அறிவு தலைமுறைத் தலைமுறையாகக் கடத்தப்படுமா? இந்திய அளவில் பிராமணர்கள் அறிவார்ந்தவர்கள் என்றும், உலக அளவில் எடுத்துக்கொண்டால் யூதர்கள்தான் புத்திசாலிகள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே, இதற்கு மரபணுக்களைக் காரணமாக முன்வைத்து பல கட்டுரைகள் இணையத்தில் இருக்கின்றன. இதை எப்படி எடுத்துக்கொள்வது?
அப்படிப் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. அறிவாற்றலுக்கு மரபணுச் சூழல் இரண்டுக்கும் பங்கிருக்கிறது. மரபணு அளவில் ஐகியூ கடத்தப்படும். ஐகியூ என நான் சொல்வது, அறிவாற்றல் கிடையாது. நுண்ணறிவு.
பெற்றோரின் நுண்ணறிவு அப்படியே வந்துவிடுமா?
அப்படியே வராது. ஓர் ஆய்வு 30 சதவிகிதம் என்கிறது. இன்னொரு ஆய்வு 32 சதவிகிதம் என்கிறது. அதையும் நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. இந்தச் சதவிகிதம் அனைத்தும் நாம் எடுத்திருக்கும் தரவுகள் அடிப்படையில்தான். நாம் ஒரு 100 பேரை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும் 1000 பேரை எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? அதுமட்டுமில்லாமல் இங்கு ஆய்வுகள் அனைத்திலும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்துதான் சோதனை செய்வார்கள். சென்னை என்றால் சென்னை மட்டும்தான். இங்கு சென்னைக்கும் பெங்களூருவுக்குமே வேறுபாடுகள் இருக்கும். இதனால் நாம் உறுதியான முடிவுக்குவந்துவிட முடியாது. வேண்டும் என்றால் ஆரம்பகட்ட சோதனையாக இதைக் கருதலாம்.
ஐகியூ கடத்தப்படுவது உண்மை. ஆனால் கற்றல் கிடையாது. அறிவாற்றல் கிடையாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தால் புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்.
பத்து வருடத்திற்கு முன்னால் பிறந்த குழந்தைக்கும் இப்போது பிறந்த குழந்தைக்கும் புத்திசாலித்தனம் வேறுபடுவதாக தோன்றுகிறதே. பொதுவாக எல்லோருடைய குழந்தைகளுக்கும் புத்திசாலித்தனம் அதிகரித்திருகிறது என்று சொல்லலாமா? அல்லது குறிப்பிட்ட சமூகத்தை, வர்க்கத்தை சார்ந்த மக்களின் குழந்தைகளுக்கு மட்டுமா?
குறிப்பிட்ட சமூகம், வர்க்கம் என குறுக்க முடியாது. இது பொதுவான மாற்றம். ஐகியூ என்பது ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இடையில் கட்டாயமாகக் கூடும். அதுவும் பிழைத்திருக்க ஒரு காரணம். சுற்றுச்சூழலுடன் பொருந்தி வாழ வேண்டும் என்றால் இந்தத் தொழில்நுட்பங்களை எல்லாம் அடாப்ட் செய்ய வேண்டும் அல்லவா? பொதுவாக அப்பா அம்மாவைவிட குழந்தைகள் அறிவில் ஒரு படி முன்னேறிதான் இருப்பார்கள். இது சூழல்சார்ந்தது எல்லாம் கிடையாது. கட்டாயம் முன்னேறிதான் இருக்க முடியும். காரணம், அந்தப் பத்துவருட இடைவெளியைத் தாண்டுவதற்கு, அப்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ள இயற்கை ஏற்படுத்தும் வழி இது.
சிறந்த மரபணுக்களை மட்டும் தேர்வு செய்து சிறந்த மனித தலைமுறையை உருவாக்குவோம் என சொல்லும் Eugenics பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
குறிப்பிட்ட சில பண்புகளை உயர்ந்த பண்புகள் என மனிதர்கள் நினைக்கிறார்கள். இதை மட்டும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தினால் போதும் எனச் சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தாக்கம் 19ஆம் நூற்றாண்டில் செல்வாக்கு பெற்று இன்றும் நிலவுகிறது. ஆனால் இது தவறானது. இயற்கை ஒரு பண்பைக் கொடுப்பதற்கு எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. கருப்பு நிற தோல் மட்டமானது என்பது Eugenics கருத்து. ஆனால் இயற்கைதானே அதையும் தேர்வு செய்திருக்கிறது. பிறகு எப்படி அதைக் குறைந்த பண்பாகச் சொல்ல முடியும்? Eugenics என்பது அறிவியலைத் துணைக்கு இழுத்துக்கொண்டு சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்த முயலும் கருத்து.
நாம் உளவியல் ரீதியாகவே வெள்ளை தோலால் ஈர்க்கப்படுகிறோம் என்று சொல்லலாமா?
கிடையவே கிடையாது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் யார் அதிகாரத்தில் இருந்தார்கள் என்றால் வெள்ளையர்கள். அவர்களை அடிப்படையாக வைத்தே நாம் வெள்ளையை வழிபட தொடங்கிவிட்டோம். இதை வேறு உதாரணங்களிலும் சொல்லலாம். பெண்களை ஏன் பலவீனமான பாலினம் என்கிறோம். அறிவியல் ரீதியாக அதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது. அது உளவியலால் வந்ததா? இல்லை. அதை ஒரு சமூகம் வலியுறுத்த வலியுறுத்த நாம் அதை ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆப்பிரிக்கப் பெண்களைக் கீழ்மைப்படுத்தி Polyandry போன்ற விஷயங்களைக் கடைபிடிப்பதால் அங்கு பாலியல் ரீதியான நோய்கள் அதிகம்தான் வருகின்றன.
அப்போது ’உயர்தர’ என்கிற விஷயமே போதிக்கப்பட்டது என எடுத்துக்கொள்ளலாமா?
ஆம்.
அப்படிப் பார்த்தால் தூய இனம் என்ற ஒன்று கிடையாதா?
