Reading view

நாட்டார்‌ இயலின்‌ தெக்கத்தி ஆத்மா


“ஏலம்‌ கிராம்பே நீங்க

எனக்கு வாச்ச புத்திமானே,

சாதிக்‌ கிராம்பே நீங்க

தள்ளுபடி ஆகலாமோ,


நெல்லிலயும்‌ ஈக்கஞ்சம்பா, நீங்க

நிலத்திலயம்‌ முத்துவில்லை

குணத்திலையும்‌ அமிர்த குணம்‌

கூடுனது நல்கிரகம்‌


வீசினார்‌ கையை

வீச்சு விலைபெறுமோ

விலை ஆயிரம்‌ பொன்பெறுமோ

துன்னூர்‌ பூசிய நெத்தி

தொன்னுறு பொன்பெறுமோ"

பேராசிரியர்‌ நா.வானமாமலை தொகுத்த தமிழ்நாட்டுப்‌ பாமரர்‌ பாடல்கள்‌ என்ற அந்த நூல்‌ அக்டோபர்‌ 1960-ல்‌ வந்தது. தமிழ்நாட்டுப்‌ பாடல்கள்‌ என்ற அடுத்த தொகுப்பு ஜூன் 1964-ல்‌ வந்தது. இந்த இருநூல்களிலும்‌ சேகரித்தவர்‌ எஸ்‌.எஸ்‌.போத்தையா என்று முதலில்‌ அவர்‌ பெயர்‌ வந்தது.

1959-ல்‌ தங்கம்மாள்புரம்‌ உயர்நிலைப்‌ பள்ளியில்‌ பணியில்‌ சேர்ந்தார்‌. அப்போதே அவர்‌ பேரா. நா.வா.வின்‌ சித்தனைப்‌ பள்ளியில்‌ முதல்‌ மாணாக்கராக வசப்பட்டிருந்தார்‌. 'ஏழாம்‌ வகுப்பு ஸார்‌' என அழைக்கப்பட்ட இளவயது எஸ்‌.எஸ்‌.போத்தையா, வட்டார ஆணும்‌ பெண்ணும்‌ அரைமனசாயும்‌ முழுமனசாயும்‌, வெக்கப்பட்டும்‌, படாமலும்‌ கொட்டியவைகளையெல்லாம்‌ சேகரித்து பேராசிறியர்‌ நா.வானமாமலையிடம்‌ கையளிக்க, அவையெல்லாம்‌ தொகுப்புக்களாய்‌ வந்தன.

  • சந்நியாசிக்கும்‌ சாதிப்புத்தி போகாது
  • இருந்தா வெங்கலப்‌ பெண்டாட்டி, இல்லாட்டா வெறும்பய பெண்டாட்டி
  • முள்ளடிச்ச கம்பு முள்மேல
  • தேர்‌ செய்யற ஆசாரிக்கு, அகப்பை போடத்தெரியாது
  • மாமியா செத்து அறுமாசம்‌ கழிச்சி மருமகளுக்கு வாசல்‌ நிலைதட்டி அழுகை வந்திச்சாம்‌

கடல்வளம்‌ கண்மண்‌ தெறியாமல்‌ சூறையாடப்பட்டதால்‌ முத்துக்‌ குளித்தல்‌, சங்கு குளித்தல்‌ ஆகிய தொழில்கள்‌ அருகிப்‌ போய்விட்டன என்று குறிப்பிடுவார்‌ எஸ்‌.எஸ்‌. போ. முத்துக்குளித்தலுக்கும்‌ சங்கு குளித்தலுக்கும்‌ ஈடாக ஒரு பணி உண்டு. அது நாட்டுப்புறப்பாடல்கள்‌ சேகரிப்பது. நாட்டுப்‌புற வழக்காறுகள்‌ எனும்‌ கடற்சங்கமத்தில்‌ போத்தையா மூழ்கி முத்தெடுத்தார்‌. அந்த முத்துக்களும்‌ சங்குகளும்தான்‌ மேலே மூழ்கிக்‌ கண்டவை. இன்று கல்வியியல்‌ கல்லூறிகளிலும்‌ பல்கலைக்‌கழகங்களிலும்‌ நாட்டுப்‌ புறவழக்காறுகள்‌ ஆய்வு 'பேஷனாக' வருவதால்‌, எஸ்‌.எஸ்‌.போத்தையாவோடு சேகரிப்பும்‌ அருகிப்‌ போய்விட்டது எனலாம்‌.

சமுதாயத்தை நேராய்‌ வகிந்து தருகிற சொலவடைகளைத்‌ தொகுத்தார்‌ போத்தையா. அப்படி அவர்‌ தொகுத்தவைகளை யார்‌ யாரோ வாங்கிப்‌ போனார்கள்‌. “கடன்‌ வாங்கிக்‌ கடன்‌ கொடுத்தவனும்‌ கெட்டான்‌” என்று அவர்‌ சேகரித்த பழமொழிக்கு அவரே உதராணமாகப்‌ போனார். மக்களிடமிருந்து அவர்‌ கடன் வாங்கியதை, மற்றவர்க்குக்‌ கடனாகக்‌ கொடுத்ததாக அவர்‌ நினைத்திருந்தார்‌. அப்படித்தான்‌ ஒன்பது கம்பளத்தார்‌ (நாயக்கர்‌) வகையறாக்களின்‌ சடங்குகள்‌, ஒவ்வொரு சடங்கையும்‌ ஒவ்வொரு பிரிவினரும்‌ நடத்தும்‌ வித்தியாசம்‌, பயன்படுத்தும்‌ சொற்கள்‌, பழக்கவழக்கங்கள்‌ பற்றியெல்லாம்‌ சிறுகச்‌ சிறுகச்‌ சேகரித்து எல்லாவற்றையும்‌ (நான்‌ அந்த 'குறிப்பேட்டை' பார்த்துள்ளேன்‌) யாரோ ஒரு புண்ணியவாளன்‌ அல்லது புண்ணியவாட்டி ஆய்வு செய்கிறேன்‌ என்று வாங்கிக்‌ கொண்டு போனார்களாம்‌. இன்னார் எவர்‌ என்று போத்தையாவால்‌ கடைசிவரை ஞாபகத்துக்கு கொண்டுவர முடியவில்லை.

கி.ராஜநாராயணன்‌ தொகுத்த வட்டார வழக்குச்‌ சொல்லகராதி 31.12.1982-ல்‌ வெளியாயிற்று. வட்டார வழக்குச்‌ சொல்லகராதி என்று அருமந்தப்‌ பெயர்‌ வைத்தபோதும்‌, கரிசல்‌ வட்டார அகராதி என்றுதான்‌ இலக்கியவாதிகள்‌ அழைத்தார்கள்‌. அன்று சிறிய அளவில்‌, அன்னம்‌ பதிப்பக வெளியீடாக வந்த அகராதிக்கு, கவிஞர்‌ மீரா எழுதிய அறிமுகவுரையில்‌

“கால்நடை பராமரிப்புத்‌ துறையினருக்குக் கூட இந்த அளவு தெரியுமோ, என்னவோ, கி.ரா.வும்‌ போத்தையாவும்‌ மாடுகளைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்‌”

என்று அதிசயித்துப்‌ போனார்‌.

கரிசல் வாழ்க்கையின்‌ சகல கூறுகளையும்‌ எடுத்துரைக்கும்‌ பிற்சேர்க்கை வட்டார வழக்குச்‌ சொல்லகராதியில்‌ இருக்கிறது. மக்களின்‌ மண்வாசனையான கரிசல்‌ காட்டு விளையாட்டுக்களைத்‌ தொகுத்ததில்‌ கணிசமான பங்கு போத்தையாவுடையது. விளையாட்டுக்கள்‌ தொடர்பில்‌ விளக்கமாய்‌ விரிவாய்‌ எழுதிய கட்டுரை “கத்தாளங்‌ கருங்கப்‌” - என்பதாய்‌ தமிழரசு இலக்கிய மலரில்‌ 1997-ல்‌ வெளியாயிற்று.

பாடல்களுக்கும்‌, கொலவடைகளுக்கும்‌ அப்பாற்பட்டு,

  • முக்கா முக்கா மூணுதரம்‌,
  • பெரிய ஆரியவித்தை, பெரிய அல்லாவித்தை,
  • அத்த மாட்டாத பய,
  • சனியன்‌ பிடறியில இருக்கான்‌
  • அவரு சண்டாக்கிருவாரு,
  • அடிமண்டி இருக்கு,
  • புத்தியைக்‌ கடன்‌ கொடுத்திட்டான்‌,
  • சும்மா தாராம்‌ பூராண்ணு,
  • ஆமா, அதனாலதான்‌ ஓட்டையாப்‌ போயிருச்சாக்கும்‌,
  • தலையில வெள்ளிடி விழுந்திரும்‌.

போன்று இரண்டு, மூன்று வார்த்தைகளாலான முழு அர்த்தத்தை அடக்கிய சொல்லாடல்கள்‌ உண்டு. இந்தப்‌ புதிய வகையைக்‌ கண்டுபிடித்து தொடர்ந்து குறித்து வைத்துக்‌ கொண்டிருந்தார்‌.

நாட்டாரியல்‌ வழக்குகள்‌, சொற்கள்‌, சொல்லாடல்கள்‌, சொலவடைகள்‌, பாடல்கள்‌, விளையாட்டுகள்‌ என வண்டி வண்டியாய்‌ சேகரித்துத்‌ தந்த எஸ்‌.எஸ்‌. போத்தையா 79 வயதில்‌ 12.03.2012 அன்று நள்ளிரவில்‌ நம்மிடமிருந்து விடைபெற்றுக்‌ கொண்டார்‌

இன்றைய காலத்தில்‌ யாருக்கு என்ன நோய்‌, எந்த வயதில்‌ வருமென்று சொல்ல இயலாது. மனுசப்‌ பிறவி விசித்திரமான நோய்களுக்கு ஆளாகும்‌ காலநிலை இது. வெற்றிலை பாக்குப்‌ பழக்கமில்லை; புகையிலை தொட்டதில்லை; புகை பிடிப்பதும்‌ இல்லை. ஆனாலும்‌ ஒருவருக்குப்‌ புற்றுநோய்‌ வரும்‌. எஸ்‌.எஸ்‌.போத்தையாவுக்கு புற்றுநோய்‌ வந்து நுரையீரல்‌ சேதாரமாகியிருந்தது. எந்த நோய்க்கும்‌ கைப்பக்குவ மருந்து அவரிடம்‌ இருந்தது. ஊர்க்காரர்களில்‌ கணிசமானவர்கள்‌, அவரிடம்‌ நோய்‌ சொல்லி கைமருந்து வாங்கிச்‌ சென்றார்கள்‌. புற்றுநோய்‌ கண்டு, நுரையீரல்‌ அரித்திருந்தது என மருத்துவர்கள்‌ சொன்னதை இறுதிவரை அவரிடம்‌ தெரியப்படுத்த வேண்டாம்‌ என்று உறுதி கொண்டிருந்தோம்‌. கடந்த ஒரு மாதமாய்‌ அவருடன்‌ சாவு, வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது. மரணத்துக்குள்‌ நடந்து கொண்டிருக்கிறேன்‌ என பேச்சிலோ, நடமாட்டத்தலோ சிறு குறிப்பும்‌ அவரிடம்‌ தென்படவில்லை. உறவு, நட்பு என ஒவ்வொருவராய்‌ வந்து பார்த்துப்‌ போகிறார்கள்‌ என்ற சிறு சந்தேகம்‌ எழுந்திருக்கிறது. “உடம்புக்குச்‌ சேட்டமில்லாம இருக்கீங்க, எப்படியிருக்குன்னு கேட்டுப்‌ போக வர்றாங்க” என்றார்‌ மருமகள்‌ சீதா.

