Reading view

தமிழியல் தேடல்(4) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பொக்கிஷமாய் திகழும் பதிப்பகங்கள்”

தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு ஆய்வு விருந்து படைக்கும் வகையில், அரிய நூல்களை வெளியிடுகிற பதிப்பகங்களின் பட்டியலும் நூற்பட்டியலும் இக்கட்டுரையில் தொகுத்துக்  கொடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வுத் தேடலில் உழன்று வரும் ஓர் ஆய்வாளருக்கு அடிப்படைத் தேவைகளாகவும் ஆய்வுத்திறவு ஊற்றுகளாகவும் ஆய்வு நூல்கள் விளங்குகின்றன. ஆய்வுத் தேடலின் அடிநாதமே சான்றாதாரங்களைத் தேடித் திரட்டுதல்தான். ஆய்வுச் சான்றாதாரங்களை முதன்மை, துணைமை என இருவகையாகப் பகுப்பர். ஆய்விற்கு முத்தாய்ப்பானவை முதன்மைச் சான்றாதாரங்கள் என்றால், ஆய்விற்குச் செழுமைச் சேர்ப்பன துணைமைச் சான்றாதாரங்கள்.

ஆய்வுலகில் காய்த்தலுவத்தலில்லா துணிபுகளை நிலைநாட்ட, முதன்மைச் சான்றாதாரங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலான துணைமைச் சான்றாதாரங்களை வகுத்தளித்தல் அவசியம். அவ்வண்ணம், துணைமைச் சான்றாதாரங்களைப் பெற பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பதிப்பகங்கள் துணை செய்கின்றன.

1) மணிவாசகர் பதிப்பகம் – மெய்யப்பன் பதிப்பகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய ச.மெய்யப்பன் என்பவரால் மணிவாசகர் பதிப்பகமும், மெய்யப்பன் பதிப்பகமும் தொடங்கப்பட்டது. மணிவாசகர் பதிப்பகத்தில் 3450 நூல்களும், மெய்யப்பன் பதிப்பகத்தில் 750 நூல்களும் வெளிவந்துள்ளன. இவ்விரு பதிப்பகங்களும் சங்க நூல்கள் முதல் சமகால நூல்கள் வரை மிகக் குறைந்த விலையில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

 நூற்பட்டியலைக் காண

மணிவாசகர் பதிப்பகம்

https://drive.google.com/file/d/1Ne2HQz5HynxPC2cMh8SMqpMMcFPUSBmX/view?usp=drivesdk

மெய்யப்பன் பதிப்பகம்

https://drive.google.com/file/d/1NaHTMCZiHYUvK8CaIsOzY2sdnAXYivnA/view?usp=drivesdk

2) தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

திருவரங்கம் பிள்ளை, வ.சுப்பையா பிள்ளை, மா.திரவியம் பிள்ளை ஆகிய மூவரும் சேர்ந்து சைவமும் தமிழும் வளர்க்க 1920ஆம் ஆண்டுச் செப்டம்பா் மாதம் தொடங்கிய பதிப்பகம்தான் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ் பதிப்புலகில் நூற்றாண்டுகளைக் கடந்து வலம்வரும் சிறப்பு இந்நூற்பதிப்புக் கழகத்திற்கே உரித்தானது.

சைவ இலக்கியங்கள், இலக்கணங்கள் தொடர்பான நூல்களைத் தொடர்ந்து அச்சிற் பதிப்பித்து வருகிறது. கழகத்தின் குறிப்பிடத்தக்க பணியாகக் கழகத் தமிழகராதியைச் சுட்டலாம். இதன் முதல் பதிப்பு கடந்த 1964-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, தற்போது வரை 100 பதிப்புகளைக் கண்டுள்ளது.

தேவநேய பாவாணா், செங்கல்வராயப் பிள்ளை, தா.கோவிந்தன், சீனி. வேங்கடசாமி, மா.ராசமாணிக்கனாா், சோமசுந்தரனாா், ஒளவை துரைசாமி பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர் பலரின்  படைப்புகளைக் கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ் ஆய்வுலகுக்குக் கழகம் நடத்தி வந்த ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழின் பங்கு அளப்பரியது.

3) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமானது 41 செவ்வியல் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள், அகராதிகள், அடைவுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து நூல்களும் 50% கழிவு விலையில் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன. 500 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்குவோருக்கு அஞ்சல் செலவு கிடையாது. தற்பொழுது, செவ்வியல் நூல்களைச் செம்பதிப்பாக அச்சிற் பதிப்பித்து வருகின்றனர். இதுவரை இறையனார் களவியல், ஐங்குறுநூறு (மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை), கைந்நிலை ஆகிய நூல்களுக்குச் செம்பதிப்பு வந்துள்ளது.

புத்தகப் பட்டியலைக் காண –

4) தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் பள்ளிகளில் கல்விப்புலம் சார்ந்த பாடப் புத்தகங்களை உருவாக்கத் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது, உலக வரலாறு, இந்திய வரலாறு, சங்க இலக்கியம், சிறார் இலக்கியம் தொடர்பான நூல்களை அச்சில் பதிப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சிலவும் இதன்வழி வெளிவந்துள்ளன. நாட்டுமையாக்கப்பட்ட நூல்களைக் மிகக்குறைந்த விலையில் வாங்க இந்நிறுவனம் ஒரு வரம். இந்நிறுவனத்தின் வெளியீடான தமிழ்-தமிழ் அகரமுதலி முக்கிய நூலாகும்.

நூல்களைப் பெற –

5) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

https://textbookcorp.tn.gov.in/publication_tam.php

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதுவரை 494 நூல்களை அச்சு வாகனம் ஏற்றியுள்ளது.  பெரும்பாலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பயின்றவர்களின் ஆய்வுகளை நூலாகக் கொணர்ந்துள்ளது.

நூற்பட்டியலைக் காண,

https://ulakaththamizh.in

6) பாரி நிலையம்

தமிழியல் ஆய்வு உலகிற்குப் பாரி நிலையத்தின் பங்கு அளப்பரியது. இதுவரை 7,000 – 8000 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளது.

மு.வரதராசானாரின் 90-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பிரசுரமாகியுள்ளன. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரனார் போன்ற ஆளுமைகளின் படைப்புகளை வெளியிட்டுள்ளனர்.

7) உமா பதிப்பகம்

உமா பதிப்பகம் 1986இல்  இராம. இலட்சுமணன் என்பவரால் தொடங்கப்பட்டது. செவ்விலக்கிய நூல்கள், பக்தி இலக்கியங்கள், இதிகாச, புராண நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்துள்ளது.

வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் கம்பராமாயண உரை நூல்களைப் பதிப்பித்தது உமா பதிப்பகத்தின் குறிப்பிடத்தகுந்த முயற்சியாகக் கருதப்படுகிறது.

8) அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம்  வாயிலாகத் தமிழ் ஆய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன.

அண்ணா பல்கலைக் கழக நூற்பட்டியலைக் காண,

http://sekalpana.blogspot.com/2009/04/blog-post_15.html

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் ஏப்ரல் 14 (தமிழ்ப் புத்தாண்டு) மற்றும் செப்டம்பர் -15 (தமிழ்ப் பல்கலைக் கழக நிறுவன நாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள்) ஆகிய நாட்களில் 50% சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கின்றன. மற்ற நாட்களில் 25% கழிவு விலையில் புத்தகங்கள் கிடைக்கின்றன.

நூல்களைக் காண,

9) உ.வே.சா. நூல் நிலையம்

உ.வே.சா நூலகம் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நூலக வளாகத்தில் உ.வே.சா. நூல்நிலையம் செயல்படுகிறது.

உ.வே.சா பதிப்பித்த நூல்கள் முதல் எழுதிய நூல்கள்வரை அனைத்தும் இங்குக் கிடைக்கின்றன.

உ.வே.சா வின் அருங்கொடைகளைக் காண , https://uvesalibrary.org/publications/

10) தமிழ்மண் பதிப்பகம்

தமிழறிஞர்களின் நூல்களை முழுமையான படைப்புத் தொகுதிகளாகத் தமிழ்மண் வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பகத்தின் தனிச்சிறப்பாக 45,000 பக்கங்களில் அறிஞர் அண்ணாவின் 123 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைக் கடந்த 2019இல் வெளியிட்டுள்ளது.

