Reading view

வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.

ஒரு வார காலக் கடும் பனிப்புயலுக்குப் பிறகான ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் மினுமினுவென்றும் கொஞ்சம் சொதசொதவென்றும் இருந்தது. நான் பிரெஞ்சு இலக்கியப் பேராசிரியராய் இருந்த பெண்கள் கல்லூரியை ஒட்டிய சிறிய மலைநகரத்தில், வழக்கமான பின்மதிய வேளை உலாத்தலின்போது, ஒரு வீட்டின் சாரல்தடுப்புப் பலகையில் வரிசையாய்த் தொங்கிய பனிக்கூரிகள்[1] என் கவனத்தை ஈர்க்க, நின்றேன். அவற்றுக்குப் பின்னாலிருந்த வெள்ளைப் பலகையில் அவற்றின் கூரிய நிழல்கள் தெள்ளந்தெளிவாய்த் தெரிந்தன. எனவே பனிக்கூரிகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் நிழலும் பார்க்கக்கூடியதாய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை. மேற்கூரை வெளிப்பக்கம் அதிக தூரம் நீட்டிக்கொண்டிருப்பதால் இருக்கலாம் அல்லது நான் பார்க்கும் கோணம் தவறாக இருக்கலாம் அல்லது சரியான பனிக்கூரிலிருந்து விழும் சரியான துளியை நான் பார்க்காது தவறவிட்டிருக்கலாம். கண்கட்டு வித்தை போல, கூர்முனைகளில் நீர்த்துளிகள் மாறி மாறிச் சொட்டுவதில் காணப்பட்ட லயம், என்னை ஏமாற்றிப் பரிகசிப்பதுபோல் தோன்றியது. அப்படியே அடுத்தடுத்த வீடுகளின் மேற்கூரை முனைகளில் தொங்கும் பனிக்கூரிகளைப் பார்வையிடும் ஆர்வம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிக்கொண்டு கெல்லி சாலையில், சரியாக, சில வருடங்களுக்கு முன்பு டி. குடியிருந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தியிருந்தது. நான் பணிபுரியும் அதே பெண்கள் கல்லூரியில் பயிற்றுநராக அவன் பணியாற்றிய காலத்தில் அந்த வீட்டில்தான் தங்கியிருந்தான்.

அந்த வீட்டை ஒட்டியிருந்த கார் நிறுத்தத்தின் கூரை முகப்பில் நீலவண்ண நிழற்பின்னணியில் தெள்ளந்தெளிவான பனிப்படிகக் கூம்புகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, என் தேடலுக்கான பரிசாக ஒரு காட்சி கிட்டியது. ஆச்சர்யக்குறியின் அடிப்புள்ளி அதன் இடத்திலிருந்து சற்றுக் கீழே சறுக்கியது போல் – இளகிச் சொட்டும் துளியை முந்தும் நோக்கோடு அவசரகதியில் ஓடியது போல் – இருந்தது. அந்த இரட்டை மினுமினுப்பு மகிழ்ச்சி அளித்தது என்றாலும் முழுமையான திருப்தி ஏற்படவில்லை. மாறாக, ஒளி மற்றும் நிழல் சார்ந்த என் தேடலுக்கான பசியைக் கூடுதலாகத் தூண்டிவிட்டது. என் ஒட்டுமொத்த இருப்பும் உலகக் கிண்ணத்துக்குள் உருளும் ஒற்றை விழிப்பந்தாக என்னை மாற்றிவிட்டதைப் போன்ற உணர்வுநிலையில் நான் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தேன்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பின்புற வளைவில் தகதகக்கும் கதிரொளியின் வைரப் பிரதிபலிப்பைக் கண்ணுற்றேன். இளகும் பனி காரணமாக, அனைத்துப் பொருட்களிலும் தெள்ளிய சித்திரத் தோற்றம் தென்பட்டது. ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்திருந்த பனித் தோரணங்களிலிருந்து உருகிய நீர், சரிவான தெருவில் சிற்றோடை போல் ஓடி மெதுவாக அடுத்தத் தெருவுக்குத் திரும்பியது. கட்டிடங்களுக்கு இடையில் எப்போதும் கவனத்தை அவ்வளவாக ஈர்த்திராத குறுகிய நடைபாதைகள் இப்போது செங்காவி மற்றும் அடர்சிவப்பு வண்ணப் பொக்கிஷங்களைத் திறந்துகாட்டிக்கொண்டிருந்தன. வரிவரியாய் இருந்த பள்ளங்களில் பனி படர்ந்து அலங்கரித்திருந்த குப்பைத்தொட்டியையும், அதன் மூடியின் மையத்தில் தொடங்கி விளிம்பு வரை பரவியிருந்த உறைபனியின் அலைவரிகளையும் முதன்முறையாகப் பார்த்தேன். கடந்த வெள்ளிக்கிழமை பனி அகற்றும் வாகனத்தின் உலோகத் தடுப்பால் ஒதுக்கிவைக்கப்பட்ட பனிக்குவியல்கள், சாலையோரங்களில் வரிசைகட்டி நிற்கும் இளம் பெங்குவின்களைப் போன்று தோற்றமளித்தன.

மேட்டில் ஏறி, இறக்கத்தில் இறங்கி, மெதுவாய் மங்கிக்கொண்டிருக்கும் தொடுவானம் நோக்கி நேராக என நான் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தேன். என் மொத்தக் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்த விஷயங்களின் தொடர்நிகழ்வு, இறுதியில் என்னை, வழக்கமாக நான் உணவருந்தும் இடத்தை விட்டு வெகு தொலைவில் அழைத்துச் சென்றிருந்தது. எனவே ஊர் எல்லையிலிருந்த, இதுவரை நான் உணவருந்தியிராத ஒரு உணவகத்தில் இரவுணவை முடிக்க முடிவு செய்தேன். உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது எந்த ஆரவாரமும் இன்றி இருள் கவியத் தொடங்கியிருந்தது.

ஈரப்பனித்தரையின் மீது விழுந்திருந்த வாகனத் தரிப்பிட மானி[2]யின்  மெலிந்து நீண்ட நிழல், விநோதமாய் ஒளிரும் சிவப்பு வண்ணத்தோடு, ஒல்லிப் பிசாசைப் போலத் தோன்றியது. நடைபாதை மீது ஒளிர்ந்துகொண்டிருந்த உணவகத்தின் அடையாள விளக்கின் சிவப்பு நிற ஒளி தெறித்துதான் அந்தத் தோற்றம் எனப் புரிந்தது. அதே போன்றதொரு விநோத நிழலை நீல நிற ஒளியில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அதே இடத்திலேயே அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து டி. போலியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி இறங்கினான். ஆல்பனியிலிருந்து பாஸ்டன் செல்வதாகவும் போகும் வழியில், தான் முன்பு குடியிருந்த அந்த ஊருக்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

ஒருவருக்கு ஒரு ஊரில் வலியும் வேதனையும் தரக்கூடிய, துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்து, பிறகு அவர் அந்த ஊரை விட்டுப் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் அவர் அந்த ஊருக்கு வரும்போது அவருடைய உணர்வுகள் எப்படி இருக்கும்? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேதனை தருவதாக இருக்கும். பழைய நினைவுகள் அவரை வாட்டி வதைக்கும். ஆனால் தங்களது மீள்வருகையின் போது எதுவுமே நடக்காதது போல், எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் அங்கு வளைய வருபவர்களைப் பார்க்கும்போது எனக்கு வலியும் வேதனையும் உண்டாவதோடு தனிப்பட்ட முறையிலும் வெறுப்பும் எரிச்சலும் ஏற்படும். இதை என் வாழ்க்கையில் பல தடவை கண்டிருக்கிறேன்.   

அவன் என்னை உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். சற்று முன்பு நான் போன அதே உணவகம். மேம்போக்கான நல விசாரிப்புக்குப் பிறகு இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாமல் கடுமையான மௌனம் நிலவியது. அந்த மௌனத்தைக் கலைப்பதற்காக, அவன் சம்பந்தா சம்பந்தமின்றி சொன்னான், “சிந்தியா வேய்னின் இதயத்தில் பிரச்சனை இருக்குமென்று நான் நினைத்தே பார்த்ததில்லை. அவள் போன வாரம் இறந்துவிட்டதாக என்னுடைய வழக்கறிஞர் சொன்னார்.”

2

அவன் இப்போதும் இளமையோடும், அதே திமிரோடும் அதே கபடத்தோடும் காணப்பட்டான். சிந்தியாவின் தங்கை சிபிலுடன் அவனுக்கு இருந்த மிக மோசமான உறவையோ, சிந்தியா என்னை அழைத்து பாஸ்டனுக்குச் சென்று டி.யைச் சந்தித்துப் பேசுமாறு என்னிடம் மன்றாடியதோ, சிபிலை அவன் சந்திப்பதை நிறுத்த வேண்டும் அல்லது அவன் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும், எதற்கும் ஒத்துவரவில்லை என்றால் அவனைக் கல்லூரியை விட்டே துரத்தவேண்டும் என்று சொன்னதோ, எதுவுமே அறியாத, அழகும் மென்மையும் கொண்ட அதே மனைவியோடும் அவன் இப்போதும் வாழ்ந்துகொண்டிருந்தான். மிகையுணர்வுக்கு ஆளான சிபிலின் வெறித்தனமான பேச்சின் பரிமாணம் அவன் மனைவியை ஒரு அடங்காப்பிடாரியாக சித்தரித்திருந்தது. நான் அவனை உடனடியாகவே மடக்கிவிட்டேன். அவனோ, எங்களைக் கவலைப்படவேண்டாம் என்றும், சிபிலை விட்டு தான் போய்விட முடிவு செய்துவிட்டதாகவும், கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியோடு ஆல்பனிக்குச் சென்று அவனுடைய அப்பாவின் பண்ணையில் வேலைபார்த்துப் பிழைத்துக் கொள்ள இருப்பதாகவும் சொன்னான். சிக்கலான பிரச்சனையாக உருமாறி வருடக்கணக்காக இழுபறியாக இருக்கக்கூடும் என்று அச்சுறுத்திய அந்த விஷயம், எங்களுடைய தொடர்ச்சியான இரகசியக் கலந்துரையாடலால் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மறுநாள் பிரெஞ்சு இலக்கியத்துக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெரிய வகுப்பறையில் நான் என்னுடைய உயர்மேஜையில் அமர்ந்திருந்தேன். சிபில் உயர் குதிகாலணி அணிந்து கையில் பெட்டியுடன் வகுப்பறைக்கு வந்தாள். மற்ற மாணவர்கள் தங்கள் புத்தகப் பைகளை வைத்திருக்கும் மூலையில் பெட்டியை வைத்தாள். தனது மெலிந்த தோளில் ஒரு பக்கமாகத் தொங்கவிட்டிருந்த ரோம அங்கியை அவிழ்த்து மடித்து பெட்டிக்குள் வைத்துவிட்டு இன்னும் இரண்டு மூன்று மாணவிகளோடு சேர்ந்து என்னிடம் வந்து தேர்வு முடிவுகளை நான் எப்போது அவர்களுக்கு அனுப்புவேன் என்று கேட்டாள். எல்லா விடைத்தாள்களையும் வாசித்துத் திருத்த, ஒரு வார காலம் எடுக்கும் என்று சொன்னேன். டி. எடுத்திருந்த முடிவைப் பற்றி அவளிடம் ஏற்கனவே சொல்லியிருப்பானா என்று நான் சந்தேகப்பட்டதும் கூட நினைவுக்கு வந்தது. கடமை தவறாத என்னுடைய இந்தச் சின்னஞ்சிறு மாணவியை எண்ணி எனக்குப் பெரும் வருத்தமும் கவலையும் உண்டாயின. தேர்வு நடைபெற்ற இரண்டரை மணி நேரமும் நான் மீண்டும் மீண்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். குழந்தைகளைப் போன்று இறுக்கமாக அணிந்திருந்த சாம்பல் வண்ண ஆடை, அலையலையாக சுருட்டிவிடப்பட்ட கருங்கூந்தல், அப்போது பிரபலமாக இருந்த, சல்லாத்துணி மறைப்புடன் கூடிய, சிறிய, பூப்போட்டத் தொப்பி, அதற்குக் கீழே நவீன பாணி ஓவியம் போன்று தோல்நோயால் உண்டான தழும்புகளோடு கூடிய முகம், தோல்நோய் சிகிச்சைக்கான செயற்கை விளக்கொளியால் கருத்த தேகம் என அழகைக் குலைக்கும் அனைத்து அம்சங்களும் அவளிடம் காணப்பட்டன. எனவே செக்கச் செவேலென்று வெடித்துக்கிடக்கும் உதடுகளுக்கிடையில் வெளிறிக் காணப்பட்ட ஈறும் பற்களும், கருத்த இமைகளுக்குக் கீழே தென்பட்ட நீர்த்த மை நிற நீல விழிகளும் மட்டுமே அவளுடைய அழகை எடுத்துக்காட்டக் கூடியனவாக இருந்தன.

அடுத்த நாள், கன்னாபின்னாவென்று இருந்த நோட்டுப்புத்தகங்களை அகர வரிசைப்படி அடுக்கிவைத்து, குளறுபடியான கையெழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன். எப்படியோ தவறுதலாக வரிசை மாறி முன்னால் வந்துவிட்ட வாலேவ்ஸ்கி மற்றும் வேய்ன் இருவரின் நோட்டுப்புத்தங்களையும் கையிலெடுத்தேன். முதலாவது வெளிப்பகட்டு காட்டும் மிகத் தெளிவான கையெழுத்துடன் அழகாக இருந்தது. ஆனால் சிபிலுடையது எப்போதும் போல ஏகப்பட்டக் கிறுக்கல்களோடு பற்பல சாத்தான்களின் பிடியில் அகப்பட்டது போல கொடுமையாக இருந்தது. அவள் முதலில் வெளிறிய கடினமான பென்சிலால் எழுத ஆரம்பித்திருந்தாள். அழுத்தி அழுத்தி எழுதியதில் தாள் முழுவதும் கருப்பு நிறமானதோடு பின்பக்கமும் அச்சு படிந்திருந்தது. நல்லவேளையாக, கொஞ்ச நேரத்திலேயே பென்சிலின் கூர் உடைந்துபோனது போலும். அடுத்து அவள் அழுத்தமாகவும் மொத்தமாகவும் எழுதக்கூடிய, கிட்டத்தட்ட கரிக்கட்டை போன்ற பென்சிலால் எழுதியிருந்தாள். அவ்வப்போது அதன் மழுங்கிய முனையை வாயில் வைத்து வைத்து எழுதிய காரணத்தால் காகிதத்தில் உதட்டுச்சாயக் கறையும் சேர்ந்திருந்தது. நான் எதிர்பார்த்ததை விடவும் அவளுடைய விடைத்தாள் மிக மோசமாக, அடிக்கோடுகள், வரிசை மாற்றுகள், தேவையில்லாத அடிக்குறிப்புகள் என அவநம்பிக்கையின் அனைத்துக் குறியீடுகளையும் பயன்படுத்தி, அவளால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் சரியாகச் செய்துமுடிக்க முயற்சி செய்ததைப் போன்று இருந்தது. அடுத்து அவள் மேரி வாலெவ்ஸ்கியின் மைப்பேனாவை இரவல் வாங்கி பிரஞ்சும் ஆங்கிலமும் கலந்து இவ்வாறு எழுதியிருந்தாள்: ‘இந்தப் பரிட்சை முடிந்ததும் என் வாழ்க்கையும் முடிந்துவிடும். விடைபெறுகிறேன், பெண்களே! மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களுக்கு, தேர்வில் ‘டி’ வாங்குவதை விடவும் மரணம் சிறந்ததல்ல, ஆனால் டி. இல்லாத வாழ்க்கையை விடவும் மரணம் சிறந்தது என்று நான் சொன்னதாக என் அக்காவிடம் தயவுசெய்து சொல்லிவிடுங்கள்.’

நான் உடனடியாக சிந்தியாவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது, எல்லாம் முடிந்துவிட்டதாக – காலை எட்டு மணிக்கே எல்லாம் முடிந்துவிட்டதாகச் சொன்னாள். நான் அங்கு வரும்போது சிபில் எழுதியிருந்த குறிப்பை எடுத்துவரச் சொன்னாள். வழியும் கண்ணீரோடு குறிப்பை வாசித்த அவள், பிரெஞ்சு இலக்கியத் தேர்வோடு, சிபில் தன்னைத் தொடர்புபடுத்தி எழுதியிருந்த ஒப்புமை வரிகளில் இருந்த புத்திசாலித்தனத்தை வியந்தாள். சிபிலின் நோட்டுப் புத்தகத்தைக் கீழே வைக்காமலேயே இரண்டு குவளைகளில் மதுவை நிரப்பினாள். சோடா நீரோடு கண்ணீரும் சேர்ந்து தெறிக்க, மீண்டும் அந்தத் தற்கொலைக் குறிப்பை வாசிக்கலானாள். அப்போது அதிலிருந்த இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். சிபில் ‘பெண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்த பிரெஞ்சு வார்த்தைக்கு ‘வேசி’ என்ற பொருளும் இருப்பதால், மாணவிகள் தவறுதலாக அந்த வார்த்தையைப் பயன்படுத்த நேரிடும் என்று அமெரிக்க அகராதிகளில் ‘பெண்’ என்றே அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டேன். சுவாரசியமற்ற அந்த அற்ப விஷயங்கள் சிந்தியாவை துக்கத்தின் அடியாழத்திலிருந்து பெரும் திணறலோடு மேற்பரப்புக்குக் கொண்டுவந்து சற்றே இலகுவாக்கின. பிறகு தொய்ந்துபோன அந்த நோட்டுப் புத்தகத்தை, சொர்க்கத்திற்குச் செல்வதற்கான கடவுச்சீட்டு போல கையில் இறுக்கமாகப் பிடித்தவாறு, மாடியில் இருந்த சிறிய குளிர்ச்சியான படுக்கையறைக்கு என்னை அவள் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த இரண்டு காலி மாத்திரைப் புட்டிகளையும், ஆதி முதல் அந்தம் வரை டி. அறிந்திருந்த அழகிய இளம் உடல் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, கீழே கவிழ்ந்து கிடந்த படுக்கையையும் ஒரு  போலீஸ்காரரிடம் அல்லது பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பான அயர்லாந்துக்காரரிடம் காட்டுவது போல் என்னிடம் காட்டினாள்.  

3

சிந்தியாவின் தங்கை இறந்து நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, சிந்தியாவை நான் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினேன். அந்தச் சமயம் நான் பொது நூலகத்தில் துறை சார்ந்த ஆராய்ச்சிக்காக நியூயார்க் சென்றிருந்தேன். அவளும் அப்போது அங்கு குடிபெயர்ந்திருந்தாள். ஏதோ ஒரு விநோதக் காரணத்துக்காக (கலையுணர்வு காரணமாக இருக்கலாம் என்பது என்னுடைய தெளிவற்ற யூகம்) குளிர்நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத மக்கள் வசிக்கும் ‘குளிர்ந்த நீர் குடியிருப்புகள்’ என்று சொல்லப்படுகிற, நகரத்தின் குறுகிய தெருக்களின் கீழ்த்தளக் குடியிருப்புகளுள் ஒன்றில் அவள் தங்கியிருந்தாள்.

வெறுப்பூட்டும் அவளுடைய நடவடிக்கைகளோ, மற்ற ஆண்களின் கண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரியும் அவளது தோற்றமோ என்னைத் துளியும் ஈர்க்கவில்லை. அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் பெரிய நீலநிறக் கண்கள். அவளுடைய அடர்ந்த கரிய புருவங்களுக்கு இடைப்பட்டப் பகுதியும் மூக்குத்துவாரத்தின் இருபக்கப் புடைப்புகளும் எப்போதும் மினுமினுவென்று காணப்பட்டன. அவளுடைய தோல் சொரசொரவென்று ஆண்களுடையதைப் போன்று இருந்தது. வண்ணமீன் தொட்டியைப் பார்ப்பது போன்று குறுகுறுவென்று அவள் நம்மைப் பார்க்கும்போது அந்த ஓவியக்கூடத்தின் துல்லியமான விளக்கொளியில் அவளுடைய முப்பத்திரண்டு வயது முதிர் முகத்தின் குழிகளைக் காணமுடியும். அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் பெரும் விருப்பம். ஆனால் அதில் அவ்வளவு நேர்த்தி இருக்காது. அசிரத்தை காரணமாக அவளுடைய பெரிய முன்பற்களில் உதட்டுச்சாயத்தின் சிவப்புக் கறை படிந்திருக்கும்.

அவள் வசீகரமான அடர்நிறத்தில் இருந்தாள். மோசம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஓரளவு நன்றாகவும் விதவிதமாகக் கலந்துகட்டியும் உடுத்தினாள். நல்ல உடல்வாகு என்று சொல்லும்படியும் இருந்தாள். ஆனால் யாவற்றிலும் ஏனோதானோவென்ற ஒரு அலட்சியம் இருந்தது. அவளுடைய மெத்தனத்தை நான் அரசியலில் இடதுசாரிக் கோட்பாடுகளோடும், கலையில் மேம்பட்ட கொச்சைத்தன்மையோடும் மறைமுகமாகத் தொடர்புபடுத்தினேன். எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய சுருள் கேசத்தை நடுவகிடு எடுத்து ஓரளவு படியவைத்து பின்னால் சிறு கொண்டையாக உயர்த்தி முடிந்திருக்காவிட்டால், பார்ப்பதற்கு பரட்டையாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். அவள் பளீரென்ற நிறத்தில் விரல் நகங்களில் நகப்பூச்சு பூசியிருந்தாள். ஆனால் நகங்கள் மிக மோசமாகக் கடிக்கப்பட்டிருந்ததோடு தூய்மையாகவும் இல்லை.

மிகவும் அமைதியான சுபாவமுடைய, திடீரென்று சிரிக்க ஆரம்பித்திருந்த ஒரு இளம் புகைப்படக் கலைஞனும், தெருவில் சிறிய அச்சுக்கூடம் வைத்திருந்த, வயது மூத்த இரண்டு சகோதரர்களும் அவளுடைய காதலர்களாக இருந்திருக்கின்றனர். கண்ணாடிக்குக் கீழே படியவைக்கப்பட்டிருக்கும் பொருளின் அறிவியல் துல்லியத்துடன், வெளிறிய முழங்கால்களுக்குக் கீழே மெல்லிய நைலான் காலுறையின் ஊடே காணப்படும் கரடுமுரடான கருப்பு முடிகளைப் பயமும் பதற்றமுமாக இரகசியப் பார்வை பார்க்கும்போது அல்லது அவளுடைய ஒவ்வொரு அசைவின்போதும், அவள் பூசியிருக்கும் மட்டமான வாசனைத் திரவியங்கள் மற்றும் களிம்புகளோடு, குளிக்காத அவள் உடலிலிருந்து வீசும் மோசமான வாடையை நுகர நேரும்போது, அவளுடைய காதலர்களின் ரசனையை எண்ணி எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

அவளுடைய அப்பா, அவர்களுக்கென்று இருந்த ஓரளவு சொத்தில் பெரும்பகுதியை சூதாடித் தொலைத்தவர். அவளுடைய அம்மாவின் முதல் கணவர் ஸ்லாவ்[3] வம்சாவளியைச் சேர்ந்தவர். மற்றபடி சிந்தியா வேய்ன் ஒரு நல்ல மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். இன்னும் பின்னோக்கி ஆய்ந்தால் ஏதேனும் தீவாந்தரத்தின் அரசர் அல்லது கணியர் வம்சத்தைச் சார்ந்தவளாக இருக்கலாம் என்பது என் யூகம். புதிய உலகத்தில், அற்புதமான இலையுதிர் மரங்களால் சூழப்பட்ட நிலப்பரப்பில் காலூன்றிய அவளது வம்சத்தின் ஆரம்ப கட்டத்தில் தூய திருச்சபைகளை நிறைத்தனர் விவசாய பக்தர்கள். அவர்களைத் தொடர்ந்து வியாபாரத்தில் கைதேர்ந்த வியாபாரிகளும், கல்வியிற் சிறந்தவர்களும் உருவாயினர். லெக்சிங்டன் நீராவிப்படகில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரும், சிந்தியாவின் சுழல்மேஜைக்கு அடிக்கடி வருகை தருபவருமான டாக்டர் ஜோனாத்தன் வேய்ன் (1780-1839) அவர்களுள் ஒருவர்.

நான் எப்போதும் மரபியல் வரிசையைத் தலைகீழாகப் பார்க்கவே முனைவேன். இங்கு வேய்ன் பரம்பரையை ஆராயும் வாய்ப்பு கிடைத்தபோது கடைசி வாரிசான சிந்தியா மட்டுமே கவனத்துக்கு உரியவளாக இருந்தாள். அதாவது, அவளுடைய கலைத்திறன், அற்புதமான, அழகான ஆனால் அவ்வளவாக விலைபோகாத, அவளுடைய நண்பர்களின் நண்பர்கள் எப்போதாவது வாங்கும் ஓவியங்கள், முக்கியமாக அவளுடைய வரவேற்பறையை அலங்கரித்த அற்புதமான மற்றும் கவித்துவமான ஓவியங்கள் அவளுடைய இறப்புக்குப் பிறகு என்னவாகும் எங்கே போகும் என்று தெரிந்துகொள்ள பெரிதும் விரும்பினேன். மிக நுணுக்கமாகத் தீட்டப்பட்டிருந்த உலோகப் பொருட்களின் ஓவியங்களுள் எனக்கு மிகவும் பிடித்தது, வாகன முகப்புக் கண்ணாடியின் ஒரு பக்கம் ஏடு போல் படிந்திருக்கும் உறைபனியும், கற்பனையான வாகனக் கூரையிலிருந்து வடிந்தோடும் நீர்த்துளிகளும், தெளிவான மறுபக்கத்தின் வழியாக நீலச்சுவாலை போல் ஒளிரும் வானமும் பச்சையும் வெள்ளையுமான தேவதாரு மரங்களும் தீட்டப்பட்டிருந்த, ‘வாகன முகப்புக் கண்ணாடி வழியே’ என்ற ஓவியம்.  

4

சிபிலின் காதலை சிந்தியாவும் நானும் சேர்ந்து முறியடித்துவிட்டது தற்போது சிபிலுக்குத் தெரிந்துவிட்டதாகவும் அதனால் சிபில் தன்மீது கோபமாக இருப்பதாகவும் சிந்தியாவுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தொல்வழக்கப்படி சிபிலின் ஆன்ம சாந்திக்கான சில பரிகாரங்களை (சிபிலுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு) அவள் செய்யத் தொடங்கினாள். சிபிலின் கல்லறையை குறைந்த வெளிச்சத்தில் படம்பிடித்து அந்தப் புகைப்படங்களை டி.யின் அலுவலக முகவரிக்கு ஒழுங்கற்ற கால இடைவெளியில் அவ்வப்போது அனுப்பிவைத்தாள். சிபிலின் தலைமயிரைப் போன்றே இருக்கும் தன்னுடைய தலைமயிர்க் கற்றையை நறுக்கி அதைத் தபாலில் அவனுக்கு அனுப்பினாள். அக்டோபர் 23-ம் தேதி, நண்பகல் வேளையில், இளஞ்சிவப்பும் பழுப்புமான வனாந்திரத்தின் சாலையோர விடுதியொன்றில் டி.யும் சிபிலும் தங்கியிருந்த நிகழ்வைக் குறிப்பிடும் விதமாக நியூ இங்கிலாந்து மாகாணத்தின் வரைபடத்தில் அவ்விடத்தை குறுக்குவெட்டுக் கோடுகளால் குறிப்பிட்டு அந்தப் படத்தை அவனுக்கு அனுப்பினாள். பாடம் செய்யப்பட்ட ஸ்கங்க்கை[4]  இரண்டு முறை அனுப்பினாள்.

எதையும் தெள்ளந்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசத் தெரியாமல் வளவளவென்று உரையாடக்கூடியவளான அவளால், தனக்குள் வியாபித்திருக்கும் விநோதமான ஆன்ம ஒளிவளையத்தைப் பற்றி முழுமையாக விவரிக்க இயலவில்லை. உண்மையில் அது தனிப்பட்ட வகையில் அவளுக்கு மட்டும் நேரும் புதிய விஷயமல்ல. பொதுவாகவே, ஒருவரின் மரணத்துக்குப் பிறகு அந்த ஆன்மா, அமைதியான ஆவியுலகில் ஏற்கனவே இறந்துபோனவர்களின் ஆன்மாவோடு போய் சேர்ந்துகொண்டு, அவ்வப்போது தனக்குப் பிடித்தவர்களைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பொழுதுபோக்காக வைத்திருக்கும். இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இயல்பான அந்த நுண்பொருள் கோட்பாட்டியலுக்குள் சிந்தியா சில விநோதமான நடைமுறைக் கூறுகளைப் புகுத்தினாள். 

அநாதையாய்த் திரியும் பூனைக்குட்டியை பள்ளிச்சிறுமி ஒருத்தி தூக்கி, கன்னத்தோடு கன்னம் இழைத்துக் கொஞ்சி, தன்னோடு எடுத்துச் சென்று, ஏதாவதொரு புறநகர்ப் பகுதியில் உள்ள புதரில் பத்திரமாக விட, அதை அந்த வழியாகச் செல்லும் யாரோ ஒருவர் எடுத்து, அன்போடு தடவிக்கொடுப்பதைப் போலவோ அல்லது இளகிய மனம் படைத்தப் பெண்மணி யாராவது, தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுசெல்வதைப் போலவோ, தன் விதியை இறந்துபோன நட்புகளின் ஆன்மாக்களே வழிநடத்துகிறார்கள் என அவள் உறுதியாக நம்பினாள்.

சில மணிநேரம் அல்லது தொடர்ந்து பல நாட்கள், சில சமயம் ஒழுங்கற்ற கால இடைவெளியில் மாதக் கணக்காகவோ, வருடக் கணக்காகவோ சிந்தியாவுக்கு ஏற்படும் எதுவும், இறந்துபோன நட்பு அல்லது உறவின் பழக்க வழக்கம் மற்றும் மனநிலை சார்ந்தது என்பது சிந்தியாவின் எண்ணம். அந்த நிகழ்வு ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய அளவுக்கு அசாதாரணமாக இருக்கும் அல்லது ஒருவரது வழக்கமான நாளில் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்து, நாளடைவில் ஒளிவளையம் மங்கி மறைய, அற்ப விஷயமாக மாறிவிடக்கூடிய, சின்னச் சின்ன சம்பவங்களாக இருக்கும். விளைவு நல்லதோ, கெட்டதோ, ஆனால் மூல ஆன்மா எதுவென்று கட்டாயம் அடையாளங்காண முடியும். ஒரு மனிதனின் ஆன்மாவுக்குள் ஊடுருவிச் செல்வதைப் போன்றது அது என்றாள் சிந்தியா.

எல்லாராலும் எல்லா ஆன்மாக்களையும் அடையாளங்காண இயலாது என்பதால் அவளால் அவளைத் தொடர்பு கொள்ளும் சரியான ஆன்மாவைக் கண்டறிவது சாத்தியமில்லை என வாதிட்டு அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன். கையொப்பம் இடப்படாத கடிதங்களையும் கிறிஸ்மஸ் பரிசுகளையும் யார் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ‘வழக்கமான நாள்’ என்று சிந்தியா குறிப்பிடுவது பலவீனமான ஆன்ம ஒளிவளையங்களின் கலவையாக இருக்கலாம் அல்லது காவல் தேவதையின் வழக்கமான செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கலாம். கடவுளைப் பற்றி என்ன சொல்வது? சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியை மண்ணில் வெறுக்கும் மக்கள், சொர்க்கத்திலும் அதே போன்ற ஒருவரை எதிர்பார்ப்பார்களா? மேலும் போர்கள் பற்றி? எவ்வளவு பயங்கரமான விஷயம்! இறந்த போர்வீரர்கள் உயிருடன் இருப்பவர்களுடன் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்களா? தள்ளாடும் வயோதிகர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக் கைப்பற்ற ஆவிக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்குமா?

ஆனால் சிந்தியா பொதுவிதிகளுக்கும் தர்க்க எல்லைகளுக்கும் அப்பாற்பட்டிருந்தாள். ‘தளபுள’ என்று கொதிக்கும் சூப்பைப் பார்த்தால் “ஐயோ, அது பால் (Paul)” என்பாள். அறக்கொடை நிறுவனத்தின் லாட்டரியில் அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட, நல்ல தரமான வாக்யூம் க்ளீனர் கிடைத்தால், “அன்புக்குரிய பெட்டி பிரவுன் இறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன்” என்பாள். 

என்னுடைய பிரெஞ்சு மூளையை அதிகம் எரிச்சலடைய வைத்தது எதுவென்றால் பெட்டி பிரவுனும் பாலும் உயிரோடு வாழ்ந்த காலத்துக்கே அவள் மானசீகமாகச் சென்றுவிடுவதுதான். நல்ல எண்ணத்துடன் அவர்கள் தனக்கு விதவிதமான, விநோதமான, ஏற்றுக்கொள்ள இயலாத பரிசுப்பொருட்களை அள்ளி அள்ளித் தந்தார்கள் என்றும் மூன்று டாலர் காசோலையுடன் கூடிய பழைய பர்ஸை தெருவில் கண்டெடுத்து, அதை உரியவரிடம் (இங்குதான் நடக்க இயலாத, முதிய பெண்மணி பெட்டி பிரவுன் வருகிறார்) சேர்ப்பித்ததில் ஆரம்பித்து, தன்னுடைய முன்னாள் காதலன் (இங்குதான் பால் வருகிறான்) அவனுடைய வீட்டையும் குடும்பத்தையும் தத்ரூபமான ஓவியங்களாய்த் தீட்டுவதற்கான நியாயமான தொகைக்கு பதில் அடிமட்டத் தொகை பேசி அவமானப்படுத்தியது வரை சொல்வாள். இவை எல்லாமே சிந்தியா குழந்தையாய் இருந்தபோது, எடுத்ததெற்கெல்லாம் அறிவுரை கூறி அவளைப் பாடாய்ப்படுத்திய திருமதி பேஜ் என்னும் நல்ல மனம் படைத்த முதிய பெண்மணியின் மரணத்துக்குப் பிறகே ஆரம்பித்தன. 

சிபிலின் குணாதிசயங்கள், வானவில்லின் விளிம்பைப் போல தெளிவற்றவை என்றாள் அவள். சிபிலை நான் கொஞ்சமாவது புரிந்து வைத்திருந்தால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சிந்தியாவின் வாழ்வில் சின்னச் சின்ன நிகழ்வுகளாக, அவ்வப்போது அவளைச் சூழ்ந்துகொள்ளும் அந்த ஒளிவளையத்தில் சிபிலின் ஆன்மா இருப்பதை என்னால் எளிதில் உணர்ந்துகொண்டிருக்க முடியும் என்றாள்.

சிந்தியாவின் அம்மா இறந்ததிலிருந்தே, அவளும் சிபிலும் தங்களுடைய பாஸ்டன் வீட்டை விட்டுவிட்டு, நியூயார்க் நகரத்துக்குக் குடிபெயர்ந்துவிட விரும்பினார்கள். நியூயார்க்கில் சிந்தியாவின் ஓவியங்களுக்கு நல்ல விலையும் அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் நம்பினார்கள். ஆனால் அவர்களுடைய பழைய வீடு தன் மென்கரங்களால் அவர்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டுவிட்டது. சிபில் தன் மரணத்துக்குப் பிறகு, அந்த வீட்டை சுற்றுப்புறத்திலிருந்து தனிமைப்படுத்தினாள். வீடு என்ற உணர்விலிருந்து அது சிதைந்து அழியத் தொடங்கியது. குறுகிய தெருவின் எதிர்ப்பக்கம் சாரங்களால் சூழப்பட்டு, இரைச்சலுடன், எரிச்சலூட்டும் ஒரு கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே வருடம் வசந்த காலத்தில் அந்தப் பகுதியில் பிரசித்தமான இரண்டு நெட்டிலிங்க மரங்கள் பட்டுப்போய் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு போல நின்றன. அறுபது வயதில் ஓய்வு பெற்ற, கால் நூற்றாண்டு காலத்தை நத்தைகள் பற்றிய ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்த திரு. லீவர் அவர்களின் காலைநேர நடைக்குப் பழகிய, ஏப்ரல் மாத மழையில் நனைந்து வித்தியாசமான கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், அழகிய செஞ்சாந்து நிற நடைபாதைக் கற்கள் பணியாட்களால் பெயர்த்தெடுத்து அகற்றப்பட்டன. முதியவர்களைப் பற்றிச் சொல்லும்போது, இறப்புக்குப் பிறகு, உயிரோடு இருப்பவர்களிடம் அவர்கள் காட்டும் ஆதரவும் இடையூறும் சில வேளைகளில் வேடிக்கையாக இருக்கும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

சிந்தியா ஒரு தடவை, போர்லாக் என்ற கிறுக்குத்தனமான நூலகரோடு நட்பாக இருந்தாள். அவர் ‘hither’ என்ற வார்த்தையில் உள்ள இரண்டாவது h-க்கு பதிலாக i என்பது போல் விநோதமான எழுத்துப்பிழைகளோடு அச்சாகியிருந்த பழைய புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே, தூசு படிந்த தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தைக் கழித்தார். சிந்தியாவுக்கு மாறாக, தெளிவற்ற யூகங்களால் உண்டாகும் புளகாங்கித உணர்வால் அவர் ஈர்க்கப்படவில்லை. அவர் தேடியவையெல்லாம் திட்டமிட்டதைப் போல் தோன்றும் தற்செயல்கள் மற்றும் இடைவெளிகளைப் போல் தோற்றமளிக்கும் பிளவுகள் போன்ற முரண்விநோதங்களை மட்டுமே. ஒழுங்கற்ற அல்லது இலக்கண விதிகளுக்கு மாற்றாக இணைக்கப்பட்ட வார்த்தைகள், சிலேடைகள், மாற்றெழுத்துப் புதிர்கள், வார்த்தை விளையாட்டுகள் இன்ன பிறவற்றில் விடாப்பிடியான ஆர்வக்கோளாறுடன் இருந்த சிந்தியா, அந்த பரிதாபத்துக்குரிய கிறுக்கு நூலகருக்கு உதவுவதற்காகக் கொடுத்த உதாரணங்களை, நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தபோது, சுத்தப் பைத்தியக்காரத்தனமாகவே எனக்குத் தோன்றியது.