நான்‌ போயிருந்த நாளில்‌, ஒரு முதியவள்‌ வந்து பார்த்தார்‌; தன்னைப்‌ பார்க்க வந்த முதியவளிடம்‌ கட்டிலில்‌ படுத்தபடியே “வா, உக்காரு” என்று சொல்வார்‌. “நா உக்கார்றது இருக்கட்டும்‌; நீங்க படுத்திட்டீங்களே, சட்டமா கெடக்கீகளே” என்று சொன்னபோதில்‌, மூதாட்டியின்‌ ஒடுங்கிய கண்களில்‌ நீர்‌ தத்தளித்தது.

கரிசலும்‌ செவலும்‌ கலந்து மயங்கும்‌ ஊர்‌ தங்கம்மாள்புரம்‌. ஊரின்‌ கிழக்கு முடிந்தவுடனே செக்கச்‌ செவேல்‌ என்ற தேரிக்காடு ஆரம்பமாகிறது. காற்றடி காலத்தில்‌, ஆகாயம்வரை பறக்கும்‌ தேரிமண்‌ தீப்பிடித்து எரிவது போல்‌ தெரியும்‌. காற்றடி காலம்‌ முடிந்து பார்க்கையில்‌ தேரி மேடுகள்‌ இடம்‌ மாறி உட்கார்ந்து இருக்கும்‌.

நாடகக்‌ கலைஞர்‌ முருகபூபதி, போத்தையாவைப்‌ பிடித்து, அவர்‌ வழியாக தேறிக்காட்டுக்குள்‌ புகுந்து, நண்பர்களுடன்‌ நாடகப்‌ பயிற்சி மேற்கொண்டார்‌. உருண்டு, புரண்டு, உடல்மொழியை பூரணமாய்‌ வெளிப்படுத்த தேரிமணல்‌ இடம்‌ தந்தது. கூந்தல்‌ நகரம்‌, மணல்‌ மகுடி, போன்ற நாடகங்களின்‌ பயிற்சிக்களமாக தங்கம்மாள்புரம்‌ தேரிக்காடு ஆகியது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை எஸ்‌.எஸ்‌.போ செய்து கொடுத்தார்‌.

ஓயிலாட்டக்‌ கலைஞர்கள்‌ பற்றி, 'தெற்கின்‌ ஆத்மாக்கள்‌' என்றொரு சிறுகதை படைத்திருந்தேன்‌. அக்கதையில்‌ சித்திரித்தது போன்ற தெற்குச்‌ சமை மனிதர்களை எழுத முனைந்து ஜூனியர்‌ விகடனில்‌ வெளியாயிற்று 'தெக்கத்தி ஆத்மாக்கள்‌'. அந்த தெக்கத்தி ஆத்மாக்களைப்‌ படைக்க என்‌ எழுதுகோலுக்கு சேனைப்பால்‌ தொட்டு வைத்தவர்‌ - நாங்கள்‌ செல்லமாக அண்ணாச்சி என்றழைக்கிற 'நாட்டார்‌ வழக்காற்றியல்‌ கொடையாளி' - தங்கம்மாள்புரம்‌ எஸ்‌.எஸ்‌.போத்தையா அவர்கள்‌. “ஒருவர்‌ பின்‌, ஒருவராய்‌ அணி வகுத்துவந்த ஆத்மாக்களுக்கு அவர்‌ உந்து சக்தி” என்று எழுதிய வாசகத்துடன்‌ நூல்‌ அவருக்கு காணிக்கையாக்கப்பட்டது.

எஸ்‌.எஸ்‌.போத்தையா பா.செயப்பிரகாசம்‌, சூரங்குடி அ.முத்தானந்தம்‌

எழுத்தாளர்‌ சூரங்குடி அ.முத்தானந்தம்‌, அவருடைய மாணவர்‌. அ.முத்தானந்தம்‌ சொல்வது போல்‌ “ஏழாம்‌ வகுப்பு ஸார்‌" என்றுதான்‌ போத்தையா அறியப்பட்டார்‌. முத்தானந்தம்‌ கூறுவது போல்‌ கண்டிப்பான ஆசிரியர்‌. கிள்ளு வாங்குவதிலிருந்து தப்பித்த ஒரு காதும்‌ இருக்காது. பிரம்படி வாங்குவதிலிருந்து ஒரு கையோ, முதுகோ பள்ளிக்கூடத்தில்‌ தப்பியிருக்காது. தங்கம்மாள்புரம்‌ காசிநாதன்‌ நடுநிலைப்‌ பள்ளியில்‌ 40 ஆண்டுகள்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணி.

விளாத்திகுளம்‌ உயர்நிலைப்பள்ளியில்‌ படித்த வேளையில்‌ சுதந்திரப்‌ போராட்டம்‌ மும்மரப்பட்டுக்கொண்டிருந்த காலம்‌.

மாணவர்களைத்‌ திரட்டிப்‌ போராடினார்‌. அப்போது அணிய ஆரம்பித்த கதராடை, சாவுவரை அவர்‌ உடலைவிட்டுப்‌ பிரிந்ததில்லை.

இந்திய சுதந்திரத்துக்குப்பின்‌, 1950-களில்‌ உருவான இரு தலைமுறை இளைஞர்கள்‌ போலவே, போத்தையா திராவிட இயக்கங்களின்‌ கவர்ச்சிக்கு ஆளானார்‌. பின்னர்‌ எல்லோரும்‌ போலவே, விஞ்ஞான பூர்வ மார்க்சிய தத்துவத்தால்‌ ஈர்க்கப்பட்டு, இந்தியப்‌ பொதுவுடைமைக்‌ கட்சியில்‌ இறுதி நாட்கள் வரை பிடிமானம்‌ விடாமல்‌ நின்றார்‌.

பொதுவுடைமை இயக்க முன்னோடியான தோழர்‌ ஜீவா குற்றாலம்‌ அருவியில்‌ குளித்துக்கொண்டிருந்தார்‌. செய்தித்தாள்களில்‌, படங்களில்‌ ஜீவாவைப்‌ பார்த்திருந்த போத்தையா அன்றுவரை நேரில்‌ சண்டதில்லை. “நான்‌ போத்தையா" என்று தன்னை அறிமுகம்‌ செய்துகொண்டார்‌. ஏற்கனவே போத்தையாவைப்‌ பற்றிக்‌ கேள்விப்பட்டிருந்த ஜீவா கட்டித்‌ தழுவாத குறை. எங்கே தங்கியிருக்கிறீர்கள்‌ என்று கேட்டு, “எங்கேயும்‌ இல்லை, இப்போதுதான்‌ வருகிறோம்‌" என்று போத்தையா சொல்ல, “எங்கேயும்‌ அறை போட வேண்டாம்‌, என்னுடனேயே தங்குங்கள்‌” என்று சொல்லிய ஜீவா அவரைக்‌ கையோடு அழைத்துப்போனது நெகிழ்ச்சியான தருணம்‌! ஜீவா சும்மா வரவில்லை, இயக்கத்தினருக்கு வகுப்பு எடுக்க வந்திருந்தார்‌ என்பது அங்கு போன பின்பு தெரிந்தது. ஜீவாவும்‌, பேரா.நா.வானமாமலையும்‌ கூடுதலான இரு இதயங்களாய்‌ அவருக்குள்‌ இயங்கினர்கள்‌.

இந்தக்‌ கண்டிப்பான வாத்தியார், வீட்டிலும்‌ வாத்தியாராக தொடர்ந்தார். தொலைக்காட்சிப்‌ பெட்டி என்ற கலாச்சாரப்‌ படையெடுப்பை அவர்‌ வீட்டுக்குள்‌ அனுமதிக்கவில்லை. பேத்திகளும்‌, பேரனும்‌ படித்துக்கொண்டிருந்தார்கள்‌. படிப்பைக்‌ கெடுத்துவிடும்‌ என்று கம்பிவட (கேபிள்‌) தொலைக்காட்சியை தீண்டாமலே வைத்தார்‌. செய்திகள்‌ பார்க்கவாவது, தொடர்பு கொடுக்கலாமே என்று நான்‌ கேட்டபோது, "யார்‌ செய்தி பாக்கறாங்க? எல்லாம்‌ சீரியல்தான்‌ பார்க்கிறார்கள்‌” என்றார்‌.

பணி நிறைவுற்றபோதும்‌ அவர்‌ சும்மா இருந்ததில்லை. பழக்கதோசம்‌ மாதிரி நித்தமும்‌ பள்ளிக்கு வழக்கம்போல வருவதும்‌, வழக்கம்போல மாணவர்களுக்குப்‌ பாடம்‌ நடத்துவதும்‌, அறிவுரைகள்‌ சொல்வுதுமாக இருந்தார்‌. அதோடு மாலை மணி 6 முதல்‌ 8 வரை ஊர்ப்பொது மடத்தில்‌ முறைசாராக்‌ கல்வியை நடத்ததினார். அதற்காக யாரிடமும்‌ முக்காத்‌ துட்டு சம்பளமாக எதுவும்‌ பெறவில்லை. பள்ளிப்படிப்பை இடையில்‌ விட்‌டவர்கள்‌ - ஆடு மாடு மேய்ப்பவர்கள்‌ - வயது வந்தவர்கள்‌ அகியோர்களைக்‌ கூட்டி உட்காரவைத்து அவர்களுக்குப்‌ பாடம்‌ சொல்லிக்‌ கொடுப்பதில்‌ மன நிறைவு கொண்ட ஆத்மா அவருடையது.

