Reading view

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1: அன்றே சொன்னார்கள் 41- இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1                                                                                                         சிந்துவெளி, மொகஞ்சதாரோ மூலம் அறியக்கிடக்கும் தமிழர் நாகரிகச் சிறப்பு நம் முன்னைத் தமிழர்களின் கட்டுமான அறிவியலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். அவற்றின் தொடர்ச்சியாக இன்றைக்கும் காட்சியளிக்கும் கோபுரங்கள், சிதலமாகிப்போன சுரங்கப் பாதைகள் முதலியனவும் முந்தைச் சிறப்பை நமக்கு விளக்குவனவாக இருக்கின்றன. மலையே இல்லாத தஞ்சாவூர் மாநகரில் பெரிய கோயில் மட்டுமல்ல  எண்ணற்ற கோயில்கள் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. கரிகால(ன்)...

The post கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1: அன்றே சொன்னார்கள் 41- இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3: அன்றே சொன்னார்கள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3 – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3                2000 ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்கான பல மாடிவீடுகள் வரிசையாக அமைந்திருந்தமை குறித்து மேலும் சில விவரம் பார்ப்போம். மதுரை மாநகர் மாடிக்கட்டடங்களால் புகழ் பெற்றது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் பல இடங்களில் விளக்குகிறார். மாடிக்கட்டடங்களால் சிறப்புமிகு புகழை உடைய நான்மாடக்கூடலாகிய மதுரை என,      மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி : 429)என்றும், முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடிக்கட்டடங்களோடு உடைய மதுரை என     மழையாடு மலையி னிவந்த மாடமொடு (மதுரைக்காஞ்சி...

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3: அன்றே சொன்னார்கள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3  – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3                        வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. நகரம் என்பதே பல மாடிகள் உடைய வீடுகள் நிறைந்தது என்பதே வழக்கம் என்னும் அளவிற்கு நகரங்கள் இருந்தன....

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 : அன்றே சொன்னார்கள்38  – இலக்குவனார்திருவள்ளுவன்


(காலணிகளைக் கவினுற அமைத்தனர் – தொடர்ச்சி)   வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3                                                                                                                கட்டடக்கலையில் தமிழ் மக்கள் பிற துறைகளைப் போல் பிறரால் ஒப்பிட இயலா அளவிற்கு மிகவும் முன்னோடியாக உள்ளனர். விரிவான இப்பொருளில் வானளாவிய கட்டடங்கள் குறித்து முதலில் பார்ப்போம். 19ஆம் நூற்றாண்டு வரை வானுயர் கட்டடங்கள் (skyscrapers) என்பது நினைக்க இயலாத ஒன்றாக இருந்தது. அதன் பின்னர்தான் இட நெருக்கடியாலும் மக்கள் பெருக்கத்தாலும் இது குறித்த சிந்தனை  பிற நாட்டார்க்கு வந்துள்ளது....

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 : அன்றே சொன்னார்கள்38  – இலக்குவனார்திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

கடந்த வியாழக்கிழமை உருவான பிரபஞ்சம்

 “திவ்யன்!” என்று உரக்க அழைத்த கடவுளின் தூதுவரின் குரல் வானுலக அலுவலகம் முழுவதும் எதிரொலித்தது. ஓட்டமும் நடையுமாக வந்த திவ்யன்...

The post கடந்த வியாழக்கிழமை உருவான பிரபஞ்சம் appeared first on சிறுகதைகள்.

  •  

பசுமையின் மனம் பாடும் ரகசியம்

இந்த தொட்டாற் சுருங்கி (Mimosa pudica) இலைகளை பாருங்கள். அதைத் தொட்டால், அதன் இலைகள் உடனே மூடிக்கொள்கிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் தொட்டால், அதன் எதிர்வினை குறைகிறது. ஏனெனில் அது தொடுதல் ஆபத்து இல்லை என்று புரிந்துகொள்கிறது. தொடும்போது, மிமோசா செல்கள் கால்சியம் அயனிகளை, ஒரு இரசாயன அலாரம் போல வெளியிடுவதால், இது இலைகளை மூடச் செய்கிறது. மீண்டும் மீண்டும் தொடும்போது, தாவரம் தன் ஆற்றலைச் சேமிக்க அதன் பதிலை மாற்றுகிறது.
  •  

ஈர்ப்பு அலைகள் – பகுதி 9

சூரியனை விட, மிகப் பெரிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய கருந்துளைகள், சூப்பர் நோவா என்று பல்வேறு ரட்சச அமைப்புகளை, விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், இவை யாவும், நம்மைச் சுற்றியுள்ள அமைப்புகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆக, மிகப் பெரிய விண்வெளி அமைப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, ஈர்ப்பு அலைகள். பிரபஞ்சத்தில், மிகப் பெரிய மோதல்கள் நிகழ்ந்தால் மட்டுமே, ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன
  •  

பிரபலங்களின் உளவியல் #2 – எர்னஸ்ட் ஹெமிங்வே

Ernest Hemingway

ஜூலை 2, 1961-ம் ஆண்டு.

அன்று வழக்கத்திற்கு மாறாக விடியும் முன்பே விழித்துக் கொண்டார் அந்தப் பெரியவர்.

மனைவி மேரியை ஒருமுறை பரிவுடன் பார்த்துவிட்டு, வீட்டின் அடித்தளத்தை நோக்கி சோர்வுடன் நடந்துசென்றார். அங்குதான் வேட்டையாடுவதற்காக அவர் பயன்படுத்தும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவருக்கு மிகவும் பிடித்தமான கைத்துப்பாக்கி ஒன்று, முதல் வரிசையில் அவரின் வருகைக்காகக் காத்திருந்தது. நேராக அதனருகில் சென்றவர், இறுதியாக ஒருமுறை அதனைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

இந்நாள் வரை பறவைகளையும் விலங்குகளையும் மட்டுமே குறி பார்த்த அது, முதன் முறையாக முதலாளியின் தலையைக் குறி பார்த்தது.

சிறிது நேரத்தில் அங்கே கேட்ட பெருஞ்சத்தம், அந்தக் காலைப் பொழுதின் அமைதியை முற்றிலுமாக உருக்குலையச் செய்தது. முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மேரி, சத்தம் கேட்டு அவசர அவசரமாகக் கீழே வந்து பார்த்தபோது மூளைச் சிதறி பிணமாகக் கிடந்தார் உலகின் ஆகச் சிறந்த எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே.

ஆம்! அவரது தந்தை கிளாரன்ஸ்போலவே தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார் ஹெமிங்வே!

நோபல் பரிசு பெற்ற, உலகின் முக்கிய எழுத்தாளராக வலம் வந்த ஹெமிங்வே, தற்கொலை செய்துகொண்டது ஏன்? அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகள் என்னென்ன?

பார்ப்போம்…

0

மூளை மடிப்புகளைப் போலவே ஹெமிங்வேயின் ஆரம்பகால வாழ்க்கை, பல சிக்கல்களைக் கொண்டது. அதற்குக் காரணம், அவருடைய பெற்றோர்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா?

ஹெமிங்வே 1899-ம் ஆண்டு, அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில் ஜூலை 21-ல் பிறந்தார். அவருடைய தந்தை, கிளாரன்ஸ். தாய், கிரேஸ்.

கிளாரன்ஸ் ஒரு மருத்துவர். மிகவும் கண்டிப்பு மிக்க தந்தையாகவே ஹெமிங்வேயிடம் இருந்திருக்கிறார். சிறு தவறு செய்தால்கூட அடி விழும். பொறுமை, கருணை, இரக்கம் போன்ற வார்த்தைகளுக்கு கிளாரன்ஸின் அகராதியில் இடமில்லை. அதனால், தந்தை கிளாரன்ஸைக் கண்டாலே அஞ்சி நடுங்குவார் ஹெமிங்வே. தந்தை மீதிருந்த பயம், விரைவிலேயே வெறுப்பாக மாறியது.

ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்த மனநல மருத்துவர் ஒருவர், ‘ஹெமிங்வேவிற்கு தன்னுடைய தந்தையைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே இருந்திருக்கிறது’ என்கிறார்.

கிளாரன்ஸுக்கு மன அழுத்த நோய் இருந்திருக்கிறது. 1928-ம் ஆண்டு அது தீவிரமடைய, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனார் அவர்.

தந்தையின் தற்கொலை, ஹெமிங்வேயை நிறையவே பாதித்திருக்கிறது. சிறுவயதில் தனக்கு இருந்த தந்தையின் மீதான வெறுப்பு, அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு குற்றவுணர்ச்சியாக உருமாறியது.

‘தந்தையின் தற்கொலைக்குக் காரணம் நீ தான்…’ எனத் தாயான கிரேஸை வெளிப்படையாகவே பழித்தார் ஹெமிங்வே. இது ஒருவகையில், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு பாதுகாப்புக் கவசமே.

புகழ்பெற்ற அவருடைய சிறுகதைகள் பலவற்றில், தற்கொலை செய்துகொள்ளும் தந்தை கதாபாத்திரம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அவருடைய முக்கியமான நாவலான, For Whom The Bell Tolls (யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது)-ல் கூட, ராபர்ட்டின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.

தாய் கிரேஸுடனும் அவருக்கு எப்போதுமே இணக்கம் இருந்ததில்லை. ஹெமிங்வேயின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமாகிய ஜான் டோஸ் பாஸ்சோஸ், ஹெமிங்வேக்கும் அவர் தாய்க்கும் இருந்த உறவை இப்படிச் சொல்லியிருக்கிறார்.

‘தன்னுடைய தாயை உண்மையில் வெறுத்த, நான் அறிந்த ஒரே மனிதன் என்றால் அது ஹெமிங்வே மட்டும்தான்…’

தந்தை கண்டிப்பானவர், அதனால் பிடிக்கவில்லை சரி. தாயை ஏன் வெறுக்க வேண்டும்? அதற்குப் பல காரணங்களை முன் வைக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

கிரேஸ் எப்போதும் ஹெமிங்வேயைச் சுதந்திரமாக விட்டது இல்லை. இயல்பிலேயே ஆதிக்க குணம் கொண்டவர் கிரேஸ். அவர் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும்.

அக்காலத்தில் விக்டோரியா நாட்டின் வழக்கப்படி, ஆண் சிறுவர்களுக்குப் பெண்களைப்போல உடையணிவது வழக்கம். ஹெமிங்வே அதை வெறுத்தார். ஆனால்‌ கிரேஸ், ஹெமிங்வேவைக் கட்டாயப்படுத்தி அப்படிப்பட்ட ஆடைகளை அணிவித்திருக்கிறார். மேலும் அவர் அணிவித்த ஆடைகளோ‌ மிகுந்த பெண்மைத்தன்மை கொண்டதாக இருந்திருக்கின்றன. இதுபற்றி தாயிடம் சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்பது ஹெமிங்வேக்கு நன்கு தெரியும். எனவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு அமைதியாகி விடுவார் ஹெமிங்வே.

ஐந்து வயது முதல், பதின்ம வயது தொடக்கம் வரையிலான காலகட்டம்தான் பிள்ளைகளின் மனவளர்ச்சிக்கு முக்கியமான காலகட்டம். அப்போதுதான் அவர்களுடைய குணாதிசயங்கள் ஒருநிலைப்படும். இந்த நேரத்தில்தான் ஏகப்பட்ட உளவியல் சார்ந்த குழப்பங்கள் அவர்களுக்குள் உண்டாகும். அதைத் தீர்க்க வேண்டிய கடமை, பெற்றோர்களிடம் இருக்கிறது.

ஆனால், ஹெமிங்வேக்கு இந்தக் காலகட்டம்தான் பிரச்னையாகவே அமைந்தது. பெற்றோர்கள் மூலம் அவர் சந்தித்த நெருக்கடிகள் எல்லாமே, பின்னாளில் அவருக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்தன.

எனில், சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட இதுபோன்ற பிரச்னைகள்தான் ஹெமிங்வேயின் தற்கொலைக்குக் காரணமா?

அதுவும் ஒரு காரணமே தவிர, அதுதான் காரணம் என்றில்லை.

0

ஹெமிங்வேயின் தந்தை, மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்பதை முன்பே பார்த்தோம் அல்லவா? அவர் மட்டுமல்ல, ஹெமிங்வேயின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். (ஹெமிங்வேயையும் அவரது தந்தையையும் சேர்த்து).

மற்ற மூன்று பேருடைய விவரங்கள்:

1. லெய்செஸ்டர்: ஹெமிங்வேயின் இளைய சகோதரர். இவரும் ஓர் எழுத்தாளரே. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 67 வயதில் துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்துபோனார்

2. உர்சுலா: ஹெமிங்வேயின் சகோதரிகளுள் ஒருவர்‌. புற்றுநோயாளியான இவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 64 வயதில் அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு இறந்துபோனார்.

3. மார்காக்ஸ்: ஹெமிங்வேயின் பேத்தி. இவர் ஒரு நடிகை. தன்னுடைய 42 வயதில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் – மன அழுத்தம். தேர்வு செய்த வழி – அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டது.

இப்படி ஹெமிங்வேயின் குடும்ப மரபணுக்களிலேயே வாடகைக்குக் குடியிருந்திருக்கிறது ‘தற்கொலை’. ஆக, ஹெமிங்வேயின் தற்கொலைக்கு மரபியல் சார்ந்த விஷயங்களும் முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.

சரி, ஹெமிங்வேக்கு இருந்த நேரடி உளவியல் பிரச்னைகளைப் பற்றி பார்ப்போம்.

0

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மார்ட்டின் எனும் மனநல மருத்துவர், ‘Ernest Hemingway: A Psychological Autopsy of a Suicide’ என்ற தலைப்பில் நீண்ட ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில், ஹெமிங்வேக்கு இருந்த உளவியல் சிக்கல்கள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன.

ஹெமிங்வே, பைபோலார் டிசார்டர் (Bipolar Disorder) எனப்படும் மனநல நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார் மார்டின்.

இந்நோய் உள்ளவர்கள், சில சமயம் மன எழுச்சியாலும் சில சமயம் மனச் சோர்வாலும் பாதிக்கப்படுவர்.

எழுச்சியின்போது எல்லா விஷயங்களையும் அதிவேகமாக அவர்களால் செய்ய முடியும். உலகம் வண்ணமயமாகத் தெரியும். எந்நேரமும் அதீத ஆற்றலுடன் சோர்வே அடையாமல் வேலை செய்வர். தூக்கத்தைத் தூக்கித் தூர வைத்துவிடுவர். ரிஸ்க் எடுப்பதெல்லாம் இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்று. இதற்கு அப்படியே நேர் எதிரானது மனச் சோர்வின் நிலை.

ஹெமிங்வே இரண்டு வகையாலும் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறார்.

மன எழுச்சியின்போது, நேரம் காலம் பார்க்காமல் எழுதித் தள்ளியிருக்கிறார். ஹெமிங்வேயின் முதல் நாவலான ‘The Sun Also Rises’, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எழுதப்பட்டதுதான். 1924-ல் மட்டும் ஏழு சிறுகதைகளை அடுத்தடுத்து எழுதியிருக்கிறார் ஹெமிங்வே.

ஆனால், மனச் சோர்வின்போது அவரால் அப்படி இயங்க முடியவில்லை. தற்கொலை எண்ணம் மட்டுமே அவருடைய மூளை முழுக்கப் பரவியிருந்தது.

‘நான் மாபெரும் ரத்தம் தோய்ந்த வெறுமையையும் ஒன்றுமில்லாததையும் உணர்கிறேன். இனி எப்போதும் என்னால் எழுத முடியாது, சண்டையிட முடியாது, சாப்பிட முடியாது. இது என் மரணத்திற்கான ஆரம்பம்…’

மனச் சோர்வில் இருந்தபோது தன்னுடைய நண்பர் பாஸ்சோஸிடம், ஹெமிங்வே சொன்ன வார்த்தைகள் இவை.

இவருடைய மனநோய் பற்றி நன்கு அறிந்த நண்பர்கள் சிலர், ‘அவர் சில நேரம் நன்றாகப் பேசுவார். சில நேரம் கோபமாகப் பேசுவார். சில நேரங்களில் பேசுவதே இல்லை. திடீரெனச் சிரிப்பார். திடீரென வெடித்து அழுவார். அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகள்‌, அவரைப் பாடாய் படுத்தின…’ என்கின்றனர்.

இதனாலேயே ஹெமிங்வேயால் யாருடனும் நீண்ட நாட்களுக்கு நட்பு பாராட்ட முடிந்ததில்லை. திருமண வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்வியுற்றார். மேரி, அவருடைய நான்காவது மனைவி.

மேலும், ஹெமிங்வேக்கு மற்ற எல்லா மேற்கத்திய எழுத்தாளர்கள் போலவும் மிதமிஞ்சிய குடிப்பழக்கம் இருந்தது. இது அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தியது.

ஹெமிங்வேவுக்கு எத்தனை முறை விபத்துகள் நடந்திருக்கின்றன என்பது பற்றி, ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவுக்கு மரணத்துடன் ‘கபடி’ விளையாடியிருக்கிறார். மனைவியுடனான ஆப்பிரிக்கப் பயணத்தின்போது அவர் சென்ற விமானம் விபத்தில் சிக்கி, அதில் அவர் உயிர் பிழைத்தது அப்போதைய முன்னணிப் பத்திரிகைகளில் முதல் பக்கச் செய்தியாக வெளியானது.

காளைச் சண்டையிலும், வேட்டையாடுவதிலும் ஈடுபாடு கொண்ட ஹெமிங்வே, உடல் முழுக்கப் பல வீரத் தழும்புகளைப் பரிசாக வாங்கியுள்ளார். முக்கியமாகத் தலைப்பகுதியில் (ஹெமிங்வேயின் நெற்றியில் மினி இட்லி ஸைசில் இருக்கும் தழும்பைத் தேடிப் பார்க்கவும்).

இப்படி மாதத்திற்கு ஒருமுறை தவணை முறையில் தலையில் அடிபட்டதால், அவருடைய நினைவாற்றலில் சிக்கல் முளைத்தது. இதனால் எழுதுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார் ஹெமிங்வே.

தற்கொலைக்குச் சில மாதங்கள் முன்புதான், அமெரிக்காவின் புகழ்பெற்ற மயோ க்ளினிக் மருத்துவமனையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஹெமிங்வே. ஆனால், எவ்வளவு நாட்கள்தான் மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்?

தற்கொலை ஒரு நிழலைப்போல வாழ்நாள் முழுவதும் ஹெமிங்வேயைப் பின்தொடர்ந்திருக்கிறது. காலம் முழுக்க அவருடன் கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட அது, இறுதியாக அன்றைய விடியற்காலைப் பொழுதில் வென்றுவிட்டது.

0

சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட உளவியல் சார்ந்த சிக்கல்கள், குடும்பத்தில் பிணைந்திருந்த தற்கொலைகள், குடிப்பழக்கம், தலையில் பலமுறை அடிபட்டது என இவையெல்லாம் சேர்ந்தே ஹெமிங்வேயின் உயிரைக் குடித்திருந்தன.

இறுதி வரையில் ஹெமிங்வேயின் மனைவி மேரி, ‘ஹெமிங்வே தற்கொலை செய்து கொள்ளவில்லை. துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது நடந்த விபத்தில்தான் இறந்தார்…’ என்றே நம்பி வந்தார்.

ஆனால் ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்தால், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

‘The Old Man and The Sea (கடலும் கிழவனும்)’ போன்ற மென்மையான நாவலை உருவாக்கிய ஹெமிங்வேயின் வாழ்க்கை, கடலைப்போலவே பல மர்மங்களை உள்ளடக்கியது.

ஹெமிங்வேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மைக்கேல் ரெனால்ட்ஸ், ‘ஹெமிங்வே ஆழமான கிணறு போன்றவர். அதில் குதித்துவிட்டால் மேலே ஏறி வருவது சிரமம்’ என்கிறார்.

உண்மை தான்.

(தொடரும்)

The post பிரபலங்களின் உளவியல் #2 – எர்னஸ்ட் ஹெமிங்வே appeared first on கிழக்கு டுடே.

  •  

அறிவியல் பேசலாம் # 3 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 3


அறிவு தலைமுறைத் தலைமுறையாகக் கடத்தப்படுமா? இந்திய அளவில் பிராமணர்கள் அறிவார்ந்தவர்கள் என்றும், உலக அளவில் எடுத்துக்கொண்டால் யூதர்கள்தான் புத்திசாலிகள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே, இதற்கு மரபணுக்களைக் காரணமாக முன்வைத்து பல கட்டுரைகள் இணையத்தில் இருக்கின்றன. இதை எப்படி எடுத்துக்கொள்வது?

அப்படிப் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. அறிவாற்றலுக்கு மரபணுச் சூழல் இரண்டுக்கும் பங்கிருக்கிறது. மரபணு அளவில் ஐகியூ கடத்தப்படும். ஐகியூ என நான் சொல்வது, அறிவாற்றல் கிடையாது. நுண்ணறிவு.

பெற்றோரின் நுண்ணறிவு அப்படியே வந்துவிடுமா?

அப்படியே வராது. ஓர் ஆய்வு 30 சதவிகிதம் என்கிறது. இன்னொரு ஆய்வு 32 சதவிகிதம் என்கிறது. அதையும் நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. இந்தச் சதவிகிதம் அனைத்தும் நாம் எடுத்திருக்கும் தரவுகள் அடிப்படையில்தான். நாம் ஒரு 100 பேரை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும் 1000 பேரை எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? அதுமட்டுமில்லாமல் இங்கு ஆய்வுகள் அனைத்திலும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்துதான் சோதனை செய்வார்கள். சென்னை என்றால் சென்னை மட்டும்தான். இங்கு சென்னைக்கும் பெங்களூருவுக்குமே வேறுபாடுகள் இருக்கும். இதனால் நாம் உறுதியான முடிவுக்குவந்துவிட முடியாது. வேண்டும் என்றால் ஆரம்பகட்ட சோதனையாக இதைக் கருதலாம்.

