Reading view

Vanangaan

வணங்கான் – அரை மணி நேரம் பார்த்திருக்கிறேன். பெரிய இயக்குநர் ஒரு படத்தை சுமாராக எடுக்கலாம். ஆனால் இத்தனை கேவலமாக எடுக்கக் கூடாது. ‘அவன் இவன்’ திரைப்படத்தை விட மோசமான ஒரு திரைப்படத்தை இனி பாலாவால் எடுக்க முடியாது என்கிற எண்ணத்தைப் போட்டு உடைத்திருக்கிறார் பாலா. தனக்குத்தான் காமெடி வரவில்லையே, அப்புறம் எதற்கு அதைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தெரியவில்லை. எல்லாக் காட்சிகளும் ஏதோ அவரது பழைய திரைப்படத்தில் வந்த காட்சிகள் போலவே இருக்கின்றன. ஆங்காங்கே பிராமண பாஷை, ஆங்காங்கே கிறிஸ்துவக் கிண்டல், மீண்டும் கிறிஸ்துவப் புகழ்ச்சி, ஆங்காங்கே அரசியல் நையாண்டி, ஆங்காங்கே இந்து மதக் கிண்டல் என எல்லாவற்றையும் போகிற போக்கில் தொட்டுக்கொண்டு விட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்று யாரோ பாலாவை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் மகனும் மகளும் கடுப்பாகி, இது என்ன படம், ஒரு மண்ணும் புரியல, ஏன் இதைப் போட்டுக் கழுத்தறுக்க என்று கேட்டார்கள்.

இப்படித்தான் முன்பொரு சமயம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ என்ற கன்னடப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் 20 நிமிடம் பார்த்ததில் ஒன்றுமே புரியவில்லை. பிடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கப் போய் அந்தத் திரைப்படத்தைச் சாப்பிடும் போதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம் என்ற வாக்கில் 7 ஞாயிற்றுக்கிழமைகளில் பார்த்து முடித்தேன். முடிவில் உண்மையில் அந்தப் படத்தின் வெறியனாகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ரக்ஷித் ஷெட்டி பிரமாதப்படுத்தி விட்டார். பின்பு அந்தப் படத்தை முழுமையாக மீண்டும் பார்த்தேன்.

அதேபோல் இந்தப் படத்தையும் இனி ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போது பார்க்கப் போகிறேன் என என் பையனிடம் சொன்னேன். மறு விநாடி அவன் சொன்னான், ‘இந்த வீட்ல உன்கூட சேர்ந்து சாப்பிடறது இன்னைக்குத்தான் கடைசி’.

வணங்கான் திரைப்படத்தில் ஒரு பாதிரியார் நெற்றி நிறையக் குங்குமம் பூசிக்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி பக்கம் இந்த எழவெடுத்த மரபு ஏதேனும் உண்டா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Update:

இன்று சாப்பிடும்போது வணங்கான் அடுத்த 30 நிமிடம் பார்த்தேன். முதல் 30 நிமிடமே பரவாயில்லையோ என்று நினைக்க வைக்கும் அடுத்த 30 நிமிடம்! கொடூரம். இயக்குநர் எடிட்டர் என அனைவரும் படத்தைப் பார்த்து மயங்கிய தருணம் ஒன்று இருக்கிறது. பிறவியிலேயே பேச முடியாத காது கேட்க முடியாத ஹீரோ கீழே விழுந்துவிட்ட குழந்தையை வேகமாக ஓடிச் சென்று தூக்கியபடி, அடிப்படலைல்ல ஒன்னும் ஆகலைல்லை என்று வாயசைப்பில் கேட்கும் அந்தக் காட்சி!

Share

The post Vanangaan first appeared on ஹரன் பிரசன்னா.

  •