புத்தக வெளியீட்டு விழாவில் எஸ்.ரா தம்பதியினரோடு ஒரு புகைப்படம் எடுக்க நினைத்திருந்த போதும், வழக்கம் போல் மறந்துவிட்டோம். எனவே இன்று புத்தகக் கண்காட்சியில் தோழர் எஸ். ராவை தேசாந்திரி அரங்கில் கண்டு, ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘நான் கண்ட நால்வர்’ எனும் நூலில் மகா கவியைப் பற்றி ‘கவிக்குலக் கோன்’ எனும் தலைப்பில் தான் கண்டும், கேட்டும் அறிந்த நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். அதிலிருந்து ஒரு நிகழ்ச்சி…
********* பாரதியார், இனிமையான சாரீரம் படைத்தவரல்லர்; ஆனால் உணர்ச்சியோடு பாடுவார்; கேட்டுக் கொண்டிருக்கிறவர்களையும் உணர்ச்சி வசப்படுத்திவிடுவார். காரணம், அவர் உணர்ச்சிமயமாய் இருந்தார்.
பாரதியார் ஒரு சமயம் சென்னை ராயப்பேட்டை மோபரீஸ் ரோடிலுள்ள குகானந்த நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது கலியாண சுந்தர முதலியாரும் நானும் வேறு சில நண்பர்களும் அங்கிருந்தோம். மாலை நேரம். நிலையத்து மண்டபத்தில் குமரக் கடவுளின் திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் பாரதியாரின் உள்ளத்தை பெரிதும் கவர்ந்துவிட்டது. “முருகா, முருகா, முருகா” என்று தொடங்கும் பாடலை உணர்ச்சி ததும்பப் பாடினார். மாலை நேரத்து மஞ்சள் வெயில் அந்தப் படத்தின் மீது லேசாகப் படிந்து, முருகனுடைய திருவுருவத்திற்குத் தனிச் சோபை கொடுத்தது. “வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய்” என்ற சரணத்தை அவர் பாடி, அதையே திரும்பத் திரும்பச் சொன்னபோது, அந்தக் குமர வடிவம் அவரை நோக்கி மெதுமெதுவாக வருவது போலவே இருந்தது. நாங்கள் அனைவரும் பரவசர்களானோம். அந்தக் காட்சி என் நெஞ்சத்தை விட்டு அகலவே அகலாது. முதலியார் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி கூறி ஆனந்தப்பட்டிருக்கிறார். ******* நாளை திருக்கார்த்திகைத் திருநாளில், குமரனின் புகழ்பாடும் பாடலைக் கேட்டு மகிழ, கனியின் குரலில் அப்பாடலை இன்றே கனி மியூசிக் வோர்ல்ட் சேனலில் ஏற்றியுள்ளோம்.
கனியின் திரை நேரம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது எனினும் அந்த குறுகிய நேரத்திற்குள் அவன் எப்படியாவது சில அபூர்வ முத்துக்களை கண்டடைந்துவிடுவது வழக்கம். அப்படித்தான் சென்ற வாரத்தில் ஒரு நாள் ‘ஆரோக்கிய தாயே ஆதாரம் நீயே’ எனும் பாடலை கண்டெடுத்தான்.
பெசண்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் பேராயர் சின்னப்பா அவர்கள் பாடிய பாடல் அது. அவன் உபயத்தில் அப்பாடலைக் கேட்ட எனக்கும் மனம் நெகிழ்ந்தது.
ஒரு பாடல் பிடித்துவிட்டால் திகட்டத் திகட்ட அதை மீண்டும் மீண்டும் கேட்டு, மனதில் பதித்துக் கொள்வது கனியின் வழக்கம். இந்தப் பாடலுக்கும் அதையே செய்யத் தொடங்கினான்.
இவ்வளவு தூரம் அவனை ஈர்த்த அந்தப் பாடலைப் பாடியவரிடமே அவனை அழைத்துப் போனால் என்ன என்று தோன்றியது. நெருக்கமான சில தோழர்களிடம் வழி கேட்டோம். அவர்களின் உதவியோடு,
பேராயரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் கேட்டோம்.
இன்று மதியம் வரச் சொன்னார். நானும் கனியும் மட்டும்தான் சென்றிருந்தோம். அவரது உதவியாளர்கள் அன்புடன் வரவேற்றனர். சிறிது நேரத்தில் வயதினால் உடல் சற்று தளர்ந்தாலும், குன்றாத மன ஊக்கத்தோடு ஐயா அவர்கள் வந்தார்.
பேச ஆரம்பித்ததுதான் நான். பின்னர் இரு இசை ஆர்வலர்களும் அவர்களின் மொழியில் உரையாடியபடியே இருக்க, நான் ஆங்காங்கு சிற்சில மொழிபெயர்ப்பு வேலைகள் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.
வயிற்றுக்கு ஈயும் நேரத்திலும் ஐயாவும், கனியும் மாறி மாறி பாடிக் கொண்டும், சிலாகித்துக் கொண்டுமிருந்தார்கள்.
சாப்பிட்டு முடித்து மீண்டும் வரவேற்பரைக்கு வந்தபோது கனியிடம் கானடா ராகம் தெரியுமாப்பா என்றார் ஐயா.
இவன் அதற்கான ஆரோகண அவரோகணத்தைப் பாடியதும், அலைபாயுதே கண்ணா பாடுவியா, பாடேன் கேட்போம் என்றார். இவனுக்கு பாடல் வரிகளில் கொஞ்சம் ஐயமிருப்பினும், பாட ஆரம்பித்துவிட, அவரும் பாடலில் ஆங்காங்கு இணைந்து கொண்டார்.
கண்ணனும், ஏசுவுமாகிய மேய்ப்பர்கள் இருவருக்கும் பொதுவான பாலமாக கானடா ராகம் அங்கே பொங்கிப் பிரவாகித்தது. கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே நெகிழ்ந்துவிட்டிருந்தோம்.
கனியின் தலை தொட்டு ஆசிர்வதித்து, வேளாங்கண்ணி மாதாவின் அழகிய திருவுருவச் சிலை ஒன்றினையும் தந்ததோடு மீண்டும் வாருங்கள் என்று அன்புடன் சொல்லி வழியனுப்பினார் பேராயர்.