Reading view

பொடி சங்கதி #1

ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் எங்கேயோ புயல் மூண்ட நொடியிலேயே மூக்கின் இரு துவாரங்களால் தேடி ஜலதோஷத்தைப் பிடித்துக்கொள்கிற அடியேன், முன்னறிவிப்புகளின்றி திடீரென பெய்த இரவு மழையில் முழுதாக நனைந்து, வீட்டு வாசலில் வந்து நிற்பதைக் கண்டதும் என்னுடைய அம்மா பால்கனி கதவைத் திறந்து உட்சபட்ச எச்சரிக்கைக் கூண்டை அவசர அவசரமாக ஏற்றினார். சில நாட்களாக தொடர்பில் இல்லாத கடவுள்களுக்கும் சேர்த்து செய்தி அனுப்பினார். சமையலறையில் சில அலமாரிகளின் கதவைப் பரபரப்பாகத் திறந்து மூடினார். அனைத்து அறைகளிலும் விளக்குகளை வரிசையாக எரியவிட்டார். தண்ணீரை ஆக்ரோஷமாகக் கொதிக்க விட்டார். விளக்கின் ஒளி சரியாகச் சிக்கும் கோணத்திலும் கண்களிலிருந்து சரியான தூரத்திலும் பிடித்துப் பார்த்து மாத்திரைகளின் காலவரையைச் சரிபார்த்தார். அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் யாரும் தயிரை நினைவினாலேக் கூட தொடக்கூடாது எனப் பிரகடனம் செய்தார். திடீரெனப் பெய்தாலும் ஒரு அளவுடன் அல்லவா பெய்திருக்கவேண்டும் என்ற அநியாயத்தை பாத்திரங்களோடு சேர்த்துத் தட்டிக்கேட்டார். எல்லோருக்கும் இதே கனமழை பெய்ததா என்று சிலரை அலைபேசியில் அழைத்து விசாரித்தார். நன்று எப்படியோ போகிறபடி போகட்டும், ஆனால் எனக்கு நேர்கிற அத்தனை தீங்கும் என்னைத் தவிரப் பிறர் தர வாரா என்ற அவரின் ஆழ்ந்த தொடர் நம்பிக்கையின் காரணமாக, கடைசியாக என்னையே கடிந்துகொண்டார்.

இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் ஏறும் வரையில் மழை வரும் அறிகுறி வானிலே காற்றிலே யாரின் விழியிலோ தென்படவில்லை. இடிகள் ஒதுங்கத் தோதாக வெறும் மரங்கள் மட்டும் இருந்த நெடுஞ்சாலையை தொட்டதும் மழை வலுத்ததால், தப்பிக்க வழியும் தென்படவில்லை. ஒரு போக்குவரத்து சந்திப்பில் பச்சை விளக்கு விழும் வரை கருணையின்றி நிறுத்திவைக்கப்பட்டோம். கவலைகளின்றி ஆடிப்பாடும் இளம் தமிழ்த் திரை கதாநாயகி போலவோ, எதிராளியின் முகத்தில் ஆவேசமாகக் குத்திவிட்டு கைவளையை பின்னுக்குத் தள்ளியபடி slow-motionஇல் நெற்றியில் வழியும் மழைநீரைத் துடைக்கும் கதாநாயகனைப் போலவோ அல்லாமல், மௌனமாக மொட்டைத் தலையில் மழையை வாங்கியபடி அமர்ந்திருந்தேன். ஏழெட்டு நிமிடங்களுக்குப் பின் ஒரு கூரைக்கு அடியில் சேர்வதற்குள் என் காதுகளில் அலையடித்தது. புதிதாகக் காதலில் விழுந்தவன் போல முதுகுத்தண்டு சில்லிட்டது. காலணிகளில் தேங்கியிருந்த இரண்டு குளங்களில் நிலைபெற்று வளர்ந்து வளைந்ததால் தான் அவை கெண்டைக் கால்களோ என்று தோன்றியது. கால்சட்டையில் அவசரமாகத் திணிக்கப்பட்டிருந்த கைக்குட்டையோடு சேர்ந்து சில பழைய சோகங்களையும் சேர்த்தே பிழியமுடிந்தது.

அடுத்த சில நாட்களில் என்னைப் பீடிக்கப் போகிற நோய்களைத் தடுக்கும் வழிமுறைகளை ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி, இரவெல்லாம் அவற்றைத் திருத்தி காலையில் எனக்காகக் காத்திருந்த அம்மாவின் முன்னே முழு ஆரோக்கியத்துடன் காட்சி தந்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினேன். தொண்டையில் சிறு கிச் கீச் கூட இல்லை. எதை விழுங்கினாலும் நள்ளிரவு கடற்கரைச் சாலையில் செல்லும் பணக்காரர்களின் வாகனங்களைப் போலத் தடையோ வலியோ இன்றி வழுக்கிக்கொண்டு சென்றது. காய்ச்சலின் மூதாதையரான உடல் வலி எந்தப்பாகத்திலும் தோன்றியிருக்கவில்லை. ஸைபீரியாவிலிருந்து ஒரு வேளை சில பனிக்கரடிகள் வந்து பணிபுரிய நேர்ந்தால் அதற்கு ஏதுவாக அதீதக் குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகளில் அன்று அமர்ந்து வேலை செய்து திரும்பினால் நோய் துவங்கிவிடுமெனக் கணித்த அம்மா, அவரின் போர்க்கால-அடிப்படை நடவடிக்கைகளை சில மணி நேரங்களுக்குத் தள்ளி வைக்க சம்மதித்தார்.

