Reading view

இசைவைத் தேடும் வாழ்க்கை

மற்ற புலிகள் அனைத்தும் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், ஆனால் வேங்கை வனம் நாவலின் மச்சிலி  உண்மையில் வாழ்ந்த புலி. அதுவும் நாம் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கைவனம் நாவல் வெறும் புலியைப் பற்றிய கதை தானா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆம்/இல்லை என்று இருபதில்களும் சொல்லலாம். புலிகள் மூலமாக வரலாறு, வரலாற்று புனைவு, போர், அதிகாரம், படிநிலை, காலனித்துவம், சூழியல், காதல், அறம், துரோகம், மனித-விலங்கு உறவு, இயற்கையின் வலிமை, இயற்கை மீதான ஆதிக்கம் போன்ற பல பரிமாணங்களை இந்நாவல் ஆராய்கிறது.
  •  

வேங்கை வனம் நாவல்: ஒரு சூழலியல் ஆவணம்

துவக்கத்திலிருந்தே கோட்டையில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது புலிவேட்டை. புலிவேட்டைகள் மிகக் கொடூரமாக நடந்திருக்கின்றன. நேரடியாகப் புலியின் வாயிலேயே ஈட்டியை சொருகுவது, ஒரே சமயத்தில் வாளால் வெட்டியும் ஈட்டியால் குத்தியும் புலிகளைக் கொல்வது தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. பல புலிகள் இதில் இருக்கின்றன. பாஹினி, மோஹினி, கிருஷ்ணவேணி என்னும் கிருஷ்ணா, சுல்தான் புரி , சுல்தான் புரியின் குட்டியான மற்றோரு  சுல்தான் புரி, பிறகு மச்சிலி
  •  

வனம் - சிறுகதை

 

எனது சிங்கப்பூர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு கதை தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன். ஃபிப்ரவரி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளிவந்த முதல் கதை/ நாவல்  பகுதி.

Image generated by Grok AI 




“அரிபுரத்தில்  இப்படியான ஒரு இடத்தை நீ  பார்த்திருக்கவே மாட்டாய்” வூ தூண்டிலை இறுகப் பற்றியபடி சொன்னார். இது அவர் அடிக்கடி சொல்வது தான்.  நாங்கள் இருவரும் யின் யாங் ஏரியில் மீன்பிடித் துறையில் அமர்ந்திருந்தோம். விடுவிடுவென மொய்க்கும்  பொன்னிற கொய் மீன்களுக்குள் எவ்வித ஒழுங்கும் இல்லை. கருப்பு நிற  கொழுத்த கெளுத்தி மீன்கள் நிதானமாக, வரிசையாக நீந்தின. தூண்டில் இரை அவற்றை பரபரக்கச் செய்யவில்லை. வூ பொறுமையாக்க் காத்திருந்தார். “எப்படியும் சிக்குவாய்.. உன் கட்டுப்பாடு  எவ்வளவு நேரம் என்பதை பார்க்கத்தானே போகிறோம்” என்றபடி ஹைனிகன் பியரை ஒரு மிடறு அருந்தினார். வெயிலும் இல்லாத மழைக்கு முந்தைய புழுக்கமும் இல்லாத மாலைப் பொழுது. இங்கே அது மிகவும் அரிது என்பதை என் குறுகியகால வாசத்தில் உணர்ந்து கொண்டேன். அத்தகைய காலநிலை என்றால் வூ பீர் புட்டிகளுடன் என் வீட்டு கதவை தட்டி விடுவார். “நாளை நம் வனத்தில் வேட்டை” என்று நேற்றே சொல்லிவிட்டுத்தான் சென்றார். “இப்போது நாம் நம் வனத்திற்கு செல்வோம் வா” என்று சொன்னபடி மாலை வீட்டிற்கு வந்தார்.  ஏரியையொட்டிய மரம் செடி செறிவுதான் அவருக்கு வனம். நான் அமைதியாக பார்த்ததைக் கவனித்தவர்  “தெரியும் நீ இதை வனம் என ஒப்புக்கொள்ளமாட்டாய். ஆனாலும் .. “

“மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். வனத்தை எவரும் வளர்க்க முடியாது. இது  தோட்டம்”. 

“சரி சரி..ஏதோ ஒன்று. எனக்கு வனம் உனக்கு தோட்டம்.” பொதுவாக நீர்த்துறையில் போடப்பட்ட பெஞ்சுகளில் அமர்ந்தபடியே நீர்வீழ்ச்சியை பார்த்தபடி எங்கள்  மாலை பொழுதுகள் கழியும். பேசுவதற்கு ஏதுமற்ற போது ஆளுக்கொரு புத்தகத்துடன் அமர்ந்து விடுவதும் உண்டு.  


  வூ மிங் லி, அதுதான் வில்லியமின் சீனப் பெயர். ஆனால் அவர் எனக்கு வில்லியமாகவே அறிமுகம் ஆனார். வூ என்கிற வில்லியம் எனக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் மேல்தளத்தில் வசிப்பவர். நான் டி ஷர்ட் ஜீன்ஸ் சகிதம் வகுப்பிற்குப் புறப்படும் போது அவர் பளபளவென தேய்த்த தோல் சப்பாத்துக்கள் கோட்டு சூட்டு சகிதம் தனது சைக்கிளில் கல்லூரிக்குக் கிளம்புவார். முதல் முறை அவரை அப்படிப் பார்த்த போது  வினோதமாக உணர்ந்தேன். சிநேகத்துடன் புன்னகைத்தார். மாலை நடைக்கு எங்கள் குடியிருப்புக்கு எதிரேயுள்ள செயற்கை ஏரியை சுற்றி நடக்கும் போது காதில் ஹெட்போன் மாட்டியபடி கையில்லா பனியனை போட்டுக்கொண்டு என்னைக் கடந்து ஓடுவார். ஏரிக்கு நடுவே உள்ள மரப் பாலத்தில் நின்று கீழே செல்லும் மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.   சூரியன் மறைந்து செந்நிற கீற்றாக மறையும் வரை வானத்தை வெறித்திருப்பேன். அடுத்த வகுப்புக்கான திட்டம் மனதிற்குள் உருப்பெறும். அப்படியான ஒரு மாலைப் பொழுதில் என்னருகே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். “வில்லியம் லி, நான் வரலாற்றுப் பேராசிரியர்.. நீங்கள் தமிழ் எழுத்தாளர் என ஜான் சொன்னார். தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள அபாரமான மொழி” என்ற போது சற்றுப் பெருமிதமாக உணர்ந்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டேன். நீரில் நீந்திய நட்சத்திர ஆமையை அவர்தான் எனக்கு முதலில் சுட்டிக் காண்பித்தார். அதை பார்த்ததும் வீடு குறித்த வினோத ஏக்கம் என்னுள் எழுந்தது. பிள்ளைகளின் அன்மையை மனம் விழைந்தது.  “இங்கே நீர் நாய்கள் கூட வரும். அதிர்ஷ்டம் இருந்தால் காண்பீர்கள். கோவிட் காலத்தில்தான் அரிபுரத்தில் இத்தனை நீர்நாய்கள் உள்ளதைக் கவனித்தேன். அரசு கணக்கெடுத்து வைத்திருந்ததை விட அதிகம் என ஸ்ட்ரெயிட் டைம்ஸில் செய்தி வந்திருந்தது ” நீர்நாயின் படம் வரைந்து அவற்றுக்கு உணவிடக் கூடாது எனும் எச்சரிக்கைப் பதாகைகள் ஏரியை ஒட்டிய நடைபாதை பகுதியில் ஆங்காங்கு தென்பட்டன. திடீரென்று சைரன் ஒலித்தது. “அது அப்படித்தான், இடிக்கான எச்சரிக்கை. ஆனால் எதுவும் ஆகாது” என்றார் நிதானமாக. 


ஏரி முடியுமிடத்தில் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி. அதைக் காண்பதற்கென்று ஒரு பாலம் உண்டு. நான் அங்குதான் பெரும்பாலான மாலைப் பொழுதுகளைக் கழிப்பேன். நீர்வீழ்ச்சி தினமும் மாலைகளில் மட்டும் தான் விழும். யின் யாங் பல்கலைக்கழகக் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு ஏரியாகவும் நீர்வீழ்ச்சியாகவும் பராமரிக்கப்படுகிறது. எரியும் நீர் வீழ்ச்சியும் கூட கழிவு நீர் மறு சுழற்சியின்  ஒரு பகுதி தான். வில்லியமை நாள்தோறும் காண்பேன். ஒருநாள் மாலை நான் எங்கேனும் வெளியே சென்றாலும் இரவு எத்தனை மணி ஆனாலும் கதவைத் தட்டி “இங்கே உனக்கொரு பெண் கிடைத்துவிட்டால் போல” என்று கேலி செய்யவில்லை என்றால் அவருக்கு  உறக்கம் வராது. முதல் மாதம் முடிவதற்குள்ளேயே வில்லியம் எனக்கு நல்ல நண்பராக ஆனார். எங்கள் முதல் பியர் சந்திப்பின்போது தான் தனது சீனப் பெயரைக் கூறினார். அப்படித் தன்னை அவர் வெளிப்படுத்துவது மிகவும் அரிது என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.  