நூலகர் இறந்துபோன மூன்றாம் நாள், அவள் ஒரு சஞ்சிகையை வாசித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அழியாக் கவிதையொன்றின்[5]  (மற்ற அப்பாவி வாசகர்களைப் போலவே அவளும் அதை உண்மையிலேயே கனவில் இயற்றப்பட்டக் கவிதையென நம்பினாள்) வரிகளைக் கண்ணுற்றதாகவும், அதிலிருந்த ‘Alph’ என்னும் வார்த்தை, Anna Livia Plurabelle (மற்றொரு கற்பனைக் கனவிற்குள் ஓடும் அல்லது அதைச் சுற்றிக்கொண்டு ஓடும் மற்றொரு புனித நதியின் பெயர்) என்பதன் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு தீர்க்கதரிசனம் காட்டுவதாகவும் அதில் கூடுதலாக இருக்கும் h என்ற எழுத்து, திரு.போர்லாக்கை வசியம் செய்திருந்த அந்த வார்த்தைக்கு வழிகாட்டும் அறிகுறி போல இருப்பதாகவும் அவள் சொன்னாள்.

எனக்கு சரியாக நினைவில்லை, ஏதோ ஒரு புதினமோ, சிறுகதையோ (யாரோ ஒரு சமகால எழுத்தாளருடையதுதான் என்று நினைக்கிறேன்), அதன் ஆசிரியரே அறியாத, கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை சிந்தியா முறைப்படுத்தினாள். அவளுடைய பொருள்விளக்கப்படி, அது அவருக்கு, இறந்துபோன தாயாரிடமிருந்து வந்திருந்த செய்தி.

5

துரதிர்ஷ்டவசமாக, சிந்தியா இந்த சாதுர்யமிக்கக் கற்பனைகளில் திருப்தியுறாமல் ஆவியுலகக் கோட்பாட்டின் மீது முட்டாள்தனமான வேட்கையைக் கொண்டிருந்தாள். கட்டணம் பெற்றுக்கொண்டு ஆவியுலகோடு தொடர்பு கொள்பவர்களின் அமர்வுகளுக்கு நான் அவளோடு செல்ல மறுத்தேன். மற்ற ஆதாரங்களின் மூலம் இதுபோன்ற விஷயங்களை அவர்களை விடவும் சற்றுக் கூடுதலாகவே நான் அறிந்திருந்தேன். எனினும், சிந்தியாவும், அச்சுக்கூடத்தைச் சேர்ந்த, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாத முக அமைப்புக் கொண்ட, அவளுடைய இரு நண்பர்களும் நடத்தும் கேலிக்கூத்துகளில் கலந்துகொள்ள சம்மதித்தேன்.

அவர்கள் பொறுமைசாலிகளாகவும், கண்ணியமாகவும், வயதில் மூத்தவர்களாகவும் அதே சமயம், சற்றே அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுடைய நகைச்சுவைப் பேச்சினாலும் நாகரிகமான நடத்தையினாலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சிறிய கனமில்லாத மேஜையைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருப்போம். மேஜையில் எங்கள் விரல்நுனி பட்டதுமே அது கிடுகிடுவென அதிர்ந்து நடுங்கத் தொடங்கும். தங்களைப் பற்றி ஆர்வத்துடன் மளமளவென்று சொல்ல முன்வந்த பற்பல ஆவிகளோடு நான் உரையாடினேன். இருப்பினும், நான் எதையாவது தவறாகப் புரிந்துகொண்டுவிட்டால் அவ்வளவுதான், அவை மேற்கொண்டு தங்களை வெளிப்படுத்த மறுத்துவிடும். ஆஸ்கார் வைல்ட் வந்து, வேகமாகவும் தப்பும் தவறுமாகவும் பிரெஞ்சுமொழியில், வழக்கமான ஆங்கிலவாத வார்த்தைகளோடு, எதற்காகவோ சிந்தியாவின் இறந்துபோன பெற்றோரைக் குற்றம் சாட்டினார். சுருக்கெழுத்தில் அதை ‘கருத்துத்திருட்டு’[6] எனக் குறிப்பிட்டேன். குறுக்கே புகுந்த ஒரு ஆவி, ஜான் மோர் என்ற பெயருடைய தானும், வில் என்ற தன் சகோதரனும் சுரங்கத் தொழிலாளிகள் என்றும் 1883-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலராடோவில் ‘க்ரெஸ்டட் பியூட்டி’ என்ற இடத்தில் ஏற்பட்ட சுரங்கச் சரிவில் மாண்டதாகவும், நாங்கள் கேட்காமலேயே முன்வந்து தகவல் சொன்னது. இந்த விளையாட்டில் அனுபவசாலியான ஃப்ரடரிக் மையர்ஸ் நான் ஓரளவு எழுதியிருந்த கவிதையை வேகவேகமாக ஒப்பித்தான். (சிந்தியா இயற்றும் சிறு பாடல்களைப் போன்று விசித்திரமான ஒற்றுமை இருந்தது)

என்ன இது? சாதுர்யமான கண்கட்டு வித்தையா?

அல்லது குறைபாடுள்ள ஆனால் மெய்யான ஒளிக்கீற்றா?

எது இந்த ஆபத்தான வழக்கத்தை உடைத்து

துன்புறுத்தும் கனவைக் கலைக்கக்கூடும்?

இறுதியாக, பயங்கரமான உறுமலுடன், மேஜை தடதடக்க, லியோ டால்ஸ்டாய் எங்கள் குழுவிற்கு வருகை புரிந்தார். அது அவர்தானா என்று மண்ணுலகில் அவரது தினசரி வாழ்வின் தனித்துவ அம்சங்களால் அவரை உறுதிப்படுத்தச் சொன்னபோது, ரஷ்யாவின் மரக் கட்டுமான வகைகளைப் பற்றியோ அல்லது வேறு ஏதோ (பலகையில் உருவங்கள் – மனிதன், குதிரை, சேவல், மனிதன், குதிரை, சேவல்) எழுத்தால் எளிதில் எழுத இயலாத, புரிந்துகொள்ளக் கடினமான, சரிபார்ப்பு சாத்தியமில்லாத சில சிக்கலான விவரணைகளைத் தந்தார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று அமர்வுகளில் பங்கேற்றேன். எல்லாமே முட்டாள்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தபோதும், அவர்களுடைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ரசிக்கவும், சிந்தியாவின் இத்தகு கொடுமையான வீட்டுக் கொண்டாட்டங்களின்போது தரப்படும் மதுவை அருந்தவும்தான் (போட்ஜியும் புட்ஜியும் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவர்கள்) நான் அவற்றில் கலந்துகொண்டேன் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அவளுடைய வீட்டின் வரவேற்பறை எப்போதும் அழுக்காக, கழுவப்படாத பழைய, வண்ணக்கலவைத் தட்டைப் போல இருந்தது. எனவே அவள், அவளுடைய வீட்டை அடுத்த, திரு.வீலரின் வசதியான வீட்டில், அவளுக்கே உரிய மையவிலக்கு மனோபாவத்துடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். 

பண்பற்ற, நாகரிகமற்ற, சுகாதாரமற்ற, கேவலத்திலும் கேவலமான வழக்கமாக, விருந்தினர்கள் அப்போதுதான் அவிழ்த்த, உடற்சூடு இன்னும் குறையாத அவர்களது மேல் கோட்டுகள், அமைதியான, வழுக்கைத் தலையரான பாப் வீலரால், அவரது தூய்மையான, அந்தரங்கமான படுக்கையறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரும் அவர் மனைவியும் படுக்கும் படுக்கையின்மீது குவித்துவைக்கப்பட்டன. மேலும் விருந்தினர்களுக்கான மதுபானங்களைக் கோப்பைகளில் அவர் ஊற்றிக் கொடுக்க, இளம் புகைப்படக் கலைஞன் அவற்றைப் பரிமாற, சிந்தியாவும், திருமதி வீலரும் ரொட்டிகளைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

தாமதமாக வருபவர்கள், ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இரண்டு கண்ணாடிகளுக்கு இடையிலான நீலச்சாம்பல்நிறக் கூடத்தில் தேவையில்லாமல் கூடிக் கூச்சலிடும் ஒரு கூட்டத்தையே பார்ப்பார்கள். சிந்தியா வழக்கமாக அழைப்பு விடுக்கும் பெண்மணிகள் அனைவருமே, திருமணமானவர்களோ, இல்லையோ, ஆனால் அலைபாயும் நாற்பதுகளில் இருந்தார்கள். ஒருவேளை, அங்கு இருப்பவர்களிலேயே தான்தான் இளையவளாக இருக்கவேண்டும் என்று சிந்தியா விரும்பியிருக்கலாம். சிலர் அவர்களுடைய வீட்டிலிருந்தே டாக்சிகளின் மூலம் வரவழைக்கப்படுவார்கள். வரும்போது முழுமையான ஒப்பனையுடனும் அழகான தோற்றத்துடனும் காணப்படும் அவர்கள், நிகழ்ச்சியின் முடிவில் எல்லாவற்றையும் இழந்திருப்பார்கள். 

வார இறுதிக் கொண்டாட்டங்களில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் சிநேகபாவம் மிக்க குடிகாரர்கள், தங்கள் அனுபவத்தால், உடனடியாகவும், மிகத் துல்லியமாகவும் போதையின் பொதுப்பகுவெண்ணைக் கண்டறிந்து, அதன் அடுத்தக் கட்டத்துக்கு முன்பு அனைவரும் ஒருவருக்கொருவர் பூரண விசுவாசத்தோடு ஒன்றிணைந்து கூட்டாக இறங்குவது, என்னை எப்போதுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

இணக்கமாகப் பேசிய பெண்மணிகளின் பேச்சில் தெனாவெட்டும், இறுக்கமான ஆண்களிடத்தில் சூலுற்றப் பெண்மையின் நாணமும் தென்பட்டன. வந்திருந்தவர்களுள் சிலர் ஏதாவது ஒரு வகையில் கலையோடு தொடர்புடையவர்களாக இருந்தனர். எனினும் எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் இல்லை, மலர்க்கீரீடம் அணிந்த தலைகள் இல்லை, முக்கியமாக, குழலூதும் பெண்கள் இல்லை.

ஒன்றிரண்டு இளைஞர்களோடு, வெளிறிய தரைவிரிப்பின் மீது கரையொதுங்கிய கடற்கன்னியைப் போன்ற தோரணையோடும், வார்னிஷ் பூசியது போல பளபளவென்று, வியர்வை பூத்த முகத்தோடும் அமர்ந்திருக்கும் சிந்தியா, ஏதேனும் ஒரு கட்டத்தில் பருப்புகள் அடங்கிய தட்டை ஒரு கையில் கவனமாக ஏந்தியவாறே ஊர்ந்து சென்று, மறு கையால் வெண்சாம்பல் நிற சோபாவில் உற்சாகமும் துடிப்புமான இரண்டு பெண்மணிகளுக்கு நடுவில் வசதியாக அமர்ந்திருக்கும் காக்கரன் அல்லது கார்க்கரன் எனப்படுகிற கலைப்பொருள் விற்பனையாளரின் திடகாத்திரமான காலில் பட்டென்று தட்டுவாள். அடுத்த கட்டத்தில், மகிழ்ச்சியும் ஆரவாரமும் வரம்பு கடந்து பெரும் களேபரமாக வெடிக்கும். கார்க்கரன் அல்லது காரன்ஸ்கி, சிந்தியாவை அல்லது அந்தப் பக்கமாகப் போகும் வேறு ஏதாவதொரு பெண்ணை தோளைப் பற்றி, அறையின் மூலைக்கு அழைத்துச் சென்று, பல் இளித்தபடி, ஆபாசமான நகைச்சுவைகளையோ, அந்தரங்கமான கிசுகிசுக்களையோ சொல்வான். அவளும் தலையாட்டிச் சிரித்தபடி அங்கிருந்து அகன்று செல்வாள். அதற்குப் பிறகு அங்கு பால்பேதமற்ற நெருக்கங்களும், கோமாளித்தனமான சமரசங்களும் சுழன்றடிக்கும். ஒருத்தியின் கணவனை (அவன் அறையின் நட்ட நடுவில் நின்றுகொண்டிருப்பான்) இன்னொருத்தியின் கொழுத்த கை வளைத்திருக்கும் அல்லது யாரோ யாரிடமோ செல்லக் கோபம் காட்டுவார்கள் அல்லது யாரோ யாரையோ விளையாட்டாய்த் துரத்துவார்கள். இவ்வளவுக்கும் மத்தியில் பாப் வீலர் அமைதியான அரைப் புன்னகையோடு, நாற்காலிகளுக்குக் கீழே காளான் முளைத்ததுபோல் ஆங்காங்கே, விருந்தினர்கள் குடித்துவிட்டு வைத்திருக்கும் காலி மதுக்கோப்பைகளை எடுத்துக்கொண்டிருப்பார்.

அதுபோன்றதொரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சிந்தியாவுக்கு, சாதாரணமாக, ஆனால் நல்ல மாதிரியாக ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய விருந்தினர்கள் சிலரைப் பற்றி அதில் விளையாட்டாய்க் கேலி செய்திருந்தேன். மேலும் அவளுடைய விஸ்கியைத் தொடாததற்கு மன்னிப்பும் கோரியிருந்தேன். பிரெஞ்சுக்காரனாகிய எனக்கு தானியத்தை விடவும் திராட்சையே பெரும் விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு, பொது நூலகத்தின் படிக்கட்டில் அவளைச் சந்தித்தேன். மேகமூட்டத்துடன் லேசான தூறலும் இருந்தபோது, கக்கத்தில் இரண்டு புத்தகங்களை இடுக்கிக்கொண்டு, அவளுடைய அம்பர் வண்ணக் குடையை விரிக்கப் போராடிக் கொண்டிருந்தாள். ஒரு நொடி அந்த இரண்டு  புத்தகங்களையும் நான் வாங்கிக்கொண்டு அவளுக்கு ஆசுவாசம் அளித்தேன். ஒன்று ராபர்ட் டேல் ஒவன் எழுதிய ‘இன்னொரு உலகின் எல்லையில் காலடித்தடங்கள், மற்றொன்று ‘ஆவியுலகும் கிறிஸ்தவமும்’ போல் ஏதோ ஒன்று.

என் தரப்பிலிருந்து எந்தத் தூண்டுதலும் இல்லாமல், திடீரென்று உணர்ச்சிக் கொந்தளிப்புடன், வக்கிரமான, விஷம் தோய்ந்த வார்த்தைகளால் அவள் பாட்டுக்கு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். நான் ஒரு போலி பகட்டுக்காரன் என்றும் நயவஞ்சகன் என்றும் வெளித்தோற்றத்தையும் நடவடிக்கைகளையும் கொண்டே மனிதர்களை எடைபோடுகிறேன் என்றும், அந்த கார்க்கரன் இரண்டு வெவ்வேறு தருணங்களில் இருவேறு கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருந்த இரண்டு பேரைக் (தற்செயல் ஒற்றுமையாக இருவரது பெயருமே கார்க்கரன்) காப்பாற்றியவன் என்றும், கூச்சலும் கும்மாளமுமாய் இருந்த ஜோன் வின்டருக்கு பார்வைக் குறைபாடுள்ள சிறிய பெண் குழந்தை இருப்பதாகவும் இன்னும் சில மாதங்களில் அவள் முற்றிலும் பார்வை இழந்துவிடுவாள் என்றும் நான் அன்று காரணமின்றி அவமானப்படுத்திய பச்சை உடையணிந்து, மார்பில் கரும்புள்ளிகளைக் கொண்டிருந்த பெண்மணி, 1932-ஆம் ஆண்டு தேசிய அளவில் அதிக விற்பனையான புதினத்தை எழுதியவள் என்றும் சொன்னாள்.

என்னவொரு விநோதமான சிந்தியா! யாரை அவள் அதிகம் நேசிக்கிறாளோ, யார் மீது மரியாதை வைத்திருக்கிறாளோ, அவர்களிடம் அவள் மிகக் கடுமையாக நடந்துகொள்வாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் ஏதோ ஒரு தருணத்தில் இருவருக்கும் இடையில் ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது அவசியம். ஏற்கனவே அவளுடைய ஆர்வக்கோளாறான ஒளிவளையங்களைப் பற்றியும் மற்ற முட்டாள்தனங்களைப் பற்றியும் ஓரளவு நான் அறிந்திருந்ததால் அதன் பிறகு அவளைப் பார்ப்பதை முற்றிலும் கைவிட்டேன்.

6

சிந்தியா இறந்துவிட்ட தகவலை டி. என்னிடம் தெரிவித்த அன்று இரவு பதினொரு மணிக்குப் பிறகு நான் வசித்த, இரண்டுதளக் குடியிருப்புக்குத் திரும்பினேன். ஒரு தளத்தில் நானும் மற்றொரு தளத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியரின் விதவை மனைவியும் குடியிருந்தோம். தாழ்வாரத்தை அடைந்ததும், தனிமைப் பயம் பீடிக்க, அடுத்தடுத்து இருந்த இரண்டு ஜன்னல்களின் ஊடாக இரண்டு வகையான இருட்டைக் கண்டேன். ஒன்று இல்லாமையின் இருண்மை. மற்றொன்று தூக்கத்தின் இருள். 

முதலாவது இருட்டைப் போக்க என்னால் ஏதாவது செய்ய இயலும். ஆனால் இரண்டாவது குறித்து எதுவும் செய்ய இயலவில்லை. என்னுடைய படுக்கை எனக்குப் பாதுகாப்பான உணர்வைத் தரவில்லை. அதன் சுருள்வில் அதிர்வுகள் என்னை மேலும் நடுக்கமுறச் செய்தன. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களுள் மூழ்க முனைந்தேன். முட்டாள்தனமாக என் கவனமெல்லாம் பாடல் வரிகளின் முதல் எழுத்துகளைக் கொண்டு அவை உருவாக்கும் சங்கேத வார்த்தைகள் என்னென்ன என்ற தேடலில் ஈடுபட்டது.

70-ஆம் பாவில் FATE, 120-ஆம் பாவில் ATOM, இருமுறை 88 & 131-ஆம் பாக்களில் TAFT[7] என்ற வார்த்தைகளும் என் கண்களுக்கு அகப்பட்டன. என் அறையிலிருந்த பொருட்களின் தன்மையில் ஏதேனும் மாறுதல் தென்படுகிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டேன். திடீரென்று அங்கே ஒரு வெடிகுண்டு விழுந்தால் கூட, சூதாட்டக்காரனின் ஆர்வக்களிப்பை விடவும் அதிகமாகவே அதை நான் எதிர்கொள்வேன் (அது எவ்வளவு பெரிய நிம்மதி) என்றும் அதே சமயம், என் அறையின் அலமாரிக்குள் இருக்கும் சின்னஞ்சிறிய புட்டி, துளி அங்குலம் நகர்ந்தால் கூட என் இதயம் வெடித்துச் சிதறிவிடும் என்றும் நினைக்கும்போது எனக்கே வேடிக்கையாக இருந்தது.

எங்கிருந்து வருகிறது என்று அறியவியலாத நுட்பமான ஒலி கூட பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில், யாரோ வேண்டுமென்றே பின்னணியில் உருவாக்கியதைப் போன்று சந்தேகத்துக்கிடமான வகையில், அறையின் அமைதி மிக அடர்த்தியாக இருந்தது. போக்குவரத்து சந்தடிகள் ஓய்ந்துபோயிருந்தன. பெர்கின்ஸ் தெருவில் ஏதேனும் கனரக வாகனம் செல்லும் சத்தத்துக்கான என் பிரார்த்தனையும் பயனின்றிப் போயிற்று. மேல்தளத்தில் வசிக்கும் பெண்மணி வழக்கமாய், பெரிய குதிகால் காலணியை அணிந்துகொண்டு டொக் டொக் என்று நடக்கும்போது அந்தச் சத்தம் என்னை எரிச்சலடையச் செய்யும். (அவள் குள்ளமாய் குண்டாய் எப்போதும் சோகம் இழையோடும் முகத்துடன் பார்ப்பதற்கு, பதப்படுத்தப்பட்ட சீமைப் பெருச்சாளியைப் போன்று காணப்படுவாள்) ஆனால் இன்று, கழிவறைக்குச் செல்லும் பொருட்டு இப்போதும் அப்படி நடந்திருந்தால் நிச்சயம் அவளை ஆசீர்வதித்திருப்பேன். விளக்கைப் போட்டும் அணைத்தும், தொண்டையைச் செருமியும், எனக்கு நானே பல முறை சத்தமெழுப்பிக் கொண்டேன். தொலைதூர வாகனம் ஒன்றில் மனக்கண்ணால் ஏறிப்  பயணிக்கத் தொடங்கினேன். ஆனால், கண்கள் சொக்கும் முன்பே அதிலிருந்து இறங்க நேர்ந்துவிட்டது. திடீரென்று ஏதோ காகிதம் கசங்கும் சத்தம் (இறுக்கமான இரவுப்பூவொன்று மலர்வதைப் போன்று கசங்கிய தாள் விரிவதாக கற்பனை செய்தேன்) குப்பைக் கூடையிலிருந்து கேட்டது. என்னுடைய படுக்கையை ஒட்டிய மேஜையில் சின்னதாக டிக் என்ற சத்தமும் கேட்டது. சிந்தியாவின் ஆவி, தன்னுடைய மட்டமான விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்று தோன்றியது. நான் சிந்தியாவை எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்.

1848-ஆம் ஆண்டு நியூயார்க்கின் ஹைட்ஸ்வில் என்னும் உட்கிராமத்தில் தட்டுதல் மூலம் இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் தொடங்கி, கேம்ப்ரிட்ஜ்ஜின் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற கோரமான தோற்றப்பாடுகள் வரை நவநாகரிக யுகத்தின் ஆவி மற்றும் அமானுஷ்யம் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மனதுக்குள் மதிப்பாய்வு செய்தேன். கணுக்கால் எலும்புகளையும் இன்ன பிற மூட்டுகளையும் பயன்படுத்தி ஆவிகளோடு தொடர்பு கொண்ட (பஃபல்லோ பல்கலைக்கழக அறிஞர்களின் கூற்றுப்படி) ஃபாக்ஸ் சகோதரிகள்; பண்டைய பெரு நாட்டில் ஏற்பட்டது போலவே எப்வர்த் அல்லது டெட்வர்த்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உண்டான ஒரே மாதிரியான மர்மமான மனநோய்[8]; புனிதமான இசையொலிக்கு ரோஜாக்கள் வீழும், அக்கார்டியன் இசைக்கருவிகள் மிதக்கும் விக்டோரியா காலத்து வெறியாட்டங்கள்; எக்டோபிளாசத்துக்கு[9]  பதிலாக ஈரமான பாலாடை வடிகட்டும் சல்லாத்துணியைப் பயன்படுத்தும் தொழில்முறை மோசடிப் பேர்வழிகள்; ஆவியுலக ஊடகப் பெண்மணி ஒருவரின் மதிப்புக்குரிய கணவரும், சோதனைக்கு உட்படுத்தியபோது, தான் அழுக்கான உள்ளாடை அணிந்திருந்ததைக் காரணமாய்க் கூறி சோதனைக்கு உடன்பட மறுத்தவருமான திரு.டங்கன்; பாஸ்டனில் ஒரு ஓய்வுநேரப் பிரார்த்தனையின்போது, வெற்றுக்கால்களும் துளையிடப்படாத காதுமடல்களுமாய் கண்முன் நின்ற வெள்ளை உருவத்தை, திரைச்சீலை இடப்பட்ட மூலையில் சற்று முன்பு தான் பார்த்தபோது உறக்கத்தில் ஆழ்ந்திருந்த, கருப்பு உடையும் இறுக்கமான பாதணிகளும், தோடுகளும் அணிந்திருந்த பணிப்பெண் மிஸ் குக்தான் என்பதை நம்ப மறுத்த அப்பாவி இயற்கை ஆர்வலர் ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்; யூசாப்பியா[10]  என்ற பெரிய, பருத்த உருவம் கொண்ட, சகிக்கவியலாத, வீச்சம் அடிக்கும் முதிய பெண்மணியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தபோதும் கூட, தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட, குள்ளமாகவும், நோஞ்சானாகவும், ஆனால் சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருந்த இரண்டு புலனாய்வாளர்கள்; குளியல் அங்கி அணிந்திருந்த நிலையில், கண்ணை மூடிக்கொண்டு, இடப்பக்கக் காலுறையைத் தடவிக்கொண்டே தொடைவரை செல்லுமாறு இளம்பெண் மார்கரியின் இனிமையான குரல் வழியே அவரை வழிநடத்திய ஆவி மூலம் அதைச் செய்து, கதகதப்பான தொடை மீது கொழகொழப்பான குளிர்ச்சியான, சமைக்கப்படாத பச்சை ஈரலைத் தொட்ட உணர்வடைந்த, அவமானத்துக்கு ஆளான, ஆவியுலக நம்பிக்கையற்ற மாயவித்தைக்காரர் என வரிசையாக நினைவுகூர்ந்தேன்.

7

உடலற்ற என் இருப்புக்கான சாத்தியத்தை மறுக்கவும் தோற்கடிக்கவும் என் சதைப்பிண்டத்திடம்[11], அதன் குற்றங்களிடம் மன்றாடிக் கொண்டிருந்தேன். ஐயோ! இந்த உச்சாடனங்களே சிந்தியாவின் அமானுஷ்யத்தன்மையின் மீதான பயத்தை அதிகரிக்கச் செய்தன. விடியற்காலையில் மீண்டும் பழைய அமைதி திரும்பி, நான் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, ஜன்னல் வழியாக செம்பழுப்பு நிறக் காலைக் கதிரொளி, சிந்தியாவால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த என் கனவை ஊடுருவித் துளைத்தது. 

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பகல் வெளிச்சம் என்னும் பாதுகாப்பான கோட்டைக்குள் இருக்கும்போது, இன்னும் கொஞ்ச நேரம் கனவு நீடித்திருக்கலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். பிரகாசமான, மிகத் துல்லியமான ஓவியங்களை வரையக்கூடிய சிந்தியா இப்போது அவளே உருவற்றவளாக, தெளிவற்றவளாக இருக்கிறாள். படுக்கையில் படுத்தபடி, வெளியிலிருந்து வரும் சிட்டுக்குருவிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே, நான் கண்ட கனவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

மனிதர்கள் பேசுவதை ஒலிப்பதிவு செய்து, பின்னோக்கி ஓடவிட்டால் கீச் கீச் என்று சத்தம் கேட்பது போல, ஒருவேளை இந்த சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சத்தத்தை ஒலிப்பதிவு செய்து பின்னோக்கி ஓடவிட்டால், மனிதர்களின் பேச்சு போல, வார்த்தைகளை வெளிப்படுத்துமோ என்னவோ? யாருக்குத் தெரியும்? நான் என்னுடைய கனவை மறுபடி பகுப்பாய்வு செய்யத் தொடங்கினேன். முன்னாலிருந்து பின்னால், பின்னாலிருந்து முன்னால், குறுக்குவாக்கில், மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக என பல பரிமாணங்களில், சிந்தியாவைப் போன்ற ஏதாவது ஒன்று, விநோதமாக, விசித்திரமாகத் தென்படுகிறதா என்று கடும் பிரயத்தனத்தோடு அதற்குள் தேடினேன்.        

என்னால் கொஞ்சம்தான் ஆராய முடிந்தது. மஞ்சள் நிறத்தில் மேகமூட்டம் போல் சூழ்ந்து என்னை எதையும் யோசிக்கவிடாமல் செய்தது. எல்லாமே தெளிவற்று மங்க ஆரம்பித்தன. சிந்தியாவுடைய கத்துக்குட்டித்தனமான வார்த்தை விளையாட்டுகள், பசப்பும் பாசாங்குமான ஏமாற்றுவித்தைகள், ஆன்மீக வெறியாட்டங்கள் என நினைவடுக்கில் வந்த யாவும் ஏதோ மர்மமான பொருளைத் தருவதுபோல் தோன்றின. எல்லாமே மஞ்சளாகி, மங்கி, மாயமாகித் தொலைந்து போயின.

பின்குறிப்பு – மூலக்கதையான ஆங்கிலத்தில் கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை வரிசைப்படுத்தும்போது ‘பனிக்கூரிகள் சிந்தியாவால், தரிப்பிட மானி என்னால் – சிபில்!’ என்பதாக இருந்தது அது.


[1] பனிக்கூரிகள் (icicles) – கூரையின் மேற்பரப்பிலிருந்து உருகிச் சொட்டும் நீர்த்தாரைகள் உறைந்த நிலையில் ஒன்றிணைந்து, கூரான கத்திகளைப் போன்று தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.

[2] வாகனத் தரிப்பிட மானி – Car parking meter

[3] ஸ்லாவ் மக்கள் – மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களுடைய மொழி ஸ்லாவோனிக் மொழி.

[4] ஸ்கங்க் (skunk) – தமிழில் முடைவளிமா எனப்படும் கருப்பு வெள்ளை நிற விலங்கு. ஆபத்து நேரத்தில் எதிரியின் மீது அது பீச்சும் திரவத்தின் முடை நாற்றம் கடுமையாக, சகிக்கமுடியாததாக இருக்கும்.

[5] அழியாக் கவிதை – கனவில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ‘குப்ளா கான்’ (அல்லது கனவுக்காட்சி) என்ற கவிதையை எழுதியவர் கவிஞர் சாம்வேல் டெய்லர் கோல்ரிட்ஜ். 1797-ஆம் ஆண்டு ஒருநாள் இரவு தூங்கும்போது (அபின் போதையில் இருக்கும்போது என்றும் சொல்லப்படுகிறது) கவிஞருக்கு இக்கவிதை வரிகள் தோன்றியதாகவும் மறுநாள் அவ்வரிகளை நினைவிற்கொண்டுவந்து கவிதையை இயற்றிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து ஊரான போர்லாக்கிலிருந்து எதிர்பாராமல் வந்த ஒருவரால் எழுத்து தடைபட்டு பிறகு வரிகள் நினைவுக்கு வராமல் கவிதை முற்றுப்பெற இயலாமலேயே போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் விறுவிறுப்பானப் படைப்பாற்றலுக்கு இடையூறு தருபவர்களை ‘போர்லாக்கின் ஆள்’ அல்லது ‘போர்லாக்’ என்று அங்கதமாகக் குறிப்பிடுவது வழக்கமாயிற்று.

[6] கருத்துத்திருட்டு – ஆஸ்கார் வைல்ட் எழுதி 1890-ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ‘The Picture of Dorian Gray’. சிபில் வேய்ன் என்ற கதாபாத்திரம் அதில் இடம்பெற்றுள்ளது.

[7] வில்லியம் ஹோவார்ட் டஃப்ட் – ஐக்கிய அமெரிக்காவின் 27-வது குடியரசுத் தலைவராக 1909 முதல் 1913 வரை பதவி வகித்தார். பின்னாளில் 1921-1930 வரை ஐக்கிய அமெரிக்காவின் தலைமை நீதிபதியாக இருந்தார். இரண்டு பதவிகளையும் வகித்த ஒரே ஆளுமை என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

[8] 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் தென்னமெரிக்காவை (கொலம்பஸால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய அமெரிக்கா) இன்கா பழங்குடிப் பேரரசு ஆட்சி புரிந்தது. இன்கா மக்கள் அனைவருக்கும் பொதுவான, காரணம் புலப்படாத மனநோய் இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இன்கா மக்களை மட்டுமன்றி அரச குடும்பத்தையும் இந்நோய் பீடித்ததாகத் தெரிகிறது. தாவரங்களும் தாதுக்களும் அதற்கான சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

[9] எக்டோபிளாசம் – அமானுஷ்யக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிசுபிசுப்பான, அருவருப்பான, மர்மமானப் பொருளைக் குறிக்கும்.

[10] யூசாப்பியா பல்லாடினோ – பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஆவியுலகத் தொடர்பாளர். அவரது அமானுஷ்ய நிகழ்வுகள் யாவும் ஏமாற்றுவித்தைகளே என்று நிரூபிக்க முயன்ற பல மாயவித்தைக்காரர்களும் தந்திரவாதிகளும், இறுதியில் யூசாப்பியா ஒரு புத்திசாலி தந்திரி என்ற முடிவுக்கு வந்தனர். 

[11] தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன், மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். – பரிசுத்த வேதாகமம், கலாத்தியர் அதிகாரம் 6.8

மூல ஆசிரியர் குறிப்பு:

விளாதிமிர் நபகோவ் (1899-1977)

ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், மற்றும் பூச்சியியல் வல்லுநர். முக்கியமாக வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய இவரது ஆய்வுக் குறிப்புகளும் உலகளாவிய வண்ணத்துப்பூச்சிகள் சேகரிப்பும் இன்றும் விஞ்ஞானிகளால் வியப்புடன் பார்க்கப்படுகின்றன. இவர் தன் எழுத்து மூலம் கிடைத்த வருவாயை வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார்.

1919-ஆம் ஆண்டு அவரது குடும்பம் இங்கிலாந்துக்குச் சென்றது. நபகோவ் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்லாவிக் மற்றும் ரோமானிய இலக்கியங்களில் பட்டம் பெற்றார். அதன்பின் குடும்பம் பெர்லினில் குடியேறியது. ஒரு பதிப்பகத்தாரின் வேண்டுகோளின்படி ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் கதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புதான் இவருடைய முதல் படைப்பு.

இவரது ‘லோலிடா’ நாவல் மிகப் பிரசித்தமானது. ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் பல படைப்புகளை அளித்துள்ளார். விளாதிமிர் சிரின் என்பது இவரது புனைபெயர். 

1951-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘வேய்ன் சகோதரிகள்’ கதையை New Yorker பத்திரிகை வெளியிட மறுத்து, திருப்பி அனுப்பிவிட்டது. நபகோவ் அதன் எடிட்டருக்கு அக்கதையின் கட்டமைப்பைப் பற்றியும் மறையெழுத்துப் புதிர் பற்றியும் விளக்கி எழுதினார். கடைசி பத்தியின் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு கதையின் முடிச்சை அவிழ்ப்பது, ‘இலக்கியத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு The Hudson Review பத்திரிகையில்தான் முதன் முதலாக இக்கதை வெளியானது. 1961-ஆம் ஆண்டு நபகோவும் அவர் மனைவியும் சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரியூ நகருக்குச் சென்று தங்கினர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அங்கேயே எழுத்திலும் வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியிலும் கழித்த நபகோவ், தனது 78-வது வயதில் நுரையீரல் பாதிப்பால் இறந்தார்.

The post வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ் first appeared on கனலி.

  •  

முதிரா இரவு – சுருளி காந்திதுரை

காலையில அஞ்சு மணிக்கு டான்னு எந்திரிச்சு… உடல் உபாதையை முடிச்சுட்டு… செம்புல தண்ணிய மோந்து குடிச்சிட்டு பெத்த பெருமாள் நடக்க ஆரம்பித்தார். ஒரு பொட்டை நாயிக்குப் பின்னே ஆறு ஏழு ஆண் நாய்கள். மெல்லக் கடந்து போனார். இப்படித்தான் காலையில பத்து நாப்பது பேருக்கு மேல் இருக்கும். நடந்தார்கள். வயது, வயிறு, உடைகள், மேக்கப்பு… பேச்சுத் தோரணை… இதில சுமார் இருபதுக்கு மேல, பட்டதாரிகள். மத்திய மாநில அரசிடம் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள்… அதில் பென்ஷன் பெறுபவர்கள் பெரும்பான்மையானோர்.

சாப்பாட்டுக்கு மொத்தமா பேசிக் காசக் கொடுத்துட்டா, இப்ப சாப்பாட்டுப் பிரச்சனையில்லன்னு மனஆறுதல் இவர்களுக்கு.

கால, மால இருவேளையும் நடக்க வேண்டியது. பேச்சு ஊர்ப் பேச்சு. உலகப் பேச்சு… சரியா ஏழரைக்கு வீட்டுக்குப் போயிக் குளிச்சிட்டுச் சாப்பிட வேண்டியது; பேப்பர மேய, பிறகு தொலைக்காட்சி சேனல மாத்தி மாத்தி ரிமோட் பட்டன் தேய்ஞ்சு போயிருச்சு. ஏதாவது போடுறாங்களான்னு தோணும். என்ன செய்ய வர்றதுதான் டிவியில வரும்.

வெளியில இருந்து பாக்கிறவுகளுக்கு, ஊர் உலகத்துக்கு பெருசுகளுக்கு என்ன கவல? பிள்ளைக நல்லா வைச்சுக்கிறாங்கன்னு பேச்சு.

மக்கமாரு, ராஜா மாதிரி வச்சுருக்காங்கன்னு போற வர்ற மக்க மனுசார் பேசுவாங்க. உறவுகளும் அப்படித்தான் நெனைக்கும்.

ஆனா, வீட்ல பெத்தப்பெருமாள் மாதிரியா இருக்கிற பெருசுகளுக்குத்தான் தெரியும். ஒரு நா என்பது ஒரு யுகம் மாதிரி போகும். மகன், மகள்… வீட்ல இருக்கிற பொருள பாதுகாக்கத் ‘திருடனுக்குப் பயந்து அப்பாவ முழுநேர வீட்டு வாட்ச்மேனா அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்காங்கன்னு…?’ வெளிய சொல்ல முடியுமா?”

தொனைக்கி நாயி வேற. அத வேற மேய்க்கனும். பெத்த பெருமாள் ரோட்ல படுத்திருக்கிற நாயிக்கு இருக்குற சுதந்திரம் நமக்குயில்ல?ன்னு முனங்கினார் பல நேரம்.

யோவ், பெத்த பெருமாள்… என்ன பலத்த யோசனை. உனக்கு எப்படி அப்படித்தான் இங்க இருக்கிற எல்லாத்துக்கும்… நாங்களும் அப்படித்தான் இருக்கோம்னு புரியணும்.

வா… வா… நம்ம எல்லார் கதையும் ‘ஒரே மாவுலச் சுட்ட இட்லி’ போலத்தான்னு புலவர் சந்தானம் சொல்லவும் எல்லோரும் தன்னை மறந்து சிரித்தார்கள்.

