Reading view

அவரில்லாத வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்பமுடியும்

 

அஞ்சலி

எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன்

அவரில்லாத வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்பமுடியும் ---

உதயசங்கர்




1970-80 களில் அதுவரை கண்டிராதவகையில் கோவில்பட்டியில் அன்றாடம் புதிய புதிய கலை இலக்கியப் பண்பாட்டு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த காலம்.. உலகப்புகழ்பெற்ற ஸ்பானிய ஓவியரும் கம்யூனிஸ்டுமான பிக்காசோவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாட்டிலேயே கோவில்பட்டியில் கொண்டாடினோம். குவெர்னிகா, சமாதானப்புறா, போன்ற புகழ்பெற்ற அவருடைய ஓவியங்களைக் காட்சிப்படுத்தி கோவில்பட்டியில் ஒரு புதிய இளைஞர் கூட்டம் கலை இலக்கியக்களத்தில் உருவாகியிருப்பதை அறிவித்த நிகழ்வு எனலாம். கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் போன்ற முன்னோடிகளைப் பின்பற்றி கோவில்பட்டியில் நவீன கலை இலக்கியக்களத்தில் இறங்கியிருந்தோம். கார்ட்டூன் கண்காட்சி, யுத்த எதிர்ப்புக்கண்காட்சி, உலக சமாதானக்கண்காட்சி, என்று கண்காட்சி வடிவத்தை அரசியல் வடிவமாக்கி வெகுமக்களிடம் கொண்டு செல்வதில் கோவில்பட்டி இளைஞர்களுக்குப் பெரும்பங்குண்டு. குறிப்பாக எங்களுடைய பள்ளி, கல்லூரித்தோழர், ஓவியர்.மாரீஸ் தான் அத்தகைய புதுமைகளைச் செய்தவர். அந்த இளைஞர் படையில் எங்கள் அன்புக்குரிய சமீபத்தில் மறைந்த எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன் முன்னணியில் இருந்தார்.

கடந்த 16-03-25 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், சிறந்த சிறுகதை எழுத்தாளரும், கதைசொல்லியும், உள்ளூர் வரலாற்றாய்வாளருமான தோழர்.இரா.நாறும்பூநாதன் தன்னுடைய 64 ஆவது வயதில் இயற்கையில் கலந்து விட்டார். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இராமகிருஷ்ணன்சண்முகத்தம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்த இரா.நாறும்பூநாதன் திருநெல்வேலியில் மறைந்த போது நெல்லை மாநகரமே அவருக்கு அஞ்சலி செலுத்தியது. மாநிலம் முழுவதுமிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும், நான்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களும், டி..ஜி, உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

நெல்லையில் உள்ள அத்தனை இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இளைஞர்களும், குழந்தை எழுத்தாளர்களும் கண்ணீர் சிந்தினார்கள். வங்கியில் உள்ள நகை மதிப்பீட்டாளர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம் என்று தொழிற்சங்கங்கள் தங்கள் இறுதி வணக்கத்தைத் தெரிவித்தார்கள். ஒவ்வொரு ஆளுமை மறைவின் போதும் நமக்குக் கற்றுக் கொள்ள சில செய்திகளை விட்டுச் செல்கிறார்கள். அந்த செய்திகளை அறிந்து கொள்வதும் அதைப் பின்பற்றுவதுமே நாம் அந்த ஆளுமைக்குச் செய்கிற மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