ஐகியூ கடத்தப்படுவது உண்மை. ஆனால் கற்றல் கிடையாது. அறிவாற்றல் கிடையாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தால் புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்.

பத்து வருடத்திற்கு முன்னால் பிறந்த குழந்தைக்கும் இப்போது பிறந்த குழந்தைக்கும் புத்திசாலித்தனம் வேறுபடுவதாக தோன்றுகிறதே. பொதுவாக எல்லோருடைய குழந்தைகளுக்கும் புத்திசாலித்தனம் அதிகரித்திருகிறது என்று சொல்லலாமா? அல்லது குறிப்பிட்ட சமூகத்தை, வர்க்கத்தை சார்ந்த மக்களின் குழந்தைகளுக்கு மட்டுமா?

குறிப்பிட்ட சமூகம், வர்க்கம் என குறுக்க முடியாது. இது பொதுவான மாற்றம். ஐகியூ என்பது ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இடையில் கட்டாயமாகக் கூடும். அதுவும் பிழைத்திருக்க ஒரு காரணம். சுற்றுச்சூழலுடன் பொருந்தி வாழ வேண்டும் என்றால் இந்தத் தொழில்நுட்பங்களை எல்லாம் அடாப்ட் செய்ய வேண்டும் அல்லவா? பொதுவாக அப்பா அம்மாவைவிட குழந்தைகள் அறிவில் ஒரு படி முன்னேறிதான் இருப்பார்கள். இது சூழல்சார்ந்தது எல்லாம் கிடையாது. கட்டாயம் முன்னேறிதான் இருக்க முடியும். காரணம், அந்தப் பத்துவருட இடைவெளியைத் தாண்டுவதற்கு, அப்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ள இயற்கை ஏற்படுத்தும் வழி இது.

சிறந்த மரபணுக்களை மட்டும் தேர்வு செய்து சிறந்த மனித தலைமுறையை உருவாக்குவோம் என சொல்லும் Eugenics பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

குறிப்பிட்ட சில பண்புகளை உயர்ந்த பண்புகள் என மனிதர்கள் நினைக்கிறார்கள். இதை மட்டும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தினால் போதும் எனச் சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தாக்கம் 19ஆம் நூற்றாண்டில் செல்வாக்கு பெற்று இன்றும் நிலவுகிறது. ஆனால் இது தவறானது. இயற்கை ஒரு பண்பைக் கொடுப்பதற்கு எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. கருப்பு நிற தோல் மட்டமானது என்பது Eugenics கருத்து. ஆனால் இயற்கைதானே அதையும் தேர்வு செய்திருக்கிறது. பிறகு எப்படி அதைக் குறைந்த பண்பாகச் சொல்ல முடியும்? Eugenics என்பது அறிவியலைத் துணைக்கு இழுத்துக்கொண்டு சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்த முயலும் கருத்து.

நாம் உளவியல் ரீதியாகவே வெள்ளை தோலால் ஈர்க்கப்படுகிறோம் என்று சொல்லலாமா?

கிடையவே கிடையாது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் யார் அதிகாரத்தில் இருந்தார்கள் என்றால் வெள்ளையர்கள். அவர்களை அடிப்படையாக வைத்தே நாம் வெள்ளையை வழிபட தொடங்கிவிட்டோம். இதை வேறு உதாரணங்களிலும் சொல்லலாம். பெண்களை ஏன் பலவீனமான பாலினம் என்கிறோம். அறிவியல் ரீதியாக அதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது. அது உளவியலால் வந்ததா? இல்லை. அதை ஒரு சமூகம் வலியுறுத்த வலியுறுத்த நாம் அதை ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆப்பிரிக்கப் பெண்களைக் கீழ்மைப்படுத்தி Polyandry போன்ற விஷயங்களைக் கடைபிடிப்பதால் அங்கு பாலியல் ரீதியான நோய்கள் அதிகம்தான் வருகின்றன.

அப்போது ’உயர்தர’ என்கிற விஷயமே போதிக்கப்பட்டது என எடுத்துக்கொள்ளலாமா?

ஆம்.

அப்படிப் பார்த்தால் தூய இனம் என்ற ஒன்று கிடையாதா?

கிடையவே கிடையாது. நமது சருமம் ஆப்பிரிக்க வம்சாவளியில் இருந்து வந்தது. இதுபோல எப்படிப் பார்த்தாலும் ஏதாவது ஒரு பண்பு வேறோர் இடத்தில் இருந்துதான் வந்திருக்கும். மனித இனமே கலப்பினத் தொகுதிதான். தூய்மை என்பது கிடையாது.

அப்போது உயர் குலம், தாழ் குலம் என்று சொல்வது எல்லாம்?

உதார். எங்கள் ஆசிரியர், கெங்கிஸ்கான் டி.என்.ஏதான் வடக்கு முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது என்பார். ஆனால் அவர்கள்தான் தங்களைத் தூய இனத்தினர் எனச் சொல்லிக்கொண்டு இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள்.
தூய இனம்போல் திறமையும் மரபு ரீதியாகத் தொடராது. ஒரு குறிப்பிட்ட சாதிதான் புத்திசாலியாக இருக்கும். குறிப்பிட்ட சாதி ஆளும் திறன் வாய்ந்தது. ஒரு சாதிக்குத் திறமையே கிடையாது என்றெல்லாம் சொல்லவே முடியாது. அதேபோல ரத்த உறவு (Consanguinity) தப்பு. பல மரபியல் நோய்களுக்கு இதுதான் காரணம்.

உறவினர்களுள் முதல் வட்டத்திற்குள் திருமணம் செய்வதற்கும், ஒரே தலைமுறைக்குள் திருமணம் செய்வதற்கும், ஒரு தலைமுறை மாற்றிச் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதாவது, தாய்மாமன் என்பது முதல் தலைமுறை. அக்காவுடைய பெண் என்பது இரண்டாவது தலைமுறை. இந்த இரண்டு பேருக்குள் திருமணம் செய்யக்கூடாது. அத்தைப் பெண் மாமா பெண் என்றால் இருவரும் ஒரே தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். ஒரே வயது அளவில்தான் இருப்பார்கள். ஆனால் அதில் செய்வதுமே பிரச்னை இருக்கிறது. ரொம்ப நெருக்கமான உறவுக்குள் திருமணம் செய்வது சிக்கல். ஆனால் கொஞ்சம் தூரத்து உறவினராக இருந்தால் பிரச்னை இல்லை. சொந்த அத்தை கிடையாது, சொந்த மாமா கிடையாது என்றால் பிரச்னை இல்லை.

அதேபோல இஸ்லாமியச் சமூகத்தில் அம்மா வழி சித்தி மகன்கள், தாய் வழியில் வரும் சகோதரியின் மன்களைத் திருமணம் செய்வார்கள். அதையும் செய்யக்கூடாது. Consanguity எதற்கு வந்தது என்றால், சொத்து போய்விடக்கூடாது. சொந்தம் போய்விடக்கூடாது என்பதால்தான். ஆனால் இப்போது அதுதான் பாரம்பரியம். பண்பாடு என்பதுபோன்று ஆகிவிட்டது.

இதேபோல சாதிக்குப் பொது பண்பு விதிப்பதும் மரபியல் ரீதியில் பொய். ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள்தான் குற்றவாளிகள், தீமை செய்வார்கள். இன்னொரு சாதியைச் சேர்ந்தவர்கள் நல்லவர்கள் என்று முத்திரை குத்துவதும் மரபியலுக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தாலே கெட்டவன் என முத்திரை குத்திவிடுகிறார்கள். அவர்களை நல்லவர்கள் என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்வது இல்லை. ஒருவன் குற்றச் செயல் செய்வது ரத்தத்திலேயே ஊறிப்போவது என்று சொல்வது தவறு. அதேபோல இறைச்சி சாப்பிடுபவர்கள் வன்முறையாக இருப்பார்கள் என்பதும் தவறு.

சில குறிப்பிட்ட சாதியினர் உயர்ந்த பதவியில் இருப்பதற்கும் மரபியல்தான் காரணம் எனச் சொல்வதும் உண்டு. உண்மையில் அவர்கள் எத்தனை தலைமுறையாக படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு சிறுவன் புதிதாகப் பள்ளிக்குச் செல்வதற்கும், பத்துத் தலைமுறையாகச் செல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இது மரபியல் கிடையாது. சூழல்தான் காரணம். புதிதாகச் செல்பவன் பள்ளியில்தான் படிக்க முடியும். ஆனால் பத்துத் தலைமுறையாக செல்பவனுக்கு சொல்லிக் கொடுக்கப் பத்துத் தலைமுறையும் இருக்கும். ஐகியூ மரபணுவில் இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த, Enhance செய்வதற்கான வாய்ப்பைச் சூழல்தான் தருகிறது.

நான் ஒரு என்.ஜி.ஓவில் பணியாற்றினேன். குற்றச் செயல் செய்த மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். அவர்கள் நம்மிடம் எந்த வன்முறையும் காட்ட மாட்டார்கள். ஒன்றை எழுதி முடித்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்றால் அமைதியாக பயத்துடன் எழுதி காட்டிவிட்டுதான் செல்வார்கள். ஆனால் வெளிச் சூழலில் வன்முறை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இதற்குக் காரணம். அவர்கள் ஒரு மாணவனை ’நீ தத்தி’, ‘அப்பன் மாதிரி’ என்றெல்லாம் சொல்வதால் அவர்கள் உளவியலால் பாதிக்கப்பட்டு படிப்பு மேல் அக்கறையே இல்லாமல் போய்விடுகிறது.

வெறி, கோபம் எல்லாம் மரபணுக்களில் வெளிப்படுமா?

அதற்கான தன்மை மரபணுக்களில் இருந்தாலும் வெளிப்படுவது சூழலைப் பொறுத்து, வாழ்வியலைப் பொறுத்துதான் அமைகிறது. உளவியல், நடத்தை ஆகிய விஷயங்களை மரபணுவும் சரி, சுற்றுச்சூழலும் சரி சமவிகிதத்தில் பாதிக்கும்.

இவற்றில் எது அதிகம் தாக்கம் ஏற்படுத்தும்?

சொல்ல முடியவில்லை. மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள்கூடக் காரணமாக இருக்கலாம். இன்றைய மரபியல் உலகில் முக்கியமான விவாதமே அதுதான். மரபியல், சுற்றுச்சூழல், உளவியல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு.

நாம் நேர்மறை எண்ணங்களை விதைத்தால் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்களே?

கிடையவே கிடையாது. நமது உடலின் செயல்பாடுதான் மரபணு என்பது. நம் உடல் எப்படி இயங்குகிறது. நமக்கு வேண்டிய இன்சுலின் வெளியாகிறதா? கொலஸ்ட்ரால் சரியான அளவில் இருக்கிறதா என உறுதி செய்வதுதான் மரபணுவின் வேலை. பிழைத்திருத்தல், தகவமைத்தல், இயங்குதல் ஆகியவற்றுக்கானது மரபணு. அது பிறப்பிலேயே கடத்தப்படுகிறது. அவை இயங்குவதற்கு சுற்றுச்சூழல் பங்களிக்கிறது. ஆனால் எண்ணங்களால் மாற்றம் நிகழும் என்பதில் எல்லாம் உண்மை இல்லை.

தமிழ்ச் சமூகத்துக்கும் அறிவியலுக்கும் இருக்கும் தொடர்பு எத்தகையது?

தமிழ் சமூகத்துக்கும் ஆறிவியலுக்கும் இடையே தொடர்பு இருப்பது உண்மைதான். தொல்காப்பியத்திலேயே அதற்கான கூறுகள் இருக்கின்றன. இதை நான் என் நூலிலும் எழுதியிருக்கிறேன். அதேபோல பஞ்சாகத்தையும் சொல்லியாக வேண்டும். அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்றே ஆச்சரியமாக இருக்கிறது. அந்தக் காலத்து அறிவியலை அந்தக் காலத்துச் சூழலுடன் பொறுத்திப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அதை இப்போது கொண்டு வந்து நம்பச் சொன்னால் ஏற்க முடியாது. இதைச் சொல்லிதான் நிறைய போலி அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது.

மரபியலில் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டதா?

மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா என்று கேட்டால் சந்தேகமே. ஆனால் ஆய்வு ரீதியாக வந்துவிட்டது. குறிப்பாக மூலக்கூறு அளவில் ஆய்வு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. இப்போது நான் ஒரு விஷயம் கண்டுபிடிக்கிறேன் என்றால் அதைச் சார்ந்து இன்னொரு ஆய்வு நடைபெற்றால் அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக ஒரு புரதம் இன்னொரு புரதத்தோடு இணைந்து இயங்கும்போது எவ்வளவு வலுவாக ஊடாடுகிறது. எந்த இடத்தில் அந்த ஊடாட்டம் நிகழ்கிறது என்பதை எல்லாம் இதில் அறிய முடியும்.

செயற்கை நுண்ணறிவின் முக்கியமான நோக்கம் என்னவென்று கேட்டால், இப்போது என்னிடம் ஒரு புரதம் இருக்கிறது. அந்தப் புரதச் செயல்பாட்டைத் தடுப்பதற்கு என்னிடம் 100 தடுப்பான்கள் (Inhibitors) இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். பரிசோதனைக் கூடத்தில் ஒவ்வொரு தடுப்பானாகச் சோதித்துப் பார்த்தால் எது சரியான தடுப்பான் எனக் கண்டுபிடிப்பதற்கே 20 ஆண்டுகள் ஆகிவிடும். இந்த ஆய்வைத் துரிதப்படுத்துவதற்கு இப்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. அந்த நூறு தடுப்பான்களைக் கொடுத்து, அதன் தன்மை எல்லாவற்றையும் தந்து, இவற்றில் பத்து சிறந்த தடுப்பான்களைக் கொடு என்று கேட்டால் அதைச் செயற்கை நுண்ணறிவு ஊகித்துச் சொல்லிவிடும். அந்தப் பத்துத் தடுப்பான்களை நாம் எடுத்து சோதனை செய்யலாம். இதனால் நேரமும் குறையும். செலவும் குறையும். செயற்கை நுண்ணறிவு இருந்ததால்தான் கோவிட் போன்ற பெருந்தொற்றை வெகு சீக்கிரமாக நாம் தடுத்து நிறுத்தினோம்.

எதிர்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதாவது ஜெனிட்டிக் கிட் போன்றவை இருக்குமா?

இப்போதே இருக்கிறது. 23andme. நீங்கள் உங்கள் எச்சில் மாதிரியைத் தந்தால் போதும், அதில் உள்ள டி.என்.ஏவை ஆய்வு செய்து, உங்கள் மூதாதையர் யார், யாரெல்லாம் உங்கள் வழி வந்தவர்கள், உங்கள் நெருங்கிய உறவினர் எந்தப் பகுதிகளில் எல்லாம் இருக்கிறார்கள் என எல்லாவற்றையும் சொல்லிவிடும்.

ஆறு மாதத்தில் உங்களுக்கு இந்த நோய் வரப்போகிறது. ஒரு வருஷத்தில் இந்த நோய் வரப்போகிறது. கட்டாயம் இந்த நோய் வந்துதான் நீங்கள் சாகப்போகிறீர்கள் என்பதையெல்லாம் ஊகித்துச் சொல்லிவிடும். 23அண்ட்மீயின் முக்கியப் பயன்பாடு மரபணு சார்ந்த நோயை ஊகிப்பது. உங்கள் மரபணுவில் எந்த அளவு பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை வைத்து இதைச் செய்கிறது.

டி.என்.ஏவை ஆய்வு செய்யும்போது என்னவெல்லாம் கண்டடையலாம்? நோயைக் காண்டடைய மட்டும்தான் டி.என்.ஏவா?

நமது பண்புகளைக் கண்டுபிடிக்கலாம். அதேபோல குழந்தைக்கு யார் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் எனப் பல வழக்குகளில் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது. தடயவியல் துறையில் பயன்படுகிறது. கைரேகைபோல டி.என்.ஏவும் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையுடன் இருக்கும் இல்லையா? இதனால் குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் டி.என்.ஏ தரவுகளை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம்.

கைரேகை தரவுகள் போல டி.என்.ஏ தரவுகள் இருக்குமா என்ன?

இருக்கிறது. NCBI எனும் இணையதளத்திற்குச் சென்று எல்லா தரவுகளையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் தரவுகள் மட்டுமே.

நாம் மூதாதையரைத் தெரிந்துகொள்ள இந்தத் தரவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாமா?

இந்தியாவைப் பொறுத்தவரை கிடையாது. இந்தியாவில் யாரும் அதுபோன்ற ஆய்வுகளைச் செய்வதில்லை. இந்தியாவில் ஜனத்தொகையை மையப்படுத்தி செய்யும் ஆய்வுகள் அத்தனையும் நோய் சார்ந்தே இருக்கின்றன. அதையெல்லாம் அவர்கள் செய்திருந்தால் ஆரியர்கள், திராவிடர்கள் பஞ்சாயத்தே வந்திருக்காது.

மானுடவியல் பார்வையில் மரபியல் ஆய்வுகள் இந்தியாவில் எந்த அளவுக்கு இருக்கிறது?

சுத்தமாக எதிர்காலம் கிடையாது. ஒருசில ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் பெரிய அளவில் நடப்பதில்லை. மானுடவியல் மட்டுமல்ல, பொதுவாகவே மரபியலுக்குப் பெரிய எதிர்காலம் கிடையாது. இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. இந்தியாவில் மரபியல் நோய்கள் அதிகம். ஆனால் ஆய்வுகள் குறைவு. இரண்டுமே இருக்கும் நிலை இந்தியாவில் தொடர்கிறது. அதற்கான நிதிகள் வருவதே இல்லை. அதேபோல நிறுவனங்களும் முக்கியத்துவம் இல்லை.

ஆனால், கோவிட் பெருந்தொற்றில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது‌. இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவ ஆய்வுகளில் பல நெறிமுறை கெடுபிடிகள் இருக்கின்றன. ஆனால், வளரும் நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஒரு முன்னுதாரணமாகத்தான் இருக்கிறது. இதுவே வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியா இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.

பெரும்பாலும் இந்திய ஆய்வுகள் இன்னும் நேரடி மக்கள் பயன்பாட்டை எட்டவில்லை. ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காகத்தான் இருக்கிறது. வெளிநாடுகளில் அப்படிக் கிடையாது. உதாரணமாக, ஐரோப்பாவில் மரபியல் ஆலோசனை என்பது மருத்துவத்தில் ஒரு பகுதி. இந்தியாவில் அப்படிக் கிடையாது.

ஏன் வெளிநாடுகளில் மட்டும் அதிகம்?

அவர்கள் குடும்ப அமைப்பு அப்படி. அவர்கள் குடும்ப அமைப்பே இடியாப்பச் சிக்கலைப்போன்றது. Half brother, Half sister, Step brother, Step Sister போன்ற உறவுகள் நிறைய இருக்கின்றன. மூலம் தெரியாத விதமாக அவர்களுக்குள் திருமணம் நடந்து, அவர்களுக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கு மரபியல் குறைபாடு வரக்கூடாது என்பதால் அவர்கள் ஒவ்வொன்றையும் மருத்துவ ரீதியாக ஆய்வு செய்த பின்னரே தொடங்குகிறார்கள்.

ஆனால், இங்கு அப்படிக் கிடையாது. இங்கு இருக்கும் மூன்று தலைமுறை வரைபடத்தை வரைந்தோம் என்றால் அது நேரடியாக இருக்கும். வேறு எங்கும் இணைப்பே இருக்காது. அப்படி இணைப்பு இருந்தாலும் தாய்மாமன் வழியில் மட்டுமே இருக்கும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் அப்படிக் கிடையாது. இதனாலேயே வெளிநாடுகளில் மரபியல் ஆலோசனை படிப்பதற்கு பலரும் விரும்புகின்றனர். நிறையத் தெரிந்துகொள்ள முடியும். நிறையக் கண்டுபிடிக்க முடியும்.

இங்கு மரபியல் குறைபாடு இருக்கிறது என்றாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கருவைக் கலைக்க மாட்டார்கள். உணர்வே இல்லாத ஒரு குழந்தையைக் கலைப்பதற்கும் அதற்கு எல்லாவற்றையும் கொடுத்து வலியுடன் வாழ வைப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. உணர்ச்சிகள், கலாசாரக் கெடுபிடிகள் காரணமாக இங்குள்ள பெற்றோர்கள் அவ்வாறு செய்வதில்லை. வெளிநாடுகளில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதற்கு மரபியல் நோய் இருக்கப்போகிறது என்றால் யோசிக்காமல் கலைத்துவிடுவார்கள்.

இங்குள்ள கலாசார, மத ரீதியான நம்பிக்கைகளால் சிகிச்சை மட்டுமல்ல, சோதனைகளும் பாதிக்கப்படுகிறது. சிலர் பரிசோதனை செய்யவே முன் வருவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவின் மருத்துவக் கொள்கைகள் மரபியல் அடிப்படையில் இருக்கிறதா?

மரபியல் ஆய்வுகளுக்கு என்று தனிக் கொள்கைகள் இருக்கிறது. PCPNDT என்று தனியாக ஒரு சட்டம் இருக்கிறது. அதில் மரபியல் ஆலோசகரின் வழிகாட்டல், நெறிமுறைகள், யாரெல்லாம் மரபியல் ஆலோசனை வழங்கலாம், எங்கு செய்யலாம், எவை எல்லாம் மரபியல் குறைபாடுகள், அதில் எவை எல்லாம் சரி செய்ய முடியும் எனச் சொல்லியிருப்பார்கள்.