நடையில வேகமில்ல. கால்கள் மட்டுமல்ல மனங்களும் தளர்ந்து போயிருந்தன.

அறுபத்தைக்கும், எண்பதுக்கும் இடைப்பட்டவர்கள். ‘நம்ம ஒண்ணாத்தான் இருக்கம். இடையே நம்ம பிள்ளைக உலகம் வேறு, பாவம் அம்மாக்கள். நமக்கு என்ன கவல? ராஜேந்திரன் சொல்லுயா’ன்னு அய்யனாரைக் கேட்க.

‘பகவான் இருக்கும்போது எனக்கு என்ன கவல?’

‘போயிம் போயிம் அய்யனார்ட்டக் கேட்டா. அப்படித்தான் சொல்லுவார்!’ ஒரே சிரிப்பொலி….. எதிரொலித்தது.

***

பலத்த ஹாரன் சத்தத்துடன் சென்னையில இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் கூடல்நகர் ஜங்சனைக் கடந்து அதேவேகத்தில் நிக்காம போனது. பிள்ளைகளில் ஆண், பெண் இருவருமே ஒரே மனநிலையில் இருப்பதைப்போல ரெண்டு பக்கமும் பிளாட்பாரம் மிக அருமையா மேடு பள்ளமில்லாம சமதளமாக இருந்தது.

இங்க வாக்கிங் போகும் ஆட்களின் நடமாட்டம் அதிகம். இதில் பெண்களை விட ஆண்கள் அதிகம். மாலைநேரம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நாகமலைக்கு மேலே மஞ்சள் வெயில் மறையத் தொடங்கியிருந்தது. மழை பெய்வதற்கானச் சாத்தியக்கூறு, இதமான தென்றல் காத்து வீசியது. ஜங்சன் பாதையில் இருபக்கமும் வேப்பமரக் குளுமை. நேத்துச் சாயங்காலம் நல்ல மழை. மண் மனமும், தென்றல் காத்தும், கனமான இதயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு போனது. எல்லோரையும் ஆரத்தழுவி ஆனந்தமாக்கியது.

என்ன? இவுங்கள இளைஞர்கள்ன்னு சொல்லுறேன்னு நினைக்க வேணாம். ‘இளமை திரும்புகிறது.’ அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நகைகள், கடிகாரங்கள், செல்போன்கள், கேன்வாஸ்… எல்லாமே நல்ல வசதிக்கான அடையாளம். வாழும் காலத்தில் பல்ல கடிச்சுக்கிட்டு சுகத் துக்கங்களை மறைத்து, மறந்து பிள்ளைகளே உலகமுன்னு வாழ்ந்தவர்கள்.

பிள்ளைகள நல்லபடியா கரையேற்றிவிட்டாங்க. ஆனா பெத்தவங்க ‘தனிமைக் குளத்தில்’ தவிக்கிறார்கள். வீட்ல தனிமை? மெல்ல மெல்ல மனித நடமாட்டத்தை நாடி நடக்க வந்துவிடுகிறார்கள்.

ஜங்சன் இருக்கு. ஆனால், ரயில்கள் நின்னு போகல. அப்படித்தான் இவர்களின் வாழ்க்கையும். எல்லாமே இருக்கு. எதுவுமே இல்ல?

ஆஸ்தி, அந்தஸ்து, காசு, பணம், நகை நட்டு, காரு, பங்களா, வேலைக்கு ஆட்கள், காவலுக்கு ரெண்டு நாய் இவ்வளவும் இருந்தும், என்ன பயன்?

எல்லோருக்கும் எல்லாம் இருக்கு. பிள்ளைகளின் வாழ்க்கை முறை வேறு, இவர்களின் உலகம் இலையுதிர் காலத்து மரம் போல… எல்லாருக்கும் மனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள்… என ‘உறவுகள்’ இருக்கிறார்கள். ‘கோலார் தங்கச் சுரங்கம் போல.’ ஆனால், மனிதனின் வாழ்க்கை பலத்த காற்றில் ‘குருவியின் கூடு பறந்து போனதைத் தேடும் குருவி போல…’ உறவுகளைத் தேடுகிறார்கள். இன்னும் தொலைத்த இன்பங்களைத் தேடியே… யாருக்காக வாழ்றோம்னு எதுவும் தெரியாது… இளைப்பாறுதல் இல்லா மனநிலையில்…? முதியோர்களின் பயணம்…

என்ன இருதயராஜ்… இந்த ஆண்டு ஜுன் மாசம் காவிரியில இருந்து தண்ணி வருமா? ஏன்ட்ட ஏன் கேட்குறீங்க…

நீ தானே பி.டபிள்யூ.டி. இஞ்சினியர்…

சும்மா இருக்க மாட்டீங்க புலவரே?

அவுக என்னைக்கி நமக்குத் தண்ணி கொடுத்தாங்க…

கேரளாவும், கர்நாடகாவும்… நல்ல பாம்பு அது; விரியன் பாம்பு இவுக.

நமக்கு பெரியாறிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குக்கும் காவேரில இருந்து தஞ்சை டெல்டாப் பகுதிக்குத் தேவைப்படும்போது தண்ணியத் தர மாட்டாங்கா? ஆனா, அங்க மழை பெய்யட்டும்…! மழை ச்சக்கப்போடு போடட்டும்…! அய்யோ “டேமப் பாதுகாக்கிறோம்ன்னு” “டேம் உடைகிற” மாதிரியா வரும்போது சத்தமில்லாம போன் பண்ணிட்டுத் தண்ணிய திறக்கிறோம்னு சொல்லுவாங்க. ஆனால், தண்ணியத் தொரந்துட்டுதான் போன் பண்ணுவாங்க.

புலவரே, ஆனா, பட்டம் தப்பி விடுற தண்ணி நமக்கு விவசாயத்துக்குப் பயன்படாது. நேராக் கடலுக்குத்தான் போகும். இங்க ரெண்டு பக்கமும் அதே நிலமதான்.

என்ன இஞ்சினியர் சார். நம்ம, “ஆம்பளப் பிள்ளையும், பொம்பளப் பிள்ளையும்… கேரளாவும் கர்நாடகாவும் ஒன்னுதான்னு சொல்லுங்க?

எத எதுலக் கொண்டாந்து பொருத்துறீங்க.

என்ன வம்புள மாட்டி விடுறீக. இதயராஜ் சொல்லவும்,

பெத்த பெருமாள், புலவர் சொல்லுறது சரிதான். ரெண்டு பிள்ளையும் அப்படித்தான் இருக்காங்க. அவுக நிலை. இது நம்ம நிலைமை. கால்கள் நடந்தன. மனங்கள் இறுகிப்போனது. நடந்தார்கள் நீண்டநேரம். மௌனத்தை உடைத்தார் அய்யனார். நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போறேன் நாளைக்கி. யாராவது வர்றிங்களா?

யோவ், எப்பப்பாரு கோயில் கோயில்…

அய்யனார் போயிட்டு வாங்க. கடவுள்ட்ட எங்கள காப்பத்த வேண்டான்னு வேண்டிக்கங்க! மாணிக்கம்.. நம்ம விதியை நொந்துக்கறாத விட்டு; அய்யனார் நீங்கப் போயிட்டு வாங்கன்ன… முடித்தார்.

என்ன எல்லாப் பிள்ளைகளுக்கும், அம்மாவைப்பி டிக்கிது. அடப்போங்கப்பா! அம்மா அடுப்படி வேலைக்குப் பிள்ள தூக்கும். அவுகளுக்குப் பிள்ள வளர்ற வரைக்கும் மகனும் மகளும் அம்மாவத் தாங்குறாங்க. இல்ல அம்மான்னு பாசத்திலத் தொங்குறாங்க.

இது தெரியாத அம்மாக்க, பிள்ளைகதான் பெருசுன்னு புருஷன விட்டுட்டுப் போய் மக வீட்ல மகன் வீட்ல இருந்துக்கிறாக. புரியும்போது அம்மாக்கள் புலம்புவாங்க.

பிள்ளைக திருமணம் முடிச்சாப் பத்தாநாள் தனிக்குடித்தனம்.

பாம்பு தன்னுடைய தோலக் கழட்டுற மாதிரி… தானா விலகிறவுகளும் இருக்காங்க. “முதுமை கஷ்டமாயிருக்கு எல்லாத்துக்கும்.”

பொஞ்சாதியின் துணையில இருந்துட்டு, இருந்த கணவன்களைத் திடீர்னு பொஞ்சாதி விட்டுட்டுப் போனாப் பலர் பித்துப்பிடித்துப் போய் டென்சன், பிரசர், எமோசன், சுகர்ன்னு மனநோயாளியாகவும் கணவன்மார்கள் போயிர்றாங்க. அத மறந்து பேச்சில காலத்தக் கடத்துவதாகவே வாக்கிங் கூட்டதில் சேர்வதும் அங்கப் பெரும் பேச்சு. நோயும், மாத்திரையும் டாக்டருமாத்தான் இருக்கு. ‘மருந்து’ நோய்க்கு மருந்தா? இல்ல மனசுக்கா?… மாத்திரைக்கும் டக்டருக்கும் வெளிச்சம்.

எல்லார்ட்டையும் புன்னகையோடு பேசினாலும்… சிரிப்ப வில கொடுத்து வாங்குவாங்கன்னு சொல்லுறது மாதிரிதான் இருப்பாங்க. “அவுககிட்டக் காசு இருக்கு. சிரிப்பு வாங்குவாங்க.. ஆனா, சிரிப்பு வரணுமே..

மதுரை திண்டுக்கல் பேசஞ்சர் ரயில் மெதுவாகக் கூடல்நகர்ல நின்னுபோனது.

மாதா கோயில் மணி அடித்தது. நேரம் சரியாக ஆறுமணி. “எல்லோரும் சுகமாக இருக்க கர்த்தருக்கு தோத்திரம்… உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன். (யாத்தி.23-26). ஆமேன்… ஆமேன்…

பேசஞ்சர் ரயில் மெல்ல தன் ஹாரன் ஒலியை எழுப்பியது. மூன்றாவது ஹாரன் ஒலி எழுப்பய உடனே கிளம்ப சிக்னல் கிடைச்சுருக்குப் புறப்பட ஆரம்பித்தது… மீண்டும் ஹாரன் சத்தம்…ஸ்ஸ்… டைசக்கு டைசக்கு டைசக்கு ரயில் புறப்பட்டுவிட்டது.

அய்யனார் சார், என்னய்யா, மணி ஆறாச்சு இன்னும் கிளம்பள. நாங்க இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்கேம். அய்யா, கதிரவன் நீங்க போயிட்டு வாங்க.

பழைய பி.ஆர்.சி.யில செக்கார இருந்தவர் பெத்த பெருமாள்.

சுந்தரம், வீட்ல இருந்து எத்தன வாட்டி கடிகாரத்தையும் செவுத்தையும் பார்க்கிறது.

எவ்வளவு நேரம் பகல்லப் படுத்துக் கிடக்கிறது. உங்களுக்கு… என்ன?

ஜங்சனை விட்டுக் கிளம்பவே மணி ஏழரையாகும்.

நான், என்னங்க சார் கொசு கடிக்காதான்னு கேட்டேன்.

அமூட்டுதான் குறுக்கிட்ட சக்திவேல் சார்.

பேரப்பிள்ளைக தராத முத்தத்தக் கொசுவாவது கொடுக்கட்டும்னு சொல்லவும். எல்லோரும் கொல்லுன்னு சிரிக்க எனக்கு ஏன்டாக் கேட்டோம்ன்னுப் போச்சு.

டியூப்லைட் வெளிச்சம் இரவைப் பகலாக்கியது. கருக் கொண்ட மேகம் இவர்கள் மனம் போலவே அமைதியா இருக்கு.

மழை பெய்யவா? வேண்டாமான்னு யோசித்தது. பிள்ளைக வயதான அப்பா, அம்மாவ வெளியே கூட்டிட்டுப் போவம்மா, வேண்டாமான்னு பொஞ்சாதிகிட்டக் கேட்ட மாதிரி… மழை காத்தக் கேட்டு இருக்கு.

காத்து வேகமா அடித்தது. மழைக்குணம் மாறி மேகக்கூட்டம் கலைந்து போனது. இப்படித்தான் பல வீடுகளிலும் பேச்சுகள் தடுமாற்றத்தால் கூட்டுக் குடும்ப உறவுகள் கலைந்து போயின.

பெத்த பெருமாள் குடும்பத்தத் தெருவே பேசும். அவுகள மாதிரியா அண்ணன் தம்பி, தங்கை ஒண்ணாயிருக்க முடியாதுன்னு… கூட்டுக்குடும்பம்.

நல்லது கெட்டதுன்னா அவுக வீட்டு ஆளுக போதும். இப்ப வீட்டைப்பாரு, ‘மனுச வாடை அத்துப்போயிக்கிடக்கு’. வீடு மட்டுமே பெருசா? மனித மனங்கள் காஞ்சு போன வாழை இலை சுருண்ட மாதிரி சுருங்கிப்போச்சு.

இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையில… வாழ்க்கை; பழச மறக்க முடியாம, புதுச ஏத்துக்கு முடியல. முதியவர்கள் மனதளவில் போராடுகிறார்கள்.

ரெண்டு தண்டவாளம் போல, சேருமா? சேராது. ரயில் சேரணும்… ஆனா, சேராது. தண்டவாளம். தவளையும் ஓந்தியும் காதலர்கள். ஆனா, பார்வைக்கு ஒரே மாதிரியா இருக்கும். எங்கூட வான்னுத் தவளைத் தண்ணிக்குள்ளக் கூப்பிட, ஓந்தி இல்ல வா மேட்டுக்குன்னுத் தவளயக் கூப்பிட. இப்படியே ரெண்டு குளத்தம் கரைமேல நட்புச் சண்டை நடக்க, மேலே இருந்து பார்த்த பருந்து ரெண்டையும் சேத்து தூக்கிட்டுப் போயிருச்சு.

“தண்ணி தவளைக்கும் ஓந்தி மேடுக்கும் கதைதான் நம்மக் குடும்பங்களின் கதையும்.”

 “தயிர்பானையில விட்ட மத்தாட்டம். எல்லோர் நாவும் உறவுகளை உச்சரிக்கத் தொடங்கினா? ஆனால், யாரு வெண்ணை எடுக்கல…” வெயில் ஏறிப் போனால் மோர் பானையில வெண்ண திரளாது. அப்படித்தான் உறவுகளிடம் சுயநலம், கர்வமும், பணத்தாசையும் வரும்போது வெறும் நீர்மோராக உறவுகள் மாறிப்போயின…

மக வீட்டுக்குப் போன அப்பாக்கள், தன்னை மாமனார்ன்னு நினைக்காம.. மருமகன மகனா நினைச்சு ரெண்டு ஒரு வார்த்தை பேசிட்டாப் போச்சு. வெறும்பயலா இருந்தாலும் மருமகன், அவனுக்குப் பெண்ணும் கொடுத்து.. ஆண்டவன் அறுபதும் சீதனமாக் கொடுத்திருப்பாரு. மாப்பிள்ள, எதாயிருந்தாலும் ஆத்துலப் போட்டாலும் அளந்து போடுங்க இதுதான் சொல்லியிருப்பாரு… இங்க வந்தமா சாப்பிட்டமான்னு போகச்சொல்லு… எனக்கு புத்தி சொல்ல வர்றாரு… என்ன அவ்வளவு அறிவாளியா உங்க அப்பா? எங்க அப்பா பேச்சையே நான் கேட்டதில்ல மருமகன் எகிறுவாக.

மக வேப்பில இல்லாம சாமியாடுவா?

யம்மா, உம் புருஷன் வந்த வாயா வச்சுட்டு சும்மா இருந்தாத்தானே… என் விட்டுக்காரர்ட்ட என்னத்தயாவது சொல்ல. அவர் மனுசன், என்னை ராத்திரி கொண்டு எடுக்கிறார். தூங்கவிடாமா?

இதெல்லாம் நமக்கு எதுக்குங்கன்னா கேட்டாத்தானே அவரு அம்மா.

அம்மாவும்… மகளும்… அப்பனுக்கு குற்றப்பத்திரிகை வாசிக்க? வரட்டும் அவருக்குத் தேவையா? வந்தம்மா இருந்தம்மான்னு இருந்துட்டுப் போறத விட்டுட்டு…

வந்தமா பேசுனமா? இருந்தம்மானு போகவேண்டியது தானே. எதையாவது சொல்ல வேண்டியது. போயி, உங்க மருமகட்டச் சொல்லி பாக்கச் சொல்லும்மா உம் வீட்டுக்காரர? அங்க உங்கப் பருப்பு வேகாது. யார் அப்புராணி எம் புருஷன்தானே கிடைச்சாரா?

ஏன்டி, மரியாதையில்லாம பேசுற? நாங்க எல்லாம் அப்படியில்ல.

யம்மா, உங்க காலக்கதைய யார் கேட்டா? ஏதாவது கேட்ட மட்டும் பேசுங்க? தேவையில்லாம பேசாதீங்க.

அந்த மனுசன் இன்னும் உலகமே தெரியாம இருக்காரு…

சரிம்மா, நா போனு போடும் போதுச் சொல்லி வைக்கிறேன்.

இப்படிப் பலரும் பல நினைவுகளை அசைபோட்டு வாக்கிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போனா.

டிபன் கேரியர்ல நாலு எருவாட்டியச் சப்பாத்தின்னு இருக்கும்.

பணம் கட்டியாச்சு, அவன் வைக்கிறதச் சாப்பிட்டாகனும்.

“வாய்க்கும் வௌங்காது, வந்தாரச் சிந்தாது.” தின்னதுபோக மிச்சத்தத் தூக்கி நாய்க்குப் போட்டா?

“நாய் மோந்து பாத்துட்டு… காலத் தூக்கிட்டுப் போகும்.”

மாணிக்கத்தின் மனத்திரையில் வந்துபோனது. எல்லோரும் ஒன்னாச் சேர்ந்து உக்காந்து, பேரன் பேத்தி எல்லாட்டையும் பேசிச் சிரிச்சு… சாப்பிட்ட நாட்கள் இனி வருமா, வரும்? ஏதாவது விசேஷகக் காலம்ன்னா?

வீட்ல போயி என்னத்தச் சாப்பிட.. அய்யோ கடவுளே! காலாகாலத்தில காப்பாத்துட்டா…! இந்த தனிமையில இருந்து காப்பாத்து உனக்குப் புண்ணியமா போகட்டும்…

பெத்தப்பெருமாள் மாதிரியான மனிதர்கள் எல்லாம் இருந்தும் எதுவுமில்லா மனநிலையில் பூமியைத் தேடிப் பூ நாளும் வாடிக் கிடக்கின்றனர். ஒவ்வொரு இரவும் முதிரா இரவாக…. ஆயிரம் பெத்தப் பெருமாள் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். முதுமையை,

“கரையான் கட்டுனப் புத்துலக் கருநாகம் குடியேறுனது கணக்கா…” மெத்தையிலப் படுத்தாத் தூக்கம் வரமாட்டேன்னுது நாம வாங்கிய வரம்…

இராத்திரி ஒம்பது மணிக்குப் படுத்துப் பெறண்டு பெறண்டு படுத்தே தூக்கம் வர எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகும். ஆனா, டான்னுக் காத்தால மூன்றரைக்கு முழிப்பு வந்திரும். அதுக்கு மேலத் தூக்கம் பிடிக்க மாட்டேங்குது.

வெருக்கு வெருக்குன்ன ஒத்தக் கொரங்கா இருக்க வேண்டியிருக்கு.

இரவு நீண்ட இரவாப் போச்சுன்னு பெத்த பெருமாள் தனக்குத் தானே மெல்ல மனசுக்குள் பொலம்புறார்……

[email protected]

The post முதிரா இரவு – சுருளி காந்திதுரை appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

பெயராடல் – அசோக்

என்னிடம் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது. என்னவெனில், இப்போது உங்கள் பெயர் முருகேசன் என வைத்துக் கொள்வோம். நான் உங்களை மறுமுறை பார்க்கும்போது ‘என்ன செல்வகுமார் எப்டி இருக்க?’ என்றுதான் அழைப்பேன். மறுமுறை ‘என்னப்பா கனகராஜ்?’ எனவும் அழைப்பேன். நியாயமாக, என்னால் ஒருவரின் பெயரை ‘பெயர்’ என்ற அடையாளத்துடன் நிறுத்த விருப்பமில்லை. கூடவே அதில் ஒரு மஜாவும் இருக்கிறது. நான் அப்படி அழைக்கையில் அவர்களுக்கு நிறைய பெயர்கள் என ஆகி விடுகிறது. எப்போதும் வலது கையால் முகம் கழுபவரா நீங்கள்? இம்முறை இடக்கையால் கழுவிப் பாருங்கள். புது முகம் சிக்கும். ஒவ்வொரு முறையும் உங்கள் ஒரிஜினல் தவிர மற்ற அனைத்து நாமத்தாலும் அழைப்பேன். ‘ஹலோ.. இல்லயில்ல. என் பேரு முருகேசன்ங்க’ என நீங்கள் என்னைத்திருத்தும்போது ஒரு புன்சிரிப்புடன் எதிர்கொள்வேன். மாறாக நீங்கள் சீற்றம் கொண்டால் அதில் உள்ள வேடிக்கையை இழப்பீர்கள்.

இதை நான் என் நட்பு வட்டாரத்தில் எனக்கான தனிக்குணமாகவே வைத்து இருந்தேன். கில்லி படத்தில்கூட பிரகாஷ்ராஜ் ‘சிவசுப்பிரமணியன்’ என்ற போலிசின் பெயரை ‘கோயிந்தசாமி’ என விளிப்பார். அவர் கோபம் கொள்ள, “அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. நீ ஏன் சொல்ற?“ என்பார். அது என்னுள் ஆழ விதைந்துவிட்டதோ என்னவோ? அப்படி அடிக்கடி நான் பயன்படுத்தும் பெயர்கள் பார்த்தசாரதி, மகா கணபதி, திருச்செல்வம், யோகராஜ் போன்றன.

தமிழ் என்றொரு நண்பன் இருந்தான். முழுப்பெயர் தமிழரசன். சற்று பெருத்த உடல். முழுக்கை சட்டை மட்டுமே அணிவான். உளுந்து மூட்டையை மேலும் ஒரு சாக்கு கொண்டு சுற்றியது போல் இருப்பான். அவனை நிறைய பேர் உருவக்கேலி செய்வார்கள். நான் அப்படியில்லை. அவனுக்கு இதன்பால் என்னிடமும், என் இந்த பெயராடல் விசயத்திலும் பெரிய அன்பு மற்றும் கிரேஸ் இருந்தது. அவனின் நண்பர்களை நான் விசாரிக்கும்போதும் அவ்வாறே செய்தேன்.

‘ஒஹ்ஹ் நம்ம ராஜேஷா?’ என்பேன். உண்மையில் அவன் பெயர் சரவணனாக இருக்கும்.

‘ஜீ இப்ப நம்ம செல்வம் வருவான்,எதாச்சும் பேர் போட்டுவிடுங்க’ என வாலண்டியராக குதூகலிப்பான் தமிழ்.

சரி. இப்போ அதுக்கு என்ன? என்றால் ஒருமுறை எங்கள் சொந்த ஊர் சென்றபோது சுப்புராஜ் மாமா என்னை பார்த்து ‘என்னப்பா பாண்டி? என்ன பண்ற?’ என்றார். சொல்லில் ஒரு நக்கல். நானோ கிராமத்தில் கார்கோ க்ராக்ஸ் என கெட்டப்பில் இருந்தேன். சுற்றிலும் பார்த்து என்னைத்தான் சொல்கிறார் என்பதை தெரிந்து கொ ண்டேன்.திக் என்று இருந்தது. நம்மை அடிக்க சில விபூதிகள் காத்துக்கொண்டுதான் இருக்கும்போல்.

‘சொன்னேன் – எம் பேரு அசோக்கு.’

‘திருப்பரங்குன்றத்துல குளத்துல தவறி விழுந்த பின்னால நைட்டு நைட்டு எந்திரிச்சி எங்காச்சும் ஒடபோறேன் ஒடபோறேனு அரட்டிகிட்டே இருப்ப. வெளக்கமாத்தால ரெண்டு போட்டதுக்கு அப்புறம்தான் தூங்குவ. அப்ப உங்க தாத்தா வச்ச பேருதான் பாண்டி. பாண்டி சாமியோட பேரு. அந்த பேரு கொஞ்ச நாள்ல காணாமப் போயி வந்ததுதான் இந்த சோக்கு எல்லாம்’ – நீண்ட விளக்கம் கொடுத்து சுப்புராஜ் மாமா பீடியை காலால் போட்டு அமத்தையில் என் மஜா எல்லாம் அணைந்துவிட்டது போன்ற ஒரு நெருடல். ஆனாலும் இந்த பாண்டிக்கு முருகேசன்கள் எல்லாம் திருச்செல்வம்கள்தாம். யோகராஜ்கள்தாம். பெயரில் என்ன இருக்கிறது?

தமிழ்தான் ஒருமுறை கேட்டான் – ‘ஏன்ஜி என்ன மட்டும் அப்படி பேர் மாத்தி கூப்பிட மாட்றீங்க?’

‘செவ்வாழைகள் கிட்ட நா வச்சிக்கிறது இல்ல’ – என்றேன். ‘கூடவே இருக்கிற’ என்பதைப் போட்டு புரிந்து கொண்டான் தமிழ் என்கிற பரிகாசன். சின்னஞ்சிறு விசயங்களில் கூட பகடி தேடுவான். சில சமயங்களில் தானே ஒரு பகடியாக மாறுவான்.

‘ஜி, இந்த கேஸ்க்காரன் வேற இன்னைக்கு என்னப் பாக்க வாரானாம்’ -தமிழ்

‘எதுக்கு?’ – நான்

‘வேற எதுக்கு கேஸ் போடத்தான்’ – தமிழ்

மேலும், ‘நேத்துதான் அஞ்சு லட்சம் செக் பாஸ் பண்ணேன். ஒத்த ரூவாகூட கைல இல்ல’ – என புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவான். அவனின் பீடிகையைப் புரிந்து கொண்டு எனக்குள்ளும் ஜிபேயிலும் ஒரு பரிமாற்றம் நிகழும்.

‘யோவ் கேஸ்க்கு கொடுக்க காசு வேணும்னு கேக்கலாம்ல?’ என்றால், ‘அதுல ஒரு ஜாலி இருக்காது ஜி’ என்பான். பின்பு ஒருமுறை பார்க்கையில், ‘ஜி, அன்னைக்கு கேஸ்க்காரன் வந்தானா, அவன பார்த்தவுடன் உங்க ‘பிட்ட’ போட்டேன்’

புரியாமல் ‘என்ன?’ என்றேன். ‘ரெண்டு மாடி ஏறி களப்பா வந்து எறக்கி வச்சான். வச்ச அடுத்த செக்கண்டு என்ன பூங்குன்றன் இந்த வாட்டி லேட்டுன்னேன்.அவன் சிரிச்சிட்டே சொன்னான்.என் பேர் கண்ணன் ஸார். ஓ அப்டியான்னேன். களப்புலாம் கலைஞ்சி போன மாதிரி தெரிஞ்சான் ஜி அவன். அந்த நேரத்துல அவன் ஒருவாட்டியாச்சும் பூங்குன்றனா இருந்திருப்பான்லஜி?’

தமிழுக்கு இனமறியா குதூகலம். ‘ஆஆ…கண்டிப்பா’ என்றேன். கண்ணன்கள் பூங்குன்றன்கள் ஆவதில் என்ன பெரிய சிக்கல் இருந்துவிடப் போகிறது?

‘நீங்க அங்க இருந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க?’ என்றான். ‘அந்த நேரத்துல மனசுக்குள் என்ன தோணுதோ அதுதான் சொல்லியிருப்பேன்’ என்றேன்.இதை திட்டம் போட்டு செய்ய முடியாது. அது ஒருவித வன்முறை. ஒருவரின் பெயர் தங்கள் பெற்றோர்களால் ருசித்து வைக்கப்பட்டது. எனக்கெல்லாம் என் அப்பா அசோக் லேலண்டு லாரியில் பார்த்து ‘குமார்’ சேர்த்து வைத்தாராம். அதை உடைத்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரின் சாம்ராஜ்யத்தையே தகர்ப்பது போன்றது. சிறு போர் போன்றது. அந்த போருக்கு ஒரு சிறு நகைச்சுவை உணர்வும், கடந்து செல்லும் குணமும், சிறு கணமும் போதுமானது. ஒரு பாலகனிடம் இருக்கும் மிட்டாயை படக்கென பறித்து அதே நொடியில் படக்கென இன்முகத்துடன் திருப்பி அவனிடமே கொடுப்பதைப் போன்றது. சிறுவனுக்கும், அதனைப் பிடுங்கிய நமக்கும் ஏற்படும் ஒரு சிறு மனமாற்றம்தான் அந்த போரின் வெற்றி. நிறைய இடங்களில் பார்த்து இருப்போம்.

ஒருவரின் பெயரை மற்றவர்கள் எழுதுகையில் தவறு இருப்பின் அதை செவ்வனே திருத்தும் நபர்கள் உண்டு. கார்த்திக்கை ‘கார்த்தி‘ என்று எழுதினாலே குற்றம். பெயர் ஒரு அடையாளம். பெயருக்குள் ஒரு நபரின் உடல், குணம், அங்கீகாரம், நகை நட்டு, ஜாதி மதம், முடியில் எடுக்கும் வகுடு முதற்கொண்டு கலாச்சாரம், கத்திரிக்காய் என எல்லாமே அடங்கும். பெயரே அவராக இருக்கிறார்.

தமிழை சொல்லாமல் இக்கதை முடியாது. சில வருடங்கள் அவனைக் காண முடியவில்லை. ஓடும் பேருந்தின் இருபுறமும் சிதறும் செத்த இலைகள்தானே நாம். ஒருநாள் ஓர் இரவில் சர்ச் அருகில் வரச்சொன்னான். சீரான படுக்கைப்பட்டைகள் இருந்த புளு நிற ட்ஷிர்ட் போட்டிருந்தான். முழுக்கைச்சட்டைகள் எங்கே போயின? ஆனால், அதே உடல்.

சூடான இரவு. ஆனாலும், சூடான டீ குடித்தோம். ஏனோ மனுஷனுக்கு சூட்டில்கூட சூடுதான் கேட்கிறது. வினோதமானது மனசு மட்டும்தான்.

கழுத்தில் ட்ஷர்ட் மறைவில் ஒளியும் சிலுவை, சர்ச் வாசல் என இருந்தவனை கேட்டேன்.

‘ஆமா ஜி ஒன்னும் முடியல, இந்தப் பக்கம் வந்துட்டேன். ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. அம்மா உள்ளதான் வேல செய்றாங்க’ என சர்ச்சைக் காட்டினான். அந்நேரம் மணி ஒலித்தது. நிறைய பேசிக்கொண்டே இருந்தான். கொஞ்சம் கேட்டுக் கொண்டே இருந்தேன். பேச்சுக்கள் எங்கே இருந்து உற்பத்தி ஆகிறதோ அந்த இடமே உடலின் புனித ஸ்தலம். வாய்ல இருக்கு வார்த்த – என சொல்வாள் கோட்டையூரில் மெஸ் நடத்தும் மாமி.

‘ஜி, ஒன்னு தெரியுமா… இந்த ஏரியால நான்தான் இப்போ குட்டி அசோக். அதான்ஜி நீங்க. இங்க வந்த புதுசுல பெக்கேன்னு வேலை வீடு காசுன்னுதான் இருந்தேன். காசு இல்லாதப்ப போர் அடிக்கல. இப்போ காசிருக்கு. ஆனா, ஒரு துடிப்பே இல்ல. அதான் பார்த்தேன். உங்க ‘பிட்ட’ போட்டேன். ஒரு மாதிரி வொர்க் அவுட் ஆச்சி. ரெண்டு பொண்ணுங்களையே இப்போ கரெக்ட் பண்ணிருக்கேன் ஜி’ என்றானே பாருங்க தமிழ் என்னும் ‘டைசன் சேவியர்’.

ஆளையும் வாழ்வையும் மாற்றியிருக்கிறது பெயர். அப்படியென்றால் பெயரில் என்னதான் இருக்கிறது தேவையை விடவும்? என்றே எனக்குத் தோன்றியது. போரில் தோற்பவனும் வெற்றியை பெறுகிறானோ? எது தேவையோ அதுவே தர்மம் – என்று அச்சிட்ட காலண்டரை முன்பு ஒருமுறை தமிழ் வீட்டில் பார்த்து இருக்கிறேன். அதில் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு இருந்தார். இங்கே பின்புறம் மாதா அழகிய புன்னகையுடன் நிற்கிறார். இருவரின் சிரிப்பையும் எந்தப்பெயர் பிரிக்கும்?

பேசிக்கொண்டே இருக்கையில் கடந்து செல்லும் ஒருவனை பார்த்து தமிழ் சொன்னான். ‘என்ன செந்தூரப்பாண்டி,வேளைக்கு வர நேரமா இது?. அவனோ, ‘யோவ்.. போய்யா!’ என சிரிப்பளித்தான்.

‘அவர் சர்ச் வாட்ச்மேன் ஜி. பேரு ஆரோன். அவருக்கு நா டெய்லி இப்டி ஏதாச்சும் சொல்லி கூப்டனும். அப்படியே சிரிச்சிட்டே உள்ள போவாரு.’ என்றான் தமிழ். எப்போதும் தமிழ்தான் எனக்கு.

பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டு, ‘சரி ஜேக்கப்… வரட்டுமா?’ என்றேன்.

‘ஜீஈஈஈஈஈ..!’ என்றான்.

குளிர்ந்து மாறியது இரவு.

[email protected]

The post பெயராடல் – அசோக் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

கன்னக்குழி – ஜெயநதி

மூன்று தினங்களுக்குப் பிறகு இன்றுதான் இந்த தொழில்முறை அலைபேசி எண்ணை ஆன் செய்தாள் ரதி. பர்சனலாக ஒரு எண் வைத்திருக்கிறாள். அது அவளுக்கும் அவளுடைய அம்மா விசாலிக்கும் மட்டுமானது. கொஞ்ச நாட்களாகத்தான் அம்மாவுடன் பேசுகிறாள். அதுவும் அவளிடம் வளருகிற தன் குழந்தையின் பொருட்டு…

தானிழைத்த பெரிய தவறுக்காக ஒரு மன்னிப்பைக் கோரி நின்றவளை தாய் மன்னித்து வீட்டில் சேர்த்திருக்கலாம். ரதியும் படிப்பை தொடர்ந்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.

தொலைபேசி எண்ணை ஆன் செய்ததும் தொடர்ச்சியாய் தவறின அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்து விழுந்தவண்ணமிருக்கிறது.

வந்தவைகளில் மஞ்சுவின் குறுஞ்செய்திதான் அதிகம். மஞ்சுநாதனை அழைத்தாள்.

‘”என்ன?” என்றாள்.

“எனக்குத் தெரியும் ரதி. மூனு   நாளைக்கு தொந்திரவு பண்ணக் கூடாதுன்னு.. ராஜ்மதன்னு புதுசு. நீதான் வேணும்னு காத்திட்டிருக்கான். இன்னைக்கு முடியுமா?”

“ம்ஹூம், முடியாதுப்பா…!” என்றாள்

“அப்ப நாளைக்கு.?….

“ம்..”

அந்தப் பக்கம் அவன் இளிப்பது தெரிந்தது.

காரைக் கிளப்பினாள். கண்ணாடியில்       முகம் பார்த்தாள். சாயமில்லாத உதடு வெளிறி இருந்தது. ரெடிமேட் மூக்குத்தி முகத்தின் வாட்டத்தை மறைத்து மின்னியது.

குதிரைவால் பின்னலை வளைத்து கொண்டையாக மாற்றியிருந்தாள். இளமையின் மீது விழுந்த நகக்கீறல்களாய் நரை அங்கொன்றும் இங்கொன்றுமாய். இன்னும் மெலிதான இரத்தப் புள்ளிகள் நாப்கினை நனைத்துக் கொண்டிருந்தது. நாளைக்கு சரியாகிவிடும்.

அப்புறம் கனஜோராய் தொழில் ஆரம்பித்து விடும். விடுபட்ட நாட்களுக்கும் சேர்த்து நுகர்வதும், கசங்குவதும், கசப்பதுமான இடிபாடுகளிடையே நொறுங்கிவிடாது

நகர்ந்து வருவது பெரும்பாடு.

ஏதாவது ஒரு முகம்

ஏதாவது ஒரு தருணம்

அழுவாச்சிக் காட்டி ஆட்டத்தைக் கலைக்கப் பார்க்கும். ஆனால், சென்டிமெண்ட்டெல்லாம் தொழில் தர்மமில்லையே!

காரிலிருந்து இறங்கி தள்ளாடி நடந்தாள்.

உலகத்தை எத்தி எத்தி பின்தள்ளி

முன் நகர்கிற இந்த தள்ளாட்டம் அவளுக்கு சுகமோ சுகம்..

வீட்டினுள் நுழைந்து கதவடைத்தாள்.

செருப்பைக் கழற்றியதும் அவளுக்காக காத்திருந்த பூனைக்குட்டி மெத்தென்று உரசி கால்களை நக்கியது.

எங்கிருந்தாலும் எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு வந்து விடுவது அவனுக்காகத்தான்..

“ச்சிலியோப்பா”… சீட்டா, லியோ, பேன்தர் மூன்றையும் கலந்து வைத்த பெயர்…அவள்பாட்டிலைத் திறக்கிற கண்ணாடி கோப்பைகள் உரசுகிற சத்தம் கேட்டாலே போதும் எங்கிருந்தாலும் ஆஜராகி விடும்.. அதற்கு மதுவை நக்குகிற பழக்கம்… அவளுடன் கட்டிலில் மல்லாந்து விடும். அவளுக்கு மனசு சுணங்கியிருக்கும்போது அதற்கு எப்படியோ தெரிந்து விடும். அவளை விட்டு விலகாது உரசிக்கொண்டு கூடவேஇருக்கும்…

“குட்நைட்…ச்சிலியோப்பா”…..என்றாள்.

வாயிலிருந்து குழறலாய் பனிப்புகை கிளம்பியது.

