Reading view

பூச்சிகளின் தேசம்

பூச்சி இனங்கள் குறித்துத் தெரியாத பல தகவல்களைச் சொல்லும் இந்நூலுக்குச் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். அதில் “இவ்வுலகில் அதிக எண்ணிக்கையில் வாழும் உயிரினம் பூச்சியினம் தான்.  ஒரு தோராயமான கணக்கில் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சுமார் 10 லட்சம் பூச்சிகள் இருக்கின்றன. பூச்சிகளைத் தோழமையோடு பார்க்கச் சொல்லித் தரும் ஒரு தனி நூலைப் ‘பூச்சிகளின் தேசம்’ என்ற தலைப்பில் தந்திருக்கிறார் கோவை சதாசிவம்.  தமிழின் பசுமை இலக்கியத்தில், இது ஒரு முதன்மை முயற்சியாகும்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார்.

உலக வனப்பாதுகாப்பு ஆண்டையொட்டி மாணவிகள் சிறப்பு கானுலா செல்வது போலவும், பயண வழியில் உரையாடல் வழியே பூச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்வது போலவும் இந்நூல் அமைந்துள்ளது. கட்டுரையாக இல்லாமல் கேள்வி பதிலாகவும், உரையாடலாகவும் இந்நூல் அமைந்திருப்பதால் வாசிக்க எளிதாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. கானுலா குழுவினரோடு வேட்டை தடுப்புக் காவலராகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மான்பன் என்பவரும் இணைந்து கொள்கிறார். இடையிடையே பூச்சிகள் பற்றிய பழங்குடி மக்களின் அனுபவ அறிவை அவர் பகிர்ந்து கொள்வது சிறப்பு.

கரையான் பற்றிய கட்டுரையில், மலைவாழ் மக்களின் வீடுகட்டும் முறையைப் பற்றி இவர் விளக்குவது ஓர் எடுத்துக்காட்டு:-

“மலைவாழ் மக்களின் ஒரு பிரிவினர் கட்டும் வீடுகளில் மூங்கில் தப்பைகள் தான் சுவர்.  மூங்கில் தப்பைகளின் மீது கரையான் புற்றிலிருந்து எடுத்து வரும் மண்ணைத் தப்பைகள் மறைய பூசி விடுவார்கள். சின்ன சந்து கூட இருக்காது. ஆனால் காற்றோட்டமும் மித வெப்பமும் சமச் சீராக இருக்கும்..”

17ஆம் நூற்றாண்டில் டார்வினுக்கு முன்பாகவே பூச்சிகள் பற்றியறிய தென்னமெரிக்காவுக்குப் கப்பல் பயணம் மேற்கொண்ட ‘மரியா சிபெல்லா மேரியான்’(Maria Sibylla Merian) என்ற பெண்மணி தாம் ‘பூச்சியியலின் மூதாய்’ என்று கருதப்படுகிறார்.

கரையான் புற்று பற்றியும், கரையான்களின் வாழ்வியல் பற்றியும் மழைக்காலத்தில் கரையான் புற்றைச் சுற்றிக் காளான் முளைப்பதற்கான காரணம் பற்றியும் பல வியப்பான செய்திகள் இந்நூலில் உள்ளன.   கரையான்கள் காய்ந்த புற்களைத் துண்டுகளாக்கிப் புற்றிலுள்ள சுரங்கத்தில் அடுக்குமாம். அப்புற்கள் சில நாட்களில் பூஞ்சையடைந்து, கரையானின் விருப்ப உணவான காளானாய் மாறிவிடுமாம். இந்த நிகழ்வை ஆசிரியர் ‘பூஞ்சைத் தோட்டமாகவும், எறும்புகள் நேராக ஊர்ந்து போவதை உயிருள்ள வாக்கியமாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்.

கரையான் கட்டிடக்கலையின் தொழில்நுட்பத்தை நம்மிடையே புழங்கும் நாட்டுப்புறக்கதையோடு இணைத்துச் சொன்னது ரசிக்க வைக்கிறது. பணிக் கரையான்கள் மிதமான வெப்பம், மிதமான குளிர் நிலவும் சூழலைக் கண்டறிந்து தம் வாழ்விடங்களைத் தீர்மானிக்கும் என்பதும், 4000 ஆண்டுகளாக ஓரு கரையான் புற்று நீடித்து நிலைத்திருக்கிறது என்பதும் இயற்கையின் அதிசயங்கள்.    

மழை, வெள்ளம் வரப்போவதை எறும்புகள் முன்பே அறிந்து தற்காத்துக் கொள்ளும் என்பதும், எறும்புகள் மண்ணிலுள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற மணற்சத்துக்களைச் சிதைத்துப் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் ஆற்றல் பெற்றவை என்பதும், உலகில் கிட்டத்தட்ட 22000 எறும்பு இனங்கள் இருக்கின்றன என்பதும் வியப்பான அறிவியல் உண்மைகள். “பூமியில் உள்ள ஒட்டுமொத்த உயிரினங்களின் எண்ணிக்கையை விடக் கரையான்களின், எறும்புகளின் எண்ணிக்கை இருபது விழுக்காடு அதிகம்” என்கிறது ஓர் அறிவியல் உண்மை.  

நத்தை பற்றிய கட்டுரையில் நத்தைகள் உடல் பருமனுக்கேற்ப ஓடுகளைப் பெரிதாக்கி கொள்வதால் மேல் ஓட்டில் வளையங்கள் தோன்றுகின்றன; வெள்ளை மற்றும் மரப்பட்டை நிறத்தில் இருக்கும் ஓட்டின் மேல் வரிகள் நம் உள்ளங்கை ரேகை போல ஒவ்வொரு நத்தைக்கும் வேறுபடும் என்பவை பலருக்கும் தெரியாத செய்திகள்.

கண் கொத்திப்பாம்பு என்று சொல்லப்படும் பச்சைப் பாம்பு பற்றி மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் விளக்கத்தை ஓர் அத்தியாயம் பேசுகிறது. எல்லாப் பாம்புகளைப் போலவே பச்சைப் பாம்புக்கும் காதுகளில்லை என்கிறார் ஆசிரியர். மகுடி இசைக்குப் பாம்பு ஆடுவதாகப்  பாம்பாட்டிகள் காட்டும் பித்தலாட்ட வித்தைக்கும் வேட்டு வைத்துள்ளார். பாம்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர்க்கு உதவும் விதமாக ‘ரோமுலஸ் விட்டேகர்’ எழுதிய ‘இந்தியப் பாம்புகள்’ புத்தகத்தை ஆசிரியர் பரிந்துரை செய்துள்ளது சிறப்பு! 

தொட்டாச்சுருங்கி செடியை அடிப்படையாகக் கொண்டு எந்திர மனிதர்களின் தொடுதிறனை அதிகப்படுத்த மேலை நாடுகளில் நடக்கும் அறிவியல் ஆய்வு பற்றிய சிறு குறிப்பையும் ஆசிரியர் ஒரு கட்டுரையில் குறிப்பிடத் தவறவில்லை.

உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் முதன் முதலாகப் பறந்த பூச்சியினங்களில் தும்பியும் ஒன்று. சுமார் 32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற படிநிலை வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது தும்பி என்ற வியத்தகு செய்திகளைத் தும்பி பற்றிய கட்டுரையில் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

“தும்பியின் தலைமுழுதும் அதன் கண்கள் பரவியுள்ளன; பறக்கும் போது பல திசைகளிலும் பார்வையைச் செலுத்த முடியும்; பூச்சி இனங்களில் தும்பிக்குத் தான் கூர்மையான பார்வை; அதன் இரண்டு பெரிய கண்ணுக்குள் 30000 சிறிய கண்கள் உள்ளன” என்ற அறிவியல் தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவை.

‘அடர்வனமும் ஒளிரும் பூச்சிகளும்’ என்ற அத்தியாயத்தில் மின்மினியை ‘வன நட்சத்திரம்’ என்று ஆசிரியர் சிலாகித்துச் சொல்வது, அழகான பொருத்தமான உவமை! இப்பூச்சிகள் பற்றிப் பல தெரியாத செய்திகள்  இக்கட்டுரையில் உள்ளன. மின்மினிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் தன்மை கொண்டவை; மண்புழுவும் நத்தையும் வளர்ந்த மின்மினியின் விருப்ப உணவு; மின்மினி அரிவாள் போன்ற கொடுக்கால் குத்தி இரையை மயக்கமடையச் செய்து செரிமான நொதிகளைச் சேர்த்துக் கூழாக மாற்றி ஜூஸ் குடிப்பது போலக் குடிக்கும்; மின்மினி உடல் நச்சுத்தன்மை வாய்ந்தது போன்ற பல தகவல்கள் வாசிக்க மிகவும் சுவாரசியமாகவும், வியப்பாகவும் இருந்தன.

அது போல ‘உயிருடன் ஓர் வானவில்!’ என்ற பொருத்தமான தலைப்பில் அறிமுகம் செய்யப்படும் வண்ணத்துப்பூச்சி குறித்த அத்தியாயத்தில்    

“உதிர்ந்த இலை

கிளைக்குத் திரும்புகிறதோ

வண்ணத்துப்பூச்சி”

என்ற அருமையான ஜப்பானிய ஹைக்கூ கவிதையும் இடம்பெற்று, வாசிப்பை ரசிக்க வைக்கிறது.   