இருதய அறுவைச்‌ சிகிச்கைக்காய்‌ கோவையில்‌ மருதமலையில்‌ மகன்‌ பாரதி வீட்டில்‌ தறித்து நின்ற அந்த ஆண்டில்‌, அவரால்‌ எட்டையபுரம்‌ பாரதி முற்போக்கு வாலிபர்‌ சங்க செயற்குழுக்‌ கூட்டத்தில்‌ கலந்துகொள்ள முடியாமலும்‌, அந்த ஆண்டு நடைபெற்ற பாரதியார்‌ விழாவில்‌ பங்குபெற இயலாமலும்‌ போனமைக்காக மிகவும்‌ நொந்துபோனார்‌. எது தவறினாலும்‌, பாரதிக்கு ஒவ்வொரு ஆண்டும்‌ செலுத்தும்‌ மரியாதையில்‌ அவர்‌ தவறியதில்லை.

பலசரக்குக்‌ கடையில்‌ சாமான்கள்‌ வாங்கினால்‌ ஒரு சிட்டையில்‌ குறித்துக்‌ கொடுப்பார்கள்‌. சிட்டை போல்‌ கையகலத்தாளை மடித்து வைத்துக்கொண்டு, நாட்டார்‌ வழக்காறுகளை நுணுக்கி நுணுக்கி எழுதி வைத்துக்‌ கொள்வார்‌. நோய்‌ பாடாய்ப்படுத்திய காலத்திலும்‌, இந்தப்‌ பழக்கம்‌ அவரைவிட்டுப்‌ போகவில்லை. மரணத்துக்கு ஒருவாரம்‌ முந்திகூட அவர்‌ நுணுகி, நுணுகி எழுதிய சிட்டைகள்‌ சட்டைப்பையில்‌ நிறைந்திருந்தன.

- பா. செயப்பிரகாசம்‌, தீராநதி - ஏப்ரல்‌ 2012

  •  

புலமைத்துவத்தில் வேரூன்றியவர்

முன்னைய நாட்களில் முதுகலைத் தமிழ் பயின்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். முதுகலை வகுப்புச் சேர்க்கையிலிருந்து அது தொடங்குகிறது. ஆங்கில இலக்கியப் பிரிவு மீதான  மோகம் தமிழிலக்கியத்தின் பால்   உருவாகவில்லை. மோகம் என்ன, அந்தக் கிறுக்கில் சிறுதுளியளவும்  தாய்மொழிக்கென முளைவிட்டதில்லை. நாட்டர் வழக்கில் சொல்வதாயின்,  ஆங்கில இலக்கியப் பிரிவுக்கு ’மவுஸ்’ கூடுதல். தமிழ் இலக்கியப் பிரிவு காற்றோட்டமாய் இருந்தது.  

எந்தப் பிரிவும் கிடைக்காதவர்கள் தமிழ்ப் பிரிவில் வந்து சேருவார்கள்.  முதுகலைத் தமிழில் எங்களுடன் ஒரு கூடைப் பந்தாட்ட விளையாட்டுக்காரர் (Basket Ball Player) பயின்றார். அவருக்கு தாய் மொழி தமிழ் அல்ல; சௌராட்டிரம் அவருடைய தாய்மொழி. மதுரைநகரில் தெற்கு மாசி வீதிகளை உள்ளடக்கிய வட்டாரத்தில் வாழும் பட்டுநூல்காரர்கள் (பட்டுநூல் நெசவாளிகள்) என்றழைக்கப்படும் சௌராட்டிர  இனத்தைச் சேர்ந்தவர்.

அவர் போல் வேறு பாடப்பிரிவில் இடம் கிடைக்காத - தொலைபேசி அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவர் எங்களுடன் முதுகலைத் தமிழ் பயின்றார்: ஒரு துறையில் பணியாளராக இருந்து கொண்டு,  அதிலும் நடுவணரசுத் துறையில் பணியாற்றிக் கொண்டு - முறையான கல்லூரியில் (Regular College) பயில்வதெனில் சாத்தியமற்ற ஒன்று. மேலதிகாரிகளைத் தாங்கித் தடவி, முண்டியடித்து முதுகலைத் தமிழில் சேர அனுமதி பெற்றிருந்தார் என்பது அபூர்வமான செய்தி! அதிர்ச்சியான செய்தி!

ம.பெ.சீனிவாசனும் நானும் சுவரில் குறுக்காய் வளர்ந்த அரச மரக்கன்று அல்ல; முருசல் பாத்தியில் (முடுக்கலான  பாத்தி) முளைத்த தோட்டப் பயிர்களும்  அல்ல; தமிழ்ப் பற்று காரணமாய் முறையாகத் தேர்வானவர்கள். நான் புகுமுக  வகுப்பில் (Pre university course) சிறப்பு தமிழ் (Advanced Tamil) எடுத்துப் பயின்றவன்.  தொடர்ச்சியில் அதே தியாகராசர் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்று முதுகலைத் தமிழில் சேர்ந்தேன். ம.பெ.சீனிவாசன் சிவகங்கை மன்னர் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றவர். சிவகங்கைக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த தமிழின் முன்னணிக் கவிஞர் மீ.ராசேந்திரன் அவர்களால் “அன்பிற்குரிய இளங்கவிஞர்” என்று பாராட்டப்பட்டவர்.

1962 - இல்  மீ. இராசேந்திரன் ’சுவை’ என்றொரு கவிதை தொகுப்பு வெளிக் கொணர்ந்தார். தொகுப்பு அவருடைய கவிதைகள் அல்ல; மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ச் சிங்கம் என அழைக்கப்பட்ட சி.இலக்குவனார் தமிழ்த் துறைத் தலைவராக அமர்ந்திருக்க, அவ்வை சு. துரைசாமி, பேராசிரியர் அ.கி.பரந்தாமனார், முனைவர் மொ.துரை.அரங்கனார்,  முனைவர் மெ.சுந்தரம் போன்றோர் தமிழ் இருக்கைகளில் வீற்றிருக்க, மீ.மீராசேந்திரன், அப்துல் ரகுமான், தி.கு நடராசன், ஆல அச்சகம் பாலசுந்தரம் என தமிழ் முதுகலையில் பயின்றோர் படைப்பாளிகளாய்  முனைப்பு பெற்ற  காலகட்டம் அது.  

சிவகங்கைக் கல்லூரிக் கவியரங்கில் கவிஞர் முடியரசன் தலைமை ஏற்க,  நகை, அவலம், மருட்கை, அச்சம், இன்பம், வீரம் - என சுவைகள் பற்றிய தொகுப்பு நூல் மீ. இராசேந்திரன் தொகுத்து வெளியிட்டது. 

ஆனால் ‘சேந்தி  உடையநாதபுரம் ம.பெ. சீனிவாசன்’  தொகுத்து வெளியிட்ட நூல் ”இராசேந்திரன் கவிதைகள்” என்னும் முதல் தொகுப்பு. 1965-ல் முதல் பதிப்பு வெளியாகி பின்னர் பல பதிப்புகள் கண்டது. தோழமை நிலையம், தெப்பக்குள கீழ்க்கரை, சிவகங்கை என முகவரி கொண்டிருக்கும்.

ம.பெ சீனிவாசன் மீ.ராசேந்திரன் மாணவர் மட்டும் அல்ல: அணுக்க நண்பரும் ஆலோசகரும் ஆக பரிணமித்தவர். பாரதிதாசன், முடியரசன், பொன்னி வளவன் என தமிழ் எழுச்சியின் அடையாளங்கள் வரிசைப்படுத்தப்படுவதில்  மீ. இராசேந்திரன் ஒரு மைல்கல். அந்த வழியில் நான்  இராசேந்திரனை வாசித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

”சாகாத வானம் நாம் வாழ்வைப் பாடும்

சங்கீதப் பறவை நாம்” 

போன்ற மீ.ராசேந்திரன் கவிதைகளை, பாவேந்தரின்

”பூட்டிய இரும்புக் கதவு திறக்கப்பட்டது, 

சிறுத்தையே வெளியில் வா” 

போல பலமுறை எழுத்தில், சொற்பெருக்காற்றுகையில் அதிகம் பயன்படுத்தினேன். அதே பொழுதில் ”ராசேந்திரன் கவிதைகளை”, தனித்தனி நட்சத்திரங்களாய் கண்டிருந்த என்னை முழுமையான நீலவானமாய்  தரிசிக்கச் செய்தவர் எனது நண்பர், முதுகலைத் தோழர் ம.பெ.சீனிவாசன். “என் கவிதைகளை எழில் மிகத் திரட்டி உதவிய என் மாணவர் இளங்கவிஞர் ம.பெ.சீனிவாசன்“ என பாராட்டி நன்றி தெரிவித்திருப்பார் மீ.ராசேந்திரன்.  

ம.பெ.சீ முதுகலைத் தமிழ் மாணவராய் மதுரைத் தியாகராசர் கல்லூரியில்  அறிமுகம் ஆகிறார். வகுப்புத் தோழனான எனக்கு அவர் தொகுத்த ராசேந்திரன் கவிதைகள் நூலினைக் கையளித்தார். அவர் வாசிக்க கையளித்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு.

எங்கள் இரு பேருக்கும் இயல்பாகவே படைப்பு மனம் உள்ளிருந்து பீறிட்டுக் கொண்டிருந்தது. படைப்புச் சிந்தனையை ஒருவர் பழம் இலக்கிய ஆய்வுகளிலும், மற்றொருவர் சிறுகதை, புதினம், உருவகம், கவிதை, கட்டுரை என (Creative writtings) என்று சொல்லப்படுகிற ஆக்கப் படைப்புகளிலும்  மடைமாற்றல் நிகழ்ந்தது.

ஆனால் இரு பேரும் சிந்திக்கிற சமுதாயம் பற்றிய புள்ளி ஒன்றாகவே இருந்தது. அவரவர் எழுத்தின் வெளிப்பாட்டு வழியாக இதனை அறிவித்துக் கொண்டோம். அவர் முன்னைய இலக்கியப் பரப்பின் மூத்த படைப்பாக்கப்  புலமைமையானார்; சற்று விலகி  நான் சமகாலப் படைப்பிலக்கியத்தின் உருவெடுத்து எழுத்தாளனாகினேன்.