 கா.அப்பாத்துரையார், வ.சு.ப.மாணிக்கம், இளங்குமரனார்,  மறைமலை அடிகள், ந.சி.கந்தையா பிள்ளை, தேவநேயப் பாவாணர், சாமி சிதம்பரனார், திரு.வி.க., மயிலை.சீனி.வேங்கடசாமி ஆகிய தமிழறிஞர்களின் பங்களிப்புகளை முழுத் தொகுப்பாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கப் பணியாகும்.

நூல்களைக் காண,

https://drive.google.com/file/d/1NiyqYNAkq5yLf6y4fQK4n5S1tONP245e/view?usp=drivesdk

11) வனிதா பதிப்பகம்

தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட பெருமைக்குரியது வனிதா பதிப்பகம். தமிழ் முதுகலைப் பட்டதாரியான அம்சவேணி இப்பதிப்பகத்தைக் கடந்த 1978ஆம் ஆண்டுத் தொடங்கினாா். 3000 தலைப்புகளில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்கள் தொடர்பான பல ஆய்வு நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நூல்களைப் பெற,

https://vanithapathippagam.com/bookdetails.php

12) காவ்யா பதிப்பகம்

பேரா. சண்முகசுந்தரம் அவர்களால் 1981ஆம் ஆண்டுக் காவ்யா பதிப்பகம் தொடங்கப்பட்டது. தொகுப்பு நூல்களுக்குப் பெயர் பெற்ற பதிப்பகம். தமிழ் ஆய்வுலகிற்குப் பல அருங்கொடைகளை வாரி வழங்கியுள்ளது.

13) ஆழ்வார்கள் ஆய்வு மையம்

தமிழ்ப் பதிப்புச் சூழலில் வைணவ இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளை வெளியிடும் குறிப்பிடத்தக்கப் பதிப்பகம். புராணங்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளது.

நூற்பட்டியலைக் காண,

https://bookday.in/aiwargal-aivu-maiyam-book-price-list/

14) பரிசல் பதிப்பகம்

பரிசல் பதிப்பகம் தமிழ் ஆய்வுலகிற்கு அரிய நூல்கள் பலவற்றை அச்சு வாகனம் ஏற்றும் மகத்தான பணியைச் செய்து வருகிறது. சமகால ஆய்வாளர்கள் எழுதிய பல ஆய்வு நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பகத்தைச் சிவசெந்தில்நாதன் அவர்கள் நடத்தி வருகிறார். இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பா.ரா.சுப்பிரமணியன் பெயரிலான இளம் ஆய்வறிஞர் விருதை ஆண்டுதோறும் பரிசல் பதிப்பகம்  வழங்கி வருகிறது.

வெளியீடுகளைக் காண,

https://www.commonfolks.in/books/parisal-putthaga-nilayam

15) அறவாணர் தமிழ்க்கோட்டம்

அற இலக்கியங்களில் ஆழங்கால் கொண்டு, ஆய்வுவெளியில் பல திறப்புகளை உருவாக்கித் தந்தவர் பேரா.க.ப.அறவாணர். இவர் பெயரில் செயல்படும் இப்பதிப்பகத்தை, இவரது துணைவியர் தாயம்மாள் அறவாணர் அவர்கள் நிர்வகித்து வருகிறார். க.ப.அறவாணரின் ஆய்வு நூல்கள் அனைத்தும் இங்குக் கிடைக்கின்றன.

காலச்சுவடு, நியூ செஞ்சுரி புத்தகநிலையம், அடையாளம், பாரதி புத்தக நிலையம், சாகித்ய அகாதெமி வெளியீடு போன்றவை ஆய்வாளர்கள் அறிந்த பதிப்பகங்கள். ஆகையால் இத்தொகுப்பில் அவை விரிவாக  விவரிக்கப்படவில்லை.

பொருளாதாரப் பயன் கருதாது, ஆய்வுலகில் புதுப்புது செல்நெறிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் பதிப்பகங்கள் ஆய்வு மாணவர்களுக்குப் பொக்கிஷம்தான்.

The post தமிழியல் தேடல்(4) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பொக்கிஷமாய் திகழும் பதிப்பகங்கள்” appeared first on Kaanalvari.