மருத்துவத் துறையில் மிக நுண்ணிய பகுதியில் போடும் தையலுக்கும் பேண்டேஜ் துணி தயாரிப்புக்கும் சிலந்தியின் நூலிழை பயன்படுத்தப்படுகின்றது; நவீன தொழில் நுட்பத்தில் சிலந்தியின் நூலிழையைக் கொண்டு செயற்கைத் தோல் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது என்ற அறிவியல் செய்திகள் ஆச்சரியமளிப்பவையாக உள்ளன. தேனியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் சொன்னதை ஆசிரியர் தேனீக்கள் பற்றிய கட்டுரையில் கொடுத்திருக்கிறார்:-

“உலகில் தேனீக்கள் மறைந்துவிட்டால் மனித குலத்தின் ஆயுட்காலம் வெறும் நான்காண்டுகளில் முடிந்துவிடும். தேனீக்கள் மறைந்தால் மகரந்த சேர்க்கை மறையும்; செடி,கொடிகள் மறையும்; மனிதனும் மறைந்து விடுவான்.”

இன்னும் 86 விழுக்காடு உயிரினங்கள் உலகில் கண்டறியாமல் இருக்கின்றன என்கிறார்கள் உயிரியியலாளர்கள்.  இவைகளைக் கண்டறிந்து பெயரிட பல ஆண்டுகள் ஆகும்….அடர்ந்த காடுகள், ஆழ்கடல் போன்ற இடங்களில் என்னென்ன விலங்குகள், பறவைகள், தாவரங்கள் கடல்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன என்பது யாருக்குமே தெரியாத ஒரு வியப்பூட்டும் ரகசியம்” என்கிறார் ஆசிரியர். அப்படியென்றால் வெறும் 14% உயிரினம் மட்டுமே இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான அதிர்ச்சியளிக்கும் உண்மை!

வண்ணத்துப்பூச்சி முதல் கரப்பான் பூச்சி வரை பூச்சிகளைப் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகள் இந்நூலில் உள்ளன. உயிரியல் மாணவர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்க்கும், சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவர்க்கும் பெரிதும் பயன்படும் நூல்.

வகைசூழலியல் கட்டுரைகள்
ஆசிரியர்கோவை சதாசிவம்
வெளியீடு:-குறிஞ்சி பதிப்பகம், திருப்பூர். +91 99650 75221
விலை:-ரூ 120/-.

The post பூச்சிகளின் தேசம் first appeared on சுட்டி உலகம்.

  •  

சின்னஞ்சிறு பெண்

அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா மே ஆல்காட் (Louisa May Alcott) 1868ஆம் ஆண்டு எழுதிய Little Women என்ற பிரபலமான சிறார் நாவல் ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் தமிழில்  வெளிவந்துள்ளது. மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன் இதனைச் சிறார் வாசிக்கக் கூடிய எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளார்.

சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பு இருந்தாலும் இந்தக் கதையில் வரும்  பெண்கள் பதின் பருவத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இதை ‘யங் அடல்ட்’ என்ற சொல்லப்படும் இளையோர் நாவல் வகையில் சேர்க்கலாம்.

இந்த நாவலில் நான்கு சகோதரிகள் இருக்கின்றார்கள். கதாசிரியர் லூயிசாவின் சொந்த வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டிருப்பதால் இந்நாவலின் 50 சதவீதம் லூயிசாவின் சுயசரிதை என்று கூறப்படுகிறது. ஏனெனில் லூயிசா வீட்டிலும் நான்கு பெண்கள். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான இரண்டாவது பெண் ஜோ எழுத்தாளர். கோபம், துடுக்குத்தனம், முரட்டுத்தனம் ஆகிய குணங்களைக் கொண்டவர், புத்தகம் வாசிப்பதில் அதிகம் நாட்டமுள்ளவர். கதாசிரியர் லூயிசாவின் மறு வார்ப்பாகத் தான் இந்த ஜோ கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.   

150 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவலில் ஆசிரியர் பாரம்பரியமான பிற்போக்கான பெண் கதாபாத்திரங்களுக்குப் பதிலாக காத்திரமான பெண் கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். இதை வாசிக்கும் பெண் குழந்தைகள் வாழ்வில் ஜோ கேரக்டர் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேசனாக இருக்கும்.

கதையில் பெண்களின் அப்பா போர் முனையில் இருக்கிறார். அப்பா வீட்டில் இல்லாத கிறிஸ்துமஸ் விழாவுடன் நாவல் துவங்குகிறது. ஏழ்மையான குடும்பம். “அன்பளிப்புகள் இல்லாத கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் அல்ல” என்று முணுமுணுத்தாள் ஜோ என்று இந்தக் கதை துவங்குகிறது. பதின்வயது பெண்களுக்குப் புதிய உடைகளோ அன்பளிப்புகளோ இல்லாத கிறிஸ்துமஸ் பண்டிகை.

சகோதரிகள் நால்வரும் தங்களுக்குப் பரிசு ஏதும் வாங்காமல் தங்களது சேமிப்பில் அம்மாவுக்காக ரகசியமாகப் பரிசு வாங்குகிறார்கள். அம்மா மீது அவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள். அப்பா தங்கள் கூட இல்லையே என்று ஏங்குகிறார்கள். பாசமான குடும்பம்.  

அம்மாவும் மிகவும் நல்ல பெண்மணி. கிறிஸ்துமஸ் காலை உணவை ஆறு குழந்தைகள் உள்ள ஒரு ஏழை குடும்பத்துக்குக் கொடுக்கச் சொல்கிறார். சகோதரிகளுக்குப் பசி. ஆனாலும் அம்மாவின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கிறார்கள். காலை உணவை அந்த ஏழை தாய்க்குக் கொடுத்து விட்டு ரொட்டியும் பாலும் மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்பதை வாசிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் இவர்கள் இப்படி கொடுத்ததை அறிந்த பக்கத்து வீட்டு பணக்கார முதியவர் மனம் நெகிழ்கிறார். அன்று மாலை இவர்களுக்கு விதவிதமான கேக் வகைகள், ஐஸ்கிரீம், பூங்கொத்துகளை அனுப்புகிறார். இந்த நாவலை வாசிக்கும் சிறுவர்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்; மற்றவர்க்குப் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளை அவர்கள் அறியாமலே அறிந்து கொள்வார்கள்.

சகோதரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் பிறகு ராசியாகிப் போவதும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் விஷயம் தான். அதனால் தான் இந்த நாவல் எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளாகியும் இன்றும் வாசிக்கப்படுகிறது. கடைசிப் பெண் ஆமி. வெளியே தன்னை அழைத்துச் செல்லவில்லை என்று அக்கா ஜோ மேல் கோபப்படுகிறாள். அதற்குப் பழிவாங்க எண்ணி ஜோ கதைகள் எழுதி வைத்திருந்த நோட்டை எரித்துவிடுகிறாள். செய்தியறிந்து ஜோ ரொம்பவும் கோபப்படுகிறாள். “உன்னை நான் என்றும் மன்னிக்கவே மாட்டேன்” என்கிறாள். ஆனால் பனிச்சறுக்கு விளையாட்டின் போது உருகிய பனியில் மூழ்கிவிட்ட ஆமியைக் காப்பாற்றப் போராடுகிறாள். இதைப் போன்ற செவ்வியல் நாவல்கள் வாசிக்கும் குழந்தைகளின் மனம் பண்படும்; விசாலமாகும்.

மேலும் பெத் என்ற மூன்றாவது சகோதரிக்கு ஏற்படும் பரிதாபமான முடிவையும் வாசிக்கும் சிறுவர்க்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு இதில் மாற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்.  இந்தக் கதாபாத்திரங்கள் அமெரிக்கப் பெண்களாக இருந்தாலும், கதையை வாசிக்கும் போது நம்மூரில் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரிகள் கதையிது என்ற உணர்வு ஏற்படுகிறது.

சிறுவர்களைக் கவரும் விதமாக மிக அழகான அட்டைப் படத்துடனும் சிறப்பான வடிவமைப்புடனும் சென்னை வானம் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 13+ வாசிக்க ஏற்ற நாவல்.

வகை – மொழி பெயர்ப்புஇளையோர் நாவல்
ஆசிரியர் – ஆங்கிலம் –
தமிழாக்கம் –
லூயிசா மே ஆல்காட்
சுகுமாரன்
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89. +91 91765 49991.
விலைரூ 100/-

The post சின்னஞ்சிறு பெண் first appeared on சுட்டி உலகம்.

  •  

புத்தக வாசிப்பைப் பகிர்வதற்காக மதுரைவாசகன் யூடியூப் சேனல்

வாசிப்பதும் வாசித்த புத்தகங்களைப் பற்றி உரையாடுவதும் அன்றாட வாழ்வில் இடம்பிடிக்கத் தொடங்கின. வலைப்பூ பற்றி அறிந்தபோது 2010இல் சகோதரர் ப.தமிழ்ச்செல்வம் உதவியுடன் மதுரைவாசகன்.வேர்டுபிரஸ் பக்கத்தில் எழுதத் தொடங்கினேன். இன்று 300க்கும் மேலான கட்டுரைகளை இப்பக்கம் வாயிலாக எழுதியுள்ளேன்.

வாசித்த புத்தகங்களைப் பற்றி பேசவும், உரையாடவும் சமூக ஊடகங்களில் அதைப் பகிர்வதும் அவசியமாகிறது. நண்பர் ரகுநாத் உதவியுடன் மதுரைவாசகன் என்ற வலைப்பூ பக்க பெயரிலேயே யூடியூப் பக்கமும் தொடங்கியுள்ளேன். இந்தப் பக்கத்தில் வாசித்த நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் குறித்து தொடர்ந்து பதிவேற்றும் இலக்கோடு தொடங்கியிருக்கிறேன்.