 “இங்கே சீனர்கள் பலருக்கும்  இரண்டு பெயர்கள். ஒன்று சீனப் பெயர்” என நெற்றிச் சுருக்கங்கள் தெரிய சிரித்தார்.  “எனக்கு என்ன வயதிருக்கும் என்று எண்ணுகிறாய்?” என்றார் புன்னகைத்தபடி. நான் அரிபுரத்தை வந்தடைந்த புதிதில் எப்போதும் எனக்கு இந்தக் குழப்பம் இருக்கும். சீனர்கள், அதிலும் பெண்களின் வயதை என்னால் ஊகிக்க முடிந்ததே இல்லை. நாற்பது ஐம்பது வயதுடையவர்கள் கூட இருபது முப்பது வயது மதிக்கத்தக்கவர்கள் போலத் தோன்றுவார்கள். என் கண் பழகவில்லை என்பதால் ஏற்பட்ட குழப்பமாகவும் இருக்கலாம். அல்லது அரிபுரத்துப் பெண்கள் உடலைப் பேணும் விதம் காரணமாகவும் இருக்கலாம். காலப்போக்கில் அவர்கள் அணியும் உடைகளை வைத்தும் பேச்சுக்களை வைத்தும் ஓரளவு வயதை ஊகிக்க முடிந்தது. கல்லூரி செல்லும் மகள், கண் ஓரம் தெரியும் சுருக்கங்கள், வூ வின் மனைவி அமண்டாவின் தோற்றம் இவற்றையெல்லாம் கொண்டு  வூவிற்கு என் கணிப்பில் எப்படியும் 55 வயதிருக்கும். ஆனாலும் அவர் கேட்க விரும்பும் பதிலைச் சொன்னேன். “நாற்பத்தைந்து இருக்குமா?” கண்களில் ஒளி மின்னச் சிரித்தார். “எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்கு அறுபது” என்றார் பெருமிதம் பொங்க.  என் புன்னகை அவருக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். “நீ பொய் தானே சொன்னாய்?” என்றார். “எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரின் மேற்கோள் இது. கதைகள் தான் என்றாலும் அவை எத்தனை அற்புதமானவை!” என்றதும் இருவரும் சிரித்தோம். “வா நாம் நம் வனத்தைச் சுற்றி நடந்துவிட்டு வருவோம்” என அழைத்துச் சென்றார். இருவருமாக யின் யாங் ஏரியின் சுற்றுவட்டப் பாதையில் நடந்து வந்தோம். இரவு விளக்கு மஞ்சள் நிறத்தில் பழைய கால அரிக்கேன் விளக்கு போல அழுது வடிந்தது. நெருங்கி வரும் தோறும் ஒளி கூடியது. ஏதோ ஒரு இயந்திரச் சத்தம் கேட்டது.  “அது ஒன்றுமில்லை. மாதம் இருமுறை சாலைக்கு நீளும் கிளைகளை வெட்டி விடுவார்கள். ஒரு காலத்தில் இங்கே மலைப்பாம்புகளைப் பார்த்திருக்கிறேன் தெரியுமா?” “பல்கலைக்கழகத்திலா?” “ஆம் இங்குதான். இது ஒரு மழைக்காடு தானே. இப்போதும் சில உடும்புகள் மேற்குப் பக்கம் திரியும். சூழலியல் துறை கணக்குப்படி  மொத்தம் பதிமூன்று உடும்புகள் நம் வளாகத்தில் உள்ளன” “அவற்றுக்கு பல்கலைக்கழக அடையாள அட்டையும் பயண அட்டையும்  உண்டா?”   என்றதும் சிரித்து பியர் புரைக்கேறி துப்பினார். அன்றிரவு நெடுநேரம் மரக்கிளைகள் அறுபடும் மின் ரம்ப ஓசை என் காதிற்குள் கேட்டபடி இருந்தது. படுக்கையில் புரண்டுக்கொண்டே இருந்தேன். வரிசை மாறாமல் நடப்பட்ட தைல மரங்கள் ஊடாக ஊரில் நான் சைக்கிளில் பள்ளிக்கு சென்றது நினைவில் எழுந்தது. தைல மர தோப்பு என சொல்வதில்லை. தைல காடுதான். அதன் சீர்மை அச்சுறுத்தும். அங்கே வேறு செடிகளை காணவே முடியாது. ஏதேதோ நினைவுகள். மனதை உடல் வென்று நான் உறங்கும் போது விடிகாலை நான்கு மணி. ஒன்பது மணிக்கு மேல் எழுந்தேன். மதியம் தான் என் வகுப்பு என்பதால் எனக்கு எந்தப் பரபரப்பும் இல்லை. வாசல் கதவில் வூ சிறிய ஒட்டும் தாளில் குறிப்பை ஒட்டிவிட்டுச் சென்றிருந்தார். “உனக்கு மீன் பிடிக்க வருமா? அடுத்த வாரத்தில் நம் ஏரியில் மீன் பிடிக்க வேண்டும். வா” என்று எழுதி இருந்தது. மூக்கு அடைத்துக் கொண்டிருந்தது. காற்றில் ஈரப்பதம் கூடி அன்று மழை வரும் என்று அதற்குப் பொருள். ஏரி அசைவின்றி ஆகாயத்தின் துல்லிய நீலத்தில் வெளிப்பட்ட வெண்பஞ்சு மேகங்களையும் சுற்றியிருந்த பசுமைகளையும் பிரதிபலித்து கொண்டிருந்தது. சாலையோரக் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு வெளிச்சம் கண்ணைக் கூசியது. அரிபுரத்து கட்டாய ராணுவ சேவை இளைஞர்களின் தலை போல என்று தோன்றியதும், இந்த உவமையை மனதில் குறித்து கொண்டேன்.  புற்கள் ஒரே சீராய் வெட்டப்பட்டிருந்தன.  ஏரியிலிருந்து கீழே இறங்கினால் வெவ்வேறு நாட்டுத் தாவர வகைகள் உள்ள ஃபூனான் தோட்டம் வரும். மைய மண்டபத்தில் சென்று அமர்ந்தேன். மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி என்னை கடந்து சென்றதை பார்த்ததும் மனம் பெரும் உவகை அடைந்தது. வில்லியமிடம் பல்கலைக்கழகத்தில் பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுத்திருக்கிறார்களா என்று கேட்க வேண்டும். அவர் பதில் என்னவாக இருக்கும் என்பதையும் அறிவேன். அதற்கான ஆராய்ச்சியில் உள்ளோம் என்பார். இத்தனை மரச் செறிவுக்கு நான் குரங்குகளையோ பறவைகளையோ பார்க்கவில்லை என்பது சட்டென்று உதித்தது. 


ஏதோ ஒன்று உந்த கைப்பேசியில் ஒரு கவிதை எழுதினேன்.



முறையீடு 


நேற்று 

இருந்த முன்னூற்றி முப்பத்தி நான்கு 

பட்டாம் பூச்சிகளில் 

முப்பதைக் காணவில்லை 

புதிதாய் பூத்த முப்பது மலர்களில் 

ஒன்று கூட 

மஞ்சளாய் இல்லை 

என்பதுதான் 

 முறையீடு 


கவிதையை அப்போதே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வில்லியமிற்கு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.  மழை பிடிப்பதற்குள் தரைத்தளத்தில் இருக்கும் என் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டேன். பெரும் இடியோசைகளுடன் ஏரியின் மீது மழை ஆவேசமாக இறங்கியது. கண்ணாடிச் சாளரத்தின் அருகே அமர்ந்து அம்புகள் போல நீரில் பாய்ந்திறங்கிய மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 


மழைக்கு பின் சாலையில் மழையின் சுவடுகள் மறைந்துவிட்டன. மாலை மீண்டும் எல்லாம் இயல்பிற்கு திரும்பியிருந்தது. காலையில் எழுதி ஒட்டிய குறிப்பை வாசித்தாயா என்று மாலை சந்திக்கும்போது கேட்டார். நான் மீன் பிடித்ததில்லை. எனினும் வருகிறேன் என்று சொல்லி வைத்தேன். “இந்த  வனம் உனக்கொரு கவிதையைத் தந்திருக்கிறது போலும். வனம் படைப்பூக்கத்தை பெருக்கும் என்பார்கள்.”   “அரிபுரத்தின் இலக்கியத்தின் சிக்கல் என்னவென்று தெரியாமல் இருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன்.” 

“என்ன?” 

“தோட்டம் தான் உங்கள் வனம். ஜாடிக்கு ஏற்ற மூடி தானே இருக்க முடியும் ”  என்றதும் சிரித்தார். 

“நீ இதை விடவே மாட்டாய்.”


 அன்றைய நாளுக்கு பிறகு  பார்க்கும்போதெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். சனிக்கிழமை எந்த வேலையும் வைத்துக் கொள்ளாதே. அன்று உனக்கு வகுப்பு இல்லைதானே? எனத் திரும்பத் திரும்பக் கேட்டார். எனக்கு அவரது ஆர்வம் மிகவும் வினோதமாக இருந்தது. வருகிறேன் என ஒப்புக் கொண்டாலும்  நாளெல்லாம் அவரருகே அரிபுரத்து வெயிலில் அமர்ந்திருப்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. வகுப்பில் மாணவர்கள் எழுதிய கதைகளை வாசித்து அவற்றுக்கு கருத்துரை இடவேண்டும். ஏரிக்கரையில் அமர்ந்து அதைச் செய்ய வேண்டியது தான் என்று முடிவு செய்து கொண்டேன்.   


சனிக்கிழமை காலையிலேயே வாயில் மணியின் ஓசை கேட்டு விழித்து கொண்டேன். “இன்று காலையுணவு ஏதாவது லேசாக எடுத்துக் கொள். மதியம் நாம் பிடித்த மீனை கொண்டு சமைத்து விருந்து உண்ணலாம். அமண்டாவிடம் சொல்லிவிட்டேன். அவள் சீன முறையில் மீன் சமைத்து தருவதை நீ சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  ஒருமணி நேரத்தில் தயாராகி விடு” என்றார். நான் இன்று அவருடன் மீன்பிடித் துறைக்கு வரும்போது இன்னும் பல முகங்கள் தூண்டிலுடன் ஆங்காங்கு அமர்ந்திருந்ததைக் கண்டேன். “நாங்கள் எல்லோரும் பல்கலைக்கழக தூண்டில் இடுவோர் சங்க உறுப்பினர்கள்…இன்று 76  மீன்கள் வரை நாங்கள் பிடிக்கலாம். எடை மிகுந்த மீன்களைப் பிடிப்பதுதான் இங்கே முக்கியம், கல்லூரிப் பையன்கள் அதிக எண்ணிக்கையில் பிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் வலுவான போராடும் ஆற்றல் உடைய மீன்களைப் பிடிப்பது தான் உண்மையான வேட்டை. சென்ற முறை நான் பிடித்த மீன் பன்னிரண்டு கிலோ.” “அது என்ன 76 மீன்கள்? ஏதும் புனித எண்ணா?” “புனிதமும் இல்லை ஒன்றும் இல்லை. கடந்த கணக்கெடுப்பில் இருந்து அதிகரித்திருக்கும் மீன்களின் தோராயமான எண்ணிக்கை” விழி விரிய நோக்கினேன் “இங்குள்ள மீன்களுக்கு கணக்கா?” “ஆம் தோராயமான கணக்கு என்று சொன்னேனே. அதை துல்லியப்படுத்த ஒவ்வொரு மீனுக்குள்ளும் ஏதேனும் மின்னணு சிப்பைப் பொருத்தலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். நூறு நாட்களுக்கு மேலான மீன்கள் மேலிருந்து சிப்புகள் ஒளிவிடும். பிடிப்பது சுலபம். நம் மாணவர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் பெருமிதம் போங்க. “எனக்கொரு யோசனை தோன்றுகிறது”

 “சொல்” 

“நீங்கள் ஏன் நூறு நாட்களில் வெடிக்கும் ஒரு சிறிய மின்னணு வெடி குண்டை சிப்புடன் சேர்த்து பொருத்த கூடாது? தானாக மீன்கள் வெடித்துச் சிதறி இறந்து விடும்.”

 “நீ சொல்வதை புரிந்து கொள்கிறேன். உன்னால் நம்ப முடியவில்லை இல்லையா? இங்கே கொசுக்கள் இல்லை என்பதைக் கவனித்தாயா?” “ஆம். கவனித்தேன்.” 

“இது ஒரு மழைக்காடு என்பதை நினைவில் கொள். மலேரியாவால் இங்கே செத்தவர்கள் ஏராளம்.” “ஒவ்வொரு கொசுவிற்குள்ளும் சிப் வைத்து 10 நாட்களில் அவற்றை வெடிக்க வைத்தோம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்” வாய் விட்டு சிரித்தார். 

“நான் எதுவும் சொல்லவில்லை. மரபணு அறிவியலைக் கொண்டு அரிபுரத்தில் எப்படிக் கொசுவை ஒழித்தோம் என்பதைப் படித்துப் பார்த்து நீயே தெரிந்து கொள்.” என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது கரங்கள் இறுகின. தூண்டில் பயங்கரமாக இழுபட்டது. “இதோ ஒருவன் சிக்கிவிட்டான்..” பெரிய மீன் சிக்கிவிட்டது என்பதை தூண்டில் இழுபடும் வேகத்தை கொண்டு கணிக்க முடிந்தது. அத்தனை ஆற்றலையும் கொண்டு தூண்டிலை இழுத்துப் பிடித்தார். “என்னைக் கொஞ்சம் தாங்கிக் கொள்” என்றார். “வில்லியமுக்கு ஏதோ ஒன்று சிக்கிவிட்டது. கமான் வில்” என எதிர் சாரியில் குரல்கள் எழுந்தன. நான் வேட்டைக்காரனைக் கண்டதில்லை. ஆனால் கற்காலத்தில் வேட்டையாடி தனது இரையை வென்றடைந்த பிறகு அவன் முகம் என்னவாக இருந்திருக்கும் என்பதை வூ முகத்தில் நான் கண்டுகொண்டேன். 


இருபது கிலோ. நம் பல்கலைக்கழக சாதனை என்று நாளெல்லாம் அரற்றியபடி இருந்தார். “மான், சிறுத்தை, புலி, யானை என தலைகளை பழையகால வேட்டைக்காரர்கள் மாட்டி வைப்பார்கள். அப்படி இந்த மீன் மண்டையை பாடம் செய்து மாட்டி வைக்க வழியில்லாமல் போனதே” என்று கண் சிமிட்டினார். விரிந்த உள்ளங்கையை விட பெரிதாக இருந்த மீன் மண்டையில் திறந்திருந்த விழியை நோக்கிக் கொண்டிருந்தேன். அமண்டா அபாரமாக சமைத்திருந்தார். எங்கள் வளாகத்தில் எல்லோருக்கும் அமண்டா சமைத்த மீனை  பகிர்ந்து  கொடுத்துவிட்டு வந்தார்  வில்லியம். 


