Reading view

வேத தொன்மங்கள் - ஆர்தர் அந்தோணி மெக்டோனல்

மதமும் தொன்மமும்

மதம் ஒருபுறம் தெய்வீகத்தை பற்றியும் இயற்கையை மீறிய ஆற்றல்களை பற்றியும் மனிதர்கள் கொண்டுள்ள கருத்தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது. இன்னொருபுறம், மனிதன் தன்னுடைய இனத்தின் நலன்கள் அந்த ஆற்றல்களை சார்ந்திருப்பதை உணர்ந்து, அவ்வுணர்வை பல்வேறு வழிபாடுகளில் வெளிப்படுத்தியதை உள்ளடக்கியுள்ளது. தொன்மவியல் முதலில் சொல்லியதுடன் தொடர்புடையது. அது கடவுள்கள் மற்றும் நாயகர்கள் பற்றிய தொன்மக்கதைகளை கொண்டது. அவர்களின் குணம், தோற்றுவாய், செயல், சூழல் ஆகியவற்றை விவரிக்கக்கூடியதாகவும் உள்ளது. இந்த தொன்மங்களின் ஊற்றுமுகம் என பண்படாத மற்றும் அறிவியல்-அறிவு அற்ற காலத்தில் மனிதன் தான் எதிர்கொண்ட பல்வேறு விசைகளையும் இயற்கையின் புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகளையும் விளக்க முற்பட்டதையும் குறிப்பிடலாம். தொன்மங்கள் பண்படாத மனதுடைய கற்பனையை காட்டுகின்றன. ஒரு பண்பட்ட மனதிற்கு உருவகங்களாக தெரியும் கூற்றுகள் அனைத்தும் முந்தைய காலத்திலிருந்து அவதானிக்கப்பட்ட நிகழ்வுகளின் விளக்கங்களாகும். வானில் நிகழும் நிகழ்வுகள் பற்றியும் (உதாரணமாக இடி, மின்னல், புயல் போன்றவை) மற்றும் உலகம் எவ்வாறு தோன்றியது எவ்வாறு கட்டமைக்கப்பட்டது போன்ற அறிவார்ந்த கேள்விகளும் எழுந்த போது அதற்கான விடைகள் தொன்மத்தில் கதைகளாக பெறப்பட்டன. தொன்மங்களுக்கான அடிப்படையானது இயற்கையை உயிருள்ள கூறுகளின் தொகுதியாக கருதும் மனிதனின் பண்படாத மனநிலையில் உள்ளது. ஒரு தொன்மம் எப்போது உருவாகிறது என்றால் மனித கற்பனை ஒரு இயற்கை நிகழ்வை ஆளுமையாக உருவகித்து அல்லது மனிதப்பண்பேற்றி விளக்கம் கொடுக்கும்போது உருவாகிறது. உதாரணமாக நிலவு சூரியனை முந்திச்செல்லாமல் தொடர்ந்து செல்வதை அவதானித்த மனிதன் அதை ’ஆண் ஒருவனால் நிராகரிப்பட்டு அவனை தொடர்ந்து செல்லும் பெண்’ என்ற தொன்மமாக ஆக்கியிருக்கலாம். இந்த நேரடியான தொன்மம் அடுத்தநிலையில் கவித்துவமேற்றப்பட்டு படைப்பூக்க கற்பனை கொண்டவர்களால் கையாளப்படத் துவங்குகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கதை கடத்தப்படுகையில் கதைசொல்லியின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப அதில் பல்வேறு கூறுகள் சேர்க்கப்படுகின்றன. தொன்மக்கதையில் உள்ள இயற்கை நிகழ்வின் இடத்தை பின்னர் விரிவாக சேர்க்கப்பட்ட மனிதப்பண்பு பற்றிய குறிப்புகள் எடுத்துக்கொள்ளும்போது அந்த நேரடியான இயற்கை நிகழ்வு கதையிலிருந்து மங்கத் தொடங்குகிறது. பிறகு காலம் செல்லச்செல்ல அந்த தொன்மக்கதையின் இயல்பான அடிப்படையான இயற்கை நிகழ்வு மறக்கப்படும்போது அதன் அசலான அர்த்தத்திற்கு தொடர்பே இல்லாத புதிய கூறுகள் அந்த தொன்மத்தில் சேர்க்கப்படலாம் அல்லது வேறு தொன்மங்களிலிருந்தும் கூறுகள் இதற்கு மாற்றப்படலாம். தொன்மத்தை அதனுடைய வளர்ச்சியின் இறுதிப்படிநிலையில் பார்க்கும்போது அதன் அசலான வடிவத்திற்கு தொடர்பற்ற சேர்க்கைகளுடன் இணைந்து அந்த தொன்மம் பெரிதாக வளர்ந்திருக்கலாம். அதை ஆய்வு செய்வது மிகக்கடினமானதாக அல்லது சாத்தியமற்றதாக மாறியிருக்கலாம். யூரிப்பிடீஸ் நாடகங்களில் உள்ள மனிதப்பண்பேற்றப்பட்ட தெய்வங்களை நமக்கு தெரியும் என்றாலும் கூட, அந்த ஹெலெனிய கடவுள்களின் பண்புகளில் அல்லது செயல்களில் உள்ள அடிப்படையான இயற்கை கூறுகளை கண்டுபிடிப்பது நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும்.