மதுரைவாசகன் வலைப்பூ பக்கத்தை ஆதரிக்கும் நண்பர்கள் யூடியூப் பக்கத்திற்கும் ஆதரவுதந்து தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

பக்கத்திற்கான இணைப்பு – https://www.youtube.com/@MaduraiVaasagan/videos

  •  

என் உடல் என் மூலதனம் – போப்பு

இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில் நம் உடல் எனும் மூலதனத்தை நாம் அடகுவைத்துவிட்டோம். அதிகாலை எழும்போது நாம் என்ன குடிப்பது என்று தொடங்கி இரவு கொசுக்கடி இல்லாமல் நிம்மதியாக உறங்க என்ன செய்வது என்பதுவரை நம் வாழ்க்கையை சந்தைதான் தீர்மானிக்கிறது. இதிலிருந்து முற்றாக நம்மை விடுவித்துக் கொள்ள முடியுமா என்றால் அது சாத்தியமில்லாத விசயம். நம் உடலின் மீது சந்தைக்கு இருக்கிற அக்கறையை நாமும் கொஞ்சம் காட்டினால் பிழைத்துக் கொள்ளலாம்.

போப்பு எழுதிய ‘என் உடல் என் மூலதனம்’ என்ற நூல் நமக்கு பல அடிப்படையான விசயங்களைக் கற்றுத் தருகிறது. நேரத்துக்கு தூங்குவதில்லை, எழுந்திருப்பதுமில்லை. கண்டநேரத்திற்கு சாப்பிடுவது, கண்டதைச் சாப்பிடுவது என நம்முடைய உடலை கவனிக்காமல், அதை படாதபாடுபடுத்தி அலட்சியப்படுத்துகிறோம். போப்பு இந்நூலில் நம் உடலோடு உரையாட வேண்டும் என்கிறார். ஒரு நாளில் அரைமணி நேரம் ஒதுக்கி ஒவ்வொரு உறுப்புகளிடமும் பேச வேண்டும் என்கிறார். காலில் வலி இருக்கிறதா? கையில் வலி இருக்கிறதா? என அதனிடம் கேட்க வேண்டும். அதற்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்லாமல் அதைச் செய்வது அவசியம். இவ்வாறு செய்வது நாம் ஆரோக்கியத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் எட்டு என்று சொல்லலாம்.

நாலு கப்புத் தண்ணியத்தூக்கி ஊத்திட்டு அதைக் குளியல் என்று சொல்லி அரக்கப்பரக்க கிளம்பக் கூடாது. மெல்ல நிதானமாக குளிக்க வேண்டும். குளிர்வித்தல் என்ற சொல்லில் இருந்துதான் குளித்தல் என்ற சொல் வந்ததாக தொ.ப. சொல்வார். அதுபோல உடம்பு குளிரக் குளிக்க வேண்டும். நம் உடலில் உள்ள வெப்பம் குறைந்தாலே பெரும்பாலான நோய்கள் நம்மைவிட்டுப் போகும். கொஞ்சூண்டு பாலை எடுத்து உச்சிமுதல் உள்ளங்கால் வரைத் தேய்த்துக் குளிப்பது, பழத்தோலை அரைத்து குளிப்பது, பாசிப்பயறு மாவில் பாதாம் பிசின் அல்லது வேப்பம் பிசினை ஊறவைத்து அரைத்துக் குளிப்பது என பல குளியல் முறைகளைச் சொல்கிறார். நம்முடைய சோப்பில் நிறைய வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன. வாரத்திற்குப் பாதி நாட்களாவது இயற்கையான பொருட்களைக் கொண்டு தேய்த்துக் குளிக்கலாம். அதேபோல பாத் டப்பில் குளிப்பது நல்லது என்கிறார். அப்படி குளிக்க வாய்ப்பில்லாதவர்கள் பயணங்களின் போது அருவி, ஆறு, கடல் போன்ற இடங்களுக்குச் சென்று குளிப்பது நல்லது. உடல் குளிர மனசு குளிரும்.

நடைக்கு மேலான நண்பன் இல்லை என்கிறார் போப்பு. தினசரி நாற்பது நிமிடங்களுக்கு மேல் வெறுங்காலோடு நடப்பது நல்லது. நடக்கும் போது அரட்டையடித்துக் கொண்டு நடப்பது பயன்தராது. நம் உடலோடு உரையாடியபடி நடந்தால் நல்லது. மூன்று வேளையும் சாப்பிடாமல் சில நேரங்களில் ஒருவேளை உணவை சாப்பிடாமல் விடுவது உடல் செரிமானப் பணிகளைச் சிறப்பாக செய்ய உதவும். மேலும், ஒருநாள் உணவாக பழங்களை எடுத்துக் கொள்வது உடலை இலகுவாக்கும்.

குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்பதால் உணவுப்பொருட்களின் உயிர்த்தன்மை கெடுகிறது. அதில் காய்கறிகளை வாங்கி அடைந்து வைக்காமல் இரண்டு மூன்று நாட்களுக்கு வாங்கிப்பயன்படுத்தலாம். சளி பிடித்தால் சனி பிடித்தது போல பயப்படத் தேவையில்லை. உடலில் உள்ள கழிவு வெளியேறுகிறது என போதிய ஓய்வெடுத்தாலே போதும். கழிவுகள் வெளியேறாமல் உடனடியாக மாத்திரை போடுவது பின்னாளில் நோய்க்கே வழிவகுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நம் உடல் எல்லா நோய்களையும் வெல்லும் திறன் கொண்டது. மெடிக்கல் மிராகிள் என்று சொல்லும் வண்ணம் சில சாதனைகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. நாம் நம் உடலோடு கொஞ்சம் உரையாடத் தொடங்கினால் நம் மூலதனத்தை அடகில் இருந்து மீட்கலாம்.

வாசிக்கும்போது நன்றாகயிருக்கிறதே நாளைமுதல் செயல்படுத்திவிடலாம் என்ற எண்ணம் வரும். பிறகு அந்த நாளை என்பது எங்கிருக்கிறது எனத் தெரியாமல் போகும். முதலில் நாம் செய்ய வேண்டியது இக்கணத்திலிருந்தே தொடங்குவதுதான். மிளகாய்க்கு பதில் மிளகு தேர்ந்தெடுப்பது, அவித்த உணவு வகைகள் (இட்லி, இடியாப்பம், புட்டு), பச்சைக்காய்கறிகள், காய்கறி தீநீர், மூலிகைத் தேநீர் என உணவு வகைகளில் மாற்றம் கொண்டுவருவதைப் போல, காலை அல்லது மாலை வேளைகளில் காலாற நடப்பது, உடல்குளிரக் குளிப்பது போன்றவற்றை பின்பற்றத் தொடங்கலாம். நம் உடல் நம் மூலதனம்.

  •  

கல்வெட்டுக்கலை – சொ.சாந்தலிங்கம், பொ.இராசேந்திரன்

கோவில்களுக்குச் செல்லும்போது சுவர்களில் உபயக்கல்வெட்டுகளை பார்த்திருப்போம். பழமையான கோவில்களில் ஆங்காங்கே சில கல்வெட்டுக்களை காணமுடியும். சில மலைகளில் குகைபோன்ற பகுதியின் விளிம்பில் கல்வெட்டுக்களைப் பார்க்கலாம். சில கல்வெட்டுகள் சமகாலத் தமிழ் எழுத்துகளைப் போல இருக்கும், சில வட்டவடிவில் இருக்கும், சில குச்சிகுச்சியாக ஆங்கில எழுத்தைத் திருப்பிப் போட்டதுபோல இருக்கும். இந்தக் கல்வெட்டுக்களை எல்லாம் எப்படி வாசிப்பது? இவையெல்லாம் தமிழா? அப்படியென்றால் அவற்றை எவ்வாறு வாசிக்க வேண்டுமென்ற சந்தேகம் நம்முள் எழும்.

இந்திய அளவில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தமிழ் கல்வெட்டுகளே! கல்வெட்டுகளைப் பற்றிய விழிப்புணர்வு இன்று ஏற்பட்டுள்ள சூழலில் கல்வெட்டுக்கலையை நாம் கற்றுக்கொள்வது அவசியம். பசுமைநடை பயணங்கள் வழியாக தமிழிக் கல்வெட்டுகள், வட்டெழுத்துக் கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் எடுத்துரைக்க நேரடியாய் கேட்கும் நல்வாய்ப்பும் கிட்டியது.

கல்வெட்டுக்கலை பற்றி அறிய விரும்புபவர்களுக்காக எழுத்துருவாக்கம், குறியீடுகள், தமிழி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து, கிரந்த எழுத்து, மெய்கீர்த்திகள், கல்வெட்டுகளில் காலக்கணக்கீடு, கல்வெட்டு வழிகாட்டிகள், நடுகற்கள்-நினைவுக்கற்கள், நீர்நிலைகளில் கல்வெட்டுக்கள், திருக்கோயில் திருப்பணிக் கல்வெட்டுகள், பெருவழிகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் என கிட்டத்தட்ட 50 தலைப்புகளில் விரிவாக எளிமையாக எழுதியுள்ளனர்.

வைகைக் கரைக் கல்வெட்டு என்ற கட்டுரையில் குருவிக்காரன் சாலைப் பாலமருகில் வைகையில் கிடைத்த பாண்டிய மன்னன் அரிகேசரியின் கல்வெட்டை வாசித்து அதைக்குறித்து விரிவாக எழுதியுள்ளனர். குருவித்துறைக்கருகில் வைகையாற்றில் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட பராக்கிரம பாண்டியன் கல்லணை குறித்த செய்திகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கல்வெட்டு தற்போது மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் பார்வைக்கு உள்ளது. இக்கட்டுரையை வாசிக்கையில் பாண்டியரின் நீர் மேலாண்மையை அறிந்துகொள்ள முடிகிறது.