இரவு  “வா நம் வனத்திற்குச் செல்வோம்” என்று  ஹைனிக்கனோடு வந்தார்.  இரவுவொளியின் மஞ்சள் வெளிச்சத்தில் அவர் முகத்தில் மிளிர்ந்த மிடுக்கைப் பார்த்தேன். சில்வண்டுகள் கூட இல்லாத நிசப்தம் இரவை நிறைத்தது. ஏரியைக் கடந்து  ஃபூனான் தோட்ட மண்டபத்திற்கு சென்று அமர்ந்து கொண்டோம். அங்கே இரவு விளக்கு கிடையாது.  “அரிபுரத்தில் எங்கும் இப்படியான ஒரு இடத்தை நீ பார்த்திருக்கவே மாட்டாய்” என்றார். “உலகத்திலேயே நான் பார்த்ததில்லை..” என்றேன் எரிச்சலுடன். அவருக்கு தமிழ்நாட்டு கார வகைகள் என்றால் பிடிக்கும். “கொண்டு வந்திருக்கிறாயா?” என்றதும் அடையார் ஆனந்தபவனின் மிளகு தட்டையை நீட்டினேன். “உனக்கு தெரியுமா? மனித குலத்தின் இத்தனை நூற்றாண்டு போராட்டம் எதற்கென்று?” “பாதுகாப்பான வாழ்விற்கு” “சரி தான். அதற்கு அவன் இயற்கையை வெல்ல வேண்டும். இயற்கை என்பது என்ன. தன்னால் கட்டுப்படுத்த முடியாத பிரம்மாண்டமான தற்செயல். இந்த நிச்சயமற்ற தன்மையை கணிப்பதற்கு தான் நாம் இத்தனை ஆண்டுகளாக போராடி வருகிறோம். கணிப்பது பத்தாது. அதை கட்டுப்படுத்தவும் வேண்டும். வருங்கால மனித நாகரீகத்திற்கு அரிபுரம் அவ்வகையில் ஒரு வழிகாட்டி. முன்னோடி..” என்றார். நான் மவுனமாக இருந்தேன். “காலையில் நீ சொன்னதை யோசித்து பார்த்தேன்” “எதைப்பற்றி?” “கணக்குகள் மீது இருக்கும் தீரா விழைவை பற்றி..அது தான் அரிபுரத்தை பிற தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளில் இருந்து தனித்து காட்டுகிறதோ?” “புரியவில்லை..” “கணக்கு என்பது என்ன, நேர்த்தி. ஆனால் இப்படி சொல்வதால் நீ தப்பாக எடுத்துக் கொள்ள கூடாது…” என்று நிறுத்தினார். “சொல்லுங்கள்” என்றேன். ஒரு மிடறு பியரை அருந்திய பிறகு  தொடர்ந்தார் “உங்கள் தேசத்தவர்களுக்கு பொதுவாக ஒழுங்கு மீது எந்த நம்பிக்கையும் இல்லை. அது தான் உன்னை சீண்டுகிறதோ என்று தோன்றுகிறது” என்றார். கோபம் தலைக்கு ஏறியது. “எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து  உடனே எழுந்து சென்றேன். அவர் என்னை நிறுத்த முயன்றார். ஆனால் வார்த்தை எழவில்லை. பின் தொடர்ந்து வருகிறாரா என்று கவனித்தேன். வரவில்லை. குடியிருப்பிற்குள் விடுவிடுவென்று சென்று கதவை அடைத்துக் கொண்டேன். தொலைக்காட்சியில் டோரா காட்டிற்குள் பயணித்து கொண்டிருந்தாள். இதோ இந்த காடு தான் உங்கள் காடு. கார்ட்டூன் காடு என்று கத்த வேண்டும் போலிருந்தது. உடலெல்லாம் அவமானத்தால் எரிந்தது. அமண்டா அழைத்தார். “வில் உன்னோடு இருக்கிறாரா? அவர் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவருடைய கைபேசியை இங்கேயே விட்டு சென்றுள்ளார் என்பதால் உனக்கு அழைக்கிறேன்” என்றார். நான் அங்கிருந்து வந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாகி இருக்கும். இவ்வளவு நேரமாக அவர் வரவில்லை என்பது எனக்கு சரியாக படவில்லை. அமண்டாவிடம் “வர சொல்கிறேன்” என சொல்லிவிட்டு கைவிளக்கை எடுத்துக்கொண்டு ஃபூனான் தோட்டத்தை நோக்கி நடந்தேன். வானில் நட்சத்திரங்கள் ஏதுமின்றி இருண்டு இருந்தது. அவர் சொன்னதில் அப்படி என்ன தவறு? ஒழுங்கீனத்துடனான சமரசம் தானே சராசரி இந்தியனின் வாழ்க்கை. மண்டபத்தில் அவரது உருவத்தை கண்டதும் மனம் அமைதி அடைந்தது.   



 அவர் அதே மண்டபத்திலேயே அமர்ந்திருந்தார். மூன்றாவது பியர் டின் அவர் கையில் இருந்தது. “அமண்டா உங்களை வீட்டிற்கு வர சொன்னார்” என்று ஒருவிதமான கறாரான குரலில் சொன்னேன். “இங்கே உட்கார். உனக்கு இன்னும் கோபம் தணியவில்லை.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, நீ புரிந்துகொள்வாய் என்று..” என அவர் பேசி முடிக்கும் முன்னரே எங்கள் மண்டபத்திற்கு பின் இலைகளின் சரசரப்பை கேட்டோம். “காதல் ஜோடிகளாக இருப்பார்கள்..பாவம்” என்று சொல்லிவிட்டு பேச்சை தொடர முயன்றார். சைகையால் அவரை அமைதிப்படுத்தினேன். சரசரப்பு எங்களை நெருங்குவதை இருவருமே கேட்டோம். என் பரபரப்பை பார்த்ததும் அவருக்கு சிரிப்பாக வந்தது. “இங்கே என்ன புலியா வரப்போகிறது? ஏன் உனக்கு இவ்வளவு பரபரப்பு” என்றபடி என்னிடமிருந்த கைவிளக்கை வாங்கி  ஓசை வந்த திசையை நோக்கி அடித்தார்.  பிரம்மாண்டமான சர்ப்பம் எங்கள் முன் படமெடுத்து நின்றது. அதன் தலை என் இரு உள்ளங்கை அகலம். விளக்கொளியில் அதன் மஞ்சள் நிறம் பொன் போல மின்னியது.  “ஓ ஷிட். ..ஓ ஷிட்” என பதறி எழுந்தார். “இது எங்கே…இங்கே” என்று குழம்பினார். அதன் சீரான சீற்றத்தை கேட்டதும் இதயம் தாறுமாறாக படபடத்தது. அவர் வலக்கரத்தை இறுக பற்றினேன். பத்தடி தூரத்தில் எங்களை நோக்கி நின்றது சர்ப்பம். அத்தனை வசீகரம். சவுந்தர்யம். ஆம் அதுதான் சரியான சொல். சவுந்தர்யம். கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு ஓசை கேட்டது. விடுக்கென்று தவம் கலைந்தது போல  திரும்பி புதர் சரசரப்புக்குள் மறைந்தது.  காலியான  ஹைனிக்கென் புட்டி சற்று தொலைவில் உருண்டு கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் அங்கிருந்து திரும்பி பார்க்காமல் ஓடி வந்தோம். எரிக்கரையை வந்தடையும் வரை அதன் சீறல் ஒலி எங்களை பின்தொடர்வது போலொரு பிரமை. இதய துடிப்பு சீரடைவதற்கு நெடுநேரம் ஆனது. எனது குடியிருப்புக்குள் நுழைந்து குளிர்நீர் அருந்திய பிறகு தான் சற்று அமைதியானோம். பிராணிகள் வாரியம்  அவசர எண்ணை தேடி எடுத்து அதில் புகாரை பதிவு செய்தார். நிமிடத்திற்கு ஒரு முறை “ஷிட்” என்று அரற்றிக்கொண்டே தலையை இல்லை இல்லையென்று  அசைத்தபடி இருந்தார். “அது என்ன என்று தெரியுமா?” என்று தனது கைபேசியில் ஒரு படத்தை காட்டினார். மலேயா ராஜநாகம். “இன்று என்னால் உறங்க முடியாது போலிருக்கிறது”. அமண்டா அவரை மெதுவாக அழைத்துக்கொண்டு சென்றார். எனக்கு புரியாத மொழியில் அவர்கள் ஏதோ பேசியபடி மாடிக்கு சென்றார்கள். அவர் கண்ட காட்சியை பரவசத்துடன் விவரித்து கொண்டிருக்க வேண்டும். இரவு கண் மூடினால் அந்த நாகம் கண் முன் தோன்றியது. ஆனால் ஏனோ அது என்னை அச்சுறுத்தவில்லை. அதன் இமையா விழியின் கீழ் நெடுநாட்களுக்கு பின் நிம்மதியாக உறங்கினேன். ‘விடமேறிய கனவு’ எனும் சொற்றொடர் மனதில் உதித்தது. குணா  கவியழகனின் நாவலின் பெயர். படைப்பாளிகள் காண்பவை எல்லாம் விடமேறிய கனவுதான். விடத்தின் இனிமையை தான் அவன் பகிர்ந்தளிக்கிறான். 


Image generated by Chat Gpt 


காலை ஃபூனான் தோட்டம் மூடப்பட்டது. சீருடை அணிந்த இருவரை பார்த்தேன். இன்னும் சிலர் கவச உடைகள் அணிந்து நீண்ட கழிகளுடன் உள்ளே நடமாடிக்கொண்டிருந்தார்கள்.   காலை தளர்வான காற்சட்டையும் கைவைக்காத பனியனுடன் வாசலில் வந்து நின்றார் வூ. மிகவும் சோர்வாக காணப்பட்டார். “பாம்பை பிடிக்கும் வரை யாருக்கும் அங்கே அனுமதியில்லை” என்றார். அவரை பார்த்ததும் நாலைந்து பேர் என்ன நடந்தது என்று விசாரித்து அவரை சூழ்ந்து கொண்டார்கள்.  அவர் ஆர்வத்துடன் எல்லோரிடமும் பார்த்ததை விவரித்து கொண்டு இருந்தார். நான் வகுப்புக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதால் உள்ளே சென்றுவிட்டேன். வகுப்புக்கு கிளம்பும்போது ஏரிக்கரையில் மீன்கள் அசையும் நீரை நோக்கியபடி தனித்து அமர்ந்திருந்தவரிடம் சென்றேன். “இனி இதை நீங்கள் வனம் என குறிப்பிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.” சன்னமான குரலில்   “ஆனால் இனி நான் அப்படி சொல்லமாட்டேன்” என்றார் நீரை வெறித்தபடி .


  •  

சீர்மையின் நுதல் விழி – சித்ரனின் சிறுகதைகள் முன்வைத்து

 

சொல்வனம் இணைய இதழில் வெளியான  கட்டுரை

மீட்பரற்ற நாயொன்று அத்துவான வெளியில் வெறும் குரைப்பொலியாய்க் கரைந்தது – விடுதலை.