பள்ளிக்காலம் தொட்டே நாறும்பூநாதன் வாசிப்பில் ஆர்வமாக இருந்ததற்கு அவருடைய தந்தையார் தமிழாசிரியராக இருந்ததும், மூத்த சகோதரர்களான தோழர்.ஆர். எஸ்.மணியும் தோழர். ஆர்.குமரகுருபரனும் இடதுசாரிகளாக இருந்ததும் முக்கியக்காரணம்.. ஆரம்பக்கல்வி முடிந்து கோவில்பட்டிக்கு குடிவந்து கல்லூரி முடிக்கும் காலம் வரை கோவில்பட்டி என்ற இலக்கிய நகரம் அவருடைய ஆளுமையை உருவாக்கியதில் மிக முக்கியமான பங்கு வகித்தது. எப்போதும் வீட்டில் புத்தகங்களுடன் புழங்கிக் கொண்டேயிருந்ததால் அவருடைய சமவயது பிள்ளைகளை விட அதிகமான அறிவுக்கூர்மையும், கலைத்திறனும் ஓவியத்தில் ஆர்வமும் வாய்க்கப் பெற்றவராக இருந்தார் நாறும்பூ நாதன். நண்பர்களுடன் பேசும்போது புத்தகங்கள், கதைகள், செய்திகள், என்று உரையாடியதின் விளைவாக நண்பர்களையும் புத்தக வாசிப்பாளர்களாக மாற்றினார். பொதுநூலகத்தில் சந்திப்பதும் வாசிப்பதும் விவாதிப்பதும் தொடர்ந்தது. தனக்குக் கிடைத்த அறிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிற பெருங்குணம் நாறும்பூநாதனுக்கு பாலிய காலத்திலேயே இருந்தது. அதனால் தான் கல்லூரிக்காலத்தில் கையெழுத்துப்பத்திரிகை தொடங்கி அதில் நண்பர்களை எழுத வைத்து அழகு பார்த்தவர் நாறும்பூநாதன். அதனால் தான் 1970-கள்  காலத்தில் உதயசங்கர், சாரதி, முத்துச்சாமி தொட்டு இப்போது 2020 - களில்  இளம் எழுத்தாளர் ஆர்.சூடாமணி வரை எழுத்தாளர்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தார்.

1980-களில் அப்போது கோவில்பட்டியிலிருந்த எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், தேவதச்சன், கௌரிஷங்கர், சுவடி, வித்யாஷங்கர், ஓவியர்.மாரீஸ், இப்போது திரைக்கலைஞராக இருக்கும் சார்லி என்ற மனோகர், சாரதி, முத்துச்சாமி, உதயசங்கர், திடவை பொன்னுச்சாமி, ராம், அப்பாஸ், ஜோதிவிநாயகம், தமிழ்ச்செல்வன், கோணங்கி, அப்பணசாமி, போன்ற எழுத்தாளர்களுடனும் கலைஞர்களுடனும் சேர்ந்து தர்சனா என்ற நாடகக்குழுவிலும், சிருஷ்டி என்ற நாடக்குழுவிலும் பங்கேற்றார்.

அந்தக்காலத்தில் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தினமும் எழுத்தாளர்களின் உரையாடல்களைக் கேட்க நட்சத்திரங்களும் காத்துக் கொண்டிருந்தன. காரசாரமான விவாதங்களையும், விமரிசனங்களையும், உரையாடல்களையும் கரிசலின் சூடான காற்று கோவில்பட்டி நகரெங்கும் கொண்டு சேர்த்தது. அத்துடன் தோழர்கள் தேவப்பிரகாஷ், சுவடி, பாலு, ஜவஹர், இசக்கிமுத்து, ஆகியோருடன் அரசியல் விவாதங்களையும் தத்துவ உரையாடல்களையும் நடத்தவும் செய்தார் நாறும்பூநாதன்.

