Reading view

ஜல்லிக்கெட்டு: ஒரு ஜனக் கூட்டத்தின் ஜனநாயகம்




பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருக்கிறது, ‘ஜல்லிக்கெட்டு’. அடிமாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட எருமை ஒன்று தப்பித்துவிட, அதைத் தேடி அலையும் ஒரு ஜனக் கூட்டத்தின் கதைதான் இது. ‘மாவோயிஸ்ட்’ என்னும் தலைப்பில் மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஸ் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆர்.ஜெயகுமாரும் ஹரீஸும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

மலையாள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இதன் இயக்குநர். ‘ஆமென்’ படத்தில் இருந்து தனக்கெனத் தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொண்ட லிஜோ இதில் இன்னும் திருத்தமாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். ஷாட் தேர்வில் அவரது தேர்ச்சி கூடியிருக்கிறது. கடிகார முள்ளின் ஓசைக்குப் படத்தின் கதாபாத்திரங்கள் விழி திறக்கும் முதற்காட்சி அதற்கான பதம்.


கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக் கிராமம்தான் கதையின் களம். அங்கே கறி வியாபாரம் செய்யும் வர்கியின் கடைக்குக் கொண்டுவரப்படும் எருமை, அடித்துக்கொல்லப்படும் அதிகாலை வேளையில் அவருடைய கையாள் அந்தோணியின் பிடியிலிருந்து நழுவிக் காட்டுக்குள் பதுங்கி விடுகிறது. அதன் பிறகு அந்த ஊரின் இரு பகல்களும் இரு இரவுகளும் நடைமுறை வாழ்க்கையிலிருந்து தப்பிக் காட்டுக்குள் அலைகிறது. இந்தச் சிறு காலத்துக்குள் படம், பலவிதமாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. இதற்கு முன்பு எருமை மாட்டிறைச்சி, அந்த ஊரின் வாழ்க்கையுடன் எவ்வளவு தொடர்பு கொண்டது என்பதைத் திட்டுத் திட்டான காட்சிகள் வழியே லிஜோ சொல்லியிருக்கிறார்.


காட்டுக்குள் தப்பிச் சென்ற எருமை மூர்க்கத்துடன் ஊருக்குள் நுழையும் ஒரு நீண்ட காட்சியில் முதலில் டீக்கடையை முட்டிச் சிதைக்கிறது. பிறகு கம்யூனிஸ்ட் கொடியை, பிறகு வங்கிக்குள் புகுந்து பெரும் சினத்துடன் வர்கியை முட்டித் தள்ளிவிட்டு மீண்டும் காட்டுக்குள் புகுந்து கொள்கிறது. இதற்குப் பிறகு தோழர்கள் வருகிறார்கள். சாய்ந்த கொடியைக் குறித்துப் பேசுகிறார்கள். ஏதோ தீர்வு சொல்ல முயன்று அதற்குள் வன்முறையில் இறங்குகிறார்கள். இதற்கு முந்தைய காட்சியில் பசு மூத்திரம் பிடிக்கும் ஒருவர் எருமையை அதன் போக்கில் வாழவிட வேண்டும் என்று ஜீவகாருண்யம் பேசுகிறார். ஆனால், எருமை அவரது காட்டைச் சிதைக்கும்போது கொதித்துப் போய் வசை பாடுகிறார். வலது, இடது அரசியலை விமர்சிக்கும் இந்தப் படம், போலீஸ் அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதையும் சொல்கிறது. மத அமைப்புகள், எளிய மனிதர்களின் நம்பிக்கைகளைக் கொண்டு தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளைச் சாதிப்பதையும் படம் காட்சிகளின் வழியே பதிவுசெய்கிறது.


