கவலைக் கடலைக் கடியும் வடிவேல்
வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘நான் கண்ட நால்வர்’ எனும் நூலில் மகா கவியைப் பற்றி ‘கவிக்குலக் கோன்’ எனும் தலைப்பில் தான் கண்டும், கேட்டும் அறிந்த நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். அதிலிருந்து ஒரு நிகழ்ச்சி…
*********
பாரதியார், இனிமையான சாரீரம் படைத்தவரல்லர்; ஆனால் உணர்ச்சியோடு பாடுவார்; கேட்டுக் கொண்டிருக்கிறவர்களையும் உணர்ச்சி வசப்படுத்திவிடுவார். காரணம், அவர் உணர்ச்சிமயமாய் இருந்தார்.
பாரதியார் ஒரு சமயம் சென்னை ராயப்பேட்டை மோபரீஸ் ரோடிலுள்ள குகானந்த நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது கலியாண சுந்தர முதலியாரும் நானும் வேறு சில நண்பர்களும் அங்கிருந்தோம். மாலை நேரம். நிலையத்து மண்டபத்தில் குமரக் கடவுளின் திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் பாரதியாரின் உள்ளத்தை பெரிதும் கவர்ந்துவிட்டது. “முருகா, முருகா, முருகா” என்று தொடங்கும் பாடலை உணர்ச்சி ததும்பப் பாடினார். மாலை நேரத்து மஞ்சள் வெயில் அந்தப் படத்தின் மீது லேசாகப் படிந்து, முருகனுடைய திருவுருவத்திற்குத் தனிச் சோபை கொடுத்தது. “வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய்” என்ற சரணத்தை அவர் பாடி, அதையே திரும்பத் திரும்பச் சொன்னபோது, அந்தக் குமர வடிவம் அவரை நோக்கி மெதுமெதுவாக வருவது போலவே இருந்தது. நாங்கள் அனைவரும் பரவசர்களானோம். அந்தக் காட்சி என் நெஞ்சத்தை விட்டு அகலவே அகலாது. முதலியார் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி கூறி ஆனந்தப்பட்டிருக்கிறார்.
*******
நாளை திருக்கார்த்திகைத் திருநாளில், குமரனின் புகழ்பாடும் பாடலைக் கேட்டு மகிழ, கனியின் குரலில் அப்பாடலை இன்றே கனி மியூசிக் வோர்ல்ட் சேனலில் ஏற்றியுள்ளோம்.