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றார். அவருடன் ஜெரி மனோகீ என்ற அடிமையும் விடுவிக்கப்பட்டார். இருவருக்கும் தலா 10 ஏக்கர் நிலத்தையும் வழங்கினார் ஆண்டனி தாம்சன். இவர்களைத் தவிர மற்ற அடிமைகளையும் எப்போது விடுவிக்கவேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டார். குழந்தைகளை 44 வயதாகும்போது விடுதலை செய்யலாம் என்று எழுதினார்.

அவர் பண்ணையைச் சேர்ந்த பெண் அடிமைகள் அருகிலிருந்த மற்ற பண்ணைகளில் வேலைசெய்த அடிமைகளையோ அடிமையல்லாதவர்களையோ மணந்தனர். சில நேரங்களில் கணவனும் மனைவியும் ஒரே உரிமையாளரின் பண்ணையில் வேலைக்கமர்த்தப்படுவதுண்டு. மனநிறைவோடு குடும்ப வாழ்க்கை நடத்தும் அடிமைகளை விளைநிலத்துக்கு அருகிலேயே குடிவைத்தால் நன்றாக வேலைசெய்வார்கள் எனச் சில உரிமையாளர்கள் நம்பியதுதான் இதற்குக் காரணம்.

இப்படி அருகருகே அமைந்த பண்ணைகளைச் சேர்ந்த அடிமைகள் மணவாழ்வில் இணைந்ததால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் வாய்ப்பு அதிகரித்தது, அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. வெள்ளை உரிமையாளர்களின் குடும்பங்களோடு சமூக, பொருளாதாரப் பரிமாற்றம் நடந்து அதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையே தொடர்பு வலுப்பட்டது.

*

ஆண்டனி தாம்சனை இரண்டாவதாக மணந்துகொண்ட அட்ஹவ் பேட்டிசனின் பேத்தியான மேரி பேட்டிசன் ப்ராடஸ் தாம்சன் எதிர்பாராதவிதமாக 1810இல் இறந்துபோனார். மேரியின் மகன் எட்வர்டையும் அவருக்குச் சொந்தமான சொத்தையும் அடிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பை ஆண்டனி தாம்சன் ஏற்றார். அதே காலகட்டத்தில் தாம்சனின் பண்ணையில் வசித்த பென் ராஸ், ரிட் அடிமைத் தம்பதியினருக்கு அடுத்தடுத்து ஐந்து குழந்தைகள் பிறந்தன. அரமிண்டா என்னும் மிண்டி என்னும் ஹாரியட் 1822இல் பிறந்தார்.

எல்லா அடிமைகளையும்போலவே ஹாரியட் பிறந்த தேதியும் யாருக்கும் தெரியாது. அறுவடைக் காலம், பழங்களைப் பறிக்கும் காலம், இலையுதிர் காலம் என்று பருவங்களைக் கணக்கில்கொண்டு பிறந்த சமயத்தைக் குறிப்பிடுவதுதான் வழக்கம். 1822ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி ஹாரியட் க்ரீனின் மகப்பேற்றுக்காக ஆண்டனி தாம்சன் மருத்துவச்சிக்கு 2 டாலர்கள் கொடுத்ததாகக் கணக்குப் புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தக் குறிப்பின் உதவியோடுதான் ஹாரியட்டின் பிறந்த தேதியையும் ஆண்டையும் கணக்கிட்டனர் வரலாற்றாளர்கள்.

ஹாரியட் பிறந்த அதே வருத்தில் எட்வர்ட் ப்ராடஸுக்கு 21 வயது முடிந்தது. அதுவரையில் மாற்றாந்தந்தையின் பாதுகாப்பிலிருந்த தன்னுடைய சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றான். தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமையைப் பெற்றான். தாயின் அடிமைகள் இப்போது எட்வர்டின் உடைமைகளாயினர். அடுத்த ஓரிரு வருடங்களில் பக்டவுன் என்ற ஊரிலிருந்த தன்னுடைய பண்ணைக்குக் குடிபோனான் எட்வர்ட். பிறகு எலிசா ஆன் கீன் என்ற பெண்ணை மணந்துகொண்டான்.

1830இல் எட்வர்டிடம் ஒன்பது அடிமைகள் இருந்தனர். ரிட்டையும் அவரது குழந்தைகளையும் மட்டும் பத்து மைல் தொலைவில் பக்டவுன் என்ற ஊரிலிருந்த தன்னுடைய பண்ணைக்குக் கூட்டிச்சென்றான் எட்வர்ட் ப்ராடஸ். பென் ராஸ் ஆண்டனி தாம்சனின் பண்ணையில் வேலைசெய்தார். எட்வர்டுக்கு ரிட்டின் எல்லாக் குழந்தைகளையும் பராமரிப்பதில் நாட்டமில்லை. ரிட்டையும் அவர் குழந்தைகளையும் அக்கம்பக்கத்துப் பண்ணைகளுக்கு வேலைசெய்ய அனுப்பிவைத்துக் கூலியைப் பெற்றுக்கொண்டான் எட்வர்ட். அத்தோடு நிற்காமல் ரிட்டின் மூத்த மகள்களைச் சட்டத்துக்குப் புறம்பாக மிஸ்ஸிசிப்பியைச் சேர்ந்த நில உரிமையாளருக்கு விற்றான். நிலைத்தன்மையோடு அமைதியாக இருந்த ராஸ் குடும்பத்தினரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன, குடும்பம் சிதறுண்டது. இளவயதில் தாயை இழந்த எட்வர்டை வளர்ப்பதில் ரிட்டின் பங்கும் இருந்திருக்கும். எனினும் ரிட்டின் குழந்தைகளை அவரிடமிருந்து பிரிப்பதில் எட்வர்டுக்கு எந்த வருத்தமும் இருந்ததாகத் தெரியவில்லை.

சிறுமியான மிண்டியின் உள்ளத்தில் இந்த நிகழ்வுகள் பெரும்தாக்கத்தை உண்டாக்கின. ‘கண்ணை மூடினால் குதிரைகளின் குளம்படிச் சத்தமும் பெண்கள், குழந்தைகளின் அலறலும் அழுகையும்தான் மனதில் தோன்றி அச்சுறுத்தும்,’ என்று பின்னொரு காலத்தில் சொன்னார் ஹாரியட் டப்மன்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள் appeared first on கிழக்கு டுடே.

  •  

குலசாமி ஜான் பென்னிகுவிக்

‘கர்னல் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick)  நினைவு மணிமண்டபம்’ என்ற பெயரைத் தாங்கிக்கொண்டு, அந்த பச்சை நிறக் கட்டிடம் ஒரு வரலாற்று நாயகனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நின்று கொண்டிருந்தது. பின்னணியில் மனதைக் கவ்வும்...

The post குலசாமி ஜான் பென்னிகுவிக் first appeared on Her Stories.

  •  

தென்னாப்பிரிக்க ஜூலு பழங்குடிகள் – தீபா ஜெயபாலன்

தென்னாப்பிரிக்காவின் தென்கோடியில், தங்கமென மலர்ந்த இனம், பசுமையால் புனைந்த வனம், காற்றின் அலைகளும், களிறுபோல் விரிந்து பரந்த மலைச்சரிவுகளும், மண் வாசனையால் நெஞ்சைத் துளைக்கும் பசுமை மலைகளின் வாசல் வழியாகப் பளிங்குப் போல ஓடும் சுனைகளோடும், வானளாவும் மரங்களின் நிழலோடும் வாழும் பழங்குடியாம் ஜூலு! ஆளுமைத் தன்மைக்கும் பாரம்பரியத்திற்கும் அச்சாரமாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை முறையை எழுதிடப் பேரவா… ஜூலு பழங்குடி அறிமுகம்: ஜூலு பழங்குடி என்பது தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பழங்குடிகளில் ஒன்றாகும். ஜூலு மக்கள், நுகுனி […]

Source

  •  

சுத்தம் அறியா மேற்குலகு

குளித்தல், துவைத்த உடை உடுத்துதல் ஆகிய இரண்டும் உலகெங்கும் மனிதர்கள் காலம் காலமாகச் செய்துவருவது, அது அவர்களது கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்று தான் நான் போன மாதம் வரை நினைத்திருந்தேன்.  ஆனால் வரலாற்றைப் படிக்கப் படிக்கத் தான் நாம் பல விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாமல், நாமாக ஒன்றைக் கற்பிதம் செய்து கொண்டு திரிகிறோம் என்பது தெரிகிறது.     Katherina Ashenburg  எழுதியிருக்கும் Clean – An Unsanitised History of Washing   ( சுத்தத்தின் அசுத்தமான வரலாறு) என்ற நூலைப் படித்த போது தான் குளித்தல், சுத்தமாக இருத்தல் பற்றிய எனது கற்பிதம் எவ்வளவு தவறு என்று தெரிந்தது.  கேதரினா கனடா நாட்டைச் சேர்ந்தவர்.  சிபிசி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். தி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரிப் பேராசிரியர். நிறைய அபுனைவுகளை எழுதிய பின் தனது 73வது வயதில் போனால் போகட்டும் என்று ஒரு நாவலும் எழுதி இருப்பவர்.  பொதுவாக சமூக வரலாறு தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால் நம் நாட்டில் இப்படி இல்லையே என்ற துக்கம் எனக்கு ஏற்படும். ஒரு மாறுதலுக்கு தமிழர்களாகிய நாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற பெருமித உணர்வைத் தந்த புத்தகம் இது.

19ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக நாகரீகமானவர்கள் என்று நாம் கருதும் ஐரோப்பியர்கள் குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொல்லும் புத்தகம் இது.  பொதுவாக சமூகத்தில் ஒரு வழக்கம் இருந்தால், அது மக்களது வாழ்க்கைத் தரம் உயர உயர மேம்படத் தான் செய்யும். காணாமல் போகாது. ஆனால் குளியல் விஷயத்தில் இது தலைகீழ். ஒரு காலத்தில் பொதுக் குளியலறை என்றெல்லாம்  ஏற்பாடுகள் வைத்திருந்த ஐரோப்பியர்கள் திடீரென அழுக்கு மூட்டைகளாக மாறிவிட்டார்கள்.  இருண்ட காலம் மாறி மறுமலர்ச்சிக் காலம் வந்த போதும், குளிப்பதில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. பைசா கோபுரத்தையும், மோனோலிசாவையும், ஈஃபிள் டவரையும், வெள்ளை மாளிகையையும்  குளிக்காமல் கொள்ளாமல்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் எல்லாம் குளித்து சுத்த பத்தமாக இருந்தவர்கள் தான் என்கிறார் கேதரினா.  அங்கெல்லாம் கட்டணக் குளியலறை இருந்திருக்கிறது. ஷவர் கூட உண்டு. என்ன, பாத்ரூம் சுவருக்கு அந்தப் பக்கமாக அடிமை ஒருவர் நின்று கொண்டு மாவு ஜல்லடை வழியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பார் !  ஜிம்னேஷியங்களில் கிரேக்கர்கள் நிர்வாணமாகத் தான் உடற்பயிற்சி  செய்வார்களாம். ஜிம்னேஷயம் என்ற சொல்லுக்கு நிர்வாண இடம் என்பதுதான் நேரடிப் பொருள் என்கிறார் கேதரினா.  உடற்பயிற்சி முடித்தவர்கள் குளித்து உடை மாற்ற அங்கு நல்ல வசதியான பாத்ரூம்கள் இருந்திருக்கின்றன.  அக்கால ஜெர்மனியில் கட்டணக் குளியலறையில் குளிப்பதற்காக சம்பளத்தில் ஒரு குளியல் அலவன்ஸ் ( பாடகெல்ட் – badegeld ) சேர்த்துத் தந்த காலமும் இருந்திருக்கிறது. ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென ஐரோப்பியர்கள் குளிக்காமல் , அழுக்கு ஆடைகளைப் போட்டுத் திரிபவர்களாக மாறிவிட்டார்கள்.  குளித்தல் என்பது மதரீதியான சடங்குகளில் ஒன்றாக மாறிப் போய்விட்டது.  சர்ச்சிற்கு சாமி கும்பிடப் போகும் போது குளிப்பது என்றானது. அதுவும் குறைந்து போய்,  சர்ச் வாசலில் ஒரு அண்டா நீரில் கையை மட்டும் நனைத்து குளித்ததாக பாவனை செய்து கொண்டு உள்ளே செல்லும் வழக்கம் வந்து விட்டது.