பொதுவாக ஆய்வாளர்களை திறனாய்வு செய்கிறவர்கள் அவர்களைப்  படைப்பாளிகளாக ஏற்றுக் கொள்ளுதல் என்பது இயல்பில்லை; இதனையே  போல் மொழியாக்கப் படைப்பாளிகளுக்கும் நேருகிறது. ஆனால் நேரம், சிந்தனை, உழைப்பு என அத்தனையின் ஒட்டுமொத்த திரட்சியாகத் தான் திறனாய்வும் மொழியாக்கமும் உருவாகின்றன. ஆகவே முன்னை இலக்கிய ஆய்வும் மொழியாக்கமும் படைப்பாக்கங்களுக்குச் சமமாய் பல்லக்கு ஏறி ஊராங்கி புறப்பட்டு (பட்டணப் பிரவேசம்) வரவேண்டியவை. ஒன்றே ஒன்று இவைகளின் வெளிப்பாட்டில் சமகாலம் தென்படுகிறதா, அல்லது பழங்கருத்துக்களுக்குச் சார்பான சமரசப் போக்கு தென்படுகிறதா என்பது தான்.  

இவ்வகையில் நண்பர் ம.பெ.சீனிவாசன் தொகுத்துக் கையளித்த 'ராசேந்திரன் கவிதைகள்’ அவரின் சமகால உள்வாங்கலைக் கிரகிப்பாய் கொண்டிருந்தது. 

2

எங்கள் கல்லூரிக்காலம், புதுக்கவிதைகள்  ஒன்றிரண்டு பூக்கத் தொடங்கியிருந்த காலம். ஒரு பூக்காடாய்ப் பரந்து, பளபளப்பாகாத நாட்கள் அவை. பெரும்பாலான கவிஞர்கள் போல் தொடக்க நிலையில் மரபுக் கவிதைகளை எழுதினார் ம.பெ.சீ.

”ராசேந்திரன் கவிதைகள் - சிறு துளி பெருவெள்ளம்” என்ற உள்ளடக்கத் தலைப்புடன்  

  1. அமுத துளிகள் 
  2. தேன் துளிகள் 
  3. கண்ணீர்த் துளிகள்
  4. பன்னீர்த் துளிகள்
  5. மழைத் துளிகள் 
  6. குருதித் துளிகள் 
என உள்ளடக்கத் தலைப்புகளை பரப்பி இருப்பார் தொகுப்பாளர் ம.பெ.சீ. 

வாசிப்பு நாக்குக்கு அனைத்துத் துளிகளிலும் ஒரே சுவைதான்.

ராசேந்திரன் கவிதைகள் தொகுப்பில் “வள்ளலார் வருவாரா” (பக்கம் 50) என்னும் கவிதை. 

தைத்திங்கள் வருகின்ற பொங்கல் நாளில்

       தங்கத்தைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கும்

நெய்ப்பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சி கொள்வர்

        நிதி  படைத்த சீமான்கள்: என்றும் எங்கள்

கைதொட்டு வாய்பட்ட துண்டோ பொங்கல்?

         கண்மட்டும் ஓயாமல் பொங்கும்! பொங்கும்! 

தெய்வங்கள் திருநாட்கள் எங்கட் கில்லை;

        தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?

கவிதையின் இறுதி வரிகளை தனது திராவிட நாடு இதழில் அண்ணா எடுத்தாண்டு பாராட்டி எழுதியிருந்ததை ம.பெ.சீ என்னுடன் பகிர்ந்துள்ளார்.

ராசேந்திரன் எழுதிய மற்றொரு கவிதையை அண்ணா திராவிட நாடு இதழில்  வெளியிட்டுள்ளார். ராசேந்திரன் கவிதைகளின் மதிப்புக் கூட்டலுக்கான மூலதனமாயிற்று இந்த அறிமுகம் எனலாம்.

இளங்கவி ம.பெ.சீ, ராசேந்திரன் கவிதைகள் தொகுப்பால்  இலக்கிய உலகுக்கு  அறியப்பட்டார். அவர் தன்னை ஒரு தமிழ்ப் புலமையாக நிலை நிறுத்திக் கொண்டாரே தவிர தனது வெளியீடு என ஒரு கவிதைத் தொகுப்பை ஏன் கொண்டு வரவில்லை? அவர் ஆய்வுலகில் அறியப்பட்ட அளவு படைப்பாக்க  வெளியில் கால் பதிக்கவில்லை என்பது காரணமாய் இருக்கலாம்;  எவ்வாறாயினும் யார் யாரையோ எழுத்துலகப் பிள்ளையாக வளர்த்தெடுத்த கவிஞர் மீரா எப்படி இவரை விலக்கிப் போனார் என்பது  இன்று வரை விடை கிடைக்காத கேள்வியாக அலைகிறது.  

3

அக்காலத்தில் முதுகலைத் தமிழ் பயில வருகிற மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கைவிரல் எண்ணிக்கை என்பதால் எவரையும் தேர்வில் தோல்வியுறச் செய்வதில்லை என்ற மரபு நிலவுகிறது. இதற்கு  நாங்கள் ’தர்ம பாஸ்’ என்று பெயர் சூட்டியிருந்தோம். இந்த தர்ம பாஸில் என் போல் தேர்வாகி வந்த சிலருண்டு .  

இறுதித் தேர்வுக்குச் செல்லும்பொழுது நான் அவ்வாறு அலட்சியம் கொண்டிருந்தமைக்கு இரு காரணங்கள் உண்டு.

1967 ஏப்ரலில் திமுக பெரும்பான்மையாய் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தது. முன்னரே திமுக வெற்றி பெற்று ஆட்சி ஏற்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததால், திமுக சார்பான என் போன்றோர் முனைந்து பயின்று தேர்வு எழுதிட முன் வரவில்லை.   

இரண்டாவது - அண்ணா  முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்த ஆட்சியில், அதிலும் மனிதநேயம் கொண்ட ஒருவரின் கீழ் அனைவருக்கும் வேலை கிடைக்கப் போகிறது; எல்லோருக்கும் எல்லாமான சமுதாயம் உருவாகிவிட்டது - என்னும் பொருந்தாத மாயையில் இருந்தோம். ம.பெ.சீ போன்றோர் புலமைத்துவ தேர்ச்சி மட்டுமே முக்கிய என உணர்ந்து முனைப்புக் கொண்டு தம்மைத் தயார் செய்து கொண்டிருந்தனர். புலமைத்துவம் மட்டுமே வாழ்வெனக் கருதியோர்  தம்மைச் சுருக்கிக் கொள்ளவில்லை. கொப்பும் கிளையுமாய் பரந்து பெருமரமாய் ம.பெ.சீ திகழ்கிறாரெனில், புலமைத்துவமே அடிப்படை என்பதனை இன்றும் உணர்ந்து செயலாற்றுகிறார் என்பது காரணம்.

அந்தப் பெருமரத்தின் கிளகளெங்கும் பழந்தின்று விதைபோடும் பறவைகளின் கெச்சட்டம். அவருடைய எண்பதைக் கொண்டாடும் மாணவத் தோழமைப் பறவைகளின் முயற்சி வெல்லும், வெல்லட்டும் என வாழ்த்துகிறேன்.

பா.செயப்பிரகாசம், 22 ஆகஸ்ட் 2022

  •  

நாட்டார்‌ இயலின்‌ தெக்கத்தி ஆத்மா - தொகுப்பாளர்‌ உரை

எஸ்‌.எஸ்‌.போத்தையா என்னவாக இருக்க நினைத்தார்‌?

“உள்ளத்தால்‌ உயர்வுள்ளல்‌” - எனும்‌ அறமொழிக்குப்‌ பொருத்தமாய்‌ - நினைப்புக்கு ஏற்ப வாழ்க்கை அமைகிறது என்பது பொதுவான நம்பிக்கை. நல்ல கணவன்‌ அல்லது நல்ல மனைவி அமைய வேண்டுமென்று நினைப்புக்களில்‌ விதை போடுகிறோம்‌. பெரும்பாலான வாழ்க்கைகளில்‌ விதையொன்று போட சுரையொன்று முளைக்கிறது. சமூக அமைப்பில்‌ கணவன்‌ என்பதும்‌ மனைவி என்பதும்‌ வேறுபாடான யதார்த்தங்களால்‌ தீர்மானிக்கப்படுகிறது. நினைப்பு நிறைவேறாத பட்சத்தில்‌.

“திருமணம்‌ சொர்க்கத்தில்‌ நிச்சயிக்கப்படுகிறது”

“மனைவி அமைவதெல்லாம்‌ இறைவன்‌ கொடுத்த வரம்‌”

- இவ்வாறு சொர்க்கத்துக்கோ, கடவுளுக்கோ, பொறுப்பைத்‌ தள்ளி விடுகிறோம்‌. கனவினும்‌ கூடுதலான புனைவு இது.

போத்தையா காலத்தின்‌ கிராமப்புற ஆசிரியர்களுக்கு அவர்கள்‌ என்னவாக வேண்டுமென விரும்புகிறார்களோ, அதுவாக ஆகிற வாய்ப்புகள்‌ சூழ இருந்தன. 1950, 60-களின்‌ ஆசிரியர்கள்‌ சுதாரிப்பானவர்கள்‌. கிராமங்களில்‌ இருந்தாலும்‌, அவர்களுக்கு நகரவாழ்வின்‌ சூழ்ச்சி தட்டியிருந்தது. கைக்கும்‌ மெய்க்கும்‌ இல்லாமல்‌ (அன்றாடச்‌ செலவுக்குமில்லாமல்‌) இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்றிருப்பதினும்‌ “அக்கு தொக்கா வாழ்வது எப்படி" என்ற அறிவு உதயமானது. சம்பாத்தியத்துடன்‌ இன்னொரு சம்பாத்தியம்‌ சேர்ந்தால்‌, வளமாக அமையும்‌ என்று கணக்குப்‌ பிறந்தது. ஆசிரியருக்கு ஆசிரியர்‌, ஆசிரியர்‌ இல்லாது போயினும்‌ இன்னொரு அரசுப்பணியாளர்‌ என்று வாழ்க்கைத்‌ துணை தேடி அமைத்துக்கொண்டார்கள்‌. இந்த இரண்டு சம்பளக் குடும்பம்‌ என்பது நடுத்தர வர்க்கம்‌ என்ற ஒன்றின்‌ உருவாக்கத்தில்‌ முன்னர்‌ கண்டிராதது. ஓன்றோடு ஒன்று சம்பாத்தியம்‌ சேர்ந்ததும்‌, அதை மூன்றாக்கும்‌ மூலதனப்‌ பெருக்கத்தை எண்ணினார்கள்‌. அவர்கள்‌ எதிரில்‌ காய்ஞ்ச கருவாடாய்ப்‌ போய்க்‌ கொண்டிருக்கும்‌ விவசாயிகளும்‌, மூங்குநீச்சல்‌ போட்டு மேல்வரத்‌ துடித்த சிறு வியாபாரிகளும்‌ தெரிந்தார்கள்‌. வட்டிக்குக்கொடுத்து வாங்கத்‌ தொடங்கினார்கள்‌.