கிடையவே கிடையாது. நமது சருமம் ஆப்பிரிக்க வம்சாவளியில் இருந்து வந்தது. இதுபோல எப்படிப் பார்த்தாலும் ஏதாவது ஒரு பண்பு வேறோர் இடத்தில் இருந்துதான் வந்திருக்கும். மனித இனமே கலப்பினத் தொகுதிதான். தூய்மை என்பது கிடையாது.
அப்போது உயர் குலம், தாழ் குலம் என்று சொல்வது எல்லாம்?
உதார். எங்கள் ஆசிரியர், கெங்கிஸ்கான் டி.என்.ஏதான் வடக்கு முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது என்பார். ஆனால் அவர்கள்தான் தங்களைத் தூய இனத்தினர் எனச் சொல்லிக்கொண்டு இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள்.
தூய இனம்போல் திறமையும் மரபு ரீதியாகத் தொடராது. ஒரு குறிப்பிட்ட சாதிதான் புத்திசாலியாக இருக்கும். குறிப்பிட்ட சாதி ஆளும் திறன் வாய்ந்தது. ஒரு சாதிக்குத் திறமையே கிடையாது என்றெல்லாம் சொல்லவே முடியாது. அதேபோல ரத்த உறவு (Consanguinity) தப்பு. பல மரபியல் நோய்களுக்கு இதுதான் காரணம்.
உறவினர்களுள் முதல் வட்டத்திற்குள் திருமணம் செய்வதற்கும், ஒரே தலைமுறைக்குள் திருமணம் செய்வதற்கும், ஒரு தலைமுறை மாற்றிச் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
அதாவது, தாய்மாமன் என்பது முதல் தலைமுறை. அக்காவுடைய பெண் என்பது இரண்டாவது தலைமுறை. இந்த இரண்டு பேருக்குள் திருமணம் செய்யக்கூடாது. அத்தைப் பெண் மாமா பெண் என்றால் இருவரும் ஒரே தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். ஒரே வயது அளவில்தான் இருப்பார்கள். ஆனால் அதில் செய்வதுமே பிரச்னை இருக்கிறது. ரொம்ப நெருக்கமான உறவுக்குள் திருமணம் செய்வது சிக்கல். ஆனால் கொஞ்சம் தூரத்து உறவினராக இருந்தால் பிரச்னை இல்லை. சொந்த அத்தை கிடையாது, சொந்த மாமா கிடையாது என்றால் பிரச்னை இல்லை.
அதேபோல இஸ்லாமியச் சமூகத்தில் அம்மா வழி சித்தி மகன்கள், தாய் வழியில் வரும் சகோதரியின் மன்களைத் திருமணம் செய்வார்கள். அதையும் செய்யக்கூடாது. Consanguity எதற்கு வந்தது என்றால், சொத்து போய்விடக்கூடாது. சொந்தம் போய்விடக்கூடாது என்பதால்தான். ஆனால் இப்போது அதுதான் பாரம்பரியம். பண்பாடு என்பதுபோன்று ஆகிவிட்டது.
இதேபோல சாதிக்குப் பொது பண்பு விதிப்பதும் மரபியல் ரீதியில் பொய். ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள்தான் குற்றவாளிகள், தீமை செய்வார்கள். இன்னொரு சாதியைச் சேர்ந்தவர்கள் நல்லவர்கள் என்று முத்திரை குத்துவதும் மரபியலுக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தாலே கெட்டவன் என முத்திரை குத்திவிடுகிறார்கள். அவர்களை நல்லவர்கள் என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்வது இல்லை. ஒருவன் குற்றச் செயல் செய்வது ரத்தத்திலேயே ஊறிப்போவது என்று சொல்வது தவறு. அதேபோல இறைச்சி சாப்பிடுபவர்கள் வன்முறையாக இருப்பார்கள் என்பதும் தவறு.
சில குறிப்பிட்ட சாதியினர் உயர்ந்த பதவியில் இருப்பதற்கும் மரபியல்தான் காரணம் எனச் சொல்வதும் உண்டு. உண்மையில் அவர்கள் எத்தனை தலைமுறையாக படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு சிறுவன் புதிதாகப் பள்ளிக்குச் செல்வதற்கும், பத்துத் தலைமுறையாகச் செல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இது மரபியல் கிடையாது. சூழல்தான் காரணம். புதிதாகச் செல்பவன் பள்ளியில்தான் படிக்க முடியும். ஆனால் பத்துத் தலைமுறையாக செல்பவனுக்கு சொல்லிக் கொடுக்கப் பத்துத் தலைமுறையும் இருக்கும். ஐகியூ மரபணுவில் இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த, Enhance செய்வதற்கான வாய்ப்பைச் சூழல்தான் தருகிறது.
நான் ஒரு என்.ஜி.ஓவில் பணியாற்றினேன். குற்றச் செயல் செய்த மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். அவர்கள் நம்மிடம் எந்த வன்முறையும் காட்ட மாட்டார்கள். ஒன்றை எழுதி முடித்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்றால் அமைதியாக பயத்துடன் எழுதி காட்டிவிட்டுதான் செல்வார்கள். ஆனால் வெளிச் சூழலில் வன்முறை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இதற்குக் காரணம். அவர்கள் ஒரு மாணவனை ’நீ தத்தி’, ‘அப்பன் மாதிரி’ என்றெல்லாம் சொல்வதால் அவர்கள் உளவியலால் பாதிக்கப்பட்டு படிப்பு மேல் அக்கறையே இல்லாமல் போய்விடுகிறது.
வெறி, கோபம் எல்லாம் மரபணுக்களில் வெளிப்படுமா?
அதற்கான தன்மை மரபணுக்களில் இருந்தாலும் வெளிப்படுவது சூழலைப் பொறுத்து, வாழ்வியலைப் பொறுத்துதான் அமைகிறது. உளவியல், நடத்தை ஆகிய விஷயங்களை மரபணுவும் சரி, சுற்றுச்சூழலும் சரி சமவிகிதத்தில் பாதிக்கும்.
இவற்றில் எது அதிகம் தாக்கம் ஏற்படுத்தும்?
சொல்ல முடியவில்லை. மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள்கூடக் காரணமாக இருக்கலாம். இன்றைய மரபியல் உலகில் முக்கியமான விவாதமே அதுதான். மரபியல், சுற்றுச்சூழல், உளவியல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு.