குளித்தல், சுத்தம் செய்து கொள்ளுதல் என்பது புறஉடல் சார்ந்ததாக இல்லாமல் அகம் சார்ந்ததாக மாறிவிட்டது.  குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள குளிப்பது, கை கழுவிக் கொள்ளுதல் என்றானது. ஏசுவிற்கு தண்டனை வழங்கியதும், பாண்டியஸ் பைலேட்  கைகழுவிக் கொண்டாராம். கைகழுவி விடுதல் என்ற சொல்லாடல் நம்மிடம் இருப்பதற்கு இது போன்ற காரணம் ஏதேனும் இருக்குமோ? என்று  தமிழறிஞர்கள் விளக்க வேண்டும்.  லேடி மேக்பத் டங்கனை கொலை செய்யுமாறு கணவனைத் தூண்டும் போது, கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும், இந்தப் பாவத்தைத் தொலைத்து விடலாம் என்கிறாள் – A little water clears us of this deed என்பது அவளது வசனம்.  இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கில் குளிப்பாட்டுதல் கிட்டத்தட்ட உலகெங்கும் இருக்கக் கூடிய ஒரு வழக்கம். அதற்கு நடைமுறை சார்ந்து எந்தக் காரணமும் இல்லாது போனாலும், இறுதி மரியாதையில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் இருக்கிறது.

ஆனாலும் கிறிஸ்தவ உலகம் குளிக்காமல், சுத்தமான உடைகள் அணியாமல் இருக்க ஆரம்பித்தது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாளும், ஈஸ்டருக்கு முதல் நாளும் மட்டும்தான் நாங்கள் குளிப்போம் என்று கிபி 1075ல் உல்ரிச்சில் ஒரு கிறிஸ்துவத் துறவி எழுதி வைத்திருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் இஸ்லாமிய உலகம் சுத்தத்திற்கு மிக மிக முக்கியத்துவம் தந்ததாக இருந்திருக்கிறது.  துருக்கியின் பொதுக் குளியலறையில் பல்வேறு வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு, ஆவி பறக்கும் வென்னீரில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இந்த பொதுக் குளியலறையின் பெயரைக் கேதரினா சொன்னதும் நான் அசந்து போனேன். அதற்கு ஹமாம் என்று பெயர். இன்று ஒரு பிரபலமான சோப் . இதைப் படிக்கும் சங்கிகள் இனி ஹமாம் சோப் வாங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் !  பண்டைக்கால குளியல் பற்றிய மற்றொரு  வியப்பான விஷயம், யூத ஆண்கள் குளிக்காதவர்கள் தான் என்றாலும், மாதவிலக்கான பெண்கள் மாதவிலக்கு வந்த ஏழாம் நாள்  மிக்வெ எனப்படும் குளியல் சடங்கை நிறைவேற்றிய பின்தான் கணவனோடு இணைய முடியும். மாதவிலக்கு, தீட்டு என்ற கருத்தாக்கங்கள்  உலகின் மற்றொரு  மூலையில், ஒரு யூத சமூகத்திலும் இருந்தது விந்தைதான்.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டு வரை யாரும் தினமும் குளிக்கவில்லை. ஒரு ஆடையை அணிந்தால் அது கந்தல் கந்தலாக கிழியும் வரை அதை அப்படியே போட்டுக் கொண்டு திரிவார்கள். மிகவும் மோசமானதும் அதை கழற்றித் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கந்தை. இப்போதும் நாம் வெப் சீரிஸ்களின் வரலாற்றுத் தொடர்களில் கதாபாத்திரங்களின் உடையலங்காரத்தில் இதைப் பார்க்க முடியும்.   அன்றைய வழக்கத்திற்கு மாறாக நெப்போலியனும் அவரது மனைவி ஜோசஃபினும்  தினமும் குளிக்கும் வழக்கமுள்ள சுத்தமானவர்கள். எனினும், நெப்போலியன்  “நாளை மாலை நான் பாரீஸ் வந்து விடுவேன். அதனால் நீ குளிக்க வேண்டாம்,“  என்று ஜோசஃபினுக்கு எழுதிய கடிதம் இன்றும் இருக்கிறது !

தொழிற் புரட்சி வந்தது. நிலக்கரி சுரங்கங்கள். நிலக்கரி இஞ்சின்கள் என்று ஐரோப்பாவே கரிப் புகையால் சூழப்பட்டதாக மாறியது. குளித்துத் தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தொழிற் புரட்சி ஒரு புறம் ஐரோப்பியர்களை செல்வந்தர்களாக ஆக்கியதோடு இல்லாமல், சுத்தமானவர்களாகவும் ஆக்கியது. அப்போதுதான் கிறிஸ்துவத்தில் மெதாடிஸம் என்ற பிரிவை உருவாக்கியவரான வெஸ்லி என்ற பாதிரியார் 1791ல் இன்று பள்ளி ஆசிரியைகளால் அடிக்கடி சொல்லப்படும் Clinliness is next to Godliness  என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார். மக்கள் தினமும் குளிக்க வேண்டும், துவைத்த ஆடைகளை அணிய வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில்தான் அன்று ஐரோப்பா இருந்தது.   சமுதாய ஒப்பந்தம் எழுதிய ரூஸோ சுத்தம், சுகாதாரம் என்பதை அறிவியல் கருத்தாகப் பார்க்காது, தனிநபர் ஒழுக்கப் பண்பாகப் பார்க்க வேண்டும் என்று எழுதினார்.

விலங்குகளின் கொழுப்பையும், எண்ணெயையும் கலந்து சோப் தயாரிக்கப்பட்டது.  பல்வேறு வகையான எண்ணெய்களைக் கலந்து புதுப்புது சோப் தயாரிக்கும் முயற்சிகள் பரவலாக நடந்தன. அப்படியான ஆராய்ச்சியில் பாமாயிலையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து தயாரிக்கப்பட்ட சோப் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.  அதன் மூலப்பொருட்களான பாம் மற்றும் ஆலிவ்வை சோ்த்து அதற்கு Palmolive என்று பெயரிட்டார்கள்.  இன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாழ்வில் ஒரு முறையேனும் பயன்படுத்தாத மனிதர் எவருமே உலகில் இல்லை எனலாம். 19ம் நூற்றாண்டில் திருமணத்திற்கான விளம்பரங்களில் நான் தினமும் குளிப்பவள் என்பதை தனது கூடுதல் தகுதியாக பெண்கள் குறிப்பிட ஆரம்பித்தார்களாம்.

கிருமிகள் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுத்தம் பேணுதல் அதிகரித்தது. குளிப்பது, துணி துவைப்பதைத் தாண்டி கை கழுவுதல் மிக முக்கியமானதாயிற்று. மருந்துப் பொருளான லிஸ்டரின் வாய்துர்நாற்றம் போக்கும்  முக்கியமான திரவமாயிற்று.

சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் உணர ஆரம்பித்ததும் வேறு பல மாற்றங்களும் ஏற்பட்டன. வீட்டிற்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வந்தன.  அமெரிக்காவில் வீட்டின் கூடம் அளவிற்கு பாத்ரூம் கட்டுவது முக்கியமான நாகரீகமாயிற்று.  இன்று நம் நாட்டிலும் கூட சொந்த வீடு கட்டுவோர் பலர்  ஆளுக்கு ஒரு கழிப்பறை என்ற கணக்கில் கட்டுவதைப் பார்க்கிறோம்.  இன்று ஒரு சராசரி அமெரிக்கர் வீட்டு பாத்ரூம் நம் நாட்டின் சிறந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தை விட படுசுத்தமாக கிருமிகள் இல்லாது இருக்குமாம்.

மின்சாரம், தொழிற்சாலைகளில் நவீனமயம், குதிரைகளுக்குப் பதில் மோட்டார் வாகனங்கள், மண் சாலைகளுக்குப் பதில் தூசிதும்பு இல்லாத தார் சாலைகள், வீடுகளில்,  விறகு, கரி அடுப்பிற்கு பதிலாக மண்ணெண்ணெய் ஸ்டவ் என்று மாற்றங்கள் நிகழ ஆரம்பித்த போது, மீண்டும் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலை உருவானது. நாம் நினைப்பதற்கு மாறாக 1920களில் ஐரோப்பா முழுவதும் சோப் விற்பனை குறைந்தது என்கிறார் கேதரினா. அப்போதுதான் சோப் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் என்ற ஒரு புது வியாபார யுக்தி உருவானது. ரேடியோ நாடகங்களுக்கு ஸ்பான்சராக சோப் கம்பெனிகள் விளம்பரம் செய்தன. அதனால், இந்த நாடகங்களுக்கே சோப் என்ற பெயர் வந்தது.  கண்மை, பௌடர், லிப்ஸ்டிக் என அழகுப் பொருட்கள் ஆயிரம் இருந்தாலும் கூட,  குறிப்பிட்ட சோப்பைப் பயன்படுத்தினால் அழகாகி விடலாம் என்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.   பத்து சோப் உறையைக் கொடுத்தால் பரிசு என்பது போன்ற திட்டங்கள். விளம்பரம் என்ற தொழில் பாய்ச்சல் வேகத்தில் வளர சோப் என்ற ஒற்றைப் பொருள் காரணமாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் இயற்கையான உடலின் வாசனை எது என்பதே தெரியாமல் போய் எல்லோரும் மாம்பழம், செர்ரி, அன்னாசி என்று பழ வாசனையில்தான் இருக்கிறார்கள் என்கிறார் கேதரின். எனக்கு சிறுவயதில் அவள் பழவாசனையோடு இருந்தாள் என்று சுஜாதா எழுதியதைப் புரியாமல் படித்தது நினைவுக்கு வந்தது,

இத்தனை மாற்றங்கள் நடந்ததை எல்லாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி 1972ல் தான்   முதன்முறையாக bathroom என்பதை தன் அகராதியில் சேர்த்துக் கொண்டதாம். கல்வியாளர்கள் எல்லா நாட்டிலும் இப்படித்தான் மந்தமாக இருக்கிறார்கள்.