  •  

தொன்மங்களின் ஆற்றல் - 3: ஜோசப் கேம்ப்பெல்


பகுதி 2 - அகவயப்பயணம்

"நரகுலகின் ஆழத்திலிருந்து இரட்சிப்பின் குரல் வரும் என்பது தொன்மங்கள் வெளிப்படுத்தும் ஒரு விஷயம். இருள் மிகுந்த தருணம்தான் மாற்றத்தின் உண்மையான செய்தி வரும் தருணம். இருள் மிகுந்த தருணத்தில்தான் ஒளி தோன்றுகிறது"

மோயர்ஸ்: என்னிடம் ஒருவர் கேட்டார், "ஏன் இந்த தொன்மங்கள் உங்களை இழுத்துக்கொண்டன? ஜோசப் கேம்ப்பெல் சொல்வதில் இருந்து நீங்கள் எதை அறிந்துகொள்கிறீர்கள்?" என்று. நான் அதற்கு "எது உண்மையென்று நான் என்னுள் அறிந்திருந்தேனோ அதையே தொன்மங்கள் வெளிப்படுத்தி, அதன் மூலமாக அவை என்னுடன் உரையாடுகின்றன" என பதிலளித்தேன். தொன்மங்கள் ஏன் இவ்வாறு இருக்கின்றன? நான் உண்மையென்று என்னுள் அறிந்தவற்றையே இக்கதைகளும் சொல்வதாக ஏன் தோன்றுகிறது? எனது இருப்பின் அடிப்படையிலிருந்து அது தோன்றுகிறதா? அதாவது எனக்கு முன்பாக இங்கு தோன்றிய அனைத்திலிருந்தும் மரபார்ந்து நான் பெற்றுக்கொண்ட நனவிலியில் இருந்து அது தோன்றுகிறதா?

  •  

தொன்மங்களின் ஆற்றல் - 2: ஜோசப் கேம்ப்பெல்


பகுதி 1: தொன்மங்களின் ஆற்றல் - 1: ஜோசப் கேம்ப்பெல்

மோயர்ஸ்: ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை என் இளைய மகன் பன்னிரண்டாவது அல்லது பதிமூன்றாவது முறையாக பார்த்தபோது நான் அவனிடம் "ஏன் இத்தனை முறை இப்படத்தைப் பார்க்கிறாய்?" என்று கேட்டேன். உடனே அவன் "நீங்கள் ஏன் பைபிளின் பழைய ஏற்பாட்டை வாழ்க்கை முழுவதும் வாசிக்கிறீர்களோ அதே காரணத்திற்காகத்தான்" என்று பதிலளித்தான். அவன் புராணத்தின் ஒரு புதிய உலகில் இருந்தான்.

கேம்ப்பெல்: ஸ்டார் வார்ஸ் திரைப்படத்திற்கு ஒரு ஏற்கத்தக்க புராணப்பார்வை நிச்சயம் உண்டு. அப்படம் அரசை ஒரு இயந்திரமாகக் காட்டி "இயந்திரம் மானுடத்தை நசுக்கப்போகிறதா அல்லது மானுடத்திற்கு சேவையளிக்கப்போகிறதா" என்று கேட்கிறது. மனிதம் இதயத்திலிருந்து தோன்றுகிறது, இயந்திரத்திலிருந்து அல்ல. ஸ்டார் வார்ஸ் படத்தில் நான் கண்ட அதே பிரச்சினையை ஜெர்மன் நாட்டுபுறக்கதை ஒன்றில் வரும் ஃபாஸ்ட் (Faust) எனும் கதாபாத்திரமும் காட்டுகிறது. அக்கதையில் வரும் மெபிஸ்டோபிளீஸ் (Mephistopheles - சாத்தானை போன்ற ஒன்று) நமக்கு தேவையானதை அளிக்கிறது, ஆனால் நமது வாழ்க்கையின் இலக்கை தீர்மானித்துவிடுகிறது. எனினும் ஃபாஸ்ட் எதிர்பார்ப்பது ஒரு இயந்திரத்தின் பார்வையிலான இலட்சியத்தை அல்ல. ஃபாஸ்ட்டின் இந்த குணமே அவரை ரட்சிக்கப்பட தகுதிகொண்டவராக ஆக்குகிறது. இப்போது ஸ்டார் வார்ஸ் படத்தின் ஒரு கதாபாத்திரமான லியூக் ஸ்கைவாக்கர் (Luke Skywalker) தன் தந்தையின் முகமூடியை கழற்றுவதன் மூலமாக தன் தந்தை இதுவரை வகித்து வந்த இயந்திரத்தின் பாத்திரத்தை அகற்றுகிறார். அவர் தந்தை ஒரு அடையாளமாக இருந்தார். அதுதான் அதிகாரம், அரசுடையது.

  •  

தொன்மங்களின் ஆற்றல் - 1: ஜோசப் கேம்ப்பெல்

நூல் அறிமுகம்

ஜோசப் கேம்ப்பெல் அவர்களின் 'தொன்மங்களின் ஆற்றல்' (Power of Myth) எனும் இந்நூல் ஒரு அமெரிக்க தொலைக்காட்சி தொடருக்கான காணொளிப்பதிவின் நேரடியான எழுத்து வடிவம். நூலின் ஆசிரியரான ஜோசப் கேம்ப்பெலிடம் தொலைக்காட்சி நிருபர் பில் மோயர் தொன்மங்கள் குறித்து கேட்கும் கேள்விகளாலும் அதற்கு கேம்ப்பெல் அளிக்கும் பதில்களாலும் ஆன இந்த உரையாடல்கள் 1985-86 ஆம் ஆண்டில் பல அமர்வுகளாக நிகழ்த்தப்பட்டது. 24 மணி நேரம் நீளும் இக்காணொளிப்பதிவு ஆறு மணி நேரமாக சுருக்கப்பட்டு தொலைக்காட்சித் தொடராகவும் நூலாகவும் வெளிவந்தது.

  •