ஜெர்மனியின் பனிச் சூழ்ந்த மரப்பலகை வீட்டின் படுக்கையறை

ஹீட்டரில் கதகதப்பாயிருந்தது.

இந்த கசிகிற மெல்லிய வெளிச்சத்தில் மேற்கூரையை வெறித்தபடி படுத்திருப்பது நன்றாய்த்தானிருக்கிறது.

சில மெழுகுவர்த்திகள் நின்று எரிகிறது. சீக்கிரத்தில் அணைவதில்லை. அதன் தடிப்பு குறைவதுமில்லை….

அரக்கு ஒழுக்கி ஒட்டிய கடிதத்தை முனை கிழியாமல் பிரிப்பதும், அதில் ஏதும் சுவாரஸ்யம் இருக்குமாவென படித்துப் பார்க்கையில் ஒரு மண்ணுமில்லை என கசக்கிப் போடுவதுமாய்

வாழ்க்கை….!

“போங்கடா”….

நொறுங்கிவிடாது இவ்வளவு தூரம் வந்திருப்பதே விஷயம்தான்…

கொஞ்சம் வீறல்…

கொஞ்சம் விரிசல்…

ஆனாலும் எதை ஊற்றினாலும் கசிய விடாத

கண்ணாடிக் குவளை.

இன்னும்

மவுசு இருக்கிறது. போகிறவரை போகட்டுமே….

மறுநாள் விடுதியை அடைந்தபோது வாசலிலேயே மஞ்சு நின்றிருந்தான். வாயெல்லாம் பற்கள்.. சட்டைப்பை நல்ல கனத்திலிருந்தது. பெரியவருமானமாய் இருந்தால் மஞ்சு நேரிலேயே வந்துவிடுவான். இல்லையெனில் அலைபேசியிலேயே வியாபாரத்தை முடித்துவிடுவான். இன்று நல்ல வேட்டைதான்போல..

அறைக்கதவை தட்டிக்கொண்டு போனபோது, உள்ளே இருந்தவர் கதவோரம் இருந்த இருக்கையிலேயே அமரும்படி சைகை செய்துவிட்டு வீடியோ காலில் அசையாமல் “ம்” கொட்டிக் கொண்டிருந்தார். அப்படியென்றால் எதிரில் பேசிக்கொண்டிருப்பது அனேகமாய் மனைவியாய் இருக்கக்கூடும்.

இந்த ஆண்களுக்கு மனைவியிடம் நடிப்பதென்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி..

பேசி முடித்ததும் அருகில் வந்து அமரும்படி சைகைசெய்தார்.

“நேர்ல இன்னும் அழகாஇருக்கே…!”

சிரித்தாள்..

“ஒகே…கே…நான் நிஜத்தை சொன்னேன்…!” அவரும் சிரித்தார்.

“ஏதோ இருக்கு உன்கிட்டே… புகைப்படத்தைப் பாத்தப்பவே கணிச்சேன்.. இன்னைக்கு ஊர்ஜிதமாயிடுச்சு.. உன்கிட்ட ஏதோ வசியம் இருக்கு…ஹா…ஹா…”

“பெரிய மனுஷ தோரணையெல்லாம் படுக்கையில உதவாது.வா..வந்து இங்க உட்கார்” என்றபடி தொடர்ந்து, “ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா?” எனக் கேட்டார்.

“ம்.”..

“என்ன சொல்லட்டும்?”

“ஷாம்ப்பெய்ன்.. சப்பாத்தி.. மட்டன் கசண்டி”…- என்றாள்.

“ஆஹா ஜோர்…எனக்கும் இது ரசிக்கும். முதல்ல சாப்பிட்டு சவகாசமா பேசிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்…” என்றார்.

ரசனைக்காரன் தான்.

இன்று எல்லாப் பசிக்கும் தீனி கிட்டலாம்..

“ரதி…ஏதாவது பேசேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லேன்?”

என்ன கன்றாவிடா இது…

ஏதாவது கவிஞன் எழுத்தாளனிடம் வந்து சிக்கிக்கொண்டுவிட்டேனா என்ன?…

வேலை முடிந்ததா அனுப்பி வைப்போமா என்றில்லாது, பைத்தியக்காரன்

“அதுவந்து”..

அவரே பேசினார்..

“எனக்கும் அலுப்பாயிருக்கு… நிறைய பாத்தாச்சு.. இன்னைக்கு அமைதியா பிடிச்சத சாப்பிட்டுக்கிட்டு, பேசிகிட்டு, ரூமுக்குள்ளேயே கதகதப்பா இருக்கத் தோணுச்சு. பாத்த போட்டோக்கள்ல நீதான் இதுக்கு சரியா வருவேன்னுபட்டுச்சு. அதுவும் இந்த சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ விழுகிற கன்னக்குழி….”

ஆழமாய் பார்த்தார்.

வெகுநேரம் ஓடிக்கொண்டிருக்கிறபோது மிகப் பிடித்த இடத்தைக் கடக்கையில் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவதைப்போல

திரில்லாக இருந்தது ரதிக்கு..

வித்தியாசமானவனாய் இருக்கிறான்.

“ம்… என்ன கேட்டீர்கள்? சரியாக கவனிக்கவில்லை” என்றாள்.

“காதலைப் பற்றி உன் அபிப்ராயம் என்ன? நீ லவ் பண்ணியிருக்கையான்னு கேட்டேன்?”

காதலன் இருந்தான். அவன்தான் காதலைச் சொல்லி படிப்பதிலிருந்து காதலுக்கு நகர்த்தி.. காதலிலிருந்து கர்ப்பத்திற்க்கு நகர்த்தி.. பின் கருக்கலைப்புக்கு நகர்த்தி.. ஆயிரம் சத்தியம் செய்து மறுபடியும் இன்னுமொரு கர்பத்திற்கு நகர்த்திவிட்டு ஒருநாள் அவனுக்கே அத்தனை சத்தியங்கள் சலித்திருக்கும் போல… ஓடிவிட்டான்.. திருட்டு ராஸ்கல்….இதுவரை எந்தத் தகவலுமில்லை.இவளும் தேடவில்லை..விட்டது சனியன் என்று..

இவனிடத்தில் எதற்கு இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்…

“அது வந்து… காவியக் காதல் பண்ற அளவுக்கு யோக்கியமானவனை இதுவரைக்கும் நான் பாக்கவுமில்ல. காவியக் காதலியா இருக்கிற யோக்கியதை எனக்குமில்ல… பத்தொன்பது வயசுலயே இந்த லைனுக்கு வந்துட்டேன். சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்ல..

அப்புறம் ஒரு கால்கேர்ள் கிட்ட காதலைப் பத்தி விசாரிக்கிறிங்கன்னா நீங்க சுவரஸ்யமான ஆள்தான்.. காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?….”

கூர்மையானாள்.

“எனக்கு இப்ப வயசு அறுபத்தி ரெண்டு. இருபத்தி மூனு வயசுல ஒருத்திய பாத்தேன். ப்ரபை அவளுடைய பெயர். அவளாக வைத்துக் கொண்ட பெயர். தமிழ்நாட்ல ஒரு நூலக வாசல்ல… யாருக்கோ காத்திட்டிருந்தா..அப்பப்ப என்னைப் பாத்துசிரிச்சா.. கன்னக்குழிவிழ… எனக்கு முதல் பார்வையிலயே ரொம்ப பிடிச்சிருச்சு..போய்ப் பேச பயம்.. ஒரு கார் வரவும் கிளம்பிப்போயிட்டா. மறுநாள் அதே நேரத்துக்கு அந்த நூலகத்துக்கு போய் ரொம்ப நேரம் காத்திருந்திட்டு ஏமாந்து திரும்பி வந்தேன். அவ கன்னக்குழி சிரிப்ப மறக்க முடியல.சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ குழி விழுகிற சிரிப்பு… மனசு எதுலயும் ஒட்டல. அதன்பிறகு எதேச்சையா ஒருநாள் ஒரு உணவகத்துல பார்த்தேன். முன்பைவிட இன்னும் அழகாயிருந்தாள். நான் அவளையே பார்த்துக்கிட்டிருக்கிறதை கவனிச்சு அவளே என்கிட்ட வந்து லேண்ட்லைன் எண்ணைத் தந்துவிட்டு மறைஞ்சுட்டா.

அந்த எண்ணுக்கு கூப்பிட்டபோது.. ரேட் இவ்வளவு என்று பேசினாள். எனக்கு முதலில் அதிர்ச்சியாய் இருந்தாலும் அவளை மறக்கமுடியாமல் திரிஞ்சேன். சில தினங்களுக்குப் பிறகு என் காதலைத் தாங்க முடியாமல் சொன்னபோது திக்குமுக்காடினாள்… குதூகலித்தாள். நிறைய பேசினோம். அவள் அதிபுத்திசாலி. கவிதையைப் பற்றி பேச ஆரம்பித்தால் ஜான்மில்டன் பற்றி பேசுவாள். ஷெல்லி பற்றி பேசுவாள். பாரதியைப் பற்றியும் பேசுவாள். வரலாறு, புரட்சி எதைப்பற்றியும் பரவலான அறிவிருந்தது அவளிடம். முக்கியமாய் பரதம்…. சுழன்றாடினாள்…

என்னை ஸ்திரமாய் நம்பினாள்.

நம்பவைத்தேன்.

சில நாட்களில் என் அண்ணனுக்கும் பின் அம்மாவுக்கும் எல்லாமும் தெரிஞ்சு போனது.. அம்மா அடித்துக் கொண்டு அழுதாள். அரிவாள் மனையை கழுத்தில் அழுத்திக் கொண்டு அறுத்துக் கொள்ளப் போவதாய் மிரட்டினாள்.

வேற வழியில்லாம அவளை தவிர்த்தேன். பாவம் ப்ரபை.. ஆனால், அதிபுத்திசாலியல்லவா.. நான் கைவிட்டதை புரிந்து கொண்டாள்.

பின்னாளில் எனக்கு கல்யாணமும் முடிந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு அவளை ஒரு ரெஸ்ட்ராண்ட்டில் பாத்தேன். ஒரு ஆணுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே

என்னைப் பார்த்ததும் சிரித்தாள். என்னை மன்னித்துவிட்டதாய் காட்டிக் கொண்டாள்… குற்ற உணர்வுடன் நான் திரும்பி விடக் கூடாதென்கிற அக்கறையோடு கன்னக்குழி விழ சிரித்துக்கொண்டே கடந்து போனாள். மனதாலும் அவ்வளவு அழகானவளை அப்புறம் பார்க்க நேராததுதான் அவளோடு இணைந்திருந்து குறுகிய நாட்களை அற்புதமான கவிதை வரியாக மாற்றியிருந்தது வாழ்வு.. ஜிகினா காகிதத்தில் அச்சிடப்பட்ட அற்புதமான பழுப்புக் கவிதை .

ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை நான் உணர்ந்தேன்.

உணவகத்திலிருந்து வெளியே வந்த போது மிக மெல்லிய காற்றுக்கே அங்கிருந்த போகன்வில்லா மரம் காகிதப்பூக்களை என் மீது ரோஸ் நிற வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றி மொய்க்கச் செய்தது.

அவள் மன்னித்துவிட்டாள்.

தெருவோரப் பைத்தியக்காரி ஒருத்தி என் முகத்தில் ஆசையாய் தடவிய விரல்களை அழுக்கு உதட்டில் வைத்து முத்தினாள்.

சத்தியமாய் ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை உணர்ந்தேன்.

ஆனால், என்னிடமிருந்து இன்றுவரை எனக்கு மன்னிப்பே கிடைகக்கவில்லை…

பிறகு மனம் நோகிற போதெல்லாம் அங்கிருந்து கிளம்பி இங்கே வந்துவிடுவேன்… இரண்டு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.

இன்று அவளை லைப்ரரியில் முதன்முதலில் பார்த்த தினம்..

அதைக்கொண்டாட அவளைப் போலவே ஒரு விலைமாதைத் தேடினேன்.  

எனக்கு வந்த புகைப்படங்களிலேயே நீதான் பழைய இடதுக் கன்னக் குழியோடு புது சிரிப்பை சிரித்துக் கொண்டிருந்தாய்!”

[email protected]

The post கன்னக்குழி – ஜெயநதி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன்

மெடிக்கல் காலேஜ் ரோட்டில் முதல் கேட்டிற்கருகே வரும் போது செல்போன் அழைத்தது. நல்ல வெய்யில் நேரம், மே மாத சூரியன் தன் முழுவீச்சை வெளிப்படுத்தும் நேரம், உச்சி வெய்யிலின் தாக்கத்தை விட சுற்றுப்புற அனலின் தாக்கம் அதிகமாயிருந்தது. வண்டியை நிழலான இடத்தில் நிறுத்தலாமென்றால், ரோட்டில் இருந்த மரத்தையெல்லாம் விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டியதால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரங்களே இல்லை.

முதல் கேட்டினுள்ளே நுழைந்தால் வலது புறம் பெரிய ஆலமரம், விழுதுகள் ஊன்றி நிழல் அளித்ததைக் கண்டு அதன் எல்லையில் நிறுத்தினான் திருப்பதி, அதற்குள்ளாக செல்போன் அழைப்பு நின்றிருந்தது.

செல்போனை எடுத்து அழைத்தது யார் என்று பார்த்தால் புதிய எண்ணாக தெரிந்தது. இதற்கு முன்பு இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக நினைவில் இல்லை. பொதுவாக அழைப்புகள் வரும் எண்களையும் பேசுபவர்கள் குரலையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவது வழக்கம். அந்த எண்ணிற்கு அழைத்தான் பிசியாக இருந்தது. சரி காத்திருப்போம் என அமேசானில் உலாவி புதியதாக வந்திருக்கும் டூல்ஸ்களை பார்வையிட்டான். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“சார், அதிர்ஷ்டம் கடையில ஒங்க நம்பர் கொடுத்தாங்க. நீங்க திருப்பதிதான? வாசிங் மிஷினுக்கு சரியா தண்ணீ வரமாட்டேங்குது. தொவக்க லேட்டாவுது. வந்து என்னான்னு பாக்க முடியுமா? இப்போ வர முடியுமா?”

“ஓகே பத்துடலாம். டேங்குல தண்ணீ ஃபுல்லா இருக்கா?”

“பார்த்துட்டேன் சார். மோட்டார போட்டு தண்ணிய ஃபுல்லா ஏத்தியும் பாத்துட்டேன். ரெம்ப கம்மியா வருது போல. தொவக்க ரெம்ப நேரம் ஆவுது. இதுக்கு முன்னாடி இது மாறி ஆனதில்ல. கொஞ்சம் சீக்கிரம் வாங்க. வெளிய போகனும்”

“சரி, அட்ரச சொல்லுங்க. வந்துர்றேன்.”

“அருளானந்த அம்மாள் நகர், புஷ்பம் காலனி, ஆறாவது தெரு, மொத மாடி வீடு, கத்தரி பூ கலர்ல பெயிண்ட் பண்ணது.”

“மெடிக்கல் காலேஜ் ரோட்டுல இருக்கேன். நேரா அங்கதான் வரனும் வந்துர்றேன்.”

தினமும் தஞ்சாவூரையே சுற்றி வருவதால் முகவரி நன்றாகத் தெரிந்தது. மனதிற்குள் அதற்குள் போக வேண்டிய பாதை வரைபடமாக விரிந்து வழிகாட்டியது. ஞாபக அடுக்குகளில் தெரு, கடைகள், திருப்பங்கள் எல்லாம் எப்படி பதிகிறது.. திரும்பவும் எடுக்கப்பட்டு பயன்படுகிறது என மனதின் வன்மையை நினைத்து வியப்படைத்தான்.

வாகனத்தை மெதுவாக இயக்கி பண்ணிரெண்டு நிமிடத்தில் புஷ்பம் காலனி ஆறாவது தெருவையடைந்தான். வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. தெருவின் முதல் வீடே அவர்களதுதான், வாகனத்தை நிறுத்திவிட்டு டூல்ஸ் பையுடன் கேட்டின் கதவருகே நின்று உள்புறமாக அழைத்தான்.

“சார், சார். வீட்டுல நாயிருக்கா?”

“இதோ வர்றேன் சார்” – என்றபடி முப்பத்தியைந்து வயதுடைய பெண் நைட்டியில் வந்தார்.

“வாங்க சார், நாய் கிடையாது. பயப்படாம வாங்க.”

“ஒகே, ஒகே. ரெண்டு மூனு தடவ கடி வாங்கி ஊசி போட்டதுல கொஞ்சம் பயம். அதான் கேட்டுக்கிட்டேன். வாசிங் மிஷின் எங்க இருக்கு?

“மொதல் மாடியில் இருக்கு. வாங்க காட்றேன்”

போர்டிகோவை ஒட்டி ஏறிய மாடிப்படியின் வழியே முதல் மாடியில் வலது புறம் இருந்த மிகப்பெரிய அறையைக் காட்டினார். “இதுல இருக்கு. நீங்க பாருங்க. நா காலேஜ்க்கு போவனும். டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்றவருக்கு நல்ல திருத்தமான முகம். மேக்கப் இல்லாமலே அழகாக இருந்தார். நன்றாகப் படிய வாரிய தலைமுடி பின்னால் பின்னி இடுப்புவரை தொங்கியது. நைட்டியிலேய உடலின் வளைவுகளும் திண்மையும், இளமையும் தெரிந்தது. சாந்தமான முகமும் புன்னகையும் ஒரு முறை பார்த்தவர்கள் மறக்க முடியாத வன்னமிருந்தது. கழுத்தில் தாலியும், காலில் மெட்டியுமில்லை. கற்பனையில் மனம் பறந்தது.

வாசிங் மிஷின் அறையில் உள்ளே அதன் அட்டாச்சுடு பாத்ருமை ஒட்டி நன்றாக வழிவிட்டு வெளியே இருந்தது. முதலில் மிஷினுடன் இணைந்த  குழாயின் வால்வை மூடிவிட்டு ஹோசை கழற்றினான். மீண்டும் வால்வைத் திருகினான். தண்ணீர் நன்றாக வேகமாக வந்தது. ஹோசின் மறுமுனை, மிஷினின் பின்புறம் இருந்ததைக் கழற்றிப் பார்த்த போது, சிறிய வலையில் அதிக அளவில் காய்ந்த தேக்குமரப் பூக்கள் நிறைய வடிகட்டும் வலையில் சிக்கி அடைத்திருந்தால் தண்ணீர் கொஞ்சமாத்தான் செல்லும். சுத்தமாக சிறிய வட்ட வலையை கழுவி சரியாகப் பொருத்தி பழையபடி ஹோசை மாட்டிவிட்டு வால்வைத் திறந்த போது நல்ல வேகமாகத் தண்ணீர் வந்தது. மிஷினை ஆன் செய்து பார்த்தான்.

தண்ணீர் உடனே வேகமாகப் பாய்ந்ததால் மிஷின் பழையபடி வேலை செய்தது. இப்போது விரைவாகத் துணிகளை துவைத்துவிடும் . பாத்ரூமில் கைகால்களை கழுவி வெளிவந்து டூல்ஸ்பையை எடுத்து சரிபார்த்து அறைக்கு வெளிய வந்தான்.

மேலும் ஐந்து நிமிடத்திற்கு பிறகே அழைத்த பெண் மாடிக்கு வந்தார்.

மிகப்பிரகாசமான ஒளிபரவ குறுகிய கால எளிய மேக்கப்பில் ஜொலித்தார். நெருங்கிய உறவினரைப் பார்பது போல தெரிந்தது. பெண்ணுக்கேயுரிய உடல் அமைப்பும் அதற்கேற்றார் போல உடையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஏதோ ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது. அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

“என்ன சார், சரியா இருக்கா இப்ப? என்னாச்சி என்ன காரணம் தண்ணீ சரியா வராததுக்கு?”

மேல இருக்குற தண்ணீர் டேங்க்குல, காஞ்ச தேக்குமர பூ கொட்டுறது உள்ள விழுந்து கீழ வர்ற பைப்பு வழியா வந்து, வாசிங் மிஷின்ல பில்டர்ல அடைச்சிகுது. அதுனால தண்ணீ உள்ள வேகமா வராம துணிய தொவைக்க ரெம்ப லேட்டாவது. அதான் காரணம்.”

“ஓ அப்டியா, ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? மாடியில இருக்கும் டேங்க்க பார்த்துட்டு சொல்லுங்க. சுத்தப் படுத்திடலாம்.”

ஒரு வினாடி யோசித்தவன், “சரி, ஏறி பாத்துடுவேன். ஆனா, கிளீன் நா பண்ண மாட்டேன்.”

“ம். ஓகே சார்.”

மொட்டை மாடியில், வீடு கிழக்கு பார்த்த வாசல் என்பதால் இடது புறம் மூலையில் டேங்க் சிமெண்ட் செங்கல் , கலவையில் கட்டப்பட்டிருந்தது. பின் கட்டில் இடமிருந்ததால். நிறைய தேக்குமரங்கள் இருந்தன, இரண்டு மாடி தாண்டி வளர்ந்தவை. டேங்கின் மேல் ஏறிப் பார்த்தான். பிளாஸ்டிக் மூடியாததால் உடைந்திருந்தது. பாதிக்கும் மேல் திறப்பாக இருந்த பகுதி வழியே பூக்களும் இலைகளும் விழுந்து தண்ணீரில் குப்பையாக, அழுக்காக இருந்தது. கீழே வந்து. அப்பெண்ணிடம், “டேங்க் மூடி ஒடஞ்சிருக்கு. அத மாத்தனும், தொட்டிய சுத்தம் செய்யனும். ஒடஞ்ச பக்கமா தேக்குமர பூவும் இலையும் கொட்டி குப்பையா இருக்கு” என்றான்.

“ஒரு உதவி செய்யுங்க. நீங்க கிளீன் பண்ணிட்டு அதுக்கும் சேர்த்து காசு வாங்கிக்கோங்க” என்றார்.

“ஸாரி, அந்த வேலை என்னால முடியாது. வேற தெரிஞ்ச ஆள் இருக்கு நம்பர் அனுப்புறேன். சொன்னீங்கன்னா வந்து கிளீன் பண்ணிட்டு மூடியும் புதுசா போட்டு குடுத்துட்டுப் போவாரு. இந்த தடவ இரும்பு மூடியா போட்டுங்க.” என்றபடி நம்பரை அனுப்பினான்.

“சரிங்க நம்பர் தாங்க. பேசிக்குறேன். உங்களுக்கு ஜீபே இருக்கா? இருந்தா நல்லது. உடனே பணம் அனுப்பிடுவேன். கேஷ் வச்சிகிறது இல்ல, ஸாரி” என்றார்.

“அதபத்தி பேசுனா அரசியலாய்டும். பொதுவா நா பணம்தான் வாங்குவேன் .முடியலன்னா ஜீ பே பண்ணுங்க. உங்க பேர சொல்லுங்க. பணம் வந்துட்டா செல்லிர்றேன்” என்றபடி கூலித் தொகையையும் சொன்னான்.

“ஒகே, நீங்க நோட் பண்ணிக்குங்க. எம்பேரு அனுஸ்ரீ” என்று சொல்லியடி போனிலிருந்து பணம் அனுப்பினார்.

கேட்ட தொகையை அனுப்பியிருந்தார்.

“பணம் வந்துடிச்சிங்க. தாங்க்ஸ். அனுப்பின நம்பர்ல கூப்பிட்டு தொட்டிய பாத்துட்டு ,கூலிய பேசிட்டப்புறம் வேலை பாக்க சொல்லுங்க. அதான் நல்லது. சரி நா கெளம்புறேன்.”

“ஓகே, நானும் காலேஜிக்கு போனும்” என்று கீழிறிங்கினார். திருப்பதியும் பின்னால் இறங்கினான். ஏதோ உறுத்தலாகவே உணர்ந்தான். வீட்டின் வாசலில் வைத்த வாகனத்தை எடுக்கும் போது சிமெண்ட் கலர் குவாலிஸ் அர்பன் குருஸ்னர் வந்து நின்றது. அதிலிருந்து மாநிறத்தில் குள்ளமான நபர் இறங்கி திருப்பதியை பார்தபடி வீட்டினுள் போனார்.

“யாரு வந்துட்டுப் போறது? நா இல்லாத போது கண்ட ஆளெல்லாம் கூப்புடாதேன்னு எத்தன தடவ சொல்றது?” என்ற சப்தமாகப் பேசுவது கேட்டது. லேசாக மனதிற்குள் வெம்மையை உணர்ந்தான்.

“வாசிங்மிஷின் ரிப்பேர்னு சொல்லி ஒரு வாரமாவுது. நீங்க பாக்குற மாறி தெரியல. அதான் அதிர்ஷ்டம் கடையில் அவரோட நம்பர குடுத்தாங்க. வரச் சொல்லி சரி பண்ணினேன். அதுக்கு இப்ப என்னா? நீங்க செய்ய மாட்டீங்க.. செஞ்சா குத்தம் சொல்றது. சரி, எனக்கு நேரமாவுது” என்ற கோபக் குரலும் கேட்டது. ‘இது குடும்ப வெவகாரம். நாம தலையிடக் கூடாது’ என ஒன்றும் பேசாமல் புறப்பட்டுவிட்டான் திருப்பதி.

மூன்று நாட்களுக்கு பிறகு அனுஸ்ரீ போன் செய்தார்.

“சார், நீங்க கொடுத்த நம்பருக்கு போன் பண்ணேன். சிவானந்தம்னு வந்தாரு. டேங்க்க நல்லா சுத்தம் பண்ணதோட, புது இரும்பு மூடிய வாங்கிட்டு வந்து சிமெண்டால பூசி குடுத்துட்டுப் போனாரு. ரெம்ப தேங்க்ஸ்” என்றார்.

“அதுக்கு ஏங்க தேங்க்ஸ்? எங்க வேலையில் அதுவும் ஒன்னு.. அவ்ளோதான். உங்களுக்கு திருப்தினா சரிதான்”

“ஒகே சார். வச்சிடுறேன் பை” என்றார்.

அப்போதே  வாட்சப்பில் பூங்கொத்தும், ஸ்மைலியும் , ஹார்ட்டும் தேங்க்ஸும் வந்தது. அன்றிலிருந்து  தினமும் காலை வணக்கமும் , இரவு வணக்கமும் பத்து நாட்களுக்கும் மேலாக அனுப்பியிருந்தார். திருப்பதிக்கு உறுத்தலும், தவிப்பும் ஏற்பட்டு ஒரு மாதிரியானான். பதிலுக்கு எதுவும் அனுப்புவதில்லை.

கடையிலும், வெளியிலும் வேலையில்லாத நேரம். அம்மாதிரியான காலத்தில் புத்தகம் படிப்பதில் இறங்கும் பழக்கம். நாஞ்சிலாரின் இடமோ வலமோ தொகுப்பை படிக்கத் தொடங்கினான் திருப்பதி,

தவசிப்பிள்ளை, கும்பமுனியை வைத்து நகைச்சுவையுடன் நிதர்சனமான உண்மையைக் கலந்து தரப்பட்ட பதிவுகள். பாதிக்கும் மேல் படித்துவிட்டான். முகம் முழுவதும் புன்னகையுடனும் மனமும் நிறைத்திருந்தது. செல்போன் அழைப்பு வந்தது , சற்றே சலிப்புடன் போனை எடுத்தான். அழைத்தது அனுஶ்ரீ. மணி பன்னிரெண்டாகியிருந்தது

“சொல்லுங்க , என்னாச்சி?”

“வீடு முழுக்க எல்லா பைப்பிலும் தண்ணீர் வர மாட்டேங்குது. கொஞ்சம் அவசரம். உடனே வர முடியுமா?”

“எல்லா பைப்பிலும் வரலியா? பத்து நாளுக்கு முன்னாலதானே சுத்தம் பண்ணோம். திடீர்னு வரலயா?” என்றான்.

“ஆமாங்க காலையில கூட பாத்திரம் கழுவினேன். அப்பல்லாம் வந்ததே! வாசிங் மிஷின்ல துணிய தொவச்சி மாடியில காயப்போட்டேனே.” என்றார்.

“சரிங்க. ஒடனே வர்றேன்”

டூல்ஸ் பையுடன் வாகனத்தில் ஏறி உடனே அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டான்.

வீட்டை நெருங்கி வாகனத்தை சுற்றுச் சுவரின் அருகே பெரிதாக வளர்ந்திருந்த புங்க மரத்தினடியில் நிறுத்தி பூட்டினான். புங்க மரத்தின் நிழலும், பசுமையும், பச்சை வாசனையும் அற்புதமான குளுமையுடன் பரந்து விரிந்திருந்தது. தெருவில் நடமாட்டமின்றி அமைதியாக இருந்தது. வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை. ஹாலைக் கடந்து இடது புறமிருக்கும் படுக்கையறைக்கும் சாமி அறைக்கும் நடுவில் நின்று மீண்டும் அழைத்தான். பதிலில்லை, படுக்கையறையிலிருந்து பிளாஸ்டிக் வாளியை நகர்த்தும் சப்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது.

மீண்டும் குரல் கொடுத்தான்.

படுக்கையறைக் கதவை மெதுவாக தயக்கத்துடனே தள்ளித் திறந்தான். அறையில் யாரும் இல்லை. பெரிய அறை. அலங்காரமான தேக்கு கட்டிலும் தலைப்பக்கம் விளக்குகள் வைத்து பிளஸ்டிக் பூக்களால் அலங்கரித்து அழகுடன் இருந்தது. ஒரு அடி உயரமுள்ள ஸ்பிரிங் மெத்தை மேலே காட்டன் போர்வையால் போர்த்தியிருந்தது. படுக்கையின் எதிரே ஐம்பத்தி மூன்று இஞ்ச் டிவியும் மரத்தால் அழகுற வடிவமைக்கப்பட்ட மையத்தில், முன்னும் பின்னும் இழுத்தும் ,சுவரில் சமமாக வைக்கும் விதத்தில் மாட்டியிருந்தனர். அறையின் இடது புற சுவரின் நடுவில் ஏசியும், மூன்று புற சுவரின் நடுவில் வண்ணமயமான விளக்குகளும் , வித்தியாசமான வடிவமைப்பில் சீலிங் பேனும் இருந்தது. வலது மூலையில் பாத்ருமின் கதவு லேசாகத் திறந்திருப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

மேலும் உள்ளே நுழைவதற்குள் பாத்ரும் கதவு திறக்கப்பட்டு முழங்கால் மூட்டு தெரிய தூக்கி மார்புப் பகுதி வரை கட்டியிருந்த உள் பாவாடையும், தோள் மேல் போர்த்தியிருந்த பெரிய தேங்காய் பூ துண்டுடன் அனுஸ்ரீ வெளியே வந்தார். திருப்பதியை பார்த்ததும் புன்னகைத்து, “வாங்க, பாதி குளிக்கும் போது திடீர்னு தண்ணீ வரல.. அதான் போன் பண்ணேன்” என்றார்.

வெட்கமும் பதற்றமுமடைந்த திருப்பதி திகைத்தான்.

“ஸாரி, கூப்பிட்டு பார்த்தேன். பதிவில்லை. அதான் உள்ளார வந்துட்டேன்.”

“அது பராவாயில்ல. என் தப்புதான். வெளியே இருந்துக்கனும். நீங்க இவ்ளோ சீக்கிரம் வருவீங்கன்னு எதிர்பார்க்கல”

“வேலையில்லாம சும்மா புத்தகம் படிச்சிட்டிருந்தேன். அதான் உடனே வந்துட்டேன்.”

“புத்தகமெல்லாம் படிப்பீங்களா?”

“ம் , படிப்பேன். சரி, வந்த வேலைய பாக்கலாமா?”

கலகலவென சப்தமாகச் சிரித்தார்.

“ஓ..சாரி. வாங்க.. வந்த வேலைய பாருங்க” என்று பாத்ரூமுக்கு வழி விட்டார்.

பாத்ருமிற்குள் புகுந்து குழாய்களைத் திருகிப் பார்த்தால் சுத்தமாக தண்ணீரே வரவில்லை. சரி மாடி டேங்கில் தான் பார்க்க வேண்டுமென முடிவுக்கு வந்து திரும்பும் போது, தேங்காய்ப்பூ துண்டில்லாமல், மார்புப் பகுதியில் கைவைத்து முடிச்சிட்ட பாவடையை அவிழ்த்து கால்கள் வழியே நழுவ விட்டு அனுஸ்ரீ நிர்வாணமாக நெருங்கினார். சாதாரணமாக நல்ல உடையணிந்தாலே அழகாகத் தெரிவார். உடையில்லாமல் தினசரி பயிற்சி செய்த உடல் வனப்புடனும் ஈர்ப்புடனும் இருந்தார். எந்த ஆண்மகனும் தடுமாறும் நிலையில் மாசு மருவற்ற துல்லியமான, அருவருப்பில்லாத முழு உடல். சட்டென்று முதல் நாள் வேலைக்கு வந்த போது உறுத்தலாக உணர்ந்தது ஞாபகம் வந்தது. கண்கள் இரண்டும் வெகு ஆழமான, உறுதியான, சோகம் கலந்த அழைப்பு விடுத்ததை மனம் அறிந்தது வெளிப்பட்டது.

அந்நிலையில் திருப்பதியை கட்டிப் பிடித்தார்

ஒரு கணம் சபலம், மறுகணம் பதற்றமும் பயமும் தொற்றியது , திண்மையான மதர்த்த உடலின் அருகாமையும், ஹாமாம் சோப்பும் ஒருவித உடலின் வாசனையும் கலந்து தினறடித்தது, கைகளில், உடலின் உணர்ச்சியின் எழுச்சியால், உணர்ந்த திண்மையால் பாலுணர்வு தூண்டப்பட்டாலும் சில நொடிகளில் மனதை கட்டுப்படுத்தினான்

“விடுங்க.. என்ன இது? இப்படி உங்க வீட்டுக்காரர் பாத்தாருன்னா ரெண்டு பேருக்கும் கஷ்டம். எனக்கு கெட்டபெயரும் வந்துடும். கடைக்குத் தெரிஞ்சா வேலைக்கும் ஆபத்து, விட்டுங்க” என உதறினான். உதறுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. நல்ல பலமான பிடியாகத் தெரிந்தது. கைகளை உயர்த்தி விட்டுவிடும் படி கெஞ்சினான். ஒரு நிமிடம் வரை அவரின் இறுகிய பிடி விலகாமலிருந்தது. கையைத் தூக்கியபடியே திருப்பதியும் வெகு அமைதியாக நின்றான்.

என்ன நினைத்தாரோ சட்டென்று முற்றிலும் விலகியவர், கண்ணீருடன் பெரும் குரலெடுத்து அப்படியே பாத்ரும் தரையில் அமர்ந்து உடல் குலுங்க தலை குனிந்து அழுதார்.

“பிளிஸ்.. எனக்கு உதவி செய்யுங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!” என அழுதபடி இருந்தார்.

வெளியே போகலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வர முடியாமல் தடுமாறினான் திருப்பதி . வெளியே வந்தவன் ஒரு முடிவெடுத்தான். போர்வையை எடுத்துக கொண்டு பாத்ருமிற்குள் நுழைந்து அனுவை முழுக்க போர்த்தி எழுப்பி ஆறுதலாக தட்டிக் கொடுத்து படுக்கையறைக்குள் மெத்தையில் அமரவைத்து, “நா வெளியே ஹால்ல சேர்ல உக்காத்திருக்கேன். டிரஸ் போட்டுகிட்டு வாங்க” என படுக்கையறையை விட்டு வெளியேறி ஹாலில் சேரில் அமர்ந்து என்னவாயிருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

இரண்டு நிமிடத்திற்குள் பெரிய பூப்போட்ட இறுக்கமான நைட்டியில் முகத்தை துடைத்தபடி வெளிவந்தவர், “உங்களுக்கு டீ யா, காபியா?” என்றார்.

“இப்பவா.. ம், சரி காபி போடுங்க. ப்ளாக் காபியா போடுங்க. சக்கரை பாதியா இருக்கட்டும்” என்றான்.

ஹாலிலிருந்து சமையலறை தெளிவாகத் தெரியும்படி கட்டப்பட்டிருந்தது. காபி போடுவதற்காக ஆயத்தம் செய்து கொதிக்கும் நீரை மௌனமாக உற்றுப் பார்ப்பது தெரிந்தது. ஆவி பறந்து முகத்தில் படிவதும் சில் அவுட் ஆக போட்டோ ப்ரேம் போலத் தெரிந்தது. ஆவி பறக்கும் காபியோடு வந்து முன்னாலிருந்த டீபாயில் வைத்து எனக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தார்.

“எனக்கும் ப்ளாக் காபியா போட்டுகிட்டேன். இன்னிக்கு குடிச்சி பாக்குறேன். டேஸ்டு எனக்கு ஓகேன்னா இனி ப்ளாக் காபிதான்” என்றார்.

சங்கடமான புன்னகையுடன், “கொஞ்சம் கசப்பாக இருக்கும். பழகிட்டம்னா நல்ல பலன் தரும். பால் கலக்காத காபி ரெம்ப நல்லது” என்றான்.

சற்றே கலகலப்பான சூழ்நிலை உருவானது . மெல்ல பேச ஆரம்பித்தார்

“நீங்க நெனக்கிறது போல அவர் என்னாட புருஷன் இல்ல. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறோம். அஞ்சி வருடத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில சென்னையில வேலை பாத்தோம். புடிச்சி போய் எங்களுக்குள்ள பேசி ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம். கல்யாணம், குழந்தைங்க வேணாம். சேர்ந்து வாழலாம். நமக்குள்ள தோனுனா கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம். ரெண்டு பேருக்கும் சென்னை புடிக்கல. வேலை நேரமும் முன்னாடி பின்னாடி இருந்திச்சி. அவரோட சொந்த ஊர் மன்னார்குடி. இங்க தஞ்சாவூர்ல அவருக்குத் தெரிஞ்சவங்க காலேஜ்ல எனக்கு வேலையும், அவரு ஒர்க் ப்ரம் ஹோமும் வாங்கிகிட்டு மூனு வருசத்துக்கு முன்னாடிதான் தஞ்சாவூர் வந்தோம்.