இன்று கொரானா காலத்தில், அதற்குப் பிறகான காலத்தில் சுத்தத்திற்கான முக்கியத்துவம் எவ்வளவு அதிகரித்து விட்டது என்று யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதே இல்லை.  பெட்ரோலிய நிறுவனமான ஷெல் எந்தப் போக்குவரத்தும் அற்ற அந்த ஊரடங்குக் காலத்தில் சும்மா இருக்காமல் ஹேண்ட்வாஷ் தயாரித்து விற்றது என என் உறவினரான அதன் உயரதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

புத்தகத்தைப் படித்து முடித்த போது, வழக்கத்துக்கு மாறாக நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.  போப் ஆண்டவர்களும், எடின்பரோ கோமகன்களும், விக்டோரியா மகாராணிகளும் மாதக் கணக்கில் குளிக்காமல், அழுக்கு உடைகளோடு திரிந்த காலத்தில் நம் முன்னோர்கள் கந்தையானாலும் கசக்கிக் கட்டினார்கள். அப்படிக் கசக்கும் போது அது கிழிந்து போனாலும், இக்கலிங்கம் போனாலென்ன, ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை என்று கவி பாடினான் எங்கள் ஊர்க்காரன் ஒருவன்.  இந்த ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Clean – An Unsanitised History Of Washing  by Katherina Ashenburg.

நன்றி – உயிர்மை ஏப்ரல் 2025 இதழ்

  •  

சுத்தம் அறியா மேற்குலகு

குளித்தல், துவைத்த உடை உடுத்துதல் ஆகிய இரண்டும் உலகெங்கும் மனிதர்கள் காலம் காலமாகச் செய்துவருவது, அது அவர்களது கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்று தான் நான் போன மாதம் வரை நினைத்திருந்தேன்.  ஆனால் வரலாற்றைப் படிக்கப் படிக்கத் தான் நாம் பல விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாமல், நாமாக ஒன்றைக் கற்பிதம் செய்து கொண்டு திரிகிறோம் என்பது தெரிகிறது.     Katherina Ashenburg  எழுதியிருக்கும் Clean – An Unsanitised History of Washing   ( சுத்தத்தின் அசுத்தமான வரலாறு) என்ற நூலைப் படித்த போது தான் குளித்தல், சுத்தமாக இருத்தல் பற்றிய எனது கற்பிதம் எவ்வளவு தவறு என்று தெரிந்தது.  கேதரினா கனடா நாட்டைச் சேர்ந்தவர்.  சிபிசி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். தி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரிப் பேராசிரியர். நிறைய அபுனைவுகளை எழுதிய பின் தனது 73வது வயதில் போனால் போகட்டும் என்று ஒரு நாவலும் எழுதி இருப்பவர்.  பொதுவாக சமூக வரலாறு தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால் நம் நாட்டில் இப்படி இல்லையே என்ற துக்கம் எனக்கு ஏற்படும். ஒரு மாறுதலுக்கு தமிழர்களாகிய நாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற பெருமித உணர்வைத் தந்த புத்தகம் இது.

19ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக நாகரீகமானவர்கள் என்று நாம் கருதும் ஐரோப்பியர்கள் குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொல்லும் புத்தகம் இது.  பொதுவாக சமூகத்தில் ஒரு வழக்கம் இருந்தால், அது மக்களது வாழ்க்கைத் தரம் உயர உயர மேம்படத் தான் செய்யும். காணாமல் போகாது. ஆனால் குளியல் விஷயத்தில் இது தலைகீழ். ஒரு காலத்தில் பொதுக் குளியலறை என்றெல்லாம்  ஏற்பாடுகள் வைத்திருந்த ஐரோப்பியர்கள் திடீரென அழுக்கு மூட்டைகளாக மாறிவிட்டார்கள்.  இருண்ட காலம் மாறி மறுமலர்ச்சிக் காலம் வந்த போதும், குளிப்பதில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. பைசா கோபுரத்தையும், மோனோலிசாவையும், ஈஃபிள் டவரையும், வெள்ளை மாளிகையையும்  குளிக்காமல் கொள்ளாமல்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் எல்லாம் குளித்து சுத்த பத்தமாக இருந்தவர்கள் தான் என்கிறார் கேதரினா.  அங்கெல்லாம் கட்டணக் குளியலறை இருந்திருக்கிறது. ஷவர் கூட உண்டு. என்ன, பாத்ரூம் சுவருக்கு அந்தப் பக்கமாக அடிமை ஒருவர் நின்று கொண்டு மாவு ஜல்லடை வழியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பார் !  ஜிம்னேஷியங்களில் கிரேக்கர்கள் நிர்வாணமாகத் தான் உடற்பயிற்சி  செய்வார்களாம். ஜிம்னேஷயம் என்ற சொல்லுக்கு நிர்வாண இடம் என்பதுதான் நேரடிப் பொருள் என்கிறார் கேதரினா.  உடற்பயிற்சி முடித்தவர்கள் குளித்து உடை மாற்ற அங்கு நல்ல வசதியான பாத்ரூம்கள் இருந்திருக்கின்றன.  அக்கால ஜெர்மனியில் கட்டணக் குளியலறையில் குளிப்பதற்காக சம்பளத்தில் ஒரு குளியல் அலவன்ஸ் ( பாடகெல்ட் – badegeld ) சேர்த்துத் தந்த காலமும் இருந்திருக்கிறது. ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென ஐரோப்பியர்கள் குளிக்காமல் , அழுக்கு ஆடைகளைப் போட்டுத் திரிபவர்களாக மாறிவிட்டார்கள்.  குளித்தல் என்பது மதரீதியான சடங்குகளில் ஒன்றாக மாறிப் போய்விட்டது.  சர்ச்சிற்கு சாமி கும்பிடப் போகும் போது குளிப்பது என்றானது. அதுவும் குறைந்து போய்,  சர்ச் வாசலில் ஒரு அண்டா நீரில் கையை மட்டும் நனைத்து குளித்ததாக பாவனை செய்து கொண்டு உள்ளே செல்லும் வழக்கம் வந்து விட்டது.

குளித்தல், சுத்தம் செய்து கொள்ளுதல் என்பது புறஉடல் சார்ந்ததாக இல்லாமல் அகம் சார்ந்ததாக மாறிவிட்டது.  குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள குளிப்பது, கை கழுவிக் கொள்ளுதல் என்றானது. ஏசுவிற்கு தண்டனை வழங்கியதும், பாண்டியஸ் பைலேட்  கைகழுவிக் கொண்டாராம். கைகழுவி விடுதல் என்ற சொல்லாடல் நம்மிடம் இருப்பதற்கு இது போன்ற காரணம் ஏதேனும் இருக்குமோ? என்று  தமிழறிஞர்கள் விளக்க வேண்டும்.  லேடி மேக்பத் டங்கனை கொலை செய்யுமாறு கணவனைத் தூண்டும் போது, கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும், இந்தப் பாவத்தைத் தொலைத்து விடலாம் என்கிறாள் – A little water clears us of this deed என்பது அவளது வசனம்.  இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கில் குளிப்பாட்டுதல் கிட்டத்தட்ட உலகெங்கும் இருக்கக் கூடிய ஒரு வழக்கம். அதற்கு நடைமுறை சார்ந்து எந்தக் காரணமும் இல்லாது போனாலும், இறுதி மரியாதையில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் இருக்கிறது.

ஆனாலும் கிறிஸ்தவ உலகம் குளிக்காமல், சுத்தமான உடைகள் அணியாமல் இருக்க ஆரம்பித்தது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாளும், ஈஸ்டருக்கு முதல் நாளும் மட்டும்தான் நாங்கள் குளிப்போம் என்று கிபி 1075ல் உல்ரிச்சில் ஒரு கிறிஸ்துவத் துறவி எழுதி வைத்திருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் இஸ்லாமிய உலகம் சுத்தத்திற்கு மிக மிக முக்கியத்துவம் தந்ததாக இருந்திருக்கிறது.  துருக்கியின் பொதுக் குளியலறையில் பல்வேறு வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு, ஆவி பறக்கும் வென்னீரில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இந்த பொதுக் குளியலறையின் பெயரைக் கேதரினா சொன்னதும் நான் அசந்து போனேன். அதற்கு ஹமாம் என்று பெயர். இன்று ஒரு பிரபலமான சோப் . இதைப் படிக்கும் சங்கிகள் இனி ஹமாம் சோப் வாங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் !  பண்டைக்கால குளியல் பற்றிய மற்றொரு  வியப்பான விஷயம், யூத ஆண்கள் குளிக்காதவர்கள் தான் என்றாலும், மாதவிலக்கான பெண்கள் மாதவிலக்கு வந்த ஏழாம் நாள்  மிக்வெ எனப்படும் குளியல் சடங்கை நிறைவேற்றிய பின்தான் கணவனோடு இணைய முடியும். மாதவிலக்கு, தீட்டு என்ற கருத்தாக்கங்கள்  உலகின் மற்றொரு  மூலையில், ஒரு யூத சமூகத்திலும் இருந்தது விந்தைதான்.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டு வரை யாரும் தினமும் குளிக்கவில்லை. ஒரு ஆடையை அணிந்தால் அது கந்தல் கந்தலாக கிழியும் வரை அதை அப்படியே போட்டுக் கொண்டு திரிவார்கள். மிகவும் மோசமானதும் அதை கழற்றித் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கந்தை. இப்போதும் நாம் வெப் சீரிஸ்களின் வரலாற்றுத் தொடர்களில் கதாபாத்திரங்களின் உடையலங்காரத்தில் இதைப் பார்க்க முடியும்.   அன்றைய வழக்கத்திற்கு மாறாக நெப்போலியனும் அவரது மனைவி ஜோசஃபினும்  தினமும் குளிக்கும் வழக்கமுள்ள சுத்தமானவர்கள். எனினும், நெப்போலியன்  “நாளை மாலை நான் பாரீஸ் வந்து விடுவேன். அதனால் நீ குளிக்க வேண்டாம்,“  என்று ஜோசஃபினுக்கு எழுதிய கடிதம் இன்றும் இருக்கிறது !

தொழிற் புரட்சி வந்தது. நிலக்கரி சுரங்கங்கள். நிலக்கரி இஞ்சின்கள் என்று ஐரோப்பாவே கரிப் புகையால் சூழப்பட்டதாக மாறியது. குளித்துத் தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தொழிற் புரட்சி ஒரு புறம் ஐரோப்பியர்களை செல்வந்தர்களாக ஆக்கியதோடு இல்லாமல், சுத்தமானவர்களாகவும் ஆக்கியது. அப்போதுதான் கிறிஸ்துவத்தில் மெதாடிஸம் என்ற பிரிவை உருவாக்கியவரான வெஸ்லி என்ற பாதிரியார் 1791ல் இன்று பள்ளி ஆசிரியைகளால் அடிக்கடி சொல்லப்படும் Clinliness is next to Godliness  என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார். மக்கள் தினமும் குளிக்க வேண்டும், துவைத்த ஆடைகளை அணிய வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில்தான் அன்று ஐரோப்பா இருந்தது.   சமுதாய ஒப்பந்தம் எழுதிய ரூஸோ சுத்தம், சுகாதாரம் என்பதை அறிவியல் கருத்தாகப் பார்க்காது, தனிநபர் ஒழுக்கப் பண்பாகப் பார்க்க வேண்டும் என்று எழுதினார்.