புலிமான்கோம்பை, தாதப்பட்டி நடுகற்கள் குறித்த கட்டுரையை வாசித்து அதை நேரில் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஏனெனில், தமிழிக் கல்வெட்டுகள் எல்லாம் மலைப்பகுதிகளில் மட்டுமே இருந்ததால் வடக்கிலிருந்து எழுத்து சமணமுனிவர்கள் வழியாக வந்ததாக கூறப்பட்ட சூழலில் இந்த நடுகற்கள் அந்த முடிவை மாற்றி அமைத்தது. இப்போது அந்த நடுகற்களைக் கீழடி அருங்காட்சியகத்தில் காண முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. கீழடி பானையோடுகளில் இருக்கும் தமிழி எழுத்துக்கள் தமிழ்நாட்டில் சமணர்கள் வருவதற்கு முன்பே எழுத்தறிவு இருந்தது என்பதை உறுதி செய்துவிட்டது.

இன்றிருக்கும் தேசிய நெடுஞ்சாலைப்போல அந்தக் காலத்திலிருந்த பெருவழிகளைப் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியிருக்கின்றனர். இராஜகேசரிப் பெருவழி, அதியமான் பெருவழி, மகதேசன் பெருவழி, கொங்குப் பெருவழி எனப் பல பெருவழிகள் இருந்திருக்கின்றன. அதில் அதியமான் பெருவழி குறித்த கல்வெட்டு ஒன்றில் எத்தனை காத தூரம் என்பதை தமிழ் எழுத்தோடு குறிப்பிட்டிருப்பதை சிறப்பாகச் சொல்லலாம். காதம் என்பது இன்றைய அளவில் 6.706 கிலோ மீட்டர் தூரம். சிலப்பதிகாரம் பூம்புகார் மற்றும் உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்ல பெருவழி இருந்ததை குறிப்பிடுகிறது.

கல்வெட்டை பிரதியெடுக்கும் முறை பற்றி இந்நூலில் மிகவும் அருமையாக விளக்கியுள்ளனர். ஒருமுறை பசுமை நடைப் பயணமாக மாடக்குளம் சென்றபோது அந்தக் கண்மாயில் கிடைத்த சித்திரமேழி கல்வெட்டை படியெடுத்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா வாசித்துக் காட்ட அதை அருகிருந்து காணும் வாய்ப்பும் கிட்டியது. நூலின் பின்பகுதியில் படியெடுப்பதற்கான கருவிகளின் படங்களை இணைத்திருக்கின்றனர். அதுபோல பாறை ஓவியங்கள், சிந்துவெளி முத்திரைகள், தமிழி எழுத்துக்கள், சங்க சேரர் காசுகள், நடுகற்கள், வல்லம் குடைவரைக் கல்வெட்டு, பிள்ளையார்பட்டி வட்டெழுத்து, கிரந்த செப்பேடு, தமிழ்ச் செப்பேடு என வண்ணப்படங்களை நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது சிறப்பு.

கல்வெட்டுக்கலை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். இந்நூலை வாசிப்பதன் வழியாக தொல்லியல் மீதான ஆர்வம் ஏற்படும். நூலறிஞர்கள் இருவரிடமும் தமிழி – வட்டெழுத்துப் பயிற்சி கற்கும் வாய்ப்பு அமைந்தது எனக்கு கிட்டிய வரம். தமிழி எழுத்துருவில் எழுதுவதைவிட வட்டெழுத்து கொஞ்சம் கடினம். சொ.சாந்தலிங்கம் அவர்களுடன் பசுமைநடைப் பயணங்களில் தொடர்ந்து பயணித்திருக்கிறேன். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் வழியாக இந்நூல் 2013இல் கல்லூரி மாணவர்கள் கல்வெட்டுக்கலை பற்றி அறிவதற்காக வெளியிடப்பட்டது. இந்நூலாசிரியர்கள் இருவரும் இத்துறையில் ஆழங்கால்பட்டவர்கள். அதேசமயம் புதிதாக வாசிப்பவர் மற்றவர்களுக்கு கல்வெட்டுக்கலைப் பற்றி எடுத்துரைக்கும் அளவிற்கு எளிமையாக எழுதியுள்ளனர்.

  •  

கேட்டி வில்காக்ஸ்: மேற்கிலிருந்து வந்த செம்பரிதி

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்விக்கான விதை துளிர்க்கத் தொடங்கியபோது அதை நீருற்றிச் செழிக்கச் செய்தவர்களில் கேட்டிவில்காக்ஸ் அம்மையாரும் ஒருவர். அவர் தன் வாழ்வின் சரிபாதி நாட்களை மதுரையில் பெண்கல்விக்காகத் தியாகம் செய்தவர். மதுரையில் ஓ.சி.பி.எம் பெண்கள் பள்ளி, நாய்ஸ் ஆங்கில வழிப்பள்ளி, டோக் பெருமாட்டி பெண்கள் கல்லூரி போன்ற கல்வி நிலையங்களை உருவாக்கி பெண்கல்வி மேம்பாட்டிற்காக மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்தவர். மதுரையின் பெண்கல்வி வரலாற்றை எழுதும்போது பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய பெயர்களில் கேட்டி வில்காக்ஸூம் ஒருவர்.

கேட்டி வில்காக்ஸ் குறித்து விக்கிப்பீடியாவில் 2015இல் எழுதியபோது விரிவாக எழுத வேண்டுமென்ற தூண்டல் ஒரு கதையாக உருவானது. தற்செயலாக இந்தக் கதை கேட்டி வில்காக்ஸ் மதுரைக்கு வந்த நூறாவது ஆண்டில் எழுதப்பட்ட கதையாக அமைந்தது. 2019இல் முன்னாள் இயற்பியல் துறைத் தலைவர் ஆர். ஆண்டாள் அவர்கள் காலமான போது அவருடைய தொடக்ககால படங்களை ஜே.எக்ஸ்.மில்லர் நூலகத்திலிருக்கும் ஆவணக் காப்பகத்தில் தேடியபோது கேட்டி வில்காக்ஸ் அம்மையாரின் படங்களும் அவர் மறைந்தபோது நாளிதழ்களில் வந்த செய்தியும் பார்க்கக் கிட்டியது. அப்போதே அவரைக் குறித்து நூல் ஒன்றை எழுத வேண்டுமென நினைத்தேன்.

கேட்டி வில்காக்ஸ் அம்மையார் குறித்து நான் எழுதிய கட்டுரையும் கதையும் அடங்கிய குறுநூல் “கேட்டி வில்காக்ஸ்: மேற்கிலிருந்து வந்த செம்பரிதி” டோக் பெருமாட்டி கல்லூரியில் கேட்டி வில்காக்ஸ் பிறந்த நாளான ஜூலை 26 2024 அன்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

கல்லூரி முதல்வர் இரா. பியூலா ஜெயஸ்ரீ வெளியிட சிறப்பு விருந்தினர் ஆனந்த பாரதி முத்துக்கிருஷ்ணன் & இயற்பியல் துறை முன்னாள் துறைத்தலைவர் ம. பிரிஜெட் மேரி பெற்றுக்கொண்டனர். துணை முதல்வர் ரா. நிம்மா எலிசபெத், நிதி காப்பாளர் பி. வனிதா மலர்விழி, மாணவ நலனாளர்கள் ஆரோக்கிய சியாமளா பனியரசி, மௌனா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நூல் வெளிவர உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் ஆயிரமாயிரம் நன்றி.

நூல் அட்டைப்பட வடிவமைப்பு : ஹக்கீம்

விழாப்படங்கள் : லெனின்

  •  

இசை சூஃபி: ஏ.ஆர்.ரஹ்மான் – மானசீகன்

திரைப்படப்பாடல்களை ஒரு காலச்சக்கரம், அருமருந்து, உணர்வூட்டி எனப் பலவாறு சொல்லலாம். அப்படி ரஹ்மானின் பாடல்களைக் கேட்டு ரசித்து அதை சிலாகித்து மானசீகன் எழுதிய கட்டுரைகளே இசை சூஃபி நூல். முகநூலில் மானசீகன் ரஹ்மான் பாடல்கள் குறித்து எழுதிய சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். சென்றாண்டு சென்னை புத்தகக் கண்காட்சி சென்றபோதே இந்நூலை வாங்க நினைத்தேன். சமீபத்தில் நடந்த மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழினியில் வாங்க முடிந்தது.

மானசீகன் ஒரு பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர். அதோடு சுவாரசியமான எழுதுபவர். ரஹ்மான் ரசிகர் என்பதோடு அவர் கமல் ரசிகரும்கூட. அவரது எழுத்துக்களை முகநூலில் விரும்பிவாசிப்பேன். உளவியல் ரீதியாக எளிமையாக நிறைய விசயங்களை எழுதுவார்.

இசையில் ரஹ்மானின் பரிசோதனை முயற்சிகள், பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம், புல்லாங்குழல், தப்ஸ் அல்லது தாயிரா போன்ற கருவிகளை பாடல்களில் பயன்படுத்திய விதம், புதிய பாடகர்களை அறிமுகம் செய்தது எனப் பல விசயங்களை இக்கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறார். “ரஹ்மானின் பாடல்களை கேட்கக் கேட்க பிடிக்கும் என்பது பொய்; கேட்ட உடனேயே பிடிக்கும்; கேட்க கேட்க புரியும்; இதுவே உண்மை” என்கிறார் மானசீகன்.

இந்தியன், பம்பாய், முத்து, காதல் தேசம், இந்திரா, மெட்ராஸ் போன்ற படங்களிலுள்ள பெரும்பாலான பாடல்களைக் குறித்து எழுதியிருக்கிறார். உயிரே படப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெறவில்லையே என்றொரு வருத்தமும் உள்ளது. ரஹ்மான் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை உயிரே படப்பாடல்கள்தான்.