நாம் நேர்மறை எண்ணங்களை விதைத்தால் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்களே?
கிடையவே கிடையாது. நமது உடலின் செயல்பாடுதான் மரபணு என்பது. நம் உடல் எப்படி இயங்குகிறது. நமக்கு வேண்டிய இன்சுலின் வெளியாகிறதா? கொலஸ்ட்ரால் சரியான அளவில் இருக்கிறதா என உறுதி செய்வதுதான் மரபணுவின் வேலை. பிழைத்திருத்தல், தகவமைத்தல், இயங்குதல் ஆகியவற்றுக்கானது மரபணு. அது பிறப்பிலேயே கடத்தப்படுகிறது. அவை இயங்குவதற்கு சுற்றுச்சூழல் பங்களிக்கிறது. ஆனால் எண்ணங்களால் மாற்றம் நிகழும் என்பதில் எல்லாம் உண்மை இல்லை.
தமிழ்ச் சமூகத்துக்கும் அறிவியலுக்கும் இருக்கும் தொடர்பு எத்தகையது?
தமிழ் சமூகத்துக்கும் ஆறிவியலுக்கும் இடையே தொடர்பு இருப்பது உண்மைதான். தொல்காப்பியத்திலேயே அதற்கான கூறுகள் இருக்கின்றன. இதை நான் என் நூலிலும் எழுதியிருக்கிறேன். அதேபோல பஞ்சாகத்தையும் சொல்லியாக வேண்டும். அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்றே ஆச்சரியமாக இருக்கிறது. அந்தக் காலத்து அறிவியலை அந்தக் காலத்துச் சூழலுடன் பொறுத்திப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அதை இப்போது கொண்டு வந்து நம்பச் சொன்னால் ஏற்க முடியாது. இதைச் சொல்லிதான் நிறைய போலி அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது.
மரபியலில் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டதா?
மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா என்று கேட்டால் சந்தேகமே. ஆனால் ஆய்வு ரீதியாக வந்துவிட்டது. குறிப்பாக மூலக்கூறு அளவில் ஆய்வு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. இப்போது நான் ஒரு விஷயம் கண்டுபிடிக்கிறேன் என்றால் அதைச் சார்ந்து இன்னொரு ஆய்வு நடைபெற்றால் அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக ஒரு புரதம் இன்னொரு புரதத்தோடு இணைந்து இயங்கும்போது எவ்வளவு வலுவாக ஊடாடுகிறது. எந்த இடத்தில் அந்த ஊடாட்டம் நிகழ்கிறது என்பதை எல்லாம் இதில் அறிய முடியும்.
செயற்கை நுண்ணறிவின் முக்கியமான நோக்கம் என்னவென்று கேட்டால், இப்போது என்னிடம் ஒரு புரதம் இருக்கிறது. அந்தப் புரதச் செயல்பாட்டைத் தடுப்பதற்கு என்னிடம் 100 தடுப்பான்கள் (Inhibitors) இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். பரிசோதனைக் கூடத்தில் ஒவ்வொரு தடுப்பானாகச் சோதித்துப் பார்த்தால் எது சரியான தடுப்பான் எனக் கண்டுபிடிப்பதற்கே 20 ஆண்டுகள் ஆகிவிடும். இந்த ஆய்வைத் துரிதப்படுத்துவதற்கு இப்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. அந்த நூறு தடுப்பான்களைக் கொடுத்து, அதன் தன்மை எல்லாவற்றையும் தந்து, இவற்றில் பத்து சிறந்த தடுப்பான்களைக் கொடு என்று கேட்டால் அதைச் செயற்கை நுண்ணறிவு ஊகித்துச் சொல்லிவிடும். அந்தப் பத்துத் தடுப்பான்களை நாம் எடுத்து சோதனை செய்யலாம். இதனால் நேரமும் குறையும். செலவும் குறையும். செயற்கை நுண்ணறிவு இருந்ததால்தான் கோவிட் போன்ற பெருந்தொற்றை வெகு சீக்கிரமாக நாம் தடுத்து நிறுத்தினோம்.
எதிர்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதாவது ஜெனிட்டிக் கிட் போன்றவை இருக்குமா?
இப்போதே இருக்கிறது. 23andme. நீங்கள் உங்கள் எச்சில் மாதிரியைத் தந்தால் போதும், அதில் உள்ள டி.என்.ஏவை ஆய்வு செய்து, உங்கள் மூதாதையர் யார், யாரெல்லாம் உங்கள் வழி வந்தவர்கள், உங்கள் நெருங்கிய உறவினர் எந்தப் பகுதிகளில் எல்லாம் இருக்கிறார்கள் என எல்லாவற்றையும் சொல்லிவிடும்.
ஆறு மாதத்தில் உங்களுக்கு இந்த நோய் வரப்போகிறது. ஒரு வருஷத்தில் இந்த நோய் வரப்போகிறது. கட்டாயம் இந்த நோய் வந்துதான் நீங்கள் சாகப்போகிறீர்கள் என்பதையெல்லாம் ஊகித்துச் சொல்லிவிடும். 23அண்ட்மீயின் முக்கியப் பயன்பாடு மரபணு சார்ந்த நோயை ஊகிப்பது. உங்கள் மரபணுவில் எந்த அளவு பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை வைத்து இதைச் செய்கிறது.
டி.என்.ஏவை ஆய்வு செய்யும்போது என்னவெல்லாம் கண்டடையலாம்? நோயைக் காண்டடைய மட்டும்தான் டி.என்.ஏவா?
நமது பண்புகளைக் கண்டுபிடிக்கலாம். அதேபோல குழந்தைக்கு யார் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் எனப் பல வழக்குகளில் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது. தடயவியல் துறையில் பயன்படுகிறது. கைரேகைபோல டி.என்.ஏவும் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையுடன் இருக்கும் இல்லையா? இதனால் குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் டி.என்.ஏ தரவுகளை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம்.
கைரேகை தரவுகள் போல டி.என்.ஏ தரவுகள் இருக்குமா என்ன?
இருக்கிறது. NCBI எனும் இணையதளத்திற்குச் சென்று எல்லா தரவுகளையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் தரவுகள் மட்டுமே.
நாம் மூதாதையரைத் தெரிந்துகொள்ள இந்தத் தரவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாமா?
