Reading view

தமிழியல் தேடல்(4) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பொக்கிஷமாய் திகழும் பதிப்பகங்கள்”

தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு ஆய்வு விருந்து படைக்கும் வகையில், அரிய நூல்களை வெளியிடுகிற பதிப்பகங்களின் பட்டியலும் நூற்பட்டியலும் இக்கட்டுரையில் தொகுத்துக்  கொடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வுத் தேடலில் உழன்று வரும் ஓர் ஆய்வாளருக்கு அடிப்படைத் தேவைகளாகவும் ஆய்வுத்திறவு ஊற்றுகளாகவும் ஆய்வு நூல்கள் விளங்குகின்றன. ஆய்வுத் தேடலின் அடிநாதமே சான்றாதாரங்களைத் தேடித் திரட்டுதல்தான். ஆய்வுச் சான்றாதாரங்களை முதன்மை, துணைமை என இருவகையாகப் பகுப்பர். ஆய்விற்கு முத்தாய்ப்பானவை முதன்மைச் சான்றாதாரங்கள் என்றால், ஆய்விற்குச் செழுமைச் சேர்ப்பன துணைமைச் சான்றாதாரங்கள்.

ஆய்வுலகில் காய்த்தலுவத்தலில்லா துணிபுகளை நிலைநாட்ட, முதன்மைச் சான்றாதாரங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலான துணைமைச் சான்றாதாரங்களை வகுத்தளித்தல் அவசியம். அவ்வண்ணம், துணைமைச் சான்றாதாரங்களைப் பெற பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பதிப்பகங்கள் துணை செய்கின்றன.

1) மணிவாசகர் பதிப்பகம் – மெய்யப்பன் பதிப்பகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய ச.மெய்யப்பன் என்பவரால் மணிவாசகர் பதிப்பகமும், மெய்யப்பன் பதிப்பகமும் தொடங்கப்பட்டது. மணிவாசகர் பதிப்பகத்தில் 3450 நூல்களும், மெய்யப்பன் பதிப்பகத்தில் 750 நூல்களும் வெளிவந்துள்ளன. இவ்விரு பதிப்பகங்களும் சங்க நூல்கள் முதல் சமகால நூல்கள் வரை மிகக் குறைந்த விலையில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

 நூற்பட்டியலைக் காண

மணிவாசகர் பதிப்பகம்

https://drive.google.com/file/d/1Ne2HQz5HynxPC2cMh8SMqpMMcFPUSBmX/view?usp=drivesdk

மெய்யப்பன் பதிப்பகம்

https://drive.google.com/file/d/1NaHTMCZiHYUvK8CaIsOzY2sdnAXYivnA/view?usp=drivesdk

2) தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

திருவரங்கம் பிள்ளை, வ.சுப்பையா பிள்ளை, மா.திரவியம் பிள்ளை ஆகிய மூவரும் சேர்ந்து சைவமும் தமிழும் வளர்க்க 1920ஆம் ஆண்டுச் செப்டம்பா் மாதம் தொடங்கிய பதிப்பகம்தான் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ் பதிப்புலகில் நூற்றாண்டுகளைக் கடந்து வலம்வரும் சிறப்பு இந்நூற்பதிப்புக் கழகத்திற்கே உரித்தானது.

சைவ இலக்கியங்கள், இலக்கணங்கள் தொடர்பான நூல்களைத் தொடர்ந்து அச்சிற் பதிப்பித்து வருகிறது. கழகத்தின் குறிப்பிடத்தக்க பணியாகக் கழகத் தமிழகராதியைச் சுட்டலாம். இதன் முதல் பதிப்பு கடந்த 1964-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, தற்போது வரை 100 பதிப்புகளைக் கண்டுள்ளது.

தேவநேய பாவாணா், செங்கல்வராயப் பிள்ளை, தா.கோவிந்தன், சீனி. வேங்கடசாமி, மா.ராசமாணிக்கனாா், சோமசுந்தரனாா், ஒளவை துரைசாமி பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர் பலரின்  படைப்புகளைக் கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ் ஆய்வுலகுக்குக் கழகம் நடத்தி வந்த ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழின் பங்கு அளப்பரியது.

3) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமானது 41 செவ்வியல் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள், அகராதிகள், அடைவுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து நூல்களும் 50% கழிவு விலையில் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன. 500 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்குவோருக்கு அஞ்சல் செலவு கிடையாது. தற்பொழுது, செவ்வியல் நூல்களைச் செம்பதிப்பாக அச்சிற் பதிப்பித்து வருகின்றனர். இதுவரை இறையனார் களவியல், ஐங்குறுநூறு (மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை), கைந்நிலை ஆகிய நூல்களுக்குச் செம்பதிப்பு வந்துள்ளது.

புத்தகப் பட்டியலைக் காண –

4) தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் பள்ளிகளில் கல்விப்புலம் சார்ந்த பாடப் புத்தகங்களை உருவாக்கத் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது, உலக வரலாறு, இந்திய வரலாறு, சங்க இலக்கியம், சிறார் இலக்கியம் தொடர்பான நூல்களை அச்சில் பதிப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சிலவும் இதன்வழி வெளிவந்துள்ளன. நாட்டுமையாக்கப்பட்ட நூல்களைக் மிகக்குறைந்த விலையில் வாங்க இந்நிறுவனம் ஒரு வரம். இந்நிறுவனத்தின் வெளியீடான தமிழ்-தமிழ் அகரமுதலி முக்கிய நூலாகும்.

நூல்களைப் பெற –

5) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

https://textbookcorp.tn.gov.in/publication_tam.php

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதுவரை 494 நூல்களை அச்சு வாகனம் ஏற்றியுள்ளது.  பெரும்பாலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பயின்றவர்களின் ஆய்வுகளை நூலாகக் கொணர்ந்துள்ளது.

நூற்பட்டியலைக் காண,

https://ulakaththamizh.in

6) பாரி நிலையம்

தமிழியல் ஆய்வு உலகிற்குப் பாரி நிலையத்தின் பங்கு அளப்பரியது. இதுவரை 7,000 – 8000 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளது.

மு.வரதராசானாரின் 90-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பிரசுரமாகியுள்ளன. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரனார் போன்ற ஆளுமைகளின் படைப்புகளை வெளியிட்டுள்ளனர்.

7) உமா பதிப்பகம்

உமா பதிப்பகம் 1986இல்  இராம. இலட்சுமணன் என்பவரால் தொடங்கப்பட்டது. செவ்விலக்கிய நூல்கள், பக்தி இலக்கியங்கள், இதிகாச, புராண நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்துள்ளது.

வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் கம்பராமாயண உரை நூல்களைப் பதிப்பித்தது உமா பதிப்பகத்தின் குறிப்பிடத்தகுந்த முயற்சியாகக் கருதப்படுகிறது.

8) அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம்  வாயிலாகத் தமிழ் ஆய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன.

அண்ணா பல்கலைக் கழக நூற்பட்டியலைக் காண,

http://sekalpana.blogspot.com/2009/04/blog-post_15.html

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் ஏப்ரல் 14 (தமிழ்ப் புத்தாண்டு) மற்றும் செப்டம்பர் -15 (தமிழ்ப் பல்கலைக் கழக நிறுவன நாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள்) ஆகிய நாட்களில் 50% சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கின்றன. மற்ற நாட்களில் 25% கழிவு விலையில் புத்தகங்கள் கிடைக்கின்றன.

நூல்களைக் காண,

9) உ.வே.சா. நூல் நிலையம்

உ.வே.சா நூலகம் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நூலக வளாகத்தில் உ.வே.சா. நூல்நிலையம் செயல்படுகிறது.

உ.வே.சா பதிப்பித்த நூல்கள் முதல் எழுதிய நூல்கள்வரை அனைத்தும் இங்குக் கிடைக்கின்றன.

உ.வே.சா வின் அருங்கொடைகளைக் காண , https://uvesalibrary.org/publications/

10) தமிழ்மண் பதிப்பகம்

தமிழறிஞர்களின் நூல்களை முழுமையான படைப்புத் தொகுதிகளாகத் தமிழ்மண் வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பகத்தின் தனிச்சிறப்பாக 45,000 பக்கங்களில் அறிஞர் அண்ணாவின் 123 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைக் கடந்த 2019இல் வெளியிட்டுள்ளது.