எழுத்தாளர் சித்ரனை வினோத் கண்ணாவாக எனக்கு அறிமுகம். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். பக்கத்து ஊர்காரர்கள் என்பதால் இயல்பாகவே கல்லூரியில் எங்களுக்குள் அணுக்கம். நான் ஆயுர்வேதமும் அவர் சித்த மருத்துவமும் ஒரே கல்லூரி வளாகத்தில் ஒரே காலகட்டத்தில் கற்றோம். ஜோனாத்தன் லிவிங்ஸ்டன் தி சீ கல், அல்கெமிஸ்ட் என திரிந்துக்கொண்டிருந்தவனுக்கு “விஷ்ணுபுரம் படி” என ஜெயமோகனை அறிமுகப்படுத்திய நண்பர் வினோத். பயிற்சி மருத்துவர்களாக இரவு பணி (பணி என ஏதுமிருக்காது, மருத்துவமனையில் உறங்கி எழ வேண்டும்) எங்களுக்கு ஒன்றாக போடப்பட்டபோது இலக்கிய – அரசியல் உரையாடல்கள் நெடுநேரம் நிகழும். ஈழப்போர் உச்சத்திலிருந்த காலம். வாசிப்பின் தொடக்க நிலைகளில் இருப்பவனின் அதீத தன்னம்பிக்கைக்கும் மொண்ணைத்தனங்களுக்கும் சலிக்காமல் பதில் சொல்வார். நியாயப்படி எனக்கு முன்பே எழுத்தாளராக அறிமுகமாகியிருக்க வேண்டும். போலன்யோவின் ‘டான்ஸ் கார்ட்’ கதையை கல்குதிரை இதழில் மொழிபெயர்த்ததன் வழியாக அறிமுகம் ஆனார். தற்போது அறநிலைத்துறையில் பணியாற்றி வருகிறார். திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் மாறி மாறி வசித்துவருகிறார். மனைவி சாலினியும் தீவிர இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர், வேளாண்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். முதல் தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. க.சீ. சிவகுமார் நினைவு பரிசு மற்றும் த.மு.எ.க.ச வின் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருதுகளை பெற்றது. இரண்டாவது தொகுப்பு ‘பொற்பனையான்’ 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி பரவலாக கவனம் பெற்று வருகிறது. 


முதல் தொகுப்பில் ஏழு சிறுகதைகளும் இரண்டாம் தொகுப்பில் ஆறு சிறுகதைகளும் நான்கைந்து குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டு தொகுப்புகளில் உள்ள பதிமூன்று கதைகள் வழியாக அவரது படைப்புலகை அணுக முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். 


சித்ரனின் கதைகள் அறிமுக எழுத்தாளர்களுக்கான எந்த தடையையோ தடுமாற்றத்தையோ பெரிய அளவில் எதிர்கொள்ளவில்லை. அவரது தொடக்கக்கால கதைகளில் சில நெருடலான/ பொருத்தமற்ற உவமானங்கள் வெளிப்படுகிறது. உதாரணமாக “செதில்களால் நெய்யப்பட்ட சட்டையை உரிக்கும் அரவமாய் எனது வெறுமையை என்னிலிருந்து அகற்ற அண்ணா நகர் பூங்காவிற்கு கிளம்பினேன்.” “கூட்டத்தால் கைவிடப்பட்ட கழுதைப்புலி ஒரு வலிமையான இரையை தாக்க வழியில்லாது வெறித்திருப்பதைப் போல் அவளை கவனித்தவாறிருந்தேன்” (தூண்டில்). இரண்டு மூன்று கதைகளுக்கு பிறகு இவ்வகையான பயன்பாடும் மறைந்து நேர்த்தி கைக்கூடிவிடுகிறது. பெரும்பாலான கதைகளில் மொழியும் பேசுபொருளும் முழு முதிர்ச்சியுடன் வெளிப்படுகிறது. கதைசொல்லி- இலக்கியவாதி என இரு முகங்களும் ஒருங்கே அமைந்த படைப்பாளியாக திகழ்கிறார். 


முதல் கதையான ‘தூண்டில்’ எழுப்பும் கேள்வி ‘தூண்டில்’ யாருக்கானது? என்பதுதான். பூங்காவில் பூனம் பால் என்றொரு பெண்னை கவனிக்கிறான். அவளால் ஈர்க்கப்படுகிறான். அவள் மணமானவள்.  பின் தொடர்கிறான். அவளும் இவனை நோட்டமிடுகிறாள். துறவியை விழைவதாக வரும் பாடல் வரிகள் வழியாக பூனம் பால் இட்ட தூண்டில் என வாசிக்கலாம். கதையில் கனவு மற்றும் கற்பனை பற்றிய குறிப்புகள் தொடர்ந்து வருகின்றன. திரைப்பட காட்சிகளின் சுட்டுதல் கதைசொல்லி கற்பனையில் வாழ்பவன் என்பதை நிறுவ உதவுகிறது. காமச்சித்தரிப்பு கூட திரைப்பட காட்சித்தன்மையை கொண்டவையே. நிகர் வாழ்வின் அசல் அனுபவத்தை விட கற்பனையும் கனவும் தான் கதை சொல்லியை கிளர்த்துகிறது. அந்தரங்கமாக மட்டும் தீண்டி மறையும் கனவின் தூண்டில் என்று கூட வாசிக்கலாம். இறக்கை முளைத்த கனவுரு ஏறத்தாழ சாத்தானின் விவரனையை ஒத்ததாக உள்ளது. இன்ப நாட்டத்தில் தற்சார்பு என்பது சாத்தானின் அருட்கொடையாக்கும். மொழி, கூறுமுறை மற்றும் பேசுபொருள் சார்ந்து சித்ரனின் ஆக பலவீனமான கதை இதுதான் என சொல்லலாம். எனினும் அவர் படைப்புகளில் தொடர்ந்துவரும் சில கூறுகளை அவதானிக்க முடிகிறது. ‘உடல் இயற்கை துறவு எனும் ஃ’ சிறுகதையை இந்த கதையையொட்டி வாசிக்க முடியும். ‘தூண்டிலில்’ இருந்து ‘உடல் இயற்கை..’ கதைக்கு வந்து சேர்ந்ததான ஒருவித பரிணாமத்தை காண இயலும். பொன்னையா ஆசாரியின் மகன் சந்திரசேகரனை துறவியாக ரயிலில் சந்திக்கிறார்கள். திருமணமாகி ஓராண்டில் துறவேற்றவர் “மானுடப்பெண் உடன் உறவுக்கொள்ள இயலவில்லை” என்கிறார்.  அவரது கதையை சொல்கிறார். உடலிச்சையிலிருந்து விலகிய ஒருவன் சித்ரனின் கதைகளில் தொடர்ந்து வருகிறான். ‘நைனாரி’ கதையின் ஜான் பாஸ்கோவைப் போல, ‘இரும்புக்கை மாயாவி’ கதையில் சம்போக சித்திரங்களைப்பார்த்து வெடித்து சிரிக்கும் மனோகரனைப்போல, சந்திரசேகரனுக்கும் பெண் உடல் மீது பெரிய ஆர்வமில்லை. அவனை கிளர்த்துவது இயற்கையின் மோனப்பேருரு. முழுமதியிரவில் நாணல் பெண்ணுடன் உறவுகொள்கிறான். மானுட பெண்ணுடன் உறவு கொள்பவர் குடும்பஸ்தன் என்றால் இயற்கை எனும் பெண் வடிவத்துடன் உறவு கொள்பவன் துறவியாகவே இருக்க முடியும் என்பதே கதையின் மைய தரிசனம். ‘தூண்டிலின்’ சிறகு முளைத்த சாத்தான் பெண்ணுக்கும் ‘உடல் இயற்கை‌ துறவு கதையின்’ நாணல் பெண்ணுக்கும் தொடர்ச்சியும் மெல்லிய பரிணாமமும் உள்ளதை கவனிக்க முடிகிறது. காமத்தை உடற்தேவை என்பதற்கப்பாலான தளத்திற்கு நகர்த்த முயல்கிறார். ‘இரும்புக்கை மாயாவி தோன்றும் இன்ப வேட்கை’ கதையில் முதன்முதலாக கலர்படங்களில் நிர்வாணத்தை காணும் மனம் அதன் பின் கிரிக்கெட் விளையாடும்போது  கொள்ளும் கூர்மையைப்பற்றி சொல்கிறது. “என்னத்தடா திண்ணுட்டு வந்து அடிச்ச” என வைரவன் வியக்கிறான். காமத்தின் வர்ணங்களையும் சிடுக்குகளையும் பேசும் கதைகளில் ஒன்றென “நீர்மை குன்றும் நெடுங்கடல்” கதையைச் சொல்லலாம். காமமும் குற்ற உணர்வும் தான் பேசுபொருள்.  காமம் உன்னதப்படுத்தப்படாமல் முற்றிலும் தரையில் உக்கிரமாக நிகழும் கதை. ஏர்வாடி தர்காவில் பைத்தியங்கள் எரிந்த நிகழ்வு பின்புலத்தில் வருகிறது. விரைந்து செல்லும் திரைக்கதை தன்மைக்கொண்ட கதை என்பதே இக்கதையின் பலவீனம். குழந்தையின் இறப்பு ஏர்வாடி எரிப்பு உட்பட வலுவான கதைத்தருணங்கள் கூட உணர்வுரீதியாக நம்மை தொந்திரவு செய்யாமல் உணர்வு விலக்கத்தோடு சொல்லிக்கடக்கப்பெறுகிறது. 


குற்ற உணர்வு சித்ரனின் கதைகளில் தொழிற்படும் மிக முக்கியமான உணர்வு. ‘விசுவாசத்தின் மறைபொருள்’ .


கதையில் பாதிரியாராக ஆன தனது சகோதரன் ஜான் பீட்டர் என்கிற ஜான் பாஸ்கோவிற்கு இளமை நினைவுகளை பகிர்ந்து எழுதும் கடிதத்துடன் கதை தொடங்குகிறது. நினைவுக்கும் நிகழ்காலத்திற்குமாக கதை ஊசலாடுகிறது. பிள்ளைகளை வைத்து கொண்டு கஷ்டப்படும் ஜூலியில் தன் அம்மாவை காண்கிறான். ஃபாதரின் உச்சந்தலை வழுக்கை அழகாக இருந்ததால் நாவற்பழ கொட்டையை குறிபார்த்து வீசுமாறு  தன் அருகே அமர்ந்து இருந்த சாத்தான் வற்புறுத்தியதாக பாவமண்ணிப்பு கோரும் ஜூலியின் கடைசிமகன் சேவியரில் தன் கடந்தகாலத்தை காண்கிறான். ஜூலி கஷ்டத்தைச்சொல்லி பிலாக்கனம் வைக்கும்போதெல்லாம் அவளுக்கு உதவுவதன் வழி கணக்கை நேர் செய்ய முயல்கிறான்.  சிறப்பான மொழியில் மெல்லிய அங்கதம் படரும் இனிய நினைவேக்க கதையாக வளர்கிறது. புதுகுளததின் வறன்ட பிளவுகளின் அடியில் தேங்கியிருக்கும் பால்யத்தின் சுணை ஊற்றெடுக்கிறது. 