மாலையும் வந்தது, நானும் திரும்பி வந்தேன் – பூங்காற்று தடையின்றி வந்தாடும் வாசலாம் மூக்குத் துவாரங்களுடனும், பிறர் தரும் அறிவுரைகளை இந்தப்பக்கம் வாங்கி அந்தப்பக்கம் சுலபமாக விட ஏதுவாக அடைப்பில்லாத காதுகளுடனும். மற்றுமொரு இரவு கடந்ததும், அம்மா உண்மையிலேயே பீதியடைந்தார். வழக்கமான ஜலதோஷங்கள் இன்றி இது வேறேதோ விபரீதத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் அமைதியான முதல் பகுதி என்று கலவரமடைந்தார். கடவுள்களைப் புறக்கணித்து துஷ்ட சக்திகளைப் பற்றி யோசிக்க துவங்கினார்.  இரண்டு மூன்று நாட்களுக்கு நான் கையை நீட்டினால், காலை நீட்டினால், எழுந்தால், நின்றால், நடந்தால், என் புருவங்கள் சுருங்கினால், என் தொண்டை விழுங்கினால், என் குரல் சற்றே பிசகினால் தீவிரமான சிந்தனையுடன் என்னையே தொடர்ந்து வந்தார். A24 தயாரித்த ஒரு மென் திகில் திரைப்படத்தில் சூழலின் அடர்த்தியை கூட்டவென தென்படும் உருவகக் காட்சிபோல, ஈரம் காய்வதற்கென ஆவென வாயைப் பிளந்தபடி சுவரோரமாகச் சாய்த்து வைக்கப்பட்டிருந்த என் சப்பாத்துகள் இவற்றுக்கு நடுவே அவ்வப்போது எங்கள் கண்களில் தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தது. மேற்கொண்டு ஏதும் சம்பவங்கள் நிகழாமல், சில நாட்களுக்குப் பிறகு ஒரு வழியாக அந்த திடீர் மழை எங்கள் வீட்டைக் கடந்தது.

கண்முன்னே தெருவே வெள்ளக்காடானாலும், இடியிடித்து மின்னல் வெட்டி வீடே அதிர்ந்தாலும், வீட்டுக்குள்ளேயே மழை ஒழுகத்துவங்கினாலும், இதெல்லாம் பெரிய மழையில்லை என்று நிராகரிக்க என்னுடைய அம்மா, சில நாட்களுக்குப் பிறகு என்னிடமும் பிறரிடமும் அப்படியென்ன திடீர் மழை பெய்த விட்டதென்றும், அப்படியொன்றும் பெரிய மழையில்லையே, நான்கு தூறல் தூறியிருக்குமா என்றும் கேட்கத் துவங்கினார்.

[**]

அடுத்த அறையில் சத்தமாக ஒலிக்கும் தொலைக்காட்சி தொடர்களை சதா கேட்க விதிக்கப்பட்ட சங்கத்தின் சார்பாக நான் ஆணித்தரமாக நிறுவ நினைப்பது – எந்த அலைவரிசை, எந்தத் தொடர் என்ற பேதமின்றி அனைத்திலும் அதே பத்து பதினைந்து பின்னணிக்குரல்கள் தொடர்ந்து ஒலிப்பதன் பின்னணியில் ஒரு எளிய, பெரிய தத்துவம் இருக்கிறது. நல்லவர்களுக்கு என சில குரல்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கெட்டவர்களுக்கு என சில குரல்கள். கதாநாயக-நாயகிக்கென சில குரல்கள், முதல் வட்டமாக சுற்றி நிற்கும் குடும்பத்தினருக்கு சில குரல்கள், ஒன்று விட்ட வெளி வட்டங்களில் தள்ளி நிற்கும் குடும்பத்தினருக்கு சில குரல்கள். நல்ல மாமியாருக்கு ஒரு குரல், கெட்ட மாமியாருக்கு ஒரு குரல், நடுநிலையான மாமியாருக்கு ஒரு குரல்; கண்டிப்பான குடும்பத் தலைவருக்கென ஒரு குரல், பழைய பனியனுடன் ஓரமாக நிற்கும் குடும்பத்தலைவருக்கென ஒரு குரல்; பணக்காரக் குடும்பங்கள், ஏழைக் குடும்பங்கள் என்ற பேதமில்லை, நகரத் தொடர்கள், கிராமியத் தொடர்கள் என்ற பேதமில்லை; துணைக் கதாபாத்திரங்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்து வரிசைப்படுத்தப்பட்ட குரல்கள் – முக்கியமான அண்ணிக்கு ஒரு குரல், மாதத்திற்கு ஒரு முறை வருகிற சித்தப்பாவிற்கு ஒரு குரல்; ஆண்பார்வையின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இளம் மாமியார்கள், அண்ணிகள், மனைவிகள், நாயகிகள், தங்கைகளுக்குத் தனியான குரல்கள், ஆண்பார்வையில் சிக்காத மற்ற பெண்களுக்கு சகோதரித்தனமான குரல்கள். விசிறியைப் போல விரியும் வண்ணப்பூச்சுகளின் விற்பனை அட்டவணையைப் போல, துல்லியமாக வகுத்துப் பிரிக்கப்பட்ட படிநிலைகளையும் குணநிலைகளையும் கொண்ட குரல்கள், அதே போலப் பகுக்கப்பட்ட பின்னணி இசைத்துணுக்குகளுக்கு இடையிடையே வசனங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதே மனித பாவங்கள், அதே கதைகள், அதே திருப்பங்கள், அதே உணர்வுகள், அதே குரல்கள்.  சளி, காய்ச்சல் மற்றும் இதர உபாதைகளின் ஊடே இளைத்தும் அடர்ந்தும் பிசகினாலும் இந்த நியதி மாறுவதில்லை. காற்றின் அலைவரிசைகள் கலக்கும் ஒரு அபூர்வ தினத்தில், மரங்கொத்திப்பறவையின் குரலில் குயிலோசை கேட்கும் ஒரு அதிசய முகூர்த்தத்தில், நல்ல அண்ணியின் குரல் ஒலிப்பதிவுக்கூடத்திற்கு வந்து சேர முடியாமல் போக, அதற்குப் பதிலாக ஒலிக்கும் மாமியாரின் மோசமான தங்கைக் குரல் குணம் மாறி ஒலிக்கக் கூடும். எல்லா கைவேலைகளையும் போட்டது போட்டபடி, அடுத்த அறையில் அமர்ந்திருக்கும் என் கால்களை நோக்கி நகர்ந்து நனைக்கும் ஒரு குழப்ப அலையைத் தொடர்ந்து வந்து தொலைக்காட்சியின் முன் நின்றபடி, அந்தப் பிறழ்வை நான் மட்டும் புரிந்தவனாக அரையிருட்டில் தொலைக்காட்சியைப் பார்த்தபடி நிற்பேன்.