ஊரடங்கு காலத்தில் இரண்டு பாடல்களைத்தான் பலமுறை கேட்டேன். ஒன்று மரியான் படத்திலுள்ள “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத்தான் என்ன?” என்ற ரஹ்மான் இசையில் வந்த பாடலும், மற்றொன்று விஸ்வாசம் படத்திலுள்ள “வானே வானே” என்ற இமான் இசையில் வந்த பாடலும்தான். இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடல்களைப் பாடியவர்களே மேடையில் பாடியதைப் பலமுறைப் பார்த்தேன். பம்பரம் சுழலும்போது “ரொங்குது பார்” எனச் சொல்வார்கள். அப்படித்தான் இந்தப் பாடல்கள் என்னை ரொங்க வைத்தன.

மானசீகனின் எழுத்துக்களில் நமக்குப் பிடித்த பாடல்கள் குறித்த கட்டுரைகளை வாசித்தபோது அந்தப் படங்களைப் பார்த்த நாட்களுக்கே சென்ற உணர்வு ஏற்பட்டது. மாயா மச்சீந்தரா பாடலை பற்றி வாசிக்கையில் கைகளும் கால்களும் “டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ” என மெல்ல அசைந்தன. கண்ணாளனே பற்றி வாசிக்கும்போது திருமலை மன்னர் அரண்மனையில் நானும் ஓரிடத்தில் நின்று அந்தப் பாடலைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

அஞ்சலி அஞ்சலி என்ற டூயட் பாடலில் பிரபு கதாநாயகி வந்ததும் சாக்சபோனை வாசிக்கும்போது அந்த இசையும் அவரது முகபாவனைகளும் மிகவும் பிடிக்கும். அந்த நினைவுகளைக் கிளறியது மானசீகனின் எழுத்து. முத்து படத்தில் ரஜினிக்கு இசையமைத்தது, சுகாசினி எடுத்த இந்திரா படத்திற்கு இசையமைத்தது, கதிரின் காதல் தேசம் படத்திற்கு இசையமைத்தது குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். ரஹ்மானின் இசை படத்திற்கு எவ்வளவு உயிர் கொடுத்திருக்கிறது என்பதை அக்கட்டுரைகளை வாசிக்கையில் அறியலாம். இந்த நூலை வாசித்ததும் ஒரு நாட்குறிப்பேட்டில் எனக்குப் பிடித்த பாடல்களைக் குறித்து விரிவாக எழுதிவைக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளது.

  •  

ஏமாறும் கலை – யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகரின் சிறுகதைத் தொகுப்பான ஏமாறும் கலையை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இந்தாண்டு (2024) தொடக்கமாக வாசிக்க எடுத்தேன். கதைகதையாம் காரணமாம் தொடங்கி மூன்று கதைகள் வாசித்தேன். அவரின் கதைசொல்லும் முறையால் ஈர்க்கப்பட்டு விடுமுறை நாட்களில் நூலகம் சென்று ஏமாறும் கலை தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் வாசித்தேன்.

யுவன் சந்திரசேகர் தன் கதையுலகிற்குள் வாசிப்பவரையும் அழைத்துச் செல்கிறார். அவர் கரட்டுப்பட்டியில் கதை நடக்கிறது என்றால் நாம் கரட்டுப்பட்டி தெருவில் நிற்கிறோம், வங்கியில் நடப்பதுபோல எழுதினால் நாம் பணமெடுப்பவராய் வரிசையில் நிற்கிறோம், இந்துஸ்தானி இசையை மையம் கொண்ட கதையென்றால் நாமும் பின்வரிசையில் நின்று புல்லாங்குழலிசை கேட்கிறோம். அவர் ஒரு கதையில் ஒரு கதையை மட்டும் சொல்வதில்லை. பல கதைகளைச் சொல்கிறார். மேலும், அந்தக் கதையில் வரும் எல்லோரையும் நமக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார். சில கதாபாத்திரங்களை நாமும் வழியில் சந்தித்திருப்போம்.

யுவன் சந்திரசேகர் கதை சொல்வதைப்போல எங்கப்பா என்னிடம் கதை சொல்லியிருக்கிறார். அவர் எந்த ஊருக்குச் சென்றாலும் மதுரையிலிருந்து புறப்பட்டு போய் திரும்பிவந்தது வரை கதையாய் என்னிடம் சொல்லிய நாட்கள் நினைவில் எழுகிறது. எத்தனையெத்தனை மனிதர்கள். ஏமாறும் கதை தொகுப்பிலுள்ள 12 கதைகளும் ஏதோ ஒருவகையில் யாரோ ஒருவரை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. சில கதையில் வரும் முக்கிய மாந்தர்களின் மரணமோ, தற்கொலையோ அது நம்மையும் உலுக்கி எடுக்கிறது.

ஒருவர் நம்மை ஏமாற்றுவது தெரிந்தபின் தெரியாததுபோல் நாமும் நடிப்பதுதான் ஏமாறும் கலை. வங்கிக்கு பணமெடுக்க வரும் பெண் ஒருவர் தன் கணவரின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டது; அவரால் நடக்க முடியாதெனப் பொய் சொல்லி ஒவ்வொருமுறையும் வந்ததும் பணமெடுத்து சென்றுவிடுவார். பின்னாளில் ஒரு விசேச வீட்டில் அப்பெண் அவள் கணவனுடன் சேர்ந்து நிற்பதை பார்த்து நொந்துவிடுவார் கதைசொல்லி. உடன் பணியாற்றுபவர் அதைத் தெரியாததுபோல் நடந்துகொள்ளுங்கள் என்கிறார். அதுதான் ஏமாறும் கலை.

ஊரில் இறந்தவர் குரலில் குறிசொல்லும் பெண்ணின் கதையை வாசிக்கையில் எங்க ஊரில் முன்பு இறந்தவர்கள் பேய் பிடித்ததாகச் சொல்லி அவர்களைப் போல் பேசிய கதைகளை நிறைய கேட்டிருக்கிறேன். மனம்புகுதல் என்ற கதை இதைப்பற்றி பேசுகிறது. கரட்டுப்பட்டியில் நடக்கும் இந்தக் கதையை வாசிக்கும் நீங்கள் முப்பது வயதிற்கு மேலானவராய் இருந்தால் இதுபோன்றதொரு கதை உங்களிடமும் இருக்கும்.

ஐயங்கார் வீட்டுப் பெண்ணின் காதலை அறிந்த குடும்பம் அவளது சோற்றில் விசம் வைத்துக் கொள்கிறது. ஆணவக்கொலையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் பானு பன்னீர்செல்வம் மீது கொண்ட காதலால் இறந்துபோகிறாள். முடிவற்று நீளும் கோடை எனும் இக்கதை மறக்க முடியாத ஒரு தம்பியின் பார்வையில் நகர்கிறது.

திருமணம் செய்துகொள்ளாமல் கால்போன போக்கில் பயணிப்பவர்களிடம் ஏராளமான கதைகள் இருக்கும். தங்கையா என்ற மனிதரின் வாழ்வில் நிகழ்ந்த கதைகளும் மூன்று முத்தங்களும்தான் மூன்றாவது முத்தம் கதை. ரயில்வே போர்ட்டராக தங்கையா இருக்கையில் என்ஜின் டிரைவராக வரும் லால் சொல்லும் கதை சுவாரசியம்.

தன்னோடு வங்கியில் உடன் பணியாற்றிய ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஐரீனிடம் தன் தாய் பற்றி பகிர்ந்து கொள்ளும் கதை தாய்மை யாதெனில். மகனுக்காக வாழும் அம்மா பக்கத்துவீட்டில் திருமணமாகி சண்டையிட்டு வந்த ஜம்னாவுடன் பேசும் மகனின் மீது சந்தேகம் கொள்வது அவளது அன்பென்கிறது கதை.

ஒவ்வொரு கதையாய் கதையில் வரும் மாந்தர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அந்தத் தொகுப்பை நீங்கள் வாசிக்கையில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறுதான் இல்லையா? கவிஞர் சுகுமாரன் யுவனின் கதைகள் குறித்து சொல்லும் வரிகளோடு இப்பதிவை முடிக்கிறேன். “தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப்பெரிய கதைசொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதிநவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது. யுவன் சந்திரசேகர் ஒருபோதும் ஒற்றைக் கதையைச் சொல்வதில்லை. கதைகளின் கூட்டணியைத்தான் முன்வைக்கிறார்.”

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்; நன்றி – கலைஞர் நூற்றாண்டு நூலகம்

  •  

நூல் வாசிப்பிற்கான நுனி

"இப்படி அபத்தமா, தப்புந்தவறுமா இங்க இருக்குன்னு சொல்லிட்டியே.... அப்ப இங்க இருந்து படிச்சு ஒரு புண்ணியமும் இல்லையா" என்று ஒரு நண்பர் வாட்சப் சேனலில் வெளியிட்டிருந்த "முதல்தர வேலைக்கு முந்துங்கள்" கட்டுரைக்கு பதிலாக கேள்விக் கேட்டிருந்தார்.

பாவம் புண்ணியம் எல்லாம் அவரவர் வினைக்குத்தானேத் தவிர, பாவம் எழுதுபவரை ஏன் நோவானேன். ஒரு புத்தக ஆர்வலானனாகவோ, வரலாற்று தரவுகளை சரிவர புரிந்து கொள்ளும் விருப்பமுள்ளவனாகவோ எனக்கு கற்பிதங்களும் தவறுகளும் மலிந்த சூழல் ஒருவகையில் உற்சாகமான சவாலை அளிக்கின்றது.