மரபியல் குறைபாடுடையவர்கள் எங்கு சென்று அணுக வேண்டும்?

Centres for Excellence என இடங்கள் இருக்கின்றன. சில மருத்துவமனைகளை அரசாங்கமே Centre for excellences என நிர்ணயித்திருக்கும். இங்கு சென்று மரபியல் நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, தமிழ்நாட்டில் ஹீமோபிலியா நோய்க்கு ராஜிவ் காந்தி மருத்துவமனை ஒரு சிகிச்சை மையம். கட்டணம் கிடையாது. அதேபோல AIIMS ஒரு சிகிச்சை மையம். இப்படிப் பல இடங்கள் இருக்கின்றன. குஜராத்தில் Gujarat State Biotechnology Mission. அங்கு சென்று நாம் டி.என்.ஏவை சீக்வென்ஸ் செய்துகொள்ளலாம். அதேபோல மாநில அரசுகளும் இதேபோன்ற மருத்துவமனைகளை அங்கீகரித்துள்ளன. இன்னொன்று Rare Diseases Registry என்று ஒன்று இருக்கிறது. அங்கு சென்று நாம் நமக்கு இருக்கும் மரபியல் நோயைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும்போது அதேபோலக் குறைபாடுகள் உடையவர்களிடம் நம்மை அறிமுகம் செய்து வைப்பார்கள். இந்த நோய்களுக்கு உதவும் என்.எஜி.ஓக்கள், காப்பீடு நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைத்துவிடுவார்கள்.

பண்டையக் காலத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறதே உண்மையா?

நாம் அப்போது இருந்த ஆரோக்கியத்தையும், இப்போதுள்ள ஆரோக்கியத்தையும் ஒப்பிடத் தரவுகள் கிடையாது. மேலும் எதை வைத்து நம்மால் ஒப்பிட முடியும்?

மிக்சி, கிரைண்டர் எல்லாம் இல்லாத காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறதே?

எதை வைத்துச் சொல்கிறார்கள்? அப்போது கழிப்பறைகள் கிடையாது. சுகாதார வசதிகள் கிடையாது. மாதவிடாய் வந்தால் பயன்படுத்த நேப்கின்கள் கிடையாது. பல ஆரோக்கியப் பிரச்னைகள் இருந்திருக்கும். வயதாகி இறந்ததைப்போன்று பாம்பு கடித்து, பூச்சிகள் கடித்து இறந்தவர்களும் அதிகம். அதற்கான தரவுகளும் நம்மிடம் கிடையாது. இன்னொன்று கர்ப்பத்தின்போது, குழந்தை பிறப்பின்போது இறந்தவர்கள் அதிகம். இந்த இரண்டு வாழ்வியலையும் ஒப்பிட முடியாது.

இயற்கை மரணம் இப்போதுதான் அதிகம். இது எளிமையான லாஜிக்தான். அப்போது ஒரு நோய் வந்தால் குணப்படுத்த முடியாது. காலரா, பெரியம்மை, போலியோ போன்ற நோய்கள் வந்தால் இறந்துவிட வேண்டியதுதான். ஆனால் இப்போது அப்படிக் கிடையாது. மனித வாழ்நாள் நீண்டிருக்கிறது. இயற்கை மரணம் அதிகரித்திருப்பது இப்போதுதான். மேலும் நம்மிடம் இருக்கும் தரவுகள் அனைத்தும் நகரத்தை மையப்படுத்தியே இருக்கின்றன. கிராமங்களில் எப்படி இருந்தார்கள் என்பதற்கான தரவுகள் இல்லை. கிராமங்களில் மாசு கிடையாது என்கிறோம். என் அம்மா பிறந்த ஊரில் தொண்டையில் புற்றுநோய் வந்து 11 பேர் இறந்துள்ளனர். இதை எப்படி எடுத்துக்கொள்வது? நகரத்தில் இருக்கும் மருத்துவமனைகள் மட்டுமே தரவுகளைத் தருவதால் கிராமத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற தரவுகள் நமக்குக் கிடைப்பதில்லை.

மரபியல் மாற்றப்பட்ட உணவுப்பொருட்களால் நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்குமா?

நாம் ஒரே கோணத்தில் எதையும் அணுக முடியாது. நாம் செயற்கையாக ஏற்படுத்தும் ஒரு மரபியல் மாற்றத்திற்கு எதிராக இயற்கையில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. இதனால்தான் பிடி கத்திரிக்கா, பிடி காட்டன் போன்றவை மிகப்பெரிய பிரச்னையை விளைவிக்கக்கூடியவையாக இருக்கின்றன. அவற்றால் நேரடி நோய்கள் உடலுக்கு வராது என்று விஞ்ஞானிகள் வாக்கு கொடுக்கலாம். ஆனால் இவை உணவு சங்கிலியைப் பாதிக்கின்றன. அதனால் வேறு விதமான நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எல்லா ஆய்வுகளும் மனிதர்களை மையப்படுத்தியே இருக்கின்றன. மனித நலனை நோக்கித்தான் இருக்கின்றன. அவை மற்ற உயிர்களுடனான சமநிலையை நோக்கி இருப்பதில்லை. இவைதான் நமக்கும் இயற்கைக்கும் இடையிலான வேறுபாடு. இயற்கை ஒரு மாற்றத்தை எல்லா உயிரினங்களை நோக்கிய சமத்துவ நோக்கில் பார்க்கிறது.

உதாரணம் சொல்கிறேன். பூச்சிகள் தாரவங்களைப் பாதிக்கிறது அல்லவா? தாவரங்களுக்கு இயற்கையாகவே பூச்சித் தாக்குதலைத் தடுக்கும் எதிர்ப்பு இயக்கமும் இருக்கும். அதேபோல அந்த எதிர்ப்பை உடைக்கும் குணமும் பூச்சிகளுக்கு இயற்கையாக வழங்கப்பட்டிருக்கும். இது ஒருவகை பொதுவான பண்பு. இது இயற்கையாக நடப்பது ஒரு பிரச்னையும் இல்லை. இது தவிர பூச்சிகள் மூலம்தான் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. பூச்சிகள் இல்லை என்றால் செடிகள் எப்படிப் பெருகும்?

ஆனால் நாம் இந்தப் பூச்சித் தாக்குதலைத் தடுக்க, தாவரங்களின் மரபணுக்களில் இருக்கும் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்துவிடுகிறோம். ஆனால் இது உணவுச் சங்கிலிச் சமநிலையைக் குலைத்துவிடுகிறது. இதனாலேயே நீண்ட நோக்கில் பார்க்கும்போது அந்தத் தாவரத்தால் பிழைக்க முடியாது. சில சமயங்களில் அதை உண்ணும் நமக்கும் ஏதாவது ஒரு பிரச்னை வரும். இந்த எதிர் மரபணுப் பிறழ்வு எங்கு நடக்கிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் பெரிய வில்லங்கமே.

தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பண்பை நாம் வளர்த்தேடுப்பது. உதாரணமாக நெற்பயிற்கள் பயிரிடும்போது அதில் எந்த நெற்மணிக்கள் பெரிதாக இருக்குமோ, அதிக விளைச்சலைத் தருமோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து மீண்டும் பயிரிடுகிறோம். அதன்மூலம் நாம் அத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு தனி ரகத்தையே உருவாக்குகிறோம். இதுவும் பிரச்னைதான்.

இந்தத் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் எந்த அளவுக்கு செல்கிறது என்பதுதான் பிரச்னை. எதற்காக இயற்கை இரண்டு வகைகளை உருவாக்க வேண்டும்? குட்டைச் செடி, உயரமான செடி என்று இரண்டு இருக்கிறது என்றால் நாம் நம்முடைய தேவைக்காக உயரமான செடியைத் தேர்வு செய்துகொள்கிறோம். அது நமது தேர்வு. இயற்கையின் தேர்வு கிடையாது. இயற்கை இரண்டும் வேண்டும் என்பதால்தான் இரண்டு உயரத்திலும் செடிகளைத் தருகிறது. நாம் நமது தேர்வால் உயரமான செடியைத் தேர்வு செய்து அதை மீண்டும் மீண்டும் பெருக்குவதால் நமது உற்பத்தி அதிகரிக்கும் என்பது உண்மைதான். நிறையப் பேருக்கு உணவு வழங்கலாம்தான். ஆனால் அந்தக் குட்டைச் செடியில் என்ன நல்லது இருக்கிறது என்பதே நமக்குத் தெரியாமல் போய்விடுமே? இப்படிச் செய்துதான் கம்பு, சாமை, திணை எனப் பலவற்றை நாம் இழந்துவிட்டோம். அரிசியும் கோதுமையும்தான் பொருளாதாரரீதியாக பலன் தரக்கூடியது என்பதால் நாம் அதற்கு முக்கியத்துவம் தந்து மற்றவற்றைக் குறைத்துவிட்டோம்.

மரபணுக்களை எடிட் செய்யும் கிரிஸ்பர் (CRISPR) தொழில்நுட்பம் மூலம் நமது உடலில் உள்ள குறைபாடுகளை நீக்க முடியுமா?

நிறைய அறநெறி பிரச்னைகள் இருக்கின்றன.

அது இருக்கலாம். ஆனால் அறிவியல் பூர்வமாக முடியுமா?

சொல்ல முடியாது. நமது ஆய்வுகள் அனைத்தும் பரிசோதனைக்கூடத்திற்கு உட்பட்டது. பரிசோதனைக்கூடம் சார்ந்தது. நமது உடலிலும் அதுதான் நடக்குமா என்றால் சொல்ல முடியாது. உதாரணமாக நாம் இரண்டு புரதம் அல்லது இரண்டு மரபணுக்களின் இயங்கு விதத்தை மட்டும் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். இதுவே நம் உடலை எடுத்துக்கொண்டே அதே நேரத்தில் அதே மரபணுவுடன் / அதே புரதத்துடன் பத்தாயிரம் புரதங்கள், பத்தாயிரம் மரபணுக்கள் இணைந்து இயங்கிக்கொண்டிருக்கும். எதனுடைய தாக்கமும் எதன் மீது வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நமக்குத் தெரியாது.

நாம் இரண்டே இரண்டு மரபணுக்களை மட்டும் வைத்து ஆய்வு செய்வதற்கும் உடலுக்குள் நடப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இது அறிவியல் சமூகத்திற்கும் தெரியும். இப்போது செய்றகை நுண்ணறிவு வந்தது ஒருவகையில் பலன் தரலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் நம் உடலின் வளர்ச்சிதை இணைப்பை (Metabolic Networks) செயற்கையாக உருவாக்கிவிடுகிறார்கள். நமது உடல் வெப்பத்தையும் செயற்கையாகக் கொடுத்துவிடுகிறார்கள். எல்லாமே கணினி மாதிரிகள்மூலம். கொடுத்துவிட்டு அதன் எதிர்வினை எப்படி இருக்கிறது எனப் பார்க்கிறார்கள். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நமக்குப் பல பதில்கள் கிடைக்கின்றன.

ஆனால் இதையும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஓர் ஊகமாக வைத்துக்கொள்ளலாம். கிரிஸ்பரிலும் இதேதான் நடக்கப்போகிறது. நாம் செய்வது அனைத்தும் பரிசோதனை ரீதியாக நிரூபணமானது. ஆனால் நமது உடலுக்குள்ளும் இப்படித்தான் நடக்குமா என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் அது தெரியும். ஆனால் ஒரு இடத்தில் பதில் கிடைத்துவிடாதா என்றுதான் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

புற்றுநோயை ஏற்படுத்துவதாக மொத்தம் 300 மரபணுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் 300ஐயும் மொத்தமாக வைத்து யாரும் பணியாற்றுவது இல்லை. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மரபணுவை வைத்து வேலை செய்கிறார்கள். அதிகபட்சமாக 10 மரபணுக்களை வைத்து வேலை செய்வார்கள். ஏனென்றால் நம்முடைய அறிவு அவ்வளவுதான். நம்மால் மூன்று பரிமாணத்தில் மட்டுமே அனைத்தையும் பார்க்க முடியும். அதைத்தாண்டி ஒரு பரிமாணத்தில் நம்மால் சிந்திக்க முடியாது. இன்னொன்று எல்லாமும் உடலில் ஒரே இடத்தில் நடந்தால் பிரச்னை இல்லை. ஆனால் நம் உடல் அப்படி இயங்குவதில்லை. நாம் தொடும் உணர்வே இங்கிருந்து நமது மூளைக்குச் சென்று திரும்பி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு அசைவிலும் ஒட்டுமொத்த உடலுமே ஈடுபட்டிருப்பதால் நம்மால் உறுதியாக கிரிஸ்பரால் பயன்பெற முடியுமா என்று சொல்ல முடியவில்லை. ஆனால், தீர்க்க முடியாத சில மரபணுக் குறைபாடுகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையலாம் என்பதால் தான் CRISPR/CAS9 தொழில்நுட்பத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நோயைக் குணப்படுத்த ஜீன் தெரப்பிகள் இருக்கின்றவே?

ஜீன் தெரப்பியின் வெற்றி விகிதம் நல்லவிதமாகத்தான் இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட மரபணுவுக்கு மட்டும்தான். பெரிய அளவில் பல்வேறு மரபணுக்கள் ஈடுபடும்போது செய்யமுடியாது. அதுமட்டுமில்லாமல் எல்லா மரபியல் குறைபாடுகளுக்கும் இந்த தெரப்பி வேலை செய்யாது. உதாரணமாக சிஸ்டிக் பைப்ரோஸிஸ் எடுத்துக்கொண்டால் அதற்கு ஜீன் தெரப்பி இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆராய்ச்சி படிநிலையில்தான் இருக்கிறது. அதுவும் Puff வகையில். அதற்கென்று இன்ஹேலர்ஸ் இருக்கின்றன. அவை பாதிக்கப்பட்ட மரபணுக்களுக்குப் பதிலாகப் புதிய mRNAவை செல்களுக்குள் செலுத்தும். அதையும் முழு வெற்றியாகக் கருத முடியாது. எல்லாமே பராமரிப்பு நோக்கம்தான். அனைத்தும் ஆராய்ச்சிநிலையில்தான் இருக்கின்றன. ஆராய்ச்சியின் கட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுமே தவிர இன்னும் அதிகாரப்பூர்வமாக முற்றிலும் நோய் குணப்படுத்தலுக்கான சிகிச்சை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நோய்க்கான சில மருந்து கலவைகளை FDA அமைப்பு அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாவரங்களில்?

தாவரங்களில் கிரிஸ்பார் பயன்படுத்தலாம். ஆனால் இதையெல்லாம் செய்துதான் நாம் பிரச்னையை இழுத்து வைத்திருக்கிறோமே!

ஆயுர்வேத மருத்துவம் போன்ற Evidence Bassed மருத்துவம் இல்லாதவை மரபியல் நோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறதா?

ஆயுர்வேதம் குணப்படுத்தாது. மக்களும் செல்வதில்லை. முதலில் மக்கள் மரபியல் குறைபாடுகள் இருப்பதையே ஒப்புக்கொள்வதில்லை. ஒப்புக்கொண்டால்தானே செல்வார்கள். அதுமட்டுமில்லாமல் அலோபதியே தள்ளாடும்போது ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியாது.
உண்மையில் ஆங்கில மருத்துவம் என்றால் என்ன என்றே தெளிவு பலருக்கு இல்லை. ஆங்கில மருத்துவம் என்றால் தரவுகள் சார்ந்த, ஆதாரங்கள் சார்ந்த மருத்துவம். அவ்வளவுதான். ஆனால் பலர் அதனைச் செயற்கை, வேதியியல் மருத்துவம் என்கிறார்கள். உண்மையில் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளே இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களை எடுத்து செய்வதுதான். உதாரணமாக ஆயுர்வேதத்தில் வேப்ப இலை சாப்பிட்டால் பாக்டீரிய எதிர்ப்பு தன்மை இருக்கிறது என்று சொல்கிறோம் இல்லையா? நமது மாத்திரைகளில் என்ன இருக்கிறது? அந்த வேப்ப இலையில் எந்த வேதிப்பொருளுக்கு பாக்டீரிய எதிர்ப்பு தன்மை இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக் கொடுப்பதுதான் ஆங்கில மருத்துவம். இவர்கள் நினைப்பதுபோல கார்பன், ஆக்சிஜன், சல்பர் ஆகியவற்றை நாம் தனித்தனியாக எடுத்து கலந்து தருவதில்லை. Drug என்பதே இயற்கைக் கலவைதான்.

நாட்டுப் பப்பாளியில் இருக்கும் ஒருவகை கொழுப்பு சருமத்திற்கு நல்லது எனக் கண்டறிந்து பயன்படுத்துகிறோம். அது முதலில் ஏன் பப்பாளியில் இருக்கிறது தெரியுமா? பப்பாளியில் வட்ட, வட்டமாக ஒருவகை பரவல் இருப்பதைப் பார்த்திருப்போம். அது பப்பாளியைத் தாக்கும் ஒருவகை வைரஸ் பாதிப்பால் ஏற்படுவது. அந்த வைரஸ் கொடுக்குள்ள குட்டிப் பூச்சிகள் வழியாக ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்குப் பரவும். இதுபோன்ற வைரஸ் பரவல்களை ஏற்படுத்தும் பூச்சிகளை வெக்டர் என அழைப்பர். அந்தப் பூச்சிகளின் கொடுக்கை உள்ளே போக விடாமல் தடுப்பதற்கும் வைரஸிடமிருந்து பப்பாளியைக் காப்பாற்றுவதற்கும் அந்தக் கொழுப்பு பயன்படுகிறது என்பதைச் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். நமது காலில் எண்ணெய் தேய்த்தால் எப்படிக் கொசு கடிக்காதோ, அதேபோலதான் அந்தக் கொழுப்பும் பயன்படுகிறது.

இந்த கொழுப்பை மட்டும் எடுத்து, இந்த வைரஸுக்கும் வெக்டாருக்கும் இடையில் இருக்கும் ஊடாடலைத் தடுக்க முடியுமா என ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அவ்வாறு தடுக்க முடிந்தால் அந்தக் கொழுப்பை வைத்து அதற்கு ஏற்றாற்போல் ஒரு மருந்தோ பூச்சிக்கொல்லியோ ஸ்ப்ரேயோ தயாரித்துவிடுவோம். இது இயற்கையாக உள்ள பொருட்களை எடுத்து சோதனை செய்து தயாரிப்பது. நூறு சதவிகிதம் வேதியியல் கிடையாது. ஆனால் இந்தப் புரிதலே பலருக்குக் கிடையாது.

இதேபோல ஹோமியோபதி போன்ற மருத்துவங்களில் தடுப்பூசி எனும் கருத்தாக்கத்தையே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கேட்டால் நோய் என்ற ஒன்றே கிடையாது. அது ஒரு நிலைப்பாடு. எதற்காகக் குணப்படுத்த வேண்டும் என்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை தடுப்பூசி என்பது ஒரு கட்டுக்கதை. ஆனால் உண்மையில் அப்படியா இருக்கிறது?

உலகில் உள்ள பெரிய பெரிய நோய்களை எல்லாம் தடுப்பூசியை வைத்துதான் விரட்டியடித்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் பொதுவான நோயெதிர்ப்பு தூண்டுதலுக்கும் குறிப்பிட்ட ஒரு பிரச்னையைச் சரி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாகக் குப்பைமேனி இலையை உடலில் தேய்த்தால் சருமப் பிரச்னைகள் வராது. இது ஆயுர்வேதத்தில் சொல்லக்கூடிய ஒரு விஷயம். திருநீற்றுப் பச்சிலையைச் தேய்த்தால் பருக்கள் வராது என்பதும் ஆயுர்வேதம். ஆனால் ஒரு சரும நோய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அங்கேபோய் நாம் குப்பை மேனியைத் தேய்த்து என்ன பிரயோஜனம். அது எதனால் வந்தது என்றே நம்மால் சொல்ல முடியாது. அது வைரஸாக இருக்கலாம். பூஞ்சையால் இருக்கலாம். இங்கே பொது சிகிச்சை வேலைக்கு ஆகாது. ஆயுர்வேதத்தின் பிரச்னையே அதுதான். குறிப்பிட்ட நோய்காரணிகளுக்குப் பொது மருந்தைப் பரிந்துரைப்பார்கள். அதுவும் உலகளவில் ஒரே அளவை பயன்படுத்துவது கிடையாது‌. ஆனால் அலோபதியில் குறிப்பிட்ட நோய்களுக்கு என்று தனிப்பட்ட மருந்துகள் என்பதுதான் பயன்பாடு.

கபசுர குடிநீர் குடித்தால் டெங்கு வராது என்பது தடுப்புதான். ஆனால் குணப்படுத்த முடியாது. டெங்கு வந்தவர்களை அது குணப்படுத்தாது. அதேபோல பப்பாளி இலையைக் குடிக்கச் சொல்வார்கள். அது குடித்தால் வெள்ளை ரத்த அணுக்கள் ஜாஸ்தியாகும் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், கூடவே வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளைத் தடுப்பதற்கான மருந்தை எடுக்க வேண்டும். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வெறும் பப்பாளி இலையைக் குடித்தால் முடிந்தது கதை.

இங்கே பொத்தாம் பொதுவாக ஒன்றை நல்லது என்று பார்ப்பதே தவறு. மஞ்சள் தேய்த்து குளித்தால் பருக்கள் வராது என்பது பொதுவாகச் சொல்வது. ஆனால் எனக்கு மஞ்சள் தேய்த்துக் குளித்தால் முகம் முழுவதும் பருக்கள் பூத்துவிடும். இதை எப்படி எடுத்துக் கொள்வது?