வந்த புதுசுல ஒன்னும் பிரச்சன இல்ல. நல்லாத்தான் இருந்தாரு. இப்ப கொஞ்சநாளா எம்மேல சந்தேகப்படுறாரு. கல்யாணமும் , குழந்தையும் வேணாம் கடைசி வரை இப்படியே இருப்போம்ன்னு சொல்றதோட, சில சமயம் கடுமையா செயல்படுறாரு. வர வர நம்பிக்கை இழந்துட்டேன். நீங்க வேலைக்கு வந்துட்டு போன நாளா என்னோட போன எடுத்து பாக்குறாரு. அன்னக்கும் எனக்கும் அவருக்கும் சண்டை. சொல்லிப் பாத்தேன். நம்பவே இல்ல. நா என்னா பண்றது? அப்பா அம்மாவ விட்டுட்டு இவர நம்பி வந்துட்டேன். ரெம்ப கஷ்டம். இவரோட இனி இருக்க முடியுமான்னு தெரியல. அவரு பாக்கனும்னுதான் தெனம் உங்களுக்கு மெசேஜ் போட்டேன். சென்னைக்கு போயிருக்காரு. வர ஒரு வாரம் ஆகும்.”

“சரி, அதுக்கு எங்கிட்ட ஏன் இப்படி நடத்துக்கனும்? போன்ல கேட்டுருக்கலாம், வாட்சாப்புல மெசேஜ் போட்டுருக்கலாம்” என்றான்.

“செஞ்சிருக்கலாம். ஆனா, நீங்க வந்துட்டு போனதும் ஏற்பட்ட சண்டையும் , நீங்க எங்கிட்ட நடந்துகிட்ட விதமும் புடிச்சிப் போச்சி. பத்து நாளா உங்களப் பத்தி விசாரிச்சேன். உங்க வயசு, வீடு, பொண்டாட்டி , புள்ளங்க எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். உங்க முழு விவரமும் இப்ப எனக்குத் தெரியும். பழைய கம்பெனிக்கும் பேசிட்டேன் வேலை தர்றேன் சொல்லிட்டாங்க. அவருக்குத் தெரியாம ஏற்பாடு செஞ்சிருக்கேன்.

அதுக்கு உங்களுக்கும் என்ன சம்பந்தன்னு யோசிக்கிறது தெரியுது.

நா உங்ககிட்ட கேக்க போறது ஒன்னே ஒன்னுதான். கொஞ்ச நாள்ல வெளியூர் போய்டுவேன். உங்கள உட்பட யாருக்கும் தெரியாத ஊருக்கு. எனக்குத் தேவை வாழ்க்கையில ஒரு நல்ல பிடிப்பும் வாழ வேண்டிய உத்வேகமும் தர்ற நல்ல விஷயம். சரி, புருவத்த சுருக்கி மண்டை காய வேண்டாம். பத்துநாளுக்கு மேலா யோசிச்சி இந்த முடிவுக்கு வந்தேன். உங்க மூலமா எனக்கு குழந்தை வேணும், குழந்தை உருவானவுடனே நா கெளம்பிடுவேன். அப்புறம் ஒங்க கண்ணுலயே படமாட்டேன். இது உறுதி. ஒரு தடவ பண்ண தப்ப இன்னொரு தடவ செய்ய மாட்டேன். உங்களயும் பிரச்சனையில இழுத்து வுடமாட்டேன்” என்றார். பெருமூச்சு விட்டபடி சேரில் சாய்ந்து ஆசுவாசமாக தளர்ந்து கண்ணை மூடினார். மனதிலிருந்தவைகளை கொட்டியதால் முகம் மேலும் பிரகாசமாக ஒளிர்ந்தது. எதிர்பார்ப்புடன் நிறைவாக, புன்னகையுடன் இருந்தது.

ஆழ்ந்து அனுவை பார்தபடி காபியை குடித்து முடிந்து டீபாயில் வைத்து கைளை கோர்த்து நெற்றியில் தட்டிக் கொண்டவன், பத்து நிமிடங்களுக்கு மேலாக ஒன்றுமே சொல்லாமல் மனதிற்குள் நடக்கும் போராட்டங்களை ரசித்துப் பார்த்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான்.

மெல்ல தலை நிமர்ந்தவன் அனு அவனயே பார்த்தபடி இருந்ததை கண்டு வெட்கமடைந்து எழப்போனான்.

“இருங்க.. எங்க கெளம்புறீங்க? ஒடனே பதில் சொல்லனும்னு இல்ல. ரெண்டு நாள் கழிச்சி சொன்னாலும் போதும். சமயத்த பயன்படுத்தாத ஆண்பிள்ள நீங்கதான். வேற யாராவது இருந்தா இந்நேரம் வேல முடிஞ்சி போயிருப்பாங்க. உங்க திடமான மனசும் உடலும் எனக்கு ஒரே ஒரு தடவை போதும். வாழ்நாள் முழுக்க வாழ்த்துடுவன். நல்ல முடிவா சொல்லுங்க. மூணு நாள் காத்திருப்பேன். அப்புறம் நீங்க நெனச்சாலும் என்ன பாக்க முடியாது..!”

“சரி, நா கெளம்புறேன்” என்றபடி டூல்ஸ் பையுடன் வெளியே வந்து வாகனத்தில் அமர்ந்து மணி பார்த்தான். இரண்டரை ஆகியிருந்தது. பசியே அப்போதுதான் தெரிந்தது. மனதின் யோசனையாலும் அனுவின் பேச்சைக் கேட்டதாலும் ஒடுங்கியிருந்தது முழு வீச்சாய் கிளம்பியது. வீட்டிற்கு வண்டியைத் திருப்பி வந்து சாப்பிட்டான். மனம் மட்டும் போராட்டத்தில் இருந்தது. மனைவி கூட, “என்ன பலமான யோசனை.. சாப்பிடுங்க” என்றாள்.

என்ன சொல்வது, எப்படி சொல்வது புரியாமல் தவித்தான். இரண்டு நாட்கள் இருக்கிறதே பார்ப்போம் என்று நினைத்தான்.

மூன்று மாதம் கழித்து அனுவிடமிருந்து போன் வந்தது. “வெளியூர் கிளம்புறேன். என்னால தெந்தரவு நிச்சயமா இருக்காது. குழந்தை பிறந்ததும் நல்லா வளர்த்து படிக்க வைப்பேன். நீங்கதான் அப்பான்னு சொல்ல மாட்டேன். உங்க மனவிக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும். அவங்களோட சம்மதம்தான் எனக்கு ஆசிர்வாதம். இந்த நம்பர் இனி வேல செய்யாது. பை”

ஆழ்ந்த மெளனத்தில் பதில் சொல்ல முடியாமல் தவித்தான், அதுவும் நல்லதே என மனதை திடப்படுத்த ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டான் திருப்பதி .

[email protected]

The post கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன்

ஒரு பெரிய மொத்த விலை மளிகைக்கடையில் மாதாந்திர சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தார் ராதா. சற்றுத் தொலைவில் தண்ணீர் பாட்டில், தலையணை, டோர் மேட், பாத்திரங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் என அந்தக் கடையில் அடுக்கப்பட்டிருந்த பல்வேறு இதர சாமான்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் கிரிதர்.

“எங்க அம்மா அப்பாவுக்கு இந்த பித்தளை டபரா டம்ளர் செட் எடுத்திருக்கேன், எப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே ராதா தள்ளிக் கொண்டிருந்த வண்டியில் அந்த பொருட்களைச் சேர்த்தார் கிரிதர். சற்று நேரம் பொறுத்து, “யார்ட்லி பவுடர் எடுத்திருக்கேன். போன முறை அப்பா நம்ம வீட்டுக்கு வந்தபோது நல்லா இருக்குன்னு சொன்னாரு” என்று ஒரு டப்பாவையும், “என்சூர் எடுத்திருக்கேன். எங்க அம்மாவுக்கு முட்டி வலி இருக்குல்ல, இது குடிச்சா நல்லதாம்” என்று மற்றுமொரு டப்பாவையும் அந்த வண்டியில் சேர்த்தார்.

“ஏம்பா, அவங்க கல்யாண நாளுக்கு ஏற்கனவே புடவை வேஷ்டி எடுத்தாச்சு, இதெல்லாம் எதுக்கு? சரி, என்சூர், யார்ட்லி பரவாயில்லை, அவங்க வீட்டுல இல்லாத டபரா டம்ளரா?” என்று கேட்டார் ராதா.

“இதோ பாரு, அவங்க கிட்ட இருக்கா இல்லையாங்கறது பிரச்சனை இல்ல, நம்ம அவங்களுக்கு நிறைய செய்யுறோமா என்பதுதான் அவங்க எதிர்பார்ப்பு. உனக்கு அது புரியாது” என்று கிரிதர் ராதாவிடம் விளக்கினார். அவர்கள் திருமணமான புதிதிலிருந்து அம்மா அப்பாவின் ஆசைகளை பூர்த்தி செய்வதில் முனைப்பாக இருக்கிறார் கிரிதர். அவருக்குத் திருமணமாகி இருபது வருடம் ஆகப்போகும் தருவாயில், இன்றும் ஒரு சிறிய குழந்தை போல, மதர்ஸ் டே துவங்கி, ஆங்கிலப் பிறந்த நாள், நட்சத்திர பிறந்த நாள், திருமண நாள், என்று அனைத்திற்கும் வாழ்த்துகளும் பரிசுகளுமாய் போய் நிற்கிறார் கிரிதர்.

“டேய் ரகு, நாங்க போய் தாத்தா பாட்டிய பார்த்துட்டு வந்துடறோம். ரெண்டு நாள்தான். உனக்கு எக்ஸாம் இருக்கறதால உன்ன இங்க விட்டுட்டுப் போறோம். வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வந்து கலாட்டா பண்ணக் கூடாது என்ன?”

“சரிம்மா, நான் பார்த்துக்கறேன். கவலைப்படாம போயிட்டு வாங்க! நான் என்ன குழந்தையா? அம்மா, ஹாவ் ஃபன்” என்று ராதாவை அணைத்து வழியனுப்பி வைத்தான் ரகு. கல்லூரிக்குச் செல்லும் மகன் இருந்தும், மாமியார் மாமனார் வீட்டிற்கு செல்வதென்றால் ராதாவிற்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆரம்பத்தில் சில ஆண்டுகள் சேர்ந்திருந்த அவர்கள், கிரிதருக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்ததால் அங்கே குடிபெயர்ந்தனர். பல வருடங்கள் கழித்து சென்னை வந்த போது, மாமனார் வீட்டருகில், அதே சுற்றுவட்டாரத்தில், வேறு ஒரு வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். சில ஆண்டுகள் முன்னதாக, திருச்சியில், ஓய்வூதியர்களுக்கான குடியிருப்பு ஒன்றில் சகல வசதிகளுடன் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே சென்று விட்டனர் ராதாவின் மாமியாரும் மாமனாரும்.

திருச்சியில் அவர்களைச் சந்தித்து அவர்கள் திருமண நாளன்று வாழ்த்து கூறி ஆசிகள் பெற கிரிதரும் ராதாவும் திருச்சியை நோக்கி காரில் பயணித்தனர்.

“குட் மார்னிங் மா! திருச்சி போயிட்டு இருக்கோம். ரகு தனியாதான் இருக்கான். அடச்சே… மறந்தே போயிட்டேன் பாரேன். ஹேப்பி பர்த்டே மா!” என்று தனது அம்மாவை வாழ்த்தினாள் ராதா.

“ஆண்டி பர்த்டேவையே மறந்துட்டியா நீ? வழக்கமா பொண்ணுங்கதானே இதெல்லாம் மறக்காம இருப்பாங்க? நீ ஏன்தான் இப்படி இருக்கியோ!” என்றார் நக்கலாக கிரிதர்.

“இதுல கூட ஆம்பளை, பொம்பளையா? நான் மறந்தா என்ன, என் அம்மாவே என்னை கால் பண்ணி உரிமையா அவங்க வாழ்த்தை வாங்கிக்கிட்டாங்க. உங்க அம்மா மாதிரி அடுத்த நாள் ஃபோன் பண்ணி திட்டல. அது என்ன உங்க அம்மா அப்பாவுக்கு கல்யாண நாளா இருந்தாலும் நம்மதான் முதல்ல வாழ்த்து சொல்லணும், நமக்கு கல்யாண நாளா இருந்தாலும் நாமளே கால் பண்ணி ஆசி வாங்கணும்? இந்த லாஜிக் எனக்குப் புரியல!”

“பெரியவங்களுக்கு, குறிப்பா, ஆண் குழந்தைகளை பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைகள் மேல அதீத எதிர்பார்ப்பு இருக்கும். அவங்கள நாங்க எப்போதும் தாங்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எல்லா இடங்களிலும் அவங்கள முதன்மைப் படுத்தணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எப்படி நம்ம பிள்ளையாரை எல்லா பூஜைகளிலும் முதன்மையா வெச்சு வழிப்படறோமோ அந்த மாதிரி. என் அம்மா அப்பாதானே, செய்துட்டு போறேன் விடு!”

“அது இல்லைங்க… நீங்களும், உங்க அண்ணனும், உங்க பெத்தவங்களுக்காக எவ்வளவோ செய்யறீங்க! இருந்தாலும், அவங்க இன்னும் செய், எங்களுக்கு பாத பூஜை பண்ணு, இது உன் கடமை அப்டிங்கறது மாதிரி மிடுக்கா இருக்காங்க. அவங்களுக்கு பொருளாதார ரீதியா சுதந்திரம் இருக்கு, ரெண்டு பேருக்கும் பென்ஷன் நிறைய வருது, இல்லைன்னு சொல்லல. ஆனா, தன் சொந்த பசங்க, பேரன் பேத்தி மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாம எப்படி இப்படி அவங்களால இருக்க முடியுது? அப்பப்போ வந்து ஐநூறு, ஆயிரம்னு பாக்கெட் மணி கொடுத்தா போதுமா?”

“இதெல்லாம் ரொம்ப யோசிக்காத ராதா! என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு நான் செய்துட்டுதான் இருப்பேன். என் வருத்தமே, அவங்க உரிமையா என்கிட்ட எதுவும் கேட்க மாட்டேங்கறாங்க அப்டிங்கறதுதான். நீ இப்போ இப்படி பேசற, நாளைக்கு ரகு கிட்ட எப்படி நடந்துக்கப் போறேங்கறத நானும் பார்க்கத்தானே போறேன்.”

“நான் ரகுவை இப்போ எப்படி நடத்தறேனோ அப்படியேதான் அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நடத்துவேன். ஒரு வருத்தம்னா உடனே பேசித் தீர்த்துப்பேன். மனசுலயே வெச்சு புழுங்க மாட்டேன். அன்பையும் எப்போதும் போலதான் காட்டுவேன். ஐம்பது வயசானாலும் ரகு என் புள்ளதானே? என் புள்ள ஆறு வயசுல அவன் கைப்பட செய்து ஒரு பர்த்டே கார்டு கொடுத்தான், அதை இன்னும் நான் பத்திரமா வெச்சிருக்கேன். அஞ்சு வருஷம் கழிச்சு அவன் எனக்கு வைரத்தோடு போட்டா சந்தோஷப்படுவேன்.. இல்லன்னு சொல்லல. ஆனா, குறைந்தபட்சம் என் பிறந்த நாளை அவன் ஞாபகம் வெச்சுகிட்டு ஒரு ஃபோன் கால் பண்ணினாலும் சந்தோஷப்படுவேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் அவன் கிட்ட கிடையாதுங்க. ”

“ரொம்பப் பேசற… எல்லாத்தையும் நானும் பார்க்கத்தான் போறேன். சரி, சரி, வீட்டுக்கு வந்துட்டோம், அவங்க என்ன சொன்னாலும் நீ எதுவும் பேசாத, நான் பேசிக்கறேன். அமைதியா இரு!” என்று வழக்கம்போல அறிவுரைகள் கொடுத்துவிட்டு, ஒரு திரை விழுந்தது போல தன்னை உள்ளிழுத்துக் கொண்டார் கிரிதர்.

வீட்டிற்கு சென்றவுடன் இருவருக்காகவும் வாங்கியிருந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து ராதாவும் கிரிதரும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்தனர். “அம்மாவுக்கு அபிவாதயே சொல்லுடா! புள்ள அம்மாவுக்கு சொல்லலாம், உனக்கு தெரியும்ல?” என்று அபிவாதயே கேட்டு வாங்கிக் கொண்டார் கிரிதரின் அம்மா . “இந்த என்சூர் ரொம்ப நல்லதாமே, எனக்கு மாசா மாசம் ஒண்ணு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக் கொடுத்திடு,” என்று சற்று உரிமையாக அவரது தாயார் கேட்டவுடன் கிரிதருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘எங்க அம்மா எப்படி கேட்கறாங்க பார்த்தியா!’ என்பது போல ராதாவைப் பார்த்துச் சிரித்தார் கிரிதர். “அடேங்கப்பா, நல்ல வாசனைடா இந்த பவுடர்!’ என்று அப்பாவும் அவர் பங்கிற்கு பவுடரை எடுத்து போட்டுக்கொண்டார். அதே சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பித்தளை டபரா டம்ளர்களில் சூடாக காபி எடுத்து வந்தார் கிரிதரின் அம்மா.

எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருக்க, “ராதா, உன் தம்பி சேகர் லண்டன்லதானே இருக்கான்? எப்படி இருக்கான் அவன்?” என்று ஆரம்பித்தார் கிரிதரின் அம்மா.

“நல்லா இருக்காம்மா. PR வேற கிடைச்சிடுச்சு அவனுக்கு.”

“ம்… ஆமாம், நீ எப்போ லண்டன் போற?”

“நான் ஏன் லண்டன் போகப் போறேன்?”

“யார் கிட்ட பொய் சொல்ற? நீ கூடிய சீக்கிரம் லண்டன் போயிடுவ, கிரிதர் உன்ன கூட்டிட்டுப் போயிடுவான். கல்யாணம் ஆன அன்னிக்கு உன் பக்கம் சாஞ்சவன்தானே அவன்? இன்னும் நிமிரவே இல்லயே! நீ ஆசைப்பட்டா என்ன வேணும்னாலும் செய்வான் அவன்” என்றார் கிரிதரின் அம்மா.

ராதா அதிர்ந்து போனாள். இன்றும் அவளை புதிய மருமகள் போல அவர்கள் நடத்துவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் உன் பக்கம் சாஞ்சுட்டான் போன்ற வார்த்தைகள் மிகவும் எரிச்சல் ஏற்படுத்தியது.

“என்னம்மா இது.. உன்கிட்ட சொல்லாம லண்டன் போவேனா என்ன? இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத பேசற?” என்று இடைமறித்தார் கிரிதர்.

“எனக்குத் தெரியும். நீங்க தாஜ் மகால் பார்கல? ஜெய்பூர் போகல? உங்க ஹனிமூனுக்கு கொடைக்கானல் போகல? என்ன உங்க கூட கூட்டிட்டு போனீங்களா என்ன? எனக்கு எல்லாம் தெரியும், நான் என்ன லூசா?” என்று திடீரென பல நாள் தேக்கத்தை வெளியே கொண்டு வந்து சீறினார் கிரிதரின் அம்மா.

“அம்மா, ஹனிமூனுக்கு உன்ன கூட்டிட்டு போக முடியுமா என்ன? சரி, அதை விடு, நீ கூட சிங்கப்பூர், மலேசியா, ஶ்ரீலங்கா , கைலாஷ் எல்லாம் போயிருக்க, என்ன கூட்டிட்டு போனியா என்ன? அண்ணா கூட நிறைய இடங்களுக்கு டிராவல் பண்ணியிருக்கார், அவன ஏதாவது கேட்டியா?” என்றார் கிரிதர் சற்று பொறுமையிழந்து.

“நாங்க ரிடயர் ஆகி எங்க பணத்துல போயிட்டு வந்தோம். நீ ஒண்ணும் எங்கள அழைச்சுட்டு போகல! இப்போ உன் அண்ணனைப் பத்தி பேசாத, நான் உன் கூடதானே பேசிட்டு இருக்கேன்!” என்றார் காட்டமாக கிரிதரின் அம்மா.

“அது எப்படி பேசாம இருக்க முடியும்? நாங்க லோக்கல்ல டிரிப் போனா உங்களுக்கு கோபம் வருது. அவர் வெளிநாடு போனா கூட உங்களுக்கு கோபம் வர மாட்டேங்குது, என்ன நியாயம் இது?” என்று தன்னையும் மீறி கேட்டார் ராதா.

“கொஞ்சம் சும்மா இருக்கியா லட்சுமி! இத பத்தி பேசற நேரமில்லை இது!” என்று கிரிதரின் அப்பா சற்று குரலை உயர்த்தவும், மற்ற மூவரும் கூட்டத்தை கலைத்து நகர்ந்தனர். ராதாவிற்கு படபடப்பு அடங்கவில்லை. அந்த குடியிருப்பின் கீழ்தளத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் அலைபேசியில் ரகு அழைத்தான்.

“ரகு, பாருடா, எதிர்பார்த்த மாதிரியே உங்க பாட்டி பிரச்சனை பண்ணிட்டாங்க!” என்று நடந்ததை ரகுவிடம் கூறினார் ராதா.

அவன் அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, “உன்ன நான் போகாதன்னு அப்பவே சொன்னேன். நீ கேட்கல. அப்பா மட்டும் போயிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது தெரியுமா?” என்றான்.

“அப்பா வருத்தப்படுவாருன்னுதான் போனேன். அவங்க அப்படி பேசினது கூட எனக்கு கஷ்டமா இல்ல ரகு. அப்பா மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் சொல்லு? அதைத்தான் என்னால ஜீரணிக்க முடியல. ஒரு கொழந்தை மாதிரி, எங்க அப்பாவுக்கு, எங்க அம்மாவுக்குன்னு பார்த்து பார்த்து வாங்கினார். கிட்ட தட்ட நானூறு கிலோ மீட்டர் வண்டி ஓட்டிட்டு வந்த அந்த மனுஷன் எதிர்பார்க்கறது எல்லாமே ஒரு அங்கீகாரம்தானே ரகு? அது கூட கிடைக்காட்டி எப்படி சொல்லு?”

“அம்மா, இப்படி யோசி, நம்ம படிச்ச ஸ்கூல்ல இருக்கற டீச்சர்ஸ்க்கு எல்லாம் நம்ம மேல ஒரு அபிப்பிராயம் இருக்கும். ஒரு இருபது வருஷம் கழிச்சு, அந்த ஸ்கூலுக்கு அவங்க எதிர்பார்க்காத ஒரு துறைல சாதிச்சுட்டு போனா அதை அவங்களால ஏத்துக்க முடியுமா சொல்லு? அப்படியே அவங்க ஏத்துக்கிட்டாலும், அந்த சாதனையை மனசார அங்கீகரிக்க முடியுமா? நிச்சயமா முடியாது.

அது மாதிரிதான் உங்க உறவும். கல்யாணம் ஆன புதுசுல அவங்க உன்னை எடை போட்டு வெச்சிருப்பாங்க. இருபது வருஷத்துல நீ என்ன தான் மாறினாலும் அவங்ககிட்ட இருந்து அங்கீகாரம் கிடைக்கிறது சிரமம். அதை முதல்ல நீ புரிஞ்சுக்க. அப்புறம், அப்பாவ நினைச்சு ரொம்ப கவலைப்படாத, ஹீ வில் பீ ஆல்ரைட். நீயும் நானும் போடாத சண்டையா? அதனால நான் என்ன மனசுடஞ்சா போயிட்டேன்? அப்பா இப்போ பாட்டி கையால தோசை சாப்டுட்டு இருப்பார். நீயும் பக்கத்துல உள்ள கிருஷ்ணா பவன்ல சாப்டுட்டு, கோபமா ராத்திரி படுத்துட்டு, சந்தோஷமா கார்த்தால எழுந்துக்கோ,” என்று தொண்டுக் கிழவன் போல அசாத்தியமான அறிவுரை கூறினான் ரகு.

அப்போது அருகிலிருந்த கோயில் மணியோசை கேட்க, “கடவுளே! அவர் அம்மா அப்பா கிட்டேயிருந்து கிரிதர் எதிர்பார்க்கும் அங்கீகாரம் அவருக்கு சீக்கிரம் கிடைக்கட்டும்!” என்று ஒரு பிராத்தனையை வைத்த வண்ணம் கிருஷ்ணா பவனை நோக்கி முகமலர்ச்ச்யோடு நடந்தார் ராதா.

[email protected]

The post அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

பேசாப்பொருளைப் பேசும் கதைகள்

 

பேசாப்பொருளைப் பேசும் கதைகள்

உதயசங்கர்



காலமும் சமூகமும் தான் தனக்கான படைப்பாளிகளை உருவாக்குகிறது. படைப்பாளிகள் இந்தச் சமூகத்தின் அசைவியக்கத்தை அதன் இயங்கியலைச் சரியாக முன்னுணரும்போது அவர்களது படைப்புகளில் சமூகயதார்த்தம் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. சமூக யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட படைப்பாளிகளே சமூகம் எத்திசையில் செல்கிறதென்பதையும் எத்திசையில் செல்லவேண்டுமென்பதையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். யதார்த்ததை  தங்களுடைய பகுத்தறிவின் மூலம் கட்டுப்படுத்தி வழிகாட்டுகிறார்கள். சமூகயதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத படைப்பாளிகள் சமூகத்தின் சமன்குலைந்த நிலையையே சமன்நிலையென்று மயங்கி விடுகிறார்கள். அதையே தங்களுடைய படைப்புகளிலும் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் சமூக அக்கறையுள்ள படைப்பாளி தன் சமூகத்தை உற்று நோக்குகிறார். படைப்புகளில் இதுவரை கவனிக்காத இருள்வெளிகளின் மீதும், சாம்பல்நிறப்பகுதிகளின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறார். புனைவின் வலிமையான மாயாஜாலத்தினால் தன்னுடைய படைப்புகளில் கவனப்படுத்துகிறார். கூருணர்வுள்ள சமூகம் அந்தப் படைப்புகளின் வழியே தன்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறது.

சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் வாழ்க்கையை பெண்கள் எழுதியதைவிட ஆண்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய படைப்புகளில் பெண்கள் துயர்மிகு வாழ்வினை வாழ்ந்து தீர்ப்பவர்களாக, அவலத்தினால் அனுதாபம் கோருபவர்களாக, கையறுநிலையில் கதறுபவர்களாகவே அன்பே உருவானவர்களாக, தியாகதீபங்களாக, சிறு சலனங்களையும் பெரும்பூகம்பமாக உணர்பவர்களாக, சில சமயம் உறுதிமிக்கவர்களாக, பிரச்னைகளைச் சமாளித்து எழுந்து நிறகும் வல்லமை கொண்டவர்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் பெண்வாழ்வை ஒரு பெண் எழுதும்போது இதுவரை தெரிந்த மொத்தச்சித்திரமும் தலைகீழாக மாறுகிறது.

இதுவரை ஆண்களின் கண்கள்வழியே பெண்வாழ்வைப் பார்த்த பெண்களுக்கே கூட புதியதொரு தரிசனம் கிடைக்குமென்று சொல்லலாம்.

ஆகாத தீதார் என்ற முதல் சிறுகதைத்தொகுப்பின் வழியே தமிழ்ச்சிறுகதையுலகில் தன்னுடைய இலக்கிய இடத்தை வலுவாகப் பதிவு செய்த ஆமீனா முகம்மத் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான நிஹாடு மூலம் புதியதொரு உயரத்திற்குச் சென்றிருக்கிறார். தமிழில் பொதுவாகவே பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் மிகவும் குறைவு. அதிலும் இஸ்லாமியப்பெண் எழுத்தாளர்கள் அரிதினும் அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்போதும் இப்போதுமாக ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல மின்னி மறைந்து விடுவார்கள். சித்தி ஜூனைதா பேகம், ரொக்கியா பேகம் என்ற பெயர்களுக்கப்புறம், சமீபகாலமாகத் தான் இஸ்லாமியப்பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பார்க்கமுடிகிறது. அவர்களில் ஒளிவீசும் புதிய வண்ணங்களோடு எழுந்து வந்திருக்கிறார் ஆமினா முகம்மத்.

பொதுவாக சமூகத்தில் வாழும் பெண்களின் நிலைமை அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி எப்படி இருக்கிறதென்பதைச் சாதாரணமாகச் செய்தித்தாள் வாசிக்கிற எல்லாருக்கும் தெரியும். சொல்லித்தீராதது பெண்களின் பாடுகள். பிறந்ததிலிருந்து இறப்புவரை எந்தச் சுதந்திரமுமின்றி, எந்தச் சுயசிந்தனையுமின்றி, யாரையாவது சார்ந்து, யாராவதொருவரின் பாதுகாப்பில், எல்லாரையும் எல்லாவற்றையும் அனுசரித்து வாழ்ந்து மடிந்து விடும் பெண்களின் வாழ்க்கை, என்ற கருத்தியலில் மிகப்பெரும் உடைப்பை ஏற்படுத்தும் கதைகளாக நிஹாடு தொகுப்பிலுள்ள கதைகளிருக்கின்றன.

வைகையால் உறிஞ்சப்படாத உயிர் அல்லது தற்கொலையின் நாட்குறிப்பு என்ற கதையில், வெளிநாடு சென்ற கணவனின் துரோகம் தெரிந்த கனியம்மா கரைபுரண்டுவரும் வெள்ளத்தில் தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறார். ஆனால் ஆமினா முகம்மதின் கலையுணர்வு அவரை ஆண்கள் மட்டுமே நியாயம் வழங்குகிற பஞ்சாயத்தில் அத்தனை பேரையும் சமாளிக்கிற வலிமையுள்ள பெண்ணாக மாற்றுகிறது.

உசுரு கருப்பட்டி கதையில் வரும் கச்சம்மா கதையில் ஆமினா முகம்மதின் மொழிநடை புதிய உச்சத்தைத் தொடுகிறது. கூட்டுவண்டியில் சாமான்களுடன், குரோதம், வஞ்சம், எல்லாம் பயணப்பட்டு வந்ததாகச் சொல்வதாகட்டும், தற்கொலை செய்ய நினைக்கும் கச்சம்மாவிடம் சிட்டம்மா தண்ணியை அழுக்காக்கிறாதே என்று சொல்லி ஞானம் போதிப்பதாகட்டும், கச்சம்மா கடைசிவரை தான் சாபம்விட்டவர்களின் வீட்டில் ஒருவாய்த்தண்ணீர் குடிக்கவில்லை என்ற முடிவுவரை இதுவரை சொல்லப்படாத கதையாக இருக்கிறது.

வாழவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் ஆயிரம் வழி இருக்கிறது என்ற வார்த்தைகளில் தான் பிடாரியம்மாளில் வரும் தங்கம்மாளின் மூர்க்கம் இருக்கிறது. எல்லாரையும் வந்துபாரு என்கிற அவருக்குத் துணையாக நாகூர் அனிபா தன்னுடைய பாடல்களின் வழியே ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாரென்ற விவரிப்பின் எள்ளல் தொனி தங்கம்மாள் என்ற கதாபாத்திரத்துக்கு வலுவூட்டுகிறது.

காதலினால் மதம் மாறித் திருமணம் முடிந்த பெண் புகுந்த வீட்டில் தன்னை நிரூபிக்கப் போராடும் வாழ்க்கையைப் பற்றிய கதை அம்மு. இதுவரை யாரும் பேசாத கதை இது. இந்தக் கதையில் வரும் அமுதவள்ளி என்ற அமீராவின் போராட்டங்கள் மனம் உருகும் வண்ணம் ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் ஆமீனா முகம்மத்.

ஒவ்வொரு கதை குறித்தும் விரிவாக எழுதிவிட மனம் துடித்தாலும் முன்னுரையில் அதற்கு இடம் கொடுக்கக்கூடாதென்ற நடைமுறையை நினைத்து சுருக்கமாகச் சொல்ல நினைக்கிறேன்.

சாஜிதா மாமி கேஸ் மனதை உருக்கும் கதை. கதையை வாசித்தவுடன் சாஜிதா மாமி ஒரு செவ்வியல் கதாபாத்திரமாக மாறியிருப்பதை நாம் உணரமுடியும். மாமனாரின் ஆவி கதையில் வரும் ராசாத்தி செய்யும் பழிவாங்கல், அசனம்மாளின் தற்கொலைக் குறிப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றும்  அசனம்மாளின் தந்திரம், இரகசிய அறை கதையில் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் இரட்டை நடைமுறை, கடைசிவரியில் ஒரு பெண்வாழ்வின் சுமையை நம் மீது ஏற்றிவிடும் வல்லமை கொண்ட கதையாகத் திகழ்கிறது. மகனுக்காகத் தன்னைப் பலிகொடுத்த தாயைப் பழிவாங்கும் பெண்ணின் சாதுரியம் என்று தொகுப்பு முழுவதும் பெண்களே நிறைந்து நிற்கிறார்கள்.

.ஆமீனா முகம்மத்தின் கதைகளில் வரும் பெண்கள் பழி வாங்குகிறார்கள், தந்திரம் செய்கிறார்கள், தன் சொந்தங்களின் மீதே சாபம் விடுகிறார்கள். வன்மத்தைப் போற்றி வளர்க்கிறார்கள், நாடகம் ஆடுகிறார்கள், அதிகாரம் செய்கிறார்கள், பிறழ்மனநிலை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள், அடிக்கடி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள், பிடிவாதம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருத்தலைத் தக்கவைத்துக் கொள்ள என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையையும் செய்பவர்களாக, ரத்தமும் சதையுமாக நம் முன்னால் உலவித்திரிபவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வின் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக ஆண்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக்குகிறார் ஆமீனா முகம்மத்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் இயங்கியல்ரீதியாக தனித்துவமாகவும் முழுமையாகவும் கதைக்குள்ளே பரிணாமவளர்ச்சி பெறுபவர்களாகவும் வருகிறார்கள். பெண்ணெழுத்துகளில் நகைச்சுவையும் எள்ளலும் கேலியும் கிணடலும் மிக அரிது. ஆமீனா முகம்மத் மிக இலகுவாக தன்னுடைய மொழிநடையில் அதைக் கொண்டு வருகிறார். வாழ்க்கையை விலகி நின்று பார்க்கும்போது மட்டுமே கிடைக்கிற அபூர்வமான நோக்கு. புதுமைப்பித்தனிடம், வைக்கம் முகமது பஷீரிடம் அத்தகையை எழுத்து முறையைப் பார்க்கலாம்.  ஆமீனா முகம்மது இயல்பாக எழுதிச் செல்கிறார். இதில் தான் அவருடைய  கலை வெற்றியடைகிறது. .

ஒரு புதிய காட்சி தெரிகிறது. புதிய உணர்வுகள் தோன்றுகின்றன. புதிய கோணத்தில் இந்த வாழ்வு துலங்குகிறது. பெண்களின் வாழ்க்கை குறித்த பழமையான சிந்தனைகள் தகர்கின்றன. பெண்கள் இப்படித்தான் சிந்திப்பார்களென்ற ஆண்களின் அனுமானங்கள் வெடிவைத்துத் தகர்க்கப்படுகின்றன. பெண்கள் பேராளுமையாக, பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறார்கள். அவர்கள் நீங்களாகவும் இருக்கலாம். உங்கள் வீட்டிலும் இருக்கலாம்!

தமிழ்ச்சிறுகதைக்கு புத்தம் புதிய காற்றாய், பேசாப்பொருளைப் பேசத் துணிந்தவராய், அபூர்வமான கதைகளுடன் மீண்டும் வந்திருக்கிற ஆமீனா முகம்மத் மிக விரைவில் இன்னும் சிறந்த படைப்புகளைத் தருவார். தமிழின் சிறந்த படைப்பாளிகளிலொருவராக மாறுவார்.

 

 

  •  

நவீன காந்தாரி

அவர்கள் வேக வேகமாக நடந்து அந்த ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். தலையைச் சீவாமல் பரப்பிக் கொண்டு நூற்றாண்டுகள் கடந்த அந்த ஆலமரம் ‘ஹோ’வென்று நின்றிருந்தது. அங்கிருந்த சிறிய கல்மேடையில், வலது காலை மடித்து வைத்து, வலது...

The post நவீன காந்தாரி first appeared on Her Stories.

  •  

சீமுர்க் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

  வருமானவரித்துறையிலிருந்து மின்னஞ்சலில் ஒரு நோட்டீஸ் வந்திருந்த நாளில் பெப்டிக் அல்சரால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன்.  அதிகப்படியான தொகையை ரீஃபண்டாகக் கோரியிருப்பதை சரிபார்க்கச் சொல்ல வந்த நோட்டீஸ்.  இவை இரண்டும் போதாதென்று, பதிமூன்றாம் நூற்றாண்டு ஈராக்கைச் சேர்ந்த, மதரஸாவில் அரிஸ்டாட்டிலைப் போதிப்பவரும், மஜ்லிசில் வழக்குகளைத் தீர்த்து வைப்பவருமான கஸ்வினி ஓராண்டுக்கும் மேலாக அனுபவித்து வந்த ‘எழுத்தாளர்களின் முடக்கத்’திலிருந்து அவரை விடுவிக்கும் பொறுப்பையும் எனக்கு நானே ஏற்றிருந்தேன்.  

நான் என் நண்பர்களைப் போல அல்ல.  கல்லூரியில் சேரும் வயதை எட்டிய மகன்களின், மகள்களின் தந்தைகளாகவும்,  ஒவ்வொரு சந்திப்பின் போதும் நிலம், பரஸ்பர நிதி, தங்கம், பங்குச்சந்தையில் எவ்வளவு முதலீடுகள் செய்திருக்கிறார்கள் என்பதை விவாதிப்பவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  என் நண்பர்களின் மனைவிகளைச் சந்திப்பதை நான் முற்றிலும் தவிர்த்தே வந்தேன்.  அவர்களது அலுவலகங்களில் உடன் பணிபுரியும் விவாகரத்துப் பெற்ற பெண்களின் விவரங்களைச் சொல்லி திருமணத்திற்குப் பேசலாமா எனக் கேட்பார்கள்.  திருமணத்தைத் தவிர்ப்பதற்கு எனக்குப் பெரிய காரணங்கள் ஏதுமில்லை. வாழ்வைக் குறித்த எனது பார்வைகளே போதுமானவையாக இருந்தன.  

பதினேழாம் நூற்றாண்டு மெய்யியலாளரான தியோடர் ராவுல் ஹஸ்க்கின் முக்கியமான கூற்று ஒன்றை திருமணத்தைப் பற்றி என்னுடைய நண்பர்கள் பேசும் போது நினைத்துக் கொள்வேன்.