விலங்குகளின் கொழுப்பையும், எண்ணெயையும் கலந்து சோப் தயாரிக்கப்பட்டது.  பல்வேறு வகையான எண்ணெய்களைக் கலந்து புதுப்புது சோப் தயாரிக்கும் முயற்சிகள் பரவலாக நடந்தன. அப்படியான ஆராய்ச்சியில் பாமாயிலையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து தயாரிக்கப்பட்ட சோப் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.  அதன் மூலப்பொருட்களான பாம் மற்றும் ஆலிவ்வை சோ்த்து அதற்கு Palmolive என்று பெயரிட்டார்கள்.  இன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாழ்வில் ஒரு முறையேனும் பயன்படுத்தாத மனிதர் எவருமே உலகில் இல்லை எனலாம். 19ம் நூற்றாண்டில் திருமணத்திற்கான விளம்பரங்களில் நான் தினமும் குளிப்பவள் என்பதை தனது கூடுதல் தகுதியாக பெண்கள் குறிப்பிட ஆரம்பித்தார்களாம்.

கிருமிகள் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுத்தம் பேணுதல் அதிகரித்தது. குளிப்பது, துணி துவைப்பதைத் தாண்டி கை கழுவுதல் மிக முக்கியமானதாயிற்று. மருந்துப் பொருளான லிஸ்டரின் வாய்துர்நாற்றம் போக்கும்  முக்கியமான திரவமாயிற்று.

சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் உணர ஆரம்பித்ததும் வேறு பல மாற்றங்களும் ஏற்பட்டன. வீட்டிற்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வந்தன.  அமெரிக்காவில் வீட்டின் கூடம் அளவிற்கு பாத்ரூம் கட்டுவது முக்கியமான நாகரீகமாயிற்று.  இன்று நம் நாட்டிலும் கூட சொந்த வீடு கட்டுவோர் பலர்  ஆளுக்கு ஒரு கழிப்பறை என்ற கணக்கில் கட்டுவதைப் பார்க்கிறோம்.  இன்று ஒரு சராசரி அமெரிக்கர் வீட்டு பாத்ரூம் நம் நாட்டின் சிறந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தை விட படுசுத்தமாக கிருமிகள் இல்லாது இருக்குமாம்.

மின்சாரம், தொழிற்சாலைகளில் நவீனமயம், குதிரைகளுக்குப் பதில் மோட்டார் வாகனங்கள், மண் சாலைகளுக்குப் பதில் தூசிதும்பு இல்லாத தார் சாலைகள், வீடுகளில்,  விறகு, கரி அடுப்பிற்கு பதிலாக மண்ணெண்ணெய் ஸ்டவ் என்று மாற்றங்கள் நிகழ ஆரம்பித்த போது, மீண்டும் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலை உருவானது. நாம் நினைப்பதற்கு மாறாக 1920களில் ஐரோப்பா முழுவதும் சோப் விற்பனை குறைந்தது என்கிறார் கேதரினா. அப்போதுதான் சோப் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் என்ற ஒரு புது வியாபார யுக்தி உருவானது. ரேடியோ நாடகங்களுக்கு ஸ்பான்சராக சோப் கம்பெனிகள் விளம்பரம் செய்தன. அதனால், இந்த நாடகங்களுக்கே சோப் என்ற பெயர் வந்தது.  கண்மை, பௌடர், லிப்ஸ்டிக் என அழகுப் பொருட்கள் ஆயிரம் இருந்தாலும் கூட,  குறிப்பிட்ட சோப்பைப் பயன்படுத்தினால் அழகாகி விடலாம் என்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.   பத்து சோப் உறையைக் கொடுத்தால் பரிசு என்பது போன்ற திட்டங்கள். விளம்பரம் என்ற தொழில் பாய்ச்சல் வேகத்தில் வளர சோப் என்ற ஒற்றைப் பொருள் காரணமாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் இயற்கையான உடலின் வாசனை எது என்பதே தெரியாமல் போய் எல்லோரும் மாம்பழம், செர்ரி, அன்னாசி என்று பழ வாசனையில்தான் இருக்கிறார்கள் என்கிறார் கேதரின். எனக்கு சிறுவயதில் அவள் பழவாசனையோடு இருந்தாள் என்று சுஜாதா எழுதியதைப் புரியாமல் படித்தது நினைவுக்கு வந்தது,

இத்தனை மாற்றங்கள் நடந்ததை எல்லாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி 1972ல் தான்   முதன்முறையாக bathroom என்பதை தன் அகராதியில் சேர்த்துக் கொண்டதாம். கல்வியாளர்கள் எல்லா நாட்டிலும் இப்படித்தான் மந்தமாக இருக்கிறார்கள்.

இன்று கொரானா காலத்தில், அதற்குப் பிறகான காலத்தில் சுத்தத்திற்கான முக்கியத்துவம் எவ்வளவு அதிகரித்து விட்டது என்று யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதே இல்லை.  பெட்ரோலிய நிறுவனமான ஷெல் எந்தப் போக்குவரத்தும் அற்ற அந்த ஊரடங்குக் காலத்தில் சும்மா இருக்காமல் ஹேண்ட்வாஷ் தயாரித்து விற்றது என என் உறவினரான அதன் உயரதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

புத்தகத்தைப் படித்து முடித்த போது, வழக்கத்துக்கு மாறாக நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.  போப் ஆண்டவர்களும், எடின்பரோ கோமகன்களும், விக்டோரியா மகாராணிகளும் மாதக் கணக்கில் குளிக்காமல், அழுக்கு உடைகளோடு திரிந்த காலத்தில் நம் முன்னோர்கள் கந்தையானாலும் கசக்கிக் கட்டினார்கள். அப்படிக் கசக்கும் போது அது கிழிந்து போனாலும், இக்கலிங்கம் போனாலென்ன, ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை என்று கவி பாடினான் எங்கள் ஊர்க்காரன் ஒருவன்.  இந்த ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Clean – An Unsanitised History Of Washing  by Katherina Ashenburg.

நன்றி – உயிர்மை ஏப்ரல் 2025 இதழ்

  •  

அலிப்பூர் சிறை அருங்காட்சியகம்

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் சிறைவைக்கபட்டிருந்த கொல்கத்தாவின் அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தற்போது மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன்.

15.2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது சிறைச்சாலை. செங்கல்-சிவப்பு சுவர்களால் ஆன கட்டிடங்கள். பதினெட்டு அடி உயர சுற்றுச்சுவர், வளாகத்தினுள் நிறைய மரங்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள். வரலாற்றின் சாட்சியமாக உள்ள தூக்குமேடை, சுதந்திரப் போராட்டகால நாளிதழ் செய்திகள், ஒவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

நேரு. நேதாஜி, பி.சி. ராய், சி.ஆர். தாஸ், கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாம் அடைத்து வைக்கபட்ட அறைகளைப் பார்வையிட்டேன். சிறையினுள் தலைவர்கள் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலச் சிலை வடித்திருக்கிறார்கள். உறுதியான கற்சுவர்கள். இரும்புக்கதவுகள். அதன் துருப்பிடித்த தாழ்ப்பாள். கறைபடிந்த தரை யாவிலும் காலம் உறைந்திருக்கிறது.

சரித்திரப் புத்தகங்களில் படித்திருந்த அலிப்பூர் சதிவழக்கும் அரவிந்தரும் நினைவில் வந்தபடி இருந்தார்கள். இந்தச் சிறைச்சாலையின் வரலாறு கண்ணீரால் எழுதப்பட வேண்டியது.

ஜனவரி 1930 முதல் செப்டம்பர் 1930 வரை இங்கே நேதாஜி சிறை வைக்கபட்டிருந்திருக்கிறார். அது போலவே பிப்ரவரி 17 முதல் மே 7, 1934 வரை நேரு சிறையில் அடைக்கபட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக இந்திராகாந்தி வந்து அமரும் மரத்தடியில் இந்திரா காந்தியின் சிலையினையும் அமைத்திருக்கிறார்கள்.

1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போருக்குப் பின்னால் சிறைச்சாலைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள். அதற்கு முன்பாகச் சிறிய சிறைச்சாலைகள் இருந்த போதும் அது கம்பெனியின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஆகவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதன்முதலில் டாக்கா சிறைச்சாலை (1790) உருவாக்கபட்டது. அதைத் தொடர்ந்து மிட்னாபூர் சிறைச்சாலை (1792 ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உருவாக்கபட்டதே அலிப்பூர் பிரசிடென்சி சிறைச்சாலை. அது 1864 ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

இப்போதுள்ள அலிப்பூர் சிறைச்சாலை 1906 இல் கட்டப்பட்டது. இதில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கைதிகளுக்காகப் பிரிக்கப்பட்ட தனித்தனிப் பகுதிகள், உயர்ந்த காவல்கோபுரம், தூக்குமேடை, மருத்துவமனை, தனிமைச்சிறைக்கூடம் அமைக்கபட்டிருக்கிறது. அந்தக் காலச் சிறைதண்டனைகள் மிகவும் கொடூரமானவை. அதுவும் அரசியல் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் பயங்கரமானவை. அதை அடையாளப்படுத்துவது போலத் தண்டனைக் காட்சி ஒன்றை சிலையாகச் செய்திருக்கிறார்கள்.

மரணத் தண்டனை கைதிகளுக்காக மூன்று தண்டனை அறைகள் காணப்படுகின்றன. ஒரு கைதி தூக்கிலிடப்படுவதை மற்றவர்கள் காணும் வகையில் அறைகளை அமைத்திருக்கிறார்கள்.

தூக்கிலிடப்பட்ட அரசியல் கைதிகளின் நினைவாக அவர்கள் புகைப்படத்துடன் கூடிய தனிக்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. தூக்கு மேடைக்கு அருகில் ஒரு பிரேத பரிசோதனை அறை உள்ளது. தேசவிடுதலைக்காகத் தூக்கிலிடப்பட்டவர்களின் சராசரி வயது இருபது முதல் முப்பதுக்குள். மரணதண்டனை விதிக்கபட்ட கைதிகளில் ஒருவர் நான்கு மாதங்களுக்குள் 110 கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

குதிராம் போஸ்

இந்தச் சிறையில் தான் புரட்சியாளர் குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவரது வயது 18. இந்த நினைவகத்தினுள் நாள் முழுவதும் வந்தேமாதரம் பாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அதைக் கேட்கும் போது மிகுந்த உணர்வெழுச்சி ஏற்படுகிறது.

சித்தரஞ்சன் தாஸ் 1921 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால், கைது செய்யப்பட்டு இதே சிறையின் 8வது அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் புத்தகம் படிப்பதற்குப் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் சிறையின் வெளியே படிப்பதற்கான மேடை அமைக்கபட்டது. சித்தரஞ்சன் தாஸ் அதில் குனிந்து படிப்பது போன்ற சிலை வைக்கபட்டிருக்கிறது

நஸ்ருல் இஸ்லாம்

சிறைக்கைதிகளுக்கான மருத்துவமனை, அச்சுக்கூடம், நெசவுக்கூடம், பயிற்சிக்கூடங்கள் தனியே காணப்படுகின்றன. கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாம் அடைத்து வைக்கபட்ட சிறையினுள் அவர் எழுதிய கவிதைநூல்கள் யாவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக உருவாக்கபட்ட அருங்காட்சியகம் என்பதால் தூய்மையாக, சிறப்பான பராமரிப்பில் வைத்திருக்கிறார்கள்.