1981- ஆம் ஆண்டு வங்கிப்பணியில் சேர்ந்ததிலிருந்து வங்கி ஊழியர் சங்கத்தில் தோழர்.பால்வண்ணம் தலைமையில் தொழிற்சங்கப்பணிகளில் தீவிரமாக இயங்கவும், இடது சாரி இயக்கங்களில் பங்கெடுத்தார். 1986-ல் நெல்லைக்கு மாற்றலாகிப் போனபிறகு அவருடைய ஆளுமை பன்முகங்களில் ஒளிவீசியது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மாவட்டச்செயலாளராகப் பொறுப்பேற்று நெல்லையில் தமிழ்ச்செல்வனுடன் இணைந்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தினார். 1990 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15, 16, 17, ஆகிய தேதிகளில் நெல்லையில் நடந்த தமுஎசவின் ஐந்தாவது மாநில மாநாட்டின் பொருளாளராக இருந்தார் நாறும்பூநாதன். பல வகைகளில் அந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்ற மாநாடு. தெருக்கூத்துக்கலைஞர் ஓம் முத்துமாரி, சு.வெங்கடேசன், கவிஞர்.லட்சுமிகாந்தன், பவா.செல்லத்துரை போன்ற ஆளுமைகள் பங்கேற்ற முதல் மாநாடு. நான்கு நாட்களும் கலை இரவுகள் நடந்த மாநாடு. முதன்முதலாக கிராமியக்கலைஞர்கள் பங்கெடுத்த மாநாடு. நெல்லை மாநகரத்தையே ஜோல்னா பையர்களின் நகரமாக்கிய மாநாடு. அந்த மாநாட்டின் வெற்றிக்குப் பின்னால் நாறும்பூநாதனின் கடுமையான உழைப்பு இருந்தது.

அதன்பிறகு தமுஎகச வில் மாநிலக்குழு உறுப்பினராக, மாநிலச்செயற்குழு உறுப்பினராக, மாநிலத்துணைச்செயலாளராக, மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்து கொண்டிருந்தார். அமைப்பை உருவாக்குவதிலும், அமைப்பைத் தொடர்ந்து இயங்கவைப்பதிலும் கவிஞர்.கிருஷியுடன் சேர்ந்து அயராது முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

நெல்லையில் இருந்த தொ.மு.சி.ரகுநாதன், தி..சி., டேவிட் பாக்கியமுத்து, ஆர்.எஸ்.ஜேக்கப் வண்ணதாசன், சுகா, போன்ற இலக்கிய ஆளுமைகளுடன் அன்றாடம் பேசிப்பழகுகிற வாய்ப்பு கிடைத்தது. 1996- ஆம் ஆண்டு முதல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு மாற்றலாகி வந்த பண்பாட்டு ஆய்வாளர். தொ.. வுடனான நட்பு அவருக்குள் புதிய படைப்புப்பொறிகளைத் தூண்டி விட்டது.

வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வில் வெளிவந்த பிறகு அவருடைய இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டது. முழுமையாக ஒரு பண்பாட்டு ஆய்வாளராக, படைப்பாளியாக, ஒருங்கிணைப்பாளராக, இளம் எழுத்தாளர்களின் நிழற்பந்தலாகப் பரிணமித்தார் நாறும்பூநாதன். அவர் தடம் பதித்த எல்லாத்துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பினைச் செய்தார்.

அவர் கிட்டத்தட்ட ஐம்பது சிறுகதைகளை எழுதியுள்ள நாறும்பூநாதனின் ஆரம்ப கால கதைகளில் எளிய மனிதர்களே வலம் வருகிறார்கள். தன்னந்தனியாக தன் வாழ்வைத் தானே விலகி நின்று பார்க்கும் ஆச்சிகளும், பழைய வாழ்க்கைக்கும் புதிய மாற்றத்துக்குமிடையில் ஊசலாடும் மனிதர்களும், அங்கீகாரத்துக்காக ஏங்கித் தவிக்கும் கலைஞர்களும், மூச்சுக்காற்றாய் வாசிப்பை நேசித்து அகாலமரணமடைந்து தன் தாயின் வழியே வாசிப்பைத் தொடரும் அபாக்கியசாலிகளும், வேலையில்லாமல் நாளையும் பொழுதையும் எரிச்சலில் கழிக்கும் இளைஞர்களும், தன் கையெழுத்தைத் தானே போடமுடியாத தமிழாசிரியர்களும், அப்பாக்கள், அம்மாக்கள், குழந்தைகளுமாய் நாறும்பூநாதனின் கதைகளில் உலவுகிறார்கள். வீடும் குடும்பமும் முக்கியக்களன்களாகத் திகழ்கின்றன. பாலியத்தின் சுவடுகளைப் பின்பற்றி நிறையக் கதைகளை எழுதிப்பார்த்திருக்கிறார்.