  •  

இலக்கியமும் எளக்கியமும் தமிழின் புதிய ”லாம்” களும் “ம்”களும் - புதிய அறிவுக்கட்டடடடப்பட்ட அஸ்திவாரங்கள்

imagesநண்பர் சுரேஷ் கண்ணன் அவர்கள் முகநூலில் கீழ்கண்ட நிலைத்தகவலை பதிவு செய்து உள்ளார். அது குறித்த எனது கருத்து கீழே...

”பின்நவீனத்துவ படைப்புகளுக்கென்று பிரத்யேகமான குணக்கூறுகள் உள்ளன. ஒரு நாவலில் ' ஒழி,பழி,குழி, மழி,கிழி' என்ற வார்த்தைகள் மாத்திரமே பத்து பக்கங்களுக்கு வந்தால் அந்த கலகத்தன்மைக்காகவே அதை பின்நவீனத்துவ நாவல் என வகைமைப்படுத்தலாம்' என்றார் நண்பரொருவர்...

உதாரணமாக...

குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி

என்று ஒரு நாவலில் வந்திருந்தால் சம்பளப் பாக்கிக்காக டிடிபி ஆப்பரேட்டர் பழிவாங்கியிருப்பாரோ என்று தவறான யூகம் கொள்ளாமல் அது பின்நவீனத்துவ நாவல் எனறு உறுதியாக சொல்லி விடலாம் என்கிறார்.
***
1941-ல் சபாபதி என்றொரு திரைப்படம் வந்தது. 'இருப்புப்பாதை வியாசம்' என்கிற கட்டுரையை குறும்புக்கார மாணவனான சபாபதி, ரயிலின் சப்தங்களையே தொடர்ச்சியாக 18 பக்கங்களுக்கு "குப் குப்..குப்..குப்... என்று எழுதியிருப்பான்.


ரயில் பாலத்தைக் கடக்கும் போது வரும் 'கடகடகட பட படபட' என்கிற நுண்ணிய வேறுபாடும் அந்த 18 பக்கங்களில் உண்டு.
***
எனக்கென்னமோ தமிழின் முதல் பின்நவீனத்துவப் பிரதி அந்த 18 பக்கங்களாகத்தான் இருக்கும் என தோன்றுகிறது.
http://www.youtube.com/watch?v=Qxs94r_J7-U
அவரது நிலைத்தகவல்  https://www.facebook.com/suresh.kannan.1806
************************************

இப்படியெல்லாம் பின்நவீனத்துவத்தை சொல்லித் தந்த அந்த பேராசானின் காலை காட்ட சொல்லுங்கள். தொட்டு கும்பிடனும். எந்த ஒன்றையும் யாரும் ஒழுங்காக படிப்பதில்லை. வார்த்தைகளை வைத்து ஜல்லியடிப்பது என்பதுதான் பின்நவீனத்துவம் என்று 20 ஆண்டுகளாக தமிழில் புரிந்துகொண்டுள்ள அபத்தம் அபாரமானது. தமிழ் மூளையின் விசேஷ குணாம்சங்களில் ஒன்று புதுமைபித்தன் கூறியதைப்போல.. ”தமிழ் குரங்குதான் முதல் குரங்கு என்பது.”  இந்த பழம்பெருமை எந்த புதிய ஒன்றையும் மூளைக்குள் நுழையவிடாது.  வரலாற்று ஆலமரத்தை அணைத்துக் கொண்டு தூங்கிவிடுவதில் அளப்பறிய ஆனந்தத்தை அடையும் தமிழ் அரசியல். ஆதார் கார்டுகளையும், ரேஷன் கார்டுகளையும் உற்பத்தி செய்யும் தமிழ் மெகா நாவல் இலக்கியம்.  வாசகன் தங்கி கண்ணீர்விடவும், கட்டி அழவும், உணர்ச்சிப் பெருக்கில் நனையவும் ஆன வாசக குடியிருப்புகளை வரைந்து தள்ளும் ரியல்-எஸ்டேட் எளக்கிய எழுத்தாளர்கள் என நிரம்பி வழியும் தமிழ் இலக்கியச் சூழல்.