காமராஜர் தனது 27 வயதில் உப்புசத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்டு இதே அலிப்பூர் சிறையில் அடைக்கபட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுச் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். அதைப் பற்றிய குறிப்புகளோ, அவர் இருந்த சிறை பற்றிய குறிப்போ அருங்காட்சியத்தில் காணப்படவில்லை.

இந்தச் சிறையில் ஒளிஒலிக்காட்சி ஒன்றும் நடைபெறுகிறது. அது மாலை நேரம் நடைபெறுவதால் நான் காணவில்லை.

  •  

வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

தொடக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவது எளிது. விடை கண்டுபிடிப்பது கடினம். இருந்தும், மனித மனம் தீரா ஆர்வத்தோடு இது எப்படித் தொடங்கியது, அது எப்படித் தொடங்கியது என்று எல்லாவற்றைக் குறித்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது இயல்பானதுதான் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி.

வரலாற்றின் தொடக்கப்புள்ளி எது? வரலாறு உதித்தது இங்கேதான் என்று எந்த இடத்தையும் முதல் வரலாற்றுப் பிரதியை உருவாக்கியவர் இவரே என்று எவரையும் திட்டவட்டமாகக் குறிப்பிடுவது கடினம். வரலாற்றின் ஆரம்பப் புள்ளி என்று கற்பனையை வேண்டுமானால் குறிப்பிடமுடியும். கடந்த காலத்தின் நினைவுகளைக் கற்பனைக் கூட்டி வண்ணமயமான கதைப் பாடல்களாகவும் தொன்மக் கதைகளாகவும் பண்டைய மக்கள் உருமாற்றினர். அதுதான் அவர்களுக்கு வரலாறாகத் தோன்றியிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான நிகழ்வுகளை அழகிய கதைகளாகவும் பாடல்களாகவும் உருமாற்றும்போது நினைவில் வைத்துக்கொள்வது எளிது; மற்றவர்களுக்குச் சுலபமாகக் கடத்தவும் முடியும்.

எழுத்துமுறை கண்டுபிடிக்கப்படும்வரை வாய்வழிக் கதைகளே வரலாறாகத் தோற்றம் கொண்டிருந்தன. எழுத்தில் பதிவு செய்யும் முறையைச் சில சமூகங்கள் கடைபிடிக்கத் தொடங்கியபோது அது மேலதிகப் பயன் தருவதாக அமைந்தது. ஒரு கதையையோ பாடலையோ கேட்டு சிறிது காலம் கழித்து. நினைவிலிருந்து மீட்டெடுக்கும்போது பிசகுகளும் மாற்றங்களும் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. எழுத்தில் பதிவு செய்யும்போது நிரந்தரத்தன்மை ஏற்பட்டுவிடுகிறது. தவிரவும், வாய்வழிக்கதைகள் சிறு குழுக்களிடையே தழைத்திருக்குமே தவிர தூர தேசங்களுக்கு அவ்வளவு எளிதில் சென்று சேராது. எழுதப்பட்ட கதைகளுக்கு எல்லைகள் கிடையாது. யாரெல்லாம் வாசிக்க முடியுமோ அவர்களுக்கெல்லாம் சென்று சேர்ந்துகொண்டே இருக்கும். மனிதப் பண்பாட்டு வரலாற்றில் எழுத்து, சந்தேகமின்றி ஒரு புதிய மைல்கல்.

0

வரலாற்று மரபு கிரேக்கத்திலிருந்து தொடங்குகிறது என்று ஐரோப்பியர்கள் பெருமிதம் கொள்வதுண்டு. ஆனால் எகிப்து, மெசபடோமியா, சிரியா ஆகிய பகுதிகளில் கடந்த காலத்தைப் பதிவு செய்யும் வழக்கம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. ஹோமருக்குச் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட ஒரு காவியம், கில்காமேஷ். எழுத்தில் கிடைக்கும் முதல் கில்காமேஷ் பிரதி பொஆமு 2100 ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சாகசம், வீரம், அறம், துயர் அனைத்தையும் உள்ளடக்கிய அபாரமான கதைப்பாடல் இது. கில்காமேஷ் நாம் அறிந்த முதல் நாயகனா என்று தெரியாது. ஆனால் முதல் துயர நாயகன் என்று சொல்லமுடியும் என்கிறார் கில்காமேஷை மொழிபெயர்த்த என்.கே. சாண்டர்ஸ். மெசபடோமியாவைச் சேர்ந்த உருக் எனும் சுமேரிய நகரின் மன்னர், கில்காமேஷ். பாதி கடவுள், பாதி மனிதன். எந்த அளவுக்கு மக்கள் அவரை நேசித்தார்களோ அதே அளவுக்கு அவரைக் கண்டு அஞ்சியிருக்கிறார்கள். தனது நண்பன் என்கிடுவின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கில்காமேஷ், சாகாவரம் வேண்டும் எனும் துடிப்போடு மேற்கொள்ளும் பயணம், மரணத்தை வெல்லமுடியாது எனும் கசப்பான உண்மையை ஏற்பதில் வந்து முடிவடைகிறது.

அக்காடிய மொழியில் இயற்றப்பட்ட இந்த முற்றுப்பெறாத காவியத்தை இலக்கியவாதிகள் மட்டுமின்றி வரலாற்றாளர்களும் ஆராய்ந்து வருகின்றர். காரணம், பல அசாதாரணமான செயல்கள் இடம்பெற்றிருந்தாலும் கில்காமேஷ் முழுக் கற்பனை கதையல்ல. சுமேரிய மன்னர்களின் பட்டியலில் கில்காமேஷின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் ஆண்டதாகச் சொல்லப்பட்ட காலம் (126 ஆண்டுகள்) அசாதாரணமானதாக இருக்கிறது.

0

யூத மரபுக்கென்று பண்டைய வரலாற்றெழுதியலில் ஓர் இடம் இருக்கிறது. விவிலியச் சட்ட நூல்களின் தொகுப்பான எபிரேய விவிலியம் (டனாக்) தனித்தன்மை வாய்ந்த ஒரு பிரதி. யூதர்களின் புனித நூல், கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு. பொஆமு 10 முதல் 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இயற்றப்பட்ட இந்தப் பிரதியில் வரலாற்றின் சில கூறுகளைக் காணலாம். உலகம் உருவான தருணத்திலிருந்து ஜெருசலேமின் வீழ்ச்சி (பொஆமு 586) வரையிலான நிகழ்வுகள் காலவரிசைப்படி விவரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விரிந்த அளவில் ஒரு நிலப்பரப்பின் கதை இதற்குமுன்பு சொல்லப்பட்டதில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது எபிரேய விவிலயத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியும். தேசங்களின் வரலாற்றை நவீன முறையில் எழுதும் வழக்கம் பின்னர் உருவாகி வந்த ஒன்று. அவ்வழக்கத்துக்கு முன்னோடியாக யூதர்கள் திகழ்ந்தனர்.

யூதர்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் மிகுதியாக இடம்பெற்றிருக்கின்றன என்றாலும் இன்னொரு பக்கம் தொன்மக் கதைகளும் தாராளமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதனிடம் முடிவடைந்தாலும் கடவுளிடமிருந்துதான் தொடங்குகிறது இப்பிரதி. கடவுள் எவ்வாறு உலகைப் படைத்தார் என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிப் பகுதியான ஜெருசலேமின் வீழ்ச்சியில் கடவுள் தோன்றவில்லை. பாபிலோனியாவால் ஜெருசலேம் முற்றுகையிடப்பட்டதும் வீழ்த்தப்பட்டதும் விவரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் நடந்ததுதான். கற்பனை மாந்தர்கள் ஒரு பக்கம் வருகிறார்கள். இன்னொரு பக்கம், பல வரலாற்று மாந்தர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

‘மனிதச் செயல்பாடுகளைவிடக் கடவுள்களின் செயல்பாடுகளே இப்பிரதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனிதர்கள் குறித்து மனிதர்களுக்காக இயற்றப்பட்டவை என்பதைவிட மனிதர்கள் கடவுளைப் புரிந்துகொள்வதற்காக இயற்றப்பட்ட பிரதிகள் என்றுதான் இவற்றை அழைக்கமுடியும். இத்தகைய பிரதிகளை வரலாறு என்று அழைக்க இயலாது. பண்டைய சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, எபிரேயப் பதிவுகளை பகுதியளவிலான வரலாறு என்று வேண்டுமானால் அழைக்கலாம். உண்மையான வரலாறு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க முடியாது. வரலாறு எனும் சமூக அறிவியல் துறை ஒரு நவீன கண்டுபிடிப்பு ’ என்கிறார் ஆங்கிலேய வரலாற்றாளரும் தத்துவவியலாளருமான ஆர்.ஜி. காலிங்வுட்.

வரலாற்றுத் தகவல்கள் இருப்பதாலேயே இவற்றையெல்லாம் வரலாறாகக் கொள்ளமுடியாது. கதைகள் இருப்பதாலேயே இவற்றை வரலாற்றாளர்கள் புறக்கணிக்கவும் முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் கற்பனையும் உண்மையும் கலந்த பிரதிகள் உயிர்த்திருக்கின்றன. இப்பிரதிகளில் விருப்பு வெறுப்பற்ற அணுகுமுறை கிடையாது. வேண்டுபவர்களை உயர்த்தியும் வேண்டாதவர்களைத் தாழ்த்தியும் பார்க்கும் போக்கே நிலவியிருக்கிறது. கடந்த காலம் குறித்து என்ன எழுதப்பட்டிருந்தாலும் அதை வரலாறு என்று நாம் ஏற்றுக்கொண்டுவிடக்கூடாது. கிரேக்க வரலாற்றெழுதியல் தோன்றுவதற்கு முந்தைய பிரதிகளை இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் காலிங்வுட்.

0

மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்று கிரேக்கம் அழைக்கப்படுகிறது. இலக்கியம், ஜனநாயகம், வரலாறு, தத்துவம், அரசியல், அறிவியல் என்று தொடங்கி அனைத்துத் துறைகளும் கிரேக்கத்தின் மடியில்தான் பிறந்து, வளர்ந்து, தழைத்தன என்பது மேற்கத்திய சமூகங்களின் பொதுவான நம்பிக்கை.

மேற்கத்திய வரலாற்றுப் பதிவுகளை ஐந்து பிரிவுகளின்கீழ் தொகுக்கமுடியும். கிரேக்கச் செவ்வியல் பதிவுகள், கிரேக்க ரோமப் பதிவுகள், ரோமப் பதிவுகள், யூதப் பதிவுகள், கிறிஸ்தவப் பதிவுகள். கிரேக்கச் செவ்வியல் காலத்தின் தொடக்கத்திலிருந்து (பொஆமு 6-5ஆம் நூற்றாண்டு) ரோமப் பேரரசின் வீழ்ச்சி (பொஆ 6-5ஆம் நூற்றாண்டு) வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பதிவுகள் இவை. உருவானவை ஏராளம் என்றாலும் கிடைத்திருப்பவை குறைவுதான்.