அவருடைய மரத்துப்போன சொற்கள் என்ற கதைத்தொகுப்பின் கதைகள் மிகுந்த கலையமைதியும் ஆழமும் கொண்டவையாக உருப்பெற்றிருக்கின்றன. நெல்லை வட்டாரமொழியில் மிக எளிதாக வாசகர்களைக் கட்டிப் போடும் திறன் பெற்றிருந்தாரெனலாம். தமிழ்ச் சிறுகதையுலகில் அவருக்கென்று ஒரு தனியிடத்தைத் தக்க வைத்திருக்கிறார். தட்டச்சுக்காலக்கனவுகள் என்ற குறுநாவலையும் வெளியிட்டிருக்கிறார்.

முகநூல் என்ற சமூக ஊடகத்தில் முதலிலிருந்தே அனுபவப்பதிவுகள், பழைய கால நினைவுகளின் துளிகள், வரலாற்றுச்செய்திகள், இதுவரை யாரும் கவனித்திராத சாமானியர்களின் விசித்திரங்கள், கண்டுகொள்ளப்படாத சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களென்று பல்வேறு வகைமைகளில் நாறும்பூநாதன் எழுதிக் கொண்டு வந்தார். அந்தப் பதிவுகளைத் தொகுத்து கண்முன்னே விரியும் கடல் என்ற தலைப்பில் இலக்கிய உலகில் முதன்முறையாக நூலாகக் கொண்டு வந்தவர் நாறும்பூநாதன். பிறகு யானைச்சொப்பனம் என்ற நூலையும் கொண்டு வந்தார். தமிழ் நாட்டில் முதலும் முடிவுமாக முகநூல் நண்பர்களின் சந்திப்பை, “ தெக்கத்தி முகநூல் நண்பர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியவர் நாறும்பூ நாதன்.

அதன்பிறகு வேணுவன மனிதர்கள், பரணி வாசம், கனடா பயணம், திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். அதில் குறிப்பாக திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் என்ற நூல் திருநெல்வேலியின் கடந்த கால வரலாற்று முக்கியத்துவத்தையும் சாதனைகளையும் காத்திரமாகப் பேசி நூல். அந்த நூலுக்காக 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை .வே.சா. விருதை அவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தியது.

வங்கியில் பணிபுரியும் போது வங்கி ஊழியர்களுக்கு உதவி செய்யும் விதமாக ஸ்டேட் பேங்க் ஊழியர் டைரி 1,  ஸ்டேட் பேங்க் ஊழியர் டைரி 2, கடன் எத்தனை வகைப்படும்? ஒரு தொழிற்சங்கப்போராளியின் டைரிக்குறிப்புகள் போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

மெல்ல மெல்ல நெல்லையின் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் சரித்திர ரகசியங்களையும், தூசி படிந்து, அழுக்கடைந்து யாரும் கண்டுகொள்ளாத அல்லது கண்டும் காணாமலும் போய்க் கொண்டிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வெளிச்சம் பாய்ச்சினார். சாராள் டக்கர் கல்லூரி, சுலோசன முதலியார் பாலம், கிளாரிந்தா அல்லது பாப்பத்திக்கிணறு, பார்வையற்றோருக்கான முதல் பள்ளி, செவித்திறன் குறைந்தோருக்கான முதல் பள்ளி, பாரதியாரின் அப்பா சின்னச்சாமி ஐயரின் பெதப்புரம் ஸ்பின்னிங் மில்  என்று தொடர்ந்து எழுதியெழுதி நெல்லையைப் பற்றிய எந்தத் தகவலாக இருந்தாலும் நாறும்பூநாதனிடம் கேட்டால் போதும் என்ற அளவுக்கு நெல்லையின் அடையாளமாக உயர்ந்தார்.