படத்தின் தொடக்கத்தில் மின்னல் வெட்டுபோல் காட்சிகள் வந்துபோகின்றன. அவற்றில் ஒன்றில் தினமும் புட்டு சமைப்பதற்காக ஒருவர் தன் மனைவியை அடிக்கிறார். இதுபோல் திட்டுத் திட்டாகப் பெண் கதாபாத்திரங்கள் படத்துக்குள் வந்துபோகின்றன. ஆனால், அவை மையக் கதைக்குள் எந்தக் குறுக்கீட்டையும் நிகழ்த்த வில்லை. ஆனால், இந்தக் கதாபாத்திரங்களின் வழி அதிகார அமைப்பை படம் சித்தரிக்கிறது. இன்னொரு காட்சியில் நக்சல் தோழரின் வீட்டில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இதற்கு ஒரு தொடர்ச்சி படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கிறது. எருமை திரும்பவும் தப்பிக்கும் காட்சியில் இந்த நக்சல் தோழர் மூலம் நடப்பு காலத்தின் இடதுசாரி அரசியலைப் படம் விமர்சிக்கிறது.


அந்தோணி, வர்கியின் தங்கை, எருமையைப் பிடிக்க காட்டுக்குள் இறங்கும் வர்கியின் முன்னாள் கையாள் குட்டச்சன் இந்த மூன்று கதாபாத்திரங்களின் முரணில்தான் படத்தின் இரண்டாம் பகுதி துளிர்க்கிறது. இவர்களுக்கு வெளியே எருமையைப் பிடிக்க ஜனக் கூட்டம் மூன்று பிரிவுகளாகக் காட்டுக்குள் இறங்குகிறது. இந்தப் பிரிவுகளுக்கு இடையில் ஒன்றிற்கு ஒன்று முரண்பாடுள்ளது. இந்த ஜனக் கூட்டம் சட்டம், ஒழுங்கைக் கைப்பற்றுகிறது. ஊரின் காவல் உதவி ஆய்வாளர் ஜனத்தோடு ஜனமாகக் கைலியுடன் எருமையின் மீது காலனைப் போல் ஓடும் காட்சி அதற்கான சாட்சி. பிறகு அந்த ஊரே ஒரு ஜனக் கூட்டத்தின் ஜனநாயகத்தின் கீழ் வருகிறது. ஒருவகையில் இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகத்தின் நிலை என்பதைப் படம் சொல்ல முயன்றிருக்கிறது.


இந்தத் துரத்தல் நாடகத்தை கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும் பிரஷாந்த் பிள்ளையின் ஒலிப்பதிவும் மூர்க்கமானதாக மாற்றியிருக்கின்றன. பின்னணி இசையாகக் குரல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. நாகரிகம் தொடங்குவதற்கு முன்னான மனித சப்தங்கள். நவீன ஆயுதங்கள் இன்றி கம்பும் சுத்தியலுமாக முன்னேறும் ஜனக் கூட்டத்தின் சப்தமும் தீப்பந்தமும் அத்துடன் சேர்ந்துகொள்கின்றன.


இந்தத் தேடுதல் வேட்டையின் ஊடே அந்தக் காட்டுக்குத் தங்கள் முப்பட்டான்கள் மலை ஏறி வந்த கதையைக் கதாபாத்திரங்கள் சொல்கின்றன. வாழ வழியில்லாத, வாழ்க்கைக்குத் தப்பிய உதிரிகளின் தேசமாக அது ஆனதைப் பல காட்சிகள் ஊடே படம் சொல்கிறது. அந்த ஊரே ஒரு தேசமாக விரிவுகொள்கிறது. அந்தத் தேசத்தில் இன்னும் மீதமிருக்கும் காட்டு வாசனையைப் போல் ஜனங்களிடம் தேங்கியிருக்கும் மிருக வாசனையையும் இந்தப் படம் இறுதியாகக் கண்டடைகிறது.