நகங்களை அழகாக வெட்டி வழவழப்பாக ஆக்கிக்கொள்வதை முதல் நிபந்தனையாகக் கொண்டு உருவாகி உள்ள பதிப்பக-எழுத்தாள-வாசக உறவு. சொறிந்துகொள்வதில் ஒரு போட்டி வைத்தால் அதில் இவர்களே பெரும் பரிசுகளை தட்டிச் செல்வார்கள். தமிழ் இலக்கியம் கட்டக்கடைசியில் சொறிதலிதம் என்கிற இஸத்தை கண்டடைந்து உள்ளது தனது எண்ணற்ற பண முதலீட்டு வியபாரத்தில் சிக்கி.


தமிழின் உயர்ந்தபட்ச இலக்கியத்தர அளவுகோல் கல்கி, சுஜாதா மற்றும் பாலகுமாரன் என்கிற நிலைக்கு இலக்கிய உலகம் இறக்கப்பட்டு உள்ளது. சுஜாதா, பாலகுமாரன் வெகுசன எழுத்துக்களை தமிழில் உருவாக்கிய இரண்டு இலக்கிய எந்திரங்கள்.  அவர்களது தேவை வெகுசனத் தளத்திலானது.  அதை இலக்கிய தளத்திற்கு நகர்த்திவிட்டனர். அதன் மெகா உற்பத்தி நிறைந்து வழியும் இடமாகிவிட்டது தற்போதைய இலக்கிய உலகம். பாலகுமாரனின் அவதாரமாகிப்போன இலக்கிய மம்ம நாயனார்கள் நிறைந்துவிட்டனர். எண்ணற்ற நாவல்கள் வெளிப்படுவது அதன் ஒரு விளைவுதான். பாலகுமாரனின் அறத்தை ஒருவரும், காமத்தை பிறிதொருவரும், நெகிழும் மனிதர்களை மற்றொருவரும்  தங்கள் எழுத்துக்களின் வழி உச்சநிலைக்கு கொண்டு சென்று உள்ளனர். கல்கியும், சாண்டியல்யனும் மீண்டும் பிறப்பது அவசியமாகி உள்ளது. அது வெகுசனதளத்தில் தேவையானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இலக்கிய உலகில் அதன் பணி என்ன? என்பதே கேள்வி. இலக்கியத்தின் சரிவு இங்குதான் துவங்கியது. இன்று அது எண்ணற்ற பாலகுமாரன், சுஜாதாக்கள், கல்கி, சாண்டில்யன்களை இணையவெளி எங்கும் இலக்கியவாதிகளாக அவதாரமெடுக்க செய்து உள்ளது. இவர்கள் சொம்புடன் அலைந்து திரியும் அவலம்தான் தாங்க முடியவில்லை.


தமிழ் மூளையின் விசேஷ அமைப்பு எந்த ஒன்றையும் தனது பழமைவாதத்தை தண்டி ஏற்காது என நினைக்கிறேன். அதனால்தான் பு.பி. கபாடபுரம் எழுதினார். தமிழின் முதல் பின்நவீன பாலிம்செஸ்ட் சிறுகதை அது. அந்த கதையை ஒரு பெரும் நாவலாக விரிக்க முடியும். அந்த கதையில் இன்று அரசியல் பண்ணும் தமிழ் தேசியர்கள் உட்பட வந்து போவார்கள்.  அந்த கதையின் விசேஷம் தமிழின் வரலாற்றை ஒரு அழித்தெழுதப்பட்ட புனைவாக எழுதி வைத்து உள்ளதுதான்.   கோணங்கி கூறியதைப்போல கபாடபுரத்தில் ஒருவன் நுழைந்து வெளிவந்தபின் அவன் முற்றிலும் வேறொரு மனிதனாக மாறிவிடுவான். இதைக்கூட சரியாக வாசிப்பதில்லை நம் ஆட்கள். சிற்பியின் நரகம், நாரத ராமாயணம், பிரம்ம ராஸஸ், கட்டிலை விட்டிறங்கா கதை, வேதாளம் சொன்ன கதை... (பெயர்கள் நினைவில் எழுதப்படுகிறது.) இப்படி பலவடிவங்களில் எழுதிப்பார்க்கப்பட்ட புதுமை பித்தன் கதைகள் எல்லாம் பின்நவீன எழுத்து சொல்லும் மொழிவிளையாட்டைக் கொண்டவைதான்.