இன்னொரு பிரிவு-காடு, கரை வாங்கி விவசாயம்‌ செய்வது, கல்யாணத் தரகு, ஜோசியம்‌ என்று உழைக்க ஆரம்பித்தார்கள்‌.

பிழைக்க வழியாயில்லை! அஞ்சல் வழிக்‌ கல்வியை பல்கலைக்கழகங்கள்‌ திறந்தன. அவிழ்த்து விடப்பட்ட நாய்க்‌குட்டிகள்‌ தாய்மடியை மொச்சி மொச்சிக்‌ குடிப்பதுபோல்‌ பி.ஏ, எம்‌.ஏ என்று படித்துப்‌ புலமை பெற்றனர்‌. புலமை பெற்றதும்‌ நல்லதுக்கே! தமிழில்‌ புலமை எய்தினால்‌ பட்டிமன்ற உரையாளர்கள்‌ ஆகலாம்‌. கோயில்‌ விழாக்கள்‌, குடமுழுக்கு, பட்டிமன்றம்‌, வழக்காடு மன்றம்‌, உரைவீச்சு என்று கோஷ்டி சேர்த்து வட்டாரத்தை கலக்கினார்கள்‌. நயமாய்‌, நயத்துக்கு மேலோரு நகைச்சுவையாய்‌ பேசி நடித்து வட்டாரம்‌ தாண்டி மாவட்டங்கள்‌ கடந்து, எல்லை தாண்டிய புகழ்கொண்டனர்‌.

எடுத்துக்கோ, எடுத்துக்கோ என்று கூவுவதுபோல்‌ எத்தனை வகைகள்‌ அன்று ஆசிரிய சமூகத்தின்‌ முன் கிடந்தன.

எஸ்‌.எஸ்‌.போத்தையா எதைத்‌ தேடி எடுத்தார்‌?

சாவின்‌ வாசலில்‌ நிற்கிற வேளையில்‌ அவரது சட்டைப்‌ பையை நிறைத்திருந்த சின்னச்சின்ன சிட்டைகள்‌ சாட்சி! காற்றில்‌ அலைந்தவைகளை ஏட்டில்‌ ஏற்றிவிட வேண்டுமென்ற வெறியுடன்‌ அவர்‌ தேடித்தேடி எடுத்தவை அவைதாம்‌. நிலத்துக்குக்‌ கீழ்‌ ஓடும்‌ நீரோட்டம்‌ போல்‌, பூமிக்கு மேலே ஓடும்‌ வெப்போட்டம்‌ போல்‌, அவருக்குள்‌ ஒரு போதும்‌ ஓய்வு கொள்ளா சமூக அக்கறை இயங்கிக்கொண்டிருந்தது.

பலசரக்குக்‌ கடையில்‌ சாமான்‌ வாங்குகையில்‌ குறித்துக்‌ கொடுப்பார்கள்‌; அதுபோல்‌ சின்னச்‌ சின்ன சிட்டைகளில்‌, அரைத்‌ தாளை நான்காய்‌ மடித்தால்‌ வருமே - அதுபோல்‌ உள்ளங்கையளவு காகிதத்தில்‌, சிசர்ஸ்‌, கோல்டு பிளேக்‌ சிகரட்‌ அட்டைகளில்‌, திருமணம்‌ - அன்புடன்‌ அழைக்கின்றோம்‌ என்று அழைத்தது போக மீதியுள்ள அழைப்பிதழில்‌ போகிற இடமெல்லாம்‌ நுணுகி நுணுகி குறித்து வைத்துக்‌ கொண்டார்‌.

மகாகவி பாரதி விழா, எட்டயபுரம்‌ செப்டம்பர்‌ 16, 17 - 1989 என்றிருந்த அழைப்பிதழும்‌ தப்பவில்லை. அது “இசை மேதை விளாத்திகுளம்‌ சுவாமிகள்‌, பொன்விழா” அழைப்பிதழாக (29-10-1960) இருக்கலாம்‌. சாந்தி இதழ்‌ வந்த உறையாக இருக்கலாம்‌. எது கைவசம்‌ கிடைக்கிறதோ அது. கேட்ட, பார்த்த நொடிப்‌ பொழுதுக்குள்‌ எதுவும்‌ தப்பித்துப்‌ போய்விடக்கூடாதே என்ற தவிதாயப்படல்‌ அங்கு செயல்பட்டது.

அவருக்கு எது அபூர்வ தருணம்‌?

ஒரு முத்தாயிக்‌ கிழவியிடமிருந்து உதிர்கிற சொலவம்‌ -

“என்‌ ஆட்டைக்கு வராதவ எண்ணெய்க்காரன்‌ பெண்டாட்டி”. முற்றத்தில்‌ எக்காளமாய்‌ வக்கணை செய்கிற ஒரு பொண்‌ குட்டியின்‌ கேவி -

பாக்குக்‌ கடிக்கும்‌ நேரத்தில்‌ பழனியக்காவிடமிருந்து நெருஞ்சியாய்‌ வெடிக்கிற வசவுக்காடு -

இவை அபூர்வத்‌ தருணங்கள்‌.

யார்‌ எந்தப்‌ பொழுதில்‌ என்ன சொல்போடுவார்கள்‌ என்று எதிர்பார்த்துக்‌ கொண்டிருக்க முடியாது. போட்டால்‌ நழுவிடாமல்‌ பிடித்துக்‌ கொள்ள வேண்டும்‌; சாவகாசமாய்‌ வீட்டில்‌ வைத்து எழுதிவைத்துக்‌ கொள்ளமுடியாது. நினைவின்‌ மடி கனமாகிவிட்டால்‌, எங்காவது பராக்குப்‌ பார்க்கையில்‌ அவிழ்ந்து இந்திவிடும்‌. நினைவு என்பது நீர்போல/ கொட்டிப்‌ போனால்‌ கூட்டி அள்ளத்‌ தோதில்லை.

சமகாலத்தின்‌ ஆசிரிய சகாக்கள்‌ பயணித்த எத்திசையையும்‌ கண்டுகொள்ளவில்லை அவர்‌. தனக்குள்‌ இருந்த திறமையை அடையாளம்‌ கண்டுகொண்டு அத்திசையில்‌ பயணித்தார்‌. அமைத்துக்‌ கொண்ட வாழ்க்கை, அதற்கு ஏந்தலாய்‌ தூக்கிக்‌ கொடுத்தது.

பணி மூப்பு அடிப்படையில்‌ நடுநிலைப்பள்ளித்‌ தலைமையாசிரியர்‌ பணியிட நியமனம்‌ வந்தது. வேறு இடத்திற்கு மாறுதலாக வேண்டியிருக்கும்‌. ஆனால்‌ இடைநிலை ஆசிரியர்‌ ஊதியத்துக்கும்‌, நடுநிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்‌ ஊதியத்துக்கும்‌ மாதம்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ வித்தியாசம்‌ அந்தக்‌ காலத்திலேயே இருந்தது. இது போக ஆண்டு ஊதிய உயர்வு, லொட்டு, லொசுக்கு என்று இன்னும்‌ 75 வருடங்கள்‌ அப்பணியிடத்தில்‌ வேலை செய்யலாம்‌; கணக்குப்‌ பண்ணிப்‌ பார்த்தால்‌ எத்தனையோ லட்சங்கள்‌ கிடைத்திருக்கும்‌. அத்தனையும்‌ வேண்டாமென்று உதறித்‌ தள்ளி உள்ளூரிலேயே பணியாற்றுவேன்‌ என்று எழுதிக்‌ கொடுத்துவிட்டார்‌.

“சம்பளத்தில்‌ இவ்வளவு வித்தியாசம்‌ இருக்கிறது. கடைசியில்‌ பென்சன்‌, கிராஜீட்டி அதிகமாய்க்‌ கிடைக்கும்‌ என்று நாங்கள்‌ எவ்வளவோ சொல்லிப்‌ பார்த்தோம்‌. அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில்‌ ஆசிரியர்கள்‌ மத்தியில்‌ அவருக்கு கிடைத்த பட்டம்‌ பைத்தியகார மனுஷன்‌”

அவரது தலைமாணாக்கரும்‌ எழுத்தாளருமான சூரங்குடி அ.முத்தானந்தம்‌ சடைத்துக்‌ கொள்கிறார்‌.

வாழ்க்கைக்கான வேலையா? வேலைக்காக வாழ்க்கையா? -

ஒற்றைக்‌ கேள்விக்குள்ளிருந்து அவருடைய முடிவைப்‌ பரிசீலித்தால்‌, சடைத்துக்கொள்ளவோ, சலித்துக்கொள்ளவோ ஏதும்‌ இல்லை. வேலைக்காக வாழ்க்கை என்று தொட்டுத்‌ தொட்டுப்‌ போய்க்‌ கொண்டிருந்தால்‌, தொடவேண்டிய கடைசி எல்லை இல்லாமல்‌ போய்விடும்‌.

“வாழ்க்கைக்காகச்‌ சேர்த்து வைப்பதா, சேர்த்து வைப்பதற்காக வாழ்வதா?” - இந்த ஒத்தையா ரெட்டையா விளையாட்டில்‌, இரண்டாவதைத்‌ தேர்ந்தெடுத்த அசிரிய சகாக்கள்‌ அதற்குள்ளேயே போய்க்கொண்டிருந்தார்கள்‌. அப்பேர்ப்பட்ட ஆட்கள்‌ சூட்டிய பைத்தியக்கார மனுஷன்‌ என்ற பட்டத்துக்கும்‌, நடப்பு உலகிலிருந்து நாம்‌ பார்க்கிறதுக்கும்‌ பெரிய வித்தியாசமில்லை.

சமூதாய அக்கறையோடு, தான்‌ எடுத்துக்கொண்ட நாட்டுப்புற இயல்‌ சேகரிப்பு தன்‌ வாழ்நாள்‌ பணி என்று இயங்கினார்‌. காலகாலமாய்‌ தலைமுறை தலைமுறையாய்‌ ஏடறியா மக்கள்‌ வாய்மொழியாய்‌ கொட்டிவைத்த அறிவுச்‌ சேகரிப்பை மூலதனமாக்கி, வியாபாரம்‌ செய்ய அவர்‌ எண்ணியதில்லை.