- மண்குதிரை
  

இந்து தமிழ், 25, அக்டோபர், 2019


  •  

சினிமாவில் அரசியல் திணிப்பு இருக்கக் கூடாது- லிஜோ ஜோஸ் பெல்லிசேரி நேர்காணல்


மலையாள சினிமாவின் இளம் தலைமுறை இயக்குநர்களுள் ஒருவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ‘ஆமென்’ ‘அங்கமாலி டைரீஸ்’ படங்கள் மூலம் தமிழகத்திலும் கவனம் பெற்றவர். அவரது புதிய படம் ஈ.ம.யோ. வெளியாகயிருக்கிறது. சென்னை வந்த அவர் பெங்களூர் விமானத்தைப் பிடிப்பதற்கு இடையிலான அரைமணி நேரத்தில் அவருடன் நிகழ்த்திய உரையாடலின் சுருக்கப்பட்ட வடிவம்.
உங்கள் முதல் படமான ‘நாயகன்’ ஒரு த்ரில்லர் வகை. மலையாள த்ரில்லரை எஸ்.என்.சுவாமி த்ரில்லர், கே.ஜி.ஜார்ஜ் த்ரில்லர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் எதைச் செய்ய வேண்டுமென நினைத்தீர்கள்?

வித்தியாசமான த்ரில்லர்தான் செய்யத்தான் விருப்பம். ஆனால் படமாக வெளிவந்தது, நான் படமாக்க நினைத்த த்ரில்லர் கதை அல்ல. முதல் படத்தில் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. இப்போது பார்க்கும்போது படம் சரியாக வரவில்லை என்பது புரிகிறது.

படத்தின் நாயகன் ஒரு கதகளிக் கலைஞர் என்பதைத் தீர்மானித்திருந்தீர்களா?

அதுதான் அந்தக் கதையில் ஒரு ஈர்ப்பான விஷயமாக இருந்தது. கதகளி மாதிரியான ஒரு கலையுடன் வன்முறையை இணைக்கும்போது கிடைக்கும் முடிவுதான், இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு உற்சாகத்தைத் தந்தது. இந்த அம்சம்தான் இதை ஒரு வித்தியாசமான த்ரில்லர் படமாக்கும் என்று நம்பினேன்.

ஆனால், அது நடக்கவில்லை, இல்லையா?

 ஆமாம். திரும்பப் பார்த்தபோது எனக்குப் பிடித்த மாதிரி அதை நான் உருவாக்கவில்லை எனத் தெரிந்தது. என் படங்களைப் பார்த்தால் எப்போதும் தவறுகள்தாம் கண்ணுக்குத் தெரிகின்றன. கலைஞர்கள் எல்லோரும் இப்படித்தான் இருப்பார்களா,  நூறு சதவீதம் திருப்தி வந்துவிட்டால் பிறகு எதற்கு படம் செய்ய வேண்டும்? ஒரு கலைஞனாக நான் 30 சதவீதம்கூட வளரவில்லை என்பதுதான் என் அபிப்ராயம்.

 ‘அங்கமாலி டைரீஸ்’ வெற்றிக்குப் பிறகுமா?

ஆமாம், ‘அங்கமாலி டைரீஸ்’ வெற்றிக்குப் பிறகும் நான் 50 சதவீதம்கூட வளரவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் நிறைய படங்கள் பார்க்கிறோம், வெளியில், இந்தியாவில். அவையெல்லாம் முழுமையான படமாக இருக்கும். என்னுடைய படங்கள் பார்க்கும்போது காட்சிகளை ரசிப்பேன். ஆனால் தவறுகள் தெரியும். முழுமையாக இல்லை எனத் தோன்றும். இது ஒரு கலைஞனின் விதி என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவன் படத்தை எல்லோரும் ரசிப்பார்கள். ஆனால் அவனால் ரசிக்க முடியாது.

ஆமென்


யதார்த்த மலையாள சினிமாவில் உங்களுடைய ‘சிட்டி ஆஃப் காட்’ மூலம் ஒரு புதிய பாவனையை உருவாக்க முயன்றீர்கள் எனலாமா?

கே.ஜி.ஜார்ஜ் ‘ஆதமிண்ட வாரியலு’ படத்திலேயே இதைச் செய்து பார்த்திருக்கிறார். சத்யஜித் ரே ‘கஞ்சன்சங்கா’வில் செய்திருக்கிறார்.

ஆனால், உங்கள் படம், அம்ரோஸ் பெரோஸ்’போல ஒரு கிளையிலிருந்து பிரிந்துசெல்கிறது இல்லையா?