’பரிநிர்வாணத்தை அடைந்தவர்களாலும் கூட வாழ்வின் சலிப்பிலிருந்து தப்ப முடியாது’.   அவர்களுக்கே இந்த நிலை என்றால் குடும்பம் நடத்துகின்றவர்களின் நிலையைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

இப்போது கஸ்வீனீயின் கதைக்கு வருவோம்.   

மத்தியகாலத்தில் ஓர் இரவில் கஸ்வீனீ நட்சத்திரங்களுக்குக் கீழே நின்றிருந்தார்.  முன்பைப் போல அவை அவருக்கு வியப்பளிப்பவையாக இல்லை.  தெருவிளக்குகளில் எண்ணையை ஊற்றி பந்தத்தால் நெருப்பு வைத்துப் போகிறான் வசிட் நகரத்தின் விளக்கேற்றி.  இந்த நகரத்தில் எல்லோரும் அவரை கரீப் (அந்நியர்) என்றே கருதுகிறார்கள்.  அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர் அல்ல.  அவரது ஊர் ஈரானிலிருக்கும் கஸ்வின்.  செங்கிஸ்கானின் படைகள் நாற்பதாயிரம் பேரைக் கொன்று அந்நகரைக் கைப்பற்றுவதற்கு முன்பே அவர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.   முய்ன் அல்-தின் ஹசன்வாய்ஹ் அவர்களிடம் கல்வி கற்றுப் பெற்ற இஜாசா (கல்வி கற்பிக்கும் அனுமதி) கையில் இருந்தது.  

முய்ன் அல்-தின்னைப் பற்றி ஒன்றைச் சொல்கிறேன்.  பல்வேறு விதமான கட்டுப்பாடுகளின் வழியாக உடலின் தேவையை ஒடுக்கியவர் மட்டுமல்ல அவரால் ஜின்னுகளோடு நேரடியாகப் பேச முடியும்.  

கஸ்வினியின் காலத்தைப் புரிந்து கொள்ள மேலும் ஒன்றைச் சொல்கிறேன்.  காஷ்மீரின் உயர்ந்த மலைகளில் ஜின்னுகளை வாங்கும் விற்கும் சந்தை ஒன்று இருப்பதாகவும், அங்கே சென்றால் பேரம் பேசும் குரல்களை மட்டுமே கேட்க முடியுமே அல்லாமல் யாரையும் பார்க்க முடியாது என்பதை நம்பியவர்கள். யானைகளைச் சுமந்து செல்லும் பறவைகளும், பெண்களை கர்ப்பமடையச் செய்யும் சீனக் கற்களும், தரைதட்டி நிற்கும் கப்பலில் இருப்பவர்களை சிறை பிடித்துச் செல்லும் நாய்த் தலையும் மனித உடலும் உடையவர்கள் வசிக்கும் தீவுகளும் இருப்பதாகவும் சொல்லப்படுவதை நம்மைப் போல மறுக்க மாட்டார்கள்.  இவை போன்ற எல்லாவற்றையும் நாம் திரைப்படங்களில், நாடகத் தொடர்களில் பார்த்து விடுகிறோம்.  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கில அகராதியில் ‘ஃபான்டஸி’ எனும் சொல்லிற்கான பொருளை ஒருமுறை வாசித்து விடுங்கள்.  இது போன்ற கற்பனைகளை நாம் நம்பிக்கையிலிருந்து சற்றே இடம் மாற்றி திரைகளில் வைத்திருக்கிறோம்.

மாடியில் நின்றிருந்த கஸ்வீனீ தூரத்தில் டைக்ரிஸ் ஆற்றில் விளக்குகள் ஏற்றி நகரும் படகுகளைப் பார்த்தார்.   விளக்குகள் மட்டுமே நகர்ந்தன.  படகுகள் கண்ணுக்குத் தெரியவில்லை.  ஆனால் அவருக்கு நன்றாகத் தெரியும் அவை படகுகளில் ஒளிரும் விளக்குகள் என்று.  

மாலை நேரங்களில் அடிவானத்தின் பொய்யான எல்லைக் கோடுகளைக் கண்டு நிற்பது, குளியல் அறையில் நீர்த்தொட்டியில் தன் முகம் கண்டு நிற்பது, உடை அணியும் முன் கண்ணாடியில் மார்பில் நரைத்திருக்கும் முடியில் விரல்களை ஓட்டிப் பார்ப்பது,  வழக்குகளைத் தீர்த்து விட்டு வீடு திரும்பும் போது எதிரே வரும் நபர்கள் வைக்கும் சலாமிற்கு பதில் சொல்லாமல் வருவதென்று அவரிடம் இல்லாத வழக்கங்கள் புதிதாகச் சேர்ந்திருந்தன.  

எப்போதிலிருந்து அவருக்கு இந்த விநோத வழக்கம் வந்ததென்று சொல்கிறேன்.  ஒருநாள் தாடிக்கு சாயம் பூசும் பணியாள் ஹிந்துஸ்தானத்திலிருந்து தருவிக்கப்படும் அவுரியோடு வேறு சில தாவரங்களின் இலைகளைச் சேர்த்து அரைத்த சாந்தை ஒரு கிண்ணத்தில் ஏந்தியிருந்தான்.   கஸ்வினியின் கையில் இஸ் அல்-தின் பின் அல்-அதீரால் தொகுக்கப்பட்ட மங்கோலியப் படையெடுப்பில் இறந்தவர்களுடைய விவரங்களின் தொகுப்பேடு இருந்தது.  பணியாள் சாந்தைக் குழைக்கும் வரை அதைத்தான் அவர் புரட்டிக் கொண்டிருந்தார்.    

மொசூலில் இருக்கும் அல்-அதீரின் மாளிகையில்தான் அவர் அப்படியொரு பதிவேட்டை முதன்முதலாகப் பார்த்தார்.  லாகூர், சாமர்கண்ட், மெர்வ், நிஷாபூர், மொசூல், பாக்தாத், விளாதிமிர் என மங்கோலியர்கள் சூறையாடாத நகரங்கள் இஸ்லாமிய நிலத்திலும் அதற்கு அப்பாலும் இல்லை என்று சொல்லுமளவிற்கு பருவகாலம் விடைபெறுவதைப் போல அவர்களது வெற்றி தடுக்கப்பட முடியாததாக இருந்தது.

மொசூலும், பாக்தாத்தும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.  ஜார்ஜ் புஷ்சின் அமெரிக்கப் படைகளால் மங்கோலியப் படையெடுப்பிற்கு ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகள் கழித்து ஆக்கிரமிக்கப்பட்டவை.  ஆனால் மங்கோலியப் படைகள் போல அமெரிக்கப் படைகள் பெண்களை வன்புணர்வு செய்வதில் ஈடுபடவில்லை.  அது ஒன்றுதான்  பெரிய வேறுபாடு.  

போரைப் பற்றி அதுவும் இப்போது இரஷ்யாவும், யுக்ரைனும் போரிடும் சமயத்தில் ஒன்றைச் சொல்கிறேன், வரலாறு முழுக்க ஆண்களுக்கு போர் வாளின் வடிவத்தில் அல்லது துப்பாக்கியின் வடிவத்தில் தெரிந்தால், பெண்களுக்கு அது அன்றும் இன்றும் ஆண்குறிகளின் வடிவத்தில் மட்டுமே தெரியும்.  பாக்தாத்தின் தெருக்களில் வெட்டி வீழ்த்தப்பட்ட உடல்களின் நடுவே, பெண்கள் மங்கோலியர்களால் வன்புணர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் கதறுவதைக் கேட்டு மங்கோலியக் குதிரைகளின் குறிகளும் விரைத்திருக்குமென்று நினைக்கிறேன்.  இன்பமும் சித்ரவதையும் இணைவதைப் பற்றி என்னால் அதிகமாக விளக்க முடியாததின் காரணத்தை நீங்கள் இக்கதையின் இரண்டாம் பத்தியை கவனமாக வாசித்தவராக இருந்தால் எளிதாக யூகிக்கலாம்.

மையைப் பூசுவதற்கு முன்பு பணியாள் சொன்னான், ‘ஐயா, அந்தப் புத்தகத்தை அப்பாலே வையுங்கள்.  மை அதன் மீது கொட்டிவிடப் போகிறது.   இல்லை என்றால் பின்னொரு நாளில் இந்தப் புத்தகத்தைப் புரட்டும் போது கரும்புள்ளிகள் எப்படி தோன்றினவென்று இரவு முழுக்க நீங்கள் யோசிப்பீர்கள்’.

’எதன் மீதும் நம்முடைய தொடர்பு முதலில் அதன் பெயரில் இருந்துதான் தொடங்குகிறது இல்லையா?’

’இல்லை ஐயா, மன்னிக்கவும் நாம் என்னவென்றே தெரியாமல்தான் சரியான இடத்தைக் கண்டுபிடித்து முலைப்பாலை அருந்தினோம்.  அப்போது நாம் பெயரற்றவர்களாகவும், நாம் அருந்துவதின் பெயரையும் அறியாதவர்களாகவே இருந்தோம்’.

மை காயும் வரை அவன் சொன்னதை யோசித்தார் கஸ்வீனீ.  அவுரியை நாம் அல்-நிலியு என்கிறோம், சமஸ்கிருதத்தில் நீலி என்று சொல்கிறார்கள்.  இன்னும் அவருக்குத் தெரியாத மொழியில் எத்தனை பெயர்களால் அது அழைக்கப்படும் என்றும் யோசித்தார்.  குளியல் தொட்டியில் அமிழ்ந்திருந்த போது ஒரு பதிவேட்டில் வெறும் பெயர்களாக எஞ்சியிருப்பவர்களின் பரிதாபமான வாழ்வை நினைத்தார்.

கல்விமானும், வழக்குத் தீர்ப்பவருமான கஸ்வீனீயைக் காட்டிலும் பணியாள் சரியாகச் சிந்திப்பதாக நீங்கள் கருதிவிடக் கூடாது.   கஸ்வினிலிருந்து இடம்பெயர்ந்த பிறகு, மொசூலில் அவர் கல்வியைத் தொடர்ந்த காலகட்டத்தைப் பற்றிச் சொன்னால் நீங்கள் அவரைக் குறைவாக மதிப்பிட மாட்டீர்கள்.

பாக்தாத்தின் புகழ்பெற்ற நிசாமியா மதரஸாவில் போதித்தவரான கமால் அல்-தீன் குரானிலும், ஹதீத்திலும் தேர்ந்தவர் மட்டுமல்ல, தர்க்கம், இயற்பியல், மீஇயற்பியல், யுக்லிடின் ஜியோமிதி, தாலமியின் வானியல், அரபு இலக்கணம், கவிதை, வரலாறு இவற்றைத் தானாகவே கற்றவர்.   அது போக கிறித்தவர்களின் காஸ்பெல்களில், யூதர்களின் டோராவிலும் சந்தேகங்களைத் தீர்ப்பவராகவும் இருந்தார்.

கமால் அல்-தீனின் கணித அறிவைச் சோதிக்கும் வண்ணம் ஒரு நிகழ்வு நடந்தது.  இரண்டாம் ஃப்ரெட்ரிக் டாமஸ்கஸ் சுல்தானாக இருந்த நாஸிர் அல்-தீனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  கணிதத்தின் அடிப்படையில் வட்டத்தை எவ்வாறு சதுரமாக்குவது என்று அதில் கேட்டிருந்தார்.  டாமஸ்கஸில் இருந்து சிரியாவின் கல்வியாளர்களிடம் அந்தக் கேள்வி வந்தது.  அவர்களால் வட்டத்தைச் சதுரமாக்கும்  கணிதக் கோட்பாட்டை எழுத முடியவில்லை.  அந்தக் கடிதம் சிரியாவிலிருந்து, மொசூலில் இருந்த கமால் அல்-தீனின் கைகளை அடைந்தது. அவர் அளித்த கணித விளக்கத்தைக் கண்டு டாமஸ்கஸில் சுல்தான் கண் விரிந்தார்.  

 

வாசனைத் திரவியம் பூசிய ஆடையை அணிந்து மாடிக்கு வந்த கஸ்வீனீ டைக்ரிஸ் ஆற்றில் தெரிந்த நகரும் ஒளிப்புள்ளிகள் முற்றிலும் பார்வையிலிருந்து மறைந்த பின்பு, கீழே இறங்குவதற்காகத் திரும்பினார்.

’ஐயா, ஐயா இங்கே பாருங்கள்’

கையில் பொதி ஒன்றை வைத்திருந்த காஸிம், அதைத் தொட்டுக் காட்டி, அவரிடம் அதனை ஒப்படைக்கும்படி நகரத் தலைமை நீதிபதி அவனை அனுப்பியதாகச் சொன்னான்.  அந்தப் பொதியில் இருந்தவை வேறு ஒன்றுமல்ல, புத்தகங்கள்.  கூடவே நீதிபதி ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.

’நீங்கள் கேட்டபடி இபின்- சினாவின் அனைத்து நூல்களையும் அபாஹ்ரீயின் ஹிதாயத் அல்-ஹிக்மாவையும் (மெய்யியலுக்கான வழிகாட்டி), அல்-காஸிலியின் கிமியே சாதத்தும் (மகிழ்ச்சியின் இரசவாதம்), அல்-பெருனி மொழிபெயர்த்த ‘பதஞ்சலி யோக சூத்திர’த்தையும் அனுப்பியிருக்கிறேன்.  என்னிடம் இருப்பவை மிகத் தெளிவாகவும், அழகாகவும் எழுத்துக்களைத் தீட்டக் கூடிய, அதிகக் கூலி வாங்கும் சித்திரவேலை எழுத்துக்காரர்களால் நகலெடுக்கப்பட்டவை.  ஆகவே வாசித்து முடித்ததும், மறக்காமல் திருப்பிக் கொடுத்து விடவும்’

அந்தக் கடிதத்தின் பின்பகுதியில் அவர் இவ்வாறு எழுதிக் கையொப்பமிட்டார் ;

’என்னிடமிருந்து பெறப்பட்டவை திரும்ப ஒப்படைக்கப்படும் போது’.  காஸிமின் கையில் கடிதத்தையும், இரண்டு நாணயங்களையும் திணித்து அவனுக்கு விடைகொடுத்தார்.

புத்தகங்களைப் பார்க்கையில் அவர் மலைப்பாக உணர்ந்தார்.  அவருடைய காலம் எவ்வளவு குறுகியதென்று அவருக்கு காட்டும் வண்ணம் கையில் வந்திருக்கும் புத்தகங்கள்.  மனித மூளையின் கொள்ளளவை இபின்-சினாவைக் கொண்டே அளவிட முடியும்.  எதைத்தான் அவர் எழுதாமல் விட்டிருக்கிறார்.  உளவியல், அரசியல், ஒழுக்கவியல், அன்பு, மருத்துவம் என அவர் மனதிலிருந்து வழிந்த புத்தகங்களில் நிறைந்திருப்பவை கஸ்வீனீயைத் திகைப்படையச் செய்தன.  அவர் எழுத முனைந்திருக்கும் நூலின் முதல் பகுதியை சில வாரங்களுக்கு முன்புதான் தொடங்கியிருந்தார்.  விண்ணுலகைப் பற்றிய பகுதி பாதியில் நிற்கிறது.  மேலும் அதைத் தொடரவே அவர் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களோடு இவற்றையும் நீதிபதியிடம் கோரிப் பெற்றிருந்தார்.

இரவுத் தொழுகைக்குப் போவதற்கு முன்பாக நீதிபதி அவருக்குக் கொடுத்திருந்த புத்தகங்களை பத்திரமாக, அவருடைய பேரக் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்தார்.  தொழுகை முடிந்து வீடு திரும்பியதும் இபின்-சினாவின் நூல் ஒன்றை அவர் வாசிக்கத் துவங்கினார்.  அலுவலகம் முடிந்து வழியிலேயே இரவு உணவை சாப்பிட்டுவிட்டு என்னுடைய வீட்டிற்குத் திரும்பி உறக்கம் வரும் வரையிலும் அவரைப் போலத்தான் நானும் புத்தகங்கள் வாசிப்பேன்.

அவர் எழுதி வந்த நூலின் பெயர் ‘அஜாயிப் அல்-முக்லுகட் வா கராயிப் அல்-மவ்ஜூதாத்’ (வியப்பிற்கு உரியவையும், அரிதானவையும்).  கற்பனையிலிருந்து அதை அவர் எழுதவில்லை.  அவர் கேட்டவை, சேகரித்தவை, வாசித்தவை, அவருடைய இடப்பெயர்வில், பயணங்களில் பார்த்தவற்றையே எழுதினார்.  

முதல் பகுதி : விண்ணுலகின் அங்கங்களான கோள்களின் சுழற்சி, நட்சத்திரங்கள், இராசி மண்டலங்கள், சூரிய சந்திர வலம், வால்நட்சத்திரங்கள்

இரண்டாம் பகுதி : குவாஃப் மலையால் சூழப்பட்டிருக்கும் இந்த நிலத்தில் வசிக்கும் விநோத மனிதர்கள், மருத்துவத் தாவரங்கள், உயிரினங்கள், தீவுகளை விவரிப்பவை.  

மூன்றாவது பகுதி : நிலத்தினடியே இருக்கும் உலோகங்கள், அவற்றின் பயன்கள்

அந்த இரவிலிருந்துதான் கஸ்வீனீ ‘எழுத்தாளர்களின் முடக்கத்திற்கு’ ஆளானார்.  

 

 

மேஷ இராசியில் படையெடுத்தால் வெற்றி நிச்சயமென்று ஹுலேகுவிற்கு (செங்கிஸ்கானின் பேரன்) அறிவுறுத்தியவர்கள் இஸ்லாமிய சோதிடர்கள்தான்.  பதிமூன்று நாட்கள் பாக்தாத்தை முற்றுகையிட்டு அந்த நகரத்தை அவனுடைய படைகளால் முடிந்த அளவு சிதைத்தான்.  அந்த நகரத்திலிருந்த முப்பது நூலகங்களில் நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட நூல்களை மங்கோலியர்கள் தீயிட்டுக் கொழுத்தினார், டைக்ரிஸ் ஆற்றில் தூக்கி எறிந்தனர்.  

பாக்தாத்தைத் தொடர்ந்து வசிட் நகரத்தையும் அவர்கள் முற்றுகையிட்டார்கள்.  இரண்டாம் முறையாக அவர் போரின் கொடுமைகளில் இருந்து தப்பினார்.  சில நாட்கள் நகரத்திற்கு வெளியே தங்கியிருந்து அங்கு திரும்பியதும் வேகவேமாக அவருடைய புத்தகத்தை எழுத முனைந்தார்.  கவனக் குறைவாக வாசிக்கும் வாசகர்களுக்கு மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்.  கஸ்வீனீ இளைஞனாக இருந்த போது செங்கிஸ்கானுக்குத் தப்பினார், நடுவயதைக் கடக்கும் போது அவனுடைய பேரனிடமிருந்து தப்பினார்.  அவர் வாழ்ந்த நகரங்கள் மட்டுமே மாறியிருந்தன.  

இபின்-சினாவின் நூல்களைத் தொட்ட அந்த நாளில் இருந்து அவரால் எழுத முடியாமல் போனது. அப்பாசித்துகள், உம்மாயித்துகள், சுல்தான்களின் ஆளுகைக்கு உட்பட்டும், பாரசீகப் பேரரசின் கிழக்கு எல்லை வரையிலும் பரவியிருக்கும் பிலாத் இஸ்லாமில் (இஸ்லாமிய நிலங்கள்) மதரஸாக்கள் பெருகி நூல்களுக்கான தேவை மிகுந்திருக்கிறது.  காகிதம் தயாரிப்பவர்கள், படியெடுப்பவர்கள், விளக்கம் சொல்பவர்கள், மைக்கூடுகள், எழுதுகோல்களை விற்பவர்களும் விற்பனையை மனதில் கொண்டு மதரஸாக்களைச் சுற்றிக் குடியேறினர்.  அதிகாரிகளும், வியாபாரிகளும், சுல்தான்களும் கூட அதிகளவில் நூல்களில் ஆர்வம் செலுத்தினர்.  

கஸ்வீனீ யோசித்தார்;

இறைக் கோட்பாடுகளை விளக்குபவர்கள், இலக்கணங்களைக் கற்றவர்கள், மருத்துவர்கள், மெய்யியலாளர்கள், கவிஞர்கள், வியாபாரிகள், நாடோடிக் கதை சொல்லிகள், சோதிடர்கள், சூஃபி ஞானிகள், வானியலாளர்கள், கணித மேதைகள் இவர்கள் எல்லாவற்றையும் கற்களைப் போல உறுதியாக விளக்கிய பிறகு, நான் சந்தேகம் அடையவும், தெளிவைப் பெறவும் என்ன இருக்கிறது. உலகின் மர்மம் இன்னும் நீங்காதிருப்பதைப் போலவும் அதை அவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் போலவும் புதிதாக எழுத வரும் ஒவ்வொரு எழுத்தாளரும் கருதிக் கொள்கிறார்.  நான் செய்ய நினைத்திருக்கும் பணியின் மதிப்பும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.  இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து யாருடைய மேசையிலாவது அது அமர்ந்திருக்குமா? அல்லது இன்னொரு போர் வந்து எல்லா நூல்களையும் எரித்தும், ஆறுகளிலும் வீசிவிடுமா?

கலங்கிய குட்டையைப் போல என் மனம் மாறாது ஜிப்ரயீல் காப்பாராக.  

 

ஒவ்வொரு நாளும் இந்த சந்தேகம் எழுகையில்தான் அவர் கண்ணாடியின் முன்னும், குளியல் தொட்டியில் தன் முகம் கண்டும் உறைபவராகவும், எதிரே வருபவர்கள் வைக்கும் சலாமிற்கு பதில் சலாம் வைக்காமல் வருபவராகவும் மாறினார்.

இந்தக் கேள்வி எனக்கே இருக்கிறது.  

 

 

ஜுவாதானோ புரூனோவின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போது, தான் உண்மையென்று நம்பும் ஒரு கருதுகோளுக்காக ஒரு மனிதர் தீயிட்டுக் கொளுத்தப்படவும் தயாராக இருப்பாரா? என்று ஒரு கேள்வி தோன்றியது.  நிலம், பெண், செல்வம் இவைகளுக்காக போரிட்டு இறப்பவர்களை என்னால் எளிமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் உண்மைக்காகவும், அறிவுக்காகவும் உயிரை விடுபவர்கள் தீர்க்க முடியாத புதிர்தான்.  இவை இரண்டும் உயிரைவிட மேலானவையா? கண்ணுக்கே தெரியாத அணுக்களைப் பற்றிய அவருடைய கோட்பாடுகளுக்காக கிறித்தவர்களால் எரிக்கப்பட்டவர் அவர்.   அவரைக் கொன்றவர்கள், ஆயிரத்து அறநூறு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கருத்துகளுக்காகத்தான் ஒரு பகல்வேளையில் இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டார் என யோசித்திருந்தால் அவரைக் கொல்வதற்கு முயன்றிருப்பார்களா?. (கணிதக் குறிகளில் கூட்டல் குறியிலிருந்து மட்டுமே மனிதர்களைத் தண்டிப்பதற்கான சிலுவையின் அமைப்பை உருவாக்க முடியும்.  வேறு எந்தக் கணிதக் குறிகளின் வடிவத்திலும் மனிதர்களைக் கொல்லும் அமைப்பை அமைக்க முடியாது). தொடர் கேள்விகளால் குழம்பிப் போய், எரியும் குழல்விளக்கை அணைக்காமல் வெளிச்சத்திலேயே தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் வாகனக் கடல், மனிதக் கடல் இரண்டையும் கடந்து என்னுடைய பட்டயக் கணக்காளர் நண்பனைச் சந்தித்தேன்.  அவன் வருமான வரி அறிக்கையை திருத்திப் பதிவேற்றினான்.  பின்பு குடல்நோய்களுக்கான மருத்துவரையும் பார்த்தேன்.  சில மருந்துகளைப் பரிந்துரைத்து, உணவகங்களில் சாப்பிடுவதை குறைக்கும்படி சொன்னார்.  கிளினிக்கில் டோக்கன் கொடுக்கும் பெண் கனகாம்பரம் சூடியிருந்தாள்.  தமிழ்நாட்டில் இப்போது இந்த வழக்கம் ஏறக்குறைய ஒழிந்துவிட்டது.  கனகாம்பரச் செடிகளை வீடுகளில் வளர்ப்பவர்களும் கிடையாது.   மீண்டும் வாகனக் கடல், மனிதக் கடல் இரண்டையும் கடந்து வீடு வந்தேன்.

என்னுடைய வீடு அமைதியாக இருந்தது.  எப்படிப்பட்ட அமைதி என்றால் ஒரு பொருளைப் போல அதைக் கையில் எடுத்து வேண்டுகிற இடத்தில் வைத்து விடுகிற அளவிற்கு.  மின்விளக்குகளைப் போட்டேன்.  வரவேற்பறை, உணவருந்தும் மேசை, துணிகள் வைக்கும் வார்ட்ரோப்பின் கீழடுக்கு, படுக்கை என எங்கேயும் புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.  எனது வீட்டின் அமைதி வாசிப்பினால் உருவாகும் அமைதியினால் ஆனது.  சில நேரங்களில் வசீகரமாக இருக்கும்.  மீதி நேரங்களில் கதவைத் திறந்ததும், ஒற்றைத் தலைவலி அதிகமாகும் போது கண்ணுக்கு அருகே தெரியும் வெள்ளிப் புழுக்களைப் போல புத்தங்களிலிருந்து வழியும் சொற்கள் குழப்பமாக நெளியும்.

 

கஸ்வீனீயின் முடக்கத்தையும், என்னுடைய வீட்டின் நிலைமையையும் சற்றே தள்ளி வைத்துவிட்டு நாம் அறிவின் கேள்விக்கு வருவோம்.   கதையை விட்டு வெளியே ஒரு சில வரிகளை வாசிக்குமளவிற்கான பொறுமையுடையவர் நீங்கள் என்பதை இவ்வளவு தூரம் நீங்கள் இக்கதையை வாசித்ததிலிருந்து நம்புகிறேன்.  பெரும்பாலும் நள்ளிரவில், அதிலும் குறிப்பாக என் அண்டை வீட்டிலிருக்கும் ஒரு பெண்மணி பாத்திரங்களை கழுவி முடித்ததும் (சில நாட்களில் இரவு பதினோரு மணிக்குக் கூட அவள் வீட்டிலிருந்து குக்கர் அல்லது மிக்சி சத்தம் கேட்கும்.  எனினும் நான் அவளைப் பார்த்ததேயில்லை), காத்திருந்ததைப் போல எழும் அமைதியில் எதையாவது என்னுடைய மனம் சிந்திக்கும்.  நான் சிந்தனையின் கட்டுப்பாட்டில் இருப்பேன்.  

எனது இரவும் கூட.

லூயி கரோல், இவ்வாறு இரவில் படுக்கையில் படுத்தவாறு சிந்திப்பவர்கள் எளிமையாக குறிப்புகளைப் பதிவு செய்ய ஒரு முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்.  தவற விடக் கூடாதென நான் கருதுபவற்றை சிரமம் கருதாது எனது செல்பேசியில் இருக்கும் குரல் பதிவு செயலில் பதிவு செய்வேன்.  அதிலிருந்த ஒரு குரல் பதிவில் இருந்துதான், அறிவை நான் எவ்வாறு பார்க்கிறேன் எனச் சொல்லப் போகிறேன். வெறும் இரண்டே வரிகள்.

ஃபிரான்ஸிஸ் பேகன் சொன்னார்;

’அறிவே அதிகாரம்’.

என்னைப் பொறுத்தவரையில் ‘அறிவு, நினைவுகள் சொல்லும் ஒரு கதை’.  

நீங்கள் இதை விளக்கச் சொன்னால் என்னால் முடியாது.  அதற்கான விளக்கத்தைப் பதிவு செய்வதற்குள்ளாக, ஃபிரானிஸிஸ் பேகனோடு ஓர் உரையாடலை நிகழ்த்தி விட்ட மகிழ்ச்சியில் உறங்கி விட்டேன்.

தலைமுடி உதிர்வதைப் போல நாட்கள் நகர்ந்தன.   கஸ்வினியை விடுவிக்கும் எண்ணம் எனக்கு எழவில்லை.  ஏறக்குறைய வாசிப்பதையும் நிறுத்திவிட்டேன். எவ்வளவு வீணான வாழ்க்கை வாழ்கிறேன் என்று நினைத்தேன்.  மத்திம வயதில் ஏதோவொரு தருணத்தில் இனியும் வாழ்வைப் புதிதாகத் தொடங்க முடியாது என்கிற கட்டத்தை அடைகிறோம்.  அன்றிலிருந்து நமக்கு முன்பு பிறந்தவர்களின் மீதும், பின்பு பிறக்கப் போகின்றவர்களின் மீதும் எரிச்சல் உண்டாகத் துவங்குகிறது.   கஸ்வீனீயைப் போலவே நானும் கண்ணாடியின் முன் உறைபவனாக மாறியிருந்தேன்.  உலகின் கண்ணாடிகளில் சற்று நேரம் தெரியும் வெற்றுப் பிம்பமே அது. பல நாட்களுக்கு (அல்லது எட்டு நூற்றாண்டுகளாக?) வெறுமனே அலுவலகம் சென்று வரும் ஒரு ஹுமானய்டைப் போலவே இருந்தேன்.  ஒரு சில நாட்களில் சித்திர எழுத்து வேலையை நானாகவே பயில முயன்றேன்.  அதற்கெனவே தயாரிக்கப்படும் காகிதங்கள், பேனாக்கள், மைக்கூடு, பிரஷ்கள், வர்ணங்கள் என தேவைப்படும் அனைத்தையும் வாங்கினேன்.  ஓரளவு பயின்ற பிறகு நூற்றி அறுபத்தைந்து ஜிஎஸ்எம் காகிதத்தில் சீமுர்க் பறவையை வரைய முனைந்தேன்.  மெச்சத்தக்க அளவிற்கு இல்லை என்றாலும், மோசமானதாக வரைந்திருக்கவில்லை.  சீமூர்க் தலையை உயர்த்தி நின்றது.

என்று அந்தக் கனவை கண்டேன் என்பது என் நினைவில் இல்லை.

கஸ்வீனீ வசிட் நகரின் கடைத்தெருவில் நின்றிருந்தார்.  அவருடைய தாடி நன்கு வெளுத்திருந்தது.  அடிமைகளை, தானியங்களை, பழங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே மாதுளம் பழம் விற்கும் கடைக்கு வந்தார் (பேரம் பேசுகிறவர்கள், சிறுசிறு சண்டையில் ஈடுபடுபவர்களின் சத்தத்தால் சந்தை களைகட்டியிருப்பது கஸ்வினிக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம்).  

‘கஸ்வீனீ ஐயா ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்?’

        ‘ஓ வாசிம் நலமா? அது வேறு ஒன்றுமில்லை.  களைப்பு. கூடையில் இருப்பவை எங்கேயிருந்து தருவிக்கப்பட்டவை?’

      ’அது கிடக்கட்டும் நீங்கள் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.  உங்கள் முகத்தில் இவ்வளவு சோர்வை நான் ஒருநாளும் கண்டதில்லையே’

(யாராவது அப்படிக் கேட்கமாட்டார்களா எனக் காத்திருந்தவரைப் போல), இபின்-சினாவின் புத்தகத்தைத் தொட்ட நாளில் இருந்து தனக்கு ஏற்பட்ட முடக்கத்தையும், அதனால் எழுந்த சோர்வையும் அவனிடம் விளக்கினார்.

‘ஐயா, விதைகளை விழுங்கிய ஞானி ஒருவரின் கதையைச் சொல்கிறேன். உங்களின் மனதிற்கு அது ஆறுதலாக இருக்கலாம்’.

 

அவன் சொன்ன கதை:

 

எந்த ஒட்டகத்தாலும் அதன் முதுகில் அமர்ந்து பயணிப்பவர்களின் பெயரைத் தெரிந்துகொள்ள முடியாது. தன்னையும் ஒட்டகத்தைப் போலவே கருதிக் கொள்ளும் ஞானியொருவர், அவரும் தனக்குப் பெயர் வைத்துக் கொள்ளவில்லை, அவருக்குப் பெற்றோர் வைத்த பெயரையும்

வெளியே சொன்னதில்லை.  தான் ஓர் ஒட்டகமென்றும், இந்த உலகுதான் அவர் முதுகில் அமர்ந்திருக்கும் பயணி என்றும் சொல்வார். ஒரு நெடும்பயணத்தின் இடையே தன்னையும் அறியாமல் அந்த ஞானி ஒட்டகத்தின் மீது அமர்ந்த வண்ணமே தூங்கிவிட்டார்.  அந்த ஒட்டகம் பகலென்றும் இரவென்றும் குளிரென்றும் கோடையென்றும் பாராமல் நடந்து நடந்து எல்லாப் பருவகாலங்களையும் கடந்து சோர்ந்து போய் ஓர் ஆழமான குளத்தின் அருகே நின்றது. தன் முதுகில் அமர்ந்திருப்பவரைக் கவனத்தில் கொள்ளாமல், குளத்தருகே சென்று தண்ணீர் அருந்துவதற்காக முன்னங்கால்களை மடித்துக் குனியவும், அந்த ஞானி குளத்திலே விழுந்து விட்டார். குளத்திலே விழுந்து தூக்கம் தெளிந்த ஞானி தான் எப்படி குளத்திலே விழுந்தோமென்று தெரியாமல் அவசர அவசரமாக நீந்தி குளத்திலிருந்து வெளியேறினார்.  தான் நீரில் மூழ்கியதைப் போலவே இந்த உலகும் ஒரு நாள் நீரில் மூழ்குமென்று சிந்தித்த அந்த ஞானி, எப்படியாவது இந்த உலகைக் காப்பதென்று முடிவு செய்தார்.  தான் நீந்தி வெளியே வந்ததைப் போலவே இந்த உலகும் மூழ்கிய பின்னும் வெளியே வரும் என்று நம்பினார். அப்படித் திரும்ப வரும் உலகில் தாவரங்கள் எங்கேயிருந்து முளைக்கும் என்று யோசித்தார்.  வயிறுமுட்ட நீரைக் குடித்த ஒட்டகத்தில் மீண்டும் ஏறி எட்டுத் திசைகளுக்கும் சென்று கண்ணிற்குத் தென்படும் தாவரங்களின் விதைகளைச் சேகரித்தார்.  நாம் தற்போது தனித்தனியாகப் பெயரிட்டு அழைப்பதைப் போல அல்லாமல், அவர் விதைகளை இன்னதென்று அழைக்காமல் ஒவ்வொன்றையும் சேகரித்தார். சேகரித்த விதைகளை சிறுசிறு துளைகளிட்டு அவர் உடலெங்கும் சேமித்தார்.  அவரிடம் பை கூடக் கிடையாது.  ஆடைகளும் இல்லை.  மேலே ஒரு தாடி, கீழே ஒரு தாடி.  அவருடைய உடலில் இடமில்லாது போனதும், ஒட்டகத்தின் உடலில் அதன் தடித்த தோலினடியே சேமிக்க ஆரம்பித்தார்.   அவர் எதிர்பார்த்ததைப் போல உலகே மூழ்குமளவிற்கு மழை பெய்யவும், மீதமிருக்கும் விதைகளை தனது வயிற்றிலும், ஒட்டகத்தின் வயிற்றிலும் நிரப்பிய பின் அமைதியாக ஒரு பாறையின் மேல் அமர்ந்தார்.  நீர் உயர, ஒட்டகம் நீந்தி வெளியே வர முனைந்தது. ஆனால் அதனால் காற்றைச் சுவாசிக்கும் அளவிற்கு நீருக்கு வெளியே தலைநீட்ட முடியவில்லை. ஒட்டகம் இறப்பதற்கு முன்பாகவே அவரும் இறந்தார்.  பறவைகள் மட்டுமே தப்பின. அவற்றிலும் பல தொடர்ந்து பறக்க முடியாமல் சோர்ந்து இறந்தன. வெள்ளம் வடிந்து, எஞ்சியிருந்த பறவைகளுக்கு சேறும் சகதியுமாகக் காட்சியளித்த நிலம் தெரிந்தது.  கூடவே உடல் வெடித்து இறந்து போயிருந்த ஒட்டகமும் ஞானியும் தெரிந்தார்கள். அவர்களது உடலில் சேகரித்து வைத்திருந்த விதைகள் ஒவ்வொன்றாக முளைக்கத் துவங்கின. நெடுங்காலத்திற்கு பறவைகள் கனிகளைத் தின்று விதைகளை நிலமெங்கும் விழச் செய்து காடுகளை முளைக்க வைத்தன. இங்கே முளைத்திருக்கும் செடிகளும், மரங்களும் கூட அவருடைய வயிற்றிலிருந்தோ அல்லது ஒட்டகத்தின் வயிற்றிலிருந்தோ முளைத்த விதையின் சந்ததிகளாக இருக்கலாம்.

 

கதையைச் சொல்லி முடித்ததும் கஸ்வீனீ கேட்டார் (என் நினைவு சரியாக இருக்குமானால் அவர் முகத்தில் சோர்வு அகன்றிருந்தது)

’இந்தக் கதை உனக்கு யார் சொன்னது? எங்கு கிடைத்தது?’.

’கடைத்தெருவில், வியாபாரம் இல்லாத நேரங்களில் நாங்கள் சொல்லிக் கொள்ளும் கதைகளில் ஒன்றே இது’.

’ஐயா, ஒருவேளை இந்தக் கதையை நீங்கள் எழுதி யாராவது படியெடுத்தால் பிழை எழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா.  விதைகளை விழுங்கிய ஞானியின் கதை என்பதற்குப் பதிலாக விரைகளைத் தின்ற ஞானி என்று யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டு விடப் போகிறார்கள்.  என்னதான் இந்த இரண்டிலிருந்தே உலகம் பெருகியிருந்தாலும் பொருள் மாறிவிடுமல்லவா’.