“நான்‌ பேராசிரியர்‌ நா.வா அவர்களின்‌ முதல்‌ மாணவன்‌ என்பதில்‌ பெருமை கொள்கிறேன்‌” என்பார்‌ எஸ்‌.எஸ்‌.போத்தையா. 

“இதனை இதனால்‌ இவன்‌ முடிக்கும்‌ என்றாய்ந்து 

அதனை அவன் கண்விடல்‌” 

- குறளைப்‌ புரிந்தவர்‌ நா.வா. இதை இதை - யார்‌ யார்‌ செய்வார்கள்‌ என்று துல்லிதமாய்க்‌ கண்டு பணிகளைப்‌ பரிந்துரைத்திருக்கிறார்‌.

“இலக்கிய சாம்ராட்டு”களோடு மல்லுக்கட்டி மக்களின்‌ மொழியை நிலைநிறுத்திய கி.ராஜநாராயணன்‌, நாட்டார்‌ வழக்காறுகளை கண்டறியத்‌ தூண்டிய நா.வா, மக்களிடம்‌ நின்று, மக்களிடம்‌ பேசி, மக்களிடம்‌ கேட்டு சேகரம்‌ செய்த எஸ்‌.எஸ்‌. போத்தையா, எஸ்‌.எம்‌.கார்க்கி, எம்‌.பி.எம்‌.ராஜவேலு, குமாரி பி. சொர்ணம்‌, கவிஞர்‌ எஸ்‌.சடையப்பன்‌, கு.சின்னப்‌ பாரதி, இவர்களுக்கு அப்பால்‌ தனித்து நின்ற காந்திக்‌ கிராம அன்னகாமு போன்றவர்கள்‌ அய்ம்பது அறுபதுகளில்‌ போட்ட விதைப்பு, நாட்டுப்புறவியல்‌ என்றாலே முகஞ்‌ சுளித்த பல்கலைக்கழக கட்டுமானத்துக்குள்‌ “நாட்டுப்புறவியல்‌ சிறப்பு அலகு” ஏற்படக்‌ காரணமாயிற்று.

போத்தையா போன்றவர்களை அடையாளம்‌ கண்டு கொள்ளவில்லையே பல்கலைக்கழக பீடங்கள்‌ என்ற வாதனையிருக்கலாம்‌ நமக்கு. ஆனால்‌ அவருக்குத்‌ துளியும்‌ கிடையாது. நம்‌ காலத்திலேயே அப்படியான சிறப்பு கி.ராஜநாராயணனுக்குக்‌ கிடைத்தது. நாட்டுப்புறவியலின்‌ மணம்‌, குணம்‌ அறிந்த ஒருவர்‌, என்று சொல்வதினும்‌, கி.ரா.வை அறிந்த ஒருவர்‌ துணைவேந்தர்‌ ஆனதால்‌ புதுவையில்‌ தன்‌ பக்கமாகவே கூட்டி வைத்துக்‌ கொண்டார்‌.

9.4.2000-த்தில்‌, அருமைச்‌ சகோதரர்‌ அவர்களுக்கு - என்று போத்தையா அண்ணாச்சியிடமிருந்து ஒரு கடிதம்‌ வருகிறது. கரிசல்‌ சொலவடைகள்‌ - தொகுப்பு பற்றி தங்கம்மாள்‌ புரத்திலிருந்து வந்த கடிதம்‌.

“அனால்‌ பள்ளப்பய, பறப்பய, வண்ணாப்பய என்று வரும்‌ சொலவடைகள்‌ அவ்வின மக்களைப்‌ புண்படுத்தத்தான்‌ செய்யும்‌. ஐயமில்லை; அரிச்சந்திர மயான காண்டத்தில்‌ பாடப்படும்‌.

'அதியிலும்‌ பறையனில்லை

சாதியிலும்‌ பறையனில்லை'

என்ற பாட்டைப்‌ பாடக்கூடாது என்ற ஓர்‌ பெரிய எழுச்சியும்‌ போராட்டமும்‌ ஏற்பட்டு இன்று இப்பாடல்‌ சொற்கள்‌ மாற்றிப்‌ பாடப்படுகிறது... இது போன்ற சொலவடைகளை நான்‌ இதில்‌ சேர்க்கவில்லை” - என்று பூர்வாங்கமாய்ப்‌ பேசியது மட்டுமல்ல, காரிய ரீதியாகவும்‌ தவிர்த்து விட்டார்‌. சமூக மாந்தரை மதிக்கும்‌ மனக்கட்டுமானம்‌ அவருக்கிருந்தது. தன்‌ வீட்டுக்கு வரும்‌ அந்த மனிதர்களை வீட்டுக்குள்‌ அழைத்து, சமமாய்‌ உட்காரவைத்து உரையாடி அனுப்பினார்‌. வருபவர்களில்‌ சிலர்‌, அப்படி உட்காராமல்‌ மதிப்பளித்து நின்றபடியே பேசிவிட்டுப்‌ போவார்கள்‌.

அய்யன்‌ (திருவள்ளுவன்‌) நூலகம்‌ என்று ஒவ்வொரு ஊராட்சியிலும்‌ திறக்கப்பட்டிருந்தது. அந்தந்த ஊரில்‌ ஓய்வுபெற்ற ஒரு ஆசிரியரைப்‌ பொறுப்பாகப்‌ போட்டிருந்தார்கள்‌. மாதம்‌ எழுநூறு ரூபாய்‌. வேறு எந்த இடத்திலும்‌ ஒரு ஆசிரியரும்‌ நூலகத்தைத்‌ திறந்து வைத்துப்‌ பார்க்கவில்லை என்று அங்கங்கே மக்கள்‌ “பிராது” (புகார்‌) செய்வார்கள்‌. காலந்தவறாமை, கடமை வழுவாமை என ஆசிரியப்‌ பணியில்‌ எப்படி இருந்தாரோ, அப்படி நூலகப்‌ பணியையும்‌ செய்கிறவர்‌ என்றார்கள்‌ எஸ்‌.எஸ்‌.போத்தையாவை. “நல்ல நல்ல புத்தகங்கள்‌ எல்லாம்‌ வாங்கிப்‌ போட்ருக்காங்க. படிக்க ஒருத்தரும்‌ வர்றதில்லே” என குமைந்து போனார்‌. வலியப்‌ போய்த்‌ தேடிப்‌ பேச்சுக்‌ கொடுத்து, சில பெண்கள்‌, பையன்களை வரச்செய்வதுண்டு. நூல்களை வெளியில்‌ எடுத்துச்‌ செல்லக்‌ கூடாது. ஆனாலும்‌ விதிகள்‌ பற்றி கவலைப்படாமல்‌, வீட்டுக்கு எடுத்துக்‌ கொண்டு போய்‌ படிக்க அனுமதித்தார்‌.

“அப்படித்‌ தொலைச்சால்தான்‌ என்ன?”

அர்த்தமுள்ள புஞ்சிரிப்பு அவர்‌ இதழ்களில்‌ தங்கியிருக்கும்‌.

அரசு நூலகங்கள்‌ இயங்கும்‌ இடங்களில்‌ நூலகர்‌ ஒருவர்‌ உண்டு. அவர்‌ ஒரு அரசுப்‌ பணியாளர்‌ அவ்வளவே; மேலைத்‌ தேயங்களில்‌ போல்‌ அறிவுலகச்‌ செயல்பாடுகளில்‌ தன்னைப்‌ பொருத்திக்‌ கொள்பவர்‌ அல்ல. கலை இலக்கிய சமுதாய இயல்களில்‌ ஈடுபாடு கொள்வதோ, அறிவுத்‌ தளச்‌ செயல்களினது கூடமாக அக்குவதோ அவருடைய பணியல்ல. நூலகம்‌ மூலம்‌ அவ்வாறான சிந்திப்பு விதைக்கப்பட்டு விடக்கூடாது என்ற அச்சம்‌ ஆட்சியாளர்‌ எவராயினும்‌ நட்டுக்க நின்று ஆடுகிறது.

எனவே எஸ்‌,எஸ்‌, போத்தையாவின்‌ மறைவுக்குப்‌ பின்‌ அய்யன்‌ திருவள்ளுவனும்‌ தூசி தும்பு படர்ந்த அறையில்‌ பூட்டப்‌ பட்டுக்‌ கிடக்கிறார்‌.

அவருக்கு என்ன நோய்‌ உண்டு என்பது எங்களுக்குத்‌ தெரியும்‌. அவருடைய புத்திரர்கள்‌, நான்‌ - என நாலைந்து பேர்‌ மட்டும்‌ அறிவோம்‌. நூலகத்துக்குப்‌ போனவர்‌, இரண்டு மூன்று முறை பேதியாகியிருக்கிறது. நூலகத்துக்கு உயரமான படிக்‌கட்டுகள்‌; படிகளில்‌ ஏறமுடியவில்லை என்று இரண்டொரு நாளில்‌ சொல்லியிருக்கிறார்‌. பிறகு பிடுங்கிப்‌ போட்ட தண்டாட்டம்‌ உணர்ந்து போனார்‌. உடம்புக்குச்‌ சேட்டமில்லாமல்‌ இருப்பதாக தகவல்‌ வந்தது. போய்‌ இருந்து பார்த்து வந்தேன்‌. ஒரு மாதத்திற்குள்‌ மூன்று தடவை போனேன்‌. அப்போது, வந்து போகும்‌ உறவினர்கள்‌ நடமாட்டம்‌ அவருக்குள்‌ சம்சயத்தை உண்டாக்க, மருமகள்‌ சீதா சாமர்த்தியசாலி, “உடம்பு முடியாம இருக்கீங்கன்னு கேள்விப்பட்டு வர்றாங்க” என்ற சமத்காரமாமாய்‌ சொன்ன பதிலில்‌ அமைதியடைந்துவிட்டார்‌. கட்டிலிலும்‌ ஈஸிசேரிலும்‌ மாறிமாறிப்‌ படுத்தார்‌. ஈஸிசேரில்‌ இருக்கிறபோது ரொம்ப லாத்தலாயிருக்கு (செளகரியமாய்‌) என்பார்‌. ஈஸிசேரில்‌ உட்கார்ந்திருக்கிறபோது பையில்‌ எழுதி எழுதி வைத்திருந்த சட்டைகளை எடுத்து என்னிடம்‌ தந்து பார்க்கச்‌ சொல்வார்‌. மஞ்சள்‌ பையை எடுத்து வரச்‌ சொல்லி, அதில்‌ வைத்திருக்கும்‌ துண்டுக்‌ காகிதங்களை எடுத்துக்‌ கொடுத்தார்‌; ஏறத்தாழ அறுபது ஆண்டுகள்‌ அவர்‌ வசம்‌ வைத்திருந்த புதையலையெல்லாம்‌ என்னிடம்‌ சேர்த்து விட்டதாகக்‌ கருதினார்‌.

