Reading view

ராவணக் கற்பு



1

தூர தேசமோ
அருகிருக்கும் சிற்றுரோ
வாகனப் பயணங்களின்
வலியும் அசதியுமாய்
வீடடைந்து கால் நீட்டி
வெயிலை வெறிக்கையில்
சின்னஞ்சிறு பறவை
பல ஊர் வானம் கடந்து
கீச்சிட்டபடி  பறக்கிறது

அடுத்தொரு வானத்திற்கு
இறகுகளுக்கு இளைப்பாறல்
பறத்தல் தான் போலும்.

*

2

தந்தை தோளிலிருந்து
இறங்கிய நாள் முதல்
பாரம் சுமக்கத் தொடங்கி
சுயம் தொலைத்தவன்

மற்றொரு தோளுக்கான
கண்ணாமூச்சி ஆட்டம்
வாழ்நாள் ஏக்கமாகக்
கண்களில் ஒளிந்திருக்கும்
 
பாரங்கள் இறக்கி வைத்த
ஒரு புனித நன்னாளில் 
அவனைச் சுமக்கின்றன
நான்கு தோள்கள்.

*

3

சிறிய வீட்டிற்குள்
தவறி நுழைந்து விட்ட‌
பட்டாம்பூச்சி ஒன்று
படபடத்து முட்டி மோதுகிறது
 
யன்னல் திறந்த கணம்
வெடித்த பலூனில் 
அடைந்திருந்த‌ காற்றாக‌
எகிறிச் சிறகடிக்கிறது
 
இந்த உடலின்
எந்தச் சன்னல் திறந்தால்
வெளியேறிப் பறக்கும்
உயிர் பட்சி!

*

4

பறவைகள் பரிதாபம் கொள்ளும்
இறகுகள் இல்லாதவனென்று

நாய்கள் நக்கலாய்ச் சிரிக்கும்
நான்கு காலற்ற‌ ஊனமென்று

நீரில் நீந்திக் களிப்பவனிடம்
மீனும் பாவப்படும் செதில் இல்லையென‌

தாவரம் கூட நினைக்கலாம்
நடந்தே சாகும் நரகப் பிறவியென‌

மனிதன் சொல்லிக் கொள்கிறான்
படைப்பில் உசத்தி என்று.

*

5

சொர்க்கமே என்றாலும்
கிடைத்த பின்
அலட்சியம் வருகிறது

காரணம் கேட்டால்
கிடைத்த பின்பே
அறிதல் வருகிறது

உண்மையில் 
எதுவும்
சொர்க்கமில்லை.

*

6

பத்து மூளைகளாலும்
இருபது கண்களாலும்
காதலித்தவனுக்கு
ஓருடலால் காமம் கொள்வதா
இயலாத காரியம்?

அது ராவணக் கற்பு!

*

7

எந்தக் குழந்தையாவது
'எப்போது கல்யாணம்' என்கிறதா?
எந்தக் குழந்தையாவது
'என்ன சம்பளம்' எனக் கேட்குமா? 
எந்தக் குழந்தையாவது
'ஏதாவது விசேசமா' என இளிக்கிறதா? 
எந்தக் குழந்தையாவது
'அவனோடு இவளுக்கு தொடர்பு' என கதைக்கிறதா? 

அடுத்த வீட்டினரிடம்
சாக்லேட் கேட்ட குழந்தையிடம்
'இது இங்கிதம் இல்லை'
என அறிவுரை சொல்வோரே!

*

8

நேரமின்மை மனமின்மை  
வேறு பணி உடல் பிணி
சோர்வு களைப்பு

இன்னும் எத்தனையோ
புனைப் பெயர்கள்
சோம்பலுக்கு

செயலுக்கு
ஒரே செல்லப் பெயர் -
வெற்றி.

*

9

இத்தனை வலி தந்து
பிறந்த பிள்ளையை
எத்தனை வெறுக்க வேண்டும்
அன்னை!

இத்தனை வலி தந்து
பெற்றவளை
எத்தனை விலக வேண்டும்
பிள்ளை!