நாம் பார்த்த பிற மரபுகள்போலவே கிரேக்க வரலாற்று மரபும் வாய்வழிக்கதைகளிலிருந்தே தொடங்குகிறது. சுமேரியர்களுக்கு கில்காமேஷ் என்றால் கிரேக்கர்களுக்கு ஹோமர் (பொஆமு 8ஆம் நூற்றாண்டு). கில்காமேஷ் போலவே ஹோமரின் இலியட், ஒடிசி இரண்டும் வாய்மொழிக் கதைகளாக நீண்டகாலம் மக்களிடையே புழங்கி பின்னர் எழுத்து வடிவம் பெற்றவை. கில்காமேஷ்போலவே இவற்றிலும் கடவுள்கள் வருகிறார்கள். கில்காமேஷை இயற்றியவர் யார் என்பது தெரியாது. ஹோமர் என்றொருவர் (ஒருவரா, சிலரா, பலரா?) இருந்தார் என்பதுகூட உறுதியானதல்ல. டிரோஜன் போர் எனும் உண்மை நிகழ்வுதான் இலியட், ஒடிசி இரண்டுக்குமான அடிப்படை என்றாலும் காலிங்வுட் வரையறுப்பதுபோல் இவை வரலாற்றுப் பிரதிகள் கிடையாது. கடந்த காலம் குறித்த நினைவுகளிலிருந்து கிளர்த்தெழுந்த செழிப்பான கற்பனைக் கதைகள்.

0

நாம் இதுவரை பார்த்த பிரதிகளில் சில பொதுப்பண்புகளைக் காணமுடியும். கடவுள்களும் அரைக் கடவுள்களும் அசாதாரண ஆற்றல்மிக்க ஆட்சியாளர்களும் பண்டைய படைப்புகளில் மிகுந்திருந்தனர். ஆட்சியாளர்களின் பட்டியல், குல வரிசை போன்றவற்றிலும் மிகை கலந்தே இருந்தது. கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் எந்த எல்லைக்கோட்டையும் அப்போதைய மக்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை.

கில்காமேஷ் தொடங்கி ஒடிசி வரையிலான படைப்புகளில் இயற்கை ஒரு முக்கியச் சக்தியாகத் திகழ்கிறது. இன்று நாம் இயற்கையிலிருந்து விலகி நிற்கிறோம். அப்போதைய மக்கள் இயற்கையைத் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகக் கண்டனர். இடி, மின்னல், மழை, வெள்ளம் அனைத்தும் அவர்களுக்கு இயற்கையின் உயிரோட்டமான செயல்பாடுகள்.

வரலாற்றுக்கு முந்தைய மக்களின் சிந்தனையோட்டத்தில் மூன்று பிரதான அம்சங்கள் காணப்படுகின்றன என்கிறார் நவீன வரலாற்றெழுதியல் குறித்த விரிவானதோர் அறிமுக நூலை எழுதியிருக்கும் சஷி பூஷன் உபாத்யாய். முதலாவது, காலம் குறித்த பார்வை. காலத்தைத் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கும் சக்கரமாகக் அவர்கள் கண்டனர். முன்பொரு காலத்தில் என்னவெல்லாம் நடந்ததோ அவைதான் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன. இனியும் நடக்கும். மேலே இருப்பது கீழே வரும், கீழே இருப்பது மேலே வரும். இதுதான் வாழ்க்கை.

இரண்டாவது, தொன்மத்தின்மீதான மரியாதை. கடந்த காலம் தொன்மங்களிலிருந்து தொடங்குகிறது என்று பண்டைய மக்கள் நம்பினார்கள். அசாத்தியங்களும் அதிசயங்களும் அவர்களைப் பொறுத்தவரை மனித வாழ்வோடு ஒன்று கலந்தவை, இயல்பானவை. மூன்றாவது, மனித ஆற்றல் குறித்த பார்வை. மனிதர்கள் ஆள்பவர்கள் அல்லர், ஆளப்படுபவர்கள். நன்மையும் தீமையும் மனிதர்களின் செயல்பாடுகள்மூலம் வருபவை அல்ல. கடவுள்களும் இன்னபிற இயற்கைச் சக்திகளும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். எனவே மனித ஆற்றல் எல்லைக்குட்பட்டது என்று அவர்கள் கருதினார்கள்.

இந்தப் பொதுத்தன்மைகளிலிருந்து பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல் உரித்து, விடுபடுவதற்கு நீண்ட அவகாசம் பிடித்தது வரலாறுக்கு. ஹெரோடோடஸின் வரவுக்குப் பிறகு வரலாறு ஒரு புதிய பாதையில் நடைபோட ஆரம்பித்தது.

(தொடரும்)

The post வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள் appeared first on கிழக்கு டுடே.

  •  

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #4 – வளர்ச்சிக் காரணிகள்

காவல்

சிங்கப்பூர் ஒரு தீவு என்பது நமக்குத் தெரியும். அதுவும் நிலப்பரப்பின் ஒரு சந்தியில் இருக்கின்ற ஒரு சிறு புள்ளி. பெரும்நிலப்பரப்பின் எல்லைப் பரப்பில் இருக்கின்ற பகுதிக்குரிய இயல்பான குண இயல்புகளுடனேயே சிங்கப்பூர் இருந்தது. கண்காணிப்போ, கட்டுக் காவலோ இல்லை. வழியற்ற குடியேறிகள், வேறு இடங்களில் சட்டத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி ஓடிவரும் குற்றவாளிகள், சீனத்திலிருந்த வந்த கூட்டத்தில் கலந்து வந்த அபின் வணிகர்கள், சீன இரகசியக் கும்பல்கள், கிழக்கிந்திய கம்பெனியே கொண்டு வந்து இறக்கிய இந்திய தமிழகச் சிறைவாசிகள் (அடிமை வேலைகளுக்காக!), துணிச்சலும் துடிப்புமான வியாபாரிகள் என்று அனைவரும் சங்கமித்துப் புழங்கும் இடமாக சிங்கப்பூர் அப்போது இருந்தது. இதோடு கிழக்கிந்திய கம்பெனியின் வணிகத்துக்கும் வர்த்தகத்தும் உதவி புரிவதற்காகக் கொண்டுவரப்பட்ட அல்லது அந்த வேலை வாய்ப்புகளுக்காக வந்த குடியேறிகளும் இருந்தார்கள்.

ஒரு புறம் பணப்புழக்கமும், உழைத்து, வணிகம் செய்து பிழைக்க வந்த பணம் சம்பாதிக்கும் கூட்டம்; மறுபுறம் ஏதிலிகள், ஒளிந்து கொள்ள வந்த குற்றவாளிகள் போன்றவர்கள். எளிதாகக் குற்றச் செயல்கள் நடக்கத் தொடங்கின. (சீனத்தில் அபின் என்ற போதைப்பொருளைப் புழங்க விட்டது பிரித்தானியர்தான். அதன்மூலம் சீனத்தையும் வளைக்கத் திட்டமிட்டார்கள். பிரித்தானியர்கள் சீனத்தில் அபினை இறக்கிச் செய்த உள்ளடி வேலைகளும், கொடுமைகளும் ஒரு பெரும் நெடுங்கதைக்கு உரிய பொருண்மை உள்ளவை. சீனர்கள் பெரும்பான்மையினர் அப்போது பிரித்தானியாவால் இறக்கிவிடப்பட்ட அபினுக்கு அடிமையானார்கள்; சீனர்களில் பெரும்பான்மை போதைப்புழங்கிகள் அப்போதைய தலைமுறையில் இருந்து வந்தவர்களே என்று சொன்னால் இது மிகையில்லை; சிங்கப்பூரிலும் கிழக்கிந்திய அபின் பண்ணைகளை வைத்திருந்தது. போருக்கு முந்தைய நிலையில் கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய வருமானத்தின் ஒரு பகுதி சிங்கையின் அபின் பண்ணைகளில் இருந்து வந்தது என்பதைக் கருதினால், அபினை முன்வைத்து பிரித்தானியர்கள் என்னவற்றை நடத்தினார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.)

எனவே சிங்கப்பூர்க் காவல்படை ஒன்றை காலனித்துவ நிர்வாகம் தொடங்கியது. முறையான காவல்படை இயங்கத் தொடங்கியது தேவையற்ற, தான்தோன்றித்தனமாகக் குற்றச்செயல்கள் நடப்பதைத் தடுத்து, வணிகத்துக்கு உதவி செய்தது.

வளர்ச்சியின் கூறுகள்

பாய்மரக் கப்பல்களிலிருந்து நீராவிக் கப்பல்களுக்கு கப்பல் போக்குவரத்து மாறியபோது, இடைத்துறைமுகமான சிங்கப்பூரில் வர்த்தகர்கள் இந்தச் சேவைக்கான தேவையை உணர்ந்தார்கள். எனவோ தஞ்சோங்பாகரில் ஒரு நிலக்கரி வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டது. மலாக்கா நீரிணையில் ஒருமுனையாக இருக்கும் அதன் இருப்பிடம், சூயஸ் கால்வாயின் வழியாகச் செல்லும் நீராவிக் கப்பல்களின் நிறுத்திச் செல்லும் துறைமுகமாக சிங்கப்பூர் இருந்தது அதன் வணிகத்தை மேலும் பெருக்கியது. எண்ணெய், நீலக்கரிச் சேவைகள், வழங்கீட்டுப் பொருள்கள் போன்றவற்றின் காரணமாக சிங்கப்பூரின் வணிகம் வளர்ந்தது. 1926-ம் ஆண்டு சிங்கப்பூர் துறைமுகம் 1886 மில்லியன் வெள்ளிகள் என்ற உச்ச வணிகநிலையை அடைந்ததாக கிழக்கிந்திய கம்பெனியின் வணிகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1933-ம் ஆண்டின் மாபெரும் மந்தநிலையில்கூட அதன் வணிகம் 512 மில்லியன் வெள்ளிகள் என்ற அளவில் இருந்தன.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் சிங்கப்பூரில் இருந்து ஏற்றுமதி வணிகம் பெரிதாக நடைபெறவில்லை; சொல்லப்போனால் அறவே இல்லை என்றே சொல்லலாம். துறைமுகத்தின் முக்கிய வருமானம் பண்டசாலை வர்த்தகமே. அதாவது மற்ற இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, சிங்கப்பூருக்குள் நுழைந்து செல்லும் சரக்குகள் அங்கிருந்து மற்ற இடங்களுக்கு மறுவிநியோகம் செய்யப்பட்டதால் வந்தவை. இதுபோலவே பதனம் செய்யும் நிலையங்களின் மூலமும் வருமானம் வந்தது. பொருட்களைப் பிரித்து அடுக்கும் வரை அவை பதன நிலையங்களில் வைக்கப்பட்டன. மலாயாவில் தயாரிக்கப்பட்டு வரும் ஈயம், இரப்பர் தொழிற்பண்டங்கள் சிங்கப்பூர் துறைமுகம் முக்கியத் துறைமுகமாக வளர்ந்து மேம்படுவதற்கு உதவின.