எஸ்‌.எஸ்‌.போத்தையா என்ற ஒரு சகாப்தம்‌ முடிந்துவிட்டது.

மரணித்த உடலை அடக்கம்‌ செய்து முடித்த மறுநாள்‌ காலையில்‌ இந்தியப்‌ பொதுவுடைமைக்‌ கட்சியின்‌ மூத்த தலைவர்‌, மனிதநேயப்‌ போராளி ஆர்நல்லகண்ணு, குடும்பத்தினரைப்‌ பார்த்து ஆறுதல்‌ கூறிச்‌ சென்றார்‌ என்பது, தனக்கான கடமையை நிறைவேற்றினார்‌ என்றே காட்டுகிறது; எஸ்‌.எஸ்‌.போ.வின்‌ மறைவின்‌ பின்‌ பலதடவை தங்கம்மாள்புரம்‌ போய்‌, அவர்‌ கட்டிவைத்திருந்த மூட்டையை அவிழ்த்து, பெட்டியைத்‌ திறந்து மருமகள்‌ சீதாவுடன்‌ சேர்ந்து கிளறி, துளாவி எடுத்தவைகளை தோது பண்ணி நூலாகக்‌ கொண்டு வருவதில்‌ ஓரளவேனும்‌ என்‌ கடமையை ஆற்றியுள்ளேன்‌. நாட்டுப்புறவியல்‌ எனும்‌ மலைக்குவியலைச்‌ சேர்த்து தந்தவரின்‌ மதிப்புணர்ந்த என்‌.சி.பி.எச்‌ புத்தக வெளியீட்டாளர்கள்‌ அது போலவே தம்‌ கடமையை நிறைவேற்றியுள்ளனர்‌.

  1. எஸ்‌.எஸ்‌.போ. சேகரித்து வைத்தவற்றுள்‌ இது முதல்‌ நூல்‌.
  2. கரிசல்‌ சொலவடைகள்‌, நம்பிக்கைகள்‌, தோக்கலவார்‌ வரலாறு - அடுத்த நூல்‌.
  3. எஸ்‌.எஸ்‌. போத்தையா அவர்களுக்கு பேரா. நா.வானமாலை, கி.ராஜநாராயணன்‌, பொன்னீலன்‌, பா.செ. ஆகியோர்‌ எழுதிய கடிதங்கள்‌ மூன்றாவது நூல்‌.

இம்‌ மூதல்‌ நூலைத்‌ தொடர்ந்து, அடுத்தடுத்து, அவர்‌ சேகரித்து வைத்தவைகளைக்‌ கொண்டு வரும்‌ பொறுப்பு அனைவருக்கும்‌ உண்டு என நான்‌ எண்ணுகிறேன்‌.

இந்நூலுக்கு அணிந்துரை அளித்திருக்கிற தோழர்‌ ஆர்‌.நல்லகண்ணு, எழுத்தாளர்‌ இி.ராஜஐநாராயணன்‌ அகியோர்‌ தங்கள்‌ கடமையை ஆற்றியதாகவே கருதுகிறேன்‌. அவர்களுக்கு நன்றிகள்‌.

இந்நூல்‌ தொகுப்பின்‌ போது அறிவார்ந்த உரையாடல்கள்‌ வழியாக, அவ்வப்போது ஆலோசனைகள்‌ வழங்கிய பேராசிரியர்‌ ஆ.சிவசுப்பிரமணியன்‌ அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்‌.

- பா.செயப்பிரகாசம்‌

04.06.2013

புதுச்சேரி.

  •  

மலேயா கணபதி

முதுபெரும்‌ பொதுவுடமைக்‌ கட்சித்‌ தோழர்‌ கே.டி.கே.தங்கமணி மலேசியாவில்‌ பல்வேறு பிரச்சாரக்‌ கூட்டங்களை முடித்துக்‌ கொண்டு, இந்தியாவுக்குக்‌ கப்பல்‌ ஏறுகிறார்‌. கப்பல்‌ ஏறுகிற நேரத்தில்‌ அவர்‌ முன்னே ஆயுதம்‌ தாங்கிய தோழர்கள்‌ செவ்வணக்கம்‌ செலுத்தி விடை தருகின்றனர்‌. செவ்வணக்கத்தை ஏற்றுக்‌ கெண்டு “நீங்கள்‌ யார்‌” எனக்‌ கேட்கிறார்‌ கே.டி.கே. அதற்கு அவர்கள்‌ பதில்‌ “தங்கள்‌ பாதுகாப்புப்‌ பணிக்காக, மலேயா கம்யூனிஸ்டு கட்சி நியமித்த கொரில்லாக்கள்‌".

ஒரு தோழரின்‌ உயிர்‌, உடல்‌ அகில உலகத்துக்கு மட்டுமல்ல, நான்கு கோடித்‌ தமிழர்களுக்கும்‌ பத்திரமாக திருப்பி ஒப்படைக்கிற, இந்த பாதுகாப்புக்‌ கவசத்தின்‌ சூத்ரதாரி கணபதி.

தீண்டாமை என்பது ஓட்டுவார்‌ ஒட்டி நோய்‌. காசம்‌ (சயரோகம்‌), சொறி, சிரங்கு, படை போன்ற நோய்களுக்கு இந்தக்‌ குணம்‌ உண்டு. தமிழ்‌நாட்டிலிருந்து மலேயா, சிங்கப்புர்‌, ரங்கூன்‌ சென்ற தமிழர்கள்‌, தங்களுடன்‌ இந்த தீண்டாமை நோயையும்‌ இடுக்கி கொண்டு சென்றார்கள்‌. தமிழகத்‌ தேநீர்க்‌ கடைகளில்‌ தனித்‌ தம்ளர்கள்‌ என்றால்‌ மலேயாவில்‌ தனித்‌ தகர டப்பாக்கள்‌. தாழ்த்தப்பட்ட மக்களின்‌ கண்ணீரின்‌ உப்பு, கடல்‌ கடந்த பின்னும்‌ அந்த தகர டப்பாக்களில்‌ கரைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களை தன்னுடன்‌ தேநீர்க்கடை அழைத்துச்‌ சென்று மற்றவர்க்குச்‌ சரி சமமாக பெஞ்சுகளில்‌ உட்கார வைத்து, தேநீர்‌ அருந்த செய்து, தானும்‌ அருந்துவார்‌ கணபதி.

1936 - 38 ல்‌ மலேயாவில்‌ தீண்டாமை எதிர்ப்புக்‌ கனலை உச்ச நிலைக்கு எடுத்துச்‌ சென்றார்‌ கணபதி. தீண்டாமைப் பிரச்சனையை எப்போதும்‌ பிற இன சமுதாய மக்களின்‌ முற்போக்கு சக்திகளை இணைத்துக்‌ கொண்டே முற்றிலும்‌ ஒழிக்கும்‌ போரட்டத்தினை வெற்றி பெறச்‌ செய்ய இயலும்‌ என்பதை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டினார்.

அக்காலத்தில்‌ மலேயத்‌ தமிழர்களை 'ஒராங்கிள்ளேங்‌' என மிக இழிவாக அழைத்தார்கள்‌. மலேய மொழியில்‌ அந்த ஒரு சொல்லுக்கு திருடன்‌, கொலைகாரன், தாழ்ந்தவர்‌ என்று பல அர்த்தங்கள்‌. புதுப்புது அர்த்தங்களை உருவாக்கி, தமிழர்களை குற்றப்‌ பரம்பரை போல்‌ கருதிய எண்ண ஓட்டத்தை எதிர்த்து உலகிற்குத்‌ தொன்மையான நாகரிக நீரோட்டத்தை தந்தவர்கள்‌ தமிழர்கள்‌ என்ற கருத்தாக்கத்தை பதிய வைத்தார்‌ கணபதி.

மலேயா முழுவதும்‌ எதிப்புச்‌ சுவரொட்டிகள்‌ ஒட்டப்பட்டு சில இடங்களில்‌ சட்டத்தின்‌ துணையோடு எதிர்த்து இடையறாத போரட்டத்தை நடத்தி அந்தப்‌ பழிச்‌ சாயத்தை துடைத்து மலேயா சரிதத்தின்‌ பக்கங்களை வெண்மைப்படுத்தினார்‌ கணபதி.

ஒவ்வொரு போராளியும்‌, ஒவ்வொரு இலட்சியத்தை தலையில்‌ தூக்கிச் சுமந்து, அதை  நிவைற்றத்‌ தேவைப்படும்‌ மற்ற இலட்சியங்களை சுமையாகக் கருதி தரையில்‌ இறக்கி விடுவார்கள். அவரவர் எல்லைக் கோடுகளில் அவரவர்க்குச்‌ சுகம்‌. கத்தரிக்கப்ட்ட சிறகுகள்‌ அந்த எல்லைக்‌ கோடுகள்‌ வரை மட்டும்‌ செல்லும்‌.

கணபதி ஒரு மார்க்சியப்‌ போராளி. எல்லாத்‌ திசைகளையும்‌ உள்ளடக்கி எல்லாப்‌ பிரச்சனைகளையும்‌ உள்செறித்து, நடைமுறைகளின்‌ ஆயிரம்‌ கைகளை விரிக்கச்‌ சொல்கிறது மார்க்சியம்‌. மலேயா பல இன மக்களின்‌ கூட்டுத்‌ தீபகற்பம்‌, அங்கு தேசிய இனங்களை இணைத்துப்‌ போராடுவது, வரலாற்றின்‌ கட்டாயம்‌. போரட்டங்களை இணைத்தார்கள்‌. இணைத்தவர்கள்‌ பின்னாளில், கம்யூனிஸ்டாக மாறினார்கள்‌.