[**]

பதினைந்து பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பெண்ணை முதலில் பார்க்க நேர்ந்தது – இதே நகரத்தில், வேறொரு வாழ்க்கையில், வேறொரு சூழலில். நான் பணிபுரியும் அதே அலுவலகத்தில் அங்கங்கே தென்பட்டார், சில சமயங்களில் நான் பயணிக்கும் அதே அலுவலகப் பேருந்தில் ஏறினார். கடுமையான ஒரு பாவத்தை எப்போதும் தாங்கிய முகம். உடல்மொழியில் அதீத தன்னம்பிக்கை, பார்வையின் வீச்சிலே ஒரு சின்ன சவால். ஒரு முறை அலுவலக உணவு விடுதியில் யாருடனோ எதற்காகவோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஒரு கலங்கிய நினைவு. ஆறேழு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வேறொரு அலுவலகத்தில் அங்கங்கே தோன்றி மறைந்தார். சில சமயங்களில் பொது இடங்களிலும் கண்ணில் தட்டுப்பட்டார். அவருடைய அசாத்திய உயரமும் மத அடையாளங்களும் அவரை மிகச்சுலபமாகத் தனிமைப்படுத்தித் தெரியப்படுத்தின. நான் இன்னும் சில அலுவலகங்கள் மாறி, வீடுகள் மாறி, பத்து வருடங்கள் வழியே வழி மாறி, உருவம் மாறி இந்த வட்டப் பூங்காவைச் சுற்றி நடக்கும் பொழுதுகளில் அவர் மீண்டும் தென்படத்தொடங்கியிருக்கிறார். பூங்காவை ஒட்டிய அந்த வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டபடியோ, பூங்கா சாலையை பார்த்தபடி இருக்கும் ஜன்னலின் உள்ளே சமையல் செய்தபடியோ, பிள்ளைகள் அவரைச் சுற்றி இல்லாத சில அபூர்வ தருணங்களில் இலக்கின்றி நடந்தபடி, எப்போதையும் போல, என்னைக் கவனிக்காமல் என் இருப்பை அறியாமல் நகர்ந்தபடி. முகத்தில் எப்போதும் இருந்த கடுமை, காலம் பின் விட்டுச்சென்ற கால் தடங்களினால் சற்று கனிந்து கலைந்துவிட்டிருக்கிறது. சிறுகதை என்ற சட்டையை அணிவித்தால் தொளதொளக்கும் இந்தப் பரிச்சயத்தை, ஒரு குறுங்கவிதையின் எல்லையைத் தாண்டி நீளும் இந்த பரிச்சயத்தை அவரிடம் பகிர சில சமயங்களில் நான் விழைந்தாலும், ஒருமுறை கூட அவர் என்னை கவனித்திராததால், திரையில் பார்க்கிற பார்வையாளனாகவே நின்றுவிடுகிறேன். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களைக் கைப்பிடித்து அழைத்து வரும் ஆணாக நான் தோன்றக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் அந்த முயற்சியை ஒவ்வொரு முறையும் கைவிடுகிறேன். என்னக் காரணத்திற்காகவோ எங்கள் இருவரையும் விடாது பின் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிற காலத்தின் முடிவிற்கே மீண்டும் அதைக் கைவிடுகிறேன். காலம் தானே எங்களை stalk செய்கிறது?