உங்கள் முனைவர் பட்ட ஆய்வு எதைப் பற்றியது? எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

என் முனைவர் பட்ட ஆய்வு புரதங்களின் ஊடாடலைப் பற்றியது. செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைப் பயன்படுத்தி புரதங்களின் ஊடாடலைக் கணிப்பது.

இயற்கை என்பது போட்டியா ஒத்துழைப்பா?

ஒத்துழைப்புதான்.

ஆனால் ஒன்றையொன்று அடித்து சாப்பிட்டால்தானே உயிர்கள் வாழ முடிகிறது?

அவை இரண்டுமே பிழைத்திருக்கதானே செய்கிறது. அதன் நோக்கம், நான் மட்டும்தான் உயிர் வாழ வேண்டும். நீ வாழக்கூடாது என்பதில்லையே. அப்போதும் அவை மொத்தமாக அழித்துவிடவில்லையே. ஆனால் மனிதர்கள் மட்டும்தான் போட்டிப் போட்டுக்கொண்டு நாங்கள்தான் உயர்ந்தவன், நாங்கள்தான் ஆல்ஃபா என எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது நடக்கும் போர்களே உதாரணம்.

அறிவியல் துறையில் இருக்கும் எல்லோரிடமும் நான் கேட்க விரும்பும் கேள்வி இது. உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

கடவுள் என்ற ஒன்று கிடையாது. ஆனால் இயங்கு சக்தி ஒன்று இருக்கிறது. இயக்கத்துக்கு ஏதோ ஒன்று காரணமாக இருக்கிறது. அதை இயற்கை என்றும் நீங்கள் கருதலாம். எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்து அழைத்துக்கொள்ளலாம். அது இருப்பதால்தான் எல்லாமே சமநிலையில் இருக்கிறது. கடவுள் என்பது தனிப்பட்ட அனுபவம். அதை எல்லோருக்கும் பொது என்று பொருத்திவிட முடியாது. கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் அதைச் சுற்றி இருக்கும் சடங்கு சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

இறுதியாகச் சில கேள்விகள். எழுதுவதில் ஆர்வம் வந்தது எப்படி?

எழுதுவதில் ஆர்வம் வந்ததற்குத் தமிழ் ஆர்வம்தான் காரணம் என நினைக்கிறேன். மூன்று வயதில் இருந்தே அப்பா எனக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பள்ளியில் நடக்கும் சிறுசிறு போட்டிகளில் கலந்துக் கொள்வது வழக்கம். சில நேரங்களில் பரிசுகளும் கிடைத்திருக்கின்றன. அதுவே தொடர்ந்து தமிழில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கான ஊக்கம். இது புத்தகமாக விரிந்தது. புத்தகம் எழுதுவது தற்செயலாக நடந்தது. அதுவும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் எழுதுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைக்கவில்லை. பெண்களின் கருப்பை நீக்கம் சார்ந்து எழுத்தாளர் மோனிஷா அவர்களுடனான ஒரு அழைப்பேசி உரையாடல்தான் நான் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கான ஆரம்பப்புள்ளி. அதன்பிறகு ஹெர் ஸ்டோரிஸ் அறிமுகம் கிடைத்து பதினைந்து அறிவியல் கட்டுரைகள் எழுதினேன். அதுவே தாயனை புத்தகமாக வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக சில மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் அறிவதுவே புத்தகமாக வெளிவந்தது.

இப்போது மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெற்ற பெண் அறிவியலாளர்களையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் மாணவர்களுக்கான புத்தகமாக எழுதலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.

0

The post அறிவியல் பேசலாம் # 3 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 3 appeared first on கிழக்கு டுடே.

  •  

பிரபலங்களின் உளவியல் #1 – சார்லஸ் டார்வின்

கலை என்பது மனதின் வெளிப்பாடு. ஒருவரின் உள்ளார்ந்த உணர்வுகளை, அனுபவங்களை, சிந்தனைகளைப் படைப்பாற்றலாக மாற்றும் சக்தி கலைக்கே இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் பலர், தங்களது நேர்த்தியான படைப்புகள் மூலம் இன்றும் நினைவில் நிற்கின்றனர். ஆனால் அந்தப் படைப்புகளின் பின்புலத்தில் பலரும் எதிர்கொண்டுள்ள தனித்துவமான உண்மை ஒன்று இருக்கிறது – அது உளவியல் தொடர்பான சிக்கல்கள். மன அழுத்தம், மனச்சிதைவு, பதற்ற நோய், இருதுருவ நோய் போன்ற பலவிதமான உளவியல் பிரச்னைகள் அவர்களின் வாழ்விலும் கலைப்பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இத்தொடர், அக்கலைஞர்களின் வாழ்வையும், அவர்கள் சந்தித்த உளவியல் சார்ந்த பிரச்னைகளையும், அந்தப் பிரச்னை அவர்களது கலை உருவாக்கத்தில் எந்த வகையில் பிரதிபலித்தன என்பது பற்றியும் ஆராயப்போகிறது.

பிரபலங்களின் வாழ்க்கை வெளியுலகிற்கு ஜொலிப்பாக, பிரமிப்பாக, ஏக்கமூட்டும் ஒன்றாகத் தெரிந்தாலும் அந்த மாய ஒளிக்குமிழிக்குள் என்ன நடக்கிறது என்பது தெரிந்தால் அதிர்ச்சியே மிஞ்சும். திரைப்பட நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் என உலகம் மதிக்கும் பல பிரபலங்கள் தீவிர உளவியல் பிரச்னைகளுடன் போராடியவர்களே.

சிலர் அந்தப் பாதிப்புகளைத் திறமையாகச் சமாளித்தும், சிலர் அதனால் தங்களது வாழ்க்கையை‌ முழுமையாகத் தொலைத்தும் இருக்கிறார்கள்.

வின்சென்ட் வான் கோ, எர்னஸ்ட் ஹெமிங்வே, எட்வர்ட் முங்க், வேர்ஜினியா வூல்ஃப் போன்ற பிரபலங்களின் வாழ்க்கை இதற்கு உதாரணம்.

உண்மையில், உளவியல் சிக்கல்கள் என்பது யாருக்கும் வரக்கூடியதே. அது சாதாரண நபர்களுக்கும் பிரபலங்களுக்கும் வேறுபாடில்லாமல் தாக்கத்தை உண்டாக்குகிறது. ஆனால் கலைஞர்களுக்கு, உணர்வுகளை வெளிக்கொணர்வதற்கான செம்மையான திறமை இருப்பதால், அவர்களுடைய மனநிலை கலைப்படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது. உளவியல் சிக்கல்கள் அவர்களின் படைப்புகளில் உயிர்பெற்று, உலகத்தைக் கவரும் படைப்புகளாக மாறுகிறது.

புதியதுபோலத் தோன்றினாலும், ‘கலையும் உளவியலும்’ ஓர் பழைய தேடல். நெடுங்காலமாகவே இது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் தமிழில் இதுபோன்ற ஒரு முயற்சி புதிதாக இருக்கலாம்.

இத்தொடரில் வரப்போகும் பிரபலங்கள் பற்றிய உளவியல் பிரச்னைகள், பல்வேறு புத்தகங்களிலிருந்தும், பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இருந்தும் பெறப்பட்டவை. ஆதாரப்பூர்வமான தகவல்கள் கொண்டு எழுதப்பட்டவை. எங்கேயும் மிகைப்படுத்துதலுக்கு இடமில்லை. என்னுடைய ஒரே நோக்கம், இருக்கும் தகவல்களை சுவாரஸ்யமாகத் தருவது மட்டுமே!

அதேநேரம், ஒவ்வொரு பிரபலங்களையும் தேடிப்பிடித்து அவர்களுக்கு இருந்த உளவியல் பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது இத்தொடரின் நோக்கம் அல்ல.

எனில் இத்தொடரின் நோக்கம்தான் என்ன?

மனநலம், கலைக்கிடையிலான ஆழமான தொடர்பை இன்னும் சற்று விரிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சியே இத்தொடரின் நோக்கம்.

ஆரம்பிக்கும் முன்…

‘கலை’, மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி என்றால், ‘உளவியல்’ அதன் உள் அடுக்குகளை ஆராயும் அறிவியல்!

இதைப் புரிந்துகொண்டாலே போதும், இந்தப் பயணத்தில் நீங்களும் எளிதில் என்னுடன் ஒட்டிக் கொள்ளலாம்.

இனி, பிரபலங்களின் உளவியலுக்குள்…

0

இவ்வளவு பெரிய கப்பலா? இதில் எப்படிப் பயணம் செய்யப் போகிறேன்?‌ அதுவும் இரண்டு ஆண்டுகள்! அடிக்கடி வரும் தலைச்சுற்றலை என்ன செய்வது? அதைக்கூடச் சமாளித்து விடலாம். அந்த வயிற்றுவலியை நினைத்தால்தான்…!

இல்லை. நான் கப்பலேறப் போவதில்லை.

நான் என்ன ஏறுவது? அவர்களே என்னைத் தகுதி நீக்கம் செய்து விடுவார்கள். என்னைப்போன்ற ஒரு நோஞ்சானைக் கப்பலில் சேர்த்துக் கொள்வார்களா என்ன?

ஒருவேளை சேர்த்துக்கொண்டால்?

சார்லஸ் டார்வினுக்கு பதற்றம் அதிகமானது. இதயம் படபடத்தது. உடலெங்கும் வியர்வை முத்துக்கள் முளைத்தன.

ஆனால் இது ஓர் அரிய வாய்ப்பு‌! எல்லோருக்கும் கிடைத்து விடாதல்லவா?

என்ன செய்யலாம்?

குழப்பமான இந்த மனநிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் துடித்தார் டார்வின்.

நண்பர்கள் பலரிடமும் இதைப்பற்றிப் பேசினார். நீண்ட யோசனைக்குப் பிறகே தீர்க்கமான அந்த முடிவை எடுத்தார்.

‘புறப்படலாம்…’

1831. டிசம்பர் 27.

ஹெச்.எம்.எஸ். பீகிள் எனும் பெயர் கொண்ட அந்தக் கப்பல், இங்கிலாந்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தது. அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தன்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கப் போகும் பயணம் இதுவென்பது.

ஆம். பீகிள் அனுபவங்களைக் கொண்டுதான், ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘உயிரினங்களின் தோற்றம்’ புத்தகத்தை எழுதினார் டார்வின்.

இரண்டு ஆண்டுகள் என ஆரம்பித்து, மொத்தம் ஐந்து ஆண்டுகள் (1831-1836) நீடித்தது பீகிள் பயணம்.

ஆனால் பதற்ற நோயாளி என அறியப்படும் டார்வினால் இத்தனை ஆண்டுகள் எப்படிக் கடலில் பயணம் செய்ய முடிந்தது? உண்மையில் டார்வினுக்குப் பதற்ற நோய் இருந்ததா?

விடை தெரிய டார்வினின் இளமைக் காலம் நோக்கிப் பயணிக்க வேண்டும்.

0

சார்லஸ் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள ஷ்ரூஸ்பரி எனும் ஊரில் பிறந்தார். டார்வினின் தந்தை, ஒரு மருத்துவர்‌.

தந்தையின் தந்தையும் மருத்துவரே. வசதியான குடும்பத்தில் பிறந்த டார்வின், ஒன்பது வயதில் தாயைப் பறிகொடுக்கிறார். எனவே அவருக்கு எல்லாமுமாய் இருந்தவர்கள், உடன்பிறந்த சகோதரிகள் மட்டுமே.

படிப்பில் சுமார் ரகம். விளையாட்டில் பூஜ்ஜியம். இசை? இரைச்சல். ஓவியமா? அப்படியென்றால்? இப்படித்தான் பள்ளிக்காலம் ஓடியது.

தந்தையின் ஆசைப்படி மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அங்கே ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைப்பார்த்த டார்வின், ‘ரத்தம் ரத்தம்…’ என அலறி அடித்துக்கொண்டே ஓடி விட்டார். அத்தோடு டார்வினின் மருத்துவப் படிப்புக்கு சுபம் போடப்பட்டது. ‘எனக்கு மனுசங்க ரத்தம் பாத்தாதான் பயம். மத்தபடி ஐ லவ் ஹண்ட்டிங்…’ எனக் கண்ணில் படும் விலங்குகளை எல்லாம் வேட்டையாடினார் டார்வின்.

வேட்டையாடிய விலங்குகளை ஆராய்ச்சி செய்வதிலும், அவற்றைப் பதப்படுத்துவதிலும் நேரத்தைச் செலவிட்டார்.

படிக்கும் வயதில் இப்படியெல்லாம் செய்தால் யார் தான் அவரை மதிப்பார்கள்? குடும்பத்தின் மத்தியில் ‘உதவாக்கரை’ என்ற இமேஜே டார்வினுக்கு இருந்தது.

ஆனால் உலகின் தலைசிறந்த இயற்கை ஆர்வலராகக் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறிக் கொண்டிருந்தார் டார்வின். கிட்டத்தட்ட இந்த நேரத்தில்தான் டார்வினுக்கு பீகிள் பயண வாய்ப்பும் கிடைத்தது.

கடற்கரைத் தீவுகளை ஆய்வு செய்யவும், கடல்வழிப் போக்குவரத்து குறித்த முழுமையான பாதையைக் கண்டறியவும் ஆய்வுக் குழு ஒன்றை ஏற்பாடு செய்தது இங்கிலாந்து அரசு. அதாவது பல்வேறு துறைகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து, அவர்களைக் கப்பலில் அனுப்புவதுதான் திட்டம். அதில் டார்வினும் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பீகிளில் பயணம் செய்யத் தொடங்கியபோது டார்வினின் வயது என்ன தெரியுமா? வெறும் 22.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் பயணத்தில் டார்வின் செய்த ஆராய்ச்சிகளெல்லாம் தனிக்கதை. இனி நம் கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்.

0

1997இல், ‘Journal of the American Medical Association (JAMA)’ வெளியிட்ட ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையில் டார்வினுக்கு இருந்த மனநலப் பிரச்சினைகள் குறித்து விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

‘பேனிக் அட்டாக் (Panic Attack)’ பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

பதற்றம், குழப்பம், நெஞ்சு படபடப்பு, நடுக்கம் எனச் சொல்லாமல் கொள்ளாமல் சுனாமிபோலத் திடீரென ஒருசேர வரும். சில நிமிடங்களுக்கு நீடிக்கும் இந்த அட்டாக், உயிர் பிரியும் பயத்தைக் கொடுத்துவிடும். ‘சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா…’ என இதனால் பாதிக்கப்படுவோர் நடுங்குவர்‌. இந்த ‘அட்டாக்’குகள் தொடர்ந்து வந்தால் அதுவே பேனிக் டிசார்டர் (Panic Disorder) எனப்படும்.

டார்வினுக்கு இந்த பேனிக் டிசார்டரோடு சேர்ந்து அகோராபோபியா (Agoraphobia) எனும் ‘அச்சம்’ சார்ந்த நோயும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அகோராபோபியாவும் பதற்ற நோயின் ஒரு வகைமைதான். அதாவது கடினமான அல்லது இறுக்கமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடியாமல் போனால் உருவாகும் அதீத பயம்.

இதனாலேயே இந்நோயால் பாதிக்கப்படுவோர் வெளியே செல்வதற்கு அஞ்சுவார்கள். மற்றவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக மாட்டார்கள்.

கூட்டத்தைக் கண்டால் பயம், தனியாக இருந்தால் பயம், லிஃப்ட் ஏறினால் பயம், லிஃப்ட் இறங்கினால் பயம்…(தெனாலி கமல் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!)

டார்வின், தன்னுடைய மருத்துவப் பிரச்சினைகளைச் சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார்‌. அன்றாடம் அவருக்கு ஏற்படும் உடல் உபாதைகளை ஒரு டைரியில் எழுதி வைப்பது அவருடைய வழக்கமாக இருந்திருக்கிறது. அதுவே அவருக்கிருந்த பிரச்னைகள் குறித்த ஆதாரமாக இப்போது இருக்கிறது.

உதாரணத்திற்குச் சில வரிகள்:

‘என்னுடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. என்னுடைய கைகள் நடுங்குகின்றன. என்னுடைய தலை அடிக்கடி சுற்றிச் சுழல்கிறது…’

‘என்னால் உடலையும் மனதையும் என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. இரண்டுமே நான் சொல்வதைக் கேட்க மறுக்கின்றன…’

டார்வின் தன்னுடைய நெருங்கிய நண்பரான ஜோசப் ஹூக்கருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘தொடர்ச்சியான தாக்குதல்கள், என் வாழ்க்கையில் தாங்க முடியாத தொந்தரவாக இருக்கின்றன. என்னுடைய எல்லா வேலைகளையும் இவை நிறுத்துகின்றன…’

இதன் மூலம் டார்வினுக்கு இருந்த பதற்ற நோயின் தீவிரம் குறித்து அறிய முடிகிறது. இதில் ‘தாக்குதல்கள்’ என பேனிக் அட்டாக்கைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கக் கூடும்.

டார்வின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய ஆசானாக இருந்தவர் பேராசிரியர் ஹென்ஸ்லோ‌ (John Stevens Henslow). சொல்லப்போனால் அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் பீகிள் பயணத்தையே மேற்கொண்டார் டார்வின். ஹென்ஸ்லோவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த டார்வின், ‘எனக்குச் சமீப காலமாக உடல்நிலை சரியில்லை. இதயத் துடிப்பு அதிகமாக இருக்கிறது. அடிக்கடி வயிறு வலியும் உண்டாகிறது…’ எனக் கடிதம் எழுதியிருக்கிறார். இதையே காரணமாக வைத்து, புவியியல் துறையில் தனக்கு வழங்கப்பட்ட கௌரவப் பொறுப்பு ஒன்றையும் நிராகரித்திருக்கிறார் டார்வின்.

0

1859ஆம் ஆண்டு, தன்னுடைய கோட்பாடுகளை எல்லாம் தொகுத்து ‘The Origin of Species’ புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். அதுவரை, ‘கடவுள்தான் எல்லா உயிரினங்களையும் படைத்தார்…’ என்று நம்பி வந்த மக்களுக்கு அப்புத்தகம் அதிர்ச்சி குண்டை வீசியது.

‘உலகில் இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு மூதாதையர் மட்டுமே இருந்திருக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் வெவ்வேறு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கின்றன…’ என்கிற அறிவியல் கோட்பாட்டை மதவாதிகள் எதிர்த்தனர்.

‘படைப்புக் கொள்கை’ ஒருபக்கம், ‘பரிணாமக் கொள்கை’ ஒருபக்கம் என இரண்டு அணிகள் உருவாகின. படைப்புக் கொள்கைவாதிகள், பல்வேறு வகைகளில் டார்வினுக்கு அழுத்தத்தைக் கொடுத்தார்கள். எல்லா விமர்சனங்களையும் எதிர்கொண்டார் டார்வின், சிறிது பதற்றத்துடன்!

டார்வின் தன்னுடைய இறுதி நாட்களை, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு சிறிய கிராமத்தில்தான் கழித்தார். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருடைய மனைவியே அவருக்கு உறுதுணையாக இருந்தார். தனிமை விரும்பியான அவர், என்றுமே கூட்டத்தோடு கலந்ததில்லை. கடைசி வரையில் ஏதாவது ஓர் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருந்தார்.

உயிரினங்களின் தோற்றம் பற்றி உலகுக்குச் சொன்ன டார்வின், ஏப்ரல் 19 1882இல் மறைந்தார். ஐசக் நியூட்டனின் சமாதிக்குச் சில அடி தூரத்தில் டார்வினின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

0

2025இல் இருக்கிறோம். இன்றும் மனப்பிறழ்வுக்குச் சாமியாரிடம் போகும் கூட்டம்தான் இங்கே அதிகம். எனில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த உலகைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மூடநம்பிக்கைகளுக்குள் மூங்கி நீச்சலடித்துக் கொண்டிருந்த காலம் அது.

‘உலகை உருவாக்கியவர் கடவுள்…’ என்கிற எண்ணம்தான் அப்போது எல்லோரிடமும் இருந்தது. அந்த நேரத்தில் இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்க எவ்வளவு மன தைரியம் வேண்டியிருக்கும்?

ஆம்…அதை‌ வெளியிட டார்வின் தயங்கினார்தான். பல வருடங்களாக அவருடைய கோட்பாடுகள் பூட்டிய பெட்டிக்குள் பதுங்கிக்கொண்டுதான் இருந்தன. இருந்தும் இப்பேர்ப்பட்ட ஒரு கருத்தைப் பதற்ற நோயாளி என அறியப்படும் டார்வின்தானே உலகிற்கு அழுத்தமாக எடுத்துரைத்தார்?

சரி, விஷயத்திற்கு வருவோம். பதற்ற நோயும், அச்ச நோயும் கொண்ட ஒருவனால் இதெல்லாம் சாத்தியம் தானா?

இதுதான் டார்வினின் உளவியல் பிரச்னைகள் குறித்த கட்டுரைகளை வாசித்தபோது எனக்குத் தோன்றியது.