மலேயா கம்யூனிஸ்களின்‌ போராட்டம்‌, காங்கிரசின்‌ தேசியப்‌ போராட்டம்‌, தமிழ்‌ மொழிப்‌ போராட்டம்‌, தீண்டாமை ஒழிப்பு போர்‌, மலேயா விடுதலைப்‌ போர்‌, ஏகாதிபத்திய எதிர்ப்புப்‌ போர்‌, வர்க்கப்‌ போரட்டம்‌ என்ற அனைத்திலும்‌ தலைமை ஏற்றிருந்தார்‌ கணபதி. பன்முகங்களிலும்‌ கருக்‌ கொண்டு அவர்‌ போர்க்‌ குணம்‌ உயிர்த்தது. அவர்‌ தலைமையேற்றும்‌ உறுதுணையாய்‌ இருந்தும்‌ பங்களித்த அமைப்புகள்‌ ஏராளம்‌.

  1. தமிழர்‌ சீர்திருத்தச்‌ சங்கம்‌
  2. விளையாட்டரங்கம்‌
  3. இந்திய இளைஞர்‌ கழகம்‌
  4. பகத்சிங்‌ உடற்பயிற்சி மன்றம்‌
  5. இந்துஸ்தான்‌ சோசலிசப்‌ படை
  6. பல்வேறு தொழிற்சங்கங்கள்‌
  7. மகளிர்‌ உரிமை அமைப்பு
  8. தீண்டாமை ஒழிப்பு இயக்கம்‌
  9. மக்கள்‌ சனநாயகக்‌ கழகம்‌
  10. அகில மலேயா கம்யூனிஸ்ட்‌ கட்சி
  11. நேதாஜி இந்திய தேசிய ராணுவம்

பன்முகப்‌ பணிகளில்‌ தோள்கொடுத்தவர்கள்‌ பலர்‌, அவர்களில்‌ வாழும்‌ நிஜம்‌ குருதேவன்‌. கணபதியை குரு இயக்கினாரா, குருவை கணபதி இயக்கினாரா என்று சொல்ல முடியாது. யார்‌, யாருக்கு ஆதாரம்‌ என்று அறுதியிடுவது சுலபமல்ல. தோழர்களாய்த்‌ தொடங்கி அகில மலேயா விடுதலைப் படை, கொரில்லாப்‌ படை வரை அது தொடர்கிறது. இன்குலாப் குறிப்பிடுவது போல தோழர்‌ குருதேவன்‌ வெறுந்‌ தாத்தவாக மட்டுமே இங்‌கே மா.லே கட்சியால்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டார்‌. ஆனால்‌ அவரது வாழ்க்கையின்‌ சொல்லப்படாத  புரட்சிப்‌ பகுதிகள்‌ எத்தனையோ உண்டு.

கணபதி போலவே தூக்குமேடையைச்‌ சந்தித்த வீரசேனன்‌, கீழக்காடு சுப்பிரமணியம்‌, சிந்தனையாளர்‌ அ.மார்க்ஸின்‌ தந்தை பாப்பா நாடு அந்தோணிசாமி, மலேசிய பழனி, தியாகி சாம்பசிவம்‌, திருமாக் கோட்டை இரத்தின சபாபதி, ராஜமாணிக்கம்‌, வாட்டாகுடி இரணியன்‌, செட்டிநாடு வீரசிம்மன்‌, புரட்சிப்‌ பித்தன்‌, மயில்‌ ராவணன்‌, முத்தையா, அருப்புக்கோட்டை ஜீவானந்தம்‌, அத்திப்பட்டு வீரசோழன்‌ என்று பலராலும்‌ தலையால்‌ முட்டுக்கொடுத்து தோள்களால்‌ தாங்கித்‌ தொடர்ந்த எழுச்சி வரலாறு, தமிழர்களுக்குப்‌ புதிய செய்தி.

பட்டுக்கோட்டைப்‌ பக்கமுள்ள தம்பிக்கோட்டையிலிருந்து நெல்‌ குவியும்‌ தஞ்சை பூமியில்‌ வயிற்றுக்கு ஒரு பிடி நெல்கூட கிடைக்காமல்‌ ஒன்பது வயதில்‌ கணபதி மலேயா பயணமாகிறார்‌.

"கருங்கல்‌ கணபதிக்கு சுடச்‌ சுடச்‌ சுட அதிரசமும்‌ அக்காரவடிசலும்‌, ஆனால்‌ தம்பிக்‌ கோட்டை கணபதிக்கோ தாங்காத விடுதலைப்‌ பசி” என்று கலைஞர்‌ கருணாநிதி எழுதுவார்‌. 'கயிற்றில்‌ தொங்கிய கணபதி' என 1952-ல்‌ எழுதிய நூலில்‌ குறிப்பிடுவார்‌. அது நாடகமாகவும்‌ தமிழ்நாட்டின்‌ பல இடங்களில்‌ நடத்தப்‌ பெற்றது.

கடல்‌ கடந்து சென்றதெல்லாம்‌ குடல்பசி தணிப்பதற்காக மட்டுமல்ல. தமிழ்ச்‌ சமுதாயத்தின்‌ மேன்மையை வளர்த்தெடுக்க - பொதுவுடமைத்‌ தீயை மூட்டிப்‌ பெரு நெருப்பாக்க என்பது, கணபதியின்‌ பின்னாளைய வரலாற்றுப்‌ பக்கங்கள்‌ வெளிச்சப்படுத்துகின்றன. மலேசியாவின்‌ விடுதலை வரலாறு கணபதியின்‌ பன்முகப்‌ போரட்டங்ளினூடாக தோள்மேல்‌ போட்டு தொடர்ச்சியாக நடந்து போகிறது.

கணபதி 1915-ல்‌ பிறந்தார்‌, 1949-ல்‌ தூக்குக்‌ கயிறு அவரை இறுக்கியபோது வயது 34. வாழ்வின்‌ ஒரு சிறிய இடம்தான்‌ அவருக்கு அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட அந்த சின்ன சந்தில்‌ அவர்‌ எத்தனை 'சாகசங்கள்‌' செய்திருக்கிறார்‌.

உலகின்‌ மாபெரும்‌ தொழிற்சங்கங்களின்‌ சம்மேளனத்திற்கு இணையாக பான்‌-மலேயா தொழிற்சங்க சம்மேளனம்‌ உருவாக்கப்படுகிறது. அகில மலேயா தொழிற்சங்கங்கள்‌ சம்மேளனம்‌, மலேயா அய்க்கிய முன்னனி, மலேயா அய்க்கிய கம்யூனிஸ்ட்‌ கட்சிகள்‌, இணைந்து பிரிட்டானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மலேயா விடுதலைப்‌ போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்‌. பிரிட்டீஷ்‌ ஏகாதிபத்தியம்‌ அவசர நிலைப்‌ பிரகடனம்‌ செய்து, பான்‌-மலேயா தொழிற்சங்கங்கள்‌ மேல்‌ பாசிச வெறிகொண்டு தாக்குகிறது. போராளிகள்‌ கொரில்லாப்‌ போரை முன்னெடுக்கிறார்கள்‌. அது ஒரு மக்கள்‌ சனநாயகப்‌ புரட்சி.

மக்கள்‌ சனநாயகப்‌ புரட்சி வெற்றி பெற்றிருந்தால்‌, மலேசியாவின்‌ சித்திரம்‌ மட்டுமல்ல, இந்தியாவின்‌ முகம்‌ கூட மாற்றி எழுதப்பட்டிருக்கும்‌. இந்திய முகத்திற்கு ஒரு முகவரி கிடைத்திருக்கும்‌.

மாவீரன்‌ மலேயா கணபதியின்‌ வரலாறு போலவே மலேயா விடுதலைப்‌ போரை முன்னெடுத்த அக்னிக்‌ குஞ்சுகளின்‌ வரலாறும்‌ சொல்லப்படாமலே போயிருக்கக்‌ கூடும்‌. மணிகள்‌ மண்ணில்‌ கிடக்கையில்‌ உமிகள்‌ ஊர்வலம்‌ போகின்றன. அப்படி அப்படித்தானே நடை முறை அரசியல்‌ நிகழ்வுகளும்‌ நடந்தவாறுள்ளன. தமிழனின்‌ பழைய முன்மாதிரிகளை அகழ்ந்தெடுக்கும்‌ ஆர்வமின்மை, உழைப்புச்‌ சோம்பல்‌ இன்னும்‌ எத்தனை போராளிகளின்‌ வாழ்க்கை சரிதத்தை காவு கொள்ள போகிறதோ?

இந்த ரீதியில்‌ அல்லாமல்‌ மாவீரன்‌ கணபதியின்‌ மறைக்கப்பட்ட வரலாற்றை நம் முன்‌ வைத்து வரலாற்றுக்‌ கடமையை நிறைவு செய்திருக்கிறார்‌ இரா.உதயபாசுகர்‌,

ஒரு தேசத்தின்‌ திசையை மாற்றியமைத்த புரட்சியாளர்களின்‌ சரிதத்தை எழுதிட முதலில்‌ அவர்களைப்‌ பற்றிய செய்திகள்‌ தொகுக்கப்பட வேண்டும்‌. செய்திகள்‌, உண்மைகளாக இருப்பது, உண்மைகளைக்‌ காலவரிசைப்டி இயக்கவரிசைப்படி கோர்த்து அடுக்குவது, இவ்வளவும்‌ செய்து முடித்த பிறகு இப்போது ஒரு சுயமான படைப்பாளியின்‌ வேலை விரிகிறது. படைப்பாற்றலை இழைத்து, ஓட்டம்‌ குறையாமல்‌ எடுத்துச்‌ செல்வது லேசுப்பட்ட காரியம்மல்ல. ஒரு சுய படைப்பாளியை விட கூடுதலான கைகளும்‌, ஆற்றலும்‌ கொண்டவனாய்‌ ஒரு வரலாற்றாசிரியன்‌ மாறுகிறான்‌

பாட்டுத்‌ திறத்தால்‌ வையத்தைப்‌ பாலித்திடப்‌ பிறந்த பாரதிக்கு மரணம்‌ தீண்டியபோது வயது 38. மலேயா கணபதி தூக்கு மேடையில்‌ நின்றபோது வயது 34 தான்‌. பன்முகக்‌ கவிதைத்‌ திறத்தாலே பாரதி இன்றும்‌ வாழ்கின்றார்‌. பாரதியின்‌ வாழ்க்கை விவரணைப்‌ படமாகவும்‌ (டாகுமெண்டரி) வந்து, நிகழ்த்திக்‌ காட்டப்பட்டுள்ளது. இதுபோல்‌ பன்முகப்‌ போராட்ட பரிமாணங்‌ கொண்ட மாவீரன்‌ மலேயா கணபதியின வாரலறும்‌ டாகுமெண்டரியாக வரவேண்டிய கட்டம்‌. தமிழ்‌ அன்பர்கள்‌ முயல்வார்களாக.

  •