கல்வி

சிங்கப்பூர் கிழக்கிந்திய கம்பெனியால் தென்கிழக்காசிய வட்டாரத்தில் வாங்கப்பட்டது என்று பார்த்தோம். கம்பெனியின் இந்திய வட்டாரத்தின் தலைமையகம் அன்றைய கொல்கத்தாவில்தான் இருந்தது. எனவே சிங்கப்பூரும் கொல்கொத்தாவில் இருந்தே மேலாண்மை செய்யப்பட்டது. இதனால் இயல்பாக சிங்கப்பூரின் மேலாண்மையில் ஒரு தொய்வு இருந்தது. கிழந்திய கம்பெனியின் வணிகத்துக்குக் கட்டாயமாகத் தேவைப்பட்ட வளர்ச்சிக் கூறுகளில்தான் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். அதாவது வர்த்தகத்திலும் வருமானத்திலும். மற்றவற்றில் சிங்கப்பூருக்கான போதிய கவனம் கம்பெனிக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. இது அங்கிருக்கின்ற சமூகங்களின் சமூக வாழ்க்கைத் தேவைக்கான ஈடுபாடுகளை அந்தந்தத் சமூகங்களே கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியது. சிங்கப்பூரில் சீனர்கள், ஏற்கெனவே பழங்குடிகளாக வாழ்ந்த மலாய் இனத்தவர்கள், கம்பெனியால் கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழர்கள், இவர்களுடன் வணிகம் வர்த்தகத்துக்காக வந்த மேற்குலகச் சமூகம் என்று நான்கைந்து சமூகங்கள் இருந்தன. இச்சமூகங்களின் சமூக ஒழுங்குகள், நடவடிக்கைகள், குலமரபு போன்றவை அந்தந்தச் சமூகங்களுக்குள்ளேயே நிகழ்ந்தன. இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், ஈடுபாடு காட்டவும் கிழக்கிந்திய கம்பெனியின் காலனி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. ஆனால் இச்சமூகங்களின் சார்பாக காலனி நிர்வாகத்தோடு தொடர்பு கொள்ள, ஆங்கிலம் தெரிந்த,மொழியறிவு தேவைபட்ட ஒரு சிறு சமூகத் தலைவர்கள் கூட்டம் தேவைப்பட்டது; அவர்களும் உருவானார்கள். அவர்கள் தத்தமது சமூக மக்களின் தேவை, கல்வி போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

இந்தத் தேவையை நிறைவு செய்ய சமயத் திருப்பணியினரும், சீனத்தின் கொடைவள்ளள்களும் முன்வந்தார்கள். ராஃபில்ஸோ, காலனி நிர்வாகமோ இதில் போதிய அக்கறை செலுத்தாததால், சமூகக் குழுக்களின் மூலம் உருவான இத்தகைய பள்ளிகள் அந்தந்த தாய்மொழி வழிக் கல்வி நிலையங்களாக உருவாகின. ஆனால் சமயத் திருப்பணியினரால் உருவாக்கப்பட்ட பள்ளிகள், ஆங்கிலமொழிவழிக் கல்விக்கு விரைவில் மாறின. காலனி நிர்வாகத்துக்குத் தேவையான பணியாளர்களை அளிக்க வேண்டிய தேவை இருந்ததை அவர்கள் உணர்ந்ததால் இந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டார்கள். சீனப் பள்ளிகளின் நிர்வாகத்திலும் கல்வி முறையிலும், காலனி நிர்வாகம் ஈடுபடாததால், சீன அரசாங்கம் அவற்றில் ஊடுருவத் தொடங்கியது.

கம்யூனிசம் வளர்க்கும், சீனத்துவ சிந்தனைகள் சிங்கப்பூரின் சீனப்பள்ளிகளில் உரம்பெறத் தொடங்கின. (இந்தநிலை வளர்ந்து காலனி நிர்வாகத்திற்கு இடரானபோது, 1920-ல் பிரித்தானிய சிங்கப்பூரின் சீனப்பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியைக் கையில் எடுக்கக் காரணமானது). மலாய்ப்பள்ளிகள் பெரும்பாலும் சமயப் பள்ளிகளாகவோஅல்லது அடிப்படைத் திறமைகளைக் கற்பிப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டவையாகவோதான் தொடக்கத்தில் இருந்தன. மாறாக சீனப்பள்ளிகள் சீனப்பற்றும், கம்யூனிசமும் வளர்த்தாலும், சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் மீதும் கண்வைத்து தொடக்கத்திலேயே இயங்கத் தொடங்கின. ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்ட குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள் சீனப் பெண்கள் பள்ளி, ராஃபில்ஸ் 1823-ல் தொடங்கிய சிங்கப்பூர் கல்விக் கழகம் (பின்னாளில் ராஃபில்ஸ் கல்விக் கழகம்), 1873-ல் தாமதாகத் தொடங்கப்பட்ட ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி, சமயத் தொண்டர் பெஞ்சமின் கீசுபாரி தொடங்கிய மலாயப்பள்ளி போன்றவை . [1]

வணிக மையமான சிங்கப்பூர்

தென்சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் இரண்டுக்கும் இடையே உள்ள கடல் பாதைகளின் சந்தியில் பாதுகாப்பாக அமைந்திருந்தது சிங்கப்பூர். அதோடு அதன் துறைமுகம் இயல்பிலேயே ஆழமானது. இது பாய்மரக்கப்பல்கள் காலத்திலிருந்தே இருந்த நிலை. இதனால் இயல்பான ஒரு நிறுத்து துறைமுகமாகவும் (Stopping Harbour port). பண்டமாற்றுத் துறைமுகமாகவும் சிங்கப்பூர் எளிதில் மாறியது. கிழக்கிந்திய கம்பெனி சிங்கப்பூரை வாங்கிய பிறகு விரைவாக சிங்கப்பூரில் சில அடிப்படைக் கட்டுமானங்களைச் செய்தது என்று பார்த்தோம். அவை ராஃபில்ஸின் முன்னெடுப்புகள். சிங்கப்பூரின் கிழக்கு மேற்குத் தொடர்பு அதன் தொடக்க கால வளர்ச்சிக்குப் பெரும் காரணியாக இருந்தது என்று பார்த்தோம். மேற்கத்தியர்கள் சிங்கப்பூரில் வந்து தங்கியபோது, சிங்கப்பூரைச் சீனாவுக்கான ஒரு நுழைவாயிலாகப் பார்த்தார்கள். மேற்கிலிருந்த வந்த சமயவாதிகள் சீனத்தை மாற்றுவதற்குத் தேவைப்படும் முயற்சிகள், மூலதனங்களுக்காக ஒரு செயல்படும் தளமாக சிங்கப்பூரைக் கருதினார்கள். அவர்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த காலத்தில் தங்கள் குடும்பத்தினர் படிப்பதற்குப் பள்ளிகளை அமைத்தார்கள்; கிறிஸ்தவ மதநூலான பைபிளை மொழிபெயர்த்தார்கள். அச்சுத் தொழிலை நிர்மாணித்தார்கள்; அதனைக் கற்பித்தார்கள். சீன சந்தையின் மீது கண்வைத்திருந்த வியாபாரிகளுக்கும் சிங்கப்பூர் முதல் துறைமுக இறங்குமிடமாக இருந்தது.

யோகர் பாலம் – அன்றும் இன்றும்

யோகர் பாலம் – இன்றைய தோற்றம் – பக்கவாட்டில் மாபெரும் குடிநீர் குழாய்கள்
யோகர் சிங்கைப் பாலம் 1924 – சிங்கை தேசிய ஆவணத்திற்கு நன்றியுடன்

வேறு சமூக மாற்றங்கள்

இதன் காரணமாக சிங்கப்பூரில் இருந்த வர்த்தக சமூகத்திற்குத் தங்களுக்குத் தேவைப்படும் ஆதரவுவும் கவனமும் கிழக்கிந்திய கம்பெனியால் தரப்படவில்லை என்ற எண்ணத்தைத் தந்தது. தங்களுக்கு ஏற்படும் இடர்களையும் கடினப்பாடுகளையும் கொல்கொத்தா நிர்வாகம் அறிந்து கொள்ளவில்லை என்பதோடு, அவற்றில் ஆர்வமும் காட்டுவதில்லை என்று அவர்கள் நினைக்கத் தொடங்கினர். இது தொடர்ந்து வளர்ந்து, கிழக்கிந்திய கம்பெனியின் மலாயாக் குடியேற்றம் (Straits Settlement) ஒரு கட்டத்தில் லண்டனில் இருந்து ஆளப்படுகின்ற முடியாட்சியின் காலனியாக 1867-ல் மாறியது.

அதிலிருந்து சிங்கப்பூருக்கு இந்தியாவுடனான தொடர்பு சிறிது குறைந்தது. 1869-ல் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாய் ஆகியவற்றால் லண்டன், சிங்கப்பூருக்கு இடையேயான தகவல் தொடர்புகள் வலிமையும், வேகமும் பெற்றன. 19-ம் நூற்றாண்டின் இறுதிக்குள் (1900) சிங்கப்பூர் மலாயாப் பகுதியில் இருந்த இலண்டனின் காலனித்துவ நிர்வாகத்தின் அதிகார மையமாக மாறியது. சிங்கப்பூரில் இருக்கும் மலாயாக்காரர்களுக்கு எளிதான கல்வி வசதி, மற்ற இனங்களிடையான தொடர்பு, போட்டி ஆகியவற்றால் சமூகம் அறிவுமேன்மை கூடுகிறது. முதல் செய்தித்தாள்கள், தொடக்கக் கால அறிஞர் குழுக்கள், எழுத்துப் படைப்புகள் தோன்றத் தொடங்குகின. 1923-ல் சிங்கப்பூரையும் யோகரையும் இணைக்கும் யோகர் காசவே (Johar Causeway) தரைப்பாலம் கட்டப்பட்டது. [2] இந்தப் பாலத்தின் வழி சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து இரண்டும் சிங்கப்பூருக்கும் மலாயாப் பகுதிக்கும் ஏற்படுகின்றன. இது இருபுறத்திலும் வணிகத்திலும், மக்கள் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தது. மக்கள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து பெருகியது. 1927-ல் யோகர் சுல்தானுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் சிங்கப்பூருக்கான குடிநீர், யோகரிலிருந்து பெரும் குழாய்கள் (சுமார் இரண்டு மீட்டர் விட்டம் உடைய பெரும் குழாய்கள் மூன்று) வழியாக வர குழாய் இணைப்பு யோகர் பாலத்தில் இணைக்கப்பட்டது.

சமூக வாழ்வு நோக்கில் பார்த்தால் சிங்கப்பூரில் இருக்கும் மலாய் இனத்தவர்கள் தவிர மற்ற இனத்தவரின் நோக்கு எப்போதும் அவரவர் தாய்நாடு நோக்கியே இருந்தது. 1915-ல் ஏற்பட்ட ஒரு சிறு சிப்பாய்க் கலகம் சிங்கப்பூர் இந்தியர்களை-பெருமளவிலான தமிழர்களை, இந்திய நாட்டுப்பற்று நோக்கித் தள்ளியது. இது திடீரென்று கிளம்பினாலும், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரிடையே ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுவந்தது.

சீனர்களைப் பொறுத்தவரை அவர்களின் தாய்நாடு சீனாதான்; அது அப்போது ஒரு மாற்றத்துக்கான, புரட்சிக்கான ஆயத்தங்களில் இருந்தது. அது நல்லநிலையை அடையும் வரை தற்காலிகமான இல்லமாகவே தென்கிழக்காசியாவைக் கருதினார்கள். ஆனால் ஒன்றுபட்ட சீனம், கம்யூனிசப் பற்று போன்றவற்றை தென்கிழக்காசியாவில் பரந்து வசிக்கும் சீனர்களுக்கிடையே உயிர்ப்புடன் வைத்திருக்க புரட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தினார்கள். யாட் சென் போன்ற புரட்சித் தலைவர்கள், அடிக்கடி சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு வந்து சீன சமூகத்தினரிடம் அளவளாவி அச்சமூகத்தினரின் சீனம் நோக்கிய பார்வையை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்தனர். இந்த நேரத்தில் 1937-ல் ஜப்பானியர்கள் சீனாவில் படையெடுத்தனர். இது சீனர்களை ஜப்பானியத் தயாரிப்புகளை, சரக்குகளைப் புறக்கணிக்கத் தூண்டும் காரணியானது. இதற்கு வளமான, வலிமையான சினத் தொழிலதிபர்கள் ஆதரவு கொடுத்தனர். சீனத்தின் நடக்கும் போர் முயற்சிக்காக தென்கிழக்காசிய நாடுகளில் சீன சமூகத்தினரிடம் தோன்றி நிதி திரட்டும் முயற்சி, சிங்கப்பூரிலும் வலிமை அடைந்தது.