பீகிள் பயணத்தின்போது பல்வேறு உடல் உபாதைகளை அனுபவத்தார் டார்வின். ஆனால் அவையெல்லாம் கடலுக்குள் செல்லும் யாருக்கும் ஏற்படக்கூடியதே. வயிறு வலி, தலைச்சுற்றல் போன்ற பயண ஒவ்வாமைதான் டார்வினுக்கு இருந்திருக்கிறதே தவிர பதற்ற நோய் பற்றிய விரிவான குறிப்புகள் ஏதும் இல்லை. அவையெல்லாம் பீகிள் பயணம் முடிந்த பிறகே டார்வினுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எது எப்படியோ, டார்வினின் ஒப்பற்ற வாழ்க்கையைப் படித்தபோது அவருக்கு இருந்ததாகச் சொல்லப்படும் பதற்ற நோய் குறித்து எவ்விதமான முடிவுக்கும் என்னால் வரமுடியவில்லை.

உலகமே எதிர்க்கும் எனத் தெரிந்தும் தன்னுடைய ஆய்வுகளை எவ்வித தயக்கமும் இன்றி மாபெரும் புரட்சி செய்த டார்வினை ‘பதற்ற நோயாளி’ என்று என்னால் சுருக்கிவிட முடியவில்லை.

அடுத்த வாரம், வேறொரு பிரபலத்தை ஆராயலாம்.

(தொடரும்)

The post பிரபலங்களின் உளவியல் #1 – சார்லஸ் டார்வின் appeared first on கிழக்கு டுடே.

  •  

அறிவியல் பேசலாம் # 2 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 2

மனிதப் பரிமாணம் ஏன் தாமதமாக நிகழ்கிறது?

மரபணு நோய்களுக்கு இந்தியாவில் சொந்தத்திற்குள் நடைபெறும் திருமணம் முக்கியக் காரணமா?

ஆம். சொந்தத்திற்குள் இல்லாவிட்டாலும் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் சில இடங்களில் மறைமுகமாகக் குடும்பத்தாருக்கு மரபியல் நோய்கள் இருப்பதைச் சொல்லாமலேயே திருமணம் செய்துவிடுகிறார்கள். சில விநோத வழக்குகளும் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து இரண்டு பேர் காதல் திருமணம் செய்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேருடைய மரபணுக்களுமே வெவ்வேறானவை. ஆனால் குழந்தைக்கு Recessive Disorder எனும் குறைபாடு இருக்கிறது. அந்தக் குறைபாடு பொதுவாகச் சொந்தத்துக்குள் திருமணம் செய்தால் மட்டுமே வரக்கூடியது. இதுவெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.

மரபியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கச் சிறப்பு பள்ளிகள் இருக்கின்றனவா?

இருக்கிறது. சென்னையிலேயே இருக்கிறது. ஆட்டிசம் போன்றவைக்குப் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் மரபியல் குறைபாடு உள்ளவர்களைப் பெரும்பாலும் பள்ளிகளில் சேர்த்துக்கொள்வதில்லை. எனது வீட்டின் அருகே இரண்டு சிறுவர்களுக்கு ஆட்டிசம் இருக்கிறது. இருவரையும் எந்தப் பள்ளிகளும் சேர்த்துக்கொள்ளவில்லை. அதேபோல வீட்டு உரிமையாளர்களும் வாடகைக்கு வீடு தர அனுமதிக்க மறுக்கிறார்கள்.

மரபியல் குறைபாடுகள் ஏற்படச் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவு பங்கு இருக்கிறது?

புற்றுநோய்களை எடுத்துக்கொள்வோம். 90-95% புற்றுநோய்கள் திடீர் பிறழ்வுகளால் வருபவை. 5-10% மட்டும்தான் பெற்றோர்களிடம் இருந்து வருபவை. இதில் இரண்டு வகை உண்டு. பொதுவாகப் பெற்றோர்களிடம் இருந்து நம் உடலுக்கு இரண்டு மரபணு வேறுபாடுகள் (Allele) வரும். அவற்றில் சிலவகை மரபணுக்களில் ஒன்று மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் நமக்கு நோய் வராது. இன்னொன்றும் பாதிக்கப்பட்டால்தான் நோய் வரும். இது முதல் வகை. இரண்டாம் வகை, சில குறிப்பிட்ட மரபணுக்களில் ஒரு மரபணு வேறுபாடு பாதிக்கப்பட்டாலே நோய் வரும்.

பிரச்னை என்னவென்றால் நாம் அதிகம் வேதிப்பொருட்களை எடுக்கிறோம். மாசு இருக்கிறது. இதில் எல்லாம் கார்சினோஜென் (Carcinogen) எனும் வேதிப்பொருள் அதிகம் இருக்கிறது. இவற்றை நாம் நுகர நேரும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. இதுதான் வாழ்வியல் புற்றுநோயை உருவாக்குகிறது. அதேபோல மைதா அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் கணையம் அடிவாங்கும். இன்சுலின் சுரத்தலில் மாறுபாடு ஏற்படும்.

மரபணுப் பிறழ்வுகளுகள் பிறப்பின்போது வருபவையா, சுற்றுச்சூழலால் ஏற்படுபவையா? எது ஆதிக்கம் செலுத்துகிறது? டார்வினின் கூற்றுப்படி பிறழ்வுகள் அனைத்தும் தன்னிச்சையாக நடைபெறுபவை. அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. அதில் எவை எல்லாம் பிழைத்திருக்க பயன் தருகிறதோ அவை மட்டும் நீடிக்கும். பிழைத்திருக்க பயன் தராத மாற்றம் நீக்கப்பட்டுவிடும். சரியா? ஆனால் நீங்களோ சூழலுக்கு ஏற்றவாறுதான் மாற்றம் அடைகிறது என்கிறீர்களே!

நீங்கள் சொல்வது சரிதான். அதேசமயம் நாம் எந்த அளவுக்குச் சூழலை வேகமாக மாற்றுகிறோம் என்பதும் இருக்கிறது. இரண்டும் ஒன்றை ஒன்று பாதிக்கிறது. நாம் தொழில்நுட்பத்தில் அதிகம் மாறுதலடைகிறோம். இதன்மூலம் சூழலை வேகமாக மாற்றுகிறோம். இதற்கு ஏற்றவாறு நம் உடலும் மாறுகிறது. பரிணாம மாற்றம் என்பது நேர்கோட்டில் நடைபெறாது. சுழற்சி முறையில் இயங்கக்கூடியது.

பொதுவாக மனித உடலில் ஏற்படும் மரபணு பிறழ்வுகள் தானாகப் போய்விடுமா அல்லது அதற்கு ஏற்றாற்போல் நாம் மாறிவிடுவோமா என்கிற கேள்வி இருக்கிறது.

இயற்கையாகவே சில குறைபாடுகள் நீங்கிவிடும். தொடராது. பொதுவாக 5-6 தலைமுறையிலேயே ஒரு மரபியல் நோய் போய்விடும். 2-3 தலைமுறை வேண்டுமானால் இருக்கலாம். அதற்கு மேல் அந்த Allele பிழைக்காது.

இதற்கு என்ன காரணம் எனக் கருதுகிறீர்கள்?

எதிர் மரபியல் பிறழ்வு (Counter Mutation). மனிதனின் வாழ்வியல், உணவு, சுற்றுச்சூழலை மையப்படுத்தி எதிர் மரபியல் பிறழ்வு நடைபெறும் அல்லவா? அதனால்கூட அவை போய்விடலாம் என இப்போதைய தரவுகளை வைத்து நாம் சொல்லிவிட முடியும்.

நாம் ஒரு பிறழ்வைத் தூண்டுகிறோம். இயற்கை கண்டிப்பாக ஒரு எதிர் பிறழ்வைத் தூண்டும். காரணம், இயற்கை என்பதே சமநிலைதானே? இயற்கை பிழைத்திருப்பதற்காக இதைச் செய்கிறது. இந்த எதிர் பிறழ்வு என்ன என்பது நமக்குத் தெரியாது. அதோட விளைவுகளும் நமக்குத் தெரியாது.

அதனால்தான் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களை (GMO) நம்மால் தார்மீக நெறியின் காரணமாக அனுமதிக்க இயலாது. நம்மால் இயற்கையில் இருந்து வெளிவந்து எதையும் செய்ய முடியாது. எந்தப் பிறழ்வுகளைத் தர வேண்டும் என்பது இயற்கையிடம்தான் இருக்கிறது.

ஆனால் இயற்கை எதையும் திட்டமிட்டு செய்வதில்லைதானே?

நாம் இன்னும் அதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒருவிஷயம் திட்டமிட்டு நடைபெறவில்லை என்றால் நாம் எப்படி Lactose Tolerantஆக இருக்க முடியும்.

அதாவது நம்மால் பாலில் உள்ள லேக்டோஸை கிரகிக்க முடியும். ஆனால் எல்லோருக்கும் அப்படிக் கிடையாது. பெரும்பாலும் ஐரோப்பிய மக்கள்தான் லேக்டோஸை முழுமையாகக் கிரகிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு (இந்தியர்கள் உட்பட) இன்னும் பால் ஆகாத விஷயம்தான். குழந்தையாக இருக்கும் வரைதான் நம்மால் பாலை எடுத்துக்கொள்ளமுடியும். இந்தத் பாலை ஜீரணிக்கும் தன்மை நமக்கு வந்ததற்குக் காரணம் மரபணுப் பிறழ்வு. ஆனால் இது எப்படித் தன்னிச்சையாக நடைபெற்றிருக்க முடியும்?

அது தன்னிச்சையாக இருக்க வாய்ப்பில்லை. அது தன்னிச்சையாக இருந்தால் சூழல் சார்ந்த, சுற்றுச்சூழலை அடிப்படையாக கொண்ட மரபணுக்கள் (genepool) நம்மிடம் இருக்காது. டார்வின் இருந்த காலகட்டத்தில் அந்தப் புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட புற்றுநோய் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எப்படிப் பரவுகிறது என்பதற்கு அவை தன்னிச்சையாகப் பரவுகிறது என்று சொன்னார்கள். எங்கெல்லாம் புற்றுநோய் செல்கள் போகின்றனவோ அங்கெல்லாம் இரண்டாம்நிலை கட்டிகள் வரும் என்பதுதான் முதலில் சொன்னது.

ஆனால் இப்போது Seed and soil எனும் கோட்பாடு சொல்லப்படுகிறது. இதன்படி எங்கு புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான போஷாக்குகள் இருக்கிறதோ அங்குதான் புற்றுநோய்கள் வரும். அதுபோல மரபணுக்கள் மாற்றமும் தன்னிச்சையாக நடைபெறாது என்பது என் கருத்து.

அப்படியென்றால் இயற்கை, சூழல் இரண்டுக்குமே சமமான பங்கிருக்கிறது என்று சொல்லலாமா? இயற்கையாகவும் நிகழலாம். சூழலும் பாதிக்கலாம். அப்படி எடுத்துக்கொள்ளலாமா?

குறிப்பிட்ட மக்கள் மட்டும் லேக்டோஸ் டாலரெண்டாக எப்படி மாறினோம்? இந்த மாற்றம் வேறொங்கும் நடைபெறவில்லைதானே? எத்தியோப்பியர்கள், திபெத்தியர்களுக்கு மட்டும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை ஏன் அதிகம் இருக்க வேண்டும்? அப்போது அது திட்டமிட்டதுதானே? இங்குமட்டும் அது நடக்கவேண்டும் எனத் திட்டமிட்டு நடத்தியதுதானே?

வைட்டமின் சி நமது உடலில் சுரக்காது. மனிதன் இறைச்சி சாப்பிட்ட வரை வைட்டமின் சி நமது உடலிலேயே சுரந்தது. நாம் என்றைக்குக் காய்கறி சாப்பிட ஆரம்பித்தோமோ அப்போதே உடலில் வைட்டமின் சி அளவு குறைந்துவிட்டது. இப்போது நாம் வெளியில் இருந்துதான் வைட்டமின் சி-ஐ எடுக்க முடியும். இது பரிணாம மாற்றம்.

இதுவே ஆடுகளை எடுத்துக்கொண்டால் அவையும் தாவரப் பட்சிணிதான். ஆனால் அவற்றின் உடம்பில் வைட்டமின் சி இன்னும் சுரக்கிறது. நமக்கு அந்தப் பண்பு போயிருந்தால் ஆட்டுக்கும் போயிருக்க வேண்டும்தானே?

அது ஏன் ஆகவில்லை? காரணம் ஆடு, பஞ்சத்தில் வாழக்கூடிய மிருகம் எனச் சொல்லலாம். எல்லா நேரத்திலும் அதற்குப் போதிய வைட்டமின் சி கிடைக்காது என்பதால் இயற்கை அதைத் தக்க வைத்துள்ளது. அப்படி என்றால் இவை தன்னிச்சையாக நடைபெறவில்லை என்றுதான் அர்த்தம்.

டார்வின் சொல்வது இயற்கைத் தேர்வு அல்லவா? தகுதி வாய்ந்த பண்பை மட்டும் இயற்கை தக்க வைத்துக்கொள்கிறது. மற்றவை நீக்கப்படுகிறது. அது வாழ்வதற்கான சூழல் இல்லாததால் அழிந்துவிடுகிறது. அதனால் தகுதியுள்ளவை மட்டும் அடுத்த தலைமுறைக்கும் பிழைக்கிறது அல்லவா? அதுபோல அந்தத் தன்மை பிழைத்திருக்கலாம்.

இதை ஒரு தவளைக்கோ எலிக்கோ பொருத்திப் பார்க்கலாம். காரணம், அவற்றின் இனப்பெருக்க எண்ணிக்கை அதிகம். ஆனால் மனிதர்களுக்கு எப்படிப் பொறுத்திப் பார்க்க முடியும்?

உயிரினங்களில் கீழே செல்லச் செல்ல மரபணுக்கள் பிறழ்வு அடையும் வேகம் அதிகரிக்கிறது. மேலே செல்லச் செல்லப் பிறழ்வு அடையும் எண்ணிக்கை குறைகிறது. அதனால்தான் நாம் பரிணாம மாற்றம் அடைய லட்ச வருடங்கள் எடுக்கிறது. ஒரு கொசு பரிணாமம் அடைய சில நாட்களே போதும்.

இன்னொரு விஷயம் டி.என்.ஏவில் எக்ஸான்ஸ் (Exons), இன்ட்ரான்ஸ் (Introns) என இரு பிரிவுகள் இருக்கின்றன. எக்ஸானில்தான் எழுதப்பட்ட தகவல் (குறியீட்டுத் தகவல்) இருக்கும் (Coding Part). இன்ட்ரானில் இருப்பது எழுதப்படாத தகவல்கள். நம் உடலில் நடைபெறும் அதிகமான மாற்றங்கள் இன்ட்ரானில்தான் நடைபெறுகின்றன. அதனால்தான் நாம் உடலை எப்படிக் கெடுத்துக்கொண்டாலும். அதாவது குடித்தாலும் வேறுவிதமான சீர்கேட்டில் ஈடுபட்டாலும் நாம் இன்னுமே ஆரோக்கியமான தலைமுறையைக் கொண்டிருக்கிறோம். எக்ஸானோடு ஒப்பிடும்போது இன்ட்ரானின் பங்குதான் அதிகம்.

ஒருவேளை எக்ஸானில் நடந்தால் என்ன ஆகும்? எக்ஸானில்தான் நம் உடல் எப்படி இயங்க வேண்டும் என்கிற தகவல் எழுதப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களை அடிப்படையாக கொண்டுதான் புரதங்கள் உடலில் உருவாகும். புரதம் மூலமாக செல்கள் உருவாகி உடல் இயங்குகிறது. எக்ஸான் அடிவாங்கினால் மொத்தமும் முடிந்தது கதை.

அதிர்ஷ்டவசமாக இன்ட்ரான்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது என்பதால் நாம் சாதாரண வாழ்க்கையை வாழ முடிகிறது. இல்லையென்றால் நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களுக்கு, சாப்பிடும் உணவுக்கு எல்லோருக்கும் புற்றுநோய் வந்திருக்க வேண்டும். ஆனாலும் சிலருக்குப் புற்றுநோய் வருவதற்கு எக்ஸானிலும் பிறழ்வு நடைபெற வாய்ப்புள்ளது என்பதுதான் காரணம்.

இதுவே பரிணாம மரத்தின்கீழ் பகுதியில் உள்ள உயிரினங்களை எடுத்துக்கொள்வோம். அவற்றின் மரபணுத் தொகுப்பே சிறியது. இதனால் பிறழ்வு எக்ஸானில்தான் நடந்தாக வேண்டும். அதனால் பரிணாம மாற்றமும் ஜாஸ்தியாக இருக்கிறது.

மனித உடலில் 2 சதவிகிதம் ஜீனோம்தான் (குறியீடு) எழுதப்பட்ட பகுதி என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மீதம் 98 சதவிகிதம் எதற்கு இருக்கிறது என்றே தெரியாது. அதாவது 98 சதவிகிதம் எதற்கானது என்பதை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதை நாம் கண்டுபிடித்தோம் என்றால் ஒரு விடை கிடைக்கலாம்.

நாம் தாமதமாகப் பரிணாமம் அடைவதற்கு மற்றொரு காரணம், நாம் டி.என்.ஏவை வெளியில் இருந்து எடுக்க மாட்டோம். ஆனால் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் அவற்றைச் செய்யும்.

பாக்டீரியா போன்ற உயிரிகள் சுற்றுச்சூழலில் இருக்கும் டி.என்.ஏவை எடுத்து தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் அவை வேகமாகப் பரிணாம மாற்றம் அடைகின்றன. இவற்றை Horizontal Gene Transfer என்கிறோம்.

ஆனால் நம்மால் அப்படிச் செய்ய முடியாது. நாம் தலைமுறை தலைமுறையாகத்தான் டிஎன்ஏவைக் கடத்த முடியும். இதனை Vertical Gene Transfer என்கிறோம். இதுவும் நாம் பரிணாம மாற்றம் அடைவதற்குத் தாமதம் ஏற்பட காரணம். இதனாலும் மனிதப் பரிணாம மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதை முழுமையாக நாம் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறோம்.

இன்றைய தம்பதிகளுக்குக் கர்ப்பம் தரிக்கும் தன்மை குறைவதற்கு மரபணுப் பிறழ்வு காரணமா?

பொதுவாகவே கருத்தரிக்கும் தன்மை ஆண், பெண் இருவருக்கும் இருக்கும். ஸ்வயர் சிண்ட்ரோம் போன்ற சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு கிட்டாது. அதற்கான வாய்ப்பு குறைவு. XXX சிண்ட்ரோம் போன்று அந்த உறுப்பே வளராமல் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு குறைவு. அவர்களைதான் sterile என்று சொல்ல முடியும். மற்றவர்களுக்குக் கருவுறச் சில காரணங்கள் இருக்குமல்லவா? அந்தக் காரணங்களில் ஏதோ பிரச்னை என எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில் ஃபோலிக் ஆசிட் பலருக்கு இருப்பதில்லை என்கிறார்கள். ஆனால் இது மரபணுப் பிறழ்வால் வந்த பிரச்னை கிடையாது. சாதாரண ஊட்டச்சத்து குறைப்பாடுதான். இதுபோன்ற பொது சுகாதாரம் சார்ந்த காரணங்களே அதிகம் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்குக் காரணம். மரபணுக்கள் அல்ல.

அதேபோல பெண்களுக்கு அவர்கள் குழந்தையாக அம்மா வயிற்றுக்குள் இருக்கும்போதே கருமுட்டை தயாராகிவிடுகிறது. 25 வயதில் அந்தப் பெண் குழந்தைக்காகத் திட்டமிடும் பட்சத்தில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அந்த முட்டை அவர்களுக்குள் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் சாப்பிடும் எல்லா விஷயங்களும் உடலுக்குள் சேகரிக்கப்படும் இல்லையா? வயதாக வயதாக நிறையக் கசடுகள் சேகரிக்கப்படும்போது ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

அதற்காக 35 வயதுக்கு மேல் எல்லோருக்கும் குழந்தை பிறக்காது, ஆரோக்கியமாக இருக்காது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மரபியலில் நிகழ்சாத்தியங்கள்தான் (Probability) அதிகம். முழு பதில் கிடையாது.

மனிதர்களுக்கு Y குரோமோசோம் குறுகிக்கொண்டு வருவதாகச் சொன்னீர்கள். இதை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

மனிதர்களிடையே ஆண் பாலினத்தை உருவாக்குவது Y குரோமோசோம்தான். அது சமீபத்தில் குறுகி வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அது உடனடியாக நடக்கும் காரியம் அல்ல. பல லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.

Y குரோமோசோம் இல்லாமல்போய்விட்டால் என்னவாகும்? இயற்கைக்கு ஆணே தேவை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி முழுமையாகச் சொல்லிவிட முடியாது. வேறு எதாவது மாற்றம் வரலாம். சொல்லப்போனால் Y குரோமோசோமே பெண்ணின் X குரோமோசோமில் இருந்து வந்ததுதானே.

Y குரோமோசோம் மறைந்தால் மனிதர்கள் அல்பாலீர்ப்பு (Asexual) கொண்டவர்களாக மாற வாய்ப்பிருக்கிறதா?

அப்படி ஆகவும் வாய்ப்பிருக்கிறது. இல்லை அர்த்தநாதிஸ்வரர் மாதிரி, ஆணும் நானே பெண்ணும் நானே என்றும் ஆகலாம். எதையும் நம்மால் ஊகிக்க முடியாது.

மரபியலில் வெறும் நோய்கள் சம்பந்த ஆய்வுகள் மட்டும்தான் இருக்கிறதா?

இந்தத் துறையில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு மற்ற துறையில் இருப்பதுபோன்று அதிகம் ஆய்வுகள் கிடையாது. தரவுகள் கிடையாது. இருக்கக்கூடிய தரவுகள் ஒரு நூற்றாண்டிற்கு உட்பட்டவை.