நமக்குக் கிடைப்பவற்றைக் கொண்டு அதன் பிறழ்வுகளை சரிப்படுத்தி நமக்கான ஊட்டமிகுந்த உணவாக்கிக் கொள்வதும் நிறைவான பணிதான். உதாரணத்திற்கு அண்மையில் நான் எதிர்கொண்ட சில அபத்தங்களையும், அதற்காக படித்த புத்தகங்களையும் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

வாடிவாசல் (சி. சு. செல்லப்பா):

முதல் பதிப்பு 1959ல். சி சு செல்லப்பா ஒரு தீவிர இலக்கிய செயல்பாட்டாளராக அறியப்பட்டவர். தீவிரம் என்றால், இறுக்கம் கலந்த தீவிரம். அவர் நடத்திய இலக்கிய கூடுகைகளில் அவருடைய தணியா ஆர்வம் பிறரால் கேலி செய்யப்படுமளவுக்கு தீவிரமானவர். வாடிவாசல் குறுநாவலின் முதல்பதிப்பை அவர் வணிகரீதியாக வெளியிடவில்லை. அவர் நடத்தி வந்த 'எழுத்து' பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு, விலையில்லாத புத்தகமாக அனுப்பி வைத்தார். நாற்பதுகளில் அவர் எழுதிய குறுநாவல், செல்லப்பாவின் எண்பத்தியாறாம் வயதில் மறுபதிப்பு காண்கிறது. பிறகு இந்தியா டுடே தன் பத்திரிகையில் வெளியிட்டதன் மூலம் கூடிய வாசகர் பரப்பைப் பெற்றது. இப்போது தமிழில் திரைப்படமாக எடுப்பதற்கான முயற்சி நடப்பதால், எழுபது வயதான இந்த புத்தகம் பற்றி அவ்வப்போது யாராவது பேசுகிறார்கள். அதில் ஒரு சினிமா செய்தியாளர், 'வாடிவாசல் நாவலில் வரும் வைத்தி பாத்திரம் இருக்கிறதல்லவா..." என்றுப் பேச, அட இதென்ன நாம் படித்த கதைக்கும் இவர்கள் பேசும் கதைக்கும் சம்பந்தமில்லையே, என சரிபார்க்க புத்தகத்தை மீண்டுமொருமுறை தேடிப் பிடித்தேன்.



சல்லிக்கட்டு காளை அடக்குதல் பற்றி அக்காலத்தில் தமிழில் பல கதைகள் வெகு யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. பெருமாள் முருகனின் முகவுரையில் அவற்றின் ஒரு வரிசையையும் குறிப்பிட்டிருக்கிறார். கிரா-வின் கோபல்லபுரத்து மக்கள் பற்றிய விரிவான பதிவுகளிலும் சல்லிக்கட்டைப் பற்றி படித்த நினைவிருக்கிறது.

ஒரு செருக்களன் போல அந்த சல்லிக்கட்டை கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் செல்லப்பா. அவ்வளவு இயல்பாகவும், புதுவகையாகவும் சொல்லப்பட்ட கதை. இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு நின்று பேசப்படக் கூடிய எழுத்து.

கதையின் நாயகனான பிச்சிக்கு இணையாக மருதனும், தகவல் சுரங்கமான கிழவனும் ஜமீந்தாரும், அம்புலியும் விரவி நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும், கூட நின்று சல்லிக்கட்டைக் கண்டுகளிக்க வந்திருந்த சனத்தையும் சேர்த்து எதிர்நாயகனாக ஜமீந்தாரின் காரி தாவிக் குதித்து விட்டது.

தில்லானா மோகனாம்பாள்:
(கலைமணி (எ) கொத்தமங்கலம சுப்பு)

வாடிவாசல் போன்ற ஆக்கங்கள் சென்று சேராத வாசகர் பரப்பை இந்த்த் தொடர்கதை சென்றடைந்தது. அன்றைய தமிழ் பெரும்பத்திரிகைகளுக்கு புதிய வாசகர் பரப்பை பல இடங்களிலும் உண்டாக்கிக் கொடுத்த பெருமையும் இதற்கு உண்டு. நாதஸ்வரக் கலைஞன், நாட்டியக் கலைஞர் என்கிற வெகுஜனக் கலையின் மாந்தர்களை முதன்மை வாசகர்களாகக் கொண்டதில் இதன் வாசகப் பரப்பு பெரியதாக விரிவடைந்தது.



ஒரு பேட்டியில் ஓர் எழுத்தாளர், 'தில்லானா மோகனாம்பாள், நாவலை திரைப்படமாக எடுத்தபோது, முலக்கதையின் சம்பவங்களை முன்பின்னாக மாற்றி சாமர்த்தியமாக செய்திருந்தார் ஏபிஎன்' என்று குறிப்பிட, மேலேக் குறிப்பிட்டிருந்த அதேக் குழப்பம் மீண்டும் ஏற்பட்டது. நாம் படித்த புத்தகத்தைத்தானா இவர்களும் குறிப்பிடுகிறார்கள் என.

அவர் குறிப்பிட்டிருந்தபடி இந்தத் தொடர்கதை இரண்டாயிரம் பக்கங்கள் எல்லாம் இல்லை. ஆனால் அப்படியானதொரு திட்ட வரைவு இருந்திருக்க முகாந்திரம் உண்டு. கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களில் முதல் பாகத்தை சுப்பு எழுதி முடித்துவிட்டார். பெருவாரியான வரவேற்பு இருந்ததால், இரண்டாம் பாகத்தைத் தொடங்கியும் விட்டார். முதல் பாகத்தில் சிக்கல் சண்முகசுந்தரத்திற்கும், தில்லானா மோகனாம்பாளுக்கும் இடையே இருந்த காதல் பிரச்னைகள் பெருமளவிற்கு தீர்ந்து, அவர்களுடைய கல்யாணமும் நிச்சயம் ஆகிவிடுவதால், சுப்பு புதிய களமாக சண்முகசுந்திரம் மீது கோர்ட் கேஸ் என்று கதையை வளர்க்கத் தொடங்கினார். இசைக் கச்சேரிகளால், முன்னதாக ஈர்க்கப்பட்டிருந்த வாசகர் தரப்பு, இந்தக் கோர்ட்டுக் கச்சேரிகளால் அதிகம் வசீகரிக்கப்படவில்லை. அதனால் சுப்பு இரண்டாம் பாகத்தை நானூறு பக்கங்களுக்கு பக்கமாக முடித்துக் கொண்டார். ஆக, இரு பாகங்களாக வந்த புதினத்தின் அளவு ஆயிரத்தைந்நூறு பக்கங்களுக்கும் குறைவுதான்.

இந்த நூலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், மிகக் கச்சிதமாக நாவலின் முதல் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தில் வரும் உச்சக்காட்சியான மைனர் நாகலிங்கம் கடத்தும் பகுதிதான் (இது இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் இடம்பெறுவது) சிக்கலுக்கும் மோகனாவுக்குமான திருமணத்திற்கு முந்தைய பகுதி.

ஒருமுறைக்கு இருமுறை புரட்டிப் பார்த்தும் ஏபிஎன், மூலக்கதையிலிருந்து முன்பின்னாக மாற்றி திரைக்கதை செய்திருந்தார் என்பதற்கு எந்தவித நிரூபணமும் கிடைக்கவில்லை.

மீண்டும் வாசிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு சுவாரசிய பத்தி. சண்முகசுந்தரத்தை கைது செய்ய போலி கேஸ் கொடுத்த, வைத்தி, அவர்களுடைய திருமணத்திற்கு அழையா விருந்தாளியாக வருகிறார். அங்கே அவரைப் பிடித்து கேள்விக் கேட்கும்போது, தப்பிக்க பேசும் சமத்கார உரையாடல் பகுதி:

"என்ன வைத்தி, இவ்வளவு கெடுதலும் பண்ணிட்டு, இங்கே வேற எப்படிய்யா வரத் தோணிச்சு உனக்கு?"
"சட்டம் வேற, சம்பந்தம் வேற சார். ஜார்ஜ் ஃபிஃப்த் சக்ரவர்த்தியும், கெய்சரும் சண்டைதான் போட்டுக்கிட்டாங்க. அரண்மனையிலே ஒரு ஃபங்க்ஷன் வந்திடுத்து. ப்ளட் ரிலேஷன் இருக்குப் பாருங்கோ. க்வீன் விக்டோரியாக்கு குழந்தை பிறக்கும்போது ஹீ (Kaiser Wilhelm II) 
இஸ் த ஃபர்ஸ்ட் மேன்"

"என்னப்பா ஜெர்மனிக்கு போயிட்டே"

"வேர்ல்ட் இஸ்டரி தெரியனும் சார். ஊரிலே சொல்றாங்க. இஸ்ட்ரி வேண்டாம். ஜியாக்ரஃபி வேண்டாம். அப்படின்னுட்டு. அவன் என்ன பண்ணான். கெய்சர் அரண்மனைத் தோட்டத்திலே மீன் பிடிச்சிட்டிருந்தான். விக்டோரியாவுக்கு குழந்தை பிறந்திடுத்துன்னு சொன்னவுடன இரண்டு மீனை எடுத்து தங்கக் கிண்ணத்துல போட்டு அனுப்பிட்டான். பாவம் பிரசவிச்சவங்க சாப்பிடட்டுமேன்னு. ஆமா இங்க கல்யாணத்தில யாரு சமையல்? சாப்பாடு எப்போ "

அப்படியே உலக விஷயங்களைப் பற்றி அள்ளி விட்டுக் கொண்டே தடாலடியாக சாப்பாட்டு விஷயத்திற்கு தாவிவிடுகிறார். திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நாகேஷ் இது போன்ற சவடால் பேச்சுகளுக்கு கொடுக்கும் உயிரூட்டத்துடன் இதைக் கற்பனை செய்து பார்த்தால் சிரிப்புத் தாங்காது.