ஜான் பீட்டர் ஜான் பாஸ்கோவாக, ஒரு துறவியாக ஏன் ஆனான்? அவனது விசுவாசத்தின் மறைபொருள் என்ன? அறியாத வயதில் அவன் சொல்லாலும் நடத்தையாலும் நிகழ்ந்த தாயின் மரணம் நிரந்தரமாக அவர்களின் வாழ்வை தடம்புரள வைக்கிறது. உள்ளத்தில் பெரும் எடையை சுமக்கிறான். பிலோமியும் இறை பணியில் இருக்கிறாள் என்பதற்கு சிறு குறிப்பு கதையில் உள்ளது. கர்த்தரின் பணியில்தான் அவன் கழுவாய் தேடிக்கொள்கிறான், இதுவே அவனது விசுவாசத்தின் மறைபொருள் என்பது ஒரு வாசிப்பு. அப்பா இறந்து பின்னர் அம்மாவையும் இழந்த குழந்தைகளாக ஜானுக்கும் பிலோமிக்கும் கர்த்தரை விசுவாசிப்பதை தவிர வேறு நாதியில்லை என்பது இன்னோரு மறைபொருள். பெற்றோர்களற்ற பிள்ளைகளை கடவுளோ சாத்தானோ எவரேனும் ஒருவர்தானே பேணி வளர்க்க முடியும். கதையின் முக்கிய நிகழ்வுகள் சிறுவர்கள் நோக்கிலிருந்து குறிப்புணர்த்தி நகர்வது மேம்பட்ட வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. தேவ ஈவு,  அவனது தந்தை, ஜானின் தந்தை அம்மா என மனதில் நிற்கும் கதை மாந்தர்களை உருவாக்கியிருக்கிறார் என்ற அளவில் நல்ல கதை. ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ கனவுக்கும் நினைவுக்குமான இடைவெளியை குலைக்கும் கதை. கதை கொத்து என கூறலாம். சில தீவிரமான தருணங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உளவியல் கதைகள் பகுப்பாய்வை நோக்கமாக கொண்டவை. ஒரு பிறழ்வுக்கான விதையை பால்யத்தில் தேடுபவை. ‘எனது கனவுகளை கதையாக்க மாட்டீர்கள் அல்லவா டாக்டர்’ என நோயாளி உறுதி கோருகிறான். நடப்பதென்னவோ அதுதான். மனித உள்ளத்தை புரிந்துகொள்ள ஃபிராய்டை விட தாஸ்தாயெவ்ஸ்கி உதவிகரமாக இருப்பவர் எனும் கூற்று கதைக்குள் சுட்டப்படுகிறது. விளையாட்டும் தீவிரமும் ஒருங்கே அமைந்த கதைசொல்லல் முறை வாய்த்திருக்கிறது. கதைசொல்லி நிரப்பும் கேள்வி பதிலில் தன் பெயரை கோபி கிருஷ்ணன் என்றும் தந்தையின் பெயர் சிறுதொண்டன் என்றும் எழுதுகிறான். அம்மாவிற்கு அவமானத்தை தேடித்தரும் சிறுவன் இக்கதையிலும் வருகிறான். ‘ப்ரிங்கா’  என குதித்து விளையாடுகிறான். மிகவும் தொந்திரவு செய்த பகுதி. சிறுவர்கள் விளையாட்டும் பொறுப்பின்மையும் பெரியவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாரதூரமான விளைவுகள் பற்றிதான் ‘விசுவாசத்தின் மறைபொருளும்’ பேசுகிறது. இரும்பு குண்டென உள்ளத்தின் ஆழத்தில் கிடக்கும் கடந்த காலத்தை என்ன செய்வது? அறியாமைக்கு யார் பொறுப்பேற்பது? இத்தனை கணமும் குற்ற உணர்வும் தேவைதானா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தவண்ணமிருந்தது. 


‘பெரியப்பா’ சித்ரனின் நல்லகதைகளில் ஒன்று. அமானுடத்தன்மை கொண்ட கதை. கதைசொல்லியின் பெரியப்பா தூக்கிலிருந்து காப்பாற்றப்பட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது. அவர் ஏன் தூக்கிட்டுக்கொண்டார் என்பதே கதை. தான் வளர்க்கும் மகன் தூளியில் கிடந்தபோது சுளுக்கி கடித்ததற்காக அவனே அழுகையை நிறுத்திய பின்னரும் “பிள்ள எப்படி தாங்குனானோ?” என விசும்பி அழுதவர் எனும் சித்தரிப்பின் வழியாகவே அவரது மன இயல்பு காட்டப்படுகிறது. கதைசொல்லிக்கு பெரியப்பா மீது பெரும் பிரியம். அவர் வளர்த்த தெருநாய் அர்ணால்டை வேட்டைக்கு பழக்குகிறார். வெறிநாயாக மாறிய அது கன்றுகளை வாநீர் வடிய கடிக்கிறது. வாழ்வை முடிக்கச் சொல்லி பெரியப்பாவிடம் மன்றாடுகிறது. பெரியப்பாவின் உருவமே ஒரு வேட்டை நாயை போன்றது என்கிறான் கதைசொல்லி. அவர் வளர்த்த நாய்க்கு அவர் மீதிருந்த பிரியத்தைப்போலவே அவனுக்கும் அவரது அணுக்கம் பிடிக்கும் என இணைவைக்கிறான். மகனின் கெண்டைக்காலை கவ்வ வந்த தேத்தாம்பட்டி நாயை வழிக்கு கொண்டுவர எண்ணி திட்டமிடுகிறார். வேறொரு உயிர் பலியாக காரணமாகிறார். தேத்தாம்பட்டி நாய் அவர்களை தொடர்ந்து வீட்டுக்கு வருகிறது. அதன் இருப்பே குற்ற உணர்வை தூண்டுகிறது. பொதுவாக குரைத்து துரத்தும் நாய் மவுனமாக நீதி வேண்டுகிறது. நாய் கோரியதை அளிக்க தீர்மானிக்கும்போது சிறுவனின் அசாதாரண செயல் அவரை மரணத்திலிருந்து காக்கிறது. மிக முக்கியமாக அவனது உறுதியை தேத்தாம்பட்டி நாய் வாஞ்சையுடன் புரிந்துகொள்கிறது. மன்னிக்கிறது. ஏறத்தாழ ஒரு நாய் இன்னோரு நாயை உணர்ந்துகொள்வதைப்போல. அவனை நக்கிக்கொடுக்கிறது. ஏதோ ஒரு கணக்கை தீர்த்துக்கொண்டது போல தொங்கியவரின் வேட்டியை மட்டும் கவ்விக்கொண்டு ஊருக்கு ஓடுகிறது.


‘ஐயனார்புரம்’ ஜயனார்புரம் சித்ரனை நல்ல கதைசொல்லியாக காட்டுகிறது. இவ்வகை கதைகளில் சிறந்த கதை என சொல்லலாம். தெருவின் கதையை சொல்ல முயன்று கனகுவின் கதையை சொல்ல தொடங்கி செல்வத்தின் கதையை சொல்லி நிறைவடைகிறது. புதுக்கோட்டைக்கே உரித்தான லாக் விளையாட்டை அறிமுகப்படுத்துகிறார். திரைக்கதை சுருக்கம் போன்ற வடிவமே இந்த சிறுகதையின் பலமும் பலவீனமும். இருளும் வன்மமும் நுரைக்கும் கதைக்களம். பல்வேறு உள்மடிப்புகளும் சாத்தியங்களும் கொண்ட கதை. கனகு வெற்றிக்காக உழைப்பவன். வெல்வதற்கென்றே விளையாடுபவன். செல்வம் கூத்து கலைஞன். குரலுடைந்து பாட முடியாமல் குடிக்கு தன்னை அளித்து சிறுக சிறுக அழித்துக்கொள்பவன். கனகுக்கு அவனது வாகனமான ஆர்.எக்ஸ் 100 ன் மீது பித்து. தினமும் துடைத்து வைப்பான். செல்வத்துடன் அவனது நாய் செவலை எப்போதும் சுற்றி வரும். அதன் மீது பெரும் பிரியத்துடன் இருந்தான். கனகு வெல்வதை வாடிக்கையாக கொள்பவன். அவன் வெற்றியால் யாருக்கும் எந்த உற்சாகமும் இல்லை. செல்வம் அரிதாக வெல்வான். ஆவி புகுந்தது போல விளையாடுவான். ஈட்டியதை அனைத்தும் அன்றே அளித்து அழிப்பான். கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் மீது ஒரு கரிசனம் எப்போதும் இருக்கும். கனகு ஆஸ்திரேலியாவை போல, வெல்வதில்‌ ஆச்சரியமில்லை தோற்றால் சற்று மகிழ்வாக இருக்கும். செல்வம் மேற்கிந்திய தீவகளை போலத்தான். அரிதாக வெல்வார்கள். வென்றால் கொண்டாட்டம்தான். இயந்திரத்தின் மீது பிடிப்புக்கொண்ட, வெற்றி வெறி கொண்ட உலகியலாளனுக்கும் உயிர் நேசம் கொண்ட தோல்வியடைந்த கலைஞனுக்கும் இடையேயான உறவுச்சிடுக்குதான் கதை. இருவரும் அவரவர் அளவில் நியாயவான்கள். தீரர்கள். எனினும் செல்வம் கனகுவை மடியிலேந்தி அவனுக்காக கண்ணீர் சிந்தியதுபோல கனகுவால் செல்வத்துக்காக அழதிருக்க முடியாது. கலை மனதிற்குள் ஒளிந்திருக்கும் இருளைப்பற்றியும் வன்மத்தைப்பற்றியும்  கதையின் இறுதித்தருணம் மீண்டும் மீண்டும் மனதில் பல கேள்விகளை எழுப்பி அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. வேட்டில் துண்டுப்பட்ட கனகுவின் கட்டைவிரலை தூக்கிக்கொண்டு ஓடும் செவலை நாயின் சித்தரிப்பு சித்ரனின் இருண்ட சித்தரிப்புகளில் ஒன்று. செவலை காட்டுக்குள் திரியும் ஏகலைவனிடம் கொண்டு கொடுத்ததாவ் அவன் இப்போது ஐந்து விரல்களோடும் விவ் பயிற்சி செய்கிறான் என செல்வம் சொல்லும் கதை இக்கதைக்கு இன்னோரு மடிப்பை சேர்க்கிறது. அந்த செல்வத்தின் பாத்திர வார்ப்பு ஏனோ எனக்கு பிரான்ஸிஸ் கிருபாவை நினைவுபடுத்தியபடி இருந்தது. ஒரு கதையில் எதை சொல்லாமல் விடவேண்டும் என்பதை அவர் நன்கு பயின்றுள்ளார். உதாரணமாக குழந்தைவேலுவை செல்வத்தின் நாய் என்ன செய்தது என்பதை விரிவாக விவரிக்காமல் அதன் விளைவாக தெரு மக்கள் செல்வத்தை கவனத்துடன் அணுகியதை மட்டும் சொல்லி கடக்கிறார். 


குற்ற உணர்வே இயக்குவிசை ஆனாலும் அதன் கணம் குறைந்து வெளிப்பட்ட கதை என ‘ஒரு வழிப்போக்கனும் அவனது வழித்துணையும்’ சொல்லலாம். ‘காண்பவர்களோடெல்லாம் உரையாடலைத் தொடங்கும் இயல்பு’ என கதைசொல்லி ‘உடல் இயற்கை துறவு எனும் ஃ’ கதையில் குறிப்பிடுகிறார். ஒருவகையில் இந்த இயல்பே சித்ரனை நல்ல கதைசொல்லியாக ஆக்குகிறது. கதைமாந்தர்களின் குணச்சித்திரத்தை படைக்க உதவுகிறது. ஐயனார்புரம் போன்ற கதைகளில் இந்த கூறு தென்படுகிறது என்றாலும் இக்கதையில் முழுவீச்சில் வெளிப்படுகிறது. இலக்கியவாதிக்கு அகத்தை கூர்ந்து நோக்குவது தன்னியல்பாக கைவரப்பெற்றது என்றால் மனிதர்களை அவதானிக்கும் திறனே கதைசொல்லிக்கான மிக முக்கிய திறன் என கூறலாம். அவதானிக்கும் திறனின் தெறிப்புகள் ‘நீர்மை குன்றும் நெடுங்கடல்’ கதையில் காணக்கிடைக்கிறது. விஜயனுக்கும் சுசீலாவுக்குமான உறவில் சண்முகம் இடையில் வருமிடம் மிக நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. ‘வழிப்போக்கன்’ கதையில் பரமசிவம் எனும் மிக சுவாரசியமான கோட்டி (அல்லது லூசுக்கூ) கதையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். பெண் இல்லாமலேயே பெண் தரகராக பணம் செய்யும் நூதன மோசடியாளர். பேருந்து பயணத்தில் தொல்லை தரும் ஆளாக உடன்வருகிறார். அவரது பின்கதை கதாப்பாத்திர கூற்றாகவே சொல்லப்படுகிறது. தொழிலில் ஏமாந்து நொடிந்தவர் காவிரியில் குதித்து உயிர்விட செல்கிறார். காவிரியின் பிரம்மாண்டமும் விரிவும் சொல்வயப்படாத அனுபவமாக அவருள் படிகிறது. இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் மனிதனின் அகங்காரம் அற்பமாக சுருங்குகிறது. அத்தனை மகத்தான இயக்கத்தை கண்டவன் வாழ்வை எப்படி மறுக்க முடியும்? பறவைகள் வேறோரு ஒழுங்கிலிருந்து உலகில் சஞ்சரிப்பவை எனும் நம்பிக்கை விசும்பின் மொழி கதையில் வெளிப்படுகிறது. இக்கதையிலும் நீரில் மூழ்குபவருக்கு மேலே நீர்காகங்கள் பறந்து வழிநடத்தும் ஆன்மீக அனுபவம் விவரிக்கப்படுகிறது. நாய்கள், பறவைகள் என பிராணிகளின் கூருணர்வு தொடர்ந்து சித்ரனின் கதைகளில் பேசுபொருளாக உள்ளது. காவிரியை நோக்கி விரிந்த யோனியுடன் இருக்கும் கோபுரத்து சுதை சிற்பத்தை காண்கிறார். வாழும் இச்சையை மீளப்பெறுகிறார்.‌ அவரது காதல் கதை விவரிக்கப்படுகிறது. மனைவி வேறுவழியின்றி விட்டுச்சென்ற பின்னரும் தொடர்கிறது காதல். கதை தொடக்கத்தில் கதைசொல்லிக்கு பரமசிவத்தின் மீது இருக்கும் எச்சரிக்கை உணர்வும் எரிச்சலும் மறைந்து ஏற்பும் புண்ணகையும் சூழ நிறைவடைகிறது. எதையும் கொண்டுசெல்லாத, எதையும் பதுக்காத மனநிலை வழிப்போக்கனுடையது. அந்த மனநிலையே வழித்துணையும் கூட. 