 

அவனிடமிருந்து அவசரமாக விடைபெற்று வீடு நோக்கி நடந்தார்.  வீடு திரும்பி இபின்-சினாவின் நூல்களை வாசிக்கத் துவங்கினார்.   அவருடைய புத்தகம் எழுதி முடிக்கப்படும் வரை அவர் ஒருநாளும் சோர்வாகவும், பொருளற்றும் உணரவில்லை.  

 

 

 

அண்டை வீட்டுப் பெண் மிக்ஸி அரைக்கும் சத்தம் கேட்டு நான் கனவிலிருந்து கண் திறந்தேன்.   ஒருவழியாக கஸ்வீனீயின் முடக்கத்தை தீர்ப்பதற்கான யோசனை கிடைக்கவும், மத்தியகாலத்தில் ஓர் இரவில் எனத் தொடங்கி பாதியில் நிறுத்தியிருந்த கதையை எழுதி முடித்தேன்.  

 

இதை அசட்டுத்தனமாகக் கூட நீங்கள் கருதலாம், எனக்கென்னவோ தோன்றுகிறது, நான் வரைந்திருந்த சீமூர்க் பறவைதான் நான் கண்ட கனவை தன் அலகில் கவ்விக் கொண்டு எட்டு நூற்றாண்டுகளைக் கடந்து, வசிட் நகரில் ஒரு கடைக்காரனுக்கும், கஸ்வீனீக்குமான உரையாடலாக மாற்றியிருக்குமென்று.

***

– பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

The post சீமுர்க் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ் appeared first on வனம்.

  •  

ரம்போ – ப.தெய்வீகன்

(1)

தலைநகர் கன்பராவில் பெருமைக்குரிய சாவுகளின் நினைவாக வீற்றிருந்த ஆஸ்திரேலிய போர் நினைவுப் பேராலயம், அதி முக்கிய கௌரவிப்பு நிகழ்வொன்றுக்காக தயாரகிக்கொண்டிருந்தது. காலை வெயில் விழுந்து நினைவாலயத்தின் முன்கோபுர நிழல் பரந்த பச்சைப்புல்வெளியில் சரிந்திருந்தது. நாயை எதிர்பார்த்தபடி நானும் பேர்கஸனும் காத்திருந்தோம்.

ஈராக்கில் சித்திக் என்ற குறுநகரில் காலை நேர ரோந்துப் பணியின்போது வெடித்த கண்ணியில் படுகாயமடைந்தவன் பேர்கஸன். சிதறிய காலோடு இரத்தச் சகதியில் கிடந்தவனை, சக இராணுவத்தினர் இழுத்தெடுத்து, உயிர் கொடுத்ததோடு, நாடு திரும்பியவன். ஆறு ஆண்டுகளாக அன்பான அயலவன். சக்கர நாற்காலியையும் என்னையும் தவிர, நெருக்கமான உறவுகள் என்று அவனுக்கு யாரும் இல்லை.

சித்திரக்கற்களால் மடக்கி மடக்கிக் வேயப்பட்ட பென்னாம்பரிய அந்த நினைவுப் பேராலயத்தை பூமரக்கிளைகள் தழுவியபடி சரிந்திருந்தன. கிளைகளில் ஆங்காங்கே குமிழ்களாய் வெளித்தள்ளிய பொன்நிற மலர்கள், வெயில் கரைந்து உறைந்ததுபோல காட்சியளித்தன. நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் வெள்ளை வண்ண பிளாஸ்திக் கதிரைகளை நிரம்பியிருந்தனர்.

பாண்ட் வாத்திய ஓசை நினைவாலயத்தின் பின்பக்கமாகக் கேட்டவுடன், அரங்கிலிருந்தவர்கள் நிமிர்ந்து இருந்துகொண்டார்கள். சத்தம் ஆரோகணித்துச் சென்றது. நீல வண்ணச்சீருடையில் வாத்தியக்குழுவினர் அணிவகுத்தபடி மேடையை நோக்கி நகர்ந்துவருவது ரம்யமாகத் தெரிந்தது. வாத்தியக்காரர்களுக்குப் பின்னால், சாம்பல் வண்ண சீருடைகளில் இலட்சினை பொருத்திய படைத் தளபதிகள் ஊர்ந்து வந்தார்கள். அவர்களது நடையில் இராணுவ இறுக்கமும் பெருமையும் தெரிந்தது.

எல்லோரும் எழுந்து நின்று மதிப்பளித்தார்கள். பேர்கஸன் சக்கர நாற்காலிக்குள்ளிருந்து விழிகள் விரியப் பேரார்வத்துடன் எட்டிப்பார்த்தான். இறுதியாகக் கண்டுகொண்டோம்.

கழுத்தைத் தவிர மேனியெங்கும் கருமை படர்ந்த கொழுத்த நாய். அணிவகுப்பின் மத்தியில் இராணுவ வீரன் ஒருவனுக்கு அருகில் மிக நிதானமாக நடந்து வந்துகொண்டிருந்தது. தன்னைச் சூழக் கேட்டபடியிருக்கும் சத்தங்களுக்கு மிகவும் பழக்கமானதைப் போன்ற ஒத்திசைவான தோரணை அதன் மாபிள் கண்களில் தெரிந்தது. அவ்வப்போது கூட்டத்தை நிமிர்ந்து பார்த்தது. நடையில் கம்பீரத்தைக் காண்பித்தது.

பாண்ட் வாத்திய ஒலிகள் ஓய்ந்து, போர் வீரர்களை நினைவு கூரும் உரைகள் நிறைவடைந்தன. கௌரவிப்பு நேரம் ஆரம்பமானது. வெளிநாடுகளில் சென்று நேச நாட்டுப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட ஆஸ்திரேலிய வீரர்களின் பெருஞ்சாதனைளை தளபதி ஒருவர் பேசத்தொடங்கினார். சாதனைகள் நிகழ்த்தியவர்களின் பெயர்களை அவர் அரங்கதிரக்குறிப்பிட்டார். பின்னர், அந்தப் பெயர்களை அழைத்தபோது, இறுக்கம் குலையாத சீருடைகளுடன் வரிசையில் வந்த சேனாபதிகள் தங்களுக்குரிய இலட்சினைகளை வாங்குவதற்கு மார்பு புடைக்க நிமிர்ந்து நின்றார்கள். பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்துத்தினார்கள். மேடையின் ஓரத்தில் குந்தியிருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த எங்களது நாய், இப்போது தனக்கான நேரம் வந்துவிட்டதைப்போல முன்னாலிருந்த கூட்டத்தைப் பெருமையோடு பார்த்தது.

பல வண்ண இலச்சினைகள் தாங்கிய புதிய தளபதியொருவர் மேடையின் வலதுபுறமிருந்த ஒலிவாங்கித் தண்டின் முன்னால் வந்து நின்றார். கௌரவம் பெறவுள்ள பெருமதிப்புக்குரிய நாயின் சாதனைகளை வரிசைப்படுத்தினார். போர் நெடி கொண்ட மூன்று நாடுகளில் பணியாற்றியபோது, தன்னாற்றலால் கண்டுபிடித்த கண்ணிவெடிகள் என்ற நீண்ட கணக்கொன்றைச் சொன்னார். எதிரி நாட்டுக் கிளர்ச்சியாளர்களைக் கண்டுபிடிப்பதற்கு அந்த நாய் செய்த உதவிகளை கந்தக மணம் பறக்க விவரித்தார். விமான நிலையங்களில் அது முகர்ந்தறிந்த வெடிகுண்டுப் பொதிகள், போதைப்பொருள் பொட்டலங்கள் என்று அத்தனை சாதனைகளையும் மந்திரம்போலச் சொல்லிச்சென்றார். கரவொலி சூழ்ந்த மேடையின் நாயகனாய் அந்த நாய் நாணத்தோடு வாலைக் குழைத்தது. மாபிள் கண்கள் விரியச் சிரித்துக் குனிந்தது.

“தீர்மானித்துவிட்டேன். எனது நாயின் பெயர் ரம்போ” – உச்ச மகிழ்வில் என் காதருகில் வந்து சொன்னான் பேர்கஸன்.

தடித்த கருநீலத்துணியால் போர்த்திக் கழுத்தில் கறுப்புப்பட்டியணிந்து, மேடையின் மத்திக்கு அழைத்துவரப்பட்ட ரம்போ, அதற்கு முன்னர் அங்கு வந்த சகல படைத்தளபதிகளையும்போல மிடுக்கோடு நிமிர்ந்து நின்றது. ரம்போவுக்காக எல்லோரும் எழுந்து நின்று சிறப்பாகக் கரவொலி எழுப்பினர். அரங்கில் சத்தங்கள் பெருகப் பெருக ரம்போவின் கண்களில் பெருமகிழ்ச்சியின் அலைகள் திரண்டு தெரிந்தன. ரம்போவுக்கான பதக்கங்களை ஆஸ்திரேலியாவின் மூத்த படைத்தளபதிகளில் ஒருவர் முழந்தாளில் இருந்து அணிவித்தார். பதக்கங்களை சூடிக்கொண்ட ரம்போவிலும் இப்போது இராணுவ மிடுக்கொன்று தெரிந்தது.

(2)

போர் நிலங்களில் பணிபுரிந்த பெருமைக்குரிய நாய்களை, அவை ஓய்வுபெற்ற பின்னர் வீட்டுப்பிராணிகளாகத் தருவதற்கு ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்திருப்பதாக அறியக் கிடைத்தவுடன், அவ்வாறான அவ்வாறான நாயொன்றைத் தான் வாங்கப்போவதாக பேர்கஸன் என்னிடம் கூறியிருந்தான். ஆரம்பத்தில் அவனது விருப்பம் எனக்குள் மென்மையான ஆச்சரியத்தைத் தந்தது. தனிமையின் பேரழுத்தங்களினால் அவன் பீடிக்கப்பட்டு விட்டானா என்று யோசித்தேன். ஆனால், அவனுக்குள்ளிருந்த விருப்பம் வேறு பலதாயிருந்தது.

மூன்று மாங்களின் பிறகு நானும் பேர்கஸனும் கன்பராவிலுள்ள சிறப்பு விலங்குகள் காப்பகத்துக்குச் சென்றபோது ரம்போ சற்றுக்கொழுத்திருந்தது. கண்களில் பழைய மிடுக்குக் குறைந்து கனிவு தெரிந்தது. ரம்போவை அழைத்துச்செல்வதற்கான ஆவணங்களை அதிகாரி கார்லோஸிடம் பெற்றுக் கையெழுத்திட்டுக்கொடுத்தான் பேர்கஸன்.

போர் நிகழ்ந்த இடங்களில் பணி செய்து திரும்பிய களைப்பிலிருந்து ரம்போ முழுதாக மீளவில்லை என்று கூறி அதற்கான மாத்திரைகள் அடங்கிய குப்பியை கார்லோஸ் தந்தான். சிவப்புக் குப்பியிலுள்ள குளிசைகள் தீர்ந்த பிறகு, மெல்பேர்னில் எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்ற மருந்தக விவரங்களையும் அவர் குறித்துக் கொடுத்தான்.

“இன்றிலிருந்து இன்னொரு ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய படைவீரரும் உன் வீட்டில் வசிக்கப்போகிறார். அவரைக் கவனமாகப்பார்த்துக்கொள்” கார்லோஸ் சொன்னான்.

கார்லோஸின் குரலில் தெரிந்த கரிசனை எனக்குப்புரிந்தது. பேர்கஸனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்த கார்லோஸ், தனது பாதிச் சிரிப்பை எனக்கும் தந்தான்.

இறுதியில் ரம்போவை எங்களது காரின் பின் ஆசனத்தில் ஏற்றியபோது, அது காருக்கு மிகப்பழக்கமான பயணிபோல ஏறிக்கொண்டது. பின்ஆசனத்தில் அங்குமிங்குமாக தனது கொழுத்த உடலைப்புரட்டி விளையாடியது. முன் ஆசனத்தில் கால்களை வைத்து எழுந்து நின்று, தனது தலையைச்சரித்துவைத்து கண்ணாடி வழியாக வெளியே பார்த்தது. காரின் வாசனை அதற்கு மிகவும் பிடித்திருந்தது.

கன்பராவிலிருந்து மெல்பேர்ன் வரும்வரைக்கும், பேர்கஸன் நெடு வீதியையும் வாகனம் ஓட்டிய என்னையும் பார்த்ததைவிட, பின் ஆசனத்திலிருந்த ரம்போவைக் கவனித்ததுதான் அதிகம். நீண்ட சொந்தமொன்று தனக்குள் மீண்டது போன்ற நிறைவு அவன் மேனியெங்கும் பிரவாகித்து வழிந்தது.

(3)

எங்கள் வீட்டுக்கு அருகில் பாம்பு மலை என்ற விவசாய நிலங்களுடன் கூடிய பெருங்குன்று ஒன்றிருந்தது. அதன் அடிவாரத்தைச் சூழவும் சணல் வயல்கள் நிறைந்திருக்கும். அறுவடை முடிந்த பிறகு, அடிக்கட்டைகள் நிறைந்த பெரு நிலப்பரப்பு மஞ்சள் கடல்போலக் காட்சியளிக்கும்.

மாலை வேளைகளில் நாங்கள் ரம்போவை அழைத்துக்கொண்டு அந்த வயல் வெளிகளில் உலாவிவரலாமென்று பேர்கஸனும் நானும் புதிய ஒழுங்குமுறையொன்றைத் தீர்மானித்துக்கொண்டோம். மாத்திரைகளின் தூக்கத்தினால் நடுப்பகல் வரைக்கும் சோம்பல் வழிந்தபடி வீட்டின் ஒவ்வொரு மூலையாக குட்டி நித்திரையடிக்கும் ரம்போ, மாலையானதும் சுறுசுறுப்பாகும்.

பாம்பு மலைக்கு மிக அண்மையில் நீளமான நதியொன்று பரந்திருக்கும். பளபளக்கும் நீல நிறத்தில் பள்ளத்தில் தெரியும் அந்த நதி ரம்போவுக்கு மிகவும் பிடிக்கும். பெரு வெளிகளையும் நதியையும் கண்டவுடன் தன்னை அறியாமல் தனியாக ஓடத்தொடங்கும். தாவித் தாவி தரையை முகர்ந்து பார்க்கும். சில இடங்களில் கால்களால் நிலத்தைக் கிளறும். திடீரென்று சில இடங்களில் நிறுத்தி யோசிப்பதுபோல முகத்தைச் சரிக்கும். மீண்டும் வேகமாக ஓடும். ரம்போவின் சகல உடல்மொழிகளும் சாதாரண நாய்களைவிட மிகவும் வித்தியாசமானவையாகவே தெரிந்தன. அது என்ன சொல்ல வருகிறது என்பதைக் கலைத்து கலைத்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பது எமக்குப் பெரும் சவாலாக இருந்தது.

இதற்கிடையில் என்னுடைய அம்மாவின் தோழி ஒருத்தி வீட்டுக்கு வந்து சென்ற புண்ணியத்தில், ரம்போ ஈராக்கில் கண்ணிவெடியகற்றும் வேலையில் ஈடுபட்டது என்ற தகவல், அடுத்த தெருவிலிருந்த ஹாலிப் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. ஒரு நாள் வேலை முடிந்து வரும்போது ஹாலிப் தனது மகனோடு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான்.

ஹாலிப்பும் அவனது குடும்பமும் நான்கு வருடக் கடும்போராட்டத்துக்குப் பிறகு, ஈராக்கிலிருந்து வெளியேறி படகு வழியாக ஆஸ்திரேலியா வந்தவர்கள். அவர்களின் குடும்பத்தில் இருவர் உட்பட உறவினர்கள் பதினொரு பேர் ஈராக் போரில் இறந்துவிட்டார்கள். எங்கள் வீட்டிற்கு முன்னாலுள்ள பூங்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்திருந்த போதுதான் ஹாலிப்பினை முதன்முதலாகக் கண்டேன். பிறகு, அவ்வப்போது மாலையில் நான் பட்மின்டன் விளையாடப் போகும்போது தனது மகனோடு அங்கு வருவான். போர் தனது குடும்பத்தை தின்று சிதைத்த கதைகளைச் சொன்னான். அவனது இரண்டாவது மகளும் மனைவியின் தங்கையும் தனியாக இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தபோது, கண்ணிவெடியில் சிக்கிப் பலியான சம்பவத்தை ஒருநாள் கூறினான். போரின் சத்தங்கள் அடங்காத அவனது கண்களைப் பார்த்தேன். தனது மகளின் உடலின் எந்தப் பாகமும் எஞ்சவில்லை என்று என் கைகளில் தன் கைவைத்துச் சொன்னபோது, அவனது கைகளில் நான் உணர்ந்த நடுக்கம், எனது ஒவ்வொரு நரம்பிலும் பரவியோடியது.

“ஹலோ ஹாலிப் வாருங்கள் வாருங்கள்….”

ஹாலிப்பும் அவனது மகனும் ரம்போவைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்திருந்தார்கள். பேர்கஸன் வீட்டுக்குத் தங்களை அழைத்துப்போகும்படி கேட்டார்கள்.

அவர்கள் வந்திருந்த மாலை நேரம் ரம்போ எங்களுடன் பாம்பு மலைப்பக்கமாக வழக்கம்போல நடைபோவதற்கு மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்தது. ஹாலிப்பையும் மகனையும் கண்டவுடன் அதன் கண்களைவிட வால்தான் வேகமாகப் பேசியது. ரம்போவைக் கண்டதும் அதன் கண்களைப் பார்க்கும் ஏக்கத்துடன் ஹாலிப் தலையை அங்கும் இங்குமாகச் சரித்தான். தன் நாட்டைக் கண்டுவந்த தேசாந்திரியிடம் கதை கேட்கும் ஆர்வத்தோடு அவன் ரம்போவை அள்ளியணைப்பதற்கு அவசரப்பட்டான். ரம்போவுடன் ஒரு பிணைப்பு உருவாகியதுபோல அவனது முகத்தில் பல மின்னல் கொடிகள் தோன்றி மறைந்தன.

இந்தக்காட்சியை பேர்கஸன் தனது சக்கர நாற்காலியிலிருந்து கொண்டு கனிவோடு கண்டு களித்தான். ரம்போ தனது வீட்டுக்கு வந்த நாளிலிருந்து பேர்கஸின் முகத்திலும் பெரும் மலர்ச்சி தெரிந்தது.

“நாங்கள் ரம்போவுடன் வெளியே போகும் நேரம்தான், ஹாலிப் நீங்களும் வாங்களேன்”

ஹாலிப் மிகுந்த மகிழ்ச்சியோடு இணைந்துகொண்டான். ஹாலிப்பைவிட அவனது மகனோடுதான் ரம்போ நெருக்கமானது. ரம்போ முதலில் அவனது கால்களை முகர்ந்தது. அவன் குனிந்திருந்து ரம்போவின் தலையை வருடிவிட்டான். அவனது பிஞ்சு விரல்களின் ஸ்பரிஸம் ரம்போவுக்கு புதிதாயிருந்தது. கூச்சத்தில் அவனது கால்களை நக்கியது. பிறகு வழக்கம்போல சணல் வயல்களுக்குள் வேகமாக ஒடியது. வரம்புகளின் மீது துள்ளியெழுந்து புற்தரைகளில் விழுந்து, முடிகளை உதறியது. ஹாலிப்பின் மகன் ரம்போவின் சேட்டைகளைப் பார்த்துச் சிரித்தவாறே அதனைக் கலைத்துச் சென்றான்.

“இந்த நாட்டின் அடையாளம் கங்காரு. பண்ணைக்காரர்கள் என்றால் குதிரை. மாடு, ஆடு என்று எத்தனையோ வீட்டுப் பிராணிகள் உள்ளன. நாய் என்றாலும்கூட எத்தனையோ அழகான – பெறுமதியான – வீட்டுநாய்கள் வளர்ப்பதற்கு இங்கே இருக்கின்றன. போர் நிலத்து நாயை நீங்கள் வாங்கியிருப்பது புதிராக இருக்கிறது”

பேர்கஸனைப் பார்த்து ஹாலிப் கேட்டான்.

“நாங்கள் எல்லோரும் போரின் பிடியிலிருந்து அதிஷ்டத்தினால் தப்பிவந்தவர்கள் இல்லையா? மீண்டும் அந்தப் போரின் அடையாளமொன்றை வீட்டுக்குள் கொண்டுவந்து வைத்திருப்பது, எங்களது கெட்ட நினைவுகளை பாதுகாப்பதற்கு நாங்களே ஒரு பிரிட்ஜ் வாங்குவது போல் இல்லையா”

ஹாலிப் தனது சந்தேகங்களை சரை சரையாக கொட்டினான்.

“உண்மைதான் ஹாலிப். போர் முனையில் ஏதோவாரு ஒளி காத்திருப்பதாக எதிர்பார்த்தோம். ஆனால், இன்று இந்தநாட்டில் வந்திருந்து பார்க்கும்போதுதான் புரிகிறது, போர் என்பது உலகின் மிகப்பெரிய அவநம்பிக்கை. அதன் மீது நாம் வைத்திருந்த எதிர்பார்ப்புதான் உலகின் மிகப்பெரிய பொய். படையிலிருக்கும் யாருக்கும் அது புரியாது. அதுதான் போர் எமக்குத் தருகின்று போதை. அந்த அவநம்பிக்கையிலிருந்து மீண்டவர்கள் எல்லோரிலும் நான் என்னைப் பார்க்கிறேன். ரம்போ என்னைப்போன்ற எனக்கான அடையாளம்”

பேர்கஸனின் பதிலால் ஹாலிப்பின் முகம் ஆச்சரியமாய் மாறத்தொடங்கியது.

“உனது நாட்டினைக் கடைசியாகப் பார்த்து வந்த ஒரு நாயைக் காணவேண்டும் என்ற பேரார்வத்தோடு எப்படி ஓடிவந்தாயோ, அதுபோலத்தான்; இந்தப்போரை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் ஒருத்தனை – பழியுணர்ச்சியற்ற ஒருவனை – எத்தனை யுகத்துக்கும் போரை நிராகரிக்கும் ஒருத்தனை – பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எஞ்சிக்கிடக்கிறது. போருக்குள்ளிருந்து தப்பியோடி வந்தவர்கள்தான் போரிற்கான நிராகரிப்பை மீண்டும் மீண்டும் அழுத்தமாக உணரவேண்டும். இதோ பார்… எனது ரம்போவை…இது போருக்கு ஒட்டுமொத்தமான எதிரி. யார் புதைத்துச் சென்றாலும் கண்ணிவெடியைக் கண்டுபிடித்துக் கிளறச் சொல்லும். யார் வெடிகுண்டோடு நின்றாலும் முகர்ந்துபிடித்து செயலிழக்கச் சொல்லும். ரம்போ போரின் தூய எதிரி. எனக்கு இந்த நாய்கள் மீது பல ஆண்டுகளாக ஏற்பட்ட ஈர்ப்பும் நேசமும் எத்தகையது என்பதை இந்த நாய்களிடம் சொல்லக்கூட என்னால் முடியவில்லை என்பது ஒன்றுதான் எனக்குள்ள கவலையே தவிர, ரம்போ எனக்குக் கிடைத்திருப்பது, எனக்குள்ளிருக்கின்ற குற்ற உணர்வை கொஞ்சமாவது தணிக்கிறது ஹாலிப்”

பேர்கஸன் சொல்லிமுடிக்கவும், நாங்கள் பாம்பு மலைக்கு மிக அருகாமையில் வந்துவிட்டிருந்தோம். மேற்குச் சூரியன் தன் செங்கரங்களால் நதி நீரில் கோலம்போடத் தொடங்கியிருந்த நேரம். ரம்போ வழக்கம்போல நதியின் ஓரங்களை முகர்ந்தபடி ஓடிக்கொண்டிருந்தது. வயல்களுக்கு நீர் இறைப்பதற்காகக் கட்டிய வரிசையான வாய்க்கால் கற்களில் ஒன்றின் மீதிருந்து ஒன்றுக்குப் பாய்ந்து பாய்ந்து, நீரில் தன் முகம் பார்த்தது. தன் காதுகளின் அருகில் கட்டளைகள் கேட்காத வித்தியாசத்தை அவ்வப்போது உணர்ந்துகொள்வதும் திரும்பிப் பார்ப்பதுமாகப் பதகளித்தது. ரம்போவிற்கு எங்களுடனான நடைபயணம் தினமும் புதிதாக இருந்தது.

ஹாலிப்பின் மகன் “ரம்போ…..ரம்போ…..” – என்று கத்தியபடி அதனைத் தன் பிஞ்சுக்கால்களால் துரத்திக்கொண்டிருந்தான்.

(4)

நான்கு மாதங்களில் ரம்போ பேர்கஸன் போல என்னுடனும் மிகவும் நெருக்கமாகிட்டான். காலையில் எழுந்தவுடன் மாத்திரை, அதன் பிறகு அவனுக்காக கட்டப்பட்ட அலுமீனியக் கூட்டுக்குள் மீண்டும் நுழைந்திருந்து நீண்ட நித்திரை. அன்றாட ஆகாரங்களில் குறைச்சலில்லை. வதக்கிய கோழி மற்றும் முயல் இறைச்சி போன்றவற்றை இரண்டு மூன்று நாட்களுக்கொரு முறை பேர்கஸன் முறையாகச் சமைத்துப் பரிமாறினான். மதியத்திற்குப் பிறகு இன்னொரு மாத்திரை. மாலையில் நான் வேலைவிட்டு வந்தபிறகுதான், ரம்போவின் அன்றைய நாளே உற்சாகமாக ஆரம்பமாகும்.

ரம்போவுக்கு ஒரே மாதிரியான கால அட்டவணைக்குள் தன்னைப் பொருத்திக்கொள்வதற்கும் அதற்குரிய கட்டளைகளை பேர்கஸினிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் பிடித்திருந்தது. அதனை அது நிதானம் தவறாமல் பின்பற்றியது. நித்திரையற்ற நேரங்களில் ரம்போ அதிக சத்தத்தை விரும்பியது. பாம்புமலைப் பக்கம் கூட்டிச்செல்கின்றபோதெல்லாம், வெட்டவெளியில் வீசுகின்ற காற்றுச் சத்தம்கூட ரம்போவுக்குள் ஏதோவொரு வழமை உணர்வை ஏற்படுத்தியது. ரம்போவை நோக்கி தொடர்ச்சியாக அதன் பெயரை நான் அழைத்தாலோ, பெரிய சத்தத்தில் கூவினாலோ அது ஏக மகிழ்ச்சியில் தன் உடலை உதறியபடி புற்தரையில் புரண்டு எழும்பும். உடல்மொழிகளின் ஊடாக தனக்குத் தேவையானதை எனக்குக் குறிப்புணர்த்துவதில் ரம்போவுக்கு பெரும் திருப்தியிருந்தது.

ஆனால், அன்று இரவு –

கூட்டுக்குள்ளிருந்த ரம்போ பெரிய சத்தத்தில் குரைக்கத் தொடங்கியபோது நானும் அம்மாவும் அதிர்ந்துபோனாம். படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து நேரத்தைப் பார்த்தபோது இரவு ஒரு மணியாகியிருந்தது. ரம்போவை அடைத்துவைத்த அலுமீனியக் கூட்டுப்பக்கமாகக் கேட்ட பெரும் ஊளைச் சத்தம் எங்கள் இருவருக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தியது. ரம்போ இதுவரைக்கும் எழுப்பியிராத பெரும் சத்தம் அது. ரம்போவின் சத்தம்தான் என்று நம்புவதற்கே எனக்குப் பெரும் குழப்பமாகவிருந்தது. ரம்போவின் கூட்டுக்குள் ஏதூவது நுழைந்துவிட்டதால், அச்சத்தில் குரைக்கிறதா என்று முதலில் நினைத்தேன். பின் தாழ்வார வெளிச்சத்தைப் போட்டபோது, பேர்கஸனும் எழுந்து தனது சக்கரநாற்காலியுடன் கூட்டுப்பக்கமாக வந்துவிட்டான். எங்கள் வீட்டின் பின் வீட்டிலிருப்பவர்களும் பக்கத்து வீட்டார்களும் ஏற்கனவே ரம்போவின் சத்தத்திற்கு எழுந்துவிட்டார்கள் என்பது புரிந்தது. ரம்போ விடாது குரைத்துக்கொண்டிருந்தது.

“பசிபோல இருக்குது, குசினியில கோழி எலும்புகள் கொஞ்சம் கறியோட கிடக்குது. கூட்டுக்குள்ள வச்சுவிடு”

அரை நித்திரையில் அம்மா ஆலோசனை சொன்னார்.

அலுமீனியக் கூட்டுக்கு அருகில் சென்ற எனக்கு, ரம்போவின் இரண்டு கண்களும் மினுங்கும் குருதிக்கோளங்களாக அச்சமூட்டின. ரம்போவை நான் பார்த்தபோது தனதுடலில் தணல் விழுந்ததுபோலக் குரைத்தது. அந்தக்கூட்டின் அலுமீனியத் தடிகளைத் தனது கூரான பற்களால் கடித்தபடி என்னை மிரட்டியது. நான் கூட்டுக்கு அருகில் செல்லச் செல்ல அதன் குரைப்பொலி முன்பைவிட அதிகரித்தது. என்னையும் பேர்கஸனையும் கர்ஜனையோடு பார்த்தது. என்னைவிட பேர்கஸன் அதிகம் பயந்திருந்தான். பக்கத்து வீட்டில் தூக்கம் கலைந்த குழந்தையொன்றின் நீண்ட அழுகையொலி, ரம்போவின் குரைப்புக்கு மேல் கேட்டது. ரம்போ தனது கூட்டுக்குள் அங்குமிங்குமாக நடந்து தனது உடலைப்புரட்டிக் குரைத்துக்கொண்டிருந்தது. எந்தக் கணத்திலும் உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடக்கூடும் என்ற பெரும் பீதி என் தலையைப் பிரித்தது.

“ஏன் இன்னும் குலைக்குது? சாப்பாடு வச்சனியே”

அம்மாவின் கேள்விகளுக்கு பதில் வழங்கமுடியாமல், எனது நா தடுமாறியது.

“நேற்றுத்தான் ரம்போவுக்கான மாத்திரை முழுவதுமாகத் தீர்ந்திருந்தது. அதனைக் கார்லோஸிடம் அழைத்துச் சொன்னபோது, “நான்குமாதங்களாகிவிட்டன, இனிமேல் மாத்திரைகளை முற்றாகத் தவிர்க்கலாம்” என்று அவன் சொல்லியிருந்தான். ஆனால், மாத்திரை உட்கொள்ளாத முதல்நாளே ரம்போவுக்குள் இவ்வாறு பெரும் மாற்றங்கள் வெடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை”

பேர்கஸன் பரிதாபமாகச் சொன்னான்.

அடுத்த தெருவிலுள்ள வீடுகளிலும் வெளிச்சங்கள் தெரியத்தொடங்கின. யாராவது பொலீஸிடம் சொல்வதற்கு முன்னர், நாங்களே அழைத்து முறைப்பாடு செய்யலாமா என்று அம்மாவும் நானும் யோசித்துக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில், அம்மா சாமியறையில் வைரவர் படத்துக்கு முன்னால் தீபத்தை ஏற்றிவைத்து “காக்க காக்க கனவேல் காக்க” – என்று நடுங்கும் குரலில் கந்த சஷ்டிக் கவசத்தை முணுமுணுக்கத் தொடங்கினார். இன்னும் சற்றுப் பொறுக்கலாம், ரம்போ களைத்துப் படுத்துவிடுவான் என்று வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நான் நடந்துகொண்டிருந்தேன். எனக்கு கால்களின் வழியாக பயக்குளிர் ஏறிக்கொண்டிருந்தது.

“நாய் கூட்டுக்குள்ள கொஞ்சத் திருநீறு போடுவமே தம்பி…வைரவர் வாகனம் சொன்னது கேக்கும்…..”

எனது முகத்தில் தெரிந்த பதில் ரேகைகளைப் புரிந்துகொண்டு, அம்மா திரும்பவும் சாமியறைக்குள் போய்விட்டார்.

மூன்று மணி நேரப் பொறுமையின் பின்னர், காலை நேரக் குருவிச் சத்தங்களும் வாகன ஒலிகளும் கேட்கத்தொடங்கின. ரம்போவின் குரைப்பொலி அடங்கியது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அலுமீனியக்கூட்டுக்குள் சிறிய அனுங்கல் ஒலி கேட்டுக்கொண்டேயிருந்தது. பின்னர் தூங்கிவிட்டது.

நாயின் சத்தம் அடங்கும்வரைக்கும் காத்திருந்தவர் போல அம்மா தொடங்கினார்.

“தேவையில்லாத கோதாரி வேலை தம்பி இது. ஊர் பேர் தெரியாத நாய வீட்டுக்குள்ள கொண்டுவந்து வச்சுக்கொண்டு பெரிய தலையிடியப்பா. நாளைக்கே ரெண்டுபேருமா போய் அவங்களிட்டத் திருப்பிக் குடுத்துப்போட்டு வாங்கோ….”

தூக்கம் கலைந்த சினம் அம்மாவை உலைத்தது. தனது காலை நேர வேலைகளுக்கு ஒத்திசைவாக ரம்போவை வைது தீர்த்தார்.

(5)

பெருங்குற்ற உணர்ச்சியில் உடைந்துகிடந்த பேர்கஸனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவன் இரண்டாம் தடவையும் போரினால் காயமடைந்ததைப்போல மிகவும் உடைந்து போயிருந்தான்.

வேலைக்கு அழைத்து லீவு சொன்னேன். கன்பரா அரச அலுவலகங்கள் ஒன்பதுமணிக்குத்தான் திறக்கும். காத்திருந்து கார்லோஸிற்கு அழைப்பெடுத்தேன்.

“போர் நிலங்களில் பணிபுரிந்த நாய்கள் சத்தங்களுக்குப் பழக்கப்பட்டவை அவற்றின் காதுகளில் ஏதாவதொரு சத்தம் விழுந்து கொண்டேயிருக்கவேண்டும். எந்த ஒலிகளுமில்லாத இரவுகள் இந்த வகை நாய்களுக்கு மிகுந்த ஒவ்வாமை மிக்கவை. அதற்காகத்தான் இவற்றுக்கு மாத்திரைகள் கொடுத்து, வீட்டு விலங்குகளாக மாற்றி, உங்களுக்குத் தருகிறோம். ஆனால், இவ்வளவு மாதங்களுக்குப் பிறகும் ரம்போ உங்களுக்குச் சிக்கல் கொடுக்கிறது என்றால், நீங்கள் திரும்பவும் மூன்று நேர மாத்திரைகளை கொடுக்கத் தொடங்குங்கள். நாயினால் ஆபத்து தொடரும் என்று நீங்கள் கருதினால், மீண்டும் கன்பராவுக்குக் கொண்டுவாருங்கள்”

கார்லோஸ் இது குறித்து முன்பே சொல்லியிருந்தபோதும், அதன் நீண்ட விளைவுகள் இவ்வளவு பயங்கரமானவை என்று பேர்கஸனோ நானோ உணர்ந்திருக்கவில்லை.

ரம்போவுக்கான மாத்திரையை வாங்குவதற்கு வெளியே போய்வந்தபோது, அம்மா வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார். முன்வீட்டு மஸிடோனியன்காரனும் பக்கத்துவீட்டு ஆஸ்திரேலியனும் நான் இல்லாத நேரத்தில் பேர்கஸினிடம் வந்து ரம்போ பற்றிய முறைப்பாட்டினை கடுமையாகச் சொல்லியிருக்கிறார்கள். அம்மா ஆங்கிலத்தில் தனக்கு விளங்கியதை கோர்த்து வைத்து எனக்குச்சொன்னார். புதிதாக வாங்கிய நாய் என்றும் திருப்பிக்கொடுக்கப்போவதாகவும் அவர்களிடம் உறுதியளித்து பேர்கஸன் அவர்களை மன்றாடி அனுப்பிவைத்திருக்கிறான்.

வீடு திரும்பிய என்னிடம், “அவகாசமே வேண்டாம், நாயைக் கன்பராவுக்குத் அனுப்பிவிடுவோம்” என்று பேர்கஸன் குரல் தழுதழுக்கச் சொன்னான். மாற்று மார்க்கமோ மாத்திரை மார்க்கமோ வேண்டாம் என்பதில் பேர்கஸன் உறுதியாயிருந்தான். தான் வெறுக்கும் போரின் சிறுபொறியொன்றை தானே மூட்டிவிட்டதைப்போல அச்சம் அவனது விழிகளில் விம்மியது.

காலை தூக்கத்திலிருந்து எழுந்து, கூட்டுக்குள்ளிருந்து எங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரம்போவைப் பார்த்தேன். எதுவுமே நடக்காததுபோல வாலைக்குழைத்தது. சிறு ஒலிகளை எழுப்பி அலுமீனியத் தடிகளின் வழியாக செல்லம் கொஞ்சியது. எனக்குக் கூட்டைத் திறப்பதற்கு அச்சமாக இருந்தது. முதல் நாளிரவு சுற்றுவட்டாரமும் பட்டபாடுகள் இன்னமும் நினைவில் அகலவில்லை.

வேலைக்குப் போகாத எனது காரினை வீட்டின் முன் கராஜில் கண்டுகொண்ட ஹாலிப், மதியமளவில் ஐந்தாறு நண்பர்களுடன் வந்தான். ரம்போவின் முன்னிரவு அட்டகாசங்கள் அடுத்த தெருவுக்கும் எட்டிவிட்டதா என்ற ஆச்சரியத்தோடு அவனை வரவேற்றேன். ஹாலீப்போடு வந்தவர்கள் பேர்கஸன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஈராக்கியர்கள். தங்களது நாட்டில் வேலை செய்துவிட்டு வந்திருக்கும் ரம்போவைப் பார்க்கவேண்டும் என்று வந்திருப்பதாக ஹாலிப் கூறியபோது எனக்கு நெஞ்சுக்குள் குளிர் குழாயொன்று வெடித்தது போலிருந்துது.

ஹாலிப்பிடம் முதல்நாளிரவு நடந்தவற்றைச் சொன்னேன். அதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்கினேன். நான் கூறிக்கொண்டிருக்கும்போதே, அவன் வந்தபோதிருந்த பூரிப்பு முகத்திலிருந்து மறைந்தது. தனது நிலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சக அகதி மீதான கவலையும் பரிவும் அவனுக்கு ரம்போ மீது எழுந்ததை உணரமுடிந்தது. கண்கள் கலங்கினான். அவன் ரம்போவில் அதிகம் உரிமைகொள்வது எனக்குப் புதுமையாயிருந்தது.