இந்தியாவைப் பொறுத்தவரை கிடையாது. இந்தியாவில் யாரும் அதுபோன்ற ஆய்வுகளைச் செய்வதில்லை. இந்தியாவில் ஜனத்தொகையை மையப்படுத்தி செய்யும் ஆய்வுகள் அத்தனையும் நோய் சார்ந்தே இருக்கின்றன. அதையெல்லாம் அவர்கள் செய்திருந்தால் ஆரியர்கள், திராவிடர்கள் பஞ்சாயத்தே வந்திருக்காது.
மானுடவியல் பார்வையில் மரபியல் ஆய்வுகள் இந்தியாவில் எந்த அளவுக்கு இருக்கிறது?
சுத்தமாக எதிர்காலம் கிடையாது. ஒருசில ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் பெரிய அளவில் நடப்பதில்லை. மானுடவியல் மட்டுமல்ல, பொதுவாகவே மரபியலுக்குப் பெரிய எதிர்காலம் கிடையாது. இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. இந்தியாவில் மரபியல் நோய்கள் அதிகம். ஆனால் ஆய்வுகள் குறைவு. இரண்டுமே இருக்கும் நிலை இந்தியாவில் தொடர்கிறது. அதற்கான நிதிகள் வருவதே இல்லை. அதேபோல நிறுவனங்களும் முக்கியத்துவம் இல்லை.
ஆனால், கோவிட் பெருந்தொற்றில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவ ஆய்வுகளில் பல நெறிமுறை கெடுபிடிகள் இருக்கின்றன. ஆனால், வளரும் நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஒரு முன்னுதாரணமாகத்தான் இருக்கிறது. இதுவே வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியா இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.
பெரும்பாலும் இந்திய ஆய்வுகள் இன்னும் நேரடி மக்கள் பயன்பாட்டை எட்டவில்லை. ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காகத்தான் இருக்கிறது. வெளிநாடுகளில் அப்படிக் கிடையாது. உதாரணமாக, ஐரோப்பாவில் மரபியல் ஆலோசனை என்பது மருத்துவத்தில் ஒரு பகுதி. இந்தியாவில் அப்படிக் கிடையாது.
ஏன் வெளிநாடுகளில் மட்டும் அதிகம்?
அவர்கள் குடும்ப அமைப்பு அப்படி. அவர்கள் குடும்ப அமைப்பே இடியாப்பச் சிக்கலைப்போன்றது. Half brother, Half sister, Step brother, Step Sister போன்ற உறவுகள் நிறைய இருக்கின்றன. மூலம் தெரியாத விதமாக அவர்களுக்குள் திருமணம் நடந்து, அவர்களுக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கு மரபியல் குறைபாடு வரக்கூடாது என்பதால் அவர்கள் ஒவ்வொன்றையும் மருத்துவ ரீதியாக ஆய்வு செய்த பின்னரே தொடங்குகிறார்கள்.
ஆனால், இங்கு அப்படிக் கிடையாது. இங்கு இருக்கும் மூன்று தலைமுறை வரைபடத்தை வரைந்தோம் என்றால் அது நேரடியாக இருக்கும். வேறு எங்கும் இணைப்பே இருக்காது. அப்படி இணைப்பு இருந்தாலும் தாய்மாமன் வழியில் மட்டுமே இருக்கும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் அப்படிக் கிடையாது. இதனாலேயே வெளிநாடுகளில் மரபியல் ஆலோசனை படிப்பதற்கு பலரும் விரும்புகின்றனர். நிறையத் தெரிந்துகொள்ள முடியும். நிறையக் கண்டுபிடிக்க முடியும்.
இங்கு மரபியல் குறைபாடு இருக்கிறது என்றாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கருவைக் கலைக்க மாட்டார்கள். உணர்வே இல்லாத ஒரு குழந்தையைக் கலைப்பதற்கும் அதற்கு எல்லாவற்றையும் கொடுத்து வலியுடன் வாழ வைப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. உணர்ச்சிகள், கலாசாரக் கெடுபிடிகள் காரணமாக இங்குள்ள பெற்றோர்கள் அவ்வாறு செய்வதில்லை. வெளிநாடுகளில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதற்கு மரபியல் நோய் இருக்கப்போகிறது என்றால் யோசிக்காமல் கலைத்துவிடுவார்கள்.
இங்குள்ள கலாசார, மத ரீதியான நம்பிக்கைகளால் சிகிச்சை மட்டுமல்ல, சோதனைகளும் பாதிக்கப்படுகிறது. சிலர் பரிசோதனை செய்யவே முன் வருவதில்லை என்பதுதான் உண்மை.
இந்தியாவின் மருத்துவக் கொள்கைகள் மரபியல் அடிப்படையில் இருக்கிறதா?
மரபியல் ஆய்வுகளுக்கு என்று தனிக் கொள்கைகள் இருக்கிறது. PCPNDT என்று தனியாக ஒரு சட்டம் இருக்கிறது. அதில் மரபியல் ஆலோசகரின் வழிகாட்டல், நெறிமுறைகள், யாரெல்லாம் மரபியல் ஆலோசனை வழங்கலாம், எங்கு செய்யலாம், எவை எல்லாம் மரபியல் குறைபாடுகள், அதில் எவை எல்லாம் சரி செய்ய முடியும் எனச் சொல்லியிருப்பார்கள்.
மரபியல் குறைபாடுடையவர்கள் எங்கு சென்று அணுக வேண்டும்?
Centres for Excellence என இடங்கள் இருக்கின்றன. சில மருத்துவமனைகளை அரசாங்கமே Centre for excellences என நிர்ணயித்திருக்கும். இங்கு சென்று மரபியல் நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, தமிழ்நாட்டில் ஹீமோபிலியா நோய்க்கு ராஜிவ் காந்தி மருத்துவமனை ஒரு சிகிச்சை மையம். கட்டணம் கிடையாது. அதேபோல AIIMS ஒரு சிகிச்சை மையம். இப்படிப் பல இடங்கள் இருக்கின்றன. குஜராத்தில் Gujarat State Biotechnology Mission. அங்கு சென்று நாம் டி.என்.ஏவை சீக்வென்ஸ் செய்துகொள்ளலாம். அதேபோல மாநில அரசுகளும் இதேபோன்ற மருத்துவமனைகளை அங்கீகரித்துள்ளன. இன்னொன்று Rare Diseases Registry என்று ஒன்று இருக்கிறது. அங்கு சென்று நாம் நமக்கு இருக்கும் மரபியல் நோயைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும்போது அதேபோலக் குறைபாடுகள் உடையவர்களிடம் நம்மை அறிமுகம் செய்து வைப்பார்கள். இந்த நோய்களுக்கு உதவும் என்.எஜி.ஓக்கள், காப்பீடு நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைத்துவிடுவார்கள்.