ஜனத்தொகையும் ஒரு பிரச்னை. தமிழ்நாடு என்றால் எல்லோரிடமும் தரவுகள் எடுக்க முடியாது. அவர்களாகத் தன்னார்வம் கொண்டு வந்தால் மட்டும்தான் எடுக்க முடியும். உதாரணமாக மூன்று பேர் மட்டும்தான் கிடைத்தார்கள் என்றால் அவர்களிடம் கவனிக்கும் மாறுபாடுகள், மரபணுப் பிறழ்வுகளை மட்டுமே நாம் பதிவு செய்ய முடியும்.

மரபியலில் ஆய்வு மிக மிகக் குறைவு. அதற்கான நிதி ஒதுக்கீடும் குறைவு. நான் இந்திய அளவில் சொல்லவில்லை. உலக அளவில் சொல்கிறேன். முதலில் புற்றுநோய்க்கு எப்படி நிதி வந்தது தெரியுமா? அமெரிக்காவில் ஆல்பர்ட் லாஸ்கர் என்னும் தொழிலதிபருக்கு புற்றுநோய் வந்தது, அதன் பிறகுதான் அவரது மனைவி மேரி லாஸ்கர் நீதிமன்றங்களில் வாதாடி இந்த நோய்க்கான ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்து 1971, புற்றுநோய்க்கான தனிச் சட்டத்தை (National Act of Cancer, 1971) இயற்ற முக்கியக் காரணமாக இருந்தார். இது தவிர லாஸ்கர் அறக்கட்டளை மூலம் மருத்துவ ஆய்வுகளுக்காக நிதியுதவியும் விருதுகளும் வழங்கினார். அதன்பிறகு புற்றுநோய் ஆய்வுக்கான நிதி அமெரிக்காவில் அதிகமாகியது. பிறகுதான் மற்ற நாடுகளுக்கு நிதி கிடைத்தது.

அப்போது புற்றுநோய் மிக அரிதாக இருக்கக்கூடிய நோய். ஆனால் இப்போது அப்படிக் கிடையாது. சராசரியாக பத்து பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறது. மேலும், மரபியல் ஆய்வுக்குத் தம்மை உட்படுத்த முன்வரமாட்டேன் என்கிறார்கள். நாம் கேட்டால் யாரும் வருவதில்லை. அவர்கள் அனுமதி அவசியம் என்பதால் நம்மால் எதையும் செய்ய முடியாது. அதுமட்டுமில்லாமல் பல சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. ஆய்வுக்குக் கிடைக்கும் மாதிரிகளும் மிகக் குறைவாக இருக்கிறது. நாம் மரபியல் படிப்பில் 5-6 நாள் ஆகக்கூடிய நாட்டுக்கோழி முட்டையை ஆராய என்றால்க்கூட அனுமதி வாங்க வேண்டும்.

இயற்கையோடு வாழ்தல் என்றால் என்ன? நாம் இயற்கையைத் துண்டித்துவிட்டு வாழ்வதுதான் நோய்கள் ஏற்பட பிரச்னையே எனப் பலரும் சொல்கிறார்களே?

இயற்கை என்பது ஒரு செயல்பாடு. அதைப் பெரும்பாலானோர்கள் புரிந்துகொள்வதில்லை. அந்த இயற்கைச் செயல்பாடுக்கு ஒருங்கிணைந்து வாழ்வதே இயற்கையோடு வாழ்தல். ஆனால் கலாசாரக் காவலர்கள் சொல்வதுபோல் இயற்கையோடு வாழ்தல் என்பது மலை, வயல், காடு, ஆடு, மாடு ஆகியவற்றுடன் மட்டுமே வாழ்வது அல்ல. அப்படிப் பார்த்தால் அவர்களுக்கு வளர்ச்சியே கூடாது. தகவமைத்துக்கொள்ளும் செயல்பாடுதான் (Process of Adaptation) இயற்கை. இன்னொன்று சமநிலை. எங்கெல்லாம் சமநிலை குறைகிறதோ அங்கெல்லாம் இயற்கை ஒரு அதீத முயற்சி எடுக்கும். அப்போது சமநிலை சரிசமமாகும்.

சிலர் கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை இருப்பதைக்கூட இயற்கை என்று சொல்கிறார்களே. அது இயற்கை, சமநிலையை ஏற்படுத்த செய்யும் செயலாக எடுத்துக்கொள்வது சரியா?

எல்லா இடங்களிலும் அப்படி சொல்ல முடியாது. சில இடங்களில் கரு தானாக கலைந்துவிடும். இதற்குக் காரணம் குரோமோசோம்களின் எண்ணிக்கையாக இருக்கலாம். இதனை Ploidy என்பார்கள். குரோமோசோம் எண்ணிக்கையில் இடறுகள் ஏற்பட்டால் (இரட்டித்தல், மும்மடங்காதல்) அது பிழைக்கவே பிழைக்காது. IVF-ல் கூட. இதை நாம் என்ன செய்தாலும் கருவை உண்டாக்க முடியாது. ஆனால் அதற்காக IVF செய்பவர்களை எல்லாம் இயற்கைக்கு எதிரானவர்கள் எனக் குற்றம்சாட்டுவது தவறு.

இந்த ஐவிஎஃப் முறையில் ஆண்கள், பெண்கள் எந்த வகை பாதிப்பை உணர்கிறார்கள்?

பொதுவாக ஆண்களுக்கு பெரிய பாதிப்புகள் கிடையாது. ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. Super Ovalution என ஒரு செயல்பாடு இருக்கிறது. மிகவும் வலி மிகுந்தது. வழக்கமான மாதவிடாயின்போது ஒரு முட்டை வெளிவரும். ஆனால் இந்த சூப்பர் ஓவலியூஷனில் 6,7,…12 முட்டை வரை ஒரே நேரத்தில் வெளிவர வைப்பார்கள். அதைத்தான் சேகரித்து வைப்பார்கள். மாதம் ஒருமுறை ஒரு முட்டை வரும்போதே எத்தகைய வலியை பெண்கள் உணர்கிறார்கள். இதுவே சூப்பர் ஓவலியூஷன் என்றால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அவர்கள் மன ஆரோக்கியம் என்னவாக இருக்கும்? உடல் ஆரோக்கியம் என்னவாக இருக்கும்?

ஆனால் ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையாது. ஒருமுறை விந்தணுவை எடுத்தாலே பல லட்சம் விந்தணுக்கள் இருக்கும். பெண்களுக்குத்தான் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதிகமாக எடை போடும். இதில் சிறந்த முட்டையைத் தேர்ந்தெடுத்து, விந்தணுவைச் சேர்க்க விடுவார்கள். பிறகு அதைக் குறிப்பிட்ட செல் பிரிவு நடைபெறும்வரை சோதனை கூடத்தில் வைத்து, பிறகு பெண்கள் உடலில் வைப்பார்கள். அது வெளியில் வராமல் இருக்க தைப்பார்கள். என்ன இருந்தாலும் கருப்பை சூழல் சோதனைக்கூடத்தில் இருக்காது. அதற்கு ஏற்ற வேதிப்பொருட்கள் எதுவும் சுரக்காது. இதனால்தான் ஐவிஎஃப் வெற்றி விகிதம் குறைவாக இருக்கிறது.

ஐந்து, ஆறு நாள் கருவை சோதனைக்கூடத்தில் வைப்பார்கள் எனச் சொன்னீர்கள். அது சாத்தியமா?

முடியும். அவை செல்கள்தானே.

விந்தணு, கருமுட்டை என்றால் நீங்கள் சொல்வது சரி. அவை செல்கள். ஆனால் கரு வளர்ச்சி என்பது செயல்பாடு அல்லவா? செல் பிரிதல் எனும் செயல்பாட்டை எப்படித் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்?

முடியும். உதாரணம் சொல்கிறேன். புற்றுநோய் பற்றிய ஆய்வுகளில் செல்களைப் பயன்படுத்துவோம். அந்த செல்களை ஹீலா செல்கள் என சொல்வார்கள். அந்த ஹீலா யார் தெரியுமா? 72 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவர். 1951இல் 31 வயதான ஒரு பெண்மணியிடம் இருந்து எடுத்தது. அதைப் பதப்படுத்தி வைத்து இன்றைக்கும் பரிசோதனைகூடங்களில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை வருடம் ஆகிறது என்று பாருங்கள். அதனால் செல் இயக்கத்தை உறைய வைப்பது சாதாரணம்.

அப்படியென்றால் ஒருமுறை உறைய வைத்த செயல்பாடு திரும்பவும் தொடங்குமா?

தொடங்கும். அதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை நேரடியாக தண்ணிரில் உறைய வைக்க முடியாது. செல்கள் உடைந்துவிடும். அது உடையாமல் இருக்க, பாக்டீரியாவாக இருந்தால் கிளிசரால், மனித செல்களாக இருந்தால் அதற்கேற்ற வேதிப்பொருட்களை சேர்த்து உறைய வைப்பார்கள். அப்போது அது கிரிஸ்டாகாது. ஜெல்லி போன்று இருக்கும். அப்படிதான் சேகரிக்க முடியும்.

அதை மீண்டும் இயங்க வைக்க என்ன செய்ய வேண்டும்?

சாதாரண அறை வெப்பத்திற்குக்கொண்டு வந்தாலே போதும். சில நேரங்களில் அதைக் கைகளிலேயே தேய்த்து வெப்பம் உருவாக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது விரைவாக அது இயல்பு நிலைக்கு திரும்பும். இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு கிளிசரால் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, வேறு சில வேதிப்பொருட்களைச் சேர்த்து, விழிக்க வைக்க வேண்டும்.

செல் வாழ்தலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த திரவத்திற்கு மாற்ற வேண்டும். அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய வேண்டும். இல்லை என்றால் செல் இறந்துவிடும். ஆனால் எத்தனை வருடம் கழித்து அதை இயங்க வைக்கிறோம் என்பதும் அவசியம். கருவை உறைய வைக்கும்போது 5-10 ஆண்டுகளில் எடுத்து இயங்க வைத்துவிட்டோம் என்றால் பிரச்னை இல்லை. அதற்கு மேல் ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்பு குறைவு. இரட்டை குழந்தை ஒன்று 30 ஆண்டுகள் கழித்து பிறந்திருக்கிறது. ஆனால் அது போன்ற விஷயங்கள் அரிதானது.

பதப்படுத்திய ஒரு கருவை எடுத்து பல ஆண்டுகள் கழித்து பயன்படுத்தினால் அது காலத்திற்கு ஏற்ற மரபணு மாற்றத்தை அடைந்திருக்குமா?

சில பத்தாண்டுகள் கழித்து எடுத்துப் பயன்படுத்துவதால் பெரிய மாற்றம் எதுவும் வராது.

ஆயிரம் ஆண்டுகளை எடுத்துக்கொள்வோம். மனித இனமே புதிய பண்புகளை பெற்றிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்போது பழைய மாற்றமடையாத தன்மைதானே அந்தக் கருவிற்கு இருக்கும்?

அப்படி இருக்க நேர்ந்தால் அந்தக் கரு முதலில் உருவாகாது. ஆனால் அந்தக் கருவை வைத்து, அந்த விந்தணுவை வைத்து நாம் ஆய்வு செய்துகொள்ளலாம். ஒப்பிட்டுப்பார்க்கலாம். இப்படிப் பலவற்றை ஒப்பிட்டுத்தான் நாம் மனித பரிணாமம் பற்றிய புரிதலைப் பெற்றிருக்கிறோம்.

(தொடரும்)

The post அறிவியல் பேசலாம் # 2 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 2 appeared first on கிழக்கு டுடே.

  •  

இரும்பிலே ஓர் இருதயம்…!

 (2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யாரோ தொட்டு உசுப்பினாற்போல இருந்தது. கண்களைத்...

The post இரும்பிலே ஓர் இருதயம்…! appeared first on சிறுகதைகள்.

  •  

ஒரு டால்ஃபின் பேச ஆரம்பித்த போது

 சாரா மைக்கை கையில் எடுத்துக் கொண்டு அரங்கின் மையத்திற்கு வந்து நின்றாள். லேசாக நடுங்கிய விரல்களால் தன் மேலங்கியை சரி...

The post ஒரு டால்ஃபின் பேச ஆரம்பித்த போது appeared first on சிறுகதைகள்.

  •  

பகிரப்படாத அறிவு கரைந்து காணாமல் போகும்… -பி.அம்பேத்கர்

தமிழில்: வெ. ஸ்ரீஹரன் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ‘டீப் சீக்’ (DeepSeek), அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு  அடிப்படையிலான தொழில்நுட்பத் துறையுடன் இணைக்கப்பட்ட பங்குச் சந்தைகளை ஆட்டம் காணச் செய்தது. டீப் சீக் செயலி  விரைவாக ஆப்பிளின் ஏப் ஸ்டோரில் அதிகளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதன் தொடர்ச்சியாக, டீப் சீக் செயலியின் வளர்ச்சியை நிர்வகித்த சில கொள்கைகளான ‘பொதுமை அறிவு’ (Knowledge Commons) மற்றும் ‘திறந்த-மூலம்’ (Open-Source) […]

Source

  •  

இந்திய அறிவியல் துறைகளில் நிலவும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள்..!

இந்திய அறிவியல் துறைகளில் நிலவும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள்..! இந்திய அறிவியல் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் நீடிக்கும் பாலின அடிப்படையிலான இடைவெளிகளைக் காணும் போது, ஒரு பிரமிடின் (PYRAMID) உருவம் நினைவுக்கு வருகின்றது. அறிவியல் கல்வியைப் பொறுத்தவரை, பிரமிடின் அடிப்பகுதியில் உள்ளது போல் அதிக அளவிலான பெண்கள் துவக்கநிலையில் உள்ளனர். ஆனால் உயர்நிலைகளில்—அதாவது உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களோ அல்லது முக்கிய நிர்வாகப் பொறுப்பிலோ—பெண்களின் இடம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. அறிவியல் கல்வியில் ஆரம்ப […]

Source

  •  

அறிவியல் திருவிழா - 3

"சர்க்கரை நோய் உள்ளவர்கள் இருநூறு பேர்களின் தகவல்களை எடுத்துக் கொண்டு ஆய்வுக்குட்படுத்தியதில்..."

பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்கு பதினாறு வயதுதான் இருக்கும். இதென்னடா, இத்தனை சிறுவயதில், இன்சுலினிக்கு ஏதோ மாற்று மருந்து கண்டுபிடித்து விட்டாளோ என நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் பக்கத்தில் இருந்தவரோ தன் வாழ்நாள் முழுவதும் அறிவியல் ஆய்வுகளில் பொழுதைக் கழித்து இப்போது ஓய்வு பெற்றபிறகும், பெரு நிறுவனங்கள் வலிய அழைத்து ஒப்பந்த பணிகளில் ஈடுபடுத்த வைக்கும் அளவிற்கு அறிவியல் ஆர்வலரான ஸ்காட்டிஷ்காரர். அவரும் ஆர்வமானார்.

"அந்த இருநூறு பேர்களின் தகவல்களைக் கொண்டு ஐயாயிரம் பேருகளுக்கான தகவல்கள் உருவாக்கி, செயற்கை பாட்களை தொடர்ந்து சோதனை செய்ய ஒரு டேட்டா மாடலை உருவாக்கி..."

நான் ஆர்வமாக பங்கேற்கும் சிறுவர்கள் அறிவியல் போட்டிகளில், கடந்த 2-3 வருடங்களான ஆய்வுகளில் பெரும்பாலும், சுற்றி சுற்றி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் வந்து நின்றுவிடுகின்றன. இந்தப் பிள்ளைகள் எல்லாம் இன்னும் ஒன்றிரெண்டு ஆண்டுகளில் கல்லூரிகளுக்கு படிக்கச் சென்றுவிடுவார்கள். அடுத்த பத்தாண்டுகளில் இவர்கள்தான் நமது மருத்துவத் துறையின் ஆய்வுகளின் போக்கை தீர்மானிக்கும் சக்தி கேந்திரங்கள். எதிர்காலத்தில் நம்முடைய நோய் நமது கவனத்திற்கு வருமுன்னரே இவர்களுடைய செயற்கை நுண்ணறிவு செயலிகள் அவற்றைக் குணப்படுத்த வல்லவையாக இருக்கும்.

இன்னொரு பையன், "நியூரோ நோய்களைக் கண்டறிய உதவும் மாடல்" என ஒரு பெரிய மாடலைப் பற்றி நுணுக்கமாக 10 நிமிடங்களில் பிரசன்டேஷன் செய்து முடித்தான். ஒரே சமயத்தில் பத்து பதினைந்து ரேடியோலஜிஸ்ட்டுகளின் பணியை செவ்வனே செய்து முடிக்கும் என்கிறான்.

"வழூ வரையறைப் பற்றி ஏதும் உன் ஆய்வில் அக்கறைக் கொண்டிருந்தாயா?" என்று கேட்டேன்.

அதெல்லாம் வெகு துல்லியமாக இருக்கும் என அடித்து சொன்னான். கோட் போட்டுக் கொண்டு கனவான் உடுப்பில் இருந்ததால், துண்டைப் போட்டு தாண்டி சத்தியம் செய்யாத குறை. அந்தப் பையன் ஒவ்வோர் ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகளுடன்தான் இந்த அறிவியல் போட்டிகளுக்கு வருகிறான். நானே அவனுடைய ஆய்வுகள் மூன்று நான்கினைப் பார்த்திருக்கிறேன். இதிலும் தன்னுடைய ஆய்வுகளுக்கான செயலிகளையும், அதற்கான மூலப் பிரதிகளையும் இணையவெளியில் பொதுவில் வைத்துவிடுவான். ஏதோ அவன் பிரசன்டேஷன் செய்யும் போது பார்த்துவிட்டு வந்துவிட்டீர்கள் என்றில்லாமல், ஆற அமர அந்த செயலிகளை இயக்கி எப்படி இயங்குகின்றன என்றெல்லாம் பார்த்துக் கொள்ளுங்களேன் என்கிற தன்னம்பிக்கை.




இன்னொரு பெண், "உங்கள் வீடு க்ரீனாக, அதாவது பசுமை நிலைக்கு சாதகமாக இருக்கின்றதா" என்றொரு சுவாரசியமான ஆராய்ச்சியை செய்திருந்தாள். உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும், சூழலியலை மாசுபடுத்தும் சாத்தியங்கள் கொண்ட உபகரணங்களும், அவற்றின் சூழலியல் ஃபுட்ப்ரிண்ட்களும் (கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேற்ற அளவுகள்) கொண்டும் உங்கள் வீட்டின் பரப்பளவை கொண்டும் ஓர் எளிய சமன்பாட்டை உருவாக்கிக் கொள்ள முடியுமாம். அந்த சமன்பாட்டின்படி நாம் நம்முடைய சூழலியலுக்கு பாதகமாக இருக்கிறோமா அல்லது அதன் வரையறைக்குள் இருக்கிறோமா எனத் தெரிந்து கொள்ள முடியும் என்றாள்.

நாடுகளுடைய அணுசக்தி கொள்கைகளை விமர்சித்து பக்கம் பக்கமாக படித்து தலை சோர்ந்து போனவர்களுக்கு மாற்றாக இப்படியொரு சிந்தனைத் தரப்பு. தம் வீடுகள் சூழலியல் மாசுபடுதலை கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றனவா என்றக் கேள்வியை முன்வைக்கும் ஆய்வுகள்.

"இதன் அடிப்படையில் ஏதாவது டேட்டாக்கள் பெற முற்பட்டாயா? ஏதாவது சர்வே நடத்தி பங்கேற்பாளர்கள் எப்படி தங்கள் வீட்டின் பசுமை நிலையைப் பற்றிய நிலையைக் கண்டு கொள்ள முடியும் என்று நிறுவினாயா?"

அந்தப் பெண் சாமர்த்தியமாக அத்தகைய கணக்கெடுப்புகளைச் செய்யவில்லை. ஆனால் முழுநீளத்திற்க்கு நல்லதொரு பிரசன்டேஷன் செய்திருந்தாள். என்ன செய்வது. இது ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஃபோரம். அதனால் அப்பெண்ணிற்கு முழு மதிப்பெண்கள் அளிக்க இயலவில்லை.

"தோல் காயங்களைப் பற்றி ஆராயும் ஏ ஐ செயலி" என்றொரு பையன் விஸ்தாரமாகப் பேசினான்.

பெயர்தான் கணிணித் துறை ஆய்வறை. ஆனால் இவர்களின் ஆய்வுகளின் போக்கெல்லாம் மருத்துவத் துறையை மையமாகக் கொண்டிருந்தன என்பது புரிந்தது.

முன்னதாக, அந்நாளின் காலைப் பொழுதில் இடைநிலை பள்ளி மாணவர்களின் ஆய்வுகளில் அமர்ந்திருந்தேன். அவர்களின் நல்லூழோ, அல்லாததோ, அந்த ஆய்வறையின் ஜட்ஜ் நான் மட்டும்தான். இயற்பியலில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆய்வுகளை பிரசண்ட் செய்தார்கள்.

"எந்த மாதிரியான மெட்டீரியல்கள் கொண்டு ஒலி மாசை வெகுவாக குறைக்க முடியும்?"

"ப்ரொபல்லர்களின் அளவைக் கொண்டு ட்ரோன்களின் பறக்கும் சக்தியை எப்படி அதிகப்படுத்துவது?"

"கவண் வில்லின் நாணின் நீளம் எப்படியாக அதன் விசையை பாதிக்கின்றது?"

"காந்தங்கள் மீதான சீதோஷ்ண நிலைகளின் பாதிப்புகள்"

"விற்களில் நாண் இழுபடும் தூரம்"

"லேசரின் பொய்யாத்தன்மை"

"கால்பந்தாட்ட காலணிகளின் முளைகளின் மெட்டீரியல் விளையாட்டுத் திறனை பாதிக்குமா?"