“உங்களுக்கு இது புதிததாக இருக்கலாம். இந்தப் பிரச்சினை என்னுடைய மகளுக்கும் பல காலமாக இருந்தது. அவள் பிறந்ததிலிருந்தே யுத்தச் சத்தங்களைக் கேட்டுக் கேட்டு, சதைகளைவிட சத்தங்களால் வளர்ந்தாள். இங்கு வந்த பிறகு, நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இது மனச்சிதைவு என்று கண்டுபிடிப்பதற்கே மருத்துவர்களுக்குப் பலகாலமானது நண்பனே. எத்தனையோ மாத்திரைகள், எத்தனையோ தடவைகள் வைத்தியசாலையில் அனுமதித்து மேற்கொள்ளப்பட்ட தூக்கச் சோதனைகள் என்று சில மாதங்களுக்கு முன்னர்தான், சத்தங்கள் இல்லாமல் எனது மகள் தூங்குகிறாள்”

அவன் சொல்லி முடிக்கும்போது எனக்கு கண்கள் இருண்டன. முதல் நாளிரவு அலுமீனியக் கூட்டுக்குள் தெரிந்த நெருப்புக்கோளங்கள் போன்ற ரம்போவின் விழிகள், மூளையின் எல்லா நரம்புகளிலும் மின்னுவது போலிருந்தது.

(6)

கன்பராவிலிருந்து மெல்பேர்னுக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், விலங்குகள் காப்பு அமையத்திலிருந்து நான்கு விசேட அதிகாரிகள் பச்சை வண்ண வாகனத்தில் பேர்கஸன் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் உத்தரவின்படி நாங்கள் ரம்போவின் கூட்டினை இரண்டு நாட்களாகத் திறக்கவில்லை. மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து குவளையில் வைத்து, கூட்டுக்குள் தள்ளிவிட்டிருந்தோம்.

ரம்போவைத் திரும்பக்கொடுக்கப் போகிறோம் என்ற தகவலறிந்து ஹாலிப் காலையிலேயே தனது முழுக்குடும்பத்துடன் பேர்கஸன் வீட்டுக்கு வந்திருந்தான். அவனது நண்பர்களும் கூடவே வந்திருந்தார்கள். பேர்கஸன் வீட்டிற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த விலங்குகள் காப்பு மையத்தின் வாகனத்தைக் கண்டு, அப்பகுதியால் நடை சென்ற பலர், வந்து புதினம் கேட்டார்கள். ஹாலிப்பின் நண்பர்கள் வாசலில் நின்று விளக்கம் சொன்னார்கள். அவர்கள் ஆச்சரியமாக, ‘நாங்கள் செய்வது சரிதான்’ என்ற முகக்குறிகளோடு தலையாட்டிச் சென்றார்கள்.

பேர்கஸன் வீட்டின் பின்பக்கமாக தங்களது தடித்த கம்பிக்கூட்டோடு சென்ற அதிகாரிகள், ரம்போவினைப் பாதுகாப்பாக தங்களிடம் எடுத்துக்கொண்டார்கள். பின்னர் வாகனத்தில் கொண்டுவந்து ஏற்றினார்கள். ஹாலிப்பின் நண்பர்கள் அப்போதுதான் ரம்போவைப் பார்த்தார்கள். அவர்கள் தங்களை அறியாமலேயே “ரம்போ….ரம்போ…” – என்று அழைத்தார்கள். ரம்போ அவர்களின் சத்தங்களினால் மிகுந்த பரவசமடைந்தது. அந்தக்கூட்டத்தில் என்னையும் பேர்கஸனையும் தேடியது. என்னைக் கண்டவுடன் வேகமாக வாலை ஆட்டியபடி தடித்த கம்பிக்கூட்டுக்குள் உடலைப்புரட்டி செல்லம் பொழிந்தது.

எப்போதும் எழுப்புகின்ற விநோத ஒலிகளினால் சமிக்ஞை தந்தது. என் விழிகள் கண்ணீரால் நிரம்பியது. ரம்போ மங்கலாகவே தெரிந்தான்.வெளியில் வரவிரும்பாத பேர்கஸன் வீட்டின் முன்னறையில் சக்கர நாற்காலியிலிருந்து அழுத சத்தம் வெளியிலும் கேட்டது.

வாகனம் புறப்படத்தயாரானது. ஹாலிப் என் தோள் மீது கைபோட்டு அருகில் வந்து நின்றான். பெரும் கூட்டத்ததையும் சத்தங்களையும் சீருடை அணிந்த அதிகாரிகளையும் கண்ட ரம்போ மிகுந்த மகிழ்ச்சியில் கூட்டுக்குள் துள்ளிக்குதித்தது. கேட்டால் எதையும் செய்யத்தயார் என்பதுபோல அங்குமிங்குமாய் உடலை வளைத்தது.

மெது மெதுவாக ஊர்ந்துகொண்டு எங்கள் தெருவினால் ஓடத்தொடங்கிய வாகனத்தின் பின்னால், ஹாலிப்பின் மகன் “பாய்….பாய் ரம்போ….” என்றபடி ஓடி ஓடி வழியனுப்பினான்.

 

முற்றும்

***

1

The post ரம்போ – ப.தெய்வீகன் appeared first on வனம்.

  •  

கிஷ்ணா – சுஷில் குமார்

​​​​​கிஷ்ணா

“எட்டி, என்ன? வேலையா இருக்கேன், திரும்ப கூப்டவா?”

“இரிங்கப்பா, என்னால முடியல.. ஒங்க பிள்ளய வந்து கூட்டிட்டுப் போங்க. சொன்னோடி ஒன்னும் கேக்க மாட்டுக்கா.”

“இப்போ என்ன.. வந்து ஒரு மணிக்கூர் கூட ஆகல!”

“இடுப்ப விட்டு எறங்க மாட்டுக்கா. ஒரே அடம்.. என்ன வேணும்னு கேட்டா, கிஷ்ணா கிஷ்ணான்னு ஒரே அழுக..”

“அது செரி. அவ்ளோதானா? அது நம்ம கதையோட எஃபக்டாக்கும்?”

“ஒங்க வேலதானா? அப்போ நீங்களே வந்து ஒங்க மகள சமானப் படுத்துங்கோ.”

“அப்பா, அப்பா, கிஷ்ணா, கிஷ்ணா” என அலறல் சத்தம்.

“இரிட்டி, இந்தா ஒங்கப்பாட்ட பேசு.. இந்தா.. இந்தா..”

“மக்ளே, என்ன வேணும் பிள்ளக்கி? அழாமச் சொல்லு பாப்பம்.. குட் கேள் லா?”

“கிஷ்ணா வாணும்.. கிஷ்ணா வாணும்…”

“செரி மக்ளே.. அப்பா சாய்ந்தரம் வந்து கிஷ்ணா கத சொல்லுகேன் செரியா? நீ குட் கேளா அழாம இருப்பியா?”

“பேட் கேள்.. பேட் கேள்…”

“நோ, நோ… செல்லக்குட்டி குட் கேளாக்கும்.. தெரியுமா?அப்பா சாய்ந்தரம் வந்து ஒரு சர்ப்ரைஸ் தருவேனே..”

அழுகை அடங்கியது.

“அம்மா, அப்பா சப்பீஸ் சொல்லுகா… சப்பீஸ்.. சப்பீஸ்…”

இன்னும் இருபது நிமிடங்களில் ஆண்டறிக்கை சமர்ப்பித்து முடித்தால் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு நல்லதொரு தேநீருக்குச் செல்லலாம் என நினைத்தேன். பத்து நிமிடங்களில் மறுபடியும் அழைப்பு.

“எட்டி, கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாம இரியேன். நா முக்கியமான மீட்டிங்க்கு போப்போறேன். வந்து கூப்டுறேன்..”

“டேய், என்னன்னு கேளுங்க.. ஒரு நிமிசம்…”

“சட்டுன்னு சொல்லு, என்ன?”

“உங்க ஆஃபீஸ் பக்கத்துல நெறைய மயில் உண்டும்லா?ஒரு மயிலிறகு எடுத்துட்டு வாங்கலாம்டே.. ப்ளீஸ்…”

“மயிரு.. வைட்டி ஃபோன.. நேரங்காலம் தெரியாம கொஞ்சிட்ருக்கா..”

குளுகுளு அறைக்குள் சிறு புழுக்கம்.

“பாரதி, ரிப்போர்ட்லாம் ஓகே தான். ஆனா, ஒன்னு நீங்க யோசிக்கணும்…”

“சொல்லுங்க சார்..”

“லிசன்.. உலகம் எங்கயோ போய்ட்ருக்கு…. சரி, அப்பிடி வேணாம்…. வேற மாதிரி வரேன்… இப்போ ஒரு டிரெயின்ல போறோம்னு வைங்க…”

‘சரித்தான், ஆரம்பிச்சுட்டான்டா. எவ்ளோ ட்ரெயின் ஓடுது. இவன…’

“யெஸ் சார்.”

“பொறப்பட்ட ஸ்பீட்லயே போய்ட்டே இருக்காம்னு வைங்க. ஹவ் வில் யு ஃபீல்?” என்று கேட்டபடி என் முகத்தைப் பார்த்து உடனடியாக பதில் வேண்டும் என்பதைப் போல சைகை செய்தார்.

“புரியுது சார்..”

“சொல்லுங்க பாரதி. உங்களுக்கு அந்த ட்ரெயின் ஜர்னி எப்பிடி இருக்கும்? போரடிக்காதா? கடுப்பாக மாட்டீங்களா?யு ஹேவ் நோ டைம் டூ ஸ்டேண்ட் அண்ட் ஸ்டேர், இல்லையா? ”

“கண்டிப்பா சார்.”

“அப்பிடின்னா உங்க மனசுல என்ன தோணும்?”

‘உன் மண்டைல என்ன தோணுமோ அதுதான்டா எனக்கும் தோணும். ஏதோ வானத்துலந்து வந்து குதிச்ச மாதில்லா சீன் போடுகான்.’

“லிஸன், ரொம்ப ஈஸி…  உலகத்துல எல்லாவனும் இப்போ எப்பிடி யோசிக்றானுங்க.. அப்பிடி யோசிங்க..பதில் கெடைக்கும்.”

“சரி தான் சார். ஏந்தான் இப்பிடி உருட்டுகானோன்னு யோசிப்பேன்..”

“எக்ஸாக்ட்லி.. யு ஆர் மை பாய்… அப்பிடின்னா, உலகம் போற வேகத்துக்கு ஈடு குடுக்கணும்னா நம்ம இங்க என்ன யோசிக்கணும்? நீங்களே சொல்லுங்க பாப்போம்…”

‘உலகம் நல்லா இருக்கணும்னா ஒன்ன மாதிரி ஆளுங்கள நிக்க வச்சி சுடணும். சரிதான!’

சட்டென அலைபேசி அலற அமைதிப்படுத்தினேன். அடுத்த நொடியே மீண்டும் அலறல். தொடர்ந்து ஐந்து முறை. கொஞ்சம் பொறுமையிழந்தவராய், “நீங்க கால் எடுக்கணும்னா எடுத்துட்டு வாங்களேன் பாரதி. நா வெயிட் பண்றேன்.. இட்ஸ் ஆல்ரைட்..” என்றார்.

“நோ சார். வைஃப் தான். அப்றமா பேசிக்றேன்..”

“ஹே, இல்ல மேன்.. வைஃப்னா கண்டிப்பா பேசிடணும். வைஃப் தானே உலகமே நமக்கு. பேசிட்டு வாங்கோ…நாம கொஞ்சம் டீப்பா பேச வேண்டியிருக்கு.. முடிச்சிட்டு வாங்கோ…”

“ஓகே சார். ஜஸ்ட் டூ மினிட்ஸ்..”

“ஒனக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாதா? பாஸ் கூட மீட்டிங்க்ல இருக்கேன். அவரு நக்கலா போய் பேசிட்டு வாங்கோன்னு சொல்லுகாரு…”

எதிர்ப்புறம் சிணுங்கல்.

“என்ன இப்போ?”

“எனக்குக் கழியாம இருக்குன்னு தான கூப்டேன். இவள இடுப்புல வச்சிட்டே எப்பிடி கறி வைக்கது? தொட்டில்ல போட்டாலும் கெடக்க மாட்டுக்கா. கிஷ்ணா, கிஷ்ணான்னு… நானும் ஃபோன்ல வீடியோ போட்டுக் குடுத்தாச்சு. அதத் தூக்கி எறிஞ்சு இன்னா க்ராக் விழுந்துட்டு..”

“ஆமா, ஒனக்கு ஃபோன் வாங்கித் தரதுக்கே நா தனி வேலைக்குப் போணும்… இதோட அஞ்சு ஃபோன் ஆச்சுல்லா? செரி, விடு.. இப்ப என்ன? ஒறங்கிட்டாளா?”

“மடிலயே கெடக்கா. ஒறங்கல. நீங்க அவட்ட சொல்லுங்க..”

“மக்ளே, பிள்ள கொஞ்ச நேரம் ஒறங்கு. அப்பா ரெண்டு சர்ப்ரைஸ் கொண்டு வருவேன், செரியா?”

“அப்பா… கிஷ்ணா, கிஷ்ணா…”

“செரி, கிஷ்ணா கத அம்மைட்ட சொல்லச் சொல்லுகேன் செரியா?”

“அம்மா, கிஷ்ணா, கிஷ்ணா…”

“எட்டி, கிருஷ்ணன் கதை ஏதும் சொல்லு. பிள்ள தூங்கிருவா.. நா லஞ்ச்ல கூப்டுகேன். ஒரு ஒன் அவர் கூப்டாத. வலிக்கின்னா பெயின்கில்லர் போட வேண்டியதான?”

பதிலின்றி துண்டிப்பதில் அவளுக்கு என்னதான் கிடைக்குமோ! எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியது நான்தான். எல்லாவற்றிற்கும் தீர்வு குடுக்க வேண்டியதும் நான்தான். என்ன நியாயம் இது?

“ஸோ, சொல்லுங்க பாரதி… ட்ரெயின்ல என்ன எதிர்பாப்பீங்க?”

‘டேய், நீ இன்னும் அதே ட்ரெயின்லதான் இருக்கியா? ஒனக்கெல்லாம் ஏன்டா வீட்லருந்து கால் வர மாட்டுக்கு?ஆமா, சனியன் தொலஞ்சு போட்டும்னு இருக்கும் போல அந்தம்மா. நீ எதுக்கெடுத்தாலும் உலகம் எங்க போகுதுன்னு தூக்கிட்டு வந்துருவேல்லா.. சை.. அண்ணன் படிச்சுப் படிச்சு சொன்னான், மீன் யாவாரத்த எக்ஸ்பேண்ட் பண்ணுவம்லன்னு… கொழுப்பெடுத்துப் போயி ஊர விட்டு வந்தம்லா.. எனக்குத் தேவதாம்…’

“சார், உங்க பாய்ண்ட் புரியுது. நாம இன்னும் வேகமா ஓடணும்னு சொல்ல வறீங்க..”

“குட்.. ஆனா, அது மட்டுமில்ல..”

“எஸ் சார்.. எஸ்..”

“வேற என்ன செய்யணும்? யோசிங்க… நான் என்ன நினைக்கிறேன்னு சரியா சொல்லுங்க பாக்கலாம்.”

‘நீ என்னடா யோசிக்கப் போற? எப்பிடி செலவக் கொறைக்கலாம், எவன வெளிய அனுப்பலாம்னு தான் யோசிப்ப. மண்டையன்.’

முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு யோசிப்பதைப் போல நடிப்பது பழகிய விசயம் தான்.

“சார். செலவு கொஞ்சம் ஓவரா தான் இருக்கு. என்ன பண்ணலாம்னு யோசிக்கணும்.”

“அதேதான்.. என்ன பண்ணலாம் சொல்லுங்க.”

“நீங்க என்ன நினைக்கிறீங்க சார்?”

“நான் சொல்றேன். ஆனா, இத எப்பிடி ஹேண்டில் பண்றதுன்னு நீங்க தான் யோசிக்கணும்.”

“நிச்சயமா சார்.. சொல்லுங்க.”

நீண்ட கலந்துரையாடலிற்குப் பிறகு நினைத்தபடியே அந்த முடிவில் வந்து நின்றார். என் அலைபேசியில் மீண்டும் பல அழைப்புகள் வந்திருந்தன.

“சரி, அப்போ அப்பிடியே பண்ணலாம். எவன தூக்கலாம்னு ஒரு லிஸ்ட்ட போடுங்க.. ஒரு மெமோ குடுப்போம். அடுத்த மாசம் ரிலீவ் பண்ணி விடுவோம்.. இவனுக பண்ற வேலைய இப்போ AI-லயே பண்ணிரலாமே. உலகம் எங்கயோ போய்ட்டு இருக்குல்லா? இன்னும் அதே ஓல்ட் சிஸ்டத்தவச்சிக்கிட்டு ஓட்ட முடியாது, ரைட்? அப்றம் எதுக்கு இவனுக, என்ன?”

“எக்ஸாக்ட்லி சார்..”

‘நீ மட்டும்தான் சொல்லுவியா மேன்.. எக்ஸாக்ட்லி… எக்ஸாக்ட்லி… உலகம் போற போக்குல…’

யாரை எப்படி அனுப்புவது என்று முடிவெடுப்பது ஒரு கொடுமையான காரியம். எல்லாரும் நானே பார்த்துப் பார்த்து வேலைக்கு எடுத்தவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உச்சமாக இருக்கும். ஒட்டு மொத்தத்தில் நல்லவொரு அணி. இதைக் கலைத்துப் போட்டு ஒரு ஆட்டம் ஆட வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு போராட்டம்தான்.

“எப்பா, உங்களுக்கு கொஞ்ச நேரம் வந்துட்டுப் போக முடியுமா?”

“எதுக்கு இப்போ?”

“கொஞ்சம் வந்துட்டுப் போங்களேன்.. அழுகைய நிறுத்த மாட்டுக்கா..”

“என்னது? இன்னுமா ஒறங்கல அவ?”

“ஆமா, தொட்டில ஆட்டி ஆட்டி கை வீங்கிட்டு எனக்கு.. பாத்ரூம் போகக்கூட விடமாட்டுக்கா.. எனக்கு அழுகையா வருகு.. நா என்ன பண்ண?”

‘நா என்ன பண்ண! நானுந்தான் இங்க ஒரு மண்டையன்ட்ட மாட்டிக்கிட்டு முழிக்கேன். அவனும், அவன் முழியும். நல்லா அவிச்ச பனம்பழம் மாதிரி..’

“நா ஒன்ன கத சொல்லச் சொன்னம்லா?”

“கதல்லாம் சொல்லிட்டேன். அதுக்கப் பொறவு தான் இன்னும் அழுகா.. என்ன கேக்கான்னே புரிய மாட்டுக்கு..”

‘நீ என்ன லட்சணத்தில் கதை சொன்னியோ! என்ட்ட மட்டும் நல்லா ஒரண்டய இழுக்கேல்லா.. பிள்ளயச் சமாளிக்கக் கழியாதா? கேட்டா, டக்குன்னு கண்ணுலந்து கொட்டிரும்.. நான் எங்க போய்க் கொட்ட?’

“அவட்ட குடு ஃபோன.”

“அம்மு, என்ன வேணும் பிள்ளக்கி.. நா ஒன்ன ஒறங்கச் சொன்னம்லா? பிள்ளக்கி சர்ப்ரைஸ் வேணுமா, வேண்டாமா?”

“சப்பீஸ் வேண்டா.. உக்கம் வாணும்.. உக்கம் வாணும்…”

“என்னம்மா? அழாமச் சொல்லு பாப்போம்.”

“அப்பா உக்கம் வாணும். உக்கம் வாணும். அம்மா தர மாட்டுக்கா.”

“செரிம்மா, அப்பா அம்மைட்ட சொல்லுகேன். அம்மாட்ட குடு..”

“சொல்லுங்கோ..”

“எட்டி, என்ன கத சொன்ன நீ?”

“கிருஷ்ணா கத தான்.”

“அது செரி, என்ன கத?”

“கிருஷ்ணா வாலு பண்ணி யசோதாட்ட வாயத் தொறந்து காட்டுவாம்லா. அந்தக் கத… ஏன் கேக்கியோ?”

“செரி, பிள்ளைட்ட குடு..”

“அப்பா, அப்பா, உக்கம் வாணும்..”

“செரி மக்ளே, அப்பா வரும்போ வாங்கிட்டு வாரேன் செரியா? இப்போ குட் கேளா மம்மம் சாப்டுட்டு ஒறங்கணும், என்னா?”

“அம்மா, அப்பா உக்கம் வாங்கி தருவாளே…”

சந்திப்பு முடிந்து கிளம்பும்போது சொன்னார். “ஸோ பாரதி. உங்களால இதெல்லாம் ஈஸியா பண்ண முடியும்னு எனக்குத் தெரியும். இந்த உலகத்துக்கேத்த ஆளு நீங்க தான்.. கீப் இட் அப்..”

மாலை வீட்டிற்குள் நுழைந்த போது கமந்து படுத்து முனகிக் கொண்டிருந்தாள் அம்மு.

“எட்டி, என்னா? எப்பிடியிருக்கு இப்போ? பிள்ள எப்போ ஒறங்குனா?”

“ம்‌ம்‌ம், எம்மா… எம்மா…” வலியில் முனகினாள்.

“செரி, செரி, நீ கொஞ்சம் ஒறங்கு.”

சட்டென விழித்தவள், “மயிலிறகு கொண்டு வந்தேளா?” என்று கேட்டாள்.

“ஆமா, இப்ப இருக்க நெலமைல நாம் போயி மயிலிறகு பொறுக்கிட்டுக் கெடக்கேன்.”

“எப்பா, நாஞ் சொன்னம்லா எடுத்துட்டு வாங்கன்னு. பிள்ளக்கி கிருஷ்ணன் வேசம் போட்டு ஃபோட்டோ எடுக்கலாம்னு நெனச்சேன். அவ வேற கிஷ்ணா கிஷ்ணான்னு அழுதுட்டே இருந்தால்லா..”

“வேசம் தான? போட்டு விடு.. மயிலிறகு இல்லாட்டி இப்ப என்ன கொறஞ்சிரப் போது?”

“ஆமா, ஒங்களுக்குத் தேவையான விசயம்னா எல்லாம் செய்வியோ. ஒலகத்துல இல்லாத்ததையா கேட்டுட்டேன்? ஒவ்வொருத்தரும் பொண்டாட்டி கேட்டா என்னல்லாம் செய்யா! இது நாம்லா கேட்டேன். அதுக்கு மதிப்பு கெடயாது. நான்னா எளக்காரம் தான! ஒங்ககிட்ட நா கேட்ருக்கவே கூடாது..”

“ஆரம்பிக்காத..”

“ஆமா, நீங்க போய் உங்க வேலயப் பாருங்க. இப்போ எந்திச்சி கத்துவா..”

“கத்துனா நா பாத்துக்குறேன். நீ ஒன்னும் கெடந்து பொலம்பாண்டாம். வேண்டா வெறுப்பா பிள்ளயப் பெத்துட்டு…”

“என்னது? என்ன சொன்னியோ?”

“ஒரு மயிரும் இல்ல, போய்ப் படு, போ…”

“இந்த வார்த்தயெல்லாம் சொல்லக் கூடாது பாத்துக்கோங்கோ..”

“போட்டி போ, போய்ப் படுன்னேன்.”

தொட்டில் மெல்ல அசைந்தது. சிறுசோடு அம்முவும் சிணுங்கிக்கொண்டே கிடந்தாள். தொட்டிலை மெல்ல ஆட்டிக்கொண்டே மின்னஞ்சல்களைப் பார்த்தேன். சிறுசோடு அம்முவும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

“அப்பா, அப்பா..” தூக்கத்தில் பேசுவது என்னைப் போலவே சிறுசுக்கும் ஒட்டிக் கொண்டது. புன்னகைத்தபடி, “ஒன்னுல்லம்மா, ஒறங்கு பிள்ள..” என்றேன்.

குரல் கேட்டதும் சட்டென புரண்டு படுத்தவள் கண் திறந்து, “அப்பா உக்கம், உக்கம்,” என்றாள்.

“செரிம்மா, பிள்ள ஒறங்கு. அப்பா வாங்கிட்டு வரேன், செரியா?”

மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள். குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுசு மீண்டும் தொடங்கினாள்.

“எப்பா, எப்பா, சட்டுன்னு குளிச்சிட்டு வாங்களேன். இவ அடங்க மாட்டுக்கா.. தொண்ட என்னத்துக்கு ஆகும்? காலைலேந்து கத்திக் கத்தி, ஒடம்புல ஒன்னும் கெடயாது..”

“இன்னா வாரேன். இரி..”

“அப்பா வருவா, போட்டும்மா, போட்டும்.. வாவோ, வாவாவோ..”

“அப்பா, உக்கம் வாணும், உக்கம் வாணும், அப்பா, அப்பா”

“நிம்மதியா குளிக்கக் கூட விட மாட்டியோ, செர எழவா இருக்கு…”

“பிள்ளய என்ன வார்த்தடே சொல்லுகீங்க?”

“எம்மா தாயே, நாம் பிள்ளயச் சொல்லலம்மா, ஆள விடு..”

“அப்போ, என்ன தான் சொன்னீங்க?”

“ரைட்டு.. இப்ப என்ன, ஒங் கால்ல விழணுமா, கொண்டா பிள்ளய மொதல்ல. ஒரு பிள்ளய சமானப்படுத்தத் தெரில, வாயி மட்டும்…”

“ஆமா, ஒங்கள விடக் கொறவு தான்..”

“அப்பா, உக்கம் வாணும்…”

“வாம்மா, செல்லக்குட்டில்லா.. அழாத..”

“உக்கம் வாணும்…”

“செரி, செரி, பிள்ளக்கி அப்பா கிஷ்ணா கத சொல்லவா?”

“உக்கம் வாணும்.. உக்கம் வாணும்..”

“அப்பா சர்ப்ரைஸ் சொன்னேம்லா.. பாப்போமா?” கேட்டதும் அழுகையை நிறுத்தினாள்.

“அப்பா சப்பீஸ், சப்பீஸ்..”

“குட் கேள்.. நீ அம்மைட்ட இரி. அப்பா, பேக்ல இருந்து எடுத்துட்டு வாரேன்..”

முறைத்தபடி வாங்கித் தன் மடியில் இருத்தினாள்.

“பிள்ளைக்கி நேரியல் உடுத்து விடு. கிருஷ்ணா வேசம் போடுவோம்.”  மடிக்கணினி பையைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்தேன். உற்றுப் பார்த்தபடி வேசத்திற்கான பொருட்களை எடுத்து வைத்தாள்.

“இங்க என்ன பார்வ? ஓங்குடும்பத்துக்கு ஒரு சொத்து எழுதி வச்சிருக்கேன் வேணுமா?”

மீண்டும் முறைத்தாள்.

“இங்கப் பாரு, பிள்ளக்கி சர்ப்ரைஸ்…” என்றபடி புத்தகத்தைத் திறந்து அந்த மயிலிறகை எடுத்தேன்.

“ஹாஹாஹா.. அப்பா, கிஷ்ணா, கிஷ்ணா” என்று சிரித்தாள்.

“பிள்ள தான் கிஷ்ணா, செரியா, கிஷ்ணாக்கு டிரெஸ் போடுங்க அம்மா, வாங்க, வாங்க..”

நேரியல் உடுத்து நேர்ந்து விட்டிருந்த நீண்ட கூந்தலை வாரியிழுத்துக் கட்டி, கண்மையிட்டு, சந்தனம் தீற்றிக் கோடிழுத்த போது அந்தக் குட்டிக் கிருஷ்ணா அழகாகச் சிரித்தான். ‘அடுத்து மகன் பிறந்தா நல்லாத்தான் இருக்குமோ!’

“அய்யா, சூப்பர், கிஷ்ணா ரெடி.. கண்ணாடில போய்ப் பாரு..”

தத்தித் தத்திச் சென்று அலமாரியின் கண்ணாடி முன் நின்று எட்டி எட்டிப் பார்த்து நின்றாள். பிள்ளையைப் பார்த்து ரசித்த அம்முவின் முகம் அவ்வளவு அழகு. ‘கோவமெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் என்ன!’

“அப்பிடியே உங்க அம்மா மாதிரியே இருக்கியே கிஷ்ணா,” என்றபடி அம்முவைப் பார்த்துக் கண்ணடித்தேன். கண்ணாடி முன் நின்று வாயை ஆவெனத் திறந்து பார்த்தாள் சிறுசு. திரும்பி முகத்தைச் சுறுக்கியபடி என்னைப் பார்த்தாள். மீண்டும் கண்ணாடியைப் பார்த்து வாயைத் திறந்து உற்று நோக்கினாள். அவ்வளவுதான். ஓவென ஒரு கத்தல்.

“அப்பா, அப்பா… உக்கம் வாணும், உக்கம் வாணும்.”

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, கிருஷ்ணா தரையில் விழுந்து புரள ஆரம்பித்தான்.

“பிள்ளய எடுக்காம என்னத்தப் பாத்துட்டு நிக்கட்டி?”

“ஏன், நீங்க எடுங்க…” என்று சொல்லிச் சிரித்தபடி அடுக்களைக்குள் ஓடினாள்.

“எட்டி, எட்டி, எங்க….” என்றபடி பிள்ளையைத் தூக்கினேன்.

“அப்பா, உக்கம் வாணும்…” அடுக்களையில் அடுப்பைப் பற்ற வைக்கும் சத்தம்.

“எட்டி, இவள வந்து பிடி…”

“இரிங்கப்பா, இன்னா வாரேன்… கொஞ்ச நேரம் பாத்தா ஒன்னும் ஆகாது..”

மீண்டும் கிருஷ்ணா கதை சொல்ல ஆரம்பித்தேன். சற்று நேரம் கேட்பாள். மீண்டும் ‘உக்கம், உக்கம்’ என்பாள். இரண்டு மூன்று கதைகள் முடிந்தன. அதற்கு மேல் சொந்தக் கதையைத் தான் சொல்ல வேண்டும்.

“இந்தாப் பாரு பிள்ளைக்கி உக்கம்….” என்று சிரித்தபடி வந்து நின்றாள் அம்மு. கையில் ஒரு சிறு சம்படம். பிள்ளை மலைத்தபடி உற்றுப்பார்க்க, அருகே அமர்ந்து அந்த சம்படத்தைத் திறந்து காட்டினாள். அழகாக ஜொலித்த ஒரு சிறு உலக உருண்டை . கிருஷ்ணாவின் முகம் அப்படி மலர்ந்தது.

‘அட! நம்ம மர மண்டைக்கு இது தோணவே இல்லயே!’

“ஹாஹாஹாஹா… உக்கம்.. உக்கம்… ”

நான் அம்முவை ஆச்சரியமாகப் பார்த்தேன். கில்லாடி தான். ஒரு குட்டி மிட்டாய் உலக உருண்டை. எப்படிச் செய்திருப்பாள்!

“அப்பா, உக்கம்.. உக்கம்…”

“ஆமாக்குட்டி, சூப்பர்லா… கிஷ்ணாக்கு உக்கம்…”

“அப்பா, ஆ… ஆ..” என்று வாயைத் திறந்தான் கிருஷ்ணா. ஒருநொடி யோசித்தபடி நின்றேன். அம்மு அந்தக் குட்டி உலகத்தை எடுத்து சிறுசின் வாய்க்குள் வைத்தாள். அவள் சட்டென ஓடிச் சென்று அலமாரியின் கண்ணாடி முன் நின்று வாய் திறந்து பார்த்தாள். என்னவொரு கண்கள். என்னவொரு முகம். ‘அடுத்ததும் மகளே தான்டா.’

சற்று நேரம் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தவள்,“அவ்வா… அவ்வா” என்று திறந்த வாய் மூடியபடி ஓடி வந்தாள். வாயோரம் வண்ண வண்ண மீசைகள் வழிந்துகொண்டிருந்தன. சில நொடிகள் தான். மீண்டும் ஓவெனக் கதறல். மீண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, தன் சிறு வாயைத் திறந்து காட்டினாள் சிறுசு.

“அப்பா, உக்கம் காணும்… உக்கம் காணும்…”

‘கரையாத ஒரு உலகத்தை எப்படிச் செய்ய!’

***

– சுஷில் குமார்

The post கிஷ்ணா – சுஷில் குமார் appeared first on வனம்.

  •  

நித்தியம்

"டாக்டர் ஜெனிஃபர், இந்த அளவீடுகள் சரியானவை என்று உறுதியா?" கிரேடி துணிச்சலாகக் கேட்டிருந்தான் தன் முனைவர் பட்ட மாணவன். பளபளக்கும் டாஷ்போர்டில் அவள் அடுக்கிய டேட்டாக்களை எல்லோரும் உற்றுப் பார்த்திருந்தனர். அவளது ஐந்து ஆண்டுகால உழைப்பில் கண்டுபிடித்த புற்றுநோய் செல்களின் பிழை பற்றி விளக்கிக்கொண்டிருந்தாள்.
  •  

செஞ்சீலை

காட்சி அவன் தர்க்கத்திற்குள் சிக்க மறுத்துக் கொண்டிருந்தது போலும். கதிரவன் தியானத்தில் திளைப்பவன் போல அசையாது இருந்தான். புளியமரத்தடியில் இருவரும் பூசைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சாமிக்குப் போட்டு கழிந்த மாலைகள், திருநீறு, குங்குமம், சூடகம், ஊதுபத்தி, தீப்பெட்டி, பன்னீர் குப்பி, உடைந்த சிறு மண்பானை ஓடு, வேப்பிலை கொத்து, சிவப்பு பட்டு சால்வை என எல்லாமே சம்பாதித்து வந்திருந்தனர் எப்படியோ. நீள் வாக்கில் கிடந்த சிதைந்த சிறிய வேலி கருங்கல்லைப் பிரதிஷ்டை செய்து அலங்கார பணிவிடை நடந்து கொண்டிருந்தது. 
  •  

பலி

“அதெல்லாம் வைச்சிருப்பான். நீ ஒண்ணும் கவலப்படாதே. மாரியம்மா தைரியமான பொண்ணு. அவ அக்காவ கொடுமப் பண்ணுன மாதிரி இதுகிட்ட நடக்காது. எல்லாம் சரியா வந்துடும்.” அம்மாவின் ஆறுதலுக்காக சொல்லிவைத்தேனேத் தவிர, என் பேச்சில் அவ்வளவு உறுதி இல்லை. இந்த மக்களிடம் ஆணின் அதிகாரம் என்பது கல்லில் செதுக்கிய கட்டளையைப்போல. ஆம்பளைக்குச் சளைக்காமல் காட்டிலும் மேட்டிலும் உடம்பு உழைத்தாலும், பொம்பளை கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகவேண்டியிருந்தது.
  •  

கொன்றைப் பூக்களும் மரவட்டைகளும்

ராகவனுக்கும் சவத்துடைய காதல் கதையைப் பற்றிக் கேட்க ஆசை. நடந்து வீடு இருக்கும் திருப்பத்தை அடைந்த போது ராகவன் அதனிடம் ”   நீ எப்படி ஒரு மதராசி தமிழ்ப் பெண்ணை காதலித்தாய் ? என்று கேட்டதை அது தனது சொந்த விஷயத்தில் இவன் ஏன் மூக்கை நுழைக்கிறான் என்றெல்லாம் நினைக்காமல்  புன்னகைத்தவாறே கண்டிப்பாக வீட்டிற்கு சென்றதும் சொல்கிறேன் என்று சொன்ன பதிலின் நாகரீகம் அவனுக்கு ரொம்பவே பிடித்தது. 
  •  

வாகை மனம்

வாவ மரத்தின் அடியில் புகைவதன் அடையாளமாக காற்றில் கருகல் வாடை வந்தது.  வெளியே வந்து பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  பிரார்த்தனைக்கு வந்தவர்களின் வாகனங்கள் மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருந்தது.  தேவாலயத்தில் பிரார்த்தனைப் பாடல்கள் வேத வசனங்களுக்கு இடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது.  கோல்டன் பாய்  வந்த ஆட்களை வைத்து முட்டுக்கொடுத்ததை சரி செய்து கொண்டு இருந்தார்.  அவர்  அவர்களை திட்டுவது புரியாமல் சத்தமாக மட்டும் கேட்டது.  இந்தப் பக்கம் அவர்  திரும்பினால் பேச வேண்டுமென நான் கடைக்குள் வந்துவிட்டேன்.
  •  

தெய்வ நிமித்தம்

 “உங்களுக்குத் தெரியாததா சார்? கடன மறுசீரமைப்பு செய்வோம், வட்டி விகிதத்தை மாற்றி, கால அவகாசம் ஆறு மாசமோ ஒரு வருஷமோ நீட்டிச்சி கொடுப்போம். எப்படியாவது கடனை அடைத்துவிடுவோம்னு  பெரியவரும் அவர் மகனும் வந்து கெஞ்சுறாங்க. கொஞ்சம் விட்டுப் பிடிப்போமே,’’ என்ற அரவிந்தனிடம், 
  •  

சூதகம்

“ஆஹா… பொழுது விடிஞ்சும் விடியாமயும் உம் பொண்டாட்டி உக்காந்துட்டாளா..?  நல்ல சகுனம். இன்னிக்கு அம்மன் கோயிலுக்கு தக்காளி சோறு ஒரு பெரிய குண்டான் நெறைய செஞ்சு கொண்டு போகணும்.  நூத்தியெட்டு எலுமிச்சம் பழத்தை மாலையா...

The post சூதகம் first appeared on Her Stories.

  •  

குழலினிது

சண்முகநாதன், "டேட்டிங் செய்ததுக்கு அப்புறம், கண்டிப்பாக இது ஒரு அற்புத கண்டுபிடிப்பா இருக்கும்" என்றார். அவை வளர்ந்த ஓர் ஆணுடைய எலும்புகள். அந்த எலும்புக் குவியலில் இருந்து, ஒவ்வொரு எலும்பாக கவனமாக எடுத்து நானும் நாதனும் பிரஷ்கொண்டு மெல்ல வருடி, உடற்பாகத்திற்கு ஏற்றவாறு மேசையின் மீது வைத்துக்கொண்டிருந்தோம்.
  •