அந்த வடிவம் அதற்கு முன்பே இங்கு இருக்கிறது. ஆனால் அலெக்ஸான்ரோ இன்னாரிட்டு இந்த வடிவத்தைப் பயன்படுத்தும்போது அது பிரபலமானது. பல அடுக்குகளில் கதை சொல்வதற்கு ஒரு சர்வதேசக் கவனமும் கிடைத்தது. எனக்கு அதுபோல ஒரு படம் செய்ய விருப்பம். அப்படித்தான் ‘சிட்டி ஆஃப் காட்’ உருவாகியது. முயற்சி என்ற வகையில் அந்தப் படம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தியேட்டரில் இரண்டு நாட்கள்தான் இருந்தது.

‘ஆமென்’ தெய்வம், மனித அவதாரம் எடுக்கும் ஒரு படம். தொன்மமும் உண்டு. த்ரில்லரிலிருந்து ஏன் சட்டனெ ஒரு மாற்றத்தைத் தேடிப் போனீர்கள்?

ஒரு படம் மாதிரி இன்னொரு படம் இருக்கக் கூடாது என்றுதான் முயன்றுவருகிறேன். ஒரு புது வகைப் படத்தில் வேலை பார்ப்பதில் உற்சாகம் கிடைக்கிறது. ஒரு கிராமத்துக் கதையைச் சொல்ல ஆசைப்பட்டேன். ஆனால் இதுவரை மலையாள சினிமாவில் காண்பிக்காத சினிமாவாக இருக்க வேண்டும் என நினைத்தேன். தமிழ்நாட்டுக் கிராமம் என்றால் பாரதிராஜாவின் கிராமம் மனத்தில் காட்சியாக உருவாகிறது. அதுபோல கேரள கிராமம் என்றால் சத்யன் அந்திக்காடின் கிராமம் உருவாகும். இதற்கு மாற்றான ஒரு கிராமத்தை உருவாக்குவதைச் சவாலான காரியமாக எடுத்துக்கொண்டேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.
ஆமெனின் வெற்றி உங்களை ‘டபுள் பேரல்’ போன்ற பரிசோதனை சினிமா செய்துபார்க்கத் தூண்டியதா?

கண்டிப்பாக. ‘ஆமென்’ ஒரு சராசரி கிராமத்துப் படமல்ல. ஒரு ஃபேண்டசியான கிரமாத்துக் கதை எனச் சொல்லலாம். அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற தைரியத்தில் இதையும் முயன்று பார்த்தேன். மேலும் எனக்குச் சிறு வயதிலிருந்தே காமிக்ஸ் பிடிக்கும். அதுபோன்ற காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்டு சினிமா செய்ய நினைத்தேன். அதுதான் டபுள் பேரல். ஆனால் அது சரியாக வரவில்லை.  வெளியான தேதியை முன்பே தீர்மானித்ததால் அவசர, அவசரமாக படத்தை முடித்தோம். அதனால் அது முழுமையான சினிமாவாக வெளிவரவில்லை. மக்களும் அதை வரவேற்கவில்லை.

திலீஷ் போத்தனின் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ போன்ற யதார்த்தவாத படங்களுக்கு கிடைத்த வெற்றியின் பாதிப்பிலான ‘அங்கமாலி டைரீஸ்’ செய்தீர்கள்?

யார்த்தமான படமாகத்தான் அதைச் செய்தோம். ஆனால், அந்தக் கதைக்கான தேவையாக அது இருந்தது. ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் வேலை பார்க்கும்போது சினிமா உருவாக்குவது ஒரு மன அழுத்தமான வேலை அல்ல என்பதைத் தெரிந்துகொண்டேன். கதையை உருவாக்குவதிலிருந்து அந்தப் படத்தின் ஒவ்வொரு வேலையைச் செய்யும்போதும் லேசாக உணர்ந்தேன். சினிமா என்பது எளிமையான, லேசான வேலைதான். நாம்தான் தேவையில்லாத அழுத்தத்தை இழுத்துப் போட்டுக்கொள்கிறோம். இவற்றை இந்தப் படம்தான் சொல்லிக் கொடுத்தது. ஆனால், இதை எல்லோருக்கும் பொதுவாகப் பார்க்க முடியாது. ‘ஈ.ம.யூ.வி’லும் இதைத் தொடர்ந்திருக்கிறேன்.