[**]

இந்த தள்ளாத நடுத்தர வயதில் என்னுடைய இனிய, சிறிய நட்பு வட்டத்தில் இன்னும் ஒருவரை, ஒரே ஒருவரை, சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்காக சில விதிமுறைகளை வகுக்க நேர்ந்தது – வாரத்திற்கு நான்கு ரீல்களுக்கு மேலாகப் பகிர்பவராக இருக்கக் கூடாது; பால்புதுமையினருக்கு முன்னுரிமை; பால்பழமையினர் உள்ளே நுழைய வாய்ப்புகள் உண்டு என்றாலும் திருமணமாகிப் பிள்ளைகள் இருந்தால் வாய்ப்புகள் குறைவு; எல்லா வெள்ளிக்கிழமைகள் புதிய தமிழ் மசாலாத் திரைப்படங்கள் பார்த்து கருத்து சொல்பவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை, கருத்துக் கேட்பவர்களுக்கு நிச்சயம் அனுமதி இல்லை; செவ்வாய்க்கிழமையே வாரயிறுதிக்கான திட்டங்களைத் தீட்டுபவராக இருக்க வேண்டும், வெள்ளிக்கிழமை அதைக் கைவிடுபவராக இருக்க வேண்டும்; நல்ல நகைச்சுவையை ரசிப்பவராக இருக்க வேண்டும், அப்படிப்பட்டவர் என்னுடைய நகைச்சுவையை ரசிக்க நிச்சயம் நேரும்போது வாய்விட்டும் மனம்விட்டும் சிரிப்பவராக இருக்க வேண்டும்; ஜி ஜி என்று விளிப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்; நாட்டை ஆளும் ஜியின் நலம்விரும்பிகள் விண்ணப்பிக்க வேண்டாம்; இளையராஜா ரசிகர்களுக்கு அனுமதி உண்டென்றாலும், பிடித்த ஐந்து பாடல்கள் கேட்கப்பட்டு, அப்படி ஐந்து பாடல்களை உங்களால் சொல்லமுடிந்து விட்டால் துரதிர்ஷ்ட விதமாக நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள்; அதிகமாக selfie எடுப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை – அதே அளவு என்னையும் படம் எடுப்பவராக இருந்தால்; திரிஷா ரசிகர்களுக்கு அனுமதியில்லை; ஜெயமோகன் ரசிகர்களுக்கு trial period விதிக்கப்படலாம்; இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு அனுமதியில்லை; மதிய வேளைக்கு முன்னர் சந்திக்க நினைப்பவர்களுக்கு அனுமதியில்லை, மதியம் இரண்டு முதல் ஐந்து மணி வரை சந்திக்க விரும்புபவர்களுக்கு அனுமதியில்லை; உலக சினிமாப் பிரியர்களுக்கு முன்னுரிமை உண்டு என்றாலும் நான் கேள்விப்படாத படங்களைப் பார்த்தவராக இருந்தால் சில தடைகள் ஏற்படலாம்;  Whatsapp தவிர்த்த செயலிகளில் பேச விரும்புபவராக இருக்க வேண்டும்; தோன்றும் போதெல்லாம் தொலைப்பேசியில் அழைப்பவராக இருக்கக் கூடாது, தோன்றாத போதும் அழைப்பவராக இருக்கக்கூடாது, அழைக்கத் தோன்றும் பொழுதென்று ஒன்று இருப்பவராக இருக்கக்கூடாது; பிரயாணப்பிரியர்களுக்கு அனுமதியில்லை, பிரியாணிப்பிரியர்களுக்கு சில மேலதிகத் தேர்வுச் சுற்றுகள் இருக்கலாம்; ரோஸ்மில்க் பிரியர்கள் விண்ணப்பத்தில் அதைத் தெளிவாகக் குறிப்பிடவும்;  Mutual fundsஇல் முதலீடு செய்வதில் உள்ள நிதி அபாயங்களை நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை; மூன்றிற்கு மேற்பட்ட நண்பர்கள் இருப்பவர்கள் சந்தேகத்துடனேயே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்; என்னுடைய மற்ற நண்பர்களை அறிய விரும்புபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்; இவை அனைத்தும் பொருந்தி வந்தால் நான் வசிக்கும் சட்டமன்றத் தொகுதி எல்லைக்குள்ளே வசிப்பவராக இருத்தல் மிக அவசியம். விண்ணப்பிக்க விரும்புவோருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

[**]

கண்ணாடிக் கூண்டிற்கு வெளியே பாதுகாப்பாக நின்றபடி வியந்தும் ரசித்தும் நான் பார்க்கிற பிற பெற்றோர்-பிள்ளைகள் கணங்களில் தனித்த நின்றவர்கள் : மூன்றடி உயரத்தில் இரு தோள்களிலும் ஒவ்வொரு புத்தகப் பையைத் தாங்கியபடி தளர்ந்து நடக்கிற தந்தையும், அதே உயரத்திற்கு வளர்ந்து அவரை பின் தொடர்ந்து வரும் மகனும் மகளும்; பயந்தும் அழுதும் முரண்டு பிடித்தும் நின்றபின் தந்தையால் கொஞ்சம் கொஞ்சப்பட்டும், கெஞ்சப்பட்டும், மிஞ்சப்பட்டும் வலுக்கட்டாயமாகத் தனியாக நகரும் படிக்கட்டில் ஏற்றிவிடப்பட்ட சிறுமியும், அதே பயத்துடனும் பதற்றத்துடனும் தட்டுத் தடுமாறி மேலேறி வந்த மூன்றாவது படியில் தாவி பின் தொடர்ந்த தந்தையும்.

[**]

அனைவரும் நலமா?