இதே உரையில் போனசாக, ஏபிஎன் -இன் திருவிளையாடல் படத்தை பெரிய புராணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கினார் என்று வேறு குறிப்பிட்டார். பாவம் பரஞ்சோதி நாயனார். அவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் மதுரையைச் சுற்றி சிவன் நிகழ்த்தியதாக சொல்லப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுதான் ஏபிஎன்னின் திருவிளையாடல் திரைப்படம்.

உரையைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் கூட அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறான பெரிய புராணமும், பரஞ்சோதி நாயன்மாரின் திருவிளையாடல் புராணமும் வேறு என்று சுட்டிக் காட்டவில்லை.

ஒருபுறம் சைவ மரபின் தனித்துவத்தை மழுங்கடித்துக் கொண்டிருக்க, இப்புறமோ சைவ மரபின் எந்த அடிப்படையும் தெரியாமல் ஒரு சந்ததி உருவாகிக் கொண்டிருக்கிறது.

கான்சாகிப் சண்டை:
(பதிப்பாசிரியர்: நா. வானமாமலை)

சிவகங்கை கும்மி, கட்டபொம்மன் கதைப்பாடல், ராமப்பையன் அம்மானை - போன்ற நாட்டுப்புற கதைப்பாடல்கள் வழியேத்தான் நாம் சில வரலாற்றுப் போர்களைப் பற்றியும், அந்த அரசர்கள் பற்றியும் முதன்மையான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.




புகழ்பெற்ற மருது சகோதரர்களுக்கு தபால்தலை வெளியிட இந்திய அரசு முன் வந்தபோது, அவர்களுடைய வரலாற்று பெருமைக்கு முதன்மையான அத்தாட்சியாக இருந்தவை நாட்டுப்புற கதைப்பாடல்கள்தான்.

ஏதோ ஒரு பதிவில் "கட்டபொம்மன் ஒரு வழிபறி கொள்ளைக்காரன். திரைப்படங்கள் வாயிலாக கட்டபொம்மனை ஒரு விடுதலைப் போர் வீரனாக்கி விட்டார்கள்" என்றபோது சற்று திகிலாக இருந்தது. ஒருவேளை நமக்குத் தெரியாமல் ஏதோ வரலாற்றுத் தகவலை அகழ்வாயுகளில் வெளிக் கொண்டு வந்து விட்டார்களோ என்னவோ.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா, நா வானமாமலையின் நாட்டாரியல் திரட்டுகள் மீது மிகுந்த கவனம் கொண்டிருந்தவர். அவருடைய உந்துதலின் பெயரில்தான், 'மருதநாயகம்' என்கிற திரைப்படத்திற்கான முயற்சி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தொடங்கிய சில காலத்திலேயே, நமது தமிழ்ச்சூழலில், குறிப்பாக திரைத்துறையை சார்ந்த சில செல்வாக்கு மிகுந்தவர்களிடையே ஒவ்வாமையை உண்டாக்கி விட்டது. காரணம் கான் சாகிபின் வரலாறு அப்படியான மேல்கீழாக்கங்கள் கொண்டது. ஒரு புறம் பிரிட்டிஷ் இராணுவத்தில் சிறப்பான இடத்தைப் பெற்ற கமாண்டர் யூசுப்கான். நாட்டார் கதைப்பாடலில் 'கம்மந்தான்' என்று குறிப்பிடப்படுகிறான்.

ஆர்க்காடு நவாபின் ஆளுகையிலிருந்த தென்னிந்தியப் பகுதியில் பாளையக்காரர்களுக்கு வரிவசூலிக்கும் பாத்தியதை பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. பிறகு கிழக்கிந்திய கம்பெனி நவாபிடமிருந்து மொத்த வரிவசூலிக்கும் உரிமையையும் குத்தைகைக்கு எடுத்துக் கொள்ள, பாளையக்காரர்களிடமிருந்து வரிபெற்றுச் செல்லும் பொறுப்பில் யூசுப்கான் அமர்த்தப்பட்டான். பூலித்தேவர், கட்டபொம்மு நாயக்கர் (நமக்கு பெரிதும் அறிமுகமான ஜெகவீர் கட்டபொம்முவின் பாட்டனார் இவர்) போன்றவர்களுடன் போரிட்டு, கிழக்கிந்திய கம்பெனிக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தவன் யூசுப்கான். இதற்காக மதுரை நகரின் சுபேதராக பதவி உயர்வு கிடைத்தது.

சிவகங்கை பாளையக்காரனான தாண்டவராயனோடு மோதல் ஏற்பட, தாண்டவராயன் ஆர்காடு நவாபின் நம்பிக்கையைப் பெற்று கான் சாகிபின் பதவிக்கு வேட்டு வைக்கிறான். இதனால் கோபமடைந்த கான்சாகிப் தானே மதுரையின் நாயகமாக முடிசூட்டிக் கொள்கிறான். இப்படித்தான் 'மருதநாயகம்' என்கிற வரலாற்று சித்திரம் உருவாகியிருக்கிறது.

இப்போதும் இளையராஜா இசையில் ஒலிக்கும் மருதநாயக திரைப்படத்திற்கென எடுக்கப்பட்ட பாடலின் தொடக்க வரிகள் "பொறந்தது பனையூர் மண்ணு...." இந்த நாட்டார் கதைப் பாடலிலிருந்து பெறப்பட்டதுதான்.

"மதனதுரை கானுகதை பாட
வரந்தர வேணுமடி மதுரை மீனாட்சி
கள்ளரை கருவறுத்த தீரன்
கனமான மதுரை நகராண்டிடுஞ் சூரன்"

என்று போகிறது பாடல் வரிகள்.

திரைப்படமெடுக்கவென இந்த நாட்டுப்புற கதைப்பாடல்கள் பேசப்பட்டதால், சில வணிக பத்திரிகைகள், ஒரு தொடராக கான்சாகிப்பின் வாழ்க்கையைப் பற்றி எழுதின.

வரலாற்றுப் பார்வை மட்டும் கொண்டு அகடெமிக்கலாக பாளையக்காரர்களின் காலத்தின் தெற்கத்திய நகரங்களின் கதைகளை ஒரு ஆய்வுநூலாக செய்தால் அது மிகப் பிரமாதமான ஒரு தொகுப்பாக அமையும்.

அனல் காற்று (ஜெயமோகன்)

இதுவும் ஓர் எழுத்தாளரின் பேட்டியில் கேட்ட அபத்தம்தான். தமிழ் புதினங்களிலிருந்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றிய உரையாடலில், பேசியவர் அழுத்தந் திருத்தமாக, "அனல் காற்று கதையை படமாக்கக் கூடாதுன்னு நான் சொல்லிட்டேன். அது இன்செஸ்ட் காதல் பற்றிய கதை. நாயகன் தன் சித்தியைக் காதலிக்கிறது போல வரும். தமிழ்ச் சமூகத்தில் எப்படி இதையெல்லாம் ஏற்றுக் கொள்வார்கள்?" என்று சொல்லிக் கொண்டே போக, எதிரில் பேட்டி எடுத்தவர் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்.


இந்த முறை எனக்குக் குழப்பமே எழவில்லை. ஏனென்றால், இந்த நாவலையும் தன்னுடைய வழக்கம் போல, ஜெயமோகன் அவருடைய இணையதளத்தில்தான் எழுதும்போது வெளியிட்டிருந்தார். ஒரு பொருந்தாத உறவிற்கும், புதியதாக முளைத்த காதலுக்கும் இடையே உழலும் நாயகனின் தடுமாற்றம்தான் கதையின் மையம். பொருந்தாதக் காதல் என்பது, கணவனை இழந்த மத்திம வயது பெண் ஒருவர் மீது இளம் வாலிபன் கொள்வது. அப்பெண்ணின் ஆளுமை மீதான மயக்கம் உலர்ந்து, அந்த உறவின் பொருந்தாமையை உணர்ந்த நிலையில், வேறொரு காதல் அவனுக்கு நிகழ்கிறது.

இன்னமும் ஒரு பத்தாண்டில் கலை நுகர்ச்சி என்பதே ஏறக்குறை காட்சி ஊடகமாக மட்டுமே என்கிற நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.

அப்போது, இது போன்ற பிழையான தகவல்கள், அபத்தமான உரைகள், அரைகுறை உளறல்கள் என்று ஏதாவது நம்மை புத்தக வாசிப்பை நோக்கி நகர்த்தும் என்றாலே அதுவே புத்தக சூழலுக்கு அளிக்கப்படும் பெரும் பேறு எனலாம். நூல் வாசிப்பின் நுனியாக எது இருந்தால் என்ன. அதைப் பற்றிக் கொண்டு ஒரு புத்தகத்திற்குள் புகுந்து கொள்ள வேண்டியதுதான்.


உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •  

சலுகை வாரம்

Pa Raghavan

உலகுக்கெல்லாம் புத்தக தினக் கொண்டாட்டம் ஒரு நாள் என்றால் என் பதிப்பாளர்கள் இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) அனைத்துப் புத்தகங்களுக்கும் இருபத்தைந்து சதவீதச் சலுகை அறிவித்திருக்கிறார்கள். இது என் புத்தகங்களுக்கு மட்டுமல்ல. ஜீரோ டிகிரி வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் என்றாலும் நமது வாசகர்களுக்குத் தனியே எடுத்துச் சொல்வது கடமை அல்லவா?

நேற்று வெளியான சலம் தொடங்கி, ஜீரோ டிகிரி இதுவரை வெளியிட்டுள்ள என்னுடைய 79 புத்தகங்களையும் இந்த வாரம் முழுவதும் (ஏப்ரல் 30 வரை) 25 சதவீதம் சிறப்புச் சலுகை விலையில் பெறலாம். மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. அவர்களுடைய இணையத்தளத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும்போது check out பக்கத்தில் தள்ளுபடித் தொகை காட்டப்படும். எனவே…

ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் என்னுடைய புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள பக்கம் இது.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

நாம எல்லாம் ஒன்னு

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பன்மைத்துவத்தை (Pluralism) எளிமையாக விளக்குகிறது.  