கதைசொல்லியாக சித்ரன் சிறப்பாக வெளிப்பட்ட மற்றொரு கதை என ‘முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை’ கதையைச் சொல்லலாம். பழைய புத்தகக்கடையை களமாக கொண்ட‌ கதை. 90 களின் குழந்தைகளுக்கு பல்வேறு நினைவுகளை கிளர்த்தும். சச்சின் – கங்குலி ரசிகர்களுக்கு இடையேயான மோதல் தொடங்கி, கிட்னி கார்டில் கைக்குட்டை போட்டு பகிர்ந்துகொள்வது,  காமிக்ஸ்களின் உலகம் வரை. புத்தக கடை இடம்பெயர்கிறது, நினைவேக்கத்துக்கான எல்லா சாத்தியங்களும் இருந்தும் கூட எவ்வித விதந்தோதுதலோ நெகிழ்ச்சியோ இல்லாமல் சொல்லப்படுவதே இக்கதையின் வெற்றி. திருமண உறவில் சிக்கியிருக்கும் தற்பாலினத்தவர் எதிர்கொள்ளும் சிக்கலே மையம். சுப்பையாவின் மனைவிக்கு கிடைக்கும் ஒரு தரிசனமே கதை. சிறிய முடிச்சுதான். ஆனால் சித்ரன் இந்த கதையை சொல்ல கட்டி எழுப்பும் உலகமும் சித்தரிக்கும் கதை மாந்தர்களும் தான் இக்கதையை நல்ல சிறுகதையாக ஆக்குகிறது. பாலியல் படங்கள் உள்ள புத்தகத்தை அளிக்கும் போது கையாலேயே எடையிட்டு அளிக்கிறார் சுப்பையா. புத்தகங்களிலேயே மூழ்கியிருக்கும் மனோகரன் வழியாக கண்ணா எனும் கதைசொல்லி வாசிப்பு உலகத்திற்குள் நுழைகிறான்.  கலர் புத்தகத்தை காணும் வேட்கை மனோகரனை விட்டகன்ற புள்ளி மவுனமாக விடப்பட்டுள்ளது. வாழ்க்கையின் நுண்மையான முரண்களையும் அபத்தங்களையும் சித்தரிப்பதன் வழியாகவே சித்ரனின் நகைச்சுவையுணர்வு செயல்படுகிறது. சரஸ்வதி பூஜைக்கு வாயை பிளந்து களிப்பில் இருக்கும் பெண் படம் போட்ட ‘இன்ப வேட்கை’ புத்தகத்திற்கு சந்தன போட்டு வைக்கப்பட்டுள்ளது எனும் காட்சி ஒரு உதாரணம். உடல் மறைந்து இருட்டில் பிசையும் சுப்பையாவின் கரத்திற்கு ‘இரும்புக்கை மாயாவி’ என பெயரிடுவான் கண்ணா. மெல்லிய புண்ணகை மொத்த கதையிலும் ஊடுருவியுள்ளது. இதே வரிசையில் வைக்கத்தக்க கதை என ‘நைனாரியும் பதின்கரைகளும்’ கதையை சொல்லலாம். அசோகமித்திரன் தான் எதிர்கொண்ட சாமானியர்களின் நினைவுகளை போற்றும் விதமாக கதை எழுதுகிறேன் என சொல்கிறார். பதின் பருவத்து நாயகன் பிம்பம் உடைபடும் அனுபவம் தான் கதை. சிறுகதை வடிவம் சரியாக துலங்கி வரவில்லை.  ‘விசுவாசத்தின் மறைபொருளுடன்’ பொருத்திப்பார்த்து நாவலின் பகுதி என ஜான் கதாபாத்திரத்தைக்கொண்டு  வாசிக்கலாம். ஏறத்தாழ ஒரு நினைவுக்குறிப்பு அல்லது வாழ்க்கைச்சித்திரம். சித்ரனின் மெல்லிய நகைச்சுவை உணர்வும் சுவாரசியமான கதைசொல்லல் முறையும் கதையை வாசிக்க வைக்கிறது. வரதனின் துடுக்குத்தனமும் சந்துரு கோழிக்குஞ்சை குறி பார்த்து சுட யத்தனிக்கும் பகுதியும் புண்ணகைக்க வைக்கிறது. ஐயனார்புரம், விசுவாசத்தின் மறைபொருள், நைனாரி ஆகிய கதைகள் எல்லாம் ஏறத்தாழ ஒரே நிலத்தில் நிகழ்பவை, கதைமாந்தர்களில் தொடர்ச்சியும் உண்டு. நாவலின் துண்டுப்பட்ட அத்தியாயங்களாக வாசிக்க இடமுண்டு. 


‘கொனட்டி முத்தன்’ குற்ற உணர்வை பேசு பொருளாக கொண்ட கதையல்ல. நமது தேர்வுகளை விட அவற்றை. பின்னிருந்து இயக்கும் விசையே முக்கியம். அதுவே பாவத்தையும் குற்றத்தையும் தீர்மானிக்கிறது என்றொரு நம்பிக்கை உண்டு. சித்ரனின் சிறந்த கதைகளில் ஒன்று. சரி தவறு எனும் இருமைக்கு அப்பால் சென்று அமரும் கதை. இதன் பேசு பொருள் எனது புனைவுகளின் ஊடாக நான் எழுப்பிக்கொள்ளும் அடிப்படை வினாக்களில் ஒன்று என்பதால் மேலும் நெருக்கமாக உணர்ந்தேன். பெண் உடல்மொழி கொண்ட கொனட்டி முத்தனை நேசத்துடன் மணந்துகொள்கிறாள் அமராவதி. கதைகளே பெரும் போதை வஸ்து என நம்புபவன் முத்தன். அவன் உடல்மொழியில் உள்ள பெண்தன்மை காரணமாக எப்போதும் கேலிப்பொருளாக எஞ்சுபவன். பரிகாசப்பொருளாக இருப்பதை குறித்து எந்த புகாரும் அற்றவன். உலகிற்கு ஒரு முகமும் நேசிக்கும் அமராவதிக்கு பேராண்மை கொண்ட வேறொரு முகமும் கொண்டவனாக இருக்கிறான். அமராவதிக்கு அனைவரிடமும் அவனது இந்த உருவை விளக்கமுடியவில்லை. உண்டான செய்தி வாயடைக்கும் என எண்ணுகிறாள். ஆனால் மேலும் பரிகாசமும் அவதூறுமே பரவுகிறது. தன்னளவிலோ அமராவதிக்காகவோ கேலிகளை பொருட்படுத்தாத முத்தன் மகன் சபாரத்தினம் படும் அவமானத்தை கொண்டு தன் உடல்மொழியை மாற்ற முயல்கிறான். ‘விசுவாசத்தின் மறைபொருள்’ போலவே குழந்தைகளின் இச்சையை நிறைவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தன்னை இழக்கிறான். படுக்கையில் இயக்கமற்று கிடக்கும் முத்தன் அமராவதியின் தயவில் நாட்களை கழிக்கிறான். நாளும் பொழுதும் ஒன்றுபோலவே நகர்கின்றன. அமராவதியிடம் ஒருநாள் கேட்கிறான். “ஏன் நாம செத்தோனே எரிக்கிறாங்கன்னு சொல்லு?” தெரியவில்லை என்றதும் “மனுசனுக்கு பயந்தான்… ஒருவேளை மனசு மட்டும் புதைகுழிக்குள்ள முழிச்சுக் கெடந்து தலைக்கு மேலே கிடக்குற மண்ணு மேட்ட முடிவே இல்லாம பாத்து கெடக்குமோன்னு தான்.. எரிச்சுட்டா மனசு காத்தோடே சுத்திக்கிட்டு திரியலாம் பாரு” என்கிறான். அமராவதி புரிந்து கொள்கிறாள். வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ எனது ‘வாசுதேவன்’ ஆகிய கதைகளின் வரிசையில் கொனட்டி முத்தனை வைக்கலாம். மேற்சொன்ன கதைகளில் நோயும் பிழைப்பை நடத்த வேண்டிய நிர்பந்தமும் பொருளாதாரமும் இக்கட்டான முடிவை நோக்கி நகர்த்துகிறது. எனினும் கொனட்டி முத்தன் இக்கதைகளில் இருந்து வேறுபடும் புள்ளியை கவனத்தில் கொள்ள வேண்டும். புருஷனுக்காக எட்டி விதைகளை கொடுக்க அமராவதி வரும்போது விடுதவையுணர்வுடன் அதை ஏற்கிறான். உற்சாகமாக படுக்கையில் படுத்தபடி இசைக்கிறான். இந்த ஏற்பு பிற கதைகளில் வெளிப்படையாக இல்லை. இதுவே கொனட்டி முத்தனை மகத்தான காதல் கதையாக ஆக்குகிறது. மேலும் கதை நிகழ்காலத்தில் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட நினைவுகளை தொட்டு மீள்கிறது. அடங்கா தாகத்துடன் எட்டியின் தீரா கசப்புடன், மாறா இளமையுடன் முதிர்ந்து தளர்ந்த அமராவதியை அரவணைக்க காத்திருக்கிறான் முத்தன். கொனட்டி முத்தனுக்கு அமராவதி அளிப்பது அவளது பெருங்காதலின் பரிசு, கருணையின் கொடை. சித்ரனின் ‘புங்கமரத்தாயிக்கும்’ கொனட்டி முத்தனின் அமராவதிக்கும் ஒற்றுமை உண்டு. புங்கமரத்தாயி ஏறத்தாழ சிறு தெய்வ நிலையை அடைகிறாள். 