  •  

பொடி சங்கதி #1

ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் எங்கேயோ புயல் மூண்ட நொடியிலேயே மூக்கின் இரு துவாரங்களால் தேடி ஜலதோஷத்தைப் பிடித்துக்கொள்கிற அடியேன், முன்னறிவிப்புகளின்றி திடீரென பெய்த இரவு மழையில் முழுதாக நனைந்து, வீட்டு வாசலில் வந்து நிற்பதைக் கண்டதும் என்னுடைய அம்மா பால்கனி கதவைத் திறந்து உட்சபட்ச எச்சரிக்கைக் கூண்டை அவசர அவசரமாக ஏற்றினார். சில நாட்களாக தொடர்பில் இல்லாத கடவுள்களுக்கும் சேர்த்து செய்தி அனுப்பினார். சமையலறையில் சில அலமாரிகளின் கதவைப் பரபரப்பாகத் திறந்து மூடினார். அனைத்து அறைகளிலும் விளக்குகளை வரிசையாக எரியவிட்டார். தண்ணீரை ஆக்ரோஷமாகக் கொதிக்க விட்டார். விளக்கின் ஒளி சரியாகச் சிக்கும் கோணத்திலும் கண்களிலிருந்து சரியான தூரத்திலும் பிடித்துப் பார்த்து மாத்திரைகளின் காலவரையைச் சரிபார்த்தார். அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் யாரும் தயிரை நினைவினாலேக் கூட தொடக்கூடாது எனப் பிரகடனம் செய்தார். திடீரெனப் பெய்தாலும் ஒரு அளவுடன் அல்லவா பெய்திருக்கவேண்டும் என்ற அநியாயத்தை பாத்திரங்களோடு சேர்த்துத் தட்டிக்கேட்டார். எல்லோருக்கும் இதே கனமழை பெய்ததா என்று சிலரை அலைபேசியில் அழைத்து விசாரித்தார். நன்று எப்படியோ போகிறபடி போகட்டும், ஆனால் எனக்கு நேர்கிற அத்தனை தீங்கும் என்னைத் தவிரப் பிறர் தர வாரா என்ற அவரின் ஆழ்ந்த தொடர் நம்பிக்கையின் காரணமாக, கடைசியாக என்னையே கடிந்துகொண்டார்.

இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் ஏறும் வரையில் மழை வரும் அறிகுறி வானிலே காற்றிலே யாரின் விழியிலோ தென்படவில்லை. இடிகள் ஒதுங்கத் தோதாக வெறும் மரங்கள் மட்டும் இருந்த நெடுஞ்சாலையை தொட்டதும் மழை வலுத்ததால், தப்பிக்க வழியும் தென்படவில்லை. ஒரு போக்குவரத்து சந்திப்பில் பச்சை விளக்கு விழும் வரை கருணையின்றி நிறுத்திவைக்கப்பட்டோம். கவலைகளின்றி ஆடிப்பாடும் இளம் தமிழ்த் திரை கதாநாயகி போலவோ, எதிராளியின் முகத்தில் ஆவேசமாகக் குத்திவிட்டு கைவளையை பின்னுக்குத் தள்ளியபடி slow-motionஇல் நெற்றியில் வழியும் மழைநீரைத் துடைக்கும் கதாநாயகனைப் போலவோ அல்லாமல், மௌனமாக மொட்டைத் தலையில் மழையை வாங்கியபடி அமர்ந்திருந்தேன். ஏழெட்டு நிமிடங்களுக்குப் பின் ஒரு கூரைக்கு அடியில் சேர்வதற்குள் என் காதுகளில் அலையடித்தது. புதிதாகக் காதலில் விழுந்தவன் போல முதுகுத்தண்டு சில்லிட்டது. காலணிகளில் தேங்கியிருந்த இரண்டு குளங்களில் நிலைபெற்று வளர்ந்து வளைந்ததால் தான் அவை கெண்டைக் கால்களோ என்று தோன்றியது. கால்சட்டையில் அவசரமாகத் திணிக்கப்பட்டிருந்த கைக்குட்டையோடு சேர்ந்து சில பழைய சோகங்களையும் சேர்த்தே பிழியமுடிந்தது.

அடுத்த சில நாட்களில் என்னைப் பீடிக்கப் போகிற நோய்களைத் தடுக்கும் வழிமுறைகளை ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி, இரவெல்லாம் அவற்றைத் திருத்தி காலையில் எனக்காகக் காத்திருந்த அம்மாவின் முன்னே முழு ஆரோக்கியத்துடன் காட்சி தந்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினேன். தொண்டையில் சிறு கிச் கீச் கூட இல்லை. எதை விழுங்கினாலும் நள்ளிரவு கடற்கரைச் சாலையில் செல்லும் பணக்காரர்களின் வாகனங்களைப் போலத் தடையோ வலியோ இன்றி வழுக்கிக்கொண்டு சென்றது. காய்ச்சலின் மூதாதையரான உடல் வலி எந்தப்பாகத்திலும் தோன்றியிருக்கவில்லை. ஸைபீரியாவிலிருந்து ஒரு வேளை சில பனிக்கரடிகள் வந்து பணிபுரிய நேர்ந்தால் அதற்கு ஏதுவாக அதீதக் குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகளில் அன்று அமர்ந்து வேலை செய்து திரும்பினால் நோய் துவங்கிவிடுமெனக் கணித்த அம்மா, அவரின் போர்க்கால-அடிப்படை நடவடிக்கைகளை சில மணி நேரங்களுக்குத் தள்ளி வைக்க சம்மதித்தார்.