“நீ யானை…நான் மனுசன்…ஆனால் பூமியில் நாம் ஓர் உயிர்”; “கிளி..குருவி..காக்கா..மயில்.. எல்லாம் வேறே வேறே தான். ஆனா..எல்லாமே பறவைகள் தானே?” “மதங்கள் வேறு வேறு ஆனாலும் நாம மனுசங்க தானே?” என்ற கேள்விகள் மூலம் குழந்தைகளுக்கு எளிமையாக வேற்றுமையில் ஒற்றுமை காண வலியுறுத்தும் புத்தகம்.

வழ வழ தாளில் வார்த்தைகள் மிகவும் குறைவாகவும், அழகான வண்ணப் படங்கள் நிறைந்தும் உள்ள இப்புத்தகம் 5-8 வயது குழந்தைகளுக்கானது.

 வகைவண்ணப்படப் புத்தகம்
ஆசிரியர்ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 75/-

The post நாம எல்லாம் ஒன்னு first appeared on சுட்டி உலகம்.

  •  

பீ…பீ..டும்..டும்

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பல இசைக் கருவிகளை அறிமுகம் செய்கிறது.

இசைக்கருவிகளில் தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், துளைக்கருவிகள் எனப் பலவகை உள்ளன. நாகஸ்வரம், வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகளின் வண்ணப்படங்கள் இதில் உள்ளன. அந்தக் கருவிகளை வாசிக்கும் போது அதிலிருந்து என்ன மாதிரியான ஒலி வெளிவரும் என்பதை இந்நூலில் கொடுத்துள்ளனர்.   

எடுத்துக்காட்டுக்கு நாகஸ்வரம் வாசிக்கும் பெண் குழந்தைப் படம் உள்ள பக்கத்தில் பீ.பீ.டும்..டும் என்ற வார்த்தைகள் மட்டும் உள்ளன.

வழ வழ தாளில் வார்த்தைகள் இல்லாமல், அழகான வண்ணப் படங்கள் நிறைந்திருக்கும் இந்த நூல் 5-8 வயது குழந்தைகளுக்கானது.

 வகைவண்ணப்படப் புத்தகம்
ஆசிரியர்யெஸ்.பாலபாரதி
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 75/-

The post பீ…பீ..டும்..டும் first appeared on சுட்டி உலகம்.

  •  

எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம்

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூலில் பழைய தமிழ்நாட்டு விளையாட்டுகளைக் கதை மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். டிஜிட்டல் மீடியாவிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடக்கும் இந்நாளைய சிறுவர்க்குக் கைபேசி இல்லாமல் மட்டுமல்ல, எந்த வித எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் இல்லாமலே கூட விளையாட முடியும் என்பதை இந்நூல் சொல்கிறது. 

எனக்கு ஃபோன் தர மாட்டேங்கிறான்” என்று அண்ணன் மீது புகார் சொல்லும் தமிழினிக்கு, அவள் அம்மா புளியங்கொட்டைகளை வைத்து விளையாடும் ஒத்தையா?ரெட்டையா? என்ற விளையாட்டைச் சொல்லிக் கொடுக்கிறார். தமிழ் மொழியுடன் நெருக்கமான இவ்விளையாட்டுகள் மூலம் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடியும் என்று விளக்குகிறார் தமிழினியின் அப்பா.

தமிழினிக்கு ஆர்வம் அதிகமாக, கில்லா பிறாண்டி, எலி-பூனை விளையாட்டு போன்ற மற்ற விளையாட்டுகளையும் அம்மா கற்றுக் கொடுக்கிறார். கில்லா பிறாண்டி விளையாட்டின் போது பாடப்படும் பாட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்குப் பழைய பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்யும் இந்நூல் 12-14 வயது சிறார்க்கானது.

 வகைசிறார் கதை
ஆசிரியர்‘பஞ்சு மிட்டாய்’ பிரபு
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 50/-

The post எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் first appeared on சுட்டி உலகம்.

  •  

ஏழும் ஏழும் பதினாலாம்

‘குழந்தை இலக்கியத்தின் பிதாமகன்’ என்றழைக்கப்படும் அழ.வள்ளியப்பா அவர்கள் குழந்தைகளுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் காலம் தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. இவரது பாடல்கள் குழந்தைகள் பாடுவதற்கேற்ற இனிய ஓசையும், சந்தமும் கொண்டவை. குழந்தைகள் எளிதாக உச்சரித்து பாடுவதற்கேற்ற எளிய மொழியில் அமைந்தவை.  

இவரது பாடல்களிலிருந்து குழந்தைகள் பாடி மகழ்வதற்கு, 15 சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்ற தலைப்பில், பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ‘பஞ்சுமிட்டாய்- ஓங்கில் கூட்டம்- வெளியிட்டுள்ளது.

“அ,ஆ என்றேனே” என்ற முதல் பாடல், குழந்தைகள் விளையாட்டாய் அரிச்சுவடியைக் கற்க உதவும். ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்பது வேடிக்கையும், நகைச்சுவையும் நிறைந்து குழந்தைகளை மகிழ்ச்சியூட்டும் பாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அதே சமயம் 7+7=14 என்ற கணக்கையும், குழந்தைகள் விளையாட்டாய்த் தெரிந்து கொள்வார்கள்.

“ஏழும் ஏழும் பதினாலாம்

எலியா ருக்கு முழம் வாலாம்.

அறைக்குள் எலியார் புகுந்தாராம்

அங்கும் இங்கும் பார்த்தாராம்.

இரண்டு தட்டில் பணியாரம்

இருந்தது கண்டு மகிழ்ந்தாராம்

கடித்து கடித்துத் தின்றாராம்

கணக்கைக் கூட்டிப் பார்த்தாராம்.

ஏழும் ஏழும் பதினாலாம்.

எலியார் ஏப்பம் விட்டாராம்!”

நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  வாங்கிக் கொடுக்கலாம். குழந்தைகள் இப்பாடல்களைப் பாடுவதன் மூலம் புதிய சொற்களைக் தெரிந்து கொள்வதோடு, அவர்கள் தமிழ் உச்சரிப்பும் மேம்படும்.

வகைகுழந்தைப் பாடல்கள்
ஆசிரியர்அழ.வள்ளியப்பா
வெளியீடு:-பஞ்சுமிட்டாய் & ஓங்கில் கூட்டம் தஞ்சாவூர். செல் +91 9731736363  
விலைரூ 40/-.

The post ஏழும் ஏழும் பதினாலாம் first appeared on சுட்டி உலகம்.

  •  

வைக்கம் வீரர் பெரியார்

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் கூடிய மிக எளிய மொழியில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.

குழந்தை வாசிக்கக் கூடிய எளிய மொழி, சிறு சிறு வாக்கியம், படங்கள் ஆகியவை, இந்த வாசிப்பு இயக்கச் சிறு புத்தகத்தின் வேர்கள். இது வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது.

வைக்கம் எங்கே உள்ளது? அங்கே என்ன போராட்டம்? அதில் பெரியாரின் பங்கு என்ன?  பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்!’ என்று பட்டம் கொடுத்தவர் யார்? பெரியார் சிறையில் அனுபவித்த கொடுமைகள் யாவை? என்றெல்லாம் தெரிந்து கொள்ள, இந்தப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் வாங்கி வாசிக்கக் கொடுங்கள். இதில் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்த நான்கு கருப்பு வெள்ளை படங்கள் உள்ளன.

வகை – சிறார் வாசிப்பு நூல்சிறுவர் கட்டுரை
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-

The post வைக்கம் வீரர் பெரியார் first appeared on சுட்டி உலகம்.

  •  

சிவி கேட்ட வரம்

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் கூடிய மிக எளிய மொழியில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.

குழந்தை வாசிக்கக் கூடிய எளிய மொழி, சிறு சிறு வாக்கியம், படங்கள் ஆகியவை, இந்த வாசிப்பு இயக்கச் சிறு புத்தகத்தின் வேர்கள். இது வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது. இதில் நான்கு கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இரண்டு குறுங்கதைகள் உள்ளன.

சிவி என்ற ஒட்டகச்சிவிங்கி வனதேவதையிடம் என்ன வரம் கேட்டது? வரம் கிடைத்த பின், சிவியின் கவலை தீர்ந்ததா? பழ விதையை விழுங்கினால், வயிற்றில் செடி முளைக்குமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.

வகை – சிறார் வாசிப்பு நூல்சிறுவர் கதை
ஆசிரியர்பூர்ணிமா கார்த்திக்
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-

The post சிவி கேட்ட வரம் first appeared on சுட்டி உலகம்.

  •  

காற்றில் கலந்த பூ தாத்தா, கதைகளில் வாழ்கிறார் – சரிதா ஜோ

எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் கழுகுமலையில் 1960 இல் பிறந்தவர். பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் கரிசல் மண் பூமியான கோவில்பட்டியில் முடித்தார். எழுத்தாளர்கள் உதயசங்கர், சாரதி, அப்பணசாமி, மாரிஸ் ஆகியோர் அவரது பள்ளித் தோழர்கள். கல்லூரிக் காலங்களில் இவர்களுடன் இணைந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்திய அனுபவம் அவருக்கு உண்டு. அவரது குறிப்பிடத்தக்க நூல்கள்: ‘பிரேமாவின் புத்தகங்கள்’ என்கிற சிறார் நூலும் கடந்த ஆண்டு வெளியாகி, அவரது நூல்களின் பட்டியலில் இணைந்துகொண்டது. மேலும், ‘கனவில் […]

Source

  •