"எவ்வகையான டார்ட்டுகள் தூரம் அதிகமாக பாய்கின்றன"

"கை போன்களின் திரைகாக்கும் அட்டைகள் எவ்வளவு பாதுகாப்பானவை?"

"எவ்வகையான உணவுகள் ஹைட்ரஜன் வெளிப்பாட்டை அதிகரிக்கின்றன"

இப்படி பல தலைப்புகளில் ஆய்வுகளிலும் தகவல்களிலும் என்னை மூழ்கடித்தனர்.

"ட்ரோன்களின் திறன்களை அதிகரிப்பதனால் என்ன சாதித்து விட முடியும் என நினைக்கிறாய்?"

"அடுத்த முறை என்னுடைய பிரசன்டேஷனுக்கு தோதாக ட்ரோன்கள் வழியே ஹேண்ட் அவுட்களை விநியோகிக்க முடியும்"

சமத்காரமான பதில்கள். தங்கள் ஆய்வுகளில் எந்தக் கேள்விக் கேட்கப்பட்டாலும் அதை தலைநிமிர்ந்து எதிர்கொள்ளும் திடம் மிகவும் கவர்ந்தது.

எங்கள் வீட்டு ஜூனியர், பயோ மெடிக்கல் துறையில், காய்கறிகள், பழங்களிலிருந்து மரபணுவை பிரித்தெடுத்துக் காட்டுகிறேன் என்றதொரு பிரசன்டேஷன் செய்திருந்தார். இளவரசியார், பற்களின் எனாமலை பாதிக்கும் குடிபானங்கள் பற்றி ஓர் ஆராய்ச்சி செய்திருந்தார்.

பிறகு ஒரு ரோபாட் காரை தானியங்கியாக ஓட்டிக் காண்பிக்கும் போட்டியில் ஜூனியர் பங்க்கேற்றார். கூடவே உயரத்திலிருந்து விழும் எடையின் சக்தியில் ஒரு வண்டியை ஓட்டிக் காட்ட வேண்டும் என்று மற்றுமொரு போட்டி. இதில் சவால் என்னவென்றால், வண்டியின் முனையில் ஒரு முட்டையைக் கட்டி விடுவார்கள். ஓடும் வண்டி தன் எல்லைக் கோட்டிற்குள் வந்து சரியாக நிற்க வேண்டும். எல்லைக் கோட்டின் மறுபுறம் ஒரு மதில்சுவர் இருக்கும். எல்லைக் கோட்டை சிறிது தாண்டிச் சென்றாலும் போய் முட்டிக் கொண்டு முட்டை உடைந்து தோல்விதான். இயல்பான பள்ளிக்கூட வேலைகளிடையே இந்தப் போட்டிகளுக்கு தயாராகி அதில் கலந்து கொள்வதே ஒரு தனி சவால்தான். போட்டிகளில் வெற்றி கிடைத்தால் அது போனஸ்.

இந்தப் பிள்ளைகளின் ஆர்வத்தின் வேகத்தை அணை போட்டு செழுமைப்படுத்தி பயன்படுத்தும் பொறுப்பினை இது போன்ற அறிவியல் திருவிழாக்களில் பொறுப்புணர்ந்த பெரியவர்கள்வசம் கொடுத்து விடுகிறார்கள்.

அமெரிக்கர்களிடையேயான அடிப்படை பண்புகளில் ஒன்று, அனைவருக்குமான வாய்ப்புகளை தடையில்லாமல் வழங்குவது. சிற்சில அரசியல் ஆதாயங்கள் பார்க்கும் போக்கு உண்டுதான். ஆனால் இந்தியர்கள் பொறுப்புகளில் அதிகரிக்கும்போதே, அவர்களுடைய பாரம்பர்ய அரசியலான செல்வாக்கானவர்களின் கால்களைக் கட்டிக் கொண்டு தங்களை உயர்த்திக் கொள்ள நினைக்கும் சில்லறத்தனங்கள் இதில் அதிகமில்லை. அதுவே இந்த சிறுவர்களுக்கு சுதந்திரமாக செயல்படும் உணர்வை மேலோங்கச் செய்கிறது.

அரங்கு முடிந்து என்னுடைய தீர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் போது எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் வந்தான்.

"பிரமாதமான கேள்விகள் கேட்டீர்கள். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்?" என்றான்.

எதிர்பாராத திசையில் இருந்து வந்த பந்தை எதிர்கொள்ள சற்றுத் தடுமாறினேன்.

"உன்னுடைய ஆய்வுகளைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவியல் படித்திருக்கிறேன் தம்பி. இப்போது நிதி சேவைக்கான ஐடி குழுவில் பணிபுரிகிறேன்"

"ஓ, நிறைய எண்களை சமாளிக்கும் வேலை. வாழ்த்துகள் உங்களுக்கு" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

செயற்கை நுண்ணறிவு பாட்க்களின் எதிர்கால இடம் சந்தேகமானதுதான். இந்த சமத்கார சாதுர்ய சிறுவர்களுடன் அல்லவா அவை போட்டி போட வேண்டும்.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •  

எல்லோரும் எங்கே?

 விரிவுரை முடிந்து மற்ற மாணவர்கள் எல்லோரும் வெளியேறி விட, கீரா மட்டுமே அரங்கத்தில் மிஞ்சியிருந்தாள். மேடையில் தனது குறிப்புகளை ஒழுங்குபடுத்திக்...

The post எல்லோரும் எங்கே? appeared first on சிறுகதைகள்.

  •  

அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1

மரபியல் ஆலோசனை சொல்வதற்கு மனவலிமை வேண்டும்!

மெட்ராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மரபியல் பாடப்பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், வைஷ்ணவி. மரபணுப் பொறியலில் இளநிலை பட்டம் பெற்றவர். கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் பயின்றவர். மரபியல் ஆலோசகராகப் பணியாற்றியவர். வெண்பா என்கிற புனைப்பெயரில் மரபியல் சார்ந்து எழுதி வருபவர். தாயனை, அறிவதுவே ஆகிய அறிவியல் நூல்களை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளார். மரபியலுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பு, அதை சமூகம் எதிர்கொள்ளும் விதம் உள்ளிட்டவை குறித்து விரிவாக அவர் உரையாடிய நேர்காணலின் முதல் பகுதி இது.

அறிவியலில் ஆர்வம் வந்தது எப்படி?

குறிப்பிட்ட ஒரு காரணம் சொல்ல முடியாது. முதலில் எங்கள் வீட்டில் பெரும்பாலானோர் பள்ளி ஆசிரியர்கள். அறிவியல் ஆசிரியர்கள். ஆனாலும் முதன்முதலில் அறிவியலில் ஆர்வம் வரத் தொடங்கியது, எட்டாம் வகுப்பில்தான். என் உயிரியல் ஆசிரியர் பாடம் தொடர்பாகப் படங்கள் வரைவது பிடிக்கும். இதயம், சிறுநீரகம் என உடல் பாகங்களை அழகாக வரைவார். அவர் சொல்லித் தருவதும் அழகாக எளிமையாக இருக்கும். இதுதான் அறிவியலில் ஆர்வம் வருவதற்கான தொடக்கப்புள்ளி என நினைக்கிறேன்.

ஏன் குறிப்பாக, மரபியல்?

ஒன்பதாம் வகுப்பில் குரோமோசோம்ஸ் பற்றிய பாடம் வந்தது. அந்தப் பெயரைக் கேட்டவுடனேயே ஏனோ ஆர்வம் வந்தது. 12ஆம் வகுப்பு முடித்தவுடன் நீட் பயிற்சியில் சேர்த்துவிட்டார்கள். மருத்துவத்தில் ஆர்வமில்லை. மரபியல் படிக்க வேண்டும் எனக் கூறினேன். வீட்டில் சம்மதிக்கவில்லை. காரணம், மரபியல் படித்தால் எந்த வேலைக்கு செல்வோம், எதிர்காலம் எப்படி அமையும் என்கிற புரிதல் அப்போது கிடையாது. நீட்டில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. 10 லட்சம் கேட்டார்கள். நாங்கள் சம்மதிக்கவில்லை. மரபுப் பொறியியல் (Genetic Engineering) படிப்பில் சேர வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றேன். அப்போது உயிரித் தொழில்நுட்பம் (Bio-Tech) ஓரளவு தெரிந்த படிப்பாக இருந்தது. அதில் சேர்க்கத் திட்டமிட்டார்கள். ஆனால் நேர்காணலில் மரபுப் பொறியியலையே தேர்ந்தெடுத்துவிட்டேன். வீட்டில் எல்லோருக்கும் கோபம். இப்போதும் திட்டுவார்கள்.

கோபம் அகன்றதா?

மரபியலுக்கும் உயிரித் தொழில்நுட்பப் படிப்புக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. கிட்டதட்ட 70 சதவிகிதம் ஒன்றாகத்தான் இருக்கும். 30 சதவிகிதம் மட்டுமே மாறும். உயிரித் தொழில்நுட்பத்தில் துறை அறிவு சார்ந்து படிப்போம். மரபியலில் நோய்கள் பற்றிப் படிப்போம். என் உறவினர் ஒருவருக்குப் பிறந்த குழந்தை மரபணுக் குறைபாட்டுடன் இருந்தது. அதேபோல உறவினர் ஒருவருக்கு Myasthenia எனும் ஒரு நோய் இருக்கிறது. தசைகளைச் சாப்பிட்டுவிடும் நோய். தன்னிச்சையான இயக்கம் (Voluntary Movements) எல்லாவற்றையும் முடக்கிவிடும். கண்களை மூடினால் திறக்க முடியாது. கண்கள் மூடி திறப்பது தன்னிச்சையாக நடைபெறுவது இல்லையா?

அந்த நோய் உள்ளவர்களுக்கு உடலில் சருமத்திற்குக் கீழ் எலும்புகள்தான் இருக்கும். தசைகள் இருக்காது. எழுந்து நடக்க முடியாது. படுத்தால் எழ முடியாது. கழுத்தைத் திருப்ப முடியாது. கையை நகர்த்த முடியாது. இந்த நோய்க்கு சிகிச்சை கிடையாது. மாத்திரைகள் மட்டும் தருவார்கள். உடலை உருக்கும் வலி இருக்கும். அதைப் போக்குவதற்காக மட்டும் மாத்திரைகள். நான் அப்போது மரபியல் படித்துக்கொண்டிருந்தேன். அன்றைக்குதான் வகுப்பில் அந்த நோய் பற்றிப் படித்தேன். என் உறவினருக்கு வந்திருப்பது அந்த நோயாக இருக்கலாம் எனத் தந்தையிடம் சொன்னேன். அவர் முதலில் நம்பவில்லை. நான் விடாமல் வற்புறுத்தவே சோதனைகள் எடுத்தனர். இறுதியில் அந்த நோய்தான் என உறுதியானது. அதன்பிறகுதான் என் வீட்டில் நான் சொல்வதையே நம்பத் தொடங்கினார்கள். இந்தப் படிப்புக்கு ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது தெரிந்தது. ஊக்கம் கொடுக்கத் தொடங்கினார்கள்.

அதேபோல விவரம் தெரியாத வயதில் இருந்தே மாத்திரைகளில் ஆர்வம் அதிகம். அதுவும்கூட காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். வீட்டில் பெரியவர்கள் சாப்பிடும் மாத்திரைகளின் பெயர்களும், அவை எந்த நோய்க்கானது என்பதும் விவரம் அறியாத வயதில் இருந்தே தெரியும். இப்படி மாத்திரைகளில் ஆர்வம் இருந்ததால்கூட நோய்கள் பற்றிய படிப்பில் ஆர்வம் வந்திருக்கலாம் என நினைக்கிறேன். நீங்கள் கேட்டவுடன் தோன்றுகிறது.

நோயில் ஆர்வம். நீட் பரீட்சையில் தேர்ச்சி. பிறகு ஏன் மருத்துவராகவில்லை?

வலி, ரத்தம் எல்லாம் ஆகாது. நோயாளிகளின் துன்பத்தைப் பார்க்க இயலாது. சண்டைப் படங்கள்கூட பார்க்க மாட்டேன். இது ஒருவகை மனவடுவாகக்கூட (Trauma) இருக்கலாம். எப்படி அந்த வடு வந்தது என்று தெரியவில்லை.

மரபியலிலும் நோய் பற்றிப் படிக்கிறீர்கள். அங்கும் நோயாளிகளைப் பார்க்கிறீர்கள். இன்னும் எப்படித் தொடர முடிகிறது?

என் வீட்டில் ஒரு குழந்தைக்கு Cystic Fibrosis எனும் மரபியல் நோய் இருக்கிறது. இப்போதுவரை சிகிச்சையில்தான் இருக்கிறான். அவனைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும்போது பார்த்திருக்கிறேன். எல்லோரும் சிறுவர்கள். பிறந்த குழந்தையில் இருந்து 18 வயது ஆனவர்கள் வரை இருப்பார்கள். 400 பேர் வரை இருப்பார்கள். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூடாது. யாரும் பேசிக்கக்கூடாது. ஒருவரிடம் இருக்கும் பாக்டீரியா இன்னொருவரிடம் பரவக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

சிஸ்டிக் பைப்ரோசிஸால் பாதிக்கப்பட்டவர்கள் நுரையீரலில் பாக்டீரியா இருக்கும். அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாக இருக்கும். ஒருவேளை வேறொருவரிடம் இருந்து பாக்டீரியா பரவிவிட்டால் நுரையீரலைக் காலி செய்துவிடும். நுரையீரல் மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டும். நுரையீரல் கிடைக்காது. கிடைத்தாலும் சிகிச்சை மேற்கொள்வதற்கு வேண்டிய பொருளாதாரம் இருக்காது. அப்படியே பொருளாதாரம் இருந்தாலும் சிஸ்டிக் ஃபைரோஸிற்கு என்று அறுவை சிகிச்சை செய்வதற்கான நிபுணர்கள் குறைவு.

அந்தப் பிரச்னை இருப்பவர்கள் பார்க்கச் சாதாரணமாக இருப்பார்கள். நாம் சொன்னால்தான் தெரியும். சாதாரண பள்ளியில் படிப்பார்கள். மற்றவர்களிடம் இருந்து இவர்களுக்கு இருக்கும் வேறுபாடு, எதைச் சாப்பிட்டாலும் மாத்திரை போட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்குத் தெரிய வரும்.

கிட்டத்தட்ட பல மருத்துவமனைகளுக்கு அலைந்து இறுதியில் வேலூர் சி.எம்.சியில்தான் அந்தச் சிறுவனுக்கு வந்தது சிஸ்டிக் ஃபைரோஸிஸ் எனத் தெரிந்தது.

அவனது பாட்டி குளிக்க வைக்கும்போது, ‘என்னடா தங்கம் உனக்கு மட்டும் இருக்கே. உனக்கு எதுவும் உடம்புக்கு முடியவில்லை என்றால் சொல்’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ‘வைஷ்ஷு அக்கா இதற்குக்தான் படிக்கிறாங்க. எப்படியும் சரி பண்ணிடுவாங்க’ என்று பதில் சொல்லியிருக்கிறான். இதை அவன் பாட்டி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். இப்போது வரைக்கும் நான் இந்தப் படிப்பில் தொடர்வதற்கு இதுபோன்ற சம்பவங்கள்தான் காரணம்.

ஆனால் தொடங்கும்போது ஏற்கெனவே சொன்னதுபோல இதைச் சேவையாக செய்யப்போகிறோம், மனிதர்களிடம் கொண்டு சேர்க்கப்போகிறோம் என்றெல்லாம் எண்ணவில்லை. பாடம் பிடித்திருந்தது. அதில் வரும் செல்கள், அந்த செல்களுக்குள் இயங்கும் தனி உலகம் எனக் கற்பனைக்கும் எட்டாத ஆச்சரியங்களைத் தந்தன. அவை மட்டும்தான் காரணம்.

இதனால்தான் மரபியல் ஆலோசனையிலும் ஆர்வமா?

கல்லூரி இரண்டாம் ஆண்டில் கீழ்ப்பாக்கத்தில் மரபியல் ஆலோசனைக்குச் (Genetic Counselling) சென்றேன். மரபியல் படிப்பவர்கள் கட்டாயம் இன்டர்ன்ஷிப் செல்ல வேண்டும். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நிறுவனங்களிலும். நான் சிஸ்டிக் பைரோஸிற்குச் சிகிச்சை தரும் இடங்களைத் தேடிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் சி.எம்.சி சென்று வர முடியவில்லை. அருகில் ஏதாவது இடம் இருக்கிறதா எனத் தேடினேன். கீழ்பாக்கத்தில் மருத்துவ மரபியல் மையம் இருந்தது. அங்கு சென்று விசாரித்தபோது மரபியல் ஆலோசனை தொடர்பாகப் பயிற்சித் திட்டம் இருந்ததும் தெரிந்தது. நிறையப் பேர், நிறைய மரபியல் குறைபாடுகளுக்குச் சிகிச்சை எடுப்பதைக் கண்டேன். அங்கேயே பணியாற்ற முடிவு செய்தேன். பிறகு அஹமதாபாத்திலும் பணியாற்றினேன்.

இப்போதும் மரபியல் ஆலோசனைகள் செய்கிறீர்களா?

தொடரவில்லை. விட்டுவிட்டேன். மொத்தம் ஆறு மாதங்கள் மட்டுமே சென்றேன். நோயில் ஆர்வம் இருந்தது. ஆச்சரியம் இருந்தது. முதன்முறை நோயாளிகளைப் பார்க்கும்போது அவர்கள் படும் துன்பத்தைவிட அந்த நோயாளிகளிடம் உள்ள குறைபாடு என்ன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, குணப்படுத்துவது என்பதில்தான் தேடலும் ஆர்வமும் இருக்கும்.

ஆறு மாதங்களில் பல்வேறு நோய்களைப் பார்த்தேன். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள். ஆனால் ஒருகட்டத்துக்குப் பிறகு, நிறைய நோயாளிகளைப் பார்க்கும்போது ஆர்வம்போய் யதார்த்தம் உறைக்கும்.

முதல்கட்டத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்போம். மூன்றாம் கட்டத்தில் நாம் முதிர்ச்சியாக நோய்மையைக் கண்டுபிடித்துக் குணப்படுத்த விழைவோம். இதற்கு இடையில் இரண்டாம் கட்டம் இருக்கிறது. நம்மை நம்பிக்கை இழக்க வைக்கும் கட்டம். இதில்தான் அவர்கள் படும் துன்பங்களை, வேதனைகளைப் பார்ப்போம். இதில் சிக்கினால் மூன்றாவது கட்டத்திற்குச் செல்லவே முடியாது. நான் இரண்டாம் கட்டத்தில் சிக்கிவிட்டேன். உண்மையைச் சொன்னால் குணப்படுத்துவதைத் தாண்டி அவர்கள் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும், சாதாரணமாக்க வேண்டும் என்பதுதான் நமது எண்ணமாக இருக்கும்.

மரபியல் ஆலோசகராக உங்கள் பணி என்ன?

மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது அவர்களுக்கு வந்திருப்பது மரபியல் குறைபாடா எனத் தெரியாத பட்சத்தில் எங்களிடம் அனுப்புவார்கள். நாங்கள் அவர்களுக்கு மரபணுச் சோதனை செய்து அவர்கள் குறைபாடு எத்தகையது எனக் கண்டுபிடிப்போம்.

எந்த வயதில் இருந்து ஆலோசனைக்கு வருவார்கள்?

குழந்தை பிறக்கும் முன்னரே. கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்யும்போது அவர்கள் பின் கழுத்தில் நீர் கோர்த்திருக்கிறதா என்று 10வது வாரத்திலேயே தெரிந்துவிடும். இது மரபியல் குறைபாடு இருப்பதற்கான ஒரு பொதுவான அறிகுறி. எதனால் அந்தக் கட்டி என்பதைச் சாதாரண மருத்துவர்களால் சொல்ல முடியாது. அவர்கள் மரபியல் ஆலோசகரிடம் அனுப்புவார்கள்.

சாதாரண மருத்துவர்கள் மரபியல் நோய்க்கு சிகிச்சை அளிக்க மாட்டார்களா?

அவர்கள் மரபியல் ஆலோசனை பண்ண முடியாது. பண்ணவும் கூடாது. அவர்கள் மரபியல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் பெற்றவர்கள் இல்லை. அதனால் எங்களுக்குப் பரிந்துரைப்பார்கள்.

நாங்கள் நோயாளிகளை மருத்துவர்கள் சொல்லியதை வைத்து ஆராய்வோம். அவர்கள் குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது மரபியல் குறைபாடுகள் இருக்கின்றனவா? கணவன், மனைவி யாருக்காவது மரபியல் குறைபாடுகள் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்புவோம். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் உறவுமுறை என்னென்ன எனக் குடும்ப வரைபடம் (Pedigree) வரைவோம். மூன்று தலைமுறையினரை உள்ளடக்கும் வரையில் அந்த வரைபடம் இருக்கும். தந்தை தரப்பில் மூன்று தலைமுறை, தாயின் தரப்பில் மூன்று தலைமுறை. இது வரையும்போதே வந்திருப்பது எத்தகைய நோய் என ஓரளவுக்குத் தெரிந்துவிடும்.

இதிலும் தெரியாதபட்சத்தில் Non Invasive Pre-Natal Testing என்ற ஒன்றைச் செய்வோம். தாயின் ரத்தத்தை எடுத்து, அதில் சுற்றித் திரியும் குழந்தையின் டி.என்.ஏவைப் பிரித்தெடுத்து, அதில் உள்ள குரோமோசோம்களை ஆராய்வோம். அதிலும் தெரியவில்லை என்றால் அடுத்தகட்ட சோதனையாக கருப்பையில் இருந்து Amniocentesis நீரை எடுத்து ஆராய்வோம். இதில் குழந்தைக்கு என்ன பிரச்னை எனத் தெரிந்துவிடும்.