சீர்குலைவுகளை காண்பது ஒரு நிலை. சமன்குலைவுகளுக்கு அப்பால் அவற்றுள் செயல்படும் ஒழுங்கு அல்லது சீர்மையை நோக்கி நகர்வதையே இலக்கியத்தில் வெளிப்படும் ஆன்மீகம் என கருதலாம். இயற்கையுடனான முழு இயைவு, ஒத்திசைவே  ரசவாதத்தின் சாரமான தத்துவம். அண்டத்தில் உள்ளவை பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளவை அண்டத்திலும் உள்ளன. இந்த தரிசனம் ரசவாதத்தை களமாக கொண்ட ‘பொற்பனையான்’ கதையில் முழு வீச்சில் வெளிப்படுகிறது. பேரொழுங்கை நோக்கிய நகர்தலில் அமானுட/ அதிமானுட அனுபவங்கள் முக்கிய பங்காற்றுபவை. ஏனெனில் அவை நம் புற உலகின் தர்க்கத்திற்கு அப்பாலான வேறொரு ஒழுங்கின் குறியீடுகள். ‘விசும்பின் மொழி’ அவ்வகையில் அவரது ‘பொற்பனையான்’ தொகுப்பின் பேசுபொருளுக்கு ஒரு முன்மாதிரி. ஆன்மீகத்தன்மை முழுக்க வெளிப்பட்ட சிறுகதை என சொல்லலாம். அமானுட / அதிமானுட நிகழ்வுகளை எழுதுவதற்கு இங்கு பொதுவாக இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒன்று இந்திரா சவுந்தரராஜன் பாணி, அதீதமாக மாயப்படுத்துவது, மற்றொன்று புதிரை கட்டுடைப்பது. மூன்றாவதாக ஒரு முறை உள்ளது. ஜெயமோகனை அவ்வகையான கதைகளுக்கான முன்னோடியாக கருதலாம். ‘விசும்பு’ மற்றும் ‘உற்றுநோக்கும் பறவை’ ஆகிய ஜெயமோகனின் கதைகளுடைய நீட்சியாக ‘விசும்பின் மொழி’ கதையை வாசிக்கலாம். கதிரவன் பறவைகளின் சமிக்ஞைகளை ஆராய்கிறான். அவற்றின் முன்னறியும் திறனை பதிவு செய்கிறான். இயற்கையின் வலைபின்னலில் ஒவ்வொரு உயிருக்கும் உண்டான முக்கியத்துவத்தை உணரும் தருணத்தில் கதிரவன் வவ்வா சாமியாக ஆகிறான். அகால மரணமடைந்த குழந்தைகளே பழந்திண்ணி வவ்வாளாக பிறக்கின்றன என சொல்கிறான். கதையின் இறுதி உச்சம் அந்த அனுபவத்தை கடத்துகிறது. இந்தியத்தன்மை கொண்ட அறிவியல் மிகுபுனைவு என சொல்லலாம். பகுத்தறிவை நம்பும் சூழலியல் பேராசிரியர் சொந்த வாழ்வில் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது ஆசுவாசம் தேடி அலைகிறார். ‘விசும்பின் மொழி’ என்பது கதிரவனின் நாட்குறிப்பு. இயற்கைக்கும் மனிதனுக்கும் (அப்படி ஒரு இருமையை கட்டமைப்பதே வினோதமானது) உண்டான உறவு சங்கிலியைப் பற்றிய அவதானங்களை கொண்டது. நாட்குறிப்பில் சித்தரிக்கப்படும் சிறுவனின் மரணம் மனதை தொந்தரவு செய்தது. ‘பறவைகளைத் தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் மட்டுமே பேரழிவின் விளிம்பில் நிற்கும் மானுட குலத்திற்கு மீட்பு என்பது சாத்தியப்படும்’ என்கிறது. இயற்கையெனும் மாபெரும் வலைப்பின்னலில் நம் கைக்கு அகப்படும் கண்ணியைக்கொண்டு புரிந்துகொள்ள முயல்வதுதான். மனிதமையவாதம் மனிதனை பிரபஞ்ச இயக்கத்தின் மையமாக ஆக்குகிறது. இயற்கைக்கு மனிதனை பேணியேயாகவேண்டிய எந்த நிர்பந்தமும் இல்லை.‌ அதன் அமைப்பில் மனிதனுக்கு தனிச்சலுகைகள் என ஏதுமில்லை. தனித்துவம் என ஏதேனும் ஒன்று உண்டென்றால் அவனுக்கு அளிக்கப்பட்ட அறிவின் காரணமாக இருக்க வேண்டிய பொறுப்புணர்வுதான். 


‘பொற்பனையான்’சித்ரனின் கதைகளில் இதுவே சிறந்தது. பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் புதுக்கோட்டை சிவகங்கை பகுதியில் மிகவும் பிரபலம். அவரது தொன்மத்தை கையிலெடுத்துக்கொண்டு ரசவாதம், காலனிய காலகட்டம் என பல தளங்களில் கதை பயணிக்கிறது. சித்ரன் அடிப்படையில் சித்த மருத்துவ பட்டதாரி. ரசவாத பின்புலத்தில் அரிதாகவே கதைகள் எழுதப்பட்டுள்ளன. ‘பொற்பனையான்’ அளவிற்கு நுண் தகவல்களும் நம்பகத்தன்மையும் கொண்டு வேறு ஒரு கதை இந்த களத்தில் எழுதப்பட்டுள்ளதா என தெரியவில்லை. கதையைப் படித்தவர்கள் தாமே குறிப்புகளைக்கொண்டு ரசவாதத்தில் ஈடுபடும் அபாயம் கூட உண்டு. எனினும் இந்த தகவல் செறிவு அறுபத்தி சொச்சம் பக்கம் நீளும் கதையில் எங்குமே அயர்வை ஏற்படுத்தவில்லை.


   பெனுவா எனும் ஃபிரெஞ்சு நாட்டுக்காரன் வீராம்பட்டிணத்தில்  துப்பாக்கிகளுக்கான வெடிமருந்து தொழிற்சாலையை நிர்வகிப்பவன். அவனுக்கு ரசவாதத்தின் மீது ஆர்வம். அவனுடன் நட்புகொள்ளும் சுவடிகளை பிரதியெடுக்கும் பொற்பனையான் ஆகியோரே கதையின் முக்கிய பாத்திரங்கள். கதைக்குள் மேலை கீழை நாகரீகங்களிக்கு இடையேயான உறவும் உரசலும் கோடிட்டுக்காட்டப்படுகிறது. இறுதியில் அத்தகைய பகுப்புகள் பொருளற்று போவதையும் சொல்கிறது. பெனுவாவின் ஆசிரியர் அவனிடம் ‘மேற்குலக நாடுகளின் இரசவாதிகள் தங்கத்தின் மீது அளவு கடந்த பிரேமை உடையவர்களென்றும் கீழைத்தேய இரசவாதிகளோ அதைத் தன் மலத்திற்கு ஒப்பாக நினைப்பவர்களென்றும்’ சொல்கிறார். விந்தைகளும் வினோதங்களும் மாயங்களும் நிறைந்த இந்தியாவைத்தேடி பெனுவா இங்கே வருகிறான். ஆனால் அவனுக்கு காண கிடைப்பதோ பசியும் பட்டினியும் நீக்கமற நிறைந்த‌ தேசம். இவர்களா ரசவாதத்தில் உலோகங்களை பொன்னாக்க போகிறார்கள்? என யோசிக்கிறான். இந்தியர்களுடன் மேட்டிமை ஏதுமின்றி நெருங்கி பழகுகிறான். ரசவாதத்தை அவன் அறிந்துகொள்ள ஏன் விரும்புகிறான்? அது தன்னை தேவனின் ராஜ்ஜியத்திற்கு இட்டுச்செல்லும் என நம்புகிறான். அறிதலின் கிளர்ச்சியே அவனுக்கு முதன்மை விசை. ஆதிமுனியின் பெயர்தாங்கியான பொற்பனையானை சந்திக்கிறான். சுவடிகளை பிரதியெடுத்து துபாஷிகளுக்கு விற்று பெரும் பொருள் ஈட்டுகிறான். தற்செயலாக ரசவாத சுவடிக்கட்டுக்களை பிரதியெடுக்க அந்த பித்து அவனை பீடித்துக்கொள்கிறது. வைத்தியர்களிடம் வித்தைகளை அவர்கள் அறியாமலேயே கற்கிறான். தேவையானவற்றை சேகரிக்கிறான். வெடியுப்பை களவாடும்போது மாட்டிக்கொண்டுதான் பெனுவாவை சந்திக்கிறான். பொற்பனையான் தனது குடியின் பூர்வகதையை சொல்கிறான். திசைப்பூண்டை தின்ற வேடுவச்சி நரிகளால் வேட்டையாடப்பட இருந்தபோது சித்தனால் மீட்கப்படுகிறான். வேடன் சித்தனுடன் அணுக்கமாகிறான். அவருக்கு தேவையானவற்றை தேடிக்கொடுக்கிறான். பனமரம் கற்ழகத்தருவாகிறது. பொன் விளையவில்லை என்றாலும்கூட பனை கற்பக விருட்சம்தான். பொற்பனைக்கான வேட்கை செட்டியை, அரசனை, ஊர் மக்களை என எல்லோரையும் ஆட்டுவிக்கிறது. பித்துடன் ஒற்றைப்பனையை தேடியலைகிறார்கள். செட்டியைக்கொன்றவர்களை பழிதீர்க்க மணிக்கிராமத்தினர் காவல்படையினரான வீரகொடியினரை அணுகுகின்றனர். அதன் தலைவன் மணிமாறன் வழியாகவே பொற்பனையான் ஆதிமுனியாகிறான். தலைச்சன் பிள்ளைக்கு‌ பொற்பனையான் என பெயரிடுகிறார். அந்த கொடிவழியில் வந்தவன் தான் பெனுவாவை சந்திக்கும் பொற்பனையான். ஆதிமுனியின் கதை அவனுடைய கூற்றாகவே வருகிறது. ரசவாதத்தில் ஆர்வம் காட்டும் பெனுவாவை வைத்தியர் எச்சரிக்கிறார். ரசசித்தி எல்லாருக்குமானது அல்ல என்கிறார். உலக வாழ்வில் பற்றுள்ளவர்களுக்கு அது கைகூடாது என்கிறார். அதற்குள் பயணித்து வாழ்வை வீணடித்தவர் பட்டியல் மிக நீண்டதென எச்சரிக்கிறார். தங்கத்துக்காக அல்ல ரசவாதம் எனும் கலைக்காகவே இதில் ஈடுபடவேண்டும் எனும் உறுதியுடன்தான் இருவரும் இணைந்து ஈடுபடத்தொடங்குகிறார்கள்.‌ இவர்களுக்கு இடையேயான மாறுபாடு எங்கு எப்படி ஏற்படுகிறது? ஏழாம் காய்ச்சலுக்கு பதிலாக ஐந்தாம் காய்ச்சல் வெடியுப்பு பயன்படுத்தியதால் மீண்டும் வெடியுப்பு வேண்டும் என பொற்பனையான் கோருகிறான். வெடியுப்பு கணிசமாக குறைந்துள்ளதால் கம்பேனி பெனுவாவை நெருக்கியது. ஐந்தாம் காய்ச்சலுக்கும் ஏழாம் காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசமில்லை என வாதிடுகிறான் பெனுவா. “சிவன் தென்னாட்டவனென்றாலும் தெற்கே பயணித்தால் கைலாச மலைகளை அடைய முடியாது” என்கிறான் பொற்பனையான். இந்த இடத்தில் பொற்பனையான் வழிமுறையில் கறாராக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அவன் பீடிக்கப்பட்டவன். நான்கு நூற்றாண்டு நீண்ட வேளிர் அரசின் கடைசி மண்ணன் ரசவாத பித்தேறி ரசமணிகளை விழுங்கி பித்தாகி இறந்தவன். அவனே பொற்பனையானின் மீது ஆரோகணித்தவன். “பொற்பனையானுக்கு விளைபொருள் மட்டுமே குறியாயிருக்க பெனுவாவிற்கோ வழிமுறைகளில் தாதுக்களில் நிகழும் மாற்றங்கள் ஏனெனக் கேள்விகளால் ஆர்வமாய் இருந்தது,” என இருவரின் உளப்போக்கையும் கதை காட்டிச்செல்கிறது. சித்ரனின் ‘மாயவன்’ குறுங்கதை ஒருவனுள் உள்ள இரு சாத்தியங்களை சொல்வது. பெனுவாவையும் பொற்பனையானையும் அப்படி காண இடமுண்டு. செயநீர் பற்றிய சுவடியை கைப்பற்ற வைத்தியரை கொல்லவும் செய்கிறான் பொற்பனையான். தங்கத்திற்கு பதிலாக மூன்று நீலமணிகள் கிடைக்கின்றன. பொற்பனையான் மனமொடிந்து ரசமணியை தயாரிக்க செல்கிறான். அதன் வழி கற்பகதருவை கண்டுவிட முயல்கிறான். பெனுவாவிற்கோ தங்கமாகவில்லை என்பது பொருட்டாக இல்லை இதுவரை மானுடம் அறியாத புதிய தாது உருவாகியிருக்கிறது என்பதே அவனுக்கு வியப்புக்குரியதாக உள்ளது. கதையில் வரும் உபதலைப்புகள் நம் கவனத்திற்கு உரியவை. ‘ஆதிமுனியின் கதை (அ) கற்பக விருட்சத்தின் கதை’ எனும் முதல் தலைப்பில் ஒரே கதை பெனுவாவிற்கு ஆதி முனியினுடையதாகவும் பொற்பனையானுக்கு ‘கற்பகவிருட்சத்தின் கதையாகவும்’ இருக்கிறது.  பெனுவாவிற்கு ‘திசையறியா வேடுவச்சியின் கதையாக’ உள்ளது பொற்பனையானுக்கு ‘பொற்பனம்பழம் காய்த்த கதையாகிறது’. ஒரே அனுபவம் பெனுவாவிற்கு ‘மெய்ஞானியின் கல்லாகவும்’ பொற்பனையானுக்கு ‘இரசவாதியின் சாபமாகவும்’ ஆகிறது. ‘நித்தியத்தின் பேரொளியை’ ஒருவருக்கு அளிக்கும் அதுவே இன்னொருவருக்கு ‘ஒலியெழா மணியாக’ உள்ளது.  தங்க பித்தேறிய பொற்பனையானுக்கு மரணமும் அறிதலின் பொருட்டு ஈடுபட்ட பெனுவாவிற்கு தேவனின் ராஜ்ஜியமும் கிட்டுகிறது. ஞானம் ஒருபோதும் அதிகாரத்தின் கருவியாக ஆகிவிட முடியாது என்பதே கதையின் தரிசனம். வேடன் ஏனாதியை கொல்கிறான். அரச மறுப்பு என்பது முக்கியமான சரடாக கதையில் துலங்கி வருகிறது. அதிகாரமற்றவர்களிடமே ஞானம் சென்று படிகிறது. வேடனிடமிருந்து பொற்பனை செட்டியை சென்றடைந்தபோதே அது பாவத்தின் கனியானது என்று புரிந்துகொள்கிறான் பெனுவா. சித்தர் மரபு என்பதே வெகுமக்களின் அதிகார மறுப்புடன் நெருக்கமாக தொடர்புடையது. ‘விசும்பின் மொழி’ கதையிலும் இக்கதையிலும் அண்டத்திலுள்ளவையே பிண்டத்தில் பிண்டத்தில் உள்ளவையே அண்டத்தில் எனும் சித்தர் மரபின் மெய்யியல் தரிசனம் மையமாக உள்ளது. கதையின் இறுதி அதை உறுதிசெய்யும் அபாரமான பகுதி. தமிழர் மெய்யியல்/ஆன்மீகத்தை/ மறைஞானத்தை பேசுபொருளாக்கிய விதத்தில் ப. சிங்காரம், ஜெயமோகனின் ‘கொற்றவை’ ரமேஷ் பிரேம் கதைகளின் வரிசையில் சித்ரனின் ‘பொற்பனையானை’ வைக்கலாம். கதையில்