மாலையும் வந்தது, நானும் திரும்பி வந்தேன் – பூங்காற்று தடையின்றி வந்தாடும் வாசலாம் மூக்குத் துவாரங்களுடனும், பிறர் தரும் அறிவுரைகளை இந்தப்பக்கம் வாங்கி அந்தப்பக்கம் சுலபமாக விட ஏதுவாக அடைப்பில்லாத காதுகளுடனும். மற்றுமொரு இரவு கடந்ததும், அம்மா உண்மையிலேயே பீதியடைந்தார். வழக்கமான ஜலதோஷங்கள் இன்றி இது வேறேதோ விபரீதத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் அமைதியான முதல் பகுதி என்று கலவரமடைந்தார். கடவுள்களைப் புறக்கணித்து துஷ்ட சக்திகளைப் பற்றி யோசிக்க துவங்கினார்.  இரண்டு மூன்று நாட்களுக்கு நான் கையை நீட்டினால், காலை நீட்டினால், எழுந்தால், நின்றால், நடந்தால், என் புருவங்கள் சுருங்கினால், என் தொண்டை விழுங்கினால், என் குரல் சற்றே பிசகினால் தீவிரமான சிந்தனையுடன் என்னையே தொடர்ந்து வந்தார். A24 தயாரித்த ஒரு மென் திகில் திரைப்படத்தில் சூழலின் அடர்த்தியை கூட்டவென தென்படும் உருவகக் காட்சிபோல, ஈரம் காய்வதற்கென ஆவென வாயைப் பிளந்தபடி சுவரோரமாகச் சாய்த்து வைக்கப்பட்டிருந்த என் சப்பாத்துகள் இவற்றுக்கு நடுவே அவ்வப்போது எங்கள் கண்களில் தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தது. மேற்கொண்டு ஏதும் சம்பவங்கள் நிகழாமல், சில நாட்களுக்குப் பிறகு ஒரு வழியாக அந்த திடீர் மழை எங்கள் வீட்டைக் கடந்தது.

கண்முன்னே தெருவே வெள்ளக்காடானாலும், இடியிடித்து மின்னல் வெட்டி வீடே அதிர்ந்தாலும், வீட்டுக்குள்ளேயே மழை ஒழுகத்துவங்கினாலும், இதெல்லாம் பெரிய மழையில்லை என்று நிராகரிக்க என்னுடைய அம்மா, சில நாட்களுக்குப் பிறகு என்னிடமும் பிறரிடமும் அப்படியென்ன திடீர் மழை பெய்த விட்டதென்றும், அப்படியொன்றும் பெரிய மழையில்லையே, நான்கு தூறல் தூறியிருக்குமா என்றும் கேட்கத் துவங்கினார்.

[**]

அடுத்த அறையில் சத்தமாக ஒலிக்கும் தொலைக்காட்சி தொடர்களை சதா கேட்க விதிக்கப்பட்ட சங்கத்தின் சார்பாக நான் ஆணித்தரமாக நிறுவ நினைப்பது – எந்த அலைவரிசை, எந்தத் தொடர் என்ற பேதமின்றி அனைத்திலும் அதே பத்து பதினைந்து பின்னணிக்குரல்கள் தொடர்ந்து ஒலிப்பதன் பின்னணியில் ஒரு எளிய, பெரிய தத்துவம் இருக்கிறது. நல்லவர்களுக்கு என சில குரல்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கெட்டவர்களுக்கு என சில குரல்கள். கதாநாயக-நாயகிக்கென சில குரல்கள், முதல் வட்டமாக சுற்றி நிற்கும் குடும்பத்தினருக்கு சில குரல்கள், ஒன்று விட்ட வெளி வட்டங்களில் தள்ளி நிற்கும் குடும்பத்தினருக்கு சில குரல்கள். நல்ல மாமியாருக்கு ஒரு குரல், கெட்ட மாமியாருக்கு ஒரு குரல், நடுநிலையான மாமியாருக்கு ஒரு குரல்; கண்டிப்பான குடும்பத் தலைவருக்கென ஒரு குரல், பழைய பனியனுடன் ஓரமாக நிற்கும் குடும்பத்தலைவருக்கென ஒரு குரல்; பணக்காரக் குடும்பங்கள், ஏழைக் குடும்பங்கள் என்ற பேதமில்லை, நகரத் தொடர்கள், கிராமியத் தொடர்கள் என்ற பேதமில்லை; துணைக் கதாபாத்திரங்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்து வரிசைப்படுத்தப்பட்ட குரல்கள் – முக்கியமான அண்ணிக்கு ஒரு குரல், மாதத்திற்கு ஒரு முறை வருகிற சித்தப்பாவிற்கு ஒரு குரல்; ஆண்பார்வையின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இளம் மாமியார்கள், அண்ணிகள், மனைவிகள், நாயகிகள், தங்கைகளுக்குத் தனியான குரல்கள், ஆண்பார்வையில் சிக்காத மற்ற பெண்களுக்கு சகோதரித்தனமான குரல்கள். விசிறியைப் போல விரியும் வண்ணப்பூச்சுகளின் விற்பனை அட்டவணையைப் போல, துல்லியமாக வகுத்துப் பிரிக்கப்பட்ட படிநிலைகளையும் குணநிலைகளையும் கொண்ட குரல்கள், அதே போலப் பகுக்கப்பட்ட பின்னணி இசைத்துணுக்குகளுக்கு இடையிடையே வசனங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதே மனித பாவங்கள், அதே கதைகள், அதே திருப்பங்கள், அதே உணர்வுகள், அதே குரல்கள்.  சளி, காய்ச்சல் மற்றும் இதர உபாதைகளின் ஊடே இளைத்தும் அடர்ந்தும் பிசகினாலும் இந்த நியதி மாறுவதில்லை. காற்றின் அலைவரிசைகள் கலக்கும் ஒரு அபூர்வ தினத்தில், மரங்கொத்திப்பறவையின் குரலில் குயிலோசை கேட்கும் ஒரு அதிசய முகூர்த்தத்தில், நல்ல அண்ணியின் குரல் ஒலிப்பதிவுக்கூடத்திற்கு வந்து சேர முடியாமல் போக, அதற்குப் பதிலாக ஒலிக்கும் மாமியாரின் மோசமான தங்கைக் குரல் குணம் மாறி ஒலிக்கக் கூடும். எல்லா கைவேலைகளையும் போட்டது போட்டபடி, அடுத்த அறையில் அமர்ந்திருக்கும் என் கால்களை நோக்கி நகர்ந்து நனைக்கும் ஒரு குழப்ப அலையைத் தொடர்ந்து வந்து தொலைக்காட்சியின் முன் நின்றபடி, அந்தப் பிறழ்வை நான் மட்டும் புரிந்தவனாக அரையிருட்டில் தொலைக்காட்சியைப் பார்த்தபடி நிற்பேன்.