ஆனால் இந்த ஒவ்வொரு சோதனைக்கும் பெற்றோர்களிடம் அனுமதி வாங்க வேண்டும். நாம் வற்புறுத்தக்கூடாது. அவர்களுக்கு விருப்பம் என்றால் மட்டும் செய்ய வேண்டும்.

பெற்றோர்கள் ஒப்புக்கொள்வார்களா?

மாட்டார்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. சோதனை செய்தால்தான் கண்டுபிடிக்க முடியும். இல்லை என்றால் முடியாது எனச் சொல்வோம். அப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கருவிற்கு ஏதாவது பாதிப்பு உண்டாகும் எனும் பயம் ஒரு பக்கம். மதம், கலாசார நம்பிக்கைகள் மறுபக்கம்.

இந்தச் சோதனைகளால் கருவிற்குப் பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்குமா?

பொதுவாக 10வது வாரத்தில் சோதனைகள் இருக்கும். சில சோதனைகளைப் 13வது வாரத்தில் செய்ய வேண்டும். சில சோதனைகள் 15 வாரத்தில் நடைபெறும். கருப்பை நீர் எடுக்கும் சோதனைகள், நச்சுக்கொடியில் இருந்து செல்களை எடுத்து பரிசோதிக்கும் சோதனைகளை 13, 15 வாரக் கருவில் மட்டும்தான் செய்ய முடியும். இதில் கரு கலைவதற்கு 1 சதவிகிதத்துக்கும் குறைவான வாய்ப்புதான். ஆனால் இதையும் பெற்றோர்கள் ஏற்பதில்லை.

ஆய்வு செய்ய நேர்ந்து குழந்தைக்குப் பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தால் என்ன செய்வீர்கள்?

பெற்றோருக்கு ஏதேனும் மரபணு குறைபாடிருந்தால் அவர்கள் குழந்தைக்காகத் திட்டமிடும் போது உங்களுக்குக் பிறக்கப் போகும் குழந்தை உங்களுக்கு இருக்கக்கூடிய மரபணுக் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பதை மட்டும்தான் சொல்ல முடியும். அதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. 25 சதவிகிதம் வாய்ப்பு, 90 சதவிகிதம் வாய்ப்பு என்றுதான் சொல்ல முடியும். இதுவே பிறக்கப் போகும் குழந்தையைப் பரிசோதித்த பிறகு குறைபாட்டை உறுதி செய்ய முடியும். சில சமயங்களில் அந்தக் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அதுவும் குழந்தையைப் பரிசோதிக்கும்போது தெரிந்துவிடும். குழந்தை குறைபாடுடன் இருக்கும் பட்சத்தில் நீங்கள் கலைக்க வேண்டும் என்றால் கலைக்கலாம். தொடர வேண்டும் என்றால் தொடரலாம் என்று சொல்வோம்.

ஒருவேளை தொடர சம்மதித்தால்?

அந்தக் குழந்தையை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றி சொல்வோம். குழந்தைக்கு வேண்டிய சிகிச்சை, குழந்தையை வளர்ப்பதற்கான செலவு ஆகியவற்றைச் சொல்வோம். பெற்றோர்கள் குழந்தையைக் கலைக்க சம்மதிக்காதபட்சத்தில் குழந்தைப் பிறக்கும் வரை எங்கள் மேற்பார்வையில்தான் இருக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடனும் குறைபாடுடன் இருக்க நேர்ந்தால் முழுதாக நாங்கள்தான் பார்த்துக்கொள்ளும்படி நேரிடும்.

பிறந்த குழந்தைக்கு மரபணு குறைபாடு இருக்கிறதா என்பதை எப்படி ஆராய்வீர்கள்?

முதல் கட்டம் அவர்கள் உடல் அமைப்பு. அந்தக் குழந்தை சாதாரணமாக இல்லாமல் முக அமைப்பில் வேறுபாடு இருக்கும். இரண்டு கண்களுக்கு இடையிலான தூரம். கண்ணுக்கும் காதுக்கும் இடையிலான அமைப்பு. மூக்குக்கும் கண்ணுக்குமான அமைப்பு ஆகியவற்றை ஆராய்வோம். புருவமும் காதும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். உடல் முழுவதும் ஒவ்வொரு பாகமும் அதற்கான அளவீடுகளில் இருக்க வேண்டும். இதை வைத்தே நாம் எந்த மரபணு குறைபாடு என்று சொல்லிவிடலாம். சில மரபணு குறைபாடுகள் வெளித் தோற்றத்தை பாதிக்காது. அது போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பார்ப்பதற்கு சாதாரணமாகவே தெரிவார்கள். அவர்களுக்கு இருக்கும் அறிகுறிகளை வைத்து அல்லது நோய்க்கான அவர்களின் குடும்பப் பிண்ணனியை வைத்துதான் என்ன குறைபாடு என்பதைக் கண்டறிய முடியும்.

பெரியவர்கள் மரபணுக் குறைபாட்டால் வருவார்களா?

சில குறைபாடுகள் 40 வயதுக்கு மேல்தான் வரும். ஆனால் அவர்களுக்கு விழிப்புணர்வு இருக்கும். பெரும்பாலும் புற்றுநோய் மற்றும் Huntington’s chorea உள்ளிட்ட மூளை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மரபியல் சோதனைக்கு எங்களிடம் வருவார்கள்.

ஏன் இந்த மரபியல் குறைபாடுகள் வருகின்றன?

காரணம் மரபணுப் பிறழ்வுகள் (Mutations). உடலில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றம். கரு உருவாகும்போது அதன் வளர்ச்சியும் ஆரோக்கியமும் முதல்கட்டமாகப் பெற்றோரிடமிருந்து கடத்தப்படும் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அப்படிக் கடத்தப்படும் மரபணுக்களில் ஏதேனும் பிறழ்வு ஏற்பட்டால், அது குழந்தையைப் பாதிக்கும். சுற்றுப்புறத்துடனான நமது உறவு, உண்ணும் உணவு, வேதிப் பொருட்கள் பயன்பாடு ஆகியவற்றாலும் நடக்கின்றன. இவ்வாறு மரபணுவில் மாற்றம் ஏற்படுவது நமது உடலைப் பாதிக்கிறது.

அதேபோல மரபணுப் பிறழ்வால் நோய்கள்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதனை மரபணு நோய்கள் என அழைப்பதே தவறு. குறைபாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். Swyer Syndrome என்கிற ஒரு மாற்றம் இருக்கிறது. கிட்டத்தட்ட பெண் உடலில் ஆண் குடியிருப்பதுபோன்றது. அவர்களுக்கு உள்ளுக்குள் பெண் உறுப்புகள் இருக்கும். கருப்பை இருக்கும், கருமுட்டைக் குழாய் (Fallopian Tube) இருக்கும். ஆனால் கருமுட்டை இருக்காது. இதனால் அவர்களது வாழ்வியலுக்கு எந்தப் பாதிக்கும் இருக்காது. ஆனால் அவர்களால் கருவுற முடியாது. அவர்களுக்குப் பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் கருப்பையில் வளர்ச்சி இருக்காது. சிலருக்கு விதைப்பைகள் உள்ளே வளர்ந்திருக்கும். வெளியே அவர்கள் பெண்ணாக இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் ஆண் உறுப்புகள் இருக்கும். சிலருக்கு இரு உறுப்புகளும் இருக்கும். இது அவர்களுக்கே தெரியாது. இதுபோன்ற குறைபாடுகளும் இருக்கின்றன.

இந்த விஷயங்கள் எதுவும் அவர்கள் பொது வாழ்வியலைப் பாதிக்காது. ஆனால் சொந்தமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. சிலருக்கு மட்டும் செயற்கைக் கருத்தரித்தல் முறையில் குழந்தை பிறந்திருக்கிறது.

மரபணுக்களில் மாற்றங்கள் வந்தாலே ஆபத்தா?

அப்படிச் சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் பயன்தரக்கூடிய மாற்றங்களும் இருக்கின்றன. உதாரணமாக ஆப்பிரிக்க ஜனத்தொகையில் வெகு சாதாரணமாகக் காணப்படும் G6PD, HbS, HbC உள்ளிட்ட மரபணுப் பிறழ்வுகள் மலேரியா தொற்றிலிருந்து அந்தக் குறிப்பிட்ட இனத்தைக் கணிசமாகக் காக்கின்றன. அவர்கள் ஹீமோகுளோபினில் நடைபெற்ற மாற்றம். அவர்கள் உடலில் மலேரியா ஒட்டுண்ணியை பிழைக்க விடாது. இதேபோல CCR5 – delta32 என்னும் மரபணுப் பிறழ்வால் சிலருக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிக்காது. குறிப்பிட்ட மரபணுப் பிறழ்வால் குறிப்பிட்ட நோய்க்குத் தடுப்பு ஏற்படுவதை protective mutation என்போம்.

இது போன்ற மரபணுப் பிறழ்வுகள் குறிப்பிட்ட நோய்களைத் தடுக்குமே தவிர இந்தப் பிறழ்வுகளால் கட்டாயம் பாதிப்புகளும் விளைவுகளும் உண்டு. உதாரணத்திற்கு HbS மரபணு பிறழ்வு sickle cell anemia எனும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதேபோல வேறு பயன் தரும் பிறழ்வுகளும் இருக்கின்றன. உதாரணமாக மனிதர்கள் உருவானபோது அவர்களுக்குத் தாய்பாலைத் தவிர வேறு விலங்குகளின் பால்களைக் கிரகிக்கும் தன்மை இல்லை. ஆனால் இப்போது நாம் எல்லோரும் பால் அருந்துகிறோம்.

இது ஒரு பயன்தரக்கூடிய மாற்றம். இதுபோன்ற பயன் தரும் மாற்றங்களும் வெகு சாதாரணம். ஆனால் அவை தனிநபர்களுக்கு என்று இல்லாமல் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு நடக்கும். இதைத்தான் நாம் பரிணாம மாற்றம் என்கிறோம்.

இன்றைய வாழ்க்கை முறையால் மட்டும்தான் மரபியல் நோய்கள் வருவதாக ஒரு கருத்து நிலவுகிறதே?

இல்லை. ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்கிறது. என்ன, அந்தக் குழந்தை பிழைத்திருக்காது. முன்பெல்லாம் ஒரு வீட்டில் பத்துக் குழந்தைகள் பிறக்கிறது என்றால் நான்கைந்து இறந்துவிடும் எனக் கேள்விப்பட்டிருப்போம் இல்லையா? அது எதனால் இறந்தது என்று அப்போது தெரியாது. அவர்கள் இறந்ததற்கு பெரும்பாலும் மரபியல் பிறழ்வுகளும் காரணமாக இருக்கலாம். அப்போதைய மனிதர்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வு கிடையாது. ஆனாலுமே இதுபற்றி தெரிந்த ஒரு சமூகமும் இருந்திருக்கிறது. அவர்கள் கொடுத்த தரவுகள் அடிப்படையில்தான் இன்றைய புரிதல் உருவாகி இருக்கிறது.

எப்போதில் இருந்து நமக்கு தெளிவான தரவுகள் கிடைக்கின்றன?

உறுதியாகச் சொல்ல முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை 1950ஆம் ஆண்டு ஸ்வயர் சிண்ட்ரோம் ஒன்று பதிவாகி இருக்கிறது. அப்போதே குரோமோசோம் சோதனைகள் வந்துவிட்டன. குழந்தையின் பாலினத்தை அறிவதற்கு. பாலினம் அறிவதற்கு அன்று தடை கிடையாது. அப்போது குரோமோசோம் சோதனை செய்துவிட்டு வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள்.. ஆனால் பிறந்தது பெண் குழந்தை. இது ஒரு நீதிமன்ற வழக்காகவே மாறி இருக்கிறது.

சொல்லப்போனால் 90களில் மனித மரபணுப் தொகுப்புகளை அறியும் Human Genome Project ஆரம்பிப்பதற்கு முன் மனிதர்களின் முழுமையான மரபணுக்கள் குறித்து யாருக்கும் புரிதல் கிடையாது,

அதற்கு முன் பகுதிப் பகுதியாகத்தான் மரபணுக்களை ஆராய்வார்கள். காரணம் அதற்கான செலவுகள் அதிகம். தொழில்நுட்பமும் கிடையாது. நம் உடலில் மரபணுக்களைக் கட்டமைத்துள்ள அடிப்படை சாரமான நியூக்ளியோடைட்ஸ் 3 பில்லியன் அளவில் இருக்கின்றன. அனைத்தையும் சேர்த்து ஆராய வேண்டும். அப்போது சாங்கர் (Frederick Sanger) என்பவர் கண்டுபிடித்த முறைதான் பயன்பட்டது. இப்போது (NGS- Next-generation sequencing) எனப்படும் முறை பயன்படுகிறது. இதில் மரபணுத் தொகுப்பைக் கொடுத்தால் ஒருநாளுக்கு இரண்டு அல்லது மூன்று பேர் என்கிற அளவில் முழுமையாக ஆராய்ந்து கொடுத்துவிடும். இப்போதே ஒரு நாளுக்கு இரண்டு பேர்தான் என்றால் அப்போது நினைத்துப் பாருங்கள்.

1990ல் ஆரம்பிக்கப்பட்ட மனித மரபணுத் தொகுப்புத் திட்டம் 2003இல் முடிந்தது. 100க்கும் மேற்பட்ட பரிசோதனைக்கூடங்களில் மனித மரபணுத் தொகுப்பைப் பகுதிப் பகுதியாக வெட்டி ஆராய்ந்தார்கள். நாம் பார்த்த சாங்கர் தொழில்நுட்பத்தில் 1000 பகுதிகளை மட்டுமே ஆராய முடியும். அதிலும் ஏகப்பட்ட உள்வேலைகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் செய்து இறுதியில் மனித மரபணுக்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம்.

இதில் ஒரு விஷயம், நாம் செய்யும் ஆய்வில் மரபணுக்களில் இடம்பெறும் தகவல்களில் 98 சதவிகிதம் குப்பைதான். வெறும் 2 சதவிகிதத்தில்தான் நாம் தேடும் தகவல்கள் இருக்கும்.

இன்று ஒருவருடைய மரபணுத் தகவல்களைக் கொடுத்தால் அவருடைய உடல் ஜாதகம் மொத்தத்தையும் சொல்லிவிடலாம். இன்றைக்கு என்ன நோய் வரும், நாளை மறுநாள் என்ன நோய் வரும் என்றெல்லாம் கண்டுபிடித்துவிடலாம். இவை எல்லாம் 2003க்குப் பிறகுதான் சாத்தியமானது.

மரபியல் குறைபாடுடையவர்களிடம் அவர்கள் பிரச்னைகளை எப்படிச் சொல்ல முடியும்?

சொல்லவே முடியாது. உதாரணமாக புற்றுநோய் இன்றைக்கு எல்லோருக்கும் பரவலாக தெரிந்த நோயாகிவிட்டது. இன்று உலகளவில் ஆறில் ஒரு இறப்பு புற்றுநோயால் ஏற்படுகிறது என்கிறது உலகச் சுகாதார அமைப்பு. ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்திற்கு வந்துவிட்டோமா? ஒரு நோயாளியிடம் சென்று உங்களுக்குப் புற்றுநோய் என்று சொல்ல முடிகிறதா? கிடையவே கிடையாது.

பிறகு எப்படிச் சொல்வீர்கள்?

அதனால்தான் எனக்கும் இந்தத் துறைக்கும் ஒத்துவரவில்லை. இந்தத் துறையில் இருப்பவர்கள் உணர்ச்சிரீதியில் வலுவானவர்களாக இருக்க வேண்டும். நம் கண்முன்னாடியே பிறக்கப்போகும் இந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருக்காது என்று நமக்குத் தெரியும். ஆனால் நம்மால் எதுவும் செய்ய இயலாது. பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் சோதனை செய்ய முடியாது. கட்டாயப்படுத்தவும் முடியாது.

பொதுவாகப் பெற்றோர்கள் எடுக்கும் முடிவு என்ன?

மரபியல் ஆலோசனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் கீழ் மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். உணர்வுப்பூர்வமானவர்கள். உடைந்து அழுவார்கள். உதவியற்று இருப்பார்கள். சில வழக்குகளில் விவாகரத்து வரை எல்லாம் சென்றிருக்கிறது. அதுபோன்ற விஷயங்களை நம்மால் சமாளிக்கவே முடியாது. அவர்களிடம் ஆறுதலும் சொல்ல முடியாது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் நமக்கே பாதிப்பாக அமையும். அந்த இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும். அழுகை வரும். அந்த வலியையும் வேதனையையும் துக்கத்தையும் நாமும் உணர்வோம். ஆனால் எதுவும் செய்ய முடியாது.

அவர்களுக்கான நேரத்தை நாங்கள் கொடுப்போம். நோயாளிகள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டாலும் அமைதியாக இருக்க வேண்டும். அவர்களை வெளியே போகும்படிகூடச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் ஏற்கெனவே உணர்வுரீதியாக உடைந்துவிட்டார்கள். சிறிய வார்த்தைகள்கூட அவர்களைக் காயப்படுத்திவிடும். மரபியல் ஆலோசனை செய்துவிட்டு இரவில் தூக்கமே வராது.

இதில் முரண்பாடே மத்தியத் தர வர்க்கத்தில் உள்ளவர்கள்தான். குழந்தைக்கு மரபியல் குறைபாடு இருந்தாலும் கலைக்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லையா?

ஆம்.

ஒருவேளை இந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் வாழ்க்கைச் செலவுகள் எவ்வளவாகும்?

ஒவ்வொரு நோயைப் பொறுத்து மாறும். ஸ்வயர் சிண்ட்ரோம் போன்ற குறைபாடுகளுக்குப் பெரிய செலவுகள் ஆகாது. ஆனால் ஹார்மோனல் தெரப்பி செய்வார்கள். ஹிமோபிலியா போன்ற நோய்களுக்கும் பெரிய செலவுகள் கிடையாது. ஆனால் கையைக் கிழித்துக்கொண்டால் உடனே சிகிச்சை எடுத்தாக வேண்டும். இதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இலவசம். அவர்களுடைய செலவு என்பது வெறும் ஜாக்கிரதையாக இருப்பது மட்டுமே. ஆனால் எல்லா நோய்களுக்கும் அப்படிச் சொல்ல முடியாது. சில நோய்களுக்கு மாதம் 4000, 5000 ரூபாய் வரை ஆகும். சிஸ்டிக் ஃபைரோஸில் போன்ற நோய்கள் வாழ்க்கை முழுவதும் நாம் பரமாரிக்க வேண்டியதாக இருக்கிறது. இதற்கான செலவை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஒருநாளுக்கு 8 மாத்திரை சாப்பிட வேண்டும் இது குழந்தைப் பருவத்தில். வயதுகூட மாத்திரையின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகும். அந்த மாத்திரை அட்டை 800 -1000 ரூபாய். மொத்தம் 15 மாத்திரை வரும். 15 மாத்திரை இரண்டு நாளுக்குத்தான் வரும். மாதக்கணக்கில் எவ்வளவு செலவாகும் என யோசித்துப் பாருங்கள். இது மாத்திரைக்கான செலவு மட்டுமே. இது தவிர nebulizer, antibiotic போன்ற இதர செலவுகளும் உண்டு.

இந்த மருத்துவச் செலவுகளைக் குறைக்க வழி இல்லையா?

அரசு மருத்துவமனையில் பெரும்பாலான நோய்களுக்கு மருந்துகள் இலவசம். ஆனால் எல்லா நோய்களுக்கும் கிடைக்காது. சில என்.ஜி.ஓக்கள், சேவை நிறுவனங்கள் இதற்காக இயங்குகின்றன. அவர்கள் தள்ளுபடி விலையில் மருந்துகளைப் பெற்றுத் தருகிறார்கள். இதன்மூலம் செலவுகள் கொஞ்சம் குறையும்.

இந்தியாவில் இருக்கும் பொதுவான மரபியல் நோய்கள் எவை?

இந்தியாவைப் பொறுத்தவரை உறவுக்களுக்குள் திருமணம் செய்வதால் வரும் நோய்கள்தான் அதிகம். குறிப்பாக ரத்தம் சம்பந்தமான நோய்கள் (thalassemia, sickle cell anemia, G6PD Deficiency).

இந்தியாவில் நடைபெறும் மரபியல் ஆய்வுகள் எத்தகையவை?

அதிகம் கேன்சர் பற்றியதுதான். மரபணு சார்ந்தவை என்று குறிப்பாகப் பார்த்தால் ஏற்கெனவே கூறியதுபோல இரத்தம் சார்ந்த குறைபாடுகள், Duchene Muscular Dystrophy (DMD) உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

The post அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1 appeared first on கிழக்கு டுடே.

  •  

மைக்கேல்:  புலங்களும் ஒளியும்

கண்ணாடி இழைகள் காகிதங்களை இழுப்பது, காந்தங்கள் ஒன்றையொன்று விலக்குவது என மின்சாரம் குறித்தும் காந்தம் குறித்தும் பதினெட்டாம் நூற்றாண்டில் சில செப்பிடு வித்தைகளைத் தாண்டி எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. இவை குறித்த ஆய்வுகள் மெதுவாகத் துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குச்  சென்றது. லண்டனில் ஆய்வகம் ஒன்றில் சிறு தையல் நூல்கண்டுகள், ஊசிகள், கத்திகள், இரும்புக் கூண்டுகளை வைத்து மின் மற்றும் காந்தப் பொருட்களின் ஈர்ப்பு - விலகலை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
  •