இந்துத்துவாவை, ராமயாணத்தை காந்தியை இந்திய சுதந்திரப்போரை மணுதர்மத்தை சாதியத்தை தமிழில் புதமை பித்தனின் நாரதராமயணம் அளவிற்கு வலுவாக கிண்டலடித்த ஒரு அரசியல் பிரதி வேறொன்றில்லை. தமிழின் பழகிய உணர்வுநிலையின் போலித்தனத்தை நுட்பமாக கிழித்தெறியும் ஜி. நாகராஜன் போன்றவர்கள் எழுத்தெல்லாம்தான் நவீனத்துவ உணர்வை முன்வைத்தவை. பின் நவீனத்துவம் என்பது ஒரு பின்-மனித சிந்தனை (post-human thought). மனிதன் என்கிற நவீனத்துவ கண்டுபிடிப்பிலிருந்தும், அதனால் உருவாகி உள்ள அழிவுகள், வன்முறையிலிருந்து, மனித மையவாத சிந்தனையிலிருந்து விலகி செல்லும் சிந்தனை. அது ஏதோ கிலி, பலி.. என்ற வார்த்தைகளின் தொங்கி கொணடிருப்பதில்லை.


குழந்தையின் அழுகையை வெறும் சத்தமாக உணர்ந்து அர்த்தமற்றது என்று முடிவெடுத்தால், எல்லாக் குழந்தையும் பசியில் செத்த மடிவதை தவிர வேறு வழியில்லை. சத்தம் ஒழுங்குபடுத்தி அர்த்தமாகிறது என்பதால், அர்த்தமற்ற சத்தம் என்பதை அதாவது நமக்கு புரியாததை, வெறும் சத்தமாக ஒதுக்க முயல்கிறோம். அதன் உணர்வு புரிவதில்லை.  அர்த்தம் என்பது ஒரு சமூக ஒழுங்கு என்பதால், அந்த ஒழுங்கை அதிகாரத்தை ஏற்பதே இதன் அடிப்படை. இப்படி சொல்வதால் மேலே குறித்த உங்கள் நக்கலான சப்தங்களின் அடுக்கை ஏற்கிறென் என்பதல்ல பொருள். இப்படி பலரும் பின்நவீன எழுத்து போலியை உருவாக்குவதே பிரச்சனை. அதை வைத்து அந்த சிந்தனைமீது சேற்றை வாறியிறைப்பது என்பது இப்போது எல்லோருக்கும் வசதியாக உள்ளது.


காரணம் இன்று இலக்கியம் என்பது வெகுசன எழுத்திற்கான பத்திரிக்கை எழுத்திற்கான பயிற்சிக்கூடமாக சான்றிதழ் வழங்கும் பட்டறையாக மாற்றப்பட்டு உள்ளது. இதுதான் தமிழில் முகநூலின் நான்காண்டு கால சாதனை. இலக்கியவாதி குமுதம் விகடனில் இடம் பிடிப்பதே உயர் லட்சியமாக மாறிவிட்ட காலமிது. கேட்டால் இலக்கியத்தின் எல்லைக் கோட்டை பின்நவீனத்தவம் அழித்துவிட்டது என்பார்கள். அதற்கு மட்டும் பின்நவீனத்துவம் முட்டுக் கொடுத்துக் கொள்வார்கள். தமிழில் தனது திறமையற்ற எழுத்தை அடைப்பதற்கான ஒரு குமிழாக பின்நவீனத்துவம் பயன்படுகிறது என்பதே யதார்த்தம்.