[**]

பதினைந்து பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பெண்ணை முதலில் பார்க்க நேர்ந்தது – இதே நகரத்தில், வேறொரு வாழ்க்கையில், வேறொரு சூழலில். நான் பணிபுரியும் அதே அலுவலகத்தில் அங்கங்கே தென்பட்டார், சில சமயங்களில் நான் பயணிக்கும் அதே அலுவலகப் பேருந்தில் ஏறினார். கடுமையான ஒரு பாவத்தை எப்போதும் தாங்கிய முகம். உடல்மொழியில் அதீத தன்னம்பிக்கை, பார்வையின் வீச்சிலே ஒரு சின்ன சவால். ஒரு முறை அலுவலக உணவு விடுதியில் யாருடனோ எதற்காகவோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஒரு கலங்கிய நினைவு. ஆறேழு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வேறொரு அலுவலகத்தில் அங்கங்கே தோன்றி மறைந்தார். சில சமயங்களில் பொது இடங்களிலும் கண்ணில் தட்டுப்பட்டார். அவருடைய அசாத்திய உயரமும் மத அடையாளங்களும் அவரை மிகச்சுலபமாகத் தனிமைப்படுத்தித் தெரியப்படுத்தின. நான் இன்னும் சில அலுவலகங்கள் மாறி, வீடுகள் மாறி, பத்து வருடங்கள் வழியே வழி மாறி, உருவம் மாறி இந்த வட்டப் பூங்காவைச் சுற்றி நடக்கும் பொழுதுகளில் அவர் மீண்டும் தென்படத்தொடங்கியிருக்கிறார். பூங்காவை ஒட்டிய அந்த வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டபடியோ, பூங்கா சாலையை பார்த்தபடி இருக்கும் ஜன்னலின் உள்ளே சமையல் செய்தபடியோ, பிள்ளைகள் அவரைச் சுற்றி இல்லாத சில அபூர்வ தருணங்களில் இலக்கின்றி நடந்தபடி, எப்போதையும் போல, என்னைக் கவனிக்காமல் என் இருப்பை அறியாமல் நகர்ந்தபடி. முகத்தில் எப்போதும் இருந்த கடுமை, காலம் பின் விட்டுச்சென்ற கால் தடங்களினால் சற்று கனிந்து கலைந்துவிட்டிருக்கிறது. சிறுகதை என்ற சட்டையை அணிவித்தால் தொளதொளக்கும் இந்தப் பரிச்சயத்தை, ஒரு குறுங்கவிதையின் எல்லையைத் தாண்டி நீளும் இந்த பரிச்சயத்தை அவரிடம் பகிர சில சமயங்களில் நான் விழைந்தாலும், ஒருமுறை கூட அவர் என்னை கவனித்திராததால், திரையில் பார்க்கிற பார்வையாளனாகவே நின்றுவிடுகிறேன். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களைக் கைப்பிடித்து அழைத்து வரும் ஆணாக நான் தோன்றக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் அந்த முயற்சியை ஒவ்வொரு முறையும் கைவிடுகிறேன். என்னக் காரணத்திற்காகவோ எங்கள் இருவரையும் விடாது பின் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிற காலத்தின் முடிவிற்கே மீண்டும் அதைக் கைவிடுகிறேன். காலம் தானே எங்களை stalk செய்கிறது?