ஜப்பானியர்கள் தெற்கு நோக்கி நகர்கிறார்கள் என்ற செய்திகள் வந்தபோதும், பிரித்தானியர்கள் அதனை ஒரு கருதத்தக்க நிகழ்வாக எண்ணவில்லை; அவர்கள் ஜப்பானிய விமானங்கள் காகிதத்தால் செய்யப்பட்டவை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அதற்கான விலையை லண்டன் காலனி நிர்வாகம் வெகு சீக்கிரமே தென்கிழக்காசியாவில் பரவலாகவும், சிங்கப்பூரில் குறிப்பாகவும் கொடுக்க வேண்டியிருந்தது என்பதுதான் விசேடம்!

(தொடரும்)

__________

[1] சிங்கப்பூர்-தேச உருவாக்கம் நோக்கிய பயணம் – நூலின் காலனித்துவக் கல்விக் கொள்கை பகுதியில் இருந்து – சிங்கப்பூர் தேசிய மரபுடைமைக் கழக வெளியீடு

[2] https://biblioasia.nlb.gov.sg/vol-20/issue-2/jul-sep-2024/singapore-malaysia-johor-causeway/ – சிங்கை நூலக வாரியம் அளிக்கும் யோகர் பாலம் அமைப்பு பற்றிய தகவற்பக்கம்

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #4 – வளர்ச்சிக் காரணிகள் appeared first on கிழக்கு டுடே.

  •  

தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009

தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009
புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....

புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009’ என்னும் இம்மலர்....

தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டதுடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தகமாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.

புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.

வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.

புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்திற்கு இணையாக வெகுசன தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன. தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் புத்தக உலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.

பொருளடக்கம்
தனி மனிதப் பதிப்புகள்
  • ஆறுமுக நாவலர் (1822-1879) - பொ. வேல்சாமி
  • சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) - ஜ. சிவகுமார்
  • தான் கலந்த தமிழ் : உ.வே.சா. பதிப்பித்ததிலிருந்தும் பதிப்பிக்காமல் விட்டதிலிருந்தும் சில குறிப்புகள் - அ. சதீஷ்
  • வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி : தி.அ. முத்துசாமிக் கோனார் - பெருமாள்முருகன்
  • தமிழ்ப் பதிப்பு வரலாறு : ரா. இராகவையங்கார் (20.09.1870 - 11.07.1946) - கா. அய்யப்பன்
  • வ.உ.சி.யின் பதிப்புப்பணி ஆ. சிவசுப்பிரமணியன்
  • வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திருமுருகாற்றுப்படை பதிப்புகளும் - பு. ஜார்ஜ்
  • மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்ளை [1896-1985] - கோ. கணேஷ்
  • தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி : சிறு குறிப்பு - உல. பாலசுப்பிரமணியம்
  • உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...தி.வே. கோபாலையரின் பதிப்புகளில் வெளிப்படும் புலமைத் தன்மைகள் குறித்த உரையாடல் - பா. இளமாறன்
  • பொதுக் கட்டுரைகள்
  • பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி - புதுவை ஞானகுமாரன்
  • ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் : பிரச்சனைகளும் செல்நெறியும் - ந. இரவீந்திரன்
  • சிங்கப்பூர் பதிப்புத்துறை - எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி
  • மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம் - ரெ. கார்த்திகேசு
  • தமிழ் நூற்பதிப்பும், ஆய்வு முறைகளும் - கார்த்திகேசு சிவத்தம்பி
  • சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள் - தாமஸ் ஆர். டிரவுட்மேன் தமிழில்: அபிபா
  • ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)ஆர்.இ. ஆஷெர் தமிழில்: ஆர். பெரியசாமி
  • தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835-1947) - J.P.B. மோரே
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் - பேரா. வீ. அரசு
  • 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள் - வெ. ராஜேஷ்
  • இசை நூல் பதிப்புகள் - அரிமளம் பத்மநாபன்
  • நிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள் - அ. கோகிலா
  • நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாறு பற்றிய குறிப்புகள் - முனைவர் ஆ. தனஞ்செயன்
  • தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள் - வ. கீதா
  • காற்றில் கலந்த புத்தகங்கள் - டி. தருமராஜன்
  • நூற்றொகை பதிப்புகள் - து. குமரேசன்
  • மொழிபெயர்ப்பு பதிப்புகள் - ந. முருகேசபாண்டியன்
  • கிறித்தவத் தமிழ்ப் படைப்புகள் - அமுதன் அடிகள்
  • பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் - கே. சந்திரசேகரன்
  • வைணவப் பதிப்புகள் - முனைவர் சு. வேங்கடராமன் ( தமிழில் : ரபெசா )
  • கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் - அ.அ. மணவாளன்
  • கையேடுகளின் நிரந்தர ஆட்சி! - தமிழ்மகன்
  • பொதுவுடைமை இயக்கப் பதிப்புகள் - ஆர். பார்த்தசாரதி
  • தலித் பிரசுரங்களும், நூல்களும் (1910-1990) - ஸ்டாலின் ராஜாங்கம்
  • தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம் - மா. சற்குணம்
  • கமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும் - பெ. மாதையன்
  • நிறுவனம் சார்ந்த பதிப்புகள்
  • எளிய அமைப்பு, மலிவு விலை : சாக்கை ராஜம் பதிப்புகள் - இரா. வெங்கடேசன்
  • பதிப்புத்துறையில் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை - பா. தேவேந்திர பூபதி
  • தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும் - முனைவர் ப. பெருமாள்
  • சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை - வ. ஜெயதேவன்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு - கல்பனா சேக்கிழார்
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள் - முனைவர் மு. வளர்மதி


    • தற்போது விற்பனையில்....

      விலை : ரூ 95.00
      பக்கங்கள் : 320
      வெளியீடு : பாரதி புத்தகாலயம் 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18

      தொலைபேசி : 91 - 44 - 24332424, 91 - 44 - 24332924
      e-mail : [email protected]

      •  

      தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009

      தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009
      புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....

      புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009’ என்னும் இம்மலர்....

      தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டதுடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தகமாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.

      புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.

      வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.

      புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்திற்கு இணையாக வெகுசன தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன. தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.

      இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் புத்தக உலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.

      பொருளடக்கம்
      தனி மனிதப் பதிப்புகள்
    • ஆறுமுக நாவலர் (1822-1879) - பொ. வேல்சாமி
    • சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) - ஜ. சிவகுமார்
    • தான் கலந்த தமிழ் : உ.வே.சா. பதிப்பித்ததிலிருந்தும் பதிப்பிக்காமல் விட்டதிலிருந்தும் சில குறிப்புகள் - அ. சதீஷ்
    • வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி : தி.அ. முத்துசாமிக் கோனார் - பெருமாள்முருகன்
    • தமிழ்ப் பதிப்பு வரலாறு : ரா. இராகவையங்கார் (20.09.1870 - 11.07.1946) - கா. அய்யப்பன்
    • வ.உ.சி.யின் பதிப்புப்பணி ஆ. சிவசுப்பிரமணியன்
    • வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திருமுருகாற்றுப்படை பதிப்புகளும் - பு. ஜார்ஜ்
    • மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்ளை [1896-1985] - கோ. கணேஷ்
    • தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி : சிறு குறிப்பு - உல. பாலசுப்பிரமணியம்
    • உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...தி.வே. கோபாலையரின் பதிப்புகளில் வெளிப்படும் புலமைத் தன்மைகள் குறித்த உரையாடல் - பா. இளமாறன்
    • பொதுக் கட்டுரைகள்
    • பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி - புதுவை ஞானகுமாரன்
    • ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் : பிரச்சனைகளும் செல்நெறியும் - ந. இரவீந்திரன்
    • சிங்கப்பூர் பதிப்புத்துறை - எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி
    • மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம் - ரெ. கார்த்திகேசு
    • தமிழ் நூற்பதிப்பும், ஆய்வு முறைகளும் - கார்த்திகேசு சிவத்தம்பி
    • சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள் - தாமஸ் ஆர். டிரவுட்மேன் தமிழில்: அபிபா
    • ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)ஆர்.இ. ஆஷெர் தமிழில்: ஆர். பெரியசாமி
    • தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835-1947) - J.P.B. மோரே
    • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் - பேரா. வீ. அரசு
    • 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள் - வெ. ராஜேஷ்
    • இசை நூல் பதிப்புகள் - அரிமளம் பத்மநாபன்
    • நிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள் - அ. கோகிலா
    • நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாறு பற்றிய குறிப்புகள் - முனைவர் ஆ. தனஞ்செயன்
    • தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள் - வ. கீதா
    • காற்றில் கலந்த புத்தகங்கள் - டி. தருமராஜன்
    • நூற்றொகை பதிப்புகள் - து. குமரேசன்
    • மொழிபெயர்ப்பு பதிப்புகள் - ந. முருகேசபாண்டியன்
    • கிறித்தவத் தமிழ்ப் படைப்புகள் - அமுதன் அடிகள்
    • பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் - கே. சந்திரசேகரன்
    • வைணவப் பதிப்புகள் - முனைவர் சு. வேங்கடராமன் ( தமிழில் : ரபெசா )
    • கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் - அ.அ. மணவாளன்
    • கையேடுகளின் நிரந்தர ஆட்சி! - தமிழ்மகன்
    • பொதுவுடைமை இயக்கப் பதிப்புகள் - ஆர். பார்த்தசாரதி
    • தலித் பிரசுரங்களும், நூல்களும் (1910-1990) - ஸ்டாலின் ராஜாங்கம்
    • தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம் - மா. சற்குணம்
    • கமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும் - பெ. மாதையன்
    • நிறுவனம் சார்ந்த பதிப்புகள்
    • எளிய அமைப்பு, மலிவு விலை : சாக்கை ராஜம் பதிப்புகள் - இரா. வெங்கடேசன்
    • பதிப்புத்துறையில் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை - பா. தேவேந்திர பூபதி
    • தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும் - முனைவர் ப. பெருமாள்
    • சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை - வ. ஜெயதேவன்
    • அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு - கல்பனா சேக்கிழார்
    • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள் - முனைவர் மு. வளர்மதி


      • தற்போது விற்பனையில்....

        விலை : ரூ 95.00
        பக்கங்கள் : 320
        வெளியீடு : பாரதி புத்தகாலயம் 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18

        தொலைபேசி : 91 - 44 - 24332424, 91 - 44 - 24332924
        e-mail : [email protected]

        •