உண்மையில் பின்நவீனம் முன்வைக்கும் எந்த இலக்கிய எழுத்தையும் யாரும் படிப்பதில்லை. ஏன் காப்காவின் நாயகன் பெயரற்ற ஆங்கில எழத்து K ஆக உள்ளான்? சில நேரங்களில் வெறும் சப்தங்களை வெளியிடும் மொழியற்றவனாக உள்ளான்? என்பதெல்லாம் வாசிக்கப்படுவதோ உள்வாங்கப்படுவதோ இல்லை. இலக்கியம் என்பது முன்னேறிச் செல்வதற்கான படிகட்டாக மாறிவிட்டது. அதன் அதிகபட்ச எல்லை பாப்பலராக மாறுவது. பெரும்பத்திரிக்கையில் எழுதுவது. 10000 பிரதிகள் விற்கும் குப்பையை இலக்கிய கோபரமாக கட்டமைப்பது. இதெற்கெல்லாம்தான் பின்நவீனத்துவம் முன்வைத்த மைய உடைப்பு, புனித உடைப்புதான் காரணம் எனக் கூறிக்கொள்வது.  இலக்கியத்திற்கான மதிப்பீட்டை மற்றைய சிந்தனைகளைவிட பின்நவீனத்துவம் மிகவும் கொதிநிலையான சமூக உணர்வு மற்றும் அறிவுத்தளத்தில் முன்வைக்கிறது.  வாசிப்பாளனை விழிப்புகொள்ள தன்னோடு சேர்ந்து எழுத சிந்திக்க வைக்கிறது. மனிதன் மனிதனாக மையம் கொண்ட அனைத்தையும் விமர்சிக்கிறது. ஒரு புதிய மொழி விளையாட்டை முன்வைக்கிறது. அதன் அரசியல் பற்றிய பல விமர்சனங்கள் உள்ளபோதும், இலக்கியத்தில் அதன் செயல்பாடு முக்கியமானதே. 


இங்கு பின்நவீனத்துவம் என்பது என்னவென்றே புரியாமல் வார்த்தைகளை வைத்து ஒரு புறம் மிரட்டுவதும், மற்றொரு புறம் அதை வைத்து நக்கலடிப்பதும்தான் நடக்கிறது. பின்நவீனத்துவம் என்ன என்பதை விளக்கவோ, விளங்கிக்கொள்ளவோ யாரும் முயற்சிப்பதில்லை. நவீனத்துவமே புரியாத தமிழ் உலகில் பின்நவீனத்துவம் புரிவதும் கஸ்டம்தான்.  தமிழ் இணையத்தில் குறிப்பாக முகநூலில் நீர்த்துப்போன வார்த்தை இலக்கியத்தைப் போல பின்நவீனத்துவமும் ஒன்று.


இந்த புத்தகச் சந்தையிலாவது வாங்கி நண்பர்கள் பின்நவீனத்தை புரிந்து கொள்ள குறைந்தபட்சம் தமிழில் வந்துள்ள இந்து புத்தகங்களையாவது படிப்பது நலம்.


1. கோபிசந்த நாரங் எழுதியுள்ள பின்நவினத்துவம், கீழைக்காவயியல் பற்றிய மொழிபெயர்ப்புநூல். (ஜெமோவால் பரிந்துரைக்கப்பட்ட நூலும் கூட.) - சாகித்ய அகாதமி வெளியிடு.


2. பின்நவீனத்துவம் - ஆக்ஸ்போர்ட் தத்துவநூல் வரிசை மொழிபெயர்ப்பு பிரேம். அடையாளம் பதிப்பகம்.


3. பின்அமைப்பியலும் குறியியலும் - எம. டி. முத்துக்குமாரசாமி - பதிப்பகம் நினைவில் இல்லை. அவுட் ஆஃப் ஸ்டாக் ஆக இருக்கலாம்.  (நூல் பெயர் நினைவில் எழுதப்படுகிறது. தவறு இருக்கலாம்.)


4. எம். ஜி சுரேஷின் - குறுநூல் அறிமுகவரிசை 6 சிறு புத்தகங்கள் - அடையாளம் பதிப்பகம்.

5. க. பூரணசந்திரன் எழுதிய பின்நவீனத்தவ அறிமுக நூல் - பதிப்பகம் நினைவில் இல்லை.


6. அமைப்பியலும் அதன் பிறகும் - தமிழவன் - அடையாளம் பதிப்பகம்.

 
இவற்றை படித்தால் பின்நவீனத்துவம் பற்றிய இப்படி ஒரு அடிப்படையற்ற கேலி வெளிப்படாது என நம்புகிறேன். :) :)


பின்குறிப்பு - மார்க்சிய தோழர்களோடு இது குறித்து உரையாடும் மனநிலையில் நான் இல்லை.  இது அவர்களுக்கான பதிவு இல்லை. பின்நவீனத்துவத்தை வைத்து ஜல்லியடிப்பவர்கள் உரையாடலாம்.

- ஜமாலன் 19-01-2014 [email protected]

  •