[**]

இந்த தள்ளாத நடுத்தர வயதில் என்னுடைய இனிய, சிறிய நட்பு வட்டத்தில் இன்னும் ஒருவரை, ஒரே ஒருவரை, சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்காக சில விதிமுறைகளை வகுக்க நேர்ந்தது – வாரத்திற்கு நான்கு ரீல்களுக்கு மேலாகப் பகிர்பவராக இருக்கக் கூடாது; பால்புதுமையினருக்கு முன்னுரிமை; பால்பழமையினர் உள்ளே நுழைய வாய்ப்புகள் உண்டு என்றாலும் திருமணமாகிப் பிள்ளைகள் இருந்தால் வாய்ப்புகள் குறைவு; எல்லா வெள்ளிக்கிழமைகள் புதிய தமிழ் மசாலாத் திரைப்படங்கள் பார்த்து கருத்து சொல்பவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை, கருத்துக் கேட்பவர்களுக்கு நிச்சயம் அனுமதி இல்லை; செவ்வாய்க்கிழமையே வாரயிறுதிக்கான திட்டங்களைத் தீட்டுபவராக இருக்க வேண்டும், வெள்ளிக்கிழமை அதைக் கைவிடுபவராக இருக்க வேண்டும்; நல்ல நகைச்சுவையை ரசிப்பவராக இருக்க வேண்டும், அப்படிப்பட்டவர் என்னுடைய நகைச்சுவையை ரசிக்க நிச்சயம் நேரும்போது வாய்விட்டும் மனம்விட்டும் சிரிப்பவராக இருக்க வேண்டும்; ஜி ஜி என்று விளிப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்; நாட்டை ஆளும் ஜியின் நலம்விரும்பிகள் விண்ணப்பிக்க வேண்டாம்; இளையராஜா ரசிகர்களுக்கு அனுமதி உண்டென்றாலும், பிடித்த ஐந்து பாடல்கள் கேட்கப்பட்டு, அப்படி ஐந்து பாடல்களை உங்களால் சொல்லமுடிந்து விட்டால் துரதிர்ஷ்ட விதமாக நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள்; அதிகமாக selfie எடுப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை – அதே அளவு என்னையும் படம் எடுப்பவராக இருந்தால்; திரிஷா ரசிகர்களுக்கு அனுமதியில்லை; ஜெயமோகன் ரசிகர்களுக்கு trial period விதிக்கப்படலாம்; இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு அனுமதியில்லை; மதிய வேளைக்கு முன்னர் சந்திக்க நினைப்பவர்களுக்கு அனுமதியில்லை, மதியம் இரண்டு முதல் ஐந்து மணி வரை சந்திக்க விரும்புபவர்களுக்கு அனுமதியில்லை; உலக சினிமாப் பிரியர்களுக்கு முன்னுரிமை உண்டு என்றாலும் நான் கேள்விப்படாத படங்களைப் பார்த்தவராக இருந்தால் சில தடைகள் ஏற்படலாம்;  Whatsapp தவிர்த்த செயலிகளில் பேச விரும்புபவராக இருக்க வேண்டும்; தோன்றும் போதெல்லாம் தொலைப்பேசியில் அழைப்பவராக இருக்கக் கூடாது, தோன்றாத போதும் அழைப்பவராக இருக்கக்கூடாது, அழைக்கத் தோன்றும் பொழுதென்று ஒன்று இருப்பவராக இருக்கக்கூடாது; பிரயாணப்பிரியர்களுக்கு அனுமதியில்லை, பிரியாணிப்பிரியர்களுக்கு சில மேலதிகத் தேர்வுச் சுற்றுகள் இருக்கலாம்; ரோஸ்மில்க் பிரியர்கள் விண்ணப்பத்தில் அதைத் தெளிவாகக் குறிப்பிடவும்;  Mutual fundsஇல் முதலீடு செய்வதில் உள்ள நிதி அபாயங்களை நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை; மூன்றிற்கு மேற்பட்ட நண்பர்கள் இருப்பவர்கள் சந்தேகத்துடனேயே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்; என்னுடைய மற்ற நண்பர்களை அறிய விரும்புபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்; இவை அனைத்தும் பொருந்தி வந்தால் நான் வசிக்கும் சட்டமன்றத் தொகுதி எல்லைக்குள்ளே வசிப்பவராக இருத்தல் மிக அவசியம். விண்ணப்பிக்க விரும்புவோருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

[**]

கண்ணாடிக் கூண்டிற்கு வெளியே பாதுகாப்பாக நின்றபடி வியந்தும் ரசித்தும் நான் பார்க்கிற பிற பெற்றோர்-பிள்ளைகள் கணங்களில் தனித்த நின்றவர்கள் : மூன்றடி உயரத்தில் இரு தோள்களிலும் ஒவ்வொரு புத்தகப் பையைத் தாங்கியபடி தளர்ந்து நடக்கிற தந்தையும், அதே உயரத்திற்கு வளர்ந்து அவரை பின் தொடர்ந்து வரும் மகனும் மகளும்; பயந்தும் அழுதும் முரண்டு பிடித்தும் நின்றபின் தந்தையால் கொஞ்சம் கொஞ்சப்பட்டும், கெஞ்சப்பட்டும், மிஞ்சப்பட்டும் வலுக்கட்டாயமாகத் தனியாக நகரும் படிக்கட்டில் ஏற்றிவிடப்பட்ட சிறுமியும், அதே பயத்துடனும் பதற்றத்துடனும் தட்டுத் தடுமாறி மேலேறி வந்த மூன்றாவது படியில் தாவி பின் தொடர்ந்த தந்தையும்.

[**]

அனைவரும் நலமா?

  •