அங்கமாலி டைரீஸ்

அதனால்தான் ஈ.ம.யூ.வை 18 நாட்களில் செய்ய முடிந்ததா?

இத்தனை நாளுக்குள் முடிக்க வேண்டும் எனத் தீர்மானித்து படப்பிடிப்புக்குச் செல்லவில்லை. நாங்கள் கதைக்காகப் போதுமான அளவு வேலை பார்த்தோம். அது 18 நாட்களுக்குள் முடிந்துவிட்டது. ‘அங்கமாலி டைரீஸு’ம் ‘ஆமெ’னும் 40 சொச்சம் நாட்களுக்குள் எடுத்த படங்கள்தாம்.

அங்கமாலி டைரீஸிலும் ஈ.ம.யூ.விலும் நட்சத்திரங்கள் இல்லை. இனி லிஜோவுக்கு நட்சத்திரங்கள் தேவை இல்லையா?

அங்கமாலீஸ் டைரீஸ் ஒரு ஆளின் கதை கிடையாது. அது ஒரு ஊரின் கதை. அதில் நட்சத்திரங்கள் இருந்தால் சரியாக இருக்காது. மேலும் பொதுவாக நான் கதைக்குத்தான் நடிகர்களைத் தேடுகிறேன். இந்திரஜித், பிருத்விராஜ், ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த என் முந்தைய படங்களுக்கும் அப்படித்தான். நட்சத்திரங்கள் இல்லை என்றால் தியேட்டர்களுக்கு ஆட்கள் வருவார்களா என்ற சந்தேகமெல்லாம் வரும். ஆனால் தியேட்டரில் ஒருநாள் தாக்குப் பிடித்தால் போதும். கதைக்காக ஆட்கள் வருவார்கள். அங்கமாலி டைரீஸுக்கு நடந்தது.

அங்கமாலி டைரீஸ் ஒரு அரசியல் படம் என விமர்சனங்கள் வந்தன. அப்படித் தீர்மானித்து உருவாக்கிய படமா அது?

அப்படியெல்லாம் தீர்மானிக்கவில்லை. ஒரு கலையை அரசியல் நோக்குடன் செய்யக் கூடாது என நினைப்பவன் நான். சினிமாவைப் பார்க்கும் பார்வையாளர் ஒருவர், அதில் காணக்கூடிய அரசியல்தான், அந்தப் படத்தின் அரசியல். நாமாக ஒன்றை வலியுறுத்தித் திணிக்கக் கூடாது. படம், ஒரு மனுஷனைப் பற்றி, ஒரு ஊரைப் பற்றிச் சொல்லும்போது அதன் அந்த மனுஷனின், ஊரின் அரசியலையும் சேர்த்து வெளிப்பட வேண்டும். நாமாக திணிக்க வேண்டியதில்லை.

ஈ.ம.யோ

வெளியாகவிருக்கும் ஈ.ம.யோ., விக்ரம் சுகுமாரனின் ‘மதயானைக் கூட்டம்’ மாதிரியான இறப்புச் சடங்கைச் சித்திரிக்கும் படமா?

அந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் பார்க்கவில்லை. இதுவும் இறந்த வீட்டைப் பற்றிய கதைதான். ஆனால் இதில் ஒரு மீனவக் குடும்பத்தில் நடக்கும் இறப்புச் சடங்கைப் பதிவுசெய்திருக்கிறேன். பொதுவாக நாம் எல்லோருமே இறப்பை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இல்லை. நாம் ஏன் இறப்பில் இருந்து மறைந்து நிற்க வேண்டும், என்ற கேள்வியையும் இதில் புகுத்திப் பார்த்திருக்கிறேன்.
சந்திப்பு: மண்குதிரை (தி இந்து, 24,பிப்ரவரி,18) 

  •