பண்டையக் காலத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறதே உண்மையா?
நாம் அப்போது இருந்த ஆரோக்கியத்தையும், இப்போதுள்ள ஆரோக்கியத்தையும் ஒப்பிடத் தரவுகள் கிடையாது. மேலும் எதை வைத்து நம்மால் ஒப்பிட முடியும்?
மிக்சி, கிரைண்டர் எல்லாம் இல்லாத காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறதே?
எதை வைத்துச் சொல்கிறார்கள்? அப்போது கழிப்பறைகள் கிடையாது. சுகாதார வசதிகள் கிடையாது. மாதவிடாய் வந்தால் பயன்படுத்த நேப்கின்கள் கிடையாது. பல ஆரோக்கியப் பிரச்னைகள் இருந்திருக்கும். வயதாகி இறந்ததைப்போன்று பாம்பு கடித்து, பூச்சிகள் கடித்து இறந்தவர்களும் அதிகம். அதற்கான தரவுகளும் நம்மிடம் கிடையாது. இன்னொன்று கர்ப்பத்தின்போது, குழந்தை பிறப்பின்போது இறந்தவர்கள் அதிகம். இந்த இரண்டு வாழ்வியலையும் ஒப்பிட முடியாது.
இயற்கை மரணம் இப்போதுதான் அதிகம். இது எளிமையான லாஜிக்தான். அப்போது ஒரு நோய் வந்தால் குணப்படுத்த முடியாது. காலரா, பெரியம்மை, போலியோ போன்ற நோய்கள் வந்தால் இறந்துவிட வேண்டியதுதான். ஆனால் இப்போது அப்படிக் கிடையாது. மனித வாழ்நாள் நீண்டிருக்கிறது. இயற்கை மரணம் அதிகரித்திருப்பது இப்போதுதான். மேலும் நம்மிடம் இருக்கும் தரவுகள் அனைத்தும் நகரத்தை மையப்படுத்தியே இருக்கின்றன. கிராமங்களில் எப்படி இருந்தார்கள் என்பதற்கான தரவுகள் இல்லை. கிராமங்களில் மாசு கிடையாது என்கிறோம். என் அம்மா பிறந்த ஊரில் தொண்டையில் புற்றுநோய் வந்து 11 பேர் இறந்துள்ளனர். இதை எப்படி எடுத்துக்கொள்வது? நகரத்தில் இருக்கும் மருத்துவமனைகள் மட்டுமே தரவுகளைத் தருவதால் கிராமத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற தரவுகள் நமக்குக் கிடைப்பதில்லை.
மரபியல் மாற்றப்பட்ட உணவுப்பொருட்களால் நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்குமா?
நாம் ஒரே கோணத்தில் எதையும் அணுக முடியாது. நாம் செயற்கையாக ஏற்படுத்தும் ஒரு மரபியல் மாற்றத்திற்கு எதிராக இயற்கையில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. இதனால்தான் பிடி கத்திரிக்கா, பிடி காட்டன் போன்றவை மிகப்பெரிய பிரச்னையை விளைவிக்கக்கூடியவையாக இருக்கின்றன. அவற்றால் நேரடி நோய்கள் உடலுக்கு வராது என்று விஞ்ஞானிகள் வாக்கு கொடுக்கலாம். ஆனால் இவை உணவு சங்கிலியைப் பாதிக்கின்றன. அதனால் வேறு விதமான நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எல்லா ஆய்வுகளும் மனிதர்களை மையப்படுத்தியே இருக்கின்றன. மனித நலனை நோக்கித்தான் இருக்கின்றன. அவை மற்ற உயிர்களுடனான சமநிலையை நோக்கி இருப்பதில்லை. இவைதான் நமக்கும் இயற்கைக்கும் இடையிலான வேறுபாடு. இயற்கை ஒரு மாற்றத்தை எல்லா உயிரினங்களை நோக்கிய சமத்துவ நோக்கில் பார்க்கிறது.
உதாரணம் சொல்கிறேன். பூச்சிகள் தாரவங்களைப் பாதிக்கிறது அல்லவா? தாவரங்களுக்கு இயற்கையாகவே பூச்சித் தாக்குதலைத் தடுக்கும் எதிர்ப்பு இயக்கமும் இருக்கும். அதேபோல அந்த எதிர்ப்பை உடைக்கும் குணமும் பூச்சிகளுக்கு இயற்கையாக வழங்கப்பட்டிருக்கும். இது ஒருவகை பொதுவான பண்பு. இது இயற்கையாக நடப்பது ஒரு பிரச்னையும் இல்லை. இது தவிர பூச்சிகள் மூலம்தான் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. பூச்சிகள் இல்லை என்றால் செடிகள் எப்படிப் பெருகும்?
ஆனால் நாம் இந்தப் பூச்சித் தாக்குதலைத் தடுக்க, தாவரங்களின் மரபணுக்களில் இருக்கும் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்துவிடுகிறோம். ஆனால் இது உணவுச் சங்கிலிச் சமநிலையைக் குலைத்துவிடுகிறது. இதனாலேயே நீண்ட நோக்கில் பார்க்கும்போது அந்தத் தாவரத்தால் பிழைக்க முடியாது. சில சமயங்களில் அதை உண்ணும் நமக்கும் ஏதாவது ஒரு பிரச்னை வரும். இந்த எதிர் மரபணுப் பிறழ்வு எங்கு நடக்கிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் பெரிய வில்லங்கமே.
தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பண்பை நாம் வளர்த்தேடுப்பது. உதாரணமாக நெற்பயிற்கள் பயிரிடும்போது அதில் எந்த நெற்மணிக்கள் பெரிதாக இருக்குமோ, அதிக விளைச்சலைத் தருமோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து மீண்டும் பயிரிடுகிறோம். அதன்மூலம் நாம் அத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு தனி ரகத்தையே உருவாக்குகிறோம். இதுவும் பிரச்னைதான்.
இந்தத் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் எந்த அளவுக்கு செல்கிறது என்பதுதான் பிரச்னை. எதற்காக இயற்கை இரண்டு வகைகளை உருவாக்க வேண்டும்? குட்டைச் செடி, உயரமான செடி என்று இரண்டு இருக்கிறது என்றால் நாம் நம்முடைய தேவைக்காக உயரமான செடியைத் தேர்வு செய்துகொள்கிறோம். அது நமது தேர்வு. இயற்கையின் தேர்வு கிடையாது. இயற்கை இரண்டும் வேண்டும் என்பதால்தான் இரண்டு உயரத்திலும் செடிகளைத் தருகிறது. நாம் நமது தேர்வால் உயரமான செடியைத் தேர்வு செய்து அதை மீண்டும் மீண்டும் பெருக்குவதால் நமது உற்பத்தி அதிகரிக்கும் என்பது உண்மைதான். நிறையப் பேருக்கு உணவு வழங்கலாம்தான். ஆனால் அந்தக் குட்டைச் செடியில் என்ன நல்லது இருக்கிறது என்பதே நமக்குத் தெரியாமல் போய்விடுமே? இப்படிச் செய்துதான் கம்பு, சாமை, திணை எனப் பலவற்றை நாம் இழந்துவிட்டோம். அரிசியும் கோதுமையும்தான் பொருளாதாரரீதியாக பலன் தரக்கூடியது என்பதால் நாம் அதற்கு முக்கியத்துவம் தந்து மற்றவற்றைக் குறைத்துவிட்டோம்.
மரபணுக்களை எடிட் செய்யும் கிரிஸ்பர் (CRISPR) தொழில்நுட்பம் மூலம் நமது உடலில் உள்ள குறைபாடுகளை நீக்க முடியுமா?
நிறைய அறநெறி பிரச்னைகள் இருக்கின்றன.
அது இருக்கலாம். ஆனால் அறிவியல் பூர்வமாக முடியுமா?
சொல்ல முடியாது. நமது ஆய்வுகள் அனைத்தும் பரிசோதனைக்கூடத்திற்கு உட்பட்டது. பரிசோதனைக்கூடம் சார்ந்தது. நமது உடலிலும் அதுதான் நடக்குமா என்றால் சொல்ல முடியாது. உதாரணமாக நாம் இரண்டு புரதம் அல்லது இரண்டு மரபணுக்களின் இயங்கு விதத்தை மட்டும் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். இதுவே நம் உடலை எடுத்துக்கொண்டே அதே நேரத்தில் அதே மரபணுவுடன் / அதே புரதத்துடன் பத்தாயிரம் புரதங்கள், பத்தாயிரம் மரபணுக்கள் இணைந்து இயங்கிக்கொண்டிருக்கும். எதனுடைய தாக்கமும் எதன் மீது வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நமக்குத் தெரியாது.
நாம் இரண்டே இரண்டு மரபணுக்களை மட்டும் வைத்து ஆய்வு செய்வதற்கும் உடலுக்குள் நடப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இது அறிவியல் சமூகத்திற்கும் தெரியும். இப்போது செய்றகை நுண்ணறிவு வந்தது ஒருவகையில் பலன் தரலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் நம் உடலின் வளர்ச்சிதை இணைப்பை (Metabolic Networks) செயற்கையாக உருவாக்கிவிடுகிறார்கள். நமது உடல் வெப்பத்தையும் செயற்கையாகக் கொடுத்துவிடுகிறார்கள். எல்லாமே கணினி மாதிரிகள்மூலம். கொடுத்துவிட்டு அதன் எதிர்வினை எப்படி இருக்கிறது எனப் பார்க்கிறார்கள். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நமக்குப் பல பதில்கள் கிடைக்கின்றன.
ஆனால் இதையும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஓர் ஊகமாக வைத்துக்கொள்ளலாம். கிரிஸ்பரிலும் இதேதான் நடக்கப்போகிறது. நாம் செய்வது அனைத்தும் பரிசோதனை ரீதியாக நிரூபணமானது. ஆனால் நமது உடலுக்குள்ளும் இப்படித்தான் நடக்குமா என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் அது தெரியும். ஆனால் ஒரு இடத்தில் பதில் கிடைத்துவிடாதா என்றுதான் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
புற்றுநோயை ஏற்படுத்துவதாக மொத்தம் 300 மரபணுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் 300ஐயும் மொத்தமாக வைத்து யாரும் பணியாற்றுவது இல்லை. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மரபணுவை வைத்து வேலை செய்கிறார்கள். அதிகபட்சமாக 10 மரபணுக்களை வைத்து வேலை செய்வார்கள். ஏனென்றால் நம்முடைய அறிவு அவ்வளவுதான். நம்மால் மூன்று பரிமாணத்தில் மட்டுமே அனைத்தையும் பார்க்க முடியும். அதைத்தாண்டி ஒரு பரிமாணத்தில் நம்மால் சிந்திக்க முடியாது. இன்னொன்று எல்லாமும் உடலில் ஒரே இடத்தில் நடந்தால் பிரச்னை இல்லை. ஆனால் நம் உடல் அப்படி இயங்குவதில்லை. நாம் தொடும் உணர்வே இங்கிருந்து நமது மூளைக்குச் சென்று திரும்பி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு அசைவிலும் ஒட்டுமொத்த உடலுமே ஈடுபட்டிருப்பதால் நம்மால் உறுதியாக கிரிஸ்பரால் பயன்பெற முடியுமா என்று சொல்ல முடியவில்லை. ஆனால், தீர்க்க முடியாத சில மரபணுக் குறைபாடுகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையலாம் என்பதால் தான் CRISPR/CAS9 தொழில்நுட்பத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நோயைக் குணப்படுத்த ஜீன் தெரப்பிகள் இருக்கின்றவே?