 தொழிற்படும் கச்சிதமின்மையே கதைக்கு ஒரு வசீகரத்தை அளிக்கிறது. அவ்வகையில் சிறுகதை வடிவமே நாவல்தன்மைக்கு நெருங்கிச்செல்கிறது. அரவிந்த் கருணாகரனின் “சீர்மை” ஏறத்தாழ இதே அளவு. அது ஒரு நாவலாகவே கருதப்படுகிறது. “பொற்பனையானையும்” அப்படி கருத இடமுள்ளது. 


என் வாசிப்பின் எல்லையில் ‘தூண்டில்’ ‘நீர்மை குன்றும் நெடுங்கடல்’ ‘கனாத்திறமுரைத்த காதைகள்’, ‘உடல் இயற்கை துறவு’ ‘நைனாரியும் பதின்கரையும்’ ஆகியவை என்னை ஈர்க்காத கதைகள். ‘உடல் இயற்கை..’ கதையில்  கதைசொல்லி வழியாக இன்னோருவரின் கதையாக சொல்லப்படுவதும் அந்த கதை குறித்த சிந்தனைகளுமாக உள்ள இவ்வடிவம் கதையின் மைய தரிசனத்தை வலுப்படுத்தவில்லை. அமானுட அனுபவங்கள் மோதலின் உச்சத்தில் நிகழும்போது தான் பெறுமதி கொள்கின்றன. ‘வழிப்போக்கன்’ கதையில் வரும் பரமசிவத்திற்கும் இக்கதையில் வரும் சந்திரசேகருக்கும், விசும்பின் மொழியின் வவ்வால் சாமிக்கும் அவை பொருந்தி வருகின்றன. இக்கதையின் கதைசொல்லிக்கும் அந்த அமானுட தரிசனம் கிடைப்பது கதையின் ஓர்மையை குலைப்பதாக உள்ளது. ஆன்மீகத்தை பேசுபொருளாக கொண்ட கதைகளில் எழுத்தாளர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதி இதுவே. அமானுட அனுபவங்களை நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதுவதில் மிகுந்த கவனம் தேவையாகிறது. அதீதமாகும்போது கேலிக்குரியதாக ஆகிவிடும் அபாயம் அதற்கு உண்டு. 


புதிய தலைமுறை கதைசொல்லிகளில் முழுமை நோக்கு கொண்ட படைப்பாளிகள் ஒப்புநோக்க சிலரே. உலக இயக்கத்தின் ஆதாரத்திற்கு சென்று அதன் சீர்மையை தரிசிக்கும் விருப்புறுதி கொண்ட வெகு சில சமகால எழுத்தாளர்களில் சித்ரனும் ஒருவர். சீர்மையை காண ஊனக்கண்களுக்கு அப்பால் ஒரு விழி திறக்க வேண்டியுள்ளது. ‘பொற்பனையான்’ அந்த சாத்தியத்தை எனக்கு காட்டுகிறது. அவ்வகையில் சித்ரனின் கதைகள் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமான வரவு. நண்பராகவும் தமிழ் இலக்கிய வாசகராகவும் சித்ரன் நெடுங்காலம் தமிழ் புனைவுக்கு பங்காற்றுவார் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. 

  •  

தர்ஜமா

மொழிபெயர்ப்பு நிலையானது அல்ல – கலாச்சாரமும், மொழியியலும் சமூகச் சூழல்களும் காலத்திற்கேற்ப மொழியாக்கத்தை உருவாக்குகின்றன. ‘மறு-மொழிபெயர்ப்பு சார்பு’ காலப்போக்கில் நியாயங்களை, விளக்கங்களை மாற்றுவது. ஹோமரின் இலியட் டஜன் கணக்கான முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் வலியுறுத்தின, அதே நேரத்தில் கரோலின் அலெக்சாண்டரின் நவீன பதிப்பு, மனிதநேயத்தையும் போர் எதிர்ப்பு உணர்வுகளிலும் கவனம் செலுத்தின. … Continue reading

  •  

தீச்சொல் நிகண்டு

  தீச்சொல் நிகண்டு நாஞ்சில் நாடன் கும்பமுனி கர்நாடக சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி எழுதினால் அவர் சங்கி என உலகம் தூற்றும் அல்லால் பூமாரி பொழியும் என்பதுவும் அறிவார். 1919-ம் ஆண்டில் பிறந்த நாகப்பட்டினம் சந்திரசேகரன் வசந்த கோகிலம் என்பது பாடகியின் முழுப்பெயர். இரிஞ்ஞாலைக்குடா, கோபாலபுரம் ஆகிய ஊர்களில் வாழ்ந்தவர். காசநோய் வந்து, 1951-ல் … Continue reading

  •  

நாஞ்சில் நாடன் சொல்வனம் கவிதைகள்

ஊடக வெளிச்சம் புறநானூற்றின் உரிமைத் தமிழ்க்குடிதிருக்குறளின் பட்டாக்காரன்காப்பியங்களை திரைக் காவியம் செய்தவன்கம்பனில் காமரசங்கள் பிழிந்தவன்அறிவது மிகவும் அவசியம் எனஊடகங்களின் உயர்தரச் செய்திகள் இமயத் தாரகை ஆம்னிஶ்ரீயின்ஐந்தாம் கணவன் ஆண்குறி நீளம்மூன்றே அங்குலம்! 2.பிரபஞ்ச காவலன் ஆத்மார்த்த மயன்காமம் துய்த்த காரிகைக் கணக்குஐந்நூற்று ஒன்றென அறிவீரா நீர்? ம.பி.க. கட்சி வேட்பாளர்அறிவித்த சொத்து மதிப்பு66,343 கோடி என்பது … Continue reading

  •  

ஓடும் தேர் நிலையும் நிற்கும்!

ஓடும் தேர் நிலையும் நிற்கும்! நாஞ்சில் நாடன் வாசித்த புத்தகங்களையும், பருவ இதழ்களையும், பிறிதோர் காலத்துத் தேவைப்படும் எனக் கருதியவற்றை மாற்றி வைப்பான். தேவைப்படாது எனக் கண்டவற்றைத் தனியாக அடுக்கி வைப்பான். இனி எத்தனை காலம் மிச்சம் இருக்கிறது? இன்றுவரை 27,823 நாட்கள் வாழ்ந்தாயிற்று. எஞ்சிய நாட்களை சித்திரகுப்த நயினார் அறிவாரா? தென்திசைக் காவலன் அறிவானா? … Continue reading

  •  

சொல்வனம் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum

சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | Solvanam | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “ஓடும் தேர் நிலையும் நிற்கும்!”

  •  

நன்றே செய்வாய், பிழை செய்வாய்!

நாஞ்சில் நாடன் ஆன்லைனில் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்தார் கும்பமுனி. ஆதித்திய கரிகாலனைக் கொன்றவரார், கொலையேதானா, தற்கொலையா, விபத்தா, அயல் கண்டத்துச் சதியா, ஹாராக்கிரியா என்ற பிரச்னை ஆழிப் பேரலையாய் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பது. ‘சோத்துக் கவலை இல்லாட்டா சூத்துக் கவலை’ என்பது சொலவம். எத்தனை முண்டிதமோ, மண்சோறோ, குறியறுத்துக் குலதெய்வத்தின் தலைமீது சொரிதலோ! நாடே தீப்பற்றி எரியும் … Continue reading

  •  

கள்ளம் கரவு திருட்டு மோசணம்

மூத்தோர் மொழிந்தனர் ‘களவும் கற்று மற’ என. களவு எனில் திருட்டு, கரவு, மோஷணம், சோரி. மோஷணம் மலையாளத்திலும் சோரி இந்தியிலும் புழங்கும் சொற்கள். சோரி எனில் கம்பனுக்குக் குருதி. சோரை எனில் மலையாளிக்கு இரத்தம். ஆண்பெண் ஒழுக்கத்திலும் கற்பொழுக்கம் களவொழுக்கம் உண்டு. சுருக்கமாகக் கற்பு, களவு என்பார்கள். சில சமயம் தோன்றும் எனக்கு – … Continue reading

  •