 கா.அப்பாத்துரையார், வ.சு.ப.மாணிக்கம், இளங்குமரனார்,  மறைமலை அடிகள், ந.சி.கந்தையா பிள்ளை, தேவநேயப் பாவாணர், சாமி சிதம்பரனார், திரு.வி.க., மயிலை.சீனி.வேங்கடசாமி ஆகிய தமிழறிஞர்களின் பங்களிப்புகளை முழுத் தொகுப்பாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கப் பணியாகும்.

நூல்களைக் காண,

https://drive.google.com/file/d/1NiyqYNAkq5yLf6y4fQK4n5S1tONP245e/view?usp=drivesdk

11) வனிதா பதிப்பகம்

தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட பெருமைக்குரியது வனிதா பதிப்பகம். தமிழ் முதுகலைப் பட்டதாரியான அம்சவேணி இப்பதிப்பகத்தைக் கடந்த 1978ஆம் ஆண்டுத் தொடங்கினாா். 3000 தலைப்புகளில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்கள் தொடர்பான பல ஆய்வு நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நூல்களைப் பெற,

https://vanithapathippagam.com/bookdetails.php

12) காவ்யா பதிப்பகம்

பேரா. சண்முகசுந்தரம் அவர்களால் 1981ஆம் ஆண்டுக் காவ்யா பதிப்பகம் தொடங்கப்பட்டது. தொகுப்பு நூல்களுக்குப் பெயர் பெற்ற பதிப்பகம். தமிழ் ஆய்வுலகிற்குப் பல அருங்கொடைகளை வாரி வழங்கியுள்ளது.

13) ஆழ்வார்கள் ஆய்வு மையம்

தமிழ்ப் பதிப்புச் சூழலில் வைணவ இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளை வெளியிடும் குறிப்பிடத்தக்கப் பதிப்பகம். புராணங்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளது.

நூற்பட்டியலைக் காண,

https://bookday.in/aiwargal-aivu-maiyam-book-price-list/

14) பரிசல் பதிப்பகம்

பரிசல் பதிப்பகம் தமிழ் ஆய்வுலகிற்கு அரிய நூல்கள் பலவற்றை அச்சு வாகனம் ஏற்றும் மகத்தான பணியைச் செய்து வருகிறது. சமகால ஆய்வாளர்கள் எழுதிய பல ஆய்வு நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பகத்தைச் சிவசெந்தில்நாதன் அவர்கள் நடத்தி வருகிறார். இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பா.ரா.சுப்பிரமணியன் பெயரிலான இளம் ஆய்வறிஞர் விருதை ஆண்டுதோறும் பரிசல் பதிப்பகம்  வழங்கி வருகிறது.

வெளியீடுகளைக் காண,

https://www.commonfolks.in/books/parisal-putthaga-nilayam

15) அறவாணர் தமிழ்க்கோட்டம்

அற இலக்கியங்களில் ஆழங்கால் கொண்டு, ஆய்வுவெளியில் பல திறப்புகளை உருவாக்கித் தந்தவர் பேரா.க.ப.அறவாணர். இவர் பெயரில் செயல்படும் இப்பதிப்பகத்தை, இவரது துணைவியர் தாயம்மாள் அறவாணர் அவர்கள் நிர்வகித்து வருகிறார். க.ப.அறவாணரின் ஆய்வு நூல்கள் அனைத்தும் இங்குக் கிடைக்கின்றன.

காலச்சுவடு, நியூ செஞ்சுரி புத்தகநிலையம், அடையாளம், பாரதி புத்தக நிலையம், சாகித்ய அகாதெமி வெளியீடு போன்றவை ஆய்வாளர்கள் அறிந்த பதிப்பகங்கள். ஆகையால் இத்தொகுப்பில் அவை விரிவாக  விவரிக்கப்படவில்லை.

பொருளாதாரப் பயன் கருதாது, ஆய்வுலகில் புதுப்புது செல்நெறிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் பதிப்பகங்கள் ஆய்வு மாணவர்களுக்குப் பொக்கிஷம்தான்.

The post தமிழியல் தேடல்(4) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பொக்கிஷமாய் திகழும் பதிப்பகங்கள்” appeared first on Kaanalvari.

  •