ஜீன் தெரப்பியின் வெற்றி விகிதம் நல்லவிதமாகத்தான் இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட மரபணுவுக்கு மட்டும்தான். பெரிய அளவில் பல்வேறு மரபணுக்கள் ஈடுபடும்போது செய்யமுடியாது. அதுமட்டுமில்லாமல் எல்லா மரபியல் குறைபாடுகளுக்கும் இந்த தெரப்பி வேலை செய்யாது. உதாரணமாக சிஸ்டிக் பைப்ரோஸிஸ் எடுத்துக்கொண்டால் அதற்கு ஜீன் தெரப்பி இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆராய்ச்சி படிநிலையில்தான் இருக்கிறது. அதுவும் Puff வகையில். அதற்கென்று இன்ஹேலர்ஸ் இருக்கின்றன. அவை பாதிக்கப்பட்ட மரபணுக்களுக்குப் பதிலாகப் புதிய mRNAவை செல்களுக்குள் செலுத்தும். அதையும் முழு வெற்றியாகக் கருத முடியாது. எல்லாமே பராமரிப்பு நோக்கம்தான். அனைத்தும் ஆராய்ச்சிநிலையில்தான் இருக்கின்றன. ஆராய்ச்சியின் கட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுமே தவிர இன்னும் அதிகாரப்பூர்வமாக முற்றிலும் நோய் குணப்படுத்தலுக்கான சிகிச்சை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நோய்க்கான சில மருந்து கலவைகளை FDA அமைப்பு அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தாவரங்களில்?
தாவரங்களில் கிரிஸ்பார் பயன்படுத்தலாம். ஆனால் இதையெல்லாம் செய்துதான் நாம் பிரச்னையை இழுத்து வைத்திருக்கிறோமே!
ஆயுர்வேத மருத்துவம் போன்ற Evidence Bassed மருத்துவம் இல்லாதவை மரபியல் நோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறதா?
ஆயுர்வேதம் குணப்படுத்தாது. மக்களும் செல்வதில்லை. முதலில் மக்கள் மரபியல் குறைபாடுகள் இருப்பதையே ஒப்புக்கொள்வதில்லை. ஒப்புக்கொண்டால்தானே செல்வார்கள். அதுமட்டுமில்லாமல் அலோபதியே தள்ளாடும்போது ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியாது.
உண்மையில் ஆங்கில மருத்துவம் என்றால் என்ன என்றே தெளிவு பலருக்கு இல்லை. ஆங்கில மருத்துவம் என்றால் தரவுகள் சார்ந்த, ஆதாரங்கள் சார்ந்த மருத்துவம். அவ்வளவுதான். ஆனால் பலர் அதனைச் செயற்கை, வேதியியல் மருத்துவம் என்கிறார்கள். உண்மையில் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளே இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களை எடுத்து செய்வதுதான். உதாரணமாக ஆயுர்வேதத்தில் வேப்ப இலை சாப்பிட்டால் பாக்டீரிய எதிர்ப்பு தன்மை இருக்கிறது என்று சொல்கிறோம் இல்லையா? நமது மாத்திரைகளில் என்ன இருக்கிறது? அந்த வேப்ப இலையில் எந்த வேதிப்பொருளுக்கு பாக்டீரிய எதிர்ப்பு தன்மை இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக் கொடுப்பதுதான் ஆங்கில மருத்துவம். இவர்கள் நினைப்பதுபோல கார்பன், ஆக்சிஜன், சல்பர் ஆகியவற்றை நாம் தனித்தனியாக எடுத்து கலந்து தருவதில்லை. Drug என்பதே இயற்கைக் கலவைதான்.
நாட்டுப் பப்பாளியில் இருக்கும் ஒருவகை கொழுப்பு சருமத்திற்கு நல்லது எனக் கண்டறிந்து பயன்படுத்துகிறோம். அது முதலில் ஏன் பப்பாளியில் இருக்கிறது தெரியுமா? பப்பாளியில் வட்ட, வட்டமாக ஒருவகை பரவல் இருப்பதைப் பார்த்திருப்போம். அது பப்பாளியைத் தாக்கும் ஒருவகை வைரஸ் பாதிப்பால் ஏற்படுவது. அந்த வைரஸ் கொடுக்குள்ள குட்டிப் பூச்சிகள் வழியாக ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்குப் பரவும். இதுபோன்ற வைரஸ் பரவல்களை ஏற்படுத்தும் பூச்சிகளை வெக்டர் என அழைப்பர். அந்தப் பூச்சிகளின் கொடுக்கை உள்ளே போக விடாமல் தடுப்பதற்கும் வைரஸிடமிருந்து பப்பாளியைக் காப்பாற்றுவதற்கும் அந்தக் கொழுப்பு பயன்படுகிறது என்பதைச் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். நமது காலில் எண்ணெய் தேய்த்தால் எப்படிக் கொசு கடிக்காதோ, அதேபோலதான் அந்தக் கொழுப்பும் பயன்படுகிறது.
இந்த கொழுப்பை மட்டும் எடுத்து, இந்த வைரஸுக்கும் வெக்டாருக்கும் இடையில் இருக்கும் ஊடாடலைத் தடுக்க முடியுமா என ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அவ்வாறு தடுக்க முடிந்தால் அந்தக் கொழுப்பை வைத்து அதற்கு ஏற்றாற்போல் ஒரு மருந்தோ பூச்சிக்கொல்லியோ ஸ்ப்ரேயோ தயாரித்துவிடுவோம். இது இயற்கையாக உள்ள பொருட்களை எடுத்து சோதனை செய்து தயாரிப்பது. நூறு சதவிகிதம் வேதியியல் கிடையாது. ஆனால் இந்தப் புரிதலே பலருக்குக் கிடையாது.
இதேபோல ஹோமியோபதி போன்ற மருத்துவங்களில் தடுப்பூசி எனும் கருத்தாக்கத்தையே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கேட்டால் நோய் என்ற ஒன்றே கிடையாது. அது ஒரு நிலைப்பாடு. எதற்காகக் குணப்படுத்த வேண்டும் என்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை தடுப்பூசி என்பது ஒரு கட்டுக்கதை. ஆனால் உண்மையில் அப்படியா இருக்கிறது?