உள்ளூர்ச்சமூகத்துடன் இப்படித் தொடங்கிய உரையாடல் அவரைத் தமிழகமெங்குமுள்ள பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் அறிமுகப்படுத்தியது. புத்தகக்கண்காட்சி நிகழ்வுகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல புதுமையான முன்மாதிரியான இன்னும் சொல்லப்போனால் சென்னை புத்தகக்கண்காட்சியிலேயே செய்யத்துணியாத பல காரியங்களை முன்னெடுத்தவர் நாறும்பூநாதன்.

மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்க புத்தகக்கண்காட்சி நடைபெற்ற பத்து நாட்களும், இருபத்திநான்கு மணி நேரமும் மாணவர்கள், வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள், பார்வையற்றோர் வரை ஒரே இடத்தில் தொடர்ந்து வாசித்த நிகழ்வானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிகழ்வாக மாறியது.

தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள சாகித்ய அகாடமி விருதுகளில் மூன்றில் ஒரு பங்கு விருதுகள் நெல்லை மாவட்ட எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்துக் கொண்டுமிருக்கிறது. அந்த எழுத்தாளர்களை தினமும் மரியாதை செய்யும் நிகழ்வையும், அவர்களைப் பற்றிய ஆவணப்படத்தையும் அவர்களைப் பற்றிய கண்காட்சியையும் ஏற்பாடு செய்ய வைத்தவர் நாறும்பூநாதன்.

புத்தகக்கண்காட்சி மேடைகளில் நினைவுப்பரிசாக நெல்லை மாவட்டத்தின் கலைச்சின்னங்களையே வழங்கும் யோசனையைச் சொன்னதோடு மட்டுமில்லாமல், கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் ரெட்டியார்பட்டி மலையில் நெல்லை மாவட்ட விலங்கான வரையாடு சிலை கம்பீரமாக நின்று கொண்டிருக்க வழிசெய்தவர் நாறும்பூநாதன்.

புத்தகக்கண்காட்சி நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் தமிழ் எழுத்தாளர்களை உரையாட வைக்கவும், அவர்களைக் கொண்டு பயிலரங்குகளை நடத்தவும் திட்டமிட்டவர் நாறும்பூநாதன்.

நவீன நாடகங்களை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியதும், சிறார்களுக்கான திரைப்படங்களைத் திரையிட ஏற்பாடு செய்ததும் நாறும்பூநாதன் தான். இப்படி எல்லாவகையிலும் முன்மாதிரியாகப் புத்தகக்கண்காட்சியை நடத்துவதில் முனைப்புடன் இருந்தது மட்டுமல்ல அதற்காக உடல்நலனையும் பொருட்படுத்தாமல் அலைந்து திரிந்தவர் நாறும்பூநாதன்.

நெல்லைமாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணப்படுத்துகிற நோக்கில், ஒரு நூற்றாண்டு கால நெல்லை மாவட்டச்சிறுகதைகளைத் தொகுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலக்கவிதைகள், ஒரு நூற்றாண்டு காலக்கட்டுரைகள், பெரிதினும் பெரிது கேள் என்ற சிறார்களுக்கான நூல் என்று தொகுப்பு நூல்களைத் தொகுத்து மாநிலத்துக்கே முன்மாதிரியாகச் செய்தவர். இப்போது அதைத் தொடர்ந்து விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் இத்தகைய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்களென்றால் நாறும்பூநாதனின் இலக்கிய அர்ப்பணிப்பைப் புரிந்து கொள்ள முடியும். 

எப்போதும் இலக்கியத்தை முன்னிறுத்துபவராக, எல்லோரையும் பங்கெடுக்க வைப்பவராக, எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மீது பேரன்பு கொண்டவராக இருந்தவர் நாறும்பூநாதன்.