பிறவியே முரண்!

*



  •  

ஒரு டஜன் காதல்


01

ஆக்ரமிப்பென‌ அகற்ற முற்பட்டாலும்
வசதிமிக்க மாற்றிடம் கிட்டினாலும்
வெளியேறு என மிரட்டல் வந்தாலும்
நகர மறுத்துப் பிடிவாதம் காட்டும்
காதல் ஒரு பூர்வகுடி! 

*

02

ஆகாய‌த்தின் விரிவு
ஆழியின் ஆர்ப்பரிப்பு
தணலின் சுடர்
ஊதையின் குளிர்
ஞாலத்தின் ஈர்ப்பென

எல்லா உவமையிலும்
பொருந்திப் போகும்
இந்தக் காதலுக்கு 
இன்னும் துல்லியமான‌
வர்ணனை இருக்கிறது

காமத்தின் கனி.


*

03

அது அப்படித்தான்.

ஒரு கேலியிலோ
ஒரு வசவிலோ
ஒரு சண்டையிலோ
ஓர்  ஆறுதலிலோ
ஏன் ஒரு பிரிவிலோ கூடத்
துளிர்த்து மலர்ந்திடும் காதல்.

சமயத்தில் இன்னொரு காதல்.

*

04

நீ ஆறுதல் கூறியதே இல்லை;
தீர்வுகளே  உன் தேர்வு.

உன் ஆறுதலுக்கு ஏங்கும்
என் ஆசைக்கு என்ன தீர்வு?

*

05

தரை தொடுவதைப் போல்
பாசாங்கு காட்டித் தாழப் பறந்து,
வெடுக்கென இரை பிடித்து
மேல் எழும்பும் வல்லூறு போல் 
மேனி தழுவிப் பறக்கிறது
உன் காதல் கண் சுடர்

இரை பாழாய் போன
இந்த மனம்தான்.

*

06

கடவுளைப் போலவே
இல்லாக் காதலை 
காலங்காலமாய்ச்
சுமக்கிறது மானுடம்

கடவுளைப் போலன்றி
மாபெரும் மானுடத்தை 
யுகங்களாய்க் காக்கிறது
இல்லாத பொல்லாத காதல்.

*

07

உன் தேகத்துக்கு
இரவின் நிறம்
உன் சிரிப்புக்கு
கள்வனின் குணம்
உன் அறிவுக்கு
நீரின் தெளிவு
உன் காமத்திற்கு
அருவியின் வேகம்  
உன் காதலுக்கு
மருதாணியின் வாசம்

உனக்கு
என் தோஷம்.

*

08

காதல் தோல்வித் தழும்பு தேடி
நினைவுகள் வருடுவதென்பது
புண்ணைச் சொறிந்து கொள்ளும்
ரணத்திற்கும் சுகத்திற்கும்
சற்றும் குறைவில்லாதது.

*

09

எருமைக்கும்
தங்கத்திற்கும்
ஒரே அர்த்தம்தான்
செல்லப்பெயர் அகராதியில்.

*

10

சென்ட்டுக்கும் ப்ளூ டிக்குக்கும்
இடைப்பட்ட நொடிகள்
தசாப்தம்;
ப்ளூ டிக்குக்கும் டைப்பிங்குக்கும்
இடைப்பட்ட கணங்கள்
நூற்றாண்டு;
டைப்பிங்குக்கும் மெசேஜ் வருவதற்கும்
இடைப்பட்ட பொழுது
முழு யுகம்.

*

11

கையாலாகாத கோபத்தைப்
பிள்ளை மேல் காட்டும்
இளந்தாயைப் போல்
தரவியலா முத்தங்களை
நான் அள்ளிக் கொள்ளும்
எல்லாக் குழந்தைகளுக்கும்
தாரை வார்த்துக் கிடக்கிறேன்.

*

12

சொன்னால் வெட்கக்கேடு -

இழவு நிகழ்வொன்றில்
நீ சுமக்க முனைந்த
பூத உடல் கண்டபின்
செத்துப் போக
ஆசைப்பட்டேன்.

***

  •