உலகில் உள்ள பெரிய பெரிய நோய்களை எல்லாம் தடுப்பூசியை வைத்துதான் விரட்டியடித்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் பொதுவான நோயெதிர்ப்பு தூண்டுதலுக்கும் குறிப்பிட்ட ஒரு பிரச்னையைச் சரி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாகக் குப்பைமேனி இலையை உடலில் தேய்த்தால் சருமப் பிரச்னைகள் வராது. இது ஆயுர்வேதத்தில் சொல்லக்கூடிய ஒரு விஷயம். திருநீற்றுப் பச்சிலையைச் தேய்த்தால் பருக்கள் வராது என்பதும் ஆயுர்வேதம். ஆனால் ஒரு சரும நோய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அங்கேபோய் நாம் குப்பை மேனியைத் தேய்த்து என்ன பிரயோஜனம். அது எதனால் வந்தது என்றே நம்மால் சொல்ல முடியாது. அது வைரஸாக இருக்கலாம். பூஞ்சையால் இருக்கலாம். இங்கே பொது சிகிச்சை வேலைக்கு ஆகாது. ஆயுர்வேதத்தின் பிரச்னையே அதுதான். குறிப்பிட்ட நோய்காரணிகளுக்குப் பொது மருந்தைப் பரிந்துரைப்பார்கள். அதுவும் உலகளவில் ஒரே அளவை பயன்படுத்துவது கிடையாது. ஆனால் அலோபதியில் குறிப்பிட்ட நோய்களுக்கு என்று தனிப்பட்ட மருந்துகள் என்பதுதான் பயன்பாடு.
கபசுர குடிநீர் குடித்தால் டெங்கு வராது என்பது தடுப்புதான். ஆனால் குணப்படுத்த முடியாது. டெங்கு வந்தவர்களை அது குணப்படுத்தாது. அதேபோல பப்பாளி இலையைக் குடிக்கச் சொல்வார்கள். அது குடித்தால் வெள்ளை ரத்த அணுக்கள் ஜாஸ்தியாகும் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், கூடவே வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளைத் தடுப்பதற்கான மருந்தை எடுக்க வேண்டும். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வெறும் பப்பாளி இலையைக் குடித்தால் முடிந்தது கதை.
இங்கே பொத்தாம் பொதுவாக ஒன்றை நல்லது என்று பார்ப்பதே தவறு. மஞ்சள் தேய்த்து குளித்தால் பருக்கள் வராது என்பது பொதுவாகச் சொல்வது. ஆனால் எனக்கு மஞ்சள் தேய்த்துக் குளித்தால் முகம் முழுவதும் பருக்கள் பூத்துவிடும். இதை எப்படி எடுத்துக் கொள்வது?
உங்கள் முனைவர் பட்ட ஆய்வு எதைப் பற்றியது? எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
என் முனைவர் பட்ட ஆய்வு புரதங்களின் ஊடாடலைப் பற்றியது. செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைப் பயன்படுத்தி புரதங்களின் ஊடாடலைக் கணிப்பது.
இயற்கை என்பது போட்டியா ஒத்துழைப்பா?
ஒத்துழைப்புதான்.
ஆனால் ஒன்றையொன்று அடித்து சாப்பிட்டால்தானே உயிர்கள் வாழ முடிகிறது?
அவை இரண்டுமே பிழைத்திருக்கதானே செய்கிறது. அதன் நோக்கம், நான் மட்டும்தான் உயிர் வாழ வேண்டும். நீ வாழக்கூடாது என்பதில்லையே. அப்போதும் அவை மொத்தமாக அழித்துவிடவில்லையே. ஆனால் மனிதர்கள் மட்டும்தான் போட்டிப் போட்டுக்கொண்டு நாங்கள்தான் உயர்ந்தவன், நாங்கள்தான் ஆல்ஃபா என எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது நடக்கும் போர்களே உதாரணம்.
அறிவியல் துறையில் இருக்கும் எல்லோரிடமும் நான் கேட்க விரும்பும் கேள்வி இது. உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
கடவுள் என்ற ஒன்று கிடையாது. ஆனால் இயங்கு சக்தி ஒன்று இருக்கிறது. இயக்கத்துக்கு ஏதோ ஒன்று காரணமாக இருக்கிறது. அதை இயற்கை என்றும் நீங்கள் கருதலாம். எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்து அழைத்துக்கொள்ளலாம். அது இருப்பதால்தான் எல்லாமே சமநிலையில் இருக்கிறது. கடவுள் என்பது தனிப்பட்ட அனுபவம். அதை எல்லோருக்கும் பொது என்று பொருத்திவிட முடியாது. கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் அதைச் சுற்றி இருக்கும் சடங்கு சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
இறுதியாகச் சில கேள்விகள். எழுதுவதில் ஆர்வம் வந்தது எப்படி?
எழுதுவதில் ஆர்வம் வந்ததற்குத் தமிழ் ஆர்வம்தான் காரணம் என நினைக்கிறேன். மூன்று வயதில் இருந்தே அப்பா எனக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பள்ளியில் நடக்கும் சிறுசிறு போட்டிகளில் கலந்துக் கொள்வது வழக்கம். சில நேரங்களில் பரிசுகளும் கிடைத்திருக்கின்றன. அதுவே தொடர்ந்து தமிழில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கான ஊக்கம். இது புத்தகமாக விரிந்தது. புத்தகம் எழுதுவது தற்செயலாக நடந்தது. அதுவும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் எழுதுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைக்கவில்லை. பெண்களின் கருப்பை நீக்கம் சார்ந்து எழுத்தாளர் மோனிஷா அவர்களுடனான ஒரு அழைப்பேசி உரையாடல்தான் நான் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கான ஆரம்பப்புள்ளி. அதன்பிறகு ஹெர் ஸ்டோரிஸ் அறிமுகம் கிடைத்து பதினைந்து அறிவியல் கட்டுரைகள் எழுதினேன். அதுவே தாயனை புத்தகமாக வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக சில மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் அறிவதுவே புத்தகமாக வெளிவந்தது.
இப்போது மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெற்ற பெண் அறிவியலாளர்களையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் மாணவர்களுக்கான புத்தகமாக எழுதலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.
0
The post அறிவியல் பேசலாம் # 3 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 3 appeared first on கிழக்கு டுடே.