பொதுவெளியிலும் ஒரு இடதுசாரியாகத் தன்னுடைய சமூகக்கடமையைச் செய்தார். ஆட்டோ டிரைவர் கோபி கொலைசெய்யப்பட்ட துயரமான சம்பவத்துக்குப் பிறகு நிர்க்கதியாக நின்ற அவருடைய குடும்பத்துக்கு குடும்பநல நிதி சேகரிப்பதில் முன்னின்றவர். அந்தக் குழந்தைகளின் கல்விக்காக உதவிகள் செய்தார்.

பரியேறும்பெருமாள் திரைப்படத்தில் நடித்த கணியான் கூத்துக்கலைஞர் தங்கராஜ் அவர்களுக்கு தமுஎகச நாட்டுப்புறக்கலைச்சுடர் விருது வழங்கிய போது அவரைத் தேடிச் சென்ற நாறும்பூநாதன் வீடின்றி தவித்த தங்கராஜின் நிலை கண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு அவருக்கு புதிதாக வீடு கட்ட அரசு உதவி பெற்றுக் கொடுத்தார். அத்துடன் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த அவருடைய மகளுக்கு ஆட்சியர் அலுவலகத்திலேயே வேலையும் வாங்கிக் கொடுத்தார்.

நாங்குநேரியில் சாதிவெறி காரணமாக சின்னத்துரை என்ற மாணவன் சகமாணவர்களால் வெட்டப்பட்ட கொடூரம் நடந்தபிறகு நாறும்பூநாதன் அவனைச் சந்தித்து ஆறுதல் கூறி வேண்டிய உதவிகள் செய்ததோடு, திருநெல்வேலியில் வீடு பார்த்துக் கொடுத்து அவன் பள்ளியில் சேர்வதற்கும் உதவிகளைச் செய்தவர். அதுமட்டுமல்ல வீட்டு வாடகையையும், பள்ளிக்கல்விச் செலவையும் செய்தார்.

இப்படி இலக்கியவாழ்விலும் பொது வாழ்விலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் நாறும்பூநாதன் என்ற ஆளுமை. ஒற்றுமை, ஒருங்கிணைந்த தன்மை, அனைவரையும் சமமாகப் பாவித்தல், அக்கறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், தமிழ்ச்சமூகத்தை அறிவுச்சமூகமாக மாற்றுவதற்கான முன்முயற்சிகள், என்று தான் வாழ்ந்த நகரத்திலுள்ள பொதுச்சமூகத்துடன் உரையாடிக் கொண்டேயிருந்தவர் நாறும்பூநாதன் என்றால் மிகையில்லை. சமூகத்துக்காக, இலக்கியத்துக்காக நெல்லை மாவட்டம் மட்டுமில்லை தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, மதுரை மாவட்டங்களிலும் நிர்வாகத்துடன் இணைந்து பங்களிப்பு செய்து கொண்டிருந்தவர் நாறும்பூநாதன்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை நடைமுறையில் கடைப்பிடித்தவர், எப்போதும் சிரித்த முகத்துடன், யாரையும் கடியாதவராக, அனைவரையும் அரவணைத்துச் செல்பவராக சகமனிதர்கள் மீது குறிப்பாக இளைய தலைமுறை மீது அக்கறை மிகுந்த மிகச்சிறந்த மாமனிதராக எழுத்தாளர்.நாறும்பூநாதன் இருந்தார். அவர் நாம் பின்பற்றுவதற்கு ஏராளமான வழிமுறைகளைக் காட்டிச் சென்றிருக்கிறார். அந்த வழிகளைக் கண்டடைவதும் அதை நடைமுறைப்படுத்துவதும் இன்றைய காலத்தின் தேவை..நெல்லை மாவட்டத்தில் இப்படியொரு ஆளுமை இதுவரை இருந்ததில்லை. இனிமேலும் அப்படியொருவர் வருவாரா என்பதும் உறுதியில்லை.

அவரில்லாத வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும்.

செவ்வணக்கம் தோழர்.எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன்

நன்றி - புத்தகம் பேசுது

  •